Monday 23 March 2015

சுகன்யா... 70

ராகவனுடையது கிழக்குப் பார்த்த வீடு. தை மாதத்தின் மெல்லிய காற்று வீட்டுக்குள் சிலு சிலுவென அடித்துக்கொண்டிருந்தது. அன்று சூரியன் தலைக்கு மேல் சோகையாக காய்ந்து கொண்டிருந்தான். சாயந்திரம் மழை வரும் போலிருந்தது. வெராண்டாவுக்குள் குளிர்ச்சியான நிழல் வந்துவிட்டிருந்தது. பத்மா வராந்தாவில் குத்துக்காலிட்டு அமர்ந்து, தன் நாத்தனாரின் தலை முடியைப் பாகம் பாகமாகப் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். உஷா தன் கை நகங்களை வெட்டிக்கொண்டிருந்தாள்.

ராகவனும், சீனுவும் வீட்டை விட்டு தத்தம் அலுவலகத்துக்கு கிளம்பிய பின், வீட்டுப்பெண்கள் இருவரும் ஜாலியாக மதியம் இரண்டு மணி வரை இப்படித்தான் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கிடையில், தினமும் பேசுவதற்கென்று புதுசுபுதுசாக ஏதாவது விஷயம் இருந்து கொண்டுதானிருந்தது. வாயில் பேச்சு பேச்சாக ஓடிக் கொண்டிருக்கும். கைகள் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும். மளிகை சாமான்கள் சுத்தமாகிக் கொண்டிருக்கும். சுத்தப்படுத்தப்பட்ட பருப்பு, தனியா, மிளகாய், புளி என சமையலுக்குத் தேவயான பொருள்கள், பிளாஸ்டிக் கன்டெய்னர்களில், சீராக அடைபடும்.



மறுநாள் கிச்சனில், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு என வறுபடும். மிக்சியில் அரைபட்டு, பருப்பு பொடியாக, இட்லிப் பொடியாக மாறி, சிறு சிறு பாட்டில்கள் நிறையும். அடுத்த நாள் மாடியில், மெல்லிய துணி விரிக்கப்பட்டு, அரிசி மாவு அரைக்கப்பட்டு, கஞ்சியாக காய்ச்சப்பட்டு, வெயிலில் காய்ந்து வீட்டுக்குத் தேவையான வத்தல் வடாமாக மாறும்.

பகல் பனிரெண்டு மணி வரை, வீட்டு வேலைகளில் மூழ்கி இருப்பவர்கள், டீவியில் சீரியலை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்கள். சிறிது நேரம் கூடத்திலேயே கண்ணயர்வார்கள். நாலுமணிவாக்கில் முகம் கழுவி, காஃபியை குடித்துவிட்டு, அண்ணியும், நாத்தியும் தினமும் வீட்டுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு கையில் ஒரு பிளாஸ்டிக் வொயர் கூடையுடன் நடந்தே போவார்கள். சுவாமி தரிசனம் முடிந்தபின் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை கையோடு வாங்கிக் கொண்டு, ஆறு மணிக்குமுன் வீடு திரும்புவார்கள். இரவு உணவு தயாராகும். சாப்பிட்டதும், பத்தே நிமிடத்தில், டெலிவிஷனின் முன்னால் பத்மா தன் கண்கள் சொக்க, சாமியாட ஆரம்பிப்பாள்.

"உஷா..."

"சொல்லுங்க மன்னி..."

"நம்ம சீனுவை, அவன் தாடி, மீசைன்னு எல்லாத்தையும் வழிக்க வெச்ச அந்தப் பொண்ணு யாருடீ... அவளை உனக்குத் தெரியுமின்னு சொன்னே... என்னடீ பெரிய சஸ்பென்ஸ்... சீக்கிரமாச் சொல்லித் தொலைடீ... என் தலை வெடிக்குது..." பத்மா புலம்பிக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்..."

"நான் கேட்டதுக்கு பதிலே குடுக்கல்லே நீ? பக்கத்திலிருந்த வென்னீரை ஒரு முழுங்கு உறிஞ்சிக் குடித்தாள், பத்மா.

"ஒரு பத்து நிமிஷம் பொறுங்க மன்னீ... இதோ வரேன்னு சொல்லிட்டுப் போனவன், தான் கட்டிக்கப்போறவளை அழைச்சிகிட்டு வரத்தானே போறான்.. "

"பொண்ணு உயரமா, துறுதுறுன்னு மெல்லிசாதான் இருப்பா... பேச்சு மட்டும் பட் பட்ன்னு மிளகாய் பட்டாசா வெடிப்பா... சிரிச்ச முகம்... பொண்ணைப் பெத்தவ வீட்டுக்காரியத்தை எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கான்னுதான் கேள்வி.. எல்லாம் நீங்கப் பாக்கத்தானே போறீங்க.." உஷா நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

"நீயும் ஒரு மணி நேரமா இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கே... என்னைக்கும் நீ அவன் பக்கம்தான்டீ, நாள் பூரா உன் கூட உழல்றேன்... ஆனாலும் உனக்கு அவனும் அவன் சொல்றதும்தான் வேதவாக்கு.."

வீட்டுக்கு வெளியில் பைக் நிற்கும் சத்தமும், ஹார்ன் ஒலிப்பதும் கேட்டது. பைக்கில் சீனுவின் பின்னால் உட்கார்ந்திருந்த மீனா, சட்டென குதித்து இறங்கி அவனருகில் நின்றாள். நின்றவளின் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. கட்டியிருந்தப் புடவையை சீராக்கிக்கொண்டாள்.

"சீனு... எனக்கு என்னமோ பயமா இருக்குப்பா... கோவில்ல உங்கத்தைக்கிட்ட நெறைய தரம் நான் பேசியிருக்கேன்... உங்கப்பாக்கிட்ட எப்பவும் நான் பேசினதேயில்லை.."

"எதுக்கு பயப்படறே... எங்க வீட்டுல உன்னை யாரும் வேணாம்ன்னு சொல்லப் போறதில்லே... எங்கம்மாவை உனக்கு நல்லாத் தெரியும்... அப்புறம் என்னா? எது நடந்தாலும் பாத்துக்கலாம் வா..." சீனுவின் முழங்கையை பிடித்துக்கொண்டு, அவன் உடலோடு தன் உடலை உரசியவாறு, தலையை குனிந்துகொண்டு, வீட்டுக்குள் நுழைந்தாள், மீனா.

"என்னங்க.. சீனு வந்துட்டாங்க... எழுந்து வாங்க வெளியிலே... யார் வந்திருக்கிறதுன்னு பாருங்களேன் .."

பத்மா சிறு கூச்சலிட்டவாறே விசுக்கென எழுந்தாள். மீனாவின் முகம் முழுவதுமாக கண்ணில் நிறைந்து, மகனின் கையை பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் வருபவள் யார் என மனதில் முழுவதுமாக உறைத்ததும், ஒரு நொடி அவள் திகைத்தாள். அடுத்த கணம் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

"என்னடீ உஷா... சீனு கூட வர்றது நம்ம செல்வாவோட தங்கச்சி மீனாதானேடீ.. இவளா சீனுவை கட்டிக்க ஆசைப்பட்டவ..?" குரலில் வியப்பு ஏறியிருந்தது.

"ஆமாம் மன்னி... இவளேதான்... மருமவளா வர்றவ யாராயிருந்தாலும் எனக்கு சம்மதம்ன்னு அண்ணன் காலையிலேயே சொல்லிட்டாரு; 'எனக்கு நல்லாத் தெரிஞ்ச குடும்பம், கடைசி செமஸ்டர் இஞ்சினியரீங் படிக்கிறா, சைவம்ன்னு' சீனு சொன்னதுமே, வரப்போறவ மீனா, நமக்குத் தெரிஞ்ச, நம்ம குடும்பத்துக்கு ஏத்த அடக்கமான பொண்ணுதான்னு என் மனசு அப்பவே நிறைஞ்சு போச்சு..."

"மன்னீ... திருப்பதி பத்மாவதி வீட்டு சமையல் கட்டுக்குள்ள, மதுரை மீனாட்சி நுழையறதுல உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?"

"பெருமாளே... என் மனசு குளுந்து போச்சுடீ.. அடியே உஷா... நீ சொல்ற மாதிரி சுத்தமான குடும்பம்டீ... அவங்க சிவனை கும்பிட்டா என்ன, முருகனை கும்பிட்டா என்னடீ... தெய்வங்கள் எல்லாம் ஓண்ணுதான்டீ... மீனா, மல்லிகா வளத்தப் பொண்ணு... சீக்கிரமா ஆத்துக்குள்ளப் போய் ட்ப்பாவுல ஏதாவது ஸ்வீட் வெச்சிருப்பியே சட்டுன்னு எடுத்துண்டு வாடீ... அந்த குழந்தை வாயில முதல்ல இந்த வீட்டுத் தித்திப்பை போடணும்.." பத்மாவின் மனமும் உடலும் மகிழ்ச்சியில் பரபரத்தன.

ஊரெல்லாம் ஜல்லடை போட்டு என் புள்ளைக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தேன். போற கோவில்ல, நடந்து போற ரோடுல, சாமான் வாங்கற கடையிலேன்னு, கண்ணுக்கு லட்சணமா தெரியற பொண்ணுங்களைப் பாத்ததும்.. என் மனசு அப்படியே அடிச்சிக்கும்... இவதான் என் மருமகளா... இல்லை இவளா... இல்லே அவளா...

எப்படீல்லாம் என் மனசுக்குள்ளவே கோட்டை கட்டிக்கிட்டு இருக்கேன் தெரியுமா? கண்ணுக்கு எதிர்ல, எளசா பிஞ்சுக்கத்திரிக்காய் மாதிரி, பளபளன்னு இப்பத்தான் துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி, ம்ம்ம்.. ஈரத்துணியில சுத்தி வெச்ச மல்லிப்பூ மொட்டு மாதிரி, கைக்கெட்டின தூரத்துல வெண்ணையை வெச்சுக்கிட்டு, நெய்யுக்கு அலைஞ்சேனே?

கோவிந்தா... கோவிந்தா.. இவ என் மனசுக்குள்ள எப்பவும் வந்ததில்லையே? நேரம் காலம் வந்தாத்தானே நடக்கவேண்டிது நடக்கும்... அப்பத்தான் எதிர்லே இருக்கற பொருள் கண்ணுக்குத் தென்படும்...

பகவானே... வரதராஜா! மணி ராத்திரி பத்தாச்சு... வெளியிலப் போன என் பிள்ளை சீனு இன்னும் வீட்டுக்கு வந்து சேரலே... அவன் உங்க வீட்டுலத்தானே இருக்கானான்னு எத்தனை நாள் இவளுக்குப் போன் பண்ணி விசாரிச்சிருப்பேன்... அப்பல்லாம் என் மனசு எப்பவும் இவளை என் மருமவளா நெனைச்சப் பாத்ததே இல்லையே?

மீனாட்சிதான் என் புள்ளைக்கிட்ட குடிக்கறதை விடுடான்னு சத்தியம் வாங்கினவளா...? எங்க மனசுல பாலை வாத்தவ இவதானா!! பெருமாளே... இவளைத்தான் நீ என் சீனுவுக்கு முடி போட்டு வெச்சிருக்கியா... பத்மாவின் மனம் நொடியில் இங்குமங்கும் அலைந்து திரிந்து தன் நிலைக்கு திரும்பியது.

"வாம்மா மீனா... உன் வலது காலை எடுத்து வெச்சு வீட்டுக்குள்ள வாம்மா..." வரந்தாவுக்குள் நுழைந்த மீனாவை தன் மருமகளாகவே பாவித்து, சட்டென தன் தோளோடு அணைத்துக்கொண்டாள், பத்மா.

"டேய்... சீனு இந்தக் கொழந்தயை எனக்குத் தெரியாதாடா? இவளை நான் வீட்டுக்குள்ள வராதேன்னு சொல்லிடுவேனாடா? ரொம்பத்தான் டிராமா பண்ணே... சஸ்பென்ஸ் அது இதுன்னு... வரப்போறவ யாரா இருக்கும்ன்னு ஒரு மணி நேரமா என் மண்டையை போட்டு ஒடைச்சிக்கிட்டு இருந்தேன்..." சீனுவின் முதுகில் செல்லமாக அடித்தாள், தாய்.

"என்னம்மா நீ... இவ எதிர்லே என்னை அடிக்கிறே நீ" அம்மாவிடம் கொஞ்சினான் சீனு. தன் வீட்டுக்குள் நுழைந்ததும் எந்த எதிர்ப்புமில்லாமல், தன் தாய் மீனாவை ஆசையுடன் வரவேற்றதும், அவனுடைய முகம் மகிழ்ச்சியில் பூவாய் மலர்ந்திருந்தது. என் செலக்ஷன் உங்களுக்கும் திருப்திதானே என்று தன் அத்தையைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

"எப்படியிருக்கேடீ மீனா... முதல்ல வாயைத் தொறடீ..." அவள் வாய் கொள்ளாத சைசில் ஒரு துண்டு பால்கோவாவைத் திணித்தாள், உஷா. எங்க சீனு தப்பான காரியம் பண்ணமாட்டான்னு எனக்குத் தெரியும்ன்டீ மீனா... உன் அம்மா சவுக்கியம்தானே?

"நல்லாருக்கேன் அத்தே.. நீங்கள்ளாம் எப்படி இருக்கீங்க..." முகத்தில் பொங்கிவரும் சிரிப்புடன், கண்களில் மிரட்சியுடன் பேசினாள் மீனா.

"டேய் சீனு.. கன்கிராட்ஸ்டா... உள்ளே வாம்மா மீனா..." ராகவன் தன் கையை மீனாவின் புறம் நீட்டினார்.

"தேங்க் யூ அங்கிள்..." ராகவனின் கையை குலுக்கிய மீனா, தன் தலையை குனிந்தவாறு சொன்னாள்.

"மீனு... இந்த புடவையில நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கேடீ... இதுக்கு முன்னே எப்பவும் உன்னை நான் புடவையில பாத்ததே இல்லே.." உஷா, அவள் தலையை கண்களில் பொங்கும் மகிழ்ச்சியுடன் மெல்ல வருடினாள்.

"மீனாட்சி... நீ என் பையனை உன்னோட வாழ்க்கைத் துணையா செலக்ட் பண்ணதுல எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்மா... அதுக்கு மேலயும் எனக்கு மகிழ்ச்சி குடுக்கற ஒரு விஷயம் என்னன்னா... இந்த வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே நீ சீனுவோட வாலை ஒட்ட அறுத்துட்டேன்னு கேள்விப்பட்டேன்... அதுக்கு நான் உனக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லித்தான் ஆகணும்.." ராகவன் சிரிப்புடன் தன் மகனை நோக்கி கண்ணடித்தார்.

"அங்கிள்.. ப்ளீஸ்... அவரை என் எதிர்ல ஒண்ணும் சொல்லாதீங்க..." வெட்கத்துடன் கெஞ்சலாக பேசினாள் மீனா.

"இப்பவே சீனுவுக்கு ரொம்ப வக்காலத்து வாங்கதடீ...மீனு..." உஷா உரக்கச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே அவளை இழுத்துக்கொண்டு தன்அறையை நோக்கி நடந்தாள். 


உஷாவுடன் சென்ற மீனாவை பின் தொடர்ந்து பத்மாவும், அவள் அறைக்குள் மெல்ல நுழைந்தாள். பெண்கள் தங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொள்ளும் மெல்லிய ஓசை ஹாலுக்குள் மிதந்து வந்தது.

"மீனா... எங்க சீனு உன்னைக் காதலிக்கறேங்கறான்... உனக்கும் அவனை பிடிச்சிருக்குல்லம்மா..." உஷா அவள் கையை வருடிக்கொண்டிருந்தாள்.

"ரொம்ப பிடிச்சிருக்கு...அத்தே" ஒரு நொடி முகம் சிவந்து பேசியவள் தன் தலையை குனிந்து கொண்டாள். 

"ஏம்மா.. என் பிள்ளை மீசை வெச்சிருந்தது உனக்குப் பிடிக்கலையா?"

"ஹூகூம்..." 

"ஏம்மா..."

"என்னமோ எனக்கு மீசை வெச்சவங்களைப் பாத்தாலே பயம்.." 

"ம்ம்ம்.. இப்பத்தான் அவன் மீசையை எடுத்துட்டானே... இப்ப எப்படீ இருக்கான் அவன்?" உஷா சிரித்தாள்.



"ஹிந்திப் படத்துல வர்ற ஹீரோ மாதிரியிருக்கார்..." மீனா வெட்கத்துடன் முறுவலித்தாள்.

"செல்வாவும் தானே மீசை வெச்சிருக்கான்..." பத்மா விருட்டென ஒரு கேள்வியை எழுப்பினாள்.

"செல்வாப் பத்தி சுகன்யாதான் கவலைப்படணும்.. அவ தானே அவனைக் கட்டிக்கப் போறவ.. அத்தே" மீனாவிடமிருந்து சட்டென வந்தது பதில்.

"நல்லாச் சொன்னேடீ... சீனு உன் கிட்ட வந்தான்னா மூஞ்சியில முள்ளு குத்தாது.." சொல்லிவிட்டு சிரித்தாள் உஷா.."

பெண்கள் மூவரும் ஒசையாக சிரிக்கும் சப்தத்தை கேட்டு, தன் முகத்தில் கிளம்பிய ஆச்சரியத்துடன் தன் மகனை உற்றுப் பார்த்தார், ராகவன்.

"வந்தவகிட்ட ஒரு வார்த்தை பேசவிடாம ரூமுக்குள்ள இழுத்துக்கிட்டு போயிட்டாளுங்க... குசுகுசுன்னு பேசி சிரிச்சி யாரை கிண்டல் பண்றாளுங்க?"

"பத்மா... என்னடீ... நடக்குது இங்க? சொல்ற ஜோக்கை எங்க கிட்ட சொன்னா, நாங்களும் சிரிப்போம்ல்லா.." உஷாவின் அறைக்குள் நுழைந்தார் ராகவன். கட்டிலில் உட்க்கார்ந்திருந்த மீனா அவரைக் கண்டதும் சட்டென எழுந்து நின்றாள்.

"நாங்க பொம்பளைங்க எங்களுக்குள்ள பேசிக்கறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு.. இப்ப யாரு உங்களை இங்கக் கூப்பிட்டது... நீங்க உங்க வேலையை கவனியுங்க சித்த நேரம்...." பத்மா தன் கணவரை அர்த்தத்துடன் உற்று நோக்கினாள்.

"வீட்டுக்கு வந்த கொழந்தை கிட்ட ரெண்டு வார்த்தை பேசணும்ன்னு எனக்கும் ஆசையா இருக்குடீ..."

"ரெண்டு நிமிஷம் ஹால்லே உக்காருங்க... எல்லோருமா உக்காந்து சாப்பிடலாம்... என்ன பேசணுமோ அப்ப பேசிக்குங்க..." உஷாவும் தன் அண்ணனைப் பார்த்து சிரித்தாள். 

"மீனா... நீங்க லவ் பண்ற விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமாடீ கண்ணு.." பத்மா, தன் வீட்டுக்கு வரப்போகும் மருமகளிடம் குழைந்தாள்.

"ம்ம்ம்... எங்க விஷயம் செல்வாவுக்கு மட்டும் தெரியும்... இப்ப நான் இங்க வந்திருக்கறதும் அண்ணனுக்குத் தெரியும் அத்தே..."

"அத்தே..."

"சொல்லும்மா..."

"கோவில்ல நீங்க என் அம்மாவை பாத்தாலும் இந்த விஷயத்தைப் பத்தி நீங்க அவங்க கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்லாதீங்க.." கெஞ்சலாக வந்தது அவள் குரல். 

"ஏண்டா கண்ணு..?"

"என் எக்ஸாமுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு... எந்த டென்ஷனுமில்லாம, நான் என் படிப்பை முடிச்சு மொதல்ல டிகிரியை வாங்கணும்ன்னு நினைக்கறேன்..."

"நீ சொல்றது சரிதாம்மா... எல்லாம் நல்லபடியா நடக்கும்.. இனிமே எதைப்பத்தியும் நீ கவலைப் படாம படிக்கற வேலையை பாரு... நடக்க வேண்டியதை நாங்கப் பாத்துக்கறோம்.." பத்மா மீனாவின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டு அவள் தலையை மென்மையாக வருடினாள்.

"தேங்க் யூ அத்தே..."

"ஏன்டீ மீனா, நீங்க ரெண்டு பேரும் பீச்சுக்கு போயிட்டு வர்றீங்களா?" உஷாவின் கண்களில் விஷமம் கூத்தாடிக்கொண்டிருந்தது. மீனா ஒரு நொடி திகைத்துப் போனாள். 

நாங்க பீச்சுலேருந்து வர்றோம்ன்னு இவங்களுக்கு எப்படித் தெரிஞ்சது..? உஷா அத்தே ரொம்பவே ஷூருடா இருக்காங்க... இவங்க கிட்ட கொஞ்சம் பக்குவமா, நிதானமாத்தான் பேசணும், பழகணும் போலருக்கே... அவள் மனம் அவளை எச்சரித்தது.

நான் யாருகிட்டவும் எதுக்காகப் பயப்படணும்..? நான் வேணாம்ன்னாலும் கேக்காம, இவங்க ஆசைப் பிள்ளைதானே என்னை கடற்கரைக்கு இழுத்துக்கிட்டுப் போனான்... எனக்கென்ன பயம்... நான் உண்மையைச் சொல்லத்தான் போறேன்... மீனா தன் மனதுக்குள் வாதம் செய்தாள். 

"ஆமாம் அத்தே... இன்னைக்கு வெயிலே இல்ல... காத்து சுகமா அடிக்குதுடீ... ஒரு அஞ்சு நிமிஷம், தண்ணில நிக்கலாம்ன்னாரு.. முதல் தடவையா வெளியில ஒண்ணா வந்திருக்கோம்... அவரு ஆசையா கூப்பிடறாரேன்னு சரின்னுட்டேன்.." 

"ம்ம்ம்.. பரவால்லேடீ... உன்னைக் கொறையா சொல்லலேம்மா" உஷா பத்மாவின் முகத்தைப் பார்த்தாள். 

"அத்தே உங்களுக்கு எப்படீ தெரிஞ்சுது நாங்க பீச்சுலேருந்து வர்றோம்ன்னு?"

"வெளியில வரண்டாவுல நீங்க கழட்டிப் போட்ட ரெண்டு பேர் செருப்புலேயும்... வெள்ளையா, பொடி பொடியா கடல் மண்ணு ஒட்டிக்கிட்டு இருந்துடீ... சும்மா ஒரு கஸ் அடிச்சேன்.. அது சரியாப் போயிடிச்சி.." கலகலவென சிரித்தாள் உஷா.

என் சீனுவோட காதலி, மனசுல இருக்கறது எதையும் ஓளிச்சு வெச்சுக்காம, பட்டுன்னு உண்மையை பேசறா... இவளோட இந்த குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு... இந்த வீட்டுக்குள்ள நுழையறதுக்கு உண்டான தகுதிகள் இவகிட்ட நெறயவே இருக்கு... உஷா தன் மனதுக்குள் திருப்தியடைந்தாள். 

"மீனா... நீ படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாங்கற ஐடியாவுல இருக்கேம்மா?" ராகவன் அவளை கூர்ந்து பார்த்தார்.

"நான் எம்.இ. படிக்கணும்ன்னு அப்பா சொல்லிக்கிட்டு இருக்காரு... ஆனா இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை.."

"ஏன்டா சீனு நீதான் படிக்கற காலத்துல ஒழுங்காப் படிக்கலை... படிக்கறப் பொண்ணோட மனசையும் கெடுத்துட்டியேடா?" ராகவன் தன் ஹாஸ்யத்திற்கு தானே சிரித்துக்கொண்டார். 

"எனக்கு வேலைக்கு போகணும் அங்கிள்..."



"ம்ம்ம்... சீனு கை நிறைய சம்பாதிக்கறாம்மா..."

"அங்கிள்... என்னை தப்பா நெனைக்காதீங்க... கொஞ்சநாளாவது எனக்கு வேலை செய்யணும்ன்னு ஆசையா இருக்கு... நெக்ஸ்ட் வீக், எங்க காலேஜூக்கு ப்ளேஸ்மென்ட் கம்பெனிங்க வர்றதா இருக்காங்க... நான் அவங்க முன்னாடி அப்பியர் ஆகறதா முடிவு பண்ணி இருக்கேன்.. அப்பாவும் நான் என் சொந்தக் கால்லே நிக்கணும்ன்னு ஆசைப்படறார்..."

"ம்ம்ம்..."

"அண்ணா... வீட்டுலதான் நாங்க ரெண்டு பேரு பொழுது போகாம உக்காந்துகிட்டு இருக்கோம்... கொழந்தை ஆசைப்படறதுல என்னத் தப்பு...?" கொஞ்ச நாள் அவ இஷ்டப்படி வேலைக்கு போகட்டுமே..." மீனாவுக்கு பரிந்து கொண்டு வந்தாள். 


No comments:

Post a Comment