Wednesday 11 March 2015

சுகன்யா... 43


"நம்ம வீட்டுல உன்னையும் சேத்து அஞ்சு பேரு..." ன்னு கொஞ்ச முன்னாடி அப்பா சொன்னாரே; அதை நீங்க கவனிச்சீங்களா? அதுக்கு என்ன அர்த்தம்? அவர்கள் மூவரும் உள்ளே சென்றதும், மீனா சீனுவை மெதுவாக நெருங்கினாள். அவள் அணிந்திருந்த வெள்ளி கொலுசின் ஒலி, அவன் காதுகளில் ஒரு கவிதையாக ஒலித்தாலும், சீனுவின் இதயத் துடிப்பை அது ஒரு நொடி நிறுத்தியது. 

"தக தஜணு தஜணு ததிமி ததிமி தக தித் தாம் தகதாம் தரிகிட தாம் 
தத்த ரீத்தா ஜணு தகதா ரீத்த ஜணு தத்த தீம் தகத தீம் தஜம் தஜம்" 

"மீனா என் கிட்ட விளையாடாதே? எனக்கு மனசுக்குள்ள திக் திக்குன்னு இருக்கு... நம்ம விஷயம் உங்க அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு... நான் பயந்துகிட்டு இருக்கேன்..

"


"தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த 
தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம்"

ஆணின் மீது மையல் கொண்ட பெண் எதற்கும் பயப்படுவது இல்லை. மீனா அவனை நோக்கிப் போக போக, சீனு பின்னால் நகர்ந்தான். சீனு பின்னால் நகர நகர அவனை நோக்கி மீனாவும் கண்களில் விஷமத்துடன், அவனை நோக்கி முன்னேறினாள். நாலடி பின்னால் நகர்ந்த பின் அதற்கு மேல் நகரமுடியாமல் மாடிப்படிக்கட்டு சுவரில் முட்டிக்கொண்டு நின்றான். அவர்கள் அங்கே நிற்பதை தெருவில் செல்லுபவர்களால் பார்க்க முடியாது. வீட்டுக்குள் இருப்பவர்களாலும் பார்க்க முடியாது. ஒரு அங்குலம் அசைந்தாலும், மீனாவின் மார்பை சீனு உரசவேண்டிய நிலை! காற்று மட்டும் அவர்களுக்கு இடையில் நுழைந்து சென்று கொண்டிருந்தது. சீனுவின் மனதில் பாடலும், உடலில் நடுக்கமும் ஒரு சேர எழுந்தன. 

"தத் தி கிடதகதா தகதிமி தத் தத் ததீம்த தத் ததீம்த தகஜணு தா 
தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த" 

"இதுக்கு மேல எங்கே போவீங்க நீங்க?" மீனாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருக்க, அவள் குரலில் எல்லையில்லாத உல்லாசம் பொங்கியது.

"தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம் 
தஜம் தஜம் தஜம் தஜம் தரிகிடதாம் 
தகதிமி தரிகிடதாம்"

"மீனா ... பிளீஸ்.. சொன்னாக் கேளு! யாரவது வந்துடப் போறாங்க... அப்புறம் அசிங்கமா போயிடும்.." சீனுவின் குரல் தயங்கி தயங்கி வந்தது..

"தாம் தாம் தரிகிடதை தரிகிடதாம்"

"ஆம்பிளைங்க பயப்படலாமா?" மீனா தன் கண்களை அபாயகரமாக சுழட்டினாள். 

தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதை 

"என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும் ... நான் எதுக்கும் பயப்படமாட்டேன்னு?"

"இப்பத்தானே சொன்னீங்க... பயமா இருக்குன்னு?"

"யார் தப்பு பண்ணாலும், அது கடைசியா என் மேலத்தான் வந்து விழும்... அதனால அப்படி சொன்னேன்!"

"இப்ப நான் தப்புப் பண்ணப் போறேன்னு... யார் சொன்னது உங்ககிட்ட?"

"மீனா .... ப்ளீஸ்... உன் கிட்ட என்னால இப்ப ... இங்க பேச முடியலை..." அவன் தன் கைகளை தன் மார்பில் கட்டிக்கொண்டு நின்றான்.

"நீங்க இந்த மீசை தாடியெல்லாம் இல்லாம, பாக்கறதுக்கு இப்ப எவ்வள ஹேண்ட்சம்மா இருக்கீங்க தெரியுமா?" மீனா இந்த உலகத்திலேயே இல்லை.

"செல்வா கார் சாவியோட வந்துடுவான் ... மீனா ... கொஞ்சம் நகர்ந்து நில்லேன்.." 

"அவனுக்கு கார் சாவி கிடைக்காது... நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க! அவன் கொஞ்ச நேரம் தேடட்டும்." மீனா உறுதியாக சொன்னாள்.

"அடிப்பாவி முதல்லேயே நீ எடுத்து ஒளிச்சு வெச்சிட்டியா?" சீனுவின் குரலில் முதல் தடவையாக நடுக்கம் சிறிது குறைந்திருந்தது.

"ஒளிச்சில்லாம் வெக்கல.. அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்..."

"சரி ... இப்ப உனக்கு என்ன வேணும்?"

"எனக்கு நீதான் வேணும்!" மீனா தன் கண்களை சிமிட்டினாள்.

"என்னடி சொல்றே?" சீனுவுக்கு குறைந்த உடல் நடுக்கம் மீண்டும் அதிகமானது. 

"ஒரு முத்தம் குடுடான்ன்னு சொல்றேன்..." மீனா இதுவரை சீனுவுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையை காற்றில் பறக்கவிட்டாள். அவள் ஒருமையில் பேசி தன் உள்ளத்து ஆசையை அவனுக்கு உணர்த்தினாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் நன்றாக புரிந்தும் புரியாதவனாக தன் கண்ணியம் காத்து நின்று கொண்டிருந்தான் சீனு. 

மீனா தன் முகத்தை நிமிர்த்தினாள். சீனுவின் கண்களை உற்று நோக்கினாள். சீனுவுக்கு அவன் ரத்தம் தலைக்கேறியது. இவளை எதுல சேர்க்கறது? நிலைமை புரியாம, ஒரு குழந்தை மாதிரியில்லா பிஹேவ் பண்றா? 

"சீனூ.. ஐ லவ் யூ ..." மீனா சட்டென தன் கரங்களால் அவன் கழுத்தை வளைத்தாள். அவன் முகத்தை தன்புறம் இழுத்து அவன் இரு கன்னங்களிலும் தன் இதழ்களை வேகமாகப் பதித்தாள். சீனு தன் நிலையிழந்து பேச வாயில்லாமல் நின்றான்.

வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது...!!
இவள் நாதம் தரும் சுகசுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள்...!! 

"ம்ம்ம்.. சீனு சட்டுன்னு ஒரு முத்தம் குடுடா... நான் போகணும் உள்ளே!" அவள் விழிகளில், விழிகளிலிருந்து புறப்பட்டப் பார்வையில் சொல்லவொண்ணா காதலும், நேசமும், தவழ்ந்து கொண்டிருந்தன.

உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி...!! 
அந்தப் பாதங்கள் அசையும் ஒலி எந்தன் பூஜைக்கு கோயில் மணி...!!! 
சுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி...!!! 

"மீனாட்சி ... ஐ லவ் யூம்ம்மா... ஐ லவ் யூ ..." சீனுவால் அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், மீனாவை இழுத்து தன் மார்புடன் இறுக்கி அணைத்துக் கொண்டான். மீனாவின் இரு கன்னங்களிலும் மென்மையாக முத்தமிட்டான். முத்தமிட்டவன் ஒரு வினாடி அப்படியே செய்வதறியாமல் நின்றான். மீனாவும் அவன் அணைப்பில் தன் மெய்மறந்து நின்று கொண்டிருந்தாள். 

தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே...
நனைந்ததனால்...சுடுகிறதே.. இனி ஒரு தினம் புது மலர்வனமே ...!!! 
மனதில் ஒளி கொடு ரகசிய நிலவில் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும்... 
விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள்...!!! 
புதிய கானங்கள் பொழியவே அமுத மேகங்கள் பொழிய வாருங்கள்... 
இளைய தேகங்கள் நனையவே கண்ணில் ஒரு காதல் துள்ளுது பெண்னெஞ்சில் ஒரு மோகம் துள்ளுது தன்... 
இருதய துடிப்பொடு விழியில் தெரிய இளகி இணையும் இரு மனது...!!! 

"மீனா, கார் சாவியை நீ பாத்தியாடீ? ... செல்வாவின் குரல் வெரண்டாவில் எதிரொலிக்க, மீனா வேகமாக சீனுவை உதறிவிட்டு வீட்டினுள் ஓடினாள். 

முதல் முறையாக இளம் பெண் ஒருத்தியின் மென்மையான, உடல் தந்த இதமான, அவன் இதுவரை அறிந்திராத சூட்டினை, சுற்று சூழ்நிலை மறந்து அனுபவித்த, சீனு தன் கண்களை மூடி நின்று கொண்டிருந்தான். 

"ஈஸ்வரா, காலம் கெட்டுப் போச்சுங்கறது ... உண்மையாத்தான் இருக்கு.. கலி முத்திக்கிட்டு இருக்கு, நடராஜன் தன் வீட்டுல இவனை சொந்தப்பிள்ளையா வெச்சிருக்காரு.... வளர்த்த கடா மார்லதானே பாயும்! படுபாவி... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணலாமா?"

எதிர் வீட்டு மாடியில், குளித்துவிட்டு வந்து, தன் வேஷ்டியையும், மேல் துண்டையும் காயவைத்துக்கொண்டிருந்த, நடராஜனின் வாக்கிங் தோழர் ராமசாமி, யதேச்சையாக கீழே பார்க்க, தன் நண்பரின் வீட்டில், மாடிப்படி சுவற்றுக்கு அருகில், மீனாவும், சீனுவும் சேர்ந்து அரங்கேற்றிய முத்த நாடகத்தை மூச்சு விடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். தமிழில் இருக்கும் எதிர்மறை பண்புகளை குறித்த அத்தனை பழமொழியும் அவருக்கு உடனே ஞாபகம் வந்தது. 

நடராஜன், தனக்கு அவ்வப்போது சுந்தரம் அய்யர் மெஸ்ஸில், சூடாக வாங்கிக் கொடுக்கும் சுவையான பில்டர் காப்பியை குடித்ததனால், அவருக்கு தான் பட்டிருக்கும் நன்றிக் கடனை உடனடியாக தீர்க்க அவர் மனது துடித்தது. 

சீனுவின் இடது கண் துடிக்க ஆரம்பித்தது. அம்மாவை கேக்கணும் ... ஆண்களுக்கு இடது கண் துடிக்கறது நல்லதா? கெட்டதா? சீனு தன் கன்னத்தை அழுத்தி தேய்த்துக்கொண்டான். 

குமாரசுவாமி, ஒரு வாரம் தன் லீவுக்கான விண்ணப்பத்தை, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, தன் உதவியாளர்களை விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தார். அதே வேகத்தில் தானும் ஒரு நிமிடம் கூட உட்க்காராமல் சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருந்தார். அலுவலகத்தில் தான் விடுப்பில் இருக்கும் போது கவனிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, தன் கீழ் பணிபுரியும் இரண்டு உதவி மேலாளர்களிடம் விவரித்துக்கொண்டிருந்தார்.

மாதத்தின் கடைசி வாரம் ஆதலால், அந்தக் கிளையின் மாத வரவு செலவு கணக்கை, கையில் வைத்துக்கொண்டு, நடராஜனின் உதவியாளர் அவர் எதிரில் நின்று கொண்டிருந்தார். அவர் கையழுத்துக்காக, ஊழியர்களின் சம்பளப்பட்டியல், காத்துக்கொண்டிருந்தது. அன்றைய வேலையை முடித்துவிட்டு, மூணு மணி அளவில் கும்பகோணம் கிளம்புவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

"ராஜகோபால், உங்க கையில என்ன? இந்த மாச பேலன்ஸ் ஷீட்டா? நடராஜன் பாத்துட்டாரா?"

"யெஸ் சார்; அர்ஜெண்டா பேலன்ஸ் ஷீட்டைப் உங்க பார்வைக்கு வைக்கச் சொன்னார்; உங்க கிட்ட போன்ல பேசறேன்னும் சொன்னார்."

"சரி அப்படி வைங்க நான் பாக்கறேன். நடராஜன் அடுத்த ஒரு வாரம் லீவுல இருப்பார்; அவர் வந்தார்ன்னா ஒரு ரெண்டு நிமிஷம் சிரமம் பாக்காம, என்னைப் பாத்துட்டு போகச் சொல்லுங்க. நானும் லீவுல போறேன்; அக்கவுண்ட்ஸ்ல்லாம் நீட் அண்ட் க்ளீனா வெச்சுக்கங்க. யூ ஆர் அன் எக்ஸ்பீரியன்ஸ்ட் மேன்! எதாவது முக்கியமான இஸ்யூன்னா, என் செல்லுல எப்ப வேணா நீங்க என்னை காண்டாக்ட் பண்ணலாம். டூ யூ அண்டர்ஸ்டேண்ட்?"

"யெஸ் சார்..."

"ரீங்க்க்க்க்க்" பஸ்ஸர் ஒலித்தது.

"சார்.. ஹெட் ஆஃபீஸ்லேருந்து உங்க லீவு சேங்ஷன் ஆகி பேக்ஸ் இப்பத்தான் வந்தது ..."குமார சுவாமியின் பர்ஸனல் செகரட்ரி, மாலதி இண்டர்காமில் அறிவித்தாள்.

"ம்ம்ம் ... ஒரு வேலை முடிஞ்சுது ... நிம்மதியாச்சு. அந்த ஃபேக்ஸை ரெண்டு காபி எடுத்து ஒன்னை நீங்க மெய்ன்டேய்ன் பண்ற என் பெர்சனல் ஃபைல்ல வெச்சிடுங்க; ஒரு காப்பியை சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசர் நடராஜன் டேபிளுக்கு அனுப்பிடுங்க.."

"நீங்க சொல்றதை நான் ஏற்கனவே செய்துட்டேன் சார்; ஒன் செகண்ட் சார்; மிஸ்டர் நடராஜன் வந்திருக்கார். உங்களை ஒரு நிமிஷம் மீட் பண்ணனும்ன்னு என் ரூம்ல வெய்ட் பண்றார்."

"லீவுல இருக்கறவரை ஏன் காக்க வெக்கறீங்க? உடனே அவரை என் ரூமுக்கு அனுப்புங்கம்மா..."

"சார் அப்ப நாங்க கிளம்பறோம் ... உதவி நிர்வாகிகள் இருவரும் எழுந்தனர்..."

'ஓ.கே .. கீப் இன் டச் வித் மீ ... "

"சார் ... உங்களுக்கு லஞ்ச் என்ன வரவழைக்கணும்?" மாலதி மீண்டும் பஸ்ஸினாள்.

"ஓ ... மை காட் ... மணி ஒண்ணாயிடுச்சா? ம்ம்ம் ... மிஸஸ் மாலதி ... கிவ் மீ ஒன் மினிட்; இப்ப உங்களுக்கு நான் சொல்றேன்." குமாரசுவாமி ரீஸிவரை வைக்கும் போது, நடராஜன் உள்ளே நுழைந்தார்.

"வாங்க மிஸ்டர் நடராஜன்; என்னச் சாப்பிடறீங்க அதை சொல்லுங்க முதல்ல..." குமாரசுவாமி தான் கட்டியிருந்த "டை"யை சிறிதே தளர்த்திக்கொண்டார்.

"வீட்டுல இந்த நேரத்துக்கு சமையல் ரெடியாகிருக்கும்; இப்ப ஓண்ணும் வேண்டாம்; நீங்க சாப்பிடுங்க சார்... ஐ வுட் டேக் ஒன்லி எ மினிட் ஆர் டூ ..."

"இல்லை ... இல்லே! நீங்க இன்னைக்கு என் கூடத்தான் சாப்பிடணும்! அயாம் வெரி ஹாப்பி டுடே! ஊருக்குப் போறேன்; பிளீஸ் ... டேக் யுவர் சீட்; இப்ப லஞ்ச் டயம்தானே; ரெண்டு நிமிஷம் நிம்மதியா உக்காருவோம்." குமாரசுவாமி புன்னகைத்தார்.

"டிஃபன் அயிட்டம் எதாவது சொல்லுங்க; ரெண்டு வாரம் முன்னாடிதான் ஊர்லேருந்து வந்தீங்க; என்ன சார் விஷயம்?நடராஜன் சோஃபாவில் அவர் எதிரில் அமர்ந்து கொண்டார்.

"மிஸஸ் மாலதி ... டிஃபன் என்ன கிடைக்கும் நம்ம கேண்டீன்ல? ... "இன்னைக்கு ரவா தோசை கிடைக்குமா? தட்ஸ் குட் ... குயிக்கா ரெண்டு ரவா தோசையும், கூடவே ரெண்டு ப்ளேட் தயிர் வடையும் வரவழைச்சுடுங்க; அண்ட் நோ மோர் கால்ஸ் ஃபார் அன் அவர்; யூ மே கோ ஃபார் யூர் லஞ்ச் ஃப்ளீஸ்!"

"சார் ... இது என் லீவ் லெட்டர் ..." நடராஜன் ஒரு காகிதத்தை அவரிடம் நீட்டினார்; குமாரசுவாமி அதைப் பார்க்கமலேயே தன் கையெழுத்தை அதில் கிறுக்கினார்.

"அப்புறம் சொல்லுங்க ..."

"என் பையன் செல்வா, ஒரு பொண்ணை விரும்பறான்னு உங்க கிட்ட சொல்லியிருந்தேன்; உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்; அந்த பெண்னை நிச்சயம் பண்ணலாம்ன்னு குடும்பத்தோட கும்பகோணம் போறேன்.."

"ரொம்ப சந்தோஷம்..."

"பொண்ணு பேரு சுகன்யா... என் பையனோட இங்க சென்னையிலத்தான் வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கா! ரொம்ப நல்லப் பொண்ணு! கண்ணுக்கு நிறைவா குடும்ப பாங்கா இருக்கறா! என் பையன் அடிபட்டு பிழைக்க கிடந்தப்ப; கூடவே இருந்து தாலி கட்டிகிட்ட பொண்டாட்டி மாதிரி அவனைப் பாத்துக்கிட்டா! பசங்க ஒருத்தரை ஒருத்தர் ஆசைப்பட்டுட்டாங்க; கல்யாணத்தை உறுதி பண்ணிடலாம்ன்னு லீவுல போறேன்..."

"தட்ஸ் வெரி நைஸ் டு ஹியர்..." குமாரசுவாமி அவர் கையை குலுக்கினார்.

"சார் .. உங்க சொந்த ஊரும் கும்பகோணத்துக்கு பக்கத்துலதானே?"

"ஆமாம்..."

குமாரசுவாமி, நடராஜன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். நடராஜன் முகம் மகிழ்ச்சியில் பளீரென்றிருந்தது. ஆஃபீஸ் பையன் கேண்டீனிலிருந்து வரவழைக்கப்பட்ட டிஃபனை அவர்கள் முன்னால் பரிமாறினான். "ரமேஷ் - பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு ரெண்டு கப் காஃபி எங்களுக்கு குடுத்துடுப்பா .."

"ஓ.கே. சார்." பையன் நகர்ந்தான்.

"சாப்பிடுங்க நடராஜன்..."

"பெண்ணுக்கு அம்மா சுந்தரின்னு... பீ.ஜீ. டீச்சரா வொர்க் பண்றாங்க; அவங்களுக்கும் அவங்க ஹஸ்பெண்டுக்கும் இடையில ஏதோ கொஞ்சம் ஒத்துவராம தனியா பெண்ணை கஷ்டப்பட்டு வளர்த்து இருக்காங்க. அவங்களோட தம்பி, ரகுராமன்னு, தங்கமான மனுஷன், அக்கா லைப் இப்படி ஆயிடிச்சேன்னு, தான் கல்யாணமே பண்ணிக்காம அக்கா கூடவே அக்காவுக்கும், அக்கா பொண்ணுக்கும் சப்போர்ட்டா இருக்கார்...!"

"ம்ம்ம்ம்..."

"என்னோட கூட படிச்ச ஃப்ரெண்ட் ஒருத்தன் சுந்தரம்ன்னு, கும்பகோணத்துல ஹைஸ்கூல் ஹெச்.எம். ஆக இருக்கான். எங்க ஸ்கூல்லதான் சுகன்யா படிச்சா ... எனக்கு அவளை நல்லாத்தெரியும். நைஸ் அண்ட் இண்டலிஜண்ட் கேர்ள் ... அவளோட அம்மாவும் என் ஸ்கூல்லத்தான் வொர்க் பண்றாங்க; ஹைலி டீசண்ட் அண்ட் மாரலி ஸ்ட்ராங் வுமன்; கேள்வியே எதுவும் கேக்காமா, கண்ணை மூடிக்கிட்டு சுகன்யாவை, உன் மருமகளாக்கிக்கோன்னு சொன்னான்." குமாரசுவாமி தன் வாயை டீஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொண்டு, காஃபியை உறிஞ்ச ஆரம்பித்தார்.

"ஸோ ... நடராஜன் ... நீங்க அவங்க குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிச்சு இருக்கீங்கன்னு தெரியுது!"

"ஆமாம் சார் ... என் வீட்டுக்கு வரப் போற பொண்ணு; அவ என் மருமக இல்லே; என் மகளா நான் அவளை நடத்துவேன்; என் வீட்டுல அவ சந்தோஷமா இருக்கணும்; அதே சமயத்துல என் குடும்பத்தோட மகிழ்ச்சி அவ கையிலத்தானே இருக்கு? வயசான காலத்துல எங்களையும், தன் அப்பா அம்மாவா அவ கவனிச்சுக்கணும்! அதனால வரப்போற மருமக குடும்பத்தைப் பத்தி நல்லா விசாரிக்கணும் இல்லீங்களா?"

"நிச்சயமா.."

"குடும்பம் நல்ல குடும்பம்ன்னா பொண்ணும் குணமுள்ளவளாத்தான் இருப்பா! சுகன்யாவோட ஆஃபீசுல விசாரிச்சேன். யாருமே அந்த பெண்ணைப் பத்தி ஒரு குறையும் சொல்லலை. எல்லோருமே சுகன்யாவைப் பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க."

'ம்ம்ம்ம் ... நடராஜன் நீங்க சொல்ற இந்த லேடியையும், அவங்க ஃபேமலியையும் எனக்கும் பர்சனலாத் தெரியும்.." தன் மனைவியையும், பெண்ணையும், நடராஜன் புகழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்ததை கேட்ட குமாரசுவாமியின் மனதில் பெருமிதம் பொங்கிக்கொண்டிருந்தது.


"அப்படியா சார்! ஆச்சரியமா இருக்கு; அப்புறம் தீர விசாரிச்சதுல சுகன்யாவோட அப்பாவும், நார்த்ல எங்கேயோ நல்ல வேலையில இருக்கறதா தெரிஞ்சுது."

"ம்ம்ம்... அந்த லேடியோட ஹஸ்பெண்ட், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி ... பெண்டாட்டியையும், பெண்ணையும், தன் குடும்பத்தையும், அம்போன்னு விட்டுட்டு போயிட்டார் இல்லையா?" குமாரசுவாமி புன்முறுவலுடன் பேசினார். 

"அப்படித்தான் என் ஃப்ரெண்ட் சுந்தரம் சொன்னான். என் மனைவியும் இந்த விஷயத்தை கேட்டதும், கொஞ்சம் ஆரம்பத்துல தயங்கினாங்க; என் பிள்ளை மூலமா, சுகன்யாவை இது பத்தி கேக்கச் சொன்னாங்க. ஆனா நல்ல குடும்பம், நல்ல பொண்ணு; இதுக்கு மேல எனக்கு என்ன சார் வேணும்? என் வீட்டுக்கு வரப்போற பொண்ணோட குணம்தானே சார் எங்களுக்கு முக்கியம்; சுகன்யாவோட அப்பாவைப் பத்தி நமக்கென்னன்னு, என் ஒய்ஃபை கன்வின்ஸ் பண்ணேன். என் மனைவியும் சரின்னு சொன்னாங்க. பைனலா, நேத்து ராத்திரிதான் கல்யாணத்துக்கு எங்களுக்கு மனசார சம்மதம்ன்னு சொல்லிட்டேன். அதனால...."



"ம்ம்ம் .." நடராஜன் அவர் சொல்லுவதை குறுக்கிடாமல் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். 

"அதனால ... " நடராஜன் பேசுவதை ஒரு வினாடி நிறுத்தி விட்டு குமாரசுவாமியின் முகத்தை ஒரு முறை கூர்ந்து நோக்கிவிட்டு தன் தலையை தாழ்த்திக்கொண்டார்.

"சொல்லுங்க நடராஜன் ..."

"நீங்க என்னைத் தப்பா நெனைக்கக் கூடாது ... அஃபீஷியலா உங்களைப் பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்; நாலைஞ்சு வருஷமா பர்ஸனலாவும் ஓரளவுக்கு தெரியும். உங்க பொண்ணும் உங்களை மாதிரி ரொம்ப நல்லப் பொண்ணாத்தான் இருப்பாங்க! ஆண்டவன் அருளாலே அவங்களுக்கு நல்ல எடத்துல வரன் அமையணும்; கண்டிப்பா அமையும்..." நடராஜன் தன் வார்த்தையை முடிக்காமல் இழுத்தார். 

"நடராஜன்... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. உங்க வாயில தயவு செய்து வேணாம்ங்கற வார்த்தை மட்டும் வரவேண்டாம். முதல்லே என் டாட்டரோட போட்டோவை நீங்க ஒரு தரம் பாருங்க; அப்புறம் நீங்க உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க; ப்ளீஸ்..." குமாரசுவாமியின் கண்களில் விஷமம் துள்ளி குதித்து விளையாடியது. 

"நிச்சயமா சார் ... மே காட் பிளஸ் ஹர்!" 

என் பையனுக்கு பெண் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னு சொன்னதுக்கு அப்புறமும், இவர் ஏன் தன் பெண்ணோட போட்டோவை இந்த நேரத்துல எனக்கு காமிக்க விரும்பறார்? ம்ம்ம்ம் ... இவர் பெண்ணும் எனக்கு என் பொண்ணு மீனாட்சி மாதிரிதானே; சாதாரணமா பாக்கறதுல என்னத் தப்பு? நடராஜன் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார். 

குமாரசுவாமி நிதானமாக எழுந்து தன் மேஜையின் இழுப்பை திறந்தார். சமீபத்தில் அவர் தன் குடும்பத்துடன் மஹாபலிபுரம் சென்ற போது எடுத்த, சுந்தரியும், சுகன்யாவும் அருகருகில் நிற்கும் பெரிதாக்கப்பட்ட புகைப்படத்தை நடராஜனிடம் நீட்டினார். 

"சார் உங்க கிட்ட இந்த போட்டோ? இந்த படத்துல இருக்கறது சுகன்யாவும், அவளோட அம்மா சுந்தரியுமாச்சே!! இவங்களோட புகைப்படம்? உங்ககிட்ட ... எப்படி சார் ???" புகைப்படத்தை பார்த்த நடராஜன் திடுக்கிட்டு, கண்களில் திகைப்பும், பேச்சில் வியப்புணர்ச்சியும் வெகுவாக கலந்திருக்க, சட்டென எழுந்தார். 

"உக்காருங்க நடராஜன், உங்க ஆச்சரியம் எனக்குப் புரியுது. சுந்தரி என் மனைவி; சுகன்யா என் ஒரே மகள்; ஆரம்பத்துல, தேவையில்லாத சில நண்பர்களின் சேர்க்கையால், அவங்க நட்ப்பை நான் தவிர்த்து இருக்கணும்; you know .. some times.. things are not under your control; you could very well understand ..." குமாரசுவாமி நீண்ட பெருமூச்சு விட்டார்.

"என் கல்யாணத்துக்கு அப்புறம், நான் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, எனக்கு கிடைச்ச அன்பான மனைவி, அருமையான மகள், எல்லோரையும் தவிக்கவிட்ட, நீங்க சொன்ன நார்த்ல வேலை செய்துகிட்டு இருந்த சுந்தரியோட ஹஸ்பெண்ட் நான்தான்."

"ப்ச்ச் ..ப்ச்ச்..." நடராஜன், தன் காதுகள் கேட்பதை நம்ப முடியாமல் சூள் கொட்டினார். திகைப்புடன் குமாரசுவாமி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தார். 

"நான் சுகன்யாவை பெத்தவன்னு தெரியாம, என் பொண்ணை நீங்க என் கிட்ட வாயார, மனசு நெறைஞ்சு, புகழ்ந்து பேசீனீங்க. The entire credit goes to my wife Sundari. இன்னைக்கு என் மகள் சுகன்யா நல்ல நிலைமையில இருக்கறதுக்கு காரணம் என் மனைவியின் பொறுமை; உழைப்பு; என் மைத்துனன் ரகுவோட தியாகம்தான்; இன்னைக்கு என் பெண் உங்களை மாதிரி ஒரு நல்ல மனுஷன் வீட்டுக்கு மருமகளா போகப் போறான்னா அதுக்கு காரணமே சுந்தரியும் ரகுவும்தான்."

"சார் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..."

"ஒரு ஆசிரியர், என் ஊரைச்சேர்ந்தவர் ... உங்க நண்பர்; அவரை எனக்குத் தெரியாது; அவர் என் மனைவியை பாராட்டி பேசினதா சொன்னீங்க; கேக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா, மகிழ்ச்சியா இருந்தது."

"உண்மையை எப்படி சார் மறைக்கமுடியும்?" 

"நடராஜன், நீங்க என்னை மன்னிக்கணும். இப்ப சொல்லுங்க நடராஜன் சார்! என் மகள் சுகன்யாவை நீங்க வேணாம்ன்னு சொல்லப் போறீங்களா?" குமாரசுவாமி, நடராஜனின் கைகளைப் மன நெகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டார். 

"நிச்சயமா மாட்டேன் சார்...வேணாம்ன்னு சொல்ல எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"

"நடராஜன்! பிளீஸ் நீங்க "சார் ... சார்" ன்னு கூப்பிட்டு என்னை அன்னியப்படுத்தாதீங்க. நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தி ஆகப் போறோம். இன் ஃபேக்ட், இன்னைக்கு நான் லீவுலே இருக்கேன். நீங்களும் லீவ்லேதான் இருக்கீங்க" நான் உங்க பாஸூம் இல்லே! நீங்க என் கலீக்கும் இல்லே!. குமாரசுவாமியின் குரலில் சிறிது தழதழப்பு இருந்தது.

"ஓ.கே. ஆஸ் யூ விஷ்.. நான் உங்களை குமார்ன்னு கூப்பிடட்டுமா?"

"நோ... இஸ்யூஸ்..."

"குமார் ... நீங்க செல்வாவை ஹாஸ்பெட்டல்ல பாக்க வந்தப்ப, உங்க பொண்ணு சுகன்யா என் பையனைத்தான் லவ் பண்றான்னு உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும் ... அன்னைக்குத்தான் நான் என் மனைவியையும், மகளையும், பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறமா மீண்டும் சந்திச்சுட்டு வந்திருந்தேன்.."

"என் பையன் ஒரு பொண்ணை லவ் பண்றான்னு சொன்னேன். நீங்க உங்க பொண்ணை, செல்வாவுக்கு பாருங்கன்னு சொன்னீங்க; ஆனா உங்க பொண்ணு சுகன்யாதான்னு அப்ப ஏன் சொல்லலை?

"அயாம் சாரி நடராஜன்; அன்னைக்கு செல்வா லவ் பண்ற பொண்ணு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன்னு நீங்க சொன்னீங்க; என் பொண்ணை உங்க பையனுக்கு பாருங்கன்னதும் கொஞ்சம் டயம் குடுங்கன்னு கேட்டீங்க இல்லையா?"

"ம்ம்ம்.." நடராஜன் குறுக்கில் பேசாமல் குமாரசுவாமியை பேச அனுமதித்தார்.

"உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், நேர்மையானவர், குடுத்த வார்த்தையை மதிக்கறவர். அப்படிப்பட்டவர் எங்கிட்ட நீங்க டயம் குடுங்கன்னு சொன்னதும், ஒரு வினாடி என் மனசுக்குள்ள ... ஒரு சின்ன சந்தேகம் வந்தது!"

"ம்ம்ம் ... சந்தேகம்? என்ன அது?"

"நான் ஒரு பெண்ணை பெத்தவங்கற ஸ்தானத்துல என்னை வெச்சு பாருங்க நடராஜன்... என்னுடைய ஃபினான்ஷியல் பேக் ரவுண்ட், என் சொத்து பத்து, இந்த விவகாரம் எல்லாம் உங்களுக்கு நல்லாத் தெரியும். நான் இங்க வந்த உடனே, தனிப்பட்ட முறையில, உங்களை என் ஆடிட்டராவும் இருக்க சொல்லி ரெக்வெஸ்ட் பண்ணியிருக்கேன்."

"சரி ..."

"என் அசையும், அசையா சொத்து விவரங்களை நான் நம்ம கம்பெனி விதி முறைகள் படி நான் வருஷா வருஷம் டிக்ளேர் பண்ணியிருக்கேன். இந்த கிளையோட சீஃப் அக்கவுண்ட்ஸ் ஆஃபிசர்ங்கற முறையில, இந்த விவரங்கள் அடங்கிய என் பெர்சனல் பைல், உங்க கிட்டத்தானே இருக்கு?"

"யெஸ் ... யூ ஆர் கரெக்ட்..."

"உங்க பையன், ஒரு பொண்ணை லவ் பண்றான்; ஆனால் அந்த பொண்ணை உங்க மருமகளா ஏத்துக்கறதா, இல்லையான்னு, அந்த நேரத்துல நீங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கலை. மேலும் அந்த பொண்ணோட குடும்பத்தைப் பத்தி அந்த நேரத்துல நீங்க முழுமையா விசாரிச்சு இருக்க மாட்டீங்கன்னு நான் நம்பினேன் ..."

"உண்மைதான் குமார்..."

"அந்த நேரத்துல புதுசா ஒரு நல்ல வசதியான ஒரு இடம் உங்க பையனுக்கு வருதுன்னதும், உங்க மகனும், நீங்களும் என் ப்ரப்போசலுக்கு எப்படி ரியாக்ட் பண்ணப் போறீங்க? ஒரு ஆவரேஜ் மனிதன், வசதியான ஒரு குடும்பத்து பெண்ணை பாப்போமேன்னு நினைக்கறது சகஜம்..."

"மே பீ ...மே பீ..."

"நடராஜன், நீங்க வசதியான இடத்தை தேர்ந்தெடுக்கிறீங்களா? இல்லே; பையனுடைய ஆசைக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுக்கறீங்களா? இதை தெரிஞ்சுகணும்ன்னு நான் ஆசைப்பட்டேன்..?!"

"ம்ம்ம்..."

"எனக்கு அபீஷியலா நல்லாத் தெரிந்த நடராஜனை, என் கலீக்கை, என் ஃப்ரெண்டை, டெஸ்ட் பண்ணணும்ன்னு நான் அன்னைக்கு நினைக்கலை; என் பொண்ணு லவ் பண்ற பையனோட அப்பாவை டெஸ்ட் பண்ணணுங்கற எண்ணம் எனக்கு சட்டுன்னு வந்தது..."

"ம்ம்ம்..."

"ஒரு விதத்துல இது தப்புதான் நடராஜன். அதுக்காக நான் உங்க கிட்ட இப்ப மன்னிப்பு கேட்டுக்கறேன்.."

"நோ ... நோ...இட்ஸ் ஆல்ரைட்.."

"சுகன்யா என் பொண்ணுன்னு உங்களுக்கு தெரிய வரும்போது, உங்களோட நேர்மையை, நாணயத்தை, நான் சந்தேகப்பட்ட மாதிரி உங்களுக்குத் தோணலாம்."

"ம்ம்ம்.."

"பொண்ணைப் பெத்தவன் நான்; நீங்க எப்படி என் குடும்பத்தைப்பத்தி, நாலு பேருக்கிட்ட விசாரிச்சேன்னு சொன்னீங்களோ; அது மாதிரிதான் நான் என் பொண்ணை ஒரு வீட்டுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி, என் பொண்ணு எங்க போய் வாழப்போறா? அந்த வீட்டு மனுஷாளோட குணம் எப்படீன்னு தெரிஞ்சுக்க நினைச்சேன்."

"நாலு விதமா யோசனை பண்ணி, நல்லா விசாரிச்சுத்தானே என் ஒரே பொண்ணை நான் இன்னொருத்தர் வீட்டுக்கு அனுப்ப முடியும்? அதனாலதான் செல்வா ஆசைப்படற பொண்ணு, சுகன்யாதான், அவ என் பொண்ணுதான்னு அன்னைக்கு உங்க கிட்ட நான் சொல்லலை."

"புரியுது குமார் ..."

"என் அணுகுமுறையை நீங்க தப்புன்னு நெனைச்சா, அயாம் எக்ஸ்ட்ரீம்லி சாரி நடராஜன்.." குமாரசுவாமி தன் கைகளை கூப்பினார்.

"இல்லே குமார்! நான் உங்களைத் தப்பா நினைக்கலை.."

"இப்ப சொல்லுங்க நடராஜன், என் பெண் சுகன்யாவை, உங்க பையன் செல்வாவுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம்தானே?"

"கரும்பு தின்ன கூலி கேக்கறவன் நான் இல்லே."

"நடராஜன், என் மச்சினன் ரகு உங்க கிட்ட பேசியிருப்பார். வர வியாழக்கிழமையே நீங்க குடும்பத்தோட, உங்க உறவினர்களையும், நண்பர்களையும், அழைச்சுக்கிட்டு வந்துடுங்க; ராத்திரி அங்க தங்கறதுக்கான ஏற்பாடுகளை நான் பண்ணிடறேன்; வெள்ளிக்கிழமை காலையில வெத்திலைப் பாக்கு மாத்திக்கிடலாம். அப்புறம் எல்லோருக்கும் வசதியான ஒரு நாள்ல கல்யாணத்தை வெச்சுக்கலாம்... குமாரசுவாமி எழுந்து நடராஜனின் கைகளை பற்றிக்கொண்டார்.

"குமார் .. எங்க தரப்புல ஒரு பத்துப் பேரு வருவோம். ஒரு வேளை, அதிகபட்சம், ஒருத்தர் இல்லே ரெண்டு பேர் கூடலாம். அவ்வளவுதான்! நீங்க ரொம்ப தடபுடலா எதையும் செய்ய வேண்டாம். நம்ம ரெண்டு குடும்பமும் அன்னைக்கு ஒண்ணா உக்காந்து, சிம்பிளா டிஃபன் சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஏற்பாடு பண்ணுங்க அது போதும்..."



"ரொம்ப சந்தோஷம் நடராஜன்..."

"இன்னொரு சின்ன விஷயம்... என் மனைவி மல்லிகா சுகன்யாவுக்குன்னு ஒரு பட்டுப்புடவையும், ஒரு சின்ன செயினும் வாங்க இன்னைக்கு கடைக்கு என் பெண் மீனாவோட போயிருக்காங்க; இது எங்க குடும்ப வழக்கம்... சுகன்யா படிச்ச பொண்ணு; அவளுக்குன்னு சில கலர், டிசைன் அப்படீன்னு மனசுக்குள்ள நிறைய விருப்பங்கள் இருக்கும்; அதுல தப்பு இல்லே; இருந்தாலும் விசேஷத்து அன்னைக்கு, நாங்க அவளுக்குன்னு கொண்டு வருகிற புடவையையும், நகையையும், எங்க வீட்டுக்கு வரப்போற குழந்தை சந்தோஷமா கட்டிக்கணும், போட்டுக்கணும்ன்னு நாங்க பிரியப்படறோம். இதை நீங்க சுகன்யாகிட்ட என் வேண்டுகோளா சொல்லிடுங்க." நடராஜன் மனதில் திருப்தியுடன் அவர் கைகளை குலுக்கினார்.

"நிச்சயமா நடராஜன் ... சுகன்யா இனிமே உங்க வீட்டுப் பெண்... பெரியவங்க விருப்பத்தை சுகன்யா எப்பவும் மறுக்கமாட்டாள்ங்கற நம்பிக்கை எனக்கு பூரணமாக இருக்கு.." குமாரும் மன மகிழ்ச்சியுடன் நடராஜனின் கைகளை பற்றிக் கொண்டார். 



No comments:

Post a Comment