Friday 20 September 2013

அன்புள்ள ராட்சசி 2


அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!! கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள்.
"என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??" "ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!" "நல்லா தூக்கமா..??" "செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!" அசோக் அன்பு வழிகிற புன்னகையுடன் சொல்ல, பாரதி பதிலேதும் சொல்லாமல் தன் மகனையே அமைதியாக பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித பெருமிதம் மிகுந்திருந்தது. பிறகு ஸ்டவ் மீதிருந்த பாத்திரத்தை கைப்பிடி பற்றி தூக்கி, தயாராக எடுத்து வைத்திருந்த கப் ஒன்றில் பாலை ஊற்றினாள். அசோக் இப்போது சற்றே நகர்ந்து சென்று, தன் அம்மாவை பின்புறமாக இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவளுடைய தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து அவன் தேய்க்க, "ஹ்ம்ம்.. என்ன.. இன்னைக்கு அம்மா மேல ஒருத்தனுக்கு பாசம் பொங்கி வழியுது..??" பாரதி திரும்பி பாராமல் கப்புக்குள் ஸ்பூன் விட்டு கலக்கிக்கொண்டே கேட்டாள். "தேங்க்ஸ் மம்மி..!!" அசோக் சம்பந்தமே இல்லாமல் சொன்னான். "தேங்க்ஸா.. எதுக்கு..??" "இல்ல.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசுல ஒரு கொழப்பம்.. எந்த நேரமும் போட்டு இம்சை பண்ணிட்டே இருந்தது..!! நேத்து உன்கிட்ட பேசினப்புறம் அந்த கொழப்பம்லாம் போய்.. மைன்ட் இப்போ ஃப்ரெஷ் ஆயிடுச்சு..!!" "ம்ம்.. அப்படி என்ன கொழப்பம் உனக்கு..??" "எப்படி சொல்றது.. ஹ்ம்ம்.... பொண்ணுகளை பத்தி.. அவங்கட்ட பேசுறதை பத்தி.. லவ்வை பத்தி.. அதுக்கான குவாலிஃபிகேஷன் பத்தி..!!" அசோக் சொல்ல, பாரதி இப்போது திரும்பினாள். அசோக்கை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். மகனுடைய கண்களையே சில வினாடிகள் உன்னிப்பாய் கவனித்து, ஏதோ உண்மையை அறிய முயன்றாள். அப்புறம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், இதழில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள். "ஹ்ம்ம்.. எப்படியோ.. மனசு இப்போ தெளிவாயிடுச்சில..??" "ம்ம்.. ஆயிடுச்சு..!!" "அப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ல.. 'இவதான் மம்மி உன் மருமக..'ன்னு எவளையாவது இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்துவேன்னு எதிர்பார்க்கலாமா.??" பாரதி குறும்பாக கேட்க, "ஹாஹா..!! அந்த அளவுக்குலாம் இப்போ என்னால அஷ்யூரன்ஸ் குடுக்க முடியாது மம்மி.. வேணுன்னா ஒன்னு மட்டும் சொல்லலாம்..!!" அசோக் சிரிப்புடன் சொன்னான். "என்ன..??" "இப்போதைக்கு உன் புள்ள செம லவ் மூடுல இருக்கான்.. எவளாவது சிக்குனான்னு வச்சுக்கோ.. பட்டுன்னு 'ஐ லவ் யூ..' சொல்லிருவான்..!! ஹ்ம்ம்.. எவளுக்கு லக் அடிக்கப் போவுதோ..??" அசோக் காலரை தூக்கிவிட்டவாறு எகத்தாளமாக சொல்ல, பாரதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "ஹாஹாஹாஹா..!! பின்ன என்ன.. என் புள்ளை புருஷனா கெடைக்கிறதுக்கு.. பூர்வ ஜென்மத்துல நெறைய புண்ணியம்ல பண்ணிருக்கனும் அவ..!!" "ஹ்ம்ம்.. எங்க இருக்காளோ, என்ன பண்ணிட்டு இருக்காளோ.. அந்த புண்ணியவதி..!!" அசோக் ஒரு பெருமூச்சுடன் சொன்னான். "அட.. ஏண்டா சலிச்சுக்குற..?? உனக்கு வரப்போறவ என்ன இனிமேலா பொறக்கப்போறா..?? அல்ரெடி எங்கயோ பொறந்திருப்பா.. அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..!! இனிமேயாவது உன் கண்ணை நல்லா தெறந்து.. கொஞ்சம் சுத்திமுத்தி பாரு..!!" அசோக்கின் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகியவாறே சொன்ன பாரதி.. பிறகு அந்தப்பக்கமாய் திரும்பி.. சற்றுமுன் பால் ஊற்றி கலக்கிய அந்த கப்பை எடுத்து.. இப்போது அசோக்கிடம் நீட்டினாள்..!! "இந்தா.." "என்ன.. கண்ணை தெறந்து பாருன்னுட்டு காபியை நீட்டுற..??" "இது காபி இல்லடா.. பூஸ்ட்..!!" "எதோ ஒன்னு.. எனக்கு வேணாம்..!!" "இது உனக்கு இல்ல.. உன் தங்கச்சிக்கு...!! கொண்டு போய் கொடு போ..!!" பாரதி சொல்ல, அசோக் இப்போது சற்றே நெற்றியை சுருக்கினான்."அவளுக்கா..?? அதுக்குள்ளயா எந்திரிச்சுட்டா அவ..??" "ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சுட்டா..!!" அசோக்கிற்கு இப்போது நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே.. எக்ஸாம் டயத்தில் கூட.. எட்டு மணிவரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு.. சொங்கி மாதிரி தூங்குவாள் சங்கி..!! இன்று ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள் என்றால்.. 'சங்கீதாவின் வாழ்க்கையிலேயே முதன் முறையாக..' என்று சன் டிவியில் விளம்பரம் போட்டால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது..!! "எ..என்ன மம்மி சொல்ற..?? ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சாளா..?? அப்படி என்ன வேலை பாக்குறா எந்திரிச்சு..??" "ம்ம்...??? எல்லாம் நீ குடுத்த வேலைதான்..!! போ.. நீயே போய் அவ அட்டூழியத்தை பாரு..!!" அசோக் குழப்பம் இன்னும் விலகாமலே, அம்மாவிடம் இருந்து காபி கப்பை வாங்கிக்கொண்டான். தங்கையின் அறை நோக்கி மெல்ல நடந்தான். பாரதி அசோக்கிடம் அந்த வேலையை ஏவியதற்கு மறைமுகமாக ஒரு காரணம் கூட உண்டு. பிள்ளைகள் இருவரும் நேற்று உரசி மனக்காயப்பட்டுக் கொண்டார்கள் அல்லவா..?? இன்று அவர்கள் இருவரையும் அருகில் இழுத்து வைத்து, அவர்களை கைகுலுக்கிக்கொள்ள வைப்பது மாதிரியான முயற்சி அது..!! 'அப்படி என்ன வேலை..??' என்று கேள்வியுடனே தங்கையின் அறைக்குள் நுழைந்த அசோக்கிற்கு, பால்கனியில் இருந்து ஹை பிட்ச்சில் ஒலித்த சங்கீதாவின் சத்தம், அவன் காதில் விழுந்த அடுத்த நொடியே எல்லாம் புரிந்து போனது. "வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..???? நான் சொல்றதை கேளு..!!! ப்ச்.. இப்போ கேக்கப் போறியா இல்லையா நீ..????" காதில் ப்ளூடூத் ஹெட்போனுடன் காளி மாதிரி கத்திக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவள் அப்படி கத்தியதும், அடுத்த முனை பட்டென ஆஃப் ஆகியிருக்க வேண்டும். இந்த முனையில் இவள் வாயைத் திறந்து படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வெடுக் வெடுக்கென நடந்தவாறே, வெடித்து சிதறினாள். "அப்போ இத்தனை நாளா எங்கிட்ட நடிச்சுட்டு இருந்திருக்க.. என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க.. அப்படித்தான..?? லவ் பண்றதுக்கு முன்னாடிலாம்.. என் பின்னாடி அப்படியே நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைவல.. அப்போ மட்டும் என் வாய்ஸ் லவ்லி வாய்ஸா இருந்தது... இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நரி வாய்ஸ் ஆயிடுச்சா..?? கேக்குறேன்ல.. பதில் சொல்லு..!! ஹலோ... இருக்குறியா..?? பேசுடா..!!!! வாயில என்ன வச்சிருக்குற..???" சங்கீதா கிஷோரை பேச சொல்லி கத்தினாள். ஆனால் அப்படி கத்தி முடித்த அடுத்த நொடியே 'வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..??' என்று மறுபடியும் எரிந்து விழுந்தாள். 'என்னாடி உங்க லாஜிக்கு..??' என்று கேட்கத் தோன்றியது அசோக்குக்கு..!! ஆனால் ருத்ர வடிவாய் நின்றிருந்த தங்கையை பார்த்ததும், எதுவும் கேட்காமல் வாயை அழுத்தி மூடிக் கொண்டான். 'இப்படி காதலனை திட்டுவதற்காகத்தான்.. காலங்காத்தாலேயே அலாரம் செட் பண்ணி எழுந்தாளா..?? கத்தி கத்தி மகள் களைப்பாகியிருப்பாள் என்று, இந்த அம்மா வேறு பூஸ்ட் கலக்கி அனுப்புகிறாள்..?? ஹ்ம்ம்.. கவலைக்கிடம்தான் என் நண்பனின் நிலைமை..!!' அசோக்குக்கு கிஷோரை நினைக்கையில் பாவமாக இருந்தது. 'கொஞ்சம் ஓவராத்தான் அவனை பழி வாங்கிட்டமோ..??' என்று தோன்றியது. அப்புறம், 'அவன் மட்டும் அங்க நடக்குறதை இங்க உளறலாமா..?? நல்லா வாங்கட்டும்.. அப்போத்தான் அறிவு வரும்..!!' என்று மனதை சமாதானம் செய்து கொண்டான். கொஞ்ச நேரம் அமைதியாகவே நின்றிருந்தான். அப்புறம் கத்திக்கொண்டிருந்த சங்கீதாவே இவனை கவனித்தும் விட்டாள். ஃபோனில் பேசுவதை நிறுத்தாமல், அந்த ஆத்திரம் கொப்பளிக்கும் முகத்துடனே அண்ணணிடம் திரும்பி, 'என்ன..??' என்று சைகையால் கேட்டாள். 'பூஸ்ட்..!!' அசோக்கும் கிசுகிசுப்பான குரலில் சொன்னான். சங்கீதா பூஸ்ட் கப்பை கையில் வாங்கிக் கொண்டாள். சத்தமே வராமல் உதட்டை மட்டும் அசைத்து 'தேங்க்ஸ்..' என்றாள். கப்பில் வாய் வைத்து கொஞ்சமாய் உறிஞ்சிக் கொண்டாள். 'யாரு.. கிஷோரா..??' அசோக் தெரியாதவன் மாதிரி கேட்டான். 'ம்ம்..' சங்கீதா தலையசைத்தாள். 'நான் அவன்ட்ட கொஞ்சம் பேசணும்..!!' அசோக் சைகையாலேயே சொல்ல, சங்கீதா ஓரிரு வினாடிகள் யோசித்தாள். பிறகு காதிலிருந்த ஹெட்போனை கழற்றி அண்ணனிடம் நீட்டினாள். அசோக் அதை வாங்கி தனது காதில் பொருத்திக்கொண்டு, "ஹலோ..!!" என்று சொல்வதற்கும், அடுத்த முனையில் "உன் கால்ல வேணாலும் விழறேன்.. ப்ளீஸ்...!!" என்று கிஷோர் பரிதாபமாக கெஞ்சுவதற்கும் சரியாக இருந்தது. "ஹிஹி.. என்ன மச்சி இது..?? என் கால்ல போய் விழுறேன்ற.. அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்ட நீ..??" அசோக் கிண்டலாக கேட்டான். உடனே "ஓ..!! நீயா..???? சொல்லு..!!!" அடுத்த முனையில் கிஷோரின் வாய்ஸ் உடனடியாய் முருக்கேறுவதை அசோக்கால் உணர முடிந்தது. 'பையன் என் மேல செம கடுப்புல இருக்கானோ..?' என்று ஒரு எண்ணம் ஓடியது. இருந்தாலும் அதெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல், கேஷுவலாகவே பேசினான். சங்கீதா பூஸ்ட் உறிஞ்சிக்கொண்டே, ஒரு கையை இடுப்பில் ஊன்றியவாறு, இவர்கள் பேசுவதை முறைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். "ஹேய்.. இன்னைக்கு காலைல மோகன்ராஜ் வர சொல்லிருந்தார்டா.. ஏதோ புது ப்ராஜக்ட் போல.. டிஸ்கஷன் கூப்பிட்ருந்தாரு..!! ஒன்பது மணிக்குலாம் வந்திருங்கன்னு சொன்னாரு.. போயிட்டு வந்துடு.. சரியா..??" "ஓ.. இதை சொல்றதுக்குத்தான் இப்போ அவகிட்ட ஃபோன் வாங்கினியா..??" "ம்ம்.. ஆமாம்..!! ஒருவேளை நீ மறந்திருப்பியோன்னு நெனச்சேன்.. அதான் ஞாபகப் படுத்தலாம்னு..!! சரி.. நீ போயிட்டு அப்படியே ஆபீஸ் வந்துடு.. அப்புறமா பேசிக்கலாம்..!!" "இ..இல்ல மச்சி.. என்னால போக முடியாதுன்னு நெனைக்கிறேன்..!! எனக்கு பதிலா நீ போயிட்டு வந்துடுறியா..??" "ஏ..ஏண்டா.. என்னாச்சு..??" "இல்லடா.. காலைலேயே ஒரு அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க் ஆகிப்போச்சு.. எல்லாம் ஒரு பரதேசி பன்னாடை நாயால வந்தது..!! எப்படியும் நான் இன்னும் ஒரு டூ ஹவர்ஸ்க்காவது ரொம்ப பிஸியா இருப்பேன்னு நெனைக்கிறேன் மச்சி..!! ஸோ.. நீயே போயிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!" "ஓ.. அப்டியா..!!! ம்ம்ம்ம்.. ஓகேடா.. நான் பாத்துக்குறேன்.. விடு..!! ம்ம்.. ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு.. அன்-எக்ஸ்பெக்டட் பர்சனல் வொர்க்கு உனக்கு..??" அசோக் அப்பாவியாக கேட்க, "ஏன்..??? உனக்கு தெரியாதா..???" அடுத்த முனையில் கிஷோர் பற்களை கடித்தவாறு கடுப்புடன் திருப்பி கேட்டான். அசோக் உடனே புரிந்து கொண்டான். "ஓ.. புரியுது புரியுது..!! ஓகே மச்சி.. நீங்க ஏதோ இன்ட்ரஸ்டிங் டிஸ்கஷன்ல இருந்தீங்கன்னு நெனைக்கிறேன்.. நான் நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. ஸாரி..!! ஓகே.. நீங்க கண்டின்யூ பண்ணுங்க.. நான் அவகிட்ட குடுக்குறேன்..!!" அசோக் ஹெட்ஃபோன் எடுத்து தங்கையிடம் நீட்டினான். இப்போது அவள் அதை வாங்கி தன் காதோடு பொருத்திக் கொண்டாள். அசோக் அங்கிருந்து நகர முயல, அவனுக்கு பின்னாலிருந்து 'டேய்..!!' என்று சங்கீதாவின் குரல் ஒருவித எரிச்சலுடன் ஒலித்தது. முதலில் கிஷோரைத்தான் அவள் அவ்வாறு அழைக்கிறாள் என்று அசோக் நினைத்தான். அப்புறம், சங்கீதா அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றி நகரவிடாமல் நிறுத்தியிருப்பதை உணர்ந்ததும், தன்னைத்தான் அழைக்கிறாள் என்று புரிந்துகொண்டான். தன் கையைப் பற்றியிருந்த தங்கையின் கையை ஒருமுறை பார்த்தான். அப்புறம் சற்றே குழப்பமாய் அவளுடைய முகத்தை ஏறிட்டான். "என்ன..??" என்பது போல பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்ததும், இப்போது சங்கீதா தனது முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொண்டாள். சற்றே வீறாப்பான, விறைப்பான குரலில் சொன்னாள். "ஸாரி..!!" இப்போது அசோக்குக்கு மனதில் சில்லென்று ஒரு உணர்வு. அந்தப்பக்கமாய் திரும்பி நிற்கிற தங்கையையே அன்புடனும், உதட்டில் ஒரு புன்னகையுடனும் பார்த்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளாகவே சங்கீதாவிடம் கிஷோர் ஃபோனில் ஏதோ கேட்டிருப்பான் போலிருக்கிறது. அசோக்கின் கையை பிடித்த பிடியை விடாமலே, சங்கீதா ஹெட்ஃபோனில் கத்த ஆரம்பித்தாள். "என்னது பரவால சங்கிம்மாவா..?? அப்படியே செவுளை சேர்த்து விட்டேன்னா..!! உன்கிட்ட போய் ஸாரி கேக்குறதுக்கு எனக்கு என்ன லூஸா பிடிச்சிருக்கு..?? நான் இங்க என் அண்ணன்ட்ட ஸாரி கேட்டேன்..!! உன்னை..????? நீ கொஞ்சம் வெயிட் பண்ணு.. நான் இங்க பேசிட்டு வரேன்..!! லைன்லேயே இரு.. கட் பண்ணிடாத.. புரியுதா..????" கத்திமுடித்தவள், காதில் இருந்து ஹெட்போனை படக்கென்று கழற்றினாள். அப்புறமும் ஒருமாதிரி ரெஸ்ட்லசாய் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்தாள். பிறகு அசோக் பக்கமாய் திரும்பி பட்டென மீண்டும் சொன்னாள். "ஸாரிடா..!!" "எதுக்கு ஸாரி..??""நே..நேத்து.. கோ..கோவத்துல.. நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்..!! என்னதான் இருந்தாலும் நான் அப்படி பேசிருக்க கூடாது.. நான் பேசினது தப்புன்னு லேட்டாத்தான் எனக்கு புரிஞ்சது..!! ஸோ.. ஸாரி.. மன்னிச்சுடு..!!" தன் முகத்தையே ஏறிடாமல், தலையை அப்படியும் இப்படியுமாய் சிலுப்பிக்கொண்டு, குரலில் மட்டும் குற்ற உணர்ச்சியுடன், தங்கை தன்னிடம் மன்னிப்பு கேட்டவிதம், அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது. உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தான். அப்புறம் சற்றே குறும்பான குரலில் சொன்னான். "பரவால போ.. மன்னிச்சுட்டேன்..!!" அசோக் அவ்வாறு ஏளனமாக சொன்னவிதம், சங்கீதாவுக்கு சற்று எரிச்சலை கிளப்பியிருக்க வேண்டும். "ஆனா ஒன்னு மவனே.. தங்கச்சி ஸாரி கேட்டுட்டா.. நமக்கு பணிஞ்சு போயிட்டா.. இனி நம்ம வழிக்கே வரமாட்டா... அப்படிலாம் தப்பு கணக்கு போட்டுடாத..!!" "ஓஹோ..!! சரி சரி... நீயும் அப்படிலாம் எதும் தப்பா நெனச்சுடாத சங்கு.. அண்ணன்ட்ட ஸாரி கேட்டாச்சு.. அவன் அப்படியே உருகிப் போயிட்டான்.. இனிமே நம்மள வம்பிழுக்கவே மாட்டான்..!! அப்படிலாம் மனசுல ஏதாவது நெனைப்பு இருந்தா.. இப்போவே அதை அணுகுண்டு போட்டு அழிச்சிடு..!!" அசோக் பதிலுக்கு பதில் பேசவும், சங்கீதா அவனையே சில வினாடிகள் உர்ரென்று முறைத்துப் பார்த்தாள். அப்புறம் முகத்தை அசிங்கமாக சுளித்தவாறு, "ஏ ச்சே.. போடா..!!" என்று அவனை பிடித்து தள்ளி விட்டாள். "அடச்சீய்.. போடீ..!!" அசோக்கும் பதிலுக்கு கத்திவிட்டு, அறை வாசலை நோக்கி நடந்தான். அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததுமே, சங்கீதா ஹெட்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டு, பாதியில் விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள். "டேய்...!! இருக்கியா..?? ம்ம்ம்... என்னது என்னது...??? ஏய்.. இரு இரு இரு.. நீ மொதல்ல இருந்து வா.. ப்ச்.. மொதல்ல இருந்து வா..!! நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொல்றதுக்கு முன்னாடி.. நீ என் பின்னாடி நாய் மாதிரி நாக்கை தொங்கப்போட்டுட்டு திரிஞ்சியா இல்லையா..?? அதுக்கு மொதல்ல ஆன்சர் சொல்லு இப்போ.. கமான்.. பேசு..!!" அசோக் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். வெளியே வந்ததுமே 'யப்பாஆஆ..' என்று தலையை ஒருமுறை உலுக்கிக்கொண்டான். தங்கை கிஷோரை பின்னி பெடலெடுப்பாள் என்று அவனுக்கு முன்பே தெரியும். ஆனால் எந்த அளவிற்கு என்பதை இன்றுதான் கண்கூடாக காண்கிறான். தனக்கென்று ஒரு பெண் தேர்ந்தெடுக்கும்போது, தங்கை மாதிரி ஒரு ராட்சஸியிடம் மட்டும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். சங்கீதாவின் அறையில் இருந்து ஹாலுக்கு வரும் வழியில்தான் தாத்தா பாட்டியின் அறையும் இருக்கிறது. அவர்கள் அறையை அசோக் கடக்கும்போது, உள்ளே இருந்து பாட்டியின் சத்தம் பெரிதாக ஒலிக்க, அசோக் அப்படியே ப்ரேக் போட்டான். பாட்டி என்ன சொல்லுகிறாள் என்று காதை கூர்மையாக்கி கேட்டான். "வாக்கிங் போனா நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதான..?? வர்ற வழில அங்க நின்னுக்கிட்டு.. அவ கூட என்ன பல்லை காட்டிக்கிட்டு பேச்சு வேண்டி கெடக்கு..??" பாட்டி இந்த வயதிலும் தன் பொசஸிவ் புத்தியால் தாத்தாவை போட்டு படுத்திக்கொண்டிருந்தாள். "போனவாரம் அவகிட்ட பல்லுவலின்னு சொல்லிருந்தேண்டி.. இப்போ எப்படி இருக்குன்னு கேட்டா.. அதான் பல்லை காட்டினேன்..!!" தாத்தாவும் பாட்டிக்கு பணிந்து போய்த்தான் பேசிக்கொண்டிருந்தார். "ம்க்கும்.. இப்படி பதிலுக்கு பதிலு பேசிட்டே இருங்க.. அப்புறம் இருக்குற நாலு பல்லையும் உடைச்சு போட்டுட வேண்டியதுதான்..!! பல்லும் இருக்காது.. வலியும் இருக்காது..!!" "ஐயே.. இப்போ என்னாயிடுச்சுன்னு இப்படி கத்துற கோமளா..??" "இங்க பாருங்க.. எனக்கு அதுலாம் தெரியாது.. இனிமே நீங்க வாக்கிங் போறதா இருந்தா இங்க வீட்டுக்குள்ளயே போங்க.. சொல்லிப்புட்டேன் ஆமாம்..!!" பாட்டி முடிவாக சொல்லிவிட்டு, மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். பார்த்துக்கொண்டிருந்த அசோக் 'ஹ்ம்ம்.. எத்தனை வயதானாலும் பெண்கள் பெண்கள்தான்..!!' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். வாசலுக்கருகே நின்றிருந்த அசோக்கை பாட்டி கவனித்துவிட்டாள். "என்னடா..??" என்று எரிச்சலாகவே கேட்டாள். ஒட்டுக்கேட்டதை பாட்டி பார்த்துவிட்டாள் என்று அசோக் முதலில் சற்று தடுமாறினான். அப்புறம் அந்த தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டு, குரலில் ஒரு கேலியையும் கலந்துகொண்டு, அவர்களுடைய அறைக்குள் தலையை மட்டும் நீட்டியவாறு கேட்டான். "ஏன் பாட்டி.. தாத்தா இத்தனை நாள் பல்லை கடிச்சுட்டு ஓட்டிட்டாரு.. இனிமேலா பல்லுவலின்னு ஓடிடப் போறாரு..??" அசோக்கின் கேள்வியில் இருந்த குதர்க்கம் பாட்டிக்கு புரியவில்லை. "என்னடா சொல்ற.. மண்டு..??" என்று முகத்தை குழப்பமாய் சுருக்கினாள். "புரியலையா..?? சரி விடு..!! தாத்தா உன்மேல உயிரையே வச்சிருக்காரு பாட்டி.. தேவை இல்லாம அவரைப்போட்டு இப்படி டார்ச்சர் பண்ணாத..!!""அடப்போடா.. என் புருஷனை பத்தி எனக்கே சொல்ல வந்துட்டான்..?? எல்லாம் எனக்கு தெரியும்.. நீ உன் வேலையை பாத்துட்டு போ..!!" பாட்டி முகத்தை வெட்டியவாறு சொன்னாள். அசோக் சலிப்பாய் தலையசைத்துக் கொண்டான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்.. தனக்குரியவனை தானும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.. தன்னைமாதிரி அவனை புரிந்து கொள்ள வேறு ஆளே இல்லை என்று அடமும் பிடிப்பார்கள்..!!' எப்படியோ போங்க என்று மனதுக்குள் முனுமுனுத்தவாறே அசோக் டைனிங் ரூமுக்கு வந்தான். அங்கே அவனுடைய அப்பா அமர்ந்திருந்த நிலையை பார்த்து சற்றே துணுக்குற்றான். கன்னத்தில் கைவைத்து.. கவலையே உருவாக.. தட்டில் கிடந்த தோசையை உண்ணக்கூட மனம் இல்லாமல்.. உறைந்து போய் அமர்ந்திருந்தார் மணிபாரதி..!! 'என்னாயிற்று இந்த அப்பாவிற்கு..?? இப்படி இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்..?? அம்மா எதுவும் அவரை திட்டிவிட்டாளா..?? இன்று என்ன.. பெண்கள் ஆண்களை வறுத்தெடுக்கிற தினமா..??' "டாடிக்கு என்னாச்சு மம்மி.. நீ ஏதும் திட்டிப்புட்டியா..??" அசோக் கிச்சன் பக்கமாக திரும்பி அம்மாவிடம் கேட்டான். "அட.. நான்லாம் ஒன்னும் அவரை திட்டலை..!!" "அப்புறம்..??" "அவரோட அர்ர்ருமை ரசிகர்ட்ட இருந்து லெட்டர் வந்திருக்கு.. அதை படிச்சதுல இருந்து இப்படி ஊமை மாதிரி உக்காந்திருக்காரு..!!" "யாரு.. அந்த ஸ்ரீனியா..??" "ம்ம்.. ஆமாம்..!!" "மறுபடியும் இவரை திட்டி லெட்டர் போட்டிருக்கானா..??" "ஆமாண்டா..!!" பாரதி கடுப்புடன் சொல்லிவிட்டு கல்லில் தோசை மாவை ஊற்றி விரவி விட, அசோக் 'ஹ்ம்ம்ம்..' என்று பெருமூச்சு விட்டவாறே தன் அப்பாவிடம் சென்றான். "என்ன டாடி.. ரொம்ப திட்டிட்டானா...??" "ஆமாண்டா.. கன்னாபின்னான்னு திட்டுறான்.. கண்கொண்டு பாக்க முடியலை அந்த லெட்டரை..!! டாடி இத்தனை வருஷமா கதை எழுதிருக்கேன்டா அசோக்.. இந்த அளவுக்கு எவனும் என்னை கேவலமா திட்டுனது இல்ல..!!" மணிபாரதி மிகவும் சோகமாக சொன்னார். "ஹ்ம்ம்.. அவனுக்கு என்னதான் பிரச்னையாம்..??" "என்னத்த சொல்றது.. நான் இனிமே லவ் ஸ்டோரியே எழுதக் கூடாதாம்.. எழுதுன வரை போதுமாம்..!! இனிமேயும் எழுதினா.. பப்ளிக் ந்யூஸன்ஸ்னு என் மேல பொதுநல வழக்கு போடப்போறதா மிரட்டுறான்..!! நான் கதை எழுதுற பேனாவை.. கூவத்துல தூக்கி கடாச சொல்றான்.!!" "இதுலாம் ரொம்ப ஓவர் டாடி.. உங்க ஸ்டோரி பிடிக்கலைன்னா படிக்காம விட வேண்டியதுதான.. ஏன் இப்படிலாம் பண்றான்..?? நீங்களும் பதிலுக்கு அவனை தாறுமாறா திட்டி ஒரு லெட்டர் போடுங்க..!!" "இல்ல அசோக்.. அவனை அப்படி திட்டுறதுக்கு எனக்கு மனசு வரலை..!!" "ஏன்..??" "ஒருகாலத்துல இந்த ஸ்ரீனி என்னை எப்படிலாம் பாராட்டுவான் தெரியுமா..?? என்னை தெய்வம்னுவான்.. என்னை மாதிரி எழுத ஆளே இல்லைன்னு சொல்வான்..!!" "ஓ.. அப்புறம் ஏன் இப்போ இப்படி திட்டுறான்..??" "ஹ்ம்ம்... அப்போ லவ் பண்ணிட்டு இருந்தான்.. பாராட்டுனான்..!! இப்போ லவ் ஃபெயிலியர் ஆகிப்போச்சு.. திட்டுறான்..!!" "இது என்ன டாடி அநியாயமா இருக்கு..?? அவனுக்கு லவ் ஃபெயிலியர் ஆனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க..?? விட்டா.. படிக்கிறவங்க வீட்டுல பவர் ஃபெயிலியர் ஆனா கூட உங்களை திட்ட ஆரம்பிச்சுடுவாங்க போல..??" அசோக் கிண்டலாக கேட்க மணிபாரதி மகனை ஏறிட்டு முறைத்தார். "ஏன்டா உனக்கு இப்படி ஒரு கெட்ட எண்ணம்..??" "என்னாச்சு டாடி..??" "பின்ன.. ஒருத்தன் திட்டுறதையே தாங்க முடியல.. பவர் ஃபெயிலியர்குலாம் திட்ட ஆரம்பிச்சா.. மொத்த தமிழ்நாடேல என் மொகத்துல காறி துப்பும்..!!"ஹாஹா..!! ஹ்ம்ம்.. என்னவோ போங்க..!! எனக்கு டைம் ஆச்சு.. உங்க தோசையை நான் எடுத்துக்குறேன்.. நீங்க அப்புறமா சாப்பிட்டுக்கங்க..!!" அப்பா முன்பிருந்த ப்ளேட்டை இப்போது அசோக் எடுத்துக் கொண்டான். அப்படியே நின்றவாறே சாப்பிட ஆரம்பித்தான். தோசையை விண்டு சட்னியில் நனைத்து தொண்டைக்குள் போட்டான். ஆவி பறக்கிற தோசையை தாங்கிய கரண்டியுடன், டைனிங் ரூமுக்குள் நுழைந்த பாரதி, மகன் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்ததும் பட்டென்று முகம் மாறினாள். அவனுடைய தலையில் நறுக்கென்று குட்டியாவாறே சொன்னாள். "அறிவு கெட்டவனே..!!" "ஆஆஆஆ..!! இன்னைக்கு என்னாச்சு.. யாராவது யாரையாவது திட்டிட்டே இருக்கீங்க..?? நீ எதுக்கு இப்போ என்னை திட்டுற..??" அசோக் தலையை தேய்த்தவாறே அம்மாவிடம் திரும்பி கேட்டான். "எத்தனை தடவை சொல்றது.. குளிச்சுட்டுத்தான் சாப்பிடனும்னு..!!" "ஐயோ.. குளிச்சுட்டேன் மம்மி..!!" "குளிச்சுட்டியா..?? பொய் சொல்லாத.. பாத்தா அப்படி தெரியல..!!" பாரதி குழப்பமாய் அசோக்கையே மேலும் கீழும் பார்த்தாள். "ஆமாம்.. உனக்கு ஒன்னும் தெரியாது..!! தோசையை குடு.. போய் இன்னும் ரெண்டு போட்டு எடுத்துட்டு வா.. போ..!!" எரிச்சலாக சொன்ன அசோக் தோசையைப் பறித்து தன் தட்டில் போட்டுக் கொண்டான். பாரதி தயங்கி தயங்கியே கிச்சனை நோக்கி நகர்ந்தாள். கிச்சன் வாசலுக்கு சென்றவள், மீண்டும் திரும்பி அசோக்கை ஒரு நம்பிக்கையில்லா பார்வை பார்க்க, அவன் இப்போது வாயில் தோசையுடன் பரிதாபமாக கத்தினான். "ஹையோ... நம்பு மம்மி..!! குளிச்சுட்டேன்..!!"சாப்பிட்டு முடித்து அசோக் வீட்டை விட்டு கிளம்பினான். தனது பைக்கில் பாலாஜி அட்வர்டைசிங்கை அவன் அடைந்த போது மணி 8.50..!! அவனை ஒன்பது மணிக்கு வர சொன்ன மோகன்ராஜ் பத்து மணிக்குத்தான் ஆபீஸ் வந்தார். பத்தரை மணிக்கு டிஸ்கஷன் ஆரம்பமானது. குளிரூட்டப்பட்ட அறையில்.. மோகன்ராஜும்.. அவருடைய அடிபொடிகள் ஐந்து பேரும்.. பிறகு அசோக்கும்..!! அரைமணி நேரம் கூட நீடிக்கவில்லை அந்த டிஸ்கஷன்..!! வழக்கம் போல.. மோகன்ராஜ் தனது எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும்.. மிகுந்த ஈடுபாட்டுடன் அப்படியே உருகி உருகி.. அசோக்கிடம் எடுத்து கூறினார்..!! அசுவாரசியமாய் அனைத்தையும் கேட்டு முடித்த அசோக், 'கேனத்தனமா இருக்கு ஸார்..!!'என்று கேஷுவலாக கூறினான்..!! கடுப்பான மோகன்ராஜும் 'கெட் அவுட்..' என்று தொண்டை கிழிய கத்தினார்..!! அசோக்கும் 'ஹேரே போச்சு.. போ..' என்று எழுந்து அறையை விட்டு வெளியேறினான்..!! அசோக் ஆபீஸை அடைந்தபோது மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. அவர்களுடைய அசிஸ்டன்ட்கள் இருவரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்து, ஹெட்ஃபோன்கள் அணிந்த காதுகளுடன், சிஸ்டத்தில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். அசோக் அவர்களை கடந்து ஆபீஸ் ரூமுக்குள் புகுந்தான். உள்ளே கிஷோர், வேணு, சாலமன்.. மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்..!! ஏதோ ஃபைனான்ஸ் கம்பனியில் பணத்தைப் போட்டவர்கள் மாதிரி.. கவலை படர்ந்த முகத்துடன் குத்தவைத்திருந்தனர்..!! அசோக்கிற்கு முதலில் எதுவும் புரியவில்லை. மூன்று பேர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். அப்புறம் அவனும் ஒரு சேரில் அமர்ந்து, லேப்டாப் திறந்து மெயில் பாக்ஸ் ஓப்பன் செய்து பார்த்தான். அவன் சென்று சிறிது நேரம் ஆகியும் யாரும் அவனுடன் பேசாமல் போக, அசோக்கே இப்போது அந்த அமைதியை கலைத்தான். வேணுவை சைகையால் காட்டி சாலமனிடம் கேட்டான். "என்னடா ஆச்சு.. ஏன் இவன் சோகமா இருக்கான்..??" "அவன் ஆளு அவனை திட்டிடுச்சாம்..!!" சாலமன் சோகமான முகத்துடனே பதில் சொன்னான். "ஏன்..??" "அவ மூணாவது அண்ணனோட மூத்த பொண்ணுக்கு.. இன்னைக்கு மூக்கு குத்துற பங்க்ஷனாம்..!! காலைலேயே இவன் கால் பண்ணி விஷ் பண்ணலைன்னு கடுப்பு..!! கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டா..!!" "ஓஹோ..!! சரி.. நீ ஏன் சோகமா இருக்குற..??" அசோக்கின் கேள்விக்கு இப்போது வேணு பதில் சொன்னான். "அவனுக்கும் அவன் ஆளுக்கும் சண்டை..!!" "அதுக்குள்ளயா..?? நேத்து நைட்தான ஒண்ணா சேர்ந்தாங்க..??" "ஆமாம்.. காலைலேயே புட்டுக்கிச்சு..!!" "ஏன்.. என்னாச்சு..??" "அவ ஏதோ புது ஸாரி கட்டிட்டு வந்திருப்பா போல இருக்கு.. இவன் கவனிச்சு பாத்துட்டு நல்லாருக்கு சொல்வான்னு எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பா போல..!!" "இவன் நல்லாருக்குன்னு சொல்லலையா..??" அசோக் வேணுவை கேட்க, "இல்ல மச்சி.. சொன்னேன்..!!" சாலமன் இடையில் புகுந்து பாவமாக சொன்னான். "அப்புறம் என்ன..??" "இவன் நல்லாருக்குன்னு சொன்னது ஸாரியை இல்ல.. சாப்பிட்டுக்கிட்டு இருந்த பூரியை..!! அவ குருமாவை எடுத்து இவன் தலைல கொட்டிட்டு கெளம்பிட்டா..!!" வேணு சீரியஸாக சொல்ல, அசோக்குக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை."ஹாஹாஹாஹா..!! ஹையோ ஹையோ..!! ஹ்ம்ம்.... உங்களைப் பாத்தா காமடியாத்தாண்டா இருக்கு.. சொன்னா எவனாவது கேக்குறீங்களா..?? அப்படி எதுக்கு மானங்கெட்டு லவ் பண்ணனும்.. அப்புறம் இப்படி மனசு உடைஞ்சு உக்காந்திருக்கணும்..?? ம்ம்..??" சிரிப்புடன் சொன்னவன் பிறகு கிஷோரின் பக்கமாய் திரும்பி, "ஹ்ம்ம்.. நீ ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி உக்காந்திருக்க..??" என்று கேஷுவலாக கேட்டான். ஏற்கனவே அசோக்கை முறைத்துக் கொண்டிருந்த கிஷோர் இப்போது இன்னும் அதிகமாக முறைத்தான். "ஏன்..?? உனக்கு தெரியாதா..??" என்று இறுகிப்போன குரலில் கேட்டான். கிஷோர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய செல்போன் கிணுகிணுத்தது. உடனே பதறிப்போய் அந்த செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், 'ஹையோ.. கடவுளே..!!' என்று தலையை பிடித்துக் கொண்டான். அழுவது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, கால் பிக்கப் செய்து காதில் வைத்தான். "ஹலோ.. சொல்லும்மா..!!" என்றான் பம்மிக்கொண்டு. ".............................." "ஐயோ.. என்ன சங்கிம்மா நீ..?? இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..??" ".............................." "இல்லம்மா.. இல்லம்மா..!! சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்ல..!!" ".............................." "ஹையோ.. எத்தனை தடவை சொல்றது..?? அந்த வார்த்தையை நான் யூஸ் பண்ணவே இல்ல.. உன் அண்ணன்தான் எக்கச்சக்கமா எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்லிருக்கான்..!! என்னை நம்பு சங்கிம்மா.. ப்ளீஸ்..!!" அடுத்த முனையில் சங்கீதா அதன்பிறகும் அவனை விடவில்லை போலிருக்கிறது. வார்த்தைகளை தாளித்து அவன் மீது கொட்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். கிஷோர் அவஸ்தையாய் நெளிந்தவாறே, நண்பர்களின் முகத்தை மாறி மாறி பார்த்தான். அப்புறம் ஏதோ திடீர் யோசனை தோன்றியவனாய், செல்போனை காதில் இருந்து சற்று தள்ளிப் பிடித்துக் கொண்டான். "ஹலோ.. ஹலோ.." என்று போலியாக கத்தினான். ".............................." "சங்கிம்மா.. நான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்மா.. இங்க சிக்னல் சரியா கெடைக்கல.. நான் அப்புறமா பேசவா..??" என்று சொல்லிவிட்டு பட்டென காலை கட் செய்தான். செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல், நெட்வொர்க் கனெக்டிவிட்டி மட்டும் இல்லாமல் போகுமாறு, செட்டிங் மாத்தினான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, 'யப்பாஆஆ...!!' என்று சலிப்பும், நிம்மதியுமாய் பெருமூச்சு விட்டான். தலையை இப்படியும் அப்படியுமாய் பரபரவென உலுக்கிக் கொண்டான். சாலமனை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னான். "காலைல ஆறு மணில இருந்துடா மச்சி.. நான் ஸ்டாப்பா ஓடிட்டு இருக்கு இந்த நான்சன்ஸ்..!! ஒரு மனுஷன் எவ்வளவுதான்டா தாங்குறது..?? ச்ச...!!! ஒரே வெறுப்பா இருக்குடா..!! எல்லாம் இந்தப் பன்னாடையால..." என்று அசோக்கை கை நீட்டி அவன் வெறுப்பாக கத்திக் கொண்டிருக்கும்போதே, டேபிள் மீதிருந்த டெலிபோன் இப்போது 'கிர்ர்ர்ர்.. கிர்ர்ர்ர்..' என்று அலறியது. கிஷோர் மீண்டும் மிரண்டு போனான். கிலியடித்த மாதிரி அந்த டெலிபோனையே பார்த்தான். அப்புறம் வேணுவிடம் திரும்பி அவசரமாய் சொன்னான். "டேய் மச்சி.. நீ எடுத்து பேசுடா...!! சங்கியாத்தான் இருக்கும்.. நான் இங்க இல்லைன்னு சொல்லிரு.. எங்க போயிருக்கேன்னு கேட்டா.. எங்கயாவது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போயிட்டேன்னு சொல்லிரு..!!" வேணு கால் அட்டன்ட் செய்தான். ரிசீவரை காதில் வைத்து 'ஹலோ..' என்றான். ஓரிரு வினாடிகளுக்கு அப்புறம், ரிசீவரை காதில் இருந்து விலக்கி, அதன் வாயைப் பொத்திவிட்டு கிஷோரிடம் இளிப்பாக சொன்னான். "சங்கி இல்ல மச்சி.. அந்த மோகன்ராஜ் மங்கி..!!" சொல்லிவிட்டு வேணு ரிஸீவரை அசோக்கிடம் நீட்டினான். மோகன்ராஜ் இப்போது ஏன் ஃபோன் செய்திருக்கிறார் என்று அசோக்கிற்கு நன்றாகவே புரிந்தது. ஒருமாதிரி திருட்டுப் பார்வை பார்த்தவன், சற்றே தடுமாற்றமாய் சொன்னான். "ஹேய்.. அ..அவர் கிஷோர்ட்டதான் ஏதோ பேசணும்னு சொன்னாரு.. அ..அவனுக்காத்தான் இருக்கும்.. அவன்ட்ட குடு..!!"என்று அழகாக எஸ்கேப் ஆனான். நண்பன் சொன்னதை உண்மை என்று நம்பிய கிஷோரும், வேணுவிடம் இருந்து ரிஸீவரை வாங்கினான். தன் காதில் வைத்துக்கொண்டான். குரலில் ஒரு மிடுக்கை வரவழைத்துக்கொண்டு கெத்தாக சொன்னான். "ஹாய் மிஸ்டர் மோகன் ராஜ்..!!" அவ்வளவுதான்..!! அதன்பிறகு ஒரு நிமிடம்..!! மோகன்ராஜ் படபடவென பட்டாசாக வெடித்து தள்ளினார். படுகேவலமாக திட்டினார். கிஷோர் பேசுவதற்கே அவர் வாய்ப்பளிக்கவில்லை.'ஸார்.. அது வந்து.. இல்ல ஸார் அவன்.. நோ ஸார்..' என்று பிட்டு பிட்டாக வார்த்தைகளை துப்பத்தான் கிஷோருக்கு இடைவெளி கிடைத்தது. மிச்ச நேரம் மொத்தமும் அவர் பொரிந்து தள்ளிவிட்டு ஃபோனையும் கட் செய்தார். கால் முடிந்தபிறகும் கிஷோர் சிறிது நேரம் ரிஸீவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தவன், முகமே செத்துப்போய் அசோக்கை பரிதாபமாக ஏறிட்டான். 'ஏண்டா.. இப்பிடி..??' என்று வடிவேலு மாதிரியான பாவனையுடன் பார்த்தான். "என்னடா மச்சி.. என்ன சொல்றார் மோகன்ராஜ்..??" என்று அசோக் அவனிடம் இளிப்பாக கேட்க, கிஷோரால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தன் சேரில் இருந்து குபீரென்று எழுந்தான். அப்படியே அசோக் மீது சரக்கென பாய்ந்தான். டேபிளில் இருந்த டெலிபோன், ஃபைல்ஸ், பென் ஸ்டாண்ட், ஸ்டேப்ளர் எல்லாம் கீழே விழுந்து மூலைக்கொன்றாய் சிதறி ஓடின. ஏதேதோ காகிதங்கள் அந்தரத்தில் பறந்தன. நழுவிய லேப்டாப் கீழே விழாமல், லாவகமாக பிடித்துக் கொண்டான் வேணு. நாற்காலிகள் 'டமார்ர்ர்ர்..' என்ற சத்துடன் அங்குமிங்குமாய் தெறித்து ஓடி கவிழ்ந்தன. கிஷோரும் அசோக்கும் தரையில் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருந்தார்கள். "மவனே.. இன்னைக்கு செத்தடா நீ..!!" கிஷோர் உச்சபட்ச கடுப்போடு கத்தினான். "டேய்.. லூசு.. சொல்றதை கேளுடா.. விடுடா..!!" அசோக் அவனுடன் சேர்ந்து உருண்டுகொண்டே கத்தினான். வேணுவுக்கும் சாலமனுக்கும் கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அதிர்ச்சியில் சற்று தடுமாறியவர்கள், பிறகு சுதாரித்துக்கொண்டு சண்டையை விலக்கி விட்டார்கள். கிஷோரையும் அசோக்கையும் ஆளுக்கொரு பக்கமாய் பிடித்து இழுத்தார்கள். "டேய்.. இது ஆபீஸ்டா.. அஸம்ப்ளினு நெனச்சிங்களா.. அசிங்கமா சண்டைலாம் போட்டுக்கிட்டு..?? விடுங்கடா..!!" அவர்களை பிரித்து விடுவதற்கு அரும்பாடு பட வேண்டியிருந்தது வேணுவுக்கும், சாலமனுக்கும்..!! அதன் பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து.. அவர்கள் எப்போதும் மதிய உணவு உண்ணுகிற ஃபுட்கோர்ட்டில் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர்..!! அசோக்கும் வேணுவும் டேபிளுக்கு ஒருபுறம் இருக்க, கிஷோரும் சாலமனும் அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். சூழ்நிலை இன்னும் சற்று இறுக்கமாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கொரு உணவை வாங்கி வந்திருந்தவர்கள், அந்த உணவை அமைதியாக பொறுமையாக வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தனர். நான்கு அடுக்குகளுடன் வட்ட வடிவில் அமைந்த பிரம்மாண்டமான கட்டிடம் அது..!! கட்டிடத்தின் உட்புற மையப்பகுதி திறந்தவெளியாக இருக்கும்..!! நான்காவது மாடியில் பாலிகார்பனேட் தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரை..!! அதன் வழியே உட்புகும் சூரிய வெளிச்சம் தாராளமாய் அந்த கட்டிடத்தை நிறைத்திருக்கும்..!! கீழ் தளத்தில்தான் அந்த ஃபுட்கோர்ட்..!! பிஸ்ஸா முதல் பிரியாணி வரை.. பலதரப்பட்ட உணவுகளை விற்கும் பத்துக்கும் அதிகமான ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர்கள்..!! வாங்கிய உணவுகளை அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக.. கீழ்த்தளத்தின் மையப்பகுதியில்.. முன்னூறு பேர் அமரக்கூடிய அளவுக்கு டேபிள்கள்.. சேர்கள்..!! மற்ற மூன்று தளங்களிலும்.. ஆடைகள், ஆபரணங்கள், செல்போன்கள், செருப்புகள் என.. விதவிதமான விற்பனை நிலையங்கள்..!! நீண்ட நேர அமைதியை முதலில் வேணுதான் குலைத்தான். அசோக்கிடம் மெல்ல கேட்டான். "மோகன்ராஜோட என்னடா பிரச்னை..??" "மோகன்ராசா அவன்..?? சரியான மொக்கைராசு..!! பேசாத அவனைப் பத்தி..!!" "ப்ச்.. என்ன நடந்துச்சுன்னுதான கேக்குறேன்..??" "அவன் என்னடா.. லூசு மாதிரி என்னன்னவோ சொல்றான்..!!" "என்ன சொன்னான்..??" "ரொமா...ண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் வேணுமாம் அந்த வெண்ணைக்கு..!!" "ஓ..!!" "இஞ்சின் ஆயிலுக்கும் ரொமான்சுக்கும் என்னடா சம்பந்தம்..?? அதை சொன்னா.. கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்.. லூசுப்பய..!!" "யாரு.. அவன் புரிஞ்சுக்க மாட்டேன்றானா..?? நீதாண்டா எதையும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிற..!!" கிஷோர் இடையில் புகுந்து எரிச்சலாக சொன்னான்."என்ன.. நான் என்ன புரிஞ்சுக்கல..?? இஞ்சின் ஆயிலையும் லவ்வையும் எப்படி லிங்க் பண்றது..??" "உனக்கு லிங்க் பண்ண தெரியலைன்னு சொல்லு.. லிங்க் பண்ணவே முடியாதுன்னு மட்டும் சொல்லாத..!! எனக்கு ரெண்டு நாள் டைம் தர்றியா.. நான் ஒரு கான்சப்டடோட வரவா..??" "ம்க்கும்.. கிழிச்ச..!!" அசோக் ஏளனமாக சொல்ல, இப்போது வேணு அவனிடம் கேட்டான். "அசோக்கு.. நீ பேசுறது தப்புன்னு தோணுதுடா எனக்கு..!! ஏன் ரொமாண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் எடுக்க முடியாதுன்னு சொல்ற நீ..??" வேணு கேட்க, அவனை தொடர்ந்து சாலமன் இப்போது உற்சாகமாக ஆரம்பித்தான். "ஆமாம் மச்சி.. ஏன் முடியாதுன்னு சொல்ற..?? இங்க பாரேன்.. நான் ஒரு லைன் சொல்லவா..?? இஞ்சினையும் இதயத்தையும் லிங்க் பண்ணினா எப்படி.. ம்ம்..?? இதயத்துக்கு காதல் எவ்வளவு முக்கியமோ... இஞ்சினுக்கு ஆயில் அவ்வளவு முக்கியம்..!! எப்பூடி...???" சாலமன் கேட்டுவிட்டு பெருமையாக பார்த்தான். "ம்க்கும்.. இதயத்துக்கும் காதலுக்குமே எந்த சம்பந்தமும் இல்ல.. இதுல இதயத்துக்கும் இஞ்சினுக்கும் லிங்க் குடுக்குறியா நீ..?? நான்சென்ஸ்..!!" அசோக் சொல்ல, இப்போது கிஷோர் மற்றவர்களிடம் கேலியாக சொன்னான். "ஏய்.. விடுங்கடா.. இதெல்லாம் இவன்ட்ட போய் சொல்லிக்கிட்டு..!! இவனுக்கு இதுலாம் புரியாதுடா.. யாரையாவது லவ் பண்ணிருந்தா.. இதுலாம் புரியும்..!! இவனுக்கு புரியலன்னதும் நம்மள நான்சென்ஸ்ன்றான்..!!" "டேய்.. ஆரம்பிச்சுட்டீங்களாடா மறுபடியும்..?? இந்த இஞ்சின் ஆயிலுக்காக இப்போ என்னை லவ் பண்ணுன்னு சொல்லப் போறீங்களாடா..??" "இல்ல மச்சி.. கிஷோர் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! இப்போ.. எங்கள விடுடா.. நாங்கல்லாம் டெக்னீஷியன்ஸ்.. ஆனா நீ அப்படி இல்லடா..!! நீ ஒரு கிரியேட்டர் மச்சி.. ஆட் ஃபில்ம்ஸ் தாண்டி, சினி ஃபீல்ட் போகவும் ட்ரை பண்ணிட்டு இருக்குற.. எந்த ஒரு க்ரியேட்டருக்குமே காதல்ன்றது ரொம்ப முக்கியமான விஷயம்டா..!!" "ஓ.. அப்போ லவ் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவன் க்ரியேட்டரா இருக்க முடியாதுன்னு சொல்றியா..??" "இல்ல.. லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற கிரியேட்டர் ரொம்ப சக்ஸஸ்ஃபுல்லா இருக்க முடியும்னு சொல்றேன்..!! உனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருந்தா.. மோகன்ராஜோட இப்படி நீ அர்த்தம் இல்லாம சண்டை போட்டு வந்திருக்க மாட்டேன்னு தோணுது.. அந்த இஞ்சின் ஆயில் வெளம்பரத்தை எப்படி ரொமாண்டிக்கா எடுக்கலாம்னு தின்க் பண்ண ஆரம்பிச்சிருப்பேன்னு தோணுது..!!" "ஹையோ.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்..!!" அசோக் கேட்க, கிஷோர் இப்போது எரிச்சலாக கத்தினான். "ஏய்.. சம்பந்தம் இருக்குதுடா வெண்ணை.. உனக்குத்தான் புரியல..!! உன்னாலலாம் நாங்க சொல்ற எதையுமே புரிஞ்சுக்க முடியாதுடா.. லவ்னா என்னன்னு புரிஞ்சுக்க முடியாது.. லவ் ஃபீலிங் பத்தி புரிஞ்சுக்க முடியாது.. லவ் பண்றவங்க மனசையும் புரிஞ்சுக்க முடியாது..!! உனக்கு அதுலாம் புரிஞ்சிருந்தா.. இப்படி அந்த மோகன்ராஜோட மல்லுக்கட்டிட்டு நிக்க மாட்ட.. உன் தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பாக்க மாட்ட..!! ஏன்.. என்னைய, வேணுவை, சாலமனை, எங்க லவ்வை.. எதுக்கெடுத்தாலும் நக்கல் பண்ணி சிரிக்கிறல.. அதுலாம் சத்தியமா பண்ணமாட்ட..!! என்னடா.. நான் சொல்றது சரிதான..??" கிஷோர் அவ்வாறு சொன்னதும், இப்போது வேணுவுக்கும் சாலமனுக்குமே சுருக்கென்று ஒரு விஷயம் மனதை தைத்தது. தங்கள் காதலையும், தாங்கள் படுகிற அவஸ்தையையும், அசோக் அடிக்கடி காமடி பண்ணி கலாய்ப்பது, அவர்களுக்கு எப்போதுமே ஒருவித கடுப்பை கிளப்பும். 'இவனை ஒன்னும் செய்ய முடியலையே.. இவன் மட்டும் ஜாலியா இருக்கானே..??' என்பது மாதிரியான கடுப்பு. அவர்கள் மனதில் உறைந்திருந்த அந்த கடுப்பு, இப்போது கிஷோருடன் சேர்ந்து அவர்களிடமிருந்தும் வெளிப்பட்டது. "சரி விடு மச்சி..!! லவ் பண்றதுக்குலாம் ஒரு தில்லு வேணுண்டா.. அது நம்ம அசோக்கிட்ட இல்லைன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்..!!" சாலமன் கிண்டலாக சொல்ல, அசோக்குக்கு சுரீர் என்று கோவம் வந்தது. "ஏய்.. ஓவரா பேசுறடா..!!" "ஓவரா பேசுறனோ.. விக்கெட்டா பேசுறனோ.. உண்மையை பேசுறேன்.. போ போ..!!" "ஆமாம் மச்சி.. உனக்கு எங்களோட கஷ்டம்லாம் புரியலடா.. லவ் பண்றவனுக்குத்தான் அதுலாம் புரியும்.. அதை மொதல்ல அக்ஸப்ட் பண்ணிக்கோ நீ..!!" தன் பங்குக்கு கொளுத்திப் போட்டான் வேணு. "ஏய்.. ரொம்ப பேசாதீங்கடா.. என்னடா பெரிய கஷ்டம், உங்க கஷ்டம்..??" அசோக் ஏளனமாக கேட்க, இப்போது கிஷோர் அவனிடம் சவால் விடுவது மாதிரி சொன்னான். "என்ன.. எளக்காரமா இருக்கா உனக்கு..?? மவனே.. ஒரு பொண்ணோட பேசிப்பாருடா.. அவ கூட பழகிப்பாரு.. அப்போ தெரியும் எங்க கஷ்டம்..!! அவளுக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்கிட்டு.. அவ இழுத்த இழுப்புக்குலாம் வளைஞ்சு குடுத்து.. நம்ம மேல நம்பிக்கை வரவைச்சு.. கொஞ்சம் கொஞ்சமா அவளை அட்ராக்ட் பண்ணி.. ஐ லவ் யூ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. உன் பருப்பு பரதநாட்டியம் ஆடுதா இல்லையான்னு பாரு..!!""ஹாஹா.. இதுலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நேத்துவரைகூட எனக்கு இதுல பெரிய ஐடியாலாம் இல்ல.. ஆனா நேத்து என் அம்மாட்ட பேசுனப்புறம்.. ஒரு விஷயத்துல நான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கேன்..!!" "எந்த விஷயத்துல..??" "ஒரு பொண்ணை காதலிக்க வைக்கிறது ரொம்ப ஈஸின்ற விஷயத்துல..!!" அசோக் அவ்வாறு படுசீரியஸாக சொல்ல, இப்போது அசோக்கை தவிர மற்ற மூவரும் கோரஸாக அவனை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள். "ஹாஹா... ஹாஹா... காமடி பண்ணாத மச்சி.. ஹாஹா...!!!" "ஏய்.. என்னடா சிரிப்பு..?? நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!!" "ஓ..!! ஓகேடா..!! அப்போ ஒன்னு பண்றியா..??" "என்ன..??" "இந்த ஃபுட்கோர்ட்ல இருக்குற ஏதாவது ஒரு பொண்ணோட பேசிப்பழகி.. அவளை உன்கிட்ட 'ஐ லவ் யூ'ன்னு சொல்ல வச்சு காட்டுறியா..??" கிஷோர் கேஷுவலாக ஒரு சேலஞ்ச் ப்ரொபோஸ் செய்ய, அசோக் இப்போது சற்றே மிரண்டான். "ஏ..ஏய்.. எ..என்னடா சொல்ற.. லவ்லாம்.. இ..இப்படி.." "ஏன்.. ஏன் தயங்குற..?? நீதான நேத்து சொன்ன..?? நீ லவ் பண்ணினா.. யாராவது ஒரு பர்ஃபக்ட் ஸ்ட்ரேஞ்சர் டுபுக்கைத்தான் லவ் பண்ணுவேன்னு..!! இங்க இருக்குறவளுக எல்லாரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்தான்.. நாங்க யாராவது ஒரு பொண்ணை ச்சூஸ் பண்ணி தர்றோம்.. நீ அவளை லவ் பண்ண வச்சு காட்டு..!! தில் இருக்கா உனக்கு..??" "இ..இல்ல.. இ..இதுலாம் வேலைக்காகாது..!!" "ஹாஹா.. அப்போ நீ ஒரு டம்மிபீஸ்னு ஒத்துக்கோ..!!" கிஷோரின் வார்த்தைகள் அசோக்கை சுருக்கென்று தைக்க, "ஏய்...!!" என்று அவனிடம் எகிறினான். "இந்த கோவமசுருக்குலாம் ஒன்னும் கொறைச்சல்மசுரு இல்ல..!!" கிஷோர் கூலாக சொன்னான். அசோக் இப்போது வாயடைத்துப் போனான். வகையாக மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! நண்பர்கள் மூவரும் அவனை ஒரு இளக்கார பார்வை பார்த்தபடி.. அவனுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்க.. அவர்களுடைய பார்வையை அசோக்கால் எதிர்கொள்ள முடியவில்லை.. அவனையும் அறியாமல் அவனுடைய தலை மெல்ல மெல்ல கீழே தாழ்ந்தது..!! அவனுடைய நிலைமையை உணர்ந்த மற்ற மூவரும், வார்த்தைகளால் அவனை மேலும் சீண்டினர்..!! "பாத்தியா எப்படி உக்காந்திருக்கான்னு..?? அடுத்தவனை பாத்து ஆயிரம் நொட்டை சொல்லலாம் மச்சி.. அவன் அவனுக்கு வந்தாத்தான் தெரியும் வாந்தியும் வயித்தாலயும்..!!" என்றான் வேணு. "எங்களுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கப் ஆனாலும்.. திரும்ப திரும்ப அவளை எங்கிட்ட வரவைக்கிறேன் பாத்தியா.. அதுக்குலாம் ஒரு ஸ்டஃப் வேணும் மச்சி.. அந்த ஸ்டஃப் இல்லாதவன்லாம் இப்படித்தான்..!!" சாலமன் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தான். "விடுங்கடா.. அவன்கிட்ட ஏதோ வாய் இருக்கு.. நம்மகிட்ட ஏதோ காது இருக்குன்னு.. வக்கனையா பேசிட்டான்..!! பேச்சு மட்டுந்தான் அப்படி மச்சி.. அவனால முடியாதுன்னு அவனுக்கே தெரியும்..!!" கிஷோரின் வார்த்தைகள் அசோக்கின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தன. 'இப்போது என்ன செய்வது..?? இவர்களுடைய சவாலை கெத்தாக ஏற்றுக்கொள்வதா.. இல்லை.. என்னால் முடியாது என்று நழுவி கேவலப்படுவதா..??' அசோக் கண்களை மூடி ஒருகணம் நிதானமாக யோசித்தான். அம்மா, அப்பா, தங்கை, பாட்டி, பரந்தாமன், நண்பர்கள், நாய்க்குட்டிகள் என.. அனைவரும் இவனுடைய மனக்கண்ணில் தோன்றி.. இவனை சுற்றி நின்றுகொண்டு.. 'காதலித்துப்பார்.. காதலித்துப்பார்..' என்று உரத்த குரலில் கத்தினார்கள்..!! ஒரு ஐந்தாறு வினாடிகள் அசோக் அந்தமாதிரி விழிகள் மூடி அமர்ந்திருப்பான். அப்புறம் பட்டென இமைகளை பிரித்து, நண்பர்கள் மூவரையும் தைரியமாக ஏறிட்டான். மிடுக்கான குரலில் சொன்னான். "ஓகேடா..!! பொண்ணை ச்சூஸ் பண்ணுங்க.. நீங்க யாரை ச்சூஸ் பண்றிங்களோ.. அந்தப்பொண்ணை நானும் லவ் பண்றேன்.. அவளையும் என்னை லவ் பண்ண வைக்கிறேன்..!!" அசோக் அவ்வாறு கெத்தாக சவாலை ஏற்றுக் கொண்டதும், இப்போது நண்பர்கள் மூவருக்கும் சப்பென்று போனது..!! 'அவன் இந்த சவாலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான்.. அதை வைத்தே காலம் முழுவதும் அவனை கலாய்க்கலாம்..' என்றுதான் அவர்கள் எண்ணியிருந்தார்கள்..!! இப்படி அவன் ஏற்றுக்கொண்டது மற்றவர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் இப்போது வேறுவிதமான எண்ணமும் எதிர்பார்ப்பும் அவர்களுடைய மனதில் கிளம்பி, அவர்களை நிமிர்ந்து அமரவைத்தன."நெஜமாத்தான் சொல்றியா..??" கிஷோர் தன்னுடைய முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே எடுத்துச் சென்று கேட்டான். "எஸ்..!!" "அப்புறம் பேக் அடிக்க மாட்டியே..??" "ஹஹா... சப்பை.. சப்பை மேட்டர்டா இது..!!" "ஓகே..!! கூல்..!!" சொல்லிக்கொண்டே கிஷோர் அவனுடைய சேரில் வசதியாக சாய்ந்து கொண்டான். மற்றவர்களிடம் திரும்பி சொன்னான். "ஓகேடா..!! ரெடியா நீங்க.. செலக்ட் பண்ணலாமா..??" "நீயே யாரையாவது செலக்ட் பண்ணு கிஷோர்.. நீதான் இவன்கிட்ட ரொம்ப அனுபவிச்சிருக்குற..!!" அசோக்கின் தோளை பிடித்து அமுக்கியவாறே சொன்னான் வேணு. "ஆமாம் மச்சி.. நீயே செலக்ட் பண்ணு..!!" வேணுவை ஆமோதித்தான் சாலமனும். "என்னடா...?? உனக்கு ஓகே வா..??" அசோக்கிடம் கேட்டான் கிஷோர். "ம்ம்.. நோ ப்ராப்ளம்..!!" அசோக் சம்மதித்ததும், கிஷோர் இப்போது தன் தலையை நைன்ட்டி டிக்ரீ இடது பக்கமாக திருப்பினான்..!! மிக மிக பொறுமையாக தனது தலையை சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் அலைந்து திரிந்த, அமர்ந்து உண்கிற பெண்களை.. ஒவ்வொருவராக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான்..!! "ஏய்.. பாத்துடா.. கல்யாணம் ஆன ஆன்ட்டி.. பல்லு போன பாட்டிலாம் செலக்ட் பண்ணிட போற.. அதுலாம் நம்மால முடியாது..!!" அசோக் கிண்டலாக சொன்னான். "ஹேய் தெரியுண்டா.. நீ மூடு...!!" பெண்கள் மீதிருந்த பார்வையை விலக்காமலே கிஷோர் சொன்னான். "அப்புறம் இன்னொரு மேட்டரு.." "என்ன...??" "என் மேல இருக்குற கடுப்புல ஏதாவது சப்பை ஃபிகரை செலக்ட் பண்ணிடாத.. என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. பொண்ணு அப்படியே பட்டாசா.. சூப்ப்ப்பர் ஃபிகரா இருக்கணும்..!!" "கவலையே படாத மச்சி...!! சூப்ப்ப்பர் ஃபிகர்தான் உனக்கு சூப்ப்ப்பரா சூப்பு குடுப்பா.. சூப்பர் ஃபிகரே செலக்ட் பண்ணித் தர்றேன் உனக்கு..!!" மேலும் கால் நிமிடம் ஆனது..!! கொஞ்சம் கொஞ்சமாய் சுழன்று கொண்டே வந்த கிஷோரின் பார்வை.. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கின் பின்புறமாக வந்ததும்.. அப்படியே நின்றது..!! அவனுடைய முகத்தில் இப்போது ஒருவித திருப்தி பரவியது..!! 'சட்' என்று விரலை ஒருமுறை சொடுக்கினான்..!! ஆட்காட்டி விரலால் அசோக்கின் பின்பக்கமாக சுட்டிக்காட்டி.. "அவ..!!" என்றான். உடனே மற்ற மூவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு அவனுடைய விரல் காட்டிய திசையில் திரும்பினார்கள். அந்த திசையில் இருந்த ஐம்பத்து சொச்ச பெண்களையும், பரபரவென பார்வையால் அலசினார்கள். 'ஏய்.. யாருடா.. யாருடா...' என்று ஆளாளுக்கு குழப்பமாய் கேட்டார்கள். "அவடா.. தனியா நடந்து வர்றா பாரு.. ப்ளாக் டி-ஷர்ட்.. ஷோல்டர் பேக்..!!" கிஷோர் சொன்னதும் அசோக்கின் பார்வை 'சர்ர்ர்ர்' என்று மற்ற பெண்களை ஃபில்டர் செய்தது..!! அந்த ப்ளாக் டி-ஷர்ட் பிம்பத்தை தேடி கண்டுகொண்டு.. 'ஜிவ்வ்வ்' என்று ஜூம் செய்தது..!! ஜூம் செய்ததுமே அசோக் இன்ஸ்டண்டாய் ஒரு இன்ப அதிர்ச்சியில் திளைக்க ஆரம்பித்தான்..!! நடப்பது கனவா நனவா என்று நம்ப முடியாமல் திகைத்தான்..!!
அவள்.. அந்தப்பெண்.. நேற்று இரவு இதே இடத்தில் சந்தித்தானே.. அவள்..!! இவனுடைய கனவில் வந்து கங்கனம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாளே.. அவள்..!! 'யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினதில்லையா' என்று அம்மா கேட்டபோது மனதுக்குள் வந்து போனாளே.. அவள்..!! பளிச்சிடும் பால்நிலா முகத்துடனும்.. பளபளக்கிற செர்ரிப்பழ உதட்டுடனும்.. காதில் வளையம் அசைந்தாட.. காற்றில் கார்குழல் அலைபாய.. கழுத்துக்கு கீழே கவர்ச்சித் திமிறலும்.. இடுப்புக்கு கீழே இருகுட வீணையுமாய்.. அழகு மொத்தைத்தையும் அபகரித்துக் கொண்டவள் போல.. அரபுக்குதிரை எனவே அடியெடுத்து நடந்து வந்தாள்..!! 'என்ன ஒரு ஆச்சரியம் இது..?? என் மனதில் ஏற்கனவே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தவளை.. கிஷோரின் விரல் எப்படி சரியாக சுட்டிக் காட்டுகிறது..?? இவள்தான் எனக்காக விதிக்கப்பட்டவளோ..?? 'அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..' என்று அம்மா சொன்னாளே.. இவள்தான் அவளோ..?? உண்மைதானா..?? இறைவன் எனக்கே எனக்கென அனுப்பி வைத்தவள் இவளேதானா..?? இத்தனைநாள் நான்தான் இமை திறந்து பாராமலே இருந்தேனா..??'"என்னடா மச்சி.. பேச்சையே காணோம்..?? ஆளு எப்படி..??" கிஷோரின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே, "மச்சீஈஈ... செம்ம்மயா இருக்குறாடா..!!!" ஜொள்ளு விட்டவாறு சொன்னார்கள் சாலமனும் வேணுவும். அசோக் சட்டென கடுப்பானான். "தலையை திருப்புங்கடா தறுதலைங்களா.. தங்கச்சி முறை ஆவுது அவ உங்களுக்கு..!!" என்றவாறு அசோக் அவர்கள் இருவரது தலையையும் பிடித்து வலுக்கட்டாயமாக திருப்பினான். அசோக்கின் வார்த்தையில் இருந்த உண்மை உறைக்கவும், சாலமனும் வேணுவும் முகம் வாடிப் போனார்கள். இப்போது அசோக்கும் திரும்பி அமர்ந்தான். கிஷோர் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவனிடம் கேட்டான். "என்னடா.. ஓகேவா..??" "ம்ம்... டபுள் ஓகே..!!" அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாலமன் ஒரு சந்தேகத்தை கிளப்பினான். "மச்சி.. எனக்கு ஒரு டவுட்டு..!!" "என்னடா..??" கிஷோர் கேட்டான். "அவளை பாத்தா காலேஜ் பொண்ணு மாதிரிதான் இருக்குது.. எப்படியும் கல்யாணம்லாம் ஆகிருக்காது..!! ஆனா.. அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தான்னா..?? ஏன் கேக்குறேன்னா.. இப்படி லட்டு மாதிரி இருக்குறவளுகளைலாம்.. இவ்வளவு நாளு எவனும் விட்டு வைக்க மாட்டானுக மச்சி..!! அல்ரெடி ஒரு அம்பது பேராவது அப்ளிகேஷன் போட்ருப்பானுக.. அதுல ஏதாவது ஒரு அப்ளிகேஷனுக்கு அவ அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்திருந்தா..??" சாலமனின் சந்தேகத்தை கிஷோர் கேஷுவலாக தீர்த்து வைத்தான். "ஸோ வாட்..?? அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்தவனுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கிக் குடுக்குறது.. நம்ம பையனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வொர்க்... அவ்வளவுதான்..!!" "என்னடா சொல்ற..??" "ஆமாம்..!! சப்போஸ் அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா.. இவன் அந்த லவ்வை எப்படியாவது கெடுத்து நாசமாக்கி.. அவளுக்கு இவன் மேல புதுசா லவ் வரவைக்கனும்.. அதுதான் தில்லு..!! எப்புடி..?? ம்ம்ம்ம்... என்னடா.. டீல் ஓகேதான..??" கிஷோர் அசோக்கை பார்த்து மீண்டும் கேட்டான். அல்ரெடி அந்தப்பெண்ணுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்த அசோக், எங்கேயோ ஆகாயத்தை வெறித்தவாறே சொன்னான். "ஹ்ஹ.. நான் டீல்க்கு ஓகே சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு மச்சி..!!" "அப்புறம்..??" கிஷோர் கேட்க, "அப்புறம் என்ன..??" அசோக் திருப்பி கேட்டான். "போ.. போய் வேலையை ஆரம்பி.. அவ கூட போய் பேசு.. போ..!!" "இப்போவேவா..??" அசோக் அப்பாவியாய் கேட்க, கிஷோர் இப்போது கிண்டலாக சொன்னான். "டேய்.. அவ என்ன உன் பக்கத்து வூட்டு ஆயான்னு நெனச்சியா..?? நெனச்சப்பலாம் போய் கடலை போட்டு வர்றதுக்கு..?? இன்னும் பத்து நிமிஷத்துக்கப்புறம் அவ எங்க இருப்பான்னே நம்ம யாருக்கும் தெரியாது.. இனிமே அவளை லைஃப்ல திரும்ப மீட் பண்ணுவமான்னும் தெரியாது..!! யூ.. பெட்டர் ஸ்டார்ட் நவ்..!!" கிஷோரின் கிண்டலில் இருந்த உண்மை அசோக்கை சுருக்கென்று குத்தியது.'உண்மைதான்.. இனி இவள் என் வாழ்வில் திரும்ப வருவாள் என்று என்ன நிச்சயம்..?? இன்றே இவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும்.. அவளுடய தொடர்பு விவரங்கள் அறிந்தாக வேண்டும்.. தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் தவறுதான்.. கிளம்பு அசோக்..!!' அசோக் இப்போது பட்டென சேரில் இருந்து எழுந்து கொண்டான். 'ஆல் தி பெஸ்ட் மச்சி..' என்ற நண்பர்களை அலட்சியம் செய்தவாறு திரும்பி நடந்தான். அந்த தேவதையை குறி வைத்து விறுவிறுவென நகர்ந்தான். அவளோ விம்மிய மார்புகள் கிடுகிடுக்க நடைபோட்டு, இவனுக்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு ஐந்தடிதான் இடைவெளி என்கிற நிலையில் அவள் திடீரென நின்றாள். சட்டென இடது பக்கம் திரும்பி நடந்தாள். அதை எதிர்பாராமல் ஒருகணம் திணறிய அசோக், பிறகு சமாளித்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான். அவள் ஒரு பிஸ்ஸா ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி சென்றாள். ஆர்டர் கொடுப்பதற்காக அல்ரெடி காத்திருந்த இருவருடன் மூன்றாவது ஆளாக சேர்ந்து கொண்டாள். அவளுக்கு அடுத்து, தான் இடம்பிடிக்க வேண்டும் என்று எண்ணிய அசோக்கும், அவசரமாக அவளை நோக்கி நகர்ந்தான். ஆனால் இவன் க்யூவில் சென்று நிற்பதற்குள், இடையில் இன்னொரு இடியட் வந்து புகுந்து கொண்டான். அசோக் 'ச்ச..!!' என்று வெறுப்பாக ஒரு சலிப்பை உதிர்த்தான். இடையில் நின்ற அந்த இடியட்டையும் மீறி, அவளுடைய மேனி நறுமணம் அசோக்கை தாக்கியது. ஒருவித மயக்கத்தை அவனுக்கு உண்டு பண்ணியது. கருகருவென மினுமினுத்த அவளது கூந்தல் வனப்பும், காதில் குலுங்குகிற அந்த பிளாஸ்டிக் வளையங்களுமே அவனுடைய மனதை கிறங்கடித்தன. ஒருமுறை பின்னால் திரும்பி நண்பர்களை பார்த்தான். அவர்கள் இவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தனர். 'அவளிடம் பேசு.. பேசு..' என்பதுபோல சைகை செய்தனர்.அசோக் இப்போது மீண்டும் இந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். 'சரி.. அவளிடம் மெல்ல பேச்சு கொடுக்கலாம்..' என்று மனதை தயார்படுத்திக் கொண்டான். கொஞ்சமாய் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான். சற்றே நகர்ந்து.. தனக்கு முன் நின்றிருந்தவனை தாண்டி.. அவளை அருகாக அணுகி.. 'ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..' என்று அவன் சொல்வதற்கும்.. இடையில் நின்றிருந்த அந்த இடியட்.. அவளுடைய பின்புறத்தை 'தட்..!!' என்று தட்டுவதற்கும்.. சரியாக இருந்தது..!! சரக்கென்று திரும்பினாள் அவள்..!! அவளுடைய முகம் ஆத்திரத்தில் இன்ஸ்டண்டாக சிவந்து போயிருந்தது..!! 'யூ.. ஸ்கவுண்ட்ரல்..!!' என்று கத்தியவாறு அந்த இடியட்டின் சட்டையை கொத்தாகப் பற்றினாள். அவளுடைய புறங்கையை வீசி 'பளார்ர்.. பளார்ர்.. பளார்ர்..' என்று அவன் கன்னத்தில் அறைய ஆரம்பித்தாள். "உனக்குலாம் அக்கா தங்கச்சி இல்ல.. அவளுகள போய் இப்படி பின்னால தட்ட வேண்டியதுதான..??" அறைந்துகொண்டே பற்களை கடித்து அலறினாள். அவளுடைய ஆவேசத்தில் அசோக் அப்படியே ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அறை வாங்கியவன் அவளுடைய பிடியில் இருந்து தப்பிக்க.. தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினான்..!! பிடியில் இருந்து விலகி பின்னால் சரிந்தான்.. பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறி.. யாரோ சாப்பிட்டுக்கொண்டிருந்த டேபிள் மீது சென்று விழுந்தான்..!! அமர்ந்திருந்தவர்கள் எழுந்து கொள்ள.. பிரியாணியோ பீஸ்புலாவோ கீழே விழுந்து சிதறியது..!! அவள் இப்போது தனது வலது காலை உயர்த்தி, அணிந்திருந்த செருப்பை அவசரமாய் கழற்றினாள்..!! "உன்னலாம் செருப்பால அடிக்கனுண்டா...!!" கத்திக்கொண்டே கழற்றிய செருப்புடன் அவன் மீது பாய, அவன் டேபிளிலிருந்து தரையில் உருண்டு விழுந்தான். விருட்டென எழுந்து.. 'விட்டால் போதும்..' என்று விழுந்தடித்துக்கொண்டு ஓடினான். மொத்த ஃபுட் கோர்ட்டும் இப்போது அப்படியே அமைதியில் உறைந்து போயிருந்தது.. அனைவரும் திரும்பி இவளையே பார்த்தனர்..!! இவளோ ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல்.. அலறியடித்து ஓடுகிற அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள்..!! 'புஸ்.. புஸ்...' என்று அவள் கோப மூச்சு விட்டதில்.. அவளுடைய மார்புகள் ரெண்டும் 'குபுக்.. குபுக்..' என மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன..!! இன்னும் தணியாத சினத்துடன் முகமும் உதடுகளும் துடித்துக்கொண்டிருந்தன..!! 'பொறுக்கி.. ராஸ்கல்..!!' என்று அவளது வாய் முனுமுனுத்தது..!! அசோக் அகலமாய் திறந்த விழிகளுடன்.. 'ஆ'வென்று பிளந்த வாயுடன்.. அவளையே பார்த்தவாறு.. சிலை மாதிரி நின்றிருந்தான்..!! இப்போது அவள் சரக்கென்று தலையை சிலுப்பி அசோக்கை பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் அப்படி ஒரு கோபக்கனல்.. முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்.. உடம்பில் அப்படி ஒரு விறைப்பு..!! கையிலிருந்த செருப்பை படக்கென்று உயர்த்தினாள்.. அசோக்குடைய முகத்துக்கு அரை அடி நெருக்கமாக.. அந்த செருப்பை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு.. சூடாகவும், சீற்றமாகவும் கேட்டாள்..!! "ஹலோ மிஸ்டர்..!!!! உங்களுக்கு என்ன வேணும்..???" அவ்வளவுதான்...!! அசோக் அப்படியே வெலவெலத்துப் போனான்..!! முதுகுத்தண்டில் யாரோ ஐஸ் கத்தி செருகிய மாதிரி இருந்தது அவனுக்கு..!! ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு நாடி நரம்பெல்லாம் ஓட.. விரல்கள் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்தன..!! அவனையும் அறியாமல் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் கைகளால் படக்கென்று பொத்திக் கொண்டான்..!! "ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்லைங்க.. ந..நத்திங்..!!" தொண்டையில் சிக்கிக்கொண்ட வார்த்தைகளை கஷ்டப்பட்டு வெளியே துப்பினான்..!! துப்பி முடித்ததும் அவசரமாய் திரும்பினான்..!! கீ கொடுத்த பொம்மை மாதிரி கிடுகிடுவென தன் நண்பர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..!!அந்த நாளும் அடுத்த நாளும் அசோக்கிற்கு ஒருவித பிரம்மையும் பிரச்னையுமாகவே கழிந்தன..!! ஆசைஆசையாக பேச சென்றவனின் மனதை.. அந்தப் பெண்ணுடைய அனல் கக்கும் பார்வையும்.. அவள் கழற்றி கையிலெடுத்த செருப்பும்.. அந்த செருப்பின் அகலமான அடிப்புறமும்.. அதில் ஓரமாய் ஒட்டியிருந்த பபிள்கமும்.. என எல்லாமும் சேர்ந்து.. ரொம்ப.. ரொம்பவே பாதித்துவிட்டன..!! அந்த பாரதிக்கு.. 'பார்க்கும் மரங்கள் எல்லாம் பச்சை நிறம்' தோன்றிய மாதிரி.. இந்த பாரதி மைந்தனுக்கு.. காணும் இடங்கள் எல்லாம் கலர் கலராய் செருப்புகள்தான் தோன்றின..!! "என்னடா.. வெறும் சாதத்தையே சாப்பிட்டுட்டு இருக்குற.. இந்தா.. இதை கொஞ்சம் கடிச்சுக்கோ..!!" என்றவாறு, அசோக்கின் அம்மா அவனுடைய வாய்க்கருகே செருப்பை நீட்டினாள். "மம்மீஈஈ..!!!!" அலறியே விட்டான் அசோக். அவனுடைய முகம் பட்டென வியர்த்துப் போனது. "அ..அசோக்கு... அசோக்கு... என்னப்பா ஆச்சு..??" பாரதி பதற்றமும் பயமும் தொற்றிக்கொண்டவளாய் கேட்டாள். "ஒ..ஒன்னும்.. ஒ..ஒன்னும் இல்ல மம்மி..!!" அம்மாவின் கையில் இருப்பது அப்பளம்தான் என்று புரிந்ததும், சற்றே நிம்மதியடைந்த அசோக், சமாளிக்கும் விதமாய் சொன்னான். ஆனால் அப்புறமும் பாரதி சமாதானம் ஆகாமல், "எ..என்னடா நீ... இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி..!!" என்றவாறே, தண்ணீர் டம்ளரை எடுத்து அவளே தன் மகனுக்கு நீர் புகட்டினாள். அன்று மாலை அசோக் வீடு திரும்பியதில் இருந்தே, அவனிடம் ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருந்த பாரதி, 'எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..?? எதைப்பாத்து பயந்தான்னு புரியலையே..?? ஒத்தை ஆளா எத்தனை பேய்ப்படம் வேணா பார்ப்பானே..?? இன்னைக்கு அப்பளத்தை பாத்தாலே அனகோண்டாவை பாத்தவன் மாதிரி அலர்றானே..?? காளியாத்தா மாரியாத்தா.. காமாட்சி மீனாட்சி.. கருமாரி மகமாயி.. நீங்கதான் எம்புள்ளைக்கு தொணை இருக்கணும்டியம்மா..' என்று மனதுக்குள்ளாகவே கவலையும் ரகசியமுமாய் வேண்டிக்கொண்டாள். அசோக்கிற்கு காணும் இடங்கள் மட்டும் அவ்வாறு அல்ல.. அந்தப்பெண் ஏற்படுத்திய டென்ஷன் தாங்காமல்.. சலம்புகிற மைன்ட் சனியனை சமாதானம் ஆக்கலாம் என்று.. ஆபீஸை விட்டு வெளியேறி.. அடுத்த தெருவில் இருக்கும் பெட்டிக்கடைக்கருகே.. ஆகாயத்தை வெறித்தபடி.. புகை இழுத்து விட்டுக்கொண்டிருந்தான்..!! புகையின் நடுவினிலும்.. அவளுடைய பூமுகமே மசமசப்பாய் தெரிந்துகொண்டிருந்த வேளையில்.. வந்து சேர்ந்தான் அவன்..!! முழங்காலுக்கு மேலே ஏற்றிக்கட்டப்பட்ட லுங்கியும்.. முழங்கைக்கு மேலே சுருட்டிவிடப்பட்ட சட்டையும்.. முகம் நிறைய தாடியும்.. வாயில் நீட்டிய பீடியுமாய்..!! "ஸார்.. கொஞ்சம் செருப்பு குடுக்குறீங்களா..??" "என்னது..????' அசோக் அதிர்ந்து போய் அந்த ஆளைப் பார்த்தான். "செருப்பு ஸார்.. செருப்பு செருப்பு செருப்பு..!!!!" அந்த ஆள் கண்ணை சிமிட்டிக்கொண்டே, திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை உச்சரித்த விதம், அசோக்கை கேலி செய்வது போல இருக்க, கடுப்பான அசோக் கண்ட்ரோல் இழந்து போய், அந்த ஆளுடைய சட்டையை பிடித்துவிட்டான்."என்னடா கேட்ட..?????" என்று பற்களை கடித்தான். அந்த ஆளோ அசோக்கின் திடீர் கோவத்தில் மிரண்டு போனான். "ஸார்.. என்னா ஸார் இது.. நெருப்புதான கேட்டேன்..?? இஷ்டம்னா குடுங்கோ.. இல்லனா விடுங்கோ.. எதுக்கு சொக்காலாம் புடிக்கிறீங்கோ..??" அசோக்கை ஒருமாதிரி ஏற இறங்க பார்த்தவாறே, அந்த இடத்தை விட்டு அகன்றான். எஸ்...!!! கேட்கும் ஒலிகளில் கூட..!!அசோக்கின் நண்பர்கள் அன்று முழுக்க செம குஷியில் இருந்தார்கள்..!! 'மாட்டுனான்டா ஒரு மானஸ்தன்' என்பது மாதிரியான குஷி..!! அன்று முழுதும் அந்த செருப்பு மேட்டரை சொல்லியே, அசோக்குக்கு வெறுப்பு மேல் வெறுப்பு ஏற்றினார்கள்..!! 'கூந்தல் கருப்பு.. குங்குமம் சிகப்பு..' பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி.. கடுப்பு மேல் கடுப்பு கூட்டினார்கள்..!! சாலமன் பாட.. "டி-ஷர்ட்டு கருப்பு..!!" "ஆஹா..!!" வேணு ஒத்து ஊதினான். "அவ கையில செருப்பு..!!" "ஓஹோ..!!" "அடங்கிப்போச்சு.. பையன் கொழுப்பு..!!" "ஓஹொஹோஹஹோ.. ஹோஹஹஹொஹோ..!!" "ஹாஹாஹாஹாஹாஹா..!!" கிஷோர் மட்டும் கிண்டலில் கலந்து கொள்ளாமல் சிரிக்க மாத்திரம் செய்தான். அன்று அவர்கள் காட்டில் அடைமழை என்பதை உணர்ந்து கொண்ட அசோக்கும், அமைதி காப்பதே நலம் என்று முறைப்போடு மட்டும் நிறுத்திக் கொண்டான். வாய் திறந்து வார்த்தைகள் எதுவும் சிந்தவில்லை. அசோக்கின் அமைதி அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையே தந்தது. சீண்டலும் கேலியும் தொடர்ந்தன. அத்தனை எரிச்சலிலும்.. கிஷோர் கிண்டல் செய்யாமலிருந்தது.. அசோக்குக்கு ஒரு சிறு நிம்மதியை தந்திருந்தது..!! ஆனால்.. அன்று மாலை அவன் வீட்டுக்கு சென்றபோது.. அந்த சிறு நிம்மதியும் சீட்டுக்கட்டு கோபுரமாய் சரிந்து போனது..!! 'அமைதியா இருக்கான் பாரு.. அவன்தான்டா என் நண்பன்..' என்று கிஷோரை பற்றி நினைத்திருந்தான்..!! அப்புறந்தான் தெரிந்தது அவன் ஆப்பை வேறிடத்தில் வைத்திருக்கிறான் என்று..!! "ஏண்டா.. ஒரு பொண்ணைப்பாத்து.. அவ கண்ணு அழகா இருக்கு, காது அழகா இருக்குன்னு சொல்லலாம்.. சிரிப்பு கூட அழகா இருக்குன்னு சொல்லிருக்கலாம்..!! போயும் போயும் அவ செருப்பு அழகா இருக்குன்னு சொன்னியாம்.. அவளும் செருப்பை கழட்டி 'யா.. லுக் அட் மை ப்யூட்டிஃபுல் செப்பல்..'னு உன் மூஞ்சிக்கு முன்னாடி நீட்டுனாளாம்..??" சங்கீதா சிரிப்பை அடக்கிக்கொண்டே கிண்டலாக கேட்டபோது.. அசோக்குக்கு அவள் மீது கோவம் வந்தது என்றால்.. கிஷோர் மீது கொலைவெறியே வந்தது..!! சங்கீதாவுக்கு தன் மீதிருந்த வெறுப்பை மறக்கடிக்கவே.. கிஷோர் அந்த செருப்புக்கதையை உபயோகித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டான்..!! தங்கையை சில வினாடிகள் முறைப்பாக பார்த்தவன், "ஒன்னு சேந்துட்டிங்களாக்கும்..??" என்றான் கடுப்பாக. "ம்ம்... யெஸ்..!!" சங்கி இமைகள் மூடி, சைனீஸ் பொம்மை போல் தலையாட்டினாள். "ஹ்ம்ம்..!! இந்த செருப்பு மேட்டர்லாம் உன்னோட வச்சுக்கோ சங்கு.. டாடிட்டயோ மம்மிட்டயோ சொல்லிட்டு இருக்காத.. புரியுதா..??" கெத்தான குரலிலேயே கெஞ்சினான் அசோக். "ம்ம்ம்...!! அது.. அந்த பயம் இருக்கணும்..!!" சங்கீதா திமிராக சொன்னாள். அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச விருப்பம் இல்லாதவனாய், அசோக் அந்த இடத்தை விட்டு நகர முயன்றான். சங்கீதா அவனுக்கு குறுக்காக ஓடி வந்து வழி மறித்தாள். "ஏய்ஏய்ஏய்.. இருடா.. எங்க கெளம்பிட்ட.. உங்கிட்ட நான் என்னன்னவோ கேக்கனும்னு நெனச்சேன்..!!" "என்ன..??" "அந்தப்பொண்ணைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்..?? அவ பாக்குறதுக்கு எப்படி இருந்தா..?? ஹைட்டா குள்ளமா.. கலரா கருப்பா..??" சங்கீதா அவ்வாறு ஆர்வமாக கேட்கவும், அசோக்கிற்கு பட்டென அவனுடைய மனது லேசாகிப்போனது மாதிரி ஒரு உணர்வு..!! இதயத்தை அந்தப் பெண்ணுடைய ஞாபகம் வந்து ஈரமாய் நனைத்தது..!! அவனையும் அறியாமல்.. உதட்டில் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது..!! தலையை சற்றே சாய்த்து.. ஏதோ அந்தரத்தில் பார்வையை நிறுத்தி.. குரலில் ஒரு மென்மையை கூட்டிக்கொண்டு.. ரசனையுடன் சொல்ல ஆரம்பித்தான்.. "அ..அவ.. அவ எப்படின்னா.. அவளை பத்தி சொல்லனும்னா.. அவ ஒரு.." அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கீதா அவனை இடைமறித்து, "டேய்.. இரு இரு..!! ரொம்ப கஷ்டப்படாத.. அவளை பத்தி நமக்கெதுக்கு இப்போ..?? விடு.. நீயே அவளை ஒழுங்கா பாத்தியோ இல்லையோ..?? நீநீநீ..." என்று இழுத்தவள், அப்புறம் பட்டென "அந்த செருப்பை பத்தி சொல்லு.. எப்படி இருந்துச்சு அந்த செருப்பு..?? ப்ளாக்கா.. ப்ரவுனா..?? பேட்டாவா.. பேரகனா..??" என முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கவும், அசோக் இப்போது உலகமகா கடுப்புக்கு உள்ளானான். தங்கையை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான். அவளோ சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, அப்படியும் முடியாமல் கொஞ்ச சிரிப்பை உதடுகள் வழியே சிந்திக்கொண்டு, அண்ணனையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். அசோக் எதுவும் பேசவில்லை. தன் வலது உள்ளங்கையை அகலமாக விரித்து, அதையே பார்த்தான். "என்னடா.. நான் கேட்டுட்டு இருக்கேன்.. நீ கையையே பாத்துட்டு இருக்குற..??" சங்கீதா சீண்டினாள். "இங்க பாரு சங்கு.. இப்படியே ஒரு அறை வுட்டேன்னு வச்சுக்கோ.. நாலு நாளைக்கு எந்திரிக்க மாட்ட..!! காது பஞ்சர் ஆயிடும்.. அப்புறம் நீ பாடுற பாட்டை உன்னாலேயே கேட்க முடியாது..!!" அசோக் அந்த மாதிரி டென்ஷன் ஆனது சங்கீதாவுக்கு ஒரு குதுகலத்தையே அளித்தது. வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள். நாக்கை வெளியே துருத்தி பழிப்பு காட்டினாள். அசோக்கால் அவளை எதுவும் செய்ய முடியவில்லை. அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றான். என்ன செய்வது..?? அசோக்கிற்கு அப்படிப்பட்ட ஒரு நாளாக அது அமைந்துபோனது. எப்போதும் டிவியில் விளம்பரங்கள் ஓடுகையில் யாரையும் சேனல் மாற்ற விடமாட்டான். அடுத்தவர்கள் வெறுப்பாக இவனை முறைக்க, இவன் விருப்பமாக விளம்பரங்கள் பார்த்து ரசிப்பான். ஆனால் அன்று.. அந்த டிவியில் விளம்பரத்தை பார்த்ததும் எரிச்சலின் எல்லைக்கே சென்றான். "பேரகன் எந்தன் தோழன்.. எந்தன் தோழன் பேரகன்..!!" "ஷ்ஷ்ஷ்ஷ்.... அந்த சேனலை மொதல்ல மாத்துங்க தாத்தா..!!" என்று தாத்தாவிடம் எரிந்து விழுந்தான். பேரனையே ஓரிரு வினாடிகள் வியப்பாக பார்த்த தாத்தா, அப்புறம் சேனலை மாற்றினார். மாற்றப்பட்ட சேனலில் ஏதோ சீரியல் ஓடியது. அசோக் சற்றே நிம்மதியடைந்தவனாய்.. கண்களை மூடி.. தலையை சோபாவில் சாய்த்து.. அலைபாய்ந்த மனதை ஆசுவாசப்படுத்தலானான்..!! அரை நிமிடம் கூட ஆகியிருக்காது.. "இவனைலாம் செருப்பாலேயே அடிக்கணும்..!!" பாட்டி திடீரென வெறுப்பாக சொல்ல, இவன் பதறிப்போய் படக்கென நிமிர்ந்து அமர்ந்தான். "யா..யாரை சொல்ற பாட்டி..??" என்று பாட்டியை பார்த்து கலவரமாக கேட்டான். "இந்த செல்லம்மா புருஷனைத்தான் சொல்றேன்.. பாவிப்பய..!!" பாட்டி சீரியலில் வரும் கேரக்டரை சீரியஸாக திட்டினாள். அசோக் நொந்து போனவனாய் தலையை பிடித்துக் கொண்டான். இந்த மாதிரி ஆளாளுக்கு அசோக்கை போட்டு பாடாய் படுத்தி, அவனுடைய நிலையை மிகக் கவலைக்கிடமாய் ஆக்கி வைத்திருந்தனர். அவனுடைய மனது ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்தது. 'பேய் இருக்கா இல்லையா.. பாத்திருக்காய்ங்களா பாக்கலையா.. நம்பலாமா நம்பப்படாதா..?' என்று வடிவேலுவுக்கு வந்த சந்தேகம் மாதிரி, அசோக்குக்கும் 'அவ பொண்ணா பிசாஸா.. அவ மேல எனக்கு லவ் இருக்கா இல்லையா.. இதை கண்டின்யூ பண்ணலாமா வேணாமா..' என்று சந்தேகம் வந்திருந்தது. 'ஒரு நாள் பேசணும்னு நெனச்சதுக்கே செருப்பு லெவலுக்கு வந்துடுச்சே.. இதை கண்டின்யூ பண்ணினா எங்க போய் முடியும்னு தெரியலையே..??' இந்த மாதிரி குழப்பமான எண்ணங்கள் அன்றைய அவனது தூக்கத்தை வெகுவாக பாதித்தன. சரியாக உறக்கம் இல்லாமல்.. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்..!! அடுத்த நாள் காலை.. அசோக்கின் அறை..!! அசோக் அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரெஷாக இருந்தான். ஆடை அணிந்து கொண்டிருந்தான். சட்டையை அணிந்து பட்டன்கள் இட ஆரம்பித்தபோது, அறைக்கதவு தட்டப்பட்டது. பட்டன் போடுவதை நிறுத்தி, பனியன் மூடிய மார்புடனே அசோக் சென்று கதவை திறந்தான். பாரதி வெளியே நின்று கொண்டிருந்தாள். "என்ன மம்மி..??" "பால் இல்லடா.. காலைல பால் பாக்கெட் போடாமலே போயிருக்கான்.. என்னன்னு தெரியல..!! உனக்கு காபி வேணும்னா சொல்லு.. மம்மி கடைல போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வரேன்..!!" "இல்ல மம்மி.. காபிலாம் ஒன்னும் வேணாம்.. நீ டிபன் ரெடி பண்ணு.. எனக்கு டைமாச்சு.. சாப்பிட்டு கெளம்புறேன்..!!" "ம்ம்.. சரிடா..!!" சொல்லிவிட்டு நகர நினைத்த பாரதி, எதேச்சையாக மகனின் தலையை பார்த்தாள். உடனே அவளுடைய முகத்தில் ஒருவித சலிப்பும் எரிச்சலும்..!! அறைக்குள் நுழைந்தவள், அசோக்கின் தலையில் 'நறுக்' என்று ஒரு குட்டு வைத்தாள்."ஆஆஆஆ..!!! என்ன மம்மி...??" அசோக் தலையை தேய்த்தவாறே கேட்டான். "பனை மரத்துல பாதி நிக்கிற.. தலை எப்படி தொவட்டனும் கூட தெரியாதா உனக்கு..??" "அ..அதுலாம் நல்லா தொவட்டியாச்சு..!!" "என்னத்த நல்லா தொவட்டுன.. ஒரே ஈரமா இருக்கு..!!" அசோக்கின் தலைமுடியை கலைத்து விட்டவாறே சொன்ன பாரதி, "உக்காரு.. நான் தொவட்டி விடுறேன்..!!" என்று அசோக்கை தோள்ப்பட்டையை பிடித்து அமுக்கி, வலுக்கட்டாயமாக அவனை கட்டிலில் அமர வைத்தாள். அருகில் இருந்த டவலை எடுத்து அவனுடைய தலையை, ஈரம் நீங்க துவட்டி விட ஆரம்பித்தாள். "அப்படியே ஈரத்தலையோட போக வேண்டியது.. அப்புறம் இருமலு காச்சலுனு வந்து நிக்க வேண்டியது..!!" அம்மா அந்த மாதிரி அன்பான அர்ச்சனையுடன் தலை துவட்டிவிட, அசோக்குக்கு திடீரென குழந்தையாகிப் போன மாதிரியான உணர்வு..!! 'மனதில் இருக்கும் குழப்பத்தை அம்மாவிடம் சொல்..' என்று அந்த குழந்தை மனம் அவனை உந்தித் தள்ளியது. பாரதியின் கை அசைவுக்கு ஏற்ப, அவனது தலையும் அப்படியும் இப்படியுமாக ஆடிக்கொண்டிருக்க, அதனுடனே மெல்லிய குரலில் ஆரம்பித்தான். "மம்மீ..!!!" "ம்ம்..!!" "உன்கிட்ட ஒன்னு கேக்கணும்..!!" "என்ன..??" "அ..அந்தப் பொண்ணு இல்ல.." என்று இழுத்தான். "எந்தப் பொண்ணு..??" "அ..அதான்.. அன்னைக்கு நீ கேட்டியே.. 'இதுவரை யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினது இல்லையா..'ன்னு.. அப்போ என் மனசுல பட்டுன்னு ஞாபகத்துக்கு வந்த பொண்ணு..!!" அசோக் அந்த மாதிரி குழந்தை குரலில் குழைந்தவாறே சொல்ல, பாரதிக்கு சுரீர் என்று இருந்தது. மகன் பேசப் போகிற விஷயத்தின் தீவிரத்தை உடனடியாய் உணர்ந்து கொண்டாள். தலை துவட்டுவதை ஓரிரு வினாடிகள் நிறுத்தி வைத்திருந்தவள், இப்போது மீண்டும் அதை தொடர்ந்தாள். கவனம் முழுவதும் மகன் பேசப் போகிற விஷயத்தில் நிலைத்திருக்க, குரலில் மட்டும் அந்த ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக கேட்டாள். "ஓ..!! யாரு அவ..??" "அவ பேர்லாம் தெரியாது மம்மி.. அவ கூட நான் பேசினது கூட கிடையாது..!!" "ம்ம்.. அப்புறம்..??" "நாங்க டெயிலி லஞ்ச் சாப்பிட போவோம்ல.. அந்த ஃபுட் கோர்ட்கு அவளும் வருவா.. அப்போ அவளை அடிக்கடி பாத்திருக்கேன்..!!" "ஓ..!! சரி.. இப்போ அவளுக்கு என்ன பிரச்னை..??" "ஐயோ.. அவளுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல மம்மி..!!" "அப்புறம்..??" "அ..அது.. எப்படி சொல்றது...?? ம்ம்ம்ம்.... அன்னைக்கு நீ சொன்னேல..?? 'யாராவது பொண்ணை பாத்து.. அழகா இருப்பான்னு தோணிருக்கும்.. நல்ல பொண்ணா இருக்காளேனு தோணிருக்கும்.. பேசிப்பழகலாம்னு தோணிருக்கும்..' அப்டின்னு மூணு விஷயம் சொன்னேல..??" "ஆமாம்..!!" "அந்த மூணுமே எனக்கு அவளை பாத்து தோணுச்சு மம்மி..!!" "ம்ம். நல்ல விஷயந்தான..??" "ஆ..ஆனா.." "ஆனா..??" "ஆனா.. இப்போ.. நேத்துல இருந்து.. மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!" "என்ன சந்தேகம்..??" "அந்த மூணு விஷயத்துல ரெண்டாவது விஷயம்..!!" "எது..?? அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இல்லையான்னா..??""அ..அப்படி சொல்ல முடியாது..!! அந்தப் பொண்ணு எனக்கு ஒத்து வருவாளா இல்லையான்னு..!!" "ஓ.. ஏன் அப்படி நெனைக்கிற..??" பாரதி அப்படி கேட்கவும், அசோக்கும் ஏதோ ஒரு ஆர்வத்தில் "செருப்ப எடுத்து இப்படி காட்டுறா மம்மி.. இப்படி.. இங்க.. மூஞ்சிக்கு முன்னாடி..!!" என்று தன் முகத்துக்கு நேராக கை நீட்டிக்காட்டி சொல்லியே விட்டான். பாரதி சற்றே அதிர்ந்து போனாள். "யாரு..?? உன் மூஞ்சிக்கு முன்னாடியா..??" என்று அவள் அவசரமாய் கேட்கவும், அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான். "ஐயையே.. எ..என் மூஞ்சிக்கு முன்னாடி இல்ல மம்மி..!! யா..யாரோ.. வேறொரு பையன்.. அவன் மூஞ்சிக்கு முன்னாடி..!! நான் கொஞ்சம்.. தூரமா இருந்து.. இதெல்லாம் பாத்துட்டு இருந்தேன்..!!" "ஓ..!! அதுசரி.. அவ ஏன் அப்படி பண்ணினா..??" இப்போது அசோக் முந்தைய நாள் நடந்த அந்த சம்பவத்தை, பாரதிக்கு பொறுமையாக எடுத்துரைத்தான். நண்பர்கள் வைத்த பந்தயத்தையும், செருப்பு நீண்டது தன் முகத்துக்கு முன்புதான் என்பதையும் மட்டும் மறைத்து விட்டான். மகனுக்கு தலை துவட்டுவதை நிறுத்திவிட்டு, எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டாள் பாரதி. கேட்டு முடித்து சில வினாடிகள் யோசனையாய் இருந்தவள், பிறகு அசோக்கை ஏறிட்டு நிதானமான குரலில் கேட்டாள். "ம்ம்ம்...!! சரி.. இதுக்கும்.. அந்த பொண்ணு உனக்கு ஒத்துவருவாளான்னு உனக்கு சந்தேகம் வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??" "என்ன மம்மி இப்படி கேக்குற..?? ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல.. அவ்வளவு பேர் பாத்துட்டு இருக்குறப்போ.. ஒருத்தனை செருப்பை கழட்டி அடிக்கப் போறா..!! யப்பா.. எனக்கு அவளை பாக்குறதுக்கே.. அப்படியே திக்குன்னு இருந்தது..!!" அசோக் அவ்வாறு ஒரு மிரட்சிப் பார்வையுடன் சொல்ல, "ஹாஹாஹாஹாஹாஹா..!!" பாரதி சிரித்தாள். "ப்ச்.. என்ன மம்மி.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற..??" "பின்ன என்ன..?? நீ சொல்றதை கேட்டா சிரிப்புதான் வருது..!! ம்ம்ம்ம்.... அம்மா ஒன்னு சொல்லவா..??" "என்ன..??" "பாவம் செஞ்சவங்கதான் சாமியை பாத்து பயப்படனும்.. தப்பே செய்யாதவங்க எதுக்கு பயப்படனும்..?? நீ பயப்படுறதும் எனக்கு அந்த மாதிரிதான் இருக்கு..!! மனசுல தப்பான எண்ணம் இருக்குறவங்கதான்.. அந்தப் பொண்ணை கண்டா மெரளனும்.. நீ எதுக்கு மெரள்ற..?? நல்லவங்களுக்கு சாமி எப்போவுமே கைக்கொழந்தை மாதிரி..!!" "என்ன மம்மி நீ.. அவளை போய் சாமி கூட கம்பேர் பண்ணிட்டு இருக்குற..??" "ஏன்.. என்ன தப்பு..?? தப்பை தட்டிகேக்குற எல்லாருமே சாமிக்கு சமானம்தாண்டா..!!" "அப்போ.. அவ அந்த மாதிரி நடந்துக்கிட்டது சரிதான்னு சொல்றியா..??" "அதுல என்ன உனக்கு சந்தேகம்..?? அம்மா இன்னொன்னு சொல்லவா..??" "சொல்லு..!!" "ஆம்பளைங்களுக்கு அழகுன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே.. தெரியுமா..??" "ம்ஹூம்..!!" "அதாண்டா.. ஏதோ புருஷலட்சணம்னு சொல்வாங்க..!!" "ஆமாம்.. உத்தியோகம் புருஷலட்சணம்..!!" "ம்ம்ம்.. கரெக்ட்..!! ஆம்பளைங்களுக்கு அழகு உத்தியோகம்.. அதாவது உழைப்பு...!! அதுமாதிரி பொம்பளைங்களுக்கு எது அழகு தெரியுமா..??" "எது..??" "தைரியம்..!!!!!" பாரதி சற்றே அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "ம்ம்..!!" "தைரியமா இருக்குறவதாண்டா பொம்பளை.. அந்த தைரியமே அவளுக்கு ஒரு தனி அழகை கொடுக்கும் தெரியுமா..!! அவ்வளவு பேர் இருக்குற ஒரு பொது எடத்துல.. ஒருத்தன் செஞ்ச தப்பை தாங்கிக்க முடியாம செருப்பை கைல எடுத்தா பாத்தியா.. அவதாண்டா பொண்ணு... எந்தப் பொண்ணுக்குமே அந்த தைரியம் அவசியமா இருக்கணும்..!!" "ம்ம்..!!"அம்மா சொல்கிற விஷயங்கள் அசோக்கின் புத்திக்குள் இறங்கிக் கொண்டிருக்க, அவன் அமைதியாக 'உம்' கொட்டிக் கொண்டிருந்தான். பாரதியோ இப்போது பட்டென பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள். எங்கேயோ பார்த்தபடி தனது இளமைப்பருவ அனுபவத்தை மகனிடம் சொன்னாள். "அப்போ... எங்க வீட்டுக்கு பின்னாடி வைகை ஆறு ஓடும் அசோக்.. பக்கத்துல இருக்குற ஆத்துக்கு தண்ணி எடுக்குறதுக்கு கூட.. எங்க வீட்டுல என்னை தனியா அனுப்ப மாட்டாங்க..!! அதே பாரதிதான்.. ஒத்தை ஆளா.. உசுரை கைல புடிச்சுட்டு.. தன்னந்தனியா மெட்ராஸ் வந்து சேர்ந்தேன்..!! எப்படி..?? தைரியம்..!!!" "ம்ம்..!!" "உங்க தாத்தா வீட்டுல.. காம்பவுண்டு சுவர் நல்லா ஏழடி உசரத்துக்கு இருக்கும்.. சுவர் மேல கொஞ்சம் கூட இடைவெளி விடாம.. கண்ணாடி பீங்கான் வச்சு பூசிருப்பாங்க.. அந்த சுவரை ஏறி குதிக்கனும்னா எவ்வளவு ரத்தத்தை கீழ சிந்தனும் தெரியுமா..?? கை கால்லாம் கிழிஞ்சுபோய்.. ரத்தக்களரியாதாண்டா உன் அப்பாகிட்ட வந்து சேர்ந்தேன்..!! ஏன்..?? தைரியம்..!!!" "ம்ம்..!!" "அன்னைக்கு எனக்கு அந்த தைரியம் இருந்ததாலதான்.. இன்னைக்கு எனக்கு கைல வச்சு தாங்குற புருஷன் கெடைச்சிருக்காரு.. கண்ணுமணிக மாதிரி ரெண்டு புள்ளைங்க கெடைச்சிருக்கீங்க.. கவலைன்னா என்னன்னே தெரியாத மாதிரி ஒரு குடும்பமும், வாழ்க்கையும் கெடைச்சிருக்கு..!!" பாரதி மிக உணர்ச்சிவசப்பட்டுப்போய் சொல்லிக்கொண்டிருந்தாள். அசோக்கோ எந்த உணர்ச்சியும் காட்டாமல், அந்தப் பெண்ணின் நினைவில் மூழ்கியிருந்தான். கொஞ்ச நேரம் இடைவெளிவிட்ட பாரதி மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் ஆரம்பித்தாள். "ம்ஹ்ஹ்ஹ்ம்...!! உங்க தாத்தா.. பச்சைக்கலர்ல பட்டையா ஒரு பெல்ட் இடுப்புல கட்டிருப்பாரு.. ட்ரன்க் பெட்டிக்குள்ள நான் ஒளிச்சு வச்சுருந்த போஸ்ட் கார்ட்லாம் அவர் கைல கெடைச்ச அன்னைக்கு என்ன செஞ்சாரு தெரியுமா.. அந்த பெல்ட்டை கழட்டி.." "ஐயையையெ... போதும் மம்மி.. மொக்கை தாங்க முடியல..!!" அசோக் இப்போது பொறுமையில்லாமல் சொன்னான். பாரதி சலிப்பானாள். "ம்க்கும்... ஏண்டா சொல்ல மாட்ட.. நான் பட்ட வேதனைலாம் உனக்கு மொக்கையாத்தான் தெரியும்..!!" "ப்ச்... உன் கதையை விடு மம்மி.. அந்தப் பொண்ணை பத்தி சொல்லு..!!" "இன்னும் அவளை பத்தி என்ன சொல்லனும்..?? நான் சொல்லவேண்டியதுலாம் சொல்லிட்டேன்.. இனிமே நீதான் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும்..!! நான் போய் சட்னியை அரைக்கிறேன்.. நீ சட்டுன்னு கெளம்பி வா..!!" சொன்ன பாரதி அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தாள். வாசலை அடைந்தவள் ஒருகணம் தயங்கி நின்றாள். பிறகு அப்படியே திரும்பி மகனை பார்த்து, புன்னகையுடன் சொன்னாள். "எனக்கென்னவோ.. அந்தப் பொண்ணு மருமகளா வர்றதுக்கு.. இந்த வீடு குடுத்து வச்சிருக்கணும்னு தோணுது அசோக்..!! உன்னால முடிஞ்சா.. அந்த பாக்கியத்தை இந்த குடும்பத்துக்கு குடு..!!" அம்மா அந்தமாதிரி தெள்ளத்தெளிவாக சொல்ல, அசோக்கும் இப்போது மனக்கலக்கம் நீங்கியவனாய் அவளைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அந்தப் பெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளுடன் பேசுகிற வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அவளை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிட்டுமா என்று ஒரு கேள்வியும் கூடவே மனதில் எழுந்தது. எனக்கென விதிக்கப்பட்டவளாய் இருந்தால், நிச்சயம் என் எதிரே தோன்றுவாள் என்று அந்த மனதை சமாதானம் செய்தான். 'அவளை அனுப்பி வை..!!' என்று ஆண்டவனிடம் ஒருமுறை வேண்டிக் கொண்டான். அன்று மதியம். அதே ஃபுட் கோர்ட். அசோக்கும் நண்பர்களும் அப்போதுதான் உணவருந்த ஆரம்பித்திருந்தார்கள். முதல் வாய் எடுத்து வைத்து, சுவைத்து பார்த்ததுமே அசோக் சலிப்பாக சொன்னான். "ப்ச்.. பார்டா இவனுகளை.. பாஸ்தால உப்பே போடல.. சப்புன்னு இருக்கு..!!" அசோக் சொல்ல, வேணு அதற்காவே காத்திருந்தவன் மாதிரி "ம்ம்.. நீ சொரணை கெட்ட பயன்னு அவனுகளுக்கும் தெரிஞ்சு போச்சு போல இருக்கு மச்சி..!!" என்று பட்டென கிண்டலாக சொன்னான். "ஹாஹா.. ஹாஹா..!!" கிஷோரும் சாலமனும் சிரித்தார்கள். அசோக் நிஜமாகவே கடுப்பாகிப் போனான். "ங்கொய்யால.. கொலைகாரனாக்காதிங்கடா என்னைய..!! நல்லா உங்க ஆசை தீர.. ஒருநாள் ஃபுல்லா என்னை ஓட்டிட்டிங்க.. போதும்.. அத்தோட விட்ருங்க..!!" என்று சூடாக சொன்னான். "ஒய்.. என்ன... ஓவரா சலம்புற..?? ஒருநாள் ஓட்டுனதுக்கே உனக்கு இவ்வளவு எரியுதா..?? நாங்கள்லாம் உன்கிட்ட எவ்வளவு வாங்கிருப்போம்..?? எங்களுக்கு எவ்வளவு எரியும்.??" "ஹ்ஹ.. சும்மாவா ஓட்டுனேன்.. நீங்க பண்ணின காமடி அப்படி..!!" அசோக் டேபிளில் இருந்த அந்த துளையிட்ட சீசாவை எடுத்து, பாஸ்தாவில் உப்பு தூவிக்கொண்டே சொன்னான். "அப்போ நீ பண்ணினது காமடி இல்லையா..?? நாங்களாவது லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் அவளுகளுக்கு பயந்து சாகுறோம்..!! நீ பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே.. பின்னங்கால் பிடரில அடிக்க ஓடி வந்தியே மச்சான்.. அந்த காமடியை எங்க போய் சொல்றது..?? நாங்க அப்படித்தான் ஓட்டுவோம்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!!" - இது சாலமன். "சரிடா.. ஓட்டுங்கடா..!! ஆனா.. ஓட்டுறது ஒரு அர்த்தத்தோட ஓட்டுங்க.. சும்ம்ம்மா ஏதாவது சொல்லனுமேனு சொல்லாதீங்க..!!" "இப்போ என்ன நாங்க ஓட்டுனதுல உனக்கு அர்த்தம் புரியல..??" "ம்ம்ம்...?? சரி.. நேத்து நான் பயந்து போய் திரும்ப வந்துட்டேன்.. ஒத்துக்குறேன்..!! ஆனா.. சொரணை கெட்ட பயன்னு சொன்னா என்ன அர்த்தம்..?? அப்படி என்ன சொரணை கெட்டு போயிட்டேன்..??" "பின்ன என்ன..?? நீதான நேத்து பெரிய புடுங்கி மாதிரி.. 'அந்தப் பொண்ணை லவ் பண்ண வச்சு காட்டுறேன் பாருங்கடா'னு.. சவால் விட்டுட்டு போன..?? 'சப்பை.. சப்பை மேட்டர்'னு.. சவடாலா பேசுன..?? அப்புறம் பேசாம பம்மிட்டு.. ஆல் ஹோல்ஸையும் அமுக்கி பொத்திட்டு திரும்ப வந்துட்டா.. உன்னை சொரணை கெட்ட பயன்னு சொல்லாம வேற என்ன சொல்றது..?? பேசுனா.. பேசுன மாதிரி செய்யணும்டா..!!" "ஹேய்..!!! கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்கடா..!! கையில செருப்பை எடுத்து என் மூஞ்சிக்கு முன்னாடி ஆட்டுறா.. காளி மாதிரி அப்படியே ஆவேசமா நிக்கிறா.. அவகிட்ட போய் 'ஹாய்.. ஹவ் ஆர் யூ.. ஐ லைக் யூ..' அப்படின்னு இளிச்சுக்கிட்டே டயலாக் பேச சொல்றீங்களா..??" "பேசிருக்கணும் மச்சி.. சொரணை இருக்குறவனா இருந்தா பேசிருக்கணும்.. அந்த செப்பலால ரெண்டு அப்பு வாங்கிருந்தா கூட தப்பே இல்ல..!!" சாலமன் கிண்டலாக சொல்ல, "ம்ம்.. உனக்கு வேணா உன் ஆளுட்ட வாங்கி வாங்கி.. செருப்படி படுறதுலாம் சகஜமாகிப் போயிருக்கலாம்.. என்னாலலாம் முடியாது..!! நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்தா.. அதான் பேசாம பேக் அடிச்சுட்டேன்.. வேணுன்னா இன்னைக்கு அவ வரட்டும்.. கண்டிப்பா போய் பேசுறேன்.. அவளை லவ் பண்ண வச்சு காட்டுறேன்..!!" அசோக் பொறுமையாக பதிலளித்தான். ______________________________"அவதான..?? வருவா வருவா..!! நல்லா வாயை ஆ'ன்னு பொளந்துட்டு உக்காந்திரு..!!" "நான் வாயை பொளந்துட்டு உக்கார்றது இருக்கட்டும்.. நீ மொதல்ல வாயை மூடிட்டு சாப்பிடு..!!" அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான். ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாய் பாஸ்தா அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டான். நண்பர்களை பார்ப்பதை தவிர்த்து, பார்வையை வேறெங்கோ செலுத்தியபடியே சாப்பிட்டான். மற்றவர்களும் இப்போது எதுவும் பதில் பேசவில்லை. அமைதியாக அவரவர் உணவை உண்ண ஆரம்பித்திருந்தனர். ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. சாலமன் மீண்டும் கேலியான குரலில் அசோக்கிடம் சொன்னான். "மானகெட்ட மாப்ள.. அந்த சால்ட் டப்பாவை கொஞ்சம் எடுக்குறியா..??" அவ்வளவுதான்.. அசோக் படுடென்ஷனாகிப் போனான்..!! "த்தா.. சொல்லிட்டே இருக்குறேன்..!! மசுரு..!!" என்று கத்தியவாறு உப்பு டப்பாவை எடுத்து சாலமனின் அடிவயிறை குறி பார்த்து எறிந்தான். சாலமன் அவசரமாய் கைகளை நகர்த்தி, அடி படாதவாறு அந்த டப்பாவை கேட்ச் பிடித்துக் கொண்டான். "ஹேய்.. ஏண்டா இப்படி டென்ஷன் ஆகுற..??" வேணு அசோக்கிடம் சீறினான். "பின்ன என்னடா..?? சும்மா சும்மா.. சொரணை கெட்டவன், மானம் கெட்டவன்னுட்டு..?? அதான் இன்னைக்கு அவ வந்தா போய் பேசுறேன்னு சொல்லிட்டேன்ல..?? அத்தோட விடுவீங்களா...??" "ஆமாம்.. டெயிலி வர்றதுக்கு அவ என்ன ந்யூஸ் பேப்பரா..?? அவள்லாம் இனி வர மாட்டா.. அவ்வளவுதான்..!!" சாலமன் எரிச்சலாக கத்த, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கிஷோர் இப்போது வாயை திறந்தான். "ஏய்.. மேட்டர் தெரியாம பேசாதீங்கடா..!! அந்தப் பொண்ணு கண்டிப்பா வருவா..!!" கிஷோர் அந்த மாதிரி அமைதியாக சொல்லவும், இப்போது மற்ற மூன்று பேரும் திரும்பி அவனுடைய முகத்தை குழப்பமாக ஏறிட்டனர். வேணுதான் அந்த குழப்பம் கலந்த குரலிலேயே கிஷோரிடம் கேட்டான். "எ..எப்படிடா சொல்ற..??" "நம்ம பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஒரு Wi-Fi கனெக்ஷன் இருக்கு மச்சி.. நம்ம கண்ணுக்குலாம் தெரியாது அந்த கனெக்ஷன்..!!" "பு..புரியலடா..!!" "நான் அந்த பொண்ணை செலக்ட் பண்றதுக்கு முன்னாடியே.. நம்ம பையன் பலநாளா அவளை சைலண்டா சைட் அடிச்சிருக்கான்..!! உங்கள்ல யாருக்காவது தெரியுமா..?? ம்ம்..?? எனக்கும் இத்தனை நாளா தெரியாது.. எவ்வளவு பெரிய கேடின்னு பாரு இவன்..??" "ஏய்.. இ..இவன் என்னடா சொல்றான்..??" வேணுவும், சாலமனும் குழப்பமாய் அசோக்கை பார்த்தனர். அவனோ கிஷோரையே எரிச்சலாக முறைத்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்களாக சங்கீதாவிடம் சொல்கிற விஷயங்கள்தான் கிஷோருக்கும் சென்றுவிடும். இன்று அம்மாவிடம் பேசிய விஷயமும் அவனை வந்து அடைந்திருக்கிறதே என்ற எண்ணத்தில் வந்த எரிச்சல் அது. "என்னடா மொறைக்கிற..??" கிஷோர் அசோக்கை சீண்டும் விதமாய் கேட்டான். "உளறிட்டாங்களா உன்கிட்ட..??" அசோக்கின் குரலில் ஒருவித கடுப்பு கலந்திருந்தது. "டேய்.. ஆன்ட்டியை கொறை சொல்லாத.. அவங்க நெலமைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாரு..!! இன்னைக்கு எங்கிட்ட பேசுறப்போ எவ்வளவு சந்தோஷமா பேசினாங்க தெரியுமா.. அவங்க இவ்வளவு சந்தோஷப்பட்டு நான் பாத்ததே இல்ல..!! அந்த பொண்ணை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாங்க.. 'என் புள்ளை அந்த பொண்ணை லவ் பண்றான் போல இருக்கு.. நீங்க ஃப்ரண்ட்ஸ் தடிப்பசங்கள்லாம் முடிஞ்ச வரை அந்த லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுங்கடா'ன்னு கேட்டுக்கிட்டாங்க..!!" "லவ்வாஆஆ..????" வேணுவும் சாலமனும் வாயை பிளந்தனர். "ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா..!!" அசோக் பலவீனமாக மறுத்தான். "இருக்கு மச்சி.. உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கு..!! அப்புறம் எப்புடி கரெக்டா அவளை நான் செலக்ட் பண்ணி காட்டனும்..??" "ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு அவ கரெக்டா செருப்பை தூக்கி காட்டனும்..??" "ப்ச்.. எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும்டா..!! நீ வேணா பாரு.. அவ கண்டிப்பா வருவா..!!' "ம்.. ம்.. வந்தா பாத்துக்கலாம்..!!" அசோக் அசால்ட்டாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சாலமன் திடீரென உற்சாகமாக கத்தினான். "மச்சீஈஈ..!!!!" "என்னடா..??" "வந்துட்டா மச்சி.. வந்துட்டா..!!" சாலமன் சொல்லவும், இப்போது அனைவரும் படக்கென திரும்பி அவன் பார்வை சென்ற திசையை பார்த்தார்கள். அங்கே அவள் வந்துகொண்டிருந்தாள். நேற்று மாதிரியே கூந்தலும், காதுவளையமும் காற்றில் ஆட.. குதிரை கணக்காக வந்து கொண்டிருந்தாள்..!! டி-ஷர்ட் ஜீன்ஸ்.. தோளில் பேக்.. கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் ப்ளேட்.. அதன்மேல் ஒரு சிறிய உணவு ப்ளேட்..!! அவளை பார்த்த மாத்திரத்திலேயே அசோக்கின் இதயம் கிடந்தது தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்திருந்தது. நாடித்துடிப்பு எல்லாம் கன்னாபின்னாவென்று எகிற ஆரம்பித்தது. ஆச்சரியம், சந்தோஷம், நிம்மதி, பயம் என பலவித உணர்வுகள் கலந்துகட்டி அவனை தாக்கின. பதித்த பார்வையை எடுக்க மனமில்லாமல், அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இவர்களை கடந்து சென்றாள். ஓரமாக யாருமற்று கிடந்த அந்த டேபிளில் சென்று அமர்ந்து கொண்டாள். பேகை பக்கத்து சேரில் வைத்துவிட்டு, ப்ளேட்டை பார்த்து குனிந்து கொண்டாள். இவர்கள் நால்வரும் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க, வேணுதான் முதலில் வாய் திறந்தான். "மச்சீஈஈ.. என்ன டைமிங்டா இது..?? சான்சே இல்ல போ..!! நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மைடா.. இவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு வயர்லஸ் நெட்வொர்க் இருக்குது மச்சி..!!" "ஃபேக்ட்.. ஃபேக்ட்.. ஃபேக்ட்..!!" சாலமனும் ஆமோதித்தான். "ஏய்.. போடா.. போய் அவகிட்ட பேசு.. போ..!!" கிஷோர் அசோக்கை தூண்டினான். "ஆமாம் மச்சி.. போடா.. போய் பேசு.. எந்திரி..!!" வேணும், சாலமனும் கிஷோருடன் சேர்ந்து கொண்டார்கள். "ஹேய்.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்குதுடா..!!" அசோக்கிற்கு நிஜமாகவே உதறலாக இருந்தது. "ப்ச்.. ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத மச்சி..!! நீ சொன்ன மாதிரி.. நேத்து அவ ஏதோ பேட் மூட்ல இருந்திருக்காடா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டா..!! இன்னைக்கு நல்ல மூட்ல இருக்கா.. தைரியமா போய் பேசு..!!" என்றான் வேணு. "அவ நல்ல மூட்ல இருக்கான்னு உனக்கு எப்படி தெரியும்..??" "எ..எல்லாம்.. ஒரு சில அறிகுறிகளை வச்சு சொல்றதுதான்..!! நேத்து அவ என்ன கலர் டி-ஷர்ட் போட்டுட்டு வந்தா..??" "ப்ளாக்..!!" "ப்ளாக்னா என்ன அர்த்தம்..?? துக்கம்.. தடங்கல்… அமங்களம்..!! இன்னைக்கு பாரு.. வொயிட் டி-ஷர்ட்.. மங்களகரமா வந்திருக்கா.. நல்ல அறிகுறிடா.. போய் பேசு போ..!!" "வெள்ளை.. மங்களகரமா..?? மஞ்சளைத்தான அப்படி சொல்வாங்க..??" "ஓ..!! அப்போ வெள்ளைக்கு என்ன..?? ஆங்.. சாந்தம்.. சமாதானம்..!! அவ நல்ல மூட்ல இருக்கான்றதுக்கு இதைவிட வேற என்னடா ப்ரூஃப் வேணும்..?? கெளம்புடா.. டைம் வேஸ்ட் பண்ணாத..!!" ஏதேதோ லாஜிக் எல்லாம் சொல்லி, நண்பர்கள் மூவரும் அசோக்கை ஏற்றிவிட, அவனோ இன்னும் தயக்கத்துடனே அமர்ந்திருந்தான். நேற்று பார்த்த அவளுடைய ஆவேசமும், அந்த ஒற்றைக்கால் செருப்பும், இன்னுமே அவனுடைய மூளையை தாக்கி இம்சை செய்தன. உடலிலும் மனதிலும் ஒரு படபடப்பை கிளறி விட்டிருந்தன. சில வினாடிகள் அவ்வாறு தடுமாறியவன், அப்புறம் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்தான். "மச்சீஈஈ.. எல்லாம் எனக்காக நல்லா வேண்டிக்கங்கடா..!!" சொல்லிவிட்டு அசோக் நகர முயல, "ஏய் ஏய்.. இந்தாடா.. இதையும் எடுத்துட்டு போ..!!" என்று கிஷோர் பாஸ்தா ப்ளேட்டை அவன் கையில் திணித்தான். "டேய்... நே..நேத்து மாதிரி எதுவும் ஆயிடாதுல..??" அசோக் பரிதாபமாக கேட்க, "ஐயே... தைரியமா போ மச்சி..!! சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல.. எல்லாம் நான் அப்போவே நல்லா பாத்துட்டேன்..!!" உறுதியான குரலில் சொன்னான் சாலமன். "ந..நல்லா பாத்துட்டியா..?? எதை..??" அசோக் குழப்பமாய் நெற்றி சுருக்கினான். "அவ காலை..!! இன்னைக்கு ஷூ போட்டுட்டு வந்திருக்கா மச்சி.. சத்தியமா நேத்து மாதிரி நடக்க சான்சே இல்ல..!!" சாலமன் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல, அசோக் அவனை எரித்து விடுவது போல முறைத்தான். கையிலிருந்த பாஸ்தாவை அப்படியே அவன் தலையில் கொட்டிவிடலாமா என்று யோசித்தான். அப்புறம் 'மவனே.. உன்னை வந்து வச்சுக்குறேன்..!!' என்று சன்னமான குரலில் அவனை எச்சரித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.தடதடத்த இதயத்துடனே நடந்து சென்று, அந்தப்பெண் அமர்ந்திருந்த டேபிளை நெருங்கினான். அருகே நிழலாடவும், அவள் தலையை நிமிர்த்தி இவனை ஏறிட்டாள். அவளுடைய திராட்சை விழிகளில், இப்போது தன் பிம்பம் விழுந்திருக்கிறது என்ற உணர்வே, அசோக்கின் மனதை சில்லிட்டுப்போக வைத்தது. அவன் இப்போது ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தியவாறே, "ஹாய்..!!!!" என்று இளித்தான். அவள் இவனை ஒருவித சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை முறைக்கிறாளோ என்று கூட அசோக்குக்கு தோன்றியது. புருவத்தை ஒருமாதிரி உயர்த்தி, 'என்ன..??' என்று அந்த புருவ அசைவாலேயே கேட்டாள். "அ..அது.. ஆக்சுவலா.. அ..அங்க எங்கயுமே உக்காரதுக்கு இடம் இல்லங்க.. இஃப் யூ டோன்ட் மைண்ட்.. இ..இங்க நான் உக்காந்துக்கலாமா..??" அசோக் தட்டு தடுமாறி கேட்டான். அவள் எதுவுமே சொல்லவில்லை. ஓரிரு வினாடிகள் அவன் முகத்தையே அமைதியாக பார்த்தவள், பிறகு மீண்டும் தனது தட்டை பார்த்து குனிந்து கொண்டாள். அசோக்கும் இப்போது தைரியம் பெற்றவனாய் அவளுக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்துகொண்டான். பாஸ்தாவை ஒரு ஸ்பூன் அள்ளி வாய்க்குள் தள்ளியவன், மெல்ல தலையை நிமிர்த்தி எதிரே இருந்தவள் மீது பார்வையை வீசினான். அவள் இவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை. சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள். மழுங்கிப்போன கத்தியால் பிஸ்ஸாவை துண்டம் செய்வதும், ஃபோர்க்கால் அந்த துண்டை குத்தி எடுத்து வாய்க்குள் திணிப்பதும், உதடுகள் அழகாக அசைய அந்த உணவை சுவை பார்ப்பதுமாக இருந்தாள். மேலும் சில வினாடிகள்..!! பிறகு அவள் ஒருமுறை எதேச்சையாக இவன் முகத்தை ஏறிட்ட போது, அசோக் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவசரமாக சொன்னான். "ஹாய்..!! ம்ம்ம்ம்... எ..எனக்கு.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..!!" அவள் இப்போது நெற்றியை சுருக்கி 'என்ன..?' என்பதுபோல இவனை பார்க்க, அசோக்கே தொடர்ந்தான். "ஆ..ஆக்சுவலா நான் ஒரு த..தத்தி.. எனக்கு இதுலாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "வாட்..??" அவள் இடைமறித்து கேட்டாள். "இ..இல்லைங்க.. ஆக்சுவலா.." "ஹலோ.. கொ..கொஞ்சம் சத்தமா பேசுறீங்களா.. ப்ளீஸ்..?? எ..எனக்கு காதுல கொஞ்சம் ப்ராப்ளம்.. காது சரியா கேட்காது..!!" அவள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, பரிதாபமான குரலில் சொல்ல, அசோக் இப்போது மெலிதாக அதிர்ந்தான். 'என்னது..?? காது.. கேக்காதா..?? இது என்னடா புதுப்பிரச்னை..??' என்று ஓரிரு வினாடிகள் தடுமாறினான். அவளை ஒருமுறை இரக்கமாக ஒருபார்வை பார்த்தான். அப்புறம் உடனடியாய் சமாளித்துக் கொண்டு, சற்றே சத்தமான குரலில் மீண்டும் ஆரம்பித்தான். "ஒ..ஒன்னுல்லங்க.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. நான் ஒரு.." "இல்லைங்க.. எனக்கு சுத்தமா கேக்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா.. ப்ளீஸ்..!!" அவள் கெஞ்சலாக சொல்ல, குழம்பிப்போன அசோக் "ஹையோ.. நான் ஒரு தத்தின்னு சொன்னேங்க..!!" என்று கத்தியே விட்டான். உடனே அந்த இடத்தில் சட்டென்று ஒரு நிசப்தம்..!! அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை சுற்றிய ஐந்தாறு டேபிளில் அமர்ந்திருந்தவர்கள்.. சாப்பிடுவதையும் பேசுவதையும் நிறுத்திவிட்டு.. சடக்கென திரும்பி அசோக்கை பார்த்தார்கள்..!! அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை..!! 'எல்லாரும் ஏன் என்னையே பார்க்கிறார்கள்..??' என.. சிலவினாடிகள் திருதிருவென விழித்தவனுக்கு.. அப்புறம்தான் 'தானே தன்னைப் பற்றி கேவலமாக சொல்லி கத்திவிட்டோம்' என்ற உண்மை உறைத்தது..!! "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" சிரித்தது வேறு யாரும் அல்ல.. இவனுக்கு எதிரே அமர்ந்திருந்தவள்தான்..!! அவளுடைய பற்கள் எல்லாம் பளீரிட.. எளிறுகள் எல்லாம் பளிச்சென தெரிய.. ஒரு கையால் வயிறை பிடித்தவாறு.. இவனைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அசோக்கிற்கு லேசாக அடிவயிறில் கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! 'என்ன இது.. ஆரம்பமே ஒன்னும் சரி இல்லையே..??' என்று விளக்கெண்ணெய் குடித்துவிட்டவன் மாதிரி 'பே' என்று விழித்தான். எல்லோரும் இன்னும் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அசோக் அவர்கள் எல்லாரையும் தனித்தனியாக பார்த்து ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தி, அவரவர்களின் பார்வையை திருப்பிக் கொள்ள செய்தான். "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" அவள் இன்னும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். அசோக் இப்போது சற்றே கடுப்பாக அவளை பார்த்தான். "ஹலோ ஹலோ.. போதுங்க.. நிறுத்துங்க..!!" "ஹையோ.. கடவுளே.. முடியல என்னால.. ஹாஹா..!!" "ஷ்ஷ்... ப்பா.. ஏங்க இப்படிலாம்..??" "எப்படிலாம்..??" அவள் இப்போது சிரிப்பை நிறுத்திவிட்டு இவனை கூர்மையாக பார்த்தாள். "உங்களுக்கு காது நல்லா கேட்குந்தான..??" அசோக் சற்றே எரிச்சலுடன் கேட்க, "கண்டுபிடிங்க பாக்கலாம்..!! உங்களுக்கு மூளை நல்லா வேலை செய்யுந்தான..??" அவள் கிண்டலாகவே பதில் சொன்னாள். "என்னங்க நீங்க.. வந்ததுல இருந்து ஏடாகூடமாவே பேசிட்டு இருக்கீங்க..??" "ம்ம்.. நீங்களுந்தான் வந்த விஷயத்தை மறந்துட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க..??" "ஹையோ.. அதைத்தாங்க சொல்ல வந்தேன்.. அதுக்குள்ள நீங்க.." "சரி.. இப்போ சொல்லுங்க..!!" அவள் படக்கென சொல்லிவிட்டு அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்க்க, "அ..அது.. நான் என்ன சொல்ல வந்தேன்னா.. ஆக்சுவலா நான் ஒரு தத்.." என்று ஆரம்பித்த அசோக் பட்டென நிறுத்தி, "இல்ல.. நான் வேற எங்கயாவது இருந்து ஆரம்பிக்கிறேன்..!!" என்று பரிதாபமாக சொன்னான். "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" "ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!!" "சரி சிரிக்கல.. மேல சொல்லுங்க..!!" அப்படி சொன்னாலும், அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்தியவாறு சிரித்துக் கொண்டேதான் இருந்தாள். அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஆரம்பத்திலேயே அவள் செய்த கலாட்டா, அவனுக்குள் ஒரு படபடப்பை கிளப்பி விட்டிருந்தது. பேச வேண்டும், ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று குழம்பினான். பிறகு அந்த குழப்பத்துடனே.. "மொ..மொதல்ல ரெண்டு விஷயங்க.." என்று ஆரம்பித்தான்.
"என்ன..??" "ஒன்னு... நா..நான்.. நான் ரொம்ப ரொம்ப அன்பானவன்ங்க..!! ரெண்டு.. எ..என்னை கட்டிக்கப் போற பொண்ணை ரொம்ப பத்திரமா.. ரொம்ப பாதுகாப்பா பாத்துப்பேன்..!!" "பாதுகாப்பா பாத்துப்பிங்களா..?? ஹ்ஹ.. அதுலாம் ஒரு பெரிய விஷயமாங்க..??" அவள் அசால்ட்டாக சொல்ல, "என்னங்க இப்படி சொல்லிட்டிங்க..??" அசோக் வியப்பாக கேட்டான். "ஆமாம்..!! ஒரு கோல்கேட் பேஸ்ட் வாங்கி குடுத்தா மேட்டர் முடிஞ்சது.. அவங்களே பாதுகாப்பு வளையம்லாம் குடுப்பாங்களே.. ப்ராப்ளம் சால்வ்ட்..!!" "என்னது..????" அசோக் முகத்தை ஒருமாதிரி அஷ்டகோணலாக சுளித்தான். "அதுசரி.. இதுலாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..??" "அ..அது.. வேற ஒன்னுல்ல.. நீ.. நீ..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கள்ல.. அதனால.." என்று அவசரமாய் சொல்லிவிட்டவன், பிறகு "ஸாரி.." என்று திருட்டு முழி முழித்தான். "அடடா.. அதுக்கு நாந்தான தேங்க்ஸ் சொல்லணும்.. நீங்க ஏன் ஸாரி சொல்றீங்க..??" "இ..இல்ல.. ஒருவேளை நீங்க வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா..??" படபடப்பில் அசோக் உளறி கொட்ட ஆரம்பித்திருந்தான். "வாட்..?? நான் யாரை லவ் பண்றேன்..??" "ஹையோ.. அதான் ஒருவேளைன்னு சொன்னேனே.. ஒரு சந்தேகந்தாங்க..!! அ..அப்படி யாராவது இருக்காங்களா..??" அசோக்கின் குரலில் ஒரு குறுகுறுப்பு. "ஹாஹா.. இல்ல...!!" அவள் புன்னகையுடன் மறுக்க, "வாவ்..!! தேட்ஸ் நைஸ்.. தேட்ஸ் ரியல்லி நைஸ் யு நோ..!!" அசோக் உற்சாகமானான். "அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு சந்தோஷப் படுறீங்க..??" "எனக்கு அப்போவே தெரியுங்க.. நீங்க யாரையும் லவ் பண்ணிட்டு இருக்க மாட்டீங்கன்னு..!! இந்த சாலமன் நாயிதான் என்னை கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!" "என்ன கன்ஃயூஸ் பண்ணான்..??" "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. இத்தனை நாளா உங்களை யாரும் விட்டு வச்சிருக்க மாட்டாங்கன்னு சொல்லி.. ரொம்ப கன்ஃயூஸ் பண்ணிவிட்டுட்டான்..!!" "ஓ..!! அதுசரி.. அது யாரு அந்த சாலமன் நாயி...??"ஹாஹா.. அது என் ஃப்ரண்டுங்க.. அதோ.. அங்க உக்காந்திருக்கான்.. அவன்கூட ரெண்டு பேர் உக்காந்திருக்குறாங்களே.. அவங்களும் என் ஃப்ரண்ட்ஸ்தான்..!!" "ஓ..!!" "ஆக்சுவலா அவங்கதான்.. உங்களை பாத்து செலக்ட் பண்ணி.." உளறிவிட்ட அசோக் உடனே நாக்கை கடித்துக் கொண்டான். வாயிலேயே பட் என்று தட்டிக் கொண்டான். "வாட்..??" அவளுடைய முகத்தில் எக்கச்சக்க குழப்பம். "ஐயோ.. கோவப்படாதிங்க.. நா..நான் அதுக்கு முன்னாடியே உங்களை பாத்துட்டேன்.. ப்ராமிஸ்..!!" "நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு ஒன்னும் புரியல..!!" அவள் சலிப்பாக தலையசைத்து கொண்டாள். "இ..இல்லைங்க.. ஆ..ஆக்சுவலா நான் என்ன சொல்லவந்தேன்னா.. ம்ம்ம்ம்.. என்ன சொல்ல வந்தேன்..?? ம்ம்ம்ம்.. நான் உங்களை இங்க அடிக்கடி பாத்திருக்கேங்க.. அழகா இருக்கீங்கன்னு தோணும்.. நல்ல பொண்ணுன்னு தோணும்.. பேசிப்பாக்கலாம்னு தோணும்..!!" "ஓ..!!" "ஆ..ஆனா.. நீங்கதான் என்னை கவனிச்சிருக்கீங்களான்னு எனக்கு தெரியலை..!! நான் கூட இங்க அடிக்கடி… ஆங்... நேத்து நீங்க செருப்பை எடுத்து காட்டுனீங்கள்ல.. அது என் மூஞ்சிக்கு முன்னாடிதான்..!!" ரொம்ப பெருமையாக சொல்லிமுடித்தான் அசோக். உளறலின் உச்சபட்சத்தை எட்டியவன், லூசுத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை கூட உணரவில்லை. தன்னைப் பற்றி அவளுக்கு நினைவூட்டியாயிற்று என்று அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். அவளுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. தான் அவனை டேமேஜ் செய்ததை விட, அவன் தன்னைத்தானே இன்னும் அதிகமாய் டேமேஜ் செய்து கொள்கிறானே என்பதை நினைக்கையில், அவளுக்கு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது. முன்பை விட அதிகமாக சிரித்தாள்.. வாய் விட்டு.. கலகலவென..!! "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" அவள் சிரிக்கையில் மிகவும் அழகாக இருந்தாள். ஒரு குழந்தையின் குதுகலம் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது. அவளுடைய முத்துப்பற்களின் ஜொலிஜொலிப்பும்.. ஆரஞ்சு அதரங்களின் மினுமினுப்பும்.. பளிங்கு கண்களின் பளபளப்பும்.. அருகில் இருந்து பார்த்த அசோக்கின் மனதுக்குள் அதகளம் செய்தன..!! அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள். தத்துபித்தென்று உளறிவிட்டோம் என்பதை தாமதமாக புரிந்து கொண்ட அசோக், இப்போது ஒரு அசட்டுப் புன்னகையுடன்.. "ஹலோ.. சிரிக்காதிங்க ப்ளீஸ்..!! நான் உங்கட்ட நெறைய விஷயம் சொல்லனும்னு நெனச்சேன்.. எல்லாம் இப்படி ஆர்டர் மிஸ் ஆகி.. அதது இஷ்டத்துக்கு வெளில வருது..!!" என்று பரிதாபமாக சொன்னான். "ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" அவள் அதற்கும் சிரித்தாள். மேலும் சிறிது நேரம்..!! நன்றாக ஆசைதீர மனம்விட்டு சிரித்தவள், பிறகு மெல்ல மெல்ல அந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ப்ளேட்டில் கிடந்த அந்த மிளகாய் துகள் பாக்கெட்டை கிழித்து, அவள் தட்டில் மீதமிருந்த பிஸ்ஸாவின் மேனியெங்கும் மெல்ல தூவினாள். தூவிக்கொண்டே.. இவனை நிமிர்ந்து பாராமலே.. மிக கேஷுவலான குரலில் கேட்டாள்..!! "லவ் பண்றீங்களா என்னை..??" அசோக் சுத்தமாக அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. பக்கென்று அதிர்ந்து போய் அவளை பார்த்தான். பட்டென்று அவனுக்கு நாக்கு வறண்டு போன மாதிரியிருந்தது. "அ..அது... அ..அதுலாம்.. அது.." என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினான். அவனுடைய விரல்கள் கூட இப்போது நடுங்க ஆரம்பித்திருந்தன. அவள் இப்போது நிமிர்ந்து இவனுடைய முகத்தை ஏறிட்டாள். இவனுடைய கண்களையே ஷார்ப்பாக ஒரு பார்வை பார்த்தாள். குரலில் ஒரு புதுவித கடுகடுப்புடன் சொன்னாள். "இங்க பாருங்க.. மனசுல நெனச்சதை வெளில சொல்ல துப்பு இல்லாதவன.. நான் ஆம்பளையாவே கன்சிடர் பண்றது இல்ல..!! அப்புறம் உங்க இஷ்டம்..!!" அசோக்கிற்கு வேறு வழி இருக்கவில்லை..!! இப்போது இல்லை என்று சொல்லிவிட்டு.. பிறகு ஏதாவது வில்லங்கம் நேர்ந்துவிட்டால்..?? இவளுடைய குணம் வேறு படுடெரராக இருக்கிறது..?? கிடைத்த குறுகிய நேரத்திலேயே.. யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவன்.. இப்போது தட்டுத்தடுமாறி சொன்னான்..!! "ஆ..ஆமாங்க.. ப..பண்றேன்...!!" "பண்றீங்களா.. என்ன பண்றீங்க..?? தெளிவா சொல்லுங்க..!!" அவள் விரட்டினாள். "ல..லவ்வுங்க.. லவ் பண்றேங்க.." அவசரமாகவும், பரிதாபமாகவும் சொன்ன அசோக்.. "ஐ.. ஐ லவ் யூங்க..!!" என்றான் தாழ்ந்த குரலில். "ம்ம்.. தேட்ஸ் லைக் எ குட்பாய்..!!" அவள் புன்னகையும், திருப்தியுமாக சொன்னாள். சொல்லிவிட்டு மீண்டும் அவளது உணவுத்தட்டை பார்த்து குனிந்துகொண்டாள். பிஸ்ஸாவை துண்டம் செய்தாள்.. வாயில் திணித்து சுவைத்தாள்..!! 'என் இதயத்தில் நீ இருக்கிறாய்' என்று இவன் உரைத்திருக்கிறான். ஆனால்.. அவன் ஏதோ 'எங்க ஏரியாவுல இன்னைக்கு பவர் கட்..' என்று சொன்னதை போலத்தான் அவளுடைய செய்கை இருந்தது. அவன் சொன்ன விஷயத்திற்கு அந்த அளவிலான ஒரு உணர்ச்சியையே முகத்தில் பிரதிபலித்தாள். அசோக்கோ அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற ஆர்வத்துடன், அவளுடைய முகத்தையே ஆர்வமாக, 'பே' என்று பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஒரு சில வினாடிகளில் பொறுமை இழந்து போய்.. "எ..என்னங்க.. ஒண்ணுமே சொல்ல மாட்டேன்றிங்க..??" என்று கேட்டே விட்டான். "என்னை 'நீ வா போ'ன்னே சொல்லலாம்..!!" "ஐயையோ.. ப..பரவாலைங்க.. இருக்கட்டும்.." "இல்ல.. நான் இனிமே உன்னை அப்படித்தான் கூப்பிடப் போறேன்.. வேணும்னா நீயும் என்னை அப்படி கூப்பிட்டுக்கோ..!! இல்ல கஷ்டமா இருக்குனா 'நீங்க வாங்க'ன்னே கண்டின்யூ பண்ணு.. எதுனாலும் எனக்கு ஓகே..!!" அவள் கூலாக சொல்ல, 'என்ன குசும்பு இவளுக்கு..' என்று அசோக் மனதில் நினைத்துக் கொண்டான். "சரிங்.. சரி.. ட்ரை பண்றேன்..!!" "குட்..!!" "அதுலாம் இருக்கட்டுங்.. நான் கேட்டதுக்கு எதுவுமே சொல்லலையே..??" "ம்ம்.. சொல்றேன்.. இரு..!! ம்ம்ம்ம்ம்... ஃபஜிட்டா பன்னீர் ஸ்டஃப்ட் பரிட்டோ.. அப்டின்னு ஒன்னு இருக்கு தெரியுமா..??" "ம்ஹூம்.. என்ன அது..??" அசோக் நெற்றியை சுருக்கினான். "நெறைய வெஜிடபிள்ஸ்.. பன்னீர்.. பீன்ஸ்.. ரைஸ்.. ச்சீஸ்.. எல்லாம் உள்ளவச்சு.. சப்பாத்தி மாதிரி ஒன்னுல ரோல் மாதிரி ராப் பண்ணி தருவாங்க.. அதை ரெட் சில்லி சாஸ் தொட்டுக்கிட்டு ஒரு கடி கடிச்சோம்னு வச்சுக்கோ.. அப்படியே யம்மியா இருக்கும்..!!" அவள் அப்படியே அனுபவித்து ஆசையாக சொன்னாள். "ஓ..!! அ..அது சரி.. அதுலாம் எதுக்கு இப்போ எங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்.. இ..இருக்க..??" "அது.. அங்க டேகோ பெல்னு ஒரு ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் இருக்குல.. அங்க கெடைக்கும்.. போய் எனக்கு ஒன்னு வாங்கிட்டு வர்றியா..??" அவள் மிக இயல்பாக சொல்ல, இவன் தலையை சொறிந்தான். "என்னங்க நீங்க.. நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. நீங்.. நீ என்னடான்னா.. பரிட்டோ சொறிட்டோன்னுட்டு..??" "இங்க பாரு.. மேற்கொண்டு நான் பேசணும்னா.. போய் எனக்கு ஒரு பரிட்டோ வாங்கிட்டு வா.. இல்லனா எடத்தை காலி பண்ணு.. கெளம்பு..!!" சொல்லிவிட்டு அவள் பிஸ்ஸா சாப்பிடுவதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள். இவனை கண்டுகொள்ளவே இல்லை. அசோக் என்ன செய்வது என்று தெரியாமல், சிறிது நேரம் திருதிருவென விழித்தபடி அமர்ந்திருந்தான். பிறகு வேறு எந்த வழியும் இருப்பதாக அவனுக்கு தோன்றாமல் போகவும், ஒரு முடிவுக்கு வந்தவனாய்.. "ச..சரி.. போய் வாங்கிட்டு வர்றேன்.." என்றுவிட்டு எழுந்தான். சலிப்பாக தலையை அசைத்தவாறே, அந்த கவுன்ட்டர் நோக்கி நடந்தான். "ஹலோ.. அப்படியே ஒரு கோக் டின்..!!" அவள் பின்னால் இருந்து இரைந்தாள். "சரீஈ..!!" அசோக் திரும்பி பார்க்காமலே வெறுப்பாக கத்தினான். "டயட் கோக்..!!" அவள் இன்னும் பெரிதாக இரைய, "சரீஈஈஈ...!!" அசோக் இன்னும் வெறுப்பாக கத்தியவாறே வேகமாக நடந்தான். 'ஷ்ஷ்ஷ்ஷ்..' என்று தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டான். 'ச்சே.. என்ன எழவுடா இது..?? கொஞ்ச நேரம் பேசுனதுக்கே காதுலாம் 'கொய்ய்ய்ங்'னு இருக்குது.. இவனுகள்லாம் எப்படி மணிக்கணக்குல பேசுறானுக..?? இதுக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே.. இவளை எப்படி பேசி சமாளிச்சு லவ் பண்ண வைக்கப் போறேன்..?? இவனுகள்லாம் எப்படி இந்த ஸ்டேஜை க்ராஸ் பண்ணி நெக்ஸ்ட் ஸ்டெப் போனானுக..?? பருப்பு பரதநாட்டியம் ஆடும்னு கிஷோர் சொன்னானே.. இதானா அது..??' எரிச்சலுடனே சென்று அசோக் அந்தப்பெண் சொன்ன ஐட்டங்களை வாங்கிக்கொண்டான். திரும்பி நடந்து வருகையில், 'என்னடா இதுலாம்..??' என்று சைகையால் கேட்ட நண்பர்களுக்கு, 'நத்திங்..' என்று சைகையாலே தோளை குலுக்கி புன்னகைத்தான். வாங்கி சென்ற ஐட்டங்களை அவளிடம் சென்று கொடுத்தான். அவள் ஆர்வமாக அதை பிரித்து உண்ண ஆரம்பித்தாள். பிஸ்ஸாவை ஒரு கவ்வு.. பரிட்டோவை ஒரு கடி.. கோக்கை ஒரு குடி.. கலந்துகட்டி அடித்தாள்..!! அசோக் அவள் சாப்பிடுவதையே பாஸ்தா மென்றுகொண்டு, பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தான்."எனக்கும் உன்னை ஞாபகம் இருக்கு.." அவள் அசை போட்டுக்கொண்டே திடீரென சொன்னாள். "வாட்..??" "இல்ல.. நானும் உன்னை இங்க அடிக்கடி பாத்திருக்கேன்.. உன்னை நல்லா எனக்கு ஞாபகம் இருக்குன்னு சொன்னேன்..!!" அவள் அவ்வாறு சொன்னதும், இப்போது அசோக்கிடம் ஒரு திடீர் உற்சாகம். "ஓ..!! இஸ் இட்..??" என்று வாயெல்லாம் பல்லாக கேட்டான். "ம்ம்..!! நல்ல பையன் மாதிரி இருக்கான்னு தோணும்.. அப்புறம்.." "ம்ம்..?? அப்புறம்..??" "நல்லா ஸ்மார்ட்டா இருக்கான்னு தோணும்..!!" சொல்லிவிட்டு அவள் கண்சிமிட்ட, அசோக்குக்கு ஜிவ்வென வானத்தில் பறப்பது மாதிரி இருந்தது. "நெ..நெஜமாவா சொல்ற..??" "உனக்கு நம்புறதுக்கே கஷ்டமா இருக்குல..??" அவளுடைய வார்த்தையில் இருந்த குறும்பை உணராமல், அசோக்கும் "ம்ம்.. யெஸ்..!!!" என்று இளித்தான். "பட்.. அதுதான் உண்மை.. நானும் உன்னை சைட் அடிச்சிருக்கேன்..!!" "ஓ..!!" அசோக் வாயை பிளந்தான். "இதுலாம் தப்பு இல்லையா..??" "ஐயோ.. இதுல என்ன தப்பு இருக்கு..?? நீ சைட் அடிக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.. நீ எவ்ளோ வேணா என்னை சைட் அடிச்சுக்கோ.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!" "ப்ச்.. நான் அதை சொல்லல..!!" "அப்புறம்..??" "யாரு என்னன்னு தெரியாம சைட் அடிக்கிறது என்னவோ சகஜந்தான்.. ஆனா.. என்னை பத்தி எதுவுமே தெரியாம.. என்னை லவ் பண்றேன்னு சொல்றியே..?? அதை கேட்டேன்..!! தப்பு இல்லையா..??" "எதுவே தெரியாம வர்றதுக்கு பேருதான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு வந்தா அதுக்கு பேரு கால்குலேஷன்..!!" "ஓ..!! இது ஏதோ விக்ரமன் படத்துல வர்ற டயலாக்தான..??" "ஐயையோ.. இது என்னோட ஒரிஜினல் டயலாக்.. நான் தமிழ்ப்படம் பாக்குறதே இல்ல.. அதுவும் விக்ரமன் படம் பாக்குறதே இல்ல..!!" "ம்ம்ம்.. அப்போ.. என்னை பத்தி எதுவுமே உனக்கு தெரியவேணாம்.. அப்படியா..??" "அடடடா.. தெரிஞ்சுக்கனும்பா.. அதுக்காகத்தான இவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்டு இருக்கேன்..??" "ஓ..!! அப்போ.. என்கூட பேசுறது உனக்கு கஷ்டமா இருக்கு.. இல்ல..??" "ஷ்ஷ்.. என்னால முடியல..!! இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா.. நான் என்ன சொல்றது..??" அசோக் பரிதாபமாக கேட்க, "உன்னை பத்தி சொல்லு..!!" அவள் பட்டென சொன்னாள். "ஆங்..??" "மொதல்ல உன்னை பத்தி சொல்லு.. அதுக்கப்புறம் நான் என்னைப் பத்தி சொல்றேன்னு சொன்னேன்..!!" "என்னை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..?? பேரு அசோக்.. வயசு இருபத்தஞ்சாகுது.. பொறந்து வளந்ததுலாம் சென்னைதான்.. விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சிருக்கேன்.. ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து ஒரு அட்வர்டைஸிங் பிஸினஸ் பண்றேன்.. ஏதோ கடவுள் புண்ணியத்துல பிஸினஸ் நல்லபடியா போயிட்டு இருக்கு..!!" "ம்ம்.. அசோக்கா உன் பேரு..?? நைஸ் நேம்..!!" "ஹ்ஹ.. பிடிச்சிருக்கா..?? ஓகே.. உன் பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..??" "உன் ஃபேமிலி பத்தி சொல்லு.. அப்புறம் சொல்றேன்..!!" "ஃபேமிலி பத்தியா..?? அப்பா கனரா பேங்ல கரன்சி கவுண்ட் பண்றாரு.. அம்மா வீட்டுலையே கரண்டி உத்தியோகம் பாக்குறாங்க.. தங்கச்சி படிச்சு முடிச்சுட்டு வீட்டுல சும்மா இருக்குறா.. நல்லா சாப்பிடுவா, நல்லா தூங்குவா.. முழிச்சிருக்குறப்போ பாதி நேரம் பாடுவா.. மீதி நேரம் என்கூட சண்டை போடுவா..!! அப்புறம்.. தாத்தா பாட்டி.. ரெண்டு நாய்க்குட்டிங்க.. அவ்ளோதான் என் ஃபேமிலி..!!""ம்ம்.. இன்ரஸ்டிங் ஃபேமிலி..!!" "ம்ம்.. வேற என்ன என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்..??" "நீ போட்ருக்குற இந்த ஷர்ட்.. என்ன ப்ராண்ட்..??" அவள் திடீரென அவ்வாறு கேட்க, "லீ..!! ஏன் கேக்குற..??" அசோக் குழப்பத்துடனே பதில் சொன்னான். "பேன்ட்..??" "லீவைஸ்..!!" "கால்ல போட்ருக்குற ஷூ..??" அவள் சற்றே தலையை சாய்த்து அவனுடைய காலை பார்த்தவாறே கேட்க, "லீ கூப்பர்..!! ஏன் இதுலாம் கேக்குற..??" அசோக் புருவத்தை நெறித்தான். "லீ.. லீ.. லீ..!! எல்லா லீ'ஸ்மே காஸ்ட்லீஸ்.. இல்ல..??" "ம்ம்..!! ஆமாம்..!!" "அதுக்காகத்தான் கேட்டேன்..!!" அவள் சொன்னதை அசோக்கால் புரிந்து கொள்ளமுடியவில்லை. "புரியல.. கொஞ்சம் எக்ஸ்ப்ளயின் பண்றியா...??" "உனக்கு இப்போ எக்ஸ்ப்ளயின் பண்ணனுமா..?? இல்ல என்னை பத்தி சொல்லனுமா..??" அவள் அவ்வாறு கேட்கவும், அசோக் சற்றே குழம்பினான். "ச..சரி.. உன்னை பத்தி சொல்லு..!! உன் பேர் என்ன..??" "ம்ம்ம்... மிர்ச்சி..!!" அவள் சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான். "மிர்ச்சியா..???? அப்டிலாமா பேர் வைப்பாங்க..??" "சேச்சே.. அது என் நிக்நேம்..!! ஃப்ரண்ட்ஸ்லாம் அப்டித்தான் என்னை கூப்பிடுவாங்க...??" "ஓ.. அப்போ.. அப்பா அம்மா வச்ச பேர்..??" "மீரா..!!" "வாவ்..!! நைஸ் நேம்..!! ஆக்சுவலா.. எனக்கு கூட கிருஷ்னு பேர் வைக்கனும்னுதான் என் தாத்தா ஆசைப்பாட்டாராம்.. ஐ மீன் கிருஷ்ணன்..!! அப்புறம் என் அம்மாதான் அடம்புடிச்சு அசோக்னு வச்சுட்டாங்க..!! ஹ்ம்ம்... மீரா அலையாஸ் மிச்சி.. லவ்லி.. நல்லாருக்கு..!! ம்ம்... என்ன படிச்சிருக்குற நீ..??" "எஞ்சினியரிங்..!!" "என்ன விஷயமா இங்க டெயிலி வர்ற..?? இங்க எங்கயும் வொர்க் பண்றியா..??" "இல்ல..!! இ..இங்க.. ஆப்டெக் சென்டர் இருக்குதுல.. அங்க ஒரு கோர்ஸ் பண்ணிட்டு இருக்குறேன்..!!" "ஓ..!! என்ன கோர்ஸ்..??" "ம்ம்.. மாயா...!!!!" "வாவ்.. அனிமேஷன் கோர்ஸ்ல..??" "ஆ..ஆமாம்..!!" "அனிமேஷன்ல இன்ட்ரஸ்ட் உண்டா..?? தேட்ஸ் நைஸ்..!! ஹ்ம்ம்... சென்னைதான் சொந்த ஊரா..??" "இல்ல..!! பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" "ஓ..!! அப்போ உனக்கு தெலுங்கு நல்லா தெரியுமா..??" "ம்ம்.. தெரியும்..!! நோரு மூஸ்குனி அதுகு..!!" "அப்படினா..??" "வாயை மூடிட்டு மேல கேளுன்னு அர்த்தம்..!!" "ஓ..!! சரிசரி.. சொல்லு..!!" "எனக்கு ஒரு அண்ணன்.. ஒரு அக்கா.. ஒரு அப்பா.. ஒரு அம்மா..!!" "ஹாஹா..!! அண்ணன் அக்கா ஓகே.. அப்பா அம்மா கூடவா அதே மாதிரி சொல்வ..??" "ம்ம்..!! இப்போதைக்கு அவ்வளவுதான் என்னைப்பத்தி..!!" "ஹ்ம்ம்.. எனக்கும் இப்போதைக்கு இவ்வளவு போதும்..!! அ..அப்புறம்.. இன்னொரு விஷயம் மீரா.." "மிர்ச்சினு கூப்பிடேன்.. ப்ளீஸ்..!!" "எ..எனக்கு மீரா பிடிச்சிருக்கே.. அப்படியே கூப்பிடுறேனே.. ப்ளீஸ்..!!" "சரி.. உன் இஷ்டம்..!!" "தேங்க்ஸ்..!!" "சரி.. என்ன கேட்க வந்த..??" "ஹ்ம்ம்.. அ..அது.. நான் சொன்னதை பத்தி ஏதும் யோசிச்சியான்னு கேட்க வந்தேன்..!!" "என்ன சொன்ன..??" "ஹையோ.. உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனேம்மா..??" "அதுவா..?? ம்ம்ம்ம்.. என்ன சொல்றது.. நானும் லவ் பண்றதுக்கு எவனாவது கெடைக்க மாட்டானான்னுதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!!" அவள் அப்படி சொல்ல, அசோக் மிகவும் உற்சாகமானான். "ஓ.. இஸ் இட்..?? நீ என்னை லவ் பண்ணலாமே..?? அசோக் ரொம்ப நல்ல பையன் மீரா..!!" "பாக்கலாம் பாக்கலாம்.. நீ எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்கிறேன்னு..!!" "என்னது..????" "ஐ மீன்.. நீ எவ்வளவு தூரம் நல்லா நடந்துக்குறேன்னு பாக்கலாம் சொன்னேன்..!!" "கண்டிப்பா ரொம்ப நல்லா நடந்துப்பேன்.. என்னை மாதிரி ஒரு நல்ல பையனை நீ பாத்திருக்கவே மாட்ட..!!" "ஓஹோ..?? ஓகே ஓகே..!!" "சரி..!! இப்போ.. நாம கொஞ்சம் நம்மளை பத்தி தெரிஞ்சுக்கலாமா..??" "எப்படி...??" "நம்மோட இன்ட்ரஸ்ட்ஸ் ஷேர் பண்ணிக்கலாம்..!!" "பண்ணிக்கலாமே..??" "கேள்வியை நான் கேட்கவா.. நீயே கேட்கிறாயா..??" "நீயே கேளு..!!" "ஹ்ம்ம்.. ஓகே...!! ம்ம்ம்... உன்னோட ஃபேவரிட் மூவி எது..??" "ம்ம்... டைட்டானிக்..!!" "குட்..!! ஃபேவரிட் பொலிட்டிகல் லீடர்..??" "ம்ம்... சோனியா..!!" "நைஸ்..!!" அசோக் அதன்பிறகும் மீராவை நிறைய கேள்விகள் கேட்டான். எல்லாமே அவளுடைய ஆசை, ஆர்வம், லட்சியம் பற்றிய கேள்விகள். அவளும் எல்லா கேள்விகளுக்கும், அமைதியாக பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே இருந்தாள். அப்புறம் எதேச்சையாக மணிக்கட்டை திருப்பி பார்த்தவள், அவசரமாக சொன்னாள். "ஹேய்.. எனக்கு ரொம்ப டைமாச்சுபா.. நான் கெளம்புறேன்..!!" "ஐயையோ.. இப்படி பொசுக்குனு எழுந்து போனா என்ன அர்த்தம்..??" "வேற என்ன பண்ணனும்..??" "நான் திரும்ப உன்னை காண்டாக்ட் பண்ணனும்னா எப்படி பண்றது..?? அட்லீஸ்ட் உன் ஃபோன் நம்பராவாது கொடுத்துட்டு போகலாமே..??" "ஓ.. அட்லீஸ்ட் ஃபோன் நம்பரா..?? இரு.. தர்றேன்..!!" என்றவள், குனிந்து தனது பேகில் எதையோ தேடினாள். அப்புறம் அசோக்கிடம் திரும்பி, "ம்ம்.. கையை நீட்டு..!!" என்றாள். அசோக் தனது கையை நீட்டினான். அவள் பட்டென்று அந்த கையை பற்றினாள். பேகில் இருந்து எடுத்த பால்பாயிண்ட் பேனாவால், அவனுடைய உள்ளங்கையில் கிறுக்க ஆரம்பித்தாள். அசோக்கிற்கு என்னவென்று சொல்ல முடியாத மாதிரியான ஒரு உணர்ச்சி..!! முதன்முறையாக அவளுடைய ஸ்பரிசம்.. அவளுடைய தளிர்க்கைகளின் மென்மை.. தனது உள்ளங்கையில் ஏற்பட்ட ஒரு குறுகுறுப்பு.. அவளுடைய நெருக்கத்தால் அவளிடம் இருந்து கிளம்பிய வாசனை..!! ரத்த ஓட்டம் படக்கென சொடுக்கிவிடப்பட்டிருக்க.. ஒருமாதிரி சொக்கிப்போய் அமர்ந்திருந்தான்..!! "ம்ம்.. இதுதான் என் நம்பர்.. ஓகேவா..??" அவள் எழுந்து கொள்ள முயல, அசோக் இப்போது உடனடியாய் சுதாரித்துக்கொண்டான். அவசரமாய் அவளை தடுத்து நிறுத்தினான். "ஹலோ ஹலோ.. ஒரு நிமிஷம்..!!" "எ..என்ன..??" மீரா குழப்பமாய் அசோக்கை பார்க்க, அவனோ தனது சட்டை பாக்கெட்டை துழாவி எதையோ தேடினான். பிறகு அந்த காகிதத்தை எடுத்தான். டேபிள் மீது வைத்தான். அதை அப்படியே மீராவின் பக்கமாய் நகர்த்தினான்.
"எ..என்ன இது..??" அவள் புரியாமல் கேட்டாள். "இதுவா..?? டேகோ பெல்லோட டேக் ஹோம் பில்..!! பரிட்டோ எயிட்டி ஃபைவ் ருபீஸ்.. டயட் கோக் ஒரு தேர்ட்டி த்ரீ.. டேக்ஸோட சேர்த்து.. ஒன் தேர்ட்டி ஃபோர்..!!" அசோக் புன்னகையுடன் சொல்ல, அவள் இவனை கடுப்புடன் முறைத்தாள். "பொண்ணுககிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னே உனக்கு தெரியாதா..??" என்று கடுமையாக கேட்டாள். 'பொண்ணுககிட்ட எப்படி பேசணும்னே உனக்கு தெரியாதா..??' அந்த ரெட்டை ஜடை ப்ளஸ் டூ பெண் அசோக்கை பார்த்து, எப்போதோ கேட்ட கேள்வி, ஏனோ இப்போது அவனுடைய காதுக்குள் ரீங்காரமிட்டது. ஒருசில வினாடிகள் பழைய நினைவில் மூழ்கியவன், பிறகு சரக்கென தலையை சிலுப்பி நிகழ்காலத்துக்கு வந்தான். சற்றே தைரியமான குரலில் அவளிடம் கேட்டான். "ஹலோ.. இப்போ என்ன நான் மிஸ்பிஹேவ் பண்ணிட்டேன்..??" "பின்ன..?? செலவும் பண்ணிட்டு.. பில்லும் நீட்டுற..??" "வேற என்ன பண்றது..?? அட்லீஸ்ட் நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லிருந்தாலாவது.. நம்மோட லவ்வருக்கு செலவு பண்ணிட்டோம்னு மனசுல ஒரு திருப்தி இருக்கும்..!! ஆனா.. இப்போ வரைக்கும் நீ எனக்கு யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர்தான..?? உனக்கு செலவு பண்ணனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா..?? பணத்தை வச்சுட்டு கெளம்பு..!!" 'காசு வீணாக போகிறதே..' என்று ஏதோ ஒரு கடுப்பில் தைரியமாக அசோக் அவ்வாறு பேசிவிட்டான். ஆனால் பேசியபிறகு, அவள் எதுவும் கடித்து குதறி விட போகிறாளோ என சற்றே மிரட்சியாய் அவளை ஏறிட்டான். அவளும் இவனை உர்ரென்று முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருசில விநாடிகள்தான். பிறகு பட்டென முகம் மாறினாள். திடீரென அவளுடைய முகத்தில் ஒருவித மலர்ச்சி.. உதட்டில் ஒரு புன்னகை..!! "ச்சோ.. ச்ச்வீட்..!!!!" என்றாள் அசோக்கை பார்த்து. அசோக் ஒருகணம் குழம்பிப் போனான். 'கோபமாக சீறப் போகிறாள் என்று எதிர்பார்த்தால்.. கொஞ்சுகிறாளே..??'. வியப்பாக அவளை பார்த்தான். அவளோ இவனுடைய முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்று கண்டுபிடிக்க முடியாத மாதிரியான ஒருவித உணர்ச்சி அவளுடைய முகத்தில்.. இதழ்களில் இதயத்தை கொள்ளை கொள்கிற மாதிரியான ஒரு புன்சிரிப்பு.. கண்களில் ஒரு வசீகர மின்னல்..!! ஓரிரு வினாடிகள்.. அப்புறம் அந்த அழகு அதரங்களை அசைத்து.. தெள்ளத்தெளிவான குரலில் சொன்னாள்..!! "ஐ லவ் யூ..!!!!!"அசோக் அப்படியே ஆடிப்போனான்..!! ஓல்ட் மங்க் குவார்ட்டரை ஒரே கல்ப்பில் அடித்த மாதிரி குப்பென்று இருந்தது..!! இதயத்தில் ஒரு உற்சாக ஊற்று சர்ர்ர்ரென பீறிட்டு கிளம்பியது..!! காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை அவனால்..!! விழிகள் விரிந்து போயிருக்க.. பேச வார்த்தை இல்லாதவனாய்.. மீராவின் முகத்தையே திகைப்பாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..!! அவளுடைய முகத்தில் இப்போது ஒரு திருப்தி புன்னகை..!! தன் பக்கம் இருந்த அந்த பில்லை ஒற்றை விரலால் அழுத்தி.. இப்போது மீண்டும் அசோக்கின் பக்கமாய் நகர்த்தினாள்.. அமைதியாக புன்னகையுடன் சொன்னாள்..!! "நவ்.. பே த பில்..!!!!" சொல்லிவிட்டு ஒருநொடி கூட அவள் தாமதிக்கவில்லை. படக்கென சேரில் இருந்து எழுந்தாள். விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அசோக் சிலவினாடிகள் செயலிழந்து போய் அமர்ந்திருந்தான். பிறகு சட்டென சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தூரத்தில் சென்ற அவளுடைய முதுகைப் பார்த்து கத்தினான். "ஹேய்..!!!!!" அதற்குள்ளாகவே அவனுடைய நண்பர்கள் அவர்களுடைய இடத்தை விட்டு எழுந்து வந்திருந்தனர். அவசரமாய் வந்து இவனை சூழ்ந்து கொண்டனர். ஆர்வம் மிகுந்த குரலில், ஆளாளுக்கு இவனைப்போட்டு பிய்த்து எடுத்தனர். "டேய்.. மச்சி.. என்னாச்சுடா..?? பேசுனியா.. என்ன சொன்னா அவ..?? ஹேய்.. சொல்லுடா..!!" அசோக் சில வினாடிகள் மீரா செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மனதில் பலப்பல கேள்விகளுடனே, மெல்ல நண்பர்களிடம் திரும்பினான். "ஏய்.. சொல்லு மச்சி.. கேட்டுட்டு இருக்கோம்ல..?? என்ன சொல்லிட்டு போறா அவ..??" சாலமன்தான் மிகவும் ஆர்வமாக இருந்தான். "ஐ லவ் யூ'ன்னு சொல்லிட்டு போறடா.. அவ ஃபோன் நம்பர் குடுத்துட்டு போயிருக்கா..!!" அசோக் கேஷுவலாக சொன்னவாறே தனது உள்ளங்கையை விரித்து காட்டினான். அவ்வளவுதான்..!! அவர்கள் மூவரும் வாழ்நாளில் மிகவும் மோசமான ஒரு அதிர்ச்சியை மொத்தமாக உள்வாங்கினர்..!! பின்னந்தலையில் யாரோ இரும்புத்தடியால் அடித்துவிட்டது போல.. சித்தம் கலங்கிப்போய்.. சீயான் பார்வை ஒன்றை வீசியவாறு நின்றிருந்தான் வேணு..!! 'பேசுனதுமே ஐ லவ் யூ சொல்லிருக்கா.. பேசாம நாம போட்டியில கலந்திருக்கலாமோ..??' என்று.. கேத்தரினாவை கூட மறந்து போய்.. கேவலமாய் ஒரு எண்ணத்தில் திளைத்திருந்தான் சாலமன்..!! கிஷோரின் நிலைதான் மிகவும் பரிதாபகரம்.. அவனுடைய மூளைக்குள்.. தங்லீஷில் யாரோ தாறுமாறாய் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்..!! 'தி ஸோர்ஸ் ஆஃப் கீ இஸ்.. கேப்பை..!!' 'டிரைவர் ஆஃப் திஸ் ஏரோப்ளான் இஸ்.. எருமை..!!' 'பேர்ட் தேட் கேன் ஃப்ளை பேக்வேர்ட்ஸ் இஸ்.. காக்கை.!!' மூன்று பேருமே மூன்றாம் பிறை கமலஹாசன் மாதிரி.. அசோக்கையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருக்க.. சாலமன்தான் முதலில் அந்த நிலையை விட்டு சுதாரித்துக் கொண்டான்..!! தன் தலையில் 'நச்ச்ச்'சென்று அடித்தவாறே வெறுப்புடன் சொன்னான்..!! "என்ன க்க்கொடுமை ஸார் இது..???"அன்று மாலை அசோக்கின் வீட்டில்.. அவனுக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது..!! மலர் மாலை அணிவித்து.. மங்கள ஆரத்தி எடுக்காத குறைதான்..!! பந்தயம், பரிட்டோ, செருப்பு, முறைப்பு என.. சில சிக்கலான விஷயங்களை மட்டும் தவிர்த்துவிட்டு, மீதி விஷயங்களை எல்லாம்.. ஒன்றுவிடாமல் அசோக்கின் குடும்பத்துக்கு ஒலிபரப்பு செய்திருந்தது.. தி கிரேட் கிஷோர் FM..!! 'அசோக் ஒருபெண்ணை பலநாட்களாக பார்வையாலேயே காதலித்தான்.. இன்று பத்தே நிமிடம் அவளிடம் பேசி.. பதிலுக்கு அவளையும் ஐ லவ் யூ சொல்ல வைத்துவிட்டான்..' என்ற அளவில்தான் செய்தி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே.. வீட்டில் அனைவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.. குதுகலம்.. மகிழ்ச்சி..!! அனைவரது முகத்திலுமே அப்படி ஒரு பூரிப்பு.. சிரிப்பு.. மலர்ச்சி..!! பொசுபொசுவென, வெள்ளை வெளேரென இருக்கும் பொமெரேனியன்கள் இரண்டும் கூட.. வாசலில் போடப்பட்டிருந்த ரங்கோலியில் புரண்டு எழுந்து.. அன்று கலர்ஃபுல்லாய் காட்சியளித்தன..!! அசோக் வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்று.. அவனுடைய காலை சுற்றி சுற்றி வந்து.. முகர்ந்து முகர்ந்து பார்த்தன..!! அனைவருமே அவசரமாய் சென்று அசோக்கை சூழ்ந்து கொண்டனர்.. அன்புடன் கட்டிக்கொண்டனர்.. கைகுலுக்கினர்.. 'கலக்கிட்டடா' என்று கன்னம் கிள்ளினர்..!! தன் குடும்பத்தினரிடம் இருந்து, அத்தகைய வரவேற்பை அசோக் எதிர்பார்த்திருக்கவில்லை.. திணறிப் போனான்..!! ஏற்கனவே அந்த மீரா தனது காதலை சொல்லிச் சென்றவிதத்தில், அவனுடைய மனம் ஒருவித குழப்பத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.. இதில் இவர்கள் வேறு ஆளாளுக்கு கலாட்டா செய்ய.. செய்வதறியாது திருதிருவென விழித்தான்..!! அவனுடன் எப்போதும் சண்டை போடுகிற சங்கீதா கூட.. அன்று அண்ணனின் காதல் கணிந்துவிட்டதென மிக சந்தோஷத்தில் இருந்தாள்..!! அசோக்கை பார்த்து கண்சிமிட்டியவாறே, தனது இனிய குரலால் பாடினாள்..!! "பெண்கள் பின்னால் சுற்றாமல்.. பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ ஓ ஓ ஓ.. அவனே காதல் மன்னன்... காதல் மன்னன்.. காதல் மன்னன்..!!" ஆட்காட்டி விரலை அண்ணனை நோக்கி நீட்டி.. அதை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி சுழற்றி, அவள் அவ்வாறு பாட.. அசோக் அவனுடைய மனக்குழப்பத்தையும் மறந்து, மெலிதாக புன்னகைத்தான்..!! "ப்ச்.. சும்மா இரு சங்கு..!!" என்று அழகாக வெட்கப்பட்டான். உடனே சங்கீதா "அழுக்கு சட்டை போட்டாலும்.." என்று அடுத்த லைனை கிண்டலான குரலில் ஆரம்பிக்கவும், வெடுக்கென தங்கையை முறைத்தான். "போதும்..!!!! நிறுத்து..!!!!" என்று கடுப்பாக சொன்னான். "ஹாஹாஹாஹா...!!! ம்ம்ம்ம்.... எப்படிடா இப்படிலாம்.. ஃபஸ்ர்ட் பால்'லயே சிக்ஸரு.. ம்ம்..?? ஃபஸ்ர்ட் நாள் பேசுனதுமே ஒரு பொண்ணை ஐ லவ் யூ சொல்ல வச்சுட்ட.. அதுவும் பத்தே நிமிஷம் பேசுனதுல..?? உன்னை இதயம் முரளின்ல நான் இவ்வளவு நாளா நெனச்சுட்டு இருந்தேன்.. இப்படி கில்ல்ல்லி மாதிரி சொல்லி அடிச்சுட்டியடா அண்ணா..?? ச்ச.. சான்ஸே இல்லடா..!!" அசோக்கை கலாய்க்கிற குரலிலேயே பாராட்டினாள் சங்கீதா. "ம்ம்ம்.. அம்மா உனக்காகவே ஆசையா.. ஸ்பெஷலா செஞ்சது அசோக்..!! ஆ.... வாயை தெற.." கையில் இனிப்பு கிண்ணத்துடன் வந்திருந்தாள் பாரதி. "எ..என்ன மம்மி இ.." அசோக் கேட்டு முடிப்பதற்கு முன்பே, "ஷாஹி துக்ரான்னு ஒரு மொகலாய் ஸ்வீட்டுடா.. நல்லாருக்கும், சாப்பிட்டு பாரு..!!" சுண்டக் காய்ச்சிய பாலில் ஊறிப்போன அந்த இனிப்புத்துண்டை அவன் வாயில் திணித்தாள். "அசோக்-மீரா..!! பேர்ப்பொருத்தம் பிரம்மாதமா இருக்குன்னு.. வல்லக்கோட்டை ஜோஸியரே சொல்லிட்டாரு..!!" - பாட்டி தன் பங்குக்கு சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.வெறும் சந்தோஷம் என்ற ஒரு வார்த்தையில் சாதாரணமாக அந்த உணர்வை விளக்கி விட முடியாது..!! குடும்பத்தில் எஞ்சியிருந்த இருந்த ஒருவனும்.. இன்று காதல் இனத்தில் கலந்துவிட்டான்.. இப்போதுதான் இவன் நம் வீட்டுப்பிள்ளை.. என்பது மாதிரியான ஒருவித பெருமிதமும் நிம்மதியும் கலந்த பெருமகிழ்ச்சி எல்லோருக்கும்..!! "இப்போத்தான் இதுக்குப்பேரு ஸ்மார்ட் ஃபோன்.. இதுக்கு முன்னாடி வேஸ்ட் ஃபோன்..!!" - மகனுடைய செல்ஃபோனில் புதிதாக சேர்ந்திருந்த மீரா என்ற பெண்ணுக்கான எண்ணை, கட்டை விரலால் தடவியபடியே பெருமையாக பார்த்தார் மணிபாரதி. "ஹ்ம்ம்.. இந்தக்காலத்து புள்ளைகள்லாம் ரொம்ப கொடுத்து வச்சதுங்க..!! அந்தக்காலத்துல உன் பாட்டி கூட நான் பேசணும்னா.. அவ ஊர்ல அய்யனாருக்கு பொங்கல் வைக்கணும்.. இல்லனா அரண்மனைக்காரருக்கு போர் அடிக்கணும்.. அப்போத்தான் அரசுகொடிப்பாளையம் எல்லைக்குள்ளயே என்னால நொழைய முடியும்..!! அப்புறம் ஆர்மோனியக்காரரு எப்போடா மங்களம் பாடுவாருன்னு.. ராமுழுக்க பல்லை கடிச்சுட்டு காத்திருக்கணும்..!! அதுவும் அதிகாலைல.. அந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு.. அஞ்சு நிமிஷம் உன் பாட்டி கூட பேச முடிஞ்சதுன்னா பெரிய விஷயம் அசோக்கு..!! ஹ்ம்ம்.. இப்போலாம் அப்படியா இருக்கு... இந்தப்பக்கம் நம்பரை அடிச்சமுனா, அந்தப்பக்கம் நம்மாளு கொரலு கேக்குது..!!" எண்கள் கிறுக்கப்பட்டிருந்த பேரனின் உள்ளங்கையை தடவியவாறே, தாத்தா சொன்னவிதத்தில் பெருமிதத்துடன் சின்ன பொறாமையும் கலந்திருந்தது. "வடபழனி போய் முருகனை பாத்துட்டு வந்தேன்டா கண்ணா.. உங்க காதல், எந்த சிக்கலும் இல்லாம கல்யாணத்துல முடியனும்னு.. உங்க ரெண்டு பேர் பேர்லயும் அர்ச்சனை செஞ்சேன்..!!" காகித மடிப்பு திறந்து, கட்டை விரலால் விபூதி தொட்டு, அசோக்கின் நெற்றியில் கோடிட்டாள் பாரதி. இப்படி ஆளாளுக்கு ஆனந்தத்தில் திளைத்தது, அசோக்கின் மனதில் இருந்த அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது. அந்தப்பெண் என்னடாவென்றால், 'ஐ லவ் யூ' சொல்லிவிட்டு, அடுத்த நொடியே 'பில் பே பண்ணு' என்கிறாள். இவர்களோ குடும்பத்திற்கு இருந்த பெரிய சாபக்கேடு நீங்கிப்போன மாதிரி, குதுகலத்தில் திளைக்கிறார்கள். அவர்களுடைய சந்தோஷம் சற்று அதிகப்படியானதாகவே தோன்றியது அசோக்கிற்கு..!! அன்று இரவு உணவை, வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில்தான் உண்டார்கள். ஆறு பேரும் டைனிங் டேபிளில் அமர்ந்து, ஆனந்தமாக பேசி சிரித்தவாறே சாப்பிட்டுக்கொண்டிருக்க, அசோக் தன் மனதில் இருந்த அழுத்தத்தை, அடக்கிக் கொள்ள முடியாமல் சொல்லிவிட்டான். "நீ..நீங்கல்லாம்.. தேவை இல்லாம.. ரொம்ப ஓவரா சந்தோஷப்படுற மாதிரி எனக்கு தோணுது.. கொஞ்சம் கொறைச்சுக்கங்க ப்ளீஸ்..!!" அவன் அவ்வாறு சொன்னதும், எல்லோருமே சட்டென முகம் மாறினர். குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் அனைவரும் அசோக்கை ஏறிட்டனர். "ஏய்.. என்னடா இப்படி சொல்லிட்ட..?? நீ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்க.. அதுமட்டும் இல்லாம அவளையும் ஐ லவ் யூ சொல்ல வச்சிருக்க..?? எவ்வளவு பெரிய விஷயம் இது..?? இதவிட எங்களுக்கு வேற என்னடா பெரிய சந்தோஷம் இருக்க முடியும்..?? இந்த அளவுக்கு கூட நாங்க சந்தோஷப்படலன்னா எப்படி.??" மணிபாரதி மகனிடம் கேட்டார். "உங்களுக்கு சந்தோஷமா இருக்கு.. எ..எனக்கு என்னவோ கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!!" "ப்ச்.. நீயும் அவளை லவ் பண்ற.. அவளும் உன்னை லவ் பண்றேன்னு வாய் விட்டு சொல்லிட்டா.. அப்புறம் என்ன உறுத்தல் உனக்கு..??" சங்கீதா அண்ணனிடம் குழப்பமாய் கேட்டாள். "ஒருவேளை.. அந்தப் பொண்ணோட குடும்பத்துல இருக்குறவங்க.. இந்த காதலை ஒத்துக்குவாங்களோ இல்லையோன்னு பயப்படுறானோ என்னவோ..?? ஏண்டா அப்படியா..??" பாட்டி தன் மனதில் இருந்த சந்தேகத்தை பேரனிடம் கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும், இப்போது தாத்தா பலத்த சிரிப்புடன் ஆரம்பித்தார். "ஹாஹாஹாஹா..!! ஏன் அசோக்கு.. அதை நெனைச்சா மனசை போட்டு கொழப்பிக்கிற..?? நம்ம கிஷோர் வீட்டுல கூடத்தான்.. ஆரம்பத்துல நம்ம சங்கீதாவை ஏத்துக்கல.. 'காதலாவது கத்திரிக்காயாவது'ன்னு அவரு அம்மா கெடந்து குதிச்சாங்க..!! அப்புறம்.. நம்ம குடும்பத்துல எல்லாரும் அவங்கட்ட பக்குவமா பேசி.. நேரா போய் அவங்களை பாத்து எடுத்து சொல்லி.. எப்படி எப்படி எல்லாமோ போராடி.. கொஞ்சம் கொஞ்சமா அவங்க மனசை கரைக்கலையா..?? இப்போ அந்த அம்மாவே 'உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க நாங்க குடுத்து வச்சிருக்கனும்'னு வாயார சந்தோஷமா சொல்றாங்க..!! உன் விஷயத்தை மட்டும் சும்மா விட்ருவோமா..?? உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்டா.. நாம குடும்பத்தோட போய் நாலு வார்த்தை பேசினாலே.. யாருக்குமே நம்மள புடிச்சு போகும்..!! இதுக்குலாமா கவலைப்படுறது..??" "ஐயோ நான் அதுக்குலாம் கவலைப்படல தாத்தா..!!" அசோக் சற்றே எரிச்சலாக சொன்னான்."அப்புறம் என்னடா..??" அத்தனை நேரம் அமைதியாக இருந்த பாரதி இப்போது அசோக்கின் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு கேட்டாள். "எனக்கும் அந்தப் பொண்ணை பத்தி எதுவும் தெரியாது.. அவளுக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது.. ஆனா ரெண்டு பேரும் ஐ லவ் யூ மட்டும் சொல்லிக்கிட்டோம்..!! நானும் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல என் காதலை சொல்வேன்னு நெனைக்கல.. அவளும் திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொல்வான்னு எதிர்பார்க்கல.. அ..அதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு..!! ஏதோ.. எக்ஸாம்க்கு போய்ட்டு எம்ப்ட்டி பேப்பர் நீட்டிட்டு வந்தவனுக்கு.. சென்டம்னு ரிசல்ட் வந்த மாதிரி இருக்கு..!!" அசோக் அந்தமாதிரி குழப்பம் அப்பிய முகத்துடன் சொல்ல, அவனையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த பாட்டி, இப்போது ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தாள். "ஹ்ஹ்ம்ம்.. என்ன விஷயம்னு இப்போ எனக்கு கொஞ்சம் புரியுது..!! உன் குழப்பம் போறதுக்கு பாட்டி ஒன்னு சொல்லட்டுமா..??" "என்ன..??" "காதலை பத்தியும், காதலிக்கிறவங்கள பத்தியும்.. காதலை சொல்றதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்குறதை விட.. காதலை சொன்னதுக்கப்புறம் தெரிஞ்சுக்குறதுதான் அதிகம்..!! அப்படி காதலை புரிஞ்சுக்கிட்டவங்கதான் உலகத்துல அதிகம் பேர்..!!" பாட்டி அவ்வாறு தனது அனுபவப்பாடத்தை மிக எளிமையாக சொல்ல, அவளுடைய மகன் மணிபாரதி தன் அம்மாவை புன்னகையுடன் ஆமோதித்தார். "ம்ம்.. கரெக்டா சொன்னம்மா..!!" என்றவர் உடனே மகனிடம் திரும்பி, "ஏண்டா.. இன்னைக்கு காதலை சொன்னதுக்காக, நாளைக்கே உனக்கு கல்யாணம்ன்ற மாதிரில நீ பேசுற..?? இப்போ என்ன ஆகிப் போச்சு..?? ரெண்டு பேரும் பேசுங்க.. பழகுங்க.. ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கங்க.. காதல்னா என்னன்னு நல்லா தெரிஞ்சுக்கங்க..!! அப்புறமா.. கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு உங்களுக்கு தோணுறப்போ, எங்ககிட்ட வந்து சொல்லுங்க.. நாங்க அந்தப் பொண்ணோட ஃபேமிலி கூட பேசி.. எந்த பிரச்னையும் இல்லாம உங்க கல்யாணத்தை முடிச்சு வைக்கிறோம்..!! அவ்வளவுதான.. அதுக்கு ஏன் உனக்கு இவ்வளவு கொழப்பம்..?? மனசை போட்டு அலட்டிக்காம.. நல்லா சந்தோஷமா இருடா..!! ம்ம்... சாப்பிடு.. சாப்பிடு..!!" உலகத்திலேயே மிக மிக சிறிய பிரச்சினை அதுதான் என்பது போல.. மிக மிக சிம்பிளான தீர்வு ஒன்றை சொல்லி.. அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மணிபாரதி..!! சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடும், அசோக்கை சமாதானப் படுத்தியதோடும் மட்டும், வீட்டில் இருப்பவர்கள் திருப்தி அடைந்து விடவில்லை. ஆளாளுக்கு அவர்களுக்கு தெரிந்த வகையில், அசோக்கின் காதலுக்கு டிப்ஸ் கொடுத்தனர்..!! "அந்தப் பொண்ணை அடிக்கடி வெளில கூட்டிட்டு போ.. அவ ஏதாவது ஆசைப்பட்டு கேட்டா யோசிக்காம வாங்கிக்குடு..!! இப்போ காதலிக்க ஆரம்பிச்சாச்சு.. இன்னும் காசை பாத்துக்கிட்டு கஞ்சப் பிசினாரியா இருக்காத..!! உன்னை நம்பி ஒரு பொண்ணு.. அவ வாழ்க்கையை உன்கிட்ட ஒப்படைக்க நெனைச்சிருக்கா.. அவளை சந்தோஷமா வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு..!! புரியுதா..??" அசோக்கின் தலையில் நறுக்கென்று குட்டியவாறே சொன்னாள் பாரதி. "இதுலாம் டாடி எழுதுனதுலயே பெஸ்ட் ரொமாண்டிக் நாவல்ஸ்டா அசோக்.. இத்தனை நாளா உனக்கு இதுலாம் பிடிக்காம இருந்திருக்கலாம்.. இப்போ படிச்சு பாரு.. ரசிகர்கள் ஏன் என்னை காதல்க்கதை சக்கரவர்த்தி அப்டின்னு புகழ்றாங்கனு புரிஞ்சுப்ப..!! ஏகப்பட்ட ரொமான்ஸ் டிப்ஸ்.. எக்கச்சக்கமா கொட்டி கெடக்கும்.. உனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!!" ஒரு நாற்பது ஐம்பது நாவல்களை கைகொள்ளாமல் அள்ளிவந்த மணிபாரதி, அசோக்கின் கட்டிலில் இறைத்து சென்றார். "ஜஸ்ட் பிஃப்ட்டித்ரீ ருபீஸ்.. ஒரே ஒரு நம்பர் மட்டும் சூஸ் பண்ணிக்கலாம்.. அந்த நம்பரோட மட்டும் அன்லிமிட்டட் ஃப்ரீ டாக்டைம்..!! பேசலாம் பேசலாம்.. பேசிக்கிட்டே இருக்கலாம்..!! நானும் கிஷோரும் இந்த ப்ளான்தான் யூஸ் பண்றோம்.. உனக்கும் அண்ணிக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்..!! ட்ரை பண்ணிப்பாரு..!!" அதற்குள்ளாகவே மீராவை உறவு கொண்டாட ஆரம்பித்திருந்த சங்கீதா, ஏதோ ஒரு மொபைல் நெட்வொர்க் கம்பனியின் ப்ளானை, இலவசமாக மார்கெட்டிங் செய்தாள். "இதை சாதாரண வளையம்னு நெனைக்காத.. உங்க ரெண்டு பேரோட நெருக்கத்துக்கு இது ஒரு சனியன்.. இதை கழட்டி எடுத்தாத்தான், பின்னாடி உக்கார்ற அவளுக்கு பிடிமானம் இருக்காது.. பேலன்ஸ்க்கு உன்னை புடிச்சுப்பா..!!" அசோக்கின் பைக் பின் சீட்டுக்கு அருகே இருந்த அந்த ஸ்டீல் வளையத்தை, ஸ்பானர் உதவியுடன் கழட்டிக்கொண்டே தாத்தா கண்ணடித்தார். அசோக்கோ நெற்றியை பிசைந்து கொண்டான். சாப்பிடும்போது அசோக் எழுப்பிய விஷயத்தை மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பாரதி அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை. கணவர் சொன்ன தீர்வில் மகன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பதை, அவனுடைய முகத்தை பார்த்தே புரிந்து கொண்டாள். ஆனால் அப்போதே அத்தனை பேர் முன்னிலையிலும் அவனை துருவி துருவி கேட்க அவள் விரும்பவில்லை. அப்போது அமைதியாக இருந்துவிட்டு, அன்று இரவு அவளுடைய மடியில் அவன் தலை சாய்த்திருந்த வேளையில், அவனது தலை முடியை கோதி விட்டவாறே மெல்ல கேட்டாள். "அப்போ ஏண்டா அப்படி சொன்ன...?" "எ..எப்படி..??" "மனசுல ஏதோ உறுத்தல்.. ஏதோ கொழப்பம்.. அப்டின்னு..!!" பாரதி அவ்வாறு கேட்கவும், அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு அன்று புட்ஃகோர்ட்டில் நடந்த விஷயங்களை அம்மாவிடம் சுருக்கமாக எடுத்துரைத்தான். அசோக் சொன்னதை எல்லாம் பாரதி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். கேட்டு முடித்தபிறகும் அவள் அமைதியும், யோசனையுமாக இருக்க, அசோக்கே தொடர்ந்தான். "நானாவது வேற வழி இல்லாம ஐ லவ் யூ சொன்னேன்.. அவ கைல காசு இல்லாம காதலிக்கிறேன்னு சொல்லிட்டாளோன்னு.. கன்ஃப்யூஸ்டா இருக்கு மம்மி..!!" மகன் பரிதாபமாக சொன்னவிதம், பாரதிக்கு சிரிப்பை வரவழைத்தது. "ஹாஹாஹாஹா...!! ச்சே.. ச்சே.. அப்படிலாம் எதுவும் இருக்காதுடா..!! நீ ஏன் அப்படி நெனைக்கிற.. மொத நாளே உன்கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக்கோ..!!" "இல்ல மம்மி.. உனக்கு புரியல..!! நான் அவ கேரக்டர் பத்தி நெனச்சு வச்சிருந்ததுக்கும்.. அவ திடீர்னு அப்படி ஐ லவ் யூ சொன்னதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல.. எனக்கென்னவோ சந்தேகமாவே இருக்கு..!!" "ப்ச்.. அதான் அவளும் உன்னை அடிக்கடி அங்க பாத்திருக்கேன்னு சொல்லிருக்காள்ல..?? உன் மனசுல ஒரு ஆசை இருந்த மாதிரி.. அவ மனசுலயும் அதே ஆசை இருந்திருக்கும்..!!" "ம்ம்ம்... உன் லாஜிக்லாம் கரெக்டாத்தான் இருக்கு.. ஆனா எனக்குத்தான் மனசு சமாதானம் ஆக மாட்டேன்னுது..!!" "அடடா... இதுக்குப்போய் ஏன் இப்படி ஃபீல் பண்ற..?? ம்ம்ம்ம்.... சரி.. அவதான் ஃபோன் நம்பர் குடுத்திருக்காள்ல.. நீ சந்தேகப்படுற மாதிரிலாம் இருந்தா, அவ ஏன் ஃபோன் நம்பர்லாம் குடுக்கணும்..??" அம்மா அந்தமாதிரி கேட்கவும், இப்போது அசோக்கிற்கும் 'அதான..??' என்று தோன்றியது. "நீ தேவை இல்லாம மனசை போட்டு கொழப்பிக்காம.. அவகூட பேசு..!! அவ மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டு புரிஞ்சுக்கோ..!!" பாரதி இதமான குரலில் சொல்லிவிட்டு அமைதியானாள். அசோக்கின் மனதிலும் இப்போது குழப்பம் நீங்கி ஒருவித நிம்மதி பரவியது. அந்த நிம்மதியுடன் சேர்ந்து புதுவித ஆசையும் இப்போது அவனது மனதுக்குள் முளைத்தது. 'மீராவுக்கு இப்போது ஃபோன் செய்து பேசினால் என்ன..??' என்ற ஆசை. அந்த ஆசைவந்ததுமே அசோக்கின் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற ஆரம்பித்தது. உடனே அவளுடைய குரலை கேட்க வேண்டும் என்றொரு உந்துதல் உள்ளத்துக்குள் உருவாகியது. தலை கோதி விட்டுக்கொண்டிருக்கிற அம்மாவை, மெல்லிய குரலில் அழைத்தான். "மம்மி...!!" "ம்ம்...??" "உ..உனக்கு தூக்கம் வரலையா..??" "இல்ல.. ஏன் கேக்குற..??" "பதினோரு மணியாக போகுதே..??" "பரவாலடா.. படுத்துக்கோ.. நீ தூங்குனப்புறம் மம்மி போறேன்..!!" "இ..இல்ல மம்மி.. நான் தூங்கிக்கிறேன்.. நீ கெளம்பு.. டாடி வெயிட் பண்ணிட்டு இருக்க போறாரு..!!" "ஹாஹா.. அவர்லாம் அப்போவே தூங்கிட்டாரு.. நீ படுத்துக்கோ..!!" "ஐயோ.. நான்தான் தூங்கிக்கிறேன்னு சொல்றேன்ல.. நீ கெளம்பு.. உன் ரூமுக்கு போ..!!" மகனுடைய குரலில் தொணித்த எரிச்சலை உணர்ந்த பாரதி, இப்போது அவனை வித்தியாசமாக பார்த்தாள். எப்போதும் 'நான் தூங்கும்வரை இருந்துவிட்டு செல்' என்று ஏக்கமாய் சொல்கிறவன், இன்று 'போ.. போ..' என்று விரட்டுகிறானே..?? குழப்பத்துடனே அசோக்கின் முகத்தை வியப்பாக பார்த்தாள். ஓரிரு விநாடிகள்தான். மகனுடைய கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுகொண்டதும், காரணம் புரிந்து போனது பாரதிக்கு. உடனே அவனுடைய காதை பிடித்து திருகியவள், ஒரு போலிக்கோபத்துடன் சொன்னாள். "திருட்டுப்பயலே.. 'என் ஆளோட பேசப்போறேன், எந்திரிச்சு போ'ன்னா.. போயிட்டு போறேன்.. அதுக்கு ஏன்டா என்னன்னவோ சொல்ற..??" "ஐயையோ.. அ..அதெல்லாம் ஒன்னுல்ல மம்மி.. நான் ஒன்னும் இப்போ அவகூட பேசப்போறது இல்ல.. நா..நாளைக்கு பேசிக்கிறேன்..!!" "ம்ம்.. ம்ம்.. தெரியும் தெரியும்.. நடிக்காத..!! சரி.. நான் கெளம்புறேன்.. எவ்வளவு நேரம் வேணா நீ பேசிக்கோ..!!" சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க, இப்போது அசோக் பதில் ஏதும் சொல்லாமல் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டான். பாரதி அவனுடைய அறையை விட்டு வெளியேறினாள். அசோக் அதன்பிறகும் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். அப்புறம் எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான். எல்லோரும் அவரவர் அறைகளில் அடைந்து விட்டார்களா என்று, அப்படியும் இப்படியுமாய் பார்வையை வீசி உறுதி செய்து கொண்டான். திருப்தியானவன், மீண்டும் தன் அறைக்குள் வந்து தாழிட்டுக் கொண்டான். வேறொன்றும் இல்லை.. அவன் தனது காதலியுடன் பேசுவதை வேறு யாராவது ஒட்டுக் கேட்டு, அவனை கேலி செய்துவிட்டால்..??மெத்தையில் விழுந்தவன், தனது செல்போனை எட்டி எடுத்தான். மீரா தந்த எண்ணுக்கு டயல் செய்தான். தொண்டையை ஒருமுறை செருமியவன், செல்போனை காதில் வைத்துக்கொண்டான். அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்படுவதற்காக, ஒருவித படபடப்புடன் காத்திருந்தான். "கிர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்..." ரிங் சென்று கொண்டே இருந்தது. சிலவினாடிகள். பிறகு யாராலும் பிக்கப் செய்யப்படாமலே கட் ஆனது. அசோக்கிற்கு சற்றே ஏமாற்றமாக இருந்தது. மீண்டும் முயன்றான். மீண்டும் அதே ரிசல்ட்..!! மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்..!! ஒரு ஐந்தாறு முறை முயன்றவன், பிறகு அலுத்துப்போனான். 'ச்சே...' என்று எரிச்சலாக, செல்போனை மெத்தையின் ஓரமாக விட்டெறிந்தான். 'ப்ச்.. என்னது இது.. மொத மொத பேசணும்னு நெனைக்கிறப்போ.. இப்படி ஆயிடுச்சு..' என்று சலிப்பை உதிர்த்தான். அப்படியே படுக்கையில் சாய்ந்து புரண்டு படுத்துக் கொண்டான். கண்கள் மூடி சிறிது நேரம் அமைதியாக கிடந்தான். ஒரு ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அவனுடைய செல்போன் அலறியது. உடனே அசோக் பரபரப்பாக எழுந்தான். 'மீராவாகத்தான் இருக்கவேண்டும்..' என்று எண்ணியவன், சந்தோஷமும் பதற்றமுமாய் செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்ததும் ஏமாற்றமும், குழப்பமுமாய் நெற்றி சுருக்கினான். வேறு ஏதோ புதிய எண்ணிலிருந்து கால்..!! 'யாராக இருக்கும்.. இந்த நேரத்தில்..??' என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டான். "ஹலோ..!!" என்றான். "ஹலோ.. யாருங்க நீங்க..??" - அடுத்த முனையில் ஒரு தடித்த ஆண்குரல். "என்னங்க இது.. எனக்கு கால் பண்ணிட்டு என்னையே யார்னு கேக்குறீங்க..?? மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க..!!" "என் பேரு வாசு..!! உங்க நம்பர்ல இருந்து 98414 16476-ன்ற நம்பருக்கு.. ஒரு ஆறு மிஸ்ட் கால் வந்திருக்கு.. அதான் நீங்க யார்னு.." அந்த ஆள் கேட்க, அசோக்கின் உடம்பில் உடனடியாய் ஒரு உதறல்..!! 'ஒருவேளை மீராவின் அப்பாவாக இருக்குமோ..?? ஐயையோ.. இப்போது எப்படி பேசி சமாளிப்பது..??' "ஓ.. அ..அதுவா.. அ..அது.. மீ..மீ..மீராவோட நம்பர்ல..." அசோக் தடுமாறினான். "ஆமாம்..!!!! நான் அவளோட புருஷன்தான் பேசுறேன்.. என் பொண்டாட்டிக்கு இந்த நேரத்துல எதுக்கு நீ கால் பண்ணுனன்னு தெரிஞ்சுக்கலாமா..??" அசோக் இப்போது பக்கென அதிர்ந்து போனான். "எ..என்னது..??? பொண்டாட்டியா...???" காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் கத்தினான். "ப்ச்.. ஆமாண்டா...!!! யார்டா நீ..??? உனக்கு எப்படி இந்த நம்பர் கெடைச்சது..??" அசோக்கின் தடுமாற்றத்தை உணர்ந்து அந்த ஆள் மரியாதையை வெகுவாக குறைத்துக் கொண்டான். "அ..அது.. அ..அவங்கதான் குடுத்தாங்க.." "ஓஹோ..?? அவளே குடுத்தாளா..?? ம்ம்.. எத்தனை நாளா உங்களுக்குள்ள பழக்கம்..??" "இ..இப்போதான்.. கொ..கொஞ்ச நாளா.." "ம்ம்.. நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு..!! எங்கல்லாம் ஊர் சுத்திருக்கீங்க ரெண்டு பேரும் .. எனக்கு தெரியாம என்னல்லாம் செஞ்சிருக்கீங்க..?? ம்ம்..?? கேக்குறேன்ல.. சொல்லுடா..!!!!" வாசு ஆத்திரமாய் கத்த, அசோக் மிரண்டு போனான். "ஐயோ ஸார்.. எ..எனக்குலாம் எதுவும் தெரியாது.. அவங்களுக்கு கல்யாணம் ஆனது கூட எனக்கு தெரியாது.. அ..அவங்கதான் என்னை ரொம்ப நாளா சைட் அடிச்சேன்.. காதலிக்கிறேன்லாம் சொன்னாங்க.." "ஓ.. காதலிக்கிறேன்னு சொன்னாளா அந்த கருவா சிறுக்கி..?? வச்சுக்குறேன் அவளை..!! சரி.. உன் பேர் அட்ரஸ் சொல்லு.. உன்னை நான் நேர்ல பாக்கணும்..!!" "இ..இங்க பாருங்க ஸார்.. நீங்க நெனைக்கிற மாதிரி தப்பா எதுவும் நடக்கல..!!" "தப்பா சரியான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்டா.. நீ உன் அட்ரஸ் குடு..!!" வாசுவின் குரலில் உக்கிரம் ஏறியிருக்க, அதற்கு மேலும் பேச்சை தொடர அசோக்கிற்கு விருப்பம் இல்லை. "ஸார்.. நான்தான் என்மேல தப்பு எதுவும் இல்லன்னு சொல்றேன்ல.. எதுவா இருந்தாலும் உங்க வொய்ஃப்ட்டயே கேட்டுக்கங்க.. என்னை ஆளை விடுங்க..!!" அவசரமாய் சொல்லிவிட்டு அசோக் காலை கட் செய்தான். உடனே வாசுவின் எண்ணிலிருந்து இவனுக்கு மீண்டும் கால் வர, அதை பிக்கப் செய்யாமல் தவிர்த்தான். செல்ஃபோன் ஒரு அரை நிமிடம் அலறிவிட்டு அமைதியானது. அது அமைதியாகி நெடுநேரம் ஆகியும் அசோக்குடைய இதயத்தில் ஏறியிருந்த படபடப்பு மட்டும் அடங்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே புரியவில்லை அவனுக்கு..!! மீராவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா..?? அப்புறம் ஏன் அதை என்னிடம் மறைத்தாள்..?? ச்சே.. எப்படி எல்லாம் பேசி என்னை ஏமாற்றிவிட்டாள்..?? நானும் தேவையற்ற கற்பனைகளை எல்லாம் மனதில் வளர்த்துக் கொண்டேனே..??' என்று ஆரம்பத்தில் நினைத்தவனுக்கு திடீரென ஒருவிஷயம் புத்தியில் பளிச்சிட்டது. 'வெயிட்.. வெயிட்.. அந்த ஆள் கருவா சிறுக்கி என்றானே.. மீராவின் கலருக்கும் அந்த கமென்ட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே..?? ஒருவேளை இப்படி இருக்குமோ.. நான் கால் செய்தது மீராவின் நம்பரே இல்லையோ..?? ராங் காலா அது..?? இல்லையே.. நான் மீரா என்றதுமே 'நான் அவளோட புருஷன்' என்றானே அந்த வாசு..?? ஒருவேளை இது வேறொரு மீராவாக இருக்குமோ..?? ஒன்றும் புரியவில்லையே..??' அசோக்கின் மனதில் பலப்பல குழப்பமான கேள்விகள்..!! மீரா தனக்கானவள் என்று முடிவே செய்துவிட்ட அவன் மனது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை நம்ப மறுத்தது. 'இது.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்.. வேறு ஏதோ மீராவாக இருக்க வேண்டும்..' என்று திரும்ப திரும்ப சொல்லி தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். படுக்கையில் வீழ்ந்தவன் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான். அவனுடைய வேண்டுதல் கடவுள் காதில் விழுந்தது போல, நள்ளிரவில் அவனுடைய நம்பருக்கு அந்த கால் வந்தது. மீரா என்று அவன் சேகரித்து வைத்திருந்த நம்பரில் இருந்து..!! ஒருவித குழப்பத்துடனே கால் பிக்கப் செய்து பேசினான். "ஹலோ..!!" என்றான் மெலிதான பதற்றத்துடனே. அவ்வளவுதான்..!! அடுத்த முனையில் ஒரு கர்ண கொடூரமான பெண்குரல் படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தது. அந்தக் குரலை கேட்ட அடுத்த நொடியே, அது தன்னுடைய மீரா இல்லை என்று அசோக்கிற்கு புரிந்து போனது. ஆனால் அதற்காக சந்தோஷப் பட முடியாமல், அந்தப்பெண் வண்டை வண்டையாக அசோக்கை வறுத்தெடுத்தாள். "ஏய்ய்.. டொச்சு.. யார்றா நீ..?? என் போனுக்கு கால் பண்ணி கீற..??" "ஹலோ.. கொ..கொஞ்சம் மரியாதையா பேசுங்க.." "அடிங்.. கொய்யால... உன்கு இன்னாடா மருவாதி என் டோமரு.. பேமானி..!! இன்னாடா சொல்லிக்கின அந்தாளாண்ட..??" "ஹையோ.. நா..நான்... நான்லாம் ஒன்னும் சொல்லலை.." "ஏய்ய்.. இன்னா.. என்னான்டயே டபாய்கிறியா..? அப்டியே வுட்டேன்.. பல்ப்பு பீஸாப் போடும்..!! அந்தாளே ஒரு கொரங்கு கம்னாட்டி.. அந்த கொரங்குக்கு கோட்டர் ஊத்தி விட்டுனுக்குற நீயி.. கோச்சுக்குனு போயிட்டான் இப்போ..!! அல்லாம் உன்னால.. பாடு.. பன்னாடை.. பொறம்போக்கு..!!" "ஹலோ.. திட்டாதீங்க ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. ஆக்சுவலி இட்ஸ் நாட் மை ஃபால்ட்.. இட்ஸ் ஜஸ்ட் எ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!" "ஏய்ய்.. அல்லாம் பண்ணிட்டு இன்னா பீட்டர் வுட்னுகிற..?? அந்தாள் மட்டும் திரும்ப வரல.. மவன உன் மாஞ்சாசோத்தை கீறி துன்னுருவேன்.. சொல்ட்டேன்..!! சோமாறி.. கயித.. கஸ்மாலம்.." அசோக்கால் அதன்பிறகும் அவளுடைய வசவுகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. படக்கென காலை கட் செய்தான். உதடுகள் குவித்து 'உஃப்.. உஃப்.. உஃப்..' என்று ஊதிக்கொண்டான். மீண்டும் அந்தப் பெண்ணிடம் இருந்து கால் வர, 'இது வேலைக்காவாது' என்று முடிவு செய்த அசோக், செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். தூக்கி ஓரமாக போட்டுவிட்டு, படுக்கையில் விழுந்தான். போர்வையால் தன் உடலை முழுவதுமாக மூடிக் கொண்டான். இமைகளை இறுக்க மூடிக்கொண்டு உறங்கிப்போக முயன்றான். 'ச்சே.. என்ன பெண் இவள்..?? இவளை எல்லாம் எப்படி கட்டி மேய்க்கிறான் அந்த வாசு..?? ப்ச்... அந்த மீரா ஏன் இப்படி செய்தாள்..?? வேறு யாருடைய நம்பரையோ எனக்கு கொடுத்து.. ச்சே.. அவளால் எவ்வளவு டென்ஷன்..?? இப்படி ஒரு நல்ல.. இல்லை இல்லை.. ஒரு கேவலமான தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகி விட்டேனே..??' எரிச்சலிலும் குழப்பத்திலும் தவித்தவன், எப்படியோ அன்று இரவு உறங்கிப் போனான். காலையில் குளித்து முடித்து ஆபீஸுக்கு கிளம்பும் போதுதான், ஆஃப் செய்து வைத்திருந்த செல்ஃபோனை எடுத்து, மீண்டும் ஆன் செய்தான். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி, உடனே செல்போன் அலறியது. ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து கால்..!! எடுக்கலாமா வேணாமா என்று ஒருகணம் யோசித்தவன், பிறகு பிக்கப் செய்தான். "ஹலோ..!!" "ஹலோ..!!" அடுத்த முனையில் ஒரு மென்மையான பெண்குரல். "ம்ம்.. யாரு..??" "நான் யார்னு உங்களுக்கு தெரியாது.. நீங்க யார்னும் எனக்கு தெரியாது.. ஆனா உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கேன்..!! உங்களாலதான் இன்னைக்கு என் புருஷன் எனக்கு திரும்ப கெடைச்சிருக்காரு.. என் புருஷன்ட்ட உண்மைலாம் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க..!!" அந்தப்பெண் பேசிக்கொண்டே போக, அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. "ஹலோ.. நீங்க யார் பேசுறீங்கன்னு மொதல்ல சொல்லுங்க..!!" "நான் மிசஸ் வாசு பேசுறேன்.. நேத்து என் ஹஸ்பன்ட் கூட நீங்க பேசுனிங்க.. கரெக்டா..??" அந்தப் பெண் கேட்க, இப்போது அசோக் குழப்பத்துடன் நெற்றியை சுருக்கினான். "ஓ.. நீங்கதான் அவர் மிசஸா..?? அப்போ நேத்து நைட்டு எனக்கு கால் பண்ணி என்னை திட்டுனது..??" "தெ..தெரியலையே.. நான் காலைல இருந்து உங்க நம்பருக்கு ட்ரை பண்ணி.. இப்போத்தான் கெடைச்சது..!!" "இல்லைங்க.. அவங்களதான் வொய்ஃப்னு மிஸ்டர் வாசு சொன்னாரு..!!" "ஓ.. அந்த பஜாரியா..??" "கரெக்டா சொன்னிங்க.. யாருங்க அது..??" "எ..என்ன கேக்குறீங்க நீங்க.. அவ யார்னே உங்களுக்கு தெரியாதா..?? அப்புறம் எப்படி..???? எ..எனக்கு ஒன்னும் புரியல..!!" "எனக்கும் ஒண்ணுமே புரியலைங்க..!! ஆக்சுவலா தப்பு என் மேலதான்.. தப்பான நம்பருக்கு கால் பண்ணிட்டேன்.. அப்புறம் ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்..!!" என்று ஆரம்பித்த அசோக், முதல் நாள் இரவு நடந்த விஷயங்களை அந்த பெண்ணுக்கு சுருக்கமாக எடுத்துரைத்தான். "அந்த மீராதான் இந்த மீரான்னு நெனச்சுட்டு.. நான் பாட்டுக்கு என்னன்னவோ சொல்லிட்டேன்..!!" அசோக் சொல்ல, அந்தப்பெண் இப்போது சிரித்தாள். "ஹாஹா.. எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. ஹாஹா.. ஹையோ ஹையோ..!!" "என்னங்க.. சிரிக்கிறீங்க..??" "நீங்க மீரான்னு சொன்னது.. என் வீட்டுக்காரர் காதுல மீனான்னு விழுந்திருக்கும் போல..??" "மீனாவா..?? அது யாரு..??" "நேத்து உங்களுக்கு கால் பண்ணி திட்டுனான்னு சொன்னீங்களே.. அவதான்..!! சரியான எடுபட்ட சிறுக்கி.. இத்தனை நாளா என் புருஷனை மயக்கி வச்சிருந்தா.. நேத்து உங்கட்ட பேசுனப்புறம் என் புருஷனுக்கும் அவளுக்கும் பயங்கர சண்டை போல.. இப்போ அவரு எங்கிட்டயே திரும்ப வந்துட்டாரு.. 'அவளை பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன் துளசி.. இனிமே நீதான் எனக்கு எல்லாம்'னு.. நடுராத்திரில வீட்டுக்கு வந்து அழுவுறாரு..!! ஹ்ம்ம்... எப்படியோ.. உங்களோட ராங் காலால எனக்கு என் வாழ்க்கை திரும்ப கெடைச்சிடுச்சு.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. உங்க உதவியை இந்த தங்கச்சி எப்போவும் மறக்க மாட்டேன்..!!" அந்த துளசி 'அண்ணா.. அண்ணா..' என்று அன்பை பொழிந்துவிட்டு, இணைப்பை துண்டித்தாள். அவளுடன் பேசிமுடித்த பிறகுதான், அசோக்கிற்கு நேற்று இரவு தொலைந்து போன உற்சாகம் திரும்ப கிடைத்தது. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது என்று தோன்றியது. தவறான அழைப்பினால் சரியானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். மீரா தவறான நம்பர் கொடுத்துவிட்டாளே என்ற எரிச்சல் கூட அவனிடமிருந்து அப்போது மறைந்து போனது. அந்த சந்தோஷத்துடனே சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பினான். பைக்கில் வடபழனியை அடைந்து, சிக்னலுக்காக காத்திருந்த போது, அவனுடைய செல்போன் மீண்டும் பதறியது. மீண்டும் ஒரு எண்ணிலிருந்து கால்..!! இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல், இயல்பாக அந்த காலை அட்டண்ட் செய்தான்..!! அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அடுத்த முனையில் ஒரு ஆள், ஆத்திரமாக சீறினான். "டேய்.. யார்டா நீ.. எந்த ஊரு உனக்கு..?? எங்க மீனாக்கா அந்த ஆளை எவ்ளோ கஷ்டப்பட்டு உஷார் பண்ணி வச்சிருந்தது தெரியுமா..?? ஒன்னு ஒன்னா அவன் சொத்துலாம் உருவலாம்னு ப்ளான் போட்ருந்தோம்.. இப்படி ஒரே கால்ல எல்லாத்தையும் காலி பண்ணிட்டியேடா நாதாரி..?? உன்னை நாங்க சும்மா விட மாட்டோம்டா..!!" "ஹலோ.. நா..நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கங்க.. அ..அதுலாம் நான் வேணும்னு பண்ணல.. எல்லாம் ஒரு.." "ஏய்.. மூட்றா.. பேசுன.. பேத்துடுவேன்..!! நான் சொல்றதை மட்டும் தெளிவா கேட்டுக்கோ.. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு தெரியாது.. நாளைக்கு நைட்டு நாங்க சொல்ற எடத்துக்கு பத்து லட்ச ரூவா பணத்தோட வர்ற.. என்ன.. புரியுதா..??" "என்னது..?? பத்து லட்சமா..??" "ஆமாம்.. நீ பண்ணுன காரியத்துக்கு ஃபைனு..!!" அந்த ஆள் கூலாக சொல்ல, அசோக் டென்ஷன் ஆனான். "யோவ்.. என்ன வெளையாடுறியா..?? பணம் வேணுமாம்ல..?? பணம்லாம் ஒன்னும் தர முடியாது.. வேணுன்னா ஒரு ஸாரி சொல்லிக்குறேன்..!! ஸாரி..!!!! ஓகேவா..??" இப்போது அந்த ஆள் டென்ஷன் ஆனான். "என்னது.. ஸாரியா..?? என்னடா.. கொழுப்பா உனக்கு..?? என்ன கேட்டுட்டு இருக்குறோம்.. என்ன சொல்லிட்டு இருக்குற நீ.. பத்து லட்சம் எங்க இருக்கு.. உன் பிஸ்கோத்து ஸாரி எங்க இருக்கு..?? பணம் வரலன்னா உன் உசுரு உனக்கு இல்ல மவனே.. ஞாபகம் வச்சுக்கோ.. நீ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு உன்னை போட்டுத்தள்ளாம விடமாட்டோம்..!!" யோவ்.. இந்த மெரட்டலுக்குலாம் நான் பயப்பட மாட்டேன்.. பணம்லாம் தர முடியாது.. உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ.. போ..!!" அசோக் கெத்தாக சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தான். திரும்பவும் அதே நம்பரில் இருந்து கால் வர, கண்டுகொள்ளாமல் செல்போனை பாக்கெட்டில் போட்டான். 'நன்னாரிப்பயலுக.. ஒத்தை ராங் கால் பண்ணதுக்கு பத்து லட்சம் ஃபைனாம்.. ரொம்பத்தான் ஆசையெடுத்து அலையுரானுக..!!' என்று மனதுக்குள்ளேயே அந்த ஆளை திட்டியவாறு, எரிச்சலுடன் சிக்னலை ஏறிட்டான். இன்னும் சிவப்புதான் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! அப்போதுதான் அவனுக்கு பக்கவாட்டில் வெண்ணிற அந்த டாடா சுமோ வந்து சரக்கென்று நின்றது. உள்ளே தடிதடியாய் நான்கைந்து ஆட்கள். ஒருத்தன் முகத்திலும் கடுகளவு கூட கண்ணியம் இல்லை. எல்லோரும் கரடுமுரடு ஆசாமிகளாக காட்சியளித்தனர். சிக்னலுக்காக நின்றவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்ள, கவனம் கலைந்த அசோக் அவர்களை திரும்பி பார்த்தான். "என்னடா ஆச்சு..??" "எடுக்க மாட்டேன்றான் மாமு..!! என்ன பண்ணலாம்..??" "பரவால விடு.. நம்ம எஸ்.ஐட்ட அந்த நம்பரை குடுத்து, அவன் அட்ரஸ் ட்ரேஸ் பண்ண சொல்லலாம்..!!" "ங்கொய்யால.. அவன் மட்டும் பணம் தரமாட்டேன்னு மொரண்டு புடிக்கட்டும்.. அவனுக்கு என் கையாலதான் மாமு சாவு..!!" முகத்தில் வெட்டு காயத்துடன் கொடூரமாக இருந்த அவன், சொல்லிக்கொண்டே கையிலிருந்த கத்தியால் தாடியை சொறிந்தான். அரையடிக்கும் அதிகமான நீளத்தில், அகலமாக பல்பல்லாக பளபளத்தது அந்த கத்தி..!! அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக் அப்படியே ஆடிப் போனான். அடிவயிறு கலங்கிப் போனது அவனுக்கு.
'ஆத்தி.. கொலைகாரப்பயலுக கூடவா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்..?? கத்தியும் கையுமால அலையுறானுக..??' விரிந்த விழிகளுடனும், ஆவேன பிளந்த வாயுடனும் அந்த கத்தியையே சிலவினாடிகள் 'பெக்கே பெக்கே' என்று பார்த்தவன், அப்புறம் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கியாவாறே, மெல்ல தலையை திருப்பிக்கொண்டான். கேஷுவலாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வது மாதிரி பாவலாவுடன், ஒரு கையை சட்டை பாக்கெட்டுக்குள் விட்டு தன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தான்.அப்புறம் ஒரு அரைமணி நேரம் கழித்து, அசோக் அந்த செல்போனை மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்தபோது, வடபழனியில் இருக்கும் ஒரு மொபைல் ஷாப்பில் இருந்தான். புதியதொரு சிம் கார்டை அவனுடைய செல்போன் அல்ரெடி உள்வாங்கியிருந்தது. "நம்பர் எப்போண்ணா ஆக்டிவேட் ஆகும்..??" "நைட்டுக்குள்ள ஆகிடும் ஸார்.. நான் கேரண்டி..!!" "ஓகேண்ணா.. தேங்க்ஸ்..!!" சொன்ன அசோக், செல்போனை தூக்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பழைய சிம்மை கையில் எடுத்து, 'த்தூ.. த்தூ.. த்தூ..' என்று மனதுக்குள்ளேயே மூன்று முறை காறித்துப்பி, அந்தக்கடையில் இருந்த குப்பைக்கூடையிலேயே விட்டெறிந்தான். "டபுள் ஃபைவ்.. ட்ரிப்பில் ஃபைவ்னு முடியுது மச்சான்.. நல்லா ஃபேன்சி நம்பர் மாதிரி இருக்கு..!!" புது சிம்கார்ட் அட்டையை சுரண்டிக்கொண்டே சாலமன் இளிக்க, அசோக் அவனை கடுப்புடன் முறைத்தான். "கெளம்புடா வெண்ணை..!!" என்று எரிந்து விழுந்தான். திரும்பி நடந்தான். "ம்க்கும்.. எவ மேல இருக்குற கடுப்பையோ, என் மேல காட்டு..!!" சாலமன் முனகிக்கொண்டே அவனுடன் நடந்தான். இருவரும் பைக்கில் ஏறிக்கொள்ள, அது ஆபீஸை நோக்கி பறந்தது. அசோக் நிஜமாகவே மீரா மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அவளால் நேற்று இரவில் இருந்து அவன் மாற்றி மாற்றி அனுபவித்த டென்ஷனை எண்ணி எண்ணி எரிச்சலானான். 'எதுக்கு இப்படி ஒரு சிக்கல்ல என்னை மாட்டிவிட்டா.. ஊர் பேர் தெரியாதவன்லாம் என் உசுரை எடுக்க அலைஞ்சுட்டு இருக்கானுக.. ச்சே.. இன்னைக்கு வரட்டும்.. அவளை வச்சுக்குறேன்..' என்று மனதுக்குள்ளேயே கருவிக் கொண்டான். ஆபீஸில்.. "அவ நம்பரை உன் கைல எழுதுனதுக்கே.. உன் நம்பர் காலி ஆகிடுச்சு மச்சி..!! ஐ லவ் யூ வேற சொல்லிருக்கா.. அதுக்கு இன்னும் என்னென்ன ஆகப் போகுதோ..?? கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு..!!" வேணு வேறு அசோக்குக்கு டென்ஷன் ஏற்றினான். "அவ ஒன்னும் என் மேல இருக்குற ஆசைல ஐ லவ் யூ சொன்ன மாதிரி எனக்கு தோணலைடா..!!" அசோக் மனதில் இருந்த குழப்பத்தை வெளியே சொல்லிவிட, "ஹேய்.. ஏண்டா அப்படி சொல்ற..??" கிஷோர் சட்டென அசோக்கிடம் கேட்டான். அசோக் இப்போது தன் மனதில் இருந்த குழப்பத்தை நண்பர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தான். பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மீரா அவனை கலாய்த்தது.. அப்புறம் பரிட்டோ வாங்கி தந்தால்தான் மேற்கொண்டு பேசுவேன் என்றது.. பில்லுக்கு பணம் கேட்டதும், திடீரென ஐ லவ் யூ சொன்னது..!! நேற்று அவர்களிடம் சொல்லாத அந்த விஷயங்களை எல்லாம், இப்போது விளக்கமாக சொன்னான். நம்பர் தந்திருக்கிறாளே என்ற நம்பிக்கை கூட நேற்று இரவே தகர்ந்து போனது என்று புலம்பினான். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட நண்பர்கள் மூவரும், சிறிது நேரம் பலத்த யோசனையில் இருந்தனர். அசோக்குக்கு ஏதாவது ஒருவகையில் உதவ முடியாதா என்று தீவிரமாக தின்க் செய்தனர். 'புரிஞ்சுக்க முடியாத கேரக்டரா இருக்காடா..' என்று அசோக் சலிப்பாக சொன்னதை அனைவரும் ஆமோதித்தனர். 'ஹேய்.. ஒருவேளை அவ கெளம்புற அவசரத்துல தப்பான நம்பர் குடுத்திருக்கலாம் மச்சி.. நீயா எந்த ஒரு முடிவுக்கும் வந்துடாத..' என்று சொல்லிப் பார்த்தனர். பிறகு அவன் சமாதானம் ஆகாததை கண்டதும், 'சரி மச்சி.. நீ ரொம்ப ஃபீல் பண்ணாத.. அதான் நாங்கலாம் இருக்கோம்ல.. இன்னைக்கு அவ வந்தான்னு வச்சுக்கோ.. ரெண்டுல ஒன்னு கேட்டுடலாம்.. சரியா..??' என்று அசோக்கை தைரியமூட்டினார். என்ன செய்யலாம் என்று நான்கு பேரும் ஒரு திட்டம் தீட்டினர்..!! அன்று மதியம்.. அவர்கள் நால்வரும் அந்த ஃபுட்கோர்ட்டுக்குள் புகுந்தபோது.. மீரா ஏற்கனவே வந்திருந்தாள்..!! வழக்கம் போல ஒரு கார்னர் டேபிளை பிடித்திருந்தவள்.. தனியாக அமர்ந்து, தட்டில் இருந்த ரோட்டியை தாக்கிக் கொண்டிருந்தாள்..!! வேணுதான் அவளை முதலில் கவனித்தான்..!! "மச்சி.. யார்னு பாரு அங்க..!!" என்று வேணு சொன்னதும், மற்ற மூவரும் மீராவை பார்வையால் தேடிப் பிடித்தனர். நன்றாக முழுங்கிக்கொண்டிருந்த அவளை.. நான்கு பேருமே தூரத்தில் இருந்தவாறு முறைத்து பார்த்தனர்..!! தங்களுக்குள் ஒருமுறை ஒருவர் முகத்தை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர். இதே ஃபுட் கோர்ட்டில் மீரா ஒரு ஆளை பளார் பளார் என்று கன்னத்தில் அறைந்து விரட்டிய சம்பவம், அவர்கள் அனைவருடைய மூளையையும் அந்த நொடியில் க்ராஸ் செய்திருக்க வேண்டும். தலையை சிலுப்பி வலுக்கட்டாயமாக அந்த நினைவை விரட்டி அடித்தனர். பிறகு வீரசிங்கங்கள் போல.. நால்வரும் பேரலலாக நடந்து.. மீராவை நோக்கி சென்றனர்.. அவள் அமர்ந்திருந்த டேபிளை சூழ்ந்து கொண்டனர்..!!தலையை நிமிர்த்திய மீரா முதலில் அசோக்கைத்தான் பார்த்தாள்.. உடனே அவளுடைய முகம் விளக்கு போட்ட மாதிரி ப்ரைட் ஆனது..!! "ஹாய்..." என்று உற்சாகமாக கத்தியவள், "மிஸ்டர்.. மிஸ்டர்.." என்று எதையோ மறந்தவள் போல இழுத்தாள். நான்கு பேருமே அவளை இன்னும் கடுமையாக முறைக்க ஆரம்பிக்க, அசோக்தான் கடுப்பை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான். "அசோக்..!!!! என் பேர் கூட அதுக்குள்ள மறந்து போச்சா..??" "ச்சே ச்சே.. அப்டிலாம் இல்லப்பா..!! உன் பேரை எப்படி நான் மறப்பேன்..? ஆக்சுவலா நேத்து நைட் உனக்கு ஒரு பெட் நேம்.. ஸாரி.. நிக் நேம் யோசிச்சு வச்சேன்.. அதை சொல்லி கூப்பிட ட்ரை பண்ணேன்.. அதுக்குள்ளே நீ..." "போதும்.. ரொம்ப நடிக்காத..!!" அசோக் அவ்வாறு எரிச்சலாக சொல்ல, இப்போது மீராவின் முகம் பட்டென மாறிப் போனது. "என்னாச்சு..???" என்றாள் மிகவும் சீரியஸான குரலில். அசோக் அவளுக்கு பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டே இருக்க, இப்போது சாலமன் அவ்வளவு நேரம் மனதுக்குள் மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்த டயலாக்கை டெலிவரி செய்தான்.. குரலில் மெலிதான பதற்றத்துடனே..!! "இ..இங்க பாருங்க.. நீங்க பண்றதுலாம் சரி இல்ல.. உங்க மனசுல என்னதான் நீங்க நெனச்சுட்டு இருக்கீங்க..??" சாலமன் கேட்கவும், இப்போது மீரா அவனை ஏறிட்டு முறைத்தாள். "இ..இந்த மொறைக்கிற வேலைலாம் வச்சுக்காதிங்க..!! எ..எங்க அசோக் உங்களை சின்ஸியரா லவ் பண்றான்.. நீங்க என்னடான்னா அவனை வச்சு காமடி பண்ணிட்டு இருக்கீங்க..!! ஏன் இப்படிலாம் பண்றீங்க..??" - இது வேணு சற்று தடுமாற்றத்துடனே. "இப்படி சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்..?? கேக்குறோம்ல.. பதில் சொல்லுங்க..!! இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நாங்க போறதா இல்ல.. எங்க ஃப்ரண்டை நீங்க உண்மைலேயே லவ் பண்றீங்களா.. இல்ல சும்மா டைம் பாஸ்க்கு வெளையாடுறிங்களா..??" கிஷோரின் குரலிதான் சற்றேனும் தைரியம் தொணித்தது. மீரா இப்போது அசோக்கை விட்டுவிட்டு அவனுடைய நண்பர்கள் மூவரையும் மாறி மாறி பார்த்து முறைத்தாள். அவளுடைய மார்புகள் ஒருமாதிரி குபுக் குபுக்கென ஏறி இறங்கின. அவளுடைய அமைதியை பார்த்த மற்ற மூவரும், இப்போது சற்றே தைரியமாகி.. "ஹலோ.. பேசுங்க.." என்றார்கள் கோரஸாக. மீராவுக்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை. அமர்ந்திருந்த சேரை சரக்கென பின்னால் தள்ளிவிட்டவாறு ஆவேசமாக எழுந்தாள். அவளுடைய முகம் இன்ஸ்டண்டாய் ஒரு ஆத்திரச் சிவப்பை பூசியிருக்க, "அடிங்ங்ங்..!! யார்டா நீங்கள்லாம்..??" என்று நரம்பு புடைக்க அவர்களை பார்த்து கர்ஜித்தாள். அவ்வளவுதான்..!! அவளுடைய அனல் கக்கும் பார்வையில் அனைவரும் அரண்டு போயினர். நால்வரும் சடக்கென இரண்டடி பின்னால் நகர்ந்தார்கள். சாலமன் மட்டும் பத்தடி தூரத்திற்கு அந்தப்பக்கம் நின்றிருந்தான். கிஷோர்தான் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மிடறு விழுங்கியவாறு சொன்னான். "நா..நாங்க.. நாங்கள்லாம்.. அ..அசோக்கோட ஃப்ரண்ட்ஸ்..!!" "ப்ரண்ட்ஸ்னா.. பெரிய பருப்பா நீங்கள்லாம்..???? பிச்சுப்புடுவேன் பிச்சு..!!! உங்களுக்குலாம் நான் பதில் சொல்லிட்டு இருக்கணுமா..?? உங்களுக்கு இன்னும் பத்து செகன்ட் டைம் தர்றேன்.. அதுக்குள்ள ஒருபய என் முன்னாடி இருக்க கூடாது.. இல்லனா நான்.. என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!" முகத்தில் முறைப்பும் உடலில் விறைப்புமாக மீரா பொரிந்து தள்ள, நான்கு பேரும் அப்படியே வெலவெலத்துப் போயினர். அசோக்கை தவிர மற்ற மூவரும் தயங்கி பின் வாங்கினர். "ம..மச்சி... வந்துட்றா.. போயிர்லாம்..!!" சாலமன் தொடை நடுங்க அசோக்கை கை நீட்டி சுரண்டினான். உடனே அசோக் மெல்ல ஓரடி பின்னால் எடுத்து வைக்க, இப்போது மீரா அசோக்கின் முகத்துக்கு நேராக 'டக்.. டக்..' என விரலை சொடுக்கினாள். "ம்ம்ம்.... நீ எங்க கெளம்புற..?? நீ உக்காரு..!!" என்று மிரட்டலாக சொன்னவள், அவளுக்கு எதிரே இருந்த சேரை சுட்டு விரலால் அவனுக்கு சுட்டி காட்டினாள். அவன் அப்புறமும் தயங்க, 'ம்ம்.. உக்காருன்றன்ல..?' என்று உறுமினாள். அசோக் இப்போது தயங்கி தயங்கி அந்த சேரில் அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததும் மீரா வெடுக்கென மற்றவர்களிடம் திரும்பினாள். "ம்ம்ம்.. இன்னும் என்ன இங்க வேடிக்கை..??" என்றாள் சீற்றமாக. "ஹேய்.. நீங்க ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு இருங்கடா.. நான் பேசிட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்..!!" அசோக் திரும்பி நண்பர்களிடம் சொன்னான். "இ..இல்ல மச்சி.. நா..நாங்க பார்ஸல் வாங்கிட்டு ஆபீஸுக்கு போயிர்றோம்.. நீ அங்கேயே வந்து ஜாயின் பண்ணிக்கோ..!!" என்று சொன்ன வேணு, "ஹேய்.. வாங்கடா..!!" என்று மற்ற இருவரையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். விட்டால் போதும் என்று விழுந்தடித்துக்கொண்டு இடத்தை காலி செய்தனர் மூவரும். "மச்சி.. எமர்ஜன்சி ஆம்புலன்ஸ் சர்வீஸ் நம்பர்.. 102-ஆ 103-ஆ..??" நகரும்போது சாலமன் முணுமுணுத்தது அசோக்கின் காதில் விழுந்து அவனை கிலியடைய செய்தது. அவர்கள் செல்வதையே சிறிது நேரம் முறைத்து பார்த்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் படக்கென சேரில் அமர்ந்தாள். அமர்ந்ததுமே டேபிளில் கிடந்த முள்கரண்டியை கையில் எடுத்து.. அசோக்கின் முகத்துக்கு நேராக நீட்டி.. அவனை குத்திவிடுவது மாதிரி ஆட்டியாவாறே.. சீற்றமாய் கேட்டாள்..!! "என்ன.. ஆள் கூட்டிட்டு வந்து மெரட்றியா..?? ஒரு அறைக்கு தாங்க மாட்டானுக ஒவ்வொருத்தனும்..!! இவனுகள்லாம் உனக்கு அடியாளுகளா..?? அப்டியே போட்டன்னா..!!!" "ஸா..ஸாரி மீரா.. அ..அவனுக என் ஃப்ரண்ட்ஸ்.... ஏதோ தெரியாம.." "ப்ரண்ட்ஸ்னா..?? இங்க பாரு.. உனக்கும் எனக்கும்தான் பேச்சு..!! உன் அல்லக்கையி.. நொள்ளக்கையி.. மொன்னக்கையிலாம்.. அங்க.. அங்க நிக்கணும்.. தூரமா..!! பக்கத்துல வந்தானுக.. பஞ்சர் ஆயிடுவானுக.. பஞ்சர்..!! சொல்லி வையி.. புரிஞ்சதா..?? இவனுக ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பானுக.. நான் கையை கட்டி பதில் சொல்லனுமா..??" "ஓகே ஓகே..!! ரிலாக்ஸ்.. கூல் டவ்ன்..!!!!" அசோக் அவளை சமாதானப் படுத்தும் விதமாக சொன்னான். அப்புறமும் சில வினாடிகள் அசோக்கையே முறைத்துக் கொண்டிருந்த மீரா, அப்புறம் ஆத்திரம் வெகுவாக குறைந்து போனவளாய் கேட்டாள். "ம்ம்ம்..!! இப்ப சொல்லு.. என்ன பிரச்சனை..??" அவள் கேட்க, அசோக் சற்றே தயங்கிவிட்டு ஆரம்பித்தான். "நீ.. நீ ஏன் அப்படி பண்ணின..??" "எப்படி பண்ணேன்..??" "உன்னால எவ்வளவு டென்ஷன் தெரியுமா..??" "ப்ச்.. பிரச்சனை என்னன்னு சொல்லப் போறியா.. இல்ல சப்புன்னு ரெண்டு விடட்டுமா..??" "சொ..சொல்றேன்.. அ..அந்த நம்பரு.." "எந்த நம்பரு..??" "அதான்.. நேத்து உன் கான்டாக்ட் நம்பர்னு குடுத்தியே..??" "ம்ம்.. அதுக்கென்ன..??" "அ..அந்த நம்பருக்கு கால் பண்ணினா வேற யாரோ ஃபோன் எடுக்குறாங்க.. ஆக்சுவலி இட்ஸ் எ ராங் நம்பர்..!!" "ஓ..!! எங்க.. அந்த நம்பர் என்னன்னு சொல்லு..!!" மீரா கேட்க, அசோக் நம்பரை சொல்லாமல், தன் செல்போன் எடுத்து அந்த காண்டாக்ட் திறந்து காட்டினான். ஒருகணம் அந்த எண்ணை சரிபார்த்த மீரா, "ஹ்ம்ம்.. என் நம்பர்தான் இது.. பட்.. ஒரே ஒரு சின்ன கரெக்ஷன்..!! ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்டேன்.. தட்ஸ் ஆல்..!!! இதுக்கா இவ்வளவு அலப்பறை..??" மீரா கேஷுவலாக கேட்க, அசோக் உடனே சன்னமான குரலில் முனகினான். "ம்க்கும்.. நீ ஏழையும் ஆறையும் மாத்தி போட்டுட்ட.. எனக்கு எல்லாரும் ஏழரையை கூட்டிட்டாணுக..!!" "என்ன மொனங்குற..??" "ஒன்னுல்ல..!! நீ தப்பான நம்பர் குடுத்ததால எனக்கு எவ்வளவு பிரச்சனை தெரியுமா..?? டாடா டோகோமோல இருந்து வோடஃபோன் மாற வேண்டியதா போச்சு.. டாடா சுமோவ பாத்தாலே ஓட்டம் எடுக்க வேண்டியதா போச்சு..!!" "ப்ச்.. எனக்கு ஒன்னும் புரியல.. என்னாச்சுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.." மீரா இப்போது கூலாக கேட்டாள். "ஆக்சுவலா.. நேத்து நைட்டு.. உனக்கு கால் பண்ணலாம்னு.." அசோக் ஆரம்பிக்க, அவள் இடையில் குறுக்கிட்டாள். "ஏய்.. இரு இரு.. அதுக்கு முன்னாடி.." அவள் சொல்லி முடிக்கும் முன்பே, "என்ன..? பரிட்டோவா..??" அசோக் பாவமாக கேட்டான். "யெஸ்..!! அதோட.." "டயட் கோக்..??" "ஹாஹா..!! க.க.க.போ.. வாங்கிட்டு வா போ..!!" கண்களில் குறும்பும், கன்னத்தில் குழியுமாக மீரா புன்னகைத்தாள்.'தலையெழுத்தே..!!' என்று அசோக் சேரை விட்டு எழுந்து கொண்டான். நேற்று மாதிரியே டேகோ பெல் சென்று பரிட்டோவும், டயட் கோக்கும் வாங்கிக்கொண்டு திரும்ப வந்தான். வந்ததுமே மீரா கவர் பிரித்து, பரிட்டோவை ஒரு பெரிய கடி கடித்தாள். "ம்ம்.. சொல்ஹு..!!" என்று வீங்கிப்போன கன்னத்துடன் சொன்னாள். அசோக் மீராவின் முகத்தையே சலிப்பாக பார்த்தவாறு, முந்தின இரவில் இருந்து நடந்த சம்பவங்களை, பொறுமையாக கூற ஆரம்பித்தான். அவன் பரிதாபமாக சொன்னவற்றை எல்லாம், மீரா பரிட்டோ மென்று கொண்டே சுவாரசியமாக கேட்டுக் கொண்டாள். அடிக்கடி 'ஹாஹாஹாஹா..' என்று சீஸ் அப்பிய வாயுடன் சிரித்தாள். கோக் குடித்து 'ஏவ்வ்வ்' என்று ஏப்பம் விட்டாள். "ம்ம்.. கடைசில என்னாச்சு..??" "என்னாச்சு.. என் நம்பரை சேன்ஜ் பண்ணிட்டேன்..!! சிவன் கோயில் போய்.. என் பேர்ல நானே ஒரு அர்ச்சனை பண்ணிக்கிட்டேன்..!! அவனுக கைல சிக்க கூடாதுடா சாமின்னு நல்லா வேண்டிக்கிட்டேன்..!!" "ஹாஹாஹாஹா..!!!" மீரா அதற்கும் கனைக்க, அசோக் எரிச்சலாக அவளை பார்த்தான். "ம்ம்.. அந்த கடுப்புலதான்.. ப்ரண்ட்ஸ்லாம் கூட்டிட்டு என் மேல படை எடுத்து வந்தியாக்கும்..??" "அ..அது மட்டும் இல்ல.." "அப்புறம்..??" "நீ நேத்து ஐ லவ் யூ சொன்னேல..??" "ஆமாம்..!!" "நெஜமாவே நீ என்ன லவ் பண்றியா.. இல்ல சும்மா வெளையாடுறியான்னு வேற எனக்கு ஒரு டவுட்டு..!!" "ஏன் அப்படி ஒரு டவுட்டு..??" "பின்ன.. திடீர்னு ஐ லவ் யூ சொன்னா..??" "ம்ம்..?? நீயுந்தான் திடீர்னு என்னை லவ் பண்றேன்னு சொன்ன..??" "அதுக்கில்ல.. என்னைப் பத்தி உனக்கு.." அசோக் கேட்க வந்ததை முடிக்காமல் இழுத்தான். "ம்ம்.. சொல்லு..!!" மீரா அவனை முடிக்க சொல்லி தூண்டினாள். "இல்ல.. எ..என்னை பத்தி உனக்கு எதுவும் தெரியாதேன்னு.." மீண்டும் இழுக்கத்தான் செய்தான். "எதுவுமே தெரியாம வர்றதுக்கு பேர்தான் காதல்.. எல்லாம் தெரிஞ்சுட்டு வந்தா அதுக்கு பேர் கால்குலேஷன்..!! நீதான நேத்து சொன்ன..??" மீரா அசோக்கை மடக்க, அவன் இப்போது சோர்ந்து போனான். "ம்ம்ம்.. ஆ..ஆமாம்.. நான்தான் சொன்னேன்.. நானேதான்..!!!!" என்று பரிதாபமாக தலையை ஆட்டினான். "ம்ம்.. அப்புறம் என்ன..??" "இல்ல.. பில்லுக்கு பணம் கேட்டதும் நீ ஐ லவ் யூ சொன்னியா.. அதான் ஒருவேளை.." ஆரம்பித்துவிட்டு, அப்புறம் அவசரப்பட்டு விட்டோமோ என்று அசோக் நாக்கை கடித்துக் கொண்டான். "ம்ம்.. ஒருவேளை..??" மீரா கண்களை உருட்டியவாறு கேட்டாள். "வே..வேணாம் விடு..!!" "ப்ச்.. இப்போ சொல்லப் போறியா.. இல்ல பளார்னு ஒன்னு விடவா..??" மீரா திடீரென உக்கிரமாக, அசோக் மிரண்டு போனான். "இ..இல்ல.. சொல்லிடுறேன்..!!" "சொல்லு..!!" "ஒருவேளை உன் கைல காசு இல்லாம ஐ லவ் யூ சொல்லிட்டியோன்னு.." சொல்லிவிட்டு அசோக் மிரட்சியாக மீராவை ஏறிட்டான். அவள் எரிந்து விழப் போகிறாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ படுகூலாக இருந்தாள். கோக்கை எடுத்து ஒருமுறை உறிஞ்சிக் கொண்டவள், பிறகு கேஷுவலாக கேட்டாள். "என் அப்பாவுக்கு மொத்தம் மூணு புள்ளைங்கன்னு சொன்னேன்ல..??" "ம்ம்..!!""அவருக்கு மொத்தம் சொத்து எவ்வளவுன்னு சொன்னனா..??" "இ..இல்ல..!!" "கொஞ்சம் கம்மி.. அறுபது கோடிக்கு கொஞ்சம் கம்மி..!!" மீரா அசால்டாக சொல்ல, அசோக் ஆவேன வாயை பிளந்தான். "மூணு பங்கு வச்சாலும்.. இருபது கோடிக்கு சொந்தக்காரி நான்..!! அந்த பிச்சைக்காசு நூத்தி நாப்பது ரூவாக்காக.. உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருப்பேன்னு நெனைக்கிறியா..?? ம்ம்..??" மீரா ஷார்ப்பாக கேட்க, அசோக் அவனையும் அறியாமல் தலையை இப்படியும் அப்படியுமாய் அசைத்தான். "சான்ஸே இல்ல..!!!" "சந்தேகப்படுறல என்னை..??" மீரா திடீரென முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, சீரியஸ் குரலில் கேட்டாள். அசோக்கிடம் உடனே ஒரு பதற்றம். தேவையில்லாமல் சந்தேகப்பட்டு அவளை காயப்படுத்தி விட்டோமோ என்பது மாதிரியான குற்ற உணர்வு..!! "ஹேய்.. மீரா.. அ..அப்டிலாம் இல்ல.." "போ..!! நம்பாட்டி போ.. மனசுல சந்தேகத்தை வச்சுக்கிட்டு நீ என் கூட பழக வேணாம்..!! போ.. ரெண்டு நாள் சாப்பிட்டதுக்கு நான் காசு தந்துட்றேன்.. வாங்கிட்டு போ..!!" சொல்லிக்கொண்டே, மீரா ஹேண்ட் பேகை எடுக்க செல்ல அசோக் அவசரமாய் அவளை தடுத்தான். "ஐயோ.. என்ன மீரா இது.. நான் ஏதோ அறிவில்லாம.." "நீ மட்டும் என்னை பத்தி தெரியாம சின்ஸியரா லவ் பண்றேன்னு சொல்ற.. அதே நான் சொன்னா.. சந்தேகப்படுறல.. போ..!!" "ஹையோ.. ஸாரிம்மா.. ஸாரி.. என்னை மன்னிச்சுடு.. ப்ளீஸ்..!! இனிமே நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன்.. ஓகே வா..?? ஸாரி.. ஸாரி.. ஸாரி..!!" "ம்ம்.. பரவால விடு..!!" "ஹேய்.. நீ இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு..!! கொஞ்சம் சிரியேன் ப்ளீஸ்..!!" "ப்ச்.. வேணாம்.. நான் சிரிக்கிற மூட்ல இல்ல..!!" "ம்ம்ம்ம்... ஓகே.. அப்போ.. நான் உன்னை சிரிக்க வைக்கவா..??" "எப்படி..??" "எனக்கு ஏதோ நிக் நேம் வச்சிருக்கேன்னு சொன்னேல..?? அது என்னன்னு கெஸ் பண்ணவா..??" அசோக் அவ்வாறு கேட்கவும், "ம்ம்.. ஓகே..!!" மீரா திடீர் உற்சாகத்துடன் சொன்னாள். அசோக் சில வினாடிகள் யோசிப்பது போல பாவ்லா செய்துவிட்டு கேட்டான். "ம்ம்.. தடிமாடு..??" அவன் அவ்வாறு கேட்கவும் மீரா குபுக்கென சிரித்துவிட்டாள். "ஹாஹாஹாஹா...!! இல்ல..!!" அவளை சிரிக்க வைத்துவிட்ட திருப்தியில், அசோக்கின் முகத்திலும் இப்போது ஒரு பூரிப்பு. "ம்ம்ம்.. அப்படினா.. கருங்கொரங்கு..??" "ஹாஹாஹாஹா...!!" "அதுவும் இல்லையா..?? ஓகே.. காட்டுப்பன்னி..??" "ஹாஹாஹாஹா...!! ச்சோ.. ச்வீட்..!!!! பக்கத்துல வந்துட்ட.. ஹாஹா..!! ம்ம்ம்.. போதும் விடு.. நானே சொல்லிர்றேன்..!!" "ஹாஹா..!! ஓகே.. சொல்லு.. வாட்ஸ் மை நிக் நேம்..??" "ஹனிபனி..!!" "ஹனிபனியா..??" "ம்ம்..!! யு'ஆர் மை பம்கின் பம்கின்.. ஹலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங் சம்திங்.. ஹலோ ஹனிபனி..!!" ஐடியா மொபைல் விளம்பர பாடலை.. அசோக்கை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டி.. கண்களை 'பட், பட்' என சிமிட்டியவாறே.. குரலில் ஒரு கிறக்கத்துடன் மீரா பாட.. அசோக் அப்படியே உருகிப் போனான்..!! அவளுடைய குரல் அவனது காது வழியே புகுந்து.. இதயத்தை வருடி சில்லிட செய்தது..!! எழில் கொஞ்சி விளையாடுகிற அவளுடைய முகத்தையே.. ஏக்கமும் காதலுமாய் பார்த்தான்..!! 'ஏதோ நேற்று அவசரத்தில் தவறான நம்பர் தந்துவிட்டாள்.. என் மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறாள்.. இவளைப்போய் சந்தேகப் பட்டுவிட்டேனே..?' என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.ஆரம்பத்தில் இருந்த இறுக்க நிலை தகர்ந்து, இப்போது இருவரும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தனர். கொஞ்ச நேரம் பொதுவாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஃபுட்கோர்ட்டிலும் கூட்டம் வெகுவாக குறைய ஆரம்பித்திருந்தது. அப்போதுதான் அசோக் பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக சொன்னான். "ஹேய்.. என் நம்பர் சேன்ஜ் பண்ணிட்டேன் சொன்னேன்ல.. ந்யூ நம்பர் சொல்றேன்.. ஸேவ் பண்ணிக்கோ..!!" "ம்ம்.. சொல்லு..!!" "எதுல ஸேவ் பண்ணிப்ப..?? உன் செல்ஃபோனை எடுத்துக்கோ..!!" "எங்கிட்ட செல்ஃபோன்லாம் இல்ல.. நீ நம்பர் சொல்லு.. நான் மைண்ட்ல ஸேவ் பண்ணிக்கிறேன்..!!" மீரா கேஷுவலாக சொல்ல, அசோக் இப்போது பக்கென அதிர்ந்தான். "என்னது..??? செல்ஃபோன் இல்லையா..?? அப்புறம் நம்பர் கொடுத்த..??" "ஹப்பா..!! இல்லன்னா.. இப்போ எங்கிட்ட இல்லன்னு சொன்னேன்.. வீட்ல வச்சிருக்கேன்..!!" "ஓ..!! மறந்து வச்சுட்டு வந்துட்டியா..??" "இ..இல்லப்பா.. நான் செல்ஃபோன் அதிகமா யூஸ் பண்றது இல்ல.. எப்போவாவதுதான்..!! ஆக்சுவலா எங்கிட்ட செல்ஃபோன் இருக்குறதே ஒன்னு ரெண்டு முக்கியமான ஃப்ரண்ட்ஸ் தவிர வேற யாருக்கும் தெரியாது.. முக்கியமா என் ஃபேமிலில யாருக்குமே தெரியாது.. தெரிஞ்சா அவ்வளவுதான்..!! உன்கிட்ட நான் நம்பர் குடுத்தது எனக்கு நீ கால் பண்றதுக்காக இல்ல.. நான் உனக்கு கால் பண்றப்போ.. நான்தான் கால் பண்றேன்னு நீ தெரிஞ்சுக்குறதுக்காக..!!" மீரா அவ்வாறு சொன்னது அசோக்கிற்கு குழப்பத்தையே உண்டுபண்ணியது. "எ..என்ன சொல்ற நீ.. நீ செல்ஃபோன் வச்சிருக்குறது உங்க வீட்டுக்கே தெரியாதா..??" "ஹ்ம்ம்..!! இதுக்கே ஷாக் ஆகிட்டா எப்படி..?? எங்க வீட்ல.. நோ டிவி.. நோ மூவி.. நோ இன்டர்நெட்.. நோ சாங்க்ஸ்.. நோ மேகஸின்ஸ்.. நோ பாய்-கேர்ல் ஃப்ரண்ட்ஷிப்..!!" மீரா சொல்ல சொல்ல, அசோக்கின் முகத்தில் எக்கச்சக்கமாய் குழப்ப ரேகைகள். "ஏ..ஏன்.. ஏன் அப்படி..??" "அதெல்லாம் இருந்தா நாங்க கெட்டுப் போயிடுவோமாம்.. யார் மேலயாவது லவ் வந்துடுமாம்..!! எல்லாம் என் அப்பாவோட ரெஸ்ட்ரிக்ஷன்ஸ்..!!" "அவருக்கு லவ் பிடிக்காதா..??" "ம்ஹூம்..!! லவ்ன்ற வார்த்தையே ஆகாது.. காதல் மேல வெறுப்புனா வெறுப்பு.. அப்படி ஒரு வெறுப்பு அவருக்கு..!!" மீரா சொல்ல, அசோக்கின் மனதுக்குள் இப்போது ஒரு மெலிதான பயம் பரவியது. "ஓ..!! எதுக்கு அப்படி ஒரு வெறுப்பு..?? உ..உன்.. உன் அப்பா பத்தி நான் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..??" "ம்ம்.. சொல்றேன்..!!" சொன்ன மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அசோக்கின் முகத்தை பாராமல் வேறெங்கோ பார்வையை செலுத்தினாள். சிறிது நேரம் அவ்வாறே வெறித்துக் கொண்டிருந்தவள், பிறகு மெல்ல ஆரம்பித்தாள். "என் அப்பா பேரு சந்தானம்..!!" "ம்ம்.. கோடிக்கணக்குல சொத்துன்னு சொல்ற.. என்ன பண்றார்..?? பிஸினஸா..??" "ஆமாம்.. பெயிண்ட் பிஸினஸ்..!! நேத்து என் சொந்த ஊர் சொன்னேன்ல..??" "ம்ம்.. காரைக்குடி..!!" "எஸ்..!! அங்க இருக்குறப்போ அவர் பிஸினஸ் பண்ண பெயின்ட்டுக்கு நெறைய கலர்.. சென்னை வந்தப்புறம் பிஸினஸ் பண்ற பெயின்ட்டுக்கு ஒரே ஒரு கலர்தான்..!! ரெட்..!!!!" "பு..புரியல..!!" "எங்க ஏரியால என் அப்பா ஒரு பெரிய புள்ளி அசோக்.. நெறைய பாலிடிஷியன்சோட லிங்க் இருக்கு அவருக்கு..!! அடிதடி.. ஆள் கடத்தல்.. கமிஷன்.. கட்டப் பஞ்சாயத்து.. ரியல் எஸ்டேட் ஃப்ராட்.. ப்யூர் ரவுடிசம்..!!!! என் அப்பா மாதிரி ஒரு இரக்கம் இல்லாத மொரட்டு ஆளை நீ பாத்திருக்கவே மாட்ட..!!" "ஓ..!!!!!" சொல்லும்போதே அசோக்கின் அடிவயிற்றில் ஒரு கிலி கிளம்பியது. "அவர் சின்னப்பையனா இருக்குறப்போ.. அவரோட அக்கா.. அதாவது என் அத்தை.. அவங்க கல்யாணத்துக்கு மொத நாள்.. காதலிச்ச பையனோட ஓடிப் போய்ட்டாங்க..!! அவமானம் தாங்க முடியாம தாத்தாவும் பாட்டியும் தூக்குல தொங்கிட்டாங்க.. அப்பா அநாதை ஆயிட்டாரு..!! அப்போ வந்தது அவருக்கு காதல் மேல வெறுப்பு.. இன்னைக்கு வரைக்கும் அந்த வெறுப்பு அவர் மனசுல கொழுந்துவிட்டு எரிஞ்சுட்டு இருக்கு.. காதலே பிடிக்காது அவருக்கு..!! எந்த அளவுக்கு பிடிக்காதுன்னா.. ஒருதடவை.. எங்க வீட்டு சமயல்காரியும், வாட்ச் மேனும் லவ் பண்றாங்கன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு.. அவ்வளவுதான்.. அப்பாவுக்கு அப்படி ஒரு ஆத்திரம்.. அவங்கள என்ன பண்ணார் தெரியுமா.. அவங்க ரெண்டு பேர் மேலயும் திருட்டுப் பட்டம் கட்டி.. போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டாரு..!!""ஐயையோ..!! அவ்வளவு வெறுப்பா..??" "ஆமாம்.. சொன்னா நம்ப மாட்ட நீ..!! இதோ.. இங்க பாரேன்..!!" மீரா சொல்லிக்கொண்டே, தனது இடது கையை அசோக்கின் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கைக்கு கீழே குறுக்கு வெட்டில் நீளமாக ஒரு தழும்பு..!! பார்த்ததுமே அசோக் பதறிப் போனான்..!! "ஐயோ.. என்ன மீரா இது.. தழும்பு..??" "நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!! 'இனிமே எவன் கூடவாவது நீ பேசுறதை பாத்தேன்.. கழுத்த நெறிச்சு கொன்னு போட்டுடுவேன்'னு சொன்னாரு..!!" மீரா பரிதாபமாக சொல்ல, அசோக் அவளை பாவமாக பார்த்தான். "ச்சே.. உன் அப்பா இவ்வளவு மோசமானவரா..??" "ம்ம்..!!" "இப்படி ஒருத்தருக்கு மகளா பொறந்துட்டு.. நீ லவ் பண்ண ஆசைப்படுறதே எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கு மீரா..!!" "அதுக்கு காரணம் இருக்கு..!!" "என்ன..??" "சினிமா பாக்ககூடாதுன்னு அப்பா கண்டிஷன் போட்டிருந்தாலும்.. நான் அப்பப்போ என் ஃப்ரண்ட்சோட போய் திருட்டுத்தனமா ஏதாவது சினிமா பாத்துடுவேன்.. அப்படி ரீசண்டா பாத்ததுதான்.. காதல் உல்லாசம்..!!" சோகமாக சொல்லிக்கொண்டிருந்த மீரா, இப்போது திடீரென உற்சாகமாகி.. "ஹேய்.. நீ அந்த படம் பாத்திருக்கியா..??" என்று அசோக்கிடம் கேட்டாள். உடனே அசோக்குக்கு சுருக்கென்று இருந்தது. 'காதல் உல்லாசமா..?? எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே..?? ஆங்.. அன்னைக்கு ஆபீஸ்ல ஃப்ரண்ட்ஸ்லாம் எமோஷனலா பாத்துட்டு இருந்தப்போ.. 'என்ன எழவெடுத்த படம்டா இது'ன்னு கேட்டனே.. அந்தப்படம்தான..??' "இ..இல்ல மீரா.. நான் பாத்தது இல்ல..!!" "ஐயோ.. என்ன பையன் நீ..?? சச் எ க்ரேட் மூவி யு நோ..?? இன்னும் அந்தப்படம் பாக்காம என்ன பண்ணிட்டு இருக்குற..?? நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. எப்படியாவது இன்னைக்குள்ள அந்தப்படத்தை நீ பாத்துடனும்.. சரியா..??" மீரா கட்டளையிடுவது மாதிரி சொல்ல, அசோக்கின் மனதுக்குள் ஒரு கற்பனைப்படம் ஓடியது. தலையை சாய்த்து, கண்களை மேலே சுழற்றி அந்த கற்பனைப்படத்தை கண்டான். 'மச்சி.. காதல் உல்லாசம்னு ஏதோ மூவி இருக்காமே.. ரொம்ப நைஸ் மூவின்னு மீரா சொன்னா.. இன்னும் அந்தப்படம் பாக்கலையான்னு செல்லமா கோவிச்சுக்கிட்டா..?? உங்கட்ட அந்த மூவி சாஃப்ட் காப்பி இருக்காடா..??' என்று அசோக் கேட்க, அவனுடைய நண்பர்கள் எல்லாம் அவனை சூழ்ந்து கொண்டு முறைத்தனர். பிறகு 'த்தூ.. த்தூ.. த்தூ..' என்று அவன் முகத்திலேயே காறித் துப்பினர்..!! அசோக் படக்கென தலையை சிலுப்பிக் கொண்டான். முகத்தில் இல்லாத எச்சிலை இருகைகளாலும் துடைத்துக் கொண்டான். "ஓகே மீரா.. நான் எப்படியாவது பாத்துடறேன்..!! ஆமாம்.. அந்த படத்துக்கும் நீ சொல்ல வந்ததுக்கும் என்ன சம்பந்தம்..??" "ஆக்சுவலா அந்தப்படம் பாத்ததும்தான் எனக்கு லவ் பண்ற ஆசையே வந்தது.. 'ச்ச.. காதல்ன்றது இவ்வளவு அற்புதமான விஷயமா.. இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமே'ன்னு தோணுச்சு..!! அந்தப்படத்துல ஒரு டயலாக் வரும்.. 'நமக்கு புடிச்சவங்கள லவ் பண்றதை விட.. நம்மள புடிச்சவங்கள லவ் பண்றதுதான் ரியல் லவ்வு'னு..!! நைஸ் டயலாக்ல..??" மீரா கண்கள் பளபளக்க கேட்க, "ஹிஹி.. எஸ்..!!" அசோக் வேண்டாவெறுப்பாக இளித்தான். "ம்ம்.. அதே மாதிரி நீ எனக்கு கெடைச்ச.. பட்டுன்னு லவ் பண்ணிட்டேன்.. ஐ'ம் ஸோ லக்கி யு நோ..?? ஹாஹா..!!" சொல்லிவிட்டு மீரா சிரித்தாள். பிறகு திடீரென ஞாபகம் வந்தவளாய், "ஹேய்.. என் அப்பா பத்தி சொல்லிட்டு இருந்தேன்ல.. டாபிக் மாறிடுச்சு..!!" என்றாள் இன்ஸ்டன்ட் சீரியஸ்னசுடன்.
"இ..இன்னும் அவரை பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு..??" "இருக்கு..!! ஆக்சுவலா என் அப்பா பத்தி எதுக்கு உன்கிட்ட சொன்னேன் தெரியுமா..??" "எதுக்கு..??""நீ என்னை லவ் பண்றதா இருந்தா.. எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்.. அதுக்குத்தான்..!!" "எ..எல்லாத்துக்கும்னா..??" அசோக்கிடம் இப்போது நிஜமாகவே ஒரு மிரட்சி. "உனக்கு எப்படி சொல்றது..?? ம்ம்ம்... ம்ம்ம்... ஆங்.. என் அக்கா சொன்னேன்ல..??" "ஆமாம்..!!" "கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா.. ரொம்ப சின்ஸியரா லவ் பண்ணினா.. அவனுக்காக என்னவேனா செய்வான்னா பாத்துக்கோயேன்.. அந்த அளவுக்கு அவன் மேல பைத்தியமா இருந்தா..!!" "ஓ..!! இப்போ என்னாச்சு..??" "என்னாச்சுன்னே தெரியல அசோக்..!! ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்.. எங்க தேடியும் அவன கண்டுபிடிக்க முடியல..!! அப்புறம்.. அவன் ஐடில இருந்து அக்காவுக்கு ஒரு மெயில் மட்டும் வந்தது..!!" "என்னன்னு..??" "நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு..!!" "ஷிட்..!!" "அக்கா அப்படியே உடைஞ்சு போயிட்டா.. சூசயிட் பண்ணிக்க ட்ரை பண்ணினா.. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அவளை காப்பாத்தினோம்..!!" "ஓ..!! இப்போ எப்படி இருக்காங்க..??" "இப்போ அக்கா நார்மல் ஆகிட்டா.. அந்தப் பையனை மறந்துட்டா.. 'உன்னை ஏமாத்திட்டு போனவனுக்காக நீ ஏன் சூசயிட் பண்ணிக்கனும்'னு ஆளாளுக்கு சொல்லி சொல்லி.. எப்படியோ அவளை தேத்தினோம்.. இப்போ கொஞ்ச நாளாத்தான் அவ சகஜமா இருக்கா.. எப்போவும் போல சிரிக்க ஆரம்பிச்சிருக்கா..!!" "குட்..!!" "அந்தப்பையன் காணாம போனதுல.. அக்காவுக்கு எந்த சந்தேகமும் இல்ல.. ஆனா எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..!!" "என்ன..??" "அந்தப் பையனை அப்பாதான் ஏதாவது பண்ணிருப்பாரோன்னு..!!" மீரா கிசுகிசுப்பாக சொன்னவிதத்திலேயே அசோக்கிற்கு கிலி கிளம்பியது. "ஓ..!!!! ஏ..ஏன்.. அப்படி சந்தேகப்படுற..??" "தெரியல.. என் மனசுக்கு அப்படி தோணுது..!! அவங்க லவ் மேட்டர் தெரிஞ்சிருந்தா.. அப்பா அந்தப் பையனை சும்மா விட்ருக்க மாட்டாரு..!! அவனை அடிச்சு உதைச்சு மிரட்டி.. அந்த மாதிரி மெயில் அனுப்ப வச்சு.. அப்புறம் அவனை எங்கயாவது கொன்னு பொதைச்சிருந்தா..??" விழிகளை விரித்து வைத்தவாறு மீரா அப்படி கேட்க, "ஹேய்... எ..என்ன நீ.. இ..இப்படிலாம் டெரரா யோசிக்கிற..??" அசோக் நடுக்கத்துடன் சொன்னான். "இல்ல அசோக்.. என் அப்பா அந்த மாதிரி செய்யக்கூடிய ஆள்தான்.. அதனாலதான் இதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்..!!" "எ..எதனால..??" "இப்போ நாளைக்கே நீ என்னை லவ் பண்றேன்னு என் அப்பாவுக்கு தெரிஞ்சதுன்னு வச்சுக்கோ.. அவர் உன்னை என்ன வேணா செய்யலாம்..!! உன்னை கடத்தி கொண்டு போய் கட்டிப்போட்டு சித்திரவதை பண்ணலாம்.. கண்ணுல ஊசி ஏத்தலாம்.. நகத்தை பிச்சி பிச்சி எடுக்கலாம்..!! இந்த ஹாக்ஸா ப்ளேட் இருக்குல.. அதை வச்சு உன் கால் நரம்பை அப்படியே கறகறன்னு.." மீரா சொல்லிக்கொண்டே போக.. அசோக் குலைநடுங்கிப் போனான்..!! பயத்தில் மூழ்கியிருந்த அவனுடைய இதயம்.. 'பக்.. பக்.. பக்..' என அடித்துக் கொண்டது..!! அவள் சொன்ன விஷயங்களை எல்லாம் கற்பனை செய்து பார்க்க.. தான் எழுதி வைத்திருந்த ஹாரர் ஸ்க்ரிப்டை விட படு பயங்கரமாக இருந்தது..!! அசோக் தலையை உலுக்கி, அந்த பயத்தை உதற முயன்றான்..!! தன்னுடைய குடும்பத்துக்கும் மீராவின் குடும்பத்துக்கும் இருக்கிற, இமாலய முரண்பாடு அவன் மனதை இப்போது சுருக்கென்று தைத்தது. 'பேசி சம்மதிக்க வைத்துவிடலாம்..' என்று தனது குடும்பத்தினர் தந்திருந்த தைரியம், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. இவளை கைபிடிப்பது எளிதாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாக புரிந்தது. மீராவின் அப்பாவிடம் சிக்கிக்கொண்டு சித்திரவதை அனுபவிப்பதை நினைத்து பார்க்கையில்.. அசோக்கிற்கு உடல் சில்லிட்டு போயிருந்தாலும்.. அதையும் மீறி அவனுடைய மனதில் ஒரு துணிச்சல் துளிர் விடத்தான் செய்தது..!! மீராவின் மீது அவனுக்கிருந்த காதல் தந்த துணிச்சல் அது..!! 'கஷ்டத்தை எண்ணிக்கொண்டு காதலை தவிர்த்தல் கோழைத்தனம் அல்லவா..?? காதலையே வாழ்க்கையாக கொண்ட குடும்பத்தில் பிறந்துவிட்டு, இதற்கெல்லாமா கவலைப்படுவது..??' என்று தோன்றியது. அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, பேசிக்கொண்டிருந்த மீராவை இடைமறித்து அசோக் சொன்னான். "இங்க பாரு மீரா.. இதெல்லாம் நீ எனக்கு சொல்லனும்னு அவசியம் இல்ல..!! எனக்கு ஒன்னும் உன் அப்பாவ நெனச்சு பயம் இல்ல.. என்ன ஆனாலும் சரி.. எவ்வளவு கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருந்தாலும் சரி.. என் கடைசி மூச்சு இருக்குறவரை இந்த காதல்ல நான் ஸ்ட்ராங்கா இருப்பேன்.. உன்னை லவ் பண்ணதுக்கு தண்டனை சாவுதான்னா.. அது எனக்கு சந்தோஷம்தான்..!!" அசோக் உறுதியான குரலில் சொல்லிவிட்டு மீராவை பார்க்க, அவளும் இப்போது அமைதியாக இவனுடைய முகத்தையே பார்த்தாள். ஒருமாதிரி.. இமைகளை அசைக்காமல்.. மிக கூர்மையாக ஒரு பார்வை..!! ஒரு நான்கைந்து வினாடிகள்..!! அப்புறம் இதழில் ஒரு அழகுப் புன்னகையுடன்.. கொஞ்சும் குரலில் சொன்னாள்..!! "ச்சோ.. ச்வீட்..!!" மீரா அந்த மாதிரி கொஞ்சியது அசோக்கிற்கு குளுகுளுவென்று இருந்தது. அவனையும் அறியாமல் அவனுடைய முகம் வெட்கத்தில் சிவந்து போனது. அந்த வெட்கத்துடனே.. "ப்ச்.. போ மீரா.. நான் சீரியஸா சொல்லிட்டு இருக்குறேன்..!!" என்றவாறு தலையை குனிந்து கொண்டான். இப்போது மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள். அப்புறம் திடீரென ஒருவித உற்சாக குரலில் கேட்டாள். "ஹேய் அசோக்.. எனக்காக நீ என்ன வேணா பண்ணுவியா..??" "என்ன மீரா இப்படி கேட்டுட்ட..?? என்ன பண்ணனும்.. சொல்லு..!!" "அந்த டேபிள்ள ரெண்டு பேரு என்னையே மொறைச்சு பாத்துட்டு இருக்கானுக.. சும்மா சும்மா என்னை பாத்து கண்ணடிக்கிறாணுக..!! கொஞ்சம் அவனுகளை போய் என்னன்னு கேக்குறியா..??" அவ்வளவுதான்..!! அசோக் விருட்டென நிமிர்ந்தான். அவன் உடம்பில் அப்படி ஒரு விறைப்பு.. நாடி நரம்பெல்லாம் அப்படி ஒரு புடைப்பு..!! 'நான் அருகில் இருக்கும்போதே, என் காதலியை ஒருவன் ஹராஸ் செய்வதா..?? துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..!!' "யார் அவனுக..??" என்று பல்லை கடித்தவாறு, சரக்கென திரும்பினான். திரும்பி அந்த டேபிளில் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததுமே, அவனுடைய விறைப்பு புடைப்பு அடைப்பு எல்லாம் பொசுக்கென்று அடங்கிப் போனது. அந்த இரண்டு பேர்.. மனிதர்களே அல்ல, மாமிச மலைகள் போல தோற்றமளித்தனர்..!! ஒருவன் ஜான் ஸீனா மாதிரி இருந்தான்.. அடுத்தவன் அண்டர் டேக்கர் கணக்காக காட்சியளித்தான்..!! இப்போதுதான் மல்யுத்தத்தை முடித்துவிட்டு.. மதிய உணவுக்காக ப்ரேக்கில் வந்திருப்பார்கள் போலிருக்கிறது..!! ஆட்டுத்தொடை போல ஆளுக்கொன்றை கையில் வைத்துக்கொண்டு.. கடித்து இழுத்துக் கொண்டிருந்தனர்..!! அவர்கள் சாப்பிடுவதே சண்டை போடுவது மாதிரி படுபயங்கரமாக இருந்தது..!! அசோக் அவர்களையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான்..!! 'ஒரு.. ஓமக்குச்சி நரசிம்மன்.. ஒருவிரல் கிருஷ்ணராவ்.. இந்த மாதிரிலாம் யாராவது என் லவ்வரை சைட் அடிக்க கூடாதா..?? எனக்குன்னு எங்க இருந்துடா கெளம்பி வர்றீங்க..?? ச்சை..!!' "என்ன அசோக்.. பாத்துட்டே இருக்க.. போ.. போய் அவனுகளை ரெண்டு விடு..!!" 'ரெண்டு விடவா.. அவனுக ஒன்னு விட்டாலே நான் ஒருவாரத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கனுமே..??' மனதுக்குள் நினைத்த அசோக், பயத்துடன் எச்சில் விழுங்கினான். 'ஏதாவது செய்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் என்னைப் பற்றி கேவலமாக நினைத்து விடுவாள்..!!'. ஒரு முடிவுக்கு வந்த அசோக், இப்போது மீராவிடம் திரும்பி சொன்னான். "இ..இங்க பாரு மீரா.. பெரியவங்கள்லாம் என்ன சொல்லிருக்காங்க..??" "என்ன சொல்லிருக்காங்க..??" "சாம.. தான.. பேத.. தண்டம்..!!" "தண்டமா..?? யாரு தண்டம்..??" "ஐயோ.. யாரும் தண்டம் இல்ல..!! தண்டம்னா அடிதடின்னு அர்த்தம்.. அதை லாஸ்ட் வெப்பனாத்தான் யூஸ் பண்ணனும்னு பெரியவங்க அட்வைஸ் பண்ணிருக்காங்க..!!" "சரி.. அதுக்கு..??" "நான் மொதல்ல போய் அவங்கட்ட பேசி பாக்குறேன்.. செஞ்ச தப்பை அவங்களே ஒத்துக்கிட்டு.. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாங்கன்னு வச்சுக்கோ.. அதுக்கப்புறம் எதுக்கு இந்த அடிதடிலாம்..?? அவங்கள அப்படியே மன்னிச்சு விட்ரலாம்.. பாவம்..!! சரியா..??" "ம்ம்.. சரி..!!"மீரா திருப்தியில்லாமல் தலையசைக்க.. அசோக் இப்போது சேரில் இருந்து மெல்ல எழுந்து கொண்டான்..!! பில்டிங் ஸ்ட்ராங்காக, பேஸ்மட்டம் வீக்காக ஒரு நடை நடந்து.. அந்த மாமிச மலைகளை நோக்கி சென்றான்..!! அவர்களுடைய தலை கவிழ்ந்து போயிருக்க.. இரு கைகளாலும் இறைச்சியை பிடித்து.. கவனமாக கடித்து குதறிக் கொண்டிருந்தனர்..!! அவர்களை நெருங்கிய அசோக் மெல்ல ஆரம்பித்தான்.. "ஹாய்.. மிஸ்டர் அண்டர் டேக்கர்..!!" அவன் அழைத்ததும், இருவரும் நிமிர்ந்தனர். "க்யா..????" என்று வாயை பிளந்தான் ஒருவன் மட்டும். வட நாட்டவர் போல..!! "இ..இங்க பாருங்க.. நீங்க பண்ணினது தப்பு..!! நீ..நீங்க பாக்குறதுக்குலாம் பயங்கர டெரராத்தான் இருக்கீங்க.. அதெல்லாம் நான் இல்லைன்னே சொல்லல.. ஆனாலும் நீங்க பண்ணினது தப்பு..!! அழகா இருக்கான்றதுக்காக அடுத்தவன் கேர்ள் பிரண்டை பாத்து கண்ணடிக்கிறது.. இட்ஸ் டூ பேட் யு நோ.. ரொ..ரொம்ப ரொம்ப தப்பு...!! கமான்.. வாங்க.. வந்து என் ஆள்ட்ட ஒரு ஸாரி கேட்டுடுங்க.. கமான்..!!" அசோக் ஒருமாதிரி தடுமாற்றமும், சமாளிப்புமாய் சொல்லி முடித்தான். இவனையே கேவலமாக ஒரு லுக் விட்டுக்கொண்டிருந்த மாமிச மலைகள் இருவரும், இப்போது அவர்களுக்குள் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மீண்டும் அசோக் பக்கமாய் திரும்பினர். அண்டர் டேக்கர் இப்போது அசோக்கிடம் சொன்னான். "அந்த புண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அட்ச்சுசு..!!" "வாட்..???" அசோக் நம்பமுடியாமல் கேட்க, "அந்த பொண்ணுதான் எங்ளே பாத்து கண்ணு அடிச்சுச்சு..!!" என்றான் ஜான் ஸீனா பெட்டர் டமிலில். அசோக்கிற்கு இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. "ஹாஹாஹாஹா.. என்னங்க நீங்க காமடி பண்றீங்க.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்றது இல்லையா..?? ஹையோ.. ஹையோ..!!" "க்யா..?? க்யா போல்த்தா..??" "பின்ன என்னங்க..?? அங்க பாருங்க என் ஆளை.. எப்டி செதுக்குன சிலை மாதிரி இருக்குறா பாருங்க.. அவ போய் செனப்பன்னி மாதிரி இருக்குற உங்களை பாத்து கண்ணடிச்சான்னு சொன்னா... எப்படிங்க நம்புறது..??" ஏதோ ஒரு ஃப்ளோவில் அசோக் அவ்வாறு சொல்லிவிட்டான். ஆனால் சொன்னபிறகு அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று ஃபீல் செய்தான். அதற்கு ஏற்ற மாதிரி, அவர்களும் இப்போது அசோக்கை உர்ரென்று முறைத்தனர். பிறகு கையில் இருந்த மாமிசத்தை தட்டில் வைத்துவிட்டு.. இருவரும் ஒரே நேரத்தில் எழுந்தனர்.. ஒரே நேரத்தில் முஷ்டியை மடக்கினர்.. ஒரே நேரத்தில் அசோக்கின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டனர்..!! அடுத்த நொடி அசோக் மீரா அமர்ந்திருந்த டேபிளில் வந்து கிடந்தான்..!! என்ன நடந்தது என்றே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. இரண்டு கன்னங்களும் திகுதிகுவென எரிந்தன.. உதட்டோரம் கசிந்த ரத்தம் உப்புக் கரித்தது.. மூளைக்குள் மினி ஸ்டார்ஸ் பறந்தன.. மண்டைக்குள் கிணிகிணிகிணியென மணியடித்தது..!! அசோக் வீங்கிப்போன முகத்துடன் மீராவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான். அவளோ இருகைகளாலும் கன்னத்தை பொத்திக்கொண்டு.. "ஹைய்யயோ..!!" என்றாள் வடிவேலு வாய்ஸில். அந்தக்குரலில் இருந்தது.. ஆச்சரியமா.. அதிர்ச்சியா.. வருத்தமா.. சோகமா.. சந்தோஷமா..?? எதுவும் புரியவில்லை அசோக்கிற்கு..!!!

No comments:

Post a Comment