Thursday 26 March 2015

சுகன்யா... 76

"குட் மார்னிங் மேடம்.."

தன் முதுகின் பின்னாலிருந்த வந்த கனமானக் குரல் கேட்டு சுகன்யா விருட்டெனத் திரும்பினாள். திரும்பியவள் மீண்டும் ஒருமுறை தன் மனதுக்குள் அரை வினாடி அதிர்ந்தாள். எப்பவும் அழுது வடியற இந்த செக்ஷ்ன்ல்ல, காலங்காத்தால என்னைத் தேடிவந்து ஒருத்தன் வணக்கம் சொல்றான்? யார் இவன்?

அந்த நிமிடம்வரை சுகன்யா அந்த இளைஞனை தன் அலுவலகத்தில் பார்த்ததேயில்லை. முதல் முறையாக பார்ப்பவர்களையும், ஒரே பார்வையில் வசீகரிக்கும் இதமான புன்முறுவலுடன், களையான, கவர்ச்சிகரமான முகத்துடன், மிகவும் நேர்த்தியான உடைகளில் உற்சாகமாக நின்று கொண்டிருந்தான் அவன்.

சுனில் குமார் பரத்வாஜ் என்கிற பரத், அணிந்திருந்த விலையுயர்ந்த கருப்பு நிற ஷூவில், ஒருவர் தன் முகத்தை தெளிவாகப் பார்த்துக்கொள்ளலாம் என்பது போல், பளபளப்பாக அவன் காலில் மின்னிக்கொண்டிருந்தன. அவன் மணிக்கட்டில் விலை உயர்ந்த 'ஃபாஸ்ட்ரேக்' மின்னிக்கொண்டிருந்தது.



உயரமாக, வாட்டசாட்டமாக, முகத்தில் முடியே இல்லாமல், மழமழவென மழிக்கப்பட்ட முகத்துடன், சுகன்யாவின் எதிரில் நின்றிருந்தான். சற்றே நீளமான முடி. தலைமுடியை வகிடெடுக்காமல், பின்புறம் தள்ளி தூக்கி வாரியிருந்தான். சுருக்கங்கள் இல்லாத அகலமான நெற்றி. கூர்மையான மூக்கு, கவர்ச்சியான கண்கள். பெண்களுக்கு இருப்பதைப் போல அடர்த்தியான கருகருவென புருவங்கள். ரோஜா நிற உதடுகள், யாரோ அளவெடுத்து செதுக்கி ஒட்ட வைத்த மாதிரி இருந்தன.

முகத்தில் இலேசாக பெண்மையின் சாயல் இருந்த போதிலும், பேசிய குரலில் அமிதாப்பச்சனின் கம்பீரம் இருந்தது. வளப்பமான சதைப்பிடிப்பான கன்னங்கள். முதல் பார்வைக்கு சென்னையில், பூர்வீகமாக வட்டி கடை நடத்திக் கொண்டிருக்கும், ஒரு சேட்டு வீட்டுப் பையனைப் போல் செழிப்பாக இருந்தான். மொத்தத்தில் 'பாபி' திரைப்படத்தில் நடித்த இளமைக்கால ரிஷிகபூரை ஞாபகப்படுத்தினான் அவன்.

"குட் மார்னிங்..." சுகன்யாவும் புன்னகையுடன் பதிலளித்தாள். மனதில் இருந்த உற்சாகம், அவள் குரலில் வெள்ளமாக வந்தது.

"அயாம் எஸ்.கே. பரத்வாஜ்... யூ மஸ்ட் பி மிஸ் சுகன்யா.." கணீரென, அதிகாரத்தோரணையில் வந்தது அவன் குரல்.

"யெஸ்... அயாம்... சுகன்யா... பட் அயாம் சாரி... யுர்செல்ஃப்.." இவனை யாருன்னு எனக்குத் தெரியலயே... ஹெட் ஆஃபிசுலேருந்து டெம்பரவரி டீயுட்டில வர்ற ஆஃபிசர்களா ஒருத்தனா இருப்பானா இவன்? மனதுக்குள் குழம்பினாள் அவள்.

"மேடம்... வெரி க்ளாட் டு மீட் யூ... நான் இந்த ஆஃபீசுல புதுசா... அஸிஸ்டன்டா ஜாய்ன் பண்ணியிருக்கேன்... லாஸ்ட் ஃப்ரைடே, ரெண்டு நாள் முன்னாடித்தான், எனக்கு இந்த செக்ஷ்ன்ல்ல போஸ்டிங் குடுத்து இருக்காங்க... வீக் எண்டுக்கு அப்புறம் இன்னைக்கு நான் ரிபோர்ட் பண்ண வந்திருக்கேன்..."

"வெல்கம்.. வெல்கம்... அதுக்குள்ள என் பேரெல்லாம் தெரிஞ்சுகிட்டு இருக்கீங்க.." அப்படாவென இருந்தது அவளுக்கு... என்ன அதிகாரமா பேசறான்...? ஒரு செகண்ட் பயந்தே போயிட்டேன்...!! கடைசீல இவனும் என்னை மாதிரி இங்க குப்பை கொட்ட வந்திருக்கறவன்தானா? தன் கன்னங்கள் குழைய, முல்லைநிறப் பற்கள் தெரிய சிரித்தாள், சுகன்யா.

"தேங்க்யூ..மேம்.. வெள்ளிக்கிழமை ஈவினிங் அஞ்சு மணி வாக்குல இங்கே வந்தேன்.. அப்ப வித்யா மேடம் மட்டும்தான் இருந்தாங்க.. நீங்க தான் என் ஜாய்னிங் ரிப்போர்ட்ல்லாம் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு அனுப்புவீங்கன்னு அவங்கதான் உங்களை ரெஃபர் பண்ணாங்க.." அவன் முகத்தில் சிரிப்புக்கு குறைவேயில்லை.

"டோன்ட் வொர்ரீ.. ரெண்டு வாரமா நான் லீவுலே இருந்தேன்... இன்னைக்குத்தான் நானும் வேலையில ஜாய்ன் பண்றேன்... ஜாய்னிங் ரிப்போர்ட் அனுப்பறதெல்லாம் ரூட்டின்னா நடக்கும்.. மொதல்லே உட்க்காருங்க... உங்க பேர் வெறும் பரத்வாஜ் மட்டும்தானா இல்லே.." சுகன்யா இழுத்தாள்.

"என் முழு பேரு சுனில் குமார் பரத்வாஜ்... நான் பிறந்தது லக்னோவுல.. வளர்ந்தது.. ஸ்கூலிங்ல்லாம் டில்லியிலே... மத்தபடி கடந்த அஞ்சு வருஷமா டிகிரி... பி.ஜி பர்சுயூ பண்ணதெல்லாம் தமிழ்நாட்டிலேதான்... அப்பா அம்மா, தங்கை எல்லாரும் இங்கே செங்கல்பட்டுலத்தான் இருக்காங்க..."

"யூ.பி.எஸ்.ஸி. பரிட்சை எழுதிட்டு... ஆஃப்ஷன் தமிழ்நாட்டுக்கு கொடுத்திருந்தேன்.. பார்ட்ச்சுனேட்லி தமிழ்நாட்டுலேயே அலாட்மெண்ட் கிடைச்சிடிச்சி..." பதட்டமில்லாமல், கோர்வையாக, நிதானமாக பேசினான்.

"இன்ட்ரஸ்டிங்... தமிழ் ரொம்ப நல்லா பேசறீங்க..."

"பின்னே.. என் அம்மா தமிழ் பெண்.. அப்பா நார்த் இண்டியன் பரத்வாஜ் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.. நான் ரெண்டும் கெட்டான்... தமிழனும் இல்லே... யூ.பி. வாலாவும் இல்லே... முதலியாரும் இல்லே.. அய்யரும் இல்லே... யாதும் ஊரே யாவரும் கேளீர்... அம்மா மட்டும் என்னை பரத்ன்னு ஆசையா கூப்பிடுவாங்க.." கலகலவென அவன் சிரித்தான்.

"வாவ்... பகுத் படியா... மிஸ்டர் சுனீல்... உங்க சுயசரிதத்தையே சொல்லிட்டீங்க.. ஆப் கி பாத் சுன்கர் மஜா ஆ கயா..!" சுகன்யாவும் கல கலவென சிரித்தாள்.

"உங்களுக்கு இந்தி பேசத் தெரியுமா மேடம்...!!? பர்ஃபெக்ட்டா... சுத்தமான ஹிந்தி பேசறீங்க... நல்லதா போச்சு.. எனக்கு பொழுது போயிடும் இந்த செக்ஷ்ன்ல்ல!!" அவன் முகத்தில் வண்டிவண்டியாக திகைப்பு.

"தோடீ தோடீ ஹிந்தி ஆத்தி ஹை முஜே... நானும் யூ.பி.எஸ்.சி. அலாட்மென்ட்ல வந்தவதான்.. நான் உங்க சீனியர்தான்.. அதுக்காக சும்மா மேடம்... மேடம்ன்னு எனக்கு கொழை அடீக்காதீங்க... வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்.. சுகன்யான்னு கூப்பிடுங்க... அது போதும்... ஓ.கே.. சுகன்யா தன் கையை அவனிடம் நீட்டினாள்.

"தேங்க் யூ... மிஸ் சுகன்யா..."

சுகன்யாவின் நீட்டிய வலதுகையை இறுக்கமாக பற்றி வலுவாக குலுக்கினான், சுனில் குமார் பரத்வாஜ். அவளுக்கு கை வலித்தது. தைரியமான பொண்ணு.. முகத்துல தேவையே இல்லாத போலி, பாசாங்கு எதுவுமில்லே.. பத்தினி வேஷம் போட்டுக்காம, இயல்பா என் மூஞ்சைப் பாத்து சிரிச்சுப் பேசறாளே.. பரத்வாஜுக்கு உடல் சிலிர்த்தது.

"போதும்பா சுனில்... என் கையை விடுங்க.. எப்பாடா... இப்படியா வலிக்கற மாதிரி ஒரு பொம்பளைக் கையை பிடிச்சு குலுக்குவீங்க.. உக்காருங்க உங்க சீட்லே.. ஒரு மேடம் இப்ப வருவாங்க... அவங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜால்ரா அடீங்க.. அப்பத்தான் நீங்க இங்கே பொழைக்க முடியும்..." சுகன்யாவின் முகத்தில் குழந்தைத்தனமும், விஷமத்தனமும் ஒருங்கே குடியேறியிருந்தது.

நான் ஏன் இன்னைக்கு முகம் தெரியாத ஒருத்தன் கிட்ட இந்த அளவுக்கு பேசிக்கிட்டு இருக்கேன். என்னுடைய தனிச்சு இருக்கற சுபாவம் கொஞ்சம் கொஞ்சமா என்னைவிட்டு விலகிப் போற மாதிரி நான் ஃபீல் பண்றேனே.. இதுக்கு என்ன காரணம்? என்னுடைய இந்த பிஹேவியர் சரிதானா?

'சுகன்யா எப்பவும் கலகலப்பா இருடீ... வாழ்க்கையில யாருக்குத்தான் கஷ்டமில்லே... உனக்கு இருக்கற முகஅழகுக்கு நீ சிரிச்சிக்கிட்டே இருந்தீன்னா... இன்னும் அழகா இருப்பே... நீயும் சந்தோஷமா இருக்கலாம்... உன்னை சுத்தி இருக்கறவங்களும் சந்தோஷமா ஃபீல் பண்ணுவாங்க...' சட்டென இதை அடிக்கடி அவளிடம் சொல்லும், வேணியின் முகம் அவள் கண்ணில் வந்து நின்றது.

"சாவித்திரி மேடத்தைத் தானே சொல்றீங்க... முஜே தோ.. வே கதர்னாக் லக்தி ஹைங்!! (எனக்கென்னவோ அவங்க ஒரு டேஞ்சரஸான லேடியா தெரியறாங்க!!!) சுனில் தன் குரலைத் தாழ்த்தி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே பேசினான்.

"புரிஞ்சிக்கிட்டா சரி... பொழக்கற புள்ளைக்கு நான் குடுக்கற இத்தனை ஹிண்ட் போதும்..."

"தேங்க் யூ மிஸ் சுகன்யா... நீங்க சொன்னதை யார்கிட்டவும் நான் சொல்லமாட்டேன்.. கவலைப்படாதீங்க..." அவனும் சகஜமாக பேசினான். பின்னர் கலகலவென சிரித்தான். பற்கள் வெண்முத்துக்களாக பளீரிட்டன.

"க்யீங்க்.. க்யீங்க்..." சுகன்யாவின் எக்ஸ்டன்ஷன் அலறியது.

"சார்... குட்மார்னிங் சார்.. சுகன்யா பேசறேன்.."

"குட்மார்னிங்... சுகன்யா! எப்ப வந்தே நீ சென்னைக்கு... சாவித்திரி ஆஃபிசுக்கு வந்தாச்சா...? அவங்க இன்னும் வந்திருக்கலேன்னா... நீ என் ரூமுக்கு கொஞ்சம் வர்றியாம்மா... சுனில்ன்னு ஒரு பையனை உன் செக்ஷ்னல்லே போஸ்ட் பண்ணியிருக்காங்க.. அந்த பையன் வந்தாச்சா..?"

"யெஸ் சார்... மிஸ்டர் சுனில் வந்திருக்கார்..."

"நீ வரும்போது, அந்தப் பையனையும் உன்னோடவே அழைச்சிக்கிட்டு வாம்மா.. பிளீஸ்.." அவளுடைய பிரிவின் உயர் அதிகாரி கோபாலன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.

"ஓ.கே. சார்... இதோ வர்றேன் சார்..."

"யார் கூப்பிடறது?" கண்களாலேயே பேசினான் சுனில்.

"பேசாம என் பின்னாலே வந்து சேரு..." சுகன்யவும் தன் அழகான கண்களால் பதிலளித்தாள்.

சுனில் குமார் பரத்வாஜ் நீளமாக ஒரு முறை தன் மூச்சை இழுந்து வெளியேற்றினான். வலது கையில் ஒரு குறிப்பெடுக்கும் நோட்டும், மறுகையில் ஒரு பென்சிலுமாக, தனக்கு முன்னால் தோள்களை நிமிர்த்தி, கம்பீரமாக நேரான பார்வையுடன், விடுவிடுவென எதிரில் வருபவர்களை கவனிக்காமல், கோபலனின் அறையை நோக்கி நடந்து செல்லும் சுகன்யாவின் அழகாக அசையும் அவள் பின்னெழில்களை வைத்த கண் வாங்காமல் ரசித்தவாறு, அவள் பின்னால் மெல்ல நடந்த, எஸ்.கே. பரத்வாஜின் மனம் களிப்புடன் முணகத் துவங்கியது.....

"என்ன விலை அழகே...!!!
என்ன விலை அழகே...! சொன்ன விலைக்கு வாங்க வருவேன்..!
விலை உயிரென்றாலும் தருவேன்...!
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ.. ஓ..
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்...!!!"


"மே ஐ கம் இன் சார்...?"
"ப்ளீஸ் கம் இன்... உக்காரும்ம்மா... ஊர்லே எல்லாரும் செளக்கியம்தானே? மிஸ்டர் சுனில் டேக் யுர் சீட்.." கோபலன் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறிப் பேசினார்.
"தேங்க் யூ சார்... மிஸ்டர் சுனிலுக்கு தமிழ் நல்லாத் தெரியுது... நீங்க தமிழ்லேயே பேசலாம்." சுகன்யா மெலிதாக புன்னகைத்தாள். அவளையும் அறியாமல் அவள் முகத்தில் புன்னகை பூக்கள் தாராளமாக பூத்துக்கொண்டிருந்தன.
"ஐ..ஸீ...ரொம்ப சவுகரியமாப் போச்சு..." கோபலன் தன் வழுக்கை மண்டையை தடவிக்கொண்டார்.
"சுகன்யா, உன்னோட டெஸ்க்ல, சப்ஜெக்ட்வைஸ் நீ டீல் பண்ற பைல் லிஸ்ட்ஸ் பிரிப்பேர் பண்ண வேண்டியிருந்தது இல்லையா... அந்த வேலையை சுனில் கிட்ட கொடுங்க... இவர் ஸ்ட்ரெய்ட்டா கம்ப்யூட்டர்ல எக்செல் ஃபார்மேட்ல பைல் டீடெயில்ஸை என்ட்ரி பண்ணிடட்டும்..."
"ஓ.கே. சார்.."
"நம்ம தேவை என்ன...? எந்த ஃபார்மேட்ல பண்ணா... எப்படி பண்ணா ஆன் கோயிங் கம்ப்யூட்டரைசேஷனுக்கு... நம்ம ட்ரெய்னிங்க் செக்ஷ்ன் வொர்க்கை சுலபமா மாத்தமுடியுங்கறதை பத்தி ஏற்கனவே ஐ.டி. பியூப்பிளோட டிஸ்கஷன் பண்ணியிருக்கோம்.."
"ஓ.கே. சார்.."
ம்ம்ம்... இந்த ஆள் சிரிக்கவே மாட்டான் போல இருக்கே... சுனில், கோபாலன் முகத்தையும், அவருடைய டேபிளின் மேலிருந்த பேப்பர் வெயிட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். நிஜமாவே சுகன்யா சொன்ன மாதிரி இங்க இருக்கற ஆஃபீசர்ஸ், பொம்பளைங்க... ஆம்பிளைங்க எல்லாருமே... ஏன் மூஞ்சை ரொம்பவே சீரியஸா வெச்சிக்கிட்டு இருக்காங்க? சிரிச்சா இவங்க சேலரியில எதாவது டிடக்ஷ்ன் ஆயிடுமா?
"டெய்லி ஈவினிங்லே, நீங்க ரெண்டு பேருமா உக்காந்து, இவர் தினம் எண்ட்ரி பண்ண டேட்டாவை, கீளீனா ஒண்ணுக்கு ரெண்டு தரமா வெரிபை பண்ணி ஐ.டி. டிவிஷனுக்கு ஒரு சாஃப்ட் காப்பியும், கூடவே ஒரு ஹார்ட் காப்பியும் அனுப்பிச்சிடுங்க... வேணும்னா வித்யா தன் சீட்டோட வேலையை எப்படி முடிச்சிருக்காங்கன்னு ஒரு தரம் அவங்க கிட்டவும் பேசிக்குங்க... ஷீ வுட் ஹெல்ப் போத் ஆஃப் யூ.
"யெஸ் சார்..."
இந்த வாரம் இந்த வேலை முடிஞ்சதும்.. நெக்ஸ்ட் வீக் உங்க சீட் வேலையை சுனிலுக்கு ஃபீரீப் பண்ணிடுங்க..." முதல் முறையாக கோபாலன், சுனிலின் முகத்தைப் பார்த்தார். அதுவரை சேரில் சாய்ந்து வசதியாக உட்கார்ந்திருந்த அவன், சட்டென நிமிர்ந்து உட்க்கார்ந்தான்.
"யெஸ் சார்..." சுனில் தன் தலையை மிகவும் பவ்யமாக ஆட்டினான்.
"மிஸ்டர் சுனில்.. நீங்க மிஸ் சுகன்யாவோட ஒரு ரெண்டு வாரம் வொர்க் பண்ணுங்க... அவங்க சீட் வேலையை குயிக்கா நீங்க பிக் அப் பண்ணிக்கணும்.. ஷீ ஈஸ் வெரி இன்டெலிஜண்ட்... யூ வுட் ரியலி லைக் டு வொர்க் வித் ஹர்..."
"சார்.. என்ன சார் நீங்க.. என்னைப் போய் ரொம்ப புகழறீங்க..." சுகன்யாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"செர்டன்லி சார்.." கடனேயென முனகினான் சுனில்.
தலே... இப்படி ஒரு சான்ஸை எந்த மடையனாவது விடுவானா? நீ நல்லாயிருக்கணும் தலை... உன் பொன்னான வாயால சுகன்யா கூட என்னை அட்டாச் பண்ணியிருக்கேன்னு சொல்லிட்டியே.. உனக்கு எப்படி நான் நன்றி சொல்லப் போறேன்...
நீ சொல்லவே வேணாம்... நாளைக்கு செவ்வாக்கிழமை... ராத்திரி என்னேரம் ஆனாலும் சரி... செங்கல்பட்டு பஜரங்கபலி ஹனுமான் சன்னிதியிலே நாலு தேங்காய் உடைக்கறதுன்னு... ஏற்கனவே நான் முடிவெடுத்துட்டேன்...
வொர்க் பண்ணா இந்த மாதிரி அழகு தேவதை ஒருத்திப் பக்கத்துல உக்காந்துதான் வேலை செய்யணும்... முகத்தை சீரியஸாக வைத்திருந்த போதிலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக ஆடிப் பாடிக்கொண்டிருந்தான், சுனில்.
"சுகன்யா.. ஐ நோ.. வாட் அயாம் ஸ்பீகிங்.."
"மிஸ்டர் சுனில்.. நீங்க ரெண்டு வாரத்துக்கு அப்புறம் மிஸிஸ் வித்யா கூடவும்.. நாகராஜன் கூடவும், தலா ஒரு ஒரு வாரம் அவங்க கூட உக்காந்து, அவங்க டெஸ்க்குல என்ன நடக்குதுண்ணும் தெரிஞ்சுக்கங்க..."
"சார்..."
"சுகன்யாவோட சீட் கொஞ்சம் ஹெவியானதா இருந்தாலும், ஐ ஹோப் யூ வுட் லைக் இட்... அதுக்கு மேல அது ஒரு கான்ஃபிடன்ஷியல் சீட்டும் கூட... டேரக்ட் அஸிஸ்டெண்டுக்குதான் அந்த சீட்டை நான் குடுக்க விரும்பறேன்..."
"யெஸ் சார்...அயாம் ஹானர்ட் சார்..."
"சார்.. உங்களை ஒரு விஷயம் கேக்கலாமா?" சுகன்யா முகத்தில் சிறிய ஆச்சரியத்துடன் பேசத் தொடங்கினாள்.
"யெஸ்...சொல்லும்ம்மா..."
கோபலன் முகத்திலும் இப்போது இலேசாக புன்னகை அரும்பியிருந்தது. அவருடைய ஆஃபீஸர் தோரணை சிறிது குறைந்திருந்தது. அப்பா, சிரிச்சிட்டாண்டா மனுசன்... சிரிச்சா இவன் மூஞ்சியும் நல்லாத்தான் இருக்கு... சுனில் மனதுக்குள் அவரை மெச்சிக்கொண்டான்.
"எனக்கு ட்ரான்ஸ்ஃபர் எதாவது வருதா சார்?"
"மிஸ்டர் சுனில்.. யூ மே கோ நவ்.. மிஸ் சுகன்யாவோட நான் கொஞ்சம் தனியா பேசவேண்டியிருக்கு... அடுத்த தரம் என் ரூமுக்கு வரும் போது எப்பவும் ஒரு சின்ன நோட்புக்கும் பென்சிலுமா வாங்க... மேக் திஸ் யுர் ஹாபிட்.." கோபலன் முகத்தில் அதிகாரம் மீண்டும் குடியேறியது.
"யெஸ் சார்... தேங்க் யூ வெரி மச் சார்..." சுனிலின் முகம் மாறியது.
சை... தூத்தெறிக்கி... கிழவன் கடைசீல என்னை நல்லா வெறுப்பேத்தி வுட்டுட்டான். என் மூடையே கெடுத்திட்டானே பாவி.. சட்டுன்னு என்னை கட் பண்ணி வுட்டுடானே... சுகன்யாவை வேற எந்த செக்ஷ்னுக்காவது ட்ரான்ஸ்ஃபர் பண்ணப் போறானா? என் ஆசைக் கனவெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் நீடிக்குமா?

'ம்ம்ம்.. பஜரங்க்பலி.. தோடுதோ மேரே துஷ்மன் கி நலி...!!' (அப்பனே.. ஹனுமந்தா... என் எதிரியின் நரம்பை வெட்டிவிடப்பா) மனதில் தன் பிரிய தெய்வம் ஹனுமானுக்கு அவசர அவசரமாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினான். 


கோபாலன் தன் எதிரில் இருந்த டேபிள் மணியை அழுத்தினார். உள்ளே வந்த அட்டெண்டர் நாராயணனிடம் சூடாக ரெண்டு காஃபி வாங்கி வரச்சொல்லி பணம் கொடுத்தார். மெதுவாக எழுந்து தன் நாற்காலிக்குப் பின்னால் சுவரின் ஓரமாக, இருந்த வாட்டர் ஜக்கில் இருந்து ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீரை நிரப்பி நிதானமாக குடித்தார்.

மீண்டும் தன் சீட்டில் உட்க்கார்ந்து, தன் முகத்திலிருந்த மூக்குக்கண்ணாடியை கழட்டி, கர்சீஃபால் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். தான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், கோபாலன் செய்து கொண்டிருந்த காரியங்களை கண்ட சுகன்யாவின் மனதில் உள்ளூர சிறிது எரிச்சல் கிளம்பியது.



இந்த மனுஷன் நல்லவன்தான். நேர்மையானவன்தான். வீணா யார்கிட்டவும் பேசமாட்டான். வீட்டுல கட்டிக்கிட்ட பொண்டாட்டி எதிர்லே வாயைத் தொறக்க மாட்டன்னு சாவித்திரி சொல்லி சொல்லி சிரிக்கறா.. ஆஃபிசுல தான் ஒரு ஆஃபிசர்.. நீ என் சஃபார்டினேட்... அப்படீன்னு ரொம்பவே கித்தாய்ப்பா சீன் போடற ஆளு.

பேசாமலே இருந்துக்கிட்டு எதிர்ல உக்காந்து இருக்கறவங்களை எப்படியெல்லாம் வெறுப்பேத்தலாம்ன்னு இவருகிட்டதான் ஒருத்தன் ட்ரெயினிங் எடுத்துக்கணும்.. தன் குறிப்பேட்டை திறந்து கடைசி பக்கத்தில் பென்சிலால், ஒரு வழுக்கைத்தலையன் படத்தை வரைந்து கொண்டிருந்தாள், சுகன்யா.

"கன்கிராட்ஸ்..சுகன்யா.. உன் நிச்சயதார்த்தமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?"

"ஆமாம் சார்.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.. இதைப்பத்தி உங்களுக்கு யார் சொன்னது சார்?" திடுக்கிட்ட குரலுடன் தன் தலையை நிமிர்த்தினாள் அவள்.

"செல்வாதான் சொன்னான்ம்மா.. அவன் ஹெட் மூர்த்தி லீவுலே இருக்கார்... தனக்கு லீவு எக்ஸ்டன்ஷன் வேணும்ன்னு உங்க ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி எங்கிட்டதான் வந்தான்.. சரி சந்தோஷமா போய் வாடாப்பான்னேன்... ம்ம்ம்... உங்க கல்யாணம் எப்பம்மா?

"அவரோட அத்தை யுஎஸ்லேருந்து அடுத்த மாசம் வர்றதா இருக்காங்களாம்... அந்த சமயத்துல மேரேஜ் வெச்சுக்கலாம்ன்னு அவங்க வீட்டுல நினைக்கறாங்க... சார்"

"ம்ம்ம்.. வாஸ்தவம்தானே... உனக்கொண்ணும் அவசரம் இல்லையே?" சொல்லிவிட்டு சிரித்தார்.

அவர் தன் வழுக்கை தலையை சொறிந்து கொண்ட போது, நாராயணன் காஃபி கோப்பைகளை அவர்கள் இருவர் முன்னும் வைத்துவிட்டு விலகினார்.

"எடுத்துக்கம்மா..." கோபாலன் காஃபியை மெல்ல உறிஞ்சத் தொடங்கினார்.

"தேங்க்யூ சார்.."

"உனக்கு ஞாபகமிருக்கும்... செல்வா ஆக்ஸிடன்ட் ஆகி ஹாஸ்பெட்டல்ல இருந்தப்ப, உன்னோட ரெக்வெஸ்ட் படி... டெல்லியில நீ அட்டண்ட் பண்ண வேண்டியிருந்த கட்டாய ட்ரெய்னிங் ஷெட்யூலை தள்ளிவெச்சோம் இல்லையா?"

"ஆமாம் சார்..."

"அந்த ட்ரெய்னிங்க்கு ஹெட் ஆபீஸிலிருந்து உன்னை திரும்பவும் ரீநாமினேஷன் பண்ணியிருக்காங்க... இதுதான் கடைசி பேட்ச்... அதனால நீ டெல்லிக்கு போயே ஆகவேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்கு... இப்ப உன் கல்யாணம் வேற எதிர்ல நிக்குது... எனக்கும் என்னப்பண்றதுன்னு புரியலை..."

"எப்ப போகணும் சார்?"

"உனக்கு சரியா அறுபது நாள் டயம் இருக்கு... ஏப்ரல் ஒண்ணாம் தேதியிலேருந்து ட்ரெய்னிங் ஆரம்பிக்குது... இன்னைக்கு உனக்கு பர்சனல் இன்டிமேஷன் சர்வ் ஆகிடும்... யூ நீட் டு அரேஞ்ச் யுர் டிக்கட்ஸ் அண்ட் ஆல் தட் நெஸசரி ரெக்கொயர்மென்ட்ஸ்..."

"இட்ஸ் ஆல் ரைட்... சார்.. என் ரிக்வெஸ்ட்டை ஒரு தரம் நீங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்... அதுக்கே நான் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன்.."

"இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. முன்னாடியெல்லாம் ட்ரெய்னிங் ஒரு மாசம் தான்.. இந்த பேட்ச்சிலேருந்து மூணு மாசமாக நீட்டியிருக்காங்க..."

"ஓ மை காட்..."

"கொஞ்ச நாளைக்கு நீ ஸ்வீட் ஹார்ட் செல்வாவை விட்டுட்டு தனியா இருக்கணும்.. சின்னஞ்சிறுசுங்க மனசெல்லாம் எனக்கு புரியாமலில்லை. பட் ஐ கான்ட் ஹெல்ப் யூ மச் இன் திஸ் இஸ்யூ..." கோபாலன் நிஜமாகவே விசனபட்டு சிரித்தார்.

"பரவாயில்லே சார்..." சுகன்யாவின் முகத்தில் காலையிலிருந்து மலர்ந்து கொண்டிருந்த புன்னகை மலர்கள் காணாமல் போயிருந்தன. சுகன்யா தன் கோப்பையிலிருந்த சூடான காஃபியை ஒரு விழுங்காக விழுங்கினாள்.

"டில்லி ட்ரெய்னிங் இன்ஸ்டீட்யூட்ல, நம்ம ஆஃபிசை சேர்ந்த ஒரு அஸிஸ்டெண்ட் போஸ்ட் ஜூன்லே காலியாகுதுல்லே. உன்னோட ட்ரெய்னிங் முடிஞ்சதுக்கு அப்புறம், அதனுடைய தொடர்ச்சியா, நீ விரும்பினால் அந்தப் போஸ்ட்டை உனக்கு தரலாம்ன்னு இருக்கறதா ஒரு ரிலையபிள் இன்ஃபர்மேஷன் எனக்கு கிடைச்சிருக்கு..."

"என்ன சார் சொல்றீங்க...?"

"திஸ் இஸ் ப்யூர்லி யுர் ஆஃப்ஷன்.. இது ஒரு ரொட்டேஷனல் போஸ்ட்... இதை நீ அக்செப்ட் பண்ணிக்கிட்டா டெபுடேஷன் அலவன்ஸ் மட்டுமில்லாம, தங்கறதுக்கு கவர்ன்மெண்ட் குவார்டர்ஸ், இதெல்லாம் உடனடியா அங்கே உனக்கு கிடைக்கும்..."

"இப்ப எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை சார்.."

"இப்போதைக்கு இந்த விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோம்மா... இந்த ஒரு வருஷ டென்யூர் போஸ்டிங்க் முடிஞ்சதும் அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு உனக்கு நார்த்துக்கு போகவேண்டிய தொந்தரவெல்லாம் இருக்காது."

"ம்ம்ம்..."

"உன் ஃப்ரெண்ட் வித்யாவும் அப்படித்தான் ஆரம்பத்துல ஒரு வருஷம் டில்லியிலே இருந்துட்டு வந்தாங்க..."

"நீங்க சொல்றது சரி சார்... ஆனா இதுக்காக என் கல்யாணத்தை ரொம்பவே தள்ளிப் போட முடியாதே சார்.."

"நான் உன்னோட வெல்விஷர்... உன் பர்சனல் லைஃப், உன் ப்ரொஃப்ஷனல் லைப், ரெண்டையும் நீ திட்டமிடறதுக்கு வசதியா, இந்த இன்ஃபர்மேஷனை உனக்கு குடுக்கறேன்... ட்ரெய்னிங் நீ போயே ஆகணும்... மத்தபடிக்கு அடுத்த ஒரு வருஷம் அங்கே தொடர்ந்து இருக்கறது உன்னோட தனிப்பட்ட விருப்பம்.. புரிஞ்சுதா..?"

"எஸ் சார்..."

"ஆல் த பெஸ்ட் டியர்..."

"தேங்க் யூ சார்.."

ம்ம்ம்.. நேத்து வரைக்கும் என் கதை வேற... இப்ப இந்த மேட்டர்ல, நானா எந்த முடிவும் எடுத்துட முடியாது. செல்வாகிட்ட டிஸ்கஸ் பண்ணியே ஆகணும். இன்னும் என் கல்யாணமே முடியலை... என் கழுத்துல அவன் தாலியேறவே இல்லை.. என் விருப்பப்படி எந்த விஷயத்திலேயும் சட்டுன்னு ஒரு முடிவு எடுக்கமுடியாதபடிக்கு, நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே, எனக்கு கால் கட்டுகள் வந்திடிச்சே.. சுகன்யா மனதுக்குள் குழம்பியவாறே தன் அறைக்குள் நுழைந்தாள்.

***


மாலை ஐந்தரை மணி வரை, சுகன்யா தன் தலையை நிமிர்த்தாமல், தனக்கு மார்க் செய்யப்பட்டிருந்த பெண்டிங் ரெசீட்களுக்கு பதில் எழுதி, அதனுடைய தொடர்புள்ள கோப்புகளில் நுழைத்து, சாவித்திரியின் மேஜையில் குவித்துக்கொண்டிருந்தாள்.

தன் சீட் வேலையை கவனித்துக்கொண்டே, அவ்வப்போது, சுனிலின் பக்கம் பார்வையை வீசிக்கொண்டிருந்தாள், சுகன்யா. சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே, சட்டுன்னு சொல்ல வர்ற விஷயத்தைப் புரிஞ்சிக்கறான். புத்திசாலியா இருக்கான்... ஆனா புத்திசாலிங்களை சாவித்திரி தன் கீழே வெச்சுக்கமாட்டாளே..

'எஸ்...மேடம்' 'எஸ்... மேடம்' - இப்படி நிமிஷத்துக்கு ஒரு தரம் தேவையில்லாம தனக்கு சல்யூட் அடிக்கற நாகராஜன் மாதிரி ஆளுங்களைத்தானே அவளுக்குப் பிடிக்கும்... 

நிஜமாவே, இந்த சுனில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில கருமமே கண்ணாய் இருக்கானே? ம்ம்ம்... பரவாயில்லே... போறப் போக்கை பாத்தா... இந்த டாட்டா என்ட்ரி வேலையிலேருந்து நான் தப்பிச்சுடுவேன் போல இருக்கே... மனசுக்கு திருப்தியாக இருந்தது. 

"மேடம்... நீங்க சரின்னு சொன்னா... லஞ்ச்க்கு போய் வந்திடட்டுமா?" மதியம் ஒன்றரை மணிவாக்கில் நமட்டுத்தனமாக சிரித்தான், சுனில்.

"என்ன மிஸ்டர் கிண்டலா..?" 

"நோ.. நோ... என்னோட இம்மீடியட் பாஸ் நீங்கதானே... அதான் உங்க பர்மிஷனை கேக்கிறேன்..." தன் தலையை தாழ்த்தி கண்களை, சாவித்திரியின் பக்கம் திருப்பி சப்தமில்லாமல் சிரித்தான்.

ஒரு நாள் முழுசா கழியலே... அதுக்குள்ள தேவையில்லாம எதுக்காக இவன் வம்பை வெலைக்கு வாங்கறான்..? தன் வாயின் மேல் சுட்டு விரலை வைத்து, சுனிலை தன் கண்களை அகல விரித்து, முறைத்தாள், சுகன்யா. 

***

மாலை ஐந்தரை மணி அளவில், தோளில் ஒரு பையுடன் செல்வா அவள் சீட்டுக்கு வந்தான். சுனிலும், சுகன்யாவும் வெகு நெருக்கமாக உட்கார்ந்து அன்று செய்யப்பட்ட என்ட்ரீசை சரி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"சுகு... வேலை முடிஞ்சுதாம்மா... கிளம்பலாமா?" நிச்சயதார்த்ததுக்கு பின் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளுவது அதுதான் முதல் தடவை. செல்வா முகத்தில் பொங்கும் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் அறைக்குள் நுழைந்தான். சாவித்திரி தன் தலையை மெல்ல நிமிர்த்தினாள்.

"செல்வா.. ஆஃபிசுல என்னை சுகன்யான்னுதான் கூப்பிடனும்ன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன் உனக்கு... சனியன் புடிச்ச சாவித்திரி அங்க உக்காந்து இருக்கா... அவ காதுல விழுந்தா மொத்தமா எரிஞ்சிப் போயிடுவா..." மெல்ல முனகினாள் சுகன்யா. அவள் முகத்தில் அவனைப் பார்த்த மகிழ்ச்சி பட்டெனப் பற்றிக்கொண்டது. 

சுனில் அவர்கள் இருவரையும், மாறி மாறிப் பார்த்தான். பஜ்ரங்பலி... இவன் யாருப்பா...? ஆளும் ஷோக்காத்தான் இருக்கான்... சுகன்யாவை.. ரொம்ப உரிமையா "சுகு"ன்னு கூப்பிடறான்?? சுகன்யா இவனைப் பாத்ததும் மத்தாப்பூவா மலர்ந்து போயிட்டா...!? முகத்துல அப்படி ஒரு மகிழ்ச்சியும், வெக்கமும் கலந்து மின்னுதே? உனக்கு செதறு காய் வேணுமா... வேணாமாப்பா? 

"ம்ம்ம்.. " சுனில் என்று ஒருவன் அங்கிருப்பதையே உணராதவன் போல் செல்வா இங்குமங்கும் பார்த்தான். 

"உக்காரேன்.. இன்னொரு பத்து நிமிஷ வேலை இருக்கு... முடிஞ்சதும் கிளம்பிடலாம்..."

"மிஸ்டர் சுனில்... இன்னைக்கு நீங்க பண்ண என்ட்ரீஸை நாளைக்கு வெரிஃபை பண்ணலாமா? இந்த டாட்டாவை நாம யாருக்கு பார்வேர்ட் பண்ணணுமோ அவரே வீட்டுக்கு கிளம்பிட்டார்.." சுகன்யா அவனை சற்று கெஞ்சலாக நோக்கினாள். பின் செல்வாவை நோக்கி மென்மையாக சிரித்தாள். 

"மேடம்.. சார் உங்களுக்காக வெய்ட் பண்றார்... உங்களுக்கு எதாவது முக்கியமான வேலை இருக்கலாம்... நீங்க கிளம்புங்க... இதெல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்..." சுனில் அவளை நோக்கி அழகாக புன்னகைத்தான். 

ஏனோ தெரியவில்லை... சுகன்யா, சுனிலிடம் சிரித்தபடியே பேசியதையும், சுனில் அவளுக்கு கொடுத்த இயல்பான பதிலையும், கூடவே அவன் முகத்தில் தோன்றிய மிக மிக மெல்லிய சிரிப்பையும், அந்த சிரிப்பில் தெரிந்த குறும்பையும், செல்வாவால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. 

யார் இவன்? புதுசா இருக்கான்.. இங்கே எங்கேயும் பாத்த முகமா தெரியலியே? டாட்டா என்ட்ரி ஆப்பரேட்டரா..? அப்படின்னா எனக்குத் தெரியாம அப்பாயின்ட் ஆகியிருக்க முடியாதே? சுகன்யா ஏன் இவன் கிட்ட அனாவசியமா கொஞ்சறா? அவன் முகம் லேசாக சுருங்கியது.

"பை த வே.. செல்வா... இவர் மிஸ்டர் சுனில்... புதுசா இந்த செக்ஷ்ன்ல்லே டேரக்ட் அஸிஸ்டண்டா ஜாயின் பண்ணியிருக்கார்... சுனில்... இவர் மிஸ்டர் செல்வா... ஃபிஃப்த் ப்ளோர்ல ஐ.டி. டிவிஷன்ல்லே சிஸ்டம்ஸ் அனலிஸ்டா இருக்கார்..

கிளாட் டு மீட் யூ சார்... சுனில் சட்டென எழுந்து மரியாதையுடன் செல்வாவின் கையை பற்றிக் குலுக்கினான். செல்வா பதிலேதும் சொல்லாமல் அவன் கையை கடனேயென்று, மரியாதை நிமித்தம் வேண்டா வெறுப்பாக குலுக்கினான். 

செல்வா சுனிலைப் பார்த்த பார்வையில் நிச்சயமாக நட்பு என்பது மருந்துக்கும் இல்லை. செல்வாவின் முகத்தில் ஓடிய உணர்ச்சியை துல்லியமாக இனம் கண்டு கொண்டான், சுனில். பஜ்ரங்பலி... இவன் மனசுல என்ன ஓடுதுன்னு என்னாலப் புரிஞ்சுக்க முடியுது... ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்..? சுனில் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். 

***



"மேடம்.. இன்னைக்கு நான் ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே கிளம்பறேன்... ஒரு ரெண்டு பேப்பர்தான் என் டேபிள்ல பாக்கியிருக்கு.. நாளைக்கு அதை முடிச்சிடறேன்.." தன் சிஸ்டத்தை ஷட்டவுன் செய்தவள், தன் டிராயர்களை பூட்டி சாவியை தன் கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள். பையை தோளில் மாட்டிக்கொண்டு, சாவித்திரியிடம் சென்று நின்றாள்.


"மகராசியா போய் வாம்மா... நான் ஏன் குறுக்குல வரப்போறேன்...?" வழக்கமான பாணியில் அவள் பேசினாள்.


No comments:

Post a Comment