Tuesday 3 March 2015

சுகன்யா... 21

"என்னப்பா சாப்படறீங்க"

"எனக்கு ஒரு புல் மீல்ஸ் சவுத் இண்டியன் தாலி ஆர்டர் பண்ணும்மா." தன் செல்லில் வந்திருந்த செய்திகளை அவர் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.

"நான் தவா ரொட்டியும், ஒரு ப்ளேட் ஷாஹீ பனீர் அண்ட் சுட்ட அப்பளம் வாங்கிக்கப் போறேன்; இங்க இந்த அயிட்டம் நல்லா இருக்கும்பா."

"வெரி குட்; நார்த் இண்டியன் டிஷஸஸ் உனக்கு பிடிக்குமா? அச்சி லட்கி ஹோ தும்" அவர் புன்னகைத்தார்.

"ம்ம்ம் ... பாபூஜி, முஜே ஷாஹீ பனீர் கீ சப்ஜி பகுத் அச்சி லக்தி ஹை; க்யா ஆப் பசந்த் நஹீ கர்தே?" மகள் சரளமாக இந்தியில் பேசியதும் குமராசாமி அவளை வியப்புடன் பார்த்தார்.

"சுகா, உனக்கு இந்தி தெரியுமா?"

"தோடி தோடி ஆத்தி ஹை; மறந்துட்டீங்களாப்பா? ... அம்மா ஹிந்தியிலே கோல்ட் மெடல் வாங்கினவங்கன்னு?" அவள் தன் குரலில் இலேசாக வருத்தம் தொனிக்க கேட்டாள்.

"நோ ... நோ ... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கும்மா ... அம்மா சொல்லிக் கொடுத்தாளா உனக்கு, கேட்டுத் தெரிஞ்சுக்கறேம்மா .. "



"ஆமாப்பா ... அப்பா! உங்களாலே நான் அம்மாகிட்ட இன்னைக்கு சரியா திட்டு வாங்கப் போறேன்" சுகன்யா தன் கருவிழிகளை அகலமாக விரித்து சிரித்தாள்.

"ஏம்மா ... நான் என்ன பண்ணேன்?

"அம்மா மதியத்துக்குன்னு தயிர் சாதமும், தக்காளி சட்னியும் பேக் பண்ணி குடுத்தாங்க; உங்க கூட நான் ஹோட்டல்ல உக்காந்து நல்லா மூக்கு பிடிக்கத் தின்னுட்டு, அதை வீட்டுக்குத் திருப்பி எடுத்துக்கிட்டு போனா, முத்தமா குடுப்பாங்க; தொடையை திருவி எடுத்துடுவாங்க;"

"ம்ம்ம் ... என் பொண்ணை திட்டவோ, கிள்ளவோ நீ யாருடின்னு நான் கேக்கறேன்?" சிரித்தார் குமாரசுவாமி.

"சரிப்பா ... நீங்க என் கூட இருக்கும் போது எனக்கென்ன பயம்? ஆனா அவங்க கிட்ட நீங்க திட்டு வாங்காம இருந்தா சரி! அம்மா நடுவுல ரொம்ப மாறிட்டாங்கப்பா ... "

"ஏம்மா ... அப்படி சொல்றே? அவ எனக்கு முதல்ல பொண்டாட்டி; அப்புறம்தான் உனக்கு அம்மாவா ஆனா; சும்மா என்னை நீ பயமுறுத்தாதே? என் சுந்தரியைப் பத்தி எனக்குத் தெரியாதா? தங்கமாச்சே அவ?" சிறிது நேரம் டல்லாக இருந்த தன் பெண் மீண்டும் முகம் மலர்ந்து சிரிப்பதை கண்ட மகிழ்ச்சியில் அவரும் சிரித்தார்.

"நீங்களே நேரா வந்து உங்க தங்கத்தைப் எடை போட்டு பாருங்க; இப்ப உங்க பத்தரை மாத்து தங்கத்தை பாக்கறதுக்கு கிளம்புங்க .." தன் தந்தையுடன் சேர்ந்து அவளும் சிரித்தாள்.

"ம்ம்ம் ... ஆனா ஆறு மணிக்கு எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு. என் கீழ வொர்க் பண்றவரோட மகன் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல அட்மிட் ஆயிருக்கான். ஈவினிங் அவனை நான் பாக்கப் போகணும் ... அப்புறமா அங்கேயிருந்து நான் எங்க ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸுக்கு போயிடலாம்ன்னு இருக்கேன். "

"இப்ப மணி ரெண்டுதானே ஆகுது ... நீங்க தாராளமா உங்க வேலையை முடிச்சுட்டு, நம்ம வீட்டுக்கே திரும்பி வந்து ராத்திரி சாப்பிடணும்; உங்க பொண்டாட்டி, பொண்ணு நாங்க ரெண்டு பேரும் குத்து கல்லாட்டாம் சென்னையில இருக்கறப்ப, எங்கேயோ கெஸ்ட் ஹவுஸ்ல்ல நீங்க ஏன் தங்கணும், அங்க கண்டதை ஏன் சாப்பிடணும்?"

"சரிடா ராஜா! இதைப்பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம் ... உனக்கு ஐஸ் கிரீம் அயிட்டம் எதாவது வேணுமா? இல்லன்னா - பேரரை பில்லை கொண்டு வரச்சொல்லு."

"அப்பா நாம வீட்டுக்கு ஆட்டோவில போகலாம்பா."

"சரிடா கண்ணு; நீ ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு, உன் அம்மாவுக்கு பன்னீர் திராட்சைன்னா ரொம்ப பிடிக்கும்; எதிர்ல ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கான்; நான் வாங்கிட்டு வந்துடறேன்."

சுகன்யாவின் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. அம்மாவுக்கு என்ன பிடிக்கும்ன்னு அப்பா இவ்வளவு நல்லா ஞாபகம் வெச்சிருக்கார்; உடலால அவர் இப்ப என் கூட இருக்கார், ஆனா அவரு மனசு அம்மாவைப் பத்தித்தான் நெனைச்சிக்கிட்டிருக்கு. அவங்களை பாக்கணும்னு கிடந்து தவிக்குது. அம்மா மேல இவ்வளவு ஆசையும், பாசமும் வெச்சிருக்கிறவர், இவ்வளவு நாளா பிடிவாதமா, தயங்கி தயங்கி அவங்களை பாக்க வராம இருந்திருக்கார். ஏன் ரெண்டு பேரும் இப்படி வீம்பா ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு தங்களுடைய இளமையை வீணாக்கிக்கிட்டாங்க? இதை தலை எழுத்துங்கறதா? இல்லை, அப்பா சொல்ற மாதிரி தனிப்பட்ட ரெண்டு பேரோட ஈகோவில் பட்ட காயத்தின் விளைவாலா?

தனிப்பட்ட மனுஷங்க மனசை புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. அவள் மனம் தன் தந்தைதையும், தாயையும் நினைத்து பரிதவித்தது. என் பெத்தவங்களை மாதிரித்தான் நானும் செல்வாவை காதலிக்கிறேன். அவனை கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன். எங்க மத்தியிலேயும், இது போன்ற ஈகோ சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருமா?

சுகன்யா, குமாருக்காக காத்திருந்த போது, பைக்கில் ஒரு இளம் ஜோடி அவளை மெதுவாக கடந்து சென்றார்கள். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்தவன் தேவையில்லாமல் ப்ரேக் போட அவன் பின்னால் உட்க்கார்ந்திருந்தவள், விருட்டென அவன் முதுகில் தன் விம்மிய மார்புகள் உரச அழுத்தமாக அவனைக் கட்டிப்பிடித்தாள்.

"மெத்துன்னு இருக்குடி" அவன் சிரித்துக்கொண்டே சொன்னது சுகன்யாவுக்கு தெளிவாக கேட்டது. அந்த பெண் முகத்தில், இந்த சந்தர்ப்பத்தை, சடன் ப்ரேக்கை, எதிர்பார்த்து காத்திருந்தது தெளிவாக தெரிந்தது. அவர்கள் இருவரும் சாலையில் நடத்திய காதல் நாடகத்தை கண்ட சுகன்யா, தன் முகம் சிவந்து அவளைப் பார்த்து முறுவலித்தாள். அவளும் கல கலவென சிரித்துக்கொண்டே, சுகன்யாவை நோக்கி தன் கையை அசைத்தாள். லெட் தெம் பி ஹாப்பி; சுகன்யாவின் மனம் அவர்களை வாழ்த்தியது.

சட்டென சுகன்யாவுக்கு செல்வாவின் நினைவு மனசிலாடியது. "அவன் பின்னாடி பைக்ல எத்தனை தரம் நான் உக்காந்து போயிருக்கேன்? ஒரு தரமாவது இந்த மாதிரி ப்ரேக் போட்டிருப்பானா? சரியான பொட்டை பயந்தாங்கொள்ளி. தன் வெக்கம் கெட்ட மனதில் எழுந்த ஆசையை எண்ணி, தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இன்னேரம் செல்வா சாப்பிட்டிருப்பானா?இன்னைக்கு சாப்பாடு யார் கொண்டு போய் குடுத்து இருப்பாங்க?

" நேத்து அம்மா, சும்மா சும்மா அவன் கிட்ட பேச வேண்டாம்ன்னு சொன்னாங்க. நானும் அவன் கிட்ட பேசலை. அவன் தன் மனசுக்குள்ளே என்ன நினைச்சுக் கிட்டிருக்கான்? எட்டு மணி நேரம் ஒடம்பு நோவ உழைச்சுட்டு, ரெண்டு நாளா அவனைப் பாக்கறதுக்காக ஆஃபீசுலேருந்து நேரா ஹாஸ்பெட்டலுக்கு ஓடினேன். அப்படி ஓடறதுக்கு நான் என்னப் பைத்தியக்காரியா?"

"இப்ப அவனுக்கு உடம்பு தேறிடுச்சி; தனி ரூமுக்கு வந்தாச்சு; அப்படியும் அவன் எனக்கு ஒரு கால் கூட பண்ணல. என்னை கூப்பிட்டு ஒரு வார்த்தை ஆசையா எப்படி இருக்கேன்னு கேட்டா, கெட்டாப் போயிடுவான்? நான் அவனுக்கு கால் பண்ணலன்னா அவன் என்னைக் கூப்பிட்டு பேசக்கூடாதா? "

"அம்மா சொல்றதும் சரிதான். என் மேல அவனுக்கு உண்மையிலேயே ஆசையிருந்தா என்னை ஒரு தரமாவது கூப்பிட்டு பேசியிருக்கணுமே? நேராப் பாக்கும் போது, "சுகும்மா ஐ லவ் யூ வெரி மச்சுன்னு" பிட்டு போட வேண்டியது. எப்பவும் நான்தான் அவனுக்கு போன் பண்ணணுமா?

"ட்ரான்ஸ்பர் ஆகி பாண்டிச்சேரி போன செல்வா ஏற்கனவே இது மாதிரி நாலு நாள் வரைக்கும் என் கிட்ட பேசாம கல்லுளி மங்கனாத்தானே இருந்தான்? கடைசியா வெக்கம் கெட்டவ நான்தானே அவனைக் கூப்பிட்டு பேசினேன். எல்லா ஆம்பிளைகளும் இப்படித்தானா? காதலிச்சவதான் உருகி உருகி சாகணுமா?

"நான் சத்தியமா அவனை கூப்பிட்டு பேசப் போறது இல்லே. என் கிட்ட எப்ப பேசறானோ அப்ப அவனா பேசட்டும். அப்ப ஊதறேன் நான் அவனுக்கு சங்கு." அவளுக்குள் ஒரு தேவையில்லாத பிடிவாதம் சட்டென எழுந்தது.

சுகன்யாவுக்குள் எழுந்த இந்த எண்ணம், அவள் பெண் ஈகோவுக்கு பட்டதாக நினைக்கும் அடியா? இல்லை பெண்களுக்கே உரித்தான தன் காதலன் மேல் இருக்கும் அளவுக்கு மேலான உரிமைப் பிரச்சனையா, இல்லை சாதாரணமான விளையாட்டுப் பிடிவாதமா, இல்லை அவள் அவனுடன் ஒரு ஊடல் நாடகம் நடத்த நினைக்கிறாளா? சுகன்யாவும் ஒரு பெண்தானே? இவ மனசை புரிஞ்சுக்கறது மட்டுமென்ன அவ்வளவு சுலபமா?

இப்படி எதுவுமேயில்லை எனில் இது தான், அவள் பெற்றோர் அனுபவித்த தனிமைதான் அவளுக்கும் விதிக்கப்பட்டிருக்கிறதா?

குமாரசுவாமி ஒரு பை நிறைய பழங்களும், சுந்தரிக்கு பிடித்த பால்கோவாவும், கூடவே அவளுக்கு மிகவும் பிடித்த மல்லிகைப் பூவையும் ஒரு நாலு முழம் வாங்கிக்கொண்டு வந்தார். அவர் கையிலிருந்த பூவைப் பார்த்ததும் சுகன்யாவுக்கு தன் தந்தையை கிண்டலடிக்கத் தோன்றியது.

"என்னப்பா ... ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு" சுகன்யா நாக்கை நீட்டி தன் தந்தையை நோக்கி கண்ணடித்தாள்.

" நீ ... என்னடா சொல்றே செல்லம் ..." தன் மகளின் கிண்டல் இலேசாக புரிந்தும் புரியாதவர் போல் குமாரசுவாமி தன் முகத்தை வைத்துக்கொண்டிருந்தார். சுகன்யாவின் குறும்புத்தனம் அவரை விடுவதாக இல்லை.

"ம்ம்ம் ... சின்னப் பாப்பா நீங்க ... புரியாத மாதிரி நடிக்கிறீங்களே? பதினைஞ்சு வருஷம் கழிச்சு பொண்டாட்டியை பாக்கப் போறீங்க; கையில பழம், ஸ்வீட்டு, அதுக்கு மேல மல்லிகைப் பூ, எல்லாம் ஒரு செட்டப்பாத்தான் கிளம்பறீங்க" முகத்தில் கள்ளத்தனத்துடன் சிரித்த சுகன்யாவிற்கு அவர் பதிலேதும் சொல்லவில்லை.

ஆட்டோ நகர ஆரம்பித்ததும் சுகன்யா மீண்டும் ஆரம்பித்தாள். "அப்பா, அம்மாவுக்கு நான் போன் பண்ணட்டுமா? வீட்டுல பால் இருக்குமான்னு தெரியலை; அது மட்டும் தான் இப்ப குறைச்சலா இருக்கு உங்க கைல; வீட்டுல பால் இல்லன்னா வழியிலேயே அதையும் வாங்கிட்டு போயிடலாம்." தன் நாக்கை குவித்து நீட்டி உரக்க சிரித்தாள்.

"கண்ணு, அப்பாவை ரொம்ப கிண்டல் பண்ணாதேடா; எனக்கு கூச்சமா இருக்கு. நான் உங்க அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிட்டுப் போறேம்மா; உனக்கும் சேத்துத்தான் பூ, பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கியிருக்கேன். வீட்டுக்கு போய் முகம் கழுவி நீயும் உன் தலையில பூ வெச்சுக்கம்மா. மனசுல வேற எந்த எண்ணத்தோடும் நான் இதெல்லாம் வாங்கலடாச் செல்லம். அதுக்கெல்லாம், அப்பாவுக்கு வயசாகிப் போச்சும்மா." குமாரசுவாமி நெளிந்த படியே சுகன்யாவைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தார்.

"அப்படி என்ன வயசாயிடுச்சு உங்களுக்கு? கிழவன்ல்லாம் டை அடிச்சி, செண்ட் அடிச்சிக்கிட்டு டீன் ஏஜ் பொண்ணுங்க பின்னாடி திரியறானுங்க?

"எனக்கு ஐம்பது முடிஞ்சிடுச்சும்மா"அவர் வெகுளியாக பேசினார்.

"அப்பா ... ஐம்பது வயசுல ஆசை வரக்கூடாதா ... அதுவும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட? சுகன்யா முகத்தில் நமட்டு சிரிப்புடன் முணுமுணுத்தாள்.

" நீ ... அப்பாக்கிட்ட செம அடி வாங்கப் போறே ? என் சுகா இன்னும் சின்னப் பொண்ணுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கேன்; நீ என்னடான்னா எல்லாத்தையும் கரைச்சு குடிச்சப் பெரிய பாட்டி மாதிரி பேசறே? அவர் விளையாட்டாக அவள் முதுகில் அடித்தார்.

"அ ... அப்பா ... உங்களுக்கு நான் இப்படி பேசினது பிடிக்கலன்ன ... வெரி வெரி சாரிப்பா ..." அவள் முகம் சற்றே தொங்கிப் போனது.

"சீ..சீ... அப்படியெல்லாம் இல்லடா கண்ணு ... இன் ஃபேக்ட், ஐ லைக் யுவர் சென்ஸ் ஆஃப் ஹூயுமர்,"

"அப்பா, அப்படின்னா, ஒரு சின்ன சஸ்பென்ஸ்; நீங்க என் கூட வரதை நான் அம்மா கிட்ட சொல்லப் போறதில்லை."

சுகன்யா குழந்தைதனமாக மீண்டும் ஒரு முறை தன் நாக்கை நீட்டி குமாரசுவாமியை நோக்கி கண்ணடித்தாள். சுகன்யா ஹோட்டலில் சாப்பிட்டதும் ஒரு "ஸ்வீட் பான்" வாங்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாள். நாக்கும் உதடுகளும் நன்றாக சிவந்திருந்தன.

"நீ நிஜமாவே அம்மாவுக்கு போன் பண்ணப் போறியா?"

"ஏன் வேண்டாமாப்பா"

"சுகா ... நான் வீட்டுக்கு வர்றது சஸ்பென்ஸாவே இருக்கட்டும் . என் மனைவியை நான் எந்த விதத்திலேயும் ஒரு இக்கட்டான சூழ் நிலையில் அல்லது தர்மசங்கடமான நிலையிலே வெக்க விரும்பலை. நானே விருப்பத்தோட அவளைப் பார்க்க வந்ததா இருக்கட்டும்." மகளிடம் தன் விருப்பத்தை சொல்லியவர், அதற்கு மேல் எதுவும் பேசாமல் மவுனமாகிவிட்டார்.

ஒரக்கண்ணால் தன் தந்தையைப் பார்த்த சுகன்யா, அவர் தோளில் தன் தலையை சாய்த்துக் கொள்ள, குமாரசுவாமி, தன் இடதுகையால், தன் மகளை ஆசையுடன் அணைத்துக்கொண்டார். இருவரும் வீடு வரும் வரை எதுவும் பேசவில்லை.

நேத்து ரகுவோடு பேசிய போது, அவன் சுகாவைப் பத்தி கூட்டி கொறைச்சு எதுவும் சொல்லிடலை. உள்ளதை உள்ள மாதிரிதான் சொல்லியிருக்கான். சுகன்யாவுக்கும் என் பொண்டாட்டி சுந்தரிக்கும் உருவ ஒற்றுமை நெறய இருக்கு. உருவம்தான் ஒத்து போகுதுன்னு பாத்தா, அவ எப்படி நாக்கை நீட்டுவாளோ அதே மாதிரி இவளும் தன் நாக்கை சுழிச்சு நீட்டறா. அவளோட நிறைய பழக்கங்கள் இவளை அப்படியே தொத்திக்கிட்டு இருக்கு.



சுந்தரி மாதிரியே இவளும் பிடிவாதக்காரியா இருப்பாளோ? இவளுக்கும் அவளை மாதிரியே எப்பவாது தீவிர கோபமும் வருமா? சுந்தரி எப்படி பாசத்தை கொட்டுவாளோ அப்படித்தான் இவளும் அப்பா, அப்பான்னு உருகறா? ஆனா சுந்தரிக்கு கோபம் வந்தா பத்து நாளானாலும் பேசமா மவுனமா இருந்தே ஆளைக் கொண்ணுடுவா? இந்த விஷயத்துல சுகன்யா எப்படியோ? இனிமே பாக்கத்தானே போறேன்.

என்னால சின்னப் பிரச்சனைன்னு சொன்னாளே .. ?? அந்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அந்த பிரச்சனையாலத்தான் அம்மாவும், மாமாவும் சென்னைக்கு வந்திருக்காங்கன்னு சொன்னாளே? சுகா வயசுக்கு வந்த பொண்ணு; பெத்தவன் என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. நல்லா சிவப்பா மூக்கும் முழியுமா அழகா இருக்கா. நல்லாப் படிச்சி, தனக்குன்னு வேலையைத் தேடிக்கிட்டு சம்பாதிக்கறா; மாடர்னா ட்ரஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. நேர் பார்வை பார்த்து தன்னம்பிக்கையோடு வெளிப்படையா, மனசுல இருக்கறதை தெளிவா பேசறா.

பாக்கற வயசு பசங்களுக்கு இவ மேல ஆசை வர்றது ரொம்ப சகஜம். ஒரு வேளை எங்களை மாதிரி என் பொண்ணும் எந்த பையனாயாவது மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு இருக்காளா? அதுல ஓண்ணும் தப்பு இல்லே. இவளையும் காதல் விட்டு வெக்கலையா? எங்களுக்கிருந்த மாதிரி இவங்க நடுவிலேயும் ஜாதி பிரச்சனை குறுக்க வந்திடுச்சா? வரதட்சினை பிரச்சனையா ... பணம் ஒரு பிரச்சனையே இல்லே ... நான் தான் வந்துட்டேனே; பையன் நல்லவனா இருந்தா போதும்; ... கேக்கறதுக்கு மேல நான் அள்ளிக் குடுத்துடறேன் ... என் பொண்ணு சந்தோஷம் தான் முக்கியம். இல்லே, வேற எதாவது பிரச்சனையா?

குமாரின் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யா, திடிரென தன் நாக்கை வெளியில் நீட்டி "அப்பா என் நாக்கு சிவந்திருக்காப்பா" என வினவினாள்.

"ஆமாண்டா கண்ணு" ... குமார் அவளை நோக்கி மென்மையாக சிரித்தார்.

சுகன்யாவின் சிவந்திருந்த நாக்கைப் பார்த்ததும், குமாரின் மனதில் இளம் வயது சுந்தரியின் முகம் தோன்றி கிளுகிளுப்பை கொடுத்தது. கல்யாணமான புதிதில் சுந்தரியும், குமாரசுவாமியும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளிக்கிழமை மாலை கோவிலுக்கு போய்விட்டு, இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்புவதை தங்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

வெளியில் சாப்பிட்டப்பின், சுந்தரி தவறாமல் "ஸ்வீட் பான்" போட்டுக்கொள்வது வழக்கம். "பானை" மென்றுக்கொண்டே, "குமரு, பாத்து சொல்லுங்க என் நாக்கு சிவந்திடுச்சா என்று நாக்கை நீட்டி நீட்டி அவனிடம் நூறு தரம் கேட்ப்பாள். அவள் வாயிலிருந்து வரும் இனிமையான ஏலத்துடன் சேர்ந்த வெற்றிலை வாசனயை நுகரும் குமாருக்கு வழியிலேயே கிக் தலைக்கு ஏறிவிடும்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் குமார் சுந்தரியைக் கட்டியனைத்து அவள் சிவந்த உதடுகளை, அவள் கதற கதற, கவ்வி குதறி எடுத்து விடுவான். அவள் கன்னக் கதுப்புகளை கடித்து புண்ணாக்கிவிடுவான். சுந்தரியும் பதிலுக்கு குமார் தன்னை முத்தமிடும்போது தன் சிவந்த நாக்கை வெறியுடன் அவன் வாய்க்குள் நுழைத்து, அவன் நாக்கை தேடித் துழாவி, நக்கி, தன் வாயால் உறிஞ்சி அவனை மூச்சுத் திணற அடித்து விடுவாள்.

ஆட்டோ ஒரு முறை வேகமாக குலுங்கி நின்றது. "அப்பா ... நாம வீட்டுக்கு வந்தாச்சு," சுகன்யாவின் குரல் கேட்டு, குமாரசுவாமி தன் சுயநினைவுக்கு வந்தார். மெதுவாக ஆட்டோவை விட்டு இறங்கினார். 

சுந்தரி சாப்பிட உட்க்கார்ந்தாள். முதல் பிடி தயிர்சாதத்தை வாயில் வைத்ததும் அவள் மனம் துணுக்குற்றது. சுத்தமா உப்பே இல்லே; பாவம்! குழந்தை ஆபிசுல இதை எப்படி சாப்பிடுவா? சோத்துல உப்பு இல்லையேன்னு, அவ கூட உக்காந்து சாப்பிடறவங்க சிரிச்சா, சாயந்திரம் வந்ததும் சண்டைக்கு இழுப்பா.

சாதத்துல உப்பு கலந்துக்கடின்னு, சுகன்யாவுக்கு நானே போன் பண்ணி சொல்லிடறேன். நல்ல வேளை, சுகன்யா, இப்பத்தான் சாப்பிட போறேங்கறா. என்னமோ தெரியலை? கூட யாராவது இருந்திருக்கணும், அதான் இன்னைக்கு எரிச்சல் படாமா சரிம்மான்னுட்டா. நல்லப் பொண்ணு பெத்து வெச்சிருக்கிறேன் நான். அவளுக்கு மூக்குக்கு மேல நிக்குது கோபம். இவ அந்த மல்லிகா கிட்ட எப்படி குப்பை கொட்டப் போறாளோ? அவளும் கொஞ்சம் முன் கோபியாத்தான் தெரியறா ... ?

"உனக்கு, உன் புருஷன் நெனைப்பு வந்திடுச்சி ... பொய் சொல்லாதே எங்கிட்டன்னு" நேத்து, ராத்திரி நேரத்துல கத்தறா. உண்மையைத்தானே சொன்னான்னு, நானும் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தேன். வேற என்னப் பண்றது? கூச்சப் போட்டாலும், கூடவே குணமும் இருக்கவேதான், ராத்திரி ரெண்டு மணிக்கு, நிமிஷத்துல சூடா காஃபியைப் போட்டு கையில குடுத்தா.

சுந்தரி தன் தட்டிலிருந்த சாதத்தில் உப்பை போட்டு, சிறிது தண்ணீரையும் விட்டு பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள். தட்டை கழுவி வைத்துவிட்டு, ஒரு புத்தகத்துடன் பால்கனியில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். ராத்திரி மழையால, காத்து சிலு சிலுன்னு வருது. இல்லன்னா இங்க இப்படி நிம்மதியா உக்கார முடியுமா?

சுந்தரியின் மனம் புத்தகத்தில் ஒன்றவில்லை. காத்தாலேந்து நாலு தரம் ரகுவுக்கு போன் பண்ணிட்டேன். எங்கப் போனான்னு தெரியலை. போன் அடிச்சு அடிச்சு ஓஞ்சு போவுது. ரூம்லேயே செல்லை விட்டுட்டுப் போயிட்டானா? இவ அப்பனைப் பத்தி கேக்கணும்ன்னு நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் பெத்த பொண்ணு கல்யாணத்துக்கு, அவன் வந்து நின்னா அது ஒரு மரியாதைதான்.

சுகன்யா, நாளைக்கு காஞ்சிபுரம் போவலாம்ன்னு சொன்னாளே? டூரிசம் பஸ் போவுதே ... அதுல போனா, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் எல்லா எடத்தையும் பாத்துட்டு, ராத்திரி எட்டு மணிக்குள்ள திரும்பி வந்துடலாமேன்னு வேணி சொல்றா ... இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா அட்வான்ஸ் புக்கிங் பண்ணணுமாம் ... சுகன்யா வீட்டுக்கு வந்தாத்தான் கேக்கணும் ... அவ என்ன நெனைச்சுக்கிட்டு இருக்கான்னு?

வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, கீரீச்சென சத்தம் எழுப்பி வீட்டிற்கு கீழ் நிற்க, உட்க்கார்ந்தவாறே தெருவை எட்டிப் பார்த்தாள் சுந்தரி. ஆட்டோலேருந்து எறங்கறது சுகா மாதிரி இருக்கே? கையில ஒரு பையோட நிக்கறா? சீக்கிரம் வந்துட்டாளே? மணி இன்னும் மூனு கூட ஆவலை ... என்னாச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையா அவளுக்கு? பின்னாடியே யாரோ ஒரு ஆம்பிளை இறங்கறாங்களே? யாரு? அசப்புல குமார் மாதிரி இருக்கு ... என் புருஷன் குமாரா? வேகமாக எழுந்து பால்கனி சுவரின் அருகில் ஓடியவள் உடல் அதிர்ந்து நின்றாள். அவள் மனம் பரபரத்து, நெஞ்சு ஏறி இறங்கியது.

"பரவாயில்லே மீதி சில்லறையை நீங்க வெச்சுக்கோங்க." டீக்காக உடையணிந்த உயரமான ஒருவர் குனிந்து ஆட்டோ டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார். சுந்தரிக்கு அவருடைய பாதி முகமும், பக்கவாட்டில் பாதி உருவமும் மட்டுமே தெரிந்தது. உயரமான ஆகிருதியும், பரந்த முதுகும், சிவந்த கைகளும், அந்த கூரான மூக்கும், தலையின் பின்புறம் அவள் பார்வையில் பட்டதே போதுமானதாக இருந்தது. அந்த கம்பீரமான குரலை எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், அவளால் எப்படி மறக்க முடியும்? வந்திருப்பது யார் என்பது சந்தேகமில்லாமல் அவளுக்கு புரிந்து விட்டது.

சுந்தரியின் இரத்த அழுத்தம் இப்போது, சரசரவென உயர்ந்தது. அவள் சுவாசம் ஒரு முறை நின்று மீண்டும் ஓட ஆரம்பித்தது. அவள் இதயம் வெகு வேகமாக அடிக்கத் தொடங்கியது. என் குமார் தானே அது? ... என் புருஷன் கடைசியா என்னைப் பார்க்க வந்துட்டானா? குமரு, என் மனசோட கூவல் உனக்கு கேட்டுச்சாப்பா? நீ வந்துட்டியாடா ... சட்டென மனசு ஒரு புறம் மகிழ்ச்சியில் குதி போட ஆரம்பித்தது.

அம்மா! ... தாயே காமாட்சி! உன்னை கையெடுத்து கும்பிட்டு ... உங்கிட்ட என் கொறயை சொல்லணும்ன்னு நெனைச்சேன். நான் கேக்கறதுக்கு முன்னாடியே என் ஆசையை நீ நிறைவேத்திட்டியே? அடுத்த நொடி அவள் மனசு இறைக்கு நன்றி சொல்லியது.

சுந்தரியின் கால்கள் இலேசாக நடுங்க ஆரம்பித்தது. அவள் கால்கள் துவண்டன. பால்கனியில் நிற்க முடியாமல், மெதுவாக அறைக்குள் சென்று ஹாலில் இருந்த நாற்காலியின் நுனியில் உட்க்கார்ந்தாள். கீழ போய் வான்னு சொல்றதா, இல்லை அவனே மேலே வர்ற வரைக்கும் பொறுத்திருப்பதா? ஒரு நொடி புரியாமல் சுந்தரி மனதுக்குள் மருகினாள். விருட்டென திரும்பி இரும்பு அலமாரியில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். நேற்றிரவு சரியாக தூங்காமல், காலையிலிருந்து தலையை சிக்கெடுத்து வாராமல் முகம் சற்றே வீங்கி, வெளுத்திருந்தது.

அடியே சுந்தரி, நல்லா இருக்குடி நீ போடற நாடகம் ... வீட்டுக்கு வந்தவனை வாங்கன்னு வாய் நிறைய கூப்பிடறதை விட்டுட்டு, ஏதோ தப்புப் பண்ணவ மாதிரி உள்ள வந்து உட்காந்துகிட்டு, கண்ணாடியில புதுப்பொண்ணு மாதிரி மூஞ்சைப் பாத்துக்கறே? மனது அவளைத் துளைத்தது. அதே மனது, தெரு வரைக்கும் வந்தவனுக்கு வீட்டு உள்ள வரத் தெரியாதா? புது மாப்பிளையா வீட்டுக்கு வரான் ... ஆரத்தி எடுத்து கொட்டறதுக்கு? அடியே ! பட்டதுக்கு அப்புறமும் உனக்கு புத்தி வரலயே, நீ செய்யறது, சரியா.. தப்பான்னு நீயே யோசனைப் பண்ணிக்க நீ அடிச்சித் தொரத்தினவன் ஆசையா உன்னைப் பாக்க வர்றான் ... உன் குறுக்குப் புத்தியை வுட்டுட்டு, ஒழுங்கா நடந்துக்க ... அவள் எண்ணங்கள் அவளை புரட்டி எடுத்தன.

சுகன்யா, வெறுமனே மூடியிருந்த வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த போது, சுந்தரி தலையை குனிந்தபடி தன் இரு கைகளையும் கோத்து மடியின் மேல் வைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா ..."

"ஆட்டோ சத்தம் கேட்டுது ... எட்டிப்பாத்தேன் ... எங்கடி உன் அப்பா? ... உன் கூட வந்தவரை வெளியிலேயே நிக்க வெச்சுட்டு நீ மட்டும் உள்ள வந்துட்டியே? குரல் முணுமுணுப்பாக வந்தது சுந்தரியிடமிருந்து.

"எம்மா ... உன் டீச்சர் அதிகாரத்தை என் கிட்ட காட்டதே? இது உன் பள்ளிக்கூடம் இல்லே ... என் அப்பாவை நான் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன் ... உன் புருஷனை நீதான் எழுந்து போய் உள்ள வாங்கன்னு கூப்பிடணும் ..." சுகன்யா தீர்மானமாக பேசினாள்.

சுகன்யாவின் பேச்சிலிருந்த கசப்பான உண்மை சுந்தரியைச் சுட, முளைச்சு மூணு எலை விடல; ஆத்தாளுக்கு புத்தி சொல்றா ... சட்டென வந்த கோபத்தில், கை விரல்கள் நடுங்கின; அவள் கால்களும் நடுங்கி வலுவிழந்தன. பெண்ணின் பேச்சால், மீண்டும் தலைக்கு வேகமாக ஏறிய ரத்தத்தால் அவள் முகம் சூடாகி, சற்றே நிறம் மாறியது. மனதில் எழுந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பால், அவளது விழிகள் கலங்கி நீரைப் பெருக்க, மூக்கு நுனிகள் விடைக்க, கீழ் உதட்டை பற்களால் அழுத்தி கடித்து அதன் துடிப்பை அடக்க முயன்றவள், தன் முயற்சியில் வெற்றியடையாமல், வேகமாக எழுந்து அறைக்கு வெளியில் ஓடினாள்.

"வாங்க! ... ஏன் இங்கேயே நிக்கறீங்க ... உள்ளே வாங்க! ... குமரு ... என் மேல இருக்கற கோவம் இன்னும் தீரலயா? நான் வான்னு சொன்னாதான் ... வீட்டுக்குள்ள வருவியா? இது என் வீடு இல்லங்க ... இது உங்க பொண்ணோட வீடு ... உனக்கு இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா? ... ம்ம்ம் ... இவ்வள நாளா என்னை அழ வெச்சு பாத்ததுலே ... உனக்கு சந்தோஷம்தானே? " சுந்தரி விம்ம ஆரம்பித்தவள், அடுத்த நொடி தன் வாய் விட்டு ஓவென கதற ஆரம்பித்தாள்.

சுகன்யா வேகமாக மாடியேறி வந்துவிட, அவள் பின்னால் ஆட்டோவை அனுப்பிவிட்டு, நிதானமாக ஒவ்வொரு படியாக மேலே ஏறி வந்து, மாடிக்குள் நுழைந்து, மாடி வெராண்டாவில், ஷூவை கழற்றிக்கொண்டிருந்த குமாரசுவாமி, அழுதபடி தன்னை வரவேற்ற சுந்தரியை, எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தார். ஒரு நொடிக்குப் பின் அவளை வேகமாக நெருங்கி, தன் இடது கையை அவள் தோளில் போட்டு தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டார். இடது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி, "அழாதே ... சுந்தரி ... ப்ளீஸ் அழாதே" சொல்லிக்கொண்டே, அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.

தன் தாயின் பின்னால் வெளியில் வந்த சுகன்யாவும், வாங்கப்பா, வீட்டுக்குள்ள வாங்கப்பா என வாய் நிறைய தன் தந்தையை வரவேற்றவள், "அப்பா ... அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு உள்ள வாங்கப்பா ... அம்ம்மா, எதுவாயிருந்தாலும் உள்ளே வந்து பேசும்மா" சொல்லிக் கொண்டே திரும்ப அறைக்குள் ஓடி, ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த நீரை, கண்ணாடி கிளாஸில் ஊற்ற ஆரம்பித்தாள்.

உள்ளே நுழைந்த தகப்பனிடம், தண்ணீரை கொடுத்து உபசரித்தாள். குமாரசுவாமி ஹாலிலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்து, சுந்தரியை தன் அருகில் உட்க்கார வைத்தான். சுந்தரி தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல், குமாரின் தோளில் தன் முகத்தைப் பதித்துக்கொண்டு மீண்டும் ஓசையின்றி அழ ஆரம்பித்தாள். குமார் எதுவும் பேசாமல், தன் மனைவியின் தலையை மவுனமாக, மனதில் பொங்கும் ஆசையுடன் வருடிக் கொண்டிருக்க, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவர் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.

தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழது கொண்டிருந்த தாயைப் பார்க்க முடியாமல், மனம் கலங்கி, சுகன்யாவும் தன் மூக்கை உறிஞ்சி விசும்ப ஆரம்பித்தாள். விசும்பிக் கொண்டே, தன் தாயின் முதுகை மெதுவாக தடவிக்கொடுத்தாள். அழாதேம்மா ... நீ அழுததெல்லாம் போதாதா? இன்னும் ஏன் அழுவறே? அதான் வந்துட்டாருல்ல ... அப்பாகிட்ட சந்தோஷமா பேசும்மா?

"நீ சும்மா இருடி ... பெருசா பேச வந்துட்டே ... நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு ... இவரு கொடுத்த தண்டனை கொஞ்சமா ... நஞ்சமா ... ? அவள் குரல் விம்ம, குமாரின் மடியில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பினாள்.

"சுந்து ... பீளீஸ் ... தப்பு எல்லாம் என்னுதுதான். நான் ஒத்துக்கறேன் ... என்னை மன்னிச்சிடும்மா... இப்ப நீ அழாதே ... அழறத நிறுத்து ... என்னால நீ அழறதை தாங்க முடியலைம்ம்மா ..." சொல்லியவர் குரல் தழுதழுத்து, குரல் குளறப் குமாரசுவாமி பேசினார்.

சட்டென சுந்தரி தன் அழுகையை நிறுத்தியவள், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள். கலங்கியிருந்த தன் கணவனின் கண்களையும், முகத்தையும், தன் புடவை முந்தானையால் துடைத்தாள். பத்து நொடிகள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தவள், வயது வந்த தன் பெண் அருகில் நிற்பதையும் பொருட்படுத்தாமல், அவன் கழுத்தில் தன் கைகளைப் போட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். " குமரு ... எழுந்து போய் உங்க முகத்தை கழுவிக்கிட்டு வாங்க ... சுகா ... பால்கனியில துண்டு காயுது ... அப்பாக்கிட்ட கொண்டாந்து குடும்மா ..." அவள் குரலில் தெளிவு பிறந்துவிட்டது. மனதில் மீண்டும் மெல்ல மெல்ல தன் கணவனைப் பார்த்த மகிழ்ச்சி எழ ஆரம்பித்தது.

சுந்தரி புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டவள், ஃபிரிஜ்ஜைத் திறந்து பார்த்துவிட்டு, சுகா ... இன்னைக்கு வீட்டுல சுத்தமா பால் இல்லடா கண்ணு ... நீ ஆஃபீஸ்லேருந்து வரும் போது வாங்கிட்டு வர சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப போனா ... அந்த தெரு கோடி கடையில பால் கிடைக்குமா? நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்.

பாத்ரூமுக்குள்ளிருந்து முகத்தை துடைத்துக்கொண்டே வந்த குமார் ... சுந்து ... குழந்தையை ஏன் போவ சொல்றே ... பக்கத்துலதானே கடையிருக்கு ... நான் போய் வாங்கிட்டு வர்றேன், ..."



அப் ... அப்ப்பா ... நான் அப்பவே சொன்னேன் ... எல்லாம் வாங்கினீங்க ... பாலை விட்டுட்டீங்கன்னு, கேட்டீங்களா? ... அவள் விஷமத்துடன் தன் தந்தையை நோக்கி கண்ணடித்து சிரித்தாள். மனம் இலேசாகி இயல்பு நிலைக்கு வந்திருந்த குமாரும் ... ஆமாண்டா கண்ணு ... நீ சொன்னே ... நான் தான் கேக்கலை ... அதனால நான் போய் பாலை வாங்கிட்டு வர்றதுதான் சரி ... கடை எங்கேயிருக்கு சொல்லு ... அவரும் தன் மகளைப் பார்த்து உரக்க சிரித்தார். பால் என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுத்தனமாக சிரிப்பது எதற்கு என்று புரியாமல் சுந்தரி விழித்தாள்.

"ஏன் இப்ப ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க ... சொன்னா நானும் சிரிப்பேன்ல்லா" சுந்தரி தன் பெண்ணையும், கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

"அப்பா, நீங்க ட்ரஸ் மாத்திக்கோங்க ... மாமா இங்க வாங்கி வெச்சிருக்கற புது லுங்கி ஒண்ணு உள்ள ரூம்ல கட்டில் மேல எடுத்து வெச்சிருக்கேன் ... அம்மா, நீ உன் வீட்டுக்காரரை கேளு ... அவர் சொல்லுவாரு நாங்க ஏன் சிரிச்சோம்ன்னு ... அதை தெரிஞ்சுக்கலைன்னா, உனக்கு இன்னைக்கு சத்தியமா ராத்திரிக்கு தூக்கம் வராது ... அப்புறம் என்னையும் தூங்க விடமாட்டே நீ ... நீ அழுததைப் பாத்து, நானும் அழுது இப்ப எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு ... எனக்கும் சூடா ஒரு காஃபி குடிக்கணும் போல இருக்கு ... " அவர்கள் பதிலுக்கு காத்திராமல், பால் தூக்கையும், தன் பர்ஸையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் நடந்தாள் சுகன்யா.


No comments:

Post a Comment