Saturday 7 March 2015

சுகன்யா... 33


'சுகா, நீ லஞ்ச்க்கு என்னப் பண்ணப் போறேம்மா?'

திங்கள் காலை, சுந்தரி தன்னுடைய ஸ்கூலுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள். ஊதா நிற புடவையும் , அதற்கேற்ற மேச்சிங் ரவிக்கையும் அணிந்து, நிலைக்கண்ணாடியின் முன் நின்று, தன் புடவை மடிப்புகளை சீராக்கிக் கொண்டிருந்தாள். கைகளில் அணிந்திருந்த வளையல்கள் தங்கள் இருப்பை கிணுகிணுத்து, அவள் காதுகளில் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தன.

"நான் தாத்தா வீட்டுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன். ரெண்டு நாளைக்கு அங்கேயே இருக்கப் போறேன். நீ வீட்டைப் பூட்டிக்கிட்டு உன் சவுகரியப்படி எப்ப வேணா கிளம்பும்மா...' சுகன்யா தனக்குத் தேவையான துணிகளை ஒரு சிறிய ட்ராவல் பேகில் அடுக்கிக்கொண்டிருந்தாள்.



'என்னடி ... இது? வருந்தி வருந்தி கூப்பிட்டாலும், யார் வீட்டுக்கும் போகாதவ, இன்னைக்கு நீயா வெளியில கிளம்பறேங்கறே? பேத்திக்கு ரொம்பத்தான் பாசம் பொங்குது தாத்தா மேலே?"

'அதான் புரியலைம்மா ... அவங்க ரெண்டு பேரு கூடவே இருக்கணும் போல இருக்கும்மா எனக்கு..?

'சரி சரி ... இந்த ஆட்டமும் பாட்டமும் எத்தனை நாளைக்குன்னு பாக்கிறேன்! ... அப்ப வீட்டு சாவியில ஒரு செட் வெச்சுக்கறியா.. நீ?

'ம்ம்ம் ... மாமா எங்கே?

'ரகு, விடியற்காலையிலேயே புறப்பட்டு பாண்டிச்சேரிக்கு 'ஆஃபீஸ் விசிட்டுக்கு'ன்னு போயாச்சு. புதன் கிழமை ஈவினிங்தான் வரேன்னு சொல்லிட்டு போயிருக்கான். ஸ்கூட்டர் சும்மாதானே துருப்புடிக்குது வரண்டாவுல... சுகன்யாவை, இங்கே இருக்கற வரைக்கும், அதை எடுத்து ஓட்ட சொல்லுன்னு சொல்லிட்டுப் போயிருக்கான் உன் மாமன் ... நீ என்னை என் ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு, வண்டியில பெட்ரோல் இருக்கான்னு செக் பண்ணிக்க; அப்படியே தாத்தா வீட்டுக்குப் போயிடேன்..."

'ம்ம்ம் ... அப்பா போன் பண்ணா என்னச் சொல்ல?'

'நீ தூங்கிக்கிட்டிருக்கும் போதே என் புருஷன் கிட்ட பேசவேண்டியதெல்லாத்தையும் நான் பேசி முடிச்சிட்டேன்! எங்க பேச்சாலே நீ டிஸ்டர்ப் ஆக கூடாது பாரு!"

சுகன்யா தன் தாயை சட்டென திரும்பி பார்த்தாள். சுந்தரி தன் கழுத்திலும், முதுகிலும் பவுடரை பூசிக்கொண்டிருந்தவள் நமட்டு சிரிப்புடன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தாள். சுந்தரியின் தலையில் மல்லிகைப்பூ கமகமத்துக்கொண்டிருக்க, கழுத்திலும், கையிலும் நேற்று மாமியார் போட்ட நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

'ஏம்மா ... நேத்தே உன் கிட்ட "சாரி" சொல்லிட்டேன்!. அப்புறம் ஏன் இப்படியெல்லாம் பேசறே?" சுகன்யா தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவள் முதுகில் தொங்கினாள்.

'விடுடி ... ஸ்கூலுக்கு கிளம்பறேன் ... கட்டிப்புடிச்சி வேணுமின்னே கட்டிக்கிட்டு இருக்கற காட்டன் புடவையை கசக்கறே?

'நீ என்னைப் பாத்து விஷமமா சிரிச்சா ... கிண்டலா பேசினா ... நானும் பதிலுக்கு பதில் அப்படித்தான் பண்ணுவேன்!

"போதுண்டி செல்லம் ... கழுத்து வலிக்குதும்மா.." சுந்தரி பெண்ணிடம் கெஞ்சினாள்.

"அம்மா ... நான் ஒண்ணு சொல்லட்டா ... கோச்சிக்க மாட்டியே?" சுகன்யாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருந்தது.

"ம்ம்ம் ... எதுவாயிருந்தாலும் சீக்கிரம் சொல்லித் தொலை..."

'அப்பா வீட்டுக்கு வந்ததுலேருந்து உன் மூஞ்சே ஒரு பொலிவா இருக்கும்மா ... நாளுக்கு நாள் உன் அழகு கூடிக்கிட்டே போகுது; இன்னைக்கு நம்ம வீட்டு தோட்டத்து மல்லிப்பூ வேற உன் தலையில ஏறிக்கிச்சா, நீ வாசனையா இருக்கேம்ம்மா.." சொல்லிய சுகன்யா தாயின் பின் கழுத்தை முகர்ந்து நீளமாக தன் மூச்சை இழுத்தாள்.

பெண்ணின் பேச்சால், சுந்தரியின் உடல் சிலிர்த்து, அவள் முகம் சட்டென சிவந்து, அதில் ஒரு பெருமிதம் குடியேறியது.

'சுகா ரொம்ப வழியாதே! எனக்கு நேரமாச்சும்மா ... கிளம்புடிச் செல்லம்; டிபனுக்கு இட்லி, குருமா பண்ணியிருக்கேன்; இருக்கற குருமாவை ஒரு டப்பாவிலே போட்டுக்க; உனக்கு நாலு இட்லிதான் வெச்சிருக்கேன் ... அதையும் எடுத்துக்கோ; தாத்தா வீட்டுலயே போய் சாப்பிட்டுக்கோ..."

வாசலை நோக்கி வேகமாக நடந்த சுந்தரி, நடையில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை, தள்ளிக்கொண்டுப் போய் தெரு வாசலில் நிறுத்தி சீட்டின் மேல் படிந்திருந்த தூசைத் துடைக்க ஆரம்பித்தாள்.

"ஒரு நிமிஷம் நில்லும்மா.. டிரஸ் மாத்திக்கிட்டு இதோ வந்துட்டேன்..."

வீட்டுக் கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வந்த, சுகன்யாவின் முகத்தில் பழுப்பு நிற கூலிங் கிளாஸ் ஏறியிருந்தது. நெற்றியில் பிந்தி காணமல் போயிருந்தது. அவள் ஆழ்ந்த சாம்பல் நிற ஜீன்சும், இள நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்திருந்தாள். தோளிலிருந்து இறங்கிய சதைப்பிடிப்பான கைகளின் வெண்மை இளம் வெயிலில் மினுமினுக்க, காலிலிருந்த வுட்லேண்ட்ஸ் லெதர் ஷூ டக் டக்கென ஒலிக்க, தலை முடியை குதிரைவால் கொண்டையில் இறுக்கியிருந்தாள் அவள்.

'ஏண்டி ... இந்த டிரெஸ்சைப் போட்டுக்கிட்டு போறியே; உன் தாத்தா எதாவது நினைச்சுக்கப் போறார்டீ...??'

தன் பெண்ணின் தொடைகளோடு ஒட்டிக்கொண்டிருந்த இறுக்கமான ஜீன்சையும், அந்த இறுக்கம் அவள் இடுப்பிலும், இடுப்புக்கு கீழும் கொண்டு வந்த கவர்ச்சியையும், டாப்ஸில் மெலிதாக அசையும் அவள் மார்புகளையும் கண்டு, இந்த பொண்ணு ஏன் எதையும் ஒரு தரம் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறா... ? சற்றே அதிர்ந்தவளாக சுந்தரி முணுமுணுத்தப் போதிலும் தன் பெண்ணின் அழகு அவள் மனதுக்குள் ஒரு கர்வத்தையும் கொடுக்க, தன் உதடுகளை ஒரு முறை அழுந்த கடித்துக்கொண்டாள்.

'நீ சும்மா இரும்மா! எல்லாத்துக்கும் பயப்படுவே! வண்டி ஓட்டறதுக்கு ஜீன்ஸ்தான் சவுகரியம்! நீ ஜீன்ஸ் போட்டா வேணா உன் மாமனார் ஏதாவது நெனைச்சுப்பார். நான் பேத்தி போட்டுக்கிட்டா தாத்தா ஒண்ணும் சொல்ல மாட்டார்.." சுகன்யா சிரித்துக்கொண்டே பட்டனை அழுத்தி ஸ்கூட்டரை விருட்டென கிளப்பினாள்.

"ஆமாண்டி ... எனக்கு ஜீன்ஸ் ஒண்ணுதான் குறைச்சல்? .

"அம்மா ... நிஜம்மா சொல்றேன்... நீ மட்டும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ரோடுல நடந்து போ ... கும்பகோணம் பசங்க உன் பின்னாடி லைன்ல நிப்பானுங்க ..." சுகன்யா ஓவென சிரித்தாள்.

'சுகா, வாயை மூடிக்கிட்டு ரோடைப்பாத்து வண்டியை ஓட்டுடி நீ .." சுந்தரி சலித்துக்கொண்டாள்


சிவதாணு பிள்ளை, தன் வழக்கமான யதாஸ்தானத்தை தவிர்த்து, காம்பவுண்டு சுவரில் சாய்ந்து நின்று, காலை வெயில் முகத்தில் அடிப்பதையும் பொருட்படுத்தாமல் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தார். யந்திரமாக அவர் மனம் சிவ நாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது.

'என்னங்க வெயில்ல என்னப் பண்ணறீங்க ... கல்லை அடுப்புல போடட்டுமா?' கனகா அவரருகில் சென்று நின்றாள்.

'இப்பத்தாண்டி வந்து நின்னேன்!... குழந்தை வராளான்னு பாக்கிறேன் ...'

'எட்டு ஆவறதுக்குள்ள பசி ... பசின்னு ஏலம் போடுவீங்க? ...' கனகா அவர் தோலை மெதுவாக உரிக்கத் தொடங்கினாள்.

"செத்த இருடி ... சுகன்யா வந்துடட்டும் ...?" அவர் அடிவயிறு கூவிக்கொண்டிருந்தது.

"வர்றவ நேத்து மாதிரி வீட்டுக்குள்ள வருவா ... நீங்க நிழலா வந்து சேர்ல உக்காருங்க... எதுலயும் எதிர்பார்ப்பே இருக்கக்கூடாதுன்னு பண்ற உபதேசம் எனக்கு மட்டும்தான்!" கனகா அவர் கையைப்பிடித்து அசைத்தாள்.

'சிவ சிவா .. சும்மா இரேண்டி கொஞ்ச நேரம் ...என்னை அதிகாரம் பண்ணிக்கிட்டே இருக்கணும் உனக்கு?" மெதுவாக நடந்து ஈஸிசேரில் உட்க்கார்ந்து கொண்டார்.."

"ம்ம்ம் ... என்னைச் சொல்லிட்டு நீ ஏன்டீ இப்ப வெயில்ல நிக்கறே? ... அப்புறம் தலை சுத்துதுன்னு புலம்பறதுக்கா?"

"பேத்தி வரலேன்னுதானே நின்னுகிட்டு இருந்தீங்க ...?"

"ம்ம்ம் ... "

"நீங்க செய்த வேலையை நான் கொஞ்ச நேரம் பாக்கறேனே?"

"அப்ப உனக்கும் சுகன்யா எப்ப வருவான்னு இருக்குதானே?"

"ம்ம்ம் ..."

"அப்புறம் என்னை ஏன் கிண்டலடிச்சே?"

"மனசு கேக்கலைங்க ... நேத்து அவ போனதுக்கு அப்பறம் ... வீடே வெறிச்சுன்னு ஆயிடுச்சி" கிழவி முனகினாள். முனகியவள் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

"ஆமாம் ... இந்த வாரம் குமார் வந்தான்னா, மெட்ராஸ்ல வீடு பாத்துட்டானான்னு கேளுடி ... குழந்தை இருக்கற வீட்டை காலிபண்ணிட்டு நம்ம கூடவே வந்து இருக்கட்டும்..."

"ஆகற கதையைத்தான் நீங்க எப்பவும் பேச மாட்டீங்களே?" கனகா கிழவரின் இடது காலை அமுக்கிவிட ஆரம்பித்தாள்.

"அப்படித் தப்பா என்னத்தைடி இப்ப நான் சொல்லிட்டேன்?"

"குழந்தை கல்யாணத்தை பண்ணிக்கிட்டு நம்ம கூட இருப்பாளா?"

"என்னடி சொல்றே நீ ... "

"அப்ப நேத்து சுந்தரி சொல்லிக்கிட்டிருந்தது உங்க காதுல விழலையா"

"நீயும் உன் மருமவளும் என்னமோ குசுகுசுன்னு ரகசியம் பேசிக்கிட்டு இருந்தீங்க ... கேட்டா, பொம்பளைங்க ஏதோ எங்களுக்குள்ள பேசிக்கிறோம்பீங்க ... நான் எதுக்கு குறுக்குல; சிவ சிவான்னு அப்படியே கூடத்துல ஓரமா கிடந்தேன்."

"இது வரைக்கும் நான் உங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த வூட்டுல குப்பை கொட்டிட்டேன்."

"ம்ம்ம் ... இதுக்கு மேல வேற எங்கே போய் பெருக்கி மொழுகப் போறே?"

"இந்த வாய்தான் வேணாம்ன்னு சொல்றேன் நான்..?

"சரிடி நீ விஷயத்துக்கு வா?"

"சுகன்யா, தன் கூட வேலை செய்யற ஒரு பையனை ஆசைப்படறாளாம்..."

"ம்ம்ம் ..."

"அந்தப்பையன் நம்ம ஜாதியில்லையாம் ..."

"சிவ சிவா; சுகன்யா ஜாதகத்துல ஏழுல ராகு உக்காந்து இருக்கான்னு உனக்கு நான் எப்பவோ சொல்லி வெச்சிருக்கேன்டி..."

"உங்க ஜாதகத்துல ரெண்டுல சனி படுத்துக்கிட்டு இருக்கான்னும் சொல்லி இருக்கீங்க"

"ஏண்டீ... எனக்கே நீ ஜோஸ்யம் கத்துக்குடுக்கறீயா?"

"சிவ சிவா; அந்த தப்பை நான் பண்ணுவனா; உங்களுக்கு யாரு எதை கத்துக்குடுக்க முடியும்?"

"ம்ம்ம்ம் ... அப்புறம்.."

"அதனாலத்தான் உங்க திருவாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு இருங்கோன்னு சொல்றேன் ... இருபத்தஞ்சு வருஷத்துக்கு அப்புறம் என் மருமவ என் வூட்டுக்கு வந்திருக்கா ..."

"புரியுதுடி ..."

"கடைசிக் காலத்துல அவ கையால ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னு பாக்கிறேன் நான்.."

"சிவ சிவா; நான் மட்டும் என்னா கடைசீல பால் பாயசம் குடிச்சிட்டு மூச்சை வுடணும்ன்னா சொல்றேன்?"

"இந்த ராகு அங்க இருக்கான்; கேது இங்க இருக்கான்ற கதையெல்லாம் ஒரு ஓரமா மூட்டைக்கட்டி வெச்சுட்டு, கல்யாணத்துக்கு கூப்பிட்டாங்களா; ஒழுங்கு மரியாதையா பெரிய மனுஷனா சபையில உக்காந்தமா; அந்த குழந்தைங்க தலையில ரெண்டு அட்சதையை போட்டமா; மனசார ஆசீர்வாதம் பண்ணமான்னு இருங்க; புரியுதா நான் சொல்றது?"

"அப்புறம் ..."

"அந்த புள்ளையைப் பெத்தவளும், ஜாதி ஜாதிங்கறளாம் ... அவ ஜாதகத்துலேயும் வாக்குல சனியோ என்ன எழவோ தெரியலை ... இந்த கல்யாணம் கூடாதுன்னாளாம்."

"சிவ சிவா;"

"புள்ளை சுகன்யாவைத்தான் பண்ணிக்குவேன்னு ஒத்தைக்கால்லே நிக்கறானாம் ... ரெண்டு மூணு நாள்லே அந்த பையனை பெத்தவங்க கும்பகோணத்துக்கு வரலாம்ன்னு சுந்தரி சொன்னா?

"ம்ம்ம் ..."

சிவதாணு நீளமாக ஒரு பெருமூச்சை விட்டவாறு தன் கண்களை மூடிக்கொண்டவர் தன் வலது கையால் தலையைத் சொறிந்து கொண்டார். கனகா தன் தலையை முடிந்துகொண்டு சுற்று சுவர் அருகில் வந்து சுகன்யா வரும் வழியைப் பார்க்க ஆரம்பித்தாள்.

"உன் பேத்தி வர்றாளாடி...?"

"பேத்தி வரலே; பேண்ட் - ஷர்ட், ஷூவோட இப்ப ஸ்கூட்டர் ஓட்டற பேரனே வந்தாச்சு ..."

க்றீச்ச்ச் ... வேகமாக வந்த சுகன்யா, வீட்டு சுற்று சுவரை ஒட்டி ஸ்கூட்டரை நிறுத்தினாள். ம்ம்ம் ... இந்த ட்ரெஸ்ல ... "சுட்டும் விழி சுடரே ... சுட்டும் விழி சுடரே" ன்னு பாட்டு பாடிக்கிட்டு டேன்ஸ் ஆடுவாங்களே, படம் பேர் ஞாபகத்துல வரலே; அந்த பாட்டுல வர்ற பொண்ணு மாதிரியில்லா இருக்கா என் பேத்தி! ... சுகன்யாவை ஜீன்ஸில் பார்த்த கனகாவின் வாயெல்லாம் பல்லாகியது.

"சிவ சிவா ... என்னடிச் சொல்றே .." சிவதாணு தன் கண்களை விழித்தார்.

"கண்ணு ... வண்டியை காம்பவுண்டுக்குள்ளே ஏத்தி நிழல்ல நிறுத்திடும்மா..." சுகன்யா வீட்டுக்குள் நுழைய, கனகா பின்னால் நின்று குரல் கொடுத்தாள்.

"சரி பாட்டீ ... 'சாரி' தாத்தா ... அம்மாவை ஸ்கூல்ல விட்டுட்டு வர்றேன்; கிளம்பறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சி ... "

"அதனால என்னம்மா?"

"நீங்க சாப்டீங்களா இல்லையா?" சுகன்யா தாத்தாவின் கைகளை பற்றிக்கொண்டாள்.

"இல்லம்ம்மா ... உனக்காகத்தான் வெய்ட் பண்றோம்..."

ம்ம்ம் ... குழந்தை ஜாதகத்துல ராகு ஏழுல இருக்கான் ... ஏழுக்குடையவன் லக்னத்துல இருக்கான். மனதுக்குள் சட்டென மின்னலடிக்க - சிவதாணுவின் மங்கிய கண்கள், சுகன்யாவின் தலையிலிருந்து கால் வரை ஒரு முறை தங்கள் பார்வையை வீசின. சிவ சிவா ... எப்போதும் போல அவர் மனம் உணர்ச்சிகளின்றி முனகியது.

"பாட்டி ... நீங்க ரெண்டு பேரும் சாப்பிட வேண்டியதுதானே?"

என் மேல எவ்வளவு பாசமிருந்தா, நான் வரேன்னு சொன்னதுக்காக, பாட்டி வெயில்ல நான் வர்ற வழியைப் பாத்துக்கிட்டு நிப்பாங்க? நினைத்தவளின் மனம் சந்தோஷத்தில் பூரித்தது. எவ்வளவு ஆசையிருந்தா,எனக்காக வயசானவங்க சாப்பிடாம காத்துகிட்டு இருக்காங்க? அவங்களை இப்படி தேவையில்லாம காத்திருக்க வெச்சிட்டோமே? இந்த நினைப்பு மனதுக்குள் வந்ததும், சுகன்யாவின் உள்ளம் சற்றே குற்ற உணர்ச்சியுடன் வருந்தவும் தொடங்கியது.

ம்ம்ம்... நடந்தது ஒரு நிகழ்ச்சி. அந்த ஒண்ணே எனக்கு மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் ஒரு சேரக் கொடுக்குதே? அப்படின்னா மகிழ்ச்சின்னா என்ன? இதைப் பத்தி தாத்தாக்கிட்ட சாப்பிட்டதும் ஆற அமர கேக்கணும்; சுகன்யா மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள். 


சிவதாணுவும், கனகாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா அவர்களுக்கு சூடாக தோசை வார்த்து போட்டுக் கொண்டிருந்தாள்.

"கனகா, குருமா நல்லாருக்குடி ...கசா கசா, தேங்கா எல்லாம் அரைச்சு ஊத்தி, அமிர்தமா பண்ணியிருக்கா உன் மருமவ ... இன்னொரு ஸ்பூன் போட்டுக்கோம்மா ..."

"போதுங்க ... குழந்தைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க ... குருமாவை நீங்களும் திட்டமா தொட்டுக்குங்க; சும்மா குடிக்காதீங்க ... அப்புறம் ஜீரணம் ஆகலே! எனக்கு நெஞ்சை கரிக்குதுன்னு என் உயிரை எடுக்காதீங்க..."

"பாட்டி ... நல்லாயிருந்தா சாப்பிடட்டும் பாட்டி ... நீங்களும் ஊத்திக்கோங்க ... எனக்கு இட்லி - தோசைக்கு மிளகாய் பொடிதான் ரொம்ப பிடிக்கும் ..."

ஸ்டவ்வை அணைத்துவிட்டு வந்த சுகன்யா, கனகாவின் தட்டில் குருமாவை எடுத்து ஊற்றினாள். தாத்தாவின் பக்கத்தில் உட்கார்ந்து நிதானமாக உண்ண ஆரம்பித்தாள். எல்லோரும் சாப்பிட்ட தட்டுகளை சுத்தமாக கழுவி கிச்சனுக்குள் வைத்தாள். மூவரும் பில்டர் காஃபியை ருசித்து குடிக்கும் போது வாசலில் காலிங் பெல் அடித்தது.

"பாட்டி நீங்க உக்காருங்க ... நான் பார்க்கிறேன் யாருன்னு...?"

மூடியிருந்த கம்பிக் கதவுக்குப் பின்னால், மா நிறத்துக்கு சற்றே குறைவாக, ஆனால் களையான சிரித்த முகத்துடன், ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். காம்பவுண்டுக்கு வெளியில் அவளுடைய ஸ்கூட்டரின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா மோட்டார் சைக்கிளில் அவன் வந்திருக்க வேண்டும்.

வாளிப்பான உடல். பரந்த மார்பு. கருகருவென சுருட்டையான முடி, க்ளோசாக வெட்டப்பட்டிருந்தது. கண்களில் கருப்பு கூலிங் க்ளாஸ். அழகாக டிரிம் செய்யப்பட்ட மீசை. பளபளக்கும் கருப்பு பேண்ட் போட்டிருந்தான், பேண்டில் செருகப்பட்டிருந்த வெள்ளை நிற டீ ஷர்ட்டில் பிதுங்கிக்கொண்டிருக்கும் திடமான கைகள், அவன் ஜிம்மில் தினசரி கணிசமாக ஒரு நேரத்தை செலவு செய்கிறான் என்பதை காட்டின.

உண்மையிலேயே முதல் பார்வைக்கு ஆள் ஸ்மார்ட்டா, ஹேண்ட்சம்மாத்தான் இருக்கான். டிப்-டாப்பா இவன் போட்டிருக்கற ப்ராண்டட் டிரஸ்சைப் பாத்தா சேல்ஸ்மேன் மாதிரித் தெரியலை சினிமாவில வர்ற தொப்பையில்லாத இளம் போலீஸ் ஆஃபீசரைப் போல் அவன் இருப்பதாக சுகன்யாவின் மனதில் பட்டது.

"யார் வேணும் ...உங்களுக்கு?"

"ம்ம்ம் ... மிஸ் சுகன்யா கதவைத் தொறங்க ..." அணிந்திருந்த கருப்பு கண்ணாடியை அவன் கழற்றிக்கொண்டே அவன் பேசினான்.

என் பேரு இவனுக்கு எப்படித் தெரியும்? இவ்வளவு தீர்மானமா, உறுதியா, முகத்துல தன்னம்பிக்கையோட எப்படி பேசறான்? கண்ணாடியை கழட்டினதுக்கு அப்புறம், இவன் கண்ணுல ஒரு திருட்டுத்தனம் இருக்கற மாதிரி படுதே? கண்ணுங்க ஒரு இடத்துல நிக்காம எதையோ தேடற மாதிரி இருக்கே? இவனை இதுக்கு முன்னாடி எங்கேயாவது பார்த்திருக்கேனா?



சுகன்யா தன் நினைவுகளில் அவனைத் தேடி அடையாளம் காண முயன்றாள். அவன் யார் என கண்டுபிடிக்கமுடியாமல் முடிவில் அவள் மனம் தோற்று நின்றது. அவள் முகத்தில் ஓடிய உணர்ச்சிகளை புரிந்து கொண்டவனாக அவன் சிரித்தவாறு பேச ஆரம்பித்தான்.

"சுகன்யா, உங்களுக்கு நிச்சயமா என்னைத் தெரியாது. நீங்க முதல் தரமா என்னைப் பாக்கறீங்க. ஆனா உங்களை பத்தி எனக்கு கொஞ்சம் தெரியும்." அவன் உற்சாகமாக புன்னகைத்தான்.

ஹீ ஈஸ் சம்வாட் இன்ட்ரஸ்டிங் ... ஒரு நொடி, அவன் உற்சாகம் சுகன்யாவைத் தொற்றிக்கொண்டது. ஒரே வினாடிதான். எல்லாம் சரி - முதல் தடவையா நான் இவனைப் பாக்கிறேன், ஆனா இவன் பார்வை என் முகத்துல நிக்காம, ஏன் என் மார்லேயே சுத்தி சுத்தி வருது? இவன் கண்ணுல இருக்கறது திருட்டுத்தனம் மட்டுமில்லே ... சதை வேட்க்கையும் அதிகமாகவே இருக்கு.

இவன் உதடுகள்ல வார்த்தைகள் மேனர்ஸோட வருது; ஆனா மனசுல அது கம்மியோ? வேஷம் அதிகமோ? யார் இவன்? அவன் புன்னகையில் மெலிதான அலட்சியமும், கர்வமும் கலந்திருப்பதாக சுகன்யாவுக்குப் பட்டது. தன் மனதுக்குள் மெலிதாக அதிர்ந்தாள் சுகன்யா. அதிர்ந்தவள் மெதுவாக கதவையும் திறந்தாள்.

"வாப்பா உள்ள வா ... நீ மட்டும் தான் வர்றயா? உன் அம்மா வரலையா?" தன் பின்னால் பாட்டியின் குரல் வந்ததும், பாட்டிக்கு வழி விட்டு, சுகன்யா சற்றே வரண்டாவில் ஒதுங்கி நின்றாள்.

"பாட்டீ ... நீங்க முதல்ல, நான் யாருன்னு உங்க பேத்திக்கிட்ட சொல்லுங்க; அவங்க என்னை உங்க வீட்டுல திருட வந்தவனோன்னு சந்தேகத்தோட பாக்கறாங்க" அவன் இப்போது கலகலவென சிரித்தான்.

"உனக்கு எல்லாத்துலேயும் கிண்டல்தாண்டா; நீ யாருன்னு சுகன்யாவுக்கு எப்படித் தெரியும்? அவ கதவைத் தொறக்க தயங்கினதுல தப்பே இல்லே? பேசியவாறே கனகா வீட்டுக்குள் நடந்தாள்.

"சுகன்யா ... யூ ஆர் வெரி ப்ரெட்டி அண்ட் ஸோ ஸ்வீட் இன் திஸ் ட்ரெஸ்! நீங்க இவ்வளவு மாடர்னாவும் ட்ரெஸ் பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது..." சுகன்யாவுக்கு மட்டும் கேட்கும் அளவுக்கு, அவளை நெருங்கி, தன் அடித்தொண்டையில் கிசுகிசுத்த அவன் உதடுகளில் ஒரு அசாத்தியமான கவர்ச்சி இருந்தது.

அவன் பேச்சைக் கேட்டதும் சுகன்யா ஒரு வினாடி தன் நிதானத்தை இழந்தாள்; இருந்த போதிலும் முதலில் அவன் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளை மனதில் அலைக்கழிக்க அவளும் மெல்லிய குரலில் ஒரு மரியாதைக்காக "தேங்க் யூ" என முணுமுணுத்தவள், தன் பாட்டியின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

அடுத்த நொடி நான் ஏன் இந்த ஸ்டுபிட்டோட காம்பிளிமென்ட்டுக்கு தேங்க்ஸ் சொன்னேன்? சுகன்யாவுக்கு தன் மீதே சட்டென எரிச்சல் எழுந்தது. வர வர நானும் ஒரு இடியட்டாத்தான் பிஹேவ் பண்றேன்.

"ஓ மை காட் ..." வந்தவன் இதயம் ஒரு வினாடி நின்றது. பின் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது.

தன் முன்னால் மெதுவாக நடந்த சுகன்யாவின் சீராக அசைந்த இடுப்பையும், வாளிப்பான அவளுடைய பருத்த தொடைகளையும், அவள் கால்களின் வீச்சையும், அதனால் அவளுடைய பின்னெழில்கள் ஆடிய நடனத்தையும் கண்ட சம்பத், சுகன்யாவின் பின்னழகை முழுமையாக ரசிக்க எண்ணி, தன் மனம் சிலிர்க்க, வீட்டுக்குள் செல்லாமல் கதவருகிலேயே நின்றுக்கொண்டிருந்தான்.

வந்தவன் கதவருகில் நின்று தன் குறுகுறுக்கும் கண்களால், திருட்டுப் பார்வையால், தன் உடலை முழுதுமாக ஸ்கேன் செய்வதை சுகன்யா நன்றாக உணர்ந்தாள். அவள் மனதிலிருந்த எரிச்சல் மெல்ல மெல்ல சினமாக உருவெடுக்க தொடங்கியது. 


"என்னங்க ... நம்ம ராணியோட பையன் சம்பத் வந்திருக்கான் ..."

"வாப்பா ... நல்லாயிருக்கியா ... இப்ப பெங்களூர்லதானே நீ வேலை செய்யறே? லீவுல வந்திருக்கியா?" சிவதாணு சோஃபாவில் சாய்ந்திருந்தார்.

"நல்லாயிருக்கேன் தாத்தா ... நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுக்குள் வந்தவுடன், தனக்கென்னவோ சுகன்யாவிடம் அதிக உரிமை கிடைத்துவிட்டது போல், அவளை அவன் இப்போது நேராகப் பார்த்தான். அவன் பார்வை மீண்டும் மீண்டும் அவள் மார்பில் சென்று படிந்தது. அவன் திருட்டுப் பார்வையை கண்டதும், எழுந்து சென்று அவனை ஓங்கி அறையலாமா என்றிருந்தது சுகன்யாவுக்கு.

சுகா, ராணின்னு நம்ம உறவுல உனக்கு ஒரு அத்தை இருக்கறதை நீ கேள்வி பட்டு இருப்பே; ஆனா பாத்து இருக்க மாட்டே. ராணியோட பிள்ளை இவன்; பேரு சம்பத்; பெங்களூர்ல இஞ்சீனியரா வேலை செய்யறான். உங்கம்மாவுக்கு ராணியை நல்லாத் தெரியும்; ரெண்டு பேரும் ஓரே காலேஜ்ல படிச்சவங்களாம். பாம்பேயிலே வேலையாய் இருந்த இவன் அப்பா இப்பத்தான் ரிடையராகி இங்க வந்து செட்டிலாயிருக்கான். சம்பத், பாம்பேயில அப்பா அம்மா கிட்டவும், இங்கே இவனோட தாத்தா வீட்டுலேயும் அல்லாடிக்கிட்டு கிடந்தான். இங்க ஊருக்கு வரும் போதெல்லாம் எங்களை ஒரு தரம் தவறாம பாத்துட்டு போவான்.

"அப்படியா பாட்டி; ராணி அத்தை ரெண்டு மூணு தரம் எங்க வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசிட்டு போறதை நான் பாத்து இருக்கேன். நான் அவங்க கிட்ட அதிகமா பேசினது இல்லே; இவரைப் பத்தியும் எனக்கு தெரியாது." சுகன்யா மையமாக பேசிக் கொண்டே தன் செல் போனை ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்தவள், திடுக்கிட்டு போனாள்.

"டேய் சம்பத்து, என் பையன் குமாரோட பொண்ணு இவ; எங்க பேத்தி, மெட்ராஸ்ல வேலை செய்றா..." கனகா அவர்களை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்தாள்.

மை காட் .. என் செல் ஆஃப் ஆகி கிடக்கு. என் செல்லை எப்ப நான் ஆஃப் பண்ணேன்? ரெண்டு நாள் முன்னே செல்வா மேல இருந்த எரிச்சல்ல, போனை டேபிள் மேல தலையை சுத்தி விசிறி எறிஞ்சேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு காலையிலத்தான் அம்மா ஸ்கூலுக்கு போறாளே, அவசரத்துக்கு இருக்கட்டும்ன்னு தேடி எடுத்துகிட்டு வந்தேன். அப்போ ரெண்டு நாளா இது ஸ்விட்ச் ஆஃப் ஆகிக் கிடக்கா? என்னாச்சு இதுக்கு; ஆன் ஆக மாட்டேங்குது; என்னப் பிராப்ளம் இதுல? சனியன் ... கெட்டு கிட்டு போச்சா?

நேத்து செல்வா எனக்கு போன் பண்ணியிருந்தால்...? போனை கெடுத்து வெச்சுட்டு நான் என்னமோ செல்வாவை தேவையில்லாமா திட்டிக்கிட்டு இருக்கேன். ஆனா போன் கெட்டுப் போன கதையெல்லாம் சனி, ஞாயிறு ரெண்டு நாளாத்தானே? அந்த தீவெட்டி தடியன் செல்வாதான் ஒரு வாரமாவே எங்கிட்ட பேசலையே? செல்வாவின் நினைவு மனதுக்குள் வந்த பின், தன் பாட்டி பேசியது எதுவும் சுகன்யாவின் காதில் ஏறவேயில்லை.

"சுகன்யா... க்ளாட் டூ மீட் யூ"

சம்பத் தன் வலது கையை அவள் பக்கமாக நீட்டிக்கொண்டு எழுந்தான். சம்பத்தின் கையை குலுக்குவதை விரும்பாத சுகன்யா, அவனை நோக்கி சட்டென தன் கைகளை கூப்பினாள். இவன் வீட்டுல என்னைக் கேட்டு வந்த ப்ரப்போசல் எப்பவோ முடிஞ்சி போன விவகாரம். எந்த உறவுகாரனைப் பத்தியும் எனக்கென்ன கவலை? எவன் உறவு கெட்டாலும் எனக்கு பரவாயில்லை.

நான் எவன் முன்னாடியும் நிக்க மாட்டேன்னு, என் முடிவை அம்மாகிட்ட தீத்து சொல்லிட்டேன். அப்பாவும் நம்ம வீட்டு முடிவை ராணி அத்தைக்கிட்டே சொல்லியாச்சு; அப்புறம் இப்ப இவன் கையை மரியாதைக்காககூட நான் ஏன் குலுக்கணும்? அப்படி குலுக்கி எனக்கென்ன ஆவப் போவுது? எனக்கு மேனர்ஸ் இல்லேன்னு இவன் நினைச்சா நினைச்சிட்டுப் போறான்.

அம்மா கிட்ட எவன் எதிர்லேயும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு இளிக்க மாட்டேன்னு சொன்னேன். ஆனா என் போதாத வேளை, நான் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு நல்ல மூடுல இருக்கும் போது இந்த பொறுக்கி வந்து என் எதிர்ல நிக்கறான். இவன் முழியே சரியில்லைன்னு நான் நினைச்சது ரொம்ப கரெக்ட். சரியான பொம்பளை பொறுக்கி. வந்ததுலேருந்து பத்து தரம், கண்ணாலேயே என்னை ரேப் பண்ணிட்டான். பாட்டி என்னமோ இப்பத்தான் இவன் ஹிஸ்டரி, ஜியாகிராஃபி எல்லாத்தையும் என் கிட்ட ஒப்பிக்கிறாங்க.

"எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் சம்பத் ... பீ கம்ஃபர்டபிள் ஹியர்! ... நீங்க பாட்டிகிட்ட பேசிகிட்டு இருங்க.." என்ற ஒற்றை வரியுடன் அவனை ஒதுக்கிவிட்டு, சுகன்யா விருட்டென ஹாலில், சோஃபாவில் கிடந்த தன் டிராவல் பேகை எடுத்துக்கொண்டு, ஹாலை ஒட்டியிருந்த தாத்தாவின் படிக்கும் அறைக்குள் நுழைந்து கதவை மூடிகொண்டாள்.

மூஞ்சியில அடிக்கிற மாதிரி கையை கூட குலுக்காம எழுந்து போயிட்டாளே? போனதுதான் போனா, ரூமுக்குள்ளே போய் கதவையும் மூடிக்கிட்டாளே? ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்காளே? இவ பண்ண காரியத்துக்கு என்ன அர்த்தம்? உன்னை எனக்கு பிடிக்கலைன்னுதானே சொல்றா? சம்பத்துக்கு உடம்பில் சடாரென சூடு ஏறி முகம் சிவந்தது. சுகன்யாவோட ட்ரஸ்தான் மாடர்னா இருக்கு. மனசால ஒரு வேளை இவ ரொம்ப ட்ரெடிஷனலா இருப்பாளோ? என் பார்வையைப் பாத்து பயந்துட்டாளா?

கனகாவுக்கும் தன் பேத்தி சுகன்யா, இப்படி வீட்டுக்கு வந்த விருந்தாளியை, உறவுக்காரனை, உதாசீனப்படுத்திவிட்டு சட்டென அறைக்குள் போனது மனதுக்கு சிறிது சங்கடத்தைக் கொடுத்தாலும், உள் மனதில் கிழவிக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது போல்தான் இருந்தது. தன் வாழ்க்கையில் இது போன்று எத்தனை தருணங்களை அவள் பார்த்திருப்பாள்?

இன்னைக்கு இந்த சம்பத்து பார்வையில ஒரு வித்தியாசம் இருக்கே? என்னமோ பேண்ட் போட்ட பொண்னை இன்னைக்குத்தான் மொதல் தரமா பாக்கற மாதிரி, கொஞ்சம் வெறியோட பாத்த மாதிரியிருந்ததே? திருட்டு முழில்லா முழிக்கிறான். சுகன்யாவுக்கு அப்புறம்தான் எனக்கு மத்த உறவெல்லாம். என் பேத்திக்கு இவனைப் புடிக்கலைன்னா, இவனை முதல்ல வெளியில அனுப்பித்தான் ஆகணும்.

"என்னடா சம்பத்து ... காஃபி குடிக்கிறியா?"

"வேணாம் பாட்டி ... இப்பத்தான் நான் குடிச்சிட்டு வந்தேன் ... நீங்க ஏன் சிரமப் படறீங்க?"

"எனக்கென்னடா சிரமம் ... ஏற்கனவே இறக்கின டிக்காஷன் இருக்கு.. பாலை காய்ச்சினா வேலை முடிஞ்சது ... ஒரு நிமிஷம் உக்காரு, இதோ வரேன்" கனகா கிச்சனில் நுழைந்தாள்.



சிவதாணு இன்று அவர் பசிக்கு மேல், ருசிக்காக ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட்டதால், உண்ட மயக்கத்தில் வந்த சன்னமான குறட்டையுடன் சோஃபாவில் சாமியாடிக் கொண்டிருந்தார். அவருக்கு தன் ஒன்று விட்ட சகோதரி லட்சுமி குடும்பத்துடன் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக ஒட்டுதல் கிடையாது. ஆனாலும் உறவு முறைக்காக அவர்கள் தன் வீட்டுக்கு வந்து போவதை சகித்துக்கொண்டிருந்தார்.

சம்பத் விட்டத்தை பார்க்க ஆரம்பித்தான். சுகன்யா உள்ளே சென்று மூடிக்கொண்ட அறைக் கதைவை ஒரு நிமிடம் கண்களை அகல விரித்துப் பார்த்தான். நடக்கறது நடக்கட்டும். சட்டுன்னு உள்ளே போய், சுகன்யாவை கட்டிபுடிச்சி அவ ஒதட்டுல ஒரு கிஸ் அடிச்சுட்டு வந்துடலாமா? அவன் மனதில் மிருக வெறி ஒரு நொடி கிளம்பியது. இவ எனக்கு உறவு முறையா போயிட்டா, கதை இத்தோட முடியாதே? இதை நினைத்து தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக்கொண்டவனின் மனது மட்டும் அலைய ஆரம்பித்தது. 


No comments:

Post a Comment