Thursday 12 September 2013

ஆண்மை தவறேல் 3


அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து.. அந்த மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் நந்தினி அமர்ந்திருந்தாள். அவளுடைய கன்னத்தை கையொன்று தாங்கியிருக்க, அவளது கண்களில் கவலை தேங்கியிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அவளது தேகத்தில் சதைப்பற்று கூடி சற்று மினுமினுப்பாக தோன்றினாலும், அவளது மனமோ எதைப்பற்றியோ எண்ணி மருகிக்கொண்டு, முகம் களையிழந்து காட்சியளித்தது. கவலையில் இருந்தவள் அவ்வப்போது கண்களை சுழற்றி ஹாஸ்பிட்டல் வாசலையும் பார்த்துக் கொண்டாள்.அப்போதுதான் வாசலில் அந்த ஆட்டோ வந்து அவசரமாய் நின்றது. பின் சீட்டில் அந்த ஆள்.. முரட்டு தேகமும், முள்முள்ளாய் தாடியும், முகமெங்கும் வழியும் கண்ணீருமாய்..!! அவருக்கருகில் அந்த பெண்மணி.. நிறைமாத வயிறும், தலையை சுற்றி துணிக்கட்டும், அந்த கட்டை மீறி நெற்றியில் வழியும் இரத்தமுமாய்..!! அந்தப்பெண்மணியும்.. வலியிலும், வேதனையிலும் 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என்று அரற்றிக் கொண்டு இருந்தாள்..!!

அவர்களைப் பார்த்ததுமே நந்தினியிடம் ஒரு பதற்றம் பரவ, நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டாள். ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய அந்த முரட்டு ஆள், இப்போது தன் லுங்கி மடிப்பை தடுமாற்றமாய் பிரிக்க, திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் கத்தினார். "துட்டுலாம் ஒன்னும் வேணாய்யா.. சீக்கிரம் உன் வூட்டம்மாவை உள்ள தூக்கினு போ..!!" ஒருகணம் திகைத்த அந்த ஆள் அப்புறம் தன் மனைவியை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் அங்குமிங்கும் அலைபாய, அவசரமாய் ஹாஸ்பிட்டலுக்குள் ஓடி வந்தார். எதிர்ப்பட்ட நந்தினியிடம், "எ..எமர்ஜன்சி வார்டு எங்கம்மா இருக்குது..?" என கேட்டார் பதட்டமான குரலில். "நே..நேரா போய்.." என்று முதலில் கையை நீட்டிய நந்தினி, அப்புறம் "என் பின்னால வாங்க.. நான் கூட்டிட்டு போறேன்.." என்றுவிட்டு அந்த ஆளுக்கு முன்னால் ஓடினாள். அவரும் தன் மனைவியை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, 'ஒன்னுல்லம்மா.. ஒன்னுல்லம்மா.. இதோ வந்துட்டோம்மா..' என்று வேதனையில் துடிக்கும் மனைவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, நந்தினியை பின் தொடர்ந்தார். "என்னங்க ஆச்சு.. தலைலாம் ரத்தம்..?" நந்தினி ஓடிக்கொண்டே கேட்க, "புள்ளத்தாச்சி பொம்பளையை கார்ல இடிச்சுனு.. நிக்காம கூட போயிட்டான்மா.. ஒரு பொறம்போக்கு தே..புள்ள..!!" அவர் அவள் பின்னால் ஓடிக்கொண்டே சொன்னார். "பாரம் ஏதும் புல் பண்ணனுமாம்மா..?" அவர் கவலையாக கேட்க, "எமர்ஜென்சிக்கு அதெல்லாம் தேவையில்லங்க.. அப்புறமா ஃபில் பண்ணிக்கலாம்.." நந்தினி ஆறுதலாய் சொன்னாள். அவசர சிகிச்சை பிரிவை அடைந்ததும் நாலைந்து மருத்துவமனை ஊழியர்கள் எதிர்ப்பட்டார்கள். ஓடிவரும் இவர்களை பார்த்ததும், உடனே அவர்களையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனடியாய் ஒரு ஸ்ட்ரெச்சர் இழுத்துவரப்பட்டது. "அப்படியே ஸ்ட்ரெச்சர்ல வைங்க..!! என்ன ஆச்சு..??" அந்த கேரளத்து நர்ஸ் கவலையாய் கேட்டதற்கு, "கார் மோதிடுச்சும்மா..!!" மனைவியை ஸ்ட்ரெச்சரில் கிடத்திக்கொண்டே அவர் சொன்னார். பணியாளர்களால் அந்த ஸ்ட்ரெச்சர் உள்ளே இழுத்து செல்லப்பட, கதவு மூடப்பட்டது. உள்ளே நுழைய முயன்ற அவரை, நர்ஸ் தடுத்தாள். "இருங்க இருங்க.. நீங்க உள்ள போககூடாது.. இங்கயே இருங்க..!!" அவ்வளவு நேரம் பரபரப்பாய் இருந்த அந்த முரட்டு ஆசாமி, இப்போது சட்டென சோர்ந்து போனார். அப்படியே மடிந்து போய் தரையில் பொத்தென்று அமர்ந்தார். குழந்தை மாதிரி கேவிக்கேவி அழ ஆரம்பித்தார். "எப்படியாவது என் பொண்டாட்டியும் புள்ளையும் காப்பாத்தி கொடுத்திடும்மா.. உன்னை என் தெய்வமா நெனச்சு கேக்குறேன்..!!" என்றார் அந்த நர்ஸை ஏறிட்டு..!! அவருடைய மனைவிக்கு சிகிச்சை உள்ளே மருத்துவர்கள் செய்ய, இங்கே இவர் சம்பந்தமே இல்லாமல் நர்ஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். அந்த காட்சியைப் பார்த்த நந்தினியோ உடலெல்லாம் சிலிர்த்துப் போனாள். என்னவென்று சொல்லமுடியாத மாதிரி ஒரு உணர்ச்சி அவளுடைய மனதை பிசைந்தது. கண்களில் லேசாய் நீர் துளிர்த்தது. ஒரு கணம் தன் பார்வையை மெல்ல சுழற்றி, அந்த மருத்துவமனையை நாலாபுறமும் பார்த்தாள். எங்கெங்கும்.. நோயாளிகள்.. அவர்களுடன் வந்தவர்கள்.. மருத்துவர்கள்.. அடுத்தவர் உயிரைக் காப்பாற்ற அங்குமிங்கும் கவலையாய் ஓடித்திரிந்த பணியாளர்கள்..!! எத்தனை விதமான நோய்கள்.. எத்தனை விதமான சிகிச்சைகள்..? எத்தனை விதமான வலிகள்.. அதற்கு எத்தனை விதமான மருந்துகள்..? எத்தனை விதமான கண்ணீர்கள்.. அந்த கண்ணீர் துடைக்க எத்தனை விதமான விரல்கள்..? இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அழுது அரற்றிக்கொண்டிருக்க.. பிறந்த குழந்தை ஒன்று அடுத்த அறையில் விடாமல் வீறிட்டுக் கொண்டிருக்கிறது..!! வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர விரும்புவர்கள், முதலில் வந்து பார்க்க வேண்டிய இடம் மருத்துவமனை என்று தோன்றியது..!!"கொ..கொஞ்சம் எழுந்து இந்த சேர்ல உக்காந்துக்கங்க.." நந்தினி அந்த ஆளின் தோளைப்பற்றி எழுப்பி, அருகில் கிடந்த நாற்காலியில் அமர வைத்தாள். இன்னும் அழுது கொண்டே இருந்த அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, மலர்ந்த முகத்துடனும், இதமான குரலுடனும் சொன்னாள். "இங்க பாருங்க.. உன் வொய்ஃபுக்கும், குழந்தைக்கும் ஒன்னும் ஆகாது.. அழாதீங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க..!!" அவள் அந்த மாதிரி ஆறுதலும், நம்பிக்கையுமாய் சொல்ல, இப்போது அவருடைய அழுகை பட்டென நின்றது. கருணை கொஞ்சும் நந்தினியின் முகத்தையே கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல் பார்த்தார். அப்புறம் தன் கண்களை அவர் துடைத்துக் கொண்டபோது, அவருடைய முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. மெலிதாக புன்னகைத்தார். "என் பேர் சூசை.. அது என் பொஞ்சாதி.. மரியம்..!! உன் பேர் என்ன பாப்பா..??" "எ..என் பேர் நந்தினி..!!" "ம்ம்.. எட்டு வருஷம் கழிச்சு இப்போத்தான் உண்டாயிருக்கா.. உண்டான நாள்ல இருந்தே நானும் மரியமும் தெனமும் சண்டை போட்டுப்போம்..!! அவளுக்கு பொண்ணுதான் வேணுமாம்.. சிங்கக்குட்டி மாதிரி பையன்தான் பொறப்பான்னு நான் சொல்லுவேன்..!! ஹஹஹா.. ஹஹஹா..!!" சிரித்தவர் உடனே 'லொக்.. லொக்..' என இருமினார். "க..கவலைப்படாதீங்க.. உங்க விருப்பப்படியே பையன் பொறப்பான்.." "இல்ல இல்ல.. பொண்ணுதான் பொறக்கும் பாப்பா.. பொண்ணுதான் பொறக்கணும்.. அப்போதான் என் பொண்டாட்டி இன்னும் சந்தோஷப்படுவா..!!" அவசரமாக அவர் சொன்னதைக்கேட்டு நந்தினி திகைத்துக் கொண்டிருக்கும்போதே, அவர் திடீரென, "என் பொண்டாட்டிக்கும், பொண்ணுக்கும் ஒன்னும் ஆயிடாதுல பாப்பா..??" என்று ஏக்கமாய் கேட்டார். "ஒன்னும் ஆகாதுங்க.. ரெண்டு பெரும் நல்லபடியா பொழைச்சு வருவாங்க..!!" நந்தினி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவளுடைய செல்போன் பதறியது. எடுத்துப் பார்த்தவள், அவசரமாய் கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டாள். "வ..வந்துட்டீங்களா அங்கிள்..? அங்க.. ரிசப்ஷன்லயே இருங்க.. நான் இதோ வந்துட்டேன்..!!" என்றவள் நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் திரும்பி, "எனக்கு கொஞ்சம் வேலை இருக்குதுங்க.. நான் போயிட்டு அப்புறமா வந்து உங்களை பாக்குறேன்..!!" என்று சொல்லிவிட்டு ரிசப்ஷன் நோக்கி ஓடினாள். மஹாதேவன் ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தார். அவள் அவரை நெருங்கியதும், "எந்த ஃப்ளோர்மா..?" என்றார். "ஃபர்ஸ்ட் ஃப்ளோர் அங்கிள்.. ஸ்டெப்ஸ்லயே போயிறலாமா..?" "ம்ம்.. போலாம்..!!" நந்தினி படிக்கட்டை நோக்கி நடக்க, அவளை நெருக்கமாக பின்தொடர்ந்தவாறே மஹாதேவன் கேட்டார். "என்னாச்சும்மா திடீர்னு.. நேத்து கூட அம்மாகிட்ட பேசினேனே.." "காலைல பாத்ரூம் போனவங்க.. திடீர்னு மயக்கம் வந்து அங்கேயே விழுந்தாட்டாங்க..!! கையிலயும் தலையிலையும் சின்னதா அடி.. காலு வேற பிசகிக்கிச்சு..!!" "ஓ..!!" "அப்பா போனதுல இருந்தே.. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க அங்கிள்.. ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. சொன்னாலும் கேக்குறது இல்ல..!! எந்த நேரமும் அழுது பொலம்பிட்டே இருக்காங்க..!!" "நீதான்மா அவங்களுக்கு கொஞ்சம் தைரியம் சொல்லணும்..!!" "புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க அங்கிள்..!! அம்மா ரொம்ப அப்பாவி.. அப்பா அம்மாவை ஒரு கொழந்தை மாதிரிதான் பாத்துப்பாரு.. எந்த வேலையா இருந்தாலும் அவரே பாத்து பாத்து பண்ணிடுவாரு.. இப்போ அவர் இல்லாம என்ன செய்யப் போறோமோன்னு.. ரொம்ப பயப்படுறாங்க..!!" "ம்ம்.. புரியுதும்மா..!!" முதல்மாடியை அடைந்தவர்கள், அந்த அறைக்குள் நுழைந்தார்கள். உள்ளே நந்தினியின் அம்மா அமுதா பெட்டில் படுத்திருந்தாள். நந்தினியின் தங்கை வந்தனா அம்மாவின் கால்மாட்டில் அமர்ந்திருந்தாள். மஹாதேவனை கண்டதும் வந்தனா விருட்டென்று பெட்டில் இருந்து எழுந்து நிற்க, அமுதா அவருக்கு வணக்கம் சொல்ல கஷ்டப்பட்டு எழ முயன்றாள். "வாங்கண்ணே.." "ஐயோ.. என்னம்மா இது.. படுத்துக்கோ.. படுத்துக்கோ.." ஆறுதலாக சொன்ன மஹாதேவன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் முன் அமர்ந்து கொண்டார். 'என்ன ஆயிற்று.. எப்படி நடந்தது..?' என்கிற ரீதியில் நலம் விசாரிக்க ஆரம்பித்தார். நந்தினி தன் தங்கையை அனுப்பி காபி வாங்கி வர செய்தாள். காபி வந்ததும் அதை மஹாதேவனிடம் நீட்ட, அவர் அதை வாங்கி மெல்ல உறிஞ்சினார். அப்போதுதான் அமுதா மெல்ல விசும்ப ஆரம்பித்தாள். "இப்படி ரெண்டு பொட்டை புள்ளைகளோட என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டாரேண்ணே..?" "ஐயோ.. அதையே நெனச்சு கவலை பட்டுட்டு இருக்காதம்மா.. இனி ஆக வேண்டியதை பாரு..!! அதான் நான்லாம் இருக்கேன்ல..? சும்மா விட்ருவேனா..?" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அவர் செத்ததுக்கு கூட எந்த சொந்தக்காரனும் வந்து எட்டிப் பாக்கலை.. ஏதோ நீங்க இருக்குற நம்பிக்கைலதான் நாங்க இருக்கோம்ண்ணே..!! அவருக்கு பிசினஸ்ல நஷ்டம் வந்து நாங்க நடுத்தெருவுல நின்னப்போவும், அவருக்கு உங்க கம்பெனில வேலை போட்டு கொடுத்து.. எங்களை தலை நிமிந்து வாழ வச்சீங்க..!! இப்போ அவர் எங்களை தனியா தவிக்க விட்டு போனப்பவும்.. எங்களுக்கு ஆறுதலா இருக்கீங்க.. நாங்க உங்களுக்கு ரொம்ப கடன் பட்டிருக்கோம்ண்ணே..!!" "அதெல்லாம் ஒண்ணுல்லம்மா.. நான்தான் சதானந்தம்கிட்ட ரொம்ப கடன்பட்டிருக்கேன்.. நான் பிசினஸ் ஆரம்பிச்ச காலத்துல என் கம்பனி வளர்ச்சிக்கு அவர் எவ்வளவு உதவியா இருந்தாரு தெரியுமா..? எத்தனை எத்தனை பெரிய காண்ட்ராக்ட்லாம் அவர் மூலமா எங்க கம்பெனிக்கு வந்திருக்கு தெரியுமா..? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ஏதோ அவருக்கு நேரம் சரியில்ல.. கடைசி காலத்துல பிசினஸ் நொடிச்சு போய்.. அந்த கஷ்டத்துலையே மனசும் நொந்து போய்.. போய் சேர்ந்துட்டாரு..!! அவரு எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னால.. நான் செய்ற உதவிலாம் ஒன்னுமே இல்ல..!! என்னை உன் கூட பொறக்காத அண்ணனா நெனச்சுக்கோ.. நான் செய்ற உதவிலாம் ஒரு தங்கச்சிக்கு அண்ணன் செய்ற கடமையா நெனச்சுக்கோ..!!" "ஹ்ஹ.. என் கூடப்பொறந்த அண்ணனுகளே, எங்களுக்கு கஷ்டம் வந்தப்போ ஓடி ஒளிஞ்சுக்கிட்டானுக.. நீங்க எங்களுக்கு செய்ற உபகாரத்துக்கு நாங்க உங்களுக்கு எப்படி கைமாறு செய்யப் போறோம்னே தெரியலைண்ணே..!!" "ஐயோ... என்னம்மா நீ..? சும்மா சும்மா அதையே பேசிக்கிட்டு..!! நாமதான் இன்னும் கொஞ்ச நாள்ல ஒரே குடும்பமா ஆகப் போறோமே.. குடும்பத்துக்குள்ள இந்த மாதிரி கணக்கு வழக்கு பாக்கணுமா..?? சரி.. அந்தப் பேச்சை விடு..!! நீ இப்படி நடந்ததையே நெனச்சுக்கிட்டு இருக்காம.. தைரியமா இரு.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!" அமுதாவுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக சொன்ன மஹாதேவன், அந்த பேச்சை மற்றும் எண்ணத்துடன் வந்தனாவிடம் திரும்பி புன்னகையுடன் கேட்டார். "என்னம்மா வந்தனா.. உன் படிப்புலாம் எப்படி போயிட்டு இருக்கு..?" "ம்ம்.. நல்லா போயிட்டு இருக்கு அங்கிள்.." "எக்ஸாம்லாம் முடிஞ்சதுல..?" "ஆங்.. போன மாசமே எல்லாம் முடிஞ்சது அங்கிள்.." "எப்படி.. நல்லா பண்ணிருக்கியா..?" "ம்ம்.. நல்லா பண்ணிருக்கேன்.." "அடுத்து என்ன பண்ணலாம்னு ப்ளான் வச்சிருக்குற..?" மஹாதேவன் அப்படி கேட்டதும், வந்தனா மிகவும் உற்சாகமானாள். அவளுடைய கண்களில் புதிதாக ஒரு மின்னல் மின்ன, "எனக்கு MSc விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னு ரொம்ப ஆசை அங்கிள்.. மாஸ் மீடியால பெரிய ஆளா வரணும்னு.." அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நந்தினி அவளை இடைமறித்து கோபமாக சொன்னாள். "ஏய்.. வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்ட..? லூசு மாதிரி ஏதாவது உளறிக்கிட்டு..!!" இப்போது மஹாதேவன் உடனே வந்தனாவுக்கு சப்போர்ட் செய்தார். "ஏன்மா அவளை திட்டுற..? அவ என்ன உளர்றா..? என்னவா வரப்போரோம்னு எவ்வளவு தெளிவா பேசுறா.. அவளை போய் உளர்றான்னு சொல்ற..?" "இல்ல அங்கிள்.. அவ ஏதோ புரியாம பேசுறா.. அதுக்குலாம் ரொம்ப செலவாகும்.. நாங்க இப்போ இருக்குற நெலமைல.." "ப்ச்.. செலவை பத்திலாம் நீ ஏன் கவலைப்படுற..? அதுலாம் நான் பாத்துக்குறேன்.." என்றவர் வந்தனாவின் பக்கம் திரும்பி, "மீனாக்ஷி யுனிவர்சிட்டில நமக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கம்மா வந்தனா.. அங்க படிக்கிறதுக்கு உனக்கு சம்மதமா..?" என்று கேட்க, வந்தனாவின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. "அங்க படிக்கணும்னுதான் என் ஆசை அங்கிள்.. என் கனவுன்னு கூட சொல்லலாம்..!!" "ஹாஹா.. அப்போ அங்க உனக்கு சீட்டு கெடைச்சுட்டதாவே வச்சுக்கோ.. சரியா..??" "தேங்க்ஸ் அங்கிள்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!!" வந்தனா முகமெல்லாம் பூரிப்பும் புன்னகையுமாய் சொன்னாள். நந்தினியும், அமுதாவும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவஸ்தையில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் அதேநேரம் வந்தனாவின் குழந்தைத்தனமான பூரிப்பு, அவர்கள் இருவருக்கும் ஒருவித சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது.மஹாதேவன் கிளம்பியபோது அவரை வழி அனுப்பி வைப்பதற்காக நந்தினி உடன் சென்றாள். இருவரும் கீழ்த்தளம் செல்ல படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கும்போது மஹாதேவன் கேட்டார். "என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லிருக்காங்க..?" "நாளைக்கு அங்கிள்.." "ம்ம்.. இந்தா.. இதை செலவுக்கு வச்சுக்கோ..!!" மஹாதேவன் தன் பர்ஸ் திறந்து உள்ளே கத்தையாக இருந்த மொத்த பணத்தையும் எடுத்து நந்தினியின் கையில் திணிக்க, அவளோ பதறினாள். "ஐயையோ.. பணம்லாம் வேணாம் அங்கிள்.. எங்கிட்ட இருக்கு.. சமாளிச்சுக்குவேன்..!!"

"ப்ச்.. பொய் சொல்லாத நந்தினி..!! ம்ம்.. வாங்கிக்கோ..!!" சற்றே கடுமையான குரலில் சொன்னவர், வலுக்கட்டாயமாக பணத்தை அவளுடைய கையில் திணிக்க, அவளும் வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டாள். "தேங்க்ஸ் அங்கிள்..!!" என்று கம்மலான குரலில் சொன்னவள், தலையை குனிந்து கொண்டாள். படிக்கட்டில் பாதி இறங்கிய நிலையில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். ஒருமாதிரி குறுகிப்போய் நின்றிருந்த நந்தினியையே சில வினாடிகள் அமைதியாக பார்த்த மஹாதேவன், அப்புறம் திடீரென ஏதோ யோசனை வந்தவராய் கேட்டார். "ஆங்.. உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்மா.." "என்ன அங்கிள்..?" "நேத்து உன் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தப்போதான் தெரிஞ்சது.. நீயும் அசோக்கும் ஒரே காலேஜ்ல, ஒரே வருஷத்துல படிச்சவங்களாமே..??" "ம்ம்.. ஆ..ஆமாம் அங்கிள்..!!" சொல்லும்போதே நந்தினிக்கு லேசாய் உதறல் எடுத்தது. "அப்போ.. என் பையனை காலேஜ்லயே உனக்கு தெரியுமா..?" "பா..பாத்திருக்கேன்.. ஆ..ஆனா ரொம்பலாம் பழக்கம் இல்ல..!!" நந்தினி திணறி திணறி பொய் சொன்னாள். "ஓ..!! ம்ம்ம்ம்.. அப்போ வேற மாதிரி இருந்திருப்பான்..!! இப்போ எப்படி இருக்கான்னு பாத்தியா..? அம்மாட்ட அவன் ஃபோட்டோ கொடுத்திருந்தேன்..!!" "ம்ம்.. பார்த்தேன் அங்கிள்.." "பிடிச்சிருக்கா..?" "எ..எது..?" "என் பையனை உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டேன்..?" "ம்ம்.. பி..பிடிச்சிருக்கு.." நந்தினி சற்றே தயக்கமாய் சொன்னாள். "அவனை பத்தி சில விஷயங்கள் உன் அம்மாகிட்ட சொன்னேன்.. உன்கிட்ட அதுபத்தி சொன்னாங்களா..?" "ம்ம்.. சொன்னாங்க..!!" "அதுக்கப்புறமும் அவனை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதம்தானா..? உனக்கு சம்மதம்னு உன் அம்மா சொன்னாங்க.. ஆனா.. உன் வாயால அதை கேக்கனும்னு எனக்கு ஆசை..!! சொல்லும்மா.. என் பையனை கட்டிக்க உனக்கு சம்மதமா..?" மஹாதேவன் மிக கூர்மையாக அந்த கேள்வியை அவள் முன்வைக்க, நந்தினி இப்போது தடுமாறினாள். அவளுடைய உடலில் லேசாய் ஒரு பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது. விரல்கள் மெலிதாக நடுங்கின. அவள் அமைதியாக நிற்பதை பார்த்த மஹாதேவன், அவரே லேசான புன்முறுவலுடன் தொடர்ந்து பேசினார். "ஹாஹா..!! என்னடா இவன்.. உதவியும் பண்ணிட்டு.. உதவாக்கரை புள்ளயையும் தலைல கட்டப் பாக்குறானேன்னு நெனைக்காத..!! நான் உங்களுக்கு பண்ற உதவி, சதானந்தத்துக்கு நான் பட்டிருக்குற நன்றிக்கடன்.. அதுக்கும் இந்தக்கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! அதேமாதிரி.. என் புள்ளையும் உதவாக்கரை புள்ளை இல்ல.. பொறுப்பானவன்.. ஹார்வர்ட் யுனிவர்சிட்டில பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சிருக்கான்.. நல்ல திறமையானவன்.. புத்திசாலி.. எங்கிட்ட இருந்து பிசினசை அவன் கவனிக்க ஆரம்பிச்சப்புறம்.. கம்பனி எந்த அளவுக்கு முன்னேறி இருக்கு தெரியுமா.. லாபம் எந்த அளவுக்கு அதிகமாயிருக்கு தெரியுமா..?? அதுமட்டும் இல்ல.. ரொம்ப அன்பானவன்.. என் மேலயும், எங்ககிட்ட வேலை பாக்குறவங்ககிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பான்..!!" படபடவென பேசிய மஹாதேவன் சற்றே நிறுத்தினார். அவர் சொல்வதை எல்லாம் நந்தினி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். பதில் எதுவும் சொல்லவில்லை. மஹாதேவன் தொடர்ந்தார். "இப்போதான்மா அவன்கிட்ட இந்தமாதிரி தேவையில்லாத கெட்ட பழக்கம்லாம்..!! எஞ்சினியரிங் முடிக்கிற வரை என் பையன் ரொம்ப நல்லவனா இருந்தான்.. அப்புறந்தான் அவன் நடத்தைல நெறைய சேன்ஜ்.. என்ன காரணம்னு எனக்கு இதுவரை எதுவும் புரியலை.. " மஹாதேவன் வருத்தமாய் சொல்ல, நந்தினியின் மனதுக்குள் இப்போது ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது."அவனுக்கு வேற பொண்ணுக கெடைக்காம நான் உன்னை ச்சூஸ் பண்ணலைம்மா நந்தினி.. அவனுக்கு பொண்ணு கொடுக்க எக்கச்சக்கமான பேர் காத்திருக்காங்க..!! ஆனா.. அவனை ஒரு நல்ல மனுஷனா மாத்த உன்னை மாதிரி ஒரு பொண்ணாலதான் முடியும்னு நான் நெனைக்கிறேன்.. அதான் உங்க பொண்ணை கொடுக்குறீங்களான்னு உன் அம்மாகிட்ட துணிஞ்சு கேட்டுட்டேன்..!! இதை நான் உங்ககிட்ட எதிர்பார்க்குற பிரதி உபகாரமா நெனைக்காத.. பையனோட வாழ்க்கை கெட்டுப்போக கூடாதேன்னு தவிக்கிற ஒரு அப்பனோட அக்கறையா எடுத்துக்கோ..!! இப்போ சொல்லு.. உனக்கு என் பையனை கட்டிக்க சம்மதமா..? உனக்கு விருப்பம் இல்லைன்னா.. தாராளமா சொல்லு.. உன் முடிவு என்னவா இருந்தாலும் அதை நான் சந்தோஷமா ஏத்துக்குறேன்..!!" சொல்லிவிட்டு மஹாதேவன் நந்தினியின் முகத்தை ஏறிட, அவள் இப்போது தயக்கமான குரலில் ஆரம்பித்தாள். "எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை அங்கிள்.. என் வி..விருப்பம்னுலாம் இதுல எதுவும் இல்ல.. நீங்க என் அப்பா மாதிரி.. நீங்க எனக்கு நல்லதுதான் செய்வீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.." "ஐயோ.. அதுக்காக இல்லம்மா.. நான் உனக்கு நல்லதுதான் செய்வேன்.. அசோக்கும், நீயும் சந்தோஷமா இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!! ஆனா.. இது உன் வாழ்க்கை இல்லையா.. அதான் உன் சம்மதத்தையும் கேக்குறேன்..!!" "எனக்கு ச..சம்மதம்தான் அங்.." அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மஹாதேவன் இடைமறித்து சொன்னார். "இல்ல.. இப்போ நீ எதுவும் சொல்லவேணாம்..!! என் பையனுக்கு நான் இன்னும் ஒருவாரம் டயம் கொடுத்திருக்கேன்.. நீயும் ஒருவாரம் டைம் எடுத்துக்கோ.. நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு..!! என் பையனுக்கு வேற வழி இல்ல.. எப்படியும் என்வழிக்கு வந்துடுவான்.. உன்னோட பரிபூரண சம்மதம்தான் எனக்கு இப்போ ரொம்ப முக்கியம்..!! சரியா..? நல்லா யோசி..!! நான் வர்றேன்..!!" புன்னகையுடன் சொன்ன மஹாதேவன், திரும்பி மிச்சப் படிகளில் இறங்க ஆரம்பித்தார். நந்தினியோ அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள். அவளுடைய மனம் இப்போது ஒரு உச்சபட்ச குழப்பத்தில் சிக்கி தவித்தது. கடந்த இரண்டு வருடங்களாகவே பலத்த காற்று வீ சிய அவளது இதயத்தீவில், இப்போது சூறாவளி ஒன்று கோர தாண்டவம் ஆடுவதாக அவளுக்கு தோன்றியது. சோர்ந்து போனவளாய் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தவள் அப்புறம் திரும்பி மாடிக்கு நடந்தாள். அறைக்குள் நுழைந்ததுமே, அதற்காகத்தான் காத்திருந்தது போல வந்தனா வந்து அவளை பிடித்துக் கொண்டாள். "அக்கா.. உன் மொபைலை கொடேன்.." "எதுக்கு..?" "நான் PG பண்ணப் போறேன்ல.. என் ஃப்ரண்ட்ஸ்கிட்டலாம் ஃபோன் பண்ணி சொல்லணும்..!!" "ப்ச்.. அப்புறம் சொல்லிக்கலாம் போ..!!" "ப்ளீஸ்க்கா.. நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா.. உடனே எல்லார்கிட்டயும் சொல்லணும் போல இருக்குக்கா..!! குடுக்கா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" வந்தனா சிறுகுழந்தையாய் கெஞ்சவும், நந்தினி செல்போனை அவளுடைய கையில் திணித்துவிட்டு நகர்ந்தாள். கையில் இருந்த பணக்கற்றை ஹேன்ட் பேகுக்குள் திணித்தாள். வந்தனாவோ தன் அக்காவின் செல்போனிலேயே ஸேவ் செய்து வைத்திருந்த தனது நண்பர்களின் காண்டாக்டுகளை ஒவ்வொன்றாக தட்டி, தான் மேலே படிக்க போகிற விஷயத்தை உற்சாகமும், பூரிப்புமாக சொல்லிக்கொண்டிருந்தாள். தன் மூத்த மகளையே பார்த்துக் கொண்டிருந்த அமுதா, இப்போது அவளை அழைத்தாள். "நந்தினிம்மா.. காலுக்கு கொஞ்சம் தைலம் போட்டு விடுறியா..?" "ம்ம்.. இரும்மா.. வர்றேன்.." அடுத்த சில நிமிடங்களிலேயே அமுதாவின் வலது காலில் தைலம் தடவி, கவனமாக நந்தினி நீவி விட்டுக்கொண்டிருக்க, அமுதா மெல்லிய குரலில் தன் மகளிடம் சொன்னாள். "நீ ரொம்ப கொடுத்து வச்சவடி நந்தினி.." "ஏ..ஏன்மா அப்படி சொல்ற..?" "நாம இப்போ இருக்குற இந்த நெலமைலயும்.. உனக்கு ஒரு நல்ல வசதியான வாழ்க்கை தேடி வந்திருக்கு.." அம்மா சொல்ல, நந்தினியின் முகம் சற்றே சுருங்கியது. "ம்ம்ம்.." என்றாள் சுரத்தற்ற குரலில். "உன் தங்கச்சிக்கும் உன்னாலதான் ஒரு விடிவு காலம் வரப்போகுது.. நீ போகப்போற வீடுதான் அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்க போகுது.." "ம்ம்ம்.." "ஹாஹா.. அவளை பாரேன்.. எந்த கவலையும் இல்லாம எவ்வளவு சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருக்கா பாரு.. சின்னப்புள்ளை மாதிரி..!!" "ம்ம்ம்.." "ம்ம்ஹ்ஹ்ம்ம்..!!! அம்மாவுக்கு வேற எதுவும் வேணாம் நந்தினி.. உனக்கும் சின்னவளுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணி பாத்துட்டா.. நானும் உன் அப்பாகிட்ட போய் சேர்ந்துடுவேன்..!!" "ப்ச்.. இப்படிலாம் பேசாதம்மா..!!" நந்தினி சற்றே கடுமையாக சொன்னாள். "ம்ம்ம்.. எல்லாம் உன் கைலதான் இருக்கு நந்தினி..!! இந்த கல்யாணத்துல உனக்கெதும் வருத்தம் இல்லையே.. சம்மதம்தான..?? ம்ம்ம்..??" அமுதா ஏக்கமாக கேட்க, நந்தினிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன் அம்மாவின் முகத்தை ஒரு சில வினாடிகள் பார்த்தவள், அப்புறம் தலையை திருப்பி.. யாரிடமோ செல்போனில் உற்சாகமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த தங்கையை பார்த்தாள். ஒருபுறம்.. எதிர் வரும் காலம் பற்றி ஏராளமாய் கனவுகளுடன் தன் தங்கை..!! மறுபுறம்.. எமன் வரும் காலத்தில் தனது கடைசி கனவையும் கண்டுவிட துடிக்கிற தாய்..!! என்ன சொல்லிவிட முடியும் நந்தினியால்..?? "எ..எனக்கு சம்மதம்தான்மா..!!" நந்தினி அவ்வாறு மெல்லிய குரலில் சொல்லவும் அமுதாவின் முகம் ஒரு மலர்ச்சிக்கு சென்றது. அவளுடைய மனதில் ஒரு நிம்மதி பரவ, மகளைப் பார்த்து ஸ்னேகமாய் புன்னகைத்தாள். "அக்கா உனக்கு ஒரு கால் வருது.." வந்தனா செல்போனை நீட்டிக்கொண்டே சொன்னாள். "யாரு..?" "யாருன்னு தெரியலை.. அன்னோன் நம்பர்..!!" நந்தினி செல்போனை வாங்கி கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள். "ஹலோ.." என்றாள். "ஹலோ.." என்று அடுத்த முனையில் ஒரு ஆண்குரல். "யாரு வேணும்..?" "நீங்கதான் வேணும் மிஸ் நந்தினி..!!" அந்த ஆண்குரலில் ஒரு எள்ளல் தொனித்தது. "நீ..நீங்க..?" "ஹாஹா.. யார் பேசுறேன்னு தெரியலையா நந்தினி..?? ஹஹாஹஹா..!!" அவன் பெரிதாக சிரிக்க, அது யாராக இருக்கும் என்று நந்தினிக்கு ஓரளவு பிடிபட்டது. இருந்தாலும், "தெ..தெரியலை.. யா..யாரு..?" என்றாள். "அசோக்க்க்க்...!! இப்போ யார்னு தெரியுதா.. இல்ல.. இன்னும் ஞாபகம் வரலையா..?? 'உன்னல்லாம் ஒருத்தியும் லவ் பண்ண மாட்டாடா'ன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொன்னியே..? அதே அசோக்..!! ஹஹாஹஹா..!!" அடுத்த முனையில் அசோக் சொல்லிவிட்டு, ஒருமாதிரி வித்தியாசமாக சிரித்துக்கொண்டே இருக்க, நந்தினியின் உடலை குப்பென்று ஒரு பதற்றம் வந்து பற்றிக்கொண்டது. அவளுடைய இதய துடிப்பின் வேகம் கிடுகிடுவென எகிற ஆரம்பித்தது.அடுத்த நாள்.. அடையாறில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது அந்த ரெஸ்டாரன்ட். கருப்பு கண்ணாடி போர்த்தப்பட்ட உட்பகுதி முழுதும் ஏஸி செய்யப்பட்டிருக்க, வெளியில் இருந்த சிறிய பகுதியில் பச்சை நிறத்தில் பெயர் தெரியாத செடி கொடிகளை வளர்த்து, அந்த செடி கொடிகளுக்கு இடையில் ஆங்காங்கே பிரம்பு நாற்காலிகளையும் மேஜைகளையும் சீராக போட்டு வைத்து, கார்டன் ரெஸ்டாரன்ட் என்று பெயரிட்டிருந்தார்கள். அந்த நண்பகல் நேரத்தில் ரெஸ்டாரண்டில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஒரு மூலையில் கிடந்த பிரம்பு நாற்காலியில் நந்தினி அமர்ந்திருந்தாள். மேஜை மீதிருந்த அந்த சிறிய கண்ணாடி உப்பு டப்பாவை கையில் எடுத்து, அதை கவிழ்ப்பதும், நிமிர்த்துவதும், கண்ணாடி சுவர்களில் உப்பு நகர்வதை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தாள். ஒருமுறை மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தாள். அசோக் வருவதாக சொன்ன நேரம் சென்று அரை மணி நேரம் ஆகியிருந்தது. வேண்டுமென்றே தன்னை காக்க வைக்கிறானோ என்று அவளுடைய மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடியது. அப்புறம் மீண்டும் டப்பாவை கையில் எடுத்து விளையாட்டை ஆரம்பித்தாள். இந்தமுறை மிளகுப்பொடி டப்பா. அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்தே அசோக் அங்கே வந்தான். வெளிர்நீல நிற மேல்சட்டையும், அடர்நீல நிற காட்டன் பேண்ட்டும், கண்ணுக்கு கொடுக்கப்பட்ட குளிர் கண்ணாடியும், காதுக்கு கொடுக்கப்பட்ட செல்போனுமாக ஒரு புயல் வேகத்தில் அந்த கார்டனுக்குள் நுழைந்தான். அவனை பார்த்ததுமே நந்தினியின் உடலில் ஒரு உதறல் வந்து ஒட்டிக் கொண்டது. விளையாடிக்கொண்டிருந்த டப்பாவை அவசரமாய் கீழே வைத்துவிட்டு, நிமிர்ந்து அமர்ந்தாள். லேசாக மிடறு விழுங்கிக் கொண்டாள். அசோக் நந்தினியை ஏறிட்டு பார்க்கவே இல்லை. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டே ஸ்டைலாக நடந்து வந்தவன், நேராக வந்து நந்தினிக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டான். நந்தினியை கண்டுகொள்ளாமலே, தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். அவன் நடந்து வரும்போது அவனையே மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, இப்போது தலையை கவிழ்த்துக் கொண்டாள். தலை கவிழ்ந்திருந்தாலும், அவளது கருவிழிகளை மட்டும் மேலே உயத்தி, 'பர்சேஸ் ஆர்டர், பேமன்ட், இன்வாய்ஸ்' என்று யாருடனோ சூடாக பேசிக் கொண்டிருந்த அசோக்கையே ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள். அவனை பார்க்க பார்க்க அவளுடைய மனதுக்குள் ஒரு ஆச்சரிய ஊற்று பீறிட்டு கிளம்பி, வெள்ளமென பொங்கி பெருகியது. ஆறு வருடங்களில் எவ்வளவு மாறி விட்டான் இவன்..? கல்லூரி படிக்கையில் அவன் முகத்தில் எப்போதும் மிளிரும் அந்த பெண்மையையும், மென்மையையும் இப்போது மைக்ராஸ்கோப் வைத்துதான் தேடவேண்டும் என்று தோன்றியது. ஸ்பெக்ஸ் அணியாத அவனது பார்வையில் இருந்த அந்த கூர்மையில்தான் எவ்வளவு வெப்பம்..? மூன்று நாட்களாய் மழிக்கப்படாமல் முள்முள்ளாய் இருந்த தாடியிலும், மூக்குக்கு கீழே அழகாய் ஓரம் நறுக்கப்பட்டு அவனது பாதி மேலுதட்டை கவ்வியிருந்த மீசையிலும்தான் எவ்வளவு கவர்ச்சி..? தோற்றம் மட்டுமில்லை. அவனது நடை, பேச்சு, பாவனையுமே ஏகத்துக்கு மாறியிருக்கிறது. சற்றுமுன் நடந்து வந்தானே ஒரு நடை.. என்னவோ இவன்தான் இந்த உலகத்துக்கே அதிபதி என்பது மாதிரி.. அந்த நடையில்தான் என்ன ஒரு கம்பீரம்..?? இப்போது யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறானே.. கோபத்துடன்.. ஆனால் கட்டுப்பாடான கோபத்துடன்.. அந்தப் பேச்சில்தான் என்ன ஒரு ஆளுமை..?? பேசுகையில் அசையும் அவனது கைவிரல்கள்.. மூடித்திறக்கும் அந்த இதழ்கள்.. சுருங்கி விரியும் அந்த புருவங்கள்.. எல்லாவற்றிலும் என்ன ஒரு வசீகரம்..?? நந்தினி அந்தமாதிரி அசோக்கை ஓரவிழிப் பார்வையாலேயே விழுங்கிக்கொண்டிருக்க, அசோக் பேசி முடித்தான். காலை கட் செய்து செல்போனை மேஜையில் வைத்தவன், நந்தினியை நிமிர்ந்து பார்க்காமலே பட்டென்று சொன்னான். "காலேஜ்ல பாத்ததை விட இப்போ இன்னும் கும்முன்னு இருக்குற நந்தினி..!!"

அசோக் சொல்லிவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து அழகாக புன்னகைத்தான். நந்தினியின் முகத்திலோ பக்கென ஒரு அதிர்ச்சி. இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பவனிடம் இருந்து இந்த மாதிரியான ஆரம்ப வார்த்தைகளை அவள் சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. அவனது கமென்ட்டிற்கு எந்த மாதிரி ரியாக்ட் செய்யவேண்டும் என்று கூட அவளுக்கு பிடிபடவில்லை. 'தேங்க்ஸ்..' என்று ஈயென இளிக்க வேண்டுமா..? இல்லை.. 'இப்டிலாம் எங்கிட்ட பேசாதிங்க..?' என்று கோபம் கொப்பளிக்க வேண்டுமா..? நந்தினி அந்த மாதிரி குழப்பத்தில் திகைக்க, அசோக்கோ கூலாக அவளது அழகு முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சில வினாடிகள் அவளுடைய முகத்தில் நிலைத்திருந்த அவனது பார்வை.. அப்புறம் மெல்ல மெல்ல கீழிறங்கி அவளது கழுத்து, புஜம், மார்பு, இடுப்பு என இறங்க.. ஒவ்வொரு பாகத்திலும் ஓரிரு வினாடிகள் தாராளமாய் தங்கியிருந்து மோகமாய் வெறிக்க.. நந்தினிக்கு உடல் கூசுவது மாதிரி ஒரு உணர்வு..!! அவஸ்தையாய் நெளிந்தாள்."ம்ம்ம்... அப்புறம்.. எப்படி இருக்குற..?" அசோக்கின் குரலில் ஒரு மிதமிஞ்சிய எள்ளல். "ந..நல்லாருக்கேன்.." நந்தினிக்கோ வார்த்தைகள் தடுமாறின. "உன்னை என் லைஃப்ல திரும்ப மீட் பண்ணவே கூடாதுன்னு நெனச்சிருந்தேன்.. இப்படி என் அப்பா உன்னை தேடிக் கண்டுபுடிச்சு என் முன்னாடி வந்து நிறுத்துவாருன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கலை.." "உ..உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்னு நெனைக்கிறேன்.. அ..அது நியாயந்தான்..!! ஆனா நான்.." "ப்ச்.. கோவம்லாம் ஒன்னும் இல்லைப்பா.. அதுலாம் நான் எப்போவோ மறந்துட்டேன்..!! ம்ம்.. சரிசரி.. மேல சொல்லு.. ஏதோ சொல்ல வந்தியே..?" "நா..நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.." "என்ன..?" "அ..அன்னைக்கு.." "இரு இரு.. ஒரு நிமிஷம்..!! மொதல்ல சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம்..!!" என்று அவளை இடை மறித்தவன், "ஹலோ பாஸ்.." என்று திரும்பி பேரரை அழைத்தான். "ஜூஸ் சாப்பிடலாமா..?" என்று நந்தினியிடம் கேட்க, அவள் "ம்ம்.. சாப்பிடலாம்.." என்று தலையசைத்தாள். "ரெண்டு குக்கு மில்க் ஷேக்..!!" என்று பேரரிடம் சொன்ன அசோக், நந்தினியை ஏறிட்டு விஷமமாக புன்னகைத்தான். நந்தினிக்கு சுருக்கென்றது. அவளுடைய நெஞ்சில் ஏனோ இப்போது ஒரு திடீர் படபடப்பு. அசோக்கோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கேஷுவலான குரலில் சொன்னான். "ஆறு வருஷம் ஆகிப் போச்சு நந்தினி.." "ம்ம்.. லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு பாத்ததுல..?" "ஹாஹா.. நான் அதை சொல்லலை.." "அ..அப்புறம்..?" "குக்கு மில்க் ஷேக் சாப்பிட்டு ஆறு வருஷம் ஆகிப்போச்சுன்னு சொன்னேன்..!! இன்னைக்கு உன்னைப்பாத்ததும் திடீர்னு ஞாபகம் வந்துடுச்சு..!!" "ஓ..!!" நந்தினிக்கு மூக்குடைபட்ட மாதிரியான ஒரு உணர்வு. "ம்ம்.. கமான்.. நீ என்னவோ சொல்ல வந்தியே.. சொல்லு.." "ஆங்.. அன்னைக்கு.." நந்தினி மீண்டும் ஆரம்பிக்க, "ஒரு நிமிஷம் இரு.. ஒரு சிகரெட் பத்த வச்சுக்குறேன்.." அசோக் மீண்டும் அவளை இடைமறித்து, அவள் சொல்ல வந்ததை சொல்ல விடாமல் தடுக்க, நந்தினி காய்ந்து போனாள். 'ப்ச்..' என்று மெலிதாக சலிப்பாக சொல்லிக் கொண்டாள். அசோக் கூலாக ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். உள்ளே இழுத்த மொத்த புகையையும், உதடுகள் குவித்து மெல்ல மெல்ல வெளியே ஊதியவன், மீண்டும் கேட்டான். "ம்ம்.. இப்போ சொல்லு.. என்ன சொல்லணும் எங்கிட்ட..?" "அன்னைக்கு.." "ப்ச்.. என்ன நந்தினி.. அப்போ இருந்து அன்னைக்கு அன்னைக்குன்னு சொல்லிட்டு இருக்குற..? என்னைக்குன்னு சொன்னாத்தான எனக்கு புரியும்..?" அசோக் சற்றே எரிச்சலாக, "அ..அதான்.. அந்த.. லாஸ்ட் எக்ஸாம் எழுதின அன்னைக்கு.." நந்தினி திணறினாள். "ஓ.. அன்னைக்கு..!! ஓகே ஓகே..!! ம்ம்.. மேல சொல்லு.. அன்னைக்கு..?" அசோக் கேட்க, நந்தினி கண்களை மூடி 'ஹ்ஹ' என்று மூச்சுக்காற்றை சலிப்பாக வெளிப்படுத்திவிட்டு ஆரம்பித்தாள். "அன்னைக்கு நான் உங்ககிட்ட அந்த மாதிரி பேசிருக்க கூடாது..!! என்னதான் எனக்கு உங்களை புடிக்கலைன்னாலும்.. அதை நாகரிகமா சொல்லிருந்திருக்கலாம்.. அந்தமாதிரி பேசி உங்களை ஹர்ட் பண்ணிருந்திருக்க கூடாது..!! ஐ'ஆம் ரியல்லி ஸாரி.. எ..என்னை மன்னிச்சுடுங்க..!!" "ஓஹோ.. அன்னைக்கு பண்ணினதுக்கு இன்னைக்கு மன்னிப்பா..?? ஹா.. பரவால விடு.. நீ ஒன்னும் அதுக்காகலாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை..!! அன்னைக்கு நடந்ததை நான் அன்னைக்கே மறந்துட்டேன்.." வேண்டுமென்றே அந்த 'அன்னைக்கு'க்கு அதிக அழுத்தம் கொடுத்தான். "இ..இல்லை.. நான் பண்ணினது பெரிய தப்பு.. நான் உங்களை அந்த மாதிரி.." "ப்ச்.. விடுன்னு சொல்றேன்ல..? ஆக்சுவலா நீ அந்த மாதிரி பேசினதுக்காக.. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!!" "தே..தேங்க்ஸா..? எ..எதுக்கு..?""ஆமாம்.. அன்னைக்கு மட்டும் நீ அப்படி பேசாம இருந்திருந்தா.. நான் இன்னும் அதே மாதிரி அம்மாஞ்சியாத்தான் இருந்திருப்பேன்..!! உலகம்னா என்ன.. நம்மை சுத்தி என்ன நடக்குது.. யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்.. இது எதுவுமே தெரியாம இன்னும் அதே மாதிரி அப்பாவி முட்டாளா இருந்திருப்பேன்..!! உன்னோட அந்த பேச்சுதான் இன்னைக்கு என்னோட மாற்றத்துக்கு காரணம்.. இந்த மாற்றம் எனக்கு புடிச்சிருக்கு.. ஐ'ஆம் ரியல்லி ஹேப்பி நவ்..!! ஸோ.. தேங்க்யூ.. தேங்க்யூ வெரி மச் நந்தினி.. அந்த மாதிரி என்னை ஹர்ட் பண்ணினதுக்கு..!!" நந்தினி மலைத்து போனாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அசோக்குடைய முகத்தையே திகைப்பாக பார்த்தவள், அப்புறம் அமைதியாக தலையை குனிந்து கொண்டாள். ஆர்டர் செய்த ஜூஸ் கண்ணாடி டம்ளர்களில் வந்தது. நந்தினி ஒரு டம்ளரை எடுத்து ஜூஸ் பருக ஆரம்பித்தாள். அசோக்கும் சிகரெட்டை நசுக்கி அணைத்தது விட்டு, ஒரு டம்ளரை கையில் எடுத்துக் கொண்டான். மெலிதாக உறிஞ்சிக்கொண்டே கேட்டான். "ஓகே சொல்லிட்ட போல இருக்கு..?" "எதுக்கு..?" "என்னை கட்டிக்கிறதுக்கு..!!" சொல்லிவிட்டு அசோக் குறும்பாக புன்னகைத்தான். "ம்ம்.. ஆ..ஆமாம்..!!" நந்தினி தயக்கமாக சொன்னாள். "குட்..!! ஆனா.. என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு ஓகே சொன்ன..? ஆறு வருஷம் முன்னாடி இருந்த அசோக்கும் இப்போ இருக்குற அசோக்கும் வேற வேற.. தெரியுமா..? இப்போலாம்.. ஒரு மணி நேரத்துக்கு ஒரு சிகரெட் எனக்கு தேவைப்படுது.. காலைல எந்திரிச்சதும் காபிலாம் குடிக்கிறது இல்லை.. ரெண்டு லார்ஜ் விஸ்கிதான்..!!" "ம்ம்.. தெரியும்..!!" நந்தினி பட்டென சொல்ல, அசோக்கிற்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. "ஓ.. தெரியுமா இதெல்லாம்..? டாடி சொன்னாரா..?" "ம்ம்ம்.." "நெனச்சேன்.. வேற என்ன சொன்னாரு..?" "வேற.. இ..இன்னொன்னும் சொன்னாரு.." அவள் இழுக்க, "என்னது..?" அசோக் ஆர்வமானான். "உ..உங்களுக்கு பொண்ணுக ச..சகவாசம் கூட.." நந்தினி திக்கித்திணறி சொன்னாள். அசோக் இப்போது முன்பைவிட பெரிதாக ஆச்சரியப்பட்டான். "வாவ்...!!! தேட்ஸ் கூல்.. தேட்ஸ் ரியல்லி கூல்..!!!!!! டாட்.. தேட்ஸ் மை டாட்..!! ஹீ இஸ் அமேசிங் யு நோ..?? அவர் மாதிரி ஒரு ஆளை பாக்கவே முடியாது.. எனக்கு பிசினஸ் சொல்லி தந்தப்போ.. அவர் மொதல்ல சொன்ன மேட்டர் என்ன தெரியுமா..? பிசினஸ்ல நேர்மைதான் எல்லாமே.. நேர்மை இல்லாம பிசினஸ்ல ஜெயிக்க முடியாது.. ப்ளா ப்ளா.. புல்ஷிட்..!!! பிசினஸ்ல மட்டும் இல்ல.. நெஜ வாழ்க்கைலயும் இந்தளவுக்கு நேர்மையை கடைபிடிக்க அவராலதான் முடியும்..!! ம்ம்ம்ம்.. கூல்..!!!! ஆனா.. அவருக்கே தெரியாத சில விஷயங்கள்லாம் இருக்கு.. அதை பத்தி அவர் உனக்கு சொல்லிருக்க சான்ஸ் இல்லை..!!" "அ..அவருக்கு தெரியாமன்னா..?" நந்தினியின் இதயத்துடிப்பு இப்போது மீண்டும் எகிறியது. "எனக்கு பொண்ணுக சகவாசம் இருக்குன்னு சொன்னாரே.. எத்தனை பொண்ணுக கூட சகவாசம் இருக்குன்னு ஏதாவது சொன்னாரா..?" "இ..இல்ல.." "எப்படி சொல்வாரு..? அவருக்கு தெரிஞ்சாத்தான சொல்வாரு..? ம்ம்..?? சரி.. அவர் சொல்றது இருக்கட்டும்.. நீ என்ன நெனைக்கிற..? எனக்கு எத்தனை பொண்ணுக கூட சகவாசம் இருக்கும்..? ஐ மீன்.. நான் இதுவரை எத்தனை பொண்ணுக கூட செக்ஸ் வச்சிருப்பேன்னு நீ நெனைக்கிற..?" "தெ..தெரியாது.." "ஹாஹா.. உனக்கு தெரியாதுன்னு எனக்கும் தெரியும்மா.. உன்னை சும்மா கெஸ் பண்ணத்தான் சொன்னேன்.." "இ..இல்ல.. நீங்களே சொல்லுங்க.." நந்தினி தப்பிக்க எண்ண, "ஹே.. கமான்.. சும்மா கெஸ் பண்ணு.. ஏதோ ஒரு நம்பர்.. கமான்.. டெல் மீ ஸம் நம்பர்.. ஸம் நம்பர்..!!" அசோக் அவளை விடுவதாயில்லை. "ஏ..ஏழு.." நந்தினி தயங்கி தயங்கி சொன்னாள். "ஓகே.. குட்.. வெரி க்ளோஸ்..!! பட் நீ சொன்னதோட ஒரு எயிட் ஆட் பண்ணிக்கோ.. ஆட் பண்றதுன்னா.. செவன் ப்ளஸ் எயிட்.. அந்த ஆட் இல்ல..!! செவன் முன்னாடி எயிட்னு ஒரு டிஜிட் ஆட் பண்ணிக்கோ.. இட்ஸ் எயிட்டி செவன்..!!!! இன்னும் கொஞ்ச நாள்ல செஞ்சுரி போடப்போறேன்..!!" சொல்லிவிட்டு அசோக் புன்னகைக்க நந்தினிக்கு லேசாக தலை சுற்றியது. மயக்கம் வரும்போல் இருந்தது. எண்பத்தேழா..??? நெற்றியை பற்றிக்கொண்டவள், அசோக்கையே ஒருமாதிரி திகைப்பாக பார்த்தாள். தான் நினைத்ததை விட இவன் மிக மோசமாய் கெட்டுப் போயிருக்கிறான் என்று பளிச்சென அவளுக்கு உறைத்தது. அவள் அமைதியாயிருக்க அசோக்கே தொடர்ந்தான். "இப்போ சொல்லு.. இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதமா..?" அசோக் கேட்க, நந்தினிக்கு இப்போது ஒருமாதிரி ஆயாசமாக இருந்தது. கடந்த சில நாட்களாக இந்த 'சம்மதமா..?' என்ற ஒரே கேள்வியை, எத்தனை பேர் எத்தனை விதமாக கேட்பார்கள் என்னிடம்..?? நந்தினி இப்போது விழிகளை மெல்ல மூடிக்கொண்டாள். படபடக்கும் இதயத்தை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அப்புறம் விழிகளை திறந்தவள் தெளிவாக சொன்னாள். "சம்மதம்..!!" "அப்படி போடு அருவாளை..!!" அசோக் ஒருமாதிரி கிண்டலாக சொன்னான். "ஏன்.. என்னாச்சு..?" "இல்ல.. ஒன்னும் ஆகலை.. உன் மன உறுதியை பாத்து.. நான் அப்படியே மலைச்சு போயிட்டேன்..!! ஆமாம்.. என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா..?" "எது என்ன காரணம்..?" "இல்ல.. ஒரு காலத்துல நான் அப்பழுக்கில்லாத ஆளா இருந்தேன்.. உன்னை வேற சின்சியரா லவ் பண்ணுனேன்.. அப்போ நீ என்னடான்னா.. என்னை 'ஆம்பளையே இல்ல.. ஒருத்தியும் உன்னை லவ் பண்ணமாட்டா'ன்னு.. தூக்கி எறிஞ்சுட்டு போயிட்ட..!! இப்போ எனக்கு இவ்வளவு கெட்ட பழக்கம் இருக்கு.. எவளையும் லவ் பண்ற மாதிரி எந்த ஐடியாவும் எனக்கு இல்ல.. அப்படி இருந்தும் இப்போ.. என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்ற.. அதான் என்ன காரணம்னு கேட்டேன்..!!" "அ..அது. அது வந்து.." "ம்ம்.. சொல்லு..!! எ..எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு காரணந்தான்.." "என்ன..?" "என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நீ இழந்து போன அந்த வசதியான வாழ்க்கை உனக்கு திரும்ப கிடைக்கும்.. கார், பங்களா, ஏசின்னு சொகுசா வாழலாம்..!! கரெக்டா..??" முகத்தில் ஒரு இதமான புன்னகையுடனே, அசோக் அந்த மாதிரி இளக்காரமான குரலில் கேட்க நந்தினிக்கு சுரீரென்று இருந்தது. அவ்வளவு நேரம் அவர்கள் பேசியதில் முதன்முறையாக அவளுக்கு அசோக்கின் மீது கோபம் வந்தது. விழிகளை உருட்டி அசோக்கை முறைத்து அதன்பிறகு அவள் பேசிய வார்த்தைகளிலும் அந்த கோபம் தாராளமாகவே நிறைந்திருந்தது. "இங்க பாருங்க மிஸ்டர் அசோக்.. வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்க.. நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்ல..!! இந்த ஆறு வருஷத்துல நீங்க எவ்வளவு மாறிருக்கீங்களோ.. அதை விட நான் அதிகமா மாறிருக்கேன்..!! காலேஜ் படிக்கிறப்போ என்னை மாதிரி அழகும், பணமும் எவளுக்கும் இல்லைன்னு எனக்கு ஒரு திமிர் இருந்தது உண்மைதான்.. அந்த திமிர்னாலதான் நான் உங்களை ஹர்ட் பண்ணுனேன்..!! ஆனா.. இந்த ஆறு வருஷத்துல நெறைய மாறிப்போச்சு.. வாழ்க்கைல எதுவும் நிரந்தரம் இல்லைன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சு போச்சு..!! நாலு வருஷம் முன்னாடி என் அப்பாவுக்கு பிசினஸ் லாஸ் ஆகி.. நாங்க நடுத்தெருவுல நின்னோம்.. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட பலநாள் கஷ்டப்பட்டோம்.. காஞ்ச வயிறோட வெறுந்தரையில படுத்தப்போதான்.. காலேஜ்ல என் திமிர்னால நான் பண்ணுன தப்பு எல்லாம் புத்தில உறைச்சுச்சு..!! நெறைய விஷயங்களை நெனச்சு நெனச்சு வருத்தப்பட்டிருக்கேன்.. உங்களை ஹர்ட் பண்ணுனதும் அதுல ஒன்னு..!! என்னைக்காவது ஒருநாள் உங்களை நேர்ல பாத்தா.. உங்ககிட்ட மனசார மன்னிப்பு கேக்கனும்னு நெனச்சேன்.. இன்னைக்கு அதை கேட்டுட்டேன்.. எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு..!! உங்க அழகுல மயங்கியோ.. உங்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டோ.. நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலை..!! என் குடும்ப சூழ்நிலை.. என் விருப்பம் என்னன்னு யார்கிட்டயும் சொல்ல முடியாத நெலமை.. இந்தக்கல்யாணம் நடந்தா நெறைய பேர் சந்தோஷமா இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை.. அதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்..!! ஆனா நீங்க.. என்னை இவ்வளவு கீழ்த்தரமா நெனைப்பீங்கன்னு நான் யோசிச்சே பாக்கலை.. ச்சே..!!" நந்தினி படபடவென பொரிந்து தள்ள, அசோக் சிரித்த முகத்துடன் அவளை தடுத்தான். "ஹே ஹே.. ஹோல்ட் ஆன்.. ஹோல்ட் ஆன்..!! ஹாஹாஹாஹா.. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு.. குலுக்கிட்டு ஓப்பன் பண்ணுன பீர் பாட்டில் மாதிரி அப்படியே பொங்குற..?? ம்ம்..?? நான் உன்னை சும்மா சீண்டிப் பாக்குறதுக்காக கேட்டேன்.. தேட்ஸ் ஆல்..!! ரிலாக்ஸ்..!!" எதுவுமே நடக்காத மாதிரி அவன் மிகவும் கூலாக சிரிக்க, தான் கொஞ்சம் அவசரப்பட்டு அதிகமாக பேசிவிட்டோமோ என்று நந்தினிக்கே சந்தேகத்தை உண்டு பண்ணியது. தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, அமைதியான குரலில் சொன்னாள். "ஸா..ஸாரி.." "ம்ம்ம்.. சரி.. காரணம் வேணாம்.. காரியத்துக்கு வருவோம்..!! அப்போ.. உனக்கு என்னை கல்யாணம் செய்துக்க இஷ்டம்.. அப்டித்தான..?" "ஆமாம்..!!" நந்தினியின் குரலில் இப்போது மெல்லிய எரிச்சல். "ஆனா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையே..? என்ன பண்ணலாம்..??" அசோக் ஏளனமாக கேட்க, "ரொம்ப சந்தோஷம்..!!" என்று கடுமையாக சொன்ன நந்தினி சேரில் இருந்து எழுந்து கொண்டாள். ஹேன்ட் பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். நகர முற்பட்டவளை அசோக் தடுத்தான். "ஏய்.. ஏய்.. இரு.. எங்க கெளம்பிட்ட..?" "அதான் இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு.. அப்புறம் என்ன..?" "ஹாஹா.. கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னுதான சொன்னேன்..? கல்யாணம் நடக்காதுன்னா சொன்னேன்..?? எதுக்கெடுத்தாலும் முறுக்கிக்குற..? உக்காரும்மா.. உக்காரு ப்ளீஸ்..!!" அசோக் இளித்தவாறே சொல்ல, நந்தினி ஒருமுறை வெறுப்பாக தலையசைத்தாள். அப்புறம் மீண்டும் அந்த சேரில் பொத்தென்று அமர்ந்தாள். 'அப்படி என்ன இவனுக்கு என்னைக் கண்டால் இளக்காரம்..? வந்ததில் இருந்தே எப்படி காய விடுகிறான் என்னை..? இனியும் இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்லக்கூடாது..!!' மனதுக்குள் சொல்லிக்கொண்ட நந்தினி சற்றே பொறுமையில்லாதவளாய் சொன்னாள். "இங்க பாருங்க.. சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு வேலை இருக்கு.. ஹாஸ்பிட்டல் போகணும்.. அம்மாவுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ்..!!" "ஓ.!! உன் அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்களா..? என்னாச்சு..??" "மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாங்க.. உடம்புல கொஞ்சம் அடி.." "ம்ம்.. அம்மாவை நான் கேட்டதா சொல்லு..!! உன் அப்பா இறந்ததுக்கு கூட என்னால வர முடியலை.." "ஆங்.. சொன்னாங்க.. நீங்க பெங்களூர்ல ரொம்ப பிஸ்ஸ்ஸியா இருந்தீங்கன்னு.." அவ்வளவு நேரம் அசோக்கிடம் இருந்த கிண்டல் இப்போது நந்தினியிடம். "அப்டிலாம் ஒண்ணுல்ல.. அவர் இறந்த விஷயத்தையே யாரும் எங்கிட்ட சொல்லல.. உன் அப்பா தவறுனது நெஜமாவே எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது..!! குடும்பத்தலைவர் இந்த மாதிரி திடீர்னு போயிட்டா.. அந்த குடும்பத்தோட நெலமையும் ரொம்ப கஷ்டந்தான்..!! ஆமாம்.. நீதான் எஞ்சினியரிங் படிச்சிருக்கேல.. எங்கயாவது வேலைக்கு போகலாம்ல..?" "போயிட்டுத்தான் இருக்கேன்.. போன வருஷத்துல இருந்து போறேன்.. ஆனா.. சம்பளம்தான் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல.." "ஓஹோ..?? மெக்கானிக்கல் இஞ்சினியர்தான நீ..? எங்கிட்ட வா.. எங்க பேக்டரில நல்ல வேலை போட்டு தர்றேன்..!!" "பேக்டரிலயா..? என்ன.. ட்ரில் ஓட்டனுமா..??" நந்தினி எரிச்சலாக கேட்டவிதம், அசோக்குக்கு சிரிப்பை வரவழைத்தது. சிரித்தான். "ஹாஹாஹாஹா..!!" "அதுலாம் என்னால முடியாது.. பொண்ணா பொறந்துட்டு.. ஏன்டா மெக்கானிக்கல் படிச்சோம்னு இப்போ ஃபீல் பண்றேன்..!! எதாவது சாஃப்ட்வேர் லைன்ல போயிருந்தாவது.. இந்நேரம் கை நெறைய சம்பாதிச்சுட்டு இருந்திருப்பேன்..!!" "ஹாஹா.. பரவால விடு.. என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. உன் பணப்பிரச்னை எல்லாம் சால்வ் ஆயிடும்..!!" புன்னகையுடன் பட்டென சொன்ன அசோக், ஒருமாதிரி கண்களை இடுக்கி நந்தினியின் விழிகளையே கூர்மையாக பார்த்தான். நந்தினியால் இப்போது ஏனோ அவனுடைய பார்வையை நேரிடையாக சந்திக்க முடியவில்லை. அந்த பார்வையில் இருந்த வசீகரம்.. அவளுடைய மனதை ஏதோ செய்ய.. பார்வையை தாழ்த்தி.. தலையை கவிழ்த்துக் கொண்டாள். சற்றே கம்மலான குரலில் கேட்டாள். "உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு சொன்னீங்க..?" "ம்ம்.. ஆமாம்.. இஷ்டம் இல்லைதான்..!! கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னுதான் இருந்தேன் நந்தினி..!! டாடிகிட்ட இருந்து ரொம்ப ப்ரெஷர்.. அதுவும் அந்த பொண்ணுக மேட்டர் தெரிஞ்சப்புறம்.. ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு..!! இப்போவும் இந்தக்கல்யாணம் வேணாம்னு என்னால அடம்புடிக்க முடியும்.. ஆனா, டாடி ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவாரு..!! வேற எவளாவது இருந்திருந்தா.. அவர் மனசு உடைஞ்சாலும் பரவால்லைன்னு என் முடிவுல ஸ்ட்ராங்கா இருந்திருப்பேன்..!! ஆனா.. அவர் பாத்திருக்குற பொண்ணு நீன்னு தெரிஞ்சப்புறந்தான்.. சின்னதா ஒரு யோசனை..!! ஒரு டீல் பேசி பாக்கலாம்னு தோணுச்சு.. அதுக்கு நீ ஒத்துக்கிட்டா கல்யாணம்..!! இல்லைன்னா.. டாடியோட மனசை நோகடிக்கிறதை தவிர எனக்கு வேற வழி இல்லை..!!" "டீலா..?? என்ன டீல்..??" நந்தினி குழப்பமாய் கேட்டாள். அசோக் சிலவினாடிகள் யோசித்துவிட்டு, பின் தெளிவாக சொன்னான்.

"ஒரு புருஷனா நான் உன்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டேன்..!! அதே மாதிரி.. ஒரு பொண்டாட்டியா நீ எந்த வகைலயும் என்னை கட்டுப்படுத்த கூடாது..!! தேட்ஸ் த டீல்..!!" அசோக் சொல்லிவிட்டு அமைதியாக நந்தினியின் முகத்தையே பார்த்தான். அவன் சொன்ன வார்த்தைகளையும், அந்த வார்த்தைகளின் அர்த்தத்தையும், அந்த அர்த்தத்தின் முழு வீரியத்தையும் கிரஹித்துக் கொள்ள நந்தினிக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. யோசித்தாள். "உ..உங்களை கட்டுப்படுத்த கூடாதுனா..?""என் விருப்பத்துக்கு குறுக்க நிக்க கூடாது.. என் சந்தோஷத்துக்கு தடையா இருக்க கூடாது.. என் நடவடிக்கைகளை பாத்து ஏன் எதுக்குன்னு கேள்வி கேக்க கூடாது..!! மொத்தத்துல.. நான் இப்ப எப்படி இருக்குறனோ.. கல்யாணத்துக்கு அப்புறமும் இதே மாதிரி என்னை இருக்க விடனும்..!!" அசோக் சொல்ல நந்தினி அதிசயித்து போனாள். 'என்ன மாதிரி ஒரு புத்திசாலித்தனமான, விவகாரமான திட்டம் இவனுக்குள்..?' "ஓ..!! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. இல்ல..?? அப்பாவையும் சமாதானம் பண்ணுன மாதிரி ஆச்சு.. உங்களோட இந்த ப்ளேபாய் லைஃபையும் மாத்திக்க தேவையில்ல.. அப்டித்தான..?? சும்மா சொல்ல கூடாது.. என்னதான் இருந்தாலும் நீங்க பிசினஸ்மேன்ல.. அதான்..!!" "பாராட்டுறது இருக்கட்டும்.. உனக்கு இந்த யோசனை பிடிச்சிருக்கா..?" "ஒரு பொம்மை கல்யாணம் மாதிரி.. இல்ல..? ஊர் உலகம் முன்னாடி நான் உங்க பொண்டாட்டி.. ஆனா நெஜத்துல எனக்கு எந்த உரிமையும் இல்ல..!!" "ஆ..ஆமாம்.." "சும்மா பேருக்கு தாலியை கட்டி.. உப்புக்கு சப்பாணி மாதிரி.. உங்க வீட்ல ஒரு மூலைல என்னை உக்கார வைக்க போறீங்க..? அப்டித்தான..?" "ச்சேச்சே.. என்ன பேசுற நீ..?? ஏன் அப்டிலாம் நெனைக்கிற..??" "பின்ன.. எதுவும் சொல்றதுக்கு எனக்கு உரிமை இல்லைன்னா என்ன அர்த்தம்..?" "பொண்டாட்டின்ற உரிமைதான் இல்லைன்னு சொன்னேன்.. ஒரு பிரண்டா உரிமை எடுத்துக்கலாம்..!!" "ஹாஹா.. பிரண்டா..?? நீங்களும்.. நானுமா..??" "ஏன்.. இருக்க கூடாதா..??" "ம்ம்.. கேக்குறதுக்கு காமடியா இருக்கு..!!" "காமடியா இருந்தா.. வீட்டுல போய் பொரண்டு பொரண்டு சிரி.. இப்போ என் டீல் உனக்கு ஓகேவா இல்லையான்னு சொல்லு..!!" "இல்லைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க..?" "நேரா டாடிட்ட போய்.. அவர் என்ன வேணா பண்ணிக்கட்டும்னு.. இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிடுவேன்.. சிம்பிள்..!!" அசோக் சொல்லிவிட்டு புன்னகைக்க, நந்தினி இப்போது சற்றே நிதானித்தாள். அவளுடைய மனதில் சில குழப்பமான எண்ணங்கள்..!! 'இவனுடைய வார்த்தைகளில் ஒரு உறுதி தெரிகிறது.. இதற்கு நான் சம்மதிக்காவிட்டால் இந்த கல்யாணம் நடக்காது..!! கல்யாணம் நடக்காவிட்டாலும் மஹாதேவன் எனது குடும்பத்திற்கு செய்யும் உதவிகளை செய்து கொண்டுதான் இருப்பார்.. ஆனால் மனதில் ஒரு மகிழ்ச்சி இல்லாமலே செய்வார்.. அதுவுமில்லாமல் அத்தகைய உதவியை பெறுவதில் எங்களுக்கும் ஒரு தயக்கமிருக்கும்..!! அம்மாவை பற்றி சொல்லவே தேவையில்லை.. இந்தக்கல்யாணம் நின்றால் நொந்து போய் விடுவாள்..!! தங்கைக்கு எந்த கவலையும் இருக்காது.. ஆனால் இன்னும் இரண்டு வருடங்கள் சென்று அவளுக்கு ஓரளவு முதிர்ச்சி ஏற்படும்போது.. அவளுக்கும் மனதில் அமைதி இருக்கப் போவது இல்லை..!! அதைவிட இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால், நிறைய பேருக்கு நிம்மதி.. பிரச்சினை மொத்தமும் எனக்கு மட்டுமே இருக்கப் போகிறது.. கணவன் கண்ட பெண்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த பெண்ணுக்குமே கொடுமையான விஷயம்தான்..!! ஆனால்.. இவன் என்னுடைய கணவன் என்று நினைத்ததால்தானே பிரச்சினை.. இவன் சொல்வது போல ஒரு நண்பனாக இவனை நினைத்து கொள்ளலாமே..? ஒரு தோழியாக இருந்து இவனது கெட்ட பழக்கங்களை மாற்ற முயலலாமே..?' எல்லா யோசனைகளுமே மொத்தமாய் ஒரு சில வினாடிகள்தான். இதில் பல விஷயங்கள் அவள் ஏற்கனவே யோசித்திருந்ததுதான். யோசித்து முடித்த நந்தினி ஒரு முடிவுக்கு வந்தவளாய் லேசாக தொண்டையை செருமிக்கொண்டு சொன்னாள். "இங்க பாருங்க.. இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு.. யார்கிட்டயும் போய் சொல்லக் கூடிய நெலமைல நான் இல்ல..!! எனக்கும், என் குடும்பத்துக்கும் இந்த கல்யாணம் நடக்குறது ரொம்ப ரொம்ப அவசியம்..!! இந்தக் கல்யாணம் நடக்குறதுக்கு நீங்க என்ன கண்டிஷன் போட்டாலும்.. எனக்கு சம்மதம்தான்..!!" "அப்போ உனக்கு டீல் ஓகே..??" "ம்ம்.. ஓகே..!!" நந்தினி அமைதியாக சொல்ல, அசோக்கின் முகத்தில் ஒருவித வெற்றிப் புன்னகை. "தேங்க்ஸ் நந்தினி..!! தேட்ஸ் ஆல்.. இதை பேசுறதுக்காகத்தான் உன்னை இங்க வர சொன்னேன்..!! உனக்கு வேற ஏதாவது டவுட்டு இருக்கா.. எங்கிட்ட ஏதாவது கேக்கணுமா..??" "இ..இல்ல.." "அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.." "என்ன..?" "இந்த டீல் விஷயம்.. நமக்குள்ளதான் இருக்கணும்.. யார்கிட்டயும் நீ சொல்லக் கூடாது.." "இல்ல.. சொல்லலை..!!" நந்தினி சொன்னதும் அசோக் சேரில் இருந்து எழுந்து கொண்டான். "கூல் தென்..!! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நந்தினி.. நான் கெளம்புறேன்..!! வில் மீட் யு அட் மணமேடை..!!" இதழில் ஒரு குறும்பு சிரிப்புடன் சொன்னவன், பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து, பில் புக்குக்குள் செருகினான். பாக்கெட்டில் இருந்த குளிர்கண்ணாடியை எடுத்து மீண்டும் கண்களுக்கு கொடுத்தான். திரும்பி ஸ்டைலாக நடந்து சென்றான். சென்று அந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறினான். அவன் போவதையே நந்தினி வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். நந்தினி ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தபோது, ரிசப்ஷனிலேயே சூசை தென்பட்டார். இவளை பார்த்ததும் ஸ்னேஹமாய் புன்னகைத்தார். நேற்று காலை அவரை பார்த்தபிறகு மாலை ஒருமுறை அவரை சென்று நந்தினி பார்த்தாள். அப்போது அவருடைய மனைவியின் உடல்நிலை ஓரளவு சீராகி நலமாயிருந்தாள். எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்ற நிலையில் மருத்துவர்களின் தீவிர கவனிப்பில் இருந்தாள். ஒரு மணி நேரம் நந்தினி சூசைக்காக செலவழித்திருப்பாள். மருந்து வாங்குவதற்காக பார்மசிக்கு அழைந்தாள். 'இவங்க கூட பொம்பளைங்க யாரும் வரலையா..?' என்று நர்ஸ் கேட்டபோது அவசரமாக உள்ளே ஓடினாள். மருத்துவமனையின் விதிகள், செயல்பாடுகள், வழக்கங்கள் பற்றி சூசைக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்தாள். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்காக அவ்வளவு உதவியாகவும், ஆறுதலாகவும் இருந்த நந்தினியை, சூசைக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால்தான் இப்போது அவளை பார்த்ததும், புன்னகையுடன் அவளை நெருங்கினார். "உன்னைத்தான் பாப்பா தேடிட்டு இருந்தேன்.. ஒருவேளை டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டீங்களோன்னு நெனச்சேன்.." "இல்லங்க.. மூணு மணிக்குத்தான் டிஸ்சார்ஜ் னு சொல்லிருக்காங்க..!! அப்புறம்.. உங்க வொய்ஃப் இப்போ எப்படி இருக்காங்க..?" "நல்லா இருக்கா பாப்பா..!! காலைல அஞ்சு மணிக்கு சுகப்பிரசவம் ஆகிடுச்சு..!!" அவர் சந்தோஷமாக சொல்ல, அவருடைய சந்தோஷம் இப்போது நந்தினியையும் தொற்றிக் கொண்டது. "வாவ்.. என்ன கொழந்தை..?" "பொண்ணு..!!" சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. "ஹையோ.. அப்போ உங்க வொய்ஃபுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.." "ஆமாம் பாப்பா..!! அவ.. என் சம்சாரம்.. உன்னை பாக்கனும்னு ரொம்ப பிரியப்படுறா.." "அப்படியா..? கண்டிப்பா.. எனக்கும் குட்டிப்பொண்ணை பாக்கணும் போல இருக்கு.. வாங்க.." இருவரும் லேபர் வார்ட் நோக்கி நடந்தார்கள். அதிகாலையில் குழந்தை பிறந்த அந்த தருணங்கள் பற்றி சூசை மிகவும் சந்தோஷமாக சொல்லிக் கொண்டு வந்தார். நந்தினியும் கண்களில் ஆவல் மின்ன, அந்த தருணங்களை ஆர்வமாக கேட்டுக்கொண்டாள். அறைக்குள் அவர்கள் நுழைந்ததுமே "வாம்மா.. உள்ள வா.." என்று மரியம் புன்னகையுடன் வரவேற்றாள். "இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு..?" "இப்போ தேவலாம்மா.. பட்ட கஷ்டம் எல்லாம் இந்த பிஞ்சு முகத்தை பாத்ததும் பறந்து போச்சும்மா.." சொல்லிக்கொண்டே மரியம் கையில் இருந்த குழந்தையை நந்தினியிடம் தூக்கி கொடுக்க அவளும் கவனமாக வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, கை கால்களை மட்டும் ஆட்டிக்கொண்டு கிடக்கும் அந்த குழந்தையின் அழகை நந்தினி மிக ஆசையாக ரசித்தாள். பட்டு மாதிரி மிருதுவாக இருந்த அந்த பிஞ்சின் உள்ளங்கால்களுக்கு முத்தமிட்டாள். "நீங்க பேசிட்டு இருங்கம்மா.. நான் மருந்துக்கடை வரை போயிட்டு வர்றேன்.." சூசை சொல்லிவிட்டு திரும்பி அறைக்கதவை நோக்கி நடந்தார். அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மரியம், இப்போது மிக இரக்கமான குரலில் சொன்னாள். "பாவம்.. என் புருஷனைத்தான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.." "ஐயோ.. ஏன்மா அப்படி சொல்றீங்க.. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா அவர் எப்படி சும்மா இருக்க முடியும்..?" "ம்ம்.. ஆனா கொழந்தை பொறந்தது தெரிஞ்சதும் அவர் மொகத்துல சந்தோஷத்தை பாக்கணுமே..? பையன் வேணும் பையன் வேணும்னு சொல்லிட்டு கெடந்தார்.. இப்போ இந்த குட்டியை என் பொண்ணு என் பொண்ணுன்னு கொஞ்சுறாரு.." "ம்ம்ம்.." நந்தினி புன்னகைத்தாள். "ஆனா.. இந்தக்குட்டியும் அப்படியே அவ அப்பாவை உரிச்சு வச்ச மாதிரி பொறந்திருக்கு பாரேன்.." மரியம் முகத்தில் இப்போது அப்படி ஒரு பெருமிதம். "ம்ம்.. ஆமாம்.. கண்ணு, மூக்குலாம் அவர் மாதிரியேதான்.." நந்தினி சொல்லிக்கொண்டிருக்க,"உனக்கு எப்போமா கல்யாணம்..?" மரியம் திடீரென கேட்டாள். "பா..பாத்துட்டு இருக்காங்க.." "அப்படியா..?? அப்போ கூடிய சீக்கிரம் ஒரு கல்யாண சாப்பாடு இருக்கு..??" "ஆ..ஆமாம்.." "கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் கூப்பிடுவல..?" "கண்டிப்பா.." நந்தினி ஒருமாதிரி சுரத்தற்ற குரலில் சொன்னாள். "கவலைப்படாத தாயி.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்..!! என் புருஷன் மாதிரியே உனக்கும் ஒரு நல்ல புருஷன் அமைஞ்சு.. புள்ள குட்டின்னு நீ எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருப்ப..!!" மரியம் மலர்ந்த முகத்துடன் மனதார வாழ்த்த, நந்தினி ஒருமாதிரி விரக்தியாக சிரித்தாள். நந்தினி அறைக்கு திரும்பியதும், அசோக்குடனான சந்திப்பு பற்றி அவள் அம்மா கேட்டாள். 'சும்மா.. சாதாரணமாத்தான் பேசிட்டு இருந்தோம்..' என்று நந்தினி சமாளித்தாள். வேறு எதுவும் சொல்லவில்லை. அன்று பிற்பகல் அமுதாவுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவர்களை வீட்டில் கொண்டு விட காருடன் ராமண்ணா ஹாஸ்பிட்டலுக்கே வந்திருந்தார். நந்தினியும் அவள் அம்மாவும் காரின் பின்பக்கம் ஏறிக்கொண்டார்கள். முன்பக்கம் ஏறிக்கொண்ட வந்தனாவோ, வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், ராமண்ணாவிடம் பேச்சுக்கொடுத்தாள். "நீங்க.. அந்த கௌரம்மாவோட ஹஸ்பன்ட்தான..?" "ஆமாம்மா.." "உங்களுக்கு சொந்த ஊர் சென்னைதானா..?" "இல்லம்மா.. எங்களுக்கு ஆந்த்ரா.. சித்தூர் பக்கத்துல பலமனேர்..!!" "ஓ..!! எத்தனை வருஷமா அசோக் அத்தான்கிட்ட நீங்க வேலை பாக்குறீங்க..?" அதற்குள் வந்தனா அசோக்கை அத்தான் என்று உரிமையாக அழைத்தது நந்தினிக்கு சற்று ஆச்சரியத்தையும், சற்று எரிச்சலையும் வரவழைத்தது. அவள் பின்னால் இருந்து முறைத்தது வந்தனாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ராமண்ணா வந்தனாவின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார். "அசோக் தம்பிக்கு அஞ்சு வயசாறப்போல இருந்து ஐயா கூட இருக்கேன்மா.." "ஹையோ.. அப்போ இருபது வருஷத்துக்கு மேல இங்க வேலை பாக்குறீங்களா..?" "ஆமாம்மா.. இருபத்திரெண்டு வருஷமாச்சு..!! இந்த இருபத்திரெண்டு வருஷத்துல.. அவங்க அம்பாஸடர், காண்டஸா, ஆல்ட்டோ, இப்போ ஐ-டொன்ட்டின்னு நெறைய கார் மாத்திட்டாங்க.. ஆனா கார் ஓட்டுற ஆளு அதேதான்..!!" "ம்ம்ம்.. இப்படி இருபத்திரெண்டு வருஷமா.. இந்த வளையத்தை புடிச்சு இப்படியும் அப்படியும் ஆட்டிட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு போரடிக்கலையா..?" வந்தனா ஸ்டியரிங்கை கைகாட்டி சொல்ல, ராமண்ணா மெலிதாக சிரித்தார். "ஹாஹா.. போரடிக்கத்தான் செய்யுது.. என்ன பண்ணலாம்..?" "வேற எங்கயாவது போய்.. வேற ஏதாவது வேலை பாக்கலாம்ல..?" "உனக்கு போரடிச்சா.. உன் அம்மா, அக்காவை விட்டுட்டு வேற எங்கயாவது போயிடுவியாம்மா..?" "எ..என்ன சொல்றீங்க நீங்க..?" "இது என் குடும்பம்மா.. இதை விட்டுட்டு நான் எங்க போவேன்..?" "ம்ம்.. முதலாளிக்கு ரொம்ப விசுவாசமாத்தான் இருக்கீங்க.. உங்களை எனக்கு புடிச்சிருக்கு..!! அவங்களும் அந்த மாதிரி உங்ககிட்ட நடந்துக்கிட்டா சரிதான்..!!" "என்னம்மா இப்படி சொல்லிட்ட.. பெரிய ஐயாவும் சரி.. அசோக் தம்பியும் சரி.. என்னை ஒரு வேலைக்காரன் மாதிரி நடத்துறது இல்ல.. என்னையும் அவங்க குடும்பத்துல ஒருத்தராத்தான் நெனைப்பாங்க..!!" "நெஜமாவா..??" வந்தனாவின் குரலில் ஒருவித நம்பிக்கையின்மை. "ஆமாம்மா.. நான் சும்மா பேச்சுக்கு சொல்லலை..!! நான் ஒரு விஷயம் சொல்லட்டா..?" "என்ன..?" "உன் அப்பா இறந்த மூணாவது நாளு.. நானும் ஐயாவும் உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே..?" "ஆமாம்.." "உன் அக்காவை மருமகளா ஆக்கிக்கனும்னு ஐயா அன்னைக்குத்தான் முடிவு பண்ணுனாரு..!! 'இவதான் ராமு என் மருமக.. நீ என்ன நெனைக்கிற..?'ன்னு.. மொத மொதல்ல அந்த விஷயத்தை அவர் சொன்னதே என்கிட்டதான்..!! எந்த மொதலாளியாவது தன் குடும்ப விஷயம் பத்தி வேலைக்காரன்கிட்ட அபிப்ராயம் கேட்பாங்களா..?? இப்போ சொல்லு.. நான் சொன்னது சரிதான..?"ராமண்ணா சொன்ன விஷயம், வந்தனாவுக்கு மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்திருந்த நந்தினிக்கும், அமுதாவுக்குமே சற்று ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வந்தனா தனது ஆச்சரியத்தை சமாளித்துக்கொண்டு ராமண்ணாவிடம் கேட்டாள். "ம்ம்.. ஓகே.. பெரிய ஐயா பத்தி நீங்க சொன்னதை வேணா ஒத்துக்குறேன்.. உங்க சின்ன ஐயா எப்படி..??" வந்தனா கிண்டலாக கேட்க, ராமண்ணாவிடம் மீண்டும் ஒரு புன்முறுவல். "அந்த விஷயத்துல அசோக் தம்பியும் அப்பா மாதிரியேதான்.. என் மேல அசோக் தம்பிக்கும் ரொம்ப பிரியம்..!!" "இப்படி மொட்டையா சொன்னா..?? உங்க சின்ன ஐயா அப்படி என்ன பண்ணிருக்கார்னு.. சாம்பிளுக்கு ஒன்னு சொல்லுங்களேன்..?" "ம்ம்.. சரி.. சொல்றேன்..!! போன வருஷம் என் பொறந்த நாளுக்கு அசோக் தம்பி என்ன பண்ணுச்சு தெரியுமா..?" "என்ன பண்ணுனாரு..?" "அன்னைக்கு பூரா.. என்னை பின்னாடி மொதலாளி மாதிரி உக்கார வச்சுட்டு.. அசோக் தம்பியே எனக்கு காரோட்டுச்சு..!! 'இன்னைக்கு ஒருநாள்.. நான் உங்களுக்கு டிரைவரா இருக்கேன் ராமண்ணா'ன்னு..!! சின்ன ஐயா எப்படின்னு நீயே முடிவு பண்ணிக்கோ..!!" ராமண்ணா சொல்ல, வந்தனா வாய் பிளந்தாள். "வாவ்.. சூப்பர்..!! சும்மா சொல்லக்கூடாது.. அத்தான் கலக்கிட்டாரு..!!" "ஹாஹா.. இப்போ சொல்லு.. நான் இருபத்திரெண்டு வருஷமா.. இந்த வளையத்தை புடிச்சு இப்படியும் அப்படியும் ஆட்டிட்டு இருக்குறதுல என்ன தப்பு..??" "தப்பே இல்ல ஸார்..!! நான்தான் உங்க மொதலாளி, தொழிலாளி பாசப்பிணைப்பு தெரியாம தப்பு தப்பா கேள்வி கேட்டுட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க..!!" "ஹாஹாஹாஹாஹாஹா..!!" ராமண்ணா மனம்விட்டு சிரிக்க, நந்தினிக்கு இப்போது மனதுக்குள் அசோக் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. 'வேலைக்காரர்களிடமும், விலங்குகளிடமும் நடந்துகொள்ளும் முறையை வைத்தே ஒரு மனிதனின் குணத்தை எளிதில் கணிக்கலாம்' என்ற ஒரு பழமொழி அவளுக்கு ஏனோ திடீரென ஞாபகம் வந்தது. தான் நினைத்த அளவுக்கு அசோக் மோசமானவன் இல்லை என்று தோன்றியது. அதேபோல.. முதலாளி பற்றி பெருமையாக பேசுகிற ராமண்ணா மீதும் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. வீட்டை அடைந்ததும், 'ஒரு அஞ்சு நிமிஷத்துல ரெடி பண்ணிடுவேன்.. இருந்து சாப்பிட்டு போங்க..' என்று நந்தினி சொன்னதற்கு, 'இல்லம்மா.. வீட்டுல கௌரம்மா எனக்காக சாப்பிடாம காத்திருப்பா.. நான் போய் அவகூட சேர்ந்து சாப்பிட்டுக்குறேன்..' என்று இதமாக அவர் மறுத்தபோது, அந்த நல்ல அபிப்ராயம் இன்னும் அதிகமானது. வீட்டுக்குள் சென்றதும் அம்மாவை படுக்கையில் படுக்கவைத்து, 'நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடும்மா..' என்றவாறு நந்தினி போர்வை போர்த்தி விடும்போது, அவள் சொன்னாள். "மாப்பிள்ளை நல்ல மாதிரியான ஆளாத்தான் தெரியிறாரு நந்தினி.. நீ என்ன நெனைக்கிற..?" "ம்ம்.." "என்ன.. இந்த தேவையில்லாத பொண்ணுக சகவாசம்.. நீ நெனச்சா அதையும் மாத்திடலாம்னு எனக்கு தோணுது.." 'ம்க்கும்.. எங்கே மாற்றுவது..? அதைத்தான் மாற்றக்கூடாது என்று கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறானே..?' மனதுக்குள் சலிப்பாக சொல்லிக்கொண்ட நந்தினி, அம்மாவிடம் "ம்ம்.. மாத்திரலாம்மா.." என்றாள். "எல்லாம் உன் கைலதான் இருக்கு நந்தினி.." கவலையாக சொன்ன அம்மாவிற்கு இப்போது புன்னகையை பதிலாக அளித்தாள். "எல்லாம் நான் பாத்துக்குறேன்மா.. நீ நிம்மதியா தூங்கு..!!" போர்வை போர்த்திவிட்டாள். மின் விசிறியை சுழல செய்தாள். கதவை சத்தம் வராமல் சாத்தியவாறே அறையை விட்டு வெளியேறினாள். அடுத்த நாள் வீட்டுக்கதவு தட்டப்பட்டபோது நந்தினி மட்டும் வீட்டில் தனியாகத்தான் இருந்தாள். கதவை சென்று திறந்தவள் வெளியே நின்றுகொண்டிருந்த அந்த பனிரெண்டு, பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுமியை பார்த்து ஆச்சரியமானாள். 'யார் இவள்..??' நந்தினி அவளை திகைப்பாக பார்த்துக்கொண்டிருக்க அந்த சிறுமியோ, "நீங்கதான் நந்தினியா..?" என்று அதிகாரமாக கேட்டாள். "ஆமாம்.. நீ..?" "ம்ம்.. பரவால.. நான் நெனச்ச மாதிரி இல்லாட்டாலும்.. ஓரளவு அழகாத்தான் இருக்கீங்க.. " "எ..என்னது..??" நந்தினி முகம் சுளித்தவாறு கேட்க, "கொஞ்சம் வழி விடுங்க.." அவளை விலக்கிக்கொண்டு அந்த சிறுமி வீட்டுக்குள் புகுந்தாள். எதுவும் புரியாத நந்தினி 'ஹேய்.. யார் நீ..?' என்று கேட்டவாறு அவளை பின்தொடர்ந்தாள். உள்ளே நுழைந்த சிறுமி, தலையை திருப்பி திருப்பி வீட்டை நோட்டமிட்டாள். சற்றே எகத்தாளமான குரலில் சொன்னாள். "ம்ம்.. வீடு சின்னதா இருந்தாலும், நீட்டா க்ளீனா வச்சிருக்கீங்க.. வெரி குட்..!!" "ப்ச்.. யார் நீன்னு கேக்குறேன்ல..?" கேட்ட நந்தினியை மதியாமல் அவள் உள்ளறைக்குள் நுழைந்தாள். கிச்சனை எட்டிப் பார்த்தாள். "ம்ம்.. கிச்சன் கூட ரொம்ப சுத்தமா இருக்கு..!! சமைக்க தெரியுமா.. இல்ல அதுவும் சுத்தமா..??" அவள் கேள்வியில் இருந்த கிண்டல் நந்தினிக்கு சிரிப்பை வரவழைத்தது."அதுலாம் எல்லாம் நல்லா சமைப்பேன்.. மொதல்ல நீ யார்னு சொல்லு.." "சிக்கன் ஐட்டம்லாம் நல்லா பண்ணுவீங்களா..? அதுதான் ரொம்ப முக்கியம்..!!" "என்னை பத்தியேதான் கேட்பியா..? உன்னை பத்தி எதுவும் சொல்ல மாட்டியா..?" "என்ன தெரியனும் என்னை பத்தி..?" "மொதல்ல உன் பேரை சொல்லு.." நந்தினி கேட்டுக்கொண்டிருக்கும்போதே அந்த சிறுமி திடீரென கத்தினாள். "ஹை.. ஊஞ்சல்..!!" கத்திக்கொண்டே ஓடியவள், உத்தரத்திலிருந்து தொங்கிய ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டாள். கம்பியை பிடித்துக்கொண்டு காலை கீழே ஊன்றி உந்தித்தள்ளி, சர் சர்ரென ஊஞ்சலாட ஆரம்பித்தாள். 'ஹையா.. எத்தனை நாளாச்சு ஊஞ்சலாடி..' அவள் குதுகலிக்க, நந்தினிக்கு எதுவும் புரியவில்லை. 'யாரிவள்..? திடீரென வந்தாள்.. ஏதேதோ கேள்வி கேட்டாள்.. இப்போது நடுவீட்டில் ஹாயாக ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறாள் ..?' நந்தினிக்கு அந்த சிறுமியின் செய்கைகள் வேடிக்கையாகவும், ரசிக்க கூடியதாகவும் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் குரலில் இப்போது ஒரு போலிக்கோபத்தை கலந்துகொண்டு கேட்டாள். "ஹேய்.. உன் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற..? நான் கேக்குறதுலாம் உனக்கு காதுல விழலையா..?" "என்ன கேட்டீங்க..?" அந்த சிறுமி சொய்ங் சொய்ங் என்று இங்குமங்கும் ஆடிக்கொண்டே கேட்டாள். "உன் பேர் என்னன்னு கேட்டேன்.." "பேர் என்ன.. என்னை பத்தி எல்லாம் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வர்றீங்களா..? ப்ளீஸ்.. ரொம்ப டயர்டா இருக்கு..!!" "ஏய்.. என்ன திமிரா..? இப்போ நீ யார்னு சொல்ல போறியா இல்லையா..?" "அச்சச்சோ.. கோவமாயிட்டிங்களா..?? கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டனோ..?? சரி.. சொல்றேன்..!! என் பேர் தமிழரசி..!!" "ஓஹோ..? நல்ல பேர்தான்..!!" "தேங்க்ஸ்..!! ஆளானப்பட்ட தமிழுக்கே நீதான் அரசின்னு என் அப்பா அடிக்கடி சொல்லுவாரு.." "நைஸ்.. நல்ல அப்பா.." "தமிழுக்கு மட்டும் இல்ல.. இந்த தரணிக்கே நான்தான் அரசி..!! தெரியுமா..?" "ம்ம்.. இது யாரு சொன்னது.. உன் அம்மாவா..??" "இல்ல.. அசோக் அங்கிள்..!!" தமிழரசி கண்களில் மின்னல் மின்ன, கன்னத்தில் குழி விழ, பூரிப்பாக சொன்னாள். அசோக்குடைய பேர் காதில் விழுந்ததுமே என்னவென்று விளங்காத ஒரு உணர்ச்சி மனதுக்குள் ஓடுவதை நந்தினியால் தவிர்க்க முடியவில்லை. அவளுடைய முகமும் இப்போது மலர்ந்து போனது. ஊஞ்சலாடிக்கொண்டிருந்த தமிழரசியிடம், மெல்லிய குரலில் கேட்டாள். "அசோக்கா..? அவரை எப்படி உனக்கு தெரியும்..?" "எப்படியோ தெரியும்.. ஆனா எக்கச்சக்கமா தெரியும்.." அவர் உனக்கு என்ன வேணும்..?" "ஹீ இஸ் மை காட்ஃபாதர்..!!" "ஹாஹா.. காட்ஃபாதரா..?? எப்படி..??" "ரொம்ப ஈகரா இருக்கோ..? ஓகே.. எனக்கு காபி கெடைச்சா.. உங்களுக்கு காட்ஃபாதர் கதை கெடைக்கும்..!!" தமிழரசி சொல்லிவிட்டு கண்சிமிட்ட, நந்தினி புன்னகைத்தாள். எதுவும் பேசாமல் திரும்பி கிச்சனுக்கு நடந்தாள். இரண்டே நிமிடங்களில் இரண்டு கப்புகளில் ஆவி பறக்கும் காபியுடன் வந்தாள். ஒரு கப்பை தமிழரசியிடம் நீட்டினாள். ஊஞ்சலில் ஆடுவதை நிறுத்தியிருந்த தமிழரசி 'தேங்க்ஸ்..!!' என்றவாறு கப்பை வாங்கி உறிஞ்சினாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த அவளுக்கு எதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு நந்தினி அமர்ந்தாள். அவளும் காபியை ஒரு மிடறு விழுங்கிவிட்டு கேட்டாள்."ம்ம்.. சொல்லு.. அந்த காட்ஃபாதர் கதையை..!!" நந்தினி ஆர்வமாக கேட்க, தமிழரசி முகமெல்லாம் மலர்ச்சியும், குரலெல்லாம் உற்சாகமுமாக ஆரம்பித்தாள். "ம்ம்.. சொல்றேன்.. எனக்கு சொந்த ஊர் திருவாரூர் பக்கம்.. எங்க ஊர் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா..? என் அப்பாவும், அம்மாவும் கூட ரொம்ப அழகா இருப்பாங்க..!! ஆனா ஒருநாள்.. களையெடுக்க போறப்போ எங்க அம்மா கரண்ட் வேலில காலை வச்சுட்டாங்க.. காப்பாத்த போன அப்பாவையும் கரண்ட்டு புடிச்சுக்கிச்சு.. அவ்வளவுதான்.. அழகா இருந்தவங்க அப்படியே கருகி போயிட்டாங்க.. ஒரே நாள்ல ரெண்டு பேரும் என்னை தனியா விட்டுட்டு போயிட்டாங்க..!! எங்க மாமா ஒருத்தர் இங்க சென்னைல இருந்தாரு.. 'வாம்மா.. நான் உன்னை வளக்குறேன்'னு கூட்டிட்டு வந்தாரு.. ஆனா கூட்டிட்டு வந்த ரெண்டாவது நாளே என்னை ஒரு பொம்பளைட்ட வித்துட்டாரு..!! அந்த பொம்பளை ரொம்ப மோசம்.. அங்க தடி தடியா எருமை மாடு மாதிரி நெறைய ஆளுக வருவாங்க.. அவங்க கூட அசிங்க அசிங்கமா ஏதேதோ என்னை பண்ண சொல்லுவாங்க.. ஒரு வாரம் நான் அழுதுட்டேதான் இருந்தேன்.. உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கும்.. அப்போத்தான் அசோக் அங்கிள் அந்த வீட்டுக்கு வந்தாரா.. ...." தனது வாழ்வில் நடந்த சோகங்களையும், தான் அனுபவித்த வேதனைகளையும் சிரித்த முகத்துடன் தமிழரசி சொல்லிக்கொண்டே இருக்க, அதைக்கேட்ட நந்தினிக்கு மனதை பிசைந்தது. அவளையுமறியாமல் அவளுடைய இதயத்தில் ஈரமும், கண்களில் நீரும் கசிந்தன. 'இத்தனை நாளாய் என்னுடைய சோகத்தை பெரிதாக கருதினேனே.. இந்த சின்ன வயதில் எவ்வளவு கொடிய, கொடூரமான வலிகளை இந்தப்பெண் அனுபவித்திருக்கிறாள்..?' அப்புறம் அசோக் தன்னை மீட்டது.. தத்தடுத்துக் கொண்டது.. பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தது.. தன்னம்பிக்கை கற்றுக் கொடுத்தது.. எல்லாவற்றையும் தமிழரசி சொல்ல சொல்ல.. நந்தினியின் மனதுக்குள் அசோக் பற்றிய நன்மதிப்பு படிப்படியாய் மேலேருவதை உணர முடிந்தது. 'நல்லவன்தான்.. இரக்க குணம் இன்னும் மாறவில்லை அவனிடம்.. மனிதர்களை மதிக்க தெரிந்திருக்கிறது.. ஒரு அனாதை சிறுமிக்கு வாழ்க்கை தந்திருக்கிறான்.. அவள் மனதில் நம்பிக்கையை ஊட்டி புதுப்பெண்ணாக மாற்றியிருக்கிறான்..' நந்தினி அசோக் பற்றி அவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்க, தமிழரசி தன் கதையை சொல்லி முடித்தாள். "ஸோ.. அசோக் அங்கிள்தான் எனக்கு எல்லாமே..!! காட்.. ஃபாதர்.. காட்ஃபாதர்.. எல்லாமே எனக்கு அவர்தான்..!!" சொல்லிவிட்டு தமிழரசி சிரிக்க, "ம்ம்.. குட்.. வெரி குட்.." நந்தினி புன்னகைத்தாள். "என் பக்கத்துல வாங்களேன்.. உங்களுக்கு ஒன்னு சொல்றேன்.." "எ..என்ன..?" "வாங்க சொல்றேன்.." "என்னன்னு சொல்லு.." "உங்களைப்பத்தி ஒரு ரகசியம்.. இந்த ரகசியத்தை யாருமே உங்ககிட்ட இதுவரை சொல்லிருக்க மாட்டாங்க.." "ஹாஹா.. அப்படி என்ன ரகசியம்.. அதுவும் என்னைப் பத்தி..??" "காதை கொடுங்க.." நந்தினி தமிழரசியை நெருங்கி, தன் காதை அவள் பக்கமாக திருப்ப, தமிழரசி அவள் காதுக்குள் கிசிகிசுப்பான குரலில் சொன்னாள். "நீங்க ரொம்ப ரொம்ப லக்கி.. எங்க அசோக் அங்கிளை கட்டிக்க.. நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!" சொல்லிவிட்டு தமிழரசி கன்னத்தில் குழி விழ அழகாக சிரித்தாள். நந்தினி உதட்டில் ஒரு புன்னகையுடன் குழி விழுந்த அந்த கன்னங்கள் ரெண்டையும் பிடித்துக் கொண்டாள். தனது நெற்றியால் தமிழரசியின் நெற்றியில் இதமாக இடித்துக் கொண்டாள்.அடுத்த நாள் மஹாதேவன் நந்தினியை கைபேசியில் அழைத்தார். அசோக் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதை பூரிப்பாக சொன்னார். பதிலுக்கு 'நானும் நல்லா யோசிச்சுட்டேன் அங்கிள்.. எனக்கும் இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம்..!!' என்று நந்தினி சொன்னாள். இவர்களுக்கு இடையில் நடந்த இன்னர்-டீலிங் அறியாத மஹாதேவனோ இரண்டு மடங்கு சந்தோஷப்பட்டார். 'அப்போ நான் உன் அம்மாகிட்ட பேசுறேன்.. கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலை எல்லாம் உடனே ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..' என்றார் உற்சாகமாய். அடுத்த வாரமே நந்தினியின் வீட்டில் வைத்தே அசோக்கிற்கும், நந்தினிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு மாதம் கழித்து திருமணம் என நாளும் குறித்தார்கள். கடந்த ஓரிரு வாரங்களாக நடந்தவையெல்லாம் நந்தினிக்கு வியப்பாக இருந்தது. அப்பா இறந்த சோகத்தில் இருந்தவளுக்கு, திருமண வாய்ப்பு தேடி வந்தது. மஹாதேவனின் மகன் என்றதும் மகிழ்ந்தவள், அப்புறம் அந்த மகன் அசோக் என்று தெரிந்ததும் சற்றே அதிர்ந்து போனாள். அதுவும் அவனது தற்கால பழக்கங்கள் தெரிய வந்தபோது கலங்கிப்போனாள். திருமணத்தை தன்னால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், திருமணத்தின்பின் அசோக் எப்படியும் தன்னை பழிவாங்க போகிறான் என்றே எண்ணியிருந்தாள். ஆனால், தன் குடும்ப நன்மைக்காக அதை தாங்கிக்கொள்ளவே தயாராக இருந்தாள். அசோக்கிடம் பேசியபோது அவனுக்கு தன் மீது கோபம் எதுவும் இல்லை என்ற விஷயம் நிம்மதியாக இருந்தாலும், அவனது விவகாரமான நிபந்தனை மனதுக்குள் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. 'நல்ல கணவன் கிடைப்பான்.' என்று மரியம் மனதார வாழ்த்தியது, அப்போதைக்கு விரக்தியாக தோன்றினாலும் இப்போது ஒரு பாஸிட்டிவ் ஸைனாக தோன்றுகிறது. அடுத்தடுத்து.. ராமண்ணா மூலமாகவும், தமிழரசி மூலமாகவும் அசோக் பற்றி அறிந்து கொண்ட விஷயங்கள் அவனை பற்றிய நல்லெண்ணத்தை எங்கோ கொண்டு சென்று வைத்திருக்கின்றன. கூட்டி கழித்து பார்த்தால், பெண்கள் சகவாசத்தை தவிர அசோக்கிடம் வேறு எந்த குறையுமே இல்லை என்று புரிந்தது. அந்தக்குறை அவனுக்கு வருவதற்கும் தான்தான் காரணம் என்ற உண்மையும் உறைக்க, உறுத்தலாக இருந்தது. இந்த கடவுள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்..? எதிரே பார்த்திராத நேரத்தில் எதற்கும் எதற்குமோ முடிச்சு போடுகிறார்..? கடவுளின் திட்டங்களை சாதாரண மனிதர்கள் கணிப்பது அவ்வளவு எளிது இல்லையோ..? சில சமயம் யோசிக்கையில் கடவுள் எல்லாம் காரியத்துடன்தான் செய்கிறாரோ என்று கூட தோன்றியது. தனது திமிரால் தான் செய்த தவறுக்கு இப்போது தண்டனை தருகிறாரோ..? 'உன்னால் இப்படி ஆனவனை நீயே கட்டிக்கொண்டு மாரடி..' என்கிறாரோ..? எது எப்படியோ..? நான் அசோக்கை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன். என்னால் கெட்ட வழிக்கு சென்றவனை நானே நல்வழிக்கு திருப்ப முயற்சிக்க போகிறேன். முடியுமா என்னால்..?? அதிகாரம் செய்தெல்லாம் அவனை மாற்ற முடியாது.. அன்பு காட்டினால் மாறுவானா..?? மாறுவான் என்றுதான் தோன்றியது. உண்மையான அன்பை புரிந்து கொள்ள முடியாத அரக்கன் அல்ல அசோக் என்று தோன்றியது. அசோக்கின் புகைப்படத்தை எடுத்து காதலாக பார்த்தபோது, இவன் கையால் தாலி கட்டிக்கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா என்று தோன்றியது. திருமண வேலைகள் எல்லாம் தீவிரமடைந்தன. மஹாதேவன் இருபது வயது இளமை ஆகிவிட்டவர் போல, பம்பரமாய் சுழன்றார். மண்டபம் முன்பதிவு செய்வது.. அழைப்பிதழ் அச்சடிப்பது.. உறவினர்களுக்கு சொல்வது.. நந்தினிக்கு நகைகள் வாங்குவது.. என எந்த நேரமும் ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார். ராமண்ணாவும், கௌரம்மாவும் மஹாதேவனுக்கு இடதுகரம், வலதுகரம் போலிருந்து.. எல்லா வேலைகளிலும் உதவியாய் இருந்தார்கள்.

அசோக் எதைப்பற்றிய கவலையுமின்றி எப்போதும் போல் சுற்றிக்கொண்டிருந்தான். அன்று பேசிய பிறகு அவன் நந்தினியிடமும் கூட பேசவே இல்லை. நிச்சயதார்த்தத்துக்கு கூட அவன் வரவில்லை. நந்தினியின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருந்தபோது, அவன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உச்சபட்ச போதையில் உறங்கிக்கொண்டிருந்தான். அவனுடைய இச்சை தீர்த்த விலைமாது ஒருத்தி, கச்சையற்ற மார்புடன் அவன் முதுகில் கவிழ்ந்திருந்தாள்.அசோக்கிற்கு நிச்சயமான நாளில் இருந்தே, நான்கு நாட்களாக நாயர் அவனை தொடர்பு கொள்ளவில்லை. பொறுத்து பார்த்த அசோக் ஐந்தாம் நாள் அவனே நாயருக்கு கால் செய்து பேசினான். நாயர் மறு முனையில் சோகமான குரலில் கேட்டார். "உனக்கு கல்யாணமாமே..?" "ஆமாம்.. அதுக்கு ஏன் நீ அழுகுற..?" "எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி அசோக் மனசு வந்தது..?" "யோவ்.. நிறுத்துயா.. நீ ஏதோ கன்னிப்பொண்ணு மாதிரியும்.. நான் ஏதோ உன்னை காதலிச்ச மாதிரியும்.. கற்பழிச்சுட்டு இப்போ ஏமாத்திட்ட மாதிரியும்ல சொல்ற.." "வெளையாடாத அசோக்.." "அப்புறம்.. துரோகம் பண்ணிட்டேன்னா என்ன அர்த்தம்..?" "பின்ன என்ன..? உன்னை நம்பித்தான நான் இருந்தேன்..? நீ இருக்கேன்ற தைரியத்துல நான் என்னோட எல்லா கஸ்டமர்களையும் இழந்தாச்சு.. எனக்கு இப்போ இருக்குற ஒரே கஸ்டமர் நீதான்.. நீயும் இப்படி கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா.. நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன்..? நான் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கணும் போல இருக்கு..!!" "ஹாஹா..!! கல்யாணம்தான பண்ணிக்க போறேன்.. கஸ்டமரா இருக்க மாட்டேன்னா சொன்னேன்..?" "அ..அசோக்.. எ..என்ன சொல்ற நீ..?" நாயர் நம்பமுடியாமல் கேட்டார். "ஆமாம் நாயர்.. நான் எப்போவும் அதே அசோக்தான்.. நீயும் எப்போவும் போல எனக்கு தேவைப்படுவ.. உன் கமிஷனும் எப்போவும் போல உனக்கு வந்துக்கிட்டே இருக்கும்.." "நெ..நெஜமாத்தான் சொல்றியா..?" "நெஜந்தான் நாயர்.." "அப்போ உன் சம்சாரம்..?" "அவ இதுல தலையிட மாட்டா.. டாடியோட இம்சை தாங்காமத்தான் அவ கழுத்துல தாலி கட்டப் போறேன்.. மத்தபடி எப்போவும் போல லைஃபை என்ஜாய் பண்ணப்போறேன்..!!" "ஹையோ.. நீ சொல்றதெல்லாம் கேக்குறப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா..?" "எப்படி இருக்கு..?" "உன்னை அப்படியே கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு.." "ஹாஹா.. அந்த முத்தம் கொடுக்குற வேலைக்கு வேற ஏதாவது பொண்ணை கூட்டிட்டு வந்தா.. நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்..!!" "வேணுமா..?" நாயர் உடனே குரலை தாழ்த்திக்கொண்டு ஆர்வமாக கேட்டார். "ஆமாம் நாயர்.. நாலஞ்சு நாளாச்சு.. எவளையாவது கூட்டிட்டு வந்தா தேவலை.." "புதுசா ஒன்னு வந்திருக்கு.. கன்னடத்து பைங்கிளி.. கைபடாத ரோஜா.. வேணுமா..?" "ஹாஹா.. கேட்டுட்டு இருக்குற.. கூட்டிட்டு வா நாயர்..!!" அசோக் சொன்ன விஷயத்தை கேட்டு நாயருக்கு முத்தம் கொடுக்கவேண்டும் என தோன்றியது என்றால், அதே விஷயத்தை அறிந்த கற்பகத்துக்கோ வேறு ஒன்று தோன்றியது. கல்யாணம் பற்றி அசோக் சொல்வதற்கு முன்பே அவள் ராமண்ணா மூலம் அறிந்திருந்தாள். அடுத்த நாள் ஆபீசுக்கு அசோக் வந்ததுமே நக்கலாக கேட்டாள். "என்னடா.. திருந்திட்ட போல இருக்கு..?" "திருந்திட்டனா.. என்ன சொல்ற..?" "கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியாம் ..?" "ஆமாம் கற்பு..!! சும்மா எல்லாரும் 'கல்யாணம் பண்ணிக்கோ.. கல்யாணம் பண்ணிக்கோ..'ன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருந்தாங்க.. எத்தனை நாள்தான் நானும் அந்த டார்ச்சரை தாங்குறது..? அதான்.. 'ஒரு கல்யாணம் என்ன.. எத்தனை கல்யாணம் வேணா பண்ணி வைங்க.. பண்ணிக்குறேன்..'னு சொல்லிட்டேன்..!!" அசோக் கிண்டலாக சொல்ல, கற்பகம் சிரித்தாள். "ஹாஹா.. கொழுப்புடா உனக்கு..!! அப்படிலாம் வேற ஐயாவுக்கு ஆசை இருக்குதா..?? உனக்குலாம் ஒரு கல்யாணம் நடக்குறதே பெருசு..!! உன்னை மாதிரி தறுதலையை கல்யாணம் பண்ணிக்கவும் ஒருத்தி தலையாட்டிருக்கா பாரு.. பாவம்டா அந்த அப்பாவிப்பொண்ணு..!!" "யாரு.. அவ அப்பாவியா..?? அவளைப்பத்தி உனக்கு என்ன தெரியும்.. அவ ஒரு கேடி, கேப்மாறி..!! தெரியுமா உனக்கு..??" "என்னடா சொல்ற.. முன்னாடியே உனக்கு அந்தப்பொண்ணை பத்தி தெரியுமா..?""தெரியாம என்ன..? நாலு வருஷம் ஒரே காலேஜ்லதான் படிச்சோம்.. நல்லாவே தெரியும்..!!" "ஓஹோ..?? அப்படியா சேதி..?? அப்போ.. இது லவ் மேரேஜா..??" "எனக்கு அவ மேல லவ் இருந்தது உண்மைதான்.. ஆனா இது லவ் மேரேஜ்லாம் இல்ல..!!" "என்னடா குழப்புற..?" "அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது கற்பு விடு..!!" "ஹ்ஹ்ம்ம்.. எது எப்படியோ.. அந்தப் பொண்ணு வர்ற நேரமாவது.. நீ உன் கெட்ட சகவாசம்லாம் விட்டுட்டு ஒழுக்கமா இருந்தா.. சந்தோஷந்தான்..!!" "ஹாஹா.. இந்த அசோக்கை பத்தி இவ்வளவு சீப்பா எடை போட்டுட்டியே கற்பு..? எவளோ ஒருத்தி கழுத்துல தாலியை கட்டிட்டு.. எல்லா சந்தோஷத்தையும் விட்டுட்டு இருக்குறதுக்கு நான் என்ன கேனையனா..?" எகத்தாளமாக அசோக் சொன்னதை கேட்க, கற்பகத்துக்கு நிஜமாவாகவே அதிர்ச்சியாக இருந்தது. "எ..என்னடா சொல்ற..?" "ஆமாம் கற்பு.. ஊருக்காகவும், என் டாடிக்காகவும்தான் இந்தக்கல்யாணம்.. மத்தபடி எங்கிட்ட எந்த மாற்றமும் இருக்காது..!!" "ஏய் லூசு.. இத்தனை நாள் நீ பண்ணுனதுலாம் கூட ஏதோ பரவால.. ஒருவகைல ஒத்துக்கலாம்.. ஆனா.. இனிமேலும் அப்டிலாம் பண்ணிட்டு இருந்தா.. அது ஒரு பொண்ணுக்கு நீ பண்ணுற பாவம்டா..!!" "பாவமும் இல்ல.. கூவமும் இல்ல.. எல்லாம் அவகிட்ட சொல்லியாச்சு.. அவளுக்கும் இதுல ஓகேதான்..!!" அசோக் சொல்ல, கற்பு மலைத்து போனாள். விழிகளை விரித்து அதிர்ந்தாள். "அடப்பாவி..!!!!" "என்னாச்சு.. அப்படியே டொய்ங்னு முழிக்கிற..?" அசோக் அப்படி நக்கலாக கேட்டதும், கற்பகத்துக்கு சுறுசுறுவென கோபம் வந்தது. "உனக்குலாம்.." "ம்ம்ம்.." "கல்யாணம் பண்றதுக்கு பதிலா.. வேற ஏதாவது பண்ணிருக்கணும்.. அப்போத்தான் நீலாம் அடங்குவ..!!" "வேற ஏதாவதுனா..?" "பொம்பளையா பொறந்துட்டனேன்னு பாக்குறேன்.. இல்லனா அசிங்கமா சொல்லிருப்பேன்..!!" அசோக் அதெயெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கூலாக சிரித்தான். திருமண நாளும் வந்தது. திருவான்மியூரிலேயே ஒரு பெரிய திருமண மண்டபத்தில் அசோக்கிற்கும், நந்தினிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. நந்தினியின் உறவினர்கள் என்று அதிகம் பேர் திருமணத்திற்கு வரவில்லை. அசோக்கின் பக்கமிருந்து உறவினர்கள், நண்பர்கள், தொழில் ரீதியாக அறிமுகமானவர்கள் என நிறைய பேர் வந்திருந்தனர். எல்லோர் முன்னிலையிலும் அசோக் நந்தினியின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான். அவளுடன் மாலை மாற்றிக் கொண்டான். 'இன்று வாழ்க்கை துணைவியாக கரம்பிடிக்கும் இவளுடன்.. இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்டு.. ஒழுக்கத்தில் தவறாது.. உண்மையான அன்புடன்.. இறுதிவரை இவளுக்கொரு நல்ல வாழ்க்கைத்துணைவனாக இருப்பேன்..' என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள சொன்னபோது, உதடசைத்தான்.அன்று இரவு.. அவர்களுக்கு முதலிரவு.. அமுதாவும், இன்னும் சில உறவினர் பெண்களும் நந்தினியை அலங்கரித்து முடித்திருந்தனர். உடலில் ஓரிரு நகைகளை தவிர மீதி நகைகளை அவளிடம் இருந்து அகற்றியிருந்தார்கள். காலையில் இருந்து கட்டியிருந்த பட்டுப்புடவையை விடுத்து, இப்போது ஒரு மெல்லிய புடவை ஒன்றை அணிந்திருந்தாள். அதிகமும் இல்லாமல், குறைவும் இல்லாமல், அளவாய் மேக்கப் போட்டு விட்டிருந்தார்கள். தலை நிறைய சரம் சரமாய் மல்லிகைப்பூ..!! தலை குனிந்த தங்கச்சிலையாய் காட்சியளித்தாள் நந்தினி..!! கௌரம்மா ஒரு சொம்பில் பால் கொண்டு வந்து நீட்டினாள். நந்தினியின் அழகை பார்த்து வாயெல்லாம் பல்லாக பூரித்தாள். அவளுடைய அழகு முகத்தை ஆசையாக தடவி நெட்டி முறித்தாள். 'அசோக் தம்பி அப்போருந்து காத்துட்டு இருக்கு.. சீக்கிரம் அனுப்பி வைங்கம்மா..' கௌரம்மா சொல்லிவிட்டு நகர்ந்தாள். அவள் சென்றபிறகு அமுதா கிசுகிசுப்பான குரலில் மகளுக்கு கடைசி கட்ட அறிவுரைகளை வழங்கினாள். அவள் சொன்னதெற்கெல்லாம் நந்தினி 'ம்ம்.. சரிம்மா.. ம்ம்.. சரிம்மா.. ' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். கையில் பால்சொம்புடன் முதலிரவு அறையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள் நந்தினி. கதவை நெருங்கியவள் சற்றே தயங்கி, தூரத்தில் நின்ற அம்மாவை பார்த்தாள். 'ம்ம்.. உள்ள போ..' என்று அமுதா சைகை செய்ய, நந்தினி கண்களை மூடி ஒருகணம் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள். கதவை மெல்ல தள்ளி, உள்ளே நுழைந்தாள்.உள்ளே நுழைந்த நந்தினி சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானாள். மெத்தையில் அசோக் அசந்து போய் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த கோட் சூட் எல்லாம் காணாமல் போய், இப்போது ஷார்ட்ஸ் பனியனில் இருந்தான். இமைகள் விழிகளை மூடியிருக்க.. வாய் சற்று 'ஓ'வென திறந்திருக்க.. மார்பு சீராக மேலும் கீழும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. திரைப்படங்களில் வரும் முதலிரவு அறை போலவே அந்த அறையும் அலங்கரிங்கப் பட்டிருந்தது. பழங்கள், இனிப்புகள், நறுமணம் பரப்பும் ஊதுவத்திகள், கட்டிலில் தொங்கும் மலர் மாலைகள், மெத்தையில் தூவப்பட்டிருந்த மலர் இதழ்கள்.. அதன் மீது மல்லாந்திருந்த அசோக்..!! நந்தினி அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. 'இப்படி அசந்து தூங்குகிறானே.. இப்போது என்ன செய்வது..?' குழம்பினாள். கையிலிருந்த பால் சொம்பை பார்த்தாள். 'இதுல பாதியை அவர் குடிச்சதும், மீதியை நீ வாங்கி குடி..' இவ்வளவு பாலையும் இப்போது நான் மட்டும்தான் குடிக்க வேண்டுமா..?? எரிச்சலாக வந்தது. எழுப்பி பார்க்கலாமா..?? அசோக்கை எழுப்புவதற்காக அவன் முகத்துக்கு அருகே குனிந்தவள், உடனே முகத்தை சுளித்தாள். அவனிடம் இருந்து குப்பென்று ஆல்கஹால் ஸ்மெல்..!! உடனே மூக்கை பொத்திக் கொண்டாள். குடித்துவிட்டுத்தான் இப்படி மட்டையாகி கிடக்கிறானா..?? கையிலிருந்த பால் சொம்பை பழத்தட்டுக்கு அருகே வைத்தாள். மெத்தையின் ஓரத்தில் பொத்தென்று அமர்ந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல், பேந்த பேந்த விழித்துக்கொண்டு, அறையை சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். 'போனதும் அவர் காலை தொட்டு கும்பிட்டுக்கோ.. தாலியை கண்ணுல தொட்டு ஒத்திக்கோ..' அம்மா சொன்னது ஞாபகம் வர மெத்தையில் இருந்து எழுந்தாள். தூங்கிக்கொண்டிருந்த அசோக்கின் கால்களை தொட்டு வணங்கிக் கொண்டாள். ப்ளவுசுக்குள் சிக்கியிருந்த தாலியை வெளியே எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் கொஞ்ச நேரம் கட்டில் மூலையில் தேமே என்று அமர்ந்திருந்தாள். அப்புறம் விளக்கை அணைத்துவிட்டு.. அசோக்கிற்கு அருகே.. அவனுக்கு முதுகு காட்டி.. ஒருக்களித்து படுத்துக் கொண்டாள். ஒரு இரண்டு நிமிடங்கள் இருக்கும். அப்போதுதான் அது நடந்தது. ஏதேதோ எண்ணத்தில் மூழ்கியிருந்த நந்தினி உடனே பக்கென்று அதிர்ந்து போனாள். அதிர்ச்சியில் அவளுடைய விழிகள் அகலமாய் விரிந்து கொண்டன. அவளுடைய அதிர்ச்சிக்கு காரணம், அசோக்குடைய இடது கை அவளுடைய இடுப்பு சதைகளை பற்றியதுதான்..!! பற்றியது மட்டும் இல்லாமல் பட்டுப்போன்ற மென்மையான அந்த சதைகளை அழுத்தி பிசைந்தன அசோக் அவனது இடது காலை நந்தினி மேல் தூக்கி போட அவனுக்குள் சிக்கி நசுங்குவது மாதிரி அவளுக்கொரு உணர்வு. நந்தினியின் இடுப்புக்கு கீழான பின்புறத்தை, அசோக்கின் இடுப்புக்கு கீழான முன்புறம் அழுத்தமாக உரசியது. அவனது முகம் நந்தினியின் பின்னங்கழுத்தில் புதைந்திருக்க, அவன் விட்ட அனல்மூச்சு முன்புறமாய் வந்து அவளுடைய மார்புகளை சுட, நந்தினிக்கு இப்போது கிறக்கமாக இருந்தது. "எ..என்னங்க.." உதறலான குரலில் அழைத்தாள். "ம்ம்ம்.." அசோக் முனகினான். "வே..வேணாம்.." "ம்ஹூம்.." என்றவன் அவளை இப்போது இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனுடைய கைகள் இப்போது நந்தினியின் மார்புகளை தடவ, அவளுக்கு எதுவும் புரியவில்லை. 'இவன் ஏன் இப்படி செய்கிறான்..? ஒரு மனைவியாக எதுவும் என்னிடம் எதிர்பார்க்க மாட்டேன் என்றானே..? இப்படி முதல் நாள் அன்றே பாய்கிறான்..? இப்போது நான் என்ன செய்வது..? இவனை அனுமதிப்பதா.. இல்லை தள்ளி விடுவதா..?’ 'தள்ளி விடவா..? முடியுமா என்னால்..? இவன் அணைப்பது ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..? இவனுடைய ஸ்பரிசம் ஏன் எனக்கு சுகமாயிருக்கிறது..? இப்படியே.. இந்த அணைப்பிலேயே கிடந்தது விடலாமா என ஏன் எனக்கு தோன்றுகிறது..? இது சரியா.. இல்லை.. தவறா..?? இதில் என்ன தவறு இருக்கிறது..? இவன் என் கணவன்.. என் கழுத்தில் மாங்கல்யம் சூட்டியவன்.. என் உடலை தொட இவனுக்கு இல்லாத உரிமையா.. இவனுடன் உறவுற எனக்குத்தான் இல்லாத உரிமையா..?' அசோக்கின் கைகள் நந்தினியின் உடலில் ஆங்காங்கே நகர்ந்து அவளை சித்திரவதை செய்ய, அவளால் அதற்கு மேலும் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. மெல்ல அசோக்கின் பக்கமாக புரண்டு படுத்தாள். அவனை அணைத்துக் கொள்ள ஆசையாக தன் கைகளை நகர்த்தினாள். அப்போதுதான் அசோக் அவளுடைய மார்புகளில் முகத்தை வைத்து தேய்த்துக்கொண்டே சொன்னான். இல்லை இல்லை.. உளறினான்..!! "மா..மாலினி.. மா..மாலினி.." அவ்வளவுதான்..!! நந்தினிக்கு ஒருகணம் இதயமே நின்றுவிடும் போலிருந்தது. அசோக்கை அணைக்க நகர்ந்த அவளுடைய கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றன. காதில் விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியாதவளாய், அசோக்கின் முகத்தையே வெறித்து பார்த்தாள். இப்போது அவளுக்கு எல்லாம் புரிந்தது. 'இத்தனை நேரம் இவன் என்னை எண்ணி தன்னை அணைக்கவில்லை.. இவனுடன் உறவு கொண்ட இன்னொரு பெண்ணை எண்ணி அணைத்திருக்கிறான்.. குடி போதையில் அந்தப்பெண் என்று கருதி என் மீது படர்ந்திருக்கிறான்.. இப்போது அந்த பெண்ணின் பெயரை உளறுகிறான்..' தாம்பத்ய பந்தத்தின் முதல் நாள் இரவு.. தாலி கட்டியவனின் முதன் முதல் தொடுகை.. ஆனால் அவனுடைய உதடுகள் உச்சரிப்பது என்னவோ இன்னொரு பெண்ணின் பெயரை..!! என்ன கொடுமை இது என்று நந்தினிக்கு நெஞ்சு குமுறியது. நெஞ்சில் இருந்து கிளம்பிய துக்கம் தொண்டையை அடைக்க, அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது.

தன் இடுப்பு மீது படர்ந்திருந்த அசோக்கின் கையை வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுத்தாள். கோபத்துடன் அவனுடைய கையை அந்தப்புறமாக வீசி எறிந்தாள். கை வீசி எறியப்பட்ட வேகத்தில் அசோக் அப்படியே புரண்டான். குப்புற கவிழ்ந்து கொண்டவன், 'ம்ம்ம்.. ம்ம்ம்..' என்று போதையில் முனகினான். நந்தினி படக்கென்று எழுந்து படுக்கையில் அமர்ந்து கொண்டாள். உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக்கொண்டும், பொங்கி வந்த அழுகையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. 'இவனுடனான என் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை..!!' முதல் நாள் இரவே அந்த உண்மை நந்தினிக்கு பளிச்சென்று உறைக்க, துடித்து போனாள். வெளியே சத்தம் வராமல் வாயைப் பொத்திக்கொண்டு, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

No comments:

Post a Comment