Thursday 12 March 2015

சுகன்யா... 47

"சாரிம்ம்மா... நான் இந்த கேள்வியை கேக்கக்கூடாதுதான்.. இன்னைக்கு நான் மனசால ரொம்ப நொந்து போயிருக்கேம்மா... அப்பா எதையுமே புரிஞ்சுக்காம பேசறாரு...!"

"அவர் போக்குத்தான் உனக்குத் தெரியுமேடா?" மகன் தன் மடியில் கிடக்க ராணியின் மனதில் தாய்மை முழுமையாக நிறைந்திருந்தது.

"என் மனசுல சுகன்யாவோட நடத்தைக்கு காரணம் என் கருப்பு நெறம்தான்னு பட்டுடுச்சிம்மா...என்னால அதைத் தாங்கிக்க முடியலைம்மா.." சம்பத்தின் கண்கள் கலங்கியிருந்தன.

"சீச்ச்சீ... அப்படியெல்லாம் இருக்காதுடா... சுகன்யாவோட அம்மா சுந்தரியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... அவ கொஞ்சம் ரிஸ்ர்வ்ட் டைப்டா... அவ புருஷனுக்கும் அவளுக்கும் இருந்த பிரச்சனையால... அதிகமா அவ யாருக்கிட்டேயும் பேச மாட்டா... சுகன்யாவும் அப்பா இல்லாம அம்மா நிழல்ல வளர்ந்த பொண்ணுடா... அதனால சுகன்யாவும் அம்மா மாதிரி, யாரோடவும் ஒட்டாம, தனியா ஒதுங்கி இருப்பாளோ என்னவோ?

"அடப் போம்மா... நீ வேற... நீயும் அப்பா மாதிரி அவ பக்கம் பேசற; கனகா பாட்டி வீட்டுக் கதவைத் தட்டினேன்... அந்த கழுதைதான் வந்து கதவைத் தொறந்தா? என்னமோ ஒரு சோப்பு விக்கப்போன சேல்ஸ்மேனைப் பாக்கற மாதிரிதான் மேலும் கீழுமா என்னைப்பாத்தா... வேண்டா வெறுப்பா யார்ரா நீன்னு கேட்டா?"



"ம்ம்ம்ம்....ஸ்ட்ரேன்ச்..." ஒரு நொடி, ராணி தன் மகன் சொல்லுவதைக் கேட்டுத் திகைத்தாள்.

"பின்னே என்னா, ஜீன்ஸ், டாப்ஸ், லேட்டஸ்ட் ஷூன்னு போட்டுக்கிட்டா மட்டும் போதுமா? சென்னையில வேலை செய்தா மட்டும் போதுமா? ஒரு நார்மல் கர்ட்டஸி அவளுக்குத் தெரியலையே? சம்பத் குமைந்தான்.

ராணி தன் மகன் சொல்லும் கதையில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டாள். ஆணும் பெண்ணும் குணங்களின் கலவைகள்தானே? மனுஷத்தன்மையும், விலங்குத்தன்மையும் கொண்ட ஒரு ஆணாலும் பெண்ணாலும் சேர்ந்து உருவாக்கப்பட்டவர்கள்தானே? ராணி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

ஒரு மனிதன் எப்போது விலங்காக மாறுகிறான்; எப்போது மனுஷனாக நடக்கிறான் என்பது, அவனுடைய சூழ்நிலையும், சேர்க்கையுமே நிர்ணயிக்கின்றன. தன் மகனின் சோர்ந்த முகத்தையும், அவன் கலங்கும் கண்களையும் கண்ட ராணியின் மனதில் அந்த நேரத்தில் வக்கிரகுணம் மெல்ல மெல்ல மேலே எழுந்து வர ஆரம்பித்தது.

இது வரையில் எந்தப் பக்கமும் சாயமால், பட்சபாதமில்லாமல் பிரச்சனையை கேட்டுக்கொண்டிருந்தவள் மனதில், தன் மகன் சொல்லுவது சரிதானோ என்ற ஒரு ஐயம் எழுந்தது? ராணி தெளிவாக சிந்திக்கும் தன் திறனை இழந்தாள். ஒரு தலைப்பட்சமாக தன் மகன் பக்கம் சாய ஆரம்பித்தாள். ஒரு தாயின் இயல்பான மனஉணர்ச்சிகளுக்கு அடிமையானாள். பெத்தவளுக்கு அவள் மகன் பேசுவதுதானே கரும்பாய் இனிக்கும்..?! மகனுக்கு அப்புறம் தானே மணளான்?

"சுகன்யாகிட்ட, அப்பா சொன்னமாதிரி நான் தப்பா எதுவும் பேசலைம்மா... சுகன்யா! உங்களுக்கு என்னைத் தெரியாது! ஆனா உங்களை எனக்குத் தெரியும்... கதவைத் தொறங்கன்னு மரியாதையாத்தான் நான் பேசினேம்மா..."

"ம்ம்ம் ...."

"அதுக்கப்புறமும்... அவ கதவைத் தொறக்காம.... "பாட்டி" யாரோ வந்திருக்காங்கன்னு உள்ளப்பாத்து குரல் குடுத்தாம்மா... அழகிப் போட்டியில நடக்கறவ மாதிரி தன் தோளை குலுக்கிக்கிட்டு, இடுப்பை ஆட்டி ஆட்டிக்கிட்டு நடந்து உள்ளே போறாம்மா... நாயி... "

ராணிக்கு தன் மகனின் ஆதங்கம் புரிந்தது. தன் மகனும் ஒரு ஆண்தானே. தன் கணவன் தன்னை முதல் முறை பார்த்தவுடன் தன் அழகில் விழுந்தது போல், சம்பத்தும் சுகன்யாவின் அழகில் விழுந்துவிட்டான் எனத் தெளிவாக அவளுக்குப் புரிந்தது. மகனுடைய மனதின் தாபம் முழுசாக புரிந்தது. தன் மகனின் கலங்கும் கண்களைக் கண்டதும், அவள் புத்திரப்பாசத்தால் புறம் பேசினாள். எப்படியாவது சுகன்யாவை தன் மகனுடன் சேர்த்துவிட அவள் மனது துடிக்க ஆரம்பித்தது.

"டேய் நீ சொல்றது சரிதாண்டா... சுகன்யா கொஞ்சம் திமிர் பிடிச்சவளாத்தான் இருக்கணும்!"

"இப்ப புரியுதாம்மா உனக்கு...? திமிரான ஒரு பெண்ணைப் பாத்தா ஒரு ஆம்பிளைக்கு எரிச்சல் வருமா? வராதா? நீயே சொல்லும்மா...?"

"..."

அம்மாவை மெதுவா நம்ம பக்கம் இழுத்தாச்சு... விடாதேடா அம்மாவை... டேய் சம்பத்து! டெம்போவை அப்படியே மெய்ன்டென் பண்ணுடா... அம்மா எப்பவும் உன் பக்கம்தான் நிப்பா. உன் அப்பனை நம்பாதே! நீ தெரியாம தப்பு பண்ணாக்கூட உன்னை அவரு சப்போர்ட் பண்ணமாட்டாரு... இதை நீ எப்பவும் ஞாபகம் வெச்சுக்க.

"நான் சுந்தரி வீட்டுக்கு, சுகன்யா இருக்கும் போது, நாலுதரம் போயிருக்கேன்... எங்கிட்டவும் எப்பவும் அந்த சுகன்யா முகம் கொடுத்துப் பேசினதே கிடையாதுடா...!" ராணி குதர்க்கமாகப் பேச ஆரம்பித்தாள்.

"பாத்தியா... பாத்தியா... சம்பத் உற்சாகமடைந்தான். நான் சொல்றதுல தப்பு ஓண்ணும் இல்லியே? உன்னையே அவ மதிச்சது இல்லே பாத்தியா...? அவ எங்க என்னை மதிப்பா?" சம்பத் வேகமாக கொம்பு சீவினான்.

"பிச்சைக்காரிக்கு, பழம் பொடவை போடற மாதிரி, இந்த சிறுக்கி சுகன்யா, என்னைப் பாத்து சின்னதா ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு, ஒவ்வொரு தரமும் எழுந்து மாடிக்கு போயிடுவா... அப்பவே இது எனக்கு வித்தியாசமா பட்டது." ராணி வேகமாக முழங்க ஆரம்பித்தாள்.

"ம்ம்ம்..."

"சுகன்யா, சின்னப் பொண்ணு, நாம ஆரம்பத்துலேருந்து பாம்பேயில இருந்துட்டோம்... சுகன்யா என்னைப் பாத்ததேயில்லே... நான் அவளுக்கு அத்தை உறவுன்னு, அவளுக்குத் தெரிஞ்சிருக்காதுன்னு நான் அப்பெல்லாம் நெனைச்சுப்பேன்..."

"நீ நெனச்சதுலே தப்பேயில்லை...ஆனா சுகன்யா அப்படியில்லே..."

"புது ஆளுங்ககிட்ட பேச கூச்சப்படறான்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன். நீ சொன்னதுக்கு அப்புறம்தான் இப்ப எனக்கு எல்லாமே நல்லாப் புரியுது?" ராணி தன் மகன் பக்கம் மொத்தமாக சாய்ந்துவிட்டாள்.

"அப்புறம்..?"

"நான் ஹால்லே உக்காந்து இருக்கேன்.. அந்த கெழவி கனகா என்னை அவளுக்கு அறிமுகப்படுத்தறா, சுகன்யா ... இந்த சம்பத்து உனக்கு அத்தைப் பிள்ளை...பெங்களூர்ல இஞ்சினீயரா இருக்கான்;"

"கெழவிக்காவது உறவு மொறை தெரிஞ்சுருக்குதே?" ராணிக்கு தன் மனதில் ஒரு அசட்டுத்தனமான திருப்தி எழுந்தது.

"ஆனாம்மா... சுகன்யா வாயில அன்பா ஒரு வார்த்தையில்லே; அவ மூஞ்சில ஒரு சிரிப்பு இல்லே; சொந்தக்காரன்ங்கற ஒரு சலுகையில்லே; ஆம்பளைங்கற ஒரு மதிப்பு இல்லே. அப்படியா பாட்டீன்னு கேட்டுட்டு, திரும்பி என்னைப் பாத்து, ஒரு சின்ன முறுவல், ஒரு தலையாட்டல், ஒரு ஆமோதிப்பு, இப்படி எதுவுமே அவகிட்டருந்து வரலை."

கோவிலில் பிரசாத வரிசையில் கையில் தொன்னையுடன் காத்திருந்து, தன் முறை வரும் போது, குண்டானில் சக்கரைப் பொங்கல் தீர்ந்துபோக, காலியான தொன்னையுடன், முகத்தில் வரட்டு சிரிப்பும், மனதில் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் பக்தனின், மனநிலையில் சம்பத் அன்று இருந்தான். ஒரு சின்னக் குழந்தையைப் போல் ஒரு வினாடி பேசுவதை நிறுத்தி தன் தாயின் ஆதரவான அங்கீகாரத்துக்காக, ஒரு புன்னகைக்காக, அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான்.

"அப்புறம்..."

"அப்புறம் என்னா? சுகன்யா, பெரிய பத்தினி மாதிரி என்னைப் பாத்து கையை கூப்பிட்டு, மிஸ்டர் சம்பத், நீங்க பாட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருங்க; "பீ கம்பர்டபிள்"ன்னு என் கிட்ட இங்லீஷ் பேசிட்டு, அடுத்த செகண்ட், கூடத்து ரூமுக்குள்ள நுழைஞ்சு, கதவை என் மூஞ்சிலே அடிக்கற மாதிரி சாத்திக்கிட்டாம்மா...?

"அவ்வளக் கொழுப்பா அவளுக்கு..? நல்லப்பொண்ணுன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேனே?" ராணி தன்னையும் அறியாமல் தன் பற்களைக் கடித்தாள். அழகான அவள் முகம் கோபத்தில் கருக்க ஆரம்பித்தது.

திருதராஷ்டிரன், துரியோதனன் மேலிருந்த புத்திரப் பாசத்தால், இப்படித்தான் தன் மகன் சொன்னதை கேட்டு கேட்டு, அதன் படியே நடந்து, தன் குலத்தையே அழித்து தானும் அழிந்தான் என்பது ராணியின் நினைவுக்கு அன்று வரவில்லை.

"கொழுப்பா ... அவ்வளவும் நடிப்பும்ம்மா..."

"என்னடா சொல்றே?"

"சுகன்யா மெட்ராஸ்ல அவ வேலைச்செய்யற எடத்துல ஏற்கனவே ஒருத்தன் கூட ஜாலியா மஜா பண்ணிக்கிட்டு இருக்கா!"

"ஆச்சரியமா இருக்கே...! அப்பவே நான் நெனைச்சேன்...! இதனாலத்தான் சுகன்யாவை உனக்கு குடுக்கமாட்டேன்னு, சுந்தரி சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கிறாளா!!??

"வேற என்னா காரணம் இருக்க முடியும்?"

"சுகன்யா ஒருத்தன் கூட கூடி குலாவிக்கிட்டு இருக்கறது உனக்கு எப்படிடா தெரிஞ்சுது...?"

"எவன் கூட இவ குஜாலா சுத்தறாளோ... அவன் பேரு தமிழ்செல்வனாம்... அந்த நேரம் பாத்து... சிவதாணு கிழவன் நம்பர்ல... அவன் போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடுன்னான்?

"வாவ்...என்ன டிவிஸ்ட்டுடா ஸ்டோரியில" தாய், சின்னக்குழந்தையாக அசட்டுத்தனமாக சிரித்தாள்.

சீட்டைக் குலுக்கி போடும் போதே கையில ஆட்டம் ஆயிருக்கணும்ம்மா எனக்கு; ரெண்டு மொக்கை, ஒரு ஜோக்கர், ரெம்மிதான் இல்லை; செட்டா கையில கார்டை வெச்சிக்கிட்டு இருக்கேன்; ஸ்ட்ரெய்ட்டா ரம்மி அண்ட் டிக் ஆவுது....இந்த செல்வாதான் என் ரெம்மி கார்ட்டும்மா... பாரும்மா இதான் லக்குங்கறது...என்ன சொல்றே நீ?" சம்பத் தன் பற்கள் பளீரென மின்ன சிரித்தான்.

"ம்ம்ம்ம்...அப்படியா ... அப்ப அங்க சிவதாணு மாமா இல்லையா?"

"போன் அடிச்சப்ப கூடத்துல யாருமில்லே! சிவதாணு கக்கூஸ் போய் வர்றேன்னு என்னைத் தனியா வுட்டுட்டு போயிட்டார்; நான்தான் போனை எடுத்தேன்... அவன் என்னடான்னா, ரொம்ப உரிமையா சுகன்யாவை கூப்பிடுன்னான்.."

"ம்ம்ம... நல்லா போவுதுடா கதை..."

"என்னா நயினா...? சுகன்யாவை "அவ இவ" ன்னு ரொம்ப உரிமையா பேசறே...? நீ யார்ரான்னேன்?

"அவன் பயந்துப் போயி, சாரி சார்... சுகன்யா நம்பர் வேலை செய்யலை; சுகன்யாவும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்... அர்ஜண்டா ஒரு மேட்டர், அவகிட்ட பேசணும்... அவளைக் கூப்பிடுங்க சார்ன்னு கெஞ்சினான்."

"சரி...சரி ... மேல சொல்லுடா"

"தோஸ்த்... நீ பேசறதைப் பாத்தா நீங்க ரெண்டு பேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு தோனலையேன்னு, பட்டுன்னு ஒரு தூண்டிலைப் போட்டேன்.. மீனு சிக்கிடிச்சி!"

"புத்திசாலிடா நீ" தாய் தன் தனயனைப் பார்த்து பெருமைப்பட்டுக்கொண்டாள்.

"அம்மா... அந்த தமிழ்செல்வன் ஒரு கேணப்பயலாத்தான் இருக்கணும்... நான் யாருன்னு முழுசா கூட தெரிஞ்சுக்காம, சார்... நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்... கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு என் கிட்ட ஆசீர்வாதம் கேக்கறான்..?"

"என்னாது... நீ அவனை ஆசிர்வாதம் பண்ணியா?" ராணி வியப்படைந்தாள்.

"பின்னே என்னா...ம்ம்மா? என் மொறைப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறவனை, நான் ஆசீர்வாதம் பண்ண வாணாமா? நானும் "ததாஸ்து"ன்னு அவனை மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டேன்!"

"சம்பத்து... விஷயத்துக்கு வாடா...கண்ணு... எப்படிடா நீ அவனை ஆசீர்வாதம் பண்ணே? தாயின் குரலில் பெருமிதம் ஒலித்தது."

"என் மொறைப்பொண்ணு சுகன்யா; என் பேருல இருக்கற பட்டாவை, உன் பேருக்கு மாத்திக்குடுடான்னு எங்கிட்டவே கேக்கறியே.. இது ஞாயமாடான்னேன்?"

"ஹாங்...போட்றா... அப்படி போடுடா...பிச்சிட்டடா... சம்பத்தா ... கொக்கான்னேன்...என் பட்டுடா நீ?" தாய் பூரித்துப் போனாள்.

"அப்படியே அசந்து பூட்டான் அவன்..."

"அருவாளை அழுத்தமாத்தான்டா வீசியிருக்கே! ராணியின் முகம் பெருமிதத்தில் மின்னியது.

"மனசார ஆசிர்வாதம் பண்ணிட்டு வந்துருக்கேம்மா!...

கொளுத்திப்போட்டேன் பாரு ஒரு ஆயிரம் வாலா சரவரிசைப் பட்டாசை... அந்த திமிர் பிடிச்ச சுகன்யா கல்யாணம் நின்னுப் போனாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே! பாத்துக்கிட்டே இரு... மெட்ராஸ்ல்ல்ல வெடி வெடிக்கற சத்தம், கும்பகோணம், சுவாமிமலைன்னு ஊரே அதிரப் போவுது பாரு..." சம்பத் ஆங்கார, ஓங்காரமாக சிரித்தான்.

தப்பு பண்ணியவனை தட்டிக்கேட்க்கவேண்டிய தாயும், தன் பிள்ளையுடன் சேர்ந்து வகை தொகையில்லாமல் சிரித்தாள். தான் சிவந்த சரீரத்துடன் இருந்த போதிலும், தன் மகன் கருப்பாக, தன் கணவனை மாதிரி, பிறந்துவிட்டதில் ராணிக்கும், அவன் பிறந்தவுடன் சிறிதே, மனக்குறைதான்.

தன் ஆசை மகனின் கருப்பு நிறம் ராணியின் மனதுக்குள் ஒரு தழும்பேறிய காயமாக இருந்தது. அந்த காயத்தை சிரித்து சிரித்தே தன் மனதுக்குள்ளாகவே ஆற்றிக்கொண்டிருந்தாள் அவள். ராணியின் பலவீனமான இடம் அது. சம்பத் இந்த இடத்தை, தன் தாயிடம் தனக்கு காரியம் ஆகவேண்டும் என நினைக்கும் பட்சத்தில், மெல்ல தொட்டு வருடி, கிள்ளி, அந்தக் காயத்தின் தணலில் குளிர் காய்ந்து கொள்ளுவான்.

"அப்புறம்...?" ராணி ஏதோ சின்னத்திரை சீரியல் பார்ப்பது போல் ஆர்வமாக இருந்தாள். 


"பாஸ், நான் சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கறேன்... நீ என்னடான்னா எங்க நடுவுல பூந்து அவளை பிராக்கெட் போட்டா, உன் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நான் என்னா ஏலக்காய் தட்டிப்போட்டு, பாலை சுண்டக் காய்ச்சி, அவ கையில குடுத்தனுப்புவேனான்னேன்?" தாயும் மகனுமாக சேர்ந்து சிரித்தார்கள்.

"சத்தியமா சொல்றேம்மா... அந்த தமிழ்ச்செல்வன் புசுக்குன்னு சுத்தமா அவிஞ்சிப்பூட்டான். பேச்சு, மூச்சு எல்லாம் அடங்கிப் போச்சு அவனுக்கு... வார்த்தையே வர்லே வாய்லேருந்து..." ஹோவென மீண்டும் சிரித்தான் சம்பத்.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையோட விளையாடிட்டு வந்திருக்கான் புள்ளை... அதை கண்டிக்காம... பெத்தவ, புள்ளை கூட சேர்ந்து சிரிச்சு கும்மாளம் போடறாளே? இது எங்கேயாவது அடுக்குமா? வெளியில் வெராண்டாவில் உட்க்கார்ந்திருந்த நல்லசிவத்தின் வயிறு கலங்கியது. பற்றி எரிந்தது.

"சம்பத்து... நீ ஆட்டத்தை சரியா ஆரம்பிச்சிட்டேடா; மீதி கதையை நான் பாத்துக்கறேன்டா; நான் தாயக்கட்டையை கையில எடுத்தா எப்பவும் மொதல் உருட்டல்ல, தாயம்தாண்டா விழும்; சுகன்யாவை உனக்கு நான் கட்டி வெக்கிறேன். ராணி, மகாபாரதத்தின் பெண் சகுனியாக மாறி, வீம்பாக தன் மகனின் மனசு புரியாமல் கொக்கரித்தாள்.



"அம்மா...! நீ என்னா உன் புள்ளையை, குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு நெனைச்சிட்டியா?" சம்பத்தின் கருத்தமுகம் குரோதத்தில் மேலும் கருத்தது. சம்பத் கோபத்துடன் தன் தொடையை ஓங்கித் தட்டிக் கொண்டான்.

"என்னடா சொல்றே நீ...? எனக்குப் புரியலைடா...!"திடுக்கிட்டாள் ராணி.

இவ்வளவு நேரம் சுகன்யாவின் அழகால் அலைக்கழிக்கப்பட்டு, அவள் தன்னை கிஞ்சித்தும் மதிக்கவில்லையே என புலம்பிக்கொண்டிருந்த தன் பிள்ளை, தீடீரென சேம் சைட் கோல் ஏன் போட முயலுகிறான் என அவளுக்குப் புரியவில்லை. தன் மகனின் முகத்தையும், அவன் முகத்தில் நிறைந்திருந்த குரோதத்தையும் பார்த்த ராணி ஒரு நிமிடம் பயந்து, இவன் ப்ளான் என்னன்னு புரியலியே, என தன் மனதுக்குள் மருகினாள்.

"அம்மா, எவனோ தொட்ட ஒருத்தியை... நீ எனக்கு கட்டிவெக்கலாம்ன்னு பாக்கறீயே? ஒரு பெத்தவ பண்ற வேலையா இது? இதுக்கு மேல சுகன்யாவே வந்து, என்னைக் கட்டிக்க அவ தயார்ன்னு சொன்னாலும், அவளைக் கட்டிக்க நான் ரெடியில்லை; நான் என்ன மானங்கெட்ட மடையனா...?” சம்பத்தின் கண்கள் கோவைப் பழங்களாக சிவந்திருந்தன.

"சம்பத்து ... நீ பேசறதுல ஞாயமில்லேடா..", ராணி முனகினாள்.

"சுகன்யாவுக்கு தாலி கட்டிட்டு, காலம் பூரா அவளைப் பார்க்கும் போதெல்லாம், அவளைப் தொடும்போதெல்லாம், அவளை புருஷனா நான் கொஞ்சும் போதெல்லாம், என் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி எவனையோ காதலிச்சவ, காதலிச்சவனை கட்டிப்புடிச்சி, கொஞ்சி குலாவினவங்கற நெனைப்புலேயே, வாழ்க்கைப் பூரா, இந்த விஷத்தை நான் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, மருகி மருகி மனசுக்குள்ளவே சாகணுமா?"

"டேய்... நீ ஒரு பொண்ணை அவமானப்படுத்தறடா..." தன் மகன் ஒரு ஆண் ஆதிக்கத்தின் மொத்த உருவம், குறியீடு, அடையாளம் ... என ராணியின் மனது ஓலமிட்டது.

"ஏற்கனவே ஒருத்தன் கூட நெருக்கமா பழகிக்கிட்டு இருக்கற சுகன்யாவை, அவனையே கல்யாணம் பண்ணிக்க இருக்கற சுகன்யா கூட, உன் புள்ளை, நிம்மதியா ஒன்னாப் படுத்து தூங்க முடியும்ன்னு நீ நெனக்கறியாம்மா?

"அப்ப ஏண்டா அந்த தமிழ்செல்வன் கிட்ட சுகன்யாவை நான் எட்டு வருஷமா காதலிக்கறேன்னு கதைவுட்டே?" ராணியால் பொறுக்கமுடியாமல் பதறினாள்.

"வெரி சிம்பிள்... என்னை மதிக்காதவளை நான் பழிவாங்க நெனைச்சேன்... அவளை நான் கட்டிக்க நெனக்கலை.... எனக்கு அவ கொஞ்ச நேரமாவது அழுவணும்.. அவ்வளவுதான்.."

"நீ அவளை கட்டிக்க ஆசைப்படறேன்னு நான் நெனைச்சேண்டா" ராணிக்கு தன் மகனின் உள்ளம் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது.

"ஆனது ஆச்சு, போனது போச்சுன்னு, அவளைக் கட்டிக்கிட்டு, சந்தோஷமா குடும்பம் நடத்தற அளவுக்கு, பரந்தமனசு எனக்கு இல்லே; அவ்வள பெரிய மனுஷன் நான் இல்லேம்மா...."

"டேய்... சம்பத்து.. இது தப்புடா கண்ணு... வேணாம்டா இந்த விளையாட்டு..." இப்போது ராணி தன் மகனிடம் புலம்ப ஆரம்பித்தாள்.

ராணிக்கு தன் கணவன் தன் மகனைப் பற்றி சொன்னது சரியாப் போச்சே என்ற பயம் சட்டென மனதுக்குள் எழுந்தது. நான் விஷயம் புரியாம இவனை வேறத் தூண்டி விட்டுட்டேன்... சுகன்யா வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகறது? இந்த விஷயம் ரகுராமனுக்கு தெரிஞ்சா, வெனையாகிடுமே; ஆன்னா ஊன்னா, அருவாளை தூக்கற மொரடனாச்சே அவன்; சிவதாணு மாமாவுக்கும், நமக்கும் இருக்கற கொஞ்ச நஞ்ச ஒறவும் இவனால வுட்டுப் போயிடுமே? இந்த விளையாட்டு எங்கப் போய் முடியும்ன்னு தெரியலியே? அவள் மனது அரற்றியது.

"அம்மா... நான் ஒரு சாதாரண ஆசாபாசமுள்ள மனுஷன், எவனோ தொட்டு வுட்டுட்ட பொண்ணை கட்டிக்கிட்டு, நான் ஒரு பெரிய தியாகின்னு சொல்லி, யாருகிட்டவும் மெடல் வாங்க எனக்கு விருப்பமில்லே..." சம்பத்தின் முகத்தில் கேலியும், கிண்டலும், விளையாடிக் கொண்டிருந்தன.

சம்பத்தின் எகத்தாளமான வார்த்தைகளையும், வெறி சிரிப்பையும் பார்த்த ராணியின் முகம் ஒரே நொடியில் வெளிறிப்போனது. தன் பிள்ளை சம்பத்தின் வக்கிரமான மனசும், அவன் தன் மனதுக்குள் ஒரு பெண்ணின் மேல், ஒட்டு மொத்த பெண் இனத்தின் மேல் வைத்திருக்கும் உண்மையான மதிப்பும், மரியாதையும் தெரிய, தன் செல்ல மகனின் உண்மையான முகம், மெல்ல மெல்ல அவளுக்குப் புரிய, அவள் முகத்தின் சிரிப்பு சட்டென உறைந்து, பேச்சு மூச்சில்லாமல் உட்க்கார்ந்திருந்தாள்.

தன் கணவர் எங்கே? அவர் தன் உதவிக்கு வரமாட்டாரா? அவள் மனம் யோசிக்க ஆரம்பித்தது. 

தாய்க்கும் பிள்ளைக்கும் நடுவில் நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளை, இதுவரை மவுனமாக, தலையெழுத்தேயென்று, தன் தலையில் இரு கைகளையும் வைத்தவாறு, வெரண்டாவில் உட்க்கார்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்த நல்லசிவம், மெதுவாக எழுந்தார். ஹாலுக்குள் நுழைந்து தன் மனைவி ராணியின் அருகில் வந்து நின்றார்.

"எம்மாடி, ராணி... இவ்வளவு நேரமா, உன் ஆசைப் புள்ளைக்கூட சேர்ந்து சந்தோஷமா, ஒரு பொண்ணு வாழ்க்கையில, தேவையில்லாம அவன் விஷத்தை ஊத்திட்டு வந்த கதையை, பெருமையாச் சொல்லச் சொல்ல, நீ சிரிச்சு சிரிச்சுக் கேட்டு சந்தோஷப்பட்டியே, இப்ப அவன் "நான் என்ன மானங்கெட்ட மடையனான்னு” கேட்ட கேள்விக்கு உங்கிட்ட பதில் எதாவது இருக்கா? இல்லே, இப்பவாவது உன் புள்ளையோட அசல் ரூபம் என்னான்னு உனக்குத் தெரியுதா?"

நல்லசிவத்தின் முகம் சலனமின்றி இருந்தது. ராணி தன் கணவரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் பதில் ஏதும் சொல்லாமல், மவுனமாக தன் தலையை குனிந்து கொண்டாள்.

"அப்பா, நான் அவமானப்பட்டதை ஒரு பொருட்டாவே நீங்க நெனைக்கலையா?" மகன் தன் தகப்பனிடம் சீறினான்.

நல்லசிவம் தன் மகனின் கேள்வியை காதிலே வாங்கிக்கொண்டதாகவே காட்டிக்கொள்ளாமல் மேலே பேச ஆரம்பித்தார்.

"நான் உன் புள்ளையை மதிக்கலேன்னு சொல்றியே! உன் புள்ளை ஒரு நல்ல குடும்பத்து பொண்ணுக்கு குடுக்கற மதிப்பை பாத்துட்டியா? ஒரு வயசுப் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கற மாதிரி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு வந்ததுமில்லாம அவளைப்பத்தி எப்படியெல்லாம் அவதூறாப் பேசறான்னு பாத்தியா?"

"....." ராணி மவுனமாக இருந்தாள்.

"மானம் கெட்டவனுக்கு ஒரு புது டெஃபினிஷன் - அதான்டி "குப்பைத் தொட்டியில வீசிப்போட்ட, எச்ச எலையில மிச்சம் இருக்கற சோத்தை, நக்கித் திங்கற நாயுன்னு" உன் புள்ளை உனக்கு புது விளக்கம் குடுத்து இருக்கானே, இதுல உனக்கு சந்தோஷம்தானே? நல்லசிவம் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு, பீறிட்டுக்கொண்டு வரும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார். சிரித்தவர், பக்கத்திலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்தவர், அவரது கை அவரையும் அறியாமல் அவர் தலையை சென்றடைந்தது.

"ஏம்மா... உன் புருஷனுக்கு இன்னா பைத்தியம் புடிச்சு போச்சா? ஏன் இப்படி சிரிக்கணும்? நான் சொன்னதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?"

சம்பத் வெகுண்டான். நல்லசிவம், அவனுக்குப் பதில் சொல்லாமல், தன் மகனையும், தன் மனைவி ராணியையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித்தார். தன் தந்தை தன்னிடம் நேராகப் பேசமால், தன்னை குறை சொல்லி, தன் தாயிடம் மட்டுமே பேசுவது அவனுக்கு எரிச்சலையும், கோபத்தையும் கொடுத்தது.

"அப்பா.. எவனோ தொட்ட ஒருத்தியை நீங்க கட்டிக்கிட்டு உங்களால வாழ முடியுமா? உங்க மனசைத் தொட்டு சொல்லுங்கப் பார்ப்போம்?" தன் தகப்பனின் சிரிப்பின் அர்த்தம் அவனுக்குப் புரியாததால் சம்பத் தன் தகப்பனை வெறுப்புடன் கேட்டான்.

"டேய்.. நீ கொஞ்ச நேரம் சும்மா இருடா..." ராணி விரிந்து கிடந்த தன் கேசத்தை கொத்தாக முடிந்தவாறு எழுந்து நின்றாள்.

நல்லசிவத்தின் சிரிப்பின் அர்த்தம் ராணிக்குப் புரிந்தது. தன் கணவன் தன்னை ஏளனம் செய்கிறார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அவள் மனதுக்குள் அவள் கல்யாண வாழ்க்கை ஒரு நொடிக்குள் முழுவதுமாக, ஆரம்பம் முதல் அந்த நொடி வரை, வேகமாக ஓடி நின்றது.

உன் பிள்ளை சம்பத்து உனக்கு ஒரு கதை சொன்னான். அதை கேட்டு நீ மகிழ்ந்துப் போய் நிக்கறே? நீ உன் புள்ளைக்கு, உன் சொந்தக் கதையை சொல்ல தைரியம் இருக்காடின்னு என் புருஷன் என்னைப் பாத்து சிரிக்கறார். எனக்குத் தைரியம் இல்லையே; ராணியின் மனம் உள்ளுக்குள் அழுதது.

டேய் சம்பத்து..., உன் வரையறைப்படிப் பாத்தா, உன் அப்பனே ஒரு மானம் கெட்ட மடையன்தாண்டா; முப்பத்தஞ்சு வருஷமா, எச்சை எலையில சோறு திங்கறவன்தான்; ஆனா இதை யாருகிட்டவும் இன்னைக்கு வரைக்கும் சொல்லாம, கொள்ளாம, மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு, மவுனமா இருக்கற பெரிய மனுஷன்தான்னு வாய்விட்டு சொல்ல, உனக்குத் தைரியம் இருக்கான்னு என்னைப் பாத்து சிரிக்கறாரு? என்னால முடியாதே? ராணியின் முகம் சிவந்து, கண்கள் குளமாகியிருந்தன.

நல்லசிவத்தின் பார்வை ராணிக்குத் தெளிவாக அவர் மனதில் இருந்ததை உணர்த்தியது. கல்யாணமே ஆகாத ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணை, எச்சை எலைன்னு சொல்லி சிரிக்கறானே உன் பிள்ளை, அவன் கிட்ட சொல்லுடி; உங்கப்பனே எச்சை எலையில சோறு திங்கறவன்தான்னு...

அடியே ராணி, இதைச் சொல்ல உனக்குத் தைரியம் இருக்கா? இல்லே; உன் புள்ளைக்கு உன் கதையை நான் சொல்லட்டுமா? நல்லசிவத்தின் கண்களில் கேலியும், கிண்டலும், ஏளனமும், ஒன்று சேர்ந்து கூத்தாடிக்கொண்டிருந்தன.

உண்மையைச் சொல்லணும்ன்னா, எனக்குத் தைரியம் இல்லையே; ராணி தன் தலை குனிந்திருக்க, நான் பெத்தப் புள்ளை, என் கதை தெரியாம, என் எதிரிலேயே, என் புருஷனையே மானம் கெட்டவன்னு சொல்லிட்டானே, மனதுக்குள் தன் கதையை யோசித்து யோசித்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். தன் கணவனை கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள். ப்ளீஸ், இப்ப இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க, அவள் பார்வை அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது.

"எதுக்கு இப்ப குடி முழுகிப் போன மாதிரி தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க?" ராணி தன் கணவரின் அருகில் சென்று அவர் கையை, அவருடையத் தலையிலிருந்து விலக்கினாள்.

"ராணி நீ தெரிஞ்சே எரியற கொள்ளிக் கட்டையை எடுத்து உன் தலையைச் சொறிஞ்சுக்கறே...! உன் புள்ளைப் பாசம் உன் கண்ணை மறைக்குது! உன் புள்ளை மேல இவ்வளவு மோகம் நீ வெக்காதே! அவனை, அவன் வாழ்க்கையை நீயே கெடுக்காதே! ஒரு நல்லப் பொண்ணோட வாழ்க்கையில் நீங்க ரெண்டு பேரும் விளையாடாதீங்க. பெண் சாபம் நம்ம குலத்தையே எரிச்சுடும். உன் புள்ளைக்கு நல்லபடியா எடுத்துச் சொல்லி, அந்த தமிழ்செல்வனுக்கு போன் பண்ணி இவன் பண்ணது தப்புன்னு மன்னிப்பு கேக்கச் சொல்லுடி."

"..."



"யாருகிட்டவும் மன்னிப்பு கேக்க வேண்டிய அவசியம் எனக்கில்லே?" சம்பத் அர்த்தமில்லாமல் எகிறினான்.

"நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்க. திருதராஷ்ட்ரனும் புத்திர பாசத்துலத்தான் அழிஞ்சான்... தசரதனும் புத்திர மோகத்தாலத்தான் அழிஞ்சான்... நீயும் நானும் இவ்வளவு நாள் ஒண்ணா இருந்ததுக்கு ஒரு காரணம் உன் புள்ளையாலத்தாங்கறது உனக்கு நல்லாத் தெரியும். நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சாகணும். தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும். யாராலும் மாத்தவே முடியாத இயற்கையின் முதல் விதி இது.

நீளமாக பேசி முடித்த நல்லசிவம் எழுந்து அமைதியாக வரண்டாவிற்கு வந்தார். சற்று முன் உதறி எறிந்த செருப்பை மாட்டிகொண்டவர், கதைவைத் திறந்து, தன் பின்னால் வந்த ராணியைத் திரும்பிப் பார்க்காமல், குனிந்த தலையுடன் தெருவில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். ராணி தன் கணவனை தடுக்க முடியாமல், அவர் போவதை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 


சுகன்யா... 46

"நீ பொணமா ஏன் போவனும்? உன் புள்ளை கூட இன்னும் நூறு வருஷம், அவன் பண்ற அநியாயம் எல்லாத்துக்கும் ஆமாம் போட்டுக்கிட்டு... நல்லபடியா இருன்னு சொல்றேன்."

"உங்களுக்கு இப்ப என்ன வேணும்?" ராணி உக்கிரமானள். தனக்கு தன் கணவன் கொடுத்த வாக்கை மீறிவிட்டதை எண்ணி மனதுக்குள் எரிமலையாய் வெடித்தாள்.

"என்னை நிம்மதியா இருக்க விடுங்கன்னு சொல்றேன். அதனாலத்தான் உன் புள்ளைகிட்டச் சொன்னேன்; ரெண்டு பேருமா எங்கேயாவது போய் தொலையுங்கன்னு.." நல்லசிவத்தின் வாயில் அன்று நல்லதாக எதுவும் வரவில்லை. சிவன் அவர் வாயில் தப்புத்தப்பாகத் தாண்டவமாடிக்கொண்டிருந்தான்.

"நீங்க கருவண்டாட்டாம் இருந்துக்கிட்டு, அழகா செவப்பா, அம்சமா, பொண்டாட்டி வேணும்ன்னு ஆசைப்பட்டீங்களே இளமையிலே? அந்தப் பொண்டாட்டி நான் உங்களுக்கு இப்ப கசந்துப் போயிட்டேனா?"

"ஆமாண்டி... ஆசைப்பட்டுத்தான் மோசம் போனேன்..?"



"நீங்க என்னா மோசம் போயீட்டீங்க என்னைக் கட்டிக்கிட்டு...? அந்தக் கதையை அப்பறமா ஆற அமரப் பேசலாம்!"

"ம்ம்ம்ம்... வேற வேலை இல்லே எனக்கு? உன் கிட்ட ஆற அமர உன் கதையை உக்காந்து பேசணுமா?" அவரும் சளைக்கவில்லை. மெல்ல உட்க்கார்ந்திருந்த சேரை விட்டு எழுந்தார்.

"இப்ப என் புள்ளைக் கதையை முதல்ல பேசியே ஆகணும்... அவனை வீட்டைவிட்டு போன்னு ஏன் சொல்றீங்க... என்னையும் எதுக்காக வீட்டை விட்டு வெளியேப் போன்னு சொல்றீங்க?"

தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு... இனி ஜான் போனா என்ன? முழம் போனா என்ன என்ற முடிவுக்கு வந்த ராணி அவரிடம் ஜிம்ப ஆரம்பித்தாள். பெற்ற மகனைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டு, தன் வீயூகத்தை சற்றே மாற்றி அவரை மடக்க முயற்சி செய்ய ஆரம்பித்தாள்.

"என்னாடி பேசணும் அந்த தறுதலையைப் பத்தி இப்ப?"

"என் புள்ளைக்கு, அழகா, செவப்பா, அம்சமா, ஒரு பொண்ணு மனைவியா வரணும்ன்னு, அவனைப் பெத்தவ நான் ஆசைப்படக்கூடாதா? இல்லே என் புள்ளைதான் ஆசைப்படக்கூடாதா?"

"நிறுத்துடி... உங்க ரெண்டு பேரு கதையுமே எனக்கு வேண்டாங்கிறேன்." நல்லசிவம் அவளை முறைத்தார். தன் துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டவர், காலில் காதறுந்துப் போயிருந்த செருப்பை அணிந்தார்.

"எங்க போறீங்க இப்ப...நீங்க?"

ராணி தன் இருகைகளையும் நீட்டி அவரை வழி மறித்தாள்.. ஆவேசத்தில் அவள் முந்தானை தோளிலிருந்து சரிந்து தரையில் விழுந்து கிடந்தது. அவளுடைய வளப்பமான பருத்த மார்புகள், அவள் விட்ட வேகமான மூச்சுக்கு ஏற்றவாறு ஏறியிறங்கியது. ராணி தன் புடவையைத் தன் தொப்புளை மறைத்தும், மறைக்காமலும், இடுப்பில் கட்டியிருந்தாள். அவள் நாபியின் ஆழமும், நாபிக்குழியைச் சுற்றியிருந்த மெல்லிய கருத்த முடிவரிசையும், பளிச்சிட்ட அவள் இடுப்பின் வெண்மையும், மெல்லிய புடவைக்குள் அசையும், வலுவான துடைகளும், நல்லசிவத்தின் நாடியை, நரம்புகளை மொத்தமாக சிலிர்க்கவைத்தது.

"நீங்க ரெண்டு பேரும்தான் போகமாட்டீங்க...என்னையாவது போகவிடுங்கடீ...?

நல்லசிவத்தின் குரலில் ஒரு உறுதியும், வெறுப்பும் தெரிந்தது. அவர் தன் மனைவியின், இன்னும் கட்டுக்குலையாத, விம்மி விம்மித் தணியும் மார்பழகைப் பார்க்கமுடியாமல், அலையும் தன் மனதை ஓரிடத்தில் நிறுத்தமுடியாமல், தன் கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

"என் புள்ளை கல்யாணத்தை நடத்திட்டு... உங்களுக்குப் பாக்கியா இருக்கற இந்த கடைசி கடமையையும் முடிச்சுட்டு, எங்க வேணா நீங்க போங்க... அதுக்கப்புறம் நீங்கப் போறதைப் பத்தி எனக்கு கவலையில்லே... ஆனா இப்ப நீங்க பாதி ஆட்டத்துல வெளியே போறதை நான் அனுமதிக்கமாட்டேன்." ராணி ஒரு பெண் நாகமாக அவர் முன்னால் நின்று படமெடுத்தாள். படமெடுத்து கொத்திவிடுவது போல் தன் தலையை ஆட்டினாள்.

நாகம் படமெடுக்கும் போது பாக்கறதுக்கு அழகாத்தான் இருக்கு... அதுக்காக எவ்வளவு நாளைக்குத்தான் இவளோட இந்த உடம்பு அழகுல நான் கட்டுப்பட்டு நிக்கறது... காமம்... காமம்...காமம்.... விசுவாமித்திரன் மொதல்கொண்டு இந்த நல்லசிவம் வரைக்கும் இந்த பெண் உடம்பின் மேல இருக்கற, ஆசையிலிருந்து, மோகத்துல இருந்து, விடுபட முடியாம தவிக்கிறாங்களே? இதுக்கு ஒரு விடிவே இல்லையா? இதுதான் ஆண்களோட தலையெழுத்தா? கையேந்தி நிக்கற பிச்சைக்காரன் மாதிரி இவ முன்னாடி, இதுக்காக அப்பப்ப ராத்திரி நேரத்துல நிக்க வேண்டியதா இருக்குது. அதுக்காக இவ போடற விதிகளுக்கு உட்பட்டு நிக்க வேண்டியதா இருக்குது?

ஆண்டவா! என் பார்வையில ஒரு தெளிவைக் கொடேன்! பெண்ணாசையை மனசுக்குள்ளிருந்து ஒழிக்கணுங்கற ஒரே எண்ணத்தையும், வலுவையும் கொடேன்...! என் மனதில் இருக்கும் பெண் மோகத்தை வேரோடு சுட்டுப் பொசுக்கி, சாம்பலாக்கும் வைராக்கியத்தைக் கொடேன்? நல்லசிவத்தின் மனது வெகுவாக அரற்றியது. ஓலமிட்டது. இவ தன் உடம்பை காமிச்சே என்னை கட்டிபோட்டு வெச்சிருக்காளே? எப்பவும் கட்டி போட்டுடறாளே? எனக்கு என்னைக்கு இதுலேருந்து விமோசனம்? அவர் சுவாசம் வேகமாகவும் வெப்பமாகவும் வந்தது. மூச்சின் வெப்பத்தால் தன் நெஞ்சு வெடித்துவிடுமோ என அவர் தன் மனதுக்குள் பயந்தார்.

என் மூச்சு இப்பவே, இந்த நொடியே நின்னாலும் பரவாயில்லையே? விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடன்னு போயிடுவேனே? ஆனா இந்த பொம்பளையோட உடம்பு மேல இருக்கற ஆசையும், சதை வெறியும், காமவேட்க்கையும் என்னைவிட்டுப் போகலையே? அறுபது வயசுல இந்த வேட்க்கை போகலன்னா, எப்ப அது என்னை விட்டுப் போகும்? உடல் ஓய்ந்தாலும், மனம் ஓயவில்லையே? ஒரு பெண்ணின் உடலுக்குள் இத்தனை வசீகரமா? அந்த வசீகரத்தில், ஆண் என்றுமே தன் அகம் அழிந்து நிற்க வேண்டியதுதானா? அவர் வெட்கத்தில் தன் தலை குனிந்து நின்றார்.

நல்லசிவம், தன் காலில் அணிந்த செருப்பை கழட்டி வேகமாக மூலையில் உதறினார். உதறித் தோளில் போட்டத் துண்டை வேகமாக மீண்டும் உதறி, வெரண்டாவில் கிடந்த மர ஈஸிச்சேரில் விரித்துப் போட்டு, சப்பனமிட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார். கண்களுக்குள் ராணியின் செழிப்பான சிவந்த மேனி வந்து நின்றது.

நல்லசிவம் ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்ட இள வயது ராணியின் உடல் மெல்ல மெல்ல வளர்ந்து விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது... நீளமான கைகள், கொழுத்துக் குலுங்கும் மார்புகள், சிறுத்த இடை, அகலமான பிருஷ்டங்கள், பருத்த இடுப்பிலிருந்து இறங்கும் நீளமான, அடிவாழைத் தொடைகள், வலுவான கெண்டைக்கால் சதைகள், கருத்த முடியின் நடுவில் அழகான, சுகமான பாம்பின் படத்தையொத்த அல்குல், அன்னைக்குப் பாத்தத்துக்கு இன்னைக்கும் ஒரு மாத்து கொறையாம இருக்காளே? அம்மா... இது என்ன வேதனை எனக்கு? திருப்பியும் இந்த முறையும் ராணிதான் ஜெயிச்சிட்டாளா? இவளை உதறித் தள்ளிட்டு ஓடணும்ன்னு பாக்கிறேன், முடியலியே?

ராணி ஜெயிச்சிட்டதா நான் ஏன் நெனைக்கணும்? இவளைப் பாத்து நான் ஏன் இந்த வயசுல வீட்டை விட்டு ஓட நினைக்கிறேன். வீட்டை விட்டு போனா என் புள்ளை பண்ற தப்புகள் என் கண்ணுல படமா இருக்கலாம்? அவனைப் பத்தி மத்தவங்க தப்பா பேசறது காதுல விழமா இருக்கலாம். ஆனா என் மனசுக்குள்ள இருக்கற காமம் என்னை விட்டு போயிடுமா? பெண்ணுடம்பு மோகத்தை மனதிலிருந்து தானே ஒழிக்கவேண்டும். மனசால நான் இவகிட்டேயிருந்து விலகாமல், உடலால் விலகி என்னப் பலன்?

இயல்பா இருடா நல்லசிவம்.. உன் இயல்பு என்ன? அதிகமாக பேசாமல் இருத்தல். உன் பிள்ளைக்கும் பொறுப்பு வரும். அதுவரைக்கும் நீ பொறுமையா இரேன். அவனை ஏன் நீ குறை சொல்லிக்கிட்டே இருக்கே? இருக்கப் போற கொஞ்ச நாளைக்கு மவுனமா இருந்துட்டுப் போயேன்?

உன்னை வேண்டாம்ன்னு சொன்ன ராணியை நீதான் விரும்பி அவதான் வேணும்ன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டே? மனைவியா ஏத்துக்கிட்டவளை, இந்த வயசுல என்னைக்கோ அவ பண்ணத் தப்பை மனசுக்குள்ள நெனைச்சு, விமர்சனம் பண்ணது சரியா? உன் பார்வையில் அது தப்பு? ராணி தன் பார்வையில அதை தப்புன்னு இதுவரைக்கும் ஒத்துக்கலையே? அவளை இந்த வயசுல உன் வயசுக்கு வந்த புள்ளை எதிர்ல விமர்சனம் செய்தது உன் தப்புத்தானே?

உன் வாழ்க்கையில, உன் இளமையிலேயே ஒரு ஆறுமாசம், ஒரே வீட்டுல நீ இவ கூடவே இருந்துக்கிட்டு, ஓரளவுக்கு மனசாலேயும், சுத்தமா உடம்பாலேயும், ஆறு மாசம், ராணியை விட்டு நீ பிரிஞ்சுத்தானே இருந்தே? உன் மனசாலே இவகிட்டேயிருந்து மீண்டும் உன்னால ஒதுங்க முடியாதா? மனசால் ஒதுங்கினால்... உடல் ஒதுங்கத்தானே போகுது? நல்லசிவத்தின் மனம் யோசித்து யோசித்து ஒருவாறு தன் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

"நல்லசிவத்தின் முன் ராணி மூச்சிறைத்துக்கொண்டு நின்றிருந்தாள். தரையில் கிடந்த தன் முந்தானையால் தன் வியர்த்த முகத்தையும், கழுத்தையும் துடைத்துக்கொண்டாள். முந்தானையை ஒழுங்காக போடாமல், கோபத்தில் ஏனோதானோவென மார்பின் மேல், புடவையை வீசியவள், கண்ணை மூடி அமர்ந்திருந்த நல்லசிவத்தின் முகத்தை ஒரு வினாடி உற்று நோக்கினாள். அவள் மனதிலும் விஷம் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்தது. 

முப்பத்தஞ்சு வருஷமா, உன் நாடியைப் புடிச்சுப்பாக்கற எங்கிட்டவே உன் ஆட்டத்தை காமிக்கிறியா? உன் நாடி எப்ப வேகமாத் துடிக்கும்ன்னு எனக்குத் தெரியாதா? என்னை அடிச்சி வீட்டை விட்டுத் தொரத்தணுங்கற எண்ணத்தை இவ்வளவு நாளா உன் மனசுக்குள்ள வெச்சுக்கிட்டுத்தான்... என் கூட பொய்யா உறவாடிக்கிட்டு இருக்கியா? உன்னை என்னமோ ஒரு பெரிய தியாகின்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்? 

பாம்பேயிலதான் சர்வீஸ் பண்ணும் போது சின்ன வீடு; பையனுக்கு ஒரு ரூமைக் குடுத்துட்டு, எப்பவும் நாம ஒரே ரூமுக்குள்ள அடைஞ்சு கிடந்தோம். இங்க கிராமத்துல பெரிய வீடு; எனக்கு தனி ரூம் வேணும்ன்னு சொன்னே? என்னமோ தனியா இருந்து, பொம்பளை ஆசையை கட்டுப்படுத்தப் போறேன்னு சொன்னே? உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா? தெரிஞ்சாலும், சரி ஆசைப்படி இருந்துக்கோன்னு சொன்னேன்! ஆனா உன்னாலத் தனியா, முழுசா ஒரு வாரம் உனக்குன்னு இருக்கற ரூமுல படுக்க முடியலை. 

அறுபது வயசு முடிஞ்சும், இன்னும் ரெண்டு நாளைக்கு ஒரு தரம், ராத்திரிலே, அரை இருட்டுல, வெக்கம் கெட்டுப்போய் என் ரூமுக்கு வந்து, என் பக்கத்துலப் படுத்துக்கிட்டு, ராணீ... ராணீன்னு என்னை முழுசா தடவிப் பாக்கறே? என்னைத் தடவியாவது விடுடீங்கறே? என்னாச்சு...? எங்கப் போச்சு உன் வைராக்கிய சாதனையெல்லாம்...? எனக்கு இன்னைக்கு வேணாம்ன்னா அப்படி மூஞ்சை சுளிச்சுக்கறே? 

ராத்திரியில உனக்கு ஒரு வேஷம்? பகல்லே ஊருக்குன்னு ஒரு வேஷம் வெச்சிருக்கே! ராத்திரியில என் ரூம்ல உனக்கு ஒரு வேஷம்? ஹால்லே உன் புள்ளை எதிர்ல ஒரு வேஷமா? எத்தனை வேஷம் போட்டாலும், கடைசியா நீ இந்த வயசுல பொம்பளை உடம்புக்கு நாயா பேயா அலையலாம். ஆனா உன் புள்ளை ஆசையா, அழகா இருக்கற பொண்ணுங்க கூட பழகக்கூடாதா?

தன் பிள்ளைப் பாசத்தில், தன் கணவன், தன் உடல் அவஸ்தையில், தன் உடலின் அரிப்பை, தனக்கு உரிமையுள்ள, தன் மனைவியிடம்தானே தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் என்ற விஷயத்தை ராணி துரதிருஷ்டவசமாக அன்று மறந்தாள். தன் மகனை ஒரு பெண் மறுத்துவிட்டாள் என்ற கோபத்தில், தன் மகனின் கட்டுப்பாடற்ற இருபத்தைந்தின் இளமை அலைச்சலையும், அந்த இளமையின் பழிவாங்கும் பரபரப்பையும், அறுபதின் தேக அவஸ்தையையும் ஒன்றாக, சமமாக அவள் பார்த்தாள். 

என்னை வீட்டை விட்டுத் துரத்திடுவியா நீ? அப்புறம் ராத்திரியில நீ எப்படித் தனியாத் தூங்குவே? என் உடம்பு கதகதப்பு இல்லாம உன்னாலத் தூங்க முடியுமா? நல்லசிவம்ன்னு பேரு வெச்சுக்கிட்டா மட்டும் போதுமாய்யா? நீ நிஜமாவே சுத்த சிவமாயிடுவியா? உன் மனசுக்குள்ள எத்தனை சிவம்யா நீ? என் உடம்புக்காகத்தான் நீ என்னை இந்த வீட்டுக்குள்ள இவ்வளவு நாளா சோறு போட்டு, துணி குடுத்து வெச்சிருக்கியா? எனக்காக இல்லையா? 

இன்னொருதரம் என்னை இருட்டுல தேடுவே பாரு; அப்ப உன் வண்டவாளத்தை தண்டவாளத்துல ஏத்தறேன். வெக்கறேன்.. உன் வெள்ளை வேஷ்ட்டி.. வெள்ளைத்துண்டு வேஷத்துக்கு ஒரு வேட்டு? என்ன போலியான ஒரு வாழ்க்கையை ரெண்டு பேரும் இந்த வீட்டுக்குள்ள் வாழ்ந்துகிட்டு இருக்கோம்...? நீ சொல்றதும் சரிதான் நான் எதுக்காக இன்னும் உன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்? உனக்கு என்னை, என் மனசை, என் மனசின் மூலையில் இருக்கும் அழியாத ஒரு சின்ன ஆசையோடு, என்ன முழுசா ஏத்துக்கப் பிடிக்கலை. ஆனா என் உடம்பு மட்டும் உனக்கு முழுசா வேணும்? அவள் மனதுக்குள் குமைந்தாள். புகைந்தாள். எரிந்தாள். 

"அம்மா... இது என்னம்மா புதுக்கதை? உங்க ரெண்டு பேரோட லைப் ஸ்டோரியில, ஒரு தனி ட்ராக் எனக்குத் தெரியாம ஓடிகிட்டு இருக்கே? இட் சீம்ஸ் டு பி வெரி இன்ட்ரஸ்டிங்...!! ஹாலில் சோஃபாவில் படுத்திருந்த சம்பத், வேகமாக எழுந்து வெரண்டாவிற்கு வந்தான். 



"நீ பொத்திக்கிட்டு போடா உள்ளே... அந்தக் கதை எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல... எங்க கதையில நீ என்ட்ரி கொடுக்க வேண்டிய அவசியமில்லே...! உன்னை யாரும் இங்க தாம்பூலம் வெச்சு அழைக்கல" ராணி அவனை மூர்க்கத்துடன் இழுத்து ஹாலுக்குள் தள்ளினாள். தள்ளிய வேகத்தில் அவள் முந்தானை மீண்டும் அவள் தோளிலிருந்து நழுவியது. நெற்றி வியர்த்து, தன் புடவை முந்தானை தரையில் புரள, கோபத்தில் குங்குமமாய் சிவந்திருக்கும் தன் தாயின் முகத்தைப் பார்த்தவனுக்கு, அவள் எதிரில் நின்று பேச சம்பத்துக்கு அச்சமாக இருந்தது. இந்த கோலத்தில் தன் தாயை அவன் எப்போதும் பார்த்ததில்லை.

சம்பத் ஒரு நொடி அதிர்ந்தான். தன் தாயின் உடலில் இத்தனை பலமா? ஒரு கையால என்னைச் சுழற்றி எறிந்துவிட்டாளே? நிஜமாவே அம்மா வெறி பிடிச்ச மாதிரில்ல பேசறா? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நடுவுல அப்படி என்னப் பழங்கதை இருக்கு? அம்மா கோபப்பட்டுத்தான் நான் பாத்திருக்கேன். ஆனா இந்தமாதிரி ஒரு கோபத்தை நான் எப்பவும் பாத்தது இல்லையே? மெதுவாக நடந்து மீண்டும் வெராண்டாவிற்கு அவன் வந்தான். 

நம்ம அப்பா சாதுவான மனுஷன். என் மேல உயிரையே வெச்சிருக்கார். என்னை கோபத்துல அப்பப்ப ஏதோ பேசுவார்... ரெண்டு வார்த்தை திட்டுவார்... அரைமணி நேரத்துல பழையபடி நார்மலாயிடுவார். வீட்டை விட்டு வெளியில போடான்னுட்டாரே? அம்மாவையும் வீட்டை விட்டுப் போடீங்கறார்? என்னா ஆச்சு இவருக்கு? இன்னைக்கு சாது மிரண்டா காடு கொள்ளாதுங்கற மாதிரி அம்மாகிட்ட ஏன் நடந்துக்கறார்? நான் போறேன்னு, துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு கிளம்பிட்டாரே? 

நான் இன்னைக்கு கொஞ்சம் வழக்கத்தைவிட அதிகமாவே, இந்த வீடு என் தாத்தா சொத்து... பேரனுக்குத்தான் உரிமை, அது... இதுன்னு பேசி அவரை வெறுப்பேத்திட்டேனா? எப்பவும் பொறுமையா இருக்கற அப்பாவுக்கு தீடீர்ன்னு இன்னைக்கு என்ன ஆச்சு? 

இவங்க ரெண்டு பேருக்குள்ள, இந்த வயசுல, இப்ப என்ன தீவிரமான ஒரு புகைச்சல்? இவங்க ரெண்டு பேரும் இப்படி சண்டைப் போட்டு நான் பாத்தது இல்லையே? இதுல ஏதோ விஷயமிருக்கு?! இதுக்கு காரணம் யாரு? நானா? இல்லை வேற யாராவதா? பொறுத்துத்தான் பாக்கணும்.... கோபத்துடன் நிற்கும் தன் தாயையும், கண் மூடி உட்கார்ந்திருக்கும் தன் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான் அவன். 

"டேய் சொல்லேண்டா சிவதாணு வீட்டுல அப்படி என்னதான் நடந்தது?"

"நான் அவமானப்பட்ட கதையை நீ தெரிஞ்சிக்கிட்டே ஆவணுமா?" சம்பத்தின் குரலில் சிறிதே வன்மம் தொனித்தது.

"சம்பத்து... உனக்கு ஒரு அவமானம்ன்னா அது எனக்கு இல்லையாடா?" ராணி தன் மகனை சமாதானப்படுத்த முயன்றாள்.

"சுருக்கமா சொன்னா சுகன்யா ஒரு தரம் கூட என் மூஞ்சை ஏறெடுத்துப் பாக்கலைம்மா..."

"அப்படி எதுலடா நீ கொறைஞ்சுப் போயிட்டே அவளை விட?"

"இந்த ஒரு வார்த்தையை சொல்லி சொல்லித்தான் நீ என்னை ரொம்பவே ஏத்திவிட்டுட்டே.. உன்னாலத்தான் இன்னைக்கு நான் அந்த நாய் கிட்ட அவமானப்பட்டேன்..."

"என்னப்பா சொல்றே நீ?"

"அம்மா... சும்மா டயம் பாஸுக்கு பசங்களோட ஜாலியா சுத்தற பொண்ணுங்க, அவனுங்க ஃப்ர்சைத்தான் குறி வெப்பாளுங்க.."

"ம்ம்ம்..."

"அம்மா! சுகன்யாகிட்ட பணம் இருக்கு. அவ என் ட்ரஸ்க்கு மசியலை; என் படிப்புக்கு மசியலை; என் அந்தஸ்துக்கு மசியலை; என் கட்டான உடம்புக்கு மசியலை; இவ்வளவு ஏன்? நான் அவளுக்கு முறைப்பிள்ளைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், சொந்தத்துக்கும் மசியலே.. அவ எதுக்குமே மசியலை!"

"ம்ம்ம்..."

"நான் என் கையை நீட்டி ஹாய்ன்னு சொன்னேன்; சுகன்யா என் கையைக்கூட புடிச்சு குலுக்கலை; அசால்டா வணக்கம்ன்னு சொல்லி கையை கூப்பிட்டா. அப்படீன்னா என்ன அர்த்தம்?"

"நீயே சொல்லுடா"

"அவ செவப்பு; நான் கருப்புன்னு அவளுக்கு திமிர்; ஆணவம்; அகங்காரம்; வேறென்னா?"

"அடி செருப்பாலே!" ராணி மனதுக்குள் கொதித்தாள். சம்பத் தன் தாயின் காயத்தை, ஆறிய புண்ணை, அதன் தழும்பை சரியாக வருடி கிள்ளிவிட்டான்.

"இன்னைய தேதியில ஆணும், பெண்ணும் ஹாய்ன்னு சொல்லி, கையை குலுக்கறது ரொம்ப சாதாரண விஷயம்மா...."

"புரியுதுடா எனக்கு.."

"சுகன்யாவுக்கு என் கையை குலுக்க பிடிக்கலையா? ரொம்ப நார்மலான ஒரு காரியத்தை அவ செய்யாததால, என்னுடைய ஆர்வத்தை புரிஞ்சுக்காததாலே, அவ மகாத்திமிர் புடிச்சவன்னுதான் அந்த சமயத்துல எனக்குப் பட்டுது."

"ம்ம்ம்....சரிப்பா... அவ கைகுலுக்கலைன்னா என்ன? இதை நீ ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கறே?"

"எம்மா ... இந்த எண்ணம் சரியோ தப்போ இந்தப் மனப்போக்கை என்னால மாத்திக்கமுடியலை."

"இது தப்புடா சம்பத்து... எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லடா" ராணி தன்னால் முடிந்தவரை, தன் மகனை அவனுடைய வழக்கமான, இயல்பான மனநிலைமைக்கு கொண்டு வர முயன்றாள்.

"எம்ம்மா... நீ செவப்பா, அழகா இருக்கியே! என்னை மட்டும் ஏம்மா கருப்பா பெத்தே?" அவன் குரலில் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

"டேய் கண்ணு... ஒரு குழந்தையோட உடம்பு நெறத்தை ஒரு பொம்பளை மட்டும் முடிவு பண்ண முடியாதுடா... இவ்வளவு படிச்சிருக்கே! இதுகூடவா உனக்குப் புரியலை...?"

"அம்மா..." சம்பத்தின் கண்கள் இலேசாக கலங்கின..

"உன் உடம்பு நிறத்தையே ஏண்டா நினைச்சு நினைச்சு, எப்பவும் உனக்குள்ள கூனி குறுகிப் போறே?" ராணி தன் மகனின் முகத்தை தன் மார்போடு சேர்த்துக்கொண்டாள். அவன் தலையை மெல்ல வருடினாள்.



"அம்மா..."

"நீ படிக்கிற காலத்துலதான் கூடப் படிச்ச பசங்க அதைச்சொன்னாங்க; பொண்ணுங்க என்னைப் பாத்து கிண்டலா சிரிச்சாங்கன்னு அழுவே... இப்ப மன முதிர்ச்சியடைஞ்ச, கை நெறைய சம்பாதிக்கற, மெச்சூர்ட் யங் மேன் நீ... இன்னும் ஏண்டா உனக்கு இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை?"

"ம்மா... நீ அந்தக் காலத்துலேயே நெறைய படிச்சிருந்தே? ஓரளவுக்கு சொத்து சுகத்தோட இருந்த குடும்பத்துலத்தான் பொறந்தே? இப்பவும் உன் அம்பத்து நாலு வயசுலேயும் நீ மகாலட்சுமி மாதிரி அழகாத்தான் இருக்கே...! நீ ஏம்மா கருப்பா இருந்த என் அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே?"

"அடப் பாவி மவனே! ஒரு புள்ளை தன் பெத்தவகிட்ட கேக்கற கேள்வியாடா இது?" தன் மகனின் மன வருத்தத்தை புரிந்து கொண்ட ராணி, தன் மகனின் அர்த்தமில்லாத கேள்வியை கண்டு சம்பத்தின் மீது தன் மனதுக்குள் எரிச்சலுமுற்றாள்.


சுகன்யா... 45

"காலையில போனவன் நீ, இவ்வள நேரமா எங்கடா சுத்திட்டு வர்றே?"

பத்து மணியளவில், தன் தாயின் விருப்பப்படி, சிவதாணுவின் வீட்டில், சுகன்யாவை பார்க்க சென்ற சம்பத், மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பியதும், ராணி தன் பிள்ளையின் சோர்ந்த முகத்தைப் பார்த்து பதறிப் போனாள்.

"வீட்டுக்குள்ளே வர்றப்பவே, என்னை நீ சும்மா நச்சு நச்சுன்னாதேம்மா?" சம்பத் அலுப்பும் சலிப்புமாக எரிந்து விழுந்தான்

"வெளியில எதாவது சாப்பிட்டியாடா...ராஜா... ஏன் கோவப்படறே?" ... "மணி ரெண்டாச்சே!" நேரத்துக்கு சாப்பிட்டு பழக்கமாச்சே இவனுக்கு? இவன் பசியினாலத்தான் உர்ன்னு கோபமா இருக்கானா?

"எதையாவது சீக்கிரமா குடுத்துத் தொலைம்மா...பசி உயிர் போவுது..!" சம்பத் தன் முகத்தைச் சுளித்தான்.


சம்பத், சுகன்யாவின் மீதிருந்த எரிச்சலையும், சினத்தையும், ஏற்கனவே செல்வாவிடம் போனில் முழுசாக காண்பித்துவிட்டான். கனகா குடுத்த காஃபியை குடித்துவிட்டு, அவன் கிளம்பும் போது கூட, தன் தாத்தாவின் அறைக்குள் படுத்திருந்த சுகன்யா, அந்த அறையைவிட்டு வெளியில் வரவேயில்லை.

"பாட்டி, சுகன்யாகிட்ட சொல்லிடுங்க; நான் போய்ட்டு அப்புறமா வர்றேன்!" அறையின் உள்ளிருந்த சுகன்யாவின் காதில் விழுமளவிற்கு சம்பத் தான் கிளம்புவதை சத்தமாக அறிவித்தும், அதற்கும் எந்தவித பலனும் இல்லை.

சம்பத்துக்கு, சற்றே மனதுக்குள் அடங்கியிருந்த ஆத்திரம், மீண்டும் பொங்கி எழுந்தது. நான் கிளம்பறேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும், உரக்க குரல் கொடுத்ததுக்கு அப்புறமும், ஒரு மரியாதைக்கு கூட வெளியில வர்றலயே? இந்த சுகன்யா மகாத்திமிர் பிடிச்சவளா இருக்கணும்? இவ லவ்வர் தமிழ்செல்வனுக்கும், இவளுக்கும், கூரா ஆப்பு வெச்சதுல ஒரு தப்பும் இல்லை? நடுவுல ஒரு நிமிஷம் நான் இவளை நினைச்சு பரிதாபப்பட்டது தப்புத்தான் போல இருக்கே? இவளை நான் மட்டும் எதுக்காக என் சொந்தம்ன்னு நினைக்கணும்? மதிக்கணும்?

ரெடி ... ஒன்.... டூ... த்திரி ... ஸ்டார்ட் மீயூஜ்ஜிக்! கத்திரிக்கா கடைத் தெருவுக்கு வந்தாச்சு! இன்னொருத்தன் இவளை ஏற்கனவே தொட்டு பாத்துட்டான்னு சுத்தமா தெரிஞ்சுப் போச்சு. நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்ன்னு இவளைத் தொட்டவனே கன்பார்ம் பண்ணிட்டான். இவ்வளவு நாளா ஒருத்தரை ஒருத்தர் தொட்டுக்காம, தடவிக்காமலா இருந்து இருப்பாங்க? எனக்கு சத்தியமா சுகன்யா கிடைக்கப் போறதும் இல்லே! இப்ப இவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற இன்ட்ரஸ்ட்டும் எனக்கு சுத்தமா இல்லே! இவளை மாதிரி திமிர் புடிச்சவளைக் கட்டிக்கிட்டா, என் சவுகரியப்படி வாழ்க்கையில ஃபிரீயா இருக்க முடியாது.

ஒரு விஷயம்தான் புரியலே? சுகன்யாவோட லவ்வர் செல்வா, சுத்தமா கொஞ்சம் கூடவா சூடு, சொரனை இப்படி எதுவும் இல்லாம இருப்பான்? சோத்துல உப்புப் போட்டுத்தானே திம்பான் அவன்? ஆப்பு வெச்சு கால் மணி நேரமாச்சு; அவன் பொலம்பி அழுவற சத்தத்தைக் காணோம்! திருப்பியும் சுகன்யாவுக்கு அவன் போன் பண்ணலயே? அவன் போன் பண்ணட்டும்! பண்ணாம போவட்டும்! இல்லே, இங்க நேரா என்கொயரிக்குத்தான் வரட்டுமே? உனக்கென்னடா? உங்கிட்ட மேட்டர் வரும்போது பாத்துக்க! சர்தானே? போ... போ.. எடத்தைக் காலி பண்ணு நயினா...

டேய் சம்பத்து... நீ உன் வேலையை கச்சிதமா முடிச்சிட்டே! உன் ரூட்டைப் பாத்துக்கிட்டு போய்கிட்டே இருடா; பலனை அனுபவிக்கறவங்க அனுபவிக்கட்டும்! தேவிடியா முண்டை...! மனதுக்குள் சுகன்யாவை வெறுப்புடன் திட்டினான். திட்டியதால் மனதுக்குள் ஏற்பட்ட போலியான சந்தோஷத்தையும், சுகன்யாவின் பாராமுகத்தினால் ஏற்பட்ட வெறுப்பையும் தன் முகத்தில் காட்டிக்கொள்ளாமல், "பாட்டீ, தேங்க்ஸ் பாட்டீ... பில்டர் காபி அருமையா இருந்தது.." கனகாவைப் வாயாரப் பாரட்டிவிட்டு சிவதாணுவின் வீட்டிலிருந்து கிளம்பினான்.

வீட்டுக்கு வரும் வழியில், தன் பழைய நண்பன் ஒருவன் எதிர்படவே, அவனுடன் நேரம் போவது தெரியாமல் அரட்டையடித்தவாறு, சுகன்யாவால் புண்பட்ட தன் மனதை, ஃபில்டர் வில்ஸ் புகையால் சிறிதளவு ஆற்றிக்கொண்டான். பசியுடன் வீட்டுக்குத் திரும்பியவன், மிச்சம் மீதியிருந்த எரிச்சலை, முதலில் தன் எதிரில் வந்த தாயின் மீது காட்டினான். ஒரு முரடனின் செல்லாத கோபம், வீட்டில் தாயிடமும், தாரத்திடமும்தானே செல்லுபடியாகும்!.

சம்பத், தான் அணிந்திருந்த ஜீன்சையும், டீ ஷர்ட்டையும் கழற்றி, ஹாலில் திசைக்கொன்றாக எறிந்தான். ராணி, தன் செல்லப்பிள்ளை சம்பத், ஆடும் ஆட்டத்தை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கோபத்தில் இருக்கும்போது யார் எது சொன்னாலும் அவன் காதில் ஏறாது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். இப்போதைக்கு அவனை விட்டுப் பிடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அவள் வந்தாள்.

நல்லசிவம், சம்பத்தைப் பெற்றெடுத்தவர், அவன் ஆடும் கூத்தைக் கண்டவர், தன் மகனையும், மனைவியையும் மாறி மாறி மவுனமாக பார்த்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தார். சரிதான்... இன்னைக்கு அம்மாவும், புள்ளையும், வழக்கம் போல ஒரு டிராமா போடத்தான் போறாங்க; அதுல எனக்கு என்ன ரோல்; அதை நான் எப்படி டீல் பண்ணணும்? அவருக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.

ராணியும் அதையேதான் சிந்தித்துக்கொண்டு இருந்தாள். ஒரே புள்ளே; ஒரே புள்ளேன்னு தலைக்கு மேலச் செல்லம் குடுத்து கெடுத்துட்டேன். பத்மாசூரன் மாதிரி இப்ப இவன் ஒவ்வொரு விஷயத்திலேயும், இவன் என் தலைமேலேயே கையை வெச்சுப் பாக்கிறேங்கிறான். என்னத்தப் பண்றது? பெத்ததை எங்க கொண்டு போய் விடறது?

பெத்தவரு என்னடான்னா, எப்பவும் தலையில கையை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கார்? பெத்தது ஒரு வக்கிரம்ன்னா, வாச்சது அதுக்கு மேல ஒரு வக்கிரம்; அப்பனும், புள்ளையும் நேருக்கு நேர் ஒருத்தரை ஒருத்தர் நேரா முகம் கொடுத்து பேசறது கூட கிடையாது. சூரியனும், சனியும் மாதிரி தான். அடுத்த வாரம் இவன் பெங்களூரூக்குத் திரும்பிப் போயிடுவான். அதுக்குள்ள ஒண்ணு ரெண்டு இடத்துல இவனுக்குப் பொண்ணுங்களை காட்டணும்! எதைப்பத்தியும் இவரு கவலைப்படாம உக்காந்து இருக்காரு?

இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா, நம்ம கடமை முடிஞ்சதுன்னு நிம்மதியா இருக்கலாம். ஒரு எடமும் சரியா அமைஞ்சுத் தொலையலை? சம்பத்து, படிச்சவளா, வேலை செய்யறவளா வேணுங்கறான். வர்ற எடத்துல பொண்ணு, கொஞ்சம் சுமாரா அழகாயிருந்தா, அவளுக்கு சரியான வேலையில்லே! வேலையிலயிருந்தா இவன் நெனைக்கற மாதிரி செவப்பா இல்லே?

அப்பன் அந்தக்காலத்துல அலைஞ்ச மாதிரி, புள்ளையும் செவப்புத் தோலா பொண்டாட்டி வேணுங்கறான். செவப்பு, கருப்புல என்னா இருக்கு? எப்படியிருந்தாலும் பொம்பளை பொம்பளைதான்னு ஏன் இந்த ஆம்பிளைங்களுக்குப் புரிஞ்சுத் தொலைக்கலை? ஆம்பளைங்களை மட்டும் நான் ஏன் குறைச் சொல்றேன்? பொண்ணுங்க மட்டும் யோக்கியமா?

ஒரு எடத்துல பொண்ணுப் பாக்க போனா, பெத்தவங்களுக்கு மேல, இதுங்களே கண்டீஷன் மேல கண்டீஷன் போடுதுங்க! வர்றவன் உசரமா இருக்கணும்; செவப்பா இருக்கணும்; மீசை இருக்கணும்; சமையல் தெரியணும்; கார் வெச்சிருக்கானா? வீடு வெச்சிருக்கானா? வீடு வெச்சிருந்தா, வீட்டுக்கு என்னை ஈ.எம்.ஐ. கட்டுன்னு சொல்லக்கூடாது! கல்யாணம் ஆனதும் உடனே தனிகுடித்தனம் போயிடனும். ஆம்பளை கண்டீஷன் போட்ட காலம் போய், இப்ப பொண்ணுங்க கண்டீஷன் போடற காலமாயிருக்கு!

இந்தக்காலத்து பொண்ணுங்களுக்குத்தான், என்னன்னா ஆசைகள்! என்னன்ன விருப்பங்கள்! என்னன்ன கற்பனைகள்! மாமானார், மாமியார், நாத்தானார்ன்னு பிக்கல் பிடுங்கல் இருக்கக்கூடாதுன்னு, மனசுக்குள்ளத் ரொம்பத் தெளிவா இருக்காளுங்க! பின்னே என்னா? சொந்தக்கால்ல நிக்கறாளுங்களே? ஒண்ணு அமைஞ்சி வந்தா, ஒண்ணு அமைய மாட்டேங்குது... சுகன்யா, எல்லாவிதத்துலயும் ஒத்துவர்றா! ஆனா அவ அப்பனும், ஆத்தாளும் ரொம்பவே பிகு பண்றாங்க... நீங்க ஒரு தரம் நேராப் பாத்து அந்த குமார்கிட்ட பேசுங்கங்கறேன்... காதுல வாங்கினாத்தானே? என்ன மனுஷனோ? புள்ளை கல்யாணத்துல கூட அக்கறையில்லே?

சம்பத்தை, காலையில சுகன்யாவைப் பாத்துட்டு வாடான்னு சொன்னேன்; என்னமோ சொன்னதும் எதுத்துப் பேசாமா எழுந்துப் போனான். அங்கப் போனானா? இல்லையா? ஒண்ணும் தெரியலை? இவனோ ஒரு குரங்கு... இவனுக்கு ஏத்த மந்தி எங்கப் பொறந்து இருக்கோ? ராணி தன் மனதுக்குள் சலித்துக்கொண்டாள். 

"ஏண்டா, சுகன்யாவைப் பாத்தியா? உனக்குப் பிடிச்சிருக்கா அவளை? அவ என்ன சொன்னா?" வரிசையாக கேள்வி மேல் கேள்வியை ராணி அடுக்கினாள்.

"ம்ம்ம்... சொன்னா சுரைக்காய்க்கு உப்பு இல்லேன்னு!"

"என்னடா உளர்றே?" மகன் அர்த்தமில்லாமல், தன் மேல் காட்டும் கோபத்தைக் கண்டு ராணி ஒரு வினாடி திகைத்தாள்.

"புரியலை...உனக்கு? இப்ப என்னைக் கேள்வி கேக்காதேன்னு சொல்றேன்..!?"

"அவங்க வீட்டுல ஒரு வாய் உன்னை சாப்பிடக்கூட சொல்லலையா?"

புத்திரப் பாசம் யாரை விட்டது? ராணியை மட்டும் விட்டுவிடுமா அது? மகனின் கோபத்தைப் பொறுத்துக்கொண்டு, தட்டில் சாதத்தையும், அதன் மேல் வத்தல் குழம்பையும் ஊற்றி, கூடவே ஒரு பொரித்த அப்பளத்தையும், தன் மகனிடம் நீட்டியவாறே கேட்டாள் ராணி.

"இப்ப பசியோட இருக்கற என் வாயைக் கிளறாதே... கொஞ்ச நேரம் நீ சும்மாயிரு.. உன் பேச்சைக்கேட்டு அந்த சுகன்யாவைப் பாக்க போனேன் பாரு..என் புத்தியை நானே, என் செருப்பாலத்தான் அடிச்சுக்கணும்!!!

"என்னடா ஆச்சு... சொல்லித் தொலையேண்டா..!" போன எடத்துல என்னமோ தாறுமாறா நடந்துருக்கு... நடந்தது என்னாங்கிறதை இவன் கிட்டேயிருந்து முழுசா தெரிஞ்சிக்கிட்டே ஆகணும். இப்போது ராணியும் சற்றே சினத்துடன் சீறினாள்.

"ம்ம்ம்.. என்னை அந்த சுகன்யா செருப்பால அடிச்சிருந்தாக்கூட பரவாயில்லே? நான் கவலைப்பட்டு இருக்கமாட்டேன்... ஆனா அவ என்னை மூஞ்சால அடிச்சா! என் மனசைப் புண்படுத்திட்டா... அதைத்தான் என்னாலப் பொறுத்துக்க முடியலை! சரியான திமிர் புடிச்ச பொட்டை நாய் அவ..!! அவளை உன் மருமகளா ஆக்கிக்கணும்ன்னு நீ கிடந்து துடிக்கறே!!?"

"டேய்...ஒரு வயசுக்கு வந்த பொம்பளைக் குழந்தையை... அதுவும் சுகன்யா நம்ம உறவு முறை; அந்தக் குழந்தையை... ஏண்டா அசிங்கமா இப்படியெல்லாம் பேசறே? நீ படிச்சு என்னடாப் பிரயோசனம்? முதல்ல பொம்பளைங்களை மதிக்கக் கத்துக்கடா..."

இதுவரை, அங்கு நடந்து கொண்டிருந்த வேடிக்கையை, அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த நல்லசிவம் குறுக்கில் பேசத் தொடங்கிய அவர் பேருக்கு ஏற்றவாறு நல்ல மனுஷன். இயல்பாக அதிகம் பேசாமல் இயல்பாகவே அமைதியாக இருப்பவர். தன் மகனின் சிலுமிஷங்கள் அத்தனையையும் நன்றாக அறிந்தவர். பெண்களை கிள்ளுக்கீரையாக மதிக்கும் தன் பிள்ளை சம்பத் இந்த அளவிற்கு சீரழிந்து போயிருப்பதற்கு முதல் காரணமும், அளவுக்கு அதிகமாக அவனுக்கு செல்லம் குடுத்திருக்கும் தன் மனைவி ராணி என்பதை, சிறிதும் தயங்காமல் எந்த கோவிலிலும் சத்தியம் செய்ய தயாராக இருப்பவர்.

"நீங்க சித்த நேரம் சும்மா இருங்க... நான் கேக்கறேன்... அவன் பதில் சொல்றான்... அங்க என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்க புள்ளையை நீங்களே மதிக்கலனா... ஊர்ல எவன் மதிப்பான்?" ராணி தன் புகைச்சலை அவர் மீது திருப்பினாள். தன் மகன் செய்யும் சில அட்டூழியங்களை ஏன் என்று அவர் தட்டிக்கேட்பதால், அவளுக்கும் அவருக்குமிடையில் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும்.

"எக்கேடோ கெட்டு நாசமாப் போங்க; ஆனா சொந்த ஊர்ல என் பேரை ரிப்பேர் ஆக்காதீங்க; இவன் ஆட்டத்தை எல்லாம் கண் காணாத இடத்துல, வெளியில எங்கயாவது வெச்சுக்கச் சொல்லு" அவர் தன் துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்.

"இன்னும் அவன் நடந்த விஷயத்தையே சொல்லலை; அதுக்குள்ள நீங்க எதுக்கு கிடந்து குதிக்கறீங்க?"

"உன் புள்ளையைப்பத்தி புதுசா தெரிஞ்சிக்கணுமா என்ன? அந்த பொண்ணு சுகன்யா கிட்ட இவன் எதாவது ஜோக் அடிக்கறேன்னுத் தப்பா பேசியிருப்பான்? இல்லேன்னா கண்ணடிச்சி, சிரிக்கறேன்னு கழுதை மாதிரி கனைச்சிருப்பான்?

"அய்யோ... என் தலையெழுத்து, உங்களைக் கட்டிக்கிட்டு நான் மாரடிக்கறேன்; என் புள்ளை புரியாத வாலிப வயசுல, ஒண்ணு ரெண்டு தரம், இப்படி... அப்படி ... சரின்னு சொன்னவளுங்க கூட சந்தோஷமா இருந்துட்டான்... இப்ப அதுக்கு என்னப் பண்ணணுங்கறீங்க?"

"ஆமாம்... உன் புள்ளைகிட்ட அவளுங்களா வந்து, சரின்னு சொன்னாளுங்க; பேச்சு பேசறே நீ; இவன் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்காம... காப்பத்திவிட்டது நான்தாங்கறது ரெண்டுபேருக்கும் ஞாபகம் இருக்கட்டும்... அன்னைக்கெல்லாம் நான் ஒரு பொஸிஷன்ல இருந்தேன்... இன்னைக்கு ஏதாவது வம்பு தும்பு ஆச்சு... இவனை உள்ளத் தள்ளி முட்டிக்கு முட்டி பேத்துடுவானுங்க; இதையும் நல்லா ஞாபகத்துல வெச்சுக்குங்க.."

"நடந்தது நடந்துப் போச்சு! நீங்களே உங்கப் புள்ளையை ஏன் இப்படி கொறைச்சுப் பேசறீங்க... எந்த ஆம்பிளை கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி அப்படி இல்லமா இருந்திருக்கான்?"

"நான் இப்படி அப்படீன்னு இருந்தது இல்லடி... உன்னைத்தவிர வேற எவளையும் என் லைஃப்ல நான் தொட்டது இல்லடி..!"

"உங்களை யாரும் இப்ப கொறை சொல்லலை... அதோட நிறுத்துங்க.."ராணி பதிலுக்கு நல்லசிவத்திடம் சீறினாள்.

"மை டியர் ஃபாதர்... நீங்க என்னை ஆசை ஆசையா பெத்து எடுத்தீங்க; அதுக்காக நீங்க உங்க கடமையை அப்ப அப்ப செய்தீங்க... செய்யறீங்க; எல்லா அப்பனும் அவன் அவன் புள்ளைக்கு இதெல்லாம் செய்துதான் ஆகணும்; நான் உங்களை அப்பான்னு கூப்பிடறேனே... அதுக்கு பதிலுக்கு நீங்க எதாவது செய்ய வேண்டாமா?"

"என் கோபத்தை அதிகமாக்காதே... நீ இத்தோட நிறுத்திக்க்க..." நல்லசிவம் அவனை கையெடுத்துக் கும்பிட்டார்.

"அப்பா... போலீஸ் ஸ்டேஷனுக்கு போக இருந்த என்னை, ஒரு தரம் போன் பண்ணி அப்படி நடக்காம பாத்துக்கிட்டீங்க; உங்க அஃபிஷியல் லிங்க்சை யூஸ் பண்ணீங்க? நான் ஒத்துக்கறேன்; போலீஸ்காரன் எத்தனை தடவை உங்க கிட்ட ஹெல்ப்புக்காக வந்திருக்கானுங்க? இதெல்லாம் ஒரு கிவ் அண்ட் டேக்ன்னு எடுத்துக்கணும்..." சம்பத் கேலியாகச் சிரித்தான்.

"டேய் ... யானை கொழுத்தா தன் தலையில அதுவே மண்ணை வாரிப் போட்டுக்குமாம்...!" கோபத்தில் நல்லசிவத்தால் பேசமுடியவில்லை.

"அப்பா ... நான் திரும்பவும் சொல்றேன்... நீங்க கும்பிடற அந்த ஆண்டவன் எனக்கு ஒரு சாய்ஸ் கொடுத்திருந்தா..."

"கொடுத்திருந்தா?" நல்லசிவம் சீறினார்.

"சிம்பிள்... உங்களுக்கு பிள்ளையா நான் பொறந்தே இருக்க மாட்டேன்; வேற ஒரு ஃபாதரைத் தேடிக்கிட்டு அந்த வீட்டுல பொறந்திருப்பேன்;" சம்பத் சிரித்தான்.

"பாத்தியாடி... நீ பெத்திருக்கற உன் புள்ளை லட்சணத்தை?"

"அப்பா.. நீங்க உங்க பயாலாஜிகல் நாலெட்ஜ்ஜைக் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணுங்க; என் அம்மா மட்டுமே நான் பொறந்ததுக்கு காரணமில்லே! அன்பார்ட்சுனேட்லி, இந்த ஜென்மத்துல நீங்க என் அப்பா! நான் உங்க பிள்ளை! உங்களுக்கும் எனக்கும் எதுலயுமே சுத்தமா ஒத்து வரலே!

"நீ என்னோட வெறியில பொறந்தவண்டா... அதான் இப்படியிருக்கே? கொஞ்சம் விவேகம் வந்தப்ப எனக்கு ஆண்டவன் ஒரு நல்லப் புள்ளையை குடுக்கலை.."

"நான் ஒத்துக்கறேன். அதுக்கு ... இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? ஒல்ட் மேன்... யூ கான்ட் புட் த க்ளாக் பேக்...!"

"டேய் சம்பத் ... நிறுத்துடா உன் கிண்டலை... நானும் பாக்கறேன்... யார்கிட்ட நீ பேசறே? அது புரிஞ்சுத்தான் பேசறீயா?" ராணி நிலைமையை சமாளிக்க குறுக்கேப் புகுந்தாள்.

"அம்மா... எனக்கு நல்லாத் தெரியும்... என்னை பெத்தவர்கிட்டத்தான் நான் பேசிகிட்டு இருக்கேன்... அவருக்கு குடுக்க வேண்டிய மரியாதையை நான் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவர்தான் என்னை தன் பிள்ளையா நெனக்கறதேயில்லை. அப்படி நெனைச்சுப் பேசறதும் இல்லே!"

"சம்பத்து... போதுண்டா... வீண் பேச்சு பேசாதப்பா..." ராணி தன் மகனை கெஞ்சி சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

"அப்பா... எனக்கு நீங்க நெறைய செய்திருக்கிறீங்க; நீங்க செய்த எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி... இப்ப நானும் சம்பாதிக்கிறேன்! நல்ல பொஸிஷன்ல்ல இருக்கேன்; எனக்கும் நாலு பேரை நல்லாத் தெரியும்! நீங்க தேவையில்லாம என்னைப் பத்தி அதிகமா கவலைப்படாதீங்க!

"சரி...அப்புறம் மேல..." நல்லசிவம் தன் மகனைக் கூர்ந்து நோக்கினார்.

"திருப்பியும் போலீஸ்காரன் நம்ம வீட்டுக்கு வந்தா எனக்கு இருபத்து அஞ்சு வயசாயிடுச்சு.. என் புள்ளை மேஜர்.. எனக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லேன்னு பாண்டு பேப்பர்ல எழுதி கையெழுத்துப் போட்டு அவன் கிட்ட குடுத்துடுங்க... மீதியை நான் பாத்துக்கறேன்." சம்பத் சாய்ந்து உட்க்கார்ந்து கொண்டு, அப்பளத்தை நொறுக்கித் தின்ன ஆரம்பித்தான்.

"அப்படி என்னடா பண்ணிட்டு வந்திருக்கே அந்த சுகன்யா வீட்டுல நீ?"

"என்னை மதிக்காதவளுக்கு... நான் யாருன்னு சூட்சமமா சொல்லிட்டு வந்திருக்கேன்...?"

"இந்த ஊர்ல உன்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, வீட்டு உள்ள வான்னு சொல்ற ஒரு எடத்தையும் கெடுத்துக்கிட்டியா?

"அவசரப் படாதீங்க... ஓண்ணு ரெண்டு நாள்ல ரிசல்ட் தெரியலாம்...!"

"இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளியில போடா... உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு; ஒரு நல்ல குடும்பத்து பொண்ணை மதிக்கத் தெரியலை உனக்கு. உன் ஆத்தா பேச்சைக் கேட்டுக்கிட்டு, சுகன்யாவோட தாய் மாமன் ரகுகிட்ட போய் உனக்காக நாலு தரம் பேசிட்டு வந்தேன். சுகன்யா உன்னை சரியாத்தான் எடை போட்டிருக்கணும். என் எதிர்ல நிக்காதே... இப்பவே போயிடு... அந்தக் குடும்பத்தைப் பத்தி உனக்கு என்னடாத் தெரியும்...?"

"தெரிய வேண்டாம் எனக்கு...என்னைப் பத்தி அவ தெரிஞ்சுக்கட்டும்?"

"போவும் போது கூடவே உன்னைப் பெத்தெடுத்து இப்படி வளர்த்து இருக்காளே இந்த மகராசி... இவளையும் உன் கூடவே கூட்டிக்கிட்டுப் போய் தொலை..." நல்லசிவத்தின் வாயிலிருந்து எச்சில் தெறித்தது.

"சாரி... பாதர்... இந்த வீடு என் தாத்தாவுது... நீங்க மத்திய அரசாங்கத்தில பெரிய லா ஆஃபிஸரா இருந்து ரிட்டையர் ஆகியிருக்கீங்க... உங்களுக்கு சட்டம் நல்லாவேத் தெரியும்..."

"என்னடா சொல்றே நீ?"

"ஏதோ இந்த வீட்டுக்கு நீங்க பெயிண்ட், கியிண்ட், அடிச்சிருக்கீங்க; திண்ணையை இடிச்சி வரந்தாவா ஆக்கியிருக்கீங்க; அதுக்கு கம்பி கதவு போட்டு இருக்கீங்க; அனுபவ பாத்தியதையை என் தாத்தா உங்களுக்கு குடுத்துட்டு, அவரு தனக்கு சங்கு ஊதிக்கிட்டாரு.."

"செத்தவங்களை எல்லாம் ஏண்டா இப்ப இழுக்கிறே?" ராணி தன் மகனின் பேச்சை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்தாள்.

"அப்பா... நீங்க இருக்கறவரைக்கும் சந்தோஷமா இருங்க... எனக்கு ஒரு அப்ஜக்ஷனும் இல்லே; ஆனா என்னை வெளியில போடான்னு சொல்ல உங்களுக்கு உரிமையில்லை... ஏம் ஐ ரைட்?"

சம்பத் தட்டை வழித்து நக்கி, வத்தல் குழம்பு சோற்றை ருசித்து தின்றுக்கொண்டிருந்தான். சோற்றைத் தின்று முடித்த சம்பத் பக்கதிலிருந்த நியூஸ் பேப்பரை ட்ர்ரென கிழித்து, பேப்பரால் தன் கையையும், வாயையும், துடைத்தான். கையைத் துடைத்த பேப்பரை சாப்பிட்ட தட்டிலேயே வீசி எறிந்தான். தண்ணீரை நிதானமாக குடித்து, நீண்ட ஏப்பம் விட்டான்.

"எம்மா... அந்த பேனைக் கொஞ்சம் ஆன் பண்ணேன்?" சோஃபாவில் நீளமாக தன் கால்களை நீட்டி, வசதியாக ஜட்டி, பனியனுடன் படுத்துக்கொண்டான்.

"டேய்... உனக்குத்தான் சட்டம் தெரியுமே! என் பொண்டாட்டி தாலி அறுத்ததுக்கு அப்புறம் நீ இந்த வீட்டுக்குள்ள வாடா.. இப்ப ஏண்டா என் கழுத்தை அறுக்கறே?' நல்லசிவம் எப்போதுமே பேசி அறியாத வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வேகமாக வந்து நெருப்பாகத் தெறித்து விழுந்தன. அவர் மூச்சு உலையிலிருந்து வெளியேறும் வெப்பமாக அவரையே சுட்டது. 




"அய்யோ ...அய்யோ... அப்பனும் புள்ளையுமாவா நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிறீங்க? ராணி முடிவில் தன் கணவன் பக்கம் திரும்பினாள்.

"என் கிட்ட ஏன் கேக்கறே? உன் புள்ளையைக் கேளுடீ.."

"அவன்தான் சின்னப்பையன், ஏதோ பைத்தியக்காரத்தனமா பேசறான்னா.. நீங்கதான் கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன்.." ராணி தன் கணவனை வெளியே இழுத்தவள், அவரை வெராண்டாவில் போட்டிருந்த சேரில் உட்க்காரவைத்தாள்.

"உன் புள்ளை என்னை என் உசுரு போற வரைக்கும் இந்த வீட்டுல இருக்கலாம்ன்னு சொல்றான்! நீ ஏண்டி அதுக்குள்ள என்னை வெராண்டா வரைக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டே? உனக்கு அது வரைக்கும் கூட பொறுக்க முடியலியா? இப்படியே, இப்பவே வெளியிலத் தள்ளிடலாம்ன்னு ஏதாவது ப்ளானா?" நல்லசிவம் தன் மனைவி ராணியிடம் எகிறினார்.

"ஆண்டவா! அவன் கிட்ட பேசி நீங்க ப்ளட் பிரஷரை ஏத்திக்கிறீங்களேன்னு, உங்களை வெளியில கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்; ஏன் இன்னைக்கு குதர்க்கமாவே பேசறீங்க?" ராணி அவரைப் பார்த்து சமாதனமாக சிரிக்க முயன்றாள்.

"சிரிக்காதடி... எனக்குப் பத்திக்கிட்டு வருது?"

"ம்ம்ம்ம்... என்னப் பாத்தா பத்திகிட்டு வருதா?"

"எப்ப சுந்தரியும், அவ புருஷன் குமாரும், இப்ப நாங்க எங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்றதாயில்லேன்னு நாசுக்கா நம்மகிட்ட சொல்லிட்டாங்களோ, அதுக்கு அர்த்தம் என்னன்னு உன் மரமண்டைக்குப் புரியலையா?

"புரியுது... இதுகூடவா ஒரு எம்.ஏ. படிச்ச எனக்குப் புரியலை?" ராணி திரும்பி அவரிடம் முறைத்தாள்.

"எம். ஏ. படிச்ச புத்திசாலிதானே நீ? அப்புறம் எதுக்குடி நீ இந்த கேடு கெட்டவனை, அதுவும் தனியா, சுகன்யாவை பாத்துட்டு வான்னு, சிவதாணு வீட்டுக்கு அனுப்பினே?"

"நீங்கதான் புரியாம பேசறீங்க... நல்ல எடங்க இது; பொண்ணு கிட்ட அழகுக்கு அழகு; குணத்துக்கு குணம்; சொத்துக்கு சொத்து; ஜாதிக்கு ஜாதி; சொந்தத்துக்கு சொந்தம்; அவங்க வீட்டுல வேணாம்ன்னு சொன்னா நாம அப்படியே விட்டுடறதா? சுகன்யா இவனைப் பாத்தது இல்லே! அதனால அனுப்பிச்சேன்..."

"வேணாங்கறவன் வீட்டு வாசல்ல போய் ஏண்டி நீ முட்டிக்கிறே? இதான் என் கேள்வி?"

"ரெண்டு தரம் முட்டிப் பாக்கறதுல தப்புல்லங்க...?"

"இப்ப இந்த சனியன் புடிச்சவன் அங்க என்னப் பண்ணிட்டு வந்திருக்கான்னு தெரியலியே?" நல்லசிவம் தன் தலையில் அடித்துக்கொண்டார்.

"நீங்க என்னைப் பொண்ணு பாத்துட்டு போனதும், நானும்தான் உங்களை வேணாம்னு சொன்னேன்".

"நம்ம கதையும் இவன் கதையும் ஒண்ணா? உன் அப்பன் ஆத்தா உன்னை எனக்கு கொடுக்க மாட்டேன்னா சொன்னாங்க?"

"இப்ப இவனை சுகன்யா வேணாம்ன்னு சொல்லிட்டாளா? ரெண்டு கதையிலேயும் கொஞ்சம்தான் வித்தியாசம்... அன்னைக்கு நீங்க என்னைக் கட்டிக்கணுமின்னு ஒத்தைக்கால்லே நிக்கலையா?"

ராணி இதை வெகு சாதாரணமாகத்தான் எந்தவிதமான உள்ளர்த்தமும் இல்லாமல்தான் சொன்னாள். ஆனால் அந்த நேரத்தில் நல்லசிவத்தால் தன் பிள்ளை எதிரில் தன்னை அலட்சியமாக பேசுவதை அவரால் சுலபமாக ஜீரணிக்கமுடியவில்லை.

"ஆனா நீ என்னை வேணாம் சொன்னதுக்கு உன்னை நான் பொட்டை நாய்ன்னு எங்க வீட்டுலே போய் யார்கிட்டவும் இவனை மாதிரி அசிங்கமா பேசலை..."

"நான் கருப்பாயிருந்தேன்; அது என் தப்பு இல்லே? நீ செகப்பா அழகா இருந்தே; அதுலே உன் பங்கு என்னா பெரிசா இருக்கு? அந்த திமிர்ல நீ என்னை வேணாம்ன்னு சொன்னேன்னு, நான் அந்தக்காலத்துல எந்த தப்புத்தண்டாவுலேயும் எறங்கலே; உன்னை நாயே பேயேன்னு கேவலமா பேசலை.. ஆனா உன் புள்ளை அப்படியா இருக்கான்...?"

"சரி சரி இப்ப என்னா அதுக்கு? முடிஞ்சுப் போன நம்ம கதையை இப்ப நாம ரெண்டு பேரும் ஏன் பேசணும்?

"நீதாண்டி ஆரம்பிச்சே... நீ ஆரம்பிச்ச அந்தக்கதையை நான் ஒழுங்கா நேராக்கறேன்... உன் புள்ளை இனிமேலாவது திருந்தட்டும்ன்னு அவனுக்குச் சொல்றேன்... அவ்வளவுதான்.." அவர் ஆத்திரத்துடன் கத்தினார்.

"சும்மா கத்தாதீங்க... நாலு தரம் எங்க வீட்டுக்கு, நீங்க எட்டுப்பேரைத் தனிதனியா அனுப்பலையா? அது தப்புன்னு உங்களுக்கு தோணலயா? அது அந்த நேரத்துல எனக்கு எவ்வளவு டென்ஷனா இருந்ததுன்னு உங்களுக்குத் தெரியுமா?" ராணியும் தன் கண்களை சற்றே உருட்டி விழித்து அவரை வெகுண்டாள். ராணி இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே அதிகம்.

"சரி...சரி... நிறுத்துடி போதும்... உன் பழங்கதையை... உன் ஞாயத்தை... கல்யாணத்துக்கு முன்னாடி நான் உன் அழகைப் பாத்து உன்னை பண்ணிக்கணும்ன்னு நான் நாலு தரம் உன் வீட்டுக்கு ஆள் அனுப்பினேன்... அது உண்மைதான்...?"

"அதைத்தான் நானும் சொன்னேன்.. நீங்க என்ன இப்ப புதுசா சொல்றீங்க எனக்கு?"

"கல்யாணத்துக்கு அப்புறம், உன் கேடு கெட்ட கதை தெரிஞ்சதுக்கு அப்புறமும், நானா இருக்கவே உன் கூட இன்னைக்கு வரைக்கும், எதையும் யாருகிட்டவும் வெளியச் சொல்லாம ... வெக்கத்தை விட்டுட்டு உன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்!" நல்லசிவத்தின் கண்கள் கோவைப்பழமாக சிவந்திருந்தன. அவர் தன் பற்களை நறநறவெனக் கடித்தார்.

விஷக்கடி நேரத்தில் ஆரம்பிக்கும் பேச்சு எப்போதும் திசைமாறிப் போகும். திசைமாறியப் பேச்சு விஷமாகவும் மாறும். கோபத்தில் பேச்சைக்குறை என்றார்கள் பெரியவர்கள். குடும்பத்தில் எதிராளி உன் பேச்சைக் கேட்கவில்லையென்றால், வாழ்ந்து கெட்டவர்கள் வாயைப் பொத்து என்றார்களே, தெரியாமலா சொன்னார்கள் அவர்கள்?

தன் மகன் ஒரு பெண்ணை மதிக்கவில்லையே என தான் படும் ஆதங்கத்தை, தன் மனைவியும் புரிந்து கொள்ளவில்லேயே என அவர் வருத்தப்பட்டார். அவள் தன்னை வேண்டாம் என சொன்னபோதிலும், அவளுக்கு எந்தக் கெடுதலையும் தான் நினக்கவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்பினார்.

நல்லசிவம் நல்லவர். வாழ்க்கையை நிதானமாக எத்தனை குறையிருந்த போதிலும், அமைதியாக கழித்தவர். தன் மனைவி காரணமேயில்லாமல் கோபமாக பேச ஆரம்பித்தால் கூட அவர் மவுனமாகிவிடுவார். ஆனால் விதி யாரை விட்டது? அன்று கோபத்தின் வசத்தில் நல்லசிவம் தன் நிலையிழந்து, தெரிந்தோ தெரியாமலோ அவர் பேச்சை தன் மனைவியிடம் வார்த்தைக்கு வார்த்தையாடிவிட்டார்.

"என் கதை தெரிஞ்ச அன்னைக்கே என்னை வுட்டுட்டு போயிருக்க வேண்டியதுதானே? இல்லே போடீன்னு என்னை அடிச்சு வெரட்டியிருக்க வேண்டியதுதானே? யாரு உங்க கையை புடிச்சிக்கிட்டது? ராணியும் கோபத்தின் உச்சத்தில் என்னப் பேசுகிறோம் எனப் புரியாமல் கத்த ஆரம்பித்தாள். அவளும் பேச்சை இன்றைக்கு நிறுத்துவதாக தெரியவில்லை.

"சரியாத்தாண்டி நீ சொல்றே! அன்னைக்கே உன்னை அடிச்சு வெரட்டியிருக்கணும்...! என் மனசாட்சிக்கு பயந்துகிட்டு... ஆண்டவனுக்குப் பயந்துகிட்டு, உன்னை நானே விரும்பி வந்து, தொட்டுத் தாலி கட்டின பாவத்துக்காக, நான் சும்மா இருந்துட்டேன்!"

இத்தனை காலமாக தன் மனதின் ஆழத்துக்குள் அவர் பொத்தி பொத்தி வைத்திருந்தது அன்று வெளியில் வந்துவிட்டது. நல்லசிவம், என்னடா இப்படி பேசிட்டே? இது நல்லதுக்கு இல்லேடா! மல்லாந்து படுத்துக்கிட்டு வானத்தை நோக்கி எச்சில துப்பற கதையாகிப் போச்சே? இங்கேயே இந்தப் பேச்சை நிறுத்திடு... ராணி என்னச் சொன்னாலும், இதுக்கு மேலே பேசாதே! இப்ப இதையெல்லாம் பேசறதால யாருக்கும் பலன் இல்லே! அவர் மனதின் ஓரத்தில் ஒரு குரல் மெல்ல ஒலித்தது.

"என்னைத் தொட்டு தாலி கட்டினது பாவம்ன்னு இன்னைக்குத்தான் தெரியுதா?"



"அறுபதுக்கு மேலத்தான் விவேகமே வருது..."

"அனுபவி ராஜா அனுபவின்னு, உடம்புல தெம்பு இருந்த வரைக்கும் என்னை அனுபவிச்சிட்டு, அறுவது வயசுல ரத்தம் சுண்டினதுக்கு அப்புறம் இப்ப என் கிட்ட இந்த பேச்சா? இதுக்குப் பேரு விவேகமா? என்னை வீட்டை விட்டு அடிச்சு விரட்டணுங்கற ஆசை வேற உன் மனசுக்குள்ள இத்தனை நாளும் இருந்திருக்கா?

நல்லாருக்குய்யா உன் ஞாயம்; நான் எதுக்கு என் வீட்டை விட்டுப் போவணும்? என் பொணம்தான் இந்த வீட்டை விட்டு வெளியிலப் போவும்..." வயது வந்த பிள்ளை எதிரில் இருவரும் சாதாரணமாக எண்ணி பேச ஆரம்பித்தப் பேச்சு அன்று வம்பில் சென்று முடிந்தது. அவர்களுடைய முப்பத்தெட்டு வருட தாம்பத்ய வாழ்க்கையில் இரண்டாவது முறையாக விஷத்தைக் கலந்தது.