Monday 7 May 2012

உயிர்

பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்கவில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையானதென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள். இவ்வுலகம் உருண்டையானதென்று கூறிய முதல் ஆளான, கியார்டானோ புரூனோ, உரோமன் கத்தோலிக்கத் திருச்சவையால் எரிக்கப்பட்டு இறந்தார்.

உலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான ‘பைபிள்’ கருத்துக்களை எதிர்த்த 'குற்ற'த்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப்பட்டார்.



புடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையேயன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல. இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.

எரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின. (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)

இம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம். மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.

மிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக்கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.

புகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார். சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.

நிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).

இம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எதிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.

உயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர்! அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும். இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

ஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண்டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும். மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.

1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார்.

ஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப்பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்டபோது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.


அதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே!

தியாகி சங்கரலிங்கனார்.

விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார்.

தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.


ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு


1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ ருஸ் பிறப்பு

1945-50 - அவானா பல்கலைக் கழகத்தில் வழக்கறிஞராகப் பட்டம் பெறுகிறார். கொலம்பியாவில் புரட்சிகர அரசியலில் ஈடுபாடு கொள்கிறார்.

1952 - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, ஜெனரல் குல்ஜெம்சியோ பத்திஸ்தா தலைமையிலான இராணுவக் கவிழ்ப்புக்குப் பின் தேர்தல் நீக்கம் செய்யப்படுகிறது.

1953 - சூலை 26 காஸ்ட்ரோ தலைமையில் சாந்தியாகோ டி கியூபாவில் மன்காடா பாசறை மீது நடைபெற்ற தாக்குதல் தோல்வி. காஸ்ட்ரோவும் தம்பி ரவுலும் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஈராண்டு கழித்து பொதுமன்னிப்பின் பகுதியாக விடுதலை.



1955 - சூலை 26 இயக்கத்தை கட்டுப்பாடுமிக்க கரந்தடிப் படையாகச் சீரமைக்க வேண்டி மெக்சிகோவுக்கு இடம் பெயர்கிறார்.

1956 திசம்பர் 2 - கிரான்மா என்ற கப்பலில் காஸ்ட்ரோவும் சிறிய புரட்சிக் குழுவினரும் கியூபா செல்கின்றனர். புரட்சிக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தவர்களில் ரவுல், எர்னெஸ்டோ சே குவேரோ உள்ளிட்ட 12 பேர் கரந்தடிப் போர் நடத்துவதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் செல்கின்றனர்.

1959 - காஸ்ட்ரோ தலைமையில் ஒன்பதாயிரம் வீரர் கொண்ட கரந்தடிப் படை அவானாவிற்குள் நுழைய, பத்திஸ்தா வேறு வழியின்றித் தப்பியோடுகிறார். காஸ்ட்ரோ தலைமை அமைச்சராகிறார்.

1960 - குருச்சேவ் தலைமையிலான சோவியத்து ஒன்றியத்தின் நெருக்கமான கூட்டாளியாகிறார். கியூபாவில் அமெரிக்க நலன்கள் அனைத்தையும் இழப்பீடின்றி நாட்டுடைமையாக்குகிறார். கியூபாவுடன் அரசநிலை உறவுகளை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது.

1061 - அமெரிக்க சி.ஐ.ஏ. பயிற்றுவித்த, 1,300 கியூப அகதிகள் அமெரிக்க ஆதரவுடன் பன்றிகள் விரிகுடாவில் நடத்திய படையெடுப்பு தோல்வி. காஸ்ட்ரோவுக்கு கியூப மக்கள் பேராதரவு.

1962 - கியூப ஏவுகணை நெருக்கடியால் அணுவாயுதப் போரின் விளம்பில் உலகம். துருக்கியிலிருந்து அமெரிக்க ஏவுகணைகள் விலக்கிக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக கியூபாவிலிருந்து ஏவுகணைகளை அகற்ற சோவியத்து நாடு ஒப்புக் கொண்டதால் நெருக்கடி தீர்வு.

1976 - கியூபப் பொதுமைக் கட்சி புதிய சோசலிச அரசமைப்புக்கு ஒப்புதல் அளிக்கிறது. காஸ்ட்ரோ அதிபராகத் தேர்வு.

1976-81 அங்கோலாவிலும் எத்தியோப்பியாவிலும் சோவியத்து ஆதரவுப் படைகளுக்கு கியூபா இராணுவ ஆதரவு.

1980 - அகதி நெருக்கடி - சுமார் 1,25,000 கியூபர்கள் மேரியல் துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு ஓட்டம்.

1991 - சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் கியூபாவில் கடுமையான நிதி முடை.

1993 - கியூபா மீதான முப்பதாண்டு வணிகத் தடையை இறுக்குகிறது அமெரிக்கா. சரிந்து வரும் பொருளியலுக்கு முட்டுக் கொடுக்க காஸ்ட்ரோ அமெரிக்க டாலரை சட்டமுறைச் செல்லுபடியாக்குகிறார். வரம்புக்குட்பட்ட அளவில் தனியார் தொழில் முனைவை அனுமதிக்கிறார்.

1996 - கியூப அகதிகள் ஓட்டிச் சென்ற அமெரிக்க வானூர்திகள் இரண்டை கியூபா சுட்டு வீழ்த்தியபின் அமெரிக்க வணிகத் தடை நிரந்தரமாக்கப்படுகிறது.

2000 - ஆறு வயதான கியூப அகதி எல்லன் கோன்சாலஸ் புளோரிடாவிலிருந்து தாயகம் திரும்பச் செய்வதற்கான 7 மாத காலப் போராட்டத்தில் காஸ்ட்ரோவுக்கு வெற்றி!

2002 – ‘தீய நாடுகளின்' அச்சில் கியூபாவையும் சேர்க்கிறது அமெரிக்கா.

2006 - சூலை - அவசர அறுவை சிகிச்சைக்குப் பின் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பை ரவுலிடம் கையளிக்கிறார்.

2008 - பிப்ரவரி 19. பொதுமைக் கட்சி ஏடு கிரான்மாவில் வெளியிடப்பட்ட கடிதத்தில் காஸ்ட்ரோ தமது பதவி விலகலை அறிவிக்கிறார்.


சாதிவாரி கணக்கெடுப்பில்


இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 340ல் பிற்படுத்தப்ட்டவர்களின் சமூக கல்வி நிலையை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கன இடர்ப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என அம்பேத்கர் கூறியிருந்தாலும் (குறிப்பு: நேரு அமைச்சரவையிலிருந்து சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகுவதற்கு அம்பேத்கர் கூறிய 10 காரணங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென குழு நியமிக்கப்படவில்லை என்பதும் ஒன்று) விடுதலைப்பெற்ற இந்தியாவில் காங்கிரசு அல்லாத மொரர்ஜி தேசாய் அமைச்சரவைதான் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை ஆராய மண்டல் அவர்களின் தலைமையில் குழுவை நியமித்தது. (நேரு காலத்தில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு ஒரு கண்துடைப்புக் குழு என்பதை அறியவேண்டும்)
பின்னர் பல அரசியல் கட்சிகள் சமூக அமைப்புக்களின் போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரசு அல்லாத பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தனது முதன்மை அமைச்சர் பதவியைத் துறந்து 1988ல் அப்பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை மட்டும் நடைமுறைப்படுத்த ஆணையிட்டார். 1993ல் பல இடர்ப்படுகளுக்கு இடையில் உச்ச நீதிமன்றத்தீர்ப்பின்படி அது முறையாக நடைமுறைக்கு வந்தது. 


முதலில் இதை கடுமையாக எதிர்த்த பா.ஜ.கவும், மறைமுகமாக எதிர்த்த காங்கிரசு உள்ளிட்ட பொதுவுடமை இயக்கங்களும் மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையுள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை இழந்துவிட விரும்பாமல் வேறு வழியின்றி பின்னர் ஆதரவு தெரிவித்ததோடு இல்லாமல் அர்ஜுன்சிங் அவர்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக 2008ல் இருந்தபோது மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆணை பிறப்பித்தது (இன்றுவரை இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேறு செய்தி). 
இதை எதிர்த்தும், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒவ்வோர் ஆண்டும் உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் போடப்படுகின்றன, விசாரணைக்கு வருகின்றன. அப்போதெல்லாம் சமூகரீதியாக, கல்விரீதியாக உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்னென்ன, அவற்றின் மக்கள் தொகை கணக்கு என்னென்ன என்பதற்கான முறையான சான்றுகளை அல்லது எடுக்கப்பட்ட கணக்குகளை தருமாறு உச்சநீதிமன்றம் கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு 1931 ஆம் ஆண்டின் கணக்கையும், மண்டல் குழு குறிப்பிட்ட மாவட்டங்களில் எடுத்த மாதிரி கணக்கெடுப்பையும், சில அரசு அமைப்புகளான National Family Health Statistics 1998 - 29.8%, National Sample Survey 1999-2000-36% எடுத்த கணக்கையும் சான்றாக அளித்தது; மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருப்பதைப் போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கான முறையான சாதி அட்டவணை இதுவரை தயாரிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் பழங்குடியினருக்குமான இடஒதுக்கீட்டிற்கு முறையாக வழிவகை செய்ய அவர்களின் சாதிப்பட்டியல் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசின் சட்டத்தின்படி அட்டவணைப்படுத்தப்பட்டு அவ்வட்டவணையில் உள்ள சாதிகள் இவ்வளவு என வரையறுக்கப்பட்டு அவர்களின் மக்கள் தொகையும் 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகையை வைத்து கணக்கிடப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு (மத்திய அரசில்) 15 சதவீதமும், பழங்குடி மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட்டுவருகிறது இந்திய விடுதலைக்குப்பிறகு அரசமைப்பு சட்ட 341, 342 விதிகளின்படி இதற்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட்டது ஆகவே இதில் இதுவரை எந்த சிக்கலும் எழவில்லை. 
 ஒவ்வோர் ஆண்டும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் எழும் இச்சிக்கலை தீர்க்க உச்சநீதி மன்றமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசுக்கு இறுதியாக ஆலோசனை கூறியது. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசின் அமைச்சரவை 19.5.2011 அன்று இம்மாதிரியான கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டது. இதற்கு முலாயம் சிங், லல்லு பிரசாத், மருத்துவர் இராமதாசு, வே.ஆணைமுத்து ஆகியோர் முயற்சி பாராட்டத்தக்கது. இக்கணக்கெடுப்பில் மக்கள் சொல்லும் சாதியை வைத்து அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களா என்பதை வரிசைப்படுத்த இயலும். ஏனெனில் ஒவ்வோர் மாநிலத்திலும் எந்தெந்த சாதி ஓபிசி பட்டியலில் இருக்கிறது என்பதற்கு இதற்கென உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது. (ஒரு தகவல் - தமிழகத்தில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்). 
ஆக கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை முறைப்படுத்த எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பை சாதி சங்கங்கள் தங்களது சாதி பலத்தைக் காட்டவும், சாதிப் பெருமை பேசவும் அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளனர்; சுவரொட்டிகள் அடித்து ஒட்டுகின்றனர். இதில் குறிப்பாக வன்னியர்கள் எனப்படும் சிலர் தங்களை வன்னியகுல ஷத்திரியர்கள் என சொல்ல வேண்டும் என்றும் தாங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள் என்றும் சுவரொட்டியில் தெரிவித்து உள்ளனர். இதற்கு ஆதாராமாக 1923ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் வெளிவந்த அரசாணையையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர். வர்ணாசிரமத்தின்படி தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு பாகுபாடுகள் நிலவவில்லை. பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு மட்டுமே நிலவியது என அம்பேத்கர் உள்ளிட்ட பலரல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நிலையில் இவர்கள் க்ஷத்திரியர்கள் தங்கள்தான் என புதுக்கரடி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வர்ணாசிரமத்தில் இரண்டாவது அடுக்கில் அதாவது பிராமணனுக்கு அடுத்த இடத்தில் இடம் பிடிக்கத் துடித்து எப்படியாவது தாங்கள் பிராமணனுக்கு கீழ்தான் என்பதை எழுதிக்கொடுக்கத் தயாரக இருப்பது வெட்கக்கேடானது.


இவர்கள் ஷத்திரியர்கள் எனக்கூற நினைப்பதே தமக்கு மேலே எந்த சாதி இருந்தாலும் பரவாயில்லை தமக்கு கீழே மற்ற சாதியினர் இருக்கிறார்கள் என்ற சாதிப் பெருமைதான். இதில் என்ன கூத்து என்றால் ஷத்திரியர்கள் என தம்மை இவர்கள் அழைத்துக்கொள்வதே தவறு என “வன்னிய சிற்றரசர்கள்” என்ற நூலில் “புலவர் முத்து எத்திரசான்” கூறுகிறார். அந்நூலின் கத்திரியர்(ஷத்திரியர்) என்ற தலைப்பில் அவர் கூறும்போது கண்டம்(சிறு கத்தி) உடையவர்கள் கண்டர் (தற்போது வன்னியர்கள் தங்களின் சாதிப்பெயராக கண்டர் என போட்டுக்கொள்கிறார்கள்) கத்தி உடையவர்கள் கத்திரியர் என ஆனார்கள் எனக் குறிப்பிட்டு, இச் சொல்லே அரசர்களை குறிக்கப் பயன்பட்டு வந்ததாகவும் காலப்போக்கில் வடமொழியாளர்களால் “க” விற்குப் பதில் “க்ஷ” என்ற எழுத்தை இட்டு க்ஷத்திரியர்கள் என வழங்கி வருகிறதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே வர்ணாசிரம க்ஷத்திரியர்கள் வேறு இவர்கள் வேறு என்பதைப் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் சாதிப் பெருமையை பேசிக்கொள்ளும் இவர்கள் ரிக் வேதத்தில் புருஷ சுக்தத்தில் (10:90) க்ஷத்திரியன் தோளில் இருந்து பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளதையும் அவர்கள் அரசர்களாகவும் வீரர்களாகவும் படைக்கப்பட்டார்கள் என்பதையும் பிடித்துக் கொண்டு க்ஷத்திரியர்கள் எனக்கூறிக்கொள்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் அதுபோல இல்லை. பிராமணர்களுக்கு கீழ் நிலையிலேயே அனைவரும் வைக்கப்பட்டனர். அதனாலேயே 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொட்டமடித்தது. ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம் கையெழுத்து போடக்கூடத்தெரியாதவர்களாக அடிமை வேலை செய்பவர்களாக, சாதியில் கீழானவர்களாக வைக்கப்பட்டு இருந்தனர். 
 பகவத் கீதையின் 18 ஆம் சருக்கம் உள்ளிட்ட பல சருக்கங்கள் சாதியின் மேல் கீழ் பிரிவினையை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இதே சாதித் தத்துவத்தை மேல்-கீழ் தத்துவத்தைப் போதித்து அதை நிலைபெறச் செய்த கிருஷ்ணனை தமது கடவுளாகப் போற்றி தாங்கள் அடிமைதான் என பழம் பெருமை பீற்றிக்கொள்கிறது யாதவர் என்ற சாதி. இவர்களும் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர். கடவுள் பரம்பரையினரின் நிலை இப்படி ஆனதற்குக் காரணமே பார்ப்பனீய வர்ணாசிரமம்தான் என்பதை உணர மறுக்கின்றனர் அச்சாதியினர். அதைப் போலவே ஆண்ட பரம்பரையினர் எனக் கூறிக்கொள்ளும் பார்கவ குலத்தினரும் இதே கோரிக்கையை வைத்து சாதிப்பெருமை பேசி மாநாடு நடத்தினர் சமீபத்தில். இவர்கள் கூறுகிறார்கள் தாங்கள் சோழர்கள் என்றும் இராஜராஜனின் வழித்தோன்றல்கள் என்றும் கூறி வர்ணாசிரமத்தால் காயடிக்கப்பட்டதை மறந்து பெருமை பேசித் திரிகின்றனர் ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்கத் தவறாமல் கோரிக்கை வைக்கின்றனர். 
ஆக பெரியார் போன்றவர்கள் கடுமையாக உழைத்தும் இந்த சாதிச் சங்கங்கள் வர்ணாசிரம கட்டுக்குள் இருந்து வெளிவராமல் ஆண்ட பரம்பரையினர் என சாதிப் பராக்கிரமம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்குள் இணையாகக்கூட நெருங்கி வரத் தயங்குகிறார்கள். வேலை வாய்ப்புகளில், கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர்; கிராமங்களில் தனக்குக்கீழே உள்ள தலித்துக்களை மிதிக்கின்றனர். வாழ்வியலில் சமத்துவத்துக்கு எதிரான வர்ணாசிரம சடங்குகளையும் பார்ப்பனீயத்தையும் கைவிட இவர்கள் தயாராக இல்லை. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இந்த ஆண்ட பரம்பரையினர் ஒவ்வொரு கூட்டத்திலும், தங்களுடைய மாநாடுகளிலும் அரசு பதவிகளில் தங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லையென்று புள்ளிவிவரங்கள் கூறி தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினராக ஆக்க வேண்டும் என கோரிக்கை வைத்து புலம்புவது மிகவும் வேடிக்கை. 
தற்போது செய்திக்கு வருவோம். தமிழகத்தில் சாதிகளுக்கு நாயுடு, நாய்க்கர் (வன்னியர்), முதலியார், பிள்ளை, செட்டியார் போன்ற பல பெயர்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசின் பட்டியலின்படி இதுபோன்ற சாதிகள் தமிழகத்தில் இல்லை. ஏனென்றால் இவையெல்லாம் சாதிப் பெருமை பேசும் பட்டங்களே ஆகும். சாதிச் சான்றிதழ் பெறும்போது இவை சிக்கல்களை உருவாக்குகின்றன. ஆகவே பெருமை பேசிக்கொள்வதற்காக சாதிப்பட்டங்களை போட்டுக்கொள்ளாமல் அரசு பட்டியலில் உள்ளபடி இச் சாதிவாரி கணக்கெடுப்பில் தங்களது சாதிகளைக் கூறினால். எந்த நோக்கத்திற்காக இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதோ அது நிறைவேற வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால் பெருங்குழப்பத்தையே இவை உருவாக்கும்.


இக்கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வந்தபோதே இச்சாதிகள் அதுவும் குறிப்பாக ஆதிக்க சாதிகள் பெரும்பான்மை, பழம்பெருமை பேசுமே என்ற வாதம் வந்தது, இக்கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டலும் இவர்கள் காற்றில் அட்டைக் கத்தியை சுற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இருந்தாலும் அரசின் திட்டங்களும், வேலைவாய்ப்பு, கல்வி உரிமைகளும் முறையாக திட்டமிடப்பட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு என உழைக்கும் இயக்கங்களுக்கு அரசை நிர்ப்பந்திக்க இவ்விவரங்கள் தேவைப்படுவதால் இக்கணக்கெடுப்பு சரியாக அமைந்திடல் வேண்டும். சாதிச் சங்கங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

பறவைகள் சரணாலயம்


தமிழகத்தில் உள்ள 9 சதவிகித வனப்பரப்பில் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக உள்ள பறவைகள் 60 குடும்பங்களில் 350 எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மழைக்கால ஆரம்பத்தில் நமது சூழலை விரும்பி நீர் நிலைகளை நாடி விருந்தாளிகளாக வரும் பறவைகள் சில லட்சத்தை தொடும். உள்ளுர் விருந்தாளிகளாக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பறவைகளும் இதில் அடங்கும்.
அந்த வகையில் நீர் நிலைகளில் காணப்படும் கொக்குகள், நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் உள்ளூர் பறவைகளே.பலவித வாத்துகள், உள்ளான்கள், பவழக்காலிகள், ஆலாக்கள் போன்றவை இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.


தமிழகத்தில் 12 முக்கிய நீராதாரங்களில் பறவைகள் வந்து செல்வதை கணக்கில் கொண்டு பறவைகள் சரணாலயங்களாக அறிவித்து பராமரித்து வருகிறது மத்திய அரசு.
1. பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
2. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
3. கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
4. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
5. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
6. வடுவூர் பறவைகள் சரணாலயம்
7. சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்
8. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
9. மேல்வல்வனூர் + கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
10. கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம்
11. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
12. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
மேற்கண்ட சரணாலயங்கள் தவிர ஏரி, குளங்கள், ஆறுகள், நீர்நிலைகளையும் பலவித நீர்ப்பறவைகள் வசிப்பிடமாகக் கொள்வதைக் காணலாம்.
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் 
தமிழக, ஆந்திர கடற்கரையோரத்தில் 481 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பழவேற்காடு பறவைகள் சரணாலயம். 153.67 சதுர கி.மீ தமிழக எல்லைக்குட்பட்டது. 800 முதல் 2000 மி.மீ வரை ஆண்டு தோறும் மழை வளம் பெறும் பழவேற்காடு பூ நாரைகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. ஒரிசாவில் அமைந்துள்ள சில்கா ஏரிக்கு அடுத்து அதிகப்படியான பூ நாரைகள் வரும் இடம் பழவேற்காடு. 


பூ நாரைகளோடு, உள்ளான்கள், பட்டைத்தலை வாத்து உள்ளிட்ட பலவித வாத்து வகைகள். பவழக்காலிகள், ஆலாக்கள் என ஆயிரக்கணக்கில் வலசை பறவைகள் வந்து செல்கின்றன. இவை தவிர கொக்குகள், நாரைகள், கரண்டி வாயன் உள்ளிட்ட பறவைகளும் வந்து செல்கின்றன. 
160 விதமான பறவைகள் வந்து செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது சரணாலயம். பார்வையாளர்கள் வந்து செல்ல நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் ஏற்ற காலமாகும். 
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 
77.185 ஏக்கர் பரப்பில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இங்கு, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவை இனங்களை காணலாம். நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற காலமாகும். 
கரிக்கிலி பறவைகள் சரணாலயம் 
சென்னையில் இருந்து 86 கி.மீ தொலைவில் மதுராந்தகம் தாலுகாவில் 61.21 ஏக்கர் பரப்பில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் ஆரம்பிக்கும் பருவம் மார்ச், ஏப்ரல் வரை பறவைகள் இங்கு இருக்க காணலாம். வாத்து வகைகளுக்கும், உப்புக் கொத்திகளுக்கும் ஏற்ற உறைவிடமாக உள்ளது. ஊசிவால் வாத்து, தட்டை வாயன், முக்குளிப்பான், புள்ளிமூக்கு வாத்து ஊசிவால் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு, சின்னக்கொக்கு போன்ற பறவை இனங்களை காணலாம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் பார்வையாளர்களுக்கு ஏற்ற காலமாகும். 
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 
தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது தான் கரைவெட்டி பறவைகள் சரணாலயம். திருச்சியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ தூரத்திலும் கரைவெட்டி அமைந்துள்ளது. மிக அருகாமை நகரமாக அரியலூர் 12 கி.மீ தொலைவில் உள்ளது. 321 ஏக்கர் சரணாலயமாக உள்ள கரைவெட்டியில் நவம்பர் முதல் மே மாதம் வரை பறவைகள் வந்து செல்லும் காலமாகும். ஆண்டிற்கு 800 முதல் 2000 மி.மீ வரை மழை பொழிகிறது.90 வகையான நீர்ப்பறவைகளும், 100 வகையான வாழிடப் பறவைகளும், ஒட்டு மொத்தமாக 188 பறவை இனங்களும் இங்கு வந்து செல்வது கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 16 வகையான வாத்துக்களும் அடங்கும்.பட்டைத் தலை வாத்து, செங்கால் நாரை, கூழைக்கடா, விரால் அடிப்பாள், பொரி வல்லூறு, ஆளிப் பருந்து, சேற்றும் பூனைப் பருந்து போன்ற பறவைகளை இங்கு காணலாம்.கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகபட்சமாக 50,000 பறவைகள் ஓராண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்கள் பறவைகளை பார்க்க ஏற்ற காலமாகும். 
உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம் 
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் 1999 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. உதயமார்த்தாண்டபுரம் சரணாலயத்திற்கு நீர் ஆதாரமாக மேட்டுர் அணையின் நீரே உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் சரணாலயம் அமைந்துள்ளது.ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வறண்டு இருக்கும் சரணாலயம் ஆகஸ்ட், டிசம்பர் மாதம் வரை பறவைகளின் வருகையால் அழகு மிளிர்ந்து காணப்படும்.சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்து நாரை, வாக்கா போன்ற பறவை இனங்களில் அதிகளவாக நத்தை குத்தி நாரைகள் காணப்படுகிறது. அதிகபட்சமாக 10,000 பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சுற்றிப்பார்க்க ஏற்ற காலமாகும். 
வடுவூர் பறவைகள் சரணாலயம் 
1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்த வடுவூர் 40 விதமான நீர்ப் பறவைகளால் காண்போரை கவர்ந்திருக்கிறது. நவம்பர் மாத வாக்கில் 20,000 பறவை இங்கு குவிந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டில் துவங்கி டிசம்பர், ஜனவரி முடிய பறவைகள் வந்து செல்லும்.பறவைகளைக் காண நவம்பர், டிசம்பர் மாதங்களில் இங்கு வரலாம். வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, நீர்க்காகங்கள், கிறவை, ஊசிவால் வாத்து, நாரை என பலவித பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. 
சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் 
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவில் பலவித வண்ணப் பறவைகளால் எழிலுடன் காட்சி தரும் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் 1989 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 47.63 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சித்திரன்குடியில் கூழைக்கடா நத்தைகுத்தி நாரை, சின்ன, பெரிய கொக்கு, குருட்டுக்கொக்கு, நாரைகளை காணலாம்.பறவைகளை காண ஜனவரி ஏற்ற மாதமாகும். 12. கி.மீ தொலைவில் சாயல்குடி அமைந்துள்ளது. இராமநாதபுரத்தில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. 
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் 
திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கூந்தன்குளம் 1994 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள பகுதிகளில் 129.33 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூ நாரைகளின் வரவு அழகு சேர்க்கிறது. கூந்தன் குளம் கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகள் யாவும் மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளிலும் கூடு கட்டுவது சிறப்பம்சமாகும். 
43 வகையான நீர்ப்பறவைகள் இங்கு வருவது கணக்கிடப்பட்டுள்ளது. செந்நிற நீண்ட கால்களையும், மெல்லியதாக நீண்டு வளைந்த கழுத்தையும், ரோஜா வண்ணத்தையும் ஒத்த பூ நாரைகள் தவிர சைபீரியா பகுதியில் இருந்து நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று வித கொக்குகள் கரண்டி வாயள், வாத்து வகைகள் என வண்ணக்கலவையாக கூந்தன்குளத்திற்கு அழகு சேர்க்கிறது.ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 1 லட்சம் பறவைகள் வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகாமை நகரமாக நாசரேத் 15 கி.மீ தொலைவில் உள்ளது. நவம்பர், டிசம்பர் வருகை புரிய தொடங்கும் பறவைகள் மே மாத வாக்கில் தங்கள் இருப்பிடத்திற்கு திருப்பிச் செல்கின்றன. பறவைகளை பார்க்க ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஏற்ற காலமாகும். 
மேல்செல்வனூர் - கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் 
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்- + கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் தமிழகத்தின் பெரிய பறவைகள் சரணாயலமாகும். 593.08 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடம் 1998 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. கொக்குகள், கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உட்பட இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. சாயல்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், கடலாடியில் இருந்து 15 கி.மீ தூரத்திலும் இராமநாதபுரத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும் இப்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 
கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம் 
170 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ள கஞ்சிரன்குளம் 1989ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 66.66 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சரணாலயத்தில் மஞ்சள்மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சின்ன, பெரிய கொக்கு என பலவித பறவை இனங்கள் வாழ்கின்றன.முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து 117 கி.மீ தொலைவிலும் கஞ்சிரன்குளம் அமைந்துள்ளது. 
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடியாகும். 38.4 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள வேட்டங்குடி ஜூன் 1977 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள வேட்டங்குடியில் நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, வக்கா, பாம்புத்தாரா, கரண்டி வாயன் போன்ற பறவை இனங்கள் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன. காரைக் குடியில் இருந்து 32 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 
நாட்டின் பழமையான பறவைகள் சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று. 250 ஆண்டுகளாக கிராம மக்களின் பாதுகாப்பில் பறவைகளின் வாழ்விடமாக வேடந்தாங்கல் உள்ளது. சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ தூரத்திலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயம் அமைந்துள்ளது. அக்டோபர் மாத மத்திய வாக்கில் வரத் தொடங்கும் பறவைகள் ஏப்ரல் மாத இறுதியில்தான் தங்களது இருப்பிடத்திற்கே திரும்பிச் செல்கின்றன. ஆண்டின் அதிகபட்ச அளவாக 40000 முதல் 50000 வரையிலான பறவைகளை ஜனவரி மாதத்தில் வேடந்தாங்கலில் காணமுடியும். 


115 விதமான பறவைகள் வருகை புரியும் இங்கு.தமிழ்சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற ‘அன்றில்’ என்ற அழகிய பறவை இனம், இன்று அரிவாள் மூக்கன் என்று பறவையியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. வேடந்தாங்களில் மூன்று வித அரிவாள் மூக்கன்களை காணலாம். 1. வெள்ளை அரிவாள் மூக்கன், 2. பழுப்பு நிற அரிவாள் மூக்கன், 3. கருப்பு அரிவாள் மூக்கன். இவை தவிர கொக்குகள், நாரைகள், ஊசிவால் வாத்து, நீர்க்கோழி, புள்ளி மூக்கு வாத்து போன்ற எண்ணற்ற பறவைகளை வேடந்தாங்கலில் காணலாம். மீன்கொத்தி, வால் காக்கை, சின்னான், புள்ளி ஆந்தை, கதிர்க்குருவி, மண்கொத்தி, குக்குறுவாள்கள், என வாழிட பறவைகளையும் காணலாம்,1960 களில் உள்ளான்கள், ஆற்று ஆலாக்கள், பருந்து வகைகள் காணப்பட்டதாகவும், கூழைகடாக்கள் ஒரு சிலவற்றையே கண்டதாக சூழலியலாளகும் ஒளிப்படக் கலைஞருமான மா. கிருஷ்ணன் தனது பறவைகளும், வேடந்தாங்கலும் நூலில் பதிவு செய்துள்ளார். 
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக உள்ளான்கள், ஆலாக்கள் பருந்துகளை கண்டதாக எந்தப் பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேடந்தாங்கலில் கூழைக்கடாக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. சில பறவைகளின் வரத்து நின்றுவிடுவதும், சில பறவைகளின் வரவு அதிகரிப்பதற்குண்டான ஆய்வுகள் அவசியம்.ஆண்டுதோறும் 1200 மி.மீ மழை பெய்யும் வேடந்தாங்கல் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பார்வையாளர்கள் வந்து செல்ல ஏற்ற நாட்களாகும். தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
தமிழகத்தில் பறவைகள் சரணாலயங்கள் தவிர. ஆயிரக்கணக்கான குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள் காணப்படுகின்றன. அவையாவற்றிலும் நீர்ப்பறவைகளும், கொக்குகள், நாரைகள் என பறவை இனங்கள் அதிகளவில் வாழ்கின்றன. நமது வாழ்வாதரத்திற்கு நீர் எவ்வாறு அவசியமோ? அதுபோல பறவைகளின் வாழ்விற்கும் நீர்நிலைகள் அவசியம். உயிரினங்களின் அச்சாணியாக விளங்கும் நீர்நிலைகளை பாதுகாப்போம்! பறவைகளை காப்போம்!! 


சுவிட்சர்லாந்து என்றாலே


தேனிலவு என்றவுடன் நினைவுக்கு வருவதும், வரி ஏய்ப்பு செய்த இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கின்ற நாடு என்று பட்டி தொட்டிகளில் எல்லாம் உள்ள மக்களிடமும் பரிச்சயமாகி உள்ள சுவிட்சர்லாந்து என்ற நாட்டில், அழகிய ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இருந்து எனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அமைவிடம்:
swiss_400சுவிட்சர்லாந்து நாடு, ஐரோப்பாக் கண்டத்தில் வடக்கே ஜெர்மனி, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லீக்டென்ஸ்டெயின், மேற்கே பிரான்சு ஆகிய நாடுகளை அரணாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த நாட்டின் நிலப்பரப்பு, தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்குதான். எனவே, நாட்டின் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு 5 மணி நேரப் பயணத்தில் சென்று விடலாம். தலைநகரம் பெர்ன். இந்த நகரில்தான் நாடாளுமன்றம் உள்ளது. சூரிச், ஜெனிவா ஆகியவை வணிக நகரங்களாக விளங்குகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டில் 26 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித் தனி கொடிகள் வைத்து உள்ளனர். ஜெனிவா நகரில்தான் ஐ.நாவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலகம் அமைந்து உள்ளது. ஐ.நாவின் அனைத்து அமைப்புகளின் அலுவலகங்களும் ஜெனிவாவாவில் அமைந்து உள்ளன. ஐ.நா சபை அலுவலகத்திற்கு அருகே வீற்று இருக்கின்றது உத்தமர் காந்தி சிலை.


சுவிட்சர்லாந்து நாடு அமைக்கப்பட்ட நாள் 01-08-1291. ஆதலால் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் முதல் நாளை வெகு சிறப்புடன் கொண்டாடுகிறார்கள். இங்கே குறைந்தது 1500 ஏரிகளாவது இருக்கின்றன. ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் கண்டிப்பாக ஆறோ அல்லது ஏரியோ கண்டிப்பாக இருக்கின்றது. இங்கு உள்ள எல்லா நகரங்களும் ஒரே மாதிரியான கட்டமைப்பைக் கொண்டு இருப்பதால் அதிக வேறுபாடு இருக்காது.
மொழி:
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 80 லட்சம்தான். சூரிச் நகரத்தில்தான் அதிக மக்கள் வசிக்கின்றனர். ஜெர்மன், பிரென்ஞ், இத்தாலியன் மற்றும் ரோமனிக் ஆகியவை அரசு மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மன் மொழியை நாடு முழுவதும் பரவலாகப் பேசுகிறார்கள். பிரென்ஞ் மற்றும் இத்தாலியன் மொழிகள் அந்தந்த நாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள இடங்களில் பேசப்படுகிறது. இங்கே உள்ள உணவகங்களில் உள்ள உணவு வகைகளின் அட்டைகளிலும், ஜெர்மன், பிரென்ஞ் மற்றும் இத்தாலியன் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டு உள்ளன. ஆங்கில மொழியை வைத்து நகரப்பகுதிகளில் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம், ஆனால் கிராமப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது மிகவும் கடினம்.
வாழ்க்கை முறை:
காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்க வணிக வளாகங்களுக்குச் சென்று, தேவையான பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து விலை போட்டால் கணினியில் செலுத்த வேண்டிய தொகை தெரியும். அதை வைத்து தேவையான பணத்தை கொடுத்து விடலாம், மொழி தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை.
சுவிட்சர்லாந்தின் பணம் ஃபிராங் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்று என்பதால், அனைத்துப் பொருட்களின் விலையும் மிக அதிகமாகத்தான் இருக்கும். ஆயினும் மனநிறைவு கிடைக்காது. அதிலும் குறிப்பாக உணவகங்களில் நாம் கொடுக்கின்ற விலைக்கு ஏற்ற உணவு, அளவு கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு காபி குடிக்க வேண்டுமானால் குறைந்தது 3.50 ஃபிராங் (இந்திய மதிப்பில் 190 ரூபாய்) கொடுக்க வேண்டியது இருக்கும்.
நான் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எல்லைப்பகுதியில் உள்ள ஜெர்மனியின் நகரத்திற்கு முப்பது நிமிடங்களில் தொடர்வண்டியில் சென்று விடலாம். அங்கே உள்ள கடைகளில், அனைத்துப் பொருட்களும், சுவிட்சர்லாந்தை ஒப்பிடும்போது விலை பாதியாக இருக்கும். அதனால் வார இறுதி நாட்களில் அங்கே சென்று பொருட்களை வாங்கி வருவோம். அப்படியே நம்மிடம் வசூலித்த விற்பனை வரியையும் எல்லையில் இருக்கும் அதிகாரிகளிடம் ஒப்புதல் வாங்கி திரும்பப் பெற்று கொள்ளலாம்.
சுவிட்சர்லாந்து மக்கள் பொதுவாக அமைதியை விரும்புவார்கள். இரவு 8 மணிக்கு மேல் சமைக்கும் சத்தம் கூட கேட்க கூடாது என்பதால், 8 மணிக்கு முன்னரே சமைத்து முடித்து விட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இங்கே உள்ள மக்கள் காலையில் 8 மணிக்கு முன்னரே அலுவலகத்துக்கு வந்து விடுவார்கள். மதிய உணவை 11.30 மணிக்கெல்லாம் உண்டு விடுவார்கள்.
மாலையில் விரைவாக வீட்டிற்குச் சென்று விடுவார்கள். ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை மட்டும்தான். அதற்கு மேல் அலுவலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். வாரத்துக்கு 45 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க கூடாது என்ற விதி உள்ளது. இரவு உணவை 6.30 மணிக்கெல்லாம் முடித்துக் கொள்வார்கள். இவர்களின் பாரம்பரிய உணவு சுவிஸ் பாண்ட்யூ (Swiss Fondue) எனப்படும் சாக்லேட்களையோ அல்லது பாலாடைக்கட்டிகளை (Cheese) உருக்கி அதில் இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை முக்கி, அதை அப்படியே உண்கின்றனர். சுவிட்சர்லாந்து முழுவதும் இத்தாலியன் உணவகங்கள்தான் நிறைய உள்ளன.
சுவிட்சர்லாந்து என்றாலே உடனே நினைவுக்கு வருவது சாக்லேட், கடிகாரங்கள் மற்றும் கத்திகள். இவற்றை இங்கே குடிசைத்தொழிலைப்போலச் செய்கிறார்கள். எல்லாம் தரமானவையாகவும், உலகப் புகழ் பெற்றவையாகவும் உள்ளன. அதனால் விலை அதிகம்.
பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியும் இங்கே அதிகம். கிராமத்துப் பக்கம் சென்றால் ஏராளமான மாட்டுப் பண்ணைகளைக் காணலாம். ஒவ்வொரு மாட்டின் கழுத்திலும் மணி தொங்கவிட்டு இருப்பார்கள். இங்கே தயாரிக்கப்படும் சாக்லேட்களைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 11.6 கிலோ சாக்லேட்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சுவிட்சர்லாந்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்கள் உள்ளன. அவை பார்ப்பதற்குப் பழமையாக இருக்கும்; ஆனால் உறுதியாக உள்ளது. அதில் உள்ள ஆணிகள், நட்டுகள் இன்றைக்கும் பளபளப்பாக உள்ளன. அந்த அளவுக்கு துருப்பிடிக்காத எஃகினால் செய்து உள்ளார்கள்.
அழகிய ஆல்ப்ஸ்:
swiss_450ஆல்ப்ஸ் என்றாலே அனைத்து மக்களுக்கும் நினைவுக்கு வருவது சுவிட்சர்லாந்து மட்டுமே. உண்மையில் ஆல்ப்ஸ் மலை ஜெர்மனி, சுலோவேணியா, ஆஸ்திரியா, லீக்டென்ஸ்டெயின், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சு நாடுகளில் எல்லாம் போர்வையைப் போல பரவிக் கிடக்கிறது. ஆனால் ஆல்ப்ஸ் மலை சுவிட்சர்லாந்தின் பரப்பளவில் 60 விழுக்காடு இருப்பதாலும், மற்றும் பல இடங்களில் மலைச் சிகரங்களுக்குச் செல்ல அனைத்து வழி வகைகளையும் செய்து உள்ளதாலும் இங்கு ஆல்ப்ஸ் மலை சிறப்பு மிகுந்ததாக உள்ளது. ஆனால், ஆஸ்திரிய பகுதியில்தான் ஆல்ப்ஸ் மிகுதியாகவும், அழகு மிகுந்தும் காணப்படுகின்றது. ஆனால், அங்கே உள்ள அனைத்து மலைச் சிகரங்களுக்கு செல்லப் போதுமான வழிவகைகள் இல்லாததால், சுவிட்சர்லாந்தின் மலைச்சிகரங்களில் சுற்றுலாப் பயணிகள் நிறைந்து வழிகின்றனர். சுவிட்சர்லாந்தில் 13000 அடிகளுக்கு மேல் 100 மலைச்சிகரங்கள் உள்ளன.
மலைச்சிகரங்களுக்குச் செல்ல மலை ரயில்களும், கேபிள் கார்களும் மற்றும் சுற்றிச் சுழன்று செல்லும் கண்டோலாக்களும் அமைத்து உள்ளனர். கண்டோலாக்களில் அமர்ந்து ஆகாயத்தில் செல்லும்போது கீழே பூமியைப் பார்த்தால் இதை கட்டமைத்து உள்ள முறை வியப்பாக இருக்கிறது. ரயில்கள் மலைகளிடையே ஊர்ந்து செல்ல பல இடங்களில் மலையைக் குடைந்து குகைகளை அமைத்து உள்ளனர். மலையைக் குடைந்து குகைகளை அமைப்பதில் வல்லவர்கள் இவர்கள். மக்கள் பயணத்திற்குத் தேவையான அனைத்து போக்குவரத்து கட்டமைப்புகளையும் அமைத்து உள்ளனர். இருப்பினும் மென்மேலும் தொடர்ச்சியாக மலையைக் குடைந்து பயணப் பாதைகளை அமைத்து வருகின்றனர். இப்பொழுது சூரிச் நகருக்கும் இத்தாலியின் மிலன் நகருக்கும் இடையே உள்ள ஆல்ப்ஸ் மலையில் குகைகளை புதிதாகக் குடைந்து முடித்து உள்ளனர். தற்பொழுது அங்கே ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிக்காக, இதுவரையிலும் மொத்தமாகப் பத்து ஆண்டுகள் செலவழித்து உள்ளனர்.
ஏற்கனவே இந்த இரு நகரங்களுக்கும் இடையே ரயில் போக்குவரத்து உள்ளதே, புதிதாக எதற்கு இந்த குகை என்று கேட்டால், பயண நேரத்தை மேலும் ஒரு மணி நேரம் குறைப்பதற்காக என்கிறார்கள்.


இதைப்போல இவர்களுடைய எதிர்கால திட்டங்களைக் கேட்கும் போது வியப்பாக உள்ளது. சூரிச் மற்றும் மிலன் நகரங்களுக்கு இடையிலான ரயிலில் பயணம் செய்வதற்கு தற்பொழுது மூன்றரை மணிநேரம் ஆகும். அதில் பாதி நேரம் அழகிய ஆல்ப்ஸ் மலையிடையே ரயில் பயணம் இருக்கும். இந்தப் பாதையில் செல்லும்போது அழகிய ஆல்ப்ஸ் மலைகளையும், ஒரு மலைத்தொடரில் இருந்து மற்ற மலைத்தொடருக்கு செல்ல அமைத்துள்ள பாலங்கள் போன்ற கட்டமைப்புகளையும் ரசித்து மகிழலாம், சலிப்பே தோன்றாது. ஆல்ப்ஸ் மலையிலேயே நாள் முழுவதும் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தும் அமைந்து உள்ளது.
இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் வரும்போது ஆல்ப்ஸ் மலையில் இருக்கும் இரு மலைத்தொடர்களுக்கு மட்டுமே செல்வார்கள். ஒன்று இண்டர்லேகன் (Interlaken) நகரத்துக்கு அருகே உள்ள ஜங்புரோ(Jungfrau) என்ற மலைத்தொடர் (உயரம் – 11782 அடி), மற்றொன்று லூசர்ன் நகருக்கு அருகே உள்ள டிட்லிஸ் (Titlis) மலைத்தொடர் (உயரம் – 10627 அடி). இதில் ஜங்புரோ ஐரோப்பாவின் உயரமான மலைத்தொடர் (Top of Europe) என்று அழைக்கப்படுகிறது. இங்கே இந்திய உணவகம் அமைந்து உள்ளது. இருப்பதிலேயே உயரமான மலைத்தொடர் மாண்டே ரோசா (15,203 அடி), சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்து உள்ளது. ஆல்ப்ஸ் மலையின் அழகையும், பச்சைப்பசேல் என்று இருக்கும் சுவிட்சர்லாந்தையும் வருணித்துக் கொண்டே இருக்கலாம்.
பொழுதுபோக்கு:
இங்கு உள்ள மக்களின் முக்கியமான பொழுதுபோக்கே விதவிதமான விளையாட்டுக்கள்தான். கால நிலைக்கு ஏற்றவாறு விளையாட்டு முறைகளை மேற்கொள்வார்கள். சுவிட்சர்லாந்தில் வெயில் காலம், இலையுதிர் காலம், இளவேனிற்காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய பருவகாலங்கள் உள்ளன.
குளிர்காலம் என்றால் மலைத்தொடருக்குச் சென்று பனிச்சறுக்கு தொடர்பான விளையாட்டுகளையும், மீதம் உள்ள காலங்களில் மலையேற்றம், பைகிங் (சைக்கிலிங்) போன்ற விளையாட்டுகளையும் மேற்கொள்வார்கள். நமது ஊர்களில் பைக் என்றால் மோட்டார் சைக்கிளை குறிப்பிடுவோம், ஆனால் இங்கே சைக்கிளை, பைக் என்று குறிப்பிடுகிறார்கள், ஆதலால் பைகிங் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் உடலை காட்டுக்கோப்பாக வைத்து கொள்ள விரும்புவார்கள். எழுபது வயதானவர்கள் கூட கைகளில் குச்சிகளை வைத்துக்கொண்டு மலையில் இருந்து (10, 000 அடி) அடிவாரத்திற்கு வெயில் காலங்களில் நடந்து செல்வதைப் பார்க்கலாம்.
எனது அலுவலக நண்பர்கள் பலர் வாரம் இருமுறை மதிய உணவுக்குமுன் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடிவிட்டு (ஜாக்கிங்) வருவார்கள். 10 கி.மீ தூரத்துக்கு குறையாமல் இருக்கும். அதுவும் சமதளப்பகுதியில் அல்ல, மேடுகளைக் கொண்ட மலைப்பாதைகளில், அந்த அளவுக்கு சக்தி இருக்கும்.
swiss_620
இங்கே குழந்தைகளுக்கு இரண்டரை வயதிலேயே பனிச்சறுக்கு விளையாட்டு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர். ஓராண்டு இடைவெளியிலேயே தனியாக பயிற்சிகளை மேற்கொள்ளும் அளவுக்கு நன்கு பழகி விடுகின்றனர். குளிர்காலம் வந்துவிட்டால் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் எங்கும் பனிச்சறுக்கு கருவிகளோடு மக்கள் குவிந்து இருப்பதைப் பார்க்கலாம். ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகளில் இருந்தும் பனிச்சசறுக்கு விளையாட சுவிட்சர்லாந்துக்கு வந்து விடுவார்கள். நானும் ஒருமுறை முயற்சி செய்தேன்; கடினமாக இருந்தது; மறுமுறை வாய்ப்பு கிட்டவில்லை.
வெயில்காலம் வந்தால் ஆங்காங்கே அடுப்புகளில் விறகுகளைப் போட்டு எரித்து, அதன்மேல் கம்பி வலையை (Grill) வைத்து, பின் இறைச்சிகளை அதன் மேல் போட்டு சுட்டுத் தின்கிறார்கள் (Barbecue). ஆண்டு முழுவதுமே இங்கே சைக்கிளில் அலுவலகத்துக்கு வருகிறார்கள். பனிப் பொழிவின் போது கூட சைக்கிளில்தான் வருகிறார்கள்.
பொழுதுபோக்குக்கென்று திரை அரங்குகள் உள்ளன. ஜெர்மன் மொழியில்தான் திரைப்படங்கள் இருக்கும். இரவுக்காட்சி மட்டும் ஆங்கிலத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது புதிய தமிழ்ப் படங்களும் நமது ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் எடுத்து திரையிடுவார்கள்.
இந்திய திரைப்படங்களுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறையவே நடக்கின்றது. பல தமிழ் படங்களின் பாடல்களில் சுவிட்சர்லாந்தின் அழகைக் காணலாம்.
ஈழத் தமிழ் சொந்தங்கள்:
சுவிஸ் நாட்டில் உள்ள நமது ரத்த பந்தங்களான ஈழத் தமிழ்ச் சொந்தங்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 90களில் இந்த நாட்டிற்கு ஏதிலியராகக் குடிவந்தவர்கள் 18,000 பேர் இருக்கலாம். இன்று 55,000 பேர்களாக உள்ளனர். இங்கே வருபவர்களை சில மாதங்கள் முகாமில் வைத்திருந்துவிட்டு, பின்னர் இந்தெந்த ஊர்களுக்கு இத்தனை பேர் என்று பிரித்து அனுப்பி, அவர்களுக்கு வேலை கிடைக்க வழியும் செய்து இருக்கின்றது அரசாங்கம்.
சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஈழத்தமிழர்கள் இன்று நல்ல வசதியுடன் கார், வீடு என வாழ்ந்து வருகின்றனர். உண்மையாக உழைப்பதனால் ஈழத் தமிழர்களை சுவிட்சர்லாந்து மக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஈழத்தமிழர்கள் இந்திய உணவகங்கள் மற்றும் கடைகள் வைத்து வணிகம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. அவர்களே பல ஊர்களில் இந்துக் கோவில்களை நிறுவி, வழிபட்டு வருகின்றனர். சூரிச் நகரில் முருகன் கோவில் ஒன்றும், சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
குழந்தைகளுக்கு தமிழ் எழுத, படிக்க பயிற்றுவிக்க வகுப்புகள் எடுக்கின்றனர். எனவே, ஈழத்தமிழ் குழந்தைகளுக்கு நன்கு தமிழ் எழுத, படிக்கத் தெரிந்து உள்ளது. ஈழத்தமிழ் நண்பர்கள் ஈழத்தில் நடக்கும் அவலங்களைச் சொல்லுவதைக் கேட்கும்போதே நெஞ்சைப் பிசையும்.
கல்வி முறை:
சுவிட்சர்லாந்தில் ஜெர்மன் வழிப் பள்ளிகளில் கல்வி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலவழிப் பள்ளிகளில் கல்விக்கு நிறைய பணம் செலுத்த வேண்டும். பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவுதான். இங்கே குழந்தைகளைப் படி படி என்று வற்புறுத்துவதே இல்லை. 7 வயது வரை அதிகமாக விளையாடத்தான் விடுவார்கள். அதற்கு அப்புறம்தான் A, B, C, D கற்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகளை வாரம் ஒருமுறை அருங்காட்சியகத்துக்கோ அல்லது காட்டுக்கோ அழைத்துச் செல்வார்கள். செய்முறைக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. தொடக்கக் கல்வி முடிக்கும்போதே அடுத்து அந்தக் குழந்தை என்ன படிப்புக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்து விடுவார்கள். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களும் இங்கே உள்ளன.


19 வயதில் அனைத்து இளைஞ‌ர்களும் கட்டாயமாக ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டும், பெண்கள் விருப்பப்ப‌ட்டால் செல்லலாம். ஆனால் இங்கே ராணுவத்தை தொழிலாகக் கொண்டு உள்ள வீரர்கள் மிகக்குறைவு.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. நோப‌ல் பரிசு வென்ற, உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்துதான் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளை (Theory of Relativity) மேற்கொண்டார். அவர் பெர்ன் நகரத்தில் தங்கி இருந்த வீட்டை கண்காட்சியக‌மாக அமைத்து உள்ளன

இளையராஜா. ராஜா ராஜா தான்.


இளையராஜா என்னும் இசையமைப்பாளரை யாருக்கு தான் தெரியாது...? இளையராஜா.. இசைஞானி, ராகததேவன், மேஸ்ட்ரோ, இசை இளையராஜா. இதெல்லாமும் அவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள். அவரது இசையை அனுபவித்து வளர்ந்தவன் நான். எனக்கு என்றும் மாறாத மரியாதைக்குரிய விஷயங்களில் பிரதானமான இடம் இளையராஜாவுக்கு உண்டு. எனக்கும் இளையராஜாவுக்கும் எந்த நேரடி அறிமுகங்களும் இல்லை என்றாலும் என்னை சமைத்த ஆளுமைகளில் தலையான தனிமையான என்னைத் தன் வயப்படுத்தி வைத்திருந்த ஆளுமை இளையராஜா.

illaiyarajaஇந்த கட்டுரை இளையராஜாவின் இசைத்திறன் பற்றியது அல்ல. என் இளையராஜா. இளையராஜாவின் நான். அவ்வளவு தான். என் சுயசரிதையின் தொடக்கமாகக் கூட எனது பால்யத்தை கொள்வதே நியாயம். அந்த வகையிலும், எனது பால்யம் என்பதும் (1977-1990) எனது வாலிபம் (91-2000) என்பதும் எனது தற்காலம் என்பதும் 2000த்திலிருந்து இன்று வரை...இளையராஜாவின் எழுச்சி, இளையராஜாவின் ஆட்சி இளையராஜாவின் தனிமை என மூன்று காலங்களாக பிரித்துப்பார்க்க முடியும் என்பது ஆச்சர்யமற்றது. இளையராஜா, காலத்தைக் கட்டிய நாயகன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.



1986-87 வாக்கில் நாங்கள் அப்பொழுது மதுரை கோ.புதூரில் வசித்துக்கொண்டிருந்தோம். ஈ.எம்.ஜி நகர் என்ற குடியிருப்பு பிரதேசம். அந்த சூழலில் எனக்கு 10 வயது தான். இளையராஜாவின் பிரபல பாடல்களை கேட்டே வளர்ந்தேன். எனக்கிருக்கும் ஒரே சகோதரி உமா, அப்பொழுது அந்த பகுதி பொங்கல் விழாவில் இளையராஜாவின் "ஊரு சனம் தூங்கிருச்சு" (மெல்ல திறந்தது கதவு) என்ற பாடலை பாடி முதல் பரிசு பெற்ற பாட்டுப்போட்டியை எங்களால் மறக்கவே முடியாது. கருத்தொற்றுமை இல்லாத தீவுகளாய் சிதறியிருந்த எனது சித்தப்பாக்கள், மாமாக்கள் அனைவருக்கும் பொதுவான நம்பிக்கை என் அக்காள் மிக நன்றாகப் பாடுவாள் என்பதாக இருந்தது. அவளும் நன்றாகவே பாடுவாள்.

ஒரு முறை எனது ஒரே தாய்மாமன் (அவர் என்னை பொருத்தவரை ஒரு அன்னியன்.) அவர் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பங்களுக்கிடையில் நிகழ்ந்த மனஸ்தாபங்களுக்கு பின்னதாய் எழுந்த மிக நீண்ட அமைதியொன்றைக் கலைக்க உதவியவர் இளையராஜா. அவரது மணியோசை கேட்டு எழுந்து....(பயணங்கள் முடிவதில்லை) என்ற பாடலை என் அக்காளை பாட சொல்லி என் தாய் மாமன் கேட்க.. அவள் பாட, அவர் பாராட்ட,நல்லவேளை சகஜமானது சூழல். இல்லையேல் அன்றைக்கு உலகப்போர் மூண்டிருக்க வேண்டியது.

என் தந்தை எனக்கு தெரிய அவர் வயது இன்றைக்கு இருந்தால் 73. காலமாகிவிட்ட அவர் அடிக்கடி பாடுவது அல்லது முணுமுணுப்பது சில பழைய பாடல்களை.
1.நீலவண்ணக் கண்ணா வாடா.
2.நான் பெற்ற செல்வம்...நலமான செல்வம்.
அவ்வளவுதான் நினைவிருக்கிறது. ஆனால் அவர் அந்திமக்காலங்களில் அப்பொழுது சாடிலைட் டி.வி. அறிமுகமான பொழுது 1994-96. அவர் அடிக்கடி கேட்ட பாடல், அதை யார் பாடினாலும் விரும்பிக் கேட்பார். ஒரே ஒரு பாடல். வனக்குயிலே குயில் தரும் இசையே..(ப்ரியங்கா) இந்தப் பாடலை அவர் எந்த அளவுக்கு விரும்பினார் என்பதை வேறெந்த பாட்டையுமே அவர் விரும்பியதில்லை என்ற அளவிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைக்கும் என் தந்தை குறித்த நினைவுகளை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இந்த பாடலளவுக்கு வேறெந்த விஷயமுமே ஏற்படுத்திவிடுவதில்லை அவ்வளவு உடனடியாக.

பள்ளி இறுதி நாட்களில் நான் ரஜினிகாந்த் ரசிகனாயிருந்தேன். அவர் நடித்த தளபதி திரைப்படம் 1991 தீபாவளிக்கு வெளியானது. மதுரையில் இரண்டு திரை அரங்கங்களில் வெளியானது. அப்பொழுது இரண்டில் தான் வெளியாகும். இன்றைக்கு திருட்டு டிவிடிக்கு பயந்து 7 அல்லது 8 அரங்குகளில் வெளியாகின்றது. எந்திரன் 18 தியேட்டர்கள். அன்றைக்கு அப்படி இல்லை.  இரண்டு தான். 100 நாள் ஓடியே தீரும் ரஜினி படங்கள். ஆனால் தளபதிக்கு முன்னால் மிகச் சமீபமான காந்தி ஜெயந்தி அன்று நாட்டுக்கு ஒரு நல்லவன் என்னும் படம் வந்து இருந்தது. மரண அடி வாங்கிய படம். குழந்தைத்தனமான ரஜினி படமும் கூட. விளைவு என்னை போன்ற ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் உடனடி அடுத்த படமாக தளபதி வந்தது.

அப்பொழுது நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இல்லை இல்லை. பள்ளிக்கு போய் வருவேன் அவ்வளவு தான். அந்த நேரம் படிப்பென்றால் எட்டிக்காயாய் கசந்தது. அது என்றைக்குமே இனிக்கவில்லை அது வேறு விஷயம். அந்த நேரம் எனக்கு பெரிய அரங்கமான மதுரை சரஸ்வதிக்கு எப்படி செல்வது என வழி தெரியாது. வீடு வேறு நகரத்தின் வெளியே ஒதுக்குப்புறமான திருநகருக்கு மாற்றப்பட்டிருந்தது. அதனால் சின்ன அரங்கமான எனது பள்ளிக்கு அருகாமையில் இருக்க கூடிய அம்பிகைக்கு சென்றேன்.
அரங்க வாயிலில் 3 சீட்டு ஆடிக்கொண்டிருந்த சில நல்லவர்களை நம்பி இருந்த பணத்தில் பெரும் பகுதியை தொலைத்து விட்டு மிச்ச சொச்சத்தில் ஒருவழியாக தலைவனைப் பார்த்தேன். அன்று வகுப்பை கட் அடித்திருந்தேன் வழக்கம் போல. மறுநாள், பள்ளிக்கு சென்றால், எனது வகுப்பாசிரியர் அதே ஷோவுக்கு வந்திருந்ததை நான் தலைவன் மயக்கத்தில் கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் அவர் அங்கேயும் என்னைக் கண்டு கொண்டவர் மறுதினம் வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் என்னை கண்டுகொண்டார் மிகச் சிறப்பாக.

அடி வாங்கி அழுதபடியே வந்தவன் ஒரு டீ கடையில் முட்டை போண்டா (அப்பொழுது 150 காசுகள்) வாங்கி தின்னபடியே அழுது கொண்டிருந்தேன். அந்த நேரம் என்னை எனது அழுகையிலிருந்து மீட்டெடுத்தவர் இளையராஜா. அந்த நேரத்தில் டேப் ரெக்கார்டரில் ஒலித்த ராக்கம்மா கையை தட்டு என்ற பாடலை கேட்டு தளபதி படத்தை பற்றி அந்த வடை மாஸ்டர் அவர் எனக்கு அப்பொழுது மிக நெருக்கம். அவர் என்னை விசாரிக்க அவரிடம் அழுகையை நிறுத்தி விட்டு உடனடி உற்சாகனாய் நான் தளபதி படத்தின் அருமை பெருமைகளை நான் சொல்ல துவங்க அதன் பின் கேட்கவா வேண்டும்..?

எனது கவனம் ரஜினி என்பதிலிருந்து எனது 17 ஆவது வயதில் முழுக்க முழுக்க இளையராஜா மீது திரும்பலானது. அதற்கு காரணம் ரஜினி அல்ல. ஆனால் காதுகளை ஊடுருவி இதயத்தை மயங்க வைத்த மருத்துனாய் இளையராஜா எனக்கும் என் சுற்றத்துக்கும் இருந்தார்.என் குருதிவழிகளை சுத்தப் படுத்தினார்.என் மனசைக் கழுவிக் கோலமிட்டார். என்னை முழுக்க ஆக்ரமித்தார்.

பனி விழும் மலர் வனம் என்னும் இளையராஜாவின் (நினைவெல்லாம் நித்யா) பாடலை என் வாழ்வில் நான் ரசிக்கும் பாடல் நம்பர் 1 எனச் சொல்ல துவங்கி இருந்தேன். அதற்கு ஒரு காரணம், பாலகுமாரன் தனது இரும்புக் குதிரைகளில் அந்த பாடலை வரி வரியாக பயன்படுத்தி இரண்டு பாத்திரங்களின் மனோநிலைகளை எடுத்து வைத்திருப்பார். அந்த பாடலின் மீது அன்று கொண்ட பைத்தியம் இன்றுவரை தொடர்கிறது. ஆக சிறந்த பாடல்களான மூடுபனி (என் இனிய பொன் நிலாவே), ரெட்டை வால் குருவி (ராஜ ராஜ சோழன் நான்), புன்னகை மன்னன் (என்ன சத்தம் இந்த நேரம்), ஆட்டோ ராஜா (சங்கத்தில் பாடாத கவிதை) (மலரே என்னென்ன கோலம்)ராஜா மகள் (பிள்ளை நிலா), மூன்றாம் பிறை (கண்ணே கலை மானே), ஸ்னோரீட்டா(ஜானி)

இந்த பாடல்களெல்லாம் பின்னால் அவற்றிற்கென தன்வரலாறு கொண்டவை. அந்த கால கட்டத்தில் இளையராஜா என் தலைவன் என்று சொல்லத் தொடங்கிய காலம். ஜாதிவெறி மாதிரி மதவெறி மாதிரி, இளையராஜா பற்றி கருத்து கேட்பேன். ஒருவர் அவரை பிடிக்கும் என்று விழி விரிந்தால் அவரை என் உறவாக பார்ப்பேன். இல்லை என்றால் சுட்டெரித்து விடுவேன். இளையராஜா என்னும்  ஆளுமை ஒரு வித்யாசமான, அதே நேரத்தில் நடிகர்களின் ரசிகர் கூட்டத்தை விட சற்று ரசனையில் உயர்ந்த (என்று நாங்களே நம்பிய) கூட்டமாக மாறுவது என்னையும் சேர்த்து பலருக்கும் பிடித்ததாகவே இருந்தது.

இன்றைக்கு தேடிப்பார்த்தாலும் காண்பதற்கு அரிதான விஷயங்களில் ஒன்று தான் கேசட் செண்டர்கள். அதாவது மதுரை நகர் மத்தியில் இருக்கும் கேசட் கடைகள் ஆடியோ மற்றும் வீடியோ கேசட்களை விற்பனை செய்யும்.. அதே நேரத்தில் நகருக்கு வெளியே குடியிருப்பு பகுதிகளான திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆம்ப்ளிஃபையர் உள்ளிட்ட சாதனங்களை வைத்துக் கொண்டு விரும்பும் பாடல்களை விரும்பும் வரிசைகளில் பதிந்து தருவர். அப்படி ஒரு கடை தான் சுரேஷ் என்னும் நண்பரின் கடை.

சமீப வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வந்து எல்லா பழைய பொதுமைகளையும் விழுங்கக் காத்திருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாமல் நாங்கள் இளையராஜாவின் பாடல்களை சுவாசித்து வாழ்ந்திருந்தோம். இன்றைக்கு இண்டெர்னெட்டில் இசை பொங்கி வழிகிறது. எங்கு பார்த்தாலும் எஃப்.எம் எனப்படும்
பண்பலை வானொலி. கைப்பேசியில் நினைவுத்தகடு எனப்படும் மெமரி கார்டுகளில் ப்ரத்யேகங்களில் ஒன்றாக இசை பெருகிக்கொண்டிருக்கிறது. ஐ-பாடு எனப்படும் சின்ன இசைப்பதிவுக்கருவியில் ஆயிரக்கணக்கான பாடல்களை அகர வரிசையில் சேமித்து விடலாம்.

ஆனால்.. அப்பொழுது வாக்மேன் என்னும் கை-இசை-ஒலி கருவி மிக விலை உயர்ந்தது, அந்த காலகட்டம் இளையராஜாவுக்கு சொந்தமாக இருந்தது. அவரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பேரரசனாக அந்த காலகட்டத்தை ஆளவே செய்தார். ஒரு கண்டக்டரும், மாணவனாகிய நானும், அகதி முகாமினை சேர்ந்த ஒரு தோழரும் மணிக்கணக்கில் திருநகர் 5வது பேருந்து நிறுத்தத்தில் நின்று பேசியபடியே இருப்போம். எங்களது பேச்சின் பொதுப்பொருள், அறிமுக காலகட்டத்திலிருந்து இளையராஜாவின் வளர்ச்சியும் அவரது இசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் இன்றைக்கு நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவருமே ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாதவர்கள். அதே போல என்னால் இன்றைக்கும் உறுதியாக சொல்ல முடியும், எங்களுக்கு இடையில் இருந்தது நட்பு அல்ல. ஒன்லி ராஜா. அவரை பற்றி விட்ட இடத்திலிருந்து பேசுவோம். கலைந்து சென்று விடுவோம். அவ்வளவு தான்.

அந்த நேரத்தில் திரு நகர் மையத்தில் இருக்ககூடிய அண்ணா பூங்காவுக்கு அருகில் இருக்க கூடிய கேஃப்டீரியா என்னும் காபி கடை. அதை நடத்தியவர் தீபக் என்னும் ஒருவர். தில்லி அடிக்கடி சென்றுவருபவர். அவர் என்னை விட ஒரு பத்து வயதுகள் மூத்தவராக இருப்பார். அவர் அந்த கடையை நடத்தியதே ஒரு அலாதியான விஷயம். அந்த கடை அன்றைய காலகட்டத்தில் மதுரை மாதிரியான ஒரு இரண்டாம் நிலை நகரத்தில் நிச்சயமாக ஒரு புதுமை தான்.

அலங்கரிக்கபட்ட சுற்றுசுவர்கள். தரையில் மென்மையான மணல். சின்ன சின்ன வட்ட மேசைகள். ஒவ்வொரு வட்டத்திற்கும் குவியும் தனிப்பட்ட விளக்குகள்  என மிக அருமையான உள்ளமைப்பு கொண்டவை. அந்த நேரத்தில் மற்ற கடைகள் திணறும் அளவுக்கு ஒரு 8 சதுர கிலோமீட்டருக்கு தீபக்கை அடிக்க ஆளே இல்லை என்னும் நிலை. அவர் எதை கையாண்டாலும் விற்கும். அந்த நேரத்தில் 18லிருந்து 25 வரை வயதுடையவர்களுக்கு தீபக் கடை தான் கோயில். அங்கு வழக்கமாக கூடுவதை (டாப் அடிப்பது) ஒரு கௌரவமாக அந்த பகுதி இளைஞர்கள் கருதிவந்த நேரம் அது.

அந்த கடை என்னை வசீகரித்து கொண்டதற்கு மேற்சொன்ன எல்லா விஷயங்களைக் காட்டிலும் தலையாய காரணம், சொல்லவே தேவை இல்லை. இளையராஜா. தீபக் மென்மையான குரலுக்கு சொந்தகாரர். அவர் ராஜ் சீதாராம், சுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி, ஜென்சி, சசிரேகா என விதவிதமான குரல்களை எனக்கு தனித்து அறிய செய்தவர். இளையராஜாவின் சம வரிசையில் இயங்கின ஷ்யாம், சங்கர் கணேஷ், கங்கை அமரன், டி.ராஜேந்தர் ஆகிய ஆளுமைகளையும் கூட பட்டியலிடக் கூடியவர். தீபக் என்பவரை சந்தித்து இராவிட்டால் நான் அந்த காலகட்டத்துக்கு முந்தைய நல்ல பல பாடல்களை அறிய ரசிக்க மிகுந்த சிரமப்பட்டிருக்க நேர்ந்திருக்கும்.

தீபக் இன்றைக்கு தில்லியிலே குடியேறி விட்டார். அவரை பார்த்து சற்றேறக் குறைய 14 வருடங்கள் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் எங்கே இருந்தாலும் அந்த சுற்றுப்புறத்தில் இளையராஜாவை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பார் யாரையாவது. அந்த கடைக்கு இரண்டு பேர் வருவார்கள். அவர்களின் பெயர் சிவாஜி மற்றும் கணேசன். இருவரும் சவுராஷ்ட்ரா இனத்தை சேர்ந்தவர்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் தான் அந்த இரண்டு பேரையும் காண முடியும். வெவ்வேறு இடங்களை சேர்ந்த நண்பர்கள். அவர்கள் வேறு யாருடனும் பேச மாட்டார்கள். ஒரு டேபிளில் அமர்ந்து கிட்ட தட்ட 2 மணி நேரங்கள் அவர்களுக்குள்ளே கிசுகிசுத்த குரலில் பேசியபடியே இருப்பர். எழுந்து போய் விடுவர்.

ரொம்ப நாளாக நான் அவர்களை கவனித்த பிறகு தான் தெரியும். அவர்கள் இருவரும் இளையராஜாவின் மிகத்தீவிர ரசிகர்களென்பது. அது தெரிந்து விட்டால் போதாதா..? அப்புறம் ஒரே சங்கமம் தான். அதன் பின் தீபக் அந்த கடையை நடத்தி முடிக்கும் வரை இளையராஜாவுக்காகவே சொல்லிவைத்து சந்திப்போம். அவர்களின் இசை ஞானம் மிக துல்லியமானது. அப்பொழுது வெளியாகியிருந்த இன்னாத்தே சிந்த விஷயம் என்னும் மலையாள படத்தின் இசைக்கேசட் அவர்களிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டது எனக்கு பொறாமையையும் அதே நேரத்தில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தில் இளையராஜா இசையில் மதுபாலக்ருஷ்ணன் பாடிய மனசிலொரு பூமாலா என்னும் பாடல் அதன் பிறகு வெகுநாளைக்கு என் இதழ்களின் முணுமுணுப்பில் இருந்தது

.

ஓளங்கள் படத்தில் இளையராஜா தனது தமிழ்பாடலான சங்கத்தில் பாடாத கவிதை பாடலை "தும்பி வா தும்பக் குடத்தில்" என்ற மறு உருவாக்கம் செய்தது பற்றி கனேஷ் சொல்லும் பொழுது அவர் விழிகள் மின்னும். வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். இளையராஜா மீதான மரியாதை கூட்டல் மடங்குகளில் இருந்து பெருக்கல் மடங்குகளுக்கு மாறியது என சொல்லலாம்.

இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது மற்றும் என் குடும்ப நண்பன் கருப்பையா ராஜா. அவர் அடிப்படையில் நல்ல ஓவியர். அவர் டைப் ரைட்டிங்க் செண்டரொன்றில் சேர்ந்து நல்ல தட்டச்சு புலமை கைவந்த பிறகு இளையராஜாவின் பிரசித்து பெற்ற உருவ ஓவியம் அப்போதைக்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தது. அந்த ஓவியத்தின் மூலவரை படத்தை பென்சிலால் வரைந்து கொண்டு அதனை முழுக்க முழுக்க ச ரி க ம ப த நி என்னும் சப்த ஸ்வ்ரங்களின் லிபிகளைக் கொண்டு மட்டும் அதை வரைந்து ஒரு நாள் என் வீட்டுக்கு எடுத்து வந்தார். அதை நான் விருப்ப பரிசாக கருதி பிடுங்கிக் கொண்டேன். என்னை விட வேறு யாருக்கும் அதை வைத்திருக்கும் உரிமை இருப்பதாக அப்போதைக்கு நான் கருதவே இல்லை என்பது தான் வேடிக்கை. அந்த படத்தை பிறகு சில சந்தர்ப்பங்களில் என்னை புதிதாக அறிய நேரும் நண்பர்களிடம் கூசாமல் அதை செய்தவன் நான் தான் என அறிமுகப்படுத்திக் கொண்டு காண்பிப்பேன்.

ரஹ்மானின் பிரசித்தி காலத்தில் நாட்டுப்புறப் பாட்டு, காதலுக்கு மரியாதை, ஹேராம் என இளையராஜாவின் வெரைட்டி  தொடர்ந்தது. அது போன்ற இளையராஜாவின் சூப்பர் ஹிட் அவதாரங்கள் வரும்பொழுதெல்லாம் அது தான் எனக்கும் என் வட்டத்தாருக்கும் பேச்சு சிந்தனை என எல்லாருக்குமான மனசு ரிங் டோங்களாக இருந்தன.

இளையராஜா அதற்குப் பிறகு எப்பொழுதுமே தனது இசையில் குறை வைக்கவே இல்லை. காலம் என்னையும் எனை ஒத்த என் வட்டாரத்து ரசிகர்களையும் வேண்டுமானால் பிரிக்க  முடிந்திருக்கலாம். ஆனாலும் என்னை மயக்கிய என்று சொல்ல கூடாது. அது வெறும் வார்த்தைக்கூட்டம் தான். என்னை பொருத்த வரை என்னை பலமுறை மீட்டெடுத்த மருத்துவர் இளையராஜா. இந்த இதே வாக்கியத்தை 3 வருடங்களுக்கு முன்னால் என் கடையின் கல்லாவில் அமர்ந்தபடி நான் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தனவேலன் என்ற திருநகரை சேர்ந்த புதிய நண்பரொருவர் என் கடைக்கு வந்திருந்தார். அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்த எனது தோழர் புறப்பட்டுச் சென்ற பிறகு மெல்லிய குரலில் என்னிடம் கேட்டார்.
"இளையராஜாவ அவ்வளவு பிடிக்குமா..?"
"அவ்வளவு பிடிக்காது ப்ரதர். அதுக்கெல்லாம் மேல பிடிக்கும்"
"சந்தோஷமா இருக்கு ரவி...நான் அடுத்த முறை அவரை பார்க்கும் பொழுது சொல்றேன்"
":உங்களுக்கு அவர தெரியுமா..?"
நான் கேட்ட பொழுது அவர் தெரியும் என எதாவது சொல்வார் என எதிர்பார்த்தேன். அவர் அந்த வட்டாரத்தில் ஒரு பெரும்புள்ளி. அதோடு கூட ஒரு கல்லூரியின் இயக்குநரும் கூட. அவர் என்னிடம் சொன்னார் "என் மனைவியோட தம்பி தான் சபரி. பவதாரணியோட கணவர்"
எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஏதோ இளையராஜாவே என் கடைக்கு வந்தாற்போல இறக்கை கட்டிப் பறந்தேன். இன்று வரை அவரது வீட்டுக்கு ராஜா வந்தால் எனக்கு தெரிவிக்க வேண்டும் என அவரை அன்பாக மிரட்டியிருக்கிறேன். அவர் கண்டிப்பாக ஒருநாள் சொல்வார் என இன்னமும் நம்புகிறேன்.
ஆனால் இந்த கட்டுரை இதுவரை சொல்லப்பட்டவற்றுக்காக எழுதவில்லை. எழுத வைத்த சம்பவம் மிகச்சிறியது. சென்ற வாரம் எனக்குத் தெரிந்த செல் கடையொன்றில் நின்று கொண்டிருந்தேன். சில சி.டி க்களை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த கடைக்கு ஒரு சிறுமி அல்லது இளம் பெண் சொல்லபோனால் 14 வயது இருக்கும். வந்தவள் என் நண்பர் கடை முதலாளியிடம் "எனக்கு ஐ.பாட் ல சாங்க்ஸ் ஏத்தி தருவீங்களா..?" எனக்கேட்க, லிஸ்டை வாங்கினார். நான் மேலோட்டமாக அந்த பட்டியலை பார்த்தேன்.
எல்லாமே இளையராஜா பாடல்கள். 70களிலிருந்து நேற்று வரை கிட்டத்தட்ட 300 பாடல்கள்.
நான் கேட்டே விட்டேன் "இதெல்லாம் யார் கேட்கறதுக்கு பதியுறீங்க..?"


"எனக்கு தான்.. நான் தான் கேட்பேன்"
"இளையராஜா பிடிக்குமா ரொம்ப..?
"இளையராஜா மட்டும் தான் பிடிக்கும்"
அது தான் அது தான் இளையராஜா. ராஜா ராஜா தான்.