Saturday 21 March 2015

சுகன்யா... 68

"சொல்லு மீனா...நான்தான் சீனு பேசறேன்.." உற்சாகமாக ஆரம்பித்தான், அவன்.

"தெரியுது... நான் என்னா நீ சீனு இல்லேன்னு நினைச்சுக்கிட்டா போன் பண்ணேன்...?"

"என்னடீ... மீனு குட்டீ.. கோவமா இருக்கியா?"

"நீயெல்லாம் ஒரு மனுஷன்... நான் ஒரு கேனச்சி.. போயும் போயும் உன்னை மாதிரி ஆளை லவ் பண்றேன் பாரு... என் புத்தியை நானேதான் ஜோட்டால அடிச்சுக்கணும்.."

"ஏம்ம்மா இந்த ஃபீலிங் உனக்கு? நான் ரொம்ப ரொம்ப நல்லவன்டீ" சீனுவுக்கு திக்கென்றிருந்தது.

"நீ நல்லவன்னு ஊர்ல இருக்கற நல்லவன் எவனாவது சொல்லணும்... இல்லேன்னா நான் சொல்லணும்... நீயே சொல்லிக்கக்கூடாது.."

"என்னாச்சு செல்லம்...?"

"ஒரு வாரமாச்சே... இங்க ஒருத்தி உன்னையே நெனைச்சுக்கிட்டு இருப்பாளேங்கற எண்ணம் உனக்கு கொஞ்சமாவது இருக்காடா?"

"மீனு... ஐ லவ் யூ ஸோ மச்... இப்பத்தான் உனக்கு நான் போன் பண்ணணும்ன்னு நெனைச்சேன்... அதுக்குள்ள நீ முந்திக்கிட்டே...."

"இந்த பிட்டு போடற வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே? எனக்கு கெட்ட கோவம் வரும்... இந்த ஒரு வாரத்துல என் கிட்ட ஒரு தரமாவது பேசினியா... நீ?"



"எந்தப் பக்கம் வந்தாலும் கேட்டை மூடறியேடீ..."

"எப்பவும் கேட்டை ஒடைக்கறது, ஜன்னல் வழியா எட்டிப்பாக்கறது... காம்பவுண்டு சுவத்தை எகிறி குதிக்கறது.. இதான் உன் வேலையா?... வெக்கமா இல்லே... உனக்கு?"

"சாரிம்மா... போன வாரம் ரொம்ப வேலைடி... மீனு குட்டி.. நிஜம்மா சொல்றேன்... உன்னை உடனே பாக்கணும்.. ஒரு முக்கியமான மேட்டர் பேசணும் உங்கிட்ட.."

"இந்த குட்டீ... புட்டீ... மேட்டரு.. இந்தப் பேச்செல்லாம் என் கிட்ட பேசாதே!! ஒழுங்கு மரியாதையா சொல்லு ஏன் போன் பண்ணலே நீ... துட்டு செலவாயிடும்ன்னு பயந்தியா?"

"நிஜம்மா சொல்றேம்மா... நடுவுல ரெண்டு மூணு தரம் நான் பண்ணேன்.. நீ காலேஜ்ல இருந்தேன்னு நினைக்கிறேன்... என் காலை நீதான் எடுக்கலை... கால் லாக்ல பாரு... நாம நேராப் பாக்கும் போது என் போனை செக் பண்ணி பாரு நீ..." சீனு குழைந்தான்.

"போன எடத்துல நீ ஒழுங்கா சாப்பிட்டியா... நேரத்துக்கு தூங்கினியான்னு உன்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தேன்... எனக்கு எக்ஸாம் வருது... படிக்கறதுக்கு புடிக்கலை... இந்த வாட்டீ உன்னால எனக்கு அரியர் வரத்தான் போவுது... அரியர் வந்தது... பாத்துக்க..."

சீனுவுக்கு மீனா பேசியதை கேட்டதும் மனதுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது. மிக மிக மகிழ்ச்சியாக தன்னை உணர்ந்தான். என் லவ்வர் மீனாட்சி குட்டி ஒரு வாரமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா... என்னை அவ கோபப்படறதுல என்னத் தப்பு இருக்கு.

நேரா பாக்கும் போது அவளுக்குப் புடிச்ச காராசேவு ஒரு கால் கிலோ வாங்கிக் கையில குடுத்துட்டு, அதே கையைப் பிடிச்சு கண்ணுல ஒத்திக்கினு, ஐ லவ் யூ டீன்னு ஒரு சீன் போடணும்.. சீனு சட்டென்று அவள் கொடுத்த லீடைப் பிடித்துக்கொண்டான்.

"மீனா ராத்திரியில நீ எக்ஸாமுக்கு படிச்சிக்கிட்டு இருப்பியேன்னு உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணலம்மா.."

"இதப் பாரு... இந்த கதை சொல்றதை இன்னையோட நிறுத்திடு.. இந்த காதுல பூ சொருவற வேலையெல்லாம் உன் ஃப்ரெண்ட் செல்வாகிட்ட வெச்சுக்க... உன் வெல்லாயுதம் கிட்ட வெச்சுக்க... அந்த வேலாயுதமும் இப்ப ஒருத்தி பின்னாடி சுத்த ஆரம்பிச்சிட்டான்..."

"ம்ம்ம்..ஹீம்ம்ம்.." அர்த்தமில்லாமல் முக்கி முனகினான், சீனு.

"என்னா முனகல் அங்க... இல்லன்னா நாலு மொக்கைப் பசங்க, ப்ளேடு வாங்கி ஒழுங்கா ஷேவ் பண்ணத் துப்பில்லாம உன் வாலைப்புடிச்சிக்கிட்டு நிக்கறான் பாரு... அவனுங்க கிட்ட வெச்சுக்க...."

"இப்ப என் நண்பனுங்களை ஏன்டீ இழுக்கறே... ?

"நீ தானே இந்த ஏரியாவுல இருக்கற வெட்டிப்பசங்களுக்கு எல்லாம் காதலிக்கச் சொல்லிக்குடுக்கற வாத்தியாரு... உன் லவ்வர்கிட்ட எப்படீ இருக்கணும்ன்னு உனக்கு எவன் சொல்லிக் குடுப்பான்.. ஹூம்ம்ம்?

"சாரிம்ம்மா.. என்னை இப்படி போட்டு கஞ்சி காய்ச்சறியே.. நீயாவது ஃப்ரீயா இருக்கும் போது, ஒரு தரம் எனக்கு போன் செஞ்சிருக்கலாம்லே?"

"சீனு... பாத்தியா... நீ ஒரு மொக்கைன்னு திருப்பியும் திருப்பியும், ஃப்ரூவ் பண்ணறியே? நீ கை நெறய சம்பாதிக்கறே... அதை என்னப் பண்ணப் போறே... சிகரெட்டா ஊதி... காசை கரியாக்குடா.... நான் படிச்சிக்கிட்டு இருக்கேன்.. ஏன் கிட்ட பைசா ஏதுடா?

"நான் ஒரு முண்டத்தை காதலிக்கறேன்... அவன் கிட்ட பேசறதுக்கு போன் ரீஜார்ஜ் பண்ண பைசா குடுன்னு யார்கிட்டவாவது கையேந்தணுமா...? நீ எதுக்கு ஒரு ஆம்பிளைன்னு என் லைஃப்ல வந்திருக்கே?"

"ம்ம்ம்... மீனா "

"போறப் போக்கைப் பாத்தா.. .எனக்கு நீ தாலி கட்டுவியா, மாட்டியான்னு உன் மேல எனக்கு சந்தேகமா இருக்கு... நல்லாக் கேட்டுக்க... நீ எங்கிட்ட மாட்டிக்கிட்டே... நீ என்னை விட்டுட்டு ஓடலாம்ன்னு மட்டும் கனவு காணாதே..."

"சேச்சே... லலிதான்னு ஒரு பொண்ணு ஜாதகம் வந்து இருக்குன்னு அத்தை காலையில சொன்னாங்க.." இந்த பிட்டைப் போட்டா, மீனா அடங்குவாளா.. என அவன் நினைத்தான்.

"என்னடா சொல்றே... சீனு இதப்பாரு... லலிதா.. ராகினின்னு எவ பின்னாடியாவது போனேன்னு தெரிஞ்சுது... இழுத்து வெச்சு அறுத்துடுவேன்..." மீனாவின் குரல் சற்றே தணிந்து மெல்லிய பயத்துடன் வந்தது.

"இதைப்பத்திதான் பேசணும்... அதுக்காகத்தான் உன்னைப் பாக்கணுங்கறேன்.."
டேய் சீனு...மீனா கொஞ்சம் அடங்கறா... புடிச்சிக்கடா.. சீனுவின் மனதுக்குள் தெம்பு வந்தது...

"சீனு... உன்னைத்தான் நான் என் மனசுக்குள்ள வெச்சிருக்கேன்டா..! என்னை ஏமாத்திட மாட்டீயே நீ"

"என்னம்மா இப்படீ பேசறே? இப்படீல்ல்லாம் நீ பேசினா எனக்கு ரொம்ப ஃபீலிங்காவுது... மனசுக்கு கஷ்டமா இருக்கு மீனா.." சீனு சட்டென குழைந்தான்.

"இச்ச் ....இச்ச்.."

"என்னா... திடீர்ன்னு இச்சு.. புச்சுன்னு சத்தம்.. வருது உன் சைடுலேருந்து...?"

"உனக்கு முத்தம் குடுத்தேண்டீ கண்ணு..." அசடு வழிந்தான் சீனு.

"உன் முத்தத்தை நீயே வெச்சுக்க... உன்னை நான் கேட்டனா? பகல்ல நான் போன் எடுக்கலைன்னா.. ஈவினீங்ல எனக்கு கால் பண்ண வேண்டியதுதானே நீ?" வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறியது.

"ராத்திரி பதினொரு மணிக்குத்தான் வேலை முடிஞ்சு தங்கியிருந்த இடத்துக்கு திரும்பி வந்தோம்.. கூடவே ரெண்டு வெட்டிப் பசங்க... ... என் ஆஃபிசருங்க... மசுரானுங்க... எதுக்கும் ஒத்துவராதவனுங்க... டக்குன்னு கெழட்டி விடமுடியலை.. கெழத்தாழிங்க..." சீனு கதை சொன்னான்.

"புளுவு... எல்லாம் புளுவு... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது?"

"கம்மினாட்டிப் பசங்க... என் ஃபீலிங் அவனுங்களுக்குப் புரிஞ்சாதானே... நிம்மதியா தூங்ககூட முடியலை... மறு நாள் என்னப் பண்ணனும்ன்னு, ராத்திரி பன்னண்டு மணிக்கு எனக்கு லெக்சர் குடுப்பானுங்க.. அதாம்மா... புரிஞ்சுக்கடி செல்லம்.."

"ம்ம்ம்... ஆமாம்... கட்டிங்க்...கிட்டிங் வுட்டியா அவனுங்க கூட?"

"சேச்சே... உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணியிருக்கேம்மா... சோத்தை திண்ணுட்டு, ஜீரணம் பண்றதுக்கு கூட சாதா தண்ணியே குடிக்கலை தெரியுமா.."

"ஏன் ஒரே வழியா போய் தொலையறதுக்கா..."

"தண்ணின்னாத்தான் நீ கோச்சிக்கறியே...?"

"சரி... சரி... எப்படி இருக்கே...? நல்லா இருக்கியாப்பா..? சீனு... எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்குப்பா?"

"எனக்கும் அதே ஃபீலிங்கதான்டீ ... இப்ப எங்கே இருக்கேம்மா"

"வீட்டுலதான் இருக்கேன்...?"

"அது தெரியலையா எனக்கு..."

"வெரண்டாவுல இருக்கேன்..."

"ஒரு முத்தா குடுடீ கண்ணு..!!" கொஞ்சினான் சீனு.

"ப்ச்ச்ச்.. ப்ச்ச்ச்" மென்மையாக இச்சினாள் மீனா.

"ஸ்வீட்ட்டா இருக்குடீயோய்..."

"ம்ம்ம்ம். அப்புறம்.."

"பீச்சுக்கு வர்றியா..?"

"அங்கெல்லாம் நான் வரமாட்டேன்..."

"உன் கிட்ட இம்மீடியட்டா கொஞ்சம் பேசணும்மா..." சீனு கெஞ்சினான்.

"எங்க வீட்டுக்கு வாயேன்... நீ"

"என்ன சொல்றதுன்னே தெரியலை... உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம்... உங்க அம்மா மூஞ்சை நிமிர்ந்து பாக்கவே எனக்கு ஒரு தயக்கமா இருக்கு.. மனசுகுள்ள ஒரு குறுகுறுப்பா ஃபீல் பண்றேன்... உன் வீட்டுக்குள்ள வந்தா... முன்னே மாதிரி உங்கிட்ட சகஜமா பேச முடியலை..."

"ம்ம்ம்... புரியுது சீனு... எனக்கும் அப்படித்தான் இருக்கு... என் படிப்பு முடியற வரைக்கும், எங்க வீட்டுக்கு நாம லவ் பண்றது தெரிய வேணாம்ன்னு பாக்கறேன்.. ஆனா உன்னைப் பாக்காமவும் இருக்க முடியலைப்பா..."

"அம்மா இருக்காங்களா பக்கத்துல..."

"ஹூகூம்... வீட்டிலேயே இல்லே.. ஒரு கல்யாணத்துக்காக அப்பாவும், அம்மாவும், எதிர் விட்டு ராமசாமி அங்கிள் பேமிலியோட வேலூர் போயிருக்காங்க... நாளைக்குத்தான் வருவாங்க..."

"செல்வா ...."

"அவன் ரூம்ல ஏதோ பிக்சர் பாத்துக்கிட்டு இருக்கான்..."

"நீ ட்ரஸ் பண்ணிக்கிட்டு ரெடியா இரு... பத்து நிமிஷத்துல நான் வர்றேன்..."

"வெளியில போறமா..."

"ஆமாம்..."

"செல்வாகிட்ட என்ன சொல்றது..?"

"நான் பாத்துக்கறேன் அதெல்லாம்... நீ ரெடியா இரு..."

மீனா மாடிக் கைப்பிடி சுவற்றின் அருகே பவழமல்லி மர நிழலில், சீனுவுக்காக காத்திருந்தாள். அவளுக்குத் தன் வீட்டிலேயே, முதன் முறையாக அவளும், சீனுவும், ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு, முத்தமிட்டுக்கொண்ட அந்த இடம், அவளுக்கு இப்போது மிகவும் பிரத்யேகமான ஒன்றாக மாறிவிட்டிருந்தது. தினமும் தவறாமல் ஒரு பத்து நிமிடத்தை அங்கு கழிப்பதை தனது வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள், அவள்.

மீனா அன்று நீலவண்ண பிரின்டட் புடவையில், அந்த சாரியின் நிறத்துக்கு கான்ட்ராஸ்டான பிளவுசை டைட்டாக போட்டுக்கொண்டிருந்தாள். புடவையின் அகலமான பார்டர், அவள் மெல்லிய உடல்வாகுக்கும், உயரத்துக்கும் ஏற்ற டீசண்டான தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது.

மீனா தன் கழுத்தில் மெலிதான தங்கச்செயின் ஒன்றை அணிந்து, காதில் குட்டித் தோடு ஒன்றை மாட்டி, அதில் ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கியை கோத்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்தான் அவள் தன் புருவங்களை நேர்த்தியாக வில் போல் ஒதுக்கியிருந்தாள். புருவங்களுக்கு இடையில் சிறிய நீல நிற பிந்தியை ஒற்றி, மெல்லிய உதடுகளில், அவளுடைய சரும நிறத்தில், உற்று நோக்கினால் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்படியாக இலேசாக லிப்ஸ்டிக் பூசியிருந்தாள். இருகைகளையும் மெல்லிய கண்ணாடி வளையல்கள், அலங்கரித்துக் கொண்டிருந்தன.

மோட்டர் பைக்கை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த சீனு, தன் காதலியைப் பார்த்ததும், ஒரு நொடி ஆணியடித்தது போல் நின்றான். மெல்ல விசில் அடித்தவாறு, அவளை நெருங்கி, 'மீனு யூ ஆர் வெரி வெரி கூல் இன் திஸ் சாரி யார்...' முனகியவாறு அவளை தன் புறம் இழுத்தான்.

சீனுவிடமிருந்து வந்த அதீதமான சிகரெட் ஸ்மெல், மீனாவின் முகத்தை தாக்க, அவள் முகம் சட்டென சுருங்கியது. சீனுவின் கண்களும், மனமும், ஒருங்கே அவள் அழகைப் அள்ளிப் பருகிக்கொண்டிருந்ததால், அவள் முகம் சுருங்கியதை கவனிக்கத் தவறின.

"சொன்னாக் கேளு.. இனிமே வீட்டுக்குள்ள என்னை தொடற வேலை வெச்சிக்காதே.. எங்கண்ணண் செல்வா ஹால்லேதான் இருக்கான்.." சீனுவுக்கு மட்டுமே கேட்கும் அடிக்குரலில் பேசிய மீனா, அவன் கையைத் தட்டிவிட்டாள்.

"ஓ.கே. ஓ.கே... அக்ரீட் டியர்... மீனாக் குட்டீ... நீ ஒண்ணு மட்டும் சொல்லிடு... இவ்வளவு அழகை எங்கடீ ஒளிச்சி வெச்சிருந்தே நீ?" சீனு அவள் வலது கையைப்பற்றி புறங்கையில் மென்மையாக முத்தமிட்டான்.

"ரொம்ப வழியாம சீக்கிரம் கிளம்புடா..!" மீண்டும் அடித்தொண்டையில் உறுமினாள், மீனா. உறுமியவள் சட்டென ஓட்டமாக ஓடி மாடிப்படிக்கட்டில் தாவி தாவி ஏறி மறைந்தாள்.

பைக்கின் சத்தம் கேட்டதும், ஹாலிலிருந்து வெளியில் வந்த செல்வா, "மாப்ளே எப்படா வந்தே மதுரையிலேருந்து?" அவன் கண்கள் இயல்பாக மீனாவைத் தோட்டத்தில் தேடியது.

"காலையிலத்தான் வந்தேன்... மீனா எங்கடா மச்சான்...? வீட்டுல சத்தத்தையே காணோம்" எதுவுமே தெரியாதவன் போல் கொக்கிப் போட ஆரம்பித்தான், சீனு.

ம்ம்ம். எல்லாம் என் நேரம்... என் க்ளோஸ் ஃப்ரெண்டோட தங்கச்சியை காதலிக்க ஆரம்பிச்சதுலேருந்து, அவன் கிட்டவே எப்படி எல்லாம் பொய் பேச வேண்டியதா இருக்குது... தன் மனதுக்குள் சீனு ஒரு வினாடி வெட்கப்பட்டான். கொடுமைடா.. இது... ரொம்ப நாளைக்கு என்னால இப்படி வேஷம் போட முடியாது. சீக்கரமே இதுக்கு ஒரு முடிவு கட்டணும். அவன் மனம் அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது.

இது என் ஃப்ரெண்டு வீடுன்னு மட்டும் இல்லாம, அதுக்கு மேலேயும் எனக்கு உரிமை உள்ள வீடா, சீக்கிரமா இதை மாத்திக்கணும்... சீனுவின் மனம் வேகவேகமாக சிந்தித்தது.

"மாப்ளே... அம்மாவும் அப்பாவும் வேலூர் போயிருக்காங்கடா... மீனா இங்கேதான் நின்னுகிட்டு இருந்தா... எங்கப் போனான்னுத் தெரியலியே?" நிஜமாகவே செல்வாவின் கண்கள் அவளைத் தேடிக்கொண்டிருந்தன.

"ஹாய் சீனு, ஹவ் ஆர் யூ," மீனா மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்துக்கொண்டு, மாடிப்படியில் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தாள்.

"அயாம் பைன்... தேங்க்யூ... மீனா.. நல்லா சூடா ஒரு கஃப் காஃபி போட்டுக் குடுக்கறியா...?" சீனு செல்வாவின் பின் நின்று கொண்டு, அங்கிருந்து நகருமாறு, அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

***

"மச்சான்... ஒரு முக்கியமான விஷயம்டா..." நண்பர்கள் இருவரும் வீட்டுப் வாசல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள்.

"சொல்லுடா... மாப்ளே"

"வீட்டுல எனக்கு தீவிரமா பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாங்கடா... காலையில வீட்டுக்குள்ள நுழையக் கூட இல்லே... அத்தை ரொம்பவே பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க... இந்த தரம் அப்பாவும் அவங்க கூட சேந்துக்கிட்டாரு..."

"வெரி குட்...யாருடா பொண்ணு...? அந்த ஜானகியோட சிஸ்டர், வெள்ளையா, பசுமாடு ஒருத்தி இருக்காளே அவளையா உனக்கு பாக்கறாங்க?"

"டேய்.. நிறுத்தடா உன் நக்கலை.. நானே வெறுத்துப் போய் வந்திருக்கேன்.. நீ வேற கேப்புல கடா வெட்டி உசுப்பேத்தற..."

"சரி... நவ் அயாம் சீரியஸ்... இதுக்கு நான் என்ன பண்ணணும் அதைச் சொல்லுடா.." செல்வா, சீனுவின் தோளில் நட்புடன் கையைப் போட்டுக்கொண்டான்.

"மீனாவைதான் நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேங்கற, என் முடிவை வீட்டுல அப்பா, அம்மாக்கிட்ட கிளியரா சொல்லிடலாம்னு பாக்கறேன்..."

"ம்ம்ம்..." செல்வா சீனுவை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

"பொண்ணு காஞ்சிபுரமாம்.. அம்மா காலையிலப் பேச்சை எடுத்தவுடனே... நான் ஒரு பொண்ணை காதலிக்கறேன்னு பட்டுன்னு சொல்லிட்டேன்...

"ம்ம்ம்ம்..." செல்வா முனகினான்.

"யாருன்னாங்க...!!" சீனு பேசுவதை ஒரு நொடி நிறுத்திவிட்டு செல்வாவின் கையைப் பற்றிக்கொண்டான்.

"உன் அப்பாகிட்ட நீ கல்யாணம் பண்ணிக்க விரும்பறது என் தங்கச்சி மீனாட்சின்னு அப்ப சொல்லலியா?" சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில் பேசினான் செல்வா.

செல்வாவுக்கு பதில் சொல்லாமல், வீட்டு கேட்டுக்கு வெளியில், அவன் பைக்குக்கு காவல் காப்பதைப் போல் நின்று, தன் வாலை மெல்ல ஆட்டிக்கொண்டிருந்த நொண்டிக் கருப்பனை ஒரு முறைப் பார்த்தான், சீனு. ஒரு நிமிடத்திற்கு பின் மீண்டும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான்.

"நான் விரும்பறப் பொண்ணு நம்ம ஜாதியில்லே... ஆனா உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்... அந்தப் பொண்ணோட குடும்பத்தாரோட எனக்கு ரொம்ப நாளாப் பழக்கம்... அவளை நேரா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து காட்டறேன்னு ஏதோ ஒரு மூடுல திடு திப்புன்னு உளறிட்டேன்..."

"அப்புறம்..."

"அப்பாவும் 'உன் சந்தோஷம்தாண்டா முக்கியம்... இன்னைக்கு நாள் நல்லாருக்கு' அவளை அழைச்சிட்டு வாடான்னுட்டார்.. அதான்..." சீனு பேசமுடியாமல் தவித்தான்.

"அதனாலே..."

"மீனாவை நான் என் வீட்டுக்கு அழைச்சிட்டு போக விரும்பறேன்... பத்திரமா ஒரு மணி நேரத்துல அவளைத் திரும்ப கொண்டாந்து நம்ம வீட்டுல விட்டுடறேன்... இதுக்கு நீ பெர்மிஷன் குடுக்கணும்..." சீனுவின் குரல் சட்டெனத் தழுதழுத்தது.

"சீனு இந்தாங்க காஃபி... செல்வா நீயும் எடுத்துக்க..." என்ன நடக்குது இங்க... சீனு ஏன் குரல் குளறி குளறிப் பேசறான்... நடப்பது புரியாமல் அவர்களைப் பார்த்த மீனா, காஃபி கோப்பைகள் இருந்த டிரேயை நீட்டினாள்.

செல்வா, மீனாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான். ம்ம்ம்ம்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினான். 'மீனா ஒரு நிமிஷம் இப்படி உக்காரும்மா...' தன் தங்கை மீனாவின் இடது கையை பற்றி தன்னருகில் உட்காரவைத்துக்கொண்டான்.

"சீனு... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா... அயாம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ... உன்னை மாதிரி ஒரு நண்பன் கிடைக்க ஒருத்தன் குடுத்து வெக்கணும்டா..." மீனாவையும், சீனுவையும் ஒரு நொடி மாறி மாறிப் பார்த்தான்.

"மீனா..."

"சொல்லுங்க அண்ணா.." மீனாவின் குரலில் மரியாதை எக்கச்சக்கமாக ஏறி ஒலித்தது.

"சீனுவோட வீட்டுக்கு நீ இதுக்கு முன்னாடி என் கூட வந்திருக்கே... ஆனா சீனு இன்னைக்கு ஏதோ ஸ்பெஷலா உன்னை அவன் வீட்டுக்கு அழைச்சிட்டு போகணுங்கறான்... அதுக்கு என் பர்மிஷன் கேக்கறான். நீ என்ன சொல்றேம்மா?"

"என்ன சீனு இதெல்லாம்.." ஒன்றுமே தெரியாதது போல் மீனாவும் தன் பாத்திரத்துக்கான வேஷத்தை சரியாக அரங்கேற்றினாள். தன் காதலன் சற்று முன் தன்னைப் பார்த்து கண்ணடித்து சொல்லிக்கொடுத்த வசனத்தை சரியாக ஒப்புவித்தாள்.

"சீனுவோட அப்பா உன்னைப் பாக்கணும்ன்னு சொன்னாராம்... அவர் எது சொன்னாலும், சொல்றதை அமைதியா கேட்டுக்க... எதுவாயிருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்து நம்ம அம்மா, அப்பாக்கிட்ட அவரை பேச சொல்லு..."

"சரிண்ணா..." மீனா மெல்ல முனகினாள்.

"அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க..." 'பொறுமை' என்ற சொல்லை ஒரு அண்ணணுக்கே உரிய முறையான பொறுப்புடன் தன் தங்கைக்கும், தன் தங்கையின் காதலனுக்கும் பொதுவாக சற்றே அழுத்தமாகச் சொன்னான், செல்வா.

"தேங்க்யூடா செல்வா..." சீனு அவன் கையை அழுத்திக் குலுக்கினான். 


சீனு, பைக்கை ஒரே உதையில் உதைத்து கிளப்பினான். மீனா அவன் பின்னால் பைக்கில் ஏறி உட்க்கார்ந்ததும், வண்டியை வேகமாக கிளப்பி, தெருமுனையை நொடியில் கடந்து மெயின் ரோடுக்கு வந்தான். மீனா அவன் முதுகில் உரிமையுடன் சாய்ந்து கொண்டாள்.

"சீனு மெதுவா போப்பா... பைக்கை ஏன் இப்படி ஸ்பீடா ஓட்டறே?"

"ஸ்பீடா போனா உனக்குப் பிடிக்கலையா?"

"பிடிக்குது ஆனா... மெல்ல போனா... மஜாவா இருக்கும்ன்னு தோணுது..."

"உன் இஷ்டம்டீ மீனு..."

"உன் கூட, பைக்ல நான் எத்தனையோ தடவை செல்வாவோட தங்கையா வந்திருக்கேன்.. ஆனா உன் காதலியா உன் கூட வர்றது இதுதான் முதல் தடவை... இல்லியா.. மனசே காத்து மாதிரி ஆயிடிச்சிடா!!"

மீனாவின் குரலில் எப்போதுமே இல்லாத ஒரு அதிஅற்புதமான இனிமை வந்திருந்ததாக சீனுவுக்குத் தோன்றியது. மீனாவின் இதயத்திலும் மகிழ்ச்சி அலையலையாக அடித்துக்கொண்டுருந்தது.

"ம்ம்ம்...." சீனு சிலிர்க்க ஆரம்பித்தான்.

மீனாவின் முகத்திலிருந்து கிளம்பிய மெல்லிய பவுடர் வாசமும், உடன் கலந்து வந்த அவள் உடலின் தனியான வாசமும், அவள் தலையில் சூடியிருந்த ஒற்றை ரோஜாவின் மணமும், சீனுவின் இரத்த அழுத்தத்தை வெகுவாக ஏற்றி அவனைச் சிலிர்க்க வைத்தன. அவன் பைக்கின் வேகத்தை குறைத்தான். மீனாவின் வலது கை அவன் இடுப்பை அழுத்தமாகச் சுற்றிக்கொண்டது.

"சீனு... ரொம்ப ஜாலியா இருக்குடா... இதான் காதலா..." மீனா மெல்ல அவன் காதில் முனகினாள். மீனாவின் பெண்மை மெல்ல மெல்ல மலர ஆரம்பித்தது. மலர்ந்து வாசம் வீச ஆரம்பித்தது.

மீனாட்சியின் வலது மார்பு சீனிவாசனின் முதுகில் அழுந்தியது. தளர கட்டியிருந்த அவள் தலை முடிக்கற்றைகள், காற்றில் பறந்து அவள் முகத்தில் சுளீரென அடித்தன. மூடியிருந்த அவள் மெல்லிய உதடுகளை கிழித்துக்கொண்டு, அவள் முன்பற்களைத் தொட்டன.

சீனுவாசன் தன் தலையைத் திருப்பி மீனாட்சியின் முகத்தைப் பார்த்த போது, மீனாவின் மெல்லிய குழல்கள் அவன் முகத்திலும் வந்து மோதின. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு இன்பம் அவன் மனதிலும், உடலிலும் எழும்ப, சீனு ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

"தெரியலைடி... மீனு... எனக்கும் இது ஒரு புது அனுபவமா இருக்கு... எல்லாத்தையும் இனிமேத்தான் ஒண்ணொண்ணா டெஸ்ட் பண்ணிப் பாக்கணும்..."

"என்னது டெஸ்ட் பண்ணணுமா?"

"உன்னுது மெத்துன்னுதான் இருக்குமா இல்லே..."

"பொறுக்கி ராஸ்கல்... வண்டியை நேராப் பாத்து ஓட்டுடா..." சீனு எதைச் சொல்லுகிறான் என்பது ஓரிரு நொடிகளுக்குப் பின் அவளுக்கு புரிந்ததும், மீனா சட்டென அவனிடமிருந்து விலகினாள்.

"பிளீஸ்... மீனு... சாய்ஞ்சுக்கடி என் மேல... இனிமே அந்த மாதிரி தப்பா பேசமாட்டேன்..." சீனு பைக்கை வேகமாக வளைத்து திருப்பினான்.

"என்ன சீனு... ஏன் இந்தப் பக்கம் போறே... இது மெரினா பீச் போற வழிதானே? உன் வீட்டுக்கு போக வேணாமா?" மனமெங்கும் எழுந்த குதூகலத்துடன் முனகிய மீனாவின் வலது விலா, தோள், மார்பு, இடுப்பு என, அவளுடைய பாதி உடல் சீனுவின் முதுகில் மீண்டும் அழுந்தியது. அவள் வலது கை சீனுவின் தோள் வழியாக நழுவி அவன் மார்பை தடவிக்கொண்டிருந்தது.

"செல்லம்... பீச்சுல ஒரு பத்து நிமிஷம், முறைக்காதேடீ... ஒரே ஒரு அஞ்சு நிமிஷம் இருந்துட்டு போவலாம்பா..." சீனு முனகினான்.

"சரி... சரி.. எங்கேயாவது போய்த் தொலை... எங்கண்ணண் கிட்ட ஒரு மணி நேரம் டயம் வாங்கியிருக்கே.. இது நினைப்புல இருக்கட்டும்..."

மீனா சீனுவின் இடுப்பை இடது கையால் இறுக்கிக் கட்டிக்கொண்டாள். தன் மனசிலும், உடலிலும் மெல்ல மெல்ல சிலிர்த்தாள். ஒரு ஆணை விருப்பத்துடன் தழுவுவதால் வரும் உடல் சிலிர்ப்பின் சுகம் என்னவென்பதை மெல்ல மெல்ல அறிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

ஒரு ஆணுடம்பின் திண்மை தன் உடலில் பரவியதும், பதிலுக்கு, தன் ஒரு பக்க மார்பை அவன் முதுகில் அழுத்தி உரசி, சீனுவின் உடலை சிலிர்க்க வைத்து அவனுக்கும் ஒரு பெண் உடலின் மென்மையை போதிக்க ஆரம்பித்தாள்.

***

இருவரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்கள். சீனுவின் கை மீனாவின் தோளில் படர்ந்தது. மீனா கூச்சத்துடன் நெளிந்தாள்.

"சீனு.. எல்லாரும் நம்பளையே பாக்கற மாதிரி இருக்குடா... உன் கையை எடுப்பா" அவள் குரலில் சிறிது இனம் தெரியாத எரிச்சல் இருந்தது.

"அவனவன் அவன் வேலையைப் பாக்கறானுங்க... நீ மொக்கைங்களை ஏன்டீ பாக்கறே? நீ என்னை மட்டும் பாருடீச் செல்லம்.." போதையில் உளறினான், சீனு.

"அவனுங்க என்ன வேலை பாக்கறானுங்க...?" மீனாவும் போதையேறியிருந்த குரலில் முனகினாள்.

"கூட உக்காந்து இருக்கற ஜிகிடிங்களுக்கு 'காய்' மெத்துன்னு இருக்கா... இல்லே கல்லாட்டாம் இருக்கான்னு அழுத்தி அழுத்திப் பாக்கறானுங்க... கேக்கறியடீ இதெல்லாம் ஒரு கேள்வின்னு..?"

"கர்மம்... எப்பவும் இதே நெனைப்பாடா... உனக்கு... சனியன் புடிச்சவனே?"

சீனுவின் தொடலில் மீனா வெளியில் தன் உடல் குறுகி, தன் தேகம் இறுகி, தன்னைக் குளிர்ச்சியாக உணர்ந்தாள். உள்ளுக்குள் மெல்ல மெல்ல வெப்பமானாள். மொத்தத்தில் தன்னுள் தன்னை மகிழ்ச்சியாக உணர்ந்தாள். ஆனாலும் பீச்சில் பட்டப்பகலில் எல்லோருக்கும் தான் ஒரு காட்சிப்பொருளாக மாறுவதை உணர்ந்ததும், மனதின் ஒரு மூலையில் எரிச்சலானாள்.

"ம்ம்ம்... எவனும் இந்த உலகத்துல புத்தன் இல்லடீ மீனா... புத்தரே பொண்டாட்டி கூட, சின்ன வயசுலேயே, செமையா உடம்பு சொகத்தை அனுபவிச்சிட்டுத்தான் கடைசியா ஆசையே துன்பத்துக்கு காரணம்ன்னு ஞானம் வந்து காட்டுக்குப் போனாரு..."

"சீனு... நிஜமாவே உங்கப்பா என்னை உங்க வீட்டுக்கு கூப்பிட்டாரா... இல்லே... என்ன தள்ளிக்கிட்டு வர்றதுக்கு செல்வா கிட்ட இப்படி ஒரு டிராமா போட்டியா?" இப்போது அவள் குரலில் எரிச்சல் சற்று கூடியிருந்தது.

"மீனா... என்னை நம்புடி... என் மச்சான் கிட்ட நான் பொய் சொல்லுவேனா?.." சீனு மீனாவை சட்டென தன் புறம் இழுத்து அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

"சீனு இது பப்ளிக் ப்ளேஸ்டா... வேணாம்.. சொன்னாக் கேளுடா.." மீனா அவனிடம் மன்றாடினாள்.

"மீனா... நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேடி... உன் கழுத்துல.... மல்லிப்பூ சென்ட் அடிச்சிருக்கியா, ம்ம்ம்ம். தன் மூச்சை நீளமாக இழுத்தான்... சீனு. அவன் பார்வை மீனாவின் மார்பில் குவிந்திருந்தது.

"ஆமாம்... கும்பகோணம் போயிருந்தோம்ல, அங்க சுகன்யா ஒரு பாட்டில் குடுத்தா..." மீனா புடவை முந்தானையை இழுத்து தன் மார்பை முழுவதுமாக மூடிக்கொண்டாள்.

"அய்யம்பேட்டை அருக்காணி மாதிரி என்னடீப் பண்றே... மொத்தமா இழுத்து மூடிக்கிட்டே... சரியான பட்டிக்காடுடி நீ.... மீனு... ஒரு செகண்ட் கிட்ட வாடீ..." தன் உடல் பதற சீனு அவளிடம் கெஞ்சினான்.

"ம்ம்ம்.. நீ என்னைத் தொடல்லன்னா கிட்ட வரேன்.." சீனுவின் முகத்தில் இருந்த ஆசையும், ஏக்கமும் அவளைத் தடுமாற வைத்தது. மெல்ல அவன் புறம் நகர்ந்து அமர்ந்தாள்.

மீனா அருகில் வந்ததும், சீனு அவளை தழுவி அவள் உதட்டில் முத்தமிட முயற்சித்தான். அவன் மூச்சில் வந்த சிகரெட் நாத்தம், மீனாவின் மூக்கில் ஏறியது. மீனா அவன் பிடியில் திணறினாள். அவள் திணற திணற, சீனுவின் பிடி மேலும் இறுகியது. ஒரு வினாடிக்கும் குறைவாக அவன் உதடுகள், மீனாவின் உதட்டை தொட்டு, உரசி, திரும்பின.

சீனுவின் உதடுகள் தன் உதடுகளை உரசியதும், மீனா ஒரு நொடி அதிர்ந்தாள். அவள் உதடுகளில் தீடிரென உண்டான வெப்பம், அந்த வெப்பத்தால் உண்டான உடல் அதிர்வின் தாக்கத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியாமல், அவனை வலுவாக தன்னிடமிருந்து உதறினாள். அவனிடமிருந்து மீண்டும் விலகி உட்க்கார்ந்தாள். அவன் கூரிய கண்கள், அவள் திமிறியதால் சற்றே விலகிய முந்தானையின் பின்னால், ஒரு நொடி மெல்ல ஏறி இறங்கிய மீனாவின் மார்புகளில் வட்டமடித்து திரும்பின.

மீனா மீண்டும் சட்டென தன் புடவை தலைப்பை நேராக்கிக்கொண்டாள். உடலில் இன்ப உணர்ச்சிகள் பெருகிக்கொண்டிருக்க, சீனுவைப் நேராகப் பார்க்காமல் கடல் அலைகளை பார்த்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது.

சீனுவுக்கு வெறுப்பாக இருந்தது. என்னாச்சு இவளுக்கு? ஏன் எரிச்சலா இருக்கா? வண்டில வரும் போது அவளாத்தானே என்னை ஆசையா கட்டிக்கிட்டா..! இப்ப நான் இவளை திருப்பி கட்டிக்கிட்டா, முரண்டிக்கிட்டு போறா.. எதிர்ல, பக்கத்துல, இங்க அங்கன்னு, அவன் அவன் ஜாலியா, கூட இருக்கறவளை மடியில போட்டுக்கிட்டு செமையா அமுக்கி புழியறானுங்க...

அஞ்சே நிமிஷத்துல எவ்வளவு சேஞ்ச் இவகிட்ட? பீச்சுக்கு வந்ததுலேருந்துதான் இவ இப்படி விலகி விலகிப் போறா? பொம்பளையைப் புரிஞ்சுக்கறது இவ்வளவு சிரமமா? ஒரு நிமிடம் அவர்கள் இருவரும் மவுனமாக உட்கார்ந்திருந்தனர். சீனு தன் ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான். தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஒரு சிகரெட்டை எடுத்தான். பேண்ட் பாக்கெட்டை லைட்டருக்காக துழாவினான். லைட்டர் அவன் பைக்கிலிருந்த ஹேங்கரில் கிடந்தது.

மீனா தன் செல்லை நோண்டிக் கொண்டிருந்தாள். சீனுவின் விரல் இடுக்கில் நெளிந்த சிகரெட்டை வெறுப்புடன் பார்த்தாள். அவன் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கினாள். அவன் கண்கள் மிரட்சியாக இங்கும் மங்கும் தீப்பெட்டிக்காக அலைந்து கொண்டிருந்தது. அரை வினாடிக்குப் பின் மெல்ல ஒரு கேள்வியை அவனிடம் எழுப்பினாள்.

"சீனு... உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?" மீனாவின் குரல் சீரியஸாக வந்தது.



"இதுல என்னடீ திடீர்ன்னு சந்தேகம் வந்திடிச்சி உனக்கு?" சீனுவின் குரலில் மெல்லிய எள்ளல் இருந்தது.

"எனக்கு சந்தேகம்தான் வருது ..? மீனாவின் மனதில் அவனுடைய கிண்டல் சுருக்கென்று தைத்தது. 

"மீனா... ரொம்ப மொக்கை போட்டு என் மூடைக் கெடுக்காதேடீ... வண்டில வரும் போது ஜாலியா இருக்குடான்னு நீதானே சொன்னே..."

"ஆமாம். அப்ப ஜாலியாத்தான் ஃபீல் பண்ணேன்.."

"அதுக்குள்ள உனக்கு என்ன ஆயிடிச்சி..."

"சீனு என் வயித்தெரிச்சலைக் கிளப்பாதே நீ..." பெண்ணின் பிடிவாதம் எழுந்தது.

"ஒரு வாரம் கழிச்சு ஆசையா உன்னைப் பாக்க வந்திருக்கேன்டீ... ஏன்டீ இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறே?" 

தன் மனதிலிருந்த ஆசை நிறைவேறாததால் சீனுவாசனுக்குள் இலேசாக சீற்றம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஆணுக்கே உரித்தான மூர்க்கம் மெல்ல தலைத் தூக்கத் தொடங்கியது. 

"சீனு.. நிஜமா என் மேல உனக்கு அக்கறை இருக்கடா? சொல்லுடா.. உனக்கு அக்கறை இருக்கு?"

"மீனா... ப்ளீஸ்... என்னை வெறுப்பேத்தாதே...?"

"உன் கிட்ட பதில் இல்லேன்னா நான் என்ன பண்ண?"

"போதும் நிறுத்துடீ... இன்னிய தேதிக்கு... எந்த புத்திகெட்ட மடையனாவது, தன் லவ்வரோட அண்ணன் கிட்ட போய், மச்சான்.. உன் தங்கச்சியை பீச்சுக்கு இட்டுகினு போறேன்னு சொல்லுவானா?"

"யூ ஆர் ரைட்... எவனும் இப்படி கேக்கமாட்டான்..?" 

மீனாவின் விரல்கள் கடல் மணலில் அலைந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில், சிறிய நண்டு ஒன்று பக்கவாட்டில் வேகமாக நகர்ந்து ஓடி வளைக்குள் நுழைந்ததை அவள் கண்ணில் ஒரு குழந்தையின் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"இங்க என் மூஞ்சைப் பாருடீ... ஆனா இந்த மாங்கா மடையன் உன் வீட்டுக்கு வந்தேன்... உன் அண்ணன் கிட்ட 'மீனாவை வெளியே அழைச்சிட்டுப் போறேன்னு' பர்மிஷன் கேட்டேன்.. ஏன்?"

"ஏன்... சொல்லு... எனக்கு நிஜமா புரியலை?"

"ஏன்னா.. நான் உன்னை உண்மையா காதலிக்கறேன்.. கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நெனைக்கறேன்.. கடைசி வரை என் வாழ்க்கையை உன் கூட வாழ விரும்பறேன்..." சீனுவுக்கு மூச்சு வாங்கியது.

"மீனா... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உன்னைத் திருட்டுத்தனமா பீச்சுல தொட்டுப் பாத்துட்டு, உன்னை இங்கேயே விட்டுட்டு ஓட போறவன் நான் இல்லே..." 

"செல்வா என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டுன்னாலும், நீ அவனுக்கு தங்கச்சி... உன்னைப் பெத்தவங்களை, நான் என் சொந்த அம்மா, அப்பாவாத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்; அவங்களுக்கு குடுக்க வேண்டிய மரியாதையை என்னைக்கும் குடுக்கணும்ன்னு நெனக்கறவன் நான். இவங்கள்ளாம், என்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் சீப்பா நினைச்சுடக்கூடாது... அப்படி அவங்க என்னைத் தப்பா நினைச்சிட்டா... என்னாலே நிம்மதியா தூங்கவே முடியாது..."

"சீனு.. உன்னைப்பத்தி எனக்கு தெரியாதாப்பா? பேசிக்கலா நீ ரொம்ப நல்லவன்டா... உன்னை நான் நேத்து இன்னைக்கா பாக்கறேன்... அதனாலத்தான் நானா வந்து என் வாழ்க்கையை உன் கையில குடுத்துட்டேன்.. உன் மனசை நான் புண்படுத்தணும்ன்னு அந்தக் கேள்வியை நான் கேக்கலை." 

சீனுவின் கண்ணியமும், அவன் மனதின் நேர்மையும் அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையும் புரிந்ததும், தன் காதலனை பெருமிதத்துடன் பார்த்தாள் மீனா.

சீனு, மீனாவை மெல்ல நெருங்கி உட்க்கார்ந்து அவள் கையை தன் கையில் எடுத்து மென்மையாக வருட ஆரம்பித்தான். ஆனால் 'உண்மையிலேயே நீ என்னைக் காதலிக்கறயா?' மீனா தன்னிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று அவனுக்கு விளங்காததால், திகைப்பின் மெல்லிய நிழல் அவன் முகத்தில் இன்னமும் இருந்தது. 

"அயாம் சாரி... சீனு... என் மனசுல தீடீர்ன்னு அந்தக் கேள்வி ஏன் தோணிச்சின்னு தெரியலை; என்னால அதை என் மனசுக்குள்ள புதைச்சுக்க முடியலை..." சீனுவின் கூர்மையான பார்வையை மீனாவால் எதிர்கொள்ள முடியாமல் சங்கடப்பட்டாள். 

"மீனா... நீ என்னை எந்த அளவுக்கு காதலிக்கறயோ, அந்த அளவுக்கு மேலேயே நானும் உன்னை உண்மையா காதலிக்கறேன், நேசிக்கறேன், ஆசைப்படறேன், விரும்பறேன், போதுமா?"

"ரொம்ப தேங்கஸ் சீனு..." மீனா அவன் கையில் தன் கையை கோத்துக்கொண்டாள். 

"கொஞ்சம் சிரிம்மா ..."

"ம்ம்ம்... அயாம் சாரீ சீனு.. இனிமே இந்த மாதிரி நான் உன் கிட்ட பேசமாட்டேன்.." மீனாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. 

"இட்ஸ் ஆல்ரைட்... மீனா..."

"அப்படீன்னா, நான் சொல்றதை மட்டும் நீ ஏன் கேக்கமாட்டேங்கறே?" மீனா, சீனுவின் விரல்களை நெட்டி முறித்துக்கொண்டிருந்தாள்.

"நீ சொல்லி நான் என்னக் கேக்கலை?" முகத்தில் ஆச்சரியத்துடன் கேட்டான், சீனு. 

"முதல்ல உன் கையில இருக்கற சிகரெட்டை விசிறி அடி... அதுக்கப்புறம் உண்மையைச் சொல்லு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ, எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி, நீ சிகரெட் குடிச்சுட்டுத்தானே வந்தே?"

"மீனா.. உன் கிட்ட நான் எதுக்குப் பொய் சொல்லணும்? யெஸ்.. உன்னைப் பாக்க வர்றதுக்கு முன்னே ஒரு சிகரெட் புடிச்சேன்.."

சீனு சிரிக்க ஆரம்பித்தான். மீனா வந்ததிலிருந்தே முகத்தை 'உம்' மென்று தூக்கிக்கொண்டு, ஏன் எரிச்சலுடன் இருக்கிறாளென்று, அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தன் கையிலிருந்த சிகரெட்டை ஒடித்து எறிந்தான். 

"மீனா... எங்க அத்தை இன்னைக்கு அருமையான வெண் பொங்கல், கூடவே மெது வடை, சட்னி... சாம்பார்ன்னு சூப்பரா ஒரு டிஃபன் பண்ணியிருந்தாங்க... அதை ஒரு புடி புடிச்சதும், ஒரு சிகரெட் புடிச்சா என்னா சுகம் அதுல கிடைக்கும் தெரியுமா... அதை என்ன மாதிரி சிகரெட் பிடிக்கற ஒருத்தனை கேட்டாத்தான் புரியும்..."

"சீனு அந்த சுகம் எனக்கு வேணாம்..."

"மீனா... அது அனுபவிச்சாத்தான் புரியும்... ஆனா அந்த சிகரெட் வாசனை உனக்கு பிடிக்கலை... ஆல்ரைட்... அயாம் சாரி... நீ அந்த சிகரெட் நாத்தத்தை சகிச்சிக்கணும்ன்னு நான் சொல்லலே.."

"சீனு ஒரு விஷயத்தை நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறே? சிகரெட் ஸ்மெல் எனக்கு சுத்தமா பிடிக்கலை. நீ இன்னைக்கு போட்டுகிட்டு இருக்கற இந்த டார்க் ப்ளு ஜீன்ஸ்ல, வெள்ளை புல் ஹேண்ட் சட்டையில, ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கே... ஒரு வாரம் கழிச்சி உன்னை என் வீட்டுலப் பாத்ததும், உன்னை அப்படியே கட்டிப்புடிச்சி கிஸ் அடிக்கணும்ன்னு என் மனசு துடிச்சுது..." 

"சரிடீ.. நீ குடுக்கறதை குடு... ஒரு முத்தத்துக்காகத்தான் இவ்வளவு நேரமா நான் கெடந்து தவிக்கறேன்.. நீயே கொடுக்கறேன்னா நான் வேணாம்ன்னா சொல்லப் போறேன்..?" முகத்தில் அசட்டுச் சிரிப்புடன், சீனு அவள் முகத்தை தன் புறம் திருப்பினான். தன் கையை அவள் தோளில் போட்டு தன்னுடன் சேர்த்தணைத்துக்கொண்டான். 

"கையை எடு என் மேலேருந்து... அது அப்ப; இப்ப உன்னைப்பாத்தாலே எனக்கு எரிச்சல்தான் வருது...!" மீனா அவன் கையை உதறிவிட்டு நகர்ந்து உட்க்கார்ந்தாள். 

"மீனா, மனசுல இருக்கற ஆசையை எப்பவும் உடனே தீத்துக்கணும்டீ...பென்டிங்க் வெக்கக்கூடாது."

"என்னை போடீ... வாடீன்னு பேசறதை முதல்ல நீ நிறுத்து..."

"கோச்சுக்காதடீ செல்லா..." சீனு மேலும் வழிந்தான்.

"என் ஆசையை நீ மதிச்சாத்தானே?"

"உன் ஆசையை மதிக்கவேதான்... உன் முகத்தை என் பக்கம் திருப்பி, என் உதட்டை உனக்கு காமிச்சேன்..." அவன் சினிமாவில் நக்கலடிக்கும் சத்தியராஜாக மாறினான். 

"சனியனே... நான் அதைச் சொல்லலே?"

"பின்னே?" சீனு மீனாவின் இடுப்பை தன் கையால் வளைத்து தன்னை நோக்கி இழுத்தான். 



"புரியாத மாதிரி பேசாதே... உன் வாயிலேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தால, நீ என் கிட்ட வந்தாலே, எனக்கு கொமட்டிக்கிட்டு வாந்தி வருது... அப்புறம் எப்படி நான் உன்னை மனசார, ஆசையா உன் வாயில கிஸ் பண்ண முடியும்?" 


"சீனுவாசா, நம்ம கல்சர்ல, மிடில் கிளாஸ் சூழ்நிலையில உழல்ற பாதி பொண்ணுங்களுக்கு சிகரெட் ஸ்மெல் புடிக்காதுடா... ஒரு நாளைக்கு நீயும் ஆசையா ஒரு பொண்ணு பக்கத்துல நெருக்கமா போவே; அவ மூஞ்சை திருப்பிக்கிட்டு தள்ளி நின்னான்னா, அந்த நேரத்துல அந்த உதாசீனத்தை உன்னால தாங்க முடியாதுடா..."

சீனுவின் மனதில் தன் அத்தை உஷா, வெகு நாட்களுக்கு முன், பட்டும் படாமல், இலை மறைவு காய் மறைவாக, சொன்னது சட்டென அவன் நினைவுக்கு வந்தது. 



சுகன்யா... 67

தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் ராகவனை எழுப்பிய அவன் பாட்டி, பஞ்சு குவியலாக கிடந்த ஐந்து நாள் குழந்தையை அவன் மடியில் கிடத்தினாள்.

'உன் தங்கச்சி பாப்படா... கெட்டியாப் புடிச்சுக்கோ... சொல்லுடா பாப்பாவுக்கு என்ன பேரு வெக்கலாம்' ராகவனைப் பார்த்து பொக்கை வாயை திறந்து சிரித்தாள் கிழவி.

"பாட்டீ... இந்த குட்டிப்பாப்பா.. இனிமே நம்ம வீட்டுலதான் இருக்குமா? ஆஸ்பத்திரியிலேருந்து காசு குடுத்து வாங்கியாந்துட்டீங்களா?" முகத்தில் பொங்கும் வியப்புடன் கேட்டான் ராகவன்.

"ஆமாம்... உன் பொம்மையெல்லாம் இனிமே இவளுக்குத்தான்... குடுப்பியா... அப்பத்தான் உன் கூட விளையாடுவா... உன் கூட பேசுவா... சிரிப்பா... ஓடிவருவா..."

"ம்ம்ம்... குடுப்பேன்... பாட்டீ... பாப்பாவை எத்தினி ரூபா குடுத்து வாங்கீனீங்க..." கண்கள் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராகவன்.

"ஏண்டா...?" பாட்டி திகைத்தாள்.

"என் உண்டீலே பத்து ரூபா வெச்சிருக்கேன்.. எனக்கு இன்னொரு தங்கச்சிப் பாப்பவும் வேணும் பாட்டீ.. நானும் நீயும் போய் வாங்கிட்டு வரலாமா?"
குழந்தை ராகவனின் பேச்சைக் கேட்டு சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள். அவர்களின் சிரிப்பின் அர்த்தம் அப்போது அவனுக்குப் புரியவில்லை



"பாப்பா அழகா இருக்காளாடா...?" பெற்றவள், தன் மகனை ஒரு கையால் இழுத்து தன் பால் வடியும் மார்புடன் அணைத்துக்கொண்டாள். பாப்பா மேல் அடித்த பால் வாசனை அம்மா மேலும் அடித்தது. ராகவன் தன் தாயின் முகத்தையும், குழந்தையின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

"பாப்பா... உன்னாட்டாமே செவப்ப்பா அழகா இருக்காம்மா... மெத்து மெத்து இருக்காம்மா... கண்ணைத் தொறந்து என்னைப் பாக்க மாட்டாளா... அம்மா... பாப்பாவுக்கு உஷான்னு பேரு வெக்கலாம்மா..."

"உஷாங்கறது யாருடா?" பக்கத்தில் நின்றிருந்த அப்பா உரக்கச் சிரித்தார்.

"ஒண்ணு 'பீ' செக்ஷன் லீடர் பேருப்பா..." சிறுவன் ராகவன் முகத்தில் பெருமிதமும் வெட்க்கமும் கலந்திருக்க, கலகலவென சிரித்தான்.."

குழந்தை உஷா என்ற பெயராலேயே அழைக்கப்பட்டாள். இருபத்து இரண்டு வயதில் அழகிலும், குணத்திலும், பத்தரை மாத்து தங்கமாக ஜொலித்தாள் உஷா. படிக்கும் காலத்தில், பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, எப்போதும் முதல் ரேங்கில் வருவது அவள்தான்.

பேச்சு போட்டியில், பாடுவதில், கவிதை எழுதுவதில் முதலிடம் அவளுக்குத்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி. கெமிஸ்ட்ரியில் முதல் ரேங்க் வாங்கினாள். பட்டம் வழங்கும் விழாவுக்கு டில்லியிலிருந்து வந்த பிரதமரிடமிருந்து கோல் மெடல் வாங்கிக்கொண்டாள். மறு நாள் ஹிண்டுவில் அவள் போட்டோவைப் பார்த்த குடும்பம் மொத்தமும் பூரித்துப்போனது. பெண்ணை தலையில் வைத்து கொண்டாடியது.

டாக்டர் ராமகிருஷ்ணன், டெல்லி யூனிவர்சிட்டியில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்டில் அஸிஸ்டன்ட் புரொஃபஸராக இருந்தவன், கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், பத்து நாள் லீவில் மெட்ராஸ் பெற்றவர்களைப் பார்க்க வந்திருந்தான். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நடந்த இரசயானம் சம்பந்தமான கண்காட்சியில் பட்டாம்பூச்சியாகத் திரிந்த உஷாவைப் பார்த்தவன், தன் மனதை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசமால், அவள் முகஅழகிலேயே பறிகொடுத்தான்.

உஷாவின் வீட்டு முகவரியை எங்கிருந்து, எப்படி சேகரித்தானோ... அவளைப் பார்த்த இரண்டாவது நாள் வீட்டுப் பெரியவர்களுடன் உஷாவின் பெற்றொர்கள் முன் வந்து நின்றான். கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என ஒரு காலில் நின்றானாம், கிருஷ்ணன். இருவரின் இனமும் ஒத்துப்போயிருந்தது. அவர்கள் மனமும் ஒத்துப் போனது. எல்லாம் காஞ்சி வரதனின் அனுக்கிரகம் என மனதுக்குள் மகிழ்ந்தாள் உஷா. ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மனசில் குதுகலமானான் ராகவன்.

பத்து நாளில், உஷாவை நிச்சயம் பண்ணி, கல்யாணம் நடந்து, சாந்திக்கல்யாணத்தையும் முடித்துக்கொண்டு, பெரியவர்களின் ஆசியுடன் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு விமானம் ஏறிப் பறந்தான், கிருஷ்ணன்.

கிருஷ்ணனுக்கு எல்லாவற்றிலும் அவசரம். எட்டுமாதத்தில் பிறந்தவனாம் அவன். அவசரமாக கார் வாங்கினான். அவசரமாக பிறந்த ஊரில் உஷாவின் பெயரில் வீடு வாங்கினான். தன் பெயரில் பேங்கில் இருந்த பிக்சட் டெப்பாஸிடுகளை, ரொக்கத்தை மனைவியின் பேரில் மாற்றினான். கட்டிய மனைவியிடம் இரவு பகல் என்று இல்லாமல் சந்தோஷமாக இருந்தான்.

கிருஷ்ணன் ஒரு விஷயத்தில் மட்டும் அவசரம் காட்டவில்லை. பிள்ளை பெற்றுக்கொள்வதை மட்டும் தள்ளிப்போட்டான். உஷா வெட்கத்தைவிட்டு 'எனக்கு குழந்தை வேணுங்க...' கேட்டவளிடம் ஒரு ரெண்டு வருஷம் ஜாலியா இருப்போமே என்று சிரித்தானாம்...! பாவி... பாவி..!!?

கான்பூரில் மீட்டிங் என்று காலையில் சிரித்துக்கொண்டே, தெரு வாசலில் மனைவியை முத்தமிட்டுவிட்டு போனவன் மீண்டும் வீட்டுக்குள் கால் வைக்கவில்லை. நடு ஆகாயத்தில் தீயை முத்தமிட்டு இருக்கிறான். அன்று எதிர்பாராமல் வெடித்து சிதறி, எரிந்து விழுந்த, விமானத்தில் அவனும் பயணம் செய்தானாம். இருபத்து ரெண்டு வருடங்களுக்கு முன் விமான விபத்தில் இறந்து போன தன் மைத்துனனின் முகம் இப்போது ராகவனின் நினைவுக்கு வரவில்லை.

அவன் குரலும், பேச்சுகளும், மட்டும் பசுமையாக ராகவனின் மனதில் இன்றும் அழியாமல் இருந்தது. அவனை எப்போது நினைத்தாலும் ராகவனின் மனதுக்குள் மட்டுமல்லாமல், கண்களிலும் இன்றும் கண்ணீர் ததும்பிவிடும். கடைசியா அவன் முகத்தைக்கூட ஆசைத் தீரப்பாக்க குடுத்த வெக்கலையே? கிருஷ்ணங்கறவனை, சாம்பலா, கரியாத்தானே, மூட்டையாத்தானே கட்டி கொடுத்தானுங்க.. இதுக்குத்தான் இப்படி அவசரப்பட்டியாடா பாவி... கிருஷ்ணனை மனதுக்குள் திட்டுவான், ராகவன்.

கிருஷ்ணா.. கல்யாணம் ஆன ரெண்டு வருஷத்துல எங்க வீட்டுக் கொழந்தையை தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு உனக்கு எப்படீடா மனசு வந்தது? ராகவன் அழுது அழுது புலம்பினான். ஒரு வருடம் தன் மனைவி பத்மாவிடம் கூட மனம் விட்டு அவன் பேசவில்லை.

"பத்மா.. உஷா இனிமே நம்ம வீட்டுலதான் இருப்பா... இவ என் தங்கச்சி இல்லே... இனிமே உன்கூடப் பொறந்தவன்னு நினைச்சுக்கோ..." ராகவன் தன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதான். ஒரு வார்த்தை பேசாமல், பத்மா, தன் கணவன் ராகவனின் கண்ணைத் துடைத்தாள். தன் தோளுடன் தன் கணவனை அணைத்துக்கொண்டாள். பத்மாவை தன் மறு தோளோடு இறுக்கிக்கொண்டாள்.

இன்று வரை உஷாவுக்கும், பத்மாவுக்கும் நடுவில், எந்தக் காரணத்துக்காகவும், எந்த புகைச்சலும் வந்ததேயில்லை. அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்ததை ராகவன் என்றுமே பார்த்ததில்லை. இன்று வரை அந்த வீட்டில் எந்த விஷயத்திலும் உஷாவின் முடிவைக் கேட்க்காமல் எந்த காரியமும் நடந்ததில்லை. உஷாவின் மடியிலும், தோளிலும், மார்பிலும்தான், வளர்ந்தான், ராகவனின் பிள்ளை.

ராகவன் மாநிறம். எப்போதும் முடியில்லாமல் சுத்தமாக இருக்கும் சிவந்த முகத்தில் இனிமையான புன்னகையின் கீற்று படர்ந்திருக்கும். தினமும் தவறாமல் சவரம் பண்ணிக்கொள்வதால், தாடையின் மழமழப்பில் கரும் பச்சை வெயிலில் மின்னும். வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் போது கருப்பு வண்ண கூலிங் கிளாஸ் முகத்தில் குடியேறும்.

ராகவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு அவருடன் குடித்தனம் பண்ண வந்த, இளம் பெண் பத்மாவுக்கு தன் கணவர் மீசையோடு இருந்தால் இன்னும் அழகாக இருப்பார் என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது.

'ஏன்னா... மீசை வெச்சுக்கோங்களேன் நீங்க..' தனித்திருக்கும் போது தன் மனசின் ஆசையை கட்டிக்கொண்டவனிடம் ரகசியமாகச் சொல்லிப்பார்த்தாள். மனைவியின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்த ராகவன், தன் மூக்கின் கீழ், உதடுகளுக்கு மேல், கரு கருவென மீசையை மட்டும், வளர்த்து அவள் ஆசையை நிறைவேற்றவில்லை.

“பத்து... அப்பா இருக்கற வரைக்கும் இந்த ஆசையை மனசுக்குள்ளவே வெச்சிக்கோடீ... என் மூஞ்சியிலே மீசையை அவர் பாத்தார்... ஆத்தை விட்டே என்னையும், உன்னையும் சேர்த்து, அடிச்சித் தொரத்திடுவார்..” ராகவனுக்கு பெற்றவரிடம் அத்தனை பயம். தகப்பன் உயிரோடு இருந்த வரை அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து பேசினவர் இல்லை.

தகப்பனார் வைகுண்ட வாசத்தை அடைந்தவுடன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற ஒரு முறை மீசை வளர்த்தார். மீசை வெள்ளையும் கருப்புமாக வளர, 'வேண்டாங்க.. மீசை இல்லாமலே நீங்க அழகா இருக்கீங்க' ஆசைப்பட்ட பத்மாவே கிண்டல் பண்ண, விட்டுது ஆசை விளாம்பழ ஓட்டோடு என அவர் மனதுக்குள் திருப்தியடைந்தார்.

கறுப்பு மெட்டல் பிரேமில் மூக்குக் கண்ணாடி. மீசை இல்லாம, நெத்தியில திருசூர்ணத்தோட வெள்ளை சட்டை போட்டு இருப்பார் அவர்தான் ராகவன். நல்ல மனுஷன். அவர் கிட்ட போங்க, உங்க பிராப்ளம் எல்லாத்தையும் நொடியில சால்வ் பண்ணிடுவார், அவர் சீஃப் மேனஜாராக இருந்த பாங்க் கிளையில் அவருடைய அடையாளம் இதுதான்...

ராகவன் எப்போதும் வெள்ளை சட்டைதான் அணிவார். நெருங்கிய உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் அவர் கீழப்பந்தல் நாராயண ஐயங்கார். மற்றவர்களுக்கு அவர் வெறும் ராகவன். ராகவன் என்பது படிக்க ஆரம்பித்த காலத்தில் பள்ளிக்கூடத்திற்காக அவருக்கு சூட்டப்பட்ட பெயர்.

உயரத்துக்கு ஏற்ற கனம். வெய்யிலோ, குளிரோ, கால வித்தியாசமில்லாமல், எந்த காலத்திலும், வீட்டில் எட்டு முழ வேஷ்டி, கை வெச்ச பனியன் என்றுதான் எளிமையாக இருப்பார். அவர் அருகில் சென்றால், மஞ்சளின் வாசமும், துளசியின் நறுமணமும் வீசும். சனிக்கிழமைகளில் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் தவறாமல் பெருமாளைத் தரிசனம் செய்தே ஆகவேண்டும்.

தனித்திருக்கும் போது வாயில் திருவாய்மொழியும், ஆண்டாள் பாசுரங்களும் முனகலாக வந்து கொண்டிருக்கும். ஒரு கைப்பிடி புளிசாதத்திற்கும், ஒரு தொன்னை நெய் வழியும் வெண் பொங்கலுக்கும், பெசண்ட் நகரில், தன் உழைப்பில், தான் கட்டிய மாடி வீட்டையும், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடத்தையும், மொத்தமாக எழுதிக்கொடுத்துவிடுவார்.

புளியோதரையிலும், வெண்பொங்கலிலும் மட்டும் அந்த அளவுக்கு அவருக்கு ருசி, விருப்பம், ஏன் ஒரு வெறி என்றே கூடச்சொல்லலாம். வாழ்க்கையில் இதைத் தவிர வேறு எந்த பெரிய ஆசை, லட்சியம், கனவு என்று இல்லாமல், தன் மனைவி, தன் தங்கை உஷா, தன் ஒரே மகன் என்ற நிறைந்த மனதுடன் வாழ்ந்து வருபவர், ராகவன்.

லயோலா காலேஜ் பாஸ் அவுட். கல்லூரியில் முதல் பெஞ்சில்தான் உட்க்காருவன் ராகவன். ஹாஸ்டலில் தங்கிப் படித்தவன். கல்லூரி மாணவர்களுக்கே உரிய அதீத ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. சிகரெட்டை கனவிலும் கையால் தொட்டதில்லை.

அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட ‘தண்ணி அடித்தல்’ என்ற சொற்களைக் கேட்டால், காத தூரம் ஓடுவார். 'அவன் தயிர்சாதம்டா" சக மாணவர்களின் கிண்டலைப் பற்றி கவலைப் பட்டடே கிடையாது.

காலையில் எழுந்ததும், ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயர் பாடும் ராகவனின் பிள்ளை, ஆசை புதல்வன், அவரின் ஒரே வாரிசு, தன் பதினெட்டாவது வயதில், தெரு முனை பெட்டிக் கடைக்கு பின்னால் நின்று கொண்டு, ஸ்டைலாக சிகரெட்டை உதடுகளில் கவ்வி, மூக்கு, வாய், உதடு என புகையை வெளியேற்றி அக்னி ஹோத்திரம் பண்ண ஆரம்பித்தான்.

தன் குலத்திலேயே முதலாவது ஆளாக, தன் வாரிசு சிகரெட் பிடிப்பதை முதல் முறையாக கண்ணால் கண்டவர், பிடிக்காமல், மனதுக்குள் புழுங்கினார். கோபத்தில் குமைந்தார். தங்கையிடமும், தாரத்திடமும் தான் கண்டதைச் சொல்லி சொல்லி மருகினார். ஒரு வாரம் மகனிடம் பேசவில்லை. ஆனால் தன் பொறுமையை இழக்கவில்லை.

'அவன் புகை விடறதை பாத்துட்டு சும்மாவா வந்தீங்க..?' பெற்றவள் பத்மா கொதித்தாள்.

'தோளுக்கு மேல வளந்தவன் அவன்; என் தோழன் அவன்; அவனை எப்படி நான் அடிச்சிப் புத்தி சொல்றது?' ராகவன் மனைவியிடம் வாதம் செய்தார்.

'நெடுக வளந்துட்டாலும் அவன் இன்னும் குழந்தைதானே... அறியாத பருவம், புரியாத வயசு, கூடாத நட்பு, தப்பு பண்ணிட்டான். என்னப்பண்றது...?விளையாட்டாப் பண்ணாலும், உடம்பைக் கெடுத்துக்கறானே, நான் அவனுக்கு புத்திசொல்றேன்...'

உஷாதான் அப்பனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் பஞ்சாயத்து பண்ணி வைத்தாள். அப்பாவிடம், அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், 'சாரி' சொன்ன பிள்ளை, தெரு முனைக் கடையை விட்டு விட்டு, நாலு தெரு தள்ளி சென்று, கண் மறைவாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது.

பிள்ளையின் இருபத்து நான்காவது வயதில், அவனே சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், தன் மகன் ‘தீர்த்தவாரியும்’ நடத்த ஆரம்பித்துவிட்டான், அதோடு நிற்காமல், 'ஜலகீரிடையின்" போது ஊர்வன, பறப்பன என்று எந்த பேதமுமில்லாமல், கண்டதை தின்னவும் தொடங்கிவிட்டான் என்று தெரிய வந்தபோது, ராகவனின் மனம் கனத்தது.

'இதெல்லாம் நல்லதுக்கு இல்லே... நம்ம குடும்பத்துல யாரும் இந்த காரியங்களை இதுவரைக்கும் பண்ணதில்லே... குடும்ப பழக்கம் வழக்கமின்னு இருக்கு... அதை பிடிக்கலைன்னாலும், கடைபிடிச்சுத்தான் ஆகணும்' ஒரு நாள் பதட்டமில்லாமல், நிதானமாக பிள்ளையை நடுக்கூடத்தில் உட்க்கார வைத்து பிள்ளைக்கு புத்தி சொன்னார்.

'எல்லாத்துக்கும் ஒரு உபதேசம்... உங்கக் கட்டுப்பாடு, உங்க லெக்சர் இதெல்லாம் எனக்கு பிடிக்கலை.. நானும் படிச்சிருக்கேன்... நானும் சம்பாதிக்கறேன்.. என் கைக்காசை போட்டு குடிக்கறேன்... உங்க பேரு கெட்டு போவுதுன்னு நீங்க நெனைச்சா, நான் வீட்டை விட்டேப் போயிடறேன்..' பிள்ளை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது...

'டேய்... யாருகிட்ட என்னப் பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசுடா' அத்தை உறுமியதில் அந்த நேரத்துக்கு அடங்கியது.

இதற்கு மேல் தன் பிள்ளையிடம் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் நினைத்தார். தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, இனி அவனிடம் பேசுவதில்லை என்று மனசுக்குள் ஒரு சபதத்தை எடுத்துக்கொண்டார். ஒரு வருடமாகிவிட்டது. அப்பனும் பிள்ளையும் நேருக்கு நேர் பேசிக்கொள்வது இல்லை. இந்த முடிவால் மனம் நொந்து போனவர்கள் பெற்றவளும், வளர்த்தவளும்தான்.

அண்ணா... இது தப்பு... பெத்தவனும், பிள்ளையும், இப்படி பரம வைரி மாதிரி ஒரே வீட்டுல இருந்துகிட்டு ஒருத்தர் கிட்ட ஒருத்தர் பேசாம மொறைப்பா இருந்தா எப்படீ? பேசாம இருந்து அவனை நீங்க கொல்றதைவிட, கூப்பிட்டு ரெண்டு அறை விடுங்க அண்ணா... அப்படியாவது அவன் திருந்தட்டும்... உஷா அண்ணணுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். 


ராகவன் ஒரு கருங்கல். எல்லா விஷயத்திலும் கல்லைப் போல் பொறுமையைக் கடைபிடிப்பவர்.

'பத்மா ... உன் பிள்ளையை நான் அடிச்சு அதனால அவன் திருந்தக்கூடாது. அவனா உணர்ந்து திருந்தணும்...'

ஒரு வரியில் பேச்சை முடித்துவிட்டு எழுந்து போய்விட்டார். இது அவரது போக்கு. இந்த கருங்கல்லுக்கு என்னைக்கு கோபம் வர்றது...? என்னைக்கு எங்கப் புள்ளை திருந்தறது...? பத்மாவும், உஷாவும் தங்களுக்குள் உருகிக்கொண்டார்கள். மருகிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு நியமம் இருக்கிறது. ஒரு தர்மம் இருக்கிறது. அந்தந்த காரியங்களை அந்தந்த முறையில்தான் செய்யணும் என்று நம்புபவர் ராகவன்.

"உஷா, என் பிள்ளையை சிகரெட் பிடிக்காதே, குடிக்காதேன்னு, நான் சொல்றது என் பேரு கெட்டுப்போகுதுன்னு இல்லே..'

'ம்ம்ம்..."

'நான் சொல்றது எல்லாத்தையும் அவன் நம்ம மதத்தோட சம்பந்தபடுத்திப் பாக்கறான்; நம்ம குலத்தவர்கள் சொல்லிக்கற போலியான, பாசாங்கான பெருமைன்னு அவன் நினைக்கறான்; நாம் கும்பிடற பெருமாளோட சம்பந்தப் படுத்திக்கறான்..'

"என்னச் சொல்றீங்க...எனக்குப் புரியலே" பத்மா முகத்தில் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தாள்.

'நான் சொல்றது மதத்தோட சம்பந்தப்பட்டது அல்ல. என் குலத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. அவனோட உடலோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டது. அவனுடைய தினசரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. வருங்காலத்துல அவனுடைய இல்லற வாழ்க்கையோட தொடர்பு கொள்ளப்போவது..."

"அண்ணா.. உங்க வயசுக்கு இருக்கற முதிர்ச்சியை இருபத்து மூணு வயசு பிள்ளைகிட்ட, எதிர்பாத்தா முடியுமா?" உஷா அவரை சமாதானப்படுத்திப் பார்த்தாள்.

"கண்ணு... உஷா... நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்டவ, ஒரு ஆம்பளை கூட வாழ்ந்தவ... நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு நல்லாப்புரியும்... இவன் ஆசையா பொண்டாட்டிக்கிட்ட போவான்.. அவ இவன் வாய்லேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தை தாங்க முடியாம, மூஞ்சை திருப்பிக்குவா... அங்கதான் ஆரம்பிக்கும் குடும்பத்துல பிரச்சனை... இதையெல்லாம் நான் இவன் கிட்ட இப்ப பேச விரும்பலை...

"அண்ணா...."

"அவன் உன் மடியிலே வளந்தவன்... கொஞ்சமாவது உன் பேச்சைக் கேக்கறான்... அவனுக்குப் புரியறமாதிரி சொல்லு... எனக்கென்ன அவன் கிட்ட விரோதம்...?"

பிள்ளைக்கு அம்மாவை விட அத்தையின் மேல் கொள்ளைப் பிரியம். பாசம். உயிர். உஷா முகம் சுருங்கி ஒரு முறைப் பேசினால், நாற்பது தடவை அவளிடம் மன்னிப்பு கேட்க்கும், பிள்ளை.

சமையலறையில் சென்று இடுப்பைக் கட்டிக்கொள்ளும்.. கொல்லையில் சென்று அத்தையின் தோளில் சாய்ந்து கொள்ளும்.. அத்தே... இனிமே நான் தப்பு பண்ணமாட்டேன்... என் கிட்ட பேசு அத்தே... பிள்ளை குழைவான்.. கெஞ்சுவான்... மிஞ்சுவான்... உஷாவும் கடைசியில் அவன் கெஞ்சலிலும், கொஞ்சலிலும் மசிந்து விடுவாள்.

பிள்ளைக்கு இன்று இருபத்தாறு வயசாகிறது. தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமே...! நேரில் அவனைப் பார்க்கும் போது முகத்தை திருப்பிக்கொள்ளும் ராகவன், அவன் நகர்ந்ததும், பிள்ளையை ஓரக்கண்ணால் பார்த்து, அவன் வளர்ச்சியைப் கண்டு பூரித்துப் போவாரே ஒழிய, தன் சபதத்தை அவரும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.



பிள்ளையும் இரத்தச் சூட்டில், தகப்பன் சொல்லும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்ற போதிலும் தன் தகப்பன் தன் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும், பற்றி நன்றாக அறிந்திருந்தது. தன் தகப்பனுக்கு பிடிக்காத காரியங்களையும் செய்யக்கூடாது என மனதுக்குள் நினைக்கும் பிள்ளை, நண்பர்களைப் பார்த்தவுடன் சிகரெட்டை வாய்க்குள் திணித்துக்கொண்டது. நண்பர்கள் சிரிப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பத்து நாளைக்கு ஒரு முறை அவர்களுடன் நடத்தும் தீர்த்தவாரியையும் நிறுத்த முடியமால் தவித்தது.

பத்து... நான் எப்பவோ பண்ண பூர்வ ஜென்ம புண்ணியம்... நீ எனக்கு ஆத்துக்காரியா வந்திருக்கே... என்ன பாவம் பண்ணியிருக்கேனோ? இப்படி ஒரு புள்ளை பொறந்து, என் மனசுக்கு ஒவ்வாத காரியத்தை பண்றதுன்னே சத்தியம் பண்ணிகிட்டு அலையுது.

ராகவன் மனதுக்குள் அங்கலாய்த்துக் கொள்வாரே தவிர, தன் மனவருத்தத்தை, தன் மனைவியின் எதிரிலோ, தங்கையின் எதிரிலோ கான்பித்து அவர்கள் மனதை வீணாக நோக அடித்ததில்லை.

"காலங்காத்தால என்ன யோசனை அண்ணா...? போய் அண்ணியை எழுப்புங்கோ.. பால் ஆறிப்போவுது... ஒரு வாய் காஃபி குடிச்சா, அவங்க தலைவலி, சோர்வு எல்லாம் தன்னாலப் பறந்து போயிடும்..."

"ம்ம்ம்... கீசரை கொஞ்சம் ஆன் பண்ணும்ம்மா..."

'தண்ணீ சூடா இருக்கு..."

"இன்னக்கு வர்றானா அவன்?" கேட்டுக்கொண்டே ராகவன் எழுந்து தன் படுக்கையறைக்குள் நுழைந்தார்.

"வெளியியல வேஷம் போட்டுக்க வேண்டியது.. ஆனா மனசுக்குள்ள புள்ளை மேல ஆசையை வெச்சுக்கிட்டு கெடந்து தவிக்க வேண்டியது... இதெல்லாம் வீட்டுல இருக்கற பொம்பளைங்க எங்களுக்கு புரியாமலா இருக்கு...?" அடுக்களையில் நுழைந்த உஷா மனசுக்குள் சிரித்தாள். 


ராகவன் குளித்துவிட்டு வந்தபோது, பத்மாவும், உஷாவும் டைனிங் டேபிளில் அவருக்காக காத்திருந்தார்கள்.

காலை டிபனுக்காக, சூடான வெண் பொங்கலும், மெது வடையும் தயாராக இருந்தது. தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும், சின்ன வெங்காயத்தை உரித்து, கறிவேப்பிலையை தக்காளியுடன் சேர்த்து வதக்கி, பருப்பை நன்றாக வேகவைத்து மசித்து கொட்டி, மல்லி விதை அதனுடன் வெந்தயத்தையும், தேங்காய் துறுவலையும் வறுத்து பொடி பண்ணிச் சேர்த்து, புளியை குறைவாக ஊற்றி, கலவையை நன்றாக கொதிக்க வைத்து, கடைசியில் கொத்தமல்லியை தூவி, ஹோட்டல் சாம்பாராக அதை இறக்கியிருந்தாள், உஷா.

"உஷா... பொங்கல் திவ்யமா இருக்கும்மா... இப்ப நீ என்னை என்னக் கேட்டாலும் குடுத்துடுவேன்.." ஒரு விள்ளலை சாம்பாரில் நனைத்து, வாயில் போட்டு சுவைத்தவர், நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, முகத்தில் திருப்தியுடன் தங்கையைப் பாராட்டினார்.

"ஆமாம்... பொழுது போனா பொழுது விடிஞ்சா இதே கதைதான்; நீங்களும் உங்களுக்கு இருக்கற ஒரே வீட்டை எத்தனை தரம்தான் உஷா பேருக்கு எழுதி வெப்பீங்க.." கலகலவென சிரித்தாள், பத்மா.

"மனசுல சந்தோஷமா எந்த காரியத்தை செய்தாலும்.. பகவானோட நாமத்தை சொல்லிண்டு சேஞ்சா அது நன்னாத்தான் வரும்.. என்ன மன்னீ நான் சொல்றது...?" உஷா அண்ணனைப் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டே, இன்னொரு கரண்டி பொங்கலை அவர் தட்டில் எடுத்து வைத்தாள்.

"போதும்டா... கண்ணு... வயிறு ரொம்பினாலும் கண்ணு நிறைய மாட்டேங்குது.. வரதராஜா.. பெருமாளே... கடைசி விள்ளலை வழித்து வாயில் போட்டுக்கொண்ட ராகவன் தட்டில் கையை உதறினார்.

"டொய்ங்க்க்க்... டிங்க்..." காலிங் பெல் ஒலித்தது.

"சீனுவாத்தான் இருக்கும்..." துள்ளி எழுந்து வாசலுக்கு ஓடினாள், சாப்பிட்டுக்கொண்டிருந்த உஷா.

தோளில் பழுப்பு நிறத்தில் தோல் பையும், கையில் மீடியம் சைஸ் டிராவலருமாக ஹாலுக்குள் நுழைந்த கீழப்பந்தல் நாராயனன் சீனுவாசனின் தலை முடி சீராக ஒட்டவெட்டப்பட்டு, முகத்தில் தாடி மீசை எதுவுமில்லாமல், பளிச்சென்று இருந்தான்.

என் புள்ளை சீனுவா இது? எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்? என்னால நம்பவே முடியலியே? எதனால இந்த மாத்தம்? சீனுவை ஓரக்கண்ணால் பார்த்த ராகவன் ஒரு நொடி திகைத்தார்.

"என் புள்ளையை ராத்திரி அவதாரம்ன்னு சொன்னீங்களே... இப்ப சொல்லுங்க...' அவர் முகத்தில் எழுந்த ஆச்சரிய உணர்ச்சியை சட்டெனப் படித்த பத்மாவின் முகத்தில் புன்முறுவல் ஒன்று எழுந்தது.

"வாடா...வா... ஆட்டோவுல வந்தியா...?" பத்மா எழுந்து அவன் தோளிலிருந்த பையை வாங்கிக்கொண்டாள்.

"அண்ணா... யாரோன்னு மலைச்சுப் போயிருக்கீங்க.. உங்களுக்கு அடையாளம் தெரியலியா... நம்ம சீனுவேதான்... டேய் சட்டுன்னு குளிச்சிட்டு வாடா... டிஃபன் ரெடியா இருக்கு..." உஷா தன் மருமகனின் தலைக்குள் தன் இடது கை விரல்களை நுழைத்து அவன் முடியைக் விளையாட்டாக கலைத்தாள்.

"அத்தே குளிக்கறது எல்லாம் அப்புறம்... பசி உயிர் போவுது... நேத்து ராத்திரியே ஒண்ணும் சரியா சாப்பிடலே... முதல்ல நீங்க டிஃபனை குடுங்கோன்னா..." பிள்ளை செல்லமாக அத்தையின் இடுப்பைக் கட்டிக்கொண்டது. அவள் நெற்றியில் ஆசையாக முத்தமிட்டது.

"போன வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதாடா..." ஒரு வாரமாக வீட்டில் இல்லாத பிள்ளையை கண்களில் பாசத்துடன் பார்த்தாள், பத்மா.

"ஆச்சு... ஆச்சு.. அத்தே.. இன்னும் ரெண்டு வடையை தள்ளுங்க இப்படீ..."

முகத்தில் ஆச்சரியத்துடன் இன்னும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, சீனு எப்போதும் போல் சாப்பாட்டு ராமனாக மாறி, தட்டிலிருந்த பொங்கலை, வேகமாக உருட்டி உருட்டி, மென்று திண்ணக்கூட பொறுமையில்லாமல், கோழியைப் போல் அவசர அவசரமாக விழுங்கிக்கொண்டிருந்தான். சட்டென ஒரு பருக்கை நெஞ்சுக்குழலில் சிக்கி பொறை ஏறி இருமினான்.

"யாரோ... என் புள்ளையை நெனைச்சுக்கறா?" பத்மா அவன் தலையைத் தட்டினாள்.

யாரு என்னை இப்ப நெனைச்சுக்கறது... மீனாவா இருக்குமா! கண்களில் கண்ணீர் ததும்ப சிரித்தான், சீனு.

"டேய் சீனு.. மெதுவா சாப்பிடுடா... சாப்பிடும் போது பேசாதடா.. தொண்டையில சிக்கிக்கும்ன்னு எத்தனை தடவைடா உனக்கு சொல்லியிருக்கேன்" ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு ராகவன் தன் மகனிடம் அன்புடன் பேச ஆரம்பித்தார். பாசத்தில் அவர் குரல் தழதழத்தது.

"அப்பா..."

ஒரு நொடி விக்கித்துப் போனான், சீனு. அப்பாவா...!! அவர் கோபத்தையும், தாபத்தையும், விட்டுட்டு எங்கிட்ட பேசறார்..? அவன் இருமிக்கொண்டே எழுந்தான், தன் எச்சில் கையோடு தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அவர் கன்னத்தோடு தன் கன்னத்தை சேர்த்துக்கொண்டான். சட்டென கண்கள் குளமாக மாறி, ஒரு சொட்டு கண்ணீர், கன்னத்தில் இறங்கி ஓட, அம்மாவையும், அத்தையையும் மாறி மாறிப் பார்த்தான்.

"இப்பத்தான் நீ நம்மாத்து புள்ளையா இருக்கேடா... ம்ம்ம்.. உக்காந்து பரபரப்பில்லாம சாப்பிடுடா..." தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டே ராகவன் அவன் தோளில் கையை போட்டுக்கொண்டார்.

"அப்பா... நான் குடிக்கறதை விட்டுட்டேன்ம்பா.. சிகரெட் பிடிக்கறதையும் கொறைச்சுட்டேன்.. அதையும் சீக்கிரமே மொத்தமா விட்டுடறேன்.. அயாம் சாரிப்பா..." சீனு தீடிரென ஓசையெழுப்பாமல், தன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தான்.

"இவ்வளவு நாள் உங்க புள்ளைகிட்ட பேசாமலே இருந்து அவனை அழவெச்சீங்க.. இப்பதான் ஒரு வாரம் கழிச்சி வீட்டுக்குள்ளே நுழைஞ்சவனை இப்ப பேசியே அழவெக்கறீங்க..."

"நீ வாடா இப்படி.. எதுக்குடா அழுவுறே நீ... என் ராஜா" பத்மா விருட்டென எழுந்து தன் பிள்ளையை தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள்.

ஆஞ்சேனேயா... இந்த செவ்வாக்கிழமை நான் உனக்கு வடைமாலை சாத்தறேம்பா... உஷா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மனதிலிருக்கும் பாசத்தை வார்த்தைகளில் கொட்டமுடியாமல் தவிக்கும் தன் அண்ணனையும், விசும்பிக்கொண்டிருக்கும், தன் ஆசை மருமகனையும், மனநிறைவுடன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

"சீனு..."

"சொல்லுங்க அத்தே..."

"குடிக்கறதை விட்டுட்டே; சிகரெட்டை விட்டுடப் போறேன்னு, நீ சொன்னதை கேட்டதுலேருந்து நாங்க ரொம்ப சந்தோஷமா ஆயிட்டோம்டா..."

"அத்தே.. இப்பத்தான் பத்து பதினைஞ்சு நாள் முன்னாடி, எப்படியாவது இந்த பழக்கம் என்னை விட்டு போனா சரின்னு, இனி குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துட்டேன்.." தலையை குனிந்து கொண்டு மெல்லியக் குரலில் பேசினான், சீனு

"கேக்கறதுக்கே ஆச்சரியமா இருக்குடா.. நாங்க சொன்னப்பல்லாம் கேக்காதவன், யார் சொல்லிடா இந்த குடி சனியனை விட்டே? அவங்க யாரா இருந்தாலும் நான் பாத்தே ஆவணும்..!" பத்மா வியப்புடன் கேட்டாள்.

"நிச்சயமா... அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வர்றேன்..." தன் காதல் கதையை வீட்டுக்குள் அவிழ்த்துவிட இதுதான் நல்ல சமயம் என புரிந்து கொண்டு உற்சாகமாக பேச ஆரம்பித்தான், சீனு.

"அவளா...?"

"ஆமா அத்தே... ஒரு பொண்ணு சொல்லித்தான் விட்டுட்டேன்.."

"சீனு... அந்தப் பொண்ணு யாராயிருந்தாலும், அவ மகராசியா நல்லா இருக்கட்டும்..." முகம் தெரியாத அவளை ஆசிர்வாதம் செய்தார், ராகவன்.

"நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா... அவன் ஏதோ சொல்ல வர்றான்... அடுத்தவங்களைப் பேசவிடாம குறுக்க பூந்துடுவீங்களே?" பத்மா அவர் வாயை அடைத்தாள்.

"நீதானேடீ அவன் கிட்ட பேசுங்க பேசுங்கன்னு நேத்து ராத்திரி பூரா என் உயிரை வாங்கினே?"

"அப்பா..."

"சீனு... நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும்ன்னு, உன் அம்மாவும், அத்தையும் ரொம்ப ஆசைப்படறாங்கப்பா.. அவங்க எதிர்பார்ப்பிலேயும் தப்பு இல்லே; வாழ்க்கையிலே எல்லாமே அந்தந்த நேரத்துல நடந்து முடியணும்பா.." இதமாக பேசினார், ராகவன்.

"ம்ம்ம்.."

"உஷா... அந்த லலிதாவோட போட்டோவையும், அவளைப் பத்திய குறிப்பையும் எடுத்துட்டு வா.. இந்த பொண்ணு காஞ்சீபுரமாம்... நல்லாப் படிச்சிருக்கா... இங்க சென்னையிலத்தான் வேலை செய்யறாளாம்... உன் அத்தையோட மச்சினருக்கு தெரிஞ்ச ஃபேமலியாம்..."

"ம்ம்ம்..."

"உனக்கு இந்த பொண்ணைப் பிடிச்சிருந்தா, மேல் கொண்டு நடக்க வேண்டியதை பேச ஆரம்பிக்கலாம்..."

"அப்பா... நீங்க கோபப்படலேன்னா ஒரு விஷயம் சொல்லட்டுமா?

"சொல்லுடா... உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லப்பா.."

"என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு மனசார ஆசைப்படறா... அவதான் நான் குடிக்கக்கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்கிக்கிட்டா..."

"டேய் சீனு... நான் வளத்தப் புள்ளை நீ, உனக்கு என்னடா கொறைச்சல்...'என்னையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு' ஏன்டா உன்னையே நீ குறைச்சுப் பேசிக்கறே?" விருட்டென எழுந்த உஷா அவன் பக்கத்தில் உட்க்கார்ந்து அவன் கையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

"சீனு... யாருடா அந்தப் பொண்ணு...?" பத்மா மகிழ்ச்சியில் துள்ளினாள்.

"நீங்க சரின்னு சொன்னா, அவளை நான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்... உங்க எல்லாருக்கும் அவளைப் கண்டிப்பா பிடிக்கும்..."

"உன் கூட வேலை செய்யறாளாடா..?" உஷாவுக்கு பொறுக்கமுடியவில்லை.

"இல்லத்தே.. படிச்சிக்கிட்டு இருக்கா..."

"படிக்கறான்னா... ரொம்பச் சின்ன பொண்ணா இருப்பாளேடா..? நம்ம ஜாதிதானேடா?" பத்மா குறுக்கிட்டாள்.

"அவனை பேசவிடுங்களேன்டீ... என்னை குறுக்குல பேசாதேன்னீங்க... நீங்க ரெண்டு பேரும் நடுவுல நடுவுல... குதிக்கறீங்க.." சற்றே எரிச்சலடைந்தார், ராகவன்.

"பைனல் இயர் இஞ்சினீயரிங் படிக்கறா... கடைசி செமஸ்டர்... இப்பவே ஒரு விஷயம் சொல்லிடறேன்... அந்த பொண்ணு நம்ம இனத்தை சேர்ந்தவ இல்லே... சைவக்குடும்பத்துல பொறந்தவ... ப்யூர் வெஜிடேரியன்... அவங்க குடும்பத்தை எனக்கு நல்லாத்தெரியும்... அவ நம்ம வீட்டுக்கு வந்தா " சீனு தயங்கி தயங்கி பேசினான்.

"வந்தா...?" உஷா முடிக்காமல் நிறுத்தினாள்.

"ரொம்ப பிராக்டிகல் மைண்ட் அவளுக்கு... நம்ம வீட்டு பழக்கங்களை சட்டுன்னு புடிச்சுக்குவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு..?"

"அண்ணீ... சீனு யாரைப்பத்தி சொல்றான்னு இன்னுமா உங்களுக்குப் புரியலே?" உஷாவின் குரலில் குதூகலம் பொங்கியது.

"அத்தே... உங்களுக்கு புரிஞ்சுப் போயிருந்தா... ப்ளீஸ் இப்ப சொல்லாதீங்க அத்தே.. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்கட்டும்... ப்ளீஸ்.. அத்தே.." சீனு அத்தையிடம் கெஞ்சினான்.

"யாருடா... எனக்கு நிஜமாவே தெரியலடா... சொல்லுடா.." பத்மா முகத்தில் குழப்பமும், தன் மகனை உருப்பட வைக்க முயலும் அந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் முகத்தில் தோன்றப் பேசினாள்.

"டேய் சீனு... அந்த பொண்ணு சொல்லித்தான்... நீ உன் தலை முடியை ஒட்ட வெட்டி, உன் மீசை, ஆட்டுக்கடா தாடி, எல்லாத்தையும் வழிச்சிக்கிட்டியா?" ராகவன் தன் கண்களில் ஒரு குழந்தையின் குறும்பு மின்னுவதைப் போல உற்சாகத்துடன் வினவினார்.

"ஆமாம்பா..." அவளை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வரவா என்ற கேள்வி சீனுவின் முகத்தில் பூரணமாக எழுந்திருக்க, அவன் தன் தந்தையின் முகத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.



"சீனு... உன் வயசு வேகத்துல, அர்த்தமில்லாம, நீ பண்ண சில காரியங்கள் எனக்கு பிடிக்கலை. அவைகளை என்னால ஜீரணிக்க முடியாம சிரமப்பட்டேன்... உன் கிட்ட கொஞ்சம் முரட்டுத்தனமாவும் நடந்துகிட்டேன்..."

"அப்...அப்பா.."

"ஒரு பொண்ணு உன்னை விரும்பறா; அவளுக்கும் நீ பண்ற காரியங்கள் பிடிக்கலை; ஆனா அவ உன்னை, உன் போக்கை, ஓரளவுக்கு மாத்தியிருக்கான்னா, அந்த பொண்ணு கண்டிப்பா என் மனப்போக்குக்கு ஒத்து வர்ற பொண்ணாத்தான் இருக்கணும்... ஒரு நல்லக்குடும்பத்துல பொறந்த கொழந்தையாத்தான் இருக்கணும்.."

"ஆமாம்பா..."

"சீனு... அந்த பொண்ணு யாரா இருந்தாலும் சரிடா... அந்த பொண்ணு எந்த ஜாதியா இருந்தாலும் சரிடா... அவளை நான் என் மருமகளா ஏத்துக்க தயார்...
உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்..." நிதானமாக பேசிய ராகவன் எழுந்தார். சீனுவாசனின் கையைக் குலுக்கினார்.

"அப்பா.. அப்டீன்னா அவளை நான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரவா?"

"போய் அழைச்சிட்டு வாடா... இன்னைக்கு நாள் நல்லாத்தான் இருக்கு..."

"ரொம்பத் தேங்க்ஸ்ப்பா..."

அதே நேரத்தில் சீனுவின் செல் ஒலித்தது. செல்லில் மீனாவின் போட்டோ மின்னியதும், சீனுவின் மனசு குப்பென்று பற்றிக்கொண்டது. சீனு எழுந்து வெராண்டாவிற்கு வந்தான். 


சுகன்யா... 66

"இன்னும் எவ்வள நேரம்தான் லைட்டு எரியணும்? எனக்குத் தூக்கம் வருது.. இப்ப லைட்டை ஆஃப் பண்ணப் போறீங்களா இல்லையா?" சிணுங்கினாள் பத்மா.

அன்று மாலை, ராகவன் வீட்டுக்கு வந்ததிலிருந்தே, யதேச்சையாக படுவது போல், நான்கைந்து முறைக்கும் மேலாக, பத்மா தன் இடது மார்பை அவர் மேல் உரசிவிட்டாள். கணவனை உரசியவள் உடனே விலகி கள்ளத்தனமாக தன் கண்களை அகல விரித்து அவரைப் பார்த்து சிரிக்கவும் செய்தாள். பத்மாவுக்கு இன்று 'அது' தேவைப்படுகிறது. 'உரசலின்' அர்த்தம் ராகவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

ராகவன் தன் மனதுக்குள் எழும் 'அந்த' வேட்க்கையை, பத்மாவின் இடுப்பை மென்மையாகக் கிள்ளி, அவள் புட்டத்தை உரசி, தன் தேவையை அவளுக்கு உணர்த்துவார். இது அவர்களுக்குள் இருக்கும் முப்பது வருட தாம்பத்ய ரகசியம். இன்னும் வாரத்தில் ஒருமுறை இந்த 'உரசலும்', 'கிள்ளலும்' அவர்களிடையில் தவறாமல் தொடர்ந்து கொண்டிருந்தன.


பத்மா தன் கழுத்தை திருப்பி தலையணைக்குள் பாதி முகத்தைப் புதைத்துக்கொண்டு கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் தன் கணவனுக்கு மட்டும் புரியும் அழைப்பிருந்தது. அழைப்பில் அவள் மனதின் ஏக்கமும் வேட்க்கையும் தெளிவாகத் தெரிந்தது. நீண்ட கருமையான அவள் கூந்தல் தலையணையில் படர்ந்து கட்டிலின் கீழ் நழுவிக்கொண்டிருந்தது.

நெற்றியின் நடுவில் மின்னும் குங்குமம், அவள் சிரிப்பில் பொங்கும் சந்தோஷம், முகத்தில் பளிச்சிட்ட பிரகாசம், அவள் கன்னத்தை மெல்லத் தன் உதடுகளால் தீண்ட ஆசை பிறந்தது ராகவனுக்கு. இது என்ன? இத்தனை நாட்களாக இது என் கண்ணில் படவில்லையே? பத்மாவின் நெற்றிக்கு மேல், வகிட்டோரம், ஓரிரண்டு முடி வெள்ளையடிக்க ஆரம்பித்திருந்தது.

வாழ்க்கையின் ஓடும் ஓட்டங்களின் அடையாளம் தானே, நெற்றியில் விழும் சுருக்கங்கள், வாழ்க்கையின் கோடுகள், அதன் தடங்கள் முகத்திலும் உடலிலும் தங்கள் முத்திரையைப் பதிக்கின்றனவே? மனதுக்குள் சிரித்துக்கொண்டார் ராகவன்.

அன்று, சிறிய சிறிய சிவப்பு வண்ணப் பூக்கள் சிதறியிருந்த வெள்ளைநிற சேலை கட்டியிருந்தாள் பத்மா. அதே நிறத்தில் மணியால் ஆன முத்துச்சரம் அவள் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. கைகளில் கிடந்த செயற்கை முத்து வளையல்கள் கழுத்து மாலைக்கு மேச்சிங்காக கலகலத்துக் கொண்டிருக்க, அவள் வென்னிற ஆடை தேவதையாக கட்டிலில் புரண்டாள். மொத்தத்தில் ராகவன் கண்களுக்கு தன் மனைவி நாலு ஐந்து வயது குறைந்தவளாகத் தெரிந்தாள்.

பத்மாவின் உடல் மல்லாந்திருந்த நிலையில், மின்விசிறியின் காற்றில் அவள் முந்தானை மார்பிலிருந்து எழுந்து பறந்து கொண்டிருந்தது. ரவிக்கையின் விளிம்புக்கு வெளியில், அவளுடைய பூரிப்பான மார்புகள் வெளியில் வந்துவிடுவது போல் ததும்பிக்கொண்டிருந்தன.

ஏதோ புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த ராகவன், பத்மாவின் சிணுங்கலைக் கேட்டதும், தன் இடது கையை அவள் வயிற்றில் தவழவிட்டவர், தோளும் கழுத்தும் சேருமிடதில் தன் உதடுகளை அழுத்தமாக பதித்தார். அவள் பின் கழுத்தில் மெலிதாக துளிர்த்திருந்த வியர்வையால் உண்டான, வாசத்தை தன் நெஞ்சு நிறைய இழுத்தார். மனைவியின் மார்புச் சேலையை மெல்ல விலக்கினார். தன் முகத்தை அவள் ரவிக்கைக்குள் பதுங்கியிருந்த மார்பில் புதைத்துக்கொண்டார்.

தன் மனைவியின் இன்னும் தளராத, கைக்கடக்கமான வாளிப்பான மார்புகள், ராகவனின் கண்களைக் சேர்த்துக் கட்ட 'அம்மா', நீளமாக முனகினார் அவர். தன் மனைவியின் நெருக்கமே, இந்த அளவு சுகத்தை மனசுக்கு குடுக்குதே?

என்ன சுகம்... அப்பப்பா... ஒரு பொம்பளை உடம்புல எல்லையே இல்லாம இந்த அளவுக்கு சுகத்தை பெருமாள் வெச்சிருக்கானே? பத்மாவும் சளைக்காம இத்தனை வருஷமா எனக்கு அள்ளி அள்ளி குடுக்கிறா.. இருந்தாலும் இவ குடுக்கற சுகமும், இன்பமும் எனக்குத் திகட்டலையே? மனதுக்குள் முணுமுணுத்தார், ராகவன்.

"என்ன முணுமுணுப்பு.." பத்மா கிசுகிசுத்தவாறு தன் கணவரின் உடலுடன் நெருங்கி ஒன்றிக்கொண்டாள். ராகவன் அவள் தலைமுடியை ஆதுரத்துடன் கோதி முத்தமிட்டார்.

"என் செல்லம் இன்னைக்கு ரொம்பவே மூடுல இருக்காப்ல தெரியுது?" அவரும் அவள் காதில் கிசுகிசுத்தார். அவர் உதடுகள் அவள் காது மடல்களில் உரசி, அவள் உடலை சிலிர்க்க வைத்தன.

"பத்து நாளாத் தனியா தூங்கறேன்... இது புரிஞ்சும் இவ்வளவு நேரமா என்னத்தையோ படிச்சுக்கிட்டு இருக்கிறீங்க நீங்க?"

"சேச்சே... அப்படீல்லாம் இல்லே.." ராகவன் வேண்டுமென்றே அவள் வயிற்றின் குறுக்கிலிருந்த தன் கையை உருவிக் கொண்டவர், தன் கை கால்களை நன்றாக விரித்து, மல்லாந்து படுத்து மூச்சை நீளமாக இழுத்து விட்டார். கைகளை மடித்து தன் நெஞ்சில் கோத்துக்கொண்டு உடலின் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டார். ஒரு நிமிடத்துக்குப் பின் மெல்ல சொன்னார்.

'பத்து... 'ஐ லவ் யூ' ம்மா.."

"என்னங்க... தீடீர்ன்னு... இப்படி சின்னப் பசங்க மாதிரிப் பேசி என்னைப் புல்லரிக்கவைக்கறீங்க.." பத்மா மல்லாந்து படுத்திருந்த தன் கணவனின் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"பத்து... மனசு சந்தோஷமா இருக்குடீ... என்னோமோ சொல்லணும்ன்னு தோணுச்சும்மா... மனசுல இருக்கறதுதானே உதட்டுல வரும்..." ராகவனின் கைகள் அவள் முதுகை ஆசையுடன் வருடியது.

"தேங்க்ஸ்ங்க.."

பத்மா தன் முகத்தை நிமிர்த்தி தன் கணவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். வெளியில் பார்த்ததும் புலப்படும், அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான அழகும், குடும்பப்பாங்கான முகமும், கருமையான விழிகளும், சிவந்த மெல்லிய உதடுகளும், மகிழ்ச்சியில் பளபளத்துக் கொண்டிருந்தன. வெளியில் புலனாகாத அவள் அந்தரங்கமும் ஈரத்தில் நனைந்து ராகவனின் ஆளுமைக்குத் தயாரக இருந்தது. 


ராகவன் தன் தலைமாட்டில் கிடந்த டிஜிட்டல் ப்ளேயரை எடுத்து அதில் சினிமாப் பாடலை ஒலிக்கவிட்டார். ஜேசுதாஸ் இனிமையான குரலில் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்' என உருக ஆரம்பித்தார்.

"ம்ம்ம்... கிட்ட வாப்பா..." மெல்ல முனகிய பத்மா, தன் கணவனை இறுக்கிக்கொண்டாள்.

தம்பதியர் இருவரும் ஜேசுதாஸின் குரல் தந்த போதையில் மனது லயிக்க அமைதியாக கிடந்தனர். இந்த இருபத்தெட்டு வருஷ தாம்பத்தியத்துல ஒரு நாள் கூட எங்க நடுவுல பெரிசா எந்த உரசலும் வந்ததில்லை... இது இறைவனோட ஆசீர்வாதம்தானே? பத்மா தன் மனதுக்குள் உவகை கொண்டாள்.

"பத்து... ஒருத்தனுக்கு பொண்டாட்டி அழகா அமைஞ்சு, அவளும் அவனை முழுமையா நேசிக்கறவளா இருந்துட்டா சொல்லவே வேணாம்... அவன் வாழ்க்கை படு ஜாலியா இருக்கும், இந்த ராகவன் குடுத்து வெச்சவன், இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு வாழ்க்கை குஷியாக போவுது..." மனதில் நிறைவுடன் ராகவன் பேசிக்கொண்டிருந்தார்.

"அப்ப நான் அழகுன்னு சொல்றீங்களா...?" பத்மா தன் மார்பை அவருடைய மார்பில் அழுத்தமாக இழைத்தாள். அவள் உடலில் சூடு ஏறிக்கொண்டிருந்தது. அந்தரங்கத்தில் ஈரம் பெருகி தொடையை அடித்தொடை நனையத் தொடங்கியது.

"அழகு என்னம்மா அழகு... அது ஒடம்போட நின்னு போயிடும்... உன் மனசு, உன் அன்பு, உன் பாசம், உன் கனிவானப் பேச்சு இந்த அழகெல்லாம்தான் என்னை உங்கிட்ட கட்டிப் போட்டு இருக்குது.?" ராகவன் அவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். அவர் கைகள், பத்மாவின் பின் புறங்களில் ஏறி இறங்கின.

"அப்ப ஒடம்பால நான் உங்களுக்கு பொருத்தமில்லையா?"

"ம்ம்ம்.. புரியலே எனக்கு...?"

"ச்ச்சொல்ல்லுங்கன்னா... 'பொருத்தம் உடலிலும் வேணும்ன்னு' இப்ப ஜேசுதாஸ் பாடீனார் இல்லையா?"

"சொன்னா கோச்சிக்க மாட்டியே..?" ராகவனின் உதடுகள் பத்மாவின் ரவிக்கையில் விம்மிக்கொண்டிருந்த இடது மார்பின் மேல் படர்ந்து அதைக் கவ்வின.

"நான் கோச்சிக்க மாட்டேன்... ஆனா உங்க மனசுல இருக்கறதை நீங்களும் உண்மையாச் சொல்லணும்.." பத்மா தன் மார்பை வெறியுடன் அவர் உதடுகளில் உரசினாள். ராகவனின் வாய் எச்சிலால் அவள் ரவிக்கை இலேசாக ஈரமாக ஆரம்பித்தது.

"கல்யாணம் ஆன புதுசுல, உன் 'முலைங்க' ரெண்டும் பெரிசா இல்லியேன்னு நான் கொஞ்ச நாள் ஃபீல் பண்ணியிருக்கேன்..." அவர் தயக்கத்துடன் சொன்னவர், பத்மாவின் ரவிக்கைக் கொக்கிகளை ஒன்றன் பின்னர் ஒன்றாக வேகமாகக் கழட்ட ஆரம்பித்தார்.

"ம்ம்ம்.. சின்னது போதலன்னா, இப்ப எதுக்கு என் ரவிக்கையை வேக வேகமா அவுக்கறீங்க...? பொய்யாக அவர் பிடியில் முரண்டினாள், பத்மா.

"நீதானே கேட்டே... உண்மையைச் சொன்னா இப்ப ஏன் திமிறிக்கிட்டு போறே?"

ராகவன் சட்டென எழுந்து உட்க்கார்ந்து, பத்மாவை இழுந்து தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் முகத்தை நிமிர்த்தி, இதழ்களில் ஆசையுடன் முத்தமிட்டார். அவள் முதுகில் தன் மார்பை அழுத்தி ஒட்டிக்கொண்டார். பத்மாவின் இடுப்பில் ராகவனின் ஆயுதம் இடித்துக்கொண்டிருக்க, கைகள் அவள் முலைகளை இதமாக தடவி விட்டுக்கொண்டிருந்தன.

"ஆரம்பத்துல என் மாரு பெரிசா இல்லேன்னு உங்களுக்குத் தோணிச்சு... இப்ப...?"

"பத்மா... அப்ப எனக்கு வயசு முதிர்ச்சி இல்லேடீ; இளமையில கண்ணு ரெண்டும் கொஞ்சம் இங்க அங்கன்னு அலைஞ்சுகிட்டு இருந்தது; எதிர்ல வர்ற பொம்பளை மாரை உத்துப் பாத்து உன் சைசோட ஒப்பிட்டு பாத்ததென்னவோ உண்மைதான்..."

"ம்ம்ம்...அப்ப நீங்களும் திருட்டு மாங்கா அடிச்சிருக்கீங்க.." பத்மா நகைத்தாள்.

"கண்ணாலத்தான் அடிச்சிருக்கேன்... கையால தொட்டது உன் மாங்காய்களை மட்டும்தான்.."

"கொறையா இருக்கா மனசுக்கு...?"

"சத்தியமா இப்ப இல்லே..." அவர் கை அழுத்தமாக அவள் மார்புகளை வருடிக்கொண்டிருந்தது.

"ம்ம்ம்ம்..."

"உன் மாரோட சின்ன சைசு மனசுக்கு ஒரு கொறையாத் தோணுச்சு... மெள்ள மெள்ளப் புரிஞ்சுது; சின்னதோ... பெரிசோ.. அதுங்க நம்ம ரெண்டு பேருக்கும் குடுக்கற சுகம் மட்டும் ஒண்ணுதான்னு... எல்லாத்துக்கும் மேல சுகம் உடம்புல இல்லே; மனசுலதான் இருக்கு..."

"நல்லாப் பேசக் கத்து வெச்சிருக்கீங்க..." பத்மாவின் கை கணவரின் வேட்டிக்குள் நுழைந்தது.

"விஷயம் புரிஞ்சதும் என் மனசு நெறைஞ்சு, உன் கிட்ட நான் சந்தோஷமா இருக்கேன்..."

"ப்ஸ்ஸ்ஸ்ஸ்... மொத்தமா அவுத்துடுங்களேன்...” முனகல் அதிகரிக்க, ராகவன் குசுகுசுவென பேசினார்.

"பத்மா, இப்ப உன் சின்ன சின்ன மொட்டுக்களோட துணையிலத்தான் நான் காமனை ஜெயிச்சுக்கிட்டு இருக்கேன்.." ராகவன், தன் துணையின் பிரா கொக்கிகளை 'பட் பட்' விடுவித்துக் கொண்டிருந்தார்.

"மெதுவாங்கா... ரவிக்கையை கிழிச்சிடுவீங்க போலருக்கே..."

"கொல்றேடீ... நீ இன்னைக்கு,” மனைவியின் கழுத்திலும், தோளிலும் மாறி மாறி முத்தமிட்டார், ராகவன்

"எனக்குத் தூக்கம் வருதுங்க..!" பத்மா பொய்யாக சிணுங்கினாள். சிணுங்கியவள், அவர் மடியிலிருந்தபடியே, முகத்தை திருப்பி அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் முகவாயைக் கடித்தாள்.

"என்னமோ துணையோட ஜெயிக்கறேங்கறீங்க... ஒரே கவிதை நடையில பேசறீங்க இன்னைக்கு..." தன் உதடுகளை கணவரின் இதழ்களோடு பொருத்தி முத்தமிட்டாள்.

"உன் துணையோடத்தானே நான் 'காமனை' வெல்ல முடியும்.. அதுக்காகத்தான்..." அவர் பேச்சை முடிக்காமல் சிரித்தார்.

"அதுக்காகத்தான்...?"

"விளையாடறதுக்கு மைதானத்தை தயார் பண்றேன்... அவள் இடுப்பிலிருந்த புடவையை உருவி அவிழ்த்த ராகவன், கள் வெறி கொண்டவராக சிரித்தார். சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தை நக்கினார்.

"சரியான வெக்கம் கெட்ட நாய்க்குட்டி..." அவள் அவர் கன்னத்தை அழுத்தி கிள்ளினாள்.

"வலிக்குதுடி... எல்லா ஆம்பளை நாய்க்கும் ஒரு பொட்டை நாய்ன்னு பெருமாள் படைச்சுத்தான் அனுப்பியிருக்கார்..."

"சே...சே.. அசிங்கமா பேசாதப்பா... கட்டில்ல இருக்கும் போது பெருமாளை ஏன் இழுக்கறே..." பத்மா திரும்பி வெறியுடன் தன் மார்பை அவர் மார்பில் உரசினாள். ராகவன் அவள் பாவாடை முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

"இன்னைக்கு மன்மதன் கிட்ட நீங்க சண்டை போடறதுக்கு என் பாவாடையை கிழிச்சே ஆகணுமா?"

பத்மா தன் விழிகளை மலர்த்தி ஆசையாக சிரித்தாள். தன் கணவனின் அந்தரங்க அன்பையும், சுகத்தையும் ருசிக்க துடித்தாள். அவள் தன் உடலையும், மனதையும் நன்றாகப் புரிந்து கொண்டவனின் உதடுகளை தன் வாயால் வெறியுடன் கவ்வி முத்தமிட்டாள். தன் பாவாடை முடிச்சைத் தளர்த்தினாள்.

ராகவன் தன் இதழ்களை விருப்பத்துடன் அவளிடம் உறிஞ்ச கொடுத்துவிட்டு, அவள் வெற்று மார்புகளை தன் இடது கையால் அழுத்தி பிசைந்து கொண்டிருந்தார். பத்மாவின் பருத்துக் கொண்டிருந்த அடக்கமான சிறிய முலைகளின் வனப்பையும், மழமழப்பையும், அவர் கைகள் அனுபவித்துக் கொண்டிருந்தன.

"இன்னைக்கு மன்மதன் கிட்ட சண்டையை ஆரம்பிச்சது நீ..! இப்ப எப்படிடீ நான் ஆரம்பிச்ச சண்டையை நடுவுல நிறுத்தறது...? இங்கப் பாரு 'இவனை' ராகவனின் தண்டு அவர் வேட்டிக்குள்ளிருந்து எழுந்து, பத்மாவின் புட்டங்களை குத்திக்கொண்டிருந்தான். அவர் இடுப்பிலிருந்து வேட்டி நழுவியது.

"போதுங்க... என்னால முடியலை... படுத்துக்கலாமா?" கொஞ்சினாள் பத்மா.

பத்மா சன்னமான குரலில், முனகினாள். முனகியவள் தன் இமைகளை முழுவதுமாக மூடாமல், அரைக்கண்ணால், ராகவனை நோக்கினாள். அவள் முகத்திலிருந்தப் புன்னகையில், அன்பு, காதல், காமம் எல்லாம் மொத்தமாகத் தவழ்ந்து கொண்டிருந்ததை கண்ட ராகவனின் உள்ளத்தில் உற்சாகம் கிளம்பியது.

"செல்லம்... அவனுக்கு ஒரு முத்தா குடேன்..." மனைவியைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார், ராகவன்.

"ம்ம்ம்ம்..." பத்மாவின் கை அவர் தடியை மென்மையாக முன்னும் பின்னுமாக அசைத்தாள். கையில் எழுந்தவனை சட்டென குனிந்து வெறியுடன் முத்தமிட்டாள். மேலும் எழுந்தவனை வாய்க்குள் நுழைத்து உறிஞ்சி ஈரமாக்கினாள்.

"எம்மாஹ்ஹா..." முனகியவனின் உறுப்பை சுற்றி சுற்றி ஒத்தடம் கொடுத்த பத்மாவின் ஈரமான நாக்கு, வெதுவெதுப்பான உஷ்ணத்தை உண்டாக்கியது. ராகவனின் உடல் மெல்ல நடுங்கியது.

"பத்து..." உடல் மன்மத சுகத்தை அனுபவிக்க, மனதில் உணர்ச்சிகள் சொல்ல முடியாத வேகத்தில் பயணப்பட, ராகவன் தன் தொடைகளை அகலமாக்கி தன் இடுப்பை லேசாக, மனைவியின் வாய்க்குள் அசைக்கத் துவங்கினார்.

"என்னங்க... வரப்போறீங்களா..." பத்மா, விறைத்திருந்த தன் கணவனின் உறுப்பை, வாயிலிருந்து வெளியில் எடுத்து மெல்ல உருவினாள்.

"இல்லே... உன் நாக்கு குடுத்த சொகத்தை தாங்கமுடியலே... தன்னால இடுப்பு அசையுது..." சொல்லிக்கொண்டே, பத்மாவை கட்டிலில் தன்னருகில் தள்ளியவர், அவள் வெற்று மார்பை, உறிஞ்சி சுவைக்கத் தொடங்கினார்.

'ப்ஸ்ஸ்ஸ்ஸ்...' முனகிய பத்மா தன் அந்தரங்கத்தை மெதுவாகத் திறந்தாள்.

'என்னம்மா.. உள்ள இறங்கிடவா..." ராகவனின் ஆள்காட்டி விரல் அவள் இடுக்கைத் தடவிப்பார்த்தது.

"ம்ம்ம்ம்... ரெடியா இருக்கு... வாங்கோன்னா..." பத்மா ராகவனை இழுத்து தன் மேல் கிடத்திக்கொண்டாள்.

"ஹோவ்..." நீளமாக மூச்சுவிட்ட ராகவன், மெல்ல தன் ஆயுதத்தை, அவள் அந்தரங்க வாசலில் நுழைத்து இடுப்பை மெதுவாக ஆட்ட, அவருடைய தம்பி மெள்ள வளைந்து உள்ளே நுழைந்து புதைந்தான். புதைந்தவன் முழுமையாக ஈரமானான். இயல்பாக ராகவனின் இடுப்பு மேலும் கீழுமாக இயங்க ஆரம்பித்தது. பத்மா தன் இரு கைகளையும் கணவரின் தோளில் மாலையாக்கி கட்டிக் கொண்டாள்.

"வ்வ்வ்ம்ம்ம்ம்..." முனகிய பத்மாவின் வெறி கொண்ட அணைப்பில், ராகவனுக்கு இலேசாக மூச்சு முட்ட ஆரம்பித்தது. ராகவன் தன் உடலை உலுக்கி அவள் இறுக்கத்தை தளர்த்தியவர், மனைவியின் உப்பியிருந்த அந்தரங்கத்தில், தன் பருத்த தண்டை அவள் அந்தரங்கத்துக்குள் அமுக்கி அமுக்கி எடுத்தார்.

"மெதுவாங்க... மெதுவாங்க... வந்துடப் போறீங்க..." ராகவனின் முகத்தை வேகமாக இழுத்து, தன் இடது மார்பை அவர் வாயில் திணித்தாள் பத்மா. ராகவன் தன் இடுப்பை சீராக அசைத்தவாறே, அவள் மார்பை இதமாக சுவைக்கவும் செய்தார்.

ராகவனின் அசைவிற்கு ஈடான வேகத்தில் பத்மாவும் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்கிக்கொடுக்க, அவருடைய தடி, அவளுடைய ஈரக்கிணற்றில் வழுக்கிக்கொண்டு இறங்கி, மீண்டும் மேலேற, இருவரின் மூச்சிலும் அணல் தெறித்தது.

ராகவனின் உருண்டு திரண்ட புல்லாங்குழல், பத்மாவின் தொடையிடுக்கில் இசைத்த மதுரமான இசை அந்த அறையில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.

பத்மாவும், ராகவனும், தங்கள் உடல்களின் சீரான அசைவில் உண்டாகும் அற்புதமான இசையில் தங்கள் மனதை லயிக்கவிட்டு, காலத்தை மறந்து, தங்களை மறந்து, இமைகள் செருகி, மன்மதனின் கோட்டையை நோக்கி வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..."

தங்கை உஷாவின் கனீரென்ற குரல், லேசாக ஒருக்களித்திருந்த கதவின் வழியாக படுக்கையறைக்குள் மெலிதாக கேட்டது. ராகவனுக்கு தூக்கமென்னவோ முழுவதுமாக கலைந்து அரைமணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.

பத்து நாட்களுக்கும் மேலாக, அலுவலக வேலை நிமித்தம், தமிழ்நாடு பூராவும் சுற்றிவிட்டு, உடலும் மனமும் களைத்து, நேற்று மாலைதான் வீட்டுக்குத் திரும்பியிருந்த அவர், சட்டென எழுந்து குளித்து காலை வேலைகளைப் பார்க்க மனம் வராமல், சோம்பலுடன் கட்டிலில் படுத்திருந்தார். கண்மூடியிருந்ததே ஒழிய மனம் குலதெய்வம் காஞ்சி வரதராஜனை தியானித்துக்கொண்டிருந்தது.

ராகவன் தன் அருகில் படுத்திருந்த மனைவியை சிறிய பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். எப்போதும், வெய்யிலோ, குளிரோ, மழையோ, டாணென்று காலை ஐந்தரைக்கு எழுந்து குளித்துவிட்டு, அடுப்பில் குக்கரை ஏற்றும் அவள் இன்று தன் மெல்லிய உதடுகள் பிரிந்திருக்க, பிரிந்த உதடுகளின் நடுவில் வரிசையான முன் பற்களின் வெண்மை தெரிய, இதழின் கடைக் கோடியோரத்தில் மெல்லிய புன்னகையுடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் பத்மா.



ஒருக்களித்து படுத்திருந்த பத்மாவின் வலது கரம் ராகவனுடைய வெற்று மார்பில் தவழ்ந்து கிடந்தது. மனைவியின் ஒரு பக்க மார்பு அவர் விலாவில் புதைந்திருந்தது. அவள் அணிந்திருந்த நைட்டி முட்டிக்கு மேல் ஏறி பளிச்சென்ற அவள் தொடையை வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது. ராகவனின் மனம் பெருமாளின் நாமத்தில் நிலைத்து நிற்கவில்லை.

பத்மா, ஒட்டடைக் குச்சி மாதிரி வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா... இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஒடம்புல சதை விழுது... இந்த வயசுல கட்டிக்கிட்ட பொம்பளைக்கு ஒடம்பு பூசின மாதிரி இருந்தா, அதுவும் ஓரு அழகாத்தான் இருக்கு... இப்பத்தான் புடவையில இவளைப் பாத்தா பாக்கறதுக்கு பாந்தமா இருக்கா... ராகவன் குனிந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார்.

எப்படி இவளால எப்பவும் நிம்மதியா சிரிச்சிக்கிட்டே இருக்க முடியுது? தூக்கத்திலேயும் சிரிச்சிக்கிட்டு இருக்காளே? சாயந்திரத்துலேருந்து என்னை உரசி உரசி, வலியவந்து என்னைக் கட்டிப்புடிச்சி, இவ நடத்தின மன்மத யுத்தத்தை 'நேத்து ராத்திரி யம்மான்னு' நினைத்து சிரிச்சிக்கிறாளா? முகத்தில் குறுநகையுடன் கட்டிலில் மெல்ல எழுந்து உட்க்கார்ந்தார் ராகவன்.

பத்மாவின் முகத்தில் முகிழ்த்திருந்த மகிழ்ச்சியின் கோடுகளைப் பார்த்த ராகவனுக்கு உள்ளம் தேனாக இனித்தது. இவளை மாதிரி ஒரு பெண்டாட்டி கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்...! என் அம்மா, அப்பா, என் தங்கைன்னு யாருக்கிட்டவும் இன்னைக்கு வரைக்கும் உரத்தக் குரல்லே எப்பவும், எந்த நேரத்திலேயும் இவ பேசினதே இல்லே...!

தனது மாமானார், மாமியாரை ஒரு நொடி நன்றியுடன் நினைத்துக் கொண்டார், ராகவன். பத்மாவுடன் தான் நடத்திய முப்பது வருடத்து தாம்பத்யம் சட்டென நினைவுக்கு வந்து அவர் மனதுக்குள் மகிழ்ச்சி திகட்டியது. படுக்கையை விட்டு எழுந்து வெரண்டாவிற்கு வந்து சில்லென்று வீசும் மெல்லிய குளிர் காற்றின் சுகத்தை அனுபவித்தவாறு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார் ராகவன்.

"அண்ணா... மன்னிக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? எப்பவும் எனக்கு முன்னே எழுந்துக்கறவங்க அவங்க... என்னாச்சு இன்னைக்கு...?" சமையலறையலிருந்து சிரித்த முகத்துடன் வந்த உஷா, சூடான காஃபியை ராகவனிடம் நீட்டினாள்.

"அதெல்லாம் ஓண்ணுமில்லேம்மா... எப்பவும் ஓடிக்கிட்டே இருக்கே; இப்படி கொஞ்ச நேரம் உக்காரு என் பக்கத்துல..." ஆசையுடன் தன் தங்கையின் இடது முழங்கையை மெல்ல வருடினார்.

"என்னண்ணா?" அண்ணன் காட்டிய பரிவில் சிலிர்த்துப்போனாள் உஷா.

"உன் அண்ணிக்கு என்ன வேலை...? அவ ஆசையா ஒண்ணே ஓண்ணு கண்ணே கண்ணுன்னு பெத்து வெச்சிருக்காளே... அந்த அவதாரத்தைப் பத்தி ராத்திரி ரொம்ப நேரம் புலம்பிக்கிட்டிருந்தா... என்னை லீவு போட்டுட்டு அவனுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வெய்யுங்கறா.."

"நீங்க ரெண்டு பேரும் அவனுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க... என் பேச்சை அவன் என்னைக்கு கேட்டான்; நான் டூர்ல கிளம்பிப் போனப்ப அவன் வீட்டுலே இல்லே... நான் பத்து நாள் கழிச்சி வீட்டுக்கு இன்னைக்கு வந்திருக்கேன் இப்பவும் அவன் இல்லே.. பெத்தப் புள்ளையை கண்ணாலப் பாத்து முழுசா இருபது நாளாவுது..."

"அண்ணா... அவன் என்ன வெட்டியாவா ஊரைச் சுத்தறான்.. அவனும் தன் ஆஃபீஸ் வேலையாத்தான் மதுரைக்கு போயிருக்கான்... இன்னைக்கு வந்துடுவான்..." உஷா தன் மருமகனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

"ம்ம்ம்... ராத்திரி பத்மா என்னையும் தூங்க விடலே... அவளும் தூங்கலே... ஏதோ ரெண்டு ஜாதகம் வந்திருக்காமே... அவனை கூப்பிட்டு வெச்சு பேசுங்கோங்ன்னு, உசுரை எடுத்தா... அதுக்கு அப்புறம் என்னமோ அசந்து தூங்கறா... ஞாயித்துக் கிழமைதானேன்னு நானும் எழுப்பலை..." தங்கையை உற்றுப் பார்த்து மென்மையாக சிரித்தார், ராகவன்.

"அண்ணா, அண்ணி சொல்றதைத்தான் நானும் சொல்றேன்... ஒரு மாசம் லீவு போடுங்களேன்.. எப்பப் பாத்தாலும் வேலை வேலைன்னு அலையறேள்.. யாருக்காக நீங்க இப்படி உழைக்கணும்... நீங்க உங்க உடம்பையும் பாத்துக்கணும்... அவனும் தலையெடுத்துட்டான்... கை நெறைய சம்பாதிக்கறான்.. நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ.."

"ஹூம்ம்ம்..."

"அவன் இப்ப எதுவுமே அறியாத பிள்ள இல்லேதான்.. ஊர்ல எல்லாப் பிள்ளைகளும் அப்படித்தான் இருக்கு... அதுக்கு நம்மப் புள்ளை எவ்வளவோ தேவலை... உங்க மேல அவன் உயிரையே வெச்சிருக்கான்... நம்மப் புள்ளைக்கு என்னக் கொறை; அவன் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கான்...!!

அவனுக்குன்னு ஒருத்தி வந்தா அவ அவனைத் திருத்திட்டு போறா; அவன் எதையோ என்னைக்கோ பைத்தியக்காரத்தனமா உளறினான்னா, நீங்க அதை மனசுல வெச்சுக்கிட்டு, நம்மக் குழந்தையை அவதாரம்ன்னு நீங்களே சொன்னா எப்படீ?" உஷா அண்ணனிடம் சிணுங்கினாள்.

"நீ பாத்தியாம்மா... அந்த பொண்ணுங்க போட்டோவை..."

"பாத்தேன்.. ரெண்டு பேருமே நன்னா இருக்காளுங்க மூக்கும் முழியுமா... அந்த லலிதாங்கற பொண்ணு இவனுக்கு நல்லப் பொருத்தமா இருப்பான்னு எனக்குத் தோன்றது... அண்ணிக்கும் அந்தப் பொண்ணை புடிச்சிருக்கு... நீங்க என்ன சொல்றீங்க..?"

"அவனுக்கு புடிச்சா சரிதான்... கூட இருந்து குப்பைக் கொட்டப் போறவன் அவன்; எனக்கென்ன இதுல தனியா ஒரு விருப்பம்...! ஜாதகம் பொருந்துதான்னு பாக்க வேண்டாமா..? யார்கிட்டவாவது காட்டீனீங்களோ?"

"ஆமாம்... தாத்தாவும் அப்பாவும் கட்சி கட்டிண்டு, எனக்கும்தான் ஜாதகம்.. பொருத்தம் எல்லாம் பாத்தாங்கா... என்ன ஆச்சு... ரெண்டு வருஷத்துல ஒத்தையா திரும்பி வந்துட்டேன்.. பெருமாளை மனசுல நெனைச்சுக்கிட்டு மேல ஆகவேண்டியதை பாருங்கண்ணா..." உஷாவின் குரல் தழைந்தது. ராகவன் முகத்தை திருப்பி தன் தங்கையைப் பார்த்தார்.

உஷா, சராசரி தமிழ் பெண்களைவிட சற்றே உயரமாக இருந்தாள். அவளுடைய உயரத்தால் தேகம் மெலிந்திருப்பதைப் போல் தோன்றினாலும் வலுவான உடல். நோய் நொடி என்று எப்போதும் படுத்ததில்லை. எட்டு மணி நேரம் தொடர்ந்து அவளால் தன் அலுவலகத்தில் வேலை செய்யமுடிந்தது. ஆஃபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த பின்னும் சளைக்காமல், அண்ணியுடன் சேர்ந்து கொண்டு வீட்டு வேலைகளையும் இழுத்து போட்டுக்கொள்ள முடிந்தது.

அண்ணி... ஆஃபீசுல எனக்கு வேலை செய்யறது 'போர்' அடிக்குது. கண்டவனுக்கும், மரியாதை தெரியாதவனுக்கெல்லாம், 'யெஸ் சார்' சொல்ல வேண்டியதா இருக்கு... எனக்கென்னா புள்ளையா குட்டியா; யாருக்காக மாங்கு மாங்குன்னு நான் சம்பாதிக்கணும்... ஒரு வேளை சோறு என் அண்ணி நீங்க போடமாட்டீங்களா? போன வருடம் தீடிரென ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தாள், உஷா.

சிவந்த நிறம். தீர்க்கமான மூக்கு. வலுவான தாடைகள். சிரித்தால் அழகாக குழி விழும் கன்னங்கள். வெண்மையான சுருக்கமில்லாத கழுத்து. காதில் சின்ன தோடு, கைகளில் ரெண்டு ஜோடி மெல்லிய பொன் வளையல்கள். கழுத்தில் ஆடும் மெல்லிய தங்கச்சங்கிலி. சங்கிலியின் நுனியில் ஒரு சிறிய பெண்டன்டில் கணவன் கிருஷ்ணனின் போட்டோ. சிம்பிளாக இருப்பாள் உஷா.

"என்னாச்சு அண்ணா..." உஷா அண்ணனின் தலையை மெல்ல வருடினாள். ராகவன் சட்டென தன் தலையைக் கவிழ்த்துக்கொண்டார். அவருடைய கண்கள் கலங்கியிருந்தது.

"அந்தப் பாவியோட நினைப்பு வந்திடிச்சி..." அவர் குரல் கரகரத்தது.

"எனக்கு இப்பல்லாம அவர் நெனைப்பு வரதேயில்லே..." உஷாவின் முகம் கல்லாகியிருந்தது.



"ஹூம்ம்ம்ம்..." ராகவன் ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றினார். தன் தங்கையின் முகத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.

உஷாவின் நெற்றி வெறிச்சோடியிருந்தது. உற்றுப்பார்ப்பவர்களால் மட்டுமே இனம் காணக்கூடிய ஒரு நிரந்தர சோகம் அவள் விழிகளில் குடியேறியிருந்தது. அவளுடைய வெடிச்சிரிப்பும், உற்சாகமான கூச்சலும், அவளை விட்டு தொலைந்து போய் இருபது வருடங்களுக்கும் மேலாகியிருந்தது. இந்த நாட்களில் பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயிருந்தது. கேட்டக் கேள்விக்கு மட்டுமே பதில் தருவது அவள் குணமாக ஆகிவிட்டிருந்தது.

விடியற்காலையிலேயே எழுந்து குளித்துவிட்டிருந்த உஷாவின் ஈரத் தலையிலிருந்து மெலிதாக வழிந்த ஈரம், அவள் தோள்பட்டையை நனைத்திருந்தது. இன்னும் உடல் கட்டு தளராத, மேனியின் அழகு குறையாத, முகத்தில் பொலிவு மாறாதிருந்த, தன் நாற்பத்தைந்து வயது தங்கையின் காலியான நெற்றியைக் கண்ட ராகவனின் மனசு ஒரு நொடி கனத்துப்போனது. மனம் வேகமாக பின்னோக்கி ஓடியது.