Saturday 28 February 2015

சுகன்யா... 20


சுகன்யா தன் அலுவலகத்தில் நுழைந்தவுடன், முதல் வேலையாக, வரும் திங்கள் கிழமையிலிருந்து ரெண்டு வாரத்துக்கு லீவு அப்ளிகேஷன் எழுதி, கையெழுத்திட்டு, தானே கையோடு எடுத்து சென்று தன் மேலதிகாரி கோபாலனுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தாள். தன் அறைக்கு திரும்பியவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து அன்று செய்யவேண்டிய வேலைகளை நோட்டமிட்டவள், மின்னஞ்சலில் ஏதும் புதிய வேலை அவளுக்கு வந்திராததால், ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளுக்கு அன்று அலுவலகத்தில் வேலை செய்யவேப் பிடிக்கவில்லை. தன் மேஜையின் மேல் ரெண்டு நாட்களாக கிடந்த மூன்று கோப்புகளையும் விறு விறுவென படித்து, அந்த பிரிவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான குறிப்புகளையும், அடுத்து உரியவர்களுக்கு அனுப்ப வேண்டிய பதில்களையும் தயாரித்து, கடித நகல்களை அச்செடுத்து, கோப்புகளில் முறையாக சேர்த்து விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. "ஏண்டி சுகன்யா ... வாயேண்டி ஒரு வாய் காபி குடிச்சுட்டு வரலாம்" அவள் பின் சீட்டுக்காரி வித்யா தன் வயிற்றை சாய்த்துக்கொண்டு அவள் பக்கத்தில் வந்து நின்றாள்.

"ம்ம்ம் ... போகலாம் வா ... உன் உடம்பு எப்படியிருக்கு, பசிக்கலேன்னு சொல்லிக்கிட்டிருந்தியே ... இப்பத் தேவலையா?" "எனக்கென்னடி கேடு ... நான் நல்லாத்தான்யிருக்கேன் ... என் வயித்துல இருக்கறதை, கீழே எறக்கி வெக்கிற வரைக்கும் ... உடம்பு தினம் ஒரு மாதிரிதான் இருக்கும் ... அதை விடு ... உன் ஆளு செல்வா எப்படியிருக்கான் ... இப்ப தேவலையா அவனுக்கு? நீ தான் அவன் கூடவேயிருந்து ராப்பகலா பாத்துக்கிட்டியாமே? வந்து அவனைப் பாக்கணும்ன்னு நினைச்சேன் ... என் வீட்டுக்காரர் வேற ஊருலே இல்லே; தனியா வாயும் வயிறுமா இருக்கற நான் எங்க வந்து பாக்கறது? ... சுகன்யா தப்பா நினைச்சுக்காதடி என்னை; எல்லார்கிட்டவும் மரியாதையா பேசறவம்பா உன் ஆளு; இந்த ஆஃபீசுல யாரை வேணா கேளு; அவனைத் தங்கமான பையன்னுதான் சொல்லுவாங்க." "ச்சே .. சே .. உன் நிலைமை எனக்குத் தெரியாதா? உன்னை எதுக்கு நான் தப்பா நெனைக்கப் போறேன்? நான் அவன் கூட இருந்து பாத்துக்கறதை உனக்கு சொன்னவங்க, அவன் எப்படி இருக்காங்கற சேதியை உங்கிட்ட சொல்லலியா?" அவள் குரலில் கேலி தொனித்தது. "என்னடி என் கிட்டவே கிண்டலா?" வித்யா அவள் முதுகில் செல்லமாக அடித்தாள். "யார் சொன்னது உனக்கு ... நான் ராத்திரியும் பகலும் அவன் கூட குடும்பம் நடத்தறேன்னு?" "வேற யாரு ... நம்ம பெண்கள் சங்கத் தலைவி குண்டு சாவித்திரி தான் ... அவ பேங்க் பாஸ் புக்கை எடுக்க நேத்து சாயங்கலாம் இங்க வந்திருந்தா ... மறந்து இங்க வெச்சிட்டு போயிட்டாளாம்; அடியே வித்யா! அந்த செல்வா குடுத்து வெச்சவன்னு நினைக்கிறேன்; தாலி கட்டிக்கிட்டவ கூட தன் புருஷனை இப்படி பாத்துக்க மாட்டா; உன் ஃப்ரெண்ட் சுகன்யா ஆஸ்பத்திரியே கதியா அவன் பக்கத்துலேயேதான் இருக்காளாம்ன்னு சங்கு ஊதினா" வித்யா சிரித்தாள். "வேற என்ன சொன்னா அவ?" "கூடிய சீக்கிரம் நீ கல்யாண சாப்பாடு போடுவேன்னு சொன்னா" "நிஜமா அப்படியா சொன்னா ... இல்லே ... இது நடுவுல நீ போடற பிட்டா?" "நிஜமாத்தாண்டி சொல்றேன் ... அப்படித்தான் சொன்னா அவ." "இல்ல வித்யா ... சாவித்திரி இன்னும் கூட செல்வாவை தன் பொண்ணுக்கு எப்படியாவது முடிக்கணும்ன்னு முயற்சி பண்றா ... செல்வாவோட அம்மாவைப் பத்தி தீர்மானமா ஒண்ணும் சொல்ல முடியலை; அவங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்கும் தெரியலை; இன்னும் பிடி கொடுத்து பேச மாட்டேங்கறாங்க ... அவங்க அப்பாவுக்கு என்னை பிடிச்சுப் போச்சு; அவர் எங்க பக்கம்ன்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சு போச்சு ... இதை நான் உங்கிட்ட மட்டும் தான் சொல்றேன் ... இப்போதைக்கு இதை நீ யாருக்கிட்டேயும் சொல்லாதே ... உன் மனசோட வெச்சுக்க ... உனக்கு தெரியாமலா நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்? " சுகன்யா புன்னகைத்தாள். "சுகன்யா ... எல்லா வீட்டுலயும், கடைசியா ஆம்பிளை சொல்றதுதான் நடக்குது; அவன் அப்பாவுக்கு உன்னைப் பிடிக்கற பட்சத்துல, உன் கல்யாணம் எல்லோருடைய ஆசிர்வாதத்துடன் நடக்கும்ன்னு நம்புவோம். நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே; உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஜாதி பிரச்சனையை செல்வாவோட அம்மா கிளறலாம். உன் ஆளோட அப்பாவும் இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு சட்டுன்னு வரல்லேன்னா, ஆபிசுல நாலு பேரு நாலு விதமா பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, செல்வா ஆஸ்பத்திரியிலேருந்து வந்தவுடனே, ரெண்டு பேருமா காதும் காதும் வெச்ச மாதிரி அம்பாள் சன்னதியில உன் கல்யாணத்தை முடிச்சுக்கற வழியைப் பாரு; கல்யாணத்தையும் சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ணிகிட்டீங்கன்னா அதுக்கப்புறம் சாவித்திரி மாதிரி எந்த நாயும் உன்னைப் பாத்து குலைக்க முடியாது. என் மனசுல பட்டதை நான் சொல்லிட்டேன்; நாளைத் தள்ளிப் போடாதே" வித்யா தன் வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள். இரவு எத்தனை மணிக்குத் தூங்கப் போனாலும் விடியற்காலை சரியாக ஐந்து மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் குமாரசுவாமிக்கு இருந்தது. சென்னைக்கு வந்த பின்னரும், அதே வழக்கத்தின் படி காலையில் எழுந்த குமாரசுவாமி கடற்கரை ஓரமாக சீரான வேகத்தில் நடக்க ஆரம்பித்தார். அரை மணி நேரம் நடந்தவரின் உடலில் வியர்வை முத்துகள் தோன்ற, கடற்கரை மணலில் அமைதியாக அமர்ந்து, கரையில் பெரும் ஓசையுடன் வந்து மோதி, பின் மீண்டும் கடலுக்குள் சென்ற அலைகளை, கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மனம் அன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தது. வழக்கமான அலுவலக வேலைகளை பனிரெண்டு மணிக்குள், லஞ்சுக்கு முன் முடித்தப்பின், சுந்தரியுடனும், சுகன்யாவிடமும் பேசவேண்டும். ரகு தன்னிடம் நேற்றிரவு சொன்னது போல், தன் தமக்கையிடம் எனக்கு முன் பேசிவிட்டால் என் வேலை கொஞ்சம் சுலபமாகிவிடும். யாரிடம் முதலில் நான் பேசுவது? என் பெண் சுகன்யாவிடமா இல்லை, என் மனைவி சுந்தரியிடமா? ரகுவைப் போல் சுந்தரி என்னிடம் சகஜமாக பேசுவாளா? அவளுக்கு என் மேலிருக்கும் கோபம் இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமாவது தணிந்திருக்காதா? ரெண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், அவளை சந்திக்க விரும்பிய என் பெற்றோர்களை பார்க்க மறுத்தவள் தானே அவள்? என் சொந்த மனைவியிடம் பேசுவதற்கு நான் ஏன் இந்த அளவுக்கு தயங்குகிறேன்? நேற்றிரவு என் மனைவியிடம் பேசி, அவளைச் சந்தித்து பிளவு பட்டிருக்கும் உறவை மீண்டும் சுலபமாக புதுப்பிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. இன்று அவளை உடனடியாகப் பார்க்க வேண்டும் என என் மனம் தவிக்கிற போதிலும், இந்த நிமிடத்தில் என் மனம் அவளுடன் பேசும் முயற்சியை ஏன் இத்தனை கடினமாக நினைக்கிறது? இதை கஷ்டம்ன்னு நினைச்சா, முதல்ல நான் சுகன்யாவிடம் பேசலாம். அவளுக்கு சுந்தரி அளவிற்கு என் மேல் கோபம் இருப்பதற்கு வழியில்லை. என்னுடைய இந்த அபிப்பிராயம் தப்பாகவும் இருக்கலாம். ஆனால் அவளுடன் பேசுவது மூலம், சுந்தரியின் இன்றைய மன நிலமை ஓரளவிற்குத் தெரியவரலாம். ம்ம்ம் ... இது சரியான வழியாகத் தோன்றுகிறது. குமாரசுவாமி சுகன்யாவிடம் உடனடியாக பேச நினைத்து அவள் நம்பரை அழுத்தியவர், மனதில் திடீரென ஏதோ தோன்ற, சட்டென தொடர்பைத் துண்டித்தார். உள்ளத்தில் ஒரு தீர்மானத்துடன் கெஸ்ட் ஹவுஸை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினார். சுகன்யா தன் இருக்கைக்கு வந்தவள், காலையில் அனுப்பியிருந்த கோப்புகள் திரும்பி வராததால், தன் மாமா ரகுவிடம் பேச நினைத்து, தன் செல்லை எடுத்தப் போது, மிஸ்டு கால் லிஸ்டில், ஒரு புதிய எண் மின்னுவைதைப் பார்த்தாள். யாருடைய நம்பர் இது? காலை ஆறு மணி வாக்கிலே யாரோ எனக்கு கால் செய்திருக்கிறார்கள். நான் இதை கவனிக்கவேயில்லையே? எதாவது ராங்க் நம்பராக இருக்குமோ என யோசித்துக் கொண்டிருக்கையில், அவளுடைய போன் ஒலிக்க ஆரம்பித்தது. மீண்டும் அந்த நம்பரிலிருந்து தான் தொடர்பு கொள்ள நினைக்கிறார்கள். யார் இது? செல்வா இருக்கற ஆஸ்பத்திரியிலிருந்து வருகிறாதா என்ன ... இந்த எண்ணம் வந்ததும் ... மனதில் பதைப்புடன், காலை ஆன் செய்து பேசத் தொடங்கினாள். "மிஸ் சுகன்யாவோட நம்பர் தானே இது" அடுத்த முனையிலிருந்து ஆண் குரலொன்று வெகு மரியாதையுடன் வந்தது. "ம்ம்ம் ... நீங்க யாரு ..." செல்வாவுக்கு எதாவது ஆகியிருக்குமா ... ராத்திரி நல்லத்தானே இருந்தான் ... அலுவலக வேலையில் கவனமாக இருந்ததால், காலையிலிருந்து அவனிடம் பேசாதது அவள் மனதில் சுருக்கென உறைத்தது. அவள் மனதில் அவன் நினைவே மீண்டும் வர சுகன்யா தவிப்புடன் பேசினாள். அவள் "ஆம்" என்றோ "இல்லை" என்றோ சொல்லாததால், ஒரு வினாடி அடுத்த முனையிலிருந்து பேசிக்கொண்டிருந்த குமாரசுவாமியும் தயங்கினார் ... நேற்றிரவு நான் ரகு குடுத்த நம்பரை சரியா நோட் பண்ணினேனா இல்லையா? "ரகு எனக்கு இந்த நம்பரைக் குடுத்தார் ... நீங்க ... நீ ... "சுகா" தானே பேசறேம்ம்மா ...." குமாரின் குரல் தழுதழுப்புடன் வந்தது. என் மாமாவின் பெயரைச் சொல்றாரே இவர் ... என் நம்பரை மாமா குடுத்தாருன்னும் சொல்றார். என் நம்பரை யாருக்கு குடுத்தாலும் உடனடியா மாமா என்னைக் கூப்பிட்டு சொல்லுவாரே? குரல் கொஞ்சம் முத்தின குரலா இருக்கு ... ஆனா குரல்லே ஒரு மிடுக்கும், கம்பீரமும் இருக்கே? யாராக இருக்கும்? ... ஈவன் செல்வாவுக்கு கூட என் செல்லப் பேர் தெரியாதே? "சுகா"ங்கற என் பெயர் இவருக்கு எப்படி தெரிஞ்சுது ... சுகான்னு என்னைச் செல்லமா கூப்பிடறவங்களே ரெண்டு பேருதானே? ... ஒருத்தர் என் மாமா; இன்னொருத்தர் என் அம்மா; மூணாவதா என் செல்லப் பேர்ல என்னை உரிமையோட கூப்பிடறது யாரா இருக்கும்? சுகன்யா திகைத்தாள். சிறிய வயதில் தன்னை இப்படி கூப்பிட்டவரின் நினைவு அந்த நேரத்தில் அவளுக்கு சுத்தமாக உதிக்கவேயில்லை. "ஆமா ... நான் சுகா .. சுகன்யாதான் பேசறேன் ... என்னை நீங்க ... "சுகான்னு" கூப்பிட்டீங்க; இந்த பேரு உங்களுக்கு எப்படித் தெரியும் ..." அவள் தன் மேனி சிலிர்க்க, தன் மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில், அந்த உணர்ச்சியுடன் சிறிது ஆச்சரியம் தொனிக்கப் பேசினாள். "ம்ம்ம் ... சுகா! என்னை நீ மொத்தமா மறந்துட்டிருக்கேம்மா ... பரவாயில்லே; உன் மேல எந்தத் தப்பும் இல்லேம்மா ... தப்பெல்லாம் என் பேர்லதாம்மா ... நீ பொறந்து, உனக்கு சுகன்யான்னு பேரு வெச்சதும் "சுகா" ன்னு அந்தப் பேரை சுருக்கி , ஆசை ஆசையா இப்படி முதல்ல உன்னை கூப்பிட ஆரம்பிச்சதே நான்தாம்ம்மா ... அதுக்கப்புறம்தான் உங்கம்மாவே உன்னை அப்படி கூப்பிட ஆரம்பிச்சா!" அவர் குரலில் துக்கம் பொதிந்திருக்க, குரலில் அப்பட்டமான வருத்தத்துடன் பேசினார் குமாரசுவாமி. தன் தாயை அந்த குரல் ஒருமையில் குறிப்பிட்டு பேசிய கணத்தில் அவளுக்கு விளங்கிவிட்டது ... பேசுபவர் வேறு யாருமில்லை ... யாரைத் தேட வேண்டும் என நினைத்திருந்தாளோ ... அவர்தான் இவர் ... இத்தனை சுலபமா என் வேலை முடிஞ்சு போச்சா? ... அப்பா ... என் அப்பாவா ... பேசறார் ... இவர் நிச்சயமா என் அப்பாதான்; சுகன்யாவின் உடல் புல்லரித்தது. அம்மாவுக்கு உடனடியா போன் பண்ணி சொல்லணும் ... அவள் ஆடவில்லை; அவள் சதை தானாக ஆடியது; அவள் முகம் கோணிக்கொண்டது; உதடுகள் துடித்தன; சுகன்யாவின் கண்கள் சந்தோஷத்தில் கலங்க ஆரம்பித்தது; அவள் முழு உடலும் பரவசமானது; லைப் ஈஸ் ஸ்டேரேஞ்சர் தேன் பிக் ஷன்னு சொல்றாங்களே; இது எவ்வளவு உண்மையான ஒரு வார்த்தை ... ஒரு வினாடி அவளுக்கு பேசுவதற்கு குரல் எழும்பவில்லை. "சுகா ... என்னம்மா பேசமாட்டேங்கற ... உனக்கும் என் மேல கோவம்ன்னு நினைக்கிறேன் ... " அடுத்த முனையிலிருந்து குரல் தயக்கத்துடனும், தழுதழுப்புடனும் வந்தது. "அப் ... அப்பா ... நீங்க ... என் அப்பாதானே பேசறீங்க ... சாரிப்பா ... என்னால சட்டுன்னு புரிஞ்சுக்க முடியலைப்பா .. உங்களை நான் யாருன்னு கேட்டுட்டேன் ... வெரி வெரி சாரிப்பா ... உங்களை பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா; நீங்க எங்கேருந்து பேசறீங்கப்பா?" "நீ இருக்கற சென்னையிலேதான் நானும் இருக்கேன்; நானும் உங்களையெல்லாம் பாக்கணும்ன்னு கொஞ்ச நாளா துடிச்சுக்கிட்டிருக்கேண்டா செல்லம்; அதுக்காகத்தான் என் வேலையெல்லாம் மாத்திக்கிட்டு இந்த ஊருக்கு வந்திருக்கேன்; எனக்கு மேல உன் தாத்தாவும் பாட்டியும் உன்னைப் பாக்கணும்ன்னு தவிச்சிக்கிட்டிருக்காங்கம்மா; உன் அம்மா நல்லாயிருக்காங்களா? உன் அம்மா இன்னும் என் மேல கோவமாத்தான் இருக்காளா? "இல்லப்பா ... அப்படியெல்லாம் இல்லைப்ப்பா ... அம்மா ரொம்ப நல்லவங்கப்பா ... உங்க மேல உயிரையே வெச்சிருக்காங்கப்பா ... ஒரு வீம்புல ... ஒரு வைராக்கியத்தோட அவங்க தன் வாழ்க்கையை எனக்காக வாழ்ந்துகிட்டு இருங்காங்கப்பா ... உங்க மேல அவங்களுக்கு கோவம் இல்லப்பா ... நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்னு ... எப்பவும் தன்னையேத்தான் அவங்க நொந்துப்பாங்க ... உங்களை எப்பவும் என் எதிர்ல தப்பாவே பேசினது இல்லப்ப்பா ... என் அம்மாவை சொல்றீங்களே; நீங்க மட்டும் இத்தனை வருஷம் எங்களையெல்லாம் பாக்க வராமத்தானே இருந்தீங்க?" சுகன்யா மேலே பேச முடியாமல் விம்ம ஆரம்பித்தாள். "சாரிடா ராஜா ... உங்களையெல்லாம் நான் ரொம்பப் படுத்தி எடுத்துட்டேன் ... உங்கம்மாவுக்கு நான் ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன். சாரிடா கண்ணு ... நேத்துதான் உன் நம்பரையும், உன் அம்மா நெம்பரையும் உன் மாமாகிட்டேயிருந்து வாங்கினேன். உண்மையை சொல்லணும்ன்னா, நீ என் கிட்ட பேசுவியோ ... மாட்டியோன்னு காலையிலேருந்து பயந்துகிட்டே இருந்தேம்மா." குமாரசுவாமியின் குரல் நொறுங்கியது. "அப்பா ... அழறீங்களாப்பா ... அழாதீங்கப்பா" சுகன்யாவின் குரல் தேய்ந்து உணர்ச்சி மிகுதியில் மெல்லியதாகி விட்டிருந்தது. " ம்ம்ம்ம் ... உன் அம்மாவைப் பத்தி நீ சொன்னதும் ... என்னால என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலடா செல்லம்..." "அப்ப்பா" "சுகா ... நீ இப்ப நல்லா படிச்சு, பெரிய பொண்ணா ஆகி, நீயும் வேலை செய்யறதா உன் மாமா சொன்னாரு; நீ உங்கம்மா மாதிரியே அழகாயிருக்கேன்னு சொன்னாரு; நேத்து ராத்திரி உன் மாமா உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசினாரு; நான் அவரோட பேசினதை அவர் உங்கக்கிட்ட சொல்லலியா? "இல்லேப்பா." "இட்ஸ் ஆல் ரைட் ... நானே உங்ககிட்ட பேசணும்ன்னு அவரு நினைச்சிருக்கலாம். அதுல ஒன்னும் தப்பில்லே; நீ இப்ப எங்க இருக்கே?" "ஆபீசுலதான் இருக்கேம்பா" "உன்னை நான் இப்ப பாக்க வரலாமா? உனக்கு எப்ப லஞ்ச் டயம்? நாம ரெண்டு பேரும் இன்னைக்கு ஒண்ணா லஞ்ச் சாப்பிடலாமா? நான் இப்ப அங்க வந்தா உனக்கு தொந்தரவா இருக்காதே?" குமாரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கலங்க, இன்னமும் குரலில் சிறு நடுக்கத்துடன் பேசிகொண்டிருந்தார். "என்னப்பா இப்படி கேக்கறீங்க? நான் வேலை செய்யற கவர்ன்மெண்ட் ஆபிசு பீச்சு ரோடுல ஆல் இண்டியா ரேடியோ பக்கத்துல இருக்குப்பா. என் ஆபீஸோட பேரு "......" யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க; நான் உங்களுக்காக ஆஃபீஸ் ரிசப்ஷன்ல வந்து நிக்கறேன்; எனக்கு உங்களை இந்த நிமிஷமே பாக்கணும் போல இருக்குப்பா." இப்போது சுகன்யா தெளிவாக பேச ஆரம்பித்திருந்தாள். குரலில் அளவில்லாத மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. "சரிம்ம்மா ... நீ சொல்ற எடம் எனக்குத் தெரியும். நான் இருபது நிமிஷத்துல அங்கே வரேன்." தன் தந்தையிடம் போனில் பேசிமுடித்த சுகன்யாவுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மேஜையின் மேலிருந்த பாட்டிலை எடுத்து மடக் மடக்கென தண்ணீரைக் குடித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்தவள், வாட்டர் கூலரை நோக்கி ஓடி பாட்டிலை நிரப்பிக் கொண்டு, தன் ஹாண்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு வெளிக்கதவை நோக்கி ஓடினாள். "அடியே சாவித்திரி ... எங்கப்பா என்னை பாக்க வந்துகிட்டு இருக்காருடி; சுகன்யாவுக்கு அப்பன் இல்ல; அவ வாழா வெட்டி வளர்த்த பொண்ணுன்னு, திரும்பியும் நீ போய் என் வருங்கால மாமியார் மல்லிகா கிட்ட தூபம் போட முடியாதுடி ... நான் கும்பிடற அம்பாள் என் பக்கத்துல இருக்கா ... தெரிஞ்சுக்கோ" அப்பாவை சந்திக்க ஓடியவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். லிப்ட்டுக்கு காத்திராமல் வேகமாக படியில் இறங்கத் தொடங்கியவள், கம்ப்யூட்டர் ஆன்ல இருக்கே! அப்படியே ஓடி வந்துட்டோம்; யார்கிட்டவும் சொல்லவும் இல்லே; நாளைக்கு ஆபீஸ் வேற லீவு; போன வேகத்தில் திரும்பி தன் அறைக்குள் ஓடி கணிணியை ஷட் டவுன் செய்தவள், தன் ட்ராயரை மூடிப் பூட்டி சாவியை, கைப்பையில் போட்டுக் கொண்டவள், அதே மூச்சில் தன் மேலதிகாரி கோபலன் ரூமுக்கு ஓடினாள். ஆபீஸ் நேரத்தில் வெளியில் செல்ல அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திரும்பவும் தன் அறைக்குள் நுழைந்து, சுந்தரி கொடுத்து அனுப்பியிருந்த மதிய உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு ரிசப்ஷனை நோக்கி மூச்சிரைக்க ஓடினாள். "செல்வா கிட்ட தனியா பேசணுமா? பேசுடி ... நல்லா பேசு ... இன்னைக்கே என் அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லி என் கல்யாணத்தை பத்தி பேச சொல்லி அவரை நான் நடராஜன் கிட்ட அனுப்பறேன். உன்னால முடிஞ்சதை நீ பாரு; என்னால முடிஞ்சதை நான் பாக்கிறேன். அவள் முகத்தில் சிரிப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள். எதிரில் வந்து கொண்டிருந்த வித்யாவிடம், கொஞ்சம் அவசரமா வெளியில போறேன்; முக்கியமான ஒருத்தரை பாத்தே ஆகணும். நான் மேல அப்ரூவலுக்கு அனுப்பிச்ச ஃபைல்ஸ் திரும்பி வருது; அதுல கோபலன் சார் கையெழுத்து போட்டு இருக்கற லெட்டர்ஸை மட்டும் டெஸ்பேச்சுக்கு அனுப்பிடும்மா ... ப்ளீஸ் அவள் கன்னத்தைக் மெதுவாகக் கிள்ளினாள். அவள் பதிலுக்கு காத்திராமல் மாடிப்படிகளை ரெண்டு ரெண்டாக தாவி இறங்கினாள். "ம்ம்ம் ... இந்த சுகன்யாவுக்கு என்னாச்சு? ஒழுங்கா இருந்த பொண்ணு; என்னைக்கு செல்வா இவளுக்கு நூல் விட்டானோ அன்னையிலேருந்து இவளுக்கு பித்தம் புடிச்சு போச்சு. நினைச்சா வர்றா; நினச்சா ஒடறா; கேக்க ஆளு இல்லாமப் போச்சு? எல்லாம் கழுத்துல ஒரு தாலி ஏர்ற வரைக்கும்தான், இந்த காதல் கத்தரிக்கா பிஸினஸ் எல்லாம் ... அப்புறம் என்னை மாதிரி வயித்தை ரொப்பிக்கிட்டு, ஒடுங்கிப் போய் ஒக்காந்துக்குவா ..." அவள் தன் மனதுக்குள் புலம்பிக்கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள். சுகன்யாவின் டேபிளின் மீதிருந்த அவள் மொபைல் ஒலிக்க, "செல்லை விட்டுட்டு போயிட்டாளா? அப்படி என்ன அவசரம் இவளுக்கு? இப்ப நான் வயித்தை சாய்ச்சுக்கிட்டு திருப்பியும் இவ பின்னால நான் எங்கேயிருந்து அலையறது?" வித்யா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் போதே, சுகன்யா மூச்சிறைக்க வந்தவள், அவசரத்தில் விட்டுவிட்டு போன செல்லை எடுத்து ஹெலோ என்றாள். "அம்மா பேசறேண்டா கண்ணு; சாப்பிட்டியா?" "இல்லம்மா ... இனிமேத்தான் ... ஏம்மா?" "தயிர் சாதத்துல உப்பு கம்மியா இருக்கு ... கொஞ்சம் போட்டுக்கோ" சுந்தரி குரலில் கரிசனத்துடன் பேசினாள். "சரிம்மா ... நீ சாப்பிடு ... நான் சாப்பிடத்தான் போயிகிட்டிருக்கேன்." அப்பா என்னைப் பாக்க வந்துகிட்டு இருக்காருன்னு அம்மாவிடம் சொல்லலாமா? சுகன்யாவின் மனம் துடித்தது. வேண்டாம் முதல்ல அப்பாவை பாத்து ஆசை தீர பேசிட்டு, எப்ப வீட்டுக்கு வருவார்ன்னு கேட்டு, நேரா அழைச்சுக்கிட்டு போய் சஸ்பென்ஸா அவங்க முன்னாடி நிறுத்தணும். அதுக்கு முன்னாடி இப்ப அரை குறையா சொல்லிட்டு, அம்மா மனசுல நிம்மதியில்லாம வீட்டுல இருப்பாங்க, இது தான் சரி என மனதில் நினைத்துக்கொண்டு, வித்யாவை நோக்கி மீண்டும் ஒரு முறை கையசைத்துவிட்டு, வாசலை நோக்கி நடந்தாள். மணி பகல் ஒன்றாகியிருந்தது. சுந்தரிக்கு பசி எடுத்தது. சுந்தரி நிதானமாக தயிர்சாதத்தையும், உடன் காலையில் அரைத்த தக்காளிச் சட்டினியையும் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும், சுகன்யா வர இன்னும் அஞ்சு மணி நேரம் ஆகும், என்ன பண்றது வெட்டு வெட்டுன்னு முழிச்சிகிட்டு இருக்கணுமா? அறைக் கதவைக் மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள். அடுத்த நொடி, கண்ணை மூடியவளின் மனது ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. மனதில் குமாரின் முகம் பளிச்சென்று வந்து உட்க்கார்ந்து கொண்டது. "ஏ ... மனமே சும்மா இரேன் ... கொஞ்ச நேரம் ... அவள் தன் மனதை சலித்துக்கொண்டாள். வலுக்கட்டாயமாக மனதில் நின்ற தன் கணவன் முகத்தை அழிக்க முயற்சித்தும் முடியாமல், மெல்ல எழுந்து தன் பெட்டியைத் திறந்து புடவைகளின் அடியில் கிடந்த குடும்ப போட்டோ ஆல்பத்தை பிரித்தாள். குமார் அவள் தோளில் தன் இடது கையை போட்டு, தன் தோளோடு அவளை அணைத்துக்கொண்டிருக்க, சுந்தரியின் இடுப்பு வரை வளர்ந்திருந்த சுகன்யா, ரோஜாப் பூவாக காமிராவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். ஆசையுடன் போட்டோவிலிருந்த சிறு வயது சுகன்யாவை ஒரு முறை முத்தமிட்ட சுந்தரி, புகைப்படத்தில் தன்னருகில் நின்றிருந்த தன் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி பார்க்கறே? உன் பொண்ணுக்கு மட்டும்தான் முத்தமா? எனக்கு கிடையாதா? உன் உதட்டு ஈரத்துக்கு முதல் உரிமைக்காரன் நான்தான்டி ; சிவந்த ரோஜா நிற உதடுகள் ... மேலுதட்டின் மேல் கரிய அடர்த்தியான மீசை, தூக்கி வாரிய கிராப்புடன் அவன் புகைப்படத்தில் கவர்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தான். பாவி, இந்த சிரிப்புல தானேடா நான் உங்கிட்ட கவுந்து போனேன் ... சுந்தரியின் மனது மெல்லக் கூவ ஆரம்பித்தது. தான் மனதுக்குள் கட்டிக் காத்து வந்த கற்கோட்டை இரண்டு நாட்களாக மெல்ல மெல்ல மணல் கோட்டையாக மாறி நாலாபுறமும் சரிவதை நினைத்து அவள் மனம் பதறியது. சுந்தரி ... ஏன்டி பதறிப் போறே? அவன் உன் புருஷன்டி ... உனக்கு அவங்கிட்ட எல்லா உரிமையும் இருக்குடி; நீயா உன் மனசுக்கு ஒரு பூட்டு போட்டுக்கிட்டே? ஒரு முத்தம் குடுடி அவனுக்கும்; என்னடித் தப்பு; அவனை மறந்துட்டேன்னு சொல்ற நீ, இந்த ஆல்பத்தை மட்டும் எங்கப் போனாலும் கூடவே ஏன் சொமந்துக்கிட்டுப் போறே? உன் பொண்ணு சென்னைக்கு வேலைக்காக வந்துட்டா? அவ படமும் இதுல தான் இருக்கு; அதனால நான் என் கூடவே இந்த் ஆல்பத்தை வெச்சிருக்கேன்னு மட்டும் பொய் சொல்லாதே? பொய் சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்காதே? நீ உன் புருஷனை உண்மையாவே மறந்திருந்த காலமெல்லாம் மலையேறிடிச்சு; அவன் திரும்பவும் உன் மனசுக்குள்ள வந்தாச்சு; மனக் கதவை மொத்தமா தொறந்து உள்ள வாங்கன்னு ஆசையா கூப்பிடுடி. போதும்டி உன் தனிமை வாழ்க்கை ... இன்னும் எதுக்கு வீம்பு, எதுக்கு இந்த பிடிவாதம்; அவன் மேல எதுக்கு இந்த தீராத கோபம் ... தன் கணவனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென தன் இதழ்களை அவன் உதடுகளில் பதித்தாள். அவள் உடல் நேற்றிரவு சிலிர்த்ததைப் போல், தலை முதல் கால் வரை மீண்டும் இப்போது ஒரு முறை சிலிர்த்தது. நினைவுகளுக்கு இத்தனை பலமா? அவள் அடிவயிறு குழைவதையும், இலேசாக அவள் அந்தரங்கம் நெகிழ்வதையும் உணர்ந்த அவள் உதடுகளிலிருந்து நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து தன் மார்புடன் இறுக்கிக்கொண்டாள். "அம்மா! என் அப்பா எங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு அவரைப் பாக்கனும் போல இருக்கும்மா? இத்தனை நாள்ல அவரு தான் குடிக்கறதை விட்டுட்டு திருந்தியிருக்கலாமே? என் பொண்ணு கேட்ட ஒரு கேள்வியில, என் வாழ்க்கையில நான் முடிஞ்சுப்போச்சுன்னு நினைச்ச அத்தனைக்கும் திரும்பவும் உசுரு வந்துடுத்தா? சுந்தரி திகைத்துத்தான் போனாள். நேத்தைய அமைதியான இரவின் இருட்டு, எதிர்ல இருக்கற பார்க்குலேந்து காத்துல மெதந்து வந்த மகிழம் பூக்களின் வாசம், மெல்லிசா தூறின மழை, அந்த மழையின் சாரல், அந்த சாரல் என் ஒடம்புல உண்டாக்கின குளிர்ச்சி, அந்த குளிர்ச்சி மனசுல ஏற்படுத்துன வெப்பத்துக்கான தவிப்பு, இருட்டும் தனிமையும் குடுக்கற இனம் தெரியாத ஏக்கம்; இதெல்லாம் ஒரு வினாடியில ஒன்னாகி என் மனசுக்குள்ள, அடியாழத்துல விதையாக உறங்கிக்கிட்டிருந்த ஒரு நிகழ்ச்சியை, என நெனவோட மேல் தளத்துக்கு கொண்டு வந்து, என் புருஷன் என்னை பின்னாலேருந்து கட்டிப்புடிச்சு, என் மாரை தடவுன மாதிரி, என் மனசே நேத்து ஒரு நாடகத்தை, உண்மையாக நடக்கற மாதிரி நடத்திக்காட்டிடுச்சே? அந்த நாடகத்தை என் மனசும், வெக்கமில்லாமே அணுவணுவாக ரசிச்சி, ருசிச்சி; அந்த சுவையை முழுசா என் ஒடம்புலேயும் காட்டிடுச்சே? நான் என் உள்ள ஈரமாயி எவ்வளவு காலமாச்சு? நேத்து ஒரு செகண்ட்ல ஈரமாயி நின்னேனே? ம்ம்ம் ... இவ்வளவுக்கும் காரணமான இந்த மனசுக்கு இத்தனை வலுவா? அனுபவங்கள் அழிவதில்லையா? ஒடம்பு என்னைக்கோ நுகர்ந்த அனுபவங்களுக்கு இத்தனை பலமா? இந்த அனுபவங்கள் என்னை மட்டும் தான் வாட்டுதா? இல்லை அவனும் இப்படித்தான் எங்கேயோ தனியா கிடந்து அலைகழியறனா? என்னை மாதிரி ராத்திரியில தூக்கம் வராம என்னை நெனைச்சுக்கிட்டு தவிப்பானா? நேத்து நான் தூக்கத்துல இருந்திருந்தா கனவுல இதெல்லாம் சாத்தியம்; என் புருஷன் என்னை கட்டியணைக்கறதா நான் கனவு கண்டிருக்கலாம்; ஆனா நான் நேத்து முழிச்சுக்கிட்டு இருந்தேனே? இது எப்படி சாத்தியம்? நேத்து இது எப்படி நடந்தது? மனசுக்கு தூக்கம், விழிப்புன்னு ஒரு வித்தியாசமும் கிடையாதா? ஆண்டவா, என் ஆசைகளையெல்லாம், சுட்டு பொசுக்கிட்டேன்னு, ரெண்டு நாள் முன்னத்தான் என் பொண்ணுக்கிட்ட கர்வமா சொன்னேன்? அதுக்கு என்னை நீ இப்படி அடிக்கிறியா? என் மனசுக்கு என்ன ஆச்சு? என் உடம்புக்கு என்ன ஆச்சு? பதினைஞ்சு வருஷமாயிடுச்சு, ஒரு ஆம்பளை ஒடம்பை ஆசையா, மனசாரத் தொட்டுத் தழுவி; எவனும் என்னை; நான் பூட்டி வெச்சிருக்கிற என் மனக்கோட்டையை உடைக்க முடியாதுன்னு இறுமாந்து இருந்தேனே? எவனுடைய பார்வையும், எவனுடைய அழகும், எவனுடைய பேச்சும், எவனுடைய சிரிப்பும், என்னை பாதிக்கலைன்னு என் பொண்ணுக்கிட்ட நான் சொன்னது எல்லாம் என் ஆணவத்தாலேயா? உண்மையில என் உடம்பு இன்னும் முழுசா மரத்துப் போகலையா? என் உடல் ஆசைகளும், தேவைகளும், விருப்பங்களும், ஏக்கங்களும், இன்னும் உசுரோடத்தான் இருக்கா? எல்லாமே முடிஞ்சுப் போச்சுன்னு நினைச்சதெல்லாம் பொய்யா? என்னுடைய வைராக்கியம் அத்தனையும் நொடியிலே சுக்கு நூறாப் போயிடுச்சே? உடம்பால அனுபவிக்கனுங்கறதுக்கு என்ன அவசியம்? மனசால அனுபவிச்சா போதாதா? நேத்துத்தான் அனுபவிச்சி முடிச்சாச்சே? நானும் எல்லோரையும் போல ஒரு சாதாரண ஆசாபாசங்களுள்ள பொம்பளைதானா? நேத்து இந்த உடம்பு அனுபவிச்ச சுகம், என் புருஷன் உடம்பு வாசனை கூட அப்படியே என் மனசுக்குள்ள இன்னும் இருக்கே? நான் அனுபவிச்சதெல்லாம் இறுகி இறுகி, விதைகளா மனசுக்குள்ளேயே இருந்திருக்கே? காய்ஞ்சு போன புல்தரையில, ரெண்டு தூறல் பட்டதும், பசுமையை காட்டற அருகம்புல் தானா நானும்? சுந்தரி மீண்டும் நீண்ட பெருமூச்சு விட்டாள். "என் புருஷன் கிட்ட சண்டை போட எனக்கு உரிமை இருக்கு? அவன் அநியாயம் பண்ணா அவனை அடிச்சு விரட்ட எனக்கு உரிமை இருக்கு? வீம்பா நான் எவ்வளவு நாள் வேணா இப்படியே இருக்கலாம்? ஆனா என் பொண்ணுக்கு அவ அப்பாவை பாக்கணும்ன்னு ஆசை வந்துடுத்தே? அவளுடைய நியாயமான ஆசையை நான் தடுக்க முடியாதே? இப்ப இதுக்கு நான் என்ன பண்ணணும்? நீ உன் அப்பாவை பாக்கறதுல எனக்கு ஆட்சேபனையில்லைன்னு நேத்தே சொல்லிட்டேன். அது பத்தாதுடி சுந்தரி; உருப்படியா நீ இதுக்கு முயற்சி பண்ணணும். சுகன்யா சாயந்திரம் ஆபிசுலேருந்து வந்ததும் முதல் வேலையா ரகு கிட்ட பேச சொல்லணும் ... என் கதையை கேட்டு அவன் சிரிப்பான் ... சிரிச்சுட்டுப் போறான் ... நான் என் புருஷனைத்தானே பாக்கணும்ன்னு சொல்றேன் ... என் தம்பி என்னைப் புரிஞ்சுக்குவான்.... அலைந்த அவள் மனது மெல்ல மெல்ல ஓய, சுந்தரி சன்னமான குறட்டை ஒலியுடன் உறங்க ஆரம்பித்தாள். சுகன்யா தன் தந்தையின் வரவை நோக்கி ரிசப்ஷனில் மனதில் பரபரப்புடன் உட்க்கார்ந்திருந்தாள். இப்ப அப்பா எப்படி இருப்பார்? அவரால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா? கடைசியா நான் அவரை ரெண்டாம் கிளாஸ் படிக்கும் போதுதான் பாத்தேன். இப்ப நான் வளந்து முழு பொம்பளையா ஆயிட்டேன். அவரு முகம் எனக்கு நல்லா நினைவுல இருக்கு. நான் தான் அவரை தினம் தினம் பார்த்துக்கிட்டு இருக்கேனே. சின்ன வயசுலேருந்தே அம்மாவுக்கு தெரியாம, அவரு எங்க கூட நிக்கற போட்டோவை புஸ்தகத்து உள்ளே மறைச்சு வெச்சுக்கிட்டு, அப்பப்ப எடுத்து பாக்கறேனே? என் அப்பா என் மனசுக்குள்ள எப்பவும் இருந்துக்கிட்டேதானே இருக்காரு. என் சின்ன வயசுல அப்பா உயரமா சிவப்பா இருந்தார். தலையை எப்பவும் தூக்கி வாரியிருப்பார். இப்ப அவருக்கு ஐம்பது வயசு இருக்குமா? இந்த ஆபிசுல இருக்கற ஐம்பது வயசுக்கார ஆண்கள், முக்கால் வாசி, தலை நரைச்சுப் போய் டை அடிச்சுக்கிட்டுத்தான் வர்றாங்க. அப்பாவும் டை அடித்துக் கொண்டிருப்பாரா? சுகன்யாவின் நினைவில் இருக்கும் இளமைக்கால அப்பாவுக்கு மீசை திக்கா இருக்கும். அப்பா கிட்ட போனாலே எப்பவும் ஜம்முன்னு சந்தன வாசனை வரும். அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பின் குமார் தன் மகளை ஆசையுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போது, சுகன்யா அவன் பிடியிலிருந்து திணறி ஓட முயற்சி செய்வாள். சுகா, அப்பாவுக்கு ஒரு முத்தா குடுடா, கண்ணுல்லே! பட்டுல்லே! குமார் தன் மகளிடம் குழந்தையாக மாறி கெஞ்சுவான். அப்பாவுக்கு முத்தம் குடுக்காமல் சுகன்யா அழுது வீட்டுக்குள் இங்குமங்கும் ஓடி அடம் பிடிப்பாள். அம்மாவிடம் அழுது முறையிடுவாள். அம்மா, அப்பாவை எனக்கு முத்தா குடுக்க வேணாம்ன்னு சொல்லும்மா. ஏண்டா கண்ணு? செல்லம், அவரு நம்ம அப்பாடா. அவருக்கு முத்தா வேணும்ன்னா எங்க போவாரு? யாருகிட்ட கேப்பாரு? நீ தானே அவருக்கு ஆசை பொண்ணு? அப்பாதானே உனக்கு தினம் தினம் தின்றதுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் குடுக்கறாரு? நீ போட்டுக்கறது மயில் பாவாடை, பட்டுப் பாவாடை எல்லாம் வாங்கி குடுக்கறது யாரு? அப்பாதானே? அப்பாக்கு நீ ஒண்ணே ஒன்னு முத்தா குடுத்தா குறைஞ்சா போயிடுவே? அப்ப கன்னதுல நீ ஒரே ஒரு ஆசை முத்தா "உம்மு" குடுத்துடுவியாம்; அப்பத்தான் நீ கேக்கறதெல்லாம் அப்பா உனக்கு வாங்கிக் குடுப்பாரு; சுந்தரி தன் மகளை கொஞ்சுவாள். போம்மா, நான் குடுக்க மாட்டேன். அப்பாக்கு கன்னத்துல முத்தா குடுத்தா உதட்டுல முள்ளு முள்ளாக் குத்துதும்மா. நான் அப்பா பேச்சு காய். அம்மா உன் மூஞ்சு நல்லா மழா மழா இருக்கும்மா; அம்மா மேலதான் எனக்கு ரொம்ப ரொம்ப ஆசை; அப்பாக்கு மீசை வேணாம் சொல்லும்மா? பாத்தாலே எனக்கு பயமா இருக்கும்மா. குழந்தை சுகன்யா அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அழுது அரற்றுவாள். சுகாவிற்கு தூங்கப் போகும் நேரத்தில் மட்டும் அப்பா கண்டிப்பாக அவள் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பாவிடம் சாயந்திரம் சண்டைப் போட்டவள் இரவில் தானாக சென்று அவனுடன் சமாதானமாகி விடுவாள். குமாரின் பக்கத்தில் படுத்துக்கொண்டு தன் காலை தூக்கி அவன் மார்பில் போட்டுக்கொள்வாள். "அப்பா உனக்குத்தான் நெறைய நெறைய, புது புது கதை தெரியுது. அம்மாவுக்கு கதையே தெரியலைப்பா. அம்மா மக்கு அம்மா. அம்மா எப்பப் பார்த்தாலும் ஆயா வடை சுட்ட கதையே சொல்லுது." அந்த நேரத்தில் மட்டும் அப்பாவுக்கு அவன் கேட்காமலேயே முத்தம் கிடைத்துவிடும். அப்பா நான் உன் பேச்சு பழம்பா ... அம்மா பேச்சு காய் ... குழந்தை சுகா சிரித்துக்கொண்டே, குமாரின் மடியில் உட்க்கார்ந்து கொள்வாள். மல்லாந்து படுத்திருக்கும் அவன் மார்பில் ஏறி நின்று குதிப்பாள். காலையில தலை வாரும்மான்னு எங்கிட்ட வருவேல்லா; அப்ப குத்தறேன் வா உன்னை உன் மூஞ்சு மேலேயே; சுந்தரி மனதில் மகிழ்ச்சியுடன், பெண்ணிடம் போலியாக பொருமுவாள். இந்த இனிமையான தருணங்கள் தினம் தினம் புத்தம் புது பூக்களாக அவர்கள் தோட்டத்தில் மலர்ந்து கொண்டிருந்தன. யார் கண் பட்டதோ? கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. சுந்தரி இப்பவும் அப்படித்தான் வாய்க்கு வாய் சொல்லுவாள். குமார் குடிக்கு மெல்ல மெல்ல அடிமையானான். அவர்களுக்குள் இருந்த இந்த கொஞ்சல், கெஞ்சல் எல்லாம் நாளடைவில் வெறும் கனவாகிப் போனது. குமார் என்னும் மரத்தின் ஒரு பக்க வேர் இலேசாக அழுக ஆரம்பித்தது. அந்த தோட்டத்தில் பூக்கள் பூப்பது குறைய ஆரம்பித்தது. வெகு நாள் வரை இதெல்லாம் சுகன்யாவுக்கு ஞாபகம் இருந்தது. குழந்தை சுகன்யாவுக்கு ஒரு விஷயம் மட்டும் எப்போதும் புரிந்ததில்லை. தூங்கறதுக்கு முன்னே அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நடுவுல நான் படுத்துக்கறேன். காலையில எழுந்துப் பாத்தா, அப்பா பக்கத்துல அம்மாதானே படுத்துக்கிட்டு இருக்காங்க? நான் எப்படி அம்மாவுக்கு இந்த பக்கத்துல வந்துடறேன். இந்த நினைவு இன்று மனதில் வந்தவுடன், வளர்ந்த சுகன்யாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

குமார் குடி பழக்கத்திற்கு முழுதுமாக அடிமையான பின், அது வீட்டில் பெரிய பிரச்சனையாக உருவான பின், சுகன்யா அவன் அருகில் போவதற்கே மிகவும் பயந்தாள். அம்மா, இப்பல்லாம் அப்பா மூஞ்சிலே இருந்து எப்பப் பாத்தாலும் மருந்து வாசனை அடிக்குதும்ம்மா? நான் அப்பாகிட்ட போவ மாட்டேம்மா. ஏம்மா அப்பா உங்கிட்டே தெனம் சண்டை போடறாரு. உன்னைத் அடிச்சு திட்டறாரு? நீ எப்பப் பாத்தாலும் அழுவறே? நீயும் அவரை திருப்பி அடிம்மா. நான் அப்பா பேச்சு காய் ... அம்மா நாம, அப்பாவை போலீஸ்காரங்ககிட்ட பிடிச்சு குடுத்துடலாம்ம்மா? சுகன்யாவின் மனதில் அவள் குழந்தைக் கால எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குமிழியிட்டன. அதோ உள்ள நுழையறாரே ... கிரீம் கலர் அரைக்கை சட்டை, கருப்பு கலர் பேண்ட், கூலீங் கிளாஸ்ன்னு ... அவர் தானா? ஆமாம் ... ஆமா ... அவரேதான் ... என் அப்பாதான் வந்துட்டார். அவளுக்கு மூச்சு வேகமாக வரத்தொடங்கியது. மார்புகள் விம்மித் ததும்பின. அப்பா கொஞ்சம் கூட மாறவேயில்லையே? அப்பல்லாம் நம்ம அப்பா கொஞ்சம் ஒல்லியா இருப்பார். இப்ப வயசுக்கு ஏத்த மாதிரி கொஞ்சூண்டு பூசின மாதிரி இருக்கார். காதுக்கு பக்கத்துல லேசாக நரை ஆரம்பிச்சிருக்கு. அப் ... அப்பா நான் இங்கே இருக்கேன் ... சுகன்யா, சட்டென தான் உட்க்கார்ந்திருந்த ரிஸப்ஷன் சோஃபாவிலிருந்து, மற்றவர்கள் தன்னை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் எழுந்து, மெலிதாக கூவிக்கொண்டே குமாரசுவாமியின் நின்ற பக்கம் ஓடினாள். குமாரசுவாமி தன்னை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்த யுவதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் உடல் சந்தோஷத்தால் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. உண்மைதான்!கல்லூரியிலே என் கூட படிச்ச சுந்தரி மாதிரி தான் இருக்கா என் பொண்ணு. அந்த காலத்துல கும்பகோணத்துல இந்த சுடிதாரெல்லாம் கிடையாது. வயசுக்கு வந்த பெண் பிள்ளைங்க ... தாவணிதான் கட்டுவாங்க ... இல்லன்னா புடவைதான் ... மகிழ்ச்சியில் அவர் மனம் துள்ள, தன் அருகில் வந்த சுகன்யாவை தன் இடது கையால் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அருகிலிருந்த சோஃபாவில் அவளுடன் உட்க்கார்ந்தவர், உணர்ச்சியின் மிகுதியால் ஏதும் பேசாமல் மவுனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். "எப்படிடா கண்ணு இருக்கே? இந்த புத்தி கெட்ட மடையனை மன்னிச்சுடும்மா ... உன்னை மாதிரி பொண்ணை அம்போன்னு விட்டுட்டு இவ்வளவு நாளா, ஊரெல்லாம் அர்த்தமில்லாம சுத்திக்கிட்டிருந்தேன் ..." அவர் முணுமுணுத்தார். "அப்பா ... இந்த பேச்செல்லாம் இப்ப எதுக்குப்பா? நீங்கதான் வந்துட்டீங்களே! எனக்கு அது போதும்." சுகன்யா, சந்தோஷத்தால் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்த குமாரின் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். அவருடன் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். அதே சந்தன வாசனை தன் தகப்பனின் தேகத்திலிருந்து வந்ததை உணர்ந்தவள், தன் மனம் விகசிக்க ஆசையுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். குமார் தன் அருகில் அமர்ந்திருந்த, அழகாக வளர்ந்து, அப்படியே அச்சாக தன் இளமைக் கால மனைவியைப் போலிருந்த சுகன்யாவைப் பார்க்க பார்க்க, அவருள் சந்தோஷம் திகட்டியது. இவ சுந்தரி எனக்கு கொடுத்த அன்புப் பரிசு. உயிருள்ள பரிசு. எங்க ரெண்டு பேரோட ரத்தத்தாலேயும் சதையாலும் ஆனவ இவ. இவளைப் பாத்ததும், இவ என்னைத் தொட்டதும் ... எனக்குள்ள இத்தனை நாளா இருந்த என் மன அழுத்தம், இனம் தெரியாத என் எரிச்சல், தவிப்பு எல்லாமே சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடுச்சே? இந்த உலகமே அழகா தெரியுதே! ஆண்டவா, இந்த கணம் இப்படியே என்னைக்கும் நீடிச்சு இருக்கணும். குமாரசுவாமி, ஏதேதோ பேச விரும்பினார். மனதிலிருந்த எண்ணங்கள் சொற்களாக மாறி உதட்டில் வராமல், அவர் பேச முடியாமல், அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். சுகன்யா அவர் மன நிலைமையை புரிந்து கொண்டவள் போல் "அப்பா ... பிளீஸ் பீ ரிலாக்ஸ்ட் ... நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்பா ... நீங்க சொல்ல நினைக்கறதை உங்க விரல்கள் எனக்கு சொல்லிடுச்சிப்பா ... அவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள். "தேங்க்ஸ்ம்ம்மா" குமாரசுவாமி ஒரு நீண்டப் பெருமூச்செறிந்தார். அவருடைய சிறு குடலை பெருங்குடல் தின்று கொண்டிருந்தது. அவருக்கு அசுரப் பசியெடுத்தது. காலையிருந்தே அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. "வாங்கப்பா வெளியிலே போகலாம் ... பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு, காலாற நடந்து போய் அங்க நிம்மதியா சாப்பிடலாம்." அவளே தன் தந்தைக்கும் சேர்த்து முடிவெடுத்தாள். குமாரசுவாமி சுகன்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனம் மகிழ்ச்சியில் இன்னும் துள்ளிக் கொண்டிருந்தது. உடலில் ரத்தம் வேகமாக ஓடுவது புரிந்தது. சின்ன சின்ன விஷயங்கள்ல்ல எனக்காக, என்னை கேக்காமா, சட்டுன்னு முடிவெடுக்க என் வாழ்க்கையில ஒருத்தர் இல்லையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன்; இனிமே எதுக்கும் நான் கவலைப் படப் போறது இல்ல. என் பொண்ணு ரொம்ப புத்திசாலி; என் தொடலில் இருந்தே, நீங்க சொல்ல வந்தது என்னன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சுங்கறா; இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்? என் மனைவி சுந்தரி இப்ப என்னப் பண்ணிகிட்டிருப்பா? அவ டீச்சரா இருக்கற ஸ்கூல்ல இப்ப மதிய உணவு வேளையா இருக்கலாம்; இப்ப அவகிட்ட பேசலாமா? சுகன்யாவைத்தான் கேக்கணும் ... சுகா என்கிற சுகன்யா அவர் உள்ளத்தில் முழுதுமாக நிறைந்துவிட்டாள். நேற்றிரவு பலத்த மழை பெய்திருந்ததால், சென்னையில் இன்று வெயில் மிதமாக காய்ந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று கடலிலிருந்து கரையை நோக்கி மெலிதாக வீசிக்கொண்டிருக்க, வானில் கரு மேகங்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தன் ஆஃபீசை விட்டு, தன் தந்தையுடன் வெளியில் வந்த சுகன்யாவுக்கு, தூரத்தில் நீல ரிப்பனாகத் தெரிந்த கடலும், மெரினா கடற்கரை சாலையும், அதை சுற்றியிருந்த இடங்களும் மிக மிக ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. சாலை ஓரத்தில், பாதசாரிகள் நடப்பதற்கு இடமில்லாமல், நடைபாதையின் மேல், தள்ளுவண்டியுடன் நின்று பழம் விற்பவன், தண்ணீர் பாக்கெட் வாங்க சொல்லி பின்னாடியே ஓடி வரும் சிறுவன், சோப்பு, சீப்பு, சீட்டுக்கட்டு என சில்லறை சாமான்களை கூவி கூவி தலையில் கட்டுபவர்கள் யாரும் இன்று சுகன்யாவிற்கு எரிச்சலை மூட்டவில்லை; மாறாக அவர்களும், எதிரில் வருபவர்களும், ரோடில் தேவையில்லாமல் ஹாரன் சத்தத்தை எழுப்பிக் கொண்டு வேகமாக பைக்கில் செல்பவர்களும், அவள் கண்ணுக்கு மிகவும் அழகாக காட்சி அளித்தார்கள். பாவம்! ஏழைங்க; வாழ வழியில்லாமத்தானே இப்படி சாலையிலே குடும்பம் நடத்தறாங்க; என்னப் பண்ணுவாங்க அவங்க; அவங்களும் நம்பளை மாதிரி வாழணும் இல்லையா? அவர்கள் பால் அவளுக்கு அன்று எல்லையில்லா இரக்கம் பொங்கி வழிந்தது. மனதில் பெருக்கெடுக்கும் அன்புடன் அவர்களைப் பார்த்தாள். சுகன்யா, குமாரசுவாமியின் கையில் தன் விரல்களை கோர்த்தபடி, நெருக்கமாக அவரை இடித்துக்கொண்டு, அவருடைய உடலின் வலது புறம் தன் தோள் உரச, ஓரக்கண்ணால் பெருமிதத்துடன் அவரைப் பார்த்தவாறு நடந்தாள். எதிரில் வந்தவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என வர்ஜா வர்ஜமில்லாமல் அனைவரையும் நிறுத்தி "இவர்தான் என் அப்பா; நல்லாப் பாத்துக்குங்க" என உரக்க கூவ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அப்பா ஹேண்ட்சமா, எவ்வளவு மேன்லியா இருக்கார்; அப்பா கை இரும்பாட்டம் எவ்வளவு உறுதியா இருக்கு; அம்பது வயசுக்கு தொப்பையே இல்லாம அப்பா தன் பாடியை நல்லா மெய்ண்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்கார். சுகன்யா, அன்றைய தினத்தில், பிரிந்து போன தன் தந்தைதை மீண்டும் பார்த்த அந்த மகத்தான நாளில் தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தாள். தன் மகள் வெகு இயல்பாக எந்த தயக்கமும் காட்டாமல் தன்னுடன் பேசியதும், ஆசையுடன் தன் கையை பிடித்தபடி நடக்க தொடங்கியதும், தன் வாழ்க்கையில் இத்தனை நாளாக தான் இழந்திருந்த அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று விட்டதாக நினைத்து பூரிப்படைந்த குமாரசுவாமி, மனதுக்குள்ளாகவே கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்டவனே! எனக்கு இது போதும்; என் மகளோட நான் திரும்பவும் வந்து சேர்ந்துட்டேன்; என் மகளாலே என் வாழ்க்கைக்கு இந்த நொடியிலேருந்து ஒரு புது அர்த்தம் கிடைக்குங்கற நம்பிக்கை எனக்கு வந்துடுத்து. எந்த குறையும் இல்லாம இப்படியே இந்த உறவு கடைசி வரைக்கும் நிலைக்கணும். என் மனைவி சுந்தரியும், பழசெல்லாம் மறந்துட்டு என்னை முழு மனசா ஏத்துக்கிட்டா, நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷடசாலிதான். எனக்கு இந்த உலகத்துல இதுக்கு மேல வேற எதுவும் வேணாம். அவர் மனம் உரக்க அரற்றிக் கொண்டிருந்தது. தன் மகளின் கையை அவர் இறுகப் பற்றிக்கொண்டு நடந்தார். தன் தந்தை தன் கையை இறுகப்பற்றியதும், அவர் முகத்தைப் பார்த்த சுகன்யா, "என்னப்பா ... நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேம்பா; பயப்படாதீங்க; " அவள் அவரை தன் உதடுகளில் புன்முறுவலுடன் பார்த்தாள். "போதுண்டா செல்லம் ... உங்களையெல்லாம் விட்டுட்டு, நான் ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சதெல்லாம் போதும், நீ எதுக்காக எங்கயாவது ஓடணும்? இன்னொரு தரம் விளையாட்டுக்கு கூட நீ இப்படி பேசாதே." சுகன்யாவின் முழங்கையுடன் தன் வலது கையை கோர்த்துக் கொண்டார். "எந்த காரணத்துக்காவும் நானும் உங்களை திரும்ப இழக்கறதுக்கு தயாரா இல்லைப்பா." "சுகா ... உன் அம்மா எப்படி இருக்காங்கம்மா?" "ஏம்பா ... நீங்க திரும்ப திரும்ப என் அம்மா ... என் அம்மாங்கிறீங்க? ஒரே ஒரு தரம் என் வொய்ஃப் சுந்தரி எப்படி இருக்கான்னு உரிமையோட கேளுங்கப்பா? சுகன்யா தன் குரலில் தாபத்துடன் பேசினாள். "சரிம்மா ... என் சுந்தரி எப்படிம்மா இருக்கா?" "அப்பா ... உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் ... அந்த பெஞ்சுல கொஞ்ச நேரம் உக்கரலாமா" சுகன்யா நடைபாதையில் ஒரு ஓரமாக நின்றாள். "இனிமே உன் விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பம் ..." "அப்பா ... நீங்க இப்ப இப்படி சொல்லிட்டு ... அப்புறம் திண்டாடப் போறீங்க." "சுகா, நான் எனக்காக முழுசா வாழ்ந்துட்டேன். அந்த வாழ்க்கையில எனக்கு திருப்தியில்லை. இனிமே உனக்காகவும், என் சுந்தரிக்காவும் நான் வாழ விரும்பறேன். அதுக்காக நான் திண்டாடினாலும் பரவயில்லம்மா." அவர் குரல் உறுதியாக வந்தது. சாலையோரமிருந்த சிமிட்டி பெஞ்சில், அவள் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்தவர் அவள் கைகள தன் கையில் எடுத்துக்கொண்டார். "அப்பா ... " சுகன்யா தன் தந்தை பேசட்டும் என அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். "சுகா ... உங்கிட்ட உண்மையை சொல்றேம்மா ... அப்ப எனக்கு மன முதிர்ச்சியில்லை. கெட்ட சகவாசம் ... போங்கடான்னு விலக்க முடியாத ஒரு தவறான நட்பு வட்டம்; மன உறுதி அதிகமா இல்லாத நேரத்துல நான் குடியால சீரழிஞ்சுப் போயிட்டேன். என் சுந்தரி, நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் மனைவி என்னை தொடப்பத்தாலே அடிச்சாளேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். எப்படியிருந்தாலும் அவ ஒரு பொம்பளை. ஒரு பொம்பளை கையால அடி வாங்கினது என் ஆண் ஈகோவை, ரொம்பவே காயப்படுத்திடிச்சி. அதுக்கும் மேல எங்க கல்யாணத்துல, எல்லாரும் எங்களை எதிர்த்தப்ப, என் பக்கம் நின்ன என் மச்சான் ரகு என்னை வெட்ட வந்ததை என்னால நம்பவே முடியலை. உலகமே ஒன்று சேர்ந்து என்னை ஒதுக்கிட்டதா நான் நெனைச்சேன். ஊர்ல இருந்தவங்க என் சொந்தக்காரங்க, என் ஜாதிக்காரங்க, என்னைப் பாத்து சிரிச்சாங்க; இனி இவங்க மூஞ்சிலே என்னைக்கும் நான் முழிக்கறதில்லேன்னு ஒரு வீராப்பையும், வீம்பையும் என் மனசுக்குள்ள வளத்துக்கிட்டேன். அந்த ஊரை விட்டு போகணும்ன்னு முடிவெடுத்தேன். அந்த வீராப்புத்தான் என் குடிப்பழக்கத்துக்கான மருந்தா பின்னாடி வேலை செஞ்சது. "ரெண்டு வருஷ குடிப்பழக்கம் இந்த அளவுக்கு என்னை சீரழிச்சதை நெனைச்சு உண்மையா நான் வருத்தப்பட்டேன். தனிமையில நடந்ததை யோசனை பண்ணி அழுது இருக்கேன். கல்கத்தாவுல இருந்த ஒரு நண்பன் கிட்ட போனேன். அங்க ஒரு நல்ல வேலையைத் தேடிக்கிட்டேன். உழைப்பு; உழைப்பு; உழைப்பு; அதுல என்னையே மறந்தேன். உண்மையா உழைச்சதனால நிறைய பணம் சம்பாதிச்சேன். பணம் இருந்தது. எங்கிட்ட இளமையும் இருந்தது. பெண்கள் என்னைத் துரத்தவும் செய்தாங்க. இன்னைக்கு சுந்தரி அடிச்சா; நாளைக்கு வேற ஒருத்தி என்னை வேற ஒரு காரணத்துக்காக அடிப்பா; பெண்களை விட்டு விலகிப்போனேன்." "சுகா, என் மனைவியை விட்டு பிரிஞ்சிருந்த இத்தனை நாள்லே, வேற எந்த பொம்பளையையும் நான் தொட்டதில்லை; ஷேர் மார்க்கெட்ல விளையாடினேன். நான் வாங்கின ஷேர் எல்லாம் கோபுரத்து உச்சிக்கு போச்சு; என் நேரம் நல்ல நேரம் அப்படீன்னு சொன்னாங்க; பணம் பேங்க்ல துரு பிடிக்க ஆரம்பிச்சுது; பணத்துல எனக்கு ருசியில்லே; அன்னிய பொம்பளை மேல எனக்கு விருப்பமில்லே; குடும்பம்ன்னு சொல்லிக்க யாருமில்லே; பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்றது? சுகா, அந்த வாழ்க்கையில, நான் தனிமையைத்தான் அதிகமா அனுபவிச்சேன். என்னை ஏன்னு கேக்க யாரும் இல்லே. ஆனாலும் எந்த தப்பும் நான் பண்ணல. உங்கம்மா குடுத்த தொடப்ப கட்டை அடி - தப்பு பண்ண எனக்கு துணிச்சல் வரலை. " "தனிமை என்னை அணு அணுவா சித்திரவதை பண்ணுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி, உன் தாத்தா பாட்டிக்கிட்ட என் கூட வந்து இருங்கன்னேன். நான் சம்பாதிச்ச பணத்தை பத்தி சொன்னேன். அவங்க என்னைப் பாத்து சிரிச்சாங்க; ஏம்பா சிரிக்கறீங்கன்னு எங்கப்பாவைப் பாத்துக் கேட்டேன்; நீ திரும்பி வந்ததுல எங்களுக்கு சந்தோஷம். என் ஜாதிக்காரன் என்னை மதிக்க மாட்டாங்கற எண்ணத்துல, உன் காதல் கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்கலை. போலி கவுரவத்துக்காக, கிளி மாதிரி இருந்த அந்த பொண்ணை வேணாம்ன்னு சொன்னோம். அவளை இழுத்துக்கிட்டு போய் தாலி கட்டினியே, அவ கூடவாது ஒழுங்கா குடுத்தனம் பண்ணியா? "நீ பண்ண கூத்துக்கு அவ உன்னை வீட்டை விட்டு அடிச்சு துரத்தினா? நீ ஊரை விட்டு ஓடினே? நம்ம எனத்தவன் எல்லாம் எங்களைப் பாத்து வழிச்சுக்கிட்டு சிரிச்சான். அவ அப்பன் ஆத்தாளும் உங்க கொடுமையை பாக்க முடியாம போய் சேர்ந்தாங்க; உன் கூட வந்தவ, நீ பெத்த பொண்ணை, நெருப்பா தனியா நின்னு இன்னைக்கும் வளக்கறா. அவளைப் பாக்க பாக்க எங்களுக்கு பெருமையா இருக்கு. மனசுக்கு உண்மையை புரிஞ்சுக்கற பக்குவம் வந்துடுத்து; உடம்புல தெம்பு குறைஞ்சு போச்சு; இன்னைக்கு நம்ப ஜாதிக்காரன் எவனும் நாங்க எப்படி இருக்கோம்ன்னு ஒரு தடவை கூட எங்களைத் திரும்பிப் பாக்கலை." டேய், நாங்க அவளை கேட்டுப் பாத்துட்டோம். எங்க சொத்தெல்லாம் என் பேத்திக்குத்தான். நீ வந்து எங்க கூட இரும்மான்னு சொல்லிப் பாத்தோம். எங்களைப் பாக்க கூட அவ மறுத்துட்டா. உங்கிட்ட இருக்கற இந்த பணத்தால, எங்க மருமகளையோ, எங்க பேத்தியையோ உன்னால வாங்க முடியாதுன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். உன்னால முடிஞ்சா நீ அவங்க ரெண்டு பேரையும் அன்பா பேசி அவகிட்ட மன்னிப்பு கேட்டு, கூப்பிட்டுக்கிட்டு வான்னு என்னைத் துச்சமா பாத்தாங்க. உன் அம்மா என் பெத்தவங்களையே பாக்க மறுத்துட்டான்னதும், சுந்தரியை பார்க்க எனக்குத் தைரியமில்லே. திரும்பிப் போயிட்டேன். கொஞ்ச நாள்ல உன் தாத்தாவும், பாட்டியும் என் கூட வந்துட்டாங்க; உங்கம்மாவுக்கு நான் குடுத்த கஷ்ட்டத்தினால எனக்குள்ள ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால இப்பவும் நான் அவளைப் நேரா பாக்கறதுக்கு கொஞ்சம் தயங்கறேம்மா .. இப்ப அவ தன் மூஞ்சை திருப்பிக்கிட்டா, என்னால அதை தாங்க முடியாதும்மா." குமாரசுவாமியின் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. "அப்பா ... நீங்க மனசால ரொம்ப அடிபட்டு வந்திருக்கீங்கப்பா ... உங்களுக்கும் அம்மாவோட துணை நிச்சயமா வேணும்பா..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது. "இப்ப நீ சொல்லும்மா ... என் சுந்தரி நல்லாயிருக்காளா?" குமார சுவாமி உண்மையான கரிசனத்துடன் கேட்டார். "நல்லாயிருக்காங்கப்பா .. கொஞ்ச நாளாவே உங்களைப் பார்க்கணுங்கற ஆசை அம்மா மனசுல இருந்துகிட்டு இருக்கு. ஆனா அதை வெளியே சொல்லாம மனசுக்குள்ளேயே வெச்சு புழுங்கறாங்க. அதுதான் ஏன்னு தெரியலை" "எல்லாம் என்னால வந்ததுதாம்மா ... எல்லாத்துக்கும் மேல மனுஷங்களுக்கு இருக்கற ஈகோ இருக்கே அது தான் அவங்களோட முதல் எதிரி. உன் அம்மாவுக்கும் ஈகோ இருக்கறது சகஜம்தானே? குமாரசுவாமி தப்பு பண்ணான். அதனால அவன் தான் திரும்பி எங்கிட்ட வரணும்ன்னு உன் அம்மா நினைக்கிறா; அவ நினைக்கறதுலேயும் தப்பு இல்லே!" அவர் குரலில் வருத்தம் தொனித்தது. "அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா ... அம்மா அப்படியெல்லாம் நினைக்கலப்பா..." "ஒரு குடும்பத்துல இருக்கற ஒரு தனி மனிதனின் தவறான நடத்தை, அந்த குடும்பத்துல இருக்கற மத்த உறுப்பினர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும்ங்கறதுக்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது அப்ப எனக்கு புரியல. அன்னைக்கு குடிக்கறது என் சுதந்திரம்ன்னு நெனச்சேன்; நான் குடிக்கறதுல என் மனைவி ஏன் தலையிடணும்ன்னு யோசிச்சேன். என்னுடைய சுதந்திரம்ன்னு நான் நெனைச்சது, என் மனைவி, மகளோட வாழ்க்கையை கணிசமான அளவுல பாதிச்சு இருக்குன்னு அப்புறமா புரிஞ்சுது. இதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன். ஆனா இப்ப வருத்தப்பட்டு என்னப் பண்றது? "பரவாயில்லேப்பா ... நடந்தது நடந்து போச்சு ... உங்க தவறை நீங்க உணர்ந்து திரும்பி வந்துட்டீங்க ... நீங்க எப்பப்பா வீட்டுக்கு வரப் போறீங்க?" "நீ என்னை சுலபமா ஏத்துக்கிட்டே ... ஆனா உன் அம்மா ... சாரிடா செல்லம் ... என் மனைவியோட மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலையே?" "அப்பா, நேத்து ராத்திரி, தூங்கிக்கிட்டு இருந்த நான், நடுவுல திடீர்ன்னு விழிச்சு எழுந்து பார்க்கிறேன், அம்மா கொட்டற மழையில நனைஞ்சுகிட்டு நின்னாங்க; ராத்திரி ரெண்டு மணி; அவங்க உடம்பு நடுங்கிக்கிட்டு இருக்கு; உள்ளே வான்னு இழுத்துக்கிட்டு வந்து காஃபி போட்டுக்குடுத்தேன். தலையை துவட்டி விட்டேன். புதுசா ஒரு நைட்டியை கொடுத்து போடச் சொன்னேன். ஏம்மா இப்படி பண்றேன்னு கேட்டேன்; என் உடம்புலயும், மனசுலயும் இருக்கற புழுக்கம் குறையட்டும் - அப்படின்னாங்க." "அம்மா, உனக்கு உன் புருஷன் ஞாபகம் வந்திடுச்சி; என் கிட்ட பொய் சொல்லாதேன்னு கத்தினேன். அம்மா ஒண்ணும் பேசலை" "சுகா ... உங்க அம்மாவுக்கு மழைன்னா ரொம்ப பிரியம்ம்மா ... எப்ப மழை பேஞ்சாலும் ... மழையில கொஞ்ச நேரம் போய் நனைஞ்சுக்கிட்டு நிப்பா ... இது அவளுடைய வழக்கம்மா ... ஆனா ராத்திரி ரெண்டு மணிக்கு இப்படி பண்ணான்னா ... அவ மனசு ரொம்ப நொந்து போயிருக்கான்னு நினைக்கிறேன்." "அதுதாம்ப நிஜம் ... அம்மா, என்னை மாமாவோட துணையோட, படிக்க வெச்சு, பரிட்சை எழுத வெச்சு, ஒரு வேலையை வாங்கற அளவுக்கு என்னை எல்லாவிதத்துலயும் மோட்டிவேட் பண்ணி, ஒரு நல்ல பொண்ணா ஆக்கிட்டாங்க; நானும் அவங்களை விட்டுட்டு இப்ப தனியா வந்துட்டேன்; இப்ப அவங்க தனிமை அவங்களை கொல்லுதுப்பா. அதுக்கும் மேல அம்மா மெனோபாஸ் ஸ்டேஜ்க்கு வந்துட்டாங்கப்பா; இப்ப உங்க அருகாமை அவங்களுக்கு அவசியமா தேவைப்பா. நான் சொல்றதை புரிஞ்சுக்கங்கப்பா ... " சுகன்யா விசிக்க ஆரம்பித்தாள். "அழாதடா கண்ணு ... ம்ம்ம்ம் ... எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா; உன்னை நிஜமாவே நல்லபடியா, ஒரு நல்ல இதயமுள்ள பொண்ணா வளர்த்திருக்காம்மா என் சுந்தரி ..." "நாலு நாள் முன்ன உங்களைப் பத்திக் கேட்டேன் ... எங்கப்பா எங்க இருக்காரு? உனக்கு எதாவது தெரியுமான்னு? அதுலேருந்து அம்மாவுக்கு தினமும் ராத்திரில உங்களை நினைச்சுக்கிட்டு அழுவறதுதான் வேலையா போச்சு. நேத்து கூட உன் அப்பாவை நீ பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னாங்க. உன் அப்பாவை பாக்கறதுக்கு உனக்கு முழு உரிமையிருக்குன்னு சொன்னாங்க;" "அப்பவே நான் உங்களை உடனடியா நீங்க எங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிச்சு அவங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்தனும்ன்னு முடிவு எடுத்தேன்; ஆனா கதையில நடக்கற மாதிரி ... சினிமா, சீரியல்ல வர்ற மாதிரி ... நீங்க காலையில எனக்குப் போன் பன்றீங்க ... காலையிலேருந்து நடக்கறது எல்லாத்தையும் என்னால நம்பவே முடியலைப்பா .. ரொம்ப விசித்திரமா இது இருக்கு. ஒருத்தர் வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்குமான்னு இருக்கு." "நேரம் வந்தா எல்லாம் தன்னால கூடி வருண்டா செல்லம். இதுக்கு மேல என்னால உன்னை திருப்தி படுத்தற ஒரு பதிலை என்னால சொல்ல முடியாது." "சரிப்பா ... இப்ப நாம வீட்டுக்கு போகலாம் வாங்க; எனக்கு உங்களோட என் அம்மா திரும்பவும் சந்தோஷமா இருக்கறதைப் பாக்கணும்." "என் ஓய்ஃப் என்னை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுவாளான்னு எனக்குத் தெரியலையேம்ம்மா" "அப்பா ... ஏம்பா பெரியவங்க நீங்கல்லாம் இப்படி பிடிவாதமா இருக்கீங்க; எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு; நீங்க ஏன் குடிக்கறீங்கன்னுதானே அம்மா கேட்டாங்க; அதுக்கு நீங்க அவங்களை அடிச்சீங்க; உதைச்சீங்க; உங்களுக்காக தன்னோட அப்பா, அம்மா, எல்லா சொந்தங்களையும் விட்டுட்டு உங்க கூட வந்தவங்க, திரும்பி அவங்க கிட்டவும் போக முடியாமா, முழுசா ரெண்டு வருஷம் உங்க கிட்ட கஷ்டப்பட்டாங்க; அவங்க சம்பாதிச்ச பணத்தையும் நீங்க குடிக்கறதுக்கு கேட்டப்ப, பதில் சொல்லாம குடுத்தாங்க; ஆனா கடைசியில நீங்க என்னையும் அடிச்சதனால, அதைப் பொறுத்துக்க முடியாம உங்களை திருப்பி அடிச்சிட்டாங்க; என் மாமா உங்களை வீட்டை விட்டு வெரட்டினார். எங்கம்மாவுக்கு இருந்த ஒரே ஆதரவு அவர்தானேப்பா" "அப்பா, அவங்க ரெண்டு பேரும் பண்ணது சரின்னு நான் வாதாடலை. ஆனா நம்ம குடும்பம் உடைஞ்சதுல உங்களுக்கு பங்கு அதிகம்ன்னு நான் ஃபீல் பண்றேன். உங்கக்கிட்ட இருந்த இந்த ஒரு குறையைத் தவிர வேற எந்தக்குறையும் உங்கக்கிட்ட இருந்ததா என்னால சொல்ல முடியாது. நீங்களும் என் அம்மாவுக்காக உங்க அப்பா, அம்மா, உங்க உறவினர்களை விட்டுட்டு வந்தீங்க; அம்மாவையும், என்னையும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா வெச்சிகிட்டு இருந்தீங்க. அம்மாவுக்கு என் மாமா துணையிருந்தார். உங்க கூட யாருமே இல்லை. நீங்க தனி ஆளா அலைஞ்சீங்க; அதை நெனைச்சு நான் எத்தனை தரம் தனியா அழுது இருக்கேன் தெரியுமா? ஆனா உங்க குடிப்பழக்கம் உங்களுடைய மத்த நல்ல குணத்தையெல்லாம் குழி தோண்டிப் புதைச்சிடுச்சிப்பா." சுகன்யா விம்ம ஆரம்பித்தாள். "அழாதேடா கண்ணு ... ப்ளீஸ் ... நீ இப்ப அழறதைப் பாத்தா நான் சுத்தமா உடைஞ்சிடுவேன் ... சுகன்யாவின் கண்களை அவர் துடைத்தார். குமாரசுவாமியின் கண்களும் கலங்கி குளமாகியிருந்தது. "நான் பேசினது உங்க மனசை புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுடுங்கப்பா ..." தன் தகப்பனின் புறங்கையில் மென்மையாக சுகன்யா முத்தமிட்டாள். பின் அவரைப் பார்த்து கலங்கிய கண்களுடன் சிரித்தாள். "சரிடா சுகா ... நான் உன் கூட வீட்டுக்கு வரேன்."

"தேங்க்ஸ்ப்பா ... கண்டிப்பா என் அம்மா உங்களை உள்ள வாங்கன்னுதான் கூப்பிடுவாங்கப்பா ... ஏன் வந்தேன்னு நிச்சயமா கேக்கவே மாட்டாங்க ... என் உள்ளுணர்வு இதை சொல்லுதுப்பா; என் உள்ளுணர்வு கண்டிப்பா தப்பா போகாதுப்பா; எனக்காக, உங்க பொண்ணுக்காக; உங்க ஈகோவை விட்டுக் குடுத்துட்டு, நடந்ததையெல்லாம் சுத்தமா மறந்துட்டு, நீங்கதான் அந்த முதல் அடியை எடுத்து வெச்சு வீட்டுக்கு வாங்களேன். நாம எல்லாம் திரும்பவும் ஒண்ணா சந்தோஷமா இருப்போம் .. என் தாத்தா பாட்டியையும் நான் போய் முதல்ல பார்க்கிறேம்பா." நீளமாக பேசிய சுகன்யா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். குமாரசுவாமியின் கை தன் மகளின் தலையை வருடிக்கொண்டிருந்தது. "வாம்மா ... மணி ரெண்டாக போகுது ... நீயும் பசியோட இருப்பே .. போய் எதாவது சாப்பிடுவோம் ..." இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். "சுகா, நீ அம்மா நேத்து மழையில நனைஞ்சான்னு சொல்றே; நீ காஃபி போட்டு குடுத்தேங்கறே? அப்ப சுந்தரி உன் கூட சென்னையிலா இருக்கா? "ஆமாப்பா; அம்மா இங்க சென்னையிலத்தான் இருக்காங்க ... " "அம்மா வேலையை சென்னைக்கு மாத்திக்கிட்டாளா? "இல்லப்பா ... அம்மா கும்பகோணத்துலத்தான் வேலை செய்யறங்க; என்னால ஒரு சின்னப் பிரச்சனை நம்ப வீட்டுல; அம்மாவும், மாமாவும் அதனால இங்க வந்தாங்க ... அந்தப் பிரச்சனை இன்னும் முழுசா முடிவுக்கு வரலை. மாமா திரும்பிப் போயிட்டார் ... இன்னும் ரெண்டு நாள் அம்மா இங்க என் கூடத்தான் இருப்பாங்கா; நான் பத்து நாள் லீவு போட்டிருக்கேன்; வெள்ளிக்கிழமை அம்மாவும் நானும் நம்ப ஊருக்கு கிளம்பறோம்." "உனக்கு என்னப் பிரச்சனைடா செல்லம் ... நான் தீத்து வெக்க முயற்சி பண்றேம்மா .." "நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்கப்பா ... வந்து அம்மாவை பாருங்கப்பா; அதுக்கப்புறம் நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்." என் சுகாவுக்கு பிரச்சனையாமே? இந்த உலத்திலே பிரச்சனை இல்லாதவங்களே இல்லையா? குமாரசுவாமி மவுனமாக அவளுடன் நடந்தார்.

No comments:

Post a Comment