Saturday 4 April 2015

சுகன்யா... 96

கடற்கரையில், வெயில் நேரத்தில், சுழன்று சுழன்று அடித்தக்காற்றில், சுகன்யாவின் முந்தானை அவள் தோளை விட்டு பறக்க, ரவிக்கைக்கு வெளியில் பிதுங்கி வழியும் அவள் மார்புகளின் திண்மையை, சுகன்யாவின் பொங்கும் செழிப்பான முன்னழகை ரசிக்கும் மன நிலையில் செல்வா அன்று இல்லை. அவன் மனதில் மூர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு நிரம்பியிருந்தது.

"செல்வா... நீ நிஜமாத்தான் சொல்றியாடா?" சுகன்யா மீண்டும் ஒருமுறை வினவினாள்.

"ஆமாம். என் மனசுல இருக்கற உண்மையைத்தான் சொல்றேன். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எடுத்த முடிவை, ஏன் எடுத்தோம்ன்னு, இப்ப எனக்கு தோணுது."

"செல்வா.. ப்ளீஸ்... இப்படீல்லாம் பேசாதப்பா... நீ பேசறதைப் பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.."



"நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கவேயில்லை. நமக்குள்ள காதல் ஏற்படவேயில்லை. நமக்குள்ள நிச்சயதார்த்தமே நடக்கலைன்னு நினைச்சுக்கிட்டு, நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொல்றேன்." செல்வா பதட்டமில்லால் பேசினான்.

"செல்வா, நீ பேசறதுலே கொஞ்சம் கூட ஞாயமே இல்லடா... நமக்குள்ள நடந்த எல்லாத்தையுமே இல்லேன்னு ஒரே வினாடியிலே எப்படிடா என்னால மறக்கமுடியும்?" சுகன்யா அவனை நோக்கி நகர்ந்தாள். செல்வா அவளை விட்டு நகர்ந்தான்.

"அந்த சாவித்திரி நான் என் ரூம்ல இல்லாதப்ப எதையோ எதையோ சொல்லி உன் மனசை கலைச்சிருக்கா. எனக்கு உன்னைப்பத்தி நல்லாத்தெரியும். என் மூஞ்சைப்பாத்து இன்னொரு தரம் சொல்லு... உன்னால என்னை மறந்துட முடியுமா?" சுகன்யாவின் விசும்பல் சிறிது அதிகமாகியது.

"சுகன்யா... எனக்கென்ன காது கேக்கலையா? இந்த ஆஃபீசுல உன்னையும், அந்த சுனிலையும் இணைச்சு பேசற பேச்செல்லாம் என் காதுல விழுது. என் கண்ணு ரெண்டும் அவிஞ்சிப்போச்சா? நீயும் அந்த சுனிலும் அடிக்கற கூத்தை ஒரு மாசமா என் கண்ணால பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். சாவித்திரி சொல்லித்தான் இப்படி நான் நடக்கிறேனா? இல்லேடீ. நிச்சயமா இல்லே. ஒரு மாசமா நீ ஆடற ஆட்டத்தையெல்லாம், தாங்கமுடியாமத்தான் இன்னைக்கு இந்த முடிவுக்கு வந்திருக்கேன். ப்ளீஸ் என்னை நீ விட்டுடு."

மனதுக்குள் அழுதுகொண்டிருந்த சுகன்யாவின் கண்களில் இப்போது கண்ணீர் வெள்ளமாக பொங்கியது. அவளுக்கு உடம்பு லேசாக உதறியது. கை விரல்கள் மெல்ல நடுங்கின. தன் நடுக்கத்தை அவனுக்கு காண்பிக்க விரும்பாமல் அவள் தன் கைகளை ஒன்றுக்குள் ஒன்றாக கோத்துக் கொண்டாள். தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து முத்து முத்தாய் வழிந்தது. தன்னைக் கட்டுக்குள் வைக்க முடியாமல் சுகன்யா குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

"இங்கப் பாருடி... நாலு பேரு பாக்கற எடத்துல உக்காந்து இருக்கோம். இப்ப நீ அழுது சீன் போடாதே. சீன் போட்டு கூட்டத்தை கூட்டிடாதே. பொம்பளை அழுதா... என்ன ஏதுன்னு கேக்காம, யார் பக்கம் தப்பு இருக்குன்னு பாக்காம, அவ பக்கத்துல நிக்கற ஆம்பிளைக்கு தர்ம அடி குடுக்கறதுக்கு ஊர்ல நாப்பது ஞாயஸ்தன் இருக்கான். நான் ஒதை வாங்கறதை பாக்கறதுக்கு உனக்கு ஆசையிருந்தா... நீ நல்லா அழுவுடீ..."

"அய்யோ.. என்ன அழக்கூட விடமாட்டியாடா நீ?"

"நான் உன்னை கெஞ்சிக்கேட்டுக்கறேன். எங்கிட்ட கொஞ்சம் நீ மரியாதையா பேசு. இல்லே எனக்கு கெட்ட கோவம் வரும்... சொல்லிட்டேன்."

"செல்வா நான் என் காதலை காப்பத்திக்க உங்கிட்டே அழறேன்டா. உனக்கு அடிவாங்கி வெக்கறதுக்கு நான் அழலடா. நான் அழறது உனக்கு சீன் போடற மாதிரி இருக்கா? நீ மனுஷனே இல்லேடா." விருட்டென நகர்ந்து அவன் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.

"சுகன்யா... தள்ளி உக்காருடீ... சொல்லிக்கிட்டே இருக்கேன்.. " செல்வா அவள் பிடியை தன் சட்டையிலிருந்து வேகமாக உதறினான். அவன் உதறிய வேகத்தில் சுகன்யா அவனை விட்டு, ஓரடி தள்ளிப் போய் மணலில் விழுந்தாள். அவன் சட்டையின் மேல் பொத்தான் பிய்ந்து காற்றில் ஆடியது.

"செல்வா... இதுக்கு என்னடா அர்த்தம்?"

"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். என்னை திரும்ப திரும்ப வாடா போடான்னு பேசி என் கோபத்தைக் கிளறாதேடீ. நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்கோ. நம்ம நிச்சயதார்த்தம் கேன்சல். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழமுடியாதுன்னு எனக்கு நல்லாத்தெரிஞ்சு போச்சு. எனக்கு நீயும் வேண்டாம். உன் காதலும் வேண்டாம். உனக்கும் எனக்கும் இடையில இனிமே எந்த உறவும் இல்லே. உன்னை நான் கையெடுத்து கும்பிடறேன். என்னை நீ விட்டுடு." செல்வா தன் கைகளை குவித்து அவளை கும்பிட்டான். அவனுக்கு மூச்சிறைத்துக்கொண்டிருந்தது.

முரட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்த செல்வா, தன்னையும் மீறிய கோவத்தில், என்ன செய்கிறோம் என்பதனை உணராதவனாக, அவர்களுடைய நிச்சயதார்த்தத்தன்று, சுகன்யா அவனுக்கு ஆசையுடன் அணிவித்த தங்க மோதிரத்தை தன் விரலிலிருந்து விருட்டென உருவி, சுகன்யாவின் மடியில் வீசி எறிந்தான்.

"மிஸ் சுகன்யா, இனிமே நீங்க உங்க இஷ்டப்படி எவன் கூட வேணா பேசலாம். எவன் பின்னாடி வேணா பைக்ல உக்காந்துகிட்டு உங்க விருப்பப்படி இந்த ஊரைச் சுத்தி சுத்தி வரலாம். பேசலாம். சிரிக்கலாம். ஏன் கட்டிப்பிடிச்சிக்கிட்டு கூத்தடிக்கலாம். சத்தியமா நான் உங்க குறுக்கே வரமாட்டேன். குட் பை."

சுகன்யாவின் பதிலுக்காக செல்வா காத்திருக்கவில்லை. அவளைத் திரும்பிப் பார்க்காமல் அவன் வேகமாக நடந்தான். சுகன்யா திக்பிரமைப்பிடித்தவளாக பேச்சு மூச்சில்லாமல் தன் மடியில் வந்து விழுந்த மோதிரத்தையே வெறித்துக்கொண்டு பார்த்தவளாக உட்கார்ந்திருந்தாள்.

செல்வா கடற்கரை மணலில் வேகமாக இரண்டடிகள் நடந்திருப்பான். என்ன நினைத்தானோ சட்டென நின்றான். ஒரு முறை தான் நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவை திரும்பிப் பார்த்தான். நான் இவ்வளவு நேரம் பேசினதும், கடைசியா நாலு பேர் எதிர்லே, நல்லநேரத்துல அவ போட்ட மோதிரத்தை, தனிமையில இப்ப கழட்டி எறிஞ்சதும் சரிதானா? இந்த கேள்வி புயலாக அவன் மனதில் எழுந்தது. தன் மனம் எழுப்பிய வினாவிற்கு தன் மனதுக்குள்ளேயே ஒரு வினாடி விடையை தேடினான் அவன்.

செல்வா... நீ ஒரு முடிவை எடுத்துட்டேடா. அது சரியா? தப்பான்னு இப்ப எதுக்காக திரும்பவும் யோசனை பண்றே?

நீ ஒரு வழவழாகொழகொழான்னு சுகன்யா உன்னைப்பாத்து எத்தனை தரம் சிரிச்சிருக்கா. உன்னால சட்டுன்னு எந்த முடிவுக்கும் வரமுடியாதுன்னு மீனா எத்தனை தரம் சொல்லியிருக்கா? உன்னோட இருவது வருஷ ஃப்ரெண்ட்ஷிப்ல, சீனு உன்னோட இந்தக்குறையை எத்தனை தடவை முறை சொல்லி சொல்லி காட்டியிருப்பான்?

எத்தனை நாளைக்கு இன்னும் நீ அடுத்தவங்க சிரிப்புக்கு ஆளாகி நிக்கப்போறே? அந்த நொடியில், ஆண்மையின் அகங்காரம், மூர்க்கத்தனம், அர்த்தமில்லாத கோபம் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

சுகன்யாவுக்கு நான் வேணும்ன்னா, அவதான் என் பின்னாடி வரணும். என்னோட விருப்பபடித்தான் அவ நடக்கணும். செல்வா திரும்பவும் வேகமாக நடக்க ஆரம்பித்தான். 

சுகன்யாவின் அடிவயிற்றிலிருந்து மெல்லிய கேவலொன்று எழுந்தது. அந்தக்கேவல் அவள் தொண்டை வரை வந்து நின்று அவளுடைய மூச்சை அடைத்தது. அடுத்த வினாடி, பெருமூச்சாக அவள் கண்டத்திலிருந்து வெளியேறியது.

நானும் ஒரு சராசரி ஆண்தான். எனக்கு உரிமையுள்ளப் பெண்ணை சந்தேக கண் கொண்டு பார்ப்பது எனது பிறப்புரிமை என சொல்லிக்கொண்டு ஒரு கோழையாக என்னை விட்டு செல்வா ஓடுகிறான். இப்படி ஒரு கோழையை நான் காதலிச்சேனே? எல்லாம் என் நேரம்தான்.

தான் அணிவித்த மோதிரத்தை கழட்டியெறிந்துவிட்டு, வேகமாக ஓடியவன் சட்டென நின்றதும் சுகன்யாவின் மனதுக்குள் ஆத்திரமும், கோபமும் ஒருங்கே எழுந்தன. அவள் உடலெங்கும் ரத்தம் வேகமாக ஓட ஆரம்பிக்க, மேனியில் அனல் பரவியது. நரம்புகள் மெல்ல மெல்ல முறுக்கேறின. தானும் செல்வாவின் பின்னால் வேகமாக எழுந்து ஓடி, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடலாமா என்ற கட்டுக்கடங்காத வெறி அவள் மனதில் எழுந்தது.

“செல்வா, ஒரு நிமிஷம் நில்லு. கடைசியா நான் சொல்றதை மட்டும் கேட்டுட்டு போ.” உரக்க கூவினாள் சுகன்யா.

செல்வா நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவைத் திரும்பிப்பார்த்தான். அவள் எழுந்து தன் பின்புறத்தில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டாள். நிதானமாக அவனருகில் சென்று நின்றாள். அவன் முகத்தை உற்று நோக்கினாள்.

"எதுக்கு இப்ப என்னை நிக்க சொன்னே நீ?" செல்வா அவள் முகத்தைப்பார்க்க முடியாமல் திணறினான். திணறியவன் தன் முகத்தை திருப்பிக்கொண்டான். சுகன்யா அவன் வலது கரத்தை இறுக்கிப்பிடித்தாள்.

"செல்வா... நான் சொல்றதை கோவப்படமா கேளு. உனக்கு பிடிக்காதவங்க கிட்ட நான் இனிமே பேசமாட்டேன். பழகமாட்டேன். ஆனா இந்த சின்ன விஷயத்துக்காக, சாதாரண விஷயத்துக்காக, நீ என்னை லவ் பண்ணலேன்னு ஏன் பொய் சொல்றே? உண்மையிலேயே என்னை நீ காதலிக்கலையா? உன் மனசைத் தொட்டு சொல்லு?"

"நான் உன்னைக் காதலிச்சேன். அது உண்மைதான்."

"அப்படீன்ன இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னே நீ என்னை வெறுக்கறேன்னு சொன்னது பொய்தானே?"

"இல்லே. உன்னை காதலிச்சதும் உண்மைதான். இப்ப உன்னை வெறுக்க ஆரம்பிச்சிருக்கறதும் உண்மைதான்."

"செல்வா... ப்ளீஸ்... என்னை நீ காதலிக்க வேண்டாம். ஆனா, என்னை வெறுக்கறேன்னு மட்டும் சொல்லாதே; இதை என்னால தாங்கிக்க முடியலே. அப்படி என்னத்தப்பு நான் பண்ணிட்டேன்?"

"அயாம் சாரி.. மிஸ் சுகன்யா... உங்க மனசை நான் புண்படுத்திட்டேன்; ஆனா என் மனசு மேலும் மேலும் புண்படறதை தவிர்க்கறதுக்கு இதைத்தவிர வேற எனக்கு எந்த வழியும் இல்லே. ப்ளீஸ்..."

"செல்வா... வாழ்க்கைங்கறது, நாம படிக்கும் போது பள்ளிக்கூடத்துல போட்ட கழித்தல் கணக்கு இல்லே. இரண்டுல ஒண்ணு போனா மிச்சம் ஒண்ணுன்னு நெனைக்காதே. நம்ம ரெண்டுபேரோட காதல் வாழ்க்கையிலேருந்து ஒருத்தரை விட்டு ஒருத்தர், யாரைவிட்டு யாரு பிரிஞ்சு போனாலும், மிச்சம் ஒண்ணுமேயில்லை. ரெண்டு பேரு வாழ்க்கையும் ஜீரோ ஆயிடும். இதை நீ நல்லாப் புரிஞ்சுக்க." சுகன்யா அவன் கையை இறுக்கிப்பிடித்துக்கொண்டு அவனை நகரவிடாமல் தடுத்தாள்.

செல்வாவின் மனதில் இருந்த மூர்க்கத்தால், சுகன்யாவின் பேச்சிலிருந்த ஞாயத்தினை அவனால் பார்க்க முடியாமல், அவளுக்கு பதில் சொல்லமுடியாமல், அவன் ஊமையாக நின்றான். மூர்க்கம் அவன் கண்களில் பனிதிரையாகி அவன் பார்வையினை மறைத்திருந்தது.

சுகன்யா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சுகன்யாவுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு பத்து நொடிகள் செல்வாவும் மவுனமாக நின்றான். அவர்களுக்கிடையில் கனமான, இறுக்கமான அமைதி நிலவியது. கடைசியில் அந்த மவுனத்தை செல்வாவே உடைத்தான்.

"சுகன்யா... யூ ஆர் எ வெரி வெரி நைஸ் லேடி. நான்தான் உனக்கு ஏத்தவன் இல்லே. ப்ளீஸ் என்னை நீ மன்னிச்சுடு. மெல்ல முணுமுணுத்த செல்வா அவள் கையிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு மெல்ல அவளுக்கு எதிர்த்திசையில் தன் பைக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனால் வேகமாக மணலில் நடக்க முடியாமல் ஒரு வினாடி நின்றான். நின்ற இடத்திலிருந்தே சுகன்யாவைத் திரும்ப ஒருமுறை நோக்கினான்.

திரும்பி சுகன்யாவைப் பார்த்தவன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். சுகன்யா தன்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போய்க்கொண்டிருக்கும் செல்வாவின் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள். மனதில் எழுந்த உணர்ச்சிப்பெருக்கால், கால்கள் வலுவிழக்க, நிற்க முடியாமல் பக்கத்திலிருந்த ஒரு படகின் நிழலில் தொப்பென உட்கார்ந்தாள்.

சுகன்யா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே தன் பார்வையை தனது வலப்புறம் திருப்பினாள். மணல் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருந்த அந்த அழகான குழந்தைகளை இப்போது அங்கு காணவில்லை. அந்தக்குழந்தைகள் வெகு அழகாக, வெகு முனைப்பாக கட்டிய, அந்த வீடு உருத்தெரியாமல் சிதறிப்போயிருந்தது.

சுகன்யாவுக்கு சட்டெனத் தான் கட்டிய அழகான காதல்கூட்டின் நினைவு வர, அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. 

செல்வா, சுகன்யா என்னும் இரு தனி மனிதர்களின் மன உணர்வுகளை பற்றிய கவலையில்லாமல், அலையும் நீலக்கடல், ஓயாமல், ஒழிவில்லாமல், அலைந்து அலைந்து, உயர்ந்து எழுந்து, கரையை வேகமாகத் தாக்கி, விருட்டென பின்னோக்கி சென்று எதிரில் வரும் அலையில் மோதி, அதன் வேகத்தை தணித்து, ஒன்றாகின. மீண்டும் அலைந்தன. உயர்ந்தன. எழுந்தன. தாழ்ந்தன. மோதின.

சுகன்யா மெல்ல எழுந்து, தண்ணீரை நோக்கி நடந்தாள். புடவையை இழுத்து தன் இடுப்பில் செருகிக்கொண்டாள். அலைகள் அவளுடைய அழகான வெண்மையான கால்களை தொட்டுத் தொட்டு வருடின. அவளுடைய பார்வை தொடுவானத்தில் நிலைத்திருந்தது.

நான் யாருகிட்டவும் என் வாழ்க்கையில அதிகமா பேசினதேயில்லை. யார்கூடவும் மனம் விட்டு பழகினதும் இல்லே. அதிகமா விளையாடிதில்லே. சிரிச்சதில்லே. நத்தையா ஒரு கூட்டுக்குள்ளே, ஆமையா ஒரு ஓட்டுக்குள்ளே, என்னை நானே சுருக்கிக்கிட்டு இருந்தேன்.

தீடிர்ன்னு, கிருஷ்ணவேணிங்கற ஒரு நல்ல சினேகிதி எனக்கு கிடைச்சா. சுகன்யா... நீ நினைக்கற மாதிரி ஆண்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமா கெட்டவங்க இல்லேன்னு எனக்கு சொல்லிக்கொடுத்தா. வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவெச்சா.



நானும் செல்வாவை மனசார விரும்பினேன். என்னை விட்டுட்டுப் போன என் அப்பா, அவரா வீட்டுக்குத் திரும்பி வந்தார். என் அம்மாவோட வாழ்க்கையில மீண்டும் வசந்தம் வந்தது. அப்பா வீட்டுக்கு வந்ததால, அம்மா தன் வீட்டுக்கு உரிமையோட போனாங்க.

என்னோட தொலைஞ்சு போன சொந்தங்கள், தாத்தா, பாட்டி, ஒண்ணுவிட்ட அத்தை, மாமா, அவங்களோட பிள்ளை, இப்படி எனக்கு நிறைய உறவுகள் திடீர்ன்னு கிடைச்சது. என் அம்மாவும், அப்பாவும் சந்தோஷமா இருக்கறதைப்பாத்து வயசான என் தாத்தாவும் பாட்டியும் சந்தோஷமாயிட்டாங்க. அவங்களைப்பாத்து நான் சந்தோஷப்பட்டேன்.

இப்பத்தான் ஒரு மாசமா, என் மனசோட ஒரு மூலையில, நிரந்தரமாக குடியிருந்த ஒரு அர்த்தமில்லாத பயம், அச்சம், கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு விலக ஆரம்பிச்சுது. மீனா, மல்லிகா, நடராஜன், சீனு அப்டீன்னு புதுசு புதுசா உறவுகள் எனக்கு கிடைச்சது. நான் சிரிக்க ஆரம்பிச்சேன்.

காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கப் போறோங்கற நிம்மதி, பெருமிதம் எனக்குள்ள வந்திச்சி. மனசுக்குள்ள இருந்த இறுக்கமெல்லாம் கொறைஞ்சு, வாழ்க்கையில ஒரு பிடிப்பு உண்டாகி, சிரிக்கணும்; சிரிக்கறதுல இருக்கற மகிழ்ச்சியை, சந்தோஷத்தை முழுசா அனுபவிக்கணும்ன்னு நான் முயற்சி பண்ணும் போது எனக்கு இப்படி ஒரு சோதனையா?

நான் மனசுவிட்டு சிரிச்சி, பேசி பழகறது என் காதலனுக்கே பிடிக்கலை. நான் சிரிச்சது, என் காதலுக்கே வினையா மாறிடிச்சி. எல்லாம் என் தலையெழுத்து.

செல்வா போயிட்டான். என் வாழ்க்கையில வந்த மாதிரியே சட்டுன்னு திரும்பி போயிட்டான். என் செல்வா இந்தக் கடற்கரையிலத்தான் தன் காதலை என் கிட்டச் சொன்னான். அதே எடத்துல தன் மனசை எங்கிட்டேயிருந்து வலுக்கட்டாயமா, என் விருப்பமே இல்லாம, பிடுங்கிக்கிட்டுப் போயிட்டான்.

நானும் இதே எடத்துலத்தான் என் மனசை செல்வா கிட்ட தொலைச்சேன். இப்ப நான் என் காதலையும் இதே இடத்துல தொலைச்சுட்டேன். என் செல்வா... கொஞ்சம் கூட இரக்கமேயில்லாம, இவ்வளவு சுலபமா, என் மனசை மிதிச்சி, துவைச்சி, சுக்கு நூறாக்கிட்டுப் போயிட்டான்.

என் காதலுக்கு என்ன ஆச்சு? என் காதல் நிஜமாவே தோத்துப்போச்சா? கடைசீல சாவித்ரித்தான் ஜெயிச்சிட்டாளா?

இல்லை. நிச்சயமா இல்லே. செல்வா என்னை வெறுக்கறேன்னு சொன்னான். ஆனா அவனை நான் வெறுக்கலே. நான் செல்வாவை இன்னும் காதலிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என் செல்வாவை நான் காதலிச்சுக்கிட்டு இருக்கும் போது என் காதல் தோத்துப்போச்சுன்னு எப்படி சொல்லமுடியும்? கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழ்ந்தாத்தான் காதல்லே ஜெயிச்சதா அர்த்தமா?

என் அத்தான் சம்பத்தும் என்னை காதலிக்கறேன்னு சொன்னார். என் வாழ்நாள் பூராவும் என்னைக் காதலிச்சுக்கிட்டே இருப்பேன்னு சொன்னார். தன்னோட மனசு விரும்பிய பெண்ணுக்காக, அவளோட காதலுக்காக தான் சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருப்பேன்னு சொன்னார். அது மாதிரி என் காதலை நான் என்னால என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்க முடியாதா? காதலுக்கு ஒரு உருவம், ஒரு உடல், ஒரு அடையாளம் தேவையா?

சுகன்யாவின் மனம் தன் நிலையில் நிற்காமல் அலைந்து கொண்டிருந்தது. தன் விழிகளிலிருந்து வடியும் கண்ணீரைத் துடைக்கவும் முயற்சிக்காமல் அலைகளில் நின்றுகொண்டு, தன்னை மூழ்கடித்து விடுவது போல் தன்னை நோக்கி வரும் அலைகளை வெறித்துக்கொண்டிருந்தாள் அவள்.

தீடீரென சுகன்யாவின் மனதில் செல்வாவின் முகத்தை உடனடியாக மறக்க வேண்டும் என்ற தீவிரமான ஒரு வெறி அவளுக்குள் எழுந்தது. இன்று செல்வா, தான் ஒரு ஆண் என்ற அகந்ததையில், தன்அகம்பாவத்தை என்னிடம் காட்டிவிட்டு போயிருக்கிறான். நாளை வேறு பெயருடன், வேறு ஒரு ஆண் என் வாழ்க்கையில் மீண்டும் வர முயற்சிக்கலாம். நானும் என் மதிமயங்கி அவனை நோக்கி நகரலாம். வருபவன் செல்வாவைப் போல் தன் அகம்பாவத்தை காட்ட முயலலாம்.

எந்த ஆண்மகனையும் நம்பி சுகன்யா இல்லை. என்னால் தனித்து வாழ முடியும். வாழ்ந்து காட்டுவேன். இதற்கு என்ன வழி? சுகன்யா மனமிருந்தால் மார்க்கம் உண்டடி... அவள் உதடுகளில் மெல்லிய புன்னகையொன்று எழுந்தது.

சுகன்யா மீண்டும், ஒரு நத்தை தன்னை தன் கூட்டுக்குள் சுருக்கிக்கொள்வது போல், ஒரு ஆமை தன் உடலை தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வது போல், தன்னை, தன் மனதை தனக்குள் ஒடுக்கிக் கொள்ள விரும்பினாள். அவள் கண்களில் ஒரு தீவிரம் எழுந்தது. எழுந்த தீவிரம் மெல்ல மெல்ல பற்றி, கொழுந்து விட்டு உடலங்கும் எரிய ஆரம்பித்தது .

மனதுக்குள் ஒரு முடிவெடுத்ததும், தன் மூச்சு சீராவதை, சீரான மூச்சால், தன் உடல் தளருவதையும், தன் தேகத்தின் சூடு குறைவதையும், உணர்ந்தாள் சுகன்யா. தன் விழிகளை துடைத்துக்கொண்டாள். ஆர்ப்பாட்டமான அலைகளை விட்டு மெல்ல நகர்ந்தாள். தன் அலுவலகத்தை நோக்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள் சுகன்யா. 


நான்கைந்து வாரங்களுக்குப் பிறகு, அன்று இரவு சுகன்யா நேரத்துக்கு தூங்கினாள். நிம்மதியாக தூங்கினாள். காலை ஐந்தரைமணி வாக்கில் படுக்கையைவிட்டு எழுந்தபோது உண்டான பரவசமான புத்துணர்ச்சியை விழிமூடி மனதிற்குள்ளாகவே, சிறிதுநேரம் அனுபவித்தாள். உற்சாகத்துடன் கட்டிலை விட்டு குதித்து, ஹவாய் சப்பலை காலில் மாட்டிக் கொண்டு மெல்ல நடந்து பால்கனிக்கு வந்தாள்.

விடுதி பால்கனியிலிருந்து வெளியில் பார்த்தபோது, வெகு அழகான புல்தரை அவள் கண்களுக்குத் தெரிய மனம் சட்டென லேசாகியது. ஒரே அளவில், ஒரே உயரத்தில், புற்கள் சீராக வெட்டப்பட்டு, அழகான பச்சைப்பாயாக, பச்சைக்கம்பளமாக விரிந்திருந்த பார்க்கில், வயது வித்தியாசமில்லாமல் ஆண்களும் பெண்களும் வேர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தார்கள். இளைஞர்களும், இளைஞிகளும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நடுத்தர வயது குமரர்களும், குமரிகளும், தங்கள் உடல்களை வளைத்தும், நீட்டியும், மடக்கியும், யோகாப்பியாசம் செய்து கொண்டிருந்தார்கள். வயதானவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே தங்கள் கை கால்களை ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

நீள் வட்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த பார்க்கின் நெடுகிலும், சரக்கொன்றை மரங்கள், தங்க நிறத்தில் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. தில்லியின் சாலைகளில், அடர்த்தியான நீலத்திலும், சிவப்பிலும், மஞ்சள் நிறத்திலும் மரங்கள் பூத்து குலுங்கிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வீட்டு சுற்று சுவர்களுக்குள் ஆங்காங்கு மாமரங்களும் தங்கள் பங்குக்கு, காய்த்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.

மே மாதத்தின் மெல்லிய காலை நேரத்துக்காற்று சுகன்யா அணிந்திருந்த நைட்டிக்குள் புகுந்து வெளியேற, காற்றின் மென்மையான ஸ்பரிசம் அவள் மார்பையும் அடிவயிற்றையும் வருடிக்கொண்டு சென்றது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிக மிக இதமாக இருந்தது. காற்றில் இன்னும் சூடு ஏற ஆரம்பிக்கவில்லை.

தில்லிக்கு வந்ததுக்கு அப்புறம் இந்த ஒரு வாரமாத்தான் நிம்மதியா இருக்கறமாதிரி நான் ஃபீல் பண்றேன். சுகன்யாவுக்கு தன் மனதில் எழுந்த இந்த திடீர் உணர்வு வியப்பைக் கொடுத்தது. இடம் மாறினா மனசுல இருக்கற பாரமும், அழுத்தமும் குறையுமா என்ன?

வந்ததுலேருந்து இந்த மூணு வாரமா, ஒரு ரூம்லே தனியா இருந்தேன். இப்ப என்னையும் அனுராதாவையும் இந்த அறையிலே இரண்டு பேராக தங்க வசதி பண்ணிக் கொடுத்திருக்காங்க. என் வயசையொத்த ஒரு பெண் எனக்கு அறைத்தோழியா வந்ததும், தனிமையில இருக்கற நேரம் கொறையவே, அந்த பாவி செல்வாவை மனசுக்குள்ள நெனைச்சு நெனைச்சு நான் அழறதும் கொறைஞ்சு போச்சு.

செல்வாவை என்னால முழுசா மறக்கமுடியுமா? சுகன்யாவின் மனதில் இந்தக்கேள்வி அவள் அனுமதிக்கு காத்திராமல் சட்டென எழுந்தது. எவனை மறக்க நினைக்கிறேனோ அவன் நினைப்புதான் முதலில் எனக்கு வருகிறது. மனதின் ஆட்டத்தை நினைத்தபோது அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

சுகன்யா... இடம் மட்டும் முக்கியம் இல்லேடி. காலமும் மனுஷனோட வாழ்க்கையில மிக மிக முக்கியமான பங்கை வகிக்குது. நாள் ஆக ஆக, கொஞ்சம் கொஞ்சமா நீ உன் காதல் எபிசோட்டை மறக்க ஆரம்பிச்சுடுவே. மறந்துதானே ஆகணும்? உன் தாத்தா சொல்ற மாதிரி, மறதிங்கறது மனுஷனுக்கு இயற்கை கொடுத்திருக்கற மிகப்பெரிய வரப்பிரசாதம். மறதியையும் நீ அனுபவி. எஞ்சாய் இட். அவளுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.



சுகன்யாவின் ரூம் மேட் அனுராதா மெல்லிய குறட்டையொலியை எழுப்பியவாறு இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். நிஜமாவே உடம்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கணுங்கற விழிப்புணர்ச்சி, தில்லியிலே படிச்சவங்க மத்தியிலே அதிகமாகவே இருக்கு. இல்லேன்னா, காலங்காத்தால, இவ்வளவு மனிதர்களை பூங்காவுல ஒருசேர பார்க்கமுடியுமா? கொஞ்சநேரம் நடந்துட்டு வரலாமா? அவளுக்கும் கால்கள் பரபரத்தன.

கல்லூரியின் ஹாஸ்டல் நாட்கள் மனதுக்குள் வந்தன. அந்த நாட்களில் அவளுடைய அறைத் தோழிக்கு நடக்கவேண்டும் என்று சொன்னாலே எரிச்சல் வந்துவிடும். அவசியமான வேலைகளுக்கு ஹாஸ்டலைவிட்டு வெளியில் போகவேண்டுமென்றாலும், முனகிக்கொண்டே, வேண்டா வெறுப்புடன்தான் அவள் கிளம்புவாள். ஒரு கிலோமீட்டர் போவதற்கும் ஆட்டோவைத்தான் அவள் தேடுவாள்.
காலை நேரத்தில் அவளை தொந்தரவு செய்யாமல், சுகன்யா ஜாகிங் சூட்டில், அறைக்கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு, கல்லூரி மைதானத்திற்கு கிளம்பிவிடுவாள்.

மீண்டும் ஒரு புது இடம். மீண்டும் ஒரு புது ரூம் மேட். ரெண்டு பேரும் ஒரு ரூம்ல செட்டில் ஆகி இன்னும் முழுசா ஒரு வாரம் ஆகலே. அனுவோடுதான் நான் அடுத்த இரண்டு மாதங்கள் இந்த அறையில் இருந்தாகணும். நடக்கிற விஷயத்துல இந்த அனுராதா எப்படியோ? வாக்கிங் போகலாம்ன்னு கூப்பிட்டா வருவாளா?

இன்னைக்கும், நாளைக்கும் விடுமுறைதானே? பார்க்குல காலாற நடந்துட்டு வந்து பகல் பூராத் தூங்கட்டுமே. யாரு வேணாங்கறது? அனுவை எழுப்பிப் பாக்கலாமா? யோசித்துக்கொண்டிருந்தாள் சுகன்யா.


No comments:

Post a Comment