Friday 20 March 2015

சுகன்யா... 65

"சம்பத்... உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே நீங்க வெச்சிக்கிட்டு இருந்திருந்தா, யாருக்குமே, எந்தவிதமான பிரச்சனையும் வந்திருக்காதுங்க... ஆனா நீங்க உங்க காதலை என் கிட்ட சொல்லிட்டீங்களே...? என் நிலைமையில நீங்க இருந்து பாருங்க..."

"என் லவ்வர் செல்வாவுக்கு என் மேல உங்களுக்கு இருக்கற ஆசை தெரிஞ்சா.. காதல் தெரிஞ்சா, அவனோட உடனடியான ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஏற்கனவே நீங்க எங்க லவ் லைஃப்ல ஒரு குழப்பத்தை உண்டாக்கியிருக்கீங்க... அதுக்காக அவன் கிட்ட நீங்க மன்னிப்பும் கேட்டு இருக்கீங்க... அதுக்கு மேல இப்ப நீங்க என்னை லவ் பண்ணறீங்கன்னு அவனுக்குத் தெரிஞ்சா அவன் எங்கிட்ட எப்படி நார்மலா பழகுவான்...? அவனும் ஒரு சராசரி ஆண்... என் எதிர்கால வாழ்க்கையை நீங்க யோசனை பண்ணுங்களேன்." சுகன்யா நிதானமாக பேசினாள்.



"என் மனசுல எது சரின்னு படுதோ அதைத்தான் நான் என் வாழ்க்கையில, இதுவரைக்கும் செய்துகிட்டு வந்திருக்கேன். உனக்கும், செல்வாவுக்கும், ஆப்பு வெக்கணும்ன்னு என் மனசு சொல்லுச்சு; உடனே அதைப் பண்ணேன்..."

"அடுத்தவங்களும் அவங்க மனசுக்கு சரின்னு படறதைத்தானே செய்வாங்க...இதை நீங்களும் புரிஞ்சுக்கணும்.." சுகன்யாவும் விடாமல் பேசினாள்.

"சுகா... நீ சொல்றதும் உண்மை... நான் பண்ணது தப்புடான்னு என் அம்மா என்னை ஓங்கி அறைஞ்சா... அம்மா செய்யறது சரின்னு புரிஞ்சுது; பேசாம அந்த அடியை நான் வாங்கிக்கிட்டேன்.."

"கடைசியில உன்னைப் புரிஞ்சுகிட்டு, நான் பண்ணது தப்புன்னு உணர்ந்தேன்.. நட்ட நடுரோடுல, முன்னே பின்னே பாத்திராத உன் செல்வாகிட்ட, என் கவுரவத்தைப் பாக்காம, என் தப்புக்காக, அவன் கையைப் பிடிச்சு மன்னிப்பு கேட்டேன்... சுகன்யா.."

"அத்தான் இது எப்ப நடந்தது...? செல்வாகிட்ட வேற என்ன சொன்னீங்க...? என்னை நீங்க காதலிக்கறதையும், ஆசைப்படறதையும், அவன் கிட்டவும் சொல்லிடீங்களா?" அதிர்ச்சியுடன் அவசர அவசரமாக குரல் குளறக் கேட்டாள், சுகன்யா.

"உங்க நிச்சயதார்த்ததுக்கு மொதல் நாள் ராத்திரி, உன் செல்வாவை நான் தனியா மீட் பண்ணேன். ஆனா நான் உன்னை காதலிக்கறது உன் செல்வாவுக்கு தெரியாது..."

"ம்ம்ம்... அப்பாடா.." சுகன்யா ஒரு வினாடி நிம்மதி பெருமூச்செறிந்தாள்.

"சுகன்யா... நான் என்ன மடையனா? உன்னை காதலிக்கற விஷயத்தை நான் உன் கிட்டதானே சொல்லுவேன்... செல்வாகிட்ட ஏன் சொல்லணும்..?"

"அத்தான்... நாம சீரியஸா ஒரு விஷயத்தைப் பேசறோம்.. நீங்க இப்ப எதுக்கு நடுவுல காமெடி பண்றீங்க..."

"சுகா... நான் உன்னை உண்மையா காதலிக்கறேம்மா.. அது காமெடி இல்லே.."

"அத்தான்... ப்ளீஸ்... திரும்ப திரும்ப இதை சொல்லாதீங்க... இதனால யாருக்கும் எந்தவிதத்திலும் பலனில்லே..."

"சுகா... எனக்கு உன்னோட சொத்துகள் வேண்டாம்... உன் இளமை வேண்டாம்... உன் அழகு வேண்டாம்... உன் படிப்பு வேண்டாம்.. எதுவுமே வேண்டாம்... உன்னோட அன்பு மட்டும்தான் எனக்கு வேணும்..."

"சம்பத்... எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை..." சுகன்யா பேசமுடியாமல் தவித்தாள்.

"சுகா.. நான் உன்னை உண்மையா விரும்பறேன்... உன்னை நான் அளவில்லாம நேசிக்கறேன்... என் மனசோட இந்த உணர்வுகள் உனக்குத் தெரியணும்ன்னு நான் நினைச்சேன்.. அதை நான் உன் கிட்ட உடனடியா சொல்ல நினைச்சேன்.. சொல்லிட்டேன். இப்ப என் மனசுக்குள்ள ஒரு பெரிய நிம்மதியை நான் உணர்றேன்."

சம்பத் எழுந்தான். எழுந்து நின்ற இடத்திலேயே தன் உடலை இடவலமாக அசைத்தான். அவன் பேசியதைக்கேட்ட, சுகன்யாவின் முகத்தில் சம்பத்தின் மேலிருந்த பிரமிப்பு மேலும் ஒரு நொடி அதிகரித்தது.

"ஆனா என் நிம்மதி போயிடுச்சு அத்தான்..." சுகன்யாவின் குரல் முணுமுணுப்பாக வந்தது. அவள் முணுமுணுப்பில் சலிப்பும் இருந்தது.

"அயாம் சாரி சுகன்யா... நீ சலிச்சிக்கிட்டாலும் உன்னை நான் காதலிப்பது உண்மை.."

"அத்தான்... நீங்க ஒரு சின்னக் கொழந்தையாட்டாம் பேசறீங்க... உங்க மனசுல இருக்கறதை நீங்க சொல்லிட்டீங்க... என்னைப் பொறுத்தவரைக்கும், நான் அதை தப்புன்னு சொல்லலை... ஆனா இதனால யாருக்குப் பிரயோசனம்... சொல்லுங்க? நீங்க விரும்பறது எப்படி நடக்கும்?

"நான் எதையும் எதிர்பார்த்து உன்னை நான் நேசிக்கலை... வாழ்க்கையிலே எதிர்பார்ப்புகளே இல்லாம இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்...?" முனகினான் சம்பத். அவன் விசுக்கென்று எழுந்தான். மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் முணுமுணுத்தது சுகன்யாவுக்கும் கேட்டது. இருவரும் வீட்டை நோக்கி திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

"அத்தான், உங்க மனசை நான் புரிஞ்சிக்கிட்ட மாதிரி... நீங்களும் என் மனசைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும். மிகவும் நாசூக்காக தன் உள்ளதில் இருப்பதை உடனடியாக அவனுக்கு புரிய வைக்க விரும்பினாள், சுகன்யா.

"சொல்லு சுகன்யா..." சம்பத் இப்போது தன் இயல்பான நிலைமைக்குத் திரும்பியிருந்தான்.

"அத்தான்... எல்லாமே விதிக்கப்பட்டதுன்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... எனக்கு விதிக்கப்பட்டவன் செல்வா. எனக்கு இந்த ஜென்மத்துல விதிக்கப்பட்டவர் நீங்க இல்லன்னு தயவு செய்து புரிஞ்சுக்கணும். நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஒரு ஆறு மாசம் முன்னாடி சந்திச்சிருந்தா, பத்து நிமிஷம் முன்னாடி நீங்க என் கிட்ட சொன்ன உங்க அன்பை அப்ப சொல்லியிருந்தீங்கன்னா, என் கண்ணை மூடிக்கிட்டு உங்களுக்கு நான் சரின்னு சொல்லியிருப்பேன்..

"ம்ம்ம்.. அயாம் அன்லக்கி..." சம்பத் முனகினான்.

"அத்தான்... "

"ம்ம்ம்... செல்வாவை நீ சந்திச்சப்பிறகுதான், உன் நிச்சயதார்த்ததுக்கு நாலு நாள் முன்னாடிதான் நான் உன்னைப் பாக்கணும்ன்னு, எனக்கு விதிக்கப்பட்டிருக்கு... இதுக்கு நான் யாரை நொந்துக்கறது?" விரக்தியாக சிரித்தான், சம்பத்.

"அத்தான்... என் மனசுல உங்களுக்குன்னு ஒரு நிரந்தரமான எடத்தை நீங்க பிடிச்சிட்டீங்க. நீங்க என் அத்தைப் பையன். நீங்க என்னோட இரத்த உறவு.. எனக்கு ஒரு பிரச்சனைன்னா எனக்காக என் உறவுகள்தானே முன்னே வரும். என் நட்புகள் தானே எனக்காக ஆதரவு கரம் நீட்டும். என் நண்பர்கள்தானே எனக்கு உதவணும். இந்த நொடியிலிருந்து நீங்க என்னோட சினேகிதன். ஒரு நல்ல நண்பன்... !" சுகன்யா அவன் கையில் தன் கையை நட்புடன் கோர்த்துக் கொண்டாள்.

"ம்ம்ம்..."

"அத்தான்... நீங்க என் கிட்ட என் அன்பை மட்டும்தான் எதிர்பாக்கறதா கொஞ்சம் முன்னாடீ சொன்னீங்க..."

"ஆமாம்..."

"ஒரு பெண், ஒரு ஆணை காதலிப்பதன் மூலமாத்தான், தன் அன்பை அவனுக்கு காட்டணும்ன்னு அவசியமில்லே. இரண்டு நண்பர்களுக்கு இடையேயும் உண்மையான அன்பு நிலவ முடியும். சம்பத், நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும். சீனு என்னோட நல்ல ஃப்ரெண்ட்... மீனா என்னோட திக் ஃப்ரெண்ட்... வேணி என்னோட ஃப்ரெண்ட்... இது மாதிரி நீங்களும் நானும் நட்பா இருக்க முடியும். இதனால என் வாழ்க்கையில எனக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராது." சுகன்யா அவனை கெஞ்சலாகப் பார்த்தாள்.

"ப்ச்ச்ச்..." சம்பத் சூள் கொட்டினான். 

"அத்தான்... வாலிப வயசுக்கே உரிய சில சிலுமிஷங்களை, இளமைக்கே உரிய சில திருட்டுத்தனங்களை, சுவையான தப்புகளை, தில்லு முல்லுகளை, விளையாட்டா நீங்க பண்ணியிருக்கீங்க. அதைப் பத்தி நான் கவலைப்படலே." பேசியவள் அவன் முகத்தை திரும்பிப் பார்த்தாள்.

"யூ ஹாவ் எ ப்ராட் மைண்ட்..சுகன்யா... என்னை நீ ஓரளவுக்கு புரிஞ்சுகிட்டே..!!"

"அயாம் நோபடி டு ஜட்ஜ் யூ... எனக்கு உங்க மேல எந்த வெறுப்பும் இல்லை. நீங்க உங்க மனசுல இருந்த காதலை என் கிட்ட ஓப்பனா சொன்னதுனால உங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை... அதுக்கு மாறா ஐ ரியலி அப்ரிஷியேட் யூர் ஸ்ட்ரெய்ட்பார்வேட்னெஸ்..."

"தேங்க் யூ சுகன்யா.."

"ஆனா அத்தான்... உங்க மனசுக்கே பிடிக்காத உறவுகளை, இனிமே, திரும்பவும் கண்ட பெண்களோடு, நீங்க வெச்சுக்கக்கூடாதுன்னு, உங்களோட ஒரு உண்மையான சினேகிதியா, உங்ககிட்ட கேக்கற உரிமையை, நான் உங்க கிட்ட எதிர்பாக்கலாமா?" சம்பத்துடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தவள், அவன் முகத்தை புன்னகையுடன் பார்த்தாள், சுகன்யா.

"சுகன்யா... நீ என் மனசுக்குள்ள வந்துட்டே... இனிமே இந்த மனசுக்குள்ளே வேற எவளுக்கும் இடம் கிடையாது. இந்த உடம்பு இனிமே வேற எந்த பொண்னோட உடம்பையும், உடல் சுகத்துக்காக நிச்சயமா தீண்டாது... இது சத்தியம்..." ஒரு நொடியும் தயங்கமால் அவளுக்கு பதிலளித்தான், சம்பத்.

இவன் என்னை இந்த அளவுக்கு நேசிக்கிறானா? என் ஒரு வார்த்தைக்கு இவன் இந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறானா? இனிமே எவளையுமே தொடமாட்டேன்னு தயங்காம சத்தியம் பன்றானே? இவனை நான் பைத்தியக்காரன்; மன நோயாளின்னு சந்தேகப்பட்டேனே? சுகன்யா ஒரு நொடி பிரமித்து நின்றாள். ந்டந்து கொண்டிருந்த சம்பத் அவளைத் திரும்பிப் பார்த்தான்..

"ஏன் நின்னுட்டே சுகன்யா?"

"ஓண்ணுமில்லே..." சுகன்யா நடக்கத்தொடங்கினாள்.

"சுகன்யா, நான் சொன்னதை நீ நம்பலையா?" சம்பத் சிரித்தான்.

"நிஜமாவே... நீங்க பண்ண சத்தியத்தைக் கேட்டதும், ஒரு செகன்ட் ... இது எப்படி சாத்தியம்ன்னு, நான் என் காதால கேட்டதை நம்ப முடியாம நின்னது உண்மைதான்.. அயாம் சாரி...உங்ககிட்ட நான் பொய் சொல்ல விரும்பலை..." சுகன்யாவின் முகம் சட்டெனக் கருத்தது.

"ப்ளீஸ் ... சுகன்யா... கம் ஆன் டியர்... நீ பேசின உண்மை எனக்கு ரொம்பப் பிடிக்குது... உன்னோட இன்னோசென்ஸ், உன் மனசோட நேர்மை, இதுதான் என்னை உங்கிட்ட இழுக்குது... திரும்பவும் சொல்றேன்... ஐ லவ் யூ சுகன்யா... "

"அத்தான்... ப்ளீஸ்... நாம ஃபரெண்ட்ஸா இருக்கலாம்பா... நான் சொல்றதைக் கேளுப்பா... இதனால யாருக்குமே பிரச்சனையில்ல... என்னைப் புரிஞ்சுக்கப்பா..." சுகன்யா மீண்டும் அவனைக் கெஞ்சினாள்.

"நீ உன் அன்பால, பாசமான வார்த்தைகளால, உன்னோட நேர்மையான குணத்தால, என்னை வதைக்கிறேம்ம்மா.. நீ ஓரே ஒரு வார்த்தை கோபமா பேசியிருந்தா, நீ என் கன்னத்துல பளார்ன்னு பளார்ன்னு ரெண்டு அறை விட்டிருந்தா... எனக்கு அது ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கும்..." சம்பத் தன் கண்களில் மீண்டும் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்...

"சுகன்யா... உன் மனசு நிம்மதியை நான் குலைச்சுட்டேன்னு நிஜமாவே உனக்கு என் மேல கோபமில்லையே?"

"நோ... நோ.. அத்தான்... நீங்க என்னைப் பத்தி செல்வா கிட்ட தப்பா பேசினதை, கிரேஸ்ஃபுல்லா என் கிட்ட ஒத்துக்கிட்டு, இதுல சம்பந்தப்பட்ட எங்க ரெண்டு பேருகிட்டவும், மன்னிப்பு கேட்டீங்க.. அதுக்கு அப்புறமும் உங்களோட நல்ல குணத்தை, உங்க திறந்த மனசைப் புரிஞ்சுக்காம, உங்களை கோவிச்சுக்கறதுக்கு நான் என்ன பைத்தியக்காரியா? இல்லே முட்டாளா?"

"தேங்க்ஸ்.. சுகன்யா..! என்னால எதிர்ப்புகளை வெகு சுலபமா நேர் கொள்ள முடியுது. ஆனா ஏனோ தெரியலை... உபசாரத்தையும், அன்பையும் என்னால எதிர்நோக்க முடியலைம்மா..." சுகன்யாவிடம் தன் காதலை சொன்னதை அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்ல என்பது புரிந்ததும், சம்பத் நிம்மதியாக பெருமூச்சுவிட்டான்.

"சுகன்யா, இவ்வளவு நேரம் நீ ரொம்பப் பொறுமையா இருந்தே... நான் சொன்னதையெல்லாம் காது குடுத்துக் கேட்டே... நீ நெனைச்சிருந்தா எப்பவோ, என்னை ஒதுக்கிட்டு எழுந்துப் போயிருக்கலாம்... இவ்வளவு தூரம் நான் சொல்றதை கேக்கணுங்கற அவசியம் உனக்கு நிச்சயமா இல்லே... இன்னும் ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்றதை நீ கேளு..."

"சொல்லுங்க சம்பத்..." சுகன்யா அவனை ஆதரவாகப் பார்த்தாள்.

"என் மனசுல இருக்கற அன்பை உன் கிட்ட நான் சொல்லிட்டேன்.. என்னைப் பொறுத்த வரைக்கும், ஒருவிதத்துல என் ஆசையை நான் உன் மனசுக்குள்ள இன்னைக்கு வெதைச்சிட்டேன்.. அது முளைக்கறதும், மொளைக்காததும் காலத்தோட கையிலத்தான் இருக்கு. உனக்காக நான் பொறுமையா காத்துக்கிட்டு இருப்பேன்."

"....."

"நான் திரும்பவும் என் காதலைப் பத்தி உன் கிட்டவோ, வேற யாரோடவும் நான் எப்பவுமே பேசமாட்டேன். என்னால உன் திருமண வாழ்க்கையில, உங்க ரெண்டு பேரு நடுவுல எப்பவும் எந்தப் பிரச்சனையும் வராது. ஐ பிராமிஸ்... சுகன்யாவின் வலது கையைப் பற்றி, தன் வலது கையால், அவள் உள்ளங்கையில் அழுத்தினான், சம்பத்.

"அத்தான்... நீங்க உங்க காதலை உங்க மனசுக்குள்ளவே வெச்சுக்கிட்டு மவுனமா என்னை காதலிச்சுக்கிட்டே இருக்கலாம்... அதை என்னால நிச்சயமா தடுக்க முடியாது... எனக்காக காத்துக்கிட்டு இருப்பேன்னு சொல்றீங்களே... அதை என்னாலப் புரிஞ்சுக்க முடியலை."

"என் மனசுக்குள்ள செல்வா பூரணமா நிறைஞ்சு இருக்கான்... என் மனசு எப்படி மாறும்ன்னு நீங்க எதிர்பாக்கறீங்க... இதை நான் உண்மையிலேயே தெரிஞ்சுக்க விரும்பறேன்.." அவன் செய்த சத்தியத்தைக் கேட்டதும், அவள் தன் மனதுக்குள் மிகுந்த நிம்மதி அடைந்தாள். அதே வினாடியில் அவள் உதடுகளில் ஒரு குறும் புன்னகை அவளையும் மீறி எழுந்தது. 

"யெஸ்... நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை.. உன்னை மாதிரி பெண்ணோட மனசு சாதாரண சூழ்நிலைகளிலே மாறவே மாறாது. நீ உண்மையா காதலிக்கற செல்வாவை ஏற்கனவே உனக்கு பெரியவங்க நிச்சயம் பண்ணிட்டாங்க... உன் மனசு என் பக்கம் எப்படித் திரும்பும்...? அதுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.. நீ கேக்கற கேள்வியும், உன் சிரிப்பின் அர்த்தமும் எனக்கு நல்லாப் புரியுது... சுகா...! 

"அயாம் சாரி சம்பத்... நான் இந்த நேரத்துல இப்படி சிரிச்சு உங்க மனசை புண்படுத்தியிருக்கக்கூடாது... ரியலி அயாம் சாரி... ஆனா..." சம்பத்தின் பதிலை எதிர் நோக்கியவாறு, அவனுடன் நடந்து கொண்டிருந்த சுகன்யா ஒரு நொடி நின்று அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

"சுகன்யா... இட் ஈஸ் ஆல்ரைட்... இந்த ஜென்மத்துல உன் மனசு மாறாமல் போகலாம்... இந்த ஜென்மத்துல இல்லன்னாலும்... அடுத்து வரப்போற எந்த ஜென்மத்துலயாவது உன் மனசுல என் மேல காதல் வரலாம் இல்லையா? அந்த நம்பிக்கையோட உனக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன்." தன் விழிகளில் அவள் பால் பொங்கி வரும் எல்லையில்லாத காதலுடன் சம்பத் அவளைப் பார்த்தான். 

"அத்தான்... என்னன்னொவோ நீங்க பேசறீங்க...?"

சுகன்யாவின் குரல் கரகரத்தது. அவள் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. தன் உடம்பு சிலிர்த்து நின்றவளின் மனம் நெகிழ்ந்தது. அவள் நெஞ்சு விம்மியது. இந்த அளவுக்கு 'டீப்' ஆக என்னை இவன் காதலிக்கறானா? சம்பத்தின் பேச்சிலிருந்த உண்மை அவளுக்குப் புரிந்தபோது, அந்த உண்மை தந்த உணர்வை அவளால் நிஜமாவே தாங்க முடியலை.



"நான் என் மனசுல இருக்கற உணர்வுகளைத்தான் பேசறேன்.. சுகா.."


"அத்த்தான்... நான் எப்பவும் நிகழ்காலத்துல வாழறவ.. நிகழ்காலத்துலதான் நான் நம்பிக்கை வெச்சிருக்கேன். நீங்க எதிர்காலத்துல நிறைய எதிர்பார்க்கறீங்க.." சுகன்யா தன் குரலை இழுத்தாள்.

"சுகன்யா, 'காலம்' ங்கறது ஆதியும் அந்தமும் இல்லாததுன்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு. 'காலங்கறது' நீளமான ஒரு மெல்லிய நூல் கண்டு. அதுல நேத்து... இன்னைக்கு... நாளைக்கு... அடுத்த வாரம், புது வருஷம், புது பிறப்புங்கற முடிச்சுகள் இல்லை. இதெல்லாம் நாம நம்ம வசதிக்கு ஏற்படுத்திகிட்ட கூறுகள், பகுதிகள், துண்டுகள்.. ..."

"மெல்லிய நூலியிழையில சட்டுன்னு சிக்கு விழுந்துடும்.. நடைமுறை வாழ்க்கையில தன்னால சிக்கல்கள் வந்துடக் கூடாதுன்னு நமக்கு நாமே போட்டுக்கிட்ட வறைமுறைகள்... சிறிய சிறிய முடிச்சுகள்தான் நேற்று, இன்று, நாளை..."

"பிரபஞ்சத்துல 'காலத்துக்கு' எல்லைகள் இல்லை. இந்த உடலுக்குள்ள அடைஞ்சுக்கிடக்கற ஆத்மாக்களின் அனுபவங்களுக்கும் எல்லைகள் இல்லை சுகன்யா... இதெல்லாமே ஒரு வட்டத்துல இயங்குது... வட்டத்துல எந்தப் புள்ளி ஆரம்பம்...? எந்தப் புள்ளி முடிவு...?" சம்பத் சுகன்யாவின் வலது கையை ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டான்.

"அத்தான்... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..."

"கொஞ்ச நாளா நான் நல்லசிவங்கறவரை என் அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்... ராணிங்கறவங்க என் அம்மா... அவங்க ரெண்டு பேரும் என்னை தன் பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.. ஆனால், எத்தனை அம்மாக்கள் எனக்கு? எத்தனை அப்பாக்கள் இந்த சம்பத் குமாரனுக்கு...??? இவன் இதுவரை எத்தனை பிறவிகள் எடுத்திருப்பான்? இவனுக்குத்தான் எத்தனை காதலிகள், எத்தனை மனைவிகள் இருந்திருப்பாங்க..? இந்த சம்பத்துக்கு இந்த கணக்குகள் எதுவும் நினைவுல இல்லே..."

"அத்த்தான்..."

"இவன் மனசுக்கு இன்னும் திருப்தி வரலே... இவன் மனசு இன்னும் பெண்ணோட அன்புக்காக, பரிசுத்தமான ஒரு பெண்ணின் அன்புக்காக, அலையுது.. இவன் இப்ப சுகன்யாங்கற பெண்ணின் அன்பை, மனசை ஆசைப்படறான்... இது சரியா தவறா? இது அவனுக்கே தெரியலை..." சம்பத் பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான். குரலில் விரக்தி தொனிக்க நீளமாக ஒரு முறைச் சிரித்தான். சுகன்யா மவுனமாக அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

"சுகன்யா... கடைசியா ஒரு நிமிஷம்... லெட் மி ஸ்பீக்...ப்ளீஸ்.." சம்பத் புன்னகைத்தான்.

"ம்ம்ம்.. சொல்லுங்க அத்தான்... நீங்க இப்ப பேசறதை கேக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு..." 

"காரணமேயில்லாமல் இந்த உலகத்துல, ரெண்டு பேர் ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கறது இல்லை. நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சதுல நிச்சயமா ஒரு அர்த்தம் இருக்கு"

"சுகன்யா, உன் கிட்ட என் காதலை சொல்லும் போதே, அதுக்கு உன்னுடைய பதில் என்னவாயிருக்கும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்" 

"என்னோட பதில் உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்காதுன்னு தெரிஞ்சும் என் கிட்ட உன் காதலை சொன்னீங்க; என்னோட மறுப்பை என் வாயால சொல்ல வைச்சு, அதை கேக்கறதுல உங்களுக்கு என்ன சந்தோஷம், சம்பத்?"

"என்னோட காதலை வலுப்படுத்திக்கத்தான்... சுகன்யா?"

"எனக்குப் புரியலை சம்பத்..."

"சுகன்யா... நீ கடல்... நான் ஒரு நதி... நதியின் இயற்கை நியதி கடலில் சென்று சேருவது. இன்னைக்கு இல்லன்னாலும், நாளை, நாளை மறுநாள், அடுத்த ஜென்மத்தில், அதுக்கும் அடுத்த ஜென்மத்தில்ன்னு, உன்னை நான் தேடிக்கிட்டு வந்துடுவேன்."

"ம்ம்ம்..." 

"என் பேரு அப்ப 'சம்பத்' ஆக இருக்காது... உன் பேரும் சுகன்யான்னு இல்லாம சுகந்தின்னு இருக்கலாம்.. வசந்தின்னு இருக்கலாம்... நாமமோ, ரூபமோ முக்கியமில்லை. மனம் தான் முக்கியம். நான் யார்? என்னுடைய இந்த உடலா? நீ யார்? உன்னுடைய இந்த வசீகரமான உடலா? இந்த உடல்கள் எத்தனை எத்தனை பெயர்களை இதற்கு முன் சுமந்து இருக்கின்றன. இன்னும் எத்தனை எத்தனை பெயர்களை சுமக்கப் போகின்றன? ஆனா நான் உன்னையும், நீ என்னையும் நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்வோம்... நீயும் நானும் நிச்சயமாக ஒன்று சேருவோம்... எனக்கு இதுல எந்த சந்தேகமும் இல்லை.. சுகா.." 

"அத்தான்... நீங்க எவ்வளவு புத்திசாலித்தனமா வாழ்க்கையின் உண்மைகளைத் தெளிவா பேசறீங்க... இது வரைக்கும் சுயக்கட்டுப்பாடே இல்லாத ஒரு வாழ்க்கையை நீங்களா வாழ்ந்து இருக்கீங்க? என்னால நம்பவே முடியலே... சம்பத்!!" சுகன்யா ஒருவித பிரமிப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 

"சுகன்யா... திரும்பவும் தப்பான எந்த ஒரு காரியத்தையும் செய்து உன் காதலை அடைய நான் முயற்சி செய்ய மாட்டேன்..." புன்னகைத்தான் சம்பத். 

"சரி... அதுக்காக இந்த ஜென்மத்துல நீங்க எந்த பெண்ணையும் தொடமாட்டேன்... யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறது எந்த விதத்துல நியாயம்..?" சுகன்யா அவன் பேசுவதில் குறுக்கிட்டாள். அவள் குரல் இலேசாக தழுதழுத்தது. 

"சுகன்யா, சில சமயங்கள்ல நாம மாம்பழத்தை திண்ணுட்டு, கொட்டையை நல்லா சப்பிட்டு, வீட்டுக்கு பின்னாடி குப்பையிலத் தூக்கி எறியறோம். அதுக்கப்புறம் அதை மறந்து போயிடறோம். கொஞ்ச காலம் கழிச்சி, பேய்ஞ்ச மழையில, காய்ஞ்ச வெயில்லே, அந்தக் கொட்டையிலேருந்து சின்னதா துளிர்கள் விட்டு, குப்பை மேட்டுல ஒரு மாஞ்செடி முளைச்சு, காத்துல ஆடும்..."

"அந்த செடியோட தாமிர வண்ண இலைகள், இளம் வெயில்லே நனைஞ்சு தக தகன்னு மின்னும். பாக்கறவன் மனசு அப்டியே குளுந்துப் போயுடும். பாக்கறவன் பிரமிச்சுப் போய் நிப்பான். அந்த மகிழ்ச்சியை அவன் ஒருத்தனாலத்தான் அனுபவிக்க முடியும்... பேச்சால சொல்ல முடியாது... எழுத்துல எழுத முடியாது... நான் என் காதலோட அழகை அப்படித்தான் பாத்து ரசிக்க விரும்பறேன்.."

ஒரு மணி நேரத்துக்கும் மேலே உன் கூட நான் தனியா இருந்தேன். உன் கூட இருந்த இந்த தருணங்கள் என் மனசுக்குள், எப்பவும், எனக்கு, சுகமா இனிச்சுக்கிட்டே இருக்கும். சம்பத் பேசுவதை கேட்ட சுகன்யாவின் முகத்திலிருந்த பிரமிப்பு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது. 

***

"தாத்தா... உங்கப் பேத்தியை பத்திரமா வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துட்டேன்..." வீட்டின் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு சுகன்யாவுக்காக தெருவிலேயே காத்திருந்த சிவதாணுவிடம் சிரித்துக்கொண்டே சொன்னான், சம்பத். 



வியப்பிலும், பெருமிதத்திலும் மூழ்கிப் போய் சிலையாக வீட்டு வாசலில் நின்றாள், சுகன்யா. அவன் பேச்சு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


"சிவ... சிவா...!! நான் சொன்னதை சீரியஸா எடுத்திக்கிட்டியாடா? நல்லப் புள்ளைடா நீ.... டேய்... சம்பத்து... நீ நல்லசிவத்துக்கு பொறந்த புள்ளைடா... நல்லசிவத்தை எனக்கு நல்லாத் தெரியும்டா..." சிவதாணு வெள்ளையாக சிரித்தார்.

"பை... சீ யூ... சுகன்யா..." சுகன்யாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான், சம்பத். அவள் கையை பிடித்து அழுத்தமாக ஒருமுறை குலுக்கியவன் அவளைத் திரும்பி பார்க்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

"பை... பை அத்தான்..." மெல்ல முனகிய சுகன்யா, தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை, துடைத்துக்கொண்டு, அவன் போவதையே மவுனமாக பார்த்துக்கொண்டு நின்றாள். 


சுகன்யா... 64

"ப்ளீஸ்... சுகன்யா... ரெண்டு நிமிஷம் உக்காரேன்..." சம்பத்தின் குரலில் லேசான நடுக்கமிருந்த போதிலும், அவன் குரலில் இருந்த ஆளுமையை மீற முடியாமல் சுகன்யா தன் கையிலிருந்த காலி கப்பை பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் வீசிவிட்டு, அவனருகில் வந்து உட்க்கார்ந்தாள்.

"சுகன்யா... உன் அன்புக்கோ, பாசத்துக்கோ நான் சுத்தமா லாயக்கில்லதவன். இது எனக்கு நல்லாத் தெரியும்... ஆனா இந்த நிமிஷம், உன் கிட்ட முழு மனசோட நான் மன்னிப்பு கேட்கிறேன்..." சுகன்யாவின் கைகளை சட்டென சம்பத் பற்றிக்கொண்டான். சீரியஸாக பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அவன் குரலில் இருந்த வறட்சியிலும், கரகரப்பிலும் அவளுக்குப் புரிந்தது.

"ம்ம்ம்..." முனகினாள் அவள்.



சம்பத் பேசிய பேச்சின் அர்த்தம் சுகன்யாவுக்கு முழுமையாகப் புரியவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், சுகன்யா அவன் முகத்தையே மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் சற்று நேரம் முன்வரை கொப்பளித்துக் கொண்டிருந்த இனிய புன்னகை மட்டும் மெல்ல மெல்ல காணாமல் போனது.

"சுகன்யா... நீ என்னை மனசார மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லும்மா... அப்பத்தான் நான் இன்னைக்கு நிம்மதியா பெங்களூருக்குப் போக முடியும்... இல்லேன்னா என் மனசுக்குள்ள இருக்கிற குற்ற உணர்ச்சி என்னை மொத்தமா திண்ணு தீத்துடும்..."

"நீங்க பேசறது எதுவுமே எனக்கு நிஜமா புரியலை... நீங்க பண்ண தப்பு என்ன? நான் எதுக்கு உங்களை மன்னிக்கணும்?" சுகன்யா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.

"நாலு நாள் முன்னாடி, நான் உன் நிச்சயதார்த்தத்தையே நிறுத்தப் பாத்தேன். உன்னையும் செல்வாவையும் அழவெச்சு பாக்கணும்ன்னு நெனைச்சேன். நானும் நீயும் எட்டு வருஷமா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கறோம்ன்னு பொய் சொன்னேன்... 'எங்க நடுவுலே நீ எங்கடா வந்தேன்னு?' செல்வாகிட்ட உன்னைப்பத்தி தப்புத்தப்பா, தாறுமாறா அவதூறு பேசினேன்."

"என்ன சொல்றீங்க சம்பத்..?" அவள் உதடுகள் முணுமுணுத்தன. இவன் என்ன சொல்றான்...? தன் மனதுக்குள்ளும் அலறினாள், சுகன்யா. அவள் குரலில் ஆச்சரியம், கோபம், குழப்பம், என பலவிதமான உணர்ச்சிகள் மொத்தமாக கலந்து கட்டி வெளி வந்தன.

"உங்க தாத்தா வீட்டுல உன்னை நான் பாக்க வந்த போது, என்னை, நீ யார்ன்னு, கதவுக்கு வெளியிலே நிக்க வெச்சேன்னு எனக்கு ரொம்பவே கோவம். நீ செவப்பா, அழகா இருக்கே; நான் கருப்பா இருக்கேன்.. அதனாலத்தான் நீ என் கையை பிடிச்சி குலுக்கலேங்கறங்கற, அர்த்தமில்லாத, சீற்றம், ஏமாத்தம், அதிர்ச்சி எனக்கு..."

"அத்தான்... நிஜமாவே நீங்க என்னைத் தப்பாத்தான் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க...?"

"நான் உனக்கு உறவுங்கறதையும் நீ பொருட்படுத்தாம, என் கிட்ட சாதாரணமாகூட பேசாம, என்னை மொத்தமா உதாசீனம் பண்ணிட்டு, உன் ரூமுக்குள்ள போயி, நீ கதவை என் மூஞ்சியிலே அடிச்சு மூடினேன்னு, உன் மேல எனக்கு அடக்கமுடியாத கோவம்..."

"சம்பத்... அன்னைக்கு தாத்தா வீட்டுல நடந்த விஷயங்களை நீங்க சரியா புரிஞ்சிக்கலைன்னு நான் நெனைக்கிறேன்.."

"உன்னைப் பாக்க வந்த என்னை, நீ அவமரியாதை பண்ணேன்னு நான் நெனைச்சேன்; அதுக்காக உன்னை பழிவாங்கணும்ன்னு அந்த இடத்துலேயே முடிவு பண்ணேன்..." சம்பத் தன் குரல் குளற, முகத்தில் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்.. வேடிக்கையா இருக்கு நீங்க பேசறது.... தெரிஞ்சோ, தெரியாமலோ உங்களை நான் இப்படி ஃபீல் பண்ண வெச்சதுக்கு, அயாம் சாரி..." சுகன்யாவின் முகம் தொங்கிப் போயிருந்தது.

"சுகா.. நான் அந்த நேரத்துல எதையும் முழுமையா சிந்திக்கல. மனசுக்குள்ள கோவம்.. கோவம்.. கோவம்... அன்னைக்கு மூர்க்கம் மட்டுமே முழுமையா எனக்குள்ள இருந்தது. அதே நேரம் செல்வாவோட போன் வந்தது... அவன் உன் கிட்ட முக்கியமா ஏதோ பேச விரும்பினான். வீட்டு ஹால்லே அந்த நேரத்துல யாருமே இல்லை. நான் அந்த வாய்ப்பை முழுசா யூஸ் பண்ணிக்கிட்டேன்..."

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும், என் செல்வா என்னை 'நிச்சயம்' பண்ண கும்பகோணத்துக்கு வந்தானா? இந்த விஷயம் மல்லிகாவுக்கும், நடராஜனுக்கும் தெரிஞ்சுருக்குமா? சம்பத்தை நான் செல்வாவுக்கு அறிமுகம் பண்ணி வெச்சிருக்கேன்... ஆனா இங்க இருந்தப்ப அவன் என் கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசவேயில்லையே??

எட்டு வருஷம் இவனை நான் காதலிச்சேன்னு சொல்லியிருக்கான்... செல்வா என்னை சந்தேகப்பட்டிருக்கணுமே? எந்த ஒரு ஆம்பளை மனசிலும் சந்தேகம் வரத்தானே செய்யும்? தான் காதலிக்கற பொண்ணைத் தன்னோட ஒருத்தன் இணைச்சுப் பேசினா அது அவனுக்கு அதிர்ச்சியாத்தானே இருக்கும்? சுகன்யாவுக்கு மேற்கொண்டு யோசிப்பதற்கே முடியவில்லை. அவளுக்குத் தன் கண்கள் இருளுவது போலிருந்தது. சம்பத்தை பளாரென அறையலாமா என்ற எண்ணம் வேகமாக அவள் மனதுக்குள் எழுந்தது.

நான் சென்னைக்கு போனதும், நிச்சயமா செல்வா இந்த விஷயத்தைப்பத்தி என் கிட்ட கேப்பானே... நான் அவனுக்கு என்ன பதில் சொல்றது.? சம்பத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாதுன்னு அவனுக்கு எப்படி புரிய வெக்கறது? செல்வா எந்த விஷயத்திலும் சுலபமா குழம்பி போறவன். இந்த விஷயத்துல கேக்கவே வேண்டாம். அவன் நிச்சயமா குழம்பி போயிருப்பான். ஆனா இங்க வந்தப்ப ரொம்பத் தெளிவா இருந்தானே? சந்தோஷமா பேசினானே? ஆசையா என் விரல்லே மோதிரம் போட்டானே? திருட்டுத்தனமா என் ரூமுக்குள்ள நுழைஞ்சு, உரிமையா என்னை கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்துட்டுப் போனானே?

செல்வாவுக்கு ஒரு விஷயம், அதுவும் இதுமாதிரியான தப்பான விஷயம் ஒரு தெரிஞ்சிருக்குன்னா, அது சீனுவுக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்... சீனு, செல்வா வீட்டுல பிறக்காத பிள்ளை. தன் பர்சனல் விஷயங்களை மனசு விட்டு கலந்து பேசறதுக்கு சீனுவைத் தவிர செல்வாவுக்கு வேற யாரும் நெருங்கிய சினேகிதர்கள் கிடையாதே? அவங்க ரெண்டு பேருக்குள்ளவும், ஒளிவு மறைவே கிடையாதே? இந்த விஷயத்தை நிச்சயமா செல்வா சீனு கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருக்கணும். ஆனா சீனுவும் என் கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லையே?

யெஸ்... ஐ காட் இட்... செல்வா குழம்பியிருந்தாலும், நிச்சயமா சீனுதான், அவன் தலையில ரெண்டு தட்டு தட்டி, இங்க வாடான்னு இழுத்துக்கிட்டு வந்திருக்கணும்... " சுகன்யாவுக்கு இதை நினைக்கும் போதே மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அவள் முகம் மெள்ள மெள்ள கருத்துக்கொண்டிருந்தது. 

"சுகன்யா... உனக்கு ஆப்பு வெச்சவனை, உன் அத்தான்னு சொல்லி, முறைப்படி நீ செல்வாவுக்கு என்னை அறிமுகப்படுத்தினே? வெள்ளை மனசோட என் கையைப் பிடிச்சு அவன் எதிரிலேயே குலுக்கினே..! அன்னைக்கு உனக்கு உடம்பு சரியில்லே, அதனாலதான் நீ என் கிட்ட சரியா பேசலைன்னு எனக்கு விளக்கம் சொல்லி, எல்லார் எதிரிலேயும் என் கிட்டே ஸாரி சொன்னே..!!" உணர்ச்சி வசப்பட்ட சம்பத்தின் கண்கள் கலங்கத் தொடங்கின... அவனால் கோர்வையாகப் பேசமுடியாமல் தவித்தான்.

சுகன்யா... சம்பத்தை அறையணும்ன்னு உனக்கு தோணினது உண்மைதான். ஆனா இவன் உண்மையைச் சொல்லி அழறதை பாக்கும்போது... இவன்தான் முட்டாள்தனமா ஒரு தப்பு பண்ணா, அதுக்காக நீ ஏன் உன் தரத்தை தாழ்த்திக்கணும்? சுகன்யாவின் மனசு வேகமாக அவளுக்குள் பேசியது. சுகன்யா நீ அவன் சொல்றதை முழுசா, பொறுமையா கேளு. சட்டுன்னு கோபப்பட்டு நீ உன் வாழ்க்கையை சிக்கலாக்கிக்காதே. ஏற்கனவே ஒரு தரம் நீ செல்வாகிட்ட இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம எரிச்சல்பட்டு, அவன் உறவே வேணாம்ன்னு ஓடியிருக்கே. இப்பத்தான் அந்த சிக்கல் சரியாகி இருக்கு. திரும்பவும் சட்டுன்னு பொறுமையை இழந்து உன் காதல் வாழ்க்கையில, திருமண வாழ்க்கையில, மீண்டும் எந்த குழப்பத்தையும் உண்டு பண்ணிக்காதே? அவள் மனம் அவளை எச்சரித்தது.

"ப்ளீஸ்... சம்பத்... என்னை நீங்க சரியா புரிஞ்சுக்காம, ஏதோ தப்பு நடந்து போச்சு... அதுக்காக நீங்க உணர்ச்சி வசப்படாதீங்க... இப்ப அழாதீங்க நீங்க..." சுகன்யா அவன் கையை மெல்ல வருடினாள்.

"சுகா.. அன்னைக்கு நீ எந்த வித்தியாசமும் பார்க்காம, என் கிட்ட பாசமா, அன்பா பழகினே.. பழகிக்கிட்டு இருக்கே; என்னை நம்பி தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கே; உன் நடத்தையால, வெள்ளை மனசால, ஒரே ஸ்ட்ரோக்ல என்னை.. என் திமிரை.. என் அகம்பாவத்தை... என் அகங்காரத்தை சுக்கு நூறா நீ ஒடைச்சு எறிஞ்சிட்டே... அன்னைக்கு நான் வெக்கத்தால தலை குனிஞ்சு உன் முன்னாடி நின்னேன்.. இப்பவும் நிக்கறேன்..."

"அத்தான்... போதும்... நீங்க இதுக்கு மேல எதையும் சொல்லாதீங்க ப்ளீஸ்... எனக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு" சுகன்யா தன் தலையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.. சம்பத் அழுவதையும் அவளால் நேராகப் பார்க்கமுடியவில்லை. என்னமாதிரி ஒரு இக்கட்டுல மாட்டிக்கிட்டு இருக்கேன் நான்? அவனைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்து அவள் தன் தலையை குனிந்து கொண்டாள்.

"அத்தான்.. அத்தான்னு நீ என்னை, நமக்குள்ள இருக்கற உறவை முதன்மைப்படுத்தி அழைக்கறப்ப, என் ஒடம்பு சிலுத்துப் போவுது. நீ என்னை செருப்பால அடிக்கற மாதிரி இருக்கு... இப்படிப்பட்ட பொண்ணையா நான் பழிவாங்க நெனைச்சேனேன்னு நான் என் உள்ளுக்குள்ள எரிஞ்சு போறேன்..." புலம்பிக்கொண்டிருந்தான், சம்பத்.

"சம்பத்... ம்ம்ம்.. அத்தான்..." சுகன்யாவும் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் திணறினாள்.

"சுகன்யா, என் வாழ்க்கையில, பணத்தால எதையும் வாங்கிடமுடியும்ன்னு நம்பறவன் நான்; பணத்தால ஒரு பெண்ணுடலை சுலபமா அடையலாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தவன் நான்; என் கட்டான உடலால எவளையும் எளிதா வசியம் பண்ணிடலாம்ன்னு நினைக்கறவன் நான்.."

"ப்ச்ச்...ப்ச்ச்ச்"

"ப்ராண்டட் ட்ரெஸ் போடறதுனால, லேட்டஸ்ட் மொபைல் இருந்தா போதும், ஈஸியா இளம் பெண்களை சட்டுன்னு கவர்ந்துடலாம்ன்னு, அழகான ஃபிகர்களை கரெக்ட் பண்ணிடலாம்ன்னு, மனக்கோட்டை கட்டிக்கிட்டு, பைக்ல சுத்தி சுத்தி வந்தவன் நான்; என் அகங்காரத்துக்கு ஒரு எல்லையே இல்லாம வாழ்ந்தவன் நான்... ஆனா..." பேசுவதை ஒரு வினாடி நிறுத்தினான், சம்பத்.

"ப்ளீஸ்... அத்தான்... நீங்க எதுவும் சொல்லவேண்டாம்... உங்க மனசு எனக்கு நல்லாப் புரியுது..." சுகன்யா அவன் வலது தோளைத் தன் கையால் மென்மையாக வருடினாள்.

"சுகன்யா நான் ஒரு உண்மையைச் சொல்லித்தான் ஆகனும்.. அன்னைக்கு, சிவதாணு தாத்தா வீட்டுல, நான் உன்னை முதல் தரம் பாக்க வந்தப்ப, உன் உடம்பு மேல விழுந்த என்னோட அசிங்கமான பார்வையை சகிச்சிக்க முடியாம, நீ உன் மூஞ்சை திருப்பிக்கிட்டு உள்ளே போனேயே, அந்த நொடியில என் அகங்காரத்துக்கு மொதல் அடி விழுந்தது.”

“அத்தான்... போதும்.. நிறுத்துங்கன்னு சொல்றேன் நான்?” சுகன்யாவுக்கு மனதுக்குள் இலேசாக ஒரு இனம் தெரியாத பயம் எழுந்தது.

“அதுக்கப்புறம், நீ என்னை உன் அத்தான்னு, செல்வாகிட்ட அறிமுகம் பண்ணப்ப, நான் அவனை தப்பா பேசினது எதையுமே தன் மனசுல வெச்சுக்காம, சிரிச்சுக்கிட்டே செல்வா, என் கையைப்பிடிச்சு குலுக்கினப்ப, என் தலைமேல இன்னொரு பலமான அடி விழுந்தது... என் அகங்காரத்து மேல விழுந்த ரெண்டாவது அடி அது..”

"ப்ச்ச்ச்...ப்ச்ச்ச்.." சுகன்யா அவளையும் அறியாமல் பச்சாதாபத்துடன் சூள் கொட்டிக்கொண்டிருந்தாள்

“உன்னை மாதிரி ஒரு பெண்ணோட மனசை என்னை மாதிரி அயோக்கியனால, மளிகை சாமான் வாங்கற மாதிரி, வெலை கொடுத்து வாங்கமுடியாதுங்கறது, இந்த ரெண்டு மூணு நாள்ல எனக்கு நல்லாப் புரிஞ்சுப்போச்சு...."

"இப்ப எதுக்கு நீங்க இந்த அளவுக்கு ஃபீல் பண்றீங்கன்னு எனக்குத் தெரியலை...?" சுகன்யா அவள் உட்க்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து நின்றாள். தனது இடமும் வலமும் ஒரு முறைப் பார்த்தாள்.

சம்பத்தின் குரல் தழுதழுத்தது. அவன் குரலில் இருந்த தழதழப்பை உணர்ந்த சுகன்யா ஒரு கணம் ஆடிப்போனாள். நின்றிருந்த இடத்திலிருந்தே, அவள் தன் ஓரக்கண்ணால் அவனை நோக்கினாள். கண்கள் குளமாகி, கன்னங்கள் கோணிக்கொண்டு, மூக்கு நுனி துடிக்க, பேசமுடியாமல், விசும்பிக்கொண்டு, உட்கார்ந்திருந்தான், சம்பத்.

"சம்பத்... இப்ப எதுக்காக நீங்க இப்படி உணர்ச்சி வசப்படறீங்க? நான் சொல்றதை கேளுங்க... அத்தான்... ப்ளீஸ்... கூல் டவுன்..."

சுகன்யாவை நான் பழிவாங்க நினைசேன்; செல்வாவை, அவளுக்கு எதிராக உசுப்பினேன்.. இதெல்லாம் தெரிஞ்சப் பின்னும், இவ என்னை 'அத்தான்னு' 'அத்தான்னு' கூப்பிடறாளே...? சம்பத் உள்ளத்தில் வெட்கினான். அவன் உடல் குன்றிப் போனது. அவன் உடல் சிலிர்த்து நடுங்கினான். 



"சுகன்யா... நீ ஒரு மனுஷனடான்னு, கோபமா ஒரு தரம் என்னை திட்டேன்?" சுகன்யாவிடம் முறையிட்டான், சம்பத்.

"ஏனோ தெரியலை... ஐ ஸ்வேர்... உங்க மேல எனக்கு கோவமே வரலை... அத்தான்... உங்களைத் திருப்தி படுத்தணுங்கறதுக்காக இப்படி நான் பேசலை... என்னை நீங்க நம்புங்க... உங்க மனசுல இருக்கற குற்ற உணர்ச்சியை தயவு செய்து சுத்தமா இப்பவே, இங்கேயே, தொடைச்சி தூரப்போடுங்க..." சம்பத்தின் தோளை ஆதுரமாக சுகன்யா தட்டிக்கொடுத்தாள்.

"தேங்க்ஸ் சுகன்யா..." கண்களைத் துடைத்துக்கொண்ட சம்பத்தின் பார்வை வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் நிலைத்து நின்றிருந்தது. சில வினாடிகள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தவன், மெல்ல திரும்பி சுகன்யாவைப் பார்த்தான். அவள் வலது கையை தன் கையால் பற்றிக்கொண்டான். அவள் முகத்தை ஏக்கத்துடன் ஒரு நொடி பார்த்தான். தன் மனதில் சுகன்யாவிடம் தனக்குள் தோன்றியிருக்கும் காதலை சொல்லிவிட அவன் முடிவெடுத்தான்.

‘சுகன்யா... ஐ லவ் யூ..” சம்பத் மெல்ல தன் மனதை அவளுக்குத் திறந்து காட்டினான்.

“அத்தான்... என்ன சொல்றீங்க நீங்க...!!?? என் தலை மேல இப்படி ஒரு குண்டைத் தூக்கி ஏன் போடறீங்க...? இந்த அதிர்ச்சியை என்னாலத் தாங்க முடியலே..! சுகன்யா பதட்டத்துடன் கூவினாள். தன் வாயடைத்துப் போய், பேச்சு மூச்சில்லாமல், ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்த சுகன்யா, மேலும் ஏதோ சொல்ல நினைத்து வாயைத் திறந்த போதிலும், அவள் குரல் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டு வெளியில் முழுமையாக வரவில்லை.

"நிஜம்மாத்தான் சொல்றேன் சுகன்யா... என் மனசு உன்னை நேசிக்க ஆரம்பிச்சிடிச்சி.." சுகன்யாவின் முகத்தை சம்பத் கண்ணிமைக்கால் பார்த்துக் கொண்டிருந்தான். சுகன்யாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் அவன் மெல்லிய குரலில் மேலும் பேச ஆரம்பித்தான்.

"அயாம் வெரி ஹாப்பி சுகன்யா..."

இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது? இவனுக்கு எப்படி என் மன நிலைமையை புரிய வெக்கறது?" சுகன்யா கடமைக்காக அவனுக்கு "ம்ம்ம்...' என பதிலளித்த போதிலும், அவள் மனசுக்குள் வெகுவாக குழம்பி போயிருந்தாள்.

"சுகா.. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் மனசு ரொம்ப ரொம்ப இலேசா இருக்கு. என் கிட்ட அன்போட பேசற, உரிமையோட என் மனசை புரிஞ்சுக்கிட்டு பேசற, அழகான ஒரு இளம் பொண்ணோடு உக்காந்து இருக்கறதே எவ்வளவு பெரிய சுகங்கறது எனக்கு இப்பத்தான் புரியுது!!" சுகன்யாவிடம் தான் செய்த தவறை சொல்லி மன்னிப்பு கேட்ட பின், தன் மனதிலிருக்கும் காதலை அவளிடம் சொல்லிய பின், தன் மனது இலவாகியிருக்க சம்பத் குரலில் பதட்டமில்லாமல் பேசிக்கொண்டு போனான்.

"அத்தான்.. உங்களுக்கு என்ன கொறை? நீங்க எந்தவிதத்துல யாருக்கு கொறைச்சல்...? நான் கருப்பா இருக்கேன்னு நீங்க ஏன் இப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மையோட இருக்கீங்க.? நிறையப் படிச்சு, நல்ல வேலையில இருக்கற நீங்க இப்படி ஒரு எண்ணத்தை உங்க மனசுக்குள்ள வெச்சிருக்கலாமா...? அதை மொதல்ல விடுங்க...!!" சுகன்யா அவனிடம் ஆதரவாக அவன் மனதுக்கு இதமாகப் பேசினாள்.

"தேங்க் யூ சுகன்யா..."

"என்னைப் போய் நீங்க அழகுன்னு சொல்றீங்க... உண்மையைச் சொல்லப்போனா, என்னைவிட அழகா, என்னைவிட அதிகமா படிச்சு, என்னை விட அதிகமா சம்பாதிக்கற பொண்ணுங்க, நல்லப் புத்திசாலித்தனம் உள்ள பொண்ணுங்க, இந்த ஊர்லேயே எவ்வளவோ பேரு இருக்காங்க.. அவ்வளவு ஏன்..? நம்ம சொந்த பந்தத்திலேயே நல்லப் பொண்ணுங்க இருக்காங்க..." சுகன்யா நிதானமாக, அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"பீளீஸ்.. சுகா, அவங்க யாருமே... என்னைக்குமே என்னோட மனசுக்கு பிடிச்ச 'சுகன்யா'வா ஆக முடியாது... இதை நீ புரிஞ்சுக்கணும்."

கரகரப்பாக வந்த சம்பத்தின் குரலில் போலி என்பது எள்ளளவும் இல்லை. பாசாங்கு சுத்தமாக இல்லை. உண்மையை அவன் பேசிக்கொண்டிருந்தான் என்பது அவன் கண்களில் தெரிந்தது. அவன் குரலில் ஒரு தீர்மானம், முழுமையான உறுதி இருந்தது.

"ம்ம்ம்..." இதற்கு மேல் அவனிடம் என்னப் பேசுவது என்று தெரியாமல் திகைத்தாள், சுகன்யா.

"சுகா, நீ என்னை காதலிக்க முடியாதுன்னு சொல்லு... என்னால அதை தாங்கிக்க முடியும்... செல்வாவை நான் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்... எங்களுக்கு நிச்சயம் பண்ணியாச்சு.. இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சும் என் கிட்ட நீ எப்படி இந்த மாதிரி 'ஐ லவ் யூ' ன்னு ஃப்ரப்போஸ் பண்ணலாம்ன்னு என் கன்னத்துல ஓங்கி ஒரு அறை விடு... என்னால அதை தாங்கிக்க முடியும்..."

"சம்பத்... பிளீஸ்... சம்பத்.. என் மனசையும், என் நிலைமையையும் நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க... அது போதும் எனக்கு... நான் எதுக்கு உங்களை அறையணும்? இப்படியெல்லாம் நீங்க பேசாதீங்க... என் மனசை புண்படுத்தாதீங்க..."

"சுகா, ப்ளீஸ் ... நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. நீ தயவு செய்து எந்த பொண்ணையும் எனக்கு சிபாரிசு பண்ணாதே.. அதை மட்டும் என்னாலத் தாங்கிக்கமுடியாது..." சம்பத் தீவிரமான ஒரு பார்வையை அவள் மேல் எறிந்தான்.

"சம்பத்... போதும்... போதும்.. நீங்க அர்த்தமில்லாம பேசறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா?" சுகன்யாவும் தன் குரலில் சற்றே கடுமையைக் கூட்டினாள்.

"ப்ளீஸ்... சுகா... உன் நிலைமை எனக்கு நல்லாப் புரியுது... ஆனா இன்னைக்கு ஒரு நாள் நீ என்னை பேசவிடு..." சம்பத் அவளிடம் கெஞ்சினான்.

"என் நிலைமை புரிஞ்சி இருக்கும் போது இப்படியெல்லாம் நீங்க ஏன் என் கிட்ட பேசறீங்க..?" சுகன்யாவின் குரலிலும் சிறிது கெஞ்சல் வந்திருந்தது.

என்னை காதலிக்கறேன்னு சொல்லி ஒரே நிமிஷத்துல இவன் என்னை கலங்க அடிச்சுட்டானே? இவன் பாம்பா? இல்லை பழுதையா? இவனுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா...? இப்ப இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது...? இப்பத்தான் எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சு ஒரு வழியா என் கல்யாண விஷயம் செட்டில் ஆச்சுன்னு திருப்தியா இருந்தேன்.

இவன் என்னடான்னா அமைதியா இருந்த என் மனசுங்கற குளத்துல 'ஐ லவ் யூன்னு சொல்லி' ஒரு பெரிய பாறாங்ககல்லைத் தூக்கி போட்டு, வீனா ஒரு புயலை உண்டாக்கி, என் மனசு நிம்மதியை கொலைச்சுட்டானே...? இப்ப இந்த சிச்சுவேஷன்ல இவனை நான் எப்படி டீல் பண்ணணும்.. சட்டுன்னு எழுந்தும் போயிட முடியாது..

நோ... நோ சுகன்யா... அது ரொம்பத் தப்பு... இவன் மனசு ஒடைஞ்சு போயிருக்கான்... இன் ஃபேக்ட், இவனை ஜாகிங் போவலாம்ன்னு நீதான் கூப்பிட்டுக்கிட்டு வந்தே...சுகன்யாவின் மனது குழம்பியிருந்த போதிலும், நியாயமாக யோசித்தது.

சுகன்யா பொறு... கொஞ்சம் பொறுமையா இரு... இவன் கூட இருந்த நேரம் இருந்துட்டே... அவன் கொஞ்ச நேரம் பேசட்டும்... அவன் மனசுல இருக்கறதை கொட்டித் தீர்க்கட்டும்; அதுக்கு அப்புறம், நீ அவனை எந்த சூழ்நிலையிலும் காதலிக்க முடியாதுங்கறதை, நிதானமா இன்னைக்கே, இப்பவே, புரியவெச்சுடு. 'நோ' ன்னு சொல்றதை எப்பவும் தள்ளிப்போடாதே... அதுவும் இந்த விஷயத்துல தள்ளிப் போடாதே..! ஸ்ட்ரெய்ட்டா நோன்னு சொல்லிடு...

சம்பத், தன் கைகளை ஒன்றுடன் ஒன்றைக் கோர்த்து, விரல்களை வலுவாக நெறித்துக்கொண்டிருந்தான். அவன் பார்வை மண்ணில் நிலைத்திருந்தது. சுகன்யா அவனுக்கு பதிலேதும் சொல்லாமல், அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து, எதிர்த்திசையிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கூட்ஸ் ரயிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

கூட்ஸ் ரெயில், சுவாமிமலை ரெயில்வே நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. அவர்கள் இருவரின் நடுவில் ஒரு இறுக்கமான மவுனம் தொடர்ந்து கொண்டிருந்தது. கூட்ஸ் ரயில், தூர வளைவில் சென்று மறைந்தது. ரயில் நிலையத்தில் மீண்டும் அமைதி.. சம்பத் ஒரு முறை தன் தொண்டையை செருமி கனைத்தான். மெல்ல நிமிர்த்து சுகன்யாவை ஒருமுறைப் பார்த்தான். மெதுவாக பேச ஆரம்பித்தான்.

"சுகன்யா இது வரைக்கும், என் கடந்து போன வாழ்க்கையிலே, நீ சொன்ன மாதிரி, உன்னை விட அழகான பொண்ணுங்க கூட நான் பழகியிருக்கேன்... அவளுங்க கூட ஒடம்புல பொட்டுத் துணியில்லாம என் படுக்கையில நான் உருண்டு பொரண்டு இருக்கேன்... அவளுங்க மேல எனக்கு எப்பவும் காதல் வந்தது இல்லே..."

"...."

இதெல்லாத்தையும் இப்ப எதுக்கு இவன் எங்கிட்ட சொல்றான்? பார்க்குலேருந்து தாத்தா கூடவே நேரா வீட்டுக்குப் போயிருக்கலாம். நான் தான் இவனை ஓடலாமான்னு கூப்பிட்டேன்... இப்ப என்ன பண்ணமுடியும்..? தன் மீதே அவளுக்கு அடக்க முடியாத கோபம் எழுந்தது. வந்தது வந்தாச்சு... வேற வழியில்லே... இவன் தன் மனசுல இருக்கறதை முழுசா சொல்லி முடிச்சிடட்டும். குறுக்க பேசாம இருக்கறது தான் நல்லது... தன் மனதில் முடிவெடுத்தாள், சுகன்யா.

இவன்... ஒருவேளை ஏதாவது மனஅழுத்தத்துல இருக்கானா? இவன் மனநோயாளியா? அந்த மாதிரியும் தெரியலியே? ரொம்பத் தெளிவா பேசறானே? நல்லாப் படிச்சவன், கை நிறைய சம்பாதிக்கறவன்... நான் கருப்பா பொறந்துட்டேன்னு ஏன் இப்படி ஃபீல் பண்றான்? இந்த தாழ்வு மனப்பான்மையினாலத்தான், நல்ல குடும்பத்துல பொறந்த இவன், இப்படி கண்ட பெண்களோட சகவாசம் வெச்சிக்கிட்டு, தன் வாழ்க்கையை பாழடிச்சுக்கிட்டு இருக்கானா?

சீரழிஞ்சு போனவளுங்க துணையில, தன் மனசோட புழுக்கத்தை தொலைக்கறதா நெனைச்சுக்கிட்டு, இவனும் குட்டிச்சுவரா போறானா? இந்த லட்சணத்துல என்னையும் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு வேற பொலம்பறான்.. எனக்கு என்னப் பண்றதுன்னு ஒண்ணும் புரியலியே? சுகன்யாவின் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து கொண்டிருந்தது.

"நான் பழகிய எந்தப் பொண்ணுகிட்டவும், உன்னைக் காதலிக்கறேன்னு எப்பவும் நான் சொன்னதே இல்லே சுகன்யா. ஏன்னா இதுவரைக்கும் நான் யாரையும் காதலிச்சதே இல்லே. அதெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரே ஒரு இரவு மட்டுமே நீடித்த உறவுகள்..."

"ப்ச்ச்ச்... அயாம் சாரி சம்பத்... கேக்கறதுக்கே வருத்தமாயிருக்கு.." சுகன்யா அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். சம்பத்தின் விழிகளில் கண்ணீர் இன்னும் தேங்கியிருந்தது.

"சுகன்யா... உன் மேல ஏற்பட்டிருக்கற இந்த உணர்வு, இதுக்குப் பேருதான் காதல்ன்னு சொன்னா, சத்தியமா சொல்றேன்... எனக்கு வேற யார் மேலேயும் இந்த உணர்ச்சி இதுவரைக்கும் வந்ததே இல்லே.. இதை மட்டும் நீ நல்லாப் புரிஞ்சுக்கோ..." தன் கண்களில் தளும்பிக்கொண்டிருந்த கண்ணீரை அவன் துடைத்துக்கொண்டான்.

"ம்ம்ம்..."

"உங்கிட்ட என் உள்ளத்துல இருக்கற உணர்ச்சியை, உன் மேல எனக்குள்ள வளர்ந்துகிட்டு இருக்கற இந்த உண்மையான உணர்ச்சியை, என் காதலை, உன்னிடம் வெளிப்படையா நான் சொன்னது தப்புன்னு நீ நெனைச்சா, அதுக்கு என்ன தண்டனை வேணா குடு.. நான் ஏத்துக்கறேன்.. ஆனா திரும்பவும் வேற எவளைப் பத்தியும் நீ எங்கிட்ட பேசாதே... பிளீஸ் சுகன்யா.. " அவன் குரல் மீண்டும் தழுதழுக்கத் தொடங்கியது.

சுகன்யா மொத்தமாக தனக்குள்ளே அந்த நொடியில் உடைந்தாள். இந்த அளவிற்கு இவன் என்னைக் காதலிக்கறானா? ஒரே நாள்ல, ஒரு ஆணால், ஒரு பெண்ணை இந்த அளவுக்கு ஆழமாக, உள்ள பூர்வமாக காதலிக்க முடியுமா? ஷுட் ஐ பீ ப்ரவுட் ஆஃப் திஸ்? அவள் ஒரு நொடி மனதுக்குள் திகைத்தாள்.

என் வாழ்க்கையிலே, என்னை மனசாரக் காதலிக்கறேன்னு எங்கிட்ட சொன்ன ரெண்டாவது வாலிபன் இவன். நோ டவுட்.. ஹீ ஈஸ் ஹேண்ட்சம்... ஹீ கேன் அட்ராக்ட் எனி வுமன் ஆஃப் மை ஏஜ்... தப்பை தப்புன்னு ஒத்துக்கற தைரியம் இருக்கற வாலிபன். உள்ளத்துல இருக்கறதை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்து தைரியமா சொல்லக் கூடிய வாலிபன் இவன்... இவனுக்கு இப்ப நான் என்ன பதில் சொல்றது? தன் உணர்ச்சிகளிலிருந்து சட்டென்று மீள முடியாமல் தவித்தாள், சுகன்யா.

"அத்தான்... உங்க உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முடியாத கல்லு இல்லே நான்... நானும் ஒருத்தனை காதலிச்சவதான்... காதல்ங்கற உணர்ச்சிகளால அலைக் கழிக்கப்பட்டவதான்... உண்மையான காதல்ங்கறது என்னன்னு எனக்கும் தெரியும்..."

"தேங்க் யூ சுகன்யா... நீ என்னை எங்கே மூளை கொழம்பிய பைத்தியக்காரன்னு நெனைச்சிடுவியோன்னு பயந்துகிட்டு இருந்தேன்..."

"அத்தான்.. நான் செல்வாவை ஆறுமாசமா காதலிச்சுக்கிட்டு இருக்கேன்.. நான் இன்னும் அவனை முழுசா புரிஞ்சுக்கலே.. அதுவும் உண்மைதான்.. ஆனா அவன் மேல நான் என் உசுரையே வெச்சிருக்கேன்... திரும்பவும் வேற யாரையும் என்னால காதலிக்க முடியாது... இது முன்னே நான் சொன்னதை விட பெரிய உண்மை... அவனும் அப்படித்தான்.. அவன் கூட எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி... நீங்களும் அந்த பங்ஷனுக்கு வந்து எங்களை வாழ்த்தினீங்க; உங்க காதல் உண்மையாகவே இருந்தாலும், நீங்க என்னை உண்மையா, உசுரா நேசிச்சாலும், இப்ப உங்களையும் என்னால எப்படி காதலிக்க முடியும்...?"

"அயாம் சாரி சுகன்யா... உன் மனசை கொழப்பணுங்கறது என்னோட நோக்கமில்லே... உன்னை எந்தவிதத்திலும் எமோஷனல் ப்ளாக் மெய்ல் பண்ணணுங்கறது என்னோட விருப்பமில்லே... ஆனா என்னால என் காதலை உன் கிட்ட சொல்லாமவும் இருக்க முடியலே..."



"பின்னே... இப்ப எதுக்காக உங்க மனசை என் கிட்ட தொறந்து காட்டறீங்க...?"

"சுகன்யா... இது என்னோட முதல் காதல்... நான் காதலிச்ச... காதலிக்கற... காதலிக்கப் போற முதல் பெண் நீ... என் காதலை உங்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட நான் சொல்லுவேன்?" சம்பத் உடைந்த குரலில் மெதுவாக பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்... நீங்க பேசறது எப்படி இருக்குன்னா, நல்ல பாட்டை ஒரு கச்சேரியில கேட்டுக்கிட்டு இருக்கறப்ப, பக்கத்துல ஒருத்தன் அந்தப்பாட்டுக்கு, தப்பு தப்பா போடற தாளங்கள் மாதிரியிருக்கு; அவன் தன்னையும் வருத்திக்கறான்; அடுத்தவங்களையும் நிம்மதியா பாட்டை ரசிக்க விடாம வருத்தறான்; இது உங்களுக்கு புரியலையா?" சுகன்யா அவன் மனசை நோக அடிக்க விரும்பாமல் வினயமாக பேசினாள்.

"சுகன்யா நான் உன் நினைவுகளோடு, அந்த நினைவுகளை என் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டு வாழறதுல உனக்கோ, இல்லை உன் செல்வாவுக்கோ, ஏன் இந்த உலகத்துக்கோ என்னப் பிரச்சனை?" தன் உள்ளத்தை திறந்து விட்டதில், தன் காதலை சுகன்யாவிடம் சொல்லிவிட்டதில், இப்போது சம்பத்தின் குரலில் ஒரு தெளிவு பிறந்திருந்தது.


சுகன்யா... 63

என் மாமா சிவதாணு என்னடான்னா, வீட்டுக்குள்ள தன் மருமவ சுந்தரி, இத்தினி வருஷம் கழிச்சி வந்ததே பெரிசுன்னு, வாயைப் பொத்திகிட்டு உக்காந்து இருக்காரு..

'சுகன்யா, உனக்கு புடவை பிடிச்சிருக்காம்மா... செயின் பிடிச்சிருக்காம்மான்னு', நாலு பேரு எதிர்ல எட்டுத்தரம் அந்த மெட்ராஸ்காரி மல்லிகா, கேள்வி மேல கேள்வி வேற கேட்டா? சுகன்யாவும் வெள்ளந்தியா... 'அத்தே... நல்லாருக்கு அத்தேன்னு குழையறா..' அறியாத பொண்ணு.. அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்...

மெட்றாஸ்காரிங்கதானே ரெண்டு பேரும்... நடுக்கூடத்துல உக்காந்துக்கிட்டு, ஆத்தாளும் பொண்ணுமா, நல்லா நடிச்சாளுங்க, ஆக்டிங் குடுக்க சொல்லியாத் தரணும்?

என் வீட்டுக்கு மருமவளா வரவேண்டியவளை, எவளோ ஊர் பேர் தெரியாதவ, இன்னைக்கு கொத்திக்கிட்டுப் போறா... கல்யாணத்துக்கு அப்புறமா சுகன்யாவுக்கு இருக்கற அத்தனை சொத்தையும், மொத்தமா மடியில அள்ளி கட்டிக்கிட்டு வேற போவப் போறா, இதபத்தி சொன்னா என் புருஷனுக்கு என் மேல கோவம் வருது.


சிவதாணு குடும்பமும், எங்க குடும்பமும், ஒண்ணுக்குள்ள ஒண்ணா, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கிட்டவங்க; அவரு எங்களுக்கு ஒண்ணுவிட்டா உறவு மொறையா இருந்தாலும், சொத்துக்கு பங்காளியா இருந்தாலும், மொத்தத்துல, ஒரு காலத்துல, சொத்து எங்க ரெண்டு வீட்டுக்கும் பொதுவான பாட்டன் வீட்டுதுதானே? பொது சொத்தை இப்ப நடுவுல வந்த எவனோல்லா அடிச்சிக்கிட்டுப் போறான்.

என் உரிமையை காத்துல பறக்க வெச்சுட்டான் இந்த குமாரு. நானும் வெக்கம் கெட்டுப் போய் எல்லாத்தையும் நேத்து வேடிக்கை பாத்துக்கிட்டு வந்து நிக்கறேன். எனக்கு என் புருஷன் இந்த விஷயத்துல சப்போர்ட் பண்ணாதானே? நான் ஒரு கையால தட்டினா எங்கேயாவது ஓசை வருமா?

எவனோ ஒருத்தன் முந்தாநாள், சுகன்யா கையில மோதிரம் மாட்டிட்டான்... என் புள்ளை, சுகன்யாவுக்கு மொறை மாப்பிள்ளை, அவ கழுத்துல தாலிகட்ட வேண்டியவன், அதை நேத்து நேர்ல பாத்துட்டு, ஏங்கிப் போய் நின்னான். என் புள்ளை மனசுல இருக்கறது, அவனை பெத்த எனக்கு புரியலையா?

அந்த செல்வா, அப்படீ என்ன சம்பாதிக்கறான்? என் புள்ளையை விட கம்மியாத்தான் சம்பாதிக்கறான்... அவங்க வீட்டு நெலைமையும், அப்படி ஒண்ணும் ஒஹோன்னு ஒண்ணும் தெரியலை. என் புள்ளையும் வீட்டுல ஒத்தை புள்ளையாத்தான் இருக்கான்... பிக்கல் பிடுங்கல்ன்னு சுகன்யாவுக்கு என் வீட்டுல என்ன இருக்கு? என் சொத்தும்... என் புருஷன் சொத்தும், மொத்தமா என் புள்ளை சம்பத் ஒருத்தனுக்குத்தானே?

என் புள்ளை அந்த செல்வாவுக்கு எந்தவிதத்துல கொறைஞ்சுப் போயிட்டான்..? என் புள்ளை அந்த செல்வாவை விட கொஞ்சம் நிறத்துல மட்டுதான்... என்னைவிட நெறம் கம்மியா இருந்த என் புருஷனை என் தலையில வலுக்கட்டாயமா கட்டிவெச்சாங்க... ஆரம்பத்துல நான் இதை மனசுல வெச்சிக்கிட்டு, மொரண்டிக்கிட்டுத்தான் இருந்தேன்... அப்புறம் என் புருஷன் குணத்தைப் பாக்க பாக்க என் மனசு மாறிடலயா? ஆயிரம் ஆசை என் மனசுல ஒரு காலத்துல இருந்ததென்னவோ உண்மைதான்... இப்ப என் புருஷன் மூஞ்சி கொஞ்சம் சுருங்கினாலும், என் மனசு நொந்து போய் துடிக்கலையா?

என் புள்ளை ஏதோ கோபத்துல, மூர்க்கனாட்டாம், என்னமோ தப்பா, சுகன்யாவைப் பத்தி அன்னைக்கு பேசிட்டான். யாருமே, காரணமில்லாம ஒரு பொண்ணை தப்பா பேசக்கூடாது. அதை நான் ஒத்துக்கறேன்.

சம்பத்து தப்பு பண்ணான்னு தெரிஞ்சதும், என் மனசு தாங்காம, நானே பளார்ன்னு அவன் கன்னத்துல ஒரு அறை வுட்டேன். என் புள்ளை என்னை எதுத்துப் பேசாம நான் கொடுத்த அடியை வாங்கிக்கிட்டு சும்மாதானே இருக்கான். இப்ப சுகன்யாவை தப்பா பேசிட்டமேன்னு மனசுக்குள்ளவே என் புள்ளை மாய்ஞ்சு மாய்ஞ்சு போறான்.

மூணு மாசமா என் புருஷங்கிட்ட நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேன்... எங்க மாமா சிவதாணுவை போய் ஒண்ணுக்கு ரெண்டு தரமா, பாத்து பேசுங்க; சுகன்யாவை நம்ம சம்பத்துக்கு கேளுங்கன்னு; இந்த மனுஷன் என் பேச்சைக் கேட்டாரா? ம்ம்ம்... அப்படி கேட்டு இருந்தா இன்னைக்கு நான் ஏன் இப்படி பைத்தியக்காரி மாதிரி மனசுக்குள்ளவே எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு புழுங்கணும்?

என் பேச்சைக் கேக்க வேணாம்; இவர் ஃப்ரெண்ட்தானே அந்த ரகு; ரகுகிட்டவாவது எப்பவாவது மனசு விட்டு பேசி, உன் அக்கா சுந்தரி பெத்த பொண்ணை என் புள்ளைக்கு கட்டிக்கப் போறேன்னு, என் மனசுல இருக்கற ஆசையை வெளிப்படையா சொன்னாரா? அதுவும் இல்லே; துப்புக்கெட்ட மனுஷன், என் புருஷன்.

உன் வீட்டுல சம்பந்தம் பண்றதுக்கு உரிமை உள்ளவ நான்; அசலான் கிட்ட சம்பந்தம் பண்றதுக்கு முன்னாடி என்னை ஒரு வார்த்தை நீ கேட்டியாடா? நீ பண்ணது ஞாயமான்னு, குமாரை நேருக்கு நேர், என்னைக்கு இருந்தாலும் நான் கேக்கத்தான் போறேன். வயசுல என்னை விட ரெண்டு வருஷம் சின்னவன் தானே அவன்? ஒழுங்கு மொறையா எனக்கு அவன் பதில் சொல்லட்டும்.

இவரு சொல்ற மாதிரி, இப்ப இதையெல்லாம் யோசனைப் பண்ணி பண்ணி, என் மனசுக்குள்ளவே புலம்பித்தான் என்ன பிரயோஜனம்...? ஆனா நான் என்னப் பண்றது..? என் மனசு கேக்கமாட்டேங்குதே? ராணியின் மனது இடம் வலமாக, கட்சி கட்டிக் கொண்டு அலைந்தது.

"என்னங்க... அங்கப் பாருங்களேன்...! நம்ம சம்பத் யாருகிட்ட பேசிகிட்டு நிக்கறான்? கூட நிக்கறது சுகன்யா மாதிரில்லா இருக்குது?

"சுகன்யாவேதான்... பக்கத்துல உன் மாமா சிவதாணு பெஞ்சில உக்காந்து இருக்காரு... காலங்காத்தால... அவருகிட்ட உன் பஞ்சாயத்தையெல்லாம் ஆரம்பிச்சிடாதே...!! அவராவது நிம்மதியா இருக்கட்டும்..." நல்லசிவம் தன் மனைவியை எச்சரித்தார்.

"ஆமாம்... நீங்க நாட்டாமையை ஒழுங்காப் பண்ணியிருந்தா, என் புள்ளை, சுகன்யா கழுத்துல இந்நேரம் தாலியைக் கட்டியிருப்பான்." ராணி நொடித்துக்கொண்டாள்.

"ஏன்டீ, ராணி... மாமா பொண்ணைப் வழியிலப் பாத்தான்.. அதுல ஒண்ணும் தப்பு இல்லே.. விஷ் பண்ணாம, ஹாய்ன்னு சொன்னமா, உள்ளப் போய் ஜாகிங் பண்றதை வுட்டுட்டு இந்த கூறுகெட்டவன், இப்ப எதுக்கு சுகன்யா கிட்ட இளிச்சுக்கிட்டு நிக்கறான்? நல்லசிவத்தின் மனசு, தன் மகனின் செயலைக் கண்டு எரிச்சலடைந்தது.

இவன் ஒரு தரம் சுகன்யாகிட்ட அடிச்ச கூத்து பத்தாதா? ஊருக்கு போற இன்னைக்கு, திருப்பியும் எந்த வெனையாவது வெதைச்சிட்டு போனான்னா... அது அறுவடை பண்றது யாரு? அவர் தன் மனதுக்குள் ஆத்திரப்பட்டார்.

"சின்னஞ்சிறுசுங்க ஏதோ சிரிச்சிப் பேசிக்கிட்டு நிக்குதுங்க... இதுக்கு இப்ப நீங்க ஏன் கிடந்து பொலம்பறீங்க..?

மெல்ல நடந்து வந்த நல்லசிவமும், ராணியும், பார்க்கின் நுழைவாயிலை நெருங்கினார்கள். ராணி தன் உதட்டில், புன்னகை வழிய, அவர்கள் ஜோடியாக பக்கம் பக்கம் நின்று பேசிக்கொண்டு இருப்பதை, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். நல்லசிவம் சிவதாணுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். 

"நல்லாயிருக்கியா சுகன்யா?" ராணி சுகன்யாவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள். 

"ஃபர்ஸ்ட் கிளாஸ் அத்தே... அயாம் ஜஸ்ட் ஃப்ளையிங் இன் த க்ளவுட்ஸ்... நீங்க எப்படீ இருக்கீங்க அத்தே?" மகிழ்ச்சியாக சிரித்தாள் சுகன்யா.

"ம்ம்ம்... எனக்கென்னடா கண்ணு... சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறதுதான் வேலை.. ஒடம்பு பெருக்குது... அதான் கொஞ்ச தூரம் தினம் நடக்கிறேன்..." ராணியும் சிரித்தாள்.

"டெய்லி நீங்க வாக்கிங் வருவீங்களா? தெரிஞ்சிருந்தா இந்த வாரம் பூரா நானும் பார்க்குக்கு வந்திருப்பேன்... நான் தினமும் ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் தனியா நடக்கப் போய்கிட்டு இருந்தேன்.."

"வாரத்துல நாலு நாள் கண்டிப்பா இந்த பக்க வருவோம்..."

"ம்ம்ம். நாளைக்கு காலையில அப்பா கூட நான் ஊருக்குப் போறேன்.. அப்புறம் திரும்பவும் தாத்தா வீட்டுக்கு வரும்போது உங்கக்கூட ஜாய்ன் பண்ணிக்கறேன்.." உற்சாகத்துடன் பேசினாள் அவள்.

"இனிமே கல்யாணத்துக்குத்தான் வருவே..." ராணி சிரித்தாள்.

"தெரியலை அத்தே... "அவர்" வீட்டுல கல்யாணம் எங்க வெச்சுக்கலாம்ன்னு பிரியப்படுவாங்களோ? வெட்கத்துடன் பேசினாள், சுகன்யா.

"கரெக்ட்தாம்மா.. நீ சொல்றது..." 

"சுகன்யா... வாட் அபவுட் ஜாகிங்... ஐ விஷ் டு கோ ஃபார் எ ஸ்லோ ரன்.." சம்பத் புன்னகைத்தான்.

"தாத்தா... நான் 'அத்தான்' கூட கொஞ்ச நேரம் ஜாக் பண்ணிட்டு வரட்டுமா? எனக்கும் கொஞ்ச நேரம் டயம் பாஸ் ஆகும்?" சம்பத்தின் உற்சாகம் தனக்கும் தொற்றிக் கொள்ள, தாத்தாவை கெஞ்சலாகப் பார்த்தாள் சுகன்யா. 

"ம்ம்ம்.. சீக்கிரமா வந்து சேரும்மா.. அங்க பாட்டி டிஃபன் செய்து வெச்சுட்டு, உனக்காக காத்துக்கிட்டு இருப்பா..!" சிவதாணு பேசுவதை சற்று நிறுத்தி தொண்டையை செருமிக்கொண்டார். சிவ சிவா என சிவத்தை ஒருமுறை துணைக்கு அழைத்தார். 

"டேய் சம்பத்.. ஒழுங்கா கொழந்தையை வீட்டுல திருப்பி கொண்டாந்து விட்டுட்டு போ; நீ பாட்டுக்கு இவளை அம்போன்னு எங்கயாவது நடு வழியிலே ரோட்ல நிக்கவெச்சுட்டு, 'தம்' அடிக்கப் போயிடாதே..!!" அவனுக்கு உரத்தக்குரலில் உத்திரவு போட்டார், சிவதாணு.

"தாத்த்த்தா.. என்ன தாத்தா சொல்றீங்க...நீங்க.. சம்பத் அத்தான் கோச்சிக்கப் போறாரு..?" சுகன்யா அழகாக தன் விழிகளை சுழற்றி கொஞ்சினாள்.

"சிவ... சிவா... அவன் அம்மா... நான் பாத்து பொறந்தவ... அவ புள்ளை என்னை கோச்சிக்குவானா.... நல்லா இருக்கும்மா நீ சொல்ற கதை...!!" 

"ம்ம்ம்.... ரெண்டு நாளா நான் என் நெஞ்சுக்குள்ள படற வேதனை எனக்குத்தானே தெரியும்... நானாவது... என் சுகன்யாவை நடுவழியிலே விட்டுட்டு போறதாவது..." சரியான புத்திக்கெட்ட கிழம் இது, மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டான், சம்பத்.

"மாமா.. நீங்க பேசறது மட்டும் நல்லாயிருக்கா? சுகன்யா என்ன இன்னும் குழந்தையா? என் புள்ளை சம்பத்தும் அவளுக்கு அசலா என்ன? அவளுக்கு அவன் சொந்த அத்தான்தானே.. அவனுக்குத் தெரியாதா? இதெல்லாம் நீங்க சொல்லணுமா?" ராணி சிவதாணுவின் கையை ஆதுரமாக பிடித்துக்கொண்டாள். 

"சிவ சிவா...! நீ தப்பா நெனைச்சுக்காதேடீ ராணீ... உன் புள்ளையை நான் கொறை சொல்லலை... நீயே எனக்கு கொழந்தைதான்!! சுகன்யா உன் பொண்ணு மாதிரி... அப்படியிருக்கும் போது சுகன்யா என்னைக்கும் எனக்கு கொழந்தைதானே?!"

"மாமா... பசங்க ரெண்டு பேரும் அவங்களா வீட்டுக்கு வந்து சேருவாங்க... இப்படியே எங்க கூடவே வந்து ஒரு கப் காஃபி சாப்பிடுங்களேன்... நீங்க எங்க வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே?" நல்லசிவம் அன்புடன் சிவதாணுவை அழைத்தார்.

"சிவ.. சிவா... இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்.. நான் வர்றதுக்கு முன்னாடி காப்பி குடிச்சுட்டுத்தான் வந்தேன். இன்னும் குளிக்கலை.. போய் குளிச்சிட்டுப் பூஜை பண்ணணும்... வர்றேம்மா ராணீ...." சொன்னவர் எழுந்து தன் வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். 

"சம்பத்... நாம இப்படியே ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வரலாமா?" அவன் முகத்தை சுகன்யா ஆர்வத்துடன் பார்த்தாள்.

சுகன்யா நின்ற இடத்திலேயே ஜாக் பண்ண ஆரம்பித்தாள். குதித்துக்கொண்டிருந்தவளின் மார்பு திரட்சிகள், சீரான ரிதத்தில், மேலும் கீழுமாக அசைய ஆரம்பித்தன. துள்ளும் அந்த கவர்ச்சியை நேராக பார்க்க முடியாமல் தன் தலையை ஒரு நொடி தாழ்த்திக்கொண்டான் சம்பத். 

"ம்ம்ம்.. ஆஸ் யூ விஷ்... அயாம் ரெடி... எந்தப் பக்கம் வேணா போவலாம்... சுகன்யா!" சம்பத்தும் அவளும் மெல்ல ஓட ஆரம்பித்தார்கள்.


சுகன்யாவும், சம்பத்தும், ரயில்வே நிலையத்தை அடையும்வரை, நிதானமாக, சீரான வேகத்தில் ஓடினார்கள்.

"அத்தான்... ஜாகிங்கை நிறுத்திக்கலாமா...? ஏற்கனவே நான் தாத்தா கூட ஒரு அரை மணி நேரம் நடந்துட்டேன்..." சுகன்யாவுக்கு இலேசாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது.

"சுகா.. நீ ரெகுலரா ஜாகிங் பண்ணுவியா? முழுசா பதினைந்து நிமிஷம், அசால்டா, என் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடி வந்தியே?" சம்பத் தன் கண்கள் விரிய அவளை வியப்புடன் பார்த்தான்.

"யெஸ்... காலேஜ்ல சேர்ந்ததுலேருந்தே, அஞ்சாறு வருஷமா, அயாம் ரெகுலர் இன் வாக்கிங் அண்ட் ஜாகிங்..." சுகன்யா தன் ஆரோக்கியமான ரோஜா நிற ஈறுகளும், வெள்ளைப் பற்களும் தெரிய சிரித்தாள்.

"இப்பத்தான் புரியுது... எனக்கு!!"

"என்னது"

"உன்னோட ஸ்மார்ட் அண்ட் அத்லெடிக் 'பாடியோட' ரகசியம்..." அவனும் தன் வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்தான்.

'க்க்கூம்.. ச்சும்மா கிண்டல் பண்ணாதீங்க அத்தான்... நான் அப்படி ஒண்ணும் ஸ்மார்ட்ல்லாம் இல்லே! நான் ஒரு சராசரி சுவாமிமலைப் பொண்ணுதான்..." கொஞ்சலாக பேசினாள், சுகன்யா.

சுகன்யா நீ என்னை அத்தான்... அத்தான்னு இவ்வளவு பாசமா, நமக்குள்ள இருக்கற உறவைச் சொல்லி கூப்பிடறயே? ஆனா நான் உன் திருமண வாழ்க்கையில இடைஞ்சலை உண்டு பண்ணப் பாத்தேன்... அது உனக்கு தெரிஞ்சா, என்னைபத்தி நீ என்ன நினைப்பே? சம்பத் தன் மனசுக்குள் வெட்கினான். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. நடுங்கியது. சம்பத் கன்யாவுடன் ஸ்டேஷனுக்குள் மவுனமாக நடந்து கொண்டிருந்தான்.

***

ஸ்டேஷனில் வரப்போகும் ரயிலுக்காக ஒரு இளம் ஜோடி, அரச மரத்தின் கீழ் காத்திருந்தது. இருவர் முதுகிலும் லாப்டாப் பை தொங்கிக்கொண்டிருக்க அவர்கள் வெகு நெருக்கமாக நின்று, அவர்களுக்கு மட்டுமே கேட்கும் தொனியில், குசுகுசுவென பேசியவாறு, காலை இளங்காற்றின் குளிர்ச்சியை போக்கிக் கொள்ள, சூடான ஆவி பறக்கும் காஃபியை ருசித்துக் கொண்டிருந்தார்கள்.



அந்த இளைஞன் தன் காதலியிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. அவன் முகத்தை தன் விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்த யுவதியின் முகத்தில் வெட்கம் சட்டென படர்ந்தது. அவள் கன்னம் சிவந்தது. கண்களில் சிரிப்புடன், தன் காதலனின் முதுகில் செல்லமாக ஓங்கி அடித்தாள் அவள்.

அவன் விழிகள் சுடராக பிரகாசித்துக்கொண்டிருக்க முகத்தில் அளவில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. தன் காதலி கொடுத்த அடியை உதட்டில் சிரிப்புடன், விருப்பத்துடன் வாங்கிக் கொண்டான் அந்த இளைஞன். சுற்றுமுற்றும் பார்த்தவன் தன் அன்புக்குரியவளின் கையைப் பற்றி சட்டென தன் புறம் இழுத்தான். அவனை நெருங்கியவளின் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தத்தைப் பதித்தான். முத்தத்தை வாங்கிக் கொண்ட அந்த இளம் பெண்ணின் முகத்தில் எல்லையில்லாத உல்லாசமும், மகிழ்ச்சியும் பொங்கி எழுந்தன.

சுகன்யாவின் பார்வை அவர்கள் மீது ஒரு கணம் தவழ்ந்து நின்றது. அவள் உதட்டில் புன்னகை ஒன்று மலர்ந்தது. 'லெட் தெம் பீ ஹாப்பி' சுகன்யாவின் தாராள மனசு முனகியது. அந்த இளம் ஜோடியை அவள் தன் மனமார வாழ்த்தினாள்.

சுகன்யாவின் பார்வை திரும்பவும் சம்பத்தின் முகத்தில் வந்து நிலைத்தது. அவன் முகத்திலும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவின் பார்வை போன இடத்தையும், அந்த இளம் ஜோடி நடத்திய காதல் விளையாட்டையும் சம்பத்தும் பார்த்துக் கொண்டே நடந்தான்.

"அத்தான்.. ஜாலியா, சந்தோஷமா இருக்கறவங்களை பாக்கறதே நம்ம மனசுக்கு ரம்மியமா இருக்கு இல்லே?"

"யெஸ்... நான் இதைத்தான் சொல்ல நினைச்சேன்... நீ முந்திக்கிட்டே..!"

"சம்பத்... இப்ப உங்க கிட்ட பைசா எதாவது இருக்கா? வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பார்க் வரைக்கும்தானே போகப் போறோம்ன்னு நான் பர்ஸை எடுத்துட்டு வரல்லே.." தன் முகம் சற்றே சுருங்கியவளாக குரலில் வெட்க்கத்துடன் கேட்டாள், சுகன்யா.

"சுகா.. இப்ப உனக்கு என்ன வேணும்மா? உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணு, எனக்கு இது வேணும்ன்னு கேட்டும், நான் உன் மாமா பிள்ளை, அதை உனக்கு வாங்கிக் குடுக்க முடியலைன்னா, இந்த ஊரும், நம்ம ஒறவு மொறையும் என்னைப் பாத்து சிரிக்கமாட்டாங்களா?" முகத்தில் சிறிய குழப்பத்துடன் பேசினான், சம்பத்.

"ம்ம்ம் அப்புறம்... வேற என்னச் சொல்லப்போறீங்க... அதையும் சீக்கிரமா சொல்லிடுங்க..?" சுகன்யா மனதில் குஷியுடன் சிரித்தாள்.

"ஊர்ல இருக்கறவன் சிரிக்கறதை விடு... என் பேத்தி கேட்டதை நீ வாங்கிக் குடுக்கலையாடான்னு உன் தாத்தா என்னை அடிக்கவே வந்துடுவார்... அவரை நெனைச்சாத்தான் மொதல்ல எனக்கு பயமா இருக்கு...!!"

"சேச்சே.. எங்க தாத்தா எவ்வளவு நல்லவர் தெரியுமா...?" சுகன்யா அவன் பேச்சை வெட்டினாள்.

"சுகன்யா... உனக்கு இந்த ரெயில்வே ஸ்டேஷன் வேணுமா? இல்லே சுவாமிமலையே வேணுமா...? என்ன வேணும் சொல்லு டியர்...! நீ கேட்டா.. நான் என் உயிரையும் உனக்கு குடுக்கறதுக்கு தயார்..." சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் வசனம் பேசி சிரித்தான், சம்பத்.

"எனக்கு ஊரும் வேண்டாம்... உங்க உயிரும் வேண்டாம்... இப்ப எனக்கு சூடா ஒரு கப் காஃபி குடிக்கணும்.. அவ்வளவுதான்... அதை மட்டும் நீங்க முடிஞ்சா வாங்கிக் குடுங்க..." சுகன்யாவும் உரத்த குரலில் உற்சாகமாக சிரித்தாள்.

"ப்ஃபூ.. இவ்வளவுதானா?" அவன் சற்றே ஏமாற்றம் படிந்த முகத்துடன், தன் பர்ஸை திறந்தான். ஸ்டாலில் நின்றவனிடம் ஒரு நூறு ரூபாய் தாளை அலட்சியமாக உருவி நீட்டினான். திறந்த ஃபர்ஸில், மாம்பழ நிற நிச்சயதார்த்தப் புடவையில், முகத்தில் சிரிப்புடன், கண்களில் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருந்தாள், சுகன்யா. 

"அத்தான்.. அந்த போட்டோ என்னோடது மாதிரி இருக்கு. உங்கக்கிட்ட எப்படீ வந்தது? சுகன்யா தன் போட்டோவை அவன் பர்ஸில் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனாள்.

"உன்னோட போட்டோதான் சுகா..." சம்பத்தின் முகத்தில் சிறிய வெட்கம் எட்டிப்பார்த்தது.

சுகன்யா, சம்பத்தின் கையிலிருந்த பர்ஸை வாங்கி, அதில் செருகப்பட்டிருந்த தன் போட்டோவைப் பார்த்தாள். சரியான வெளிச்சத்துடன், முழு "டெப்த்" டுன் அந்த புகைப்படம் அழகாக எடுக்கப்பட்டிருந்தது. பாதி உள்ளங்கையளவு இருந்த அந்தப் படத்தில், தன் மார்பளவில், சுகன்யா, தாமரையாக மலர்ந்து, தன் முகம் நிறைய சிரிப்புடன் இருந்தாள்.

"என் நிச்சயதார்த்த படம் மாதிரி இருக்கே...?" சுகன்யா தன் முகத்தில் சிறிது குழுப்பமும், ஆச்சரியமாகவும் பேசினாள்

"சுகா... நான் நேத்து உன்னோட பங்கஷனுக்கு வந்தேன்... என் கிட்டவும் அருமையான கேமிரா இருக்கு... போட்டோகிராஃபி என்னோட ஹாபி... என் மனசுக்கு பிடிச்ச நொடியை, நான் படமா மாத்திட்டேன்..." சம்பத் முகத்தில் புன்னகை மாறாமல் பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்... என் போட்டோவை நீங்க ஏன் உங்க பர்ஸ்ல வெச்சிக்கிட்டு இருக்கீங்க...?" முகத்தில் வியப்புடன், குரலில் சிறிய நடுக்கத்துடன் கேட்டாள், சுகன்யா. தன் கையிலிருந்த போட்டோவை அவனிடம் தயக்கத்துடன் திருப்பிக்கொடுத்தாள்.

"சுகன்யா உன்கிட்ட நான் மனசுவிட்டு ஒரு பத்து நிமிஷம் பேசணும்... ப்ளீஸ்.. அப்படி ஓரமா இருக்கற அந்த பெஞ்சுல உக்காரலாமா? சம்பத்தின் கண்களில் மெல்லியக் கெஞ்சல் தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவால் அவன் கேட்டதை தட்ட முடியவில்லை.

இருவரும் காஃபியை வாங்கிக்கொண்டு, ப்ளாட்பாரத்தின் கோடியில், காலியாக கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். ஆவி பறக்கும் காஃபியை, தன் உதடுகளை குவித்து, மெல்ல "ஸ்ஸ்ஸ்" என சத்தமெழுப்பி, சுகன்யா குடிக்கும் அழகை, தன் உள்ளத்தில் எழுந்த உவகையை அடக்க முடியாமல், ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான், சம்பத்.

"சுகன்யா... அந்த காதல் ஜோடியை நீ பாத்தே இல்லையா?"

"யெஸ்... தே ஆர் வெரி க்யூட்..." மனதில் கள்ளமில்லாமல் பேசினாள் சுகன்யா.

"சூடான ஒரே கப் காஃபியை ரெண்டு பேரும் எவ்வளவு ஜாலியா மாத்தி மாத்தி குடிச்சாங்க. ரியலி... ஐ லைக்ட் தட் மொமென்ட்.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்... அந்த நொடியில... இந்த உலகமே அவங்களுக்கு இல்லாம போயிருக்கும்..."

ம்ம்ம்... சம்பத் மனசால இவ்வளவு தூரம் வாழ்க்கையின் எளிமையான அழகை ரசிக்கறவனா? இவனால தன் மனசுக்குள்ள ரசிச்சதை, இந்த அளவுக்கு தெளிவா வார்த்தைகளால வெளிக்கொணர முடியுமா? தன் உள்ளத்து உணர்வுகளை இன்னொருத்தருக்கு உணர்த்த முடியுமா? சுகன்யா மனதுக்குள் வியந்து போனாள்.

"சுகா... அந்த நொடியில அவங்க ரெண்டு பேரு மட்டுமே இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.. அப்படீத்தான் நான் நெனைக்கிறேன்... மனசுக்குள்ள எந்தக் கவலையும் இல்லாம, தங்களை மட்டுமே அவர்கள் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க... அதைத்தான் அவங்க ரெண்டு பேரோட முகத்துல நான் பாத்தேன்... வாட் டூ யூ சே?" இப்போது அவன் முகம் சற்று சீரியஸாக இருந்தது போல் சுகன்யாவுக்கு தோன்றியது.

"ம்ம்ம்... யெஸ்...ஐ அன்டர்ஸ்டேன்ட் தட்..." இயந்திரமாக தன் மனதில் ஓடும் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் பதிலளித்தாள் சுகன்யா.

சம்பத்தின் நயமான ரசிப்பை, அவனுடைய இயல்பான, யதார்த்தமான பேச்சை அவள் ஒரு புறத்தில் ரசித்தபோதிலும், மறுபுறத்தில் அவள் தன் மனதுக்குள் இன்னொரு விஷயத்தை நினைத்து குழம்பிக்கொண்டிருந்தாள்..

சம்பத் என் போட்டோவை ஏன் அவன் பர்ஸில வெச்சிருக்கான்? இதுக்கு என்ன அர்த்தம்...? அவன் ஏதோ மனசு விட்டு பேசணும்ன்னு சொன்னானே? அவன் எங்கிட்ட என்ன சொல்ல விரும்பறான்..? உடனடியாக அதைத் தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.

சம்பத் மெல்ல தன் கையிலிருந்த காஃபியை உறிஞ்சி அவசரமில்லாமல் குடிக்க ஆரம்பித்தான். காஃபி நிஜமாகவே சுவையாக இருந்தது. அவன் முகத்தில் ஒரு அசாதாரண அமைதி குடிகொண்டிருக்க, பார்வை தொடுவானத்துக்கும் அப்பால் நிலைத்திருந்தது.

சம்பத் தன் கையிலிருந்த சுகன்யாவின் போட்டோவை ஒரு முறை உற்றுப் பார்த்தவன், திரும்பவும் போட்டோவை வெகு பத்திரமாக, தன் பர்ஸுக்குள் செருகி, அதை தன் ட்ரவுசர் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான். ஒரு நீளமான பெருமூச்சு அவன் அடிவயிற்றிலிருந்து கிளம்பி வெளிவந்தது.

"சொல்லுங்க சம்பத், என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொன்னீங்க...?

"சுகன்யா... என் மனசுல இருக்கறதை சுருக்கமா ஒரு வரியில எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை? சம்பத் சுகன்யாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.

தன் மனதை, தன் மனதில் உள்ள காதலை ஒரு பெண்ணிடம் சொல்ல எந்த ஆணும், எப்போதும், ஏன் தயங்குகிறான்? பெண் மறுத்துவிடுவாள் என்ற பயமா? மறுப்பை எதிர்கொள்ள தயக்கமா? சம்பத்தும் தன் மனதுக்குள் முதல் முறையாக ஒரு பெண்ணின் முன் பேசமுடியாமல் தவிப்பதை, தன் தயக்கத்தை நினைத்து சிரித்துக்கொண்டான். மனதின் சிரிப்பு உதடுகளிலும் வந்தது.

"அத்தான்... எதுவும் சொல்லாம இப்படீ என்னைப் பாத்து சிரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்?" சுகன்யா தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தாள்.

"ஸாரி சுகா... நான் உன்னைப்பாத்து சிரிக்கலை... நான் என்னையே, என் நிலைமையை நெனைச்சு சிரிச்சுக்கறேன்..."



"ப்ளீஸ்... நேரமாவுது... நீங்க சொல்ல நினைக்கறதை சீக்கிரம் சொல்லுங்க.." சுகன்யா சற்றே எரிச்சலைடைந்தாள். அவள் குரலில் அந்த எரிச்சல் லேசாக வெளிவந்துவிட்டது.

"அயாம் சாரி சுகா.. அயாம் பாதரிங்க் யூ... என் பேச்சு உனக்கு வினோதமா படலாம்.. ஆனா நான் சொல்றதெல்லாம் நிஜம்... உண்மை... முழுமையான சத்தியம்... நான் விளையாட்டுக்காக உன் கிட்ட பேசல.." சம்பத் நீண்ட பீடிகையுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கியவன், மீண்டும் தயங்கினான், பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, தொடுவானத்தையும் எதிரில் ஓடிக்கொண்டிருந்த முடிவில்லாத தண்டவாளத்தையும் மவுனமாக மாறி மாறி பார்க்க ஆரம்பித்தான்.

"சம்பத்... நீங்க சொல்ல வந்ததை சொல்லாமா, எதுக்காக இப்ப தண்டாவளத்தை அளந்துகிட்டு இருக்கீங்க...? வீ ஆர் கெட்டிங் டிலேய்ட்...யூ நோ... நீங்களும் இன்னைக்கு பெங்களூருக்கு கிளம்பணும் இல்லையா?"

சுகன்யா தன் கையிலிருந்த பேப்பர் கப்பை மெல்ல கசக்கிக்கொண்டே எழுந்தாள். வாட்சில் நேரத்தைப் பார்த்தாள். மணி காலை எட்டைத் தொட்டிருந்தது.