Wednesday 18 September 2013

அன்புள்ள ராட்சசி 1


"உ..உங்க பேரே மறந்து போச்சு..!!" பிரமிட் நடராஜன் சாயலில் இருந்த பரந்தாமன் நெற்றியை தடவியவாறே சொன்னார். "அ..அசோக்..!!" அவருக்கு பதிலளித்த அசோக் அல்லு அர்ஜுன் சாயலில் இருந்தான். "ஆங்.. கரெக்ட் கரெக்ட்.. அசோக்..!! இப்போ ஞாபகம் வந்துடுச்சு..!! ஹாஹா.. வயசாயிடுச்சுல..??" "ம்ம்..!! அதனால என்ன ஸார்..?? பரவால..!!" "வந்து ரொம்ப நேரம் ஆச்சோ..??" "இல்ல ஸார்.. ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.. அவ்வளவுதான்..!!"
"ம்ம்.. காஃபி, டீ ஏதும் சாப்பிடுறீங்களா..??" அவர் சம்பிரதாயமாக கேட்க, "இ..இல்ல ஸார்.. பரவால..!!" அசோக் புன்னகையுடன் தவிர்த்தான். "வெயில்ல அலைஞ்சு வந்திருப்பீங்க போல.. கொஞ்சம் தண்ணியாவது குடிங்க..!!" அவர் கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரை அசோக்கின் பக்கமாக நகர்த்தினார். "பரவால ஸார்.. இருக்கட்டும்..!!" அசோக் அதை தொட்டுக்கூட பார்க்காமல் சொன்னான். "ஹ்ம்ம்.. சொல்லுங்க தம்பி.. கிஷோர் தம்பி உங்களை பத்தி ஆஹா ஓஹோன்னு சொன்னாரு.. நானும் 'சரி அனுப்பி வைங்க.. பேசிப்பாக்குறேன்..'னு சொல்லிருந்தேன்..!!" அவருடைய பேச்சில் ஒரு அலட்சியம் தெரிந்தது. இருந்தாலும், "ரொம்ப தேங்க்ஸ் ஸார்.. எனக்காக உங்களோட டைம் ஒதுக்கித் தந்ததுக்கு..!!" அசோக் நிஜமான நன்றியுணர்வுடன் சொன்னான். "பரவால தம்பி..!! மொதல்ல.. உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க..!!" அவர் கேட்க, அசோக் இப்போது தனது கையிலிருந்த ஃபைலை டேபிள் மீது வைத்தான். சர்ர்ர்ரென ஜிப்பை இழுத்து ஃபைலை திறந்தான். உள்ளே இருந்த அந்த டிவிடி கேஸை வெளியே எடுத்தான். எதிரே இருந்தவரின் முன்பாக வைத்து, அதை அவர் பக்கமாய் நகர்த்தினான். பரந்தாமன் இப்போது சற்றே குழம்பிப்போனவராய், அந்த டிவிடி கேஸ் மீதிருந்து பார்வையை விலக்காமலே கேட்டார். "என்ன தம்பி இது..??" "என் ரெஸ்யூமே ஸார்..!! நான் எடுத்த ஆட் ஃபில்ம்ஸ்.. ஷார்ட் ஃபில்ம்ஸ்.. டாகுமன்ட்ரிஸ்.. எல்லாம் இதுல காப்பி பண்ணிருக்கேன்..!! இதை பாத்தீங்கன்னா என்னைப் பத்தி உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும்..!!" "ஹாஹா.. எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி.. நீங்களே கொஞ்சம் உங்களை பத்தி சொல்லிடுங்க..!! என்ன பண்ணுனீங்க.. என்ன பண்ணிட்டு இருக்குறீங்க.. எப்படி போயிட்டு இருக்கு..??" பரந்தாமன் அப்படி கேட்பார் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. சற்றே தடுமாறினான். அவருக்கு பக்கவாட்டில் இருந்த கம்ப்யூட்டரை அமைதியாக ஒருமுறை பார்த்தான். 'நேரம் இல்லையா..?? அப்புறம் எதற்கு இதெல்லாம் இங்கு இருக்கிறது..??' என்பது போல இருந்தது அவனது பார்வை. பரந்தாமன் ஒரு கையை, அமர்ந்திருந்த சேரின் கைப்பிடியில் ஊன்றி இருந்தார். புறங்கையை இன்னொரு கையால் தடவிக்கொண்டே, ஒருபக்கமாய் தலையை சாய்த்து வைத்துக்கொண்டு, திறந்த வாயும் இடைவெளி விழுந்த பற்களுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அசோக் இப்போது மெல்ல ஆரம்பித்தான். தன்னைப் பற்றி கூறினான்."எ..என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல ஸார்..!! பொறந்தது வளந்தது படிச்சதுலாம் சென்னைதான்..!! லயலால விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன்.. காலேஜ்ல படிக்கிறப்போவே ஆட் ஃபில்ம் இண்டஸ்ட்ரி மேல ரொம்ப இன்ட்ரஸ்ட்..!! டிக்ரீ முடிச்சதும்.. சென்னை ஃபில்ம் ஸ்கூல்ல, சிக்ஸ் மன்த்ஸ் கோர்ஸ் அண்ட் ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன்.. ஆட் ஃபில்ம் மேகிங் பத்தி..!! அப்புறம்.. நானும், என் கூட படிச்ச பிரண்ட்ஸ் கொஞ்ச பேரும் சேர்ந்து ஒரு அட்வர்டைசிங் கம்பனி ஆரம்பிச்சு, இப்போ நடத்திட்டு இருக்குறோம்.. கிஷோர் கூட அதுல ஒன் ஆஃப் தி பார்ட்னர்ஸ்..!!" "ம்ம்ம்.. சொன்னாரு சொன்னாரு..!! உங்க ஆபீஸ் எங்க இருக்கு..??" "வடபழனிதான் ஸார்.. ஆர்காட் டெரஸ்க்கு ஆப்போசிட்..!!" "ஒ.. அப்போ ரொம்ப பக்கத்துலதான் இல்லையா..??" " ஆமாம் ஸார்..!!" "ம்ம்.. எந்த மாதிரி அட்வர்டைஸ்மண்ட்ஸ்லாம் பண்றீங்க..??" "மெயினா ஆட் ஃபில்ம்ஸ்தான் ஸார்.. மோஸ்ட்லி டிவி கமர்ஷியல்ஸ்..!! இப்போ கொஞ்ச நாளா இன்டர்நெட் அட்வர்டைசிங்லயும் கான்சன்ட்ரெட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்..!!" "எப்படி.. எல்லாம் டைரெக்ட் டீலிங்தானா..??" அவர் கேட்டுவிட்டு அசோக்கையே கூர்மையாக பார்க்க, இப்போது அசோக் சற்றே தடுமாற்றமாய் நெளிந்தான். "இ..இல்ல ஸார்.. பாலாஜி அட்வர்டைசிங்கோட டை-அப் வச்சிருக்கோம்.. அவங்கட்ட இருந்து ப்ராஜக்ட் எடுத்து பண்றோம்.. அவங்க ப்ரொடக்ஷனுக்கு அப்பப்போ எங்க டீமை யூஸ் பண்ணிப்பாங்க..!!" "ஆங்.. அப்படி சொல்லுங்க..!! ம்ம்ம்.. பரவால.. நல்லா புளியங்கொம்பாதான் புடிச்சிருக்கீங்க..!! பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு..??" "நாலு வருஷம் ஆச்சு ஸார்..!!" "இப்போ என்ன திடீர்னு பிரச்சனை..??" "எ..என்ன பிரச்சனைனா..?? பு..புரியல ஸார் ..!!" "இல்ல.. பிசினஸ்ல ஏதும் ப்ராப்ளமான்னு கேட்டேன்..??" "ஐயோ.. அதுலாம் ஒன்னும் இல்ல ஸார்..!! பிசினஸ்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.. ரொம்ப ஃபாஸ்ட் க்ரோத்னு சொல்ல முடியாட்டாலும்.. ஸ்டெடியா முன்னேறிட்டு இருக்கோம்..!!" "அப்புறம் ஏன் சினி இண்டஸ்ட்ரிகுள்ள வர ஆசைப்படுறீங்க..??" "அ..அது.. அது.." "ம்ம்.. சொல்லுங்க தம்பி..!!" "இ..இது.. இது எனக்கு ஒரு பேஷன் மாதிரி ஸார்.. இப்போ கொஞ்ச நாளாத்தான்.. ஒரு ஒன் இயராத்தான் இந்தமாதிரி பெரிய ஸ்க்ரீன் மேல எனக்கு ஆசை..!! மூவீஸ் டைரெக்ட் பண்ணனும்னு எனக்குள்ள ஒரு கனவு..!!" "ஹாஹா.. கனவுதான..?? காண வேண்டியதுதான்..!! இப்போத்தான் ஆளாளுக்கு டைரெக்டர் ஆகணும்னு கனவு வந்துடுதே.. உங்களுக்கும் வந்ததுல ஒன்னும் தப்பு இல்ல.. ஹாஹா..!!" சொல்லிவிட்டு அவர் சிரித்தார். அவர் சிரிப்பில் இருந்த கிண்டல் அசோக்கை சற்றே எரிச்சலுற செய்தது. ஆனாலும், அவர் புதுமுக இயக்குனர்களை வைத்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்திருக்கிற தயாரிப்பாளர் என்ற நினைவு அசோக்கின் மனதை குறுக்கிட, எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டான். "தம்பி தப்பா எடுத்துக்க கூடாது.. நான் ஏன் சொல்றேன்னா.. எப்போவுமே இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட கூடாது..!!" சொல்லிவிட்டு அவர் பல்லிளித்தார். "இல்ல ஸார்.. இதை அப்படி சொல்ல முடியாது.. நான் ஒன்னும் தகுதி இல்லாம ஆசைப்படல.. பெரிய ஸ்க்ரீன்ல கண்டிப்பா ஜெயிக்கமுடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! உண்மையை சொல்லப்போனா.. ஒன் இயர் முன்னாடி வரை எனக்கு சினி இண்டஸ்ட்ரி மேல எந்த ஈடுபாடும் இல்லாமத்தான் இருந்தது..!!" "ஓ.. அப்புறம் எப்படி திடீர்னு..??""ஆக்சுவலா.. ஒன் இயர் முன்னாடி.. எங்க க்ளையன்ட் ஒருத்தருக்காக நான் ஒரு கான்சப்ட் சொன்னேன்.. அதை அவங்க ரிஜக்ட் பண்ணிட்டாங்க.. இருந்தாலும் எனக்கு அந்த கான்சப்ட் பிடிச்சிருந்ததால.. ஒரு செல்ஃப் இன்ட்ரஸ்ட்ல, அந்த கான்சப்டை ஷார்ட் ஃபில்மா ஷூட் பண்ணிணேன்.. யூட்யூப்ல அப்லோட் பண்ணினேன்.. நெறைய பேர் நல்லாருக்குன்னு சொன்னாங்க.. அதுல இருந்துதான் எனக்கு மூவிஸ் மேல இன்ட்ரஸ்ட் வர ஆரம்பிச்சது..!! அதுக்கப்புறம் நானே நெறைய கான்சப்ட்ஸ் யோசிக்க ஆரம்பிச்சேன்.. அப்பப்போ அதை ஷார்ட் ஃபில்ம்ஸா எடுத்து யூட்யூப்ல அப்லோட் பண்ணுவேன்.. எல்லாத்துக்குமே செம ரெஸ்பான்ஸ்..!! இதுவரை அஞ்சு ஷார்ட் ஃபில்ம்ஸ் எடுத்திருக்குறேன்.. அந்த ஷார்ட் ஃபில்ம்ஸ்லாம் பாத்தீங்கன்னா, என்னோட கனவுல ஒரு நியாயம் இருக்குன்னு உங்களுக்கே புரியும்..!! ப்ளீஸ் ஸார்.. ஒரு அஞ்சு நிமிஷம்.. அந்த டிவிடி கொஞ்சம் பாருங்களேன்..!!" அசோக்கின் குரலில் மெலிதான கெஞ்சல் ஒளிந்திருந்தது. "ஹாஹா.. இதைப்பாத்து நான் என்ன தம்பி பண்ணப் போறேன்..?? என்னை பொறுத்தவரை ஷார்ட் ஃபில்ம்ஸ் வேற.. சினிமா வேற..!! எனக்கு இந்த பாஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ், ராசியான ஆர்டிஸ்ட், இமேஜ், பொடலங்கா, கத்தரிக்கா.. இதுலலாம் நம்பிக்கை இல்ல தம்பி..!! நான் அறிமுகப்படுத்தின ரெண்டு டைரக்டரும் புதுப்பசங்கதான்.. உங்கள மாதிரி சினிமால எந்த அனுபவும் இல்லாதவங்கதான்..!!" "ம்ம்.. தெரியும் ஸார்.. அதான் நானும் ஒரு நம்பிக்கையோட வந்திருக்கேன்..!!" "எனக்கு சப்ஜக்ட்தான் தம்பி முக்கியம்.. எந்த மாதிரி ஸ்டோரி வச்சிருக்கீங்க, எந்த மாதிரி புதுபுது ஐடியாஸ் வச்சிருக்கீங்க.. அதுதான் எனக்கு முக்கியம்..!! டெக்னாலாஜி பத்தி நீங்க ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. அதுக்கெல்லாம் ஆள் வச்சுக்கலாம்..!! சப்ஜக்ட் பத்தி சொல்லுங்க தம்பி.. நீங்க சொல்ற ஸ்டோரி எனக்கு பிடிச்சிருந்தா.. கண்டிப்பா உங்களை வச்சு படம் எடுக்குறேன்..!!" பரந்தாமன் அப்படி சொன்னதும், கொஞ்ச நேரமாக தளர்ந்து போயிருந்த அசோக் இப்போது மீண்டும் உற்சாகமானான். முதுகில் யாரோ குத்தியது மாதிரி நிமிர்ந்து அமர்ந்தான். லேசாக தொண்டையை செருமிக்கொண்டு, கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு, மெல்ல ஆரம்பித்தான். "இ..இது.. இது ஒரு ஹாரர் த்ரில்லர் சப்ஜக்ட் ஸார்..!! ஒரு மலையடிவாரத்துல இருக்குற கிராமத்துல நடக்குற மாதிரிதான் இந்தக்கதையை நான் யோசிச்சு வச்சிருக்கேன்..!! ஒரு ரெய்னி ஸீசன்ல.. சுத்தி பச்சை பசேல்னு மரமும், செடியுமா.. எந்த நேரமும் மழையும், இடியுமா.. ஒரு அழகான, அமானுஷ்யமான பேக்ட்ராப்ல.. அடுத்தடுத்து சில கோரமான சாவுகள் நடக்குது.. அந்த சாவுகளுக்கு பின்னாடி இருக்குற ஷாக்கிங் மிஸ்ட்ரியை சொல்றதுதான் இந்தக்கதை..!! தங்களோட பூர்வீக பங்களாவை விக்கிறதுக்காக, அந்த கிராமத்துக்கு வர்ற ஹீரோ அண்ட் ஹீரோயினோட வியூலதான் மொத்த கதையும் நகருது.. ஒரு ஸ்டேஜ்ல, அங்க நடக்குற மர்மமான சம்பவங்களுக்கும் தங்களுக்கும் ஒரு லிங்க் இருக்குன்னு.. அவங்களுக்கு தெரியவருது.. உண்மை என்னன்னு கண்டுபிடிக்க ரெண்டு பேரும் ட்ரை பண்றாங்க..!! அந்த உண்மை என்ன.. அதை எப்படி கண்டுபிடிச்சாங்க.. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்றதுதான் மீதி கதை..!!" கதைச்சுருக்கத்தை முதலில் சொல்லி அவரை தயார் படுத்தி விட்டதாக எண்ணிய அசோக், அடுத்து ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு காட்சியாக அவருக்கு நெரேட் செய்ய நினைத்தான். முதல் காட்சியை அவனுடைய மனக்கண்ணில் நிறுத்தி, அதை அவருக்கு உரைக்க முற்பட்டான். "படம் ஆரம்பிக்கிறப்போவே ரொம்ப த்ரில்லிங்கா ஷாக்கிங்கா ஆரம்பிக்கிறோம் ஸார்.. ஃபர்ஸ்ட் ஸீன்லயே.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனை இடைமறித்து, "அந்த கொலைலாம் பண்றது யார் தம்பி..??" என்று பரந்தாமன் அசால்டாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் ஓரிரு வினாடிகள் அவரையே திகைப்பாக பார்த்த அசோக், அப்புறம் "இ..இருங்க ஸார்.. நான் ஒவ்வொரு ஸீனா சொல்றேன்.. அப்போத்தான் நல்லாருக்கும்.. இப்போவே க்ளைமாக்ஸை சொல்லிட்டா உங்களுக்கு சுவாரசியம் போய்டும்..!!" என்று பரிதாபமாக சொன்னான். "ஹாரர்னா..?? எந்த மாதிரி ஹாரர் தம்பி..??" அவர் கேள்வியை மாற்றினார். "சூப்பர் நேச்சுரல் ஹாரர்..!!" அசோக் கெத்தாக சொல்ல, "ஹ்ஹ.. பேய்ப்படமா..??" அவர் கேலியாக கேட்டார். "ஆமாம் ஸார்..!!" "அப்போ.. பேய்தான் இந்தக்கொலைலாம் பண்ணுதா..??" "ஆ..ஆமாம் ஸார்..!!" 'கதை சொல்கிற சுவாரசியத்தையே இந்த ஆள் காலி செய்துவிட்டாரே' என்று நொந்துபோன குரலில் சொன்னான் அசோக். அவரோ தனது கனத்த சரீரம் குலுங்கும் அளவிற்கு 'ஹாஹா..' என்று கனைத்தார். கிண்டல் தொனிக்கும் குரலில் சொன்னார். "என்ன தம்பி நீங்க.. நான் உங்ககிட்ட இருந்து என்னன்னவோ எதிர்பார்த்தேன்.. நீங்க என்னடான்னா.. பேய், பூதம், ரத்தக்காட்டேரின்னு சப்புன்னு முடிச்சுட்டீங்க..??" அவர் சொன்னதைக்கேட்டு சற்றே அதிர்ந்த அசோக், "ஸார்.. நீங்க ஒரு தடவை கதையை முழுசா கேளுங்க ஸார்.. அப்புறம் சொல்லுங்க.!!" என்று அவசரமாக சொன்னான்."அவுட்லைனே புடிக்கலன்றேன்.. அப்புறம் கதையை கேட்டு என்ன ஆகப்போகுது தம்பி..?? வேற ஏதாவது ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!" "வே..வேறன்னா.." "வேறன்னா வேறதான்..!! வேற ஏதும் ஸ்டோரி உங்கட்ட இல்லையா..??" "இ..இருக்கு.. ஆனா.." அசோக் இழுக்க, "அதுவும் பேய் ஸ்டோரியா..??" "ஆ..ஆமாம்..!!" "ஹ்ம்ம்... இன்னொரு பேய்.. இன்னொரு பத்து பதினஞ்சு பேரை கொல்லுதா..??" "ம்ம்..!!" "இது எந்த பேக்ட்ராப்ல..?? நல்லா பளீர்னு வெயில் கொளுத்துற பாலைவனத்துலையா..??" இப்போது அவரது குரலில் நக்கல் மிதமிஞ்சி போயிருந்தது. "இ..இல்ல ஸார்.. அது வேற மாதிரி தீம்..!!" "அட போங்க தம்பி..!!" அவர் சலித்துக்கொண்டார். "ஸார்.. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. நான் ஸ்டோரியை முழுசா சொல்றேன்.. இந்த ஸ்டோரி கண்டிப்பா வொர்க்கவுட் ஆகும் ஸார்.. படம் பாக்க வர்றவங்கள எப்படிலாம் பயமுறுத்தலாம்னு.. நான் புது புது ஐடியாஸ் வச்சிருக்கேன் ஸார்.. மக்கள் அதெல்லாம் கண்டிப்பா ரசிப்பாங்க..!!" "ஹாஹா.. மக்கள் இந்த மாதிரி கதைலாம் ரசிக்க மாட்டாங்க தம்பி.. நான் இருபத்திரண்டு வருஷமா இந்த ஃபீல்ட்ல இருக்கேன்.. மக்களோட ரசனையை பத்தி எனக்கு நல்லா தெரியும்..!! வேற ஏதாவது நல்ல ஸ்டோரி இருந்தா சொல்லுங்க..!!" அவர் பேசிய விதத்தில் அசோக் மிகவும் சோர்ந்து போனான். "ஓ..!! நல்ல ஸ்டோரினா.. எப்படி..??" என்று சுரத்தில்லாமல் கேட்டான். "ஏதாவது லவ் ஸ்டோரி தம்பி..!!" அவ்வளவுதான்..!! அந்த 'லவ்' என்ற வார்த்தையை கேட்டதுமே அசோக்குக்கு ரத்த அழுத்தம் குபுக்கென எகிற ஆரம்பித்தது. அவன் முகத்தில் தெரிந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இப்போது சட்டென வடிந்து போனது. ஒற்றை விரலால் நெற்றியை தேய்த்தவாறே, எதிரே இருந்தவரை எரிச்சலாக பார்த்தான். அவ்வளவு நேரம் பரந்தாமனிடம் இருந்த ஒரு அலட்சிய மனோபாவம், இப்போது அசோக்கையும் தொற்றிக் கொண்டது. இப்போது சற்றே கிண்டலான குரலில் கேட்டான். "ஓ.. லவ் ஸ்டோரிதான், உங்க பாஷைல நல்ல ஸ்டோரியா..??" "என்ன தம்பி தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்தே.. அதுதான எவர்க்ரீன் ஹிட் ஃபார்முலா.. அதைத்தான மக்கள் ரசிக்கிறாங்க..??" "அப்படிலாம் ஒன்னும் இல்ல ஸார்.. ஸ்டோரியும், சொல்ற விதமும் நல்லா இருந்தா போதும்.. எந்த மாதிரி ஸ்டோரியா இருந்தாலும் மக்கள் ரசிப்பாங்க..!! இப்போ பிஸ்ஸானு ஒரு படம் வந்து பிச்சுக்கிட்டு ஓடுது.. பாத்திங்கல்ல..??" "ஹாஹா.. நான் அப்படிலாம் புதுமுயற்சி பண்ணி ரிஸ்க் எடுக்க ரெடியா இல்ல தம்பி..!! என்னோட படங்கள் எப்போதும் மெல்லிய காதல் உணர்வுகளை சொல்ற படமாத்தான் இருக்கும்.. நான் ஏற்கனவே எடுத்தது ரெண்டும் லவ் ஸ்டோரிதான்.. இனிமே எடுக்க போறதும் லவ் ஸ்டோரிதான்..!! அலைபாயுதே, துள்ளுவதோ இளமை மாதிரி.. ஃப்ரெஷா, யூத்ஃபுல்லா ஒரு ஸ்டோரி இருந்தா சொல்லுங்க.. இப்போவே அக்ரீமன்ட் போட்டுக்கலாம்..!!" "ஓ..!! பெத்தவங்களையும், டீச்சர்சையும் எப்படிலாம் ஏமாத்தலாம்னு கத்துக்குடுக்குற மாதிரி படம் எடுக்க சொல்றீங்க..?? அப்படியா..??" "ஹாஹா.. என்ன தம்பி நீங்க.. அதெல்லாம் பாத்தா சினிமாவே எடுக்க முடியாது.. அப்படிப்பாத்தா.. நீங்க சொன்ன பேய்க்கதை மட்டும் என்ன ஒழுங்கா..?? பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??" "இல்ல..!!" "அப்புறம்.. அது மக்களுக்கு மூட நம்பிக்கையை வளக்குற மாதிரிதான..??" "காதல்ன்ற பேர்ல ஆடியன்ஸ் அறியாமலே அவங்க மனசுல விஷத்தை கலக்குறதுக்கு.. கற்பனைன்ற பேர்ல நேர்மையா அவங்களை கொஞ்ச நேரம் பயமுறுத்துறது ஒன்னும் தப்பு இல்ல ஸார்..!!" "அட.. காதல்னு அழகான ஒரு விஷயம் இருக்குறப்போ.. பேய் பூதம்னு எதுக்கு தம்பி படம் பாக்க வர்றவங்கள பயமுறுத்தனும்..?? நீங்க ஒன்னு பண்ணுங்க.." "என்ன..??""கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கங்க.. ஒரு நல்ல லவ் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வந்து என்னை பாருங்க.. சரியா.??" "இல்ல ஸார்.. எனக்கு லவ் ஸ்டோரிஸ்ல இன்ட்ரஸ்ட் இல்ல.. கண்டிப்பா நான் லவ் ஸ்டோரிலாம் எழுத மாட்டேன்..!!" "ஹாஹா.. உங்களை மாதிரி ஒரு யங்க்ஸ்டர்.. காதல் பிடிக்காதுன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு தம்பி..!!" "காதல் பிடிக்காதுன்னு சொல்லல ஸார்.. காதல் கதைகள்தான் பிடிக்காதுன்னு சொன்னேன்..!!" "ரெண்டும் ஒண்ணுதான் தம்பி..!! நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா.. காதல்க்கதைகள் மேலயும் உங்களுக்கு ஆர்வம் வந்திருக்கும்.. நீங்க பேசுறதை வச்சே எனக்கு புரிஞ்சு போச்சு.. உங்களுக்கு எதுவும் மாட்டலைன்னு..!! நான் நெனைச்சது சரியா..??" நக்கலாக சொன்ன பரந்தாமன் தனது தலையை சற்றே தாழ்த்தி அசோக்கை கூர்மையாக பார்த்தார். அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, அவரே வெற்றிக்கனைப்புடன் தொடர்ந்தார். "ஹாஹஹா..!! போங்க தம்பி.. பேய், பிசாசுன்னு ஏதாவது கதை எழுதுறதை விட்டுட்டு.. போய் யாரையாவது லவ் பண்ணுங்க.. போங்க..!!" பரந்தாமன் சொல்லிவிட்டு சிரிக்க, அசோக் அவரையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அவர் பேச்சில் இருந்த கிண்டல் அவனுக்கு எக்கச்சக்கமாய் எரிச்சலை உண்டுபண்ணியிருந்தது. அவருடன் அதற்கு மேலும் விவாதம் செய்ய விரும்பாதவனாய் கேட்டான். "அப்போ.. ஃபைனலா என்னதான் ஸார் சொல்றீங்க ..??" "இன்னுமா உங்களுக்கு புரியல..?? சரி.. தெளிவாவே சொல்லிர்றேன்.. நான் உங்களை மாதிரி இல்ல தம்பி.. எனக்கு காதல் பிடிக்கும்.. காதல்கதைகளையும் பிடிக்கும்.. காதலை மையமா வச்சு உருவாக்குற கதைகளைத்தான் நான் ப்ரொட்யூஸ் பண்ணுவேன்.. என்னோட கொள்கைல இருந்து நான் எப்போதும் மாறுறதா இல்ல..!! நல்ல காதல்க்கதை இருந்தா மறுபடி என்னை வந்து பாருங்க.. இல்லனா வராதீங்க.. இப்போ இடத்தை காலி பண்ணுங்க...!!" சொல்லி முடித்து அமைதியான பரந்தாமன், அசோக்கின் முகத்தையே குறுகுறுவென பார்த்தார். அவருடைய உதட்டில் ஒருவித விஷமப் புன்னகை வழிந்தது. அசோக் என்ன செய்வது என்று அறியாதவனாய், ஏமாற்றமும் எரிச்சலும் மிகுந்த மனதுடன், அசையாமல் அமர்ந்திருந்தான். அப்போதுதான் அவன் பார்வை, எதிரே இருந்தவரின் முதுகுக்கு பின்னால் இருந்த அந்த ஷோ கேஸில் எதேச்சையாக விழுந்தது. அதன் மேல் வைக்கப்பட்டிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படத்தின் மீதும்..!! உடனே அவனுடைய எரிச்சலடைந்திருந்த மூளை சுறுசுறுப்பாய் எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! ஒரு சில வினாடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்தான். உதட்டுக்கு அவசரமாய் ஒரு புன்னகையை கொடுத்தவாறே அவரை ஏறிட்டான். குரலில் ஒருவித குறுகுறுப்புடன் கேட்டான். "அப்போ.. உங்களுக்கு காதல்க்கதைகளையும் பிடிக்கும், காதலையும் பிடிக்கும்.. அப்படித்தான ஸார்..??" "ஆமாம்.. இவ்ளோ நேரம் அதைத்தான சொல்லிட்டு இருந்தேன்..??" "பேச்சு மாற மாட்டீங்களே..??" அசோக் அவ்வாறு குதர்க்கமாய் கேட்கவும், "இ..இதுல பேச்சு மாற என்ன இருக்கு..??" அவர் இப்போது குழப்பமாய் இவனை பார்த்தார். "ஸாரி ஸார்.. என்னை மன்னிச்சுடுங்க..!!" "மன்னிக்கனுமா.?? எதுக்கு..??" "இவ்வளவு நேரம் உங்ககிட்ட டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்தவன் மாதிரி நடிச்சதுக்கு..!!" "ந..நடிச்சியா..?? எ..என்ன சொல்ற நீ..??" அவர் பதட்டத்தில் பட்டென ஒருமைக்கு தாவினார். "ஆமாம் ஸார்.. உங்களோட மனநிலைமையை பத்தி தெரிஞ்சுக்கத்தான் இவ்ளோ நேரம் நடிச்சுட்டு இருந்தேன்.. ஆக்சுவலா கிஷோர்ட்ட சொல்லி உங்க அப்பாயின்ட்மன்ட் வாங்கினது.. உங்ககிட்ட கதை சொல்றதுக்காக இல்ல..!!" "அ..அப்புறம்..??" அவர் இப்போது குழப்பத்தின் உச்சிக்கே சென்றிருந்தார். "நா..நானும்.." "நீயும்..??" "உ..உங்க மகளும்.." "என் மகளும்..????" பரந்தாமனின் முகம் பதட்டத்தில் துடித்தது. "நானும் உங்க மகளும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம் ஸார்.. ரெண்டு பேரும், ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிக்கிறோம்..!! நீங்கதான்.. ஸ்டேட்டஸ்லாம் பாக்காம.. எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு.. எங்க காதலை.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, பரந்தாமன் உச்சபட்ச டென்ஷனை அடைந்திருந்தார். அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தார். 'டேய்ய்ய்..!!!' என்று கத்தியவாறு, அசோக்கின் சட்டையை எட்டி கொத்தாக பிடித்து இழுத்தார். அவருடைய முகம் இப்போது திடீர் ஆத்திரத்தை பூசிக்கொண்டு கோரமாக மாறியிருந்தது. காண சகிக்கவில்லை..!! 'பேயை நேர்ல பாத்திருக்கீங்களா நீங்க..??' என்று சற்றுமுன் அவர் கேட்ட கேள்விக்கு, இப்போது பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! அவன் சொல்வதற்கு முன்பாகவே, பரந்தாமன் ஆத்திரத்தில் படபடவென பொரிந்தார். "ஏண்டா... எ..என்ன நெஞ்சழுத்தம் உனக்கு.. எவ்வளவு தைரியம் இருந்தா.. என் ஆபீசுக்கே வந்து.. என்கிட்டயே.. என் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லுவ..?? உ..உன்னை என்ன பண்றேன் பாரு.. என்ன பண்றேன் பாரு இப்போ..!!" என்று கறுவியவர், அசோக்கின் சட்டையை பிடித்த பிடியை விடாமல், இன்னொரு கையால் டேபிள் ஓரத்தில் இருந்த தனது செல்போனை எட்டி எடுத்தார். "ஸார்.. நீங்கதான ஸார் காதல் ஒரு அழகான விஷயம்னு சொன்னீங்க..?? இப்போ திடீர்னு டென்ஷன் ஆகுறீங்க..?? ப்ளீஸ் ஸார்.. எங்க காதலை பிரிச்சிடாதீங்க..!!" அசோக் கிண்டலாக சொன்னதை கண்டுகொள்ளாத பரந்தாமன், கையிலெடுத்த செல்போனின் பட்டன்களை, பதற்றத்தில் நடுங்கிய விரல்களால் படபடவீன அழுத்தினார். கோபத்தில் வெடவெடத்த உதடுகளுடன் முணுமுணுத்தார். "எனக்கு தெரியும்.. எனக்கு முன்னாடியே தெரியும்.. அந்த திருட்டு சிறுக்கி என்னைக்காவது ஒருநாளு.. இந்த மாதிரி எவனையாவது இழுத்துட்டு வருவான்னு.. அவளை.." அவர் அந்த மாதிரி முணுமுணுத்ததுந்தான் அவர் தன் மகளுக்கு கால் செய்கிறார் என்று அசோக் புரிந்து கொண்டான். உடனே அவர் கையிலிருந்த செல்போனை பிடுங்கி அவரை தடுத்தான். "ஸார் ஸார்.. இருங்க ஸார்.. அவசரப்படாதீங்க.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!!" "எதைடா பொறுமையா கேக்க சொல்ற.. நீயும் என் பொண்ணும் டாவடிச்ச கதையை.. பொறுமையா உக்காந்து கேட்டுட்டு இருக்க சொல்றியா..??" "ஹையோ.. நான் சும்மா சொன்னேன் ஸார்.. எங்களுக்குள்ள எந்த லவ்வும் இல்ல.. உங்க பொண்ணை நான் பாத்தது கூட கெடயாது.. அவங்க பேர் கூட எனக்கு தெரியாது..!!" அசோக் அவ்வாறு சொன்னதும், பரந்தாமன் பட்டென முகம் மாறினார். அவர் முகத்தில் கொப்பளித்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, குழப்பம் நிரம்பியது. "ஏ..ஏய்.. எதுக்குடா பொய் சொன்ன..??" "மொதல்ல நீங்க உக்காருங்க ஸார்..!!" அசோக் அவரை சேரில் அமர வைத்தான். அவருடைய உடல் இன்னும் அதிர்வில் இருந்து மீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது. அசோக்கையே எரித்துவிடுவதுபோல் ஆத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார். "டென்ஷன் ஆகாதீங்க ஸார்.. ரிலாக்ஸ்..!! இந்தாங்க.. இந்த தண்ணியை கொஞ்சம் குடிங்க..!!" சற்றுன் அவர் தன் பக்கமாக நகர்த்தி வைத்த தண்ணீர் க்ளாஸை, இப்போது அசோக் அவர் பக்கமாக நகர்த்தி வைத்தான். அவரும் அதை எடுத்து மொத்த தண்ணீரையும் கடகடவென தன் தொண்டைக்குள் சரித்துக் கொண்டார். தண்ணீர் குடித்த பின்பும் அவரது கொதிப்பு அடங்கியது மாதிரி தெரியவில்லை. 'தஸ்.. புஸ்..' என்று பெரிது பெரிதாக மூச்சு விட்டார். மார்பு சரக் சரக்கென ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அசோக் அவனது நடிப்பை மேலும் கொஞ்ச நேரம் தொடர்ந்திருந்தால், மாரடைப்பில் போய் சேர்ந்திருப்பார் போல் தெரிந்தது. அந்த மாதிரி திணறல் மூச்சு விட்டுக்கொண்டே அசோக்கைப் பார்த்து கேட்டார். "சொ..சொல்லுடா.. ஏன் பொய் சொன்ன..??" "ஒண்ணுல்ல ஸார்.. சும்மா.. ஒரு உண்மையை கன்ஃபார்ம் பண்ணிக்கலாமேன்னுதான்..!!" "என்ன உண்மையை..??" அவர் குழப்பமாக கேட்க, இப்போது அசோக் புன்னகையுடன் சொன்னான். "உங்களுக்குலாம் கதைலயும், சினிமாலயும்தான் 'காதல் அழகான விஷயம்'..!! இல்ல..?? அதே உங்க குடும்பத்துல நடந்தா.. அசிங்கம்..!! ஏத்துக்க மாட்டிங்க..!! ஆனா.. எவனோ லவ் பண்ணி, எப்படியோ நாசமா போகட்டும்னு.. படம் மட்டும் வரிசையா எடுத்து ரிலீஸ் பண்ணிடுவீங்க..!! காதலை வச்சு.. நல்லா காசு பாத்து.. அதை மட்டும் பேங்க்ல போட்டு வச்சுப்பிங்க.. ஆனா அந்த காதலை மட்டும் உங்க வீட்டுக்குள்ள விட மாட்டீங்க..!! அப்படித்தான ஸார்..?? சூப்பர் ஸார்.. உங்க கொள்கையை நெனச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது..!!" அசோக் பேசிய பேச்சில் இருந்த உண்மை பரந்தாமனின் முகத்தை அறைய, அவர் பதில் பேச நாவெழாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். ஏதோ ஜென்ம விரோதியை பார்ப்பதுபோல, அவனையே முறைத்துக் கொண்டிருந்தார். அசோக் உதட்டில் இருந்த புன்னகை மாறாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். பரந்தாமன் அதற்குமேலும் அந்த சூழ்நிலையை விரும்பாதவராய் வெறுப்புடன் சொன்னார். இல்லை.. கத்தினார்..!! "டேய்.. வெளில போடா..!!" "போறேன் ஸார்.. இதுக்கப்புறமும் உங்ககிட்ட பேசிட்டு இருக்க எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..?? வந்ததும் உங்க டைம் எனக்கு செலவு பண்ணினதுக்காக தேங்க்ஸ் சொன்னேன்.. இப்போ.. உங்ககிட்ட பேசி என் டயத்தை வேஸ்ட் பண்ணினதை நெனச்சு.. ரொம்ப ஃபீல் பண்றேன்..!! வர்ட்டா..!!" ஸ்டைலாக சொன்ன அசோக், அவர் முன்பாக இருந்த டிவிடி கேசை எடுத்துக்கொண்டு, கிளம்பினான். அறையை விட்டு வெளியேறினான். அவன் கண்ணில் இருந்து மறையும் வரை பரந்தாமன் அவனது முதுகையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்த அசோக், உடனடியாய் செய்த காரியம்.. தன் செல்போன் எடுத்து கிஷோருக்கு கால் செய்ததுதான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதுமே, அசோக் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தான்..!! "பன்னாடை.. பரதேசி.. தெருப்பொறுக்கி.. பிச்சைக்கார நாயே..!!" "டேய்.. டேய்.. என்னடா ஆச்சு.. ஏண்டா திட்டுற..??" "வெண்ணை.. புண்ணாக்கு.. மொள்ளமாரி.. தெள்ளவாரி..!!" என்னவென்று புரியாமல் அந்தப்பக்கம் கிஷோர் கதறிக் கொண்டிருக்க. அதை பொருட்படுத்தாமல் இந்தப்பக்கம் அசோக், கெட்ட வார்த்தைகளை சரமாரியாக சிதறிக் கொண்டிருந்தான். Creative Ad Labs - அசோக்கும் அவன் நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த அட்வர்டைசிங் கம்பனியின் பெயர் அதுதான்..!! ஆபீஸுக்கு வெளியே 'இது ஒரு விளம்பர கம்பனி' என்று விளம்பரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் பலகையே.. வண்ணம் இழந்து.. பிளைவுட் விரிசல் விட்டுப்போய்.. சற்றே சிதிலமடைந்து.. சாய்வாக தொங்கிக் கொண்டிருப்பதிலேயே.. அந்த கம்பனியின் லாபகரம் பற்றிய உண்மை நிலவரம் புரியும்..!! அலுவலகத்தின் மொத்த பரப்பளவே ஆயிரம் சதுர அடிதான்..!! மொத்தம் மூன்றே அறைகள்..!! ஒரு பெரிய சைஸ் அறையில்.. சுவற்றில் அறையப்பட்ட இரண்டு மெகா ஸ்க்ரீன்கள்.. அதன் முன்புறமாக அமைந்திருக்கும் மேஜையில்.. அந்த ஸ்க்ரீன்களுடன் இணைக்கப்பட்ட வீடியோ எடிட்டிங் சிஸ்டம்.. ஆடியோ மிக்சிங், எடிட்டிங் கருவிகள்.. பக்கவாட்டில் இரண்டு ராட்சத ஸ்பீக்கர்கள்.. மேஜை முன்பாக நான்கைந்து நாற்காலிகள்.. அலுவலகத்தில் முக்கியமான அறையே அதுதான்..!! அதில்லாமல் அசோக்கும் அவன் நண்பர்களும் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொள்ள வசதியாக ஒரு அறை..!! அதை ஒட்டி.. கேமரா, கேபிள்கள், லைட்ஸ் போன்ற உபகரணங்களை அடைத்து வைத்துக்கொள்ள ஒரு அறை.. அவ்வளவே..!! கொஞ்சம் உற்றுக் கவனித்தால், சுவற்றின் ஓரமாய் நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகளை காண நேரிடும்.. குப்பைக்கூடையை கிளறினால், காலியான ஓல்ட் மங் பாட்டிலையும், கடலை வறுவல் கவரையும், கண்டுபிடிக்க இயலும்..!! அசோக்கையும் கிஷோரையும் தவிர, பிசினஸில் பணம் போட்ட இன்னும் இரண்டு நண்பர்கள்.. சாலமனும், வேணுவும்..!! நான்கு பேருக்கும் சென்னைதான் சொந்த ஊர். கல்லூரி படிக்கையிலேதான் நட்பாகி நெருக்கமானார்கள். சாலமனும், வேணுவும் விஷுவல் எஃபக்ட்ஸ், ஆடியோ மிக்சிங் மாதிரியான டெக்னிகல் வேலையில் பிஸ்து காட்டுவார்கள். கிஷோருக்கு ஒளிப்பதிவில் ஆர்வம். அசோக்குக்கு கான்சப்ட் டெவலப் செய்வது மாதிரியான கிரியேட்டிவ் வேலையும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோல் மாதிரியான மேனேஜ்மன்ட் வேலையும்..!! கிஷோர் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவன்.. பிசினஸ் தவிர.. ஒரு முன்னணி திரைப்பட ஒளிப்பாதிவாளரிடம் அசிஸ்டண்டாக பகுதி நேர பணி புரிகிறான்.. சினி இண்டஸ்ட்ரியில் சில காண்டாக்டுகள் அவனுக்கு உண்டு.. அந்த மாதிரி ஒரு காண்டாக்ட்தான் அந்த பரந்தாமன்..!! இவர்கள் நான்கு பேரை தவிர.. இவர்கள் கம்பனி இருக்கும் லட்சணத்தில், இவர்களுக்கு உதவிக்கென இரண்டு பேரை சம்பளம் கொடுத்து வேலைக்கு வேறு வைத்திருக்கிறார்கள்..!! அசோக்கின் நண்பர்கள் மூன்று பேரும், வெவ்வேறு வித குடும்ப சூழல், வெவ்வேறு வித குணநலன்கள் கொண்டவர்கள்.. இருந்தாலும் அவர்கள் மூன்று பேருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை.. அசோக்கை தனியாக பிரித்துக்காட்டும் வேற்றுமை.. காதல்..!! அசோக்கை தவிர மற்ற மூவருமே காதலில் விழுந்து.. உருண்டு.. புரண்டு கொண்டிருப்பவர்கள்..!! பரந்தாமனிடம் பிசினஸ் பற்றி அசோக் கூறுகையில், நிறைய விஷயங்கள் மிக நாசுக்காக, நகாசுப்பூச்சொடு சொன்னான். உண்மை நிலை சற்று பரிதாபகரமானது. 'என்னை பத்தி சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்லை..' என்று சொன்னான் அல்லவா..?? அவர்கள் பெரிதாக சாதிப்பதற்கு வாய்ப்பு எதையும் இந்த விளம்பர உலகம் வழங்கவில்லை என்பதுதான் நிஜம்..!! 'லக்ஸ்.. லிரில்.. கேட்பரிஸ்.. சன்ரைஸ்.. கோல்கேட்.. பெப்சொடன்ட்..' என்று பெரிய பெரிய கனவுகளுடன்தான் கம்பனியை ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது எல்லாம் 'கோபுரம் பூசு மஞ்சள்தூள்.. அரசன் சோப்.. சங்கு மார்க் லுங்கிகள்.. சுடர்மணி பனியன் ஜட்டிகள்..'தான்..!! பரந்தாமன் குறிப்பிட்ட மாதிரி 'பாலாஜி அட்வர்டைசிங்' ஒரு புளியங்கொம்பு..!! விளம்பர உலகில் பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனம். பல முன்னணி நிறுவனங்களும், மாடல்களும் அவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். 'பாலாஜி அட்வர்டைசிங்'குக்கு பெரிய அளவு பட்ஜட்டுகளுடனான காண்ட்ராக்ட்கள் வந்து குவிந்தாலும், சில சின்ன பட்ஜெட் ப்ராஜக்டுகளும் வரும். தொழில் நோக்கோடு பார்க்கையில் சில ப்ராஜக்டுகளை அவர்களால் தவிர்க்க இயலாது. ஒத்துக் கொள்வார்கள். ஆனால்.. அந்த மாதிரி ஒப்பந்தங்களுக்கு அசோக்கின் கம்பனியை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். அதுவும் முழு வேலையையும் தராமல் 'பிச்சு பிச்சு' தருவார்கள்..!!அசோக்கின் கம்பனி செய்யும் வேலைகள் என்றால்.. வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு சரத்குமாரோ, சாய்குமாரோ.. வாயெல்லாம் பல்லாக குறுக்கும் மறுக்கும் நடப்பதை.. டிஜிட்டல் கேமராவில் ஷூட் செய்ய வேண்டும்.. ஷூட் செய்ததை தங்கள் லேபுக்கு கொண்டுவந்து, க்ளையன்ட் குறிப்பிட்ட நொடிகளுக்கு மிகாமலும், குறையாமலும் எடிட் செய்ய வேண்டும்.. சரத்குமார், சாய்குமாரின் வேஷ்டி சட்டைகளுக்கும், பளிச்சிடும் பற்களுக்கும்.. விஷுவல் எஃபக்ட்ஸ் கொடுத்து.. அதன் வெண்மையை, கண்ணைப்பறிக்கும் வகையில் என்ஹான்ஸ் செய்யவேண்டும்.. 'சல்யூட்.. ராம்ராஜுக்கு.. சல்யூட்..!!' என்பது மாதிரியான ஜிங்கில்களை, வீடியோவுடன் பொருத்தமாக மிக்ஸ் செய்யவேண்டும்.. வீடியோவின் இறுதி வடிவத்தை, ஒரு டிஸ்கிலோ, சிப்பிலோ போட்டு.. 'பாலாஜி அட்வர்டைசிங்'குக்கு டெலிவர் செய்ய வேண்டும்..!! பரந்தாமனின் BP’யை எகிற வைத்து வேடிக்கை பார்த்த அசோக், மீண்டும் ஆபீசுக்கு வந்து சேர அரை மணி நேரம் ஆனது. ஆபீசில் கிஷோர் மட்டும் இல்லை. 'நாளைக்கு ஷூட்டிங் இருக்கு..' என்று நேற்றே அசோக்கிடம் சொல்லியிருந்தான். அசோக் உள்ளே நுழைந்தபோது, மீதி நான்கு பேரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்திருந்தார்கள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ஸ்க்ரீன்களில் ஒன்றில், ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோவும், ஹீரோயினும் கிளிசரின் அப்பிய கண்களுடன் நாதழதழக்க வசனம் பேசிக்கொண்டிருக்க.. இவர்கள் நான்கு பேரும் நாற்காலியில் அமர்ந்து, வாயைப் பிளந்து வைத்தவாறு.. அசோக் வந்ததைக்கூட கவனிக்காமல், திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!! 'ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!' 'ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!' 'இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!' 'ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!" 'போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!' 'என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??' 'எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!' 'ஷிவா ப்ளீஸ்.. வார்த்தையால என்னை கொல்லாத..!! நீ இப்படி கண்ணீர் வடிச்சுக்கிட்டு எங்கிட்ட கெஞ்சுறதை நெனச்சா.. எனக்கு இதயமே வெடிச்சிடும் போல இருக்கு..!! அழாத ஷிவா.. ப்ளீஸ்.. அழாத..!!' 'அப்போ என்னை விட்டு போகாத.. என்கூடவே இருந்துடு..!!' 'அது என்னால முடியாது..!!' 'அப்போ நீயே உன் கையால என்னை கொன்னுட்டு போயிடு..!!' 'ஐயோ கடவுளே..!! என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்ற..?? எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது..!!' ஹீரோயின் வானத்தை பார்த்து அலறினாள். அதற்கு மேலும் பொறுமை இல்லாத அசோக், "என்ன எழவெடுத்த படம்டா இது..??" என்று சப்தம் எழுப்பினான். உடனே நான்கு பேரும் திரையை விட்டு திரும்பி, இவனை பார்த்தனர். சாலமன் அசோக்குக்கு பதில் சொன்னான். "காதல் உல்லாசம்னு ஒரு புதுப்படம் மச்சி..!!" என்று இளிப்புடன் சொன்னான். "காதலு..?? உல்லாசமா..?? அப்புறம் ஏன் 'ஓ'ன்னு ஒப்பாரி வச்சுட்டு கெடக்குறாய்ங்க..??" அசோக் கிண்டலாக கேட்க, சாலமன் மட்டும் இல்லாமல் மற்றவர்களும் இப்போது பட்டென சிந்தனையில் மூழ்கினர். 'ஆமாம்ல.. ஏன்..??' என்பது மாதிரி பரிதாபமாக தலையை சொறிந்து கொண்டனர். சில வினாடிகள் சொறிந்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அப்புறம் சாலமன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு, "அடப்போடா.. ஏடாகூடமா ஏதாவது கேட்டுக்கிட்டு..??" என்று சலிப்பாக சொன்னவாறு திரும்பி திரையை பார்க்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்து மற்றவர்களும்..!! "ஹ்ம்ம்.. பதில் சொல்ல முடியாது.. எனக்கு தெரியும்..!! இப்படித்தான் எல்லாப்பயலும் என்ன எழவுனே தெரியாம, நானும் லவ் பண்றேன்னு, பண்ணிட்டு திரியிறாய்ங்க..!!" "ஏய்.. போடா போடா.. இவரு பெருசா நாலு லவ்வு, ஏழு மேரேஜ் பண்ணுனவரு.. நமக்கு அட்வைஸ் சொல்றாரு.. போடா டம்மி பீஸு..!!" - இது வேணு
"போங்கடா.. உங்களை மாதிரிலாம் லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலேயே இருக்கலாம்..!!""இருந்துக்கோ.. உன்னை யார் இப்போ லவ் பண்ண சொல்லி கெஞ்சுனது..??" "ம்க்கும்..!! சரி.. அது கெடக்கட்டும்..!! ஆபீஸ் நேரத்துல.. இப்படி மொக்கைப்படம் பாத்துட்டு உக்காந்து இருக்கீங்களே.. வேலை எதுவும் இல்லையா..??" "ஆமாம்.. பெரிய ஏவிஎம் ஸ்டுடியோ நடத்துறோம்.. வேலைலாம் கரெக்ட் டயத்துக்கு நடந்துடனும்.. போடா.. எல்லாம் நைட்டு பாத்துக்கலாம்..!!" வேணுவின் பதிலில் அசோக் கடுப்பானான். சில வினாடிகள் அவர்களுடைய முதுகையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் விறுவிறுவென நடந்து சிஸ்டத்தை நோக்கி சென்றான். அதில் செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென பிடுங்க, ஒளிர்ந்து கொண்டிருந்த ஸ்க்ரீன் இப்போது இருட்டானது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டென டென்ஷன் ஆனார்கள். "ப்ச்.. டேய்.. மடக்..!! ஏண்டா இப்ப அதை எடுத்த.. பாத்துட்டு இருக்கோம்ல.. போடுடா..!!" - வேணு கோவமாக சொன்னான். "மச்சி.. க்ளைமாக்ஸ்டா.. இன்னும் கொஞ்ச நேரந்தான்.. ஸ்டிக்கை குடுடா.. ப்ளீஸ்..!!" - சாலமன் பாவமாக கேட்டான். "ஆமாண்ணா.. ப்ளீஸ்ண்ணா..!!" இரண்டு அல்லக்கை பசங்களும் கோரசாக கெஞ்சினார்கள். "போங்கடா.. போய் வேலையை பாருங்க போங்க..!!" அசோக் கூலாக சொல்லிவிட்டு, மெமரி ஸ்டிக்குடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டான். சற்றுமுன் கிஷோரை அவன் திட்டியதுபோல, இப்போது எல்லோரும் அவனை கேவலமாக திட்டினார்கள். ஆனால் அந்த திட்டெல்லாம் கண்ணாடி தடுப்பை கடந்து சென்று, அவன் காதில் விழ தவறின. கிஷோர் ஆபீஸை அடைந்தபோது இரவு ஏழு மணி ஆகி இருந்தது. அவன் வந்தபோது நண்பர்கள் மூவரும் கண்ணாடி அறைக்குள் அமர்ந்து பிசினஸ் (?????) பேசிக்கொண்டிருந்தனர். அவசரமாக கதவை திறந்து உள்ளே நுழைந்த கிஷோர், நுழைந்ததுமே அசோக்கை பார்த்து ஆத்திரமாக கத்தினான். "ஏண்டா வெளக்கெண்ணை.. என்னடா பண்ணுன அந்த ஆளை..??" "எந்த ஆளை..??" அசோக் தாழ்வான குரலில் பம்மினான். "நடிக்காத..!! அந்த பரந்தாமனை..??" "அந்த ஆளை நான் என்ன பண்ணுனேன்.. நான்லாம் ஒன்னும் பண்ணல..!!" "ப்ச்.. அப்புறம் ஏன் அந்த ஆளு எனக்கு ஃபோன் பண்ணி.. வண்டை வண்டையா திட்டுறான்..??" "வண்டை வண்டையாவா..??" "ஆமாம்..!!" "என்னைய விடவா..??" "ஆமாண்டா வெண்ணை..!!" "சரி விடு.. ஏதோ கோவத்துல திட்டிருப்பான்.. சின்னப்பய.. மன்னிச்சு வுட்று..!!" "மன்னிச்சு வுட்றவா..?? எவ்ளோ கூலா சொல்றான் பாரேன்.. திட்டு வாங்கினது நான்டா..!! சினி ஃபீல்ட்ல ஒரு காண்டாக்ட் புடிக்கிறதுக்கு, நான் எவ்ளோ கஷ்டப்படுறேன் தெரியுமாடா..?? நீ என்னடான்னா.. காலித்தனமா அந்த காண்டாக்டை காலி பண்ணிட்டு வந்திருக்குற..??" "விட்ரா.. அந்த ஆளு காண்டாக்ட் இருக்குறது ஒண்ணுதான்.. இல்லாததும் ஒண்ணுதான்..!! அந்த மசுரு ஒன்லி லவ் சப்ஜக்ட்தான் எடுப்பாராம்.. திரில்லர்லாம் எடுக்க மாட்டாராம்..!! லவ் ஸ்டோரி சொல்லு.. லவ் ஸ்டோரி சொல்லுன்னு.. கொஞ்ச நேரம் என் உசுரை வாங்கிட்டான்..!! நல்ல ஆள்ட்ட கதை சொல்ல அனுப்பி விட்டடா என்னை நீ..!!" "ஏய்.. அந்த ஆளு கேட்டதுல என்ன தப்பு..?? உன்கிட்ட லவ் ஸ்டோரி இருந்தா சொல்லிருக்கணும்.. இல்லனா மூடிட்டு வந்திருக்கணும்..!! எதுக்கு தேவை இல்லாம அந்த ஆள் பொண்ணை பத்திலாம் தப்பா சொன்ன..??" "ப்ச்.. நான்லாம் அந்த பொண்ணை பத்தி எதுவும் தப்பா சொல்லல.. அந்த ஆளுதான் பெத்த பொண்ணுன்னு கூட நெனைப்பு இல்லாம.. திருட்டு சிறுக்கின்னு கேவலமா திட்டுனான்..!! நான் டீசண்டா ஒரு பொய் சொன்னேன்.. அவ்ளோதான்..!!" "அதான் ஏன் சொன்னேன்னு கேக்குறேன்..??" "அந்த ஆள் முகமூடியை கிழிக்கிறதுக்குத்தான்..!! போனதுல இருந்தே லவ்வு லவ்வுன்னு பொலம்பிட்டு இருந்தான்.. 'சரிய்யா.. நான் உன் பொண்ணை லவ் பண்றேன்.. கட்டிக்குடு..'ன்னு கேட்டா.. என் ஸ்டோரில வர்ற காட்டேரியை விட கர்ணகொடூரமா மாறிட்டான்..!! ஹாஹா.. இப்போ நான் அவனுக்கு வச்சுட்டு வந்திருக்குறேன் பாரு ஊசி.. அது இன்னும் நாலஞ்சு நாளைக்கு அவனை குத்தி குடைஞ்சுட்டு இருக்கும்.. அது போதும் எனக்கு..!!"அசோக் சொல்லிவிட்டு பெருமையாக புன்னகைத்தான். சாலமனும், வேணுவும் இன்னும் குழப்பம் விலகாமலே காட்சியளித்தனர். கிஷோரோ, அசோக் பதிலுக்கு பதில் பேசியதில், களைத்தும் சலித்தும் போயிருந்தான். அந்த சலிப்பு இப்போது குரலிலும் கலந்து போயிருக்க, "ஏண்டா இப்படிலாம் பண்ற..??" என்று பரிதாபமாக கேட்டான். "நீ ஏண்டா இப்படிலாம் ஃபீல் பண்ற..??" அசோக் அதே டோனில் திருப்பி கேட்டான். "பின்ன என்ன..?? அன்னைக்கும் இப்படித்தான்.. 'பாலாஜி அட்வர்டைசிங்' மோகன்ராஜோட சண்டை போட்டுட்டு வந்த..??" "அது வேற மேட்டர்.. அந்த ஆள் லூசுத்தனமா ஒரு ஐடியா சொன்னான்.. 'ஸார்.. இது லூசுத்தனமா இருக்கு ஸார்..' அப்டினு நான் ரொம்ப மரியாதையாத்தான் சொன்னேன்.. அதுக்கே அந்த ஆளுக்கு கோவம் வந்துடுச்சு..!!" "ம்ம்.. அப்படி என்ன லூசுத்தனமா சொன்னான்..??" "காஞ்சனா ஜுவல்லர்ஸ் வெளம்பரத்துக்கு ஒரு கோட் சொன்னான் மச்சி.. மஹா கேவலமான கோட்..!!" "என்ன அது..??" "'காஞ்சனா ஜ்வல்ஸ் வாங்குங்கள்.. காதலின் ஆழத்தை உங்கள் காதலிக்கு உணர்த்துங்கள்..' அப்டின்னு..!!" "நல்லாத்தான இருக்கு..?? இதுல என்ன லூசுத்தனம்..??" "ஏண்டா.. இவனுக நகையை வாங்கிக் குடுத்துத்தான் காதலோட ஆழத்தை காதலிக்கு உணர்த்தனுமா..?? நாட்ல நகை வாங்க வக்கு இல்லாதவன்லாம் லவ்வே பண்ணக் கூடாதா..?? லவ் பண்றவனுகளை எல்லாம் கேலி பண்ற மாதிரி இல்ல.. அந்த கோட்..?? அதைத்தான் அந்த ஆள்ட்ட சொன்னேன்..!!" "ம்ம்.. உனக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலைலாம்..?? அவன் சொல்ற மாதிரி ஆட் ரெடி பண்ணி தர்றது மட்டுந்தான்டா நம்ம வேலை..!!" "ப்ச்.. என்னால அப்படி இருக்க முடியல..!!" "முடியாது.. உன்னால முடியாது.. நீ பாட்டுக்கு அந்த ஆள் கூட சண்டை போட்டுட்டு வந்துட்ட.. அப்புறம் நான் அவன் கைல காலுல விழுந்து, காண்ட்ராக்ட் கேன்சல் ஆகாம பாத்துக்கிட்டேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியலடா சாமி.. உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னே எனக்கு ஒன்னும் புரியல..!! ஹ்ம்ம்ம்ம்... போன வாரம் ஒரு தெலுகு படம் பாத்தேன்.. அதுல.. ஹீரோ ரொம்ப முரட்டுப்பயலா இருப்பான்.. அவனை பாத்து.. காமடியன் ஒரு டயலாக் சொல்வாரு..!! அந்த டயலாக்தான் எனக்கும் உன்னை பாத்து சொல்ல தோணுது..!!" "ஓ.. அப்படி என்ன டயலாக்..??" "ம்ம்.. 'இவன் ரொம்ப வயலண்டா இருக்கான்டா.. இவனுக்கு கொஞ்சம் பூ, பொண்ணுலாம் கண்ணுல காட்டுங்கடா..'ன்னு சொல்வாரு..!!" "ஹாஹா... பூ, பொண்ணுலாம் பாத்துட்டா..??" "நீ இப்படிலாம் பிரச்னை பண்ண மாட்டேன்னு தோணுது..!! நீ பெருசா மக்கர் பண்றதே இந்த லவ்ன்ற மேட்டர்லதான்.. லவ்வை பத்தி நீ வச்சிருக்குற தப்பான அபிப்ராயத்துலதான்.. நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா.. எல்லாம் சரியாயிடும்னு எனக்கு தோணுது.. நம்ம பிசினசும் நல்லபடியா உருப்படும்னு தோணுது..!!" "போடா.. இந்த பரந்தாமன், மோகன்ராஜ்-க்காகலாம் என்னை லவ் பண்ண சொல்றியா..??" "சரி.. அவனுகளுக்காக பண்ண வேணாம்.. எங்களுக்காக பண்ணு..!!" "உங்களுக்காகவா.??" "ம்ம்.. உன்னோட ஃப்ரண்ட்ஸ் நாங்க எல்லாம் லவ் பண்றோம்.. எங்களை பாத்து உனக்கு லவ் மேல ஆசை வரல..??" கிஷோர் அந்த மாதிரி கேட்க, "ஏய்.. நீங்களாடா..?? உங்களை பாத்தப்புறந்தான்.. எனக்கு லவ் மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் காணாமப் போயிடுச்சு..!!" அசோக் கிண்டலாக சொன்னான். "ஏண்டா இப்படி சொல்ற..??" "பின்ன..?? ஒருத்தன்.. லவ் பண்றவ.. பாடுறேன்ற பேர்ல நரி மாதிரி 'ஊஊஊ'ன்னு ஊளையிடுறதைலாம்.. லவ்லி வாய்ஸ்னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்றவன்..!!" - அசோக் அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான். "ஒருத்தன்.. பாத்ரூம் போறதுக்கு கூட 'ரொம்ப அர்ஜன்ட்மா.. போயிட்டு வந்து பேசுறேனே.. ப்ளீஸ்..' அப்டின்னு பெர்மிஷன் கேக்குறவன்..!!" - இப்போது வேணு தலையை கவிழ்த்துக் கொண்டான். "ஒருத்தன்.. லவ்வர் செருப்பால அடிக்காத குறையா.. 'என் மூஞ்சிலயே முழிக்காத'ன்னு.. இவன் மூஞ்சில காறித்துப்பிட்டு போனப்புறமும்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. 'அன்பே.. அழகே.. அவிச்ச முட்டையே.. அழுகுன முள்ளங்கியே..'ன்னு.. கவிதை எழுதிட்டு இருக்குறவன்.." - நீங்கள் நினைத்தது சரிதான். சாலமன் இப்போது மண்டையை தொங்க போட்டுக் கொண்டான்."உங்களை மாதிரிலாம் மானங்கெட்டு லவ் பண்றதுக்கு.. லவ் பண்ணாமலே இருக்கலாம்..!!" அசோக் முடிவாக சொல்ல, "ஷ்ஷ்ஷ்ஷ்.. முடியல மச்சி..!! காதல் மேல உனக்கு அப்படி என்ன வெறுப்பு..?? சொல்லு மச்சி.. சொல்லு..!!" வேணு உணர்சிகரமாக கேட்டான். "என்னடா.. தமிழ் சினிமால.. ஹீரோயின் அப்பாகிட்ட பேசுற டயலாக்லாம் எங்கிட்ட பேசுற..?? எனக்கு காதல் மேலலாம் எந்த வெறுப்பும் இல்ல.. காதல்ன்ற பேர்ல நீங்க லூசுத்தனமா என்னன்னவோ பண்றதுதான் காமடியா இருக்கு..!! உங்களோட சுயத்தை இழந்துட்டிங்களேடா.. காதல் பண்றோம்னு உங்க ஒரிஜினாலிட்டியை தொலைச்சுட்டிங்களே..??" அசோக்கின் கேள்விக்கு இப்போது கிஷோர் பதில் சொன்னான். "மச்சி.. இதுலாம் உனக்கு புரியாது.. நீயும் ஒரு பொண்ணை லவ் பண்ணினாத்தான்.. எங்கபக்கம் இருக்குற நியாயத்தை உன்னால புரிஞ்சுக்க முடியும்..!! பண்ணிப்பாருடா.. எங்க கஷ்டம் உனக்கும் புரியும்..!!" "ஹாஹா.. நான்லாம் லவ் பண்ணினேன்னா.. உங்களை மாதிரி பண்ண மாட்டேன் மச்சி..!!" "அப்புறம்..??" "வேற.. வேற.. வேற மாதிரி பண்ணுவேன்..!!" விஜய் மாதிரி அசோக் ஸ்டைலாக சொன்னான். அதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது என்றே புரியாமல், மற்றவர்கள் அமைதியாகினர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அசோக், அப்புறம் அவனே ஆரம்பித்தான். "சரி.. அந்தக்கதைலாம் அப்புறம் பேசிக்கலாம்..!! தண்ணியடிக்க போலாமா இன்னைக்கு.. நான் ட்ரீட் தர்றேன்..!!" "என்னடா மச்சி திடீர்னு..??" "இன்னைக்கு என் பர்த்டேடா..!!" அசோக் கூலாக சொல்ல, எல்லோர் முகத்திலும் இப்போது திடீர் மலர்ச்சி. "டேய்.. என்னடா நீ.. இவ்ளோ சாதாரணமா சொல்லிட்டு இருக்குற..?? ஹேப்பி பர்த்டேடா மச்சி..!!!!" எல்லோரும் அவனுடைய கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். "ஹ்ம்ம்.. பர்த்டேயும் அதுவுமா.. ஒரு புல்டாக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டான் மச்சி..!!" "ஹேய்.. நான் என்னடா பண்ணினேன்..??" கிஷோர் அவசரமாக, பரிதாபமாக கேட்க, "உன்னை சொல்லலடா.. அந்த பரந்தாமன் டாகை சொன்னேன்..!! செம டென்ஷன்.. இன்னைக்கு கண்டிப்பா தண்ணி போட்டே ஆகணும்..!!" "ஏய்.. இப்படி திடீர்னு சொன்னா எப்படிடா..??" வேணு சலித்துக் கொண்டான். "ஏன்.. உன் ஆளுட்ட பெர்மிஷன் கேக்கணுமா..??" "ம்ம்..!!" "போ போ.. போய் கேளு போ..!!" அசோக் சொன்னதும், வேணு செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இப்போது கிஷோரும் தனது செல்போனை எடுக்க, "ஏய்.. என்னடா.. நீயும் பாத்ரூம் போறதுக்குலாம் அவகிட்ட பெர்மிஷன் கேட்க ஆரம்பிச்சுட்டியா..??" "ஹிஹி.. பாத்ரூம் போறதுக்கு தேவை இல்ல மச்சி.. பாருக்கு போறதுன்னா.. சொல்லிட்டுத்தான் போகணும் மச்சி..!!" இளிப்புடன் சொல்லிவிட்டு செல்கிற கிஷோரையே அசோக் எரிச்சலாக பார்த்தான். இப்போது சாலமனும் செல்போனை எடுத்துக்கொண்டு கிளம்ப, அசோக் உச்சபட்ச கடுப்பானான். "டேய்.. அவனுகதான் லவ் பண்ற பொண்ணுககிட்ட பெர்மிஷன் கேக்க போறானுக..?? நீ எங்க போற.. உனக்குத்தான் பிரேக்கப் ஆயிடுச்சுல..??" "இல்ல மச்சி.. எதுக்கும் கேட்டு வைக்கிறேன்.. ப்யூச்சர்ல யூஸ் ஆனாலும் ஆகலாம்டா..!!" சாலமன் பாவமாக சொன்னான். "அடப்பாவி..!!!!" "அவ வேணா.. ஒரு நல்ல காதலியா இல்லாம இருக்கலாம் மச்சி.. ஆனா.. நான் நல்ல காதலன் மச்சி.. நான் நல்ல காதலன்..!!" அழுகிற குரலில் சாலமன் சொல்ல, "கிழிஞ்சது..!! போடா.. போய்த்தொலைடா..!!" என்று தலையில் அடித்துக் கொண்டான்.அப்புறம் அவர்கள் ஆளாளுக்கு பெர்மிஷன் கேட்டு திரும்பும் வரை, அசோக் கடுப்புடன் காத்திருந்தான். பிறகு எல்லோரும் ஆபீஸுக்கு தாழிட்டு கிளம்பினார்கள் அருகிலேயே இருக்கும் ஒரு பாருக்கு சென்று, இஷ்டம்போல் மது அருந்தினார்கள். திரவ உணவு அருந்திவிட்டு.. திட உணவும் அருந்த நினைத்தார்கள். அவர்கள் எப்போதும் மதிய உணவு அருந்துகிற ஃபுட் கோர்ட்டிற்கு, இரவு உணவு அருந்த வந்து சேர்ந்தார்கள். அவரவருக்கு பிடித்த ஐட்டங்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு, மூலையில் கிடந்த டேபிள் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டு, ஆர்டர் செய்த ஐட்டங்களை வயிற்றுக்குள் அனுப்ப ஆரம்பித்தனர். எல்லோரும் நல்ல போதையில் இருந்தனர். பேச்சு எங்கெங்கோ சென்று சுற்றி மீண்டும் காதலில் வந்து அமர்ந்தது. அப்போதுதான் சாலமன் அசோக்கிடம் மெல்ல கேட்டான். "நீ ஏன் மச்சி யாரையாவது லவ் பண்ணக்கூடாது..??" "என்னடா நீங்க.. ஆளாளுக்கு லவ் பண்ணு லவ் பண்ணுன்னு சொல்றீங்க.. திடீர்னு நான் யாரைப்போய் லவ் பண்றது..?? லவ் பண்றதுக்கு பொண்ணு வேணாமா..?? அதுவும் எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணா இருக்கணும்..??" "என்ன மச்சி.. நாட்டுல பொண்ணுகளுக்கா பஞ்சம்..?? இப்போ நாங்கல்லாம் லவ் பண்ணல.. எங்களுக்குலாம் பொண்ணுக கெடைக்கல..??" என்று நாகுழற கேட்டான் கிஷோர். அவன் அவ்வாறு கேட்டதும், அசோக் இப்போது மீண்டும் நக்கலாக ஆரம்பித்தான். "யாரு.. நீங்க லவ் பண்ணின பொண்ணுகதான..?? ஒருத்தனை பிரண்டுன்னு நம்ம்ம்பி.. இன்னொருத்தன் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்.. வீட்டுக்கு போனவன் என்ன பண்ணினான் தெரியுமா.. கூட்டிட்டு போன பிரண்டு தங்கச்சியையே.. உஷார் பண்ணிட்டான்..!!!!" - அசோக் அந்த 'நம்பி'க்கு தனி அழுத்தம் கொடுத்து, அவ்வாறு சொன்னதும் கிஷோர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டான். "ஒருத்தனை தம்பின்னு நம்ம்ம்பி.. அண்ணன் ஒருத்தன்.. தனக்கு பொண்ணு பாக்க தம்பிகிட்ட மேட்ரிமோனி ஐடி, பாஸ்வோர்ட் குடுத்தான்.. அதுல லட்டு மாதிரி ஒரு அலையன்ஸ் வந்ததும்.. வீட்டுக்கே தெரியாம தனியா லவட்டிட்டு வந்து.. இப்போ இவன் அந்த பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்குறான்..!!" - இப்போது வேணு தலையை தொங்கப்போடும் முறை. "இன்னொருத்தன் ப்ளஸ் டூ படிக்கிறப்போவே பயங்கர கேடி, கிரிமினல் நாயி.. பையன் கணக்குல வீக்கா இருக்கானேன்னு.. ஒரு அப்பா பையன் மேல உள்ள அக்கறைல.. அவனை நம்ம்ம்பி.. கணக்கு ட்யூஷனுக்கு அனுப்பிச்சா.. பையன் கணக்கு டீச்சரையே கணக்கு பண்ணிட்டான்.. இவ்வளவுக்கும் அது அஞ்சு வயசு மூத்த ஆண்ட்டி..!!" "ஒய்.. என் ஆளை ஆண்ட்டின்னு சொல்ற வேலைலாம் வச்சுக்காத அசோக்கு..!! அஞ்சு வயசுலாம் ஒன்னும் இல்ல.. மூணு வயசுதான் டிபரன்ஸ்..!!" என்று தாழ்ந்த குரலில் தன் மறுப்பை தெரிவித்தாலும், தலையை தொங்கப்போடவும் தவறவில்லை சாலமன்.இப்போது கிஷோர் தன் தலையை நிமிர்த்தி அசோக்குக்கு பதில் சொன்னான். "மச்சி.. 'All is fair in love and war'..!! காதல்ன்ற ஒரு விஷயமே.. நீ சொன்ன கம்ப்ளயின்ட் எல்லாத்தையும் சரி பண்ணிடும்டா..!!" "போங்கடா.. என்னாலலாம் யாரோட நம்பிக்கையையும் கொன்னுட்டு.. அதுமேல காதல் செய்ய முடியாது..!!" "அப்படிலாம் பாத்தா யாரையுமே லவ் பண்ண முடியாதுடா..!!" "ஏன்.. பண்ணனும்னு நெனச்சா பண்ணலாம்..!!" "சரி.. மத்தவங்கள விடு.. நீ எந்த மாதிரி பொண்ணை லவ் பண்ணுவ..??" வேணு அந்த மாதிரி கேட்கவும் அசோக் சற்றே நிதானித்தான். சில வினாடிகள்..!! பிறகு.. எங்கோ சூனியத்தை வெறித்தவாறு மெல்லிய குரலில், ரசனையாக சொன்னான். "நான் லவ் பண்றதா இருந்தா.. யாராவது ஒரு 'Perfect Stranger'-ஐத்தான் லவ் பண்ணுவேன்..!!" "ம்ம்.. பாத்துடா.. கடைசில அவ 'Perfect Psycho'-வா இருக்கப்போறா..!!" வேணு கிண்டலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமனின் செல்போன் கிணுகிணுத்தது. யார் அழைப்பது என்று எடுத்து பார்த்தான் சாலமன். பார்த்ததுமே, ஏதோ தங்க வேட்டையில் வென்றவன் மாதிரி துள்ளிக் குதித்தான். அசோக்கைப் பார்த்து கத்தினான். "மச்சி.. நான் சொன்னேன்ல.. ப்யூச்சர்ல யூஸ் ஆகும்னு..?? இன்னைக்கே யூஸ் ஆகிடுச்சுடா.. எனக்கு மிஸ்ட் கால் குடுத்திருக்கா.. ஐயோ.. எனக்கு தலயும் புரியல.. காலும் புரியல..!! இருங்கடா.. இதோ வந்துர்றேன்..!!" என்றவாறு செல்போனை எடுத்துக்கொண்டு ஓடினான். அவனுடைய சந்தோஷத்தை பார்த்து கிஷோருக்கும் ஆசை வந்திருக்கும் போலிருக்கிறது. "மச்சி.. நீங்க பேசிட்டு இருங்கடா.. நான் இதோ வந்துர்றேன்..!!" என்றவாறு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டே கிளம்பினான். அவன் சென்ற சில வினாடிகளிலேயே, "மச்சி.. நீ சாப்பிட்டுட்டு இருடா.. இதோ வந்துர்றேன்..!!" சொல்லிக்கொண்டே வேணுவும் அசோக்கை தனியாக விட்டுவிட்டு, அங்கிருந்து அகன்றான். அசோக் எல்லோரும் செல்வதையே ஒருவித ஏக்கத்துடன் பார்த்தான். திடீரென தனியாகிப்போனதும், சாப்பிட்டுக்கொண்டிருந்த ப்ரைட் ரைசை அதற்கு மேலும் உண்ண மனமில்லாமல், ஓரமாக ஒதுக்கி வைத்தான். அசோக் எல்லாரிடமும் காதலைப்பற்றி சற்று ஏளனமாக பேசினாலும், 'உங்களைப்பாத்து எனக்கு காதலிக்கிற ஆசையே போயிடுச்சு..' என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தாலும், அவன் மனதில் எப்போதும் ஒரு மெலிதான ஏக்கம் உண்டு.. தனக்கென்று ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம்..!! அதுவும்.. இந்த மாதிரி.. நண்பர்கள் எல்லோரும் தனித்து விட்டு செல்கையில்.. பேசுவதற்கு யாரும் இல்லாத சூழலில்.. அந்த ஏக்கம் சற்று அதிகமாகவே மேலெழும்..!! இப்போதும் அப்படித்தான்..!! ஒரு மாதிரியான விரக்தி உணர்வு மனதுக்குள் மெல்ல பரவியது..!! அந்த ஃபுட் கோர்ட்டை ஆக்கிரமித்திருந்த மக்களை இலக்கில்லாமல் வெறித்தான்..!! அப்போதுதான் அசோக்கின் கண்ணில் அவள் பட்டாள். அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு சற்று தள்ளி.. தனியாக.. தட்டில் இருந்த உணவை உண்ண மறந்தவளாய்.. எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.. அமைதியே உருவாக..!! அழகாக.. அழகாக.. மிக மிக அழகாக இருந்தாள்..!! தேவதைக்கு ஜீன்சும், டி-ஷர்ட்டும் மாட்டி விட்ட மாதிரி.. தேன் நிலாவுக்கு பொட்டும், லிப்ஸ்டிக்கும் போட்டு விட்ட மாதிரி..!! அவளை இதே ஃபுட் கோர்ட்டில் அசோக் ஓரிரு தடவைகள் பார்த்திருக்கிறான். எப்போதும் தனியாகத்தான் வருவாள். தனியாக வரிசையில் நின்று, பிடித்த உணவை வாங்கிக் கொள்வாள். தனியாக சென்று அமர்ந்து கொள்வாள். யாரிடமும் பேச மாட்டாள். தனியாகவே அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, பிறகு காணாமல் போவாள். அசோக் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் ஒருமுறை இவனை எதேச்சையாக திரும்பி பார்த்தாள். அவளுடைய பார்வையில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் வேறெங்கோ பார்வையை செலுத்தி வெறித்தாள். அசோக் அதன்பிறகும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுமுன் அவன் சொன்ன, 'Perfect Stranger' என்ற வார்த்தைகள், அவனது மூளையை அவசரமாய் குறுக்கிட்டன.வடபழனியில் இருந்து வளசரவாக்கம் வருவதற்குள்ளாகவே அசோக் கண்ணயர்ந்திருந்தான். அவனுடைய தலை கார் சீட்டில் சாய்ந்து அண்ணாந்திருக்க, வாய் 'ஆ'வென்று பிளந்திருந்தது. ஆல்கஹாலால் குழம்பிப் போயிருந்த அவனது மூளை, அன்று முழுதும் அவனை பாதித்த விஷயங்களை எல்லாம், கடுகளவும் லாஜிக் இல்லாமல் கண்களுக்குள் படமாக ஓட்டிக்கொண்டிருந்தது. கொட்டும் மழையில்.. கோரமான பற்களுடனும்.. கொலைவெறி கொப்பளிக்கும் விழிகளுடனும்.. பரந்தாமன் ஷிவாவையும், ப்ரியாவையும்.. கோடாரியுடன் விரட்டினார்..!! 'யாரைப்பாத்து ஆண்ட்டின்னு சொன்ன..? யாரைப்பாத்து சொன்ன..? இனிமே சொல்லுவியா..? சொல்லுவியா.. சொல்லுவியா..??' என்று சாலமனின் ஆள் 'குண்டு' கேத்தரினா.. பற்களை நறநறவென கடித்தவாறு.. அசோக்கின் முகத்திலேயே பாக்ஸிங் பழகினாள்..!! 'இவன் ஆளு ரொம்ம்ம்ப வயலண்டா இருக்காடா..' என்று கிஷோர் யாரிடமோ செல்போனில் சொல்லிக்கொண்டிருந்தான்..!! இந்த லட்சணத்தில்.. இவர்கள் சரக்கடித்த பாரில்.. எய்ட்டி ஃபோர் இன்ச் எல்.ஈ.டி டிவியில் ஓடிய.. ஐ.பி.எல் மேட்சின் எஃபக்ட் வேறு.. அவனுடைய கனவில் தெரிந்தது..!! வான்கடே மைதானத்தின் மையத்தில்.. வானை முட்டிவிடுவது மாதிரி நின்றது.. ஒரு ராட்சத வடிவ ராயல் சேலன்ச் குவார்ட்டர் பாட்டில்..!! தந்தூரி அடுப்பில் சுடப்பட்டு கருகிப்போன லெக்பீஸ் ஒன்று, அந்த பாட்டில் மீது ஸ்டைலாக சாய்ந்திருந்தது..!! ஃபுட் கோர்ட்டில் பார்த்த அந்த ஸ்ட்ரேஞ்சர் அழகி (நம்ம ஹீரோயின்தான்).. சியர்லீடர் கெட்டப்பில் மஞ்சள் நிற கச்சையும், குட்டைப்பாவாடையும் அணிந்து கொண்டு.. கையில் சிவப்பு நிற பாம்பாம்களுடன்.. முகத்தை வேறு சோகமாக வைத்துக்கொண்டு.. ராட்சத ராயல் சேலன்ச் பாட்டிலை சுற்றி சுற்றி வந்து.. கிறிஸ் கெயிலுடன் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாள்..!! இதெல்லாம் பத்தாதென்று, எந்த சம்பந்தமுமே இல்லாமல்.. ஹர்பஜன் சிங் வேறு இடையில் புகுந்து.. 'ஹே.. பல்லே பல்லே பல்லே..' என்று ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியுடன் தவ்வித்தவ்வி குதித்துக் கொண்டிருந்தார்..!! "மச்சி வீடு வந்துடுச்சுடா..!!" காரை ஓட்டிக்கொண்டிருந்த வேணு தோளைப் பற்றிக் குலுக்கவும், அசோக் கனவு கலைந்து விழித்தான். கண்களை சுருக்கி வைத்தவாறே, இமைகளை சிமிட்டி சிமிட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். கார் ஏதோ கும்மிருட்டுக்குள் நின்றிருந்தது. "எங்கடா.. வீட்டை காணோம்..??" அசோக் குழப்பமாக கேட்டான். "அந்தா... அங்ங்ங்க தெரியுது பாரு..!!" வேணு எங்கோ தூரமாக கை காட்ட.. அசோக் பாரதிராஜா படத்தில் வரும் பல்லுப்போன கிழவி போல.. கண்களுக்கு மேல் கையை ஹரிசாண்டலாக வைத்து.. அவன் கைகாட்டிய திசையை உன்னிப்பாக பார்த்தான்..!! இருநூறு மீட்டருக்கு அப்பால்.. ஒளிர்ந்துகொண்டிருந்த அவனுடைய வீடு பார்வையில் பட்டது..!! திரும்பி வேணுவிடம் கேட்டான். "ஏன் இங்கயே நிறுத்திட்ட..??" "ஹிஹி.. சும்மாதான் மச்சி.. இங்க இருந்து நடந்தே போயிடுடா.. ப்ளீஸ்..!!" "ஏன்..?? நீங்க யாரும் வீட்டுக்கு வரலையா..??" "இ..இல்லடா.. நாங்க இன்னொரு நாள் வரோம்.. நீ கெளம்பு..!!" கிஷோர் பின்சீட்டில் இருந்து சொன்னான். அவன் சொல்லியவிதத்தில் ஒருவித அவசரமோ பதற்றமோ இருந்தது. "ஏய்.. வீட்டுக்கு வாங்கடா..!! இன்னைக்கு என் பர்த்டேன்னு அம்மா ஏதாவது ஸ்பெஷல் ஐட்டம் பண்ணிருப்பாங்க.. வந்து ஆளுக்கு கொஞ்சம் டேஸ்ட் பாருங்.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு பின்புறம் இருந்த சாலமன், "ஐயையோ..!!!!" என்று அலறினான். அவ்வளவுதான்..!! உடனே அசோக் கடுப்புடன் பின்னால் திரும்பினான். கிஷோரையும், சாலமனையும் பார்த்து படுகோவமாக கத்தினான். "டேய்.. எவன்டா இப்போ ஐயோன்னு கத்துனது.. எவன் கத்துனது..?? சொல்லுங்கடா.. எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்.. டெல் மீ..!!!!! என் அம்மா சமையல் அவ்வளவு மட்டமா..??" "ஐயோ.. அதுக்காக கத்தல மச்சி..!! இவன் ஷூகாலோட என் காலை மிதிச்சுட்டாண்டா..!!" சாலமன் பரிதாபமாக சமாளித்தான். "ஏய்.. பார்லயும், ரெஸ்டாரன்ட்லயும் சாப்பிட்டதே வயிறு ஃபுல்லா இருக்குடா மச்சி.. நாங்க இன்னொரு நாள் வந்து சாப்பிடுறோம்..!! அல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு.. எங்க வீட்லயும் தேட ஆரம்பிச்சுடுவாங்க..!!" அசோக்கை சமாளிக்கும் வித்தையை ஓரளவாவது அறிந்தவன் கிஷோர்தான். அவன் அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும், அசோக் சமாதானமானான். மூன்று பேர் முகத்தையும் மாற்றி மாற்றி ஒருமுறை பார்த்தான். எல்லோருமே இவனைப்பார்த்து அமைதியாக புன்னகைத்தார்கள். "ஹ்ம்ம்.. ஓகேடா.. பை.. ஸீ யு டுமார்ரோ..!!" அசோக் குழறலாக சொல்லிவிட்டு காரை விட்டு கீழே இறங்கினான். கால்கள் சற்றே தள்ளாட வீடு நோக்கி நடையைப்போட்டான். அவன் கீழே இறங்குவதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, கார் விர்ரென திடீர் வேகம் எடுத்து பறந்தது. காருக்குள் அவர்கள் 'யப்பா.. ஆண்ட்டி சமையல்ல இருந்து கிரேட் எஸ்கேப்டா சாமி..!!' என்று கமென்ட் அடித்தது அசோக்கின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.அசோக் வீட்டுக்குள் நுழைந்தபோது, ஹாலில் இருந்த டிவியில் ஏதோ ஒரு தமிழ் சேனலில், பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. உதட்டுக்கு மேலே இரண்டு கம்பளிப்பூச்சிகள், உயர நோக்கி ஊர்வதுமாதிரி ஒரு மீசையை ஒட்டிக்கொண்டு.. இரண்டு கையிலும் இரண்டு கர்ச்சீப்களை வைத்து ஆட்டி ஆட்டி நடந்தவாறு.. 'ஊர்வசியும் இவள்தானோ... ரம்பைதானோ... ரதிதானோ... பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ...??' என்று.. சிவாஜி கணேசன் சாவித்திரியை பார்த்து பாடிக்கொண்டிருந்தார்..!! சாவித்திரியும் நளினமாக தன் உதட்டை சுளித்து.. முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்து.. வெடுக் வெடுக்கென முகத்தை வெட்டிக்கொண்டிருந்தார்..!! டிவிக்கு முன்பாக கிடந்த சோபாக்களில் ஒன்றில் அசோக்கின் தாத்தாவும் பாட்டியும் அமர்ந்து அந்த பாடலை பார்த்தும், கேட்டும், ரசித்தும் கொண்டிருந்தனர். சரியாக அசோக் உள்ளே நுழைந்த நேரத்தில், தாத்தா பக்கவாட்டில் திரும்பி பாட்டியை பார்த்து புன்னகைத்து.. "ஏய்.. கோமளா.." என்று ரகசியமாக அழைத்து "ஞாபகம் இருக்கா..??" என்று கேட்டார். பாட்டிக்கு உடனே பட்டென பழைய ஞாபகம் வந்து, வெட்கத்தில் குப்பென முகம் சிவந்து போனது. "ம்ம்.. இருக்கு..!!' என்று கிசுகிசுப்பாக சொன்னவள், தன் முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் சாய்த்து நளினமாக வெட்கப்பட்டாள். ஏற்கனவே நண்பர்களின் காதலைப்பார்த்து கடுப்புடன் வந்திருந்த அசோக்குக்கு, இவர்களுடைய காலம் போன காலத்து ரொமான்சைப் பார்த்ததும், மேலும் எரிச்சலே உண்டானது. தாத்தாவை பார்த்து சற்றே முறைப்பாகவும், கிண்டலாகவும் கேட்டான். "என்ன.. ரொம்ப ரசிச்ச்ச்சு.. பாட்டோட அப்படியே ஒன்றிப்ப்ப்போய்.. டிவி பாக்குற மாதிரி இருக்கு..??" "அ..அது.. அதுவந்து.. டிவில தேன்கிண்ணம் போட்டான்டா அசோக்கு.. ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல நல்ல பாட்டா போடுறான்.. அ..அதான் நானும் உன் பாட்டியும்.. செத்த பாக்கலாம்னு.." தங்கள் ரொமான்சை பேரன் பார்த்துவிட்டான் என்ற நாணத்துடன், தாத்தா திணறலாக சொன்னார். "ஹ்ம்ம்.. பாத்தது போதும்.. பத்து மணியாகப் போகுது.. போய் படுத்து தூங்குங்க.. போங்க..!!" "இருடா.. இந்த தேன்கிண்ணம் முடிஞ்சுக்கட்டும்.." தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "ப்ச்.. அதான் சொல்றேன்ல..?? போய் படுங்க போங்க.. தேன்கிண்ணம், தயிர்க்கிண்ணம்னுக்கிட்டு..!!" அசோக் அவ்வாறு கத்த, பாட்டிக்கு கோவம் வந்துவிட்டது. "ம்க்கும்.. இந்தப்பய வந்தாலே இப்படித்தான்.. நம்மள செத்த நேரம் டிவி கூட பாக்கவிடமாட்டான்.. நீங்க வாங்க.. காலுக்கு ஏதோ தைலம் தேய்க்கணும்னு சொன்னிங்களே.. தேச்சுவிட்டு தூங்க போலாம்..!!" சலிப்பாக சொன்ன பாட்டி, ரிமோட் எடுத்து டிவியை ஆஃப் செய்தாள். தாத்தாவை கூட்டிக்கொண்டு ஹாலில் இருந்து கிளம்பினாள். அவர்கள் போவதையே அசோக் முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். அசோக்கின் தாத்தா, பாட்டியைப்பற்றி தெரிந்து கொள்ளும் முன், நீங்கள் வேறொரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். தஞ்சாவூருக்கு அருகே இருக்கும் அரசுகொடிப்பாளையம் என்ற ஊரில், கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கும் மேலாக, எந்த ஒரு திருவிழாவிற்கும் மேடைநாடகம், தெருக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. ஆனால் அந்த ஊரின் தற்போதைய நிலைதான் அப்படி. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அந்த ஊரில் வாரத்துக்கு ஒரு நாடகம், மாதத்துக்கு இரண்டு கூத்து என்று ஊரே அமர்க்களமாய் இருக்கும். திரைப்படம் அந்த அளவுக்கு வேரூன்றி இருக்காத காலத்தில், நாடகத்தையே பெரும் பொழுதுபோக்காக நினைத்திட்ட மக்கள்..!! அந்த ஊர் ஜமீன்தார் ஒரு கலா ரசிகர். நாடகப்ரியர். யார் வீட்டிலோ கல்யாணம், காதுகுத்து என்று எந்த விசேஷமாக இருந்தாலும், ஜமீன்தார் பெரும்பங்கு செலவை ஏற்றுக்கொள்ள, மாகாளி அம்மன் கோயில் முன்பாக அமைந்திருக்கும் ஊர்ப்பொது மேடையில் நாடகம் நடைபெறும். அவ்வாறு நாடகம் போடுவதற்கு ஜமீன்தார் அணுகுவது, தஞ்சையை சேர்ந்த 'நாகமணி நாடக சபா'தான். அந்த சபாவின் சார்பாக பவளக்கொடி, வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி என்று எந்த நாடகம் நடைபெற்றாலும், அதில் நாயகனாக நடிப்பது.. 'நடிப்பிசை வேந்தன்.. நாடக கலா சிரோன்மணி' நாராயணசாமிதான்..!! பலத்த கரகோஷங்களுக்கு இடையே மேடையில் தோன்றும் நாராயணசாமி.. அவ்வாறு தோன்றியதுமே.. 'தேடி வந்தேனே புள்ளி மானே..' என்று உச்சஸ்தாயியில் பாடியவாறு.. மேடையில் நிற்கும் குறவள்ளியை விட்டுவிட்டு.. முன்வரிசையில் அமர்ந்திருக்கிற கோமளவல்லியை தேட ஆரம்பித்துவிடுவார்...!! அந்த நொடிக்காகவே அத்தனை நேரம் காத்திருந்த கோமளவல்லியும்.. நாராயணசாமியை ஆசையுடன் பார்ப்பாள்..!! அவர்களுடைய பார்வைகள் ஒன்றோடொன்று மோதி, காதல் கதை பேசும்..!! காதலியை கண்டுவிட்ட குஷியில் நாராயணசாமியும்.. 'ஊர்வசியும் இவள்தானோ... ரம்பைதானோ... ரதிதானோ... பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ...??' என்று.. சத்தியவான் சாவித்திரிக்காக மனப்பாடம் செய்து வைத்திருந்த பாடலை.. வள்ளி திருமணத்திலேயே அள்ளி வீசுவார்..!! கோமளவல்லியும் சற்றுமுன் செய்தது போலவே, முகவாய்க்கட்டையை திருப்பி அழகாக வெட்கிப்போவாள்..!!பிறகு நாடகம் முடியும்வரை.. அவ்வாறே இருவரும் இரவு முழுவதும்.. ஊர்மக்கள் சூழ்ந்திருக்க கண்களால் காதலித்துக் கொள்வார்கள்..!! நாடகம் முடிந்தபின்.. அதிகாலை இருளில்.. மேடைக்கு பின்புறமாக.. தனிமையில்.. தயங்கி தயங்கி கைவிரல்கள் கோர்த்துக்கொண்டு.. காதல்மொழி பேசிக்கொள்வார்கள்..!! ஜமீன்தார் தனது சொந்த செலவில் நிறைய நாடகங்களுக்கு ஏற்பாடு செய்ய.. இவர்களது காதலும்.. மேடைக்கு முன்பாகவும், பிறகு பின்பாகவும்.. தங்கு தடை இல்லாமல் வளர்ந்து வந்தது..!! பிறிதொரு நாளில்.. வேலன் வேடத்திற்கும், வேடன் வேடத்திற்கும் இடைப்பட்ட தருணத்தில்.. உடை மாற்றுவதற்காக பனைஓலை தடுப்புக்கு அப்பால் சென்ற நாராயணசாமி.. 'கறை.. தேடினாலும் கிடைக்காது..' என்பது மாதிரி காணாமல் போனார்..!! 'வள்ளியம்மை.. அச்சு முறுக்கு வாங்கிட்டு வர்றேன்.. எடத்தை பாத்துக்க..' என்றுவிட்டு எழுந்து சென்ற கோமளவல்லியும்.. 'ஏய்.. எனக்கு ரெண்டு எள்ளு உருண்டைடி..!!' என்று ஆசையாக சொன்ன உற்றதோழிக்கு.. உருண்டை வாங்கி வராமலேயே ஊரைவிட்டு தொலைந்து போனாள்..!! நாராயணசாமியும், கோமளவல்லியும் சென்னைக்கு வந்து செட்டில் ஆகி.. பிற்காலத்தில் அசோக்குக்கு தாத்தாவும் பாட்டியுமாய் ஆகிப்போனார்கள்..!! சரி.. இதற்கும் அந்த ஊரில் ஐம்பது வருடங்களாக கலைநிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! இவர்கள் காணாமல் போனதற்கு இரண்டு நாட்கள் கழித்து.. ஜமீன்தாருக்கு சாமி அருள் வந்துவிட்டது..!! மகள் போனதால் வந்த துக்கத்திலும்.. தானே தனக்கு சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதை, நினைந்து நினைந்து குமைந்து வெந்த ஆத்திரத்திலும்.. 'டேய்ய்ய்.. ஆத்தா வந்திருக்கேண்டா.. இனிமே எனக்கு விழா எடுக்குறேன்ற பேர்ல.. எவனாவது கூத்து, நாடகம்ன்னு கும்மாளம் போட்டிங்க.. எல்லாரையும் க்ளோஸ் பண்ணிப்புடுவேன்.. க்ளோஸ் பண்ணி.. ராஸ்க்கெல்ஸ்..!!' என்று சூலாயுதத்தை சுழற்றியவாறு ஜமீன்தார் உக்கிரமான குரலில் கத்தி எச்சரிக்க.. அம்புட்டுத்தேன்..!!!! தாத்தாவையும் பாட்டியையும் விரட்டி அடித்துவிட்டு, அசோக் சோபாவில் வந்து அமர்ந்தான். கால்களை அகட்டி 'பப்பரக்கா' என்று அமர்ந்தவன், டிவியை ஆன் செய்வதற்காக ரிமோட் எடுக்கப் போக, படக்கென்று ஒரு கை அந்த ரிமோட்டை எட்டி எடுத்தது. அசோக்கின் அருகில் ஜம்மென்று வந்து அமர்ந்தாள் அவன் தங்கை சங்கீதா. சற்றுமுன் தாத்தா பாட்டியை முறைத்த மாதிரி, அசோக் இப்போது தங்கையை திரும்பி முறைக்க, அவள் டிவியை ஆன் செய்து VH1 சேனல் வைத்தாள். 'ஹிட் மீ பேபி.. ஒன் மோர் டைம்..!!' என்று அர்த்த ராத்திரியில் அலறிய பிரிட்னி ஸ்பியர்சுடன், 'ஓ.. பேபி.. பேபி..' என்று லாவகமாக ஜாயின் செய்து கொண்டாள். அருகில் அமர்ந்து தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் அண்ணனை, கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தலையை மெலிதாக அசைத்து அனுபவித்து பாட ஆரம்பித்தாள். இப்போது அசோக் வாயைத் திறந்தான். "ஒய்.. என்ன.. கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..??" என கிண்டலான குரலில் கேட்டான். "எ..என்ன உளர்ற.. எதை கண்டுபிடிக்க முடியாதா..??" சங்கீதா அசோக்கை பார்த்து குழப்பமாக கேட்டாள். "என்னதான் ஆயிரம் குயில்களுக்கு மத்தில கூவ ட்ரை பண்ணாலும்.. காக்காவோட வாய்ஸ் தனியா காட்டிக் கொடுத்துடும் சிஸ்டர்.. கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி.. ஹாஹா..!!" சொல்லிவிட்டு அசோக் சிரித்தான். அவ்வளவுதான்.. அண்ணனின் நக்கலில் சங்கீதா இன்ஸ்டன்டாய் டென்ஷன் ஆனாள். "யாருடா காக்கா.. யாரு காக்கா..?? குடிக்காரப்பயலே..!!" என்று அவன் தலையில் குட்டு வைக்க முயன்றாள். "நீதாண்டி காக்கா.. அண்டங்காக்கா.. மண்டைக்காக்கா.. கொண்டைக்காக்கா.. கொர்ர்ர்ர்... கொர்கொர்ர்ர்...!!" காக்கா மாதிரி கத்தி காட்டிய அசோக், அவள் கையிலிருந்த ரிமோட்டை படக்கென பறித்தான். தங்கை தன்னை எரித்து விடுவதைப்போல் பார்ப்பதை, சற்றும் சட்டை செய்யாமல் டிவி பக்கமாய் திரும்பி சேனலை மாற்றினான். "இப்போ அந்த சாங்கை வைக்கப் போறியா இல்லையா நீ..??" சங்கீதாவின் குரலில் அனல் தெறித்தது. "முடியாது.. என்ன பண்ணுவ..??" அசோக்கின் குரலில் அலட்சியம் மிகுந்திருந்தது. எந்த சேனலிலும் நில்லாமல் ஒவ்வொரு சேனலாக தாவிக்கொண்டே சென்றவன், எரிச்சலில் முணுமுணுத்தான். "ச்சே.. எல்லா சேனல்லயும் ஏதாவது ப்ரோக்ராம் போட்டு உசுரை வாங்குறானுக.. ஒரு சேனல்லயும் அட்வர்டைஸ்மன்டே காணோம்..!!" என்று சலிப்பாக முணுமுணுத்து தங்கையின் டென்ஷனை பல மடங்காக்கினான். அப்புறம் ஒரு தமிழ் சேனலில் 'ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்..' என்று ஏர்டெல் விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, உடனே முகம் மலர்ந்து போய், "ஆங்.. இது சேனல்..!!" என்று சந்தோஷமாக சொன்னவன், ஆர்வமாக அட்வர்டைஸ்மன்ட் பார்க்க ஆரம்பித்தான். சங்கீதா அவனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயல, படக்கென கக்கத்தில் செருகிக்கொண்டான். அண்ணனின் செய்கையில் கடுப்பான சங்கீதா, "ரிமோட்டை குடுறா.. குடிக்காரா.. நான் சாங் பாக்கணும்..!!" என்று சண்டை போட்டாள். "குடுக்க முடியாது போடி.. நான் ஆட் பாக்கணும்..!!" "ஆ..மாம்.. இவர் பெரிய ஆட் ஃபில்ம் அய்யாச்சாமி.. ஆட் மட்டுந்தான் டிவில பாப்பாரு..!!" சங்கீதா நக்கலாக சொல்ல, "ஆ...மாம்.. இவுங்க பெரிய சாதனா சர்ர்ர்றுக்கம்.. சாங் மட்டுந்தான் டிவில பாப்பாங்க.. போடி போடி..!!" என்று கவுண்ட்டர் கொடுத்தான் அசோக். சங்கீதா உச்சபட்ச கடுப்புடன் அண்ணனை முறைத்துக் கொண்டிருந்தாள். அசோக் தங்கைக்கு டென்ஷன் ஏத்திவிட்டதில் எக்கச்சக்க குஷியாகிப்போய், மனதுக்குள்ளேயே ரகசியமாய் சிரித்துக் கொண்டான். அப்போதுதான் டிவியில் அந்த விளம்பரம் போட்டார்கள். அசோக்கின் கம்பெனியில் இருந்து தயாரான ஒரு விளம்பரம். அந்த விளம்பரத்தை பார்த்ததுமே, அசோக் புரையேறிப்போன மாதிரி பதறிப் போனான். கக்கத்தில் இருந்த ரிமோட்டை உடனே எடுத்து, அவசரமாய் சேனலை மாற்ற முயன்றான். பதட்டத்தில் வேறேதேதோ பட்டன்களை அவன் விரல்கள் அழுத்த, சங்கீதா இப்போது ரிமோட்டை பிடுங்கிக் கொண்டாள். "எதுக்கு மாத்துற..?? ஓடட்டும் ஓடட்டும்.. உன் லட்சணம் இந்த உலகத்துக்கு தெரியட்டும்..!!" என்று திடீர் உற்சாகத்துடன் சொன்னாள். "ஏய்.. சேனலை மாத்துடி..!!" அசோக் அவமானத்தில் கத்த, "முடியாது போ..!!" பழிப்பு காட்டிய சங்கீதா, விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். டிவியில் ஓடிய விளம்பரத்தை பார்த்து பார்த்து கைகொட்டி சிரித்தாள். "ஹாஹாஹாஹா..!! 'என்ன வெண்மை.. என்னென்ன வெண்மை.. என்ன புதுமை.. என்னென்ன புதுமை..'..!! ச்சே.. என்ன சாங்கு.. சான்சே இல்ல ப்ரதர்.. கொன்னுட்ட போ..!! ஹாஹாஹாஹா..!!" "ஏய்.. ரிமோட்டை குடுடி..!!" "ஹாஹாஹா..!! ஏன் ப்ரதர்.. இந்த கேவலமான வெளம்பரத்தை பாத்தபிறகும்.. எந்த கேனைப்பயலாவது அந்த வாஷிங் பவுடரை வாங்குவான்னு நீ நெனைக்கிற..?? ம்ம்..?? ஹாஹா.. வெளம்பரம் எடுத்திருக்கான் பாரு.. கருமம்..!! த்தூ..!!!" "ப்ச்.. இங்க பாரு.. இது ஒன்னும் எங்க ஆட் இல்ல.. நாங்க வெறும் ஆடியோ மிக்சிங் மட்டுந்தான் பண்ணினோம்..!!" "அது போதுமே.. ஆடியோதான இந்த ஆட்லயே ஹைலைட்டு..!! ஹாஹா..!!" என்று சிரித்தவள், "என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை..!!" என்று அந்த விளம்பர மெட்டிலேயே பாட, அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான். "அடி வாங்காதடி சங்கு..!! ஒழுங்கா சேனலை மாத்து..!!" என்று கத்தினான். "முடியாது..!! என்னோட அறிவு ஜீவி அண்ணன் எடுத்த அட்வர்டைஸ்மன்டை.. நான் பாத்தே ஆகணும்..!!" "ஹேய்.. நான் ஒன்னும் எடுக்கல.. அது ஹிந்தி விளம்பரம்டி.. ஒரிஜினல் சாங்கை தமிழ்ல டப் பண்றப்போ.. அப்படி பண்ணிட்டானுக.. அதுக்கு நான் என்ன பண்றது..??" "இதுலாம் செல்லாது செல்லாது..!! இது உன் விளம்பரந்தான்..!! 'என்ன கொடுமை.. என்னென்ன கொடுமை'..!!" சங்கீதா மீண்டும் பாட, அசோக் இப்போது பொறுமை இழந்தான். "ஏண்டி சொல்ல சொல்ல..?? உன்னை..???? என்ன பண்றேன் பாரு..??" என்று கோவமாக கத்திக்கொண்டே சோபாவில் இருந்து படக்கென எழுந்தான். அண்ணனின் ஆத்திரத்தை அளவுக்கதிகமாய் கிளறிவிட்டோம் என்று புரிந்து போனதும், சங்கீதாவும் இப்போது அவசரமாய் சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள். அசோக் அவளை அடிப்பதற்காக கையை ஓங்க, அவள் 'டாடீஈஈ..!!' என்று கத்திக்கொண்டே, உள்ளறைக்குள் ஓடினாள். அசோக்கும் விடாமல் அவளை ஆத்திரத்துடன் விரட்டினான். சங்கீதாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன், அசோக்கின் அப்பா அடிக்கடி நாக்கூசாமல் சொல்கிற ஒரு பொய்யை பற்றி தெரிந்து கொள்ளலாம். 'என் பொண்ணு பொறந்த கொழந்தையா இருந்தப்போ.. அவ பசியில அழுறது கூட.. பாட்டுக்கச்சேரி கேக்குற மாதிரி அவ்வளவு இனிமையா இருக்கும்..!! அதனாலதான் அவளுக்கு சங்கீதான்னே பேர் வச்சுட்டோம்..!!' - இதுதான் அந்த பொய்..!! அப்பாவின் பொய்யை உண்மை என்றே சங்கீதா நம்ப ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தான் பிறந்ததே பாடுவதற்குத்தான் என்று அவள் முடிவு கட்டியபின், சிறுவயதிலேயே அவளுக்கு இசையிலும், பாடலிலும் ஆர்வம் வந்து தொலைத்ததில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இசையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறாள். கர்நாடக சங்கீதத்தையும், ஹிந்துஸ்தானி சங்கீதத்தையும் பயின்று முடித்து, இப்போது வெஸ்டர்ன் க்ளாசிக்கையும் ஒரு கை பார்ப்பது என்று களத்தில் இறங்கியிருக்கிறாள். தன்னுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சின் ஊடே, சின்ன கேப் விட்டால் கூட போதும்.. 'சிங்'க ஆரம்பித்துவிடுவாள் சங்கி..!! தனது இசை என்னும் இன்ப வெள்ளத்தால், இந்த உலகையே மூழ்கடித்து மூச்சு திணற வைக்கவேண்டும் என்பதுதான் அவளது முழுமுதற் லட்சியம்..!! சங்கீதா எம்.ஏ படித்துக் கொண்டிருக்கையிலேயே, அண்ணனின் நண்பன் அண்ட் பிசினஸ் பார்ட்னர் என்ற முறையில், அடிக்கடி வீட்டுக்கு வருகை தந்த கிஷோர் அவள் கண்களில் விழுந்தான். அவனுடைய குழந்தைத்தனமான முகமும், வசீகர சிரிப்பும்தான் முதலில் அவளை அவன்பால் ஈர்த்தன. 'நீங்க நல்லா பாடுவீங்களாமே.. அங்கிள் சொன்னாரு..' என்று அவன் ஒருநாள் சொன்னபோது, 'ம்ம்.. ஆமாம்..' என்று வெட்கப்பட்டாள். 'ப்ளீஸ்ங்க.. எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்..' என்று அவன் இன்னொரு நாள் கேட்டபோது, 'ஐயோ.. நான் மாட்டேன்பா..' என்று போலியாக மறுத்தாள். வேறொரு நாள் அவனிடம் ஒரு கீர்த்தனை பாடிக்காட்ட, அவன் 'வாவ்.. லவ்லி வாய்ஸ்ங்க உங்களுக்கு..!!' என்று சொல்லிவிட்டான். இவளும் 'ரியல்லி..?? தேங்க்ஸ்..!!' என்று அப்படியே பூரித்துப் போனாள்.அப்புறம் இவளாகவே அடிக்கடி அவனிடம் பாடிக்காட்டுவாள். அவன் வீட்டுக்கு வராத நாட்களிலும், ஃபோன் போட்டாவது தன் சொந்த காசில் அவன் காதுக்குள் கானமழை பொழிவாள். அவனும் வஞ்சகமில்லாமல் வாய் நிறைய இவளை பாராட்டுவான். ஒருநாள் அப்படித்தான்.. பார்க் பெஞ்சில் தனியாக அவனுடன் அமர்ந்திருந்த வேளையில் ஒரு பாடல் பாடினாள். பாடி முடித்ததும் அவன் 'லவ்லி வாய்ஸ்..' என்று சொல்வான் என்று, அவள் தலைகுனிந்து ஆசையுடன் காத்திருக்க, அவனோ 'லவ் யூ..!!' என்று சொல்லி குண்டை தூக்கி போட்டான். அவ்வளவுதான்..!! சங்கீதா மிரண்டு போனாள். வெறிநாய் ஒன்று பின்னாலேயே விரட்டுவது போல, திடுதிடுவென ஒரே ஓட்டமாய் வீட்டுக்கே ஓடிப்போனாள். பெட்டில் விழுந்து, இரண்டு தலையணைகளை எடுத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டும், மார்புக்குள் எழுந்த படபடப்பு அடங்கவே மறுத்தது. 'டெம்ப்ரேச்சர்லாம் நார்மலாத்தான் இருக்கு.. அப்புறம் ஏன் உடம்பு மட்டும் உனக்கு இப்படி நடுங்குது..??' என்று கவலையாக கேட்ட அப்பாவை பார்த்து, தெர்மாமீட்டர் கவ்விய வாயுடன் திருட்டுமுழி முழித்தாள். அன்றிலிருந்து ஒரு நான்கைந்து நாட்களுக்கு. அவள் கிஷோரை பார்க்கவில்லை.. பேசவில்லை.. முக்கியமாக அவன் காதில் பாடவில்லை..!! ஆனால்.. அவளுடைய எண்ணம் முழுவதும் அவனே நிறைந்திருந்தான்..!! அந்த நான்கைந்து நாட்களும் அவளுடைய மனதுடன் சண்டை போட்டு.. கேள்வி கேட்டு.. விவாதம் செய்து.. விரல் நகங்களை எல்லாம் கடித்து துப்பி.. அதன்பிறகுதான் அந்த உண்மையை அவள் கண்டுபிடித்தாள்..!! உடனே.. அவளுடைய அறையை விட்டு ஓடிவந்து.. கண்டு பிடித்த உண்மையை.. நடுஹாலில் நின்று சத்தம்போட்டு கத்தினாள்..!! "YESSSS....!! I'M IN LOVE....!!!!!" கண்டுகொண்ட காதலை காதலனிடம் அறிவிக்காமல், ஹாலில் நின்று அவள் அவ்வாறு கத்தியதற்கு காரணம் இருக்கிறது. அது என்னவென்று ஏற்கனவே உங்களுக்கு புரிந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் இன்னும் சிறிது நேரத்தில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். சங்கீதாவும், கிஷோரும் இப்போது இருவீட்டார் சம்மதத்தோடு சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருக்கிறாள். 'மூத்தவனுக்கு முடிச்சுட்டுத்தான் எளையவளுக்கு..!!' என்று அம்மா கறாராய் சொல்லிவிட்டதால், அசோக்கின் திருமணத்திற்காக இப்போது சங்கீதாவும், கிஷோரும் வெயிட்டிங்..!! இப்போதும் சங்கீதா தினமும் கிஷோரின் காதில் பாடுகிறாள். அவன் பாராட்ட மறந்து போனாலும், இவள் மறவாமல் கேட்டு வாங்குகிறாள். 'சினிமால ப்ளேபேக் பாடனுண்டா.. நீதான் எப்படியாவது ஹெல்ப் பண்ணனும்..' என்று அவனை நச்சரிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள். சரி.. இப்போது.. "பாருங்க டாடி.. சும்மா சும்மா என்னை அடிக்க வர்றான்..!!" என்று கத்திக்கொண்டே அப்பாவின் பின் சென்று பம்மினாள் சங்கீதா. "பாரு மம்மி.. சும்மா சும்மா அவ என்னை கேலி பண்ணிட்டே இருக்குறா..!!" என்று குழைந்துகொண்டே அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு முறையிட்டான் அசோக். "ஏண்டா சின்னப்புள்ளையை போட்டு அடிக்க வர்ற..??" அசோக்கிடம் எகிறினார் அவன் அப்பா. "ஏண்டி எந்த நேரமும் பச்சைப்புள்ளையை போய் கேலி பண்ணிட்டே இருக்குற.. கொழுப்பா உனக்கு..??" சங்கீதாவிடம் சீறினாள் அவள் அம்மா. "ஆமாம்.. பச்சைப்புள்ளையாம் பச்சைப்புள்ளை..!! உன் பச்சைப்புள்ளை என்ன வேலை பண்ணிட்டு வந்திருக்குன்னு தெரியுமா உனக்கு..??" சங்கீதா அந்த மாதிரி திருப்பி கேட்கவும், "எ..என்ன.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??" என்று ஒருகணம் குழம்பிய அம்மா, அப்புறம் அவனிடமே திரும்பி, "என்னடா பண்ணிட்டு வந்த..??" என்று கேட்டாள். "நா..நான்.. நான் என்ன பண்ணுனேன்.. நான் ஒண்ணும் பண்ணலையே..??" அசோக் தடுமாற்றமாய் சமாளிக்க முயன்றான். "நடிக்கிறான் பாரு.. திருட்டுப்பய.. திருட்டுப்பய..!! உண்மையை சொல்லுடா..!!" சங்கீதா கத்தினாள். "ஏய்.. எதுக்குடி இப்ப அவனைப்போட்டு திட்டுற.. சரி நீ சொல்லு.. என்ன பண்ணிட்டு வந்திருக்கான்..??" "ம்ம்ம்..?? நல்லா தண்ணி போட்டுட்டு வந்திருக்கான் மம்மி உன் புள்ளை..!!" சங்கீதா சொல்லவும் அசோக்கின் அம்மா அதிர்ந்தாள். "என்னடா சொல்றா இவ..??" என்று மகனை திரும்பி பரிதாபமாக பார்த்தாள். "ஐயோ.. இ..இல்ல மம்மி.. இவ சும்மா சொல்றா..!!" "ஏய்.. யாருடா சும்மா சொல்றா..?? எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் சொல்றேன்.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு.. கிஷோர் எல்லாம் சொல்லிட்டான்..!!" சங்கீதா ஒருமாதிரி பெருமையாக சொன்னாள். கிஷோர் உளறிவிட்டான் என்று தெரிந்ததுமே, அசோக் அப்படியே நொந்து போனான். அதற்கு மேல் எப்படி சமாளிப்பது என்று புரியாமல், இமைகளை மூடி நெற்றியை பிசைந்தான். பிறகு தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான். "பாரு.. உன் பச்சைப்புள்ள லட்சணத்தை..!!" அம்மாவுக்கு சூட்டை கிளப்பிவிட முயன்றாள் சங்கீதா. ஆனால் அவளோ 'என்னடா மகனே இதெல்லாம்..?' என்பதுபோல அவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அசோக்கின் அப்பா சற்றே கடுமையான குரலில் அவனிடம் சீறினார். "ஏண்டா.. பொறந்த நாளும் அதுமா போய்.. குடிச்சுட்டு வந்திருக்கியா..?? நீலாம் எப்படிடா உருப்படப் போற..??" என்று ஆரம்பிக்கவுமே, அசோக்கின் அம்மாவுக்கு பொறுக்கவில்லை. "ப்ச்.. இப்போ எதுக்கு தேவை இல்லாம கத்துறீங்க..?? ஏ..ஏதோ.. பொறந்த நாளுன்னு ஒரு ஆசைல பண்ணிட்டான்.. விடுங்க..!! உங்கள மாதிரி வாரத்துக்கு ஒருதடவைன்னு கணக்கு வச்சா குடிச்சுட்டு இருக்கான்..??" என்று கணவரை பார்த்து கத்தி, அவரை கப்சிப் ஆக்கினாள். மகளையும் 'ஐயையே.. அவ்ளோதானா..??' என்று மண்டை காய விட்டாள். அப்புறம் மகனிடம் திரும்பி, "சரி போ.. கை கழுவிட்டு வா.. சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடு..!!" என்று எதுவுமே நடவாத மாதிரி கனிவாக சொன்னாள். "ஹாஹா.. அதெல்லாம் தொரை வெளிலயே நல்லா கொட்டிட்டு வந்துட்டாரு மம்மி..!! கிஷோர் அதையும் சொல்லிட்டான்..!!" சொல்லிவிட்டு சிரித்த தங்கையை, அசோக் இப்போது நிமிர்ந்து பார்த்து முறைத்தான். "என்னடா.. சாப்பிட்டு வந்துட்டியா..??" அம்மாவுடைய குரல் இப்போது நிஜமாகவே ரொம்ப பரிதாபமாக ஒலித்தது. "ம்ம்..!!" "ப்ச்.. என்னடா நீ.. பொறந்த நாளும் அதுவுமா.. நான் உனக்காக எல்லாம் ஆசையா சமைச்சு வச்சுட்டு உக்காந்திருக்கேன்..?? சரி.. மம்மி உனக்காக ஸ்பெஷலா ஹப்ஷி அல்வான்னு ஒன்னு பண்ணுனேன்.. அதையாவது கொஞ்சம் சாப்பிடுறியா.??" அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்தப்பக்கம் சங்கீதா களுக் என்று சிரித்தாள். "ஏய்.. என்னடி இளிப்பு..??" அம்மா திரும்பி பார்த்து சீறவும் சங்கீதா வாயை மூடிக்கொண்டாள். அசோக்கின் அப்பா இப்போது கிண்டலாக சொன்னார். "ப்ச்.. பொறந்த நாளும் அதுவுமா கப்ஸி பெப்ஸின்னு ஏண்டி அவனைப் போட்டு வதைக்கிற.. எங்களுக்குத்தான் வேற வழி இல்ல.. அவனையாவது விடு.. பாவம்..!!" "ம்ம்.. ஏன் பேச மாட்டீங்க.. அப்பாவும், மகளும் நல்லா தின்றதையும் தின்னுப்புட்டு..?? குடுக்குறப்ப வேணான்னு சொல்றதுக்கு என்னவாம்.. வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருந்தீங்க..??" 'ம்க்கும்.. நீ கிண்டுன அல்வாவைத்தான் வச்சிருந்தேன்..!! வேணாம்னா விடுற ஆளா நீ..' அப்பா வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். "என்னது..?? என்ன சொன்னிங்க இப்போ..??" "அவங்க கெடக்குறாங்க விடு மம்மி.. நீ போய் அல்வா எடுத்துட்டு வா.. நான் சாப்பிடுறேன்..!!" அசோக் அந்த மாதிரி இடையில் புகுந்து சாந்தமாக சொன்னதும், அவன் அம்மாவின் டென்ஷன் சுத்தமாக வடிந்து போனது. அவளுடைய முகம் முழுதும் பூரிப்பும் மலர்சியுமாய் மாறிப்போனது. "ம்ம்ம்.. ஒரு நிமிஷம்டா கண்ணா.. உக்காரு.. மம்மி எடுத்துட்டு வர்றேன்..!!" என்றவாறு கிச்சனுக்கு ஓடினாள். அசோக்கின் அப்பா அம்மாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், உங்களுக்கு ஒரு கெஸ் குவிஸ்..!! அசோக்குக்கு அவனுடைய பெயரை யாருடைய நினைவாக அவன் பெற்றோர் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்..?? கெஸ் செய்யுங்கள்..!! நாராயணசாமி அசோக்கின் அப்பாவுக்கு வைத்த பேர் பிச்சுமணி..!! ஆனால்.. அசோக்கின் வீட்டுக்கு யாராவது வந்து 'பிச்சுமணி இருக்காரா..??' என்று கேட்டால்.. வீட்டில் இருப்பவர்களே சில வினாடிகள் குழம்பி, பிறகு யோசித்துதான் 'ம்ம்.. இருக்காரு இருக்காரு.. உள்ள வாங்க..' என்பார்கள். இதே 'இங்க மணிபாரதி வீடு எதுங்க..?' என்று அந்த ஏரியாவில் சென்று எவரைக் கேட்டாலும் இவர்கள் வீட்டை நோக்கி சரியாக கை நீட்டிவிடுவார்கள்..!! பி.யு.ஸி படிக்கிற காலத்திலேயே பிச்சுமணிக்கு கதை, கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் வந்து தொலைத்தது. எந்த நேரமும் எதையாவது கிறுக்கிக்கொண்டே இருப்பார். கல்லூரி படிக்கிற காலத்தில் தான் கிறுக்கியதை எல்லாம் பத்திரிக்கைக்கு அனுப்புகிற பாவச்செயலையும் செய்யத் துணிந்தார். ஆனால் நல்லவேளையாக இவர் அனுப்பிய கதைகள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாக இவரிடமே திரும்பி வந்து சேர்ந்தன. கல்லூரி முடித்து கனரா வங்கியில் காசாளராக சேர்ந்தபின்னும், கதை எழுதும் ஆர்வம் அவரை விட்டு காணாமல் போனதா என்றால்.. போகவில்லை..!! தொடர்ந்து பத்திரிக்கைகளை நோக்கி கதை அம்பு எய்து கொண்டே இருந்தார். அப்படித்தான் ஒருமுறை.. அப்போது வெளிவந்திருந்த இருவர் உள்ளம் என்ற திரைப்படத்தின் கதையை.. கொஞ்சம் உல்ட்டா செய்து 'உள்ளம் இரண்டு' என்ற தலைப்பில் இவர் ஒரு கதை எழுதி அனுப்பி வைக்க.. எடிட்டரின் கவனக்குறைவாலோ.. எப்படியாவது பக்கத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ.. அந்த வார வாரமலரில் அந்தக்கதை வெளியாகியது.. ஒரு எழுத்தாளர் பிறந்து தொலைத்தார்..!! மதுரைக்கருகே ஒரு சிற்றூரில்.. எஸ்.எஸ்.எல்.ஸி படித்து முடித்துவிட்டு.. காலையிலும், மாலையிலும் அடுப்பூதுவதை தவிர.. வேறு எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள் பாரதி..!! வெட்டி நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாது.. கிழிந்த காகிதத்துண்டு எதுவும் கீழே கிடந்தால் கூட.. அது எவ்வளவு சிதிலமடைந்த நிலைமையில் கிடைத்தாலும்.. எடுத்து படித்துக் கொண்டிருப்பாள்..!! வாரமலரில் வெளியான அந்த 'உள்ளம் இரண்டு' பாரதியின் கண்ணில் பட்டுவிட்டது.. உருகிப் போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. பித்துப் பிடிக்காத குறை..!! கதை ஆசிரியரை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் என்று தோன்ற.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டையில் தனது பாராட்டை எழுதி அனுப்பினாள்..!! தன்னுடைய எழுத்துக்கு முதன்முறையாக ஒரு விசிறி.. அதுவும் பெண் விசிறி.. அதனினும் திருமணம் ஆகாத பெண் விசிறி.. பூரித்துப் போனார் பிச்சுமணி..!! உடனே பதில் அனுப்ப நினைத்தார்.. அஞ்சு பைஸா அஞ்சல் அட்டை வாங்க அஞ்சலகத்துக்கு ஓடினார்..!! அந்த சின்ன அட்டையில் எத்தனை நன்றிகளை அடக்க முடியுமோ.. அத்தனையும் அடக்கி எழுதி.. அப்படியே மட்டையாக மடங்கி.. ஒரு பதில் அனுப்பினார்..!! ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரிடம் இருந்து உடனே தனக்கு பதில் வந்துவிட்டதில்.. புளங்காகிதம் அடைந்து போனாள்.. பாரதி..!! கதை பிரசுரம் ஆன துணிச்சலும்.. பாரதியின் மடல் தந்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள.. பிச்சுமணி அதன்பிறகு நிறைய கதைகளை சுட ஆரம்பித்தார்..!! சுட்டதில் நிறைய பத்திரிகைகளிலும் வெளிவந்தன.. பிச்சுமணி, பாரதியின் அட்டை பரிமாற்றமும் தொடர்ந்தது.. அரசாங்க கஜானாவிலும் நிறைய அஞ்சு பைசாக்கள் குவிய ஆரம்பித்தன..!! ஆரம்பத்தில் கதை பற்றி பேசிய பேச்சு.. அப்புறம் நட்பாக மாறி.. பிறகு காதலாக கனிந்து.. உருகி.. ஓடி.. அஞ்சல் அட்டை வழியாக ஒழுக ஆரம்பித்தது..!! மாதவரத்தில் இருந்து மதுரை வரை அஞ்சல் அட்டையை தூக்கி சுமக்கும் போஸ்ட்மேன்கள், இவர்களுடைய அட்டைகளுக்கு 'Followers' ஆக ஜாயின் செய்து கொண்டார்கள்..!! அஞ்சலகத்தில் குவிந்து கிடக்கும் அட்டைகளில் இவர்களுடைய அட்டைகளை தேட ஆரம்பித்தனர்..!! 'பாரதியே.. பார் ரதியே.. என்னைப்பார் ரதியே..!!' என்று பிச்சுமணி பாரதியை நினைத்து அச்சுபிச்சுத்தனமாக எழுதுகிற கவிதையை, தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற தபால்நிலையத்தில் முத்திரை குத்துகிற ஒருவர் படித்து, 'பேஷ்.. பேஷ்.. கவிதை ரொம்ம்ம்ம்ப நன்னா இருக்கு..' என்று உசிலைமணி ஸ்டைலில் பாராட்டிவிட்டு முத்திரை குத்துவார்..!! "உன் ஆளு கதை இந்த வாரம் கல்கில வருதாம்மா.. மறக்காம படிச்சுடு..!!" - அஞ்சல் அட்டையை நீட்டியவாறே போஸ்ட்மேன் சொல்லும்போதே, பாரதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னும். "ஐயோ.. அடுத்தவங்களுக்கு வந்த போஸ்ட் கார்ட்லாம் படிப்பிங்களாண்ணே..?? ப்ளீஸ்ண்ணே.. படிக்காதிங்கண்ணே..!!" - குனிந்த தலை நிமிறாமல் கெஞ்சலாக சொல்வாள். "ஹாஹா.. பயப்படாதம்மா.. படிக்க கூடியதை மட்டுந்தான் நான் படிப்பேன்..!!" - அவர் சிரிப்புடன் சொல்லிவிட்டு சைக்கிளை மிதிப்பார். பாரதி இந்தமாதிரி முகம் தெரியாத ஒருவருடன் அஞ்சல்வழிக்காதல் பயிலுவது அவளுடைய வீட்டுக்கு ஒருநாள் தெரிந்து போனது. கொதித்துப் போயினர். அவளுக்கு உடனே திருமணத்தை முடித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வீட்டுச்சிறை வைத்தனர். பாரதி சற்றும் மனம் தளரவில்லை. வீட்டு சிறையில் இருந்து தப்பித்து ஓடி, தபால் நிலையத்தில் தஞ்சம் புகுந்தாள். அங்கிருக்கும் அரதப்பழசான டெலிபோனில் சென்னைக்கு ட்ரங் கால் புக் செய்து பேசி, ஒருவழியாக பிச்சுமணியை பிடித்தாள். அவரும் அவளை உடனே மதராசபட்டினத்துக்கு வந்து சேர சொன்னார். சென்னைக்கு ரயில் ஏறிவிட்டாள் பாரதி..!! பிறகு சென்னை வந்து.. காதலனை கைபிடித்து.. பிற்காலத்தில் அசோக், சங்கீதா ஆகிய அரிய செல்வங்களை ஈன்றெடுத்து.. திருமணம் ஆனபிறகு பிச்சுமணி வேறு புனைப்பெயரில் கதை எழுத துவங்கினார்.. தன்னுடைய கதைக்காக படங்கள், பிற புதினங்களில் இருந்து பாதியை உருவுகிற பிச்சுமணி, புனைப்பெயருக்காகவும் பாதியை தன் மனைவியின் பெயரில் இருந்து உருவிக்கொண்டார்.. அப்படி உருவித்தான் மணிபாரதி உருவானார்..!! அன்றிலிருந்து மணிபாரதியின் எழுத்துப்பயணம் நிற்கவே இல்லை.. காசாளராக வேலை பார்த்துக்கொண்டே கதை எழுதுவதை கண்டின்யூ செய்தார்..!! இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.. அவ்வளவும் காதல் கதைகள்தான்.. காதல் ரசத்தின் கடைசி சொட்டையும்.. கருணையே இல்லாமல் கசக்கி பிழிந்து சாறெடுத்துத்தான்.. தனது கதைகளையே அவர் எழுதுவது..!!
சரி.. குவிஸ்க்கு ஆன்சர் கெஸ் செய்தீர்களா..?? நானே சொல்கிறேன்.. விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்..!! வீட்டு சிறையில் இருந்த பாரதி.. பிச்சுமணியுடன் இணையவேண்டும் என்று போட்ட ப்ளான்.. நாராயணசாமி - கோமளவல்லி அண்ட் கோ போட்ட ப்ளான் மாதிரி பக்கா ப்ளான் எல்லாம் இல்லை..!! ஒரு அவசரமான அவசியத்தில் போட்ட அரைகுறை ப்ளான்..!! அதனால்தான்.. வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும்போது.. அடுக்களையிலோ, அரிசிப்பானையிலோ அம்மா ஒளித்து வைத்திருக்கிற பணத்தை அபேஸ் செய்துகொண்டு எஸ்கேப் ஆகவேண்டும் என்ற அறிவு.. பாரதிக்கு இல்லவே இல்லை..!! அவளுக்கு வழக்கமாக அஞ்சல் அட்டை நீட்டும் போஸ்ட்மேன்.. தபால் நிலையத்தில் தஞ்சமும் கொடுத்து, மெட்ராசுக்கு ட்ரங் கால் புக் செய்து கொடுத்ததும் இல்லாமல்.. அவளுடன் ரயில்நிலையம் வரை சென்று.. யாரோ மருதப்பனின் மகன் மயில்சாமிக்கு வந்த மணியார்டர் பணத்தில் டிக்கெட்டும் எடுத்து.. அவளை பத்திரமாக ரயில் ஏற்றி அனுப்பி வைத்தார்..!! 'அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவ'னின் பெயர்.. அசோகன்..!! தன் காதலுக்கு உதவி செய்த போஸ்ட்மேனின் பெயரையே தன் தலைச்சன் பிள்ளைக்கு வைத்துவிட்டாள் பாரதி. வீட்டில் இருக்கும் அனைவரிடமும் எகத்தாளமாகவும், எரிச்சலாகவும் பேசுகிற அசோக், ஒரு வெகுளித்தனமான குழந்தையாக மாறிப்போய் விடுவான் என்றால், அது அவனுடைய அம்மா பாரதியிடம்தான்..!! அம்மா மீது அவனுக்கு அளவிலா அன்பு.. அவளுக்கும் மகன் மீது..!! சற்றுமுன் அசோக்கின் நண்பர்கள் பயந்த அளவுக்கோ, மணிபாரதி கேலி செய்த அளவுக்கோ.. பாரதி ஒன்றும் சமையல் கொடுமைக்காரி இல்லை.. நன்றாகவே சமைப்பாள்..!! ஆனால்.. அவள் செய்யும் தவறு.. புதுப்புது உணவுப்பண்டங்களை உருவாக்கிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான்..!! சமையல்கலையில் அவ்வளவு ஆர்வம்..!! ஆனால்.. அவளுடைய ஆர்வத்துக்கு தங்களை 'ஆராய்ச்சி எலி' மாதிரி உபயோகிக்கிறாளே என்றுதான்.. அனைவரும் பாரதியைப் பார்த்து தெறித்து ஓடுவதும், சன்னமான குரலில் கேலி செய்வதும்..!! ஆனால்.. அசோக் என்றுமே அம்மாவை குறை சொன்னது இல்லை.. அம்மா தயாரிக்கிற புதுவகை உணவு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், முகம் சுளிக்காமல் முழுவதும் சாப்பிட்டு முடிப்பான்..!!ம்ம்ம்... அசோக் வீட்டில் இருக்கும் எல்லோரையும் பற்றி பார்த்தாயிற்று அல்லவா.. யாராவது விட்டுப்போய் விட்டார்களா..?? ம்ம்ம்ம்... ஆமாம்... இவர்கள் இல்லாமல் அந்த வீட்டில் இரண்டு ஐந்தறிவு ஜீவன்களும் இருக்கின்றன.. நாராயணசாமி-கோமளவல்லி ஆளுக்கொன்றாய் வளர்க்கும் நாய்க்குட்டிகள்.. அதில் ஒன்று ஆண் நாய்.. ஒன்று பெண் நாய்.. அந்த இரு நாய்களும் கூட.. அவ்வப்போது ஒருவர் முகத்தை அடுத்தவர் முகர்ந்து முகர்ந்து பார்த்து.. ரொமான்ஸ் செய்து கொண்டிருக்குங்கள்..!! இந்தமாதிரி.. கலையும், காதலும் அசோக்கின் வீட்டில் எங்கும் நிறைந்திருந்தது..!! கலை என்பது அசோக்கிற்கு ஓரளவு கைவரப் பெற்றிருந்தாலும், காதல் என்பது தன் கருணைப்பார்வையை அவன் மீது வீசவே இல்லை..!! அந்த ஏக்கத்தையும் நெஞ்சில் வைத்துக்கொண்டு, அடுத்தவர் காதலில் குறைகண்டுபிடித்து மனதை தேற்றியும் கொள்கிற அசோக், ஒரு பரிதாபகரமான ஜீவன்தான்..!! மூளைக்குள் இன்னும் சற்று போதை மிச்சமிருக்கும் நிலையுடன், அம்மா தட்டில் கொண்டு வந்துகொடுத்த அல்வாவை ஸ்பூனால் விண்டு விண்டு அசோக் விழுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கருகே அமர்ந்திருந்த பாரதி, தன் கையால் செய்த இனிப்பை மகன் ஆசையாக உண்ணும் அழகை, கண்களாலேயே அள்ளி பருகிக் கொண்டிருந்தாள். "இதுக்கு பேர் என்ன மம்மி.. தப்ஸி அல்வாவா..??" அசோக் கேட்க, "தப்ஸி இல்லடா தடிமாடு.. ஹப்ஷி..!!!!" பாரதிக்கு முந்திக்கொண்டு சங்கீதா அவனுக்கு பதில் சொன்னாள். "ஹப்ஷி அல்வாவா..??" அசோக் இப்போது முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு கேட்டான். "ஆமாண்டா கண்ணா.. பாகிஸ்தான்ல ரொம்ப பாப்புலர்..!!" பாரதி பெருமையாக சொன்னாள். "ஓஹோ..!!" இப்போது மணிபாரதி, அவ்வளவு நேரமாக புரட்டிக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணாடியை கழற்றி கையில் எடுத்தவாறே, திடீர் ஞாபகம் வந்தவராய் அசோக்கிடம் கேட்டார். "ஏண்டா.. இன்னைக்கு ஏதோ ஒரு ப்ரொட்யூசரை பாக்கப் போறேன்னு சொன்ன.. என்னாச்சு..??" "ஹாஹா.. அது தெரியாதா உங்களுக்கு.. இவன் செம சொதப்பு சொதப்பிட்டான் டாடி..!!" சங்கீதா மீண்டும் தான் ஒரு முந்திரிக்கொட்டை என்பதை நிரூபித்தாள். "ப்ச்.. சொதப்பலாம் ஒன்னும் இல்ல..!!" அசோக் தங்கையை ஏறிட்டு முறைப்பாக சொன்னான். "பொய் சொல்லாத.. அல்ரெடி எனக்கு ந்யூஸ் வந்துடுச்சு..!!" "இங்க பாரு.. நடந்தது என்னன்னு தெரியாம பேசாத..!!" அசோக் சங்கீதாவிடம் எகிற, "ஏய்.. அவளை விடுடா...!! நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..!!" மணிபாரதி இடையில் புகுந்து கேட்டார். "என்ன சொல்ல..??" அசோக் எரிச்சலாக திரும்ப கேட்டான். "ஏன் சொதப்புனேன்னு சொல்லு..!!" ஒரு குழப்பத்தில் அவர் அந்த மாதிரி கேட்கவும், அசோக் உச்சபட்ச டென்ஷன் ஆனான். "ஐயோ.. அதான் நான் ஒன்னும் சொதப்பலைன்னு சொல்றேன்ல..??" என்று கத்தினான். "சரிடா சரிடா..!! என்ன ஆச்சுன்னு சொல்லு..!!" "அந்த ஆளு லவ் ஸ்டோரிதான் ப்ரொட்யூஸ் பண்ணுவாராம்.. நான் சொன்ன த்ரில்லர் ஸ்டோரி அவருக்கு பிடிக்கல..!! ஏதாவது லவ் ஸ்டோரி வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு.. நான் இல்லைன்னு சொல்லிட்டு கெளம்பி வந்துட்டேன்.. அவ்வளவுதான்..!!" அசோக் சொன்னதும் சில வினாடிகள் நெற்றியை தேய்த்தவாறு யோசித்துக்கொண்டிருந்த மணிபாரதி, அப்புறம் "ம்ம்..!! ஏண்டா அசோக்.. நீ ஏன் ஒன்னு பண்ணக் கூடாது..??" என்று மகனிடம் கேட்டார். "என்ன..??" "நான்தான் எக்கச்சக்கமான லவ் ஸ்டோரி எழுதிருக்கேனே.. நீ ஏன் அந்த ஸ்டோரிலாம் சொல்லி சான்ஸ் தேடக்கூடாது.. நீ ஏன் அதுல ஏதாவது ஒன்னை படமா எடுக்க கூடாது..??" மணிபாரதி கேட்டுவிட்டு பெருமிதமாக சிரிக்க, அசோக் அவரையே கடுப்புடன் முறைத்தான். "ஸாரி டாடி..!! தமிழ் ரசிகர்களுக்கு அப்படி ஒரு தாங்க முடியாத துயரத்தை குடுக்குறதுக்கு நான் தயாரா இல்ல..!!" அசோக் கிண்டலாக சொன்னதை கேட்டு பாரதி சிரிக்க, மணிபாரதி டென்ஷன் ஆனார். "ஏண்டா.. நான் எழுதுன ஸ்டோரிலாம் உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா..??""அப்படி இல்ல டாடி.. உங்க ஸ்டோரின்னு இல்ல.. எந்த லவ் ஸ்டோரியும் எனக்கு பிடிக்கல.. ஒரே வெறுப்பா இருக்கு..!!" "ஓஹோ.. அந்த வெறுப்புலதான் அந்த ப்ரொட்யூசர்கூட சண்டை போட்டுட்டு வந்தியா..??" சங்கீதா மீண்டும் கிண்டலாக ஆரம்பித்தாள். "என்னது..?? சண்டை போட்டானா..??" பாரதியும், மணிபாரதியும் இப்போது ஒன்றாக அதிர்ந்தார்கள். "அந்த கதை தெரியாதா உங்களுக்கு.. கிஷோர் எனக்கு எல்லாம் சொல்லிட்டான்..!! இருங்க.. இவன் என்ன பண்ணான்னு சொல்றேன்..!!" சங்கீதா ஆர்வமாக, "ஏய்.. உன் வாயை வச்சுட்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா..?? சும்மா நொனநொனன்னு..!!" அசோக் தங்கையிடம் சலிப்பாக சொன்னான். "ஏன்.. சொன்னா சொன்ன..?? நான் சொல்லுவேன்..!!" "ப்ச்.. சொல்றேன்ல.. கம்னு இரு..!!" "முடியாது போடா..!!" திமிராக சொன்ன சங்கீதா கிஷோர் தன்னிடம் சொன்ன விஷயத்தை அப்பாவிடம் சொல்ல ஆரம்பித்தாள். அசோக் தங்கையை முறைத்து பார்த்தான். அவனுக்கு.. சங்கீதாவிடம் உளறியிருக்கிறான் என்று கிஷோர் மீதும் கடுப்பு.. இவள் வாயை அடைக்க முடியவில்லையே என்று சங்கீதா மீதும் எரிச்சல்..!! அசோக் இரண்டுக்கும் சேர்த்து ஒரே தீர்வாய் யோசித்தான்..!! "கேளுங்க டாடி.. அந்த ப்ரொட்யூசர்க்கு இவன் சொன்ன கதை புடிக்கலையாம்.. அவரும் டைரெக்டா எனக்கு புடிக்கலைப்பான்னு சொல்லிருக்காரு.. இவனுக்கு செம கடுப்பு..!! அந்த கடுப்புல என்ன பண்ணிருக்கான் தெரியுமா.. அந்த ப்ரொட்யூசரோட பொண்ணை.." சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக் இடையில் புகுந்து, "இங்க பாரு சங்கு.. மொதல்ல நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!" என்றான். "என்ன..??" "நீ கிஷோர் கட்டிக்கப் போற பொண்ணு.. அவன் சொல்றதைலாம் நீ மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் என்னைப் பத்தின சில விஷயங்களை உன்கிட்ட சொல்லிருக்கலாம்..!! அதெல்லாம் நீ இப்படி வெளில சொல்றது ரொம்ப தப்பு..!!" "ஏன்.. இதுல என்ன தப்பு இருக்கு..??" "புரியலையா உனக்கு..?? சரி.. புரியிற மாதிரியே சொல்றேன்..!! இப்போ.. கிஷோர் எனக்கும் ஃப்ரண்டுதான்.. அவன் சொல்றதைலாம் நான் மத்தவங்கட்ட சொல்ல மாட்டேன்ற ஒரு நம்பிக்கைல.. அவன் உன்னைப் பத்தின சில விஷயங்களை என்கிட்ட சொல்லிருக்கான்..!! அதெல்லாம் என்னைக்காவது நான் உன்கிட்ட வந்து சொல்லிருக்கனா.. ம்ம்..?? வாயை மூடிட்டு கம்முனு இருக்குல.??" என்று அசோக் அழகாக சங்கீதாவின் மூளைக்குள் ஆணி செருகினான். "எ..என்னைப் பத்தியா..?? என்னைப் பத்தி என்ன சொன்னான்..?? - ஆணி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. "அதெல்லாம் எதுக்கு சங்கு..?? சொன்னா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..!!" "ப..பரவால.. சொல்லு..!!" "கண்டிப்பா தெரிஞ்சுக்கிட்டே ஆகணுமா..??" "ஆமாம்..!! சொல்லு..!!" "ப்ச்.. என்னத்த சொல்றது சங்கு..!! உன்னைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே.. அப்படியே பொலம்புறான்..!! 'உன் தங்கச்சிக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடா'ன்னு.. அப்படியே ரத்தக் கண்ணீர் வடிக்கிறான்..!!" "ஏ..ஏன்..??" கேட்ட சங்கீதாவுக்கு அல்ரெடி முகம் சுருங்கிப் போயிருந்தது. "பாடுறேன்ற பேர்ல.. தெனம்தெனம் அவனை நீ அணுஅணுவா சித்திரவதை பண்றியாம்.. 'தாங்க முடியலைடா சாமி'ன்றான்..!! நரி மாதிரி ஊளையிடுறியாம்.. அதை லவ்லி வாய்ஸ்னு வேற சொல்ல சொல்லி.. அவனை கம்பெல் பண்றியாம்..!! இதுல இப்போ புதுசா.. சினிமால ப்ளேபேக் பாடுறதுக்கு வேற அவனை சான்ஸ் தேட சொல்லி இம்சை பண்றியாம்..!! 'இவ வாய்ஸை கேட்டா.. அந்த ம்யூசிக் டைரெக்டர் என் மூஞ்சில காறித் துப்பமாட்டானா'ன்னு கதர்றான்..!!" "இ..இல்ல.. நீ பொய் சொல்ற.. கிஷோர் அப்படிலாம் சொல்லிருக்க மாட்டான்..!!" சங்கீதா சொன்னவிதத்திலேயே கிஷோர் மீது அவளுக்கிருந்த நம்பிக்கையில்லாத்தன்மை தெரிந்தது. "நான் ஏன் பொய் சொல்லப் போறேன் சங்கு..?? இந்த 'லவ்லி வாய்ஸ்.. சினிமா சான்ஸ்..' இதுலாம்.. அவன் சொல்லாம எனக்கு எப்படி தெரியும்.. நீயே சொல்லு..!! எனக்கு கிஷோரை பாத்தா ரொம்ப பாவமா இருக்கு சங்கு.. அதான் உன்கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு இருக்கேன்..!! எனக்கு ஏதாவது பிரச்னைன்னா.. கிஷோர்தான் என் கஷ்டத்தை காது குடுத்து கேட்பான்..!! நீ இப்படி பாடி பாடி.. அந்த காது ஜவ்வை கிழிச்சு வச்சுடாத சங்கு.. ப்ளீஸ்.. உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!!" அசோக் கெஞ்சலான குரலில் சொல்லி முடித்தான். சங்கீதாவோ பேயிடம் அறை வாங்கியவள் மாதிரி, விழிகளை விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முனைபவள் பாதிரி, உதடுகளை அழுந்த கடித்துக் கொண்டாள். ஆனால் ஒருசில வினாடிகள் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. 'டாடீஈஈ..!!' என்று குழந்தை மாதிரி கத்திக்கொண்டே, மணிபாரதியை கட்டிக்கொண்டாள். அவருடைய மார்பில் முகம் புதைத்து, அவளது முதுகு குலுங்க குலுங்க அழ ஆரம்பித்தாள். அவர் பதறிப்போனார். "ஐயையோ.. என்னம்மா நீ..?? இந்தப்பய சும்மா சொல்றான்மா.. மாப்ள அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாரு..!!" என்று மகளை சமாதானம் செய்ய முயன்றார். "ஏய்.. ஏண்டா அவளை அழ வைக்கிற..??" பாரதி இப்போது மகனை செல்லமாக கடிந்து கொள்ள, "இல்ல மம்மி.. அவன் சொன்னதைத்தான் நான் சொன்னேன்..!!" அசோக் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, தனது திட்டம் பலித்துவிட்ட திருப்தியில் அல்வாவை விண்டு வாயில் போட்டுக்கொள்ள ஆரம்பித்தான். அழுகிற மகளை தேற்ற மணிபாரதி படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார். பாரதி அவர்கள் இருவரையும் அமைதியும், அவஸ்தையுமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அழுது கொண்டிருந்த சங்கீதா திடீரென எழுந்தாள். "இருங்க டாடி.. நான் இப்போவே அவனுக்கு ஃபோன் பண்ணி கேக்குறேன்..!!" "ஐயோ.. சொல்றதை கேளும்மா..!! இவன் சொன்னதை நம்பி.. இந்த நேரத்துல மாப்ள கூட சண்டை போடப் போறியா..??" "சண்டை போடல டாடி.. அப்டி சொன்னியா இல்லையான்னு மட்டும் கேக்குறேன்..!!" "அதெல்லாம் வேணாம்மா.. எதா இருந்தாலும் நிதானமா காலைல பேசிக்கோ..!!" "ப்ளீஸ் டாடி.. எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்..!!" சங்கீதாவின் பிடிவாதத்தில், இப்போது மணிபாரதி டென்ஷன் ஆகிப் போனார். "அப்பப்பப்பா...!! சொன்னா கேட்க மாட்டியா நீ..?? அதான் காலைல பேசிக்கலாம்னு சொல்றேன்ல..??" அப்பா அந்த மாதிரி குரலை உயர்த்தி கத்தவும், சங்கீதா இப்போது பட்டென அமைதியாகிப் போனாள். ஆனால் மணிபாரதிக்குத்தான் ஏறிய டென்ஷன் இறங்க சிறிது நேரம் பிடித்தது. அந்த டென்ஷனுடனே மனைவியிடம் திரும்பி சொன்னார். "இதுக ரெண்டையும் ஒண்ணா வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு எந்த நேரமும் ஒரே டென்ஷனா இருக்குடி..!! எப்ப பாரு.. ஏதாவது சண்டை.. பிரச்சனை..!! யாராவது ஒருத்தருக்கு மொதல்ல கல்யாணத்தை முடிச்சாத்தான்.. நாம நிம்மதியா இருக்க முடியும் போல இருக்கு..!! பேசாம.. சங்கீதா கல்யாணத்தை உடனே முடிச்சுட்டா என்ன..??" "என்னங்க.. வெளையாடுறீங்களா..?? எத்தனை தடவை சொல்றது.. அசோக்குக்கு முடிச்சுட்டுத்தான் அவளுக்கு முடிக்கணும்னு..!!" பாரதியின் குரலிலும் ஒருவித தீவிரம் தெரிந்தது. "ப்ச்..!! அப்புறம் அவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாமான்னா.. அதுக்கும் வேணான்னு சொல்ற..??" "இங்க பாருங்க..!! நம்ம வீட்டுல எல்லாருக்கும் லவ் மேரேஜ்தான்.. அதேமாதிரி அசோக்குக்கும் லவ் மேரேஜ்தான்னு நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன்.. நாம ஒன்னும் அவனுக்கு பொண்ணு பாக்க தேவை இல்ல.. எல்லாம் அவனே பாத்துப்பான்..!!" "ம்க்கும்.. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல..!!" "ஏன் அப்படி சொல்றீங்க..??" "இவன் ஃபேஸ்புக் அக்கவுன்ட் பாத்திருக்கியா நீ..??" "இ..இல்ல.. ஏன்..??" "இருநூத்தி சொச்சம் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க இவனுக்கு... அத்தனை பேரும் ஆம்பளை தடிப்பசங்க..!! இவன் செல்போனை எடுத்துப்பாரு.. அதுல மருந்துக்குகூட ஒரு பொண்ணு காண்டாக்ட் நம்பர் இருக்காது..!! நாம லவ் மேரேஜ்னு முடிவு பண்ணி என்ன பிரயோஜனம் பாரதி.. இவன் கொஞ்சமாவது முயற்சி எடுத்துக்க வேணாமா..?? இவன்தான் லவ்னாலே இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கானே..??" "நீங்க ஏன் அப்படி நெனைக்கிறீங்க..?? அவன் மனசுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை இதுவரை அவன் பாக்கலைன்னு நெனச்சுக்காங்க..!! இப்போ என்ன வயசாச்சு அவனுக்கு.. இருபத்தஞ்சு வயசுதான ஆகுது..?? இன்னைக்கோ நாளைக்கோ.. அவனுக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ணை பாக்கப் போறான்.. அவ கூட பேசிப்பழக போறான்.. லவ் பண்ண போறான்.. பதிலுக்கு அந்தப்பொண்ணையும் இவனை லவ் பண்ண வைக்கப் போறான்..!!" பாரதி நம்பிக்கையாய் சொல்லிக்கொண்டிருக்க, "கிழிச்சான்...!!!!" அண்ணன் மீது ஆத்திரத்தில் இருந்த சங்கீதா இடையில் புகுந்து கத்தினாள். "இவனலாம் எவ லவ் பண்ணுவா..?? இவன் மூஞ்சியும் மொகறைக்கட்டையும்..!! இவனை எவளாவது லவ் பண்ணுவான்னு வெயிட் பண்ணிட்டு இருந்தா.. நான் கெழவி ஆகுற வரை கல்யாணம் பண்ணிக்காம வெயிட் பண்ண வேண்டியதுதான்..!! இவனுக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. அதுவும், அப்பா அம்மாவுக்கு பயந்துக்கிட்டு மாடு மாதிரி மண்டையை மண்டையை ஆட்டுற எவளாவது மாட்டுனாத்தான் உண்டு..!!"சங்கீதா ஆத்திரத்தில் அறிவில்லாமல் படபடவென பொரிந்து தள்ள, பெற்றோர்கள் இருவரும் ஸ்தம்பித்துப் போய் அவளை பார்த்தார்கள். தங்கையின் வார்த்தைகள் அசோக்கின் மனதை குத்திக் கிழிக்க.. அமைதியாக.. எதுவும் பதில் பேச தோன்றாதவனாய்.. ஒருவித வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்..!! அல்வாவை ஸ்பூனால் விண்டு எடுத்தவன், பிறகு அதை உதட்டுக்கு எடுத்துச் செல்ல வலுவில்லாது போன மாதிரி மீண்டும் தட்டிலேயே போட்டான். மகனின் மனக்காயத்தை பட்டென புரிந்து கொண்ட பாரதி, அவனுடைய முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். "எனக்கு போதும் மம்மி..!! தூக்கம் வருது.. நான் போய் படுக்குறேன்..!!" அசோக் அமைதியாக சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே சென்றான். சங்கீதாவுக்கு உண்மையிலேயே அவள் செய்த தவறு புரியவில்லை. அசோக் தனது குரலை கேலி செய்வதும், தான் அவனது விளம்பரத்தை கேலி செய்வதும் மாதிரியேதான் இதையும் நினைத்தாள். தான் வீசிய வார்த்தைகள் எந்த அளவிற்கு அண்ணனின் மனதை புண்படுத்தியிருக்கும் என்று புரிந்து கொண்டாள் இல்லை. அதனால்தான் அவன் அவ்வாறு எழுந்து சென்றபோது, "என்ன ஆச்சு இவனுக்கு திடீர்னு..??" என்று அம்மாவிடம் குழப்பமாக கேட்டாள். பாரதியோ பதிலுக்கு சீறினாள். "பேசுறதெல்லாம் பேசிட்டு என்னாச்சுன்னா கேக்குற..?? இன்னைக்கு அவன் பொறந்த நாளுடி.. இன்னைக்குப் போய் இப்படிலாம் பேசி.. அவனை..!! வாய்.. வாய்.. அப்படி வாய் உனக்கு..!! அந்த கொழுப்பெடுத்த வாயை அப்படியே கோணூசி வச்சு தைக்கணும்..!!" படபடவென சொல்லிவிட்டு, அல்வா தட்டை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு நகருகிற அம்மாவையே, சங்கீதா எரிச்சலாக பார்த்தாள். பிறகு அப்பாவிடம் திரும்பி முறையிட்டாள். "பாருங்க டாடி மம்மியை..!! அவன் ஏதோ லூசுத்தனமா பண்ணதுக்கு.. என்னைப் புடிச்சு திட்..!!' சங்கீதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, "இல்லம்மா சங்கீதா.. நீ பேசுனது ரொம்ப தப்பு..!! அண்ணன்ட்ட அப்படிலாம் இனிமே பேசாத..!!" மணிபாரதி அமைதியாக சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பாவும் அந்த மாதிரி சொன்னதும்தான், 'நிஜமாகவே நான் செய்தது தவறுதானோ..?' என்ற சந்தேகமே சங்கீதாவுக்குள் எழுந்தது..!! தனது அறைக்குள் நுழைந்த அசோக், விளக்கை கூட அணைக்காமல், வேறு உடை அணிந்து கொள்ளவும் தோன்றாமல், அப்படியே படுக்கையில் விழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். சங்கீதா சிந்திய வார்த்தைகள் இன்னும் அவன் இதயத்தில் ஊசி போல பாய்ந்து, சுருக் சுருக்கென குத்திக் கொண்டிருந்தன. மூச்சை சீராக உள்ளிழுத்தும் வெளியிட்டும்.. துடிக்கிற நெஞ்சை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்..!! "பொண்ணுககிட்ட எப்படி பேசனும்னே தெரியாதா உனக்கு..??" அசோக் ப்ளஸ் டூ படிக்கையில், அவனுடன் படித்த இரட்டை ஜடை போட்டிருக்கும் ஒரு பெண், இவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தபடி வீசிவிட்டு சென்ற வார்த்தைகள், ஏனோ இப்போது அவன் காதுக்குள் ஒலித்தன. அந்தப் பெண்ணின் பெயர் கூட இப்போது அசோக்கிற்கு நினைவில்லை. ஆனால் அவள் உதிர்த்து சென்ற வார்த்தைகள் இன்னும் அவன் உள்ளத்துக்குள் உயிரோடிருக்கின்றன.சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாக சலனமில்லாமல் கிடந்திருப்பான். பிறகு அவனது தலைமுடியை யாரோ வருடுவது போலிருக்க, இமைகளை திறந்து பார்த்தான். அவனுக்கு அருகே பாரதி அமர்ந்திருந்தாள். காயப்பட்டு கிடக்கிற மகனையே பரிவுடன் பார்த்தபடி இருந்தாள்."எ..என்ன மம்மி..??" "அவ ஏதோ வெளையாட்டுத்தனமா பேசிட்டா அசோக்.. அதெல்லாம் மனசுல வச்சுக்காத..!!" "இ..இல்ல மம்மி.. அப்படிலாம் ஒன்னும் இல்ல.. எனக்கு எதும் வருத்தம்லாம் இல்ல..!!" அசோக் புன்னகையுடன் பொய் சொன்னான். "ம்ம்.. உனக்கு எதும் வருத்தம் இல்லன்னா சரிதான்..!!" "அவ சொல்றதும் சரிதான் மம்மி.. எனக்குலாம் அரேஞ்ட் மேரேஜ்தான் சரி.. என்னல்லாம் எவ லவ் பண்ணுவா..??" அசோக் அந்தமாதிரி சுய இரக்கத்துடன் சொல்ல, பாரதிக்கு பொசுக்கென்று கோவம் வந்தது. "இப்படிலாம் அறிவில்லாம பேசினா.. அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் அசோக்..!! பேசுற பேச்சைப் பாரு..!! உனக்கு என்னடா கொறைச்சலு..?? உனக்கு லவ் பண்ண தகுதி இல்லன்னா.. உலகத்துல யாருக்குமே அந்த தகுதி இல்லன்னு அர்த்தம்..!!" அம்மா அந்தமாதிரி கோவப்பட்டது அசோக்கிற்கு மிகவும் இதமாக இருந்தது. அந்த கோவத்திற்குள் புதைந்திருந்த அவளது அதீத அன்பை அவன் உணர்ந்துகொண்டதுதான் அதன் காரணம். மெல்ல உதடுகள் பிரித்து கொஞ்சமாய் சிரித்தான். பிறகு சற்றே புரண்டு, அம்மாவின் இடுப்பை சுற்றி இரண்டு கைகளையும் போட்டு அவளை அணைத்துக்கொண்டு, அவள் மடிமீது தலைசாய்த்து படுத்துக் கொண்டான். பாரதி மென்மையாக அவன் தலைமுடியை கோதிவிட, அசோக் மெலிதான குரலில் சொன்னான். "எனக்கு இந்த லவ்லாம் வேணாம் மம்மி..!! நீயே ஏதாவது ஒரு பொண்ணு பாரு.. உனக்கு புடிச்சிருந்தா போதும்.. நான் கட்டிக்கிறேன்..!!" "ப்ச்.. ஏன்டா இப்படிலாம் பேசுற..?? நீ லவ் மேரேஜ்தான் பண்ணிக்கனும்னு, நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்குறேன்னு கூடவா உனக்கு புரியலை..?? காதல்ன்றது ஒரு அற்புதமான உணர்வு அசோக்.. அது ஒரு அழகான அனுபவம்..!! நம்ம குடும்பத்துல எல்லாரும் அதை அனுபவிச்சிருக்கோம்.. என் பையனுக்கும் அந்த அனுபவம் கெடைக்கணும்னு அம்மா ஆசைப்படுறேண்டா..!! அது தப்பா..??" "ஹ்ம்ம்.. உன் ஆசைல ஒன்னும் தப்பு இல்ல..!! இப்போ என்ன.. உனக்கு உன் பையன் லவ் பண்ணனும்.. அவ்வளவுதான..?? சரி.. மேரேஜ் பண்ணிக்கிட்டு என் பொண்டாட்டியை லவ் பண்ணிக்கிறேன்.. போதுமா..??" "ஹையோ.. மேரேஜ்க்கு அப்புறம் வர்ற லவ் வேற.. நான் சொல்ற லவ் வேற..!! மேரேஜ்க்கு அப்புறம் வர்றது, வேற வழி இல்லாம வர்றது.. கட்டி வச்சுட்டாங்களேன்னு கட்டாயத்தினால வர்றது.. அது எல்லாருக்குமே கெடைக்கும்..!! ஆனா நான் சொல்ற லவ் அப்படி இல்ல.. புரியுதா உனக்கு..??" "ம்ம்.. புரியுது..!! ஆனா.. சும்மா சும்மா 'லவ் பண்ணு லவ் பண்ணு'ன்னு சொன்னா.. நான் யாரைப் போய் லவ் பண்றது..?? எனக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி யாராவது கெடைக்க வேணாமா..??" "நீ யார்ட்டயாவது பேசினாத்தான மனசுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியும்..?? நீதான் எந்த பொண்ணுட்டயும் பேசகூட மாட்டேன்றியே..??" "எனக்கு எவ கூடவும் பேசணும்னு தோணல மம்மி.. அது என் தப்பா..??" "பொய் சொல்லாத..!! அப்படிலாம் இருக்க வாய்ப்பே இல்ல.. ஸ்கூல்ல, காலேஜ்ல, இப்போ வொர்க் பண்ற இடத்துலனு.. இதுவரை ஒரு பொண்ணு கூடவா உன்னை அட்ராக்ட் பண்ணல..?? உண்மையை சொல்லு..!! எவளாவது ஒருத்தியாவது இருப்பா..!! 'அழகா இருக்காளே..'ன்னு தோணிருக்கலாம்.. 'நல்ல பொண்ணு மாதிரி தெரியுதே..'ன்னு நெனச்சிருக்கலாம்.. 'இவ கூட பேசிப் பழகினா எப்படி இருக்கும்'னு ஆசை வந்திருக்கலாம்..!! சொல்லு.. இதுவரை அப்படி எந்த பொண்ணையுமே நீ மீட் பண்ணது இல்லையா..??"பாரதி அந்தமாதிரி கேட்கவும், பளிச்சென்று அசோக்கின் மனதுக்குள் தோன்றியது, சற்று முன் ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண் தான்..!! அம்மா சொன்ன மூன்று விஷயங்களுமே, அந்தப்பெண்ணைப் பார்த்தபோது தனக்குள் தோன்றியதை எண்ணி, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..!! உடனே அவன் உள்ளத்துக்குள் ஒரு புதுவித மாற்றம்..!! சங்கீதாவின் பேச்சால் மனதில் ஏற்பட்டிருந்த ரணம் உடனடியாய் ஆறிப்போய், இப்போது ஜிலுஜிலுவென ஏதோ தென்றல் வீசுவது மாதிரி சிலிர்ப்பாக இருந்தது..!! அவனியும் அறியாமல் அவன் உதடுகளில் ஒரு புன்னகை குடியேறியது..!! முகத்தை நிமிர்த்தி.. அம்மாவை ஏறிட்டு.. குரலில் ஒருவித குறுகுறுப்புடனே கேட்டான்..!! "ஒருவேளை.. அப்படி யாராவது என்னை அட்ராக்ட் பண்ணினா.. நான் என்ன செய்யட்டும் மம்மி..??" "ஹாஹா.. இது என்ன கேள்வி..?? போய் அந்த பொண்ணுட்ட பேசு..!!" "ஆனா.. எனக்குத்தான் பொண்ணுங்கட்ட எப்படி பேசனும்னே தெரியாதே..??" "எப்படி பேசணும்னா..?? எனக்கு புரியல..!!" "எப்படின்னா.. ம்ம்ம்ம்... பொண்ணுங்களுக்கு எப்படி பேசினா புடிக்கும், எப்படி பேசினா புடிக்காது.. எதுக்கு சிரிப்பாங்க, எதுக்கு கோவப்படுவாங்க, எதுக்கு வெட்கப்படுவாங்க... எப்படி பேசினா 'ச்சோ.. ச்வீட்..'னு கொஞ்சுவாங்க.. இதுலாம் எதுவுமே எனக்கு தெரியாதே..?? அப்புறம் எப்படி அந்தப் பொண்ணுக்கு என் மேல லவ் வர வைக்கிறது..??" "ஹாஹாஹாஹா..!! பொண்ணுங்களுக்கு லவ் வர வைக்கிறதுக்கு.. நீ சொல்ற மாதிரிலாம் இனிக்க இனிக்க பேசணும்னு அவசியமே இல்லடா கண்ணா..!!" "அப்புறம்..??" "நீ ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரிய வை.. உன்னை கட்டிக்கிட்டா நீ அவளை பத்திரமா பாத்துப்பேன்ற நம்பிக்கையை அவளுக்கு கொடு..!! இந்த ரெண்டு விஷயம் மட்டும் போதும்..!! எந்த மகாராணி மங்கம்மாவா இருந்தாலும்.. மயங்கித்தான் ஆகணும்..!!" "நெஜமாவா..?? இது ரெண்டும் போதுமா..??" அசோக் இன்னும் நம்பிக்கை இல்லாமல் கேட்க, "போதுண்டா..!! மம்மி சொல்றேன்ல.. நம்பு..!!" பாரதி உறுதியாக சொன்னாள். "இவ்வளவுதானா மம்மி..?? லவ்ன்றது இவ்வளவு சிம்பிளா..?? நான் ரொம்ப காம்ப்ளிகேட்டட்னு நெனச்சேன்..!!" "ஹாஹா.. காம்ப்ளிகேட்டடான ப்ராப்ளத்துக்கு.. சொல்யூஷன் எப்போவுமே ரொம்ப சிம்பிள்தாண்டா மகனே..!!" சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, "ம்ம்ம்...!!" அசோக்கும் அம்மாவை பார்த்து புன்னகைத்தான். "அதுசரி..!! இவ்வளவு விஷயம் கேக்குறியே.. அந்தமாதிரி ஏதாவது பொண்ணை பாத்துட்டு இருக்கியா..??" பாரதி குறும்பாக கேட்கவும், அசோக் தடுமாறிப் போனான். "ஐயோ.. அதுலாம் யாரும் இல்ல மம்மி..!!" என்று வெட்கத்துடன் சொன்னவாறு, அவளுடைய மடியில் முகத்தை புதைத்துக் கொண்டான். அம்மாவின் வருகைக்கு பிறகு, நம்பிக்கையூட்டும் விதமாய் அவள் பேசியபிறகு, அசோக்கின் மனது இப்போது லேசாகிப் போயிருந்தது. ஃபுட் கோர்டில் பார்த்த அந்தப்பெண், திரும்ப திரும்ப அவன் மனதுக்குள் வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு இதமான உணர்வு உடலெங்கும் பரவ, அந்த உணர்வு எப்போதும் நீடித்திருக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவை ஏறிட்டான்.
"மம்மி..!!' "ம்ம்..??" "கொஞ்ச நேரம் இங்க இருக்குறியா..?? நான் தூங்குனப்புறம் போறியா..??" ஏக்கமாக கேட்ட மகனையே, பாரதி கனிவுடன் பார்த்தாள். "இருக்குறேண்டா கண்ணா.. படுத்துக்கோ.. தூங்கு..!!" அசோக் அம்மாவின் மடிமீது தலைவைத்து படுத்துக் கொண்டான். அசோக்குக்கு அவனுடைய குடும்ப சூழலில் இருந்தும்.. நட்பு வட்டாரத்தில் இருந்தும்.. தனது தொழிலான விளம்பர உலகத்தில் இருந்தும்.. தனது லட்சியமான திரைப்பட உலகத்தில் இருந்தும்.. காதல் என்ற வார்த்தை எப்போதுமே ஒருவித நெருக்கடியையே அவனுக்கு தரும்..!! ஆனால் இப்போது பாரதி அவனது தலையை இதமாய் வருடிக்கொடுக்க.. அந்த நெருக்கடி எல்லாம் மறந்துபோய்.. கவலையெல்லாம் தீர்ந்து போனது போன்ற உணர்வுடன்.. மனதெல்லாம் நிம்மதி நிறைய ஆரம்பிக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் நித்திரையில் மூழ்கிப் போனான்..!!