Saturday 4 April 2015

சுகன்யா... 97

"சுகன்யா, மணி என்னடி ஆகுது?"

அனுராதாவின் குழந்தைத்தனம் மாறாத குரல் அறைக்குள்ளிருந்து கிசுகிசுப்பாக வந்தது. சுகன்யா சட்டெனத் திரும்பிப்பார்த்தாள். அனு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். பால்கனி கதவை மூடிக்கொண்டு குதிநடையாக அறைக்குள் வந்தாள் சுகன்யா.

இந்த நாலு நாள்ல, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வாடீ போடீன்னு கூப்பிடற அளவுக்கு நெருக்கமாயிட்டோம். நிறைய விஷயங்கள்லே எங்க ரெண்டுபேருக்கும் கருத்துகள் ஒத்துப்போகின்றன. அனுராதாவும் சிரிச்சி சிரிச்சி பேசறா. பேசும்போதும், சிரிக்கும் போதும், இவளுக்கு முகம் மத்தாப்பூவா மலர்ந்து போகுது. எந்த சந்தர்ப்பத்துக்கும் ஏத்த மாதிரி, இவ உதட்டுல ஒரு ரெடிமேட் சிரிப்பை வெச்சிருக்கா. இவ சிரிப்பைப் பாத்தா என் மனசு நெறைஞ்சு போவுது.

நிஜமாவே அனுராதா மனசுலேருந்து சிரிப்பு இயற்கையா பொங்கி பொங்கி வருது. இவ நிச்சயமா போலியாக பொய்யாக சிரிக்கலை. சிரிக்கறது நல்லதுதானே. இதுவரைக்கும் எவனையும் இவ காதலிச்சு இருக்கமாட்டான்னு தோணுது! அதான் இவளுக்கு மனசுலேருந்து சிரிப்பு வருது! இப்போது சுகன்யாவுக்கு சிரிப்பு வந்தது.



சீனுவின் முகம் சுகன்யாவின் மனதுக்குள் வந்தது. அவனும் இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் சிரிப்பான். அவன் சிரிக்கற சிரிப்பை பாத்துத்தான் நான் அவன்கிட்ட மயங்கிட்டேன்னு மீனா ஒரு தரம் சொன்னா. சீனுவோட மூஞ்சியில சீரியஸ்னெஸ்ஸைப் பாக்கவே முடியாது. மீனா ரொம்பவே குடுத்து வெச்சவ.

சுகன்யா அறைக்குள்ளேயே தன் உடலை ஸ்ட்ரெச் செய்து கொண்டிருந்தாள். நின்ற இடத்திலிருந்தே அனுவின் பக்கம் திரும்பினாள். மெல்லிய போர்வையை காலிலிருந்து தலை வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கட்டிலில் உருண்டு கொண்டிருந்தாள் அவள். இவளால எப்படி கவலையே இல்லாம இப்படி பொழுது விடிய விடிய தூங்கிக்கிட்டே இருக்க முடியுது? சுகன்யாவின் உதட்டில் மீண்டும் புன்னகை எழுந்தது.

என் மனசு ஏன் இன்னைக்கு இப்படி பேயா அலையுது? ஏ மனமே சும்மாயிரு! தன் கூந்தலை முழுவதுமாக அவிழ்த்து முதுகில் படரவிட்டுக்கொண்டவள், தன் தலையில் மெல்ல ஒரு குட்டு குட்டிக்கொண்டாள். ஒரு மாதத்துக்கு பிறகு மனம் விட்டு சிரித்தாள்.

கண்களை மூடிக்கொண்டு, குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறைய இழுத்து நிறுத்தி மெல்ல காற்றை ஒருமுறை வெளியேற்றினாள். சுகன்யாவின் மார்புகள் மேலும் கீழும் சீரான லயத்துடன் ஏறி இறங்கின. பிரஷ்ஷில் பேஸ்ட்டைத் தடவிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள். பல்துலக்கி முகம் கழுவியதும் தன் முகத்தில் குளிர்ந்த நீரை வாரி வாரி அடித்துக்கொண்டாள். பாத்ரூமை விட்டு வெளியில் வந்தாள். அனுராதா இன்னமும் கட்டிலை விட்டு எழுந்திருக்கவில்லை.

"அனு... தூங்கினது போதும்... எழுந்திருடி..." மனதில் எழும் உற்சாகத்துடன் அவள் புட்டத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் சுகன்யா.

"அடியேய்ய்ய்ய்ய் வலிக்குதுடீய்ய்ய்ய்ய்." உரக்க சிணுங்கிய அனு எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தாள். நைட்டியின் முதல் இரண்டு பொத்தான்கள் அவிழ்ந்து கிடந்தன. தன் கைகளை உயர்த்தி முதுகை பின்னுக்குத்தள்ளியதும், முன்னெழுந்த அவளுடைய செழிப்பான மார்புகளின் அழகை காணமுடியாமல் சுகன்யா தன் முகத்தை சட்டெனத் திருப்பிக்கொண்டாள்.

"என்னடி சுகா.. நீயும் பொம்பளை... நானும் பொம்பளை... என் உடம்பைப்பாத்து ஏண்டி இப்படி வெக்கப்படறே? அவள் உரக்கச்சிரித்துக்கொண்டே கட்டிலை விட்டு இறங்கி தன் மார்போடு சுகன்யாவை இறுக்கிக்கட்டிக்கொண்டாள். சுகன்யாவின் கன்னத்தில் அழுத்தமாக தன் உதடுகளைப்பதித்தாள்.

"என்னை விடுடீ... என்னடிப் பண்றே நீ? பல்லு கூட துலக்கலே...? மொகம் கழுவிட்டு வந்திருக்கேன்... மூஞ்சை எச்சிலாக்கறே? மொதல்லே உன் நைட்டியோட பட்டனை ஒழுங்காப் போட்டுத்தொலைடி." சுகன்யா அவளை விருட்டென உதறினாள்.

"சுகா... நீ ரொம்ப அழகா இருக்கேடீ... அனுராதா தன் கண்களை அகலமாக விரித்து புருவங்களை உயர்த்தினாள்.

"ஹேய்... போதும்டீ... என் அழகு என்னான்னு எனக்கு நல்லாத்தெரியும்... நான் வாக்கிங் போறேன்... நீ வர்றயா... இல்லையா? அதைச் சொல்லுடி நீ?"

சுகன்யா நைட்டியை உதறிவிட்டு, வெளிர் காக்கி நிற ஜூன்ஸை மாட்டிக்கொண்டு இடுப்பில் பட்டனை அழுத்தினாள். சிவப்பு நிற டாப்சுக்குள் தன் தலையை நுழைத்தாள். வெளேரேன்றிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவின் லேசை தளர்த்த ஆரம்பித்தாள்.

"சுகா... கிவ் மீ டூ மினிட்ஸ்... நானும் உங்கூட வர்றேன்டீ." பாத்ரூமுமை நோக்கி துள்ளி ஓடினாள் அனுராதா.


நுழைவாயிலில், பார்க்கில் நடப்பவர்களின் வசதிக்கென அமைக்கப்பட்டிருந்த நடைபாதையின் சுற்றளவு ஒன்றரை கிலோமீட்டர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தோழிகள் இருவரும் சீரான வேகத்தில் பார்க்கை மவுனமாக இருமுறை சுற்றிவந்தார்கள்.

"சுகா... இன்னைக்குத்தானே முதல்நாள்... இரண்டு ரவுண்டு போதும்டீ..." அனு ஒரு மரத்தின் நிழலில் தன் காலை நீட்டியவாறு உட்கார்ந்துகொண்டாள்.

"நாளையிலேருந்து, நான் தினமும் பார்க்குக்கு வரப்போறேன்." சுகன்யா சீராக வெட்டிவிடப்பட்டிருந்த புல்தரையில் சவாசனத்தில் கிடந்தாள்.

"காலையிலே சரியா ஆறுமணிக்கு வந்தாக்கூட போதும். நிதானமா நடந்துட்டு, ரூமுக்கு போய் குளிச்சுட்டு, ஃபிரேக்பாஸ்ட் முடிச்சுட்டு, கிளாஸுக்கு டயமுக்கு போயிடலாம்." அனு சொன்னதை சுகன்யாவும் ஆமோதித்தாள். உதட்டின் மீது பூத்திருந்த வியர்வை முத்துக்களை புறங்கையால் மெல்லத் துடைத்துக்கொண்டாள்.

"திஸ் ஈஸ் ரியலி... ப்யூட்டிஃபுல் ப்ளேஸ். அயாம் வெரி வெரி ஹேப்பி டுடே.." சுகன்யா எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய முன் நெற்றியிலும் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன.

"ரூம்ம்ம்ம்ம்... ரூம்ம்ம்ம்ம்ம்ம்..." அனுவின் செல் வண்டாக ரீங்காரமிட்டது.

* * * * * *

"அனு... குட்மார்னிங் அயாம் செல்வா ஹியர்.. ஹவ் ஆர் யூ?"

"ஹாய்... செல்வா... குட்மார்னிங்... குட்மார்னிங்... வாட் எ சர்ப்ரைஸ்? எங்கேருந்து பேசறே நீ?" அனுவின் முகம் மத்தாப்பூவாகி, கண்களும், உதடுகளும் ஒருங்கே தாமரையாக மலர்ந்தன. பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யாவை ஒருமுறை பார்த்த அனு, மீண்டும் தனக்கு வந்த 'கால்'லில் தன் கவனத்தை செலுத்தினாள்.

இது எந்த செல்வா? அனுவுக்கு என் செல்வாவைத் தெரியுமா? 'செல்வா குட்மார்னிங்' என அனு கத்தியதும், சுகன்யாவின் முகம் சட்டென மாறியது. முகத்தில் இருந்த களை சட்டென இறங்கியது. அவள் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

"சென்னையிலிருந்துதான் பேசறியா? மை டியர் தமிழ்செல்வன், நவ்... அயாம் இன் தில்லி... கேப்பிட்டல் ஆஃப் இண்டியா. கியா ஹால் ஹை ஆப்கா? டிக் டாக்? அயாம் அட்டெண்டிங் மேன்டேட்டரி ட்ரெய்னிங். சப் டீக் தோ ஹைன்னா? உனக்கெப்படி என் ஞாபகம் திடீர்ன்னு வந்திச்சி?" அனு ஹிந்தி, தமிழ், இங்லீஷ் என மாறி மாறி வார்த்தையாடினாள்.

"அனு... நீ தில்லியிலே இருக்கறது தெரிஞ்சுதான் உங்கிட்ட பேசறேன். எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் வேணும்."

"சொல்லுடி செல்லம்... உனக்கு இல்லாத ஹெல்ப்பா? சொல்லு என்ன வேணும்?" அனு தன் கண்களை சுழற்றிக்கொண்டு ஜாலியாக பேசிக்கொண்டிருந்தாள். சுகன்யா அவள் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

"அனு... இங்கே சென்னையிலேருந்து மிஸ் சுகன்யான்னு ஒரு தமிழ் லேடி... ஷீ ஈஸ் டேரக்ட் அஸிஸ்டெண்ட்... அவங்களும் தில்லிக்கு ட்ரெயினிங்க்காக வந்திருக்காங்க..."

"ஆமாம்... இந்த பேச்சுலே... மொத்தமே இரண்டு பேர்தான் தமிழ்நாட்டிலேருந்து ட்ரெய்னிங் அட்டண்ட் பண்றோம். சுகன்யான்னு சென்னையிலேருந்து ஒருத்தி வந்திருக்கா. அவளைப்பத்தி நீ எதுக்காக விசாரிக்கறே? நீயும் சென்னையிலே அவ ஆஃபிஸ்லேதானே வொர்க் பண்றே? அவ செல் நம்பர் உங்கிட்ட இல்லையா?" அனு சுகன்யாவை பார்த்து தன் கண்ணை சிமிட்டினாள்.

அனுவிடம் பேசிக்கொண்டிருப்பது அவளுடைய செல்வாதான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல், இப்போது சுகன்யாவுக்கு விளங்கிவிட்டது. அனுராதா பாண்டிச்சேரியிலிருந்து பயிற்சிக்காக வந்திருந்தாள். செல்வா இரண்டு மூன்று வாரங்கள் பாண்டிச்சேரிக்கு மாற்றலில் போனதும் சட்டென அவள் நினைவுக்கு வந்தது.

'அவ செல் நம்பர் உங்கிட்ட இல்லையா?' என அனு செல்வாவைக் கேட்டதும், அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சுகன்யா விருட்டென எழுந்தாள். எழுந்தவளின் கையை இறுக்கிப்பற்றி, அவளைத் தன்னருகில் அமர்த்திக்கொண்டாள் அனு. தன் உதட்டின் மேல் ஒரு விரலை வைத்து அவளை அமைதியாக இருக்கும்படி கண்களால் சொன்னாள். தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

"யெஸ்... யெஸ்... அவங்க போன் நம்பர் எங்கிட்ட இருக்கு... ஆனா அனு... ப்ளீஸ்... லிசன் டு மீ.. நான் சுகன்யாவைப் பத்தி உங்கிட்டே விசாரிச்சேன்னு அவங்களுக்கு தயவு செய்து தெரியவேண்டாம்."

"செல்வா... என்ன மேன் இது? நீ பேசறதுல கொஞ்சமாவது ஞாயம் இருக்கா? நீ ஒரு அழகான பொண்ணைப்பத்தி எங்கிட்ட விசாரிக்கறே? நீ விசாரிக்கற விஷயம் அவளுக்கு தெரியக்கூடாதுங்கறே? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சம்திங்க்... சம்திங்ங்கா? அனு கொக்கரித்தாள்.

"அனு... ப்ளீஸ்... அயாம் கொய்ட் சீரியஸ்... நீ உன் வழக்கம்போல என்னை நக்கலடிக்காதே? அவங்க எப்படி இருக்காங்கன்னு மட்டும் சொல்லேன்?

"எப்படி இருக்காங்கன்னா?"

"ம்ம்ம்... சாதாரணமா கலகலப்பா சிரிச்சி பேசிகிட்டு இருக்காங்களா? இல்லே மூட் அவுட் ஆன மாதிரி இருக்காங்களா?

"செல்வா... இதெல்லாம் நான் எப்படி சொல்லமுடியும்? ஒரு பொண்ணோட மூடு ஒரு நாளைக்கு பத்து தரம் மாறும்? நீ ஏன் அவகிட்ட பேச தயங்கறே?"

"ப்ளீஸ்... நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க அனு.." செல்வா கெஞ்சினான்.

"என்ன புரிஞ்சுக்கணும்? எதையோ நீ என்கிட்ட மறைக்கறே? கிளியரா சொல்லு... உனக்கு என்ன வேணும்? சுகன்யாவோட பேசணுமா உனக்கு? உன் நம்பரை கொடுத்து அவளை உங்கிட்ட பேச சொல்லவா?"

"நோ... நோ... அந்தமாதிரி எதுவும் பண்ணிடாதேடி தாயே?

"ஹேய்... எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை.. அதுக்குள்ளே என்னை அம்மாவாக்கிட்டியே?" அவள் அவுட் சிரிப்பு சிரித்தாள்.

"அனு... பீ சீரியஸ்... நான் பேச விரும்பினாலும், சுகன்யா என்கிட்ட பேசமாட்டாங்க. ஜஸ்ட் அவங்க எப்படி இருக்காங்கன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சா போதும். ஈஸ் ஷி டூயிங் பைன்..? ஸே... அவங்களோட ஹெல்த் எப்படியிருக்கு? நார்த்திண்டியன் சாப்பாடெல்லாம் அவங்களுக்கு ஒத்துக்குதா? வெயில்லே ஒண்ணும் கஷ்டப்படலியே?"

செல்வாவின் குரல் தழுதழுப்பாக வந்தது. அனு சுகன்யாவின் முகத்தைப்பார்த்தாள். சுகன்யா தான் பேசமாட்டேன் என தன் தலையை இடவலமாக ஆட்டினாள். தன் கீழுதட்டைக் கடித்துக்கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கிக்கொண்டிருப்பதை போல் இருந்தது அனுவுக்கு.

"உனக்கு சுகன்யாகிட்ட பேசவேண்டாம்... ஆனா அவ எப்படி இருக்கான்னு தெரிஞ்சா மட்டும் போதும்...? ஐ ஃபீல் உன் மேட்டர்ல... சம்திங்க் ஈஸ் ராங் செல்வா.. கம் ஸ்ட்ரெய்ட். நீ அவளை லவ்வறியா? ஒன் சைட் காதலா?" அனு பட்டாசாக வெடிச்சிரிப்பு சிரித்தாள்.

"அனு... ப்ளீஸ்... அவ நல்லா இருக்காளா? அதை மட்டும் சொல்லேன்.. ப்ளீஸ்" செல்வா மீண்டும் கெஞ்சினான்.

"சுகன்யாவுக்கு என்னக்கொறைச்சல்? அவ ரொம்ப நல்லா இருக்கா... ஆனா அவகிட்ட ஒரு சின்னப்பிரச்சனை..."

"என்ன அனு?"

"எப்பவும் படிச்சுக்கிட்டே இருக்கா.. ரொம்ப ரொம்ப ஸ்ட்ரெய்ட் அண்ட் சீரியஸ் வுமன்... என்னை மாதிரி அனாவசியமா யாருகிட்டவும் வழியறதெல்லாம் இல்லே."

"யெஸ்.. ஐ நோ..."

"சரி.. இப்ப நீ ஒழுங்கா விஷயத்துக்கு வா... வாட் ஈஸ் கோயிங் ஆன் பிட்வீன் யூ அண்ட் ஹர்? அயாம் யுர் குட் ஃப்ரெண்ட்... என்னைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும்... என் கிட்ட பொய் மட்டும் சொல்லாதே? நேரா சுகன்யாகிட்ட போய் என்ன ஏதுன்னு கேட்டுடுவேன்?" அனு சீரியஸாக பேசினாள்.

"அனு... வீ வேர் டீப்லி லவ்விங் ஈச் அதர்... எங்க நிச்சயதார்த்தமும் முடிஞ்சிட்டுது.. கல்யாணத்துக்கு நாள் குறிக்க வேண்டியதுதான் பாக்கியா இருந்திச்சி." செல்வா முனகினான்.

"இப்ப என்ன ஆச்சு...?"

"இப்ப நாங்க பிரிஞ்சுட்டோம்..?"

"யாரு காரணம்? நீயா? இல்லே அவளா?"

அனு சுகன்யாவின் முகத்தை நோக்கினாள். சுகன்யாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அனுவின் முகம் சட்டென கல்லாகிப்போனது. சுகன்யாவை அவள் தன் தோளோடு அணைத்துக்கொண்டாள்.

"செல்வா... யூ ஆர் மை ஃப்ரெண்ட்... செர்டன்லி ஐ கேன் ஹெல்ப் யூ. அண்ட் சார்ட் அவுட் யுவர் ஃப்ராப்ளம்.... உண்மையைச் சொல்லுப்பா...?" அனு நிதானமாக கேட்டாள்.

"ஐ டோன்ட் நோ அனு... ஆனா நான்தான் காரணம்ன்னு என் வீட்டுல கூட யாருமே எங்கிட்ட பேசறது இல்லே. எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல இருக்கு. நடந்தது நடந்து போச்சு..."

"அப்டீன்னா...?"

"பிரிஞ்சது பிரிஞ்சதுதான்... ஒடைஞ்சு போன மண் பானையை எப்படி திரும்பவும் ஒட்ட வெக்கறது?"

"ஒடைஞ்சதை ஒட்டமுடியாதுன்னா... இப்ப எதுக்கு அவளைப்பத்தி எங்கிட்டே கேக்கிறே நீ?" அனுவின் குரலில் சூடு ஏறியிருந்தது.

"அனு... என் மேல சுகன்யா அவ உயிரையே வெச்சிருந்தா; ஒரு மாசமா நான் வீராப்பா இருந்துட்டேன்; இப்ப என் மனசு கேக்கலே; அதான் உன்னைத் தொந்தரவு பண்ணிட்டேன். அயாம் சாரி... " மறுமுனையில் செல்வாவின் குரல் கேவியது.

"செல்வா... செல்வா..." அனு கூவினாள். கால் கட்டாகிவிட்டிருந்தது. 

"சுகன்யா... என்னைத் தப்பா நினைக்கதே? நேத்து நைட் நீ சொன்னதெல்லாம் உண்மையா? செல்வாவா இப்படியெல்லாம் நடந்துகிட்டான்? இதையெல்லாம் என்னால நம்பவே முடியலேடீ.." மறுநாள் காலை, பார்க்கில் அனுவும், சுகன்யாவும் பரபரப்பில்லாமல் நடந்துகொண்டிருந்தார்கள். சுகன்யா ஒரு விரக்தியான புன்னகையை அனுவின் புறம் வீசினாள்.

"ம்ம்ம்... தில்லிக்கு கிளம்பற அன்னைக்கு எப்படியும் அவன் ஸ்டேஷனுக்கு வந்துடுவாங்கற ஒரு நப்பாசை என் மனசுக்குள்ள இருந்திச்சி. ஆனா அவன் வரவேயில்லை. செல்வாவுக்கு இனிமே என் வாழ்க்கையில் இடமில்லேன்னு அன்னைக்குத்தான் நான் என் மனசை திடப்படுத்திக்கிட்டேன். "

"ப்ப்ச்ச்ச்... அயாம் சாரீடீ சுகா.."

"இட்ஸ் ஆல் ரைட். இப்ப நான் என் காதல் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் மொத்தமா எல்லாத்தையும் மறந்துடுவேங்கற நம்பிக்கை எனக்கு வந்திடிச்சி." சுகன்யா புல்தரையில் உட்கார்ந்துகொண்டு தன் கால்களை மெதுவாக அசைத்துக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்... சுகா... நீ தப்பா நினைக்கலேன்னா நான் வேணா செல்வாகிட்ட ஒரு தரம் பேசட்டுமா? நேத்து அவன் எங்கிட்ட செல்லுல பேசும்போது உடைஞ்சு போய் அழுததை நீதான் கேட்டியே?" சுகன்யாவின் இடதுகரத்தை அனு ஆதுரமாக பற்றிக்கொண்டாள்.

"இல்லேடீ... செல்வா சொன்னதும் சரிதான். ஒடைஞ்சு போன மண் பானையை எப்படி ஒட்ட வெக்கமுடியும்? தூளானாது தூளானதுதான். எந்த தண்ணியை ஊத்தி பிசைஞ்சாலும் அது திரும்பவும் ஒட்டாது."

"சே..சே... மனசை தளரவிடாதேடீ சுகா... உடைஞ்ச போன எதையும் ஒட்டறதுக்கு மார்க்கெட்ல க்யூக் ஃபிக்ஸ் வந்திடிச்சி..." அனு சிரித்து சுகன்யாவின் மூடை மாற்ற முயற்சித்தாள்.

"ஒடைஞ்சு போன மனசை ஒட்டறதுக்கு மட்டும் இன்னும் எந்த கோந்தும் கடையில வரலேடீ..." சுகன்யாவும் வாய்விட்டு சிரித்தாள்.

"சுகா... உங்களுக்குள்ள நடந்த முடிஞ்ச கசப்பான நிகழ்ச்சிகளெல்லாம் உன்னோட பேரண்ட்சுக்கு தெரியுமாடீ?"

"செல்வா, நான் போட்ட மோதிரத்தை கழட்டி எறிஞ்சு, எங்களுக்கு நடுவுல இருந்த உறவை மொத்தமா முறிச்சிட்டாங்கறதை தில்லிக்கு நான் கிளம்பறதுக்கு மொதல் நாள் என் வீட்டுலே சொல்லிட்டேன்.." சுகன்யா மெலிதாக முறுவலித்தாள்.

"சுகா... நான் கதை கேக்கறேன்னு நினைக்காதே. உன் மனசுல இருக்கற வலி எனக்கு நல்லாப்புரியுது. எல்லாத்துக்கும் நான் சிரிக்கறேனே; அது எதனால தெரியுமா?"அனுவின் உதடுகளில் ஒரு கள்ளப்புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

"சொல்லுடீ... நானும் உங்கிட்ட சிரிக்க கத்துக்கறேன்... சொல்லுடி அனு.." சுகன்யா எழுந்தாள். எழுந்தவள் குனிந்து அனுவின் கையைப்பிடித்து எழுப்பினாள். விடுதி அறையை நோக்கி அவர்கள் பரபரப்பில்லாமல் அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

"சுகன்யா... நானும் என் வாழ்க்கையில ஒரு காதல் தோல்வியை சந்திச்சிருக்கேன். அந்த தோல்விலேயிருந்துதான், சிரிக்கறதுக்கு நான் கத்துக்கிட்டேன். வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளதா வாழறதுங்கறதையும் என் காதல் தோல்வியிலேதான் நான் கத்துக்கிட்டேன். எதையும், யாரையும் பார்த்து நான் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். நவ் அயாம் ஹேப்பி." அனு தன் கையை சுகன்யாவின் தோளில் போட்டுக்கொண்டாள். 

மணி இரவு ஒன்பதாகியிருந்தது. சுகன்யா நைட்டிக்கு மாறியிருந்தாள். அனு ஒரு லூசான காட்டன் டிரவுசரும், சட்டையையும் அணிந்துகொண்டிருந்தாள்.

"சுகா... உன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், உன் காதல் முறிஞ்சு போன விஷயம் அதிர்ச்சியை கொடுத்து இருக்குமே?" சுகன்யா தன் கட்டிலில் ஒருகளித்து படுத்திருந்தாள். சுகன்யாவின் அருகில் வந்து உட்கார்ந்தாள் அனு. சுகன்யாவின் தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு, அவள் நெற்றியை வருடிக்கொடுத்தாள். சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

* * * * *



"எனக்கு மேரேஜ் வேண்டாம்மா. இப்ப எனக்கு முடிவு பண்ணியிருக்கற கல்யாணத்தை அப்படியே நிறுத்திடலாம். செல்வாவுக்கு நான் செய்யறது எதுவுமே சுத்தமா பிடிக்கலேங்கறான். நான் உக்காந்தா குத்தம்ங்கறான். எழுந்து நின்னா தப்புங்கறான். என் முகத்தை பாக்கவே பிடிக்கலேன்னு சொன்னான். முடிவா என்னை அவன் வெறுக்கறதாவும் சொல்லிட்டான். என்னை வெறுக்கறவனை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும்? அவன் என் மனசை நோகடிச்சுட்டு என்னை விட்டு பிரிஞ்சு போயிட்டான்.”

சுகன்யா, தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியால் உண்டான, கோபத்தை, ஆத்திரத்தை, வெறுப்பை, ஏமாற்றத்தை, ஒரு வாரமாக மிகவும் சிரமப்பட்டு மனதுக்குள் அடக்கி வைத்திருந்தாள். தில்லிக்கு கிளம்புவதற்கு முன், அவள் மனதிலிருந்து உணர்ச்சிகள் கட்டுக்கு அடங்காமல் பீறீட்டுக்கொண்டு வெளியே வந்தன. அந்த வேகத்தில் அவள் செல்வாவை 'அவன்' 'இவன்' என பேசினாள்.

“என்னடீ சொல்றே?” சுந்தரி திடுக்கிட்டுப்போனாள்.

நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து செல்வாவை ‘அவர்’ என்று மரியாதையுடன் பேசிக்கொண்டிருந்த சுகன்யாவின் வாயில், அன்று செல்வா ‘அவன்’ ஆக மாறியிருந்ததை கவனிக்கத் தவறாத சுந்தரி மனதுக்குள் வெகுவாக அதிர்ச்சியடைந்தாள்.

“எங்க காதல், நடந்து முடிஞ்சிருக்கற நிச்சயதார்த்தம், எங்களுக்குள்ள இருந்த எல்லா உறவும் மொத்தமா முறிஞ்சிப் போச்சுன்னு சொல்றேன்.”

“செல்வாவுக்கு உன்னைப் பிடிக்கலையா? அந்த மாதிரி அவன் சொல்ற அளவுக்கு நீ என்னடீப் பண்ணே? அதையும்தான் கொஞ்சம் சொல்லேன்?”

“அவன் மனசு ஒரு சாக்கடையாப் போயிடிச்சிம்மா. அந்த சாக்கடையை நம்ம வீட்டுல திரும்பவும் குத்திக் கெளற வேணாம்ன்னு பாக்கறேன் நான்.”

“இங்கே பாருடி... காதலிச்சது நீங்க... ஊர் சுத்தினது நீங்க... ஆனா உங்களுக்கு கல்யாணத்தை நிச்சயம் பண்ணது நாங்க... நீங்களா உங்க இஷ்ட்டத்துக்கு எந்த முடிவுக்கும் சட்டுன்னு வந்துட முடியாது; இதை நீ நல்ல ஞாபகம் வெச்சுக்கோ.” சுந்தரி உறுமினாள்.

“இந்தக் கதையை, உனக்கும் எனக்கும் எந்த ஒறவும் இல்லேன்னு சொல்லி, நான் போட்ட மோதிரத்தை கழட்டி என் மூஞ்சிலே விட்டெறிஞ்சுட்டுப் போனானே, அவன் கிட்ட போய் சொல்லு. சுகன்யாவும் தன் குரலை தனக்கு உரிமையுள்ள இடத்தில், தன் வீட்டில், தன் தாயிடம் உயர்த்தினாள்.

“என்னடி உளர்றே? மோதிரத்தை கழட்டி குடுத்துட்டானா?” சுந்தரியின் மனதில் செல்வாவின் பால் சீற்றமும், அவள் குரலில் அந்த கோபமும் வெளிவந்தது.

“நான் சொன்னது தப்பும்மா... அவன் கழட்டி என் கையில குடுக்கலை. என் மூஞ்சியிலே விசிறி அடிச்சான். நீ போட்ட நாலு சவரம் செயினு இன்னும் அவன் கழுத்துலத்தான் இருக்கு. வரப்போற என் மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப நல்லவன்னு, அவனைத் தலைக்கு மேலே தூக்கி வெச்சிக்கிட்டு குதிச்சது நீயும்... அப்பாவும்தான்.”

“சுகன்யா...” சுந்தரியின் முகம் சிவந்து போயிருக்க, அவள் இடது கை விரல்கள் நடுங்கின.

“இப்ப நீ இதுக்கெல்லாம் என்னடா அர்த்தம்ன்னு அவனை கேட்டீன்னா, அந்த செயினையும் கழட்டி உன் மூஞ்சியிலே அடிச்சாலும் அடிப்பான். போய் சந்தோஷமா எடுத்துக்கிட்டு வா...” சுகன்யாவின் உடலில் ரத்தம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

“சுகா... என்னம்மா ஆச்சு? என்ன விஷயம்? ஏதாவது உங்களுக்குள்ள சண்டையா?” முகத்தில் கலக்கத்துடன் கேட்டுக்கொண்டே உள் அறையிலிருந்து வெளியில் வந்த சிவதாணுவின் மனதுக்குள் வாலில்லாத ராகு படமெடுத்து எழுந்தான்.

“உன் கிட்ட போய் நான் பேசறேனே, என் புத்தியைத்தான் செருப்பால அடிச்சுக்கணும். நீயாச்சு... உனக்கு செல்லம் குடுக்கற உங்க அப்பனாச்சு. காலத்துக்கும் உன் கிட்ட என்னாலப் படமுடியாதுடீயம்மா...?"

சுந்தரி மேற்கொண்டு எதுவும் பேசாமல் சுகன்யாவை சுட்டு எரித்துவிடுவது போல் முறைத்தவள், மனதிலிருக்கும் கோபம் முகத்தில் பட்டவர்த்தனமாக தெரிய, தன் புடவை முந்தானையின் முனையை முறுக்கியபடி நின்றாள்.

“ப்ச்ச்ச்... சுந்து நீ சும்மா இரும்மா. சுகா... நீ சொல்ற மாதிரியெல்லாம் சட்டுன்னு கல்யாணத்தை எப்படி நிறுத்தறது? உங்களுக்குள்ள நடந்ததை நீ விவரமா சொன்னாத்தான் மேல என்னப் பண்றதுன்னு நாங்க ஒரு முடிவுக்கு வரமுடியும்.” இதுவரை அமைதியாக சுகன்யா கூச்சலிடுவதை கேட்டுக்கொண்டிருந்த குமாரசுவாமி, மெல்ல பேசினார்.



“அப்பா... அவங்க நிச்சயதார்த்தத்துல குடுத்த பட்டுப்புடவை, தங்கச்செயின் எல்லாத்தையும் பேக் பண்ணி ரெடியா வெச்சிருக்கேன். அந்த பார்சலை அவங்களுக்கு கூரியர்ல அனுப்பிட்டா, விவகாரம் முடிஞ்சுடும். நானும் நிம்மதியா டெல்லிக்குப் போற வேலையைப் பாப்பேன்.

“என்னம்மா இது? நீ படிச்சப் பொண்ணு. இப்படி ஒரே வழியா மொறைப்பா, அர்த்தமேயில்லாமா பேசினா எப்படீடா கண்ணு?”

கனகா பேத்தியை தன்னருகில் இழுத்து உட்காரவைத்துக்கொண்டு அவள் தலையை மெல்ல வருடினாள். இது வரை முறைப்பாக பேசிக்கொண்டிருந்த சுகன்யா, உதடுகள் துடிக்க, எதோ சொல்ல வந்தவள், சொல்லவந்ததை சொல்ல முடியாமல், தன் பாட்டியின் மடியில் தலையைப் புதைத்துக்கொண்டு, உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள். தன் ஆசை மகள் விம்மி விம்மி அழுவதைக் கண்டதும், சுந்தரியின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. 


No comments:

Post a Comment