Friday 20 September 2013

அன்புள்ள ராட்சசி 7


வடபழனி NGO காலனி மெயின் ரோட்..!! வளர்ந்து அடர்ந்திருந்த பச்சை மரங்கள்.. வழிநெடுக தார்ச்சாலைக்கு குடைவிரித்திருந்தன..!! கிளைகளையும், இலைகளையும் ஊடுருவ முடியாத சூரியக்கதிர்கள்.. செறிவற்ற வெளிச்சத்தையே செல்கிற பாதையில் தெளித்திருந்தன..!! மத்தியில் வெண்ணிறப்பட்டை இழைக்கப்பட்ட கருஞ்சாலையின் தேகம் எங்கும்.. மஞ்சள் நிறத்திலான இலைதழைகள் மண்டிப்போய் கிடந்தன..!! சன்னமாய் புகை துப்பியவாறே அசோக்கின் பைக்.. சரக்கென அச்சாலையில் சீறியபோது.. பதறிப்போன மஞ்சள் இலைகள்.. பறந்து சிதறி.. பாதையில் இருந்து விலகி வழிவிட்டன..!! வண்டியின் வேகத்தை அதிகம் குறைக்காமல்.. வலதுபுறம் செல்கிற சாலையில் அசோக் திரும்பினான்..!! எதிர்பாராத விதமாய் ஒரு ஆட்டோ.. எதிர்ப்புறம் இருந்து வெளிப்படவும்.. ஷகிரா இடுப்பசைப்பது மாதிரியான ஒரு லாவகத்துடன்.. பைக்கை நெளித்து சுளித்து வளைத்து.. ஆட்டோவின் மூக்குரசி முத்தமிடுவதை இறுதி நொடியில் தவிர்த்தான்..!! சடனாக பிரேக்கிட்ட ஆட்டோ ட்ரைவர்.. சத்தமாய் உதிர்த்த கெட்ட வார்த்தை.. காற்றோடு கலந்து காதில் விழுவதற்குள்.. காத தூரம் பறந்திருந்தான்..!!
அடுத்த இரண்டாம் நிமிடத்தில்.. அசோக்கின் பைக் அந்த தெருவுக்குள் நுழைந்தது..!! அப்படி நுழைந்ததுமே.. அந்த தெருவில் நிலவிய ஒருவித அமைதியை.. அசோக்கால் உடனடியாக உணர முடிந்தது..!! வீதியின் இருபுறமும் கோடிகளை தின்று கொழுத்துப் போயிருந்த வீடுகள்..!! எல்லா வீடுகளுக்கு முன்பாகவும், ஏதாவது ஒரு காஸ்ட்லி கார் மினுமினுப்புடன் நின்றிருந்தது..!! அந்த வீடுகளை விடுத்து வெளிப்பட்டிருந்த மனித தலைகள்.. கேட்டுக்கருகே கொத்துக்கொத்தாய் குழுமியிருந்தன.. கிசுகிசுப்பான குரலில் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தன..!! தூரத்தில் ஒரு காவல்த்துறை வாகனம்.. ஈச்சமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது..!! தெருவுக்குள் நுழைந்த அடுத்த நொடியே.. அந்த வாகனத்தை கவனித்துவிட்ட அசோக்.. அதை நோக்கித்தான் தனது வண்டியையும் செலுத்தினான்..!! அந்த வாகனத்துக்கு அருகாகவே.. தனது பைக்கையும் பார்க் செய்தான்..!! ஈச்சமரத்துக்கு எதிர்ப்புறம் இருந்த வீடு.. அடர்பச்சையும் இளமஞ்சளுமான வர்ணப்பூச்சோடு.. அழகோடும் கம்பீரத்தோடும் காட்சியளித்தது..!! அந்த வீட்டு கேட்டுக்கருகிலும்.. கிசுகிசுப்பு பேச்சுடன் ஒரு சிறு மனித கும்பல்..!! அசோக் அந்த வீட்டை நோக்கி நடந்தான்..!! கும்பலோடு கும்பலாய் இரண்டு கான்ஸ்டபிள்களும் நின்றிருந்தார்கள்..!! தங்களுக்குள் பேசிக்கொண்டு நின்றிருந்தவர்களில்.. தனசேகரன் என்ற பெயர்ப்பட்டயத்தை மார்பில் தாங்கியிருந்த ஒரு கான்ஸ்டபிள்.. அசோக் அவர்களை நெருங்குவதை கவனித்ததும் பேச்சை நிறுத்தினார்.. நெற்றியை சுருக்கியவர், அசோக்கை ஏறிட்டு வித்தியாசமாக பார்த்தார்..!! அவரது பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அசோக்.. அவனாகவே.. "எஸ்பி ஸாரை பாக்கணும்..!!" என்றான். "நீ யாரு..??" "என் பேரு அசோக்.. ஆர்காட் ரோட்ல அட்வர்டைஸ்மன்ட் ஏஜன்சி வச்சிருக்கேன்..!!" "ஓ..!! என்ன விஷயமா அவரை பாக்கணும்..??" கேட்டுவிட்டு தனசேகரன் அசோக்கை கூர்மையாக பார்க்க, அவனிடம் இப்போது மெலிதான ஒரு தயக்கம். "அ..அது.. அது கொஞ்சம் பர்சனல் ஸார்..!!" அசோக் சொன்ன பதிலில்.. அந்த தனசேகரன் சற்று எரிச்சல் ஆகி இருக்கவேண்டும்.. அது அவரது குரலிலேயே தெளிவாக தெரிந்தது..!! "பர்சனலா..?? ஏன்யா.. பர்சனல் விஷயம் பேசுற எடமா இது..?? க்ரைம் ஸ்பாட்டுயா.. உள்ள விசாரணை நடந்துட்டு இருக்குது.. இங்க ஆளாளுக்கு டென்ஷன்ல இருக்குறோம்.. நீ என்னடான்னா..?? போ போ.. போயிட்டு மத்தியானத்துக்கு மேல ஸ்டேஷன்ல வந்து பாரு..!!" "இ..இல்ல ஸார்.. அவருக்கு என்னை நல்லா தெரியும்.. நான் வந்திருக்கேன்னு அவர்ட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்..!!" "ப்ச்.. சொல்றேன்ல.. இங்கல்லாம் இப்படி வந்து பாக்க கூடாதுயா.. நீ மத்தியானத்துக்கு மேல.." "ஹையோ.. என்னை இங்க வர சொன்னதே அவர்தான் ஸார்..!!" அசோக் சற்றே சலிப்பாக சொல்ல, தனசேகரனின் முகத்தில் இப்போது ஒரு வியப்பு. "என்னது.. அவர்தான் வர சொன்னாரா..??" "ஆமாம்..!! நீங்க உள்ள போய்.. அவர்ட்ட கொஞ்சம் சொல்றீங்களா.. ப்ளீஸ்..!!" அசோக் பொறுமையற்ற குரலில் சொன்னான். தனசேகரன் இப்போது ஒருமாதிரி அவஸ்தையாக நெளிந்தார். அவருடைய குரலிலும் ஒருவித தடுமாற்றம். "எ..எங்களை வெளில நிக்க சொல்லிருக்காருயா.. உ..உள்ள போனா திட்டுவாரு..!!" தனசேகரன் அவ்வாறு தயக்கமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, "தனசேகர்..!!!!" என்று வீட்டுக்குள் இருந்து ஒரு தடித்த குரல் ஒலித்தது.அந்த குரலை கேட்டதுமே மூன்று பேரும் உடனடியாய் திரும்பி, வீட்டுக்குள் பார்வையை வீசினார்கள். அங்கே கான்ஸ்டபிள் கனகராஜன் நின்றுகொண்டிருந்தார். இவர்கள் திரும்பிப் பார்த்ததும், "ஸாருக்கு தெரிஞ்ச பையன்தான்.. உள்ள அனுப்பு..!!" என்றார். அசோக் இப்போது தனசேகரனை ஏறிட்டு ஏளனமாய் ஒரு பார்வையை வீசினான். அதற்கு மேலும் அவருடைய அனுமதி தேவையில்லை என்பதை உணர்ந்தவன், அவரது பதிலுக்காக காத்திராமல் அவரை கடந்து சென்றான். வீட்டுக்குள் நுழைந்தவன், அங்கு நின்றிருந்த கனகராஜனுடன் சேர்ந்துகொண்டான். அவர் திரும்பி உள்ளறைக்கு நடக்க, அசோக் அவரை பின்தொடர்ந்தான். "என்னய்யா.. ஃபோன் நம்பரை வச்சு, அந்த பொண்ணு அட்ரஸ கண்டுபுடிச்சிட்டீங்களா..??" கனகராஜனின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது. "அ..அதைப்பத்தி பேசுறதுக்குத்தான்.. ஸார் வர சொல்லிருக்காரு..!!" அசோக் அடக்கத்துடனே அவருக்கு பதில் சொன்னான். "ஹ்ம்ம்..!! உன்னை சொல்றதா.. இல்ல.. உனக்கு ஒத்து ஊதுற அவரை சொல்றதான்னு தெரியல..!! அந்தப்பொண்ணு மேல இவ்வளவு பைத்தியமா இருக்கியே.. உன் லவ்வு மேட்டர்லாம்.. உன்னை பெத்து வளத்தவங்களுக்கு தெரியுமா..??" "ம்ம்.. தெரியும்..!! அவங்களுக்கும் தெரியும்.. அவங்களை பெத்து வளத்தவங்களுக்கும் தெரியும்..!! ஏன் கேக்குறீங்க..??" அசோக் அவ்வாறு இயல்பாக கேட்க.. இப்போது கனகராஜனின் முகத்தில் ஒரு பெருத்த ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது..!! காதல் என்ற பெயரில்.. வீட்டை ஏமாற்றுகிற விடலைப்பையன் என்பது.. அசோக்கைப் பற்றிய அவரது அனுமானமாக இருந்திருக்கும் போலிருக்கிறது..!! "ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா கேட்டேன்..!!" என்று தடுமாற்றமாய் சமாளித்தார். வெளிப்புற கட்டமைப்பை போல.. அந்த வீட்டின் உட்புற வடிவமைப்பும்.. அழகும் ஆடம்பரமும் மிகுந்ததாகவே இருந்தது..!! வெல்வெட் துணியாலான தரைவிரிப்புகள்.. தேக்கு மரத்தாலான அறைகலண்கள்.. இத்தாலித்தோல் போர்த்திய சாய்விருக்கைகள்.. கண்ணாடி ஸ்படிகம் பொதிந்த சாண்ட்லியர் விளக்குகள்..!! ஏலத்தில் வாங்கப்பட்ட எழில்மிகு அரியவகை ஓவியங்கள்.. உட்புற சுவர்களை அலங்கரிக்க உபயோகமாகியிருந்தன..!! அறைக்குள் இருந்த அத்தனை பொருட்களுமே.. அந்த வீட்டு உரிமையாளனின் செல்வச்செழிப்பை செப்பின.. பணச்செறிவை பறைசாற்றின..!! ஆனால்.. வெளிப்புறத்தைப்போல வீட்டுக்குள் அதிக ஆள் நடமாட்டம் இருக்கவில்லை..!! ஹாலில் மட்டும்.. கன்னத்தில் கைவைத்தவாறு வீட்டு வேலைக்காரியும்.. கைகளை கட்டியவாறு கார் ட்ரைவரும் நின்றிருந்தனர்..!! ஹாலை கடந்து சென்ற கனகராஜன்.. வலது புறம் இருந்த அந்த அறையை அடைந்ததும் திரும்பினார்.. திரும்பியவர் வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டார்..!! அவருக்கு பின்பக்கமாக வந்து சேர்ந்த அசோக்.. ஆர்வமான ஒரு பார்வையை அந்த அறைக்குள் வீசினான்.. உள்ளே கண்ட காட்சியில் உடனே அதிர்ந்துபோய்.. மூச்சை சற்றே இழுத்து பிடித்துக் கொண்டான்..!! மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆள்.. முன்பாக கிடந்த கண்ணாடி மேஜை மீது.. முதுகு குப்புற கவிழ்ந்திருந்தான்..!! முகத்தை பக்கவாட்டில் திருப்பி புதைத்து.. மூச்சு நின்று போய் இறந்து கிடந்தான்..!! முரட்டு மீசை.. கனத்த தேகம்.. மூக்கிலிருந்து வழிந்து உறைந்துபோன ரத்தம்.. மூடாத இமைகளுடன் நிலைகுத்திய பார்வை..!! அந்த கண்ணாடி மேஜையில்.. வெண்ணிறத்திலான ஒருவகை பொடி சிந்திக் கிடந்தது.. வெப்பத்தில் கருகிப் போன வெள்ளி தேக்கரண்டி ஒன்று.. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்ரக மதுபுட்டி ஒன்று.. அதனருகில் நேற்றிரவு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தி.. இப்போது உருகி, உயிர் தீர்ந்து, உறைந்து போயிருந்தது.. மேஜையில் கவிழ்ந்திருந்த அந்த ஆளைப்போலவே..!!இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றியிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. இவர்களுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தார்.. மஃப்டி உடையில்தான் இருந்தார்..!! காவல்த்துறை தடவியல் பிரிவை சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குழு.. அந்த அறைக்குள் இருந்த பொருட்களை ஆய்வு செய்துகொண்டிருந்தது..!! அவர்களுள்.. கண்ணாடியும் கையுறையும் அணிந்திருந்த ஒரு தடயவியல் நிபுணர்.. கால்களை மடக்கி தரையில் மண்டியிட்டு.. அந்த கண்ணாடி மேஜை நோக்கி குனிந்திருந்தார்..!! கையிலிருந்த ஒரு சிறிய தகரத்தகடால்.. அந்த வெண்ணிற பவுடரை கொஞ்சம் அள்ளினார்.. விரலால் தொட்டு நாவால் சுவைத்துப் பார்த்தார்..!! ஓரிரு வினாடிகள்.. பிறகு தலையை சுழற்றி ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டவர்.. "Coke..!!" என்றார் அழுத்தம் திருத்தமாக. அதைக்கேட்டதுமே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து ஒரு சலிப்பான பெருமூச்சு வெளிப்பட்டது..!! "ப்ச்.. ஆரம்பிச்சிடுச்சு.. தலைவலி..!!" சொல்லிக்கொண்டே தலையை பரபரவென சொறிந்து கொண்டார்..!! அந்த தடவியல் நிபுணர் இப்போது மெல்ல மேலெழுந்தார்.. உயிரை விட்டிருந்த அந்த ஆளை உன்னிப்பாகப் பார்த்தவாறே.. கையுறைகளை கழட்டியபடியே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொன்னார்..!! "ஆக்சிடண்டல் டெத் மாதிரிதான் தோணுது எஸ்பி.. எதும் ஃபோர்ஸ் பண்ணதுக்கான சிம்ப்டம்ஸ் இல்ல.. ஓவர்டோஸ் ஆகி உயிரை விட்ருக்கணும்..!! ட்ரக்ஸ் ப்ளஸ் ஆல்கஹால்..!! ஹ்ம்ம்.. உள்ள என்னென்ன வெடிச்சதோ தெரியல.. மூக்குல இருந்து ரத்தம் கொட்டிருக்கு..!!" "ம்ம்..!!" "Overall.. It looks pure accidental to me..!!" "இப்போவே எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் பார்த்தி.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்.. பாத்துக்கலாம்..!!" அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், அடுத்த நொடியே சரக்கென திரும்பினார். வாசலில் நின்றிருந்த கனகராஜனையும் அசோக்கையும் பார்த்ததும், அவரிடம் மெலிதாக ஒரு திகைப்பு. ஆனால் உடனடியாய் அந்த திகைப்பை சமாளித்துக் கொண்டவர், "ஒரு அஞ்சு நிமிஷம் அசோக்..!!" என்று அசோக்கை பார்த்து ஒரு இதமான புன்னகையை வீசினார். பிறகு கனகராஜனை ஏறிட்டவர், முகத்தில் இன்ஸ்டன்டாக ஒரு கடுமையை வரவழைத்துக்கொண்டு, "வேன் என்னாச்சு கனகு..??" என்றார். "வந்துக்கிட்டு இருக்கு ஸார்.. இப்போத்தான்.." கனகராஜன் பதற்றத்துடன் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. அவருடைய பதிலில் ஆர்வம் இல்லாதவர் போல.. ஸ்ரீனிவாச பிரசாத் படக்கென திரும்பி உள்ளே நடந்தார்..!! ஒருகணம் குழம்பிய கனகராஜன்.. பிறகு அவசரமாக நகர்ந்து அவரை பின்தொடர்ந்தார்..!! என்ன செய்வது என்று புரியாத அசோக்கும்.. கனகராஜனின் பின்னால் நடந்தான்..!! விடுவிடுவென நடந்த ஸ்ரீனிவாச பிரசாத் பக்கத்து அறையை அடைந்தார்.. அவருக்கு பின்னாலேயே, கனகராஜனும் அசோக்கும்..!! பக்கத்து அறைக்குள் அந்தப்பெண் அமர்ந்திருந்தாள்.. அழகாக இருந்தாள்.. முப்பதுகளின் ஆரம்பத்தில் ஏதாவது ஒரு வயது இருக்கலாம்.. முகத்தில் ஒருவித அசாத்திய அமைதி..!! அவளது கையில் பால்சாதம் நிரம்பிய கிண்ணம்.. மடியில் அவளுடைய ஐந்துவயது பெண்குழந்தை..!! இவர்கள் வாசலில் வந்து நின்றதை அந்தப்பெண் கவனிக்கவில்லை.. குழந்தைக்கு சாதம் ஊட்டுவதில் குறிப்பாக இருந்தாள்..!! அந்தக்குழந்தை சாதத்தை அசைபோட்டவாறே.. வாயிடுக்கில் பாலும், வார்த்தைகளில் மழலையும் வழிந்தோட.. அம்மாவை கேட்டது.. "ஸ்கூலுக்கு போகலைன்னா மிஸ் திட்டுவாங்களே..??" "இல்லடா.. மிஸ் திட்டமாட்டாங்க..!! மம்மி.. மிஸ்ட்ட பேசிட்டேன்..!! சுஜிக்குட்டி.. மண்டே ஸ்கூலுக்கு வந்தா போதும்னு மிஸ் சொல்லிட்டாங்க..!!" "நெஜமா..??" அந்தக்குழந்தையின் கண்களில் ஒரு சந்தோஷ மின்னல். "ம்ம்.. நெஜமா..!!" அந்தப்பெண்ணின் இதழ்களில் ஒரு வறண்ட புன்னகை. அப்பா இறந்துபோன விஷயம், அந்தக்குழந்தைக்கு இன்னும் தெரியாது போலிருந்தது.. இப்போதுதான் தூக்கத்திலிருந்தே விழித்திருக்கும் போல தெரிந்தது..!! கண்களில் ஒருவித சோர்வுடனும்.. 'இன்று பள்ளிக்கு செல்கிற தொல்லை இல்லை' என்ற மகிழ்ச்சியுடனும்.. அம்மா ஊட்டிய பால்சாதத்தை விழுங்கிக்கொண்டிருந்தது..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் 'ம்க்கும்' என்று மெலிதாக தொண்டையை செரும.. அந்தப்பெண் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்..!! இவர்கள் மூன்று பேரையும் வாசலில் கண்டதும்.. 'என்ன..' என்பது போல கேள்வியாக பார்த்தாள்..!! "கொஞ்சம் பேசணும்..!!" என்றார் ஸ்ரீனிவாச பிரசாத். "உ..உள்ள வாங்க..!!" என்றாள் அவள். ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் அறைக்குள் நுழைய.. அசோக்கும் கனகராஜனும் வாசலுக்கு அருகிலேயே நின்றுகொண்டார்கள்..!! உள்ளே சென்ற ஸ்ரீனிவாச பிரசாத்.. அந்தப்பெண்ணுக்கு அருகே கிடந்த இன்னொரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.. மென்மையான குரலிலேயே ஆரம்பித்தார்..!! "இது.. ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான் மிஸஸ் தேவராஜ்.. நீங்க ஒன்னும்.." ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பெண் இடைமறித்து, "நிர்மலா..!!" என்றாள். "வாட்..??" ஸ்ரீனிவாச பிரசாத் புரியாதவராய் நெற்றி சுருக்கினார். "என் பேர் நிர்மலா.. அப்படியே என்னை கூப்பிடலாம்..!!" அந்தப்பெண் இறுக்கமான குரலில் சொல்லிவிட்டு, குழந்தையின் வாயில் சாதத்தை திணித்தாள். ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் ஒருவித திகைப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் ஒரு பெருமூச்சுடன், அந்த திகைப்பை சமாளித்துக்கொண்டு சொன்னார். "ஓகே.. மிஸஸ் நிர்மலா.. இ..இது.. இது ஜஸ்ட் ஃபார்மல் என்கொய்ரிதான்.. நீங்க எதும் டென்ஷன் ஆகிக்க வேணாம்னு சொல்ல வந்தேன்..!!" "இல்ல.. டென்ஷன் ஆகல..!! கேளுங்க..!!" "உ..உங்க ஹஸ்பண்டுக்கு எத்தனை நாளா இந்தப்பழக்கம் இருக்கு..??" "குடிப்பழக்கம் கல்யாணம் ஆன நாள்ல இருந்தே இருக்கு..!! இப்போ ஒரு ரெண்டு வருஷமாத்தான்.. இதுலாம்..!!" "ம்ம்..!! அவர் கன்ஸ்யூம் பண்ணிருக்குறது.. கொக்கைன்'ன்னு சொல்ற ஒருவகை போதைப்பொருள்..!! கேள்விப்பட்ருக்கீங்களா..??" "இ..இல்ல.. கேள்விப்பட்டது இல்ல..!!" "ரொம்ப காஸ்ட்லி.. ஒரு சின்ன பொட்டலமே இருபதாயிரம், முப்பதாயிரம் ஆகும்..!! இங்க சென்னைல அவ்ளோ ஈஸியா கெடைச்சிடாது.. ஸவ்த் அமெரிக்கால இருந்து ஸ்மக்ள் பண்ணி.. மும்பை, டெல்லி மூலமாத்தான் சென்னைக்கே வந்தாகனும்..!!" "ஸோ..??" "நத்திங்.. இந்த ட்ரக்ஸ்லாம் சென்னைல புழக்கத்துல இருக்குதுன்ற ந்யூஸே.. எங்க டிப்பார்ட்மண்ட்டுக்கு பெரிய தலைவலியான சமாச்சாரம்..!! மீடியாக்கு தெரிஞ்சா சொல்லவே வேணாம்.. ஒரு வழி பண்ணிடுவாங்க..!! It's a serious issue for us Mrs.Nirmala..!! என்ன சொல்ல வரேன்னு புரியுதா..??" "பு..புரியுது..!!" "ம்ம்..!! அவருக்கு இந்த ட்ரக்ஸ்லாம் எப்படி கெடைக்குதுன்னு.. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கவும், நிர்மலா இப்போது பட்டென அமைதியானாள். சிலவினாடிகள் சாதத்தை பிசைந்துகொண்டே, சற்று யோசித்தாள். பிறகு பிசைந்த சாதத்தை சுஜிக்கு தந்தவாறே, மெலிதான குரலில் சொன்னாள். "எனக்கு அந்த ஆள் பேர்லாம் தெரியாது.. ஆனா.. அந்த ஆள் மூலமாத்தான் இவருக்கு இதெல்லாம் கெடைக்குதுன்னு மட்டும் நல்லா தெரியும்..!! அப்பப்போ இங்க வருவான்.. இவரும் அவனுக்கு அப்பப்போ பணம் குடுக்குறதை நான் பாத்திருக்கேன்..!! நேத்து கூட.. இவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல அந்த ஆள் பைக்ல இங்க வந்தான்.. இவர் வாசலுக்கே போய் அவன்ட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தாரு..!! அனேகமா.. அந்த கருமத்தை குடுக்குறதுக்குத்தான் அவன் வந்திருக்கணும்..!!" "ம்ம்.. அ..அவன் பேர் தெரியாது சரி.. ஆள் பாக்குறதுக்கு எப்படி இருப்பான்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..??" "கருப்பா.. குண்டா.. கொஞ்சம் குள்ளமா இருப்பான்.. சுருட்டை முடி..!! இந்த எடத்துல ஒரு வெட்டுக்காயமோ, தீக்காயமோ..!! அவனுக்கு ஏதோ நரம்புத்தளர்ச்சின்னு நெனைக்கிறேன்.. பேசுறப்போ அடிக்கடி வாய் ஒருமாதிரி கோணிக்கும்.. பல்லுலாம் கறையா இருக்கும்.. பாத்தாலே அப்படியே வெறுப்பா இருக்கும்..!!" நிர்மலா ஒருவித வெறுப்புடனே சொல்லிமுடிக்க, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது வாசல் பக்கம் திரும்பினார். இதழில் கசிகிற ஒரு புன்னகையுடன் கனகராஜனை கேட்டார். "யார்ன்னு தெரியுதா கனகு..??" "ந..நம்ம.. நெற்குன்றம் காசியா இருக்குமோன்னு தோணுது ஸார்..!!" "சந்தேகமே வேணாம்.. அவனேதான்..!! அம்பதுக்கும் நூறுக்கும் பொட்டலம் போட்டுட்டு இருந்த நாயி.. 'Coke peddling' பண்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டான் பாத்தியா..?? த்தா.. கைல மாட்டட்டும்..!!" கருவிய ஸ்ரீனிவாச பிரசாத், மீண்டும் நிர்மலாவின் பக்கம் திரும்பிக் கொண்டார். "நீங்க சொல்ற ஆளு பேரு காசி..!! அவன் மேல ஏற்கனவே நாலஞ்சு கேஸ் இருக்குது.. போலீஸ்க்கே டிமிக்கி குடுத்துட்டு திரியிறவன்..!!" "ம்ம்..!!" "ஹ்ம்ம்... எதுக்கும்.. அவனோட ஃபோட்டோவை அப்புறம் வந்து காட்ட சொல்றேன்.. நீங்க ஒருதடவை பார்த்து அவன்தானான்னு கன்ஃபார்ம் பண்ணிருங்க.. சரியா..??" "ஷ்யூர்..!! ம்ம்ம்ம்... அப்படினா.. அ..அந்த போதை மருந்துதான் அவர் உயிர் போனதுக்கு காரணமா..??" "அது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தப்புறந்தான் தெரியும்..!!" "ஓ..!!" "அதுக்கு முன்னாடி.. எனக்கு இன்னும் சில விஷயங்கள் க்ளியர் பண்ணிக்கணும்..!!" "கேளுங்க..!!" "ம்ம்ம்... நேத்து நைட்.. வீட்ல யாரார்லாம் இருந்தீங்க..??" "நான்.. அவர்.. அப்புறம் சுஜி.. மூணு பேர்தான்..!! அவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலயே.. வேலைக்காரியும் ட்ரைவரும் கெளம்பிட்டாங்க..!!" "அவரை கடைசியா எப்போ உயிரோட பாத்தீங்க..??" "நேத்து நைட்டு..!!" "அதான் எப்போ..??" "அ..அந்த ஆள்ட்ட பேசிட்டு.. அப்புறம் அந்த ரூமுக்குள்ள போனாரு.. அதுதான் கடைசி..!!" "அப்போ டைம் என்ன இருக்கும்..??" "எட்டு மணி இருக்கும்..!!" "ம்ம்.. நைட்டு எட்டு மணிக்கு உள்ள போயிருக்காரு.. மிட்னைட்க்குள்ள அவர் உயிர் போயிருக்கனும்..!! காலைல எட்டு மணிக்கு.. கார் ட்ரைவர் வந்து பாத்துத்தான்.. அவர் இறந்து போன விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு..!! அப்படித்தான..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்டுக்கொண்டிருக்க.. இடையில் புகுந்த சுஜி.. "யாரு மம்மி எறந்து போயிட்டாங்க..??" என்று மழலைக்குரலில் அம்மாவிடம் கேட்டாள்..!! உடனே.. அறையில் இருந்த மற்ற நால்வரும்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அந்தக் குழந்தையை ஏறிட்டனர்..!! அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை சந்திப்பது.. அதுவே அவர்களுக்கு முதல்முறை..!! ஒரு சில வினாடிகள் அமைதிக்கு பிறகு.. பதிலேதும் சொல்லாமல்.. பால்சாதத்தாலே மகளின் வாயை அடைத்தாள் நிர்மலா..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் திரும்பி சொன்னாள்..!! "ஆ..ஆமாம்..!!" "ம்ம்.. காலைல வரைக்கும்.. அவரை போய் பாக்கணும்னு உங்களுக்கு தோணலையா..??" "இல்ல..!!" "ஏன்..??" "அவருக்கு அந்த மாதிரி டிஸ்டர்ப் பண்றது பிடிக்காது..!! முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!" "ஹ்ம்ம்..!! அந்த ரூம்கதவு வெளிப்பக்கமா லாக் ஆகிருந்ததா ட்ரைவர் சொன்னான்..!! ரூமுக்குள்ள இருந்துக்கிட்டு.. கண்டிப்பா உங்க ஹஸ்பண்டால அதை பண்ணிருக்க முடியாது.. சுஜியும் அந்த அளவுக்கு ஹைட்லாம் கிடையாது..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சுற்றி வளைக்க, "நான்தான் லாக் பண்ணினேன்..!! நேத்து நைட்டு அவர் அந்த ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்துல.. நானேதான் கதவை வெளிப்பக்கமா லாக் பண்ணினேன்..!!" நிர்மலா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள். "ஏன்..??" "அ..அது.. ஸம்டைம்ஸ் நான் அந்த மாதிரி பண்ணுவேன்.. இல்லனா அவரை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்..!! அதுவும்.. முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!" "ஓ..!!" "அதும் இல்லாம.. நேத்து.. என் மேல அவர் ரொம்ப கோவத்துல வேற இருந்தாரு.. அதான்..!!" எந்த ஒரு படபடப்பும் இல்லாமல்.. நிர்மலா நிதானமாக பதில் சொன்னாள்.. பதில் சொன்னதோடு மட்டுமல்லாது, மகளுக்கு அவ்வப்போது பால்சாதம் ஊட்டுகிற கவனமும் அவளிடம் இருந்து சிதறவில்லை..!! ஸ்ரீனிவாச பிரசாத் சில வினாடிகள் அவளையே கூர்மையாக பார்த்தார்.. அந்த கூர்மையான பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் கலந்திருந்தது..!! "உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..!!" "என்ன..??" "அவருக்கு கார்டியாக் அரஸ்ட் மாதிரி இருக்குது..!! கண்டிப்பா.. ரொம்ப வேதனைக்கு அப்புறந்தான் அவரோட உயிர் பிரிஞ்சிருக்கணும்.. வலில துடிச்சிருக்கணும்.. சத்தம் போட்ருக்கணும்.. கத்திருக்கணும்..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சற்று நிறுத்தி, "நீங்க போய் அவரை பாக்கலையா..?? ஐ மீன்.. அவர் சத்தம் போட்டது உங்களுக்கு கேக்கலையா..??" என்று குதர்க்கமாக கேட்டார். "இல்ல.. நான் போய் பாக்கலை..!! ஐ மீன்..அவர் சத்தம் போட்டது எனக்கு கேக்கலை..!!" குதர்க்கமான கேள்விக்கு, நிர்மலாவும் குதர்க்கமாகவே பத்தி சொல்ல.. இதழில் அரும்பிய ஒரு மெலிதான புன்னகையை, ஸ்ரீனிவாச பிரசாத்தால் தவிர்க்க முடியவில்லை.. புன்னகைத்தார்..!! "ஏன் சிரிக்கிறீங்க..??" "நத்திங்..!!" "என் மேல சந்தேகப்படுறீங்களா.. அவரோட சாவுக்கு நான் காரணமா இருந்திருப்பேன்னு..??" "ம்ம்ம்ம்.. அப்படி சொல்லமுடியாது..!!" "அப்புறம்..??" "சந்தேகம்னு இல்ல.. பட்.. மனசுல சின்னதா ஒரு உறுத்தல்..!! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வர்ற வரை அந்த உறுத்தல் இருந்துட்டேதான் இருக்கும்..!!" "ஓ..!! அது என்ன உறுத்தல்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??" "ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??" "இல்ல.. சொல்லுங்க..!!" "நான் இந்தமாதிரி நெறைய சாவு பாத்திருக்கேன் மிசஸ் நிர்மலா.. அதே மாதிரி.. செத்துப்போன ஆளுங்களோட பொண்டாடிங்கள்லாம்.. எந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க, அழுது ஒப்பாரி வைப்பாங்கன்னும் பாத்திருக்கேன்..!! ஆனா நீங்க.. You are different..!! புருஷன் போயிட்டாரேன்ற அதிர்ச்சியோ, துக்கமோ, கவலையோ.. துளியூண்டு கூட உங்ககிட்ட இல்ல.. ஏன் அப்படி..?? You are so Cool, Calm And Collected..!!! அதுதான் அந்த உறுத்தல்..!!" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட அந்த கேள்வி.. அசோக்கிற்கும், கனகராஜனுக்குமே அவரவர் மனதில் இருந்தது..!! இப்போது அவர் அந்த கேள்வியை கேட்டதும்.. அவர்களுமே.. 'என்ன பதில் சொல்லப் போகிறாள்' என்பது மாதிரியான ஒரு ஆர்வத்துடன் நிர்மலாவை பார்த்தனர்..!! நிர்மலா சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.. கேள்வி கேட்ட ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! பிறகு என்ன நினைத்தாளோ.. மடியில் அமர்ந்திருந்த தனது மகளிடம் திரும்பினாள்.. அவளது வாயைச்சுற்றி அப்பியிருந்த சாதத்துணுக்குகளை, புடவைத்தலைப்பால் சுத்தம் செய்தாள்..!! அவர்கள் பேசிக்கொண்ட விஷயத்தை அரைகுறையாக புரிந்துகொண்டு.. குழப்பம் அப்பிய கண்களுடன் மருட்சியாக பார்த்துக்கொண்டிருந்த மகளிடம்.. மெல்லிய குரலில் சொன்னாள்..!! "சுஜிக்குட்டிக்கு ஒரு விஷயம் தெரியுமா..??" "தெரியாதே..!!" "டாடி.. செத்துப் போயிட்டாரு..!!" "நம்ம டாடியா..??" "ம்ம்..!!" "நெஜமா..??" "நெஜமா..!!" "அப்போ டாடி இனிமே நம்மள அடிக்க மாட்டாரா..??" "அடிக்க மாட்டாரு..!!" "ஹையா..!! ஜாலி..!!!" பால்நிற பற்கள் பளீரிட சுஜி சந்தோஷத்தில் குதுகலித்தாள்.. ஆண்கள் மூவரும் அப்படியே அதிர்ந்து போய் அவளை பார்த்தார்கள்..!! அப்பா இறந்த செய்தியைக் கேட்டு ஒரு குழந்தை ஆனந்தம் அடைகிறது என்றால்.. 'எப்படிப்பட்ட மோசமான ஒரு மனிதனாக அவன் இருந்திருப்பான்' என்று.. உடனடியாக அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது..!! ஒரு வேதனையான உணர்வு அவர்களது இதயத்தை பிசைவதை அவர்களால் உணர முடிந்தது..!!
நிர்மலா மகளிடம் இருந்து பார்வையை விலக்கி.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டாள்..!! அவளுடைய கண்கள் இப்போது சற்றே கலங்கிப்போய் பளபளத்தன.. அந்த கலங்கிய கண்களை இமைகளால் இடுக்கி.. மிகக்கூர்மையாக அவரை ஒரு பார்வை பார்த்தாள்.. ஒருவித இறுக்கமும், விரக்தியும் கலந்த மாதிரியான குரலில் கேட்டாள்..!! "வேற ஏதாவது கேக்கணுமா..??" உண்மையில்.. ஸ்ரீனிவாச பிரசாத் நிர்மலாவிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க எண்ணியிருந்தார்.. ஆனால் அந்த கேள்விகள் எல்லாம் இப்போது அவரது நினைவடுக்கிலிருந்து தொலைந்து போயிருந்தன..!! குழந்தையின் குதுகலத்தில் ஒருவித திகைப்புக்கு சென்றிருந்தவர்.. அந்த திகைப்பு மாறாமலேயே.. "இ..இல்ல.. வேற ஒன்னும் இல்ல..!!" என்று தடுமாற்றமாக சொன்னவாறு, சேரில் இருந்து எழுந்துகொண்டார்.அறையை விட்டு வெளியே வந்த ஒரு சில நிமிடங்களிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத் அந்த தடுமாற்றத்தை உதறியிருந்தார்.. மீண்டும் பரபரப்புடன் பணியில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்..!! அசோக்கிடம் தனித்து பேசுவதற்கு.. அதன்பிறகும் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்..!! அடுத்த அறைக்கு சென்றவர், அங்கிருந்த தடயவியல் குழுவிடம், மேலும் சில உத்தரவுகள் பிறப்பித்தார்.. கார் ட்ரைவரை வரவழைத்து, ஏதோ ஒரு சந்தேகம் தீர்த்துக்கொண்டார்.. 'வேன் எங்கே' என்று கேட்டு, கனகராஜனை மீண்டும் டென்ஷன் ஆக்கினார்.. செல்ஃபோனில் யாரையோ அழைத்து, கெட்ட வார்த்தையில் திட்டினார்..!! சுஜி தந்த அதிர்வில் இருந்து மீள்வதற்கு.. அசோக்கிற்கும் அந்த ஐந்து நிமிட நேரம் அவசியமாக இருந்தது..!! அறையை விட்டு வெளியே வந்தபிறகும்.. அந்தக்குழந்தையின் வெள்ளைச்சிரிப்பே.. திரும்ப திரும்ப அவன் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது..!! பொறுப்பற்ற தேவராஜ் மாதிரியான ஆட்கள் மீதும்.. பணம் சேர்ப்பதற்காக, பல குடும்பங்களது உளநிம்மதியில் உலைவைக்கிற காசி மாதிரியான ஆட்கள் மீதும்.. கடுங்கோபம் பிறந்தது அவனுக்கு..!! சுஜி பற்றிய நினைவுடனே.. ஸ்ரீனிவாச பிரசாத் பணியாற்றும் விதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!! ஐந்து நிமிடங்கள் கரைந்து போயிருந்த வேளையில்.. வீட்டு வாசலில் DEVARAJ - IN என்று காட்டிக் கொண்டிருந்த, மரத்தாலான பெயர்ப்பலகையின் கைப்பிடியை பற்றி இழுத்து.. DEVARAJ - OUT என்று காட்டுமாறு அதை அசோக் மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில்.. அவனுக்கு பின்பக்கமாக வந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. மெலிதாக அவனது தோளை தட்டினார்..!! "வா அசோக்..!!" என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திராமல்.. விடுவிடுவென முன்னால் நடந்தார்.. வீட்டை விட்டு வெளியேறினார்..!! உடனடியாய் சுறுசுறுப்பான அசோக்கும்.. வாசலில் நிரம்பியிருந்த கும்பலுக்குள் புகுந்து.. நெருக்கமாக அவரை பின்தொடர்ந்தான்..!! "ஸ்டேஷனுக்கே போயிட்டியா..??" "இல்ல ஸார்.. போற வழிலேயே உங்க கால் வந்துடுச்சு.. நேரா இங்க வந்துட்டேன்..!! எ..என்ன விஷயம் ஸார்.. எதுக்கு வர சொன்னீங்க..??" "வா சொல்றேன்..!!" மரநிழலில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை நோக்கி ஸ்ரீனிவாச பிரசாத் நடந்தார்..!! ஜீப்பை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. டேஷ்போர்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்தார்..!! "தம்மடிக்கிறியா..??" சிகரெட் பாக்கெட்டை அசோக்கிடம் நீட்டினார். "இ..இல்ல ஸார்.. வேணாம்..!!" அசோக் மறுத்துவிட.. ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் ஒரு சிகரெட் உருவி பற்ற வைத்துக் கொண்டார்.. வாகனத்தின் மீது வசதியாக சாய்ந்து கொண்டார்..!! புகையை மிக ஆழமாக நுரையீரலுக்குள் இழுத்தார்.. பிறகு.. குபுகுபுவென உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியவாறே சலிப்பாக சொன்னார்..!! "ப்ச்.. காலங்காத்தாலேயே இப்படி எழவு விழும்னு நெனச்சே பாக்கல..!! எப்படியும் இன்னும் நாலஞ்சு நாளைக்கு என் தாலிய அறுத்துருவானுக.. நின்னு பேசக்கூட எனக்கு நேரம் இருக்காது.. அதான் உன்னை இங்கயே வரசொல்லிட்டேன்..!! ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டனா..??" "பரவால ஸார்..!!" "ம்ம்..!! ஆக்சுவலா.. ஃபோன்லயே கூட மேட்டரை சொல்லிருக்கலாம் அசோக்.. ஆனா.. எனக்கென்னவோ நேரா சொல்றது பெட்டர்னு தோணுச்சு..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல, அசோக்கிடம் மெலிதான பதற்றம். "எ..என்ன விஷயம் ஸார்..??" அந்த பதற்றம் தொனிக்கிற குரலிலேயே அசோக் கேட்க.. ஸ்ரீனிவாச பிரசாத் ஒருசில வினாடிகள் அமைதியாக இருந்தார்..!! பிறகு அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு மெல்லிய குரலில் சொன்னார்..!! "அந்த நம்பரை வச்சு.. அட்ரஸை கண்டு பிடிச்சாச்சு..!!" அவர் சொல்லவும், அசோக்கின் முகத்தில் இப்போது பட்டென ஒரு பரவசம்.. ஏதோ மீராவையே அடைந்துவிட்டவன் போல, அவனிடம் அப்படி ஒரு பூரிப்பு..!! "என்ன ஸார் நீங்க.. இவ்வளவு முக்கியமான மேட்டரை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டு இருக்கீங்க..??" "இருடா.. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு பேசு..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அசோக்கை அடக்கியதும், அவனது உற்சாகம் சற்றே குறைந்து போனது. "ஏன் ஸார்.. ஏதாவது ப்ராப்ளமா..??" "ப்ராப்ளம்லாம் ஒன்னுல்ல..!! ம்ம்ம்.. மேட்டர் என்னன்னா.. நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!" "விஜயசாரதின்னா..????" அசோக் சற்றே குழப்பமாகி, கேள்வியை இழுத்தான். "ஆமாம்.. பையன்தான்..!! ஆக்சுவலா அந்தப்பையன் இண்டியாலயே இல்ல.. அவன் வெளிநாட்டுக்கு போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு..!!" "ஒ..ஒருவேளை.. அந்த விஜயசாரதி நம்ம மீராவுக்கு தெரிஞ்ச பையனா இருக்கலாம் இல்லையா.. அவன் இவளுக்கு அந்த நம்பர் வாங்கித் தந்திருக்கலாமே..?? அந்தப்பையன்ட்ட பேசுனா.." "ப்ச்.. என்னை சொல்ல விடுடா..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலாக, "ச..சரி.. சொல்லுங்க..!!" அசோக் தனது ஆர்வத்தை கட்டுப் படுத்திக் கொண்டான். "கே.கே.மூர்த்தின்னு கேள்விப்பட்டிருக்கியா..??" "இல்ல.. யாரு அவரு..??" "பெரிய பணக்காரர்.. மூணு காலேஜ், ரெண்டு ஹாஸ்பிடல், ஒரு லிக்கர் ஃபேக்டரி..!! ரொம்ப பெரிய கையி.. நார்த் சென்னைல ரொம்ப பவர்ஃபுல்..!! அவரோட பையன்தான் இந்த விஜயசாரதி..!!" "ஓ..!!" "அவருக்கு மாதவரத்துல ஒரு பங்களா இருக்கு.. இந்த ஸிம் ரெஜிஸ்டர் ஆகிருக்குறது அந்த அட்ரஸ்லதான்..!!" "ம்ம்..!!" "நான் அந்த அட்ரஸ்க்கு போய்.. கே.கே.மூர்த்தியோட பி.ஏவை மீட் பண்ணினேன்..!! அவர் மூலமா.. அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்..!!" "ஓ.. என்ன சொன்னான்..??" அசோக்கிடம் இப்போது மீண்டும் ஒரு உற்சாகம். "அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!" "அப்புறம்..??" "நான் அவனை கொஞ்சம் கூல் பண்ணினேன்.. அந்த நம்பர் அவன் பேர்ல ரிஜிஸ்டர் ஆகி இருக்குறதை பத்தி சொன்னேன்.. மீராவோட அடையாளம்லாம் சொல்லி.. அந்த மாதிரி ஒரு பொண்ணை உங்களுக்கு தெரியுமான்னு கேட்டேன்..!!" "அ..அதுக்கு அவன் என்ன சொன்னான்..??" "அந்த மாதிரி யாரையும் அவனுக்கு தெரியாதாம்..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அசோக்கிடம் இருந்த உற்சாகம் மொத்தமும் இப்போது காணாமல் போனது. "ஓ..!!" அவனது குரலும் வறண்டு போய் ஒலித்தது. "ஆக்சுவலா.. ஒரு வருஷத்துக்கு முன்னாடி.. ஐ மீன்.. அந்த விஜயசாரதி இண்டியால இருக்குறப்போ.. அவன் ஃப்ரண்ட்சோட சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்ட் போயிருந்திருக்கான்.. அங்க அவனோட செல்ஃபோனை தொலைச்சிருக்கான்..!! அப்போ.. அதை அவன் ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. அப்படியே விட்டுட்டான்..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சொல்ல சொல்ல.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தான்.. முற்றிலும் தளர்ந்து போனான்..!! ஏற்கனவே ஐந்தாறு நாட்கள் தானாக மீராவை தேடியலைந்து.. அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில்.. அந்த செல்ஃபோன் நம்பரைத்தான், மிகப்பெரிய துருப்புச்சீட்டாக அவன் எண்ணியிருந்த வேளையில்.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் இருந்து வந்த இந்த செய்தி.. இடியென அவனது இதயத்தில் இறங்கியது..!! "ம்ம்..!!" வாயிலிருந்து வந்த வார்த்தை கூட குறைந்த டெசிபலில் ஒலித்தது. "அந்த தொலைஞ்சுபோன செல்ஃபோன்ல இருந்த ஸிம்மை வச்சுத்தான்.. உன் ஆளு உன்கூட இத்தனை நாள் வெளயாண்ட்ருக்கா..!!" ஏதோ ஒரு உணவகத்தில் கண்டெடுத்த.. யாருடைய கைபேசியையோ வைத்துக்கொண்டா.. இத்தனை நாட்கள் மீரா தன்னிடம் பேசிக் கொண்டிருந்தாள்..?? அசோக்கிற்கு ஏனோ அதை நம்புவதற்கு கடினமாக இருந்தது..!! "ந..நம்ப முடியல ஸார்..!!" "என்ன நம்ப முடியல..??" "யாரோ ஒருத்தரோட ஃபோனை வச்சுக்கிட்டு.. இத்தனை நாளா..!! என் மீரா அந்த மாதிரி ஆளு கெடையாது ஸார்..!!" "ம்ம்.. சரி.. வேற ஏதோ ஒரு வழில.. வேற யார் மூலமாவோ.. தொலைஞ்சு போன அந்த ஃபோன் அவ கைக்கு போயிருக்கலாம்..!! ஆனா.. இப்போ அது மேட்டர் இல்ல..!!" "பின்ன..??" "அவளை ட்ரேஸ் பண்றதுக்கு இருந்த ஒரே ரூட்டும்.. இப்போ க்ளோஸ் ஆயிடுச்சு..!!" ஸ்ரீனிவாச பிரசாத் சொன்ன வார்த்தைகள், அசோக்கின் மனதில் ஒரு இனம்புரியாத வேதனையை கிளறிவிட ஆரம்பித்தன. "வே..வேற வழியே இல்லையா ஸார்..??" என்று பரிதாபமாக கேட்டான். "இருக்கு.. அவ திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணினா.. கண்டிப்பா ட்ரேஸ் பண்ண முடியும்..!!" "அவ எப்படி ஸார் திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..?? அவதான் என்கூட இருந்த எல்லா லிங்கையும்.. ப்ளான் பண்ணி பக்காவா கட் பண்ணிட்டு போயிருக்காளே..?? அவ எப்படி திரும்ப அந்த நம்பரை யூஸ் பண்ணுவா..??" "அப்போ எதுவும் செய்ய முடியாது அசோக்..!!" ஸ்ரீனிவாச பிரசாத் இயல்பாக சொல்ல, அசோக்கின் மனவேதனை உச்ச பட்சத்தை எட்டியது. "எ..என்ன ஸார்.. நீங்களே இப்படி சொல்றீங்க..??" அசோக்கின் கண்கள் இப்போது லேசாக கலங்கிப் போயிருந்தது.. அவனுமே சோர்ந்து தளர்ந்து போயிருந்தான்..!! அவனுடைய மூளை சிந்திக்க மறுத்து, மரத்துப்போன மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு குழப்பம்.. அவளைக் கண்டுபிடிக்க இருக்கிற வழிகளெல்லாம் ஒவ்வொன்றாக அடைபடுகிறனவே என்கிற ஆதங்கம்.. சிக்கலான வலைக்குள் சிக்கி மீள முடியாமல் தவிக்கிற மீனுடைய இயலாமை.. எங்கே அவளை திரும்ப பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்பது போலொரு பயம்..!! உள்ளத்தால் உடைந்தும், உடலால் உறைந்தும் போய் நின்றிருந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக்கை அவ்வாறு பார்க்க பாவமாக இருந்தது.. தனது வலது கையால் அவனுடய தோளைப் பற்றினார்.. ஆறுதலாக ஒரு அழுத்தம் கொடுத்தார்.. அசோக் இப்போது அவரை ஏறிட்டு.. 'என்ன?' என்பது போல பாவமாக பார்த்தான்..!! "நான் ஒன்னு சொல்வேன்.. தப்பா எடுத்துக்க மாட்டியே..??" "சொ..சொல்லுங்க ஸார்..!!" "அ..அவளை.. மறந்துடுடா அசோக்..!!" அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் அசோக்கின் மனதுக்குள் கொப்பளித்துக்கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து.. வேறொரு உருவம் எடுத்துக்கொண்டன.. ஏமாற்றம், குழப்பம், இயலாமை, பயம் எல்லாம் உருமாறி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீதான கோபமாக மாறின..!! அவனுடைய குழப்பமான மனதின் முன்பு.. அவர் அவனது காதலுக்கு முளைத்த புது எதிரியாகவே தோன்றினார்..!! தனது தோளைப்பற்றியிருந்த அவரது கையை வெடுக்கென தட்டிவிட்டான்..!! "டேய்..!!" அவனுடைய செய்கையில் ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே எரிச்சலானார். அசோக்கோ அவருடைய கண்களை நேருக்கு நேராக சந்தித்து, சூடாக சொன்னான். "மறக்கலாம் முடியாது ஸார்..!!" "ப்ச்.. உன் நல்லதுக்குத்தான்டா சொல்றேன்..!!" "எனக்கு எது நல்லதுன்னு நீங்க சொல்ல வேணாம் ஸார்.. எல்லாம் எனக்கு தெரியும்..!!" "புரியாம பேசாதடா..!!" "யாரு ஸார் புரியாம பேசுறா..?? நீங்கதான் புரியாம பேசுறீங்க..!! எப்படி ஸார் மறக்க சொல்றீங்க..?? அவ என் உசுரோட கலந்துட்டா ஸார்.. உசுரை விட்டாத்தான் அவளை மறக்க முடியும்..!!" "டேய்.. என்ன பேசுற நீ..??" அசோக் உபயோகப் படுத்திய வார்த்தைகளில், ஸ்ரீனிவாச பிரசாத் சற்றே அரண்டு போனார்.. அவனுடைய முகத்தையே ஒருவித திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்..!! அசோக் ஒரு தெளிவற்ற ஆவேசத்தில் இருந்தான்.. ஜூரம் வந்தவன் மாதிரி உடலை சிலிர்த்துக்கொண்டான்.. முகத்தை அப்படியும், இப்படியுமாய் வெட்டிக்கொண்டான்.. உள்ளுக்குள் பொங்கிய உணர்வுகளில், அவனது முகம் கிடந்தது துடித்தது..!! பற்களால் உதட்டை அழுத்திக்கடித்து அந்த உணர்வுகளை அடக்க முயன்றவன்.. அப்புறம் அவனது ஆவேசம் குறையாமலேயே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!! "உங்க ஆளு.. அவ பேர் என்ன..??" அசோக் திடீரென அப்படியொரு கேள்வி கேட்பான் என்று எதிர்பாராத ஸ்ரீனிவாச பிரசாத்.. "அ..அனிதா..!!" என்றார் திணறலாக. "ஆங்.. அனிதா..!! அவள்லாம் ஒரு பொண்ணா ஸார்..??? ச்சை..!! உங்க காதலை புரிஞ்சுக்காம.. சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு.. அப்பா, அம்மா மேல பழியைப் போட்டு.. உங்களை அப்படியே தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போனவ..!! உங்களோட உண்மையான காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவ ஸார் அவ..!! அந்த மாதிரி ஒரு பச்சைத்துரோகியையே.. அவளை உண்மையா நேசிச்ச உங்களால மறக்க முடியல.. போறவன், வர்றவன்ட்டலாம் பொலம்பிட்டு இருக்கீங்க..!! இல்ல..??" "............................." அசோக்கின் வார்த்தைகளில் இருந்த உண்மை, ஸ்ரீனிவாச பிரசாத்தின் இதயத்தில் சுருக்கென தைக்க, அவர் இப்போது வாயடைத்துப் போனார். "என் மீரா உங்க ஆளு மாதிரி இல்ல ஸார்..!! என் காதலை நல்லா புரிஞ்சுக்கிட்டவ.. பதிலுக்கு என்னையும் உண்மையா நேசிச்சவ.. என்னை விட்டு அவ விலகி இருக்குறதே என் மேல இருக்குற காதாலாலதான்..!! அவளுக்கு ஏதோ பிரச்னை இருக்கு.. அந்தப் பிரச்சினையை கூட எங்கிட்ட சொல்லி, என்னை கஷ்டப்படுத்த விரும்பாதவ ஸார் அவ..!! அவளை எப்படி ஸார் என்னால மறக்க முடியும்..??" அசோக் ஆவேசமாக கத்தினான். "............................." "மறக்க முடியாது ஸார்.. மறக்கலாம் முடியாது..!!" தனது வலது கையை சரக்கென உயர்த்தி.. ஐந்து விரல்களை விறைப்பாக விரித்து வைத்து.. 'முடியாது' என்பது போல அசோக் அசைத்துக் காட்டினான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பார்த்துக் கொண்டிருக்க.. அவன் சரேலென திரும்பி நடந்தான்.. பைக்கில் ஏறி அமர்ந்தான்.. ஆத்திரத்துடன் கிக்கரை உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை திருகி புயல் வேகத்தில் பைக்குடன் பறந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத் ஒருவித பயமும், கவலையும் தொற்றிக்கொண்டவராய்.. அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தார்..!!மனித மனதில் ஒரு மாற்றத்தை விதைப்பதென்பது.. மலையைக் குடைந்து பாதை அமைப்பதற்கு சமானம்..!! அந்த மனம் அத்தனை நாளாய் நம்பியிருந்த சித்தாந்தங்கள்.. எல்லாவித நிகழ்விற்குமான அந்த மனதின் எதிர்வினை சிந்தனைகள்.. இயல்பான அதன் அணுகுமுறைகள்.. இறுகிப்போன அதன் குணநலன்கள்.. இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிந்தால் மட்டுமே.. எந்தவொரு ஒரு மனிதனின் மனதையும் மாற்றிவிடுகிற சூத்திரம் மட்டுப்படக்கூடும்..!! சாத்தியமான காரியமே எனினும்.. சாதாரணமான காரியம் என இயலாது..!! கடினமான அந்த காரியத்தை, மிக எளிதாக செய்து முடிக்கிற ஒன்று.. அண்டத்தில் உண்டெங்கில், அதனை அன்பென்றுதான் சொல்ல வேண்டும்..!! ஒரு உயிர் இன்னொரு உயிர் மீது கொண்ட உறுதியான அன்பென்பது.. உன்னதமானது மட்டுமல்ல.. சக்தி வாய்ந்தது.. வலிமை கொண்டது.. அளப்பரிய ஆற்றல் படைத்தது..!! அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!! அன்பு.. மனதை இளக, உருக செய்கிறது.. இறுக, உறைய வைக்கிறது.. மென்மையாக்குகிறது.. வன்மையாக்குகிறது.. மூர்க்கமாக்குகிறது.. சில சமயங்களில் முட்டாளாக்குகிறது..!! ஒரு வடிவத்தில் இருக்கிற மனதினை.. வேறொரு வடிவத்துக்கு சுலபமாக மாற்றுகிற பண்பு.. அன்பின் அனுகூலங்களில் ஒன்று..!! 'காதல் வீரனை கோழையாக்கும்.. கோழையை வீரனாக்கும்..' என்கிற பிரபலமான மேற்கோள் வாசகத்தில்.. காதல் என்ற சொல்லுக்கு பதிலாக, அன்பு என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்பது எனது அபிப்ராயம்.. நம்மூரில் காதல் என்கிற சொல், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்தரங்க அன்பை மட்டுமே குறிக்கிற சொல்லாக இருப்பதாலேயே இதை சொல்கிறேன்..!! எந்தவகை அன்புக்குமே மனிதமனத்தை மாற்றிவிடுகிற வல்லமையுண்டு.. சங்ககாலத்தில் முறத்தால் அடித்து புலியை விரட்டியவள் ஒரு தமிழ்த்தாய்தானே ஒழிய.. தமிழ்க்காதலி அல்ல..!! 'கவலைப்படாதடா.. கண்டுபிடிச்சிடலாம்' என்று நம்பிக்கையாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்தின் மனது.. 'அவளை மறந்துடுடா' என்று சொல்கிற அளவிற்கு மாறியிருக்கிறது என்றால்.. அதற்கும் கூட அன்பையே காரணமாக கொள்ளலாம்.. அசோக்கின் மீது அவருக்கிருந்த அன்பு.. அவனுடைய பரிதாபமான நிலையை பார்க்கசகியாத பரிதவிப்பில் பிறந்திட்ட அன்பு..!! அசோக்கிற்கும் கூட மீராவின்மீது அன்பிருந்தது.. அளந்தெடுத்தோ, அறுதியிட்டோ கூற முடியாத மாதிரியான ஒரு அதீத அன்பு..!! நெஞ்சை அடைத்திருக்கிற அவளை.. இனி நேரில் சந்திப்பதே உறுதியற்றுப் போனநிலையில்.. அவள் மீது அவனுக்கிருந்த அந்த அதீத அன்பு.. அவனை என்ன பாடுபடுத்தியிருக்க கூடும்.. அவனது மனதில் எந்தவித மாற்றத்தை தூண்டியிருக்க கூடும்..?? 'இனி செய்வதற்கு எதுவும் இல்லை..' என்று ஸ்ரீனிவாச பிரசாத் கையை விரித்தபோதே.. அவனுடைய மனதை ஒரு மாயவகை அழுத்த மண்டலம் சூழ ஆரம்பித்தது.. அச்சம் கலந்த ஒரு வேதனையை அவன் மனதுக்குள் அனுப்பி அழுத்தியது..!! மீராவின் மீதிருந்த அளவிலா அன்பினாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலும்.. அவன் மனதில் உருவான அழுத்தம் அது..!! இதயம் இரும்புக்குண்டென கனத்துப் போனது.. மூளையில் முறுக்காணி ஏற்றியது மாதிரியாக ஒரு வலி..!! அந்த வலி பொறுக்காமல்தான் அங்கிருந்து அவன் உடனே அகன்றுவிட்டான்.. ஆனால் அவனது அகத்தை விட்டுத்தான் மீரா அகலுவதாய் இல்லை..!! எந்த நேரமும் அவளைப் பற்றிய எண்ணத்துடனே அசோக்கை தத்தளிக்க வைத்தாள்.. உணர்விருக்கையில் அவன் நினைவை நிறைத்திருந்தாள்.. உறங்கிப்போகையில் அவன் கனவை நிரப்பியிருந்தாள்..!! காணுமிடமெல்லாம் அவளது பிம்பம் அசைவது போலொரு மாயை.. காதுகளுக்குள் அவளது குரல் ஒலிப்பது போலொரு மயக்கம்.. காற்றினில் அவளது வாசம் வீசுவது போலொரு மருட்சி.. பித்துப்பிடிக்காத குறைதான் அசோக்கிற்கு..!! சாலைப்போக்குவரத்து மிகுந்த அண்ணாசாலையில்.. சாலமனும் அவனும் பைக்கில் பறந்து கொண்டிருந்தபோது.. மீராவுடையவை போன்ற பின்னலும், பின்னழகுமாய் ஒருத்தி குறுக்கிட.. "ஏய் மச்சி.. மீராடா...!!" என்று அலறிய அசோக், தலையை அப்படியே 180 டிகிரிக்கு திருப்பினான்.. சாலமனும் பதறிப்போய் ஒருபக்கமாக சாய.. சமநிலை இழந்த வண்டி சாலையில் சரிந்து சறுக்கியது..!! அசோக்கிற்கு அப்படியொன்றும் அடி பலமில்லை.. இவர்கள் விழுந்த சப்தத்தில், அந்தப்பெண் திரும்பி பார்க்க.. 'அவள் மீரா இல்லை' என்று உறைத்திட்ட உண்மைதான்.. அவனுடைய முழங்கை சிராய்ப்பை விட அதிக வலியை தந்தது..!! சாலமனின் நிலைதான் பரிதாபம்.. கீழே விழுந்ததில் முட்டி பெயர்ந்து ரத்தம் கொட்டியது..!! "டேய்..!!! கொலைகாரப்பாவி..!!! கொஞ்சம்னா அப்டியே எகிறிருப்பேன்டா..!!" என்று வேதனையும் வெறுப்புமாய் அசோக்கைப் பார்த்து கத்தினான். அவனை கண்டுகொள்ளாத அசோக், "மீ..மீரான்னு நெனச்சுட்டேன் மச்சி.. அ..அவ இல்லடா..!!" என்று உதிர்த்த வார்த்தைகளில் இருந்த வேதனையை சாலமனால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிந்தாதிரிப்பேட்டையில் அந்த ஃப்ளக்ஸ் போர்டை சூழ்ந்திருந்த, அத்தனை வீடுகளின் கதவையும் தயக்கமில்லாமல் தட்டியாயிற்று.. மக்கள்தொகை கணக்கெடுக்கிற போர்வையில், மனம் திருடிச்சென்றவளின் மதிமுகம் தென்படுகிறதாவென தேடிப் பார்த்தாயாயிற்று.. மாடிவீடுகள் மட்டுமல்லாது, மண்குடிசைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை..!! ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி.. ஆயிரத்து சொச்ச வீடுகளை சலித்தெடுத்தும்.. அகப்பட மறுத்தாள் அவனது அன்புக்காதலி..!! எப்படி அகப்படுவாள்.. அந்த வீடுகளில் அவள் இருந்தால்தானே..?? பார்த்த முதல் வீட்டிலேயேதான் பாவையவள் பதுங்கியிருந்தாள் என்கிற உண்மை.. பாவம் அசோக்கிற்கு தெரியாதல்லவா..?? ஒவ்வொரு வீடாக சென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஏறி இறங்குகையில்.. ஒருசில வீடுகளில் அச்சமயம் ஆளிருக்க மாட்டார்கள்.. வெளிப்புற தாழ்ப்பாள்கள் அவர்களை வெறுங்கையுடன் திருப்புவன..!! அந்த மாதிரி வீடுகளை அசோக் ஒரு தனிக்கணக்கில் வைத்திருந்தான்.. அடுத்தநாள் செல்லும்போது அந்த வீடுகளை மீண்டும் அணுகுவதை வழக்கமாக கொண்டிருந்தான்..!! தனது வீட்டிற்கு அசோக் வந்தபொழுதினில்.. மீரா தப்பியோடி இருந்திருந்தால் கூட.. அசோக் அவளை மீண்டும் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்க கூடும்..!! அந்த நெருக்கடிநிலைமையை அவள் மனோகரைக்கொண்டு சமாளித்தபடியால்.. அசோக்கின் தனிக்கணக்கில் மீராவின் வீடு அங்கம் வகிக்காமல் போனது..!! ஐந்தாம் நாள் இறுதி.. அசோக்கின் நம்பிக்கையைபோல ஆதவனின் வெளிச்சமும் மங்கிப்போயிருந்த மாலைப்பொழுது.. அட்டவணையில் இருந்த அனைத்து வீடுகளிலும் தேடிமுடித்து.. அலைந்து திரிந்த களைப்புடன்.. அருகிலிருந்த ஒரு சாலையோர கடையில்.. பஜ்ஜி கடித்து அவர்கள் பசி தீர்த்துக் கொண்டிருந்த சமயம்..!! அசோக்கின் மனதில்.. ஆரம்பத்திலிருந்தே ஒருசில வீடுகளின் மீதும், அங்கிருந்த மனிதர்கள் மீதும் ஒருவித சந்தேகம்.. அவன் முதன்முதலில் அணுகிய மீராவின் வீடுமே அதில் அடக்கம்.. அடுத்தநாள் அந்த வீடுகளை எல்லாம் திரும்ப ஒருமுறை சென்று பார்க்கலாமா என்று அவனுக்குள் ஒரு எண்ணம்..!! உள்ளுக்குள் எழுந்த அந்த எண்ணத்தை.. அசோக் சாலமனிடம் உரைத்தான்..!! அவ்வளவுதான்.. ஏற்கனவே கடும் எரிச்சலில் இருந்த சாலமன், அப்படியே கொதித்துப் போனான்.. வாயிலிருந்த பஜ்ஜியை அவசரமாய் விழுங்கியவன், அசோக்கிடம் ஆத்திரமாய் சீறினான்..!!டேய்..!!! உனக்கு என்ன பைத்தியமாடா..????" "ப்ச்.. என்னாச்சு இப்போ..??" "பின்ன என்ன.. அஞ்சு நாளா பிச்சைக்காரன் மாதிரி வீடுவீடா ஏறிஎறங்கிருக்குறோம்.. அறிவு வரலை உனக்கு இன்னும்..?? அவ இங்க இல்லடா..!!" "இல்ல மச்சி.. அவ இங்கதான்டா எங்கயோ இருக்குறா.. எனக்கு நல்லா தெரியும்..!!" "ஆமாம்.. உனக்கு எங்க பாத்தாலும் அவ இருக்குற மாதிரியே இருக்கும்.. எவளை பாத்தாலும் அவளை மாதிரியே தோணும்..!! ஏன்டா இப்படிலாம் பண்ற..??" "ஏய்.. இது அப்டி இல்லடா..!!" "என்ன நொப்டி இல்லடா.. அன்னைக்கு ரோட்ல எவளையோ பாத்துட்டு பைக்கை கீழ வுட்டியே..?? த்தா.. அன்னைக்கு ஜஸ்ட் மிஸ்ஸு.. இல்லனா சங்கு ஊதிருப்பானுக..!! உன்கூட பைக்ல போற ஒவ்வொரு செகண்டும், அப்டியே பக்கு பக்குன்னு இருக்குதுடா எனக்கு..!! போதுன்டா சாமி.. என்னால முடியாது இனிமே.. உன் ஆளை தேடுறோம்னு என் உசுரை தொலைச்சுருவேன் போல இருக்கு..!! போதும்.. இத்தோட நிறுத்திக்கலாம்..!!" சாலமன் சலிப்புடன் சொல்ல, "எ..என்னடா இப்படி சொல்ற..??" அசோக்கின் குரல் உடைந்து போய் ஒலித்தது. இப்போது சாலமனுக்குமே அசோக்கின் மீது மெலிதான ஒரு பரிதாபம். "சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மச்சி.. இது வேலைக்காவாது..!! அவ இந்த ஏரியாலதான் இருப்பான்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல..!!" "இல்லடா.. அவ சொல்லிருக்குறா.. அவ வீட்டுக்கு எதுத்தாப்ல.." "ம்க்கும்.. நல்லா சொன்னா.. என்னை பாடைல ஏத்துறதுக்கு..!! அவ ஏதோ ரோட்ல அந்த போர்டை பாத்துட்டு.. என் வீட்டுக்கு எதுத்தாப்லன்னு பொய் சொல்லிருப்பாடா.. நாமளும் அதை உண்மைன்னு நம்பிட்டு நாய் மாதிரி அலைஞ்சுட்டு இருக்கோம்..!!" "சேச்சே.. மீரா அப்டிலாம் சொல்லிருக்க மாட்டாடா..!!" அசோக் அந்த மாதிரி அடம்பிடிக்க, இப்போது சாலமன் மீண்டும் டென்ஷன் ஆனான். "டேய்.. அப்புறம் எனக்கு வாயில நல்லா வந்துரும் ஆமாம்..!! மீராவாம் மீரா.. மசுரு..!!!! அந்த மீரான்ற பேரே ஒரு பெரிய பொய்தானடா.. பேர் மட்டுமா.. அவ அவளைப்பத்தி சொன்ன எல்லாமே பொய்தான..?? அப்புறம் எப்படி இதை மட்டும் உண்மைன்னு நம்புற நீ..?? உனக்கே இது பைத்தியக்காரத்தனமா தோணல..?? மொதல்ல அவளோட உண்மையான பேரை கண்டுபிடிடா.. அப்புறம் அவளை கண்டுபிடிக்கலாம்..!!" சாலமன் பொரிந்து தள்ள.. அசோக் தளர்ந்து போனான்..!! சாலமன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த உண்மை.. அசோக்கின் புத்தியை அறைந்தது..!! என்ன பதில் சொல்வதென்று எதுவும் புரியவில்லை அவனுக்கு..!! சோகம் அப்பிய முகமும்.. சோர்ந்து போன கால்களுமாய்.. சொத்தென்று பெஞ்சில் அமர்ந்தான்..!! அவனது மனதைச் சூழ்ந்திருந்த அந்த மாயவகை அழுத்த மண்டலம்.. இப்போது இரக்கமே இல்லாமல் இறுக்க ஆரம்பித்திருந்தது..!! அடுத்த நாளும் சிந்தாதிரிப்பேட்டையில் அலைய நினைத்திருந்த அந்த எண்ணத்தை.. அவநம்பிக்கையுடன் அசோக் கைகழுவினான்..!! ஆனால்.. அவன் மனதில் எப்போதும் எழுந்து.. அவனைப்பார்த்து கைகொட்டி நகைக்கிற மீராவின் நினைவுகளை கலைந்திடத்தான்.. அவனுக்கு வழியேதும் புலப்படவில்லை..!! அலுவலகச்சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அவளது கவிதைக்காகிதம்.. அவர்கள் அமர்ந்து உண்டு கதையடிக்கிற அந்த ஃபுட்கோர்ட் மேஜை.. சிவந்த மூக்குடன் சிரிக்கிற குரங்கு பொம்மை.. மஞ்சள் இதழ்களுடன் மலர்ந்து குலுங்கும் ரோஜாத்தோட்டம்.. அர்த்தம் புரியாத பார்வையுடன் அவனையே வெறிக்கிற அவளது வால்பேப்பர்.. அவளது அழைப்புக்கென பிரத்தியேகமாக செலக்ட் செய்து, செட் செய்து வைத்திருந்த செல்ஃபோன் ரிங்டோன்..!! கண்ணில் படுகிற அனைத்துமே.. காயம்பட்ட அவன் நெஞ்சில் திராவகம் தெளிப்பதாகவே இருந்தன..!! மனதில் இருந்த குழப்பமும், பயமும், வேதனையும்.. அசோக்கின் முகத்திலும் வெளிப்படாமல் இல்லை.. வீட்டிலிருப்பவர்கள் அவனுடைய நடவடிக்கைகளை வித்தியாசமாக பார்த்தனர்.. எனினும் அவர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.. ஏதாவது கேட்டாலும் இவன் 'ஒன்றுமில்லை' என்றே கூறி சமாளித்தான்..!! "போதும் மம்மி.. எனக்கு பசி இல்ல..!!" பெயருக்கு கொறித்துவிட்டு அசோக் எழ முயல.. பாரதி பொறுமை இழந்து போனாள்.. மகனின் முகத்தை ஏறிட்டு கடுமையாக ஒரு முறை முறைத்தாள்.. அவனது கண்களை நேருக்கு நேராக எதிர்கொண்ட கூரான பார்வை.. அந்தப்பார்வையில் அப்படி ஒரு உஷ்ணம்.. எழுந்தாய் என்றால் எரித்துவிடுவேன் என்பது மாதிரி..!! பாரதியின் அனல்கக்கும் பார்வை ஒன்றே அசோக்கிற்கு போதுமானதாக இருந்தது.. எழ முயன்றவன், பிறகு தயக்கத்துடன் மீண்டும் அமர்ந்தான்.. தட்டை அருகில் இழுத்து, சாதத்தை கொஞ்சமாய் அள்ளி, மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்..!! மகன் மீண்டும் சாப்பிட ஆரம்பித்ததும், பாரதியின் கோபமும் மறைந்து போனது.. உள்ளத்தில் அவன் மீதான அன்பு, உடனடியாய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.. அதேநேரம் 'இவனுக்கு ஏதோ பிரச்னையோ' என்கிற கவலையும் அவளை ஆட்கொண்டது.. சாதம் மெள்ளுகிற மகனின் கேசத்தை, இதமாய் வருடிக்கொடுத்தாள்..!! "அவ கூட ஏதாவது சண்டையா..??" பாரதியின் கேள்வி கூர்மையாக இருந்தது. "ச..சண்டையா.. அ..அதுலாம் இல்லையே..??" அசோக்கிடம் ஒரு தடுமாற்றம். "அப்புறம் என்னாச்சு..??" "எ..என்னாச்சுனா..??" "ப்ச்.. நடிக்காத அசோக்.. நானும் ஒருவாரமா பாத்துட்டுத்தான் இருக்கேன்.. நீ ஒன்னும் சரியில்ல..!! உன் மூஞ்சில ஒரு களையே இல்ல.. எந்தநேரமும் எதையாவது யோசிச்சுட்டே இருக்குற..?? ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. வீடே தங்குறது இல்ல..!! எ..என்னாச்சு உனக்கு.. ம்ம்..?? சொல்லு.. மீரா கூட எதும் பிரச்சினையா..??" "இ..இல்ல மம்மி.. அதுலாம் ஒன்னும் இல்ல..!!" "அப்புறம்..??" "ஆபீஸ் டென்ஷன்தான்..!! கொஞ்சநாளா ரொம்ப ஹெக்டிகா போயிட்டு இருக்கு..!!" அசோக் கம்மலான குரலில் சொல்ல, பாரதி அவனை ஒருசில வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பிறகு, "வேற ஒன்னும் இல்லையே..??" என்றாள் முழு நம்பிக்கை இல்லாதவளாகவே. "அதான் சொல்றன்ல..??" "ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! ஆபீஸ் டென்ஷன்லாம் ஆபீஸ்லயே விட்டுட்டு வர மாட்டியா.. வீட்டுக்கு வந்தும் அதையே நெனச்சுட்டு இருப்பியா.. என்ன புள்ள நீ..??" பாரதியின் குரலில் ஒருவித பொறுமல். ".................." "ஆன்னா ஊன்னா சாப்பாடு மேல கோவத்தை காட்ட வேண்டியது..!!" ".................." "அவதான் வந்து உன்னை அடிச்சு திருத்தணும்..!!" அப்படி சொல்லும்போதே, பாரதிக்கு திடீரென மீராவின் நினைவுகள்..!! ஒரே ஒரு நாள்தான் சந்தித்து பேசியிருந்தாலும்.. மீராவுடன் ஒரு அன்னியோன்ய உணர்வு அவளுக்கு அன்றே வந்திருந்தது..!! 'தனக்குப்பிறகு தனது இடத்தில் இருந்து.. தன் மகனை அன்புடன் கவனித்துக் கொள்ளப்போகிற ஒரு ஜீவன்.. தான் ஈன்றெடுத்தவனுடன் சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்டு, அவனை முழுமனிதனாக்கப் போகிற ஒரு உயிர்..' என்பது மாதிரியான எண்ணத்தில் பிறந்த உணர்வு அது.. மகனை உண்மையாக நேசிக்கிற எந்த தாய்க்குமே, அவனுடைய மனைவியை பார்த்து வரவேண்டிய உன்னதமான உணர்வு..!!குரலில் உடனடியாய் ஒரு மென்மையை வரவழைத்துக்கொண்டு.. ஒருவித ஏக்கம் தொனிக்க.. அசோக்கிடம் பாரதி கேட்டாள்..!! "இ..இந்த வாரம் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றியா அசோக்..??" அம்மா அப்படி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. மனதில் சுருக்கென்று ஒரு வலியுடன், அம்மாவை ஏறிட்டு பரிதாபமாக பார்த்தான்..!! மகனின் முகத்தை கவனியாத பாரதி.. எங்கேயோ பார்த்துக்கொண்டு தொடர்ந்து பேசினாள்..!! "ஹ்ஹ்ம்ம்ம்ம்..!!! பார்த்து ஒருவாரம்தான் ஆச்சு.. அதுக்குள்ளயே வருஷக்கணக்கான மாதிரி இருக்குது..!!" ".................." "அவகிட்ட பேசிட்டு இருந்தா, நேரம் போறதே தெரியல தெரியுமா..?? ரொம்ப நல்ல பொண்ணுடா..!! நீதான் கோவக்காரி, டெரர் பார்ட்டின்னு என்னன்னவோ சொன்ன..!!" ".................." "பாக்கணும் போல இருக்குடா.. கூட்டிட்டு வர்றியா..??" ஏக்கத்துடன் கேட்டுவிட்டு வெள்ளந்தியாக சிரிக்கிற அம்மாவுக்கு, என்ன பதில் சொல்வதென்று அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! அழுகை முட்டிக்கொண்டு வந்தது அவனுடைய கண்களில்..!! அதனை அடக்கிக்கொண்டு.. "ம்ம்.. கூ..கூட்டிட்டு வர்றேன்..!!" சற்றே பிசிறடிக்கிற குரலில் சொன்னான்..!! பாரதி மட்டுமல்ல.. அசோக்கின் குடும்பத்தார் அனைவருமே.. அவர்களையும் அறியாமல், அசோக்கின் நிலையையும் அறியாமல்.. மீராவின் நினைவுகளை அவனுக்குள் தூண்டிக்கொண்டே இருந்தனர்..!! ஏற்கனவே நொறுங்கிப்போயிருந்த அசோக்கிற்கு.. அவர்களின் நடவடிக்கைகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தன..!! "ஸ்பென்ஸர் போயிருந்தேண்டா.. இயர் ரிங் வாங்கினேன்.. நல்லாருந்துச்சேன்னு அண்ணிக்கும் ஒரு செட் வாங்கினேன்.. இந்தா.. அவங்களை பாத்தா குடுத்துடு..!!" அண்ணனின் கையில் காதணி பெட்டகத்தை திணித்துவிட்டு.. திரும்பி நடந்தாள் சங்கீதா..!! வலிக்கிற மனதுடனே அசோக் அந்த பெட்டகத்தை பார்க்க.. வாசலை அடைந்திருந்த சங்கீதா திரும்பி கேலியாக சொன்னாள்..!! "மவனே.. நான் வாங்கி தந்ததா சொல்லி குடுக்கணும்..!! நீயே வாங்கினதா பீலா வுட்டு.. முத்தம் கித்தம் கேட்டு எங்க அண்ணியை டிஸ்டர்ப் பண்ணினேன்னு தெரிஞ்சது.. கொன்னுடுவேன்..!! ஹாஹாஹா..!!" மத்தாப்பு கொளுத்திய மாதிரி சிரித்துவிட்டு.. மறைமுகமாக அண்ணனுக்கு ரொமான்ஸ் ஐடியாவும் வழங்கிவிட்டு.. அறையை விட்டு வெளியேறினாள் சங்கீதா..!! அசோக்குக்குத்தான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.. வேதனை கொப்பளிக்கிற நெஞ்சுடன்.. வெகுநேரம் அந்த காதணியையே பார்த்துக் கொண்டிருந்தான்..!! "ஹ்ம்ம்... என் அருமை, என் புள்ளைக்குத்தான் தெரியல.. அட்லீஸ்ட் வரப்போற மருமகளாவது தெரிஞ்சுக்கட்டும்..!! என்னோட நாவல் எதுவும் மீரா படிச்சது இல்லன்னு சொன்னா.. இது நான் எழுதினதுல ரீசன்ட் ஹிட்.. இதை அவகிட்ட குடுத்து படிக்க சொல்லு... மாமனாரோட மகிமை என்னன்னு அவ தெரிஞ்சுக்குவா..!! ஹாஹா..!!" மணிபாரதி தன் பங்குக்கு அசோக்கின் உணர்வை சீண்டினார்..!! அவர் வைத்துவிட்டு சென்ற நாவலின் தலைப்பை பார்த்த அசோக்கிற்கு.. அழுகை மேலும் பீறிடவே செய்தது..!! "எங்கே அந்த வெண்ணிலா..??" நாராயணசாமியும் அமைதியாய் இருக்கவில்லை.. அனுபவத்தால் தான் கற்ற காதல் பாடங்களை, அறிவுரைகளாக பேரனுக்கு அவ்வப்போது அள்ளி வீசிக்கொண்டிருந்தார்..!! "சும்மா உம்முனே இருக்காத.. நானும் லவ் பண்றேன்னு ஏதோ பேருக்கு லவ் பண்ணாத..!! அவளை சிரிக்க வை.. அழ வை.. கோவப்பட வை.. வெக்கப்பட வை..!! அவளை அடி.. அவளுக்கு முத்தம் குடு..!! என்னை மாதிரி நீ கெழட்டுப்பயலானப்புறமும் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற மாதிரி.. ஏதாவது பண்ணிக்கிட்டே இரு..!! எந்த லட்சணத்துல நீ லவ் பண்ணினன்னு.. எழுபது வயசுல பெருமையா சொல்லிக்கிற மாதிரி உன் லவ் இருக்கணும்..!! புரியுதா..??" "ம்ம்.. புரியுது தாத்தா..!!" மனதில் எழுந்த ஆதங்கத்தையும் சோகத்தையும் மறைத்துக்கொண்டு, அமைதியாக சொன்னான் அசோக்.வீடே தங்குவதில்லை என்று.. அசோக்கைப் பற்றி பாரதி குறைபட்டுக்கொண்டது சரிதான்..!! வீடு தங்கவே அவன் விருப்பப்படவில்லை என்பதுதான் அதன் பின்னணியில் உறைந்திருந்த உண்மை..!! அடிக்கடி இந்த மாதிரி மீரா பற்றி பேசி.. அசோக்கின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தால்.. அவன் என்ன செய்வான் பாவம்..?? உள்ளம் கவர்ந்து சென்றவளை கண்டறியவும் வழியில்லை.. உள்ளது உள்ளபடி குடும்பத்தாரிடம் உரைக்கவும் துணிவில்லை.. உடைந்து போனான்..!! வீட்டை தவிர்த்தான்.. அலுவலக வேலை இருக்கிறதென அங்கேயே அடிக்கடி முடங்கிப் போனான்..!! அலுவலகத்தில் மட்டும் என்ன அவனுக்கு நிம்மதியா கிட்டிவிடப் போகிறது..?? அவள்தான் நினைவை நிறைய கொடுத்துவிட்டு.. நிம்மதியை முழுதாய் எடுத்துச் சென்றுவிட்டாளே..?? அலுவலகத்தில் எப்போதும்.. புகை மண்டலத்துக்கு இடையில்தான் அவன் முகம் தேட வேண்டியிருக்கும்.. அந்த அளவுக்கு எந்த நேரமும் சிகரெட் புகைத்தான்..!! அவன் நெஞ்சில் எரிகிற நெருப்புக்கு தற்காலிக மருந்தாய்.. உதட்டில் பொருத்திய சிகரெட்டின் சிரத்தில் நெருப்பு வைத்தான்..!! நச்சுப்புகை உள்ளே சென்று அத்தனை உறுப்புகளையும் தடுமாறச்செய்ய.. அந்த தடுமாற்ற உணர்வில், தன் மனவேதனையின் வீரியம் குறைக்க முயன்றான்..!!அலுவலக வேலைகளும் எதுவும் செய்வதில்லை.. அப்படியே செய்தாலும்.. யாருடனாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு சண்டை..!! புது ப்ராஜக்ட் சம்பந்தமாக பாலாஜி அட்வர்டைஸிங்குக்கு கலந்தாய்வு செய்ய சென்றவன்.. மோகன்ராஜுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டான்..!! "டேய்.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா..??" "இன்னும் இதுல புரிஞ்சுக்க என்ன இருக்கு..?? என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..!!" "ப்ச்.. ஏண்டா இப்படி அடம் புடிக்கிற..??" "யாரு அடம் பிடிக்கிறா..?? நான் சொன்ன கான்சப்ட்ல என்ன குறைன்னு சொல்லுங்க மொதல்ல..!! நீங்க எப்போவும் கேக்குற மாதிரி.. லவ், ஃபீல், எமோஷன், டெப்த் எல்லாம் இருக்கு.. அப்புறம் என்ன..??"
"குறைலாம் சொல்லலடா.. க்ளயன்ட்டுக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!!" "புல்ஷிட்..!!" "Emergency lamp ad.. கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றாங்க..!! அவங்க சொன்ன கான்சப்ட்ல மட்டும் என்ன குறை.. நல்லாத்தான இருக்கு..??" "ப்ச்.. எனக்கு பிடிக்கல.. இதெல்லாம் என்னால ஷூட் பண்ணமுடியாது..!!" "ஷ்ஷ்ஷ்.. இப்போ முடிவா என்னதான் சொல்ற..??" "நான் சொன்ன கான்சப்ட்ன்னா பண்றேன்.. இல்லனா என்னை ஆளை விடுங்க..!!" "அவசரப்படாத அசோக்.. It's going to affect your career..!!" "பரவால ஸார்.. எனக்கு பரவால..!!" அலுவலகத்தில் அடைந்து கிடக்கிற நேரங்களில்.. காதல் உல்லாசம் திரைப்படத்தை திரும்ப திரும்ப பெரிய திரையில் பார்த்தான்..!! அந்தப்படத்தின் நாயகன் நாயகியுடன்.. தன்னையும் மீராவையும் அவனால் எளிதில் பொருத்திப் பார்க்க முடிந்தது.. திரையில் அவர்கள் அழுகையில், நிஜத்தில் இவனால் இங்கு உருக முடிந்தது..!! முக்கியமாக.. முன்பொருமுறை 'என்ன எழவெடுத்த படம்டா இது..??' என்று நண்பர்களை கிண்டல் செய்த அதே காட்சி.. இப்போது அவனது ஏக்கத்தையும் துக்கத்தையும் கிளறிவிடுகிற காட்சியாக இருந்தது..!! 'ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!' 'ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!' 'இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!' 'ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!" 'போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!' 'என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??' 'எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!' அந்தக்காட்சியை பார்க்கையில் அவனையும் அறியாமல் அவனுடைய கண்களில் இருந்து நீர் கசியும்.. அவனையும் அறியாமல் அவனது உதடுகள் 'மீரா' என்ற பெயரை நடுக்கத்துடன் உச்சரிக்கும்..!! ரீவைன்ட் செய்து, ரீவைன்ட் செய்து.. திரும்ப திரும்ப அந்தக்காட்சியை ஓடவிட்டு.. அழுது அழுது கண்கள் சிவந்து..!! அவனுடைய மனநிலை அழுத்தம் குறைவதற்கு.. நிச்சயம் அந்தப்படமும், காட்சியும் கொஞ்சம் கூட உதவவில்லை.. மாறாக அவனது மனக்காயத்தை மேலும் புரையோடச் செய்யவே பயன்பட்டது..!!ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. அசோக்கின் நண்பர்களுக்கும் அவனது அந்த கோலத்தை காண சகிக்கவில்லை..!! 'சும்மா இருந்தவனை காதலித்துப்பார் என்று ஏற்றிவிட்டு.. இந்த நிலைக்கு தள்ளிவிட்டோமோ..' என்ற குற்ற உணர்வு வேறு அவர்களுக்கு..!! ஆனால்.. அவனுடைய நிலைக்கு என்ன தீர்வு காண்பது என்றுதான்.. அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை..!! அவர்களால் முடிந்த அளவுக்கு அவனுடைய மனதை வேறுபக்கம் திருப்ப முயன்றார்கள்.. அதிலும் தோல்விதான்..!! மதுவின் போதை அவனது மனதின் வேதனையை குறைக்கும் நினைத்தார்கள்.. மதுவருந்த அழைத்து சென்றார்கள்..!! "இதே டேபிள்தான் மச்சி.. நான் இங்க.. அவ அங்க..!!" "....................." "இவ்ளோஓஓஓ பெரிய பச்சைமொளகாடா கிஷோரு..!! எடுத்து அவ பாட்டுக்கு கேரட் மாதிரி, 'கர்ச் கர்ச் கர்ச்'ன்னு கடிச்சு தின்ன ஆரம்பிச்சுட்டா..!! எனக்குலாம் அப்டியே டவுசர் லூஸாயிடுச்சு..!!" "....................." "திடீர்னு அப்டியே அழுறா.. எனக்கு ஒன்னும் புரியல..!! 'என்னை விட்டு எங்கயும் போயிடாத அசோக்'ன்னு அப்டியே கொழந்தை மாதிரி ஏக்கமா சொன்னாடா.. பாவமா இருந்துச்சு..!! சொல்லிட்டு அப்டியே என்னை இறுக்க்க்கி கட்டிப் புடிச்சுக்கிட்டா..!!" "....................." "எனக்கு அப்போ எப்டி இருந்துச்சு தெரியுமா..?? அவளுக்காக என்னவேணா பண்ணலாம்னு தோணுச்சுடா.. சத்தியமா சொல்றேன் மச்சி.. என்னவேணா பண்ணலாம்னு தோணுச்சு ..!!" "....................." உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்த அசோக்.. திடீரென உணர்ச்சி வசப்பட்டுப் போனான்..!! கடிப்பதற்காக கையில் எடுத்த சிக்கனை.. பிறகு கடிக்காமலே தட்டில் விசிறினான்..!! அவனுடைய கண்கள் பட்டென குளமாகிப்போக.. வேணுவை ஏறிட்டு உடைந்துபோன குரலில் கேட்டான்..!! "அ..அப்டிலாம் சொல்லிட்டு.. கடைசில.. அவ ஏன்டா என்னை விட்டுட்டு போயிட்டா..?? ம்ம்..?? நான் ஒண்ணுமே செய்யலையேடா மச்சி..??" "மச்சி.. போதுண்டா.. விடுறா..!!" சாலமன்தான் அவ்வாறு பொறுக்கமாட்டாமல் சொன்னான்..!! அசோக்குக்கு மதுவை ஊற்றிவிட்டு.. அவனது மனதை மீராவிடம் இருந்து மீட்டெடுத்து.. சற்றேனும் அவனை சந்தோஷத்தில் வைத்திருக்க நினைத்த அவனது நண்பர்களின் திட்டம்.. பலிக்கவில்லை.. தவிடு பொடியானது..!! அங்கு சென்றும் அவன் புலம்பலைத்தான் இவர்கள் கேட்க வேண்டி இருந்தது.. அதுவும் வேதனையில் போதையை மிக்ஸ் செய்த புலம்பல் எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை..!! மூன்று பேரும் நெற்றியை பிசைந்தவாறு.. ஒருவர் முகத்தை அடுத்தவர் அவஸ்தையாக பார்த்துக்கொண்டனர்..!! "மச்சி.. எனக்கு இன்னொரு லார்ஜ் சொல்லேன்..!!" ஆறாவது லார்ஜையும் முடித்துவிட்டு அசோக் அவ்வாறு குழறலாக கேட்க.. இப்போது கிஷோர் எரிச்சலானான்..!! "ஹேய்.. போதுண்டா.. ஏற்கனவே கன்னாபின்னான்னு குடிச்சுட்ட..!! கெளம்பலாம் வா..!!" "ஹ்ஹ.. போதுமா..?? அதெல்லாம் நீ சொல்லக் கூடாது.. எனக்கு போதும்னா அதை நான்தான் சொல்லணும்..!! நோ.. எனக்கு போதாது.. போதவே போதாது..!!" எகத்தாளமாக சொன்ன அசோக்.. தூரத்தில் தெரிந்த பேரரை பார்த்து.. இங்கிருந்தே பெருங்குரலில் கத்தினான்.. மீராவின் ஸ்டைலில்..!! "ரிப்பீட்..!!!!" அதிகமாக புகைத்தான்.. அளவில்லாமல் குடித்தான்.. ஆல்கஹாலும், டொபாக்கோவும் அவனது சிந்தனை ஓட்டத்தை மேலும் சிக்கலாக்கின.. மூளையின் செயல்பாட்டை முடக்கி வைத்தன..!! அசோக்கின் நிலை அவனது நண்பர்களுக்கும் கவலையையே தந்தது..!! சில நேரங்களில்.. அவன் மனநிலை பிறழ்ந்தவன் மாதிரியெல்லாம் பேச.. அவர்கள் மிரண்டு போய் பார்த்தார்கள்..!! "அவ மட்டுந்தான் கவிதை எழுதுவாளா..?? எங்களுக்குலாம் எழுத தெரியாதா..?? நானும் எழுதுவேன்..!! அவள் பறந்து போனாளே.. என்னை மறந்து போனாளே..!!" மோகன்ராஜுடன் அசோக் சண்டையிட்டதிலிருந்து மூன்றாவது நாள்.. ஓவராக குடித்து, ஓவராக புலம்பி நண்பர்களுக்கு கிலி கிளப்பியதிலிருந்து நான்காவது நாள்.. பாலாஜி அட்வர்டைஸிங்கில் இருந்து அசோக்கின் அலுவலகத்துக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.. புது வேலை தொடர்பாக இவர்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை, முறித்துக் கொண்டுவிட்ட செய்தியை தாங்கி வந்த அழைப்பு அது..!! கிஷோர்தான் அந்தக்காலை அட்டன்ட் செய்தான்.. விஷயம் கேள்விப்பட்டதுமே கொதித்துப் போனான்.. அசோக்கின் மீது அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்..!! ரிஸீவரை அதனிடத்தில் அறைந்து சாத்தியவன்.. அலுவலக அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தான்.. 'எங்க அவன்..?' என்று முனுமுனுத்துக்கொண்டே வீடியோ எடிட்டிங் அறைக்குள் நுழைந்தான்..!! அந்த அறைக்குள் புகை மண்டலத்துக்கு நடுவே அசோக் அமர்ந்திருந்தான்.. அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உட்கொண்டு ஏற்கனவே எக்கச்சக்க போதையில் இருந்தான்.. திரையில் காதல் உல்லாசம் ஓடிக்கொண்டிருக்க.. இவன் அதை இருநூறாவது முறையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! மற்ற நண்பர்களும் அங்கேதான் இருந்தனர்.. வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..!! உள்ளே நுழைந்த கிஷோர்.. முதல்வேலையாக சென்று வீடியோ சிஸ்டத்தில் செருகியிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென உருவினான்.. உடனே வீடியோ ஸ்க்ரீன் பட்டென இருட்டு போனது.. ஆர்வமாக படம் பார்த்துக்கொண்டிருந்த அசோக்கிற்கோ கிஷோரின் மீது சுருக்கென்று ஒரு ஆத்திரம்..!! "ஏய்.. ஏன்டா இப்போ ஆஃப் பண்ண..??" என்று சீறினான். "ஆஃப் பண்ணது மட்டும் இல்லடா.. இனிமே இந்தப்படத்தை பாக்க உன்னை அல்லோ பண்ணவும் முடியாது..!!" கிஷோரும் பதிலுக்கு சூடாக சொன்னான். சொன்னவன் கையிலிருந்த மெமரி ஸ்டிக்கை சரக்கென விசிறி எறிந்தான். அது தரையில் மோதி, உடைந்து சிதறி தெறித்து ஓடியது. அது அசோக்கின் கோபம் இன்னும் அதிகமாக்கியது. அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தான். கோபத்தில் சிவந்த முகத்துடன் கிஷோரை நெருங்கி, அவனது மார்பில் கைவைத்து தள்ளியவாறே கேட்டான். "ஏய்ய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு இப்போ..??" "எனக்கு எதுவும் ஆகலைடா.. நான் நல்லாத்தான் இருக்கேன்..!! உனக்குத்தான் பைத்தியம் புடிச்சிருச்சு.. உன் பைத்தியக்காரத்தனத்தால.. நாப்பது லட்ச ரூபா ப்ராஜக்ட், அப்படியே நக்கிக்கிட்டு போயிருச்சு..!!" கிஷோர் கொதிப்புடன் கத்தினான். ப்ராஜக்ட் கைநழுவி சென்றதை அறிந்ததும், சாலமனும் வேணுவும் அதிர்ந்து போய், அவரவர் இருக்கையில் இருந்து எழுந்தார்கள். செய்தி கேட்டு அசோக்கின் கோபமுமே அப்படியே வடிந்து போயிருந்தது. "போ..போனா போகட்டும்.. விடு..!! அதுக்கு ஏன் இப்படி டென்ஷனாகுற..??" என்றான் கம்மலான குரலில். "விட்டுர்றதா..?? போனா போகட்டும்னு ப்ராஜக்ட்டை வேணா விட்ரலாம்டா.. உன்னை எப்படி விடுறது..?? இந்த ப்ராஜக்ட் இல்லனா இன்னொரு ப்ராஜக்ட்.. ஆனா நீ அப்படி கெடையாது..!! அவளையே நெனச்சுக்கிட்டு.. நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை அழிச்சுக்குறதை.. இனிமேலும் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது..!! எனக்கு இன்னைக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!!" "எ..என்ன தெரியனும்..??" "எத்தனை நாளைக்கு இன்னும் இப்படியே இருக்கப் போற..?? எந்த நேரமும் தம்மடிச்சுட்டு.. தண்ணியடிச்சுட்டு.. பைத்தியக்காரன் மாதிரி பொலம்பிக்கிட்டு..!! ம்ம்..??" "................." "கேக்குறேன்ல..?? பதில் சொல்லுடா..!! இப்படி இருக்குறது உனக்கே வெறுப்பா இல்ல.. மாறணும்னு தோணல..??" "இல்ல.. தோணல..!! எனக்கு இப்படி இருக்குறதுதான் புடிச்சிருக்கு..!!" "அப்படியே அறைஞ்சுடுவேன்..!! ஏன்டா இப்படி என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்ற..??" "உங்களுக்குத்தாண்டா புரியல.. என் மனசைப் பத்தி யாருக்கும் புரியல.. எதுவும் புரியல..!!" "ப்ச்.. உன் வேதனையை எங்களால புரிஞ்சுக்க முடியுதுடா..!! கஷ்டந்தான்.. அதுக்காக நீ இப்படியேதான் இருப்பேன்னா என்ன அர்த்தம்..?? உன்னை பார்த்தா எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்குடா..!!" கிஷோர் ஆதங்கத்துடன் கத்தினான். "................." அசோக் அமைதியாய் இருக்க, கிஷோர் இப்போது சற்றே சாந்தமானான். குரலை இதமாக மாற்றிக்கொண்டு சொன்னான். "இங்க பாரு.. நாங்கதான் உன்னை ஏத்திவிட்டோம்.. லவ் பண்ணி காட்டுன்னு சவால்லாம் விட்டோம்..!! இப்போ நாங்களேதான் சொல்றோம்.. போதுண்டா மச்சி.. இதை முடிச்சுக்கலாம்.. It's over now.. try to understand the fact..!!" "fact-ஆ.. என்ன fact..??" "அவ இனிமே திரும்ப வரப்போறது இல்லடா.. அவ்ளோதான்.. she's gone..!! அவளை கண்டுபிடிக்கிறதுக்கும் எந்த வழியும் இல்ல..!! அவ இனிமே உன் லைஃப்ல இல்ல.. That's the fact..!!" "So..??" "Accept the fact ashok..!! அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்து தலைமுழுகு..!!" அசோக் மீதிருந்த அன்பில், ஸ்ரீனிவாச பிரசாத் செய்த அதே தவறையே கிஷோரும் செய்தான்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீது வந்த அதே அர்த்தமற்ற கோபமே, கிஷோர் மீதும் அசோக்கிற்கு வந்தது..!! அவனுடைய உடம்பில் உடனடியாய் ஒரு நடுக்கம் ஏறியிருக்க.. நண்பனின் முகத்தை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான்..!! "லைஃப்ல இன்னும் எவ்ளோவோ இருக்கு மச்சி.. Life is larger than love..!!" சொல்லிக்கொண்டே ஆறுதலாக பற்றிய கிஷோரின் கையை, அசோக் வெடுக்கென உதறினான். அவனுடைய செய்கை கிஷோருக்கு மீண்டும் கோவத்தை கிளறிவிட்டது. "ஏய்..!!" என்றான் எரிச்சலாக. "போடா..!! புத்தி சொல்ல வந்துட்டான்.. பெரிய புடுங்கி மாதிரி..!! மறக்கனுமாம்..!!! ம..மறக்கலாம் முடியாது.. என்னை மாத்திக்கவும் முடியாது.. நான் இப்படியேதான் இருப்பேன்.. போதுமா..??" அசோக் உறுதியான குரலில் சொல்ல, கிஷோரின் ஆத்திரம் இப்போது உச்சபட்சத்தை எட்டியது.
"ஓஹோ.. இப்படியேதான் இருப்பியோ..?? உன்னை இருக்க விட்டாத்தான..??" சூடாக சொன்ன கிஷோரின் பார்வையில்.. சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த மீராவின் கவிதைக்காகிதம் கண்ணில் பட்டது.. உடனே.. "மொதல்ல இதெல்லாம் ஒழிச்சு கட்டனும்..!!" என்று கருவியவாறு அந்த காகிதத்தை நோக்கி சென்றான்..!! அவனுடைய எண்ணம் அசோக்கிற்கு உடனே புரிந்து போனது.. கிஷோரை தடுப்பதற்காக அவனும் அவசரமாக அவனை நோக்கி ஓடினான்..!! அதற்குள்ளாகவே கிஷோர் அந்த காகிதத்தை சரக்கென கிழித்து எடுக்க.. அசோக் பாய்ந்து சென்று அதை அவனிடமிருந்து பறித்தான்.. பறித்த வேகத்தில் புறங்கையை வீசி, கிஷோரின் கன்னத்தில் 'ரப்'பென ஒரு அறை விட்டான்..!! கிஷோருக்கு சுள்ளென்று கோவம் கிளம்பியது.. நிலமையைப்பார்த்து கலவரமாகி வேணுவும் சாலமனும் ஓடிவந்து அவனை தடுப்பதற்குள்ளாகவே.. அவனும் அசோக்கின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்து விட்டான்..!! அடிபட்ட வேகமும், ஆல்கஹாலின் போதையும் சேர்ந்து அசோக்கை தடுமாறச்செய்ய.. அவன் அப்படியே சுவற்றில் மோதி.. தள்ளாடிச்சென்று மேஜையில் விழுந்து.. அதிலிருந்த பொருட்களை எல்லாம் கீழே சிதற செய்து.. அவனும் தரையில் போய் பொத்தென்று விழுந்தான்..!! விழுந்த வேகத்தில் எழுந்து வந்து திரும்ப கிஷோரை தாக்கப் போகிறான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க.. அவனோ தரையில் கிடந்தவாறே கையிலிருந்த காகிதத்தை பார்த்தான்.. 'சேதம் அதிகமில்லை' என்று சந்தோஷப்பட்டான்..!! கசங்கிப் போயிருந்தது அந்த காகிதம்.. அதை தரையில் விரித்து வைத்து.. கைகளால் தடவி அந்த கசங்கலை நீக்க முயன்றான்..!! "ஒன்னுல்ல.. ஒன்னுல்ல..!!" என்று பித்துப் பிடித்தவன் மாதிரி முனுமுனுத்தவாறே அந்த காகிதத்தின் கசங்கலை நீக்கினான். நண்பர்கள் மூவருமே அவனுடைய செய்கையை மிரட்சியாக பார்த்தனர். "எ..என்னடா இவன்..??" கிஷோர் நொந்துபோனவனாய் சொன்னான். இப்போது வேணு கிஷோரின் புஜத்தை பற்றி, "அவனை விடு மச்சி..!! நீ வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!" என்று அவனை இழுத்து சென்றான். இருவரும் அலுவலகத்தை ஒட்டியிருந்த அந்த பால்கனியை நோக்கி நகர்ந்தார்கள். அசோக்கையே மேலும் ஒருசில வினாடிகள் பரிதாபமாய் பார்த்த சாலமன், பிறகு அவர்களை பின்தொடர்ந்து ஓடினான்.பால்கனியை அடைந்தவர்கள், நிலைமையின் டென்ஷன் குறைக்க சிகரெட் புகைத்தனர். வேணுவே ஆளுக்கொரு சிகரெட் எடுத்துக்கொடுத்து, அவனும் ஒன்று பற்ற வைத்துக்கொண்டான். புகையை ஊதிக்கொண்டே கிஷோரிடம் சொன்னான். "என்ன மச்சி நீ.. அவன்தான் அப்படி இருக்கான்னா.. நீயும்..!!" "ப்ச்.. வேற என்னடா பண்ண சொல்ற..?? அவ போய் ரெண்டு வாரம் ஆச்சு.. இவன் கொஞ்சம் கூட மாறுற மாதிரி தெரியல..!! இப்படியே விட்டா ஆளே ஒன்னும் இல்லாம போயிடுவாண்டா..!!" "புரியுது மச்சி..!! ஆனா அவன் கூட இப்படி மல்லுக்கட்டுறதுல எந்த பிரயோஜனமும் இல்லடா.. அதை நீ மொதல்ல புரிஞ்சுக்கோ..!! அவன் எந்தமாதிரி ஸ்டேட்ல இருக்கான்னு தெரிஞ்சா.. இப்படிலாம் அவன்கூட சண்டை போடமாட்ட..!!" வேணு சொல்ல, கிஷோர் இப்போது குழப்பமாய் நெற்றி சுருக்கினான். "எ..என்ன சொல்ற நீ..?? எந்த மாதிரி ஸ்டேட்ல அவன் இருக்கான்..??" "நேத்து.. அந்த சுமங்கலி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ப்ராஜக்ட் விஷயமா.. ஷூட்டிங் லொகேஷன் பாத்துட்டு வர சொல்லிருந்தல..??" "ம்ம்.." "ஆபீஸ்ல சும்மாதான இருக்கான்னு.. இவனையும் கூட்டிட்டு போயிருந்தேன்..!!" "சரி..!!" "பதினஞ்சு மாடி பில்டிங் மச்சி.. மேல நின்னுக்கிட்டு லொகேஷன் பாத்துட்டு இருந்தோம்..!! திடீர்னு இவன்.. 'இங்க இருந்து இப்படியே குதிச்சிடலாம் போல இருக்குடா'ன்றான்..!! எனக்கு ஒன்னும் புரியல.. திரும்பி இவன் மூஞ்சை பாத்தா.. மூஞ்சில அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! எங்க இவன்பாட்டுக்கு டப்புன்னு குதிச்சிருவானோன்னு.. நான் அப்படியே மெர்சலாகி போயிட்டேன்..!!" "ஓ..!!" வேணு சொல்ல சொல்ல.. கிஷோரும் சாலமனும் திகைப்பாக அவனையே பார்த்தனர்..!! "அப்புறம்.. அப்படியே நைஸா.. பேச்சை வேற மாதிரி மாத்தி.. அவனை கீழ இழுத்துட்டு வந்தேன்..!!" "ம்ம்..!!" "அன்பா பேசித்தான்டா அவனுக்கு நெலமையை புரிய வைக்கணும்..!! அதைவிட்டுட்டு.. சும்மா சும்மா அவளை மறந்துடுன்னு சொன்னா.. அவன் என்னடா பண்ணுவான்..?? அவன் அந்த ஸ்டேஜ்லாம் தாண்டிட்டான்டா..!! ஆளாளுக்கு அவனை போட்டு டார்ச்சர் பண்ணி.. அவன்பாட்டுக்கு ஏடாகூடமா ஏதாவது பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கோ.. நெனச்சு பாரு..!!" "ம்ம்.. புரியுதுடா..!!" "வா.. கொஞ்சம் நல்லவிதமா பேசி.. அவனை கூல் பண்ணு.. வா..!!" வேணுதான் அசோக்கின் நிலையை ஓரளவு சரியாக கணித்திருந்தான்.. இப்போது அவன்மூலமாக சாலமனும், கிஷோரும் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டிருந்தார்கள்.. மூவரும் சிகரட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு, மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!! நுழைந்தவர்கள்.. ஒருகணம் திகைத்துப் போனார்கள்..!! அசோக்கை அங்கே காணவில்லை..!!!! "எங்கடா போயிருப்பான்..??" "தெரியலையே மச்சி..!!" "அவன் நம்பருக்கு கால் பண்ணு..!!" கிஷோர் சொல்ல.. வேணு ஒருவித பதற்றத்துடன் தனது செல்போனை எடுத்து.. அசோக்கின் எண்ணை தேட ஆரம்பித்தான்..!!அதே நேரத்தில்.. அசோக்கின் வீட்டில்.. அவனுடைய அறையில்.. வெட்டி நேரத்தை செலவழிக்க.. ஏதாவது ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன்.. DVD எடுத்துச்செல்கிற நோக்கத்துடன்.. அண்ணனின் அறைக்கு வந்திருந்தாள் சங்கீதா..!! அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த DVDகளை ஆராய்ந்து.. அதில் ஒன்றை தேர்வு செய்து வெளியே இழுக்க.. DVDயுடன் சேர்ந்து இன்னொன்றும் வெளியே வந்து விழுந்தது.. 'டிங்டடாங்டாங்..' என்ற சப்தத்துடன் தரையில் விழுந்து சிதறி ஓடியது..!! அது.. அசோக்கின் பாட்டி மீராவுக்கு அன்பளிப்பாக தந்த பரம்பரை மோதிரம்.. மீரா அசோக்கை விட்டு பிரிகையில், அவனிடம் திருப்பியளித்த மோதிரம்..!! அதைப் பார்த்த சங்கீதா ஒருகணம் குழம்பிப் போனாள்.. குனிந்து கையில் எடுத்தாள்..!! அது பாட்டியின் பரம்பரை மோதிரம், விலைமதிப்பில்லாதது என்று அவளுக்கு தெரியும்..!! ஆனால்.. அது எப்படி இங்கே.. அண்ணனின் அறையில்..?? "பாட்டிஈஈ..!!" என்று கத்தியவாறே படிக்கட்டு இறங்க ஆரம்பித்தாள் சங்கீதா..!! பாட்டியிடம் சென்று அந்த மோதிரத்தை அவள் நீட்ட.. அவளுக்கும் அந்த மோதிரத்தை பார்த்து அதிர்ச்சி..!! "நான் இதை.. நம்ம மீரா பொண்ணுட்ட குடுத்தேனே.. இது எப்படி உன்கிட்ட..??" "அ..அங்க அண்ணன் ரூம்ல கெடந்துச்சு பாட்டி..!!" பாரதியும் அவர்கள் இருவருடனும் வந்து சேர்ந்துகொண்டாள்.. விஷயம் தெரிந்ததும் அவளுக்கும் குழப்பம்..!! 'இது எப்படி இங்கே வந்திருக்கும்' என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள.. அந்த குழப்பம் அதிகரித்துக்கொண்டே சென்றது.. இரண்டு வாரங்களாக அசோக்கின் நடவடிக்கைகள் வேறு அவர்களுடைய சந்தேகத்தை கிளப்பியது..!! "கொஞ்சநாளாவே அவன் ஒன்னும் சரியில்ல மம்மி..!! முன்னாடிலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் மூஞ்சி அப்படியே ப்ரைட் ஆயிடும்.. இப்போலாம் அண்ணி பத்தி பேசினாலே அவன் அவாய்ட் பண்ணிடுறான்.. அவன் மட்டும் இல்ல.. இந்த கிஷோரும்..!!" சங்கீதா சொல்ல, இப்போது மற்ற இருவரையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. "அவனுக்கு ஃபோனை போடுடி..!!" என்றாள் பாரதி, மூளையில் பலப்பல எண்ண ஓட்டத்துடன். "ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கான் மம்மி..!!" முயன்று பார்த்து சொன்னாள் சங்கீதா. "ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கானா..??" பாரதியின் பதற்றம் இப்போது மேலும் அதிகரித்தது..!! நெஞ்சில் ஒருவித கிலியுணர்வு கிளம்ப.. நெற்றியை பற்றி பிசைந்துகொண்டவள்.. சற்றே தடுமாற்றமான குரலில் மகளிடம் சொன்னாள்..!! "ச..சரி.. கி..கிஷோருக்கு ஃபோனை போடு..!!" அதே நேரத்தில்.. அசோக்கின் அலுவலகத்தில்.. வீடியோ எடிட்டிங் அறையில்.. "விடு மச்சி.. ஃபோன் பண்றது வேஸ்ட்..!! அவன் ஃபோனை இங்கயே விட்டுட்டு போயிருக்கான்.. ஸ்விட்ச் ஆஃப் ஆகி வேற இருக்கு..!!" சாலமன் சொல்லிக்கொண்டே மேஜையில் இருந்த செல்ஃபோனை கையில் எடுத்தான். "இப்போ என்னடா பண்றது..?? திடீர்னு எங்க போய் தொலைஞ்சான்..??" வேணு கையை பிசைந்தான். அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனுடைய செல்ஃபோன் அலறியது..!! எடுத்து டிஸ்ப்ளே பார்த்தவன், நெற்றியை பிசைந்தான்..!! "யார்டா..??" "சங்கி..!!" அடுத்த அரைமணிநேரத்தில் அசோக்கின் நண்பர்கள் அவனுடைய வீட்டில் இருந்தார்கள்..!! அசோக்குடைய குடும்பத்தினர் அவர்களை சூழ்ந்துகொள்ள.. கடந்த இரண்டு வாரங்களாக அசோக்கிற்கு நேர்ந்ததை எல்லாம்.. ஒவ்வொன்றாக அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்..!! மீரா அசோக்கை விட்டு பிரிந்து சென்றது.. அவர்களுக்கு தெரியாமல் இவர்கள் அவளை தேடிப்பிடிக்க முயன்றது.. இப்போது அவளை கண்டுபிடிக்கிற வழியெல்லாம் அடைபட்டுப்போனது.. அவளை அடையமுடியாத ஏக்கத்தில் அசோக்கின் மனநிலை மிக மோசமாகிப்போனது.. சற்றுமுன் கிஷோருடன் ஏற்பட்ட சண்டை.. அதைத்தொடர்ந்து அவன் காணாமல் போனது.. எல்லாவற்றையும் வேறுவழியில்லாமல் சொல்லிமுடித்தார்கள்..!!அவர்கள் சொன்னதை எல்லாம்.. அசோக்கின் குடும்பத்தினர் அதிர்ச்சியும் திகைப்புமாய் கேட்டுக்கொண்டனர்..!! அசோக்கைப் பற்றி அவர்கள் சொன்னவை எல்லாம்.. பாரதியைத்தான் மிகவும் பாதிப்பதாக அமைந்தன.. பெற்ற மகனுக்கு நேர்ந்த பெருந்துயரத்தை.. குமுறுகிற நெஞ்சுடன் கேட்டுக்கொண்டாள் பாரதி..!! 'ஐயோ.. எம்புள்ளை..' என்று மனதுக்குள்ளேயே மருகி மருகி.. கலங்கி கண்ணீர் வடித்தாள்..!! "இவ்வளவு நடந்திருக்கு.. இத்தனை நாளா எதையுமே சொல்லாம மறைச்சுட்டிங்களேடா..?? ஒன்னுக்கு மூணு பேரு ஃப்ரண்டுன்னு இருந்தும்.. எம்புள்ளையை இப்படி தொலைச்சுட்டு வந்து நிக்குறீங்களே..??" வேதனையுடன் பாரதி வெடித்து சிதற.. பதில் சொல்ல வார்த்தையின்றி நண்பர்கள் மூவரும் தலையை குனிந்துகொண்டனர்..!! அசோக்கை தேடி இரண்டு காரில் கிளம்பினார்கள்.. நண்பர்கள் மூவரும் வேணுவின் காரில்.. பாரதி, மணிபாரதி, சங்கீதா மூவரும் மணிபாரதியின் காரில்..!! வெளியே கோடைமழை 'ச்ச்சோ'வென்று கொட்டிக்கொண்டிருந்தது.. மழை நீர் பாதையை மறைக்காமல் இருக்க.. காரின் வைப்பர்கள் 'தடக் தடக்'என அடித்து.. தமது பணியை செய்துகொண்டிருந்தன..!! அசோக்கின் குடும்பத்தினர்.. தங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று.. அவனை தேடினர்..!! அசோக்கின் நண்பர்கள்.. அவன் வழக்கமாக தண்ணியடிக்கிற பார்களுக்கெல்லாம்.. சென்று பார்த்தனர்..!! மணி இரவு பத்துமணியையும் தாண்டிப் போனது.. ஆனால் அசோக்கை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..!! "கொஞ்ச நேரம் முன்னாடிதான் ஸார் வந்துட்டு போனாரு.. கன்னாபின்னான்னு குடிச்சாரு.. சொன்னாகூட கேக்கல..!!" அண்ணாநகரில் இருக்கிற ஒரு பார் பேரர் சொன்ன செய்தியை.. சங்கீதாவுக்கு கால் செய்து சற்றே நாசுக்காக சொன்னான் கிஷோர்..!! அதை அவள் அப்படியே அம்மாவிடம் சொன்னாள்..!! பாரதியின் கண்களில் இருந்து வடிகிற கண்ணீரின் அளவு இப்போது இன்னும் அதிகமானது.. வேதனையில் துடித்த அவளது உதடுகள் மேலும் வெடவெடத்தன.. அவளுடைய பதைபதைப்பு எல்லை மீறி சென்று கொண்டிருந்தது..!! சங்கீதா திடீரென.. "ஒருவேளை.." என்று ஆரம்பித்து.. அசோக் சென்றிருக்கக் கூடிய இடத்தை கெஸ் செய்ய.. அனைவருக்கும் அதில் ஒரு நம்பிக்கை பிறக்க.. மணிபாரதி காரை யு-டர்ன் அடித்து திருப்பினார்..!! சங்கீதாவின் கணிப்பு நூறு சதவீதம் சரிதான்..!! அசோக் அந்த நேரத்தில்.. அவர்கள் வழக்கமாக சாப்பிடுகிற அந்த ஃபுட்கோர்ட்டில்தான் அமர்ந்திருந்தான்..!! வெளியே 'சடசட'வென மழை கொட்டுகிற சப்தம் இரைச்சலாக கேட்டது.. அசோக் அல்ரெடி மழையில் நனைந்திருப்பான் போலிருக்கிறது.. அவனுடைய சட்டையும் தலைமுடியும் ஈரமாக இருந்தன..!! பரந்து விரிந்த அந்த தளத்தில்.. அவனையும், டேபிள் சேர்களையும் தவிர வேறு ஆட்களை காணோம்..!! அவன் மட்டும் தனியே.. அவனும் மீராவும் எப்போதும் அமர்ந்து உண்கிற அந்த டேபிளில் அமர்ந்திருந்தான்..!! அளவுக்கதிகமான போதையில்.. அவனுடைய கருவிழிகள் இரண்டும் மேலே ஏறி செருகியிருந்தன.. அவனது தலை நிலையில்லாமல் தள்ளாடியது..!! வெகுநேரம் பொறுத்து பொறுத்து பார்த்த ஃபுட்கோர்ட் ஊழியர்கள் நான்கு பேர்.. இப்போது அவனுக்கு எதிரே வந்து நின்றனர்..!! கைகளை பின்னால் கட்டியிருந்தவர்கள்.. கடுமையான குரலில் அசோக்கிடம் சொன்னார்கள்..!! "ஹலோ.. சொன்னா உங்களுக்கு புரியாதா..?? சர்விஸ் டைம் முடிஞ்சு போச்சு.. எடத்தை காலி பண்ணுங்க..!!" "ஹ்ஹ.. எ..என் மீரா வராம.. நா..நான் எடத்தை காலி பண்ண மாட்டேன்..!! ஓகே..??" அசோக் குழறலாக சொன்னான். "மீராவா.. அது யாரு..??" ஒரு ஆள் அந்த மாதிரி கேட்க, இப்போது அசோக் சேரை விட்டு எழுந்தான். "மீ..மீரா தெரியாது உனக்கு..?? ம்ம்..?? உனக்கு தெரியுமா..?? உ..உனக்கும் தெரியாதா..??" கிண்டலாக கேட்டவாறே, சுற்றி நின்றவர்களின் கன்னத்தில் 'பட்.. பட்.. பட்..' என்று தட்டினான். சங்கீதாவின் பேச்சைக்கேட்டு ஃபுட்கோர்ட் வந்த அசோக்கின் பெற்றோர்.. அவர்களுடைய வாழ்நாளின் மிக மோசமான காட்சியை அன்று காண நேர்ந்தது..!! ஃபுட்கோர்ட்டுக்கு வெளியே.. கொட்டுகிற மழையில்.. அவர்களுடைய மகன் யாரோ நான்கு பேருடன்.. ஒரு ரவுடி ரேஞ்சுக்கு அடிதடி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்..!! போதையின் பிடியில் சிக்கியிருந்த அவனது உடலும் மூளையும் அவனுடன் ஒத்துழைக்காமல் போக.. மற்ற நான்குபேராலும் அவனை எளிதில் சுற்றிவளைத்து அடித்து வீழ்த்த முடிந்தது..!! "ஐயோ.. விடுங்கப்பா.. எம்புள்ளையை விட்ருங்க..!!" மணிபாரதி ஓடிச்சென்று அவர்களை தடுக்க, அவரை மதியாமல் தள்ளிவிட்டு, "குடிச்சுட்டு வந்து சலம்பல் பண்ணா.. சும்மா விட சொல்றியா..??" என்றவாறே அசோக்கை அடித்து உதைப்பதை தொடர்ந்தனர். பாரதியும் சங்கீதாவும் கூட அலறியடித்து ஓடிச்சென்று அவர்களை தடுக்க முயன்றார்கள்.. "வேணாம்பா.. விட்ருங்கப்பா.." கெஞ்சினாள் பாரதி. "அண்ணாஆஆ..!!" அலறினாள் சங்கீதா.அவர்களுடைய முயற்சி வெற்றிபெற சிறிது நேரம் பிடித்தது..!! இறுதியாக.. நான்கு பேரும் சேர்ந்து அசோக்கை தூக்கி வீச.. நடுரோட்டில் சென்று மல்லாந்து விழுந்தான் அசோக்.. அவனுடைய நெற்றி உடைந்து ரத்தம் கொட்டியது..!! அந்த ரத்தம்.. சடசடவென முகத்தில் அடித்து தெறிக்கிற மழைநீருடன் கலந்து.. கன்னம் வழியாக ஓடியது..!! "அசோக்க்க்..!!!" கதறியவாறே ஓடிவந்த பாரதி.. மகனை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டாள்..!! மூன்று பெரும் கைத்தாங்கலாக அழைத்து சென்று அசோக்கை காரில் ஏற்றினார்கள்.. கார் கிளம்பியது.. காரின் வைப்பர்கள் தங்களது 'தடக் தடக்' ஓசையை தொடர்ந்தன..!! மணிபாரதி காரை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தார்.. அவருக்கு அருகே அமர்ந்திருந்த சங்கீதா, அடிக்கடி திரும்பி பின்சீட்டை பார்த்துக்கொண்டாள்..!! பின்சீட்டில் பாரதியும்.. அவள் மார்பில் அசோக்கும்..!! பாரதி தன் ஈரமான புடவைத்தலைப்பால்.. தனது கண்களில் வழிந்த நீரை துடைக்காமல்.. மகனின் நெற்றியில் வழிந்த உதிரத்தை துடைத்தெடுத்தாள்..!! "ரொம்ப வலிக்குதாயா..??" கனிவாக கேட்டாள். "ஹ்ஹ.. இது என்ன மம்மி வலி..?? அவ என்னை விட்டுட்டு போயிட்டான்னு தெரிஞ்சப்போ வலிச்சதே ஒரு வலி.. அதுக்குலாம் முன்னாடி இது ஒன்னும் இல்ல மம்மி..!!" அசோக் சொல்ல பாரதிக்கு அழுகை வெடித்து கிளம்பியது. "ஐயோ.. எம்புள்ளை..!!!" என்று அவனை மார்போடு இறுக்கிக் கொண்டாள். "நீ சொன்னமாதிரிதான் எல்லாம் செஞ்சேன் மம்மி.. நல்லபுள்ளையா நடந்துக்கிட்டேன்..!! ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரியவச்சேன்.. கண்கலங்காம அவளை பாத்துப்பேன்னு கான்ஃபிடன்ஸ் குடுத்தேன்..!! அப்புறமும் ஏன் மம்மி என்னை விட்டுட்டு போயிட்டா..??" அசோக்கின் ஏக்கம் பாரதியின் இதயத்தை பிசைவதாக இருந்தது..!! மகனுக்கு காதலென்ற மகிழ்ச்சியை கொடுக்க முயன்று.. இப்போது அவனையே இழந்துவிடுவோமோ என்பது மாதிரியான பயம்.. அவளது இதயத்தை வந்து கவ்விக்கொண்டது..!! அந்த பயம்.. மகன் மீதிருந்த அளவுகடந்த அன்பு.. அவனுடைய பரிதாபநிலையை பார்க்க சகியாமை.. அடுத்தவர்கள் செய்த தவறையே அவளையும் செய்ய தூண்டின..!!
"வேணாய்யா.. அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்துடு..!! இந்தப்பாழாப்போன காதலே உனக்கு வேணாம்..!! எனக்கு எம்புள்ளை வேணும்.. எம்புள்ளை மட்டும் எனக்கு போதும்..!!" சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள். அவ்வளவுதான்..!! அசோக் அப்படியே நொறுங்கிப் போனான்.. அம்மாவின் வாயிலிருந்தே அந்தமாதிரி வார்த்தைகளை கேட்போமென்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திரவில்லை..!! விக்கித்துப் போனவனாய் பாரதியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்..!! "ஆமாண்ணா.. அம்மா சொல்றதுதான் கரெக்ட்..!! அண்ணியை..." என்று ஆரம்பித்த சங்கீதா சற்றே நிறுத்தி, "அ..அந்தப்பொண்ணை மறந்துடுண்ணா..!!" என்று முடித்தாள். தங்கையை ஏறிட்டு ஒருசிலவினாடிகள் வெறுமையாக பார்த்த அசோக்.. பிறகு அப்பாவிடம் திரும்பினான்..!! "நீங்க எதுவும் சொல்லலையா டாடி..??" என்று கேட்டான். "எ..என்ன சொல்ல..??" மணிபாரதி காரை ஓட்டிக்கொண்டே தளர்வான குரலில் கேட்டார். "ஏதாவது சொல்லுங்க டாடி..!! அவ ஒரு ஃப்ராடு.. அவளை மறந்துடு.. வேற யாரையாவது கட்டிக்கோ.. சந்தோ...ஷமா இருக்கலாம்.. ஆகாசத்தை கிழிக்கலாம்.. மலையை புடுங்கலாம்..!! ஏதாவது சொல்லுங்க டாடி..!!" "எங்களுக்கு.. அந்தப்பொண்ணைவிட நீ ரொம்ப முக்கியம்டா.. அதைத்தவிர வேற எதுவும் எனக்கு சொல்ல தோணல..!!" மணிபாரதி பின்னால் திரும்பிப்பார்த்து சொன்னார்..!! அப்பா சொன்னதைக்கேட்ட அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான்.. அப்புறம் திடீரென.. அழுகை கலந்திட்ட குரலில் வெடித்து சிதறினான்..!! "அப்போ அவ்ளோதான்ல..?? எல்லாமே போச்சுல.. எல்லாமே என்னாலதான் போச்சுல..?? இந்தக்குடும்பம் காதல் மேல வச்சிருந்த நம்பிக்கை.. எல்லாமே என்னால நாசமா போச்சுல..??" "ஐயோ.. அப்படி இல்லடா..!!" பாரதி மகனை அணைத்துக்கொண்டாள். "அப்படித்தான்..!! நான்தான் தோத்துட்டேன்ல..?? போச்சு.. எல்லாம் போச்சு..!!" அசோக் புலம்ப ஆரம்பித்தான்.. 'இல்லடா.. இல்லடா..' என்றவாறு, பொங்கி வருகிற அழுகையுடன் அவனை ஆறுதல் படுத்த முயன்றாள் பாரதி..!!வீடு வந்து சேர்ந்தது.. தாத்தாவும், பாட்டியும் பாவமாக பார்த்துக்கொண்டிருக்க.. அவனை அழைத்து சென்று அவனுடைய அறையில் படுக்க வைத்தனர்..!! அவன் தூங்கிப் போகும் வரையில், பாரதி அவனருகே அமர்ந்து, அவனுக்கு தலைகோதி விட்டுக்கொண்டிருந்தாள்..!! பிறகு கீழே வந்து.. அசோக்கின் எதிர்காலம் பற்றியும்.. அவனிடம் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைககளை பற்றியும்.. மற்றவர்களிடம் பேசினாள்..!! அசோக் கிடைத்துவிட்ட செய்தியை.. சங்கீதா கிஷோருக்கு முன்பே தெரிவித்துவிட்டிருந்தாள்..!! அனைவரும் தூங்க செல்ல நள்ளிரவு ஒருமணிக்கு மேல் ஆகிவிட்டது..!!அடுத்த நாள் காலை ஏழு மணி.. வீடு மட்டுமல்ல.. வெளியுலகமும் மிக அமைதியாக இருந்தது..!! எங்கேயோ 'கா.. கா.. கா..' என்று கரைகிற காக்கையின் சப்தம் மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது..!! பாரதி சமையலறையில் இருந்தாள்.. முந்தினநாள் இரவு நெடுநேரம் விழித்திருந்ததால், வீட்டில் அனைவரும் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தனர்..!! பாரதியுமே.. உறக்கம் இழந்த, அழுது அழுது சோர்ந்து போயிருந்த விழுகளுடன்.. வேலை செய்துகொண்டிருந்தாள்.. பாத்திரங்களை கழுவி அடுக்குகிற வேலை..!! அப்போதுதான்.. "பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!" உள்ளறையில் இருந்து தாத்தாவின் குரல் சற்றே ஈனஸ்வரத்தில் ஒலித்தது. "என்ன மாமா..??" பாரதியின் பதில் அவருடைய காதில் விழவில்லை போலிருக்கிறது. "பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!! செத்த இங்க வாயேன்..!!" என்று மீண்டும் அழைத்தார். "இருங்க மாமா.. இதோ வந்துட்டேன்..!!" பெருமூச்சொன்றை எறிந்த பாரதி.. செய்துகொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு.. சமையலறையில் இருந்து வெளியேறினாள்..!! நடந்து சென்று நாராயணசாமியின் அறையை நெருங்கியவள்.. கதவை உட்பக்கமாய் தள்ளி.. "என்ன மாமா..??" என்றாள். "காலாங்காத்தாலேயெ காலு ரெண்டும் கொடைச்சல் குடுக்குதுமா.. எந்திரிக்கவே முடியல.. அந்த தைலத்தை கொஞ்சம் எடுத்து தாரியா..??" "ம்ம்.. சரி மாமா..!!" சொல்லிவிட்டு பாரதி முன்னறைக்கு வந்தாள்..!! டைனிங் ரூமுக்குள்ளேயே.. ரெஃப்ரிஜரேட்டரை ஒட்டியிருக்கும் அந்த அலமாரியில்தான்.. மருந்துப்பொருட்களை அவர்கள் அடைத்து வைத்திருப்பது..!! அந்த அலமாரியை நோக்கித்தான் பாரதி இப்போது சென்றாள்..!! அலமாரி திறந்து.. தாத்தா கேட்ட அந்த தைல சீசாவை எடுத்துக்கொண்டாள்..!! அலமாரியை மூட சென்றபோதுதான்.. எதேச்சையாக அதை கவனித்தாள்..!! சில வருடங்களுக்கு முன்பெல்லாம் மணிபாரதி தனது எழுத்துல வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார்.. இரவெல்லாம் கண்விழித்து கதை எழுதியாகவேண்டிய கட்டாயம்..!! அது அவருடைய உடல்நிலையை பாதித்தது.. இன்சோம்னியா எனப்படுகிற தூக்கமின்மை வியாதியை கொடுத்தது..!! அடிக்கடி அந்த வியாதியால் அவர் அவதிப்படுகிறபோது.. உறக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைப்பதற்காக.. தூக்க மாத்திரைகளை அவர் உட்கொள்வது வழக்கம்..!! அந்த தூக்க மாத்திரைகள் அடைத்து வைத்திருக்கும் டப்பாவை.. இப்போது அலமாரியில் காணவில்லை..!!!! அதை கவனித்ததுமே பாரதிக்கு திக்கென்று இருந்தது..!! அவ்வளவு நேரம் களைப்பாக இருந்த அவளுடைய மூளை.. இப்போது சுறுசுறுப்பாக எதையோ யோசிக்க ஆரம்பிக்க.. சுருக்கென்று அவளுடைய புத்தியில் அந்த எண்ணம் தைத்தது..!! "ஒருவேளை.. ஒருவேளை.." நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு குலைநடுங்கிப் போனது..!! தைல சீசாவை அலமாரியிலேயே போட்டுவிட்டு.. சரக்கென திரும்பி ஓடினாள்.. படிக்கட்டை அடைந்தவள் விழுந்தடித்துக்கொண்டு தடதடவென மேலேறினாள்..!! அவளுடைய முகத்தில் அப்படி ஒரு பதற்றம்.. உடலில் அப்படி ஒரு நடுக்கம்.. மகனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதே என்று அப்படி ஒரு பயம்..!! "இந்த மீரா சரியான லூஸு மம்மி..!!" "ஹாஹா.. ஏன்டா அப்படி சொல்ற..??" "பின்ன என்ன மம்மி.. அடிக்கடி ஏதாவது லூஸுத்தனமா உளர்றா..!! இன்னைக்கு அவ கண்டுபிடிப்பை பாரேன்..!!" "என்ன..??" "சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷனாம்..!! மத்ததெல்லாம் பெயின்ஃபுல்லாம்..!!" "ஹாஹா.. கரெக்டாத்தான சொல்லிருக்குறா என் மருமக..!!" எப்போதோ மகனிடம் பேசி சிரித்தது இப்போது பாரதியின் நினைவில் வர.. அவளுடைய இதயம் கிடந்தது குமுறியது.. கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது..!! அழுது வடிகிற கண்களை துடைக்ககூட தோன்றாமல்.. பரபரப்பாய் படிக்கட்டு ஏறினாள்.. அசோக்கின் அறைக்கு விரைந்தாள்..!! 'கடவுளே.. எம்புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது..' என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்துக்கொண்டாள்..!! ம்ம்ம்... அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!!

No comments:

Post a Comment