Saturday 7 March 2015

சுகன்யா... 31

சுந்தரியும், சுகன்யாவும், கும்பகோணம் வந்து சேர்ந்தாகிவிட்டது. வீட்டை ஒழித்து சுத்தம் பண்ணுவதிலேயே முதல் நாள் கழிந்தது. சுகன்யாவும் அன்று அதிசயமாக, முணுமுணுக்காமல் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருந்த போதிலும் சுகன்யாவின் உள்ளம் அந்த வேலையில் முழுமையாக நிலைக்கவில்லை.

"சுகா ... நல்லா குனிஞ்சு, உடம்பை வளைச்சு, தொடப்பத்தை கெட்டியா புடிச்சு குப்பையைத் தள்ளும்மா - என்னமோ சாமரம் வீசறவ மாதிரியில்லே நிமிந்து நின்னுக்கிட்டு வீசறே? பெத்தவ ஒண்ணும் சொல்லிக்குடுக்கலைன்னு போற எடத்துல யாருகிட்டேயும் பேச்சு வாங்காதே?" சுந்தரி மகளுக்கு ஆணையிட்டுக் கொண்டிருந்தாள்.

செல்வா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பானா? தன் செல் எப்போது ஒலிக்கும்? சுகன்யாவின் மனமும், கண்களும், காதுகளும், அவன் அழைப்பை எதிர்பார்த்து தன் மொபைலையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. அவள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த ஒரு அழைப்பு மட்டும் வராமல், உள்ளத்தின் ஒரு மூலையில், செல்வாவுக்கு எதிராக சிறு சிறு எரிச்சல் குமிழிகள் எழுந்து அங்கேயே வெடித்துக் கொண்டிருந்தன. அந்த எரிச்சல், அலையாக மாறி இன்னும் அவள் மனதின் மேற்பரப்புக்கு வரவில்லை.

மாறாக சுந்தரியின் செல் விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்தது. குமாரசுவாமி வெள்ளிக்கிழமை இரவு அவர்களை ரயில் ஏற்றிய பின், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை தன் மனைவிக்கு போன் செய்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். சுந்தரியும் ஓடி ஓடி செல்லில், தன் முகம் மலர, சிரித்து சிரித்து தன் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தது, சுகன்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது..


என்னை செல்வாகூட பேச வேணாம்ன்னு சொல்லிட்டு, இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல அப்படி விடாம பேசிக்கறதுக்கு என்ன விஷயம் இருக்கும்? என்னமோ இப்பத்தான் புதுசா காதலிக்க ஆரம்பிச்ச லவ்வர்ஸ் மாதிரி "குசுகுசு"ன்னு பேசிக்கிறாங்க? என்னை லவ் பண்றேன்னு சொல்லிக்கிட்டு திரியற செல்வாவுக்கு அஞ்சாறு நாளா எங்கிட்ட பேசறதுக்கு கூட நேரமில்லே! இதைப் பத்தி யாருக்காவது கவலையிருக்கா? நான் இதுக்கெல்லாம் யாரை நொந்துக்கறது?

"என்னடி சுகா .. மலைச்சுப் போய் நிக்கறே?" சுந்தரி அப்போதுதான் குமாரிடம் பேசி முடித்திருந்தாள்.

"ஏம்மா... அப்பாவுக்கு ஆஃபிசுல வேற வேலையே கிடையாதா? நிமிஷத்துக்கு நாலு போன் பண்றாரு? பேச வேண்டியதை ஒரே தரத்துல பேசி முடிக்க வேண்டியதுதானே?" பொறுத்துப் பொறுத்து பார்த்து, பொறுமை இழந்த சுகன்யா தன் தாயிடம் வெடித்தாள்.

"நல்லாருக்குடி; நீ பேசறது; என் புருஷன் என் கிட்ட பேசினா, நீ ஏண்டி கடுப்பாவறே? என் புருஷன் ஒரு பெரிய கம்பெனிக்கு மேனேஜர்டி. மத்தவங்களை வேலை வாங்கறதுதான் அவன் வேலை; ஞாபகமிருக்கட்டும்." பதிலுக்கு பொருமிய சுந்தரியின் குரலில் பிரபல கம்பெனியின் பிராஞ்ச் மேனேஜர் பொண்டாட்டிக்குரிய கர்வமிருந்தது.

"எனக்கு என்னம்மா கடுப்பு? வீட்டை சுத்தம் செய்துகிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க உன் வீட்டுக்காரர் உனக்கு போன் பண்றாரு. நீயும், பத்து நிமிஷம் ஹீ...ஹீ...ஹீ ன்னு இளிச்சிக்கிட்டு நான் பெருக்கற எடத்துல வந்து நிக்கறே. நான் கையில தொடப்பத்தை வெச்சிக்கிட்டு ஒரு மூலையில நிக்கறேன். எடுத்த வேலை முடியமாட்டேங்குது. இப்ப நான் பெருக்கணுமா? வேணாமா?" சுகன்யா தன் தோளில் முகத்தை இடித்துக்கொண்டாள்.

இவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படி சிடுசிடுக்கறா?

சுந்தரி ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனாள். சுகன்யா கலங்கிய கண்களுடன் நிற்பதைக் கண்டதும் பெற்ற மனம் சற்று பதட்டமடைந்தது. ட்ரெயின்லேருந்து இறங்கினவுடனே, காலையில ஹோட்டல்ல ரெண்டு இட்லி சாப்பிட்டதுதான், இப்ப இவளுக்குப் பசி வந்துடுச்சா? அதான் கோபப்படறாளா? தன் பதைப்பை முகத்தில் காட்டாமல் சுகன்யாவின் முகத்தை தன்புறம் திருப்பினாள். சுகன்யாவின் மூக்கு விடைத்துக்கொண்டு அவள் மெல்லிய உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன.

"என்னம்மா ... சுகா? மாடி ரூம்தான் சுத்தமா இருக்கே? உன்னால முடியலைன்னா நீ போய் செத்த நேரம் படுத்துக்கோ. மீதி வேலையை நான் பாத்துக்கிறேன். சுந்தரி கனிவுடன் பேசினாள்."

"எனக்கு இங்க போரடிக்குது. நீ ஏன் என்னை இங்க கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கே? அதைச் சொல்லு முதல்லே?" சுகன்யா அழுதுவிடுவாள் போலிருந்தது.

"கண்ணு, வந்து ஒரு நாள் ஆகலை, அதுக்குள்ள போரடிக்குதுன்னு சொன்னா எப்படி? தாத்தாப் பாட்டியை பார்க்கணும்ன்னு அப்பா உங்கிட்ட சொன்னாரா இல்லையா?"

"ஆமாம்."

"நாளைக்கு ஞாயித்துக்கிழமை, காலையில ரெண்டு பேருமா போய் அவங்களைப் பாத்துட்டு ஈவினிங் திரும்பி வந்துடலாம்ன்னு யோசனைப் பண்ணிக்கிட்டு இருக்கேன்."

"சரி ... அப்புறம்?" சுகன்யாவின் கேள்வி எரிச்சலுடன் வந்தது.

"நேத்து ராத்திரி ட்ரெய்ன்ல நீ சரியாத் தூங்கலை. நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு; நான் சட்டுன்னு கிச்சனை கழுவி, சமையலை முடிச்சுட்டு உன்னை எழுப்பறேன்; குளிச்சு சாப்பிட்டின்னா உன் மூடு சரியாயிடும்." சுகன்யா அனுசரனையாகப் பேசினாள்.

"நான் லீவு எடுத்துக்கிட்டு இங்கே உங்கூட வந்தது வெறுமனே தின்னுட்டு, தூங்கறதுக்கா? என்ன நடக்குது இங்க? உண்மையைச் சொல்லும்மா நீ." சுகன்யா வெடித்தாள்.

"என்னடாச் செல்லம் இப்படி பேசறே? உன் கல்யாணத்தை நிச்சயம் பண்ண வேண்டாமா? நீ இங்க எங்கக்கூட இருந்தாத்தானே சௌகரியம்?

"செல்வா வீட்டுல எங்க கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டாங்களா? நிச்சயதார்த்தம் என்னமோ நாளைக்கு காலைலைங்கற மாதிரி நீ பேசறே?"சலித்துக் கொண்டாள் சுகன்யா.

"அடுத்த வாரம் உங்க அப்பா இங்கே வர்ற சமயத்துல, நடரஜனையும், அவர் குடும்பத்தையும், நம்ம வீட்டுக்கு ஃபார்மலா இன்வைட் பண்ணி உன் மேரேஜ்ஜை எங்கே, எப்படி பண்றதுங்கறதைப் பத்தி முடிவு எடுக்கலாம்னு உன் மாமன் அபிப்பிராயப் படறான்."

"அவங்களும் சரின்னு சொன்னா, மறு நாளே ஒரு "முடிவுன்னோ" "ஒரு ஒப்புத்தாம்பூலமோ நமக்குள்ள மாத்திக்கற மாதிரிதான்" இதைப்பத்தித்தான் இப்ப நானும் உங்கப்பாவும் பேசிக்கிட்டு இருந்தோம்."

"அந்த ராணி அத்தை புள்ளை சம்பத்து விவகாரம், அப்புறம் உன் ஃப்ரெண்டு புள்ளை, நெட்டையா, சிவப்பா, கன்னத்துல மச்சம் இருக்கறவன் விவகாரம் எல்லாத்துக்கும் நீ ஒரு புல்ஸ்டாஃப் வெச்சிட்டியா? இல்லையா?"

"ம்ம்ம்... இப்ப நீ ஏன் அதெல்லாம் கேக்கிறே?"

"அம்மா ... நீ இப்பவே நல்லாக் கேட்டுக்க; நீ சொன்னாலும் சரி; இல்லை வேற யாரு சொன்னாலும் சரி; என்னால எவன் முன்னாடியும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு, ஹீ ஹீன்னு இளிச்சுக்கிட்டு நிக்க முடியாது. சொல்லிட்டேன் ஆமாம்..."

"ம்ம்ம் ... எல்லாத்துக்கும் ஏண்டி நீ சலிச்சிக்கிறே? அப்பா உன் ராணி அத்தைகிட்ட, நீங்க வேற எடம் பாருங்க ... அப்படீன்னு பக்குவமா சொல்லிட்டாராம். என் ஃப்ரெண்ட் கிட்ட நான் பேசிக்கிறேன் ... நீ இப்ப அந்த விவகாரத்தையெல்லாம் நினைச்சுக்கிட்டு என் கிட்ட எரிச்சல் படாதே."

"சரி ... சரி ... எனக்கு பசி உயிர் போவுது ... முதல்ல ஒரு ரவை உப்புமாவையாவது கிண்டித் தொலை நீ..." சுகன்யா முனகிக்கொண்டே குளியலறையை நோக்கி நடந்தாள்.

***

"அக்கா, ரகு பேசறேன்"

"சொல்லு ரகு..."

"நாளைக்கு சண்டே ஈவீனிங் வீட்டுக்கு வர்றேன் ... ராத்திரி எனக்கும் சேர்த்து சமையல் பண்ணிடுக்கா"

"சரி ... "

"சுகா எங்கே?"

"இப்பத்தான் குளிக்கப் போனா..."

"ம்ம்ம்... அப்புறம் நான் ஒரு விஷயம் சொல்றேன் ... கோவப்படாம கேளு.."

"சொல்லுடா ... "

"நம்ம மாப்பிள்ளை குமாரு அவரா உங்கிட்ட வந்துட்டார். இப்ப சுகன்யா கல்யாண வேலையை வேற நாம ஆரம்பிக்கிறோம். கடைசி நேரத்துல போய் உன் மாமனார் மாமியாருக்கு இந்த விஷயத்தை சொன்னா நல்லாயிருக்காது. அவங்களை முன்னே வெச்சுக்கிட்டுத்தான், அவங்க பேத்தி கல்யாணத்தை ஆரம்பிக்கணும். நான் சொல்றது உனக்குப் புரியுதாக்கா?

"புரியுதுடா ..."

"அக்கா ... நீ சுகன்யாவோட நாளைக்கு காலையில முதல் வேலையா சுவாமிமலைக்குப் போய் உன் மாமனார், மாமியாரைப் பாத்துட்டு வா. பாவம், வயசானவங்க எப்ப குடும்பம் ஒண்ணா சேரும்ன்னு எதிர்பார்த்து தவிச்சுக்கிட்டு இருக்காங்க."

"ம்ம்ம் .."

"இருபத்து அஞ்சு வருஷம் முன்னாடி, நீங்க ரெண்டு பேரும், நீங்களா கல்யாணம் பண்ணிக்கிட்டு, குமார் வீட்டுக்கு போனப்ப, உன் மாமனார் கோபத்துல என்னமோ சொன்னாருன்னு, அதையே மனசுல வெச்சிக்கிட்டு, அவரே வந்து உன்னை வீட்டுக்கு வான்னு சொல்லணும், கூப்பிடணும்ன்னு இன்னமும் நீ பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்கக்கூடாது? நம்ம பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்... புரியுதா?"

"சரிடா ... நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்? ஒரு தரம் உன் மூலமா என் மாமனார் என்னைக் கூப்ட்ட உடனேயே அவங்களை போய் பாத்து இருக்கலாம். நான் தப்பு பண்ணிட்டேன். இப்ப அதை நெனைச்சா எனக்கும்தான் என் மேலேயே எரிச்சலாயிருக்கு." சுந்தரி உண்மையான வருத்தத்துடன் பேசினாள்.

"ம்ம்ம் ... பேச்சு வாக்குல உன் மாமியார் காதுல சுகா கல்யாண விஷயத்தை போட்டு வை. குமார் டீடெய்லா உன் மாமனார்கிட்ட பேசிக்கட்டும். போவும் போது நம்ம வீட்டுலேருந்தே டிஃபன் ஏதாவது செய்து எடுத்துக்கிட்டு போயேன்? அப்படி பண்ண முடியலன்னா, ஹோட்டல்லேருந்து வாங்கிக்கிட்டு போயிடுங்க. பாவம் வயசான உன் மாமியாருக்கு சிரமம் குடுக்காதே.."

"சரிடா ரகு ... அதெல்லாம் நான் பாத்துக்கறேன்..."

"சரிக்கா ... நாளைக்குப் பார்க்கலாம்...."

"சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை, முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்"

சிவதாணுப்பிள்ளை, காலையில் குளித்து, சிவபூஜையை முடித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிவபுராணத்தை நிதானமாக சொல்லிக்கொண்டிருந்தார். நாற்பத்தைந்து வருஷத்து பழக்கம்.

நெற்றியில் விபூதியும், சந்தனமும் பூசி, இடுப்பில் எட்டு முழவேஷ்டியும், கழுத்தில் ருத்திராக்ஷ மாலையும், மார்பில் மெல்லிய வெள்ளை நிறத்துண்டுமாய், சிவப்பழமாக காட்சியளித்துக்கொண்டு இருந்தார். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.

"அல்லல் பிறவி அறுப்பானே! ஓ ... என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து, சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து."

சிவபுராணத்தை நிதானமாக சொல்லி முடித்தார். தலை நரைத்திருந்ததே தவிர எழுபத்தைஞ்சு வயதிலும், வழுக்கை விழவில்லை. பூஜையை முடிச்சுட்டு தலையை நல்லாத் துடைக்கணுமின்னு இருந்தேன். மறந்தே போச்சு; தலை ஈரமாயிருக்கா என்ன? ஆமாம் ஈரமாத்தான் இருக்கு; கேள்வியும் நானே; பதிலும் நானேதான். மார்பிலிருந்த துண்டால் தலையை லேசாக துவட்டிக்கொண்டார். சிவ சிவா; மனம் சிவனை நினைத்தது; வாய், சிவ சிவா; சிவ சிவா; விடாமல் முணுமுணுத்தது.

ஒரு வேலையும் செய்யாம, பென்ஷனை வாங்கி உக்காந்தே சாப்பிட்டுக்கிட்டு, பதினைஞ்சு வருஷத்தைக் கடத்தியாச்சு; மனசுல ஒரே ஆசைதான் பாக்கியிருக்கு. ஆசையா அது? கடமை; கடமையாச்சே? என் கடமையை நான் சரியா செய்யாமா போனா கட்டை வேகுமா? அந்த குழந்தைங்க கூட கொஞ்ச நாள் இருந்து, அதுங்களுக்கு செய்ய வேண்டியதை செய்துட்டா போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

நான் தயாரா இருக்கேன். அந்த சிவன் கூப்பிடமாட்டேங்கறான். கூப்பிட்டா உடனே போகறதுக்கு ரெடி; சிவாய நம ... சிவாய நம ... பழக்கத்தால் பரதேசியின் நாமத்தை வாய் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தது.

ம்ம்ம்ம் ... வைராக்கியம்ன்னு சொன்னா, என் மருமகளைத்தான் அதுக்கு உதாரணமா காட்டணும். புதுப்புடவையோட, கழுத்துல தாலியும், முகத்துல மிரட்சியுமா, என் புள்ளை கையை புடிச்சுக்கிட்டு, பயந்து பயந்து இந்த வெராண்டா முனையிலத்தான் வந்து நின்னா! மானமுள்ளவளா இருந்தா இந்த வீட்டுக்குள்ள நுழையாதேன்னு கூவினேன். இருபத்தைஞ்சு வருஷமாச்சு. சிவதாணு! நான் மானமுள்ளவடா! இன்னும் இந்த தெருப்பக்கம் கூட அவ வந்தது இல்லே.

என் வீட்டுக்குள்ளத்தான் அவ நுழையலை. அவ வீட்டுக்காவது திரும்பி போனாளா? அதுவுமில்லே. நான் மானமுள்ளவன்னு தனியாவே நின்னு அவங்களுக்கும் சவால் விட்டு, எனக்கும் சவால் விட்டா. தனியா நின்னு ஜெயிச்சுக்கிட்டு இருக்க்கா!

என் புள்ளை உடம்புல என் ரத்தம்தானே ஓடும்? புடிச்ச தன் பொண்டாட்டி கையை கெட்டியா புடிச்சானா? ஒரே வருஷத்துல தங்கமா ஒரு பூங்கொத்தை பெத்து போட்டுட்டு, தறுதலையா அவளை விட்டுட்டு ஓடிட்டான். எப்படித்தான் குடிக்க கத்துக்கிட்டானோ? என்னாலத்தான் அவன் குடிக்க ஆரம்பிச்சான்னு கனகா சொல்றா. என் பொண்டாட்டியே கேக்கிறா இந்த பாவமெல்லாம் எங்களை விடுமான்னு? சிவாய நம; சிவாய நம.

வீடு இருக்கு; வாசல் இருக்கு; நீர் இருக்கு; நிலம் இருக்கு; பேங்க்குல பணமிருக்கு; என்ன இருந்து என்ன பலன்; என் மூஞ்சை நீ பாரு; உன் மூஞ்சை நான் பாக்கிறேன்; கிழவனும் கிழவியும், ஒருத்தர் கிட்ட ஒருத்தர் மல்லு குடுத்துக்கிட்டு நிக்கறோம். இதான் என் வாழ்க்கை; இது ஒரு வாழ்க்கையா?

ஜாடை மாடையா சொல்லி அனுப்பிச்சேன். மசியலையே அவ; பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல தாமு கடைக்கு பக்கத்துல நின்னு, அந்த குழந்தை என் பேத்தி ... அழகா யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு, பள்ளிக்கூடம் போறதையும் வரதையும், திருட்டுத்தனமா கிழவனும், கிழவியுமா பாத்துக்கிட்டு நிப்போம். ஒரு தரம் வாம்மா நம்ம வீட்டுக்குப் போவலாம்ன்னு கூப்பிட்டேன்.

சிவ சிவா; நீ யாருன்னு கேட்டா? பேத்தி - பாட்டனைக் கேக்கற கேள்வியா? நான் இன்னும் உசுரோட இருக்கேன். நான் உன் தாத்தாம்மா; இது உன் பாட்டின்னேன். மாட்டேன். நீங்க கெட்டத் தாத்தாவாம். எங்க அம்மாவை வீட்டை விட்டே தொரத்தினீங்களாமே?

நான் ஏன் உங்க வீட்டுக்கு வரணும்? எங்கம்மா உங்களுக்கு வேணாம்? நான் மட்டும் வேணுமா?நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன். என் அம்மா என்னைத் திட்டுவாங்கன்னு திரும்பிப் பாக்காம, ஓட்டமா ஓடுச்சு அந்த குழந்தை. அன்னைக்கு அந்த சின்னக்குழந்தைக்கிட்ட வாங்கின அடி; அந்த அடியோட வலி; இன்னைக்கும் என் மனசுல பாக்கியிருக்குது. இந்த நெஞ்சுவலி அந்தக் குழந்தை இந்த வீட்டுக்கு வந்தாத்தானே போகும்?

தனியா ஒத்தையில நின்னு பெத்தப் பொண்ணை; என் பேத்தியை; இந்த வீட்டு வாரிசை வளர்த்தா என் மருமவ! என் கூட்டாளிங்க அப்ப அப்ப சொல்லுவானுங்க; யோவ் சிவதாணு! உன் பேத்தி கிளி மாதிரி இருக்காய்யா; அப்படியே உன் மருமவ ஜாடை; போன வாரம் உன் பேத்தி வயசுக்கு வந்துட்டாளாம். இப்பவாவது வீம்பை விட்டுட்டு, அந்த பொண்ணு கையில கால்லே விழுந்து, அவளையும், பேத்தியையும், வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டு வாய்யா? ஏன்யா உனக்கு இந்த புடிவாதம்?

புடிவாதம் என் பரம்பரை சொத்து. ரத்தம் சுண்டினாத்தான் எவனுக்கும் புத்தியே வரும். சிவதாணு மட்டும் இதுக்கு விதிவிலக்கா?

சிவ சிவா ...




"அப்பா! என் கூட வந்து இருங்க"ன்னு, என் ஓடிப்போன புள்ளை திடீர்ன்னு திரும்பி வந்து, அப்பனையும், ஆத்தாளையும் தன் கூட கல்கத்தா, டெல்லின்னு இழுத்துக்கிட்டு போனான். பரதேசத்துல, என் மருமவளோட தம்பியை பாத்தேன். என்னோட மனசுல இருக்கறதைச் சொல்லி அவன்கிட்ட மன்னிப்பும் கேட்டேன். நீங்க பெரியவங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு என் கையை பிடிச்சிக்கிட்டான். மரியாதை தெரிஞ்சவன். என் மருமகளையும் பேத்தியையும் பாக்கணும். நீதான்டா தம்பி அவங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வரணும்ன்னு சொன்னேன். முயற்சி பண்றேன்னு சொன்னான்.

என் புடிவாதத்துல பாதியாவது என் மருமவளுக்கு இருக்காதா? கட்டினவனே என்னை விட்டுட்டு போயிட்டான். அவன் போனதுக்கு அப்புறம் நான் யார் வீட்டுக்குப்போய், யார்கிட்ட எந்த உரிமையில சொந்தம் கொண்டாடறதுன்னு கேட்டாளாம். அவ என் புள்ளையோட, என் வீட்டுக்கு வந்தப்ப உள்ளே வராதேன்னேன். அவ சொல்றதுலயும் ஞாயம் இருக்கே? அவ தம்பிதான் என்னப் பண்ணுவான்? இவ்வளவும் ஆனதுக்கு அப்புறம், நான் என்னா அவ கால்லேயே போய் விழமுடியும். அவ வைராக்கியம் அவளுக்கு பெரிசுன்னா, எனக்கு என் சுயகவுரவம்ன்னு ஒண்ணு இல்லையா?

சிவதாணு, என்னடா உன் சுயகவுரவம்? உன் சுயகவுரவம் அந்த பொண்ணோட வைராக்கியத்துக்கு முன்னாடி நிக்க முடியுமா? பதினைஞ்சு வருஷமா தனியா இருந்தாளே! சிவதாணு, உன் மருமவளை நான் அங்கனப் பாத்தேன்; உன் மருமவ அவன் கூட நின்னு சிரிச்சுக்கிட்டு இருந்தான்னு, நாக்கு மேல பல்லைப் போட்டு எவனவாது என் மருமவளை எப்பவாவது, தப்பா பேசி இருப்பானா? சிவ சிவா; நெருப்பு மாதிரிதானே வாழ்ந்துகிட்டு இருக்கா என் மருமவ!

"பாஷை தெரியாத ஊருல, பொழுது போவலை ரெண்டு பேருக்கும்; புள்ளையை தனியா விட்டுட்டு வர கிழவிக்கு இஷ்டமில்லே; எல்லாத்துக்கும் மேல குளிர் ஒத்துக்கலை அவளுக்கு. ஆறு மாசம் இங்கேயும், ஆறு மாசம் அங்கேயுமா அல்லாடறோம்.

என் பொண்டாட்டி, கிழவி கனகா, ஒரு பொங்கலுக்கு, நல்ல நாளும் அதுவுமா, எத்தனை வருஷம்தான் இப்படி தனியா நான் பொங்கிப் படையல் போடுவேன்? யாருக்குப் புண்ணியம் இந்த படையல்? நான் போய் மருமவளை கூப்பிடறேன்னா. அப்பவும் நான்தான் என் அகங்காரம் தலையில ஏறி இருக்க, அவளுக்கு சரியா பதில் சொல்லாம இருந்தேன். என் பேச்சை மீறி அவ என்னைக்கு என்ன காரியம்பண்ணி இருக்கா? சிவ சிவா; அன்னைக்கு அவளை போக விட்டிருக்கலாம்.

கனகா இப்ப சொல்றா; செப்பு சிலை மாதிரி, குத்து விளக்காட்டம், வீட்டுக்கு வந்த என் மருமவளையும், என் புள்ளையையும் வீட்டுக்குள்ள வரவிட்டீங்களா? பெரிசா ஜாதி கவுரவம் பாத்தீங்க; இந்த காரியத்துக்கு ஏழே ஏழு ஜென்மத்துக்கு, பேயாட்டாம் தனியாவே இருந்து நீ அனுபவிப்பேன்னு, எனக்கு சாபம் குடுக்கிறா?

அன்னைக்கு ஏண்டி உன் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தேன்னு கேட்டா, என்னைக்கு என்னை நீ பேசவிட்டேன்னு இப்ப இந்த வயசுல எங்கிட்ட குதிக்கிறா? உடம்பு வத்திப் போன இந்த வயசுல, இவ கூட என்னால சரிக்கு சமானமா குதிக்க முடியுமா?

வெரண்டாவுல, காத்தால எழுந்ததுலேருந்து கம்பியை புடிச்சுக்கிட்டு நிக்கறேன். கால் வலிச்சா, ஈஸிசேர்லே உக்காந்துக்கறேன். போகாத நேரத்தை எப்படியோ போக்கிக்கிட்டு, தனியா பேய் மாதிரி, தெருவை நோட்டம் விட்டுக்கிட்டு இருக்கேன். சிவ, சிவா ... இன்னைக்கு என்ன காலங்காத்தாலயே அந்த குழந்தைங்க நினைப்பு என் மனசுக்குள்ள வந்து இப்படி பேய் ஆட்டம் ஆடுது?

தெரு வாசலில், காலை பூஜைக்காக, வெரண்டாவை ஒட்டிய மண் தரையில் பூ செடிகள்... முருங்கை மரத்தை சுற்றி படர்ந்திருந்த சங்கு புஷ்பம், கொடியில் நீலமும் வெள்ளையுமாக, மெல்லிய பனியாடையை போர்த்திக்கொண்டு மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தன.

முருங்கை மரத்தில ரெண்டு காக்கைகள். எங்களை மாதிரி கிழ ஜோடிகளா? பாத்தா அப்படித்தான் தெரியுது. சிவ சிவா; எப்பவும் ஆம்பிளை பொம்பளை இதே நினைப்பு; எப்பவும் ஜோடிங்கன்னே ஏன் மனசு நினைக்கணும்? ஏன் அதுங்க அண்ணன் தம்பிங்களா இருக்கக்கூடாதா? ரெண்டும் விடாமல் கரைந்து கொண்டிருந்தன.

"கனகா"

"...."

பதிலே சொல்ல மாட்டா; சிவ சிவா; அவளை என்னைக்கு நான் பதில் சொல்லவிட்டேன். அவளை குறைசொல்லி என்னப் புண்ணியம்? வாயில்லாப் பூச்சி. என் இஷ்டப்படித்தான் அவ வாழ்ந்தா. அவ விருப்பத்தை, ஆசையை, வெளியிலே சொன்னதே கிடையாது. பொம்பளை வாயை தொறந்தா மூட மாட்டான்னு சொல்றானுங்க. ஆனா என் பொண்டாட்டி கனகா இப்படி; பத்து தரம் கேட்டாலும் எதுக்கும் பதில் கிடையாது. இப்படி ஒரு பெண் ஜென்மம்.

இப்பத்தான் கொஞ்ச நாளா, மசானத்துக்கு போகப் போற காலத்துல அப்பப்பா வாயைத் தொறந்து என் கிட்ட எதிர் வார்த்தைப் பேசறா. பேசறாளா? கிழவி கிறுத்துருவம் புடிச்சவ. ஊமைக் கோட்டான். வாயைத் தொறந்தா என்னைக் குத்திக்காட்டறேதே வேலை. என் தோலை உரிச்சு உள்ள என் உள் மனசுல என்ன இருக்குன்னு எட்டிப் பாக்கறதே இவளுக்கு தொழில்.

நான் வேஷம் போடறேனாம். வெளியில நெத்தியில பட்டையையும், கழுத்துல கொட்டையையும் கட்டிக்கிட்டு ஊருக்கு நல்லவனா வேஷம் போடறேனாம். ஆனா மனசு பூரா எனக்கு அழுக்குன்னு கூவறா. எல்லாரும் ஒண்ணு; எல்லா ஆத்மாவும் ஒரே சிவம் தான்னு சொல்லிட்டு; என் மருமவ என் ஜாதிக்காரி இல்லேன்னு அவளை வீட்டுக்கு வெளியில நிக்க வெச்சு அவமானப் படுத்தினேனாம். அதுக்கு பலனை இப்ப அவளும் அனுபவிக்கிறாளாம்.

எப்பவும் நான் பெரியவன்; அவ சின்னவ அப்படிங்கற பேதத்தை மனசுல வெச்சிக்கிட்டு குமையறேனாம். சிவ சிவா. கிழவி சொல்றது புரிய மாதிரியும் இருக்கு; புரியாத மாதிரியும் இருக்கு. அந்த சிவம் தானேயே என் உள்ளவும் நின்னு பேசறான்? இந்த விஷயம் ஏன் இவளுக்கு புரிய மாட்டேங்குது?


***

"கனகா காப்பி ரெடியாம்மா? சிறு குடலை பெருங்குடல் திங்குது?

"வர்றேங்க ... விடிகாலம் செத்த கண்ணு அசந்து போச்சு; எழுந்துக்க லேட்டாயிடுச்சு.

"ம்ம்ம்ம்"

"காப்பிதான் போட்டுக்கிட்டு இருந்தேன்."

"குடுடி ... மணி எட்டாச்சுடி;அப்புறமா கதை சொல்லுவே!"

"சூடா இருக்கு ... கெட்டியா புடிங்க டம்ளரை .. கீழ ஊத்திப்புட்டு என்னை திருப்பியும் ஓடவிடாதீங்க"

"அதான் கெட்டியா உன்னைத்தான் புடிச்சுக்கிட்டு இருக்கேனே! கங்கையில கால் வழுக்கி விழுந்தே! அப்படியே போடீன்னு உன்னை விட்டேனா; புடிச்சு இழுத்து கரையில போட்டேனே? இப்ப இங்க உன்னை விட்டுடுவேனா? நீ என்னை விட்டுட்டு ஓடிடாதடி தாயே!" சிவதாணு கனகாவின் கையை பிடித்து தன் எதிரில் உக்காரவைத்துக் கொண்டு மனைவியை முகத்தில் அன்பு வழியப் பார்த்தார்.

"நாலு தரம் காசிக்கு போய் வந்தாச்சு! எல்லாத்தையும் விட்டாச்சு! விட்டாச்சுன்னு தம்பட்டம் அடிச்சுக்க வேண்டியது. காலங்காத்தால பொண்டாட்டி கையை இறுக்கி புடிச்சாவது." கனகாவின் முகத்திலும் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது. என்னை விட்டா வேற ஆளு எனக்கு இல்லன்னு என் புருஷன் சொல்றான். எனக்கு இது பெருமைதானே? அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது.

கிழவன் என்னா கூத்தடிச்சாலும் ... என் மேல இன்னும் தன் உசுரையே வெச்சிருக்கான். அஞ்சு நிமிஷம் நான் பக்கத்துல இல்லன்னா ... கனகா; கனகா; எங்கேடிப் போயிட்டேன்னு ஒரே கூப்பாடுதான். நான் கிழவனுக்கு முன்னே போயிடனும்ன்னு பாக்கறேன். நான் போயிட்டா இவன் தனியா ஒரு நாள் இந்த வீட்டுல இருப்பானா? இல்லே இவன் எனக்கு முன்னாடி போனாலும், நான் எப்படி தனியா இருப்பேன்? ஆண்டவா, ரெண்டு பேரையும் ஒரே நாள்ல கூப்பிட்டுகப்பா.

"கனகா ... சிவ சிவா; நம்ம வீட்டுக்கு விருந்தாளி ஏதோ வர்றாப்பல இருக்குடி!"

"செத்து பொணமா கிடந்தாகூட கேக்க ஆளு இல்ல ... விருந்தாளி வராங்களாம்! எந்த ஊருலேருந்து வர்றாங்க?"

"பத்து நிமிஷமா ... வூட்டு கூரையில ரெண்டு காக்கா உக்காந்துக்கிட்டு கரையுதுடி ... ஒரு இட்லியை புட்டுப் போடேன்... சிவ சிவா; தின்னுட்டுப் போவட்டும்.."

"இன்னும் குளிக்கவே இல்லே நான் ... குளிச்சுட்டுத்தான் குண்டானை அடுப்புல ஏத்தணும் .."

"ம்ம்ம் ...."

"ஏண்டி கனகா ... அவங்க வீட்டுக்கு போய் வருவோமா?"

"எவங்க வீட்டுக்கு"

"என்னாடி ஒண்ணும் தெரியாத மாதிரி பேசறே?"

"உங்க மனசுல இருக்கறது எவங்க வீடுன்னு எனக்கு என்னாத் தெரியும்"

"சரிடி நீ என் தோலை உரிச்சு பாக்கறதுலேயே குறியா இரு" அவர் சலித்துக்கொண்டார்.

"உக்ஹூம் ... உங்க தோலை உரிச்சு யாருக்கு என்ன பலன்? உங்க மனசோடத் தோலை நல்லா உரிச்சுப் பாத்து, இருக்கற குப்பையை எல்லாத்தையும் வாரி வெளியில கொட்டுங்க! உங்களுக்கு புண்ணியமா போவும்!"

"வெங்காயத்தை உரிக்கற கதைதான் ... உரிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான், ஏதோ ஒரு மூலையை பெருக்கி, கொஞ்சம் குப்பையை வாரி கொட்டிட்டுத்தான் கூப்பிடறேன் உன்னை ... அதாண்டி, கும்பகோணத்தல, நம்ம மருமவளை போய் பாத்துட்டு வரலாம்ன்னு; என்ன சொல்றே? உன் ஆசை மருமவளேதான் ஆட்டத்துல ஜெயிச்சதா இருக்கட்டும் ... வர்றயா?"



"இன்னும் உங்க அகங்காரம் போவலையே?" நீங்கதான் அவகிட்டப் போய் "வீட்டுக்கு வாம்மா"ன்னு ஒரு தரம் நம்ம மருமவளை கூப்பிடுங்களேன். அவ வரமாட்டேன்னா சொல்லுவா? இன்னும், "அவளா" "நானா" ங்கற எண்ணம் உங்க மனசுக்குள்ளே இருக்கே?" எந்த குப்பையை எங்க கொட்டீனீங்களோ?"

"சிவ சிவா; சரி கிளம்பு ... இப்பவே போயிட்டு வந்துடலாம்.."

"என்னங்க நிஜம்மாவா சொல்றீங்க... ரெண்டு சொம்பு தண்ணியை தலையில ஊத்திக்கிட்டு வந்துடறேங்க..." கனகாவின் முகம் பளிச்சென மலர வயது பெண்ணைப் போல் வேகமாக துள்ளி எழுந்தாள்.

"கனகா மெதுவாடி ... சிவ சிவா; நீ ஒடற ஓட்டத்துல எங்கேயாவது விழுந்து கிழுந்து வெக்கப் போறே?"


No comments:

Post a Comment