Friday 3 April 2015

சுகன்யா... 94

செல்வா காலையில் எழுந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. அவனும் கடந்த ஒரு வாரமாக இரவில் சரியாக தூங்கியிருக்கவில்லை. அரையும் குறையுமாக குளித்தேன் என பெயர் பண்ணிவிட்டு, கையில் கிடைத்த பேண்ட் சட்டையை உடம்பில் மாட்டிக்கொண்டு, மல்லிகா கொடுத்த இட்லியையும், வடைகறியையும் கிச்சனில் நின்றவாறே அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, ஆஃபிசுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

"செல்வா... சுகன்யாவுக்கு வடைகறின்னா ரொம்ப பிடிக்கும்டா... அவளுக்கு கொஞ்சம் வெச்சிருக்கேன். போகும் போது இந்த டப்பாவையும் எடுத்துட்டு போடா... மறக்காம லஞ்சுல அவகிட்ட குடுத்துடு..." மல்லிகாவின் குரலில் வீட்டுக்கு வரப்போகும் மருமகளின் மேல் பாசம் பொங்கிக்கொண்டிருந்தது.



"ரொம்பவே அவளை உன் தலைமேல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடறே? அப்புறம் என்னை எதுவும் சொல்லாதே..." செல்வா வாய்க்கு வந்தபடி அர்த்தமில்லாமல் எதையோ முணுமுணுத்தானே தவிர, மல்லிகா கொடுத்த டப்பாவை தன் தோள்பையில் உடனே போட்டுக்கொண்டான்.

"சார், உங்களுக்கு சுகன்யா மேடம் போன் பண்ணியிருந்தாங்க..."

செல்வா தன் அறைக்குள் நுழைந்ததும் நல்லதம்பி கூவினான். 'என் சுகன்யா... சுகன்யாதான். என்ன பெருந்தன்மையான மனசு அவளுக்கு...?!' மெல்லிய தூறலுடன், மெல்லிய தென்றல் காற்று அவன் மனசுக்குள் இதமாக வீசத்தொடங்கியது. லஞ்ச் டயம்லே அம்மா ஆசையா குடுத்துவிட்டிருக்கற வடைகறியை அவ கையில குடுத்துட்டு "சாரி" சொல்லிடணும். சாயந்திரம் அவளை எங்கேயாவது கூட்டிட்டு போகணும். ஒரு வாரத்துல அவ டெல்லிக்கு போயிடுவா. அவன் மனம் சுகன்யாவைப் பார்க்க துள்ளிக்கொண்டிருந்தது.

"டேய் செல்வா... ரொம்பத்துள்ளாதே; நீ பண்றது ரொம்பத்தப்பு. இந்த தடவையும் உங்க சண்டையில, புத்திகெட்டத்தனமா ஈகோயிஸ்டிக்கா நடந்துக்காம, சுகன்யாதான் மொதல்லே வெள்ளைக்கொடி காட்டியிருக்காடா? இதை நல்லா ஞாபகத்துல வெச்சுக்க.." அவன் மனசு அவனை இலேசாக குத்தியது.

"நல்லத்தம்பி.. கால் எப்படா வந்திச்சி?" செல்வாவின் குரலில் உற்சாகம் வழிந்துகொண்டிருந்தது.

"பத்து நிமிஷம் முன்னாடி பண்ணாங்க சார்?"

"என்னடா சொன்னாங்க?"

"நீங்க இல்லேன்னு சொன்னதும், உடனே காலை கட் பண்ணிடாங்க." அதற்கு மேல் நல்லத்தம்பியும் பேசவில்லை. அனுஷ்கா தன் வெண்மையான இடுப்பையும், உட்காருமிடங்களையும், அவன் மொபைல் ஸ்கிரீனில் அபாயகரமாக குலுக்கிக் கொண்டிருந்ததை பார்ப்பதில் அவன் கவனம் இருந்தது.

காலையில் ருசியாக இருக்கிறதென அளவுக்கு மேல் வழித்து வழித்து தின்ற வடைகறி செல்வாவின் வயிற்றை கலக்கி, தன் வேலையை ஆரம்பித்திருந்தது. செல்வா டாய்லெட்டுக்குள் நுழைந்து தன்னைத் தளர்த்திக்கொள்ள நினைத்தான். கதவை இறுக மூடிவிட்டு, டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

வெளியில் பாத்ரூமுக்குள் யாரோ இருவர் நுழையும் சப்தம் வந்தது. "க்றீச்... க்றீச் என காலணிகளின் தொடர்ந்த ஓசைகள். செருப்பின் ஒலியைத் தொடர்ந்து ஒரு கட்டையான குரல் வந்தது.

"மாமூ... நம்ம செல்வாவோட லவ்வு புட்டுக்கிச்சா என்ன?" பேசியவனின் குரலில் ஏகத்திற்கு உல்லாசம் தெறித்துக்கொண்டிருந்தது. செல்வாவின் காதுகள் விருட்டென நிமிர்ந்தன. தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டான்.

"என்னடா உளர்றே நீ?"

"என் கண்ணால பாத்ததைத்தாண்டா சொல்றேன்.."

"என்னா பாத்தே?"

"செல்வா தன் ரூம்ல இருக்கான்... சுகன்யா பைக்ல வேற ஒருத்தன் இடுப்பைக்கட்டிக்கிட்டு, தொப்புளை காமிச்சிக்கிட்டு, அவன் முதுவுல படுத்துகினு போய்கிட்டு இருக்கா.."

"டேய்... புண்ணாக்கு; உனக்கு சுகன்யா கரெக்ட் ஆகலேங்கற வெறுப்புல சும்மா ரூமரை கிளப்பாதேடா நாயே... நம்ம ஆஃபீசுலேயே, அந்தப்பொண்ணு ரொம்ப டீசண்டான பொண்ணு. நீ வேற எவளையோ பாத்துட்டு கன்ப்யூஸ் ஆயிருக்கே.? காலங்காத்தாலேயே நீ ஊத்திகிட்டியா?"

"ங்கோத்தா... நீயும் தான் அவளுக்கு ரூட்டு வுட்டே. இப்ப என்னமோ மகாத்மா காந்தி கணக்குல எங்கிட்ட பேசறே?"

"நான் இல்லேன்னு சொல்லலையே? நாலு பேரு இந்த ஆஃபிசுல சுகன்யாவுக்கு கடலை போட்டோம்; சுகன்யா செல்வாவுக்கு கிளிக் ஆயிட்டா... தட்ஸ் ஆல். அதுக்காக உன்னாட்டாம் நான் எதுக்கு பொறாமையில காண்டாவணும்?"

"நீ புத்தராவே இரு. வேணாங்கலே. ஆனா நான் சொல்றதை கேளுடீச் செல்லம். ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி என் கண்ணால பாத்தேன்னு சொல்றேன். வெண்ணை... நீ நம்பனா என்ன? நம்பாட்டி என்ன? எனக்கு எதாவது நஷ்டமா; இல்லே உனக்கு நஷ்டமா? செல்வாவுக்கு நஷ்டம்; அந்த வடக்கத்தியான் அவனுக்கு வெள்ளையா நீட்டா ஆப்பு வெச்சிட்டான்." கட்டைக் குரலுக்குரியவன் நீளமாக ஆங்காரமாக மீண்டும் ஒரு முறை சிரித்தான்.

"யார்ரா அது?"

"சுனிலோ... அனிலோ.. பேரு எனக்கு சரியாத் தெரியாது. டேரக்ட் அஸிஸ்டென்டா ஒருத்தன் வந்திருக்கான். ஒடம்பை ஷோக்கா வெச்சிருக்கான். பையன் செமை பர்சனாலிட்டி. அவன் கூடத்தான், சுகன்யா ஜாலியா போய்கிட்டு இருக்கா. பெரிய மசுரூ மாதிரி... நீ எனக்கு கவுண்டர் குடுக்கறியே; நான் சொல்றதுல உனக்கு சந்தேகம்ன்னா, இங்கேருந்து நேரா சுகன்யா செக்ஷ்னுக்கு போய் பாத்துட்டு வாடா. இந்த நிமிஷம் அவங்க ரெண்டு பேரும் அங்கே இருக்கமாட்டாங்க... என்ன பெட்டு வைக்கிறே நீ?"

கட்டைக்குரல் இப்போது ஆனந்தமாக விசிலடித்தவாறு வெளியே போனது. செல்வா ஃப்ளஷை தடாலென இழுத்தான். தெறித்த தண்ணீரில் தன் பேண்டை நனைத்துகொண்டான். வெளியில் வந்தவன் தன் முகத்தை அவசரமாக கழுவித் துடைத்துக்கொண்டான். மாடிப்படிக்கட்டுகளின் வழியே சுகன்யாவின் அறையை நோக்கி வேகமாக கால் தடுமாற ஓடினான். 

சுகன்யாவின் அறைக்குள் செல்வா நுழைந்தபோது, சாவித்திரி தன் இருகைகளையும், தன் தலையில் வைத்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய முகம் தொங்கிப்போயிருந்தது.

சாவித்திரியின் இருபத்தைந்து வருட அனுபவம் பாண்டிச்சேரியில் இருக்கும் அவர்களுடைய கிளை அலுவலகத்திற்கு எந்த அளவுக்கு அந்த நேரத்தில் தேவைப்படுகிறது என்பதை கோபாலன் அவளுக்கு விரிவாக சற்று முன்தான் சுட்டிக்காட்டியிருந்தார். அடுத்த இரு வாரங்களுக்குள் பாண்டிச்சேரியில், அவள் ஜாய்ன் பண்ண வேண்டிய விஷயத்தையும் அவர் அஃபீஷியலாக தெரிவித்திருந்தார்.

சுகன்யா தன் சீட்டில் இல்லை. அறையில் சுனிலும் இல்லாததால், செல்வாவின் முகம் சட்டென காற்றுப்போன பலூனாக மாறியது.

"எனக்கு நஷ்டமா; இல்லே உனக்கு நஷ்டமா... செல்வாவுக்கு நஷ்டம்; அந்த வடக்கத்தியான் அவனுக்கு வெள்ளையா நீட்டா ஆப்பு வெச்சிட்டான்."

டாய்லெட்டில் கேட்ட கட்டைக்குரல் செல்வாவை இரக்கமில்லாமல் சீண்ட ஆரம்பித்தது. கட்டைக் குரலுடன் வாதாடிக்கொண்டிருந்த குரலில் இருந்த நியாயங்கள் அவன் நினைவுக்கு வரவில்லை. செல்வாவின் மனதில் கோபம் மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரம்பித்தது.

"குட்மார்னிங் மேடம்."

"வாடாப்பா... நீ குட்மார்னிங்ன்னு சொல்றே. ஆனா இந்த காலைப்பொழுது எனக்கு பேட்மார்னிங் ஆயிடிச்சிடாப்பா.."

சாவித்திரி புலம்ப ஆரம்பித்தாள். தன் மனபாரத்தை இறக்குவதற்கு மிகச்சரியான ஒரு ஆள் தனக்கு கிடைத்துவிட்டானானெ அவள் உள்ளூர மகிழ்ந்தாள்.

"ஏன் டல்லா பேசறீங்க மேடம்? சுகன்யா ஆஃபிசுக்கு வரலியா?" செல்வா தன் காரியத்தில் குறியாக இருந்தான்.

"என்னை எதுவும் கேக்காதடாப்பா. நீ எனக்கு வேண்டப்பட்ட பையனாச்சேன்னு நான் சாதாரணமா எதையாவது சொல்லுவேன். சுகன்யாவுக்கு கோவம் வந்த மாதிரி, உனக்கும் என் மேல எரிச்சல் வரலாம். 'மரியாதையா பேசுடீ நாயேன்னு என் பல்லு மேலேயே நீயும் போடுவே...' இந்த வம்பெல்லாம் நேக்கெதுக்கு? சாவித்திரி தன் முகத்தை நொடித்துக்கொண்டாள்.

"நீங்க எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்... வயசுல பெரியவங்க. நீங்க சொல்றதை கேட்டு நான் எதுக்கு கோவப்படப்போறேன்?" செல்வா தலையெழுத்தேயென சாவித்திரியின் எதிரில் உட்கார்ந்தான்.

"செல்வா... என் அருமை உனக்குத் தெரியுதுடா. உன்னை நான் 'டா' போட்டு பேசறேன். உனக்கு கோவம் வரலே. நம்ம குடும்பங்களுக்கு நடுவுல இருக்கற நெருக்கம் உங்காத்துக்கு வரப்போற அந்த சுகன்யாவுக்கு தெரியலியே?"

"ஹூம்..." செல்வா ஒரு வரட்டுப்புன்னகையை அவளுக்கு வீசினான்.

'நீ இப்ப உக்காந்துகிட்டு இருக்கற இதே சேர்லதான் பத்து நிமிஷம் முன்னாடி சுகன்யா உக்காந்து இருந்தா. என் வயசுக்காவது அவ கொஞ்சம் மரியாதை குடுத்திருக்கலாம்; ஆனா அவ என்னடான்னா, கால் மேல காலை போட்டுக்கிட்டு, எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு தன் குரலை உயர்த்தி கத்தினா..."

"சாரீ... இதை என்னால நம்ப முடியலியே மேடம்?"

"நானும் உன்னை மாதிரி அசந்து போயிட்டேன். ஆடிப்போன நான், உனக்கு என்னடீ ஆச்சுன்னு கேட்டேன்... இவ்வளவுதாண்டாப்பா நடந்திச்சி. என்னை 'டீ" போட்டு பேசாதேன்னு தன் கண்ணை உருட்டிக்கிட்டு ஒரு கூச்சப்போட்டாப்பாரு; இந்த காரிடாரே ஆடிப்போச்சு. ரெண்டு ரூம் தள்ளி உக்காந்து இருக்கற கோபலன் எழுந்து இந்த ரூமுக்கு வந்துட்டாருன்னா பாத்துக்கோயேன்."

"அப்படியா?"

"அதோட விட்டாளா, 'மைண்ட் யுவர் லாங்வேஜ்ன்னு இங்கிலீஷ்ல என்னை மிரட்டிட்டு, இப்பத்தான் அந்த சுனிலோட எங்கேயோ கிளம்பி நகர்வலம் போயிருக்கா." கட்டைக்குரல் சொன்னது உண்மைதான். சுகன்யா, சுனிலுடன் ஆஃபீசை விட்டு வெளியில் போயிருக்கிறாள் என்பது உறுதியானதும், செல்வாவின் சுதி மொத்தமாக இறங்கியது.

"சுகன்யா எனக்குத்தெரிஞ்சு அப்டீல்லாம் யாரையும் மரியாதை இல்லாம பேசமாட்டாளே மேடம்?" சுகன்யாவின் மேல் அவனுக்கு நான்கு நாட்களாக கோபம் இருந்தபோதிலும், அவளை சாவித்திரியிடம் விட்டுக்கொடுக்க அவன் மனதின் ஒரு மூலை தயங்கியது.

"செல்வா... என்னைத் தப்பா நினக்காதே? இன்னைக்கு இருக்கற சுகன்யா நீ நினைக்கற நம்ம பழைய சுகன்யா இல்லே; அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.." இவ சொல்ற இந்த பாய்ண்ட் மட்டும் ரொம்பவே சரிதான். சாவித்திரி பேசியதும் அவன் மனதில் சட்டென புகுந்து கொண்டது.

"சுகன்யா எனக்கு இண்டர்காம்ல போன் பண்ணாளாம். நல்லத்தம்பி சொன்னான்; அதான் என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு போவலாம்ன்னு வந்தேன். எப்ப திரும்பி வருவான்னு உங்களுக்கு எதாவது தெரியுமா?" தன் முகவாயை அசிரத்தையாக சொறிந்து கொண்டே செல்வா பேசினான். 

"நம்ம சுகன்யாவை, அந்த ஊர் பேர் தெரியாத வடக்கத்தியான் கூட, இந்த வேவாத வெய்யில்லே, அக்கவுண்ட்ஸ் ஆஃபீசுக்கு அனுப்பவேண்டிய அவசியம் இந்த கோபலனுக்கு என்னன்னு நான் கேக்கறேன்?" சாவித்ரி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைப்பட்டாள்.

"ம்ம்ம்..."

"இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடீ சுகன்யா அந்த தடியன் சுனிலோட போனா; எப்ப திரும்பி வருவாளோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். உன் கல்யாணம் எதிர்லே நிக்குது. உன் அம்மா மல்லிகா என்னடான்னா, தன் மாட்டுப்பொண்ணோட அழகை பாத்து பாத்து மனசுக்குள்ளவே பூரிச்சு போய் நிக்கறா? பெத்த மனசு அவளை என்னக்குறை சொல்றது? நீ சந்தோஷமா இருக்கணுமேன்னு அவ நினைக்கறா? அதுல என்னத்தப்பு? பொம்பளைக்கு அழகோட கூடவே கொஞ்சம் குணமும், அடக்கமும் வேணும்டா..."

"க்க்குஹூம்" செல்வாவுக்கு முனகுவதை தவிர வேறென்ன சொல்லுவது என தெரியவில்லை.

"கழுத்துல தாலிகட்டிக்கப் போற இந்த நேரத்துல, சுகன்யா இன்னொருத்தன் கூட தினமும் காண்டீன்லே, மரத்தடிலே, இங்கே அங்கேன்னு நின்னுக்கிட்டு அரைட்டையடிக்கறதும், அவன்கூட பைக்ல இங்கே அங்கேன்னு அலையறதும், பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு? உன் பின்னாலத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க?"

"மேடம்..."

"உன் ஆத்துக்கு மாட்டுப்பொண்ணா வரப்போற சுகன்யாவும், நான் எதையாவது ஜாடை மாடையா சொன்னா புரிஞ்சிக்கிட்டாத்தானே? என் மேல கோவப்படறா." செல்வாவின் முகம் விளக்கெண்ணைய் குடித்தவனின் முகத்தைப்போல் அஷ்டகோணலாகியது. அவன் தவிப்பைக்கண்டு சாவித்திரி உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.



அடியே சுகன்யா... மைண்ட் யுவர் லாங்வேஜ்ன்னு என்னையாடீ இங்கிலீஷுல மிரட்டறே? எனக்கு என்ன உரிமை இருக்குன்னா கேட்டே? உன் இடத்துல இருக்கவேண்டியது என் பொண்ணுடீ. உன் கழுத்துல விழப்போற தாலி என் பொண்ணு கழுத்துல விழவேண்டியதுடீ. ஒருவிதத்துல அய்யோ பாவம், ஏதோ சின்னஞ்சிறுசுங்க ஒருத்தரை ஒருத்தர் ஆசைப்பட்டுடீங்களேன்னு, செல்வாவை நான் உனக்கு விட்டுக்குடுத்தேண்டீ? என்னையா நீ சீண்டிப்பாக்கறே?"

"உன் வயசு என்னா? என் வயசு என்னா? எனக்கே இங்கீலிஷ்ல பேசறது எப்படீன்னு நீ கிளாஸ் எடுக்கறியா? நான் அருவாளை எடுத்து வீசினேன்னா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்டீ. என் லாங்வேஜ் என்னான்னு இன்னிக்கு பொழுது சாயறதுக்குள்ளே உனக்குத் தெரிஞ்சு போயிடும்டீ." சாவித்திரி ஒரு கப்பில் காஃபியை உற்றி செல்வாவின் முன் நகர்த்தினாள். செல்வாவின் கருத்த முகத்தை பார்க்க பார்க்க அவள் மனதில் தெம்பு கிளம்பியது.

"செல்வா.. ஒரு விஷயம் என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா.."

"என்ன மேடம்.?"

"இந்த ரெண்டு நாளாத்தான் பாக்கறேன்... 'அத்தான்... அத்தான்னு' சுகன்யா உன்னை லஞ்சு டயம்லே ஆசையா கூப்பிட்டு செல்லுல பேசிகிட்டு இருக்காளே... அதைத்தான் சொல்றேன்?"

இது என்ன புதுக்கதை? நான் சுகன்யாகிட்ட பேசியே நாலு நாளாச்சு; இவ எந்த அத்தானை சொல்றா? சாவித்திரி சொல்ல வந்ததை சொல்லி முடிக்கட்டுமென செல்வா குறுக்கில் பேசவில்லை.

"அந்த காலத்துல கல்யாணம் ஆன புதுசுலே நான் கூட என் ஆத்துக்காரரை 'அத்தான்னுதான்' கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன்."

சாவித்திரி ஏகத்திற்கு முகம் சிவந்து வெட்கப்பட்டாள். சுகன்யாவும் சம்பத்தும் லஞ்ச் டயமில் தினமும் பேசிக்கொள்ளுகிறார்கள் என்ற விஷயம் செல்வாவுக்கு அப்போதுதான் புரிந்தது. விஷயம் புரிந்ததும், செல்வா தன் மனதுக்குள் கோபம், வெறுப்பு, எரிச்சல், ஏமாற்றம் என பலவித உணர்ச்சிகளால் எரிந்து, தன் முகம் சிவந்து கொண்டிருந்தான்.

செல்வா, சாவித்திரியின் முகத்தைப்பார்க்காமல், தன் தலையை குனிந்தவாறு, அவள் கொடுத்தக் காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த காஃபி அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. சாவித்திரி செல்வாவை பற்றவைத்துவிட்ட திருப்தியில் தன் காஃபியை 'சர்ரென' ஓசையெழுப்பி ரசித்து குடிக்க ஆரம்பித்தாள்.

"எது எப்படியிருந்தாலும் சரிடா. சும்மா சொல்லக் கூடாதுடாப்பா. நம்ம சுகன்யா எப்பவுமே ஆஃபிஸ் நேரத்துல, ஆஃபீஸ் வேலையில எந்தக்குறையும் வெச்சதே கிடையாது. எப்பவும் உயிரைக் குடுத்து உழைக்கறவ. டில்லிக்கு போற எடத்துலேயும் அவ நல்லபேர் வாங்கிக்கிட்டுத்தான் திரும்புவா."

"ம்ம்ம்... எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம்தான்."

"என்னாச்சுன்னு தெரியலே; இன்னைக்குத்தான் மொதல் தரமா எங்கிட்ட மரியாதையே இல்லாமே நடந்துகிட்டா; இப்பக்கூட அவமேல எனக்கு எந்த வருத்தமும் இல்லே; நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்? பை தி வே... உங்க கல்யாணம் எப்போடாப்பா?" சாவித்திரி இனிக்க இனிக்க பேசினாள்.

"இன்னும் முடிவு பண்ணலே மேடம்."

"என்னை அந்த கோபாலன் பாண்டிச்சேரிக்கு தூக்கி அடிச்சிட்டான். உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிட மறந்துடாதே. நான் எங்க இருந்தாலும் கண்டிப்பா வந்துடறேன்? சாவித்திரி தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள். 
செல்வா தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தன் கால்களில், உடலில், சுத்தமாக வலுவே இல்லாததைப்போல் அவன் உணர்ந்தான். தன் சீட்டில் உட்கார்ந்தவனால், நேராக நிமிர்ந்து உட்க்கார முடியாமல், உடல் தளர்ந்து நாற்காலியில் சரிந்தான். இமைகளும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல், அவன் கண்களை மூடின.

டாய்லெட்டுக்குள் கேட்ட கட்டைக்குரல் அவன் மனதை குடைந்து கொண்டிருந்தது. இப்போது கட்டைக்குரலுடன் சாவித்ரியின் குரலும் சேர்ந்து அவன் காதில் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. மண்டை வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு

'சுகன்யா இன்னொருத்தன் கூட தினமும் காண்டீன்லே, மரத்தடிலே, இங்கே அங்கேன்னு நின்னுக்கிட்டு அரைட்டையடிக்கறதும், அவன்கூட பைக்ல சுத்தறதும் பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு? உன் பின்னாலத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க?' சாவித்திரியின் உருண்டை முகமும், முட்டை விழிகளும், அவன் கண்களில் வந்து நின்றன.

ச்சை... என்னக்கொடுமைடா இது? எந்த அளவுக்கு சுகன்யாவை நான் உரிமையோட நெருங்கணும்ன்னு நினைச்சு அவ கிட்டப் போகிறேனோ, அந்த அளவுக்கு அவ என்னைவிட்டு விலகிப்போறா. இந்தக்கன்றாவி விளையாட்டை தினம் தினம் என்னால ஆடமுடியாது. இன்னைக்கு இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சே ஆகணும். செல்வா மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

தன் தோள்பையை திறந்தான். சுகன்யாவுக்காக மல்லிகா கொடுத்து அனுப்பியிருந்த வடைகறி நிரம்பியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து தன் காலடியில் இருந்த குப்பைக்கூடையில் விசிறியடித்தான்.

கெடாவை வெட்டறதுங்கற முடிவுக்கு வந்தாச்சு; வெட்டறதுக்கு முன்னாடி, குளிப்பாட்டி, மாலை வேற போடணுமா? என் அம்மாவுக்கு புத்தியே கிடையாது. சொல்றதை புரிஞ்சிக்கிட்டாத்தானே? கல்யாணமே கேள்வியிலே நிக்குது? மருமவளுக்கு வடைகறி பார்சல் பண்ணிட்டாங்க?

"நல்லத்தம்பி... நான் கொஞ்சம் வெளியிலே போறேன். நம்ம டெபுடி சீஃப் கோபாலன் தேடினா மட்டும் என் மொபைல்லே ஒரு மிஸ் கால் குடுடா.." செல்வா தன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

"ஓ.கே. சார்.." நல்லதம்பியின் மொபைலில் இப்போது ஹன்ஷிகா தன் மார்புகளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். கண்களில் காமத்துடன், ஜெயம் ரவி அவளை இடவலமாக துரத்தி துரத்தி அவள் மார்புகளை தடவிக்கொண்டிருந்தான்.

அலுவலகத்தின் நுழைவாயிலிலிருந்து பார்க்கிங்குக்கு பிரியும் கிளைப்பாதையின் வலது புறத்தில் இருக்கும் வேப்பமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்தான் செல்வா. அங்கிருந்து பார்த்தபோது ஆஃபீசுக்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் மிகத்தெளிவாக தெரிந்தன. நிமிடங்கள் உருண்டன.

"ச்சே... எவனுக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரவே கூடாது. காலையில தின்னது செரிக்கல. வயிறு கலங்கிப்போயிருக்குது. உயிருக்கு உயிரா என்னைக் காதலிக்கறேன்னு சொல்றவ இன்னொருத்தன் கூட ஜாலியா பைக்லே சுத்தப்போயிருக்கா.

காயற வெயில்லே, வேப்ப மரத்தடியில, மனசுல திருட்டுத்தனத்தோட, என்னை காதலிக்கறேன்னு சொல்றவ எப்பத்திரும்பி வருவான்னு நான் ஒரு பைத்தியக்காரன் மாதிரி தேவுடு காத்துக்கிட்டு இருக்கேன். சுகன்யா அவனை வெகு நேரம் வெய்யிலில் காயவிடவில்லை.

செல்வா மரத்தடிக்கு வந்த பத்தே நிமிடங்களில், கருமை நிறத்தில் பளபளக்கும் புதிய பைக் ஒன்று ஆஃபீசுக்குள் நுழைந்தது. கண்ணில் கருப்புக் கண்ணாடியுடன், சுனில் கம்பீரமாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். சுகன்யா அவன் முதுகில் தன்னுடல் இலேசாக உரச அவன் பின்னால் உட்கார்ந்திருந்தாள்.

மரத்தடியில், சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த செல்வா சட்டென எழுந்து மரத்தின் பின்னால் நகர்ந்தான். தான் உட்கார்ந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து மரத்தின் பின்னால் நகரும் செல்வாவை, சுகன்யாவின் கூரிய கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

செல்வாவின் செயலைக்கண்டதும், சுகன்யாவின் முழு உடலும் நடுங்க ஆரம்பித்தது. சுகன்யாவுக்கு சட்டென குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி எடுக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"சுனீல்... வண்டியை ஒரு செகண்ட் இங்கேயே நிறுத்துங்களேன்."

"சுகன்யாஜீ... என்னாச்சு..?" பைக் நின்றது.

"நீங்க வண்டியைப் பார்க் பண்ணிட்டு செக்ஷ்னுக்கு போங்க. எனக்கொரு ஒரு சின்ன வேலை பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு நான் வர்றேன்." சுகன்யா தான் இறங்கிய இடத்திலேயே வெய்யிலில் நின்று கொண்டிருந்தாள்.

"ஓ.கே மேம்."

சுனில் தன் பைக்கை பார்க் செய்துவிட்டு இங்குமங்கும் பார்க்காமல், நேராக லிஃப்டை நோக்கி நடந்தான். செல்வா மறைவாக நின்றிருந்த அந்த மரத்தடியை நோக்கினாள் சுகன்யா. செல்வா இப்போது தான் முதலில் உட்கார்ந்திருந்த கல் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தான். சுகன்யா விறுவிறுவென அவனை நோக்கி நடந்தாள்.

"செல்வா... இந்த வேகாத வெயில்லே நீங்க இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?"

தன் முதுகுக்குப் பின்னாலிருந்து வந்த சுகன்யாவின் குரலைக் கேட்டதும், செல்வா திடுக்கிட்டான். காய்ந்து போயிருந்த உதடுகளை தன் நாவால் ஈரப்படுத்திக் கொண்டான். தன்னைச் சுதாரித்துக் கொண்டவனாக, அவள் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

"யெஸ்... மிஸ் சுகன்யா... என்ன வேணும் உங்களுக்கு?" அவன் குரல் பிசிரடித்தது.

"நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலே?"

"மேடம்... நான் என் மனசுக்குள்ள எரிஞ்சு, வெந்து, சாம்பலா ஆயிருக்கேன். இங்க கொஞ்சம் கூலா காத்து வருதுன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்கே உக்காந்துகிட்டு, புது பைக்ல போறவங்க, வர்றவங்களை வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கேன்." செல்வாவின் குரலில் நக்கல் குடியேறியிருந்தது.

"காத்தாட உக்காறதுலே தப்பில்லே. போறவங்க வர்றவங்களை வேடிக்கைப் பாக்கறதுலயும் தப்புல்லே. ஆனா நான் உக்காந்து வந்த பைக்கைப் பாத்ததும், நீங்க உக்காந்திருந்த இடத்தை விட்டுட்டு எழுந்து ஓடி ஒளியறதுக்கு என்ன அவசியம்ன்னுதான் எனக்கு புரியலே? அதைத்தான் தெரிஞ்சுகிட்டு போவலாம்ன்னு நான் வந்திருக்கேன்." சுகன்யாவின் குரலிலும் நக்கலுக்கு குறைவில்லை.

"மிஸ் சுகன்யா... நீங்க புது பைக்ல, புது ஃப்ரெண்ட்டோட, ஜாலி ரைட் போயிட்டு வர்றீங்க. இந்த நேரத்துல, உங்களையோ, உங்க புது நண்பரையோ நான் அனாவசியமா சங்கடப்படுத்த விரும்பலை. அதனாலதான் சட்டுன்னு எழுந்து ஓடி ஒளிஞ்சிக்கிட்டேன்."

"யார் மனசுல திருட்டுத்தனம் இருக்கோ அவங்கதான் சங்கடப்படணும்... என் மனசுல திருட்டுத்தனம் எதுவும் இல்லே." சுகன்யாவின் உதடுகள் முறுக்கிகொண்டன.



"சரி... என் மனசுல திருட்டுத்தனம் இருக்கு... நான் ஒத்துக்கறேன். இப்ப என்னப் பண்றது அதுக்கு?"

"உங்க காதலியை வேவு பாக்கற அளவுக்கு உங்க தரம் தாழ்ந்து போச்சா?" சுகன்யாவின் கண்களில் வெறுப்பு, அதிர்ச்சி, ஏமாற்றம் என பலவிதமான உணர்ச்சிகள் குவிந்திருந்தன.

"காதலியோட தரம் தாழ்ந்தா, அவ காதலனோட தரமும் தாழ்ந்துதானே போகும்?"

"செல்வா... நீங்க என்னை உங்க வார்த்தையாலேயே கொன்னு போட்டுடணும்ன்னு நினைக்கறீங்களா? அப்படி உங்க மனசுல என்னதான் இருக்கு? வெளிப்படையா சொல்லித் தொலைச்சுடுங்களேன்."

"மிஸ் சுகன்யா... உங்க கிட்ட ஒரு பத்து நிமிஷம் நான் பேசணும்.. உங்களால என்கூட வரமுடியுமா?"

"இப்ப எதுக்கு மிஸ் சுகன்யா.. மிஸ் சுகன்யான்னு பேசி என்னை அன்னியப்படுத்தறீங்க?"

"எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு இன்னைக்கு காலையிலத்தான் நீங்க ஒரு ஆஃபிசருக்கு நோட்டீஸ் குடுத்ததா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ எனக்குத் தெரிய வந்தது. அதனால நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கேன். அவ்வளவுதான்." செல்வாவின் வார்த்தைகளில் விஷம் வழிந்து கொண்டிருந்தது. 

சுகன்யா... 93

சம்பத்தோட சுகன்யா பேசறப்ப, அவ மொகத்துல ஒரு மலர்ச்சி, சந்தோஷம் வருது. இதை உன்னால சகிச்சிக்க முடியலே? நான் சொல்றது சரியா?"

"ம்ம்ம்.."

"சம்பத் கருப்புதான்; ஆனா அவன் மூஞ்சியில ஒரு கவர்ச்சியும், வசீகரமும் இருக்கு..."
"நீ என்ன சொல்றே? எனக்குப்புரியலே."
"சம்பத்து... உன்னைவிட செமை பர்சானாலிட்டின்னு சொல்றேன்; சூப்பரா பாடியை வெச்சிருக்கான்; நல்ல வேலையில இருக்கான்; உன்னைவிட அதிகம் சம்பாதிக்கறான்; இத்தல்லாம் பாக்கும்போது உனக்கு உன் மனசுக்குள்ள ஒரு பயம். ஒரு கலக்கம்."
"அந்த நாய்கிட்ட எனக்கென்ன மசுரு பயம். கலக்கம்?"
"சம்பத்தோட அப்பன் பெரிய போஸ்ட்லேருந்து ரிட்டயர் ஆன ஆளு. அவன் குடும்பத்துக்கு சுவாமி மலைல நல்ல செல்வாக்கு. ஏன்? உன் சுகன்யாவோட அப்பாவே அந்தாளுக்கிட்ட கையைகட்டிக்கிட்டு மரியாதையா பேசினதை நிச்சயதார்த்த பங்கஷன்லே உன் கண்ணால நீ பாக்கலையா?"


"உண்மைதான்."
"சம்பத்துக்கு அவன் அப்பன் சைட்ல ஏகப்பட்ட சொத்து இருக்கு; ஆத்தா சைடுல அதைவிட அதிகமா இருக்கு; வூட்டுக்கு ஒரே புள்ளை அவன்; எல்லாத்துலேயும் உன்னைவிட ஒரு படி அவன் உசரத்துல இருக்கான்; இதான் உன் மனசுல இருக்கற கலக்கம். கரெக்டா நயினா?"
"ம்ம்ம்..." முனகினான் செல்வா.
"அவன் உனக்கு வெச்ச ஆப்புக்கு உங்கிட்ட மன்னிப்பு கேட்டான். சுகன்யாகிட்டவும் மன்னிப்பு கேட்டு, தான் ஒரு ஜெண்டில்மேன்னு காமிச்சுட்டான். உன் லவ்வர் மனசுலே நட்புங்கற பேர்ல ஒரு பர்மெனண்ட் எடத்தைப் புடிச்சுட்டான்? அவன் இண்டேரக்டா உனக்கு இரண்டாவது தரமா ஒரு ஆப்பை திருப்பியும் வெச்சிட்டான்ங்கறதுதான் இப்ப உனக்குள்ள இருக்கற எரிச்சல்? ஆம் ஐ ரைட்?"
"ஓரளவுக்கு நீ சொல்றது சரிதான்.." செல்வா மீண்டும் முணுமுணுத்தான்.
"சுகன்யா ஒரு அழகான பொண்ணு; பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவவீட்டுக்கு சம்பந்தம் பண்ண போவத்தான் செய்வாங்க; சம்பத் குடும்பம் அவளுக்கு நெருங்கின சொந்தம். அவங்களும் பொண்ணு கேக்கப் போனாங்க; அவங்க ஒண்ணுக்குள்ள ஓண்ணு; ஒறவுகாரங்க இன்னைக்கு உன் கல்யாண விஷயத்துக்காக சண்டை போட்டுக்குவாங்க. நாளைக்கு கூடிப்பாங்க. சுகன்யாவே இந்த விஷயத்துல ஒண்ணும் பண்ணமுடியாதப்ப, இந்த விஷயத்துல நீ ஏண்டா காண்டாவறே?"
"சுகன்யாவும் 'ஹீ ஹீன்னு' என் மனசைப்புரிஞ்சுக்காம, என் எதிர்லேயே சம்பத்கிட்ட இளிச்சா எனக்கு எரிச்சல் வராதா?" செல்வா சட்டென தன் மனதிடம் எகிறினான்.
"டேய்... சம்பத் அவளுக்கு அத்தான்டா. அவளுக்கு உறவுடா. அவ அவன்கிட்ட பேசறதை நீ எப்படி தடுக்கமுடியும்? உனக்குப்பிடிக்கலேன்னா நீ அவன்கிட்ட பேசாம பொத்திகிட்டு கிட, அதைவிட்டுட்டு அவ உயிரை ஏண்டா எடுக்கறே?"
"புரியுது... நானும் அதைத்தான் சுகன்யாகிட்ட சொன்னேன். சம்பத்கிட்ட என்னைப்பத்தி பேசாதே; என் தங்கச்சியைப்பத்தி பேசாதே; என் குடும்பத்தைப்பத்தி பேசாதேன்னு சொன்னேன்; நான் சொல்றதை அவ கேட்டாதானே?"
"சுகன்யா, சம்பத்கிட்ட பேசி முடிச்சதும், நீ சொல்ல விரும்பறதை, கொஞ்சம் பொறுமையா, அவளுக்குப் புரியமாதிரி சொல்லியிருக்கலாம்லே?"
"சொல்லியிருக்கலாம்"
"அறிவுகெட்டத்தனமா இந்த பிரச்சனையில அவளை இரண்டு தரம் அழவெச்சிருக்கியே, கொஞ்சமாவது மண்டையில எதாவது இருக்காடா உனக்கு?"
"...."
"இப்ப என்னப்பண்றதா உத்தேசம்?'
"வேற என்னப்பண்றது? அவ டெல்லிக்கு போறதுக்கு முன்னாடீ அவகிட்ட, சாரிடீ சுகு. ப்ளீஸ்... எங்கிட்ட பேசுடீச் செல்லம். ஐ லவ் யூ வெரிமச்ன்னு சொல்லுவேன்."
ஏன் இப்ப சுகன்யாவுக்கு போன் பண்ணி 'சாரி' சொன்னா நீ கொறைஞ்சு போயிடுவியா? இன்னும் ஒரு பத்து நாளைக்கு அவ டெல்லிக்கு போறவரைக்கும் அழுதுகிட்டு இருக்கணுமா? நீங்கள்ல்லாம் உருப்படமாட்டீங்கடா; தலைக்கு மேல ஈகோடா உங்களுக்கெல்லாம்.
சுகன்யா லட்டு மாதிரி இருக்கா; உன்னை மாதிரி சம்பாதிக்கறா; ஒரே பொண்ணு; கை நிறைய சொத்தோட உன் வீட்டுக்கு வர்றாளே; அந்த அதுப்புதாண்டா உங்களுக்கு - மனம் அவனை புரட்டி புரட்டி, அடித்து துவைத்து, அலசி அலசி, உதறி கொடியில் போட்டு கிளிப்பையும் மாட்டியது.
இப்ப மணி பன்னண்டு ஆச்சு; என் சுகன்யா தூங்கிட்டு இருப்பா. அவளை நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பலே. காலையில ஆஃபீசுல மொதல் வேலையா அவ கிட்ட மன்னிப்பு கேட்டுடறேன். மனதிடம் வாதிட்டுக் கொண்டிருந்த செல்வா தன்னையும் அறியாமல் தன் கண்களை துடைத்துக்கொண்டான். 

சராசரி மனிதர்கள், தாங்கள் தனிமையில் இருக்கும் சமயங்களில், தங்கள் மனதோடு பட்சபாதமில்லாமல் வாதம் செய்து, தங்களை விமர்சனம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். சிலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள். சிலர் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், தாங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க உள்ளத்தில் உறுதி கொள்ளுகிறார்கள். நடந்த தவற்றை சரி செய்ய முடியுமானால் அதற்கான வழியையும் நிதானமாக தேடுகிறார்கள்.

ஏனோ தெரியவில்லை, இரவுகளில், இருட்டின் மடியில், தாங்கள் எடுக்கும் நியாயமான முடிவுகளைகூட, பகலில், வெளிச்சத்தில் சிலரால் சட்டென அமுலுக்கு கொண்டுவர முடிவதில்லை. செல்வாவும் இதற்கு விதிவிலக்கானவன் இல்லை. மறுநாள் அலுவலகத்தில், முதல் வேலையாக சுகன்யாவை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முதல்நாள் இரவு தான் எடுத்த முடிவை உடனடியாக செயல்படுத்த தயங்கினான் அவன். அவன் தயங்கினானா? அவன் தன் செயலுக்கு வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறானா? அது அவனுக்குமட்டும்தான் தெரியும்.

ஆண் மகனான செல்வாவிடம் வரட்டு கவுரவம் அதிகமாக இருந்ததென்றால், சுகன்யாவை, சிறிது காலமாக, பிடிவாதம் என்னும் கொடிய நோய் பிடித்தாட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவருமே நேருக்கு நேர் ஒருவரையொருவர் பார்த்துவிடக்கூடாது என்ற விஷயத்தில், மிகவும் கவனமாக இருந்தார்கள்.

எனக்கு பிடிக்காததை செய்தது நீதானே என செல்வாவும், தப்பாக பேசியது நீதானே? நானில்லையே? என சுகன்யாவும், இருவருமே ஒருவர் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டு தேவையே இல்லாமல், தங்கள் மனதை உளைச்சலில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.

சுகன்யா அலுவலகத்தில் எப்போதும் மாடிப்படிக்கட்டுகள் வழியாகத்தான் தன் ரூமுக்குப்போவாள். வருவாள். செல்வா மாடிப்படிக்கட்டுகளை உபயோகிப்பதைத் தவிர்த்தான்.

சுகன்யா, செல்வாவின் ஐடி டிவிஷன் இருக்கும் ஐந்தாவது தளத்தின் பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. ஐ.டி டிவிஷனில் டிஸ்கஷன் என்றால், சுனிலை விரட்டிக்கொண்டிருந்தாள். காலையில், மாலையில் காண்டீனுக்கு போவதையும் அடியோடு தவிர்த்துவிட்டாள்.

சுனில் மட்டும், எப்போதும் போல், தன்னுடைய இயல்பின்படி, எதுவுமே நடக்காதது போல், சுகன்யாவிடம் கலகலப்பாக சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அவள் அவன் சொல்லுவதைக் முகத்தில் புன்னகையுடன் கேட்டுக்கொண்டாளே தவிர, தான் பேசுவதை முடிந்தவரை குறைத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று வெள்ளிகிழமை. வாரத்தின் கடைசி வேலை நாள். சுகன்யா கணிணியில் மும்முரமாக எதையோ டைப் செய்துகொண்டிருந்தாள். வழக்கம்போல் சுனில் ஏதோ ஒரு சினிமாப்பாட்டை வாய்க்குள் முனகிக்கொண்டே, தன் காரியத்தில் கண்ணாயிருந்தான்.

"ஹலோ... குட் மார்னிங் டு யூ ஆல்" கோபாலன் அறைக்குள் நுழைந்தார்.

"அயாம் சாரிம்மா சுகன்யா. நேத்து ஈவினிங் அக்கவுண்ட்ஸ்லேருந்து உன்னை உடனடியா வரசொல்லி ஒரு கால் வந்திச்சி. அப்ப நீ சீட்டுலே இல்லே. அதனால மிஸிஸ் சாவித்திரி கிட்டே சொன்னேன். "

"என்ன விஷயம் சார்? அவங்க எதுவும் என்கிட்ட சொல்லலையே." சுகன்யா மரியாதையாக எழுந்து நின்று வினவினாள்.

"அப்படியா? சரிம்ம்மா. சாவித்திரி கதையை விட்டுத் தள்ளு; உன் சர்வீஸ் புக்ல ஏதோ என்ட்ரி விட்டுப் போயிருக்காம். அவங்க கேட்டதை நான் டெலிபோன்ல கிளாரிபை பண்ணிட்டேன். அடுத்த வெள்ளிக்கிழமை நீ இங்கேருந்து ரிலீவ் ஆகறதுக்கு முன்னாடி இந்த குளறுபடியை சரி பண்ணிட சொல்லிட்டேன். இருந்தாலும் நீ ஒரு தரம், இன் பெர்சன், அந்த ஆஃபிசுக்கு போயிட்டு வந்துட்டீன்னா நல்லாயிருக்கும்."

"உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் சார். இன்னைக்கு இன்வென்ட்ரீசை முடிச்சுடலாமேன்னு பாக்கறேன்." சுகன்யா சற்றே தயங்கியவாறு தன் மணிக்கட்டைப் பார்த்தாள். மணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

"தியாகராஜனை புடிக்கறது ரொம்பக் கஷ்டம்மா. இன்னைக்கு அவன் ஆஃபிசுலத்தான் இருக்கான். நீ ஒரு கையெழுத்து போடணும். அதுக்கு கீழே அவன் தன் கையெழுத்தைக் கிறுக்கி சீல் அடிக்கணும்; சட்டுன்னு உன் பர்சனல் வேலையை முடிச்சுக்கோ."

"உன் செல்வாவை கூப்பிட்டுக்கோயேன். ரெண்டு பேருமா பைக்லே போனீங்கன்னா ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடலாம்." முகத்தில் புன்னகையுடன் பேசியவர் வந்த வேகத்தில் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அவர். 

சுகன்யா ஒரு நிமிடம் யோசிக்க ஆரம்பித்தாள். 'திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்' ன்னு அவன் என்னைப்பாத்து காறிதுப்பிட்டு போய் நாலு நாளாச்சே? உண்மையிலேயே இன்னும் என்னை அவன் காதலிச்சுக்கிட்டு இருந்தா, அட்லீஸ்ட், சுகும்மா... நான் பேசினது தப்புடீன்னு ஒரு 'சாரி' யாவது சொல்லியிருப்பான்லே? ஏண்டா இவனை காதலிக்க ஆரம்பிச்சோம்ன்னு எனக்கு வெறுத்து போயிடிச்சி.

எங்க காதலை சக்ஸஸ்புல்லா ஆக்கறதுல நான் மட்டும்தான் எப்பவும் ஒரு கமிட்மெண்ட்டோட இருக்கணுமா? எங்க லவ்வுல, எங்க கல்யாணத்துல இவனுக்கு எந்த ரோலும் இல்லையா? ஒவ்வொரு தரமும் நான்தான் நாய் மாதிரி, என் சுயமரியாதையை காத்துல பறக்கவிட்டுட்டு, என் வாலை குழைச்சுக்கிட்டு இவன் எதிர்ல போய் நிக்கணுமா? ஆம்பிளைங்க திமிரு இவன் கிட்ட நிறையவே இருக்கு; இவன் மேல எனக்கு வந்த ஆசையில, ஆரம்பத்துல என் கண்ணு அவிஞ்சிப்போயிடிச்சி. எனக்கு நல்லா வேணும். இப்ப எல்லாத்துக்குமா சேர்ந்து இவன்கிட்ட அனுபவிக்கறேன்.

அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸ் வரைக்கும் என்னை நீ அழைச்சிட்டுப்போறியான்னு இவன்கிட்ட எதுக்காக நான் கெஞ்சணும்? செல்வா இப்பல்லாம் எல்லாத்துக்கும் ரொம்பவே அல்டிக்கிறான்? சென்னையில இவன் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டா நான் வேலையில வந்து சேர்ந்தேன்? நூறு ரூபாயை விசிறி அடிச்சா எவனாவது ஒரு ஆட்டோக்காரன் கூப்பிட்ட இடத்துக்கு வந்துட்டுப்போறான்.

சுகன்யா... ஒரு செகண்ட் பொறுடீ. எக்குத்தப்பா எமோஷனாவதடீ. இது நல்லதுக்கு இல்லே. செல்வா பண்ணது தப்பாவே இருக்கட்டும்? அவனை நீ இன்னும் காதலிச்சுக்கிட்டுத்தானே இருக்கே? அதனாலத்தானே நாலு நாளா மனசுக்குள்ளவே நீ முகாரி ராகத்தைப் பாடிகிட்டு இருக்கே?

அவனை டெஸ்ட் பண்றதுக்கு இது உனக்கு கிடைச்சிருக்கற ஒரு சான்சை நீ தவறவிட்டுடாதே. நீயா... நானான்னு போட்டி போடாதடீ. உன் பிடிவாதத்தை கொறைச்சுக்கோ. காதல்லே யாரு விட்டுக் கொடுத்தாலும், சந்தோஷம் உங்க ரெண்டுபேருக்கும்தானேடீ?



சுகன்யா நீ இன்னொரு விஷயத்தையும் நல்லாப்புரிஞ்சுக்கோ. 'உன் அத்தான் சம்பத் குடுத்த டார்ச்சரை தாங்கமுடியாம, எங்க அண்ணன் செல்வா அசந்து போய் உக்காந்துட்டான். அன்னைக்கு ராத்திரி சீனுதான் அவன் தலைமேல ரெண்டு அடி போட்டு, சுவாமிமலைக்கு இழுத்துக்கிட்டு வந்தான்னு' ஏற்கனவே மீனா உங்கிட்ட சொல்லியிருக்காளா இல்லையா?

இப்படி செல்வா ஆரம்பத்துலேருந்தே எதையாவது நினைச்சுக்கிட்டு தனக்குள்ள தடுமாறிகிட்டுத்தான் இருக்கான். இது அவன் கூடப்பிறந்த குணம்; ஆனாலும் அவன் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கறாங்கறதும் உனக்கு நல்லாத்தெரியும். நீ இல்லாம அவனால இருக்கமுடியாது. உங்கப்பிரச்சனையை நீங்கதாண்டீ தீத்துக்கணும். ஒவ்வொரு தரமும் உன் மாமாவோ, சீனுவோ, மீனாவோ, உங்க நடுவுல வந்து நிக்கமாட்டாங்க?

அவனுக்கு இன்னொரு சான்ஸ் குடுடீ. அவன் கிட்ட போய் பேசுடீ; இதுதான் கடைசி தரம்ன்னு நெனைச்சிக்கோ. சுகன்யாவின் மனதுக்குள் எழுந்த வேறுபட்ட உணர்ச்சிகள் அவள் முகத்திலும் தங்கள் தாக்குதலை படமாக வரைந்து கொண்டிருந்தன.

சுனில், தன் ஓரக்கண்ணால் சுகன்யாவைப்பார்த்தான். சுகன்யாவின் முகத்தில் ஓடும் வலியை, அவள் முகத்தின் பாவனைகளை, சட் சட்டென அவள் முகத்தில் தோன்றும் மாறுதல்களை, எட்டு பெண்களிடம் காதலுக்கு அப்ளிகேஷன் போட்டவனால் நன்றாகப் படிக்க முடிந்தது. செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் நடுவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

நாலு நாளா செல்வாவையும் நான் நோட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நிஜமாவே அவன் டெக்னிகல் வேலையில இன்டெலிஜண்ட் பெலோதான். ஆனா இவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையினால, ஆஃபீஸ்ல முட்டாளா பிஹேவ் பண்றான்.

டேட்டா அப்டேஷனைப்பத்தி தினமும் ஈவினிங்ல அவன் கூட டிஸ்கஸ் பண்ணும்போது, நான் ஒண்ணு சொன்னா, பைத்தியக்காரன் மாதிரி அவன் எதையாவது உளர்றான். அப்புறம் விஷயம் புரிஞ்சதும், நாலுதரம் எங்கிட்ட 'சாரி ப்ரதர்'ங்கறான்.

சுகன்யா கேண்டீனுக்கு போற வழக்கமான நேரத்துல, தினமும், தவறாம, தனியா மூலையில உக்காந்துகிட்டு, இவ வர்றாளான்னு திருட்டுப்பார்வை பாத்துகிட்டு தேவுடு காக்கறான்.

கம்மினாட்டி பய...! இவ்வளவு தூரம் சுகன்யாவை டீப்பா லவ் பண்ற முண்டம், எதுக்காக இந்தமாதிரி ஒரு நல்லப்பொண்ணுகிட்ட அறிவுகெட்டத்தனமா சண்டை போட்டுக்கிட்டு இவளை அழவிடணும்?

இவனும் தவிக்கறான்? இவளையும் தவிக்கவுடறான்? சுனிலின் மனதில் அவர்கள் இருவரின் பேரிலும் பரிதாபம் எழுந்தது. காதலிக்கறவன் அத்தனை பேரும் உருப்படப்போறது இல்லே; அவன் உதடுகளில் ஒரு மந்தகாச புன்னகை மலர்ந்தது. 

சுனில் மெல்ல தன் தொண்டையை செருமினான். சுகன்யா தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள். சுகன்யா தன் தலையை நிமிர்த்தி தன்னைப்பார்ப்பாள் என ஒரு பத்து வினாடிகள் அவன் பொறுமையாக இருந்தான். அவள் தன் தலையை உயர்த்தவில்லை.

"சுகன்யா..." தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாக சுனில் சுகன்யாவிடம் நேராகவே பேசத்தொடங்கினான்.

சுனில் அவளை பொதுவாக 'மேம்' என்றுதான் விளிப்பான். தங்கள் அறையை விட்டு கேண்டீனிலோ, அல்லது மற்ற இடங்களில் பேசும்போது, 'சுகன்யாஜீ' என அவள் பெயருடன் 'ஜீ" யைச்சேர்த்து ஒரு புன்னகையுடன் அழைப்பான். இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு? ரொம்ப அன்பா, உரிமையா என் பேரைச் சொல்லி கூப்பிடறானே?

"ம்ம்ம்... சொல்லுங்க சுனீல்." சுகன்யா ஒரு நொடி தன் புருவங்களை சுருக்கி விரித்தாள். "ஓ மை காட்" இன்னைக்கு சுகன்யாதான் எவ்வளவு அழகா இருக்கா? சுனில் தன் மனதுக்குள் வியந்து போனான்.

"சுகன்யா... உங்க பர்சனல் விஷயத்துல அனாவசியமா தலையிடறனேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க." சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சாவித்திரி ஆஃபீசுக்கு இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

"சுகன்யா... உங்களை என்னோட நல்ல ஃப்ரெண்டா நினைச்சிக்கிட்டு இருக்கேன். அந்த உரிமையிலேதான் இப்ப நான் பேசறேன். நாலு நாளைக்கு முன்னாடி நீங்க விளையாட்ட என் தோள்லே தட்டினீங்க. திரும்பவும் நீங்க தட்டப்போறீங்களோன்னு, சட்டுன்னு நானும் விளையாட்டாத்தான் உங்கக்கையை புடிச்சிட்டேன். அந்த நேரத்துல என் மனசுக்குள்ள வேற எந்த தவறான எண்ணமும் இல்லே. அதை செல்வா வேறவிதமா புரிஞ்சிக்கிட்டாருன்னு நினைக்கிறேன். அதனால உங்க நடுவுல ஏற்கனவே இருந்த பிரச்சனை இன்னும் அதிகமாயிடுச்சுன்னு எனக்கு தோணுது."

"ஆமாம் சுனில்..." சுகன்யா முணுமுணுத்தாள்.

"நம்ம வாழ்க்கையில நாம எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும், சிலநேரங்கள்லே, எதிர்பாராமல், சில விரும்பதகாத நிகழ்ச்சிகளும் நடந்துடுது. இந்த மாதிரி விஷயங்கள் சுத்தமா நம்ம கட்டுப்பாட்டுலேயே இல்லைன்னு எனக்குத்தோணுது."

"உண்மைதான் சுனீல்.." அவன் கண்களை நேராக பார்த்து பேசினாள் சுகன்யா.

"செல்வா உங்களை ரொம்ப டீப்பா லவ் பண்றார். உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சி. கூடிய சீக்கிரத்துல உங்க கல்யாணம் நடக்கபோவுதுன்னும் எனக்குத்தெரியும்."

"ப்ப்ச்ச்ச்... ஐ டோண்ட் நோ... சுனில். என்ன நடக்குமோ? எனக்கு மனசுக்குள்ள ஒரே பயமா இருக்கு."

"கவலைப்படாதீங்க சுகன்யா. உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும். நான் ஒரு ஆண். ஒரு சராசரி ஆணோட மனசைப்பத்தி எனக்கும் தெரியும்லே?"

"சுனில்... நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்க?"

"உங்க செல்வா... உங்கக்கிட்ட, தன்னோட உரிமையை, அக்கறையை, அன்பை அவர் மட்டும்தான் காட்டணும்ன்னு நினைக்கறார். இதை நீங்க தயவு செய்து புரிஞ்சிக்கணும்."

"நீங்க சொல்றது எனக்கு நல்லாப்புரியுது சுனில். ஆனா செல்வாகிட்ட ரொம்பவே அதிகமா இந்த பொஸஸிவ்னெஸ் இருக்கு. ஆனா, எதுவுமே அளவுக்கு அதிகமா போனா விஷமாயிடும் இல்லையா? இப்ப அதுதான் எங்க நடுவுல நடந்துகிட்டு இருக்கு." சுகன்யாவின் குரல் கிசுகிசுப்பாக வந்தது.

"உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா இதெல்லாம் சரியாகிடும் சுகன்யா. நான் என்ன சொல்றேன்னா, இந்த முறை, ப்ளீஸ்... எனக்காக நீங்க கொஞ்சம் விட்டுக்குடுங்க. சும்மா தயங்கிக்கிட்டே இருக்காம, செல்வாவுக்கு நீங்களே ஒரு தரம் போன் பண்ணி 'ஹலோ சொல்லுங்க. ஹவ் ஆர் யூன்னு கேளுங்க.' எனக்கு நம்பிக்கையிருக்கு, அவர் நிச்சயமா உங்களை அக்கவுண்ட்ஸ் ஆஃபீசுக்கு அழைச்சிட்டுப்போவார்." நிதானமாக பேசிய சுனில், தன் தலைமுடியை கோதி பின்னால் தள்ளிக்கொண்டான்.

"தேங்க்யூ வெரிமச் சுனில். ஒரு உண்மையான ஃப்ரெண்டா நீங்க என்னை கய்ட் பண்ணியிருகீங்க. லெட் மி சின்சியர்லி டிரை யுவர் அட்வைஸ்." சுகன்யா எந்த தயக்கமும் இல்லாமல், செல்வாவின் இண்டர்காம் நம்பரை அழுத்த ஆரம்பித்தாள்.

"மேடம், செல்வா சார் இன்னும் ஆஃபிசுக்கு வரலீங்க. அவர் செல்லுல டிரை பண்ணுங்க. ஆமாம். நீங்க யார் பேசறீங்க?" செல்வாவின் அட்டெண்டண்ட் நல்லத்தம்பி பதில் கொடுத்தான்.

"நல்லத்தம்பி... நான் சுகன்யா பேசறேன்..." சுகன்யா போனை கட் பண்ணினாள். சாவித்ரி அறைக்குள் நுழைந்து தன் சீட்டில் உட்கார்ந்தாள்.

"சுகன்யா, உங்களை நான் இன்னைக்கு சிரிச்ச முகத்துல பாக்கணும்ன்னு நினைச்சேன். பட் அயாம் அன்லக்கி." சுனில் மென்மையாக சிரித்தான். 
சுகன்யா, சுனிலுக்கு பதிலேதும் சொல்லவில்லை. தன் மணிக்கட்டைத் திருப்பி, வாட்சில் நேரத்தைப் பார்த்தாள். மணி பத்தே முக்கால் ஆகிக்கொண்டிருந்தது. சுகன்யா வெள்ளிக்கிழமையன்று பிறந்தவள்.

சுகன்யாவின் ஜாதகத்தில் ராகு தன்னுடைய எதிரியின் கட்டத்தில் உட்கார்ந்திருந்தான். சுகன்யாவுக்கு ராகுவின் புக்தி நடந்துகொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை, காலை பத்தரை மணியிலிருந்து ராகு தன் ஆதிக்கத்தை தொடங்குகிறான். கோச்சாரத்திலும் ராகு சுகன்யாவின், சந்திரனிலிருந்து எட்டாம் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான்.

சுகன்யாவுக்கு தான் கற்றுக்கொடுக்க வேண்டிய “பொறுமை” என்னும் பாடத்தை, நாவடக்கம் என்னும் அரிய உண்மையை, அவளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கியதை உணர்ந்து, ராகு தன் வேலையை ஆரம்பித்தான்.

சுகன்யாவின் முகத்தையே மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான் சுனில். ஒரு அசாதாரணமான அமைதி அவள் முகத்தில் குடியேறியிருந்தது. சாவித்திரியின் முன்னால் சென்று அமர்ந்தாள் அவள்.

"குட்மார்னிங் மேம். கோபாலன் சார், என்னை அக்கவுண்ட்ஸ் ஆஃபிசுக்கு போயிட்டு வர சொன்னார்."

"ஆமாம்டீயம்மா. நேத்து போன் வந்திச்சி. ஒரு வாய் தண்ணியை குடிச்சுட்டு, நானே சொல்லணும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ரெண்டு அஃபீஷியல் லெட்டர்ஸ் குடுக்கறேன். அதுகளையும் பர்சனலா நீ தியாகராஜன்கிட்டே குடுத்துடறீயா?" சாவித்திரி வாட்டர் பாட்டிலிலிருந்து நேரடியாக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தாள்.

"ஷ்யூர் மேடம்."

"அடுத்த வாரம் நான் ரிலீவ் ஆகறேன்." சுகன்யா தன் கன்னத்தை தடவிக்கொண்டாள்.

"ம்ம்ம்..." சாவித்திரி டவலால் தன் நெற்றி வியர்வையைத் நிதானமாகத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

"அக்கவுண்ட்ஸ் பீப்பிளை மிஸ்டர் சுனிலுக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணணும். ஸோ... இவரை என்கூட அழைச்சிட்டுப் போகலாம்ன்னு நினைக்கறேன். நீங்க பர்மிஷன் குடுக்கணும்." சுகன்யா மெல்லிய குரலில் பேசினாள்.

"பேஷா அழைச்சிண்டு போடீயம்மா. நீ எங்க வேணா போ. யார்கூட வேணா போ. எப்ப வேணா திரும்பி வா. இதுல நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? கோபாலன்தான் இந்த ஆஃபீசுக்கு அடுத்த சீப். அவனோட ஆசீர்வாதம் உனக்கு பூரணமா இருக்கும் போது, நீ என்ன வேணா பண்ணலாம்? இதுக்கெல்லாம் என் பர்மிஷன் உனக்கெதுக்கு?" அவள் குரலில் அளவுக்கு அதிகமான நக்கல் இருந்தது.

சாவித்திரிக்கு கூடியவிரைவில் மாற்றல் உத்திரவு வரப்போகிறது என்ற தகவலை அன்று காலைதான் கோபாலனின் பர்சனல் அஸிஸ்டெண்ட் அவளுக்கு சொல்லியிருந்தான். கோபாலன், தன்னை தன் டிவிஷனில் நிறுத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிந்ததிலிருந்து, அவளுக்கு அவர் மேல், காலையிலிருந்தே, அர்த்தமில்லாமல் ஒரு எரிச்சல் எழுந்து கொண்டிருந்தது. எதையும் யோசிக்காமல், நேரம் காலம் பார்க்காமல், தனக்கு கோபாலன் மீது இருந்த எரிச்சலை, கோபத்தை, வெறுப்பை, அவள் ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த சுகன்யாவின் மீது திருப்பிவிட்டாள்.

அடுத்தவர்களின் உணர்வுகளை கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல், தன் எதிரில் இருப்பவர்களை, கிள்ளுக்கீரையாக எடுத்தெறிந்து பேசும் சாவித்திரியின் வழக்கத்தைப்பற்றி சுகன்யாவுக்கு நன்றாகத்தெரியும். சாவித்திரியின் கிறுக்குத்தனமான, கிண்டல் பேச்சுக்களுக்கு, சுகன்யா எப்போதுமே மதிப்பு கொடுத்ததில்லை. ஆனால் அன்று சுகன்யா இருந்த நிலையில், எரிச்சலும், கோபமும், அவள் அடிவயிற்றிலிருந்து பற்றிக்கொண்டு கிளம்பின. அவள் தன் பொறுமையை சட்டென இழந்தாள்.

நானும் ரொம்பப் பொறுமையா இருக்கேன். இந்த நாய் தன் மனசுக்குள்ள என்ன நினைச்சுக்கிட்டு இந்த மாதிரி என்னை தப்பு தப்பா பேசறா? இவளும் ரெண்டு பொண்ணைப் பெத்தவதானே? இவ பொண்ணுங்களை யாராவது இப்படி இழிவா பேசினா, இவ சும்மா இருப்பாளா? சுகன்யா மனதுக்குள் குமைந்தாள். ராகு தன் வேலை சுலபமாக முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டிருந்தான். 
எதைச்செய்யவேண்டாமோ, எதைச்செய்யக்கூடாதோ, அதை செய்ய உற்சாகப்படுத்துவதே ராகுவின் வேலை. கிரகங்கள் மனிதனின் இயல்பான குணங்களை நேரான, அல்லது தவறான வழியில் தூண்டி அவர்களை ஒரு இக்கட்டான நிலையில் தள்ளி சோதிக்கின்றன. புத்தியுள்ளவன் இந்த சோதனையில் வெற்றி பெறுகிறான். பொறுமையில்லாதவன், துன்பத்தை அனுபவிக்கிறான். கிரகங்கள் துன்பத்தையோ, இன்பத்தையோ தாங்களாக தருவதில்லை. மனிதனே, இன்பத்தையும், துன்பத்தையும் நோக்கி, தான் செய்யும் காரியங்களால், அதன் பலன்களை அடைவதற்கு ஓடுகிறான்.

கண்ணு... சுகன்யா... கொஞ்சநாளைக்கு, வெள்ளிக்கிழமையிலே, ராகு காலத்துலே, யார்கிட்டவும் தவறா எதையும் பேசிடாதே. யாராவது உன்னை தப்பாவே பேசினாலும், வேணும்னே சண்டைக்கு இழுத்தாலும், உன் பொறுமையை நீ இழந்துடாதே - தாத்தா சிவதாணு அவளிடம் சொல்லியிருந்தார். சுகன்யாவுக்கு அன்று வெள்ளிகிழமை என்பது மறந்து போயிருந்தது.

"நீ எங்க வேணா போ... யார்கூட வேணா போ..." இதுக்கு என்ன அர்த்தம்..? இவ எனக்கு ஆஃபிசுல சீனியர்... இவ என்னை விட வயசுல மூத்தவ... அதுக்காக நாக்குல நரம்பில்லாம எதை வேணா என் கிட்ட பேசிடலாமா? சுகன்யாவால், அன்று தனக்கு எழுந்த கடுமையான எரிச்சலை அடக்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் மேலும் பேசுவதற்கு ராகு அவளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.

"வாட் யூ மீன் மேம்? வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங் டு மீ?" சுகன்யா விருட்டென சீறினாள்.

சாவித்திரி சற்று அதிர்ந்துதான் போனாள். சுகன்யாவின் அந்த திடீர் சீறலை, கோபத்தை சாவித்திரி எள்ளளவும் எதிர்பார்க்கவேயில்லை. தான் பேசிய வார்த்தைகளில் இருந்த எகத்தாளம், கடுப்பு, எரிச்சல், எல்லாமே அவளுக்கு புரிந்திருந்தது. ஆனால் தன் காரியத்துக்கான பலனை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் இங்கு பரிதாபமான உண்மை.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற தன்னுடைய வழக்கப்படி, எல்லோரிடமும் கிண்டலாக பேசுவது போல், தன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத, அடக்க ஒடுக்கமான சுகன்யாவிடம், உண்மையான ஒரு அரசு ஊழியரிடம், அலுவலகத்துக்குள், அன்று அனாவசியமாக பேசிவிட்டதை நினைத்து ஒரு கணம் அவள் தன் மனதுக்குள் வருந்தினாள். அவள் முழுமையாக தன் தவறை உணர்ந்துகொள்வதற்குள், சுகன்யா தன் ஆயுதத்தை அவள் மேல் எய்துவிட்டாள். ஆயுதமும் சாவித்ரியை அவளுடைய பலவீனமான இடத்தில் தாக்கி காயப்படுத்திவிட்டது.

"ஏண்டீ சுகன்யா நீ நல்லப்பொண்ணாச்சே? நீ எதுக்குடீ இப்ப எரிச்சல் படறே? உடம்பு கிடம்பு சரியில்லையா உனக்கு? ஆத்துலேருந்து பில்டர் காஃபி கொண்டு வந்திருக்கேன். நீ வேணா ஒரு முழுங்கு குடிக்கறீயா?" தன் அதிர்ச்சியை சமாளித்துக்கொண்டு, குரலில் சிறிது கரிசனத்தைப் பூசிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"எனக்கு உடம்பெல்லாம் சரியாத்தான் இருக்கு; உங்க பிளட் பிரஷரை நீங்க கொஞ்சம் கன்ட்ரோல்ல வெச்சிக்குங்க. இல்லேன்னா எல்லாருக்கும் கஷ்டமாப் போயிடும். வார்த்தைக்கு வார்த்தை என்னை உங்க பொண்ணுன்னு சொல்லிக்கறீங்களே?" சுகன்யாவுக்கு லேசாக மூச்சிறைக்க ஆரம்பித்தது.

"ஆமாம்டீ... இப்பவும் சொல்றேன். உன்னை நான் என் பொண்ணாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்." சாவித்திரிக்கு மெல்ல பிரஷர் ஏறிக்கொண்டிருந்தது. தலை சுற்ற ஆரம்பித்தது.



"நீ எங்கே வேணா போ... யார் கூட வேணா போ, எப்ப வேணா திரும்பி வான்னு", வெள்ளிக்கிழமை அதுவுமா நாக்குல நரம்பில்லாம, வாய்க்கு வந்தபடி என்னைப் பாத்து பேசறீங்களே, இப்படி பேசறதுக்கு உங்களுக்கு வெக்கமாயில்லே? ஒரு அம்மா ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?"

சுகன்யாவின் முகம் கோபத்தில் அடியோடு சிவந்து போயிருந்தது. தன்னுடைய உடல் நடுங்குவதை அவள் உணர்ந்த போதிலும், சாவித்திரியை இன்று ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என அவள் முடிவெடுத்து விட்டாள். அவளா முடிவெடுத்தாள்? முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது. அவள் செய்த ஒரே தவறு; அவள் தன் நிதானத்தை இழந்ததுதான்.

"சுகன்யா... நிறுத்துடி. அப்டீ நான் என்னடீ சொல்லிட்டேன் இப்ப? சும்மா நீ பாட்டுக்கு மேல மேல பேசிகிட்டே போறே? நான் பேசினது உனக்குத் தப்புன்னு பட்டா, அயாம் சாரீ" சாவித்திரி பதிலுக்கு பேசவேண்டுமென நினைத்து பேசினாளேத் தவிர அவள் மனசுக்குள் சிறிய பயம் முளைத்திருந்தது.

காரிடாரில் போய்க்கொண்டிருந்த கோபாலன் காதில், சுகன்யாவின் கோபமான குரல் விழுந்தது. சாவித்திரியின் நைச்சியமான பேச்சும் அவர் காதில் விழுந்தது. சுகன்யாவா இப்படி கூச்சல் போடறா? அவரால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. சட்டென அந்த அறைக்குள் நுழைந்த தன் மேலதிகாரியை சுகன்யா கவனிக்கவில்லை.

"மேடம்.. மைண்ட் யூர் லேங்வேஜ். இனிமே எங்கிட்ட நீங்க கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாயிருக்கும். என்னை போடீ.. வாடீன்னு பேசறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லே? உங்களுக்கும் உங்க ஆஃபிசருக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்; அந்த எரிச்சலையெல்லாம் நீங்க என்கிட்ட காட்டவேண்டிய அவசியமில்லே." சுகன்யா உறுமிகொண்டே தான் உட்கார்ந்திருந்த சேரை வேகமாக பின்புறம் உதறிவிட்டு எழுந்தாள்.

"ப்ளீஸ்... சுகன்யா... கூல்டவுன்... கூல்டவுன்... யூ ப்ளீஸ் கேரி ஆன் வாட் ஐ டோல்ட் யூ... மிஸ்டர் சுனில் யூ ப்ளீஸ் கோ வித் சுகன்யா. மிஸஸ் சாவித்ரி யூ கம் டு மை ரூம்." கோபலான் மிடுக்காக திரும்பி நடந்தார். 

சுகன்யா... 92

அறைக்குள் நுழைந்த செல்வாவை தன் ஓரக்கண்ணால் கவனித்த சுனில் சுகன்யாவின் கையை தன் கரத்திலிருந்து எந்தவித பரபரப்புமில்லாமல் நிதானமாக விடுவித்தான். சுகன்யாவின் முகத்தைப்பார்த்தான். அவள் முகத்திலும் பதட்டேமேதும் இல்லை என்பதை உணர்ந்து மனதுக்குள் நிம்மதியானான்.

ஆனால் தன்னை நோக்கிய செல்வாவின் முகம் வினாடிக்கும் குறைவான நேரத்துக்கு சட்டென மாறியதையும் அவன் கவனிக்கத்தவறவில்லை. சட்டென தன்னைச் சுதாரித்துக்கொண்ட சுனில் தன் சீட்டிலிருந்து எழுந்து செல்வாவை விஷ் செய்தான்.

"குட்மார்னிங் சார்..."

"குட்மார்னிங் மிஸ்டர் சுனீல்... ஹவ் ஆர் யூ?"

செல்வா தன் மனதுக்குள் விருப்பமேயில்லாமல், சுனிலுக்குப் பதிலளித்தான். அறைக்குள் வராமல் வாயிலிலேயே சில வினாடிகள் நின்ற செல்வா, மேற்கொண்டு எதுவும் பேசமால் அங்கிருந்தே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

"செல்வா... ஒன் செகண்ட்" சுகன்யா அவன் பின்னால் வேகமாக ஓடினாள்.



'சுகன்யா நீங்க மிஸ்டர் சுனிலோட பிஸியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நீங்க ஃபிரீ ஆனதும், கேன் யூ கால் மீ ப்ளீஸ்?" செல்வா அறைவாசலில் நின்றவாறே முகத்தில் ஒரு ஏளனப்புன்னகையுடன் பேசினான். அவன் பேசியதைக் கேட்ட சுனில் ஒரு நொடி தனக்குள் அதிர்ந்தபோதிலும், தன் அதிர்ச்சியை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

"அயாம் நாட் பிஸி... நீ எதுக்கு வந்தேன்னு சொல்லாமலேயே திரும்பிப் போனா என்ன அர்த்தம்?" செல்வாவை நெருங்கிவிட்ட சுகன்யா மெல்லியக்குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

"நான் என்ன சொல்லணும்ன்னு எதிர்பாக்கறே நீ?" செல்வாவின் குரலில் கேலியிருந்தது.

"நீ ஏதோ சொல்லவந்தேன்னு நான் நினைச்சேன்.."

"உன்னைப்பாக்க நான் உன் ரூமுக்கு வரக்கூடாதா? இல்லே வர்றதுக்கு முன்னாடீ உங்கிட்ட சொல்லிட்டுத்தான் வரணுமா?"

"என்ன ஆச்சு செல்வா உனக்கு? நீ ஏன் இப்டீல்ல்லாம் பேசறே?" சுகன்யாவின் குரலில் லேசான நடுக்கமிருந்தது.

"எனக்கு எதுவும் ஆகலே மேடம்... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..?"

"அப்ப நான் மாறிட்டேனா?"

சுகன்யாவின் குரல் தழுதழுக்க ஆரம்பிதது. அவள் கண்கள் இலேசாக கலங்கியது. இப்பல்லாம் எனக்கு ஏன் சட்டு சட்டுன்னு அழுகை வருது? சுகன்யா தன்னை கேட்டுக்கொண்டாள்.

"திஸ் யூ நோ பெட்டர் தேன் மீ..." சுகன்யாவை சீண்டிவிட்டோம் என்கிற திருப்தி அவன் கண்களில் நிலவியது.

"செல்வா... பிளீஸ்... என்னைக் கொல்லாதே?"

"உன்னை கொல்றதுக்கு நான் யாரு?"

"எனக்குத் தலை வலி உயிர் போகுது செல்வா. கேண்டீனுக்கு போகலாம் வா. எனக்கு காஃபி குடிச்சே ஆகணும். வில் யூ கம் வித் மீ?" சுகன்யா அவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள்.

"என்னோட நீ மட்டும்தானே வருவே?"

"பின்னே?"

"இல்லே ஒருவேளை உனக்கு ஒரு எடுபிடி கிடைச்சிருக்கானே; அவனும் நம்மகூட வருவானோன்னு நினைச்சேன்." செல்வாவின் முகத்தில் இப்போது ஒரு கூரூரப்புன்னகை நிலவுவதாக சுகன்யா நினைத்தாள்.

"செல்வா.. ப்ளீஸ்..." செல்வாவின் முழங்கையை இறுக்கமாகப் பிடித்த சுகன்யா அவனை இழுத்துக்கொண்டு கேண்டீனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

*****

இங்க என்ன நடந்து போச்சுன்னு நினைச்சு, இப்ப இவன் சில்லியா தன் லவ்வர் கிட்ட பிஹேவ் பண்றான்? நாங்க என்ன ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிக்கிட்டு முத்தமா கொடுத்துக்கிட்டு இருந்தோம்?

லவ் பண்ற ஸ்டேஜ்லேயே இவனுக்குத் தன்னை சின்சியரா காதலிக்கற பிகரு மேலே நம்பிக்கையில்லையே? இந்தக் கேணயன்ல்லாம் எப்படி கடைசீ வரைக்கும் தன்னை கல்யாணம் பண்ணிக்கப்போறவளை சந்தோஷமா வெச்சிருக்கப்போறானுங்க? ஆனா பஜ்ரங்பலி இவனை மாதிரி மொக்கைங்களுக்குத்தான் சுகன்யா மாதிரி டீசன்டான, அழகான, புத்திசாலியான, பொண்ணுங்களை கோத்துவுடறான்? சுனில் மனதுக்குள் சலித்துக் கொண்டான்.

செல்வா, சுகன்யாவை பாக்க வந்தாலும் சரி; நான் அவன் ரூமுக்கு அஃபீஷியலா போனாலும் சரி; ஏன் என்னை அலட்சியப்படுத்தறான்? எப்பவுமே ஒரு மாதிரி திமிராப் பேசறானே? ஆமாம். இவனுக்கு என்னைப்பத்தி என்னத் தெரியும்? இவன் மயிரான் என்னைப்பத்தி என்ன வேணா நினைச்சுக்கிட்டு போகட்டும். சுகன்யா நோஸ் மீ வெல்.

சுகன்யாவை நான் மயக்கிடுவேன்னு இந்த கம்மினாட்டி செல்வா நினைக்கிறானா? என் பர்சனாலிட்டியைப் பாத்து பயப்படறான் போல இருக்கு. நான் சிரிச்சி சிரிச்சி பேசறதுனால, சுகன்யாதான் என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாளா? இவன் என்னை நம்பாம போகலாம். ஆனா இவன் லவ்வரை இவன் நம்பணுமில்லே. ஹீ ஈஸ் ரியலி எ ஃபூல்.

சுகன்யாவுக்குத்தான் எவ்வளவு சென்ஸ் ஆஃப் ஹூயுமர்? மூட் அவுட்டாயிருந்த சுகன்யாவை, என் கலீக்கை, நான் சிரிக்கவெச்சேன். பதிலுக்கு அவ ஃப்ரெண்ட்லியா என் தோளை தட்டினா? இட் ஈஸ் அ சிம்பிள் மேட்டர். அவ்வளவுதானே? சுகன்யா மாதிரி ஒரு லேடிக்கு இப்படி ஒரு லவ்வரா?

"செல்வா மஸ்ட் பீ அன் இடியட்...?" தன் மனதுக்குள் சிரித்துக்கொண்ட சுனில், நீளமாக தன் உதட்டிலிருந்து ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

இரண்டு நிமிடம் தன் சீட்டிலேயே ஒருவிதமான குற்ற உணர்வுடன் உட்கார்ந்திருந்தான் சுனில். காலையில் அவன் அலுவலகத்துக்குள் நுழைந்த போது தன் மனதில் இருந்த உற்சாகம், அமைதி இரண்டுமே இப்போது காணாமல் போயிருப்பதாக அவன் உணர ஆரம்பித்தான். தன் இருகைகளையும் தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறித்தான்.

சாவித்ரி வேர்க்க விறுவிறுக்க அறைக்குள் நுழைந்தாள்.

"குட்மார்னிங் மேடம்" சுனில் இயந்திரமாக அவளை நோக்கி புன்னகைத்தான். சாவித்ரி, தன் டிராயரை இழுத்தாள். அதனுள்ளிருந்து அழுக்காக இருந்த ஒரு சிறிய வெள்ளை டவலால் தன் முகத்தை துடைத்துக்கொண்டிருந்தாள். அழுக்கான டவல் மேலும் அழுக்காகியது.

சுனில், தன் டேபிளின் மேல் கிடந்த சுகன்யாவின் சுத்தமான கர்சீஃபை ஒரு முறை வெறித்து நோக்கினான். எழுந்து அறைக்கு வெளியில் வந்தான். கேன்டீனை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தான். 

"இரண்டு பஜ்ஜி. இரண்டு காஃபி" சுகன்யா ஐம்பது ரூபாய் தாளை எடுத்து கவுண்டரில் நீட்டினாள்.

"சுகன்யா வெயிட்... எனக்கு பஜ்ஜி வேண்டாம். மெது வடை வேணும்."

செல்வா பஜ்ஜியைத்தான் எப்போதும் விரும்பி சாப்பிடுவான். அவன் மறுப்பைக்கேட்டதும், சுகன்யாவின் விழிகள் விரிந்தன. புருவங்கள் உயர்ந்தன. சுகன்யாவும், செல்வாவும் கேண்டீனை விட்டு வெளியில் வந்தார்கள். ஒரு மரத்தடியில், புல்தரையில் எதிரெதிராக உட்கார்ந்துகொண்டார்கள்.

"செல்வா... உனக்கு பஜ்ஜிதானே பிடிக்கும்?"

"யெஸ்... பிடிச்சுது. ஆனா இப்ப பிடிக்கலை. நேத்துவரைக்கும் எனக்கு பிடிச்சதெல்லாம் இன்னைக்கும் எனக்கு பிடிக்கணும்ன்னு என்ன அவசியம் இருக்கு?" செல்வா மெல்ல சிரித்தான். சிரிப்பதாக நினைத்தான். அவன் சிரிப்பில் சிடுசிடுப்பின் சாயை இருப்பதை சுகன்யா உணராமலில்லை.

"ஐ சீ.." சுகன்யாவின் வாயிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை.

சற்று நேரம் அவர்கள் இருவருக்குமிடையில் இறுக்கமான மவுனம் நிலவியது. இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், தங்கள் கையிலிருந்த காஃபியை கடனே என உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். சுகன்யா தன் கையிலிருந்த பேப்பர் கிளாஸை தரையில் வைத்தாள். தன் உதட்டை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

"செல்வா... உனக்கு பஜ்ஜியை பிடிக்கலேன்னா அது பெரிய விஷயம் இல்லே. நேத்து வரைக்கும் என்னை உனக்கு பிடிச்சிருந்தது. இன்னைக்கு உனக்கு என்னை பிடிக்குதா? இது ரொம்ப ரொம்ப முக்கியம். ஆர் யூ ஸ்டில் லவ்விங் மீ? ஆர் யூ ஷ்யூர் அபவுட் யுவர் லவ்." சுகன்யாவின் முகத்தில் உணர்ச்சிகள் இல்லை.

சுகன்யாவின் அப்பட்டமான, ஒளிவு மறைவில்லாத கேள்வியை செல்வா சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகத்தில் எழுந்த சுருக்கம் தெளிவாக சொல்லியது.

"நானும் இந்த கேள்விக்கான பதிலைத்தான் ஒரு வாரமா தேடிகிட்டு இருக்கேன்."

"நமக்குள்ள இந்த கேள்வியும் பதிலும் நிஜமாவே தேவைதானா? சுகன்யாவுக்கு சற்றுமுன் குடித்த காஃபி தொண்டையில் கசப்பது போலிருந்தது. எச்சிலை மெல்ல விழுங்கினாள் அவள்.

"சுகன்யா... உன்னை நான் ஏன் காதலிக்க ஆரம்பிச்சேன் தெரியுமா?"

"சொல்லு..."

"நீ அமைதியா இருந்தே. உன் கிட்ட ஆரவாரமான பேச்சோ, சிரிப்போ எப்பவும் இருந்ததேயில்லை. எப்பவும் தனியாத்தான் இருப்பே. யார்கிட்டவும் தேவையில்லாம நீ பேசினதே கிடையாது."

"சுத்தி வளைச்சுப் பேசாதே செல்வா. நேத்து நான் என் அத்தான்கிட்ட பேசினது உனக்குப்பிடிக்கலே. நீ என் ரூமுக்குள்ள வர்றதுக்கு முன்னாடி என் கலீக் சுனிலோட நான் சாதாரணமா சிரிச்சி பேசிகிட்டிருந்தேன். அதை நீ விரும்பலே."

"நேத்து என் அத்தானை நீ இன்ஸல்ட் பண்ணே? இன்னைக்கு சுனிலை இன்ஸல்ட் பண்ணே? ஆனா ஒரு விஷயத்தை நீ மறந்துட்டே."

"என்னன்னு அதையும் சொல்லிடு..."

"நீ அவங்களை மட்டும் தேவையே இல்லாம அவமானப்படுத்தலே... என்னையும் தான் பண்றே.." தன் மனதில் இருப்பதை அவனுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும் என அவள் முடிவெடுத்துவிட்டாள்.

"இன்னும் எதாவது சொல்ல வேண்டியது பாக்கியிருக்கா?" செல்வா தன் கையிலிருந்த பாதி காஃபியை ஒதுக்கிவைத்தான். தன் உதடுகளைத் துடைத்துக்கொண்டான்.

"உன்னைத்தவிர வேறு எந்த ஆம்பிளையோட நான் பேசறதும், சிரிக்கறதும் உனக்குப்பிடிக்கலே. இதானே விஷயம்?" சுகன்யா தாழ்ந்த குரலில் பேசினாலும், ஒரு தீர்மானத்துடன் பேசிக்கொண்டிருந்தாள்.

"வெல்... யூ ஆர் அப்சொல்யூட்லி ரைட். யெஸ்... நீ சம்பத்தோட பேசறது எனக்கு பிடிக்கலே. இப்ப நீ சொல்றமாதிரி சுனிலோட பேசறதும் பிடிக்கலே."

"ஏன்?"

"சம்பத் உனக்கும் எனக்கும் நடுவுல வெச்ச ஆப்பைப் பத்தி உனக்குத் தெரியாதுடீ... ஐ ஹேட் ஹிம். என் காதலுக்கு நடுவுல வர்ற யாரையும் எனக்கு பிடிக்கலே. எனக்கும் உனக்கும் நடுவுல வர்ற யாரையும் எனக்கு பிடிக்கலே." செல்வாவின் குரலில் சூடு ஏறியது.

"செல்வா... சம்பத் தான் பண்ணத்தப்புக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டதும் எனக்குத் தெரியும். நீ அதை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டியே?" அவள் முகத்தில் சட்டென ஒரு புன்னகை எழுந்து மறைந்தது.

"ஓ... அந்த பொறுக்கி நாய்... என்கிட்ட மன்னிப்பு கேட்டதை உன்கிட்ட சொல்லி, உன் பார்வையில, உன் மதிப்புல அவன் பெரிய மனுஷனாயிட்டானா? அவன் உன்கிட்டவும் மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதனால அவன் உனக்கு என்னை விட முக்கியமா போயிட்டானா? என் உணர்வுகளை விட அவன் உன் கிட்ட சொன்ன கதையும், உன் கிட்ட கேட்ட மன்னிப்பும் உனக்கு பெரிசா தெரியுதா?"

"எனக்கும் உணர்வுகள் இருக்கு செல்வா... அதை நீயும் மதிக்க வேணாமா?"

"என் உணர்வுகளுக்கு நீ முதல்லே மதிப்பு குடு... உனக்கு மதிப்பு தன்னாலே கிடைக்கும்..." செல்வாவின் குரலில் ஆண் எனும் ஆணவம் தெறித்தது.

"செல்வா... சம்பத்தைப்பத்தி உனக்கு தெரிஞ்சதை விட எனக்கு அதிகமாத் தெரியும். யார்தான் தப்பு பண்ணலே? நீ தப்பு பண்ணதேயில்லையா? இனிமே என் அத்தானைப்பத்தி பேசும் போது நீ கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாருக்கும்."

"அயாம் சாரீ மேடம்... நான் என்னத் தப்பு பண்ணேன்? இல்லே பண்றேன்?"

"உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கற என்னை நீ சந்தேகப்படறியே? என் நடத்தையை நீ சந்தேகப்படறியே? இதுக்கு மேல வேற எந்த தப்பை நீ பண்ணணும்?"

"சுகன்யா... தன் லவ்வருக்குன்னு ஒருத்தன் ஆசை ஆசையா வாங்கிக்கொடுத்த கைக்குட்டையை இன்னொருத்தன் மோந்து பாக்கறது அவனுக்கு சுத்தமா பிடிக்காது? உன் காதலனோட மனஉணர்வை நீ முதல்லே புரிஞ்சுக்கோ..."

"செல்வா.."

"தன் காதலி இன்னொருத்தன் தோள்லே கையை போட்டுக்கிட்ட நிக்கறதை எந்த மானமுள்ள ஆம்பிளையாலும் பொறுத்துக்க முடியாது." செல்வாவின் முகம் சிவந்து போயிருந்தது.

"செல்வா... அங்கே என்ன நடந்திச்சின்னு முழுசா தெரிஞ்சுக்காம கன்னாபின்னான்னு பேசாதே... சுனில் ஒரு பக்கா ஜெண்டில்மேன். உன் காதலியை, என்னை நீ மட்டமா எடை போடாதே?"

"நீயும் சம்பத்தும் பேசினதை என் காதாலே கேட்டேன். நீயும் சுனிலும் கொஞ்சி விளையாடிக்கிட்டு இருந்ததை என் கண்ணாலப் பாத்தேன்..."

சுகன்யாவின் செல் ஒலித்தது. சம்பத் லைனில் வந்து கொண்டிருந்தான். சுகன்யாவும் தன் மனதுக்குள் ஒரு முடிவு எடுத்துவிட்டாள். பதட்டமில்லாமல் செல்லை ஆன் செய்தாள்.

"சொல்லுங்க அத்தான்... நேத்தே உங்களுக்கு போன் பண்ண நினைச்சேன். முடியலே. நேத்து ராத்திரியெல்லாம் தூங்கவேயில்லை நான். "

"நானும்தான் தூங்கலே சுகன்யா" சம்பத்தின் குரலில் இருந்த துக்கம் அவள் காதில் இடியாக இறங்கியது.



"அத்தான்... ஃப்ர்ஸ்ட் ஆஃப் ஆல், அக்சஃப்ட் மை அன் கண்டீஷனல் அப்பாலஜீஸ். நேத்து செல்வா எக்குத்தப்பா பேசினது உங்க காதுல விழுந்திருக்கலாம். அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்."

"சுகன்யா... திரும்பவும் சொல்றேன்... என்னைப்பத்தி எவன் கிட்டவும் நீ பேசவேண்டிய அவசியமில்லே." செல்வா அடித்தொண்டையில் கூவினான்.

"அத்தான்... நான் ரெண்டு செகண்ட்ல உங்களை நான் கூப்பிடறேன்.. பிளீஸ்..." சுகன்யா லைனை கட் செய்தாள்.

"செல்வா இது ஆஃபீஸ். ஒரு பொது இடத்துல நாம உக்காந்து இருக்கோம். நான் ஒரு கண்ணியமான பொம்பளை. இது உன் வீடு இல்லே. நாகரீகமில்லாமே நாலு பேரு என்னைத் திரும்பி பாக்கற கத்தாதே? பிஹேவ் லைக் எ ஜெண்டில்மேன்."

சுகன்யாவின் கண்களில் பெண்மைக்கே உரிய பிடிவாதம் அவள் முகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. குரல் தீர்க்கமாக வந்தது. இதுவரை இல்லாத ஒரு வெறுப்பு அவள் கண்களில் குடியேறியிருந்தது.

"சுகன்யா... திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்... யூ கோ டு ஹெல்... அயாம் லீஸ்ட் பாதர்ட் அபவுட் யூ அண்ட்... அண்ட்... "

செல்வா தன் கையிலிருந்த பாதி வடையை வீசி தூரமாக எறிந்தான். வாயில் மென்றுகொண்டிருந்த பாதி வடையையும் 'தூ.." வென துப்பினான். கோபம் விஷத்தைப்போல் அவன் தலைக்கேறிக் கொண்டிருந்தது. அவன் பேச நினைத்ததை பேசமுடியாமல், அவன் சொல்லவந்ததை முழுவதுமாக சொல்ல முடியாமல், விருட்டென எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

சுகன்யாவின் கண்கள் பனித்தன. 

சம்பத்... அப்ப நாங்க கிளம்பறோம். ட்ரெய்னுக்கு நேரமாவுதே, எழுந்திருமா ராணீ?" நல்லசிவம் தன் பையை தோளில் மாட்டிக்கொண்டார்.

"அப்பா... ஸ்டேஷன் வரைக்கும் நானும் வர்றேன். உங்களை சீ ஆஃப் அனுப்பிட்டு அங்கேருந்தே என் ஆஃபீசுக்கு போயிடறேன்.." சம்பத் தன் தாயின் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டான்.

ஸ்டேஷனுக்கு போகும் வழியில் ராணி தன் மகனிடம் ஏதும் பேசவில்லை. அவன் இடது கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டு மெல்ல வருடிக் கொண்டேயிருந்தாள். டாக்ஸியில் மவுனமாகவே அவர்கள் பயணம் செய்தனர். ட்ரெயின் பிளாட்பாரத்துக்குள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

"ஏண்டா... நேத்து நீ சுகன்யாகிட்ட மன்னிப்பு கேட்டியாமே? என்னடா விஷயம்?"

"அப்பா சொன்னாரா?" சம்பத் மெல்லியக்குரலில் சிரிக்க ஆரம்பித்தான்.

"கண்ணு... என்னடா நடக்குது உங்களுக்குள்ளே?"

"அம்மா... என்னை நம்புமா. நேத்து முதல் தடவையா சுகன்யாவுக்கு நான் போன் பண்ணப்ப செல்வா அங்கே இருந்திருக்கான். நான் சுகன்யாவோட பேசினது அவனுக்கு பிடிக்காம, அவன் ஏதோ அவகிட்ட கடுப்பா சொன்னான்."

"அவனைப் பொறுத்தவரைக்கும் அவன் பண்ணது சரிதானேடா? நீ ஏண்டா இந்த மாதிரி கண்டவன் முன்னால அவமானப்படறே?" ராணியின் முகம் தொங்கிப்போனது.

"விடும்மா... உன் காதலுக்காக நீ எவ்வளவு அவமானத்தை பொறுத்துக்கிட்டே?" சம்பத் சந்தோஷமாக சிரித்தான்."

"உன்னோடது ஒருதலைக்காதல்டா. இது எந்தவிதத்துலேயும் சரியில்லே? யாருக்கும் பிரயோசனமில்லே." நல்லசிவம் பெருமூச்சுவிட்டார்.

"சம்பத்து..."

"சொல்லும்மா..." சம்பத் தன் தாயை நெருங்கி நின்றுகொண்டான்.

"அப்ப இந்த பொண்ணு வீட்டுக்கு நான் என்ன பதில் சொல்றது?"

"அம்மா... என்னை தொந்தரவு பண்ணாதேன்னு உனக்கு நான் எத்தனை தடவை சொல்லணும்?"

"என் மனசு கேக்கலடா ராஜா. நீ சரீன்னு சொல்லுவேன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்தேன்டா..." ராணி ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தாள். ட்ரெயின் கிளம்பும் வரை சம்பத் தன் தாயின் அருகில் உட்கார்ந்துகொண்டு அவள் கரத்தை அன்புடன் வருடிக்கொண்டிருந்தான். 

"சுகன்யா... திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்... யூ கோ டு ஹெல்... அயாம் லீஸ்ட் பாதர்ட் அபவுட் யூ அண்ட்... அண்ட்... " என தன் வாய் குளற கோபமாக தன் காதலியிடம் உளறிவிட்டு வந்த செல்வா, அன்று இரவு தூக்கம் வராமல், தன் வீட்டு மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருந்தான்.

டேய் செல்வா... இந்த நிலைமை உனக்கு தேவையாடா? நீயெல்லாம் படிச்சவன். நேத்துதான், மீனாவால, ஒரு வாரத்துக்கு அப்புறம் சுகன்யா மூஞ்சியில சிரிப்பையே பாக்க முடிஞ்சுது. ஒரே நாள்லே இரக்கமேயில்லாமா, அவளை திரும்பவும் அழ வெச்சிட்டியேடா பாவி? நீயும் நிம்மதியா இருக்காதே? உன் பிகரையும் நிம்மதியா இருக்க விடாதே? உனக்கெல்லாம் ஒரு காதல் தேவைதானாடா? அவன் மனது அவனை இரக்கமில்லாமல் நக்கலடித்துக்கொண்டிருந்தது.

சுகன்யா என் வாழ்க்கைத்துணையாக ஆகப்போகிறவள். எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணுடைய மனசு, உடம்பு, அழகு எல்லாமே எனக்குத்தானே சொந்தம். என் ஒருவனுக்குத்தானே அவளிடம் முழுமையான உரிமையும், அதிகாரமும் இருக்கமுடியும்?

சுகன்யாவோட அழகை, இனிமையான பேச்சை, நட்பை அடுத்தவர்களுடன் எதற்காக நான் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அவளை எனக்கென நிச்சயம் செய்தபின், அவள் என் விருப்பப்படி நடக்க வேண்டுமென நான் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்? இந்த மிகச்சிறிய விஷயத்தை சுகன்யா ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாள். உன்னாலும் இதை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? செல்வா இலக்கண சுத்தமாக தன் மனதிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்.

மனசுக்கு ஏது இலக்கணம். அது அதன் போக்கில் அவனுக்கு பதில் கொடுத்தது.

டேய்... செல்வா... நீ நினைக்கறதெல்லாம் சரிதான்டா. ஒரு சின்ன விஷயத்தை புரிஞ்சுக்கோ? சுனில் யாருடா? சுகன்யாவோட கலீக். வேலை நேரத்துல அவ அவன் பேசித்தானே ஆகணும்? சுனிலோட, சுகன்யா சிரிச்சி பேசிட்டா, உன்னைவிட அவன் சுகன்யாவுக்கு முக்கியமாயிடுவானா? எதுக்குடா நீ கேனத்தனமா காலையில சுகன்யாகிட்ட கன்னாபின்னான்னு உளறினே?

"சுகன்யாவுக்கு என் மேல உண்மையான ஆசையிருக்குன்னா, அவ நான் சொல்றதை ஏன் கேக்கக்கூடாது? எனக்கு பிடிக்காதவங்ககிட்ட அவ ஏன் பேசணும்? பழகணும்? நான் அவளை எவ்வள லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதா? இருபத்து நாலு மணி நேரமும் நான் அவளைத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்."

"நிறுத்துடா உன் பீலீங்கை. அந்த பொண்ணுகிட்ட நீ இப்படியெல்லாம் பூச்சிக்காட்டலாம்; ஆனா உன் பருப்பு எங்கிட்ட வேவாது. உன் பேச்சைக் கேக்கற ஒரு அடிமைதான் உனக்கு வேணும்ன்னா, வேலைக்குப்போற ஒரு பொண்ணை நீ ஏண்டா காதலிச்சே?" அவன் மனம் அவனை கூறு போட ஆரம்பித்தது.

"ரெண்டு பேரு சம்பாதிச்சாத்தான் இப்ப காலத்தை தள்ளமுடியும்?"



"நீ ஆம்பிளைதானே? உன்னை நம்பி வர்றவளுக்கு நீதானேடா சோறு போடணும்? உங்கப்பனுக்கு இருந்த தைரியம் உனக்கு இருக்காடா? உங்கம்மாவை சவுகரியமா வீட்டுல உக்காரவெச்சி அவரு குடும்பம் நடத்தலே? உன்னைப்படிக்க வெக்கலே, உன் தங்கச்சியைப் படிக்க வெக்கலே; வீடு கட்டலே; கார் வாங்கலே; வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே ஏண்டா இப்படி இன்செக்யூர்டா ஃபீல் பண்றீங்க...?"

"அவரு காலம் வேற; இப்ப இருக்கற காலம் வேற; சுகன்யாவை சந்தோஷமா என்னால வெச்சுக்கமுடியாதுன்னுல்லாம் ஒண்ணும் இல்லே; நாட்டுல எல்லாப்பயலும் வேலை செய்யற பொண்ணைத்தான் சைட் அடிக்கறான். கல்யாணம் பண்ணிக்கறான். எல்லாத்துக்கும் மேல பொண்ணுங்களுக்கு வீட்டுல உக்கார புடிக்கலை. ஊரோட நானும் ஒத்து வாழவேணமா?"

'அப்ப வேலைக்கு போற பொம்பளைங்க, தங்களோட வாய்க்கு பூட்டு போட்டுகிட்டு சாவியை புருஷன் கிட்டவா குடுத்துட்டுப் போறாளுங்க?"

"ஓ.கே. ஓ.கே... இந்த லாஜிக்கெல்லாம் எங்களுக்கும் தெரியும்..."

செல்வா தன் மனதிடம் சிணுங்கினான். இங்கும் அங்கும் நழுவிக்கொண்டிருந்தான். சரிடா.. உன்னைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். கொஞ்சம் பொத்திகிட்டு நான் சொல்றதை கேளு. அவனுடைய மனம் அடுத்த அம்பை அவன் மேல் எறிந்தது. 


சுகன்யா... 91

நல்லசிவமும், ராணியும் சம்பத்தின் அறையில் ஒரு இரண்டு மணி நேரம் நிம்மதியாக தூங்கி எழுந்தார்கள். மாலை ஆறு மணியளவில் ராணி போட்டுக்கொடுத்த காஃபியை ருசித்து குடித்துவிட்டு நல்லசிவம் ஒரு அரை மணி நேரம் காலாற நடந்துவிட்டு திரும்பி வந்தபோது, ராணி சம்பத்தின் நண்பன் ரமேஷிடம் ஏதையோ சொல்லி சிரித்து சிரித்து கதை பேசிக்கொண்டிருந்தாள்.

சம்பத் தன் செல்லில் மூழ்கியிருந்தான். நல்லசிவம் வீட்டுக்குள் நுழைந்து லானில் நின்று கொண்டிருப்பதை கூட அவன் கவனிக்கவில்லை. தன் மகன் பேசிய கடைசி சில வார்த்தைகள் அவர் காதில் மிகத்தெளிவாக விழுந்தது. காதில் வந்து விழுந்த அந்த வார்த்தைகளை கேட்டதும் அவர் திடுக்கிட்டுப்போனார். தன் மகனின் தலையெழுத்தை நொந்துகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல், சம்பத்தின் அறைக்குள் சென்று மீண்டும் படுத்துக்கொண்டார்.

இரவு நேர உணவை மட்டும் தங்கள் வீட்டிலேயே சம்பத்தும், ரமேஷும் சமைத்துக்கொண்டார்கள். அன்று சமையலை ராணி கவனித்துக்கொண்டாள். ரமேஷும், ராணியும் சாப்பிடும் போதும் அரட்டையடித்துக்கொண்டே இருந்தார்கள். சம்பத்தும், நல்லசிவமும் அமைதியாக உண்டு முடித்தார்கள்.

"அப்பா... நீங்களும் அம்மாவும் என் ரூமுல படுத்துக்குங்க... நான் ரமேஷ் ரூம்ல தூங்கிக்கறேன்." ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு சம்பத் தன் நண்பனின் அறையை நோக்கி தளர்வாக நடந்தான். 



"என்னங்க தூங்கிட்டீங்களா?" ராணியின் கரம் நல்லசிவத்தின் வெற்று மார்பில் தவழ ஆரம்பித்தது.

"இன்னைக்கு உன் புள்ளையால எனக்கு சிவராத்திரிதான்" மெல்ல அவர் முனகினார்.

"ப்ச்ச்... என்னங்க... நானும் பாக்கறேன் சாயந்தரத்துலேருந்து ரொம்பவே டல்லா இருக்கீங்க..."

"என் மூஞ்சே அவ்வளதான்" மீண்டும் குரலில் உயிரில்லாமல் முனகினார். மனைவியின் கை தன் மார்பில் படர்ந்து விளையாடிக்கொண்டிருந்ததால், அதுவரை களைத்திருந்த அவருடைய மனமும் உடலும் சட்டென விழித்துக்கொண்டன.

"ஒரு பத்து நாளாயிருக்குமா?" மனசு விறுவிறுவென கணக்கு போடத்துவங்கியது.

"என் பக்கம் திரும்புங்களேன்.." கிசுகிசுத்த ராணி அவரை மெல்ல நெருங்கினாள். தன் வலது காலை நல்லசிவத்தின் இடுப்பில் போட்டுக்கொண்டாள். அவர் கழுத்தை வளைத்தாள். அவளுடைய ஈர உதடுகள் அவர் முகத்தில் வேகவேகமாக விளையாட ஆரம்பித்தன.

"என்னடிச் செல்லம்... மூட்ல இருக்கியா?" நல்லசிவத்தின் குரலில் ஏகத்திற்கு காதல் வழிந்தது.

"கேள்வி கேக்காதீங்க... சட்டுன்னு கிட்ட வாங்க ராஜா.. உங்க ராணி ஈஸ் இன் செமை மூட்.." ராணியின் வலது கரம் நல்லசிவத்தின் தண்டை வேட்டியோடு சேர்த்து இறுக்கிப்பிடித்தது. அவளுடைய விரலகள் அவரை மெல்ல இதமாக வருட ஆரம்பித்தன. நல்லசிவம் மெள்ள மெள்ள பருக்க ஆரம்பித்தார்.

"தேங்க்ஸ்ம்ம்ம்மா... மெதுவா உருவும்மா.... ம்ம்ம்.. அப்படியே என் மொட்டை மட்டும் நல்லா அழுத்தி விடேன்." நல்லசிவம் ராணியின் வாயைக் கவ்விக்கொண்டார். மனைவியின் உதடுகளை இதமாக மெல்ல ஆரம்பித்தார். அவருடைய இடதுகை ராணியின் மார்பை தடவ ஆரம்பித்தது. இருட்டில் ரவிக்கையின் கொக்கிகளை அவரால் விடுவிக்கமுடியாமல் தவித்தார்.

"லைட்டை போடேண்டீ..."

"வேண்டாங்க... புது எடங்க... வயசுக்கு வந்த பசங்க எதிர் ரூம்லேயே இருக்கானுங்க... இன்னும் பேச்சுக்குரல் கேக்குது..." ராணி அவரின் வேட்டியை அவிழ்த்துவிட்டு, கணவரின் பருத்த சுண்ணியை அழுந்த பிடித்து உருவிக்கொண்டிருந்தாள்.

"அப்ப இந்த சனியன் புடிச்ச ரவிக்கையை கழட்டிட்டு படுக்க வேண்டியதுதானே" நல்லசிவத்தின் கை அவள் மார்பை வெறியுடன் கசக்கிக்கொண்டிருந்தது.

"மெதுவாங்க..."

"அவுருடி சீக்கிரமா"

ராணியின் மேல் வெறிகொண்டவராக படர்ந்தார். ராணியின் கொழுத்த மார்புகள் அவர் மார்பில் அழுந்தின. அவள் முகமெங்கும் தன் முத்தங்களை மழையாக பொழிந்தார்.

"ஏன் உச்ச் உச்ச்சுங்கறீங்க.. குடுக்கறதை சத்தமில்லாம குடுங்களேன்.." தன் உதடுகளை அகலமாக விரித்தாள். அவர் உதடுகள் அவள் வாயில் சிறைபட்டன.

"முடியாதுடீ..." படமெடுத்த பாம்பு ராணியின் தொப்புளில் அழுந்தியது.

"சிவா... ஒரு செகண்டுடிச்செல்லம்..." ராணி அவரை தன் மேலிருந்து உருட்டித்தள்ளினாள். நொடிகளில் பிறந்த மேனியானாள். தன் கணவனின் பருத்த ஆண்மையை வெறியுடன் சுவைக்க ஆரம்பித்தாள்.

"ப்ப்ப்பா... ஆண்டவா..."

"இப்ப எதுக்கு அவனை கூப்படறீங்க..."

"அவன் கைலாசத்துல சரியா அசைஞ்சாத்தான் இங்கே உன் நாக்கே என் லிங்கத்துல சரியா அசையும்டீ.." மனைவியின் கூந்தலை இறுகப்பிடித்துக்கொண்டார்.

ராணி தன் நாக்கால் அவரை சுழற்றி சுழற்றி அடித்தாள். மெட்டை இதமாக கடித்தாள். தன் நுனி நாக்கால் அவரை வருடி வருடி சாகடித்தாள். அவரை சுவைத்துக்கொண்டிருந்த ராணி தன் நெற்றியில் வியர்த்தாள். மார்பில் வியர்த்தாள். அடிவயிற்றில் வியர்த்தாள். அந்தரங்கத்திலும் வியர்க்க ஆரம்பித்தாள். சட்டென விலகி மல்லாந்தாள்.

"சிவா... சீக்கிரமா உள்ளே வாங்களேன்..."

ராணி, தன் கணவனை தன் இரு கைகளாலும் வாரி தன் மார்பில் போட்டுக்கொண்டாள். தன் பருத்த தொடைகளை விரித்து உயர்த்தினாள். தன் சிவந்த செம்பருத்தியில், பருத்து கொழுத்திருந்த சிவத்தை புதைத்துக்கொண்டு தன் இடுப்பை வேகமாக மேல் நோக்கி உயர்த்தினாள்.

சிவா என ஆசையாக, செல்லமாக, அழைக்கப்பட்ட நல்லசிவம், அவளுள் வெறியுடன், வேகமாக, வெகு வேகமாக இயங்கினார். இருவரும் முனகினார்கள். மூச்சிறைத்தார்கள். ஏகத்திற்கு வியர்த்தார்கள். நல்லசிவம் மனசுக்குள் எண்ண ஆரம்பித்தார். ஒன்னு... ரெண்டு... அம்பது... அம்பத்தி மூனு... அய்ம்பத்து நால்ல்ல்லு... வெடித்தார்.. வழிந்தார்... ராணியின் மேல் தளர்ந்தார்.

"இப்ப சொல்லுங்க... ஏன் உங்க மூஞ்சி கடுவன் பூனையா இருக்கு?" மல்லாந்து கிடந்த தன் கணவரின் மார்பை அவர் வேட்டியால் துடைத்துகொண்டிருந்தாள் ராணி.

"நடந்துட்டு வந்தேன்.." சிவத்தின் கை ராணியின் புட்டத்தை வருடிக்கொண்டிருந்தது.

"இந்த வயசுல பின்ன ஓடவா முடியும்..." ராணி தன் மார்பை அவர் உதடுகளில் தேய்த்துக்கொண்டிருந்தாள்.

"உன் மேல படுத்துக்கிட்டு நீச்சலடிக்கறவன் ஓடமாட்டேனா?"

"சரி.. சரி... உங்க தப்பட்டையை அடிக்க ஆரம்பிக்காதீங்க..."

"பொத்துடீ... உன் புள்ளை சம்பத் மதியானம் என்ன சொன்னான்...?"

"அவன் ஏதோதோ சொன்னான்.. கொஞ்சம் சப்புங்களேன்.. காம்புல அரிக்குது..." ராணி தன் இடது முலையை அவர் வாய்க்குள் திணித்தாள். ராணியின் இலேசாக தொய்ந்திருந்த மார்புகனிகள் சிவத்தின் வாயில் மாறி மாறி வதைபட்டன. கருத்த காம்புகள் மெல்ல நிமிர ஆரம்பித்தன.

"என்னமோ சொல்ல வந்தீங்க..."

"நீதானேடி சப்ப சொன்னே... நான் அதை பண்றதா.. உன் கேள்விக்கு பதில் சொல்லவா?" முரண்டியது சிவம்.

"சொல்லுங்க... என்ன சொன்னான்?'

"சுகன்யாகிட்ட நான் பேசறதேயில்லன்னான்.."

"ஆமாம்... மெதுவா.. வலிக்குது..." சிவம் ராணியின் காம்புகளை உருட்டிக்கொண்டிருந்தார்.

"சாயந்திரம் நான் வீட்டுக்குள்ள நுழைஞ்சப்ப உன் பையன் சுகன்யாகிட்டத்தான் பேசிக்கிட்டு இருந்தான்..." ராணி சட்டென தன் மார்பை அவர் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள். அவர் மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

"போதுமா..."

"ம்ம்ம்..."

"உன்னை கொஞ்சம் நக்கி விடட்டுமா?"

"கொஞ்ச நேரம் போவட்டும்..." ராணியின் உதடுகள் சிவத்தின் மார்பில் புரண்டுகொண்டிருந்தன.

'சுகன்யா.. அயாம் சாரி.. யூ கேரி ஆன்.. பிளீஸ்... ரியலி அயாம் சாரி டு ஹேவ் டிஸ்டர்ப்ட் யூ... மை சின்சியர் அப்பாலஜிஸ் டு யூ...' இதுக்கு என்னடி அர்த்தம்?'

"புரியலீங்க..."

"சம்பத் அவகிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருந்தான்."

"ம்ம்ம்..."

"அவன் மூஞ்சி இருண்டு போய் இருந்திச்சி... அவன் குரல்லே சுத்தமா உயிரே இல்லே"

"ப்ச்ச்... இப்ப என்னங்க பண்றது?"

"என்னை ஏண்டி கேக்கறே?"

மவுனம் அந்த அறையில் கனத்தது. மின்விசிறி ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. சிவம் கொட்டக்கொட்ட விழித்துக்கொண்டிருந்தது. சிவத்தின் பாதி தன் அந்தரங்கத்தை திறந்து போட்டுக் கொண்டு சன்னமாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தது.

காலையிலிருந்தே அலுவலகத்தில் சுகன்யாவுக்கு வேலையே ஓடவில்லை. தன் கவனத்தை முழுமையாக எந்த வேலையிலும் அவளால் செலுத்த முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். கம்ப்யூட்டர் அவள் நினைத்ததற்கு மாறாக, அவள் செய்ய நினைப்பதுக்கு எதிராக இயங்கிக்கொண்டிருந்தது.

சாவித்திரி அன்று ஆஃபீசுக்கு இன்னும் வந்து சேராததால், இரண்டு நிமிடத்திற்கு ஒரு தரம் கோபலனிடமிருந்து வரும் கால்களையும், தன் சீட்டுக்கும் அவள் சீட்டுக்குமாக ஓடி ஓடி அட்டண்ட் செய்ததில் அவளுக்கு கால்கள் ஓய்ந்து போய்விட்டன.

சுகன்யா தன் சிஸ்டத்தை எரிச்சலுடன் அணைத்தாள். ரீபூட் செய்தாள். கடந்த வெள்ளிக்கிழமையன்று தானும் சுனிலுமாக தயார் செய்த பைல்லிஸ்டின் டேட்டாவை திறந்து ஒரு சிறிய மாற்றத்தை செய்து திரும்பவும் சேவ் செய்ய முயன்றாள். சிஸ்டம் அவள் செய்ய நினைத்ததை நிர்தாட்சண்யமாக மறுத்தது.

நேற்றைய தினம் மீனாவின் வீட்டில், சம்பத்துடன் தான் செல்லில் பேசிக்கொண்டிருந்தபோது, செல்வா நாகரீகமில்லாமல் நடந்துகொண்ட விதத்தையே சுகன்யாவின் மனம் திரும்ப திரும்ப நினைத்து வருந்திக்கொண்டிருந்தது.

நான் என் அத்தான் சம்பத்தோட பேசினது செல்வாவுக்கு ஏன் பிடிக்கலை? அவனுக்கு அது பிடிக்கலைன்னாலும், நிதானமா நான் பேசிமுடிச்சதுக்கு அப்புறம் என்கிட்ட சொல்லியிருக்கலாமே? பைத்தியம் மாதிரி கோவத்தோட கன்னாபின்னான்னு அவன் உளறினது அத்தானுக்கு கேட்டு அவரும் அப்செட் ஆயிட்டாரே?

என் அத்தான் சம்பத் எவ்வளவு டீசன்ட்னா மனுஷன்? சுகன்யா, உன்னை நான் அனாவசியமா தொந்தரவு பண்ணமாட்டேன்னு சுவாமிமலையில சொல்லிட்டுப் போன மனுஷன், ஒரு மாசத்துக்கு அப்புறம் நேத்துதான் முதல் தரமா போன் பண்ணார்?
இது செல்வாவுக்குத் தெரியுமா? என் செல்வாவை ஒரு இண்டீஸண்ட் ஃபெலோன்னு சம்பத் அத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கமாட்டாரா?

செல்வா என்னை மட்டுமா தப்பா நினைச்சான்? அவன் செய்ததுதான் சரிங்கற மாதிரி 'இதுதான் நான்னு', அகங்காரமா பெரிசா இங்கீலீஷ்லே பேசி சினிமாவுல வர்ற வில்லன் மாதிரி சிரிக்கிறான்? செல்வாவோட இந்த அகங்காரத்தைத்தான் என்னால சுத்தமா சகிச்சிக்கவே முடியலே?

செல்வாவின் நடத்தையால், சுகன்யாவுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலால், அவளால், முந்தின இரவு சரியாக தூங்க முடியவில்லை. தேவையான உறக்கம் இல்லாததால், அவள் கண்களில் மெலிதான வலியும், எரிச்சலும் இருந்து கொண்டேயிருந்தன.

லஞ்சுல மறந்துடாம அத்தானுக்கு போன் பண்ணி சாரி சொல்லணும். சுகன்யாவின் மனசு ஆஃபீஸ் வேலையிலும், தன் சொந்தப்பிரச்சனைகளிலும் செக்குமாடாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. 

"சுனோ நா சங்குமர்மர் கி ஏ மினாரே...
குச் பீ நஹி ஹை ஆகே துமாரே...
ஆஜ் சே தில்பே மேரே ராஜ் துமாரே...
தாஜ் துமாரே...!"

சுகன்யா தன் இடதுபுறம் திரும்பினாள். சுனில் பரத்வாஜ், கம்ப்யூட்டர் ஸ்கிரீனில், ஜாக்கி பாக்னானியும், நேகா ஷர்மாவும் தங்கள் கண்களில் பொங்கும் எல்லையில்லாத காதலுடன், ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருந்ததை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தான். கனவுலகில் மிதந்துகொண்டிருந்த சுனில், அர்ஜித்சிங்குடன் சேர்ந்து அந்தப்பாடலை மிக மிக இனிமையாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

டில்லிக்கு கிளம்பி போறதுக்கு முன்னாடி, இந்த வீக் எண்ட்க்குள்ள, பைல் லிஸ்ட் டேட்டா அப்டேஷனை நான் முடிச்சே ஆகணும்? சார்ஜ் ரிப்போர்ட்ஸ் பிரிபேர் பண்ணணும். இவென்ட்ரீஸ் தயார் பண்ணி முடிக்கணும். இப்படி ஆயிரம் வேலை தலைக்கு மேல குவிஞ்சிக்கிடக்கு. இந்த சுனிலை எனக்கு அஸிஸ்ட் பண்ணச்சொல்லியிருக்காங்க.

சாவித்ரி சீட்டுல இல்லேன்னதும், இவன் ஹாயா நேகா ஷர்மாவை சைட் அடிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான். இவனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? சுகன்யாவுக்கு அடிவயிற்றிலிருந்து எரிச்சல் கிளம்பியது.

"மிஸ்டர் சுனீல்... என்னப்பண்றீங்க நீங்க? இது ஆஃபீஸ்ங்கறது உங்களுக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும். சாவித்திரி வந்தாள்ன்னா என் கழுத்தைத்தான் அறுப்பா? நீங்களும் நானும் செய்து முடிக்க வேண்டிய ஆஃபிஸ் வேலைக்கு நான்தான் பதில் சொல்லியாகணும். நீங்க என்னடான்னா, ஊர் உலகத்தையே மறந்து பாட்டு பாடிகிட்டு உக்காந்து இருக்கீங்க?"

"கோச்சீக்காதீங்க மேம். இதுவரைக்கும், இந்த இரண்டு வாரத்துல, இந்த ஆஃபீஸ்ல என்னை மரியாதையா, ஒரு மனுஷனா நடத்தினது நீங்கதான். என்னை அதட்டாம இருந்த ஒரே ஆள் நீங்கதான்னு மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நான் கும்பிடற அந்த அனுமந்தனுக்கு இது பொறுக்கலை. அவன் வேலையை அவன் காமிச்சிட்டான்." சுகன்யாவிடம் பயப்படுவதுபோல் போலியாக அவன் நடித்தான்.



"சும்மா நடிக்காதீங்க நீங்க? இன்னைக்கு நம்ம டிவிஷன் டேட்டா ஏன் சர்வர்லே சேவ் ஆகவே மாட்டேங்குது? லாஸ்ட் ஃப்ரைடே இந்த பைல்லே நீங்கதானே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தீங்க?சீக்கிரமா எழுந்து வந்து இந்த பைல்லே என்ன ப்ராப்ளம்ன்னு கொஞ்சம் பாருங்க?"

"மேம்... நானும் காலையிலேருந்து பாக்கறேன். உங்களுக்கு என்னாச்சு? ஆர் யூ ஆல்ரைட்? உங்களுக்குத் தலை கிலை வலிக்குதுன்னா காஃபி ஆர்டர் பண்ணட்டுமா?" சுனில் மென்மையாக சிரித்தான்.

"எனக்கென்ன ஆச்சு... அயாம் ஆல்ரைட்? கேண்டீனுக்கு போற வழி எனக்குத் தெரியும். நீங்க உங்களை பாதர் பண்ணிக்க வேண்டாம். நான் சொல்றதை மட்டும் செஞ்சீங்கன்னா போதும்..."

"சாரி மேம்..." தன் சிஸ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்தினான். பென் டிரைவை உருவி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

சுகன்யா ரொம்ப சாஃப்டான பொண்ணு. ஹைலி டீசண்ட் கேர்ல். பாவம் இவளுக்கு இன்னைக்கு என்னப்பிரச்சனையோ? இன்னைக்கு கொஞ்சம் கடுப்படிக்கறா? சுனில்... அவ பேசறதை நீ சீரியஸா எடுத்துக்காதேடா..! 

"மிஸ்டர் சுனீல், ஐ திங்க் சிஸ்டத்துல ஏதோ வைரஸ் பிரச்சனையிருக்கு. ஐ.டி.க்கு போன் பண்ணி நம்ம டிவிஷன் சிஸ்டத்தையெல்லாம் ஒரு தரம் ஸ்கேன் பண்ணச்சொல்லுங்க." பதட்டத்துடன் பேசிய சுகன்யா தன் தலையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

"மேம்... எனக்கு நல்லாத்தெரியுது. நீங்க ஏதோ எரிச்சல்ல இருக்கீங்க? அந்த எரிச்சலை இந்த அப்பாவி மேல ஏன் காட்டறீங்க?" சுனிலின் முகத்தில் இன்னும் புன்னகை மிச்சமிருந்தது.

கடந்த இரண்டு வாரத்தில் சுகன்யா சுனிலின் நடவடிக்கைகளை அலுவலகத்தில் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். தன் வேலையில் அவன் எந்தக்குறையும் வைத்ததில்லை. எல்லோரிடமும் பணிவாக, இதமாக பேசினான். குறிப்பாக பெண்களிடம் மரியாதையாக நடந்துகொண்டான். பங்ச்சுவலாக ஆஃபிசுக்கு வந்து கொண்டிருந்தான். தேவையில்லாமல் தன் சீட்டை விட்டு நகருவதில்லை.

'நீட் அண்ட் கிளீன் பாய். எ தரோ ஜெண்டில்மேன்! சுனிலுக்கு சுகன்யா தன் மனதுக்குள் கொடுத்திருந்த சர்டிஃபிகேட் இது. ஆனால் இன்று அவன் தனக்கு காட்டிய மிதமிஞ்சிய பணிவும், விஷமப் புன்னகையுமே சுகன்யாவுக்கு எரிச்சலைக்கொடுத்தன.

"சுனீல்.. வாட் டூ யூ மீன்? நான் எரிச்சல்லே இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது? இப்ப எதுக்கு நீங்க என்னைப்பாத்து கிண்டலா சிரிக்கிறீங்க?" சுகன்யா மெல்லியகுரலில் சீறீனாள்.

"மேம்... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. டேட்டா ஈஸ் அல்ரெடி வெரிஃபைட் அண்ட் சென்ட் டு ஐடி டிவிஷன். வெள்ளிகிழமையன்னைக்கே நான் இந்த லிஸ்டை சர்வர்லே அப்லோட் பண்ணிட்டேன். அப்ப நீங்களும் என்னோடதான் இருந்தீங்க. ஏதோ நினைப்புல திரும்பவும் அதே பைல அதே பேர்ல டேரக்டா சர்வர்ல அப்லோட் பண்ண டிரை பன்றீங்க."

"சர்வர்ல இருக்கற டேட்டாவுல, இங்கேருந்து அடிஷன், டிலீஷன் எதுவும் பண்ணமுடியாது. இதெல்லாம் உங்களுக்கு நல்லாத்தெரியும். நீங்க என்னோட சீனியர். நீங்க பண்றது தப்புன்னு நான் எப்படி சொல்றது?"

"ஓ மை காட்... நேத்து இந்த செல்வா அடிச்ச கூத்துல, என் பர்சனல் பிராப்ளத்தை ஆஃபிஸ் நேரத்துல மனசக்குள்ள வெச்சிக்கிட்டு, என்னை நானே ஒரு வடிகட்டின முட்டாள்ன்னு இவன் கிட்ட ப்ரூவ் பண்ணிட்டேன். ச்சே... நான் ஒரு பைத்தியம்..." தன் வாய்க்குள்ளே முனகிக்கொண்டாள் சுகன்யா.

சுனில் தன் சீட்டை விட்டு மெல்ல எழுந்தான். தன் டேபிளின் மேலிருந்த வாட்டர் ஜக்கை எடுத்தான். சுகன்யாவின் கிளாசை குளிர்ந்த நீரால் நிரப்பினான். "சுகன்யாஜீ, வாட்டர் கூலர் எங்கேயிருக்குன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். ப்ளீஸ் என் மேல கோவப்படாம, இந்த தண்ணியை ஒரு முழுங்கு குடிங்க. உங்க தலையில இருக்கற சூடு கொஞ்சம் கொறையும்." பவ்யமாக தன் உடலை வளைத்து அவளிடம் கண்ணாடி டம்ளரை நீட்டினான்.

சுகன்யாவுக்கு அவன் பவ்யத்தையும், அவன் உதட்டில் தவழ்ந்து கொண்டிருக்கு நமட்டுச்சிரிப்பையும் பார்த்ததும், அவளையும் அறியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். தான் செய்து கொண்டிருந்த பைத்தியக்காரத்தனத்தை உணர்ந்து, பத்து நொடிகள் வாய்விட்டு சிரித்ததும், அவள் மனதில் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது.

"அரே சுனீல்... உனக்கு ஒடம்புல ரொம்பவே கொழுப்பு ஏறிப்போயிருக்கு. அரை மணி நேரமா உன் சீனியர் நான் என் மண்டையை தேவையில்லாம ஒடைச்சிக்கிட்டு இருக்கேன். இது உனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறமும் வேலை நேரத்துல சினிமா பாட்டு கேக்கறே?"

"யெஸ் மேம்..." குனிந்தான் சுனில்.

"என்ன யெஸ்?"

"சாரீ மேம்..." சுனிலின் முகத்தில் புன்னகை மேலும் விரிந்தது.

"நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்... வந்ததுலேருந்து குஷியா நேகா ஷர்மாவை டாவடிச்சிக்கிட்டு இருக்கே? ஏண்டா இப்படி பண்றேன்னு கேட்டா, நான் ஜூனியர் நீ சீனியர்ன்னு இது வேற நக்கலா?"

"வெரி வெரி சாரீ மேம்..." மேலும் போலியாக தன் உடலை வளைத்து பம்மினான் சுனில்.

"எனக்கு கோவம் வந்திச்சின்னா இப்ப இங்க என்ன நடக்கும்ன்னு எனக்குத் தெரியாது?"

சாவித்திரியின் ஸ்டைலில், தன் கண்களை உருட்டி விழித்து, கன்னத்தையும், மூக்கையும் சொறிந்து கொண்டே, சுகன்யா, தன் கையிலிருந்த கர்சீஃபை சுருட்டி சுனிலின் முகத்தில் விளையாட்டாக வீசியெறிந்தாள்.

"மேம்... உங்க கர்சீஃப் ரொம்ப வாசனையா இருக்கு. உங்க ஞாபகமா, லெட் மீ கீப் திஸ் வித் மீ... வாட் டூ யூ சே?"

சுனில் தன் மேல் எறியப்பட்ட ரோஜா வண்ண கைக்குட்டையை நீளமாக ஒரு முறை முகர்ந்தான். அழகான ஒரு பெண்ணின் கைக்குட்டை இந்த அளவுக்கு வாசனையாக இருக்குமா? கைக்குட்டையே இந்த அளவுக்கு வாசனையா இருக்குன்னா.... செல்வா நிஜமாவே குடுத்துவெச்சவன்... அவன் மனமும் உடலும் சிலிர்த்தன.

"சுனில்... என் ஹேங்கியை திருப்பி குடுத்துடுப்பா. ப்ளீஸ் அதை மோந்துப்பாக்காதேப்பா... போயும் போயும் அழுக்கை மோந்து பாக்கிறயே?" சுகன்யா தவிப்புடன் தன் இடது கையால், அவன் கரத்திலிருந்த தனது கர்சீஃபை பிடுங்க முயற்சித்தாள். தன்னுடைய வலது கையால் அவனை அடிக்கப் போவது போல் பாவனை செய்தாள். சுனில் அவள் கைக்குட்டையை தன் இடதுகைக்கு மாற்றிக்கொண்டான்.

"கூல் டவுன் மேம். என்னை நம்பி இந்த வேலையை எங்கிட்ட விட்டுடுங்கன்னு ஏற்கனவே நான் நாலு தரம் சொல்லிட்டேன். இந்த பத்து நாள்லே, நீங்க டெல்லிக்கு போகறதுக்கான ஏற்பாடுகளை கவனியுங்க. உங்க பர்சனல் வேலையை மட்டும் பாருங்க. பர்கெட் அபவுட் சாவித்ரி. சாவித்திரியோட பாட்டி, தாத்தா எல்லாரையும் நான் கவனிச்சிக்கறேன். அவங்களையெல்லாம் என் கிட்ட விட்டுடுங்க."



"தேங்க்யூ சுனில்..." சுனிலின் இதமான பேச்சைக்கேட்ட சுகன்யா நிஜமாகவே நெகிழ்ந்து போனாள்.

"சுகன்யா... இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க..."

"சுனீல்... அயாம் சாரீப்பா... ரியலி அயாம் சாரி... நீ சொன்னது சரிதான்... இன்னைக்கு நான் என் இயல்பான மூட்லே இல்லே. உன்கிட்ட தேவையில்லாம நான் எரிச்சல் பட்டுட்டேன்."

"புரியுது மேம்... இந்த ஜூனியருக்கு ஒரு சின்ன சந்தேகம்."

"என்ன சந்தேகம்?"

"என்னோட சீனியருக்கு, அவங்க லவ்வரோட எதாவது சண்டையா?" சுனில் கண்களில் வழியும் குறும்புடன் அவளை நோக்கி கண்ணடித்தான்.

"ஏய்... உன்னை என்னப்பண்றேன் பாரு? சுகன்யா வேகமாக சுனிலை நெருங்கினாள். அவன் பால் மனதில் பொங்கிய நட்புடன், சினேகிதத்துடன், விளையாட்டாக, அவன் வலது தோளில் ஓங்கி ஒரு அடி விட்டாள். அவளிடமிருந்து மேலும் அடி வாங்குவதை தவிர்ப்பதற்காக சுனில் தன்னை நோக்கி வந்த சுகன்யாவின் வலது கரத்தை பிடித்தான்.

சுகன்யாவின் கை சுனிலின் தோளில் படிந்த நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தான் செல்வா. இரண்டு நாட்களுக்கு முன், மீனாவுக்கு வாட்ச் வாங்கிய கடையில், தான் சுகன்யாவுக்கு ஆசையுடன் வாங்கிக்கொடுத்த ரோஜா நிற கைக்குட்டை, சுனிலின் கையிலிருந்ததை கண்ட செல்வாவின் முகம் சட்டென கருத்தது.