Friday 13 March 2015

சுகன்யா... 48

கதிரவன் சிவந்து பழுத்த ஆரஞ்சாக மாறிவிட்டிருந்தான். மாலை வெயில், செவ்வரளியை அரைத்து வானவீதியில் தெளித்தது போல் ஆகாயம் செப்புத் தகடாக தகதகத்துக் கொண்டிருந்தது. மேகப்புள்ளிகள் நீல வானத்தில் கோலமாக மாறியிருந்தன. மூர்க்கனும் இப்படிப்பட்ட இயற்கையழகில் ஒரு நொடி தன் மனதைப் பறிகொடுத்து நிற்பான்.

மனைவி, மகனுடன் ஏற்பட்ட விவாதத்தால், அவர்களிடம் கொண்ட கோபத்தால், மனதில் விளைந்த விரக்தியால், நல்லசிவத்தின் களைத்த மனமும், உடலும், வீசிய மேலைக் காற்றின் மெல்லிய குளுமையை உணரமுடியமால், தெருவில் இலக்கில்லாமல், இடிந்த மனதுடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.

எனக்கு வாய்ச்சவளும் சரி; பொறந்ததும் சரி; ரெண்டுமே ஏறுமாறா இருக்கே! என்னப் புண்ணியம் பண்ணியிருந்தா இப்படி ஒரு புள்ளையை நான் பெத்து இருப்பேன்? பெத்தவளாவது, தான் பெத்தது கழுதையா இருக்கேன்னு, புத்தி சொல்லி திருத்தியிருக்கணும்! எல்லாம் என் தலையெழுத்து!


ம்ம்ம்... புள்ளை பாடற பாட்டுக்கு, என் பொண்டாட்டியும் எதையும் யோசிக்காம ஏன் கும்மி அடிக்கறா? பாசங்கற பேர்ல, ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு, எதுக்கெடுத்தாலும் செல்லம் குடுத்து, தன் புள்ளையைத் தீவெட்டித் தடியனா வளத்து, கெடுத்துக் குட்டிச்சுவரா ஆக்கி வெச்சிருக்கா!

என் புள்ளை நல்லா படிச்சிருக்கான்... ஏட்டு சுரைக்கா கூட்டுக்கு உதவாதே? நல்ல வேலையில இருக்கான்... கை நெறைய சம்பாதிக்கறான்... ஆனா இதெல்லாம் மட்டும், முழுமையான வாழ்க்கைக்கு போதுமா? சம்பத் யாருக்கும் மரியாதை குடுக்கத் தெரியாம, டிஸிப்ளீனே இல்லாம, வளந்து இருக்கானே? பெரியவங்கக்கிட்ட பணிவுங்கறது இல்லையே? பெண்ணை மதிக்கத் தெரியாதவன் குடும்ப வாழ்க்கையில நிம்மதியா எப்படி இருக்கமுடியும்?

சொந்தம், பந்தம், ஒறவு மொறைகளை மதிச்சு, அவங்களோட ஒத்து வாழணும்ங்கறது இல்லாம, என்னை மதிக்கற ஒரு எடத்துலயும், குட்டி நாய் கொலைச்சு பெரிய நாய் தலையில வந்து விடிஞ்ச கதையா, துக்கத்தையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்துக்கறதுக்கு எனக்குன்னு இருக்கற ஒண்ணு, ரெண்டு சொந்தக்காரங்க வீட்டுக்குள்ளவும் நுழைய முடியாதபடி, இப்படி ஒரு தப்பான காரியம் பண்ணிட்டு வந்திருக்கானே? இதை நான் எப்படி சரி பண்ணப் போறேன்?

ஒரு அப்பனா, ஒரு புருஷனா, இவங்க ரெண்டு பேரும் நான் சொல்றதுல இருக்கற நியாயத்தை புரிஞ்சுக்கலை. என்னை எதுக்கும் உதவாதவனா நெனக்கறாங்க; செல்லாத, கிழிஞ்சிப் போன, கரன்சி நோட்டா நடத்தறாங்க,! இந்த வீட்டுல நான் ஏன் இருக்கேன்?

என் புள்ளை எனக்கு இன்னைக்கு சட்டம் சொல்லிக்கொடுக்கறான்... என் கையால தாலி கட்டிக்கிட்டவளுக்கு என் பேச்சு புரியலை. புள்ளை பக்கம் சாய்ஞ்சு நிக்கறா... எனக்கு என் புள்ளை மேல ஆசையில்லே; பாசமில்லேன்னு நெனக்கிறாங்க... என் புள்ளையை நாலு பேரு நல்லவன்னு சொல்லணும்... அதுதானே ஒரு அப்பனுக்கு பெருமை... இந்தச் சின்னவிஷயம் இவங்க ரெண்டு பேருக்கும் புரியலையே?

ராணி சொன்ன மாதிரி இவன் கல்யாணத்தை சட்டுபுட்டுன்னு முடிச்சுட்டு, மனசுக்கு திருப்தியில்லாத ஒரு வாழ்க்கையை இந்த வீட்டுல வாழறதை விட, எங்கேயாவது கண்ணு மறைவா, ஹரித்துவார்... ரிஷிகேஷ்ன்னு நடையைக் கட்டிடவேண்டியதுதான். ஆண்டவா... மனுசன் நெனக்கறது எல்லாம் நடந்துட்டா, நீ ஒருத்தன் மேல எதுக்கு? நல்லசிவத்தின் எண்ணங்கள் முடிவற்று விரிந்து கொண்டிருந்தன. 

நல்லசிவம், தன் நினைவுகளில் மூழ்கியபடி, அன்று தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தமுடியாமல், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடந்து கொண்டிருந்தவர், காபி குடிக்கவேண்டும் என்ற நினைப்பில், கண்ணில் தென்பட்ட ஹோட்டலில் நுழைந்து மூலையிலிருந்த ஒரு டேபிளில் தலைகுனிந்து அமர்ந்தார். 

"மாமா... எப்படி இருக்கீங்க?"

உற்சாகமாக வந்த குரலைக் கேட்டு சட்டென நிமிர்ந்தார் நல்லசிவம். ரகுராமன் எதிரில் உட்க்கார்ந்திருந்தான். ராணியின் தம்பியும், ரகுவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். உறவுக்கு உறவு. நட்புக்கு நட்பு. வேலையிலிருந்து ஓய்வு பெற்று வந்ததிலிருந்து, வயது வித்தியாசம் பார்க்காத நண்பர்களாக அவர்கள் மாறி, ரகு ஊரிலிருக்கும் போதெல்லாம், இருவரும் மாலையில் ஆற்றோரமாக காலார நடப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

"ம்ம்ம்... இருக்க்க்க்கேன்..." இழுத்தார்.

"எதிரில்ல உக்காந்து இருக்கறது யாருன்னு அடையாளம் தெரியாத அளவுக்கு அப்படி என்ன பலமான யோசனை?" 

"சாரிப்பா... கும்பிடப் போன தெய்வம் நீ குறுக்க வந்துட்டே.." விரக்தியாக புன்னகைத்தார். 

"மாமா என்ன சாப்படறீங்க நீங்க... உங்கக்கிட்ட சந்தோஷமான சேதி ஒண்ணு சொல்லணும்..." புன்னகையுடன் பேசினான் ரகு. 

"காஃபியைச் சொல்லு...தலை விண் விண்ணுன்னு தெறிக்குது.." குரலில் சலிப்பிருந்தது. 

"தம்பி... இன்னைக்கு என்ன... கோதுமை ஹல்வா ஸ்பெஷலா? ரெண்டு ப்ளேட் போண்டா, அதை நாங்க சாப்பிட்டதுகப்புறமா, சக்கரை கம்மியா ரெண்டு காபி குடுத்துடுப்பா... ஓ.கே" சர்வரிடம் தங்கள் ஆர்டரை கடகடவென சொன்னான். 

"மாமா... சாயந்திரம் நானே உங்க வீட்டுக்கு வரணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்... நீங்க முந்திக்கிட்டீங்க..." 

சர்வர் ஸ்வீட்டை கொண்டு வந்து இருவர் எதிரிலும் வைத்தான். இனிப்பை ரசித்து, சுவைத்து சாப்பிடும் மனநிலையில் நல்லசிவம் இல்லை. தன் வீட்டில் சொந்த மகனிடம் குற்றமிருந்ததால், அவர் உள்ளம் குறுகுறுவென்றிருந்தது. நடந்த விஷயம் இவனுக்கு தெரிந்து விட்டாதா? மனதுக்குள் நிம்மதியில்லாமல் தவித்தார். 

"மாமா... நம்ம சுகன்யாவுக்கு வர்ற வெள்ளிக்கிழமை, அவகூட வேலை செய்யற பையன், தமிழ்செல்வன்னு பேரு... நல்ல குடும்பம் அவனோடது, கண்ணுக்கு நெறைவா இருக்கான்; பெத்தவங்களும் தங்கமானவங்க; பசங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பங்கறாங்க; சுகன்யாவும் அவனையே பண்ணிக்கறேங்கறா; சட்டு புட்டுன்னு நிச்சயம் பண்ணிடலாம்ன்னு நெனைக்கறோம்... பெரியவங்க நீங்களும், ராணி அக்காவும், சம்பத்தோட, விசேஷத்துக்கு அவசியமா வரணும்." ரகு நிதானமாக பேசினான். 

"ம்ம்ம்...." நல்லசிவம் வாயில் வார்த்தை முழுசா வரவில்லை. 

"எங்க வீட்டு மாப்பிள்ளை குமாரும், என் அக்காவும் நாளைக்கு உங்க வீட்டுக்கே நேரா வந்து அழைப்பாங்க... தாய் மாமன் நான், உங்களுக்குத் தித்திப்பு கொடுத்து விஷயத்தைச் சொல்லிட்டேன்... என்னடா நம்ப ஃப்ரெண்டு இப்படி ரோட்டுல வெச்சு அழைக்கறானே நீங்க நெனைக்கக்கூடாது..." ரகுவின் முகத்தில் ஒரு திருப்தி இழையோடிக் கொண்டிருந்தது. 

"ரொம்ப சந்தோஷம் ரகு... உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா... நோ ஃபார்மாலிட்டீஸ் ப்ளீஸ்..."

"மாமா... நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க .. நான் குறுக்குல பேசிக்கிட்டேப் போறேன்.. நீங்க கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி தெரியுது... உடம்புக்கு ஒண்ணுமில்லயே?" கரிசனத்துடன் பேசிய ரகு போண்டாவை தேங்காய் சட்டினியில் அழுத்தி மென்று தின்றுக்கொண்டிருந்தான். 

"ரகு ஒரு முக்கியமான விஷயம்... உன் கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்." நல்லசிவம் தணிந்த குரலில் இழுத்தார். 

"சொல்லுங்க...நாமத் தனியாத்தானே இருக்கோம்..."அவன் புன்னகைத்தான்.

"என் புள்ளை சம்பத் புத்திக்கெட்டுப் போய் ஒரு சின்னத் தப்பு பண்ணிட்டான் ரகு... அவன் தரப்புல நான் உன் கிட்ட மொதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்..." நல்லசிவத்தின் குரல் தழுதழுத்து கண்கள் கலங்க ஆரம்பித்தது. 

"மாமா... என்னப் பேசறீங்க... என் கிட்ட நீங்க மன்னிப்பு கேக்கறதா?" ரகு சட்டென எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான். 

"ஆமாம்பா ரகு... நான் சொல்ற விஷயத்தை உன் மனசோட வெச்சுக்கோ.. உன் குடும்பத்துல வேற யாருக்கும், எப்பவும் இது தெரியவேணாம்... ப்ளீஸ்... இது என் ரெக்வெஸ்ட்... உன் உறவா நான் இதைக் கேக்கலை. நண்பனா கேக்கிறேன். இந்த விஷயம் உன் மாப்பிளை குமாருக்கோ அல்லது சுந்தரிக்கோ தெரிஞ்சா.. நம்ம உறவுகாரங்க யார் மூஞ்சிலேயும் என்னால இனிமே முழிக்கவே முடியாது..." சொல்லிக் கொண்டே அவன் முகத்தை அதைரியமாக நிமிர்ந்து பார்த்தார். 

"மாமா ... ஏன் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க... நான் இருக்கேன்ல்லா... முதல்ல விஷயத்தைச் சொல்லுங்க.." ரகுவின் முகத்தில் குழப்பம் திரையிட்டிருந்தது. 

சம்பத், சுகன்யாவை காலையில் சந்திக்க சென்றதிலிருந்து, தன் வீட்டில் அதனால் நடந்த பெரிய சண்டையையும், ரகளையையும், சுகன்யாவை தன் மருகளாக்கி கொள்ளவேண்டும் என்ற தன் மனைவியின் ஆசையையும், கோபத்தில் தான் தன் மகனையும், மனைவியையும், வீட்டை விட்டே வெளியேற சொன்ன விஷயம் வரை, அவனிடம் விவரமாக சொன்னார். 

"ப்ச்ச்ச்... ம்ம்ம்ம்... நம்ம சம்பத்தா இப்படி பண்ணிட்டான்... என்னால நம்ப முடியலியே?" 

ரகு தன் தாடையை சொறிந்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் அவனுக்கு கோபம் கனன்று கொண்டிருந்தது. ஆனாலும் பொறுமை... பொறுமை என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். இந்த பக்கம் பழைய உறவு; அந்தப் பக்கம் புது உறவு... எதை விடுவது? ... எதை சேர்த்துக்கொள்வது...? 

"ரகு, இந்த பிரச்சனையை நீதான் காதும் காதும் வெச்ச மாதிரி ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்... எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை... என் பிள்ளையால, அவன் பண்ண முட்டாள்தனமான காரியத்தால, வெள்ளிக்கிழமை நடக்க இருக்கற நிச்சயத்தார்த்தமோ, சுகன்யா கல்யாணமோ எந்தவிதத்திலேயும் பாதிக்கப்படக்கூடாது..." 

நல்லசிவம் உண்மையான மனவருத்தமும், குற்ற உணர்வுடனும் பேசி முடித்தவர், சட்டென எழுந்து நின்று, ரகுவின் கைகளை, மன்னிப்பு கேட்க்கும் பாவனையில் மீண்டும் ஒரு முறை பிடித்துக்கொண்டார். 

"மாமா... ஒண்ணு மட்டு நிச்சயம். சம்பத் இப்போதைக்கு வேற யார்கிட்டவும் தான் செய்ததை பேசமாட்டான்... நீங்க மொதல்ல நேரா வீட்டுக்குப் போய், ராணி அக்கா, இந்த விஷயத்தை வேற யார்கிட்டவும் பேசாம பாத்துக்குங்க. மீதியை நான் டீல் பண்ணிக்கறேன்." ரகு விறு விறுவென தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 

ஆண்டவா.. நான் யாருக்கும் இது வரைக்கும் தீங்கு நெனைச்சதில்லே... என் புள்ளையால அந்த பொண்ணோட பேருக்கு எந்த கெட்ட பேரும் வந்துடக்கூடாது... நல்லசிவம்... சுவாமிநாதனை வேண்டிக்கொண்டார். கோவில் இருக்கும் திசை நோக்கி கையெடுத்து கும்பிட்டவர், மெதுவாக வீடு திரும்ப ஆரம்பித்தார். 

நல்லசிவம், தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததும், அவர் போவதையே சில வினாடிகள் மவுனமாக பார்த்தவாறு நின்றிருந்தாள் ராணி. மனம் ஒரு வினாடி துணுக்குற்றது. சட்டைக்கூட போட்டுக்காம வெறும் துண்டைப் போத்திக்கிட்டு கோபமா போறாரே? எங்கப் போறீங்கன்னு எப்படி கேக்கறது?

எங்கப் போயிடப் போறார்? ரயில்வே ஸ்டேஷன் வரைக்கு நடந்து போவார். மனசுல இருக்கற கோவம் தீர்ற வரைக்கும், கோவில்ல உக்காந்து இருப்பாரு... தேர் எங்க ஓடினாலும் கடைசீல தன் நிலைக்கு திரும்பி வந்துதானே ஆவணும்...! தன் மனதுக்குள் ஒரு குருட்டுத் தைரியத்துடன் தெருக்கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் ராணி.

தலையை சீராக வாரி, முகத்தைக்கழுவி, நெற்றிக்கிட்டுக்கொண்டு, மாடிக்குச் சென்று வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தாள். தன் மகனுக்குப் பரிந்து கொண்டு, தன் மேல் உயிரையே வைத்திருக்கும், தன் கணவனிடம், அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், தேவையில்லாத வன்மத்துடன், குரலை உயர்த்தி, அவருடன் அன்று கூட கூடக் அனல் கக்கும் வார்த்தைகளைப் பேசியதால், அவள் மனதில் உண்டான கழிவிரக்கம் அவளை வாட்டி, வதைக்க ஆரம்பித்தது.

மாடி கட்டை சுவரில் சற்று நேரம் சாய்ந்து உட்க்கார்ந்தாள். ராணி தனக்குள் தனித்திருக்க விரும்பும் நேரத்தில் வழக்கமாக இங்குதான் உட்காருவாள். மாடி கட்டைச் சுவர்தான் அவளுடைய போதிமரம்.

ராணி, தன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதிலோ, ருசியாக சமைத்து, சரியான நேரத்தில் தன் குடும்பத்தினருக்குப் பரிமாறுவதிலோ, வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரிப்பதிலோ, எந்தக் காரியத்தையும் நறுவிசாக திட்டமிட்டு செய்து முடிப்பதிலோ, அவளிடம் ஒரு குறையையோ, குற்றத்தையோ, யாரும் கண்டுவிடமுடியாது.

இருபத்து இரண்டு வயதில் நல்லசிவத்தின் மனைவியாகி, தன் கணவனுடன் பம்பாய்க்கு சென்று, தனிக்குடித்தனம் தொடங்கிய நாள் முதல், கணவன் கொண்டு வந்த சம்பளப்பணத்தில், குடும்பத்தை சிக்கனமாக, கச்சிதமாக நடத்தி வந்திருக்கிறாள். கடன் என்று யாரிடமும், எப்போதும் தன் கணவனை அவள் கை நீட்ட வைத்ததில்லை. முன் பின் தெரியாதவர்களுக்கும், தேவைப்படும் நேரத்தில், தன்னால் முடிந்த வரை ஓடி உதவுவதில் அவள் என்றுமே பின் வாங்கியதில்லை.

தனது ஐம்பது நாலு வயதில் இன்றும் ஆரோக்கியமாக, அழகான பெண்மணியாக, பார்ப்பவர்கள் வியக்கும் வகையில், உடல் கட்டு குலையாமல் வலுவாக இருக்கிறாள். தன் கணவனுடன் தினமும், நடப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாள். நல்லசிவத்தின் தீராத உடல்ஆசைக்கும், மனவேட்க்கைக்கும், அவரின் இரவு நேர மோக விளையாட்டுகளுக்கும் இன்னும் விருப்பத்தோடு முடிந்தவரையில், குறைவில்லாமல் ஈடு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

ராணியின் ஒரே பலவீனம் அவள் பெற்றெடுத்தப் பிள்ளை. அவள் மகனை யாரும் எதற்காகவும் குற்றம் சொல்லிவிடக் கூடாது. எந்த காரணத்திற்காகவும் குறைத்து பேசிவிடக்கூடாது. அது தன் கணவனே ஆனாலும், என்னப் பேசுகிறோம், ஏது பேசுகிறோம் என்றில்லாமல், தலைவிரி கோலமாக ஒரு ஆட்டம் ஆடிவிடுவாள். ஆடி முடித்தப்பின், தான் ஏன் அவ்வாறு நடந்து கொண்டோம் என தனக்குள்ளாகவே வருந்துவாள். மீண்டும் ஒரு முறை இந்த தவறை செய்யக்கூடாது என அவள் எடுக்கும் முடிவு, பெண்களின் பிரசவ வைராக்கியத்தைப் போன்றதுதான்.

சாதாரண மனிதன் தன்னைத் சுற்றியிருப்பவர்களிடமிருந்து, சற்றே விலகி, அவனைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் போது, அவன் மனதின் அலையும் வேகம் மட்டுப்படுகிறது. அவன் எண்ணங்களும், சிந்தனைகளும் ஓரளவிற்கு சீராகி, பதட்டமில்லாமல் யோசிக்கத்தொடங்குகிறான். ராணியும் இந்த பொது விதிக்கு விலக்கானவள் இல்லை.

ராணி அவளுடைய போதிமரத்தடியில் உட்க்கார்ந்தவுடன், தன் கணவன் மதியம் சாப்பிடக்கூட இல்லை என்ற நினைப்பு சட்டென அவள் மனதில் எழுந்தது. "ச்சை... என்னப் பொம்பளை நான்... சமைச்சு முடிச்சதும், சூடா நான் மொதல்ல என் வயித்த ரொப்பிக்கிட்டேன். அவர் பொறுமையா சம்பத் வரட்டும்; அவன் கூட சாப்பிடறேன்னு காத்திருந்தாரு. புள்ளை வந்ததும் அவனுக்குத் தட்டுல சோத்தைப் போட்டுக் கொடுத்தவ, புள்ளைப் பேச்சைக் கேக்கற ஆர்வத்துல புருஷனுக்கு சோறு போடக் கூட மறந்துட்டேனே," அவள் செய்ய மறந்த அந்தக் காரியம் அவள் மனதின் ஓரத்தில் முள்ளாகக் குத்தி சுருக் சுருக்கென வலித்தது.

என்னைக்குமில்லாம, இன்னைக்கு எதுக்காக என் ஆம்பிளைக்கு இந்த அளவுக்கு என் மேல கோவம்? இப்படி ஒரு எரிச்சல்? என் மனசை புண்படுத்தற மாதிரி ஒரு விஷமான பேச்சை ஏன் பேசினார்? ஏன் என் பழைய கதையை ஆரம்பிச்சாரு? என் கதை தெரிஞ்ச அன்னைக்கே என்னை வீட்டை விட்டே அடிச்சு வெரட்டியிருக்கணும்ன்னு வெறுப்பா பேசினாரே? அவரு மட்டும் அப்படி பேசியிருக்கலாமா? அவரு அப்படி பேசினதுதான் என் கோபத்தை கிளப்பிடிச்சி... நானும் என் நிலை தடுமாறி, என் புள்ளை எதிர்ல தலை குனிஞ்சுடுவோமோங்கற பயத்துல அவரைத் தாறுமாறாப் பேசிட்டேன்.

மனுஷனோட முதல் எதிரி அவனுடைய பயம். எப்பவும் அவன் ஏன் இன்செக்யூர்டா ஃபீல் பண்றான்? அவனால் உண்மையை ஏன் எதிர்கொள்ள முடிவதில்லை. அவன் ஏன் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்கிறான். ராணிக்கு மூச்சு அடைப்பது போலிருந்தது. அவள் தன் முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்துக்கொண்டாள். இறுக்கமாக அவள் அணிந்திருந்த தன் ரவிக்கையை தளர்த்திக்கொண்டாள்.

ராணி, உன் புருஷன் க்ளியரா சொன்னான்ல்ல... பொம்பளை சாபம் சும்மா விடாதுன்னு...! அது சரியானப் பேச்சுத்தானே? உன் புள்ளைப் பண்ணத் தப்பு உனக்குப் புரியலியா? உன் புள்ளை கூட நீ ஆமாம்... ஆமாம் போட்டுக்கிட்டு இருந்தே; அது அவருக்குப் பிடிக்கலை. அதனால அவருக்கு கோபம் வந்துடுச்சி.... என்னைக்காவது, எதுக்காவது இப்படி கோவபட்டிருக்கானா உன் புருஷன்.

உன்னை மாதிரி ஒரு பொண்ணு நல்லா இருக்கணும்ன்னுதானே இன்னைக்கு அவன் கோவப்பட்டான். உன் புள்ளையால ஒரு நல்லப் பொண்ணோட வாழ்க்கையில பிரச்சனை எதுவும் வந்துடக்கூடாதுன்னுதானே கோவப்பட்டான். உன் தப்பை நீ ஒத்துக்கடி. பொய் இருக்கற எடத்துலதானே பயம் இருக்கும்.

சுகன்யாவும், அவன் காதலனும் க்ளோஸா இருக்கறதை, கண்ணால உன் புள்ளை பாத்தது இல்லே; காதால கேட்டதுதான். அவங்களோட நெருக்கம் எந்த அளவுக்குன்னு உன் புள்ளைக்குத் தெரியாது. ஆனாலும் அவன் சுகன்யாவை எச்சை எலைன்னு திட்டினான். அப்படி சுகன்யாவை அவன் அவதூறாக பேசினதை உன் புருஷனால பொறுத்துக்க முடியலே. நீயும் ஒரு பொம்பளைதானே, உன்னைக் குத்தம் சொன்னா உன்னால பொறுக்க முடியுமான்னு உன்னை டெஸ்ட் பண்றதுக்கு உன் பழையக் கதையை அவர் கிளறிட்டாரு.

உனக்கும் உன் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதலன் இருந்திருக்கான். இதை நீ எப்படி மறந்தே? நீயும் அவனோட நெருங்கி பழகியிருக்கே! உங்க நெருக்கம் உன் வீட்டுக்குத் தெரியும். ஆனாலும் உன் காதல் விஷயத்தை மறைச்சு உன் அப்பனும் ஆத்தாளும், தங்க குடும்ப கவுரவுத்துக்காக, உன் ஜாதியைச் சேர்ந்த நல்லசிவத்துக்கு உன் விருப்பத்துக்கு மாறா, உன்னைக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க... இதெல்லாம் பொய்யா? இல்லாத எதையும் உன் புருஷன் புதுசா சொல்லிடலையே?

சுகன்யாவை எச்சை எலைன்னு, அவளுக்கு எந்தவிதத்துலேயும் சம்பந்தமேயில்லாத உன் பையன் சொல்றானே? நீ மட்டும் என்னடி? உன் கதை அவனுக்கு தெரிஞ்சா அவன் உன்னை என்னன்னு சொல்லுவான்? இதை வாயை விட்டு வெளிய சொல்லாம உன் புருஷன், உனக்கு மட்டும் புரியற மாதிரி சிரிச்சிட்டு வெளியில எழுந்து போயிட்டாரு.

உன் புள்ளை உன் லைப்ல ஓடற "தனி ட்ராக்கை" பத்தி கேட்டானே அவனுக்கு என்னப் பதில் சொல்லப்போறே? அவள் மனம் அவளைப் பார்த்து நகைத்தது. 



ராணியின் மனம் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தது. உன் புள்ளைக்கு, அவன் வீட்டுக்கு வந்தவுடனே அவன் மூஞ்சி பாத்து சோறு போட்டியே? உன் புருஷனுக்கு இன்னைக்கு சோறு போட்டியா? உன் புருஷன்தானேடி உன் புள்ளையை உனக்கு கொடுத்தான். விதையை வெதைச்சவன் அவன். அவனோட வீரியமான விதையை மறந்துட்டே நீ. அந்த விதையிலேருந்து வந்த செடியைப் புடிச்சிக்கிட்டு ஏன் தொங்கறே?

செடி வலுவான மரமானதுக்கப்புறம்தான் அதுல தொட்டில் கட்டி நீ ஊஞ்சல் ஆடலாம். அந்த மரத்து நிழல்ல நின்னு நீ இளைப்பாறலாம். ஆனா, இப்ப அந்த சின்னச் செடியைச் சுத்தி ஏகத்துக்கு களை மொளைச்சுக்கிடக்கு. செடியோட இலைகளைப் பூச்சி அரிச்சிருக்கு; களையை பிடுங்கிப்போடு. செடியைச் சுத்தி அகலமா பாத்தியை வெட்டி விடு. தயங்கமா பூச்சி அரிச்ச எலையைக் கிள்ளிப்போடு. உன் புருஷன், நல்ல பூச்சி மருந்தா வாங்கி தெளிக்கச் சொல்றான். அவனைப் புரிஞ்சுக்கோ.

உன் புருஷன் வெதைச்ச விதையில மொளைச்ச செடி மேல அவனுக்கு அக்கறை இல்லையா? உன் புருஷன் சொல்றதை கேளு. அவன் ஒரு நல்லத் தோட்டக்காரன். தோட்டக்காரன் சொல்றதை நீ இப்ப கேக்கலன்னா, உன் செடி அழுகிப் போயிடும்.
மரத்து நிழல்லே நிக்கணும்ன்னு நீ ஆசைப்படறியே, ஆனா உன் செடியே அழுகிட்டா, நீ மரத்துக்கு எங்கப் போவே? இந்த வயசுல உன்னால ஒரு புது வெதையை உன் நிலத்துக்குள்ள வாங்கி ஒரு செடியா மாத்த முடியுமா?

ராணீ... உன் புத்திரப் பாசத்தை மனசுக்குள்ள பொதைச்சு வெச்சுக்கோ. உன் மனசை கல்லாக்கிக்கிட்டு, உன் புள்ளைக்கு உருப்படற வழியைச் சொல்லிக்கொடு. அவன் மனசுல இருக்கற தாழ்வு மனப்பாண்மையை வேரோட புடுங்கிப் போடு. உன் தாயும் ஒரு பெண்தான்னு சொல்லு. அவளுக்கும் ஒரு காதல் கதை இருக்கு. காதலிச்சவங்க எல்லாம் எச்சை எலைன்னா, இந்த உலகத்துல சுத்தமான இலையே இல்லேன்னு சொல்லு. பெண்மையை மதிக்க சொல்லிக்கொடு. அவள் மனசை புரிந்து கொள்ள கத்துக்கொடு.

ஒரு பொண்ணு இல்லன்னா என்னா? ஊரு ஒலகத்துல வேற பொண்ணே இல்லையா? உன் புள்ளைக்கும் நல்லா பொண்ணு கிடைப்பா. உன் புருஷன் உன் விஷயம் தெரிந்த பின்னும் உன்னை மதிச்சான். உன் கூட முப்பத்து ரெண்டு வருஷமா வாழறான். உன் புள்ளை உன் புருஷனைப் போல பெண்மையை மதிக்கத் தெரிந்த மனுஷனா முதல்ல மாறணும். அதுக்கு நீதான் பொறுப்பேத்துக்கணும்.

ராணி தெளிவுடன் யோசிக்க ஆரம்பித்தாள். சரி.. சரி... என் புள்ளையை விடு... என் புருஷன் இன்னைக்கு பேசின பேச்சு அவரோட மனசுலேருந்துதான் வந்திருக்குமா? கண்டிப்பா இருக்காது! என் புருஷனைப்பத்தி எனக்குத் தெரியாதா? அவன் மனசு பத்தரை மாத்து தங்கமாச்சே! அவனைத் தனியா விட்டா, தாகத்துக்கு குடிக்கறதுக்கு ஒரு சொம்பு வென்னீர் வெச்சுக்கத் தெரியாது. அவனை நான் விட்டுட்டு போறதா? அது இந்த ஜென்மத்துல இல்லே.

என் புருஷன் ஒரு கொழந்தை. இன்னைக்குத்தான் ஊரெல்லாம் கேட்டரிங்க் சர்வீஸ் வந்துடுச்சி. சோத்துக்கு பஞ்சமில்லே. போன்ல சொன்னா மூணு வேளையும் வீட்டுக்கு கொண்டாந்து குடுத்துட்டுப் போயிடுவான். அவனுக்கு வயித்துப்பசி அடங்கிடும். அதுக்காக என்னை வீட்டை விட்டுப் போன்னு அவன் சொல்றதா? பொண்டாட்டிங்கறவ சோறு பொங்கிப் போடத்தானா?

அடியே ராணி... உன் புருஷனைப் பத்தி உனக்குத் தெரியாதாடி? நீதான் வேணும்ன்னு உன்னைக் கட்டிக்கிட்டானே? அவன் உன் மேல வெச்சிருக்கற ஆசையைப் பத்தி உனக்கு வேற யாராவது சொல்லணுமா? ஒரு செகண்ட் உன் மூஞ்சி சோர்ந்துப் போனா, அவன் துடிக்கற துடிப்பு உனக்குத் தெரியாதா? நீ சோறு தின்னாம அவன் என்னைக்காவது தின்னு இருக்கானா?

ராத்திரிக்கு என்ன பண்ணுவான் அவன்? உன் புருஷனால உன் ஒடம்பு சூடு இல்லாம ஒரு ராத்திரி தனியா தூங்க முடியுமா? அவனுக்கு உடம்பு இன்னும் தளரல! இன்னைக்கும் அவன் ஆடற ஆட்டத்துல நீ அசந்து போய் கிடக்கறே? அவன் போடற ஆட்டத்துக்கு நீ மனசுக்குள்ள இன்னும் ஏங்கிப் போறே? மனசுல உன் மேல இருக்கற ஆசை அவனுக்கு அடங்கலை. அவன் ஒடம்பு பசியைத் தீத்துக்க இந்த வயசுல எங்க போவான்? பொண்ணு ஒடம்புக்கு அவன் எந்தக் கடையில ஆர்டர் குடுப்பான்?

பழசெல்லாம் மொத்தமா மறந்துட்டியா நீ? உனக்கு கல்யாணமாயி, உங்க சாந்தி முகூர்த்தத்தன்னைக்கு, உன்னை ஆசையா கட்டிப்புடிச்சவனை, என்னைத் தொடாதேன்னு சொன்னியே, அவன் உன்னை உன் விருப்பமில்லாம திரும்பவும் தொட்டானா? ரெண்டு வாரம் கழிச்சி, புடவையை அவுத்துட்டு, பாவாடையும், ரவிக்கையுமா, சுவத்தைப் பாத்து தூங்கினவன் முதுகோட, நீ ஒட்டிக்கிட்டப்பத்தானே அவன் உன் மேல கை வெச்சான்? இவனை மாதிரி ஒரு நல்ல புருஷன்கிட்ட கோபப்படறீயே? உனக்கு இது அடுக்குமா?

அது போவட்டும்... சம்பத்துக்கு எட்டுவயசாகும் போது, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த உன் பழைய கதை தெரிஞ்சன்னைக்கு, தன் மனசு நொந்து போய், இனி உன்னை நான் தொடமாட்டேன்னு ஆறுமாசம், முழுசா ஆறு மாசம், ஒரே ரூம்ல நீ கட்டில் மேல படுத்து கெடக்க, அவன் தரையில பாய்ல கிடந்து உருண்டானே தவிர, ஒரு நாளாவது அவனா வந்து உன்னைத் தொட்டு இருப்பானா? நீயா போய் அவன் மேல விழுந்து, நீ இல்லாம என்னால உயிரோட இருக்க முடியாதுன்னு அழுததுக்கு அப்புறம்தானேடி உன்கூட அவன் திரும்பவும் படுக்க ஆரம்பிச்சான்! அப்படிப்பட்டவன் உன்னை வீட்டை விட்டு தொரத்திடுவானா?

இத்தனை வயசுல எவளையாவது கண்ணெடுத்துப் பாத்துருப்பானா அவன்? நீயே வேணுமின்னே அப்பப்ப அவனை வம்பு பண்ணாலும், ஆசையா அவனை உனக்காக, உன் நெருக்கத்துக்காக தெரிஞ்சே துடிக்க வெச்சாலும், எத்தனை நாள் ஆனாலும், ஏக்கத்தோட உன் முந்தானையை புடிச்சுக்கிட்டுத்தானே நின்னான்? எவ பின்னாலயாவது போனானா? இன்னைக்கும் உன் பின்னாலத்தானே நிக்கறான்?

உன்னை விட்டுட்டு, ஒரு நாள் தனியா இருந்துட முடியுமா உன் புருஷனால? ஒரே ஒரு நாள்; தன் காலைத் தூக்கி உன் மேல போட்டுக்க நீ பக்கத்துல இல்லன்னா, ராத்திரி பூரா விட்டத்தைப் பாத்துக்கிட்டு தூங்கமா இருக்கற ஆளு உன் புருஷன்... உன்னை வீட்டை விட்டு தொரத்திடுவானா அவன்...? ஏதோ கோபத்துல அவன் பேசினப் பேச்சைக்கேட்டு, பொறுமையா இல்லாமே, அப்ப நீயும் குணம் கெட்டுப் போய் குதிச்சே? இப்ப குழம்பிக்கிட்டு நிக்கறே! நீதான் அவனை விட்டுட்டு போகமுடியுமா? அவனாலத்தான் உன்னை விட்டுட்டு இருக்க முடியுமா?

"சரி.. இப்ப நான் என்னப் பண்ண... அதைச் சொல்லு நீ" ராணி தன் மனதிடம் கேட்டாள்.

"காலையில பிஞ்சி கத்திரிக்கா வாங்கினீயா?"

"ஆமாம்...."

"கத்திரிக்காயை நீள நீளமா வெட்டி, அவனுக்கு புடிச்ச மாதிரி தண்ணியே விடாம பக்குவமா எண்ணையை விட்டு வதக்கிடு..."

"ம்ம்ம்..."

"கூடவே, உப்பு ஒரைப்பா, தக்காளியை வதக்கி, கொத்துமல்லித்தழையை தூவி, புளியைக் கம்மியா கரைச்சு விட்டு, மிளகு ரசம் பண்ணிடு..."

"பண்ணிடறேன்... அப்புறம்.."

"ராத்திரிக்கு வாய்க்கு ருசியா அவனுக்கு சோத்தை ஆக்கிப் போடு... பக்கத்துல உக்காந்து அவன் வயிறுப் பாத்து பாத்து பரிமாறுடீ. அப்புறம் பாரு கதையை..!!

"அப்புறம் என்ன்னா கதை?

"ஆமாம்... நீ ஒண்ணும் தெரியாத பாப்பா... மூடுடீ உன் பெட் ரூம் கதவை டைட்டா... உனக்கு அதுக்கு மேல என்னப் பண்ணணும்ன்னு நான் சொல்லித்தரணுமா?"

ராணியின் மனசு அவளை கிண்டலடித்து உரக்க சிரித்தது. எழுந்துப் போய் வேலையைப் பாருடி.. முதலில் அவளை எள்ளி நகையாடிய அவள் உள்ளமே, நல்லசிவத்தைச் சமாதானப்படுத்த வழியும் சொல்லியது.

என் புருஷனுக்கு பணத்து மேல ஆசையில்லே. இருக்கற எடத்துல, வந்த ரிடையர்மெண்ட் பெனிஃபிட்ஸை போட்டு, கீழ ஒரு போர்ஷன், மேல ஒரு மாடி போர்ஷன்னு, அழகா ஃப்ளாட் கட்டுங்கன்னு சொல்றேன். அதுபாட்டுக்கு வாடகை வந்துகிட்டு இருக்கும். அதுல அவருக்கு ஆசையில்லே. மனை வாங்கிப்போடுங்க மாமாங்கறான் என் தம்பி. அதுல இன்ட்ரெஸ்ட் இல்லே. கோல்ட்ல இன்வெஸ்ட் பண்ணலாங்கறான் என் புள்ளை. புள்ளை சொல்றதை என்னைக்காவது கேட்டாத்தானே? அதுலயும் ஆசையில்லே.

ஆனா மனுஷனுக்கு இந்த சதை ஆசை மட்டும் போவலையே? என் மாரைப்பாத்துத்தான் மயங்கி நின்னேன்னு இன்னும் சொல்றானே? அப்படி என்னா இருக்கு இந்த சதையில?இந்த ஒரு ஆசைதான் என் புருஷனை இந்த பூமியில கட்டி போட்டு வெச்சிருக்காப்ல இருக்கு. இதுவும் இல்லைன்னா வாழறதுதான் எதுக்கு? ஆசையில்லாதவன் யாரு? ஒவ்வொருத்தனுக்கு ஒரு ஆசை.

என் புருஷனுக்கு என் ஒடம்பு மேல தீராத ஆசை. என் அருகாமை அவனுக்கு சொர்க்கம். என் நெருக்கம் அவனுக்கு அமிர்தம். இந்த ஒரு ஆசை இருந்துட்டு போவட்டுமே. கையில பணம் இருக்கு. உடம்புல தெம்பு இருக்குன்னு... ஊர் மேயப் போவாம... என் புருஷன் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட என் காலைத்தானே சுத்தி சுத்தி வர்றான். என் கிட்டத்தானே தன் ஆசையை தீத்துக்க வர்றான். என் ஒடம்பும், மனசும் ஒத்துழைக்கறவரைக்கும் அவன் ஆசையை நான் சந்தோஷமாத் தீத்துட்டுப் போறேன்.

எனக்கு மட்டும் ஆசை விட்டாப் போச்சு? பின்னாடி நின்னு என் இடுப்பை வளைச்சு, என்னை அவன் இறுக்கிக் கட்டும் போது என் மூச்சே நின்னு போவுது. அப்படி ஒரு இறுக்கு இறுக்கறான். தன் மார் மேல என்னை அள்ளிப்போட்டு, ஆசையா என் கன்னத்தைக் கடிச்சா, என் ஒடம்புலயும் போதை ஏறி, துடிச்சுத்தானே போறேன். அதுக்கப்பறம் முழுசா ஒரு ஆட்டம் போட்டாத்தானே எனக்கும் தூக்கமே வருது!



ஹாங்... ஆமாம்... என் புருஷன் கோவத்துக்கு காரணம் என்னான்னு இப்பத்தான் புரியுது! நான் ஒரு புத்தி கெட்டவ... இதை மறந்தே போயிட்டேன். சம்பத் லீவுல வந்திருக்கானேன்னு, அவனைப் பாக்க வந்த என் தம்பி குடும்பம் நேத்துதானே ஊருக்கு திரும்பி போனாங்க. நாங்க ஒண்ணாப் படுத்து தூங்கி ஒரு வாரம் ஆச்சு.

என் புருஷன் செகண்ட் ஷோ பாத்து முழுசா ஒரு வாரம் ஆகிப்போச்சுல்லே. அதான் என் கொழந்தைக்கு கோவமா? குருட்டுப் பூனை விட்டத்துல தாவிப் பாக்குது.. வரட்டும் ராத்திரிக்கு வட்டியும் மொதலுமா குடுத்துடறேன். நாளை காத்தாலைக்கு எல்லாம் சரியாப் போயிடும். ஒரு நமுட்டு சிரிப்பு ராணியின் இதழ்கடையில் பூத்தது. இந்த நினைப்பிலேயே அவள் பெண்மை நசநசத்தது.

ஆனாலும் தன் கணவன் பட்டினியாக இருக்கிறான் என்பதால், அவள் மனதில் தோன்றிய அதீதவலி, ராணியை விடாமல் இம்சிக்க, மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி கிச்சனுக்குள் ஓடினாள். கிச்சனில் நல்லசிவத்துக்கென மதியம் அவள் தட்டில் எடுத்து வைத்திருந்த சோற்றில் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும், அவளையும் அறியாமல், அவள் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

ச்சே... என்ன இருந்து என்ன புண்ணியம்? பொறுமையில்லேன்னா வாழ்க்கையே நரகம்தான். இவ்வளவுக்கும் காரணம் என் அளவுக்கு அதிகமான புள்ளைப் பாசம்தானா? அவன் கையில தட்டைக் கொடுத்துட்டு, என் புருஷன் கையில இந்த தட்டைக் கொடுக்காம விட்டுட்டேனே? பாத்து பாத்து தோள்ல, மார்லேன்னு போட்டு வளத்தப் புள்ளை, கடைசீல சுகன்யாவை அவமானப்படுத்தறேன்னு, என்னையே அவமானப்படுத்திட்டானே? அவள் உள்ளம் வெம்பியது. 



No comments:

Post a Comment