Tuesday 7 April 2015

சுகன்யா... 106

மொட்டை மாடியில் நின்றுகொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் செல்வா.

அனு கல்யாணம் பண்ணிக்கப்போற பையன் சென்னையில வொர்க் பண்றானேமே? தன் ஃப்ரெண்டு லைப்ல செட்டிலாகட்டும்ன்னு, சுகன்யா அவளாகவே, தன்னோட போஸ்டிங்கை டெல்லியிலே வாங்கிக்கிட்டாளாமே?

இட் ஈஸ் எ நீயூஸ் ஃபார் மீ.. லாஸ்ட் வீக்கூட அனுகிட்ட நான் பேசினப்ப தன்னோட மேரேஜைப்பத்தி எங்கிட்ட ஓண்ணுமே சொல்லவே இல்லையே? தன் சினேகிதியைப்பத்தி கவலைப்படற சுகன்யா, எப்ப இவ திரும்பி வருவான்னு தினம் தினம் கேலண்டரையே பாத்துகிட்டு இருக்கற என்னைப்பத்தி கொஞ்சமாவது யோசிச்சாளா?

சுகன்யா ஈஸ் எ ஜெம். சுகன்யாவைப்பத்தி கோபாலன் சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா என்ன? செல்வாவின் உதடுகளில் தவழந்த புன்னகையில் இப்போது சிறிய கர்வமிருந்தது.

"மோதிரத்தை கழட்டி அவ மூஞ்சியிலே எறிஞ்சியே அப்ப அவ ஜெம்ன்னு மறந்துட்டியாடா?"



"அதான் இப்ப தனியா நின்னுக்கிட்டு பொலம்பி சாகறேன்."

"சரி... சரி.. நீ விதைச்சதை நீ அறுத்துத்தானே ஆகணும்? சுகன்யாவைப் பாக்க டில்லிக்கு போகப்போறியா?"

"போனா என்ன? போகக்கூடாதா நான்? சுகன்யாவை விட்டு பிரிஞ்சது நான்தானே? நான்தானே அவளை சமாதானப் படுத்தணும்?"

"இப்பவாவது புத்தி வந்திச்சே? ."

"ம்ம்ம்ம்..."

"டேய்.. டில்லிக்கு போறதெல்லாம் அப்புறம்... திரும்பவும் உன் மாறிடப்போகுது. மொதல்லே அவகிட்ட ஒரு தரம் பேசுடா... "

செல்வாவின் மனம் மேலும் கீழுமாக அவனை புரட்டி புரட்டி பந்தாடிக்கொண்டிருந்தது. யெஸ். என் சுகன்யாவோட நான் இப்பவே பேசப்போறேன். செல்வா செல்லில் விடுவிடுவென அவள் நம்பரை அழுத்தினான்.

சுகன்யா கிச்சனில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். கட்டியிருந்த புடவையில் ஈரக்கையை துடைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்து சிணுங்கும் செல்லை எடுத்தாள் அவள். செல்லின் திரையில், செல்வாவின் முகமும் அவன் பெயரும் மாறி மாறி மின்னிக்கொண்டிருந்ததைக் கண்ட அவள் கன்னங்களில் இலேசாகச் சூடேறியது.

சுகன்யா... உன்னை பாக்கறதுக்கே பிடிக்கலைன்னு சொன்னவன், முழுசா மூணு மாசத்துக்கு அப்புறம் உன் கிட்ட பேச நினைக்கிறான்டீ... மனம் பரபரத்து கூவியது. முகம் சிவந்தது. தன் உதடுகளை அழுத்தமாக கடித்துக்கொண்டாள் அவள்.

இவனா நெனைச்சிக்கிட்டா என்னை வெறுக்க ஆரம்பிப்பான். உனக்கும் எனக்கும் இருக்கற உறவே முடிஞ்சு போச்சுடீன்னு கூவுவான். உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலேன்னு முகத்தை திருப்பிக்கிட்டு போவான்.

ஒரு வாரம் பத்து நாளாத்தான், நான் கொஞ்சம் நிம்மதியா இருக்க ஆரம்பிச்சிருக்கேன். இந்த நிம்மதிக்காகத்தான், இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்துல, என் உறவுகளையெல்லாம் விட்டுட்டு தனியா மல்லடிச்சுக்கிட்டு இருக்கேன். இப்ப இதுவும் இவனுக்கு பிடிக்கலையா?

எதுக்கு இப்ப இவன் போன் பண்றான்? சுகு... சுகு... அயாம் சாரிப்பான்னு வழிவான். நானும் இவன் என்னைக் கொஞ்சற கொஞ்சல்லே மனசு மயங்கி, சொல்லுடா செல்வா... சொல்லுடா செல்வான்னு திரும்பவும் வழிஞ்சுக்கிட்டு நிக்கணுமா? நாலு நாள்ல்ல பழைய குருடி கதவை தொறடின்னு இவனே என் உயிரை வாங்குவான். இதே லொல்ள்ளாப் போச்சு இவன் கூட..!?

இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? ஆம்பிளை இவனுக்குத்தான் கோவம் வரலாம்... பொம்பளைக்கு வரக்கூடாதா? சுகன்யா வந்து கொண்டிருந்த காலை சட்டென டிஸ்கனெக்ட் செய்தாள்.

"என்னடா ஆச்சு...?"

"கால் டிஸ்கனெக்ட் ஆயிடிச்சி.."

"கட் ஆச்சா... இல்லே சுகன்யாவே உன்னை கட் பண்ணிட்டாளா?"

"என்னை கட் பண்ணிட்டாளா? அப்படி ஒண்ணும் இருக்காது."

"இன்னொரு தரம் டிரை பண்ணிப்பாருடா.."

ரீடயல் ஐக்கானை அழுத்தினான் செல்வா. சுகன்யாவின் செல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது. மறுமுனையில் அவனுடைய கால் திரும்பவும் கட் செய்யப்பட்டது. மூன்று நாட்கள் விடாமல் தொடர்ந்து சுகன்யாவை அவளுடைய செல்லில் தொடர்பு கொள்ள முயன்றான் செல்வா.

சுகன்யாவும், செல்வாவின் கால் வந்தபோதெல்லாம், அவனிடம் பேசவேண்டும் என அவளுடைய மனதின் ஒரு பகுதி விரும்பியபோதிலும், அவளுடைய மனதின் மறுபகுதி அவளை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை. அந்த மனதின் மறுபகுதி, செல்வாவின் மீது அவளுக்கிருந்த சிறிதளவு சினத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

டெல்லிக்கு சென்று சுகன்யாவை பார்க்கவேண்டுமென, செல்வாவின் மனதிலெழுந்த ஆவல் மெல்ல மெல்ல அடங்க தன்னையே வெறுத்துக்கொண்டான் செல்வா.

செல்வாதானே என் மூஞ்சியிலே அடிச்சான். அவனுக்கு நான் வேணும்னா, என் காதல் வேணும்னா, அவனே நேரா டெல்லிக்கு ஒரு தரம் வந்து என்னை பாக்கட்டுமே? அவனா வந்து என்னை பாக்காத வரைக்கும் நானும் அவன்கிட்ட நிச்சயமா பேசப்போறது இல்லே.

என்னைவிட்டு கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கட்டும்; அப்பத்தான் அவனுக்கு என் அருமை தெரியும். நான் அவன் மேல வெச்சிருந்த அன்பு புரியும்; என் ஆசை புரியும்; என் காதலோட வலிமை புரியும். சுகன்யா தன் உதடுகளை சுழித்துக்கொண்டாள்.

சுகன்யாவின் மனதின் ஒரு மூலையில் பொய்யான வீராப்பும், தாயிடம் அடிவாங்கிய ஒரு குழந்தையின் முறுக்கலும் இருந்த போதிலும், ஒரு முறைக்கு நான்கு முறை, செல்வா தன்னிடம் பேச விரும்பினான் என்பதிலேயே அவள் மனதில் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.

மனதின் இறுக்கம் வேகவேகமாக குறைவதையும், மன உளைச்சல் குறைவதால், தன் காதலனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தன்னுள் மீண்டும் மீண்டும் எழுவதையும் அவள் உணராமலில்லை.

"உடம்பு கிடம்பு சரியில்லையாடா உனக்கு?" மல்லிகா மகனின் நெற்றியை, கழுத்தை, மார்பை தொட்டுப்பார்த்தாள்.

"எனக்கென்ன கேடு? நான் கல்லு மாதிரி நல்லாத்தான் இருக்கேன். நீ கொஞ்ச நேரம் தொணத் தொணக்காமே இருந்தீன்னா எனக்கு நிம்மதியா இருக்கும்." பிள்ளை புரண்டு படுத்தது.

"நேத்தே ஆஃபீஸ் போவலையேடா. மணி பத்தாச்சு.. இன்னும் நீ டிஃபன் கூட சாப்பிடலே.. எப்பவும் படுத்துக்கிட்டு இருக்கியே? என்ன விஷயம்?"

செல்வாவை உலுக்கினாள் மல்லிகா. செல்வா படுத்திருந்த மாடி அறைக்கு வெளியில், நடராஜனின் கைகள் வேட்டியை உதறி உலர்த்திக்கொண்டிருந்தன. ஆனால் அவருடைய கவனமென்னவோ தாய்க்கும் மகனுக்கும் நடுவில், அறைக்குள் நடக்கும் உரையாடலிலேயே நிலைத்திருந்தது.

"நான் ரெண்டு வாரம் லீவு போட்டிருக்கேன்..."

"ஏண்டா...?"

"எனக்கு ஆஃபீஸ் போக பிடிக்கலேம்மா."

"என்னடா கூத்தடிக்கறே? தேவையே இல்லாம இப்ப எதுக்குடா லீவு போட்டே? உன் கல்யாண சமயத்துல லீவுக்கு என்ன பண்ணுவே?"

"இனிமே என் கல்யாணத்தைப்பத்தி நீ கவலைப்படாதே... இப்ப எனக்கு கருமாந்திரம் ஒண்ணுதான் பாக்கி.. நானே செத்ததுக்கு அப்புறம் லீவுக்கு என்ன அவசியம்?"

"காலங்காத்தால என்ன பேச வைக்காதேடா... சனியனே?" செல்வாவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள் மல்லிகா.

"சரி பேசாதே... பேசு பேசுன்னு.. உன்னை நானா இப்ப கூப்பிட்டேன்..?"

"ஏன்டா இப்படி எங்க உயிரை எடுக்கறே?" மல்லிகாவின் குரல் கம்மியது.

"அப்பா சொன்னாரேன்னு.. நாலு தரம் அந்த சிங்காரி கிட்ட பேச டிரை பண்ணேன். நாலு தரமும் அவ என் காலை கட் பண்ணிட்டா." செல்வா எழுந்து தன் இடுப்பிலிருந்து நழுவிய லுங்கியை இறுக்கிக்கொண்டான்.

"என் நம்பர்லேருந்து பண்றேன்.. என் காலை அவ கட் பண்ணிடுவாளா?"

"கட் பண்ணலாம்..."

"உனக்கும் அவளுக்கும் தகராறுடா... எனக்கும் அவளுக்கும் நடுவுல என்னப் பிரச்சனை?"

"எனக்கு அப்புறம்தான் அவ உங்க எல்லாருக்குமே உறவு... இதை நான் எத்தனை தரம் சொன்னாலும், இது உங்க ரெண்டுபேருக்கும் ஏன்தான் புரியமாட்டேங்குதோ?"

"எங்களுக்கு புரிய வைக்க உனக்கு வயசு பத்தாதுடா..." மல்லிகா சீறினாள்.

"சரி.. அவ கிட்ட செருப்படி வாங்க உனக்கு இஷ்டம்ன்னா நீ என்ன வேணாப் பண்ணு..." தன்னிடம் அவள் பேசவில்லையே, தன்னை அவள் உதாசீனப்படுத்திவிட்டாளே என்ற எரிச்சலில், தன் முகம் சுருங்க, தன் தாயிடம், இடக்காக பேச ஆரம்பித்தான் செல்வா.

"அர்த்தமில்லாமே பேசாதேடா... அவ அந்த மாதிரி பொண்ணு இல்லே; ரெண்டு நாள் முன்னாடி கூட மீனாவும் சுகன்யாவும் நல்லாத்தான் சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டு இருந்தாங்க." விருட்டென அந்த அறைக்குள் நடராஜன் நுழைந்ததும் அந்த அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தான் செல்வா.

"நில்லுடா.. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"அப்பா... நல்லாக் கேட்டுக்குங்க... அடுத்த ஒரு வருஷத்துக்கு சுகன்யா சென்னைக்கே திரும்பி வர்றதா இல்லே... அவளுக்கு போஸ்டிங் டில்லியிலே ஆயிடிச்சி... சீனு வீட்டுல சொல்ற மாதிரி என் தங்கச்சி மீனா கல்யாணத்தை சட்டு புட்டுன்னு முடிக்கற வழியைப்பாருங்க..."

"என்னடா சொல்றே?" இருவரும் ஒரே குரலில் வியப்புடன் கேட்டனர்.

"நடந்ததை சொல்றேன்... சுகன்யா, சென்னைக்கு ஏன் திரும்பி வரலேன்னு ஆஃபீசுல அவனவனும் என் உயிரை எடுக்கறானுங்க. அதான் லீவு போட்டுட்டு வீட்டுல படுத்து கிடக்கறேன்."

"மல்லிகா... ஈவினிங்கே, மீனா கல்யாணத்தைப்பத்தியும், இவனைப்பத்தியும், சுகன்யா கிட்டே நானே பேசிடறேன்..." நடராஜன் விறுவிறுவென எழுந்து வெளியே நடந்தார்.

* * * * *

"யார்கூட இவ்வளவு நேரமா பேசிகிட்டு இருந்தீங்க?"

"நம்ம சுகன்யாகிட்டத்தான் பேசிகிட்டு இருந்தேன்..."

"என்ன சொன்னா?"

வெராண்டாவில் உட்கார்ந்துகொண்டு, கையில் அந்த வார ஆனந்தவிகடனை புரட்டிக்கொண்டிருந்த நடராஜனின் அருகில் அமர்ந்திருந்தாள் மல்லிகா. செல்வா வாசல் படியில் காற்றாட உட்கார்ந்திருந்தான்.

"மாமா... எனக்கு ரொம்ப சந்தோஷம்... என் ஃப்ரெண்டு மீனா மேரேஜை மொதல்லே நடத்தி முடிங்கன்னு சொன்னா.."

"அப்புறம்..."

"உங்க பிள்ளை மேல எனக்கு இருக்கற கோவம் இன்னும் முழுசா தணியலேன்னா.."

"அப்டீன்னா..."

"மல்லிகா அத்தை எப்படி இருக்காங்கன்னு கேட்டா... அதே சமயத்துல... என் கதை முடிஞ்சுபோன விஷயம்... அதை மறந்துட்டு நடக்கவேண்டிய வேலையை பாருங்கன்னும் சொன்னா..."

"என்னங்க இப்படி பேசறீங்க?" மல்லிகாவில் குரலில் பதட்டம் ஏறிக்கொண்டே போனது.

"நானா எதுவும் சொல்லலேடீ... சுகன்யா சொன்னதை நான் சொல்றேன்..."

"முடிவா என்னதாங்க சொன்னா?"

"மல்லிகா... அவ எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணுங்கறா?"

"எனக்கு புரியலீங்க... உங்களை மாமாங்கறா... என்னை அத்தேங்கறா... ஆனா இவன் மேல கோவம் தணியலேங்கறா... இதுக்கு என்னங்க அர்த்தம்?"

"இனிமே... ஆண்டவன் விட்ட வழிதான்னு அர்த்தம்..." நடராஜன் தன் தலையை தடவிக்கொண்டிருந்தார்.

"குமார் மாமாகிட்ட பேசிட்டீங்களாப்பா?" மீனா நடராஜனின் மடியில் தன் தலையை சாய்ந்துக்கொண்டு வெறும் தரையில் படுத்திருந்தாள்.

"சுகன்யா சென்னைக்கு திரும்பி வராததுலே அவருக்கும் ரொம்பவே வருத்தம்... அவர் மட்டும் என்ன பண்ணுவார்? என் பொண்ணோட விருப்பம்தான் எனக்கு முக்கியம்... அவ திரும்பவும் விருப்பப்பட்டாதான் இந்த கல்யாணம் நடக்கும். மீனாவும் எனக்கு ஒரு பொண்ணுதான்... என்னை உன் கல்யாண வேலையை பாக்கச்சொல்லிட்டார்."

"செல்வா... அப்பா சொல்றதை கேட்டியாடா?" மல்லிகா தன் மகனை நோக்கினாள்.

"இதைத்தான் நான் காலையிலேயே சொன்னேன்..." செல்வாவின் குரலில் சிறிதே ஏளனம் இருந்ததாக அவர்களுக்குத் தோன்றியது.

"நான் வேணா ஒரு தரம் சுகன்யாவோட பேசட்டுமா?"

"அம்மா... நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன். ஸ்டாப் திஸ் ப்ளீஸ்.." செல்வா தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே, மல்லிகாவை நோக்கி தன் இரு கைகளையும் கூப்பினான். நீளமாக பெருமூச்சொன்றை விட்டான். பின்னர் மெதுவாக எழுந்து மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 



இண்டர்காம் மென்மையாக சிணுங்க ஆரம்பித்தது. தலையை நிமிர்த்தி தன்னெதிரில் இருந்த சுவரை நோக்கினார் நடராஜன். டிஜிட்டல் வால் கிளாக் 1330 என நேரத்தை அறிவித்துக் கொண்டிருந்தது.

"மிஸ்டர் நடராஜன்... பிஸியா இல்லேன்னா ஒரு ரெண்டு நிமிஷம் என் ரூமுக்கு வரமுடியுமா?"

"நம்ம காண்ட்ராக்டர் ஒருத்தரோட பேசிகிட்டு இருக்கேன் சார். அவரோட வேலையை முடிச்சுட்டு, ஒரு பைவ் மினிட்ஸ்ல வரட்டுமா?"

"தட்ஸ் வெரி பைன்... வீட்டுலேருந்து உங்களுக்கும் சேர்த்து லஞ்ச் வந்தாச்சு. உங்களுக்கு பிடிச்ச மெனுதான். என் ரூம்லேயே சாப்பிட்டுக்கலாம் வாங்க." குமாரசுவாமி மென்மையாக சிரித்தார்.

* * * * *

"கம் இன்... ப்ளீஸ்..."

நடராஜன், குமாரசுவாமியின் அறைக்குள் நுழைந்தபோது அந்த அலுவலகத்திற்கான உணவு இடைவேளை தொடங்கி பத்து நிமிடத்திற்கும் மேலாகியிருந்தது. குமாருடன் சோஃபாவில் கவர்ச்சியான சிரித்த முகத்துடன், இதுவரை அவர் பார்த்திராத இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான்.

உற்சாகம் பொங்கும் முகம், கூர்மையான கண்கள். செதுக்கிய மூக்கு. வலது மணிக்கட்டில் வட்டமான வாட்ச். காலில் மின்னும் கருப்பு நிற ஷூக்கள். உடலோடு ஒட்டிய பளபளக்கும் விலையுயர்ந்த காட்டன் ஆடைகள். மொத்தத்தில் பளிச்சென்றிருந்தான் அவன்.

"நான் லஞ்ச் கொண்டு வரலேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" புன்முறுவலுடன் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார் நடராஜன்.

"காலையில மீனாகிட்ட பேசிகிட்டு இருந்தேன். உங்க வீட்டு எஜமானியம்மா திருத்தணி போயிருக்காங்கன்னு தெரியவந்தது. ஆஃபீசுக்குள்ள நுழையும் போது ரெண்டு கையையும் வீசிகிட்டு வந்தீங்க நீங்க. லஞ்சு அனுப்பும் போது ரெண்டு பேருக்கு அனுப்பும்மான்னு உடனே சுந்தரிக்கு போன் பண்ணிட்டேன்."



குமாரசுவாமியின் முகத்திலிருந்து, பொங்கி வரும் சிரிப்பிலிருந்து, அன்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது தெரிந்தது.

"உங்கக்கிட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் தோத்துடுவார் போங்க..." நடராஜனும் நட்புடன் சிறிது உரக்கவே சிரித்தார்.

"மீட் மிஸ்டர் சம்பத்... சம்பத், இவர்தான் நடராஜன். இந்த ப்ராஞ்ச்லே வேலை செய்யற அத்தனை பேருக்கும் சாப்பாடு போடறவர்... ஐ மீன் டூ சே, மாசக்கடைசீலே சம்பளம் குடுக்கறவர். சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசர்." சிரித்தவாறே பரஸ்பரம் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார்.

"மாமா, சாரோட பேசினது இல்லேயே தவிர இவரை நான் பார்த்திருக்கேன்."

சம்பத் இனிமையாக புன்னகைத்துகொண்டே தன் வலது கையை நீட்ட, நடராஜன் தன் புருவங்களை உயர்த்தியவாறு, அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தவாறே, அவன் நீட்டிய கையை அவசரமாக குலுக்கினார்.

"என்னை எங்கே பார்த்திருக்கீங்க நீங்க?"

"சுவாமிமலையிலே தமிழ்செல்வன், சுகன்யாவோட நிச்சயதார்த்தத்துக்கு நானும் வந்திருந்தேன்." சம்பத் இனிமையாக புன்னகைத்தான்.

"ஐ சீ... ஐ சீ..."

பை த பை... நடராஜன், இன்னைக்கு நம்ம லஞ்சை இவர்தான் என் வீட்டுலேருந்து நமக்காக கொண்டு வந்திருக்கார்."

"அப்படியா?"

"யெஸ்... நடராஜன்... என் ஒண்ணுவிட்ட சிஸ்டர் மிஸஸ் ராணி நல்லசிவத்தைப்பத்தி உங்கக்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்களோட ஒரே மகன் சம்பத் இவர்தான். இவருக்குத்தான் சுகன்யாவை பெண் கேட்டு வந்தாங்கன்னு...." குமார் பேசிக்கொண்டிருந்த வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார்.

"யெஸ்... யெஸ்... ஐ ரிமெம்பர் தட்..."

"சம்பத், நாளைக்கு, நம்ம ஜோனல் ஆஃபீஸ்லே, ஹெச்.ஆர்.லே டெபுடி மேனேஜரா ஜாய்ன் பண்றார். எல்லாம் அவரோட மெரிட்தான். இதுல என் ரோல் ஒண்ணுமில்லே."

"நீங்க இதை எனக்கு சொல்லணுமா? உங்களைப்பத்தி எனக்கு தெரியாதா? வெல்கம்... மிஸ்டர் சம்பத்குமாரன், வெல்கம்... யூ வில் எஞ்சாய் யுர் ஸ்டே ஹியர். ஹெட் ஆஃபீஸ்லேருந்து வந்த உங்க ஆர்டர்சை லாஸ்ட் வீக் பார்த்தேன்... சம்பத்துன்னு சொன்னதும் சட்டுன்னு ரிலேட் பண்ணிக்க முடியலே."

* * * * *

"போன் பண்ணி பாராட்டியே ஆகணும்... வீட்டுல யாரோட சமையல் இன்னைக்கு? புளிசாதத்துக்கு, மசால் வடை, உருளைகிழங்கு சிப்ஸ்... சூப்பர் காம்பினேஷன்..." நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நடராஜன்.

"புளிசாதம் எங்க கனகா பாட்டி பண்ணாங்க. மசால் வடை பண்ணது சுந்தரி மாமி. இங்கே வர்றதுக்கு முன்னாடி நானும் ஒரு புடி புடிச்சுட்டுத்தான் வந்திருக்கேன்." சம்பத் அவர்களுக்கு குளிர்ந்த நீரை டம்ளரில் ஊற்றி பக்கத்தில் வைத்தான்.

"சம்பத்... உங்க வீட்டுலேதான் தங்கியிருக்காரா?"

"இப்போதைக்கு மாடியிலே சுகன்யாவோட ரூம் காலியாத்தானே இருக்கு. இங்கேயே இரேன்டாங்கறார் அப்பா. இவன் கேக்கமாட்டேங்கறான். தனியா வீடு வேணுமாம். காலையில நம்ம சீனுகிட்ட பேச டிரை பண்ணேன். அவன் கிடைக்கலே. சீனுவோட டே டு டே ப்ரொக்ராம் மீனாவுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்குமேன்னு காலையிலே அவகிட்டே பேசினேன்..

"யெஸ்... ஓரு ஆளுக்கு இப்ப தனி வீடு எதுக்கு?" நடராஜன் மசால்வடையை கடித்து நிதானமாக மென்று கொண்டிருந்தார்.

"ஹீ ஈஸ் கோயிங் டு கெட் மேரீட் வெரி வெரி சூன்..

"குட்... கங்கிராட்ஸ்..."

"சண்டேன்னைக்கு பத்திரிக்கையோட இவனும், இவனை கட்டிக்கப் போறவளும் உங்க வீட்டுக்கு வர்றதா இருக்காங்க..."

"அவசியம் வாங்க மிஸ்டர் சம்பத்..."

அத்தை பிள்ளைக்கு கல்யாணம்ன்னா, கல்யாணத்துக்கு சுகன்யாவும் வந்துதானே ஆகணும். நடராஜனின் மனதில் சட்டென சுகன்யாவின் முகமும், செல்வாவின் முகமும், ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

முருகா... செல்வாவை ரொம்ப சோதிக்காதே. அவனையும் சுகன்யாவையும் சீக்கிரமே ஒண்ணு சேர்த்துடுப்பா. மனதுக்குள் திருத்தணி முருகனை ஒரு முறை வேண்டிக்கொண்டார்.

சாப்பிட்டுக்கொண்டிருந்தவருக்கு பொறை ஏறியது. அதே நேரத்தில், நடராஜன் நினைத்ததையே, திருத்தணியில் முருகன் சன்னிதியில், மல்லிகா விண்ணப்பமாக்கிக் கொண்டிருந்தாள். 

இரண்டு வாரம் விடுமுறையில் இருந்தபின் அன்றுதான் அலுவலகத்திற்கு வந்திருந்தான் செல்வா. அவனுக்காக காத்திருந்த, அவனே செய்து முடிக்க வேண்டியிருந்த வேலைகளை, லஞ்சுக்கு கூட போகாமல், ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடித்தான். மேஜை காலியானதும்தான் அவனால் அப்பாடாவென மூச்சு விடமுடிந்தது.

மாலை நாலரை மணியளவில், வழக்கம் போல்,கேண்டீனின் வலதுபுற மூலையில், தன்னந்தனியாக உட்கார்ந்து கொண்டு தன் கையிலிருந்த கொதிக்கும் காஃபியை மெதுவாக உறிஞ்சிக்கொண்டிருந்தான் அவன்.

"செல்வா.. உன்னை எங்கெல்லாம் தேடறதுப்பா...?"

தனக்குப் பின்னாலிருந்து வந்த கூவலைக்கேட்டு அவன் திரும்புவதற்குள், அவன் தோளிலும் பட்டென ஒரு அடி விழுந்ததும், அவன் ஒரு நொடி அதிர்ந்து, விருட்டென பின்புறம் திரும்பியவன், அடுத்த நொடியில் தன் முகம் மலர்ந்து முறுவலிக்க ஆரம்பித்தான்.

"ஹாய் அனு... எப்டீ இருக்கே? எப்ப வந்தே பாண்டிச்சேரியிலேருந்து? இந்த ஆஃபீசுல ஜாய்ன் பண்ணிட்டியா?"

அனுவின் கையை உற்சாகமாக குலுக்க ஆரம்பித்த செல்வா, மூச்சு விடாமல், கேள்விக்கு மேல் கேள்வியாக கேட்டு அவளை திக்குமுக்காடவைத்தான்.

"ஒரு வாரமா உனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்கேன். 'ஸ்விட்ச்ட் ஆஃப்'ன்னே மெசேஜ் வருது? நேத்து ஈவினிங், கடைசியா, உன் தங்கை மீனாவுக்கு போன் பண்ணேன். சாமியார் மாதிரி, எங்கே போறேன்னு வீட்டுலகூட சொல்லிக்காம, ஊர் ஊரா நீ திரிஞ்சுக்கிட்டு இருக்கேன்னு அப்பத்தான் தெரிய வந்திச்சி. நீ பண்றதுல கொஞ்சமாவது ஞாயம் இருக்கா?"

"பெங்களூர் போயிருந்தேன் அனு. எங்கூட படிச்ச ஒரு ஃப்ரெண்டோட ஒரு வாரம் தங்கியிருந்தேன். இன்னைக்கு மார்னிங்தான் சென்னைக்கு வந்தேன். அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு கல்யாணமாமே? நீ ஏன் இதை எங்கிட்ட சொல்லவே இல்லே? மாப்பிள்ளை யாரு? அவரு என்னப்பண்றார்?"

"இன்னைக்கு ஈவினிங் உன் வீட்டுக்கு எங்க மேரேஜ் இன்விடேஷனோட வர்றதா இருக்கேன். அப்ப டீட்டெய்லா எல்லாக்கதையும் சொல்றேன்." புன்னகை பூவாய் இருந்தாள் அனு.

"பைன்... பைன்.. இப்படி உக்காரு நீ; மொதல்லே நீ என்ன சாப்பிடறே? அதைச்சொல்லு; நான் போய் வாங்கிட்டு வரேன்.." செல்வா வேகமாக எழுந்தான்.

"காபிமட்டும்தான் வேணும்... அதுவும் வந்துகிட்டு இருக்கு. மொதல்லே உன் காஃபி ஆறிப்போகறதுக்குள்ளே குடிச்சி முடி.. உன்கிட்ட எனக்கு நெறையப் பேசவேண்டியது இருக்கு."

அனுவின் முகத்தில் சிரிப்புக்கு குறைவேயில்லை.இவளால மட்டும் எப்படி பொங்கற ஆத்து வெள்ளம் மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுது? ஆத்துல கூட தண்ணி வத்திப்போவுது... ஆனா அனுவோட சிரிப்பு மட்டும் வத்தவே வத்தாது. செல்வா பொறாமையுடன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

செல்வாவின் தோளோடு தன் தோள் உரச உட்கார்ந்து கொண்டாள் அனு. தன்னுடைய இயல்பின்படி முகத்தில் பொங்கும் சிரிப்புடன், நெற்றியில் வந்து விழும் தன் முன்னுச்சி முடியை காதுக்குப் பின்னால் தள்ளிக்கொண்டே, அனு செல்வாவின் இடது கையை வெகு இயல்பாக தன் கரங்களில் எடுத்துக்கொண்டாள்.அவனுடைய மெல்லிய நீளமானவிரல்களை ஒன்றன் பின் ஒன்றாக நெட்டி முறிக்க ஆரம்பித்தாள்.

"என்னம்மா பண்றே? என் விரலை ஒடைச்சிடப்போறே?" செல்வா தவித்தான்.

"மிஸ்டர் செல்வா...இங்கே நான் உக்காரலாமா? உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?" செல்வா விருட்டென நிமிர்ந்தான். முகத்தில் இனிமையான புன்னகையுடன், கைகளில் காஃபி கோப்பைகளுடன், அவனெதிரில் நின்று கொண்டிருந்தான் சம்பத் என்கிற சம்பத்குமாரன்.

"சே..சே.. என்ன சொல்றீங்க? டேக் யுவர் சீட் ப்ளீஸ்..."

இங்கே எங்கே சம்பத் வந்தான்? அனுவுக்கு சம்பத்தை தெரியுமா? அனுவை திருமணம் பண்ணிக்கப் போறவன் சென்னையில வேலை செய்யறதா கோபாலன் சொன்னாரே? அப்படீன்னா சம்பத்துதான் அனுவை கல்யாணம் பண்ணிக்கப் போறவனா? சம்பத் பெங்களூர்லேல்லா வேலை செய்யறான்.

செல்வாவின் முகம் விருட்டென சிவக்க, அவன் முற்றிலும் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். அனு இன்னமும் செல்வாவின் கரத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்தாள். சம்பத் வெகு வெகு இயல்பாக இருந்தான்.

சுகன்யாவுக்கு சம்பத் உறவு. இவன் சுகன்யாகிட்ட சிரிச்சி பேசினதையே என்னாலத் தாங்கிக்கமுடியலியே? இவன் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு என் தோளோடு தோள் உரச உக்காந்து, என் கையை வேற பிடிச்சிக்கிட்டு இருக்கா. இவன் சிரிச்சுக்கிட்டு உக்காந்து இருக்கான். செல்வாவின் மனம் கபடி ஆடிக்கொண்டிருந்தது. 
"செல்வா... மீட் மை வுட் பீ... மிஸ்டர் சம்பத்குமாரன்..." சொல்லிவிட்டு தன் வலது கண்ணைச் சிமிட்டினாள் அனுராதா.

அனு என்ன சொல்றா? எனக்கு காது சரியாத்தான் கேக்குதா? அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த செல்வா தனக்குள் மீண்டும் ஒரு முறை அதிர்ந்தான்.

"என்ன செல்வா.. என்னமோ ஷாக்கான மாதிரிப் பார்க்கிறே? சம்பத்... இவர் மிஸ்டர் தமிழ்ச்செல்வன், என்னோட வெரிகுட் ஃப்ரெண்ட்.." அனு மிக மிக சந்தோஷமாக சிரித்தாள்.

"கங்கிராட்ஸ் மிஸ்டர் சம்பத்.. என்னால நம்பவே முடியலே; அனு உங்களோட மனைவியா ஆகப்போறாளா? எனிவே... ஆல் த வெரி பெஸ்ட்... யூ மஸ்ட் பீ வெரி வெரி லக்கி டு ஹேவ் எ வுமன் லைக் ஹர்..." செல்வா சம்பத்தின் கரத்தை இறுகப்பற்றி குலுக்க ஆரம்பித்தான்.

"அனு உங்க மனைவி ஆகப்போறாளா? இது என்னக்கேள்வி? அவரைப்பாத்து ஏன் இப்படி கேக்கறே நீ?" தலையை குனிந்து கொண்டிருந்த அனு செல்வாவின் இடுப்பில் குத்தினாள்.

"அனு.. நான் சொல்லப்போறதை கேட்டு நீ அதிர்ச்சியடையாதே. மிஸ்டர் செல்வாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் ஏற்கனவே ஒரு முறை சந்திச்சிருக்கோம். ஆனா அந்த சந்திப்பு அவ்வளவு சுமுகமானதா இருக்கலே..."

"சம்பத்... உங்களுக்கு செல்வாவை முன்னாடியே தெரியுமா? இந்த விஷயத்தை எங்கிட்ட நீங்க சொன்னதேயில்லை.? சுகன்யாவும் இதைப்பத்தி சொன்னதேயில்லை..." தன் முகத்தைச் சுளித்துக்கொண்டு படபடவென பொரிய ஆரம்பித்தாள் அனு.

"அயாம் சாரி அனு... உங்கிட்டேருந்து எதையும் நான் மறைக்க விரும்பலே. ஆனா சில விஷயங்களை சொல்றதுக்கு எனக்கு இன்னும் சரியான சந்தர்ப்பம் வாய்க்கலே... இதுதான் உண்மை. நம்ம கல்யாணம் முடியட்டும். அப்புறம்..."

"அப்புறம்??"

"செல்வாவும், சுகன்யாவும் திரும்பவும் ஒண்ணு சேரட்டும். நான்... செல்வா, சுகன்யா, நாங்க மூணு பேரும் ஒருத்தரோட ஒருத்தர், ஒரு குறுகிய காலத்துலே எப்படியெல்லாம் சம்பந்தபட்டுட்டோங்கறதை, உனக்கு நான் சொல்றேன்."

"சரீங்க..." தன் சிவந்த கீழ் உதட்டை கடித்து அதை மேலும் சிவப்பாக்கிக் கொண்டாள் அனு.

"டியர்... இன்னும் கொஞ்சம் நாள் பொறுமையா இரு. என்னை நம்பு..." சம்பத் வெகு இனிமையாக புன்னகைத்தான்.

அனுவிடம் பேசிக்கொண்டே, மேஜையின் குறுக்கே தன் கையை நீட்டி செல்வாவின் வலது கரத்தை மெல்ல வருடினான் சம்பத். சம்பத் தன்னைத் தொட்டதும் செல்வா சிலிர்த்தான். சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தான். இப்போது செல்வாவை நோக்கி நட்புடன் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவன்.

"ஓ.கே.. ஓ.கே.. உங்களை நம்பிட்டேன் நான். உங்க பின்னாடி வரவும் தயாராயிட்டேன். கல்யாணப் பத்திரிக்கையும் அடிச்சாச்சு.. இனிமே உங்களை விட்டுட்டு எங்கே ஓடறது?" அனுவின் முகத்தில் மீண்டும் சிரிப்பும், வெட்கமும் ஒன்றாக வந்தது. செல்வாவின் பக்கம் திரும்பினாள் அவள்.

"செல்வா...உன் ஹேண்ட்சம்மான மூஞ்சை ஏன் இப்படி அலங்கோலம் பண்ணி வெச்சிருக்கே? ஹூம்ம்? உனக்கு தாடியும் மீசையும் நல்லாவேயில்லை. பிச்சைக்காரன் மாதிரியிருக்கே; எனக்கே உன்னைப்பாக்க சகிக்கலே. இந்தக் கோலத்துல சுகன்யா மட்டும் உன்னைப்பாத்தா, அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும். என் ஃப்ரெண்டை நீ சாகடிச்சுடாதே..."

"ம்ம்ம்.. ப்ளீஸ் அனு.. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?" செல்வா தன் தலையை குனிந்து கொண்டான். அவன் உடலுக்குள் சூடு ஏற ஆரம்பித்தது. ஓரக்கண்ணால் சம்பத்தை பார்த்தான். மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.

"இன்னைக்கு ஈவீனிங், நாங்க ரெண்டு பேருமா, எங்க திருமணத்துக்கு உங்களையெல்லாம் அழைக்கறதுக்காக உங்க வீட்டுக்கு வர்றோம்."

"அவசியம் வாங்க... ராத்திரிக்கு எங்க வீட்டுலதான் நீங்க ரெண்டு பேரும் டிஃபன் சாப்பிடணும்..." செல்வா சம்பத்தை கெஞ்சலாகப் பார்த்தான்.

"செல்வா.. நான் உன் வீட்டுக்கு வர்றப்ப, உன் சுத்தமான மூஞ்சை பாக்க ஆசைப்படறேன். இல்லேன்னா அங்க நடக்கறதே வேற... இப்பவே சொல்லிட்டேன் ஆமாம்.." அனு செல்வாவின் முதுகில் மீண்டும் ஒரு முறை ஓங்கி அடித்தாள். தன் முகம் சிவக்க செல்வா அவளை நிமிர்ந்து பார்த்தான். தன்னைப் பார்த்தவன் தலைமுடியை நட்புடன் ஒரு முறை கலைத்தாள் அனு.

சம்பத் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். செல்வாவின் தோளில் தன் கையைப் போட்டுக்கொண்டான். அவனுடன் வெளியில் வந்தவன், கேண்டீனுக்கு எதிரிலிருந்த பெரிய அரசமரநிழலில் நின்றான். அனு அவர்கள் இருவரையும் புன்னகையுடன் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

"செல்வா.. என்னை நீங்கத்தவறா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. சுவாமிமலையிலே உங்க எங்கேஜ்மென்டுக்கு முன்னாடி நடந்ததையெல்லாம் இன்னும் நீங்க மறக்கலேன்னு நான் நினைக்கிறேன். என்னை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டா பரவாயில்லே. அதனால யாருக்கும் நஷ்டமில்லே. ஆனா சுகன்யாவையும் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்களே. இதனால நிறையபேருக்கு நஷ்டம். இதை மட்டும் நீங்க தயவுசெய்து புரிஞ்சுக்கணும்."

"ப்ச்ச்ச்..." செல்வா விரக்தியாக சூள் கொட்டினான்.

"நான் சொல்றதை கேளுங்க. சுகன்யா உங்களைத்தான் லவ் பண்ணா. உங்களை மட்டுமேதான் லவ் பண்ணிகிட்டு இருக்கா. என் அனு சொன்னது மாதிரி, பழைய உற்சாகமான, தமிழ்செல்வனா, உங்க வீட்டுக்கு எங்களை நீங்க வரவேற்கணும்."

"ஷ்யூர்... முழு மனசோட, முழு விருப்பத்தோட, உங்களை நான் என் வீட்டுக்கு கூப்பிடறேன்... சம்பத் கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்..." செல்வா, சம்பத்தின் கைகளை பற்றிக்கொண்டான்.



"அனு உங்களோட நல்ல ஃப்ரெண்ட். சுகன்யா என்னோட மாமா பொண்ணு. அவ எனக்கு மாமா பொண்ணு மட்டும்தான்; உங்களுக்கு மட்டும்தான் அவ முழுமையாக சொந்தம். இரு தரப்பிலேருந்தும், நீங்க எனக்கு ரொம்ப நெருங்கியவரா ஆயிட்டீங்க. எங்க கல்யாணத்துக்கு நீங்க உங்க குடும்பத்தோட, உங்க ஃப்ரெண்ட் சீனுவோட, கண்டிப்பா சுவாமிமலைக்கு வரணும்."

"நான் உங்களை தப்பா புரிஞ்சுகிட்டது உண்மைதான் சம்பத்... அதுக்கு இப்ப நான் ரொம்பவே அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன். அயாம் சாரி... என் தப்புக்கு உங்கக்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்."

"செல்வா... யாருகிட்டே குறை இல்லே?. உங்க வருத்தத்தை நீங்க சுகன்யாகிட்ட சொல்லுங்க... அதுபோதும். திரும்பவும் சொல்றேன். சுகன்யா லவ்ஸ் யூ ஒன்லி..." செல்வாவின் முதுகில் ஆதரவாக தட்டிக்கொடுத்த சம்பத், அனுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

அருமையான ஜோடி பொருத்தமென தன் மனதுக்குள் எழுந்த எண்ணத்தை அவனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. 'மே காட் பளஸ் தெம்...' அவன் உதடுகள் முணுமுணுக்க, தனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த காதலர்களை ஏக்கத்துடன் நோக்கியவாறு நின்றிருந்தான் செல்வா.

No comments:

Post a Comment