Monday 9 March 2015

சுகன்யா... 38


செல்வாவையும், சீனுவையும், மீனா, தனியாக விட்டு சென்றதிலிருந்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சற்று நேரம் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். இருவரின் மனதிலும் இனம் தெரியாத உணர்ச்சிகள் எழுந்து பின் மெதுவாக அடங்கின. மீண்டும் வேகமாக எழுந்தன. மெல்ல மெல்ல அடங்கின.

ஒருவரிடம் ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நண்பர்கள் இருவருமே மனதுக்குள் தவித்துக்கொண்டிருந்தார்கள். நேருக்கு நேர், தங்கள் பார்வை ஒன்றுடன் ஒன்று மோதுவதை அவர்கள் கவனமாக தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். செல்வா இந்த விளையாட்டில் முதலில் களைத்துப்போனான்.



"உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை..."

மீனாவின் இந்த ஒரே ஒரு வார்த்தை, அந்த வார்த்தையில் இருந்த அப்பட்டமான உண்மை, செல்வாவை ஒரு நொடி நிலை குலைய வைத்தது. மீனா தன் ஆடைகளை உருவி நிர்வாணமாக நடுத்தெருவில் நிற்க வைத்ததைப் போல் அவன் உணர்ந்தான். மீனா உண்மையைத்தானே சொல்றா? அவளுக்கு என்னை விட சீனு மேல ஒரு படி அக்கறை அதிகமாவே இருக்கு; நிஜமாவே சீனு மேல எனக்கு அக்கறை இருந்திருந்தால் அவன் குடியை நிறுத்தறதுக்கு இத்தனை நாள் உருப்படியா எதையாவது ஒரு வழியைத் தேடியிருப்பேனே?

அண்ணன் செல்வாவும், அவனுடைய இளவயது தோழன் சீனுவும், மீனாவை மிகவும் நன்றாக அறிந்தவர்கள். மீனா எந்த ஒரு விஷயத்திலும் தான் எடுத்த ஒரு முடிவை மாத்திக்கிட்டதேயில்லை. இனி அந்த ஆண்டவனே வந்தாலும், சீனுவுக்காக அவள் எடுத்துள்ள முடிவையோ, அவள் மனதை மாற்றுவதென்பதோ முடியாத காரியம், என்பது அந்த இருவருக்குமே தெரிந்திருந்தது.

இருபது வருட நட்பில், இது போன்ற ஒரு தருணத்தை, நண்பர்கள் இருவரும் சந்திப்பது இதுவே முதல் தடவை. தங்களுக்கிடையில் இருந்த பரிசுத்தமான, களங்கமற்ற, தூய்மையான நட்பு, இப்போது வேறு ஒரு பரிமாணத்துடன், இதுவரை அவர்கள் நினைத்தே பார்த்திராத, வேறு ஒரு திசையில் பயணிக்கப் போவதை, அவர்கள் இருவரும் அந்த கணங்களில் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள்.

இந்தப் பாவி இனிமே தண்ணி கிளாசை, தன் கையில எடுக்காம இருந்தான்னா, என்னால முடியாத காரியத்தை என் தங்கச்சி சாதிச்சுட்டான்னு, நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா இதுக்கான வெலை என் தங்கச்சியோட வாழ்க்கைன்னு நினைக்கும் போது, எனக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

"ம்ம்ம்ம்" ... என் சீனு ஆயிரத்துல ஒருத்தன். அவனைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவனை கொறை சொல்லணும்ன்னு யாராவது நெனைச்சா, இந்த ஒரு விஷயத்தை தவிர வேற எதை அவன் கிட்ட காட்டமுடியும்? சீனு மீனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுப்பானா? சீனு என் தங்கச்சி மீனாவை சந்தோஷமா வெச்சுப்பானா? சீனுவை இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு என் வாயைவிட்டு இதைப் பத்தி கேட்டுத்தான் ஆகணும்...

"மாப்ளே!, மாப்ளே"ன்னு சீனுவை நான் எவ்வளவு நாளா அர்த்தமேயில்லாம கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன்? மீனா அந்த சொல்லுக்கான உண்மையான அர்த்தத்தை, இவனை ஒரே செகண்ட்ல இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆக்கி, எனக்கு சொல்லி கொடுத்துட்டா! செல்வா, முகம் தெரியாத ஒருத்தனை நீ ஏண்டா மாப்ளேன்னு கூப்பிடப் போறே; இருபது வருஷமா நீ தினம் பாத்துக்கிட்டு இருக்கற இவனையே நீ மாப்ளேன்னு கூப்பிடுடான்னு, மீனா அடிச்சு சொல்லிட்டா! இனிமே நான் இவனை என்னன்னு கூப்பிடறது? வீட்டு மாப்பிள்ளையை "டேய் சீனுன்னு" கூப்பிடமுடியுமா?

மீனா சீக்கிரமா வந்து தொலைச்சா பரவாயில்லே; உள்ளே போனவ அப்படி என்னதான் பண்ணிகிட்டு இருக்கா? இந்த கொடுமையான மவுனத்தை என்னால தாங்கமுடியலியே? தொண தொணன்னு பேசற இந்த சீனுவும் இன்னைக்கு வாயில கொழுக்கட்டையை அடைச்சிக்கிட்டு இருக்கான்? பாவி அவன் மட்டும் என்னப் பண்ணுவான்? எல்லாமே இந்த மீனாவால வந்த வெனை! அவதான் இன்னைக்கு சீனுவோட வாயை கட்டிப்போட்டுட்டாளே!

சீனுவும், மீனாவின் அந்த வார்த்தையை தன் மீது வீசப்பட்ட ஒரு சவுக்கடியாகத்தான் உணர்ந்தான். எங்க ரெண்டு பேருடைய ஃப்ரெண்ட்ஷிப்பையே, ஒரு வினாடியிலே ஒண்னுமில்லாம ஆக்கிட்டாளே? செல்வாவும் நான் குடிக்கறதை சீரியஸா எடுத்துக்கலே! சீனு... நீயும் செல்வாவை, அவன் சொல்றதை சீரியஸா எடுத்துக்கலே? நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு வாயாலத்தானே சொல்லிக்கிட்டிருந்தீங்கடான்னு, ரெண்டுபேரையும் ஜோட்டால அடிச்சுட்டாளே?

என்னாலத்தானே செல்வாவுக்கு இந்த நிலைமை? செல்வா எத்தனையோ முறை சீரியஸா, நான் கட்டிங்க் வுடற விஷயத்தைப் பத்தி, என் கிட்ட இது நல்லதுக்கு இல்லேடான்னு தன் மனம் வெதும்பி பேசியிருக்கான். நான் தான் அவன் சொன்ன எதுக்கும் காது குடுக்காம என் போக்குல போய்கிட்டு இருந்தேன்; என்னால இன்னைக்கு அவன் அவமானப்பட்டு வாயைத் தொறக்க முடியாம உக்காந்திருக்கான்.

செல்வா, மவுனமாக உட்க்கார்ந்து தன் விரல் நகங்களை ஒவ்வொன்றாக கடித்து துப்பிக்கொண்டிருந்தான். மீனா பேசிவிட்ட அந்த ஒரு வார்த்தையால் செல்வாவும், சீனுவும், எப்போதும் தங்களுக்குள் தாங்கள் உணரும் சகஜமான நிலைமை, ஒரே நொடியில் சுக்கு நூறாக்கிவிட்டதை, நினைத்து திரும்ப திரும்ப வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள். சீனு, தன் தலையை குனிந்து தன் கன்னத்தை சீரியஸாக சொறிந்துகொண்டிருந்தான். 

"அண்ணா! சாப்பிட வர்றீங்களா?"

வெங்காயத்தின் விலை மடமடவென ஒரே நாளில் ஏறியது போல், மீனாவின் குரலில் திடீரென மரியாதை ஏகத்துக்கு ஏறியிருந்தது. செல்வாவுக்கு தன் தங்கை தனக்கு திடீரென கொடுக்கும் மரியாதைக்கான காரணம், தெளிவாக புரிந்தாலும், இவ எப்ப நம்பளை தலைமேல தூக்கி வெச்சுக்குவா; எப்ப கால்லே போட்டு மெதிப்பான்னு ஒண்ணும் புரியலையே, ஏகத்துக்கு அப்பா இவளுக்கு செல்லம் கொடுத்து வெச்சிருக்காரு. வயசுக்கு வந்த பொண்ணை ஒண்ணும் வாய்விட்டு அதட்டி சொல்லவும் முடியலை. இவ மனசுக்குள்ள இந்த நிமிஷம் என்ன இருக்கு? புதுசா வேற ஒரு சீனுக்கு அடி போடறாளா? அவன் மனதில் சிறிதே வியப்பும், அச்சமும் ஒரு சேர எழுந்தன.

சீனு, தன் தலையை நிமிர்த்தாமல், தன் உள்ளங்கைகளை விரித்து, அதில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும், அட்சரேகைகளையும், தீர்க்க ரேகைகளையும், அன்றுதான் புதிதாக பார்ப்பவன் போல் மவுனமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தான். செல்வா, தன் தங்கையின் முகத்தை நிமிர்ந்து நோக்கியவன், வாய் பேசாமல், சீனுவின் பக்கம் நோக்கி, அவனையும் நீயே ஒரு தரம் சாப்பிட கூப்பிடேண்டி, என்ற பொருள் தன் பார்வையில் தொக்கி நிற்க, மீனாவிடம் கண்களால் கெஞ்சியவன், தன் தலையைத் சட்டென தாழ்த்திக்கொண்டான்.

"மணி பதினொன்னு ஆவப்போவுது, அர்த்த ராத்திரியில, ஒவ்வொருத்தரையும் நான் தனித்தனியா, வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளையை, விருந்துக்கு அழைக்கற மாதிரி வெத்தலைப் பாக்கு வெக்கணுமா?" மீனா தன் குரலில் போலியாக சிறிது சீற்றத்தை கொண்டுவந்தாள்.

மீனாவின் குரலில் இருந்த சீற்றத்தைக்கண்டதும், "இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி, காத்துல எனக்கு முத்தம் கொடுத்துட்டு போனா; அதுக்குள்ள இப்ப எதுக்காக என் மேல இந்த கோபம் இவளுக்கு?" ம்ம்ம்.. நடத்தற டிராமாவை, சொந்த அண்ணனை பக்கத்துல சாட்சிக்கு வெச்சிக்கிட்டே நடத்தணுதுமில்லாமே, கடைசீல என்னை இந்த வீட்டு மாப்பிள்ளைன்னும் சீலைக் குத்திப்பிட்டா..! இனிமே இவகிட்டேயிருந்து தப்பிச்சு ஓடமுடியாதபடி கட்டிப்போட்டுட்டா!.

சீனு தன் மனதில் ஓடும் கட்டுக்கடங்காத எண்ணங்களுடன், விளக்கெண்ணைய் குடிச்சது போலிருந்த தன் முகத்தை ஒரு முறை, தன் வலதுகையால், அழுந்த துடைத்துக்கொண்டு, தன் தலையை நிமிர்த்தி வாசல் படியில் நின்றிருந்தவளை நோக்க, "பசிக்குதுன்னு சொன்னியேடா ... சட்டுன்னு எழுந்து வாயேன்" என்கிற கனிவான அழைப்பை அவள் கடைக்கண்ணில் கண்டதும், சரியான ஒண்ணாம் நம்பர் திருட்டு ராஸ்கல் இவ; இவளுக்கு வாயில ஒரு பேச்சு; கண்ணுல ஒரு பேச்சு; இவ கிட்ட இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே; சீனு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான்.

***

மீனா, அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டாங்களா?" சீனு அங்கு எதுவுமே நடக்காதது போல், தன்னை வெகு சகஜமாக காட்டிக்கொள்ள முயன்றான்.

"கையை கழுவிக்கிட்டு வந்து சாப்பிடறதுங்கற பழக்கம் கூட போயாச்சு இந்த வீட்டுலே? தட்டின் எதிரில் உட்க்கார்ந்த செல்வாவிடம் மீனா எரிந்து விழுந்தாள்.

"மீனா ... போதும்டா கண்ணு, சாப்பிட வுடுடி..." செல்வா எரிச்சலுடன் பேசியபோதிலும், முழுவதுமாக வீக்கம் குறையாத தன் காலுடன் வாஷ் பேசினுக்கு நொண்டியபடி நடந்தான். சீனு அவளை பார்க்காமலே செல்வாவின் பின்னால் வாயைத் திறக்காமல் எழுந்து ஓடினான்.

"போதும்...மீனா ... போதும் ... செல்வாவுக்கு வெய்யேன் ... அம்மா மாதிரி பொண்ணுக்கும் மனசும், கையும் தாராளம், தட்டில் எடுத்து எடுத்து ஊத்தப்பத்தையும், பஜ்ஜியையும் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தவளை மனதில் நன்றியுடன் பதறித் தடுத்தான் சீனு.

"இங்க சாப்பிடறதுக்கு பில்லு யாரும் போடப்போறதில்லே ...சீன் காட்டாம ஒழுங்கா சாப்பிடுங்க..."மீனாவின் குரலில் இப்போது கொஞ்சம் மென்மை வந்திருந்தது.

"மீனா ... ஊத்தப்பம் ரொம்ப நல்லா இருந்தது ... தேங்க்ஸ்ம்ம்மா ..." அண்ணனுக்குத்தான் மரியாதை கூடியிருக்குன்னுப் பாத்தா, எனக்கும் கொஞ்சம் மரியாதை அதிகரிச்சித்தான் இருக்கு. மனதுக்குள் சற்றே வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்த சீனு மெல்லிய குரலில் சொன்னான்

"சரி ... சரி ... மாடிக்கு போகும் போது கையோட குடிக்கறதுக்கு தண்ணியை எடுத்துகிட்டு போய் சேருங்க; போனமா, படுத்தமான்னு ரெண்டு பேரும் நேரத்துக்கு தூங்கற வேலையைப் பாருங்க; அப்புறமா என்னை ஒரு டம்ளர் தண்ணி குடுடி ... ஒரு கப்பு டீ போட்டு குடுடீன்னு தூங்கறவளை எழுப்பினா எனக்கு கெட்ட கோவம் வரும் ... இப்பவே சொல்லிட்டேன் ..." வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.

"உன்னை யாரும் இதுக்கு மேல எதுவும் கேக்கமாட்டோம் ... நீ நிம்மதியா தூங்குடியம்மா..." செல்வா கை கழுவ வாஷ்பேசின் பக்கம் நகர்ந்தான். தன் கையை கழுவி, வாய் கொப்பளித்த செல்வா டாய்லெட்டுக்குள் நுழைந்தான்.

"சீனு, ஐயாம் சாரி ... உங்களை நான் கன்னா பின்னான்னு பேசிட்டேன் ... என்னை மன்னிச்சுடுங்க; உங்க மனசுல எதுவும் வெச்சிக்காதீங்க பிளீஸ்.." மீனா வேகமாக சீனுவை நெருங்கி மெதுவாக தன் அடிக்குரலில் பேசினாள்.

சீனு, மீனாவை ஒருமுறை நிமிர்ந்து நோக்கினான். அவன் கண்கள் இலேசாக கலங்கியிருந்தது. நிமிர்ந்தவன் தன் தலையை வேகமாக குனிந்து கொண்டான். இதுவரை அவன் மனதுக்குள் அடைபட்டிருந்த இனம் தெரியாத துக்கம் மெதுவாக பீறிட்டுக்கொண்டு கேவலுடன் வெளியில் வந்தது. அவன் உடல் வேகமாக குலுங்கியது. சீனு சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தான்.

கல்லுளிமங்கன் சீனுவா அழறான்? எப்பவும் அடுத்தவங்களை அழவெச்சுப் வேடிக்கைப் பாத்துத்தானே இவனுக்குப் பழக்கம்! மீனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவன் அழுவதைப் பார்த்த மீனாவின் மனம் பதைத்து, மேனி நடுங்கியது. என் சீனு அழறான். என் சீனு அழறதை என்னால பொறுத்துக்க முடியாது. அவன் அழுகையை நிறுத்தணும். என்ன செய்யறது? செல்வா இன்னும் டாய்லெட்டிருந்து வரும் அறிகுறி எதுவும் தெரியவில்லை. மீனா நின்ற இடத்திலிருந்தே தன் பெற்றோர்களின் அறையை ஒரு முறை எட்டிப்பார்த்தாள். அவர்களின் அறைக்கதவு முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது.

மீனா, சீனுவை நெருங்கினாள். தலை கவிழ்ந்து விம்மிக்கொண்டிருந்த சீனுவின் முகத்தை தன் இருகரங்களாலும் பற்றி நிமிர்த்தினாள். கண்களால் பேசினாள். தன் தலையை ஆட்டி அழாதே சீனு ... சீனுவின் கண்களை தன் வலது கையால் துடைத்தாள். சீனுவின் உதடுகள் ஏதோ சொல்ல துடித்தன. மீனா அவன் வாயை தன் சிவந்த உள்ளங்ககையால் பொத்தினாள்.

"அழாதே சீனு! ... நீ இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்.. உன் மனசு எனக்கு புரியுதுப்பா! உனக்குத்தான் நான் இருக்கேன்ல்லா? ... ஏன் அழறேப்பா? அவள் குரல் தழுதழுத்தது.

"மீனா .... சத்தியமா நான் இனிம குடிக்கமாட்டேன்... என்னை நீ நம்பு மீனா..." சீனு கேவலுடன் குளறினான்.

"சரி ... நான் உங்களை நம்பறேன்... நீங்க இப்ப அழாதீங்க ... நீங்க அழறதை என்னால தாங்கமுடியலை." மீனா மீண்டும் அவன் கண்களைத் துடைத்தாள்.

சீனுவின் அருகில் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்த மீனா, அவன் முகத்தை திருப்பி தன் வயிற்றில் அழுத்திக் கொண்டாள். மீனாவின் வலுவான பருத்த இடது தொடை அவன் தோளை உரசிக்கொண்டிருந்தது. இத்தனை நெருக்கத்தில், ஒரு இளம் பருவப்பெண்ணின் உடலை, அந்த உடல் தரும் இதமான வெப்பத்தை சீனு இதுவரை உணர்ந்ததில்லை. மீனாவின் உடல் வாசம் அவன் நாசியில் வேகமாக ஏறியது. சீனுவின் உடல் சிலிர்த்தது. அவன் தேகம் காற்றில் பறந்துகொண்டிருந்தது.

மீனா தன் இடது கையால் சீனுவின் முதுகை மென்மையாக வருடிகொண்டிருந்தாள். அவளின் வலது கை விரல்கள் அவனின் அடர்த்தியான கேசத்துக்குள் நுழைந்திருந்தன. சீனுவின் உதடுகள் அவள் அணிந்திருந்த குர்த்தாவின் மேல் பதிந்து மெல்ல அசைந்து கொண்டிருந்தது. மீனாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவர்கள் தாங்கள் இருக்கும் நிலையை முழுமையாக மறப்பதற்குள், டாய்லெட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மீனா சீனுவின் கன்னத்தை செல்லமாக கிள்ளிவிட்டு, அவனிடமிருந்து விலகி வேகமாக கிச்சனுக்குள் ஓடினாள்.

சீனு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, நிதானமாக தன் தட்டிலிருந்த கடைசி விள்ளல் ஊத்தப்பத்தை சாம்பாரில் அமிழ்த்தி, தன் வாயில் போட்டு மென்றவன், கிச்சனுக்குள் தன் பார்வையை மெல்ல செலுத்தினான். மீனாவிடமிருந்து சீனுவுக்கு இரண்டாவது முத்தம் காற்றின் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த வினாடியில், சீனுவுக்கும் சற்றே தைரியம் வந்து, பதிலுக்கு தன் உதட்டை குவித்து மீனாவின் பக்கம் காற்றில் ஒரு முத்தத்தை பறக்கவிட்டான்.

இன்னொரு ஆண். இன்னொரு பெண். சீனு ... மீனா...! சீனுவாசன்... மீனாட்சி!. காதலர்களின் பெயர்கள் புதிதாக இருக்கலாம். காதல் புதிது அல்ல. சீனுவாசன், மீனாட்சி துவங்கியிருக்கும் இந்த காதல் நாடகம், அவர்கள் இருவருக்கும் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். காலம் எத்தனை சீனுக்களையும், மீனாக்களையும், எத்தனை காதல் நாடகங்களையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் பெண் மோதல். அந்த மோதலின் பின் காதல். காலத்திற்கு இந்த காதல் நாடகம் புதிதல்லவே...

இந்த காலம்தானே ஓய்வில்லாமல், சுயம் எண்ணற்ற காதல் நாடகங்களை, களைப்பில்லாமல் கல்ப காலமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தனிமனிதர்கள் தாங்கள் காதலிப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார்கள். இதில் காலத்துக்கு கிடைக்கும் லாபம் என்ன? காலம் அந்த புதிய காதலர்களை நோக்கி மென்மையாக சிரித்துக்கொண்டிருந்தது. 



"செல்வா ... ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொன்னே? என்ன விஷயம்?" சீனு, சுவரில் வசதியாக சாய்ந்து தன் இருகால்களையும் நீட்டி, ஒரு சிகரெட்டை கொளுத்தி புகையை நெஞ்சு நிறைய இழுத்தான். மாடிக்கு வந்ததும், இப்போது செல்வாவுக்கு எதிரில், தனிமையில், அவன் தன்னை மிகவும் சகஜமாக உணர ஆரம்பித்திருந்தான்.

"பேசணும்டா.. ஆனா மீனா என்னை முந்திக்கிட்டா; யாருமே எதிர்பாக்காத விதத்துல அவ இந்த வீட்டுல உன்னை ஒரு முக்கியமான நபரா ஆக்கிட்டா..."

"ம்ம்ம் ... இப்படி ஒரு தருணம் என் வாழ்க்கையில வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே.." சீனுவின் குரல் கம்மியிருந்தது.

"மாப்ளே, வெரி சாரிடா, மீனா இந்த அளவுக்கு உன்கிட்ட எடக்கு மடக்கா பேசியிருக்கக் கூடாது..." செல்வா லுங்கிக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.

"நம்ம மீனாதானேடா ... என் கிட்ட அவளுக்கு இல்லாத உரிமையா? நான் திருந்தணும்ன்னுதானே அவ பேசினா... எனக்கு அதுல மனவருத்தம் ஒண்ணுமில்லே; ஒருவிதத்துல அவ இப்படி பேசினதுக்கு நான் தான் நன்றி சொல்லணும் ... நிஜமாவே நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. யாருக்குடா இந்த மாதிரி ஒரு லட்சுமி சுலபமா கிடைப்பா? என்னால இதை நம்பவே முடியலை." சீனு பேசமுடியாமல் தடுமாறினான்.

"ஏண்டா நீ பாட்டுக்கு யோசிக்காமே ... குடிக்கமாட்டேன்னு அவகிட்ட சட்டுன்னு சத்தியம் பண்ணிட்டே?" செல்வா சீனுவுக்கு எதிர் சுவரில் சாய்ந்து உட்க்கார்ந்தான்.

"மச்சான் ... மீனா ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இருந்தா ... அந்த நேரத்துல அவளை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு எனக்கு புரியலை... அவ கையை புடிச்சு சத்தியம் பண்றதை தவிர எனக்கும் வேற வழி தெரியலை..."

"எல்லாமே நல்லதுக்குத்தாண்டா ... நீ உருப்பட்டா சரிதான்; ஆனா உன்னால இந்த குடிக்கற பழக்கத்தை சட்டுன்னு விட்டுட முடியுமா?"

"ஒரு கெட்டப் பழக்கத்தை இப்படித்தாண்டா விடமுடியும் ..."

"மாப்ளே ... உனக்கு நல்லாப் புரிஞ்சிருக்கும்; மீனா தன் லைப்பையே உனக்காக பணயம் வெச்சிருக்கா; இதை மட்டும் நீ மறந்துடாதே! அவ உன்னை கொஞ்ச நாளாவே தன் மனசுக்குள்ளவே நேசிச்சுக்கிட்டு இருந்திருக்கான்னு எனக்குத் தோணுது ..."

"புரியுது செல்வா ... அவ நம்பிக்கையை என்னைக்கும் நான் வீணாக்கிட மாட்டேன்! ஆனா அவ அன்புக்கு நான் லாயக்கானவனா? யோக்கியதை உள்ளவன் தானா? அதுதான் எனக்குப் புரியலை.."

"சீனு... உனக்கென்னடா குறைச்சல்? எனக்கு என் தங்கையைப் பத்தி நல்லாவேத் தெரியும்; மீனா உன்னைத் தனக்குன்னு தேர்ந்தெடுத்துட்டா; இனிமே எங்க வீட்டுல, யார் என்ன சொன்னாலும் அவ கேக்கப் போறது இல்லே. யாருக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும், நீ தான் இந்த வீட்டு மாப்பிள்ளை...இதுல எந்த மாத்தமும் கிடையாது..."

"செல்வா... உங்க வீட்டுல உங்க அம்மா கையால சாப்பிட்டு வளந்தவண்டா நான்...என்னால உங்க வீட்டுல எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது.." சீனு தன் சிகரெட்டை அழுத்தி தேய்த்து அணைத்தான். அவன் முகத்தில் இலேசாக பயமும், மிரட்சியும் இருந்தது.

"என்னைப் பொறுத்த வரைக்கும் ... மீனா உன்னை நேசிக்கறதுலயோ ... அவ உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுலேயோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லே..உன்னை எனக்கு இருபது வருஷமா பாக்கறேண்டா; உன் மனசைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. மீனாவுக்கு ஏத்தவன்தான் நீ..." செல்வாவின் குரல் தெளிவாக வந்தது.

"செல்வா ... மீனா எனக்கு கிடைக்கறதுக்கு நான் உண்மையிலேயே குடுத்து வெச்சிருக்கணும்; ஒண்ணு மட்டும் சொல்றேன்; ஆனா எப்பவுமே நான் அவளை இந்த மாதிரி எண்ணத்துல பாத்ததே கிடையாதுடா; என் மனசுக்குள்ளே அவளை கல்யாணம் பண்ணிக்கணுங்கற எண்ணம் எப்பவுமே வந்தது கிடையாது."

சீனுவுக்கு தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. சில வினாடிகள் தன் தலையை குனிந்து அவன் மவுனமாக உட்க்கார்ந்திருந்தவன், மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து தன் நடுங்கும் விரல்களால் உதடுகளில் பொருத்தி பற்றவைத்துக்கொண்டான்.

"மாப்ளே ... உன்னைப் பத்தி எனக்கு தெரியாதாடா ... There is no need to vindicate yourself... உன்னைப் பொறுத்த வரைக்கும் நீ இந்த முடிவை ஒரே ஒரு நொடியில எடுத்திருக்கேன்னு எனக்கு நல்லாத் புரியுது..." செல்வா ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி, பேசினான்.

"தேங்க் யூ டா ... உன் அப்பாவை நெனைச்சாத்தான் எனக்கு பயமா இருக்கு... இதை அவர் எப்படி எடுத்துப்பார்ன்னு தெரியலை?"

"இனிமே இதையெல்லாம் யோசிச்சு எந்த பிரயோசனமுமில்லே; மீனா என் ஒரே தங்கைடா! சீனு... நாங்க எல்லாம் அவ மேல எங்க உயிரையே வெச்சிருக்கோம்... இது உனக்கு நல்லாத் தெரியும்... அவ சந்தோஷமா இருக்கணும்... அதுக்கு நீதான் உறுதியா நிக்கணும்;" செல்வாவின் குரல் இலேசாக தழுதழுத்து வந்தது.

"செல்வா ... மீனாவை நான் என் உயிருக்கு மேலா பாத்துப்பேன் ...அவளை மாதிரி ஒருத்தி என் வாழ்க்கைத் துணையா, எனக்கு கிடைக்க நான் ரொம்ப ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்" சீனு, செல்வாவின் முகத்தை நேராகப் பார்த்து உறுதியுடன் பேசினான்.

"மச்சான் ... ஏண்டா பேசாம உம்முன்னு இருக்கே?" சீனு தன் வழக்கமான உற்சாகத்துடன் ஆரம்பித்தான்.

"அம்மா இன்னைக்கு காலைல சுகன்யாவை தன்னோட மருமகளா ஏத்துக்கறேன்னு சொல்லிட்டாங்கடா.."

"இவ்வளவு நேரம் கழிச்சு இந்த குட் நியூஸை எனக்கு நீ சொல்றே ..ம்ம்ம்" சீனு செல்வாவின் கையை மகிழ்ச்சியுடன் குலுக்கினான்.

"நீ வந்ததுலேருந்து மீனா என்னை எங்கடா பேசவிட்டா?"

"இதுக்கு ஏண்டா நீ இப்ப ஒப்பாரி வெக்கிறே?"

"சம்பத்துன்னு ஒரு கம்மினாட்டி என்னை இன்னைக்கு ரொம்பவே கலாய்ச்சுட்டாண்டா"

"ம்ம்ம்... யார்ரா அவன்? பேரை கேட்ட மாதிரி இல்லையே?"

"அம்மா விருப்பத்தையும் நான் சுகன்யாவோட மாமா ரகுகிட்ட மதியம் சொல்லிட்டேன்..."

"விஷயத்துக்கு வாடா..."

"இந்த சம்பத்து சுகன்யாவை எட்டு வருஷமா காதலிக்கறானாம்..."

"சரி ... அவன் என்னா சுகன்யாவை உங்கிட்ட தானமா கேட்டானா? நீ என்னா கொடை வள்ளல் கர்ணன் மாதிரி வாடா வந்து வாங்கிக்கோடான்னு சொல்லிட்டியா?"

"சுகன்யாவுக்கு நான் அத்தைப் பையன் ... அவளுக்கு நான்தான் முறை மாப்பிள்ளைன்னான்"

"எங்கடா இருக்கான் அவன்? பொழுது விடிஞ்சதும் போய் என்னா ஏதுன்னு சரியா விசாரிச்சிட்டு வரலாம்..."

"நேத்து வந்த நீ சுகன்யாவை கல்யாணம் கட்டிக்கிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லே, சாமான் போடுவே! நான் என்னா உனக்கு விளக்கு புடிக்காவான்னு கேட்டாண்டா.."

"அவன் கதை சொல்ல சொல்ல, அவனுக்கு மூஞ்சியில ரெண்டு பல்பு குடுக்காம, நீ இன்னா உன்னுதை உன் கைல புடிச்சுக்கிட்டு கேட்டுகிட்டு இருந்தியா?"

"மாப்ளே ... சுகன்யா இப்ப கும்பகோணத்துல அவ தாத்தா வீட்டுல இருக்காடா! அவ கிட்ட அம்மா சம்மதம் சொன்னதை சொல்லலாம்னு போன் போட்டப்ப அவன் லைன்ல வந்தாண்டா..."

"இப்ப என்னா நாம ரெண்டு பேரும் கும்பகோணம் போவணுமா அவனை மீட் பண்றதுக்கு? அவன் நம்பரை குட்றா நான் என்னாடா விசயம்ன்னு கேக்கறேன்.."

"அதெல்லாம் வேணாம்..."

"அப்டீன்னா இதுல உனக்கு என்னடா பிராப்ளம்? நீ சுகன்யாவுக்கு தாலியை கட்டிட்டு, ஜாலியா அவளை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போக வேண்டியதுதானேடா?" சீனு விஷயம் புரியாமல் குதித்தான்.

"எட்டு வருஷமா காதலிக்கறேன்னு அவன் சொல்றான்; சுகன்யா இதைப்பத்தி எங்கிட்ட எப்பவும் சொன்னதேயில்லே; அவங்களுக்குள்ள எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்? வெறுமனே அவங்க ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்களா? எதுவரைக்கும் அவங்களுக்குள்ள உறவு இருந்திருக்கும்ன்னு என் மனசு திண்டாடுதுடா?" செல்வா மெதுவாக இழுத்து இழுத்து பேசினான்.

"ஒஹோ ... மை டியர் சார் ... இப்ப புரியுது எனக்கு ... நீங்க எங்க வர்றீங்கன்னு? நீங்க சுகன்யாவை சந்தேகப்படறீங்களா?" சீனுவின் குரலில் நையாண்டி ஒலித்தது.

"மாப்ளே ... என்னடா நீ .. சேம் சைட் கோல் போடறியேடா? அவ நடத்தையை நான் சந்தேகப்படலடா ... ஆனா இவனைப்பத்தி என் கிட்ட சுகன்யா ஏன் சொல்லலைன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன முள்ளு மாதிரி உறுத்திக்கிட்டே இருக்குடா.."

"ம்ம்ம்..."

"இதைப்பத்தி அவகிட்ட நான் கேக்கலாமா...? கூடாதா...?அப்படி கேட்டா சுகன்யா என்ன பண்ணுவா? செல்வா இழுத்தான்..

"சுகன்யா, கும்பகோணத்துலேருந்து ஒரு தரம் மெனக்கெட்டு உன் வீட்டுக்கு வந்து உன்னை செருப்பால அடிச்சுட்டு திரும்பி போவா.." சீனுவின் முகம் கோபத்தில் சற்றே சிவந்திருந்தது.

"மாப்ளே..."

"அந்தாள் பேரு என்னா? சுகன்யாவோட மாமன் ... ரகுராமன் தானே? அவன் வீச்சு அருவாளோட வந்து உன்னை வெட்டினாலும் வெட்டுவான்...என் மருமவளை நீ சந்தேகப்பட்டியான்னு?"

"என்னடா நீ அவங்க பக்கமே பேசறே?" செல்வா சீறினான்.

"சுகன்யாவைப் போய் சந்தேகப்படறியேடா...நாயே? அவளை மாதிரி ஒரு பொண்ணை நீ ஒரு தரம் கை நழுவ விட்டே ... கடைசி வரைக்கும் கையில புடிச்சிக்கிட்டுத்தான் நீ அலையணும் சொல்லிட்டேன்..." சீனு ஒரு சிகரெட்டை எடுத்து கொளுத்திக்கொண்டான்.

"மாப்ளே... என்னை திட்டறதுக்காடா நான் உன்னை இங்கே கூப்பிட்டேன்?" செல்வாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்த போதிலும், பரிதாபமாக சீனுவைப் பார்த்தான்.



"மச்சான் ... ஆளுங்களோட தராதரம் உனக்குத் தெரியலைடா..."

"என்னடா சொல்றே ..."

"சுகன்யாவோட அம்மாவை பாத்தல்லே?

"ம்ம்ம்.."

"அந்தம்மா பெத்த பொண்ணுடா சுகன்யா ... எவனோ ஒரு கேனப்புண்டை என்னமோ சொன்னான்னு அவளை போய் சந்தேகப்படறியே நீ?"

"ம்ங்க் .. ம்ம் ...ஹீம்ம்..ப்ஸ்ஸ்"

செல்வாவின் வாயிலிருந்து இனம் புரியாத ஓசைகள் வெளிப்பட்டன. இவன்ல்லாம் ஒரு ஃப்ரெண்டு... குடிகார நாய் இவன்; குடிக்கமாட்டேன்னு சொல்லி முழுசா ஒரு மணி நேரம் ஆவலை. அதுக்குள்ள பெரிய மகாத்மா மாதிரில்லா எங்கிட்ட பேசறான்..?

என்னமோ இருபது வருஷமா, ஒண்ணுக்கு ஓண்ணா பழகி, ஒரு தட்டுல சாப்பிட்டோமே, இவன் எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுவான்னு கூப்பிட்டேன். என்னை நாய்ங்கறான்; அதுக்கு அப்புறம் என் இடுப்புக்கு கீழ போர் போட்டு, அது உள்ள ராடு வுட்டு லெஃப்ட்டு ரைட்டுன்னு என்னை நெம்பி நெம்பி எடுக்கறான். செல்வாவுக்கு ச்ச்சீய் என்று ஆகிவிட்டது.

"இப்ப என்னை நீ என்னா பண்ணச் சொல்றே?" செல்வா முனகினான். சீனு சீறினால் அவன் எப்போதும் அடங்கிவிடுவான்.

"என் வாயை நீ நாத்தம் அடிக்குதுன்னு சொன்னேல்ல! இப்ப நீ உன் நாத்த வாயைப் பொத்திக்கிட்டு இருன்னு சொல்றேன். ."

"ம்ம்ம்..." நான் இவனை நாய்ன்னேன்; அதை சொல்லி என்னை திட்டினான். இப்ப பதிலுக்கு பதில் என் வாயை நாத்தங்கறான். நல்லா வேணும்டா எனக்கு! என் புத்தியை என் செருப்பாலேயே அடிச்சுக்கணும் ... இன்னைக்கு ஒவ்வொருத்தன் கிட்டவும் செருப்படி வாங்கறதுன்னு ராசி பலன்ல எழுதியிருக்கா எனக்கு?

"டேய் செல்வா, முதல்ல நீ உங்க ரெண்டுபேருக்குள்ள என்ன பேச்சு நடந்ததுன்னு வில்லாவரியா ஒரு எழுத்து விடாம முதல்லேருந்து சொல்லுடா..." சீனு புகையை நன்றாக இழுத்து அனுபவித்து வெளியில் விட்டான்.

ஆமாம் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லே; திருவிளையாடல் சிவாஜிகணேசன் மாதிரி பேசறான். நான் என்னா தருமியா? உரலுக்குள்ள தலையை விட்டாச்சு; இனிமே இவன் உலக்கையடிக்கு பயந்து என்னா பண்றது? செல்வா, ரகுவிடம் பேசி, சுகன்யாவின் தாத்தா சிவதாணு பிள்ளையின் செல் நெம்பர் வாங்கியதிலிருந்து, அவனுக்கும் சம்பத்துக்குமிடையில் நடந்த உரையாடலை முழுவதுமாக சொல்லி முடித்தவன் சீனுவிடம் வேகமாக எகிறினான்.

"இப்ப சொல்லுடா ... இந்த நாய் என்ன பண்ணணும்? என் நாத்த வாயை பொத்திக்கிட்டு இருக்கணுமா?" செல்வாவின் குரலில் சுயபரிதாபமும், கோபமும் வெகுவாக ஒலித்தது.

"நீ என்னடா பண்ணுவே; அவன் நம்பரும் உன் கிட்ட இல்லே? கொஞ்ச நேரம் என்னை யோசிக்க வுடுடா; மச்சான் ஒரு கப் டீ போட்டுகினு வர்றியா? கீழ தூங்கற யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடாதே; ஜாக்கிரதை, மெயினா அந்த பிசாசு மீனா எழுந்துடப்போறா; எழுந்துட்டா ராத்திரி நேரத்துல உனக்கு ஓத்தாமட்டை வுடுவா; சொல்லிட்டேன்." சீனு தன் கண்களை மூடிக்கொண்டு, சிகரெட்டு ஒன்றை கொளுத்திக்கொண்டான்.

"டேய் ... நீ இதுவும் பேசுவே; இதுக்கு மேலயும் பேசுவடா; அண்ணணும், தங்கச்சியும், உனக்கு சூடா ஊத்தப்பம் ஊத்திகுடுத்து, பஜ்ஜியை பக்கத்துல வெச்சி சேவை பண்ணோமில்லே... ஏன் பேசமாட்டே நீ..." அவன் எரிச்சலுடன் டீ போடுவதற்காக எழுந்து கீழே இறங்கினான். 





No comments:

Post a Comment