Thursday 26 February 2015

சுகன்யா... 13



அன்றிரவு சாவித்திரிக்கும் வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். பக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் அடித்துப்போட்டாற் போல் தூங்கிக் கொண்டிருந்தான். ஏதாவது கவலை இருக்கா இந்த மனுசனுக்கு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணணுமேன்னு? எங்கேயிருந்து தூக்கம் வருது இவருக்கு, அவள் தன்னை நொந்துகொண்டாள். செல்வா, அன்று மாலை, அவள் வீட்டுக்கு வந்தபோது அங்கு நடந்த நிகழ்ச்சிகள் அவளை வெகுவாக நிலைகுலையச் செய்துவிட்டன. தன் பெண் ஜானகியா இப்படி நடந்து கொண்டாள்? காலையில கூட உற்சாகமாகத்தானே இருந்தா? எந்த புடவை கட்டிக்கம்மான்னு கேட்டாளே? அவ மனசைக் கலைச்சது யார்? செல்வா வர்றதுக்கு முன்னாடி, அவனுக்கும், சுகன்யாவுக்குமிடையிலிருந்த நட்பு அவளுக்கு எப்படி தெரிய வந்தது?

இந்த விஷயத்தில் மல்லிகாவை தன் வழிக்கு கொண்டுவர அவள் எடுத்த முயற்சிகள்தான் எத்தனை எத்தனை? சுகன்யாவிடமிருந்து செல்வாவை பிரிக்க, அவனை சென்னையிலிருந்து மாற்ற அவள் பட்ட பாடுதான் எவ்வளவு? இதற்காக நான் பட்ட சிரமம் கொஞ்சம் நஞ்சமில்லையே? எல்லாத்தையும் சொடுக்கு போடற நேரத்துல வீணாக்கிட்டாளே இந்த புத்தி கெட்ட ஜானகி. அவள் தன் பெண்ணை நொந்துகொண்டாள். "ம்ம்ம்" ஜானகிக்கு என்னத்தெரியும், செல்வாவைப் போல் ஒரு பிள்ளை, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து கிடைப்பது எவ்வளவு கஷ்டமென்னு? நான் நினைச்ச மாதிரி செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல இருந்தது வெறும் நட்பில்லையா? அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? சுகன்யாவே தன் பெண் ஜானகியிடம் அவர்கள் காதலைச் சொல்லியிருப்பாளா? செல்வா, மல்லிகாவை, திருப்தி செய்வதற்காகத்தான் என் வீட்டிற்கு வந்தானா? சாவித்திரி, இதுவரைக்கும் நீ ஆரம்பிச்ச எந்த காரியத்திலும் நீ தோத்ததில்லைடி. உனக்கு முன்னால, நேத்து பொறந்த இந்த சுகன்யா எம்மாத்திரம்? நீ அவளை முதுகில குத்தினே. அவளோ உன்னை உன் முகத்தில அறைஞ்சிருக்கா? ஜானகி என்னைக் கொண்டு பொறந்திருக்கா; சரியான மூர்க்க குணம்; என் பொண்ணு, அந்த சின்னப்பய செல்வா முன்னால, என்னையே கீழத்தள்ளி மிதிச்சாளே. நானும் ஆத்திரத்துல தோளுக்கு மேல வளந்த பொண்ணை, இன்னொரு ஆம்பிளை முன்னாடி அடிச்சது தப்புத்தானே? இனிமே என் பொண்ணையோ, செல்வா மனசையோ மாத்தறதுங்கறது சாதாரண காரியமில்லையே. ஆனா இவ்வளவுக்கும் காரணம் அந்த பொட்டை நாய் சுகன்யாதானே? அவளை சும்மா விடலாமா? அவளுக்கு ஒரு பாடம் கத்துக்குடுத்தே ஆவணும். வசதியுள்ளவங்க வாழ்க்கையை வாழற விதமே வேற; அவங்களுக்கான வாழ்க்கை விதிகளும், நியதிகளும் வேற; சுகன்யா நீ உன் வர்க்கத்துக்குள்ள, உன்னுடைய மட்டத்துக்குள்ள ஒரு பையனை பாத்து ஆசைப்பட்டு இருக்கணும். நீ உன் தகுதிக்கு அதிகமா ஆசைப்படறே; என் பொண்ணுக்கு கிடைக்காதவன் உனக்கும் கிடைக்கக்கூடாது. சுகன்யா, இப்ப நீ, இங்க என்னை ஜெயிச்சிருக்கலாம்? வர்றேண்டி, வந்து வெச்சிக்கிறேன் ஆபீசுல உன்னை? அங்க நீ என் கீழதான் இருந்தாகணும்? நீ என் ஆசையில மண்ணை வாரி போட்டுட்டே; நான் உன் சோத்துல மண்ணைப் போடறேண்டி. உன்னை இந்த வேலையிலிருந்தே தூக்கறேன். அப்பத்தான் நான் யாருன்னு உனக்கு புரியும். நான் எப்பவும் உனக்கு மேலதான் ஆபிசுல; இதை நீ மறந்துடாதே? சாவித்திரி தன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்தாள். அடியே சாவித்திரி, உன் வயசென்ன? அந்த பொண்ணு வயசென்ன? அவளும் உன் பொண்ணு மாதிரிதானே? அவ பண்ண தப்புத்தான் என்ன? அவ என்ன உன் புருஷனையா தன் கையில போட்டுகிட்டா? அவ மனசுக்கு புடிச்சவனை, அதுவும் ஒரு கல்யாணமாகாத பையனை விரும்பினா? அவனுக்கும் அவளை புடிச்சிருக்கு; அவனும் அவளை விரும்பறான்; முதல்ல நீ அந்த பையனை, உன் அதிகாரத்தை வெச்சு இடமாற்றம் பண்ணதே தப்பு. உன் ஆசைக்காக, நீ பெத்த பொண்ணுக்காக,அந்த சின்னஞ்சிறுசுகளை பிரிக்க நெனைக்கறது ரொம்ப பாவம். இதுக்கு மேல சுகன்யாவை உன் சொந்த விவகாரத்துக்காக ஆபீஸுல பழிவாங்கப் பாக்கிறியே? இது நியாயமாடி? இதோட இந்த விளையாட்டை நிறுத்துடி. எப்பவும் உன் கையே ஓங்கியிருக்காதுடி; நல்லா யோசிச்சு இந்த காரியத்துல இறங்கு; அவளை அசிங்கப்படுத்த நெனைச்சு, நீ அசிங்கப்பட்டுடாதேடி. அவ வேலைக்கு உலை வெக்கப் போறதா நெனைச்சுக்கிட்டு, உன் வேலைக்கு நீயே உலை வெச்சுக்காதே? ம்ம்ம்ம்... என் மனசு ஏன் ரெண்டு பக்கமும் பேசுது? ஆனாலும் நியாயத்தைத்தானே என் மனசு பேசுது? இதுவும் சரிதான். என் பொண்ணுக்குத்தான் செல்வா கிடைக்கல. அந்த பொண்ணாவது அவளுக்கு புடிச்சவனை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டுமே சாவித்திரி தன் நினைவுகளில் காணாமல் போனாள். கடைசியில் தன் இமைகள் தன்னால் செருக தூக்கத்திலாழ்ந்தாள். *** ரகுவும், கீழ் வீட்டில் அவர் நண்பர் மாணிக்கமும் விடியலில் எழுந்து வாக்கிங் போனவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. சுகன்யா, தன் உள் தொடை பளிச்செனத் தெரிய, முழங்கால் வரை ஏறியிருந்த நைட்டியுடன் இன்னும் பாயில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள். சுந்தரி, ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டு, சிம்பிளாக ஒரு வாயில் சேலையும், வென்னிற ரவிக்கையும் அணிந்து, காலை காபிக்கு பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள். அவளையும் சுகன்யாவையும் ஒன்றாக பார்த்தால், பார்ப்பவர்கள் அவளை, சுகன்யாவின் அக்கா என்று சொல்லுவார்களே தவிர, சுகன்யாவின் அம்மா என்று சத்தியம் பண்ணாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். சுந்தரியின் உடலில் இளமை இன்னும் முழுதாக பாக்கியிருந்தது. நாற்பத்தாறு வயதுக்கு இன்னும் அவள் தலை நரைக்கவில்லை. முகத்தில் சுருக்கமில்லை. மார்புகள் தளரவில்லை. இடுப்பில் அனாவசிய சதை விழவில்லை. தெருவில் அவள் இறங்கி நடந்தால், அசையும் அவள் திரட்சியான பின்னழகை, எதிரில் வருபவன் திரும்பி பார்க்காமல் போவதில்லை. இன்றும் ரோடில் செல்லும் ஆண்களின் கண்கள் அவள் உடலை காம இச்சையுடன் மேய்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது உடலில் தோன்றும் இயற்கையான சிற்றின்ப வேட்கை, அவள் வயதொத்த பெண்களைப் போல் அவளையும் விட்டு வைக்கவில்லை என்ற போதிலும், உடல் புழுக்கத்தை, மனப்புழுக்கமாக அவள் மாற்றிக்கொள்ளவில்லை. கணவன் வீட்டை விட்டு ஓடிய பின், இந்த பதினைந்து வருடங்களாக வைராக்கியத்துடன் தன் மனதுக்கு ஒரு வலுவான பூட்டை மாட்டி, கழுத்தில் கணவன் குமார் கட்டிய தாலியுடன் நெருப்பாக சுகன்யாவுக்காக அவள் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். "சுகன்யா" "ம்ம்ம்ம் .... சொல்லும்மா" "எழுந்திருடி ... மணியாச்சு ... போட்டுகிட்டு இருக்கற உன் நைட்டி விலகி தொடை தெரியது; அது கூட புரியாம பாயில உருண்டுகிட்டு இருக்கே, நீ என்ன சின்னக்குழந்தையா? ராத்திரியே சொன்னேன், இந்த மாதிரி மாரும், சூத்தாமட்டையும் வெளிய தெரியற மாதிரி மெல்லிசான நைட்டியெல்லாம் போடாதேன்னு. "அந்த விஸ்வாமித்திரனே பொம்பளை ஒருத்தி உடம்பை பாத்து மயங்கித்தான் தன் தவம் கலைஞ்சு நின்னான். ஆயிரம் சொன்னாலும் உன் மாமனும் ஒரு ஆம்பிளைதாண்டி. அவனும் மனசோ, உடல் அலுத்தவனோ இல்லடி கண்ணு. அவன் கல்யாணம் பண்ணிக்கலையே தவிர, பொம்பளை சுகம் என்னன்னு தெரிஞ்சவண்டி அவன். கீழ் வீட்டுலயும் வாட்ட சாட்டமா ரெண்டு ஆம்பிளைங்க இருக்காங்க; சட்டுன்னு எழுந்து போய், குளிச்சிட்டு, நல்லதா ஒரு ட்ரெஸ்ஸை போட்டு ரெடியாகுடி; அந்த பையன் போன் பண்ணா இங்கேயே வரச்சொல்லுன்னு உன் மாமன் சொல்லிட்டு வாக்கிங்க் போயிருக்கான்." "அம்ம்ம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடும்மா ... நீ சும்மா எனக்கு கிளாஸ் எடுக்காதே; எனக்கு நல்லாத் தெரியும் செல்வா காலங்காத்தால எழுந்துக்க மாட்டாம்ம்மா; அதே மாதிரி உன் தம்பியைப் பத்தி உனக்கு தெரிஞ்ச மாதிரி, எனக்கு என் மாமவைப் பத்தியும் நல்லாத் தெரியும். உன் டீச்சர் வேலையை உன் ஸ்கூல்ல மட்டும் வெச்சுக்க; புழுக்கமா இருக்குதுல்ல; வெந்து போவுதும்ம்மா; ராத்திரி தூங்கும் போதுதாம்மா இப்படி மெல்லிசு நைட்டி போட்டுக்குவேன், டே டயம்ல்ல இப்படி போடறது இல்லம்ம்மா? "சரிடித் தங்கம் - கோச்சிக்காதடி, எனக்குன்னு இருக்கற ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நீ ஒருத்தி தானேடி, என் பெத்த மனசு கேக்கலடி; அதனாலதாண்டி சொல்றேன்." "ஆமாம், செல்வா என்னமோ என்னை பொண்ணு பாக்கறதுக்கு வர்ற மாதிரி நீ பேசறீயே? வந்தா ஒரு காப்பியை போட்டு குடு. எல்லாம் அது போதும் அவனுக்கு. நேத்து ஒரு வார்த்தை கேட்டானா என்னை, நீ சாப்பிட்டியாடின்னு - நாள் பூரா நான் சாப்பிடலை" அவன் வரானாம்; நீ அவனுக்காக இட்லியும், தோசையும், பக்கோடா குருமாவும் செய்யப்போறேன்னு ராத்திரியிலேருந்து குதிக்கறே?" சுகன்யா சோம்பல் முறித்தவாறே எழுந்து உட்க்கார்ந்தாள். "ராத்திரி நீ தானேடி சொன்னே அவனுக்கு குருமா புடிக்கும்ன்னு" இப்ப என்னமோ என்னை மிரட்டறே? "நீ கேட்டே; அவனுக்கு என்ன பிடிக்கும்ன்னு; நானும் பேச்சு வாக்குல சொன்னேன்; நான் அவனுக்காக உன்னை செய்யுன்னா சொன்னேன்?" "அடியே சுகன்யா, நீங்க தனியா இருக்கும் போது உங்களுக்குள்ள எப்படி வேணா பேசிக்குங்க; ஆனா அந்த பையனை எங்க எதிர்ல "அவன்" "இவன்" அப்படின்னு பேசாதடி; மரியாதையா பேசுடி. அதாண்டி முறை ... நாளைக்கு அவங்க வீட்டுக்கு நீ போனா சட்டுன்னு இதே பழக்கம்தான் வரும் ... அவங்க என்னை காறி முழியக்கூடாது ... இப்படி ஒரு மரியாதை தெரியாத பொண்ணா உன்னை வளத்து வெச்சி இருக்கேன்னு?" "சரி சரி ... எனக்கு அவன் இன்னும் தாலியே கட்டலை; இப்பவே அவனை நீ உன் மாப்பிள்ளையா பார்க்க ஆரம்பிச்சிட்டியா? எனக்கு முதல்ல காப்பியை குடும்மா ... நான் காபி குடிச்சுட்டுத்தான் குளிக்கப் போவேன் ..." அவள் செல்லமாக அம்மாவிடம் கொஞ்சினாள். அவள் காபியை ரசித்து உறிஞ்சிய போது, செல் சிணுங்கியது. பாய்ந்து எடுத்தாள் சுகன்யா. செல்வாவின் நெம்பர் பளிச்சிட்டது. அவள் மனதுக்குள் சட்டென மகிழ்ச்சி குமிழியிட்டது "எம்ம்மா .... அவன்தான் ... செல்வாதான் லைன்ல இருக்கான் ... நீ பேசறியா அவன் கிட்ட" மாமா சொன்ன மாதிரி போன் பண்ணிட்டானே? சுகன்யாவின் முகம் பூவாய் மலர்ந்தது. "நீயே பேசுடி ... செல்லம் ... எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசு" அவளும் தன் காபியை மெதுவாக உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தாள். "ம்ம்ம் ... ஹலோ" "செல்வா பேசறேன் ... சுகன்யா, உங்க மாமா என்னை நேர்ல பாத்து பேசணும்ன்னு போன் பண்ணார்; ... இது உனக்கு தெரிஞ்சு இருக்கலாம்" "தெரியும் ... இதுவும் தெரியும் ... நீ என்னை தெரியாதுன்னு அவருகிட்ட ராத்திரி டயலாக் வுட்டியாமே? அதுவும் நல்லாத் தெரியும் ... உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா அப்படி சொல்லியிருப்பே; இப்ப உனக்கு என்ன வேணும் அதைச் சொல்லு" அவள் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தாள். "சுகன்யா ரொம்ப தேங்க்ஸ்" "காலங்காத்தால என்னை போன் பண்ணி எழுப்பி இப்ப எதுக்கு தேங்க்ஸ் சொல்றே நீ?... " "இல்ல... என் நம்பரை பாத்துட்டு நீ எங்கிட்ட பேசுவியா மாட்டியான்னு சந்தேகமா இருந்தது எனக்கு; உன் கோபம் தீர்ந்து போச்சுன்னு நினைக்கிறேன்; பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போன நீ, என் கிட்ட பேசிட்டே, உன் குரலை கேட்டதும் மனசுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்மா; அதுக்குத்தான் தேங்க்ஸ்." அவன் இழுத்தான். "ஆமாம், நேத்து ராத்திரி நான் யாருன்னு உனக்குத் தெரியாது; காலையில எழுந்தவுடனே என் செல் நம்பரு, என் பேரு, என் ஊரு, என் குரல் எல்லாம் உனக்கு ஞாபகம் வந்திடுச்சா?" "சாரிடி ... சுகு ... சும்ம்மா வெறுப்பேத்தாதடி ... நீ நேத்து எங்கிட்ட கொஞ்சமாவா பேசிட்டு போனே? "தெரியாதுன்னு சொன்னது" நீ பேசின டயலாக்தானே? நீ தானே மீனா கிட்ட முதல்ல சொன்னே? நீ பேசினப் பேச்சுக்கு வேற எவனா இருந்தாலும் உங்கிட்ட இந்த ஜென்மத்துக்கும் திரும்பவும் பேச மாட்டான். நானா இருக்கவே காலங்காத்தால உங்கிட்ட பேசறேன்." "சாரி செல்வா ... நேத்து நான் உங்கிட்ட கொஞ்சம் கோபமாத்தான் பேசிட்டேன், குரலில் குழைவுடன் பேசியவள்; அது சரி ... என் கிட்ட பேச உனக்கு இஷ்டமில்லன்னா, இப்ப வேண்டா வெறுப்பா எதுக்கு நீ எங்கிட்ட பேசணும் ... உனக்கு போன் பண்ணது என் மாமாதானே ... அவருகிட்ட நீ பேசிக்கோ; எனக்கு எதுக்கு நீ போன் பண்ணே? நீயாச்சு; அவராச்சு; அவர் நம்பர் உன் செல்லுல இருக்குல்ல; இப்ப காலை நீ கட் பண்ணிட்டு அவருகிட்ட பேசிக்கோ" சுகன்யா பொய்யாக அவனிடம் சீறினாள். இந்த பொண்ணை புரிஞ்சுக்கவே முடியலையே! என்ன பேசறா இவ; ஒரு நிமிசம் கொஞ்சறா அவனை; அடுத்த செகண்ட் ஏறி மிதிக்கிறா; என்ற புரியாத பாவனையுடன், புத்தி கெட்ட பொண்னை பெத்து வெச்சிருக்கேன் நான்; என்ற அலுப்பு கண்களில் தெரிய சுந்தரி தன் மகளின் தோளை அழுத்தினாள். "சுகன்யா, நேத்து நான் என்ன நிலமையில இருந்தேன்னு உனக்கு என்ன தெரியும்? எங்கம்மா கிட்ட நான் வாங்கின பேச்சு உனக்கு எப்படி தெரியும்? உனக்காக எப்படியெல்லாம் நான் எங்கம்மா கிட்ட பேசியிருக்கேன்னு உனக்குத் தெரியாது? நேத்து ஏதோ கடுப்புல உன் மாமா கிட்ட அப்படி பேசிட்டேன். அதுக்காக அவருகிட்ட நான் அவரைப்பாக்கும் போது நான் சாரி சொல்லிக்குவேன்." "நான் உன்னை எவ்வளவு தூரத்துக்கு காதலிக்கறேன் தெரியுமா? நீ இல்லாம என்னால இருக்கமுடியாது சுகு. என்னை வெக்கமில்லாதவன்னு வேணா நீ நினைச்சுக்க; அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை; நேத்து நடந்த நெறைய விஷயம் உங்கிட்ட பேசணும். நாம நம்ம சண்டையை அப்புறமா வெச்சுக்கலாம்" அவன் கெஞ்சலாக சிரித்தான். "எங்கிட்ட இன்னும் சண்டை போடணுங்கற ஆசை வேற உனக்கு இருக்கா? உன் கிட்ட சண்டை போட எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லைப்பா ... என் உடம்புல தெம்பும் இல்லை; என் மனசை நான் ஒண்ணும் மொத்தமா மாத்திக்கவுமில்லை. ஏதோ பழகின தோஷத்துக்கு உங்கிட்ட இப்ப நான் பேசிகிட்டு இருக்கேன்; ஜானகி இல்லன்னா அவ தங்கச்சி ஜெயந்தி பின்னால நீ தாராளமா போகலாம். இப்ப நீ எதுக்கு போன் பண்ணே? உனக்கு என்ன வேணும் அதை மட்டும் சீக்கிரமா சொல்லு?" அவள் ஒன்றும் தெரியாதவள் மாதிரி அவனிடம் நடித்து, அவனை தெரிந்தே வம்புக்கிழுத்தாலும், அவன் தன் தாயிடம் தனக்காக வாதாடியிருக்கிறான், தன் மாமாவை பார்க்க அவன் தயாராகிவிட்டான், இன்னைக்கு அவன் இங்கே வரப்போகிறான், என தெரிந்ததும் அவள் மனதில் மகிழ்ச்சி கங்கை வெள்ளமாக பொங்கியது; உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சி அவள் உதடுகளில் புன்னகையாக தவழத் தொடங்கியது. "சரி ... மிஸ் சுகன்யா ... மீதியை நான் உங்க மாமாவை பார்த்து பேசிக்கிறேன்; அவர் எங்க தங்கியிருக்காருன்னு மட்டும் நீங்க சொல்லமுடியுமா?" "நீங்க, வாங்க, போங்க, மிஸ், மேடம் இந்த டிராமால்லாம் எங்கிட்ட வேணாம்; அதெல்லாம் அந்த சாவித்திரிகிட்டவும் அவ பொண்ணுகிட்டவும் வெச்சுக்க; என் மாமா என் ரூம்லதான் இருக்கார்" அவள் தன் அம்மாவைப் பார்த்து உதட்டில் சிரிப்புடன் கண்ணடித்தாள்.

"சரிடி செல்லம், நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வரேன் ... போன வாரம் நீ புதுசா ஒரு சுரிதார் செட் வாங்கினேன்னு போன்லே சொன்னியே அந்த ட்ரஸ்ஸை போட்டுக்கோ ... வரும் போது மல்லிப்பூ வாங்கிட்டு வந்து குடுத்தா வெச்சிக்குவே இல்லியா? போன வாரம் நான் வந்தப்ப, என்னன்னவோ காமிச்சி, நெறைய வாரி வாரி குடுத்த; இன்னைக்கு அது மாதிரி எதாவது ஸ்பெஷலா குடுப்பியா?... அவன் குரலில் உல்லாசம் வழிந்தது. சனியன் புடிச்சவன் அம்மா பக்கத்துல இருக்கான்னு தெரியாம என் உயிரை எடுக்கிறான். போனவாரம் அவன் ரூமுக்கு வந்த போது நடந்தவைகள் மனதில் வேகமாக ஓட அவள் மனம் கிளுகிளுத்து உடல் இலேசாக சிலிர்த்து அவள் உதட்டில் விஷமப்புன்னகை நடனமாடியது. அவனாவது ஒரு முத்தம் போன்ல குடுக்கிறானா அதுவும் இல்லை. அவன் முத்தத்திற்கு மனம் வெக்கமில்லாமல் அலைந்தது. "...." "என்ன சுகன்யா பேசமாட்டேங்கிற; ஆசையா கேக்கிறேண்டா, புரியுதுடி; இன்னைக்கு உன் மாமா, உன் கூட இருப்பார்; என்னை நீ பட்டினியாத்தான் திருப்பி அனுப்ப போறே! ஒரு கிஸ், போன்ல கூட குடுக்க மாட்டியா, நேத்து தான் பாதியிலேயே நிறுத்திட்டுப் போயிட்டியே? அவன் குரலில் தாபம் அலைபுரண்டது. "ம்ம்ம் ... எங்கம்மா தோசையும், உனக்கு புடிச்ச பக்கோடா குருமாவும் பண்ணிகிட்டு இருக்காங்க, வெறும் வயித்தோட வா, வந்து ஒழுங்கு மரியாதையா சாப்பிட்டுப்போ ..." அவள் தன் உதட்டைச் சுழித்து அவள் பற்கள் மின்ன சிரித்தாள். "என்னாது ... உங்கம்மாவும் வந்து இருக்காங்களா? உங்க மாமாதான் வந்திருக்காருன்னு பாத்தேன் ... என்ன பிளான்ல இருக்கீங்கடி நீங்க மூணு பேரும்? சின்னப் பையனை தனியா கூப்பிட்டு, மடக்கி ரூம்ல கட்டிப்போட்டு தாலி கட்ட சொல்லபோறீங்களா? நான் யாரையாவது என் சேஃப்டிக்குன்னு கூட கூப்பிட்டுக்கிட்டு வரட்டுமா? அவன் சிரித்தான் "செல்வா நல்லா கேட்டுக்க; இப்பவும் நான் தெளிவா சொல்றேன்; எனக்கு திருட்டு தாலி கட்டிக்க இஷ்டமில்லை; நாலு பேருக்கு முன்னாடி, எத்தனை நாள் ஆனாலும் சரி, உனக்காக காத்துகிட்டு இருந்து, அதுவும் உங்க அம்மா ஆசிர்வாதத்தோட, அவங்க தொட்டு குடுக்கற தாலியைத்தான், உன் கையால கட்டிக்குவேன்; உன்னை வற்புறுத்தி இப்ப யாரும் தாலி கட்ட வர சொல்லலை; நீ ஒரு பயந்தாங்கொள்ளி; உனக்கு பயமாயிருக்குன்னா வராதே என் ரூமுக்கு; ... எங்க மாமா உங்கிட்ட சொன்ன மாதிரி நானும், எங்கம்மாவும் அவரோட உங்க வீட்டுக்கு வர்றோம். என்ன சொல்றே?"அவள் அவனை மிரட்டினாள். "எம்மா தாயே, அப்படி எதுவும் பண்ணிடாதீங்க; உங்களைப் பாக்கறதுக்கு நானே வர்றேன்" அவன் முனகினான். "நேத்து உன்னைப் பாத்தப்ப தாடி மீசையோட கன்றாவியா இருந்த; எதாவது அழுக்கு ஜீன்ஸை எடுத்து போட்டுகிட்டு வந்திடாதே; ஒழுங்கா ஷேவ் கீவ் பண்ணிட்டு, சுத்தமா டிரெஸ் பண்ணிகிட்டு வா, இல்லன்னா கீழ் வீட்டுல மாணிக்கம் மாமா கதவை தொறக்க மாட்டாரு; இப்பவே சொல்லிட்டேன்" அவன் பதிலுக்கு காத்திராமல் சுகன்யா தன் செல்லை அணைத்தாள். அவள் முகம் பரவசத்தில் பொலிவாக மின்னியது. "யாரு கிட்ட பேசிகிட்டு இருந்தே?" ரகு கேட்டவாறு உள்ளே நுழைந்தார். அவர் உள்ளே நுழைந்ததும், சுகன்யா ஒரு டவலை எடுத்து தன் நைட்டியின் மேல் தன் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். பக்கத்தில் நின்ற தன் தாயின் தோளில் தன் கையை வீசி அவளைத் தன்னுடன் இறுக்கிக்கொண்டாள். "மாமா, அவர்தான் செல்வா பேசினாரு; ஒரு மணி நேரத்துல உங்களை வந்து பாக்கிறேன்னாரு, அதுக்குள்ள நீங்களும் குளிச்சுட்டு ரெடியாகிடுங்க; அவரை இங்கேயே சாப்பிடச் சொல்லியிருக்கேன்" இப்போது அவள் குரலிலும் முகத்திலும் வெட்கம் மெலிதாக இழையோடியது. "ஏம்மா, வெறும் இட்லி மட்டும் தான் செய்யறியா? அவருக்கு வெங்காய ஊத்தப்பம் ரொம்ப பிடிக்கும், அவர் வந்ததும், பொடியா ஒரு மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை அரிஞ்சி போட்டு சூடா ஊத்திடேன், சொல்லியவாறு அவள் கன்னத்தில் தன் உதடுகளை மென்மையாக பதித்தவள் குளியலறையை நோக்கி ஓடினாள். "நல்லாயிருக்குதே இவ ஞாயம்; சித்த முன்னாடி, அவனுக்கு காப்பி மட்டும் குடு போதும்; ரொம்ப அவனுக்காக உருகாதேன்னு என்னை அதட்டினா; இப்ப என்னடான்னா ஊத்தப்பம் ஊத்துங்கறா" அவள் தன் தம்பியை வியப்புடன் பார்த்தாள். "அதானே நேத்து ராத்திரியெல்லாம், அந்த பையனை "அவன்" "இவன்னு" வறுத்து கொட்டினா, இப்ப என்னமோ அவன் போன் வந்ததும், "அவரு" "இவருன்னு" அவனை தலை மேல தூக்கி வெச்சிகினு ஆடறா; என்னை சீக்கிரமா குளிச்சுட்டு ரெடியாகுன்னு ஆர்டர் போடறா? அக்கா, இந்த காலத்துப் பொண்ணுங்க எல்லாமே சித்தம் போக்கு, சிவம் போக்குன்னு இருக்காளுங்க, எவளையும் ஒண்ணும் புரிஞ்சுக்கவே முடியலை" ரகுவும் சிரித்தார். *** சுகன்யாவிடம் பேசிவிட்டு, நிமிடங்களில் ஷேவ் செய்துகொண்டு செல்வா குளிக்க ஓடினான். குளியலறையில் குதூகலத்துடன் தன் கள்ளக்குரலில் பாடத் தொடங்கினான். "ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே ஏ மச்சத் தாமரையே... என் உச்சத் தாரகையே... கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே" "வெளியில வந்து பாடேண்டா ... காலங்காத்தால பாத்ரூமுல உன் கச்சரியை ஆரம்பிச்சிட்டே ... அப்பா பாத்ரூம் யூஸ் பண்ணணுமாம்" மீனா வெளியிலிருந்து கத்தினாள். "ஒரு நிமிஷம்; இதோ வந்துட்டேண்டி ... வெளியில் வந்தவன் தன் தங்கையின் முதுகில் செல்லமாக குத்தியவன் சொன்னான், இது உன் வருங்கால அண்ணிக்கு பிடிச்சப் பாட்டுடி... அதனால எனக்கும் ரொம்பப் பிடிக்கும்" மனநிறைவுடன் சிரித்தான் செல்வா. *** குளித்துவிட்டு வந்த சுகன்யா, போன வாரம் புதிதாக வாங்கியிருந்த ஸ்லீவ்லெஸ் மஞ்சள் நிற குர்தாவை அணிந்து, ரோஸ் நிற சுரிதார் அலங்காரத்தில் தங்கமாக மின்னிக் கொண்டிருந்தாள். தலையை கோதி முடியை இறுக்கமாக ரப்பர் பேண்டில் அழுத்தியிருந்தாள். சிறிய கருப்பு நிற பிந்தியை நெற்றியில் ஒட்டியிருந்தாள். ரோஜா நறுமணம் வீசும் டியோடரண்டை அக்குளில் அடித்துக்கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னுமாக தன் உடலை திருப்பி திருப்பி பார்த்து தன் உதடுகளை கடித்துக்கொண்டாள். நான் ஏன் இன்னைக்கு என் உடைகளிலும், தலையை சீவிக்கொள்வதிலும் இவ்வளவு நேரம் செலவு பண்றேன். என் அலங்காரத்துக்கு ஏன் அதிக கவனம் செலுத்துகிறேன். செல்வா என்ன என்னை புதுசாவா பார்க்கப்போறான். இல்லையே? அவள் தன் மனதுக்குள் கேட்டுக்கொண்டாள். "நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே.... என் வாழ்வும் அங்கே அன்பே அன்பே நான் இங்கே தேகம் எங்கே.... என் ஜீவன் எங்கே" சுகன்யா அவளையும் அறியாமல் செல்வாவுக்கும் தனக்கும் பிடித்த பாடலை வாய்க்குள் முணுமுணுக்கத் தொடங்கினாள். ரகு, தன் தமக்கையை கண்களால் அர்த்தமுடன் பார்த்து சிரித்தார். அவளும் நமட்டு சிரிப்புடன், சுகன்யாவை பார்த்துவிட்டு தன் தலையை குனிந்து கொண்டாள். மல்லிகாவும் நடராஜனும், அவர்களுக்குள் இரவில் நடந்த இன்ப விளையாட்டுக்குப்பின் களைத்து தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாகவே எழுந்து, மீனா போட்டுக் கொடுத்த காஃபியை குடித்தவாறு வெரண்டாவில் அமைதியாக உட்க்கார்ந்திருந்தனர். மீனா அவர்கள் அருகில் அமர்ந்து அன்றையை செய்தி தாளை புரட்டிக் கொண்டிருந்தாள். செல்வா, வெள்ளை நிற அரைக்கை சட்டையும், வெளிர் க்ரே நிற பேண்ட்டும் அணிந்துகொண்டு, ஒல்ட் ஸ்ஃபைஸ் வாசத்துடன், கண்ணில் மெட்டல் ஃப்ரேமில் கருப்புநிற கண்ணாடியும், வுட்லேண்ட் ஷூவுமாக வந்தவன் முகம் முழு மலர்ச்சியுடன் இருந்தது. "காலங்காத்தால எங்கேடா போறே காஃபி கூட குடிக்காமா? மீனா வினவினாள். "கேட்டுட்டில்லே கிளம்பும் போதே நான் எங்கே போறேன்னு? ... இனிமே போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்?" அவன் எரிந்து விழுந்தான். "பெரிய வி.ஐ.பி. இவரு, மன்மோகன்சிங், ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்க்கு இவரை கூப்பிட்டிருக்காரு; நான் எங்கே போறேன்னு கேட்டதாலே அது இப்ப கேன்சல் ஆயிடப் போவுதா? நீ தான் ஞாயித்து கிழமைன்னா வாரம் தவறாம அந்த சீனு தடியன் பின்னால அலைஞ்சுட்டு ஏதாவது கையேந்தி பவன்ல ரோடுல நின்னு வயித்தை ரொப்பிக்குவே; அதுக்காகத்தான் நான் கேட்டேன்; உனக்கு இங்க வீட்டுல டிஃபன் பண்ணணுமா வேணாமான்னு" அவள் பதிலுக்கு பொரிந்து தள்ளினாள். "மை டியர் சிஸ்டர், எனக்கு ஸ்பெஷல் டிஃபன் - தோசை, பக்கோடா குருமா - வேற ஒரு இடத்துல ரெடியாகிட்டு இருக்கு, நீங்க எனக்காக ஒரு சின்ன உதவி பண்ணுங்க; நான் கிளம்பின உடனே, இந்த காம்பவுண்ட் கேட்டை மட்டும் மூடிடுங்க ப்ளீஸ்" ... பை ... பை என கையாட்டிவிட்டு தன் பல்சரை உதைத்து வேகமாக கிளம்பினான். *** மணி எட்டரையாகியிருந்தது. செல்வா இன்னும் வந்து சேரவில்லையே என அந்த வீட்டிலிருந்த மூவரும் மனதுக்குள் மருகிக்கொண்டிருந்தனர். ரகுவும் குளித்துவிட்டு தயாராகி செய்தித்தாளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். சுந்தரியும் தான் செய்த இட்லியையும், குருமாவையும், தனித்தனி ஹாட்பேக்கில் வைத்து மூடிவிட்டு, காஃபிக்கு பாலை காய்ச்சி ஃப்ளாஸ்கில் ஊற்றிக்கொண்டிருந்தாள். சுகன்யா குட்டி போட்ட பூனையைப் போல் குறுக்கும் நெடுக்குமாக தன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தாள். தன் கையை திருப்பி திருப்பி வாட்ச்சில் மணியைப் பார்த்தாள். ஒரு மணி நேரத்துல வர்றேன்னு சொன்னவனை இன்னும் காணோமே? என்னப் பண்றான் அவன்? நம்ம வீட்டுக்கு அவனுக்குத் வழி தெரியும்? அப்புறம் என்ன பிரச்சனை? இன்னும் ஏன் அவனை காணவில்லை. அவன் வீட்டுல ஏதாவது உளறி அவங்க அம்மா ஏதாவது டென்ஷன் குடுக்கிறாங்களா? பால்கனியில் சென்று தெரு மூலையைப் நொடிக்கொரு தரம் எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்தாள். அன்று காலை எழுந்ததிலிருந்தே தன் மனம் அவசியமில்லாமல் பரபரத்துக் கொண்டிருப்பதாக சுகன்யாவுக்கு பட்டது. இதுக்கு என்ன காரணம், நான் என்ன எதிர்பார்க்கிறேன். இந்த செல்வா இன்னும் ஏன் வரலே? எப்பவும் பங்க்சுவுல வர்றவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? சுகன்யாவால் அமைதியுடன் இருக்க முடியாமல் மாடி பால்கனியில் நடை போட்டுக்கொண்டிருந்தாள். "சுகன்யா, வந்து உக்காரும்மா அவர் வந்துடுவாரு, இல்லன்னா ஒரு தரம் போன் பண்ணி பாரேன்." பெண்ணின் தவிப்பை உணர்ந்த தாய் மெதுவாக பேசினாள். "அஞ்சு தரத்துக்கு மேலப் பண்ணிப்பாத்துட்டேன்ம்மா, நாட் ரீச்சபிள்ன்னு வருதுமா... என்னமோ தெரியலமா ... என் வலது கண்ணு துடிச்சிக்கிட்டே இருக்கு ... அப்படி துடிக்கக் கூடாதுன்னு நீ சொல்லுவியேம்மா; அவள் தன் மனம் கலங்கப் பேசினாள்." *** செல்வா வேகமாக வெளியே வந்தவன் ரெண்டு நிமிடத்தில் அடையாறு டிப்போவை தொட்டான். அடுத்த மூன்று நிமிடங்களில் காலியான சாலையில் விர்ர் என சர்தார் பட்டேல் ரோடில் என்பது கிலோமீட்டரில் பறந்து அண்ணா சாலையில் தன் மனதுக்குள் தன்னை சூர்யாவாக கற்பனை செய்து கொண்டு "என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய், வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய், என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்" என பாடியவாறு சர்ர்ரென நுழைந்தான். நுழைந்தவன் வலது பக்கத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த டிரக்கை, கடைசி வினாடியில் ஒரக்கண்ணால் பார்த்தவன், கம்மினாட்டி குடிச்சுட்டு ஓட்டறானா ... ஆடி ஆடி வர்றான்... தாழி .... என்னால முன்ன போற பஸ்ஸை ஒவர்டேக் பண்ணிட முடியுமா, முடியாது போல இருக்கே, நேரா போனா முன்ன போற பஸ்ஸை இடிக்க வேண்டியதுதான். வேகத்தை குறைச்சா, ட்ரக் கீழேயே நமக்கு சமாதி கட்டவேண்டியதுதான் ... நாம இன்னைக்கு செத்தமா? மனதில் அலாரம் அடிக்க ... லெஃப்ட்ல போலாமா ... போனா தப்பிக்கலாமா ... முருகா ஒரே ஒரு சான்ஸ் குடுப்பா ... நான் என் சுகன்யாவை பாக்கணும் ... இவ்வளவையும் அவன் மூளை நொடியில் சிந்தித்தது ... போடா லெஃப்ட்ல அவன் இன்ஸ்டிங்க்ட் சொல்ல, செல்வா இடப்புறம் தன் பைக்கை திருப்பும் முன், பக்கத்தில் வேகமாக வந்த ட்ரக்கின் இடது புற முன் சக்கரம் அவன் வண்டியின் பின் சக்கரத்தை முத்தமிட்டுவிட்டது. ட்ரக் வந்த வேகத்தில், அந்த மெல்லிய உரசலிலேயே அவன் வண்டி தட்டு தடுமாறியது, அவனால் தன் பைக்கை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், ஏற்கனேவே அங்கு நின்று கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் டிசையரின் பின்னால் தன் பைக்கை செல்வா முட்டினான். முட்டிய வேகத்தில் தன் பைக்கிலிருந்து மூன்றடி உயரம் பறந்து, கார் டிக்கியின் மேல் விழுந்து உருண்டு, முடிவாக தரையில் ட்ஃப் என்ற சத்தத்துடன் தன் பைக்கின் மீதே விழந்தான். அவன் தளர்வாக போட்டிருந்த ஹெல்மெட் அவன் தலையிலிருந்து கழன்று அவன் பக்கத்திலேயே விழுந்தது. விழுந்தவன் இடது காதுக்குப்பின்னால் இரத்தம் மெல்லிய கோடாக வழிய ஆரம்பித்தது. அசைவில்லாமல் கிடந்தான் .... அதே நேரத்தில் அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல் போன் ஒலிக்கத் தொடங்கியது. நின்றது. மீண்டும் மீண்டும் ஒலித்து அடங்கியது ... ரகு, எழுந்திருப்பா, மணி ஒன்பதாச்சு; நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க; அந்த தம்பி வரும் போது, சுகன்யா சொன்ன மாதிரி சூடா தோசையோ, ஊத்தப்பமோ நான் ஊத்தி கொடுத்துடறேன். ரகு நிமிர்ந்து சுகன்யாவைப் பார்த்தார். "சுகு வாம்மா சாப்பிடலாம்" ரகு அவளை அழைத்தார். "நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க மாமா; எனக்கு பசிக்கலை. இன்னும் கொஞ்ச நேரம் நான் வெயிட் பண்றேன். நான் அவரை இங்க சாப்பிடச் சொல்லிட்டு, நானே சாப்பிட்டா நல்லாருக்குமா? இப்ப நான் ஒரு கப் காபி குடிக்கப்போறேன்." ரகுவும் சுந்தரியும் மவுனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சுகன்யா தனக்கு ஒரு கப் காஃபியை கலந்து கொண்டு, மீனாவுக்கு போன் பண்ணலாமா என பால்கனியில் நின்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவள் செல் ஒலித்தது. "கால்" நம்பர் அவளுக்கு பரிச்சயமில்லாததாக இருந்தது. "ஹல்லோ..." "ஹல்லோ" சுகன்யா குழப்பத்துடன் பேசினாள். "நீங்க சுகன்யாவா... " "ஆமாம் நீங்க யாரு" "அரை மணிக்கு முன்னாடி நீங்க இந்த .......... செல் நெம்பர்ல நாலு அஞ்சு தடவை "கால்" பண்ணியிருக்கீங்க; இது யாரோட நெம்பர்; நெம்பருக்கு சொந்தகாரர் பேர் சொல்லமுடியுமா? "ம்ம்ம்ம் ... நீங்க யாரு பேசறீங்க" "சொல்றேம்மா ... இப்ப நீங்க எங்க இருக்கீங்க ... இந்த செல் நம்பர் யாருது? இவருக்கும் உங்களுக்கு என்ன ரிலேஷன்?" குரல் மிடுக்குடனும் அதிகாரத்துடனும் ஒலிக்க சுகன்யா தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தாள். "இது செல்வாவோட நெம்பர் ... அவரை எனக்கு நல்லாத் தெரியும் ... முதல்ல நீங்க யாருன்னு சொன்னா நல்லாயிருக்கும்" அவள் குரலில் எரிச்சல் ஒலித்தது. "நான் கிண்டி போலீஸ் ஸ்டேஷன்லேருந்து ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் கணேசன் பேசறேன் ... யோவ் ... அந்த பையன் டிரைவிங்க் லைசென்ஸ்ல என்ன பேர் இருக்குன்னு பாருய்யா? பாவம் ... சின்னப்பொண்ணு யாரோ லைன்ல வருது ... அவன் அம்மாவா இருக்க முடியாது" .... பக்கத்தில் யாருடனோ பேசும் அந்த கணேசன் குரல் இந்த பக்கம் சுகன்யாவுக்கு தெளிவாகக் கேட்டது. சுகன்யாவின் மனதில் இப்போது பட்டென உறைத்தது. செல்வாவுக்கு என்னவோ ஏதோ தப்பாக நடந்திருக்கிறது; அதனால் தான் அவன் என்னுடைய "கால்ஸை" அட்டெண்ட் பண்ணலயா? இப்ப வேற யார்கிட்டயோ அவன் செல் போன் இருக்கு; அவங்க என்னை கூப்பிடறாங்க; அவள் உடல் இலேசாக நடுங்கியது. "ஹலோ... ஹலோ ... அவள் பரபரப்புடன் கூவினாள் "சொல்லுங்கம்மா ... ஒ.கே ... ஓ.கே ... அந்த பையன் பேர் செல்வாதான் ... கன்ஃபார்ம் ஆயிடுச்சு ... யோவ் கந்தசாமி நீ அப்படியே ராமச்சந்திரனுக்கு "கால்" பண்ணி செல்வான்னு எண்ட்ரி போட்டு கேஸ் ஷீட் எழுத சொல்லிடுயா..." "மிஸ் சுகன்யா ... செல்வாவுக்கு நீங்க என்ன உறவும்மா, உங்க வீட்டுல வேற யாரும் பெரியவங்க ... ஆம்பளைங்க இப்ப இல்லையா? இருந்தா அவங்க கிட்ட போனை குடும்மா?" "சார் ... எங்கிட்ட நீங்க தாராளமா பேசலாம் ... ஸார் ... அவர் என் கூட வொர்க் பண்றார் ... எனக்கு நல்ல ஃப்ரெண்ட், நாங்க கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கிறோம் ... அவர் எங்க வீட்டுக்கு காலையில வர்றதா இருந்தார் ... மோஸ்ட்லி அவர் பைக்லதான் எங்கேயும் போவார் ... அவரோடது கருப்பு பல்ஸர் பைக். என் வீடு சைதாப்பேட்டையில இருக்கு, இப்ப நான் வீட்டுலத்தான் இருக்கேன். இப்ப எங்க மாமா ரகுராமன் என் பக்கத்துலதான் இருக்கார். சொன்ன டயம்ல செல்வா வராததாலே நான் அவருக்கு தொடர்ந்து போன் பண்ணேன். என்னாச்சு ஸார் அவருக்கு ..." அவள் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தாள். அவள் குரல் உடைந்து, தேய்ந்து தழுதழுக்க ஆரம்பித்தது. "ஓ.கே. இப்ப புரியுது ... சாரி மிஸ் சுகன்யா ... அரை மணி நேரத்துக்கு முன்னாடி செல்வா கிண்டியிலேருந்து சைதாப்பேட்டை பக்கமா வரும் போது ஒரு ட்ரக் அவரோட பைக்கை இடிச்சிருக்குன்னு தெரிய வருது ... நின்னுகிட்டிருந்த ஒரு கார் மேல அவர் பைக் மோதி, தலையில அடிபட்டு, மயக்கமா கிடந்தவரை நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்கு ... இந்த இன்ஃப்ர்மேஃஷனை முதல்ல உங்களுக்குத்தான் நான் குடுக்கறேன் ... நீங்க உடனடியா அங்க போகமுடியுமா ... அங்க ராமச்சந்திரன்னு ஒரு போலீஸ் ஆஃபிஸர் ரிஸப்ஷன்ல இருப்பார்... அவரை நீங்க பாருங்க ... என்ன ஓ.கே வா?" "கண்டிப்பா ஸார் ... நான் இப்பவே போறேன் ஸார் ... ஸார் செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணும் ஆயிடலேயே சார் ... இது அவங்க வீட்டுக்குத் தெரியுமா ... " அவள் பதைபதைத்தாள். "ம்ம்ம் ... சாரி சுகன்யா ... இப்ப இதுக்கு மேல என்னால ஒண்ணும் சொல்லமுடியாது. விக்டிமோட செல் போன்லேருந்து மத்த நம்பர்களை செக் பண்ணி, பேரண்ட்ஸை நான் காண்டாக்ட் பண்ணணும் ... அவன் வீட்டுக்கு தகவல் சொல்லணும் ... நீங்க அந்த பையனோட பேரண்ட்ஸ் நம்பரோ, வீட்டு நம்பரோ இருந்தா குடுங்க ... தட் வில் பி ஹெல்ப்ஃபுல் ஃபார் மீ ...? இப்போது அவர் குரலில் கனிவு தெரிந்தது. "சார், செல்வாவோட தங்கை மீனா நெம்பர் எங்கிட்ட இருக்கு ... நோட் பண்ணிக்குங்க ... ஸார் நீங்க கால் பண்றீங்களா இல்லை நான் அவ கிட்ட பேசட்டுமா?" அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. "சுகன்யா, நீ ஹாஸ்பெட்டலுக்கு குயிக்கா போம்மா ... அந்த பையன் அங்க தனியா "I.C.U.ல்ல" இருக்கான்... நான் அவன் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்றேன் ... ஆல் த பெஸ்ட் ... " கால் கட் ஆகியது. சுகன்யாவின் கால்கள் துணியாக துவண்டன. அவளால் நிற்கமுடியாமல் சுவரை பிடித்துக்கொண்டாள். உடலில் இருக்கும் அவ்வளவு இரத்தமும் ஒரு நொடியில் வடிந்துவிட்டது போல உணர்ந்தாள். அவள் அடிவயிறு கலங்கி, உடனடியாக பாத்ரூமுக்கு போக வேண்டுமென தோன்றியது. "யாரும்மா போன்ல ... என்னாச்சு ..." பால்கனிக்கு வந்த ரகு, கண்ணீர் கன்னங்களில் ஒழுக நின்ற சுகன்யாவை கண்டு திடுக்கிட்டார். மாமா ... செ... செல்... செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சி ... பைக்ல நம்ம வீட்டுக்கு வரும் போது ... ட்ரக் ஒண்ணு மோதிடிச்சாம் ... போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஃபார்ம் பண்ணாங்க ... எனக்கு செல்வாவை உடனே பார்க்கணும் மாமா ... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டல் எமர்ஜென்ஸியிலஅட்மிட் பண்ணியிருக்காங்களாம். அங்க அவன் தனியா கிடக்கறான் மாமா ... இது இன்னும் அவங்க வீட்டுக்கு கூட தெரியாதாம் ... ப்ளீஸ் போவலாம் வாங்க மாமா... " அவள் அறைக்குள் பாய்ந்து இங்குமங்கும் ஓடினாள் ... தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள் ... அலமாரியை திறந்து கையில் கிடைத்த பணத்தை அள்ளிக்கொண்டாள். அம்மா நீயும் வர்றியாம்மா ... " சுந்தரியை கட்டிக்கொண்டு விம்மினாள். "செல்வா ... என்னடா உனக்கு இப்படி ஆகிப்போச்சு ... பாவி பாத்து வரக்கூடாதாடா ... வண்டியை வேகமா ஓட்டாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ... கேட்டியாடா பாவி ... கிக்கா இருக்குடி பைக்ல பறக்கும் போதுன்ன்னு சொல்லுவியடா பாவி ... நீ என்னைப் பாக்க வரும் போது உனக்கு இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா உன் அம்மா என்னை உயிரோட புதைச்சுடுவாளேடா? ... இப்ப நான் அவங்க மூஞ்சியில எப்படிடா முழிப்பேன்; இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு புரியலேயே?" "டேய் செல்வா ... எல்லாம் அந்த முண்டக்கண்ணி சாவித்திரி கண்ணுதாண்டா ... உன்னை இப்படி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சு இருக்கு; நம்பளை உசுரோட திண்ணனும்ன்னு பாக்கறடா அவ ... அவ கண்ணு தான் கொள்ளிக்கண்ணாச்சே ... நல்லா இருப்பாளா அவ; அவள் கட்டிலில் விழுந்து தலையில் அடித்துக்கொண்டு கத்தினாள் ... உனக்கு ஏதாவது ஓண்ணு ஆச்சு; அவளை நான் சும்மா விட மாட்டேன் .... ஓவென கத்தி அழ ஆரம்பித்தாள். அவள் போட்ட கூச்சலையும் அதை தொடர்ந்து வந்த அழுகை சத்தத்தையும் கேட்டு கீழே வெரண்டாவில் நின்று கொண்டிருந்த சங்கர் பதறியாவாறு மேலே ஓடி வந்தான்." "சரிடா கண்ணு சுகா .. நாம போகலாம்ம்மா ... கிளம்பு நீ ... இப்ப அழுவாதே நீ... தைரியமாயிரு ... ஒண்ணும் ஆகியிருக்காது ... ரகு தன் உடையை மாற்ற ஆரம்பித்தார். "என்னாச்சு சுகன்யாவுக்கு ... ஏன் அழறா இப்படி?" சங்கர் திகைத்தான். "சங்கர் உங்க கார்ல சீக்கிரமா என்னை லட்சுமி ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறீங்களா? என் செல்வா அங்க சீரீயஸா கிடக்கிறான் ..." எழுந்து ஓடி அவன் கையை பிடித்துக்கொண்டாள் சுகன்யா. "நான் எல்லாம் விவரமா சொல்றேன் ... நீ கொஞ்சம் வண்டியை எடுப்பா சங்கர் ... உனக்கு வேலை ஒண்ணும் இப்ப இல்லையே ... நீ கொஞ்சம் எங்க கூட வரலாம் இல்லே? வேணி சாயந்திரம் தானே வர்றா ... அக்கா, நான் என் ஏடிம் கார்டு எடுத்துக்கிட்டேன்; நீ உன் கிட்ட இருக்கற பணத்தை மொத்தமா எடுத்துக்கோ... சுகா நீங்க ரெண்டும் பேரும் கிளம்புங்க ... சங்கருடன் ரகு கீழே இறங்க ஆரம்பித்தார். *** மீனாவின் செல் சிணுங்கியது... யாராக இருக்கும் இப்ப ... ஜெயந்திதான் காலையில கால் பண்றேன்ன்னா; ஆனால் போனில் தெரியாத நம்பராக இருக்க ... மீனா தயங்கினாள் ... அடித்து அடங்கிய போன் மீண்டும் சிணுங்கியது. "ஹலோ ... யாரு "

"நான் தீபக் ... இன்ஸ்பெக்டர் ... செல்வா உன் அண்ணனா? சுகன்யாதான் இந்த நெம்பரை குடுத்தாங்க ... செல்வா பைக்ல ..... கிண்டிக்கு கிட்ட ..... ட்ரக் இடிச்சு ... நந்தனம் லட்சுமி ஆஸ்பிட்டல்ல .... அட்மிட் ஆயிருக்கான் ... சுகன்யாவுக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறேன் ... நீங்க அங்க உடனடியா போங்க ... ராமச்சந்திரன் ஹெல்ப் பண்ணுவார் ... மீதியை அப்புறம் பேசலாம் ..." "அப்பா ... நம்ம செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்.. சீரியஸா இருக்கானாம். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம் ... நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டலாம் ... போலீஸ்லேருந்து போன் பண்ணி சொல்றாங்க ... நீ பேசுப்பா இன்ஸ்பெக்டர் கிட்ட... அவள் தந்தியடிக்க ... நடராஜன் அவள் செல்லை வாங்கி ... ஹலோ என கத்தி ... யாரும் லைன்ல இல்லடி மீனா" ... அவர் நடுக்கத்துடன் கூச்சலிட்டார். குளித்துவிட்டு தலையை உலர்த்திக்கொண்டிருந்த மல்லிகா அரையும் குறையுமாக மீனா பேசுவதை கேட்டவள் ... என்னாச்சு ... அப்பாவும் பொண்ணும் ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை? விஷயம் தெரியாமல் அவள் தன் போக்கில் உளறினாள். மீனா தன் கண் கலங்க அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு, அம்மா செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம். இப்ப நாம ஆஸ்பத்திரிக்கு போவணும். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம். இப்பத்தான் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து நீயூஸ் தெரிஞ்சுது." "எனக்கு நல்லாத் தெரியுண்டி; அந்த சுகன்யா என் புள்ளையை முழுசா தின்னுட்டுத்தான் மூச்சு விடப்போறா; என் பேச்சை இந்த பாவி மனுஷன் கேட்டாத்தானே? செல்வா கிட்ட சொல்லி அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிடுவோம். அவகிட்ட ஒரு தரம் பேசி பாருடி; பேசி பாத்துட்டு முடிவெடுக்கலாம்ன்னு ராத்திரி பூரா ஒரே புலம்பல் எங்கிட்ட; எனக்கு புத்தி சொல்றாரு இந்த புத்தி கெட்ட மனுஷன்... இப்பவாது உங்களுக்கெல்லாம் புரிஞ்சா சரிடி ... அவ நல்ல அதிர்ஷ்ட கட்டைடி... என் உயிரை எடுக்க பொறந்து இருக்கா" பெண்ணின் கையை உதறியவள் கத்திக்கொண்டே இலக்கில்லாமல் தெருவுக்கு ஓடினாள். அவள் பின்னால் ஓடிய நடராஜன் ... மல்லிகா ... என் புள்ளையை காப்பத்தணும் முதல்ல ... ஆஸ்பத்திரியில வந்து நீ சாமியாட ஆரம்பிச்சே ... உன்னை அங்கேயே பொலி போட்டுடுவேன் ... அங்க வந்து நீ பொத்திகிட்டு சும்மா இருக்கறதா இருந்த எங்க கூட வா ... இல்லயா நீ இங்கேயே வீட்டுல கத்திக்கிட்டு கிட ... சொல்லிட்டேன் நான் ... நடராஜன் பதிலுக்கு கூவினார். மீனா, கார் சாவியை முதல்ல என் கிட்ட எடுத்து குடுத்துட்டு அலமாரியை திறந்து இருக்கிற பணத்தை எடுத்துக்கோ, நான் வண்டியை எடுக்கிறேன்; வீட்டை பூட்டிகிட்டு சீக்கிரமா ஓடிவா.. உங்கம்மாளுக்கு இப்ப எது சொன்னாலும் புரியாது." நடராஜன் லுங்கியிலிருந்து பேண்ட்டுக்கு மாறினார். தலையில் கையை வைத்துக்கொண்டு பிரமை பிடித்தவள் போல எங்கேயோ பார்த்துக்கொண்டு, தெரு படிக்கட்டில் உட்கார்ந்திருந்த மல்லிகாவின் தோளைப் பிடித்து இழுத்த மீனா, "அம்மா, வண்டியில ஏறும்மா என இழுத்து பின் சீட்டில் உட்க்காரவைத்து கதவை அடித்து மூடினாள். வண்டி கிளம்பியதும், செல்லை எடுத்து செல்வாவின் ஃப்ரெண்ட் சீனுவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி நேராக ஹாஸ்பெட்டலுக்கு வரச்சொன்னாள். "மீனா இப்ப ஏம்மா எல்லாருக்கும் போன் பண்ணி கலவரப்படுத்திகிட்டு இருக்கே?" "இல்லப்பா ... நமக்கு அண்ணன் நிலைமை என்னன்னு சரியா தெரியலை; உதவிக்கு கூட ஒரு ஆம்பிளை இருக்கறது நல்லது தானேப்பா; அதுவும் இல்லாம செல்வாவுக்கு ரொம்ப ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் அவன், அவனுக்கு சொல்லலன்னா அவன் அப்புறமா வீட்டுக்கு வந்து சண்டை போடுவான். " அந்த இக்கட்டான நேரத்திலும் நடராஜன் தன் மகளின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து மனதுக்குள் சிலாகித்து கொண்டு பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த தன் பெண்ணின் கையை அழுத்தி சிரித்தார். "அப்பா நீங்க வண்டியை கவனமா ஓட்டுங்கப்பா" அவள் சுரத்தில்லாமல் அவரைப்பார்த்து முறுவலித்தாள். *** சங்கர் வண்டியை நிறுத்தியதும் சுகன்யா பாய்ந்து ஓடினாள். மூச்சிரைக்க ரிசப்ஷனில் செல்வாவின் பேரை சொல்லி விசாரிக்க, அங்கிருந்த ராமச்சந்திரன் "மெதுவாம்மா ... நீ யாரு ... உன் பேரு என்ன?" "நான் சுகன்யா" தான் யார் என அவள் சொல்ல அவர் அவளை ட்யூட்டி டாக்டரிடம் அழைத்து சென்றார். "செல்வாவுக்கு சீரியஸா ஒண்ணுமில்லையே சார்" சுகன்யா கேட்டுக்கொண்டிருக்கும் போது சீனுவும் பதைபதைப்புடன் அங்கு வந்து சேர்ந்தான். "ஃப்ர்ஸ்ட் எய்ட் குடுத்தாச்சு. இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாதும்மா. பேஷண்ட்க்கு இன்னும் நினைவு வரல. பையன் ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில காயம் அதிகமில்லை. ஆனா ஹெல்மெட் உடைஞ்சு தலையில காதுக்கு பக்கத்துல ஆழமா குத்தி ப்ளட் லாஸ் ஆகியிருக்கு. காயத்துக்கு எக்ஸ்டர்னலா ஸ்டிச் போட்டாச்சு. ரெண்டு யூனிட் ப்ளட் ஏத்தியிருக்கோம். இப்ப ப்ரெய்ன் ஸ்கேன் நடந்துகிட்டு இருக்கு. முதல்ல ஸ்கேன் முடியட்டும். மத்தபடி உடம்புல அங்கங்க ஸ்க்ராட்ச்சஸ் இருக்கு. பையன் முழிச்சதுக்கு பின் டீடெயில்லா செக் பண்ணாத்தான் எதுவும் சொல்ல முடியும். அப்புறம் தான் மேற்கொண்டு என்ன பண்றதுன்னு முடிவு செய்யமுடியும். " அவர் தன் தோள்களை குலுக்கிக்கொண்டு எழுந்தார். "அந்த பையன் ப்ளட் ஒரு ரேர் க்ரூப். அதை வரவழைக்கச் சொல்லியிருக்கேன். இன்னும் குறைஞ்சது ரெண்டு யூனிட் ப்ளட் பேஷண்ட்க்கு குடுக்க வேண்டியிருக்கலாம். அதுக்காக நீங்க ப்ளட் எங்களுக்கு இம்மிடியட்டா ரீப்ளேஸ் பண்ணணும். முதல்ல ரிஸப்ஷன்ல 50,000 ரூபாய் அட்வாண்ஸா பணம் கட்டிட்டு வாங்க. பையனோட பேரண்ட்ஸ்க்கு தகவல் சொல்லியாச்சா. சில ஃபார்ம்ஸ்ல அவங்க யாராவது ஒருத்தரோட கையெழுத்து வேணும். "பணம் உடனடியா நான் கட்டறேன்.. அதுக்காக நீங்க வெய்ட் பண்ண வேண்டாம். அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க டாக்டர்", அவள் அவரை கை கூப்பினாள். "மாமா டாக்டர் சொல்றதை கேட்டீங்களா ... நீங்க முதல்ல பணத்தை கட்டிடுங்க மாமா ... அவங்க வரும் போது வரட்டும்" சுகன்யா பதறலுடன் சொன்னவள், சார் என்னோட ப்ளட் க்ரூப் "ஓ". நான் எவ்வளவு ரத்தம் வேணா குடுக்க தயார் சார். நீங்க எப்படியாவது அவரை காப்பாத்திடுங்க சார். "சிஸ்டர் இந்த பொண்ணோட ரத்தம் சேம்பிள் எடுத்துக்குங்க ... மத்த ஏற்பாடுகளையும் பண்ணுங்க" "சார் நான் அந்த ஃபார்ம்ஸ்ல கையெழுத்து போடலாமா" "நீங்க அந்த பையனுக்கு என்ன உறவு"? டாக்டர் மெலிதாக புன்னகைத்தார். "நான் ... நான் அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறவ சார் ... நான் அவரோட லவ்வர்" "உன் பேரு என்ன சொன்னே? ... நான் நிறைய பொண்ணுங்களை பாத்து இருக்கேன். இந்த மாதிரி நேரத்துல அழுது புலம்புவாங்க; ஆனா நீ ரொம்ப தைரியசாலியா இருக்கே! நீ எதையும் யோசிக்காம பணம் கட்ட சொன்னே; ஒரு வினாடி கூட தயங்காம ரத்தம் கொடுக்க தயாராயிட்டே; ஐ அப்ரிஷியேட் யூ, ஆனா நீ அந்த ஃபார்ம்ஸ் சைன் பண்ணறதுல சில சிக்கல்கள் இருக்கு. பையனோட பேரண்ட்ஸ் வரட்டும். சீனு மவுனமாக அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். சும்மா சொல்லக்கூடாது, நம்ம மச்சான் செல்வா ரொம்ப ரொம்ப குடுத்து வெச்சவன் ... இப்படி ஒரு பொண்ணு அவனுக்கு லவ்வரா கிடைச்சிருக்கா ... அவன் மனதுக்குள் வியந்தான் ... இவளையா செல்வாவோட அம்மா வேணாங்கிறா? *** ரத்தம் கொடுத்துவிட்டு சுகன்யா வெளியில் வந்து அமர்ந்தாள். அதே நேரத்தில் செல்வாவின் குடும்பத்தினர் எதிரில் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். சீனு அவர்களிடம் செல்வாவின் உடல் நிலையையும், சுகன்யாவின் பக்கம் தன் கையை காட்டி, செல்வாவுக்காக அவள் ரத்தம் கொடுத்துவிட்டு வந்ததையும், ஸ்கேனுக்காவும் மற்ற டெஸ்ட்களுக்காக அவர்களுக்காக காத்திராமல் பணம் கட்டிய விவரங்களையும் முழுவதுமாக சொல்ல, மீனா சுகன்யாவிடம் வேகமாக ஓடி, கலங்கிய கண்களுடன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவள் காதில் முணுமுணுத்தாள் ... "தேங்க்யூ வெரி மச் சுகன்யா... செல்வா ட்ருலீ லவ்ஸ் யூ வெரி மச் ... அவன் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான் ... " அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியாமல் கண்கலங்கினாள். நடராஜன் சுகன்யாவிடம் சென்று மவுனமாக நின்றார். மனதில் பொங்கும் பலவித உணர்ச்சிகளையும் உதட்டில் காட்டாமல் அவள் தலையை மெதுவாக வருடினார். ரகுவையும் சுந்தரியையும் பார்த்து கை கூப்பி நின்றார். அதுவரை எல்லாவற்றையும் பேசாமால் கேட்டுக்கொண்டிருந்த மல்லிகா சுகன்யாவை நோக்கி சென்றாள். அவள் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். "சுகன்யா ... நீ என் புள்ளைக்காக ரத்தம் குடுத்தியாம் ... என்ன ஏதுன்னு கேக்காம பணத்தை அள்ளி கட்டினாயாம் .... நீ அவனுக்காக ரொம்ப பண்ணியிருக்கே ... அதுக்கு ஒரு தாயா உனக்கு நான் என் முழு மனசோட நன்றி சொல்றேன் ... உனக்கு நான் பதிலுக்கு என்ன வேணா செய்ய தயாரா இருக்கேன். ஆனா செல்வாவை என் மனசார உனக்கு கட்டி வெச்சு உன்னை என் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லே ... ஏன் ... என்ன காரணம்ன்னு என்னை எதுவும் கேக்காதே? என் புள்ளையை நீ முழுசா எங்கிட்ட விட்டு குடுத்துடு ... தயவு செய்து நீ இங்கேயிருந்து போயிடு ... ப்ளிஸ் ... அவள் அவளை நோக்கி கை எடுத்து கும்பிட்டாள்." மல்லிகாவின் முகம் உணர்ச்சிகள் ஏதுமின்றி வரண்டு கல்லாக இறுகி அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.

சுற்றி நின்றவர்கள் வாயடைத்து நிற்க சுகன்யா ஒரு நிமிடம் மல்லிகாவை கூர்ந்து நோக்கினாள். "எனக்கு நான் நேசிச்ச என் செல்வா நல்லபடியா பிழைச்சு எழுந்தா போதும் ... வேற எதுவும் எனக்கு வேண்டாம் ... அவன் உயிரோட இருக்கணும் அதுதான் எனக்கு முக்கியம் ... நீங்க கேட்டுக்கிட்ட படி உங்க புள்ளை கிட்ட இந்த நிமிடத்துலேருந்து எனக்கு எந்த உரிமையும் இல்ல ... நான் எல்லாத்தையும் விட்டு குடுத்துடறேன். நீங்க நிம்மதியா அவன் கூட இருந்து அவனை பாத்துக்குங்க. கூப்பிய அவள் கைகளை பிரித்து தன் வலது கையை மல்லிகாவின் கையில் வைத்து அழுத்தினாள். " "அம்மா, மாமா ... வாங்க நாம போகலாம் ... நாம வந்த வேலை முடிஞ்சு போச்சு ... " யாரையும் திரும்பி பார்க்காமல் விடுவிடுவென வாசலை நோக்கி நடக்கத்தொடங்கினாள். *** I.C.U வின் கதவை திறந்துகொண்டு ஒரு நர்ஸ் அவர்களை நோக்கி வேகமாக வந்தாள். பேஷண்ட்டுக்கு நினைவு வந்துடுச்சு .... அவருக்கு ப்ளட் குடுத்துக்கிட்டு இருக்காங்க; அவரு சுகன்யா ... சுகன்யான்னு முனகறார் ... இங்க சுகன்யாங்கறது யாரு? டாக்டர் அவங்களை மட்டும் உள்ளே கூப்பிடறார்.... யாரு அவங்க? அவங்களை சீக்கிரமா உள்ளே அனுப்புங்க ... சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்.

No comments:

Post a Comment