Saturday 24 August 2013

ஐ ஹேட் யூ, பட்.. 2

அத்தியாயம் 3 அடுத்த பத்தாவது நிமிடம், அசோக் அவர்களுடைய வீடு இருக்கும் தெருமுனையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நின்றிருந்தான். தேநீரையும் சிகரெட்டையும் அப்போதுதான் சுவைத்து முடித்திருந்தவன், புகையிலை தீர்ந்து போன சிகரெட் துண்டை கீழே போட்டு ஷூ காலால் மிதித்து நசுக்கினான். ஹெல்மட் எடுத்து தலைக்கு கொடுத்துவிட்டு, தனது பஜாஜ் அவெஞ்சரில் ஏறி அமர்ந்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து நிதானமாக செலுத்தியவன், அவுட்டர் ரிங் ரோடை அடைந்து வலது பக்கம் திரும்பியதும், ஆக்சிலரேட்டரை திருகி அறுபது கிலோ மீட்டர் வேகத்தில் சில்க் போர்ட் நோக்கி பறக்க ஆரம்பித்தான். செல்வி சொன்னது போல, அசோக் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவன்தான். விவசாயம்தான் அவர்களது குடும்பத்தொழில். கிராமத்து பள்ளியில் படித்திருந்தாலும், படிப்பில் ரொம்ப கெட்டி. மதுரையின் புறப்பகுதியில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில்தான் இளநிலை பட்டப்படிப்பை முடித்தான். டிக்ரி முடித்ததுமே பெங்களூர் வந்து நண்பர்களுடன் அறை எடுத்து தங்கிக்கொண்டான். அவனுடய அறிவுக்கும் திறமைக்கும் உடனே வேலை கிடைத்தது. ப்ரியாவிடம் ஏமாந்த அதே கம்பெனிதான்..!! ஃப்ரெஷராக ஜாயின் செய்தவன், இன்னும் அதே கம்பெனியில்தான் வேலை பார்க்கிறான்.

காலேஜ் முடிக்கும் வரை ஷை டைப்பாக இருந்தவன், பெங்களூர் வந்த பிறகு ஹை டைப்பாக மாறிவிட்டான். பெண்களிடம் பேசுவது என்றாலே வெட்கத்தில் நெளிபவன், இப்போதெல்லாம் 'யூ நோ வாட்.. யூ லுக் ஆவ்ஸம் டுடே..' என்று பெண்களிடம் வசீகரமாக வழிகிறான். கிராமத்தில் கையால் அள்ளி கூழ் குடித்து வாய் வழியாக ஒழுகவிட்டவன், இப்போது நைஃபால் கட் செய்ததை, ஃபோர்க்கால் குத்தி ஸ்டைலாக வாய்க்குள் திணித்துக் கொள்கிறான். கிழிந்த டவுசரின் வழியே இளிக்கும் அவனது பின்புறம், இப்போது லீவைஸ் ஜீன்ஸ்தான் அணிகிறது. பெங்களூரும், IT கம்பெனி வேலையும் அவனை நிறையவே மாற்றிவிட்டது எனலாம். இப்போது அவன் கொடுக்கிற பில்டப்புகளை எல்லாம் பார்ப்பவர்கள், அவன் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் என்று சொன்னால் நம்பமாட்டாகள். சற்றுமுன் அண்ணியிடமும், அண்ணனிடமும் அவன் பேசியதை வைத்து அவனுடைய குணத்தை ஓரளவு உங்களால் கணிக்க முடியும் என்று நினைக்கிறேன். பொதுவாக கூலான மென்டாலிட்டி உடையவன்தான். அவனை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அவனுக்கு பிடிக்காத பாதையில் பயணிக்கும்போதுதான், குரங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொள்வான். உடன் இருப்பவர்களை தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைப்பவன். 'ஈகோ புடிச்ச பய..!!' என்று செல்வி அவனை திட்டியதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ம்ம்ம்.. செல்வி என்றதும்தான் நினைவு வருகிறது..!! சற்றுமுன் அவளிடம் பேசுகையில், 'அதெல்லாம் அவளைப்பத்தி எனக்கு நல்லா..' என்று இழுத்துவிட்டு பாதியில் நிறுத்தினானே.. அந்த 'அவள்'.. அதோ பஸ் ஸ்டாப்பில் மணிக்கட்டை திருப்பி திருப்பி பார்த்தவாறு, முகத்தில் கொஞ்சம் டென்ஷனோடு நிற்கிறாளே.. அதே ப்ரியாதான்..!! தூரத்திலேயே அவளை பார்த்துவிட்ட அசோக், வண்டியின் வேகத்தை உடனே குறைத்து, அவளுக்கு முன்பாக ப்ரேக் அடித்து நிறுத்தினான். "ஹேய்.. லூசு.. இன்னும் ஆபீஸ் போகாம இங்க என்ன பண்ணிட்டு இருக்குற நீ..??" அசோக் ஹெல்மெட் கண்ணாடியை மேலே ஏற்றி விட்டவாறு, ப்ரியாவை பார்த்து புன்னகையுடன் கேட்டான். அவனை பார்த்ததும் பட்டென பரவசமான ப்ரியாவின் முகம், 'லூசு...' என்று காதில் வந்து விழுந்ததும் பொசுக்கென சுருங்கிப்போனது. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு, முகத்தில் கொஞ்சம் முறைப்புடன், அவசரமாய் அசோக்கை நோக்கி நடந்து வந்தாள். சற்றே கிசுகிசுப்பான குரலில் சொன்னாள். "ப்ச்.. எத்தனை தடவை உனக்கு சொல்றது அசோக்..!!" "என்னது..??" "இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல வச்சு லூசுன்னு கூப்பிடாதன்னு..!!" அடுத்தவர்கள் காதில் விழாதவாறு சன்னமான குரலிலேயே சொன்னாள். "ஹேய்.. ஸாரி ப்ரியா.. உன்னை அப்டியே கூப்பிட்டு கூப்பிட்டு.. என் கண்ட்ரோல் இல்லாம் தானா வந்துடுது..!!" "ப்ச்.. உனக்கு வேணும்னா.. நாம தனியா இருக்குறப்போ கூப்பிட்டுக்கோ.. இப்படி அடுத்தவங்க முன்னாடி கூப்பிட்டு அசிங்கப்படுத்தாத..!!" "சரி சரி.. இனி கூப்பிடலை.. போதுமா..??" அசோக் சற்றே கெஞ்சலாக சொல்லவும், "ம்ம்ம்..!!" ப்ரியாவும் சற்று கோவம் தணிந்தாள். "சரி கேட்டதுக்கு பதிலே சொல்லல..?? ஏன் இன்னிக்கு இவ்ளோ லேட்டு..??" "லேட்டுலாம் ஒன்னும் இல்ல.. நான் எப்போவும் போல வந்துட்டேன்.. பஸ்தான் இன்னும் காணோம்..!!" "ஓ.. கோரமங்கலால ஏதாவது ட்ராஃபிக்கா இருக்கும்னு நெனைக்கிறேன்..!!" "என்ன எழவோ.. இன்னைக்கு மாதிரி என்னைக்கும் லேட் ஆனது இல்ல..!!" "சரி வா.. பைக்ல ஏறு.. போலாம்..!!" அசோக் கேஷுவலாக சொல்ல, ப்ரியா பட்டென அமைதியானாள். அவளுடைய உடலில் உடனடியாய் ஒரு பதற்றம். அவனுடைய முகத்தில் இருந்து பார்வையை நகர்த்தி, தலையை லேசாக குனிந்து கொண்டாள். இடது கை விரல் நகத்தை, வலது கை விரல் நகத்தால் கீறினாள். கீறிக்கொண்டே ஓரக்கண்ணால் அசோக்கை பார்த்தாள். அவளுடைய இதயத்துடிப்பு இப்போது சற்றே எகிறிப் போயிருப்பதை அவளால் உணர முடிந்தது. "ஹேய்.. என்னாச்சு..??" அசோக் புரியாமல் கேட்டான். "இல்ல வேணாம்.. நீ போ.. நான் பஸ்லயே போயிக்கிறேன்..!!" ப்ரியா மெல்லிய குரலில் சொன்னாள். "ஏன்..??" "ப்ச்.. வேணான்னு சொல்றேன்ல..??" "அதான் ஏன்னு கேக்குறேன்..?? என்னவோ புதுசா என் கூட பைக்ல வரப்போறவ மாதிரி வேணாம்னு சொல்ற..?? வழக்கமா நாம போறதுதான..??" "அதனாலதான் வேணாம்னு சொல்றேன்..!!" "இல்ல.. புரியலை..!!" "இப்போலாம் ஆளாளுக்கு என்னன்னவோ கேக்க ஆரம்பிச்சுட்டாங்க அசோக்..!!" "என்ன கேக்குறாங்க..??" அசோக் குழப்பமாய் கேட்க, ப்ரியா சில வினாடிகள் தயங்கிவிட்டு அப்புறம் மெல்ல சொன்னாள். "உ..உனக்கும் அசோக்கும் அப்படி என்னடி மேட்டருன்னு..!!" ப்ரியா அப்படி சொன்னதும், இப்போது அசோக் அப்படியே அமைதியாகிப் போனான். குழப்பமாய் இருந்த அவனது முகத்தில் இப்போது ஒரு குறுகுறுப்பு. அவனாலும் இப்போது ப்ரியாவின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அவனும் தலையை கொஞ்சமாய் கவிழ்த்துக் கொண்டான். ப்ரியா நகத்தை கீறினாள் என்றாள், இவன் இஞ்சின் அணைக்கப்பட்ட பைக்கின் ஆக்சிலரெட்டரை பிடித்து முறுக்கினான். பிறகு தடுமாற்றமான குரலில் கேட்டான். "அ..அதுக்கு நீ என்ன சொன்ன..??" அவனுடைய பார்வை வேறெங்கோ திரும்பியிருந்தாலும், அவனது காதுகள் ப்ரியாவின் பதிலை தெரிந்து கொள்ள கூர்மையாக காத்திருந்தன. ப்ரியாவோ அவனை விட கில்லாடி என்பதை காட்டினாள். "நான் சொன்னது இருக்கட்டும்.. உன்கிட்ட கேட்டிருந்தா நீ என்ன சொல்லிருப்ப..??" "ப்ச்.. நீ என்ன சொன்னேன்னு சொல்லு மொதல்ல..!!" "இல்ல இல்ல.. நீ என்ன சொல்லிருப்பேன்னு சொல்லு..!!" "நா..நான்.." அசோக் திணற, "ம்ம்.. சொல்லு.." சற்றுமுன் அவனிடம் இருந்த ஆர்வம் இப்போது ப்ரியாவிடம். அசோக் இப்போது தடுமாறினான். ஒரு சில வினாடிகள் அந்த தடுமாற்றம்..!! பிறகு ஒருவழியாய் சமாளித்துக்கொண்டு, ப்ரியாவின் முகத்தை பாராமல் எங்கோ பார்த்தபடி சொன்னான். "நா..நாங்க நல்ல ஃப்ரண்ட்சுன்னு சொல்லிருப்பேன்..!!" அசோக் தட்டு தடுமாறி சொல்ல, ப்ரியாவின் முகத்தில் ஒரு ஏமாற்றம். "ம்ம்ம்..!!" என்றாள் அமைதியாக. "சரி நீ என்ன சொன்ன..??" "நான் என்ன சொல்லிருப்பேன்..?? நானும் அதேயேதான் சொன்னேன்..!!" ப்ரியா சொல்ல, இப்போது அசோக் உள்ளுக்குள் நொறுங்கினான் . "அப்புறம் என்ன.. அதான் ஒன்னும் இல்லைல.. வா.. வந்து வண்டில ஏறு..!!" என்றான் சற்றே எரிச்சலாக. "ஆனா.. மத்தவங்களாம் வேற மாதிரி நெனைக்கிறாங்களே..??" "மத்தவங்க நெனச்சு என்ன பிரயோஜனம்..??" அசோக் அவசரமாய் சொல்லிவிட, "என்னது..??" ப்ரியா விழித்தாள். "மத்தவங்கள பத்தி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்னு சொன்னேன்..!! நாம எப்போவும் போல இருப்போம்.. நீ தேவையில்லாம போட்டு கொழப்பிக்காத..!! வா.. ஏறு..!!" "இல்ல.. நான் வரலை..!!" "சரி.. அப்போ நான் கெளம்புறேன்..!!"அசோக் சலிப்பாக சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். கியர் மாற்றி வண்டியை கிளப்பினான். ஆக்சிலரேட்டர் திருகி ஒரு ஐந்தாறு அடிகள் கூட நகர்ந்திருக்க மாட்டான். "அசோக்..!!!!" என்று பின்னால் இருந்து ப்ரியா அழைத்தது கேட்டதும், உடனடியாய் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். பின்னால் திரும்பி பார்த்தான். ப்ரியா அவசரமாய் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். இவனை நெருங்கியதும், 'என்ன..??' என்பது போல ஏறிட்டு பார்த்தான். ப்ரியா இப்போது மெல்லிய குரலில் சொன்னாள். "நீ சொன்னதுதான் சரின்னு தோணுது..!!"

"நான் என்ன சொன்னேன்..??" "அடுத்தவங்க நெனைக்கிறதை பத்தி நமக்கு என்ன கவலை..??" கேட்டுவிட்டு ப்ரியா அழகாக தனது அதரங்களை விரித்து புன்னகைக்க, அசோக்கிடம் அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் இப்போது சுத்தமாய் தளர்ந்து போனது. அவனும் இப்போது ப்ரியாவை பார்த்து புன்னகைத்தான். இருவரும் கொஞ்ச நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய இதழ்களில் சிந்திய புன்னகையும், இப்போது எளிருகள் தெரிகிற அளவுக்கு பெரும் சிரிப்பாய் மாறியது. 'ஹாஹாஹாஹாஹாஹா..!!' என வாய்விட்டு சிரித்தார்கள். அசோக்தான் முதலில் சிரிப்பை நிறுத்திவிட்டு சொன்னான். "ஹாஹா.. ஏறுடி ஸ்டுபிட்... டைமாச்சு..!!" "ம்ம்.. ஏறிட்டேன்டா இடியட்.. கெளம்பு..!!" பின் சீட்டில் அமர்ந்த ப்ரியா அவனுடைய முதுகை குத்தியவாறே சொன்னாள். அசோக் பைக்கை கிளப்பினான். ஓரிரு நிமிடங்களிலேயே ஹோசூர் ரோட்டில் வண்டி மிதமான வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. பெங்களூரின் காலை நேர குளிர் தென்றல் இருவரது முகத்தையும் வருடி, உடலில் ஜில்லென ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியது. பைக்கின் வேகம் அதிகரித்ததுமே சற்று தடுமாறிய ப்ரியா, தனது வலது கையை மெல்ல உயர்த்தி அசோக்கின் தோளைப் பற்றிக் கொண்டாள். அசோக்கின் நெருக்கம் ஆணுடைய வாசனையை அவளுடைய நாசிக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அவனுடைய முதுகையும், கழுத்தையுமே வெறித்துப் பார்த்தவாறு பயணித்தாள். ப்ரியாவின் ஸ்பரிசம் அசோக்கிற்கு இதமாக இருந்தது. பைக்கின் ரியர் வியூ மிரரில் அரைகுறையாக தெரிந்த அவளுடைய முகத்தை, அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்தவாறே பைக்கை கவனமாக செலுத்திக் கொண்டிருந்தான். அசோக்கும் ப்ரியாவும் ஒரே நாளில்தான் இந்த கம்பெனியில் சேர்ந்தார்கள். சேர்ந்த அன்றே 'ஹாய்..!!' என்று ஃபார்மலாக புன்னகைத்தவாறு அறிமுகமாகிக் கொண்டார்கள். அன்று ஆரம்பித்த நட்பு, ஐந்தரை வருடங்களில் இப்போது ஆழமாய் வேர் விட்டிருக்கிறது. முதல் நாள் அறிமுகத்துக்கு அப்புறம், முதல் ஆறு மாதங்களுக்கு இருவரும் ஒன்றாகவே ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தார்கள். ஒரே டெவலப்மன்ட் டீமில் இடம்பெற்றார்கள். அசோக் டெக்னிக்கலாக ரொம்ப ஸ்ட்ராங்.. ப்ரியாவுக்கோ அதுதான் வீக்..!! தன்னுடைய வேலைகளில் பிரச்னை வரும்போதெல்லாம் ப்ரியா அசோக்கின் உதவியையே நாடுவாள். அவனும் அந்த பிரச்னையை சால்வ் செய்து, அவளுக்கு உதவுவான். ஐந்தரை வருடங்களாக இந்தக்கதைதான் நடந்து கொண்டிருக்கிறது. ப்ரியாவும் 'கூல் ப்ரியா.. கூல்..' என்று கவலையில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாள். ப்ரியா ஒரு 'வெத்து வேட்டு.. வெட்டி ஸீன்..' என்று வெகுசீக்கிரமே புரிந்துகொண்ட வெகுசிலரில் அசோக் முதன்மையானவன். ப்ரியாவும் சற்றுமுன் அப்பாவிடம் ப்ளேடு போட்டது மாதிரி எல்லாம் அசோக்கிடம் ப்ளேடு போட மாட்டாள். 'ஒபாமா என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?' என்று அசோக்கிடம் கேட்டால், 'உன்னை இப்படி லூசு மாதிரி உளற சொல்லிருக்காரா..?' என்று அவன் திருப்பி கேட்பான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அசோக்கை அவளுக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்களிடம் தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள நினைக்கிற ப்ரியா, அசோக் தன்னை 'லூசு..!!' என அழைப்பதை அனுமதித்திருக்கிறாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அசோக்கிற்கும் ப்ரியாவை மிகவும் பிடிக்கும் என்று தனியாக நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அண்ணியிடம் அவன் உளறியதில் இருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும். அசோக்கிற்கும், ப்ரியாவிற்கும் எல்லா விஷயங்களும் நன்றாக ஒத்துப்போனது. இந்த ஐந்தரை வருடங்களில் அவ்வப்போது சின்ன சின்ன செல்ல சண்டைகள் வந்திருக்கிறதே ஒழிய, பெரிதாக பிரச்னை வந்து அவர்கள் பேசாமல் இருந்தது இல்லை. நல்ல நட்பின் உண்மையான சந்தோஷத்தை இருவரும் நன்றாகவே அறிந்து உணர்ந்திருந்தார்கள். நட்பில் ஊறித் திளைத்திருந்த அவர்களுடைய மனங்கள் இரண்டும், இப்போது அந்த நட்பையும் தாண்டி செல்லலாமா என தடுமாற ஆரம்பித்திருக்கும் சமயம்..!! எலக்ட்ரானிக் சிட்டி பஸ் நிறுத்தத்திற்கு சற்று முன்பாகவே இடது புறம் செல்கிற சாலையில், பரந்து விரிந்திருக்கும் அந்த சாப்ட்வேர் கம்பெனியின் வளாகம்..!! அசோக்கும், ப்ரியாவும் ஐந்தரை வருடங்களாக வேலை பார்க்கிற கம்பெனியின் தலைமையகம்..!! வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பெரிதான தாக்கத்தை அளிக்காது.. உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும்.. அது ஒரு தனி உலகம் என்று..!! உலகின் எல்லா மூலைகளிலும் தங்கள் வியாபரத்தின் வேர் விட்டிருக்கிறார்கள்..!! மொத்த எம்ப்ளாயிகளின் எண்ணிக்கை போன வருடம்தான் ஒரு லட்சத்தை தாண்டியது..!! கம்பெனியின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்கிறதே ஒழிய, சரிவென்பதே கிடையாது..!! கம்பனி காம்பவுண்டுக்குள் பைக்கில் நுழைந்த அசோக்கும், ப்ரியாவும்.. எதிர்ப்பட்ட செக்யூரிட்டியிடம் தங்கள் அடையாள அட்டைகளை உயர்த்தி கட்டினார்கள்..!! அட்டையை பார்த்த செக்யூரிட்டியும், வணக்கம் தெரிவித்து வழிவிட்டு ஒதுங்கி நின்றான். பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் இட்ட அசோக், "அப்டியே கேஃப்ட்டீரியா போயிட்டு போகலாம் ப்ரியா..!!" என்றான். "ஏண்டா.. இன்னும் சாப்பிடலையா நீ..??" "இல்ல..!! நீ சாப்டியா..??" "ம்ம்.. நான் சாப்டேன்..!! ஏன்.. நீ வீட்ல சாப்பிட்டு வர மாட்டியா..??" "சாப்டுவேன்.. இன்னைக்கு புடிக்கலை.. அதான் ஆபீஸ்ல சாப்டுக்கலாம்னு வந்துட்டேன்..!! போலாமா.. கம்பெனி தர்றியா..?? " "ம்ம்ம்.. ஓகே..!!" ப்ரியா மறு பேச்சே பேசாமல் ஒத்துக்கொண்டாள். இருவரும் கேஃப்ட்டீரியா நோக்கி நடந்தார்கள். கீழ்த்தளத்திலேயே மிக பிரம்மாண்டமாக இருக்கும் அந்த கேஃப்டீரியா..!! இருபதுக்கும் மேற்பட்ட கவுன்டர்கள்.. ஒவ்வொரு கவுன்டரிலும் ஒவ்வொரு விதமான உணவு.. உலகின் எல்லா மூலைகளிலும் பிரபலமான உணவு வகைகள்.. ஒரே இடத்தில் கிடைக்கும்..!! ஒரு கவுன்ட்டரை அடைந்து அசோக் எக் சான்ட்விச் ஆர்டர் செய்தான்..!! சான்ட்விச் வரும்வரை காத்திருந்தவன், எதேச்சையாக தூரத்தில் பார்வையை வீசினான். இவர்களுடைய டீமில் உள்ள மற்றவர்கள் சிறிது தூரத்தில் இருந்த ஒரு டேபிளை ஆக்கிரமித்திருந்தார்கள். இவனைப் பார்த்து கையசைத்தார்கள். இவனும் பதிலுக்கு கையசைத்து புன்னகைத்தான்..!! சான்ட்விச் வாங்கிவிட்டு வருகிறேன் என்று சைகையாலேயே சொன்னான்..!! அசோக்கும் ப்ரியாவும் அடங்கிய அவர்களது டீம், இந்த ஐந்தரை வருடங்களில் பல க்ளையன்ட்டுகளுக்காக பல ப்ராஜக்ட்களில் வேலை செய்திருக்கிறார்கள். டீமுக்குள்ளும் பல பேர் வந்திருக்கிறார்கள்.. சென்றிருக்கிறார்கள்..!! போன மாதந்தான் ஒரு ப்ராஜக்டை முடித்துவிட்டு, இப்போது அடுத்த ப்ராஜக்டின் வருகைக்காக மொத்த டீமும் காத்துக் கொண்டிருக்கிறது..!! இப்போதைய டீமில் உள்ளவர்களை மட்டும் (அசோக், ப்ரியா தவிர்த்து) கொஞ்சம் குயிக்காக ஒரு பார்வை பார்க்கலாம்..!! ரவிப்ரசாத் - இவன்தான் டீம் லீட். சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இவன் டீமை லீட் செய்கிறான். அதற்குமுன் வேறொரு கம்பெனியில் வேலை பார்த்தவன். இப்போது இந்த கம்பெனியிலும் போன மாதம் பேப்பர் போட்டுவிட்டான். பேப்பர் போட்டுவிட்டான் என்றால் வேலையை ரிசைன் செய்துவிட்டான் என்று அர்த்தம். நோட்டீஸ் பீரியடில் இருக்கிறான். அடுத்த கம்பெனியில் ஜாயின் செய்வதற்கு முன், இன்னும் இரண்டு மாதங்களை இங்குதான் கழிக்க வேண்டும். ரிசைன் செய்துவிட்டதால் ஏனாதானோவென்றுதான் இப்போதெல்லாம் வேலை பார்க்கிறான். ஹரிஹரன் - அசோக், ப்ரியாவுடன் ஆரம்பத்தில் இருந்தே டீமில் இருப்பவன். 'மாமா.. மச்சி..' என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு அசோக்கிற்கு மிகவும் நெருக்கம். அசோக்கைப் பற்றி நிறைய தெரிந்த ஆள் என்றால் இவனைத்தான் சொல்ல வேண்டும். ஜாலியான பையன். சென்னையை சேர்ந்தவன். கம்பெனியில் சேர்ந்த காலத்தில் இருந்தே அசோக்கின் தண்ணி பார்ட்னர். இப்போது கொஞ்ச நாளாக இருவரும் சேர்ந்து தண்ணியடிக்கிற ஃப்ரிக்வன்சி வெகுவாக குறைந்து போயிருக்கிறது. அதற்கு காரணம் கீழே..!! கவிதா - இவளும் சென்னைதான். ஆறு மாதங்களுக்கு முன்புதான் டீமில் வந்து சேர்ந்து கொண்டாள். திருமணமானவள். ஒரு வருடத்திற்கு முன்புதான் கழுத்தில் தாலி வாங்கிக்கொண்டாள். கலகலப்பாக பேசுவாள்.. கணவனிடம் மட்டும் கொஞ்சம் கடுகடு..!! இவளுடைய கணவன் வேறு யாரும் இல்லை.. மேலே பார்த்த ஹரிஹரன்தான்..!! சென்னையில் வேலை பார்த்தவள், கணவனின் சில பல முயற்சிகளுக்கு அப்புறம்.. இப்போது இந்த கம்பெனியில்..!! அசோக்கும் ஹரியும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி தண்ணியடிக்க முடியாமல் போனதற்கு இவள்தான் காரணம்..!! 'ஏன்தான் இவளை இதே கம்பெனில சேத்துவிட்டனோ.. எந்த நேரமும் என்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கா மச்சி.. ஒரே டார்ச்சரா இருக்குடா..!!' என்று ஹரி அசோக்கிடம் அடிக்கடி நொந்து கொள்வதற்கும் இவளே காரணம்..!! கோவிந்த் - கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் இவனுக்கு சொந்த ஊர். ஒரு வருடத்திற்கு முன்பாக கம்பனியில் சேர்ந்தவன். ஒரு வருடத்தில் பல டீம்களுக்கு சென்று, ஒரு மாதத்துக்கு முன்பாக இந்த டீமில் வந்து சேர்ந்து கொண்டான். அமெரிக்காவுக்கு ஆன்சைட் செல்லவேண்டும் என்று ஒரு லட்சியத்துடன் வந்து இந்த கம்பனியில் சேர்ந்தவன். அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்து சேர்த்துக் கொண்ட கம்பனி, இதுவரை அவனை அனுப்பி வைக்கவில்லை. கம்பனி காட்டும் அலட்சியத்தால் அடிக்கடி நொந்து போகும் கோவிந்த், அடிக்கடி வேலையையும் ரிசைன் செய்வான். இந்த ஒரு வருடத்தில் மட்டும் நான்கு முறை பேப்பர் போட்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் அவனை சீனியர் மேனேஜர் அழைத்து பேசி, கூடிய சீக்கிரம் அனுப்பி வைப்பதாக உறுதி தந்து (அல்வா கொடுத்து) அவன் போட்ட பேப்பரை, அவனையே திரும்ப வாயில் கவ்விக்கொள்ள சொல்வார். அவனும் அப்பாவியாக கவ்விக்கொண்டு திரும்ப வருவான். இரண்டு மாதங்களுக்கு முன்பு, 'ஹேய்.. நான் ஆன்சைட் போறேன்.. ஆன்சைட் போறேன்.. ஆன்சைட் போறேன்..' என்று எல்லோரிடமும் பந்தாவாக சொல்லிவிட்டு சென்றவன், அடுத்த நாளே ஆபீசில் எல்லோருக்கும் முன்பாக வந்து அமர்ந்திருந்தான். மும்பை வரைக்கும் சென்றவனை 'ப்ராஜக்ட் கேன்சல் ஆயிடுச்சு... திரும்ப வந்துடு..' என்று திரும்ப வரவழைத்திருந்தார்கள். 'என்ன கொடுமைடா இது கோவிந்தா..??' என்று எல்லோரும் அவனை கிண்டல் செய்தார்கள். இங்க்லீஷ் கம்யூனிகேஷனில் இவன் கொஞ்சம் வீக்.. கொஞ்சம் திக்கி திக்கி பேசுவான்.. டீமுக்கு புதியவன் என்பதால் யாரும் இவனுடன் அதிகமாக ஒட்டுவது இல்லை.நேத்ரா - டீமில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கும் நான்காவது ஆள். கன்னடம் பேசுகிற ஊரில், தமிழர்கள் நிறைந்த டீமில் தனியாக மாட்டிக்கொண்ட ஒரே கன்னடத்துப் பெண். தமிழ் நன்றாக புரியும் இவளுக்கு. ஓரளவு பேசவும் செய்வாள். இருந்தாலும், முடிந்தவரையில் கன்னடத்துக்காக மிகவும் சப்போர்ட் செய்து பேசுவாள். 'தமிழை விட கன்னடம்தான் தொன்மையானது.. ஆதாரம் என்னிடம் இருக்குறது.. காட்டவா..??' என்று அடித்து பேசுவாள். வேலை விஷயத்தில் சராசரி. ஹிந்திப்பாடல் பிரியை. எந்த நேரமும் ஏதாவது ஹிந்திப்பாடலை முனுமுனுத்துக்கொண்டே இருப்பாள். அசோக்கிற்கு இவளை சீண்டுவது என்றால் அலாதிப்ரியம். "மே ஷாயர் தோ நஹி.. மகர் ஏ ஹஸீ.." என்று பாபி படப்பாடலை நேத்ரா மிக சீரியஸாக உருகி உருகி பாடிக்கொண்டிருப்பாள். "மைக்கேல் ஹஸீயா.. டேவிட் ஹஸீயா..??" என்று சிரிக்காமல் கேட்பான் அசோக். "ஐயே.. ப்ராந்தா.." என்று அவனை கன்னடத்தில் திட்டுவாள் நேத்ரா. இப்போது அந்த டேபிளில் ரவிப்ரசாத் தவிர்த்து மற்ற அனைவரும் அமர்ந்திருந்தார்கள். வழக்கமாக கோவிந்த் இவர்களுடன் காணக்கிடைக்க மாட்டான். இன்று அதிசயமாக இவர்களுடன் ஐக்கியமாகி இருந்தான். "ஹாய் கைஸ்.." என்றவாறு அசோக்கும் ப்ரியாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். "ஹேய் மச்சி.. பக் மீட்டிங் ரெக்வஸ்ட் அனுப்பிருக்கார்டா..!!" என்றான் ஹரி அவர்கள் அமர்ந்ததுமே. "என்னவாம்..??" சாண்ட்விச்சை கடித்துக்கொண்டே கேட்டான் அசோக். "அந்த ப்ராஜக்ட் சைன் பண்ணிட்டானுக போல இருக்கு..!!" "கிழிஞ்சது.. பக் ஒன்றை மணி நேரம் மொக்கை போட்டே கொல்வானே..!!" பக் என்று அவர்கள் குறிப்பிடுவது அவர்களது சீனியர் மேனேஜர் பாலகணேஷ். வட அமெரிக்க கண்டத்தின் எல்லா க்ளையண்டுகளையும் அவர்தான் மேனேஜ் செய்கிறார். அவருடைய முன்னிலையில் பாலா என்று பாசமாக கூப்பிடும் இவர்கள், அவர் இல்லாத போது பக் என்று நக்கலாக குறிப்பிடுவதுதான் வழக்கம். "நல்ல நிக் நேம் வச்சிருக்கீங்கடா அவருக்கு..!! ஹாஹா..!!" என்று கவிதா சிரிக்கவும், அவர்களுடைய பேச்சு வேறு திசையில் திரும்பியது. புதுவிதமான, கிரியேட்டிவான பட்டப்பெயர்களை பற்றி அனைவரும் பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் ஹரி திடீரென சொன்னான். "அசோக்குக்கு காலேஜ்ல சூப்பரா ஒரு நிக் நேம் வச்சிருக்காங்க தெரியுமா..?? அன்னைக்கு அவன் காலேஜ் இயர் புக் பாத்தப்போத்தான் எனக்கே தெரிஞ்சது..!! சும்மா சொல்லக்கூடாது.. சூப்பரான பேரா வச்சிருக்கானுக.. ஹாஹா..!!" என அவன் சிரிக்கவும், "ஹேய்.. என்னடா அது.. சொல்லு.. சொல்லு..!!" என்று அனைவரும் ஆர்வமானார்கள். "ஏய்.. வேணாண்டா ஹரி.. சும்மா இரு..!!" என அசோக் டென்ஷனானான். "ஹேய்.. போடா.. நான் சொல்லப்போறேன்..!!" என்று மிஞ்சினான் ஹரி. "சொல்லப்போறியா.. சரி சொல்லிக்கோ போ..!!" என்றவாறு கண்களை உருட்டி ஹரியை முறைத்தான் அசோக். அவனுடைய உஷ்ணப்பார்வையில் ஹரி சற்றே மிரண்டு போனான். இப்போது ஹரியின் குரல் பட்டென தடுமாறிப்போய் கெஞ்சலாக ஒலித்தது. "ஹேய்.. சொல்லிக்கிறேண்டா மச்சி.. ப்ளீஸ்..!!" "வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல.. சொல்றேன்றல..?? சொல்லு.. சொல்லிக்கோ..!!" அசோக் முன்பை விட இப்போது அதிகமாக அவனை முறைத்தான். ஹரி இப்போது ஒரு மாதிரி குலை நடுங்கிப் போனவனாய், அசோக்கையே பரிதாபமாக பார்த்தான். அதற்குள்ளாக ஆளாளுக்கு, "ஹேய் சொல்லுடா.. ஹேய் சொல்லுடா..!!" என்று ஹரியை பிய்த்து எடுக்க ஆரம்பித்தனர். சில வினாடிகள் அசோக்கையே மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்த ஹரி, அப்புறம் "ஹேய்.. ப்ளீஸ்.. அந்த டாப்பிக்கை விடுங்க.. வேற ஏதாவது பேசுங்க..!!" என்று பட்டென பின்வாங்கினான். "அது.. அந்த பயம் இருக்கணும்..!!" என்று கெத்தாக சொன்ன அசோக், சாப்பிட்டு முடித்த காலி பிளேட்டை எடுத்துக்கொண்டே ஹேன்ட்வாஷ் பகுதியை நோக்கி நடந்தான். ப்ரியாவும் எழுந்து அவனுக்கு பின்னால் ஓடிவந்தாள். இருவரும் அவர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு லிப்டில் செல்கையில் ப்ரியா கேட்டாள். "ஹேய் அசோக்.. என்னடா ஆச்சு.. அவன் ஏதோ சொல்ல வந்தான்.. நீ ஏதோ சொன்ன.. அவன் வாயைத்தொறந்தா நீ ஏதோ சொல்லப்போற மாதிரி முறைச்ச..!! கடைசில அவனும் எதுவும் சொல்லல.. நீயும் எதுவும் சொல்லல.. அவன் பேக் அடிச்சுட்டான்.. நீயும் எந்திரிச்சு வந்துட்ட.. என்னடா இதுலாம்..?? இதுக்குலாம் என்ன அர்த்தம்..?? எனக்கு எதுவுமே புரியலை..!!" "ம்ம்ம்.. அர்த்தம் தெரிஞ்சுக்கனுமா..?? சரி சொல்றேன்.. இதுக்குலாம் என்ன அர்த்தம்னா.. என்னைப்பத்தி ஒரு சில ரகசியம் அவனுக்கு தெரியும்னா.. அவனைப்பத்தி பலப்பல ரகசியம் எனக்கு தெரியும்னு அர்த்தம்..!! என் மேட்டரை அவன் சொன்னா அவன் மேட்டர் நாறிப்போயிடும்னு அர்த்தம்..!!" "அடப்பாவிகளா..!! ம்ம்ம்ம்.. சரி.. அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்குள்ள ரகசியம்..?? ம்ம்..??"

"ஹேய் லூசு.. அதான் ரகசியம்னு சொல்றேன்ல..?? அப்புறம் என்னன்னு கேட்டேன்னா என்ன அர்த்தம்..??" "அப்போ.. சொல்ல மாட்டியா..???" "ஹாஹா.. சான்சே இல்ல..!! அந்த ரகசியத்தை நான் காப்பாத்தி வச்சிருக்குற வரைதான் அவன் என் கண்ட்ரோல்ல இருப்பான்.. நானும் கூலா இருக்க முடியும்..!!" "ஏதோ தெலுங்குப்பட வில்லன் மாதிரியே பேசுறடா நீ.. எனக்கு எதுவும் புரியலை..!!" "அடி லூசு..!! ம்ம்ம்.. சரி.. நான் உனக்கு ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொல்றேன்.. கேக்குறதுக்கு உனக்கு பொறுமை இருக்கா..??" "ம்ம்ம்.. சரி.. சொல்லு..!!" "இப்போ.. நாம லைஃப் சந்தோஷமா இருக்கணும்னு வச்சுக்கோ.. மொதல்ல நம்மள சுத்தி இருக்குறவங்கள நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும்.. புரியுதா..??" "ம்ம்.. புரியிற மாதிரி இருக்கு.. ஆனா அதை எப்படி பண்றது..?? ஐ மீன்.. எப்படி அவங்களை கண்ட்ரோல்ல வச்சுக்குறது..??" "இரு.. சொல்றேன்..!! எதிராளியை நம்ம அடக்கி ஆளனும்னா.. அதுக்கு ரெண்டு வழி இருக்கு..!! ஒன்னு.. அவனோட பலத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டு.. அதுக்கு தகுந்த மாதிரி நம்மோட பலத்தை பெருக்கிக்கிறது...!!" "ம்ம்ம்.. இன்னொன்னு..??" "இன்னொன்னுதான் ஈசியான வழி.. அவனோட பலவீனத்தை தெரிஞ்சுக்கிட்டு.. குத்த வேண்டிய எடத்துல சரியா குத்த வேண்டியது..!!" "அப்டின்னா..???" "ஐயோ.. ப்ரியா..!! ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வீக்னஸ் இருக்கும்.. புரியுதா..?? அந்த வீக்னசை மட்டும் கரெக்டா புடிச்சு.. சரியான நேரத்துல சரியா எடத்துல அடிச்சேன்னு வச்சுக்கோ.." "ம்ம்ம்.." "நீதான் கிங்..!!" "ச்சை.. நான் பொண்ணுடா..!!" "சரி.. குயின்னு வச்சுக்கோ..!! நான் சொல்ல வந்தது புரிஞ்சதா..??" "ம்ம்.. ஏதோ புரிஞ்சது..!!" என்ற ப்ரியா உடனடியாய் அமைதியானாள். சுட்டுவிரல் நகத்தால் நெற்றியை கீறிக்கொண்டாள். அவளது செய்கையின் அர்த்தம் புரியாத அசோக், அவனே கேட்டுவிட்டான். "ஏய்.. என்னாச்சு உனக்கு இப்போ..??" "இல்ல.. உனக்கு என்ன வீக்னஸ்னு யோசிச்சுட்டு இருக்கேன்..!!" "ஹாஹா.. ரொம்ப யோசிக்காத செல்லம்..!! ஐயாவுக்கு வீக்னசே இல்ல... யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது.. நான்தான் எல்லாரையும் கண்ட்ரோல் பண்ணுவேன்.. புரிஞ்சதா..??" "ம்ம்.. ரொம்பத்தான் கான்பிடன்ஸ் உனக்கு..!!" "யூ நோ வாட்..?? கான்சியஸ் மேக்ஸ் கான்ஃபிடன்ஸ்..!!" "வாவ்..!!!!!" ப்ரியா அசோக்கை அதிசயமாகவும், பெருமிதமாகவும் பார்த்தாள்.அன்று முன்பகல் பதினோரு மணி அளவிற்கு அந்த மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலகணேஷ் புதிதாக ஒப்பந்தமாயிருக்கும் ப்ராஜக்ட் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். அவர் எப்போதுமே ஒரு விஷயத்தை சுற்றி வளைத்துத்தான் சொல்வார். நேரடியாக சொல்லக்கூடிய விஷயத்தை கூட, பலப்பல புதுமையான ஆங்கில வார்த்தைகளால் பாலிஷ் செய்து, நீண்ட உரை ஆற்றுவார். மனதில் என்ன நினைத்திருக்கிறாரோ அதை நூறு சதவீதம் வார்த்தைகளில் கொண்டு வரக்கூடிய வல்லமை பெற்றவர். அனைவரும் அவருடைய பேச்சை பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருக்க, பின் வரிசையில் அமர்ந்திருந்த அசோக் மட்டும், தனது ஆண்ட்ராய்ட் செல்ஃபோனில் ஆங்ரிபேர்ட் விளையாடிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தான். பாலகணேஷ் சொல்வதெற்கெல்லாம் வடிவேலு வசனங்களை அவ்வப்போது முனுமுனுத்தான். அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ப்ரியா, சிரிப்பு சத்தம் வெளியே கேட்டுவிடாமல் இருக்க அவளுடைய வாயை அடிக்கடி பொத்திக்கொள்ள வேண்டி இருந்தது. பாலகணேஷுடைய நீண்ட உரையின் தமிழ் சாராம்சத்தையும், அதற்கு அசோக் அடித்த கமெண்ட்டையும் மட்டும் சுருக்கமாக சொல்கிறேன்..!! "அட்லாஸ்ட்.. அந்த யூனியன் பேங்க் ஆஃப் கலிஃபோர்னியா ப்ராஜக்ட் சைன் ஆகிடுச்சு..!!" 'நமக்கு இன்னொரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லுங்க..!!' "நெறய காம்பட்டிஷனுக்கு அப்புறம்.. நம்மாளதான் இதை செய்ய முடியும்னு அவங்க முடிவு பண்ணிருக்காங்க..!!" 'ம்ம்.. இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிட்டு இருக்கு..??' "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.. அவங்க நெனைக்கிறதை விட நம்மகிட்ட ரொம்ப ஸ்ட்ராங் டீம் இருக்கு..!!" 'இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணரணமா ஆக்கி வச்சிருக்கீங்க..!!' "ஹேய் ஃபோக்ஸ்.. நான் ஒன்னு சொல்றேன்.. நல்லா நோட் பண்ணிக்குங்க.. இந்த ப்ராஜக்டை சக்சஸ்ஃபுல்லா பண்ணி முடிச்சா.. நாமதான் கிங்..!!" 'உன் ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்குது.. ஃபினிஷிங் சரியில்லையப்பா..!!' "திஸ் இஸ் வெரி க்ரிட்டிக்கல்.. அண்ட் சேலஞ்சிங் வொர்க்..!!" 'ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. இப்போவே கண்ணைக்கட்டுதே..!!!' "ஆக்சுவல் டெவலப்மன்ட் வொர்க் நெக்ஸ்ட் வீக் ஸ்டார்ட் ஆகுது.. அதுக்கு முன்னாடி வீ ஷுட் பீ ப்ரிப்பேர்ட் வித் த ஃப்ரேம்வொர்க்..!!" 'எதையும் ப்ளான் பண்ணாம பண்ணக்கூடாது.. ஓகே..??' எல்லாம் பேசி முடித்த பாலகணேஷ், இறுதியாக எல்லோரையும் உற்சாகப்படுத்தும் விதமாக கேட்டார். "வீ ஹேவ் வெரி சேலஞ்சிங் வொர்க் அஹெட்.. ஆர் யூ ரெடி..?? ஷேல் வீ கெட் திஸ் ஸ்டார்ட்டட்..??" அவர் அவ்வாறு உற்சாகம் கொப்பளிக்க கேட்கவும், இப்போது அனைவரும் முஷ்டியை மடக்கி கத்தினார்கள். அசோக்கும் கூட ஆங்ரிபேர்டை ஆஃப் செய்துவிட்டு கத்தினான். "யா..!! லெட்ஸ் ஸ்டார்ட்..!!!!!"அத்தியாயம் 4 "புதுப் ப்ராஜெக்ட்ன்றது, புதுப் பொண்டாட்டி மாதிரி ஃபோக்ஸ்.. ஆரம்பத்துல விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க.. அப்புறம் கடைசி வரை புடிக்கவே முடியாது..!!" இது அன்றைய மீட்டிங்கில் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது திருவாய் மலர்ந்து அருளிய தத்துவம்..!! அவர் எப்போதும் இப்படித்தான். எதற்கெடுத்தாலும் ஏதாவது புதிது புதிதாக உதாரணம் யோசிப்பார். குப்புறப் படுத்தா.. மல்லாக்கப் படுத்தா.. என்று தெரியவில்லை. பெண்கள், பெண்டாட்டி, காதல், கல்யாணம்.. இந்த நான்கு விஷயங்களில் ஒன்றைத்தான் உதாரணங்கள் சொல்ல தேர்ந்தெடுப்பார். கழுத்தில் தொங்குகிற ஐடி கார்டையும், கல்யாணத்தில் கட்டுகிற தாலி கயிறையும் கம்பேர் செய்வார். லைசென்ஸ் என்பார். பவர்ஃபுல் என்பார். பட் டேஞ்சரஸ் என்பார். ஹேண்டில் வித் கேர் என்பார். சில நேரங்களில் அவருடைய அசட்டுத்தனமான கம்பேரிசன்கள் அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் அலட்டிக்கொள்வது இல்லை. "ச்ச.. எனக்கு வாச்ச பொண்டாட்டியும் அப்படித்தான் இருக்குறா.. க்ளையன்ட்டும் அப்படித்தான் இருக்கானுக அசோக்..!!" என்பார் திடீரென. "ஏன் பாலா.. என்னாச்சு..??" என்று அசோக் சீரியஸாக கேட்பான். "என்ன பண்ணினாலும் ரெண்டு பெரும் சாடிஸ்ஃபையே ஆக மாட்டேன்றாங்க..!!" என்று எஸ்.ஜே.சூர்யாத்தனமாய் ஒரு ஜோக் அடித்து விட்டு இளிப்பார். 'ஐயே..!!' என்று மனசுக்குள் தலையில் அடித்துக் கொள்வான் அசோக். ஆனால் அன்று அவர் மீட்டிங்கில் சொன்ன தத்துவத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எந்த ப்ராஜக்ட்டுக்கும் ஆரம்ப கட்டம் மிக முக்கியம். அந்தக்கட்டத்தில் ஸ்லிப் ஆகிவிட்டால், அப்புறம் எல்லாக்கட்டமுமே 'கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல..' கணக்காக மாறிவிடும். புதுமனைவியின் விருப்பு, வெறுப்புகளை மனம் விட்டு பேசி தெரிந்து கொள்வது போல, க்ளையன்ட்டின் தேவை, ஆசைகளை மீட்டிங் போட்டு அறிந்து கொள்வது அவசியம். 'எங்களிடம் வேலை பார்ப்பவர்களின் சம்பளக்கணக்கை நிர்வகிக்கிற மாதிரி ஒரு மென்பொருள் வேண்டும்..!!' என்று க்ளையன்ட் கேட்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு மென்பொருளை தயாரித்து கொடுப்பதுதான் சாப்ட்வேர் சர்வீஸ் கம்பனிகளின் வேலை. அதைத்தான் ப்ராஜக்ட் என்கிறார்கள். 'வாழ்க்கைன்றது ஒரு வட்டம்டா..!!' என்று டாக்டர் ஒருவர் சொல்லியிருக்கிறார் அல்லவா..?? அதுபோல மென்பொருள் அபிவிருத்திக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. அதை மென்பொருள் அபிவிருத்தி வாழ்க்கை சக்கரம் என்று தமிழ்ப்படுத்தலாம். அந்த சக்கரத்திற்கு நிறைய வடிவங்கள் இருந்தாலும், அதில் வருகிற முக்கியமான கட்டங்கள் என்றும் மாறாது. அவை மூன்று கட்டங்கள்..!! முதல் கட்டம், ப்ளானிங் - 'எதையும் ப்ளான் பண்ணாம பண்ணப்படாது..!!' என்று வடிவேலுவின் வார்த்தைகளை எல்லா சாப்ட்வேர் கம்பனிகளின் சுவற்றிலும் பொன்னெழுத்தில் பொறித்து வைக்க வேண்டும். அந்த அளவிற்கு முக்கியமானது இந்தக்கட்டம். ரெகயர்மன்ட் கேதரிங், எஸ்டிமேஷன், சாஃப்ட்வேர் டிசைன் எல்லாம் இந்தக்கட்டத்தில்தான் வரும். 'ரெகயர்மன்ட் கேதரிங்' என்றால் க்ளையண்ட்டுக்கு என்ன தேவை என்று விவரமாக விசாரித்து தெரிந்து கொள்வது. அப்படி தெரிந்து கொள்ளும்போது தெளிவாக இருக்க வேண்டும். அவர்கள் கேட்ட கடலை எண்ணையை கண்ணாடி சீசாவில் ஊற்றிக் கொண்டிருக்கும்போதே, 'இது நல்லெண்ணைதான..?' என்று கேட்டு நம்மை குழப்புவார்கள். அதற்கெல்லாம் பித்துப் பிடித்துப் போகாதவாறு, முழு சித்தத் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியம். எஸ்டிமேஷன்தான் பொதுவாக நிறைய தவறு நடக்கிற ஏரியா. ப்ராஜக்டை எப்படியாவது லவட்டிவிட வேண்டும் என்ற பேராசையால், இரண்டு வருடத்தில் முடிக்கவேண்டிய ப்ராஜக்ட்டை, ஆறு மாதங்களில் முடித்து தருவதாக க்ளையன்ட்டிடம் உதார் விட்டு, கம்பனி மேனேஜ்மன்ட் லவட்டிவிடும். பிறகு டெவலப்பர்களும், மேனேஜர்களும் இந்த விஷயத்தில்தான் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியில் பாப்புலரான ஜோக் ஒன்று இருக்கிறது.கொழந்தை வேணும்னா.. ஒரு பொண்ணையும், பத்து மாசம் டைமும் கொடுங்க..!!' ன்னு டெவலப்பர் சொல்வான். 'இல்ல இல்ல.. உனக்கு பத்துப் பொண்ணு தாரேன்.. ஆனா எனக்கு ஒரே மாசத்துல கொழந்தை வேணும்..!!' ன்னு மேனேஜர் சொல்வார். இந்த விஷயத்தில் மேனேஜருக்கும், டெவலப்பருக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது. அவர் இவர்களை குறை சொல்வார். இவர்கள் அவரை குறை சொல்வார்கள். அதிருப்தியுடனே ப்ராஜக்ட் முடியும்வரை அலைவார்கள். சாஃப்ட்வேர் டிசைன் என்பது, பெரிதாக கோலம் போடுவதற்கு முன்பாக சின்ன சின்னதாக புள்ளி வைத்துக் கொள்கிற மாதிரியான சமாச்சாரந்தான். கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் வரைந்து வைத்துக் கொள்கிற ட்ராயிங்குகள் மாதிரி. க்ளையன்ட்டுகளிடம் விசாரித்து தெரிந்து கொண்ட அவர்களது தேவைகளை மனதில் கொண்டு, உருவாகப் போகிற மென்பொருள் எந்த மாதிரி இருக்கவேண்டும் என்று முன்கூட்டியே தோராயமாக வடிவமைத்துக் கொள்கிற வேலை. புள்ளிகள் சரியாக வைக்கப்படவில்லையெனில், கோலமும் கோணல் மாணலாய் போய் விட கூடிய வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது கட்டம், இம்ப்ளிமண்டேஷன் - வைத்த புள்ளிகளை இணைத்து கோலம் போட ஆரம்பிக்க வேண்டியதுதான். முதல் கட்டத்தில் உருவாக்கிய டிசைனை கொண்டு கோட் எழுதுவதும், அதை டெஸ்டிங் செய்வதும் இந்தக்கட்டத்தில்தான். எல்லா கட்டங்களிலும் இந்த கட்டத்துக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கப்படும். டெவலப்மன்ட் டீமும், டெஸ்டிங் டீமும் அடித்துக் கொள்கிற கட்டம். அதுவரை மாமன் மச்சான் என்று கொஞ்சித் திரிந்தவர்கள், அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு போல முறைத்துக் கொண்டு எதிரெதிராக க்ராஸ் செய்து கொள்வார்கள். பாட்டெழுதி பேர் வாங்குகிற கூட்டம் டெவலப்பர் கூட்டம் என்றால்.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குகிற கூட்டம் டெஸ்டிங் கூட்டம்..!!

மூன்றாவது கட்டம், இன்ஸ்டாலேஷன் - அத்தனை நாளாய் கோட் அடித்து குவித்த குப்பைகளை கொண்டு சென்று, க்ளயன்ட்டின் தலையில் கொட்டுகிற கட்டம். உருவாக்கிய மென்பொருளை க்ளயன்ட்டின் சிஸ்டத்தில் நிறுவவேண்டும். டெப்ளாய்மன்ட்..!! க்ளையண்டும் அவர்கள் பங்கிற்கு ஒரு டெஸ்டிங் டீம் வைத்து மென்பொருளை டெஸ்ட் செய்து கொள்வார்கள். மென்பொருளின் இறுதி வடிவத்தில், பெரும்பாலும் க்ளையண்ட்டுக்கு திருப்தி இராது. 'ஐயையோ.. நாங்க பார்வதி ஓமனக்குட்டன்ல கேட்டோம்.. நீங்க பரவை முனியம்மாவை டெலிவர் பண்ணிருக்கீங்களே..??' என்ற ரீதியில் பதறுவார்கள். இவர்களும் 'ஐயையோ பதறாதீங்கங்க.. கொஞ்சம் மேக்கப் இல்லனா பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினா சரியாப் போவும்..' என்ற ரீதியில் சமாளித்து, தலையில் கட்டித் திரும்புவர். சில கில்லாடி சாப்ட்வேர் கம்பனிகள் தொடர்ந்து அந்த மேக்கப் போடும் பணிக்காக, மெயின்டனஸ் காண்ட்ராக்ட் வேறு தனியாக போட்டு துட்டு தீட்டுவார்கள். சரி. இதெல்லாம் ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா..?? காரணம் இருக்கிறது. கதையை தொடர்ந்து படிப்பதற்கு முன்பு சாப்ட்வேர் கம்பனி இயங்கும் விதம் பற்றி இந்த அளவிற்காவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்..!! இப்போது இவர்களது ப்ராஜக்ட் இருப்பது ப்ளானிங் ஸ்டேஜில்..!! முதல் கட்ட ரெகயர்மன்ட் கேதரிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ரெகயர்மன்ட் கேதரிங்குக்கு, இன்னும் சில நாட்களில் அமெரிக்காவிற்கே யாரையாவது நேரிடையாக அனுப்பி வைப்பார்கள். டிசைன் ஆரம்பித்து விட்டார்கள். ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதுதான் இப்போது டீமின் பிரதான வேலை. ஃப்ரேம்வொர்க் என்றால் என்னவென்று எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், உருவாக்கப் போகிற முக்கியமான மென்பொருளுக்கு அடித்தளமான மென்பொருள் என்று சொல்லலாம். ஃப்ரேம்வொர்க் சரியாக அமையாமல் போனால், 'பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்கு..' கதையாகி விடும். ஃப்ரேம்வொர்க் டெவலப் செய்வதற்கான மொத்த வேலைகளும் டீமில் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தது. ஆளுக்கொரு காம்போனன்ட் என்று டிசைன் அண்ட் டெவலப்மன்ட் செய்ய ஆரம்பித்து இப்போது ஒருவாரம் ஓடிவிட்டது. அத்தனை நாளாய் ஜாலியாய் சுற்றித் திரிந்த அனைவரும் இப்போது சைலண்டாகிப் போயிருந்தனர். அவர்கள் வேலை பார்க்கும் தளத்தில் கேட்கும் அரட்டை சத்தம் அறவே வற்றிப் போயிருந்தது. எல்லோரும் தீயாக வேலை பார்த்தார்கள்..!! அசோக் ஆபீஸ் நேரத்தில் வழக்கமாக மூன்று தம் அடிப்பான். ஃப்ரேம்வொர்க் வேலை ஆரம்பித்த பிறகு, அந்த மூன்று ஆறாகிவிட்டது. அன்று மாலை அவன் தம்மடிக்க ஸ்மோகிங் ஏரியா சென்றபோது, அவனுக்கு பின்னாடியே ஹரியும் வந்தான். "எனக்கு ஒரு தம் குடுடா மச்சி.. ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷரா இருக்கு..!!" என்றான் வெறுப்பான குரலில். "என்னடா.. தைரியமா தம்மடிக்க வந்துட்ட..?? உன் வொய்ஃப் இல்லையா..??" கேட்டுக்கொண்டே சிகரெட் எடுத்து நீட்டினான் அசோக். "உன் ஆளும் என் ஆளும் மட்டையை தூக்கிட்டு வெளையாட கெளம்பிட்டாங்க.. அவங்களுக்கும் ஒரே ப்ரஷ்ஷ்ஷ்ஷர் போல..!!" ஹரி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். "உன் ஆளு சரி.. அது யாரு என் ஆளு..??" கேலியாக கேட்டவாறே, அசோக்கும் சிகரெட்டின் தலைக்கு கொள்ளி வைத்தான். "ஏன்.. நெறைய ஆள் வச்சிருக்கியோ.. ப்ரியாவைத்தான்டா சொன்னேன்..!!" ஹரி சொல்லும்போது அசோக்கிற்கு உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 'நாங்க ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸ்னு சொன்னேன்..' என்று ப்ரியா சொன்னது இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது. உடனே முகத்தை ஒருமாதிரி கடுகடுப்பாய் மாற்றிக்கொண்டு சொன்னான். "இங்க பாரு ஹரி.. இப்படிலாம் சொல்லிட்டு திரியாத.. எங்களுக்குள்ள இருக்குறது ஜஸ்ட் ஃப்ரண்ட்ஷிப்.. அவ்ளோதான்..!! புரியுதா..??" அசோக்கின் கோபம், ஹரியை சற்றே மிரள செய்தது. "ஹிஹி.. எனக்கு தெரியும் மச்சி.. உன் ஃப்ரண்ட்ன்றதைதான் உன் ஆளுன்னு சொன்னேன்..!!" என்று சமாளிக்க முயன்றான். "இனிமே ஃப்ரண்ட்னே சொல்லு.. இந்த ஆளு, வாலுன்னு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்லாம் வேணாம்..!! சரியா..??" "சரிடா சரிடா.. மொறைக்காத..!!" அப்புறம் ஓரிரு நிமிடங்கள் இருவரும் அமைதியாக புகைவிட்டுக் கொண்டிருந்தனர். பாதியில் விட்டு வந்திருந்த வேலையைப் பற்றியே அவர்களது மூளை யோசித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் ஹரியின் செல்போனுக்கு அந்த கால் வந்தது. யார் அழைக்கிறார்கள் என்று எடுத்துப் பார்த்தவனை, உடனே ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. பாதி தீர்ந்திருந்த சிகரெட்டை அவசரமாய் கீழே போட்டு நசுக்கிவிட்டு, காலை பிக்கப் செய்தான். "ஆங்.. சொல்லுங் மாமா.." என்றான் பவ்யமாக. ஹரியின் மாமனார் அடுத்த முனையில் இருக்கிறார் என்று அசோக் உடனே புரிந்துகொண்டான். மனைவியைக் கண்டால் அவன் அப்படியே மிரளுவான் என்பது அசோக்கிற்கு தெரியும். ஆனால் மாமனாரிடமும் இப்படி பம்முவான் என்பதை இப்போதுதான் அறிந்து கொள்கிறான். போனில் பேசுவதற்கே சிகரெட்டை கீழே போட்டு அணைக்கிறானே..?? நேரில் பார்த்தால் நெடுஞ்சான் கிடையாக விழுந்து விடுவானோ..?? அசோக் ஹரியை சற்றே ஏளனமாய் பார்க்க ஆரம்பித்தான். அவனோ 'சரிங் மாமா.. சரிங் மாமா..' என்று சலிக்காமல், பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிக் கொண்டிருந்தான். அவரிடம் பேசி முடித்ததும், 'ஹ்ஹ..!!' என்று நிம்மதியாய் ஒருமுறை தலையை உலுக்கினான். ஒரு சில வினாடிகள் நெற்றியைக் கீறியவாறு எதையோ யோசித்தான். அப்புறம் தனது செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே, அலட்சியமான குரலில் சொன்னான். "என் பொண்டாட்டிக்கு ஒரு ஃபோனை போடு மாப்ள..!!" "எதுக்கு..??" அசோக் குழப்பமாக கேட்டான். "போடு.. சொல்றேன்...!!" அசோக் குழப்பமாய் ஒரு பார்வை பார்த்தவாறே, அவனிடமிருந்து செல்போனை வாங்கினான். கவிதாவின் நம்பர் தேடிப்பிடித்து டயல் செய்துவிட்டு, காதில் வைத்துக் கொண்டான். ரிங் போய்க்கொண்டிருந்தது. காத்திருந்த நேரத்தில் ஹரியிடம் கேட்டான். "போட்டாச்சு.. ரிங் போயிட்டு இருக்கு.. என்னன்னு சொல்லு..!!" "அவ அப்பா கால் பண்ணினாரு.. அவகிட்ட பேசணுமாம்.. அவளை கால் பண்ணி பேச சொல்லு..!!" "ஏன்.. அதை நீங்க சொல்ல மாட்டீங்களோ..??" "நான் அவகூட பேச மாட்டேன் மாப்ள.. சண்டை..!!" ஹரி கூலாக சொல்ல, "சண்டையா.. எப்போ..??" அசோக் மெலிதாக அதிர்ந்தான். "நேத்து நைட்டு..!!" ஹரி அவ்வாறு சொன்னதும், அசோக்கிற்கு இப்போது சின்னதாய் ஒரு குழப்பம். "நேத்து நைட்டா..?? காலைல ஒண்ணா பைக்ல வந்தீங்க..??" "ஆமாம்.. வீட்ல ஒரு பைக்தான இருக்கு.. அதான் ஒண்ணா வந்தோம்.. அதுக்காக ஒத்துமையா இருக்கோம்னு அர்த்தமா..?? நீ நல்லா கவனிச்சு பாத்திருந்தா உனக்கு ஒரு மேட்டர் புரிஞ்சிருக்கும்..!!" "என்ன..??" "என்னைக்கும் ரெண்டு பக்கமும் காலை போட்டு உக்காந்துட்டு வருவாள்ல..?? இன்னைக்கு ஒரே சைட் போட்டு உக்காந்திருந்தா.. கவனிச்சியா..??" "அடச்சை.. இதெல்லாம் கவனிக்கிறதுதான் என் வேலையா..?? உங்க ரெண்டு பேருக்கும் வேற பொழப்பே இல்லடா.. எப்பப்பாரு சின்னப்புள்ளைங்க மாதிரி சும்மா சும்மா சண்டை போட்டுக்க வேண்டியது..!!" பிக்கப் செய்யப்படாமலே கால் கட் ஆக, செல்போனை காதில் இருந்து எடுத்துக்கொண்டே அசோக் சொன்னான். "ஐயோ.. இது ஸ்மால் ஃபைட்லாம் இல்ல மச்சி.. பிரச்னை பெருசாயிடுச்சு.. இந்த மாதிரி நாங்க சண்டை போட்டுக்கிட்டதே இல்ல..!!" "ஏன்.. என்ன ஆச்சு..??" "அவளுக்கு ரொம்ப கொழுப்பு மச்சி..!!" ஓஹோ..?? மேல..!!" "நேத்து நைட்டு வெஜ் பிரியாணி பண்ணுனா.. நல்லாவே இல்ல.. என்னடி இவ்வளவு கேவலமா இருக்குன்னு சாதரணமாத்தான் கேட்டேன்.. அதுக்குப்போய் ஆய் ஊய்ன்னு கத்துறா.. நானும் பொறுத்து பொறுத்து பாத்தேன் மச்சி.. ரொம்ப ஓவரா பேசிட்டே இருந்தாளா.. விட்டேன் ஒன்னு கன்னத்துல பளார்ன்னு..!!" ஹரி சீரியசாக சொல்லிக்கொண்டே போக, அசோக் இப்போது தன் தலையை ஒருபக்கமாய் சாய்த்து, கண்களை இடுக்கி அவனை கடுப்புடன் முறைத்தான். அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாத ஹரி, சொன்னதை பாதியில் நிறுத்திவிட்டு, "என்ன மச்சி.. என்னாச்சு..??" என குழப்பமாக கேட்டான். "நீ அறைஞ்ச..??" "ம்ம்ம்.." "உன் பொண்டாட்டியை..??" "ஆ..ஆமாம்.. ஏன் கேக்குற..??" "மச்சி.. பொய் சொல்லலாம்.. ஆனா பொருந்த சொல்லணும்..!! நான் கூட நெறைய பொய் சொல்வேன்.. ஆனா நம்புற மாதிரி சொல்வேன்..!!" "அப்போ நீ நம்பலையா..??" "போடா கப்ஸா கண்ணா.. இதெல்லாம் நம்புறதுக்கு நான் ஒன்னும் கேனயன் இல்ல..!!" "ஹேய் மச்சி.. ப்ராமிஸ்டா..!!" "ஹ்ஹ.. உன் ப்ராமிஸ், பெப்சொடன்ட்லாம் வேற யார்ட்டயாவது போய் பிதுக்கு மகனே..!! மாமனார்ட்டயே இப்படி மட்டையா மடங்குற நீ.. பொண்டாட்டிட்ட எப்படி பம்முவன்னு எனக்கு தெரியாதா..?? என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லவா..??" "எ..என்ன நடந்திருக்கும்..??" "ரொம்ப டயர்டா இருக்குன்னு நேத்து நைட்டு அவ உன்னையே சமைக்க சொல்லிருப்பா.. நீ உனக்கு ரொம்ப புடிச்ச வெஜ் பிரியாணி பண்ணிருக்குற.. ஆர்வத்துல காரத்தை அள்ளி போட்டிருப்ப.. அவ ஏன் இவ்ளோ காரம்னு கேட்டிருப்பா.. நீ வாயை வச்சுட்டு சும்மா இருக்காம ஏடாகூடமா ஏதாவது சொல்லிருப்ப.. அவ கடுப்பாயிருப்பா.. கையை முறுக்கிட்டு கும்மு கும்முன்னு நல்லா பன்ச் விட்டிருப்பா..!! அதை அப்படியே உல்ட்டா பண்ணி, இங்க வந்து ஊத்தி விட்டுட்டு இருக்குற..!!" "ஹேய்.. போடா.. நான் உண்மையைத்தான் சொல்லிட்டு இருக்குறேன்..!!" "ஹாஹா.. எது உண்மைன்னு எனக்கு நல்லா தெரியும் தம்பி.. விடு..!!" "சரி நம்பாட்டி போ.. எனக்கு என்ன..?? ஆனா நீ சொன்னதுல ஒன்னு தப்பு..!!" "என்ன..??" "காரம்லாம் நான் எப்போவும் கரெக்டா போட்டிருவேன்.. உப்புதான் கொஞ்சம் தப்பு தப்பா..!!" "ம்ம்.. உப்போ காரமோ.. அவ உன்னை அப்புனது உண்மைதான..??" "ஏய்.. அது வேற இது வேற.. ரெண்டையும் போட்டு கொழப்பாத..!!" ஹரி எரிச்சலாக சொல்ல, அசோக் இப்போது அமைதியானான். ஹரியின் முகத்தையே சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். 'வாங்குற அடியையும் வாங்கிக்கிட்டு.. எப்படித்தான் இப்படி வெறப்பா மூஞ்சியை வச்சுக்குறானோ..??' என்று அவன் மனதிற்குள் ஒரு எண்ணம் ஓடியது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவாறு சொன்னான். "சரி எப்படியோ போ.. அது உங்க குடும்பத்துக்குள்ள நடக்குற குத்து வெட்டு.. அதுல நான் தலையிட விரும்பலை..!!" "ஹ்ம்ம்.. சரி அதை விடு.. அவளுக்கு ஃபோன் போட்டியே.. என்னாச்சு..??" "ரிங் போகுது.. எடுக்கலை..!!" "ஓ..!! அவரும் அதைத்தான் சொன்னாரு..!! வெளையாடுறா போல.. அதான் கவனிச்சிருக்க மாட்டா..!! சரி நீ ஒன்னு பண்ணுறியா..??" "என்ன..??" "நேராவே போய் அவளைப் பாத்து சொல்லிட்டு வந்துடுறியா..?? ப்ளீஸ்..!!" "என்னடா.. வெளையாடுறியா..?? உனக்கென்ன நான் அல்லக்கையா..?? அப்படி என்ன அவசரம்..?? அவ ஆடி முடிச்சுட்டு வரட்டும்.. அப்புறமா சொல்லிக்கலாம்..!!" "ஏய் மச்சி.. ப்ளீஸ்டா.. உடனே போய் சொல்லிட்டு வாடா.. இல்லனா அவ வர்றதுக்குள்ள இந்த ரப்பர் வாயன் பத்து தடவை எனக்கு கால் பண்ணி ரவுசு விடுவான்.!!" "ரப்பர் வாயனா..?? இரு.. அவருக்கு கால் பண்ணி சொல்றேன்..!!" என்றவாறு அசோக் செல்போனை அமுக்க, ஹரி பதறிப்போய் அதை பறித்தான். "டேய்.. சும்மா இருக்க மாட்டியா நீ..??" "ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..!! வீட்ல பம்முறது.. வெளில உதார் விட்டுட்டு திரியிறது..!!" "சரிப்பா.. நான் பயந்தாங்கொள்ளின்னு ஒத்துக்குறேன்.. போதுமா..?? அவகிட்ட போய் சொல்லிட்டு வாடா.. ப்ளீஸ்..!!" "நீயும் வா.. ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்..!!" "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு மச்சி.. டீபக் போட்டு விட்டு வந்திருக்கேன்.. அப்புறம் சிஸ்டம் அப்படியே ஹேங் ஆகி படுத்துடும்..!! இன்னைக்கு அதை செக்கின் பண்ணனும் வேற.. இல்லனா அந்த ஸ்ப்ரிங்கு மண்டையன் வந்து டாபர் மேன் மாதிரி சவுண்டு விட்டுட்டு இருப்பான்..!! ஒரு அஞ்சு நிமிஷம்தான.. என் செல்லம்ல.. அப்படியே பொடிநடையா போய் சொல்லிட்டு வந்துடுடா.. ப்ளீஸ்..!!" ஹரி கெஞ்சலாக சொல்லவும், அசோக் கொஞ்சம் மனம் இளகினான். நேராகவே சென்று கவிதாவிடம் சொல்லிவர ஒத்துக்கொண்டான். இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஹரி தனது பணியிடம் செல்லும் பாதையில் திரும்ப, அசோக் எதிர் திசையில் நடந்தான்.

கம்பெனி வளாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இல்லையா..?? வளாகத்தின் உட்புறம் நாலாபக்கமும் சிமென்ட்டாலான சாலைகள் அகலமாகவும், நீளமாகவும் ஓடும். சாலையின் ஒருபுறம், காம்பவுண்ட் சுவரை ஒட்டி, கரும்பச்சை நிறத்தாலான ஸ்டீல் தகடுகள் வேயப்பட்ட கொட்டாரம் இட்டிருப்பார்கள். கொட்டாரத்தின் அடியில் கொஞ்சம் கூட கேப் இல்லாமல், கார்களும் பைக்குகளும் பார்க் செய்யப்பட்டிருக்கும். சாலையின் மறுபக்கத்தில், இளம்பச்சை நிற இலைகள் கொண்ட பெயர் தெரியாத தாவரம், இடுப்பளவு உயரத்திற்கு நெருக்கமாக நடப்பட்டிருக்கும். மையப்பகுதியில் சின்ன சின்ன மேடு பள்ளங்களுடன் கோல்ஃப் மைதானம் போன்று பரந்து விரிந்திருக்கும் புல்வெளி..!! அந்த புல்வெளிகளில்தான் ஆங்காங்கே, ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த மாதிரியான கலரில், அவர்கள் வேலை பார்க்கிற கட்டிடங்கள், உடலெல்லாம் கண்ணாடி பாதிக்கப்பட்டு உயர உயரமாய் எழுப்பப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் 'டவர் ஒன்.. டவர் டூ..' என்று பெயரிட்டிருப்பார்கள். எல்லா டவர்களையும் தாண்டி சென்றால், வளாகத்தின் பின்பக்க காம்பவுன்ட்டை ஒட்டி இரண்டு கட்டிடங்கள் நின்றிருக்கும். ஒன்று, க்ளையன்ட்டுகள் வந்தால் அவர்களை தங்க வைக்கிற வசதிக்காக கட்டப்பட்ட லக்ஸுரி கெஸ்ட் ஹவுஸ்..!! இன்னொன்றுதான் கம்பனி எப்ளாயிக்கள் ஆரோக்கியமாக பொழுதை போக்குவதற்காக கட்டப்பட்டிருக்கும் உள் விளையாட்டு அரங்கம். அசோக் அந்த அரங்கத்துக்குள் நுழைந்தான். அரங்கத்தின் ஒரு பக்கம் பிரம்மாண்டமான ஜிம். இன்னொரு பக்கம் இன்டோர் கேம்ஸ் ஆடுவதற்கான சிறு சிறு அறைகள்.. வரிசையாக..!! அந்த அறைகளுக்குள் கேரம், டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால் என விளையாடிக் கொண்டிருந்தவர்களை கடந்து அசோக் நடந்து சென்றான். ஸ்குவாஷ் அரங்கம் இருந்த பகுதிக்கு நகர்ந்தான். வரிசையாக இருந்த நான்கு ஸ்குவாஷ் கோர்ட்டுகளில் கவிதாவை தேடினான். இரண்டாவது கோர்ட்டிலேயே அவள் பார்வைக்கு சிக்கினாள்... அவளோடு விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவும்..!! ஸ்குவாஷ் விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா..?? நான்கு புறமும் சூழப்பட்ட சுவர்களுக்குள் விளையாடப்பட்டும் உள்ளரங்கு விளையாட்டு. ரப்பர் பந்தும், ராக்கெட் எனப்படும் வலை மட்டையும் கொண்டு ஆடப்படும் ஆட்டம். டென்னிஸ் போன்றதுதான். டென்னிஸ் விளையாடுபவர்கள் எதிரெதிர் பக்கமாக நின்று கொண்டு, பந்தை மாற்றி மாற்றி அடித்துக் கொள்வார்கள். ஸ்குவாஷில் ஒரே பக்கமாக நின்று கொண்டு, முன்பக்க சுவரை நோக்கி பந்தை மாற்றி மாற்றி அடித்து விளையாடவேண்டும். டென்னிஸில் நெட் இருப்பது போல, இங்கு அதே உயரத்திற்கு சுவரோடு பொருந்திய மெட்டல் தகடு இருக்கும். அந்த தகடுக்கு மேல்தான் பந்தை அடிக்கவேண்டும். நாம் சுவற்றில் அடித்த பந்து திரும்பி வரும்போது, அதை எதிராளி திரும்பவும் சுவற்றில் அடிக்க முடியாமல் போனால், நமக்கு ஒரு பாயின்ட்..!! அசோக் ஓரிரு நிமிடங்கள் கோர்ட்டுக்கு வெளியே நின்று, உள்ளே விளையாடிக்கொண்டிருந்த ப்ரியாவை, கண்ணாடி சுவர் வழியாக கண்களாலேயே விழுங்கினான். அசோக்கிற்கு பொதுவாகவே ஸ்போர்ட்ஸில் இருக்கிற பெண்களை பிடிக்கும். விளையாடுவது பெண்களுக்கு கட்டான உடலை மட்டுமன்றி, முகத்தில் ஒரு தனி களையையும் கொடுப்பதாக அவனுக்கு தோன்றும். பூப்போன்ற தேகம் கொண்டவர்கள், புயல் போல சுழன்றாடி விளையாடுவதே ஒரு தனி அழகுதான். அதுவும் இந்தப்புயல் தன் இதயத்தில் மையம் கொண்ட புயலாக வேறு இருந்து போனதே..?? ஆசையாகவும், ஆர்வமாகவும் ரசித்தான். ப்ரியா வெள்ளை நிற டி-ஷர்ட்டும், அதே நிறத்தில் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முழங்கால் வரை ஸ்கர்ட் மறைத்திருக்க, மீதி கால் வெளுப்பாய், வழவழப்பாய் வெளிப்பட்டிருந்தது. அழகு பாதங்களை அடிடாஸ் ஷூ கவ்வியிருந்தது. கூந்தலை குதிரை வால் போலாக்கி, அங்குமிங்கும் அசைய விட்டிருந்தாள். இடது கை மணிக்கட்டில் ஒரு ரிஸ்ட் பான்ட் அணிந்திருந்தாள். நெற்றியில் வழியும் வியர்வையை அவ்வப்போது அதில் துடைத்துக் கொண்டாள். நளினமாக விளையாடிக் கொண்டிருந்தாள் என்றுதான் ப்ரியாவை சொல்லவேண்டும். அழகாக சர்வீஸ் போடுவதும்.. லாவகமாக கோர்ட்டின் மையப்பகுதிக்கு நகர்ந்து கொள்வதும்.. ஓடிச்சென்று அகலமாய் அடியெடுத்து வைத்து கால்களை ஊன்றி, வலது கையை வலுவாக வீசி பந்தை சுவற்றுக்கு அடிப்பதும்.. பாயின்ட் கிடைத்ததும் 'ஹேய்..' என்று உற்சாகமாக கத்தி முஷ்டியை மடக்குவதும்..!! ப்ரியா ஸ்குவாஷ் விளையாடுவாள் என்று அசோக்கிற்கு முன்பே தெரியும். ஆனால் அவள் விளையாடுவதை இன்றுதான் பார்க்கிறான். இவ்வளவு அழகாக ஆடுவாள் என்பதை இப்போதுதான் அறிகிறான். அவள் விளையாடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருந்தது அசோக்கிற்கு..!! ஆனால் கொஞ்ச நேரத்திலேயே வந்த வேலை ஞாபகம் வரவும், கைவிரல்களை மடக்கி கண்ணாடி சுவற்றில் 'லொட்.. லொட்..' என்று தட்டினான். ஆட்ட சுவாரசியத்தில் இருந்த இருவரும், சிறிது நேரம் அந்த சத்தத்தை கவனிக்கவே இல்லை. அசோக் அந்த மாதிரி ஒரு நாலைந்து தடவை தட்டியதுந்தான் கவிதா திரும்பி பார்த்தாள். அசோக்கை பார்த்து ஆச்சரியமுற்றவள், 'என்ன..??' என்பது போல சைகையாலேயே கேட்டாள். இவன் 'வெளில வா..' என்பது போல சைகையாலேயே சொன்னான். கவிதா நடந்து வந்து கதவு திறந்தாள். "என்ன அசோக்..??" "உன் அப்பா ஹரிக்கு கால் பண்ணிருந்தாராம்.. உன்கிட்ட அவசரமா பேசணும்னு சொன்னாராம்.. உன்னை கால் பண்ணி அவர்கிட்ட பேச சொன்னான்..!!" "ஓ.. அவர் எங்க.. அவர் வரலையா..??" கவிதா கண்களாலேயே தன் கணவனை தேட, அசோக் அவளுடைய முகத்தையே அமைதியாக பார்த்தான். அவர்களுக்குள் நடந்த சண்டையின் அறிகுறி அந்த முகத்தில் துளியும் தெரியவில்லை. இல்லையென்றால் அவள் காட்டிக்கொள்ளவில்லை என்றும் சொல்லலாம். ஒரு இயல்பான புன்னகையுடனே அந்த மாதிரி கேட்டாள். சிறிது நேரத்திற்கு முன்பு ஹரியின் முகத்தை பார்த்தபோது தோன்றிய மாதிரியே ஒரு எண்ணம், இப்போதும் அசோக்கின் மனதில் ஓடியது. 'அடிக்கிற அடியையும் அடிச்சுப்புட்டு.. எப்படித்தான் இவ அப்பாவி மாதிரி மூஞ்சியை வச்சுக்குறாளோ..??' "இல்ல.. அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்குன்னு கெளம்பிட்டான்.. என்னை சொல்ல சொன்னான்..!!" உதட்டில் அரும்பிய சிறு புன்னகையுடனே அசோக் சொன்னான். "ஓ.. ஓகே ஓகே..!! ரொம்ப தேங்க்ஸ் அசோக்..!!" நன்றி சொன்ன கவிதா கையில் இருந்த ராக்கெட்டை ப்ரியாவிடம் நீட்டிவிட்டு, கோர்ட்டை விட்டு வெளியே வந்தாள். சுவற்றில் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த தனது பேக் திறந்து செல்போனை கையில் எடுத்தாள். டயல் செய்து காதில் வைத்துக்கொண்டவள், 'ஹாங்.. சொல்லுங்க டாடி..' என்றவாறே அந்த இடத்தை விட்டு அகன்றாள். அவள் செல்லும்வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், அப்புறம் ப்ரியாவின் பக்கமாய் பார்வையை திருப்பினான். ப்ரியாவோ, விரிந்த இமைகளுக்குள் மினுக்கும் விழிகளுடன் இவனையே சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் திரும்பியதும், சகஜமாய் மாற முயற்சி செய்தாள். அசோக் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, கண்ணாடி சுவரில் லேசாக சாய்ந்து கொண்டான். ப்ரியாவை பார்த்து கண்களில் குறும்பு கொப்பளிக்க புன்னகைத்தான். அப்புறம் அந்த கண்களில் ஒன்றை மட்டும் லேசாக சிமிட்டியவாறே சொன்னான். "ம்ம்ம்ம்.. கலக்குற ப்ரியா..!!" "ஹேய்.. ச்சீய்.. போடா..!!" ப்ரியா அழகாக நாணமுற்றாள். "ஹ்ம்ம்.. சும்மா சொல்லக்கூடாது.. நல்லாவே ஆடுற..!!" "நெஜமாவா சொல்ற..??" ப்ரியா நம்பமுடியாமல் கேட்டாள். "சீரியஸாத்தான் சொல்றேன்..!! நல்லா ஆடுற..!!" அவ்வளவுதான்..!! அசோக்கின் வாயில் இருந்து பாராட்டு பெற்றதுமே, ப்ரியா பறக்க ஆரம்பித்திருந்தாள். ஒரு புதுவித உற்சாகம் குரலில் கொப்பளிக்க சொன்னாள். "ம்ம்.. நான் காலேஜ்ல ஸ்குவாஷ் ஆடுறப்போ நீ பாத்திருக்கணும் அசோக்.. இதை விட அமேசிங்கா ஆடுவேன் தெரியுமா..?? நான் ஸ்குவாஷ் ஆட கூப்பிட்டாலே.. அவ அவ தெறிச்சு ஓடுவாளுக.. நாலு வருஷத்துல எத்தனை டோர்னமன்ட் பாத்திருக்கேன் தெரியுமா.." ப்ரியா பேசிக்கொண்டே போக, அசோக் இப்போது பொறுமையில்லாமல் ஒரு சலிப்பு மூச்சு விட்டான். 'ஆரம்பிச்சுட்டாளா.. கொஞ்சம் பாராட்டிட்டா போதுமே..??' என்பது போல அவளையே கேலிப்புன்னகையுடன் பார்த்தான். அதைக்கவனியாத ப்ரியா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். "எத்தனை கப்பு.. எத்தனை கப்பு.." "என்ன.. காபி கப்பா..??" அசோக் அவ்வாறு கிண்டலாக கேட்கவும், ப்ரியாவுக்கு பொசுக்கென்று முகம் சுருங்கிப் போனது. "ஹேய்.. நீ என்னை நம்பலைன்னு நெனைக்கிறேன்..!!" "சொல்றது யாரு.. ப்ரியாவாச்சே..?? அதான்.. நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குது..!!" "போடா போ.. நம்பாட்டா போ..!!" ப்ரியா கோபமாகவும், "ஹாஹா.. சரி விடு.. நம்புறேன்..!!" அசோக் சமாதானமாக சொன்னான். "ம்ம்... அப்படி வா வழிக்கு..!! இன்டர் காலேஜ் டோர்னமன்ட்ல ஒரு வருஷம் நான்தான் சாம்பியன்..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்.. எந்த நேரத்துல இந்த ஐ.டி கம்பனிக்குள்ள அடி எடுத்து வச்சனோ.. என் டேலன்ட்லாம் கெணத்துக்குள்ள போட்ட கல்லு மாதிரி ஆகிப் போயிடுச்சு..!! ஏதோ இப்போ இந்த கவிதா வந்ததும் திரும்ப ஆட ஆரம்பிச்சிருக்கேன்.. அட்லீஸ்ட் அவளுக்காவது ஸ்குவாஷ்ல இன்ட்ரஸ்ட் இருந்ததே.. அதுக்கு நான் கடவுளுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்..!!""ஹ்ம்ம்.. ஸ்குவாஷ் கூட நல்ல கேம்தான் இல்ல..??" அசோக் பேச்சை மாற்றும் விதமாக கேட்க, "ஹேய்.. செம இன்ரஸ்டிங்கா இருக்கும்.. நீ ஆடிருக்கியா..??" ப்ரியா உற்சாகம் பீறிட கேட்டாள். "இல்ல.. ஆடுனது இல்ல..!!" "ஓ.. இப்போ ஆடலாமா..??" "இ..இப்போவா..??" "ம்ம்..!!" "ஹேய்.. எங்கிட்ட ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்லாம் இல்ல..!!" "பரவால வா.. ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டிருக்கேல.. அது போதும்..!!" "அட லூசு.. எனக்கு இந்த கேம் ரூல்ஸ்லாம் எதுவும் தெரியாது..!!' "வா.. நான் சொல்லித் தர்றேன்.. எல்லாம் சிம்பிள் ரூல்ஸ்தான்..!!" "வே..வேணாம் ப்ரியா..!!" "ஏய் ச்சீய்.. வாடா.. எனக்கு உன் கூட வெளயாடி உன்னை ஜெயிக்கணும் போல இருக்கு..!!" ப்ரியா அசோக்கின் சட்டையைப் பற்றி அவனை உள்ளே இழுத்தாள். கதவை மூடி தாழிட்டாள். அவன் கையில் ராக்கெட்டை திணித்தாள். ஆட்டத்தின் அடிப்படை விதிகளை சுருக்கமாக சொன்னாள். அசோக்கை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, பந்தை தூக்கிப்போட்டு சர்வீஸ் செய்தாள். சுவற்றில் பட்ட பந்து, அசோக்கை நோக்கி எம்பி வர, 'ம்ம்ம்.. அடி..!!!!' என்று கத்தினாள். அசோக் கையிலிருந்த ராக்கெட்டால் பந்தை திருப்பி அடித்தான். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு இருவரும் குழந்தைகள் போல மாறிப் போயினர். சூழ்நிலை மறந்து குதுகலமாய் ஸ்குவாஷ் ஆடிக் கொண்டிருந்தார்கள். ப்ரியாவுக்கு ஸ்குவாஷ் ஆடுவதே மிகவும் பிடித்தமான விஷயம். அதிலும் இப்போது அசோக்குடன் சேர்ந்து ஆடுகிறோம் என்ற நினைவே அவளை உள்ளம் பூரிக்க செய்திருந்தன. சந்தோஷமும், உற்சாகமுமாய் விளையாடினாள். எப்படி ஆட வேண்டும் என்று அசோக்கிற்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டே, இங்கும் அங்கும் ஓடி ஓடி பந்தை அடித்தாள். "ராக்கெட்டை இப்படி புடி அசோக்..!!" "கையை நல்லா ஃப்ரீயா விடு.. இப்படி..!!" "இன்னும் கொஞ்சம் ஃபாஸ்டா.. ஃபாஸ்ட்..!!" "அந்த லைன்ஸ்குள்ளதான் அடிக்கனும்னு சொன்னேன்ல..??" "வுட் ஃப்ளோர்டா.. ஸ்லிப் ஆகும்.. கேர் ஃபுல்..!!" கத்தினாள். அசோக்கும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான். ப்ரியாவுடன் இப்படி ஓடி ஓடி விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவனுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டே விளையாடுவதில் ப்ரியா கவனமாக இருக்க, இவனது கவனமோ அவளுடைய அழகை அருகிருந்து ரசிப்பதிலேயே லயித்திருந்தது. அவளிடம் அத்தனையுமே அழகாய் தோன்றியது அசோக்கின் கண்களுக்கு..!! சர்வீஸ் போடுகையில் அந்த செர்ரி உதடுகளை கடித்துக் கொள்ளும் முத்து பற்கள்.. அவள் விழிகளில் தெரிகிற தீவிரம்.. நெற்றியில் முத்து முத்தாய் திரளும் வியர்வை துளிகள்.. அந்த துளிகளை துடைத்து சுண்டுகிற சுட்டு விரல்..!! பந்தை அடிக்க விரையும்போது அதிர்கிற அவளது ஆடுதசைகள்.. அசைகிற காது வளையங்கள்.. குலுங்குகிற அவளது கையடக்க கனிகள்..!! புஜத்தை உயர்த்தையில் காணக்கிடைக்கும் அக்குள் ஈரம்.. இளமஞ்சள் நிற இடுப்புக்குழைவு..!! இருவரும் குறுக்கே ஓடிக்கொள்கையில் இவன் நாசியில் சுருக்கென்று ஏறும் அவளது மேனி வாசனை.. முகத்தை கீறி செல்லும் அவளது கூந்தல் நுனிகள்..!! அசோக் தடுமாறிப் போயிருந்தான். ப்ரியா சொல்கிற இன்ஸ்ட்ரக்ஷன்கள் கூட இப்போது அவனுடைய காதில் விழ மறுத்தன. ப்ரியாவின் அழகு அசோக்கின் மூளையில் ஒரு போதையை கிளப்பி விட்டிருந்தது.. அந்த போதையுடன்தான் அங்குமிங்கும் ஓடிச்சென்று பந்தை அடித்துக் கொண்டிருந்தான்..!!

அந்த போதை ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைய.. பந்தை அடிப்பதற்காக தன்னை க்ராஸ் செய்து ஓடிய ப்ரியாவை.. அப்படியே வளைத்துப் பிடித்தான்.. அவளது இடுப்பை பற்றி தன்பக்கமாய் இழுத்தான்..!! ப்ரியா எதிர்பாராத பிடிக்குள் சிக்கி, 'ஆஆஆவ்வ்வ்வ்' என்று சப்தமெழுப்பியவாறு அவன் கையோடு சென்றாள்.. தனது மார்புப்பந்துகள் அவன் நெஞ்சில் சென்று மெத்தென்று அழுந்த நின்றாள்..!!ப்ரியா அதை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியில் அவளுடைய விழிகள் அகலமாய் திறந்து கொண்டன. உதடுகள் 'ஓ'வென பிளந்து கொண்டன. அசோக்கின் முகத்தையே திகைப்பாய் பார்த்தாள். அசோக் இன்னும் பித்தம் தெளியாதவனாகவே காட்சியளித்தான். ப்ரியாவின் பிறைமுகத்தை கண்ணுக்கு நெருக்கமாய் கண்டதில், வேறெதுவும் செய்யத் தோன்றாதவனாய், அவளையே விழுங்கிவிடுவது போல பார்த்துக் கொண்டிருந்தான். இருவருக்குமே அந்த நெருக்கம் பிடித்திருந்தது. அசோக்கிற்கு ப்ரியாவுடைய ஸ்பரிசத்தில் இருந்த மென்மை பிடித்திருந்தது என்றால், ப்ரியாவிற்கு அசோக்குடைய பிடியில் தெரிந்த முரட்டுத்தனம் பிடித்திருந்தது. ஆனால்.. எல்லாம் ஒரு ஐந்தாறு விநாடிகள்தான். ப்ரியாதான் முதலில் சுதாரித்துக்கொண்டு சற்றே திணறலான குரலில் கேட்டாள். "எ..என்ன ஆச்சுடா....??" ப்ரியாவின் குரல் காதில் விழுந்ததுமே அசோக் சுயநினைவுக்கு வந்தான். அவளைப் பிடித்திருந்த பிடியை பட்டென விட்டான். ப்ரியாவும் உடனே அவனிடமிருந்து சற்றே நகர்ந்து கொண்டாள். ஓரிரு வினாடிகள் என்ன சொல்வதென்று தடுமாறிய அசோக், உடனே சமாளித்துக்கொண்டு, "பா..பாத்து ப்ரியா.. இன்னும் கொஞ்சம்னா கீ..கீழ விழுந்திருப்ப.. நல்லவேளை.. புடிச்சுட்டேன்..!!" அசோக் அந்த சூழ்நிலையை அழகாக சமாளித்துவிட, ப்ரியாதான் புரியாமல் தலையை சொறிந்தாள். "கீ..கீழயா..?? நா..நான் எப்போ கீழ விழப் போனேன்..??" "இ..இதோ.. இப்போ.. அப்படியே சர்ருன்னு.. ஸ்லிப் ஆகிட்டு போனியே.??" "போடா லூசு.. நான் பால் ரிடர்ன் எடுகுறதுக்காக போனேன்..!!" "ஓஹோ..?? போறது.. கொஞ்சம் பொறுமையா போகலாம்ல..?? நான் கீழ விழப்போறியோன்னு பயந்துட்டேன்..!!" "ஹ்ம்ம்.. பொறுமையா போறதுக்கு இங்க என்ன கல்யாண ஊர்வலமா நடக்குது..??" "சரி சரி.. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.. ஸாரி..!!" அசோக் அவளை ஒரு திருட்டுப் பார்வை பார்த்தவாறே சொன்னான். "ப..பரவால.. விடு..!!" ப்ரியா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாகவே சொன்னாள். அப்புறம் கொஞ்ச நேரம் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவாறு, அமைதியாக நின்றிருந்தார்கள். பிறகு ப்ரியா அந்த மௌனத்தை உடைக்கும் விதமாய், மெல்லிய குரலில் கேட்டாள். "இப்போ என்ன.. போதுமா இல்ல கண்டின்யூ பண்ணலாமா..??" "க..கண்டின்யூ பண்ணலாம் ப்ரியா.. வா வா.. நாந்தான இப்போ சர்வீஸ்..??" குரலை இயல்பாக மாற்றிக்கொள்ள முயற்சித்தவாறே, அசோக் குனிந்து ஓரமாய் கிடந்த பந்தை பொறுக்கிக் கொண்டான். சர்வீஸ் செய்யும் கட்டத்துக்குள் சென்று நின்று கொண்டான். ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, பந்தை தூக்கிப்போட்டு சுவற்றில் அடித்தான். சுவற்றில் பட்ட பந்து மீண்டும் இவர்களை நோக்கி பறந்து வர, ப்ரியா அதை அடிப்பதற்காக பாய்ந்தாள். ப்ரியாவின் நெருக்கம் ஏற்படுத்திய கிறக்கத்தில் இருந்து இன்னும் மீளாத அசோக், அவள் ஓடுகையில் அதிர்கிற அவளது அங்கங்களையே வெறித்தான். ப்ரியா பந்தை திருப்பி சுவற்றில் அடித்த பிறகும், அவனது பார்வை அவள் மீதிருந்து அகல்வதாய் இல்லை. சித்தமெங்கும் பித்தம் ஏறிப்போனவனாய் 'பே' என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஹேய்.. பால்-டா..!!' என்று ப்ரியா கத்தியது காதில் விழவில்லை. பறந்து வந்த பந்து இவன் கன்னத்தில் வந்து 'சொத்..'தென்று ஒரு அடி போட்டதும்தான், சுரணை வந்து 'ஆஆஆ..' என்று கத்தினான்.

No comments:

Post a Comment