Wednesday 8 April 2015

சுகன்யா... 108

“மச்சான்… வெண்பொங்கல் சூப்பரா இருக்கு. அப்புறம் சுகன்யா என்னடா சொன்னா...?” நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு சீனு சாப்பிடுவதில் கவனமாக இருந்தான்.

“என்னத்த சொன்னா... வேணும்ன்னே என்னை வெறுப்பேத்தறா... பூஜை நேரத்துல கரடியா அவளோட அம்மாவும் வந்துட்டாங்க...”

“மாமா... இவருக்கு கொஞ்சம் கொத்சு போடுங்க... டேஸ்டா இருக்காம்; ஆனா கேக்கறதுக்கு கூச்சப்படறார்.” செல்வாவின் மனத்தவிப்பை புரிந்துகொள்ளாதது போல், அவன் இலையைக் காட்டினான் சீனு.

“மாப்ளே... சுந்தரி அத்தை முகத்தைப்பாத்தியா...? என் ஆளு கையை நான் புடிச்சிக்கிட்டு இருந்ததைப் பாத்ததும் உர்ன்னு என்னை மொறைச்சாங்க... என் மேல ரொம்பவே கோவமா இருக்காங்கன்னு தோணுது...” செல்வா தன் புலம்பலை ஆரம்பித்தான்.

“பேஷா... வேணுங்கறதை கேட்டு பொறுமையாச் சாப்பிடுங்கோ சுவாமி... உங்க ரெண்டு பேரையும் ஸ்பெஷலா கவனிக்கச் சொல்லி எனக்கு உத்தரவு ஆயிருக்கு...”

“யார் சொன்னது மாமா?” சீனுவின் கண்களில் ஏகத்திற்கு வியப்பு.

“ரகு சாரோட அக்கா உங்களுக்கு என்ன உறவு ஆகணும்? அவாதான் சொன்னா...”

“ஓய்... இங்கே பாரும்... சாரோட பேரு செல்வா... இவர்தான் அவாளோட மருமகனா ஆகப்போறார்....”

“அப்படியா பேஷ் பேஷ்... உங்களுக்கும் ஒரு அரை கரண்டி பொங்கல் போடட்டுமா? சூடா இருக்கு இட்லி.. இல்லே முறுகலா ஊத்தப்பம் ஒண்ணு சாப்பிடறேளா... ?” பரிசாரகர் தன் வெற்றிலைக்காவி ஏறிய பற்களை சீனுவிடம் காட்டினார்.

"மாமா... ஊத்தப்பம் வாக்கறதுல நீங்க எக்ஸ்பர்ட்டுன்னு கேள்விப் பட்டிருக்கேன்.." சீனு தன் முகமெங்கும் புன்னகையை ஓடவிட்டான்.

“யாருடா இது? எனக்குத் தெரியாம பாண்டிச்சேரில புது மாமா உனக்கு?

“மச்சான்... பூணூல் போட்ட ஆளை மாமான்னு கூப்பிடறது எங்களுக்குள்ள சகஜம்டா.. மாமான்னு மரியாதை கொடுத்ததும் என்னை அந்தாளு எப்படி விழுந்து விழுந்து உபசரிச்சான் பாத்தியா... ரெண்டு நிமிஷம் பொறு... நெய் ஊத்தப்பம் வரப்போவுது பாரு...”

"சார்... இவாளோட மேரேஜ் டேட் பிக்ஸ் ஆயிடுத்தோ?" சூடாக நெய் ஒழுகும் வெங்காய ஊத்தப்பம் இருவரின் இலையிலும் வந்து விழுந்தது.

"மாமா... கவலையே படாதேள்... இவரோட கல்யாணம் சுவாமிமலையிலத்தான்... மூணு நாள் சாப்பாட்டை நீர்தான் கவனிச்சுகணும்.. ரகு சார் கிட்ட இன்னைக்கே சொல்லிடறேன்." சீனு செல்வாவை நோக்கி கண்ணடித்தான்.

“டேய்... நீ கொட்டிக்கறதுலேயே இருடா..” எரிந்து விழுந்தான் செல்வா.

“ஏன்டா எரிஞ்சு விழறே? இந்த கல்யாணத்துல சாப்பிடறதைத் தவிர வேறே என்னடா வேலை நம்ம ரெண்டு பேருக்கும்?”

"எனக்கு என் ஆளோட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்டா... அதுக்கு ஒரு வழி சொல்லுடா நாயே..."

"என்னை முழு நேர மாமாவா ஆக்கிட்டீங்கடா...! சீனுவின் சிரிப்பை செல்வா ரசிக்கவில்லை.

“சுந்தரி அத்தை என்னை எரிக்கற மாதிரி பாத்தாங்கன்னு சொன்னேன்... அதை நீ கண்டுக்கவே இல்லே...”

“பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்... அவங்க பொண்ணு கையை நீ முறுக்கி நெறிச்சா அவங்களுக்கு கோவம் வராதா?” பில்டர் காஃபியை சர்ர்ரென ஓசையெழுப்பி உறிஞ்சினான் சீனு.

“நீதானேடா அவ கையை புடிச்சிக்கிட்டு கதறுன்னே?”

“நாலு பேரு எதிர்லேயா புடிக்க சொன்னேன்? கொஞ்சமாவது உனக்கு புத்தி இருந்தாதானே?”

“மாப்ளே... இப்ப என்னடா பண்றது?”

"இதோ பாரு... சுகன்யா உன்னைப்பாத்ததும் மெழுகா உருகி நீ கையைப்புடிச்சு இழுத்ததும், சத்தம் போடாம உன் பின்னால வந்தாளே அதை நெனைச்சு சந்தோஷப்படு..."

"ஆமாம் மாப்ளே... சுகன்யா என்னை நேர்ல பாத்ததும் பிண்ணி பெடல் எடுப்பான்னுதான் நினைச்சேன். நடு ஹால்லே தகராறு பண்ணிடப்போறாளேன்னும் பயந்தேன்... ஆனா உன் தாடி மீசை எங்கடான்னு சிரிச்சிக்கிட்டே போங்கேத்தறா... இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலைடா..."

"மச்சான்.. என் கிட்ட உளர்ற மாதிரி அவ எதிர்லே "பொண்ணுங்களை"ன்னு சொல்லி அவ மூடை சொதப்பிடாதே... "

"தேங்க்ஸ்டா மாப்ளே... என் நாக்குல சனிதாண்டா இருக்கான். பேசி பேசியே கெடறேன் நான்."

“சரி விஷயத்துக்கு வா... அவகிட்டே சாரின்னு சொன்னியா நீ..?”

“என்னை மன்னிச்சுடு சுகன்யான்னு சீரியஸா மன்னிப்பு கேட்டுட்டேன்டா...”

“அனு கழுத்துல தாலி ஏறினதும், அவங்கவங்க அக்காடானு ஓய்ஞ்சு போய் உக்காருவாங்க... சுந்தரி அத்தைக்கிட்ட நான் ஏதாவது பேச்சு குடுக்கறேன்... அப்ப உன் ஆளை, சத்திரத்து மாடிக்குத்தள்ளிட்டுப் போடா...”

“தள்ளிட்டு போயி...” செல்வா மெல்லியகுரலில் இழுத்தான்.

“டேய்... இப்ப நீ என்னை வெறுப்பேத்தறே? சீனு தன் தலையில் அடித்துக்கொண்டான்.

“மாப்ளே என் நேரம் சரியில்லடா.. புது எடத்துல என்னை ஒதை பட வெக்காதேடா... நான் எது பண்ணாலும் அது தப்பாயிடுதுடா... சீரியஸா கேக்கறேண்டா...” அதற்கு மேல் ஏதாவது சொன்னால் செல்வா அழுதுவிடுவான் என சீனுவுக்குத் தோன்றியது. 



“எல்லாம் என் தலையெழுத்துடா... உனக்கு எல்லாத்தையும் புட்டு புட்டு வெக்க வேண்டியதா இருக்கு..." சீனு துளிர் வெற்றிலையை, வாசனைப்பாக்குடன் மெல்ல ஆரம்பித்தான். ஹேவ்... என நீளமாக ஏப்பம் விட்டான்.

"மாப்ளே... கோச்சிக்காதடா..." செல்வா சீனுவின் கையை பிடித்துக்கொண்டான்.

"உன் கண்ணால பாத்தேல்லா... உன் அப்பாவை சுகன்யா எவ்வளவு பாசமா உபசரிச்சா...? அதான்டா உனக்கும் அவளுக்கும் இருக்கற வித்தியாசம்...”

“ம்ம்ம்...”

“அவ உன் பக்கத்துலே ஆசையா வந்து நின்னாளே, நாயே... நீ அவ இடுப்பைத்தானே மொறைச்சுக்கிட்டு இருந்தே... நாலு மாசம், உன்னை நெனைச்சு நெனைச்சு தனியா உருகிகிட்டு இருந்தாளே, ஒரு தரமாவது நிமிர்ந்து நேரா அவ மொகத்தை பாத்தியாடா...? அவ கண்ணுல இருந்த ஏக்கத்தைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணியா?"

"மாப்ளே...?"

"மீனா, நாலு நாளைக்கு ஒருதரம் 'என் அண்ணனை வெறுத்துடாதே... வெறுத்துடாதேன்னு' அவகிட்ட அழுத கதையெல்லாம் உனக்கு என்னடாத் தெரியும்?"

"சுகன்யா... இளைச்சுப்போயிருக்கியே... ஒழுங்கா சாப்பிடறது இல்லையான்னு ஒரு வார்த்தை ஆதரவா கேட்டியாடா? அந்த மாதிரி ஒரு லுக்காவது வுட்டியாடா?"

"நான் ஒரு முண்டம்டா... ஒத்துக்கறேன்…"

“உன்னைப்பாத்ததும், நீ மெலிஞ்சிப் போயிருக்கேன்னு ஒரு அதிர்ச்சி; ஒரு பரபரப்பு அவ கண்ணுல வந்திச்சே... அதைக்கூட கவனிக்கலே நீ? கம்மினாட்டி... ஒரு பொம்பளை மனசை உனக்கு புரிஞ்சுக்கத் தெரியலே; உனக்குல்லாம் எதுக்குடா காதல்...?”

"சாரிடா மாப்ளே... இந்த நேரத்துல என்னை நீயும் வெறுப்பேத்தாதடா... ப்ளீஸ்..."

"அவ கையை புடிச்சியே... அவ விரலைப்பாத்தியா?"

"ஹூகூம்... இல்லைடா மாப்ளே?”"

“உன் தோள் உரச நின்னாளே... அவ கழுத்தைப் பாத்தியா?”

"மாப்ளே.. என்னடா சொல்றே?"

"நிச்சயதார்த்ததுலே நீ போட்டியே அந்தச்செயின் அவ கழுத்துலே இருந்திச்சின்னு சொல்றேன்.."

"சாரிடா... எனக்கு இருந்த பதட்டத்துலே அதை நான் கவனிக்கலேடா..."

"அவ விரல்லே நீ போட்ட மோதிரம் இருந்திச்சிடா.... அவ உன்னை எப்பவும் தன் மனசுக்குள்ளவே வெச்சிருக்கா... அதனுடைய அடையாளம்தான், அவ கழுத்துலே, அவ விரல்லே இருந்திச்சி... அவ உன்னை தூக்கி எறியவேயில்லே... நீதான் பெரிய மசுரு மாதிரி அவ போட்ட மோதிரத்தை கழட்டி எறிஞ்சே..."

“தப்புத்தாண்டா...”

“மச்சான்.... சுகன்யாவுக்கு உன் மேல எந்த கோவமும் இல்லே... இது எனக்கு நல்லாத் தெரியும். சும்மாங்காட்டியும் முறுக்கறா அவ... என்கிட்ட வம்பு பண்ணுடான்னு சொல்லாம சொல்லி உனக்கு அவ பூச்சிக்காட்டறா... நீ அவளை அழ வெச்சீல்லா... அதுக்கு உன்னை பதிலுக்கு அழவெக்கணும்ன்னு அவ நினைச்சா எவ்வளவு வேணா அழவெச்சிருக்கலாம்... உன்னை இந்த அளவோட விட்டாளே.. அதை நினைச்சு சந்தோஷப்படுடா.."

“அப்படித்தாண்டா தோணுது...”

"என்னத் தோணுது? நான் சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறே?

"மாப்ளே... எந்த பக்கம் போனாலும் கேட்டு போடறீயேடா...?"

“அந்த அளவுக்கு உன்னை அவ லவ் பண்றாடா... இப்ப அவளுக்குத் தேவை உன் உண்மையான அன்புடா... உன் உண்மையான அக்கறைடா...”

“மாப்ளே... அவளுக்காக நான் எது வேணா செய்யத் தயார்டா...”

“இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணை மட்டும் பண்ணு; நான் சொன்ன மாதிரி அவளை மாடிக்குப் அழைச்சிக்கிட்டு போய்....”

“அழைச்சிட்டு போய் ஒரு கிஸ் அடிக்கவா?”

“அலையாதடா நாயே...”

“என்னால உன்னைப் பிரிஞ்சு இருக்கமுடியலே... எனக்கு ஒரு வழி சொல்லிட்டு டில்லிக்கு போ.. இல்லேன்னா.. நான் செத்துடுவேன்னு ஒரு பிட்டைப் போடு...”

“ம்ம்ம்...”

“பிலிம் காட்டிக்கிட்டு இருக்கும் போதே, மெதுவா உன் ஆளை ஒரசிப்பாரு... பத்திக்கற மாதிரி தெரிஞ்சா. பட்டுன்னு கட்டிபுடிச்சி.. சட்டுன்னு பச்சக் பச்சக்குன்னு உதட்டுலேயே நாலு கிஸ் அடிச்சுடு... எந்த பொண்ணும் இந்தக் கட்டிபுடி வைத்தியத்துல நார்மல் ஆயிடணும்...”

“ஆயிடுவாளா?”

“உன் கட்டத்துல என்ன இருக்கோ? எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்...? நானும் தான் அவஸ்தை படறேன்...."

"என்னடா சொல்றே?"

"ஹேங்க்... உன் தங்கச்சியும் ஒரு பொண்ணுதான்; அவளை புரிஞ்சுக்கறதும் கஷ்டமாத்தான் இருக்குன்னு சொல்றேன். எப்ப சிரிப்பா.. எப்ப எட்டி ஒதைப்பான்னு ஒரு மண்ணும் புரியலே..."

"மீனாவுக்கும் எங்க அம்மாவுக்கு வர்ற மாதிரி சட்டு சட்டுன்னு கோவம் வருமே எப்படிடா சமாளிக்கறே அவளை...? "

"மச்சான்... வாழ்க்கையில அப்பப்ப கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆவணும். எல்லாம் அந்த ஆண்டவன் விட்ட வழின்னு போயிகிட்டே இருக்கணும்...”

“நம்ம வேலாயுதமும் இதைத்தாண்டா சொன்னான்.”

“ வேறென்ன சொல்லுவான்; நம்ம சிஸ்யன் தானே அவன்?” சீனு தன் காலரை தூக்கிவிட்டுக்கொண்டான்.

“சாமீ... இப்ப எனக்கு சிம்பிளா ஒரு வழி சொல்லுங்களேன்? செல்வா தன் நண்பனை விரக்தியாகப் பார்த்தான்.

“உன் பிகரை கட்டிப்புடிக்கறதுக்கு முன்னாடி உன் குலதெய்வத்தை ஒரு தரம் வேண்டிக்கோ... எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, மாரியாத்தா கோவுல்லே கூழ் ஊத்தி... கொழுக்கட்டை படைக்கிறேன்னு... மஞ்சாத்துணியிலே ஒரு ரூவா முடிஞ்சி வெய்டா... கொஞ்சமாவா அழும்பு பண்ணியிருக்கே நீ?”

“டேய்... என் தலையெழுத்து உன் எதிர்லே கைகட்டிக்கிட்டு உன் பேச்சையெல்லாம் கேக்க வேண்டியதா இருக்குது..."

“மவனே... கிஸ் அடிக்கறதுக்கு முன்னாடி, இந்த பக்கம் அந்த பக்கம் ஒரு தரம் பாத்துகோ... நம்ம எதிர்வீட்டு ராமசாமி மாதிரி பண்டாரப்பய எவனாவது அங்கே இங்கே நின்னுக்கிட்டு இருக்கப்போறானுங்க... அய்யோ அம்மான்னு கூவிடுவானுங்க... அப்புறம் ஊர் தெரியாத ஊர்ல இது ஒரு பெரிய வம்பாயிடப்போவுது...” 


புரோகிதர்கள் மந்திரம் ஓத, பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் தங்களைச் சுற்றி நின்று மனமார வாழ்த்த, பெரியோர்கள் குறித்திருந்த நல்ல நேரத்தில், அனுராதாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் சம்பத்குமாரன்.

மாங்கல்யதாரணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியினர், குடும்பத்தில் மூத்தவர்களான சிவதாணு கனகா தம்பதியினரை முதலில் நமஸ்கரித்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள். நல்லசிவமும், ராணியும், சந்தோஷத்தில் கண்கள் கலங்க, தங்களின் ஓரே வாரிசின் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தவர்களுக்கு, நன்றிகூறி வழியணுப்பிக் கொண்டிருந்தார்கள்.

* * * * *

அனுவுக்கும், சம்பத்துக்கும் கல்யாண அன்பளிப்பாக வந்த பொருட்களை, ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தாள் சுகன்யா. உடன் தன்னுடைய துணிகளையும் சூட்கேஸில் அடுக்கியவாறு தன் அத்தை ராணியுடன் பேசிக்கொண்டிருந்தாள். சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்ததும் புதுமணத் தம்பதிகளுடன் அவளும் சுவாமிமலைக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

சுகன்யாவின் செல் ஒலிக்க ஆரம்பித்ததும், வரும் கால் செல்வாவிடமிருந்து இருக்குமோ என்ற உள்ளுணர்வினால், சுற்றுமுற்றும் பார்த்தாள். தானிருந்த அறையை விட்டு வெளியில் வந்தாள். நினைத்தது போல் செல்வாதான் அவளை அழைத்தான். சுகன்யா உதடுகளில் மெல்லிய சிரிப்புடன் கால் பட்டனை அழுத்தினாள்.

“...”

“சுகும்மா.... ப்ளீஸ்... காலை கட் பண்ணிடாதே..."

“நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

டேய்... மாங்கா... சுகன்யா உனக்கு சொல்ற பதிலைப் பாத்தியாடா... பிஸியா இருக்காளாம்... செல்வா எல்லாம் உன் நேரம்டா... விதைச்ச வெனையை இப்ப அறுத்துத்தானே ஆகணும்... மனுசனா பொறந்தவன் எவளையும் காதலிக்கவே கூடாது... தன் மனசுக்குள் நொந்து போனான் செல்வா.

“நீ மட்டும்தான் எனக்கு வேணும்ம்மா..?” செல்வா செல்லில் கிசுகிசுக்க சுகன்யாவின் இதயம் வெகு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

“மிஸ்டர் செல்வா சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரி கன்னா பின்னான்னு உளறாதீங்க...?”

“உளர்றேனா?" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நான் கையைப்பிடிச்சி இழுத்ததும், நாய் குட்டி மாதிரி என் பின்னாடி வந்தா... நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்கன்னு சிரிச்சா...? இப்ப எதுக்கு என்னை மிஸ்டர்ங்கறா? செல்வாவுக்கு இலேசாக மனதில் கிலி பிடிக்க ஆரம்பித்தது.

"பின்னே?” சுகன்யாவின் குரலில் சிறிது கேலி இருந்தது.

“சுகு... ப்ளீஸ் எங்கிட்ட பழையபடி கொஞ்சம் பிரியமா பேசும்மா..”

“உங்களுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன்..."

"என்னம்மா சொல்றே?"

"எங்கிட்ட பேசவே பிடிக்கலைன்னு நீங்க சொன்ன மாதிரி எனக்கு ஞாபகம்... என் முகத்தை பாக்கவே பிடிக்கலேன்னு சொன்னதாகவும் நினைவு... அதான் எனக்கு ஒண்ணும் புரியலே” சுகன்யா தன் உதட்டை சுழித்துக்கொண்டே இழுத்தாள்.

“நான் அப்படி பேசினதெல்லாம் தப்புதாம்மா... இப்ப உன்கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும்மா... ப்ளீஸ்... ஒரு ரெண்டு நிமிஷம் அந்த ரூமை விட்டு ஹாலுக்கு வாயேன்..."

“நான் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள எங்க ஊருக்கு போகணும்... திங்ஸ்ல்லாம் பேக் பன்ணிக்கிட்டு இருக்கேன்..." சுகன்யாவின் குரலில் இருந்த கிண்டலும், கேலியும் சற்றே குறைந்திருப்பதாக செல்வாவுக்குத் தோன்றியது.

"சுகு... ரொம்ப பிகு பண்ணாதடி."

"செல்வா... என்னை போடி வாடீன்னு பேசாதீங்க... பழசையெல்லாம் தயவு செய்து மறந்துடுங்க.."

"அயாம் சாரி சுகன்யா... கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ் பார் மீ.." செல்வாவின் குரல் கெஞ்சலாக வந்தது.

"எங்கம்மா என் பக்கத்துல இருக்காங்க... காலையில உங்கக்கூட நான் பேசிக்கிட்டு இருந்ததே அவங்களுக்கு பிடிக்கலேன்னு எனக்குத் தோணுது... இப்ப என்னால எங்கேயும் வரமுடியாது...”

“பொய் சொல்லாதே செல்லம்... உங்கப்பாவும் அம்மாவும், என் பாதரோட பேசிகிட்டு இருக்காங்க... அவங்க எதிர்லேதான் சீனுவும் நின்னுக்கிட்டு இருக்கான். அங்கேதான் ரகு மாமாவும் இருக்கார். நீ உங்க அத்தையோட ரூமுக்குள்ள உக்காந்து இருக்கே... எனக்கு எல்லாம் தெரிஞ்சுதான் உன்னைக்கூப்பிடறேன். சட்டுன்னு வெளியில வாம்மா...”

சரிதான்... இதெல்லாம் சீனுவோட பிளானாத்தான் இருக்கணும். செல்வா ஹால்லேதான் எங்கேயாவது இருக்கணும்... சுகன்யா தன் தலையிருந்த சற்றே வாடியிருந்த பூச்சரத்தை எடுத்து எறிந்தாள். செல்வா எங்கிருக்கிறான் என ஹாலில் தனது பார்வையை ஓட்டித் தேடினாள்.

“சரி... நீங்க சொல்ல நினைக்கறதை போன்லேயே சொல்லுங்க...”

“சுகன்யா என்கிட்ட பேசறதுக்கு, என்னப்பாக்கறதுக்கு உங்கம்மாவோட பர்மிஷன் நிஜமாவே உனக்குத் தேவைதானா?”

“அந்த தேவையை உண்டாக்கினதே நீங்கதான்.. நான் இல்லே..”

“ப்ளீஸ்... சுகு... நான் பண்ணதெல்லாம் தப்புதான்... உங்கம்மாவுக்கு என் மேல இருக்கலாம்... அதுக்காக என்னை நீ இப்ப கொல்லாதடீ...” செல்வா உருகினான்.

“...”

“சுகு... ஐ லவ் யூம்மா... பழையபடி என் கிட்ட நீ ஆசையோட பேசமாட்டியா...?” செல்வாவின் குரல் உடைந்து போயிருந்தது. 

என் செல்வா அழறானா என்ன? குரல் கலங்கின மாதிரி இருக்கே? மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தாள் சுகன்யா. டைனிங் ஹாலில், காலையில் செல்வா தன் மணிக்கட்டைப் வலிமையுடன் இறுக்கிப்பற்றியது அவள் நினைவுக்கு வந்தது. அவன் கையின் வலிமையை நினைத்தபோது உடல் சிலிர்த்தது அவளுக்கு. இன்னமும் இலேசாக சிவந்திருந்த தன் புறங்கையை ஒரு முறைப் பார்த்தாள். அவன் தனக்கு ஆசையுடன் போட்ட மோதிரத்தை ஒரு முத்தமிட்டாள். செல்வா தொட்ட தன் புறங்கையை கன்னத்தில் ஒற்றிக்கொண்டு மனசுக்குள் இலேசாகக் கிளுகிளுத்தாள்

“நீங்க என்ன சொல்றீங்க... நீங்க... என்னை லவ் பண்றீங்களா?” சுகன்யா அவனை சீண்டி விளையாட விரும்பினாள்.

“சுகு... ஐ லவ் யூடாச்செல்லம்...”

“நிஜமாவா?”

“சத்தியமா சொல்றேன் சுகன்யா... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...” சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டு அவன் சொன்னதை ரசித்தாள்.

“உங்களை நான் நம்பலாமா?”

“சுகன்யா... உனக்கு என் மேல இன்னமும் கோவம் மீதி இருந்தா... நேரா வந்து என்னை நாலு அடி அடிச்சுடு... ஆனா இப்படில்லாம் பேசி என் மனசை புண்படுத்தாதே...”

"நான் எதுக்கு உங்களை அடிக்கணும்?"

"சரி... என் மேல உனக்கு கோவமில்லேன்னும் தெரியும்... எனக்கு உன்னைப் பாத்தே ஆகணும்... எனக்கு உங்கிட்ட பேசியே ஆகணும்... ஒரு அஞ்சு நிமிஷம் என்னை வந்து பாத்துட்டுப் போடீ..." செல்வாவின் குரலில் அவள் மேல் அவனுக்கிருந்த உரிமை கொப்பளித்துக்கொண்டு வந்தது.

"நான் எப்ப சொன்னேன்? உங்க மேல இருக்கற கோவம் எனக்குத் தீந்து போச்சுன்னு?"

"சரிம்மா... உனக்கு என் மேல கோவம் இருக்கு... ஆனா உனக்கு கோவம் தீந்து போச்சுன்னு நான் நெனைச்சேன்... அதுவும் என் தப்புதான்..."

"ஏன் அப்படி நினைச்சீங்க நீங்க?"

"என் அப்பாவை மாமா... மாமான்னு கூப்பிட்டு, அவர் திக்குமுக்காடி போற அளவுக்கு அவரை நீ உபசரிச்சே... காலையில உன் கையை பிடிச்சேன்... நீ எதுவுமே சொல்லலே... நான் கூப்பிட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம என் கூடவே வந்தே... நான் நல்லாயிருக்கேனான்னு சிரிச்சுக்கிட்டே விசாரிச்சே?"

"ஹால்லே நாலு பேரு முன்னாடி நீங்க என் கையை பிடிச்சீங்க... நான் சட்டுன்னு உங்க கையை உதறிட்டு போயிருந்தா அங்கே இருந்த முகம் தெரியாத நாலு பேரு என்னைத் தப்பா நினைச்சிருப்பாங்க... உங்களையும் தப்பா நினைச்சிருப்பாங்க...”

“சுகன்யா... எதையும் யோசிக்காம, புத்திக்கெட்டுப்போய், உன்னை நான் அழவெச்சிட்டேன்... அதுக்காக பதிலுக்கு பதில் இப்ப என்னை நீ அழவெக்காதே... ப்ளீஸ்...”

“விளையாட்டுக்குக்கூட உங்களை அழவெக்கறதுக்கு, உங்ககிட்ட எனக்கு எந்த உரிமையும் இல்லேன்னு எனக்குத் தெரியும்... ஆயிரம்தான் இருந்தாலும்... நீங்க என் ஃப்ரெண்டு மீனாவோட அண்ணன். சீனு உங்களோட ஃப்ரெண்ட்... அவரும் என்னோட ஃப்ரெண்டுதான். அதனாலத்தான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு ஒரு மரியாதைக்குக் கேட்டேன்..."

“சரி... நீ என்னைவிட புத்திசாலி.. நான் வடிகட்டின மடையன்னு ஒத்துக்கறேன்... இந்த மடையனை நீ மன்னிச்சுடு.. இப்ப உன்னை நான் தனிமையிலே சந்திக்கணும்...”

“தனியா வந்தா திரும்பவும் கண்டதைப் பேசி என்னை நீங்க அழ வெக்க மாட்டீங்களே?”

“சுகன்யா... ஐ பிராமிஸ்... இனிமே எந்த காரணத்துக்காகவும் என்னால உன் கண்ணுல கண்ணீரே வராது...”



“சரி.. உங்களை நான் மீட் பண்றேன். ஆனா.... இன்னைக்கு வேண்டாம்... வர்ற சனிக்கிழமையன்னைக்கு நான் டில்லிக்கு திரும்பிப்போறேன்... அன்னைக்கு காலையில பாக்கலாம்.”

"சுகன்யா... உன் விளையாட்டெல்லாம் போதும்... இப்ப நீ வரப்போறியா இல்லையா?" இதுவரை அவளிடம் கெஞ்சலாக பேசிக்கொண்டிருந்தவன், செல்வா நறுக்கென பேசத்தொடங்கினான்.

"வரல்லேன்னா என்னப் பண்ணுவீங்க...?" சுகன்யா கேலியாக சிரிப்பதாக உணர்ந்தான் அவன்.

"நீ இருக்கற இடத்துக்கே வந்து உன்னை என்னால தூக்கிட்டுப்போக முடியும்...” செல்வாவின் குரல் சற்றே உயர்ந்தது.

"வெரிகுட் மிஸ்டர் செல்வா... இப்ப நான் ஹால்லேதான் இருக்கேன்... உங்களால முடிஞ்சா... சட்டுன்னு வந்து என்னை கொஞ்சம் தூக்கித்தான் பாருங்களேன்..." களுக்கென சிரித்த சுகன்யா காலை கட் பண்ணிணாள்.

அயாம் சாரிடா செல்வா... உன்னை அழவெக்கணுங்கறது என் எண்ணம் இல்லேடா... செல்வா சீக்கிரம் வாடா... நம்மக் குடும்பத்துல இருக்கற எல்லாரும் ஒண்ணா உக்காந்து இருக்காங்க... எப்படி இருக்கே சுகன்யான்னு எல்லார் முன்னாடியும் ஒரே ஒரு தரம் கேளுடா...

எல்லோருமே உங்கிட்டேருந்து இதைத்தான் எதிர்பாக்கறாங்க... அப்படியே எங்க கல்யாண தேதியையும் ஃபிக்ஸ் பண்ணுங்கன்னு அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லுடா... எங்கம்மாவுக்கு உன் மேல இருக்கற கோபமும் தீர்ந்து போயிடும்... சுகன்யா மனதுக்குள் பித்தானாள். கலங்கிய தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். 

கல்யாணச்சத்திரத்தின் மாடியில், கைப்பிடி சுவரில் தன் இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு அசைவில்லாமல் நின்றிருந்தான் செல்வா.

"மச்சான்... ?"

"ம்ம்ம்..."

"சுகன்யாகிட்ட பேசிட்டியா?"

"ப்ச்ச்ச்.. விடுடா மாப்ளே"

"என்னடா ஆச்சு... கீழே எல்லாரும் கிளம்பறாங்கடா.."

"சுந்தரி அத்தை என் மேல கோவமா இருக்காங்களாம். எது சொல்றதா இருந்தாலும் போன்லே சொல்லுங்கறா... இப்ப நான் வரமுடியாதுன்னு கிளியரா சொல்லிட்டா...." செல்வாவின் முகம் சிவந்து தொங்கிப்போயிருந்தது.

* * * * *

"சுகன்யா... சீனு பேசறேன்.." சீனு தன் செல்லின் ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

"சொல்லுங்க..."

"என்னம்மா இது...? வரட்டுப்பிடிவாதம் பிடிக்காதே.... இதனால யாருக்கும் லாபம் இல்லே... ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வந்து செல்வாவைப் பாத்துட்டு போகக்கூடாதா?"

"சீனு... நீங்களுமா என்னை புரிஞ்சுக்கலே...?" குரலில் வலுவில்லை.

"சரி... உங்கம்மாவுக்கு செல்வா மேல அப்படி என்ன கோவம்...?"

"செல்வா என்னை சந்தேகப்பட்டதை... தன்னையே சந்தேகப்பட்டதா அவங்க ஃபீல் பண்றாங்க...”

"என்ன சொல்றே சுகன்யா?" சீனு திடுக்கிட்டுப்போனான்.

“நூலைப் போல சேலை... நான் நூல்... என் பொண்ணு சுகன்யா சேலை... செல்வா சேலையை சந்தேகப்பட்டுட்டான். நான் வளர்த்த என் பொண்ணை அவன் சந்தேகப்பட்டா அது என்னையே சந்தேகப்பட்ட மாதிரிதான்னு என் அம்மா அவரு மேல கோவமா இருக்காங்க.. எங்கப்பா எவ்வளவோ சொல்லிப்பாத்து இருக்காங்க... ஆனா இன்னும் அவங்க கொஞ்சம் மனவருத்தத்துலேத்தான் இருக்காங்க..”

“ஓ... மை... காட்...” கேட்டுக்கொண்டிருந்த செல்வாவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

"சுகன்யா இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும்... " சீனு தீர்க்கமாக பேசினான்.

"எனக்கும் என்னப்பண்றதுன்னு புரியலே சீனு... அதனாலத்தான் கொஞ்ச நாளைக்கு டில்லியிலேயே இருப்போம்ன்னு நான் முடிவெடுத்தேன்..."

"சுகன்யா நீ டில்லியிலே இருந்தா மட்டும் இந்த ப்ராப்ளம் சால்வ் ஆயிடுமா?"

"ஆகாது சீனு... நிச்சயமா ஆகாது... எங்க ப்ராப்ளம் எங்களோட இருக்கட்டும்... இதனால அடுத்தவங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாதுன்னுதான் உங்க கல்யாணமாவது நேரத்துல நடக்கட்டுமேன்னு, எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கன்னு நடராஜன் மாமாகிட்ட ரிக்வெஸ்ட் பண்ணிக்கிட்டேன்."

"சுகன்யா... உன் மனசைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... ஆனா இந்த ரெண்டு மாசமா செல்வா உன்னை ரொம்பவே மிஸ் பண்றான்... அவன் ஒழுங்கா டிரஸ் பண்றது இல்லே; சாப்பிடறது இல்லே; அவனுக்கு பைத்தியம்தான் பிடிக்கலை; இதெல்லாம் உனக்குத் தெரியுமா?"

"தெரியும்... சீனு... நீங்க என்ன நினைக்கறீங்க... நான் மட்டும் தில்லியிலே நிம்மதியா, சந்தோஷமா இருக்கேனா?"

"சே...சே... நான் அப்படி சொல்லலே சுகன்யா..."

"பெரியவங்க நாங்க முடிவு பண்ண விஷயத்தை கேன்சல் பண்றதுக்கு செல்வாவுக்கு என்ன உரிமை இருக்கு? எனக்குத் தெரியாமா இன்னொரு தரம் நீ செல்வாவைப் பாக்கக்கூடாது... பேசக்கூடாதுன்னு... என் அம்மா சொன்னாங்க; நானும் நாலு மாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருந்தேன் சீனு..."

"சுகன்யா..."

"இன்னைக்கு அவரை உங்கக்கூட நேராப் பாத்ததும், அவர் முகம் வாடிப்போயிருந்ததைப் பாத்ததும்.. என்னை என்னால கட்டுப்படுத்திக்க முடியலே; அவர்கிட்டே பேசிட்டேன்..."

"ஐ அண்டர்ஸ்டேன்ட்... பட் சுகன்யா... ஒரே ஒரு ரெண்டு நிமிஷம் நீ செல்வா கிட்ட பேசணும் சுகன்யா... ப்ளீஸ்..." சீனு, வானத்தை வெறித்துக்கொண்டிருந்த செல்வாவின் தோளில் கையைப் போட்டு அவனைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

"என்னை வளத்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது என் அம்மா... அவங்க மனவருத்தத்துலே இருக்கும்போது அவங்க சொன்னதை மீறி எதையும் செய்ய எனக்கு விருப்பம் இல்லே; என்னைப் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.. என்னைக் கூப்பிடறாங்க நான் கிளம்பறேன் சீனு..."

"சுகன்யா... ஒன் செகண்ட்...."

"பட் ஐ லவ் ஹிம் சீனு... என் மனசை, என் நிலைமையை அவருக்கு நீங்கதான் புரிய வெக்கணும்... நிச்சயமா எங்கம்மா மனசு மாறிடுங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு... அதுவரைக்கும் கொஞ்ச நாள் அவரை பொறுமையா இருக்கச்சொல்லுங்க... டேக் கேர் ஆஃப் ஹிம்..." 

அனுவின் திருமணத்திற்காக தில்லியிலிருந்து வந்திருக்கும் சுகன்யாவை நேரில் சந்தித்து, தன் தவறுக்கு அவளிடம் வருந்தி, தொலைத்துவிட்ட தன் காதலை மீண்டும் அடைந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பாண்டிச்சேரிக்கு சென்ற செல்வா, மனதில் பெருத்த ஏமாற்றத்துடன் சென்னைக்குத் திரும்பி வந்திருந்தான்.

"செல்வா... சுகன்யாவைப்பாத்தியாடா?"

"பாத்தேம்மா..."

"என்னடா சொன்னா..."

"சும்மா என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கம்மா.." செல்வா முகத்தை திருப்பிக்கொண்டான்.

"எரிஞ்சு விழாதேடா... நீ சிரிக்கறதையே விட்டுட்டியேடா...! நான் எப்படிடா சும்மா இருக்கறது?"

"நிஜமாவே சுகன்யாவுக்கு பெரிய மனசும்மா.." செல்வா நெகிழ்ந்தான்.

"ம்ம்ம்ம்..."

"சுகன்யாவை என்னோட பேசக்கூடாதுன்னு அவளோட அம்மாதான் கண்டிச்சி வெச்சிருக்காங்க..."

"தான் பெத்த பொண்ணோட நடத்தையை சரியான காரணம் இல்லாம சந்தேகப்பட்டா, எந்த தாய்க்கும் கோபம் வரத்தான் செய்யும்..." நடராஜன் அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார்.

"அப்பா... நான் சுகன்யாகிட்ட என் தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டேன்..."

"இப்ப கோவத்துல இருக்கறது சுகன்யாவோட அம்மா.."

"இவன் பிரச்சனை எப்பத்தான் ஒரு முடிவுக்கு வருமோ தெரியலே?" மல்லிகா தனக்குத்தானே சலித்துக்கொண்டாள்.

"மீனா கல்யாணம் நடந்து முடியறவரைக்கும் நாம கொஞ்சம் பொறுமையாத்தான் இருந்தாகணும்.." நடராஜன் தன் தோள் துண்டை உதறி கழுத்தில் போட்டுக்கொண்டு தோட்டத்தை நோக்கி நடந்தார்.

* * * * *

வெள்ளிக்கிழமை மாலை அனுராதா சம்பத்குமாரன் தம்பதியினர், தங்கள் நண்பர்களுக்கு கொடுத்த இரவுவிருந்துக்கு செல்வாவின் குடும்பத்தினரும், சீனுவின் குடும்பத்தினரும் அழைக்கப் பட்டிருந்தனர். விருந்தளிக்கப்பட்ட ஹாலில் சுகன்யாவைத் தேடி தேடி செல்வாவின் கண்கள் பூத்துப்போக, அவன் மனம் அலுத்துப்போனது.

காதலியைக் காணமுடியாமல் தன் அண்ணன் படும் தவிப்பையும், அவஸ்தையையும் மீனாவால் புரிந்து கொள்ள முடிந்தது. சுகன்யாவின் செல் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கும் தகவலை அரைமணி நேரமாக கேட்டு கேட்டு அவளும் களைத்துப் போய்விட்டாள்.

"சீனு... சுகன்யாவை காணோமே? சம்பத் குடுக்கற டின்னருக்கு வராம அவ எங்கே போயிருப்பா...?"

"நானும் அவளைத்தான்டீ தேடறேன்.. செல்லையும் எடுக்கமாட்டேங்கறா" சீனு மீண்டும் ஒரு முறை சுகன்யாவை தொடர்பு கொள்ள முயன்றான்.

ஹாலில் வலதுபக்கத்தில், சீனுவின் அத்தை உஷா தன் அண்ணியின் காதில் எதையோ குசுகுசுவென சொல்ல, அதைக்கேட்டு மல்லிகாவும் சுந்தரியும், விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, முகவாயில் கையை ஊன்றிக்கொண்டு கூரையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி திரும்பினர். பின் மீண்டும் தங்கள் பேச்சில் ஆழ்ந்து போயினர்.

"அனு.. சுகன்யா எங்கே இருக்கா தெரியுமா உனக்கு?" மீனா அவள் காதை கடித்தாள்.

"ஈவீனிங் அவ எங்கக்கூடத்தான் வந்தா... இங்கேதான் இருந்தா... அவ செல்லுல டிரை பண்ணேன்..." அனுவை வாழ்த்த யாரோ வர அவள் அவர்களுடன் பேசுவதில் பிஸியாகிவிட்டாள்.

மூன்றே நாட்களில் அனுவின் முகத்தில் ஒரு இனம் தெரியாத பளபளப்பும், அழகும் குடியேறி இருந்தன. சம்பத்தின் இடது முழங்கையை வளைத்துக்கொண்டு, அழகு தேவதையாக அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள். சம்பத் ஓய்வேயில்லாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவியை முகர்ந்து வாசனை பார்த்துக் கொண்டிருந்தான்.

"மீனா... இந்த ஹோட்டலை சல்லடை போட்டு சலிச்சிட்டேன்... எங்கேயுமே சுகன்யாவை காணோம்.. நாளைக்கு ஊருக்கு போறாளே ஷாப்பிங் எதாவது பண்ண போயிருப்பாளா?"

"அப்படியே போனாலும் யார்கிட்டவாவது சொல்லிட்டுத்தானே போயிருக்கணும்.. அவ எங்கே போன்னான்னு யாருக்குமே தெரியலியே?"

"மீனா... எனக்கு பசிக்குதும்ம்மா... இப்ப சாப்பிட போகலாம் வா... அதுக்குள்ள சுகன்யா வந்தா சரி.. இல்லேன்னா நாளைக்குத்தான் அவளை பிடிக்கணும்..." இருவரும் டைனிங் ஏரியாவை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

ஹாலில் தனியாக ஏஸியில் உட்கார்ந்திருந்த செல்வாவுக்கு வியர்த்தது. செல்வா எழுந்தான். வெளியில் வந்தான். வானத்தை நோக்கினான். இருண்டிருந்தது. மூச்சை நீளமாக நெஞ்சு நிறைய இழுத்தான். கூட்டம் குறைந்திருந்த சாலையில் இலக்கில்லாமல் நடக்கத் தொடங்கினான்.

"சாவு கிராக்கி... வூட்டுல சொல்லிட்டு வந்திட்டியா?" உறுமிக்கொண்டு வந்த ஆட்டோவை கவனிக்காமல் சாலையை கடக்கும் போது டிரைவரிடம் திட்டு வாங்கினான்.



"போடா தேவடியா மவனே.." உரக்க கூவினான். ஆட்டோ கிறீச்சிட்டு நிற்க, சாலையில் நடந்தவர்கள் திரும்பிப்பார்ப்பதை பொருட்படுத்தாமல், வேகமாக ஓடி, ஆட்டோவிலிருந்து இறங்கிய டிரைவரின் சட்டையை கொத்தாகப்பிடித்து உலுக்கினான். "ங்க்ஹோத்தா" என அவன் குரல்கொடுக்க, டிரைவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான். மூக்கைப்பிடித்துக்கொண்டு தடுமாறி கீழே விழுந்தவன் மார்பில் பலமாக மிதித்தான்.

விருட்டென ஓடி எதிரில் வந்து கொண்டிருந்த பஸ்ஸில் புட்போர்ட் அடித்தான். பஸ் திருவல்லிகேணியைத் தொட்டு பீச் ரோடில் திரும்ப, ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கி கடற்கரை மணலில் மெல்ல நடக்க ஆரம்பித்தான். கரையில் வந்து மோதும் கடல் அலைகளை வெறித்துக்கொண்டு நின்றான். 


No comments:

Post a Comment