Thursday 18 September 2014

இதயத்தில் ஒரு யுத்தம் 9


சூர்யாவின் திடீர் முடிவில் தீரஜ் ஆடிப் போய்விட்டான். "என்ன... ஏன் இந்த திடீர் முடிவு...?" தீரஜ் தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக கேட்டான். "எத்தனை நாளைக்கு இங்கேயே இருக்க முடியும்... சென்னைக்கு போனால் அடுத்து என்ன செய்றதுன்னு முடிவு பண்ண முடியும்." சூர்யாவும் அமைதியாகவே பதில் சொன்னாள். "அங்க போயி எடுக்குற முடிவ இங்க இருந்து எடுக்க முடியாதா...? அப்படி எதை பற்றி நீ முடிவெடுக்கணும்?"

'புதிதாக என்ன முடிவு... எல்லாம் ஏற்கனவே முடிவு செய்தது தானே... அவள் குழந்தையை நல்லபடியாக வளர்க்க அவளுக்கு பணம் வேண்டும். அதற்கு அவள் வேலைக்கு போகவேண்டும். இதை இவனிடம் சொன்னால் 'என் கம்பெனியிலேயே வேலை பார்...' என்று சொல்வான். இவனை பார்த்துக் கொண்டு இவன் அருகிலேயே இருந்தால் அது யாருக்குமே நல்லது அல்ல... இதை இவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது...' இயலாமையில் அவளுக்கு எரிச்சல் வந்தது. "நான் எதை பற்றி முடிவு செய்தாலும் உனக்கு என்ன தீரஜ்...? எத்தனை நாள் நான் உன் பாதுகாப்பில் இங்கு இருப்பது. எனக்கென்று என்னை பெற்றவர்களும் என் பிள்ளையும் இருக்கிறாள். நான் அவர்களோடு என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன். நீ என்னை தொல்லை செய்யாமல் இருந்தால் போதும்..." அவள் படபடப்பை அவனிடம் கொட்டிவிட்டாள். "நான் உன்னை தொல்லை செய்கிறேனா...? எப்போது எந்த விதத்தில் உன்னை தொல்லை செய்தேன்..." "இதோ... இப்போது செய்றியே... இதற்கு பேர் என்ன...? தொல்லை இல்லையா...? நான் சென்னைக்கு போனால் உனக்கென்ன... நீ எதற்கு என்னை தடுக்குற?" "நான் உன்னை தடுக்கலா சூர்யா... நீ தாராளமா சென்னைக்கு போ... ஆனா கீர்த்தியை நான் விட மாட்டேன்..." "கீர்த்தியையா...!" சூர்யா அதிர்ச்சியடந்தவளாக கேட்டாள். "ஆமாம் கீர்த்தியை தான்... அவளுக்கு நல்ல சிகிச்சை அளித்து மற்ற குழந்தைகளை போல் அவள் ஆகும் வரை அவளை நான் யாரிடமும் கொடுக்கமாட்டேன். எங்கேயும் அனுப்ப மாட்டேன்." அவன் அழுத்தம் திருத்தமாக சொன்னான். "தீரஜ்..." அவள் கத்திவிட்டாள். "................." அவன் நீ என்ன கத்தினால் எனக்கென்ன என்று நின்று கொண்டிருந்தான். "கீர்த்தி என் மகள். அவளை என்னிடம் கொடுப்பதற்கும் பறிப்பதற்கும் நீ யார்...? நான் அவளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வேன்... நீ எப்படி தடுக்க முடியும்... உனக்கென்ன உரிமை இருக்கிறது...?" அவள் முகம் சிவக்க உடல் கோவத்தில் நடுங்க சத்தமாக பேசினாள். அதையெல்லாம் தூசி போல் ஊதிவிட்டு "என் உரிமை என்னவென்று என்னை தவிர வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது. இதை நான் உனக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்" என்றான் அழுத்தமாக. அவள் வாயடைத்துப் போனவளாக நின்றாள். "நான் எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று நான் தான் முடிவு செய்வேன். கீர்த்தியை மதுராவை விட்டு அனுப்புவதில்லை என்று நான் முடிவு செய்துவிட்டேன். " அவன் தீர்மானமாக சொன்னான். "நீ அநியாயம் செய்ற தீரஜ்..." சூர்யா அவனை எச்சரிப்பது போல் சொன்னாள். "நீ சொல்ற ஞாய அநியாயம்... சட்ட திட்டம் எல்லாம் என்னை எதுவும் செய்ய முடியாது சூர்யா..." அவள் அவனை கோபமாக முறைத்தாள். அவனும் அவளை முறைத்தான். அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள் அவனும் தோலை குலுக்கியபடி வெளியேறினான். தோட்டத்திலிருந்து உள்ளே வந்த கிருஷ்ண மூர்த்தி இவர்களின் உரையாடலை முழுவதும் கேட்டார். தீரஜ் காரில் ஏறிக் கொண்டிருந்த போது "ஒரு நிமிஷம்... கொஞ்சம் பேசணும்..." என்றபடி அவன் அருகில் சென்றார். தீரஜ் பிரசாத்தும் காரில் ஏறாமல் கார் கதவை மூடிவிட்டு அவரை நோக்கி வந்தான். அவர் அவனை தோட்டத்திற்கு தள்ளிக் கொண்டு போனார். "தப்பா எடுத்துக்காதிங்க... நீங்களும் சூர்யாவும் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது..." "............." "நீங்க நினச்சா என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் இல்லன்னு சொல்லல... ஆனா சூர்யாவ நீங்க கஷ்ட்டப் படுத்துரீங்கன்னு என்னால நம்ப முடியல..." "..................." "ஏன்... எதுக்காக என் மகளை ஆளாளுக்கு இப்படி படுத்துறீங்க...?" "கீர்திக்காக... அவளுக்கு நல்ல சிகிச்சை கொடுப்பதற்காக..." அவன் உணர்ச்சியற்று பதில் பேசினான். "அதை நாங்கள் சென்னையில் இருக்கும் போது உங்களால செய்ய முடியாதா...? சென்னையில இல்லாத மருத்துவமனையா... மருத்துவரா...! என் மகள் சென்னைக்கு போக விரும்பினால் எங்களை அனுப்பிவிட வேண்டியது தானே... எதற்கு பிடிவாதம் பிடிக்கிறீங்க...?" அவர் அவனை மடக்கினார். "அது... அது... வந்து..." அவன் தயங்கினான். "சொல்லுங்க..." "கீர்த்திய பிரிஞ்சு என்னால இருக்க முடியாது..." அவன் உண்மையை தான் சொன்னான். அந்த பிஞ்சு குழந்தை அந்தளவு அவன் மனதில் இடம் பிடித்துவிட்டது. "சரி... அப்படின்னா ஒன்னு செய்யலாம்... நீங்க கீர்த்திய தத்தெடுத்துக்கோங்க... நான் சூர்யாவை சமாதானம் செஞ்சு சென்னைக்கு கூட்டிட்டு போறேன்." அவர் சாவதானமாக சொல்ல அவன் முகம் வெளிறினான். 'இந்த கிழம் செஞ்சாலும் செய்யும்... ஏற்கனவே ஒரு முறை சூர்யாவை 'கார்னர்' பண்ணி ஒரு புதை சேற்றில் தள்ளிய சாகசகாரனாச்சே...! இந்த ஆளை நம்பவே முடியாது...' தீரஜ் கிருஷ்ணமூர்த்தியை மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.

"என்ன... நான் சொல்றது சரிதானே... கீர்த்தியை நீங்களே வச்சுக்கோங்க... சூர்யாவை நாங்க கூட்டிட்டு போறோம்..." அவர் திரும்பவும் சொன்னதையே சொல்லவும் அவன் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான். "அ.. அது... சூர்யா... சூர்யா எப்படி குழந்தையை விட்டுட்டு..." "அதை பற்றி உங்களுக்கென்ன.. உங்களுக்கு தேவை குழந்தை தானே... அதை சூர்யாவின் சம்மதத்தோடு உங்களிடம் வாங்கிக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு... ஆனால் அதன் பிறகு சூர்யாவும் நாங்களும் சென்னை போகலாம் தானே... நீங்க எந்த வம்புக்கும் வர மாட்டிங்களே...!" "இல்ல... அது... அது எப்படி கீர்த்தி அவ அம்மாவை விட்டுட்டு இருப்பா...?" "அது சின்ன குழந்தை தானே... ஆறு மாதம் கூட ஆகாத குழந்தைக்கு அம்மா இருப்பது தெரியுமா... இல்லாதது தெரியுமா... அதெல்லாம் எதுவும் தெரியாது. பாலை குடுத்தா அதுபாட்டுக்கு குடிச்சுட்டு அழுவாம இருக்கும்..." அவர் தீரஜ்பிரசாத்தை சமாதானம் செய்தார். "இல்ல... அது..." அவன் தயங்கினான். இவன் இந்த அளவு ஒரு விஷயத்தை பற்றி பேச தயங்குவான் என்று அவனுக்கு இன்று தான் தெரிந்தது. "என்னதாங்க உங்க தயக்கம்..... ஒடச்சு பேசிடுங்க..." அவர் அவனை ஊக்கினார். "இல்ல... சூர்யாவ பார்க்காம... என்னால... இனி... முடியாது..." அவன் சொல்லிவிட்டான். ஒரு வழியாக அவன் மனதை திறந்துவிட்டான். "ம்ம்ம்... அப்போ சூர்யாவுக்காக தான் குழந்தைய இறுக்கி பிடிச்சுகிட்டீங்களா..?" "இல்ல... இல்ல... குழந்தையும் எனக்கு வேணும்..." "அப்படின்னா... சூர்யாவும் வேணும்... அப்படிதானே...?" அவர் போலிஸ்காரராக மாறி கேள்வி கேட்க, யாருக்கும் அடங்காத தீரஜ் இப்போது கிருஷ்ண மூர்த்திக்கு அடக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். "என்னை தப்பா நினைக்காதிங்க... சூர்யாவிற்கு என்னை பிடிக்கவில்லை என்று தெரிந்த பின் நான் ஒதுங்கிதான் இருந்தேன். அவளுக்கு திருமணமாகிவிட்ட விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சியில் சூர்யாவை திட்டி காயப்படுத்தியது உண்மைதான். ஆனால் அவளுக்கு அமைந்துவிட்ட குடும்பத்தை சிதைத்து என்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நான் ஒருநாளும் நினைத்ததில்லை..." "அன்று சூர்யாவிற்கும் கபிலனுக்கும் பிரச்சனை நடந்த போது கூட நான் எதேர்ச்சையாக வேறு ஒரு விஷயமாக KC காலனிக்கு வந்தேன். அப்போதுதான் அங்கு பிரச்சனை நடந்தது தெரியவந்து நான் உள்ளே நுழைந்தேன். அன்று அந்த இடத்தில் சூர்யா இல்லாமல் வேறு எந்த பெண் இருந்திருந்தாலும், நான் அன்று அப்படிதான் நடந்து கொண்டிருந்திருப்பேன்." "ஆனால்... " அவன் தயங்கினான். "ஆனால்...?" அவர் எடுத்துக் கொடுத்தார். "ஆனால்... கீர்த்தியின் விஷயம் வேறு..." "அப்படின்னா...?" "வேறு ஒரு பெண்ணின் குழந்தையை என்னால் என்னுடைய குழந்தையாக ஏற்றுக் கொண்டிருந்திருக்க முடியாது... இப்போது கீர்த்தி என் மனதில் என்னுடைய குழந்தையாகத்தான் இருக்கிறாள். அவளை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்...?" அவர் மனம் நெகிழ்ந்தார். 'இப்படி ஒருவனையா வேண்டாம் என்று சொல்லிவிட்டு கபிலனுக்கு சூர்யாவை திருமணம் முடித்து கொடுத்தோம்...!' அவன் மனம் வருந்தினார். சூர்யாவையும் தீரஜ்ஜையும் எப்படியாவது ஒன்று சேர்த்துவிட வேண்டும் என்று நினைத்தார். நினைத்ததை தீரஜ்ஜிடம் கேட்டும்விட்டார். "நீங்கள் ஏன் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள கூடாது...." "அது முடியாது..." "ஏன்...? அவளை திருமணம் செய்யாமல் அவளுடைய குழந்தைக்கு மட்டும் எப்படி நீங்கள் தகப்பனாக முடியும்?" ".............................." அவன் பதில் பேசவில்லை. "சூர்யா வேறு ஒருவனக்கு ஏற்கனவே மனைவியாகி விவாகாரத்தானவள் என்று நினைத்து அவளை ஒதுக்குகிறீர்களா...?" அவரது கேள்வியில் அதிர்ந்தவன் "ச்ச... ச்ச... இன்னொரு முறை அப்படி சொல்லாதிங்க..." "பின்ன உங்களுக்கு என்னதான் பிரச்சனை...?" "அது... அவளுக்கு தான் என்னை பிடிக்கவில்லையே..." அவன் குனிந்தபடி மெதுவாக சொன்னான். அவன் முகம் சிவந்துவிட்டிருந்தது. அவமானமோ...! "அவள் அப்படி சொன்னாளா...?" "ஆமாம்... அப்படி சொல்லித்தான் என்னை நிராகரித்துவிட்டு சென்னைக்கு வந்தாள்." "அந்த எண்ணம் தவறு என்று இப்போது புரிந்து கொண்டிருக்கலாமே...!" அவன் பதில் பேசவில்லை... தலை குனிந்தபடி அமர்ந்திருந்தான். அவன் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. குழம்பிப் போய் அமர்ந்திருந்தான். "யோசிங்க... நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க..." அவர் அவனை தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்துவிட்டார். அவன் குழப்பத்தை சுமந்தபடியே காரை நோக்கி சென்றான். அன்றொரு நாள் அவன் இதயத்தில் ஆரம்பித்து முடிவு தெரியாமல் பாதியிலேயே நின்றுவிட்ட யுத்தம் இன்று மீண்டும் துவங்கியது... தீரஜ் பிரசாத்திற்கு சூர்யாவின் மீதிருக்கும் காதல் ஒருநாளும் குறைந்ததில்லை. அவள் இன்னொருவனின் மனைவி என்று ஆகிவிட்ட பின்பு அவன் தன் காதலை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், சூர்யா அவள் கணவனிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாள். அதற்காக சூர்யா அவள் கணவனை விட்டு விலகிய அடுத்த நாளே 'உனக்காக நான் காத்திருக்கேன்... என்னை திருமணம் செய்துகொள்...' என்று கேட்கும் அளவுக்கு தீரஜ் நாகரீகம் இல்லாதவன் இல்லை. ஆனால் இப்போது அவன் அவனுடைய விருப்பத்தை சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை சரி செய்யாவிட்டால் அந்த அரைவேக்காடு கிழம் மீண்டும் சூர்யாவை 'கார்னர்' பண்ணி குழந்தையை இவனிடம் விட்டுவிட்டு சூர்யாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு பறந்தாலும் வியப்பில்லை... ஆனால் முன்பு தீரஜ் சூர்யாவிடம் அவனுடைய காதலை சொன்ன போது அவள் அவனுடைய காதலை நிராகரித்திருக்கிறாள். அதற்கான காரணம் அவன் அறிந்ததே...! அவனுடைய வாழ்க்கை முறையை அவள் வெறுக்கிறாள். பிரசாத்ஜி என்கிற அவனுடைய அடையாளத்தை வெறுக்கிறாள். அந்த வெறுப்பு அவள் மனதில் இருக்கும் போது இவன் எப்படி அவளிடம் தன் விருப்பத்தை சொல்ல முடியும்...? அவன் தயங்கினான். தயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு முறை சூர்யாவை கை நழுவவிடும் எண்ணம் தீரஜ்ஜுக்கு இல்லை... அப்படியானால் சூர்யாவின் வெறுப்பை மாற்றியே ஆக வேண்டும். அவளுடைய வெறுப்பு மாற வேண்டுமானால் இவன் 'பிரசாத்ஜி' என்கிற அடையாளத்திலிருந்து வெளியே வந்து ஒரு சாதாரண மனிதனாக புது வாழ்க்கையை துவங்க வேண்டும். 'அவனுடைய அடையாளங்களா...? சூர்யாவா...? ' மீண்டும் எண்ணங்கள் அலை மோத ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்த முறை மிக விரைவாகவே அவனுடைய இதயத்தில் ஆரம்பித்த யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. தீரஜ் மிக ஆழமாக சிந்தித்து கடைசியாக எடுத்த முடிவு அவனுடைய அடையாளங்களை துறப்பது என்பதுதான். பிரசாத்ஜி என்கிற பெயரையும் மதுராவையும் தூர விளக்கி தள்ளிவிட்டு நாட்டின் மறுகோடிக்கு சென்று சூர்யாவின் கணவனாகவும் கீர்த்தியின் தந்தையாகவும் தன்னுடைய புதிய வாழ்க்கையை துவங்க எண்ணினான். 'இந்த எண்ணத்தை சூர்யாவிடம் எப்படி சொல்லி புரியவைப்பது...? நான் சொல்வதை அவள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமே...' அவனுக்கு தவிப்பாக இருந்தது. தயக்கத்திலேயே நான்கு நாட்கள் ஓடிவிட்டன. நான்கு நாட்களாக இவன் எப்படி கீர்த்தியை பார்க்காமல் இருந்தான் என்பது அவனுக்கே ஆச்சர்யம்தான். ஆனால் இன்று என்னவோ காலை எழுந்ததிலிருந்து அந்த லட்டுகுட்டியை பார்க்க மனம் பரபரக்கிறது... இன்று கீர்த்தியை பார்க்காமல் தாங்காது என்கிற நிலையில் தீரஜ் சூர்யாவின் வீட்டிற்கு புறப்பட்டான். கீர்த்திக்கு ஆறு மாதம் முடிந்துவிட்டது. ஆனால் ஆறு மாத குழந்தைக்கு உரிய உடல் வளர்ச்சி இருந்தாலும் மன வளர்ச்சி இல்லை... அதாவது ஆறு மாத குழந்தையின் செயல்பாடுகள் எதுவும் கீர்த்தியிடம் இல்லை. ஒரு மாத குழந்தை எப்படி இருக்குமோ அது போல தான் இருந்தது. ஆனால் அழகாக இருந்தது. தீரஜ் குழந்தையை பார்க்க வந்த போது குழந்தை மர தொட்டிலில் படுத்து கை காலை அசைத்துக் கொண்டிருந்தது. அருகே சூர்யா அமர்ந்து அதன் அசைவுகளை பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்த தீரஜ் குழந்தையிடம் குனிந்து அதன் முகம் பார்த்து சிரித்தான். அதுவும் இவனை பார்த்து சிரித்தது. வேகமாக கை காலை அசைத்து ஆட்டிக் கொண்டே சிரித்தது. அவன் அந்த குழந்தையை கையில் அள்ளிக் கொண்டான். அவனுக்கு அதை வாய்விட்டு 'கண்ணே... மணியே...' என்று கொஞ்ச தெரியவில்லை. ஆனால் அதை நெஞ்சோடு அனைத்து அவனுடைய அன்பை குழந்தைக்கு தெரியப்படுத்தினான். அதுவும் அவனோடு ஒட்டிக் கொண்டது அவனுடைய அன்பை புரிந்து கொண்டது போல் தோன்றியது... குழந்தையை அணைத்தபடி தோட்டத்திற்கு வந்த தீரஜ் தோட்டத்தில் இருக்கும் பூ, மரம், செடி, கொடி, அணில், கிளி என்று எல்லாவற்றையும் பற்றி குழந்தையிடம் பேசினான். அதற்கு புரிகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப் படாமல் பேசிக் கொண்டிருந்தான். சூர்யா பால் பாட்டிலுடன் தோட்டத்திற்கு வந்தாள். "குழந்தைக்கு பால் கொடுக்கிற நேரம்..." அவள் விட்டேற்றியாக தீரஜ்ஜிடம் பேசினாள். அவன் அங்கு போடப்பட்டிருந்த கல் பெஞ்ச்சில் வசதியாக சாய்ந்து குழந்தையை மடியில் வைத்தபடி அமர்ந்து கொண்டு "அதை இங்க கொடு..." என்று கையை நீட்டினான். சூர்யா அவனை சந்தேகமாக பார்த்தபடியே பால் பாட்டிலை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கியவன் லாவகமாக குழந்தைக்கு பால் புகட்டினான். சூர்யாவிற்கு எரிச்சல் வந்தது... 'இதெல்லாம் இவனுக்கு ரொம்ப தேவையா... எதுக்கு இங்க அடிக்கடி வந்து இதெல்லாம் செஞ்சு என் உயிரை எடுக்கிறான்...' அவள் மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள். அவளை மறந்துவிட்டு அவன் அவனுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கரைத்தான் அவளுடைய எரிச்சலுக்கு காரணம். பால் குடித்து முடித்த குழந்தை அவன் மடியிலேயே தூங்கிவிட்டது. "உட்கார் சூர்யா..." அவன் அமைதியாக சொன்னான். "எனக்கு வேலை இருக்கு... நான் போகணும்..." அவள் முறைப்பாக சொல்லியபடி உள்ளே வீட்டை நோக்கி திரும்பினாள். "சூர்யா.... உட்காருன்னு சொன்னேன்..." சத்தமில்லாமல் அழுத்தமாக சொன்னான். 'இந்த அதிகாரத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...' அவள் முனுமுனுத்தபடி அவனுக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு கல் பெஞ்ச்சில் அமர்ந்தாள். "சென்னை போறதை பற்றி என்ன முடிவு பண்ணியிருக்க?"

"அதுதான் மதுரா மகாராஜா போகக் கூடாதுன்னு உத்தரவு போட்டுடீங்களே..." அவள் நக்கலும் கோபமுமாக அவனுக்கு பதில் சொன்னாள். அவளுக்கு தெரியும் அவனை மீறி மதுராவில் ஒரு துரும்பும் அசையாது என்பது. அதனால் இப்போதைக்கு சென்னை பயணத்தை ரத்து செய்திருந்தாள். பழைய சூர்யா... வார்த்தைக்கு வார்த்தை அவனிடம் வாயாடும் சூர்யா லேசாக எட்டிப் பார்த்தாள். தீரஜ் பிரசாத்தின் கண்கள் லேசாக சிரிப்பில் சுருங்கின... "சரி... நீயும் குழந்தையும் சென்னைக்கு போகலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு கண்டிஷன்..." அவன் புதிர் போட்டான். "என்ன கண்டிஷன்...?" "என்னையும் கூட்டிட்டு போகணும்..." "என்னது... உன்னையா...! உன்னை எதுக்கு நான் கூட்டிட்டு போகணும்...?" "ஏன்னா... கீர்த்தியை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது..." அவனால் சூர்யாவையும் பிரிந்து இருக்க முடியாதுதான். ஆனால் அதை சொல்லாமல் குழந்தையை மட்டும் சொன்னான். "அதுக்காக...?" "அதுக்காகத்தான் என்னையும் உன்னோடு கூட்டிட்டு போக சொல்றேன்..." "விளையாடறியா...? நீ அடிக்கடி இங்க வந்து போறதா எத்தனை பேர் பார்க்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் நீ இங்க கீர்த்தியை பார்க்கத்தான் வர்ற... என்கிட்ட தேவையில்லாமல் பேசகூட மாட்டேன்னு தெரியுமா...? அவங்க மனசுல எல்லாம் என்னை பற்றியும் உன்னை பற்றியும் என்ன நினைப்பு இருக்கும் என்று உனக்கு தெரியுமா... இந்த தொல்லையிலேருந்து தப்பிக்க தான் நான் சென்னை போறேன்னு சொல்றேன் நீ அங்கேயும் வர்றேன்னு சொல்ற... யாரோ ஒரு ஆண் பிள்ளையை அழைச்சுட்டு போயி நான் நின்றால் எல்லோரும் அங்க என்ன நினைப்பாங்க..." அவள் படபடப்பாக பேசினாள். அவள் சொல்வது பெரிய விஷயமே இல்லை என்பது போன்ற பாவனையில் "யாரோ ஒரு ஆண்பிள்ளையை ஏன் நீ கூட்டிட்டு போகணும்... உன்னோட கணவனா என்னை கூட்டிட்டு போ..." என்று அவன் சொல்லிவிட்டான். "தீரஜ்..." அவள் சத்தமாக அவனை அதட்டினாள். தீரஜ் தான் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அவளிடம் வெளிப்படுத்திவிட்டான். அதில் அதிர்ச்சியடைந்த சூர்யா "தீரஜ்..." என்று அவனை சத்தமாக அதட்டினாள். அவள் அதட்டலெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல மிக சுலபமாக அவளை அடக்கினான் தீரஜ். "ஷ்... குழந்தை தூங்குறது தெரியல... ஏன் இப்படி கத்தி பேசுற...?" அவளை கடிந்து கொண்டவன் "நான் நிஜமா தான் சொல்றேன் சூர்யா... என்னால உன்னையும் குழந்தையையும் இனி தனியா விட முடியாது. நான் உன்னை கல்யாணம் செய்துகொள்ள விரும்புறேன்..." அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் எதையோ பேச துவங்க அவளை கையமர்த்தி தடுத்தவன்... "நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா கேட்டுட்டு அப்புறம் பேசு..." என்று அவளை அடக்கிவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான். "உனக்கு என்னோட சில நடவடிக்கைகளும் கொள்கைகளும் பிடிக்காதுன்னு எனக்குதெரியும்... அதையெல்லாம் விட்டுட முடிவு செய்துவிட்டு தான் உன்கிட்ட பேச வந்திருக்கேன்." "................" "என்னுடைய பெயர்... புகழ்... பணம்... மதுராவின் மீதான எனது ஆதிக்கம்.... எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு உன் பின்னால் உனக்கு கணவனாகவும் கீர்த்திக்கு தகப்பனாகவும் வர தயாராகிவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். சொல்லு... என்கிட்டே உனக்கு இன்னும் என்ன பிடிக்கலன்னு சொல்லு விட்டுடறேன்... ஆனா முன்பு சொன்ன மாதிரி என்னை பிடிக்கல... என் முகத்தை பிடிக்கலன்னு கதை அளக்காத..." "உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சிருச்சா...? ஏன் இப்படி உளர்ற...? இத்தனை நாள் நல்லாதானே இருந்த..." "நான் உளறல... நல்லா யோசிச்சு தெளிவா தான் பேசுறேன்... நீயும் வேணுன்னா நல்லா யோசிச்சிட்டு சொல்லு. ஒன்னும் அவசரம் இல்ல..." "இதுல யோசிக்க என்ன இருக்கு... எனக்..." அவள் சொல்லி முடிக்கும் முன் "உனக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லப் போறியா...? இதை நம்ப எவனாவது காதுல பூ வச்சவன் இருப்பான். அவன்கிட்ட போயி சொல்லு..." அவள் பதில் பேச முடியாமல் வாயடைத்து நின்றாள். அவளுக்கு அவனை பிடித்திருப்பது உண்மைதான். ஆரம்பத்திலிருந்து அவள் மனதில் இருப்பவன் அவன் மட்டும் தானே...! ஆனால் அதை வெளிப்படுத்தும் நிலையில் அவள் இல்லையே...! மனதை சிரமப்பட்டு கட்டுப் படுத்திக் கொண்டு, "தீரஜ்... நீயா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசாத... சொன்னா புரிஞ்சுக்கோ... ப்ளீஸ்..." அவள் இறங்கிவிட்ட குரலில் பேசினாள். "எதை புரிஞ்சுக்கணும்..." "என் நிலைமையை புரிஞ்சுக்கணும்..." "என்ன உன் நிலைமை...? சொல்லு புரியுதான்னு பார்க்குறேன்..." "என் நிலைமை என்னன்னு உனக்கு தெரியாதா...?" "தெரியல... என்ன உன் நிலைமை...? சொல்லு..." அவன் விடாபிடியாக அவளிடம் விதண்டாவாதம் செய்தான். "தீரஜ்... எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... நீ என்கிட்டே இப்படி பேசுறது சரியில்ல... இது உனக்கு புரியலையா...?" அவள் ஆற்றாமையாக கேட்டாள். "தப்பா சொல்லாத சூர்யா... உனக்கு விவாகரத்து முடிந்து நான்கு மாதம் முடிந்துவிட்டது. இப்போ நீ ஒரு சுதந்திரமான பெண். உன்னுடைய வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கு. அப்படி இருக்கும் போது உன் மனதுக்கு பிடித்த ஒருவனை திருமணம் செய்துகொள்ள எதற்கு தயங்குற...?" "உன்னை பிடிச்சிருக்குன்னு நான் சொன்னேனா...?" "சொல்லல... நீ என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லதான்... ஆனா பிடிக்கலைன்னும் சொல்லல... அப்படியே நீ என்னை பிடிக்கலன்னு சொன்னாலும் அதை நான் நம்ப மாட்டேன்... அதனால உண்மையை மட்டும் பேசு... " "...................." "என்னதான் சூர்யா உன் பிரச்சனை... சொல்லு... பேசி தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்ல..." "........................." "சொல்லு சூர்யா உண்மையிலேயே உனக்கு என்ன தயக்கம்... சொல்லு..." "நீ ஏன் என்னையே நினச்சுகிட்டு இருக்க தீரஜ்.... உன்னை மாதிரி ஒரு ஆணை திருமணம் செய்ய, அழகான படித்த வசதியான இன்னும் எல்லா விதத்திலும் உனக்கு பொருத்தமான பெண்கள் எத்தனை பேர் தயாரா இருக்காங்க தெரியுமா...? அவங்கள்ள யாரையாவது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமா வாழறதை விட்டுட்டு என்னை ஏன்..." அவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்தது. "ஏன்னா நீ மட்டும் தான் 'சூர்யா...' எனக்கு சூர்யா மட்டும் தான் வேணும்..." அவள் மனம் அவளுடைய கட்டுப்பாட்டு மீற துடித்துக் கொண்டிருந்தது. அவள் அவனை எதுவும் செய்ய முடியாமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையில் இயலாமை தெரிந்தது. "என்ன சூர்யா...?" "எல்லாருக்கும் காதலிச்சவங்கலையே திருமணம் செய்துகொள்ளும் பாக்கியம் கிடைப்பதில்லை தீரஜ்... நமக்கும் அந்த பாக்கியம் இல்லை என்று நினைத்துக் கொள்." அவள் தன்னை அறியாமலே அவனை காதலித்தாள் என்பதை மறைமுகமாக அவனிடம் ஒத்துக் கொண்டுவிட்டாள்.

"ஏன்... ஏன் நமக்கு நினைத்த வாழ்க்கை அமையாது... நான் நினைத்தால் எதையும் செய்வேன்..." "உன்னை போல நினைத்ததை எல்லாம் நான் செய்துவிட முடியாது தீரஜ்... நான் ஒரு குழந்தைக்கு தாய்... எனக்கு அவளுடைய எதிர்காலம் முக்கியம்.." "நானும் ஒரு குழந்தைக்கு தகப்பன் தான்... நான் நினைத்ததை என்னால் செய்ய முடியும் போது நீ நினைத்ததை உன்னால் செய்ய முடியாதா...?" "என்ன உளர்ற தீரஜ்...?" "நான் உளறல... கீர்த்தி உனக்குமட்டும் மகள் இல்லை. அவள் எனக்கும் மகள் தான். மனதளவில் நான் அவளுடைய தந்தையாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவளுடைய எதிர்காலம் எனக்கும் முக்கியம் தான். அதனால் தான் இந்த திருமணத்திற்கு அவசரப்படுகிறேன். உன்னைவிட என்னால் கீர்த்திய நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். அவளை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்... உனக்கு கூட..." கீர்த்தி விசயத்தில் தீரஜ் அடாவடி தான் செய்கிறான். அநியாயம் தான் செய்கிறான். சூர்யாவின் மகளிடம் அவளைவிட அவன் அதிகம் உரிமை பாராட்டுவது தவறான விஷயம் தான். ஆனால் அவன் அந்த தவறை செய்வது சூர்யாவிற்கு உண்மையில் ஆறுதலாக இருந்தது. இன்னும் ஆழ்ந்து நோக்கினால் அவள் மனம் அவனுடைய அடாவடித்தனத்தில் மகிழ்ந்தது. அவனுடைய அடாவடித்தனத்திக்கு அடிப்படை காரணம் அவன் கீர்த்தி மீது வைத்திருக்கும் பாசமாயிற்றே....! அந்த பாசம் சூர்யா மீது அவன் கொண்ட காதலால் பிறந்ததாயிற்றே...! அவள் உருகினாள். கண்ணீரில் கரைந்தாள். முகத்தை மூடிக்கொண்டு தேம்பினாள். தீரஜ் பிரசாத்தின் காதல் எவ்வளவு ஆழமானது. இந்த காதலை தூக்கியெறிந்த தான் எவ்வளவு பெரிய துரதிஷ்ட்டசாலி என்று நினைக்கும் போது சூர்யாவிற்கு அழுகை பொங்கியது... அவள் தேம்புவதை சிறிது நேரம் வெறித்த தீரஜ்... "என்ன ஆச்சு இப்போ... எதுக்கு இப்படி அழற?" என்றான். அவளுடைய அழுகை நிற்கவில்லை. "சூர்யா..." அவன் அதட்டினான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய கலங்கிய முகம் அவனை என்ன செய்ததோ... உடனே "என்ன சூர்யா....? சொல்லிட்டு அழு..." என்று தழைந்த குரலில் கேட்டான். "...................." அவளிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அழுகை நின்றிருந்தது. "உன்னை ரொம்ப கஷ்ட்டப் படுத்துறேனா சூர்யா...?" அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள். "பின்ன என்ன...?" "எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேன்னு சொல்றியே... இத்தனை நான் அனுபவிச்ச சுகங்களையும் அதிகாரத்தையும் விட்டுட்டு வந்து உன்னால சந்தோஷமா இருக்க முடியுமா...?" "நீயும் குழந்தையும் தான் என்னுடைய சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும் என் பக்கத்துல இருந்தா நரகத்தையும் என்னால சொர்கமா மாத்திக்க முடியும்... நீங்க இல்லைன்னா சொர்கத்துல இருந்தாலும் அது எனக்கு நரகம் தான்... " அவன் சொல்லி முடிப்பதற்குள் "தீரஜ்..." அவள் மீண்டும் தேம்பினாள். "சொல்லு சூர்யா... என்னை கல்யாணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா...? சொல்லு..." அவன் விடாபிடியாக அவளிடம் கேட்க, அதற்கு மேல் தன் மனதை மூடி மறைக்க வலுவில்லாத சூர்யா கண்களில் கண்ணீருடன் 'ஆம்' என்பது போல் தலையசைத்தாள். அவளுடிய தலையசைப்பு உண்மையிலேயே அவளுடைய சம்மதத்தை தான் சொல்கிறது என்பதை நம்பமுடியாத இன்ப படபடப்பில் "என்ன... என்ன சொல்ற சூர்யா...? திரும்ப சொல்லு... என்னை உனக்கு பிடிச்சிருக்கா... " அவன் படபடத்தான். "ம்ம்ம்.... பி...டிச்சி...ருக்கு... பிடிச்சிருக்கு... ரொம்ப... பிடிச்சிருக்கு தீரஜ்... ரொம்ப பிடிச்சிருக்கு..." அவள் கண்ணீரும் விம்மளுமாக சொல்ல... அவன் மனம் அடைந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்ல...!!! இந்த நொடி தீரஜ் பிரசாத்தின் மனம் அனுபவிக்கும் மகிழ்ச்சியை அளவிட்டு சொல்ல முடியாது. இன்று போல் அவன் என்றும் மகிழ்ந்ததில்லை. சூர்யாவின் ஒற்றை தலையசைப்பு அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் மிதந்தபடி, "என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா... கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொல்லேன்..." அவன் மீண்டும் கேட்டான். எத்தனை முறை அவள் சொன்னாலும் மீண்டும் மீண்டும் அவள் வாயால் அவனை பிடித்திருக்கிறது என்று சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு... கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாக "சம்மதம்..." என்றாள் சூர்யா. நிம்மதி பெருமூச்சு விட்டபடி "தேங்க்ஸ் சூர்யா..." என்றான் தீரஜ். 'எனக்கு நீ தேங்க்ஸ் சொல்றியா...!' அவள் மனம் கேட்டது. மகிழ்ச்சி தொண்டை வரை நிறைந்திருக்க பேச்சுவராமல் கண்ணீர் முட்டிக் கொண்டு வெளியேறியது. ஆனந்தக் கண்ணீர்...!!! இரண்டு வாரத்தில் தீரஜ் பிரசாத்திற்கும் சூர்யாவிற்கும் எளிமையாக கோசிகாலனில் திருமணம் முடிந்தது. ஆம் கோசிகாலனில் தான்... தீரஜ் சூர்யாவிற்காக மதுராவை விட்டுவிட்டு வர தயாரானாலும், சூர்யா தீரஜ் பிரசாத்திற்காக மதுராவை விட்டுவெளியேற மறுத்துவிட்டாள். தீரஜ் சூர்யாவை அவளுடைய எல்லா குறை நிறைகளோடும் ஏற்றுக்கொண்டது போலவே, சூர்யாவும் தீரஜ் பிரசாத்தை அவனுடைய எல்லா குறை நிறைகளோடும் அப்படியே ஏற்றுக் கொண்டாள். அவர்கள் வாழ்க்கை மதுராவிலேயே ஆரம்பம் ஆனது.

கீர்த்தனாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை. வயதுக்கேற்ற வளர்ச்சி அவளிடம் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. அவள் மூன்று வயதில் தான் நடப்பாள், ஐந்து வயதில் தான் பேசுவாள், எட்டு வயதில் தான் பள்ளியில் சேர்க்க முடியும்... என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். மற்றபடி அவளை சாதாரண குழந்தைபோல் மாற்றிவிடலாம் என்றும் சொல்லியிருந்தார்கள். கீர்த்தனாவிற்கு ஐந்து வயதாகும் போதுதான் நலன் பிறந்தான். நலன் பிறந்த பின் கீர்த்தனா நலனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டாள். அதன் பிறகு அவளிடம் நிறைய முன்னேற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அவள் சுட்டிக் குழந்தையாக மாறினாள். மதுராவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் பிரசாத்ஜியை சூர்யா, கீர்த்தி, நலன் மூவரும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் செல்ல தொல்லைகளை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தான் தீரஜ் பிரசாத். நிறைவடைந்தது

இதயத்தில் ஒரு யுத்தம் 8


சூர்யா மயங்கி விழுந்ததும் தன்னுடைய கோபம் வெறுப்பு எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாக மறைந்ததை தீரஜ் உணரக் கூட இல்லை. அவன் அவசரமாக அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான். அவளை தட்டி எழுப்பி பார்த்தான். அவளிடம் அசைவில்லாதது கண்டு பயந்துவிட்டான். 'இவள் தற்கொலை கிர்க்கொலை என்று பைத்தியக்கார தனமாக ஏதும் முடிவெடுத்து எதையாவது சாப்பிட்டுவிட்டு தான் இங்கு வந்தாளோ...!' இந்த எண்ணம் வந்ததும் அவனுக்கு உலகமே ஸ்தம்பித்தது போல் ஆனது. இந்த நொடி சூர்யா இல்லை என்று முடிவாகிவிட்டால் அவனும் இல்லை என்பது உறுதி.... கடவுளை வேண்டியபடி மருத்துவருக்கு தொடர்பு கொண்டு வரவழைத்தான். அவர் வந்து சூர்யாவை பரிசோதித்துவிட்டு சொன்னார்...

"ஜி... இந்த பொண்ணு தாயாக போகுது... அதனால தான் மயங்கி விழுந்துருச்சு... ஊசி போட்டிருக்கேன். இன்னும் இரண்டு மணி நேரத்துல எந்திரிக்கும். சாப்பிட ஏதாவது கொடுங்க. காலையில சரியாகிவிடும்... ஏதாவது அவசரம் என்றால் கால் பண்ணுங்க உடனே வந்துட்றேன்... நான் வர்றேன்..." என்று சொல்லிவிட்டு வெளியேறினார். மருத்துவர் சொன்ன செய்தியை உள்வாங்கிய தீரஜ்க்கு கண்கள் இருட்டின... தலை கிறுகிறுத்தது... உலகமே சுற்றியது... அவன் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள சில நிமிடம் அவகாசம் எடுத்துக் கொண்டான். மருத்துவர் சொல்லிவிட்டு சென்ற செய்தி அவனை நோகடித்தது. மனதின் ரணம் தாங்காமல் அவன் கண்கள் கலங்கியது... எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் கோழையாகிவிடுகிறான்... 'சூர்யா.. சூர்யா... எதுக்காக இப்படி செஞ்ச சூர்யா... உன்னால என்னை எப்படி மறக்க முடிஞ்சுது... நீ வாய்விட்டு என்னிடம் உன் காதலை சொல்லவில்லை தான். ஆனால் உன் கண்களில் நான் பார்த்த அந்த காதல் எப்படி பொய்யாகும்... நீ என்னை ஏமாற்றிவிட்டாய்... உன்னையும் ஏமாற்றிக்கொண்டாய்... எதற்காக...? யாருக்காக...? கடவுளே... எனக்கு எல்லாவற்றியும் கொடுத்து எதுவுமே இல்லாதவனாக்கிவிட்டாயே...! என் சூர்யாவை மற்றொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேனே...! ' அவன் மனம் புலம்பி தவித்தது... அவன் நொந்து போனான். ஆனாலும் அவள் துன்பப்படுவதை அவனால் ரசிக்க முடியவில்லை... அவளை துன்புறுத்தி கதரவைக்க வேண்டும் என்று நினைத்தவன் அவளுக்கு ராஜ உபச்சாரம் செய்தான். அவளுக்கு தேவையான வசதிகளை செய்துவிட்டு ஒரு பெண்ணையும் அவளுக்கு துணைக்கு இருக்க ஏற்பாடு செய்துவிட்டு அவன் கிளம்பிவிட்டான். போகும் போது ஒரு முடிவுடன் சென்றான். தூங்கிக் கொண்டிருக்கும் சூர்யாவின் முகத்தை ஏக்கமாக பார்த்து "இன்று தான் நான் உன்னை பார்க்கும் கடைசிநாள். இனி இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் சந்திக்காமல் இருந்தால் நாம் புண்ணியம் செய்தவர்கள்...." புண்பட்ட மனதுடன் சூர்யாவிடம் சொல்லிவிட்டு அந்த மாளிகையிலிருந்து வெளியேறினான். சூர்யாவின் வாழ்க்கையிலிருந்தும் வெளியேறிவிட நினைத்து தான் சென்றான்... ஆனால் விதி விட வேண்டுமே... மருத்துவர் சொன்னபடி இரண்டு மணிநேரத்தில் கண்விழித்த சூர்யா அவளுக்கு துணையாக தீரஜ் விட்டு சென்றிருந்த பெண்ணிடம் விபரம் அறிந்து கொண்டாள். தீரஜ் அவளை பற்றி என்ன நினைத்திருப்பான்.... அவனுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் எப்படி துடித்திருப்பான் என்றெல்லாம் எண்ணி கலங்கியபடி அங்கிருந்து புறப்பட்டாள். "மேடம்... ஜி நீங்கள் எழுந்ததும் உங்களை உங்க வீட்டில் விட்டுவிட சொன்னார்... கார் ரெடியா இருக்கு... இதில் உங்க மருந்துகள் இருக்கு...." என்று ஒரு சிறு பையை எடுத்துக் கொண்டு அவளும் வெளியே வந்தாள். சூர்யா மறுத்தும் கேட்காமல் அவளை அவளுடைய வீட்டில் சேர்ப்பித்துவிட்டு தான் அந்த பெண் தன்னிடத்திற்கு திரும்பினாள். சூர்யாவிர்க்குள் பல குழப்பம்... 'இந்த குழந்தை வேண்டுமா.. வேண்டாமா... நான் இனியும் கபிலனுடன் வாழவேண்டுமா... நம்மை வேவு பார்க்க தீரஜ்ஜின் அறைக்கு அனுப்பிவைத்த அவன் எவ்வளவு பெரிய கயவன்... அவன் குழந்தையை என் வயிற்றில் சுமக்க வேண்டுமா...' என்றெல்லாம் எண்ணி குழம்பினாள். அவள் வயிற்றில் உதித்திருக்கும் குழந்தை அவனுக்கு மட்டும் குழந்தை இல்லையே... அது அவளுக்கும் குழந்தை தானே...! அதோடு தகப்பன் செய்யும் தவறுக்கு அவனுடைய குழந்தை எப்படி பொறுப்பாகும்... அந்த குழந்தையை அழிப்பது எந்த விதத்தில் ஞாயம்... அவள் குழந்தையை அழிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாள். சூர்யா வீட்டிற்கு வரும் போது இரவு பதினொரு மணியாகிவிட்டது. அதன் பிறகு வீட்டிற்கு வந்த கபிலன் அவளை வருத்தெடுத்தான். தீரஜ்சுக்கும் அவளுக்கும் தவறான உறவு இருப்பதாக சொன்னான். அவள் அவனை ஏமாற்றிவிட்டதாக சொன்னான். இன்னும் ஏதேதோ மோசமாக பேசினான்... அவன் பேசியதை கேட்ட சூர்யாவிற்கு உடம்பெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. அவள் வெறுப்புடன் முகத்தை சுழித்து "ச்சீ..." என்றாள் சீற்றத்துடன். "என்ன ச்சீ... " அவன் அவளை முறைத்தான். "உன்ன மாதிரி கேவலமா நான் நடக்க மாட்டேன்... " "அப்படின்னா... என்ன அர்த்தம்..." அவன் கொலைவெறியுடன் அவளை பார்த்தான். "எனக்கும் தீரஜ்கும் தப்பா எந்த உறவும் இல்லைன்னு அர்த்தம்..." "இத என்ன நம்ப சொல்றியா...? இவ்வளவு நேரம் அவனோடு இருந்துவிட்டு தப்பா இல்லைன்னு சொன்னா அதை நம்ப நான் என்ன கேனையனா...? " அவனிடம் பேசினால் இன்னும் தரமிறங்கி பேசுவான் என்று நினைத்த சூர்யா பதில் பேசுவதை தவிர்த்து அங்கிருந்து நகர்ந்தாள். அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இரண்டடி எடுத்து வைக்கும் முன் பாய்ந்து அவளுடைய முடியை கொத்தாக பிடித்துவிட்டான். மிருகத்தனமாக அவளை தாக்கினான். அவள் சமாளித்துக் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவளுடைய அறையில் சென்று தாள் போட்டுக் கொண்டாள். நாளுக்கு நாள் கபிலனின் மிருகத்தனம் அதிகமானது. அவனுடைய கொடுமைகளுக்கு ஒரு மாதம் தாக்குபிடித்த சூர்யாவால் அதற்கு மேல் முடியவில்லை. கபிலனின் மிருகத்தனத்தில் சூர்யா பயந்துவிட்டாள். இனி ஒருமுறை அவன் இதுபோல் மிருகத்தனமாக நடந்துகொண்டால் அவளால் தாக்குப் பிடிக்க முடியாது. அவனை தனியாக சமாளிப்பது முடியாத காரியம் என்பதை புரிந்து கொண்டாள். உடனே மாமியார் வீட்டிற்கு தொடர்பு கொண்டாள். "ஹலோ... அத்த நா சூர்யா பேசுறேன்..." "சொல்லும்மா நல்லா இருக்கியா...?" "இருக்கேன் அத்த... நீங்க எப்படி இருக்கீங்க...? மாமா எப்படி இருக்கார்...?" "நாங்க நல்லா இருக்கோம்மா...? கபிலன் எப்படி இருக்கான்? "அத்த... இங்க கொஞ்சம் நிலைமை சரியில்ல... நீங்க உடனே கிளம்பி வாங்க.. என்னோட அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம்... ரெண்டு பெரும் வயசானவங்க... பயந்துடுவாங்க..." "என்னம்மா...? என்ன ஆச்சு...? "அதெல்லாம் இப்போ விளக்க முடியாதுத்த... நீங்க உடனே இங்க கிளம்பி வாங்க. அப்படி வரலன்ன உங்க குடும்ப வாரிசு உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும்..." அவள் ஒரு குண்டை தூக்கி போட்டாலும், சூர்யா சொன்ன குழந்தை விஷயம் கபிலனின் பெற்றோருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை கொடுக்க அவர்கள் கபிலனை அழைத்து வாழ்த்து சொல்லியதோடு புத்திமதியையும் சேர்த்து சொல்லிவிட்டு மதுராவிற்கு கிளம்பினார்கள். கபிலன் தன் பெற்றோர் மூலம் தெரிந்துகொண்ட செய்தியில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான். "ஏய்... என்னடி நெனச்சுகிட்டு இருக்க... கிளம்புடி டாக்டர்கிட்ட... " "எதுக்கு...?" "எதுக்கா... உனக்கு தெரியாது...? துரோகி..." "நான் வரமாட்டேன்... " "வரமாட்டியா... அப்போ குழந்தை விஷயம் உண்மை தானா...?" "ஆமாம்..." "என்ன அழுத்தம்டி உனக்கு...?" "அழுத்தம் தான்... அதற்கு என்ன இப்போ... எனக்கு இனி இந்த குழந்தை தான் எல்லாம்... இதற்கு ஒரு ஆபத்து வர நான் விடமாட்டேன்..." "யார் குழந்தைடி இது...?" அவள் வேதனையுடன் கண்களை மூடி திறந்தாள். அவன் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்க அவள் அந்த சிறு அவகாசத்தை எடுத்துக் கொண்டாள். பின் நிதானமாக "என்னோட குழந்தை..." என்று அழுத்தமாக சொன்னாள். "ஏய்... அது தெரியாமலா கேட்குறேன்... அந்த குழந்தைக்கு அப்பன் யாருடி...? "

அவனுடைய பேச்சில் பாதிக்கப் படாதவள் போல் தன்னை காட்டிக் கொண்டு " உன்னோட பேச்சு இனி என்கிட்டே எடுபடாது... இந்த குழந்தையை நான் பெத்துக்க தான் போறேன்..." என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள். அடுத்த நொடியே அவன் பிடியில் சிக்கி சித்ரவதை பட்டாள். கபிலன் சூர்யாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை தீரஜ் பிரசாத்தின் குழந்தை என்று முற்றிலும் நம்பினான். அதனால் அந்த குழந்தையை அழிப்பதில் குறியாக இருந்தான். எத்தனையோ முறை சூர்யாவை அவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றான். முடியவில்லை... அதனால் மருத்துவரை வீட்டிற்க்கே வரவழைத்தான். சூர்யா அவளுடைய அறையில் படுத்திருக்கும் போது உள்ளே ஒரு பெண் நுழைந்தாள். "யார் நீங்க...?" "டாக்டர் உமாதேவி... உங்களை கொஞ்சம் ச்செக் பண்ணனும்..." "நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு என் குழந்தையை அழிக்க விருப்பமில்லை. என்னை மீறி ஏதாவது நடந்தால் நீங்கள் பிரசாத்ஜிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்." அவள் தீரஜ் பிரசாத்தின் பெயரை துணைக்கு அழைத்துக் கொண்டாள். அந்த பெயரை சொல்வதே பெரும் பலம் போல் தோன்றியது அவளுக்கு. "என்ன...?" அந்த மருத்துவர் அதிர்ந்தார். "ஆமாம்... இந்த குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா பிரசாத்ஜி உங்களை கேள்வி கேட்பார்..." அவள் மீண்டும் அழுத்தமாக சொன்னாள். அதற்கு மேலும் அங்கே நின்று பேசிக்கொண்டிருக்க அந்த மருத்துவருக்கு பைத்தியமா என்ன...! அந்த பெண் வந்த தடம் தெரியாமல் திரும்ப சென்றுவிட்டாள். "ஏய்... என்னடி நெனச்சுகிட்டு இருக்க நீ... மரியாதையா சொன்னா கேட்க மாட்டியா..? என்னடி சொன்ன அந்த டாக்டர்கிட்ட...? எதுக்குடி அவங்க இப்படி ஓடுறாங்க? " அவன் ஹாலில் இருந்ததால் உள் அறையில் நடந்த பேச்சு வார்த்தை அவனுக்கு தெரியாது. அதனால் சூர்யாவிடம் எரிந்து விழுந்தான். "உண்மையை சொன்னேன்..." "என்னடி உண்மை...?" "என்னோட குழந்தைக்கு ஏதாவது ஆச்சுன்னா தீரஜ் கேள்வி கேட்பான்னு சொன்னேன்..." "தெரியும்டி... அவன் எப்படி கேட்காமல் இருப்பான்... இது அவன் குழந்தையாச்சே...! கேட்க தான் செய்வான்... " "வாய மூடு..." "நா எதுக்குடி மூடனும்... உன்ன கொன்னு போட்டா எல்லாம் சரியாகிவிடும்டி..." அவன் ஆவேசமாக பேசிக்கொண்டு அவள் மீது பாய்ந்தான். அந்த நேரம் வெளியில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து கபிலனின் பெற்றோர் வந்து இறங்கினார்கள். "இவங்க எதுக்குடி இங்க வர்றாங்க..." "நான் தான் வர சொன்னேன்..." "என்னது...! என்னன்னுடி சொன்ன...?" அவன் அதிர்ச்சியடந்தவனாக கேட்டான். எங்கே அவன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றியிருப்பாளோ என்று பயந்துவிட்டான். அதற்குள் காரிலிருந்து இறங்கியவர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். சூர்யாவும் கபிலனும் நின்று கொண்டிருந்த கோலம் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை அவர்களுக்கு தெளிவாக காட்டியது. பெற்றோரை பார்த்ததும் கபிலன் கொஞ்சம் அடக்கி வாசித்தான். சூர்யாவை பற்றி சொன்னால், அவளை தீரஜ் பிரசாத்தின் அறைக்கு அனுப்பியது கபிலன் தான் என்பதையும் சொல்ல வேண்டி வரும். அவர்கள் முன் அவனுடைய முகத்திரை கிழிவதை அவன் விரும்பவில்லை. சூர்யாவும் அவனை காட்டிக் கொடுக்கவில்லை. குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்று கபிலன் நினைக்கிறான். சூர்யா வேண்டும் என்று நினைக்கிறாள். இது தான் பிரச்சனை என்று வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் முழுமையாக சூர்யாவிற்கு தான் ஆதரவு கொடுத்தார்கள். வயிற்றில் இருப்பது அவர்கள் குடும்ப வாரிசாயிற்றே... ஒருநாள் கபிலனின் தாய் சமயலறையில் காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தாள். கபிலன் டிவி பார்த்தபடி காபி குடித்துக் கொண்டிருந்தான். சூர்யா அவளுடைய அறையிலிருந்து வெளியே வந்து "அத்த... இன்னிக்கு செக் அப் இருக்கு... நாம ரெண்டு பெரும் போய்விட்டு வந்துவிடலாம்..." என்றாள் "அதுக்கென்னம்மா... போயிட்டு வந்துட்டா போச்சு... உனக்கு ஒரு கப் காபி கொடுக்கவா..." "வேண்டாம் அத்த..." சூர்யாவின் பேச்சை கேட்ட கபிலனுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது. 'என்னுடைய பேச்சிற்கு இந்த வீட்டில் என்ன மதிப்பு' அவன் கடுப்பானான். "அம்மா.. அவ பேச்ச கேட்டுகிட்டு ஆடாத... உன் பிள்ளை ஒழுங்கா வாழணுன்ன மரியாதையா அந்த குழந்தையை கலைக்க சொல்லி உன் மருமகளுக்கு புத்தி சொல்லு..." "அத்த.. நீங்க இல்ல... அந்த கடவுளே வந்து சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்..." அவள் பேச்சு அவனை எரிச்சலாகக கையில் இருந்த சூடான காபி டம்ளரை தூக்கி அவள் மீது வீசினான். அது சரியாக அவளது நெற்றியை பிளந்தது. "அட பாவி மகனே... புள்ளதாச்சி பொண்ண இப்படி போட்டு அடிக்கிரியேடா... இந்த பாவத்த எங்கடா கொண்டு போயி தொலைப்ப..." கபிலனின் அன்னை சூர்யாவை மடியில் தாங்கியபடி மகனை திட்டினாள். அவன் சிறிதும் அலட்டிக்காமல் "அவள வெளியே எங்கயும் கூட்டிட்டு போன உன்ன தொலைச்சிடுவேன்..." என்று தாயையே மிரட்டிவிட்டு வேகமாக வெளியேறினான். மற்றொரு நாள் கபிலன் யாரிடமோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். சூர்யா குழந்தையை பற்றி ஏதோ மாமியாரிடம் பேசினாள். அடுத்த நொடி கபிலனின் கையிலிருந்த கைபேசி சூர்யாவை நோக்கி பறந்தது. அவளுடைய நாசி உடைந்து ரத்தம் கொட கொடவென கொட்டியது. அதை பார்த்த கபிலனின் பெற்றோர் இருவரும் திகைத்தார்ர்கள். தங்கள் மகன் இப்படி ஒரு ராட்சசனா என்று நினைத்து மருகினார்கள். ஆனால் சூர்யாவிற்கு இது பழகிவிட்டது. தினமும் இப்படி கையில் இருக்கும் பொருளை சூர்யாவை நோக்கி வீசுவது அவனுக்கு பழக்கமாகிவிட்டது. கவனமாக இல்லாதது அவளது தவறு தான் என்று நினைத்துக் கொண்டாள். மகனின் நடவடிக்கை பெற்றோரை வேதனைப்படுத்தியது. அவர்கள் செய்வதறியாது திகைத்தார்கள். ______________________________ கபிலன் வெறிபிடித்தவன் போல் இருந்தான். அவனுடைய நடவடிக்கைகள் அவனுடைய பெற்றோரையே வெறுப்படைய செய்தது. அவர்கள் பார்த்தவரை சூர்யாவின் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. "என்னங்க... இந்த கபிலன் ஏங்க அந்த பொண்ண இந்த பாடு படுத்துறான்...?" "என்னவோ பெரிய விஷயம் நடந்திருக்கு கமலா... நமக்கு தான் என்னன்னு தெரியல... ரெண்டு பேருமே மறைக்கிறாங்க..." "ஆமாங்க... குழந்தை வேண்டாம் என்பதற்காக ஒருவன் இந்த அளவு மிருகமாக மாறுவானா...!" "சரிதான் கமலா... ஆனால் ஒன்னுமட்டும் நிச்சயம்..." "என்னங்க....?" "நடந்தது எதுவா இருந்தாலும் மருமக பொண்ணு மேல தப்பிருக்க வாய்ப்பே இல்லை கமலா..." "எனக்கும் புரியுதுங்க... இவன் குணத்துக்கு இந்த பொண்ணு என்பதால் தான் இவ்வளவு நாளும் வண்டி ஓடிகிட்டு இருக்கு... அது இந்த பயலுக்கு புரிய மாட்டேங்குது..." இந்த ரீதியில் தான் கபிலனின் பெற்றோர் பேசிக்கொண்டார்கள். இந்த நிலையில் ஒரு நாள் கபிலன் நேரத்திலேயே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிவிட்டான். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய கபிலன் வீட்டில் பெண்கள் இல்லாததை கவனித்து தந்தையிடம் கேட்டான். "அப்பா.. எங்க அவளையும் அம்மாவையும் காணும்...?" "அவங்க ரெண்டு பேரும் பார்க்குக்கு வாக்கிங் போயிருக்காங்கப்பா...? " "வெளியே சென்றுவிட்டு வரும் ஆண்பிள்ளையை கவனிப்பதை விட இவங்களுக்கு என்ன வாக்கிங் முக்கியமா போச்சு..." அவன் எரிந்து விழுந்தான். "மருமக பொண்ணு இந்தமாதிரி நேரத்துல வாக்கிங் போகணும் என்று டாக்டர் சொல்லியிருக்காராம் பா.." அவர் எதார்த்தமாக சொல்லிவிட்டார். 'குழந்தைக்காக வாக்கிங் போயிருக்காளா...!' அவன் வெறியாகிவிட்டான். அதற்கு மேல் அவன் அவரிடம் எதுவும் கேட்கவில்லை... வீட்டிற்குள் நின்று தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தவன் வேகமாக வெளியே வந்து வாசல்படியில் அமர்ந்துகொண்டான். அவனுடைய முகத்தில் இருந்த கொடூரம் கபிலனின் தந்தையை அச்சுறுத்தியது. இன்று ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று அவர் உள்ளுணர்வு சொல்லியது. சிறிது நேரத்தில் தூரத்தில் சூர்யாவும் அவள் மாமியார் கமலாவும் வருவது தெரிந்தது. கபிலனின் கண்களில் தீ பொறி பறந்தது... அதை பார்த்த அவன் தந்தையின் வயிற்றில் பயம் பொங்கியது. "கபிலா... அவசரப்படாதடா.... சொன்னா கேளுடா... பொறுமையா இருடா..." அவர் பீதியுடன் மகனை அமைதிபடுத்த முயன்றார். அதற்குள் சூர்யாவும் கமலாவும் வீட்டை நெருங்கிவிட்டார்கள். கபிலனின் முகத்தை பார்த்தவர்கள் தயங்கி நின்றார்கள். வாசல் படியிலிருந்து ஆவேசமாக எழுந்தவன் "எவனை பார்க்கடி போய்ட்டு வர்ற...?" என்று கேட்டபடி அவள் சுதாரிப்பதற்குள் வாசல்படியில் செடி மறைவில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து அவள் வயிற்றில் பலமாக அடித்துவிட்டான். "ஆ..." என்று அலறியவள் கீழே விழும் முன் மேலும் இரண்டு அடிகளை கொடுத்ததோடு தடுக்க வந்த பெற்றோரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு அவள் முடியை பிடித்து இழுத்தபடி வீட்டிற்குள் சென்று தாள் போட்டுவிட்டான். காலனியில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் சூர்யா மற்றும் கபிலனின் பெற்றோர் போட்ட சத்தத்தில் வெளியே வந்து கபிலனை தடுப்பதற்குள் அவன் சூர்யாவுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டான். "அடேய் பாவி பயலே... உன்னை பெற்றதுக்கு நான் மலடியாவே இருந்திருக்கலாமேடா... கொடும் பாதகா... புள்ளதாச்சி பொண்ண சித்ரவதை செய்றியேடா..." "உன்னை அந்த கடவுள்தான்டா கேட்கனும்..." "பகவானே...!!! இந்த பயலுக்கு கூலி கொடுக்க வாப்பா... வந்து இந்த பொண்ண காப்பாத்துப்பா..." கபிலனின் தாய் ஆவேசமாக வானத்தை பார்த்து கத்த உள்ளே அரை மயக்கத்தில் கிடந்த சூர்யாவின் மனமும் அதையே சொல்லிக் கொண்டிருக்க.... அவன் வந்தான்....!!! இரணியனை கொள்ளவந்த நரசிம்மன் போல் வந்தான்... ராவணனின் தலையை கொய்தெரியவந்த ராமன் போல் வந்தான்... அசுரனை அழிக்க வந்த தேவன் போல் வந்தான்... அப்பாவிகளை காக்க வந்த ரட்சகன் போல் வந்தான்... சீறி பாய்ந்து வந்து கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தான்... அவன் தான் தீரஜ் பிரசாத்...!!! அங்கு நடந்த கலவரம் யார் மூலம்... எப்படி அவனுக்கு தெரிந்தது... அவன் எப்படி அவ்வளவு விரைவாக KC காலனியை அடைந்தான் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்... ஆனால் சரியான நேரத்திற்கு அங்கு வந்தான்... புயல் வேகத்தில் புழுதியை கிளப்பியபடி காலனிக்குள் நுழைந்து அரைவட்டம் அடித்து நின்ற காரிலிருந்து மின்னல் போல சீறி பாய்ந்து வந்தான். சூர்யாவை கபிலன் வீட்டிற்குள் இழுத்து சென்று கதவை தாள் போட்ட சில நிமிடங்களிலேயே ஒரே உதையில் அந்த கதவை தகர்த்தெறிந்தான்.

பலத்த சத்தத்துடன் திறந்துகொண்ட கதவை திடுக்கிடலுடன் திரும்பிப்பார்த்த கபிலன் அங்கே ஆக்ரோஷமான முகத்துடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்த தீரஜ் பிரசாத்தை பார்த்து குலை நடுங்கிப்போனான். அவன் மேலே சிந்திக்கும் முன் உள்ளே நுழைந்துவிட்ட தீரஜ்பிரசாத் அவனின் செவியை கிழித்தான். அருகிலிருந்த பூச்சாடியை கையிலேடுத்தவன் ஒரே அடியில் அவன் மண்டையை பிளந்ததோடு அவனை மயக்கமடையவும் செய்தான். அதே சமயம் தரையில் அரைமயக்கமாக சரிந்துகிடந்த சூர்யாவின் கண்களுக்கு கடவுளாக தெரிந்தவன் அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்... தீரஜ் பிரசாத்தின் ஆட்கள் கபிலனை அள்ளிக் கொண்டு பேப்பர் மில்லிர்க்கு விரைந்தார்கள்... அங்கு கூடியிருந்த அனைவரும் அங்கு என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது... கபிலனால் தாக்கப்பட்ட சூர்யா இரண்டு நாட்களாக கோசிகாலனிலேயே சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். சூர்யாவின் பெற்றோருக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்றே வந்துவிட்டார்கள். மூச்சுவிட கூட முடியாதபடி பயமும் துக்கமும் தொண்டையை அழுத்த சிந்தாமணி கண்ணீருடனும் கிருஷ்ணாமூர்த்தி இறுக்கமான முகத்துடனும் ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டார்கள். அவர்களுக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியாமல் கபிலனின் பெற்றோர் குற்ற உணர்வுடன் ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டார்கள். அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரியும் வரை தீரஜ் பித்தனை போல் மருத்துவமனையை விட்டு அசையாமல் ஒரே இடத்திலேயே தவம் கிடந்தான். அங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று தான் சூர்யாவிற்கு எந்த ஆபத்தும் இல்லையென்றும் குழந்தைக்கு உயிராபத்து இல்லை... ஆனால் வேறு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது குழந்தை வயிற்றில் வளர வளரத்தான் தெரியும் என்றும் தெரியவந்தது. சூர்யாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை... குழந்தைக்கும் உயிராபத்து இல்லை என்று தெரிந்த பின்பு அவன் மனம் கொஞ்சம் சமாதானம் ஆனது. இரண்டு உயிருக்கும் ஆபத்து இல்லை என்கிற செய்தியால், இதுவரை அங்கு இருந்த இறுக்கமான சூழ்நிலை கொஞ்சம் தளர்ந்தது... சூர்யாவின் பெற்றோர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற தீரஜ் "பார்த்துக்கோங்க... கொஞ்ச நேரத்துல வந்துட்றேன்..." என்று சொல்லிவிட்டு வேக நடையுடன் வெளியேறினான். # # # தீரஜ் பிரசாத்தின் அடியில் நினைவிழந்த கபிலன், நினைவு திரும்பிய போது தலையில் ஒரு கட்டுடன் குப்பை கூளங்கள் நிறைந்திருந்த ஒரு அறையில் தரையில் கிடப்பதை உணர்ந்தான். சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தான். யாரையும் காணவில்லை. அரைமணி நேரம் கழித்து ஒருவன் வந்தான். கொச்சை இந்தியில் ஏதோ பேசினான். பின் ஒரு பொட்டலத்தையும் தண்ணீர் பாக்கெட்டையும் அவனிடம் வீசிவிட்டு சென்றுவிட்டான். கபிலன் அதை பிரித்து பார்த்தான். இரண்டு ரொட்டி துண்டுகள் இருந்தன. அதை உண்டு தண்ணீரை குடித்து வயிறை நிறைத்துக் கொண்டான். மேலும் ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் வந்தார். அவர் மருத்துவராக இருக்க வேண்டும். அவனை பரிசோதித்து ஊசி போட்டார். அவனிடம் எதுவும் பேசாமலே சென்றுவிட்டார். இதே போல் கபிலனுக்கு இரண்டு நாள் உபச்சாரம் நடந்தது. மூன்றாம் நாள் தான் அந்த காட்சியை பார்த்தான் கபிலன். முன்பு ஒரு நாள் சூர்யா பார்த்தது போலவே கோரமான காட்சி... அவன் ரத்தமே உறைந்துவிட்டது... 'இரண்டு நாட்களாக நமக்கு நடந்த உபச்சாரம் பலியாட்டுக்கு நடக்கும் உபச்சாரம் தானோ...! இந்த மாதிரி கொடுமையை தாங்குவதற்குதான் நம்மை தயார் செய்திருக்கிறார்களோ...!' அவன் கலங்கினான். இது போல் பத்தில் ஒரு பங்கு என்ன... நூற்றில் ஒரு பங்கு சித்ரவதையை கூட அவனால் தாங்க முடியாது என்று நினைத்து நடுங்கினான்... அன்று முழுக்க நடுங்கிக் கொண்டிருந்தவனின் நடுக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்தான் தீரஜ்... தீரஜ் பிரசாத்தின் கார் பேப்பர் மில்லிர்க்குள் நுழைந்த நேரம், கபிலன் அவன் அடைபட்டிருந்த அறையிலிருந்து மரத்தடிக்கு இழுத்து வரப்பட்டு குத்துக் காலிட்டு அமர வைக்கப்பட்டான். தீரஜ் காரிலிருந்து இறங்கி வரும் வேகநடையும், அவனுடைய சிவந்து இறுகிய முகமும் கபிலனை அச்சுறுத்த அவன் கண்களில் கண்ணீர் கட கடவென வழிந்தது. வேகமாக அவனை நெருங்கிய தீரஜ் அவன் மார்பில் எட்டி உதைக்க கபிலன் சுருண்டான். தீரஜ்பிரசாத் கபிலனை பார்த்தபடியே தனக்கு வலதுபுறம் நின்று கொண்டிருந்த சகாவிடம் கையை நீட்ட அங்கே உடனடியாக ஒரு ஹாக்கி பேட் முளைத்தது. தீரஜ் மட்டும் தான் கபிலனை அடித்தான். மிஞ்சி போனால் பத்து அடி கூட அடித்திருக்க மாட்டான். ஆனால் நூறு பேர் சேர்ந்து தாக்கியிருந்தால் கூட கபிலன் இந்த அளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டான் என்கிற அளவு பாதிக்கப்பட்டுவிட்டான். ஏனடா இந்த பிறபெடுத்தோம் என்று நினைத்தான் கபிலன்... இப்போவே செத்துவிடக் கூடாதா என்கிற அளவு ஒவ்வொரு அணுவும் வலித்தது. சற்று முன் ஒருவனை நான்கு பேர் அடித்து அவன் தோலை உரித்தது கூட பரவாயில்லை என்று தோன்றியது கபிலனுக்கு. ஏனென்றால் அங்கே அடிபட்டவன் நினைவிழந்த நிலையில் தான் அடிபட்டுக் கொண்டிருந்தான். ஆனால் கபிலனுக்கு முழு சுரணையும் இருந்தது. அழவும் கத்தவும் முடிந்தது... ஆனால் எழுந்து ஓடவோ கை காலை அசைக்கவோ முடியவில்லை... தீரஜ் அடிப்பதை நிறுத்திவிட்ட பின்பும் "என்னை கொன்னுடு... என்னை கொன்னுடு..." என்று கத்திக் கொண்டிருந்த கபிலன் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கத்தி கத்தியே சோர்வடைந்து மயக்கமானான். மறு நாள் மயக்கத்திலிருந்து விழித்தவனுக்கு மீண்டும் பழயபடி உபச்சாரம் நடந்தது...!!! இப்போது நடக்கும் உபச்சாரம் பிறகு அவன் அனுபவிக்க போகும் சித்ரவதையை நினைவுபடுத்தி அவனை அச்சுறுத்தியது. கபிலனுக்கு ஒன்று புரிந்துவிட்டது. 'சூர்யா சொன்னது நிஜம் தான் இவன் சூர்யாவை காதலித்திருக்கிறான். அதனால் தான் அவள் அடிபட்டது இவனுக்கு வலிக்கிறது... அந்த வலியும் அதனால் ஏற்பட்ட வெறியும் அவன் கண்ணில் தெரிந்ததே...! அதோடு நம்மை ஒரு வழி பண்ணாமல் இங்கிருந்து அனுப்பமாட்டான்... ஐயோ கடவுளே... இந்த சூர்யாவை நான் ஏன் தான் திருமணம் செய்தேனோ...! ஆண்டவா... என்னை காப்பாத்துப்பா...' அவன் மனம் புலம்பியது... # # # சூர்யா கண்விழித்ததிலிருந்து அவளுடைய பெற்றோரும் கபிலனின் பெற்றோரும் அவளுக்கு அருகில் தான் இருக்கிறார்கள். சூர்யாவிடம் தெளிவே இல்லை. ஒரு வாரமாக மருத்துவமனைக்கு வந்து போய் கொண்டிருக்கும் தீரஜ் சூர்யாவை ஒரு முறை கூட வந்து பார்க்கவே இல்லை. ஏதோ ஒரு உணர்வு அவனை சூர்யாவை நெருங்கவிடாமல் தடுத்தது. ஒரு வாரம் கழித்து சூர்யாவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். கூடவே அதிக தூரம் சூர்யா பயணம் செய்யக் கூடாது என்றும் சேர்த்து சொல்லிவிட்டார். தீரஜ், கபிலன் மற்றும் சூர்யாவின் பெற்றோரை அழைத்தான். " என்ன முடிவு பண்ணியிருக்கீங்க...?" சாதாரணமாக கேட்டான். "இதுல என்ன முடிவு செய்றதுக்கு இருக்கு....? நான் என் பெண்ணை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு போகிறேன்... இனி இவங்க பையனுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..." கிருஷ்ண மூர்த்தி கபிலனின் தந்தையை காட்டமாக பார்த்துக்கொண்டே தீரஜ் பிரசாத்தின் கேள்விக்கு பதில் சொன்னார். "அதை முடிசெய்ய நீங்கள் யார்...? சூர்யாவின் வாழ்க்கையை பற்றி முடிவு செய்ய உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு...?" தீரஜ் கிருஷ்ணமூர்த்தியை எரிப்பது போல் பார்த்தபடி கேட்ட கேள்வியில் அவர் திணறினார். "எ.. என்.. என்ன சொல்றீங்க நீங்க...? இந்த பயலோட என் பொண்ணு எப்படி வாழ முடியும்...?" "அதை அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைப்பதற்கு முன்பே யோசித்திருக்க வேண்டும்..." அவன் அவரிடம் காட்டமாக பேச அவர் அவனை குழப்பமாக பார்த்தார். "எனக்கு தெரியும்... சூர்யாவின் முழு சம்மதத்தோடு இந்த திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று எனக்கு முன்பே சந்தேகம் தான். இப்போது உங்களுடைய அதிர்ந்த முகம் நான் சொன்னது முழுவதும் சரிதான் என்று சொல்லிவிட்டது..." கிருஷ்ணமூர்த்தி குற்ற உணர்வுடன் தலை குனிந்துவிட்டார். சிந்தாமணி முந்தானையால் வாயை மூடி கண்ணீர்விட்டார். தீரஜ் பிரசாத்தின் கடினமான முகம் சற்றும் இளகவில்லை. "நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க..." அவன் கபிலனின் பெற்றோரை பார்த்து கேட்டான். "முடிவு எடுக்கும் தகுதி எங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. சூர்யாவும் அவள் பெற்றோரும் என்ன சொல்கிறார்களோ அதற்கு கட்டுப்படுகிறோம்..." கபிலனின் தந்தை தன் வார்த்தையை முடித்துக் கொண்டார். "சரி... சூர்யா அதிகம் பயணம் செய்யக் கூடாது. அதனால் இந்த மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு வீடு ஏற்பாடு செய்திருக்கேன். சூர்யாவும் நீங்களும் அந்த வீட்டிலேயே தாங்கிக்கொள்ளுங்கள். அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை சென்னையை மறந்துவிடுங்கள். வீட்டிற்கு சென்ற பின் சூர்யா என்ன முடிவெடுத்திருக்கிறாள் என்று கேட்டுவிடுங்கள்." அவன் கிருஷ்ண மூர்த்தியிடம் உத்தரவிடுவது போல் சொன்னான். பின் கபிலனின் பெற்றோரிடம் திரும்பி "நீங்கள் சூர்யா விரும்பினால் அவளுடன் தங்கலாம்... இல்லையென்றால் சென்னைக்கு இன்றே புறப்பட தயாராகுங்கள்." என்றதும் கபிலனின் தாய் 'ஓ' வென்று சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டார். அந்த அழுகைக்கு பின் மகனை பற்றிய பயமும் கலக்கமும் நிறைந்திருந்தது அனைவருக்குமே புரிந்தது. தாயின் மனம் பதறுவது தெரிந்தது. ஆனால் அதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. தீரஜ்ஜும் அந்த அம்மாவிற்கு எந்த சமாதானமும் சொல்லவில்லை. அவன் ஒரு இயந்திரம் போல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். வீட்டில் அமைதி குடிகொண்டிருந்தது. பெரியவர்கள் அனைவரும் வெளியே தோட்டத்தில் இருக்க, உணர்ச்சிகளை தொலைத்துவிட்ட முகத்துடன் அமர்ந்திருக்கும் தீரஜ் பிரசாத்திக்கு முன் சங்கடமான முகத்துடன் சூர்யா அமர்ந்திருந்தாள். சூர்யா வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு ஒரு மாதம் முடிந்துவிட்டது. அவள் அடிபட்ட நாளிலிருந்து இன்றுவரை ஒரு நாள் கூட தீரஜ் சூர்யாவின் முன் வந்ததில்லை. அவளிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை. எப்போதாவது சூர்யாவின் வீட்டிற்கு வந்தால் அவளை பார்க்காமல் கிருஷ்ண மூர்த்தியை பார்த்து பேசிவிட்டு சென்றுவிடுவான். தினமும் கிருஷ்ண மூர்த்திக்கு கை பேசியில் அழைத்து பேசி அவளுடைய நலம் விசாரிப்பவன் அவளிடம் ஒரு வார்த்தை பேசமாட்டான். இந்த சூழ்நிலையில் தான் சூர்யா தானாக தீரஜ்ஜை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வர சொல்லியிருந்தாள். சில நிமிட மௌனத்திற்கு பின் தீரஜ்பிரசாத்தான் பேச்சை ஆரம்பித்தான். "எதுக்காக வர சொன்ன...?" 'எப்படி இருக்கன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை...' அவள் மனம் சுணங்கியது. அதை வெளிப்படுத்தாமல்... "கபிலன் எங்க...?" சூர்யா தீரஜ் பிரசாத்திடம் கேட்டுவிட்டாள். இந்த கேள்வி அவளாக கேட்கவில்லை... கபிலனின் தாய் அழுது புலம்பி கெஞ்சி சூர்யாவை கரைத்து தீரஜ்ஜிடம் பேச சொல்லியிருந்தது தீரஜ்பிரசாத்திற்கு தெரியாது. அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. "என் இடத்தில் தான் இருக்கான்..." 'அதற்கு மேல் என்ன கேட்பது...?' சூர்யாவிற்கு புரியவில்லை. அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். "அவரை அவங்க அம்மா அப்பாகிட்ட ஒப்படச்சிடுங்க... " அவள் அவனிடம் வேண்டவும் இல்லை... அவனுக்கு கட்டளையிடவும் இல்லை... இயந்திர தனமாக சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாள். "சரி..." அவனும் எதிர் பேச்சின்றி அவள் சொல்வதை ஏற்றுக் கொண்டான். மீண்டும் அங்கே கனத்த மௌனம்... "வேற என்ன...?" தீரஜ் மௌனத்தை கலைத்தான். "இல்ல... வேற எதுவும் இல்ல..." தீரஜ் எதுவும் பேசாமல் எழுந்துவிட்டான். சூர்யா தீரஜ்ஜிடம் பேசிய அடுத்த அரைமணி நேரத்தில், தீரஜ்பிரசாத்தின் கைவண்ணத்தில் நாற்பத்தைந்து நாட்களாக நடந்த மேள தாளத்துடன் கூடிய தட-புடலான பூஜையின் காரணமாக, கிழிந்த நாராய் கபிலன் அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். மகன் உயிரோடு கிடைத்ததே பெரும் பாக்கியம் என்று நினைத்து அவனை சென்னைக்கு கொண்டு போய்விட்டார்கள் அவனை பெற்றவர்கள். # # #

சூர்யா கருத்தரித்து நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் தான் அவர்களுக்கு அந்த விஷயம் தெரியவந்தது. சூர்யாவிற்கு வயிற்றில் பட்ட அடியில் குழந்தை பாதிக்க பட்டிருந்தது. அவளுடைய குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையாக பிறக்கும் என்பதை தெரிந்துகொண்ட சூர்யா அதிர்ந்தாள். மருத்துவரும் சூர்யாவின் பெற்றோரும் அவளுக்கு சொன்ன அறிவுரை... "இந்த குழந்தை பிறந்தால் அது மிகவும் சிரமப்படும். இந்த உலகத்தில் அந்த பிள்ளைக்கு போராடி வாழும் வலு இருக்காது... பேசாமல் இந்த குழந்தையை கலைத்துவிடு..." அடுக்கடிக்காக சோதனைகளை சந்தித்துக் கொண்டே இருந்தாலும் அவள் மனம் மரத்துப் போகாமல் வலித்துக் கொண்டு தான் இருந்தது. அன்று கபிலன் சொன்ன வார்த்தையை இன்று மருத்துவரும் அவளுடைய பெற்றோரும் சொல்கிறார்கள். காரணம் வேறாக இருந்தாலும் அவர்கள் சொல்வது அவளுடைய குழந்தையை கொல்ல வேண்டும் என்று... நான்கு மாதமே ஆனாலும் அவளுடைய வயிற்றில் உதித்து... அவளோடு உறவாடி... அவளுக்குள் இருக்கும்... அவளுடைய குழந்தையை அழிக்க சூர்யாவிற்கு மனம் வரவில்லை... அழுதாள்... தொடர்ந்து அழுதாள்... தீரஜ் அவளை வந்து பார்த்து பேசும் வரை அழுதாள். குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக சூர்யா நொறுங்கிப் போயிருக்கிறாள் என்பது தீரஜ் பிரசாத்திற்கு தெரியவந்தது. அவளாக சமாதானம் அடைந்துவிடுவாள் என்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தான். அவள் தெளிவதாக தெரியவில்லை. அதனால் அவளை பார்த்து பேச முடிவு செய்தான். அழுது வீங்கிய முகத்துடன் தன் முன் நிற்கும் சூர்யாவை வெற்றுப்பார்வை பார்த்தான் தீரஜ். "என்ன சொல்றாங்க?" "அழிக்கனுமாம்..." "நீ என்ன முடிவு செஞ்சிருக்க...?" அவளுடைய கண்கள் கலங்கின..."என்னால முடியாது..." "பின்ன ஏன் அழற...?" "என் குழந்தை என்ன பாவம் செஞ்சுச்சு...? இந்த உலகத்துல அது என்னவெல்லாம் கஷ்ட்டப்பட போகுதோ..." அவள் தேம்பினாள். "நான் விடமாட்டேன்..." அவன் அழுத்தமாக சொன்னான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். "இந்த குழந்தை எந்த கஷ்ட்டமும் பட நான் விட மாட்டேன்..." அவன் மீண்டும் ஒரு முறை தெளிவாக சொன்னான். இப்போது சூர்யாவிற்கு நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. அவளுடைய எல்லா துன்பங்களும் நீங்கிவிட்டது போல் உணர்ந்தாள். 'தீரஜ்பிரசாத்தின் ஒரு வார்த்தைக்கு இத்தனை சக்தியா...!' அவளுக்கு வியப்பாக இருந்தது. அன்று சூர்யாவிடம் உறுதி கொடுத்துவிட்டு போனவன் தான். அதன் பிறகு சூர்யாவை அவன் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவள் நலனை கிருஷ்ணமூர்த்தி மூலம் அடிக்கடி தெரிந்துகொள்வான். நாட்கள் நகர்ந்தன. சூர்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அது சூர்யாவின் மறுபதிப்பாகவே இருந்தது. 'இந்த குழந்தையா மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை...!' என்று சந்தேகிக்கும் வண்ணம் இருந்தது அந்த குழந்தை... குழந்தையை பார்த்த தீரஜ் பிரசாத்திற்கு அது கபிலனின் குழந்தை என்கிற நினைவே எழவில்லை. குழந்தையின் பூ முகம் தீரஜ்ஜை 'சூர்யா சிறு வயதில் இப்படி தான் இருந்திருப்பாள்...' என்று நினைக்க வைத்தது. அவனுக்கு குழந்தையை விட்டு பிரிந்து அவனுடைய வேலைகளை பார்க்க செல்லவே மனம் இல்லாமல் போனது. காலம் பெரியவர்களின் மனக் காயத்தை ஆற்றியிருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு கபிலனின் பெற்றோர் குழந்தையை பார்க்க வந்திருந்தார்கள். சூர்யாவின் பெற்றோர் அவர்களிடம் முகம் திருப்பவில்லை. அன்று தீரஜ்ஜும் குழந்தையை பார்க்க வந்திருந்தான். கபிலனின் பெற்றோரை பார்த்ததும் அவனுக்கு 'பகீர்' என்றது... சூர்யா மீண்டும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்று பயந்தான். சூர்யாவின் மனதில் கபிலனின் இடம் என்ன என்று தெரிந்து கொள்ள அவன் மனம் அடித்துக் கொண்டது. மீண்டும் ஒரு புதை குழியில் அவள் சிக்கிவிடக் கூடாது என்று மனம் பதைத்தது. 'யாராவது இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர மாட்டார்களா...' என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது கபிலனின் தாய் சூர்யாவிடம் பேச்சை ஆரம்பித்தார். "என்னம்மா... முடிவு பண்ணியிருக்க...? குழந்தையும் பிறந்துடுச்சு... இனியும் அமைதியா இருந்தது என்ன செய்றது...?" சூர்யா கமலாவை குழப்பமாக பார்த்து "எதை பற்றி...?" என்றாள். "கபிலனை பற்றி தான்..." "இனி எனக்கும் உங்கள் மகனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமானால் சட்டரீதியான பிரிவிற்கு ஏற்ப்பாடு செய்யுங்கள்..." அவள் கண்டிப்புடன் சொன்னாள். சூர்யா தான் கபிலனால் பாதிக்கப்பட்டவள். அதனால் கபிலனின் பெற்றோருக்கும் சூர்யாவின் பெற்றோருக்கும் சூர்யாவின் முடிவை எதிர்த்து பேசும் துணிவும் விருப்பமும் இல்லை. அவர்களுக்கு சூர்யாவின் முடிவை ஏற்பதுதான் சரியென்று பட்டது.... ஏற்றுக் கொண்டார்கள். இரு தரப்பிலும் எதிர்ப்பு இல்லாததால் இரண்டு மாதத்தில் கபிலனிடமிருந்து சூர்யாவிற்கு விடுதலை கிடைத்துவிட்டது. இதில் எதிலும் தீரஜ் சம்மந்தப்படவில்லை... இப்போது சூர்யாவிற்கு அவள் குழந்தையே உலகம் என்றானது. தீரஜ் எதை மறந்தாலும் காலையும் மாலையும் கீர்த்தியை பார்த்து அவளோடு ஒரு மணிநேரம் செலவிடுவதை மறக்க மாட்டான். 'கீர்த்தி...' சூர்யா தன் செல்ல கண்ணமாவிர்க்கு கீர்த்தனா என்று பெயரிட்டிருந்தாள். "எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே...! நான் வாழ்ந்தது கொஞ்சம் அந்த வாசத்தில் வந்து உதித்து உயிரில் கலந்தாய் என் உயிரே...! உண் பூவிழி குறுநகை அதில் ஆயிரம் கவிதையே... " பெரியவர்கள் பாடும் தாலாட்டு பாடல் தெரியாத சூர்யா, சினிமாவில் வரும் சில பாடல்களை பாடி குழந்தையை தூங்க வைப்பது வழக்கம். அன்றும் அதே போல் தான் அந்த பாடலை பாடிக் கொண்டிருந்தாள். அவள் குரலில் அத்தனை சோகம்... தீரஜையும் அவளுடைய குழந்தையின் நிலையையும் மாற்றி மாற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவளின் வாய் குழந்தைக்கு தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்தது என்பதுதான் சோகத்தின் காரணம்... குழந்தையை பார்க்க வந்த தீரஜ் அவள் குரலில் நெகிழ்ந்து அசையாமல் நின்றுவிட்டான். "வானம் தாலாட்ட மேகம் நீராட்ட வளரும் வெள்ளி நிலவே... வாழ்வில் நீ காணும் சுகங்கள் நூறாக வேண்டும் தங்க சிலையே... காண கிடைக்காத பிள்ளை வரமே கண்ணில் ஜொலிகின்ற வைரமே... கோடி கொடுத்தாலும் உன்னை போல செல்வம் கிடைக்காது வாழ்விலே... புள்ளி மானே... தூங்கும் மயிலே... எனை மறந்தேன் நானம்மா... " குழந்தையின் அறைக்குள் யாரோ வரும் அரவரம் கேட்டு பாடலை நிறுத்திவிட்ட சூர்யா அங்கே தீரஜ் பிரசாத்தை பார்த்ததும் எழுந்து நின்றாள். அவன் தொட்டிலுக்கு அருகில் சென்று குழந்தையை அள்ளி மார்போடு அனைத்துக் கொண்டான். அவனுக்கு பாடல் பாடவெல்லாம் தெரியாது. ஆனால் சூர்யாவின் இந்த தாலாட்டை அவன் அவ்வப்போது கேட்டதால் அந்த பாடல் அவன் மனதில் பதிந்துவிட்டது. மீதி பாடலை அவன் மனதிற்குள் பாடினான். "எந்தன் வாழ்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே என் மகளே...! கனவில் நினைவாக நினைவில் கனவாக கலந்தாய் காதல் தேவி...! உறவின் பலனாக கடலின் அமுதாக பிறந்தாய் நீயும் கனியே...! தாயின் மடி சேரும் கன்று போல நாளும் வளர்வாய் என் மார்பிலே...! சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும் காலம் கனியாகும் தேவியே...! சிறு கிளி போல் பேசும் பேச்சில் எனை மறந்தேன் நானம்மா.... "

தீரஜ் தன்னை அறியாமலே மனதளவில் அவன் அந்த குழந்தைக்கு தந்தையாகிவிட்டான். இதை அவனுடைய நடவடிக்கையிலிருந்து புரிந்து கொண்ட சூர்யா தீரஜ்பிரசாத்தின் எதிர்காலத்தை நினைத்து கலங்கினாள். குழந்தைக்கு விபரம் தெரியும் முன் இந்த குழந்தையிடமிருந்து அவனை பிரித்தால் தான் குழந்தைக்கு பாதிப்பு இருக்காது. அதோடு இவன், சூர்யாவிற்கும் குழந்தைக்குமே சேவகம் செய்து கொண்டிருந்தால் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமாட்டான். தூங்கும் குழந்தையை மார்போடு அணைத்தபடி வெளியேறும் தீரஜ் பிரசாத்தை கனிவாக பார்த்தாள் சூர்யா... 'இவனுக்கு எதற்கு இத்தனை பாசம் இந்த குழந்தை மேல்...!' அவளுக்கு புரிந்தது. அந்த பாசம் சூர்யாவின் மீதான அவனுடைய காதலின் வெளிப்பாடு. ஆனால் அந்த காதலுக்கு அவள் தகுதியானவள் இல்லை என்பது சூர்யாவின் எண்ணம். அதனால் தான் அந்த முடிவை எடுத்தாள்.

இதயத்தில் ஒரு யுத்தம் 7


கபிலனின் மிருகத்தனத்தில் அரண்டுவிட்ட சூர்யா அவனைவிட்டு பிரிந்து பெற்றோரிடம் செல்ல முடிவெடுத்து அதை பற்றி கபிலனிடம் பேசினாள். அவள் பிரிவை சொன்னதும் அடுத்த நொடி பாய்ந்து வந்த கபிலன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் காலை பிடித்துக் கொண்டான். "சூர்யா... என்ன வார்த்தை சொல்லிட்ட சூர்யா... என்னை விட்டுட்டு போய்ட போறியா...? நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன் சூர்யா... நேத்து ஒரு மிருகம் மாதிரி நான் நடந்துகிட்டது எனக்கே வெறுப்பா இருக்கு. அதனால தான் காலையிலிருந்து உன் முகத்தை கூட பார்க்க சங்கடப்பட்டுகிட்டு இருந்தேன்... மன்னிச்சுடு சூர்யா... தயவு செய்து என்னை மன்னிச்சுடு..." அவன் காலில் விழுந்து அழ இவள் பதறிவிட்டாள். "ஹேய்... என்ன இது... ஐயோ... காலை விடுங்க.... ப்ளீஸ்... எந்திரிங்க..." "இல்ல சூர்யா... நான் மடத்தனமா நடந்துகிட்டேன்... போதைல என்ன செய்றோம்ன்னு தெரியாம செஞ்சுட்டேன்... நீ என்னை ஏமாத்திட்டென்ற கோபத்துல செஞ்சுட்டேன்... சூர்யா.. நீ என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு அப்போதான் நான் விடுவேன்... ப்ளீஸ் சொல்லு..." அவன் கெஞ்சினான். என்ன இருந்தாலும் ஒரு மனிதன் செய்த தவறுக்காக காலில் விழுந்து கெஞ்சுகிறான். அதோடு இவளும் தவறு செய்யாமல் இல்லையே... ! அவள் மனம் இளகியது...

அவனை மனதார இன்னும் கணவனாக ஏற்க முடியவில்லை என்றாலும் அவன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து... பெற்றோர் செய்துவைத்த திருமணத்திற்கு மதிப்பு கொடுத்து... "சரி... நீங்க முதல்ல எந்திரிங்க..." என்றாள். "இல்ல நீ மன்னிச்சுட்டேன்னு சொல்லு... அப்போதான் எந்திரிப்பேன்..." "சரி... நேற்று வரை நடந்த பழசை எல்லாம் மறந்திடுவோம்... நீங்க எந்திரிங்க..." அவள் சொன்னாளே ஒழிய அவள் மனம் அவளை குற்றம் சாட்டியது. நீ கபிலனை ஏமாற்றுகிறாய்... உன்னால் தீரஜ் பிரசாத்தை மறக்க முடியாது... மனசாட்சியின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்தது... # # # அன்று இரவு கபிலன் மீண்டும் தான் உண்மை முகத்தை சூர்யாவிடம் காட்டினான். இன்றும் குடித்துவிட்டு வியர்த்த முகமும்... சிவந்த விழிகளுமாக வந்து நின்ற கபிலன் அவளை நடுங்க செய்தான். "நேற்று மாதிரி இன்றும் நடந்துகொல்வானோ...!" அவள் உடல் சில்லிட்டது. "எ... என்ன... இன்னிக்கும்....?" அவள் தயங்கி தயங்கி என்ன கேட்பது என்று புரியாமல் தடுமாறினாள். "என்னடி... என்ன...? உன் நடிப்பெல்லாம் என்கிட்டேயேவா...?" "................" "எப்படி... எப்படி....! அந்த தீரஜ் பிரசாத் உன்னை லவ் பண்ணினான்... நீ அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துட்ட.... ஹா.... ஹா... குட் ஜோக்..." "......................." "கேட்குறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்லலாம்... ஆனா நான் கேனையன் இல்ல..." "................................" "ஏன்டி... அந்த தீரஜ் பேரை சொன்னா நான் உன்னை பற்றி ஆராய்ச்சி செய்றதை விட்டுடுவேன்னு நெனச்சியா...?" "................" "ஆமா... உண்மையிலேயே அவன் யாருடி... அந்த ஃபைஸல் தானே.... அவன் தான் உன்னை பற்றி என்கிட்டே அன்னைக்கு விசாரிச்சான்.... சொல்லுடி அவன் தானே..." இது போலவே விடிய விடிய சூர்யாவை தூங்கவிடாமல் பேசிபேசியே கழுத்தை அறுத்தான். அவனுக்கு போதையில் தூக்கம் வரவில்லை. ஆனால் அவள் அசதியில் நின்ற நிலையிலேயே கண்களை லேசாக மூடினாலும் குரலை உயர்தி அவளை அதிர வைப்பான். நேற்று மாதிரி இன்று நடந்துவிட்டால் அவளால் தாங்க இயலாது... அதனால் அவன் கொடும் மொழிகளை கண்ணீருடன் சகித்துக் கொண்டு நின்றாள் சூர்யா. முதலில் நின்று கொண்டு பேசியவன் பிறகு வசதியாக அமர்ந்து கொண்டு பேசினான். பிறகு படுத்து கொண்டே பேசினான். பேசி பேசி ஓய்ந்து அவன் நன்றாக உறங்கிய பிறகுதான் சூர்யா அவள் நின்ற இடத்திலிருந்து அசைந்தாள். ஆனால் அப்போது மணி விடியற்காலை ஐந்து அடித்தது. படுக்கைக்கு செல்லாமல் நேரடியாக குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு சமையலை கவனிக்க ஆரம்பித்தாள். தினமும் வேலைக்கு விடுப்பு சொல்ல முடியாதே...! இரவு குடிபோதையில் சூர்யாவை தினமும் ஒவ்வொரு விதமாக சித்ரவதை செய்யும் கபிலன் விடிந்ததும் 'இவன் தானா அவன்...' என்கிற ரேஞ்சுக்கு மான ரோஷம் பார்க்காமல் அவள் காலில் விழுந்து கெஞ்சுவான்... "என்ன மனிதன் இவன்...! ஒரு நிலையாக இருக்காமல் மாற்றி மாற்றி நடந்து கொள்கிறானே...!" சூர்யா குழம்பிவிடுவாள். சூர்யாவின் மேல் இருக்கும் கோபத்தை போதை என்னும் திரைக்கு பின் ஒளிந்துகொண்டு வெளிப்படுத்தும் கோழை தான் கபிலன் என்பதை சூர்யாவிற்கு புரிந்துகொள்ள முடியவில்லை... அவனுடைய இரட்டை வேடத்தை அந்த குழந்தை பெண்ணால் சமாளிக்க முடியவில்லை... # # # தீரஜ்பிரசாத்தின் உடலெல்லாம் மிளகாய் அரைத்து பூசியது போல் எரிந்தது. அவனால் சூர்யா மற்றொருவனுக்கு சொந்தமாகிவிட்டாள் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதிலும் அவள் இதே ஊரில் வேறொருவன் வீட்டில்... அவனுக்கு மனைவியாக.... "ஐயோ... !" அவனால் அதற்கு மேல் நினைக் கூட முடியவில்லை. அவனுக்கு சூர்யா மேல் கடுமையான கோபம் இருந்தாலும் மற்றொருவனுடைய குடும்ப வாழ்க்கையை அழித்து தன்னுடைய வாழ்க்கையை செழிக்க வைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. அவனுக்கு கோபம்... வன்மம்... எல்லாம் சூர்யா மேல் மட்டும் தான். கபிலன் மீது பொறாமையாகத்தான் இருக்கிறது... அவனை பார்த்தால் உடம்பெல்லாம் எறிவது போல தான் இருக்கிறது... அவனை பார்க்கவே பிடிக்கவில்லை தான்... ஆனால் இதற்கெல்லாம் முழு முதற்காரணம் சூர்யா மட்டும் தானே... சூர்யாவை வதைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட தீரஜ் அவளை வீட்டை விட்டு வெளியேற்றி கிருஷ்ணா கெமிக்கல்சுக்கு கொண்டுவர முடிவு செய்தான். அதற்கு கபிலனை கருவியாக பயன்படுத்திக் கொண்டான். கபிலனின் பணத்தாசையை கண்டுகொண்டவன் அவனுக்கு பணத்தை சம்பளமாக அல்லியல்லி வழங்கியதோடு அவனை சூர்யாவிடம் நெருங்காமலும் பார்த்துக் கொண்டான். ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மட்டுமே வீட்டில் தங்க முடிந்த கபிலனின் உடல் ஓய்வுக்காக மட்டுமே வீட்டிற்கு செல்லும் என்பது அவனுக்கு உறுதி... ஆனால் இந்த ஒரு வாரமாக கபிலனின் நடவடிக்கை தீரஜ் பிரசாத்தை கலக்கியது. அவன் அடிக்கடி லீவ் போடுகிறான். காலை கம்பனிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை... மாலையும் விரைவாகவே சென்றுவிடுகிறான்... 'புது மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை போலும்...' இவற்றையெல்லாம் நினைத்தால் தீரஜ் பிரசாத்திற்கு பற்றிக்கொண்டு வரும். அந்தமாதிரி நேரங்களில் அவனிடம் சிக்குவோர் சின்னாபின்னம்தான்... ஆனால் அவனுக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்திருந்தது... சூர்யா வேலைக்கு செல்கிறாளாம்... KC -க்கு தான் அவள் வேலைக்கு வரவேண்டும் என்பது தீரஜ் பிரசாத்தின் விருப்பம். ஆனால் அவள் வேறு ஏதோ ஒரு கம்பனிக்கு வேலைக்கு செல்கிறாள். அதனால் என்ன...? அவள் வேலை செய்யும் கம்பனியை அவனுடைய கம்பனியாக மாற்றுவதில் அவனுக்கு சிரமம் எதுவும் இல்லை... அந்த வாரமே கம்பெனி கைமாறியது... சூர்யாவும் தீரஜ்பிரசாத்தை சந்திக்கும் நேரம் வந்தது.... அன்று சூர்யா வேலை செய்யும் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. புது முதலாளி வந்திருக்கிறார். அவர் மேல்மட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் தங்களை எப்போது அழைப்பாரோ என்கிற பரபரப்பில் தங்கள் வேலைகளை சரிவர செய்து கொண்டிருந்தார்கள். வேலையில் சேர்ந்து ஒரு வாரம் தான் முடிந்திருக்கிறது என்பதால் சூர்யாவிற்கு முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இல்லை... அதனால் அவள் முதலாளியின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அழைப்பும் வந்தது. முதலாளியின் அறைக்கதவை ஒற்றை விரலால் தட்டி உள்ளே வர அனுமதிக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்ற சூர்யா நிச்சயம் தீரஜ்பிரசாத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவள் மலங்க விழித்துக் கொண்டு நிற்கும் போதே "கம் இன்...." அவன் அவளை உள்ளே வர சொன்னான். எப்படிதான் அவனுடைய கண்களில் அப்படி ஒரு அந்நியத்தன்மையை கொண்டுவந்தானோ... அது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்... இவளுடைய திகைத்த விழிகளை பார்த்து 'ஏன் இந்த பெண் இப்படி பார்க்கிறாள்...?' என்பது போல் பதில் பார்வை பார்த்து மட்டும் அல்லாமல் அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பது போல ஒரு பார்வை பார்த்து வைத்தான். சூர்யாவிற்கு ஒரு நொடி சந்தேகமே வந்துவிட்டது... 'இவன் தீரஜ் தானா...! அல்லது... அவனோடு ஒட்டி பிறந்த இரட்டை பிறவி சகோதரன் யாரேனும் உண்டோ...! இல்லையே... தீரஜ் தன்னை பெற்றோருக்கு ஒரே பிள்ளை என்று தானே சொன்னான்...' அவள் பயங்கரமாக குழம்பிவிட்டாள்.

ஆனால் அடுத்த நொடி அங்கே இருந்த பெயர் பலகை அவன் தீரஜ் தான் என்பதை தெளிவாக சொன்னது. அவள் மனம் வெகுவாக புண்பட்டது. 'இவன் என்னை மறந்தேவிட்டானா...! எப்படி இவனால் முடிந்தது...? என்னால் முடியவில்லையே... ' ஒரு நொடி தன்னிலை மறந்து சூர்யாவின் மனம் தீரஜ்பிரசாத்திடம் உரிமையை எதிர்பார்த்தது... பிறகு தன்னுடைய நிலையை எண்ணி 'ச்ச... என்ன நான் இப்படியெல்லாம் நினைக்கிறேன்...! எனக்கு திருமணம் முடிந்துவிட்டது... கபிலன் தான் என் கணவன். அவனுக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்...' அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். சூர்யாவின் எண்ண ஓட்டத்தையும் தடுமாற்றத்தையும் அவள் முக பாவத்திலிருந்து கண்டு கொண்ட தீரஜ் முகத்தில் கசப்பான புன்னகை வந்து மறைந்தது. "உக்காருங்க..." என்று சொல்லி அவள் கையில் இருந்த கோப்பை வேண்டி கை நீட்டினான். சூர்யா அதை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கி புரட்டியபடியே "உங்க பேர்...?" அவளிடம் கேள்வி கேட்டான். "சூ... க்க்ம்... சூர்யா..." பதில் பேசவிடாமல் அடைத்த தொண்டையை செருமி சரிசெய்து கொண்டு அவனுக்கு பதில் சொன்னாள். "எவ்வளவு நாளா இங்க வேலை பார்க்குறீங்க...?" "ஒரு வாரமா..." "இதுக்கு முன்னாடி எண்ண செய்துகிட்டு இருந்திங்க...?" "கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல வேலை செய்து கொண்டிருந்தேன்... " "கிருஷ்ணா கெமிக்கல்ஸ்...!" அவன் குரலில் பெரிய ஆச்சர்யத்தை கொண்டு வந்து அவளை கேள்வியாக பார்த்தான். அவனுடைய இந்த பாவம் அவளை மிகவும் வருத்தியது. 'தூக்கியெரிந்தேவிட்டானே...!' "ஆமாம்... கிருஷ்ணா கெமிக்கல்ஸ் தான்..." அவள் மெலிந்த குரலில் பதில் சொன்னாள். "அது பெரிய கம்பெனியாச்சே...! அந்த வேலையை விட்டுட்டு இங்க ஏன் ஜாயின் பண்ணியிருக்கீங்க...?" "அவள் உதட்டை அழுந்த கடித்துக் கொண்டாள்." "மிஸ். சூர்யா... ம்ம்ம்... மிஸ் தானே...!" அவன்தான் பெரிய தவறு செய்துவிட்டவன் போல் முறுக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிய சூர்யா... இன்று தான் என்னவோ கொலை குற்றம் செய்துவிட்டவள் போல் குறுகினாள். "ஓகே... அது என்னவா வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஏன் KC-ல பார்த்த வேலையை விட்டுட்டு இங்க வந்து ஜாயின் பண்ணியிருக்கீங்க...? பதில் சொல்லுங்க..." "சில சொந்த பிரச்சனைகளால் அந்த வேலையை விடவேண்டியதா போச்சு... இப்போ இந்த கம்பெனில வேலை கிடைத்தது... ஜாயின் பண்ணிவிட்டேன்..." சுரத்தில்லாமல் சொன்னாள். அந்த குரல் தீரஜ்பிரசாத்தை பாதித்ததோ...! அதற்கு மேல் அவளிடம் பழைய விஷயத்தை கிளரும்படி வேறு எதையும் கேட்காமல் வேலை சம்மந்தமாக சில கேள்விகளை கேட்டுவிட்டு அவளை அனுப்பினான். அவள் அவனுடைய அறையிலிருந்து வெளியேறும் போது அவளுடைய முதுகை வெறித்த அவன் கண்களில் இருந்த பளபளப்பு இருளில் ஒளிரும் மிருகத்தின் கண்களில் இருக்கும் பளபளப்பேதான்... சூர்யாவிற்கு பல விஷயங்கள் விளங்கவில்லை.... எனக்கு திருமணம் முடிந்துவிட்ட விஷயம் இவனுக்கு தெரியுமா...? பிறகு ஏன் என்னிடம் சண்டை போடவில்லை... நான் இங்கு வேலை பார்ப்பது அவனுக்கு தெரியுமா...? தெரிந்து தான் இந்த கம்பனியை வாங்கினானா...? அப்படியானால் என்னை தெரிந்தமாதிரியே ஏன் காட்டிக்கொள்ளவில்லை.... ஒருவேளை அவன் நம்மை உண்மையிலேயே மறந்துவிட்டானா...! அது எப்படி முடியும்... மறக்க வேண்டும் என்று நினைத்தவுடன் ஒரு மனிதனால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நினைவிலிருந்து அழித்துவிட முடியுமா...! அவளுக்கு 'ஐயோ...' என்றிருந்தது... தலையை பிடித்துக் கொண்டாள். தீரஜ் அவளை திட்டியிருந்தாலோ கேள்வி கேட்டிருந்தாலோ அவளால் தாங்கியிருக்க முடியும்... ஆனால் இந்த விலகல் அவளை வெகுவாக பாதித்தது. இந்த மன வலியை தானே அவன் குறிவைத்தான்... அவன் குறி தப்பவில்லை... அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்த சூர்யா எந்த வேலையையும் பார்க்கும் சிந்தனை இல்லாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். தீரஜ் இருக்கும் இடத்தில் சூர்யாவால் இருக்க முடியவில்லை. அவளால் கபிலனின் கொடுமைகளை கூட சகித்துவிட முடிந்தது ஆனால் தீரஜ் அவளை தள்ளி நிருத்திரியிருப்பதை சகிக்க முடியவில்லை. அவள் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள்.... அவளுக்கே புரியவில்லை. அவள்தான் அவனுடைய நட்பையும் காதலையும் தூக்கி எரிந்தாள். இப்போது அவன் அவளை தூக்கி எறிந்துவிட்டான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாள். அதே நேரம் கபிலனும் அவளுடைய மனக்கண் முன் வந்து 'நான் தான் உன் கணவன்... நீ மாற்றானை நினைக்கிறாயே... துரோகி...' என்று கூக்குரலிட்டான். 'இல்லை... இல்லை... மாற்றானை நினைக்கவில்லை... நான் அவனுடைய காதலை எதிர்பார்க்கவில்லை... அந்த தகுதி எனக்கில்லை..... ஆனால் அவனுடைய நட்பு... அதுவும் கிடைக்காதோ...! அந்த தகுதியையும் இழந்துவிட்டேனோ...! சரி நட்பு வேண்டாம்... என்னை விரோதியாகவேனும் பார்க்கலாமே... அதையும் தவிர்த்து இப்படி தூர தூர விளக்கி தள்ளிவிட்டானே...!' அவள் மனம் புலம்பியது. 'ஆமாம்... இழந்துவிட்டாய்தான்... நீயாகத்தானே அந்த பொக்கிஷத்தை தூக்கிஎரிந்தாய்...' இன்னொருமனம் கேள்விகேட்டது... 'ஆனால் அவனும் தவறு செய்தானே... அப்பாவிகளை வதைத்தானே... இன்னமும் அப்படிதானே இருக்கிறான்...' 'பிறகு ஏன் நீ அவனுக்காக ஏங்குகிறாய்...' "தெரியவில்லையே... எனக்கு தெரியவில்லையே...!" அவள் வாய்விட்டு புலம்பியபடி குலுங்கி அழுதாள். சூர்யா முடிவெடுத்துவிட்டாள். அவளால் தீரஜ் பிரசாத்தின் முகத்தை பார்த்துக் கொண்டு... அவன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு... மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என்று தெரிந்துவிட்டது. அதனால் தான் அந்த முடிவுக்கு வந்தாள். அவளுடைய வேலையை விட்டுவிட்டு தீரஜ் பிரசாத்திடமிருந்து எவ்வளவு விலகியிருக்க முடியுமோ அவ்வளவு விலகியிருக்க வேண்டும் என்று... தன் முன் கையில் ராஜினாமா கடிதத்துடன் நிற்கும் சூர்யாவை சுட்டெரிப்பது போல் பார்த்தான் தீரஜ். அவள் மீது கட்டுக்கடங்காத கோபம் பீறிட்டது. ஏற்கனவே அவள் மீது கடுங்கோபத்தில் இருக்கிறான். அந்த கோபத்தையெல்லாம் அவளிடம் கொட்டவேண்டும்... ஒரேடியாக கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி அவளை கதறடிக்க வேண்டும் என்கிற அவன் எண்ணத்தில் மண்ணை போடுவது போல் ராஜினாமா கடிதத்துடன் வந்து நிற்கும் சூர்யாவை கொன்று போட்டால் கூட தகும் என்கிற அளவு வெறி தோன்றியது. கண்களில் வெறியும் முகத்தில் அருவருப்புமாக தன்னை பார்க்கும் தீரஜ் பிரசாத்தை குழப்பமாக பார்த்து... "ஏன்... என்ன ஆச்சு...?" என்று கேட்டாள் சூர்யா. "நீ இவ்வளவு மோசமான பெண் என்று நான் நினைக்கவே இல்லை...." அவன் வெறுப்பாக சொன்னான். "ஏன்...? என்... என்ன நான் செய்தேன்...?" அவள் புரியாமல் திக்கி திணறி கேட்டாள். "என்ன செய்தியா...? உரிமை இருக்கோ இல்லையோ... அதை பற்றியெல்லாம் உனக்கு கவலையில்லை. ஆனால் நான் உன்னை சுற்றி சுற்றி வரவேண்டும்... அதை பார்த்து நீ மகிழ வேண்டும்...இது தானே உன் எண்ணம்... இப்படி நினைக்க உனக்கு கேவலமாக இல்லை..." "என்னது...!" அவள் அதிர்ந்தாள். "ஆமாம்... அப்படி தான் நீ நினைக்கிறாய்... அதனால் தான் என்னை உதறிவிட்டு சென்னை சென்ற நீ, உன் கணவனுடன் திரும்ப மதுராவுக்கே வந்திருக்கிறாய். ஆனால் உன் ஜாலத்தில் மயங்கி உன்னை சுற்றி வர நான் ஒன்றும் பழைய ஏமாளி தீரஜ் இல்லை..." "கடவுளே... கடவுளே... உனக்கு என்ன ஆச்சு தீரஜ்... ஏன் இப்படி பேசுற...?" "ச்சீ... வாயை மூடு... என் பேரை இன்னொரு தரம் நீ சொன்ன வெட்டி பொதச்சுடுவேன்..." அவன் காட்டிய அலச்சியம் கலந்த வெறுப்பு அவளை நொறுக்கியது. அவள் குன்றிபோனாள். அடுத்த வார்த்தை பேச தெரியாமல் திகைத்தாள். 'இவன் தீரஜ் தானா... அவள் எது பேசினாலும் எதை செய்தாலும் கலகலப்பாக சிரிக்கும் அதே தீரஜ் தானா இவன்...!' அவளுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது... "ஏன்டி... ஒருத்தனோட நல்லா ஊர் சுத்திட்டு, இன்னொருத்தனை கல்யாணம் செய்ததோடு நிற்காமல் அவன் முன், நீ குடும்பம் நடத்தும் லட்சனத்தை மேடை போட வந்து நிரப்ப... அப்போவும் அந்த ஏமாளி உன்னை பார்த்து பல் இளிக்கணும்... என்ன பொண்ணுடி நீ..." "ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்... இதுக்கு மேல எதுவும் பேசாத ப்ளீஸ்... நான் உன்னை நோகடிக்க இந்த மதுராவுக்கு வரல... இன்ஃபாக்ட் உன்னை பார்க்காமல் இருப்பதுதான் எனக்கு நல்லது. அதனால் தானே நான் இந்த வேலையை ரிசைன் பண்ணுறேன்னு சொல்றேன்... அதுக்கு ஏன் நீ இப்படியெல்லாம் கோவப்படுற தீ..." அவன் பெயரை சொல்லும் துணிவின்றி பேச்சு பாதியிலேயே நின்றது. "என்னை பார்ப்பதை நீ தவிர்க்கிரியா...? ஹா.. குட் ஜோக்... நீ என்னை தவிர்க்க நினைத்திருந்தால் இந்த மதுராவுக்கே வந்திருக்க கூடாது... இங்கு வந்ததோடு மட்டும் அல்லாமல் என் கம்பனியிலேயே வேலைக்கு சேர்ந்து என் முன் நடமாடிக்கொண்டு இருந்து என்னை மயக்கப் பார்த்தாய். நான் உன்னை மாதிரி பிறவியை சந்தித்ததே பாவம் என்று விலகிருந்ததால் உன் அடுத்த அஸ்த்திரத்தை பிரயோகிக்க பார்க்கிறாய்...." அவனுக்கு தெரியும் இந்த கம்பனியை அவன் ஏன் வாங்கினான்... எப்போது வாங்கினான் என்று... ஆனால் சூர்யாவை எதையாவது சொல்லி நோகடிக்க வேண்டுமே... அதனால் அவனுடைய கம்பெனி என்று தெரிந்து தான் சூர்யா அங்கு வேலைக்கு வந்தாள் என்று கூசாமல் பொய் சொன்னான். 'சூர்யாவும் அதை நம்பினாள். ஒருவேளை அவன் இந்த கம்பனியை வாங்கிய பிறகுதான் நாம் இங்கு வேலைக்கு வந்திருப்போமோ... ஆனால் அது என்ன அஸ்த்திரம்...' "அஸ்த்திரமா...!" அப்படியென்றால் என்னவென்றே புரியாத சூர்யா குழப்பமாக அவனை பார்த்தாள். "என்னடி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பார்க்குற...? நீ இங்கிருந்து போனால் அடுத்து நீ வலைக்கு போகும் இடத்திற்கும் நான் வருவேன் என்று எதிர் பார்க்கிறாய்... அப்படிதானே..." "ஐயையோ... இல்லவே இல்லை... நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்ட..." அவள் கண்கள் கலங்கிவிட்டது. "பின்ன ஏன் இங்கிருந்து போக நினைக்கிற...? நாம் இருவரும் பழகினோம் தான்... ஒத்துவரவில்லை பிரிந்துவிட்டோம்... உன்வழி தனி என் வழி தனி என்று ஆகிவிட்டது. நான் என் வேலையை பார்க்கிறேன். உன்னை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை... அதே போல் நீயும் உன் வேலையை பார்க்க வேண்டியது தானே... எதற்காக என் கம்பெனியில் வேலைக்கு வந்து... என் முன் விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு நடமாட வேண்டும்... இப்போது வேலையை விட போகிறேன் என்று நாடகமாட வேண்டும்..."

'உன் கம்பெனியில் வேலைக்கு வந்தேனா...! விதவிதமாக அலங்கரித்துக் கொண்டேனா...! நாடகமாடுகிறேனா...! இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்ன...? அவளை ஒரு மோசமான பெண் என்று சொல்லிவிட்டான்....' 'தீரஜ்... அவள் தீரஜ்... வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவள் ஆழ் மனதிற்கு தெரியும் அவன் அவள் தீரஜ் என்று... அப்படி ஆழ் மனதில் அவள் பூஜிக்கும் அவளுடைய தீரஜ் அவளை பார்த்து எப்படிப்பட்ட வார்த்தையை சொல்லிவிட்டான்...' தாங்க முடியாத வலி அவள் நெஞ்சில் ஏற்பட்டது. கபிலனும் இதே வார்த்தையை தான் தினமும் சொல்லி அவளை ஏசுகிறான். ஆனால் அப்போது ஏற்படாத பயங்கர வலி இப்போது அவளை துடிக்க வைத்தது. அவன் மௌனத்தையும் விலகலையும் தாங்க முடியாத சூர்யா முன்பு நினைத்தாள்.... ' அவன் அவளை கேள்வி கேட்டால் கூட பரவாயில்லை... திட்டினால் கூட பரவாயில்லை...' என்று. ஆனால் அந்த சூழ்நிலை நடைமுறையில் வந்தபோது அவனுடைய வார்த்தையடியில் துவண்டாள். கையில் கொண்டுவந்த ராஜிநாமா கடிதத்தை அவனிடம் கொடுக்காமலே கசக்கியபடி அவனுடைய அறையிலிருந்து வெளியேறினாள். அந்த காகிதத்தை போலவே அவள் மனமும் கசங்கியிருந்தது. சூர்யாவின் கசங்கிய முகமும் தளர்ந்த நடையும் தீரஜ்பிரசாத்தை மகிழ்விக்கவில்லை.... மகிழ்வென்ன சின்ன அமைதியை கூட தரவில்லை... மாறாக மேலும் அவன் மன காயத்தை அதிகரிக்கத்தான் செய்தது... 'ஏன்டி... நீ ஏன்டி இப்படி இப்படி இருக்கிற...? நான் பேசும் போது என்னை எதிர்த்து சண்டை போடுவதற்கென்ன... முன்பெல்லாம் நான் ஒரு வார்த்தை பேசுவதற்குள் பத்து வார்த்தை பேசும் என் சூர்யாவா நீ... ' 'உன்னை காயப்படுத்தவும் முடியவில்லை... உன்னிடம் அன்பாக இருக்கவும் முடிவில்லை... உன்னை விட்டு விலகவும் முடியவில்லை... உன்னிடம் நெருங்கவும் முடியவில்லை... என்னை வதைக்கவென்றே பிறந்தவளா நீ...!' அவன் மானசீகமாக அவளிடம் பேசினான். தீரஜ் கொடுத்த அடியில் பலமாக காயப்பட்ட சூர்யா மறு நாள் வேலைக்கு செல்லவில்லை. தினமும் அலுவலகத்திற்கு வரும் தீரஜ் சூர்யாவிற்கு தெரியாமல் அவள் முகத்தை பார்த்து ஆறுதலடைவான். ஆனால் இன்று சூர்யாவை காணாமல் தவித்தான். முதலில் சூர்யா சென்னைக்கு சென்ற போது எப்படி அவனால் அவனை கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தது என்று அவனுக்கே தெரியவில்லை. இத்தனைக்கும் அப்போது அவள் அவனுடைய சூர்யாவாக இருந்தாள். ஆனால் இப்போது அவள் இன்னொருவனின் மனைவி... என்றாலும் அவனுடைய மனம் அவனுக்கு அடங்க மறுத்தது. கைவிட்டு போன பொக்கிஷத்தின் அருமை தீரஜ்பிரசாத்துக்கு தாமதமாகத்தான் புரிந்ததோ என்னவோ... அவனால் சூர்யாவின் முகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனுக்கு தலைவலி வந்தது... யாரும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனுடைய அறையில் தனியாக இருந்தான். சூர்யா வந்தது போல் தெரியவில்லை. அவனுடைய அறை ஜன்னலிலிருந்து பார்த்தால் கம்பெனி வளாகத்தின் நுழைவாயில் தெரியும். அவளுக்காக கண்களை விரித்து வைத்துக் கொண்டு காத்திருப்பவனின் கண்களிலிருந்து தப்பி அவள் உள்ளே வந்திருக்க முடியாது... இருந்தாலும் ஒரு சந்தேகம்... 'கொஞ்ச நேரத்திற்கு முன் கண்ணை இமைதோமே... அப்போது உள்ளே வந்திருப்பளோ...' அதற்கு சாத்தியமே இல்லை என்று அவன் அறிவு சொன்னாலும் அவன் மனம் கேட்கவில்லை. உடனே ரௌண்ட்ஸ் புறப்பட்டான். 'இல்லை... அவள் வரவில்லை....' அவனுடைய தலைவலி அதிகமானது... தலையே வெடித்துவிடும் போல வலித்தது... பைத்தியம் பிடிப்பதுபோல் ஆனது... மத்தியம்வரை காத்திருந்தவன் இனி அவள் வரமாட்டாள் என்று தெரிந்து கொண்டு காரை விரட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். மத்தியம் அவனுடைய அறைக்குள் நுழைந்தவன் மாலைவரை மது அருந்தினான். தொடர்ந்து அருந்தினான். தன்னை மறக்கும்வரை மது அருந்தினான். அப்படியே உறங்கிப்போனான். விடிந்து வெகு நேரம் கழித்து எழுந்தவன் அன்று அலுவலகம் செல்ல பயந்தான். 'இன்றும் அவள் வரவில்லை என்றால்... அவளுக்காக காத்திருந்து காத்திருந்து நோவதைவிட இன்று அங்கு போகாமலே இருந்துவிடலாம்... ' மாலை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு 'யார் யார் இன்று விடுப்பு...' என்பதை பொதுவாக கேட்டான். அவன் நினைத்தது சரிதான்... இன்றும் சூர்யா வரவில்லை... மேலும் இரண்டு நாள் அந்த அலுவலகம் பக்கம் செல்லாமலே அவன் தெரிந்து கொண்ட விஷயம் சூர்யா இரண்டு நாட்களாக அலுவலகத்திற்கு வரவில்லை... இதற்கு மேல் அவன் சூர்யாவை பார்க்கவில்லை என்றால் தாடிவைத்த தேவதாசாக தெருவில் அலையும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை என்று அவனுக்கு தோன்றியது... அதனால் சூர்யாவை தன்னிடத்திற்கு வரவைப்பது எப்படி என்று சிந்தித்தான். அடுத்த இரண்டாவது நாள் சூர்யா தீரஜ் பிரசாத்தை அவன் இடத்தில் சந்தித்தாள். அன்றோடு சூர்யா வேலைக்கு செல்லாமல் ஐந்து நாட்கள் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக கபிலன் சூர்யாவிடம் மிக இலக்கமாக நடந்து கொண்டான். அவளிடமிருந்து அவன் பறித்த அவளுடைய கைபேசியையும் அவளிடமே கொடுத்துவிட்டான். எப்பொழுதும் கரித்துக் கொட்டுபவன் புதிதாக இலக்கம் காட்டியது செயற்கை தனமாக இருந்தாலும் அவன் அதை பொருட்படுத்தாமல் மகிழ்சியாகதான் இருந்தான். சூர்யாவிற்கு அவனுடைய கடுகடுப்பான முகத்தை கூட சகித்துவிட முடிந்தது. ஆனால் இந்த புதிய கரிசனத்தை சகிக்க முடியாமல் மூச்சு திணறினாள். அன்றும் அப்படி தான். ஒரு புது புடவையை வாங்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து "இந்த கலர் உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் சூர்யா... உனக்காகவே பத்து கடை ஏறி இறங்கி தேர்ந்தெடுத்தேன்... இன்னிக்கு எங்க கம்பெனில பார்ட்டி இருக்கு. நீ இந்த புடவையை தான் கட்டிக்கிட்டு வரணும்...." அவன் அன்புக் கட்டளையிடான். சூர்யாவிற்கு "ஐயோ..." என்றிருந்தது. அவனிடம் பதில் சொல்லி பேச்சை வளர்க்காமல் புடவையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். அவளுக்குள் இன்னொரு கலக்கம்... "கம்பெனி பார்ட்டின்னா தீரஜ் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கே...! அவன் வந்தா என்ன செய்றது...! ஐயோ கடவுளே...! " பார்ட்டிக்கு தயாராகி வெளியே வந்தவளின் உடல் பயத்தில் பதறியது... "சூர்யா... என்னம்மா ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்க...?" கபிலன் கரிசனமாக கேட்டான். "மயக்கம் வர்றமாதிரி இருக்கு... என்னவோ செய்யுது..." அவள் தலையை கையில் தாங்கி பிடித்துக் கொண்டு தள்ளாடினாள். "ஐயையோ... மயக்கமா... ஒரு நிமிஷம் இப்படி உக்காரு...." அவன் பதட்டமாகிவிட்டான். அவளை வாசல் படியில் அமரவைத்துவிட்டு, அவசரமாக உள்ளே ஓடி தண்ணீர் கொண்டுவந்தான். "இந்தா இத கொஞ்சம் குடி... முகத்தை கழுவு..." அவனுடைய கரிசனத்தில் சூர்யா உருகிவிடவில்லை என்றாலும் மனித தன்மையுடன் அவன் நடந்துகொள்வது ஆறுதலாக இருந்தது. அவன் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு மீதியை பருகினாள். கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. இருந்தாலும் அவளுக்கு பார்ட்டிக்கு போவதை நினைத்தால் படபடப்பு அதிகமாவது போல் இருந்தது. "எனக்கு ஏதோ மாதிரி இருக்கு... நீங்க மட்டும் பார்ட்டிக்கு போயிட்டு வாங்களேன்..." அவனை கெஞ்சலாக பார்த்தவள் திடுக்கிட்டாள். அவனுடைய முகம் அவ்வளவு பயங்கரமாக மாறியது. ஒரே நொடியில் தன்னுடைய முகபாவத்தை மாற்றிக் கொண்டவன், "என்ன சூர்யா நீ... மயக்கம் வர்றதெல்லாம் ஒரு காரணமா பார்டியை தவிர்க்க... எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தோட வரும் போது நான் மட்டும் தனியா போயி நிக்க முடியுமா...? ப்ளீஸ்... ஒன்னும் ஆகாது சூர்யா... ஒரே மணி நேரம் தான்... போயிட்டு உடனே திரும்பிடலாம்... வா சூர்யா..." அவன் அவளை கட்டாயப்படுத்தினான். அவள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்காமல் அவளை காலில் விழாத குறையாக கெஞ்சி அழைத்து சென்றுவிட்டான். கிருஷ்ணா கெமிக்கல்ஸ் கம்பெனி வளாகத்திலேயே இருந்த விருந்தினர் மாளிகையில்தான் பார்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு சூர்யா அதே நிறுவனத்தில் தான் வேலை செய்தாள். அப்போதெல்லாம் இது போல் எந்த பார்டியும் கொண்டாடியதில்லை. 'இந்த ஆண்டு மட்டும் என்ன சிறப்பு...? எதற்காக இந்த பார்ட்டி...!' சூர்யா குழம்பியபடியே ஆட்டோவிலிருந்து இறங்கினாள். விருந்தினர் மாளிகை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் அந்த மாளிகை மின்னியது. கிருஷ்ணா கெமிக்கல்சில் மேல் மட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். நல்லவேளையாக தீரஜ்பிரசாத்தை அங்கு காணவில்லை. அவள் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள். "ஹலோ... மேடம்... எப்படி இருக்கீங்க...?" "ஹாய்... சூர்யா... எப்படி இருக்க... கபிலன் சார் தான் உன் ஹஸ்பன்டா...?" "என்ன மேடம்... திடீர்ன்னு வேலையை விட்டுட்டு போயிடீங்க...? நீங்க போகனுன்னு நினைத்தாலும் கோசிகாலன் உங்களை விடாது போல... ஹா... ஹா..." "சூர்யா... உன்ன பார்த்து எத்தை நாளாச்சு... உன் கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் கூப்பிடவே இல்லையே..." என்று பலர் சூர்யாவிடம் வந்து பேசினார்கள். பழைய நட்பு வட்டாரத்தை பார்த்ததும் சூர்யாவிற்கு அவளுடைய கவலை மறந்துவிட்டது. அவள் மலர்ந்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். கபிலனின் கண்கள் ' சூர்யாவை யார்யாரெல்லாம் பார்க்கிறார்கள்...? அவர்களின் பார்வை எப்படி இருக்கிறது...? இந்த கூட்டத்தில் எவன் சூர்யாவின் முன்னாள் காதலனாக இருப்பான்... ' என்று கணக்கு பண்ணிக்கொண்டிருந்தது. கபிலன் தீரஜ்தான் சூர்யாவை காதலித்தவன் என்று நம்பவே இல்லை. அந்த முகம் தெரியாத காதலன் யார் என்பதை கண்டுபிடிக்கத்தான் இன்று பல ஜாலங்களை செய்து சூர்யாவை அலங்கரித்து அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அதை புரிந்துகொள்ளாத சூர்யா பழைய நண்பர்களுடன் விகல்பமின்றி பேசிக்கொண்டிருந்தாள். அவனால் யாரையும் குறிப்பிட்டு சந்தேகப்பட முடியவில்லை. சூர்யாவின் மீது யாருடைய பார்வையும் ஏக்கமாகவோ... தவறாகவோ... கோபமாகவோ... பதியவே இல்லை. எல்லோருடைய பார்வையும் சகஜமாக இருப்பது போல் தான் தெரிந்தது. அவனுக்குள் கோபம் குமிழிட்டது. யார் அவன்...? ஒருவேளை இன்று அவன் வரவே இல்லையோ...! அவனுக்குள் சந்தேகம் பிறந்தது. யோசித்துப் பார்த்தான். அவனுக்கு தெரிந்து யாரும் வராமல் இருப்பதாக தோன்றவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையுடன் இருந்தான். அந்த நேரம் அனைவருக்கும் மதுபானமும் குளிர்பானமும் விநியோகிக்கப்பட்டது. கபிலன் மதுபானம் அருந்தியபடி ஒரு மூலையில் அமர்ந்துவிட்டான். சிறிது நேரத்தில் விருந்து நடக்கும் கூடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாஸ் வருகிறார்... ஜி வருகிறார்... என்கிற குரல்கள் எழும்பின. தீரஜ்பிரசாத் ஒரு இளம் பெண்ணின் கையை பிடித்தபடி உள்ளே வந்தான். அந்த பெண்ணின் அழகில் விருந்து கூடமே ஒரு நொடி அசைவற்றுப்போன நேரம், தீரஜ்பிரசாத்தின் கண்கள் மலர்ந்த முகத்துடன் பழைய நட்பு வட்டாரத்துடன் கதைத்துக் கொண்டிருக்கும் சூர்யாவை விழுங்குவது போல் பார்த்ததை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உள்ளே வந்த தீரஜ் புதிய பெண்ணை கையை உரிமையுடன் பிடித்தபடி, மைக்கில் இந்த பார்டி தொழிலாளர்களை உற்ச்சாகமூட்டுவதர்க்காக ஏற்ப்பாடு செய்யப்பட்ட பார்ட்டி என்றும் இந்த தருணத்தை அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும் சொல்லி சுருக்கமாக அனைவரிடமும் பொதுவாக பேசி முடித்தான். பிறகும் அந்த பெண்ணின் தோள் மேல் கை போட்டபடி, தனித்தனியாக அவனிடம் வந்து பேசுபவர்களிடம் உற்சாகமாக பேசியதோடு கையணைப்பில் இருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தினான். சூர்யாவிர்க்குள் ஒரு தீ பற்றிக்கொண்டது. அந்த தீ இதுவரை தீரஜ் பிரசாத்திர்க்குள் எரிந்து கொண்டிருந்த தீ...! பொறாமை தீ...! அவள் எவ்வளவோ முயன்றும் அவள் முகம் சிவந்து சூடாவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. சூர்யாவின் சிவந்த முகம் தீரஜ் பிரசாத்தை கொஞ்சம் சாந்தப்படுத்தியது. அவள் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பதை அவன் புரிந்து கொண்டான். கபிலன் எதை கடுபிடிக்க வேண்டும் என்று இங்கு வந்தானோ அதை எப்படி கண்டுபிடிப்பது என்று மது கோப்பையுடன் அமர்ந்து யோசிக்கும் போதுதான் இவர்களின் மௌன போராட்டம் நடந்து கொண்டிருந்தது... அவன் ஒருவழியாக யோசித்து முடித்துவிட்டு வரும்போது தீரஜ் சகஜமாகிவிட்டான். ஆனால் சூர்யா தகித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முக மாற்றம் கபிலனுக்கு சொன்ன செய்தி... 'நீ தேடும் ஆள் இங்கு தான் இருக்கிறான்...' இந்த உண்மை புரிந்ததும் கபிலன் சூர்யாவின் தோளில் கையை போட்டான். அவளுடன் மிக நெருக்கமாக நின்றான். சூர்யாவால் விலக முடியாதாளவு அவனுடைய பிடி இறுகியிருந்தது. அப்படி சூர்யாவுடன் நெருங்கி நின்றபடியே அங்கிருந்த ஆண்கள் அனைவரின் முகபாவத்தையும் கணக்கிட்டான். தீரஜ் உட்பட... யாருடைய முகத்திலும் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவன் ஏமாற்றமாக உணர்ந்தாலும் அவனுடைய நெருக்கத்தை தளர்த்தவே இல்லை. கபிலன் அறியாத விஷயம்... தீரஜ் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாலும் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறான் என்பது தான்... சிறிது நேரத்தில் அனைவரும் விருந்துண்ண அழைக்கப் பட்டார்கள். சைவமும் அசைவமும் தனித்தனியாக தோட்டத்தில் நிலா வெளிச்சத்திலும் மின் விளக்கு வெளிச்சத்திலும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவரவர் தங்களுக்கு விருப்பமான உணவை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் உண்டு மகிழ்ந்தார்கள். கபிலன் சூர்யாவிற்கு ஊட்டியே விட்டுவிடுபவன் போல நடந்து கொண்டான். சூர்யாவுக்கு அவனுடைய செய்கை வெறுப்பாக இருந்தாலும் தீரஜ் முன் இவன் இப்படி நடந்து கொள்வதை நினைத்தால் 'காற்றில் கரைந்து காணாமல் போய்விடமாட்டோமா...' என்றிருந்தது. யாரயும் நிமிர்ந்து பார்க்கும் ஷக்தியின்றி குன்றிபோய் அமர்ந்திருந்தாள். அந்த காட்சியை சகிக்க முடியாத தீரஜ் என்ன சொல்லி தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்த பெண்ணை அனுப்பினானோ... அவளை அனுப்பிவிட்டு அந்த மாளிகையிலேயே மாடியில் இருந்த அவனுடைய அறைக்கு சென்றுவிட்டான். மேலே சென்றவனால் சும்மா இருக்க முடியவில்லை. சிசி கேமராவுடன் பொருத்தப்பட்ட திரை அவனுடைய அறையில் இருந்தது. அதில் கபிலனின் கொட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தான். அதற்கு மேல் அவனால் அந்த கொடுமையை பார்க்க முடியாது என்கிற நிலையில் தன்னுடைய கைபேசியை எடுத்து சில எங்களை அழுத்தினான். அங்கே கபிலனின் கைபேசி அலறியது... சூர்யாவின் கையை விடாபிடியாக பிடித்திருந்த கபிலனின் கைபேசி அலறியதும் வேறு வழியின்றி அவள் கையை விட்டுவிட்டு கைபேசியை எடுத்து பேசினான். "ஹலோ..." "ஹலோ யாருங்க பேசுறது...?" "தீரஜ் பிரசாத்..."

அவனுக்குள் ஒரு இன்ப படபடப்பு தோன்றியது. 'யாரும் நெருங்கவே முடியாத தீரஜ் நம்மை தனிப்பட்ட முறையில் கைபேசியில் அழைக்கிறானே...! ஆஹா... நீ பொழச்சுக்குவடா கபிலா....' அவன் மகிழ்சியாக தீரஜ் பிரசாத்திடம் பேசினான். "ஐயோ சார்... வணக்கம் சார்... சொல்லுங்க சார்... நான் பார்ட்டிக்கு வந்திருக்கேன் சார்... இங்க தான் சார்... தோட்டத்துல இருக்கேன்... நீங்க என்னை கவனிக்கல போலிருக்கு சார்..." தீரஜ் எதற்காக அவனுக்கு கைபேசியில் அழைத்தான் என்பதே தெரியாமல் படபடப்பில் உளறினான். "ம்ம்ம்... கபிலன்... இங்க தான் இருக்கிங்களா... ஓகே... அப்படியே உள்ள வந்து மாடிப்படியில ஏறி மேல வாங்க... உடனே..." "ஓகே சார்..." அவன் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் உடனே தோட்டத்திலிருந்து உள்ளே செல்ல எத்தனித்தான். சூர்யா அவனை கேள்விக்குறியாக பார்த்தாள். "மாடில என்னோட ஃபிரண்டு என்னக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கானாம்... போயி அவனை பார்த்துட்டு வந்திடறேன்..." எந்த காரணமும் இல்லாமலே இயல்பாக கபிலன் தீரஜ்பிரசாத்தின் பெயரை சொல்லாமல் மறைத்து பேசினான். "மாடிலையா...! பார்ட்டி ஹால் கீழ தானே... மாடிக்கு எம்ப்லாயீஸ் போறதுக்கு பர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே...! உங்க ஃபிரண்டு எப்படி மாடில வெயிட் பண்ணுறார்...? யார் உங்க பிரண்டு...?" அவள் குழப்பமாக வினவினாள். "சும்மா... நை... நைன்னு கேள்வி கேட்டு கொல்லாத... போசாம கொஞ்ச நேரம் இங்கேயே வெயிட் பண்ணு... " அவன் பதில் சொல்வதை தவிர்த்துவிட்டு வேகமாக உள்ளே சென்று அகண்ட பட்டு கம்பளம் விரிக்கப்பட்ட மடிப்படிகளில் ஏறினான். தீரஜ் மீண்டும் கபிலனுக்கு அழைத்து அவன் எந்த அறைக்கு வரவேண்டும் என்கிற விபரத்தை சொல்லி அவனை அங்கு வரவழைத்தான். கபிலனும் சரியாக தீரஜ் பிரசாத்தின் அறையை அடைந்து கதவை தட்டினான். "உள்ளே வா..." என்ற தீரஜ் பிரசாத்தின் குரல் அவனை வரவேற்றது. தீரஜ் பிரசாத்தின் அறை இப்படி தான் இருக்கும் என்ற கபிலனின் கற்பனையையும் மீறி பிரம்மாண்டமாக இருந்த அறையின் ஒரு பக்கத்தில் தீரஜ் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் டீப்பாயில் மது பாட்டில்களும் கோப்பைகளும் மேலும் சில உணவு பொருட்களும் அடுக்கியிருந்தன. கபிலன் தயங்கியபடி உள்ளே வந்தான். நிதானமாக மது அருந்திக்கொண்டிருந்த தீரஜ், அவனை ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஒற்றை நாற்காலியை காட்டி அதில் அமரச்சொன்னான். தீரஜ் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் கபிலனை அவன் அமரசொன்ன இடத்திற்கும் ஏகப்பட்ட இடைவெளி. கபிலன் குழப்பத்துடன் தீரஜ் பிரசாத் சொன்னதை செய்தான். தீரஜ் பிரசாத்தோ அங்கே கபிலன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டவன் போல ஒரு மணிநேரம் நிதானமாக மது அருந்தினான். பிறகு வீடியோ கேம் விளையாட ஆரம்பித்தான். அவன் வீடியோ கேம் விளையாடிய திரையை கபிலனால் பார்க்க முடியாது. அவன் தீரஜ் பிரசாத்தின் முகத்தை, தூரத்தில் அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். தீரஜ் கேம் விளையாடுவதோடு கீழே பார்ட்டியில் என்ன நடக்கிறது என்பதையும் அவ்வப்போது திரையில் கொண்டுவந்து பார்த்துக்கொண்டிருந்தது கபிலனுக்கு தெரியாது... அவனுக்கு தீரஜ் பிரசாத்தின் விசித்திர நடவடிக்கை குழப்பத்தையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்தியது. பள்ளி மாணவனை ஆசிரியர் சத்தம் போடாமல் அமைதியாக ஒரு மூலையில் அமரும்படி உத்தரவிட்டு அமரவைத்திருப்பது போல் தன்னை தீரஜ் அமரவைத்திருப்பதாக உணர்ந்தான். என்ன ஒன்று தீரஜ் கபிலனை கைகட்டி வாயில் விரல் வைக்க சொல்லவில்லை அவ்வளவுதான்... தீரஜ் மேலும் ஒருமணிநேரம் வீடியோ கேம் விளையாடும் வரை பொறுத்திருந்த கபிலன் பொறுமையிழந்து எழுந்து... "சார்... என்னை ஏன் வர சொன்னிங்க...?" என்று தயக்கமாகவே கேட்டான். "அந்த சேர்ல உக்காருன்னு சொன்னேன்...." தீரஜ்ஜின் குரலில் இருந்த அதட்டலும் அவன் கபிலனை அமர சொன்ன தோரணையும் கபிலனை உறையவைத்தது. அவன் அதன் பிறகு வாயை திறக்கவே இல்லை. ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. 'தீரஜ் சூர்யாவின் மீது ஆசைப் பட்டிருக்கிறான். ஏதோ காரணத்தால் அவனுடைய ஆசை நிறைவேறாமல் சூர்யா சென்னைக்கு வந்துவிட்டாள். என்னையும் திருமணம் செய்துகொண்டாள். இப்போதும் அவனுக்கு சூர்யாவின் மீது இருக்கும் மோகம் குறையவில்லை. அதனால் தான் நான் சூர்யாவுடன் நெருக்கமாக இருந்தது பிடிக்காமல் என்னை இங்கு கொண்டுவந்து உட்க்கார வைத்துவிட்டான்.... மற்றபடி சூர்யா அடித்துவிட்ட காதல் கீதல் எல்லாம் பொய்... இவனுக்காவது சூர்யாவின் மீது காதல் வருவதாவது... அப்படியே வந்தாலும் அதை சூர்யா நிராகரிப்பதாவது... எல்லாம் கதை.... கட்டுக்கதை....' இப்போதும் சூர்யாவின் மீதுதான் கபிலனின் கோபம் திரும்பியது... 'அடிபாவி... உன் கழுத்துல தாலிகட்டின பாவத்துக்கு இவன் என்னை அடிமை மாதிரி இங்கு உட்கார வைத்துவிட்டான். இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறானோ... எல்லாத்துக்கும் நீ தாண்டி காரணம்...' அவன் சூர்யாவை கருவினான். மேலும் இரண்டுமணி நேரம் கபிலனை இருந்த இடத்திலிருந்து தீரஜ் அசையவிடவில்லை. அதன் பிறகு கேழே பார்ட்டி முடிந்து அநேகமானவர்கள் சென்றுவிட்டார்கள். ஒருசிலர் மட்டுமே எஞ்சியிருக்கையில் சூர்யா தனித்து நின்றுகொண்டிருந்தாள். அப்போதுதான் தீரஜ் கபிலனிடம் சொன்னான்... "சரி நீ கிளம்பு... " என்று. எந்த விஷயமும் இல்லாமல் ஒரே இடத்தில் கிட்டத்தட்ட நான்குமணிநேரம் கபிலனை தீரஜ் அமரவைத்து அவனை கேலிப் பொருளாக்கிவிட்டான். கபிலன் கடுகடுத்த முகத்துடன் தீரஜ் பிரசாத்தின் அறையிலிருந்து வெளியே வந்தான். அவன் தீரஜ் பிரசாத்துடன் கழித்த அந்த சில மணிநேரம் தான் அவனுடைய வாழ்க்கையில் மிக மோசமான நேரம் என்று நினைத்தான். அப்படி இருந்த போதும், தீரஜ் பிரசாத்துக்கும் சூர்யாவுக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை தெரிந்துகொள்ள நினைத்து அசட்டுத்தனமாக ஒரு காரியம் செய்தான். அந்த காரியத்தால் அவனுடைய நிம்மதியே பரிபோகப்போவதை அறியாமல்... கபிலன் தீரஜ் பிரசாத்தை சந்திக்க சென்ற பின் பழைய நட்பு வட்டாரத்துடன் கதைத்துக் கொண்டு உணவருந்திய சூர்யா சிறிது நேரத்தில் பலரும் விடைபெற்று கிளம்ப ஆரம்பித்ததும் கபிலன் என்ன ஆனான் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். 'இந்த கபிலன் எங்கு போனான்... மீண்டும் ஒரு முறை தீரஜ் பிரசாத்தை சந்திக்கும் நிலை வரும் முன் இங்கிருந்து கிளம்பிவிட்டால் நன்றாக இருக்கும்...' என்று யோசித்தபடி குறுக்கும் நெடுக்கும் நடப்பதும்... பின் ஒரு நாற்காலியில் அமர்வதும்... அதில் நிலைகொள்ளாமல் மீண்டும் நடப்பதுமாக இருந்த சூர்யாவை சிசி கேமரா திரையில் பார்த்துவிட்டு தீரஜ் கபிலனை விடுவித்தான். தீரஜ் பிரசாத்தின் அறையிலிருந்து வெளியே வந்த கபிலன் அவனுடைய அறை கதவு முழுவதுமாக மூடி லாக் ஆகிவிடாதபடி லேசாக மூடிவிட்டு வெளியே வந்தான். வெளியே வந்தவன் வராண்டாவில் நடந்தான். மாடிப்படியை அடைந்ததும் கீழே இறங்காமல் மாடிப்படியை கடந்து சென்று, மறுபுறம் ஒரு தூணுக்கு பின் மறைவாக ஒளிந்துகொண்டான். பிறகு கைபேசியை எடுத்து சூர்யாவை அழைத்தான். "சூர்யா... நான் என் நண்பனோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ மேலே வா... நாம் இருவரும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு கிளம்பிவிடலாம்..." என்றான். "மாடிக்கா...!" வியப்பாக கேட்ட சூர்யா... "இல்லை... நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன்... நீங்க சீக்கிரம் வாங்க..." என்றாள். "சூர்யா... சொன்னா கேளு... நீ வரலன்னா என்னால இப்போ இங்கிருந்து கிளம்பவே முடியாது. என் நண்பன் என்னை அறுத்து தள்ளிக் கொண்டிருக்கிறான். நீ வந்தால்... நீ என்னை தேடிக்கொண்டு வந்துவிட்டதாக சொல்லி நான் உன்னோடு வந்துவிடுவேன்... ப்ளீஸ் சூர்யா..." இந்த நேரத்தில் மிரட்டினால் அவள் பணியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து அவளிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான். கெஞ்சினால் அவளிடம் கண்டிப்பாக வேலைக்காகும் என்று அவனுக்கு தெரியும். "சரி.... இப்படி நீங்க என்கிட்டே பேசுறது உங்க நண்பனுக்கு தெரியாதா... அவர் எங்க...?" அவள் அவனை மடக்கினாள் "அவன் பாத் ரூமில் இருக்கிறான்...." "சரி... நான் வருகிறேன்..." என்று சொல்லி சூர்யா மாடிப்படிகளில் ஏறினாள். முதல் முறையாக சூர்யா அந்த மாளிகையின் மாடி பகுதிக்கு சென்றாள். அதன் பிரம்மாணடமும் ஆடம்பரமும் அவளை குழப்பியது. எந்த பக்கத்தில் படி ஏறினோம்... இப்போது எந்த பக்கம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே அவளுக்கு தெளிவாக புரியவில்லை... கபிலனுக்கு கைபேசியில் அழைத்து "நான் மாடில தான் இருக்கேன்... நீங்க எந்த ரூம்ல இருக்கீங்க... இங்க எல்லா ரூமும் ஒரே மாதிரி இருக்கு... நான் எங்க இருக்கேன்னே எனக்கு இப்போ தெரியல..." என்றாள். அவனுக்கும் முதல் இங்கு வந்த போது அப்படி தான் இருந்தது. ஆனால் அவன் மாடிப்படியிலிருந்து ஐந்தாவது தூண் வந்ததும் வலதுபுறம் வளைந்து முதலாவது ரூம் என்று தெளிவாக கணக்கு பண்ணிக்கொண்டே வெளியே வந்ததால் குழப்பமில்லாமல் சூர்யாவிற்கு வழி சொன்னான். சூர்யாவும் அவன் சொன்ன வழியை பின்பற்றி அந்த அறையை அடைந்துவிட்டாள். "ம்ம்ம்... வந்துட்டேன்... வெளிய வாங்க..." அவள் அவனை கைபேசியில் பேசியபடியே வெளியே அழைத்தாள். "கதவு சாத்தவில்லை... நீ உள்ளே வா..." என்று சொன்ன கபிலன் கைபேசியை அணைக்கவே இல்லை. அவள் தீரஜ்ஜிடம் என்ன பேசப்போகிறாள் என்று கேட்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் போது சூர்யா கைபேசியை அனைத்து கைபையில் போட்டுக்கொண்டு கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள். கபிலனை போல் கதவை லாவகமாக சூர்யா மூடாததால் 'பட்' என்ற சத்தத்துடன் கதவு லாக் ஆனது. கதவு லாக் ஆவதற்கு முன் அங்கு என்ன நிலை சூர்யா தீரஜ்ஜிடம் என்ன பேசுகிறாள்... அதற்கு அவன் என்ன பதில் சொல்லுகிறான் என்று ஒட்டு கேட்க ஓடிவந்த கபிலன் ஏமார்ந்து போனான். சரி... உள்ளே கபிலன் இல்லை என்றதும் சூர்யா உடனே வெளியேரிவிடுவாள் என்று காத்துக் கொண்டிருந்த அவனுடைய எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. கபிலன் மணிக்கணக்கில் காத்திருந்தும் சூர்யா வெளியேறவில்லை. "உள்ளே ஏதோ கசமுசா நடக்கிறது... இல்லையென்றால் ஏன் இவ்வளவு நேரம் அந்த கடங்காரி வெளியே வரவில்லை.... ஐயோ... ஐயோ... கட்டிய கணவன் நான் இங்கு இருக்கும் போதே இப்படியா... பாவி... பாவி... சண்டாளி..." கபிலன் சிறிது நேரம் சூர்யாவை அர்ச்சித்துக் கொண்டே மாடியில் நின்றான். பிறகு யார் கண்ணிலும் பட்டுவிட்டால் தீர்ந்தோம் என்று நினைத்து தோட்டத்திற்கு வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் கபிலன் தன் தலைவிதியை தானே தன்னுடைய கெட்ட எண்ணங்களால் மாற்றிக் கொண்டிருந்தான். ஆனால் கபிலன் நினைத்தது போல் அந்த அறையில் எதுவம் நடக்கவில்லை. தீரஜ் பிரசாத்தின் அறைக்குள் நுழைந்த சூர்யா முதலில் அங்கு யாரையும் காணாது திகைத்தாள். அந்த பெரிய அறையில் ஒரு பக்கம் மது கோப்பையுடன் ஒரு உருவம் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பது அவள் கண்ணில் சில நிமிட தேடலுக்கு பிறகுதான் பட்டது. அவளுடைய கண்கள் நிலைகுத்திவிட்டன... அவள் அங்கு தீரஜ் பிரசாத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய அதிர்ந்த முகமே காட்டியது... வெளியே சென்ற கபிலன் கீழே செல்லாமல் தூணுக்கு பின் பதுங்கியதையும் அதன் பிறகு சில நிமிடங்களில் சூர்யா மாடிக்கு வருவதையும் திரையில் கவனித்துக் கொண்டிருந்த தீரஜ் சூர்யா அவனுடைய அறைக்குள்ளேயே நுழைந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்கள் பளபளத்தன. "வெல்கம் மிசஸ் கபிலன்... வெல்கம்..." அவன் முகத்திலும் குரலிலும் இருந்த எள்ளல் சூர்யாவை கொன்று கூறுபோட்டது... "நீங்களா...?" "என் அறைக்கே வந்து நின்று கொண்டு... என்னை பார்த்தே நீங்களா என்று கேட்கிறாய்....! ஏன்... உன் கணவன் உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா.....?" 'அவன் என்ன சொன்னான்...? நண்பனை பார்க்க போவதாக சொன்னான்... பிறகு என்னையும் இங்கே வர சொன்னான்... ஆனால் தீரஜ் அறைக்கு ஏன் வர சொன்னான். இப்போ கபிலன் எங்கே போனான்...? என்ன நடக்கிறது இங்கே... ' அவள் பேந்த விழித்தாள். "ஹா... ஹா... ஹா...... ஹா... ஹா... " அவள் விழிப்பதை பார்த்துவிட்டு சத்தமாக சிரித்தான். அவனுடைய சிரிப்பு சத்தத்தில் அந்த அறையே அதிர்ந்தது. சூர்யாவிற்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. சிரித்து சிரித்து ஓய்ந்தவன் கையிலிருந்த கோப்பையில் சிறிது மதுவை ஊற்றி அருந்தினான். சூர்யா ஏன் இங்கு வந்தாள்...? கபிலன் ஏன் அறைக்கு வெளியே குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டிருக்கிறான் என்பதை பற்றியெல்லாம் தீரஜ் சிந்திக்கவே இல்லை. அவனுக்கு இப்போது சூர்யா அவனுடைய அறையில் இருக்கிறாள்... அதுமட்டும் தான் மனதில் நின்றது... நடுங்கியபடி அங்கு நின்று கொண்டிருந்த சூர்யா மெதுவாக நகர்ந்து அவள் உள்ளே நுழைந்து தாள் போட்ட கதவை திறக்க முயன்றாள்... முடியவில்லை... கதவு பூட்டப்பட்டிருந்தது... தானியங்கி கதவு... சூர்யா கதவை திறந்து வேகமாக விட்டதும் தானாக பூட்டிக் கொண்டது. அவளுக்கு கண்ணீர் முட்டியது... கண்ணீர் வெளியேறிவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டாள். தீரஜ் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை என்றாலும் அவளுடைய முயற்சி தோற்றதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். "ஹா... ஹா.... ஹையோ.... ஹா... ஹா..." அதே வெறித்தனமான சிரிப்பு சூர்யாவை அச்சுறுத்தியது. கபிலன் ஒருமுறை குடித்துவிட்டு அவளிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டது நினைவில் வந்தது. அவள் நாவரண்டது. தீரஜ் அந்த அளவு தரமிறங்க மாட்டான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு பயம் படர்வதை அவளால் தடுக்க முடியவில்லை. "நான் போகணும் தீரஜ்... ப்ளீஸ்... கதவை திற..." அவள் பயத்தை மறைத்துக் கொண்டு அவனிடம் சாதாரணமாக கேட்டாள். "நான் உன்னை இங்கு வர சொல்லவில்லையே... கதவையும் நான் பூட்டவில்லையே...!" "தீரஜ் ப்ளீஸ்... நான் போகணும்..." "சரி போ... ஆனால் ஏன் இங்கு என்னை தேடி வந்த... அதை சொல்லிவிட்டு போ..." "நான் உன்னை தேடி வரவில்லை தீரஜ்..." அவள் தயக்கத்துடன் சொன்னாள். சட்டென்று குடிப்பதை நிறுத்திவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய முகமும் கண்களும் போட்டி போட்டுக் கொண்டு சிவந்திருந்தன. சூர்யாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது... "அப்போ... யாரை தேடிவந்த... அந்த கபிலனையா....?" அவன் நிதானமாக கேட்டான். அவ்வளவு குடித்திருந்தாலும் அவனிடம் சிறு தடுமாற்றம் கூட இல்லை. "......................." அவள் பதில் சொல்லாமல் தலைகுனிந்தாள்.

கபிலன் அவளுடைய கணவன். அவனை அவள் தேடிவருவதில் என்ன தவறு... அதை தீரஜ்பிரசாத்திடம் ஏன் அவளால் நிமிர்ந்து சொல்ல முடியவில்லை... யாருக்கும் தெரியாமல் அவள் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும் ஒரு முகம் நேரில் வந்து கேள்வி கேட்கும் போது அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்... அவள் சிலை போல் நின்றாள். சூர்யாவை இழந்துவிட்ட துக்கமும், அவள் இனி தனக்கு கிடைக்கவே மாட்டாள் என்கிற தவிப்பும் கொடுத்த மனஅழுத்தமும்... அதை குறைக்க அவன் எடுத்துக் கொண்ட மதுவும் அவனை தூண்ட, அவன் சூர்யாவிடம் நேரடியாக கேட்டுவிட்டான்... "ஏன்டி இப்படி பண்ணின...? என்னை ஏமாத்திட்டு எதுக்குடி அவன்கிட்ட போன... என்கிட்டே இல்லாதது அப்படி என்னடி அவன்கிட்ட இருக்கு...?" கண்கள் கனலை கக்க.... கர்ஜித்தான்.... "தீரஜ்... இது பழசை பற்றி பேசும் நேரம் இல்ல... அதோடு உன்னை நான் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றவும் இல்லை... பிறகு நான் யாரை கல்யாணம் செய்துகொண்டால் உனக்கென்ன... ஏன் இப்படி செய்ற... " அவள் படபடப்பாக பேசிக்கொண்டிருக்கும் போதே மின்னல் வேகத்தில் தான் அமர்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்தவன் எதிரில் இருந்த டீப்பாயை காலால் எட்டி உதைத்தான். அது "தட்..டட்...டட்" என்ற சத்தத்துடன் கீழே உருண்டது. அதன் மீது அடுக்கப்பட்டிருந்த பாட்டில்கள் கலகலவென உடைந்து சிதறின. அந்த சத்தத்தின் ஊடே "பொய் சொல்லாதடி... பொய் சொன்னே... உன்ன கொலையே செஞ்சுடுவேன்..." என்று கையை ஓங்கிக் கொண்டு அவளிடம் பாய்ந்தான். பின் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை தொடாமல் கையில் இருந்த மது கோப்பையை தூக்கி சுவற்றில் அடித்தான். அவனுடைய வெறித்தனமான செயலில் செய்வதறியாது திகைத்த சூர்யா மிரண்டு விழித்தாள். "என்னடி முட்ட கண்ண வச்சுகிட்டு முழிக்குற...? இப்படி முழிச்சே ஆளை காலி பண்ணிடுவடி நீ... இன்னிக்கு முழுக்க நீ எனக்கு அடிமை... நீ இங்கிருந்து ஒரு அடி கூட நகர முடியாது..." "....................." "நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி... பார்த்திருப்பியே... 'கிரா....ன்ட் பார்ட்டி...' எதுக்குன்னு நினைக்கிற... எல்லாம் உன்னை இங்கு கொண்டு வரத்தான்......" "....................." "என்ன பார்க்குற... என்னை தவிக்க விட்டுவிட்டு நீ மட்டும் சந்தோஷமா குடும்பம் நடத்துவ... நான் இங்கு வெந்து சாகனுமா...? இன்னியோட உன்னோட நிம்மதி சந்தோஷமெல்லாம் குழி தோண்டி புதைக்க போறேண்டி..." அவனுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக வந்தது. "........................." அவள் பதில் எதுவும் பேசவில்லை. அவளை பொறுத்தவரை அவளது நிம்மதி என்றோ தொலைந்துவிட்டது. இல்லாத நிம்மதியை இவன் எங்கிருந்து புதைக்க போகிறான்.... "உன்னை ஏன்டி அந்த கபிலன் இங்கு வர சொன்னான்...? எதற்காக நீ இங்கு வந்த... முதலில் அதை சொல்..." ".........................." "பதில் சொல்லுடி... இல்லை... உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது... சொல்லுடி..." அவன் அவளை அதட்டினான். "உன்னால என் நிம்மதி சந்தோஷம் எல்லாம் போச்சுடி... இப்போ எதுக்காக இங்க வந்திருக்க...? நான் எப்படி வேதனை பட்டு சாகிறேன் என்று பார்த்து ரசிக்க வந்தியா...? துரோகி... துரோகி..." "இல்லை... இல்லை..." "என்னடி இல்லை... நீ என்னை காதலிக்கவே இல்லை...? உன் மனசாட்ச்சியை தொட்டு சொல்லு... நீ என்னை நினைக்கவே இல்லை....?" "............................" "உன்னால பதில் சொல்ல முடியாதுடி... எப்படி முடியும்...? நீ என்னை எமற்றலடி... உன்னையே ஏமாத்திக்கிட்ட..." ".............................." "பொண்ணுங்க மனசு மட்டும் தான் பூ மாதிரியா....? காதல்ன்னு வந்துட்டா ஆண்கள் மனசுதான்டி பூ மாதிரி... " "........................" "என்னை நினைத்த உன் மனசில் இன்னொருவனை சுமந்துகொண்டு உன்னால் குடும்பம் நடத்த முடிகிறது.... ஆனால் என்னால் முடியாதுடி... உன்னை நினைத்த என் மனது வேறு யாரையும் நினைக்காதுடி..." "உன்னால நான் என் பலத்தை கொஞ்சம் கொஞ்சமா இழந்து கொண்டிருக்கிறேண்டி... அழிந்து கொண்டிருக்கிறேன்... பார்... இந்த மதுராவிலேயே இருந்து என் அழிவை பார்... உன்னை நினைத்ததற்கு நீ எனக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசை பார்த்து ரசி..." ".............." அவள் இப்போதும் எதுவும் பேசவில்லை. ஆனால் இதுவரை அடக்கி வைத்திருந்த அவளுடைய கண்ணீர் இப்போது அடங்க மறுத்து மடை திறந்தது. அவளுடைய கண்ணீரை பார்த்ததும் அவனுடைய பேச்சு நின்றது... அவன் எதிர் பார்த்தது நடக்கிறது... அவளை காயப்படுத்தி கதரவைக்க வேண்டும் என்கிற அவனது எண்ணம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது... ஆனால் அது அவனுடைய காயப்பட்ட மனதிற்கு நிம்மதியை தந்ததா...? இல்லையே...! அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை... அவளுடைய கண்ணீரை அவனால் பார்க்க முடியவில்லை. மறுபுறம் திரும்பி நின்றவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து ஆழமாக இழுத்து புகையை வெளியேவிட்டான். மறுபக்கம் திரும்பியிருந்தபடியே "எதுக்குடி அழற...? அழவேண்டியவன் நான் தான்... உன்னை போல் ஒரு பெண் பின்னால் பித்தனாக அளைத பாவத்திற்கு நான் இந்த ஜென்மம் முழுக்க அழ வேண்டும்..." அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே பின்னால் ஏதோ சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தவன் திகைத்தான்... வேரறுந்த மரம் போல் சூர்யா தரையில் விழுந்தாள். ஒரே எட்டில் அவளை அடைந்தவன் கன்னத்தை தட்டிப் பார்த்தான். அசைவே இல்லை...

"சூர்யா... சூர்யா... ஏய்... எந்திரி சூர்யா... என்ன ஆச்சு... எந்திரி..." அவன் உண்மையிலேயே பதறினான். அவளுக்கு என்ன ஆயிற்றோ என்று தவித்தான். அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் அவனுக்கு தாங்கவில்லை. பிறகு எப்படி இவன் அவளை பழிவாங்க போகிறான்...!? மயங்கி விழுந்தவளை தூக்கி கட்டிலில் படுக்கவைத்தவன் மருத்துவருக்கு தொலைபேசியில் அழைத்தான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஆஜரான மருத்துவர் சூர்யாவின் நாடியை பிடித்து பார்த்துவிட்டு அவன் தலையில் அடுத்த இடியை இறக்கினார்....