Wednesday 25 March 2015

சுகன்யா... 71

அங்கிள், இது என்னோட கடைசி செமஸ்டர். புல்லா கான்ஸ்ன்ட்ரேஷனோட படிச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கு வேலைக்குப் போகணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு அங்கிள். மீனா தன் மனதிலிருக்கும் ஆசையை ராகவனிடன் தெளிவாக சொன்னாள். வேலைக்கு போகவேண்டும் என்ற மீனாட்சியின் தவிப்பை, விருப்பத்தைக் கேட்ட ராகவன், சில வினாடிகள் மேற்கொண்டு எதுவும் பேசாமல், மவுனமாக இருந்தார்.

"என்ன அங்கிள்... பெண்கள் வேலைக்கு போறதுல உங்களுக்கு எதாவது ரிசர்வேஷன் இருக்கா?"

"மீனா... என் அப்பா வீட்டுக்குள்ளவே இருக்கற ஒரு சாமியார்... அவருக்கு ஒரு கப் சாதமும் ரசமும் இருந்தா... அதுவே போதும்ன்னு மகிழ்ச்சியா இருக்கறவர்... அவருக்கு வேற எதுவுமே வேணாம்..." சீனு சிரித்தான்.


"ம்ம்ம்.. ரிசர்வேஷன்... அப்படீன்னுல்லாம் எதுவும் இல்லம்மா... பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கணுங்கறதும் என் எண்ணமில்லே... நாம படிக்கறது நம்ம அறிவை வளத்துக்கத்தான்... படிச்சப் படிப்பு என்னைக்கும் வீண் போகாது... அன்பார்ட்சுனேட்லி, பொதுவா நாம படிக்கற படிப்புக்கும் செய்யற வேலைக்கும் என்னைக்குமே சம்பந்தம் இருக்கறது இல்லே..."

"இந்த வீட்டுல சீனு கை நெறைய சம்பாதிக்கறான்.. என்னைவிடவே அதிகமான சேலரி வருது அவனுக்கு.. உங்க ரெண்டுபேரோட அடிப்படையான தேவைகளுக்கும் மேலாகவே அவன் சம்பாதிக்கறான்.. நாம எவ்வளவு சம்பாத்திக்கறோமோ, அந்த அளவுக்கு நிச்சயமாக செலவும் உண்டு. கையில காசு இருந்தா, தேவையே இல்லாத பொருட்களையும் வாங்கனும்ன்னு மனசுக்குள்ள ஆசைகள் வரும்..."

"ஆமாம்.. உங்கத் தத்துவத்தையெல்லாம் நீங்களே வெச்சுக்குங்க... வாழ்க்கையை நம்பிக்கையோட, தொடங்கப் போற கொழந்தைகிட்ட சொல்லாதீங்க..." பத்மா அவர் பேச்சினிடையில் குறுக்கிட்டாள்.

"நான் தப்பா எதுவும் சொல்லலை... மீனா... நாம வாழறதுக்காகத்தான் வேலையை தேடணுமே தவிர, வேலை கிடைக்குதுங்கறதுக்காக, நம்ம அமைதியான வாழ்க்கையை இழக்கறதுல அர்த்தமில்லே. வீட்டு வேலைகளையும் செய்துட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் பொறக்கப் போற குழந்தைகளையும் வீட்டுல சரியா கவனிக்க முடியாம, தேவையில்லாம பெண்கள் வெளியிடத்திலும் போய் எதுக்காக கஷ்டப்படணம்ங்கறதுதான் என் கேள்வி.."

"அங்கிள் நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன், எங்க 'பேட்ச்'ல இப்ப நான்தான் முதல் ஸ்டூடன்டா இருக்கேன். கண்டிப்பா கேம்பஸ் இன்டர்வியூல, எனக்கு முதல் சிட்டிங்லேயே, எந்த சிபாரிசும் இல்லாம வேலை கிடைச்சுடும்ன்னு, என்னோட டீச்சர்ஸ் சொல்லிக்கிட்டு இருக்காங்க..."

"வெரிகுட்... நல்லாப் படிக்கிற கொழந்தைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்மா.. உண்மையிலேயே, பெண் சம்பாதித்தே ஆகணுங்கற நிர்பந்தம் உள்ள ஒரு குடும்பத்துல, பெண்கள் வேலைக்கு போகலாம்... அதுல தப்பேயில்லை.."

"தேவையே இல்லாம, நான் படிச்சுட்டேன்... என் படிச்சப் படிப்பு வீணா போகக்கூடாது, எனக்கு வீட்டுல பொழுது போகலேன்னு... பெத்த குழந்தைகளை கவனிக்கக்கூட நேரம் ஒதுக்க முடியாம, மூணு மாசம் கூட ஆகாத, பால் குடி மறக்காத குழந்தகளை 'கிரஷ்ச்சில' கொண்டு போய் விட்டுட்டு, வேலைக்கு வந்ததும், ஆஃபீசுல உக்காந்துகிட்டு, அந்த பிஞ்சுக் கொழந்தைகளைப் பத்தி ஏன் கவலைபட்டுகிட்டு இருக்கணும்? இதையெல்லாம் பாக்கும் போது ஏன் இப்படி பெண்கள் தன்னை வருத்திக்கறாங்கன்னு ஒரு சின்ன நெருடல் என் மனசுல இருக்கும்மா... அவ்வளவுதான்."

"நான் எடுத்துக்கிட்ட எந்த வேலையும் நான் சின்சியரா பண்றவ அங்கிள் ..." மீனா மெல்லிய குரலில் பேசினாள்.

"மீனா.. என்னை நீ தப்பா எடுத்துக்காதே... இதுவே வேற ஒரு பொண்ணா இருந்தா... இவ்வளவு தூரம் நான் பேசியே இருக்க மாட்டேன்... நீ என் வீட்டுக்கு வரப்போற மருமகளா இருக்கப் போய்த்தான் என் மனசுல இருக்கறதை கொஞ்சம் ஃப்ரீயா பேசினேன், மெல்லியக் குரலில் பேசியவாறு ராகவன் எழுந்தார்.

"அண்ணா... வீட்டுக்கு வந்த கொழந்தையை மொதல் நாளே, ஏன் டார்ச்சர் பண்றீங்க...? அவளுக்கு வேலைக்கு போகனும்ன்னு ஆசையிருந்தா அவ போகட்டும்... நான் எதுக்கு தடிமாடாட்டம் இந்த வீட்டுல இருக்கேன்...? அவளுக்குப் பொறக்கற குழந்தையை நான் பொறுப்பா பாத்துக்கறேன்.. போதுமா"

"ஹூம்...ம்ம்ம்க்க்கும்.. சரிடியம்மா... " முனகினார் ராகவன். தன் தங்கை உஷா வாயைத் திறந்தால், அடுத்த நொடி ராகவன் அமைதியாகிவிடுவார்.

"நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருங்க... சீனுவையே வளத்தா உஷா... அவனுக்கு பொறக்கறதை தெருவிலயா விட்டுடுவா... மீனா இஷ்டம்.. அவளைக் கட்டிக்கற உங்க புள்ளை இஷ்டம்... இதுல நீங்க ஏன் உங்க தலையை போட்டு ஒடைச்சிக்கிறீங்க.." பத்மாவுக்கு தன் கணவரின் பேச்சு எரிச்சலைத் தந்தது.

"சரிடீ... சரிடீ... உன் பாடு.. உன் மருமவளா வரப்போறவ பாடு... எதையாவது நீங்க பண்ணிக்குங்க..."

"டேய் சீனு... மீனாவுக்கு நம்ம வீட்டை சுத்திக்காட்டுடா.. மத்தியான பாட்டுக்கு சாதம் மட்டும்தான் ஏத்தணும்..." உஷா எழுந்து கிச்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"அத்தே... நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா..?" மீனாவும் அவள் முந்தானையை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

"வெறும் சாதம்தான் வெக்கணும்ம்மா.. சுண்டைக்காய் வத்தக்குழம்பும், உருளைக்கிழங்கு பொறியலும் ஏற்கனவே பண்ணியாச்சு... ரெண்டு அப்பளத்தை நெருப்புல வாட்டி எடுக்கணும்... உன் மாமாவுக்கு சுண்டைக்காய் வத்தல்னா ரொம்பப் பிரியம்... இனிமே இதெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்.."

"உங்களுக்கு என்ன பிடிக்கும் அத்தே?" மீனா தேனொழுகும் குரலில் பேசினாள்.

"ம்ம்ம்.. எனக்கு இப்ப உன்னைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு..."

"போங்கத்தே.. நான் சீரியஸா கேக்கறேன்... நீங்க என்னடான்ன கிண்டல் பண்றீங்க என்னை.." ரோஜாவாக அவள் முகம் மலர்ந்தது.

"ஒரே நாள்ல்ல எல்லாத்தையும் படிச்சுக்க முடியாதுடீ.. எல்லாத்தையும் சொல்லியும் கொடுக்க முடியாது... பாத்து பாத்து... அனுபவிச்சி அனுபவிச்சித்தான் சில காரியங்களைத் தெரிஞ்சுக்கணும்..."

"சரிங்க அத்தே..."

"இன்னைக்கு நீ பரிமாறும் போது என் கூட அமைதியா நின்னுப் பாரு... உனக்கே எல்லாம் தன்னாலப் புரிய வரும்.." உஷா சுருக்கமாக முடித்தாள். 

மீனாவோட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்ன்னு மனசு துடிக்குது. அப்பா என்னடான்னா இப்பத்தான் அவளை நகரவிடாம, தன் பக்கத்துல உக்கார வெச்சுக்கிட்டு பிளேடு போடறார். இவரை எப்படி கட் பண்ணிவிடறது...

காதலிக்க ஆரம்பிச்சு, மொதல் தடவையா இன்னைக்குத்தான் மீனாவை வெளியில இழுத்துக்கிட்டு வந்திருக்கேன். இவளை இப்ப எப்படி மாடிக்கு தள்ளிட்டுப் போறது? மனதுக்குள் திட்டம் போட்டுக்கொண்டிருந்த சீனுவுக்கு தன் அத்தை உஷாவின் வார்த்தைகளை கேட்டதும், பசிச்சவனுக்கு பாயசம் கிடைத்தது போலிருந்தது.

வா... மீனா உனக்கு நான் எங்க வீட்டை சுத்திக் காட்டுகிறேன், பூஜை ரூமைக் காட்டுகிறேன்... தோட்டத்தை காட்டுகிறேன்... என ஒரு ஐந்து நிமிடங்கள் எல்லோர் முன்னாலும் பாவ்லா பண்ணிகொண்டிருந்த சீனு, தோட்டத்திலிருந்து வெராந்தாவுக்குள் நுழைந்ததும், மீனாவை அங்கிருந்தே, மாடியிலிருந்த தன் அறைக்குள் இழுத்துக்கொண்டு நுழைந்தான்.

"சீனு.. இட் இஸ் கொய்ட் சர்ப்ரைசிங்.. என்னால நம்பவே முடியலை... உன் ரூமை நீ இவ்வளவு நீட் அண்ட் க்ளீனா வெச்சிருக்கே... மீனாவின் முகத்தில் ஆச்சரியம் வெளிப்படையாகத் தெரிந்தது.

"டார்லிங்... இன்னும் நீ என்னை சரியா புரிஞ்சுக்கலைடி செல்லம்... போவ போவ பாரு...!!" சீனுவின் முகத்தில் உற்சாகம் கொப்பளித்துக்கொண்டிருந்தது.

"ஆமாம்.. இந்த சனியன் புடிச்ச ஆஷ்ட்ரேயை மட்டும் படுக்கற கட்டில்ல தலைமாட்டிலே வெச்சிருக்கே... என்ன மனுஷனோ நீ... இதை தூக்கி முதல்ல குப்பையில வீசி அடிப்பா.." பளிங்கு கண்ணாடியில், மீன் வடிவத்தில் அழகாக செதுக்கப்பட்டிருந்த சாம்பல் கிண்ணத்தை தன் கையில் எடுத்தாள், மீனா.

"போடீ.. இவ ஒருத்தி... நீ சொன்னதைத்தான் நான் ஒத்துக்கிட்டேன்ல்லா.. இப்ப எதுக்கு நீ திருப்பியும் திருப்பியும் இந்த சிகரெட் டாபிக்கை எடுக்கறே...? சீனு சலிப்புடன் முணகினான்.

"தேங்க் யூ டா சீனு.."

"மீனு.. உன் தேங்க் யூல்லாம் எனக்கு வேணாம்.."

"வேற என்ன வேணும்?"

"நீ என் பக்கத்துல வாடீ.."

"ஹூகூம்.. சான்சே இல்ல.."

"ப்ளீஸ் கிட்ட வாடீன்னா.. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறே?"

"எதுக்க்க்கு..." கண்களில் திருட்டுத்தனத்துடன் மீனா தன் குரலை கிசுகிசுப்பாக்கி, நீளமாக இழுத்தாள்.

"வான்னா வரணும் நீ..."

"நீ எதுக்குன்னு சொல்லு.." மீனாவும் கொஞ்சினாள். அவள் இதயம் தடக் தடக்கென அடிக்க ஆரம்பித்தது.

"செல்லம்.. ஒரே ஒரு கிஸ் குடுடீ.." சீனு பிச்சைக்காரனைப் போல் கெஞ்சினான்.

மீனா திறந்திருந்த அறைக்கதவை தயக்கத்துடன் பார்த்தாள். திரும்பி சீனுவின் முகத்தைப் பார்த்தாள். அவன் முகத்திலிருந்த தவிப்பை, கண்களில் முளைவிட்டிருந்த ஆசையின் வேட்க்கையைப் பார்த்தாள். அவனைப் பார்ப்பதற்கு அவள் மனதுக்குள் என்னவோ போலிருந்தது.

என் சீனுக்குட்டிதானே.. தொலைஞ்சுப் போறான்... கிட்டப் போய்த்தான் பாப்போமே... என்னப் பண்றான்னு... மிஞ்சி மிஞ்சிப் போனா கட்டிப்புடிச்சி அவனே என்னை கிஸ் அடிப்பான்.. அவ்வளவுதானே... அதுக்குமேல எதாவது ஆரம்பிச்சான்ன... பட்டுன்னு கட் பண்ணிடணும்... சீராக சிந்தித்த மீனாவின் மனதிலும் சீனுவை கட்டிபிடிக்கும் ஆசை ஆவேசமாக எழுந்தது.

மீனா சீனுவை நோக்கி நகர்ந்தாள். அவனருகில் நின்று அவன் தலையைக் கலைத்தாள். சீனு அவள் தோளில் தன் கையைப் போட யத்தனித்தபோது அவன் மொபைல் அலறியது.

"கம்மினாட்டிங்க... பூஜை வேளையில கரடி மாதிரி வந்துடறானுங்க..." எரிச்சலுடன் முனகிக்கொண்டே, சீனு செல்லை ஆன் செய்தான். சீனுவின் முகத்தில் தோன்றிய எரிச்சலைக் கண்ட மீனா குஷியாகச் சிரித்தாள். சிரித்தவள் மெல்ல கதவை நோக்கி நகர ஆரம்பித்தாள்.

"எங்கடீப் போறே?"

"நீ பேசி முடி.." விஷமத்துடன் கண்ணடித்தாள், மீனா.

சீனு அவளை கண்ணாலேயே தன் அருகில் அழைத்தான். மீனாவும் தயங்கி தயங்கி அவன் அருகில் வந்து நின்றாள். 

மாப்ளே... எங்கடாப் போயிட்டே... இந்த ஊர்லத்தான் இருக்கியா? உன்னை ஆளைப்பாத்து பத்து நாளாச்சுடா..." மறுமுனையில் வேலாயுதம் உற்சாகமாக கூவினான்.

வெல்லாயுதத்தின் உற்சாகத்துக்கு காரணம், காலையிலேயே அவனுக்கு அவன் சிஷ்யன் ஒருவன் ஒரு குவார்டரோட வந்து கதவை தட்டி, ரெண்டு மூடி சோடாவில் கலந்து ஊத்திவிட்டு போயிருந்தான். அவன் கூவியது சீனுவின் பக்கத்தில் வெகு நெருக்கமாக நின்ற மீனாவுக்கு மிக மிக தெளிவாகக் கேட்டது.

மீனா, சீனுவின் நெற்றியில் வந்து விழும் அவன் தலை முடியை கலைத்து விளையாட ஆரம்பித்தாள். சீனு அதுதான் சாக்கு என அவளை சட்டென இழுத்து தன் மடியில் உட்காரவைத்துக் கொண்டான். அவன் வலது கரம் அவள் இடுப்பில் தவழ்ந்தது.

"சரி.. சரி.. வெல்லாயுதம்... அடங்குடா... மச்சான்.. உன் குரலே ஒரு மாதிரி இருக்குது... உடம்பு கிடம்பு சரியில்லையா... எதாவது மருந்து கிருந்து சாப்பிட்டியா? என்னா விஷயம்.. நான் இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன்டா.. ஐ வில் கேச் யூ லேட்டர்..."

சீனுவுக்கு புரிந்து விட்டது. எவனோ ஒரு தறுதலை இவனுக்கு மூடி நிறைய ஊத்திக்குடுத்து இருப்பான். இந்த கேனப் பயலுக்கு நேரம் காலமே கிடையாது என மனதுக்குள் சலித்துக்கொண்ட சீனு, சற்றே மிரட்சியுடன் அவனுக்குப் பதில் கொடுத்தவன், மீனாவின் கன்னத்தில் தன் கன்னத்தை உரசினான்.

"என்னாத் தலை.. உன் ஜிகிரி தோஸ்தை ச்சட்டுன்னு கட் பண்றியே... ஞாயமா இது.. மாப்ளே எங்கடா இருக்கே இப்ப நீ.. வீட்டுக்கு வரட்டா..."

"டேய்.. சும்மா இருடா நீ.. என் கோவத்தை கிளறாதே... சாயந்திரம் நானே வந்து பாக்கறேன் உன்னை..."

"என்னாத் தலை.. ஆஃபீஸ்ல இருக்கியா என்னா...? இல்லே... பக்கத்துல பிகர் எதாவது நிக்குதா... மச்ச்சீ..." வேலாயுதம் சீனு சொல்வதை புரிந்து கொள்ளாமல் அசட்டுதனமாக சிரிக்கிறேன் என்ற பெயரில் கழுதையைப் போல் கனைத்தான்.

மீனா சற்று முன் பீச்சில், அவன் கையில் சிகரெட்டைப் பார்த்துவிட்டு, அவனை உப்புத் தண்ணீ ஊத்தி கஞ்சி காய்ச்சியது, சீனுவின் மனதில் சட்டென வந்தது. எனக்கு நேரமே சரியில்லை. என்னடா இது என்னைப் புடிச்ச சனியனை பீச்சுல வுட்டுட்டு வந்தோமே... இன்னும் அவன் வரக் காணோமேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.



இப்ப அந்த சனியன் வேலாயுதம் ரூபத்துல செல்லு வழியா வந்துட்டான். மீனா இவன் பேச்சைக் கேட்டுட்டு இப்ப என்னக் கூத்தடிக்கப் போறாளோ.. சீனுவின் மனதுக்குள் ஒரு சிறிய கலக்கம் உடனடியாக எழுந்தது.

சீனு தயக்கத்துடன் தலையை திருப்பி தன் மடியில் உட்கார்ந்திருந்த மீனாவின் முகத்தைப் பார்த்தான். அவள் முகம் மாலை நேரத்து கீழ் வானமாக சிவக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. அவள் பார்வையில் அவள் மனதில் கிளம்பும் எரிச்சல் தெளிவாகத் தெரிந்தது. சீனுவின் மடியிலிருந்து விருட்டென எழுந்திருக்க முயன்றவளை.. சீனு இறுக்கமாக கட்டி அவள் பின் கழுத்தில் தன் உதடுகளை உரசினான்.

"டேய்.. வெல்லாயுதம்.. காலைக் கட் பண்றா.. நான் உன்னை கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடறேன்..." சீனு இறைந்தான் தன் தோழனிடம்.

"சரி மாப்ளே.. ஒரே ஒரு செகண்ட்.. நான் சொல்ல வந்ததை மட்டும் ஜல்தியா.. சுகுரா சொல்லிடறேன்.. மத்தியானம் மூணு மணி வாக்குல என் ரூமுக்கு பக்காவா வந்துடு மாப்ளே... வயித்தை காலியா வெச்சுக்கோ..."

"சீக்கிரமா சொல்லித் தொலைடா.... மேட்டர் என்னடா... உன் கூட பெரியத் தொல்லையாப் போச்சு.." சனியன் புடிச்சவனுக்கு நான் இருக்கற நிலைமை புரிஞ்சாத்தானே.. மேல மேல பேசிக்கிட்டேப் போறான். மீனா அவன் பிடியில் திமிறிக்கொண்டிருந்தாள். அவன் அவளை எழவிடாமல், அவள் இடுப்பை அழுத்தமாக வளைத்துக்கொண்டிருந்தான்.

"தலே.. முழுசா ஒரு ஸ்காட்ச் பாட்டிலோட நம்ம மச்சான் ஒருத்தன்... என் ரூம்ல உக்காந்துகினு கீறான்... கையோட நாட்டு கோழி ஒண்ணும் புட்சாந்து இருக்கான்.. சும்மா கொழுக்கு மொழுக்குன்னு இருக்குது மாப்ளே... நம்ம பசங்களுக்கு நீயூஸ் குடுத்துட்டேன்.."

"டேய்... டேய்.. என்னடா சொல்றே?"

"மாப்ளே சுத்தமான அரேஞ்ச்மென்ட்.. வரும் போது நீ ஒரு ரெண்டு லிட்டர் கோக் பாட்டில் ஒண்ணு புட்சாந்துடு.. நாம நாலே பேருதான்... மத்தபடிக்கு ஒரு டஜன் முட்டை.. ரெண்டு முழு ப்ளேட் பிரியாணி... ரூம்லேயே ஆம்லேட் போடறதுக்கு.. பச்சமொளகா.. வெங்காயம்.. மல்லித்தழைன்னு சப்ஜாடா எல்லா அரேஞ்ச்மென்ட்டும் ஒ.கே ஆயிடிச்சி.. நீ வந்தா ஒரே அமுக்கா அமிக்கிடலாம்.. இல்லேன்ன மெறிச்சிடலாம்... என்னா சொல்றே தலே... ரொம்ப லேட் பண்ணிடாதே.. ஆமாம்.." 

சீனு எங்கிருக்கிறான்... அவன் பக்கத்தில் இருப்பது யார்.. அவனுடைய மனநிலைமை என்ன, எதையுமே அறியாத வேலாயுதம் கண்மூடித்தனமாக வாயில் வந்ததை உளறிக்கொண்டிருந்தான். பாட்டிலைப் பார்த்ததுமே அவனுக்கு போதை ஏறிவிடும்.. ஆனால் மூடியைத் திறந்ததும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடுவான். இது அவனது விசேஷம்.

வேலாயுதம் குஷியாக கொக்கரிப்பதை தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்த மீனாவுக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. என் லைஃப்யே ஸ்டேக்ல வெச்சு, இவ்வளவு கஷ்டப்பட்டு, சீனுவை அவனோட குடிக்கற பழக்கத்தை விடச் சொல்லி சத்தியம் வாங்கியிருக்கேன்... இது தெரிஞ்சு இவன் வீட்டுல இருக்கறவங்கல்லாம், எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க.. என்னைத் தலையில தூக்கி வெச்சிக்காத குறையா கொண்டாடறாங்க...

நடுவுல எதுவோ தெருவுல போற நாய் ஒண்ணு.. என் சீனுவை குடிக்க கூப்பிடுது.. இதை மீனாவால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், சீனுவின் கையை உதறிவிட்டு அவன் மடியிலிருந்து எழந்தாள்... சட்டென சீனுவின் கையிலிருந்த செல்லைப் பிடுங்கினாள். தொண்டையைக் கணைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"மிஸ்டர்... ஊர்ல இருக்கறவனை கெடுக்கறதுக்குன்னே கங்கணம் கட்டிக்கிட்டு, ஓசியில எவன் தண்ணி வாங்கிக் குடுப்பான்.. குடுக்கறதை வாங்கிக் குடிச்சுட்டு, வாந்தி எடுக்கணும்ன்னு உடம்பை வளத்துக்கிட்டு அலையறீங்களே... உங்களுக்கெல்லாம் வெக்கமாயில்லே.."

"மீனா.. ப்ளீஸ்... வேணாம்மா.. போனைக்குடுத்துடு.. நான் போக மாட்டேண்டீ.. பிளீஸ் சொல்றதைக் கேளு.." பதறிப்போன சீனு, ஒரு முறை அவள் பேர் சொல்லி அலறியவன்.. அதன் பின் அவளிடம் கண்களாலும், சைகையாலும் கெஞ்ச ஆரம்பித்தான்.

"மேடம்.. மேடம்.. நீங்க யாரு பே..பேஸ்ஸ்றீங்க.." வேலாயுதத்துக்கு ஒன்றும் புரியவில்லை.. பதட்டத்தில் பேசியவனுக்கு வார்த்தைகள் முழுதுமாக வாயிலிருந்து வரமால் திணறினான்.

"ஹேங்... உன் பாட்டீ பேசறேன்டா... சித்த முன்னாடீ கேட்டீல்லா... பிகர் பக்கத்துல நிக்குதான்னு... உனக்கெல்லாம் மேனர்சே கிடையாதா.. ஹேங்.. க்க்க்ம்ம்ம்" மீனா சீறினாள்.

"சாரி மேடம்.. பிளீஸ்.. பிளீஸ்ஸ்.. நாங்க அண்ணன் தம்பியா ரொம்ப நாளா பழகறோம்.. ப்ரெண்ட்ஸ்ங்களுக்குள்ள ஜாலியா கலாய்ச்சுக்கிட்ட்டோம்.. நீங்க தப்பா நினைக்காதீங்கோ... மேடம்.."

"உன் குடும்பத்துல அண்ணன்.. தம்பி ரெண்டுபேரும் ஒரு மரியாதைப்பட்ட பொண்ணை.. பிகரு கிகருன்னுதான் பேசீப்பீங்களா..?"

"மேடம்... என்னன்னமோ தப்புத் தண்டாவா பேசறீங்களே.. எங்க தலை கிட்ட கொஞ்சம் செல்லைக் குடுங்க.. நான் என் தோஸ்தாண்டா பேசிக்கிறேன்..."

"இந்த கலாய்க்கற வேலையெல்லாத்தையும் வேற எங்கயாவது வெச்சுக்க்க்க" இனிமே 'என் சீனு' கிட்ட எந்தக் காரணத்தைக் கொண்டும் தோஸ்தி வெச்சிக்காதே.. மீனாவின் குரலில் சூடு ஏறிக்கொண்டே போனது. அவள் குரலில் சீனுவின் மேல் அவளுக்கு இருக்கும் உரிமையை, துப்பாக்கியிலிருந்து சீறி வரும் குண்டாக வெளிப்படுத்தினாள்.

"சாரிங்க மேடம்... நீங்க யார் பேசறீங்கன்னு எனக்குத் தெரியலை.. நான் கேக்கறனேன்னு கோச்சீக்காதீங்க.. நீங்க எங்கிட்ட தமாசுக்காக, காமெடி கீமடி எதுவும் பண்ணலயே?

"அது ஒண்ணுதான் கொறைச்சல் இப்ப...?"

பேசறக் குரலைக் கேட்டா ஷார்ப்பா ஒரு சின்ன பொண்ணு குரல் மாதிரி இருக்கு.. சீனுவோட அம்மா குரலா.. இல்லையே.. நிச்சயமா இல்லே... நான் வேலாயுதம் பேசறேன்னு தெரிஞ்சா, எப்பவுமே அவங்க ரொம்ப ரொம்ப அன்பா என் கிட்ட பேசுவாங்களே..

நம்ம 'தலை' கையிலேருந்து செல்லைப் புடுங்கி பேசற அளவுக்கு அவங்க வீட்டுல யாருக்கு தைரியம் இருக்கு..? பேசறது சீனுவோட அத்தையா இருக்குமா..?. வேலாயுதத்துக்கு குழப்பமாக இருந்தது. தன் தலையை சொறிந்து கொண்டான்.

"மேடம்... நீங்க யாருன்னு சொல்லவே மாட்டீங்களா? உங்க வாய்ஸ்ல ரொம்பவே தீ பொறி பறக்குது மேடம்..."

"மிஸ்டர் வெல்லாயுதம்.. நான் யாருன்னா கேக்கறே? நான்தான் உன் 'தலை' கையால சீக்கிரமே தாலி கட்டிக்கப் போறவ... நான் சொல்றதை கொஞ்சம் நல்லாக் கவனமா... காதைத் தொறந்து கேளு..."

"வணக்கம் மேடம்..." வேலாயுதம் மிகுந்த பணிவுடன் பேசினான்.

"நக்கலா... ஹூம்... வேலாயுதம்.. இன்னொரு தரம், நீ சீனுவுக்கு போன் பண்ணி... கட்டிங் வுடலாம்.. ஆம்லெட் போடலாம்.. கூடவே கோழி அமுக்கலாம்... வயித்தைக் காயப் போட்டுக்கிட்டு வந்துடு... பார்ட்டீ... கீர்ட்டீன்னு.. எதுக்காவது கூப்ட்டேன்னு எனக்குத் தெரிஞ்சுது... உனக்கு இருக்கற மரியாதை சுத்தமா கெட்டுப் போயிடும் சொல்லிட்டேன்.."

"மீனா.. நிறுத்துடீ ப்ளீஸ்..." அவளைக் கையெடுத்து கும்பிட்ட சீனு தன் கைகளை தன் தலையில் வைத்துக்கொண்டான்.

மீனா கோபத்தில் தான் என்னப் பேசுகிறோம் எனப் புரியாமல் வேக வேகமாகப் வேலாயுதத்தின் முதுகில் 'டின்' கட்டிக்கொண்டிருந்தாள். மறு முனையில் அவள் பேசியதைக் கேட்டு வேலாயுதம் திடுக்கிட்டுப் போனான். தலையைக் கட்டிக்கப் போறவளாமே...

நடுவுல மீனா நிறுத்துடீன்னு சொன்ன மாதிரி கொரல் கேட்டுதே.. அந்தக் கொரலு தலையோட கொரல் மாதிரிதானே இருந்திச்சி.... என்னப்படம் இது.. யாரு டைரக்ஷன்... திரைக்கதை வசனம் யாருது.. ஒண்ணுமே புரியலியே...

மீனாங்கறது நம்ம மாப்ளை செல்வாவோட தங்கச்சி பேராச்சே.. ஓஹோ.. ஹோ... ஹோ... ஓஹோ... கதை அப்டீ போவுதா... அதானேப் பாத்தேன்.. நம்ம 'தலையா கொக்கா..?' கட்ச்சீல மீனாவை கரெக்ட் பண்ணிட்டாரா நம்ம தலை சீனு..? வேலாயுதத்துக்கு குஷி பிய்த்துக்கொண்டு கிளம்பியது.

மீனாவுக்கு ரோடு போட்டு.. அவளுக்கு ரூட்டு காமிக்கற இந்த மேட்டரைப் பத்தி தலை எப்பவும் நம்மக்கிட்ட சொன்னதே இல்லயே... கட்சீல நம்ம 'தலைக்கும்' ஒரு ஷோக்கு பிகர் செட் ஆயிடிச்சா..? இன்னைய டேட்ல சிட்டியில இதான் ஹாட் நீயூஸ் மாமே... பசங்களா கேட்டுக்கினீங்களாடா மேட்டரை...

தலை காதும் காதும் வெச்ச மாதிரி செல்வா தங்கச்சியை கணக்கு பண்ணி கரெக்ட் பண்ணி இருக்காரு... சும்மா வுட்டுடக்கூடாது தலையை... என்னம்மா உரிமை கொண்டாடறா மீனா...? என் சீனுங்கறா... இந்த ஒரு வார்த்தைக்கே மட்டுமே தலை நமக்கு ஒரு செமை ட்ரீட் குடுக்கணுமே...
]
என் மரியாதை கெட்டுப்பூடுங்கறா... இந்த டயலாக்தான் கேக்கறதுக்கு கொஞ்சம் பேஜாரா இருக்குது... போனாப் போவுது.. யாரு அது நம்ப அண்ணிதானே திட்டினது... கோபம் இருக்கற எடத்துலதான் கொணம் இருக்கும்... இதெல்லாம் கண்டுகினா வேலைக்கு ஆவுமா...

மீனா ரொம்பவே 'உஷார்' பார்ட்டி ஆச்சே.. ஒரு தரம் வெயில் நேரத்துல செல்வா வீட்டுக்கு போயிருந்தப்ப, ஒரு கிளாஸ் தண்ணி குடும்மான்னேன்.. நான் என்னா உனக்கு அம்மாவான்னு சுள்ளுன்னு எரிஞ்சு விழுந்தாளே.. கல்யாணத்துக்கு முன்னாடீயே 'தலயோட' வீட்டுக்கு வந்து 'தலைக்கே' நல்லெண்ணைய் தேச்சு சுளுக்கு எடுக்கறாளா அவ..? மேட்டரு இன்ட்ரஸ்டிங்கா போவுதே... வேலாயுதத்துக்கு தலை சுற்றியது.

"சாரி.. மீனா.. மீனா மேடம்... அயாம் சாரி... எக்ஸ்க்யூஸ் மீ... இனிமே இப்டீல்லாம் நடக்காது.. "

"வேலாயுதம்.. நல்லாக் கேட்டுக்குங்க.. இப்ப இங்க நடந்த விஷயத்தை, நான் உங்க கிட்ட பேசின விஷயத்தை, நான் சீனு கூட இருக்கறதை, ஊரு ஒலகத்துக்கெல்லாம்.. உடனே ப்ராட்காஸ்ட் பண்ணிடாதீங்க...ஆமாம்." மீனா வேலாயுதத்தை ஒரு மிரட்டு மிரட்டிவிட்டு, காலை கட் பண்ணினாள். செல்லை விசிறி கட்டிலின் மேல் எறிந்தாள்.

வேலாயுதம் அசந்து போய் நின்றான். காலங்காத்தால மீனா மாதிரி சின்னப் பொண்ணு கிட்ட தேவையே இல்லாம ஓத்தாமட்டை வாங்க வேண்டியதா போச்சே.. செல்வா மாதிரியே அவன் தங்கச்சி மீனாவும் பொம்பளை புத்தரா பொறந்து இருக்கா.. 'தலை' நான் கால் பண்றேன்னு சொன்னப்பவே... அதை புரிஞ்சுக்கிட்டு வாயை பொத்திக்கிட்டு இருந்து இருக்கணும்.. நான் ஒரு கூறுகெட்டவன்... மொக்கையாட்டம் மேல மேல உளறிட்டேன்...



வேட்டிக்குள்ள ஓணானை எடுத்து வுட்டுகிட்டாச்சு... இப்ப கொடையுதே.. குத்துதேன்னு நொந்துக்கிட்டு என்னாப் பண்றது... ம்ம்ம்.. நம்ம 'தலை சீனுவே' அடிக்கற காத்துல அம்மிக்கல்லா பறக்கறாரு.. என்னடா இது பேஜாரு.. ம்ம்ம். கட்டிங் வுட்டுக்கற மூடே கெட்டுப்போச்சே..

கிணறு வெட்டப் போனா பூதம் கெளம்புற கதையா போச்சே... அட்லீஸ்ட் கடைசீல நமக்கு ஆப்பு வெச்சது யாருன்னு தெரிஞ்சுப் போச்ச்ச்சு... சீனுவோட அத்தையா இருக்குமோன்னு ரொம்பவே பயந்து போயிட்டேன்.. ஏற்கனவே என்னை அவங்க வீட்டுக்குள்ளவே விடமாட்டேங்கறாங்க.. காலிங் பெல் அடிச்சா.. அவங்க வீட்டு வரண்டாக் கதவையே தொறக்க மாட்டாங்க..

தலை சொல்ற மாதிரி நம்ம நேரம் சரியில்லே... இனிமே கொஞ்ச நாளைக்கு நம்ம 'தலை' வீட்டுப் பக்கமே நாம தலைவெச்சு படுக்கக்கூடாது... மனதுக்குள் முனகிக்கொண்டான் வேலாயுதம்.


No comments:

Post a Comment