Monday 6 April 2015

சுகன்யா... 103

"சுகன்யா... செல்வா உங்கிட்ட நடந்துகிட்ட விதத்தை நான் சரின்னு சொல்லலே. அவன் என் பிள்ளைங்கறதுக்காக நியாயப்படுத்தவும் இல்லே. திரும்பவும் சொல்றேன். அவன் செய்தது தப்புதான்."

"...."

"சுகன்யா... அவன் யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு உன்னை அவன் சந்தேகப்பட்டதை, எங்களுக்காக, நீ முழுசா மறந்துடணும்ன்னுதான் நான் கேக்கறேன். சுகன்யா என்னை சுயநலக்காரன்னு மட்டும் நினைச்சுடாதே. உன்னை நான் எந்தக்காரணத்துக்காவும் இழக்க விரும்பலேம்மா. இதுதான் உண்மை.

"அங்கிள் நீங்க என் மேல வெச்சிருக்கற அன்புக்கு ரொம்ப தேங்க்ஸ்..."

"சுகன்யா... எனக்கு உன்னோட தேங்க்ஸ் வேண்டாம்மா... அவனை நீ இந்த ஒரு தரம் மன்னிக்கக்கூடாதா?"

"அங்கிள்... ப்ளீஸ்..." சுகன்யா விசும்ப ஆரம்பித்திருந்தாள்.



"அயாம் சாரி... கொழந்தை நீ தனியா இருக்கே... என்னவோ பேச நினைச்சு.... என்னவோ பேசி... உன்னை நான் அழவெச்சுட்டேன்... அயாம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி ஃபார் திஸ்..." நடராஜன் குரலில் சுயபரிதாபம் மிகுதியாக இருந்தது.

"இட்ஸ் ஆல் ரைட் அங்கிள்... நான் தப்பு பண்ணலேங்கறதை நீங்க புரிஞ்சிகிட்டு இருக்கீங்க பாருங்க... அதை உங்க வாயாலே என் கிட்ட இன்னைக்காவது சொன்னீங்க பாருங்க... அதுவே எனக்குப் போதும். உங்க வார்த்தைகளாலே, என் மனசு ரொம்பவே இலேசாயிட்ட மாதிரி நான் ஃபீல் பண்றேன். நான் தனியா இல்லேங்கற ஒரு உணர்வு எனக்கு இப்ப வந்திடிச்சி..."

"சுகன்யா... பீ ப்ரேவ்... ஐ நோ.. யூ... நீ தைரியமான பொண்ணு... நீ எங்கேயிருந்தாலும், நீயே தப்பு பண்ணணும்ன்னு நினைச்சாலும் உன்னாலத் தப்பு பண்ண முடியாதும்மா.. எதுக்கு நீ அழறே? நீ எதுக்கும் அழாதே.. உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்மா..."

"தேங்க் யூ அங்கிள்..." சுகன்யா தன் விழிகளை புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை உறிஞ்சினாள்.

"உனக்கு செல்வா மேல இருக்கிற கோபம் ஞாயமானதும்மா..." நடராஜன் தன் குரலை இழுத்தாற் போல் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

"அங்கிள் அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே..."

"அப்ப நீ ஏன் உன் ட்ரெயினிங் முடிஞ்சதும் சென்னைக்கு திரும்பி வரலே?"

"இதுக்கு மேல இதைப்பத்திமட்டும் தயவு செய்து நீங்க எதுவும் கேக்காதீங்க அங்கிள்...."

"சுகா... மீனாவை மட்டும் நான் என் மகளா நினைக்கலே. செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தன்னைக்கு, எங்க பசியறிஞ்சு, எங்களுக்காக வேகாத வெய்யில்லே ஓட்டமா ஓடி, உன்னோட ரெண்டு கை கொள்ளாத அளவுக்கு சாப்பிட விதவிதமா வாங்கிட்டு வந்தியே, அந்த நிமிஷத்திலிருந்தே உன்னை நான் என் மகளா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். அந்த உரிமையிலே சொல்றேம்மா... பிடிவாதத்தினாலே எந்த பயனும் இல்லேம்மா..."

"நிஜமாவே அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே... என்னை நம்புங்க அங்கிள்..."

"நான் உன்னை நம்பறேன்... உன் செல்வா ரொம்பவே ஒடைஞ்சு போயிருக்காம்மா..." நடராஜன் பொய் சொல்லவில்லை என்பது அவருடைய குரலிலிருந்து அவளுக்கு புரிந்தது.

"அங்கிள்... இதுக்கெல்லாம் காரணம் நான் இல்லே...." செல்வா உடைந்து போயிருக்கிறான் என நடராஜன் சொன்னதும் அவள் தன்னுள் ஏதோ இளகுவதாக உணர ஆரம்பித்தாள்.

"யெஸ்... இன் ஏ வே... யூ ஆர் கொயட் ரைட்... திரும்பவும் சொல்றேம்மா... அந்த முட்டாள் தன் தப்பை உணர்ந்துட்டான். இதை மட்டும் என்னால நிச்சயமா சொல்லமுடியும். உன்னைப் பாக்க, உங்கிட்ட பேச, உங்கிட்ட மன்னிப்பு கேக்க அவன் துடிச்சிக்கிட்டு இருக்கான்."

"ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ... அவன் சொல்லி நான் இன்னைக்கு உங்கிட்டே பேசலே... அவன் தரப்புல நான் உன் கிட்ட வாதடால. நான் உன்னிடம் பேச நினைச்சதே வேற ஒரு முக்கியமான் விஷயம்... "

"அவர் தன்னோட தப்பை ரியலைஸ் பண்ணிட்டாருன்னு எப்படி நீங்க அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க அங்கிள்?"

"உன்கிட்ட மீனா எப்ப பேசினாலும், அவ பேசி முடிச்சதுக்கு அப்புறம் உன்னைப்பத்திய எல்லா விஷயத்தையும் அவகிட்டருந்து நாங்க கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். அதை அவன் திருடன் மாதிரி ஒளிஞ்சு நின்னுக்கிட்டு ஒரு வரி விடாம கேட்டுக்கிட்டு இருப்பாம்மா...."

"ம்ம்ம்" சுகன்யாவின் உதடுகள் துடிக்க ஆரம்பித்தன.

"மீனாவை தனியா அழைச்சிக்கிட்டுப் போய், சுகன்யா எப்படியிருக்கா? சுகன்யா நல்லா இருக்காளா? சுகன்யா என்னைப்பத்தி ஏதாவது கேட்டாளா? சுகன்யாவோட கோபம் அப்படியேதான் இருக்கா... என் மேல அவளுக்கு இருக்கற கோவம் இன்னும் கொஞ்சம் கூட கொறையலயான்னு, நூறு தரம் உன்னைப்பத்தி அவகிட்ட செல்வா கேக்கிறானே... அதுக்கெல்லாம் என்னம்மா அர்த்தம்?"

"அங்கிள்..."

"சுகன்யா... ப்ளீஸ் செல்வாவுக்கு திரும்பவும் உன்கிட்ட அன்பு செலுத்த, நீ ஒரே ஒரு வாய்ப்பு குடுக்கணும்ம்மா..." நடராஜனின் குரல் கெஞ்சலாக வந்தது.

"அங்கிள் நீங்க என்னைத் தப்பா நினைக்கக்கூடாது..."

"சொல்லும்மா..."

"ஐ நீட் சம் டயம்... இப்பத்தான் என் மனசு கொஞ்சம் கொஞ்சமா நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பிக்கிட்டு இருக்கு."

"சுகன்யா... தேங்க் யூ ம்ம்மா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... நீ இவ்வளவு சொன்னதே எனக்குப் போதும்..." நடராஜன் குரலில் இப்போது மிகுந்த உற்சாகம் வந்திருந்தது. 

"அங்கிள்... என்னவோ பேச நினைச்சு என்னவோ பேசிட்டேன்னு சொன்னீங்க... ஏதோ முக்கியமான விஷய்ம்ன்னு சொன்னீங்க?" சுகன்யா மெல்ல பேச்சை செல்வாவிடமிருந்து திசை திருப்ப விரும்பினாள்.

"சுகன்யா... நீ உன் மனசுல என்ன இருக்குங்கறதை என் கிட்டவும் சரியா சொல்ல மாட்டேங்கறே? அதனாலத்தான் நான் சொல்ல வந்ததை எப்படி சொல்றதுன்னு தயங்கறேன்." நடராஜன் சிறிய பீடிகையுடன் பேசத்தொடங்கினார்.

"அங்கிள்... நீங்க என் விஷயத்தை மறந்துடுங்க. அது முடிஞ்சு போன விஷயம். இப்ப நீங்க பேச நினைக்கறததை சொல்லுங்க."

"எதும்ம்மா முடிஞ்சு போன விஷயம்?" நடராஜனின் குரல் சூடாக வருவதாக சுகன்யாவுக்கு பட்டது.

"எங்க நிச்சயார்த்தம்..."

"யார் சொன்னது?" இப்போது அவர் குரலில் சிறிதளவு சீற்றம் இருந்தது.

"உங்க மகன்தான் சொன்னாரு?" நடராஜனின் குரலில் இருந்த சீற்றத்தை உணர்ந்த சுகன்யாவின் குரலில் இலேசாக நடுக்கம் எழுந்தது.

"அவன் சொல்லிட்டா போதுமா?" நடராஜனின் குரல் இலேசாக உயர்ந்தது.

"அங்கிள்...?"

"நீயும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு இருக்கலாம். உங்களுக்குள்ள சண்டை போட்டுகிட்டு இருக்கலாம். ஆனா உன்னை எங்க வீட்டு மருமகளா நிச்சயம் பண்ணது யாரும்மா? நானும் உன் அத்தை மல்லிகாவும் நிச்சயம் பண்ண கல்யாணம் இது. இஸ் தட் ரைட்?"

"யெஸ்..."

"இந்தக் கல்யாணத்தை நிறுத்த உங்களுக்கு உரிமையில்லே... இந்த திருமணத்தை இப்படி பாதியில நிறுத்த எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லே..."

"மேரேஜை நீங்க உறுதி செய்திருக்கலாம்.. ஆனா வாழப்போறது நாங்கத்தானே அங்கிள்?" சுகன்யாவின் குரல் சுத்தமாக வலுவேயில்லாமல் தேய்ந்து போயிருந்தது.

"நீ சொல்றது உண்மைதான்.. நான் இல்லேங்கலே... அதே சமயத்துலே எங்களுக்கும் உங்க வாழ்க்கையில பங்கு இருக்கு.. நீங்க எடுக்கற முடிவுகள் உங்களை மட்டுமில்லே... உங்களை சுத்தி இருக்கற நிறைய நபர்களை பாதிக்குதும்மா... எங்க ரோலை நாங்க எப்படி விட்டுக்குடுத்துட முடியும்?"

"அங்கிள்..." சுகன்யா முனகினாள்.

"அனாவசியமா அடுத்தவங்க வாழ்க்கையில தலையிடறது தப்புன்னு எனக்கும் தெரியும்... உங்க பிரச்சனையை உங்களாலே ஹேண்டில் பண்ண முடியலேங்கறப்ப, அட்லீஸ்ட், நீயாவது அதை என் கிட்ட சொல்லியிருக்கலாம்லே?"

"எங்க நடுவுல இருந்த பிரச்சனையை நான் உங்ககிட்ட சொல்லி இருக்கலாம்... அப்படி சொல்லாதது என்னோட தப்புன்னு நான் ஒத்துக்கறேன்... அங்கிள் இதுக்காக நீங்க என்னை மன்னிக்கணும்..."

"தில்லியிலே என்னோட ட்ரெய்னிங் முடிஞ்சு நான் ஊருக்கு திரும்பி வந்ததுக்கு பின்னாடி, எங்க கல்யாணத்தை எப்ப வேணா நீங்க பிக்ஸ் பண்ணுங்க மாமான்னு மீனாவோட பொறந்த நாளைன்னைக்கு என் கிட்ட சொன்னியே? இது உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ஞாபகம் இருக்கு அங்கிள்.."

"உனக்கும் செல்வாவுக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சனை வந்திருக்கலாம்... அறிவு கெட்டத்தனமா அவன் எதையாவது உங்கிட்ட உளறியிருக்கலாம். இந்த விஷயத்துல இன்னைக்கு வரைக்கும் உன்னை நான் ஏதாவது தப்பா சொன்னேனா?"

"இல்லே அங்கிள்..."

"அப்படியிருக்கும் போது நீ ஏன் என்னை திரும்ப திரும்ப அங்கிள்ன்னு சொல்லி உன் கிட்டேயிருந்து என்னை அன்னியமாக்கறே?" தன் மனதில் இருந்த உறுத்தலை அவர் கடைசியில் அவளிடம் கொட்டிவிட்டார்.

"அயாம் சாரி அங்கிள்... சாரி... சாரி... மாமா... நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு நான் சுத்தமா நினைக்கவேயில்லை.... மனசுல எந்த உள்நோக்கமும் இல்லாமத்தான் நான் உங்களை அங்கிள்ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். அது தப்புன்னு நீங்க ஃபீல் பண்ணா... ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க மாமா.."

"நீயே இன்னும், என் வீட்டுக்கு வரலே. ஏன்... நீயே சொல்லிட்டு வந்த மாதிரி, ட்ரெய்னிங் முடிஞ்சு சென்னைக்கே இன்னும் திரும்பி வரலே. எப்ப என் வீட்டுக்கு வருவேன்னு கேட்டா எனக்கு டயம் வேணுங்கறே? இந்த நிலையிலே, இன்னொரு கல்யாணத்தைப்பத்தி எப்படிம்மா நான் உங்கிட்ட பேசறது?"

"எனக்கு புரியலே மாமா.. என்னச் சொல்றீங்க நீங்க? இன்னொரு கல்யாணமா?" சுகன்யா ஒரு வினாடி திடுக்கிட்டுப்போனாள்.

"மீனாவை தங்களோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும்ன்னு சீனுவோட அத்தையும், அவன் அம்மாவும், ரொம்பவே அவசரப்படறாங்கம்மா..."

"மாமா இது ரொம்பவும் சந்தோஷமான விஷயமாச்சே...!! இதைச் சொல்றதுக்கு எதுக்காக நீங்க இப்படி தயங்கறீங்க?" சுகன்யா நிதானமாக மூச்சு விட ஆரம்பித்தாள்.

"நீங்க ரெண்டு பேரும், ஒருத்தரோட ஒருத்தர், முகத்தை முறிச்சிக்கிட்டு நிக்கும் போது, நான் எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு என் பொண்ணு கல்யாணப் பத்திரிக்கையோட உங்க வீட்டுக்குள்ள நுழையறது?"



"மாமா... மீனா கல்யாணத்துகான வேலைகளை நீங்க தாராளமா பாக்க ஆரம்பிக்கலாம்...!! இதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லே.."

"ம்ம்ம்ம்.. அப்புறம்.."

"மாமா.. மீனா கல்யாணத்துக்காக நான் என்ன செய்யணும்? அதை மட்டும் சொல்லுங்க! இப்ப என் ஃப்ரெண்ட் மேரேஜ் நடக்கறதுல, எங்க வீட்டுல, யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது..." சுகன்யா உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.

"என் ஃப்ரெண்ட் குமாரசாமியைப்பத்தி எனக்கும் நல்லாத் தெரியும்... அவர் மீனாவோட கல்யாணத்துல எந்த பிரச்சனையும் பண்ணமாட்டார்... ஆனா.."

"ஆனா...? ஆனா... என்ன மாமா?"

"நாங்க முடிவு பண்ணபடி, உன் கல்யாணம்தான் முதல்லே நடக்கணும்... எங்க வீட்டு மருமகளா நீ முன்னே நின்னு, உன் ஃப்ரெண்டு கல்யாணத்தை நீ நடத்தி வைக்கணும்ன்னுதான் நானும், உன் அத்தையும் ஆசைப்படறோம். மீனாவோட ஆசையும் இதுதாம்மா... மொதல்லே இதுக்கு நீ ஒத்துக்கணும்..."

"மாமா... என் நிலைமையையும் கொஞ்சம் நீங்க யோசனைப் பண்ணி பாருங்க. 'உன்னை நான் வெறுக்கறேன்னு நான் போட்ட மோதிரத்தை என் மூஞ்சியிலே வீசி எறிஞ்சுட்டு போன ஒருத்தரோடு,' நான் எப்படி திரும்பவும் சகஜமா பழக முடியும்? எப்படி என் மனசுல எந்த வருத்தமும் இல்லாதது போல அவருகிட்ட சிரிச்சுப் பேச முடியும்? எங்களுக்குள்ளே எதுவே நடக்காத மாதிரி எப்படி அவரை திருமணம் பண்ணிக்க முடியும்?"

"தப்புதாம்மா... செல்வா பண்ணது தப்புதான்... நான்தான் சொன்னனே அவன் தன் தப்பை உணர்ந்துட்டான்னு! செல்வா உன்கிட்ட மன்னிப்பு கேக்க தயாரா இருக்கான்."

"நீ சென்னைக்கு திரும்பி வரலே... உனக்கு போஸ்டிங் தில்லியிலே ஆயிடிச்சுன்னு தெரிஞ்சதும், ஒரு தரமில்லே.. இரண்டு தரமில்லே... தொடர்ந்து உனக்கு நாலு நாள் அவன் போன் பண்ணியிருக்கான்.. நீதான் அவன்கிட்ட பேசாம, ஒவ்வொரு தரமும் லைனை கட் பண்ணிட்டியாமே? இது உண்மைதானா?"

"மாமா...ப்ளீஸ்..." சுகன்யாவின் குரல் மீண்டும் தழுதழுக்க ஆரம்பித்தது.

"சுகன்யா.. அவன் என்னதான் சொல்ல விரும்பறான்னு ஓரே ஒரு தரம் நீ கேட்டு இருக்கலாம்லே?"

"ப்ச்ச்... கேட்...கேட்டு இருக்கலாம்.. ஆம்பிளைக்கு கோவம் வரலாம்... ஆனா எனக்கு மட்டும் கோவம் வரக்கூடாதா மாமா?" சுகன்யா தீடிரென முறுக்கினாள்.

"வரலாம்ம்மா... உன் கோவம் நியாயம்ன்னு நீ கேக்காமலேயே நாலு தரம் நான் சொல்லிட்டேனே?" சுகன்யாவின் குழந்தைத்தனமான முறுக்கலை கண்டு நடராஜன் மெல்ல சிரித்தார்.

"எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க... சிரிக்காதீங்க.. நீங்க சிரிச்ச எனக்கு கெட்ட கோவம் வரும்..." சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"சுகன்யா... சும்மா நீ பிடிவாதம் பிடிக்காதேம்மா. நீ ரொம்ப பிடிவாதக்காரின்னு உன் அம்மா... உன் அத்தை மல்லிகா கிட்ட சொல்லியிருக்காங்களாம்... நான் சொல்றதை கொஞ்சம் கேளு... உன் பிடிவாதத்தை எங்களுக்காக கொஞ்சம் விட்டுக்குடு. எங்க வீட்டுக்கு எப்ப நீ வரப்போறேன்னு நாங்க தவிச்சுக்கிட்டு இருக்கோம்ம்மா... எங்க தவிப்பையும் நீ புரிஞ்சுக்கணும்."

"...."

"செல்வா மேல உனக்கு கோவம் இல்லேன்னு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே சொன்னே? நடந்ததையெல்லாம் நான் மறந்துட்டேன்னு, சொன்னது நீதானே?"

"ஆமாம் மாமா அப்படி நான் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனா இப்ப சொல்றேன்... நான் அவர் மேல ரொம்பக் கோவமா இருக்கேன்..." சுகன்யா தாயிடம் பொம்மை கடையில் முரண்டு பிடிக்கும் சிறு குழந்தையாக தன் மூக்கை உறிஞ்சினாள்.

"சுகன்யா... அழாதேம்மா.. செல்வா பண்ணத்தப்புக்கு அவனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு நீ நினைக்கிறியோ அதை நீ அவனை நேரா பாக்கும் போது குடு. இது உனக்கும் அவனுக்கும் நடுவுல நீ தீத்துக்க வேண்டிய விஷயம்."

"சுகன்யா... தேவையில்லாம எங்களை நீ ஏன் தண்டிக்கறே? எங்களை மட்டும் நீ தண்டிக்கலே... கூடவே உன் அப்பாவை, உன் அம்மாவை, உன் மேல தன் உசுரையே வெச்சிருக்கற உன் ரகு மாமாவை, உன் கல்யாணத்தைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற உன் தாத்தா, பாட்டி, இவங்களையும் ஏம்மா தண்டிக்கறே?"

"மாமா... யாரையும் தண்டிக்கணுங்கறது என் விருப்பமில்லே.... என்னை நானே தண்டிச்சுக்கறேன்... ஏன்டா ஒருத்தனை காதலிச்சோம்ன்னு எனக்கு இருக்கு?"

"சரி... செல்வா மட்டுமா உன்னை நேசிச்சான்? எங்க குடும்பத்துல இருக்கற எல்லோரும் உன்னை நேசிக்கிறோம். அவன் உன்னை பைத்தியக்காரத்தனமா, வெறுக்கறேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நாங்கள்ல்லாம் உன்னை வெறுக்கலையே?"

"இல்லே மாமா..."

"சுகன்யா நீ புத்திசாலிப் பொண்ணு. வாழ்க்கையில எப்பவும் ஒரே நேரத்தில ரெண்டு விஷயங்கள் நடக்கும்..."

"நிஜமாவே இப்ப நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை அங்கிள்."

"நாம நடக்கும்போது வலது காலை எடுத்து ஒரு அடி முன்னே வெச்சா, அந்தக் கால் பதியபோற இடம் மேடா, இல்லை பள்ளமான்னு, கவனமா பாத்து வைக்கிறோம். அந்த எடத்தை எப்படியிருந்தாலும் நாம நம்ம மனசார வரவேற்று ஏத்துக்கறோம்."

"ம்ம்ம்.."

"ஏன்னா.. வலது காலை கீழே வெக்காம இடது காலை தூக்க முடியாது..."

"யெஸ்..."

"அதே சமயத்துல எந்த எடத்துலேருந்து நம்ம காலை எடுத்து வெச்சோமோ, அந்த இடத்தைப்பத்தி நாம அதிகமா நெனைக்காம சட்டுன்னு மறந்துடறோம். இதுதான் வாழ்க்கை... இப்படித்தான் நீ உங்களுக்குள்ள நடந்த அந்த கசப்பான நிகழ்ச்சியை மறந்துடணும்ன்னு நான் சொல்றேன்."

"இதைத்தான் நானும் சொல்றேன் மாமா..."

"சொல்லு சுகன்யா.. நீ என்ன சொல்ல விரும்பறே?"

"செல்வாவோட எனக்கிருந்த உறவு... நான் கடந்து வந்துட்ட இடம்... அந்த இடத்தை நானும் மறக்க விரும்பறேன்... நான் எடுத்து வெக்கப் போற அடுத்த அடி என்னன்னு எனக்கு இன்னும் தெளிவாப் புரியலே... நான் எடுத்த வைக்கப்போற அந்த அடி தப்பாயிடக்கூடாதேன்னு நான் எனக்குள்ள ரொம்ப பயப்படறேன்.."

"ம்ம்ம்ம்... ஐ அண்டர்ஸ்டேண்ட்..." சுகன்யா என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் நடராஜன் தன் மனதுக்குள் குழம்ப ஆரம்பித்தார்.

"அதனாலத்தான் எனக்கு இப்ப கொஞ்சம் டயம் வேணும்ன்னு உங்கக்கிட்ட கேக்கிறேன் மாமா..." சுகன்யா மெல்லிய குரலில் மரியாதையுடன் நடராஜனுடன் பேசிய போதிலும், அவள் குரலில் இருந்த விரக்தியையும், சலிப்பையும் நடராஜன் உணர்ந்து கொண்டார்.



"உன் இஷ்டம்மா... இதுக்கு மேல நீ இதைத்தான் செய்யணும்ன்னு, உன்னை நான் வற்புறுத்தமாட்டேன். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும் நீ மட்டும்தான் என் வீட்டுக்குள்ள என் மருமகளா நுழைய முடியும்." நடராஜன் நீண்ட பெருமூச்செறிந்தார்.

"மாமா.. என்னை நீங்க தப்பா நினைக்கக்கூடாது..."

"இல்லேம்மா... நிச்சயமா இல்லே... நீங்க ரெண்டு பேரும் பழையபடி ஒண்ணா சேர்ந்து என் வீட்டுத் தோட்டத்துல நின்னுகிட்டு சிரிக்கறதைப் பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. உனக்கு தேவையான அளவுக்கு டயம் எடுத்துக்கோ... ஆனா என் ஆசையை மட்டும் நீ நிராசையா ஆக்கிடாதே..!"

"ம்ம்ம்..."

"ரொம்ப நேரமாயிடுச்சு.. குட் நைட்... சுகன்யா..." சட்டென தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் நடராஜன்.

"குட் நைட் மாமா..." சுகன்யாவும் மெல்ல முணுமுணுத்தாள். அப்போதைக்கு அவள் தன்னை சிறிது ஆசுவாசமாக உணர ஆரம்பித்தாள். 


சுகன்யா... 102

"குட்மார்னிங் சுகன்யா... சம்பத் ஹியர்.."

"அத்தான் வெரி வெரி குட்மார்னிங் ... நீங்க நிம்மதியா தூங்கினீங்களா? இல்லே கனவு கண்டுகிட்டு கட்டில்லே உருண்டுகிட்டு இருந்தீங்களா?"

சுகன்யாவும், அனுவும் பார்க்கில் காலாற நடந்து முடித்தபின் புல்தரையில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள். 'அனு... உன் ஆள்தான்டீ' சுகன்யா ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு அனுவை நோக்கி கண்ணடித்தாள்.

"காலங்காத்தால கிண்டலா? நல்லாத் தூங்கினேன். அப்புறம் ரொம்ப தேங்க்ஸ் சுகா... அயாம் ரியலி ஹேப்பி... எழுந்ததுமே மனசுக்குள்ள ஒரு தெளிவு வந்த மாதிரி இருக்கு..."

"குட்.. அது இருக்கட்டும்.. இப்ப எனக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?இதையெல்லாம் இனிமே அனுகிட்ட வெச்சிக்கோங்க... நேத்து நீங்க அவ நம்பரை வாங்கிக்கலையா?" சுகன்யா விஷமமாகச் சிரித்தாள்."



"நீ பர்மிஷன் குடுத்தா நேர்லேயே வந்து அவ நம்பரை வாங்கிக்கலாம்ன்னு நினைக்கிறேன். அப்படியே அவகிட்டவும் நன்றி சொல்லலாம்ன்னு இருக்கேன். " சம்பத்தும் குறும்பாக சிரித்தான்.

"உங்காளை பாக்கறதுக்கு என் பர்மிஷன் எதுக்கு?" சம்பத் தன்னைப்பார்க்க வரப்போகிறான் என தெரிந்ததும் அனுவின் முகம் மலர ஆரம்பித்தது.

"நீ தானே அவளுக்கு லாயர்... இன்னைக்கும் நான் ஃப்ரீதான்... உனக்குத் தெரியாம எப்படீ நான் அவளை மீட் பண்றது?" சம்பத் இழுத்தான்.

"புரியுது அத்தான்... புரியுது... நீங்க தாராளமா ஹாஸ்டலுக்கு வந்து அவளை எங்கே வேணா அழைச்சிட்டுப்போங்க... ஆனா அவளை முழுசா, பத்திரமா, திரும்ப இங்கேயே கொண்டுவந்து விட்டுடுங்க. சந்தோஷம்தானே?" சுகன்யா அனுவின் இடுப்பைக் கிள்ளினாள்.

"சும்மா இருடீ..." அனு சிணுங்கினாள்.

"அனு பக்கத்துல இருக்காளா?"

"இருக்கா... பார்க்ல இருக்கோம். அல்ரெடி ஸ்பீக்கர் ஆன்... நாம பேசறதை அவளும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கா... அவகிட்ட செல்லை குடுக்கறேன்; பேசறீங்களா?"

"அதான் நேர்ல வர்றேனே..."

"குட்மார்னிங்ன்னு விஷ்தான் பண்ணுங்களேன். கொறைஞ்சா போயிடுவீங்க?"

"ஹாய் அனு... குட்மார்னிங்..."

"குட்மார்னிங் சம்பத்... ஹவ் ஆர் யூ? இன்னைக்கு வர்ர்றீங்களா?" தன் உதடுகளில் பொங்கும் சிரிப்புடன் அனு குழைந்தாள்.

"ம்ம்ம்.."

"எத்தனை மணிக்கு?"

"அரவுண்ட் டென்.. இஸ் தட் ஓ.கே..?"

"எப்ப வேணா வாங்க... வெய்ட் பண்ணிகிட்டு இருப்பேன்..." அனு செல்லை சுகன்யாவிடம் கொடுத்தாள்.

"அத்தான்... ஒரு விஷயம்..."

"சொல்லு சுகா..."

"ட்ரெய்னிங் முடிஞ்சதும், சென்னையிலதான் அனுவுக்கு போஸ்டிங்ன்னு முடிவாயிடிச்சி... அதனால நீங்களும் சீக்கிரமா சென்னைக்கு வந்துடுங்களேன்..."

"ம்ம்ம்... உடனடியா அது எப்படி முடியும்?"

"உங்களோட வொர்க் எக்ஸ்ஃபீரியன்சை என் அப்பாவுக்கு அனுப்புங்கன்னு சொன்னேன்லா..."

"சுகா... இதைப்பத்தி அம்மாவும் என்கிட்ட பேசினாங்க. பட் அயாம் நாட் ஏபிள் டு டேக் எ டிஷிஷன்..."

"யூ ஆர் க்வாலிஃபைட் இனஃப்... தே நீட் எக்ஸ்பீரியன்ஸ்ட் பெர்சோனல்.. அப்புறம் எதுக்காக தயங்கறீங்க?அத்தையும் இதைப்பத்தி என் அப்பா கிட்ட பேசினாங்களாம்... அவர்கிட்ட நீங்களும் ஒரு தரம் பேசுங்களேன்..."

"ஓ.கே.. பெங்களூரு போனதும் ஐ வில் சென்ட் மை ரெஸ்யுமேஅண்ட் டாக் டு ஹிம்.."

"மறந்துடாதீங்க.. அப்புறம் கரெக்டா பத்து மணிக்கு வந்துடுங்க... அனு வில் பீ வெய்டிங் பார் யூ..." சுகன்யா மனதுக்குள் திருப்தியுடன் கலகலவென சிரித்துக்கொண்டே செல்லை அணைத்தாள். 

அனு கட்டியிருந்த வெள்ளை நிற காட்டன் புடவையில், கண்ணுக்கு இதமான இளம் பச்சை நிற பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. இறுக்கமான கருப்பு நிற ரவிக்கையில் அவளுடைய முன்னழகுகள் தங்களை எடுப்பாக காட்டிக்கொண்டிருந்தன. அவள் கட்டியிருந்த புடவை அவளுடைய குழிந்த தொப்புளின் அழகை சிறிதளவு காட்டியும், காட்டாமலும், அவள் நடக்கும்போது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

அனு, பால்கனிக்கு சென்று தெருவை நோட்டமிட்டாள். திரும்பி வந்து அறையில் சேரில் உட்கார்ந்தாள்.நிமிடத்துக்கு இரண்டு முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். விருட்டென மீண்டும் பால்கனிக்கு போனாள். இரண்டு நிமிடம் அங்கே நின்றாள். திரும்பவும் அறைக்குள் வந்தாள். செல்லை எடுத்து சமயத்தைப் பார்த்தாள். அனு படும் அவஸ்தையைப் பார்த்த சுகன்யா மெல்ல சிரித்தாள்.

"எதுக்குடி இப்ப சிரிக்கறே நீ?" அனு சிணுங்கினாள்.

"அனூ குட்டீ.. உன்னைப்பாத்து நான் ஏன்டீ சிரிக்கப்போறேன்?"

"பின்னே?"

"சட்டுன்னு மணி பத்தாகி தொலைய மாட்டேங்குதேன்னு என் வாட்சைப்பாத்து சிரிச்சேன்.." சுகன்யா கட்டிலிலிருந்து எழுந்து அனுவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

"சுகா... உன்னை நான் மீட் பண்ணியிருக்கலேன்னா,என் சம்பத் எனக்கு கிடைச்சே இருக்கமாட்டார்.உன்னை நான் என் வாழ்க்கை பூரா மறக்கமாட்டேன்டீ" அனுவின் குரல் தழைந்தது.

"ஹேய்.. ரொம்ப எமோஷனல் ஆகாதே... ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலேயும் என்ன நடக்கணுமே அது மட்டும்தான் நடக்கும். நடக்க வேண்டியது கட்டாயம் நடந்துதான் தீரும்..இட் ஈஸ் எ மேட்டர் ஆஃப் டயம்."

"சுகா.. உங்க அத்தை சட்டுன்னு கோபப்படுவாங்கன்னு சொன்னியே, என்னை வேணாம்ன்னு சொல்லிட மாட்டாங்களே?"

"சேச்சே...அதெல்லம் இல்லடி.. நான் அவங்களோட நார்மல் குணத்தை சொன்னேண்டீ.. புருஷனா இருந்தாலும் சரி; புள்ளையா இருந்தாலும் சரி; சட்டுன்னு எப்படி அவங்க கோவப்படறாங்களோ அதே மாதிரி அடுத்த அஞ்சு நிமிஷத்துல பாசத்தை மழையா அவங்க மேல பொழிவாங்கடீ... ஆனா எங்க மாமா... அதான் உன் ஆளோட அப்பா இருக்காரே; அவர் ஒரு பர்ஃபெக்ட்... பக்கா ஜெண்டில்மேன்.. உன்னை தன் தலை மேல தூக்கி வெச்சுக்குவார். மாமாகிட்ட பேசறியா... நீ பேசினா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்?"

"வேணாம்டீ.. எனக்கு பயமா இருக்குடீ..கொஞ்சம் பொறுக்கலாம்டீ... மொதல்லே சம்பத் தன்னோட வீட்டுல என்னைப் பத்தி பேசிடட்டும். அப்புறமா நான் அவங்ககிட்ட பேசறேன்."

"எங்க அத்தையே அவங்க காலேஜ் டேஸ்ல, லவ் பண்ணவங்கதான்டீ.. காதலைப்பத்தி, காதல் வசப்பட்ட ஒரு பெண்ணோட மனசைப்பத்தி, அவங்களுக்கு நல்லாத் தெரியும்டீ."

"ஐ சீ..."

"அன்பார்ட்சுனேட்லி அவங்க லவ் சக்ஸஸ்ஃபுல் ஆகலை. நீ எதுக்கும் கவலைப்படாதேடீ...கல்யாண விஷயத்துல அத்தானுக்கு அவங்க வீட்டுல முழு சுதந்திரம் குடுத்திருக்காங்க. சம்பத் எந்த பொண்ணை ஓ.கேன்னு சொன்னாலும் அவங்களுக்கு ஓ.கே தான். "

"நான் உன்னைத்தாண்டீநம்பியிருக்கேன்.."

"டோண்ட் வொரி.. உனக்கென்னடீ கொறைச்சல்? நீ ஏன் இப்படி பயந்து சாகறே? உன்னை நானே அழைச்சிட்டுப்போய் எங்க அத்தைகிட்ட அறிமுகப்படுத்தறேன். எங்கத்தான் ஒரே பையன்.ஏகப்பட்ட சொத்து இருக்கு அவருக்கு.நல்லாக் கேட்டுக்க. எங்க அத்தை வீட்டுல நீ ராணி மாதிரி இருக்கப்போறே."

"ப்ச்ச்... எனக்கு சொத்தெல்லாம் வேணாம்டி.. இவர் கிடைச்சா, அதுவே போதும்டீ..."

அனுவின் செல் கிணுகிணுத்தது. சம்பத்துதான் அவளை அழைத்திருந்தான். ரிஸப்ஷனில் இருப்பதாக சொன்னான்.

"போயிட்டு வரேன்டீ..."

"அனு.. ஆல் த பெஸ்ட்... கொஞ்சம் பொறுமையா இரு..."

"என்னடி சொல்றே?"

"ம்ம்ம்.. நீ ஒரு பாப்பா... நேத்து காலையிலத்தான் நீ வயசுக்கு வந்திருக்கே; நான் சொல்றதோட அர்த்தம் உனக்கு புரியலே? கல்யாணம் ஆகற வரைக்கும் முழுசா டேமேஜ் ஆகாம இருடீன்னு சொல்றேன்.." சுகன்யா ஹோவென சிரித்தாள்.

"போடீ.. இவ ஒருத்தி.. நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்..." அனு அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, தன் முகத்தில் வெட்கத்துடன் ரிசப்ஷனை நோக்கி வேகமாக ஓடினாள்.

* * * * *

சுகன்யா... நானும்தான் ஒருத்தனை மனசாரக் காதலிச்சேன். என் காதல் தோத்துத்தான் போச்சு. அதுக்காக நான் செத்தா போயிட்டேன்? இன்னொருத்தன் கூட சந்தோஷமா வாழ்ந்து இவனை பெத்துக்கலையா? என் புள்ளை சம்பத் வாழ்க்கையோட நிஜமான அர்த்தத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கறான்.

என் புள்ளை, காலம் பூரா உன்னையே நெனைச்சுக்கிட்டு வாழ்ந்துடுவேன்னு அடாவடி பண்றான்டீ. உன் பேச்சை அவன் கேப்பான்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்மா. எனக்காக ஒரு தரம் நீ அவன் கிட்ட பேசறயா?

ராணி அத்தே... உங்க பிள்ளை நிஜமாவே லக்கி. தங்கமான மனசுள்ள பெண் ஒருத்தி உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறா. நான் அதிகமா எந்த முயற்சியும் எடுக்காமலேயே உங்க பிரச்சனை தன்னால முடிஞ்சுப்போச்சு. கடந்தவாரம், தன்னிடம் செல்லில் அழுது புலம்பிய தன் அத்தை ராணியின் முகம் அவள் மனதில் சட்டென வந்தது. சுகன்யா எழுந்து பால்கனிக்கு வந்தாள்.

ஹாஸ்டல் கேட்டுக்கு வெளியில், கேட்டுக்கு எதிரில் உயரமாக வளர்ந்திருந்த மாமரத்தின் நிழலில் நின்றிருந்த சம்பத்தை அனு நெருங்கியதும், அவன் அவளை விருட்டென இழுத்து தன் மார்போடு அணைத்து அவள் கன்னத்தில் உரிமையுடன் முத்தமிட்டான்.

"அனு.. ரியலி யூ ஆர் வெரி வெரி ப்யூட்டிஃபுல் இன் திஸ் சாரி... தேவதை மாதிரி இருக்கே..." சம்பத் தன் விழிகளை இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ப்ளீஸ்.. சம்பத்... விடுங்க என்னை... சுகன்யா பால்கனியில நின்னுகிட்டு இருக்கா..." சம்பத் சட்டென அவளை தன் பிடியிலிருந்து விடுவித்தான். அனு, சுகன்யா நிற்கும் திசையை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினாள். சம்பத்தை நோக்கி தன் முகம் மலர சிரித்தாள்.

"அனு எதுக்கு சிரிக்கறே?" சம்பத்தும் சுகன்யா நின்ற திசையை நோக்கி தன் கையை ஆட்டினான்.

"டேமேஜ் ஆகாம, முழுசா வந்து சேருடீன்னு இப்பத்தான் சுகன்யா சொல்லி அனுப்பினா. ஆனா நீங்க என்னடான்னா, அவ எதிர்லேயே என் கன்னத்தை கடிக்கறீங்க?" கன்னத்தை துடைத்துக்கொண்டு, அனு விழுந்து விழுந்து சிரித்தாள்.

சுவாமி மலை முருகா.. என் அனுவும், என் அத்தானும் என்னைக்கும் இப்படியே சந்தோஷமா சிரிச்சுக்கிட்டெ இருக்கணும். சுகன்யா அவர்களை நோக்கி உற்சாகமாக தன் கரத்தை அசைத்துக்கொண்டிருந்தாள்.

சம்பத் அனுவின் கழுத்தை சுற்றி தன் கரத்தை ஆசையுடன் போட்டுக்கொண்டான். அவள் அவன் இடுப்பில் தன் கையை தவழவிட்டுக்கொண்டாள். காலியாக இருந்த நடைபாதையில் அவர்கள் இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள். தலையில் காயும் வெய்யில் அவர்களுக்கு சுத்தமாக உறைக்கவில்லை. 

பால்கனி தரையில், குளிர்ந்த நீரை ஒன்றுக்கு இரண்டு முறையாக தெளித்து, தரை ஜில்லென்று ஆனவுடன், ஒரு பெட்ஷீட்டை விரித்து நிம்மதியாகப் படுத்திருந்தாள் சுகன்யா. அவள் உள்ளத்தில் அன்று அசாதாரணமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

நிசப்தமான அந்த இரவில், தன் தலைக்கு மேல் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் அவளை குளிப்பாட்டிக்கொண்டிருக்க, நிலவின் குளுமையை, அவள் தன் மெய்மறந்து, அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

சந்திரனுக்கு இருபத்தேழு பெண்டாட்டியாமே? ஒவ்வொரு நட்சத்திரமும் அவனுக்கு ஒரு மனைவியாமே? தலைக்கு மேல் ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில், பூர்ணசந்திரன் மெதுவாக உலா வந்து கொண்டிருந்தான். இன்னைக்கு ஒரு ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் மனசொத்து வாழறதே கஷ்டமாயிருக்கறப்ப, இருபத்தேழு பெண்களை, அஸ்வினியிலேருந்து ரேவதி வரைக்கும், கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்திரன், எப்படி ஓரே நேரத்துல அவங்களை சமாளிச்சு இருப்பான்?

இளம் வயதில் சுந்தரி சொல்லியிருந்த புராணக் கதையொன்று சுகன்யாவின் நினைவுக்கு வர உதடுகளில் இளம் புன்முறுவல் ஒன்று எழுந்தது. இப்ப என் அனு என்ன பண்ணிக்கிட்டு இருப்பா? ம்ம்ம்.. என்ன பண்ணுவா? அத்தான் சம்பத்தோட செல்லுல, குசுகுசுன்னு எதையாவது பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பா... காதலர்களுக்கு பேசறதை தவிர வேற வேலை என்ன இருக்கு?

தில்லியில் ட்ரெய்னிங் முடிந்ததும், அனு சென்னை ஆஃபிசில் சேருவதற்கான போஸ்டிங் ஆர்டருடன், தமிழ்நாட்டுக்கு கிளம்பிப்போய் இரண்டு வாரங்களாகி விட்டிருந்தபோதிலும் இன்னும் ட்யூட்டியில் அவள் சேர்ந்திருக்கவில்லை. தனது சொந்த ஊரான பாண்டிச்சேரியில், தனக்கு கிடைத்த ஜாய்னிங் டயமை, பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துக்கொண்டிருந்தாள்.

சுகன்யா... நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டீ...!! ஊருக்கு வந்த ரெண்டு நாள்லே, எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறேங்கற சாக்குல, ஒண்ணுமே சொல்லாம கொள்ளாம, என் சம்பத், தன் அப்பா, அம்மாவோட, எங்க வீட்டுக்கு தீடீர்ன்னு காலையிலேயே வந்து நிக்கறாரு. அன்னைக்கு நான் எழுந்து குளிக்கக்கூட இல்லேடீ.

எங்கம்மா கதவைத் தொறந்தப்ப, நான் வீட்டு ஹால்லே, சோஃபாவுல கால் மேல கால் போட்டுக்கிட்டு கேஷுவலா நைட்டிலத்தான் படுத்திருந்தேன். அவங்க எல்லோரையும் ஒண்ணாப் பாத்ததும் எனக்கு கையும் ஓடலே; காலும் ஓடலே; அப்படியே திகைச்சு போய் நின்னுட்டேன்டீ.



நான் சாதரண நேரத்துல எப்படி இருப்பேன்னு அவங்க தெரிஞ்சுக்க விரும்பினாங்களாம். உங்கத்தைக்கும், மாமாவுக்கும் என்னை ரொம்ப பிடிச்சுப்போச்சுடீ. அவங்க எங்கக் மேரேஜுக்கு அவங்க விருப்பத்தை, சம்மதத்தை, அப்பவே அங்கேயே என் எதிர்லேயே சொல்லிட்டாங்க.

சுகன்யா... உங்க அத்தையும் மாமாவும் ரொம்ப பெருந்தன்மையானவங்கன்னு, நீ சொன்னப்ப நான் நம்பவே இல்லே; நேர்ல அவங்களை பாத்து பேசினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, உங்கத்தைக்கு ரொம்பவே தாராள மனசுடி. அவங்க என்னை பிடிச்சிருக்குன்னு தன் வாயால மட்டும் சொல்லலேடி; சட்டுன்னு தான் போட்டுக்கிட்டிருந்த தங்கச்செயினை கழட்டி என் கழுத்துலே போட்டு அழகு பாத்தாங்கன்னா, பாத்துக்கோயேன்.

மாமாவும் எங்கிட்ட ரொம்ப அன்பா பேசினாருடீ. இன்னும் ஒரே மாசத்துல எங்க கல்யாணத்தை முடிச்சிடணும்ன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. சுகா... இதெல்லாத்துக்கும் முக்கியமான காரணம் நீதான்டீ. அனு தன் மனதில் பொங்கும் மகிழ்ச்சியை அவளிடம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை சொல்லி சொல்லி நெகிழ்ந்து கொண்டிருந்தாள்.

சுந்தரியும், சம்பத்தின் கல்யாண விஷயத்தை மட்டுமல்லாமல், சென்னையில் குமாரசுவாமியின் கம்பெனியில் ஹெச். ஆர். டிவிஷனில் அவன் சேர்ந்துவிட முடிவெடுத்திருப்பதை பற்றியும் சுகன்யாவிடம் ஒரு வாரத்திற்கு முன் சொல்லியிருந்தாள்.

வேணிக்கு இது எத்தனையாவது மாசம்? எட்டாயிருக்கணுமே? அவகிட்டவும் மனசு விட்டு பேசி ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடிச்சி. இப்ப பேசலாமா? இப்ப மணி பத்தாயிடுச்சே? சங்கரும் அவளும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தாலும் இருக்கலாம். இப்ப அவளை எதுக்காக கூப்பிட்டு தொந்தரவு பண்ணணும்? நாளைக்கு ஈவினிங் அவகிட்ட கண்டிப்பா பேசிடலாம்.

கண்களை மூடி படுத்திருந்தவள் சட்டென புரண்டு படுத்தாள். எழுந்து உட்கார்ந்து வானத்தை நிமிர்ந்து பார்த்தாள் சுகன்யா. இத்தனை குளுமையான நிலவொளியிலும் ஏன் என் மனசு இப்படி எட்டு திசையிலும் தேவையே இல்லாம ஓடிகிட்டு இருக்கு? ஏன் எனக்கு வேண்டியவங்களையெல்லாம் திரும்ப திரும்ப நினைச்சுப் பாக்குது?

ஏன்டீ சுகன்யா... உனக்கு வேண்டியவங்க எல்லாரையும் நீ இன்னைக்கு நினைச்சிட்டியா? மனம் அவள் நெற்றிப்பொட்டில் பட்டென அடித்தது.

யெஸ். சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

பொய் சொல்லாதடி..!. எங்கிருந்தோ ஒரு குரல் அவள் காதில் கேட்டது. தன் தலையை விருட்டென ஆட்டிக்கொண்டாள் சுகன்யா.

பயிற்சி முடிந்தபின், தில்லியிலேயே பணி புரிய தனக்கு விருப்பமென சுகன்யா எழுதிக்கொடுத்த விண்ணப்பம், ஒரே நாளில் அங்கீகரிக்கப்பட்டு, அவளுக்கு ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலேயே சேர உத்திரவு கொடுக்கப்பட்டதோடு அல்லாமல், அதே வளாகத்துக்குள்ளாகவே அவளுக்கு தங்குவதற்காக அரசாங்க க்வார்ட்டர்ஸும் ஒதுக்கப்பட்டுவிட்டது.

சுகன்யா எடுத்த இந்த முடிவு தெரிந்ததும், குமாரசுவாமி தன் மனதுக்குள் சிறிது ஆடித்தான் போனார். நடராஜனிடம் இதைச்சொல்லி வருத்தப்படவும் செய்தார். சிவதாணுவும், சுந்தரியும் தங்களால் ஆனமட்டும் அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கடைசியில் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனார்கள்.

தாத்தா...! இப்பத்தான் நான் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கேன்! தில்லியிலே நான் நிரந்தரமாகவா இருக்கப்போறேன்? ஆஃப்டர் ஆல், மிஞ்சி மிஞ்சிப்போனா இன்னும் ஒரு வருஷம்தான் இங்கே நான் இருக்கமுடியும்? அதுக்கு அப்புறம் என்னை தமிழ்நாட்டுக்கு மாத்திடுவாங்க. ஒண்ணு நான் பாண்டிசேரியில வொர்க் பண்ண வேண்டியிருக்கும்; இல்லேன்னா சென்னை ஆஃபீசுக்கே வந்திடுவேன். நான் என்ன இன்னும் சின்னப்பொண்ணா? என்னைப்பத்தி ரொம்பக் கவலைப்படாதீங்க தாத்தா!

பாட்டியும், நீங்களும், ஃப்ளைட்ல, ரெண்டு மணி நேரத்துல தில்லிக்கு வந்துடலாம். ஒரு மாசம் என்னைப் பாக்கறதுக்கு நீங்க வாங்க. அடுத்த மாசம் உங்களையெல்லாம் பாக்கறதுக்கு நான் ஓட்டமா ஓடி வந்துடறேன். இல்லையா; நீங்க என் கூடவே இருக்கலாம். எனக்குன்னு இங்கே தனி வீடு கிடைச்சிருக்கு. சுகன்யா மிகவும் பிடிவாதமாக தான் எடுத்த முடிவில் நிலையாக நின்றாள்.

கட்டிலின் மேல் கிடந்த சுகன்யாவின் செல் மெல்ல சிணுங்க ஆரம்பித்தது. மணி பத்தாச்சு. இந்த நேரத்துல யார் கிட்டேருந்து கால் வருது? அனுவாத்தான் இருக்கும்! சம்பத் இதைச் சொன்னாரு. சம்பத் அதைச்சொன்னாருன்னு, இன்னைக்கு என்ன புதுக்கதை சொல்லப்போறாளோ? வர்ற காலை அட்டண்ட் பண்ணிட்டு, டயமுக்கு தூங்கினாத்தான், நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்து, சமையலை முடிச்சுட்டு, ஆஃபிசுக்கு ஒழுங்கா கரெக்டான நேரத்துக்குப் போக முடியும்???

சுகன்யா விருட்டென எழுந்தாள். பவுர்ணமி நிலவுக்கும், அதன் குளுமையான மெல்லிய வெளிச்சத்திற்கும் ஒரு டாட்டா காட்டினாள். தரையில் கிடந்த பெட்ஷீட்டை உதறியெடுத்துக் கொண்டு, தன் படுக்கையறைக்குள் வேகமாக நுழைந்தாள். 

"ஹலோ.. அயாம் சுகன்யா ஹியர்... நீங்க யாரு?" செல்லை பாய்ந்து எடுத்த சுகன்யாவால், தன்னை அழைத்தது யார் என்பதை அவளால், செல்லில் பளிச்சிட்ட நம்பரை மட்டும் வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை.

"சுகன்யா... எப்படியிருக்கேம்மா? மறுபுறத்திலிருந்து வந்த குரலில் அன்பும், கனிவும் பொங்கிக்கொண்டு வந்தன.

"நான் நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க எப்படி இருக்கீங்க?" மறுமுனை இனிமையாக பேச ஆரம்பித்ததும், தன்னுடன் பேசுவது யார் என்பதை புரிந்து கொள்வது, சுகன்யாவிற்கு இப்போது சிரமமாக இல்லை.

"சுகன்யா... மணி ஏற்கனவே பத்தாயிடுச்சு... உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணிடலியே?" நடராஜன் மிருதுவாக பேசினார்.

"அங்கிள்... நீங்க என்னை எப்ப வேணாலும் கூப்பிடலாம். ஆனா யாரோ முகம் தெரியாத ஒருத்தர் கிட்ட பேசற மாதிரி என் கிட்ட நீங்க ஃபார்மலா பேசினா, அப்புறம் உங்க கிட்ட நான் பேசமாட்டேன்... ஆமாம்..."

நடராஜனுடன் சகஜமாக சிரித்து பேசுவதாக நினைத்தவளால் மேற்கொண்டு ஏதும் பேசமுடியாமல், தன் முகம் வாடி சட்டென மவுனமானாள். அவர் தன்னைக் கூப்பிட்டு பேசுவார் என்று சுகன்யா சிறிதும் எதிர்பார்த்திராததால், கன்னங்கள் சிவந்து, உடலின் உஷ்ணம் வேகமாக ஏறி அவளுடைய குரல் சட்டெனத் தழுதழுத்தது.

நடராஜனின் குரலால், சில நாட்களுக்குப் பிறகு, தீடிரென புயலாகத் தன் மனசுக்குள் வந்து நின்ற செல்வாவின் முகம் சட்டென போகமாட்டேன் என அடம் பிடிக்க ஒரு நொடி தன் விழிகளை மூடி மூடித்திறந்தாள். இன்னைக்குத் தூங்கினமாதிரிதான் என மனதுக்குள் குமைய ஆரம்பித்தாள்.

செல்வா தன்னுடன் சண்டையிட்டுவிட்டு போனபின், நடராஜனோ, மல்லிகாவோ தன்னிடம் பேசாமலே இருந்தது அவள் மனதை அவ்வப்போது உறுத்திக்கொண்டுதான் இருந்தது. ஆயிரம்தான் இருந்தாலும் புள்ளையை பெத்தவங்களாச்சே... புள்ளையோட தப்பை அவங்க ஒத்துக்குவாங்களா? முதல் ஒரு மாதம் அவள் மனது இந்த போக்கில் போனது என்னவோ உண்மைதான். நாளாக நாளாக இந்த உறுத்தல் அவள் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

நடராஜன், இப்ப எங்கிட்ட என்ன பேசுவார்? சுகன்யாவின் மனசில் இந்த கேள்வி எழுந்ததும், அவளுக்கு இடது தொடைக்கு கீழ் முழங்கால் இலேசாக உதறியது. இரு கால்களும் தங்கள் வலுவினை இழந்து பஞ்சாக துவண்டன. கட்டிலில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். மீனாவின் பிறந்த நாளன்றுதான் அவரை, அவள் கடைசியாக சந்தித்து இருந்தாள். தங்கள் கல்யாணத்தைப்பற்றி அவருடன் மனம் திறந்து பேசிவிட்டு வந்திருந்தாள்.

அந்த வாரக்கடைசியில், கடற்கரையில், செல்வா வெகு மூர்க்கமாக, தன்னை, தன் உறவை, தன் காதலை தன்னிடமிருந்து முறித்துக்கொண்டு போனதும் அவள் நினைவிற்கு வந்தது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் கழித்து, சுகன்யா தில்லிக்கு வந்த பின், நடராஜனுடன் மீண்டும் அன்றுதான் முதன்முறையாக பேசிக்கொண்டிருக்கிறாள்.

"தேங்க் யூ சுகன்யா..!!"

நடராஜனின் குரலில் இருந்த சங்கடம் இப்போது வெகுவாக குறைந்தது போலிருந்தது. தன் 'காலை' அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனையும், சுகன்யாவின் அந்த நேரத்து மனநிலையையும் வெகு துல்லியமாக அவர் கணக்கிட்டு விட்டிருந்தார். அவளுடன் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்பதையும் அவர் திட்டமிட்டுவிட்டிருந்தார்.

"அங்கிள்... மல்லிகா அத்தை எப்படி இருக்காங்க...?" சுகன்யா தன் மூச்சை நீளமாக இழுத்து தன்னை சுதாரித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

"ஏதோ இருக்காம்மா..?"

"ஏன் அங்கிள் சலிச்சிக்கிறீங்க? அவங்களுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே?" வாய்க்கு வாய் தன்னை அன்புடன், உரிமையுடன், தில்லி வருவதற்கு முன் மாமாவென அழைத்துக்கொண்டிருந்த சுகன்யா இன்று தன்னை 'அங்கிள்' என்று விளித்தது அவருக்கு சுருக்கென்றிருந்தது.

"தடிமாடாட்டாம், புத்தியே இல்லாத, ஒரு புள்ளையை பெத்து வெச்சிருக்கோமே? சலிச்சுக்காம என்ன பண்றது?" இப்போது நடராஜனின் குரல் தழுதழுப்பாக இருந்தது.

"அங்கிள்...??"

"சுகன்யா.... மொதல்லே அந்த அறிவுகெட்ட முண்டம் பண்ண தப்புக்கு நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேம்மா..."

நடராஜன் நிஜமாகவே அந்த கசப்பான நிகழ்ச்சியால் கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அவருடைய குரல் அவளுக்கு தெளிவாக சொன்னது. அவர் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருப்பதையும் சுகன்யா உணர்ந்தாள்.

"அங்கிள்... பெரியவங்க நீங்க என்ன தப்பு பண்ணீங்க? எந்த காரணமும் இல்லாம, நீங்க இப்படி என் கிட்ட மன்னிப்பு கேட்டு என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதீங்க... அங்கிள் ப்ளீஸ்..." சுகன்யாவின் கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

"ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சுக்கத்தெரியாதவனா, அவன் மேல உண்மையான அன்பு வெச்ச ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையை குடுக்கத் தெரியாதவனா என் புள்ளையை நான் நான் வளர்த்திருக்கேனே; அது என் தப்புத்தானேம்மா..." நடராஜன் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

"அங்கிள்... செல்வா அன்னைக்கு ரொம்ப கோபமா இருந்தப்ப.. நான் என்னால முடிஞ்சவரைக்கும் பொறுமையா இருந்தேன் அங்கிள்.. என் நடத்தையை திரும்ப திரும்ப அவர் சந்தேகபட்டு என்னைத் தவறா பேசினதுனாலேதான் என் பொறுமையை நான் இழந்துட்டேன்.. அயாம் சாரி..."

"எல்லா விஷயத்தையும் நான் கேள்விப்பட்டேன். நீ தப்பு பண்றவ இல்லேம்மா... உன்னாலத் தப்பு பண்ணவே முடியாதும்மா.. செல்வா உன்னை சந்தேகப்பட்டது ரொம்பப் பெரிய தப்பு..."

"அங்கிள்... எல்லாம் என் கெட்ட நேரம்... இதுல அவரை மட்டும் கொறை சொல்லி எந்த பலனுமில்லே..."

"அயாம் சாரிம்மா... நீ ஆயிரம்தான் சொன்னாலும், என் புள்ளை செல்வா பண்ணது தப்புதாம்மா... நீயில்லே... வேற எந்த பொண்ணாயிருந்தாலும் இந்த அளவுக்கு உன்னை மாதிரி பொறுமையா இருந்திருக்க மாட்டாள்."

"நான் அதையெல்லாம் மறந்துடறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்... அங்கிள்..."



"ரொம்ப சந்தோஷம்மா... நடந்ததை நீ மறந்திட முயற்சி பண்றேன்னு சொல்றியே... உனக்கு உண்மையாவே பெரிய மனசு... ஆனா எங்களையெல்லாம் நீ மறந்துடலியே?"

"நோ... நோ.. அங்கிள் இப்படியெல்லாம் பேசி என்னை அழ வெக்காதீங்க... லாஸ்ட் வீக் கூட நானும் மீனாவும் பேசிகிட்டுத்தான் இருந்தோம். சீனுவும் அப்பப்ப என்கிட்ட பேசிகிட்டுத்தான் இருக்கார்."

"தெரியும்மா... ஆனா நீ செல்வா மேல இன்னும் கோபமா இருக்கேங்கறதும் எனக்குத் தெரியும்... இப்ப ஒரு விஷயத்தை நான் உங்கிட்ட சொல்ல விரும்பறேன்."

"சொல்லுங்க அங்கிள்..."

"எங்களால, உன்னைத்தவிர வேற யாரையும் எங்க வீட்டு மருமகளா நெனைச்சுப்பாக்க முடியலம்ம்மா..."

"....." 


சுகன்யா... 101

"அனு... கிளம்புடீ... என் அத்தான் என்னைப்பாக்க வந்திருக்கார். நான் பேசினதுலேருந்து நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்... காலையிலே இன் ஃபேக்ட் அவர்கிட்ட வேற ஒரு விஷயமா பேசணும்ன்னு நினைச்சேன்... ஆனா அவர் நம்பர் கிடைக்கலே... தீடீர்ன்னு மனுஷன் டெல்லிக்கு வந்து நிக்கறார்...
நான் ஒரு முட்டாள்டீ.. இன்னைக்கு அவருக்கு பர்த்டேன்னு நான் மறந்தே போயிட்டேன்... கீழே போனதும் சரியான சண்டை இருக்கு..." சுகன்யா பரப்பரப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.

"சுகன்யா... உன் அத்தான் உன்னைப் பாக்க வந்திருக்கார். இன்னைக்கு அவருக்கு பொறந்த நாள். கோவிலுக்கு போகணுங்கறார். அவர் கூட நீ போயிட்டு வாடி. உங்கக்கூட நான் வேற எதுக்குடி நடுவுலே?"



"என்னடீ பேசறே? உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன்; நீ எங்கக்கூட வந்துதான் ஆகணும். நீ வரலேன்னா நானும் அவர்கூட லஞ்சுக்கு போக மாட்டேன்..."

"என்னடி இப்படி அர்த்தமில்லாம அடம் புடிக்கறே? உங்க அத்தானை எனக்கு தெரியாது. என்னை அவருக்குத் தெரியாது?" அனு நிஜமாகவே தயங்கினாள்.

"அனு... என் அத்தானை உனக்குத் தெரியாட்டா பரவாயில்லே; ஆனா நான் சொல்றதை கேளு. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீயும் சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் விரும்பறேன்." சுகன்யாவின் முகத்தில் காரணமேயில்லாமல் ஒரு கள்ளச்சிரிப்பு பொங்கி பொங்கி வந்து கொண்டிருந்தது.

"நீ சந்தோஷமா இருக்கேங்கறது உன் முகத்தைப் பார்த்தாலே நல்லாத் தெரியுதுடீ" அனு நகருவதாக தெரியவில்லை.

"அப்படீனா இப்ப நீ எதுவும் பேசாம என் கூட எழுந்து வா..." சுகன்யா, அனுவின் கையை பிடித்து அவளை இழுத்தாள்.

"ஓ.கே. நான் ரிசப்ஷன் வரைக்கும் வர்றேன். உன் அத்தானை விஷ் பண்ணிட்டு ரூமுக்குத் திரும்பிடறேன்... இஸ் தட் ஓ.கே.?"

"இல்லே. நிச்சயமா இல்லே. ரிசப்ஷன் வரைக்கும் வர்றேங்கறே? அப்படியே கோவிலுக்கும், லஞ்சுக்கும் எங்கக்கூட வர்றதுல உனக்கு என்னடி பிரச்சனை? காலையிலே கோவிலுக்கு போகணும்ன்னு நீயே சொன்னியா இல்லியா?"

"ஆமாம் சொன்னேன்..."

"நானும் என் அத்தானும் லவ்வர்ஸா? அப்படீல்லாம் ஒண்ணுமில்லையே? ஹீ ஈஸ் ஜஸ்ட் மை ஃபிரண்ட் ஆஸ் தட் ஆஃப் யூ... எங்கக்கூட வர்றதுக்கு நீ ஏன் தயங்கறே?"

"சே... சே... அவரை எனக்கு முன்னே பின்னே தெரியாதேடீ... நீங்க ரிலேடிவ்ஸ்... உங்களுக்குள்ள இன்னைக்கு பேசிக்கறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும்.. அவரோட மேரேஜ் பத்தி நீ பேசும் போது நான் எதுக்கு குறுக்கேன்னு நினைக்கறேன் அவ்வளவுதான்."

"எனக்கு பிரச்சனை இல்லே.. என் அத்தானுக்கு நீ வர்றதுனாலே எந்தப் பிரச்சனையும் இருக்காது... அவர் ரொம்ப ஜோவியல் டைப்... எனக்கு அவரைப்பத்தி தெரியும்..."

"என்னமோ நீ சொல்றே? ஆனாலும் எனக்கு தயக்கமாத்தான் இருக்கு.."

"அனுக்குட்டி... சும்மா படுத்தாதேடி.. சட்டுன்னு கிளம்புடி செல்லம்..."

அனுவைக் கொஞ்சிக்கொண்டே எழுந்த சுகன்யா,
அவளை விருட்டென இழுத்து தன் தோளோடு அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள். சுகன்யாவின் முகத்தில் பூத்திருந்த அந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்ன என்பதை அந்த நொடியில் அனுவால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியவில்லை. சுகன்யா அறையை பூட்டி சாவியை தன் தோள் பையில் போட்டுக் கொண்டாள். அனுவின் இடுப்பில் தன் இடது கையை தவழவிட்டவளாக, வேகமாக ரிசப்ஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"அனு... உன் லவ்வரோட பர்த் டே என்னைக்குங்கறதை நீ நிஜமாவே மறந்திட்டியா?" அவர்கள் இருவரும் ரிசப்ஷனை நோக்கி மெல்ல நடந்துகொண்டிருந்தார்கள்.

"இப்ப எதுக்கு இந்தக்கேள்வியை கேக்கறே நீ?"

நடந்து கொண்டிருந்த அனு சட்டென நின்றாள். அன்றைய தேதி ஜூன் மூன்று என்பது சட்டென அவள் மனதுக்குள் உறைக்க அவள் காதலனின் களையான முகம் அவள் கண்ணுக்குள் வந்து நின்றது. சுகன்யாவின் முகத்திலிருந்த குறும்புப்புன்னகையின் அர்த்தம் இன்னும் அவளுக்கு முழுமையாக விளங்கியிருக்கவில்லை. அனு, ஒரு நொடி, சுகன்யாவின் கையை இறுக்கிப்பிடித்தாள். சுகன்யா மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

"அனு... உன் மனசுக்குள்ளவே நீ நினைச்சிக்கிட்டு இருக்கற உன் காதலனை, அவனோட பிறந்த நாளன்னைக்கு, நீ விஷ் பண்ண விரும்புவேன்னு நான் முழுமையா நம்பறேன்." இதை சொல்லிவிட்டு சுகன்யா, அனுவின் முகத்தை நோக்கி மிக மிக இயல்பாக சிரித்தாள். அவள் உதடுகளில் இருந்த குறும்பின் அர்த்தம், அனுவுக்கு இப்போது இலேசாக புரிவது போல் இருந்தது.

"சுகன்யா... என்னடி சொல்றே நீ? உண்மையைச்சொல்லுடீ... இப்ப இங்கே வந்திருக்கறது யாரு?" இப்போது அவர்கள் ரிசப்ஷனை அடைந்து விட்டிருந்தார்கள். 


“ஹாய் சுகன்யா ஹவ் ஆர் யூ? ஹாய் அனு... ஹவ் டு யூ டூ? எப்போ, எங்கே, யாரை, யார்கூட சந்திப்போம்ன்னு எதிர்பாக்கவே முடியலியே? நம்ம லைப்ல இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு நிஜமாவே நான் இன்னைக்கு ஆச்சரியப்படறேன்? திஸ் ஈஸ் ரியலி எ சர்ஃப்ரைஸ் டு மீ. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஃப்ரெண்ட்ஸா?” சம்பத் வியப்புடன் பேசிக்கொண்டிருந்தான்.

சுகன்யாவுடன் வந்துகொண்டிருந்த அனுராதாவைக் கண்டதும் சம்பத்தின் முகத்தில் இருந்த உற்சாகப் புன்னகையின் நிறம் சற்றே மாறி மங்கலடித்தது.ஒரே நொடியில் அவன் தன்னை சுதாரித்துக்கொண்டு, எப்போதும் தன் முகத்திலிருக்கும் இயல்பான புன்னகையை வரவழைத்துக் கொண்டான். சினேகிதிகள் இருவரையும் இதமான குரலில் விஷ் செய்தவன், முகத்தில் சிறிதும் தயக்கமேயில்லாமல் அவர்கள் கைகளையும் பிடித்து குலுக்கினான்.

ரிசப்ஷனுக்குள் நுழையும் போதே அங்கே வந்திருப்பது யாராக இருக்கும் என்பதை அனு ஓரளவுக்கு யூகித்துவிட்டிருந்தாலும், சுகன்யாவுக்கு சம்பத் நெருங்கிய உறவு என்பதை மட்டும் அவளால் சுத்தமாக நம்பவே முடியவில்லை. அவளும் சம்பத்தைப்போல் தன்னுள் திகைத்துத்தான் போயிருந்தாள்.

அனுவின் யூகத்துக்கு ஏற்ப, சம்பத் ரிசப்ஷன் வாசலில் நின்றவாறு புன்னகையுடன் தங்களை விஷ் செய்ததைக் கண்டதும், அவள் மனதில் இனம் புரிந்து கொள்ள முடியாத ஒரு மகிழ்ச்சி பீறிட்டெழ ஆரம்பித்தது. சம்பத்தை அவள் கடைசியாக பார்த்து ஒரு வருஷத்துக்கும் மேலாகியிருந்தது.

அனுவின் மனதை கொள்ளையடிக்கும் கவர்ச்சியான அதே சிரிப்பு, இன்றும் சம்பத்தின் முகத்தில் பூத்திருந்தது. அந்த இனிமையான, இதமான, சிரிப்பில்தானே அவள் அவனிடம் மயங்கி போயிருந்தாள். அவனுடைய கம்பீரமான குரலில் தானே, அவள் தன் மனதை அவனிடம் பறிகொடுத்திருந்தாள். அவனுடைய மிடுக்கானத் தோற்றத்தை கண்டுதானே தன் காதலை அவனிடம் தெரிவித்திருந்தாள்.

சம்பத் இப்ப கொஞ்சம் மெலிஞ்சி போயிருக்கானே? எப்பவும் பார்ட்டி பார்டீன்னு அலையறவன்; இன்னும் அந்த பழக்கமெல்லாம் இவனுக்கு இருக்கோ என்னவோ? நேரத்துக்கு சரியா சாப்பிடறது இல்லையோ? ஆனா இந்த ஒரு வருஷத்துலே, முகத்துல ஒரு மெச்சூரிட்டி வந்த மாதிரி இருக்கே?

அவனே சொன்ன மாதிரி, திடுதிப்புன்னு, எதிர்பார்க்காத நேரத்துல, அவனோட பொறந்த நாளைன்னைக்கு என் எதிர்ல வந்து நிக்கறானே? நான் அவனை காதலிச்சது, நான் அவங்கிட்ட என் நேசத்தை சொன்னது, இதெல்லாம் அவனோட ஞாபகத்துல இருக்குமா? என்னைப் பாத்ததும் வெகு இயல்பா சிரிச்சானே?

இதுக்கு என்ன அர்த்தம்? என்னை அவன் மறக்கலேன்னுதானே அர்த்தம். கடைசீல என் மனசுக்குள்ள இருக்கற ஆசை நிறைவேறப்போகுதா? என் வேண்டுதல் வீண் போகலையா? நான் கும்பிடற தெய்வம் என்னை கைவிடலியா? தெரியலியே? அனுவின் மனம் மகிழ்ச்சியில் ஒரு பக்கம் பொங்க, மறுபுறம் ஆயிரம் கேள்விகளுடன் தவிக்க, அவள் உடல் சிலிர்த்துப்போய் நின்றாள்.

"அயாம் பைன்... ஹவ் டூ யூ டூ சம்பத்... ஹேப்பி பர்த் டே டு யூ" அனு தன் மனசார அவனை வாழ்த்தினாள்.

"தேங்க் யூ அனு... தேங்க் யூ வெரிமச்...?" சம்பத் அனுவின் வலது கையை மென்மையாக அழுத்தினான்.

"அத்தான்... அனுவோட கையை குலுக்கினது போதும்.. என் பக்கமும் கொஞ்சம் திரும்புங்க... ஹேப்பி பர்த் டே டு யூ..." சுகன்யா தாமரையாக மலர்ந்தாள்.

"தேங்க் யூ சுகா... உன் வாழ்த்துக்கு தேங்க்யூ... பட் இன்னைக்கு ஒரு நாளாவது என்னை நீ கிண்டல் பண்ணாம இரேன்.." அவளிடம் கெஞ்சுவது போல் அவன் நடித்தான்.

"அத்தான்.. நீங்க உண்மையைச்சொல்லுங்க. என் ஃப்ரெண்ட் அழகா இருக்காளா இல்லியா?"

"ஹேய்.. அனுவுக்கென்ன? ஷி ஈஸ் வெரி வெரி நைஸ் லேடீ.. அண்ட் ஷீ ஈஸ் ஆல்வேஸ் ப்யூட்டிஃபுல்..." அனுவின் முகத்தை, அவனுடைய பாராட்டுதலால் சிவந்த அவள் முகத்தை, அவன் தன் ஓரக்கண்ணால் பார்த்தான். உண்மையாகவே அனு இப்ப முன்னைக்கு அழகா இருக்காளே? உடம்புல கொஞ்சம் சதை போட்டிருக்கு... நல்லா கலர் ஏறின காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்கா? சம்பத் அவளை நீளமாக ஒரு முறைப்பார்த்தான்.

"அத்தான்... அனுவையோ, அல்லது அவளோட வாழ்த்தையோ இன்னைக்கு நீங்க எதிர்பாத்தீங்களா?"

"நிச்சயமா இல்லே. பட் அயாம் ரியலி ஹேப்பி டு மீட் ஹர் அகெய்ன். அனுவை சந்திச்சி கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே இருக்கும். பெங்களுரூலேருந்து எங்க கம்பெனி வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் இப்பத்தான் அவளைப் பாக்கறேன். தேங்க் யூ அனு. தேங்க் யூ ஃபார் யுவர் விஷ்ஷஸ்." மீண்டும் ஒரு முறை சம்பத் அவள் கையை பிடித்து மகிழ்ச்சியுடன் குலுக்கினான்.

"உலகம் ரொம்ப சின்னது. நாம நினைக்காததெல்லாம் நடக்குதுன்னு, போனவாரம் நான் சொன்னப்ப நீங்க சிரிச்சீங்களே, இப்ப என்ன சொல்றீங்க?" சுகன்யா சம்பத்தை நோக்கி கேலியாகச் சிரித்தவள், அனுவையும் குறும்பாக நோக்கினாள்.

"யெஸ்... யூ ஆர் ரைட் சுகன்யா..."அவர்கள் மெல்ல காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். இதமான காற்று அவர்கள் உடலைத் தழுவிக் கொண்டுபோனது.


"நான் ரூமுக்கு போறேன்டீ சுகன்யா... நீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க..." காரை நெருங்கியதும் அனு சற்றே தயங்கி நின்றாள்.

"வொய்... அனு?எங்க கூட வர்றதுக்கு உனக்கென்ன தயக்கம்? ஏதோ என்னை முன்னே பின்ன தெரியாதவன் மாதிரி ஏன் நினைக்கிறே?"

"அப்படீல்லாம் இல்லே சம்பத்..."

"என் பர்த்டேன்னைக்கு, எங்க கூட லஞ்ச் சாப்பிட உனக்கு இஷ்டமில்லையா? இல்லே; என்னையே உனக்குப் பிடிக்கலையா?" சம்பத் பேசியபின் சட்டெனத் தன் நாக்கை கடித்துக் கொண்டான். ஏதோ நினைவில் சட்டென அவளுடைய இடது கையைப் பிடித்தான்.

உன்னைப் பிடிக்காமலாடா, உன் பொறந்து நாளுக்கு கோவிலுக்குப் போய், உன் பேர்ல அர்ச்சனை பண்ண நினைச்சேன்? என் காதல் வேண்டாம்ன்னு என் மனசை நீ நொறுக்கிட்டுப் போயிருக்கலாம்.

ஆனா நான் இன்னும் உன்னை மறக்கவும் முடியாமே, என் மனசுலேருந்து உன்னை தூக்கி எறியவும் முடியாமே ஒரு பைத்தியக்காரியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என் மனசுல இருக்கறது உனக்கு புரியாதுடா. அனு தன் மனதுக்குள் புழுங்கினாள்.

"அத்தான்.. அனு இன்னைக்கு, அவ மனசுக்கு ரொம்ப நெருக்கமான யார் பேருக்கோ கோவில்லே அர்ச்சனை பண்றதா இருந்தா. அவ மனசுக்கு நெருங்கியவங்க யாருங்கறதை நான் யதேச்சையா கண்டுபுடிச்சிட்டேன்." அவர்கள் இருவரும் ஒன்றாக உட்காரட்டும் என்ற எண்ணத்தில் சுகன்யா காரின் முன் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டாள். அனுவும் சம்பத்தும் பின் சீட்டில் அமர்ந்தனர்.



"சுகன்யா... பிளீஸ்... கொஞ்ச நேரம் சும்மாருடி..." அனு தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள். காரில் உட்கார்ந்த பின்னும் சம்பத், அனுவின் கரத்தை தன் பிடியிலிருந்து விடவில்லை.

"அனு... பீ சீர்ஃபுல்..." சம்பத் ஆதரவாக அவளை நோக்கி புன்னகைத்தான்.சம்பத்தின் கரத்திலிருந்து தன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டாள் அனு.

"அத்தான்... அனு சொல்ற மாதிரி நான் சும்மாயிருக்கப் போறது இல்லே. நீங்க என்ன காரணத்துக்காக அனுவோட அன்பை, காதலை வேணாம்ன்னு சொன்னீங்களோ... இப்ப அதைப்பத்தி நான் ஆராய்ச்சி பண்ண விரும்பலே. அதனால எந்த பிரயோசனமும் இல்லே. ஒரு விதத்துல அது ஏற்கனவே முடிஞ்சு போன விஷயம்."

"சுகன்யா... இப்ப இதைப்பத்தி நாம பேசியே தீரணுமா?" சம்பத் தன் முகத்தை, கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவன், ஓரக்கண்ணால் அனுவைப் பார்த்தான். சுகன்யாவின் மனதிலிருப்பது என்னவென்று அவனுக்கு புரிந்துவிட்டது.

அனு யாரையுமே பார்க்காமல் கார் கண்ணாடியின் வழியே சாலையை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தாள்.சுகன்யா அடுத்ததாக என்னப்பேசுவாள் என்பது அவளுக்கும் புரிந்துவிட்டது.

"அத்தான்.. சுத்தி வளைச்சுப்பேச எனக்கு விருப்பமில்லே. உங்களுக்கும் அது பிடிக்காது. நாமெல்லாம் குழந்தைகளும் இல்லே. இந்த வயசுல ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்க்கையிலே உண்மையா இருக்கறதுதான் முக்கியம். அதுதான் புத்திசாலித்தனம்."

"அனு என்னோட ஃப்ரெண்ட்.. அனுவும் நீங்களும் ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸா இருந்திருக்கீங்க. உங்களுக்கு அவளைப்பத்தி, அவ குணத்தைப்பத்தி, தெரிஞ்ச மாதிரி எனக்கும் அவளைப்பத்தி ஓரளவுக்குத் தெரியும்."

"இந்த நிமிஷத்துல, உங்க மேல அனு வெச்சிருக்கற ஆசை, காதல், நேசம், இதைப்பத்தியெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும்." ஆனா உங்களுக்குத் தெரியாது.நீங்க அதை தெரிஞ்சுக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்."

"ம்ம்ம்.." சம்பத் தன் பார்வையை அனுவின் புறம் திருப்பினான். அனு இன்னமும் ரோடையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஒரு நேரத்துல, அனுவோட காதலை நீங்க ஏத்துக்க மறுத்து இருக்கலாம். ஈரத்துணியிலே சுத்தி வெச்சிருக்கற மல்லிகை பூவை மாதிரி, இன்னமும் உங்களை, அவ தன் மனசுக்குள்ளவே பொத்தி பொத்தி வெச்சிக்கிட்டு இருக்கா. உங்க நினைப்புங்கற வாசனையை தன் உள்ளத்குள்ளவேமுகர்ந்து முகர்ந்து பாத்துகிட்டு, தன் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கா."

"சுகன்யா... இன்னைக்கு அவரோட பர்த் டேப்பா. இன்னைக்கு பூரா அவர் சந்தோஷமா இருக்கணும். இதுதான் என் ஆசை. எனக்கும் அவருக்கும் நடுவுல என்னைக்கோ நடந்த ஒரு மேட்டரை, இப்ப நீ டிஸ்கஸ் பண்ணியே ஆகணுமா?" அனு தன் பார்வையை காருக்குள் திருப்பமால் முனகினாள்.

"கொஞ்ச நேரம் நீ சும்மாயிருடீ... நீயாடீ என்னை இவர்கிட்ட உன்னைப்பத்தி பேச சொன்னே?"

“ப்ச்ச்ச்... இல்லே...” அனு மீண்டும் மெல்லிய குரலில் முனகினாள்.

“பாத்தீங்களா அத்தான்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செல்லுலே பேசும்போது, நான் யார் மனசை புரிஞ்சுகலேன்னு என் கிட்ட கேட்டீங்களே? இப்ப உங்களுக்கு புரியுதா?"

"சுகா.."

"உங்க பர்த் டே அன்னைக்கு உங்க சந்தோஷம்தான் முக்கியம்ன்னு நினைக்கறவளோட மனசைத்தான் இப்ப நீங்க முக்கியமா புரிஞ்சிக்கணும்."

“சுகன்யா... அயாம் சாரி.. உண்மையாகவே உன்னோட குற்றசாட்டுக்கு இப்ப என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலே.” முகத்தில் இலேசான குழப்பத்துடன் சம்பத் தன் சீட்டில் தளர்ந்து சரிந்தான்.

“அத்தான்.. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொல்றதை மட்டும் காது குடுத்து கேட்டாப் போதும்...”

“சுகன்யா உன் அத்தான்கிட்ட நீ பேச விரும்பறதையெல்லாம், என் எதிர்லேதான் பேசணுமா?” அனு அசௌகரியமாக தன் ஆசனத்தில் நெளிந்தாள்.

"ஆமாம்டீ... நீ கொஞ்ச நேரம் பேசாம இருன்னு சொல்றேன்"

“அத்தான், உங்ககிட்ட எனக்கிருக்கற உறவாலேயும், உங்க மேல இருக்கற உண்மையான அக்கறையாலேயும், அனுவோட ஃப்ரெண்டுங்கற உரிமையாலேயும், இப்ப நான் உங்க ரெண்டு பேரைப்பத்தியும் பேசிகிட்டு இருக்கேன். உங்க தனிப்பட்ட விஷயத்துல நான் தலையிடறது உங்களுக்கு பிடிக்கலேன்னா அதை ஓப்பனா சொல்லிடுங்க..."

இதுவரை பின்சீட்டை நோக்கி அவர்களைப் பார்த்து உரையாடிக்கொண்டிருந்த சுகன்யா விருட்டென திரும்பி உட்கார்ந்துகொண்டு, தன்னெதிரில் தன்னை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கும் அகலமான வீதியைப்பார்க்க ஆரம்பித்தாள்.

"சுகா.. உன்னை நான் தப்பா எதுவும் சொல்லலீயே? எதுக்காக நீ கோவப்படறே?" சம்பத் தன் முகம் சுருங்கினான்.

"பின்னே எப்படி பேசணுங்கறீங்க? நீங்க பழைய சம்பத்தாயிருந்தா நான் அனுவைப்பத்தி உங்ககிட்ட பேசியே இருக்க மாட்டேன். நிச்சயமா அவளை என்னோட அழைச்சிக்கிட்டே வந்திருக்க மாட்டேன்."

"சுகன்யா... ப்ளீஸ்... நான் சொல்றதை கேளேன்." தன்னால் அவர்கள் நடுவில் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாதேயென்ற ஆதங்கத்தில் அனு அவர்கள் பேச்சின் நடுவில் நுழைந்தாள்.

"சரிடீ.. கடைசியா என்னை நீ ஒரே ஒரு வார்த்தை பேசவிடுடீ... அத்தான்... இப்ப நீங்க அனுவோட செல்லை வாங்கிப்பாருங்க. ஒண்ணுல்லே; ரெண்டுல்லே; பத்து போட்டோ வெச்சிருக்கா. அத்தனையும் உங்களோடதுதான். ஒரு நாள்லே பத்து தரம் திரும்ப திரும்ப அந்த படங்களை பாத்துக்கிட்டு இருப்பா..." சம்பத் அனுவைப்பார்த்தான்.

"அவளைப் பொறுத்தவரைக்கும், அவ காதல் முடிஞ்சுப் போன விஷயம் இல்லே. அவ உங்களையே எப்பவும் தன்னோட மனசுக்குள்ளவே நெனைச்சிக்கிட்டு இருக்கா." சுகன்யா இப்போது அவர்களை பார்க்காமல் கார் ஓடிக்கொண்டிருந்த பாதையை நோக்கியவாறு பேசிக்கொண்டிருந்தாள்.

"ஓ மை காட்..." இம்முறை சற்று உரக்கவே முனகினான் சம்பத்.

முனகிய சம்பத் தன் அருகில் உட்கார்ந்திருந்த அனுவின் முகத்தை தயக்கத்துடன் மீண்டும் ஒருமுறைப் பார்த்தான். அனு தன் இருகரங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக கோர்த்து தன் மடியின் மேல் வைத்திருந்தாள்.

கார் ஓடும் வேகத்தில் அனுவின் முகத்தில் அடித்த மெலிதான வெய்யிலில், அவளுடைய குழந்தை போன்ற முகம் அழகாக மின்னிக்கொண்டிருந்தது. அனுவுக்குத்தான் எவ்வளவு அழகான மூங்கில் மாதிரி வழவழப்பான கைகள்? எத்தனை நீள நீளமான விரல்கள் இவளுக்கு? அமைதியான முகம். ஆரவாரமில்லாத பேச்சு. சம்பத், தன் பார்வையில் சிறிதும் காமம் என்பதேயில்லாமல் அவளை நோக்கினான்.

அனு நீ அழகு மட்டுமில்லே; புத்திசாலியும் கூட; இதுல எனக்கு கொஞ்சமும் சந்தேகமேயில்லை. உன்னை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உன் அழகுல எனக்கு மோகமிருக்கு. ஆனா உன்னை நான் காதலிக்கலைங்கறதுதான் உண்மை. உன்னை மட்டுமல்ல; என்னால எந்தப்பெண்ணையும் காதலிக்க முடியாது. எந்த பெண்ணோடவும் நிரந்தரமான உறவை வெச்சுக்க எனக்கு விருப்பமில்லே. எனக்கு காதல், திருமணம், இதுலேல்லாம் சிறிதளவும் நம்பிக்கையில்லை.

அனு... என்னை நீ புரிஞ்சுக்கணும். உன்னை நான் எந்த விதத்திலும் வற்புறுத்தலை. உனக்கு சரின்னா, நம்ம ஓய்வு நேரத்துல, நம்ம மனசுல இருக்கற ஆசைகளை, உடலின் தேவைகளை, நம்ம விருப்பங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து தீத்துக்கலாம். உனக்கு விருப்பம் இருக்கறவரைக்கும் இந்த உறவு நமக்குள்ள நீடீக்கும். உனக்கோ எனக்கோ போதும்ன்னு தோணும்போது இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடலாம்.

அனுராதா தன் காதலை சம்பத்குமாரனிடம் தெரிவித்தபோது, அவளை, அவள் மனதை, அவள் காதலை புரிந்துகொள்ளமால், அவளிடம் கொஞ்சமும் வெட்கமில்லாமல், பைத்தியக்காரத் தனமாக பேசியது அவன் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்துலதான் நான் புத்தியே இல்லாம, யாரையுமே மதிக்காம, திமிர் பிடிச்சி அலைஞ்சுக்கிட்டு இருந்தேனே? சம்பத் தன் தலையை வேகமாக உதறிக்கொண்டான்.

என்னை இவ காதலிக்கறான்னு தெரிஞ்சும், இவளோட காதல் எனக்கு தேவையில்லைன்னு இவளை நான் உதறினதுக்கு அப்புறமும், இவ தன் மனசுக்குள்ளாகவே ஒரு வருஷத்துக்கும் அதிகமா என்னை காதலிச்சுக்கிட்டு இருக்காளே? என் பிறந்த நாளை நினைவு வெச்சுக்கிட்டு இருந்து, என்னோட நலனுக்காக, கோவில்ல அர்ச்சனை செய்ய நினைக்கிறாளே?

என்னை நினைச்சு, தன் காதலை நினைச்சு, என் கண் முன்னாலேயே என் நினைவுல இவ தன் கண் கலங்குகிறாளே. எனக்காகவும் ஒருத்தி அழுறாளா? இது உண்மையாவே சாத்தியம்தானா? சம்பத் அதிர்ந்து போனவனாக அனுவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏன்டா முடியாது? சுகன்யாவை நீ காதலிக்கறேங்கலையா? ஆறு கடலை சேர்ந்துதான் ஆகணும்ன்னு நீ கதை சொல்லலியா? எவ்வளவு காலமானாலும் நீயா வர்ற வரைக்கும் உனக்காக காத்திருப்பேன்னு சுகன்யாகிட்ட ஜம்பமடிச்சிக்கிட்டியேடா, அது உனக்கு மறந்து போச்சா? சுகன்யாவை நீ உன் மனசுக்குள்ளவே நினைச்சுக்கிட்டு இருக்கறது உண்மைன்னா அனு ஏன் உன்னை தன் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு இருக்கக்கூடாது?

மனதுக்குள் வெகுவாக அதிர்ந்த சம்பத் மெல்ல அனுராதாவின் பக்கம் திரும்பினான். அவள் வலது கரத்தை மிகுந்த நேசத்துடன் வெகு மெண்மையாக தன் இடது கையால் பற்றினான். அனு அவனை நோக்கித் திரும்ப, அவன் விழிகள் அவள் விழிகளை கனிவுடன், காதலுடன் நோக்கின. அனுவின் விழிகள் லேசாக கலங்க ஆரம்பித்தன.

"அனு... ஏண்டி உன் வாய்லே என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்கே? வாயைத்தொறந்து சொல்லேண்டீ.."

"என்னடீ சொல்ல சொல்றே?" அனு தழுதழுத்தாள்.

"உங்களை நான் காதலிக்கலே; உங்களை நான் எப்பவோ மறந்துட்டேன்; சுகன்யா சொல்லிகிட்டு இருக்கறதெல்லாம் சுத்தப்பொய்ன்னு என் அத்தான் மூஞ்சைப்பாத்து ஒரே ஒரு தரம் சொல்லேண்டீ.."

உள்ளத்தில் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தில், ஆசையில், தன் மேலிருக்கும் ஒரு தலைக்காதலால், தன் பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற மறுக்கும் தன் அத்தானின் மனதை மாற்றிவிடவேண்டும் என்ற உணர்ச்சியுடன் கோபமாக சுகன்யா அனுவிடம் வெடித்தாள். தன் பேச்சுக்கு பதிலேதும் வராததால், சட்டென திரும்பி பின் சீட்டை நோக்கினாள்.

காரின் பின்னிருக்கையில், சம்பத்தின் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டு, அனு தன் விழிகளை மூடி உட்கார்ந்திருந்தாள். சம்பத்தின் இடது கரம் அனுவின் தோளில் விழுந்திருந்தது. அனுவின் வலது கரத்தை, அவன் தன் இடது கரத்தால் பற்றி வருடிக் கொண்டிருந்தான்.

கார் மலைமந்திரின் முன் கிறீச்சிட்டு நின்றது.

"அனு குட்டீ உன் கண்ணைத் தொறடீ... கோவில் வந்திடிச்சிடீ..." களிப்புடன் கூவிய சுகன்யா காரின் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கினாள்.

"சுகன்யா... ஒரு சின்ன திருத்தம் சொல்லட்டுமா?" தன் பக்கத்து கதவைத் திறந்துகொண்டு இறங்கிய சம்பத், தன் முகத்தில் புன்னகையுடன், அனு இறங்குவதற்காக வசதியாக அவள் பக்கத்து கதவை திறந்து கொண்டு நின்றான்.

"அத்தான் நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்களோ, அதை முதல்லே உங்க அனுராதாகிட்ட சொல்லுங்கோ... அவ தன் காது குளிர கேக்கட்டும்..." சுகன்யாவின் முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

"ஓ.கே... சுகன்யா... கோவில் என்னைத் தேடி வராதுங்கறது எனக்கு இன்னைக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு. எனக்காக திறந்திருக்கிற ஒரு கோவிலைத் தேடி நான்தான் போகணும்." காரிலிருந்து இறங்கிய அனு அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் பார்த்தாள்.

"அனு... எனக்காக நீ காத்துக்கிட்டு இருந்தே. இப்ப நானே உன்னைத் தேடி வந்திருக்கேன். என்னை நீ ஏத்துக்குவியா?" சம்பத் படபடக்கும் உள்ளத்துடன், அனுவின் முகத்தை உற்று நோக்கினான்.



அனுராதா, சம்பத்குமாரனின் இடதுபுறத்தில் நின்றிருந்தாள். அவள் பதிலேதும் பேசாமல், தன் வலது கரத்தால், அவன் இடது முழங்கையை வளைத்துக்கொண்டாள். அவன் இடது தோளில் தன் தலையை சாய்த்துகொண்டு, சில நொடிகள் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றாள்.

"சுகன்யா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டீ." மெல்லிய குரலில் சொன்னவள் சம்பத்தை இழுத்துக்கொண்டு அர்ச்சனை தட்டுகள் விற்கும் இடத்தை நோக்கி, தன் கால்கள் தொய்ய, தொய்ய, மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.


சுகன்யா... 100

இரவு உணவை முடித்துக்கொண்டதும், மறுநாள் சனிக்கிழமை விடுமுறைதானே என்ற காரணத்தால், சுகன்யா முதல்நாள் இரவு ஒரு மணிவரை ஆங்கிலப் புத்தகமொன்றை படித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த அந்த நாவலைப் படித்து முடித்த பின்னரே அவளுக்கு தூக்கம் வந்தது.

மறு நாள் காலையில் சுகன்யா படுக்கையை விட்டு எழுந்தபோது மணி எட்டைத் தொட்டுக்கொண்டிருந்தது. பாத்ரூமிலிருந்து தண்ணீர் வழியும் சத்தம் தொடர்ந்து வந்துகொண்டிருக்க, பக்கத்து கட்டில் காலியாக கிடந்தது. படுப்பதற்கு முன், காலையில் சீக்கிரமாக எழுந்து துணி துவைக்க வேண்டுமென அனுராதா முன்னாள் இரவு சொல்லிக்கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது.

புது இடத்திற்கு சுகன்யாவின் உடம்பும், மனசும் இந்த இரண்டு மாதத்தில் வெகுவாகப் பழகிவிட்டன. கண் விழித்த பின்னும், அரைமணி நேரம் உடலை அசைக்காமல், கட்டிலிலேயே கிடந்தாள் சுகன்யா. மனதை சூன்யத்தில் நிலைக்கவிட்டாள். புருவ மத்தியில் தன் கவனத்தை நிறுத்தினாள். வெகு தூரத்தில் நீல ஜ்வாலை மெல்ல எழுந்தது. இடம் வலம் அசைந்தது. மேலும் கீழுமாக அசைந்தது. பின் நிலைத்து நின்றது. பிரகாசித்தது. உள்ளமெல்லாம் இதமான சுகம் மெல்லிய தூறலாக பொழிந்தது. பரவியது.



கட்டிலைவிட்டு எழுந்த சுகன்யா பால்கனிக்கு வந்தபோது, கிழக்கில் வானம் இருட்டிக்கொண்டிருந்தது. பொன்னிற சூரியன் கரு மேகங்களுக்குள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தான். ஆந்தி என்னும் மண்ணோடு சேர்ந்த பேய்க்காற்று வேக வேகமாக அடித்துக்கொண்டிருந்ததில், விடுதி காம்பவுண்டுக்குள் வளர்ந்திருந்த மாமரங்களில் இருந்த மாம்பிஞ்சுகள் சடசடவென காற்றில் கொட்டின. குழந்தைகள் கூச்சலுடன் ஓடி ஓடி தரையில் விழும் மாங்காய்களை பொறுக்கி சேர்த்துக்கொண்டிருந்தனர்.

சுகன்யா அணிந்திருந்த லூசான பைஜாமா, அவள் இடுப்புடன், தொடைகளுடன், புட்டங்களுடன் ஒட்டிக்கொண்டு, அழகான அவள் தேகத்தின் வடிவழகை தெளிவாக வெளிப்படுத்திக்கொண்டிருக்க, அவள் கூந்தல் காற்றில் அலையலையாக பறந்துகொண்டிருக்க, பால்கனியில் சுகன்யா ஒரு தேவதையைப்போல் நின்று கொண்டிருந்தாள்.

"மைடியர் ப்யூட்டி க்யூன்... குட்மார்னிங்..."

அனுராதா ஈரக்கைகளுடன் சுகன்யாவை, அவள் பின்புறத்திலிருந்து கட்டிக்கொண்டாள். அவளுடைய மெண்மையான கைகளிலிருந்து துணி வெளுக்கும் சோப்பின் வாசம் சுகன்யாவின் மூக்கிலடிக்க, அவள் விருட்டென அனுவின் பிடியில் திமிற, அனு அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, அவள் இடுப்பிலும் நறுக்கென கிள்ளிவிட்டு அறைக்குள் துள்ளி ஓடினாள்.

"இந்த மாதிரி தீடீர்ன்னு வந்து என்னை நீ கட்டிப்புடிக்காதேடீன்னு உனக்கு எத்தனை தரம் நான் சொல்லியிருக்கேன்? யாரோன்னு பயந்தே போயிட்டேன் நான்?" சுகன்யா அனுவை துரத்திச்சென்று அவள் முதுகில் பட்டென அடித்தாள். அவள் இவளை விளையாட்டாக அடிக்க, இவள் அவளை திருப்பி செல்லமாக அடிக்க, அவர்களிருவரும் இரண்டு நிமிடங்கள், சிறு குழந்தைகளாக கட்டிலில் விழுந்து புரண்டார்கள்.

"சுகா... மழை வரும் போல இருக்கு... சட்டுன்னு கிளம்புடி... மெஸ் இன்சார்ஜ்க்கு காலையிலேயே போன் பண்ணி விசாரிச்சுட்டேன்... இட்லி, தால் வடை, தொட்டுக்க சாம்பார், தேங்காய் சட்னி... இதான் இன்னைக்கு மெனு. சூடா இருக்கும் போதே போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம். லேட்டாப்போனா ஒண்ணும் கிடைக்காது. அனு தன்னுடலில் பளபளக்கும் பழுப்பு நிற ஜீன்சை மாட்ட ஆரம்பித்தாள்.

"மழை கண்டிப்பா வரும்டீ.. மழைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். மழையில கொஞ்ச நேரம் நனையணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு. முகத்தை கழுவிக்கொண்டு லூசான காட்டன் ட்ரவுசரையும், மெல்லிய சட்டையொன்றையும் அணிந்துகொண்டாள் சுகன்யா. சுகன்யாவின் பருத்த தொடைகளும், மழமழவென்று சுத்தமாக முடியில்லாத அவளுடைய வலுவான கால்களும், அவள் டிரவுசரின் கீழ் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன.

அனு மவுனமாக, முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் தன் செல்லை நோண்டியவாறு நடந்து கொண்டிருந்தாள். அனுவை அவ லவ்வர் கூட சேத்து வைக்கறதுக்கு சின்சியரா நான் ஏன் டிரை பண்ணக்கூடாது? தீடிரென சுகன்யாவின் மனதில் இந்த எண்ணம் எழ அவள் அனுவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள்.

"என்னடீ...?" அனு சிணுங்கினாள்.

"ஒண்ணுமில்லேடீ." சுகன்யா தன் உதட்டைக்கடித்துக்கொண்டாள். தன் செல்லில் இருக்கும் காண்டாக்ட் லிஸ்டை சர்ப் செய்தாள். அவசரஅவசரமாக ஒரு நம்பரை அழுத்தினாள்.

"ஸ்விச்ட் ஆஃப்.." என்ற பதில் மீண்டும் மீண்டும் வர செல்லை தன் ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டாள். 

மெஸ்ஸை நெருங்கும் வேளையில், பட படவென தூறல் போட ஆரம்பித்தது. அனு விருட்டென மெஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

"அனு... கேச் இட்...." சுகன்யா தன் செல்லை அனுவை நோக்கி விட்டெறிந்தாள்.

சுகன்யா தன் மேல் விழும் தூறலில் விருப்பத்துடன் நனைய ஆரம்பித்தாள். தன் கைகளை இடவலமாக வீசி எகிறி எகிறி குதித்தாள். மழையில் நனைந்ததால், தன் மனம் இலேசாகி, தேகம் காற்றில் பறப்பதை அவள் உணர ஆரம்பித்தாள். மழை நின்றதும், அனுவை அழைத்துக்கொண்டு, எங்கேயாவது ஜாலியாக வெளியில் போய் சுற்றிவிட்டு வரவேண்டுமென தன் மனதுக்குள் திட்டமிட்டுக்கொண்டாள்.

போர்டிகோவிற்குள் அடித்துக்கொண்டிருந்த மழையின் சாரலில் தன் உடல் நனைய நின்றிருந்தாள் சுகன்யா. இரு கோப்பைகளில் கொதிக்கும் காஃபியுடன் மெஸ்ஸின் வாசலுக்கு வந்தாள் அனு. சுழன்று சுழன்று அடித்த காற்றில் அனுவின் தலை முடி கொத்தாக அவள் முகத்தில் வந்து விழுந்தாடிக்கொண்டிருந்தது.

கொழு கொழுவென்ற உடலுடன், கள்ளமில்லாத குழந்தை முகத்துடன், சூடான காஃபியை, தன் சிவந்த உதட்டால் ஊதி ஊதி மெல்ல உறிஞ்சிக்கொண்டிருந்த அனுவின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகன்யா.

"ரெண்டு மாசமா பாத்துக்கிட்டு இருக்கேன். இந்த அனுதான் எவ்வளவு நல்லவ? இவளுக்கு முகம் மட்டும்தானா அழகா இருக்கு... மனசும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கே? இவளை வேணாம்ன்னு சொல்றதுக்கு இவ லவ்வருக்கு எப்படி மனசு வந்திச்சி..."

"என்னடி சுகா... எதுக்குடி நீ என்னை உத்து உத்துப்பாக்கறே? என் புருவத்தை காலையில நானே ட்ரிம் பண்ணேன். சரியா இல்லையாடீ? கொஞ்சம் பாத்து சொல்லுடீ..." அனு, சுகன்யாவை நெருங்கி வந்தாள்.

"அனு... என்னைப்போய் ப்யூட்டி குயின்... ப்யூட்டி குயின்னு நீ சொல்றே... ஆனா உண்மையைச் சொல்லணும்ன்னா... என்னை விட நீதான்டீ கொள்ளை அழகா இருக்கே? உன் புருவம் என்னடி புருவம்? உனகென்னடீ கொறைச்சல்? ராஜாத்தி மாதிரி இருக்கே." இதமான காற்றில் அடிக்கும் மழைத்துளிகள் பறந்து வந்து தன் உடலில் மோத, கையிலிருந்த காஃபியை சுகன்யாவும் பரபரப்பில்லாமல் ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.

"ஆமாம்.. என் அழகை நீதான்டீ மெச்சிக்கணும்?"

அனு தன் தலையை கோதிக்கொண்டாள். தான் அணிந்திருந்த காட்டன் குர்த்தியின் முனையை திருகிக்கொண்டே, சுகன்யாவின் தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

"ஏண்டீ அலுத்துக்கறே? வெளியிலே எங்கேயாவது போவலாமா? இன்னைக்கு லஞ்ச் என் செலவுலதான்.. என்னடீ சொல்றே நீ?" சுகன்யா பூவாக சிரித்தாள்.

மழை இப்போது கொட்டோ கொட்டென கொட்டிக்கொண்டிருந்தது. சுகன்யா நிமிர்ந்து மைதானத்தை பார்த்தாள். கூச்சலுடன் மாங்காய் பொறுக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.

"இன்னைக்கு வேணாம்டீ.. நாளைக்கு போவலாமே?" அனுவின் முகத்தில் ஒரு இனம் தெரியாத சோகம்.

"ஏண்டீ உம்முன்னு இருக்கே?"

"ப்ச்ச்ச்.. ஒன்ணுமில்லேடீ..."

"பொய் சொல்றே நீ..." சுகன்யா அவளை தோண்டி துருவ ஆரம்பித்தாள்.

"கோவிலுக்கு போகலாம்ன்னு நினைச்சேன்..."

"என்னடி தீடீர்ன்னு?"

"என் ஃப்ரெண்ட்டோட பர்த் டே இன்னைக்கு... கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணலாம்ன்னு நினைச்சேன்."

"ஃப்ரெண்டுன்னு சொல்றயே... அது அவனா? இல்லே அவளா?"

"ஜெண்டர்ல என்னடி இருக்கு... என் ஃப்ரெண்ட் நல்லாயிருக்கணும்... அதுதான் என் விருப்பம்.." அனு தன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

"மை டியர் ப்யூட்டி குயின்... இன்னைக்கு வெதர் நல்லா இருக்குடீ... உன் இஷ்டப்படியே முதல்ல கோயிலுக்கு போயிட்டு அப்றமா லஞ்சுக்கு போவலாம்... ஈஸ் தட் ஓ.கே ஃபார் யூ?" சுகன்யா தாமரையாக மலர்ந்தாள்.

"ப்ச்ச்ச்... சும்மா நீ என்னை கிண்டல் பண்ணாதேடி. இப்பவும் ஒருத்தனுக்கு ரெண்டு பேரா, ஒரு பெங்காலியும், ஒரு டில்லிவாலாவும், ராத்திரி பகலா உன் கிட்டத்தான் கடலை போடறானுங்க. நீ என் பக்கத்துல இருக்கும் போது எவன்டீ என் பின்னாடி வர்றேங்கறான்?" அனுவின் கண்களில் இப்போது குறும்பு தெறித்துக்கொண்டிருந்தது.

"டோண்ட் பீ சில்லி. எனக்கு கடலையும் வேணாம். பட்டாணியும் வேணாம். இப்பத்தான் நான் நிம்மதியா இருக்கேன். என்னை கொஞ்ச நாளைக்கு இப்படியே நிம்மதியா இருக்க விடுங்கடீ." சுகன்யா அவள் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள்.

"அப்ப நான் நிம்மதியா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?"

"அனு உன் கிட்ட அழகு இருக்கு. படிப்பு இருக்கு. நிரந்தரமான வேலையிருக்கு. எல்லாத்துக்கும் மேல யாருக்கு என்னப் பிரச்சனைன்னாலும், உடனே அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்ங்கற ஆர்வமிருக்கு; எப்பவும் அடுத்தவங்களுக்கு உதவணுங்கற அழகான மனசும் உனக்கிருக்கு. இதுதாண்டீ ஒரு பொண்ணுக்கு உண்மையான அழகு. உன்னோட நல்ல மனசை அவனால புரிஞ்சுக்க முடியலியே; அதை நினைச்சாத்தான் எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு?"

"முடிஞ்சுபோன கதையைப் பத்தி இப்ப என்னடீ? பழசெல்லாத்தையும் விட்டுத்தள்ளுடீ..." அனு வெள்ளையாக சிரித்தபோதிலும் அந்த சிரிப்பில் ஒரு மெல்லிய சோகம் அன்று கலந்திருப்பதாக சுகன்யாவுக்குத் தோன்றியது.

"இல்லடீ... நானும் ஒரு வாரமா என் மனசுக்குள்ளவே யோசனை பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். இந்த ஆண்கள் மனசுல அப்படி என்னதான் இருக்கு? ஆண்கள் ஒரு பெண்கிட்ட என்னதான் தேடறாங்க? எதை எதிர்பாக்கறாங்க?"

"ம்ம்ம்... என்ன எதிர்பாக்கறாங்களா? உன் கேள்விக்கு ஆன்சர் ரொம்ப சிம்பிள்... 'உடம்பு' பெண்கள் கிட்ட அவங்க எதிர்பாக்கறேதே 'பெண்களோட உடம்பைத்தான்டீ..." பொம்பளை கொஞ்சம் செவப்புத்தோலோட இருந்துட்டா கேக்கவே வேணாம்; அவ மொத்தமா ஒழிஞ்சா..." அனு ஹோவென சிரித்தாள்.

"சிரிக்காதேடீ... எனக்கு பத்திக்கிட்டு வருது. உன் ஆளைப்பாத்து நல்லா நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்கணும்ன்னு எனக்குத்தோணுது.." சுகன்யா முகத்தில் தோன்றிய மெல்லிய கோபத்துடன் வெடித்தாள். 




"அனு... நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான்டீ... எல்லாக்காதலனும், தன் காதலிக்கு விருப்பம் இல்லேன்னு தெரிஞ்சாலும், கல்யாணத்துக்கு முன்னாடியே, அவ உடம்பை அவுத்துப்பாக்க ஆசை படறாங்க..."

"ம்ம்ம்ம்..."

"பார்ச்சுனேட்லி... உன் வாழ்க்கையிலே தொலைஞ்சு போன அந்த வசந்தத்தை மீண்டும் என்னால கொண்டுவர முடியும்ங்கற நம்பிக்க்கை எனக்கு இருக்கு. உனக்கு ஆட்சேபனையில்லேன்னா, அதுக்கான முயற்சியிலே நான் இறங்கத்தான் போறேன்." சுகன்யா அனுவின் விரல்களில் தன் விரல்களை கோர்த்துக்கொண்டாள்.

"என்னடீ சொல்றே சுகா?"

"நீ சரீன்னு ஒரு வார்த்தை சொல்லு... நான் அவன்கிட்ட பேசறேன்..."

"எவன் கிட்டே?

"நீ யாரை காதலிச்சியோ.. அவன்கிட்டத்தான் பேசறேன்னு சொல்றேன்"

"வேணாம்டீ சுகா... நீ யாருடீ இவளுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கேன்னு அவன் உன் மூஞ்சியிலே அடிச்சா நீ என்னடி பண்ணுவே?"

"யூ பர்கெட் அபௌட் இட்" சுகன்யா தன் குரலில் ஒரு உறுதியுடன் பேசினாள்.

"என் பேச்சைக் கேளுடீ சுகா..."

"உன் விருப்பம் என்ன? அதை மட்டும் நீ சொல்லுடீ"

"சுகா... கவர்ன்மெண்ட் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி அவனும் நானும் ஒரே இடத்துலத்தான் வொர்க் பண்ணிகிட்டு இருந்தோம். ஆரம்பத்துல நாங்க வெறும் ஃப்ரெண்ட்ஸாத்தான் இருந்தோம்..."

"எல்லோரட கதையும் அப்படித்தாண்டீ ஆரம்பிக்குது.." சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"நான்தான் ஒரு பைத்தியக்காரி மாதிரி அவனை விழுந்து விழுந்து லவ் பண்ணேன். என்னை அவன் லவ் பண்ணவேயில்லேங்கறது கொஞ்ச நாள் பழக்கத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது; என் காதலை அவன் ஒரு பொருட்டாவே நினைக்கலே; அவனுக்கு என் மனசு தேவைப்படலே; அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் என் உடம்புதான்."

"ப்ச்ச்..."

"நான் உன்னை மேரேஜ் பண்ணிக்க விரும்பறேன். கல்யாணத்துக்கு முன்னாடி என்னை நீ அனுபவிக்க முடியாதுன்னு நான் தீத்துச் சொன்னதும், கொஞ்சம் கொஞ்சமா அவன் என்னை விட்டு விலகி போக ஆரம்பிச்சான். ஆனா ஒரு விதத்துல அவனும் நல்லவன்தான்னு நான் ஃபீல் பண்றேன்..."

"என்னடீ சொல்றே... உன் ஃபீலிங்கை கேக்கறதுக்கு ரொம்பவே நல்லா இருக்குடி ?" சுகன்யா எரிந்து விழுந்தாள்.

"சுகா.. அவன் என்னைக் காதலிக்கறேன்னு என்கிட்ட பொய் சொல்லலே பாரு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு பொய்யா பிராமிஸ் பண்ணிட்டு என்னை ருசி பாக்கலே பாரு; அதைச்சொல்றேன் நான். அவன் தன்னோட தேவையை, அவன் என்கிட்ட எதை எதிர்பார்த்தாங்கறதை அவன் ஓப்பனா சொன்னான் பாரு... அந்த நேர்மையைச் சொல்றேன்டீ நான்."

"அனு... ஒரு பெண்ணை அவன் இந்த மாதிரி கண்ணோட்டதோட பாத்ததே பெரிய தப்புன்னு நான் நெனைக்கறேன்... நீ என்னடான்னா அவன் நேர்மையை பாராட்டிக்கிட்டு நிக்கறே?"

"நான் உன் ஃப்ரெண்டா இருக்கவே, அவன் மேல உனக்கு இந்த அளவுக்கு கோவம் வருது; எனக்காக அவன்கிட்ட பேசணும்ன்னு, வாதடணும்ன்னு உனக்குத்தோணுது ; ஆனா சுகன்யா... இது நாட்டுல தினம் தினம் நடக்கற கதைடீ... யாரார்கிட்ட யாராருக்காக நீ பேசுவே?"

"யாருக்காக இல்லேன்னாலும் உனக்காக நான் அவன்கிட்ட பேசறதா நான் முடிவு பண்ணியிருக்கேன்." சுகன்யாவின் கண்களில் தீர்க்கமிருந்தது.

"சுகா அவன் ஒரு மாதிரி டைப்டீ. பணத்தால எவளையும் விலைக்கு வாங்கிடலாங்கற எண்ணம் அவன் கிட்ட இருந்திச்சி. ஆரம்பத்துல இது எனக்கு புரியலே; நீ பேசற ஞாயத்துக்கெல்லாம் மசியறவன் அவன் இல்லே.. சாத்தானுக்கு வேதம் ஓதறதால எந்த பலனாவது உண்டாடீ?" நாலாபுறமும் குளிர்ந்த காற்று மென்மையாக அடித்துக்கொண்டிருந்தது உடலுக்கு மிகவும் இதமாக இருந்தது. அனு தன் மேல் சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்து விட்டுக்கொண்டாள்.

"நீ சொல்றதெல்லாம் எனக்கும் புரியுதுடீ. எப்பவும் ஒருத்தன் ஒரே மாதிரி மனநிலைமையிலத்தான் இருக்கணுங்கறது அவசியமா என்ன? இன்னைய தேதிக்கு எல்லா பெண்களையும் பணத்தால விலைக்கு வாங்கிட முடியும்ங்கற அவனோட மனப்பாண்மை மாறியிருக்கக்கூடாதா? பெண்களை பெண்களா அவன் மதிக்க ஆரம்பிச்சிருக்கக்கூடாதா?"

"அவன் மாறியிருப்பாங்கறதுக்கு என்ன உத்திரவாதம்? அவனை நான் பாத்தே, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிகிட்டே, ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. நானே மறந்துட்ட இந்த விஷயத்துலே, நீ ஏன் உன் டயமை, உன் எனர்ஜியை அனாவசியமா, வீணடிக்க விரும்பறேன்னுதான் எனக்குப் புரியலே?"

"காரணம் சொல்லவா?" சுகன்யா அனுவின் முகத்தை தன் வலது கையால் நிமிர்த்தினாள்.

'சொல்லு..."

"உன் செல்லுல, இன்னமும் அவன் போட்டோவை நீ சேவ் பண்ணி வெச்சிருக்கே; அந்த போட்டோவை தினமும் கொறைஞ்சது நாலு தரமாவது நீ பாத்துக்கிட்டு இருக்கே: அவன் போட்டோவை பாக்கும் போதெல்லாம் உன் முகத்துல ஒரு பளபளப்பு வருது; ஒரு ஏக்கம் வருது; அவனை உன்னால மறக்க முடியலே; உன் மனசுக்குள்ளவே அவனை நீ வெச்சிக்கிட்டு வெளியிலே சிரிக்கறே; உள்ளுக்குள்ளே அழறே..." சுகன்யா தான் பேசுவதை நிறுத்தினாள்.

"சுகன்யா... ப்ளீஸ்... நீ நினைக்கற மாதிரியெல்லாம் என் மனசுக்குள்ளே ஒன்ணுமேயில்லை."

"உன் செல்லுலேருந்து அவன் போட்டோவை டிலீட் பண்ணுடீன்னு நான் சொன்னா, உடனே நீ பண்ணிடுவியா?" சுகன்யா அவள் முகத்தை மீண்டும் தன் புறம் திருப்பினாள்.

"இப்பவே பண்ணிடறேன்..." மனதில் கிளம்பிய வீம்புடன் தன் செல்லை விருட்டென எடுத்தாள் அனு.

"ஒரு செகண்ட் நில்லுடீ... அவனை நான் மறந்துட்டேன்னு என் முகத்தை நேரா பாத்து ஓரே ஒரு தரம் சொல்லுடீ. என்னால நீ படற அவஸ்தையைப் பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியலேடீ; இதுதான் நான் அவன் கிட்டே பேசப்போறேன்னு சொல்றதுக்கான முதல் காரணம்."

"...."

சுகன்யாவுக்கு பதில் ஏதும் சொல்லாமல், காலியாக இருந்த மைதானத்தை நோக்கித் தன் முகத்தை விருட்டெனத் திருப்பிக்கொண்டாள் அனு. அவள் கண்கள் இலேசாக கலங்கிக்கொண்டிருந்தது.

"அனு... அயாம் சாரிடீ.. ஒரு விஷயத்தை மட்டும் நீ நல்லா புரிஞ்சுக்கோ; உன்னை அழவெக்கணுங்கறது என் விருப்பமில்லே"

"இட்ஸ் ஆல்ரைட்... ஐ நோ யூ..." அனுவின் குரல் தழுதழுத்தது.

"அனு... அப்ப நான் சொல்றதெல்லாம் உண்மைதானே?"

கொட்டிக்கொண்டிருந்த மழை இப்போது மெல்லிய தூறலாக மாறியிருந்தது. கீழ் வானில் சூரியன் இப்போது இலேசாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தான். அனு பதிலேதும் சொல்லாமல், சுகன்யாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தங்கள் அறையை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள். 

காலையிலிருந்து அடித்த காற்றாலும், பெய்த மழையாலும், பகல் நேரத்து வெப்பம் அன்று மிகவும் கணிசமாக குறைந்து விட்டிருந்தது. சுகன்யாவும், அனுவும் வெளியில் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுகன்யாவின் செல் சிணுங்கியது. செல்லில் பளிச்சிட்ட நம்பர் அவளுக்குப் பரிச்சயமில்லாததாக இருந்தது.

"ஹலோ... யாரு?"

"ஹாய் சுகன்யா... ஹவ் ஆர் யு? சம்பத் ஹியர்..?"

"பைன்.. பைன்... அத்தான்.. நான் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க... உங்ககிட்டதான் பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்... நீங்களே என்னை கூப்பிட்டுட்டீங்க..." சுகன்யாவின் முகம் சூரியனைக் கண்ட தாமரையாக மலர்ந்தது.

"சுகன்யா... நீ சும்மா கதை விடாதே...! நீயா ஒரு தரம் கூட எனக்கு போன் பண்ணி பேசினதே இல்லை. ஒவ்வொரு தரமும் உன்னை நான் கூப்பிடும்போதெல்லாம் இந்த பிட்டைத்தான் நீ போடறே?"

"பொய் சொல்லாதீங்க அத்தான்.... சென்னையிலேருந்து எத்தனை தரம் நான் உங்களை கூப்பிட்டு இருக்கேன்? மறந்துட்டீங்களா?"

"நீ டில்லி வந்ததுக்கு அப்பறம் நடக்கிற கதையை சொல்றேன் நான்..." சம்பத்தும் விடாமல் வம்படித்தான்.

"சாரி அத்த்த்தான்... அக்ரீட்ட்ட்... நீங்க ரிங் பண்ணா என்ன? நான் ரிங் பண்ணா என்ன? நாம ரெகுலர்லி பேசிக்கிட்டு இருக்கோம்... அதானே முக்கியம்... பிராமிஸா சொல்றேன்... ரெண்டு மூணு நாள் முன்னாடி... அத்தை எங்கிட்டே பேசினாங்க. உடனே உங்கக்கிட்ட பேசணும்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.." சுகன்யா குழந்தையாக கொஞ்சினாள்.

"ம்ம்ம்... என் அம்மா, உன் கிட்டவும் பேசிட்டாங்களா?" சம்பத் சிரித்தான்.

"ஏன்... என் கிட்ட அவங்க பேசக்கூடாதா?"

"தாராளமா பேசலாமே?" சம்பத் கலகலவென சிரித்தான்.

"உங்களுக்கு சிரிப்பாத்தான் இருக்கும்... நீங்க ஏன் பொம்பளைங்க மனசை புரிஞ்சிக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு அலையறீங்க?"

"என்ன நீ "பொம்பளைங்க"ன்னு பண்மையிலே பேசறே? யார் மனசையெல்லாம் நான் புரிஞ்சுக்கலே?"

"ஆமாம்... உங்க அம்மா மனசை, நீங்க புரிஞ்சிக்கலே; நான் சொல்றதை நீங்க கேக்க மாட்டேங்கறீங்க; தட் மீன்ஸ், என் மனசையும் நீங்க புரிஞ்சிக்கலேன்னுதான் அர்த்தம்; அப்புறம்... அப்புறம்..." சுகன்யா இழுத்தாள்.

"அப்புறம்...?"

"இன்னும் எத்தனையோ பேர் மனசை நீங்க புரிஞ்சிக்கலே? உங்களாலே எத்தனை பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா?"

"என்னால கஷ்டப்படறாங்களா? இன்னும் யாரார் மனசை நான் புரிஞ்சிக்கலே? அப்படி யாரை நான் கஷ்ட்டப்படுத்தறேன்?"

"உங்க அம்மா உங்களுக்குப் பாத்த பொண்ணை நீங்க ஏன் வேணாம்ன்னு சொன்னீங்க? உங்க மேரேஜை சீக்கிரமா முடிக்கணும்ன்னு அத்தை மனசுக்குள்ள எவ்வளவு ஆசையோடு இருக்காங்கன்னு உங்களுக்குப் புரியலியே?"

"என்ன என்னத்தான் பண்ண சொல்றே சுகா?"

"அந்த பொண்ணு வீட்டுல எல்லாருக்கும் உங்களை பிடிச்சிருக்காம்... நானும் அந்த பொண்ணு போட்டோவைப் பாத்தேன்... அவளை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லுங்களேன்... அவளுக்கு என்னக்கொறை?"


"ஸோ... இப்ப நீ என் அம்மாவோட லாயரா பேசிக்கிட்டு இருக்கியா? இல்லே என் மாமா பொண்ணு சுகன்யாவா பேசிக்கிட்டு இருக்கியா? இல்லே என் ஃப்ரெண்டா பேசிகிட்டு இருக்கியா?"

"நான் உங்களோட ஃப்ரெண்டா பேசிகிட்டு இருக்கேன். ஏன் உங்க கல்யாணத்தைப்பத்தி நான் உங்கக்கிட்ட பேசக்கூடாதா? உங்க கிட்ட இதைப்பத்தி பேச எனக்கு எந்த உரிமையும் இல்லையா?"

"வொய் நாட்... நீ பேசலாம்.. ஏன் பேசக்கூடாது?"

"பேசத்தான் போறேன்... நேர்ல வாங்க உங்களுக்கு ஒரு கச்சேரி வெச்சிக்கறேன்... சுவாமி மலைக்கு வந்திருக்கீங்களா?"

"நீயும் எனக்கு கச்சேரி வெக்கப்போறியா? எனக்கு பயமா இருக்கு சுகா... நான் வந்த வழியைப் பாத்துகிட்டு திரும்பி போயிடறேன்.." சம்பத் சிரித்தான்.

"திரும்பி போறீங்களா? இப்ப எங்க இருக்கீங்க?"

"உனக்கு பக்கத்துலேதான் இருக்கேன்..."

"ஓ மை காட்... அத்தான் நீங்க டெல்லிக்கு எப்ப வந்தீங்க? எங்கேருந்து பேசறீங்க.." சுகன்யா துள்ளி குதித்தாள்.

"வந்து ரெண்டு நாளாச்சு. கம்பெனி வேலையா வந்தேன். மண்டே ஈவினிங் பெங்களூருக்கு திரும்பிப் போறேன். இன்னைக்கு நான் ஃபிரீ. அதான் உன்னை மீட் பண்ணலாம்; உன் கூட லஞ்ச் சாப்பிடலாம்ன்னு நினைச்சேன்; நீ என்னடான்னா என் மேல கம்ப்ளெய்ன்ட் மேல கம்ப்ளெய்ன்டா அடுக்கிக்கிட்டே போறே?"

"அத்தான் நான் இன்னைக்கும், நாளைக்கும் கம்ப்ளீட்லி ஃப்ரீதான். என் ஹாஸ்டலுக்கு வாங்க... உங்களுக்கு லஞ்ச் நான் குடுக்கறேன்.. ஓ.கே.வா?"

"ஏற்கனவே நான் உன் ஹாஸ்டலுக்கு வந்தாச்சு... சுகன்யா... லஞ்ச் வில் பீ ஃப்ரம் மை சைட்..."

"வந்தாச்சா? திரும்ப திரும்ப கேக்கறேன்... எங்க இருக்கீங்க நீங்க?"

"அயாம் அட் யுவர் ரிஸப்ஷன்...."

"அப்பிடியா.. அங்கேயே நில்லுங்க.. ரெண்டு நிமிஷத்துல நான் கீழே இறங்கி வர்றேன்..."

"நோ இஸ்யூஸ்... ஒண்ணும் அவசரமில்லே... நீ நிதானமா வா..."

"லஞ்ச் குடுக்கறேன்னு சொல்றீங்க... எனி திங் ஸ்பெஷல்...?"

"இருபத்தேழு வருஷத்துக்கு முன்னாடி, இன்னையத் தேதியிலதான் நான் இந்த பூமிக்கு வந்தேன்.."

"அத்தான்... ஹேப்பி பர்த் டே டு யூ..." சுகன்யா ராகம் பாடினாள். பேசிக்கொண்டே தன் கைப்பையைத் துணிக்குவியலிலிருந்து தேடி எடுத்து தன் தோளில் மாட்டிக்கொண்டாள். அனுவின் கையை பிடித்து இழுத்தாள்.

"தேங்க் யூ... சுகா... தேங்க் யூ" சம்பத் இனிமையாக சிரித்தான்.

"உங்க பர்த்டே அன்னைக்கு நீங்க எனக்கு டிரீட் குடுத்துத்தான் ஆகணும்... உங்களை யாரு விடப்போறது? ஆனா என் கூட, என் ஃப்ரெண்டும் வருவா? அதுல உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லையே?" சுகன்யா அனுவைப்பார்த்து கண்ணடித்தாள்.

"நீ போயிட்டு வாடீ.. என்னை எதுக்குடீ கூப்பிடறே?" அனு, சுகன்யாவின் முழங்கையை கிள்ளினாள்.

"நீ சும்மாயிருடீ.. நீ எங்க கூட லஞ்சுக்கு வர்றதால என் அத்தான் ஒண்ணும் ஏழையாகிட மாட்டார்? என்னத்தான் நான் சொல்றது சரிதானே?" தாங்கள் பேசுவதை அனுவும் கேட்கட்டும் என சுகன்யா தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

"சுகா... நீ உன் பிரண்டை மட்டுமில்லே; உன் ஹாஸ்டலையே தாராளமா அழைச்சிட்டு வா.. அயாம் ரெடி டு ஹோஸ்ட் எ லஞ்ச்.. ஒரு அழகான பொண்ணோட இன்னைக்கு டயம் பாஸ் பண்ணலாம்ன்னு நினைச்சேன். உன் கூட இன்னோரு அழகான பொண்ணும் வர்றான்னா எனக்கென்ன பிரச்சனை...?"

"என் ஃப்ரெண்ட் அழகான பொண்ணு மட்டும் இல்லே.." சுகன்யா சிரித்தாள்.

"பின்னே?"

"நேர்ல பாத்தீங்கன்னாத்தான் தெரியும்."

"உன் ஃப்ரெண்டு யாரு சுகா? அவ பேர் என்ன? உன் ஃப்ரெண்ட் உன்னை விட அழகா?"

"செர்ட்டெய்ன்லீ... அவ என்னவிடவே அழகுதான். அவ எவ்வளவு நல்லவ தெரியுமா? நிச்சயா அவளை நீங்க பாத்தீங்கன்னா இன்னைக்கு அசந்து போய் நின்னுடுவீங்க..." சுகன்யாவின் முகத்தில் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது. அனு அவள் இடுப்பைக் கிள்ள ஆரம்பித்தாள்.

"சுகா.. ஐ ஹாவ் ஏ கார் வித் மீ... நான் டில்லியில எங்கேயாவது ஒரு கோவிலுக்கு போய், சுவாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணித்தான் ஆகணும்ன்னு என் அம்மா உத்தரவு போட்டு இருக்காங்க... மலை மந்திருக்கு போகலாமா? சீக்கிரம் இறங்கி வாயேன்... அயாம் வெய்ட்டிங் ஃபார் யூ கேர்ல்ஸ்..."

"ஓ.கே.. அத்தான்... ரெண்டே நிமிஷம்... நாங்க வந்துகிட்டே இருக்க்கோம்.." சுகன்யா தன் செல்லை அணைத்தாள்.