Monday 28 October 2013

Checkmate ... A cybercrime thriller 2


Joshua's Plan ExplainedSunday, May 4, 2008 ஜாஷ்வாவின் திட்டம் விளக்கப் படுகிறது ஞாயிறு, மே 4, 2008 காலை பதினோறு மணி அளவில் ஜாஷ்வா நித்தின், சக்திவேல் இருவரையும் அழைத்து செல்ல அவர்கள் ஃப்ளாட்டுக்கு வந்தான். "என்ன ரெண்டு பேரும் நான் சொன்னதை யோசிச்சு பாத்தீங்கள?" நித்தின், "எஸ் ஜாஷ்வா, ஆனா உன்னோட ப்ளான் என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் எங்களோட சம்மதத்தை சொல்றோம்"
ஜாஷ்வா, "நோ ப்ராப்ளம் .. வாங்க என் வீட்டுக்கு போலாம். என் மனைவி ஒரு நல்ல சௌத் இண்டியன் லஞ்ச் சமைச்சுட்டு இருக்கா. நித்தின் உனக்கு ஓ.கே தானே. என் மனைவி கேட்டுக்க சொன்னா" சக்திவேல்,"அவன்கிட்ட நீ அதை கேக்கவே வேண்டாம். அவன் என்னை விட சௌத் இண்டியன் ஃபுட்டுக்கு அலையறவன்" ஜாஷ்வா, "வாட் அபௌட் நான்-வெஜ்?" நித்தின், "வெஜ் சாப்பாடுன்னா நாங்க ரெண்டு பேரும் வரலை!" மூவரும் சிரித்தபடி வெளியில் வந்து ஜாஷ்வாவின் வெள்ளை நிற டொயோடா ப்ரிய்ஸ் (Toyota Prius) காருக்கு வந்தனர். நித்தின், "வாவ், டொயோடா ப்ரியஸ்! எவ்வளவு மைலேஜ் உனக்கு கிடைக்குது" ஜாஷ்வா, "அவங்க விளம்பரம் பண்ணின அளவுக்கு இல்லை. ஆனா ஓரளவு பரவாயில்லை" சக்திவேல், "ஏன்? இங்க உனக்கு லாங்க் டிஸ்டன்ஸ் ட்ராவல் அதிகம் இல்லையா?" ஜாஷ்வா, "ரொம்ப கம்மி. வீக் எண்டுல கொஞ்சம் வெளிய போயிட்டு வருவோம். அதோட சரி" என்றவாறு காரைக் கிளப்பினான். நித்தின், "எங்களுக்கும் கார் தேவைப் படுது. ஒரு வருஷத்துக்கு உபயோகிக்கப் போறோம். எது பெட்டர். வாங்கறதா இல்லை ரெண்டல் எடுத்துக்கறதா?" ஜாஷ்வா, "அது நீங்க என் ப்ளானுக்கு ஒத்துக்கறதை பொறுத்தது" சக்திவேல், "நாங்க உன் ப்ளானுக்கு ஒத்துக்கறதுக்கும் காருக்கும் என்ன சம்மந்தம்?" ஜாஷ்வா, "என் ப்ளானை அமுல் படுத்தறதுக்கு நாம் மூணு பேரும், எந்த மாதிரி கார்ல போறோம், எந்த இடத்துல வசிக்கறோம், இப்படி எல்லா விஷயத்திலும் முன் ஏற்பாடுகள் நிறைய செய்யணும். வீட்டில விரிவா சொல்லறேன்" மௌனமாக மூவரும் பயணம் செய்ய சில நிமிடங்களில் ஜாஷ்வாவின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். நித்தின், "உன் வீடு இவ்வளவு பக்கத்தில இருக்கா?" ஜாஷ்வா, "இந்த ஏரியாவுக்கு பேரு ஹார்லம் .." நித்தின், "ஓ, ப்ளாக் கெட்டோ (Black Ghetto).. " என்ற பிறகு நாக்கை கடித்துக் கொண்டு மேலும் எதுவும் சொல்லாமல் நிறுத்தினான். ஜாஷ்வா, "ஹேய், நீக்ரோன்னு (Negro) சொன்னாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். உண்மையில் வெள்ளைக்காரங்கள் எல்லாம் எங்களை ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் அப்படின்னு கூப்படறாங்க. ஆனா எங்க ஜனத்துக்குள்ள பாத்தீங்கன்னா ஒருத்தனை ஒருத்தன் நிக்கர் (Nigger) அப்படின்னு சொல்லிக்குவானுக!" சக்திவேல், நித்தின் மௌனமாக அவன் வீடு இருந்த கட்டிடத்துக்குள் நுழைந்தனர். வாசற்கதவை தன் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து ஜாஷ்வா திறக்க, சக்திவேல், "வீட்டுல உன் மனைவி இல்லையா?" "அவ இருந்தாலும் அவளுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கறதுன்னு நான் எப்பவும் வீட்டு சாவி ஒண்ணு வெச்சுக்குவேன்" என்ற ஜாஷ்வாவிக்கு தன் மனைவி மேல் இருந்த கரிசனத்தைக் இந்திய நண்பர்கள் இருவரும் ரசித்தனர். ஜாஷ்வாவை தொடர்ந்து உள்ளே நுழைந்தவர்கள் சமையலறைக்குள் இருந்து வந்த அழகான பெண்ணை கண் கொட்டாமல் பார்த்தனர். தோள்வரை வெட்டப் பட்ட அடர்ந்த கூந்தல், மாநிறம், வட்ட முகம், அளவான நெற்றியின் நடுவே வட்டப் பொட்டு, வில்லாய் வளைந்த புருவங்களுக்கு கீழ் மைதீட்டாமலே மிளிறும் மீன் விழிகள், கொழு கொழு கன்னங்கள், சிறிய வாயை சுற்றிய சற்றே தடித்த உதடுகள். இடுப்புக்கு மேல் அவள் அணிந்து இருந்த கம்பளியாலான ஆரஞ்சு வர்ண கார்டிகனும் கீழே இருந்த ஜீன்ஸும் அவளது அங்க வளைவுகளை அழகாக எடுத்து காட்டின. புன் முறுவலுடன், "ஹாய், ஐ அம் சஞ்சனா எட்வர்ட்ஸ்." என்றவள் இந்திய நண்பர்கள் இருவருக்கும் புரியும்படி, "ஐ அம் திஸ் மேன்'ஸ் தர்மபத்தினி (I am this man's Dharma pathini)" என்றாள். நித்தின், "ஹாய், மிஸஸ் எட்வர்ட்ஸ்" என்றவாறு கை நீட்டினான். குலுக்கிய கையை விடாமல், "மிஸஸ் எட்வர்ட்ஸ் ஆனதுக்கும் மத்தவங்க அப்படி கூப்படறதுக்கும் ரொம்ப நாள் சந்தோஷப் பட்டாச்சு" என்றபடி ஜாஷ்வாவை பார்த்து முகத்தில் ஒரு போலி நக்கலுடன் "இப்ப கொஞ்சம் போரடிக்குது. சஞ்சனான்னே கூப்பிடுங்க" என்றாள். சக்திவேல், "ஹாய், சஞ்சனா" என்று தொடர்ந்து தமிழில், "நீங்க தமிழ்ன்னு ஜாஷ்வா சொன்னார். தமிழ்நாட்டில இருக்கற ஈரோட் என் சொந்த ஊர்" சஞ்சனா, "இப்பதான் உங்க ஃஃப்ரெண்டுகிட்ட ஃபார்மாலிடி ஒண்ணும் வேண்டாம்னு ஃபர்ஸ்ட் நேம் சொல்லி கூப்பட சொன்னேன். உங்க கிட்ட தனியா சொல்லணுமா. உங்களை விட நான் வயசிலும் சின்னவ தான். நீ, வா, போன்னு கூப்பிடுங்க" சக்திவேலுக்கு சஞ்சனா, ஊரில் இருக்கும் தங்கை சாந்தியை நினைவு படுத்தினாள். சஞ்சனாவுக்கு சக்திவேல், மறைந்த சந்தோஷை நினைவு படுத்தினான். அவளை அறியாமல் அவள் கண்கள் பனிக்க, "உங்களை நான் அண்ணான்னு கூப்படலாமா?" என்றதும் சக்திவேல் 'இது தெய்வச் செயலோ. அல்லது என் மனதை இவள் படித்தாளோ' என்று எண்ணி "ஓ, தாராளமா. உண்மையில் நான், நீ என் தங்கையை நினைவு படுத்தறேன்னு சொல்ல இருந்தேன்" சஞ்சனா, "நீங்க என் அண்ணன் சந்தோஷை நினைவு படுத்தறீங்க. அவன் உங்க உயர மில்லை ஆனா ஆள் பாக்க உங்களை மாதிரி கொஞ்சம் வாட்ட சாட்டமா இருப்பான்" சக்திவேல், "ஓ, அப்படியா, இப்ப எங்க இருக்கார்" சஞ்சனா வான் நோக்கி விரலைக் காட்டி தமிழில், "மூணு வருஷம் ஆச்சு" சக்திவேல், நித்தின் இருவரும் ஒரு சேர, "ஓ, சாரி சஞ்சனா" என்றதும் நித்தினை சற்று வியப்புடன் பார்த்தாள். நித்தின், "இவன்கூட இவன் அம்மா தங்கைகூட எல்லாம் பேசி எனக்கு கொஞ்சம் தமிழ் தெரியும். அதே மாதிரி இவனுக்கும் கொஞ்சம் மராட்டி தெரியும்" ஜாஷ்வா, "எனக்கும் தமிழ் தெரியும்" என்று ஆங்கிலத்தில் சொல்ல சஞ்சனா, "ஐய்யோ, வேண்டாம் இவர் நிஜமாவே தமிழ்நாட்டில இருந்து வந்து இருக்கார். எங்களுக்கு எல்லாம் எங்க மொழியை கேவலப் படித்தினா பிடிக்காது" என்று கிண்டலடித்தாள். பிறகு, "என்ன குடிக்கறீங்க? ஜூஸ் அல்லது பியர்?" என்க ஜாஷ்வா இடைமறித்து, "ஹனி, நாங்க கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும். அதனாலதான் கொஞ்சம் சீக்கரமா அழைச்சுட்டு வந்தேன். பியர் இப்ப வேண்டாம். கொஞ்ச நேரம் கழிச்சு" என்றான். சஞ்சனா, "அப்ப காஃபி?" என்றதும் எதிரில் இருந்த மூவரும் "எஸ்" என்றனர். சஞ்சனா, "சரி, நீங்க ரெண்டு பேரும் காஃபி பிரியர்கள் தானா? போட்டுட்டு வர்றேன்" என்று தொடர்ந்து "அண்ணா, உங்களுக்கு ஃபில்டர் காஃபிதானே?" என்று சக்திவேலிடம் கேட்க நித்தின், "எனக்கும் ஃபில்டர் காஃபிதான்" சஞ்சனா, "சரி, அப்ப மூணு பேருக்கும் ஃபில்டர் காஃபி" என்று சமையல் அறைக்குள் நுழைய இந்திய நண்பர்கள் இருவரும் ஜாஷ்வாவை வியப்புடன் பார்த்தனர் ஜாஷ்வாவை தொடர்ந்து ஹாலுக்கு அருகே இருந்த அவனது அலுவலக அறையை அடைந்த நித்தினும் சக்திவேலும் அங்கு இருந்த கணிணிகளையும் உப கருவிகளையும் பார்த்து வாய் பிளந்தனர். நித்தின், "ஹேய், வாட் இஸ் திஸ்? ஒரு கணிணி ஆராய்ச்சிக் கூடம் மாதிரி இருக்கு?" ஜாஷ்வா, "நிஜமா இது ஆராய்ச்சி கூடம்தான்" என்றவன் அங்கு ஒரு மேசைக்கு எதிரே இருந்த இரு நாற்காலிகளை அவர்களுக்கு இழுத்து கொடுத்து விட்டு "உக்காருங்க .. " என்றபடி எதிரில் ஒரு கணிணியின் முன் இருந்த நாற்காலியை தனக்கு இழுத்து கொண்டு அமர்ந்தான். அவனுக்கு அருகே சிறு வகுப்பறைகளில் உபயோகிப்பது போன்ற ஒரு வெள்ளை பலகை நிறுத்தப் பட்டு இருந்தது. அதன் அடியில் இருந்த தட்டு போன்ற அமைப்பில் மூன்று வெவ்வேறு வண்ண மார்க்கர் பேனாக்களும் எழுதுவதை அழிக்கும் இரேசரும் இருந்தன. ஜாஷ்வா, "ஆரம்பிக்கட்டுமா?" சக்திவேல், "ம்ம்ம் .. " நித்தின், "ப்ளீஸ் .. " ஜாஷ்வா, "சோ, நான் நேத்து சொன்னது மாதிரி கொலம்பியன் ட்ரக் கார்ட்டெல்காரங்களுக்கு அவங்க பணத்தை இங்க இருந்து பாங்க் மூலம் அவங்க நாட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்கறதுதான் என்னோட ப்ளான். எப்படி பண்ணப் போறோம்னு விளக்கறேன்" நித்தின், "ம்ம்ம் .. வேற ஒரு கம்பெனி அக்கௌண்டை அந்த கம்பெனிக்கு தெரியாம உபயோகித்து பண்ண முடியும்ன்னு சொன்னியே ..." ஜாஷ்வா, "எஸ், முதல்ல நான் எங்க வேலை செய்யறேன்னு சொல்றேன்" என்றபடி தான் பணி புரியும் பன்னாட்டு வங்கியின் பெயரை சொல்லி "அதில நான் டீ.பீ.ஏ (DBA என்று அழைக்கப் படும் Data Base Administrator)" நித்தின், "ஓ, So, you will be the insider (சோ, நீ இந்த ஆபரேஷன்ல வங்கிக்கு உள்ள இருந்து காரியம் செய்யப் போற ஆள்)!" ஜாஷ்வா, "எஸ், லெட் மீ எக்ஸ்ப்ளைன். முதல்ல ஆபரேஷன் எப்படி நடக்கப் போகுதுன்னு சொல்றேன். அதுக்கு அப்பறம் அதை எப்படி பண்ண முடியும்ன்னு சொல்றேன்" சக்திவேல், "ஓ.கே .. ஷூட்" ஜாஷ்வா, "ஒரு கன்ஸைன்மெண்டுக்கு நியூயார்க்கில இருந்து அவங்களுக்கு கிடைக்கற பணம் நூற்றி ஐம்பதில் இருந்து இருநூறு மில்லியன் (பதினைந்தில் இருந்து இருபது கோடி) டாலர். நாம் என் வங்கில இருக்கும் எந்த கம்பெனி கணக்கில போடணும்னு சொல்லுவோம். அவங்க அந்த கணக்கில போடுவாங்க (deposit பண்ணுவாங்க). அந்த பணத்தை உடனே நாம் வெளிநாட்டில இருக்கற கார்ட்டெல் காரங்களோட வங்கி கணக்குக்கு உங்க வைரஸ் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவோம். அவ்வளவுதான்" நித்தின், "எப்படி எங்க வைரஸ் மூலம் அதை ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியும்?" ஜாஷ்வா, "சொல்றேன். " என்றவாறு அவன் சொன்னது: "பெரிய அளவில வெளிநாடுகள் கூட வியாபாரம் வெச்சுகிட்டு நிறைய பண பரிமாற்றம் செய்கிற கம்பெனிகள் நிறைய எங்க பாங்குல அக்கௌண்ட் வெச்சுட்டு இருக்காங்க. இதில நிறைய ஷிப்பிங்க் (shipping) கம்பெனிகளும் இன்டெர்னேஷனல் ட்ரேடிங்க் (international trading) கம்பெனிகளும் இருக்கு. இந்த மாதிரி கம்பெனிகளில் முக்கால் வாசி பண பரிமாற்றங்கள் வெளி நாடுகள் கூடதான். அவங்க பண பரிமாற்றத்துக்கு செக் (cheque) அல்லது டிமாண்ட் ட்ராஃப்ட் (demand draft) அல்லது வயர் ட்ரான்ஸ்ஃபர் (wire transfer) உபயோகிச்சுட்டு இருந்தாங்க. பணம் போய் செர செக் (cheque) டிமாண்ட் ட்ராஃப்ட் (demand draft) இது ரெண்டுலயும் ரொம்ப நாள் எடுக்கும். வயர் ட்ரான்ஸ்ஃபர் (wire transfer) முறையில் பாங்க் பணி பரிமாற்றம் செய்யும் போது ஒவ்வொரு ட்ரான்ஸ்ஃபருக்கும் ஒரு விண்ணப்பத்தை அவங்க வங்கிக்கு அனுப்பணும். வங்கி அந்த விண்ணப்பத்தை வாங்கிட்டு அதில அவங்க சொல்லி இருக்கற மாதிரி அவங்க கணக்கில் இருந்து அவங்க சொல்ற கணக்குக்கு பணத்தை அனுப்பும். இந்த மாதிரி பண பரிமாற்றத்தினால அந்த கம்பெனிகளுக்கும் வங்கிக்கும் நிறைய வேலை. செலவும் அதிகம். அந்த மாதிரி கம்பெனிகள் உபயோகப் படுத்தறதுக்காக எங்க வங்கில ஒரு மென்பொருள் எழுதினாங்க. அந்த மென் பொருள் மூலம் எங்க வங்கிகூட அவங்க தொடர்பு கொண்டு அவங்களுக்கு தேவையான பண பரிமாற்றங்களுக்கான ஆணைகள் கொடுக்கலாம். அவங்க தொடர்பு கொள்ளும் போது அந்த மென்பொருள் அவங்க அனுப்பற ஒவ்வொரு தகவலையும் ஒரு பிரத்தியேக சங்கேத முறையில மாத்தி (encrypt செய்து) இணையம் மூலம் அனுப்பும். அப்படி சங்கேத முறையில் வரும் தகவலை எங்க வலை தளத்தில் இருக்கற இன்னொரு மென்பொருள் மறுபடி மாத்தி (decrypt செய்து) உள்ளே அனுப்பும். இப்படி சங்கேத முறையில் அனுப்பறதுனால யாரும் தகவலை போகும் வழியில் படித்து பார்க்க முடியாது, அது மட்டும் இல்லை அந்த மென்பொருள் மூலம் ஒரு க்ளர்க் அல்லது அக்கௌண்டண்டின் கணிணியில் இருந்து அவங்க பண பரிமாற்றத்துக்கு விண்ணப்பம் எழுத முடியும். ஆனால் மேனேஜர் கணிணியில் இருந்து மென்பொருள் மூலம் கையெழுத்து போடற மாதிரி ஒரு அங்கிகாரம் செஞ்சாத்தான் அந்த பண பரிமாற்றத்தை வங்கி ஏற்றுக் கொள்ளும். இந்த காரணங்களால இந்த மென்பொருள்மூலம் வங்கியை தொடர்பு கொள்ளறது ரொம்ப பாதுகாப்பானதுன்னு இந்த கம்பெனிகளுக்கு எல்லாம் விளம்பரம் பண்ணினாங்க. எல்லா கம்பெனிகளும் இப்ப இந்த மென் பொருள் மூலம்தான் வங்கியை தொடர்பு கொண்டு பண பரிமாற்றம் செய்யறாங்க. மேலும் இந்த மென்பொருள் முலம் மாதா மாதம் அவங்க வங்கி கணக்கு பட்டியலையும் (bank statement) இறக்கம் செஞ்சுக்கறாங்க." இடையில் குறுக்கிட்ட நித்தின், "ஏன், இன்டர்நெட் பாங்கிங்க் உங்க வங்கில இல்லையா?" ஜாஷ்வா, "சமீப காலத்தில நெட் பாங்கிங்க் வந்து இருக்கு. ஆனா இன்னும் அதை கம்பெனிகளுக்கு கொடுக்கல. பிஸினஸ் டு பிஸினஸ் (B2B என்று அழைக்கப் படும் Business-to-Business) பரிமாற்றங்கள் இன்னும் இந்த மென் பொருள் உபயோகிச்சுதான் பண்ணிட்டு இருக்காங்க. இந்த கம்பெனிகளும் இந்த மென் பொருள் உபயோகிச்சு பண்ணறது ரொம்ப பாதுகாப்பானதுன்னு நம்பறாங்க. ஏன்னா அவங்க கணிணில இருந்து மட்டும்தான் அவங்க பண பரிமாற்றம் பண்ண முடியும். நெட் பாங்கிங்க்ன்னா எந்த கணிணி மூலமும் பண்ணலாம் இல்லையா?" சக்திவேல், "சோ, இந்த மென்பொருள் மூலம்தான் வங்கியை தொடர்பு கொள்ள முடியும். எங்க வைரஸ்மூலம் அந்த மென் பொருளை ஆக்கிரமிச்சு அந்த மென் பொருளில் ஒரு ஆள் டைப் பண்ணினது மாதிரி பண பரிமாற்றத்துக்கான ஆணை அனுப்பணும். இல்லையா?" ஜாஷ்வா, "எஸ் .. யூ காட் இட் (Yes, you got it)"நித்தின், "நீ அந்த வங்கில டீ.பி.ஏதானே, பேசாம அந்த மென் பொருளில் இருந்து வந்த மாதிரி தகவலை நீயே வங்கியோட கணிணில பதிச்சுடலாமே?" ஜாஷ்வா, "என்னை மாதிரி இன்னும் பத்து டீ.பி.ஏ இருக்காங்க. அது மட்டும் இல்லை வங்கில பதிக்கறது அவ்வளவு சுலபமானது இல்லை. நானே நேரடியா ஒரு தகவலையும் மாத்தவோ அழிக்கவோ முடியாது" சக்திவேல், "சரி, அவங்க கம்ப்யூடரை எங்க பாட் நெட்டுக்குள்ள கொண்டு வந்து எங்க வைரஸ் மூலம் ட்ரான்ஸ்ஃபரருக்கான ஆணையை அவங்களே டைப் பண்ணின மாதிரி செய்யறோம்னு வெச்சுக்கோ. அதுக்கு அப்பறம் அவங்க வங்கி கணக்கை பாக்கும் போது அந்த ட்ரான்ஸ்ஃபரும் அந்த பட்டியலில் வரும் இல்லையா? அப்ப அந்த கம்பெனி காரங்க வங்கி கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணுவாங்களே?" ஜாஷ்வா, "குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு அவங்களுக்கு தெரியாத மாதிரி பண்ணறதுக்கு என் கிட்ட ஒரு உபாயம் இருக்கு" நித்தின், "அது மட்டும் இல்லை. எங்க வைரஸை நாங்க வெவ்வேறு ஈமெயில் மூலம் அல்லது சில வெப் சைட் மூலம் பரவ வைக்கறோம். அந்த கம்பெனி காரங்களுக்கு அந்த மாதிரி ஈமெயில் அனுப்பினா அவங்க ஸ்பாம் (spam) மெயில்ன்னு ஃபில்டர் பண்ணிடுவாங்களே. அதே மாதிரி அவங்க கம்பெனில இருந்து நாங்க வைரஸ் பரப்பும் வெப் சைட்டையும் அணுக முடியாது. அவங்களோட ஃபையர் வால்(Fire-wall - இணைய தொடர்பு பாதுகாப்பு அரண்) தடுத்து விடும். எப்படி அவங்க கம்ப்யூடரை எங்க பாட் நெட்டுக்குள்ள கொண்டு வர்றது?" ஜாஷ்வா, "அதுக்கும் என் கிட்ட ஒரு உபாயம் இருக்கு. சொல்றேன்" என்ற பிறகு சஞ்சனா வருவதை பார்த்து "ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கலாம்" அப்போது சஞ்சனா மூவருக்கும் காஃபியும் தனக்கு ஒரு கோப்பையில் டீயும் கொண்டு வந்து அவர்களுடன் அமர்ந்தபடி, சக்தியிடம் தமிழில், "என்ன அண்ணா உங்க மச்சினன் சன் டீவில வர்ற மாதிரி ஷார்ட் ப்ரேக்குன்னு சொல்றார்?" அறிமுகம் ஆகி சில நிமிடங்களில் அவள் எடுத்துக் கொண்ட உரிமை சக்திக்கு மிகவும் பிடித்து இருந்தது. பிறகு, நித்தினிடம் அழகான ஆங்கிலத்தில், "நித்தின் கண்டுக்காதீங்க .. எனக்கு சக்திகூட தமிழ்ல பேசிட்டே இருக்க்ணும் போல இருக்கு" என்றாள். சக்திவேல், "ஜாஷ்வாக்கு நீ தமிழ் சொல்லி கொடுக்கற மாதிரி இருக்கு?" சஞ்சனா, "பின்னே, அப்பறம் பொறக்கப் போற குழந்தைகள் கூட இவர் பேசணும் இல்லை? அதனால் தினமும் உக்காந்து தமிழ் சொல்லி கொடுத்துட்டு இருக்கேன். முதல்ல குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி சொல்லி கொடுத்திடலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சாகறதுக்கு முன்னாடி நாலு வார்த்தை உருப்படியா பேசினா போதும்ன்னு இருக்கு." சக்திவேல் ஜாஷ்வாவிடம், "ஏன் ஜாஷ், தமிழ் அவ்வளவு கஷ்டமா?" நித்தின், "நம்ம பெங்களூர் சிவாஜிநகர்ல பேசற தமிழ் ஈஸி. இவ பேசற தமிழ் கஷ்டம்தான்" சஞ்சனா, "ஓ நீங்க ரெண்டு பேரும் பெங்களூர்காரங்க இல்லை? அங்க தமிழை வெச்சு சமாளிச்சுக்கலாம்ன்னு கேள்வி பட்டு இருக்கேன்" சக்திவேல், "உனக்கு எப்படி தெரியும் தமிழ் தெரிஞ்சா சமாளிக்கலாம்ன்னு?" சஞ்சனா அவனை கூர்ந்து பார்த்து பிறகு ஜாஷ்வாவிடம், "கேன் ஐ டெல் ஹிம் (அவனுக்கு நான் சொல்லட்டுமா) ?" என்க ஜாஷ்வா தலை அசைக்க, சில வரிகளில் தன் வாழ்க்கை வரலாற்றை தலை குனிந்தவாறு சொன்னாள். "ராஜிவ் கொலை வழக்கில சிக்கின போராளி சிவராசனோட கஸின் ஒருத்தி என்னோட முகாம்ல இருந்தா. அவமூலம் தான் பெங்களூரைப் பத்தி கேள்வி பட்டேன்" என்ற பிறகு தலை நிமிர சக்தியின் கண்கள் குளமாகி இருந்ததைக் கண்டாள். சஞ்சனா, "என்ன இது? என் கதையை கேட்டு கண் கலங்கறீங்க?" நித்தின், "எங்க டீம்ல இவனுக்கு வெச்சு இருக்கற பேர் என்ன தெரிய்மா? ஜெண்டில் ஜயன்ட் (Gentle Giant)!" சஞ்சனா, "எங்க அண்ணன் என்ன ராட்சசன் மாதிரியா இருக்கார்? ஒரு என்.பி.ஏ (NBA) ஸ்டார் மாதிரி இல்ல இருக்கார்?(NBA என்று அழைக்கப் படும் National Basketball Association அமெரிக்காவில் கூடைப் பந்து ஆட்டத்துக்கு நமது ஐ.பி.எல் (IPL) பொன்ற ஒரு அமைப்பு) " சக்திவேல், "அப்ப வேணும்னா வேற ஒரு தொழிலுக்கு மாற தகுதி இருக்குன்னு சொல்லு" சஞ்சனா, "சரி, நான் போய் சமயலை கவனிக்கறேன். சாதத்துக்கு கூட செட்டிநாட்டு கோழி வருவல், மட்டக்களப்பு மீன் குழம்பு, எலுமிச்சை ரசம், மிக்ஸ்ட் வெஜிடபிள் சாலட், கூட எங்க வீட்டுக்காரர் எப்ப கொடுத்தாலும் சாப்பிடற அப்பளம், வடகம், மோர் மிளகாய். ஓ.கேவா?" நித்தின், "சொல்லாதே. எனக்கு இப்பவே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிச்சுடுச்சு" சஞ்சனா, "ஓ, சாப்பட்டுக்கு கொஞ்சம் முன்னாடி சொல்லுங்க பியர் அல்லது வொய்ட் வைன் கொண்டு வந்து தரேன். சாப்பிட்டதுக்கு அப்பறம் ஃப்ரூட்ஸ் கூட சூஃப்ளே அப்படின்னு நான் பண்ணற ஒரு டெசர்ட்" சக்திவேல், "அப்பா! இப்பதான் நீ என்னோட பாஷை பேசறே" சஞ்சனா, "என்ன பியரும் வைனுமா?" நித்தின், "இல்லை சஞ்சனா, இவன் ஒரு ஸ்வீட் டூத் (sweet tooth) இனிப்பா விஷம் கொடுத்தா கூட வாங்கி சாப்பிட்டு விடுவான்" சஞ்சனா, "வேண்டாம் விஷத்தை பத்தி பேச வேண்டாம். ரொம்ப நாள் சர்க்கரை கலந்த விஷத்தை கழுத்தில கட்டிட்டு திரிஞ்சு இருக்கேன்" நித்தின், "சாரி சஞ்சனா .. " என்றதும் சஞ்சனா, "நான் விளையாட்டா சொன்னேன்" என்றவாறு சென்றாள். ஜாஷ்வா, "இட்ஸ் ஓ.கே, என்னவோ தெரியலே அவ இன்னைக்கு கொஞ்சம் இமோஷனலா இருக்கா. கண்டின்யூ பண்ணலாமா" சக்திவேல், "உங்க வங்கில கணக்கு வெச்சு இருக்கற கம்பெனில இருக்கும் கணிணியில் இருந்து எங்க வைரஸ் மூலம் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணற ஆணை கொடுக்கணும்ன்னு சொன்னே. ஒன்ஸ், எங்க வைரஸ் அவங்க கணிணிக்கு உள்ள போயிடுச்சுன்னா அந்த கணிணியை நம்ம ட்யூனுக்கு தகுந்த மாதிரி டான்ஸ் கூட ஆட வைக்கலாம். வைரஸ்ஸை எப்படி அவங்க கணிணிக்கு உள்ள பரவ வைக்கறது? அப்பறம் அவங்க பேங்க் ஸ்டேட்மென்ட் (bank statement - வங்கி கணக்கு பட்டியல்) எடுத்தா நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃபர் எப்படி தெரியாம இருக்கும்? இது ரெண்டுக்கும் உங்கிட்ட உபாயம் இருக்குன்னு சொன்னே" ஜாஷ்வா, "அது என்னோட ஒரு சின்ன கண்டுபிடிப்பு ... உங்க வைரஸை என்னால் PDF ஃபைல் மூலம்அனுப்ப முடியும்" நித்தின், "PDF மூலமாவா? எப்படி?" ஜாஷ்வா, "மாத்தி எழுத முடியாதபடி கோப்புக்ளை PDF மூலம் அனுப்பறதை அரசாங்கமே அங்கீகாரம் செஞ்சு இருக்கு. PDF ஃபைலில் நாம் எதை வேணும்னாலும் இணைக்கலாம். டிஜிடல் கையெழுத்து (Digital Signature) அப்படின்னு ஒண்ணை PDF ஃபைலில் சேர்க்கறதுக்காக அந்த அம்சத்தை அமைச்சு இருக்காங்க. ஆனா, டிஜிடல் கையெழுத்துக்குன்னு ஒரு பொதுவான நியமம் (Common Standard) இன்னும் வரல. டிஜிடல் கையெழுத்து ஒரு இமேஜ் மாதிரி இருக்கலாம், இல்லை சங்கேத முறையில் எழுதின ஒரு தகவலா இருக்கலாம் இல்லை ஒரு மென்பொருள் வடிவில் கூட இருக்கலாம். அதனால அடோபி (Adobe) காரங்க (PDFஐ கண்டுபிடித்த மென்பொருள் நிறுவனம்) டிஜிடல் கையெழுத்துன்னா இப்படிதான் இருக்கணும்னு அமுல் படுத்த முடியல. ஒரிஜினல் PDF ஃபைல் எழுதற அடோபியின் (Adobe) அக்ரோபாட் டிஸ்டிலர் (Acrobat Distiller) மூலம் எறக்குறைய எதை வேணும்னாலும் டிஜிடல் கையெழுத்துன்னு சொல்லி ஒரு PDF ஃபைலில் இணைக்கலாம். ஒரே ஃபைலுக்கு ரெண்டு மூணு டிஜிடல் கையெழுத்தை கூட சேர்க்கலாம். அந்த கையெழுத்து உங்க வைரஸாகூட இருக்கலாம்!" சக்திவேல், "அப்படின்னா ஒரிஜினல் PDF எழுதற அடோபி டிஸ்டிலர் (Adobe Distiller) மூலம் எங்க வைரஸ்ஸை PDFஇல் இணைக்க வைக்கணும். சரி, இணைக்க வைக்கறோம்னு வை. எந்த PDF ஃபைலில்? அந்த PDF ஃபைலை எப்படி அந்த கம்பெனிகளுக்கு அனுப்பறது. அதுவும் ஸ்பாம் (spam) அப்படின்னு ஃபில்டர் ஆயிடுமே?" ஜாஷ்வா, "அந்த PDF ஃபைல் அவங்க பேங்க் ஸ்டேட்மென்டா இருந்தா ஃபில்டர் ஆகாது!" நித்தின், "வாவ், சோ, அவங்க இறக்கம் செய்யற வங்கி கணக்கு பட்டியல் (bank statement) PDF வடிவத்திலதான் போகுதா?" ஜாஷ்வா, "அது மட்டும் இல்லை, எங்க வங்கில அந்த PDF எழுதும் கணிணில நான் ஒரு வைரஸ்ஸை ஏத்தி இருக்கேன். அந்த வைரஸ் நான் கொடுக்கற எந்த ஃபைலையும் நான் சொல்ற கம்பெனியோட பேங்க் ஸ்டேட்மென்ட் PDF ஃபைலில் சேத்துடும். நீங்க உங்க வைரஸ்ஸை கொடுத்தீங்கன்னா அதை நான் PDF ஃபைலில் சேத்துடுவேன்." நித்தின், "Smart thinking Josh!" ஜாஷ்வா, "அதை தவிர என்னோட வைரஸ் இன்னோரு வேலையும் செய்யும்" சக்திவேல், "என்ன வேலை?" ஜாஷ்வா, "பேங்க் ஸ்டேட்மேன்டை மாத்தி எழுத வைக்கும். அதாவது, கோர்வையா நாம் சொல்லும் சில எழுத்துக்கள் வந்தா அவைகளை நாம் சொல்லும் வேற ஒரு கோர்வையான எழுத்துக்களாக மாத்தி எழுதவைக்கும். நாம் பண்ணும் ட்ரான்ஸ்ஃபரினால் பேங்க் ஸ்டேட்மென்டில் ரெண்டு வரிகள் வரும். முதல் வரி பணம் அவங்க கணக்கில் போட்டதுக்கு. அடுத்த வரி அவங்க கணக்கில் இருந்து பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆனதுக்கு. இதோ இந்த மாதிரி என்றவாறு ஒரு பேங்க் ஸ்டேட்மெண்டின் ப்ரிண்ட் அவுட்டை காண்பித்தான். பிறகு "இதை நான் இந்த மாதிரி மாத்தி எழுத போறேன்" என்றவாறு இன்னும் ஒரு பேங்க் ஸ்டேட்மென்ட் ப்ரிண்ட் அவுட்டை காண்பித்தான். நித்தின், "ஓ, நம்ம ட்ரான்ஸ்ஃபருக்கான என்ட்ரிக்கு முன் இருக்கும் வரி தப்பா ரெண்டு தடவை வந்த மாதிரியும் அதை வங்கி காரங்க திருத்தின மாதிரியும் மாத்தி எழுதப் போறே. சரி, இது என்ன ERR-REV அப்பறம் COMPERR Ref#" ஜாஷ்வா, "இந்த மாதிரி ஒரு நொடேஷன் எங்க வங்கி முதல் முதல்ல கணக்குகளை எல்லாம் கணிணி மயமான ஆக்கின காலத்தில இருந்து இருக்கு. யாராவது டைப்பிங்க் மிஸ்டேக் பண்ணி அதை வெரிஃபை பண்ணும் போது அந்த தப்பை கண்டு பிடிச்சா அந்த என்ட்ரிக்கு ஒரு மாற்றல் என்ட்ரி, அக்கௌண்டன்ஸியில் ஜர்னல் என்ட்ரி (Journal Entry) என்பது போல போடுவாங்க. முன்னத்து என்ட்ரி தப்பானதால அதை மாத்தி எழுதின என்ட்ரி அப்படின்னு குறிக்கும்."சக்திவேல், "இருந்தாலும் அந்த கம்பெனிக்கு தெரிய வாய்ப்பு இல்லையா? பணத்தை ட்ரக் கார்டல்காரங்க கொண்டு போய் அந்த கம்பெனியோட கணக்கில போடும்போது அவங்களுக்கு அல்லது எஃப்.பி.ஐக்கு அலர்ட் மெஸேஜ் வராதா?" ஜாஷ்வா, "இந்த மாதிரி கம்பெனி எல்லாம் அட்-பார் சலுகை, அதாவது அவங்களுக்கான பணத்தை எந்த கிளையில் இருந்தும் போடலாம் அல்லது எடுக்கலாம் அப்படின்னு ஒரு சலுகை எங்க வங்கி கொடுத்து இருக்கு. யாராவது ஒரு மில்லியனுக்கு (பத்து லட்சத்துக்கு) மேல் பணத்தை போட்டாலோ இல்லை அதை எடுத்தாலோ எஃப்.பி.ஐக்கும் (FBI) என்.எஸ்.ஏ (NSA)வுக்கும் தகவல் கொடுக்கணும்ன்னு இருக்கு. அவங்களுக்கு தினம் கொடுக்க வேண்டிய இந்த தகவல்களை கணிணியில் இருக்கும் மென்பொருள் ஒண்ணு ஒரு ரிப்போர்ட்டா (பட்டியலா) தயாரிக்குது. ஒவ்வொரு கிளையிலும் தினமும் அந்த ரிப்போர்ட்டை எடுத்து அதை அப்படியே எஃப்.பி.ஐக்கும் என்.எஸ்.ஏவுக்கும் ஈமெயில் பண்ணிடுவாங்க. இந்த ரிப்போர்ட் தயாரிக்கும் மென் பொருளில் ஒரு சின்ன பக் உண்டாக்கி இருக்கேன். அதனால அந்த டெபாசிட் விவரம் அவங்களுக்கு போகாது" சக்திவேல், "என்ன பக்? நீ டீ.பி.ஏ தானே உனக்கு எப்படி மென்பொருளை மாத்தும் உரிமை உங்க வங்கில கொடுத்து இருக்காங்க?" ஜாஷ்வா, "எனக்கு எங்க வங்கில எந்த மென்பொருளையும் மாத்தி எழுதும் உரிமை கிடையாது. ஆனா யாருக்கு எந்த மென்பொருளை மாத்த உரிமை இருக்குன்னு எனக்கு தெரியும். இன் ஃபாக்ட் அது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அவங்களோட லாக் இன் பாஸ்வர்ட் ஹாக் பண்ணறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. பாதி பேர் அவன் பொண்டாட்டி பேரையோ இல்லை குழந்தைங்க பேரை பாஸ்வர்டா வெச்சுட்டு இருப்பாங்க. சில சமயம் அவங்க நாய்குட்டி பேரை பாஸ்வர்டா வெச்சு இருப்பாங்க. அவங்க கூட ரெண்டு நாள் பழகினா போதும் அவனோட எல்லா பாஸ்வர்டும் தெரிஞ்சுக்கலாம்." நித்தின், "சோ, அவங்க லாக் இன்ல நுழைஞ்சு அந்த மென் பொருளை மாத்தி எழுதினே. என்ன பக் அது?" ஜாஷ்வா, "அந்த ரிப்போர்ட் எப்படின்னா, ஒவ்வொரு கிளையிலும் அன்னைக்கு பத்து லட்சத்துக்கு மேல வசூலிச்ச டெபாசிட் விவரமும் அவங்க கிளையில் இருக்கும் எந்த கணக்கிலாவுது அன்னைக்கு பத்து லட்சத்துக்கு மேல டெபாசிட் ஆன விவரமும் அந்த ரிப்போர்டில ப்ரிண்ட் ஆகும். நான் அந்த கிளை கணக்கில அந்த கிளையில் வசூலிச்ச டெபாசிட் ஆனதை மட்டும் ப்ரிண்ட் பண்ணற மாதிரி அதை மாத்தி எழுதிட்டேன்." சக்திவேல், "இதனால என்ன ஆகும்? " ஜாஷ்வா, "நம்ம உபயோகிக்க போற கம்பெனியோட கணக்கு மன்ஹாட்டன் ஸென்ட்ரல் (Manhattan Central) அப்படிங்கற கிளைல இருக்குன்னு வெச்சுக்குவோம். அவங்க ஹார்லம் (Harlem) கிளையில் பணத்தை டெபாசிட் பண்ணினா. அந்த பக் இல்லைன்னா ரெண்டு கிளையில் எடுக்கும் ரிப்போர்டிலும் அந்த டெபாசிட் விவரம் வரும். இப்ப நான் உண்டாக்கின பக் இருக்கறதால ரெண்டு கிளையில எடுக்கற பட்டியலிலும் வராது." நித்தின், "பணம் வந்து இருப்பதை வேற எந்த வழியிலாவுது அவங்க பாத்தா?" ஜாஷ்வா, "இந்த கம்பெனி எல்லாம் பல நூறு கோடி கணக்கில பண பரிமாற்றம் செஞ்சுட்டு இருக்கும் கம்பெனிகள். அவங்களை எப்பவும் சந்தேகப் படமாட்டாங்க. அந்த மாதிரி கம்பெனிகள்தான் அமெரிக்காவின் பணப் பசியை போக்குதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும். அவங்களை தொடறதுக்கு முன்னால் ஆயிரம் தடவை யோசிப்பாங்க" சக்திவேல், "சோ, எங்களோட பாட் நெட் வைரஸ், உன்னோட PDF எழுதற வைரஸ், அப்பறம் நீ அந்த ரிப்போர்ட் எழுதற மென்பொருளில் உண்டாக்கி இருக்கும் பக் (bug) இது மூணுதான் இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனுக்கு முக்கிய அம்சங்கள். ஆனா இருந்தாலும் உங்க வங்கில எதாவுது செக் பண்ணினாங்கன்னா?" ஜாஷ்வா, "இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன்ல என் வங்கில இருந்து நான் மட்டும் இல்லை. பேங்கிங்க் செக்யூரிட்டி ஆடிட் செல் (Banking Security Audit Cell) அப்படின்னு ஒரு பிரிவு இருக்கு, அந்த பிரிவோட மேனேஜர் பெஞ்சமின் ஹாஃப்மன். அவருக்கும் இதுல பங்கு. ஆனா அவர் பங்கு நம்ம கமிஷனுக்கு வெளியே" நித்தின், "ஜாஷ்வா, நேத்துத்தான் உன்னை நாங்க பாத்தோம். இருந்தாலும் உன் கிட்ட எங்களுக்கு ஒரு நெருக்கம் வந்துடுச்சு. இந்த ஆபரேஷன்ல வெளி ஆளுங்களும் இருக்காங்கன்னா ... " என்று இழுத்தான்ஜாஷ்வா, "முதல்ல இருந்து என்ன நடந்துதுன்னு சொல்றேன். சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னாடி மைக்கல் ஆண்டர்ஸன் அப்படின்னு ஒருத்தன் என்னை அணுகினான். அவனுக்கு நான் தான் ஹார்ஷ்7ன்னு எப்படி தெரிஞ்சுதுன்னு முடிவா தெரியலை. அனேகமா, சைபர் திருட்டுக் கள்ளச் சந்தையில் இருக்கறவங்க என்னை மோப்பம் பிடிச்சு அவன்கிட்ட சொல்லி இருக்கணும். அவனுக்கும் நான் சொன்ன பெஞ்சமின் ஹாஃப்மனுக்கும் பழக்கம். அதுவும் எப்படின்னு எனக்கு தெரியலை. என் கிட்ட இந்த மாதிரி ஒரு ஆபரேஷன் அமைக்க முடியுமான்னு ஒரு ப்ரோபோஸல் கொடுத்தான். அப்படி பண்ண முடிஞ்சா ஒரு பர்ஸென்ட் (percent) கமிஷன் கொடுக்கறேன்னு சொன்னான். அதுக்கு அப்பறம்தான் நான் என் வேலையை ஆரம்பிச்சேன்." சக்திவேல், "அவன் கொலம்பியன் ட்ரக் கார்ட்டல்காரங்களோட பிரதிநிதியா?" ஜாஷ்வா, "இல்லை. அவன் கொலம்பியன் ட்ரக் கார்ட்டல் காரங்களுக்கு பணத்தை இங்க இருந்து வெளிய எடுத்துட்டு போறதுக்கு ஏற்பாடு பண்ணும் ஒரு ஏஜண்ட். அவன் பண்ணறதும் கடத்தல் மாதிரிதான், பணக் கடத்தல்! அதை கள்ள சந்தையில் கேஷ் ம்யூல் ஆபரேஷன் (Cash Mule Operation) அப்படின்னு சொல்லுவாங்க. பணத்தை இங்கே இருந்து மெக்ஸிகோ, ப்ரேசில், வெனிஸுவேலா மாதிரி நாடுகளுக்கு எடுத்துட்டு போறதுக்குன்னு ஸ்டூடண்ட்ஸ், அல்லது வெளிநாட்டில் இருந்து, முக்கியமா தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இங்கே வேலைக்கு வந்தவங்க இந்த மாதிரி ஆளுங்களை பிடிப்பான். அவங்களுக்கு டிக்கெட் விசா எல்லாம் வாங்கி கொடுத்து அவங்க லக்கேஜ்ல பணத்தை அனுப்புவான். இம்மிக்ரேஷன் (immigration), கஸ்டம்ஸ் (customs) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சரி கட்டுவான்." நித்தின், "அவனை எப்படி நம்பினே?" ஜாஷ்வா, "ஆண்டர்ஸன், ஹாஃப்மன் இந்த ரெண்டு பேரைப் பத்தியும் என் கஸின்ஸ் மூலம் விவரம் சேகரிச்சு எந்த விதத்திலாவுது அவங்க மூலம் ஆபத்து இருக்கான்னு பாத்தேன். எதுவும் இல்லை. இருந்தாலும், அவனும் ஹாஃப்மனும் செய்ய வேண்டியதையும் நான் செய்ய் வேண்டியதையும் தனியா பிரிச்சேன். ட்ரான்ஸ்ஃபர் பண்ணறதுக்கு முன்னாடி எனக்கு, அதாவுது நமக்கு, சேர வேண்டிய கமிஷனை கொடுத்துடணும். எவ்வளவுதான் பக்காவா செஞ்சாலும் குறைந்தது ஐந்து பர்ஸன்ட் ஆபரேஷன் தோல்வி அடையறதுக்கு வாய்ப்பு இருக்கு. நூறு சதவிகிதம் உத்திரவாதம் கொடுக்க முடியாதுன்னும் கண்டிஷன் போட்டேன். எப்படி ஆபரேஷனை செய்யப் போறோம்ன்னு யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்" சக்திவேல், "இந்த ஆபரேஷனில் ஹாஃப்மனோட வேலை என்ன?" ஜாஷ்வா, "இப்படி அதிக பண பரிமாற்றம் இருக்கும் கம்பெனி கணக்கு மூலமா அவங்களுக்கு தெரியாம ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியுமான்னு கேட்டவனே அவன் தான். நாம் உபயோகிக்க கூடிய கம்பெனி கணக்குகளோட ஒரு லிஸ்ட் அவன் தயார் பண்ணி கொடுத்தான். ஒவ்வொரு மாதமும் ராண்டமா (random) சில கணக்குகளை தேர்ந்து எடுத்து அந்த கணக்குகளில் நடந்து இருக்கும் பண பரிமாற்றங்கள் எல்லாம் செக் பண்ணுவாங்க. இதுக்கு ராண்டம் ஆடிட் சைக்கிள் (Random Audit Cycle) அப்படின்னு பேர். ட்ரான்ஸ்ஃபருக்கு பிறகு நாம் உபயோகிச்ச கணக்கு ஆடிட்டுக்கு வராம அவன் பாத்துக்குவான். கம்பெனி பேங்க் ஸ்டேட்மெண்டை மாத்தி எழுதறது அவன் சொன்ன ஐடியா இல்லை. அது என்னுது. அவன் சொன்ன படி ட்ரான்ஸ்ஃபர் மட்டும் பண்ணினா போதும். அவன் சொல்ற கம்பெனிகள் மாதா மாதம் அவங்க கணக்கை பாக்க மாட்டாங்கன்னு அவனுக்கு தெரியுமாம். வருஷத்துக்கு ஒரு முறை பார்ப்பாங்களாம்" நித்தின், "அவங்க எவ்வளவு கமிஷன் வாங்குவாங்க?" ஜாஷ்வா, "அவங்க ரெண்டு பேரும் சேர்த்து அரை பர்ஸன்ட் (1/2 %)" சக்திவேல், "எப்படி அவங்க அதுக்கு ஒத்துகிட்டாங்க?" ஜாஷ்வா, "ஒரு வேலையும் செய்யாம அரை பர்ஸன்ட் வருது இல்லையா? அது மட்டும் இல்லை. நானே இந்த ஆபரேஷனை தனியா பண்ண முடியாது, மத்தவங்களுக்கும் கொடுக்கணும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு" நித்தின், "ட்ரான்ஸ்ஃபருக்கு உங்க வங்கி அந்த கம்பெனிகிட்ட சார்ஜ் வசூலிப்பாங்க இல்லையா? அது அந்த கம்பெனிகளுக்கு நஷ்டம்தானே? எப்படியும் இருநூறு மில்லியன்னா பாங்க் ரெண்டு பர்ஸன்ட்டாவுது வசூலிக்கும். நாலு மில்லியன் டாலர், ஒண்ணும் சின்ன அமௌன்ட் இல்லை. விடுவாங்களா?" ஜாஷ்வா, "அந்த கம்பெனியோட வருடாந்திர ஆடிட்டின்போது அவங்க ஆதாரத்தோட பாங்கை அணுகுவாங்க. பாங்க் தலையை சொறிஞ்சுட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்கும்" நித்தின், "என்ன ஆதாரம்?" சக்திவேல், "ஜாஷ்வாவோட் வைரஸ் மூலம் திருத்தம் செய்த அவங்களோட பேங்க் ஸ்டேட்மென்ட். இல்லையா ஜாஷ்வா?" ஜாஷவா "ஆமா" நித்தின், "பேங்க அது எங்க ஸ்டேட்மென்ட் இல்லைன்னு சொல்ல வாய்ப்பு இருக்கா?" ஜாஷ்வா, "இல்லை. ஒவ்வொரு PDFலயும் வங்கியோட டிஜிட்டல் கையெழுத்து இணைக்கப் பட்டு இருக்கும். அதனால வங்கி அந்த PDF வங்கியோடது இல்லைன்னு மறுக்க முடியாது" சக்திவேல், "சோ, வ்ங்கிக்கு நிச்சயம் நஷ்டம் இல்லையா?" ஜாஷ்வா, "வங்கி எதுல எல்லாம் லாபம் சம்பாதிக்கறாங்கன்னு பாத்தா இந்த நஷ்டம் ஒரு பெரிய விஷயம் இல்லை" நித்தின், சக்தி இருவரும் மௌனம் காக்க ஜாஷ்வா தொடர்ந்து, "சோ, என்ன சொல்றீங்க?" நித்தின், "ஜாஷ், மேலோட்டமா பாத்தா பண்ண முடியும்ன்னு தோணுது. ஒத்துக்கறேன் ஒரு வேளை இந்த ட்ரான்ஸ்ஃபர் விஷயம் எஃப்.பி.ஐ அல்லது என்.எஸ்.ஏவுக்கு தெரிஞ்சா யாரை உள்ள தள்ளுவாங்க?" ஜாஷ்வா, "யாரையும் உள்ள தள்ள முடியாது. ஒரு வேளை மாங்க்ஸ் பாட் நெட் உங்களோடதுதான்னு அவங்க கண்டு பிடிச்சாகூட அந்த கம்பெனிக்கு உள்ள எப்படி போக முடிஞ்சுதுன்னு அவங்கனால விளக்க முடியாது. நாம் எல்லாம் சேந்து செய்யறதை முழுசா தெரிஞ்சாதான் அவங்க நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி எடுத்தா நம்ம மேலதான் எடுப்பாங்க" நித்தின், சக்திவேல் இருவரும் மௌனம் காக்க ஜாஷ்வா, "லிஸன் கய்ஸ், இந்த ப்ளானுக்கு நான் எடுத்துட்ட சிரமத்துக்கும் உங்க பாட் நெட்டோட திறனுக்கும் நாம் நினைச்சா வேணும்னா எங்க பாங்கில் இருக்கற அத்தனை அக்கௌண்டையும் காலி பண்ணிட்டு அந்த கொலம்பியா, பெரு மாதிரி இடத்துக்கு போய் செட்டில் ஆக முடியும். ஆனா, நாம் சில வியாபாரிகளுக்கு உதவறோம் அவ்வளவுதான். எனி ஹவ், இன்னும் ரெண்டு நாள் யோசிங்க. உங்களுக்கு ஓ.கேன்னா வரும் புதன் கிழமை சாயங்காலம் மீட் பண்ணி நம்ம ஆபரேஷனை ஃபைனலைஸ் பண்ணலாம். சரியா?" என்ற பிறகு "வாங்க போய் பியர் எடுத்துட்டு வரலாம்" நித்தின், சக்தி இருவரும் "ஒ.கே" என்றவாறு எழுந்தனர்.Vanthana Rathod I.P.S - An Introduction Friday, May 23, 2008 11 AM, Dausa Collectorate, Dausa, Rajasthan வந்தனா ராத்தோட் I.P.S - ஒரு அறிமுகம் வெள்ளி, மே 23 2008 காலை 11 மணி, தவுசா மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தவுசா, ராஜஸ்தான் ராஜஸ்தானில் பல மாநிலங்களில் பல மாதங்களாக அறிக்கையும் எதிர் அறிக்கையுமாக இருந்த குர்ஜார் (இதை குஜ்ஜார் என்று அழைப்பதும் வழமை) வகுப்பினரின் போராட்டம் அன்று கலவரமாக உருவெடுத்து இருந்தது. தவுசா மாவட்ட ஆட்சியாளர் தலைமை வகித்த அந்த கலந்தாய்வு கூடத்தில் சுற்றிலும் இருந்த நாற்காலிகளில் வெவ்வேறு காவல் துறை அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர். மாவட்ட ஆட்சியாளருக்கு அருகே அந்த மாவட்டத்தின் தலைமை காவல் துறை அதிகாரி S.P காஷிநாத் ஷர்மா அமர்ந்து இருந்தார். "மதியம் ரெண்டு மணி வரை வந்த தகவல்படி போராட்டம் நடத்தறவங்க சிக்கந்த்ரா ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் ரெண்டு காவல் நிலையங்களை சுத்தி நின்னும் கோஷம் போட்டுட்டு இருக்காங்க. நிலைமை மோசமாயிட்டு வருது. அவங்களோட நோக்கம் ஜெய்ப்பூர் - தில்லி நேஷனல் ஹைவேயில் போக்குவரத்தை முழுசா நிறுத்தறது. சில இடங்கள்ல பண்ணிட்டும் இருக்காங்க. போலீஸ் படை உதவி (Police Force Reiforement) கேட்டுட்டு இருக்காங்க. நான் இவ்வளவு நேரம் சி.எம்மோட ஆணைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி முழு அதிகாரம் கொடுத்து இருக்காங்க" என்றவாறு தலைமை காவல் துறை அதிகாரியிடம் "நீங்க என்ன நடவடிக்கை வேணும்னாலும் எடுக்கலாம். துப்பாக்கி சூட்டுக்கான ஆணையும் (Shooting Order) இதில இருக்கு." என்றபடி ஜெய்ப்பூரில் இருந்து ஃபாக்ஸில் (fax) வந்து இருந்த ஆணைகளை அவரிடம் கொடுத்தார் "சரி, நீங்க டிப்ளாய்மென்ட் (Deployment) பத்தி சீக்கிரம் அலோசிச்சு முடிவெடுங்க. பொது ஜனங்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் இதுக்கு மேல் எந்த சேதாரமும் இருக்கக் கூடாது" சிறு விவாதங்களுக்கு பிறகு தலைமை காவல் அதிகாரி யார் எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்று ஆணைகள் இட்டார். ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேற, முடிவில் பயிற்சியில் இருக்கும் உதவி காவல் ஆணையாளர் (A.S.P Under Training) வந்தனா ராத்தோட் I.P.S மட்டும் அங்கு இருந்தாள். மாவட்ட ஆட்சியாளர் கேள்விக் குறியுடன் பார்க்க தலைமை காவல் அதிகாரி, "வந்தனா இங்க ஹெட் குவார்டர்ஸ்ல என் கூட இருப்பா. தேவையா இருந்தா மட்டும் அவளை அனுப்பலாம். பத்து படி முன் கூட்டி யோசிக்கக் கூடியவள். அவள் என்னுடன் தலைமை அலுவலகத்தில் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்" என்றதும் மாவட்ட ஆட்சியாளர் அவளை வியப்புடன் பாத்தபடி தலையசைத்தார். தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் வந்தனா ராத்தோட் I.P.S அங்கிருந்து அவள் மாவட்ட தலைமை காவலகத்தை அடைந்த சில மணி நேரங்களில் S.P காஷிநாத் ஷர்மாஅவளை அழைத்து, "சிக்கந்த்ராவில நிலைமை கை நழுவி போயிட்டு இருக்கு. ஜெய்ப்பூரில் இருந்து வந்திருக்கற ரிஸர்வ் போலீஸ் படையை (Reserve Police Battalion) உடனே அங்க போக சொல்லி இருக்கேன். நீயும் அவங்க கூட போ" என்று ஆணை பிறப்பித்தார். அவள் வெளியே சென்றதும் ரிஸர்வ் போலீஸ் படையின் தலைவர் S.P. தல்பத் சிங்க்கிடம் "She is with you only for officiating your actions. Please ensure her safety (அவள் உங்களுடன் இந்த மாவட்டத்தின் ஒரு பிரதிநிதியாக மட்டும் வருவாள். அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்)" என்றார். அவரும் தலையசைத்தவாறு வெளியில் சென்றார்.அந்த படையின் முன்னணியில் இருந்த ஜீப்பில் S.P. தல்பத் சிங்க்குடன் வந்தனா சென்றாள். அவர்கள் சிக்கந்தராவை அடைந்த போது ஒரு காவல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டு இருந்தது. இன்னொரு காவல் நிலையமும் எரியத் தொடங்கி இருந்தது. குர்ஜார் வகுப்பினர் எறியத் தொடங்கிய காவல் நிலையத்தை சுற்றி நின்று வெறியுடன் கோஷமிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை அந்த இடத்தை விட்டு அமைதியாக அகலும் படி தன் கையில் இருந்த மைக்கில் S.P தல்பத் சிங்க் வந்தானாவை அறிவிக்க சொன்னார். வந்தனா அவ்வாறு அறிவித்த பிறகும் கூட்டம் கலையாமல் இருக்க. அடுத்த கட்டமாக சுட வேண்டி இருக்கும் என்று அறிவிக்க சொன்னார். அதையும் வந்தனா அறிவித்தாள். மேலும் கூட்டம் கலையாமல் இருக்க காவல் நிலையத்தில் இருந்தவர்களை காப்பாற்றும் பொருட்டு தன் படையிடம் முதலில் கண்ணீர் புகை வெடிகளை வீச ஆணையிட்டார். ஜீப்பில் இருந்தவர்கள் உட்பட படையில் இருந்த அனைவரும் தத்தம் முகமூடிகளை அணிந்த பிறகு கண்ணீர் புகை வெடி குண்டுகள் கூட்டத்தை நோக்கி வீசப் பட்டன. அதன் பிறகும் கலையாமல் இருப்பவரை சுடுவதற்கு ஆணை பிறப்பித்தார். அடுத்ததாக துப்பாக்கி ஏந்திய காவல் துறை வீரர்கள் முன்னணிக்கு வந்து கூட்டத்தை நோக்கி ஐந்து முறை சுட்டனர். கூட்டம் சிதற பலரும் காயமுற்று விழுந்தனர். S.P. தல்பத் சிங்க்கின் கவனம் முழுவதும் அந்த தாக்குதலில் இருக்க, வந்தனா அவர்களுக்கு தேவையான அளவுக்கு உள்ளே செல்ல வழி கிடைத்ததும் கூட்டத்தின் நடுவே புகுந்து ஒரு ஜீப்பில் பின்னால் இரண்டு வேன்களுடன் காவல் நிலையத்தை அடைந்தாள். உடன் வந்த ரிஸர்வ் போலீஸ் படையினருடன் வந்தனா எரிந்து கொண்டு இருந்த காவல் நிலையத்திற்குள் சென்று அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்ற தொடங்கினாள். காயமுற்று இருந்தவர்களை எல்லோரையும் ஒரு வேனில் ஏற்றியபிறகு மற்றவர்களை வீரர்களுடன் அடுத்த வேனில் ஏற்றி திரும்பிச் செல்ல ஆணை இட்டாள். மறுபடி ஜீப்பில் ஏறி அந்த காவல் நிலையத்தை விட்டு வெளியேறுகையில் கூட்டம் ஓரளவு கலைந்து இருந்தது. அருகில் நின்று கோஷமிட்டுக் கொண்டு இருந்தவர்கள் இப்போது துப்பாக்கி சூடு படாத தூரத்திற்கு சென்று நின்று இருந்தனர். சிலர் இன்னமும் கோஷமிட்ட படி இருந்தனர். பலர் காவல் துறையினர் அருகே துப்பாக்கி சூட்டில் காயமுற்று கிடந்தவர்களை கண்டு மலைத்து நின்று இருந்தனர். அபாயம் ஏதும் இல்லை என்று சற்று கவனக் குறைவாக இருந்தவளின் இடுப்பில் எங்கிருந்தோ வந்த ஒரு கத்தி பாய்ந்தது. கண்கள் இருண்டு சாய்ந்தவளை தக்க சமயத்தில் பார்த்த அருகில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தாங்கிப் பிடித்தார். S.P தல்பத் சிங்க் மாவட்ட தலைமை அதிகாரியை கைபேசியில் அழைத்து நடந்தவற்றை கூறியபின் வந்தனாவின் நிலைமையை பற்றியும் சொன்னார். பிறகு முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்று இன்னமும் மயக்கமுற்று இருந்த வந்தனாவை ஒரு தனி ஜீப்பில் ஏற்றி ஜெய்ப்பூர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல ஆணையிட்டு தன் கடமையை தொடர்ந்தார். மூன்று நாட்களில் அபாயகரமான நிலையில் இருந்து மீண்டாள். ஒரு வாரத்திற்கு பிறகு மருத்துவ மனையில் இருந்து ஜெய்ப்பூரில் இருக்கும் அவளது சித்தப்பா வீட்டிற்கு பெற்றோருடன் சென்றாள். Friday, 30 May 2008 10 AM, Residence of IGP Yogeshwar Rathod I.P.S வெள்ளி, மே 23 2008 காலை 10 மணி, ஐ.ஜீ.பி. யோகேஷ்வர் ராத்தொட் I.P.S அவரகளின் இல்லம் வீட்டை அடைந்து தனது பெற்றோர், சித்தி, சித்தப்பாவுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். "என்ன வந்தனா, இப்ப எப்படி இருக்கு? இன்னும் வலி இருக்கா?" "வலி இல்லை சித்தப்பா, ஆனா கொஞ்சம் பலவீனமா இருக்கு" "பின்னே, எவ்வளவு இரத்தம் போயிருக்கு?" சிரித்தவாறு அமர்ந்து இருந்தவளருகே அது வரை மௌனமாக இருந்த அவள் தாய் கௌரி தன் கொழுந்தனிடம், "யோகி, போதும்பா இந்த வேலை. என்னால இன்னோரு இழப்பை தாங்க முடியாது. இவருக்கும் இது மனசில இருக்கு. ஆனா, ராத்தோட் குடும்பத்தில மத்தவங்க எல்லாம் அவரை கேவலமா பாப்பாங்கன்னு வெளியில சொல்லாம இருக்கார்." வந்தனா, "அம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி கவலை படறே?" யோகேஷ்வர், "வந்தனா, அண்ணி சொல்றதுலயும் ஞாயம் இருக்கு ... " வந்தனா தந்தை என்ன சொல்லப் போகிறார் என்று அவரை பார்த்த படி இருந்தாள். அவள் தந்தை, "அமா வந்தனா. உங்க அம்மா சொல்றது சரி. என்னாலயும் நிச்சயம் தாங்க முடியாது. எனக்கு முன்னாடி அவ வாய்விட்டு சொல்லிட்டா" யோகேஷ்வர், "வந்தனா, நீ போலீஸ்ல இருந்து வெளிய போக வேண்டாம். உன் ட்ரெயினிங்க் முடுஞ்சப்ப உனக்கு என்ன சிபாரிசு செஞ்சு இருந்தாங்க? யோசிச்சு பாரு. அதுவும் போலீஸ் வேலைதான். அதிலயும் உன்னால நீ அன்னைக்கு சிக்கந்தராவில சாதிச்சதை விட நிறைய சாதிக்க முடியும்" அவளது சித்தி எல்லோரையும் அமைதி படுத்தும் விதமாக, "ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு இப்பதான் வந்து இருக்கா. இன்னும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துக்க சொல்லி இருக்காங்க அதுக்குள்ள என்ன பேச்சு? வந்தனா, இந்த டீயை குடிச்சுட்டு ரூம்ல போய் படுத்து ரெஸ்ட் எடும்மா" என்று அந்த விவாதத்திற்கு முற்று புள்ளியிட்டாள். வேலையாள் கொண்டு வந்த டீயை வாங்கி குடித்துவிட்டு மாடிக்கு செல்ல எழுந்தாள். படிகளை ஒட்டிய சுவற்றில் அழகாக மாட்டி இருந்த குடும்ப படங்களை பார்த்தவாரு மாடிக்கு சென்றாள். முதலில் இருந்த படத்தில் இருந்தது அவள் பெரியப்பா ஜெனரல் மஞ்சுநாத் ராத்தோட், பெரியம்மா கோமள் மற்றும் பெரியப்பாவின் மகன் A.C.P மனீஷ் ராத்தோட் I.P.S. அடுத்த படம் அவள் குடும்ப படம். பல வருடங்களுக்கு முன் எடுத்தது. மாறுகண்ணுடன் அவளது தந்தை வீரேந்திர ராத்தோட், தாய் கௌரி, அண்ணா விக்ரம் இவர்களுடன் வந்தனா. அடுத்தது அவளது சித்தப்பாவின் குடும்பம் I.G.P யோகேஷ்வர் ராத்தோட் I.P.S, சித்தி சுலக்ஷணா, பள்ளிப் படிப்பில் இருக்கும் சித்தப்பாவின் மகன் பிரவீண். அடுத்த படம் அவள் எப்போதும் விரும்பிப் பார்ப்பது. பெரியப்பா, சித்தப்பா இவர்களை தவிர அவர்களது சித்தப்பா, பெரியப்பா மக்கள், பிறகு அவர்களின் பிள்ளைகள். படத்தில் பாதி காக்கி சட்டைகள். நடு நடுவே சில கடற்படையின் வெள்ளைச் சட்டைகளும் விமானப் படையின் வெளிர் நீலச் சட்டைகளும் இருந்தன. அவர்களுக்கு நடுவே கோட்-சூட்டுடன் இருந்த சிலரில் அவளது தந்தை இருந்தார். மாடியில் ஏறக்குறைய அவளது அறையாகி விட்டு இருந்த கெஸ்ட் பெட்ரூமை அடைந்தவள் எதிரில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னை பார்த்தாள். விறைப்பாக நின்றபடி 'வந்தனா ராத்தோட் I.P.S' என்று மனதுக்குள் ஒரு சொல்லிக் கொண்டாள். அடுத்த கணம் மாடிப் படியோரம் படத்தில் அடுத்த நாளைப் பற்றிய கவலை ஏதுமற்று இருந்த தனது முகத்தைக் நினைவு கூர்ந்தாள். தான் அடைந்த மாற்றங்களை நினைக்க அவளுக்கே வியப்பாக இருந்தது. அவளை அறியாது பெருமூச்சு விட்டாள். படுக்கையில் படுத்தவள் தூக்கம் வராமல் கடந்த காலத்தின் வெவ்வேறு கட்டங்களை அசை போடத் தொடங்கினாள்..காவல் துறையிலும் ராணுவத்திலும் இருப்பதை ஒரு பாரம்பரியமாக கொண்ட குடும்பச் சூழலில் பிறந்தவர் அவளது தந்தை வீரேந்தர் ராத்தோட். பிறவியில் இருந்த மாறு கண்ணால் அவரால் தன் குடும்ப பாரம்பரியத்தில் பங்கு கொள்ள முடியவைல்லை என்பது அவர் மனதில் பெரியதொரு ஆதங்கம். தன் மகன் விக்ரம் ஒரு காவல் துறை அதிகாரி ஆகவேண்டும் என்பது அவன் பிறந்த போதிலிருந்து அவர் கண்ட கனவு. ஆஜ்மெரில் இருக்கும் மேயோ காலேஜ் (Mayo College, Ajmer) எனும் உயர்தர போர்டிங்க் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் தில்லியில் இருக்கும் செய்ன்ட் ஸ்டீஃபன்ஸ் (St Stephens) கல்லூரியில் அவனுக்கு பி.ஏ பொருளாதாரம் ஹானர்ஸில் (B.A Economics Hons) இடம் கிடைத்தது. அவனுக்கு கிடைப்பதற்கரிய அந்த இளகலைப் பட்டப் படிப்பில் இடம் கிடைத்ததும், ஐ.பி.எஸ் (IPS) இல்லாவிடில் அந்த படிப்புக்கு ஏற்ற ஐ.ஏ.எஸ் (IAS) யில்லாவது சேருவான் என்று கனவு கண்டார். விக்ரம் படிப்பை முடிக்கும் முன்னரே அவன் தந்தைக்கு தெரியாமல் இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் (London School Of Economics) இடம் பிடித்தான். வருடத்திற்கு ஒரு முறை தங்கள் குடும்பத்துடன் பெரியப்பா, சித்தப்பா குடும்பங்களும் வந்து கூடி இருக்கும் சமயத்தை பயன் படுத்திக் கொண்டு தனக்கு ஐ.பி.எஸ் அல்லது ஐ.ஏ.எஸ் படிப்பில் விருப்பமில்லை என்று அறிவித்தான். இவ்வளவு நாளும் தனக்கு ஆசை காட்டிய பின் மறுக்கும் மகனை கண்டு வீரேந்தர் கொதிப்படைந்தார். இருப்பினும் தன் சகோதரர்கள் உடனிருந்து அவரை சமாதானப் படுத்த, தன் ஆசை நிராசை ஆனதை பொருட் படுத்தாமல் அவனை மேலும் படிக்க லண்டனுக்கு செல்ல அனுமதித்தார். மனதோரத்தில் மகன் எல்.எஸ்.ஈ (LSE) யில் இடம் பிடித்ததை பற்றி சிறுது கர்வமும் பட்டார். விக்ரம் வந்தனாவுக்கு நான்கு வயது மூத்தவன். மகனை காவல் துறை அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட வீரேந்தருக்கு மகளை பற்றி அப்படி எந்த கனவும் இல்லை. அவருக்கு அவள் ஒரு செல்லக் குட்டி. சிறு வயதிலிருந்து தாயைவிட தந்தையிடம் வந்தனாவுக்கு அளவு கடந்த பாசம். சிறு வயதில் இருந்து வந்தனாவுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் நாட்டம் அதிகம். தன் அண்ணனைப் போலவே பல விளையாட்டுகளிலும் பங்கேற்பாள். பதினைந்து வயதில் விக்ரம் குதிரை ஏற்றம் கற்கும் போது அவனுடன் சேர்ந்து பனிரெண்டு வயதில் அவனுக்கு நிகராக கற்றாள். பத்தாம் வகுப்பில் அவள் பெற்ற மதிப்பெண்களைக் கண்டு வியந்த தன் சகோதரர்களின் வற்புறுத்தலால் அவளை கோட்டா என்ற இடத்தில் ஐ.ஐ.டி நுழைவு தேர்வுக்கு தனிப் பயிற்சி அளிக்கும் பன்ஸால் இன்ஸ்டிட்யூட்டில் (Bansal Institute, Kota, Rajasthaan) சேர்த்தார். ஐ.ஐ.டியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஐ.ஐ.டிகளுக்கு அடுத்தவையாக கருதப் படும் என்.ஐ.டி கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். ஜெய்ப்பூரிலே இருக்கும் மாலவியா தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (Malaviya National Institute of Technology) கணிணி விஞ்ஞானம் (Computer Science) படிக்க அவளுக்கு இடம் கிடைத்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவள் பி.டெக் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் போது விக்ரம் இங்கிலாந்து புறப்பட்டான். அண்ணன் தான் விரும்பிய எம்.பி.ஏ படிக்க செல்கிறான் என்று ஒரு புறம் அவள் மனம் குதூகலித்தாலும் தந்தையின் எதிர்பார்ப்பை நிராகரித்தான் என்பதில் அவளுக்கு மன வருத்தமே. விக்ரமை வழியனுப்ப குடும்பத்தினர் எல்லோரும் கூடி இருந்த சமயம், யோகேஷ்வர் வந்தனா பி.டெக் படித்தாலும் ஐ.பி.எஸ் நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம் என்று கூறி அவள் மனதில் ஐ.பி.எஸ் படிக்கும் ஆர்வத்திற்கு வித்திட்டார். அவளது இரண்டாம் வருட இறுதி தேர்வுக்கு படிப்பு விடுமுறையில் வீட்டில் இருந்தாள். விக்ரம் தனது இறுதி ஆண்டின் ப்ராஜக்ட்டுக்கு ஒரு பன்னாட்டு முதலீட்டு வங்கியின் ஸ்பெய்ன் (Spain) நாட்டின் தலை நகரமான மாட்ரிட்டில் (Madrid) இருந்த கிளையில் பணியிட இடம் கிடைத்து இருந்தது. மார்ச் 11ம் தேதி மாலை தொலைக் காட்சியில் மாட்ரிட் நகரத்தின் மின்சார ரயில்களில் அன்று காலை நடந்த சரமாரியான குண்டு வெடிப்புகளில் இருநூறு பேர் இறந்ததாகவும் ஆயிரக் கணக்கானோர் காயமுற்றதாகவும் செய்தி வந்தது. உடனே பதறிய வீரேந்தர் தன் மகனை அவன் கைபேசியில் அழைத்தார். பதிலேதும் இல்லாமல் போக அவனது அலுவலகத்தை அழைத்தார். வெவ்வேறு மேசைகளுக்கு அவரது இணைப்பு திசை திருப்பப் பட்டு முடிவில் அவன் பணிபுரிந்த பிரிவின் மேனேஜருடன் தொடர்பு கொண்டார். விக்ரம்மும் அவனுடன் லண்டனில் இருந்து ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்த அவனது நண்பனும் அன்று அலுவலகத்திற்கு வந்து இருக்கவில்லை. மேனேஜர் பதட்டப் பட வேண்டாமென்றும் அன்று பலர் வேலைக்கு வந்து இருக்க வில்லை என்றும் தெரிவித்தார். அவனை தொடர்பு கொள்ள வேறு வழியறியாமல் தவித்த படி இருந்தார். சற்று நேரத்தில் அவர்களை தொலைபேசியில் அழைத்த யோகேஷ்வர் விவரம் அறிந்து மாட்ரிட் தூதரகத்தில் பணியிடும் ஒரு சக ஐ.பி.எஸ் அதிகாரியை அணுகினார். இரண்டு நாட்களுக்கு பிறகு அல்-கைதாவின் தீவிரவாத செயலில் உயிரிழந்த விக்ரம்மின் உடல் குளிர் சாதனச் சவப் பெட்டியில் வந்து சேர்ந்தது.அண்ணனின் மறைவும் உயிரிழந்த மகனின் உருத்தெரியாமல் அழிந்து இருந்த முகத்தை கண்ட பெற்றோரின் கதறலும் அவளை பெரிதும் பாதித்தது. அந்த தீவிரவாதத்தை நினைத்து அவள் மனம் கொதித்தது. தீவிரவாதத்தின் மேல் இருந்த வெறுப்பு ஒரு இனம் புரியாத வெறியாக மாறியது. விதையாக மனதில் இருந்த ஐ.பி.எஸ் ஆர்வம் வேரூன்றி மரமானது. பி.டெக் மூன்றாம் வருடத்தில் காலடி வைக்கும் போது இருந்தே ஐ.பி.எஸ் நுழைவு தேர்வுக்கான படிப்பிலும் இறங்கினாள். முதலில் அவள் முடிவைக் கேட்ட வீரேந்தர் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் சிறு வயது முதல் தெருவில் அடிபட்ட நாய்க் குட்டிகளையும் பூனைக் குட்டிகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து பராமரிக்கும் மென்மையான மனப் பாங்கு கொண்ட வந்தனா அந்த துறைக்கு ஏற்றவளா என்ற சிறு அய்யம் அவர் மனதில் இருந்து வந்தது. பி.டெக் முடித்து அடுத்த சில மாதங்களில் யூ.பி.எஸ்.ஸி (UPSC) நடத்தும் இண்டியன் சிவில் சர்வீஸஸ் (Indian Civil Services) தேர்வில் பங்கேற்றாள். ராஜஸ்தானில் பங்கேற்றவர்களில் முதலாக வந்ததோடு அகில் இந்திய அளவிலும் நல்ல ராங்க்குடன் தேர்வு பெற்றாள். 2006ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹைதராபாத்தில் இருக்கும் ஸர்தார் வல்லப் பாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடெமி (Sardar Vallabh Bhai Patel National Police Academy)யில் ஐ.பி.எஸ் பயிற்சி முகாமில் சேர்ந்தாள். ஒரு வருட பயிற்சியில் பல வகுப்புகளிலும் பாடங்களிலும் முதல் இடத்தில் தேர்வு பெற்றாள். ஐ.பி.எஸ் பயிற்சி முடிவில் ஒவ்வொருவரும் எந்த மாகாண அரசு அல்லது மத்திய அரசு பிரிவுக்கு அனுப்பப் படுவர் என்பதை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது வழக்கம். இதை கேடர் (Cadre) என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மாகாணத்தின் முதலிடத்தை பெற்றவர் மட்டும் விருப்பப் பட்டால் தங்கள் சொந்த மாகாண கேடரை தேர்ந்தெடுக்கலாம். வந்தனா ராஜஸ்தான் மாநிலத்தில் முதலிடத்தில் இருந்ததால் அவள் ராஜஸ்தான் கேடரில் சேரும் விருப்பத்தை தெரிவித்து இருந்தாள். ஆனால் அந்த கல்லூரியின் டைரக்டரும் அவளது பயிற்சி முகாமின் தலைவரும் அவளை சாதாரண போலீஸ் வேலையில் சேர வேண்டாமென்று அறிவுரைத்தனர். அவளைப் போன்ற அறிவாற்றல் (IQ) கொண்டவர்கள் ஐ.பி.எஸ்ஸில் சேர்வது அரிது. அப்படிப் பட்டவள் சாதாரண சட்ட-ஒழுங்கு மேற் பார்வை பணியிலோ, குற்றப் பிரிவிலோ சேர்வதற்க்கு பதிலாக அவளுக்கு உகந்த ஒரு மத்திய அரசு பிரிவில் சேர்வதே சரி என்று பரிந்துரைத்தனர். ராஜஸ்தான் ஐ.பி.எஸ் போலீஸ் பிரிவில் (Rajashthan I.P.S Cadre) சேர்ந்து தன் தந்தையின் முன் காக்கிச் சட்டையில் வலம் வர விரும்பிய வந்தனாவின் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. தன் சித்தப்பா யோகேஷ்வரிடம் முறையிட்டாள். யோகேஷ்வர் ராஜஸ்தான் தலைமை காவல் அதிகாரியிடம் பேசி (சிபாரிசு செய்து!) அவளை ராஜஸ்தான் காவல் துறையில் பணியிட வாய்ப்பளித்தார். இருப்பினும், அந்த கல்லூரி டைரக்டர், அடுத்த ஆறு மாதத்திற்குள் அவள் விரும்பினால் ஒரு மத்திய அரசு பிரிவுக்கு மாற்றிக் கொள்ள அவளுக்கு வாய்ப்பளிப்பதாக வாக்களித்து இருந்தார். தவுசாவில் A.S.P Under Training ஆக அவள் பணியில் சேருவதை பார்ப்பதற்காகவே அவளது பெற்றோர் உதைப்பூரில் இருந்து வந்து இருந்தனர். அவளுடன் சில வாரங்கள் தங்கி இருந்தனர். வீரேந்தர் ராத்தோட்டின் கனவை நினைவாக்கும்படி அவர் முன் காக்கி சட்டையில் வலம் வந்தாள். ஆனாலும் எதிர் காலத்தைப் பற்றி அவள் மனதில் ஒரு சிறு கேள்வி குறி இருந்து வந்தது. அடுத்த இரண்டு நாட்களில் அவள் பரிபூரண குணமடைந்து இருந்தாள். மறுபடி அவளது பணியைப் பற்றி பேச்சு எழுந்தது. அவள் சித்தப்பா அவளிடம், "என்ன சொல்றே வந்தனா, நீ ட்ரெயிங்க் முடிக்கும் போது உங்க டைரக்டர் சொன்ன மாதிரி வேற பிரிவுக்கு (cadreக்கு) மாத்திக்கறயா?" வந்தனா, "அப்பா நீங்க என்ன சொல்றீங்க? முக்கியமா உங்களுக்காகத் தான் நான் இந்த ஐ.பி.எஸ்ல சேர்ந்தேன்" சற்று அதிர்ந்த வீரேந்தர், "ஆனா உனக்கு பிடிக்கலையாம்மா?" வந்தனா, "எனக்கும் பிடிச்சுத்தான் இருந்து. இல்லைன்னா சேர்ந்து இருக்க மாட்டேன்" யோகேஷ்வர், "அண்ணா முதல்ல நீங்க இதை புரிஞ்சுக்குங்க. ஐ.பி.எஸ் அப்படிங்கறது ஒரு பெரிய குடும்பம். அதில பலர் எப்பவும் காக்கி சட்டை போட்டுட்டு இருப்பாங்க. சிலர் எப்பவாவுது போடுவாங்க. அதனால அவங்க ஐ.பி.எஸ் இல்லைன்னு அர்த்தம் இல்லை. வந்தனா, இது உனக்கும் தெரியும் இல்லையா? எப்பவும் காக்கி சட்டை போடற ஒரு பிரிவில் இருந்து எப்பவாவுது காக்கி சட்டை போடற ஒரு பிரிவுக்கு மாத்திக்கறதை பத்திதான் பேசிட்டு இருக்கோம். அப்பறம் ஐ.பி.எஸ் சேர்ந்ததை பத்தி என்ன பேச்சு?" வந்தனா, "தெரியும் சித்தப்பா. ஆனா, மாநில காவல் துறை பிரிவுல எந்த மாதிரி வேலை இருக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும். வேற பிரிவுன்னா எந்த மாதிரி இருக்கும்ன்னு தெரியலை. அதான் குழப்பமா இருக்கு" யோகேஷ்வர், "இப்படி நீயா குழம்பிட்டு இருக்கறதுக்கு பதிலா உன் அகாடெமி டைரக்டர்கிட்டயே பேசேன்" வந்தனா, "அவர் என் கிட்ட எல்லாம் பேசுவாறா?" யோகேஷ்வர், "நீ ட்ரெயினிங்க்ல இருந்தப்பவே அவர் உன்னை நல்லா கவனிச்சு இருக்கார். நிச்சயம் பேசுவார். நாளைக்கே அவர்கூட ஃபோன்ல பேசு" அடுத்த நாள் அவள் டைரக்டரை தொலைபேசியில் அழைக்க, "எஸ் வந்தனா, நான் உனக்கு மட்டும் பிரிவை மாத்திக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேணும்னு உள்நாட்டு அமைச்சகத்துக்கு (Home Ministry) கொடுக்கும் பயிற்சி முகாம் முடிவு அறிக்கையில் (IPS Batch Training Completion Report) எழுதி இருந்தேன். இப்ப நீயே அந்த வாய்ப்பை உபயோகிச்சுக்க ஆர்வம் காட்டற மாதிரி தெரியுது. சொல்லு பிரிவை மாத்திக்கறயா?" வந்தனா தன் சித்தப்பாவிடம் சொன்னதை சொல்ல அவர், "அடுத்த வாரம் உன் மெடிக்கல் லீவை முடிச்சுட்டு தில்லிக்கு வா. நான் அப்ப அங்க இருப்பேன். நான் உன்னை போக சொல்லும் பிரிவை பத்தி விளக்கமா சொல்றேன்" என்றார். அவருக்கு எப்படி தனக்கு காயம் பட்டது தெரியும் என்று வந்தனா வியந்தாள். வந்தனா, "அப்ப என்னோட போஸ்டிங்க் .. " டைரக்டர், "நான் இன்னைக்கே உள்நாட்டு அமைச்சகத்துக்கு உன்னோட மாற்றலை பத்தி ஒரு நோட் எழுதறேன். உங்க மாநில காவல் தலைவருக்கும் ஒரு நகல் அனுப்பறேன். அதை வெச்சுட்டு உன்னை அவர் ரிலீவ் பண்ணுவார். நீ என்னை பாக்க வரும்போது உன்னோட அடுத்த வேலைக்கான ஆணை தயாரா இருக்கும்" என்றார். அடுத்த நாள் அவளை தில்லியை அடைந்த பிறகு அடுத்த திங்கள் கிழமை காலை எட்டு மணிக்கு அவரது கைபேசியில் அழைக்க சொல்லி தகவல் வந்தது.Monday, 9 June 2008 திங்கள், ஜூன் 9, 2008 முந்தைய தினம் மாலை தில்லியில் இருக்கும் பெரியப்பா மஞ்சுநாத் ராத்தோட்டின் வீட்டிற்கு தந்தை தாய் சகிதம் வந்து சேர்ந்தாள். இரவு சாப்பாட்டு வேளையில் பெரியப்பா குடும்பத்துடன் இன்னும் ஒரு கலந்துரையாடல். உத்திரப் பிரதேச காவல் துறை பிரிவில் இருக்கும் பெரியப்பா மகன் A.C.P மனீஷ் I.P.Sம் வந்து இருந்தான். அவனும் பெரியப்பாவும் காக்கி சட்டை போடாத பல பிரிவுகளைப் பற்றிய விவரங்களை வந்தனாவுக்கு எடுத்து உரைத்தனர். முடிவில் மனீஷ் "வந்தனா, அகாடெமி டைரக்டரருக்கு நிறைய ஆஃப் த ரெக்கார்ட் (off the record - வெளிப்படையாக கொடுக்கப் படாத) அதிகாரம் இருக்கு. இந்திய போலீஸ் படைகளில் அவரை ஒரு கிங்க் மேக்கர் (king maker)ன்னு சொல்லலாம். அவர் உன் மேல தனி அக்கறை எடுத்துக்கறார்ன்னா, அவருக்கு உன்னை ரொம்பவே பிடிச்சு போயிருக்கணும். அது மட்டும் இல்லை, எதோ ஒரு பிரிவுல இருக்கற ஒரு வேலைக்கு நீதான் சரியான ஆள்ன்னு அவர் நினைக்கறார். இந்திய போலீஸ் படை மத்த நாடுகளில இருக்கும் படைகள் கூட ஒப்பிட்டு பார்க்கும் போது ரொம்ப பின் தங்கி இருக்கு. சீக்கரமா நாம் முன்னேற வேண்டிய அவசியம் இருக்கு. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புது பிரிவுகள், துணை-துறைகள்ன்னு கேள்வி பட்ட படி இருக்கோம். அதனால அவர் உனக்கு என்ன பரிந்துரைத்தாலும் சரியாதான் இருக்கும். நாளைக்கு அவரை போய் பாரு அப்பறம் சாயங்காலம் நம்ம டிஸ்கஸ் பண்ணலாம்" என்று வந்தனாவுக்கு அறிவுரைத்தான். காலை எட்டு மணிக்கு டைரக்டரை தன் கைபேசியில் அழைக்க அவர், "ஹெல்லோ வந்தனா, எப்ப தில்லி வந்தே?" "நேத்து சாயங்காலம் சார்" "எங்கே தங்கி இருக்கே?" "எங்க பெரியப்பா வீட்டிலே சார்" "ஓ, ஜெனரல் ராத்தோட் எப்படி இருக்கார்?" "நல்லா இருக்கார் சார். நான் உங்களை எங்க மீட் பண்ணறது?" "ஆக்சுவலா நீ ரிப்போர்ட் பண்ண வேண்டியது லோதி ரோட்ல இருக்கும் சி.ஜி.ஓ காம்ப்ளெக்ஸ்ல (CGO Complex). அதுக்கு முன்னாடி உன் கூட பேசி உனக்கு கொஞ்சம் பின்னணி விவரங்கள் கொடுக்கணும். இன்னம் ஒரு அரை மணி நேரத்தில தில்லி கால்ஃப் க்ளப்ல (Delhi Golf Club) இருக்கும் டைனிங்க் ரூம் (Dining Room)க்கு வர முடியுமா?" "ம்ம்ம் .. எஸ் சார்" தந்தையின் ஸ்கார்பியோவை எடுத்துக் கொண்டு சரியாக இருபத்து ஐந்து நிமிடங்களில் தில்லி கால்ஃப் க்ளப்பை அடைந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் ரிஸப்ஷனில் விசாரித்து டைனிங்க் ரூமை அடைய மூலையில் இருந்த ஒரு மேசையில் டைரக்டர் ஒரு ஃபைலை பார்த்தவாறு காஃபி அருந்திக் கொண்டு இருந்தார். சல்யூட்டுடன், "வந்தனா ராத்தோட் ரிப்போட்டிங்க் சர்" என்று விறைப்பாக நின்றவளை பார்த்து புன் முறுவலுடன் "வா வந்தனா, டேக் அ ஸீட்" என்றவாறு எதிரில் இருந்த நாற்காலியை காட்டினார். தொப்பியை எடுத்து கையில் பிடித்த படி அவருக்கு எதிரில் அமர்ந்தாள். "ப்ரேக்ஃபாஸ்ட் சாப்படறயா?" "இல்லை சார், சாப்பிட்டுட்டுதான் வந்தேன்" "கொஞ்சம் காஃபி அல்லது டீ?" "ஓ.கே சார் .. எனக்கு டீ" "சோ, இப்ப பூரண குணமாயிட்டயா? அதிர்ஷ்ட வசமா பெருங்குடலில் மட்டும் லேசான காயம்ன்னு கேள்வி பட்டேன். எதுவும் காம்ப்ளீகேஷன் இல்லையே?" "எதுவும் இல்லை சார் .. ஃபாலோ அப் செக்-அப் பண்ணின போது ஸ்கேன் எடுத்து பாத்தாங்க" "குட். முதல்ல இதை சொல்லு. என்ன காரணத்தினால ராஜஸ்தான் காவல் துறையில் இருந்து மாத்திக்க முடிவெடுத்தே?" "முக்கிய காரணம் என் பேரண்ட்ஸ்தான் சார். மத்தபடி எனக்கு நான் செஞ்சுட்டு இருந்தது ஓரளவு பிடிச்சுத்தான் இருந்தது" "ம்ம்ஹூம் ... ரெண்டு வருஷத்தில உன் மூளை துருப்பிடிச்சு போயிருக்கும். ஐ மீன் அந்த வேலை அறிவில்லாதவங்க செய்யறதுன்னு சொல்லலை. உன்னோட ஐ.க்யூவுக்கு அது ஒரு சாலஞ்சா இருக்காது. ரெண்டு வருஷத்தில ஏண்டா வந்தோம்ன்னு வருத்தப் பட ஆரம்பிச்சு இருப்பே. ஒண்ணு கேக்கறேன் உண்மையா பதில் சொல்லணும். ஓ,கே?" "ஓ,கே சார்" "உன்னோட பொழுது போக்கு என்ன?" "படிக்கறது, க்ராஸ்-வர்ட் (Cross Word), சொடுகு (Soduku), நெட்ல எதாவுது மைண்ட் கேம்ஸ் (Mind Games) வெப்சைட்" "கரண்ட் அஃபேர்ஸ் (Current Affairs - நாட்டு நடப்பு?!) பத்தி எல்லாம் எக்ஸாமுக்கு படிச்சதோட சரி. இல்லையா?" "அப்படி இல்லை சார், டீ.வில பாப்பேன் ... " என்று இழுத்தாள் "நான் உன்னை தப்பா சொல்லலை. உனக்கு டிபிகல் அதிகார வர்க்க குணாதிசங்கள் எதுவும் இல்லை அப்படிங்கறதை வலியுறுத்தறேன்"மௌனமாக புன்னகைத்தவளிடம் தொடர்ந்தார், "ஆர் அண்ட் ஏ டபுள்யூ (R&AW)வில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெக் சர்வீஸஸ் (Electronics and Tech Services) பிரிவை பத்தி கேள்வி பட்டு இருக்கியா?" "கேள்வி பட்டு இருக்கேன் சார், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் சர்வேலன்ஸ் (Electronic Communication Surveilance) பண்ணற அமைப்பு" "அப்ப அவங்க கார்கில் போருக்கு முன்னாடி பண்ணின சொதப்பலும் கேள்வி பட்டு இருப்பியே" லேசாக சிரித்தபடி ஆமென்று தலையசைத்தாள். "அந்த பிரிவுக்கு கீழ என்.டி.ஆர்.ஓ (NTRO)ன்னு சொல்லற தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (National Technical Research Organization) அப்படின்னு ஒரு அமைப்பு இருக்கு. இவ்வளவு நாளும் அதுக்குன்னு தனி ஃபெஸிலிடீஸ் (Facilities) இல்லை. ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) மாதிரி அமைப்புகளோட வசதிகளை உபயோகிச்சுட்டு இருந்தாங்க. இப்ப அதுக்குன்னு ஒரு தனி கட்டிடங்களோட ஹைதராபாத்தில ஒரு காம்ப்ளெக்ஸ உருவாகிட்டு இருக்கு. ஆரம்பிச்சப்ப என்.டி.ஆர்.ஓவின் குறிக்கோள் தகவல் சேகரிக்கறது மட்டும் தான். ஆனா, இப்ப எலட்ரானிக்ஸ், கணிணி சம்மந்தப் பட்ட பாதுகாப்பும் இந்த என்.டி.ஆர்.ஓவின் வேலைன்னு முடிவாகி இருக்கு." "எலட்ரானிக்ஸ், கணிணி சம்மந்தப் பட்ட பாதுகாப்பு அப்படின்னா?" "நீ கம்ப்யூடர் வைரஸ் அப்படின்னு கேள்வி பட்டு இருக்கியா?" "ம்ம்ம். எஸ் .. ஓ, நம்ம அரசாங்கத்துக்கு சொந்தமான கம்ப்யூடர்ல வைரஸ் வராமல் .. " என்று அவள் தொடங்க "நான் சொல்ல வந்தது வெறும் வைரஸ் மட்டும் இல்லை. எவ்வளவோ தகவல்கள் நாம் இப்ப கம்ப்யூடர்ல சேமிச்சு வெச்சு இருக்கோம். அதை பாதுகாக்கற வேலை" "ஓ .. " "பாதுகாப்பில் ரெண்டு விதமான வேலை இருக்கு .. ஒண்ணு யாரும் நம்முடைய தகவலை திருடாம பாத்துக்கறது. இன்னொண்ணு, யாராவது திருட வருவதற்கு முன்னாடியே அவங்களை பிடிக்கறது. ஸைபர் செக்யூரிட்டி (Cyber Security) அப்படிம்பாங்க. இதை தவிர, தீவிரவாதிகள் உபயோகிக்கும் கணிணி சந்தேகக் குறிப்புக்களையும் கண்டு பிடிச்சு தீவிரவாதச் செயல் நடக்கறதுக்கு முன்னாடி அவங்களை ட்ரேஸ் அவுட் பண்ணற வேலையும் இருக்கு" 'தீவிரவாதம்' என்ற சொல்லைக் கேட்டதும் அவள் முகத்தில் தெரிந்த இறுக்கத்தை அவர் கவனிக்க தவறவில்லை. மௌனமாக சிறிது குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்து தொடர்ந்தார், "என்.டி.ஆர்.ஓவை முழுக்க பொறியாளர்கள் (Engineers) அப்பறம் விஞ்ஞானிகள் கையில் விட அரசாங்கம் விரும்பல. அதில ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இருக்கணும்ன்னு விரும்புது. பொதுவா இந்த மாதிரி அமைப்புகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ரொம்ப உயர் மட்டத்தில் இருப்பாங்க. அதனால, கீழ என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு சரியா தெரிய வர்றது இல்லை. இந்த காரணத்தினால் என்.டி.ஆர்.ஓவில் கீழ் மட்டத்திலும் தகுந்த ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நுழைக்க முடிவெடுத்து இருக்காங்க. அவங்க பொறியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சரி சமமா வேலை செஞ்சாலும் அவங்களுக்குன்னு சில தனி அதிகாரங்கள் கொடுக்கப் படும். இதில தான் நான் உன்னை சேர சொல்றேன். என்ன சொல்றே?" "காலேஜுக்கு பிறகு டெக்னிகல் சம்மந்தப் பட்ட விஷயங்கள்ல நான் கவனம் செலுத்தலை... " "இன்னும் ஒரு விஷயம் சொல்லாம விட்டுட்டேன். இந்த என்.டி.ஆர்.ஓவில ஸைபர் செக்யூரிட்டி பிரிவுக்குதான் நீ தேர்ந்து எடுக்க பட்டு இருக்கே. உன்னை இந்த பிரிவில எடுக்கறதுக்கு முக்கிய காரணம் உன்னோட ஐ.பி.எஸ்ஸும் உன்னோட கணிணிப் படிப்பும்தான். கணிணி துறையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வந்துட்டே இருக்கு. அதனால் உன்னை மாதிரி மத்தவங்களுக்கு புதுசாதான் இருக்கும். வேலையில் முழுசா ஈடு படறதுக்கு முன்னாடி தனி பயிற்சி கொடுப்பாங்க. அதுக்கு அப்பறம் தான் முழுசா வேலையில் இறங்குவே. இதுக்கு மேல விவரங்கள் எனக்கு தெரியாது. ஆனா, நான் சொன்னதை வெச்சு உனக்கு இந்த பிரிவில் சேர சம்மதமா" "சம்மதம் சார் .. " என்று அவள் வாய் சொன்னாலும் அவள் முகத்தில் தெரிந்த சந்தேக ரேகைகளை பார்த்து அவர், " நீ இதில நல்லா ஷைன் பண்ணுவே .. எனக்கு நம்பிக்கை இருக்கு. பயப் படாம போய் சேரு" என்றார் "சரி சார் .. " "குட்..." என்ற படி அவளது பணிக்கான ஆணையை அவளிடம் கொடுத்தார் ராஜஸ்தான் போலீஸ் பிரிவில் இருந்து ஆர் அண்ட் ஏ டபுள்யூ அல்லைட் சர்வீஸஸ் (R&AW Allied Services Cadre) பிரிவுக்கு மற்றப் பட்டு இருந்தாள். அதே ஏ.எஸ்.பி (A.S.P) பதவி. அதைப் பார்த்து சற்று வியந்து அவரை நோக்க. அவர், "இது மத்திய அரசாங்க பதவி. மாநில அளவில இருக்கும் ஏ.எஸ்.பி பதவியை விட இது உயர்ந்தது. உனக்கு அது தெரியும் இல்லையா?" "எஸ் சார் ... தேங்க் யூ சார் .. " "நீ அதுக்கு தகுதி ஆனவள்தான் .. சரி இந்த ஆர்டர்ல சொல்லி இருக்கற இடத்துக்கு போய் ரிப்போர்ட் பண்ணு" என்றவாரு அவளுக்கு விடை கொடுத்தார். அடுத்து லோதி சாலையில் இருக்கும் சி.ஜி.ஓ காம்ப்ளெக்ஸில் (CGO Complex) ஒரு பதினோரு மாடி கட்டிடத்தை அடைந்தாள். கட்டிட வாசலில் சிறியதாக இருந்த ஒரு பெயர் பலகையில் "Research And Analysis Wing" என்று மட்டும் பதித்து இருந்தது. பலத்த பாதுகாப்புடன் கூடிய அந்த கட்டிடத்தின் எட்டாம் மாடியில் இருக்கும் ஒரு பகுதிக்குள் இருந்த அறை வாசலை அடைந்தாள். அங்கு அமர்ந்து இருந்த காரியதரிசி அவளை வரிசையாக போடப் பட்டு இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து காத்திருக்கும் படி பணித்தாள். சற்று நேரத்தில் ஜீன்ஸ், கட்டம் போட்ட அரை-கை சட்டை, தோளில் ஒரு ஜோல்னா பை, காதில் ஐ-பாட் ஹெட் ஃபோன்ஸ், சற்றே தடித்த கண் கண்ணாடி, கால்களில் ஸ்னீக்கர் ஷூ இவைகளுடன் காதளவுக்கு மட்டும் முடியுடன் ஒரு பெண் அந்த காரியதரிசியை அணுக காரியதரிசி அவளையும் காத்திருக்குமாறு பணித்தாள். காவல் துறை சீருடையில் தோள்பட்டையில் அசோக சின்னத்துடன் அதிகாரத்தின் சின்னமாக அமர்ந்து இருந்த வந்தனாவுக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தவள் வந்தனாவை பார்த்து சிரித்து, "ஹாய், நீங்களும் ஜாயிண்ட் டைரக்டரை பார்க்கத்தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்களா" வந்தனா, "எஸ் .. " வந்தவள், "நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா" என்றாள் வந்தனா அதிகார முறுக்குடன், "நான் A.S.P வந்தனா ராத்தோட் I.P.S. நீங்க?" என்க அந்த பெண் ஒரு போலி முறுக்குடன், "நான் இளநிலை விஞ்ஞானி தீபா ராவ் ஐ.ஐ.டி பி.டெக், ஐ.ஐ.எஸ்ஸி எம்.டெக். நீங்க எதுக்கு இங்க வந்து இருக்கீங்க?" என்றாள். வந்தனா, "என்.டி.ஆர்.ஓ வில் ஜாய்ன் பண்ணறதுக்கு. நீங்க?" தீபா, "நானும் அதுக்குத் தான் வந்து இருக்கேன். நீங்க எதுக்கு இங்கே?" வந்தனா, "குற்றவாளிகளை பிடிச்சு ஜெயிலுக்கு அனுப்பற வேலையை விட இதுதான் எனக்கு ஏத்ததுன்னு சொன்னாங்க. வேற வழி இல்லை. வந்தேன். நீங்க?" தீபா, "ஜெயிலுக்கு அனுப்பறதுக்கு பதிலா எனக்கு இந்த வேலை கொடுத்தாங்க. வேற வழி இல்லை வந்தேன்" மறு கணம் அவளை அதிர்ச்சியுடன் பார்தத வந்தனா அவள் முகத்தில் கொப்பளித்த குறும்பைக் கண்டு இறுக்கம் தளர்ந்து அடக்க முடியாமல் சிரித்தாள். உடன் வாய்விட்டு சிரித்த தீபா, "உண்மைதான் ..." என்றாள்.கருத்துருவத்தின் செயல் வடிவாக்கம்புதன், மே 7 2008 முதல் ஜுன் 8 நியூ யார்க் நகரம், அமெரிக்காImplementation of the conceptWed, 7 May 2008 New York, USA ஜாஷ்வாவை சந்தித்த அடுத்த இரண்டு நாட்களும் கண் இமைக்கும் நேரத்தில் பறந்தன. புது ஆன்-சைட் அசைன்மென்டில் இருவரும் அவரவர் பொறுப்புகளை ஏற்று, அவர்களுக்கு பணித்தவற்றில் கவனம் செலுத்தினர். தங்கள் நிறுவனத்தில் அவர்களுக்கு இருந்த நல்ல பெயரை இங்கும் நிலை நாட்ட வேண்டும் என்ற உறுதியுடன் செயல் பட்டனர். அன்று மாலை நாலு மணி அளவில் சக்திவேல் ஜாஷ்வாவை அழைத்தான். ஜாஷ்வா, "ஹேய் சக்தி, நித்தின் எங்கே?" சக்திவேல், "அவனும் என் கூடதான் இருக்கான்" ஜாஷ்வா, "நான் சொன்ன மாதிரி பப்ளிக் ஃபோன் பூத்தில் இருந்துதானே கூப்பிடறே?" சக்திவேல், "ஆமா, எங்க ஆஃபீஸ் பக்கத்தில இருக்கற ஃபோன் பூத்தில் இருந்து" ஜாஷ்வா, "குட் .. நியூ யார்க் சப்வே பழக்கம் ஆயிடுச்சா? சப்வே மூலம் நான் சொல்ற இடத்துக்கு வர முடியுமா" நியூ யார்க்கின் சுரங்க மின்சார ரயிலை (underground mass transit electric train) சப்வே (subway) என்று அழைப்பது வழமை. சக்திவேல், "ஒரு தடவை ரெண்டு பேரும் போனோம். எங்கேன்னு சொல்லு நாங்க சமாளிச்சுக்குவோம்" ஜாஷ்வா, "59த் ஸ்ட்ரீட் கொலம்பஸ் ஸர்கிள் (59 Street, Columbus Circle) ஸ்டேஷன்ல இறங்குங்க. வெவ்வேறு திசையில் இருந்து அந்த ஸ்டேஷனுக்கு நிறைய வாயில்கள் (entrance) இருக்கு. நீங்க வட-மேற்கு வாயில்ல வெளிய வந்தா நேரா டைம் வார்னர் செண்டர் (Time Warner Center) அப்படிங்கற கட்டிடத்துக்கு வருவீங்க. அந்த கட்டிடத்தில இருக்கற பௌச்சன் பேக்கரி (Bouchon Bakery) என்கிற பேக்கரி-ரெஸ்டாரண்டுக்கு வாங்க. நான் உங்களை இன்னும் ஒரு மணி நேரத்தில மீட் பண்ணறேன்" அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவரும் அந்த பேக்கரி-ரெஸ்டாரண்டில் ப்ளூ பெர்ரீ மஃப்ஃபின் மற்றும் காஃபியுடன் (Blue berry muffin and coffee) அமர்ந்து இருந்தனர். ஜாஷ்வா, "என்ன நித்தின், சக்தி, யோசிச்சீங்களா?" சக்திவேல், "ம்ம்ம் யோசிச்சோம். பண்ண முடியுங்கற நம்பிக்கை இருக்கு. ஆனா நல்லா ப்ளான் பண்ணாம காரியத்தில இறங்க கூடாது" ஜாஷ்வா, "நிச்சயமா! அடுத்த ஒரு மாசத்துக்க நாம் பண்ணப் போற ஒரே வேலை அதுதான். எந்த விதமான ஓட்டையும் இருக்கக் கூடாது (There should be no loose ends anywhere)" நித்தின், "முதல்ல இன்னொரு முறை நாம் பண்ணப் போற ஆபரேஷனை படிப் படியா விளக்கி சொல்லு" ஜாஷ்வா தன் பையில் இருந்து ஒரு வரை படத்தை எடுத்து மேசை மேல் பரப்பி விளக்க தொடங்கினான்."நம் முதல் கவனம் இந்த பட்டியலில் இருக்கும் கம்பெனிகள். இந்த கம்பெனிகளில் இருக்கும் கம்ப்யூடர்ல என் வங்கில இருந்து PDF வடிவில் போற பேங்க் ஸ்டேட்மென்ட் மூலமா உங்க பாட் நெட் வைரஸ்ஸை புகுத்தறோம். வைரஸ் புகுந்ததுக்கு அப்பறம் எந்த கம்பெனில எல்லாம் வைரஸ் வெற்றிகறமா புகுந்து இருக்குன்னு பாத்து இன்னொரு பட்டியல் எழுதி வெச்சுக்குவோம். நீங்க அடிக்கடி அதை சரி பார்த்துக்கணும். ஒரு வேளை எந்த காரணத்தினாலோ வைரஸ் வேலை செய்யலைன்னா அந்த கம்பெனியை உடனே பட்டியலில் இருந்து நீக்கிடணும். ஆண்டர்ஸன் மூலமா எனக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணறதுக்கான தகவல் வரும். எந்த நாட்டில இருக்கும் எந்த வங்கி கணக்குக்கு பணம் போகணும்னு அவன் சொல்லுவான். நம்ம பட்டியலில் இருந்து ஒரு கம்பெனியை தேர்ந்து எடுத்துட்டு, எந்த எந்த கிளைகளில் டெபாசிட் பண்ணணும், டெபாசிட் பண்ண வேண்டிய தேதி நேரம், இதை எல்லாம் நாம் ப்ளான் பண்ணுவோம். அப்பறம் அவனுக்கு அந்த விவரங்களை தெரிவிப்போம். தவிர, நம் கமிஷனை தனியா எந்த கணக்கில் அவன் டெபாசிட் பண்ணணும்னு சொல்லுவோம். சரியா அவன் டெபாசிட் பண்ணி முடிச்சதும் நம் கமிஷன் வந்து சேந்துதான்னு சரி பார்த்ததுக்கு அப்பறம் நம் வைரஸ் மூலமா அந்த கம்பெனியே ட்ரான்ஸ்ஃபர் பண்ணற மாதிரி பணத்தை கம்பெனி கணக்கில் இருந்து ஆண்டர்ஸன் கொடுத்த கணக்குக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவோம். அதுக்கு அப்பறம் ஹாஃப்மனுக்கு ட்ரான்ஸ்ஃபர் விவரங்களை தெரிவிப்போம். அந்த மாசக் கடைசில தயார் ஆகும் பேங்க் ஸ்டேட்மென்டில் நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃபர் வங்கி தப்பா பண்ணினதா மாத்தி எழுதப் பட்டு இருக்கும். நம் வேலை அவ்வளவுதான். அதுக்கு அப்பறம் அந்த கம்பெனி கணக்கு ஆடிட்டுக்கு வராம பாத்துக்க வேண்டியது ஹாஃப்மனோட பொறுப்பு." என்று முடித்தான். நித்தின், "ம்ம்ம் ... ஓ.கே .. நிச்சயம் முடியும் .. ஒரு ப்ராப்ளமும் இல்லை" ஜாஷ்வா, "சரி, எனக்கு இன்னும் கொஞ்சம் விளக்கங்கள் வேணும். முதல்ல, உங்க பாட் நெட்ல இருக்கும் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டருக்கு எப்படி ஆணை அனுப்புவீங்க?" நித்தின், "இது வரைக்கும் நாங்க அப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதாவுது எங்க வைரஸ்ஸோட ஒவ்வொரு நகலுக்கும் ஒரு ஐ.டி இருக்கு. ஒரு வைரஸ் கம்ப்யூட்டருக்கு உள்ள புகுந்த உடனே அது அந்த ஐ.டியையும் அது இருக்கும் கம்ப்யூட்டரோட விலாசத்தையும் எங்களுக்கு அனுப்பும். அதை வெச்சு எந்த கம்ப்யூட்டர் எல்லாம் எங்க பாட் நெட்டுல இருக்குன்னு எங்களுக்கு தெரியும்" ஜாஷ்வா, "அப்ப வைரஸ்ஸோட ஒரு நகலுக்கும் இன்னொரு நகலுக்கும் வித்தியாசம் இந்த ஐ.டி மட்டும் தான் இல்லையா?" சக்திவேல், "ஆமா .. " ஜாஷ்வா, "நான் PDF மூலமா அனுப்பும் வைரஸ்ஸுக்கும் நீங்க ஈமெயில் மூலம் அனுப்பற வைரஸ்ஸுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சரியா?" நித்தின், "இதை பத்தி நாங்க யோசிச்சோம். எதாவது வித்தியாசம் தேவை. அது மட்டும் இல்லை எந்த கம்பெனிக்கு அனுப்பின வைரஸ் அப்படின்னும் நமக்கு தெரியணும். அதனால நீ PDFஇல் சேர்க்கறதுக்குன்னு தனியா ஒரு சின்ன மாற்றம் செய்யப் பட்ட ஒரு வைரஸ்ஸை கொடுக்கறோம் அந்த வைரஸ்ஸோட நகலை நீ ஒரு PDFஇல் சேர்க்கறதுக்கு முன்னாடி அந்த நகலில் அந்த நகல் எந்த கம்பெனிக்கு போகுதுன்னு ஒரு குறிப்பு எழுதணும். அந்த நகல் கம்பெனியோட கம்ப்யூடருக்குள் புகுந்த உடனே எந்த மாதிரியான வைரஸ் எங்க கம்பெனில இருந்து அப்படிங்கற தகவலையும் ஐ.டி கூடவே அனுப்பும். இதை வெச்சுட்டு நாம் ஒரு கம்பெனியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கம்ப்யூடருக்கு ஆணை பிறப்பிக்க முடியும்" ஜாஷ்வா, "வாவ், க்ரேட்! நான் நினைச்சதை விட நீங்க வேகமா யோசிக்கறீங்க!! எனக்கு வேற ஒரு சந்தேகமும் இல்லை. அடுத்த ஒரு மாசம் நாம் இன்னும் நல்லா ப்ளான் பண்ணிட்டு ஒரு ஒரு சின்ன ட்ரயலும் பண்ணிப் பாத்துடலாம். ஓ.கே?" சக்திவேல், "ஓ.கே .. எங்க பாட் நெட் கன்ட்ரோலர் இன்னும் நீ புடிங்கி போட்ட மாதிரியே இருக்கு. மாசத்துக்கு ஒரு தடவையாவுது ஒவ்வொரு கம்ப்யூடருக்கும் நாங்க எதாவுது மெஸேஜ் அனுப்பணும். ஒரு மெஸேஜும் இல்லைன்னாலும் ஒரு ஆணையும் இல்லை அப்படின்னு ஒரு மெஸேஜ் அனுப்பணும். எப்படி ப்ரோஸீட் பண்ணறது?" ஜாஷ்வா, "முதல்ல நீங்க ரெண்டு பேரும் அந்த ஃப்ளாட்டை காலி பண்ணிட்டு தனி தனி ஃப்ளாட் எடுத்துக்கணும். அந்த ரெண்டு ஃப்ளாட்டுக்கும் நான் நெட் கனெக்ஷன் ஏற்பாடு பண்ணறேன்" நித்தின், "ஏன் ஜாஷ்வா?" ஜாஷ்வா, "ஒரு ஸேஃப்டிக்குதான். மூணு பேரும் வெவ்வேற இடத்தில் இருந்து ஆபரேட் பண்ணும் போது நம்மை கண்டுபிடிக்க முயற்சி செய்யறவங்களுக்கு குழப்பம் அதிகமாகும். செலவைப் பத்தி கவலைப் படாதீங்க. இன்னைல இருந்து நம்ம ஆபரேஷனுக்குன்னு ஆகற செலவை எல்லாம் ஆபரேஷன் கணக்கில இருந்து எடுத்துட்டு அதுக்கு அப்பறம் மிச்சத்தை பங்கு போட்டுக்கலாம்." நித்தின், "சரி. நீ சரி சமமா பங்கு போட்டுக்கலாம்னு சொன்னே. அதில ஒரு சின்ன மாற்றம். நாங்க ரெண்டு பேரும் யோசிச்சு முடிவு எடுத்தது" ஜாஷ்வா, "என்ன?" சக்திவேல், "யாருக்காவுது உதவி செய்யறதுக்கு, எதாவுது அனாதை இல்லத்துக்கு, முதியோர் இல்லங்கள் இந்த மாதிரி விஷயத்துக்குன்னு ஒரு சின்ன பகுதியை ஒதுக்கினா என்னன்னு தோணுச்சு" ஜாஷ்வா, "ஃபெண்டாஸ்டிக் .. என் மனைவி உன்னை அண்ணனா ஏத்துக்காம இருந்து இருந்தா நான் உன்னை என் தம்பியா ஏத்துட்டு இருப்பேன். பரவால்லை, நித்தின் நீ என்னை அண்ணனா ஏத்துக்கறயா?" நித்தின், "வொய் நாட்? எனக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை.. பட், நாங்க சொன்னதுக்கு என்ன பதில் சொல்றே?" ஜாஷ்வா (ஒர் கணமும் யோசிக்காமல்), "10-30-30-30. பத்து சதவிகிதம் தர்மத்துக்கு. பாக்கி நமக்கு. ஓ.கேவா?" சக்திவேல், "க்ரேட்!" அடுத்த ஒரு மாதம் செயல் படுத்தப் போகும் பணமாற்றத்தை அணு அணுவாக ஆராய்ந்து திட்டமிட்டனர். நித்தினும் சக்தியும் தங்களின் பாட் நெட் வைரஸ்ஸில் தேவையான மாற்றங்கள் செய்து அந்த மாற்றங்களை வெள்ளோட்டம் விட்டு சரி பார்த்தனர். ஜூன் 2008ந் முதல் வாரக் கடைசியில் ஹாஃப்மன் த்யாரித்து கொடுத்த வைரஸ்ஸை புகுத்தப் போகும் கம்பெனிகளிக்கான ஒரு புது பட்டியலில் இருந்த கம்பெனிகளுக்கு ஜாஷ்வா பாட் நெட் வைரஸ்ஸை பரப்பத் தொடங்கினான். அந்த பட்டியலில் எழுபத்து மூன்று கம்பெனிகள் இருந்தன. அடுத்த மூன்று வாரங்களில் ஐம்பத்து ஆறு கம்பெனிகளில் மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் வெற்றிகரமாக குடிபுகுந்தது. ஜூன் 30 அன்று அவர்களின் முதல் பண மாற்றம் வெற்றிகரமாக நிறைவேறியது. ஜூலை 4ம் தேதி அமெரிக்க சுதந்ததிர தினம் வெள்ளிக் கிழமையில் அமைய நித்தின், சக்திவேல், ஜாஷ்வா, சஞ்சனா நால்வரும் அவர்களின் முதல் பண மாற்றத்தை கொண்டாட நயகரா நீர் வீழ்ச்சிக்கு அருகே இருக்கும் ஒரு ரிசார்ட்டுக்கு செனறனர். தீபா ராவ் ஒரு அறிமுகம் 2008 மே மாதத் தொடக்கம் வரை Deepa Rao - An Introduction Till the beginning of May 2008 தீபா ராவ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவள். அவளது தந்தை வீரபத்ர ராவ் இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு உயர் நீதி மன்றங்களிலும் அவ்வப் போது உச்ச நீதி மன்றத்திலும் வாதாடும் பிரபல வழக்கறிஞர். அவளது அண்ணன் சுதாகர் ராவ் தந்தையின் கால் சுவட்டில் சென்று வழக்கறிஞராக தந்தையின் கீழ் ஜூனியராக பணியாற்றிக் கொண்டிருந்தான். தாய் கோமதி ராவ் ஒரு கைனகாலஜிஸ்ட். தாய் தந்தை இருவரும் அவர்கள் தொழிலுக்கு அவள் முடிந்த வரை தூரத்தில் இருப்பதே நல்லது என்று நினைத்தனர். "அவ லாயர் ஆனான்னா அவளுக்கு இருக்கற மூளைக்கு எப்பேர்பட்ட கிரிமினலையும் வெளிய கொண்டு வர முடியும். ஆனா அவளுக்கு இருக்க குறும்புத்தனத்துக்கு மதர் தெரஸாவை கூட கம்பி எண்ண வெச்சுறுவா ... நல்ல வேளை அவளுக்கு லாயராக இஷ்டம் இல்லை" .. இது வீரபத்ர ராவின் தன் செல்ல மகளைப் பற்றிய அன்பான விமர்சனம். "ஐய்யோ, வேண்டவே வேண்டாம் .. உனக்கு எதுக்கு இன்னோரு குழந்தைன்னு பேஷண்டுக்கு தெரியாமலே கருத்தடை பண்ணினாலும் பண்ணிடுவா .. நல்ல வேளை அவளுக்கு டாக்டர் ஆக இஷ்டம் இல்லை" ... இது அவள் அன்புத் தாய் கோமதியின் விமர்சனம். "நல்லா படிக்கற பொண்ணுங்கற ஒரே காரணத்துக்காக அவளுக்கு நாங்க இன்னமும் டீ.சீ கொடுக்காம இருக்கோம் ... அவளை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க" இது அவளது பள்ளி தலைமை ஆசிரியர் அவளுடைய ஒவ்வொரு வருட ரிப்போர்ட் கார்டிலும் எழுதியது. இருந்தாலும் தாய், தந்தை, அவளை விட எட்டு வயது மூத்த அண்ணன், அண்ணி சாரதா இவர்கள் எல்லோருக்கும் அவள் ஒரு செல்லக் குட்டி. ஐந்தடி நான்கு அங்குல உயரம், எந்த விதமான உடல் பயிற்சியும் இல்லாமலே உடலில் தேவையான இடங்களை தவிற வேறு எங்கும் சதை பற்று இல்லாத மணல் கடிகார உடல் அமைப்பு, மாசு மருவில்லாத முகம், அளவுக்கு அதிகமான குறும்பு, 'என்னதான் நடக்கும் பாக்கலாமே' என்று மனதில் எப்போதும் ஒரு குறுகுறுப்பு, அசட்டு தைரியம், Razor sharp wits (மன்னிக்கவும், இதை கூர்மையான அறிவு என்று தமிழில் சொன்னால் ஏதோ ஒப்புக்கு சப்பாக தோன்றுகிறது) இவை அனைத்தும் கூடிய ஒரு அழகு பெட்டகம் தீபா ராவ். வீட்டில் யாரும் படிக்காததாலே தீபாவுக்கு கணிதம் மற்றும் பொறியியலின் மேல் சிறு வயது முதல் பற்று அதிகம். கரக்பூர் ஐ.ஐ.டியில் பி.டெக் முடித்தபின் மேலும் படிக்கும் ஆர்வத்தினால் தீபா ராவ் பெங்களூரில் இருக்கும் ஐ.ஐ.எஸ்ஸி (IISc - Indian Institute of Science)ல் எம்.டெக் படிக்க சேர்ந்தாள். ஒன்றரை வருடங்கள் பெங்களூரில் தங்கி படித்துக் கொண்டு இருந்தவள் தன் கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. மைரோஸாஃப்ட் நிருவனத்தின் ஹைதராபாத்தில் இருக்கும் சென்டருக்கு விண்ணப்பித்து இருந்தாள். அது கிடைக்காமல் போக தந்தையிடம் முறையிட்டாள். மகள் அந்த ஆறு மாதமும் ஹைதராபாத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பிய வீரபத்ர ராவ் தெரிந்தவர் ஒருவர் மூலம் ஒரு மத்திய அரசின் ஆராய்ச்சி மையத்தில் அவளுக்கு ப்ராஜெக்ட் வேலை செய்ய அனுமதி வாங்கி கொடுத்தார். இந்திய அரசுக்கு சொந்தமான செயற்கை கோள்கள் பல விண்வெளியில் பூமியை சுற்றி வந்த படி உள்ளன. அவைகளில் சில செயற்கை கோள்கள் தகவல் சேகரிப்பதற்காகவே விடப் பட்டவை. இவைகளுக்கு ரிமோட் ஸென்ஸிங்க் சாட்டிலைட் (Remote Sensing Satellite) என்று பெயர். இந்த வகை செயற்கை கோள்கள் விண்வெளியில் இருந்தபடி பூமியை (அவைகளின் காலடியில் இருக்கும் பகுதிகளை) புகைப் படங்களாகவும், வெப்ப பிம்பங்களாகவும் (Infra red imagery) எடுத்து அந்த ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்புகின்றன. அந்த புகைப் படங்களையும் பிம்பங்களையும் ஆராய்ந்து அரசின் வெவ்வேறு துறைகளுக்கு பயன் படும்(?) தகவல்களாக கொடுப்பதற்கென உருவாக்கப் பட்டதே இந்த மையம். அரேபியக் கடலில் மீன் கூட்டம் கடலில் எந்த பகுதியில் இருக்கிறது என்ற தகவல் தினமும் மாநில மீன் துறை வாயிலாக மீனவருக்கு இந்த மையத்தில் இருந்து அனுப்பப் படும். கரைக்கு வருமுன்னரே மீனவர்கள் பிடித்த அதிகப் படியான மீன்களை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு எஞ்சி இருப்பதை பாமர மக்களுக்கு யானை விலைக்கு விற்பது இந்த மையம் வந்த பிறகு வாடிக்கையானது. அதே போல எந்த காட்டில் எந்த இடத்தில் மக்கள் மரங்களை வெட்டி காட்டை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலை வனத்துறைக்கு அனுப்பி மரம் வெட்டுபவர்களை தேடிப் பித்து லஞ்சம் வாங்கும் வேலையை வெகுவாக குறைப்பதும் இந்த மையத்தின் ஒரு முக்கிய அன்றாட கடமை!! அங்கு அவள் சேர்ந்த பின் அவள் குறும்பு எல்லையை கடக்க ஆரம்பித்தது. இந்த மையத்தில் நடக்கும் வேலைகள் அனைத்தும் கணிணி சார்ந்தவையே .. ஆராய்ச்சி வேலைகளுக்கென தனி கணிணிகள் இருப்பினும், ஒவ்வொருவ்ருக்கும் ஒரு விண்டோஸுடன் கூடிய பி.சி (PC running on Windows) கொடுக்கப் பட்டு இருந்தது. அந்த மையத்தில் இருந்த கணிணிகள் அனைத்தும் ஒரு லோகல் ஏரியா நெட்வொர்க் (LAN - Local Area Network) மூலம் இணைக்கப் பட்டு இருந்தன. இணையத்தில் பல தளங்கள் தடுக்கப் பட்டு இருந்தன. இதனால் கொடுத்த வேலையை அதற்காக கொடுப்பட்ட நேரத்தில் பாதியில் செய்துவிட்டு மீதி நேரத்தை தன் பொழுது போக்கில் கழிக்கும் தீபாவுக்கு அளவு கடந்த எரிச்சல். அவள் பொழுது போக்கு என்ன? அவள் ஒரு ஹேக்கர்! VGSD247 என்ற ஐ.டியில் ஹாக்கர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக தொடங்கி இருந்தாள். ஹார்ஷ்7 (harsh7) அவளது மானசீக குரு. (படிப்பவருக்கு யாரிந்த ஹார்ஷ்7 என்று நினைவுக்கு வருகிறதா?). ஒரு முறை அவர் பாட் நெட்டுகளை (Bot Net) பற்றி எழுதி இருந்த ஒரு கட்டுரையை படித்து விட்டு அவைகள் எப்படி இயங்குகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அமெரிக்காவில் பிரபலமான ஸ்டார்ம் பாட் நெட்டின் வைரஸ்ஸை (Storm Bot Net Virus) தன் லாப் டாப்பில் புகுத்தி அது என்ன செய்கிறது என்பதை ஆராய்ந்து இருந்தாள். அந்த மையத்தின் கெடுபிடியை வெறுத்தவள், இணையம் மூலம் வெளியுலகத்தை அணுக முடியாவிட்டாலும் தன் விளையாட்டை மையத்துக்குள்ளே தொடங்கினாள். முதலில் ஒரு சிறு வைரஸ் எழுதி மையத்துக்குள் உலவ விட்டாள். பல வலைதளங்கள் தடுக்கப் பட்டு இருப்பினும் மின் அஞ்சலுக்கு (Email) இருந்த தனி மென்பொருளுக்கு (MS Outlook) எந்த தடையும் இல்லை என்பதை அறிந்தவள் முதலில் தன் குறும்பை அதில் தொடங்கினாள். திடீரென்று ஒரு நாள் எல்லோருடைய மின் அஞ்சலில் இருந்தும் ஆங்கில உயிரெழுத்துக்கள் காணாமல் போய் இருந்தன (to put it better in English, she waged a war on vowels and phonetics). IMAGERY என்ற வார்த்தை அதிகமான புழக்கத்தில் இருக்கும் அந்த மையத்தில் அன்று MGR பிரபலமானார். அடுத்த நாள் மறுபடி எல்லோரது மின் அஞ்சலும் சரியாக சென்றன. எல்லோரும் என்ன நடந்தது என்று தலையை சொறிந்து கண்டு பிடிக்கும் முன் ஒரு நாள் எல்லோருக்கும் பால் மாற்றம் (sex change) செய்ய முடிவெடுத்தாள். அன்று (மட்டும்) எல்லோரும் அனுப்பிய மின் அஞ்சல்களிலும் "Dear Sir" என்பது "Dear Madame" ஆகவும் "Dear Madame" என்பது "Dear Sir" அகவும் மாறி இருந்தன. இதைப் போலவே "Mr" என்பது "Mrs" ஆகவும் "Miss" மற்றும் "Mrs" என்பவை "Mr" ஆக மாறின. அந்த மையத் தலைவர் எழுதிய மின் அஞ்சலில் மனைவிக்கு மிகவும் பயந்த மத்திய அமைச்சகத்தின் காரியதரியின் அனுமதிக்கு பதிலாக அவரது மனைவியின் அனுமதிக்காக காத்திருப்பதாக எழுதி இருந்தது புது டில்லியில் பிரபலமானது! இந்த செயல்கள் போரடிக்கத் தொடங்க, அந்த மையத்தின் இருக்கும் கணிணிகளை ஹாக் செய்யத் தொடங்கினாள். எல்லோரது கணிணியும் லோகல் ஏரியா நெட்வொர்க் மூலம் இணைக்கப் பட்டு இருந்தது அவளுக்கு மிக வசதியாக இருந்தது. பலரது கணிணிகளில் விண்டோஸ் இயக்கும் ஒலிகள் மாற்றப் பட்டு இருந்தன. ஒரு பிரிவின் தலைவரின் கணிணியில் விண்டோஸ் தொடங்கும் போது வரும் இசைக்கு பதிலாக அவரது கணிணியில் அவர் சேகரித்து வைத்து இருந்த ஒரு செக்ஸ் படத்தில் வரும் பெண்ணின் உச்ச கட்ட அனத்தல் ஒலித்தது. பலர் சேகரித்து வைத்து இருந்த செக்ஸ் படங்கள் அவர்களது கணிணியின் வால் பேப்பராக மாறின. வெளியில் வேலை தேடிக் கொண்டு இருந்தவர்களின் பயோ டேட்டாக்கள் அந்த மையத்தின் தலைவருக்கே அனுப்பப் பட்டன! கணிணிகளில் இந்த வேலையை யார் செய்கிறார்கள் என்பதை உடனே கண்டு பிடிக்கும் படி மையத் தலைவர் கணிணிகளை பராமரிக்கும் பிரிவின் தலைவருக்கும் கடுமையான ஆணையிட்டபடி இருந்தார். அவரும் பதிலுக்கு தலையை சொறிந்து கொண்டு இருந்தார். ஒரு நாள் அந்த மையத்தின் தலைவரின் கணிணியை அவள் ஹாக் செய்து கொண்டு இருந்த போது வேறு ஒருவர் அதை பார்க்க நேரிட கையும் களவுமாக பிடிபட்டாள். அங்கு ப்ராஜெக்ட் செய்யும் தன்னை யாரும் கண்காணிப்பது இல்லை என்ற கவனக் குறைவினால்தான் அவள் பிடிபட்டாள். அந்த மையத்தின் பாதுகாப்புக்கென நியமிக்கப் பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் (CISF - Central Industrial Security Force) ஒப்படைக்கப் பட்டாள். அவள் தந்தையும் அண்ணனும் வந்து ஜாமீனில் எடுத்து விவரங்களை அவளிடம் இருந்து தெரிந்து கொண்டனர். "என்ன வேலை பண்ணி வெச்சுருக்க? நீ பண்ணின வேலைக்கு உன்னை உள்ள தள்ளாம விடமாட்டாங்க" என்று அலுத்துக் கொண்ட வீரபத்ர ராவ் புது தில்லியில் அவருக்கு தெரிந்தவர்களிடம் உதவியை நாடினார். R&AWவில் புதிதாக தொடங்கி இருக்கும் என்.டி.ஆர்.ஓ (NTRO) வின் சைபர் க்ரைம் பிரிவின் தலைவர் முரளீதரனின் காதுகளுக்கு அவளைப் பற்றிய விவரம் அடைந்தது. அடுத்த நாள் அவர் ஹைதராபாத்துக்கு வந்தார். "உனக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. ஒண்ணு உன் பராஜெக்ட் முடிந்ததும் நீ என்னோட டிபார்ட்மெண்ட்ல மூணு வருஷமாவுது வேலை செய்யணும். ரெண்டாவுது ஆறு மாசம் கம்பி எண்ணனும். உனக்கு எது வேணும்" என்று அவர் போட்ட நிபந்தனைகளில் எளிதானதை தேர்ந்தெடுத்தாள். அடுத்த பதினைந்து நாட்களில் தன் ப்ராஜெக்டை முடித்து (பலத்த கண்காணிப்புடன்!) கல்லூரியில் சப்மிட் செய்து அதற்கான தேர்வையும் முடித்து புது தில்லிக்குப் புறப்பட்டாள்.R&AW Head QuartersJune 9 2008 Vandhana Meets Deepaவந்தனா-தீபா அறிமுகமாவதுஜூன் 9, 2008 ஆர் அண்ட் ஏ டபுள் யூ தலைமை அலுவலகம் வந்தனாவும் தீபாவும் காத்துக் கொண்டு இருக்கையில் முரளீதரன் அங்கு வந்து ஜாயிண்ட் டைரக்டரின் அறைக்குள் சென்றார். பிறகு அவர்கள் இருவரும் அறைக்குள் அழைக்கப் பட்டனர். வந்தனா எப்போதும் ஒரு சீனியர் அதிகாரிக்கும் அளிக்கும் மரியாதையான சல்யூட் அடித்து, "வந்தனா ராத்தோட் ரிப்போர்டிங்க் சார்" என்றாள். தீபா முரளீதரனைப் பார்த்து, "நீங்க போட்ட கண்டிஷன்ல சல்யூட் அடிக்கறதெல்லாம் இல்லை" என்றாள். அதிகாரிகள் இருவரும் வாய் விட்டு சிரிக்க அந்த அறையின் இறுக்கம் முழுவதும் காணாமல் போனது. ஜாயிண்ட் டைரக்ட்ர், "வெல்கம் தீபா, உன்னை மாதிரி ஆளுங்களை முரளி இந்த பிரிவு ஆரமிச்சதில இருந்து தேடி தன் பிரிவில் சேத்துட்டு இருக்கார். வந்தனா, மீட் J.C.P முரளீதரன் I.P.S. இவருக்கு கீழதான் நீ வொர்க் பண்ணப் போறே. முரளி, இது வந்தனா, அகடெமி டைரக்டர் சொன்ன ஐ.பி.எஸ் ப்ரொபேஷனர் (IPS Probationer)" என்று அறிமுகப் படுத்தினார். பிறகு அவர் தொடர்ந்து, "என்.டி.ஆர்.ஓ என்கிற அமைப்பில பெரும்பாலானவங்க சைபர் சர்வேலன்ஸ் (cyber surveilance) அப்பறம் டிஜிடல் ஃபோட்ரஸ் (Digital Fortress) பிரிவுலதான் இருக்கப் போறாங்க. நீங்க ரெண்டு பேரும் சேரப் போறது சைபர் க்ரைம் ப்ரிவு. சைபர் க்ரைமுக்குன்னு ஒரு பிரிவு இருக்கணும்னு கொஞ்ச நாள் முன்னாடிதான் முடிவு எடுத்தாங்க" தீபா, "சைபர் சர்வேய்லன்ஸ் பிரிவு என்ன செய்யுது" ஜாயிண்ட் டைரக்டர், "செய்யுது இல்லை. செய்யப் போகுது. இணையம் மற்றும் கைபேசிகள் மூலமாக நடக்கும் தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதுதான் இந்த பிரிவோட வேலை" வந்தனா, "யூ மீன் எல்லா ஈமெயிலையும்?" என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்க ஜாயிண்ட் டைரக்ட்ர, "எஸ், ஒவ்வொண்ணையும் யாரும் படிச்சு பாக்கப் போறது இல்லை. ஆனா ஒவ்வொரு ஈமெயிலோட நகலும் இந்த பிரிவுக்கு போகும். சந்தேகப் படற மாதிரி இருக்கும் விலாசங்கள் இருந்தா அதை மட்டும் படிச்சு பாப்பாங்க" தீபா, "அப்ப ஜிமெயில் எல்லாம்?" ஜாயிண்ட் டைரக்டர், "உலகத்தில இருக்கும் எல்லா ஈமெயில் வசதி கொடுக்கும் கம்பெனிகளும் ஒரு அக்ரிமெண்டில கையெழுத்து போட்டு இருக்காங்க. இந்தியாவுக்குன்னு தனியா இல்லை. ஐ.நா சபையின் சைபர் க்ரைம் எதிர்ப்பு பிரிவுக்கு. அதன் மூலம் நாம் எப்ப வேணும்னாலும் எந்த ஈமெயிலையும் பிரிச்சு பாக்கற உரிமை நமக்கு இருக்கு" வந்தனா, "அந்த டிஜிடல் ஃபோர்ட்ரஸ் பிரிவு என்ன பண்ணும்" ஜாயிண்ட் டைரக்டர், "இந்தியாவில் இருக்கும் எல்லா பாதுகாக்கப் படவேண்டிய தகவல்களுக்கும் அது ஒரு நிலவறை; பேங்கில இருக்கும் லாக்கர் வசதி மாதிரி" தீபா, "எங்க பிரிவு என்ன செய்யப் போகுது?" ஜாயிண்ட் டைரக்டர், "சைபர் க்ரைமை பத்தி துப்பறியறதுக்கும் தடுக்கறதுக்கும் ஒவ்வொரு மாநில போலீஸ்லயும் ஒரு தனி பிரிவு இருக்கு அதை தவிற ஸீ.பி.ஐ (CBI)லயும் சைபர் க்ரைமுக்குன்னு ஒரு தனி பிரிவு இருக்கு. கணிணி சம்பத்தப் பட்ட எல்லா விதமான தீய செயல்களும் சைபர் க்ரைம்தான். ஸாஃப்ட்வேர் பைரஸி (Software Piracy) கூட ஒரு சைபர் க்ரைம்தான். இதெல்லாம் அந்த ஐ.நா சபை அக்ரிமெண்டில எல்லா நாடுகளும் சேர்ந்து ஒத்துகிட்ட விஷயம்". தீபா, "மைக்ரோஸாஃப்ட் (Microsoft) அமெரிக்க அரசுல இருக்கறவங்களுக்கு நிறைய லஞ்சம் கொடுத்து ஐ.நா சபைல சொல்ல சொல்லி இருப்பாங்க" என்றாள் நக்கலாக ஜாயிண்ட் டைரக்ட்ர், "மைக்ரோஸாஃப்ட் (Microsoft) மட்டும் இல்லை நம்ம இந்தியால இருக்கும் பல சினிமா கம்பெனிகளும்தான். பாட்டு சினிமா எல்லாம் ஏ.வி.ஐ ஃபைலா (AVI file) வெளிய வருதே அதுவும் பைரஸிதானே. அதுவும் சைபர் க்ரைம்தான். அப்படி பாத்தா, அமெரிக்காவுக்கு அடுத்த பெரிய சினிமா தொழில் இந்தியால தான் நடக்குது" என்று விவரித்தார். உடனே தீபா தன் ஐபாடை பார்த்தாள். சிரித்தபடி தொடர்ந்த ஜாயிண்ட் டைரக்டர், "நாம் அதை எல்லாம் பிடிக்க ஆரமிச்சா போலீஸ் படை பத்தாது. எதாவுது ஆதார பூர்வமான புகார் வந்தா மட்டும் இந்த பிரிவுகள் ஆக்ஷன் எடுக்கும்." வந்தனா, "ஒவ்வொரு மாநிலத்திலயும் தவிர ஸீ.பி.ஐலயும் சைபர் க்ரைப் பிரிவு இருக்கும்போது என்.டி.ஆர்.ஓல எதுக்கு ஒரு பிரிவு?" ஜாயிண்ட் டைரக்டர், "இந்த பிரிவுகள் எல்லாம் கண்காணிப்பாங்க; யார் செய்யறாங்கன்னு தெரிஞ்சா, பிடிப்பாங்க. ஆனா, ரொம்ப நுட்பமான சைபர் க்ரைம்மை பிடிக்கற அளவுக்கு அவங்க கிட்ட ஆளுங்க இல்லை" வந்தனா, "அப்படி என்ன பெரிய ஆள் பலம் தேவை?" ஜாயிண்ட் டைரக்டர், "தீபா மாதிரி ஆளுங்க இல்லை. மேற்கொண்டு முரளி உங்களுக்கு விளக்குவார், வந்தனா தீபாவை பொறாமையுடன் பார்த்தாள். தீபாவோ பலியாட்டு களையுடன் காட்சி அளித்தாள்.மானதென்பதை உணர்ந்தாள். விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் மத்தியில் பணிபுரிய வேண்டும் என்று நினைத்து மனம் குழம்பி இருந்த வந்தனா, அவருக்கு கீழ் தான் பணியாற்றப் போவதைப் அறிந்து நிம்மதியும் பெருமிதமும் அடைந்தாள். முரளீதரன் தொடர்ந்தார், "தீபா, வந்தனா, என்னைப் பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ. இதுக்கு முன்னாடி நான் இன்டர்போலில் (Interpol) டெபுடேஷன்ல இருந்தேன். அங்க இருக்கும் போது தான் நான் சைபர் க்ரைம் பிரிவுக்கு மாத்திகிட்டேன். சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி ஐ.பி.எஸ் தமிழ்நாடு கேடர்ல சேர்ந்தேன். பத்து வருஷம் தமிழ்நாட்டில இருந்ததுக்கு அப்பறம் இன்டர்போலுக்கு என்னை டெபுடேஷன்ல அனுப்பினாங்க. அதில ஒரு பத்து வருஷம். இப்ப ஒரு வருஷமா இந்த பிரிவுல இருக்கேன். அனேகமா இதில இருந்துதான் ரிடையர் ஆவேன்னு நினைக்கிறேன்" தீபா, "பாவம் சார், நீங்க" முரளீதரன், "கிண்டலா? இன்னும் ஒரு வருஷம் கழிச்சு சொல்லு இந்த வேலையை விட்டு போக விருப்பமா இல்லையான்னு" என்ற பிறகு வந்தனாவை பார்த்து, "உண்மைதான் வந்தனா. இது அவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கான ஒரு வேலை. அப்பறம் இனிமேல் நீ யூனிஃபாரத்தில் வரக் கூடாது. ஓ.கே" வந்தனா, "எனக்கு நான் பண்ண போற வேலையை பத்தி ஒண்ணுமே தெரியாது. எனக்கு ட்ரெயினிங்க் ... " என்று இழுக்க முரளீதரன், "உன்னோட ப்ரொஃபைலைப் பாத்த உடனே ஓ.கே பண்ணின முக்கிய காரணம் என்ன தெரியுமா? தீபாகூட வொர்க் பண்ணறதுக்கு என் டீம்ல யாரும் இல்லை. என்னோட டீம் ரொம்ப சின்னது. என்.டி.ஆர்.ஓவுக்குன்னு தனி செண்டர் ஹைதராபாத்துல ரெடி ஆகிட்டு இருக்கு. அது முழுசா ரெடி ஆகறதுக்கு இன்னும் குறைஞ்சது ஆறு மாசம் ஒரு வருஷம் ஆகலாம். அதுவரைக்கும் என்னோட டீம் வெவ்வேறு ஊர்ல வேலை செஞ்சுட்டு இருக்கு. இங்க டெல்லில என்.ஐ.சி (National Informatics Center எனப்படும் NIC) கொஞ்சம் பேர், சி.பி.ஐ சைபர் க்ரைம் செல்லில் டெபுடேஷன்ல சிலர், அப்பறம் அவங்க அவங்க வீட்டில இருந்துட்டு வேலை செய்யற சிலர்." என்ற பிறகு ஜாயிண்ட் டைரக்டரைக் காட்டி, "ஜே.டி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கார். அவருக்கு கீழ நான் இருந்தாலும் R&AWல இருக்கும் மத்த பிரிவுகளும் நம் சேவையை பயன் படுத்திக்க வாய்ப்புகள் இருக்கு". வந்தனா, "மத்த பிரிவுகள்னா?" முரளீதரன், "நார்காடிக்ஸ் (narcotics - போதைப் பொருள்) பிரிவுக்கு நம் உதவி தேவைப் படும். அதே மாதிரி ஆண்டி-டெரரிஸம் (anti-terrorism - தீவிர வாத தடுப்பு) பிரிவிலும் நம் சேவை தேவை படும்" இரண்டுமே வந்தனாவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தன. தீபா, "சார், நாம் என்ன பண்ணப் போறோம். அதை முதல்ல சொல்லுங்க" முரளீதரன், "சார் தன் வேலையை பார்க்கட்டும் நாம் வெளில போய் கண்டின்யூ பண்ணலாம்" தீபா, "எங்கே உங்க ஆஃபீசுக்கா?" முரளீதரன், "எனக்குதான் ஆஃபீஸே இல்லைன்னு சொன்னேனே மறந்துடுச்சா?" என்ற படி எழுந்து, "பக்கத்தில இருக்கற காஃபீ ஷாப் எதுக்காவுது போலாம்" என்றார். சற்று தொலைவில் இருந்த பரிஸ்டா ரெஸ்டாரண்டுக்கு சென்றடைந்தனர். முரளீதரன், "என்னோட பிரிவில் இருக்கறவங்க எல்லாரையும் ஜோடிகளா (pairs) பிரிச்சு இருக்கேன். ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு அசைன்மென்ட் கொடுப்பேன். தேவைப் பட்டா ரெண்டு மூணு ஜோடிகள் சேர்த்து ஒரு டீமா வொர்க் பண்ணவும் வைப்பேன். நீங்க ரெண்டு பேரும் ஒரு ஜோடில பார்ட்னர்ஸா வேலை செய்யணும்" தீபா, "என்ன மாதிரி அசைன்மென்ட்ஸ் சார்?" முரளீதரன், "ஹாக்கிங்க் செய்யறவங்களை கண்டு பிடிக்கறது, ஸ்பாம் மெயில் அனுப்பறவங்களை கண்டு பிடிக்கறது, வைரஸ் மூலம் தகவல் திருடறவங்களை கண்டு பிடிக்கறது இது மாதிரி அசைன்மென்ட்ஸ்" தீபா, "ஓ, அப்ப பாட் நெட்டுகளை கண்டு பிடிக்கற வேலையும் இருக்குமா?" முரளீதரன், "நிச்சயம் .. " இவர்கள் பேச்சில் திணறிய வ்ந்தனா, "சார் எனக்கு ட்ரெயினிங்க் ... " என்று இழுத்தாள்
முரளீதரன், "நீ கத்துக்கற வேகத்தை பொறுத்து அடுத்த ஒரு மாசம் வரைக்கும் இங்க டெல்லி ஐ.ஐ.டில நீங்க ரெண்டு பேரும் ட்ரெயினிங்க் எடுத்துக்க ஏற்பாடு செஞ்சு இருக்கேன். நிறைய விஷயம் தீபாவுக்கு தெரிஞ்சதுதான் இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் கூட் ஒருத்தர் பழகி புரிஞ்சுக்கறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த ட்ரெயினிங்க் முடிஞ்சதும் உங்களுக்கான முதல் அசைன்மென்ட் ரெடியா இருக்கும்"அடுத்த மூன்று வாரங்களின் முடிவில் வந்தனா மறுபடியும் ஒரு கல்லூரி மாணவியை போல் உணரத் தொடங்கினாள். அதன் காரணத்தில் பாதி அவர்கள் எடுத்துக் கொண்ட பயிற்சியினால் என்றாலும் மீதி பாதி தீபாவுடன் சேர்ந்து கழித்த நேரத்தினால். பார்ப்பதற்கும் பழக்க வழக்கங்களிலும் இருவரும் மாறுபட்டு இருப்பினும் அவர்களிடையே ஒரு இணை பிரியாத நட்பு உருவாக தொடங்கியது. நுணுக்கங்களை அவள் கற்றுக் கொண்ட வேகம் தீபாவை வியக்க வைத்தது. தீபாவின் குறும்புத் தனமும் கேலிக் கூத்தும் வந்தனாவின் போலீஸ் இறுக்கத்தை முற்றிலும் அகற்றியது. வீரபத்ர ராவ் தில்லி வரும்போதெல்லாம் தங்குவதற்காக சௌத்எக்ஸ் பகுதியில் ஒரு உயர்தர ஃப்ளாட் இருந்தாலும் தனியாக இருக்க விரும்பாமல் தீபா ஜெனரல் ராத்தோடின் வீட்டில் வந்தனாவுடன் தங்கினாள். ஒவ்வொரு சமயம் எந்த விதமான் கட்டுப்பாடும் இல்லாமல் தீபாவுடன் சுற்றித் திரியும் போது கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த கட்டுப் பாட்டுடன் கழித்த ஐ.பி.எஸ் பயிற்சியால் வந்த மனப் பக்குவம் அவள் மனத்தை உறுத்தும். அடுத்த கணம் தான் இப்போது செய்வதும் போலீஸ் வேலையே என்ற எண்ணம் வந்து அவள் மனம் குதூகலிக்கும். தன் அண்ணனின் மறைவைப் பற்றி சொன்ன போது முதல் முதலாக தீபாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்ததைக் கண்டாள். வந்தனாவின் பெற்றோர் இரண்டு வாரங்கள் கழித்து புதி தில்லி வந்திருந்த போது வீரபத்ர ராவும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து இருந்தார். எல்லோரும் அன்று இரவு உணவுக்கு ஜெனரல் ராத்தோடின் வீட்டில் கூடிய போது தீபா தான் ப்ராஜெக்ட் செய்த போது செய்த கைங்கரியத்தை ஒன்று விடாமல் சொல்ல சிரிப்பொலியால் வீடே அதிர்ந்த படி இருந்தது. வீரேந்தர் ராத்தோட், "வந்தனாவுக்கு நேர் மாறா இல்லை இருக்கா இவ? ஆனா, வந்தனா இந்த மூணு வருஷமா ரொம்ப மாறிட்டா. முன்னே தீபா அளவுக்கு குறும்பு இல்லைன்னாலும் ஜாலியா இருப்பா. மறுபடி அவ பழைய வந்தனா ஆகறதுக்கு தீபாதான் சரியான மருந்து!" வீரபத்ர ராவ், "வேண்டாம் சார். வந்தனா முழுசா மாற வேண்டாம். அப்பறம் தீபாவை அடக்க ஆளே இருக்காது. இப்ப இருக்கற மாதிரியே இவங்க நல்ல ஜோடி தான்" ஜெனரல் ராத்தோட், "சோ, நீங்க ரெண்டு பேரும் சேந்து சைபர் க்ரைமை எதிர்த்து நிக்கப் போறீங்க. குட்" தீபா, "அங்கிள், எங்க ரெண்டு பேர் அப்பா பேர்ல வீரம் இருக்கு. நாங்க அதை செயல்ல காட்டப் போறோம். கூடவே கொஞ்சம் ஜாலியாவும் இருக்கப் போறோம். ஆனா அப்பா, அம்மா, இப்பவே சொல்லிட்டேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்காவுது கல்யாணம் அது இதுன்னு தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணினா எதாவுது ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்!" வந்தனா, "ஆமா .. டாடி, கேட்டீங்க இல்லை? அம்மாகிட்ட் சொல்லி வையுங்க இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணத்தை பத்தி பேச்சே இருக்கக் கூடாது"4 July 2008 6:00 PM Cafe Coffee Day, Cunnaught Circus, New Delhi ஜூலை 4 2008 மாலை 6 மணி காஃபீ டே ரெஸ்டாரன்ட், கன்னாட் ஸர்கஸ், புது தில்லி முரளீதரன், "சோ வந்தனா, எப்படி இருந்தது உன் ட்ரெயினிங்க்? இப்ப ஒரு அளவுக்கு தன்னம்பிக்கை வந்து இருக்கா?" வந்தனா, "ஐ.டி.பி.எஸ் (IDPS), ஸேண்ட்பாக்ஸ் (Sandbox) உபயோகிச்சு ரோக் எலமென்ட் ட்ரேஸ் ஔட்(Rogue Element Trace Out*) பண்ணறது எனக்கு அத்துப் படி .. ஒரு வைரஸ்ஸோட லாஜிக்கை புரிஞ்சுக்கறதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகணும். வைரஸ் மாதிரி ஒரு கோட் எழுத இன்னும் ரொம்ப நாள் ஆகும். ..." (*Tracing Out of rogue elements: is a standard procedure in cyber crime fighting. This procedure involves using a system of computers and software called Intrusion Detection and Prevention System a.k.a IDPS to detect malicious network data traffic. Besides it also involves using a software mechanism called Sandbox to identify malicious code in a computer - ரோக் எலமென்ட் ட்ரேஸ் ஔட் என்பது இணயம் மற்றும் கணிணிகளின் மூலம் நடக்கும் சட்ட விரோத செயல்களை (yes! Cyber Crime!!) கண்டு பிடிக்க உபயோகிக்கப் படும் ஒரு செயல் முறை. இந்த செயல்முறை மூலம் இணையத்தில் நடக்கும் தவல் பரிமாற்றங்களை ஆராய்ந்து, தீங்கு விளைவிக்கும் தகவல் பரிமாற்றங்களை கண்டு பிடிக்க முடியும். தவிர, ஸேண்ட்பாக்ஸ் (ஆம்! மணல்பெட்டி தான்!) என்ற மென்பொருளை உபயோகித்து ஒரு கணிணிக்குள் வைரஸ்ஸின் செயல்களை ஆராய்வதும் இந்த செயல் முறையில் ஒரு பகுதி). தீபா, "சார், ட்ரேஸ் ஔட் பண்ணுவதில் இப்ப இவ புலி! இவ யோசிக்கற சில கோணங்களில் நான் இதுவரைக்கும் யோசிச்சதே இல்லை" முரளீதரன், "அதான் போலீஸ் புத்தி! சோ, நீங்க ரெண்டு பேரும் ஒரு டீமா வொர்க் பண்ணறது உங்களுக்கு ஓ,கேதானே?" வந்தனா, "நிச்சயமா சார். எங்களுக்குள்ள எந்த மாதிரி வேலை யார் பண்ணணும்ன்னு இப்ப ஒரு நல்ல அண்டர்ஸ்டேண்டிங்க் வந்து இருக்கு .. " முரளீதரன், "வெரி குட். நான் உங்களுக்கு கொடுக்க போற முதல் அசைன்மென்ட் எஃப்.பி.ஐக்கு உதவறது .. ஒரு பாட் நெட்டை ட்ரேஸ் ஔட் பண்ணி அதன் சர்வரையும் அதை கன்ட்ரோல் பண்ணறவங்களையும் கண்டு பிடிக்கறது" வந்தனா, "எதுக்கு எஃப்.பி.ஐக்கு உதவணும்?" தீபா, "வாவ், எந்த பாட் நெட் சார்?" முரளீதரன், "வந்தனா, சைபர் க்ரைம் என்பது ஒரு நாட்டில் மட்டும் நடக்கற வேலை இல்லை. உருவாக்கினவன் ஒரு நாட்டில இருப்பான் அதனால் பாதிக்கப் படறவங்க இன்னொரு நாட்டில் இருப்பாங்க. சைபர் தாக்குதல் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு போகும். நம்ம பிரிவு இந்தியாவுக்கு ஒரு நோடல் ஏஜன்ஸி (Nodal Agency). நாம் எடுத்துக்கற அசைன்மென்ட் எல்லாம் பல நாட்டு எல்லைகளை கடக்கும் சைபர் க்ரைம் தான் (CROSS BORDER CYBER CRIMES). இப்ப தீபா, உன்னோட கேள்விக்கு வரேன். AKBOT அப்படின்னு ஒரு பாட் நெட். யூ.எஸ்ல தொடங்கப் பட்டு யூ.எஸ்ல இருக்கறவங்க அதை கன்ட்ரோல் பண்ணறாங்க என்பது எஃப்.பி.ஐயோட கணிப்பு. அதன் அடிமை கணிணிகள் எல்லா நாட்டிலயும் இருக்கு, இந்தியா உள்பட. இந்த AKBOT இப்ப ஒரு புது ட்ரெண்ட்டை ஆரம்பிச்சு இருக்கு. .. " தீபா, "நான் இது வரைக்கும் கேள்வி படாத பேரா இருக்கு. என்ன புது ட்ரெண்ட்?" முரளீதரன், "டி.ஓ.எஸ் (DOS) அப்படின்னு சொல்லற டினையல் ஆஃப் சர்வீஸ் அட்டாக் (Denial of service attack) பத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா?" வந்தனா, "ம்ம்ம் ... வலை தளங்களை மத்தவங்க உபயோகிக்க முடியாதபடி செய்யறதுதானே. பொதுவா அந்த மாதிரி தாக்குதல் வீம்புக்கும் தற்பெருமைக்காகவும் சிலர் பண்ணறதுன்னு கேள்வி பட்டு இருக்கேன்" முரளீதரன், "அந்த ட்ரெண்ட்டைத்தான் இந்த AKBOT மாத்திட்டு இருக்கு. பொதுவா நீ சொன்ன மாதிரி தங்களை பத்தி தம்பட்டம் தட்டிக்கறதுக்கும், அல்லது ஒரு கம்பெனி மேல இருக்கும் வெறுப்பை காண்பிக்கறதுக்கும் ஹாக்கர்ஸ் டி.ஓ.எஸ் தாக்குதல் நடத்துவாங்க. போன வருஷம் ஏறக்குறைய ஒரு வாரம் மைரோஸாஃப்ட் (Microsoft) வலைதளம் யாராலயும் திறக்க முடியாதபடி இருந்தது. யாரோ மைக்ரோஸாஃப்ட் மேல இருக்கற வெறுப்பில பண்ணினது டி.ஓ.எஸ் தாக்குதலின் விளைவு அது. ஆனா, இந்த AKBOT பாட் நெட் காசு வாங்கிட்டு தாக்குதல் நடத்தற மாதிரி தெரியுது. அவங்க இதுவரைக்கும் செஞ்ச ஒவ்வொரு தாக்குதலினாலும் அவங்க குறிவைத்த வலை தளத்தோட போட்டி வலை தளம் பலன் அடைஞ்சு இருக்கு. போன கிருஸ்மஸ் ஸீசனின் போது பல விற்பனை வலை தளங்கள் இந்த AKBOTனால தாக்கப் பட்டு இருக்கு. அதனால அவங்களோட போட்டி வலை தளங்களுக்கு வியாபாரம் அதிகமாகி இருக்கு." தீபா, "சுமார் எத்தனை கணிணிகள் இந்த AKBOTஇல் இருக்கும்? அதாவது எத்தனை கணிணிகளில் இந்த AKBOT வைரஸ் புகுந்து இருக்கும்?" முரளீதரன், "எஃப்.பி.ஐயோட யூகம் சுமார் பதிமூணு லட்சம் கணிணிகள்" வந்தனா, "யார் அதனால லாபம் அடைஞ்சாங்கன்னு பாத்து அவங்களை விசாரிச்சா தெரிஞ்சுடுமே?" முரளீதரன், "வெளிநாட்டில் இருக்கும் பல கம்பெனிகள் மார்கெடிங்க் ஸ்லஷ் ஃபண்ட் (Marketing Slush Fund) அப்படின்னு பணம் ஒதுக்கி வெச்சு இருப்பாங்க. அது யார் கைக்கு போகுது, எதுக்கு போகுதுன்னு அந்த கம்பெனிக்கே தெரியாது. ஸ்பாம் மெயில் அனுப்பறதுக்குன்னு முதல்ல இந்த மாதிரி ஃபண்ட் உருவாச்சு. அந்த மாதிரி வேலைகளை செய்யறதுக்குன்னு சில ஏஜன்ஸிகள் இருக்கு. அந்த ஏஜன்ஸிகளை கண்டு பிடிக்கறது கஷ்டம்." வந்தனா, "ஏன் கஷ்டம்?" முரளீதரன், "வந்தனா, கருப்பு சந்தையை ரொம்ப சாதாரணமா ஏதோ முட்டாள்கள் கூடி இருக்கும் ஒரு இடம்ன்னு எடை போடக் கூடாது. அவங்களில் ஒருத்தரை அணுகணும்னா முதல்ல அவங்களுக்கு தகவல் அனுப்பறதுக்குன்னு ஒரு பிரத்தியேக சிக்னல் இருக்கும். அதை கொடுத்ததுக்கு அப்பறம் அவங்களே அணுகுவாங்க. எதாவுது சந்தேகம் வந்தா வரமாட்டாங்க. அப்படியே அவங்களை அணுகி அவங்களை விசாரிச்சாலும் அந்த ஏஜன்ஸிக்கும் யார் மூலம் காரியம் நடக்கப் போகுதுன்னு தெரியாது. அவங்க உதவியோட அவங்களுக்கு அடுத்த லெவலான ஹாக்கர்களை அணுகணும்" தீபா, "Which is next to impossible, I know! (ஹாக்கர்களை அணுகுவது என்பது முடியாத ஒரு செயல். எனக்கு தெரியும்)"வந்தனா, "Still, I am not convinced ... அவங்க ரொம்ப சட்டரீதியா மட்டும் கண்டு பிடிக்க முயற்சி செய்யறாங்கன்னு நினைக்கறேன். நம்ம ஊர் மாதிரி லாடம் கட்டினா எல்லா உண்மையும் வெளில வந்துடும்" முரளீதரன், "அவன் நம்ம ஊர்காரன்னா நீ லாடம் கட்டுவே. அவன் முன்னே சோவியத் யூனியனுக்கு உள்ள இருந்த எதாவுது ஒரு நாட்டில் இருந்தான்னா? இந்த மாதிர் நாடுகளில் நிலையான அரசாங்கமும் சட்டம் ஒழுங்கும் இல்லைன்னாலும் மொபைல் ஃபோனும் இணையமும் இருக்கு" வந்தனா, "International repurcussions..., ம்ம்ம் ... நீங்க சொல்றது புரியுது" தீபா, "சோ, நாங்க இந்த AKBOTஐ ட்ரேஸ் ஔட் பண்ணணும். அதானே எங்க அசைன்மென்ட்?" முரளீதரன், "எஸ், இன்னைக்கு நைட் பத்து மணிக்கு ஒரு கான்ஃபரன்ஸ் கால் மூலம் எஃப்.பி.ஐல இருக்கும் டீம் கூட டிஸ்கஸ் பண்ணப் போறோம். அவங்க யூ.எஸ்ல இருக்கும் கணிணிகளை எப்படி மானிடர் பண்ணறாங்கன்னு சொல்லுவாங்க. நீங்க இந்தியாவில் இந்த AKBOT ஆக்ரமிச்சு இருக்கற கணிணிகளை கண்காணிக்கணும். ஏற்கனவே AKBOT வைரஸ் புகுந்த இந்தியாவில் இருக்கும் சில கணிணிகளை அவங்க ஐடெண்டிஃபை (அடையாளம் அறிந்து) பண்ணி இருக்காங்க. அந்த பாட் நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை வெச்சு வேணும்னா இன்னும் சில கணிணிகளை நீங்க கண்டு பிடிச்சு எல்லா கணிணிகளிலும் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கும் போது சில க்ளூ கிடைக்கலாம்." தீபா, "இதுக்கெல்லாம் எங்களுக்கு கணிணிகள் அப்பறம் சில மென்பொருள் எல்லாம் வேணுமே. இதை எல்லாம் எங்க சொந்த லாப் டாப்பில் பண்ண முடியாது" முரளீதரன், "உங்களுக்கு தேவையான கணிணிகள், மென் பொருள் எல்லாம் நீங்க வாங்கிக்கிட்டு பில்லை எனக்கு கொடுங்க" தீபா கண்கள் பளிச்சிட, "தேவையானதுன்னா, என்ன வேணும்னாலும் வாங்கிக்கலாமா சார்?" முரளீதரன், "நீங்க பண்ணற வேலைக்கு தேவையான என்ன வேணும்னாலும் வாங்கிக்கலாம். எனக்கு பட்ஜெட் லிமிட் எதுவும் கிடையாது!" தீபா, "வாவ்! இந்த பிரிவிலேயே இருந்து ரிடையர் ஆக போறேன்னு நீங்க சொன்னதோட அர்த்தம் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா புரியுது" வந்தனா, "ஹெல்லோ! நாம் செலவு செய்யப் போறது ஜனங்க கட்டின வரிப் பணம். ஞாபகம் இருக்கட்டும்" தீபா, "அம்மா தாயே ஐ.பி.எஸ்! சார், இந்த ஒரு விஷயத்துல தான் சார் எங்க பார்ட்னர்ஷிப் சரி வராது. ரொம்பவே தேசியவாதியா இருக்கா!!" முரளீதரன், "கவலைப் படாதே வந்தனா, நாம் செலவு செய்யற மாதிரி நூறு மடங்கு நமக்கு எஃப்.பி.ஐகிட்ட இருந்து NTROவுக்கு வருது. ஏன்னா சைபர் க்ரைமினால அதிக பட்சம் பாதிக்கப் படற நாடு அமெரிக்கா" பிறகு தன் தோள் பையில் இருந்த கவர்களை எடுத்து கொடுத்தார். இருவரும் அவரவர் கவரை பிரித்தனர். ஒவ்வொருவருக்கும் இரண்டு அடையாள அட்டைகள் மற்றும் ஒரு கற்றை விசிட்டிங்க் கார்டுகள். ஒரு அடையாள அட்டை அவர்களது உண்மையான பிரிவையும் பணியையும் குறித்தது. இன்னொன்றில் "ப்ரோக்ராமர் - நேஷனல் இன்ஃபர்மாடிக்ஸ் செண்டர் (Programmer - National Informatics Center) என்று இருந்தது. விசிடிங்க கார்டுகளிலும் அதே ப்ரோக்ராமர் பணியின் பெயர் இருந்தது. வந்தனாவின் பெயரை அடுத்து அவளது ஐ.பி.எஸ் இல்லாமலும் தீபாவின் பெயரை அடுத்து அவளது பட்டங்கள் இல்லாமலும் இருந்தது. வந்தனா, "எதுக்கு சார் ரெண்டு ஐ,டி கார்ட்?" முரளீதரன், "ஒண்ணு உங்க அஃபீஷியல் ஐ.டி கார்ட். இன்னொன்னு வெளி உலகுக்கு" தீபா, "இந்த அஃபீஷியல் ஐ.டி கார்டை எப்பவாவுது யாருக்காவுது காமிக்க வேண்டி இருக்குமா?" முரளீதரன், "நிச்சயம் .. நீங்க அஃபீஷியலா யாரையாவுது மீட் பண்ணும் போது ... மட்டும்" வந்தனா, "Which will never happen! சரி, தனியா நொந்து போய் இருக்கும் போது நாங்களே பாத்துக்கறோம்" முரளீதரன், "ஏய், நீ எப்ப இந்த மாதிரி கிண்டலா பேச ஆரமிச்சே?" தீபா, "சும்மாவா? யாரோட ட்ரெயினிங்க்? இந்த ஒரு மாசமா தானே என் கூட பழகிட்டு இருக்கா. அடுத்த வருஷம் பாருங்க உங்களை வறுத்து எடுத்துடுவா" சிரித்துக் கொண்டு இருந்த தோழிகளைப் பார்த்து சிரித்த படி முரளீதரன், "எப்படியோ சொன்ன வேலையை செஞ்சா போதும். பட், நீங்க ரெண்டு பேரும் உங்க உண்மையான பதவியை வெளில சொல்லக் கூடாது." தீபா, "எங்க அப்பா அம்மாவுக்கு ஏற்கனவே நான் R&AWவில் வேலைக்கு சேந்தது தெரியும் சார். வந்தனாவோட பேரண்ட்ஸுக்கும் தெரியும்." முரளீதரன், "உங்க குடும்பத்துக்கு சொல்லித்தான் ஆகணும். அவங்களை வெளில சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுங்க. நான் சொன்னது மத்தவங்களை, உங்க ஃப்ரென்ட்ஸ் யார் கிட்ட்யும் சொல்லக் கூடாது" வந்தனா, "நாங்க செய்யறது அவ்வளவு ரகசியமானதா தெரியலையே சார்" முரளீதரன், "இல்லை வந்தனா, இணையம் என்பது முகம் தெரியாத ஒரு உலகம் ஒரு ரகசிய மெயில் ஐ.டிக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு தெரியாது. அதுவும் இல்லாமல் R&AWவின் சட்ட திட்டம் அப்படி. ஒரு சில பெரிய தலைகளை தவிர யாரும் அவங்க என்ன செய்யறாங்கன்னு வெளிய சொல்லக் கூடாது" தீபா, "எங்க ஃப்ரெண்ட்ஸ் யாரையாவுது என்ன செய்யறேன்னு கேட்டா. NICஇல் ப்ரோக்ராமர் வேலை செய்யறேன்னு சொல்லணும். இல்லையா?" முரளீதரன், "எஸ் ... " தீபா, "ஆனா, ஏன் சார் வெறும் ப்ரோக்ராமர்ன்னு கேவலமா ஒரு பதவி? பொய் சொல்றது தான் சொல்றோம் கொஞ்சம் பெருசா சீனியர் ப்ரோக்ராமர், சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் அப்படின்னு போட்டு இருக்கலாமே" முரளீதரன் தன் விசிடிங்க் கார்டை காண்பித்தார். அதில் "அக்கௌண்டண்ட்" என்று இருந்தது. அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை.6 July 2008 Around 2:00 PM A Resort near Niagara Falls, U.S.A ஜூலை 6 2008 ஞாயிறு மதியம் 2 மணி அளவில் நயாகரா நீர் வீழ்ச்சி அருகே இருக்கும் ஒரு ரிசார்ட் நால்வரும் கடந்த இரண்டரை நாட்கள் நேரம் போனது தெரியாமல் கழித்து அன்று மாலை நியூ யார்க் புறப்படுமுன் மதிய உணவுக்கு அமர்ந்து இருந்தனர். ஜாஷ்வா, "எப்படி இருந்தது லாங்க வீக் எண்ட்?" நித்தின், "ரொம்ப நல்லா இருந்துது ஜாஷ் .. " சக்தி, "இட் வாஸ் க்ரேட் மேன் " சஞ்சனா, "நாங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி ஒருதரம் வந்து இருக்கோம். நான் தான் சஜ்ஜஸ்ட் பண்ணினேன் இங்க போலாம்ன்னு" சக்தி, "தாங்க்ஸ்டா நான் ரொம்ப நல்லா எஞ்சாய் பண்ணினேன்" ஜாஷ்வா, "நித்தின், சக்தி, உங்க கமிஷனை டெபாசிட் பண்ணறதுக்கு ரெண்டு அக்கௌண்ட் ஓபன் பண்ணி இருக்கேன். என் கஸின்ஸ் பேர்ல. அவங்க கை எழுத்து போட்டதோட சரி. அவங்களுக்கு அக்கௌண்ட் நம்பர்கூட தெரியாது. சோ, உங்க பணத்தை பத்தி எந்த கவலையும் வேண்டாம். நான் கூட என் கமிஷனை அப்படி ஒரு அக்கௌண்டில டெபாசிட் பண்ணப் போறேன். இது தான் உங்க அக்கௌண்ட் நம்பர், நெட் பாங்கிங்க் லாக் இன் ஐடி, அப்பறம் பாஸ்வர்ட். இது உங்க ஏ.டி.எம் கார்ட். எடுக்கும் போது நிறைய பணம் எடுக்கணும்ன்னா நாலஞ்சு தடவையா கொஞ்சம் கொஞ்சமா எடுங்க" நித்தின், "இப்போதைக்கு நான் அதை தொடக்கூட போறது இல்லை" ஜாஷ்வா, "ஏன் ?" சக்தி, "எங்க செலவுக்கு வேணுங்கற அளவு எங்களுக்கு அல்லவன்ஸ் வருது. அதுவே போதும்" ஜாஷ்வா, "அடுத்த வாரம் புதன் நாம் மூணு பேரும் ஹாஃப்மனையும் ஆண்டர்ஸனையும் டின்னர்ல மீட் பண்ணறோம் மறந்துடாதீங்க" சக்தி, "ஓ.கே. அப்பறம் பணம் கைக்கு வந்ததுன்னு அவனுக கிட்ட இருந்து கன்ஃபர்மேஷன் வந்துதா" ஜாஷ்வா, "பணம் கைக்கு வந்து சேரலைன்னா மட்டும் காண்டாக்ட் பண்ண சொல்லி இருக்கேன். எதுக்கு அனாவிசியமான தொடர்பு?" நித்தின், "இல்லை .. இவ்வளவு பணம் .. ட்ரான்ஸ்ஃபர் பண்ணின எங்களுக்கு த்ரில்லிங்கா இருந்துது. சரியா போய் சேந்துதான்னு தெரிஞ்சுக்கத்தான் சக்தி கேட்டான்" ஜாஷ்வா, "ஃப்ரெண்ட்ஸ்! இந்த இருநூறு மில்லியன் (இருபது கோடி) டாலர் அவங்க மாச வருமானத்தில் ஒரு சின்ன பகுதி. மறந்துடாதீங்க. பணம் போய் சேரலைன்னா கூட உடனே நம்மை காண்டாக்ட் பண்ண மாட்டாங்க. ஆனா இன்னும் ஒரு நாலு அஞ்சு ட்ரான்ஸ்ஃபருக்கு அப்பறம் யூ.எஸ்ல இருந்து போற எல்லா பணத்தையும் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க சொல்லி கேப்பாங்க" நித்தின், "அப்படி கேட்டா?" ஜாஷ்வா, "நம்ம வசதியைப் பொறுத்து அப்பறம் யோசிக்கலாம்"7 July 2008 to 12 Aug 2008 ஜூலை 7 2008 முதல் ஆகஸ்ட் 12 2008 வரை ஜூலை 7ம் தேதியில் இருந்து வந்தனா-தீபா இருவரும் எஃப்.பி.ஐ நடத்திய ஆபரேஷன் பாட் ரோஸ்ட் 2 (Operation Bot Roast II) என்ற பாட் நெட் வேட்டையில் இந்தியாவில் இருந்தபடி பங்கேற்றனர். அமெரிக்க வலை தளங்களை மட்டுமே AKBOT தாக்கி வந்ததால் அதனை இயக்குபவர்கள் அமெரிக்காவில் இருக்கக் கூடும் என்ற எஃப்.பி.ஐயின் கணிப்பு முதலில் தீபாவின் ஒரு கண்டு பிடிப்பால் உடைத்து எறியப் பட்டது. அதன் பிறகு வேட்டை சூடு பிடித்தது. வந்தனாவிடம் அவளுக்கு உதவ, அமெரிக்காவில் இருந்து கொண்டு பணியாற்றிய ஒரு குழு ஒப்படைக்கப் பட்டது. எஃப்.பி.ஐ குழுவும் தீபா-வந்தனா ஜோடியும் நிமிடத்துக்கு நிமிடம் தகவல் பரிமாறிக் கொண்டு பணியாற்றினர். அந்த பாட் நெட்டை இயக்கும் சர்வர் கணிணிகள் மலேசியாவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அடுத்த கூட்டு முயற்சியில் அந்த பாட் நெட்டுக்கு நியூசிலாந்து நாட்டில் இருந்து ஆணைகளை வருவதை கண்டு பிடித்தனர். தொடங்கிய ஒரே மாதத்தில் வேட்டை வெற்றிகரமாக முடிந்தது. அந்த பாட் நெட்டை இயக்கி வந்த எட்டு பேர் கொண்ட கூட்டத்தையும் அதன் தலைவனான் AKILL என்ற சந்தேகப் பெயரில் இயங்கி வந்த ஓவன் வாக்கர் (Owen Walker) என்ற பதினெட்டு வயது வாலிபனையும் நியூசிலாந்து போலீசாரும் எஃப்.பி.ஐ ஏஜண்டுகளும் சேர்ந்து கைது செய்தனர். ஒவன் வாக்கருக்கு அவன் தனது குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டு எஃப்.பி.ஐ மற்றும் இன்டர்போலுக்கு உதவினால் அவர் சிறை தண்டனை குறைக்கப் படும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டது. வேறு வழி இன்றி அவன் அதை ஏற்றான். அடுத்த இரண்டு வாரங்கள் பல அண்டர்க்ரௌண்ட் சைபர் க்ரைம் விவரங்கள் எஃப்.பி.ஐக்கு தெரிய வந்தன. அவன் பிடி பட்டதை போலீஸாரும் எஃப்.பி.ஐயும் பறை சாற்றியதன் பலனால் அந்த விசாரணையைப் பற்றி வெளி உலகிற்கு தெரிய வந்தது. பத்திரிகை நிருபர்கள் ஓவன் வாக்கரை அணுக அவர்களுக்கு அவன் கொடுத்த ஒரு பேட்டியில் அவன் சொன்ன ஒரு திடுக்கிடும் தகவல்: "என் AKBOT ஒண்ணும் அவ்வளவு சக்திவாந்தது இல்லை போலீஸ் ஒழுங்கா வேலை செஞ்சு இருந்தா ரொம்ப நாளைக்கு முன்னாடியே பிடிச்சு இருக்கலாம். மாங்க்ஸ் பாட் நெட் அப்படின்னு ஒரு பாட் நெட் இருக்கு. அதில இப்ப சுமார் ஒரு லட்சம் கணிணிகள் தான் இருக்கு. ஆனா அந்த பாட் நெட்டை மாதிரி ஒரு சக்தி வாய்ந்த பாட் நெட்டை நான் இது வரைக்கும் பாத்தது இல்லை. என்னோட AKBOT உள்பட நான் இது வரைக்கும் பாத்த பாட் நெட் எல்லாம் ஆக்ரமிச்ச கணிணிகளில் இருக்கும் தகவல்களை சேகரிக்கவும் அந்த கணிணிகளில் இருந்து இணையம் மூலம் மெஸேஜ் அனுப்பவும்தான் முடியும். ஆனா இந்த மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் என்ன வேலை வேணும்னாலும் செய்யும். அதை கண்டு பிடிக்கறது அசாத்தியம். அந்த பாட் நெட்டை இயக்கறவங்க நினைச்சா எந்த நாட்டையும் அவங்க காலடில விழ வைக்க முடியும்" இந்த தகவல் உலகில் இருக்கும் பல மூலைகளுக்கு சென்றது. மாங்க்ஸ் பாட் நெட்டைப் பற்றி இதற்கு முன்னரே அறிந்து இருந்தாலும் அதனை உருவாக்கியவர்களின் நேர்மையான அணுகு முறையை (இது ஜாஷ்வாவை சந்திப்பதற்கு முன்) அறிந்து கொண்ட எஃப்.பி.ஐ அவர்களது பாட் நெட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஒரு முறை கள்ளச் சந்தையில் இருந்து தகவல் அனுப்பவதைப் போல் அதனுக்கு விலை பேசியும் பார்த்திருந்தார்கள். நித்தினும் சக்தியும் பாட் நெட்டை விற்க விருப்பமில்லை என்று பதிலளித்து இருந்தனர். அவர்கள் உருவாக்கியது அவர்களையும் அறியாமல் தீய சக்திகளின் கைகளுக்கு போய் சேர விருப்பமில்லை என்பதை மறைமுகமாக அறிவித்து இருந்தனர். அதனால், மாங்க்ஸ் பாட் நெட்டின் மூலம் விளம்பர ஈமெயில்களைத் தவிர வேறு எதாவது நடக்கின்றதா என்று மட்டும் எஃப்.பி.ஐ (முடிந்தவரை!) கண்காணித்து வந்தது. இருப்பினும், ஓவன் வாக்கர் மாங்க்ஸ் பாட் நெட்டின் மகிமையை உலகுக்கு வெளிச்சப் படுத்தியபின் மேலும் கேள்விகள் எழும் என்ற காரணத்தினால் மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டை ஆட ஒரு குழு அமைத்தது. 12 August 2008 5:00 PM Central Park, New York ஆகஸ்ட் 12 2008 மாலை 5 மணி சென்ட்ரல் பார்க் பூங்கா, நியூ யார்க் டைம் வார்னர் செண்டரில் இருந்த பௌச்சன் பேக்கரி ரெஸ்டாரண்டில் கப் கேக் (actually muffin, and it's a grave injustice to it to call it cup cake!) மற்றும் காஃபியை வாங்கிக் கொண்டு எதிரில் இருந்த சென்ட்ரல் பார்க்கில் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். மூவரின் மனதிலும் ஒரு பயம் கலந்த பட படப்பு; த்ரில்லிங்கான உணர்வு என்று கூட சொல்லலாம். சக்தி, "எஃப்.பி.ஐயோட தேடுதல் எவ்வளவு சீரியஸா இருக்கும்?" ஜாஷ்வா, "தெரியலை. ஆனா. அவங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டில் அவ்வளவு ஆர்வம் இருக்கற மாதிரி தெரியலை. ஆனா நீங்க ரெண்டு பேரும் உங்க பாட் நெட்டை பத்தி தம்பட்டம் அடிச்சுக்காம இருந்து இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது" நித்தின், "சாரி ஜாஷ், அப்ப எங்களுக்கு பெருசா சாதிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்க் ... இன் ஃபாக்ட் நாங்க சாதிச்சது பெரிசு தான் .. வெளில சொல்லி பெருமை படாம இருக்க முடியலை" சக்தி, "உன் அளவுக்கு எங்களுக்கு மெச்சூரிடி இல்லை. விடு, ஏன் எஃப்.பி.ஐக்கு ஆர்வம் இல்லைங்கறே" ஜாஷ்வா, "இதை விட பெரிய தலைவலிகள் அவங்களுக்கு இருக்கு. இது வரைக்கும் மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி ஒரு கம்ப்ளெயிண்ட்டும் அவங்களுக்கு போகலை." சக்தி, "அது சரி. நாம் க்ரெடிட் கார்ட் தகவல் திருட்டு மாதிரி எதாவுது பண்ணி இருந்தாதானே நம்மை பத்தி கம்ப்ளெயிண்ட் போகும்" நித்தின், "What about the companies we use to transfer money? (நாம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவதற்கு உபயோகிச்சுக்கற கம்பெனிகள் கம்ப்ளெயிண்ட் பண்ணி இருந்தா?" ஜாஷ்வா, "இது வரைக்கும் மூணு ட்ரான்ஸ்ஃபர் தான் பண்ணி இருக்கோம். அப்படி கம்ப்ளெயிண்ட் பண்ணி இருந்தா முதல்ல எங்க வங்கிக்கு, ஹாஃப்மனுக்குத்தான் தகவல் வரும். அந்த மூணு கம்பெனிகளுக்கும் ஒரு தகவலும் தெரியாது" சக்தி, "ஜாஷ், நீ எங்களை கண்டு பிடிச்ச மாதிரி அவங்களும் பாட் நெட்டை மானிடர் பண்ணி இருந்தா?" ஜாஷ்வா, "நான் உங்களை கண்டு பிடிச்சது என் லக். உங்க சர்வரை மூணு நாலு மணி நேரம் ஸ்டாட்டிக் ஐ.பி மூலம் கனெக்ட் பண்ணி வெச்சு இருந்தீங்க. உங்க கவன குறைவினால் என்னால கண்டு பிடிக்க முடிஞ்சுது. அவங்களும் அதை நோட் பண்ண முடிஞ்சு இருக்கும். ஆனா, அசால்டா விட்டுட்டாங்கன்னு நினைக்கறேன். இல்லைன்னா இந்நேரம் உங்க ரெண்டு பேரையும் தேடி வந்து இருப்பாங்க" சக்தி, "பழைய தகவல் பரிமாற்றங்களை அவங்க ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தாங்கன்னா?" ஜாஷ்வா, "பாட் நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்றங்களை மட்டும் தனியா ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தா இந்நேரம் சுலபமா உங்களை கண்டு பிடிச்சு இருக்க முடியும். இணையத்தில் நடக்கும் எல்லா தகவல் பரிமாற்றங்களையும் ஒண்ணா கலந்து ஸ்டோர் பண்ணி வெச்சு இருப்பாங்க என்பது என் யூகம்" நித்தின், "அதை வெச்சுட்டு நம்மை ட்ரேஸ் ஔட் பண்ணறது முடியாத ஒரு காரியம்" சக்தி, "அப்படி நாம் அசால்டா இருக்க கூடாது. எதுக்கும் எந்த வழியில் எல்லாம் நம்மை அவங்க ட்ரேஸ் ஔட் பண்ண முடியும்ன்னு நாம் மூணு பேரும் தனி தனியே யோசிச்சு நோட்ஸ் எழுதலாம். நாளைக்கு மூணு பேர் நோட்ஸ்ஸையும் ஒப்பிட்டு பாக்கலாம். எங்கேயாவுது ஒரு ஓட்டை இருந்தா அதை உடனே அடைக்கணும்"" ஜாஷ்வா, "நீ சொல்றதுதான் சரி. ... நாளைக்கு மீட் பண்ணலாம். சஞ்சனாவை ஒரு கான்சர்ட்டுக்கு கூட்டிட்டு போறதா சொல்லி இருந்தேன். நான் புறப்படறேன்"14 August 2008 10:00 AM ஆகஸ்ட் 14 2008 காலை 10 மணி முரளீதரன் வந்தனாவின் கை பேசியில் அழைத்தார், முரளீதரன், "வந்தனா? நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க" வந்தனா, "கிவ் மீ அ மினிட் நான் கான்ஃப்ரென்ஸ்ல தீபாவையும் கனெக்ட் பண்ணறேன்" தீபா, "சொல்லுங்க சார் ... " முரளீதரன், "நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க" தீபா, "நாங்க ரெண்டு பேரும் இன்னும் அதிகமா பிரபலம் ஆக வேண்டியவங்க சார். ஆனா வெளில சொல்லிக்க முடியாத இந்த வேலைனால எங்களை பத்தி யாருக்கும் தெரியறது இல்லை. பரவால்லை, பரம் வீர் சக்கரம் மாதிரி ஒரு ப்ரெஸிடண்ட் மெடலாவுது கிடைக்குமா சார்?" வந்தனா, "ஏய், போதும் நிறுத்து .. சொல்லுங்க சார், எதுக்கு கூப்பிட்டீங்க?" முரளீதரன், "உங்க ரெண்டு பேர் கிட்டயும் பாஸ்போர்ட் இருக்கா?" வந்தனா, தீபா இருவரும், "இருக்கு சார்" முரளீதரன், "சரி, pack your bags and get ready for two week US trip (இரண்டு வார அமெரிக்க பயணத்துக்கு தயாராகுங்க)" வந்தனா, "எதுக்கு?" முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட் வேட்டையில் பங்கேற்கறதுக்கு. முழுக்க முழுக்க நம் கைல ஒப்படைக்கறதா இருக்காங்க. அதனால அவங்க இதுவரைக்கும் சேகரிச்ச விவரங்களை பத்தி டிஸ்கஸ் பண்ணறதுக்கு உங்களை அங்கே வர சொல்லி இருக்காங்க" தீபா, "வாவ்! எப்ப புறப்படணும் சார்?" முரளீதரன், "இன்னைக்கு நைட்டு ஒரு மணிக்கு ஃப்ளைட்" இருவரும் "சார் !!!" என்று அலறினர் முரளீதரன், "என்ன ஆச்சு?" வந்தனா, "அடுத்த மூணு நாள் லீவ்ல நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போலாம்ன்னு ப்ளான் பண்ணி இருக்கோம்" முரளீதரன், "யூ.எஸ் போயிட்டு வந்தப்பறம் ஒரு வாரம் கொடுக்கறேன் நிதானமா ஊருக்கு போயிட்டு வாங்க. ஆக்சுவலா இந்த ரெண்டு வாரமும் நீங்க யூ.எஸ்ஸில் ஜாலியா சுத்தத்தான் போறீங்க .. " தீபா, "ஜாலியா சுத்தறது கொஞ்சம் நாள் கழிச்சே சுத்தலாமே சார்?" வந்தனா, "என்ன சொல்றீங்க சார்? ஜாலியா சுத்தப் போறோமா?" முரளீதரன், "எஃப்.பி.ஐகாரங்க மாங்க்ஸ் பாட் நெட்டைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சு இருக்காங்க. இந்த வேட்டையை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கலை. மாங்க்ஸ் பாட் நெட்னால ஒரு அபாயமும் இல்லைன்னு நம்பறாங்க. இருந்தாலும் நியூஸ் பேப்பர் காரங்களையும் அவங்களோட காங்க்ரஸ்ல, செனேட்ல இருக்கறவங்களை சமாதான படுத்தறதுக்கு எதாவுது செஞ்சாகணும். அவங்களுக்கு இது வரைக்கும் தெரிஞ்சதை உங்களுக்கு சொல்லப் போறாங்க. அவ்வளவுதான். நீங்களும் திரும்பி வந்து நிதானமா அந்த அசைன்மெண்டை செஞ்சா போதும். "
தீபா, "அவங்களே சீரியஸா எடுத்துக்கலை. நாம் ஏன் சார் எடுத்துக்கணும்?" முரளீதரன், "ஆக்சுவலா, அவங்க நம்மை உடனே வர சொல்லலை. வெளி உலகுக்கு இது ஒரு ஜாயிண்ட் ஆபரேஷன். எஃப்.பி.ஐ இந்த மாதிரி ஜாயிண்ட் ஆப்ரேஷன் பத்தி எழுதும் போது என்னோட பாஸுக்கும், எக்ஸ்டர்னல் அஃப்ஃபேர்ஸ் மினிஸ்ட்ரிக்கும் (External Affairs Ministry) நகல் அனுப்புவாங்க. ஆனா அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண மாட்டாங்க. பண்ணினாலும் பெரிய தலைகளுக்கு புரியப் போறதும் இல்லை. என்னோட ஜே.டியும் மினிஸ்ட்ரில இருக்கற அண்டர்-செக்ரடரியும் சேந்துட்டு உடனே போன்னு குதிக்கறாங்க. நான் என்ன பண்ண?" வந்தனா, "நீங்களும் வர்றீங்களா சார்?" முரளீதரன், "உங்க கூட நான் வரலை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கிளம்பறீங்க .. நான் தனியா அடுத்த வாரம் வந்து ஒரு மீட்டிங்க்ல கலந்துக்க போறேன்." தீபா, "எங்களுக்கு விசா, மத்த பேப்பர்ஸ் எல்லாம்?" முரளீதரன், "நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெண்டு லெட்டர்ஸ் உங்களுக்கு ஸ்கேன் பண்ணி ஈமெயிலில் அனுப்பறேன். ஒண்ணு உங்களுக்கு எஃப்.பி.ஐல இருந்து வந்தது. அடுத்த லெட்டர் ஜே.டி கொடுத்த அஃபீஷியல் ஆர்டர். நீங்க நியூ யார்க் ஏர்போர்டில் இந்த ரெண்டு லெட்டரையும் காண்பித்தால் போதும். உங்களை வரவேற்கறதுக்கு எஃப்.பி.ஐல இருந்து யாராவுது வருவாங்க. அவங்க கிட்ட மட்டும் உங்க அஃபீஷியல் ஐ.டி கார்டை காண்பிக்கணும். மத்ததை அவங்க பாத்துப்பாங்க" தீபா, "நியூ யார்க்கா? வாஷிங்க்டன் டி.சியில் இருக்கும் எஃப்.பி.ஐ தலைமையகத்துக்கு நாங்க போகலையா?" முரளீதரன், "இல்லை, அவங்களோட் நியூ யார்க் ஃபீல்ட் ஆஃபீஸ்" வந்தனா, "ஏன் நியூ யார்க்?" முரளீதரன், "முன்ன மாங்க்ஸ் பாட் நெட் வந்த புதுசில அதை கண்காணித்தவரும் அவரோட அஸிஸ்டண்ட்டும் அங்கேதான் இருக்காங்க. அதனலதான்." தீபா, "நீங்களும் நியூ யார்க்தான் வருவீங்களா?" முரளீதரன், "தேவை இருந்தா வருவேன். இல்லைன்னா நான் வாஷிங்க்டன் டி.சில என்னோட மீட்டிங்கை முடிச்சுட்டு அங்கிருந்தே திரும்பி வந்துடுவேன். " அன்று இரவே இருவரும் நியு யார்க் புறப்பட்டனர். அடுத்த நாள் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை மதியம் நியூ யார்க்கை அடைந்தனர். அரசாங்க விருந்தினரான இருவரையும் வரவேற்க எஃப்.பி.ஐ ஏஜென்ட் சாண்ட்ரா ஆஸ்டின் (Sandra Austin) ஏர்போர்ட்டுக்கு வந்து இருந்தாள். நியூ யார்க்கில் இருக்கும் ஃபெடரல் ப்ளாஸா (Federal Plaza) என்ற கட்டிடத்தில் எஃப்.பி.ஐ அலுவலகம் இருந்தது. அதற்கு அருகே இருந்த மில்லினியம் ஹில்டன் (Millinium Hilton) என்ற ஹோட்டலில் அவர்கள் தங்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். அடுத்த நாள் (ஞாயிறு) அவர்கள் தங்கி இருந்ததற்கு அருகில் (நியூ யார்க் தூர கணக்கில்!) இருந்த ஸ்டாச்சு ஆஃப் லிபர்டி (Statue Of Liberty) எனப்படும் பிரம்மாண்டமான சுதந்திர தேவியின் சிலைக்கு (சிலை வடிவத்தில் இருக்கும் கட்டிடத்திற்கு) சுற்றுலா பயணம் செல்லவும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சாண்ட்ரா அதற்கான டிக்கட்டுகளை அவர்களிடம் கொடுத்து திங்கள் காலை வந்து அவர்களை எஃப்.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்து செல்வதாக கூறி விடைபெற்றாள்.Players Meet Off The Game Sunday, 17 August 2008 9:00 AM சதுரங்கத்துக்கு வெளியில் முதல் சந்திப்பு ஞாயிறு, அகஸ்ட் 17 2008 காலை 9 மணி நியூ யார்க்கில் பாட்டரி பார்க் எனும் இடத்தில் இருந்த படகுத்துறை முன் இருந்த க்யூவில் வந்தனாவும் தீபாவும் நின்று கொண்டு இருந்தனர். வந்தனா, "இன்னும் ஒரு அரை மணி நேரம் முன்னாடி வந்து இருந்தா முதல் ஃபெர்ரியிலயே (பெரிய படகு) இடம் கிடைச்சு இருக்கும். இப்ப பார் இன்னும் ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி மூணாவுது ஃபெர்ரியில் தான் போக முடியும்" தீபா, "நமக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தவன் ஃபெர்ரிக்கும் சேத்தி புக் பண்ணி இருக்கலாம் இல்லை?" வந்தனா, "ஏன், டாக்ஸிக்கும் ஏற்பாடு பண்ண சொல்றதுதானே?" தீபா, "சரி, இன்னும் ஒரு மணி நேரம் சுத்தி இருக்கறவங்களை சைட் அடிக்கலாம்" வந்தனா, "க்யூல கடைசில நின்னுட்டு யாரை சைட் அடிக்கப் போறே? உனக்கு முன்னாடி நிக்கற தாத்தாவையா?" தீபா, "பரவால்லையே உனக்கு சைட் அடிக்கறதில் எல்லாம் இன்ட்ரெஸ்ட் இருக்கா?" வந்தனா, "ஏய், விட்டா சும்மா பேசிட்டே போறே?" தீபா, "சரி, நீ காலேஜ்ல யாரை சைட் அடிச்சே?" வந்தனா, "ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து நாலஞ்சு பெர் எனக்கு ரூட் போட்டுட்டு இருந்தாங்க. நான் யாரை செலக்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, தர்ட் இயர்ல அண்ணா போனதுக்கு அப்பறம் எனக்கு இன்ட்ரெஸ்ட் சுத்தமா போயிடுச்சு" தீபா, "தெரியுமே, ஐ.பி.எஸ்ஸே குறின்னு படிக்க ஆரம்பிச்சுட்டே. நான் எத்தனை பேரை செலெக்ட் பண்ணினதுக்கு அப்பறம் கழட்டி விட்டு இருக்கேன் தெரியுமா?" வந்தனா, "எந்த அளவுக்கு பழகி இருக்கே?" தீபா, "சிலர்கூட க்ளாஸ் ரூம் வரைக்கும், சிலர்கூட காஃபீ ஷாப்வரைக்கும், ஒரு சிலர்கூட மட்டும் மூவி போய் டின்னர் சாப்பிடற அளவுக்கு. அதிலயும் ஒருத்தன் நான் கிஸ் அடிப்பேன்னு நினைச்சு அடிக்கடி கழுத்தை நீட்டுவான். அவனுக்கு கழுத்து வலி வந்து அவனா என்னை கழட்டி விட்டுட்டான்" வாய் விட்டு சிரித்த வந்தனா, "ஏன், அடுத்த கட்டத்துக்கு போறதுக்கு பயமா?" தீபா, "அடுத்த கட்டத்துக்கு போற அளவுக்கு எனக்கு யார் மேலயும் ஈடுபாடு வரலை" வந்தன, "ஈடுபாடு வந்து இருந்தா அடுத்த கட்டத்துக்கு போயிருப்பியா?" தீபா, "சத்தியமா தெரியலை. நீ போய் இருப்பியா?" வந்தனா, "எனக்குத்தான் அந்த மாதிரி விஷயங்களில் இன்ட்ரெஸ்ட்டே வரலைன்னு சொன்னேன் இல்லையா?" தீபா, "இப்ப ஐ.பி.எஸ் முடிச்சுட்டு உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலைல இருக்கே. இன்னமும் உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா?" வந்தனா, "ம்ம்ம் ... இன்ட்ரெஸ்ட் இருக்கு அதுக்காக ஏக்கம் இல்லை." தீபா, "அப்ப, ரெண்டு வருஷம் கழிச்சு முன்ன பின்னே தெரியாத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லு" வந்தனா, "அதான் எனக்கு பெரிய பயம். நீ என்ன பண்ணறதா இருக்கே?" தீபா, "நான் இந்த பயத்தை என் பேரண்ட்ஸ்கிட்டயே சொல்லி ஆச்சு" வந்தனா, "அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?" தீபா, "அப்படின்னா நீயா ஒருத்தனை செலெக்ட் பண்ணிட்டு வா. நாங்க கல்யாணம் பண்ணி வெக்கறோம் அப்படின்னாங்க" வந்தனா, "நாம் ரெண்டு பேரும் ஒரே நிலைமைல இருக்கோம். நமக்கா யார் மேலயும் ஈடுபாடு வராது. யாரையும் சந்திக்கவும் வாய்ப்பு இல்லை. இனிமேல் எங்கே யாரை சந்திச்சு அவனை நமக்கு பிடிச்சு, ஈடு பாடு வரும் அளவுக்கு அவனை புரிஞ்சுட்டு .. பேசாம இப்போ இருந்தே மனசை தேத்திக்க வேண்டியதுதான்" தீபா, "அவனுக்கும் உன்னை பிடிச்சு இருக்கணும். அதை விட்டுட்டயே" இருவரும் வாய்விட்டு சிரித்தனர். பிறகு மறுபடி மௌனம். தீபா, "உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவன் எப்படி இருக்கணும்? அதாவுது உன் மனசில் தெளிவா இருக்கா?" வந்தனா, "ஓ! என்னை ரொம்ப லவ் பண்ணறவனா இருக்கணும். நல்லா ஜாலியா சிரிச்சு பேசறவனா இருக்கணும். முன்கோபியா இருக்கக் கூடாது. இன் ஃபாக்ட் கோபமே வராத ஒருத்தனா இருக்கணும். பாக்க ஸ்மார்ட்டா இருக்கணும். என்னை விட உயரமா இருக்கணும. சோம்பேறியா இருக்கக் கூடாது. நல்லா படிச்சு இருக்கணும். நிறைய விஷயம் தெரிஞ்சு இருக்கணும். ரொம்ப சம்பாதிக்கணும்ன்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். அவன், தன் குடும்பத்தில் இருக்கறவங்க எல்லார்கூடவும் ரொம்ப பாசமா இருக்கணும்" தீபா, "அவன் குடும்பத்தின் மேலா ?" வந்தனா, "ம்ம்ம்.. அப்படி இருந்தா எங்க அப்பா அம்மா மேல அவனுக்கு தன்னைப் போல பாசம் வந்துடும். எங்க அப்பா அம்மா கிட்ட பாசமா இல்லைன்னா நான் உடனே டைவர்ஸ் பண்ணிடுவேன்" தீபா, "அதுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்" வந்தனா, "உனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்?" தீபா, "ஓரளவுக்கு நீ சொன்னது மாதிரி தான். ஆனா கோபமே வரக்கூடாதுன்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். அப்பறம் லைஃப் போரடிச்சுடும். அப்பறம் ஒரேடியா என்கிட்ட வழியக் கூடாது. நான் தான் அவனை ரொம்ப லவ் பண்ணனும். அவன் என்னை ஒரு அளவுக்கு மட்டும் லவ் பண்ணினா போதும்" வந்தனா, "எனக்கு தெரிஞ்ச ஆந்திராக்காரங்க யாரும் அப்படி இல்லை. சோ, நீ உனக்கு எல்லா விதத்திலும் பிடிச்ச மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சான்ஸே இல்லை" தீபா, "ஏய், அவனும் ஆந்திராவை சேந்தவனா இருக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கலை. உனக்கு ராஜஸ்தானியா இருக்கணுமா" வந்தனா, "அப்படி எல்லாம் இல்லை. எனிவே எங்க வீட்டில் ஹிந்தி, ஆங்கிலம் ரெண்டும் கலந்துதான் பேசுவோம். அதனால க்ம்யூனிகேஷனுக்கு ப்ராப்ளம் இருக்காது" தீபா, "பட், தமிழனா இருந்தா. ஏன்னா அவங்களுக்குதான் ஹிந்தி தெரிஞ்சு இருக்காது" வந்தனா, "ஆனா, அவங்க ஆங்கிலம் அதுக்கு சரிக்கட்டிடும். நம்ம முரளிசார் எப்படி?" சக்தியும் நித்தினும் க்யூவுக்கு வந்து அவர்களுக்கு பின்னால் நின்றார்கள்.சக்தி (தமிழும் ஆங்கிலமும் கலந்து), "மடையா! அங்க பாரு க்யூ how long it is" நித்தின் (மராட்டியும் ஆங்கிலமும் கலந்து), "Relax, டைம் இருக்கு" சக்தி (ஆங்கிலமும் மராட்டியும் கலந்து), "We have a reservation for the Crown also and you are allowed there only till 2 (க்ரௌனுக்கும் டிக்கட் எடுத்து இருக்கிறோம். அதுக்கு ரெண்டு மணி வரைக்கும்தான் விடுவாங்க) லேட்டாச்சுன்னா டிக்கட் பணம் போச்சு" அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்ட வந்தனா, "ஏய், இது என்ன க்ரௌன் டிக்கட்ன்னு கேட்டுட்டு இருந்தியே. பின்னால நிக்கறவங்களும் அந்த டிக்கட் வாங்கி இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டு என்னன்னு தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லி முடிக்கும் முன் தீபா திரும்பி சக்தியை பார்த்து, "Hi, Are you also from India? (ஹாய், நீங்களும் இந்தியாவில் இருந்து வந்து இருக்கீங்களா?)" சக்தி, "நாங்க இந்தியாவில் இருந்துதான் வந்து இருக்கோம். ஆனா க்ரௌண் (கிரீடம்) அப்படின்னு என்னன்னு தெரியாத நீங்க இந்தியாவில் இருந்து வந்து இருக்கீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு ... " வந்தனா (கோபத்துடன்), "ஹெல்லோ! க்ரௌன் அப்படின்னா என்னன்னு தெரியும் ஆனா அதுக்கு டிக்கட் ... " என்று பாதியில் நிறுத்தி அந்த டிக்கட் சுதந்திர தேவி சிலையின் கிரீடப் பகுதிக்கு செல்வதற்கு என்று உணர்ந்து நாக்கை கடித்தாள். அதை ரசித்து புன்னகைத்து நின்ற சக்தியை பார்த்து அவளும் புன்னகைக்க, விட்டுக் கொடுக்க விரும்பாத தீபா கொபத்துடன், "அப்ப நீங்க நாகரீகமில்லாமல் ஒட்டுக் கேட்டீங்க ... " என்றதும் நித்தின், "உங்களை மாதிரி எங்களுக்கும் காது இருக்கு இல்லை?" என்று அவர்கள் ஒட்டுக் கேட்டதை சுட்டிக் காட்ட நால்வர் முகத்திலும் சிரிப்பு. சக்தி (வந்தனாவிடம்), "Hi, I am Shakthivel, call me Shakthi (நான் சக்திவேல், நீங்க என்னை சக்தி என்று அழைக்கலாம்)" என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு கையை நீட்டினான் சிறிதும் தயங்காமல் அவன் கையை குலுக்கி, "ஐ ஆம் வந்தனா ராத்தோட்" என்றாள் சக்தி, "அப்ப நான் உங்களை மிஸ் ராத்தோட்ன்னு கூப்படணும் இல்லையா? நான் சக்திவேல் முத்துசாமி கவுண்டர். ஆனா நீங்க என்னை சக்தின்னே கூப்படலாம்" என்றான் கிண்டலாக தன் தவறை உணர்ந்த வந்தனா, "சாரி, I didn't mean to be rude. நீங்களும் என்னை வந்தனான்னே கூப்பிடலாம்" தீபா (நித்தினிடம்) "ஹாய், நான் தீபா ராவ். நீங்க என்னை மிஸ் ராவ்ன்னு கூப்பிட்ட நான் திரும்பிக் கூட பாக்க மாட்டேன்" நித்தின், "ஐ அம் நித்தின் தேஷ்பாண்டே. நீங்க என்னை மிஸ்டர் தேஷ்பாண்டேன்னுதான் கூப்பிடணும்" என்றபிறகு சிரித்தவாறு ".. just kidding" என்றான் நால்வருக்கிடையே கல கலப்பு அதிகமானது. முன்புறம் இருந்த தீபா மெதுவாக பின்னோக்கியும் பின்னால் இருந்த சக்தி முன்னோக்கியும் நகர்ந்து நின்றனர். தீபா, "சொல்லுங்க மிஸ்டர் தேஷ்பாண்டே. இந்தியாவில் எங்க இருந்து வந்து இருக்கீங்க?" நித்தின், "சொந்த ஊர் பூனா. இங்கே வருவதற்கு முன்னால் இருந்தது பெங்களூர். இன்னும் ஒன்பது மாசம் கழிச்சு திரும்பி போகும் போதும் அனேகமா அங்கேதான் போவேன்னு நினைக்கிறேன். What about you Deepa?" தீபா, "ஓ, சொந்த ஊர் ஹைதராபாத் இப்ப புது தில்லியில் வேலைல இருக்கேன். இன்னும் ரெண்டு வாரத்தில் புது தில்லிக்குத்தான் திரும்பி போக போறேன்" சக்தி, "ஓ, நீங்க ஷார்ட் அசைன்மென்ட்டில் வந்து இருக்கீங்களா?" வந்தனா, "இல்லை, ஒரு செமினார், ட்ரெயினிங்க்ன்னு கூட சொல்லலாம்; அதில் பங்கேற்க வந்து இருக்கோம். நீங்க எங்கே வேலை செய்யறீங்க?" நித்தின், தாங்கள் பணியாற்றும் கம்பெனியின் பெயரை சொல்லி வந்து இருக்கும் கம்பெனியின் பெயரையும் சொன்னான். தீபா, "நாங்க ரெண்டு பேரும் NICயில் வேலை செய்யறோம்" என்றாள் மொட்டையாக சக்தி, "ஓ, அரசாங்க வேலையா? I am surprised as well as impressed" வந்தனா, "ஏன்?" நித்தின், "நிச்சயம் நீங்க ரெண்டு பேரும் நல்ல காலேஜில் படிச்ச மாதிரி தெரியுது. இருந்தும் கம்மி சம்பளத்தில் அரசாங்க வேலையில் சேர்ந்து இருக்கீங்க ...அதான்" தீபா, "உங்களை மாதிரி நாட்டோட அன்னிய செலாவணியையும் எங்க பாங்க் பாலன்ஸையும் அதிகப் படுத்துவதில் எங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை" சக்தி, "ஏன் அப்பா அம்மா சேத்து வெச்சதை செலவு செய்யவே நேரம் போறலையா?" வந்தனா, "நோ! நாங்க ஒண்ணும் எங்க அப்பா அம்மாவை நம்பி இல்லை" சக்தி, "அவங்களும் உங்களை நம்பி இல்லை .. சரி தானே?" தீபா, "நீங்க ரெண்டு பேரும் எந்த காலேஜில் படிச்சீங்க" நித்தின், "நீ படிச்ச காலேஜ் பேரை சொல்லி பெருமை அடிச்சுக்கலாம்ன்னு கேக்கறே. பரவால்லை நீ அதை நாங்க கேக்காமலே சொன்னாலும் பாராட்டுவோம்" தீபா, "ஆமா, பெருமை படறமாதிரி காலேஜ்தான். நான் ஐ.ஐ.டி. இவ என்.ஐ.டி. நீங்க எந்த காலேஜ்?" சக்தி, "வாவ்! நாங்க ரெண்டு பேரும் சாதாரண காலேஜ்தான்" என்று பொய் சொன்னான். க்யூ நகரத் தொடங்க இரண்டு ஜோடிகளாக பிரிந்து பேச்சை தொடர்ந்தனர். வந்தனா, "நீ தமிழ்நாடு தானே?" சக்தி, "ஆமா, நீ ராஜஸ்தான் சரியா?" வந்தனா, "நீ தமிழ் பேசினதை வெச்சு நான் சொன்னேன். நான் ராஜஸ்தான்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது?" சக்தி, "உன் பட்டப் பெயரை வெச்சு ஒரு யூகம்தான். ஆனா, நீ ஐ.டி ஃபீல்டில் இருக்கே அப்படிங்கறதை என்னால நம்ப முடியலை" வந்தனா, "ஏன்?" சக்தி, "உன்னை பாத்தா மென்பொருள் எழுதற ஆள் மாதிரி தெரியலை. உன் ஃப்ரெண்ட் தீபாவை பாத்தா நிச்சயம் அப்படித்தான் தெரியுது" வந்தனா, "அதான் ஏன்? என்னை பாத்தா புத்திசாலி மாதிரி தெரியலையா?" சக்தி, "சே, ஐ.டி ஃபீல்டில் இருக்கும் 99% வேலைக்கு புத்தி தேவையே இல்லை. இன்னும் சொல்லப் போனா மக்கா இருந்தா நல்லா ஷைன் பண்ணலாம்" சிரித்த வந்தனா, "அப்பறம் ஏன் அப்படி சொன்னே?" சக்தி, "உன்னை பாத்தா மத்தவங்களை வேலை வாங்கறவ மாதிரி தெரியுது (Someone used to bossing around people)" வந்தனா, "என் வீட்டில் எனக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டாங்க அதனால் இருக்கும்" சக்தி, "சோ, எங்கே உங்க ட்ரெயினிங்க்?" வந்தனா, "சொன்னா பயப் படக்கூடாது" என்று பீடிகை போட்டாள். சக்தி, "சொல்லு. நீ எதிர்பார்த்த அளவுக்கு பயப்படறேனான்னு பாக்கலாம்" வந்தனா, "எஃப்.பி.ஐ" சக்தியின் முகத்தில் தோன்றி மறைந்த சிறு கலக்கத்தை அவள் கவனித்தாள். வந்தனா, "ரொம்ப பயப்படாதே. கம்யூடர் செக்யூரிட்டி பத்தி அவங்க ஒரு செமினார் நடத்தறாங்க. நிறைய நாடுகளில் இருந்து அதில் பங்கேற்க வந்து இருக்காங்க. இந்தியாவில் இருந்து நாங்க வந்து இருக்கோம்" சக்தி, "எஃப்.பி.ஐ எதுக்கு கம்ப்யூடர் செக்யூரிடி பத்தி செமினார் நடத்தறாங்க?" வந்தனா, "சைபர் தீவிரவாதம் இப்ப அதிகரிச்சுட்டு வருது இல்லையா? அதுக்கு என்ன முன்னேற்பாடுகள் எடுக்கணும் அப்படின்னு சொல்லிக் கொடுக்கப் போறாங்க" என்று சமயோசிதமாக பொய் சொன்னாள். கூர்ந்து பார்த்த சக்தியின் கண்களை தவிர்த்தாள். பேச்சை மாற்ற "தமிழ்நாட்டில் எந்த ஊர்?" என்றாள் சக்தி, "ஈரோட். பெரியார் மாவட்டம், கோவை மாவட்டத்துக்கு பக்கத்தில் இருக்கு" வந்தனா, "ஈரோட் எதுக்கு ஃபேமஸ்" சக்தி, "ஈரோட் ஒரு வியாபார தலம். மஞ்சள், எண்ணை, டெக்ஸ்டைல்ஸ் இந்த மாதிரி நிறைய வியாபாரங்கள்; ஏற்றுமதி நிறுவனங்கள் இருக்கு." வந்தனா, "ஸ்கூலிங்க் காலேஜ் எல்லாம் ஈரோடிலா" சக்தி, "ஸ்கூலிங்க் மட்டும். காலேஜ் சென்னை" வந்தனா, "கோவைக்கு பக்கம்ன்னா சென்னை ரொம்ப தூரமாச்சே. கோவைல நல்ல எஞ்சினியரிங்க் காலேஜஸ் இருக்கு இல்லையா? ஏன் சென்னை?" சக்தி, "நான் படிச்சது ஐ.ஐ.டி சென்னை" வந்தனா, "வாவ், அப்ப ரொம்ப சாதாரண காலேஜுன்னு சொன்னே?" சக்தி, "உன் ஃப்ரெண்ட் ரொம்ப ஜம்பம் அடிச்சு கிட்டா. எதுக்கு பதில் ஜம்பம்னு அப்படி சொன்னேன். ராஜஸ்தானில் நீ எந்த ஊர்?" வந்தனா, "உதைப்பூர்" சக்தி, "வாவ்! டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை. அந்த ஏரிக்கு உள்ள இருக்கும் அரண்மனை அங்கேதானே இருக்கு?" வந்தனா, "ஆமா ..." சக்தி, "அப்ப நீயும் என்னை மாதிரி ஃபேமிலியை விட்டுட்டு தனியா டெல்லில இருக்கே" வந்தனா, "ஒரு விதத்தில சரி. ஆனா டெல்லியில் என் பெரியப்பா இருக்கார். அவர் வீட்டில நான் தங்கி இருக்கேன்" சக்தி, "லக்கி .. " வந்தனா, "ஏன் தனியா இருப்பதும் ஜாலிதானே. வீட்டில் செய்ய முடியாதது எல்லாம் தனியா இருக்கும் போது செய்யலாம்" சக்தி, "வீட்டில் இருக்கும் போது செய்ய முடியாததுன்னு எனக்கு ஒண்ணும் இல்லை." வந்தனா, "அப்ப நீ ரொம்ப காந்தியா?" சக்தி, "ஏன் அப்படி கணக்கு பண்ணறே? எனக்கு வீட்டில் ரொம்ப சுதந்திரம் கொடுத்து இருக்காங்கன்னு எடுத்துக்கலாம் இல்லையா?" வந்தனா, "ஓ சாரி .. ஆக்சுவலா என்னோட பேரண்ட்ஸும் அப்படித்தான்" சக்தி, "எங்க அம்மா நான் என்ன பண்ணினாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அவங்க சொல்ற மாதிரி எதுவும் நான் பண்ண மாட்டேன்" வந்தனா, "அப்பா?" சக்தி வானத்தை நோக்கி விரலைக் காட்ட, வந்தனா, "ஓ, சாரி ... எப்போ?" சக்தி, "நான் ப்ளஸ் டூ படிக்கும் போது" வந்தனா, "ஐ ஆம் சோ சாரி" சக்தி, "பரவால்லை .. இப்ப ரொம்ப ஞாபகம் வருவது இல்லை" வந்தனா, "உனக்கு வராம இருக்கலாம். ஆனா உங்க அம்மா இன்னும் ரொம்ப கஷ்டப் படுவாங்கதானே?" முகம் இறுக அவன் தலையசைத்தான், பிறகு "வேற எதாவுது பேசலாமே" என்றான் வந்தனா, "உன்னோட கஷ்டம் எனக்கு நல்லா புரியுது. நான் த்ர்ட் இயர் படிக்கும் போது என் அண்ணன் இறந்துட்டான். என் துக்கத்தை விட என் அப்பா படற கஷ்டத்தை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியாது" சக்தி, "ஐ ஆம் சோ சாரி" என்று அவனையறியாமல் அவள் கைகளைப் பற்றினான். இருவரிடையே நிலவிய மௌனத்திலும் ஒரு அன்னியோன்னியம் இழையோடியது.அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஜோடி இதற்கிடையே ... தீபா, "பூனாவிலயே நிறைய ஐ.டி கம்பெனிகள் இருக்கே. எதுக்கு பெங்களூர் போனே?" நித்தின், "பூனால எங்க தாத்தா பாட்டிதான் இருக்காங்க. அப்பா இருப்பது மும்பை" தீபா, "அம்மா?" நித்தின் இறுகிய முகத்துடன் வானத்தை நோக்கி விரலை உயர்த்த அடுத்த கணம் தீபாவின் முகத்தில் இருந்த குறும்பு காணாமல் போனது, "சாரி .. எப்ப?" நித்தின், "நான் ப்ளஸ் டூவில் இருக்கும் போது" தீபா, "ஐ ஆம் சோ சாரி .. " நித்தின், "பரவால்லை .. இப்ப ரொம்ப ஞாபகம் வருவது இல்லை" தீபா, "ஆனா உங்க அப்பா இன்னமும் ரொம்ப கஷ்டப் படுவார் இல்லை?" நித்தின் ஆமென்று தலையாட்ட தீபா தொடர்ந்து, "எங்க அப்பா மாசத்தில் மூணு வாரம் ஊர் ஊரா சுத்திட்டு இருப்பார். ஆனா ஒவ்வொரு நாளும் அம்மாகூட ரெண்டு மூணு தடவை ஃபோன்ல பேசுவார்" நித்தின், "வேறு எதாவுது பேசுவோமே?" தீபா மௌனமானாள். நித்தின், "ஹேய், நான் கோவமா சொல்லலை. ஜாலியாதான் சொன்னேன் .. சரி, ஹைதராபாத்திலேயே நிறைய கம்பெனிகள் இருக்கும் போது நீ ஏன் டெல்லில வேலைல சேர்ந்தே?" தீபா, "அப்பா அம்மா கெடுபிடி இல்லாம கொஞ்ச நாள் ஜாலியா இருக்கலாம்ன்னுதான்" நித்தின், "ஏன் உங்க பேரண்ட்ஸ் ரொம்ப ஆர்தடாக்ஸா?" தீபா, "நோ வே. எங்க அப்பா ஒரு லாயர். அம்மா டாக்டர். என் இஷ்டத்துக்கு குறுக்கே நிக்க மாட்டாங்க" நித்தின், "அப்பறம் டெல்லி ஏன்?" அதுவும் அரசாங்க வேலைல ஏன் சேர்ந்தே? உனக்கு பாத்து இருக்கும் மாப்பிள்ளை டெல்லில இருக்கானா?" தீபா, "வேறு எதாவுது பேசலாமே?" நித்தின், "ஓ, சரி, என்ன வேலை பண்ணறான்?" தீபா, "யாரு?" நித்தின், "உனக்கு பாத்து இருக்கும் மாப்பிள்ளை" அவன் கழுத்தை நெரிப்பதுபோல் பாவனையுடன், "க்ர்ர்ர் ... எனக்கு இன்னும் மாப்பிள்ளை பாக்கலை .. இன்னொரு தடவை ஏன் டெல்லி ஏன் அரசாங்க வேலைன்னா உன்னை கொன்னுடுவேன். வேற எதாவுது பேசலாம்" நித்தின், "பி.டெக் முடிக்கும் போது கேம்பஸ் இண்டர்வ்யூவில எந்த கம்பெனியிலும் கிடைக்கலையா? " மறுபடி அவன் எதைப் பற்றி கேட்க வருகிறான் என்று அறிந்தும் அவனுடய வார்த்தை விளையாட்டில் கலந்து கொண்டாள் ... தீபா, "பி.டெக் முடிச்சதும் மேல படிக்கணும்னு நான் கேம்பஸ் இண்டர்வ்யூ எதுக்கும் போகலை" நித்தின், "மேல படிச்சியா?" தீபா, "ம்ம்ம் ... ஐ.ஐ.எஸ்ஸில எம்.டெக் படிச்சேன்" நித்தின், "ஸ்கூல் ஆஃப் ஆடோமேஷனிலா (IISc School Of Automation)" தீபா, "ஆமா .. " நித்தின், "சோ, நீ வேலைக்கு சேந்து ரெண்டு மூணு மாசம்தான் ஆச்சு" தீபா, "ஆமா .. " நித்தின், "ஏன்? ஏன் NIC? .... நான் உன் கிட்ட கேக்கலை .. நானே என்னை கேட்டுக்கறேன். என்ன காரணமா இருக்கும்ன்னு யோசிக்கறேன்" என்ற படி வானத்தைப் பார்த்து தலையை சொறிந்த அவனது குறும்பை தீபா மிகவும் ரசித்தாள். தீபா, "எம்.டெக் ப்ராஜெக்ட் நான் NICஇல் பண்ணினேன். வந்தனா பழக்கமானா. எனக்கு அந்த இடம் ரொம்ப பிடிச்சு இருந்துது. எங்க அப்பா அம்மா நான் வேலைக்கு போய் சம்பாதிக்கணும்னு எதிர் பார்க்கல. சோ, அங்கே சேர்ந்தேன். கூலான வேலை. பெருசா ஒண்ணும் கிழிக்கறது இல்லை. நிறைய ஃப்ரீ டைம். இதெல்லாம் எனக்கு பிடிச்சு இருந்துது. இதுக்கு மேல ஏன் சேர்ந்தேன்னு காரணம் சொல்ல தெரியலை" என்று அழகாக பொய் சொன்னாள். நித்தின், "சரி, இனி இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன். தாங்க்ஸ்." தீபா, "என்ன உனக்கு அவ்வளவு க்யூரியாசிடி?" நித்தின், "யாராவுது ஒளிச்சு வெச்சா, மறைச்ச எனக்கு எப்படியாவுது கண்டு பிடிக்கணும்னு இருக்கும். என் நேச்சர் அப்படி அதில் ஒரு த்ரில்" தீபா, "அப்படியா நான் ஒர் புதிர் போடறேன் கண்டு படி பாக்கலாம்" என்றபடி ஒரு கணித புதிரை சொன்னாள். நித்தின், "ஓ, சாம் லாய்டோட புதிர்தானே அது, " என்றபடி அதன் விடையை சொன்னான். அடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் புதிர் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். தீபா சொன்ன அத்தனை புதிர்களுக்கும் நித்தின் விடையளித்தான். தீபாவும் நித்தினின் அத்தனை புதிர்களுக்கும் விடையளித்தாள். தீபா, "சோ, யாராவுது மறைச்சா அதை கண்டு பிடிக்கறதில் ஒரு த்ரில். ஆனா நீ மறைக்கறதை யாரும் கண்டு பிடிக்கக் கூடாது அப்படித்தானே?" நித்தின், "அதிலயும் ஒரு த்ரில்தான்!" தீபா, "இப்ப சொல்லு நீ எந்த காலேஜ்ல படிச்சே" நித்தின், "அதான் சொன்னேனே சாதாரண காலேஜ்ன்னு" தீபா, "அதை என்னை நம்ப சொல்றியா?" நித்தின், "எங்க அப்பா தனியா இருந்ததுனால் வெளியூருக்கு போய் படிக்க விரும்பல. அதனால் மும்பையிலேயே சீட் கிடைச்ச காலேஜில் சேர்ந்தேன்" தீபா, "சரி, ஐ.ஐ.டி மும்பை சரி தானே?" என்றாள் நித்தின் அதற்கு பதிலாக புன்னகைத்தான். தீபா, "அப்ப சக்தி? சென்னையா?" நித்தின் வாய்திறக்காமல் ஆமென்று தலையாட்டும் விதத்தை வெகுவாக ரசித்தாள். இருவருக்கும் இடையே குறும்பு கலந்த ஒரு அன்னியோன்னியம் தோன்றியது. க்யூ நகரத் தொடங்க நால்வரும் சுற்றுலா பயணத்தை தொடங்கினர். மதியம் இரண்டு மணி வரை ஒரு தீவில் இருந்த சுதந்திர தேவி சிலையையும் அருகே எல்லிஸ் ஐலண்ட் என்ற இன்னொரு தீவில் இருந்த சரித்திரப் புகழ் பெற்ற கட்டிடங்களையும் சுற்றிப் பார்த்தபின் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இடையே பல் வேறு இடங்களிலும் சக்தியும் தீபாவும் கொண்டு வந்து இருந்த டிஜிடல் கேமராக்களில் பல புகைப் படங்கள் பதிவாகி இருந்தன.Sunday, 17 August 2008 2:00 PM ஞாயிறு, ஆகஸ்ட் 17 மதியம் 2 மணி கடைசியாக எல்லிஸ் ஐலண்டில் ஃபெர்ரியில் ஏறியவர்களிடையே மௌனம் நிலவத் தொடங்கியது. வந்தனா, 'எதையாவுது சொல்லி இன்னும் கொஞ்ச நேரம், இல்லை, இன்னைக்கு முழுக்க என் கூடவே இரேன். ப்ளீஸ். நீ அபத்தமா எதாவுது சொன்னாலும் நான் கண்டுக்க மாட்டேன்' என்று மனதுக்குள் சக்திக்கு விண்ணப்பித்தாள். தீபா, 'உன்னை என்ன சொல்லி இன்னும் கொஞ்ச நேரம், இல்லை, இன்னைக்கு முழுக்க என் கூடவே இருக்க வைக்கலாம். அபத்தமா எதாவுது சொன்னா உடனே கிண்டலடிப்பே. அதுக்கெல்லாம் நான் அவமானப் படப் போறது இல்லை' என்று நித்தினிடம் மனதுக்குள் முறையிட்டாள். மௌனமாக ஃபெர்ரியில் இருந்து கார் பார்க்கை அடையும் போது. சக்தி மௌனத்தை கலைக்கும் படி, "ரெண்டு பேரும் என்ன மாதிரி லஞ்ச் சாப்பிடலாம்ன்னு இருந்தீங்க?" என்றான். அவன் கேட்ட கேள்வி இருவரையும் நோக்கி இருப்பினும் அவன் கண்கள் வந்தனாவின் முகத்தில் இருந்து அகலவில்லை. 'ஐய்யோ பிரியப் போறோம்; அதுக்குள்ள எதாவுது கேக்கணுமே' என்று யோசித்துக் கொண்டு இருந்த தீபா, சக்தி அப்படிக் கேட்டதும் குதூகலத்துடன் அவளையறியாமல், "எஸ்!" என்றாள். நித்தின், "சக்தி, எஸ் அப்படின்னு ஒரு லஞ்ச் இங்க எங்கே கிடைக்கும்ன்னு உனக்கு தெரியுமா?" . அசடு வழிந்து அவனை முறைத்தபடி தீபா, "அகோர பசி. சாப்பாடுன்னு சக்தி சொன்னதும் 'எஸ்'ன்னேன். அதுக்குள்ள காலை வாராதே. எனக்கு எந்த மாதிரி லஞ்ச்ன்னாலும் பரவால்லை" காலை அவர்களது ஹோட்டலில் சண்டே ஸ்பெஷல் ப்ரேக்ஃபாஸ்ட் புஃப்ஃபே (Sunday Special Breakfast Buffet) உணவு அருந்தும் போது, “ரெண்டு இடத்தையும் பாத்து முடிக்க சாயங்காலம் ஆனாலும் ஆகலாம். சோ, இப்ப நல்லா ஒரு வெட்டு வெட்டிக்கலாம். கூடவே, இந்த ஸ்வீட் பன்னும் ஜூஸ் பாக்கெட்டும் ரெண்டு எடுத்து பாகில் போட்டுக்கலாம்” என்று தீபா சொன்னது நினைவுக்கு வந்தது. தீபா நமட்டுச் சிரிப்புடன் தன் கண்களை தவிர்ப்பதைக் கண்டு அவளும் புன்னகைத்தவாறு வேறெங்கோ பார்த்தாள். சக்தி தன் காரில் வந்தனாவை அழைத்துக் கொண்டு சோஃபியா'ஸ் ஆஃப் லிட்டில் இட்டலி (Sofia’s Of Little Italy) எனும் இத்தாலிய உணவகத்தை அடையுமுன் நித்தினும் தீபாவும் அங்கு சென்று டேபிளுக்கு சொல்லி விட்டு வெளியில் காத்திருந்தனர். சுவற்றோரம் இருந்த டேபிளில் சுவற்றை ஒட்டி இருந்த இருக்கைகளில் வந்தனாவும் அவளுக்கு எதிரில் சக்தியும் அமர்ந்தனர். சக்தியின் கால்கள் அடிக்கடி வந்தனாவின் கால்களை உரசியபடி இருந்தது. சக்தி வந்தனாவைப் பார்த்து, "சாரி .. " அவள் பதிலளிக்குமுன் தீபா, "என்னாச்சு?" நித்தின், "நீளமா கால் இருக்கறதுனால வரும் தொந்தரவு" என்றான். வந்தனா, "இட்ஸ் ஓ.கே, நல்லா ஸ்ட்ரெட்ச் பண்ணிக்கோ. எனக்கு தொந்தரவு இல்லை" என்ற பிறகு சக்தி சுவாதீனமாக கால்களை நீட்ட இருவரின் கால்களும் உறவாடிய வண்ணம் இருந்தன. நித்தினும் சக்தியும் தங்கள் அளவுக்கு பெண்களும் பசியுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் ஆர்டர் செய்து இருந்தனர். இப்போதோ அந்த பாஸ்தாவை சாப்பிட முடியாமல் திணறிய வந்தனாவையும் தீபாவையும் சுவாரசியமாக பாத்துக் கொண்டு இருந்தனர். தீபா, "நீ இவ்வளவு ஆர்டர் பண்ணுவேன்னு நான் நினைக்கலை. பாக்கியை பாக் பண்ணி எடுத்துட்டு போயிடலாமா?" நித்தின், "போதும்ன்னு சொல்லு. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்" என்றதும் மறுபடி அசடு வழிந்தாள். நித்தின், "போதும் வெச்சுடு. இங்கே டெஸர்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். ஆனா பேர் ஒண்ணும் வாயில் நுழையாது. முன்னாடி ஷோ கேஸில் வெச்சு இருக்கறதை பாத்து செலக்ட் பண்ணிட்டு வரலாம்" என்று எழுந்ததும் அவள் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை அப்படியே விட்டு விட்டு அவனுடன் சென்றாள். சக்தி, "ஆக்சுவலி, எனக்கு இன்னும் கொஞ்சம் வேணும். உனக்கு போதும்ன்னா எனக்கு கொடு" வந்தனா தன் கைகளை உயர்த்தினாள். அவள் மிச்சம் வைத்து இருந்த பாஸ்தாவை எந்த விதமான சங்கோஜமும் இல்லாமல் சக்தி சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தாள் சக்தி, "நீயும் போய் உனக்கு வேணுங்கற டெஸர்ட்டை செலக்ட் பண்ணிட்டு வா" வந்தனா, "உனக்கு?" சக்தி, "நான் எதுன்னாலும் சாப்பிடுவேன். நித்தினே பாத்து எனக்கும் செலக்ட் பண்ணிடுவான்" வந்தனா, "அப்ப எனக்கும் அதையே ஆர்டர் பண்ணலாம்" ஒரு கணம் சாப்பிடுவதை நிறுத்தி அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்களை தவிர்த்து சிரத்தையுடன் அருகில் இருந்த டிஸ்ஸ்யூவை எடுத்து கை துடைத்துக் கொண்டு இருந்தாள். அவள் முகத்தில் படர்ந்து இருந்த நாணத்தை அவன் கவனிக்க தவறவில்லை. சக்தி, "தயவு செஞ்சு அப்படி சொல்லாதே. நீ போய் உனக்கு பிடிச்சதை எடுத்துட்டு வா. நித்தின்கிட்டே உன் செலக்ஷன் என்னன்னு சொல்லு” என்று வற்புறுத்தி அவளை அனுப்பி வைத்தான். முன்புறம் ஷோகேஸின் எதிரே நின்றிருந்த நித்தின்-தீபா அருகே சென்ற வந்தனா அந்த ஷோகேஸில் வைத்து இருந்த வெவ்வேறு வகையான ஐஸ் க்ரீம், கஸ்டர்ட், ஜெல்லாட்டோ போன்ற டெஸர்ட்டுகளின் ஒன்றை தேர்ந்து எடுத்த பின் நித்தினிடம் சொன்னாள். நித்தின், "பரவால்லை நாம் மூணு பேருக்கும் வேற வேற செலக்ட் பண்ணி இருக்கோம். சக்திக்கு இந்த மூணைத் தவிர வேற ஒண்ணை நான் செலக்ட் பண்ணி இருந்தேன். இன்னிக்கு சக்திக்கு வேட்டைதான்" வந்தனா, "ஏன், " நித்தின், "அவன் ஒரு இனிப்புப் பிரியன். அவனுதை தவிர நம் ஐஸ் க்ரீம்லயும் ஒரு ஸ்பூனாவுது எடுத்து ஸுவாஹா பண்ணிடுவான். இன்னைக்கு நாலு வகையான டெஸர்ட்ஸ் அதான் அவனுக்கு வேட்டைன்னேன்" அதற்கேற்றார் போல் நால்வரும் டெஸர்ட்டுகளை உண்டு கொண்டு இருக்கும் போது, 'இது எப்படி இருக்குன்னு பாக்கலாம்' என்றவாறு அவனுடையதை தவிர மற்ற மூவரது கிண்ணங்களில் இருந்தும் ஒரு பெரிய ஸ்பூனில் எடுத்து ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் சாப்பிட்டதை வந்தனா மிகவும் ரசித்தாள். தீபாவளியின் போது அவள் தந்தை, பெரியப்பா, சித்தப்பா மற்றும் மனீஷ் எல்லோரும் பல வகையான இனிப்புக்களைக் கொண்டு வந்து வீட்டை நிறப்புவது நினைவுக்கு வந்தது. 'சோ, இதுதான் உன்னோட வீக்னஸா? வர்ற தீபாவளி சமயத்தில் நீ இங்கே இருப்பே. அடுத்த தீபாவளி நீ என் வீட்டுக்கு வரணும். உனக்கு போதும் போதுங்கற அளவுக்கு உனக்கு ஸ்வீட்ஸ் கொடுத்து நான் பாக்கணும்' என்று மனதுக்குள் அவனிடம் பேசினாள்.சாப்பிட்டு முடித்து வெளியில் வந்ததும் இம்முறை மற்றவரை முந்திக் கொண்டு. "நித்தின், இன்னைக்கு உன் ப்ரோக்ராம் என்ன? எனக்கு டைம் ஸ்கொயர் பாக்கணும்; அப்பறம் நைன் இலவன் (9/11) WTC (World Trade Centre) சைட்டுக்கு கூட்டிட்டு போய் காண்பிக்கறயா?" நித்தின், "எனக்கு ப்ரோக்ராம் ஒண்ணும் இல்லை ... ஆனா" என்று இழுத்தபடி சக்தியை பார்க்க, தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக சக்தி, "நித்தின், நீ கூட்டிட்டு போறயா; நான் கிளம்பறேன்" என்றதும் வந்தனா, "தீபா, எனக்கு இப்ப ஷாப்பிங்க் போக விருப்பமில்லை. நீ போயிட்டு வாயேன். நான் திரும்பி ஹோட்டலுக்கு போறேன்" என்றாள். அதற்காகவே காத்து இருந்ததைப் போல தீபா, "சரி, நித்தின் நாம் போலாமா" நித்தின், "வந்தனா, 9/11 சைட் உன் ஹோட்டலுக்கு பக்கத்திலயே இருக்கு அங்கே முதல்ல போய் பாத்துட்டு உன்னை ஹோட்டலில் இறக்கி விட்டுடறேன்" வந்தனா அவசரமா, "அதுக்கு நான் வரலை .." சொன்னதைக் கண்டு சக்தி துணுக்குற்றான். சக்தி, "இல்லை டைம் ஸ்கொயருக்கு நீ வடக்கே போகணும். திரும்பி வரும் வழியில் 9/11 சைட்டுக்கு கூட்டிட்டு போய் காட்டு. நான் வந்தனாவை அவ ஹோட்டலில் விட்டுட்டு போறேன்" பிறகு வந்தனாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் வந்தனாவிடம், "ஏன் 9/11 சைட்டுக்கு போகலைன்னு ரொம்ப பதட்டத்தோட சொன்னே?" சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "என் அண்ணன் ஸ்பெயினில் இருக்கும் போது அல்-கைதா தீவிரவாதத் தாக்குதலில் இறந்தான். அதை இப்ப நினைச்சாக்கூட .. " என்று மட்டும் சொன்னாள். அவள் அதற்கு மேல் தொடருமுன் சக்தி, "ஓ ஐ அம் சாரி, நீ எப்படி ஃபீல் பண்ணுவேன்னு எனக்கு புரியுது. இட்ஸ் ஓ.கே மேல எதுவும் சொல்ல வேண்டாம்" என்றபடி அருகில் அமர்ந்தவள் கையை பற்றினான். சக்தி, "உனக்கு ஷாப்பிங்க்ன்னா பிடிக்காதா?" வந்தனா, "எனக்கு இப்ப ஷாப்பிங்க் போற மூட் இல்லை" சக்தி, "ஹோட்டலுக்கு போய் என்ன பண்ணப் போறே?" வந்தனா, "தெரியலை. எதாவுது படிச்சுட்டு இருப்பேன்" சக்தி, "உனக்கு வேற எதாவுது இடத்துக்கு போகணும்ன்னு இருக்கா?" வந்தனா, "ஆக்சுவலா, சென்ட்ரல் பார்க் ரொம்ப தூரமா?" சக்தி, "ம்ம்ம் .. கொஞ்சம் தூரம்தான், ஒண்ணு செய்யலாம். உன் ஹோட்டலில் காரை நிறுத்திட்டு சப்வேல போலாம். உனக்கும் சப்வே பழக்கமான மாதிரி இருக்கும். அடுத்த ரெண்டு வாரமும் டாக்ஸியை மட்டும் நம்பி இருந்தா ரொம்ப செலவு ஆகும். Besides, சப்வேல போனா சீக்கரமா போலாம்" ஆறு மணிவரை நேரம் போனது தெரியாமல் பேசியபடி சென்ட்ரல் பார்க்கை சுற்றி திரிந்தனர். வந்தனா தன் மனதில் சக்தியிடம் தோன்றிய இனம் புரியாத நெருக்கத்தை மறைக்க முயன்று தோற்றாள். அவளை அறியாது அவன் கைகளை, புஜத்தை பற்றுவதும் பிறகு உணர்ந்து விடுவிப்பதுமாக நடந்தாள். சக்தி அவளது அவஸ்தையை கவனித்தாலும் ஓரளவு நெருங்கிய நண்பனைப் போல் மட்டும் பேசியபடி அவளுடன் நடந்தான். தன்னிடம் அவள் நெருக்கமாக பழக முயல்வதை நன்கு உணர்ந்தான். இருப்பினும் அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்பதையும் உணர்ந்தான். ஏற்கனவே இருந்த அவனது முன் எச்சரிக்கை உணர்வு அவர்களின் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் ஆரம்பித்ததில் இருந்து பன் மடங்காகி இருந்தது. 'இவள் எனக்கு வேண்டும்' என்று மனதின் ஒரு பாதி கூக்குரலிட்டாலும் மறு பாதி அபாய மணிகளை ஒலித்த வண்ணம் இருந்தது. தீபாவை அழைத்துச் சென்ற நித்தினும் இதே அலைக்கழிப்புக்கு உள்ளானான். அவள் அரசாங்க வேலையில் சேர்ந்ததற்கு அவள் சொன்ன காரணங்கள் எதையும் அவன் மனம் ஏற்கத் தயாராக இல்லை. உணவருந்தும் போது அவர்கள் எஃப்.பி.ஐயில் எடுத்துக் கொள்ளப் போகும் ட்ரெயினிங்க்கை பற்றி சக்தி விவரம் கேட்க இருவரும் சொன்னவற்றில் பல ஓட்டைகள் இருந்ததை கண்டான். இருப்பினும் தீபாவிடம் அவன் ஈர்க்கப் படுவதை தவிர்க்க முடியாமல் தவித்தான். சக்தியை போல் அல்லாமல் அவளிடம் துளியும் தன் நெருக்கத்தை அவன் காட்டாவிட்டாலும் அவள் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு உரிமையுடன் உறவாடுவதை மனதுக்குள் மிகவும் ரசித்தான். சென்ட்ரல் பார்க்கில் இருந்து சக்தியும் வந்தனாவும் மில்லினியம் ஹில்டன் ஹோட்டலை அடைந்து பிரிய மனமில்லாமல் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருக்கையில் நித்தின் தீபாவுடன் வந்து சேர்ந்தான். நால்வரும் பிறகு சந்திப்போம் என்று விடை பிரிந்தனர். லிஃப்டில் இருக்கும் போதே தீபா பேச்சைத் தொடங்கினாள்: தீபா, "எப்படி இருந்துது சென்ட்ரல் பார்க்?" வந்தனா, "டைம் ஸ்கொயர் எப்படி இருந்துது?" இருவர் முகத்திலும் இனம் புரியாத நாணம். தீபா, "Do IPS officers also blush? (ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கூட வெட்கத்தில் முகம் சிவக்குமா?") வந்தனா, "நீ மட்டும் என்ன? மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிச்ச மாதிரி உன் முகம் பிரகாசிக்குது." தீபா, "ஓ.கே. ஐ லைக் நித்தின். ஐ லை ஹிம் அ லாட். ஒத்துக்கறேன். ஆனா நானாத்தான் அவன் கிட்ட வலிய பேச வேண்டி இருக்கு. அவனுக்கும் என் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குன்னு நல்லா தெரியுது. ஆனா அவன் எப்பவும் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணறான். இப்ப நீ உண்மையை சொல்லு உனக்கு சக்தியை ரொம்ப பிடிச்சு இருக்குதானே?" வந்தனா, "ஆமா. அவனை மாதிரி ஒருத்தனை எந்த பொண்ணுக்கும் பிடிக்கும்" தீபா, "கம் ஆன் வந்தனா! நமக்குள்ள ஒளிவு மறைவு வேண்டாம். ப்ளீஸ்" வந்தனா, "ம்ம்ம்ம்... ரொம்ப பிடிச்சு இருக்கு. ஆனா நீ சொன்ன மாதிரி ஃப்ரெண்ட் அப்படிங்கற எல்லைக் கோட்டை கொஞ்சமும் தாண்டலை. ஆனா சக்தி ஏன் அப்படி நடந்துக்கறான்னு எனக்கு தெரியும்" தீபா, "நம் வேலையைப் பத்தி சொன்னதை அவன் நம்பலை. சரியா?" வந்தனா, "நாம் பொய் சொல்றோம்ன்னு அவனுக்கு நல்லா தெரியுது" தீபா, "என்ன பண்ணலாம்?" வந்தனா, "தெரியலை தீபா" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நித்தின் அவனது ஃப்ளாட்டை அடைந்த பிறகு சக்தியை கை பேசியில் அழைத்தான். சக்தி, "என்னடா?" நித்தின், "How was Central Park?" (எப்படி இருந்தது சென்ட்ரல் பார்க்?)" சக்தி, "How do you like Deepa? (தீபா எப்படி இருந்தா?)" நித்தின், "ம்ம்ம்ம் .. ஐ லைக் ஹர். ரொம்ப பிடிச்சு இருக்கு. வாட் அபௌட் யூ?" சக்தி, "எனக்கும் வந்தனாவை ரொம்ப பிடிச்சு இருக்கு .. ஆனா" நித்தின், "ஆனா எதையோ மறைக்கற மாதிரி இருக்கு இல்லையா?" சக்தி, "எஸ். ஒண்ணு நிச்சயம். அது அவங்க ரெண்டு பேரும் செய்யும் வேலை சம்பத்தப் பட்டதுங்கறது தெளிவா தெரியுது" நித்தின், "என்ன பண்ணலாம்?" சக்தி, "தெரியலைடா"16 August 2008 9 AM FBI New York Field Office, 23rd Floor, Federal Plaza, NY ஆகஸ்ட் 16 2008 காலை 9 மணி எஃப்.பி.ஐ நியூ யார்க் கிளை, 23ம் தளம், ஃபெடரல் ப்ளாஸா கட்டிடம், நியூ யார்க் சொன்னது போல் காலை எட்டரை மணிக்கு சான்ட்ரா ஆஸ்டின் அவர்களை ஹோட்டலில் இருந்து அழைத்துப் போக வந்து இருந்தாள். சான்ட்ரா, "நேத்து எப்படி இருந்தது உங்கள் சுற்றுலா?" வந்தனா, "நல்லா என்ஜாய் பண்ணினோம்" சான்ட்ரா, "எப்ப எல்லிஸ் ஐலண்டில் இருந்து திரும்பி வந்தீங்க?" தீபா, "ரெண்டு மணி இருக்கும்" சான்ட்ரா, "அதுக்கு அப்பறம் என்ன பண்ணினீங்க" வந்தனா, "ஸோஃபியா'ஸ் ஆஃப் லிட்டில் இட்டலி என்கிற ரெஸ்டாரண்டில் லஞ்ச் சாப்பிட்டோம்" என்ற பிறகு சற்று தயங்கியபின் "அப்பறம் நான் என் ஃப்ரெண்ட்கூட சென்ட்ரல் பார்க்குக்கு போனேன். இவ அவ ஃப்ரெண்ட்கூட டைம் ஸ்கொயர்ல ஷாப்பிங்க் பண்ணப் போனா" சான்ட்ரா, "ஓ, உங்களுக்கு இங்க ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா. இந்தியர்களா?" தீபா, "ஆமா, இந்தியாவில் இருந்து ஒரு வருஷ ஆன்-சைட் அசைன்மென்ட்டில் வந்து இருக்காங்க" என்றபடி நித்தின் பணி புரியும் அமெரிக்க கம்பெனியின் பெயரை சொன்னாள். சான்ட்ரா, "குட், இங்கே உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்கறது ஒரு விதத்தில் நல்லதுதான்" தீபா, "ஏன்?" சான்ட்ரா, "ரெண்டு வாரத்துக்கு மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி கத்துக்கறதுக்கு ஒண்ணும் இல்லை. இந்த வாரம் மாங்க்ச் பாட் நெட்டை பத்தி எங்களுக்கு தெரிஞ்ச விஷயம் எல்லாம் சொல்லப் போறோம். அடுத்த வாரம் வேட்டையை எந்த கோணத்தில் எல்லாம் செய்யலாம்ன்னு டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கப் போறோம். அவ்வளவுதான். பாக்கி எல்லாம் நீங்க இந்தியாவுக்கு போய் தொடரப் போறீங்க" வந்தனா, "அப்ப நீதான் அடுத்த ரெண்டு வாரம் எங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டை பற்றி விளக்கப் போறயா?" சான்ட்ரா, "நானும் தான். இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை முதலில் இருந்து ட்ராக் பண்ணிட்டு வந்தது என் சீனியர் ஷான் ஹென்றி (Shawn Henry). ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்துதான் நான் அவருக்கு கீழ வேலை செய்ய ஆரம்பிச்சேன். நீங்க அவரைத்தான் முதலில் மீட் பண்ணப் போறீங்க" வந்தனா, "சோ, சான்ட்ரா? நீ எஃப்.பி.ஐ ஃபீல்ட் ஏஜண்டா? (Are you an FBI field agent?)" சான்ட்ரா, "ஃபீல்ட் ஏஜண்ட் பதவிதான். ஆனா நானும் தீபாவைப் போலத்தான்" தீபா, "அப்படின்னா?" சான்ட்ரா, "டெக்னிகல் எஜுகேஷன் (Technical Education) முடிச்சுட்டு நேரடியா எஃப்.பி.ஐயில் சைபர் க்ரைம் பிரிவில் சேர்ந்தேன்" தீபா, "ஏன் உனக்கு மைக்ரோஸாஃப்ட் மாதிரி கம்பெனில வேலை செய்ய பிடிக்கலையா?" சான்ட்ரா, "எனக்கு விருப்பம் இல்லை. சம்பளமும் அவ்வளவு வித்தியாசம் இல்லை. கூகிளில் கிடைச்சு இருந்தா சேர்ந்து இருப்பேன்" எஃப்.பி.ஐ அலுவலகத்தை அடைந்து அவர்களுக்கென கணிணிகள் சகிதம் ஒதுக்கப் பட்டு இருந்த கான்ஃபரென்ஸ் ரூமை அடைந்தனர். சிறிது நேரத்தில் தொடக்கத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்பு வரை மாங்க்ஸ் பாட் நெட்டை கண்காணித்து வந்த ஷான் ஹென்றி (Shawn Henry) வந்தார். ஷான் ஹென்றி, "ஹாய் வந்தனா, தீபா, எப்படி இருக்கீங்க? ஹோட்டல் வசதியா இருக்கா? வந்தனா, "ஹெல்லோ சார். ரொம்ப வசதியா இருக்கு சார்." ஷான், "'சார்' போட்டு கூப்பிட வேண்டாம் ஷான் அப்படின்னு பெயர் சொல்லி கூப்பிடுங்க" வந்தனா, "ஓ.கே ஷான். " ஷான், "நீ ஒரு பயிற்சி பெற்ற போலீஸ் அதிகாரின்னு கேள்விப் பட்டேன். நானும் உன்னைப் போலத்தான். போலீஸ் வேலையில் இருந்து சைபர் க்ரைமுக்கு வந்தவன். தீபா, நீ சான்ட்ரா மாதிரி காலேஜ் முடிச்சதும் R&AWவில் சேர்ந்தேன்னு கேள்விப் பட்டேன்" தீபா (தன் புராணம் அவருக்கு தெரியவில்லை என்ற பெருமூச்சுடன்), "எஸ் ஷான்" ஷான், "ஸோ, ஷால் வீ ஸ்டார்ட்?" வந்தனா, "எஸ் ... ப்ளீஸ்" ஷான், "முதல் முதலா மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி அதை உருவாக்கினவங்களே ஹாக்கர்கள் மத்தியில் அறிவிச்சாங்க. கில்9 (KILL9), மோர்லா (M0RLA) அப்படிங்கற ஐ.டி உபயோகிக்கும் ரெண்டு பேர் இதை உருவாக்கி இருக்காங்க. இந்த கில்9ம் மோர்லாவும் ஏற்கனவே ஹாக்கர்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமானவங்க. " என்றவரை இடைமறித்து தீபா, "ஷான், இவங்க ரெண்டு பேரும் அந்த கொரியன் கம்பெனி நடத்தின ஹாக் செய்யும் போட்டியில் ... " என்ற பிறகு "சாரி, நீங்க பேசும் போது குறுக்கே பேசிட்டேன். நீங்க கண்டின்யூ பண்ணுங்க ..." ஷான், "யெஸ், நீ சொல்றது சரிதான். நீ குறுக்கே பேசினதைப் பத்தி எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. இன் ஃபாக்ட், நானே முழுக்க முழுக்க விளக்கிட்டு க்ளாஸ் எடுக்கற மாதிரி இல்லாமல் ஒரு உரையாடல் மாதிரி இருந்தா யாருக்கும் தூக்கம் வராது. எனக்கு அந்த போட்டியைப் பத்தி முழுசா தெரியாது. நீயே சொல்லேன்" தீபா உடனே கில்9ம் மோர்லாவும் சேர்ந்து கொரிய நாட்டு கம்பெனி நடத்திய கண் துடைப்புப் போட்டியில் எப்படி அவர்களின் கண் துடைப்பை பகிரங்கப் படுத்தினார்கள் என்று விளக்கினாள். மற்ற மூவரின் முகத்திலும் ஆச்சர்யம் படர்ந்தது. ஷான், "ஸோ, நாம் எப்படிப் பட்டவங்களை ட்ரேஸ் அவுட் பண்ணும் முயற்சியில் இறங்கி இருக்கோம்ன்னு இப்ப தெரிஞ்சு இருக்கும். இல்லையா" வந்தனா, "சார், ஒரு சின்ன சந்தேகம். அவங்களோட ஹாக்கர் ஐ.டியே தெரிஞ்சு இருக்கும் போது அவங்களை ட்ரேஸ் அவுட் பண்ண முடியாதா?" ஷான், "நாம் ஒவன் வாக்கரை எப்படி ட்ரேஸ் அவுட் பண்ணினோம்? அவன் AKBOTக்கு கொடுக்கும் ஆணைகள் உங்களுக்கு முதலில் தெரிஞ்சுது. பிறகு அந்த ஆணை எந்த கணிணியில் இருந்து வருதுன்னு தேடினோம். அந்த மாதிரி ஒரு க்ளூவும் கிடைக்கலைன்னா? கில்9, மோர்லா இது ரெண்டும் ரெண்டு பெயர்கள் அவ்வளவுதான். அவங்களை நேரடியா அணுக முடியாது. அவங்க மெயில் ஐ.டி, ஃபோன் நம்பர் இதெல்லாம் யாருக்கும் தெரியாது." தொடர்ந்து, "இன்னொரு விஷயம் கொஞ்ச நாளா ஹார்ஷ்7 அப்படிங்கற ஒரு பிரபலமான ஹாக்கரும் மாங்க்ஸ் பாட் நெட்டில் சம்மந்தப் பட்டு இருக்கறதா எனக்கு ஒரு ஃபீல்ட் ரிப்போர்ட் வந்தது" தீபா (கண்கள் அகல!), "வாட்? ஹார்ஷ்7ஆ? (You mean THE one and only HARSH7?)" ஷான், "எஸ் ... அதுவும் இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி நாங்க சந்தேகப் படாம இருக்க ஒரு காரணம்" வந்தனா, "எனக்கு புரியலை .. " ஷான், "ஹார்ஷ்7 எந்த விதமான சட்ட விரோதமான செயல்களிலும் ஈடு படாத ஒரு ஹாக்கர். அதே சமயம் அவன் தன்னை எதிகல் ஹாக்கர் அப்படின்னும் விளம்பரப் படுத்திக்கறது இல்லை. ஏன்னா, எதிகல் ஹாக்கர்களுக்கு வருமானம் கம்மி. ஆனா, ஹார்ஷ்7 வெவ்வேறு தளங்களிலும் ஹாக்கர்கள் தாக்கக் கூடிய விஷயங்களை கண்டு பிடித்து அதை உலகுக்கு அறிவிக்காமல் அந்த வலை தளங்களின் சொந்தக்காரர்கள்கிட்டயே பேரம் பேசி அவங்களுக்கு காட்டி உதவுவான். வேற வழி இல்லாமல் அவங்களுக்கு பணம் கொடுப்பாங்க. ஆனா இது வரைக்கும் எந்த தளத்தையும் அவன் தாக்கினது இல்லை. இதனாலயே அவன் ரொம்ப பிரபலமாயிட்டான். இப்ப எல்லாம் சில நிறுவனங்கள் தானா அவனை தொடர்பு கொண்டு அவங்க தளங்களில் இருக்கும் ஓட்டையை கண்டு பிடிக்க சொல்லி பணம் கொடுக்கறாங்க" தீபா, "எனக்கு ஹார்ஷ்7 பத்தி நல்லா தெரியும். அவர் இதில் சம்மந்தப் பட்டு இருக்கார்ன்னா நிச்சயம் மாங்க்ஸ் பாட் நெட் எந்த விதமான சட்ட விரோத செயலிலும் ஈடு பட்டு இருக்க மாட்டாங்க" வந்தனா, "அப்படியே இருக்கட்டும். முதலில் இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி முழுசா தெரிஞ்சுக்கலாமா?"ஷான், "எஸ், அவங்க அறிவிக்கும் போதே ஏறக்குறைய 20,000 கணிணிகள் இந்த மாங்க்ஸ் பாட் நெட் ஆக்கரமிச்சு இருந்துது. இந்த வைரஸ் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் அப்படின்னு அப்ப ஒரு ஆன்லைன் டெமோ கொடுத்தாங்க. கூடவே, மாங்க்ஸ் பாட் நெட் விளம்பர ஈமெயில் (ஸ்பாம் மெயில்) அனுப்புவதை தவிர வேறு எதுக்கும் பயன் படுத்தப் போறது இல்லைன்னு ஹாக்கர்கள் மத்தியில் ஒரு அறிக்கையும் கொடுத்தாங்க. வைரஸ் மெதுவா இணையத்தில் பரவ ஆரம்பிச்சுது. மாங்க்ஸ் பாட் நெட் பெரிசாக ஆரம்பிச்சுது. அவங்க சொன்ன படி ஸ்பாம் மெயில் மட்டும் இந்த மாங்க்ஸ் பாட் நெட் மூலம் அனுப்பப் படுது. வேறு எந்த விதமான தகவல் திருட்டும் நடக்கற மாதிரி தெரியலை" வந்தனா, "அவங்க வைரஸ் மூலம் எந்த மாதிரி செயல்களை செய்ய முடியும்ன்னு விளக்கி சொல்லறீங்களா?" ஷான், "மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் பல வேலைகள் செய்யும்" என்றபடி சான்ட்ராவை நோக்கி தலையசைக்க அவர்களுக்கு எதிரே இருந்த திரையில் ஒரு ப்ரெஸெண்டேஷன் ஓடத் துவங்கியது. ஷான் திரையைக் காட்டியபடி தொடர்ந்தார், அது ஆக்ரமித்த கணிணிக்கு எந்த விதமான ஆணையும் அதனால் கொடுக்க முடியும். அதிலும் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு என்ன்ன்னா அந்த ஆணை அந்த கணிணியை உபயோகிப்பவர் கொடுத்த மாதிரி விண்டோஸுக்கு கொடுக்க முடியும். இந்த அம்சத்தின் மூலம் ஒரு கணிணியில் இருக்கும் தகவல்கள் அத்தனையும் அழிக்கணும்ன்னாலும் அதனால் முடியும். அதுவும் அந்த வைரஸ் அதுவா போய் அழிக்கத் தேவையில்லை. அழிப்பதற்கு அது விண்டோஸுக்கு ஆணை இடும்; விண்டோஸும் கணிணியை உபயோகிப்பவர் அந்த ஆணையை கொடுத்தார் என்று தப்பா புரிஞ்சுட்டு எல்லாத்தையும் அழிச்சுடும். தற்கொலை செஞ்சுக்கற மாதிரி! அருகில் இருக்கும் கணிணிகளுக்கும் கணிப் பொறிகளுக்கும் எந்த விதமான ஆணையையும் அது கொடுக்க முடியும். இணையத்தில் கணிணிகளை இணைக்க ரௌட்டர், ப்ரிட்ஜ்ன்னு பல கணிணி மாதியான பொறிகள் இருக்கு. இதுக்கு எல்லாம் இதனால் ஆணைகள் கொடுக்க முடியும். இந்த மாதிரி ஆணைகள் மூலம் ஒரு நெட்வொர்க்கை பயன் இல்லாமல் செய்ய முடியும். ஆக்கிரமிச்ச கணிணியில் ஸ்டோர் ஆகி இருக்கும் எந்த தகவலையும் மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யும் சர்வருக்கு அனுப்ப முடியும். இந்த அம்சம் பொதுவா எல்லா பாட் நெட்டிலையும் இருக்கும். இதை வெச்சுத்தான் நிறைய க்ரெடிட் கார்ட் விவரத் திருட்டு நடக்குது. அது ஆக்கிரமித்த கணிணியில் ஸ்டோர் செஞ்சு வைத்து இருக்கும் ஈமெயில் ஐடிகளை உபயோகிச்சு அந்த ஈமெயில் ஐடிக்கு தன்னிச்சையா ஈமெயில் அனுப்ப முடியும். அது அனுப்பும் ஈமெயில் மூலமே அதால மத்த கணிணிகளுக்கு பரவ முடியும். நான் சொன்ன நாலு அம்சங்களில் முதல் ரெண்டும் ரொம்ப அபாயகரமான அம்சங்கள். ஒரு கணிணிக்குள் மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் புகுந்தப்பறம் அந்த வைரஸ்ஸை கண்டு பிடிச்சு அகற்றினால் ஒழிய அதை தடுக்க முடியாது. ஆனா, கடைசி அம்சத்தை தவிர மத்த மூணும் அவங்க டெமான்ஸ்ட்ரேட் பண்ணின பிறகு உபயோகிக்கலை. இது வரைக்கும் எங்களால இதோட கன்ட்ரோல் சர்வரை கண்டு பிடிக்க முடியலை. ஆனா எங்க அலுவலகத்தில் தனி நெட் கனெக்ஷனோட இருக்கும் ஒரு கணிணியில் மாங்க்ஸ் பாட் நெட்டை புகுத்தி இருக்கோம். அது என்ன செய்யுதுன்னு தொடர்ந்து மானிடர் பண்ணிட்டு இருக்கோம்.” தொடர்ந்து ஒவ்வொரு அம்சங்களையுன் அடுத்த மூன்று நாட்களும் விரிவாக அலசி ஆராய்ந்து விவாதித்தனர். வந்தனாவும் தீபாவும் அந்த அம்சங்களை முழுவதுமாக புரிந்து கொண்டனர். இரண்டு நாட்களும் சக்தி, நித்தின் இருவரும் தொடர்பு கொள்ளவில்லை. வந்தனா, தீபா இருவருக்கும் அவர்களுடன் பெச வேண்டும் என்று இருந்தாலும் அவர்களே அழைக்கட்டும் என்று காத்து இருந்தனர். செவ்வாய் அன்று இரவு உணவை முடித்த பிறகு தோழிகள் இருவரும் கனத்த மனத்துடன் தங்கள் கைபேசியின் அழைப்புக்கு காத்து இருந்தனர். தீபா, "நாம் கூப்பிடணும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க" வந்தனா, "ஆமா" தீபா, "நீ என்னமோ பண்ணிக்கோ நாளைக்கு நானே நித்தினைக் கூப்பிடப் போறேன்" வந்தனா சக்தியை மனதுக்குள் திட்டியபடி மௌனமாக இருந்தாள். புதனன்று மதியம் தீபா நித்தினை அவன் கைபேசியில் அழைத்தாள் நித்தின், "ஹாய் தீபா, கட் பண்ணிட்டு அங்கே இருக்கும் லாண்ட் லைன் நம்பரில் இருந்து கூப்பிடு. இல்லைன்னா பில் பழுத்துடும்" என்று அவனே காலை கட் செய்தான். சற்றும் யோசிக்காமல் தீபா அவகளுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் இருந்த தொலைபேசியில் இருந்து அவனை அழைத்தாள். நத்தின், "ஹெல்லோ ..." தீபா, "நித்தின், நான் தீபா .. " நித்தின், "எப்படி இருக்கே? உன் ட்ரெயினிங்க் செமினார் எப்படி போயிட்டு இருக்கு?" தீபா, "ம்ம்ம் ... கோயிங்க் ஆன்" நித்தின், "ஸோ?" தீபா, "ஒண்ணும் இல்லை சும்மாத்தான் கூப்பிட்டேன்" நித்தின், "ம்ம்ம் சொல்லு" தீபா, "நீ ரொம்ப பிஸியா?" நித்தின், "ரொம்ப பிஸின்னு சொல்ல முடியாது. வொர்க் பண்ணற ப்ராஜெக்ட் சீரான வேகத்தில் போயிட்டு இருக்கு." தீபா, "ஓ .." நித்தின், "அப்பறம்?" தீபா, "வந்து ... இன்னைக்கு சாயங்காலம் நீ ஃப்ரீயா?" நித்தின், "ஃப்ரீயா இருந்தாலும் ஷாப்பிங்க் பேக் சுமந்து கிட்டு கடை கடையா நடக்க எனக்கு விருப்பமில்லை" தீபா, "ஷாப்பிங்க் ஒண்ணும் வேண்டாம் .. வேற எங்கேயாவுது கூட்டிட்டு போறியா?" நித்தின், "வேற எங்கேயாவுதுன்னா?" தீபா, " எங்கேயாவுது டின்னருக்கு போலாமா?" நித்தின் (சற்று யோசித்த பிறகு), "நான் இன்னைக்கு வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்ன்னு இருந்தேன். உனக்கு உங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நல்ல சாப்பாடு கிடைக்கும்" தீபா, "எனக்கும் ஸ்பெஷலா சாப்பிடணும்ன்னு இல்லை" நித்தின், "ஏன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு அதுக்குள்ள அலுத்துப் போச்சா?" தீபா, "நித்தின்! ப்ளீஸ்" நித்தின், "என்ன?" தீபா, "உன் கூட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு கேட்டேன்" நித்தின், "ஏன் உன் ஃப்ரெண்ட் ரொம்ப போரடிக்கறாளா?" தீபா (சற்று தடுமாறிய பிறகு), "இல்லை அவ இன்னைக்கு எங்கேயோ வெளில போறா" நித்தின், "எங்கே?" தீபா, "தெரியலை. யாரோ அவ ஃப்ரெண்ட்கூட" நித்தின், "ஸோ, உனக்கு தனியா இருக்க போரடிக்கும் அதனால் தான் என்னை கூப்படறே. இல்லையா?" தீபா, "ஏய், அப்படி இல்லை. வந்தனா எங்கேயும் வெளில போலேன்னாலும் நான் உன்னை இன்னைக்கு கூப்படலாம்ன்னு இருந்தேன்" நித்தின், "உன் ஃப்ரெண்டை அம்போன்னு தனியா விட்டுட்டு வரலாம்ன்னு இருந்தியா?" தீபா, "ஹூம்ம்ம் .. க்ர்ர்ர்ர் ... சரி, இதை மட்டும் சொல்லு. நீ சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் உன் ஆஃபீஸ்லதானே இருப்பே?" நித்தின், "ஆமா ... " தீபா, "அஞ்சு மணிக்கு நான் உன் ஆஃபீஸ் வாசலில் உன்னை மீட் பண்ணறேன். எதாவுது சைட் கேட் வழியா போயிடலாம்ன்னு பாக்காதே" நித்தின், "சைட் கேட் வழியா போனா என்ன பண்ணுவே" தீபா, "உன் ஆஃபீஸ் வாசலில் நின்னுட்டே இருப்பேன் ... நீ நாளைக்கு காலைல திரும்ப ஆஃபீஸ் வர்ற வரைக்கும்" தொண்டை அடைக்க அந்தக் கணம் நித்தின் பேச்சிழந்தான் ... நித்தின், "வெளிய நிக்காதே. உள்ளே ரிஸப்ஷனுக்கு வா .. " தீபா, "சரி .. " என்றபடி ஃபோனை வைத்தாள். அருகில் இருந்த வந்தனாவிடம், "நீ யார்கூடயோ வெளில போறதா சொல்லி இருக்கேன். எதுக்கும் நீயும் ரெடியா இரு" வந்தனா, "ஏன் ?" தீபா, "நான் பொய் சொல்றது அவனுக்கா தெரியாம இருக்கும்? நீ சொல்லற அளவுக்கு சக்திக்கு உன் மேல் இன்ட்ரெஸ்ட் இருந்தா நிச்சயம் உன்னை சக்தி கூப்பிடுவான். அது மட்டும் இல்லை. அவங்க ரெண்டு பேரும் எங்கேயோ டின்னருக்கு போறதா இருந்தாங்கன்னு நினைக்கிறேன். நித்தினுக்கு பதிலா நீ சக்திகூட போ" அவள் சொன்னதில் வந்தனாவின் மனம் குதூகலித்தது.தீபாவிடம் பேசிய சில நிமிடங்களில் நித்தின் சக்தியுடன் பேசினான். நித்தின், "சக்தி, நான் இன்னைக்கு ஜாஷ்வா வீட்டுக்கு வரலை. இப்ப நான் சொன்னா சஞ்சனா கத்துவா" சக்தி, "ஏண்டா?" நித்தின், "நான் தீபாவை கூட்டிட்டு டின்னருக்கு போறேன்" சக்தி, "அப்படி ப்ளான் இருந்து இருந்தா முதல்லயே சொல்லி இருக்கலாம் இல்லையா? பாவம் சஞ்சனா நீ வருவேன்னு இன்னைக்கு நார்த் இண்டியன் ஐடம் எதோ செய்யப் போறேன்னு சொல்லிட்டு இருந்தா" நித்தின், "நான் ப்ளான் பண்ணலை. அந்த பிசாசுதான் ஃபோன் பண்ணி ஆஃபீஸ் வாசலில் தவம் கிடப்பேன்னு பயமுறுத்தினா" சக்தி, "ஸோ, நீ மனம் இளகி ஒத்துகிட்டியாக்கும். சும்மா ஓட்டாதடா" நித்தின், "சரி, சாரி .. எனக்கே அவளை இன்னைக்கு கூப்பிட்டு பேசணும்ன்னுதான் இருந்துச்சு. ஆனா அவ என்னை விட ஜெட் வேகத்தில் டின்னருக்கு போலாம்ன்னு முடிவு பண்ணிட்டா. பட், நான் ஒண்ணு சொல்லட்டுமா?" சக்தி, "என்ன?" நித்தின், "நீ வந்தனாவை ஜாஷ் வீட்டுக்கு கூட்டிட்டு போயேன். Both Josh and Sanjana will like her company" சக்தி, "அவ ஃப்ரீயா இருப்பாளா?" நித்தின், "நிச்சயமா .. என் கூட வரணுங்கறதுக்காக வந்தனா அவ ஃப்ரெண்ட்கூட வெளிய போறதா தீபா ஒரு மைல் நீளத்துக்கு புளுகினா. வந்தனா தனியாதான் இருப்பா" சக்தி, "சரி, முதல்ல நான் ஜாஷ்கிட்டயும் சஞ்சனாகிட்டயும் கேட்டுட்டு அப்பறம் அவளுக்கு ஃபோன் பண்ணறேன்" மாலை நான்கு மணி ... வந்தனாவுக்கு எதிலும் ஆர்வம் இல்லை. தன் கைபெசியை சில நிமிடங்களுக்கு ஒரு முறை அருகே இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். நாலரை மணிக்கு தீபாவிடம், "என்ன தீபா கிளம்பலையா?" தீபா, "இல்லை வந்தனா, ஒரு ஆர்வத்தில் நித்தினை கேட்டுட்டேன். கூடவே சக்தியையும் கூட்டிட்டு வான்னு சொல்லி இருக்கணும். உன்னை தனியா விட்டுட்டு நான் போகலை" வந்தனா, "ஏய், நான் இப்ப ஹோட்டலுக்கு போய் என் கிட்ட லண்டன் ஏர்போர்ட்டில் வாங்கின புக் இன்னும் திறக்காம இருக்கு. எடுத்து படிக்க ஆரமிச்சேன்னா நேரம் போறதே தெரியாது. நீ போய்ட்டு வா. கம் ஆன்! கிளம்பு!!" தீபா, "உனக்கு ஓ.கேவா?" வந்தனா, "நோ பராப்ளம் .. யூ கேரி ஆன்" ஐந்து மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஹோட்டல் அறையை அடைந்தாள். தன் மீது சக்திக்கு ஆர்வம் இல்லை என்று அவள் மனம் ஏற்க மறுத்தது. வெகு நாட்களுக்கு பிறகு அவள் கண்கள் கலங்கின. விட்டத்தைப் பார்த்தபடி படுத்து இருந்தாள். அறையில் இருந்த தொலைபெசி ஒலித்தது .. சக்தி, "ஹாய் வந்தனா. எப்படி இருக்கே?" வந்தனா, "ஹாய் ஷக்தி. ஐ ஆம் ஃபைன். நீ?" சக்தி, "ஐ அம் டூயிங்க் குட். எப்படி போகுது உன் ட்ரெயினிங்க்?" வந்தனா, "ம்ம்ம் .. கோயிங்க் ஆன் .. " சக்தி, "என்ன ஃப்ரெண்டுகூட இன்னைக்கு வெளிய போறியா?" வந்தனா, "ம்ம்ம் .. ஆமா .. எதுக்கு கேக்கறே?" சக்தி, "ஓ, இன்னைக்கு நானும் நித்தினும் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு டின்னருக்கு போறதா ப்ளான். அவன் தீபாகூட டின்னர் போறேன்னுட்டு போயிட்டான். நீ தனியா இருப்பியே கூட்டிட்டு போலாமேன்னு நினைச்சேன். என் ஃப்ரெண்ட்கிட்டயும் அவன் மனைவிகிட்டயும் பேசின பிறகு உன்னை கூப்பிட்டேன். பரவால்ல. இன்னொரு நாள் பார்க்கலாம், ஓ.கே தென்" வந்தனா, "ஷக்தி ... வெய்ட் .. " அவள் அவனை அழைத்தது அலறியது போல இருந்தது சக்தி, "என்ன?" வந்தனா, "வந்து நான் என் ஃப்ரெண்ட்கூட வேற ஒரு நாள் போயிக்கறேன். உன் ஃப்ரெண்ட் வீட்டுக்கே போலாம்" சக்தி, " .... " வந்தனா, "என்ன ஷக்தி?" சக்தி, "உன் வேலையை பத்தி கேட்டேன். எதோ சொல்லி மழுப்பினே. நான் மேற்கொண்டு எதுவும் கேட்கலை. பட், இந்த சின்ன விஷயத்தில் கூட ஏன் வெளிப்படையா பேச மாட்டேங்கறேன்னு யோசிக்கறேன்" வந்தனா (கோபம் ஆதங்கம் எல்லாமும் கலந்து தொண்டை கறகறக்க), "சாரி .. " சக்தி, " ... " வந்தனா, "உன் காலுக்காக ரொம்ப் நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அஞ்சு மணி வரைக்கும் நீ கூப்பிடலைன்னு எனக்கு கோபமா வந்தது. நான் ஆஃபீஸ்ல இருந்து இப்ப ஹோட்டலுக்கும் வந்து சேர்ந்தாச்சு." சக்தி, "தெரியும் .." வந்தனா, "எப்படி?" சக்தி, "இப்ப நான் கீழ ரிஸப்ஷனில் இருந்துதானே பேசிட்டு இருக்கேன். ஒருத்தர் வீட்டுக்கு டின்னருக்கு போகும்போது எப்படியும் நீ ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு போகணும்ன்னு விருப்பப் படுவேன்னு நினைச்சேன். அதான் நேரா இங்கே வந்துட்டேன்" வந்தனா, "சாரி, .. " சக்தி, "அப்ப தீபா நித்தின் கிட்ட நீ ஃப்ரெண்டுகூட வெளிய போறதா சொன்னது பொய்தானே?" வந்தனா, "ஆமா .. நித்தின் கூட வெளிய போறதுக்காக அவ அப்படி பொய் சொன்னா" சக்தி, "ஏன் சினேகிதிகள் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பொய் சொல்லறீங்களோ" வந்தனா, "ஓ ப்ளீஸ் ஷக்தி, தனியா உக்காந்து இருந்த வெறுப்பில் நீ அப்படி கேட்டதும் நான் கோபத்தில் சொன்னேன். ஐ அம் சாரி." சக்தி, "சரி .. ரெடியாகி கீழ வா" வந்தனா, "முதல்லயே மொபைலில் கூப்பிட்டு சொல்லி இருந்தா நான் ரெடியா இருந்து இருப்பேன். இப்ப நீ வெயிட் பண்ணனும். கிவ் மீ ஃபிஃப்டீன் மினிட்ஸ்" சக்தி, "பரவால்லை. நான் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு எட்டு மணிக்குதான் வர்றதா சொல்லி இருக்கேன்" வந்தனா மனதுக்குள், 'மடையா நான் சொன்னது அதுக்கு இல்லை. நீ இப்ப வெயிட் பண்ணும் நேரமும் நான் உன்னோட இருந்து இருக்கலாம்ன்னு சொன்னேன்' பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அழகான சுடிதாரில் வந்தனா வந்தாள். சக்தி, "வாவ், யூ லுக் கார்ஜஸ் (Wow, you look gorgeous)" தன்னை அலங்கரித்துக் கொண்ட விதம் அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. சக்தியின் கண்கள் அவளை மொய்ப்பதை கண்டு முகம் சிவந்தாள். வந்தனா, "போலாமா ..?" சக்தி, "பக்கத்தில் இருக்கும் ஷாப்பிங்க் செண்டருக்கு போயிட்டு போலாமா. எனக்கு அங்கே சில ஐடம்ஸ் வாங்கணும்" வந்தனா, "ஓ எஸ்" என்று அவள் தலையாட்டிய போது அலை அலையாக விரித்து விட்டு இருந்த அவள் கூந்தலும் காதுகளின் அணிந்து இருந்த ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியதில் சில கணங்கள் லயித்தான். இருவரும் அருகில் இருந்த ஷாப்பிங்க் செண்டருக்கு சென்றனர். சென்ற முறை அவர்கள் நயாகரா சென்று இருந்த போது தன் கூலிங்க் க்ளாஸ் உடைந்து போனதை சஞ்சனா கூறியதை நினைவு கூர்ந்து ஒரு கூலிங்க் க்ளாஸ் வாங்கினான். பிறகு அருகே இருந்த ஒயின் கடையில் ஒரு ரெட் ஒயின் பாட்டில் வாங்கினான். காரில் செல்லும் போது வந்தனா யார் அந்த நண்பன் என்று கேட்பதற்கு முன்பு ஜாஷ்வா-சஞ்சனாவிடம் சொல்லி இருந்தபடி சஞ்சனாவை தற்செயலாக சந்தித்ததாகவும் அவள் மூலம் ஜாஷ்வாவை சந்தித்ததாகவும் சரளமாகப் பொய் சொன்னான். ஆனால், தீவிரவாதிகளை அவள் வெறுப்பதை உணர்ந்து முன் கூட்டியே அவளை தயார் படுத்தும் விதத்தில் சஞ்சனாவின் வரலாற்றை சொன்னான். அவன் சொல்லி முடித்ததும் வந்தனாவுக்கு உடனே சஞ்சனாவை பார்க்க வேண்டும் என்று மனத்தில் ஒரு ஆவல். ஜாஷ்வாவின் வீட்டை அடைந்தனர். சஞ்சனா (தமிழில்), "வா அண்ணா, வா வந்தனா" தொடர்ந்து குழப்பத்துடன் சக்தியை பார்த்த வந்தனாவிடம், "உனக்கு தமிழ் தெரியாதா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள் இல்லை என்று தலையாட்டியபடி வந்தனா, "சுத்தமா தெரியாது" சஞ்சனா, "அண்ணான்னா தமிழில் மூத்த சகோதரன்" என்ற பிறகு சக்தியை பார்த்து "அப்ப இவ என் வீட்டுக்காரரைவிட மோசம்" சக்தி, "எங்கே என் மச்சான்?" சஞ்சனா, "அய்யோ! நீ மச்சான்னு அவர்கிட்ட சொல்லி வைக்காதே. நேத்து தான் மாமன் மச்சான் உறவை பத்தி பேசிட்டு இருக்கும் போது, தமிழில் உன்னை மச்சான்னு கூப்பிடுன்னு சொல்லி இருக்கேன். நீ இப்ப அவரை மச்சான்னு கூப்பிட்டா என் கிட்ட அது எப்படி தான் தானே உன்னை அப்படி கூப்பிடணும்ன்னு மறுபடி விளக்கம் கேக்க ஆரம்பிச்சுடுவாரு" சக்தி, "நான் அவனை மாமான்னும் கூப்பிடலாம் மச்சான்னும் கூப்பிடலாம்ன்னு சொல்லலையா?" சஞ்சனா, "ம்ம்ம் அவருக்கு புரியற மாதிரி கம்ப்யூடர் பாஷைல நீயே சொல்லு. நடுவில் தமிழில் பேசினதுக்கு சாரி வந்தனா, .. சக்தி, இன்னைக்கு நைட்டு வரைக்கும் இங்கிளீஷ் தான் ஓ,கே?" வந்தனா, "பரவால்லை .. நானும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன்" என்றவளை சஞ்சனா சற்று வியப்புடன் பார்த்தாள் பேசிக்கொண்டு இருக்கையில் அமர உள்ளே இருந்து வந்த ஜாஷ்வாவை சஞ்சனா அறிமுகப் படுத்தி வைக்க வந்தனா வாயடைத்துப் போனாள். சக்தி ஜாஷ்வா ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்கன் என்று சொல்ல மறந்து இருந்தான். ஜாஷ்வா, "ஹாய் வந்தனா, "எப்டி இருக்கே (தமிழில்)" என்றதும் மேலும் கண்கள் விரிய பார்த்த வந்தனாவிடம் சக்தி, "சாரி சொல்ல மறந்துட்டேன்" என்று முணு முணுத்தான் சஞ்சனா, "யோவ், அவளுக்கு தமிழ் தெரியாது!" ஜாஷ்வா, "ஓ சாரி வந்தனா, சக்தி நீ சொல்லவே இல்லையே" சக்தி, "நான் நிறைய விஷயம் சொல்லலை. நீயா எதுக்கு அஸ்ஸ்யூம் பண்ணிக்கறே" ஜாஷ்வா, "இல்லை நீ இவளை டின்னருக்கு அழைச்சுட்டு வரேன்னு சொன்னப்ப உனக்கு அவ ரொம்ப க்ளோஸ்ன்னு நினைச்சேன். அட் லீஸ்ட் உன் குரலில் இருந்து எனக்கு அப்படி தோணுச்சு. சோ, அவளும் தமிழ் நாட்டில் இருந்து வந்து இருக்கான்னு அனுமானம் பண்ணிட்டேன்" சஞ்சனா, "ஹெல்லோ சார், தமிழ் தெரிஞ்சாதான் க்ளோஸா? இப்ப நீயும் நானும் க்ளோஸ் இல்லையா?" சக்தி உட்கார்ந்த இடத்தில் நெளிவதை ரசித்த சஞ்சனா வந்தனாவின் முகம் மேலும் சிவப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவனிடம், "நான் சொல்றது சரி தானே?" இந்திய ஜோடி பேசாமல் சிரித்து மழுப்பியது. கல கலப்பான பேச்சுடன் டின்னர் முடிந்தது. சஞ்சனா செய்து இருந்த ஐஸ் கிரீம் வகை ஒன்றை சாப்பிட்டபடி அமர்ந்து இருந்த போது சஞ்சனா, "சோ என் மச்சான் உன் ஃப்ரெண்ட்கூட டின்னர் போயிருக்கானா?" வந்தனா, "யாரு?" சஞ்சனா, "நித்தின், இவருக்கு உடன் பிறவா சகோதரன்" வந்தனா, "ஆமா .. என் ஃப்ரெண்டுதான் இன்னைக்கு உங்க ப்ரோக்ராம் சேஞ்ச் ஆனதுக்கு முக்கிய காரணம்" சஞ்சனா, "அண்ணா, இவங்க ரெண்டு பேரையும் இந்த வீக் எண்ட் கூட கூட்டிட்டு போலாமா?" சக்தி, "இந்த வீக் எண்ட் உன் ப்ரோக்ராம் என்ன வந்தனா?" வந்தனா மனதுக்குள் 'முழுக்க முழுக்க உன்னோட இருக்கணும்ன்னு ஆசைப் பட்டேன்' என்றபடி, "நத்திங்க் ஸ்பெஷல்" சக்தி, "எதுக்கும் நித்தின் தீபாவையும் கேட்டுக்கலாம்" என்றபடி கைபேசியில் நித்தினை அழைத்தான். டின்னர் முடித்தபின் மௌனமாக தங்களது நெருக்கத்தில் திளைத்தபடி நடந்து கொண்டு இருந்தவர்களை நித்தினின் கைபேசி தரை மட்டத்திற்கு கொண்டு வந்தது. நித்தின், "என்ன சக்தி? எங்கே இருந்து பேசறே?" சக்தி, "ஜாஷ் வீட்டில் இருந்து. உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்"
நித்தின், "என்ன?" சக்தி, "இந்த வீக் எண்ட் லேக் ஜார்ஜ் ரிசார்ட்டுக்கு வந்தனாவையும் தீபாவையும் கூட்டிட்டு போலாமா?" நித்தின், "நானும் அதைதான் நினைச்சுட்டு இருந்தேன். வந்தனாவுக்கு ஓ.கேதானே?" சக்தி, "அவளுக்கு ஓ.கே" நித்தின், "அப்ப தீபாவுக்கும் ஓ.கேவாதான் இருக்கும்" என்றபடி அருகில் இருந்தவளிடன், "இந்த வீக் எண்ட் லேக் ஜார்ஜ் கிட்ட ஒரு ரிஸார்ட்டுக்கு போறதுக்கு உனக்கு ஓ.கேவா?" அவன் புஜங்களை பற்றி நடந்த வண்ணம் வேகமாக தலையசைத்த தீபாவை ரசித்தபடி, "இந்த பிசாசுக்கு ஓ.கே .. ஏய், வலிக்குது" என்று தீபா கிள்ளியதில் கத்தினான். சிரித்த படி இணைப்பை துண்டித்த சக்தி, "அவங்க ரெண்டு பேருக்கும் ஓ.கே. எக்ஸ்ட்ரா ஒரு ரூமுக்கு ஏற்பாடு பண்ணனும்" சஞ்சனா, "அதை நான் பாத்துக்கறேன். வந்தனா, வெள்ளிக் கிழமை நீயும் தீபாவும் கொஞ்சம் சீக்கரமா ஆஃபீஸ்ல இருந்து புறப்பட முடியுமா? ஒரு மூணு மணி வாக்கில்?" வந்தனா, "ம்ம்ம் .. முடியும்" சஞ்சனா, "அண்ணா, எல்லாம் ஒரே கார்ல போலாம்ன்னு இருந்தோம். இப்ப நித்தின் தன் டூ சீட்டர் ஸ்போர்ட்ஸ் காரில் ஹைவேல போகணும்ன்னு ஆசைப் பட்ட படி தீபாவை கூட்டிட்டு அவன் காரில் போகட்டும். நாம் நாலு பேரும் எங்க காரில் போலாம். நீ வந்தனாவை பிக் அப் பண்ணிட்டு இங்கே அஞ்சு மணிக்கு முன்னாடி வந்துடணும். நாம் நாலு பேரும் அஞ்சு மணிக்கு புறப்பட்டா எட்டு எட்டரைக்கு ரிஸார்ட்டில் இருப்போம். ஒன்பது மணிக்குள்ள அந்த வெல்கம் டின்னருக்கு போக முடியும்" சக்தி, "நீ என்னோட ப்ராஜெக்ட் மேனேஜரா வந்து இருக்கணும்" சஞ்சனா, "அண்ணா நீ ஒரேயடியா காலை வாராதே" ஜாஷ்வா, "நோ ஹனி! அவன் சொல்றது சரிதான்" வந்தனா, "ஏன்?" ஜாஷ்வா, "நிச்சயமா. ஜஸ்ட் சுற்று முற்றும் பாரு. என் வீட்டில் எலலாம் எவ்வளவு நீட்டா எடுத்து வைச்சு க்ளீனா இருக்கு? எல்லாம் அவளோட மேற்பார்வை, என்னோட கடுமையான உழைப்பு" சஞ்சனாவின் பொய்க் கோபத்தை பொருட் படுத்தாத சக்தி, "சொல்ல மறந்துட்டனே. வந்தனாவும் மேனேஜர் மெடீரியல்தான்" இப்போது வந்தனாவின் முகத்தில் அந்த பொய்க் கோபம் குடி கொண்டது. இரவில் ஹோட்டல் அறையில் பேசிக் கொண்டது தீபா, "ஹேய், எப்படி இருந்தது உன் ஈவினிங்க்." வந்தனா, "நல்லா இருந்துச்சு. I really enjoyed" தீபா, "சாரி, சக்திகூட உன்னால தனியா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலை தானே? வந்தனா, "அப்படி இல்லை. போகும் போது வரும் போது எல்லாம் தனியாதானே இருந்தோம். பட், ஜாஷ்வா, சஞ்சனா கூட இருக்கும் போது என் குடும்பத்தோட இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க். கூட சக்தியும் இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு" தீபா, "ஹெய், நித்தின் சஞ்சனாவைப் பத்தி சொன்னான். ரொம்ப பாவம் இல்லை?" வந்தனா, "ஆமா, இருந்தாலும் அவ்வளவு கஷ்டத்தில் இருந்து விடுபட்டு வாழணும் அப்படிங்கற வைராக்கியம் அவ முகத்தில் தெரியுது. அதே சமயத்தில் அவளை இந்த அளவுக்கு முன்னுக்கு கொண்டு வந்த ஜாஷ்வா மேல அவ வெச்சு இருக்கும் அன்பு, பாசம் அதே மாதிரி ஜாஷ்வாவுக்கு அவகிட்ட இருக்கும் அன்னியோன்னியம் ரொம்ப டச்சிங்க்கா இருக்கு. உண்மையை சொல்லட்டுமா? அவங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு ரோல் மாடல் கப்பிள் ஆயிட்டாங்க. அவங்களை மாதிரி இருக்கணும்ன்னு இருக்கு" தீபா, "யார் கூட?" வந்தனா, "ம்ம்ம் தெரியாதாக்கும்" தீபா, "அப்பறம் ஏன் வாயை திறந்து சொல்ல மாட்டேங்கறே? இன்னும் சக்தி உனக்கு ஏத்தவனான்னு சந்தேகமா இருக்கா?" வந்தனா, "சே! அப்படி இல்லை. சக்திக்கு என்னை முழுசா பிடிச்சு இருக்கான்னு சந்தேகமா இருக்கு" தீபா, "ஏன்?" வந்தனா, "நாம் அன்னைக்கு டிஸ்கஸ் பண்ணினமே? அதேதான். இன்னைக்கு நேரடியாவே நான் என் வேலையை பத்தி மழுப்பறேன்னு சொல்லிட்டான்" தீபா, “என் ஆளு அப்பப்ப வாழைப் பழத்தில் ஊசி ஏத்தற மாதிரி எதாவுது கமெண்ட் அடிச்சுட்டுத்தான் இருக்கான். ஆனா இன்னைக்கு ஒரு பெரிய இம்ப்ரூவ்மென்ட்!” வந்தனா, “என்ன?” தீபா, “அவங்க அப்பாவைப் பத்தி, அம்மா ஆக்ஸிடெண்டில் இறந்து போனதைப் பத்தி எல்லாம் பேசிட்டு வந்தான். ஒரு விஷயம் தெரியுமா? எங்க அப்பாவுக்கு அவனோட அப்பாவை தெரியும்! ரெண்டு பேரும் லாயர்ஸ். அவனோட அப்பா இண்டர்நேஷனல் சிவில் லாயர் எங்க அப்பா க்ரிமினல் லாயர். இருந்தாலும் சில கேஸ்ல ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணி இருக்காங்க!” வந்தனா, “ஸோ, ஃபேமிலி அளவுக்கு நெருக்கம் வந்துடுச்சுன்னு சொல்லு” தீபா, “நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும்போது நானே அவன் கிட்ட ப்ரோபோஸ் பண்ணலாம்னு இருக்கேன். எதாவுது முரண்டு பிடிச்சான்னா, நேரா எங்க அப்பாகிட்ட போய் அவனோட அப்பா கிட்ட பேச சொல்லிடுவேன் அப்படின்னு பயமுறுத்தப் போறேன்!” வந்தனா, “சரியான புல் டோஸர் நீ!”அடுத்த நாள் ஷானும் சான்ட்ராவும் அவர்கள் மங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் செயல் முறைகளை விளக்கினார்கள், ஷான், “மாங்க்ஸ் பாட் நெட் பாதிக்கப் பட்ட ஒரு கணிணியில் இருந்த வைரஸ்ஸோட காப்பி ஒண்ணு எடுத்து ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கேன். அதை ஒரு தனி நெட் கனெக்ஷன் இருக்கும் கணிணியில் புகுத்தி என்ன பண்ணுதுன்னு கண்காணிக்கறோம்” தீபா, “நாங்களும் அந்த காப்பியையே இன்னும் ஒரு காப்பி எடுத்துட்டு போய் எங்க ஆஃபீஸ்ல இருக்கும் கணிணியில் புகுத்தி கண் காணிக்கறோம்” சான்ட்ரா, “தப்பி தவறி கூட ஒரு நெட்வொர்க்கில் (LANஇல் இணைத்து) இருக்கும் கணிணியில் புகுத்தக் கூடாது. எப்படி பரவுதுன்னே தெரிய மாட்டேங்குது. ஒரு கணிணியில் புகுந்த ஒரு மணி நேரத்தில் அந்த LANஇல் இருக்கும் சர்வர்கள் உள்பட, எல்லா கணிணியிலும் புகுந்து இருக்கும்” ட்ரேஸ் அவுட் புலியான வந்தனா, “என்னென்ன ஆக்டிவிடீஸ்ஸை (செயல்களை) கண் காணிக்கறீங்க?” ஷான், “அந்த வைரஸ்ஸுக்கு இணையம் மூலம் ஆணைகளை வருவதை பாக்க முடியுது. ஆனா அந்த வைரஸ் விண்டோஸுக்கும் பிறப்பிக்கும் ஆணைகளை கண்காணிப்பது முடியாத ஒரு காரியம்.” வந்தனா, “சாண்ட் பாக்ஸ் உபயோகிச்சா?” சான்ட்ரா, “ம்ம்ஹூம் .. வைரஸ் பிறப்பிக்கும் ஆணைகளுக்கும் மத்த மென்பொருள்கள் பிறப்பிக்கும் ஆணைகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. பல சமயங்கள் மத்த மென் பொருள் கொடுப்பது போல் அந்த வைரஸ் ஆணை பிறப்பிக்குது” வந்தனா, “அந்த வைரஸ்ஸை மட்டும் ஐஸொலேட் பண்ணினா?” ஷான், “ஹார்ட் டிஸ்கில் இருக்கும் வைரஸ்ஸை நீ ஐஸொலேட் பண்ண முடியும். ஒன்ஸ் விண்டோஸ் இயங்க ஆரம்பிச்சுடுச்சுன்னா வைரஸ் இயங்கிட்டு இருக்குங்கறதுக்கு எந்த தடயமும் இல்லை” தீபா, “ஓ இட்ஸ் அ பாரஸைட் கோட்? (Oh, it is a parasite code? – மற்ற மென்பொருள்களுடன் தன்னை பொருத்திக் கொண்டு இயங்கும் மென்பொருள்)” சான்ட்ரா, “பாரஸைட் அண்ட் ம்யூடண்ட் கொட் (parasite and mutant code - மற்ற மென்பொருள்களுடன் தன்னை பொருத்திக் கொண்டு இயங்கும் அடிக்கடி உருமாறும் மென்பொருள்)” தீபா, “வாவ்! “ வந்தனா, “அப்ப எப்படித்தான் ட்ராக் பண்ணறது?” ஷான், “வைரஸ் எப்படி செய்யுதுன்னு பார்க்கறதை விட்டுட்டோம். அது விளைவிக்கும் செயல்கள், கணிணியில் ஏற்படுத்தும் மாற்றங்கள், மற்றும் வெளியுலகுடன் அதன் தகவல் பரிமாற்றம் இவைகளை மட்டும் கவனிச்சுட்டு வர்றோம்” தீபா, “என்ன மாதிரி தகவல் பரிமாற்றங்கள் ஏற்படுது?” சான்ட்ரா, “ஒண்ணு, அதுக்கு வரும் ஆணை, ரெண்டாவுது அது கொடுக்கும் பதில்கள், மூணாவது வைரஸ் புகுந்த மற்ற ஒரு கணிணிக்கு அது அனுப்பும் தகவல்கள்” வந்தனா, “அதுக்கு சர்வர்கிட்ட இருந்து வருவதைதானே ஆணைன்னு சொல்றீங்க?” ஷான், “அப்படித்தான் யூகிச்சு இருக்கோம். ஏன்னா, வைரஸ் புகுந்த மற்ற கணிணிகளிடம் இருந்துதான் அந்த வைரஸ்ஸுக்கு இது வரைக்கும் ஆணைகள் வந்து இருக்கு” தீபா, “ஓ, சர்வர் ஒரு கணிணிக்கு அனுப்பும் ஆணையை மத்த கணிணிகளுக்கு வைரஸ் அனுப்புதா?” சான்ட்ரா, “ஆமா .. “ வந்தனா, “அப்ப எதோ ஒண்ணு ரெண்டு கணிணிகளுக்குத்தான் சர்வர்கிட்டே இருந்து நேரடியா ஆணை வரும். இல்லையா?” ஷான், “ஆமா .. அதனால்தான் அதன் கன்ட்ரோல் சர்வரை கண்டு பிடிப்பது அசாத்தியம்ன்னு ஓவன் வாக்கர் சொன்னான்” தீபா, “அந்த ஆணைகளை ஆராய்ந்து பாத்தீங்களா?” சான்ட்ரா, “ம்ம்ம் .. ஒரு அளவுக்கு. எந்த மாதிரி ஆணை வந்தா அது ஈமெயில் அனுப்புதுன்னு தெரியுது. அதை தவிர அட்டெண்டன்ஸ் எடுக்கற மாதிரி சில சமயம் ஆணைகள் வருது. அதுக்கு அந்த வைரஸ்ஸும் ‘உள்ளேன் அய்யா’ அப்படின்னு சொல்ற மாதிரி பதில்களை அனுப்புது. இந்த ரெண்டு விதமான பரிமாற்றங்களை தவிர வேறு எந்த விதமான ஆணையோ பதிலோ நாங்க இது வரை பார்க்கலை” வந்தனா, “அப்ப அந்த ஆணைகளையும் பதில்களையும் டீகோட் பண்ணலையா?” ஷான், “நோ! இதுவரைக்கும் எங்களால டீகோட் பண்ண முடியலை .. அவங்க உபயோகிக்கும் அல்காரிதம் ரொம்ப காம்ப்ளிகேட்டட். நீ வேணும்ன்னா முயற்சி செஞ்சு பாரு.” அன்று அதற்கு பின் தீபாவும் வந்தனாவும் மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ்ஸுடன் விளையாடத் தொடங்கினர். தீபா, “இதுக்கு ஆணைகள் வந்துட்டே இருக்கு. அதுவும் வெளியே மெஸ்ஸேஜஸ் அனுப்பிட்டே இருக்கு பாரேன்” வந்தனா, “ஷான் சொன்ன மாதிரி சாண்ட் பாக்ஸில் அது என்ன பண்ணுதுன்னு ஒண்ணும் புரியலை. எல்லாம் விண்டோஸோட சர்வீஸ்ஸ் ரன்னாகிட்டு இருக்கற மாதிரி இருக்கு” தீபா, “கணிணிக்கு உள்ளே என்னவெல்லாம் பண்ணுதுன்னு நாம் டெல்லிக்கு போய் குடையலாம். இப்போதைக்கு இருக்கும் நேரத்தில் அதோட தகவல் பரிமாற்றத்தில் மட்டும் கான்ஸென்ட்ரேட் பண்ணலாம்” வந்தனா, “பண்ணலாம் ஆனா அதுக்கு வரும் தகவலோ அது அனுப்பும் தகவலோ ஒண்ணும் புரிய மாட்டேங்குதே” தீபா, “சும்மா ஒரு விளையாட்டு விளையாடலாம்” வந்தனா, “என்ன?” தீபா, “அதுக்கு வரும் தகவலை அதுகிட்ட போறதுக்கு முன்னாடி கொஞ்சம் மாத்தலாம்” வந்தனா, “எதை மாத்துவே?” தீபா, “அது என்னன்னே தெரியாது. சும்மா நாலஞ்சு எழுத்துக்களை மாத்தலாம். முதலில் இருக்கும் எழுத்துக்களை மாத்த வேண்டாம். அனேகமா முதலில் ஃப்ரம் அண்ட் டூ அட்ரெஸ் இருக்கும். கடைசியில் சில எழுத்துக்களை மாத்தலாம்” வந்தனா, “சரி, அதுக்கு வரும் மெஸ்ஸேஜை மட்டும் இல்லை. அது அனுப்பும் மெஸ்ஸேஜையும் மாத்தலாம். மாத்திட்டு என்ன பண்ணுதுன்னு பாக்கலாம். நீ அது அனுப்பும் மெஸ்ஸேஜஸ்ஸை மாத்து நான் அதுக்கு வரும் மெஸ்ஸேஜுகளை மாத்தறேன். அதுக்கு அப்பறம் கண்காணிக்கலாம்” அன்று முழுவதும் இப்படி அவர்கள் ஒன்று இரண்டு முறை செய்த பிறகு கண்காணித்தபடி இருந்தனர். அன்று மாலைவரை ஒரு மாற்றமும் இல்லை. அடுத்த நாள் (வெள்ளிக் கிழமை) காலை அவர்கள் அன்று மாலை செல்லும் பயணத்துக்கு தேவையானவற்றை பாக் செய்து, எடுத்து செல்வதற்கு தயாராக வைத்து விட்டு அலுவலகத்தை அடைந்தனர். தங்களது அறைக்கு வந்து அந்த கணிணியை கண்காணிக்க தொடங்கிய போது அவர்களுக்காக ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. அந்த கணிணியில் இருந்த வைரஸ் தன்னை தானே அழித்துக் கொண்டு இருந்தது! மறுபடி தீபா அந்த கணிணிக்குள் வைரஸ்ஸை புகுத்தினாள். அதுவும் தான் புதிதாக புகுத்தப் பட்டு இருப்பதை பிரகடனப்படுத்துயது. ஆனால் அதற்கு ஒரு மெஸ்ஸேஜும் வரவில்லை. அது எந்த மெஸ்ஸேஜையும் அனுப்பவும் இல்லை!! தோழிகள் இருவரும் அதை ஆராய்ந்தனர். பிறகு கரைபுரண்டோடும் உற்சாகத்துடன் தங்கள் புதுக் கண்டு பிடிப்பை பகிர்ந்து கொள்ள ஷானையும் சான்ட்ராவையும் அழைத்து நடந்ததை விவரித்தனர். ஷான், “இது ஒரு புது திருப்பம். இதில் இருந்து நமக்கு தெரிய வருவது என்ன?” சான்ட்ரா, “மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் ஒரு கணிணியில் இருந்து (அதாவது அதில் இருக்கும் வைரஸ்ஸில் இருந்து) போகும் மெஸ்ஸேஜை டேம்பர் (tamper – கொச்சையாக சொன்னால் நோண்டி பார்ப்பது) செய்தால் அதன் பிறகு அந்த கணிணியை மாங்க்ஸ் பாட் நெட்டே விலக்கி விடுகிறது” தீபா, “அது அதை உருவாக்கினவங்க எடுத்த முடிவு!” ஷான், “என்ன சொல்றே?” வந்தனா, “நாங்க இன்கமிங்க் மெஸ்ஸேஜையும் அவுட்கோயிங்க் மெஸ்ஸேஜையும் டாம்பர் பண்ணினதுக்கு அப்பறம், உன்னை அழிச்சுக்கோன்னு அதுக்கு ஒரு ஆணை வந்து இருக்கு. அந்த மாதிரி ஒரு ஆணைக்கு பதிலா கணிணியில் இருப்பதை அழின்னும் வரலாம் இல்லையா?” ஷான், “மை காட்! நிச்சயம் இவனுக அஹிம்சாவாதிகள் தான். இதுவே சில வக்கிர புத்தி இருக்கும் ஹாக்கர்ன்னா நீ ரெண்டாவதா சொன்னபடி தான் ஆணை கொடுத்து இருப்பாங்க” தீபா, “ஷான், ஆனா நாங்க சொல்ல வந்தது அது இல்லை” சான்ட்ரா, “பின்னே என்ன?” வந்தனா, “அந்த மாதிரி ஒரு ஆணை நிச்சயம் சர்வரில் இருந்துதான் வந்து இருக்கும். இதை வெச்சு சர்வரை ட்ரேஸ் பண்ண முடியும்” ஷான், “ஓ எஸ்! யூ கால்ஸ் ஆர் ப்ரில்லியண்ட்! (Oh Yes! You gals are brilliant!!)” தீபா, “Sorry to dampen your spirits Shawn. It is possible, but not easy” (உங்கள் உற்சாகத்துக்கு தடைபோடறதுக்கு மன்னிக்கணும். முடியும் ஆனா அவ்வளவு சுலபம் இல்லை)” சான்ட்ரா, “ஏன்?” வந்தனா, “நாங்க டாம்பர் பண்ணின கணிணிக்கு அன்னைக்கு நைட்டு வரைக்கும் பல மெஸ்ஸேஜஸ்கள் வந்துட்டு இருந்து இருக்கு. அதில் ஒரு மெஸ்ஸேஜ்தான் சர்வர்கிட்ட இருந்து நேரடியா வந்த ஆணை. அது எதுன்னு முதலில் கண்டு பிடிக்கணும்” தீபா, “அது மட்டும் இல்லை ஒரு மெஸ்ஸேஜை மட்டும் வெச்சு ட்ரேஸ் அவுட் பண்ண முடியாது. எத்தனை ப்ராக்ஸி சர்வருக்கு பின்னாடி அவங்க சர்வர் இருக்குன்னு தெரியாது. நமக்கு பல மெஸ்ஸேஜுகள் தேவைப் படும் (for triangulation we need many messages – ட்ரையாங்குலேஷன் எனப்படுவது மின் தகவல்கள் எங்கு இருந்து வருகின்றன என்பதை கண்டு பிடிக்க பயன் படுத்தப் படும் ஒரு செயல்பாட்டு முறை)” ஷான், “இருந்தாலும் ஒரு விதத்தில் நாம் சர்வரை நேரடியா மெஸ்ஸேஜ் அனுப்ப வைக்க முடியும் அப்படிங்கறதை கண்டு பிடிச்சு இருக்கீங்க. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம்ன்னு யோசிக்கலாம்” வந்தனா, “அதை திங்கள் கிழமை பார்க்கலாமா ஷான்? நாங்க இன்னைக்கு சீக்கரமா புறப்படணும்” ஷான், “அடுத்த வாரம் உங்களுக்கு ஒரு வேலையும் இருக்காதுன்னு நினைச்சுட்டு இருந்தோம். ஹாட்ஸ் அஃப் டு யூ போத்! சரி, திங்கள் கிழமை பார்க்கலாம்” சரியாக நாலு மணிக்கு நித்தினும் சக்தியும் அவர்களை அழைத்து செல்ல வந்தனர். நித்தின், தீபா ஜோடி லேக் ஜார்ஜை நோக்கி புறப்பட, சக்தி வந்தனாவை அழைத்துக் கொண்டு ஜாஷ்வாவின் வீட்டை நோக்கி புறப்பட்டான். சஞ்சனா சொன்னபடி ஐந்து மணிக்கு ஜாஷ்வாவின் காரில் லேக் ஜார்ஜ் நோக்கி பயணித்தனர். பயணம் முழுவதும் சஞ்சனா, வந்தனா மற்றும் சக்தி பேசிக் கொண்டு வந்தாலும் ஜாஷ்வா வழக்கத்துக்கு மாறாக மௌனம் காத்தான். சக்தி, “என்ன ஜாஷ், காரோட்டும் போது சரளமா பேசிட்டே ஓட்டுவே. என்ன இன்னைக்கு ரொம்ப கான்ஸென்ட்ரேட் பண்ணி ஓட்டறே? நான் வேணும்ன்னா கொஞ்சம் தூரம் ஓட்டிட்டு வரட்டுமா?” சஞ்சனா, “விடுண்ணா, அய்யா ஆஃபீஸ்ல இருந்து வந்ததில் இருந்தே என்னவோ மூட் அவுட். அங்க போனதுக்கு அப்பறம் சரியாயிடுவாரு” எட்டு மணிக்கே லேக் ஜார்ஜில் இருக்கும் ஹாலிடே இன் ரிஸார்ட்டை அடைந்தனர். மூன்று அறைகளுக்கு சாவியுடன் நித்தின் வாசலில் காத்து இருந்தான். ஜாஷ்வா பெண்கள் மூவரையும் பார்த்து, “கால்ஸ், நீங்க மூணு பேரும் ரூமுக்கு போய் ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு டின்னருக்கு போங்க. நாங்க மூணு பேரும் தண்ணி அடிக்க போறோம்” சஞ்சனா, “என்னப்பா இது திடீர்ன்னு? நம்ம ப்ரோக்ராம்ல இது இல்லையே. நாளைக்கு சாயங்காலம் போங்களேன்” ஜாஷ்வா, “நோ! எனக்கு இப்ப தண்ணி அடிக்கணும்” சஞ்சனாவின் முகம் சுருங்கியது. சக்தி, “என்ன ஜாஷ் இது?” சஞ்சனா ஜாஷ்வாவை தனியே அழைத்துச் சென்றாள். சற்று நேரத்திற்கு பிறகு திரும்பியவள் முகத்தில் பழைய உற்சாகத்துடன், “வந்தனா, தீபா, ஜாஷ்வா சொல்றதும் சரிதான். இன்னைக்கு சாயங்காலம் நம்ம மூணு பேரும் கொட்டம் அடிக்கலாம். அவங்க மூணு பேரும் தனியா கொட்டம் அடிக்கட்டும்” ஜாஷ்வா, நித்தின், சக்தி மூவரும் அந்த பெரிய ரிஸார்ட்டில் இருந்த பாரில் ஒரு மூலையில் இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தனர். சக்தி, “என்ன ஜாஷ் திடீர்னு?” நித்தின், “ஆக்சுவலா எனக்கு தண்ணி அடிக்கற மூட் இல்லை” ஜாஷ்வா, “உங்க ரெண்டு பேர் முகத்திலும் ஏமாற்றம் எழுதி ஒட்டி இருக்குது. ஆனா ஒரு முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கணும். அதுக்கு தான் நான் அப்படி அவங்க கிட்ட இருந்து உங்களை கழட்டிட்டு வந்தேன்” நித்தின், “என்ன விஷயம்?” சக்தி, “எனி ப்ராப்ளம்?” ஜாஷ்வா, “தீபாவும் வந்தனாவும் இந்தியாவோட R&AWவின் சைபர் க்ரைம் பிரிவில் வேலை செய்யறவங்க. அதை விட முக்கியமா, மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டை ஆடும் பொறுப்பை எடுத்துக்கறதுக்காக இங்கே வந்து இருக்காங்க”ஜாஷ்வா, “தீபாவும் வந்தனாவும் இந்தியாவோட R&AWவின் சைபர் க்ரைம் பிரிவில் வேலை செய்யறவங்க. அதை விட முக்கியமா, மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டை ஆடும் பொறுப்பை எடுத்துக்கறதுக்காக இங்கே வந்து இருக்காங்க” சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தது ... மௌனத்தை கலைத்த சக்தி, "இது மாதிரி தான் இருக்கும்ன்னு நான் சந்தேகப் பட்டேன். ஆனா, நம் பாட் நெட்டை கண்டு படிக்கும் வேலையை இவங்க ரெண்டு பேரும் செய்யப் போறாங்கங்கன்னு எதிர்பார்க்கலை. சரி, நீ எதையும் தீர விசாரிக்காம சொல்ல மாட்டேன்னு தெரியும். இருந்தாலும், எப்படி உனக்கு தெரிஞ்சுதுன்னு சொல்றயா?" ஜாஷ்வா, “சக்தி, நேத்து நைட்டு சர்வரில் இருந்து ஒரு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் கமாண்ட் (தன்னை தானே அழித்துக் கொள்ள ஆணை) போயிருக்குன்னு சொல்லி ஒரு ஐ.பி அட்ரெஸ் (இணைய விலாசம்) கொடுத்தே இல்லையா?” சக்தி, “ஆமா ..” ஜாஷ்வா, “அது யாரோடதுன்னு விசாரிச்சேன். ஃபெடரல் ப்ளாசா கட்டிடத்தில் இருக்கும் ஃபெஸிலிட்டீஸ் ஸ்டாஃப்கிட்ட (facilities staff) கேட்டபோது அந்த இணைப்பு ‘ஓ.பி.ஆர் 2 இந்தியா டீம்’ இருக்கும் ரூமுக்குன்னு சொன்னாங்க." நித்தின், "ஓ.பி.ஆர் 2?" ஜாஷ்வா, "ஆபரேஷன் பாட் ரோஸ்ட் 2 (Operation Bot Roast II) அப்படிங்கறது AKBOT புகழ் ஓவன் வாக்கரை பிடிச்ச மிஷனோட பெயர். அந்த ரூமில் யார் வொர்க் பண்ணிட்டு இருக்காங்கன்னு விசாரிச்சேன். இந்தியாவில் இருந்து வந்து இருக்கும் ரெண்டு பெண்கள்ன்னு சொன்னாங்க." சக்தி, "இவங்க ரெண்டு பேரைத் தவிர வேறு யாராவுது ... வந்தனா நிறைய பேர் ட்ரெயினிங்கில் கலந்துக்கறாங்கன்னு சொன்னாளே?" ஜாஷ்வா, "நோ! வெளி ஆளுங்க அந்த கட்டிடத்துக்கு நுழையும் போது விசிடர்ஸ் பாஸ் எடுத்துட்டு போகணும். யாராவுது தொடர்ந்து வந்துட்டு போகணும்னா டெம்பரரி ஐ.டி கார்ட் இஸ்ஸ்யூ பண்ணுவாங்க. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேருக்குத்தான் இஸ்ஸ்யூ பண்ணி இருக்காங்க. இதை அங்கே இருக்கும் செக்யூரிடி ஏஜன்ஸிகிட்ட இருந்து தெரிஞ்சுகிட்டேன்." நித்தின், "எப்படி அவங்க மாங்க்ஸ் பாட் நெட் வேட்டைல இறங்கி இருக்காங்கன்னு சொல்றே?" ஜாஷ்வா, "இன்னைக்கு காலைல இருந்து நாலஞ்சு பேர் மூலமா தகவல் சேகரிச்சேன். தீபாவும் வந்தனாவும் AKBOT வேட்டையில் முக்கிய பங்கு ஏற்று இருக்காங்க. மாங்க்ஸ் பாட் நெட்டை சில மாதங்கள் வரைக்கும் எஃப்.பி.ஐயில் இருக்கும் ரெண்டு பேர் கண்காணிச்சுட்டு வந்து இருக்காங்க. ஒரு வருஷமா கண்காணிச்சதில் மாங்க்ஸ் பாட் நெட் மூலம் எந்த விதமான அபாயமும் இல்லைன்னு நம்பறாங்க. இப்போதைக்கு அவங்க ஸ்டார்ம் பாட் நெட்டை(Storm Bot Net)யும் க்ரெடிட் கார்ட் விவரங்களை திருடும் இன்னும் சில பாட் நெட்டுகளையும் தீவிரமா வேட்டை ஆடிட்டு இருக்காங்க. இந்த சமயத்தில் நியூஸ் பேப்பர்காரங்க அரசியல் வாதிகள் எல்லாமா சேர்ந்து சத்தம் போட்டதும் எதாவது செஞ்சாகணும். அதனால இந்தியாவை உதவிக்கு அழைத்து இருக்காங்க. முக்கியமா, முரளீதரன் தலைமையில் இயங்கிய வந்தனா-தீபா டீமை கேட்டு இருக்காங்க. இப்போ அவங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி அவங்களுக்கு தெரிஞ்ச விவரங்களை கொடுத்துட்டு இருக்காங்க. கண்காணிக்கும் பணியையும் கண்டு பிடிக்கும் பணியையும் அவங்க இந்தியா போய் தொடரப் போறாங்க" இந்திய நண்பர்கள் இருவரும் மௌனமாக தலை குனிந்து அமர்ந்து இருந்தனர். ஜாஷ்வா, "நீங்க இந்தியாவில் மேலும் விசாரிச்சா இவங்க ரெண்டு பேரைப் பத்தி முழு விவரமும் தெரியும்" நித்தின், "எனக்கு அவ குடும்ப சரித்திரமே தெரியும். " சக்தி, "அப்படியா?" நித்தின், "எஸ், அவங்க அப்பாவும் ஒரு பிரபலமான லாயர். நேத்து சாயங்காலம் அப்பாகிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் கிட்ட காஷுவலா கேட்டேன். எங்க அப்பாவுக்கு அவரை நல்லா தெரியும். நான் எதோ மழுப்பறேன்னு புரிஞ்சுட்டு அவர் என் கிட்ட அவளை விரும்பறையான்னு நேரடியா கேட்டார். இல்லை, இப்போதைக்கு ஃப்ரெண்டாதான் பழகிட்டு இருக்கேன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் உடனே அவரே அவங்க வீட்டில் போய் பேசி முடிச்சுடுவார்" ஜாஷ்வா, "சக்தி, உன் முகத்தில் ஏமாற்றம் தாண்டவமாடுது. வந்தனா உனக்கு ரொம்ப பொருத்தமானவன்னு சஞ்சனா என் கிட்ட பத்து தடவையாவுது சொல்லிட்டா. நிச்சயம் உங்க ரெண்டு பேர் வீட்டிலும் இதுக்கு ஒரு அப்ஜெக்க்ஷனும் இருக்காது இல்லை?" சக்தி, "எங்க அம்மா என் இஷ்டத்துக்கு எப்பவும் குறுக்கே நின்னது கிடையாது" ஜாஷ்வா, "கய்ஸ், இட்ஸ் ஓ.கே. உங்க ரெண்டு பேருக்கும் அவங்களை பிடிச்சு இருக்கு. அவங்களுக்கும் உங்களை பிடிச்சு இருக்கு. அவங்களோட வேலை உங்க காதலுக்கு இடையூறா இருக்கக் கூடாது. மாங்க்ஸ் பாட் நெட்டால மட்டும் உங்க காதலுக்கு எந்த இடையூறும் வராது. ஆனா நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் அரசாங்கத்தின் கண்களில் சட்ட விரோதமான செயல். உடனே நம் ஆபரேஷனை இழுத்து மூடிடலாம்" இன்னும் சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தது. குறும்பு புன்னகையுடன் சக்தி, "ஜாஷ், நித்தின், மாங்க்ஸ் பாட் நெட்டை அவங்களால கண்டு பிடிக்க முடியும்ன்னு நினைக்கறீங்களா?" ஜாஷ்வா, "இதை பத்தி நாம் முன்னாடி ஒரு தடவை டிஸ்கஸ் பண்ணி இருக்கோம். நிச்சயமா கண்டு பிடிக்க முடியாது." சக்தி, "நீ என்னடா சொல்றே?" நித்தின், "முதல்ல அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா தீபாகூட பழகினதுக்கு அப்பறம் கொஞ்சம் சந்தேகமா இருக்கு ... பாரேன், வந்து ஒரே வாரத்தில் அவ எதையோ நோண்டி இருக்கா சர்வரில் இருந்து ஸெல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் போயிருக்கு. நிச்சயம் சர்வரில் இருந்து நேரடியா போற மெஸ்ஸேஜுன்னு தெரிஞ்சு இருக்கும். அதை வெச்சுட்டு சர்வரை ட்ராக் பண்ண முயற்சிக்கலாம் இல்லையா?" சக்தி, "நானும் அதை யோசிச்சேன். அவங்க நோண்டின கணிணிக்கு வரும் பல மெஸ்ஸேஜ்களுக்கு நடுவே ஒண்ணு சர்வரில் இருந்து போயிருக்கும். முதல்ல அதை அவங்க எதுன்னு கண்டு பிடிக்கணும். அதுக்கப்பறம், ஒரு மெஸ்ஸேஜை வெச்சுட்டு ஒரு மயிரையும் புடுங்க முடியாது. எந்த ஒரு கணிணியையும் அணுக நமக்கு குறைஞ்சது நாலு ரூட் இருக்கும். இது நாம் முதல்லயே மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கும் போது ப்ளான் பண்ணினது. தவிர, Thanks to Joshua's insistence, மூணு ப்ராக்ஸிக்கு பின்னாடி நம் சர்வர் இருக்கு. அதை ட்ரேஸ் அவுட் பண்ண அவங்களுக்கு எக்கச்சக்கமான நேரடி மெஸ்ஸேஜஸ் தேவைப் படும். அத்தனையும் ஒரே நாளில் அனுப்பினதா இருக்கணும். ஏன்னா நாம் டெயிலி ப்ராக்ஸி சர்வரை மாத்தறோம். ஒரு நாள் உபயோகிச்ச ப்ராக்ஸி சர்வரை அடுத்த பதினஞ்சு நாளுக்கு உபயோகிக்கறது இல்லை. இதை எல்லாம் வெச்சு பாத்தா நம் சர்வரை அவங்களால் கண்டு பிடிக்க முடியும்ன்னு எனக்கு தோணலை" ஜாஷ்வா, "அது மட்டும் இல்லை. அவங்க எந்த வழியில் முயற்சி செய்யறாங்கன்னு நமக்கு இப்போ தெரிஞ்சுருச்சு. ஒரு வேளை ஒரே நாளில் நிறைய மெஸ்ஸேஜ் போச்சுன்னா அன்னைக்கே நாம் சர்வரையே மாத்திடலாம்!" நித்தின் (சற்று யோசித்த பிறகு சிரித்தபடி), "எஸ் நீ சொல்றது சரி ... It will be fun to play hide-and-seek with that devil (அந்த பிசாசு கூட கண்ணாமூச்சி ஆட ஜாலியா இருக்கும்) .. " சக்தி, "அப்படியே அவங்க நம் பாட் நெட் சர்வரை கண்டு பிடிக்கறாங்கன்னு வெச்சுக்குவோம். அவங்களுக்கு நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பத்தி தெரிஞ்சுக்க முடியுமா?" நித்தின், "முடிஞ்சு போன ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பத்தி நாமே எங்கேயும் ஸ்டோர் பண்ணி வெக்கறது இல்லையே. அவங்களுக்கு எப்படி தெரியப் போகுது? ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் எப்படி நடக்குதுன்னு முன் கூட்டியே தெரிஞ்சுட்டு, எந்த எந்த கணிணிகள் அதில் இன்வால்வ் ஆகியிருக்குன்னும் தெரிஞ்சுகிட்டு, ஆபரேஷன் நடக்கும் போது கண்காணிச்சாத்தான் கண்டு பிடிக்க முடியும்". சக்தி, "சோ, அப்படி பாட் நெட் சர்வரை கண்டு பிடிக்கும் பட்சத்தில் நாம்தான் பாட் நெட்டை உருவாக்கினோம் அப்படிங்கற விவரம் மட்டும்தான் வெளிய வரப் போகுது. இல்லையா?" ஜாஷ்வா, "நீ சொல்றது சரி சக்தி. நீ எந்த அளவுக்கு வந்தனாவை நேசிக்கறே முதல்ல அதை சொல்லு" சக்தி, "ரொம்ப. அவளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப் படறேன்" ஜாஷ்வா, "அப்ப இதை சொல்லு. நாளைக்கு உனக்கு மனைவியா வரப்போறவகிட்ட உன்னால் நீ செய்யறதை மறைக்க முடியுமா? இல்லை மனைவியானதுக்கு அப்பறம் நீ செஞ்சதை மறைக்க முடியுமா. உன் மனசாட்சி உறுத்தும்" சக்தி, "இப்ப ஆபரேஷனை இழுத்து மூடிட்டா மட்டும் உறுத்தாதா? மூணு மாசமா செஞ்சுட்டுதானே இருக்கோம்?" ஜாஷவா (சற்று நேர யோசனைக்கு பிறகு), "யூ ஆர் ரைட் சக்தி, நான் இந்த கோணத்தில் யோசிக்கலை" சக்தி, "Besides, அடுத்த வாரம் ஒரு ட்ரான்ஸ்ஃபர் செய்யறதுக்கு ஒத்துகிட்டு இருக்கோம். எப்படியோ இறங்கியாச்சு இனி பாதில எதுக்கு விட்டுட்டு போகணும்? ஜாஷ்வா, நாங்க இங்கே இருக்கும் இந்த ஒரு வருஷத்துக்கு அப்பறம் நாம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனை தொடர முடியுமான்னு தெரியலை. நீயே அதை சொன்னே ஞாபகம் இருக்கா? இந்த ஒரு வருஷத்துக்கு அப்பறம் மாங்க்ஸ் பாட் நெட் மட்டும் தான் இருக்கும். இதன் மூலம் நடந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் யாருக்கும் தெரியப் போவது இல்லை. திரும்பிப் போனதும் நாமே வந்தனா-தீபா கிட்ட மாங்க்ஸ் பாட் நெட்டை நாங்கதான் உருவாக்கினோம்னு சொல்லிடலாம்" நித்தின், "சரணடையப் போறியா?" ஜாஷ்வா, "சக்தி சொல்ற லாஜிக் சரிதான். ஆனா எதுக்கு நீங்க சரணடையணும்? மாங்க்ஸ் பாட் நெட்டை என்ன சட்ட விரோதமான செயலில் ஈடு படுத்துனீங்க? அவங்களுக்கு தெரிஞ்ச அளவில் அதால் யாருக்கும் எந்த விதமான நஷ்டமும் இல்லை. எஸ், அதை வெச்சுட்டு நிறைய தீங்கு விளைவிக்கலாம். அப்படி எதுவும் செய்யாமல் பாதுகாத்து இருக்கீங்க. உங்களை பாராட்டுவாங்களே ஒழிய கைது செய்ய மாட்டாங்க"நித்தின், "What about the money we earn .. இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் மூலம் நாம் சம்பாதிக்கும் பணம்? அதை எப்படி மறைக்கப் போறே?" சக்தி, "மாங்க்ஸ் பாட் நெட் மூலம் விளம்பர் ஈமெயில் அனுப்பி சம்பாதிச்சோம்ன்னு சொல்லலாம். ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் தகுந்தா மாதிரி ஈமெயில் அனுப்பினதுக்கு ஆதாரம் தயாரிக்கறது ஒண்ணும் பெரிய வேலை இல்லை. வேணும்ன்னா வருமான வரி கூட கட்டலாம்” ஜாஷ்வா, "இருந்தாலும் சக்தி. உன் மனைவிகிட்டயே மறைக்க வேண்டியதா இருக்கும். பரவால்லையா?" சக்தி, "ஜாஷ், வந்தனா என் கிட்ட எங்கே வேலை செய்யறான்னு மறைக்கலையா?. அப்படியே அவ R&AWவில் வேலை செய்யறதா சொன்னாலும் என்ன வேலைன்னு சொல்ல மாட்டா. R&AWவின் விதி முறைகள் அதுக்கு இடம் கொடுக்காது. நான் அதை புரிஞ்சுக்கத்தான் வேணும் இல்லையா? அவ வேலைக்காக அவளுக்கு ஒரு ஞாயம் எனக்கு ஒரு ஞாயமா? அவ அப்படி நினைப்பான்னு தோணலை. அவளும் என்னை புரிஞ்சிப்பா. நான் சொல்லாத, அவங்களுக்கு தெரியாத, அவங்களால கண்டு பிடிக்க முடியாத ஒண்ணு மூலம் நான் பணம் சம்பாதிச்சேன்னு அவ என் மேல் சந்தேகப் பட எந்த காரணமும் இல்லை. என்னால் யாருக்கும் எந்த நஷ்டமோ கெடுதலோ ஏற்படலைன்னு நான் சொன்னா அவ நிச்சயம் நம்புவா. நித்தின், நீ என்னடா சொல்றே" நித்தின், "உண்மையில் அந்த பணத்தை நான் எடுப்பேனான்னு தெரியலை. ஆனா ஒண்ணு. தீபா எதுக்கும் அசராத ஆளு. அவகிட்ட மறைக்கறதை விட உண்மையை சொன்னா பெரிசா எடுத்துக்கவே மாட்டான்னு தோணுது.” ஜாஷ்வா, “என்னது? பெரிசா எடுத்துக்க மாட்டாளா? பெரிய கேடியா இருப்பா போல இருக்கே” நித்தின், “நிஜமா! அவளோட மெண்டாலிட்டிக்கு எப்படி அவளை R&AWவில் வேலைக்கு சேர்த்துகிட்டாங்கன்னு எனக்கு குழப்பமா இருக்கு." சக்தி, "ஏன் ?" நித்தின், "போலீஸ் புத்தியை விட திருட்டு புத்திதான் அவளுக்கு அதிகம். அவளுக்கு எதையும் திருட வேண்டிய அவசியம் இல்லைங்கறது வேற விஷயம்" சிரித்த மற்ற நண்பர்கள் இருவரில் சக்தி, "இப்ப நீ இல்லையா? உனக்கு இவ்வளவு பணம் சம்பாதிக்க என்ன அவசியம்?" ஜாஷ்வா, "பட், நித்தின், அந்த மாதிரி புத்தியும் தேவைன்னு இப்ப போலீஸே நம்பறாங்க." நித்தின், "இல்லை ஜாஷ்வா, அவளா போய் R&AWவில் சேர்ந்து இருப்பான்னு எனக்கு தோணலை. எதோ ஒர் வற்புறுத்தலில் தான் போய் சேர்ந்து இருப்பா" ஜாஷ்வா, "ஸோ, எப்படி ஹாண்டில் பண்ணப் போறீங்க?" சக்தி, "இந்த ஒரு வாரமா எப்படி ஹாண்டில் பண்ணினமோ அதே மாதிரிதான். நான் அவ கிட்ட இதுவரைக்கும் நெருக்கமா பழகலை. இனி அப்படி இருக்கப் போறது இல்லை. ஆனா, எப்பவும் போல நான் அவ வேலையை பத்தி சொல்றதை நம்பலைன்னுதான் சொல்லப் போறேன். அவ கொஞ்சம் நெளிவா. பரவால்லை. திடீர்ன்னு அதை பத்தி கேட்காம இருந்தா நம் மேல் சந்தேகம் வரும்" நித்தின், "நீ சொல்றது சரி. நமக்கு தெரியும்ன்னு காண்பிச்சுக்க வேண்டாம். எப்பவும் போல நமக்கு தெரியாத மாதிரி கிண்டலடிச்சு கொஞ்சம் நெளிய விடலாம்" ஜாஷ்வா, "உண்மையில் நான் கொஞ்சம் கலங்கிப் போய் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்கற விதம் சூபர்ப். ஐ அட்மையர் யூ சக்தி." நித்தின், "சரி, கொஞ்சமா தண்ணி அடிச்சுட்டு அவங்க கூட டின்னருக்கு போலாமா" சக்தி, "அவங்க பாதி டின்னர் முடிச்சு இருப்பாங்க. அட்லீஸ்ட் தண்ணியாவுது உருப்படியா அடிப்போம்" ஜாஷ்வா, "ஆமா, இன்னைக்கு கொஞ்சம் மட்டை ஆகலாம்"மூவரும் அவர்கள் விரும்பிய ட்ரிங்க்ஸை இரண்டு சிப்கூட எடுத்து இருக்கவில்லை. அதற்குள், "தேர் ... அங்கே பார் நான் சொன்னேன் இல்லையா? தண்ணி அடிச்சு மட்டை ஆகும் மூஞ்சிங்களை பாத்தியா? உக்காந்து எதாவுது பஸ்ஸில்ஸ் அல்காரிதம்ன்னு அரட்டை அடிச்சுட்டு ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ண மறந்து இருக்குங்கன்னு நான் சொன்னது சரி தானே?" என்ற சஞ்சனாவின் கிண்டலுக்கு இந்திய அழகிகள் இருவரும் சிரித்தபடி அவர்களின் மேசைக்கு வந்து சேர்ந்தனர். ஜாஷ்வா, "ஏய் என்னாச்சு உன் வெல்கம் டின்னர்? தலைக்கு 100 டாலர் டின்னர் ஃப்ரீயா கொடுக்கறான்னு சொல்லிட்டே இருந்தே?" சஞ்சனா, "நைட்டு பனிரெண்டரை வரைக்கும் இருக்குமாம். இப்ப ஒன்பதரை மணிதானே ஆகுது?" நித்தின், "இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" தீபா, "ஃப்ரெஷன் அப் பண்ணி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து இருக்கோம். பாத்தா தெரியலை?" நித்தின், "புளுகு மூட்டை. நான் உன்னைக் கேக்கலை ... " பேசாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த சக்தியிடம் வந்தனா, "சஞ்சனா இன்னைக்குதானே தீபாவை முதல் முதலா மீட் பண்ணறா. உக்காந்து அரட்டை அடிக்க ஆரம்பிச்சோம். நேரம் போனதே தெரியல" சஞ்சனா, "சரி, பாவம் பசங்க. கம்பெனி கொடுக்கலாம்ன்னு வந்தோம்" ஜாஷ்வாவுக்கு அருகே இருந்த ஒரே காலி நாற்காலியில் சஞ்சனா அமர்ந்தாள். சஞ்சனா, "அண்ணா, நீ எடத்தை காலி பண்ணு தீபா உட்காரட்டும். எதிரிலில் இருக்கும் கார்டன் ரொம்ப நல்லா இருக்குன்னு வந்தனா சொல்லிட்டு வந்தா. நீ அவளை கூட்டிட்டு போ" நித்தின், "ஏன் அவனை துரத்தறே?" சஞ்சனா, "தீபா உட்காரட்டும். இதுவரைக்கும் தீபா ஜாஷ்வாகூட பேசினது இல்லை அதனாலதான் .. " சக்தி தன் ட்ரிங்க்ஸ் க்ளாஸை எடுத்துக் கொண்டு எழுந்தான். வந்தனா அந்த மேசையில் இருந்த நொறுக்கு தீனி தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனுடன் சென்றதை சஞ்சனா வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். நித்தினுக்கு அருகே அமர்ந்த தீபா ஜாஷ்வாவிடம் கைநீட்டி, "ஹாய் ஜாஷ்வா, நீங்க எனக்கு டென்ஸில் வாஷிங்க்டனை நினைவு படுத்தறீங்க" ஜாஷ்வா, "O thanks Deepa I am honored .. என் மனைவி முன்னால இதுக்கு மேல நீ எதாவது சொன்னா உன்னோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு இல்லை" என்று சஞ்சனாவிடமிருந்து இடுப்பில் ஒரு கிள்ளல் வாங்கினான். தீபா, "சஞ்சனா நீ என்ன சொன்னாலும் சரி, உன் ஹஸ்பண்ட் ரியலி ஹாண்ட்ஸம்" சஞ்சனா, "ஏய், போதும் நிறுத்து ... நித்தின், என்னது இது விட்டா அடிமடியிலே கை வெக்கறா?" நித்தின், "எப்படியோ எனக்கு கொஞ்சம் ரிலீஃப். என்னை கொஞ்சம் கம்மியா தொந்தரவு பண்ணுவா" சட்டென தீபாவின் முகம் சற்று சுருங்கியது. அடுத்த கணம் சுதாரித்தவள், "ஹெல்லோ! அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதே. அடுத்த ரெண்டு நாளும் உனக்கு இருக்கு" அவளது ஒவ்வொரு செயலும் பேச்சும் அவனை மதி மயங்க வைத்தது. 'பிசாசே .. எவ்வளவு நாள் .. இல்லை .. எவ்வளவு நேரம் உன்னை இழுத்து கிஸ் அடிச்சு ஐ லவ் யூன்னு சொல்லாம இருக்க முடியும்ன்னு தெரியலை' என்று மனதுக்குள் அவளை திட்டினான். தீபா, "ஜாஷ், டெல் மி அபௌட் யூ ... நீங்க எங்க படிச்சீங்க?" நித்தின், "ஆரம்பிச்சுட்டியா?" என்றபடி எதிரில் பார்த்து, "இவளுக்கு இவளை பத்தி தம்பட்டம் அடிச்சுக்கணும். அதனால யாரைப் பார்த்தாலும் முதல்ல இதைத்தான் கேப்பா" தீபா, "இதில் தப்பு என்ன இருக்கு நித்தின்? ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்க அவங்களோட படிப்புதான் நல்ல தொடக்கம். அதிலிருந்து அவங்களோட ஸ்டேட்டஸ்ஸை, பெடிக்ரீயை (pedigree - வம்சாவழி) எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்" ஜாஷ்வா, "உனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கப் போறேன். எனக்கு பெடிக்ரீன்னு சுத்தமா ஒண்ணும் இல்லை. ஹார்லம் பகுதியில் பிறந்து வளர்ந்த பல அனாதைகளில் நானும் ஒருத்தன்" தீபா முகத்தில் எப்போதும் தாண்டவம் ஆடும் குறும்பும் சிரிப்பும் மறைய, "வாட்? .. ஐ யம் சோ சாரி தட் ஐ ஆஸ்க்ட் (I am so sorry that I asked)” சஞ்சனா, "பரவால்லை. அவர் பெடிக்ரீ மட்டும் தான் அப்படி" தீபா, "என்ன?" சஞ்சனா, "அய்யா எம்.ஐ.டில படிச்சுட்டு பிடிவாதமா இங்கேதான் திரும்பி வருவேன்னு நியூ யார்க்கில் குப்பை கொட்டிகிட்டு இருக்கார்" தீபா, "வாட்! நீங்க எம்.ஐ.டி .. யூ மீன் மஸாஷுசட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Massachusetts Institute Of Technology)? இது வரைக்கும் அந்த காலேஜை பத்தி கேள்வி பட்டதோட சரி. ஆனா அங்கே படிச்ச ஒருத்தரை இப்போதான் நேரில் பார்க்கறேன். இன்னோரு தடவை கை குடுங்க" என்று அவன் கையை பற்றி குலுக்கினாள் தீபா, “அந்த காலேஜைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் .. “ ஜாஷ்வா மேலோட்டமாக அக்கல்லூரியை பற்றியும் அதில் சேர்வதற்கு தேவையான தகுதிகளையும் விளக்கினான்.தீபா, “நீங்க பெரிய ஆள் ஜாஷ்வா” ஜாஷ்வா, "தாங்க்ஸ் ஃபார் தி காம்ப்ளிமெண்ட்ஸ் (Thanks for the compliments)” சஞ்சனா, "யோவ், காம்ப்ளிமென்ட்ஸ் நீ படிச்ச காலேஜுக்கு உனக்கு இல்லை" ஜாஷ்வா, "நித்தின் உனக்கு ஒண்ணு தெரியுமா Behind every successful man there is a woman” நித்தின், "தெரிஞ்ச பொன் மொழிதான் ஆனா .. " ஜாஷ்வா, "இரு இரு நான் இன்னும் முடிக்கலை .. limiting his success” நித்தின், "Now, that I fully agree .. “ சொல்லி முடித்தபின் இருவரும் அதற்கேற்ற அளவுக்கு கிள்ளப் பட்டனர். சஞ்சனா, "எத்தனாவுது ட்ரிங்க் இது?" நித்தின், "இதுதான் முதல் ட்ரிங்க். நாங்க ஆர்டர் பண்ணி ஒரு சிப் அடிச்சு இருப்போம் நீங்க வந்துட்டீங்க. ஏன் கேக்கறே? ஜாஷ்வா எப்படி சரளமா உண்மை பேசறானேன்னு பாக்கறையா?" இம்முறை தீபாவிடம் இருந்து முதுகில் ஒரு குத்து. ஜாஷ்வா, "பட், தீபா உனக்கு ஒண்ணு தெரியுமா. இவனுக்கு இன்னைக்கு தண்ணி அடிக்க மூடே இல்லையாம். நான் கூட்டிட்டு வந்ததுக்கு அப்பறம் இப்பதான் சார் மூஞ்சில கொஞ்சம் சிரிப்பு வந்து இருக்கு" நித்தின், "எட் டூ ப்ரூடே" (Et tu Brute? Were the Latin words written by Shakespear in his Julius Ceasar... meaning You Too Brutus ..அதாங்க, நம்ம சிவாஜிசார் அப்பறம் ரஜனிசார் கூட ஜூலியஸ் ஸீஸர் நாடகத்தில் கடைசியா நண்பன் ப்ரூடஸ் கிட்ட குத்து படும் போது சொன்ன வரி! அவங்க யூ டூ ப்ரூடஸ் அப்ப்டின்னு சொன்னாங்க. ஆனா ஷேக்ஸ்பியர் தன் நாடகத்தில் அந்த லத்தீன் மொழி வாக்கியத்தை அப்படியே எழுதி இருந்தார்) தீபா, "தெரியும். ஆனா காண்பிச்சுக்க மாட்டான். அது சரி, எம்.ஐ.டில படிச்சுட்டு ஏன் பாங்க்கில் டேட்டா பேஸ் அட்மின் வேலை?" ஜாஷ்வா, "ஈஸ்ட் கோஸ்ட்டில் (East Coast) எனக்கு கிடைச்ச வாய்ப்புகள் கம்மி. அதில் அதிக சம்பளம் கிடைச்ச வேலையில் சேர்ந்தேன்" நித்தின், "For God’s sake தீபா, உனக்கு எதுக்கு அதல்லாம்?” தீபா, "ம்ம்ம் .. நான் கட்டிக்க போறவனோட உடன் பிறவா அண்ணன் என்ன பண்ணிட்டு இருக்கார்ன்னு எங்க அப்பா அம்மா கேட்டா சரியா பதில் சொல்லறதுக்காக கேட்டேன்" என்று போட்டு உடைத்தாள். எதிரில் இருந்த தம்பதியினர் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க, ஒரு கணம் உறைந்து போன நித்தின் மறுகணம் அவளை இழுத்து அவள் இதழ்களில் இதழ் பதித்தான். எதிரில் இருப்போரை பதட்டத்துடன் பார்த்த தீபாவின் இமைகள் சில நொடிகளில் மூடின .. பல நொடிகள் தொடர்ந்த முத்ததை முடித்தவன், "பிசாசே .. ஐ லவ் யூ" என்றான். வெட்கத்தில் முகம் சிவந்து தீபா தலை குனிந்தாள். சஞ்சனா (ஜாஷ்வாவை பார்த்து), "இவனுக்கெல்லாம் ரொமான்ஸ் பண்ண வருமான்னு சந்தேகமா இருந்துது. பரவால்லை, தம்பிக்கு ஒரு அளவுக்கு ட்ரெயினிங்க கொடுத்து வச்சு இருக்கே .. " தலை நிமிர்ந்த தீபா நித்தினை ஒரக் கண்ணால் பார்த்தபடி, "ஆனா போன வாரம் முழுக்க கடுப்பு ஏத்தினான் .. But, he made me suffer the whole week” என்றாள் நித்தின், "பின்னே? வண்டி வண்டியா புளுகினா?" தீபா சட்டென நிமிர்ந்து, "பாரு நித்தின். நானும் வந்தனாவும் ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். என்னைப் பத்தி, நான் எங்கே வேலை செய்யறேங்கறதைப் பத்தி எல்லாம் உன் கிட்ட நான் மறைக்க விரும்பல. ஆனா என்ன வேலைன்னு மட்டும் நீ என்னை கேக்கக் கூடாது. உண்மையில் நான் எல்லார்கிட்டயும் மறைக்கற விஷயத்தைக் கூட நான் உங்கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன் .. " நித்தின், "சரி, எங்கே வேலை செய்யறே?" தீபா, "R&AW - Research And Analysis Wing” நித்தின் முகத்தில் வியப்பை வரவழைத்துக் கொண்டு, "ஹேய், யூ மீன் CIA மாதிரி இந்திய உளவு நிறுவனமா?" தீபா, "ஏய், ஆச்சர்யப்படற மாதிரி ரொம்ப கஷ்டப்படாதே. நீ ஏற்கனவே இந்த மாதிரி ஒரு நிறுவனம்ன்னு யூகிச்சு இருப்பேன்னு எனக்கு தெரியும். பட், நீ சொல்றது ஒரு அளவுக்கு சரி. வெளிநாட்டில் உளவு வேலை பார்க்கறதை தவிர மத்த சில பிரிவுகளும் R&AWவில் இருக்கு. NTRO அப்படின்னு ஒரு நிறுவனம் R&AWவுக்கு கீழ இருக்கு. அதில் சைபர் க்ரைம்மை தடுக்கறதுக்குன்னு ஒரு பிரிவு இருக்கு. அதில் தான் நானும் வந்தனாவும் வேலை செய்யறோம்" நித்தின், "அப்பா, இவ்வளவு டீடெயில் கொடுக்கறே? இப்ப நம்பறேன்" தீபா, "ஆனா, இதுக்கு மேல சொல்ல மாட்டேன்" நித்தின், "பரவால்லை. உனக்கு அப்படி விதி முறைகள் இருக்கும்ன்னு எனக்கு புரியுது. சரி, எல்லார்கிட்டயும் மறைக்கற விஷயம்ன்னு சொன்னியே அது என்ன" ஜாஷ்வா, "நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியில் போறோம் நீங்க தனியா பேசுங்க .." தீபா, "நோ ஜீஜாஜி! என் ஃபேமிலியில் வந்தனா ஃபேமிலியில் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்" நித்தின், "அக்காவோட புருஷனுக்கு ஹிந்தியில் ஜீஜாஜி" முகம் மலர்ந்த சஞ்சனா, "சரி சொல்லு .. " தீபா, "நாம் எல்லாம் ஒண்ணா ஒரு பெரிய டேபிளில் உக்காந்துட்டு பேசலாம். ஜாலியான சமாசாரம் .. நான் வந்தனாவை கூப்படறேன்" என்றபடி கைபேசியில் வந்தனாவை அழைத்தாள்.வெளியில் அந்த அழகான தோட்டத்துக்கு முதலில் வந்த ஜோடி என்ன செய்தது என்று பார்ப்போம் ... அங்கு இருந்த பெஞ்ச் ஒன்றில் சக்தி அமர்ந்தான். வந்தனாவின் கையில் இருந்த நொறுக்கு தீனி தட்டை இருவருக்கும் இடையே வைத்து அதிலிருந்து இருவரும் எடுத்து கொறித்த படி இருந்தனர். நடு நடுவே சக்தி தன் ட்ரிங்க்ஸ் க்ளாஸில் இருந்து சிப்பிக் கொண்டு இருந்தான். மௌனத்தை கலைத்த வந்தனா, "ஏன் ஜாஷ்வா அப்ப ரொம்ப டல்லா இருந்தார்?" சக்தி,"அவன் வேலை செய்யற இடத்தில் வேறு யாரோ முடிக்க வேண்டியதை இவன் தலையில் கட்டி இருக்காங்க. அதைத்தான் இவ்வளவு நேரம் எங்ககிட்ட பொலம்பி தீர்த்தான்" என்று உதாசினமாக தன் ட்ரிங்க்ஸில் கவனம் செலுத்தியபடி சொன்னான். வந்தனா, "அப்பறம் எப்படி அரை நாள் லீவ் போட்டுட்டு வர முடிஞ்சுது?" சக்தி, "அந்த வேலை அடுத்த வாரம். ஏற்கனவே மாசக் கடைசில வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுக்கு மேல் எக்ஸ்ட்ரா வேலைன்னு சொல்லிட்டு இருந்தான்" வந்தனா, "ஏன் மாசக் கடைசில வேலை அதிகமா இருக்கும்?" சக்தி, "ஃபினான்ஷியல் இன்ஸ்டிட்யூஷன்ஸ் (Financial Institutions) எல்லாத்திலயும் அப்படித்தான். பாங்க், நாங்க ஆன்-சைட் வந்து இருக்கும் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி இதில் எல்லாம் கணக்குகளை நேர் செய்யறது, வாடிக்கையாளர்களுக்கு அவங்க கணக்குக்கான ஸ்டேட்மென்ட் அனுப்பறது இதெல்லாம் மாசக் கடைசில தான் நடக்கும். எங்க ரெண்டு பேருக்கும் கூட அடுத்த வாரக் கடைசில தலைக்கு மேல வேலை இருக்கும்" என்று தான் அடுத்த வாரம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனில் மூழ்கி இருக்கப் போவதற்கு இப்போதே ஒரு காரணத்தை உருவாக்கினான். வந்தனா, "எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது. உன் வேலை இன்டரெஸ்டிங்கா இருக்குமா?" சக்தி, "ரொம்ப இன்டரெஸ்டிங்க்ன்னு சொல்ல முடியாது. ஆனா போரடிக்காது" தொடர்ந்து அவளை சீண்டுவதற்காகவே, "உன் வேலை எப்படி இருக்கும்?" வந்தனா, "ம்ம்ம் ... என் வேலையும் அப்படித்தான்" சக்தி, "ஆனா என்ன வேலைன்னுதான் சொல்ல மாட்டே. பரவால்லை விடு" வந்தனா, "ஷக்தி, நான் எங்கே வேலை செய்யறேன்னு நான் சொன்னதை நீ இன்னும் நம்பலை இல்லையா?" சக்தி, "உண்மையா இருந்தா நிச்சயம் நம்பி இருப்பேன்" வந்தனா, "ஷக்தி, நான் எங்கே வேலை செய்யறேன்னு என் குடும்பத்துக்கு மட்டும்தான் சொல்லி இருக்கேன். அவங்களுக்கே குறிப்பா என்ன வேலை செய்யறேன்னு நான் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். அவங்களும் கேக்க மாட்டாங்க" பிறகும் மௌனம் காத்த சக்தியை பார்த்து, "என்னைப் பத்தி, என் குடும்பத்தைப் பத்தி, எதுவுமே, உன் கிட்ட நான் மறைக்க விரும்பலை ஷக்தி. இன் ஃபாக்ட், என்னோட இவ்வளவு நாள் வாழ்க்கையை பத்தி ஒண்ணு விடாம உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்ன்னு இருக்கு ஷக்தி" பிறகும் சக்தி மௌனம் காக்க அவன் கையை பற்றி .. "ப்ளீஸ் எதாவது சொல்லேன் .. " இடது தோளை பெஞ்சில் சாய்த்து அவளை பார்த்தபடி அமர்ந்து இருந்த சக்தி இருவருக்கும் நடுவே இருந்த நொறுக்கு தீனி தட்டை எடுத்து அவனுக்கு பின் புறம் வைத்தான். பிறகு அவளிடம், "எங்க அப்பா உயிரோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு யோசிச்சேன்" வந்தனா, "ஏன்?" சக்தி, "ஏன்னா அவருக்கு நல்லா ஹிந்தி பேச தெரியும்" வந்தனா, "ஸோ?" சக்தி, "உங்க வீட்டுக்கு உன்னை பெண் கேட்டு வரும் போது, அவங்க கூட பேசறதுக்கு வசதியா இருந்து இருக்கும்" சில கணங்கள் அளவிட முடியாத சந்தோஷத்துடன் அவனைப் பார்த்தவள் நகர்ந்து வந்து விரித்திருந்த அவன் கைகளில் தஞ்சம் புகுந்தாள்.அவனுக்கு பின் புறம் இருந்த நொறுக்கு தீனி தட்டை பார்த்த வந்தனா சக்தியின் தோளில் புதைத்து இருந்த முகத்தை எடுத்து, "எல்லாத்தையும் முன் கூட்டி ப்ளான் பண்ணிட்டுத்தான் பேசுவையா?" சக்தி, "பின்னே? இல்லைன்னா இந்நேரம் எல்லாம் கீழ விழுந்து இருக்கும், என் ட்ரிங்க் இன்னும் பாதி இருக்கு. அதை முடிக்கறதுக்கு நொறுக்கு தீனி?" மறுபடி அவனை இறுக்கி அணைத்தவளின் முகத்தை நிமிர்த்தி, "உன்னை பாத்த முதல் நாளே சொல்லணும்ன்னு இருந்தேன் .. ஐ லவ் யூ" வந்தனா, "நான் நிச்சயம் சொல்லி இருப்பேன். நீதான் தள்ளி தள்ளி போனே" சக்தி, "என்னடா இப்படி ஒரு புளுகு மூட்டையா இருக்காளேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்" வந்தனா, "நான் எங்கே வேலை செய்யறேன் தெரியுமா?" சக்தி, "வெய்ட் வெய்ட். ... உன் ஃபேமலிக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு சொன்னே" வந்தனா, "ம்ம்ம் .. ரோட்ல போறவனை கட்டி பிடிக்கற பழக்கம் எனக்கு இல்லை" என்று அவள் சொல்லி முடிக்க அவள் முகத்தை இரு கைகளில் ஏந்தி தன்னிடம் இழுத்தான். எதற்கு இழுக்கிறான் என்று புரிந்தவள் கண் மூடிய வண்ணம் நெருங்கினாள். இருவரின் இதழ்கள் சேர்ந்து தொடங்கிய முத்தம் சில நிமிடங்கள் நீடித்தது. விடுபட்ட போது வெட்கத்தில் முகம் சிவந்தவள் மறுபடி அவன் தோளில் சாய்ந்தாள். சக்தி, "ம்ம்ம் ... சொல்லு எங்கே வேலை செய்யறே?" வந்தனா (முகத்தை நிமிர்த்தாமல்) "R&AW - Research And Analysis Wing” மிகுந்த பிரயத்தனப் பட்டு முகத்தில் வியப்பை வரவழைத்த சக்தி, "ஹேய், யூ மீன் CIA மாதிரி இந்திய உளவு நிறுவனமா?" வந்தனா, "ஆமா, வெளிநாட்டில் உளவு வேலை பார்க்கறதை தவிர மத்த சில பிரிவுகளும் R&AWவில் இருக்கு. NTRO அப்படின்னு ஒரு நிறுவனம் R&AWவுக்கு கீழ இருக்கு. அதில் சைபர் க்ரைம்மை தடுக்கறதுக்குன்னு ஒரு பிரிவு இருக்கு. அதில் தான் நானும் தீபாவும் வேலை செய்யறோம்" சக்தி, "அப்பா! சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு இவ்வளவு சொல்றே" வந்தனா, "இதுக்கு மேல சொல்ல மாட்டேன்" சக்தி, "இரு இரு, இதை ஜீரணிக்கறதுக்கே எனக்கு ரொம்ப நாள் ஆகும்" மறுபடி அவன் தோளில் சாய்ந்தபடி இருந்தாள். சக்தி, "R&AWவில் வேலையில் இருக்கேன்னா, நீ ஒரு போலீஸ் ஆஃபீஸர் மாதிரின்னு சொல்லு" வந்தனா, "மாதிரி இல்லை. நிஜமாவே" சக்தி, "வாட் டூ யூ மீன்?" வந்தனா அவன் மார்பில் இருந்து முகத்தை நிமிர்த்தி அவன் கண்களை பார்த்தபடி முகத்தில் பெருமிதம் வழிய, "ஐ ஆம் வந்தனா ராத்தோட் B.Tech, I.P.S” என்றாள் தொடர்ந்து "நான் பி.டெக் முடிச்சுட்டு ஐ.பி.எஸ்ஸில் சேர்ந்தேன்." இம்முறை வியப்படைய எந்த செயற்கை முயற்சியும் சக்திக்கு தேவைப் படவில்லை. அளவிடமுடியாத சந்தோஷம், பெருமிதம், வியப்பும் நிறைந்த சிரிப்புடன் அவளது இரு புஜங்களைப் பற்றி, "வாவ் .. " என்றபிறகு பேச்சிழந்து அவளை பார்த்தபடி இருந்தான். வந்தனா அவனுக்கு ஆறுதலளிக்கும் விதமான் முகபாவத்துடன், "பட் டோண்ட் வொர்ரி, எனக்கு மத்த ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் மாதிரி என்னை சுத்தி எந்த பந்தாவும் இருக்காது. ட்யூட்டியும் இருக்காது. உன்னை மாதிரி எனக்கும் நைன் டு ஃபைவ் வேலைதான்" சக்தி, "ஏன் அப்படி சொல்றே? என்ன பந்தா?" வந்தனா, "இல்லை, பொதுவா ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸை கல்யாணம் பண்ணிக்க தயங்குவாங்க. டாக்டர்ஸ் மாதிரி கண்ட நேரத்திலும் வேலை இருக்கும். அவங்களை சுத்தி இருக்கும் பந்தாவா தனி ஜீப், சுத்தி ரெண்டு கான்ஸ்டபிள்ஸ், ஒரு ஜூனியர் ஆஃபீஸர் இதெல்லாம் மத்தவங்களுக்கு பயமுறுத்தற மாதிரி இருக்கும். அதைத் தான் சொன்னேன்" சக்தி, "சே, இதில் என்ன பயம் இருக்கு? உண்மையில் நீ மத்த ஐ.பி.எஸ் ஆஃபீஸர்ஸ் மாதிரி இருந்தா எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கும். இப்ப அதை விட கொஞ்சூண்டு கம்மியா பிடிச்சு இருக்கு. ஆனா எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?" என்றவாறு அவளை இழுத்து நெஞ்சோடு ஆரத்தழுவினான். காதலால் வரும் தழுவல் அல்ல அது. தன் வருங்கால மனைவியின் பெருமையை பாராட்டிய தழுவல். விலக்கி அவள் நெற்றியில் முத்தமிட்ட பிறகு இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான். காதலனின் பாராட்டில் மனம் நிறைந்த வந்தனாவின் கண்கள் பனித்தன. சக்தி, "மத்த ஆஃபீஸர்ஸ் மாதிரி பந்தா இல்லாட்டி பரவால்லை. யூனிஃபார்ம் போட்டுட்டுதானே ஆஃபீஸுக்கு போவே. உனக்கு ஜீப் வேணும்ன்னா நானே ஒண்ணு வாங்கி தரேன்" மறுபடி அவனை வியப்புடன் பார்த்தவள், "சாரி. நான் ஆஃபீஸுக்கு யூனிஃபார்ம் போட்டுட்டு போக மாட்டேன்" இப்போதைக்கு தனக்கு ஆஃபீஸே இல்லை என்பதை சொன்னால் மேலும் வேலை பற்றிய விவரங்களை சொல்ல வேண்டும் என்று மறைத்தாள். சக்தி, "சரி, பரவால்லை அப்ப அப்ப எனக்கு மட்டும் போட்டு காட்டணும் என்ன?" வந்தனா, "ஆக்சுவலி நான் கொஞ்ச நாள் போட்டுட்டுதான் இருந்தேன் .. " சக்தி, "ரியலி? அப்பறம் என்ன ஆச்சு? " வந்தனா, "இதை எல்லாம் தான் நான் உன் கிட்ட சொல்லணும்ன்னு இருந்தேன். உன் கிட்ட மட்டும் இல்லை. சஞ்சனா, ஜாஷ்வா கிட்டயும் சொல்லணும்ன்னு இருந்தேன். என்னை மாதிரியே, இல்லை இல்லை என்னை விட ரொம்ப ரொமப் ஜாலியான பின்னணி தீபாவுக்கு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட அதை எல்லாம் சொல்லி நாங்க செய்யற வேலையை பத்தி மட்டும் கேக்காதேன்னு சொல்லலாம்ன்னு முடிவெடுத்து இருந்தோம்" சக்தி, "ஃபேமிலி மெம்பர்ஸுக்கு மட்டும் சொல்லலாம்ன்னு சொன்னே?" வந்தனா, "சஞ்சனா உனக்கு தங்கை மாதிரின்னா எனக்கு ஃபேமிலிதானே?" வந்தனாவின் கைபேசி சிணுங்கியது.சில நிமிடங்களில் எல்லோரும் ஒரு பெரிய டேபிளில் அமர்ந்து இருந்தனர். ஆடவர் மூவருக்கும் இரண்டாவது ரவுண்ட் தொடங்கி இருந்தது... சஞ்சனா, "போதும் இதோட நிறுத்திக்கோ ... " என்று ஜாஷ்வாவிடம் காதைக் கடித்தாள் வந்தனா, "எவ்வளவு ட்ரிங்க்ஸ் சாப்பிடுவே?" சக்தி, "குறைஞ்சது ரெண்டு. ஆனா கூட குடிக்கறவங்களை பொறுத்தது அது .. எனக்கு எத்தனை ட்ரிங்க்ஸ் சாப்பிட்டாலும் தாங்கும் .. ரெண்டோட போதும்ன்னாலும் நிறுத்திக்குவேன் ஏன்னா எனக்கு அதுக்கு மேல கிக் ஏறாது" தீபா, "நீ எத்தனை குடிப்பே?" நித்தின், "வழக்கமா ரெண்டு. என்னோட லிமிட் மூணு" தீபா, "நீ குடிப்பேன்னு. உங்க அப்பாவுக்கு தெரியுமா?" நித்தின், "ஓ தெரியுமே. கூடவே உக்காந்து குடிச்சு இருக்கேன்" வந்தனா, "உங்க அம்மாவுக்கு?" சக்தி, "செகண்ட் இயர் படிக்கும் போது முதல் முதலா குடிச்சேன். அடுத்த லீவில் போனப்ப அம்மாகிட்ட சொன்னேன். அளவோட நிறுத்திக்கோன்னு சொன்னாங்க. பி.டெக் முடிச்சு வேலை கிடைச்சதும் ஊர்ல இருந்த ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி கொடுன்னு சொன்னப்ப வீட்டிலேயே மொட்டை மாடில அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்காங்க. She knows I don't get drunk" ஜாஷ்வா, "கமான் தீபா உன்னோட கதையை சொல்லு .. " தீபா தன் ப்ராஜெக்ட் வொர்க்கில் இருந்து ஆரம்பித்து கைதாவதற்கு பதிலாக வேலைக்கு சேர்ந்ததை சொல்லி முடிப்பதற்குள் அந்த மேசையில் ஆரவாரம் அந்த பாரை குலுக்கியது. நடுவே அவள் தான் ஒரு ஹாக்கர் என்ற போது ஆடவர் மூவர் முகத்திலும் தோன்றிய சிறு கலவரம் சஞ்சனாவுக்கு மட்டும் புரிந்தது. நித்தின், "நீ ஒரு பெரிய ஹாக்கரா?" தீபா, "பெரிய ஹாக்கர் இல்லை ..நான் சுமாரான ஹாக்கர். என்னைவிட பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க" சக்தி, "உனக்கு அவங்க எல்லாம் யாருன்னு தெரியுமா?" தீபா, "யாரும் அவங்களோட நிஜ ஐடெண்டிடியை காண்பிச்சுக்க மாட்டாங்க" நித்தின், "இப்ப எங்க கிட்ட நீ உன்னோட ஐடெண்டிடியை காண்பிச்சு இருக்கே" தீபா, "என்னோட ஹாக்கிங்க் எல்லாம் வேலைக்கு சேர்ந்த உடனே மூட்டை கட்டி வெச்சாச்சு .. தவிர, பாங்கிலயும் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிலயும் கோட் எழுதிட்டு இருக்கும் உங்ககிட்ட சொல்றதில எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை" சஞ்சனாவின் நமட்டுச் சிரிப்பை சக்தி மட்டுமே கவனித்தான். சக்தி, "உன்னைப் பொறுத்தவரை யார் பெரிய ஹாக்கர்" தீபா வந்தனாவைப் பார்த்தாள். வந்தனா, "நிறைய பேர் இருக்காங்க. கொஞ்ச நாளுக்கு முன்னாடி நியூஸ்ல வந்துதே ஓவன் வாக்கர்ன்னு ஒருத்தன் அவன் கூட ஒரு அளவுக்கு பெரிய ஹாக்கர்தான்" என்று உலகிற்கு தெரிந்ததை மட்டும் சொன்னாள். அவர்கள் இருவரின் சங்கடத்தை புரிந்த சக்தி, "வந்தனா, நீ உன் ஐ.பி.எஸ் ட்ரெயினிங்கை பத்தி சொல்லேன்" வந்தனா தன் தந்தையின் கனவில் இருந்து தொடங்கி பெயர்களை மட்டும் தவிர்த்து முரளீதரனின் பிரிவில் சேர்ந்தது வரை சொல்லி முடித்தாள். சக்தியின் கண்களில் இருந்த பதட்டம் நீங்காமல், "மறுபடி செக் அப் போனியா? குடலில் பட்ட காயம் முழுசா ஆறிடுச்சா" வந்தனா தன் கண்களால் காதலனுக்கு ஆறுதல் சொல்லி, "ஒரு பிரச்சனையும் இல்லை. எங்க அப்பா என்னை மூணு டாக்டர்ஸ் கிட்ட காண்பிச்சார்..." ஜாஷ்வா, "அந்த கலவரத்தின் போது நீ யாரையாவுது ஷூட் பண்ணினேயா?" வந்தனா, "தற்காப்புக்கு கையில் கன் எடுத்தேன் அவ்வளவுதான். ஆனா உண்மையை சொல்லணும்ன்னா ஒருத்தனை ஷூட் பண்ண வேண்டி இருந்து இருந்தா அவ்வளவு சுலபமா பண்ணி இருப்பேனாங்கறது சந்தேகம்தான்" நித்தின், "அதில் என்ன இருக்கு? கையில் கன் இருக்கும் போது தேவைன்னா ட்ரிக்கரை அழுத்த வேண்டியதுதானே?" சஞ்சனா, "எதிரில் இருப்பவன் செத்து விழக்கூடும்ன்னு தெரிஞ்சு சுடறது அவ்வளவு சுலபம் இல்லை" ஜாஷ்வா, "She is the expert in these matters .. you all better listen (இந்த விஷயத்தில் அவ நிபுணி .. அவ சொல்றதை பேசாம கேட்டுக்கோங்க) வந்தனா அப்போதுதான் அதை உணர்ந்தாள். வந்தனா, "Sanjana, have you .. சஞ்சனா, நீ ..." சஞ்சனா, "ம்ம்ம் .. குறைஞ்சது ரெண்டு டஸன் பேரையாவுது சுட்டு இருக்கேன். துப்பாக்கி சுடுவதில் புலிகளுக்குள் புலின்னு பேர் வாங்கி இருக்கேன். சில சமயம் என்னை, என் கூட இருந்தவங்களை காப்பாத்திக்க சுட்டேன். சில சமயம் எதுக்குன்னு தெரியாம சுட்டேன். அதில் பத்து பேராவுது எதுக்கு சாகறோம்ன்னு தெரியாம செத்தும் போயிருப்பாங்க" என்று சர்வ சாதாரணமாக சொல்ல தீபாவுக்கு சிறிது நடுக்கம் ஏற்பட்டது. சஞ்சனா தொடர்ந்து, "ஒவ்வொரு மிஷனுக்கு பிறகும் வந்து வாந்தி எடுப்பேன். மூணு நாளைக்கு தூங்காம அழுதுட்டு இருப்பேன். கழுத்தில் இருந்த சையனைட்டை கடிச்சுட்டு உயிரை விட்டடலாமான்னு தோணும். இன்னும் ரெண்டு மூணு மாசம் அந்த நரகத்தில் இருந்து இருந்தா முழுசா மரத்துப் போயிருக்கும். நல்ல வேளை அதுக்குள்ள அங்கே இருந்து தப்பிச்சுட்டேன்" மென்பொருளை மட்டும் தொழிலாக கொண்ட மற்ற ஐந்து பேரும் பேச்சிழந்து அமர்ந்து இருக்க ஒரு மயான அமைதி நிலவியது. சக்தி, "இப்ப உன்னால அப்படி சுட முடியுமா?" சஞ்சனா, "நிச்சயமா. இப்ப நம்மை யாராவுது தாக்கினாங்கன்னா என் கைல கன் இருந்தா நிச்சயம் சுடுவேன். offence is the best form of defence" ஜாஷ்வா, "ஹனி, எனக்கு இன்னொரு ட்ரிங்க் வேணும்" சஞ்சனா, "சாரி, உன் மூடை கெடுத்துட்டேன் .. " எல்லோரும் எழுந்து டின்னருக்கு சென்றனர். அடுத்த நாள் முழுவதும் லேக் ஜார்ஜ் ஏரியில் சிறு கப்பலில் க்ரூயிஸ். மனம் விட்டு பேச மிகவும் ஏதுவான சூழலில் அன்றைய பொழுது கழிந்தது இரவு மறுபடி எல்லோரும் சேர்ந்து கல கலப்பான டின்னர். அடுத்த நாள் மாலை வரை பல விளையாட்டுகளில் கழிந்தது. சக்தி-வந்தனா அணி மற்ற நால்வரும் சேர்ந்த அணியை தோற்கடித்த வண்ணம் இருந்தது. ஞாயிறு மாலை புறப்பட்டு இரவு நியூ யார்க்கை அடைந்தனர். ~~~~~~~~~~~~~~~~~~~ தோழிகள் இருவரும் தங்கள் காதலர்களிடம் இருந்து பிரியா விடை பெற்று தங்கள் அறையை அடைந்தனர். தீபா, "நான் கனவில் கூட நினைச்சு பார்க்கலை வந்தனா. ஒரு வாரத்தில் என் வாழ்க்கையே மாறிப் போன மாதிரி இருக்கு." வந்தனா, "நானும் அதே மாதிரிதான் ஃபீல் பண்ணறேன்" தீபா, "உங்க வீட்டில் பிரச்சனை ஒண்ணும் இருக்காதுதானே?" வந்த்னா, "முஸ்லிம் அல்ல கிருஸ்துவன் அப்படின்னா நிச்சயம் ஒத்துக்க மாட்டாங்க .. பாஷை தெரியாதது ஒரு குறைதான். மற்றபடி பழக்க வழக்கங்கள் விஷயத்தில் எங்க ரெண்டு பேர் குடும்பங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டி இருக்கும்." தீபா, "நான் ஒண்ணு கேப்பேன் தப்பா எடுத்துக்க கூடாது. ஓ.கே?" வந்தனா, "என்ன சொல்லு" தீபா, "நாம் சரியான முடிவெடுத்து இருக்கோமா?" வந்தனா, "ஏன் உனக்கு சந்தேகமா இருக்கா?" தீபா, "இல்லை வந்தனா, என்னாலயே நம்ப முடியலை. இது அதான் பயமா இருக்கு" வந்தனா, "எனக்கும் நம்ப முடியலைதான். ஆனா பயமா இல்லை. நான் இதுவரைக்கும் யாரோடவும் இந்த அளவுக்கு ஃப்ரீயா மனம் விட்டு மனசில் இருக்கறது எல்லாம் சொல்லற அளவுக்கு கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணினது கிடையாது." தீபா, "ம்ம்ம்... நோட் பண்ணினேன். ஒரு சமயத்தில் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை பார்த்து நீயா இவ்வளவு பேசறேன்னு தோணுச்சு" வந்தனா, "இன்னும் ஒண்ணு நோட் பண்ணினேயா?" தீபா, "என்ன?" வந்தனா, "நித்தினும் ஷக்தியும் ரொம்ப க்ளோஸ் ... ஒருத்தனைப் பத்தி மத்தவனுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சு இருக்கு" தீபா, "அது மட்டும் இல்லை தனியா மத்தவங்க வீட்டுக்கு போற அளவுக்கு. இங்கே வரதுக்கு முன்னாடி சக்தி ரொம்ப பிஸியா இருந்தானாம். சக்தியின் அம்மா தங்கையை பாத்து சொல்லிட்டு வர நித்தின் மட்டும் தனியா ஈரோடுக்கு போயிருக்கான். சக்தியின் அம்மாவுக்கு நித்தினை ரொம்ப பிடிக்குமாம். அதே மாதிரிதான் சக்தியும் நித்தினோட அப்பாவும். 'அவர் என்னை விட சக்தியைதான் நம்புவார்' அப்படிங்கறது நித்தினோட கடுப்பு" வந்தனா, "வெவ்வேறு காலேஜில் படிச்சுட்டு இவ்வளவு க்ளோஸா இருக்கறது ஆச்சர்யமா இருக்கு" தீபா, "ஆமா, ரெண்டு பேருக்கும் பிடிச்ச பொழுது போக்குகூட ஒண்ணும் கிடையாது" வந்தனா, "இருக்கே! பஸ்ஸில்ஸ், அல்காரிதம், கணிணி சம்மந்தப் பட்டவைகள் ..." தீபா, "ஆமா, மறந்துட்டேன். ஒவ்வொரு சமயம் தோணும் நித்தினுக்கு அல்காரிதம்களில் இருக்கும் இன்ட்ரெஸ்டுக்கு அவன் மட்டும் என் கூட வொர்க் பண்ணினான்னா ரெண்டே நாளில் மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிச்சடலாம்" வந்தனா, "ஹேய், நம்ம ரெண்டு பேருக்கும் இந்த விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை ... நானும் அதையே தான் நினைச்சேன்" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நண்பர்களின் பேச்சு அவரவர் கைபேசிகளில் ... நித்தின், "டேய், கொஞ்சம் நடுக்கமா இருக்கு ..." சக்தி, "ஏன் .. " நித்தின், "ரொம்ப வேகமா போறமோ?" சக்தி, "எனக்கு கொஞ்சம் அந்த மாதிரி தோணுச்சு. ஆனா வந்தனா இன்னைக்கு என் கிட்ட ஃப்ரீயா பேச ஆரம்பிச்சதும் போயிடுச்சு" நித்தின், "ம்ம்ம் ... இவ்வளவு பேசுவாளான்னு தீபாகூட நக்கல் அடிச்சா" சக்தி, "அவங்க வீட்டில் ஒத்துப்பாங்களான்னு கொஞ்சம் பயமா இருக்கு ... " நித்தின், "ஆமாண்டா! எல்லாரும் போலீஸ், ராணுவம், ஏர்ஃபோர்ஸுன்னு. மவனே, ஜாக்கரதையா இரு. பெண்டை நிமித்திடுவாங்க" சக்தி (சிரித்த படி), "ஆமா ... அவளோட அப்பாவை தவிர .. " நித்தின், "அதுக்கு பதிலாதான் வந்தனாவே ஐ.பி.எஸ் ஆஃபீஸரா இருக்காளே"
சக்தி, "அவங்க வேலையை பத்தி தீபா எதாவது சொன்னாளா?" நித்தின், "அவளுக்கு சில சமயம் உற்சாகத்தில் நாக்கு வரைக்கும் வந்துடுது .. கஷ்டப் பட்டு அடக்கிட்டு சொல்லாம இருக்கா" சக்தி, "வந்தனாவும் அப்படித்தான் ... " நித்தின், "உனக்கு அவங்க மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டு பிடிப்பாங்கன்னு தோணுதா?" சக்தி, "நாம் ஜாக்கிரதையா இருந்தா கண்டு பிடிக்க முடியாது" நித்தின், "இப்ப இருக்கறதை விடவா?" சக்தி, "இப்ப இருக்கற மாதிரியே இருந்தா ஓ.கே" நித்தின், "ஏன் அப்படி சொல்றே?" சக்தி, "வந்தனாவும் சரி, தீபாவும் சரி, நான் பாத்த வரைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கறாங்க. ரெண்டு பேரும் அவ்வளவு சீக்கரமா எதையும் கைவிடறதும் இல்லை. இன்னைக்கு வெவ்வேறு காலேஜில் படிச்சும் எப்படி நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு க்ளோஸ்ன்னு வந்தனா கேட்டா. நான் கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்ல வேண்டியதா இருந்துது" நித்தின், "நீ சொல்றது சரி. "

No comments:

Post a Comment