Thursday 26 March 2015

சுகன்யா... 76

"குட் மார்னிங் மேடம்.."

தன் முதுகின் பின்னாலிருந்த வந்த கனமானக் குரல் கேட்டு சுகன்யா விருட்டெனத் திரும்பினாள். திரும்பியவள் மீண்டும் ஒருமுறை தன் மனதுக்குள் அரை வினாடி அதிர்ந்தாள். எப்பவும் அழுது வடியற இந்த செக்ஷ்ன்ல்ல, காலங்காத்தால என்னைத் தேடிவந்து ஒருத்தன் வணக்கம் சொல்றான்? யார் இவன்?

அந்த நிமிடம்வரை சுகன்யா அந்த இளைஞனை தன் அலுவலகத்தில் பார்த்ததேயில்லை. முதல் முறையாக பார்ப்பவர்களையும், ஒரே பார்வையில் வசீகரிக்கும் இதமான புன்முறுவலுடன், களையான, கவர்ச்சிகரமான முகத்துடன், மிகவும் நேர்த்தியான உடைகளில் உற்சாகமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

சுனில் குமார் பரத்வாஜ் என்கிற பரத், அணிந்திருந்த விலையுயர்ந்த கருப்பு நிற ஷூவில், ஒருவர் தன் முகத்தை தெளிவாகப் பார்த்துக்கொள்ளலாம் என்பது போல், பளபளப்பாக அவன் காலில் மின்னிக்கொண்டிருந்தன. அவன் மணிக்கட்டில் விலை உயர்ந்த 'ஃபாஸ்ட்ரேக்' மின்னிக்கொண்டிருந்தது.



உயரமாக, வாட்டசாட்டமாக, முகத்தில் முடியே இல்லாமல், மழமழவென மழிக்கப்பட்ட முகத்துடன், சுகன்யாவின் எதிரில் நின்றிருந்தான். சற்றே நீளமான முடி. தலைமுடியை வகிடெடுக்காமல், பின்புறம் தள்ளி தூக்கி வாரியிருந்தான். சுருக்கங்கள் இல்லாத அகலமான நெற்றி. கூர்மையான மூக்கு, கவர்ச்சியான கண்கள். பெண்களுக்கு இருப்பதைப் போல அடர்த்தியான கருகருவென புருவங்கள். ரோஜா நிற உதடுகள், யாரோ அளவெடுத்து செதுக்கி ஒட்ட வைத்த மாதிரி இருந்தன.

முகத்தில் இலேசாக பெண்மையின் சாயல் இருந்த போதிலும், பேசிய குரலில் அமிதாப்பச்சனின் கம்பீரம் இருந்தது. வளப்பமான சதைப்பிடிப்பான கன்னங்கள். முதல் பார்வைக்கு சென்னையில், பூர்வீகமாக வட்டி கடை நடத்திக் கொண்டிருக்கும், ஒரு சேட்டு வீட்டுப் பையனைப் போல் செழிப்பாக இருந்தான். மொத்தத்தில் 'பாபி' திரைப்படத்தில் நடித்த இளமைக்கால ரிஷிகபூரை ஞாபகப்படுத்தினான் அவன்.

"குட் மார்னிங்..." சுகன்யாவும் புன்னகையுடன் பதிலளித்தாள். மனதில் இருந்த உற்சாகம், அவள் குரலில் வெள்ளமாக வந்தது.

"அயாம் எஸ்.கே. பரத்வாஜ்... யூ மஸ்ட் பி மிஸ் சுகன்யா.." கணீரென, அதிகாரத்தோரணையில் வந்தது அவன் குரல்.

"யெஸ்... அயாம்... சுகன்யா... பட் அயாம் சாரி... யுர்செல்ஃப்.." இவனை யாருன்னு எனக்குத் தெரியலயே... ஹெட் ஆஃபிசுலேருந்து டெம்பரவரி டீயுட்டில வர்ற ஆஃபிசர்களா ஒருத்தனா இருப்பானா இவன்? மனதுக்குள் குழம்பினாள் அவள்.

"மேடம்... வெரி க்ளாட் டு மீட் யூ... நான் இந்த ஆஃபீசுல புதுசா... அஸிஸ்டன்டா ஜாய்ன் பண்ணியிருக்கேன்... லாஸ்ட் ஃப்ரைடே, ரெண்டு நாள் முன்னாடித்தான், எனக்கு இந்த செக்ஷ்ன்ல்ல போஸ்டிங் குடுத்து இருக்காங்க... வீக் எண்டுக்கு அப்புறம் இன்னைக்கு நான் ரிபோர்ட் பண்ண வந்திருக்கேன்..."

"வெல்கம்.. வெல்கம்... அதுக்குள்ள என் பேரெல்லாம் தெரிஞ்சுகிட்டு இருக்கீங்க.." அப்படாவென இருந்தது அவளுக்கு... என்ன அதிகாரமா பேசறான்...? ஒரு செகண்ட் பயந்தே போயிட்டேன்...!! கடைசீல இவனும் என்னை மாதிரி இங்க குப்பை கொட்ட வந்திருக்கறவன்தானா? தன் கன்னங்கள் குழைய, முல்லைநிறப் பற்கள் தெரிய சிரித்தாள், சுகன்யா.

"தேங்க்யூ..மேம்.. வெள்ளிக்கிழமை ஈவினிங் அஞ்சு மணி வாக்குல இங்கே வந்தேன்.. அப்ப வித்யா மேடம் மட்டும்தான் இருந்தாங்க.. நீங்க தான் என் ஜாய்னிங் ரிப்போர்ட்ல்லாம் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு அனுப்புவீங்கன்னு அவங்கதான் உங்களை ரெஃபர் பண்ணாங்க.." அவன் முகத்தில் சிரிப்புக்கு குறைவேயில்லை.

"டோன்ட் வொர்ரீ.. ரெண்டு வாரமா நான் லீவுலே இருந்தேன்... இன்னைக்குத்தான் நானும் வேலையில ஜாய்ன் பண்றேன்... ஜாய்னிங் ரிப்போர்ட் அனுப்பறதெல்லாம் ரூட்டின்னா நடக்கும்.. மொதல்லே உட்க்காருங்க... உங்க பேர் வெறும் பரத்வாஜ் மட்டும்தானா இல்லே.." சுகன்யா இழுத்தாள்.

"என் முழு பேரு சுனில் குமார் பரத்வாஜ்... நான் பிறந்தது லக்னோவுல.. வளர்ந்தது.. ஸ்கூலிங்ல்லாம் டில்லியிலே... மத்தபடி கடந்த அஞ்சு வருஷமா டிகிரி... பி.ஜி பர்சுயூ பண்ணதெல்லாம் தமிழ்நாட்டிலேதான்... அப்பா அம்மா, தங்கை எல்லாரும் இங்கே செங்கல்பட்டுலத்தான் இருக்காங்க..."

"யூ.பி.எஸ்.ஸி. பரிட்சை எழுதிட்டு... ஆஃப்ஷன் தமிழ்நாட்டுக்கு கொடுத்திருந்தேன்.. பார்ட்ச்சுனேட்லி தமிழ்நாட்டுலேயே அலாட்மெண்ட் கிடைச்சிடிச்சி..." பதட்டமில்லாமல், கோர்வையாக, நிதானமாக பேசினான்.

"இன்ட்ரஸ்டிங்... தமிழ் ரொம்ப நல்லா பேசறீங்க..."

"பின்னே.. என் அம்மா தமிழ் பெண்.. அப்பா நார்த் இண்டியன் பரத்வாஜ் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.. நான் ரெண்டும் கெட்டான்... தமிழனும் இல்லே... யூ.பி. வாலாவும் இல்லே... முதலியாரும் இல்லே.. அய்யரும் இல்லே... யாதும் ஊரே யாவரும் கேளீர்... அம்மா மட்டும் என்னை பரத்ன்னு ஆசையா கூப்பிடுவாங்க.." கலகலவென அவன் சிரித்தான்.

"வாவ்... பகுத் படியா... மிஸ்டர் சுனீல்... உங்க சுயசரிதத்தையே சொல்லிட்டீங்க.. ஆப் கி பாத் சுன்கர் மஜா ஆ கயா..!" சுகன்யாவும் கல கலவென சிரித்தாள்.

"உங்களுக்கு இந்தி பேசத் தெரியுமா மேடம்...!!? பர்ஃபெக்ட்டா... சுத்தமான ஹிந்தி பேசறீங்க... நல்லதா போச்சு.. எனக்கு பொழுது போயிடும் இந்த செக்ஷ்ன்ல்ல!!" அவன் முகத்தில் வண்டிவண்டியாக திகைப்பு.

"தோடீ தோடீ ஹிந்தி ஆத்தி ஹை முஜே... நானும் யூ.பி.எஸ்.சி. அலாட்மென்ட்ல வந்தவதான்.. நான் உங்க சீனியர்தான்.. அதுக்காக சும்மா மேடம்... மேடம்ன்னு எனக்கு கொழை அடீக்காதீங்க... வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்.. சுகன்யான்னு கூப்பிடுங்க... அது போதும்... ஓ.கே.. சுகன்யா தன் கையை அவனிடம் நீட்டினாள்.

"தேங்க் யூ... மிஸ் சுகன்யா..."

சுகன்யாவின் நீட்டிய வலதுகையை இறுக்கமாக பற்றி வலுவாக குலுக்கினான், சுனில் குமார் பரத்வாஜ். அவளுக்கு கை வலித்தது. தைரியமான பொண்ணு.. முகத்துல தேவையே இல்லாத போலி, பாசாங்கு எதுவுமில்லே.. பத்தினி வேஷம் போட்டுக்காம, இயல்பா என் மூஞ்சைப் பாத்து சிரிச்சுப் பேசறாளே.. பரத்வாஜுக்கு உடல் சிலிர்த்தது.

"போதும்பா சுனில்... என் கையை விடுங்க.. எப்பாடா... இப்படியா வலிக்கற மாதிரி ஒரு பொம்பளைக் கையை பிடிச்சு குலுக்குவீங்க.. உக்காருங்க உங்க சீட்லே.. ஒரு மேடம் இப்ப வருவாங்க... அவங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜால்ரா அடீங்க.. அப்பத்தான் நீங்க இங்கே பொழைக்க முடியும்..." சுகன்யாவின் முகத்தில் குழந்தைத்தனமும், விஷமத்தனமும் ஒருங்கே குடியேறியிருந்தது.

நான் ஏன் இன்னைக்கு முகம் தெரியாத ஒருத்தன் கிட்ட இந்த அளவுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். என்னுடைய தனிச்சு இருக்கற சுபாவம் கொஞ்சம் கொஞ்சமா என்னைவிட்டு விலகிப் போற மாதிரி நான் ஃபீல் பண்றேனே.. இதுக்கு என்ன காரணம்? என்னுடைய இந்த பிஹேவியர் சரிதானா?

'சுகன்யா எப்பவும் கலகலப்பா இருடீ... வாழ்க்கையில யாருக்குத்தான் கஷ்டமில்லே... உனக்கு இருக்கற முகஅழகுக்கு நீ சிரிச்சிக்கிட்டே இருந்தீன்னா... இன்னும் அழகா இருப்பே... நீயும் சந்தோஷமா இருக்கலாம்... உன்னை சுத்தி இருக்கறவங்களும் சந்தோஷமா ஃபீல் பண்ணுவாங்க...' சட்டென இதை அடிக்கடி அவளிடம் சொல்லும், வேணியின் முகம் அவள் கண்ணில் வந்து நின்றது.

"சாவித்திரி மேடத்தைத் தானே சொல்றீங்க... முஜே தோ.. வே கதர்னாக் லக்தி ஹைங்!! (எனக்கென்னவோ அவங்க ஒரு டேஞ்சரஸான லேடியா தெரியறாங்க!!!) சுனில் தன் குரலைத் தாழ்த்தி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே பேசினான்.

"புரிஞ்சிக்கிட்டா சரி... பொழக்கற புள்ளைக்கு நான் குடுக்கற இத்தனை ஹிண்ட் போதும்..."

"தேங்க் யூ மிஸ் சுகன்யா... நீங்க சொன்னதை யார்கிட்டவும் நான் சொல்லமாட்டேன்.. கவலைப்படாதீங்க..." அவனும் சகஜமாக பேசினான். பின்னர் கலகலவென சிரித்தான். பற்கள் வெண்முத்துக்களாக பளீரிட்டன.

"க்யீங்க்.. க்யீங்க்..." சுகன்யாவின் எக்ஸ்டன்ஷன் அலறியது.

"சார்... குட்மார்னிங் சார்.. சுகன்யா பேசறேன்.."

"குட்மார்னிங்... சுகன்யா! எப்ப வந்தே நீ சென்னைக்கு... சாவித்திரி ஆஃபிசுக்கு வந்தாச்சா...? அவங்க இன்னும் வந்திருக்கலேன்னா... நீ என் ரூமுக்கு கொஞ்சம் வர்றியாம்மா... சுனில்ன்னு ஒரு பையனை உன் செக்ஷ்னல்லே போஸ்ட் பண்ணியிருக்காங்க.. அந்த பையன் வந்தாச்சா..?"

"யெஸ் சார்... மிஸ்டர் சுனில் வந்திருக்கார்..."

"நீ வரும்போது, அந்தப் பையனையும் உன்னோடவே அழைச்சிக்கிட்டு வாம்மா.. பிளீஸ்.." அவளுடைய பிரிவின் உயர் அதிகாரி கோபாலன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.

"ஓ.கே. சார்... இதோ வர்றேன் சார்..."

"யார் கூப்பிடறது?" கண்களாலேயே பேசினான் சுனில்.

"பேசாம என் பின்னாலே வந்து சேரு..." சுகன்யவும் தன் அழகான கண்களால் பதிலளித்தாள்.

சுனில் குமார் பரத்வாஜ் நீளமாக ஒரு முறை தன் மூச்சை இழுந்து வெளியேற்றினான். வலது கையில் ஒரு குறிப்பெடுக்கும் நோட்டும், மறுகையில் ஒரு பென்சிலுமாக, தனக்கு முன்னால் தோள்களை நிமிர்த்தி, கம்பீரமாக நேரான பார்வையுடன், விடுவிடுவென எதிரில் வருபவர்களை கவனிக்காமல், கோபலனின் அறையை நோக்கி நடந்து செல்லும் சுகன்யாவின் அழகாக அசையும் அவள் பின்னெழில்களை வைத்த கண் வாங்காமல் ரசித்தவாறு, அவள் பின்னால் மெல்ல நடந்த, எஸ்.கே. பரத்வாஜின் மனம் களிப்புடன் முணகத் துவங்கியது.....

"என்ன விலை அழகே...!!!
என்ன விலை அழகே...! சொன்ன விலைக்கு வாங்க வருவேன்..!
விலை உயிரென்றாலும் தருவேன்...!
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ.. ஓ..
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்...!!!"


"மே ஐ கம் இன் சார்...?"
"ப்ளீஸ் கம் இன்... உக்காரும்ம்மா... ஊர்லே எல்லாரும் செளக்கியம்தானே? மிஸ்டர் சுனில் டேக் யுர் சீட்.." கோபலன் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறிப் பேசினார்.
"தேங்க் யூ சார்... மிஸ்டர் சுனிலுக்கு தமிழ் நல்லாத் தெரியுது... நீங்க தமிழ்லேயே பேசலாம்." சுகன்யா மெலிதாக புன்னகைத்தாள். அவளையும் அறியாமல் அவள் முகத்தில் புன்னகை பூக்கள் தாராளமாக பூத்துக்கொண்டிருந்தன.
"ஐ..ஸீ...ரொம்ப சவுகரியமாப் போச்சு..." கோபலன் தன் வழுக்கை மண்டையை தடவிக்கொண்டார்.
"சுகன்யா, உன்னோட டெஸ்க்ல, சப்ஜெக்ட்வைஸ் நீ டீல் பண்ற பைல் லிஸ்ட்ஸ் பிரிப்பேர் பண்ண வேண்டியிருந்தது இல்லையா... அந்த வேலையை சுனில் கிட்ட கொடுங்க... இவர் ஸ்ட்ரெய்ட்டா கம்ப்யூட்டர்ல எக்செல் ஃபார்மேட்ல பைல் டீடெயில்ஸை என்ட்ரி பண்ணிடட்டும்..."
"ஓ.கே. சார்.."
"நம்ம தேவை என்ன...? எந்த ஃபார்மேட்ல பண்ணா... எப்படி பண்ணா ஆன் கோயிங் கம்ப்யூட்டரைசேஷனுக்கு... நம்ம ட்ரெய்னிங்க் செக்ஷ்ன் வொர்க்கை சுலபமா மாத்தமுடியுங்கறதை பத்தி ஏற்கனவே ஐ.டி. பியூப்பிளோட டிஸ்கஷன் பண்ணியிருக்கோம்.."
"ஓ.கே. சார்.."
ம்ம்ம்... இந்த ஆள் சிரிக்கவே மாட்டான் போல இருக்கே... சுனில், கோபாலன் முகத்தையும், அவருடைய டேபிளின் மேலிருந்த பேப்பர் வெயிட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். நிஜமாவே சுகன்யா சொன்ன மாதிரி இங்க இருக்கற ஆஃபீசர்ஸ், பொம்பளைங்க... ஆம்பிளைங்க எல்லாருமே... ஏன் மூஞ்சை ரொம்பவே சீரியஸா வெச்சிக்கிட்டு இருக்காங்க? சிரிச்சா இவங்க சேலரியில எதாவது டிடக்ஷ்ன் ஆயிடுமா?
"டெய்லி ஈவினிங்லே, நீங்க ரெண்டு பேருமா உக்காந்து, இவர் தினம் எண்ட்ரி பண்ண டேட்டாவை, கீளீனா ஒண்ணுக்கு ரெண்டு தரமா வெரிபை பண்ணி ஐ.டி. டிவிஷனுக்கு ஒரு சாஃப்ட் காப்பியும், கூடவே ஒரு ஹார்ட் காப்பியும் அனுப்பிச்சிடுங்க... வேணும்னா வித்யா தன் சீட்டோட வேலையை எப்படி முடிச்சிருக்காங்கன்னு ஒரு தரம் அவங்க கிட்டவும் பேசிக்குங்க... ஷீ வுட் ஹெல்ப் போத் ஆஃப் யூ.
"யெஸ் சார்..."
இந்த வாரம் இந்த வேலை முடிஞ்சதும்.. நெக்ஸ்ட் வீக் உங்க சீட் வேலையை சுனிலுக்கு ஃபீரீப் பண்ணிடுங்க..." முதல் முறையாக கோபாலன், சுனிலின் முகத்தைப் பார்த்தார். அதுவரை சேரில் சாய்ந்து வசதியாக உட்கார்ந்திருந்த அவன், சட்டென நிமிர்ந்து உட்க்கார்ந்தான்.
"யெஸ் சார்..." சுனில் தன் தலையை மிகவும் பவ்யமாக ஆட்டினான்.
"மிஸ்டர் சுனில்.. நீங்க மிஸ் சுகன்யாவோட ஒரு ரெண்டு வாரம் வொர்க் பண்ணுங்க... அவங்க சீட் வேலையை குயிக்கா நீங்க பிக் அப் பண்ணிக்கணும்.. ஷீ ஈஸ் வெரி இன்டெலிஜண்ட்... யூ வுட் ரியலி லைக் டு வொர்க் வித் ஹர்..."
"சார்.. என்ன சார் நீங்க.. என்னைப் போய் ரொம்ப புகழறீங்க..." சுகன்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"செர்டன்லி சார்.." கடனேயென முனகினான் சுனில்.
தலே... இப்படி ஒரு சான்ஸை எந்த மடையனாவது விடுவானா? நீ நல்லாயிருக்கணும் தலை... உன் பொன்னான வாயால சுகன்யா கூட என்னை அட்டாச் பண்ணியிருக்கேன்னு சொல்லிட்டியே.. உனக்கு எப்படி நான் நன்றி சொல்லப் போறேன்...
நீ சொல்லவே வேணாம்... நாளைக்கு செவ்வாக்கிழமை... ராத்திரி என்னேரம் ஆனாலும் சரி... செங்கல்பட்டு பஜரங்கபலி ஹனுமான் சன்னிதியிலே நாலு தேங்காய் உடைக்கறதுன்னு... ஏற்கனவே நான் முடிவெடுத்துட்டேன்...
வொர்க் பண்ணா இந்த மாதிரி அழகு தேவதை ஒருத்திப் பக்கத்துல உக்காந்துதான் வேலை செய்யணும்... முகத்தை சீரியஸாக வைத்திருந்த போதிலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக்கொண்டிருந்தான், சுனில்.
"சுகன்யா.. ஐ நோ.. வாட் அயாம் ஸ்பீகிங்.."
"மிஸ்டர் சுனில்.. நீங்க ரெண்டு வாரத்துக்கு அப்புறம் மிஸிஸ் வித்யா கூடவும்.. நாகராஜன் கூடவும், தலா ஒரு ஒரு வாரம் அவங்க கூட உக்காந்து, அவங்க டெஸ்க்குல என்ன நடக்குதுண்ணும் தெரிஞ்சுக்கங்க..."
"சார்..."
"சுகன்யாவோட சீட் கொஞ்சம் ஹெவியானதா இருந்தாலும், ஐ ஹோப் யூ வுட் லைக் இட்... அதுக்கு மேல அது ஒரு கான்ஃபிடன்ஷியல் சீட்டும் கூட... டேரக்ட் அஸிஸ்டெண்டுக்குதான் அந்த சீட்டை நான் குடுக்க விரும்பறேன்..."
"யெஸ் சார்...அயாம் ஹானர்ட் சார்..."
"சார்.. உங்களை ஒரு விஷயம் கேக்கலாமா?" சுகன்யா முகத்தில் சிறிய ஆச்சரியத்துடன் பேசத் தொடங்கினாள்.
"யெஸ்...சொல்லும்ம்மா..."
கோபலன் முகத்திலும் இப்போது இலேசாக புன்னகை அரும்பியிருந்தது. அவருடைய ஆஃபீஸர் தோரணை சிறிது குறைந்திருந்தது. அப்பா, சிரிச்சிட்டாண்டா மனுசன்... சிரிச்சா இவன் மூஞ்சியும் நல்லாத்தான் இருக்கு... சுனில் மனதுக்குள் அவரை மெச்சிக்கொண்டான்.
"எனக்கு ட்ரான்ஸ்ஃபர் எதாவது வருதா சார்?"
"மிஸ்டர் சுனில்.. யூ மே கோ நவ்.. மிஸ் சுகன்யாவோட நான் கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு... அடுத்த தரம் என் ரூமுக்கு வரும் போது எப்பவும் ஒரு சின்ன நோட்புக்கும் பென்சிலுமா வாங்க... மேக் திஸ் யுர் ஹாபிட்.." கோபலன் முகத்தில் அதிகாரம் மீண்டும் குடியேறியது.
"யெஸ் சார்... தேங்க் யூ வெரி மச் சார்..." சுனிலின் முகம் மாறியது.
சை... தூத்தெறிக்கி... கிழவன் கடைசீல என்னை நல்லா வெறுப்பேத்தி வுட்டுட்டான். என் மூடையே கெடுத்திட்டானே பாவி.. சட்டுன்னு என்னை கட் பண்ணி வுட்டுடானே... சுகன்யாவை வேற எந்த செக்ஷ்னுக்காவது ட்ரான்ஸ்ஃபர் பண்ணப் போறானா? என் ஆசைக் கனவெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் நீடிக்குமா?

'ம்ம்ம்.. பஜரங்க்பலி.. தோடுதோ மேரே துஷ்மன் கி நலி...!!' (அப்பனே.. ஹனுமந்தா... என் எதிரியின் நரம்பை வெட்டிவிடப்பா) மனதில் தன் பிரிய தெய்வம் ஹனுமானுக்கு அவசர அவசரமாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினான். 


கோபாலன் தன் எதிரில் இருந்த டேபிள் மணியை அழுத்தினார். உள்ளே வந்த அட்டெண்டர் நாராயணனிடம் சூடாக ரெண்டு காஃபி வாங்கி வரச்சொல்லி பணம் கொடுத்தார். மெதுவாக எழுந்து தன் நாற்காலிக்குப் பின்னால் சுவரின் ஓரமாக, இருந்த வாட்டர் ஜக்கில் இருந்து ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீரை நிரப்பி நிதானமாக குடித்தார்.

மீண்டும் தன் சீட்டில் உட்க்கார்ந்து, தன் முகத்திலிருந்த மூக்குக்கண்ணாடியை கழட்டி, கர்சீஃபால் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். தான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், கோபாலன் செய்து கொண்டிருந்த காரியங்களை கண்ட சுகன்யாவின் மனதில் உள்ளூர சிறிது எரிச்சல் கிளம்பியது.



இந்த மனுஷன் நல்லவன்தான். நேர்மையானவன்தான். வீணா யார்கிட்டவும் பேசமாட்டான். வீட்டுல கட்டிக்கிட்ட பொண்டாட்டி எதிர்லே வாயைத் தொறக்க மாட்டன்னு சாவித்திரி சொல்லி சொல்லி சிரிக்கறா.. ஆஃபிசுல தான் ஒரு ஆஃபிசர்.. நீ என் சஃபார்டினேட்... அப்படீன்னு ரொம்பவே கித்தாய்ப்பா சீன் போடற ஆளு.

பேசாமலே இருந்துக்கிட்டு எதிர்ல உக்காந்து இருக்கறவங்களை எப்படியெல்லாம் வெறுப்பேத்தலாம்ன்னு இவருகிட்டதான் ஒருத்தன் ட்ரெயினிங் எடுத்துக்கணும்.. தன் குறிப்பேட்டை திறந்து கடைசி பக்கத்தில் பென்சிலால், ஒரு வழுக்கைத்தலையன் படத்தை வரைந்து கொண்டிருந்தாள், சுகன்யா.

"கன்கிராட்ஸ்..சுகன்யா.. உன் நிச்சயதார்த்தமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?"

"ஆமாம் சார்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. இதைப்பத்தி உங்களுக்கு யார் சொன்னது சார்?" திடுக்கிட்ட குரலுடன் தன் தலையை நிமிர்த்தினாள் அவள்.

"செல்வாதான் சொன்னான்ம்மா.. அவன் ஹெட் மூர்த்தி லீவுலே இருக்கார்... தனக்கு லீவு எக்ஸ்டன்ஷன் வேணும்ன்னு உங்க ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி எங்கிட்டதான் வந்தான்.. சரி சந்தோஷமா போய் வாடாப்பான்னேன்... ம்ம்ம்... உங்க கல்யாணம் எப்பம்மா?

"அவரோட அத்தை யுஎஸ்லேருந்து அடுத்த மாசம் வர்றதா இருக்காங்களாம்... அந்த சமயத்துல மேரேஜ் வெச்சுக்கலாம்ன்னு அவங்க வீட்டுல நினைக்கறாங்க... சார்"

"ம்ம்ம்.. வாஸ்தவம்தானே... உனக்கொண்ணும் அவசரம் இல்லையே?" சொல்லிவிட்டு சிரித்தார்.

அவர் தன் வழுக்கை தலையை சொறிந்து கொண்ட போது, நாராயணன் காஃபி கோப்பைகளை அவர்கள் இருவர் முன்னும் வைத்துவிட்டு விலகினார்.

"எடுத்துக்கம்மா..." கோபாலன் காஃபியை மெல்ல உறிஞ்சத் தொடங்கினார்.

"தேங்க்யூ சார்.."

"உனக்கு ஞாபகமிருக்கும்... செல்வா ஆக்ஸிடன்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல இருந்தப்ப, உன்னோட ரெக்வெஸ்ட் படி... டெல்லியில நீ அட்டண்ட் பண்ண வேண்டியிருந்த கட்டாய ட்ரெய்னிங் ஷெட்யூலை தள்ளிவெச்சோம் இல்லையா?"

"ஆமாம் சார்..."

"அந்த ட்ரெய்னிங்க்கு ஹெட் ஆபீஸிலிருந்து உன்னை திரும்பவும் ரீநாமினேஷன் பண்ணியிருக்காங்க... இதுதான் கடைசி பேட்ச்... அதனால நீ டெல்லிக்கு போயே ஆகவேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கு... இப்ப உன் கல்யாணம் வேற எதிர்ல நிக்குது... எனக்கும் என்னப்பண்றதுன்னு புரியலை..."

"எப்ப போகணும் சார்?"

"உனக்கு சரியா அறுபது நாள் டயம் இருக்கு... ஏப்ரல் ஒண்ணாம் தேதியிலேருந்து ட்ரெய்னிங் ஆரம்பிக்குது... இன்னைக்கு உனக்கு பர்சனல் இன்டிமேஷன் சர்வ் ஆகிடும்... யூ நீட் டு அரேஞ்ச் யுர் டிக்கட்ஸ் அண்ட் ஆல் தட் நெஸசரி ரெக்கொயர்மென்ட்ஸ்..."

"இட்ஸ் ஆல் ரைட்... சார்.. என் ரிக்வெஸ்ட்டை ஒரு தரம் நீங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்... அதுக்கே நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன்.."

"இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. முன்னாடியெல்லாம் ட்ரெய்னிங் ஒரு மாசம் தான்.. இந்த பேட்ச்சிலேருந்து மூணு மாசமாக நீட்டியிருக்காங்க..."

"ஓ மை காட்..."

"கொஞ்ச நாளைக்கு நீ ஸ்வீட் ஹார்ட் செல்வாவை விட்டுட்டு தனியா இருக்கணும்.. சின்னஞ்சிறுசுங்க மனசெல்லாம் எனக்கு புரியாமலில்லை. பட் ஐ கான்ட் ஹெல்ப் யூ மச் இன் திஸ் இஸ்யூ..." கோபாலன் நிஜமாகவே விசனபட்டு சிரித்தார்.

"பரவாயில்லே சார்..." சுகன்யாவின் முகத்தில் காலையிலிருந்து மலர்ந்து கொண்டிருந்த புன்னகை மலர்கள் காணாமல் போயிருந்தன. சுகன்யா தன் கோப்பையிலிருந்த சூடான காஃபியை ஒரு விழுங்காக விழுங்கினாள்.

"டில்லி ட்ரெய்னிங் இன்ஸ்டீட்யூட்ல, நம்ம ஆஃபிசை சேர்ந்த ஒரு அஸிஸ்டெண்ட் போஸ்ட் ஜூன்லே காலியாகுதுல்லே. உன்னோட ட்ரெய்னிங் முடிஞ்சதுக்கு அப்புறம், அதனுடைய தொடர்ச்சியா, நீ விரும்பினால் அந்தப் போஸ்ட்டை உனக்கு தரலாம்ன்னு இருக்கறதா ஒரு ரிலையபிள் இன்ஃபர்மேஷன் எனக்கு கிடைச்சிருக்கு..."

"என்ன சார் சொல்றீங்க...?"

"திஸ் இஸ் ப்யூர்லி யுர் ஆஃப்ஷன்.. இது ஒரு ரொட்டேஷனல் போஸ்ட்... இதை நீ அக்செப்ட் பண்ணிக்கிட்டா டெபுடேஷன் அலவன்ஸ் மட்டுமில்லாம, தங்கறதுக்கு கவர்ன்மெண்ட் குவார்டர்ஸ், இதெல்லாம் உடனடியா அங்கே உனக்கு கிடைக்கும்..."

"இப்ப எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை சார்.."

"இப்போதைக்கு இந்த விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோம்மா... இந்த ஒரு வருஷ டென்யூர் போஸ்டிங்க் முடிஞ்சதும் அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு உனக்கு நார்த்துக்கு போகவேண்டிய தொந்தரவெல்லாம் இருக்காது."

"ம்ம்ம்..."

"உன் ஃப்ரெண்ட் வித்யாவும் அப்படித்தான் ஆரம்பத்துல ஒரு வருஷம் டில்லியிலே இருந்துட்டு வந்தாங்க..."

"நீங்க சொல்றது சரி சார்... ஆனா இதுக்காக என் கல்யாணத்தை ரொம்பவே தள்ளிப் போட முடியாதே சார்.."

"நான் உன்னோட வெல்விஷர்... உன் பர்சனல் லைஃப், உன் ப்ரொஃப்ஷனல் லைப், ரெண்டையும் நீ திட்டமிடறதுக்கு வசதியா, இந்த இன்ஃபர்மேஷனை உனக்கு குடுக்கறேன்... ட்ரெய்னிங் நீ போயே ஆகணும்... மத்தபடிக்கு அடுத்த ஒரு வருஷம் அங்கே தொடர்ந்து இருக்கறது உன்னோட தனிப்பட்ட விருப்பம்.. புரிஞ்சுதா..?"

"எஸ் சார்..."

"ஆல் த பெஸ்ட் டியர்..."

"தேங்க் யூ சார்.."

ம்ம்ம்.. நேத்து வரைக்கும் என் கதை வேற... இப்ப இந்த மேட்டர்ல, நானா எந்த முடிவும் எடுத்துட முடியாது. செல்வாகிட்ட டிஸ்கஸ் பண்ணியே ஆகணும். இன்னும் என் கல்யாணமே முடியலை... என் கழுத்துல அவன் தாலியேறவே இல்லை.. என் விருப்பப்படி எந்த விஷயத்திலேயும் சட்டுன்னு ஒரு முடிவு எடுக்கமுடியாதபடிக்கு, நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே, எனக்கு கால் கட்டுகள் வந்திடிச்சே.. சுகன்யா மனதுக்குள் குழம்பியவாறே தன் அறைக்குள் நுழைந்தாள்.

***


மாலை ஐந்தரை மணி வரை, சுகன்யா தன் தலையை நிமிர்த்தாமல், தனக்கு மார்க் செய்யப்பட்டிருந்த பெண்டிங் ரெசீட்களுக்கு பதில் எழுதி, அதனுடைய தொடர்புள்ள கோப்புகளில் நுழைத்து, சாவித்திரியின் மேஜையில் குவித்துக்கொண்டிருந்தாள்.

தன் சீட் வேலையை கவனித்துக்கொண்டே, அவ்வப்போது, சுனிலின் பக்கம் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள், சுகன்யா. சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே, சட்டுன்னு சொல்ல வர்ற விஷயத்தைப் புரிஞ்சிக்கறான். புத்திசாலியா இருக்கான்... ஆனா புத்திசாலிங்களை சாவித்திரி தன் கீழே வெச்சுக்கமாட்டாளே..

'எஸ்...மேடம்' 'எஸ்... மேடம்' - இப்படி நிமிஷத்துக்கு ஒரு தரம் தேவையில்லாம தனக்கு சல்யூட் அடிக்கற நாகராஜன் மாதிரி ஆளுங்களைத்தானே அவளுக்குப் பிடிக்கும்... 

நிஜமாவே, இந்த சுனில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில கருமமே கண்ணாய் இருக்கானே? ம்ம்ம்... பரவாயில்லே... போறப் போக்கை பாத்தா... இந்த டாட்டா என்ட்ரி வேலையிலேருந்து நான் தப்பிச்சுடுவேன் போல இருக்கே... மனசுக்கு திருப்தியாக இருந்தது. 

"மேடம்... நீங்க சரின்னு சொன்னா... லஞ்ச்க்கு போய் வந்திடட்டுமா?" மதியம் ஒன்றரை மணிவாக்கில் நமட்டுத்தனமாக சிரித்தான், சுனில்.

"என்ன மிஸ்டர் கிண்டலா..?" 

"நோ.. நோ... என்னோட இம்மீடியட் பாஸ் நீங்கதானே... அதான் உங்க பர்மிஷனை கேக்கிறேன்..." தன் தலையை தாழ்த்தி கண்களை, சாவித்திரியின் பக்கம் திருப்பி சப்தமில்லாமல் சிரித்தான்.

ஒரு நாள் முழுசா கழியலே... அதுக்குள்ள தேவையில்லாம எதுக்காக இவன் வம்பை வெலைக்கு வாங்கறான்..? தன் வாயின் மேல் சுட்டு விரலை வைத்து, சுனிலை தன் கண்களை அகல விரித்து, முறைத்தாள், சுகன்யா. 

***

மாலை ஐந்தரை மணி அளவில், தோளில் ஒரு பையுடன் செல்வா அவள் சீட்டுக்கு வந்தான். சுனிலும், சுகன்யாவும் வெகு நெருக்கமாக உட்கார்ந்து அன்று செய்யப்பட்ட என்ட்ரீசை சரி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"சுகு... வேலை முடிஞ்சுதாம்மா... கிளம்பலாமா?" நிச்சயதார்த்ததுக்கு பின் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளுவது அதுதான் முதல் தடவை. செல்வா முகத்தில் பொங்கும் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் அறைக்குள் நுழைந்தான். சாவித்திரி தன் தலையை மெல்ல நிமிர்த்தினாள்.

"செல்வா.. ஆஃபிசுல என்னை சுகன்யான்னுதான் கூப்பிடனும்ன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன் உனக்கு... சனியன் புடிச்ச சாவித்திரி அங்க உக்காந்து இருக்கா... அவ காதுல விழுந்தா மொத்தமா எரிஞ்சிப் போயிடுவா..." மெல்ல முனகினாள் சுகன்யா. அவள் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி பட்டெனப் பற்றிக்கொண்டது. 

சுனில் அவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தான். பஜ்ரங்பலி... இவன் யாருப்பா...? ஆளும் ஷோக்காத்தான் இருக்கான்... சுகன்யாவை.. ரொம்ப உரிமையா "சுகு"ன்னு கூப்பிடறான்?? சுகன்யா இவனைப் பாத்ததும் மத்தாப்பூவா மலர்ந்து போயிட்டா...!? முகத்துல அப்படி ஒரு மகிழ்ச்சியும், வெக்கமும் கலந்து மின்னுதே? உனக்கு செதறு காய் வேணுமா... வேணாமாப்பா? 

"ம்ம்ம்.. " சுனில் என்று ஒருவன் அங்கிருப்பதையே உணராதவன் போல் செல்வா இங்குமங்கும் பார்த்தான். 

"உக்காரேன்.. இன்னொரு பத்து நிமிஷ வேலை இருக்கு... முடிஞ்சதும் கிளம்பிடலாம்..."

"மிஸ்டர் சுனில்... இன்னைக்கு நீங்க பண்ண என்ட்ரீஸை நாளைக்கு வெரிஃபை பண்ணலாமா? இந்த டாட்டாவை நாம யாருக்கு பார்வேர்ட் பண்ணணுமோ அவரே வீட்டுக்கு கிளம்பிட்டார்.." சுகன்யா அவனை சற்று கெஞ்சலாக நோக்கினாள். பின் செல்வாவை நோக்கி மென்மையாக சிரித்தாள். 

"மேடம்.. சார் உங்களுக்காக வெய்ட் பண்றார்... உங்களுக்கு எதாவது முக்கியமான வேலை இருக்கலாம்... நீங்க கிளம்புங்க... இதெல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்..." சுனில் அவளை நோக்கி அழகாக புன்னகைத்தான். 

ஏனோ தெரியவில்லை... சுகன்யா, சுனிலிடம் சிரித்தபடியே பேசியதையும், சுனில் அவளுக்கு கொடுத்த இயல்பான பதிலையும், கூடவே அவன் முகத்தில் தோன்றிய மிக மிக மெல்லிய சிரிப்பையும், அந்த சிரிப்பில் தெரிந்த குறும்பையும், செல்வாவால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. 

யார் இவன்? புதுசா இருக்கான்.. இங்கே எங்கேயும் பாத்த முகமா தெரியலியே? டாட்டா என்ட்ரி ஆப்பரேட்டரா..? அப்படின்னா எனக்குத் தெரியாம அப்பாயின்ட் ஆகியிருக்க முடியாதே? சுகன்யா ஏன் இவன் கிட்ட அனாவசியமா கொஞ்சறா? அவன் முகம் லேசாக சுருங்கியது.

"பை த வே.. செல்வா... இவர் மிஸ்டர் சுனில்... புதுசா இந்த செக்ஷ்ன்ல்லே டேரக்ட் அஸிஸ்டண்டா ஜாயின் பண்ணியிருக்கார்... சுனில்... இவர் மிஸ்டர் செல்வா... ஃபிஃப்த் ப்ளோர்ல ஐ.டி. டிவிஷன்ல்லே சிஸ்டம்ஸ் அனலிஸ்டா இருக்கார்..

கிளாட் டு மீட் யூ சார்... சுனில் சட்டென எழுந்து மரியாதையுடன் செல்வாவின் கையை பற்றிக் குலுக்கினான். செல்வா பதிலேதும் சொல்லாமல் அவன் கையை கடனேயென்று, மரியாதை நிமித்தம் வேண்டா வெறுப்பாக குலுக்கினான். 

செல்வா சுனிலைப் பார்த்த பார்வையில் நிச்சயமாக நட்பு என்பது மருந்துக்கும் இல்லை. செல்வாவின் முகத்தில் ஓடிய உணர்ச்சியை துல்லியமாக இனம் கண்டு கொண்டான், சுனில். பஜ்ரங்பலி... இவன் மனசுல என்ன ஓடுதுன்னு என்னாலப் புரிஞ்சுக்க முடியுது... ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்..? சுனில் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். 

***



"மேடம்.. இன்னைக்கு நான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே கிளம்பறேன்... ஒரு ரெண்டு பேப்பர்தான் என் டேபிள்ல பாக்கியிருக்கு.. நாளைக்கு அதை முடிச்சிடறேன்.." தன் சிஸ்டத்தை ஷட்டவுன் செய்தவள், தன் டிராயர்களை பூட்டி சாவியை தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். பையை தோளில் மாட்டிக்கொண்டு, சாவித்திரியிடம் சென்று நின்றாள்.


"மகராசியா போய் வாம்மா... நான் ஏன் குறுக்குல வரப்போறேன்...?" வழக்கமான பாணியில் அவள் பேசினாள்.


சுகன்யா... 75

"மல்லீ... மல்லீ..."

"ம்ம்ம். சொல்லுங்க.."

"திருப்திதானேடீ..."

"ம்ம்ம். நான் திருப்தியா இருக்கேன்... ரொம்ப தேங்க்ஸ்ங்க.. நான் உங்களை படுத்தி எடுக்கறனா? உங்க தூக்கத்தை கெடுத்துட்டேனா.." மல்லிகாவின் குரலில் சுகத்தை முழுவதுமாக அடைந்ததின் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

"சேச்ச்சே... தீபாவளிக்கு ஒரு நா... பொங்கல்லுக்கு ஒரு நாள்ன்னு உனக்கு ஆசை வருது.. நீயா வந்து என்னை கட்டிக்கறே... அந்த நேரத்துல உன் சின்ன ஆசையைக்கூட நான் நிறைவத்தலன்னா எப்படீம்மா..."

"நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? காத்தால கல்யாண சத்தரத்துலேயே என்னை தடவ ஆரம்பிச்சீங்க.." மல்லிகா சிரித்தாள்.

"ம்ம்ம்.. நிஜம்மாத்தான்டீ, மனசு எப்ப முழிச்சிக்குதுன்னு புரியவே மாட்டேங்குது..."

"சரி.. ஹேப்பிதானே?"

"ஹேப்பி.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப ஹேப்பி.." நடராஜன் மல்லிகாவை இழுத்து அவள் முகத்தை தன் மார்பில் பதித்துக்கொண்டார்.



"என்னமோ தெரியலைங்க... நேத்துலேருந்து என் மனசு தவிச்சுப் போவுது... அந்த தவிப்பு... உங்களை கட்டிப்புடிச்சிக்கிட்டா கொறையும்ன்னு நினைச்சேன்.." மல்லிகா தன் வலது காலை, தன் கணவரின் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.

"ஏம்மா.. எதுக்காக தவிக்கணும்.. ம்ம்ம். சொல்லு.. உனக்கு என்ன கொறை இந்த வீட்டுல..." நடராஜனின் கை மல்லிகாவின் பிருஷ்டத்தில் பதிந்தது. இன்னும் இறுகியிருந்த சதையை மெல்ல வருடி... அவள் உடலின் இறுக்கத்தை தளர்த்த முயன்றது.

"சியாமளா ஒரு விஷயம் சொன்னாங்க..."

"சொல்லும்மா. எங்கிட்ட உனக்கு என்னத் தயக்கம்...ம்ம்ம்" மனைவியின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை கனிவுடன் நோக்கினார்.

"நம்ம மீனாவும்.. சீனுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்ச்சம் அதிகமா நெருங்கிட்டதா.. சொல்றாங்க.."

"ம்ம்ம்..." நடராஜன் தன் மனைவியை இறுக்கி அணைத்து அவள் இதழில் ஒரு முறை அழுத்தமாக கட்டுக்கடங்காத வெறியுடன் ஓசையாக முத்தமிட்டார்.

"என்னங்க... இதுக்கு எதுக்கு நீங்க எனக்கு முத்தம் குடுக்கறீங்க...?"

தான் சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டு தன் கணவன் பதறிப்போவான் என மல்லிகா நினைத்ததுக்கு மாறாக, தன்னை அவன் இறுக்கி முத்தமிட்டதைக் கண்டு அவள் திகைத்துப் போனாள். அவன் அணைப்பில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு அவள் சற்றே அதிர்ந்தும் போனாள்.

"மனசு சந்தோஷமா இருக்குடீ..."

"என்ன சொல்றீங்க...?" மல்லிகா நடராஜனின் மார்பில் தன் இருகைகளாலும் குத்தினாள்.

"அடியே பைத்தியம்.. என்னடீ பண்றே.. லூசு..." நடராஜன் சட்டென எழுந்து மல்லிகாவை தன் மடியில் கிடத்தி, தன் மார்போடு அவளை அணைத்துக்கொண்டு அவள் முதுகை வருடினார்.

"உங்களுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமா...?"

"ம்ம்ம். தெரியும்...எப்பவும் லொடலொடன்னு பேசற ராமசாமி இந்த விஷயத்தை என் கிட்ட சொல்லாம சும்மா இருப்பாரா...?"

"சனியனே.. எதிர் வீட்டு மாமி நேத்துதான் எங்கிட்ட சொன்னாங்க.. பசங்களுக்குள்ள என்ன நடந்திருக்குமோன்னு பொண்ணைப் பெத்தவ நான் பயந்து சாகறேன்.. அப்போலேருந்து நான் தூக்கம் வராம துடிச்சிக்கிட்டு இருக்கேன். எங்கிட்ட நீங்க ஏன் சொல்லலை..? வீட்டுக்கு வந்ததும்.மீனா கிட்ட கேக்கவும் எனக்கு மனசு வரலை.. கேக்கலாமா? வேணாமா? தவிச்சுக்கிட்டு இருக்கேன்..." மல்லிகா குமுறினாள்.

"எனக்கு தெரிஞ்சதும் உனக்கு சொல்லியிருந்தா... உடனே நீ குதிப்பே... கூச்சப்போடுவே.. இந்த செமஸ்டர் அவளுக்கு பைனல் செமஸ்டர்.. மீனாவோட மனசு வருத்தப்படும்... அவ டென்ஷன் ஆவா.. அடுத்த வாரம் அவளுக்கு ப்ளேஸ்மெண்ட் இண்டர்வீயூ இருக்கு... அவ கவனம் படிப்புலேருந்து சிதறிடக்கூடாதேன்னு நினைச்சேம்ம்மா.. அதுமட்டும் இல்லாமே.."

"எது மட்டும் இல்லாமே?"

"செல்வா நிச்சயதார்த்தம் முடியட்டும்.. அப்புறமா உன்கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன்... இதுவரைக்கும் உங்கிட்ட எதையாவது நான் மறைச்சிருக்கேனா...?" அவர் குழைந்தார். மல்லிகாவின் மார்பெங்கும் தன் இதழ்களை ஒற்றி ஒற்றி எடுத்து அவளை சமாதானப் படுத்தினார்.

"ராமசாமி என்ன சொன்னார்.. மாமி பட்டும் படாமாத்தான் என் கிட்ட சொன்னாங்க..."

"அதெல்லாம் ஒண்ணும் தப்பா நடந்துடலேடீ..."

"சொல்லுங்கன்னா..." மல்லிகா சிணுங்கினாள்.
நடராஜன் மல்லிகாவை இழுத்து அணைத்தார். அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் முகத்தைப் பார்த்து கனிவுடன் சிரித்தார்.


"என்னங்க நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. கிழவன் இப்பத்தான் நீங்க துள்ளி துள்ளி குதிக்கறீங்க.."

"நீதானேடீ கேட்டே... அவங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு..?

"ஆமாம் சொல்லுங்களேன்..."

"அவங்களுக்குள்ள நடந்ததைத்தான் இவ்வளவு நேரமா சொன்னேன்.. இன்னும் உனக்குப் புரியலையா..? மக்கு சாம்பிராணி..."

"புரியலீங்க..." குழந்தையாக சிணுங்கினாள் மல்லிகா.

"மீனாவும் சீனுவும் மாடிபடிக்கிட்ட நின்னுகிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் குடுத்துக்கிட்டு இருந்தாங்களாம்.. அதைத்தான் ராமசாமி, அவர் வீட்டு மாடியிலேருந்து பாத்தாராம்.. பாத்ததும் நம்ம கிட்ட சொல்றதுக்கு ஓடி வந்தாராம்... அன்னைக்குன்னு பாத்து நம்ம நொண்டி கருப்பன் அவர் ஓடிவந்த வேகத்தைப் பாத்து கொறைக்கவே, பயத்துல திரும்பி ஓடிட்டாராம்.

"நான் ரொம்பவே பயந்துட்டேங்க.."

"ஏன்டீ மல்லீ... நம்ம சுகன்யா... கல்யாணத்துக்கு முன்னாடீ உன் பையனுக்கு முத்தம் குடுத்தான்னு அப்படீ கோவப்பட்டியே...? சுகன்யா கூறு கெட்டவ... எடுபட்டவன்னு... கெடந்து கெடந்து குதிச்சியே..? இப்ப உன் பொண்ணு உன் வீட்டுக்குள்ளவே சீனுவுக்கு கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்திருக்காளே... இதுக்கு என்னப் பண்ணப் போறே?"

"சீனுவை எனக்கு பதினைஞ்சு வருஷமா தெரியும்.. அவன் குடும்பத்தைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்... ஆனா சுகன்யாவைப் பத்தி அப்ப எனக்கு என்னத் தெரியும்...?"

"நீ பெத்த பொண்ணுதானே மீனா.. நீ எப்படியோ அப்படித்தானேடீ உன் பொண்ணு இருப்பா..."

"என்ன உளர்றீங்க...?" மல்லிகா சீறினாள்.

"நாம புருஷன் பொண்டாட்டியா ஆவறதுக்கு முன்னாடியே, உன் மாமா புள்ளை கல்யாணத்துல, கல்யாண சத்திரத்துல...வாட்டர் டேங்க் பின்னாடீ என்னை கட்டிப்புடிச்சி நீ கிஸ் அடிச்சியே.. அது உனக்கு மறந்து போச்சா.."

"கிட்ட வாடா.. நீ... மல்லிகா நடராஜனை இழுத்து தழுவினாள். அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி சப்பினாள். கண்களில் தோன்றிய மகிழ்ச்சியுடன் அவர் உதடுகளை இதமாக கடிக்க ஆரம்பித்தாள்.

"போதும்டீ... மல்லி இன்னைக்கு உனக்கு வெறி புடிச்சி போயிருக்கு.. நேரமாச்சுடீ.. சித்த நேரம் தூங்கவிடுடீ செல்லம்ம்ம்..."

"ம்ம்ம்.. உங்களுக்கு மீனாவும் சீனுவும் கிஸ் அடிச்சிக்கிட்ட விஷயம் எப்ப தெரியவந்தது...?"

செல்வா 'நிச்சயத்துக்கு' கும்பகோணம் போனோம்ல்லியா.. அன்னைக்குத்தான் ராமசாமி, பஸ்ல எங்கிட்ட இந்த விஷயத்தை சொன்னார்.

"மீனாவை சீனுவுக்கே பண்ணி வெச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?" மல்லிகாவின் மனசு லேசாகிக்கொண்டிருந்தது.

"தங்கமான புள்ளைடீ அவன்... ஏன்டீ உன் பொண்ணோட செலக்ஷன் உனக்கு பிடிக்கலையா...?"

"அதில்லீங்க... உங்க தங்கச்சி நளினிக்கு... அவ வீட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்லுவீங்க... அமெரிக்கா போனாலும், நம்ப ஊர்ல வளந்த பொண்ணுதான் வேணும்ன்னு மூச்சுக்கு முப்பது தரம் சொல்றா அவ... நம்ப மீனா மேல அவங்களுக்கு ஒரு கண்ணாச்சே..." மல்லிகா தன் கணவனின் மார்பை வருடிக்கொண்டிருந்தாள்.

"ஆண்டவனா இவங்க ரெண்டு பேருக்கும் போட்டிருக்கற முடிச்சை நாம எதுக்குடீ மாத்தணும்...?"

"ம்ம்ம்.. நீங்க இவ்வளவு லைட்டா இந்த விஷயத்தை எடுத்துப்பீங்கன்னு நான் நெனைக்கவே இல்லீங்க..."

"மல்லி... என் தங்கச்சி புள்ளைக்கு எத்தனையோ நல்ல எடத்துலேருந்து 'நீ'... 'நான்'னு போட்டி போட்டுக்கிட்டு பொண்ணு குடுக்க வருவாங்க.."

"ம்ம்ம்..."

"என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.. நம்ம குழந்தை மகிழ்ச்சியா, மனம் நெறைஞ்சு என் கண்ணெதிர்ல குடும்பம் பண்ணணும்.. இதைத்தானே நீயும் விரும்பறே?" நடராஜன், மல்லிகாவை தன்னுடன் இறுக்கிக்கொண்டார். அவள் கன்னக்கதுப்புகளில் தன் முகத்தை இழைத்தார்.

"ஆமாங்க... எனக்கு வேற என்ன வேணுங்க..." மல்லிகா வெறியுடன் தன் கணவரை மீண்டும் ஒருமுறை தன் மார்புடன் அணைத்துக்கொண்டாள். இப்போது அவள் மனதுக்குள் மகிழ்ச்சி காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.

"அப்டீன்னா சீனுதான் நம்ம வீட்டு மாப்பிள்ளைடீ...எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே..."

"முருகா..." மல்லிகா முனகினாள்.

"என்னங்க... சுகன்யாதான் நம்ம ஜாதி இல்ல.. சீனுவும் நம்ம ஜாதி இல்லையேங்க...?"

"சை...என்னடீ பேசறே நீ.. பதினைஞ்சு வருஷமா உன் புள்ளை செல்வா... அவங்க வீட்டுல பொங்கறதை திங்கறான்.. சீனு உன் கையால, நீ போடறதை திங்கறான்.. ஜாதி பாத்தா அவனை நம்ம வீட்டுக்குள்ள விட்டே? ஜாதி பாத்தா அவனுக்கு நாம சாப்பிட்ட தட்டுல சோறு போட்டே?"

"இல்லீங்க.. சத்தியமா இல்லீங்க.. அவனை என் புள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு செய்தேன்... செய்துகிட்டு இருக்கேன்.."

"அப்புறம் என்னடீ.. சீனுங்கற 'பிள்ளையை" சீனுங்கற 'மாப்பிள்ளை'யாக ஆக்கிக்கோங்கறேன்.. செல்வாவுக்கு 'இனம்' என்ன பெரிய 'இனம்' அப்படீன்னு முடிவெடுத்துதானே சுகன்யாவை அவனுக்கு நிச்சயம் பண்ணியிருக்கோம்..."

"ஆமாங்க.. நமக்கு குணம்தாங்க முக்கியம்..."

"அப்புறம் சீனு என்ன ஜாதின்னு இப்ப ஏன் யோசிக்கறே?

மல்லிகா மவுனமாக தன் கண்களை மூடிக்கிடந்தாள். தன் கழுத்தில் முறுக்கிக்கொண்டு கிடந்த தாலிக்கொடியை சீராக்கினாள். நடராஜனுக்கு தன் முதுகைக் காட்டிக்கொண்டு சுவரை நோக்கி திரும்பி படுத்தாள். உடனே அவள் இடுப்பில் நடராஜனின் கை விழுந்தது. நடராஜன், மல்லிகாவை இழுத்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார்.

"மல்லீ... மீனாகிட்ட பக்குவமா ரெண்டு வார்த்தை சொல்லுடீ... உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும்ன்னு ஆதரவா பேசு... அவ படிப்பு முடிய இன்னும் ரெண்டுமாசம்தான் பாக்கியிருக்கு... இப்போதைக்கு அவளை தன்னோட படிப்புல முழுகவனம் வெக்கச் சொல்லு.. அவளுக்கு நல்ல இடத்துல வேலை கிடைச்சுடுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு... நம்மக் குழந்தை நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்குவாடீ.."

"ம்ம்ம்..."

"அப்படியே அவளுக்கு கேம்பஸ் செலக்ஷன்ல்ல வேலை கிடைக்கலைன்னாலும் எங்க கம்பெனியிலேயே அடுத்த மாசத்துல ரெண்டு மூணு வேகன்சி வருது.. அதுக்கு அவளை அப்ளிகேஷன் போடச் சொல்லாம்ன்னு இருக்கேன்.. அந்த திருத்தணி முருகன் நினைச்சா எல்லாம் நல்லபடியா முடியும்ம்மா."

"சரிங்க.. இப்ப சீனுகிட்ட நான் எதாவது பேசணுமா?"

"ஒரு வாரம் பொறும்மா... குழந்தையோட ப்ளேஸ்மெண்ட் இன்டர்வியூல்லாம் நல்லபடியா முடியட்டும்... அதுக்கப்புறம் நாம ரெண்டுபேருமே அவனையும், அவன் வீட்டுப் பெரியவங்களையும் கூப்பிட்டு, உக்கார வெச்சு முடிவா இதைப் பத்தி பேசிடலாம்..."

"வீட்டுக்கு வெளியில அவங்க ரெண்டு பேரும் பழகினா..." வெகுளியாக கேட்டாள் மல்லிகா.

"உன் பொண்ணு புத்திசாலிடீ... சீனுவும் மரியாதை தெரிஞ்சவன்டீ... சும்மா சும்மா இதையே நீ பேசிக்கிட்டு இருக்காதே... எனக்குத் தூக்கம் வருதுடீ..." நடராஜன் நீளமாக கொட்டாவி விட்டார். மல்லிகாவின் முதுகோடு தன் மார்பை ஒட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தார். 


ஹாலில் சுவரோரம் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் படுத்திருந்த சுகன்யாவுக்கு சட்டென விழிப்பு தட்டியது. தலைமாட்டிலிருந்த செல்லை எடுத்தாள். 0523 என டிஜிட்டலில் நேரம் பச்சையில் மின்னிக்கொண்டிருந்தது. விருட்டென எழுந்து உட்க்கார்ந்தாள். அப்பாவுக்கு டீ போட்டுக்குடுக்கணும்..

ராத்திரி படுக்கறதுக்கு முன்னே, விடிகாலம் அஞ்சு மணிக்கு அடிக்கற மாதிரி அலாரம் செட் பண்ணி வெச்சேனே... அலாரம் அடிச்சது கூட கேக்காம நான் அசந்து தூங்கியிருந்திருக்கேன்... அடிச்ச அலாரத்தை உள் ரூம்ல படுத்திருந்த அப்பாதான் எழுந்து வந்து நிறுத்தியிருக்கணும்.

பாத்ரூமில் பக்கெட்டில் தண்ணீர் விழும் ஓசை தெளிவாக ஹாலில் உட்க்கார்ந்திருந்தவளின் காதில் விழுந்தது. அப்பா எழுந்து தன் வேலையை தொடங்கிட்டாரா...? நாளையிலேருந்து அப்பா எழுந்துக்கறதுக்கு முன்னாடீ எழுந்துக்கணும்; மனதுக்குள் முடிவெடுத்தாள். சுகன்யா.

மெல்ல படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கையை உயர்த்தி சோம்பல் முறித்தாள். மெல்லிய வெளிச்சத்தில் வடிவான கற்சிலையொன்று தன் உடலை அசைப்பது போலிருந்தது. நைட்டியில் சுகன்யாவின் செழித்த மார்புகள் மேலும் கீழுமாக அசைந்தது. அவள் நாசியிலிருந்து சீரான சுவாசம் வெளிவந்து கொண்டிருந்தது.



அப்பா சரியா டாண்ணு அஞ்சு மணிக்கு எழுந்துடுவார். அஞ்சரைக்கு நடக்கப் போயிடுவார். ஒரு பத்து நாளைக்கு நீ விடியகாலையில எழுந்து, ஒரு கப் அப்பாவுக்கு டீ போட்டு குடுடீ கண்ணு... அப்புறம் நான் வந்து அவர் தேவைகளை கவனிச்சிக்கறேன்.. கும்பகோணத்திலிருந்து, சென்னைக்கு கிளம்புவதற்கு முன், சுந்தரி தன் பெண்ணிடம் நாலு தரம் திரும்ப திரும்ப சொல்லி அனுப்பியிருந்தாள்.

"ஏம்மா.. அப்பாவை நான் பாத்துக்க மாட்டேனா? இதெல்லாம் எனக்கு நீ சொல்லணுமா?" சுகன்யாவின் கண்களில் விஷமம் துளிர்த்திருந்தது.

"பாவம்டீ உன் அப்பா.. இத்தனை நாள்தான் தனியா கஷ்டப்பட்டார்.. தனியா தன் கையாலேயே டீ போட்டு குடிச்சாரு.. பொங்கித் திண்ணுகிட்டு இருந்தாரு... இனிமேலாவது.. பொம்பளை கையால திருப்தியா சாப்பிடட்டுமேன்னு சொல்றேன்டீ.."

"பாட்டீயும், தாத்தாவும் அப்பாக்கூடத்தானே இருந்தாங்க..." வேணுமென்றே கிண்டினாள், சுகன்யா.

"எனக்குத் தெரியாதா அந்தக் கதையெல்லாம்..? அப்பனுக்கு செய்யறதுக்கு அழுவறே... உன்னால முடிஞ்சா செய்... முடியலைனா விடுடீ... சும்மா என் கிட்ட விவாதம் பண்ணாதே.." சுந்தரி தன் முகத்தைத் தூக்கிக்கொண்டாள்.

"அம்மா... தமாஷுக்குச் சொன்னேன்ம்மா... அவர் என் அப்பா மட்டுமில்லே... உன் புருஷனை, நீ வர்ற வரைக்கும் நான் பத்திரமா பாத்துக்கறேன்.. கவலையேப் படாதே..." அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள், சுகன்யா.

"தேங்க்ஸ்டீ.. சுகா..." சுந்தரியின் முகம் தாமரையாக மலர்ந்தது.

***

கண்ணு... சுகா இராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி ஒரு தரம், காலையில எழுந்ததும் ஒரு தரம், நூத்தியெட்டு முறை நம்ம குலதெய்வம் சிவனை "ஓம் சிவாய நம" அப்படீன்னு நெனைச்சுக்க; கொஞ்ச நாள்லே வாழ்க்கையில எல்லாமே போதுங்கற மனசு உனக்கு வந்துடும்.


மனசு கண்டபடி இங்கயும் அங்கயுமா அலையறது கொறையும். திருப்தியோட எப்படி இருக்கறதுங்கற வித்தை கைகூடும்... ஒரு வீட்டுல மனசுல திருப்தியோட இருக்கற பொம்பளை இருந்தா, அந்த குடும்பத்துல மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது... தாத்தாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

சப்பணமிட்டு உட்கார்ந்த சுகன்யா, தன் உள்ளங்கைகளை நான்கைந்து முறை பதட்டமில்லாமல் தேய்த்து தன் மூடிய கண்களின் மேல் ஒற்றிக்கொண்டாள். உள்ளங்கையில் எழுந்த சூட்டை இமைகளில் உணர்ந்தாள். அலையும் தன் மனதை புருவ மத்தியில் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்தாள்.

ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: ஓம் சிவாய நம: என மனசுக்குள் நிதானமாக ஜபிக்க ஆரம்பித்தாள். ஊருக்குப் போயிருந்த போது, ஒரு வாரம் தாத்தா சிவதாணுவுடன் இருந்ததின் விளைவு இது.

செல்வாவின் நட்பு கிடைப்பதற்கு முன் தினமும் காலையிலும், இரவிலும் தியானம் செய்வது அவள் வழக்கம். அவனை சுகன்யாவின் மனது விரும்ப ஆரம்பித்ததிலிருந்து அவளையறியாமல் தியானம் செய்யும் பழக்கம் அவளை விட்டுப் போய்விட்டது. தாத்தாவின் அறிவுரைப்படி, கடந்த பத்து நாட்களாக மீண்டும் தியானத்தில் உட்க்காருவதை தன் வழக்கமாக்கி கொண்டிருந்தாள்.

பாத்ரூமிலிருந்து வந்த குமார், அசையாமல் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த மகளை, மனதில் பெருமிதத்துடன் பார்த்தார். ஓசையெழுப்பாமல், தேனீரை தயார் செய்து, இரு கப்புகளில் ஊற்றினார்.

சுகன்யா தன் கண்களை மெல்லத் திறந்தாள். சுகன்யாவின் மனம் முழுசாக பதினைந்து நிமிடங்கள் கூட தியானத்தில் நிலைக்கவில்லை. கையில் தேனீர் கோப்பையும், முகத்தில் புன்னகையுமாக, தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் தந்தையைப் பார்த்தவள், முகம் சட்டென சுருங்கிப் போனது.

"அப்பா... உங்களுக்கு 'டீ' நான் போட்டுக் கொடுக்க மாட்டேனா..? நீங்க எதுக்காக இந்த வேலையெல்லாம் செய்யறீங்க..? அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை திட்டுவாங்கா.. நீங்க எழுந்தப்பவே என்னையும் எழுப்பியிருக்க வேண்டியதுதானே?" சுகன்யா சிணுங்கினாள்.

"நீ அசந்து தூங்கிக்கிட்டு இருந்தேம்மா... அலாரம் அடிக்கறது கூட உனக்கு கேக்கலே..? குமாரசுவாமி மகளின் தலையை ஆசையாக வருடிக் கொண்டிருந்தார்.

"அப்ப்பா... சீக்கிரமா ஒரு வீடு பாருங்கப்பா.. தாத்தா என் கூட இருக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்..."

"செல்வாவோட ஃப்ரெண்டு இருக்காரே... சீனுதானே அந்தப் பையன் பேரு... அவங்க ஏரியாவுல ஒரு வீடு காலியா இருக்கு அப்டீன்னு... ராத்திரி போன் பண்ணியிருந்தார்.. அப்ப நீ தூங்கிட்டே.. இன்னைக்கு ஈவினிங் பாக்கலாம்ன்னு சொல்லியிருக்கேன்.."

"சீனு ரொம்ப நல்ல டைப்புப்பா.. அவுட் ஆஃப் த வே... அவரே போய் எல்லாருக்கும் ஹெல்ஃப் பண்ணுவார்... செல்வாவோட ஃபேமலி ஃப்ரெண்ட்.. அவரு.."

"ம்ம்ம்... சாயந்திரம் அந்த வீட்டைப் பாக்கறதுக்கு நீயும் வர்றியா...?"

"டூ வீக்ஸ் கழிச்சி இன்னைக்குத்தான் நான் வேலையில ஜாய்ன் பண்றேன்... சீக்கிரம் சீட்டை விட்டு சட்டுன்னு எழுந்து வரமுடியாதுப்பா.. உங்களுக்கு வீடு பிடிச்சிருந்தா.. ஓ.கே. பண்ணிடுங்க..."

"ம்ம்ம்..."

"அப்பா... இட்லியும் தொட்டுக்க சட்னியும் பண்றேன்.. லஞ்சுக்கு எடுத்துட்டுப் போறீங்களா?"

"வீட்டுல ஃப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிடறேம்மா... எனக்குன்னு லஞ்ச் எதுவும் தயார் பண்ணாதே... எனக்கு ருட்டீன் வேலை, மீட்டிங்... ஃபீல்டுல குடவுன் இன்ஸ்பெக்ஷன், அது இதுன்னு ஒரு நாள்லே பத்து எடத்துக்கு போகவேண்டி இருக்கும்... உன்னை மாதிரி சீட்டுலேயே உக்காந்து பாக்கற வேலை இல்லை என்னுது... லஞ்ச் நேரத்துல... எங்கே எது கிடைக்குதோ, அதைதான் சாப்பிடறது என் பழக்கம்.. ராத்திரி டின்னர் வீட்டுல வந்து சாப்பிடுவேன்..."

"அம்மா என்னைத் திட்டுவாங்கப்பா... உங்களுக்கு தினமும் லஞ்ச் பேக் பண்ணி குடுக்கணும்ன்னு என் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்கப்பா"

"பத்து நாள்லே உன் அம்மா இங்க வந்துடுவா... லஞ்ச்செல்லாம் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்.. உன்னை நீ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதே... இப்ப நான் வாக்கிங் போய்ட்டு வந்திடறேன்... சரியா.." சுகன்யாவின் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு எழுந்தார், குமாரசுவாமி. 

"சுகா... இன்னிக்கி ஈவினிங் உன் சவுகரியப்படி நீ வீட்டுக்கு போயிடுமா... நான் வர்றதுக்கு லேட் ஆகும்..." தன் அருகில் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த சுகன்யாவை, அவளுடைய அலுவலகத்தின் அருகில் டிராப் செய்தார், குமாரசுவாமி.

"சரிப்பா... வீட்டுல வந்து சாப்பிடுங்கப்பா.." சுகன்யா புன்னகைத்தவாறே, காரை விட்டு இறங்கினாள்.

***

சுகன்யா வருகையை பதிவு செய்துவிட்டு, தன்னுடைய பிரிவில் நுழைந்தவள் ஒரு கணம் அசந்து போய் நின்றாள். அவளுடைய தேவையான புத்தம் புதிய கணினியும், அவள் கேட்டிருந்ததற்கு மேலாகவே, கம்யூட்டருடன், ஃபேக்ஸ், ஸ்கேனர், போட்டோ காப்பியர், பிரிண்டர் என எல்லா வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆல்-இன்-ஒன் சாதனம் ஒன்றும் அவள் டேபிளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. விருட்டென தன் சீட்டுக்கு ஓடி, அவைகளை ஒரு சிறு குழந்தையைப் போல் தொட்டு தொட்டுப் பார்த்தாள். மனதுக்குள் உற்சாகம் பொங்கியது.

வேலைக்கு சேர்ந்த மறு நாளே அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஆதாம் ஏவாள் காலத்து கம்யூட்டரை உடனடியாக மாற்றித் தரவேண்டும் என அவள் விண்ணப்பம் கொடுத்திருந்தாள். மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிதாக கணிணிகள், தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருப்பது தெரிந்ததும், சுகன்யா ஒரு வார காலம் தினமும் ஸ்டோருக்கு நடையாக நடந்தாள். ஸ்டோர்ஸ் இன்சார்ச் மாதவனின், வெற்றிலை காவியேறிய ஓட்டைப் பற்களையும், அவன் உதட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் அசட்டு சிரிப்பையும் அவள் பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.

கிழவியோ, குமரியோ, கல்யாணம் ஆனவளோ, விதவையோ, பிள்ளையை சுமப்பவளோ, மலடியோ, மாதவனுக்கு இதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப் படுவது இல்லை. யாராவது ஒருத்தியை தன் சீட்டுக்கு எதிரில் உட்க்கார வைத்து, கதை அளந்து, பற்களை காட்டிக்கொண்டிருப்பான். இப்படி பெண்களுடன் இளித்துக்கொண்டிருப்பதில்தான் தன் ஜென்மம் சாபல்யம் அடைவதாக அவன் நினைத்தான்.

மாதவனை கட்டிக்கொண்டவள், பத்து வருடம் முன், அவன் தொல்லைத் தாங்காமல், அவனை விட்டு விட்டு ஒரு சின்னப்பையனுடன் ஓடிப்போய்விட்டாளாம். அதிலிருந்து அவன் அலையும் அலைச்சலை, அந்த ஆஃபீஸ் ரின் சோப்பை போட்டு, அழுக்குத் துணியை அலசுவது போல் அலசிக்கொண்டிருந்தது. இதுவும் அவனுக்குத் தெரியும்.

மாதவனுக்கும் வெட்கம், மானம் என்ற எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரியாது. அர்த்தம் தெரிந்தாலும், அவன் தெரியாதவன் போல்தான் இருக்கிறான் என எல்லோரும் பேசி சிரித்தார்கள். வர்ஜா வர்ஜம் எதுவுமே இல்லாமல், அவன் கண்கள் எக்ஸ்ரே மெஷினாக மாறி எதிரில் நிற்கும் பெண் உடலை தலை முதல் கால் வரை துளைத்து எடுக்கும். அதைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் எந்த ஸ்டேஷனரியும் உடனடியாக கிடைத்துவிடும்.

அவன் அறைக்குப் போகும் அத்தனை பெண்களும் அவனுடைய திருட்டுப் பார்வையையை ஒரு ஐந்து நிமிடம் சகித்து கொண்டுதானாக வேண்டும். இதற்கு யாருமே விதிவிலக்கு அல்ல. அவன் அட்டூழியம் எல்லாம், தன் கண்களால், பெண்களை சுகிப்போதோடு சரி. அதற்கு மேல் அவன் என்றைக்குமே யாரிடமும் அத்து மீறியதில்லை.

அந்த ஆஃபீஸின் தலைவருக்கும் (செல்லமாக குருடன், திருதராஷ்டிரன், என அழைக்கப்படுபவரும், தன் பை நிரம்பினால் போதும், மற்றதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.. பலன் இருக்கிறது என்று தெரிகிற இடங்களில் அவர் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் இடுவதால், ஊழியர்களால் இந்த பட்டப் பெயர் அவருக்கு சூட்டபட்டிருந்தது.) மாதவனுக்கும் இடையில் ஏதோ ஒரு அந்தரங்கத் தொடர்பு இருப்பதாகவும், அரசல் புரசலான செவி வழி செய்தி ஒன்று நிலவிக் கொண்டிருந்ததால், அவனுக்கு எதிராக தலைமையதிகாரியிடம், யாரும் எழுத்து மூலம் கம்ப்பெள்ய்ண்ட் எழுதிக் கொடுக்கவும் தயங்கினார்கள்.

சுகன்யா, தனக்கு தன் வரிசைப்படி புதிய கம்யூட்டர் தரப்படவில்லை என தன் சீனியர் கோபாலனிடம் ஓரிரு முறை, முறையிட்டும் பார்த்தாள். அந்த சாது புண்ணியாத்மாவோ, "கொழந்தே... சுகன்யா... என்னை நீ தப்பா நினைக்கதே... என் புது கம்ப்யூட்டரை வேணா நான் உனக்கு கொடுத்துடறேன்... நம்ம தலை குருடன் கிட்டவோ, இல்லே இந்த வெக்கம் கெட்ட தடியன் மாதவனோடவோ என்னால மல்லுக்கு நிக்க முடியாது... நான் சொல்றதை புரிஞ்சுக்கோ..."

"உன் சீட்டு வேலையை மட்டும் நீ பாரும்மா.. மத்ததையெல்லாம் கெடப்புல போடு.. சாவித்திரி எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்த காதுலே விட்டுட்டு.. எதுவாயிருந்தாலும் பைனலா, நான்தானே உன்னை கேக்கப்போறவன்..!?"

"வருஷ முடிவுல உன் கான்ஃபிடன்ஷியல் ரிப்போர்ட்டை நான் தானே எழுதணும்... எதைப்பத்தியும் நீ கவலைப் படாதே... ஆஃபீசுல நீ எடுக்கற முயற்சிகளைப் பத்தியும், தனிப்பட்ட முறையில உன்னைப் பத்தியும் எனக்கு நன்னாத் தெரியும்... இந்த ஆஃபீசைப் பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கலை... இது ஒரு சாக்கடை... இதுலே உன்னை அனாவசியமா நீ அழுக்காக்கிக்காதே.."

"எல்லாம் அந்த அந்த நேரத்தில் அததுவும் அதுவா நடக்கும் போது நடக்கும்..." இதைச் சொல்லிவிட்டு, தன் கண்ணாடியை முகத்தில் ஏற்றிக்கொண்டு.. எதிரில் இருந்த கோப்பில் அவர் மூழ்கிப் போனார்.

இது என்ன உலகம்? இப்படி ஒரு மனுஷனா? தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தட்டிக்கேக்க வேண்டியதை கூட இவர் ஒரு வார்த்தை கேக்க மாட்டேங்கறாறே? இவரை மாதிரி ஆஃபீசர்கள் நாலு பேரு இருந்தாலும் எந்த ஆஃபீசும் உருப்படாமத்தான் போவும்.. சுகன்யா தன் மனதில் எரிச்சலும், ஏமாற்றமும், அலுப்புமாக திரும்பி வந்தாள்.

'அடியே சுகன்யா, இந்த நாய்ங்க கிட்ட கொலைச்சு, சண்டைப் போட்டு, நீ ஏன் உன் மூடைக் கெடுத்துக்கறேடீ... நீ சின்னப்பொண்ணு... உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே... பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லாம ஜாலியா இருக்கே... உடம்பு தெம்புல, இந்த ஆஃபிஸ் திருந்தணும்.. இந்த உலகம் திருந்தணும்ன்னு கூச்சல் போடறே... ஆன உன் தனி ஒருத்தி கூச்சலால எந்த பலனும் இல்லே...'

'என்னைப் பார்... நானும் ஆரம்பத்தில, இந்த ஆஃபீசுல சேர்ந்த புதுசுல, உன்னை மாதிரித்தான், ஒரு தண்ணி குடிக்கற கிளாஸுக்கு, எழுதறதுக்கு ஒரு பேனா, பென்சிலுன்னு சண்டை போட்டிருக்கேன்..'

'இப்ப எனக்கு எல்லாம் சலிச்சிப் போச்சு.. இது ஒரு டிபிகல் கவர்மெண்ட் ஆஃபீஸ்டீ... இங்கே யாரும் உன் சின்சியாரிட்டிக்கு எந்த மெடலும் குடுக்கப் போறது இல்லே... இன்னும் சொல்லப்போனா, உன் கிட்ட இருக்கறதை பிடுங்கிக்காம் இருந்தா சரின்னு சந்தோஷப்படு...'

'இங்க நடக்கிற இந்த அராஜகத்தையெல்லாம் நானும் எட்டு வருஷமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்டீ.. வந்தமா.. வேலையைப் பாத்தமா... சம்பளத்தை எண்ணி வாங்கினோமான்னு போய்க்கிட்டே இருடீ...'

வித்யா அவளுக்கு தாமரை இலையின் மேல் எப்படி புத்திசாலித்தனமான தண்ணீர் முத்துகளாக இருக்க வேண்டும் என்ற வித்தையை உபதேசித்தாள். அதற்கு பின், தனக்கு கிடைக்க வேண்டிய புது கம்ப்யூட்டரைப் பற்றி சுகன்யா சுத்தமாக மறந்தே போய்விட்டிருந்தாள்.

சுகன்யாவின் நினைப்புக்கு மாறாக, கோப்புகள் கன்னா பின்னாவென அவளுடைய சீட்டில் குவிந்து கிடக்காமல், டேபிள் வெகு சுத்தமாக இருந்தது. கால் உடைந்து ஒரு பக்கம் கோணிக்கொண்டு, திறக்கும் போது எந்த நேரத்திலும் தலையில் விழும் என்ற நிலையில், அவள் சீட்டுக்கு எதிரில் ஆடிக்கொண்டிருந்த, ஆதாம் ஏவாள் காலத்து இரும்பு அலமாரிகளுக்கு பதிலாக, அழகான கண்ணாடீ டாப் பொருத்தப்பட்ட, ஸ்லீக்கான பைல் கன்டெய்னர்களில், பைல்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, அழகாக நின்றுகொண்டிருந்தன.

என்னாச்சு இந்த செக்ஷனுக்கு...? நான் லீவுலே இருந்த பதினைஞ்சு நாள்லே இங்கே இத்தனை மாற்றங்களா? என் பாஸ், சோம்பேறி சாவித்திரிக்கு டிரான்ஸ்ஃபர் கிரான்ஸ்ஃபர் வந்து எங்கேயாவது போய் தொலைஞ்சிட்டாளா?



புதிசா இங்க வந்திருக்கிற ஆஃபிசர் யாராவது முயற்சி எடுத்து இந்த மாத்தங்களை கொண்டாந்து இருக்காங்களா? ஆனா இந்த ஆஃபீஸுல, ஆஃபிசர்ஸ் எல்லாம் கெழங்கதானே? ஒரே குட்டையில ஊறின பொடி மட்டைகள்தானே? இல்லே.. நான்தான் தப்பா... தவறுதலா... வேற எந்த செக்ஷனுக்குள்ள நுழைஞ்சிருக்கேனா? அவள் ஆச்சரியத்துடன் தன் சீட்டில் அமர்ந்தாள்.

வித்யாவின் சீட்டிலும், சாவித்திரியின் சீட்டிலும் கூட புதிதான கம்ப்யுட்டர்கள், சிரித்துக்கொண்டிருந்தன. அந்த பிரிவு முழுவதுமே வயதுக்கு வந்த ஒரு இளம் பெண்ணின் முகம் போல் சுத்தமான கண்ணாடியாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

தன் உள்ளத்தில் எழுந்த 'இளம் பெண்' என்ற இந்த உவமை சரிதானா? ஏன் ஒரு வாட்டம் சாட்டமான ஒரு அழகான யுவனாக இந்த செக்ஷனை நான் வர்ணிக்கக்கூடாதா? சுகன்யா ஒரு நொடி மனதுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கமுடியாமல், வாய்விட்டு சிரித்தாள்.