Saturday 28 February 2015

சுகன்யா... 20


சுகன்யா தன் அலுவலகத்தில் நுழைந்தவுடன், முதல் வேலையாக, வரும் திங்கள் கிழமையிலிருந்து ரெண்டு வாரத்துக்கு லீவு அப்ளிகேஷன் எழுதி, கையெழுத்திட்டு, தானே கையோடு எடுத்து சென்று தன் மேலதிகாரி கோபாலனுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தாள். தன் அறைக்கு திரும்பியவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து அன்று செய்யவேண்டிய வேலைகளை நோட்டமிட்டவள், மின்னஞ்சலில் ஏதும் புதிய வேலை அவளுக்கு வந்திராததால், ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளுக்கு அன்று அலுவலகத்தில் வேலை செய்யவேப் பிடிக்கவில்லை. தன் மேஜையின் மேல் ரெண்டு நாட்களாக கிடந்த மூன்று கோப்புகளையும் விறு விறுவென படித்து, அந்த பிரிவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான குறிப்புகளையும், அடுத்து உரியவர்களுக்கு அனுப்ப வேண்டிய பதில்களையும் தயாரித்து, கடித நகல்களை அச்செடுத்து, கோப்புகளில் முறையாக சேர்த்து விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. "ஏண்டி சுகன்யா ... வாயேண்டி ஒரு வாய் காபி குடிச்சுட்டு வரலாம்" அவள் பின் சீட்டுக்காரி வித்யா தன் வயிற்றை சாய்த்துக்கொண்டு அவள் பக்கத்தில் வந்து நின்றாள்.

"ம்ம்ம் ... போகலாம் வா ... உன் உடம்பு எப்படியிருக்கு, பசிக்கலேன்னு சொல்லிக்கிட்டிருந்தியே ... இப்பத் தேவலையா?" "எனக்கென்னடி கேடு ... நான் நல்லாத்தான்யிருக்கேன் ... என் வயித்துல இருக்கறதை, கீழே எறக்கி வெக்கிற வரைக்கும் ... உடம்பு தினம் ஒரு மாதிரிதான் இருக்கும் ... அதை விடு ... உன் ஆளு செல்வா எப்படியிருக்கான் ... இப்ப தேவலையா அவனுக்கு? நீ தான் அவன் கூடவேயிருந்து ராப்பகலா பாத்துக்கிட்டியாமே? வந்து அவனைப் பாக்கணும்ன்னு நினைச்சேன் ... என் வீட்டுக்காரர் வேற ஊருலே இல்லே; தனியா வாயும் வயிறுமா இருக்கற நான் எங்க வந்து பாக்கறது? ... சுகன்யா தப்பா நினைச்சுக்காதடி என்னை; எல்லார்கிட்டவும் மரியாதையா பேசறவம்பா உன் ஆளு; இந்த ஆஃபீசுல யாரை வேணா கேளு; அவனைத் தங்கமான பையன்னுதான் சொல்லுவாங்க." "ச்சே .. சே .. உன் நிலைமை எனக்குத் தெரியாதா? உன்னை எதுக்கு நான் தப்பா நெனைக்கப் போறேன்? நான் அவன் கூட இருந்து பாத்துக்கறதை உனக்கு சொன்னவங்க, அவன் எப்படி இருக்காங்கற சேதியை உங்கிட்ட சொல்லலியா?" அவள் குரலில் கேலி தொனித்தது. "என்னடி என் கிட்டவே கிண்டலா?" வித்யா அவள் முதுகில் செல்லமாக அடித்தாள். "யார் சொன்னது உனக்கு ... நான் ராத்திரியும் பகலும் அவன் கூட குடும்பம் நடத்தறேன்னு?" "வேற யாரு ... நம்ம பெண்கள் சங்கத் தலைவி குண்டு சாவித்திரி தான் ... அவ பேங்க் பாஸ் புக்கை எடுக்க நேத்து சாயங்கலாம் இங்க வந்திருந்தா ... மறந்து இங்க வெச்சிட்டு போயிட்டாளாம்; அடியே வித்யா! அந்த செல்வா குடுத்து வெச்சவன்னு நினைக்கிறேன்; தாலி கட்டிக்கிட்டவ கூட தன் புருஷனை இப்படி பாத்துக்க மாட்டா; உன் ஃப்ரெண்ட் சுகன்யா ஆஸ்பத்திரியே கதியா அவன் பக்கத்துலேயேதான் இருக்காளாம்ன்னு சங்கு ஊதினா" வித்யா சிரித்தாள். "வேற என்ன சொன்னா அவ?" "கூடிய சீக்கிரம் நீ கல்யாண சாப்பாடு போடுவேன்னு சொன்னா" "நிஜமா அப்படியா சொன்னா ... இல்லே ... இது நடுவுல நீ போடற பிட்டா?" "நிஜமாத்தாண்டி சொல்றேன் ... அப்படித்தான் சொன்னா அவ." "இல்ல வித்யா ... சாவித்திரி இன்னும் கூட செல்வாவை தன் பொண்ணுக்கு எப்படியாவது முடிக்கணும்ன்னு முயற்சி பண்றா ... செல்வாவோட அம்மாவைப் பத்தி தீர்மானமா ஒண்ணும் சொல்ல முடியலை; அவங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியலை; இன்னும் பிடி கொடுத்து பேச மாட்டேங்கறாங்க ... அவங்க அப்பாவுக்கு என்னை பிடிச்சுப் போச்சு; அவர் எங்க பக்கம்ன்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு ... இதை நான் உங்கிட்ட மட்டும் தான் சொல்றேன் ... இப்போதைக்கு இதை நீ யாருக்கிட்டேயும் சொல்லாதே ... உன் மனசோட வெச்சுக்க ... உனக்கு தெரியாமலா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்? " சுகன்யா புன்னகைத்தாள். "சுகன்யா ... எல்லா வீட்டுலயும், கடைசியா ஆம்பிளை சொல்றதுதான் நடக்குது; அவன் அப்பாவுக்கு உன்னைப் பிடிக்கற பட்சத்துல, உன் கல்யாணம் எல்லோருடைய ஆசிர்வாதத்துடன் நடக்கும்ன்னு நம்புவோம். நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஜாதி பிரச்சனையை செல்வாவோட அம்மா கிளறலாம். உன் ஆளோட அப்பாவும் இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு சட்டுன்னு வரல்லேன்னா, ஆபிசுல நாலு பேரு நாலு விதமா பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, செல்வா ஆஸ்பத்திரியிலேருந்து வந்தவுடனே, ரெண்டு பேருமா காதும் காதும் வெச்ச மாதிரி அம்பாள் சன்னதியில உன் கல்யாணத்தை முடிச்சுக்கற வழியைப் பாரு; கல்யாணத்தையும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணிகிட்டீங்கன்னா அதுக்கப்புறம் சாவித்திரி மாதிரி எந்த நாயும் உன்னைப் பாத்து குலைக்க முடியாது. என் மனசுல பட்டதை நான் சொல்லிட்டேன்; நாளைத் தள்ளிப் போடாதே" வித்யா தன் வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள். இரவு எத்தனை மணிக்குத் தூங்கப் போனாலும் விடியற்காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் குமாரசுவாமிக்கு இருந்தது. சென்னைக்கு வந்த பின்னரும், அதே வழக்கத்தின் படி காலையில் எழுந்த குமாரசுவாமி கடற்கரை ஓரமாக சீரான வேகத்தில் நடக்க ஆரம்பித்தார். அரை மணி நேரம் நடந்தவரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, கடற்கரை மணலில் அமைதியாக அமர்ந்து, கரையில் பெரும் ஓசையுடன் வந்து மோதி, பின் மீண்டும் கடலுக்குள் சென்ற அலைகளை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மனம் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. வழக்கமான அலுவலக வேலைகளை பனிரெண்டு மணிக்குள், லஞ்சுக்கு முன் முடித்தப்பின், சுந்தரியுடனும், சுகன்யாவிடமும் பேசவேண்டும். ரகு தன்னிடம் நேற்றிரவு சொன்னது போல், தன் தமக்கையிடம் எனக்கு முன் பேசிவிட்டால் என் வேலை கொஞ்சம் சுலபமாகிவிடும். யாரிடம் முதலில் நான் பேசுவது? என் பெண் சுகன்யாவிடமா இல்லை, என் மனைவி சுந்தரியிடமா? ரகுவைப் போல் சுந்தரி என்னிடம் சகஜமாக பேசுவாளா? அவளுக்கு என் மேலிருக்கும் கோபம் இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமாவது தணிந்திருக்காதா? ரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், அவளை சந்திக்க விரும்பிய என் பெற்றோர்களை பார்க்க மறுத்தவள் தானே அவள்? என் சொந்த மனைவியிடம் பேசுவதற்கு நான் ஏன் இந்த அளவுக்கு தயங்குகிறேன்? நேற்றிரவு என் மனைவியிடம் பேசி, அவளைச் சந்தித்து பிளவு பட்டிருக்கும் உறவை மீண்டும் சுலபமாக புதுப்பிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. இன்று அவளை உடனடியாகப் பார்க்க வேண்டும் என என் மனம் தவிக்கிற போதிலும், இந்த நிமிடத்தில் என் மனம் அவளுடன் பேசும் முயற்சியை ஏன் இத்தனை கடினமாக நினைக்கிறது? இதை கஷ்டம்ன்னு நினைச்சா, முதல்ல நான் சுகன்யாவிடம் பேசலாம். அவளுக்கு சுந்தரி அளவிற்கு என் மேல் கோபம் இருப்பதற்கு வழியில்லை. என்னுடைய இந்த அபிப்பிராயம் தப்பாகவும் இருக்கலாம். ஆனால் அவளுடன் பேசுவது மூலம், சுந்தரியின் இன்றைய மன நிலமை ஓரளவிற்குத் தெரியவரலாம். ம்ம்ம் ... இது சரியான வழியாகத் தோன்றுகிறது. குமாரசுவாமி சுகன்யாவிடம் உடனடியாக பேச நினைத்து அவள் நம்பரை அழுத்தியவர், மனதில் திடீரென ஏதோ தோன்ற, சட்டென தொடர்பைத் துண்டித்தார். உள்ளத்தில் ஒரு தீர்மானத்துடன் கெஸ்ட் ஹவுஸை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினார். சுகன்யா தன் இருக்கைக்கு வந்தவள், காலையில் அனுப்பியிருந்த கோப்புகள் திரும்பி வராததால், தன் மாமா ரகுவிடம் பேச நினைத்து, தன் செல்லை எடுத்தப் போது, மிஸ்டு கால் லிஸ்டில், ஒரு புதிய எண் மின்னுவைதைப் பார்த்தாள். யாருடைய நம்பர் இது? காலை ஆறு மணி வாக்கிலே யாரோ எனக்கு கால் செய்திருக்கிறார்கள். நான் இதை கவனிக்கவேயில்லையே? எதாவது ராங்க் நம்பராக இருக்குமோ என யோசித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய போன் ஒலிக்க ஆரம்பித்தது. மீண்டும் அந்த நம்பரிலிருந்து தான் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். யார் இது? செல்வா இருக்கற ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறாதா என்ன ... இந்த எண்ணம் வந்ததும் ... மனதில் பதைப்புடன், காலை ஆன் செய்து பேசத் தொடங்கினாள். "மிஸ் சுகன்யாவோட நம்பர் தானே இது" அடுத்த முனையிலிருந்து ஆண் குரலொன்று வெகு மரியாதையுடன் வந்தது. "ம்ம்ம் ... நீங்க யாரு ..." செல்வாவுக்கு எதாவது ஆகியிருக்குமா ... ராத்திரி நல்லத்தானே இருந்தான் ... அலுவலக வேலையில் கவனமாக இருந்ததால், காலையிலிருந்து அவனிடம் பேசாதது அவள் மனதில் சுருக்கென உறைத்தது. அவள் மனதில் அவன் நினைவே மீண்டும் வர சுகன்யா தவிப்புடன் பேசினாள். அவள் "ஆம்" என்றோ "இல்லை" என்றோ சொல்லாததால், ஒரு வினாடி அடுத்த முனையிலிருந்து பேசிக்கொண்டிருந்த குமாரசுவாமியும் தயங்கினார் ... நேற்றிரவு நான் ரகு குடுத்த நம்பரை சரியா நோட் பண்ணினேனா இல்லையா? "ரகு எனக்கு இந்த நம்பரைக் குடுத்தார் ... நீங்க ... நீ ... "சுகா" தானே பேசறேம்ம்மா ...." குமாரின் குரல் தழுதழுப்புடன் வந்தது. என் மாமாவின் பெயரைச் சொல்றாரே இவர் ... என் நம்பரை மாமா குடுத்தாருன்னும் சொல்றார். என் நம்பரை யாருக்கு குடுத்தாலும் உடனடியா மாமா என்னைக் கூப்பிட்டு சொல்லுவாரே? குரல் கொஞ்சம் முத்தின குரலா இருக்கு ... ஆனா குரல்லே ஒரு மிடுக்கும், கம்பீரமும் இருக்கே? யாராக இருக்கும்? ... ஈவன் செல்வாவுக்கு கூட என் செல்லப் பேர் தெரியாதே? "சுகா"ங்கற என் பெயர் இவருக்கு எப்படி தெரிஞ்சுது ... சுகான்னு என்னைச் செல்லமா கூப்பிடறவங்களே ரெண்டு பேருதானே? ... ஒருத்தர் என் மாமா; இன்னொருத்தர் என் அம்மா; மூணாவதா என் செல்லப் பேர்ல என்னை உரிமையோட கூப்பிடறது யாரா இருக்கும்? சுகன்யா திகைத்தாள். சிறிய வயதில் தன்னை இப்படி கூப்பிட்டவரின் நினைவு அந்த நேரத்தில் அவளுக்கு சுத்தமாக உதிக்கவேயில்லை. "ஆமா ... நான் சுகா .. சுகன்யாதான் பேசறேன் ... என்னை நீங்க ... "சுகான்னு" கூப்பிட்டீங்க; இந்த பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் ..." அவள் தன் மேனி சிலிர்க்க, தன் மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில், அந்த உணர்ச்சியுடன் சிறிது ஆச்சரியம் தொனிக்கப் பேசினாள். "ம்ம்ம் ... சுகா! என்னை நீ மொத்தமா மறந்துட்டிருக்கேம்மா ... பரவாயில்லே; உன் மேல எந்தத் தப்பும் இல்லேம்மா ... தப்பெல்லாம் என் பேர்லதாம்மா ... நீ பொறந்து, உனக்கு சுகன்யான்னு பேரு வெச்சதும் "சுகா" ன்னு அந்தப் பேரை சுருக்கி , ஆசை ஆசையா இப்படி முதல்ல உன்னை கூப்பிட ஆரம்பிச்சதே நான்தாம்ம்மா ... அதுக்கப்புறம்தான் உங்கம்மாவே உன்னை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா!" அவர் குரலில் துக்கம் பொதிந்திருக்க, குரலில் அப்பட்டமான வருத்தத்துடன் பேசினார் குமாரசுவாமி. தன் தாயை அந்த குரல் ஒருமையில் குறிப்பிட்டு பேசிய கணத்தில் அவளுக்கு விளங்கிவிட்டது ... பேசுபவர் வேறு யாருமில்லை ... யாரைத் தேட வேண்டும் என நினைத்திருந்தாளோ ... அவர்தான் இவர் ... இத்தனை சுலபமா என் வேலை முடிஞ்சு போச்சா? ... அப்பா ... என் அப்பாவா ... பேசறார் ... இவர் நிச்சயமா என் அப்பாதான்; சுகன்யாவின் உடல் புல்லரித்தது. அம்மாவுக்கு உடனடியா போன் பண்ணி சொல்லணும் ... அவள் ஆடவில்லை; அவள் சதை தானாக ஆடியது; அவள் முகம் கோணிக்கொண்டது; உதடுகள் துடித்தன; சுகன்யாவின் கண்கள் சந்தோஷத்தில் கலங்க ஆரம்பித்தது; அவள் முழு உடலும் பரவசமானது; லைப் ஈஸ் ஸ்டேரேஞ்சர் தேன் பிக் ஷன்னு சொல்றாங்களே; இது எவ்வளவு உண்மையான ஒரு வார்த்தை ... ஒரு வினாடி அவளுக்கு பேசுவதற்கு குரல் எழும்பவில்லை. "சுகா ... என்னம்மா பேசமாட்டேங்கற ... உனக்கும் என் மேல கோவம்ன்னு நினைக்கிறேன் ... " அடுத்த முனையிலிருந்து குரல் தயக்கத்துடனும், தழுதழுப்புடனும் வந்தது. "அப் ... அப்பா ... நீங்க ... என் அப்பாதானே பேசறீங்க ... சாரிப்பா ... என்னால சட்டுன்னு புரிஞ்சுக்க முடியலைப்பா .. உங்களை நான் யாருன்னு கேட்டுட்டேன் ... வெரி வெரி சாரிப்பா ... உங்களை பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா; நீங்க எங்கேருந்து பேசறீங்கப்பா?" "நீ இருக்கற சென்னையிலேதான் நானும் இருக்கேன்; நானும் உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு கொஞ்ச நாளா துடிச்சுக்கிட்டிருக்கேண்டா செல்லம்; அதுக்காகத்தான் என் வேலையெல்லாம் மாத்திக்கிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கேன்; எனக்கு மேல உன் தாத்தாவும் பாட்டியும் உன்னைப் பாக்கணும்ன்னு தவிச்சிக்கிட்டிருக்காங்கம்மா; உன் அம்மா நல்லாயிருக்காங்களா? உன் அம்மா இன்னும் என் மேல கோவமாத்தான் இருக்காளா? "இல்லப்பா ... அப்படியெல்லாம் இல்லைப்ப்பா ... அம்மா ரொம்ப நல்லவங்கப்பா ... உங்க மேல உயிரையே வெச்சிருக்காங்கப்பா ... ஒரு வீம்புல ... ஒரு வைராக்கியத்தோட அவங்க தன் வாழ்க்கையை எனக்காக வாழ்ந்துகிட்டு இருங்காங்கப்பா ... உங்க மேல அவங்களுக்கு கோவம் இல்லப்பா ... நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்னு ... எப்பவும் தன்னையேத்தான் அவங்க நொந்துப்பாங்க ... உங்களை எப்பவும் என் எதிர்ல தப்பாவே பேசினது இல்லப்ப்பா ... என் அம்மாவை சொல்றீங்களே; நீங்க மட்டும் இத்தனை வருஷம் எங்களையெல்லாம் பாக்க வராமத்தானே இருந்தீங்க?" சுகன்யா மேலே பேச முடியாமல் விம்ம ஆரம்பித்தாள். "சாரிடா ராஜா ... உங்களையெல்லாம் நான் ரொம்பப் படுத்தி எடுத்துட்டேன் ... உங்கம்மாவுக்கு நான் ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன். சாரிடா கண்ணு ... நேத்துதான் உன் நம்பரையும், உன் அம்மா நெம்பரையும் உன் மாமாகிட்டேயிருந்து வாங்கினேன். உண்மையை சொல்லணும்ன்னா, நீ என் கிட்ட பேசுவியோ ... மாட்டியோன்னு காலையிலேருந்து பயந்துகிட்டே இருந்தேம்மா." குமாரசுவாமியின் குரல் நொறுங்கியது. "அப்பா ... அழறீங்களாப்பா ... அழாதீங்கப்பா" சுகன்யாவின் குரல் தேய்ந்து உணர்ச்சி மிகுதியில் மெல்லியதாகி விட்டிருந்தது. " ம்ம்ம்ம் ... உன் அம்மாவைப் பத்தி நீ சொன்னதும் ... என்னால என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலடா செல்லம்..." "அப்ப்பா" "சுகா ... நீ இப்ப நல்லா படிச்சு, பெரிய பொண்ணா ஆகி, நீயும் வேலை செய்யறதா உன் மாமா சொன்னாரு; நீ உங்கம்மா மாதிரியே அழகாயிருக்கேன்னு சொன்னாரு; நேத்து ராத்திரி உன் மாமா உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசினாரு; நான் அவரோட பேசினதை அவர் உங்கக்கிட்ட சொல்லலியா? "இல்லேப்பா." "இட்ஸ் ஆல் ரைட் ... நானே உங்ககிட்ட பேசணும்ன்னு அவரு நினைச்சிருக்கலாம். அதுல ஒன்னும் தப்பில்லே; நீ இப்ப எங்க இருக்கே?" "ஆபீசுலதான் இருக்கேம்பா" "உன்னை நான் இப்ப பாக்க வரலாமா? உனக்கு எப்ப லஞ்ச் டயம்? நாம ரெண்டு பேரும் இன்னைக்கு ஒண்ணா லஞ்ச் சாப்பிடலாமா? நான் இப்ப அங்க வந்தா உனக்கு தொந்தரவா இருக்காதே?" குமாரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க, இன்னமும் குரலில் சிறு நடுக்கத்துடன் பேசிகொண்டிருந்தார். "என்னப்பா இப்படி கேக்கறீங்க? நான் வேலை செய்யற கவர்ன்மெண்ட் ஆபிசு பீச்சு ரோடுல ஆல் இண்டியா ரேடியோ பக்கத்துல இருக்குப்பா. என் ஆபீஸோட பேரு "......" யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க; நான் உங்களுக்காக ஆஃபீஸ் ரிசப்ஷன்ல வந்து நிக்கறேன்; எனக்கு உங்களை இந்த நிமிஷமே பாக்கணும் போல இருக்குப்பா." இப்போது சுகன்யா தெளிவாக பேச ஆரம்பித்திருந்தாள். குரலில் அளவில்லாத மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. "சரிம்ம்மா ... நீ சொல்ற எடம் எனக்குத் தெரியும். நான் இருபது நிமிஷத்துல அங்கே வரேன்." தன் தந்தையிடம் போனில் பேசிமுடித்த சுகன்யாவுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மேஜையின் மேலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்தவள், வாட்டர் கூலரை நோக்கி ஓடி பாட்டிலை நிரப்பிக் கொண்டு, தன் ஹாண்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு வெளிக்கதவை நோக்கி ஓடினாள். "அடியே சாவித்திரி ... எங்கப்பா என்னை பாக்க வந்துகிட்டு இருக்காருடி; சுகன்யாவுக்கு அப்பன் இல்ல; அவ வாழா வெட்டி வளர்த்த பொண்ணுன்னு, திரும்பியும் நீ போய் என் வருங்கால மாமியார் மல்லிகா கிட்ட தூபம் போட முடியாதுடி ... நான் கும்பிடற அம்பாள் என் பக்கத்துல இருக்கா ... தெரிஞ்சுக்கோ" அப்பாவை சந்திக்க ஓடியவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். லிப்ட்டுக்கு காத்திராமல் வேகமாக படியில் இறங்கத் தொடங்கியவள், கம்ப்யூட்டர் ஆன்ல இருக்கே! அப்படியே ஓடி வந்துட்டோம்; யார்கிட்டவும் சொல்லவும் இல்லே; நாளைக்கு ஆபீஸ் வேற லீவு; போன வேகத்தில் திரும்பி தன் அறைக்குள் ஓடி கணிணியை ஷட் டவுன் செய்தவள், தன் ட்ராயரை மூடிப் பூட்டி சாவியை, கைப்பையில் போட்டுக் கொண்டவள், அதே மூச்சில் தன் மேலதிகாரி கோபலன் ரூமுக்கு ஓடினாள். ஆபீஸ் நேரத்தில் வெளியில் செல்ல அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திரும்பவும் தன் அறைக்குள் நுழைந்து, சுந்தரி கொடுத்து அனுப்பியிருந்த மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு ரிசப்ஷனை நோக்கி மூச்சிரைக்க ஓடினாள். "செல்வா கிட்ட தனியா பேசணுமா? பேசுடி ... நல்லா பேசு ... இன்னைக்கே என் அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லி என் கல்யாணத்தை பத்தி பேச சொல்லி அவரை நான் நடராஜன் கிட்ட அனுப்பறேன். உன்னால முடிஞ்சதை நீ பாரு; என்னால முடிஞ்சதை நான் பாக்கிறேன். அவள் முகத்தில் சிரிப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள். எதிரில் வந்து கொண்டிருந்த வித்யாவிடம், கொஞ்சம் அவசரமா வெளியில போறேன்; முக்கியமான ஒருத்தரை பாத்தே ஆகணும். நான் மேல அப்ரூவலுக்கு அனுப்பிச்ச ஃபைல்ஸ் திரும்பி வருது; அதுல கோபலன் சார் கையெழுத்து போட்டு இருக்கற லெட்டர்ஸை மட்டும் டெஸ்பேச்சுக்கு அனுப்பிடும்மா ... ப்ளீஸ் அவள் கன்னத்தைக் மெதுவாகக் கிள்ளினாள். அவள் பதிலுக்கு காத்திராமல் மாடிப்படிகளை ரெண்டு ரெண்டாக தாவி இறங்கினாள். "ம்ம்ம் ... இந்த சுகன்யாவுக்கு என்னாச்சு? ஒழுங்கா இருந்த பொண்ணு; என்னைக்கு செல்வா இவளுக்கு நூல் விட்டானோ அன்னையிலேருந்து இவளுக்கு பித்தம் புடிச்சு போச்சு. நினைச்சா வர்றா; நினச்சா ஒடறா; கேக்க ஆளு இல்லாமப் போச்சு? எல்லாம் கழுத்துல ஒரு தாலி ஏர்ற வரைக்கும்தான், இந்த காதல் கத்தரிக்கா பிஸினஸ் எல்லாம் ... அப்புறம் என்னை மாதிரி வயித்தை ரொப்பிக்கிட்டு, ஒடுங்கிப் போய் ஒக்காந்துக்குவா ..." அவள் தன் மனதுக்குள் புலம்பிக்கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள். சுகன்யாவின் டேபிளின் மீதிருந்த அவள் மொபைல் ஒலிக்க, "செல்லை விட்டுட்டு போயிட்டாளா? அப்படி என்ன அவசரம் இவளுக்கு? இப்ப நான் வயித்தை சாய்ச்சுக்கிட்டு திருப்பியும் இவ பின்னால நான் எங்கேயிருந்து அலையறது?" வித்யா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் போதே, சுகன்யா மூச்சிறைக்க வந்தவள், அவசரத்தில் விட்டுவிட்டு போன செல்லை எடுத்து ஹெலோ என்றாள். "அம்மா பேசறேண்டா கண்ணு; சாப்பிட்டியா?" "இல்லம்மா ... இனிமேத்தான் ... ஏம்மா?" "தயிர் சாதத்துல உப்பு கம்மியா இருக்கு ... கொஞ்சம் போட்டுக்கோ" சுந்தரி குரலில் கரிசனத்துடன் பேசினாள். "சரிம்மா ... நீ சாப்பிடு ... நான் சாப்பிடத்தான் போயிகிட்டிருக்கேன்." அப்பா என்னைப் பாக்க வந்துகிட்டு இருக்காருன்னு அம்மாவிடம் சொல்லலாமா? சுகன்யாவின் மனம் துடித்தது. வேண்டாம் முதல்ல அப்பாவை பாத்து ஆசை தீர பேசிட்டு, எப்ப வீட்டுக்கு வருவார்ன்னு கேட்டு, நேரா அழைச்சுக்கிட்டு போய் சஸ்பென்ஸா அவங்க முன்னாடி நிறுத்தணும். அதுக்கு முன்னாடி இப்ப அரை குறையா சொல்லிட்டு, அம்மா மனசுல நிம்மதியில்லாம வீட்டுல இருப்பாங்க, இது தான் சரி என மனதில் நினைத்துக்கொண்டு, வித்யாவை நோக்கி மீண்டும் ஒரு முறை கையசைத்துவிட்டு, வாசலை நோக்கி நடந்தாள். மணி பகல் ஒன்றாகியிருந்தது. சுந்தரிக்கு பசி எடுத்தது. சுந்தரி நிதானமாக தயிர்சாதத்தையும், உடன் காலையில் அரைத்த தக்காளிச் சட்டினியையும் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும், சுகன்யா வர இன்னும் அஞ்சு மணி நேரம் ஆகும், என்ன பண்றது வெட்டு வெட்டுன்னு முழிச்சிகிட்டு இருக்கணுமா? அறைக் கதவைக் மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள். அடுத்த நொடி, கண்ணை மூடியவளின் மனது ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. மனதில் குமாரின் முகம் பளிச்சென்று வந்து உட்க்கார்ந்து கொண்டது. "ஏ ... மனமே சும்மா இரேன் ... கொஞ்ச நேரம் ... அவள் தன் மனதை சலித்துக்கொண்டாள். வலுக்கட்டாயமாக மனதில் நின்ற தன் கணவன் முகத்தை அழிக்க முயற்சித்தும் முடியாமல், மெல்ல எழுந்து தன் பெட்டியைத் திறந்து புடவைகளின் அடியில் கிடந்த குடும்ப போட்டோ ஆல்பத்தை பிரித்தாள். குமார் அவள் தோளில் தன் இடது கையை போட்டு, தன் தோளோடு அவளை அணைத்துக்கொண்டிருக்க, சுந்தரியின் இடுப்பு வரை வளர்ந்திருந்த சுகன்யா, ரோஜாப் பூவாக காமிராவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். ஆசையுடன் போட்டோவிலிருந்த சிறு வயது சுகன்யாவை ஒரு முறை முத்தமிட்ட சுந்தரி, புகைப்படத்தில் தன்னருகில் நின்றிருந்த தன் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி பார்க்கறே? உன் பொண்ணுக்கு மட்டும்தான் முத்தமா? எனக்கு கிடையாதா? உன் உதட்டு ஈரத்துக்கு முதல் உரிமைக்காரன் நான்தான்டி ; சிவந்த ரோஜா நிற உதடுகள் ... மேலுதட்டின் மேல் கரிய அடர்த்தியான மீசை, தூக்கி வாரிய கிராப்புடன் அவன் புகைப்படத்தில் கவர்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தான். பாவி, இந்த சிரிப்புல தானேடா நான் உங்கிட்ட கவுந்து போனேன் ... சுந்தரியின் மனது மெல்லக் கூவ ஆரம்பித்தது. தான் மனதுக்குள் கட்டிக் காத்து வந்த கற்கோட்டை இரண்டு நாட்களாக மெல்ல மெல்ல மணல் கோட்டையாக மாறி நாலாபுறமும் சரிவதை நினைத்து அவள் மனம் பதறியது. சுந்தரி ... ஏன்டி பதறிப் போறே? அவன் உன் புருஷன்டி ... உனக்கு அவங்கிட்ட எல்லா உரிமையும் இருக்குடி; நீயா உன் மனசுக்கு ஒரு பூட்டு போட்டுக்கிட்டே? ஒரு முத்தம் குடுடி அவனுக்கும்; என்னடித் தப்பு; அவனை மறந்துட்டேன்னு சொல்ற நீ, இந்த ஆல்பத்தை மட்டும் எங்கப் போனாலும் கூடவே ஏன் சொமந்துக்கிட்டுப் போறே? உன் பொண்ணு சென்னைக்கு வேலைக்காக வந்துட்டா? அவ படமும் இதுல தான் இருக்கு; அதனால நான் என் கூடவே இந்த் ஆல்பத்தை வெச்சிருக்கேன்னு மட்டும் பொய் சொல்லாதே? பொய் சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்காதே? நீ உன் புருஷனை உண்மையாவே மறந்திருந்த காலமெல்லாம் மலையேறிடிச்சு; அவன் திரும்பவும் உன் மனசுக்குள்ள வந்தாச்சு; மனக் கதவை மொத்தமா தொறந்து உள்ள வாங்கன்னு ஆசையா கூப்பிடுடி. போதும்டி உன் தனிமை வாழ்க்கை ... இன்னும் எதுக்கு வீம்பு, எதுக்கு இந்த பிடிவாதம்; அவன் மேல எதுக்கு இந்த தீராத கோபம் ... தன் கணவனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென தன் இதழ்களை அவன் உதடுகளில் பதித்தாள். அவள் உடல் நேற்றிரவு சிலிர்த்ததைப் போல், தலை முதல் கால் வரை மீண்டும் இப்போது ஒரு முறை சிலிர்த்தது. நினைவுகளுக்கு இத்தனை பலமா? அவள் அடிவயிறு குழைவதையும், இலேசாக அவள் அந்தரங்கம் நெகிழ்வதையும் உணர்ந்த அவள் உதடுகளிலிருந்து நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து தன் மார்புடன் இறுக்கிக்கொண்டாள். "அம்மா! என் அப்பா எங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு அவரைப் பாக்கனும் போல இருக்கும்மா? இத்தனை நாள்ல அவரு தான் குடிக்கறதை விட்டுட்டு திருந்தியிருக்கலாமே? என் பொண்ணு கேட்ட ஒரு கேள்வியில, என் வாழ்க்கையில நான் முடிஞ்சுப்போச்சுன்னு நினைச்ச அத்தனைக்கும் திரும்பவும் உசுரு வந்துடுத்தா? சுந்தரி திகைத்துத்தான் போனாள். நேத்தைய அமைதியான இரவின் இருட்டு, எதிர்ல இருக்கற பார்க்குலேந்து காத்துல மெதந்து வந்த மகிழம் பூக்களின் வாசம், மெல்லிசா தூறின மழை, அந்த மழையின் சாரல், அந்த சாரல் என் ஒடம்புல உண்டாக்கின குளிர்ச்சி, அந்த குளிர்ச்சி மனசுல ஏற்படுத்துன வெப்பத்துக்கான தவிப்பு, இருட்டும் தனிமையும் குடுக்கற இனம் தெரியாத ஏக்கம்; இதெல்லாம் ஒரு வினாடியில ஒன்னாகி என் மனசுக்குள்ள, அடியாழத்துல விதையாக உறங்கிக்கிட்டிருந்த ஒரு நிகழ்ச்சியை, என நெனவோட மேல் தளத்துக்கு கொண்டு வந்து, என் புருஷன் என்னை பின்னாலேருந்து கட்டிப்புடிச்சு, என் மாரை தடவுன மாதிரி, என் மனசே நேத்து ஒரு நாடகத்தை, உண்மையாக நடக்கற மாதிரி நடத்திக்காட்டிடுச்சே? அந்த நாடகத்தை என் மனசும், வெக்கமில்லாமே அணுவணுவாக ரசிச்சி, ருசிச்சி; அந்த சுவையை முழுசா என் ஒடம்புலேயும் காட்டிடுச்சே? நான் என் உள்ள ஈரமாயி எவ்வளவு காலமாச்சு? நேத்து ஒரு செகண்ட்ல ஈரமாயி நின்னேனே? ம்ம்ம் ... இவ்வளவுக்கும் காரணமான இந்த மனசுக்கு இத்தனை வலுவா? அனுபவங்கள் அழிவதில்லையா? ஒடம்பு என்னைக்கோ நுகர்ந்த அனுபவங்களுக்கு இத்தனை பலமா? இந்த அனுபவங்கள் என்னை மட்டும் தான் வாட்டுதா? இல்லை அவனும் இப்படித்தான் எங்கேயோ தனியா கிடந்து அலைகழியறனா? என்னை மாதிரி ராத்திரியில தூக்கம் வராம என்னை நெனைச்சுக்கிட்டு தவிப்பானா? நேத்து நான் தூக்கத்துல இருந்திருந்தா கனவுல இதெல்லாம் சாத்தியம்; என் புருஷன் என்னை கட்டியணைக்கறதா நான் கனவு கண்டிருக்கலாம்; ஆனா நான் நேத்து முழிச்சுக்கிட்டு இருந்தேனே? இது எப்படி சாத்தியம்? நேத்து இது எப்படி நடந்தது? மனசுக்கு தூக்கம், விழிப்புன்னு ஒரு வித்தியாசமும் கிடையாதா? ஆண்டவா, என் ஆசைகளையெல்லாம், சுட்டு பொசுக்கிட்டேன்னு, ரெண்டு நாள் முன்னத்தான் என் பொண்ணுக்கிட்ட கர்வமா சொன்னேன்? அதுக்கு என்னை நீ இப்படி அடிக்கிறியா? என் மனசுக்கு என்ன ஆச்சு? என் உடம்புக்கு என்ன ஆச்சு? பதினைஞ்சு வருஷமாயிடுச்சு, ஒரு ஆம்பளை ஒடம்பை ஆசையா, மனசாரத் தொட்டுத் தழுவி; எவனும் என்னை; நான் பூட்டி வெச்சிருக்கிற என் மனக்கோட்டையை உடைக்க முடியாதுன்னு இறுமாந்து இருந்தேனே? எவனுடைய பார்வையும், எவனுடைய அழகும், எவனுடைய பேச்சும், எவனுடைய சிரிப்பும், என்னை பாதிக்கலைன்னு என் பொண்ணுக்கிட்ட நான் சொன்னது எல்லாம் என் ஆணவத்தாலேயா? உண்மையில என் உடம்பு இன்னும் முழுசா மரத்துப் போகலையா? என் உடல் ஆசைகளும், தேவைகளும், விருப்பங்களும், ஏக்கங்களும், இன்னும் உசுரோடத்தான் இருக்கா? எல்லாமே முடிஞ்சுப் போச்சுன்னு நினைச்சதெல்லாம் பொய்யா? என்னுடைய வைராக்கியம் அத்தனையும் நொடியிலே சுக்கு நூறாப் போயிடுச்சே? உடம்பால அனுபவிக்கனுங்கறதுக்கு என்ன அவசியம்? மனசால அனுபவிச்சா போதாதா? நேத்துத்தான் அனுபவிச்சி முடிச்சாச்சே? நானும் எல்லோரையும் போல ஒரு சாதாரண ஆசாபாசங்களுள்ள பொம்பளைதானா? நேத்து இந்த உடம்பு அனுபவிச்ச சுகம், என் புருஷன் உடம்பு வாசனை கூட அப்படியே என் மனசுக்குள்ள இன்னும் இருக்கே? நான் அனுபவிச்சதெல்லாம் இறுகி இறுகி, விதைகளா மனசுக்குள்ளேயே இருந்திருக்கே? காய்ஞ்சு போன புல்தரையில, ரெண்டு தூறல் பட்டதும், பசுமையை காட்டற அருகம்புல் தானா நானும்? சுந்தரி மீண்டும் நீண்ட பெருமூச்சு விட்டாள். "என் புருஷன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இருக்கு? அவன் அநியாயம் பண்ணா அவனை அடிச்சு விரட்ட எனக்கு உரிமை இருக்கு? வீம்பா நான் எவ்வளவு நாள் வேணா இப்படியே இருக்கலாம்? ஆனா என் பொண்ணுக்கு அவ அப்பாவை பாக்கணும்ன்னு ஆசை வந்துடுத்தே? அவளுடைய நியாயமான ஆசையை நான் தடுக்க முடியாதே? இப்ப இதுக்கு நான் என்ன பண்ணணும்? நீ உன் அப்பாவை பாக்கறதுல எனக்கு ஆட்சேபனையில்லைன்னு நேத்தே சொல்லிட்டேன். அது பத்தாதுடி சுந்தரி; உருப்படியா நீ இதுக்கு முயற்சி பண்ணணும். சுகன்யா சாயந்திரம் ஆபிசுலேருந்து வந்ததும் முதல் வேலையா ரகு கிட்ட பேச சொல்லணும் ... என் கதையை கேட்டு அவன் சிரிப்பான் ... சிரிச்சுட்டுப் போறான் ... நான் என் புருஷனைத்தானே பாக்கணும்ன்னு சொல்றேன் ... என் தம்பி என்னைப் புரிஞ்சுக்குவான்.... அலைந்த அவள் மனது மெல்ல மெல்ல ஓய, சுந்தரி சன்னமான குறட்டை ஒலியுடன் உறங்க ஆரம்பித்தாள். சுகன்யா தன் தந்தையின் வரவை நோக்கி ரிசப்ஷனில் மனதில் பரபரப்புடன் உட்க்கார்ந்திருந்தாள். இப்ப அப்பா எப்படி இருப்பார்? அவரால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? கடைசியா நான் அவரை ரெண்டாம் கிளாஸ் படிக்கும் போதுதான் பாத்தேன். இப்ப நான் வளந்து முழு பொம்பளையா ஆயிட்டேன். அவரு முகம் எனக்கு நல்லா நினைவுல இருக்கு. நான் தான் அவரை தினம் தினம் பார்த்துக்கிட்டு இருக்கேனே. சின்ன வயசுலேருந்தே அம்மாவுக்கு தெரியாம, அவரு எங்க கூட நிக்கற போட்டோவை புஸ்தகத்து உள்ளே மறைச்சு வெச்சுக்கிட்டு, அப்பப்ப எடுத்து பாக்கறேனே? என் அப்பா என் மனசுக்குள்ள எப்பவும் இருந்துக்கிட்டேதானே இருக்காரு. என் சின்ன வயசுல அப்பா உயரமா சிவப்பா இருந்தார். தலையை எப்பவும் தூக்கி வாரியிருப்பார். இப்ப அவருக்கு ஐம்பது வயசு இருக்குமா? இந்த ஆபிசுல இருக்கற ஐம்பது வயசுக்கார ஆண்கள், முக்கால் வாசி, தலை நரைச்சுப் போய் டை அடிச்சுக்கிட்டுத்தான் வர்றாங்க. அப்பாவும் டை அடித்துக் கொண்டிருப்பாரா? சுகன்யாவின் நினைவில் இருக்கும் இளமைக்கால அப்பாவுக்கு மீசை திக்கா இருக்கும். அப்பா கிட்ட போனாலே எப்பவும் ஜம்முன்னு சந்தன வாசனை வரும். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பின் குமார் தன் மகளை ஆசையுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போது, சுகன்யா அவன் பிடியிலிருந்து திணறி ஓட முயற்சி செய்வாள். சுகா, அப்பாவுக்கு ஒரு முத்தா குடுடா, கண்ணுல்லே! பட்டுல்லே! குமார் தன் மகளிடம் குழந்தையாக மாறி கெஞ்சுவான். அப்பாவுக்கு முத்தம் குடுக்காமல் சுகன்யா அழுது வீட்டுக்குள் இங்குமங்கும் ஓடி அடம் பிடிப்பாள். அம்மாவிடம் அழுது முறையிடுவாள். அம்மா, அப்பாவை எனக்கு முத்தா குடுக்க வேணாம்ன்னு சொல்லும்மா. ஏண்டா கண்ணு? செல்லம், அவரு நம்ம அப்பாடா. அவருக்கு முத்தா வேணும்ன்னா எங்க போவாரு? யாருகிட்ட கேப்பாரு? நீ தானே அவருக்கு ஆசை பொண்ணு? அப்பாதானே உனக்கு தினம் தினம் தின்றதுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் குடுக்கறாரு? நீ போட்டுக்கறது மயில் பாவாடை, பட்டுப் பாவாடை எல்லாம் வாங்கி குடுக்கறது யாரு? அப்பாதானே? அப்பாக்கு நீ ஒண்ணே ஒன்னு முத்தா குடுத்தா குறைஞ்சா போயிடுவே? அப்ப கன்னதுல நீ ஒரே ஒரு ஆசை முத்தா "உம்மு" குடுத்துடுவியாம்; அப்பத்தான் நீ கேக்கறதெல்லாம் அப்பா உனக்கு வாங்கிக் குடுப்பாரு; சுந்தரி தன் மகளை கொஞ்சுவாள். போம்மா, நான் குடுக்க மாட்டேன். அப்பாக்கு கன்னத்துல முத்தா குடுத்தா உதட்டுல முள்ளு முள்ளாக் குத்துதும்மா. நான் அப்பா பேச்சு காய். அம்மா உன் மூஞ்சு நல்லா மழா மழா இருக்கும்மா; அம்மா மேலதான் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை; அப்பாக்கு மீசை வேணாம் சொல்லும்மா? பாத்தாலே எனக்கு பயமா இருக்கும்மா. குழந்தை சுகன்யா அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அழுது அரற்றுவாள். சுகாவிற்கு தூங்கப் போகும் நேரத்தில் மட்டும் அப்பா கண்டிப்பாக அவள் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பாவிடம் சாயந்திரம் சண்டைப் போட்டவள் இரவில் தானாக சென்று அவனுடன் சமாதானமாகி விடுவாள். குமாரின் பக்கத்தில் படுத்துக்கொண்டு தன் காலை தூக்கி அவன் மார்பில் போட்டுக்கொள்வாள். "அப்பா உனக்குத்தான் நெறைய நெறைய, புது புது கதை தெரியுது. அம்மாவுக்கு கதையே தெரியலைப்பா. அம்மா மக்கு அம்மா. அம்மா எப்பப் பார்த்தாலும் ஆயா வடை சுட்ட கதையே சொல்லுது." அந்த நேரத்தில் மட்டும் அப்பாவுக்கு அவன் கேட்காமலேயே முத்தம் கிடைத்துவிடும். அப்பா நான் உன் பேச்சு பழம்பா ... அம்மா பேச்சு காய் ... குழந்தை சுகா சிரித்துக்கொண்டே, குமாரின் மடியில் உட்க்கார்ந்து கொள்வாள். மல்லாந்து படுத்திருக்கும் அவன் மார்பில் ஏறி நின்று குதிப்பாள். காலையில தலை வாரும்மான்னு எங்கிட்ட வருவேல்லா; அப்ப குத்தறேன் வா உன்னை உன் மூஞ்சு மேலேயே; சுந்தரி மனதில் மகிழ்ச்சியுடன், பெண்ணிடம் போலியாக பொருமுவாள். இந்த இனிமையான தருணங்கள் தினம் தினம் புத்தம் புது பூக்களாக அவர்கள் தோட்டத்தில் மலர்ந்து கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. சுந்தரி இப்பவும் அப்படித்தான் வாய்க்கு வாய் சொல்லுவாள். குமார் குடிக்கு மெல்ல மெல்ல அடிமையானான். அவர்களுக்குள் இருந்த இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் நாளடைவில் வெறும் கனவாகிப் போனது. குமார் என்னும் மரத்தின் ஒரு பக்க வேர் இலேசாக அழுக ஆரம்பித்தது. அந்த தோட்டத்தில் பூக்கள் பூப்பது குறைய ஆரம்பித்தது. வெகு நாள் வரை இதெல்லாம் சுகன்யாவுக்கு ஞாபகம் இருந்தது. குழந்தை சுகன்யாவுக்கு ஒரு விஷயம் மட்டும் எப்போதும் புரிந்ததில்லை. தூங்கறதுக்கு முன்னே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நடுவுல நான் படுத்துக்கறேன். காலையில எழுந்துப் பாத்தா, அப்பா பக்கத்துல அம்மாதானே படுத்துக்கிட்டு இருக்காங்க? நான் எப்படி அம்மாவுக்கு இந்த பக்கத்துல வந்துடறேன். இந்த நினைவு இன்று மனதில் வந்தவுடன், வளர்ந்த சுகன்யாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

குமார் குடி பழக்கத்திற்கு முழுதுமாக அடிமையான பின், அது வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவான பின், சுகன்யா அவன் அருகில் போவதற்கே மிகவும் பயந்தாள். அம்மா, இப்பல்லாம் அப்பா மூஞ்சிலே இருந்து எப்பப் பாத்தாலும் மருந்து வாசனை அடிக்குதும்ம்மா? நான் அப்பாகிட்ட போவ மாட்டேம்மா. ஏம்மா அப்பா உங்கிட்டே தெனம் சண்டை போடறாரு. உன்னைத் அடிச்சு திட்டறாரு? நீ எப்பப் பாத்தாலும் அழுவறே? நீயும் அவரை திருப்பி அடிம்மா. நான் அப்பா பேச்சு காய் ... அம்மா நாம, அப்பாவை போலீஸ்காரங்ககிட்ட பிடிச்சு குடுத்துடலாம்ம்மா? சுகன்யாவின் மனதில் அவள் குழந்தைக் கால எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டன. அதோ உள்ள நுழையறாரே ... கிரீம் கலர் அரைக்கை சட்டை, கருப்பு கலர் பேண்ட், கூலீங் கிளாஸ்ன்னு ... அவர் தானா? ஆமாம் ... ஆமா ... அவரேதான் ... என் அப்பாதான் வந்துட்டார். அவளுக்கு மூச்சு வேகமாக வரத்தொடங்கியது. மார்புகள் விம்மித் ததும்பின. அப்பா கொஞ்சம் கூட மாறவேயில்லையே? அப்பல்லாம் நம்ம அப்பா கொஞ்சம் ஒல்லியா இருப்பார். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி கொஞ்சூண்டு பூசின மாதிரி இருக்கார். காதுக்கு பக்கத்துல லேசாக நரை ஆரம்பிச்சிருக்கு. அப் ... அப்பா நான் இங்கே இருக்கேன் ... சுகன்யா, சட்டென தான் உட்க்கார்ந்திருந்த ரிஸப்ஷன் சோஃபாவிலிருந்து, மற்றவர்கள் தன்னை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் எழுந்து, மெலிதாக கூவிக்கொண்டே குமாரசுவாமியின் நின்ற பக்கம் ஓடினாள். குமாரசுவாமி தன்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்த யுவதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் உடல் சந்தோஷத்தால் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. உண்மைதான்!கல்லூரியிலே என் கூட படிச்ச சுந்தரி மாதிரி தான் இருக்கா என் பொண்ணு. அந்த காலத்துல கும்பகோணத்துல இந்த சுடிதாரெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க ... தாவணிதான் கட்டுவாங்க ... இல்லன்னா புடவைதான் ... மகிழ்ச்சியில் அவர் மனம் துள்ள, தன் அருகில் வந்த சுகன்யாவை தன் இடது கையால் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அருகிலிருந்த சோஃபாவில் அவளுடன் உட்க்கார்ந்தவர், உணர்ச்சியின் மிகுதியால் ஏதும் பேசாமல் மவுனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். "எப்படிடா கண்ணு இருக்கே? இந்த புத்தி கெட்ட மடையனை மன்னிச்சுடும்மா ... உன்னை மாதிரி பொண்ணை அம்போன்னு விட்டுட்டு இவ்வளவு நாளா, ஊரெல்லாம் அர்த்தமில்லாம சுத்திக்கிட்டிருந்தேன் ..." அவர் முணுமுணுத்தார். "அப்பா ... இந்த பேச்செல்லாம் இப்ப எதுக்குப்பா? நீங்கதான் வந்துட்டீங்களே! எனக்கு அது போதும்." சுகன்யா, சந்தோஷத்தால் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்த குமாரின் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். அவருடன் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். அதே சந்தன வாசனை தன் தகப்பனின் தேகத்திலிருந்து வந்ததை உணர்ந்தவள், தன் மனம் விகசிக்க ஆசையுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். குமார் தன் அருகில் அமர்ந்திருந்த, அழகாக வளர்ந்து, அப்படியே அச்சாக தன் இளமைக் கால மனைவியைப் போலிருந்த சுகன்யாவைப் பார்க்க பார்க்க, அவருள் சந்தோஷம் திகட்டியது. இவ சுந்தரி எனக்கு கொடுத்த அன்புப் பரிசு. உயிருள்ள பரிசு. எங்க ரெண்டு பேரோட ரத்தத்தாலேயும் சதையாலும் ஆனவ இவ. இவளைப் பாத்ததும், இவ என்னைத் தொட்டதும் ... எனக்குள்ள இத்தனை நாளா இருந்த என் மன அழுத்தம், இனம் தெரியாத என் எரிச்சல், தவிப்பு எல்லாமே சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடுச்சே? இந்த உலகமே அழகா தெரியுதே! ஆண்டவா, இந்த கணம் இப்படியே என்னைக்கும் நீடிச்சு இருக்கணும். குமாரசுவாமி, ஏதேதோ பேச விரும்பினார். மனதிலிருந்த எண்ணங்கள் சொற்களாக மாறி உதட்டில் வராமல், அவர் பேச முடியாமல், அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். சுகன்யா அவர் மன நிலைமையை புரிந்து கொண்டவள் போல் "அப்பா ... பிளீஸ் பீ ரிலாக்ஸ்ட் ... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்பா ... நீங்க சொல்ல நினைக்கறதை உங்க விரல்கள் எனக்கு சொல்லிடுச்சிப்பா ... அவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள். "தேங்க்ஸ்ம்ம்மா" குமாரசுவாமி ஒரு நீண்டப் பெருமூச்செறிந்தார். அவருடைய சிறு குடலை பெருங்குடல் தின்று கொண்டிருந்தது. அவருக்கு அசுரப் பசியெடுத்தது. காலையிருந்தே அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. "வாங்கப்பா வெளியிலே போகலாம் ... பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு, காலாற நடந்து போய் அங்க நிம்மதியா சாப்பிடலாம்." அவளே தன் தந்தைக்கும் சேர்த்து முடிவெடுத்தாள். குமாரசுவாமி சுகன்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனம் மகிழ்ச்சியில் இன்னும் துள்ளிக் கொண்டிருந்தது. உடலில் ரத்தம் வேகமாக ஓடுவது புரிந்தது. சின்ன சின்ன விஷயங்கள்ல்ல எனக்காக, என்னை கேக்காமா, சட்டுன்னு முடிவெடுக்க என் வாழ்க்கையில ஒருத்தர் இல்லையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன்; இனிமே எதுக்கும் நான் கவலைப் படப் போறது இல்ல. என் பொண்ணு ரொம்ப புத்திசாலி; என் தொடலில் இருந்தே, நீங்க சொல்ல வந்தது என்னன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சுங்கறா; இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்? என் மனைவி சுந்தரி இப்ப என்னப் பண்ணிகிட்டிருப்பா? அவ டீச்சரா இருக்கற ஸ்கூல்ல இப்ப மதிய உணவு வேளையா இருக்கலாம்; இப்ப அவகிட்ட பேசலாமா? சுகன்யாவைத்தான் கேக்கணும் ... சுகா என்கிற சுகன்யா அவர் உள்ளத்தில் முழுதுமாக நிறைந்துவிட்டாள். நேற்றிரவு பலத்த மழை பெய்திருந்ததால், சென்னையில் இன்று வெயில் மிதமாக காய்ந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று கடலிலிருந்து கரையை நோக்கி மெலிதாக வீசிக்கொண்டிருக்க, வானில் கரு மேகங்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தன் ஆஃபீசை விட்டு, தன் தந்தையுடன் வெளியில் வந்த சுகன்யாவுக்கு, தூரத்தில் நீல ரிப்பனாகத் தெரிந்த கடலும், மெரினா கடற்கரை சாலையும், அதை சுற்றியிருந்த இடங்களும் மிக மிக ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. சாலை ஓரத்தில், பாதசாரிகள் நடப்பதற்கு இடமில்லாமல், நடைபாதையின் மேல், தள்ளுவண்டியுடன் நின்று பழம் விற்பவன், தண்ணீர் பாக்கெட் வாங்க சொல்லி பின்னாடியே ஓடி வரும் சிறுவன், சோப்பு, சீப்பு, சீட்டுக்கட்டு என சில்லறை சாமான்களை கூவி கூவி தலையில் கட்டுபவர்கள் யாரும் இன்று சுகன்யாவிற்கு எரிச்சலை மூட்டவில்லை; மாறாக அவர்களும், எதிரில் வருபவர்களும், ரோடில் தேவையில்லாமல் ஹாரன் சத்தத்தை எழுப்பிக் கொண்டு வேகமாக பைக்கில் செல்பவர்களும், அவள் கண்ணுக்கு மிகவும் அழகாக காட்சி அளித்தார்கள். பாவம்! ஏழைங்க; வாழ வழியில்லாமத்தானே இப்படி சாலையிலே குடும்பம் நடத்தறாங்க; என்னப் பண்ணுவாங்க அவங்க; அவங்களும் நம்பளை மாதிரி வாழணும் இல்லையா? அவர்கள் பால் அவளுக்கு அன்று எல்லையில்லா இரக்கம் பொங்கி வழிந்தது. மனதில் பெருக்கெடுக்கும் அன்புடன் அவர்களைப் பார்த்தாள். சுகன்யா, குமாரசுவாமியின் கையில் தன் விரல்களை கோர்த்தபடி, நெருக்கமாக அவரை இடித்துக்கொண்டு, அவருடைய உடலின் வலது புறம் தன் தோள் உரச, ஓரக்கண்ணால் பெருமிதத்துடன் அவரைப் பார்த்தவாறு நடந்தாள். எதிரில் வந்தவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என வர்ஜா வர்ஜமில்லாமல் அனைவரையும் நிறுத்தி "இவர்தான் என் அப்பா; நல்லாப் பாத்துக்குங்க" என உரக்க கூவ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அப்பா ஹேண்ட்சமா, எவ்வளவு மேன்லியா இருக்கார்; அப்பா கை இரும்பாட்டம் எவ்வளவு உறுதியா இருக்கு; அம்பது வயசுக்கு தொப்பையே இல்லாம அப்பா தன் பாடியை நல்லா மெய்ண்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்கார். சுகன்யா, அன்றைய தினத்தில், பிரிந்து போன தன் தந்தைதை மீண்டும் பார்த்த அந்த மகத்தான நாளில் தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தாள். தன் மகள் வெகு இயல்பாக எந்த தயக்கமும் காட்டாமல் தன்னுடன் பேசியதும், ஆசையுடன் தன் கையை பிடித்தபடி நடக்க தொடங்கியதும், தன் வாழ்க்கையில் இத்தனை நாளாக தான் இழந்திருந்த அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று விட்டதாக நினைத்து பூரிப்படைந்த குமாரசுவாமி, மனதுக்குள்ளாகவே கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்டவனே! எனக்கு இது போதும்; என் மகளோட நான் திரும்பவும் வந்து சேர்ந்துட்டேன்; என் மகளாலே என் வாழ்க்கைக்கு இந்த நொடியிலேருந்து ஒரு புது அர்த்தம் கிடைக்குங்கற நம்பிக்கை எனக்கு வந்துடுத்து. எந்த குறையும் இல்லாம இப்படியே இந்த உறவு கடைசி வரைக்கும் நிலைக்கணும். என் மனைவி சுந்தரியும், பழசெல்லாம் மறந்துட்டு என்னை முழு மனசா ஏத்துக்கிட்டா, நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷடசாலிதான். எனக்கு இந்த உலகத்துல இதுக்கு மேல வேற எதுவும் வேணாம். அவர் மனம் உரக்க அரற்றிக் கொண்டிருந்தது. தன் மகளின் கையை அவர் இறுகப் பற்றிக்கொண்டு நடந்தார். தன் தந்தை தன் கையை இறுகப்பற்றியதும், அவர் முகத்தைப் பார்த்த சுகன்யா, "என்னப்பா ... நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேம்பா; பயப்படாதீங்க; " அவள் அவரை தன் உதடுகளில் புன்முறுவலுடன் பார்த்தாள். "போதுண்டா செல்லம் ... உங்களையெல்லாம் விட்டுட்டு, நான் ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சதெல்லாம் போதும், நீ எதுக்காக எங்கயாவது ஓடணும்? இன்னொரு தரம் விளையாட்டுக்கு கூட நீ இப்படி பேசாதே." சுகன்யாவின் முழங்கையுடன் தன் வலது கையை கோர்த்துக் கொண்டார். "எந்த காரணத்துக்காவும் நானும் உங்களை திரும்ப இழக்கறதுக்கு தயாரா இல்லைப்பா." "சுகா ... உன் அம்மா எப்படி இருக்காங்கம்மா?" "ஏம்பா ... நீங்க திரும்ப திரும்ப என் அம்மா ... என் அம்மாங்கிறீங்க? ஒரே ஒரு தரம் என் வொய்ஃப் சுந்தரி எப்படி இருக்கான்னு உரிமையோட கேளுங்கப்பா? சுகன்யா தன் குரலில் தாபத்துடன் பேசினாள். "சரிம்மா ... என் சுந்தரி எப்படிம்மா இருக்கா?" "அப்பா ... உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் ... அந்த பெஞ்சுல கொஞ்ச நேரம் உக்கரலாமா" சுகன்யா நடைபாதையில் ஒரு ஓரமாக நின்றாள். "இனிமே உன் விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பம் ..." "அப்பா ... நீங்க இப்ப இப்படி சொல்லிட்டு ... அப்புறம் திண்டாடப் போறீங்க." "சுகா, நான் எனக்காக முழுசா வாழ்ந்துட்டேன். அந்த வாழ்க்கையில எனக்கு திருப்தியில்லை. இனிமே உனக்காகவும், என் சுந்தரிக்காவும் நான் வாழ விரும்பறேன். அதுக்காக நான் திண்டாடினாலும் பரவயில்லம்மா." அவர் குரல் உறுதியாக வந்தது. சாலையோரமிருந்த சிமிட்டி பெஞ்சில், அவள் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்தவர் அவள் கைகள தன் கையில் எடுத்துக்கொண்டார். "அப்பா ... " சுகன்யா தன் தந்தை பேசட்டும் என அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். "சுகா ... உங்கிட்ட உண்மையை சொல்றேம்மா ... அப்ப எனக்கு மன முதிர்ச்சியில்லை. கெட்ட சகவாசம் ... போங்கடான்னு விலக்க முடியாத ஒரு தவறான நட்பு வட்டம்; மன உறுதி அதிகமா இல்லாத நேரத்துல நான் குடியால சீரழிஞ்சுப் போயிட்டேன். என் சுந்தரி, நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் மனைவி என்னை தொடப்பத்தாலே அடிச்சாளேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். எப்படியிருந்தாலும் அவ ஒரு பொம்பளை. ஒரு பொம்பளை கையால அடி வாங்கினது என் ஆண் ஈகோவை, ரொம்பவே காயப்படுத்திடிச்சி. அதுக்கும் மேல எங்க கல்யாணத்துல, எல்லாரும் எங்களை எதிர்த்தப்ப, என் பக்கம் நின்ன என் மச்சான் ரகு என்னை வெட்ட வந்ததை என்னால நம்பவே முடியலை. உலகமே ஒன்று சேர்ந்து என்னை ஒதுக்கிட்டதா நான் நெனைச்சேன். ஊர்ல இருந்தவங்க என் சொந்தக்காரங்க, என் ஜாதிக்காரங்க, என்னைப் பாத்து சிரிச்சாங்க; இனி இவங்க மூஞ்சிலே என்னைக்கும் நான் முழிக்கறதில்லேன்னு ஒரு வீராப்பையும், வீம்பையும் என் மனசுக்குள்ள வளத்துக்கிட்டேன். அந்த ஊரை விட்டு போகணும்ன்னு முடிவெடுத்தேன். அந்த வீராப்புத்தான் என் குடிப்பழக்கத்துக்கான மருந்தா பின்னாடி வேலை செஞ்சது. "ரெண்டு வருஷ குடிப்பழக்கம் இந்த அளவுக்கு என்னை சீரழிச்சதை நெனைச்சு உண்மையா நான் வருத்தப்பட்டேன். தனிமையில நடந்ததை யோசனை பண்ணி அழுது இருக்கேன். கல்கத்தாவுல இருந்த ஒரு நண்பன் கிட்ட போனேன். அங்க ஒரு நல்ல வேலையைத் தேடிக்கிட்டேன். உழைப்பு; உழைப்பு; உழைப்பு; அதுல என்னையே மறந்தேன். உண்மையா உழைச்சதனால நிறைய பணம் சம்பாதிச்சேன். பணம் இருந்தது. எங்கிட்ட இளமையும் இருந்தது. பெண்கள் என்னைத் துரத்தவும் செய்தாங்க. இன்னைக்கு சுந்தரி அடிச்சா; நாளைக்கு வேற ஒருத்தி என்னை வேற ஒரு காரணத்துக்காக அடிப்பா; பெண்களை விட்டு விலகிப்போனேன்." "சுகா, என் மனைவியை விட்டு பிரிஞ்சிருந்த இத்தனை நாள்லே, வேற எந்த பொம்பளையையும் நான் தொட்டதில்லை; ஷேர் மார்க்கெட்ல விளையாடினேன். நான் வாங்கின ஷேர் எல்லாம் கோபுரத்து உச்சிக்கு போச்சு; என் நேரம் நல்ல நேரம் அப்படீன்னு சொன்னாங்க; பணம் பேங்க்ல துரு பிடிக்க ஆரம்பிச்சுது; பணத்துல எனக்கு ருசியில்லே; அன்னிய பொம்பளை மேல எனக்கு விருப்பமில்லே; குடும்பம்ன்னு சொல்லிக்க யாருமில்லே; பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்றது? சுகா, அந்த வாழ்க்கையில, நான் தனிமையைத்தான் அதிகமா அனுபவிச்சேன். என்னை ஏன்னு கேக்க யாரும் இல்லே. ஆனாலும் எந்த தப்பும் நான் பண்ணல. உங்கம்மா குடுத்த தொடப்ப கட்டை அடி - தப்பு பண்ண எனக்கு துணிச்சல் வரலை. " "தனிமை என்னை அணு அணுவா சித்திரவதை பண்ணுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி, உன் தாத்தா பாட்டிக்கிட்ட என் கூட வந்து இருங்கன்னேன். நான் சம்பாதிச்ச பணத்தை பத்தி சொன்னேன். அவங்க என்னைப் பாத்து சிரிச்சாங்க; ஏம்பா சிரிக்கறீங்கன்னு எங்கப்பாவைப் பாத்துக் கேட்டேன்; நீ திரும்பி வந்ததுல எங்களுக்கு சந்தோஷம். என் ஜாதிக்காரன் என்னை மதிக்க மாட்டாங்கற எண்ணத்துல, உன் காதல் கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்கலை. போலி கவுரவத்துக்காக, கிளி மாதிரி இருந்த அந்த பொண்ணை வேணாம்ன்னு சொன்னோம். அவளை இழுத்துக்கிட்டு போய் தாலி கட்டினியே, அவ கூடவாது ஒழுங்கா குடுத்தனம் பண்ணியா? "நீ பண்ண கூத்துக்கு அவ உன்னை வீட்டை விட்டு அடிச்சு துரத்தினா? நீ ஊரை விட்டு ஓடினே? நம்ம எனத்தவன் எல்லாம் எங்களைப் பாத்து வழிச்சுக்கிட்டு சிரிச்சான். அவ அப்பன் ஆத்தாளும் உங்க கொடுமையை பாக்க முடியாம போய் சேர்ந்தாங்க; உன் கூட வந்தவ, நீ பெத்த பொண்ணை, நெருப்பா தனியா நின்னு இன்னைக்கும் வளக்கறா. அவளைப் பாக்க பாக்க எங்களுக்கு பெருமையா இருக்கு. மனசுக்கு உண்மையை புரிஞ்சுக்கற பக்குவம் வந்துடுத்து; உடம்புல தெம்பு குறைஞ்சு போச்சு; இன்னைக்கு நம்ப ஜாதிக்காரன் எவனும் நாங்க எப்படி இருக்கோம்ன்னு ஒரு தடவை கூட எங்களைத் திரும்பிப் பாக்கலை." டேய், நாங்க அவளை கேட்டுப் பாத்துட்டோம். எங்க சொத்தெல்லாம் என் பேத்திக்குத்தான். நீ வந்து எங்க கூட இரும்மான்னு சொல்லிப் பாத்தோம். எங்களைப் பாக்க கூட அவ மறுத்துட்டா. உங்கிட்ட இருக்கற இந்த பணத்தால, எங்க மருமகளையோ, எங்க பேத்தியையோ உன்னால வாங்க முடியாதுன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். உன்னால முடிஞ்சா நீ அவங்க ரெண்டு பேரையும் அன்பா பேசி அவகிட்ட மன்னிப்பு கேட்டு, கூப்பிட்டுக்கிட்டு வான்னு என்னைத் துச்சமா பாத்தாங்க. உன் அம்மா என் பெத்தவங்களையே பாக்க மறுத்துட்டான்னதும், சுந்தரியை பார்க்க எனக்குத் தைரியமில்லே. திரும்பிப் போயிட்டேன். கொஞ்ச நாள்ல உன் தாத்தாவும், பாட்டியும் என் கூட வந்துட்டாங்க; உங்கம்மாவுக்கு நான் குடுத்த கஷ்ட்டத்தினால எனக்குள்ள ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால இப்பவும் நான் அவளைப் நேரா பாக்கறதுக்கு கொஞ்சம் தயங்கறேம்மா .. இப்ப அவ தன் மூஞ்சை திருப்பிக்கிட்டா, என்னால அதை தாங்க முடியாதும்மா." குமாரசுவாமியின் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. "அப்பா ... நீங்க மனசால ரொம்ப அடிபட்டு வந்திருக்கீங்கப்பா ... உங்களுக்கும் அம்மாவோட துணை நிச்சயமா வேணும்பா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. "இப்ப நீ சொல்லும்மா ... என் சுந்தரி நல்லாயிருக்காளா?" குமார சுவாமி உண்மையான கரிசனத்துடன் கேட்டார். "நல்லாயிருக்காங்கப்பா .. கொஞ்ச நாளாவே உங்களைப் பார்க்கணுங்கற ஆசை அம்மா மனசுல இருந்துகிட்டு இருக்கு. ஆனா அதை வெளியே சொல்லாம மனசுக்குள்ளேயே வெச்சு புழுங்கறாங்க. அதுதான் ஏன்னு தெரியலை" "எல்லாம் என்னால வந்ததுதாம்மா ... எல்லாத்துக்கும் மேல மனுஷங்களுக்கு இருக்கற ஈகோ இருக்கே அது தான் அவங்களோட முதல் எதிரி. உன் அம்மாவுக்கும் ஈகோ இருக்கறது சகஜம்தானே? குமாரசுவாமி தப்பு பண்ணான். அதனால அவன் தான் திரும்பி எங்கிட்ட வரணும்ன்னு உன் அம்மா நினைக்கிறா; அவ நினைக்கறதுலேயும் தப்பு இல்லே!" அவர் குரலில் வருத்தம் தொனித்தது. "அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா ... அம்மா அப்படியெல்லாம் நினைக்கலப்பா..." "ஒரு குடும்பத்துல இருக்கற ஒரு தனி மனிதனின் தவறான நடத்தை, அந்த குடும்பத்துல இருக்கற மத்த உறுப்பினர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும்ங்கறதுக்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது அப்ப எனக்கு புரியல. அன்னைக்கு குடிக்கறது என் சுதந்திரம்ன்னு நெனச்சேன்; நான் குடிக்கறதுல என் மனைவி ஏன் தலையிடணும்ன்னு யோசிச்சேன். என்னுடைய சுதந்திரம்ன்னு நான் நெனைச்சது, என் மனைவி, மகளோட வாழ்க்கையை கணிசமான அளவுல பாதிச்சு இருக்குன்னு அப்புறமா புரிஞ்சுது. இதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன். ஆனா இப்ப வருத்தப்பட்டு என்னப் பண்றது? "பரவாயில்லேப்பா ... நடந்தது நடந்து போச்சு ... உங்க தவறை நீங்க உணர்ந்து திரும்பி வந்துட்டீங்க ... நீங்க எப்பப்பா வீட்டுக்கு வரப் போறீங்க?" "நீ என்னை சுலபமா ஏத்துக்கிட்டே ... ஆனா உன் அம்மா ... சாரிடா செல்லம் ... என் மனைவியோட மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலையே?" "அப்பா, நேத்து ராத்திரி, தூங்கிக்கிட்டு இருந்த நான், நடுவுல திடீர்ன்னு விழிச்சு எழுந்து பார்க்கிறேன், அம்மா கொட்டற மழையில நனைஞ்சுகிட்டு நின்னாங்க; ராத்திரி ரெண்டு மணி; அவங்க உடம்பு நடுங்கிக்கிட்டு இருக்கு; உள்ளே வான்னு இழுத்துக்கிட்டு வந்து காஃபி போட்டுக்குடுத்தேன். தலையை துவட்டி விட்டேன். புதுசா ஒரு நைட்டியை கொடுத்து போடச் சொன்னேன். ஏம்மா இப்படி பண்றேன்னு கேட்டேன்; என் உடம்புலயும், மனசுலயும் இருக்கற புழுக்கம் குறையட்டும் - அப்படின்னாங்க." "அம்மா, உனக்கு உன் புருஷன் ஞாபகம் வந்திடுச்சி; என் கிட்ட பொய் சொல்லாதேன்னு கத்தினேன். அம்மா ஒண்ணும் பேசலை" "சுகா ... உங்க அம்மாவுக்கு மழைன்னா ரொம்ப பிரியம்ம்மா ... எப்ப மழை பேஞ்சாலும் ... மழையில கொஞ்ச நேரம் போய் நனைஞ்சுக்கிட்டு நிப்பா ... இது அவளுடைய வழக்கம்மா ... ஆனா ராத்திரி ரெண்டு மணிக்கு இப்படி பண்ணான்னா ... அவ மனசு ரொம்ப நொந்து போயிருக்கான்னு நினைக்கிறேன்." "அதுதாம்ப நிஜம் ... அம்மா, என்னை மாமாவோட துணையோட, படிக்க வெச்சு, பரிட்சை எழுத வெச்சு, ஒரு வேலையை வாங்கற அளவுக்கு என்னை எல்லாவிதத்துலயும் மோட்டிவேட் பண்ணி, ஒரு நல்ல பொண்ணா ஆக்கிட்டாங்க; நானும் அவங்களை விட்டுட்டு இப்ப தனியா வந்துட்டேன்; இப்ப அவங்க தனிமை அவங்களை கொல்லுதுப்பா. அதுக்கும் மேல அம்மா மெனோபாஸ் ஸ்டேஜ்க்கு வந்துட்டாங்கப்பா; இப்ப உங்க அருகாமை அவங்களுக்கு அவசியமா தேவைப்பா. நான் சொல்றதை புரிஞ்சுக்கங்கப்பா ... " சுகன்யா விசிக்க ஆரம்பித்தாள். "அழாதடா கண்ணு ... ம்ம்ம்ம் ... எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா; உன்னை நிஜமாவே நல்லபடியா, ஒரு நல்ல இதயமுள்ள பொண்ணா வளர்த்திருக்காம்மா என் சுந்தரி ..." "நாலு நாள் முன்ன உங்களைப் பத்திக் கேட்டேன் ... எங்கப்பா எங்க இருக்காரு? உனக்கு எதாவது தெரியுமான்னு? அதுலேருந்து அம்மாவுக்கு தினமும் ராத்திரில உங்களை நினைச்சுக்கிட்டு அழுவறதுதான் வேலையா போச்சு. நேத்து கூட உன் அப்பாவை நீ பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னாங்க. உன் அப்பாவை பாக்கறதுக்கு உனக்கு முழு உரிமையிருக்குன்னு சொன்னாங்க;" "அப்பவே நான் உங்களை உடனடியா நீங்க எங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிச்சு அவங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்தனும்ன்னு முடிவு எடுத்தேன்; ஆனா கதையில நடக்கற மாதிரி ... சினிமா, சீரியல்ல வர்ற மாதிரி ... நீங்க காலையில எனக்குப் போன் பன்றீங்க ... காலையிலேருந்து நடக்கறது எல்லாத்தையும் என்னால நம்பவே முடியலைப்பா .. ரொம்ப விசித்திரமா இது இருக்கு. ஒருத்தர் வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்குமான்னு இருக்கு." "நேரம் வந்தா எல்லாம் தன்னால கூடி வருண்டா செல்லம். இதுக்கு மேல என்னால உன்னை திருப்தி படுத்தற ஒரு பதிலை என்னால சொல்ல முடியாது." "சரிப்பா ... இப்ப நாம வீட்டுக்கு போகலாம் வாங்க; எனக்கு உங்களோட என் அம்மா திரும்பவும் சந்தோஷமா இருக்கறதைப் பாக்கணும்." "என் ஓய்ஃப் என்னை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுவாளான்னு எனக்குத் தெரியலையேம்ம்மா" "அப்பா ... ஏம்பா பெரியவங்க நீங்கல்லாம் இப்படி பிடிவாதமா இருக்கீங்க; எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு; நீங்க ஏன் குடிக்கறீங்கன்னுதானே அம்மா கேட்டாங்க; அதுக்கு நீங்க அவங்களை அடிச்சீங்க; உதைச்சீங்க; உங்களுக்காக தன்னோட அப்பா, அம்மா, எல்லா சொந்தங்களையும் விட்டுட்டு உங்க கூட வந்தவங்க, திரும்பி அவங்க கிட்டவும் போக முடியாமா, முழுசா ரெண்டு வருஷம் உங்க கிட்ட கஷ்டப்பட்டாங்க; அவங்க சம்பாதிச்ச பணத்தையும் நீங்க குடிக்கறதுக்கு கேட்டப்ப, பதில் சொல்லாம குடுத்தாங்க; ஆனா கடைசியில நீங்க என்னையும் அடிச்சதனால, அதைப் பொறுத்துக்க முடியாம உங்களை திருப்பி அடிச்சிட்டாங்க; என் மாமா உங்களை வீட்டை விட்டு வெரட்டினார். எங்கம்மாவுக்கு இருந்த ஒரே ஆதரவு அவர்தானேப்பா" "அப்பா, அவங்க ரெண்டு பேரும் பண்ணது சரின்னு நான் வாதாடலை. ஆனா நம்ம குடும்பம் உடைஞ்சதுல உங்களுக்கு பங்கு அதிகம்ன்னு நான் ஃபீல் பண்றேன். உங்கக்கிட்ட இருந்த இந்த ஒரு குறையைத் தவிர வேற எந்தக்குறையும் உங்கக்கிட்ட இருந்ததா என்னால சொல்ல முடியாது. நீங்களும் என் அம்மாவுக்காக உங்க அப்பா, அம்மா, உங்க உறவினர்களை விட்டுட்டு வந்தீங்க; அம்மாவையும், என்னையும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா வெச்சிகிட்டு இருந்தீங்க. அம்மாவுக்கு என் மாமா துணையிருந்தார். உங்க கூட யாருமே இல்லை. நீங்க தனி ஆளா அலைஞ்சீங்க; அதை நெனைச்சு நான் எத்தனை தரம் தனியா அழுது இருக்கேன் தெரியுமா? ஆனா உங்க குடிப்பழக்கம் உங்களுடைய மத்த நல்ல குணத்தையெல்லாம் குழி தோண்டிப் புதைச்சிடுச்சிப்பா." சுகன்யா விம்ம ஆரம்பித்தாள். "அழாதேடா கண்ணு ... ப்ளீஸ் ... நீ இப்ப அழறதைப் பாத்தா நான் சுத்தமா உடைஞ்சிடுவேன் ... சுகன்யாவின் கண்களை அவர் துடைத்தார். குமாரசுவாமியின் கண்களும் கலங்கி குளமாகியிருந்தது. "நான் பேசினது உங்க மனசை புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுடுங்கப்பா ..." தன் தகப்பனின் புறங்கையில் மென்மையாக சுகன்யா முத்தமிட்டாள். பின் அவரைப் பார்த்து கலங்கிய கண்களுடன் சிரித்தாள். "சரிடா சுகா ... நான் உன் கூட வீட்டுக்கு வரேன்."

"தேங்க்ஸ்ப்பா ... கண்டிப்பா என் அம்மா உங்களை உள்ள வாங்கன்னுதான் கூப்பிடுவாங்கப்பா ... ஏன் வந்தேன்னு நிச்சயமா கேக்கவே மாட்டாங்க ... என் உள்ளுணர்வு இதை சொல்லுதுப்பா; என் உள்ளுணர்வு கண்டிப்பா தப்பா போகாதுப்பா; எனக்காக, உங்க பொண்ணுக்காக; உங்க ஈகோவை விட்டுக் குடுத்துட்டு, நடந்ததையெல்லாம் சுத்தமா மறந்துட்டு, நீங்கதான் அந்த முதல் அடியை எடுத்து வெச்சு வீட்டுக்கு வாங்களேன். நாம எல்லாம் திரும்பவும் ஒண்ணா சந்தோஷமா இருப்போம் .. என் தாத்தா பாட்டியையும் நான் போய் முதல்ல பார்க்கிறேம்பா." நீளமாக பேசிய சுகன்யா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். குமாரசுவாமியின் கை தன் மகளின் தலையை வருடிக்கொண்டிருந்தது. "வாம்மா ... மணி ரெண்டாக போகுது ... நீயும் பசியோட இருப்பே .. போய் எதாவது சாப்பிடுவோம் ..." இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். "சுகா, நீ அம்மா நேத்து மழையில நனைஞ்சான்னு சொல்றே; நீ காஃபி போட்டு குடுத்தேங்கறே? அப்ப சுந்தரி உன் கூட சென்னையிலா இருக்கா? "ஆமாப்பா; அம்மா இங்க சென்னையிலத்தான் இருக்காங்க ... " "அம்மா வேலையை சென்னைக்கு மாத்திக்கிட்டாளா? "இல்லப்பா ... அம்மா கும்பகோணத்துலத்தான் வேலை செய்யறங்க; என்னால ஒரு சின்னப் பிரச்சனை நம்ப வீட்டுல; அம்மாவும், மாமாவும் அதனால இங்க வந்தாங்க ... அந்தப் பிரச்சனை இன்னும் முழுசா முடிவுக்கு வரலை. மாமா திரும்பிப் போயிட்டார் ... இன்னும் ரெண்டு நாள் அம்மா இங்க என் கூடத்தான் இருப்பாங்கா; நான் பத்து நாள் லீவு போட்டிருக்கேன்; வெள்ளிக்கிழமை அம்மாவும் நானும் நம்ப ஊருக்கு கிளம்பறோம்." "உனக்கு என்னப் பிரச்சனைடா செல்லம் ... நான் தீத்து வெக்க முயற்சி பண்றேம்மா .." "நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்கப்பா ... வந்து அம்மாவை பாருங்கப்பா; அதுக்கப்புறம் நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்." என் சுகாவுக்கு பிரச்சனையாமே? இந்த உலத்திலே பிரச்சனை இல்லாதவங்களே இல்லையா? குமாரசுவாமி மவுனமாக அவளுடன் நடந்தார்.

சுகன்யா... 19


கல்யாணமான புதிது. சுந்தரியும், குமாரும் அன்னியோன்யமாக இருந்த நாட்கள் அவை. மழை இலேசாக தூறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம். காற்று குளுகுளுவென வீசியது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது. சன்னல் வழியே மழைச்சாரல் வீட்டுக்குள் அடித்துக் கொண்டிருந்தது. குமார் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். அன்றும், இன்று போல்தான் வானம் பொழிந்து பூமியை நனைக்க துடித்துக் கொண்டிருந்தது. சுந்தரி அறைக்கு வெளியில் மொட்டை மாடியில் மழைத்தடுப்புக்கு கீழ் நின்று கொண்டு மழை பொழிவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று அந்த மொட்டை மாடியில் எந்த கவலையும் இல்லாமல், தன் ஆசைக் கணவனுடன் மழையில் நனைந்து, குதித்து, சிரித்து விளையாடி, மகிழ்ச்சியாக இருந்ததை நினைக்கையில் இன்று அவள் மனம் புது மணப்பெண்ணைப் போல் குதிபோட்டு கும்மாளமிடுகிறது. மீண்டும் தன் கணவனை, தன் மடியில் கிடத்தி, அவனை மகிழ்வித்து தானும் மகிழ மனம் ஏங்குகிறது. அவள் மனம் அவள் கட்டுக்குள் நிற்காமல், எந்த இலக்குமில்லால் அலைந்து அவளை இம்சை செய்கிறது. அவள் அடி வயிறு குழைந்து நெகிழ்கிறது. ஆண்டுகளாக இறுகிக்கிடக்கும் அவள் அந்தரங்கம் இன்று தீடிரென இளகுவதை கண்டு அவள் மனம் துணுக்குற்றது.

தீடிரென சுந்தரியின் மனம் அவள் கல்லூரியில் படித்தக் காலத்தை நோக்கி தாவியது. தாவல்தானே மனசின் நியதி! அது ஓரிடத்தில் நில்லாமல் தாவிக்கொண்டே இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் போதே குமாரும் அவளும் ஒருவரை ஒருவர் முழு மனதுடன் நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் காதல் உறவு என்பதே அந்த காலத்தில் ஒருவரின் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு, அவ்வப்போது இருவரின் தோள்களும் உரசிக்கொள்ள, பேசிக்கொண்டே நீண்ட தூரம் நடப்பது தான். மொத்தத்தில் அவர்களின் இரண்டாண்டு காதல் வாழ்க்கையும் ஓரிரு முத்தத்தையே கண்டிருந்தது. "கிஸ் அடித்தல்." என்பதும், கல்லூரியிலிருந்து பஸ்ஸில் ஒன்றாக உட்க்கார்ந்து, கண்களால் ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கிக்கொண்டு, தொடைகள் உரச, மனம் கிளுகிளுக்க, உடன் படிப்பவர்கள் பொறாமையில் வெந்துகொண்டிருக்க, ஐம்பது கிலோமீட்டர் பயணம் செய்து, கிராமத்துக்கு திரும்பி வரும் வெள்ளிக்கிழமை மாலையன்று, இருட்டும் நேரத்தில் சாலையோரம், மரத்தின் கீழ் ஒளிந்து நின்று, யாராவது பார்த்துவிட்டால், உடம்பு புண்ணாகிவிடும் என்ற பயத்தில், கன்னத்தில் உதடுகள் பட்டும் படாமல் ஒரு முறை ஒற்றியெடுத்துவிட்டு ஓட்டம் ஓட்டமாக வேறு திசைகளில் ஓடுவதுதான். அடுத்த வாரம், கல்லூரியில் ஹாஸ்டலில், மதிய உணவு சமயத்தில், சுந்தரி பெருமையாக தன் சினேகிதியிடம் பீற்றிக் கொள்வாள், "பேசிக்கிட்டே இருந்தான்; சட்டுன்னு என் ஆளு நேத்து என்னை கன்னத்துல கிஸ் அடிச்சுட்டாண்டி!". "நீ லக்கிடி ... உன் ஆளு நிஜம்மாவே ஹேண்ட்சம்மா இருக்காண்டி, ஆனா ஜாக்கிரதையா இரு," அவள் தோழி உமா, சுந்தரியை தன் கண்களில் பொங்கும் பொறாமையுடன் பார்ப்பாள், பிறகு தாழ்ந்த குரலில் கேட்ப்பாள், "சுந்தரி ... கிஸ் அடிக்கும் போது எப்படி இருந்துதுடி" "சூப்பரா இருந்ததும்ம்மா," சுந்தரி கண்ணடித்து சிரிப்பாள். ஓருமுறை, பிள்ளையார் கோவில் பிரகாரத்தில், முத்தம் என்ற பெயரில் அவசர அவசரமாக குமார் அவள் உதட்டை அழுத்தி கடித்து விட்டதையும், உதடு கிழிந்து ரத்தம் கசிய, அவள் வலி தாங்காமல் அவனைத் தன் கையிலிருந்த பூக்கூடையால் மொத்தி, அந்த கூடையின் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த மூங்கில் குச்சி, அவன் கண்ணுக்கீழ் குத்திக் கிழித்து ரத்தம் பொங்கியதையும், அவள் துடிதுடித்து ஆயிரம் தடவை அவனிடம் மன்னிப்பு கேட்டது அவள் நினைவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்ததும், வீங்கிய உதட்டைப் பார்த்து "என்னடி இது ... ஏன் இப்படி உன் உதடு திடீர்ன்னு வீங்கியிருக்கு" அம்மா ஏகத்துக்கு கவலைப்பட்டதையும், "அம்மா குளவி கொட்டிடுத்தும்மா" என அவள் புளுகினதையும், சுந்தரியின் தாய் வேண்டாம் என்றாலும் கேட்காமல் மஞ்சளை அறைத்து உதட்டில் பூசியதையும், இன்னைக்கு நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது சுந்தரிக்கு. அந்த ஒரு ஐந்து வினாடி நெருக்கத்துக்காக எத்தனை தவிப்புடன் வாரம் பூராவும் காத்திருப்பார்கள் இருவரும். வானம் இப்போது பூ வாளியாக மாறி, பூமிச்செடியில் தண்ணீர் விட ஆரம்பித்துவிட்டது. "உடம்பு நனையுதே; உள்ளே எழுந்து போகலாமா?" சுந்தரி ஒரு வினாடி யோசித்தாள். "உள்ளேப் போய் மட்டும் என்னப் பண்ணப் போறேன்? இந்த மனசு என்னை நிம்மதியாவா இருக்கவிடப்போகுது? இன்னைக்கு நான் சத்தியமா தூங்கப்போறது இல்லை; அந்த பாவி மவன் நினைப்பு வந்துடுச்சி; புரண்டு புரண்டு படுத்து உடம்பு வலிதான் மிஞ்சும் ... சுகன்யா முழிச்சிக்குவா; சின்ன சத்தம் கேட்டாக் கூட எழுந்துக்கறாளே? இங்கேயே செத்த நேரம் உக்காந்து இருப்போம் ... அவளாவது நிம்மதியா தூங்கட்டும்!" சுந்தரியின் மனம் மீண்டும் அந்த மழை நாளை நோக்கித் திரும்பியது. கல்யாணம் முடிந்த பின், ஒருத்தரை ஒருத்தர் தொடும் போது, ஒவ்வொரு முறையும் ஒரு புது வித அனுபவத்தை உணர்ந்த காலம். உள்ளமும் உடலும் சளைக்காமல், தினம் தினம், காலையும் மாலையும், பரஸ்பரம் அடுத்தவரின் உடலில் புது புது அர்த்தங்களை விடாமல் தேடிக்கொண்டிருந்த நேரம். மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரியின் முதுகில், குமார் தன்னை பசைபோட்டு ஒட்டியதைப்போல் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் உடலிலிருந்து வந்த இலேசான வியர்வை வாசமும், காலையில் முகத்தில் தேய்த்து, இன்னும் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் கலந்த ஆண்மை மணமும் வந்துகொண்டிருந்தது. அவன் தொடை நடுவில் மெல்ல மெல்ல எழுந்த புடைப்பு சுந்தரியின் பின்னெழில்களில் உரச, அந்த புடைப்பை தன் கையில் பற்றிக்கொள்ள அவள் மனம் பறக்க, அவன் கைகள் அவள் அடிவயிற்றை தடவ, அவள் இதயம் வேகமாக துடித்து, முகம் நிறம் மாறிக்கொண்டிருந்தது. "வீட்டுக்கு வந்து முகத்தைக் கூட கழுவலியா நீ ... சரியான சோம்பேறி? "ம்ம்ம் .... ஏம்ம்மா" "நீ காலைல மூஞ்சியிலே தேய்ச்சிக்கிட்ட லோஷன் வாசனை உன் கழுத்துலேருந்து இன்னும் குப்புன்னு வருது." "கழுவிட்டேண்டி மூஞ்சை." "பொய் சொல்லாதே ... நீ பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது" அவள் சலித்துக்கொண்டாள். "சுந்து நான் ரூம்ல உனக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன் ... நீ இங்க மழையை வேடிக்கைப் பாத்துக்கிட்டு நிக்கறே" அவன் குரலில் அவள் உடம்பை திறந்து பார்க்கும் ஏக்கம் வழிந்தது. "தெரியும்" "என்னத் தெரியும்" "நீ எதுக்கு காத்துக்கிட்டிருக்கேன்னு"

"எதுக்கு" "துள்ளிக்கிட்டு என் இடுப்புக்கு கனமா கீழே எதுவோ இடிக்குது ... அதைக் கேளு ... அது சொல்லும்" சுந்தரி கலகலவென நகைத்தாள். "எங்கடி ... எதுடி ..." அவன் தன் இடுப்பை அவள் புட்டங்களில் மேலும் அழுத்தினான். "ஹீம்ம்ம்ம் .. .ம்ம்ம்மா" அவள் சுகமாக முனகினாள். "சுந்துக்குட்டி, உனக்கு மழை பெய்யறதை பாக்கப் பிடிக்குமா? அவள் காதருகில் கிசுகிசுத்தவன் தன் இதழ்களால் அவள் காது நுனியை கவ்வி இதமாக கடித்து, அவள் பின் கழுத்தில் முத்தமிட்டான். முத்தமிட்டவன் இதழ்கள் அவள் கழுத்துடன் நிற்காமல், ரவிக்கை மறைக்காத அவள் முதுகை பட்டும் படாமல் உரசிக் கொண்டிருந்தது. அவன் கைகள் அவள் கைக்கடக்கமான மாங்கனிகளை சேலையுடன் சேர்த்து வெறியுடன் பிசைந்து கொண்டிருந்தது. "ம்ம்ம் ... பிடிக்கும் ... மழையை பாக்கறது, மழையில நனைஞ்சுக்கிட்டு நிக்கறது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்" சுந்தரி முனகினாள். அவள் முனகல் சத்தம் அவன் காதுகளுக்கு இன்பமாக இருந்தது. "சரி வா ... அப்ப மழையில நனையலாம்" குமார் உற்சாகத்துடன் அவளை இழுத்துக்கொண்டு மொட்டை மாடியின் நடுவுக்கு ஓடினான். சுந்தரி குழந்தையைப் போல் மழையில் குதித்தாள். கைகளை விரித்து தன்னைத்தானே தட்டாமாலை சுற்றினாள். குமார் அவளை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டெனத் தாவி அவன் முதுகில் உப்பு மூட்டையாக தன்னைக் கட்டிக்கொண்டாள். தன் அந்தரங்கத்தை அவன் அடி முதுகில் தேய்த்தாள். தன் மனைவிக்கு என்னப் பிடிக்கும் என்னப் பிடிக்காது என்பதே அவனுக்கு இன்னும் பிடிபட்டிருக்கவில்லை. மழை இவளுக்கு இத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கிறதா? வெற்று மார்புடன், தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு, நனைந்த முடியுடன், உயரமாக, உயரத்துக்கேற்ற பருமனுடன், சிவப்பாக, கருத்த மீசையுடன், ஈர லுங்கியில், முகத்தில் பொலிவுடன், வியப்புடன் தனனைப் பார்த்துக்கொண்டிருந்த கணவனை காணக் காண அவள் மனம் வெறி கொண்டு துள்ளியது. மழை நீரால் உடலில் நனைந்து ஒட்டிக்கொண்டிருக்கும் துணியை உறுவி எறிந்து விட்டு, அவனை அங்கேயே கட்டித் தழுவி, அந்த மழையிலேயே அவனைக் கூடும் வெறி அவளுள் எழுந்தது. மழையில் நனைந்த படியே அவனை நெருங்கி அவனை தன் மார்புடன் சேர்த்து தழுவி வெறியுடன் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள். மழையில் நனைந்த புடவை அவள் வடிவான உடலுடன் ஒட்டிகொண்டு அவள் வீங்கிய மார்பையும், அவள் பின்னெழில்களையும் தெளிவாக அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. மார்புகள் அவள் குதியலுக்கு ஏற்ப குலுங்கி, அவள் கால் கொலுசுகள் மேலும் கீழும் ஏறி ஒலித்தன. அருகில் நெருங்கி அவன் லுங்கியோடு சேர்த்து, அவன் உறுப்பை அழுத்திக் கண்களில் விஷமத்துடன் கிள்ளி விட்டு, தன் புட்டங்கள் அசைந்தாட அவள் மானாக ஓடினாள். அவன் அவளைத் துரத்தி பின்னால் ஓடினான். அவன் அவளை நெருங்கியதும் சுந்தரி தன் கைகளில் மழை நீரைப் பிடித்து அவன் முகத்தில் வீசி அடித்தாள். ஈர உடையில் தன் ஆசை மனைவியைப் பார்த்த குமாரின் தம்பி வேகமாக விறைத்து எழ, குமார் அவளை இறுகத் தழுவி தன் வலுவான கைகளல் தூக்கித், தன் உறுதியான மார்பில் சேர்த்தணைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தான். அறையின் வெளிச் சுவரில் அவளைச் சாய்த்து அவள் உதடுகளை கவ்வி முத்தமிட்டான். புடைத்திருந்த அவன் தண்டு அவள் அடி வயிற்றில் நெளிய, அதன் உரசலால் தன்னுடலில் ஏற்பட்ட கிளுகிளுப்பை அவள் கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள். மழைச்சாரல் உண்டாக்கிய இலேசான குளிரில் அவளையுமறியாமல் வெட்க்கத்தை விட்டு அவள் தன் இடுப்பை அசைத்து அசைத்து அவன் புடைப்பை மேலும் மேலும் எழுப்பினாள். அவன் உடல் தந்த கதகதப்பு அவளுக்கு அந்த நேரத்தில் இதமாக இருக்க, குமாரின் கைகள் அவள் சேலை முந்தானையின் உள்ளே நுழைந்துவிட்டிருந்தது. "என் சுந்தரி குட்டிக்கு என்னப் பிடிக்கும்" "உனக்குத் தெரியலையா? எனக்கு ... என்னப் பிடிக்குதுன்னு..." " ஒரு தரம் உன் வாயாலத்தான் சொல்லேன் ... அப்புறம் பாரேன் ..." "மக்க்க்கு ... வீரமா இழுத்துக்கிட்டு வந்து தாலி கட்டி ஒரு மாசமாச்சு ... பொண்டாட்டிக்கு என்னப்புடிக்கும்ன்னு இன்னும் புரியலை"? அவள் அவன் கன்னத்தை வருடி கீழுதட்டைத் திருகினாள். "ஓரே ஒரு தரம் சொல்லுன்னுதானே கேக்கிறேன் ... ரொம்ப அல்ட்டிக்கிறியே ... எனக்கு என்னப் புடிக்கும்ன்னு உனக்குத் தெரியுமா? குமாரின் கைகள் அவள் புட்டங்களை வருடிக்கொண்டிருந்தன. "க்க்க்கும்ம்ம் ..." அவள் அவன் கையை எடுத்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள்.. சட்டென திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். " நீ மெதுவா அமுக்கினா எனக்குப் புடிக்கும்; எப்பவும் மொரட்டுத்தனமா கசக்கறே... அதுங்களை ... எனக்குத் தெரியும் உனக்கு என் மாங்காய்களை புடிக்குதுன்னுட்டு ... அதுங்களை அழுத்து ஆனா ரொம்ப கசக்காதே ... எனக்கு வலிக்குதுல்ல..." அவள் குழைந்தாள். "சாரிடாச் செல்லம்...இனிமே நான் அப்படி பண்ணமாட்டேன்; இவ்வள நாளா நீ எங்கிட்ட ஏன் சொல்லலை?" "நீ இன்னைக்குத்தானே கேட்டே ... எனக்கு என்னப் பிடிக்கும்ன்னு?" "உனக்குப் பிடிக்காததை இனிமே நான் செய்ய மாட்டேன் ... உள்ளப் போவலாம் சுந்து" அவன் குரலில் கெஞ்சல் ... "பிராமிஸ் .. " சுந்தரி தன் உள்ளங்கையை நீட்டினாள். "பிராமிஸ் ... அவன் அவள் நீட்டிய கையில் முத்தமிட்டான். "உள்ளப் போலாமாடி ராஜாத்தி" "போய் ...." அவள் சிணுங்கினாள். "நான் அப்ப்பாவாம் ... நீ அம்ம்மாவாம் ... நமக்குன்னு ஒரு குட்டிப் பாப்பா வேணாமா? அவன் விரல்கள் அவள் ரவிக்கையை அவிழ்க்கத் துடித்தது. "முண்டம் ... இங்கேயே அவுக்கறயே ... அறிவு கெட்டவனே? ..." அவள் அவன் கன்னத்தைக் கடித்தாள். "நீதானே அமுக்குன்னு சொன்னே?" "அமுக்குன்னு சொன்னேன் ... இங்கயா அவுக்க சொன்னேன் ... ஹூக்கும்ம்ம்ம் ... மக்கு ... மக்கு ... குமரு உள்ளப் போயிடலாம் ... வாப்பா ... குமரு ... ப்ளீஸ் ... இங்க வேணாம்" அவள் அவனை வலுவாக உந்தித் தள்ளினாள். *** வானத்தில் இடியின் முழக்கம் ... காற்றின் வேகம் வலுத்திருந்தது ... சுழன்று சுழன்று காற்று அடித்தது ... மின்னல் மின்னியது ... அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள். மழை நாட்கள்ல்ல, மனுஷனுடைய உடல் வேட்க்கை அதிகமாயிடுது ... இப்ப என் குமார் என்னப் பண்ணுவான்? அவனும் இப்படித்தான் தூங்காம இருப்பானா? "படார்" ... பால்கனி கதவு மிகுந்த சத்தத்துடன் அடித்துக்கொள்ள, சட்டென சுந்தரி நிகழ்காலத்துக்கு வந்தாள். "சே ... சே .. எனக்கென்ன பித்துப் புடிச்சு போச்சா?" "இன்னைக்கு உப்புமாவுல உப்பு கொஞ்சம் அதிகமாயிருந்தது ... அதான் என் உடம்புக்கு கதகதப்பு கேக்குது." சடசடவென மழை வேகமாகக் கொட்டத் தொடங்கியது. சுந்தரி விருட்டென எழுந்தாள். எழுந்து கூரையில்லாத இடத்தை நோக்கி மெதுவாக நடந்து தலை முடியை அவிழ்த்து உதறிக் கொண்டு, கொட்டும் மழையில் நின்றாள். தலை முடி அவள் இடுப்பை தொட்டு நின்றது. அகன்ற இடுப்பு மத்தாளமாக காட்சியளித்தது. "உடம்பு சூடு கொஞ்சம் கொறையட்டும்." சுந்தரி விருப்பத்துடன் மழையில் நின்று நனைந்தாள். இரு கைகளாலும் மார்பின் மீது விழுந்த நீரை வழித்து எறிந்தாள். அவள் கை பட்டதும் ரவிக்கையில் தூங்கிக்கொண்டிருந்த முலைகளில் தினவேறி மெதுவாக காம்புகள் நிமிரத்தொடங்கின. "எனக்கு பிடிக்காததை செய்யமாட்டேன்னு மழையில நின்னு சத்தியம் பண்ணியே? ... நான் உன்னை வீட்டை விட்டுப் போடான்னு கத்தினேன் ... உண்மைதான்... நான் இல்லேன்னு சொல்லலை...எத்தனை தரம் நீ என்னை உன் குடி வெறியில அடிச்சிருப்பே? என்னை கீழேத் தள்ளி மிதிச்சிருப்பே? நான் ஒண்ணுமே சொன்னதில்லையே? நம்ம குழந்தையை குடி வெறியில கடிச்சியேடா? அதை என்னால பொறுக்க முடியாம போய்த்தானே, நான் உன்னை ஓரே ஒரு தரம், போதையில நீ பண்ணத் தப்புக்கு நான் திருப்பி அடிச்சேன்? அதுக்காக நீ என்னை விட்டுட்டு மொத்தமா போயிட்டியேடா?" "குமரு, இப்ப நீ எங்கடா இருக்கே? நான் இங்கேத் தனியா மழையில பைத்தியக்காரியாட்டம் நிக்கறண்டா; உடம்பு சூடு ஏறிப் போய் நனையறேண்டா ... தவிச்சிப் போயிருக்கேண்டா ... என்னால முடியலடா ... வெக்கத்தை விட்டு கெஞ்சறேன் ... வந்துடுடா ... எனக்காக நீ வரவேண்டாம் ... உன் ஆசைப் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரே ஒரு தரம் வந்துட்டுப் போடா... " அவள் மனம் அழுது கூவியது. வானத்தில் மின்னல் மின்னி, இடி இடித்துக்கொண்டு குமுறியது... இயற்கையின் இந்த கம்பீரமான பிளிறலில், அவள் மனதின் மெல்லிய ஒலம் அவள் ஆசைக் கணவன் குமாருக்கு - குமாரசுவாமிக்கு கேக்குமா? "வீட்டுக்கு மாப்பிள்ளை வரப் போற நேரத்துல, என் மனசு ஏன் இப்படி தறிகெட்டு ஓடி பழசையெல்லாம் நினைக்குது?" அவள் கன்னங்களில் கண்ணீர்ர் வழிந்தோடி அவள் உதடுகளைத் தொட்டது. மழை நீர் சுத்தமானதுன்னு சொல்றாங்களே, எத்தனை தடவை நான் மழையில நின்னு நனைஞ்சிருக்கேன்? இன்னைக்கு ஏன் எனக்கு மழைத் தண்ணி உப்பு கரிக்குது? நான் அழறேனா என்ன? என் மனசு கல்லுன்னு என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் சொல்றாங்களே?" அவள் மனதுக்கு இதற்கான விடை தெரிந்திருந்த போதிலும், அவள் பரிதவித்துக் கொண்டிருந்தாள். சுகன்யா, பால்கனி கதவு ஏற்படுத்திய சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து சட்டென விழித்து எழுந்தாள். பக்கத்தில் படுத்திருந்த தாயைக் காணாமல் ஒரு நொடி பதறிப் போனாள். பால்கனி கதவு காற்றில் மீண்டும் திறந்து கொள்ள, மின்னல் வெளிச்சத்தில் சுந்தரி வெளியில் மழையில் நின்று கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. எழுந்து விளக்கைப் போட்டாள். "இந்த அம்மாவுக்கு மழை மேல அப்படி என்ன அடங்காத ஆசை? எப்ப மழை பேஞ்சாலும் பயித்தியமாட்டம் ஓடிப்போய் அதுல நனையனும்; ராத்திரி பகல் ஒன்னும் கிடையாது. அவள் மனதில் சலித்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த குடையை கையில் எடுத்துக்கொண்டு வெளியில் ஓடினாள். "எம்ம்மா, உள்ளே வாம்மா; யாராவது உன்னைப் பாத்தா பயித்தியம்ன்னு நெனைச்சுக்கப் போறாங்க." சுகன்யா, சுந்தரியின் கையை பிடித்து உள்ளே இழுத்துக்கொண்டு வந்தாள். தன் மகளின் கரம் அவள் உடம்பில் பட்டதும், சுந்தரியின் உடல் இலேசாக நடுங்கியது. "தலையைத் சீக்கிரமா துவட்டும்மா; ஜொரம் வரப்போவுது உனக்கு; உடம்பு நடுங்கற அளவுக்கு மழையில நனையறே? ... முதல்ல உன் ரவிக்கையை அவுத்துட்டு இதை உடம்புல போடு ", அலமாரியை திறந்து ஒரு புது நைட்டியை எடுத்து தன் தாயிடம் நீட்டினாள் சுகன்யா. ஸ்டவ்வை பற்ற வைத்து பாலைச் சூடாக்கி, காஃபியை கலக்க ஆரம்பித்தாள். "கண்ணு, எனக்கு ஒன்னும் இல்லடா; ஏன் இப்படி பதறிப் போறே நீ?" "ஆமாம் ... பதறிப் போறேன் நான்? ... இடியிடிக்குது, அப்படி ஒரு மின்னல் மின்னுது; மழையில போய் நிக்கறே? உனக்கு என்ன ஆச்சு இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் ... இப்ப உனக்கு உன் புருஷன் நினைப்பு வந்துடுச்சு... அதானே?" "அதெல்லாம் ஒண்ணுமில்லடி" காஃபியை உறிஞ்சிய சுந்தரி போலியாக சிரித்தாள். "நான் இன்னும் சின்னக் குழந்தையில்லம்மா; உண்மையை சொல்லு நீ ... பொய் பேசக்கூடாதுன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் எனக்கு உபதேசம் பண்ற நீ; நான் தெரியாத்தனமா சொல்லிட்டேன்; என் அப்பாவை பாக்கணும்ன்னு; அது உன்னை இந்த அளவுக்கு பாதிக்கும்ன்னு நான் நினைக்கலை அப்ப; உனக்கு இஷ்டமில்லேன்னா, நான் அவரைப் பாக்கமாட்டேன்னும் சொல்லிட்டேன்; அப்புறம் எதுக்கு நீ நேத்து ராத்திரி பூரா அழுதுகிட்டு இருந்தே?" பெண்ணின் பேச்சிலிருந்த உண்மை அவளைச்சுட்டது. "சுகா ... நீ சொல்றது சரிதாம்மா ... நான் யோசனைப் பண்ணிப் பாத்தேன்" "என்னம்மா சொல்றே நீ" "தீராத கோபம் யாருக்கு லாபம்? தங்கமான மனுஷந்தாண்டி உன் அப்பா. அந்த குடிப்பழக்கம்தான் அவரை ஒரு மனுசனா இல்லாம ஆக்கியிருந்தது. நானும் உன் மாமாவும் சேர்ந்து தானே அவரை அடிச்சு விரட்டினோம். என் புருஷன் நல்லவர்தான் ஆன ரொம்ப ரோஷக்காரர். யாருக்குத் தெரியும்? நீ சொல்றது மாதிரி உங்கப்பா ஒருவேளைத் தன் குடிப்பழக்கத்தை விட்டுட்டு திருந்தி வாழ்ந்துகிட்டு இருக்கலாம்? திருந்தியே இருந்தாலும் உங்காப்பாவா எப்படி திரும்பி வருவார்? உன் மாமாவுக்கு அவர் இருக்கற இடம் தெரிஞ்சு இருக்குன்னு நினைக்கிறேன் ... நானே உன் அப்பாகிட்டே பேசறேன் ... திரும்பி வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடறேன் ..." சுந்தரி சுவரைப் பார்த்துக்கொண்டு பேசினாள். "நிஜம்மாவாம்மா சொல்றே?" சுகன்யா தன் தாயின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டாள். "நிஜம்மாத்தாண்டா கண்ணு சொல்றேன்." "தேங்க்ஸ்ம்மா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா ... உனக்கு ... கஷ்டமாயிருந்தா நான் வேணா அப்பாக்கிட்ட பேசறேனேம்மா ... அவருக்கு என் மேல என்ன கோபம் இருக்க முடியும்?" சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள். "சரிடா கண்ணு ... நீ தான் பேசு ... எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லம்மா ... இப்ப லைட்டை நிறுத்து ... செத்த நேரம் தூங்கலாம் ... மணி ரெண்டாவாகப் போகுது ..." தெரு விளக்குகள் பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தன. பண்புள்ள ஒரு குடும்பத்துடன், மாலை நேரத்தை கழித்ததானல் உள்ளத்தில் பொங்கிய உவகையுடன், அந்த இனிமையான சுவையை அசைபோட்டவாறே, மனம் நிறைய குதூகலத்துடன் குமாரசுவாமி கெஸ்ட் ஹவுசை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். தன் மனசிலிருந்த மகிழ்ச்சியை பதட்டமில்லாமல் அனுபவிக்க விரும்பி ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு, தான் தங்கியிருந்த இடத்திற்கு அவர் நடந்து செல்ல விரும்பினார். நடப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான பொழுது போக்கு. கடந்த பதினைந்து வருடங்களாக, தன் ஓய்வு நேரத்தை நடப்பதிலேயே அவர் கழித்துக் கொண்டிருந்தார். குளிர்ச்சியாக வீசிக்கொண்டிருந்த காற்றும், வரப்போகும் மழையும், அவருடைய உள்ளத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்கிக் கொண்டிருந்தன. குமாரசுவாமியின் நிழல், அவருடன் சேர்ந்து சென்றது, பின்னாலிருந்து அவரைத் துரத்தியது, வேகமாக முன்னால் சென்று, மீண்டும் பின்னால் வந்து அவரைத் துரத்தியது. முன்னேயும் பின்னேயும் ஓடி ஓடி ... ம்ம்ம் ... களைப்பே இல்லையா இதுக்கு; என் மனசை மாதிரி; அவர் சிரித்துக் கொண்டார். கால்கள் மெதுவாக நடை போட அவர் மனம் வேகமாகப் பறந்தது. "நடராஜன் குடுத்து வெச்ச மனுஷன். அவர் கட்டிக்கிட்ட பொம்பளை, ஒல்லியா வெட வெடன்னு இருந்தாலும்; பளிச்சுன்னு மனசுல ஒட்டிக்கற முகம்; சிம்பிளா ஒரு மூக்குத்தி, தோடு, கழுத்துல மெல்லிசா ஒரு செயின், வாய் நிறைய சிரிப்பு; தீர்மானமாக ஒரு பேச்சு; கொஞ்சம் முன் கோபியா இருப்பாளோ? அந்தம்மா பார்க்கற பார்வையில பொண்ணும், புருஷனும், பணிஞ்சிப் போயிடறாங்க; இருந்துட்டுப் போவட்டுமே; அவங்க குடும்பம்; அவங்க குடும்பத்தோட நல்லதுக்காகத்தானே மல்லிகா ஸ்ட்ரிக்டா இருக்காங்க; அவங்களுக்கு ஒரு ஆம்பிளைப் புள்ளைன்னாரு நடராஜன்". "நல்லவங்களுக்கு பொறந்தவன்; அவனும் நல்லவனாத்தான் இருப்பான்; ரெண்டு பேரு மேலயும் பாசத்தைக் அள்ளிக் கொட்டறாளே இந்த அம்மா!என்னமா ஓடி ஓடி, போதும்ன்னாலும் கேக்காம கை நெறய, அள்ளி அள்ளி என் எலையில போட்டா; முகத்தைப் பார்த்து பரிமாறின விதத்துல தெரியுதே அவ மனசு தாராளம்ன்னு; குமாரசுவாமியின் மனசு வஞ்சனையில்லாமல் வாழ்த்தியது மல்லிகாவை!" "எனக்கு வாய்ச்சவ மட்டும் எந்த விதத்துல கொறச்சலா இருந்தா? அழகுல கொறையா? இல்லையே? அம்சாம இருந்தா! சுந்தரிங்கற பேருக்கு ஏத்தப்படி சுந்தரியாத்தான் இருந்தா; படிப்புல கொறையா? நல்லாப் படிச்சுட்டு கை நெறைய சம்பாதிச்சா; நான் உன்னை காதலிக்கறேன்னு சொன்ன ஒரு வார்த்தைக்காக அவ அப்பன் ஆத்தாளை பகைச்சிக்கிட்டு எனக்காக என் பின்னால கூப்பிட்ட உடனே ஓடி வந்தா? என் கூடப்படிச்சவன்ல்லாம் பொறாமையில வயிறெரிஞ்சானுங்க ... "மாப்ளே, லாட்டரி விழுந்துடுச்சுடா உனக்குன்னு!" "சுந்தரிக்கும் தாராள மனசுதான்; என்னக்குறை வெச்சா எனக்கு? கேட்டப்பல்லாம், வாரி வாரி மனசார அவளையும், அவ சம்பாதிச்ச பணத்தையும் எனக்கு அள்ளி அள்ளிக் குடுத்தா; நேரத்துல அழகா தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பொண்ணையும் பெத்து என் கையிலக் கொடுத்து என்னைப் அப்பனாக்கினா; என் நேரம் சரியில்லாம போனா, நேரம் என்னா நேரம்? நான் புத்திக்கெட்டுப் போய், சேரக்கூடாதவன் கூட சேர்ந்து, குடிக்கக் கத்துக்கிட்டு, என் குடியை நான் அழிச்சிக்கிட்டா அதுக்கு யார் பொறுப்பு? கொடுத்தவன் நல்லாத்தான் குடுத்தான்; நான் அவளை வெச்சி வாழல; அதுக்கு யாரைக் குத்தம் சொல்றது?" "வேணாம் குமாரு, நாம அழிஞ்சிப் போயிடுவோம்டா; தலைத் தலையா அடிச்சுக்கிட்டா; நம்பளைப் பாத்து ஊர்ல இருக்கற ஜாதி ஜனங்கல்லாம் சிரிப்பாங்கடா? நாம காதல் காதல்ன்னு ஊரு, உறவு மொறைங்களை பகைச்சுக்கிட்டு வந்துட்டோமே? அத்தனை பேருக்கும் நாம இளக்காராமா போயிடுவோம்; இந்த குடிப்பழக்கத்தை விட்டுடான்னு அன்பா சொல்லிப் பாத்தா; கெஞ்சினா; மிரட்டிப்பாத்தா; ரெண்டு வருஷம் நான் அடிச்சக் கூத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டு இருந்தா." "கடைசியா என் குடி வெறியில என் பொண்ணையே நான் கடிச்சுப் புண்ணாக்கினா; எந்தப் பொம்பளைத்தான் சும்மா இருப்பா; அப்புறம்தான் தொடப்பத்தை எடுத்து அடிச்சிப்பிட்டா; என் வீட்டை விட்டு வெளியில போன்னா; அவ தம்பி அரிவாளைத் தூக்கிக்கிட்டு வெட்ட வந்தான். அவனுக்கு மட்டும் உரிமையில்லயா; குடிச்சுப்புட்டு அங்கங்க நான் வாங்கி வெச்ச கடனையெல்லாம் அவன் தானே தீர்த்தான். அவன் வீட்டுலதானே நாங்களே இருந்தோம். சுந்தரி மேல என்னத் தப்பு இருக்கு? ரோஷமா, வீட்டை விட்டு போடான்னு அடிச்சு விரட்டினாளேன்னு நானும் மறு பேச்சு பேசாம போயிட்டேன். பொண்டாட்டி புள்ளையில்லாம தனியா பிச்சைக்காரன் மாதிரி ஊர் ஊராக அலைஞ்சதுக்கு அப்பறம் தான் புத்தி வந்தது; பதினைஞ்சு வருஷமா தனியா வீம்பா, கோபமா வாழ்ந்து என்னத்தைக் கண்டேன்?" "அப்பா அம்மா என் கூட வந்து இருக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் , வாழ்க்கையில இப்ப ஒரு பிடிப்பு வந்திருக்கு. டேய் எங்க உசுரு போறதுக்கு முன்னே எங்க பேத்தியைப் பாக்கணும்ன்னு அவங்க துடிக்கிறாங்க. போடா, அந்த பொண்ணு கால்லே விழுந்தாவது என் பேத்தியை கூப்பிட்டுக்கிட்டு வாடாங்கறாங்க; உடம்புல ரத்தம் குறைய குறைய இப்ப என் மிச்சமிருக்கற காலத்தை கட்டிக்கிட்டவ கூட கழிக்கணும்ன்னு தோணுது. சுந்தரியை பாக்கணும்ன்னு என் மனசு துடிக்குது. நான் அவ வீட்டுக்குப் போனா வான்னு சொல்லுவாளா? என்னை மன்னிச்சு தன் புருஷனா மீண்டும் என்னை ஏத்துப்பாளா? முதல்ல அவ தம்பி ரகுகிட்ட தான் பேசிப்பாக்கணும். எத்தனை அலைஞ்சு, யார் யாரை விசாரிச்சு, அவன் ஆஃபீசை கண்டுபுடிச்சி, அவன் செல் நம்பர் எனக்கு கிடைச்சிருக்கு. இன்னைக்கு கெஸ்ட் ஹவுசுக்கு போனதும் என் மச்சான் கிட்ட பேசி என் குடும்பத்தை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும்." "மீனா துறுதுறுன்னு இருக்கா; மணியான பொண்ணு; பெத்தவ பாக்கற பார்வையிலேயே, சொல்றது என்னான்னு புரிஞ்சிக்கிட்டு செய்ய வேண்டிய காரியத்தை கரெக்டா செய்து முடிச்சிடறா! பொண்டாட்டி, புள்ளைங்க, சினேகிதன், வேலைக்காரன் இதெல்லாம் மேல இருக்கறவனா பாத்து கொடுக்கறது. வரம் வாங்கிக்கிட்டு வரணும். " "டேய் மடையா! என்னப் பேசறே நீ; உன் பொண்ணுக்கு என்னடா குறைச்சல்; உன் மேல அப்பா அப்பான்னு உசுரை வுட்டாளே; உன் மடியிலதான் உக்காந்து சாப்பிடுவேன்னு தினம் ஒரு அமக்களம் பண்ணுவா! நீ குடிச்சுட்டு வர ஆரம்பிச்சதிலேருந்து எல்லாம் போச்சு; உன்னைப் பாத்தாலே அந்த குழந்தை பயந்து நடுங்க ஆரம்பிச்சிடுச்சி." குமாரசுவாமியின் கண்கள் கலங்கியது. இப்ப அழுது என்ன பிரயோசனம். இன்னும் என் சுந்தரி கும்பகோணத்துலதான் வேலை செய்யறாளா? என் சுகன்யா ... என் குழந்தை சுகா என்னப் பண்ணிக்கிட்டிருப்பா? என்னைப் பாத்தா அவளுக்கு அடையாளம் தெரியுமா? அவளுக்கு இருபத்தி மூணு வயசாயிருக்கும்; என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா? அப்படியே ஆகியிருந்தாலும் என்னை என் பொண்ணு கல்யாணத்துக்கு சுந்தரி கூப்பிட்டிருக்கணும்ன்னு என்ன அவசியம்? நான் என் குழந்தைக்கு இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்கேன்? அவர் மனம் வெட்கத்தில் துவண்டது. கடவுளே ஒரு சான்ஸ் ... ஒரே ஒரு சான்ஸ் எனக்கு குடு ... என் மனைவியை ... என் குழந்தையை, என் கண்ணுல வெச்சு நான் பாத்துக்குவேன். என்னை நம்பி வந்தவளுக்கு, நான் பண்ண கொடுமைக்கு; அவ மனசு சந்தோஷப் படற மாதிரி நடந்துக்கறதுக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடு; அவர் மனது இறைந்தது. மழை தூறத் தொடங்கியது. என் இறைஞ்சுதல் "அவனுக்கு" கேட்டுவிட்டதா? "ஹலோ! ... மிஸ்டர் ரகுராமன் பேசறீங்களா" "ஆமாம் .. நான் ரகுராமன் தான் பேசறேன் ... நீங்க யாரு?" "சாரி ... நான் ராத்திரி நேரத்துல உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு மன்னிக்கணும்." "பரவாயில்லை ... சொல்லுங்க" ... பரிச்சயமான குரலாயிருக்கே? இந்த குரலை நான் எங்கே கேட்டிருக்கேன்? ம்ம்ம் ... ரகுராமன் தன் நெற்றியைச் சொறிந்து கொண்டான். "ரகு ... நான் குமார் ... குமாரசுவாமி பேசறேன்" குமாரின் குரலில் நடுக்கமிருந்தது. "குமார் ... எப்படியிருக்கீங்க? ... இன் எ வே ... ஐயாம் ஹாப்பி ... உங்ககிட்ட நானே ஒரு முக்கியமான விஷயமா பேசணும்ன்னு இருந்தேன். ஆனா நீங்க முந்திக்கிட்டீங்க; எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்ன்னு சொல்றாங்களே; அது இதுதான் போல இருக்கு; சொல்லுங்க குமார் ... எத்தனை நாளாச்சு உங்க குரலைக் கேட்டு ... எங்கேருந்து பேசறீங்க ... ம்ம்ம் ... " ரகுராமன் மனதில் மின்னலாக ஒரு மகிழ்ச்சியின் கீற்று உதயமாகியது. "நல்லாயிருக்கேன் ... இப்ப சென்னையிலேருந்துதான் பேசறேன். உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையாயிருக்கு ... நீங்க சரின்னு சொன்னா உங்களை நான் வந்து பாக்க விரும்பறேன். நேரா வீட்டுக்கு வர்றதுக்கு எனக்கிருந்த உரிமையை நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி இழந்துட்டேன் ... இப்ப சுந்தரியும் நீங்களும் அந்த உரிமையை திரும்பவும் எனக்கு குடுத்தா ... எனக்கு சந்தோஷமா இருக்கும் ... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க ... அப்புறம் நான் உடைஞ்சு போயிடுவேன். " "பழசையெல்லாம் நான் மறந்துட்டேன். குமார் ... நீங்க என்னைப் பாக்க எப்ப வேணா வரலாம். உங்க கல்யாணத்துக்கு எங்க வீட்டுல எதிர்ப்பு இருந்தப்பவும், நான் தனியாளா உங்களை சப்போர்ட் பண்ணது உங்களுக்கு ஞாபகமிருக்கும். உங்க கிட்ட இருந்த ஒரு சின்னக் குறையால, நம்ம குடும்பத்துல, நம்பளுக்கு உள்ள இருந்த உறவுல விரிசல் ஏற்பட்டது உண்மைதான். அந்த விரிசலுக்கான குறையும் இப்ப உங்கக்கிட்ட இல்லேன்னு இப்பத்தான் எனக்குத் தெரிய வந்தது." "நீங்க பழசெல்லாம் மறந்துட்டு என் கிட்ட அன்பா பேசறதுக்கு ரொம்பத் தேங்க்ஸ் ரகு ... " "குமார் ... போன வாரம் ... பேச்சுவாக்குல வேற ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல சுகன்யாகிட்டச் சொன்னேன் ... "தீராத கோபம் யாருக்கு லாபம்ன்னு?" "ரகு ... என் குழந்தை சுகன்யா எப்படியிருக்கா? "ரொம்ப நல்லாயிருக்கா ... எங்களால முடிஞ்ச அளவுக்கு அவளை நல்லபடியா வளர்த்து இருக்கோம். நீங்க அவளைப் பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவீங்க. இப்ப அவளும் சென்னையிலத்தான் வேலை செய்துகிட்டு இருக்கா ... அவளைப் பாத்தா நீங்க உங்க சுந்தரியை பார்க்க வேண்டாம் ... அப்படியே சின்ன வயசு சுந்தரி மாதிரியே இருக்கா." ரகுவின் குரலில் பூரிப்பு வெளிப்பட்டது. "சுகன்யா ... என் சுந்தரி வளர்த்த பொண்ணு ... அவ கண்டிப்பா நல்லபடியாத்தான் வளர்ந்து இருக்கணும்" குமாரின் குரலில் எல்லையற்ற ஏக்கம் வழிந்தோடியது. "குமார் ... நான் அக்காவோட செல் நம்பரும், சுகன்யாவோட நம்பரும் தரேன். நீங்க என் கிட்ட பேசினதையும் அக்காகிட்ட சொல்றேன். முதல்ல நீங்க அக்காகிட்ட ஒரு தரம் பேசுங்க. ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சிக்கறது ரொம்பக்கஷ்டம் ... நான் சொல்றது உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன் ... எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நான் நம்பறேன். "ரொம்பத் தேங்க்ஸ் ரகு ... நாளைக்கு காலையில நான் சுந்தரிக்கிட்ட பேசறேன். பை தி பை ... எங்கிட்ட நீங்க பேசணும்ன்னு இருந்ததா சொன்னீங்க ... என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்கலாமா?" "எல்லாம் நல்ல விஷயம் தான் ... பிளீஸ் ... முதல்ல நீங்க சுந்தரியக்கா கிட்ட பேசுங்க ... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். குட் நைட்" "குட் நைட் ... " குமாரசுவாமியிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது. காலையில் வழக்கம் போல் படுக்கையை விட்டு எழுந்த சுகன்யா, இரவு மழையில் நனைந்து, விடியற்காலையில் அயர்ந்து உறங்க ஆரம்பித்த சுந்தரியைப் பார்த்தவள், அம்மா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்; மனதில் நினைத்துக்கொண்டே, காஸில் பாலை ஏற்றிவிட்டு, இரண்டு தம்ளர் அரிசியை கழுவி, இன்னொரு பக்கம் அடுப்பில் ஏற்றினாள். பல் துலக்கி தன் முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். பிரிஜ்ஜை திறந்து நேற்றைய தோசை மாவு இன்னும் மீதமிருப்பதைப் பார்த்தவள், காலை டிபனுக்கு இந்த மாவு போதும், இதை ஊத்தப்பம்மா ஊத்திக்கலாம். ஆபிசுக்கு தயிர் சாதமும், ஊறுகாயும் கொண்டு போய்விடலாம் என மனதுக்குள் திட்டமிட்டாள். மீதி சமையலை அம்மா பாத்துக்குவாங்க. மனதில் திருப்தியுடன், சர்க்கரை குறைவாக தனக்கு மட்டும் காபியை கலந்து கொண்டு, கட்டிலில் உட்க்கார்ந்து நிதானமாக காபியை ருசித்து குடித்தாள். "சுகா, மணி என்னடி ஆச்சு, ஏண்டி நீ எழுப்பலை என்னை? குக்கரின் விசில் சப்தம் கேட்டு, மனதில் குற்ற உணர்வுடன் விருட்டென எழுந்த சுந்தரி தன் தலை கேசத்தை இறுக்கி முடிந்துகொண்டாள். "ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் மழையில நின்னே? அப்புறம் எப்பத் தூங்கினயோ? இப்ப எந்த பட்டினம் எங்க முழுகிப்போச்சுன்னு இப்படி அடிச்சுப் புடிச்சிக்கிட்டு எழுந்திருச்சிட்டே நீ? ... இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க வேண்டியதுதானே?..." ஆசையுடன் தாயின் கழுத்தில் தன் கையைப் போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் சுகன்யா. "நாள் பூரா என்ன வேலையிருக்கு எனக்கு இங்க; நீ ஆபிசுக்கு போனதுக்கப்பறம் தூங்கிட்டுப் போறேன் ... எனக்கும் காபியை கலக்குடி சுகா. காபியில ஒரு துளி அதிகமா சக்கரையைப் போடு; ஒரு நிமிஷத்துல வர்றேன் ... " சொல்லியாவாறே அவள் பாத்ரூமில் நுழைந்தாள். "என்னப் பண்ணியிருக்கே இப்ப நீ" சுகன்யா கொடுத்த காஃபியை வாங்கி உறிஞ்சினாள் சுந்தரி. "ரெண்டு டம்ளர் சாதம் ஏத்தியிருக்கேன் ... வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடியா அரிஞ்சு நேத்து மிஞ்சின மாவுல கலந்து வெச்சிருக்கேன்; காலை டிபனுக்கு அதை ஊத்திக்கலாம்; தொட்டுக்க தக்காளிச் சட்டினி அரைச்சுக்கலாம். உனக்கு மதியத்துக்கு என்ன வேணுமோ சூடா பண்ணிக்கிறியா?" "தயிர் நெறய இருக்கு. ஒரே வழியா எனக்கும் சேத்து தயிர் சாதமா கிளறிடலாம்; ஒரு நாளைக்கு சிம்பிளா நானும் அதையே சாப்பிட்டுக்கிறேன்," சுந்தரி எழுந்து குளிப்பதற்காக குளியறைக்குள் நுழைந்தாள்.

சுகன்யா பால்கனியில் நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். வீதியில் ஆண் பெண், குழந்தைகள் என வித்தியாசமில்லாமல், நடந்தும், சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும், மக்கள் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு காலையில் இவ்வளவு பேர் எங்கே வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது காரணமில்லாமல் இத்தனை பரபரப்புடன் ஓடுவார்களா? இவ்வளவு பேருக்கும் அப்படி என்ன அவசர வேலை இருக்க முடியும். அவள் வியப்புடன் தன் மனதில் சிரித்துக்கொண்டாள். சுகன்யா வீதியை எந்த வித இலக்குமின்றி பார்த்துக்கொண்டிருந்த போதிலும் அவள் மனம் தன் தாயை நினைத்து புழுங்கிக்கொண்டிருந்தது. நேற்றிரவு தான் தூங்கியபின் அவள் வெகு நேரம் தூங்காமல் மன உளைச்சலுடன் இருந்த தன் தாயை நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நான் நல்லா இருக்கணும்; நான் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகணும்ங்கறதுக்காக, தன் கணவனை விட்டுட்டு, இவ்வளவு நாளா ஒண்டியா எனக்காக வாழ்க்கையில போராடியிருக்காங்க. தனியா நின்னு கஷ்டப்பட்டு என்னை என் கால்ல நிக்கற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க; என் மனசுக்கு புடிச்ச ஒருத்தனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு சுதந்திரமும், தன்னம்பிக்கையையும் எனக்கு கொடுத்திருக்காங்க. நான் அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னதுலேருந்து, அவங்க மனசாழத்துல தூங்கிக்கிட்டிருந்த என் அப்பாவோட நினைவு அவங்களுக்கு வந்துடுத்து. தனிமை அவங்களை கஷ்டப்படுத்துது. இன்னைக்கெல்லாம் பாத்தாலும் அம்மாவுக்கு நாற்பத்தாறு வயசுதான்; அந்த வயசுக்கு இருக்கற உடம்பின் ஏக்கமும், மனசின் தவிப்பும் அவங்களை நிலை குலய வெக்குது; இதுக்கு ஒரே வழி அப்பாவை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு ரெண்டு பேரையும் ஓண்ணா சேர்த்து வைக்கிறதுதான். எனக்காக தன் வாழ்க்கையையும், தன் இளமையையும், ஒரு காலத்துல தூசா நினைச்சவங்களுக்கு நான் செய்ய வேண்டிய முதல் காரியம் அப்பாவைப் பத்தி மாமா கிட்ட விசாரிக்கறதுதான். ராத்திரியெல்லாம் நல்லா மழை பேஞ்சுருக்கு; நல்லாத் தூங்கி எழுந்தா அவங்க உடல் தவிப்பு தற்காலிகமா அடங்கிப் போகாலாம். ஆனா அவங்க மனப்புழுக்கம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிடுமா? இன்னைக்கு வெயிலைக் காணோம்; குறைஞ்ச பட்சம் இன்னைக்கு உடல் புழுக்கம் இல்லாம நானும் ஆபிசுக்கு போகலாம்; அவள் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி பிறந்தது. "சுகா ... கண்ணு ... கொஞ்சம் உள்ளே வர்ரயாமா ... அந்த நீலக் கலர் ஸாரியை என் பெட்டியிலேருந்து எடுடி கண்ணு." தன் தாயின் இடுப்பு வரை புரளும் நீண்ட கருத்த கூந்தலையும், திருத்தமான முகத்தையும், கருத்த கண்களையும், மெல்லிய ரோஜா நிற உதடுகளையும், சீரான வென்னிற பல் வரிசையும், நீண்ட தீர்க்கமான மூக்கையும், வாளிப்பான மார்புகளையும், கட்டியிருந்த பாவாடைக்கும், ரவிக்கைக்கும் நடுவில் வழவழவென சுருக்கமில்லாமல், அதிகமாக மேடிடாமல் பளிச்சிடும் அவள் இடுப்பையும், பாவாடைக்குள் அசையும் பருத்த பிருஷ்டங்களையும், நீளமான செழித்த வலுவான தொடைகளையும், பாவாடைக்கு வெளியில் பளிச்சிட்ட வெள்ளை நிற பாதங்களையும், பாதங்களை அழகு செய்யும், மெல்லிய தங்கக் கொலுசையும் பார்த்த மகளின் வயிற்றில் ஒரு சங்கடமான உணர்வு எழுந்தது. ம்ம்ம் ... கடவுளே ஏன் இப்படி பண்ணிட்டே? என் அம்மா எப்ப பண்ணத் தப்புக்கு இப்படி அவங்களை தவிக்க விட்டுட்டே? பதினைஞ்சு வருஷமா, என் அம்மாவோட அழகெல்லாம் இப்படி விழலுக்கு இறைச்ச நீரா வீணாகிக்கிட்டு இருக்கே? நல்லா சுகமா வாழ வேண்டிய வயசுல என் அப்பாவை அவங்க கிட்டேயிருந்து பிரிச்சிட்டியே? குளித்துவிட்டு சந்தன சோப்பின் மணம் கமழ பாத்ரூமிலிருந்து பாவாடையும், ஜாக்கெட்டுமாக ரூமுக்குள் வந்து நின்றிருந்த சுந்தரியின் குரல் கேட்டு, உள்ளே வந்து தன் தாயை நோக்கிய சுகன்யாவின் முகம் சுருங்கி, அவள் மனம் பதை பதைத்தது. "என்னடி சுகா ... என்னாச்சு உனக்கு; அப்படி ஏன் என்னை உத்துப் பாக்கறே? குறுகுறுன்னு இருக்கு எனக்கு" புடவையை அவள் கையிலிருந்து வாங்கிய சுந்தரியின் குரலிலும் இனம் தெரியாத ஒரு தவிப்பிருந்தது. "ஒண்ணுமில்லேம்மா ..." சுகன்யாவின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. முதல் காரியமா அப்பாவை கொண்டு வந்து அம்மாவின் முன் நிறுத்த வேண்டும் என்று நேற்றிரவு அவள் எடுத்த முடிவு மீண்டும் மனதில் உறுதியாக எழுந்தது.

சுகன்யா... 18



சாவித்திரி கிளம்பிய ரெண்டு நிமிடங்களில் டிபனுடன் வந்த சீனு, சுகன்யா வேண்டாம் வேண்டாமென வெகுவாக மறுத்தப்போதிலும், அவளைத் தன் பைக்கில் அவள் வீட்டு வாசல் வரை அழைத்து வந்து விட்டுவிட்டு திரும்பிப்போனான். "என்னம்மா செல்வாவுக்கு எப்படியிருக்கு உடம்பு," அவர்களிருவரும் சாப்பிடுவதற்காக தட்டுகளை எடுத்து வைத்தவாறு கேட்டாள் சுந்தரி. "கால் வீக்கம்தான் சுத்தமா குறையல; மத்தப்படிக்கு இப்ப பெட்டரா அவர் ஃபீல் பண்றார்; ஒன்றிரண்டு நாள்ல வீக்கம் குறைய ஆரம்பிக்குமின்னு டாக்டர் சொல்லிக்கிட்டிருந்தார்; சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு தோணுது; உனக்கு வீட்டுல தனியா இருக்கறது போரடிக்குதாம்மா?" சுகன்யா தன் தாயின் கழுத்தை ஒரு சிறு குழந்தையைப் போல் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடினாள். "சுகா ... எனக்கு கழுத்து வலிக்குதுடி; நீ என்னடான்னா சின்ன குழந்தையாட்டாம் விளையாடறே?"

"வலிச்சா வலிக்கட்டும்; எனக்கு உன் மேல ஆசை ஆசையா வருது; நான் அப்படித்தான் கட்டிக்கிட்டுத் தொங்குவேன்" தன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள். ம்ம்ம்ம் ... ராஜாத்தியாட்டம் ஒரு பொண்ணு எனக்கு பொறந்திருக்கா? இந்த வயசுல தன்னைப்பத்தி மட்டும் கவலைப்படாம, தன் அம்மாவோட மன உணர்ச்சிகளைப் பத்தியும், அவ உடல் உணர்ச்சிகளையும் பத்தியும் கவலைப்படற பொண்ணு. சுந்தரியின் மனதில் மகிழ்ச்சி பீறிக்கொண்டு வந்தது. மறுபுறம் அவள் மனம் வெதும்பியது; இவளை மாதிரி ஒரு தங்கமான பொண்ணைப் பெத்துட்டு, பக்கத்துல இருந்து புத்திர சுகத்தை அனுபவிக்க குடுப்பனை இல்லாம, அந்த குடிகாரப் பாவி எங்களையும் தவிக்கவிட்டு, அவனும் எங்க கிடந்து தவிக்கிறானோ தெரியலையே? காலையிலேருந்து பாழாப் போற மனசுல அவனைப் பத்திய நெனப்பு ஏன் வந்து வந்து போகுது? "நான் உனக்கு குழந்தையில்லையா?" சுகன்யா சிணுங்கினாள்; ஆசையுடன் கொஞ்சினாள். "நீ என் குழந்தைதான்; யார் இல்லேன்னது; ஆன இப்ப நீ வளர்ந்த குழந்தை ... அதுக்கு ஏத்த மாதிரி நீ பிஹேவ் பண்ணணும் ... பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க; அவள் பெத்த மனம் அவளைப் பார்க்க பார்க்கப் பூரித்தது. ... சரி சரி ... கொஞ்சினது போதும் என்னை; வந்து சாப்பிடு, அப்புறம் நேரத்துக்கு படுத்து தூங்கு ... திருப்பியும் போனை எடுத்து வெச்சுக்கிட்டு அவன் கிட்ட ராத்திரி பூரா பேச ஆரம்பிச்சிடாதே." சொன்னவள் சிரித்தவாறு சுகன்யாவின் கையை ஆசையாகப் பற்றிக்கொண்டாள். "என்னப் பண்ணேம்மா நாள் பூரா?" நொய் உப்புமா ... சூப்பரா இருக்கு ... தேங்காய் சட்டினியுடன் சேர்த்து உப்புமாவை மென்றுவாறே கேட்டாள் சுகன்யா. "காலையில வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு வேணி வந்திருந்தா; அவ கூட பேசிகிட்டிருந்தேன்; உன்னைத் தங்கமான பொண்ணுன்னு கொண்டாடினா; பெத்தவளுக்கு வேற என்னடி வேணும்? எனக்கு மனசு நெறைஞ்சு போச்சுடி; செத்த நேரம் தூங்கினேன்; ரொம்ப நாளாச்சு இப்படி மதியானத்துல நிம்மதியா படுத்து; அப்புறம் டிஃபன் பண்ணி வெச்சுட்டு மாணிக்கம் அண்ணாச்சி கூட கோவிலுக்கு போய்ட்டு வந்தேன். "அம்மா, நாளைக்கு நைட் நான் தான் உனக்கு சமையல் பண்ணி போடப்போறேன்." "ஆகட்டும் ... நாளைக்கு அந்த பிள்ளையை பாக்க போவலையா நீ?" "இல்லம்மா ... இப்பதான் உடம்பு அவனுக்கு தேவலயா ஆயிடுச்சே? தினம் தினம் நான் அங்க போய் நின்னாலும் அவன் அம்மா என்னை சீப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு இருக்கு." "சரியா சொன்னே; நானே உங்கிட்ட இதுபத்தி பேசணும்ன்னு நினைச்ச்சேன்." "எனக்கு உன் கூட இருக்கணும்ன்னு இருக்குதுமா? உன்னை எங்கயாவது வெளியில கூப்பிட்டுக்கிட்டு போய் உனக்கு பிடிச்சதை வாங்கிக் கொடுக்கணும்ன்னு ஆசையா இருக்கும்மா? நாளைன்னைக்கு எங்களுக்கெல்லாம் ஆபீஸ் லீவு; பக்கத்துலதான் காஞ்சீபுரம் ... மாபலிபுரம்ன்னு ... காஞ்சீபுரத்துல நெறைய கோவில் குளம்முன்னு இருக்கு; நீ போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தியே? போய் வரலாமா; காலங்காத்தால எழுந்து குளிச்சுட்டு ஏஸி பஸ்ல போனா, ரெண்டு ரெண்டரை மணி நேரம் தான் ட்ராவல் ... வரதராஜர் கோவில், அப்புறம் காமாட்சியம்மன்னை தரிசனம் பண்ணிட்டு, அந்த ஊர்லேயே மதியம் சாப்பிட்டுக்கலாம். சாயந்திரத்துக்குள்ள திரும்பி வந்துடலாம்?" "ம்ம்ம் ... போய் வரலாம்" கையை கழுவிவிட்டு வந்த சுந்தரி தான் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த தோல் பையைத் திறந்து, ஒரு புது தங்கச்சங்கிலியை எடுத்தாள், "சுகா ... கண்ணு! இங்கப் பாரு, உனக்காக நான் என்ன வெச்சிருக்கேன்னு; வந்ததுலேருந்து இதை எடுத்து உன் கழுத்துல போட்டு பாக்கணும்ன்னு நினைக்கிறேன்; முடியலை; நீ ஒரே அலைச்சலா ஓடிக்கிட்டு இருக்கே; இன்னைக்கு நாள் நல்லா இருக்கு; இதை கழுத்துல போட்டுக்கடி." "இப்ப எதுக்கும்ம்மா இதை வாங்கினே? ... எனக்கு வேணும்னா நான் கேக்க மாட்டேனா? எத்தனை பவுன்மா ... நல்லா வெயிட்டா இருக்கு; நீ போட்டுக்கம்மா முதல்ல ... எங்கிட்ட இருக்கற செயினையே நான் போட்டுக்கறதுல்ல" சுந்தரியின் கையில் பளபளத்தை தங்கச் செயினை கையில் வாங்கிய சுகன்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. நகையை விரும்பாதவள் ஒரு பெண்ணாகவே இருக்கமுடியாது! "சுகா, நான் உனக்குன்னுத்தான் வாங்கினேன்ம்மா ... உன் கல்யாணத்துக்கு ஒன்னு ரெண்டு உருப்படி தேவைதானே? நாலு பவுனு; இப்ப சின்னதா லட்சுமி டாலர் கோத்திருக்கு இதுல; வேணும்னா டாலரை கழட்டிட்டு, உன் கல்யாணத்துக்கு அப்புறமா நீ தாலியை கூட இதுலயே கோத்துக்கலாம் ... வெளியே போய் வர பொண்ணு நீ; அது பாட்டுக்கு கழுத்துல கிடக்கும். எனக்கு புரமோஷன் கிடைச்சதுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கான அரியர்ஸ் வந்தது ... அதை ஒரு நகையா மாத்திட்டேண்டி செல்லம்." "அம்மா நீயே போட்டுவிடும்ம்மா" சுகன்யாவின் கழுத்தில் செயினை மாட்டிய சுந்தரி தன் பெண்ணின் அழகை கண்ணும் மனமும் நிரம்ப பார்த்தாள். அந்த குடிகாரனுக்கு கூட இருந்து இதெல்லாம் பாத்து அனுபவிக்க குடுத்து வெக்கலை. சட்டென தன் கணவனின் நினைவு மீண்டும் வர அவள் திடுக்கிட்டாள். எனக்கென்ன ஆச்சு? இத்தனை வருஷமா அவன் நெனப்பு இல்லாம நிம்மதியா வாழ்ந்துட்டேன். நேத்து இவ என் அப்பா எங்கேன்னு கேட்டா, அதுலேருந்து திரும்ப திரும்ப இவன் நெனப்பு என்னை அலைக்கழிக்குது. அவள் மனம் சலித்துக்கொண்டது. "தேங்க்ஸ்ம்ம்மா" சுகன்யா தன் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள். "பத்திரமா வெச்சுக்கடி சுகா ... " "சரிம்ம்மா ... நான் என்னா சின்னக்குழந்தையாம்ம்மா ... இதெல்லாம் எனக்கு தெரியாதா? ம்ம்ம்... வேற என்னல்லாம் என் கல்யாணத்துக்குன்னு நீ வாங்கி வெச்சிருக்கே?" "முதல்ல அந்த மல்லிகா "சரி" ன்னு தலையாட்டட்டும்; உன் கல்யாணத்தை நல்ல படியா உன் மனசுக்கு திருப்தியா ஜாம் ஜாம்ன்னு நான் செய்து வெக்கிறேண்டி; எனக்கு உன் மனசு திருப்திதாண்டி முக்கியம். ரெண்டு ஜோடி வளையல் செய்து வெச்சிருக்கேன், ரெண்டு மோதிரம் உனக்குன்னு இருக்கு; ஒரு தாம்பு கயிறு செயின் பண்ணி வெச்சிருக்கேன். என் தம்பியும் கொஞ்சம் காசா உனக்குன்னு வாங்கி வெச்சிருக்கான். உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி வேற எது வேணுமோ செய்துக்கலாம்.. காதுக்கு உனக்கு புடிச்ச மாடலா நீயா பாத்து எதாவது வாங்கிக்கோ; இதுக்கெல்லாம் நான் பணம் குடுக்கறேன். நான் சொன்ன அயிட்டமெல்லாம் பத்திரமா பேங்க் லாக்கர்ல இருக்கு." "என் அப்பன் ஆத்தா போய் சேர்ந்தப்ப, அவங்க விட்டுட்டு போன வீட்டை ரிப்பேர் பண்ணி வாடகைக்கு விட்டு இருக்கு; உன் மாமன் அதுல வர வாடகையையும் உன் பேர்லதான் பேங்க்ல போட்டுக்கிட்டு இருக்கான். உன் பாட்டியோட பழைய நகையை எனக்கு குடுத்தான். உங்கப்பனை காதலிச்சுக் கட்டிக்கிட்டேன்னு என் மேல அவ்வளவு கோவமா இருந்து செத்தா என் ஆத்தாக்காரி. இப்பவாது வந்து என் கூட இருன்னு எங்கப்பனை கூப்பிட்டேன். அவன் என் பொண்டாட்டி இருந்த வீட்டை விட்டுட்டு வரமாட்டேன்னு புடிவாதன் புடிச்சான். அவன் அவளையே நெனைச்சுக்கிட்டு, அவ துக்கத்துலேயே இருந்து ஆறுமாசத்துல அவனும் போய் சேர்ந்தான். "நான் உன்னை குழந்தையா வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டப்ப என்னை ஒரு தரம் வந்து பாத்தாளா அவ? கல்லு மனசு அவளுக்கு. அவளுக்கு இருந்த ரோஷம் எனக்கில்லையா? அவ பெத்த பொண்ணுதானே நான்? அவ நகையை நான் எதுக்கு போட்டுக்கிட்டு மினுக்கணும்?" சுந்தரியின் குரல் கரகரப்பாக வந்தது. "யம்மா ... ஆயாவை ஏம்மா திட்டறே ... அவங்க ரெண்டு பேரும் என் கிட்ட எப்பவும் ஆசையாத்தான் இருந்தாங்க ... வீட்டுக்கு வாம்மான்னு ஆசையா கூப்பிடுவாங்க." "நீ ஸ்கூலுக்கு போவும் போது ஒளிஞ்சுகிட்டு நின்னு உன்னையே பாத்துகிட்டு நின்ன கதையெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? நீயும் அவங்க வாங்கிக் குடுக்கற சாக்லெட்டை மொத்தமா திண்ணுட்டு வீட்டுக்கு வந்து திருட்டுத்தனம் பண்ணதெல்லாம் எனக்கும் தெரியும்." சுந்தரி மூக்கை உறிஞ்சினாள்; தன் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். "அம்மா அழுவாதேம்ம்மா ... எனக்கும் அவங்களை நினைச்சா அழுகை வருதும்மா" சுகன்யா அவள் தலையைத் தடவினாள். "நான் சம்பாதிக்கிறேன். வேலையை விட்டாலும் எனக்கு பென்ஷன் வரும். அவங்க சொத்தே எனக்கு எதுவும் வேணாம்ன்னு உன் மாமன் கிட்ட தீத்து சொல்லிட்டேன். அந்த வீட்டை என் தம்பி உனக்குதான்னு இப்பவே எழுதி வெச்சிட்டான். நீ எப்ப வேணா பத்து நாள் லீவு எடுத்துக்கிட்டு வா; உன் பேர்ல அந்த வீட்டை மாத்திக்கோ; அவனுக்கும் உன்னை விட்டா வேற யாரு இருக்காங்க? புத்தி கெட்டவன் எனக்காக வாழறானாம்; இப்படி வாழ்க்கையில ஒத்தையாவே இருந்துட்டான்." "இத்தனை நாளா இல்லாம இப்ப எதுக்கு நீ எங்கிட்ட என் குடும்ப கணக்கை கேக்கிற?" "அம்மா ... ஏம்மா நீ என்னை தப்பா நினைக்கிறே? நான் கண்க்கு கேக்கலைம்ம்மா ... மாமா என்னை கேட்டார் ... உனக்கு என்ன மாதிரி நகை வேணும்ன்னு நான் போன தரம் ஊருக்கு வந்தப்ப கேட்டாரு ... நான் உன்னை கேளுன்னு சொல்லிட்டு வந்தேன்? "சரிடி ... உண்மையைச் சொல்லு; அந்த பையன் செல்வா உன்னை எதாவது கேட்டானா? இல்லை அவன் தங்கச்சி மீனா கேட்டாளா? என் புருஷன் என் கூட இல்லேன்னு தெரிஞ்சதும், அந்த மல்லிகா உன்னை ஒண்ணுமில்லாத ஓட்டாண்டின்னு நெனைச்சுக்கிட்டு இருக்கா போல இருக்கு; நீ சொல்ற அந்த சாவித்திரி பேச்சைக் கேட்டுக்கிட்டு குதிக்கிறான்னு நினைக்கிறேன். அந்த மல்லிகா கிட்ட ஜாடை மாடையா சொல்லி வை; நான் ஒண்ணும் பஞ்சையோ பராரியோ இல்லை. எங்க குடும்பமும் மரியாதையுள்ள குடும்பம்தான். என் கிட்டயும் சொத்து சுகம் எல்லாம் இருக்குன்னு தலையை நிமிர்த்தி சொல்லு! நீ யாருக்கும் குறைஞ்சு போயிடலடி இங்க." "சுகா, உன் அப்பன் உன் கூட இல்லாத குறையைத் தவிர வேற எந்த குறையும் உனக்கு இல்லடி ... என் கூட வேலை செய்யற ரெண்டு பேரு எப்ப எப்பன்னு காத்துகிட்டு இருக்காளுங்க; என்னை தினமும் நச்சரிக்கறாளுங்க; உன்னை அவங்க புள்ளைக்கு கட்டிக்கறோம்ன்னு. உன் பொண்ணுகிட்ட பேசிட்டியா; பேசிட்டியான்னு? நீ இவனை ஆசை பட்டுட்டியே ... சரி அவ மனசுக்கு புடிச்சவனையே கட்டிக்கட்டுமேன்னு உன் மாமன் உன் பக்கம் சேந்துகிட்டு குதிக்கறான். அதனால ஆசை பட்டவனையே நீ கட்டிக்கோன்னு நான் சும்மா இருக்கேன். இல்லேன்னா உனக்கு பசங்களை லைன்ல கொண்டாந்து நிறுத்துவேன்." "எம்மா ... எனக்கு இவன் ஒருத்தனே போதும் ... நீ புதுசா எவனையும் கூப்பிட்டுக்கிட்டு வரவேணாம்; மீனா சொல்லிக்கிட்டிருந்தா; செல்வா, குணமாகி வீட்டுக்குப் போனதும் எங்க கல்யாணத்தைப் பத்தி அவங்க அம்மா கிட்ட பேசி முடிவு எடுக்கறேன்னு நடராஜன் சொன்னாராம்." "செல்வா, ஒரு பயந்தாங்கொள்ளி, எங்கம்மா நம்ம மேரேஜ்க்கு சம்மதம் குடுப்பாங்களான்னு எனக்கு சந்தேகமாயிருக்கு; அவங்க மாட்டேன்னுடா என்னப் பண்றதுன்னு என்னை இன்னைக்கு கலக்கமா கேட்டான்; நான் சொன்னேன் உங்கம்மாவை நீ தான் சரிகட்டணும் ... இல்லன்னா நீ என் வீட்டுக்கு வந்திடு, மத்ததை நான் பாத்துக்கறேன்னு ஜம்பமா சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப பயமா இருக்கும்மா. இப்படியே நாளைத் தள்ளறதுக்கு எனக்கு இஷ்டமில்லேம்மா. நான் அவன் கிட்ட சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையேம்ம்மா? அவன் நம்ம வீட்டுக்கு வந்துட்டா; மாமவும் நீயும் ஒண்ணும் சொல்ல மாட்டீங்களே? சுகன்யா தயங்கி தயங்கிப் பேசினாள். "அந்த சாவித்திரி இன்னைக்கு செல்வாவை பார்க்க வந்தா; அவ போறப்பா சொல்றா - "செல்வா உன் கிட்ட நான் தனியா பேசணும்ன்னுட்டு" - அவ வேற எதைப் பத்தி பேசுவா? எனக்குத் தெரியாதா? திருப்பி திருப்பி அவ பொண்ணைப் பத்தி அவன் கிட்ட பேசி எங்க நடுவுல குழப்பத்தை உண்டு பண்ணப் பாக்கிறான்னு நினைக்கிறேன்?" "சுகா நீ கொஞ்சம் பொறுமையா இரு; உன் எதிர்லதானே எங்ககிட்ட உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அன்னிக்கு ஆஸ்பத்திரியிலே செல்வா சொன்னான் இல்லியா?" "ஆமாம்" "நடராஜனும், உன் மாமா கிட்ட ரெண்டு வாரம் கழிச்சு பேசறேன்னு சொன்னாரா இல்லையா? தன் பொண்டாட்டிகிட்டவும் பேசறேன்னு இப்ப சொல்றாரா இல்லையா? "ம்ம்ம்ம்" "பின்னே நீ ஏன் இப்ப நடுவுல குழம்பறே ... ? நாங்க சீன்ல வந்தாச்சு இல்லயா? பெரியவங்க நாங்க பேசி ஒரு முடிவுக்கு வர வரைக்கும் சும்மாயில்லாம நீ ஏன் நடுவுல எல்லாத்தையும் தூக்கி உன் தலையில போட்டுக்கிட்டு குதிக்கறே?" "......." "நான் சொல்றதை ஒழுங்கா கேளு ... உன் மாமாகிட்ட சொன்ன மாதிரி பத்து நாள் நீ லீவு போட்டுட்டு என் கூட ஊருக்கு வா ... அங்க வந்து நிம்மதியா இரு; உன் மனசு அலைபாயறதும் குறையும். இப்ப அவனுக்கு சீரியஸா ஒண்ணுமில்லைன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க; சும்மா சும்மா தினம் அவனைப் பாக்கறதுக்கு போவாதே. அவன் கிட்ட போன்ல தேவைக்கு மேல தொணதொணன்னு பேசிக்கிட்டு இருக்காதே. பழகப் பழகப் பாலும் புளிக்கும்டி கண்ணு; நான் சொல்றதை புரிஞ்சுக்கோ; அவனை பாத்துக்கறதுக்கு அவனைப் பெத்தவங்க இருக்காங்க."

"ம்ம்ம் ..." "தினம் தினம் நீ அங்க போய் அவன் எதிர்ல எதுக்கு நிக்கணும்? அந்த சாவித்திரி மாதிரி நாலு பேரு அவன் உறவு காரங்க ஆஸ்பத்திரிக்கு அவனைப் பாக்க வருவாங்க; உன் கூட வேலை செய்யறவங்க வரலாம்; உன்னைப் பத்தி நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. நீ இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது? அப்புறம் உன் மேல, எங்க மேலே அந்த நடராஜனுக்கு இருக்கிற மரியாதைதான் கெட்டுப்போகும். கல்யாணத்துக்கு முன்னாடி கையளவு தூரத்துல நீ தள்ளி நிக்கணும்." "செல்வா கிட்ட சும்மா மூச்சுக்கு முன்னூறு தரம் பேசி பேசி அவனையும் குழப்பாதே, நீயும் குழம்பாதே; அவன் அவ அம்மாளை விட்டுக்கொடுக்கிறானா? உண்மையிலேயே உனக்கு அவன் மேல ஆசை இருக்கற மாதிரி, அவனுக்கு உன் மேல ஆசை இருந்தா, ஆத்தாளை விட்டுட்டு அவன் உன்னைத் தேடிக்கிட்டு நம்ம ஊருக்கு வரட்டும். அப்ப பாத்துக்கலாம் அந்த கதையை." "உண்மையா என்னை கட்டிக்கணுங்கற ஆசை இருக்கவே தானே உன் அப்பன் என் பின்னால வந்தான். சொல்லுடி ... வந்தானா இல்லையா?" "ம்ம்ம்" "நான் அவனுக்கு எந்த குறையும் வெக்கல. வந்ததுக்கு அப்புறம் அவன் குடிக்க கத்துக்கிட்டு கெட்டு குட்டி சுவரா போனான். அது வேற விஷயம். திருத்தப் பாத்தேன். முடியலை. அடிச்சி வெரட்டினேன். அதுக்கு மேல நான் என்னப் பண்ணமுடியும்? இவன் எங்கப் போயிடப் போறான்? இன்னைக்கு நான் சொல்றேன். இதை நீ எழுதி வெச்சுக்கோ - இவன் உன்னை விட்டுட்டு எங்கேயும் போகமாட்டான்; அவனுக்கு அவன் அப்பா அம்மா இருக்கற மாதிரி, உனக்கு நாங்க இருக்கோம் இல்லையா? எங்கக்கிட்ட நீ சொல்லிட்டேல்ல; இனிமே நாங்க பாத்து எல்லாத்தையும் நல்லபடியா செய்து முடிக்கிறவரைக்கும் பொத்திக்கிட்டு இரு. நீயா உள்ள பூந்து எதாவது குட்டையை குழப்பினே எனக்கு கெட்ட கோவம் வரும் புரியுதா?" குரலில் கோபத்தை காட்டுவது போல பேசினாலும் மனதில் ஒரு தீர்மானத்துடன் பேசினாள். "சரிம்மா ... என்னை எதுக்கு இப்ப கோச்சிக்கறே ... நான் அப்படி என்னா பண்ணிட்டேன்?"அவள் சிணுங்கினாள். அம்மாவை விட்டு தள்ளிப் படுத்துக்கொண்டாள். தன் கையைத் தள்ளிவிட்டு தன்னை விட்டு நகர்ந்து படுத்துக்கொண்ட தன் பெண்ணை நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் சுந்தரி. "உன் மேல எனக்கு என்னடா கோபம் ... நீ நல்லா இருக்கணும்ன்னு தான் சொல்றேண்டா; பேசாம இப்ப தூங்கு" பக்கத்தில் படுத்திருந்த சுகன்யாவின் முதுகை சுந்தரி ஆதரவாக தடவிக் கொடுத்தாள். "மல்லிகா மேடம், சாப்பாடு பிரமாதம். மரியாதை நிமித்தமா நான் சொல்லலை. நிஜமா சொல்றேன், நான் இந்த மாதிரி வாய்க்கு ருசியா நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப காலமாச்சு." மிளகு ரசத்தை மீண்டும் ஒரு முறை கப்பில் வாங்கிக் குடித்தவர், "நடராஜன் ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்; நான் பொறாமைபடறேன்னு நீங்க நினைக்கக்கூடாது. இப்படி ஒரு அன்பான மனைவி கையால ருசியா தினம் தினம் அருமையான சாப்பாடு சாப்பிடறதுக்கு நீங்க குடுத்து வெச்சிருக்கனும்." குமாரசுவாமி, மல்லிகா பரிமாறிய இரவு உணவை மிகவும் நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிட்டார். சாப்பிட்டவர் முழு மனநிறைவுடன் மீண்டும் மல்லிகாவை பாராட்டினார். "என்ன சார் இப்படி சொல்றீங்க, என் மனைவியை பாராட்டனுங்கறதுக்காக உங்க மனைவியை நீங்க சும்மா குறைச்சு சொல்லக்கூடாது. நீங்க நார்த்ல ரொம்ப நாளா இருந்துட்டு வந்திருக்கீங்க; அது உண்மைதான்; ஆனா உங்க மனைவியும் சவுத் இண்டியன்தானே? அவங்களும் நல்லா சமைக்கறவங்களாத்தானே இருப்பாங்க?" நடராஜன் பதிலுக்கு பேசினார். "சார், இவர் திடீர்ன்னு போன் பண்ணி நீங்க சாப்பிட வர்றதாச் சொன்னார்; நானும் ஏதோ அவசர அவசரமா அரக்க பரக்க பண்ணியிருக்கேன். என் பொண்ணு இன்னைக்கு மனசு வந்து ஏதோ தன் கையை காலை கொஞ்சம் ஆட்டிட்டா; நானும் அவளை கூட வெச்சிக்கிட்டு ஏதோ கொதிக்க வெச்சு இறக்கிட்டேன் ... நீங்க என்னை ரொம்ப புகழறீங்க ... உங்க வீட்டுல உங்க மனைவி இத்தனை காலத்துல நார்த் இண்டியன் டிஷஸஸ் நல்லா பண்ணக் கத்துகிட்டு இருப்பாங்களே? இப்ப நீங்க தனியா இங்க வந்திருக்கறாதா இவர் சொன்னார்; அவங்க ஊர்லேருந்து வந்ததும் அவங்களையும் நீங்க நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரணும். இன்னொரு நாள் பகல்ல ரெண்டு பேருமா வந்து ஆற அமர உக்கார்ந்து சாப்பிடணும்." மல்லிகா அவரை உபசாரம் செய்தாள். "மேடம் முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும். எனக்கு உங்க பிள்ளை அடிபட்டு ஹாஸ்பெட்டல்ல இருக்கறது தெரியாது. நடராஜன் சார் இதை எங்கிட்ட சொல்லவே இல்லை. இங்க வந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன். உங்களுக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன்." அவர் கெஞ்சலாக பேசிக்கொண்டு, மீனா எடுத்து கொடுத்த டவலால் தன் வாயையும் கையையும் துடைத்துக்கொண்டார். "சார் நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இப்ப என் பிள்ளைக்கு உடம்பு பரவாயில்லை. என் பொண்ணும், வைப்ஃபும் இன்னைக்கு முழு நாள் அங்கதான் இருந்தாங்க. அவன் ஜெனரல் வார்டுல தனி ரூமுக்கு ஷிப்ட் ஆயிட்டான். அவன் தனியா இல்லை. இப்ப என் பையனோட க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன் கூட இருக்கான். ரெண்டு நாளா ராத்திரி நாங்க வீட்டுலத்தான் சாப்பிடறோம். மூன்று பேருக்கு இவங்க எப்படியிருந்தாலும் சமைக்கத்தான் போறாங்க, அதுல உங்களுக்குன்னு ஸ்பெஷலா ஒண்ணும் பண்ணிடலை." என்றார் நடராஜன். "நான் உண்மையாத்தான் சொல்றேன் மேடம் ... இந்த மாதிரி ஒரு ருசியான சாப்பாடு, பாத்து பாத்து கேட்டு கேட்டு எடுத்துப் பரிமாறின உங்க பொண்னோட அன்பான உபசரிப்பு ; இதையெல்லாம் நான் அனுபவிச்சு ரொம்ப நாளாயிடுச்சி; நீங்க சொல்ற மாதிரி என் மனைவியும் மிக மிக அருமையா சமைப்பாங்க; ஆனா அன்பார்ச்சுனேட்லி, அவங்களும் நானும் நீண்ட காலம் ஒண்ணா சேர்ந்து வாழல; அவங்களும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு பிரிஞ்சு ரொம்ப நாளாயிடுச்சு." அவர் சில வினாடிகள் வேகமாக ஓடிக்கொண்டிருந்த சீலிங் பேனை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். பழைய நினைவுகளில் அவர் மனது ஆழ்ந்திருக்கவேண்டாம். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவர் முகத்தில் விரக்தியோடியிருந்தது. திடிரென அங்கு அவர்களுக்கிடையில் ஒரு இறுக்கமான மவுனம் நிலவியது. "ஐயாம் சாரி சார்" ... உங்க மனசை நான் புண்படுத்திட்டேனா எதையாவது சொல்லி ... அயாம் வெரி வெரி சாரி, மல்லிகா பதறியவாறு அவரிடம் மன்னிப்பு கோரும் தொனியில் பேசியவள் தன் கைகளை பிசைந்து கொண்டாள். "நோ ... நோ ... மிஸஸ் நடராஜன் ... இது ரொம்ப நாளுக்கு முன்னாடி என் வாழ்க்கையில நடந்து முடிஞ்ச விஷயம் ... இதுக்காக நீங்க வருத்தப்படவேண்டிய அவசியமேயில்லை." அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டார். "அச்சா, மிஸ்டர் நடராஜன், நாளைக்கு மாலையும் நீங்க உங்க நேரத்தை எனக்காக கொஞ்சம் ஒதுக்கணும்; நான் உங்க பையனை பாக்க விரும்பறேன். உங்களுக்குத் தேவைன்னா நீங்க தாராளாம இந்த வாரம் லீவ் எடுத்துக்கலாம். நீங்க எல்லோரும் உங்க மாலை நேரத்தை எனக்காக ஒதுக்கினதுக்காக ரொம்ப நன்றி ... நடராஜன் நான் கிளம்பறேன். ப்ராஞ்ச்லேருந்து கிளம்பறதுக்கு முன்னாடி நாளை நான் உங்களுக்கு போன் பண்றேன்; சென்னை எனக்கு புதிது அல்ல. நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு நான் தனியா போயிடுவேன் - நீங்க என்னை டிராப் பண்ண இப்ப என் கூட வரணும்ன்னு அவசியமில்லே; நீங்க ரெஸ்ட் எடுங்க." "மிஸ் மீனா, ரொம்ப தேங்க்ஸ்ம்மா ... இட் இஸ் இண்டீட் எ வெரி வெரி நைஸ் ஈவீனிங்க்; மீனா மாட்டேன்னு சொல்லாமா நான் கொடுக்கறதை நீ வாங்கிக்கணும் ... டீக் ஹை பேட்டா?" தன் கைப்பையிலிருந்து விலையுயர்ந்த ஒரு பார்க்கர் பென் செட்டை எடுத்து அவளிடம் பாசத்துடன் கொடுத்தார். அவள் முதுகில் தட்டிக்கொடுத்தார். மல்லிகாவையும், நடராஜனையும் நோக்கித் தன் கையை மரியாதையுடன் கூப்பினார் குமாரசுவாமி. பின் விறு விறுவென்று வாயிலை நோக்கி நடந்தார். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தார் குமாரசுவாமி. வானம் மூடிக்கொண்டு மெலிதாக குளிர்ச்சியான காற்று வீசிக்கொண்டிருந்தது. மழை வருமா? கொஞ்ச நேரம் நடந்தால் என்ன? ஒரு முறை திரும்பி நடராஜன் வீட்டின் பக்கமாகப் பார்த்தார். நடராஜன் தன் வீட்டு காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டிருந்தார். தன் தலையை தடவிக்கொண்டே நிதானமாக நடக்க ஆரம்பித்தார். நல்ல மனைவி; நல்ல பிள்ளை; நல்ல குடும்பம்; தெய்வீகம்; தெய்வீகம் அது தெய்வீகம்; அவர் மனது வேதனையுடன் முனகியது. "தேங்க்ஸ்டி மல்லிகா" நடராஜன் தன் பக்கத்தில் கவிழ்ந்து படுத்திருந்தவளை நெருங்கிப்படுத்து அவள் முதுகில் தன் கையைப்போட்டு அணைத்து அவளை தன் புறம் இழுத்தார். "எதுக்கு இப்ப தேங்க்ஸ்ல்லாம்" முணுமுணுப்பாக வந்த அவள் குரல் தலையணையில் அழுந்தி சிதறியது. "காலையிலேருந்து செல்வாவோட ஆஸ்பத்திரியில நின்னுகிட்டு இருந்தே; ஈவினிங் இங்க வீட்டுக்கு வந்து, அவியல், பொரியல், மிளகுரசம், மெது பக்கோடா, பாயசம்ன்னு பறந்து பறந்து அசத்திட்டே; மிளகு ரசமும், அவியலும் "கிளாஸா" இருந்ததும்மா! நான் ஒரு வெட்டு வெட்டிட்டேன் இன்னைக்கு; என் மேனேஜர், நாக்கை சப்புக்கொட்டிகிட்டு திருப்தியா வாங்கி வாங்கி சாப்பிட்டாரே?" அவன் கைகள் நைட்டியில் அடைபட்டுக்கிடந்த அவள் முதுகை தடவிவிட்டது. "ம்ம்ம்ம் ..." "என்னடா கண்ணு" "கால் வலிக்குதுங்க ... ரெண்டு நாளா நின்னு நின்னு அசந்து போவுது." நடராஜன் விருட்டென எழுந்து, மல்லிகாவை மல்லாக்காக புரட்டி அவள் கால்களை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டு, அவள் அணிந்திருந்த நைட்டியை முட்டி வரை நகர்த்தி, வெண்ணையாக வழவழவென்றிருந்த வெளுப்பான அவள் பாதத்திலிருந்து முழங்கால் வரை இலேசாக பிடித்துவிட்டார். அவள் தன் கண்களை மூடிக்கொண்டு அவர் கைகளின் அழுத்தத்தையும், அந்த அழுத்தம் தந்த சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். "ம்ம்ம் ... போதுங்க..."அவள் கிசுகிசுப்பாக பேசினாள். அந்தக் குரலின் கிசுகிசுப்பே போதுமானதாயிருந்தது நடராஜனின் மனதில் ஆசைத் தீயை பத்த வைப்பதற்கு; பட்டென அவரின் உடல் விழித்துக்கொண்டது. இப்ப இவ உடல் வலியில முணுமுணுக்கிறாளா? இல்லே ஆசையில முனகறாளா? அவர் மனம் இதற்கான விடை தேடுவதில் முனைந்தது. நடராஜன் கைகள் அவள் நைட்டியில் நுழைந்து அவள் தொடைகளையும் இதமாக பிடித்துவிடத் தொடங்கியது. அவள் தொடைகளை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தவர், தன் கையால் எதேச்சையாக தொடுவது போல், அவளின் உள் தொடையை அழுத்திப்பிடித்தபோது, அவர் கை அவள் அந்தரங்கத்தில் பட்டும் படாமல் உரச ... விரல்களில் அவள் உள்தொடைகளின் கதகதப்பு ஏற, நடராஜன் அடிவயிற்றில் பட்டாம் பூச்சியொன்று சிறகடித்தது. "ச்சும்ம்மா இருக்க மாட்டீங்களே?" மெதுவாக அவள் அந்தரங்கத்தை நோக்கி ஊர்ந்த அவர் கையை சட்டென மல்லிகா தன் கையால் அழுத்தமாக மேலே நகரவிடாமல் பிடித்துக்கொண்டாள். மல்லிகாவின் உள் தொடைகளில் ஓடிக்கொண்டிருந்த அவள் நரம்புகள் மெல்ல சிலிர்த்து முறுக்கேறி ஆசை என்னும் மணியை தொடர்ந்து அடிக்க, மணியோசையின் அதிர்வுகள் அவள் அந்தரங்கத்தில் சென்று முடிந்து சுகம் சுகம் என எதிரொலிக்கத் தொடங்கியது. அவள் உதடுகளிலிருந்து "க்ஹூம்ம்ம்" என முனகல் அவசரமாக கிளம்பியது. நடராஜன் தன் மறுகையால் அவள் நைட்டியை மேலும் உயர்த்த முனைய, மல்லிகா களுக்கென சிரித்தாள். "மல்லி ... ஏன் சிரிக்கறே?" நடராஜன் குரல் இப்போது கிசுகிசுப்பாக வந்தது. "சிரிக்காம என்ன பண்ண?" சாப்பிட்டுப் போன குமாரசுவாமியின் மனமார்ந்த பாராட்டாலும், தன் கணவனின் ஆமோதிப்பாலும் அவள் மனம் மகிழ்ச்சியுற்றிருந்தது. அந்த மகிழ்ச்சி அவள் குரலில் வழிந்தோடியது. ஆனால் அதே சமயம் முகம் தெரியாத ஒரு மனிதனின் வெளிப்படையான பாராட்டால் தன் மனம் இந்த அளவுக்கு துள்ளுவதும், அதன் விளைவாக, கணவனின் தொடல் உடலுக்கு மிகுந்த இதத்தை கொடுப்பதையும் உணர்ந்த மல்லிகா, சே ... என் புள்ளை அங்க ஆஸ்பத்திரியில படுத்துக்கிடக்கறான், என் மனசு தவிக்குது; என் புருஷனோட தொடலை சரின்னு சொல்லுது; அவன் நெருக்கத்தை உடம்பு தேடுது ... ம்ம்ம்ம் என்ன ஆச்சு எனக்கு? தன் தவிக்கும் உடலுக்கு முன்னால், தன் மனதைக் கட்டுபடுத்திக் கொள்ளமுடியாமல், "சிரிக்காம என்ன பண்ண" என முணுமுணுத்துக்கொண்டே, மல்லிகா தன் இடுப்பை இலேசாக உயர்த்த, நடராஜனின் கை அவள் நைட்டியை சுலபமாக அவள் இடுப்புக்கு மேல் உயர்த்தியது. "சொல்லேன் ஏன் சிரிக்கிறே?" ஒருக்களித்து படுத்திருந்த நடராஜன் தன் உடலை அவள் உடலுடன் நெருக்கி அழுத்தினார். நெருங்கியவரின் கைவிரல்கள் அவள் அடிவயிற்றில் ஊர்ந்து அவள் அந்தரங்க மேட்டில் முளைத்திருந்த முடிக்கற்றைகளின் உள் புகுந்து விளையாடின. அவர் தன் குறுகுறுக்கும் பார்வையால் அவள் தொடையிடுக்கை நோட்டமிட்டுக்கொண்டு, இவ தாமரையில இன்னைக்கு ஈரத்தை சுத்தமா கானோம் ... இன்னைக்கு என் காட்டில போற மேகம் கொஞ்சம் பேஞ்சுட்டு போவுமா? இல்லை சும்மா வேடிக்கை காட்டிட்டு கலைஞ்சு போயிடுமா? குமாரசுவாமி நீ வாழ்க என அவர் மனம் பரபரக்க, அவர் தன் தொடை நடுவில் சூடு ஏறுவதை உணர்ந்தார். தன் கணவன் தொடைகளில் ஏறிய சூட்டைத் தன் உடலில் இலேசாக உணர ஆரம்பித்த மல்லிகாவின் உடல் நாடிகளும், நரம்புகளும் மெல்ல மெல்ல அவள் தொடையில் ஆரம்பித்த சிலிர்ப்பை முழு உடம்புக்குள்ளும் எடுத்து செல்லத் தொடங்கின. அவள் உடல் களைத்திருந்தது. மார்க் காம்புகளைச் சுற்றி இலேசாக வலியிருந்தது. ஆனால் அவள் மனம் "எனக்கு வேணும்" " எனக்கு வேணும்" கட்டிக்கடி உன் புருஷனை; அவன் ஆசை உனக்குப் புரியலையா; கட்டிப்புடிச்சி அவனை சந்தோஷப்படுத்துடி; நீயும் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருடி; நேரத்தை வீணாக்காதே என கூச்சலிட்டது. அவள் சொப்பு போன்ற வாயிதழ்கள் புன்னகையில் விரிந்தன. "உங்க பிள்ளை அங்க ஆஸ்பத்திரி கட்டில்ல உடம்பு வலியோட படுத்துக்கிட்டிருக்கான் ... நீங்க என்னடான்னா புள்ளைக்கு பொண்ணை நிச்சயம் பண்ணணும்ன்னு சொல்லிட்டு, இங்க கட்டில்ல உங்க பொண்டாட்டி தொடையை தடவிக்கிட்டிருக்கீங்க ... உங்களுக்கு வெக்கமா இல்லை?" அவள் புன்னகையுடன் பேசினாள். "ம்ம்ம் ... இல்லடி ... உன்னை தடவறதுக்கு நான் எதுக்கு வெக்கப்படணும்?" "நிஜம்ம்மாவா சொல்றீங்க ... கொஞ்சம் கூட வெக்கமாயில்லே?" அவள் குரலில் வியப்பிருந்தது. மல்லிகாவின் இமைகள் மூடிக்கிடந்தன. "செல்வாவுக்கு மயக்கம் தெளிஞ்ச அடுத்த நிமிஷம், அவ்வளவு உடம்பு வலியில கிடந்தானே; அப்ப நம்ம புள்ளை மனசுல என்னத் தோணுச்சுன்னு நேத்து நீ பாக்கலயா?" அவர் வலது கை அவள் கழுத்துக்கு கீழ் நுழைந்தது. அவள் முகத்துடன் தன் முகத்தை சேர்த்துக்கொண்டவர், தன் உடலைத் திருப்பி, அடுத்த கையை அவள் நைட்டிக்குள் செலுத்தி அவளுடைய வலது முலையை கொத்தாக பற்றி தன் உள்ளங்கையால் இதமாக அமுக்கினார். "வேண்டாங்க மாரைச்சுத்தி வலிக்குதுங்க ... நாள் வரும்ன்னு நினைக்கிறேன் ... அதான் காலும் விட்டு விட்டு வலிக்குது ... வேணும்ன்னா சும்மா கட்டிப்புடிச்சிக்கோங்க ... " "சாரிடா ... நான் அழுத்தமாட்டேன். அவர் சட்டெனத் தன் கையை பின்னுக்கு எடுத்தார்." இன்னைக்கு சத்தியமா மழை பேயாது ... காத்துல மேகம் கலைஞ்சுடும் ... நடராஜன் மனம் கணக்குப் போட்டது. சாப்பிட்டு முடித்தப்பின் அவள், வெற்றிலை போட்டுக்கொண்டிருக்க, அவள் பேசியபோது அவள் சிவந்த உதடுகள் நடராஜனின் கன்னங்களில் உரசி, அவர் உடல் சூட்டை மேலும் அதிகமாக்கியது. மல்லிகா வலது காலை அவர் இடுப்பில் போட்டு அவரைத் தன் புறம் இழுக்க, பரஸ்பரம் ஒருக்களித்து படுத்திருந்த நிலையில் ஒருவர் விழிகள் அடுத்தவர் விழிகளில் நிலைத்திருக்க, அவள் வாய் அவர் மூக்கின் அருகில் உரசிக்கொண்டிருக்க, அவள் வாயிலிருந்து வெற்றிலையின் வாசமும், ஏலக்காய் வாசனையும் சேர்ந்து அவர் முகத்தில் அடிக்க, நடராஜனின் தம்பி கிடு கிடுவென விரைக்கத் தொடங்கினான். ஏண்டா கிடந்து துடிக்கிறே? இன்னைக்கு நீ பட்டினியாத்தான் படுக்கணும். நடராஜன் அவனை தன் லுங்கியுடன் சேர்த்து ஒரு முறைத் தன் கையால் அழுத்தி உறுவினார். "நம்மப் பையன் சுகன்யாவை நேசிக்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகலேன்னு சொன்னான். அவன் பொய் சொல்லலைடி; அந்த பொண்ணு அழகாயிருக்கா; நான் இல்லேன்னு சொல்லலை; நம்ம பையனுக்கு மட்டும் என்ன கொறைச்சல்; அவனும் ஸ்மார்ட்டாத்தான் இருக்கான்; ஆனா இதுக்கு மேலே அவங்க ரெண்டு பேரும் உண்மையா ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறாங்க; அதை அவங்க மூஞ்சி சொல்லுதுடி; செல்வா மனசு பூரா அந்த பொண்ணு இருக்கவேதான், கண்ணு முழிச்சவுடனே, வெக்கப்படாமா அவ பேரை சொல்லி முனகினான்." "ம்ம்ம் ... " மல்லிகா அவர் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவர் என்ன சொல்ல வரார் எனக்குப் புரியலையே? "நீங்க என்ன சொல்றீங்க இப்ப? நீங்க வெக்கப்படறதுக்கும் அவங்க காதலிக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?" அவள் அவன் கன்னத்தில் தன் உதடுகளை தீற்றினாள். "கேளுடி நான் சொல்றதை" அவர் கை அவள் அடிவயிற்றை வருடிக்கொண்டிருந்தது. அந்த பொண்ணு முகத்தைப் பாத்தியா? என்ன வேதனையோட அவனை நெனைச்சு உட்க்காந்துகிட்டு இருந்தா? செல்வா அவ பேரை சொல்லி கூப்பிட்டான்னு தெரிஞ்சு அவனைப் பாக்கறதுக்கு உள்ளே ஓட்டமா ஓடினாளே, அப்பவும் அவ முகத்தை நான் பாத்தேன்; என் ஆள் பொழைச்சுட்டான்ங்கற நிம்மதி அவ முகத்துல இருந்தது; நாம உள்ளப் போனப்ப யாரைப் பத்தியும் கவலைப் படாம அவன் உதட்டுல முத்தம் குடுத்துக்கிட்டு நின்னாளே ... அப்பவும் அவ மூஞ்சை நான் பாத்தேண்டி; அவ முகத்துல என்னை இவன் அடையாளம் தெரிஞ்சுக்கிட்டான்ற மகிழ்ச்சி; அந்த திருப்தியில, சந்தோஷத்துல அப்ப அவ முகத்துல இருந்த சின்ன வெக்கத்தையும், ஆசையும், தவிப்பையும் நான் பாத்தேன். இவ செல்வாவை உண்மையா காதலிக்கிறா; என் புள்ளையை இவ கடைசி வரைக்கும் நல்லபடியா பாத்துக்குவான்னு அப்பவே தோணிடிச்சி." "ம்ம்ம் ... என் மனசை எப்படியாவது மாத்தி சுகன்யாவை என் புள்ளைக்கு கட்டி வெக்கணும்ன்னு நீங்க தீர்மானிச்சிட்டீங்க ... அது எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு ... சும்மா எங்கிட்ட நீளமா கதை சொல்லாதீங்க ... நீங்க வேலையை விட்டுட்டு ... மெகா சீரியலுக்கு கதை எழுதப்போகலாம்." அவள் உதட்டில் கேலிப்புன்னகை மின்னியது. "மல்லி ... பீ சிரியஸ் ... நான் இப்ப மனசு விட்டுப் பேசறேன் ... நீ என்னை அப்புறமா கிண்டல் பண்ணலாம்" "ம்ம்ம்ம் ... சொல்லுங்க ... நானும் சீரியஸாத்தான் பேசறேன்" "யாருக்காகடி அந்த அளவுக்கு தவிப்பும் வேதனையும் அந்த பொண்ணுக்கு? அதெல்லாம் நம்ம புள்ளைக்காகத்தானே? உண்மையான ஆறு மாச காதல் அவங்க நடுவுல இருக்க வேண்டிய வெட்க்கத்தையும், தயக்கத்தையும், பெத்தவங்கன்னு நம்ம கிட்ட இருக்க வேண்டிய மரியாதையையும் தூக்கி எறிஞ்சிட்டப்ப, உன்னை நான் இருபத்தஞ்சு வருஷமா, என் மனசுக்குள்ள வெச்சி உண்மையா; உனக்காக மட்டும்; உன்ன நான் நேசிச்சுக்கிட்டு இருக்கேனே; நான் எதுக்குடி வெக்கப்படணும் உன்னைத் தொடறதுக்கு, தடவறதுக்கு; அதுவும் நம்ம பெட் ரூம்ல? யாருக்காக வெக்கப்படணும்?" நடராஜன் பேசிவிட்டு அவள் முகத்தை ஆசையுடன் பார்க்க, மல்லிகா ஒரு வினாடி எதுவும் பேசாமல் அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் புல்லரித்தது. என் மேல இவனுக்கு இவ்வளவு ஆசையா? நான் சரியான மக்கு மாதிரி அவனை கிண்டல் பண்ணிட்டேனே? எழுந்து உட்க்கார்ந்தவள், தன் உடலில் இருந்த நைட்டியை உறுவி கட்டிலின் அடுத்த முனையில் வீசினாள். அடுத்த நொடி தன் கணவனின் முகத்தை இழுந்து வெறியுடன் தன் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவர் உதடுகள் தன் மார்பில் உரசியதால் உண்டான இன்ப வேதனையுடன், அவர் முகத்தை நிமிர்த்தினாள். அவர் முகத்தில் ஆவேசமாக முத்தமிட்டவள், அவர் உதடுகளை மிருதுவாக கடித்தாள். அவன் மார்பையும் முதுகையும் தடவி விட்டாள். சட்டென அவரின் நெகிழ்ந்திருந்த இடுப்பு துணிக்குள் தன் கையை செலுத்தி அவருடைய தடித்திருந்த தண்டைப் பற்றி அழுத்தி வருடினாள். "ஐ லவ் யூ ... நானும் உங்களை என் மனசுக்குள்ளத்தான் பொத்தி பொத்தி வெச்சிக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி எனக்கு பேசத் தெரியாதுங்க; என் மனசுல இருக்கறதை சொல்லத் தெரியாதுங்க; என்னங்க ... நீங்க என்னை அப்படியே கட்டிப்புடிச்சுகிட்டு இருங்க; உங்களுக்கு முத்தம் குடுத்துக்கிட்டே, என் மூத்தப் பையனை நான் ஆட்டிவிட்டுடறேன் ... உங்க சந்தோசம்தான் எனக்கு முக்கியம்" அவள் அவர் இதழ்களை வெறியுடன் கவ்விக்கொண்டாள். "ஏம்மா உனக்கு உள்ள விட்டுக்க வேணாமா?" நடராஜனின் கைகள் அவள் அந்தரங்க மொட்டை தடவத்தொடங்கியது. "ம்ம்ம்ஹூம் ... என் மனசு நெறைஞ்சு போச்சுங்க; உடம்பும் டயர்டா இருக்கு; கால் வலிக்குதுன்னு சொன்னேன்லா; நாளைக்குள்ள எனக்கு பீரியட்ஸ் வந்துடும்ன்னு தோணுது; மார்லாம் வலிக்குது; உங்களுக்கு வேணும்ன்னா சொல்லுங்க, முயற்சி பண்றேன்; நான் தயாராக இன்னைக்கு கொஞ்ச நேரம் ஆகலாம். என்னமோ தெரியலை ... ஈரத்தையே காணோம் அங்க ...." அவள் அவருடைய முகத்தில் முத்தமிட்டாள். "வேண்டாம் எனக்கும் வேணாம்; உனக்கு முடியலைன்னா எனக்கு வேண்டாம்; நீ அவனை உருவிவிட்டலே போதும்; உன் கை குடுக்கற சுகம் இருக்கே அதுவே இன்னைக்கு எனக்கு போதும்; நானும் டயர்டாத்தான் இருக்கேன்; உடம்பு முடியலைன்னாலும் வேணும் வேணும்ன்னு, இந்த மனசு கிடந்து தவிக்குது; அவர் விரல் அவளுடைய அந்தரங்கத்தில் ஒரு முறை நுழைந்து, வெளிவந்தது. அவள் அந்தரங்கம் வானம் பார்த்த பூமியாக இருந்தது. அவர் ஒற்றை விரல் அவள் பெண்மை மொட்டை வருடிக்கொண்டிருக்க, அவள் அவருடைய தண்டை நிதானமாக, கீழிருந்து மேலும், மேலிருந்து கீழுமாக ஒரே சீராக உருவிகொண்டிருந்தாள். மல்லிகாவின் கையும், அவர் விரலும், இருவரின் உதடுகளும், இப்போது தாங்கள் இயங்கும் வேகத்தை கூட்டிக் கொண்டேப் போக, மல்லிகா அவர் தண்டிலிருந்து தன் கையை எடுத்துவிட்டு அவரை இறுக்கியணைத்து ஹ்ஹீய்ம்ம் ... ஹீங்க்ம்ம் ஹீவ்வ்ம் என நீளமாக மூச்சிறைக்க அவர் உதடுகளை ஆவேசமாக உறிஞ்சியவாறே தன் உச்சத்தையடைந்தாள். அவன் மார்பில் துவண்டு சரிந்தாள். நடராஜன் தன் மார்பில் கிடந்தவளை, கட்டிலில் சரியவிட்டார். அவள் பக்கத்தில் படுத்து அவள் மார்பை நிதானமாக தன் நாக்கால் நக்கத் தொடங்கினார்.

"போதுங்க ... எனக்கு கிடைச்சிடுச்சி ... நீங்க சவுகரியமா படுத்துக்கோங்க ... உங்களை நான் ஆட்டிவிட்டுடறேன். " மல்லாந்து கிடந்தவர் மேல் மல்லிகா சரிந்து படுத்து அவன் உதடுகளை தன் வாயால் கவ்வி முத்தமிட்டவாறு, அவர் சுண்ணி மொட்டைத் தன் இருவிரல்கலால் பற்றி அழுத்தினாள். தன் கையை விரித்து அவன் நீளத்தையும், பருமனையையும் வருடினாள். பதட்டமில்லாமல் அவரை குலுக்க ஆரம்பித்தாள். குலுக்கும் வேகத்தையும், கை அழுத்தத்தையும் சீராக அதிகமாக்க நடராஜனின் முழு உடலும் இறுகி, அவளை இறுக்கி அணைத்து அவள் உதடுகளை உறிஞ்சும் அழுத்தத்தை அதிகரித்த போது, மல்லிகா தாம்பூலம் தரித்ததால் சிவந்திருந்த தன் நாக்கை அவன் வாய்க்குள் நுழைத்து அவர் நாவைத் தீண்டியதும், நடராஜன் அவர் மார்புகள் ஆட நடுங்கி தன் உடல் சிலிர்க்கத் தெறித்தார். பத்து வினாடிகள் வரை தன் விந்தை சொட்டு சொட்டாக அவள் கையிலேயே சிந்தி சிதறினார். தன் ஆசை மனைவியை தழுவியவாறு கட்டிலில் மூச்சிறைத்துக் கொண்டிருந்தார். மெல்ல நகர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டார். வேர்த்திருந்த அவள் அடிவயிற்றை ஆசையுடன் முத்தமிட்டார். அவர் முகம் பொலிவுடன் மலர்ந்திருந்தது. "ஐ லவ் யூடா செல்லம், நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறேங்க; என் மேல நீங்க வெச்சிருக்கற ஆசை குறைஞ்சு போச்சோன்னு நான் அப்பப்ப நினைச்சுப்பேன். நான் ஒரு மண்டூகம்; உங்களைப் போய் சந்தேகபடறேனே? அப்பப்ப புத்தியில்லாம உங்களை நான் கத்திடறேன்; நீங்க எதையும் மனசுல வெச்சுக்காதீங்க ப்ளீஸ் ... உங்க மேல நான் உயிரையே வெச்சிருக்கேங்க" ... அவள் குரல் தழுதழுக்க, நடராஜன் தன் ஆசை மனைவியை தன் மார்புடன் அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடத் தொடங்கினார். மணி இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. சுகன்யா, தன் உதடுகளிரண்டும் இலேசாக பிரிந்திருக்க, அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். அவளருகில் கட்டிலில் படுத்திருந்த சுந்தரிக்கு உறக்கம் வரவில்லை. மதிய நேரத்தில் தூங்கும் வழக்கம் அவளுக்கு எப்போதுமிருந்ததில்லை. இன்று சிறிது நேரம் சாப்பிட்டவுடன் கண்ணயர்ந்து விட்டிருந்தாள். அதன் பலன் இப்போது தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டியதாயிருந்தது. படுத்தபடியே கண்ணை மூடித் தன் அலையும் மனதை புருவ மத்தியில் நிற்க வைக்க முயன்றாள். எவ்வளவு முயன்றும் அவள் மனம், தாயின் இடுப்பில் கையையும் காலையையும் உதைத்துக்கொண்டு துள்ளும் குழந்தையைப் போல், இங்குமங்கும் நழுவி நழுவி அலை பாய்ந்தது. புரண்டு புரண்டு படுத்த போதிலும் உடல் களைத்து தூக்கம் வந்தபாடில்லை. சுகன்யா விழித்துக்கொள்ளப்போகிறாளே என்று ஒசையெழுப்பாமல் கட்டிலைவிட்டு இறங்கி, பிரிஜ்ஜிலிருந்து ஒரு தம்ளர் குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு பால்கனியில் வந்து நின்று தெருவைப் பார்த்தாள். எதிரிலிருந்து சிறிய பார்க்கின் இரும்பு கதவில் சாய்ந்தவாறு ஒரு கையில் மூங்கில் கழியும் மறு கையில் புகையும் சிகரெட்டுமாக கூர்க்கா வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். தெரு நாயொன்று தன் வாலை ஆட்டியவாறு அவன் காலருகில் நின்று கொண்டிருந்தது. ஒன்றிரண்டு வீடுகளிலிருந்து வரும் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர தெருவே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. நீல வானம் கருத்து தன் நிறமிழந்திருந்தது. தூரத்தில் மின்னல் வெட்டி வெட்டி மின்னிக்கொண்டிருக்க, நல்ல மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இருளில் நின்றுகொண்டிருந்த சுந்தரி, நிதானமாக குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறையும் வரை உள்ளிழுத்து, இழுத்தக் காற்றினை மார்பிலேயே சிறிது நேரம் நிறுத்தி, பதட்டமில்லாமல் மெல்ல மெல்ல மூச்சை வெளியேற்ற உடலும் மனசும் சிறிது தளர்ந்தது. சுந்தரி, தீடிரென வலுவான இருகரங்கள், யாரோ அவள் முதுகின் பின் நின்று, அவளை இறுக்கியணைத்து, அவள் மார்புகளை அழுத்தமாக வருடி, அவள் புறங்கழுத்தில் முத்தமிட்டது போல் உணர்ந்தாள். ஒரு நொடியில் ஓர் ஆணின் தொடலை, ஆண் கரங்களின் வலுவை, ஆண் தேகத்துக்கே உரிய பிரத்யேக வாசத்தை, மூர்க்கமான நெடியை, தன் உடல் புல்லரிக்கச் சுகித்தாள். . தலைமுடி முதல், கால் நகம் வரை அவள் மேனி மெல்ல நடுங்கியது. நடுங்கிய ஒரு கையை மறு கையால் அழுத்தமாக பற்றிக்கொண்டாள். ஒரு காலை இன்னொரு காலால் மிதித்தாள். அந்த முடியடர்ந்த கைகளின் தொடல், அந்தக் கைகளின் மெல்லிய உறுதியான விரல்கள் மார்பில் தந்த அழுத்தம், பலம் பொருந்திய அந்த கைகள் தன்னை தழுவிய வேகம், திடமான மேனியின் வேட்கையான உரசல், உரம் வாய்ந்த தேகத்தின் வாசனை, அந்த ஆண்மையின் மிடுக்கு, அவளுக்கு பரிச்சயமான ஒரு ஆண் மகனுடையதாக இருந்ததை அவள் மனம் உணர, அவள் பதறிப்போனாள். "யார் என்னை தழுவியது? இந்த உடல் வாசனை எனக்கு புதிதல்லவே? இந்த வாசனை என் புருஷனுக்கு சொந்தமாச்சே? குமாரா அது .... "குமரு" நான் ஆசையா நேசிச்ச குமரு ... ஓ மை காட் ... அடப் பாவி நீ தானா அது? நீ தான் இப்ப வந்து என்னை அணைச்சியா? ஏண்டா என்னை ரெண்டு நாளா இப்படி ஹிம்சை பண்றே? கொல்லாம கொல்றியேடா பாவி? உன்னை நான் மறந்து எத்தனையோ வருஷமாச்சேடா? நீ எனக்கு பண்ணதெல்லாம் போதாதா? நீ வேண்டாம்ன்னுதானே உன்னை உதறிட்டு நிம்மதியா இருந்தேன்? இப்ப ஏண்டா என் எண்ணங்கள்ல்ல; மனசுல நினைவுகளாக என்னை ஆக்கிரமிச்சி, இரக்கமில்லாம கொல்றே? இப்ப நீ எங்கடா இருக்கே? உன் பொண்ணுக்கு உன்னைப் பாக்கணுமாண்டா? ஒரு தரம் வந்துட்டு போடா... " "என்னை விட்டுப் போன என் கணவன் குமார் இப்போது இங்கு எங்கு வந்தான்? ஒரு வினாடி அவன் என் பின்னால் நின்று என்னை கட்டிபுடிச்ச மாதிரி இருந்துதே? அது உண்மையில்லையா? என் மார்புகள்ல்ல அவன் விரல்கள் கொடுத்த அழுத்தம் இன்னும் பாக்கியிருக்குதே? என் கழுத்துல அவன் கொடுத்த முத்தம் இன்னும் என்னை சிலுக்க வெக்குதே? என் நினைவுகள்ல்ல, என் எண்ணங்கள்ல்ல வந்து அவன் என்னை இறுக்கி அணைச்சது, நிஜமாவே இப்ப நனவுல நடந்ததைப் போல இருக்குதே?" சுந்தரி தன் உள்ளம் திடுக்கிட, அவள் உடல் தள்ளாட, அவள் வாயிலிருந்து ஓசையுடன், நீண்டப் பெருமூச்சு ஒன்று வெளி வர, கழிவிரக்கத்துடன் தன் இயலாமையை நினைத்து, கண்கள் கலங்க, நிற்பதற்கு கால்களில் வலுவின்றி, முழுங்காலுக்கு கீழ் துணியாக உடல் தொய்ந்து போக, அப்படியே சுவரில் சாய்ந்து, இரு கால்களையும் தரையில் நீட்டி உட்க்கார்ந்து கொண்டாள். அவள் உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. மனசு காட்டிய ஒரு நொடி வேடிக்கையிலிருந்து அவளால் அவ்வளவு சுலபமாக விடுபடமுடியவில்லை. அவள் மனம் பின்னோக்கிப் பறந்தது.