Tuesday 31 March 2015

சுகன்யா... 84

திருவான்மியூரில், குமாரசுவாமியின் குடும்பத்தினருக்காக, சீனு பார்த்திருந்த வீடு, தனிக்காம்பவுண்டில், வராந்தாவும், அதைக்கடந்ததும், ஒரு பெரிய ஹாலும், ஹாலுக்கு இடது வலது புறங்களில் மூன்று ரூம்களும், இரண்டு பால்கனிகளும், பூஜைக்கென கதவுடன் கூடிய ஒரு தனியிடமும், கிச்சன், பாத்ரூம் என கீழ்ப்போர்ஷனில், புழங்குவதற்கு வசதியாக இருந்தது.

மாடியிலும், இரண்டு பேர் தங்குமளவுக்கு ஒரு அறை இருந்தது. அறைக்குப் பின் மொட்டை மாடியாக இருந்தது. 'மாடியில ஒரு ரூம் இருக்கற வீடாப் பாருங்கப்பா...' அப்பாவிடம் தன் விருப்பமாக சுகன்யா சொல்லியிருந்தது இந்த ஒரு கண்டீஷன்தான். மாடி அறைக்கு வெளியில் பாத்ரூமும், டாய்லெட்டும் இருந்தன. அங்கிள், சுகன்யா வில் செர்டன்லி லைக் திஸ் அக்காமடேஷன் என சீனு சிரித்துக்கொண்டே சொன்னான்.



வீட்டு காம்பவுண்டுக்குள் இரண்டு கார்களை நிறுத்திக் கொள்ளுமளவுக்கு தாராளமாக காலி இடமும் இருந்தது. சிறிய லானில் புற்கள் பச்சைபசேலென கட்டுக்கு அடங்காமல் வளர்ந்திருந்தன. ஒரு முறை ஒழுங்காக வெட்டி சுத்தம் செய்துவிட்டால், பின் மாலையில் அங்கு சவுகரியமாக உட்க்கார ஒரு சிமெண்ட் பெஞ்சும் புதைக்கப்பட்டிருந்தது. வீட்டைக்கட்டியவன் வாழ்க்கையை ரசித்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் கட்டியிருக்கவேண்டும் என குமாரசுவாமி நினைத்தார்.

வீட்டுக்குப் பின்னால் நான்கைந்து தென்னை மரங்களும், வேப்ப மரமொன்றும், நாரத்தை மரம் ஒன்றும் காற்றில் தலையாட்டிக் கொண்டிருக்க, வீடே குளுகுளுவென இருந்தது. சுந்தரிக்கு இந்த வீடு நிச்சயமாகப் பிடித்துவிடுமென குமாரசுவாமியின் மனதுக்குப்பட்டது.

வீட்டுக்கு அவ்வப்போது வரும் தன் மச்சினர் ரகுவோ, அல்லது வேறு யாராவது விருந்தினர்களாக வந்தாலும், அவர்களைத் தங்கவைத்து உபசரிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில், வாடகை சிறிது அதிகமாக இருந்தபோதிலும், மொத்தத்தில் வீடு குமாரசுவாமிக்கு வெகுவாகப் பிடித்துப்போக, தங்களது உபயோகத்துக்காக முழு வீட்டையும் அவர் வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.

நடராஜன் வீட்டிலிருந்து, அவர் பார்த்த வீடு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால், சுகன்யாவின் திருமணத்துக்குப் பின்னும், நினைத்த போது, வீட்டுப்பெண்கள் அவளைப் பார்த்துவிட்டு வர வசதியாக இருக்கும் என அவர் நினைத்தார். மறு யோசனை செய்யாமல், உடனே வீட்டுக்காரனிடம் அட்வான்ஸும் கொடுத்துவிட்டு, சீனுவுக்கு நாலு முறை நன்றி சொன்னார்.

சுந்தரியும், அவருடைய பெற்றோர்களும் சென்னைக்கு அந்த வார இறுதியிலேயே வந்துவிட்டார்கள். சுகன்யாவும், மாணிக்கத்தின் வீட்டையும், வேணியையும் கொஞ்சமும் பிரிய மனமில்லாமல், மனதில் சிறிது வருத்தத்துடனேயே, தன் சாமான்களை எடுத்துக்கொண்டு புது வீட்டிற்கு வந்து சேர்ந்து ஒரு வாரமாகியிருந்தது.

சனிக்கிழமையன்று லஞ்சுக்குப்பின்னர் பாட்டியுடன் பேசிக்கொண்டே, சுகன்யா தன் சாமான்களை மாடியறையில் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தபோது, அவளுடைய செல் சிணுங்க, அதில் செல்வாவின் நம்பர் மின்ன, மனதுக்குள் சட்டென பொங்கிய சந்தோஷத்துடன், பால்கனியில் வந்து நின்றுகொண்டு, மெல்லியக்குரலில் பேச ஆரம்பித்தாள் அவள்.


"செல்வா, என் மேல உனக்கிருக்கற கோபம் ஒரு வழியாத் தீந்துதா...?

"..."

"இல்லே இவ உயிரோடத்தான் இருக்கறளா இல்லையா... இதைத் தெரிஞ்சுக்கலாம்னு போன் பண்ணியா? இப்படி என்னை அழ வைக்கறதுல உனக்கு என்னப்பா சந்தோஷம்?"

செல்வா ஒருவாரமாக அவளுடன் பிடிவாதமாக பேசாமல் இருந்ததால், மனதில் உண்டாகியிருந்த ஏக்கமும், ஆற்றாமையும் ஒரு புறம் அவளை தீவிரமாக அழுத்த, மறுபுறத்தில் கடைசியில் தன்னை செல்லில் அவன் கூப்பிட்டுவிட்டான் என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சியால் சிணுங்கினாள் சுகன்யா.

"..."

"பேசுடா.. செல்வா... உன் மேல எந்தத் தப்பும் இல்லேன்னு நீ நினைக்கறே. நான் அதையும் சரின்னு ஒத்துக்கறேன். அன்னைக்கு என் ரூம்ல நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீ நினைச்சா, அதுக்கு நான் திரும்பவும் ஒரு தரம் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்... செல்வா ரியலி அயாம் சாரி..."

"..."

"எத்தனைத்தரம் நான் உனக்கு சாரி சொல்லணும்? நீ இப்படி பிஹேவ் பண்றது நிச்சயமா சரியில்லே... எங்கிட்ட பேசறதுக்கு உனக்கு இவ்வளவு தயக்கமா?

"..."

சுகன்யாவுக்கு திடுமென சந்தேகம் வந்தது அடுத்தமுனையில் இருப்பது செல்வாதானா? இல்லே வேறு யாராவது செல்வாவின் செல்லில் தன்னிடம் பேசவிரும்புகிறார்களா? யாருன்னு கேக்காமலே நான் பாட்டுக்கு அறிவில்லாம பேசிக்கிட்டேப் போறேன்?

"செல்வா.. நீதானே போன் பண்ணது?"

"சுகன்யா... நான் மீனா பேசறேன்... அயாம் சாரி... நான் நெனைச்சது சரியாத்தான் இருக்கு.."

"நீயாடீ மீனா..? நல்லதாப் போச்சு.. உங்கிட்டத்தானே நான் உளறியிருக்கேன்... இதுவே உன் பேரண்ட்ஸா இருந்திருந்தா நான் செத்தேன்..."

"ஏண்டீ இப்படீல்லாம் டிஜக்டடா பேசறே நீ?"

"நீ ஏண்டி செல்வா செல்லுலேருந்து என்னைக் கூப்பிடறே... உன் செல்லு என்னாச்சு... சரிடீ.. இப்ப என்ன சரியா இருக்குன்னு நீ சொல்றே?"

சுகன்யா பேசியது அவளுக்கே கேட்கவில்லை. ப்ச்ச்ச்.. எங்களுக்குள்ள இருக்கற சச்சரவு, மூணாவது ஆளா, இப்ப இவளுக்கும் தெரிஞ்சுப் போச்சு. தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் சுகன்யா.

"உனக்கும், செல்வாவுக்கும் நடுவுல திருப்பியும் எதாவது சண்டையா? உங்க பர்சனல் விஷயத்துல நான் தலையிடறேன்னு நினைச்சுக்காதே... எனக்கென்னமோ ஒரு வாரமாவே ஒரு சின்னச் சந்தேகம் இருந்தது. அதனாலத்தான் செல்வா போன்லே உன்னைக் கூப்பிட்டேன்..."

"நீ நினைக்கற மாதிரில்லாம் ஒண்ணுமில்லேடீ.."

"சுகா... நீ பொய் சொல்லாதே... உன் குரலே சொல்லுது... சம்திங்க் ஈஸ் ராங்... இந்த வாரத்துல மட்டும் நீ செல்வாவுக்கு இருபத்தெட்டு கால் பண்ணியிருக்கே. ஒரு நாளைக்கு உனக்கு பத்து கால் பண்ற செல்வா, ஒரு கால் கூட அவன் உனக்கு பண்ணவே இல்லே. உன் கால் வந்தா சட்டுன்னு கட் பண்றான் அவன். ஒரு வாரமா அவனும் மூஞ்சைத் தூக்கி வெச்சுக்கிட்டு வீட்டுல உர் உர்னு இருக்கான். நான் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். உண்மையைச் சொல்லு. என்ன நடக்குது உங்களுக்குள்ளே?"

"உன் சந்தேகம் சரிதான்டீ... செல்வா எங்கிட்ட கோவமா இருக்கார்..." சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.

"என்னப்பா சுகா... என்ன விஷயம்...? எங்கிட்ட சொல்லக்கூடாதா? நான் என்னன்னு கேட்டிருப்பேன்ல்லா அவனை." மீனா உரிமையும், ஆதரவுமாக பேசினாள்.

"மீனா.. ப்ளீஸ்... நீ ஒண்ணும் அவரைக் கேட்டுடாதே? உன் கிட்ட சொல்ல எனக்கு மனசு துடிக்குதுடீ... ஆனா நீ செல்வாவோட தங்கை... என் வருங்கால நாத்தானார்... அதனால உன் கிட்ட எங்கப் பிரச்சனையைச் சொல்லவும் கொஞ்சம் தயக்கமா இருக்குடி..."

"சுகன்யா... நீ ஒரு மேட்டரை நல்லாப் புரிஞ்சுக்கோ. உன் கல்யாணத்தால, நமக்குள்ள ஏற்படப்போற சொந்தத்தை விட, நம்மோட ஃப்ரெண்ட்ஷிப்பைத்தான் நான் அதிகமாக மதிக்கிறேன். உன்னை என்னோட டியரஸ்ட் ஃப்ரெண்டா நான் நினைக்கிறேன்... நான் உன் ஃப்ரெண்டுடீ... இதை எப்படி நீ மறக்கலாம். நீ அழறதை என்னாலப் பொறுத்துக்க முடியாது... மொதல்லே நீ விஷயத்தைச் சொல்லு..."

"நான் இதைப் போன்ல பேசவேணாம்ன்னு பாக்கறேன்... மீனா... நாளைக்கு நாம எங்கேயாவது தனியா மீட் பண்ணலாமா? இல்லேன்னா என் வீட்டுக்கு வாயேன் நீ.."

"நான் உன் வீட்டுக்கு நாளைக்கு வரமுடியாது... நீ தான் என் வீட்டுக்கு வரணும்.." மீனா குறும்பாகச்சிரித்தாள்.

"ஏண்டீ இப்படி மொக்கைப் போடறே நீ?"

"சுகா.. நாளைக்கு நாம கண்டிப்பா மீட் பண்ணத்தான் போறோம்... இன் ஃபேக்ட்.. உன்னை எங்க வீட்டுக்கு இன்வைட் பண்றதுக்குத்தான் நான் இப்ப போன் பண்ணேன். அப்பாவும் ஈவினிங் உங்க வீட்டுக்கு வர்றதா இருக்கார். நீங்க எல்லாரும் நாளைக்கு எங்க வீட்டுக்கு வரணும்..."

"என்ன விஷயம்டீ?"

"ஒரு குட் நீயூஸ்... எனக்கு வேலை கிடைச்சுடிச்சு சுகா... அதுவும் சென்னையிலேயே போஸ்டிங் குடுத்திருக்காங்க. காலையிலத்தான் எனக்கு மெயில் வந்தது... எனக்கு எக்ஸாம் முடிஞ்ச மறுநாளே நான் வேலையில ஜாய்ன் பண்ணணும்..."

"கங்கிராட்ஸ்டீ மீனா..."

"தேங்க் யூ... தென்... எனக்கு நாளைக்கு பர்த் டே..."


"அட்வான்ஸ்ல உனக்கு "ஹேப்பி பர்த் டே டு யூ" மீனா.. அயாம் வெரி வெரி ஹாப்பிடீ..."

"தேங்க் யூ சுகா.."

"அப்புறம்... சீனு வீட்டுலேருந்து நாளைக்கு என்னைப் ஃபார்மலா பொண்ணு பார்க்க வர்றாங்க..."

"வெரி வெரி நைஸ்... கண்டிப்பா இதெல்லாத்துக்குமா சேர்த்து நீ ஒரு க்ரேண்ட் பார்ட்டி குடுத்தே ஆகணும்.."

"யெஸ்... யெஸ்... கண்டிப்பா நான் முதல் சேலரி வாங்கினதும் உனக்கு மட்டும் ஒரு தனியா பார்ட்டி குடுப்பேன். நாளைக்கு ஈவினிங் நாலு மணிக்கு எங்க வீட்டுல ஒரு சின்னப் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கோம். நம்ம மூணு குடும்பமும் ஒண்ணா உக்காந்து டிஃபன் சாப்பிடலாம்ன்னு என் பேரண்ட்ஸ் நினைக்கிறாங்க. இது என் தரப்புலேருந்து என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு ஸ்பெஷல் இன்விடேஷன்." மீனா கலகலவென சிரித்தாள்.

"மீனு... நீ சொன்ன எல்லாமே சந்தோஷமான விஷயம்டீ... நிச்சயமா அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியோட நான் வந்துடறேன்..."

"மீனு"னு மட்டும் நீ கூட என்னைக் கூப்பிடக்கூடாது..! திஸ் ஈஸ் மை ரிக்வெஸ்ட்.."

"ஏண்டீ..?"

"சீனு மட்டும்தான் என்னை அப்படி கூப்பிடாலம்.. தட் ஈஸ் ஒன்லி ஃபார் மை சீனு.." மீனா வெட்கத்துடன் முனகினாள்.

"சாரிடிம்மா... இனிமே அப்படி கூப்பிடமாட்டேன்... இந்த மேட்டருக்குன்னே சீனு கிட்ட ஒரு பார்ட்டி வாங்கிடறேன்.." சுகன்யாவும் குஷியாக சிரித்தாள்.

"அவனாவது... பார்ட்டி குடுக்கறதாவது... அவன் பார்ட்டி அட்டண்ட் பண்ற ஆளுடீ... நீ இன்னும் அவனை சரியா புரிஞ்சுக்கலே... நாளைக்கு வரேல்லா... எல்லாத்தையும் நான் உனக்கு வில்லாவரியா சொல்றேன்.."

"ம்ம்ம்.."

"ஒரு பத்து நாளைக்கு முன்னாடீ, சீனுவை, சீனுவோட குடிகார ஃப்ரெண்ட் ஒருத்தன் - கோழி மிதிக்கலாம் வான்னு கூப்பிட்டான்.. இரண்டு பேருக்கும் சேர்த்து, சரியான ஆப்பு ஒண்ணு வெச்சேன்... சீனுவுக்கு இப்ப என்னைப் பாத்தாலே செமை மெர்சல்தான்..." மீனா ஹோவென இரைந்து சிரித்தாள்.

"நல்ல மனுஷன்டீ அவரு... அவரைப் போய் இப்டீல்லாம் கலாய்க்கறே நீ?" சுகன்யாவும் தன் வாய்விட்டு சிரித்தாள். மனம் இலேசாகிக்கொண்டிருந்தது அவளுக்கு.

"சுகா... நவ் லெட் அஸ் டாக் சீரியஸ்லி... சீனு வீட்டுலேருந்து அவனோட பேரண்ட்ஸ், அவனோட அத்தை, இன்னும் ரெண்டு பேரு, நாலு மணிக்கு எங்க வீட்டுக்கு வர்றாங்க... உங்க வீட்டுலேருந்தும் பெரியவங்க அவங்க சவுகரியப்படி எப்ப வேணா வரட்டும்... சுகன்யா ப்ளீஸ்... நீ மார்னிங்கே வந்துடுடீ... த ஹோல் டே... நீதான்டீ என் கூடவே இருக்கணும்...

"ஓ.கே... ஓ.கே... அக்ரீட்..." சுகன்யா ஒத்துக்கொண்டாள்.

"நீ எதுக்கும் கவலைப்படாதே.. என் ஃபிரதரைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. இப்பவே அவன் காதைத் திருகி, அவனை உன் கிட்ட பேச வைக்கலே என் பேரு "மீனுக்குட்டி" இல்லே... இப்படித்தாண்டீ சீனு என்னை ஆசையா கூப்பிடறாரு..." மீனா களிப்புடன் முனகினாள்.

"பிளீஸ்... மீனா... இப்ப நீ எதுவும் செல்வா கிட்டே கேக்காதே... எல்லாத்தையும் நான் நேர்ல உன் கிட்ட சொல்லிடறேன்... மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்." சுகன்யா கெஞ்சினாள்.

"ஓ.கே.. அக்ரீட் மை டியர் அண்ணீ... அக்ரீட்... பை..." மீனா செல்லை அணைத்தாள்.

"மீனுக்குட்டி..." சீனு உனக்கு வெச்சிருக்கற செல்லப்பேரு ரொம்ப ஸ்வீட்டா இருக்குடி... நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சண்டைப் போட்டுக்காம, சந்தோஷமா இருக்கணும்... சுகன்யா நீளமான பெருமூச்சொன்றை விட்டாள்.


"ஏய் மீனா.. உனக்கு எத்தனை தரம் சொல்லியாச்சு... என் செல்லை ஏண்டி நீ நோண்டறே...?" செல்வா எரிச்சலுடன் வெராண்டாவிற்கு வந்தான்.

"இப்ப எதுக்கு டென்ஷனாவறே நீ... நான் என்ன கொழந்தையா... உன் செல்லை நான் கெடுத்துடுவேனா... ரொம்பத்தான் அல்டிக்காதே..."

"சில விஷயங்கள் ஃப்யூர்லி பர்சனல்; சொன்னப் புரிஞ்சுக்கடீ... ப்ளீஸ் என் செல்லை நீ எடுக்காதே... அவ்வளவுதான்... திஸ் இஸ் ஃபைனல். தட்ஸ் ஆல்" செல்வா வெடித்தான்.

"நீ அடிக்கற கூத்து எனக்குத் தெரிஞ்சு போச்சேன்னு எரிச்சலா?" உதடுகளை சுழித்தாள் மீனா.

"என்னடிப் பேசறே?"

"சுகன்யாவை நீ எப்படி வேணா மெரட்டிக்கிட்டு இரு... என்னை நீ மிரட்ட முடியாது... நீயும் இதை ஞாபகத்துல வெச்சுக்கோ?

"என்னடி உளர்றே?"

"எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு" சொல்லிக்கொண்டே அவள் ஹாலில் நுழைந்தாள். ஹாலில் நடராஜனும், மல்லிகாவும் சுகன்யா வீட்டிற்கு கிளம்புவதற்காக தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

"ஹேய் நில்லுடீ... உனக்கு என்னடி தெரியும்" சுகன்யா எல்லாத்தையும் இவ கிட்ட சொல்லிட்டாளா? செல்வா உள்ளுக்குள் இலேசாகப் பதறிப்போனான்.

சுகன்யா என்கிட்ட எதையும் சொல்லலே. எனக்கு என்னத் தெரியும்ன்னு குதிக்கற செல்வாவை இப்ப எப்படி மடக்கறது? மீனாவின் முளை படு வேகமாக வேலைசெய்தது.

செல்வா போன மண்டே சாயந்திரம், வேணிக்கு அதிரசம் குடுக்கறேன்னு, சுகன்யா கூட, அவ வீட்டுக்குப் போனான். அவ்வளவு தூரம் போனவன், அம்மா சொன்ன வேலையை மட்டுமா செய்திருப்பான்?

செல்வா சந்தேகமேயில்லாம, சுகன்யா கூட அவ ரூமுக்கும் போயிருப்பான். அப்பதான் இவங்க ரெண்டு பேருக்குள்ள எதாவது டென்ஷன் ஆகியிருக்கணும். சுகன்யா வீட்டுலேருந்து செல்வா திரும்பி வரும் போதே எரிச்சலோடத்தான் வந்தான்.

அம்மா கேட்ட எந்தக் கேள்விக்கும் இவன் ஒழுங்கா பதில் சொல்லலை. நானும் பாக்கறேன் அன்னையிலேருந்துதான் அய்யாவோட மூடும் சரியில்லை. ஒண்ணும் ஓண்ணும் ரெண்டு.

சுகன்யா போன் பண்ணாலும் அவகிட்டவும் இவன் பேசறது இல்லே. அவ காலை பட்டு பட்டுன்னு கட் பண்றான். சுகன்யா என்னடான்னா, என்னை ஏண்டா இப்படி அழவெக்கறேன்னு ரொம்பவே எமோஷனலா பேசறா..!! தூண்டித் துருவிக்கேட்டா அழுதுடுவா போல இருக்கு. ரெண்டும் ரெண்டும் நாலு.

செல்வாதான் எதாவது சுகன்யாகிட்ட தேவையே இல்லாம, கூத்தடிச்சிருப்பான்... ஸோ... இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ பிரச்சனை இருக்குங்கறது நிச்சயமாகிப் போச்சு. இவனை கொஞ்சம் எடக்கு மடக்கா இப்படி டீல் பண்ணாத்தான், இவன் அவகிட்ட பேசுவான். இவன் அவ கிட்ட சிரிச்சிப் பேசினாத்தான், நாளைக்கு சுகன்யா சிரிச்ச முகத்தோட இங்க வருவா.

இவனை இப்ப கொஞ்சம் நோண்டித்தான் பாக்கிறேனே? சுகன்யா இவனுக்கு பொண்டாட்டின்னா, எனக்கு அண்ணி. என் அண்ணியை இவன் எதுக்கு அழவெக்கணும். ஏற்கனவே ஒரு வாரம் ஆகிப் போச்சு. இதுக்கும் மேலே என்னாலப் பொறுத்திருக்க முடியாது. நாளைக்கு சுகன்யா இங்க வந்து, அவ விஷயத்தைச் சொல்றதுக்குள்ள, எனக்குத் தலை வெடிச்சிப் போயிடும். எதாவது ஒரு பிட்டைப் போட்டு பாக்கலாமே...? செல்வா மாட்டாமலா போயிடுவான். மீனா தன் மனதுக்குள் முடிவெடுத்தாள்.

"உன் கதை எல்லாம் எனக்குத் தெரியும்... சுகன்யா எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா" தனக்கு விஷயமே தெரியாமல் இருந்த போதிலும் மீனா சகட்டுமேனிக்கு செல்வாவைப் போட்டுத் தள்ள ஆரம்பித்தாள்.

"திரும்ப திரும்ப பேசற நீ..? உனக்கு என்னத் தெரியும்ன்னுதான் நானும் கேக்கிறேன்." செல்வாவுக்கு நிஜமாகவே எரிச்சல் கிளம்பியது. அவன் மனதும் வேகமாக வேலை செய்தது.

ஒரு வாரமா நானும் பெரிய புடுங்கல் மாதிரி சுகன்யா கிட்ட முறுக்கிக்கிட்டு இருந்துட்டேன். என்னமோ அவளை அழவெச்சுப் பாக்கணும்ன்னு என் மனசுக்குள்ள ஒரு ஆசை அன்னைக்கு வந்திடிச்சி. பாவம் நிஜமாவே அவளுக்கு நல்ல மனசு இருக்கவேதானே, என் நெத்தியில அவ்வளவு அக்கறையா விபூதியைக் கொண்டாந்து பூசினா..! என்னை அவ வெறுப்பேத்தினாங்கறதுக்காக பதிலுக்கு அவளை நான் பேசாமலே இருந்து வெறுப்பேத்தணும்ன்னு இருந்துட்டேன்.

அஞ்சு நாளாப் தொடர்ந்து அவளும் விடாம எனக்கு கால் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தா. ஒழுங்கு முறையா சாரிடீச் செல்லம்ன்னு சொல்லிட்டு, பீச்சுல விக்கற, அவளுக்குப் புடிச்ச வாழைக்கா பஜ்ஜியை ரெண்டு வாங்கி கையில குடுத்துட்டு, அவ திண்ணுக்கிட்டு இருக்கும் போதே, அவ எச்சை ஒதட்டுல, ரெண்டு கிஸ்ஸாவது அடிச்சிருக்கலாம். கொஞ்ச நேரம் கிக்காவது இருந்திருக்கும். நண்டு கொழுத்தா வளையில தங்காதுங்கற கதைதான் என் கதை.

நேத்து நைட்டே பேசிடலாம்ன்னு பாத்தேன். அதுக்குள்ள அவ பண்ண கால் கட்டாயிடுச்சி. சத்தியக்கட்டுக்கு இன்னைக்கு காலையிலேருந்து சுகன்யா என்னைக் கூப்பிடவேயில்லை. இவ்வளவையும் இந்த கொரங்கு மீனா என்னை விடாம கீனா வாச் பண்ணிக்கிட்டு இருந்திருக்கா..! என் போன்லேருந்து அவகிட்ட பேசி அரைகுறையா எதையோ தெரிஞ்சுக்கிட்டு இப்ப நடுவுல பூந்து குட்டையைக் குழப்பறா?

அம்மாவும், அப்பாவும், நாளையப் பார்ட்டிக்கு எங்க சம்பந்தியை நேராப் போய் கூப்பிடப் போறேன்னு துள்ளி குதிச்சிக்கிட்டு திருவான்மியூருக்கு கிளம்புறாங்க. போற எடத்துல, என் அம்மா ரொம்ப பாசம் பொங்கிப்போய், வீட்டுக்கு வரப்போற மருமவளை, கண்ணு... எப்படி இருக்கேடீன்னு கேட்டு, பதிலுக்கு சுகன்யாவும், அத்தே, அத்தேன்னு, கொழையடிச்சி, எந்த சங்கையாவது எடுத்து ஏடாகூடாம, ஊதிட்டாள்ன்னா, மல்லிகா அம்மையார், வீட்டுக்கு வந்து என் கழுத்துல நிச்சயமா துண்டைப் போட்டு இறுக்கிடுவாங்க.

நிச்சயத்தார்த்ததுக்கு போனப்பவே நான் நோட் பண்ணேன். சுகன்யாவோட அம்மாவும் ரொம்ப ஷார்ப்பாத்தான் இருக்காங்க. அவங்க கண்ணுலேருந்து எதுவுமே தப்பலை. நாளைக்குப் பார்ட்டிக்கு சுகன்யா கண்டிப்பா வருவா. அவளும் ரோஷக்காரி. என் கிட்ட பேசாமத்தான் இருப்பா. அப்ப அவகிட்ட நான் மூஞ்சி குடுத்து பேசலன்னா, அவங்க அம்மாவும் சுகன்யாவை என்ன ஏதுன்னு, எதாவது கொடைச்சல் பண்ணிட்டாலும், நாலு பேரு நடுவுலேயே திருவாளர் நடராஜ முதலியார் என் மென்னியை முறுக்கிடுவார்.

எனக்கு இப்ப என்னப்பண்றதுன்னேப் புரியலை. கொரங்கு ஆப்பை அசைச்ச கதையா ஆயிடுச்சி என் கதை. பத்தாக்குறைக்கு இந்த மீனா வேற இப்ப எதுக்கு நடுவுல துள்ளி தொப்புன்னு குதிக்கறா? 




"ஹேய்.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ பாட்டுல உள்ளேப் போய்கிட்டே இருக்கே?" தனக்கு பதில் எதுவும் சொல்லாமல் ஹாலுக்குள் நுழைய ஆரம்பித்த மீனாவின், பின்னலைப் பிடித்து இழுத்தான் செல்வா.

"எம்மா... என் பின்னலைப் புடிச்சி இழுக்கறாம்மா இவன்?" கூவினாள் மீனா.

"புள்ளைங்களா இதுங்க ரெண்டும்... ரெண்டுத்துக்கும் கல்யாணம் எதிர்ல நிக்குது... இன்னும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சி புடிச்சிக்கிட்டு மல்லடிக்குதுங்க.. நீ ஏண்டீ அவன் செல்லை எடுக்கறே?" மல்லிகா பதிலுக்கு தன் பெண்ணை நோக்கிக் கூவினாள்.

"உனக்கு ஃபுல் விஷயம் தெரியாதும்மா... இங்க வா நான் சொல்றேன்..." செல்வாவை நோக்கி கண்ணடித்தாள் அவள்.

"ப்ளீஸ்... பேசாம இருடீ.." செல்வா சட்டென அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டான்.

"அது.." சிரித்தாள் மீனா.

"என்னடி உன் நாட்டாமை தாங்கலே இங்கே?"

"ஒண்ணுமில்லம்மா... நீங்க ரெண்டு பேரும் போய்வாங்க... அண்ணணுக்கு காஃபி நான் போட்டுக்குடுக்கறேன்..." மீனா பவ்யமாக சிரித்தாள்.

"பாத்துகிட்டேல்லா... எதுக்குடீ நீ அவங்க பஞ்சாயத்துல மூக்கை நுழைக்கறே? அண்ணணும் தங்கச்சியும் அடிச்சிப்பாங்க கூடிப்பாங்க... கிளம்புடீ நீ..." மல்லிகா பின் தொடர நடராஜன் வேகமாக தெருவுக்கு நடந்து தன் கார் கதவைத் திறந்தார்.

***

"செல்வா... நீ சுகன்யா கிட்ட ஒழுங்கு முறையா சாரின்னு சொல்லிட்டு அவகிட்ட பேசிடு... எதுக்கு அவளை தேவையில்லாம அழுவ வெக்கறே நீ?" தன் அண்ணணிடம் காஃபி டம்ளரை நீட்டினாள் மீனா.

"அதெல்லாம் இருக்கட்டும்டீ... உன் கிட்ட அவ என்ன சொன்னா, அதை மொதல்லே ஒழுங்கா நீ சொல்லிடு..." மீனாவின் முகத்தை நேராகப்பார்த்தான் செல்வா.

"டேய் அண்ணா... வெக்கமாயில்லே உனக்கு... நான் உன் தங்கச்சிடா... என் கிட்ட கேக்கற கேள்வியா இது? திடிர் திடீர்ன்னு உன் புத்தி குருட்டுப்பூனை விட்டத்துல தாவுன கதையா பாயுது?

மூடின ரூமுக்குள்ள உனக்கும் உன் லவ்வருக்கும் நடுவுல நடந்த கூத்தை நான் உனக்கு ரிவைண்ட் பண்ணி ஓட்டிக்காட்டணுமா? உனக்கே இது ஓவராத் தெரியலே?"

மீனா அடித்த இந்த அடியில் செல்வா சுத்தமாக சுருண்டுவிட்டான். சுகன்யா மொத்தமாக போட்டுக்குடுத்துவிட்டாள் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான். மீனாவுக்கு என்னப் பதில் சொல்லுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதே மேல் என அவன் நினைத்தான். தன் கையிலிருந்த காஃபியை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தான்.

மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள்.

தன் வீட்டு மாடிக்கு என்னை தனியாக் கூப்பிட்டுக்கிட்டு போன சீனு அன்னைக்கு என்னப் பண்ணான்? மொதல்லே கிட்ட வந்து என் தோள்லே கைப்போட்டான். அப்புறம் கன்னத்துல கிஸ் அடிச்சான். நமக்கும் சொகமா இருக்கே, போனாப்போவுதுன்னுப் பாத்தா, அந்தத் திருட்டுக்கழுதை என் மாரைத் தொட்டுபாத்துட்டு, 'மீனா உனக்கு சின்னதா இருக்கேடீன்னு உளறினான்.."

செல்வா மட்டும் யோக்கியனா? இவன் அவன் ஃப்ரெண்டுதானே; இவன் மட்டும் சுகன்யா கூட தனியா இருக்கும் போது தேவாரம், திருவாசகமா படிச்சிருக்கப்போறான்? இவனும் ஒரு ஆம்பிளைதானே? ஆம்பிளைப் புத்தியை அவசரமா அவகிட்ட காமிச்சிருப்பான்.

எல்லத்துக்கும் மேலே இவங்க ரெண்டு பேருக்கும் நிச்சயத்தார்த்தம் வேற முடிஞ்சிப்போச்சி... இதை ஒரு சாக்கா வெச்சிக்கிட்டு இவன் சுகன்யா உடம்புல கண்ட எடத்துல கைபோட்டு இருப்பான்.

மே பீ... இவன் கிஸ் அடிச்சிருந்தா, சுகன்யாவுக்கு, கிக்கேறிப்போய் இவனைக் கட்டி புடிச்சிக்கிட்டு நின்னுருந்திருக்கலாம்; இவன் இதாண்டா சான்ஸ்ன்னு சுகன்யாவை தாறுமாறாத் தடவி இருப்பான். அவ வேணாம்டான்னு திமிறியிருப்பா; இவன் ஆம்பிளை ஈகோவுல அடிப்பட்டுக்கிட்டு, மூஞ்சை முறுக்கிக்கிட்டு வந்து இருப்பான். இதுக்கு மேல அங்க என்ன நடந்து இருக்கப்போவுது?

இது சாதாரணமா நடக்கறதுதானே? எங்கக்காலேஜ்ல நடக்காத கூத்தா? பொழுது விடிஞ்சா பொழுது போனா இதேக் கதைதானே? ஒவ்வொருத்தி மடியிலேயே புள்ளையே வாங்கிக்கிறாளுங்க. சுகன்யா நல்லப்பொண்ணு. திட்டி அனுப்பியிருப்பா..!

ஆரம்பத்திலேயே, செல்வாதான் லைன்ல இருக்கான்னு நெனைச்சுக்கிட்டு, "அன்னைக்கு என் ரூம்ல நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீ நினைச்சா, அதுக்கு நான் திரும்பவும் ஒரு தரம் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்..." ன்னு என்கிட்டப் பேசினாளே? ஏதோ தான் நடந்த விஷயத்தை நேரில் பார்த்தது போல், மீனா தைரியமாக மனதில் தோன்றியதை குருட்டாம் போக்கில் அடித்துவிட்டாள்.



செல்வா பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டதும், தான் விட்ட அம்பு சரியான இலக்கில் சரியானபடி தைத்துவிட்டது என்பது மீனாவுக்குப் புரிந்துவிட்டது. தன் அண்ணனைப் பார்த்தபோது அவளுக்கு பரிதாபமாகவும் இருந்தது.

"செல்வா..."

"ம்ம்ம்.."

"சாரிப்பா.. நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுடு. இது உங்களோடப் பர்சனல் விஷயம். நான் தலையிடக்கூடாதுதான். ஆனா சுகன்யா நல்லப்பொண்ணுடா... என்னோட ஃப்ரெண்டுப்பா அவ; அவ கிட்ட ஒரு போன் பண்ணி சாரி சொல்லுடா. ரொம்பவே வாடிப்போயிருக்கா அவ.." செல்வாவின் தோளைத் தடவிக்கொடுத்தாள் மீனா.

"சரிடீ.. செல்லைக் குடுடீ எங்கிட்ட நீ" முகத்தை திருப்பிக்கொண்டான் செல்வா.

"தேங்க்யூடா செல்வா"

அண்ணன் செல்வாவின் முகத்தை நிமிர்த்தி அவன் நெற்றியில் பாசமுடன் முத்தமிட்டாள் மீனா. 



No comments:

Post a Comment