Friday 3 April 2015

சுகன்யா... 94

செல்வா காலையில் எழுந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. அவனும் கடந்த ஒரு வாரமாக இரவில் சரியாக தூங்கியிருக்கவில்லை. அரையும் குறையுமாக குளித்தேன் என பெயர் பண்ணிவிட்டு, கையில் கிடைத்த பேண்ட் சட்டையை உடம்பில் மாட்டிக்கொண்டு, மல்லிகா கொடுத்த இட்லியையும், வடைகறியையும் கிச்சனில் நின்றவாறே அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, ஆஃபிசுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

"செல்வா... சுகன்யாவுக்கு வடைகறின்னா ரொம்ப பிடிக்கும்டா... அவளுக்கு கொஞ்சம் வெச்சிருக்கேன். போகும் போது இந்த டப்பாவையும் எடுத்துட்டு போடா... மறக்காம லஞ்சுல அவகிட்ட குடுத்துடு..." மல்லிகாவின் குரலில் வீட்டுக்கு வரப்போகும் மருமகளின் மேல் பாசம் பொங்கிக்கொண்டிருந்தது.



"ரொம்பவே அவளை உன் தலைமேல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடறே? அப்புறம் என்னை எதுவும் சொல்லாதே..." செல்வா வாய்க்கு வந்தபடி அர்த்தமில்லாமல் எதையோ முணுமுணுத்தானே தவிர, மல்லிகா கொடுத்த டப்பாவை தன் தோள்பையில் உடனே போட்டுக்கொண்டான்.

"சார், உங்களுக்கு சுகன்யா மேடம் போன் பண்ணியிருந்தாங்க..."

செல்வா தன் அறைக்குள் நுழைந்ததும் நல்லதம்பி கூவினான். 'என் சுகன்யா... சுகன்யாதான். என்ன பெருந்தன்மையான மனசு அவளுக்கு...?!' மெல்லிய தூறலுடன், மெல்லிய தென்றல் காற்று அவன் மனசுக்குள் இதமாக வீசத்தொடங்கியது. லஞ்ச் டயம்லே அம்மா ஆசையா குடுத்துவிட்டிருக்கற வடைகறியை அவ கையில குடுத்துட்டு "சாரி" சொல்லிடணும். சாயந்திரம் அவளை எங்கேயாவது கூட்டிட்டு போகணும். ஒரு வாரத்துல அவ டெல்லிக்கு போயிடுவா. அவன் மனம் சுகன்யாவைப் பார்க்க துள்ளிக்கொண்டிருந்தது.

"டேய் செல்வா... ரொம்பத்துள்ளாதே; நீ பண்றது ரொம்பத்தப்பு. இந்த தடவையும் உங்க சண்டையில, புத்திகெட்டத்தனமா ஈகோயிஸ்டிக்கா நடந்துக்காம, சுகன்யாதான் மொதல்லே வெள்ளைக்கொடி காட்டியிருக்காடா? இதை நல்லா ஞாபகத்துல வெச்சுக்க.." அவன் மனசு அவனை இலேசாக குத்தியது.

"நல்லத்தம்பி.. கால் எப்படா வந்திச்சி?" செல்வாவின் குரலில் உற்சாகம் வழிந்துகொண்டிருந்தது.

"பத்து நிமிஷம் முன்னாடி பண்ணாங்க சார்?"

"என்னடா சொன்னாங்க?"

"நீங்க இல்லேன்னு சொன்னதும், உடனே காலை கட் பண்ணிடாங்க." அதற்கு மேல் நல்லத்தம்பியும் பேசவில்லை. அனுஷ்கா தன் வெண்மையான இடுப்பையும், உட்காருமிடங்களையும், அவன் மொபைல் ஸ்கிரீனில் அபாயகரமாக குலுக்கிக் கொண்டிருந்ததை பார்ப்பதில் அவன் கவனம் இருந்தது.

காலையில் ருசியாக இருக்கிறதென அளவுக்கு மேல் வழித்து வழித்து தின்ற வடைகறி செல்வாவின் வயிற்றை கலக்கி, தன் வேலையை ஆரம்பித்திருந்தது. செல்வா டாய்லெட்டுக்குள் நுழைந்து தன்னைத் தளர்த்திக்கொள்ள நினைத்தான். கதவை இறுக மூடிவிட்டு, டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

வெளியில் பாத்ரூமுக்குள் யாரோ இருவர் நுழையும் சப்தம் வந்தது. "க்றீச்... க்றீச் என காலணிகளின் தொடர்ந்த ஓசைகள். செருப்பின் ஒலியைத் தொடர்ந்து ஒரு கட்டையான குரல் வந்தது.

"மாமூ... நம்ம செல்வாவோட லவ்வு புட்டுக்கிச்சா என்ன?" பேசியவனின் குரலில் ஏகத்திற்கு உல்லாசம் தெறித்துக்கொண்டிருந்தது. செல்வாவின் காதுகள் விருட்டென நிமிர்ந்தன. தன் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டான்.

"என்னடா உளர்றே நீ?"

"என் கண்ணால பாத்ததைத்தாண்டா சொல்றேன்.."

"என்னா பாத்தே?"

"செல்வா தன் ரூம்ல இருக்கான்... சுகன்யா பைக்ல வேற ஒருத்தன் இடுப்பைக்கட்டிக்கிட்டு, தொப்புளை காமிச்சிக்கிட்டு, அவன் முதுவுல படுத்துகினு போய்கிட்டு இருக்கா.."

"டேய்... புண்ணாக்கு; உனக்கு சுகன்யா கரெக்ட் ஆகலேங்கற வெறுப்புல சும்மா ரூமரை கிளப்பாதேடா நாயே... நம்ம ஆஃபீசுலேயே, அந்தப்பொண்ணு ரொம்ப டீசண்டான பொண்ணு. நீ வேற எவளையோ பாத்துட்டு கன்ப்யூஸ் ஆயிருக்கே.? காலங்காத்தாலேயே நீ ஊத்திகிட்டியா?"

"ங்கோத்தா... நீயும் தான் அவளுக்கு ரூட்டு வுட்டே. இப்ப என்னமோ மகாத்மா காந்தி கணக்குல எங்கிட்ட பேசறே?"

"நான் இல்லேன்னு சொல்லலையே? நாலு பேரு இந்த ஆஃபிசுல சுகன்யாவுக்கு கடலை போட்டோம்; சுகன்யா செல்வாவுக்கு கிளிக் ஆயிட்டா... தட்ஸ் ஆல். அதுக்காக உன்னாட்டாம் நான் எதுக்கு பொறாமையில காண்டாவணும்?"

"நீ புத்தராவே இரு. வேணாங்கலே. ஆனா நான் சொல்றதை கேளுடீச் செல்லம். ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி என் கண்ணால பாத்தேன்னு சொல்றேன். வெண்ணை... நீ நம்பனா என்ன? நம்பாட்டி என்ன? எனக்கு எதாவது நஷ்டமா; இல்லே உனக்கு நஷ்டமா? செல்வாவுக்கு நஷ்டம்; அந்த வடக்கத்தியான் அவனுக்கு வெள்ளையா நீட்டா ஆப்பு வெச்சிட்டான்." கட்டைக் குரலுக்குரியவன் நீளமாக ஆங்காரமாக மீண்டும் ஒரு முறை சிரித்தான்.

"யார்ரா அது?"

"சுனிலோ... அனிலோ.. பேரு எனக்கு சரியாத் தெரியாது. டேரக்ட் அஸிஸ்டென்டா ஒருத்தன் வந்திருக்கான். ஒடம்பை ஷோக்கா வெச்சிருக்கான். பையன் செமை பர்சனாலிட்டி. அவன் கூடத்தான், சுகன்யா ஜாலியா போய்கிட்டு இருக்கா. பெரிய மசுரூ மாதிரி... நீ எனக்கு கவுண்டர் குடுக்கறியே; நான் சொல்றதுல உனக்கு சந்தேகம்ன்னா, இங்கேருந்து நேரா சுகன்யா செக்ஷ்னுக்கு போய் பாத்துட்டு வாடா. இந்த நிமிஷம் அவங்க ரெண்டு பேரும் அங்கே இருக்கமாட்டாங்க... என்ன பெட்டு வைக்கிறே நீ?"

கட்டைக்குரல் இப்போது ஆனந்தமாக விசிலடித்தவாறு வெளியே போனது. செல்வா ஃப்ளஷை தடாலென இழுத்தான். தெறித்த தண்ணீரில் தன் பேண்டை நனைத்துகொண்டான். வெளியில் வந்தவன் தன் முகத்தை அவசரமாக கழுவித் துடைத்துக்கொண்டான். மாடிப்படிக்கட்டுகளின் வழியே சுகன்யாவின் அறையை நோக்கி வேகமாக கால் தடுமாற ஓடினான். 

சுகன்யாவின் அறைக்குள் செல்வா நுழைந்தபோது, சாவித்திரி தன் இருகைகளையும், தன் தலையில் வைத்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய முகம் தொங்கிப்போயிருந்தது.

சாவித்திரியின் இருபத்தைந்து வருட அனுபவம் பாண்டிச்சேரியில் இருக்கும் அவர்களுடைய கிளை அலுவலகத்திற்கு எந்த அளவுக்கு அந்த நேரத்தில் தேவைப்படுகிறது என்பதை கோபாலன் அவளுக்கு விரிவாக சற்று முன்தான் சுட்டிக்காட்டியிருந்தார். அடுத்த இரு வாரங்களுக்குள் பாண்டிச்சேரியில், அவள் ஜாய்ன் பண்ண வேண்டிய விஷயத்தையும் அவர் அஃபீஷியலாக தெரிவித்திருந்தார்.

சுகன்யா தன் சீட்டில் இல்லை. அறையில் சுனிலும் இல்லாததால், செல்வாவின் முகம் சட்டென காற்றுப்போன பலூனாக மாறியது.

"எனக்கு நஷ்டமா; இல்லே உனக்கு நஷ்டமா... செல்வாவுக்கு நஷ்டம்; அந்த வடக்கத்தியான் அவனுக்கு வெள்ளையா நீட்டா ஆப்பு வெச்சிட்டான்."

டாய்லெட்டில் கேட்ட கட்டைக்குரல் செல்வாவை இரக்கமில்லாமல் சீண்ட ஆரம்பித்தது. கட்டைக் குரலுடன் வாதாடிக்கொண்டிருந்த குரலில் இருந்த நியாயங்கள் அவன் நினைவுக்கு வரவில்லை. செல்வாவின் மனதில் கோபம் மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரம்பித்தது.

"குட்மார்னிங் மேடம்."

"வாடாப்பா... நீ குட்மார்னிங்ன்னு சொல்றே. ஆனா இந்த காலைப்பொழுது எனக்கு பேட்மார்னிங் ஆயிடிச்சிடாப்பா.."

சாவித்திரி புலம்ப ஆரம்பித்தாள். தன் மனபாரத்தை இறக்குவதற்கு மிகச்சரியான ஒரு ஆள் தனக்கு கிடைத்துவிட்டானானெ அவள் உள்ளூர மகிழ்ந்தாள்.

"ஏன் டல்லா பேசறீங்க மேடம்? சுகன்யா ஆஃபிசுக்கு வரலியா?" செல்வா தன் காரியத்தில் குறியாக இருந்தான்.

"என்னை எதுவும் கேக்காதடாப்பா. நீ எனக்கு வேண்டப்பட்ட பையனாச்சேன்னு நான் சாதாரணமா எதையாவது சொல்லுவேன். சுகன்யாவுக்கு கோவம் வந்த மாதிரி, உனக்கும் என் மேல எரிச்சல் வரலாம். 'மரியாதையா பேசுடீ நாயேன்னு என் பல்லு மேலேயே நீயும் போடுவே...' இந்த வம்பெல்லாம் நேக்கெதுக்கு? சாவித்திரி தன் முகத்தை நொடித்துக்கொண்டாள்.

"நீங்க எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்... வயசுல பெரியவங்க. நீங்க சொல்றதை கேட்டு நான் எதுக்கு கோவப்படப்போறேன்?" செல்வா தலையெழுத்தேயென சாவித்திரியின் எதிரில் உட்கார்ந்தான்.

"செல்வா... என் அருமை உனக்குத் தெரியுதுடா. உன்னை நான் 'டா' போட்டு பேசறேன். உனக்கு கோவம் வரலே. நம்ம குடும்பங்களுக்கு நடுவுல இருக்கற நெருக்கம் உங்காத்துக்கு வரப்போற அந்த சுகன்யாவுக்கு தெரியலியே?"

"ஹூம்..." செல்வா ஒரு வரட்டுப்புன்னகையை அவளுக்கு வீசினான்.

'நீ இப்ப உக்காந்துகிட்டு இருக்கற இதே சேர்லதான் பத்து நிமிஷம் முன்னாடி சுகன்யா உக்காந்து இருந்தா. என் வயசுக்காவது அவ கொஞ்சம் மரியாதை குடுத்திருக்கலாம்; ஆனா அவ என்னடான்னா, கால் மேல காலை போட்டுக்கிட்டு, எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு தன் குரலை உயர்த்தி கத்தினா..."

"சாரீ... இதை என்னால நம்ப முடியலியே மேடம்?"

"நானும் உன்னை மாதிரி அசந்து போயிட்டேன். ஆடிப்போன நான், உனக்கு என்னடீ ஆச்சுன்னு கேட்டேன்... இவ்வளவுதாண்டாப்பா நடந்திச்சி. என்னை 'டீ" போட்டு பேசாதேன்னு தன் கண்ணை உருட்டிக்கிட்டு ஒரு கூச்சப்போட்டாப்பாரு; இந்த காரிடாரே ஆடிப்போச்சு. ரெண்டு ரூம் தள்ளி உக்காந்து இருக்கற கோபலன் எழுந்து இந்த ரூமுக்கு வந்துட்டாருன்னா பாத்துக்கோயேன்."

"அப்படியா?"

"அதோட விட்டாளா, 'மைண்ட் யுவர் லாங்வேஜ்ன்னு இங்கிலீஷ்ல என்னை மிரட்டிட்டு, இப்பத்தான் அந்த சுனிலோட எங்கேயோ கிளம்பி நகர்வலம் போயிருக்கா." கட்டைக்குரல் சொன்னது உண்மைதான். சுகன்யா, சுனிலுடன் ஆஃபீசை விட்டு வெளியில் போயிருக்கிறாள் என்பது உறுதியானதும், செல்வாவின் சுதி மொத்தமாக இறங்கியது.

"சுகன்யா எனக்குத்தெரிஞ்சு அப்டீல்லாம் யாரையும் மரியாதை இல்லாம பேசமாட்டாளே மேடம்?" சுகன்யாவின் மேல் அவனுக்கு நான்கு நாட்களாக கோபம் இருந்தபோதிலும், அவளை சாவித்திரியிடம் விட்டுக்கொடுக்க அவன் மனதின் ஒரு மூலை தயங்கியது.

"செல்வா... என்னைத் தப்பா நினக்காதே? இன்னைக்கு இருக்கற சுகன்யா நீ நினைக்கற நம்ம பழைய சுகன்யா இல்லே; அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.." இவ சொல்ற இந்த பாய்ண்ட் மட்டும் ரொம்பவே சரிதான். சாவித்திரி பேசியதும் அவன் மனதில் சட்டென புகுந்து கொண்டது.

"சுகன்யா எனக்கு இண்டர்காம்ல போன் பண்ணாளாம். நல்லத்தம்பி சொன்னான்; அதான் என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு போவலாம்ன்னு வந்தேன். எப்ப திரும்பி வருவான்னு உங்களுக்கு எதாவது தெரியுமா?" தன் முகவாயை அசிரத்தையாக சொறிந்து கொண்டே செல்வா பேசினான். 

"நம்ம சுகன்யாவை, அந்த ஊர் பேர் தெரியாத வடக்கத்தியான் கூட, இந்த வேவாத வெய்யில்லே, அக்கவுண்ட்ஸ் ஆஃபீசுக்கு அனுப்பவேண்டிய அவசியம் இந்த கோபலனுக்கு என்னன்னு நான் கேக்கறேன்?" சாவித்ரி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைப்பட்டாள்.

"ம்ம்ம்..."

"இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடீ சுகன்யா அந்த தடியன் சுனிலோட போனா; எப்ப திரும்பி வருவாளோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். உன் கல்யாணம் எதிர்லே நிக்குது. உன் அம்மா மல்லிகா என்னடான்னா, தன் மாட்டுப்பொண்ணோட அழகை பாத்து பாத்து மனசுக்குள்ளவே பூரிச்சு போய் நிக்கறா? பெத்த மனசு அவளை என்னக்குறை சொல்றது? நீ சந்தோஷமா இருக்கணுமேன்னு அவ நினைக்கறா? அதுல என்னத்தப்பு? பொம்பளைக்கு அழகோட கூடவே கொஞ்சம் குணமும், அடக்கமும் வேணும்டா..."

"க்க்குஹூம்" செல்வாவுக்கு முனகுவதை தவிர வேறென்ன சொல்லுவது என தெரியவில்லை.

"கழுத்துல தாலிகட்டிக்கப் போற இந்த நேரத்துல, சுகன்யா இன்னொருத்தன் கூட தினமும் காண்டீன்லே, மரத்தடிலே, இங்கே அங்கேன்னு நின்னுக்கிட்டு அரைட்டையடிக்கறதும், அவன்கூட பைக்ல இங்கே அங்கேன்னு அலையறதும், பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு? உன் பின்னாலத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க?"

"மேடம்..."

"உன் ஆத்துக்கு மாட்டுப்பொண்ணா வரப்போற சுகன்யாவும், நான் எதையாவது ஜாடை மாடையா சொன்னா புரிஞ்சிக்கிட்டாத்தானே? என் மேல கோவப்படறா." செல்வாவின் முகம் விளக்கெண்ணைய் குடித்தவனின் முகத்தைப்போல் அஷ்டகோணலாகியது. அவன் தவிப்பைக்கண்டு சாவித்திரி உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.



அடியே சுகன்யா... மைண்ட் யுவர் லாங்வேஜ்ன்னு என்னையாடீ இங்கிலீஷுல மிரட்டறே? எனக்கு என்ன உரிமை இருக்குன்னா கேட்டே? உன் இடத்துல இருக்கவேண்டியது என் பொண்ணுடீ. உன் கழுத்துல விழப்போற தாலி என் பொண்ணு கழுத்துல விழவேண்டியதுடீ. ஒருவிதத்துல அய்யோ பாவம், ஏதோ சின்னஞ்சிறுசுங்க ஒருத்தரை ஒருத்தர் ஆசைப்பட்டுடீங்களேன்னு, செல்வாவை நான் உனக்கு விட்டுக்குடுத்தேண்டீ? என்னையா நீ சீண்டிப்பாக்கறே?"

"உன் வயசு என்னா? என் வயசு என்னா? எனக்கே இங்கீலிஷ்ல பேசறது எப்படீன்னு நீ கிளாஸ் எடுக்கறியா? நான் அருவாளை எடுத்து வீசினேன்னா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்டீ. என் லாங்வேஜ் என்னான்னு இன்னிக்கு பொழுது சாயறதுக்குள்ளே உனக்குத் தெரிஞ்சு போயிடும்டீ." சாவித்திரி ஒரு கப்பில் காஃபியை உற்றி செல்வாவின் முன் நகர்த்தினாள். செல்வாவின் கருத்த முகத்தை பார்க்க பார்க்க அவள் மனதில் தெம்பு கிளம்பியது.

"செல்வா.. ஒரு விஷயம் என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா.."

"என்ன மேடம்.?"

"இந்த ரெண்டு நாளாத்தான் பாக்கறேன்... 'அத்தான்... அத்தான்னு' சுகன்யா உன்னை லஞ்சு டயம்லே ஆசையா கூப்பிட்டு செல்லுல பேசிகிட்டு இருக்காளே... அதைத்தான் சொல்றேன்?"

இது என்ன புதுக்கதை? நான் சுகன்யாகிட்ட பேசியே நாலு நாளாச்சு; இவ எந்த அத்தானை சொல்றா? சாவித்திரி சொல்ல வந்ததை சொல்லி முடிக்கட்டுமென செல்வா குறுக்கில் பேசவில்லை.

"அந்த காலத்துல கல்யாணம் ஆன புதுசுலே நான் கூட என் ஆத்துக்காரரை 'அத்தான்னுதான்' கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன்."

சாவித்திரி ஏகத்திற்கு முகம் சிவந்து வெட்கப்பட்டாள். சுகன்யாவும் சம்பத்தும் லஞ்ச் டயமில் தினமும் பேசிக்கொள்ளுகிறார்கள் என்ற விஷயம் செல்வாவுக்கு அப்போதுதான் புரிந்தது. விஷயம் புரிந்ததும், செல்வா தன் மனதுக்குள் கோபம், வெறுப்பு, எரிச்சல், ஏமாற்றம் என பலவித உணர்ச்சிகளால் எரிந்து, தன் முகம் சிவந்து கொண்டிருந்தான்.

செல்வா, சாவித்திரியின் முகத்தைப்பார்க்காமல், தன் தலையை குனிந்தவாறு, அவள் கொடுத்தக் காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த காஃபி அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. சாவித்திரி செல்வாவை பற்றவைத்துவிட்ட திருப்தியில் தன் காஃபியை 'சர்ரென' ஓசையெழுப்பி ரசித்து குடிக்க ஆரம்பித்தாள்.

"எது எப்படியிருந்தாலும் சரிடா. சும்மா சொல்லக் கூடாதுடாப்பா. நம்ம சுகன்யா எப்பவுமே ஆஃபிஸ் நேரத்துல, ஆஃபீஸ் வேலையில எந்தக்குறையும் வெச்சதே கிடையாது. எப்பவும் உயிரைக் குடுத்து உழைக்கறவ. டில்லிக்கு போற எடத்துலேயும் அவ நல்லபேர் வாங்கிக்கிட்டுத்தான் திரும்புவா."

"ம்ம்ம்... எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம்தான்."

"என்னாச்சுன்னு தெரியலே; இன்னைக்குத்தான் மொதல் தரமா எங்கிட்ட மரியாதையே இல்லாமே நடந்துகிட்டா; இப்பக்கூட அவமேல எனக்கு எந்த வருத்தமும் இல்லே; நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்? பை தி வே... உங்க கல்யாணம் எப்போடாப்பா?" சாவித்திரி இனிக்க இனிக்க பேசினாள்.

"இன்னும் முடிவு பண்ணலே மேடம்."

"என்னை அந்த கோபாலன் பாண்டிச்சேரிக்கு தூக்கி அடிச்சிட்டான். உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிட மறந்துடாதே. நான் எங்க இருந்தாலும் கண்டிப்பா வந்துடறேன்? சாவித்திரி தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள். 
செல்வா தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தன் கால்களில், உடலில், சுத்தமாக வலுவே இல்லாததைப்போல் அவன் உணர்ந்தான். தன் சீட்டில் உட்கார்ந்தவனால், நேராக நிமிர்ந்து உட்க்கார முடியாமல், உடல் தளர்ந்து நாற்காலியில் சரிந்தான். இமைகளும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல், அவன் கண்களை மூடின.

டாய்லெட்டுக்குள் கேட்ட கட்டைக்குரல் அவன் மனதை குடைந்து கொண்டிருந்தது. இப்போது கட்டைக்குரலுடன் சாவித்ரியின் குரலும் சேர்ந்து அவன் காதில் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. மண்டை வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு

'சுகன்யா இன்னொருத்தன் கூட தினமும் காண்டீன்லே, மரத்தடிலே, இங்கே அங்கேன்னு நின்னுக்கிட்டு அரைட்டையடிக்கறதும், அவன்கூட பைக்ல சுத்தறதும் பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு? உன் பின்னாலத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க?' சாவித்திரியின் உருண்டை முகமும், முட்டை விழிகளும், அவன் கண்களில் வந்து நின்றன.

ச்சை... என்னக்கொடுமைடா இது? எந்த அளவுக்கு சுகன்யாவை நான் உரிமையோட நெருங்கணும்ன்னு நினைச்சு அவ கிட்டப் போகிறேனோ, அந்த அளவுக்கு அவ என்னைவிட்டு விலகிப்போறா. இந்தக்கன்றாவி விளையாட்டை தினம் தினம் என்னால ஆடமுடியாது. இன்னைக்கு இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சே ஆகணும். செல்வா மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

தன் தோள்பையை திறந்தான். சுகன்யாவுக்காக மல்லிகா கொடுத்து அனுப்பியிருந்த வடைகறி நிரம்பியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து தன் காலடியில் இருந்த குப்பைக்கூடையில் விசிறியடித்தான்.

கெடாவை வெட்டறதுங்கற முடிவுக்கு வந்தாச்சு; வெட்டறதுக்கு முன்னாடி, குளிப்பாட்டி, மாலை வேற போடணுமா? என் அம்மாவுக்கு புத்தியே கிடையாது. சொல்றதை புரிஞ்சிக்கிட்டாத்தானே? கல்யாணமே கேள்வியிலே நிக்குது? மருமவளுக்கு வடைகறி பார்சல் பண்ணிட்டாங்க?

"நல்லத்தம்பி... நான் கொஞ்சம் வெளியிலே போறேன். நம்ம டெபுடி சீஃப் கோபாலன் தேடினா மட்டும் என் மொபைல்லே ஒரு மிஸ் கால் குடுடா.." செல்வா தன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

"ஓ.கே. சார்.." நல்லதம்பியின் மொபைலில் இப்போது ஹன்ஷிகா தன் மார்புகளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். கண்களில் காமத்துடன், ஜெயம் ரவி அவளை இடவலமாக துரத்தி துரத்தி அவள் மார்புகளை தடவிக்கொண்டிருந்தான்.

அலுவலகத்தின் நுழைவாயிலிலிருந்து பார்க்கிங்குக்கு பிரியும் கிளைப்பாதையின் வலது புறத்தில் இருக்கும் வேப்பமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்தான் செல்வா. அங்கிருந்து பார்த்தபோது ஆஃபீசுக்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் மிகத்தெளிவாக தெரிந்தன. நிமிடங்கள் உருண்டன.

"ச்சே... எவனுக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரவே கூடாது. காலையில தின்னது செரிக்கல. வயிறு கலங்கிப்போயிருக்குது. உயிருக்கு உயிரா என்னைக் காதலிக்கறேன்னு சொல்றவ இன்னொருத்தன் கூட ஜாலியா பைக்லே சுத்தப்போயிருக்கா.

காயற வெயில்லே, வேப்ப மரத்தடியில, மனசுல திருட்டுத்தனத்தோட, என்னை காதலிக்கறேன்னு சொல்றவ எப்பத்திரும்பி வருவான்னு நான் ஒரு பைத்தியக்காரன் மாதிரி தேவுடு காத்துக்கிட்டு இருக்கேன். சுகன்யா அவனை வெகு நேரம் வெய்யிலில் காயவிடவில்லை.

செல்வா மரத்தடிக்கு வந்த பத்தே நிமிடங்களில், கருமை நிறத்தில் பளபளக்கும் புதிய பைக் ஒன்று ஆஃபீசுக்குள் நுழைந்தது. கண்ணில் கருப்புக் கண்ணாடியுடன், சுனில் கம்பீரமாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். சுகன்யா அவன் முதுகில் தன்னுடல் இலேசாக உரச அவன் பின்னால் உட்கார்ந்திருந்தாள்.

மரத்தடியில், சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த செல்வா சட்டென எழுந்து மரத்தின் பின்னால் நகர்ந்தான். தான் உட்கார்ந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து மரத்தின் பின்னால் நகரும் செல்வாவை, சுகன்யாவின் கூரிய கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

செல்வாவின் செயலைக்கண்டதும், சுகன்யாவின் முழு உடலும் நடுங்க ஆரம்பித்தது. சுகன்யாவுக்கு சட்டென குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி எடுக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

"சுனீல்... வண்டியை ஒரு செகண்ட் இங்கேயே நிறுத்துங்களேன்."

"சுகன்யாஜீ... என்னாச்சு..?" பைக் நின்றது.

"நீங்க வண்டியைப் பார்க் பண்ணிட்டு செக்ஷ்னுக்கு போங்க. எனக்கொரு ஒரு சின்ன வேலை பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு நான் வர்றேன்." சுகன்யா தான் இறங்கிய இடத்திலேயே வெய்யிலில் நின்று கொண்டிருந்தாள்.

"ஓ.கே மேம்."

சுனில் தன் பைக்கை பார்க் செய்துவிட்டு இங்குமங்கும் பார்க்காமல், நேராக லிஃப்டை நோக்கி நடந்தான். செல்வா மறைவாக நின்றிருந்த அந்த மரத்தடியை நோக்கினாள் சுகன்யா. செல்வா இப்போது தான் முதலில் உட்கார்ந்திருந்த கல் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தான். சுகன்யா விறுவிறுவென அவனை நோக்கி நடந்தாள்.

"செல்வா... இந்த வேகாத வெயில்லே நீங்க இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?"

தன் முதுகுக்குப் பின்னாலிருந்து வந்த சுகன்யாவின் குரலைக் கேட்டதும், செல்வா திடுக்கிட்டான். காய்ந்து போயிருந்த உதடுகளை தன் நாவால் ஈரப்படுத்திக் கொண்டான். தன்னைச் சுதாரித்துக் கொண்டவனாக, அவள் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

"யெஸ்... மிஸ் சுகன்யா... என்ன வேணும் உங்களுக்கு?" அவன் குரல் பிசிரடித்தது.

"நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலே?"

"மேடம்... நான் என் மனசுக்குள்ள எரிஞ்சு, வெந்து, சாம்பலா ஆயிருக்கேன். இங்க கொஞ்சம் கூலா காத்து வருதுன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்கே உக்காந்துகிட்டு, புது பைக்ல போறவங்க, வர்றவங்களை வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கேன்." செல்வாவின் குரலில் நக்கல் குடியேறியிருந்தது.

"காத்தாட உக்காறதுலே தப்பில்லே. போறவங்க வர்றவங்களை வேடிக்கைப் பாக்கறதுலயும் தப்புல்லே. ஆனா நான் உக்காந்து வந்த பைக்கைப் பாத்ததும், நீங்க உக்காந்திருந்த இடத்தை விட்டுட்டு எழுந்து ஓடி ஒளியறதுக்கு என்ன அவசியம்ன்னுதான் எனக்கு புரியலே? அதைத்தான் தெரிஞ்சுகிட்டு போவலாம்ன்னு நான் வந்திருக்கேன்." சுகன்யாவின் குரலிலும் நக்கலுக்கு குறைவில்லை.

"மிஸ் சுகன்யா... நீங்க புது பைக்ல, புது ஃப்ரெண்ட்டோட, ஜாலி ரைட் போயிட்டு வர்றீங்க. இந்த நேரத்துல, உங்களையோ, உங்க புது நண்பரையோ நான் அனாவசியமா சங்கடப்படுத்த விரும்பலை. அதனாலதான் சட்டுன்னு எழுந்து ஓடி ஒளிஞ்சிக்கிட்டேன்."

"யார் மனசுல திருட்டுத்தனம் இருக்கோ அவங்கதான் சங்கடப்படணும்... என் மனசுல திருட்டுத்தனம் எதுவும் இல்லே." சுகன்யாவின் உதடுகள் முறுக்கிகொண்டன.



"சரி... என் மனசுல திருட்டுத்தனம் இருக்கு... நான் ஒத்துக்கறேன். இப்ப என்னப் பண்றது அதுக்கு?"

"உங்க காதலியை வேவு பாக்கற அளவுக்கு உங்க தரம் தாழ்ந்து போச்சா?" சுகன்யாவின் கண்களில் வெறுப்பு, அதிர்ச்சி, ஏமாற்றம் என பலவிதமான உணர்ச்சிகள் குவிந்திருந்தன.

"காதலியோட தரம் தாழ்ந்தா, அவ காதலனோட தரமும் தாழ்ந்துதானே போகும்?"

"செல்வா... நீங்க என்னை உங்க வார்த்தையாலேயே கொன்னு போட்டுடணும்ன்னு நினைக்கறீங்களா? அப்படி உங்க மனசுல என்னதான் இருக்கு? வெளிப்படையா சொல்லித் தொலைச்சுடுங்களேன்."

"மிஸ் சுகன்யா... உங்க கிட்ட ஒரு பத்து நிமிஷம் நான் பேசணும்.. உங்களால என்கூட வரமுடியுமா?"

"இப்ப எதுக்கு மிஸ் சுகன்யா.. மிஸ் சுகன்யான்னு பேசி என்னை அன்னியப்படுத்தறீங்க?"

"எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு இன்னைக்கு காலையிலத்தான் நீங்க ஒரு ஆஃபிசருக்கு நோட்டீஸ் குடுத்ததா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ எனக்குத் தெரிய வந்தது. அதனால நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கேன். அவ்வளவுதான்." செல்வாவின் வார்த்தைகளில் விஷம் வழிந்து கொண்டிருந்தது. 

No comments:

Post a Comment