Saturday 7 September 2013

நெஞ்சோடு கலந்திடு.. 4


அப்புறம் ஒரு மூன்று நாட்கள் மிக இறுக்கமாகவே சென்றன. அசோக் அன்று மொட்டை மாடியில் சொன்னதை எல்லாம் திவ்யா அப்படியே செய்தாள். செல் நம்பர் மாற்றிக் கொண்டாள். அசோக் சொன்னமாதிரியே திவாகருக்கு ஒரு இறுதி ஈ-மெயில் அனுப்பிவிட்டு அந்த அக்கவுன்ட்டை க்ளோஸ் செய்தாள். அந்த இறுதி ஈ-மெயிலை கூட அசோக்கிடம் காட்டி சரி பார்த்து வாங்கிக்கொண்டே அனுப்பினாள். திவாகருடனான தொடர்பை முழுவதுமாய் துண்டித்துவிட்டு, அசோக்கின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். "அவ்ளோதானா அசோக்.. எல்லாம் முடிஞ்சு போச்சா..?"

"இங்க பாருடா.. மனசை போட்டு குழப்பிக்காத..!! எல்லாம் உன் நல்லதுக்காகத்தான்..!! நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா நெனச்சு.. மறந்துடு..!!" "முடியலை அசோக்.. கஷ்டமா இருக்கு..!!" "அதெல்லாம் ஒண்ணுல்ல திவ்யா.. உன்னால முடியும்.. எல்லாம் நம்ம மனசுதான் காரணம்..!! கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்..!! அப்புறம் உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.. அதுக்கு நான் உத்திரவாதம்..!! சரியா..?" "ம்ம்.. சரி..!!" "குட் கேர்ள்..!!" "அசோக்.." "ம்ம்..??" "எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் நீதான் அசோக்.. நீ எப்போவும் என்கூடவே இருடா.. சரியா..?" "இருக்குறேன் திவ்யா.. இருக்குறேன்.. எப்போவும் உன் கூடவே இருக்குறேன்..!!" திவ்யாவின் கூந்தலை இதமாய் வருடிக் கொடுத்துக்கொண்டே அசோக் சொன்னான். திவாகருக்கு திவ்யாவின் வீட்டு முகவரி தெரியாது. ஆனால் அவள் எந்த காலேஜில் படிக்கிறாள் என்ற விவரம் தெரியும். திவ்யாவிடம் இருந்து அந்த மெயில் சென்ற அடுத்த நாளே அவளை தேடி காலேஜுக்கு சென்றுவிட்டான். திவ்யாவிடம் பேசவேண்டும் என்று காலில் விழாத குறையாக கெஞ்சினான். "ப்ளீஸ் திவ்யா.. ஏன் இப்படி எல்லாம் பண்ற..? எனக்கு எதுவுமே புரியலை..!!" "உங்களுக்கு எதுவும் புரியவேணாம் திவாகர்.. நாம லைஃப்ல ஒண்ணுசேர முடியாது.. அது மட்டும் உங்களுக்கு புரிஞ்சா போதும்..!!" "திவ்யா நான் சொல்றதை கொஞ்சம் கேளு.. எனக்கு கொஞ்ச நேரம் டைம் கொடு.. நாம பேசலாம்..!!" "எனக்கு உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை.. தயவு செஞ்சு இனிமே இங்க வந்து நின்னு.. இந்த மாதிரி தொந்தரவு பண்ணாதீங்க..!! என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க..!!" "திவ்யா ப்ளீஸ்..!!" "உங்களுக்கு ஒருதடவை சொன்னா புரியாதா..?? ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்க..?? உங்களை கையெடுத்து கும்பிடுறேன்.. போயிடுங்க இங்க இருந்து..!!" திவ்யா முகத்தில் அறைந்த மாதிரி பேச, திவாகர் நிஜமாகவே திகைத்துப் போனான். அப்பாவியான திவ்யாவா இப்படி எல்லாம் பேசுவது என நம்பமுடியாமல் பார்த்தான். அசோக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டோமோ என இப்போது வருந்தினான். படபடவென பொரிந்து தள்ளிவிட்டு செல்கிற திவ்யாவின் முதுகையே வெகுநேரம் வெறித்துப் பாத்தவாறு நின்றிருந்தான். திவாகரிடம் வீராப்பாக பேசினாலும், திவ்யாவால் உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்குவது கடினமான காரியமாகவே இருந்தது. தனியாக சென்று அமர்ந்துகொண்டு, தலையை கவிழ்த்துக்கொண்டு நெடுநேரம் அழுவாள். எந்த நேரமும் ஒருவித சோகம் அப்பிய முகத்துடனே சுற்றி திரிந்தாள். தான் முதல்முதலாக கண்ட கனவு இப்படி பாதியில் கலைந்து போனதே என்ற சோகம்..!! அசோக்கிற்கு திவ்யாவை பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் விரைவில் அவள் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. முடிந்த அளவுக்கு அவளுடன் அதிகமான நேரத்தை செலவழித்தான். ஏதாவது மொக்கை ஜோக் அடித்து அவளை சிரிக்க வைத்து, அவளுடைய மனதை இலகுவாக்க முயன்றான். அந்த மாதிரியே ஒரு மூன்று நாட்கள் கழிந்தன.அது ஒரு ஞாயிறுக்கிழமை.. நண்பகல் பதினோரு மணி இருக்கும்..!! காலை உணவு சாப்பிட அக்கா வீட்டிற்கு வந்திருந்த அசோக், அப்புறம் அவ்வளவு நேரம் திவ்யாவின் அறையில்தான் கழித்திருந்தான். சிகரெட் பிடிக்கவேண்டும் போலிருக்க, திவ்யாவிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் சென்ற படிக்கட்டுகள் ஏறி மொட்டை மாடியை அடைந்தான். அடைந்தவன் அங்கே தன் அக்கா நின்றிருப்பதைக் கண்டதும் திருதிருவென விழித்தான். சித்ரா அப்போதுதான் வாஷிங் மெஷின் துவைத்து பிழிந்த துணிகளை, இரண்டு பக்கெட்டுகளில் அள்ளிக்கொண்டு மாடிக்கு வந்திருந்தாள். குறுக்கு மறுக்காக கட்டப்பட்டிருந்த கொடிகளில் தொங்கிய கிளிப்புகளை எடுத்தவாறே, கொண்டு வந்திருந்த துணிகளை காயப் போட தயாராகிக் கொண்டிருந்த போதுதான், அவளுடைய தம்பி வந்து அங்கு நின்றான். திருதிருவென விழித்த தம்பியை ஒரு நமுட்டுப்பார்வை பார்த்தவாறே, கேலியான குரலில் கேட்டாள். "என்னடா.. புகை விட வந்தியா..?" "புகையா..?? அ..அதெல்லாம் ஒன்னுலையே..??" "ஏய்.. நடிக்காதடா..!! எல்லாம் எனக்கு தெரியும்.. வேற எதுக்கு இந்த உச்சி வெயில்ல மொட்டை மாடிக்கு நீ வரப் போற..?" "ம்ம்.. என்னைய நல்லா புரிஞ்சு வச்சிருக்குற.. சரி நான் போயிட்டு அப்புறம் வரேன்.." "அடச்சீய்.. இங்க வா..!!" "என்ன..?" "தம்மடிக்கத்தான வந்த..?" "ம்ம்.." "அப்புறம் எங்க ஓடுற..?" "அதான் நீ இருக்கியே..?" "பரவால.. வா.. வந்து அடி.." "அ..அதெப்படிக்கா உன் முன்னாடி..??" அசோக் இழுத்தான். "பரவாலடா.. என் தம்பி தம்மடிக்கிற ஸ்டைல பார்க்கனும்னு எனக்கு கொள்ளை நாளா ஆசை.. வா.. வந்து அடி..!!" சித்ரா சொல்லிவிட்டு பக்கெட்டில் இருந்த துணி ஒன்றை எடுத்து.. விரித்து பிடித்து.. ஒரு உதறு உதறி.. கொடியில் காயப் போட்டாள். அசோக் கொஞ்ச நேரம் தலையை சொறிந்தவாறே நின்றிருந்தான். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்துக் கொண்டான். தயங்கி தயங்கி புகையை வெளியிட்டான். அசோக் அவஸ்தையாக புகைப்பதையே ஓரக்கண்ணால் பார்த்து சிரித்த சித்ரா, ஒவ்வொரு துணியாக எடுத்து கொடியில் விரித்து போட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கொடி நெட்டுக்க துவைத்த புடவைகளை விரித்து சித்ரா காயப்போட்டிருக்க, இப்போது அசோக்கிற்கு அந்தப்பக்கம் நின்ற அக்கா கண்ணுக்கு தட்டுப்படவில்லை. துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றான். புகை விட்டுக்கொண்டே அக்காவிடம் கேட்டான். "எத்தனை நாளாச்சு தொவைச்சு..? எக்கச்சக்கமா தொவைச்சு எடுத்துட்டு வந்திருக்குற..?" "ஒருவார அழுக்குடா.. ஒண்ணா சேர்ந்துடுச்சு..!!" "ம்ம்ம்ம்.." "அப்பா.. காலைல இருந்து வேலை பெண்டு நிமிந்து போச்சு.." "ஹ்ஹா.. ரொம்பதான் சலிச்சுகுற..? நீயா எல்லாத்தையும் தொவைச்ச..? வாஷிங் மெஷின்தான தொவைச்சது..?""ரொம்பத்தாண்டா கொழுப்பு உனக்கு.. சமைக்கிறது, வீட்டை சுத்தம் பண்றதுலாம் எந்த கணக்குல சேர்க்குறது..? நான் ஒருத்தியா கெடந்து அல்லாடுறேன்.. யாருக்காவது கொஞ்சமாவது அக்கறை இருக்கா பாரேன்..!! உன் பிரண்டு இருக்காளே.. அந்த திவ்யா மகாராணி.. அட்லீஸ்ட் இந்த வேலையவாவது செய்றதுதான..? காலைல இருந்து ஹாயா ரூமுக்குள்ளயே படுத்து கெடக்குறா..!!" "அவ பாவம்க்கா.. திட்டாத அவளை..!!" "அவளை சொன்னா உனக்கு பொறுக்காதே..?" "அப்படி இல்லக்கா.. அவ ரொம்ப நொந்து போயிருக்கா.. கொஞ்ச நாள் அவளை எதுவும் சொல்லாத..!!" "நொந்து போயிருக்காளா..? ஏன்..?" "என்ன.. தெரியாத மாதிரி கேக்குற..? எல்லாம் அந்த திவாகர் போனதை நெனச்சுத்தான்..!!" "அவன் எங்க போனான்..? நீதான் அவனை பத்தி விட்டுட்ட..!!" சித்ரா கிண்டலாக சொன்னாள். "வெளையாடதக்கா.. நான் எங்க பத்தி விட்டேன்..? அவங்க பிரிஞ்சதுக்கு நான் ஒன்னும் காரணம் இல்ல..!!" "அப்புறம் யாரு..??" "அந்த திவாகர்தான்..!! அவர் சரியில்லக்கா..!!" "ம்ம்ம்ம்.. எனக்கென்னவோ நீ சொன்னதை இன்னும் நம்ப முடியலைடா..!!" "எதை..?" "அதான்.. அந்த திவாகரே உன்கிட்ட வந்து சவால் விட்டான்னு சொன்னியே..!!" "அட உண்மைதான்க்கா.. அந்த ஆளுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ்..!! தன்னை மீறி என்ன நடந்திடப் போகுதுன்னு நெனைப்பு..!!" "ம்ஹ்ம்ம்.. அவன் போனதுக்காக அவ ஃபீல் பண்றாளோ இல்லையோ.. அக்கா ரொம்ப ஃபீல் பண்றேண்டா தம்பி..!!" "நீ ஃபீல் பண்றியா..? ஏன்..?" "ஆமாம்.. நீ அந்த திவ்யாவை உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த.. எனக்கு பக்கு பக்குன்னு இருந்தது..!! அப்போத்தான் அந்த திவாகர் வந்து சேர்ந்தான்.. என் தம்பி தப்பிச்சுட்டான்னு நான் நிம்மதியா இருந்தேன்..!! இப்போ.. மறுபடியும் மாட்டிக்குவானோன்னு பயமா இருக்கு..!!" "ஹாஹா..!! நீ பயப்படலாம் தேவையே இல்ல..!!" "ஏன் அப்படி சொல்ற..?" "திவ்யாவுக்கு என் மேல லவ்லாம் வரும்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே போயிடுச்சுக்கா..!!" "அவ உனக்காக உருகுறது மருகுறதுலாம் பார்த்தா.. எனக்கென்னவோ அப்படி தோணலை..!! கூடிய சீக்கிரம் அந்த திவாகர்ட்ட வுட்ட லவ் டயலாக்லாம் உன்கிட்ட வுட போறா பாரு..!!" "ஹாஹா..!! அவ லவ் டயலாக் விடுறாளோ இல்லையோ.. நீ சொல்றதை கேக்குறப்போ எனக்கு குளுகுளுன்னு இருக்குது..!!" அசோக் சிரிப்புடன் சொல்ல, சித்ரா இப்போது கிண்டலான குரலில் சொன்னாள். "ஓஹோ.. குளுகுளுன்னு இருக்கா..?? இருக்கும் இருக்கும்..!! பாவிப்பயலே.. உன்னை எவ்வளவு நல்லவன்னு நெனச்சேன்.. இப்படி பண்ணிட்டியடா..?" "நானா..? நான் என்ன பண்ணினேன்..?" "உன் லவ் சக்சஸ் ஆகணும்னு.. இல்லாததும் பொல்லாததுமா சொல்லி.. இப்படி ரெண்டு அப்பாவி காதல் கிளிகளை பிரிச்சுட்டியேடா..!! நீ நல்லாருப்பியா..?" நக்கலாக சொன்ன சித்ரா, கிளிப்புகள் எடுப்பதற்காக தொங்கிக்கொண்டிருந்த துணிகளை விலக்கி அந்தப்பக்கமாக சென்றாள். "ஆமாம்.. நான்தான் என் லவ்வுக்காக அவங்க லவ்வை ப்ளான் பண்ணி பிரிச்சுட்டேன்.. ஏன்க்கா நீ வேற..?" சித்ராவுக்கு பதில் சொல்லிக்கொண்டே அசோக்கும், துணிகளை விலக்கி அந்தப்பக்கம் சென்றான். சென்றவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றான். அங்கே சித்ரா ஒருமாதிரி மிரட்சியாக நின்றிருக்க, அவளுக்கு அருகே திவ்யா முகமெல்லாம் ஆத்திரம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தாள்..!!!அதுவரையான தன் வாழ்க்கையில் அந்த மாதிரியான ஒரு மோசமான சூழ்நிலையை அசோக் சந்தித்ததே இல்லை. நடந்ததை நம்ப முடியவில்லை அவனுக்கு..!! விவரம் தெரிந்த நாளில் இருந்தே திவ்யாவின் மீது அவனுக்கு விருப்பம் உண்டு..!! தனது காதலை எப்படி எல்லாம் திவ்யாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று எத்தனையோ நாட்கள் கனவு கண்டிருக்கிறான்.!! ஆனால்.. இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையில் தன் காதல் அவளுக்கு தெரிய வரும் என்று நிச்சயமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. திக்கித்துப்போய் நின்றிருந்தான்..!! திவ்யாவும் கடந்த ஒரு நிமிடமாக தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவளாகவே காட்சியளித்தாள். தான் அத்தனை நாட்களாய் நம்பிய அசோக்கா இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறான் என்பது போல அவனையே வெறுப்பாக பார்த்தாள். அவளது கண்கள் கலங்கி, நீரை பொழிய ஆரம்பித்தன. அவளுடைய உதடுகள் படபடத்தன. அந்த உதடுகளை பற்களால் அழுத்திக் கடித்தவாறே, அசோக்கை எரித்து விடுவது போல பார்த்தாள். அப்புறம்.. "ச்சை..!!" என்று அசோக்கின் மீது ஒரு அருவருப்பான பார்வையை வீசிவிட்டு, திரும்பி விடுவிடுவென நடந்தாள். படபடவென படியிறங்கி கீழே சென்றாள். அசோக் திகைத்துப் போனவனாய் தன் அக்காவை திரும்பி பார்த்தான். அவளும் இப்போது அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். "எ..என்னடா இது.. இப்படி ஆயிடுச்சு..? நான் ஏதோ வி..விளையாட்டுக்கு சொல்லப்போய்..?? இப்போ என்னடா பண்றது..?" "அ..அதான்க்கா எனக்கும் புரியலை..!!" "போடா.. போய் அவளை சமாதானப் படுத்து.. போ..!!" அக்கா சொல்ல அசோக் இப்போது சுதாரித்துக் கொண்டான். அவனும் அவசரமாக படியிறங்கி கீழே ஓடினான். வீட்டுக்குள் நுழைந்தான். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். அறைக்கதைவை தள்ளி, உள்ளே புகுந்தான். உள்ளே.. திவ்யா ட்ரசிங் டேபிள் டிராயரை வெளியே இழுத்து வைத்து.. அதற்குள் எதையோ அவசரமாக தேடிக் கொண்டிருந்தாள். அசோக் வந்ததை அவள் கவனிக்கவில்லை. அசோக்தான் அவளை அழைத்து அவளுடைய கவனத்தை கலைத்தான். "தி..திவ்யா..!!" இப்போது திவ்யா அசோக்கை ஏறிட்டு முறைத்தாள். "எங்க வந்த..?" என்று வெறுப்பை உமிழ்ந்தாள். "தி..திவ்யா.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!!" "இன்னும் என்ன சொல்லப் போற..? இன்னும் என்னெல்லாம் சொல்லி என்னை பைத்தியக்காரியா ஆக்கப் போற அசோக்..? ம்ம்..??" திவ்யா கத்தினாள். "திவ்யா.. ப்ளீஸ்.." "எப்படி அசோக்.. எப்படி உன்னால இப்படி ஒரு காரியம் செய்ய முடிஞ்சது..?? நான் உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்..?? கடவுளை விட உன் மேல நெறைய நம்பிக்கை வச்சிருக்கேன்னு சொன்னேனே..?? உனக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருந்திருந்தா.. அந்த நம்பிக்கைக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிருப்பியா..? 'எல்லாம் என் நல்லதுக்காக பண்றேன்.. என் நல்லதுக்காக பண்றேன்..'ன்னு சொல்லிட்டு.. இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டியே..?? உனக்காக நான் என் காதலையே தூக்கி எறிஞ்சனே.. ஆனா நீ..???? உன் காதலுக்காக.. என் வாழ்க்கைல கேம் ஆடிட்டியே..?? ச்சீய்..!!!" திவ்யாவின் வார்த்தைகள் அசோக்கின் உடம்பெல்லாம் 'சுளீர்.. சுளீர்..' என சாட்டை சொடுக்கின..!! அவனது உச்சந்தலையில் 'படார்.. படார்..' என சம்மட்டியை இறக்கின..!! "ஐயோ.. நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்ட திவ்யா..!!" "இல்ல.. இப்போத்தான் நான் எல்லாம் சரியா புரிஞ்சிக்கிட்டேன்..!! நீ என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சப்புறந்தான் எனக்கு எல்லாமே தெளிவா புரியுது..!!" "எ..என்ன சொல்ற நீ..?" "ஆரம்பத்துல இருந்தே உனக்கு திவாகரை புடிக்கலை.. எங்க லவ்வை புடிக்கலை.. எப்படியாவது எங்க லவ்வை கெடுக்குறதுலயே குறியா இருந்திருக்க நீ.." "இ..இல்ல திவ்யா..!!" "நடிக்காத..!! அன்னைக்கு.. திவாகர் என்கிட்டே ஃபர்ஸ்ட் டைம் 'ஐ லவ் யூ' சொன்னப்போ.. நான் அவரை லவ் பண்ணலைன்னு சொல்ல சொன்னியே.. ஏன்..?? எங்க காதலை கெடுக்கனும்ன்ற கெட்ட எண்ணம்தான..?" திவ்யா அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்க, அவன் திணறினான்."இ..இங்க பாரு திவ்யா.. அன்னைக்கு நான் அந்த மாதிரி எண்ணத்துல சொன்னது என்னவோ உ..உண்மைதான்.. ஆனா.. அப்புறம்.." "அப்புறம் என்ன..?? திடீர்னு நல்லவனா மாறிட்டியோ..??" "உனக்கு புரியலை.. அதுக்கப்புறம்.. அவர் திரும்ப வந்ததுக்கப்புறம்.. நான் நெஜமாவே உங்களை சேர்த்து வைக்க நெனச்சேன்..!!" "பொய் சொல்லாத அசோக்..!!" "ஐயோ.. இல்ல திவ்யா.. அதுதான் உண்மை..!!" "இல்ல.. இல்ல..!! பொய்..!! நீ சொன்ன பொய்யெல்லாம் நான் கேட்டு ஏமாந்தது.. இன்னைக்கு மொட்டை மாடியோட போயிடுச்சு..!! எனக்கு எல்லாம் தெரியும்..!!" "ப்ளீஸ் திவ்யா.. என்னை நம்பு.. நான் சொல்றது உண்மைதான்..!!" அசோக் கெஞ்சினான். "அப்புறம் ஏன் திருவிழா அன்னைக்கு அப்படி சொன்ன..?" "எ..என்ன சொன்னேன்..?" அசோக் மிரட்சியாகவே கேட்டான். "திவாகர் சூசயிட் பண்ணப்போறேன்னு சொல்லிட்டு இருந்தப்போ.. பட்டுன்னு காலை கட் பண்ணிட்டு என்னையும் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணினியே.. அது ஏன்..? 'திவாகர் செத்து போயிடட்டும்.. நம்ம ரூட்டு கிளியர் ஆகும்..'னு ஒரு கேவலமான புத்திதான..?? ச்சை..!!!! உன் காதல் சக்சஸ் ஆகுறதுக்காக ஒரு உசுரை கொல்ல கூட தயங்காத பெர்வர்ட் நீ..!! அப்படி என்ன வெறி உனக்கு..??? அப்படி என்ன என் மேல வெறி உனக்கு..???" திவ்யா ரவுத்திரமாக அலற, அசோக் அப்படியே மிரண்டு போனான். பேச்சிழந்தான். சிறு வயதில் இருந்தே அன்பில் நனைந்த வார்த்தைகளையே திவ்யாவிடம் இருந்து கேட்டறிந்த அசோக், இப்படி அவள் அமிலத்தில் தோய்ந்த வார்த்தைகளை அள்ளி வீச.. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வேதனையில் வெந்து துடித்தான். அவனையும் அறியாமல் அவனது கண்கள் பொலபொலவென நீரை வடிக்க ஆரம்பித்தன. "தி..திவ்யா.. நீயா இப்படி இல்லாம் பேசுற..? நா..நான் உன் அசோக் திவ்யா..!!" என்று பரிதாபமாக சொன்னான். "இல்ல.. நீ என் அசோக் இல்லை..!! என் அசோக் ரொம்ப நல்லவன்.. ரொம்ப ரொம்ப நல்லவன்.. என் பெஸ்ட் ஃபிரண்ட்..!! அவன் கொஞ்ச நேரம் முன்னாடி செத்து போயிட்டான்..!! நீ என் எதிரி.. உலகத்துலேயே நான் ரொம்ப ரொம்ப வெறுக்குற நம்பர் ஒன் எதிரி..!! ச்சை.. உன்கூட பேசுறதே பெரிய பாவம்..!! இனிமே பேச மாட்டேன்.. பேசவே மாட்டேன்..!! உன் மூஞ்சிலையே முழிக்க மாட்டேன்..!!" "ஓ..!!! பே..பேச மாட்டியா.. என்கூட பேசகூட மாட்டியா திவ்யா..?" "ஏன்.. என்னால உன்கூட பேசாம இருக்க முடியாதுன்னு நெனைக்கிறியா..?? என்னைப் பத்தி உனக்கு இன்னும் சரியா புரியலை..!! என்னை மாதிரி யாரையும் விரும்ப முடியாது.. அதே மாதிரி.. என்னை மாதிரி யாரையும் வெறுக்கவும் முடியாது..!! பதினஞ்சு வருஷமாச்சு.. உன் அக்காவோட பேசி..!! அவளாவது என் உடம்புல சூடு போட்டா.. நீ மனசை குத்தி கிழிச்சு தீயில தூக்கி போட்டுட்ட அசோக்..!!" வெறுப்பாக சொன்ன திவ்யா மீண்டும் அந்த ட்ராயரில் பரபரவென்று எதையோ தேடினாள். அசோக் திக்கித்துப்போய் நின்றிருக்க, திவ்யா தேடியது சில வினாடிகளிலேயே அவளது கையில் சிக்கியது..!! அது.. மூன்று நாட்களுக்கு முன்பாக அவள் கழட்டி தூக்கி எறிந்த சிம் கார்ட்..!! உடனடியாய் அதை தனது செல்போன் கழட்டி செருகிக் கொண்டாள்..!! அணைந்திருந்த செல்போனை உயிர்ப்பித்துக்கொண்டே, அசோக்கிடம் திரும்பி ஆத்திரமாக சொன்னாள்..!! "நான் என் காதலனோட பேசப் போறேன்.. கதவை மூடிட்டு நீ கொஞ்சம் வெளில போறியா..?? எனக்கு ப்ரைவசி வேணும்..!!" அவ்வளவுதான்..!!! இதயத்தில் இடி விழுந்தாற்போல ஒரு நிலையை அசோக் அடைந்தான்..!!!! எந்திரம் மாதிரி திரும்பி அந்த அறையை விட்டு வெளியேறினான்..!! உயிரற்ற ஜடம் ஒன்று எழுந்து நடமாடுவது போல.. வீட்டு வாசலை நோக்கி நடந்தான்..!! எதிரே வந்த சித்ரா.. 'தம்பி.. என்னாச்சுடா.. என்னாச்சு.. ஏன்டா ஒரு மாதிரி பாக்குற..?' என்று கேட்டது அவன் காதில் விழவே இல்லை..!!நம்பிக்கை பற்றியும் , நம்பிக்கை துரோகம் பற்றியும் முன்பே சொன்னேன் அல்லவா..? அதை சற்று ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்..!! இப்போது அதை சார்ந்த வேறொரு உண்மையை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன்..!! மனித மனதில் நம்பிக்கையை விதைப்பது மிகவும் கடினம்..!! பொறாமையும், பழியுணர்வும், சுயநலமும், சூழ்ச்சியும் கொண்ட இந்த உலகத்தில்.. மனித மனதில் ஒருவர் மீதான நம்பிக்கையை விதைப்பது மிக மிக கடினம்..!! சிறுவயதிலேயே திவ்யாவின் மனதில் அசோக் விதைத்த நம்பிக்கை விதை, வேரூன்றி வளர்ந்து ஒரு ஆலமரம் கணக்காக பிரம்மாண்டமாய் நின்றிருந்தது..!! ஆத்திரத்திலும், அவசரத்திலும், திவாகர் மீது இருந்த எரிச்சலிலும் அசோக் செய்த காரியம்.. ஒரே நொடியில் அந்த ஆலமரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது..!! நம்பிக்கையை உருவாக்குவது கடினமான காரியம் என்றால், உருவாக்கிய நம்பிக்கை உருக்குலைந்து போவது மிக மிக கொடுமையான விஷயம்..!! தனக்கு பிடித்த ஒருவருக்கு தன் மீதான நம்பிக்கை செத்து போய் விட்டது என்பதை அறிவது யாருக்குமே மிகுந்த வலியை தரக்கூடியது..!! அசோக்கிற்கு அதுதான் நிகழ்ந்திருக்கிறது..!! அசோக் மிக மிக மோசமான மனநிலையில் இருந்தான். விரக்தியின் உச்சம் என்ன என்பதை முழுவதுமாய் உணர்ந்தான். எப்படி என்று உதாரணம் சொல்ல வேண்டுமானால்.. 'சாலையில் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில், எதிரே வரும் லாரி தன்னை அடித்து தூக்கினால் கூட நன்றாக இருக்குமே' என்றெல்லாம் அவனுடைய காயம்பட்ட மூளை, அறிவில்லாமல் சிந்தித்தது..!! திவ்யாவுடைய இதய சிம்மாசனத்தில், ஒரு சக்கரவர்த்தி போல அவன் வீற்றிருந்தது அவனுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது அவளுடைய கால் செருப்பில் படிந்திருக்கும் ஒரு தூசைப் போலவே தன்னை உணர்ந்தான். அந்த அளவுக்கு திவ்யாவின் வார்த்தைகள் அவனை சுய இரக்கம் கொள்ள செய்தன. திவ்யாவின் சுடு சொற்கள் அவனுடைய இதயத்தை கீறி ரணமாக்கியது என்றால், இனிமேல் அவள் தன்னிடம் பேசப்போவதே இல்லை என்ற நினைவு அந்த காயத்தில் எப்போதும் வெந்நீர் தெளித்து வேதனையை இன்னும் அதிகமாக்கியது. அதுவுமில்லாமல் அடுத்தநாள் காலையில் அவன் அக்கா வீட்டிற்கு சென்றபோது, எதிர்ப்பட்ட திவ்யா அவனை ஒரு அற்பப்புழு மாதிரி பார்த்த பார்வை.. இதயத்தில் இரத்தத்தையும், கண்களில் கண்ணீரையும் கசிய செய்தது..!! சாப்பிடுவதற்காக அக்கா வீட்டிற்கு செல்வதை முடிந்த அளவு தவிர்த்தான். எப்போதாவது செல்ல நேர்ந்தாலும், திவ்யா அங்கு இருக்க மாட்டாள் என்று தெரிய வந்தால் மட்டுமே சென்றான். எப்போதும் அன்பாகவே பார்க்கும் திவ்யாவின் கண்கள், இப்போது அருவருப்பான பார்வையை வீசுவதை அசோக்கால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. செல்வாவுடன் சேர்ந்துகொண்டு, புவனா மெஸ்ஸிலேயே பாதி நேரம் சாப்பிடுவான். மீதி நேரம் பட்டினிதான்..!! நொந்து போயிருந்த அசோக்கிற்கு செல்வாதான் மிகவும் ஆறுதலாக இருந்தார். திவ்யாவோ வேறு மாதிரி மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அசோக்கின் மீது வெறுப்பில் இருந்தாள். அவன்தான் நாடகமாடி, திவாகரை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டான் என்றே நம்பினாள். 'அசோக்கை எவ்வளவு நம்பினோம்.. அவன் இப்படி செய்துவிட்டானே..' என்ற வெறுப்புதான் அவளுடைய நெஞ்சில் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. அசோக்கை நம்பி திவாகரை நிறைய காயப்படுத்திவிட்டோமே என்று மனம் வருந்தினாள். திவாகருக்கு திவ்யா திரும்ப கால் செய்தபோது, அவன் வேண்டும் என்றே ரொம்பவும் பிகு செய்தான். 'உன்னால் நான் எப்படி துடித்து போனேன் தெரியுமா..? வாழ்க்கையையே வெறுத்து விட்டேன்..!! இனி எனக்கு எதுவும் வேண்டாம்.. நான் இப்படியே இருந்து கொள்கிறேன்..!!' என்றெல்லாம் சொல்லி, திவ்யாவின் குற்ற உணர்ச்சியை கொழுந்து விட்டு எரிய வைத்தான். திவ்யா அழுது புலம்பி, திவாகரின் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடினாள். அதன் பிறகே அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்தான். சித்ராவுக்கு அன்று அறைக்குள் நடந்த விஷயம் முழுவதுமாக தெரியாவிட்டாலும், என்ன நடந்திருக்கும் என்று எளிதாக யூகிக்க முடிந்தது. தம்பி மனம் காயப்பட்டிருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள். அவனிடம் கேள்வி கேட்டு அந்த காயத்தை கிளற வேண்டாம் என்று நினைத்தாள். அவன் வீட்டிற்கு வருவதை தவிர்க்கவும், விட்டுப் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன், பொறுமையாக இருந்தாள். கார்த்திக்கின் பாடுதான் ரொம்ப கஷ்டம்..!! வீட்டில் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன என்று அவனால் உணர முடிந்தது. ஆனால் அது என்ன என்று சுத்தமாக அவனுக்கு விளங்கவில்லை. திவ்யாவும், அசோக்கும் திடீரென எலியும் பூனையுமாய் மாறிப்போனது ஏனென்று அவனுக்கு புரியவில்லை. அசோக்கிடமோ, தங்கையிடமோ அதுபற்றி கேட்டால்.. அவர்கள் கடித்து குதறி விடுவார்கள் என்று பயம்..!! மனைவியிடம் கேட்டால், அவளோ 'உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்..?' என்று யாரோ மூன்றாம் மனுஷனிடம் சொல்வது போல முகத்திலறைந்த மாதிரி சொன்னாள்.அப்புறம் ஒரு பத்து நாட்களுக்கு மேற்சொன்ன நிலைதான்..!! அந்த பத்து நாட்களில் திவ்யாவிடம் பேசாமல் அசோக்கிற்கு பைத்தியம் பிடித்தாற்போல இருந்தது. திவ்யா தன்னை காதலிக்க வேண்டாம்.. தன்னை புரிந்துகொண்டு தன்னுடன் வந்து பேசிவிட மாட்டாளா என்றே ஏங்கினான்..!!

அவர்களது பிரிவு அசோக் அளவிற்கு திவ்யாவை பாதிக்கவில்லை என்றாலும், அவளும் அசோக்கின் இன்மையை உணராமல் இல்லை. அவள் பார்க்கும் பொருட்கள் எல்லாம், செல்லும் இடங்கள் எல்லாம் அவளுக்கு அசோக்கை நினைவு படுத்த தவறவில்லை. முதல் நாள் அசோக் எதிர்ப்பட்டபோது அவனை அருவருப்பாய் பார்த்து விரட்டினாள் எனினும், அடுத்த நாள் அதே நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டபோது, அசோக்காக இருக்குமோ என்று தன் அறையில் இருந்து எட்டிப் பார்த்து ஏமாந்தாள். 'ஏன்டா அசோக் இப்படி பண்ணின.. ஏன்..? போடா..!!' என்று மனதுக்குள்ளேயே அசோக்கை அடிக்கடி திட்டிக்கொண்டாள். அசோக்கும் திவ்யாவும் பிரிந்த பதினோராம் நாள்.. மாலை ஐந்து மணி..!! திவாகர் அந்த அகலமான, ஆள்நடமாட்டமற்ற சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான். திவ்யாவுடைய கல்லூரி அவனுக்கு இடப்புறமாக கடந்து சென்றது. கல்லூரியை தாண்டியதும், காரின் வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டான். மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டே, சாலையின் இடப்புறமாக பார்வையை வீசிக்கொண்டே சென்றான். ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் அவ்வாறு கடந்ததும், தூரத்தில் ஒரு மரநிழலில் நின்றுகொண்டிருந்த திவ்யா கண்ணுக்கு அகப்பட்டாள். அவள் முன்பாக ஒரு மாருதி ஆல்ட்டோ நின்று கொண்டிருந்தது. இவன் அந்த காரை நெருங்க நெருங்கவே அந்த கார் கிளம்பி வேகமெடுத்து பறந்தது. திவ்யா முதலில் திவாகரின் காரை கவனிக்கவில்லை. கிளம்பிய காரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எதேச்சையாக திரும்பி திவாகரின் காரை பார்த்தவள், அவசரமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள். அவளுடைய உதட்டில் உடனடியாய் ஒரு செயற்கை புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. கதவு திறந்து காருக்குள் ஏறிக் கொண்டாள். "யார் அது திவ்யா..?" திவாகர் ஆர்வமாய் கேட்டான். "எது..??" "அந்த கார்ல..?" "ஓ.. அதுவா..? அ..அவ.. என் க்ளாஸ்மேட்..!!" "என்னவாம்..?" "ஏண்டி இங்க தனியா நிக்குறேன்னு கேட்டா.. பிரண்டுக்காக வெயிட் பண்றேன்னு சொன்னேன்.. போயிட்டா.. அவ்ளோதான்..!!" "ஓ.. ஓகே ஓகே..!! ம்ம்ம்.. கெளம்பலாமா..?" "ம்ம்.." திவாகர் கியர் மாற்றி காரை கிளப்பினான். கழட்டியிருந்த குளிர் கண்ணாடியை மீண்டும் கண்ணுக்கு கொடுத்துவிட்டு, ஸ்டியரிங்கை வளைத்தான். அடுத்த பத்தாவது நிமிடம் அந்த பெரிய ஷாப்பிங் மால் முன்பாக கார் நின்றது. அது ஐந்து அடுக்குகள் கொண்ட, அரைவட்ட வடிவில் கட்டப்பட்ட ஷாப்பிங் மால்..!! சென்னையில் மிகவும் பிசியான அந்த சாலையில், ஆடம்பரமாய் முளைத்திருந்தது. அந்த ஷாப்பிங் மாலின் கீழ்த்தளத்தில், கட்டிடத்துக்கு மையமாக ஒரு ஃபவுன்டைன்.. மேல் நோக்கி சரம் சரமாய் நீர் துப்பிக் கொண்டிருந்தது..!! அதை சுற்றி வெண்ணிற டேபிள்களும், டேபிளுக்கு நான்கு சிவப்பு நிற நாற்காலிகளுமாய் போடப்பட்டு.. அந்த திறந்த வெளி உணவகம்..!! வடக்கிந்திய சாட் உணவகம்..!! அங்குதான் திவ்யாவும் திவாகரும் சென்றார்கள்..!! ஃபவுன்டைன் அருகிலேயே ஒரு டேபிள் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். இருவரும் அமைதியாக மெனு கார்ட் புரட்டினார்கள். "டூ ப்ரெட் ரோல்.. ஒன் ஆலு டிக்கி.. டூ நிம்பு பானி..!!" திவாகர் பேரரிடம் ஆர்டர் செய்ய, அவ்வளவு நேரம் மெனுகார்ட் புரட்டிய திவ்யா ஏமாற்றமாய் அவனுடைய முகத்தை ஏறிட்டாள். 'என்ன சாப்பிடுகிறாய்..?' என்று தனது விருப்பத்தை அவன் கேட்கவில்லையே என்ற ஏமாற்றம் அது..!! அசோக்கும் அவளும் தனியாக ரெஸ்டாரன்ட் சென்ற நினைவுகள், இப்போது ஏனோ பட்டென்று அவள் உள்ளத்தில் வந்து அலை அலையாய் மோதின..!! "ப்ச்.. சைட் அடிக்கிறதுக்குத்தான் ரெஸ்டாரன்ட் வர்றியா நீ..? ஜொள்ளு வுட்டது போதும்.. இந்தப்பக்கம் திரும்பு..!!" திவ்யா அசோக்கின் தலையில் குட்டுவாள். "ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ... விட மாட்டியே நீ.. வில்லி..!!" அசோக் உச்சந்தலையை தேய்த்து விட்டுக் கொள்வான். "நான் ரோட்டியும், பன்னீர் பட்டர் மசாலாவும் ஆர்டர் பண்ணப் போறேன்டா.. உனக்கு என்ன வேணும்..??" "ஆமாம்.. நான் என்ன ஆர்டர் பண்ணினாலும், கடைசில நீதான் அதையும் சேர்த்து நல்லா மொக்கப் போற.. ஏதோ ஒன்னு நீயே ஆர்டர் பண்ணித்தொலை..!!" என்று சலிப்பாக சொல்பவன், அடுத்த நொடியே "ஹேய் திவ்யா.. அந்த பச்சை சல்வாரை பாரேன்.." என்று உற்சாகமாவான்.என்னை காதலிக்கிறான் என்று நான் கொஞ்சம் கூட உணர முடியாதவாறு.. எப்படி எல்லாம் நடித்து ஏமாற்றிவிட்டான்..??' திவ்யா பழைய நினைவு கலைந்து மீண்டாள். இப்போது திவாகர் திவ்யாவிடம் திரும்பினான். திவாகருக்கு திவ்யாவுடைய ஏமாற்றப் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. கேஷுவலாக கேட்டான்."ப்ரெட் ரோல் உனக்கு பிடிக்கும்ல திவ்யா..?" "ம்ம்.. பி..பிடிக்கும்.." திவ்யா பொய் சொன்னாள். "ப்ரெட் ரோல்தான் இந்த ரெஸ்டாரன்ட்ல என்னோட ஃபேவரிட் தெரியுமா..? "ஓ.!!" "சாப்பிட்டிருக்கியா நீ..?" "ம்ம்.. சாப்பிட்டிருக்கேன்..!!" "ஹாஹா.. வேற எங்கயாவாது சாப்பிட்டிருப்ப..? இங்க சாப்பிட்டு பாரு.. அப்படியே அசந்து போயிடுவ..!!" என்று பெருமையாக சொன்னான். "இ..இல்ல.. இங்கதான் சாப்பிட்டிருக்கேன்.." "இங்கயா..? அப்போ.. ஏற்கனவே இந்த ரெஸ்டாரன்ட்க்கு வந்திருக்கியா நீ..??" "ம்ம்.. நானும் அசோக்கும் இங்க அடிக்கடி வருவோம்..!!" அவ்வளவுதான்..!! திவாகர் பட்டென டென்ஷன் ஆனான். அவனுடைய புன்னகை முகம் உடனடியாய் 'உர்ர்ர்..' என்று இறுக்கமாகிப்போனது. திவ்யாவையே சில வினாடிகள் முறைத்து பார்த்தவன், அப்புறம் "டேமிட்..!!" என்று கத்தியவாறு டேபிளை ஓங்கி குத்தினான். "எ..என்னாச்சு..?" என்றாள் திவ்யா பதற்றமாக. "கொஞ்ச நேரம் கூட அவனைப் பத்தி பேசாம இருக்க முடியாதா உன்னால..?" "ஸா..ஸாரி.." திவ்யா மெல்லிய குரலில் சொன்னாள். "ப்ச்.. பண்றதையும் பண்ணிட்டு என்ன ஸாரி..??" "ஏ..ஏதோ வாய்தவறி.." "வாய் தவறியா..?? பொய் சொல்லாத திவ்யா..!! கொஞ்ச நேரம் முன்னாடி கார்ல வரப்போ.. 'டி நகர் போக பத்து நிமிஷம் ஆகும்'னு சொன்னா.. 'இல்லை.. அசோக் கூட பைக்ல போயிருக்கேன்.. அஞ்சு நிமிஷம்தான் ஆகும்'னு சொல்ற..!! ட்ராபிக்ல நிக்கிறப்போ.. 'நம்ம நாட்டோட பிரச்னைக்கு இந்த பாப்புலேஷன்தான் காரணம்'னு சொன்னா.. 'ம்ம்.. அசோக் கூட அப்படித்தான் அடிக்கடி சொல்லுவான்'னு சொல்ற..!! அவன் பேரை சொல்லாம.. ஒரு அஞ்சு நிமிஷம்.. உன்னால என்கிட்டே பேச முடியாதா..?? என்ன நெனச்சுக்கிட்டு இருக்குற நீ..??" "ப்ளீஸ்.. விட்ருங்க.." அவளுடைய குரல் இப்போது கெஞ்சலாக ஒலித்தது. "அவனை உன்னால மறக்க முடியலைல..? எந்த நேரமும் அவன் நெனைப்பாவே இருக்கேல..?" "ச்சே.. அ..அப்டிலாம் இல்லை.. நாங்க சின்ன வயசுல இருந்தே ஒண்ணா இருந்துட்டோம்.. இ..இப்போ திடீர்னு பேசாம இருக்குறது ஒரு மாதிரி இருக்கு.. வேற ஒன்னும் இல்ல..!! சீக்கிரமே அவனை சுத்தமா மறந்துடுவேன்..!!" "இங்க பாரு திவ்யா.. அவன் உனக்கும், நம்ம காதலுக்கும் பெரிய துரோகம் செஞ்சவன்..!!" "ம்ம்.. ஞாபகம் இருக்கு..!!" "நீ அவனைப் பத்தி பேசுறது சுத்தமா எனக்கு புடிக்கலை..!!" "சரி.. இ..இனி பேசலை.. மன்னிச்சுடுங்க..!!" "டேமிட்..!! அவன் ஒரு வக்கிரமான புத்தி உள்ளவன்.. அவனைப்போய் இன்னும் நீ நெனைச்சுக்கிட்டு.." திவாகர் கோபமாக சொல்ல, திவ்யா இப்போது நெற்றி சுருக்கினாள். "என்ன பேசுறீங்க நீங்க..? அவனுக்கு என்ன வக்கிரமான புத்தி..?" "நான் தற்கொலை பண்ணிக்க போனப்போ.. நான் சாகட்டும்னு நெனச்சவந்தான அவன் ..? உன் மேல அவனுக்கு இருந்த வெறில.. ஒரு உயிர் போனாக்கூட பரவாலைன்னு நெனச்சவந்தான..?" "சேச்சே.. அப்படிலாம் அவனை நெனைக்காதீங்க.. ப்ளீஸ்.." "நான் எங்க நெனைச்சேன்.. நீதான அன்னைக்கு அவனை அப்படி திட்டினதா சொன்ன..?" "அ..அது.. அது அன்னைக்கு ஏதோ அவன் மேல எனக்கு இருந்த கோவத்துல.. ஒரு அவசரத்துல அப்படி எல்லாம் சொல்லிட்டேன்..!! ஆனா.. என் மனசார நான் அவனை அப்படி நெனைக்கலை..!! அன்னைக்கு நீங்க அவன்கிட்ட ஃபோன்ல பேசுனதை வச்சு.. நீங்க நடிக்கிறீங்கன்னு தப்பா நெனைச்சுட்டான்.. அதான் ஃபோனை கட் பண்ணிட்டான்.. மத்தபடி உங்க உயிர் போகனும்னுலாம் அவன் சத்தியமா நெனைச்சிருக்க மாட்டான்.. அப்படி எல்லாம் அவன் வக்கிர புத்தி புடிச்சவன் இல்ல..!!" "ஓஹோ..??" "ஏதோ என் மேல இருந்த ஆசைல.. இப்படி எல்லாம் பண்ணிட்டான்..!! மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்.. யாருக்கும் எந்த கெடுதலும் நெனைக்க மாட்டான்..!!" "ம்ம்.. சர்ட்டிபிகேட்லாம் பலமா இருக்குது.. ரொம்பதான் அவன் மேல நம்பிக்கை போல..?" "அப்டிலாம் இல்ல.. அதான்.. நான் அவன் மேல வச்சிருந்த நம்பிக்கையை எல்லாம்.. ஒட்டுமொத்தமா குழி தோண்டி புதைச்சுட்டானே..?" "அப்புறமும் ஏன் இப்படி அவனுக்காக உருகுற..? நீ உருகுறதை பாத்தா.. நாளைக்கே அவன் காலுல விழுந்து.. நீ திட்டுனதுக்காக மன்னிப்பு கேட்டாலும் கேட்ப போலருக்கு..!!" "நோ நோ..!! அப்டிலாம் என்னை தப்பா நெனச்சுடாதீங்க.. நான் ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டன்னா.. ஜென்மத்துக்கும் அதுதான்..!! அவன் கூட பேசுறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.. இனி எப்போவும் பேச மாட்டேன்.. என்னை பொறுத்தவரை.. எனக்கும், அசோக்குக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு..!!" திவ்யா அப்படி உறுதியான குரலில் சொல்லவும், திவாகரின் முகம் இப்போது ஒருவித மலர்ச்சிக்கு போனது. மீண்டும் அவனது உதட்டில் அந்த வசீகர புன்னகை..!! ஆர்டர் செய்த ஐட்டங்கள் டேபிளுக்கு வந்து சேர்ந்தன. இருவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். ஒரு பத்து நிமிடங்கள்..!! எல்லாம் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில்தான், திவ்யாவின் துப்பட்டாவில் சாட் மசாலா சிந்தியது. அதை வாஷ் செய்வதற்காக கை கழுவும் இடத்துக்கு சென்றாள். துப்பாட்டாவின் கறையை நீர் கொண்டு துடைத்தாள். ஓரளவு கறை நீங்கி சுத்தமானதும் திருப்தியானாள். முகத்தையும் நீர் வாரி இறைத்து கழுவி கொண்டாள். டிஷ்யூ பேப்பர் உருவி நீர் வழிந்த முகத்தை துடைத்தவாறே நிமிர்ந்தபோதுதான் அதை கவனித்தாள். அவளுக்கு எதிரே இருந்த கண்ணாடி, அவளுக்கு பின்புறம் தூரமாக அமர்ந்திருந்த திவாகரை காட்டியது. தன் செல்போனில் யாரிடமோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். ஓரிரு வினாடிகள் அதை கவனித்தவள் அப்புறம் இயல்பாக முகத்தை துடைத்துக் கொண்டு, அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை நோக்கி நடந்தாள். "வாஷ் பண்ணியாச்சா..??" திவாகர் காலை கட் செய்தவாறே கேட்டான். "ம்ம்.." என்றவாறே திவ்யா அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுமே அவளுடைய தோள் மீது கைபோட்டு, திவாகர் அவளை தன்னோடு இறுகிக் கொண்டான். திவ்யா அதை எதிர்பார்க்கவில்லை. அவன் அந்த மாதிரி திவ்யாவிடம் நடந்துகொள்வது இதுவே முதல்முறை. திவ்யாவுக்கு ஏனோ அவனுடைய செய்கை பிடிக்கவில்லை. முகத்தை சுளித்தாள். அவஸ்தையாக நெளிந்தாள். "எ..என்ன இது திவாகர்.. கையை எடுங்க.. ப்ளீஸ்.." "ஏன்.. நான் உன் தோள் மேல கை போட கூடாதா..? எனக்கு அந்த உரிமை இல்லையா..?" "இ..இருக்கு.." "அப்புறம் என்ன..?" "இ..இப்படி பப்ளிக்கா.. எல்லாரும் பாக்குறாங்க.." "பாத்தா பாத்துட்டு போகட்டும்.." "ப்ளீஸ்ங்க.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. கையை எடுங்க.. ப்ளீஸ்..!!" திவ்யா கெஞ்சவும், திவாகர் ஓரிரு வினாடிகள் அவளுடைய முகத்தையே சலனமில்லாமல் பார்த்தான். அப்புறம் அவள் தோள் மீதிருந்து கையை எடுத்துக் கொண்டான். புன்னகைத்தான். குரலை உடனடியாய் உற்சாகமாக மாற்றிக் கொண்டு சொன்னான். "சரி.. நாளைக்கு என்னோட பர்த்டே.. ஞாபகம் இருக்குல..?" "ம்ம்.. இருக்கு.." "நைட்டு பன்னண்டு மணிக்கு நீ எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணனும்.. சரியா..?" "ம்ம்.. பண்றேன்.." "நாளைக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கேன்.. கண்டிப்பா நீ கலந்துக்கனும்..!!" "பா..பார்ட்டியா..???" திவ்யா திகைத்தாள். "ஹேய் ஹேய்.. நீ நெனைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் ஃபுட்.. நோ ட்ரிங்க்ஸ்..!! ஓகேவா..?" "ம்ம்.. ஓகே.. வர்றேன்..!!" "சரி.. ப்ரெட் ரோல் கொஞ்சம் மிச்சம் இருக்கு பாரு.. சாப்பிட்ரு.." "இ..இல்லைங்க.. எனக்கு போதும்..!!" "ஏன்..?" "சாப்பிட முடியலை.. வயிறு ஃபுல் ஆயிடுச்சு..!! ம்ம்ம்.. சரி எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!" "என்ன.. அதுக்குள்ளே கிளம்பிட்ட..?" "இல்லை.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. ஒரு புக் வாங்கணும்.. புக் ஷாப் போயிட்டு அப்படியே வீட்டுக்கு போயிடுவேன்..!!" "இரு.. நான் ட்ராப் பண்றேன்..!!" "இல்ல.. பரவால.. நான் ஆட்டோ புடிச்சு போய்க்குறேன்..!!" "ஓகே.. யுவர் விஷ்..!! பை..!!" திவாகர் தோளை குலுக்கிக்கொண்டே சொன்னான். "பை.."திவ்யா சொல்லிவிட்டு தன் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். மாட்டியவள், பேகின் சைட் ஜிப் திறந்திருப்பதை ஓரிரு வினாடிகள் வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் ஜிப்பை இழுத்து மூடிவிட்டு, அந்த ஷாப்பிங் மாலின் எக்ஸிட் நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்தாள். ரோட்டின் ஓரமாய் நின்றுகொண்டு, ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று தூரமாய் பார்த்தாள். அப்போது.. ஏதேச்சையாகத்தான் அது அவளது கண்ணில் பட்டது..!! அது.. அசோக்கின் பைக்..!! ஷாப்பிங் மால் முன்பாக வரிசையாக பார்க் செய்யப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களுக்குள், இடையில் செருகப்பட்டிருந்த அசோக்கின் பைக், தனியாய் அவள் கண்களில் விழுந்தது. உடனே அவளிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. 'அசோக் இங்குதான் இருக்கிறானா..??' சில வினாடிகள் சுற்றும் முற்றும், தலையை திருப்பி திருப்பி பார்த்தாள். எங்கும் அவன் தென்படவில்லை..!! அப்புறம் தயங்கி தயங்கி மெல்ல அந்த பைக்கை நெருங்கினாள்..!! அந்த பைக்கை பார்க்க பார்க்க.. அவள் மனதுக்குள் ஒரு இனம்புரியாத அழுத்தம்.. ஒரு பிடிபடாத ஏக்கம்.. ஒரு காரணமறியாத சோகம்..!! பைக்கின் சீட்டில் அவளுடைய பிஞ்சு விரல்களை அப்படியே படர விட்டாள். பச்சை குழந்தையை தடவுவது போல வாஞ்சையாக அந்த பைக்கை தடவி கொடுத்தாள். 'எத்தனை நாட்கள் இந்த பின் சீட்டில் அமர்ந்து பயணித்திருக்கிறேன்..? இந்த கம்பியைத்தானே பிடித்துக் கொள்வேன்.. பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அவன் இடுப்பை இறுகப் பற்றிக் கொள்வேன்..? அவன் பைக்கை சீற செய்து பறக்கையில், 'ஊஊஊஊ' என்று உற்சாகமாக கத்தி ஊளையிடுவேன்..? சிக்னலுக்காக அவன் காத்திருக்கையில், என் மூக்கில் துளிர்க்கும் வியர்வையை அவன் முதுகில் துடைத்துக் கொள்வேன்..?? அவ்வளவுதானா..??? எல்லாமே முடிந்து விட்டதா..??? அந்த இனிய கனவு இப்போது கலைந்து விட்டதா..??? இனி நான் இந்த இருக்கையில் அமரவே போவதில்லையா..???' "எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் வழி விடுறீங்களா..? பைக்கை எடுக்கணும்..!!" சத்தம் கேட்டு படக்கென திரும்பிய திவ்யா அப்படியே அதிர்ந்து போனாள். அவளுக்கு பின்னால் வெகு அருகே அசோக் நின்று கொண்டிருந்தான். கண்களுக்கு கருப்பு நிறத்தில் குளிர் கண்ணாடி..!! அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் நின்றிருக்க, திவ்யாதான் உடனடியாய் முகம் வெளிறிப் போனாள். திகைத்தாள்.. தடுமாறினாள்.. பதற்றமாய் விலகி நின்றாள்.. உளறினாள்..!! "ஸா..ஸாரி.. ஸாரி.." அசோக் திவ்யாவை ஒரு பொருட்டாக கூட மதியாமல், பைக்கை வெளியே எடுத்தான். கிக்கரை ஒரே உதையாக உதைத்து கிளம்பி, சர்ரென சாலையில் செலுத்தி பறந்தான்..!! அவன் கண்ணில் இருந்து மறையும் வரை.. அதன்பிறகும் அந்த திசையையுமே.. திவ்யா நெடுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இதயம் திடுக் திடுக்கென துடிக்க, அவளுக்குள் இப்போது ஒரு புதுவித தவிப்பு..!! 'ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறான்..?? என்னைப் பார்க்க நேர்ந்ததால் வந்த கோபமா..?? அதற்குள் இந்த அளவுக்கு என்னை வெறுத்து விட்டானா..?? ஏன் வெறுக்க மாட்டான்.. நான் வீசி எறிந்த வார்த்தைகள் அப்படி..!! ஐயோ.. கடவுளே.. இப்படி கண்மண் தெரியாத வேகத்தில் பறக்கிறானே.. அவன் பத்திரமாக வீடு சென்று சேர வேண்டும்..!!' திவ்யா கண்களை மூடி மனமார கடவுளிடம் வேண்டிக் கொண்டாள். அப்புறம் ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு, அவள் செல்ல நினைத்த புக் ஷாப்பிற்கு சென்றாள். புக் வாங்கிக்கொண்டு நடந்தே சென்று மெரீனா பீச்சை அடைந்தாள். நிலவு வெளிச்சத்தில் எழும்பிய வெள்ளி அலைகளையே வேடிக்கை பார்த்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தாள். அவளுடைய நெஞ்சக் கடலிலும் பல்வேறு குழப்ப அலைகள்..!! அதையே சிந்தித்து சிந்தித்து அவள் மூளை செயலிழந்து போனது மாதிரி தோன்றியது..!! திவ்யா வீட்டுக்கு திரும்புகையில் இரவு எட்டு மணியை தாண்டியிருந்தது. லிஃப்டுக்குள் இருந்து வெளிப்பட்டதுமே வீட்டு வாசலில் நின்றிருந்த சித்ராவின் முகத்தில்தான் விழிக்க வேண்டியிருந்தது. யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள். வீட்டுக்குள் சிக்னல் கிடைக்கவில்லை போலிருக்கிறது. "ஐயோ.. அப்டிலாம் இல்லப்பா .............. ஆமாம்ப்பா .............. இல்லப்பா.. நான் ............... ம்ம்.. சரிப்பா .............. சரி சொல்றேன் .............. " அசோக்கின் அப்பா அடுத்த முனையில் இருக்கிறார் என்று திவ்யாவால் உடனடியாய் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கும் அங்கும் அலைந்து பேசிகொண்டிருந்த சித்ராவை கண்டுகொள்ளாமல், அவளை கடந்து திவ்யா வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் இருந்த டிவியில் ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதை திரும்பிகூட பாராமல் தன் அறைக்குள் சென்றாள். முகத்தை கழுவி ரெஃப்ரஷ் செய்துகொண்டு, வேறு உடை மாற்றிக் கொண்டாள். மீண்டும் வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டுக்கு வெளியே இப்போது சித்ராவை காணோம். கொஞ்ச நேரம் குழப்பமாக சித்ராவை தேடிய திவ்யா, அப்புறம் கதவை அறைந்து சாத்திவிட்டு, பக்கவாட்டு படிக்கட்டில் ஏறி மொட்டை மாடிக்கு சென்றாள். கொஞ்ச நேரம் கைகட்டி அமைதியாக நின்றிருந்தாள். இருண்ட வானத்தையும், வட்ட நிலவினையும், நிலவு கடக்கும் மேகங்களையும், மினுக்கும் நட்சத்திரங்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து, அந்த கோணத்தில் இருந்து பார்த்தால், அடுத்த தெருவில் அசோக் தங்கியிருக்கும் அறையும் அதை சுற்றிய மொட்டை மாடியும், உயரமான தென்னை மரங்களும் தெளிவாக தெரியும். அவளுடைய மனதை ஏதோ ஒரு ஏக்கம் வந்து பிசைய, தூரமாய் தெரிந்த அந்த மொட்டை மாடியையே திவ்யா வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அறைக்கு வெளியே எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பு, ஓரளவு வெளிச்சத்தை அந்த மொட்டை மாடி முழுதும் பரப்பியிருந்தது. அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அசோக் அவனுடைய அறையில் இருந்து வெளிப்பட்டான். அவன் பின்னாலேயே செல்வாவும்..!! அசோக் நன்றாக குடித்திருப்பான் போலிருக்கிறது.. அவனுடைய கால்கள் பின்னிக்கொள்ள தடுமாறினான்..!! வெளியே வந்தவன், அப்படியே மொட்டை மாடியில் நின்றவாறே டான்ஸ் ஆட ஆரம்பித்தான். சாவுக்கு ஆடுவார்களே.. அந்த மாதிரி ஒரு குத்தாட்டம்..!! கன்னாபின்னாவென்று.. நளினம் என்பது கொஞ்சமும் இன்றி அவன் இஷ்டத்திற்கு ஆடினான்..!! செல்வா அவனை சமாதானம் செய்து, அறைக்குள் மீண்டும் அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அசோக் அவருடைய பிடியில் இருந்து திமிறி விடுபட்டு, மனம் போன போக்கில் கையையும் காலையும் ஆட்டி, வெறித்தனமாக ஆடிக் கொண்டிருந்தான். அவனை நிறுத்த கொஞ்ச நேரம் முயன்று பார்த்த செல்வா, அப்புறம் அந்த முயற்சியை கைவிட்டார். கைகளை கட்டிக்கொண்டு ஓரமாய் நின்று அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அந்தக் காட்சியை பார்த்த திவ்யாவுக்கு, இதயத்தில் யாரோ முள் செருகுவது போலிருந்தது.. வலித்தது..!! அவளையும் அறியாமல் அவளுடைய கண்களில் இருந்து நீர் கசிந்தது..!! உதடுகள் படபடக்க, உடம்பெல்லாம் ஒரு வெடவெடப்பு..!! 'ஏண்டா அசோக் இப்படி ஆடுற..?? என்னடா ஆச்சு உனக்கு..?? யார் மேல உனக்கு கோவம்..?? என் மேலயா..?? என் மேலயா அசோக்..?? உன்னை ரொம்ப காயப் படுத்திட்டேனாடா..?? என்னை மன்னிச்சுடுடா அசோக்.. என்னை மன்னிச்சுடு..!! ப்ளீஸ்.. இப்படிலாம் பண்ணாதடா.. உள்ள போ.. நிம்மதியா படுத்து தூங்கு..!!' திவ்யா மனதுக்குள்ளேயே அசோக்கிடம் மன்றாடிக் கொண்டிந்தாள். அப்போதுதான்.. சற்றுமுன் அவர்கள் வீட்டில் காணாமல் போன சித்ரா, அங்கே மொட்டை மாடியில் முளைத்தாள். தம்பியின் நிலையை பார்த்து அதிர்ந்து போனாள். அவனை சமாதானம் செய்ய முயன்றாள். கைகளை பிடித்தாள். அசோக் அவளுடைய கையை வெடுக்கென உதற, ஆத்திரமுற்றவளாய் அவனுடைய கன்னத்திலேயே 'பளார்.. பளார்..' என அறைவிட்டாள்..!! அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் திவ்யாவால் அந்த காட்சியை காண சகிக்கவில்லை. கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே படியிறங்கி கீழே ஓடிப்போனாள். தன் அறைக்குள் நுழைந்து தாழிட்டவள், 'ஓ..'வென்று கத்திக்கொண்டே சென்று படுக்கையில் வீழ்ந்தாள். குலுங்கி குலுங்கி அழுதாள். அசோக்கின் நினைவுகளே அவளுடைய நெஞ்சத்தை அழுத்தியிருக்க, உணவு பற்றிய நினைப்புமின்றி, திவாகருக்கு வாழ்த்து சொல்லவும் மறந்து போனவளாய் அழுதுகொண்டே உறங்கிப் போனாள். அடுத்தநாள் மாலை.. திவ்யா சீக்கிரமே கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிவிட்டாள். கதவை திறந்து விட்ட சித்ரா, அவளை ஒரு மாதிரி கூர்மையாக பார்த்தாள். திவ்யா அவளுடைய பார்வையை கண்டுகொள்ளாமல், அவளை கடந்து உள்ளே சென்றாள். அவளுடைய அறையை அடைந்தவள், முகம் கழுவிக்கொண்டு வெளியே செல்ல.. திவாகரின் பிறந்த நாள் விருந்துக்கு செல்ல.. தயாரானாள்..!! காலையிலேயே தேர்வு செய்து, தயாராக மடித்து வைத்திருந்த புதிய உடையை எடுத்து அணிந்து கொண்டாள். திவாகருக்கு பிடிக்கவேண்டுமே என்று கவனமாக மேக்கப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். எல்லாம் முடிந்து அவள் கிளம்பும் தருவாயில்தான், அவளுடய அறையின் கதவு 'லொட்.. லொட்..' என்று தட்டப்பட்டது. 'யார் அது..?' என்று குழப்பமாய் திரும்பியவள், வாசலில் அவள் கண்ட காட்சியில், அப்படியே திகைத்து போனாள். 'திவ்யா வாசலில் அப்படி என்ன கண்டாள்..? அவளுடைய அதிர்ச்சிக்கு காரணம் என்ன..?' என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், அடுத்து வரப்போகிற அத்தியாயங்களில் நேற்று நடந்த சில சம்பவங்களை இன்னும் கொஞ்சம் அருகில் சென்று உற்று நோக்கலாம்..!!நேற்று மாலை 4.50 க்ளாஸ் முடிந்ததுமே நண்பிகளின் பார்வையில் இருந்து நைசாக நழுவி, கல்லூரி காம்பவுண்ட் விட்டு திவ்யா வெளியே வந்திருந்தாள். திவாகருக்காக அந்த மர நிழலில் காத்திருந்தாள். அடிக்கடி மணிக்கட்டை திருப்பி கைக்கடிகாரத்தை பார்த்தாள். லேசாக எரிச்சலுற்றாள். 'ச்சே.. இவர் ஏன் இப்படி செய்கிறார்..? எப்போது எங்கே சந்திப்பதாக இருந்தாலும், அரை மணி நேரம் தாமதமாகவே வருகிறார்..!! இதுவே அசோக்கானால் சொன்ன நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே வந்து நிற்பான்..!!' அதே நேரம் அவளுக்கு இன்னொரு எண்ணமும் கூடவே ஓடியது. 'சில நேரங்களில் அசோக்கிற்காக இந்த மாதிரி காத்திருக்க வேண்டியதாக இருந்தாலும், இப்படி எல்லாம் நான் அப்போது எரிச்சல் அடைந்தது இல்லையே.. அது ஏன்..??' மேலும் கொஞ்ச நேரம் அவளுடைய மூளை அந்த மாதிரியே யோசித்துக் கொண்டிருக்க, உடனடியாய் தன் தலையை சிலுப்பி, அந்த சிந்தனையை நிறுத்தினாள். 'ச்சே.. என்ன நான்..?? இப்போது எதற்காக அசோக்கையும் அவரையும் கம்பேர் செய்கிறேன்..??' திவ்யா தன்னைத்தானே கடிந்துகொண்டாள். அப்போதுதான் அவள் முன்பாக அந்த மாருதி ஆல்ட்டோ வந்து நின்றது. காரைப் பார்த்ததும் திவ்யா சற்றே துணுக்குற்றாள். அதற்குள் கார்க்கண்ணாடி கீழே இறங்கிக்கொள்ள, உள்ளிருந்து அஞ்சு கையசைத்தாள். சற்றே குழப்பமான குரலில் கேட்டாள். "ஏய்.. என்னடி இங்க நின்னுட்டு இருக்குற..?" "ஒ..ஒன்னும் இல்லடி.. சும்மாதான்.. ஆட்டோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்குறேன்..!!" திவ்யா திணறினாள். "ஆட்டோக்கா..? ஆட்டோக்குனா காலேஜ் என்ட்ரன்ஸ்லயே வெயிட் பண்ணலாமே.. இங்க வந்து நின்னுட்டு இருக்குற..?" "சு..சும்மா அப்படியே கொஞ்ச தூரம் வாக்கிங் போகலாம்னு.." "நாலு மணி வெயில்.. சுள்ளுன்னு அடிக்குது.. உனக்கு வாக்கிங் கேக்குதா..?? சரி வா.. எங்க போகணும்னு சொல்லு.. நான் ட்ராப் பண்றேன்.." "ப..பரவாலடி.. நீ கெளம்பு.. நான் ஆட்டோலேயே போயிக்குறேன்.." "ஏய்.. வான்றேல.. வா..!!" "இல்லடி.. நீ போ..!!" அவ்வளவு சொல்லியும் திவ்யா மறுக்க, அதுவுமில்லாமல் அவள் இயல்பாக இருப்பது போல் தோன்றாமல் போக, இப்போது அஞ்சுவுக்கு லேசாக சந்தேகம் வந்தது. சில வினாடிகள் திவ்யாவையே கூர்மையாக பார்த்தவள், அப்புறம் கார் இன்ஜினை சாவி திருப்பி அணைத்தாள். கதவு திறந்து வெளியே வந்தாள். கண்களை இடுக்கி திவ்யாவின் முகத்தையே குறுகுறுவென பார்த்தவள், அப்புறம் குறும்பான குரலில் கேட்டாள். "யாருக்காகடி வெயிட் பண்ணுற..?" "அதான் சொன்னனே.. ஆட்டோக்காக..!!" "அறைஞ்சுருவேன்.. உண்மையை சொல்லு..!!" "உண்மையைத்தாண்டி சொல்றேன்.." "நடிக்காத.." "நான் ஏன் நடிக்கணும்..?" "ஹாஹா.. எல்லாம் எனக்கு தெரியும்டி..!!" "என்ன சொல்ற நீ..?" "நீ யாருக்காக வெயிட் பண்ணுறேன்னு எனக்கு தெரியும்..!!" "யாருக்காக..?" "அசோக்குக்காத்தான வெயிட் பண்ணுற..?" "ப்ச்.. இல்ல.." "பொய்..!! நீயும் அவரும் மாத்தி மாத்தி உருகிக்கிறது.. லவ்வோ லவ்வோ லவ்வாங்கி பண்றது.. எனக்கு எல்லாம் தெரியும் மவளே..!!" "என்னடி லூசு மாதிரி உளர்ற..? நாங்க லவ் பண்றோமா..? அப்டின்னு அந்த அசோக் சொன்னானா..?" "அப்போ பண்ணலையா..?" "இல்லை.." "ம்ம்ம்ம்... சரி உன் மொபைலை கொடு.. எனக்கு அசோக் நம்பர் வேணும்..!!" "அது எதுக்கு உனக்கு..?" "இங்க பாரு.. இது பொண்ணுக பசங்ககிட்ட சொல்லுற டயலாக்.. ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணுகிட்ட சொல்லக் கூடாது.. நம்பர் சொல்லு.. எனக்கு அவர்கிட்ட பேசணும்.." "எதுக்குன்னு சொல்லு.. தர்றேன்.." "ம்ம்.. நீதான் லவ் பண்ணலைன்னு சொல்றியே.. அவர் வேற கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்குறாரு.. நான் அவருக்கு ரூட்டு போடலாம்னுதான்..!!" "ஓஹோ..?? ஏன்.. ஒருநாள் பேசுனதுலையே உன்னை மயக்கிட்டானா..?" இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித ஏரிச்சல் ஏறியிருந்தது. "அப்படியே வச்சுக்கோ.. நீ நம்பர் குடு..!!" "குடுக்க முடியாது.. போடீ..!!" திவ்யா கத்தினாள். "ஹாஹா.. இதுக்காகத்தான் நம்பர் கேட்டேன்.." "எதுக்காக..?" "நீ டென்ஷன் ஆகுறியான்னு பாக்குறதுக்காக..!! அப்பா.. அவரை லவ் பண்ணப் போறேன்னு சொன்னதும் எப்படி உனக்கு கோவம் வருது..!! சரி சரி.. கோச்சுக்காத கண்ணு.. எனக்கு அவரை லவ் பண்ற மாதிரிலாம் ஒன்னும் ஐடியா இல்ல..!! நீயே வச்சுக்கோ உன் ஆளை..!! நான்லாம் போட்டிக்கு வர மாட்டேன்..!!" அஞ்சு கிண்டலாக சொல்ல, திவ்யா டென்ஷனானாள். "இப்போ நீ என்கிட்டே செருப்படி வாங்காம போக மாட்டேன்னு நெனைக்கிறேன்..!!" "ஏண்டி..??" "பின்ன.. லூசு மாதிரி உளறிட்டு இருந்தா..?? உனக்கு அவன் நம்பர்தான வேணும்..? சொல்றேன் நோட் பண்ணிக்கோ.. அவனை லவ் பண்ணிக்கோ.. மேரேஜ் பண்ணிக்கோ.. என்ன எழவை வேணா பண்ணிக்கோ.. எனக்கு ஒரு கவலையும் இல்ல..!!" "ஏய்.. சீரியஸா சொல்றியா..?" "பார்த்தா எப்படி தெரியுது உனக்கு..?" "அப்போ நெஜமாவே நீ அவரை லவ் பண்ணலையா..?" "பண்ணலை பண்ணலை..!! அவன்தான் என்னை லவ் பண்றான்.. அதுகூட எனக்கு போன வாரந்தான் தெரியும்..!! அவனால நானே செம கடுப்புல இருக்கேன்.. போயிடு..!!" "அப்புறம் யாருக்காக இங்க வெயிட் பண்ணிட்டு இருக்குற..?" "நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்.. அவருக்காகத்தான் இப்போ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. போதுமா..?" "வேற ஒருத்தரா..? அது யாரு..?" "அவர் பேர் திவாகர்..!!" "அவர் எப்படி பழக்கம்..?" "ஏன்..? ஆன்லைன் மூலமா..!!" "எத்தனை நாளா அவரை உனக்கு தெரியும்..?" "ம்ம்ம்.. ஒரு ரெண்டு மூணு மாசமா..?" "அசோக்கோட லவ்வை உதறி எறிஞ்சுட்டு.. அந்த திவாகரைத்தான் நீ கல்யாணம் செய்துக்க போறியா..?" "ஆ..ஆமாம்.." திவ்யா சொல்லி முடிக்கும் முன்பே, "போடீ லூசு..!!" அஞ்சு ஆத்திரமாக கத்தினாள். "ஏண்டி கத்துற..?" "அப்புறம் என்ன..? அசோக் பத்தி நீயே எங்கிட்ட எவ்வளவு சொல்லிருக்குற.. சின்ன வயசுல இருந்து உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கார்னு..!! அவரை விட.. நேத்து வந்த அந்த திவாகர்தான் உனக்கு பெருசா போயிட்டானா..? உன்னை மாதிரி தப்பா முடிவெடுக்குற ஒருசில பொண்ணுகளாதான் எல்லா பொண்ணுகளுக்குமே கெட்ட பேர்டி.. பொண்ணுகன்னாலே நல்லவனை நம்ப மாட்டாளுகன்னு..!!" "இங்க பாரு அஞ்சு.. நீ விஷயம் தெரியாம பேசுற.. அசோக் பத்தி உனக்கு முழுசா தெரியாது..!!" "ஆமாம்.. அவரைப் பத்தி எனக்கு முழுசா தெரியாதுதான்.. அவர்கூட ஒரே ஒருநாள்தான் பேசிருக்கேன்.. கொஞ்ச நேரந்தான் ஸ்பென்ட் பண்ணிருக்கேன்..!! ஆனா அந்த கொஞ்ச நேரத்துலையே.. அவர் உன் மேல எவ்வளவு லவ் வச்சிருக்கார்னு என்னால முழுசா புரிஞ்சுக்க முடிஞ்சது..!!" "அ..அப்படி என்ன பண்ணிட்டான்..?" இப்போது திவ்யாவின் குரலில் ஒருவித கலக்கமும், ஆர்வமும் பிறந்திருந்தது. "ஹாஹா.. உனக்கு எப்படி தெரியும்..? நீதான் மயக்கம் போட்டு மட்டையாயிட்டியே..? நாங்க ரெண்டு பேருந்தான உன்னை அள்ளிக் கொண்டு போயி வீட்ல போட்டோம்..!!""எ..என்ன பண்ணான்னு சொல்லு.." "எதுக்கு..?? இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப் போற..?? நான் சொல்லிட்டா மட்டும் உனக்கு புரியப் போகுதா..?? அதான்.. எனக்கு ஒரு இருபது நிமிஷத்துல புரிஞ்ச விஷயம்.. உனக்கு இருபது வருஷமா புரியலைன்னு சொல்றியே..?? இப்போ மட்டும் புரிஞ்சுக்கவா போற..??" "ப்ளீஸ்டி.." திவ்யா கெஞ்சலாக கேட்க, "ம்ம்ம்.. அழுதாரு.. துடிச்சாரு.. கண்ணீர் விட்டாரு..!! போதுமா..??" அஞ்சு அலறினாள். "...................." "அன்னைக்கு அந்த மனுஷன் துடிச்ச துடிப்பு.. உனக்கு என்னாச்சோன்ற அந்த பயம்.. அழுகையை அடக்க முடியாம அவர் பட்ட வேதனை..!! சத்தியமா அதெல்லாம் நான் சினிமாலயும், கதைலயும்தாண்டி பாத்திருக்கேன்..!! ஒரு பொண்ணுக்காக இப்படி துடிக்கிற ஆம்பளை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் திவ்யா..!! எனக்குலாம் இப்படி ஒருத்தன் கெடைச்சா.. காலம் பூரா அவன் காலடில விழுந்து கெடப்பேன்..!!" "...................." அஞ்சு பேச பேச திவ்யா அமைதியாகவே இருந்தாள். "சரி விடு.. எனக்கெதுக்கு அதெல்லாம்..? உன் மேல அவ்ளோ பிரியமா இருந்த அவரையே நீ தூக்கி எறிஞ்சுட்ட.. நான் சொல்றதையா கேட்கப் போற..? இது உன் வாழ்க்கை.. உன் இஷ்டம்..!! நான் கெளம்புறேன்..!!" சொன்ன அஞ்சு விடுவிடுவென சென்று கார்க்கதவை திறந்து உள்ளே புகுந்து கொண்டாள். காரை ஸ்டார்ட் செய்தாள். கியர் மாற்றி கிளம்பும் முன், திவ்யாவை ஒருமுறை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னாள். "நீ ஏதோ பெரிய தப்பு பண்றேன்னு எனக்கு தோணுது திவ்யா.. பாத்துக்கோ.. டேக் கேர்..!!" கார் சீறிக்கொண்டு கிளம்பியது. திவ்யாவுக்கோ அசோக்கின் நினைவுகள் மனதுக்குள் பீறிக்கொண்டு கிளம்பியது. சிறுவயதில் இருந்து அசோக்குடனான நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் அவளுடைய மனதில் வந்து மோத, அவளையும் அறியாமல் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. பிரம்மை பிடித்தவள் போல நின்று கொண்டிருந்தவள், ஒரு சில வினாடிகள் கழித்துதான் தன் எதிரே வந்து நின்ற திவாகரின் காரை கவனித்தாள். உடனே கண்களில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். உதடுகளில் ஒரு செயற்கை புன்னகையை வரவழைத்துக் கொண்டாள்.அசோக் அந்த ஷாப்பிங் மால் முன்பாக பைக்கை நிறுத்தி பார்க் செய்தான். கண்ணுக்கு கொடுத்திருந்த குளிர் கண்ணாடியை எடுத்து ஷர்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான். ஹெல்மட் கழற்றி கையில் எடுத்துக்கொண்டு கலைந்திருந்த தலையை, பைக்கின் மிரர் பார்த்து சரி செய்துகொண்டான். நடந்து அந்த ஷாப்பின் மாலுக்குள் நுழைந்தான். ஐந்தடுக்குகள் கொண்ட அந்த ஷாப்பிங் மாலின் முதல் தளத்தில்தான் அவன் செல்ல வேண்டிய ஷாப் இருந்தது. வாட்ச் சேல்ஸ் அண்ட் ரிப்பேர் ஷாப்..!! அலுத்துப்போயோ, ஆற்றல் தீர்ந்து போயோ ஓடாமல் சுணங்கும் கடிகார முட்களை மீண்டும் ஓட வைக்கும் இடம்..!! போன வருடம் அசோக்கின் பிறந்த நாளுக்கு திவ்யா ஒரு வாட்ச் பரிசளித்திருந்தாள். அவளுடைய பாக்கெட் மணி எல்லாம் சேகரித்து வைத்து, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அந்த வாட்சை வாங்கி அசோக்கிற்கு பரிசளித்திருந்தாள். அசோக்கிற்கு அந்த வாட்ச் என்றால் உயிர்..!! என்னதான் இருந்தாலும் அவனுடைய உயிர்க்காதலி அவனுக்கு அளித்த அன்பு பரிசல்லவா..? திவ்யா அசோக்கை விட்டு பிரிந்துவிட்டது அந்த வாட்சுக்கும் தெரிந்து விட்டதோ என்னவோ..? இரண்டு நாட்களுக்கு முன்பாக.. ஓடமாட்டேன் என்று அடம் பிடித்து, இரண்டு முட்களும் அசையாமல் ஓரிடத்தில் நின்றுகொண்டன. பேட்டரி மாற்றிப் பார்த்தும் புண்ணியம் இல்லை..!! நேற்றுதான் அந்த கடையில் வந்து சரி செய்வதற்காக கொடுத்திருந்தான். இன்று மாலை வந்து திரும்ப வாங்கிக்க சொல்லியிருந்தான் அந்த கடையின் முதலாளி..!! முதல் தளத்தை அடைந்து அந்தக் கடையை நெருங்கிய அசோக், கடும் எரிச்சலுக்கு உள்ளானான். காரணம்.. கடை பூட்டப்பட்டு கிடந்ததுதான்..!! 'ப்ச்.. இதுக்காகத்தான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் கிளம்பி வந்தனா.. ? முடியாட்டா ஏன் கமிட் பண்ணிக்கிறானுக..? நாட்டுல ஏன் எவனுக்குமே பொறுப்புன்றதே இருக்க மாட்டேன்னுது..?' சலிப்படைந்தவனின் கண்களில் கடைக்கு வெளியே, சிவப்பு பெயிண்டில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகம் தென்பட்டது. "கடை உரிமையாளர் சி.சிட்டி பாபு. தொடர்பு கொள்ள - XXXXXXXXXX" 'சிட்டி பாபுவாம் சிட்டி பாபு.. சரியான சீட்டிங் பாபு..' மனதுக்குள் அந்த கடை உரிமையாளரை திட்டிய அசோக், செல்போன் எடுத்து கதவில் எழுதியிருந்த அந்த நம்பருக்கு கால் செய்தான். நான்கைந்து ரிங் சென்றதும் கால் பிக்கப் செய்யப்பட்டது. அடுத்த முனையில் கசகசாவென்று ஒரே இரைச்சல். "ஹலோ.." "ஹலோ.." "நான் பேசுறது கேக்குதா ஸார்..?" "கேக்குதுப்பா.. சொல்லு.." "என் பேர் அசோக்.. ஒரு வாட்ச் ஒன்னு.. ரிப்பேர் பண்ண கொடுத்திருந்தேன்.. நேத்து.." "சரி.. அதுக்கு என்ன இப்போ..?" "என்ன இப்போவா..? இன்னைக்கு ஈவினிங் வந்து வாங்கிக்க சொல்லிருந்தீங்க ஸார்.. வந்து பாத்தா கடை அடைச்சு கெடக்கு.." "ஏன் தம்பி.. இன்னைக்குனா இன்னைக்கேவா வந்து நிப்ப..? போயிட்டு நாளைக்கு வா.. கடை இன்னைக்கு லீவு..!!" "லீவா..?? வெளையாடாதீங்க ஸார்.. வாங்க.. வந்து எடுத்துக் குடுங்க..!!" "வரவா..? நான் இப்போ ஆதம்பாக்கத்துல இருக்கேன் தம்பி.. உடனே அங்க வர முடியாது..!!" "என்ன ஸார் இப்படி சொல்றீங்க..? அது எனக்கு ரொம்ப முக்கியமான வாட்ச் ஸார்.. நீங்க சரி பண்ணாட்டா கூட பரவால.. உடனே வந்து எனக்கு எடுத்து குடுங்க..!!" "ஏன் தம்பி.. வாட்ச்சதான ஒப்படைச்சுட்டு போன..? என்னமோ உன் வாழ்க்கையையே ஒப்படைச்சுட்டு போன மாதிரி இப்படி பதர்ற..? நாளைக்கு வந்து வாங்கிக்கப்பா..!!" "இல்லை ஸார்.. உங்களுக்கு புரியலை.. எனக்கு அந்த வாட்ச் ரொம்ப முக்கியம்.. அதை பிரிஞ்சு நான் ஒருநாள் கூட இருந்தது இல்ல..!! ப்ளீஸ் ஸார்..!!" "என்னப்பா நீ..? அவன் அவன் இங்க வாக்கப்பட்டு வந்தவளையே பிரிஞ்சு போய் உக்காந்திருக்கான்.. நீ வாட்சை பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு சொல்ற..?" "என்ன ஸார் சொல்றீங்க..?" "பொண்ணு மேட்டரா..? உன் ஆளு உனக்கு வாங்கி கொடுத்ததா..?" "ஆமாம்.. ஏன் கேக்குறீங்க..?" "நெனச்சேன்.. நான் அப்போவே நெனச்சேன்..!!" அந்த ஆள் இப்போது பெரிதாக கத்தினான். "என்னாச்சு ஸார்.. ஏன் இப்போ டென்ஷனாகுறீங்க..?" "நம்பாத தம்பி.. இந்த பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாத..!! நம்பினேன்னு வச்சுக்கோ.. என்னை மாதிரி இப்படி பார்ல உக்காந்து ஒண்டியா பாட்டில் போட உட்ருவாளுக..!!" "கடையை அடைச்சுப்போட்டு.. பாருக்கு போயிருக்கீங்களா..?" "பின்ன என்ன போருக்கா போயிருக்கேன்..? பாருக்குதான் தம்பி..!! ஹ ஹ ஹ ஹ.." அந்த ஆள் இப்போது அழ ஆரம்பித்தான். "ஸார்.. ஏன் ஸார் அழறீங்க..?" "எ..என் பொண்டாட்டி.. என் பொண்டாட்டி.. என்னை விட்டு ஓடிப்போயிட்டா தம்பி..!!" "ஐயையே.. என்ன ஸார்.. இதுலாம் எங்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்க..?" "ஏன்.. சொன்னா என்ன..? ஊருக்கே தெரிஞ்சு போச்சு.. உனக்கு தெரிஞ்சா என்ன..? அவளுக்காக நான் காலநேரம் பாக்காம வாட்ச் கடைல கெடந்து ஒழைச்சேன்.. அவ என்னடான்னா எங்க காலனி வாட்ச்மேனை கரெக்ட் பண்ணிட்டு.. ஓடிப்போயிட்டா தம்பி..!!" "ஸார்.. அழாதீங்க ஸார்.." "அதான் சொல்றேன்.. இந்த பொண்ணுகளை நம்பாதீங்க.. நட்டாத்துல விட்டுட்டு போயிடுவாளுக..!! அவளுகளுக்கு செலவு பண்ற காசலாம் ஏதாவது அநாதை விடுதிக்கு டொனேஷனா குடுங்க.. கொஞ்சம் புண்ணியமாவது கெடைக்கும்..!!" "ஐயையே.. என்ன ஸார் நீங்க.. முன்னப்பின்ன தெரியாத எங்கிட்ட வந்து.. அழுது பொலம்பிக்கிட்டு..? அழாதீங்க ஸார்.." அசோக் அந்த சிட்டிபாபுவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவனுடைய நம்பருக்கு இன்னொரு கால் வந்தது. புது நம்பராக இருந்தது. 'யார் இது..?' என்று ஓரிரு வினாடிகள் குழம்பினான். அப்புறம் சிட்டி பாபுவிடம், "ஸார்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் அப்புறமா உங்களை கூப்பிடுறேன்.." "சரி தம்பி.. நான் சொன்னதை மட்டும் மறந்துடாதீங்க..!! பொண்ணுகளை நம்பாதீங்க.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்க..!!" "சரி ஸார்.. நம்பலை..நம்பலை.." அசோக் சிட்டிபாபுவின் காலை கட் செய்துவிட்டு, அடுத்த காலை அட்டன்ட் செய்தான். "ஹலோ.." என்றான். "அசோக் செல்லம்.." அடுத்த முனையில் குழைவாக ஒரு ஆண் குரல். "ஹலோ.. யாரு..?" "யாருன்னு தெரியலையா செல்லம்.. ஹாஹா.. ஹாஹா.." அடுத்த முனை சிரிக்க ஆரம்பித்ததும், இப்போது அசோக்கிற்கு தெளிவாக தெரிந்து போனது.. அது யாரென்று..!! திவாகர்..!! "திவாகர்..!!" "பரவாலையே.. கரெக்டா கண்டு பிடிச்சுட்ட..??" "என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்..?" "ஜஸ்ட் இப்போத்தான்.. திவ்யாவோட ஹேன்ட் பேக் திறந்து. அவ செல்போனை நோண்டி கண்டு பிடிச்சேன்..!!" "ஓ.. சரி என்ன விஷயம்.. சொல்லுங்க..!!!" "எனக்கு உன்கிட்ட சொல்றதுக்கு என்னப்பா இருக்குது..?? லாட்ஸ் அண்ட் லாட்ஸ் ஆஃப் தேங்க்ஸ்..!!" "என்ன.. நக்கலா..??" "நோ.. சீரியஸ்..!! திவ்யா எனக்கு கெடைப்பாளோ மாட்டாளோன்னு ரொம்ப கவலைல இருந்தேன் ராஜா.. நீ அடிச்ச கூத்துல.. நான்தான் கதின்னு என் காலுல விழாத குறையா எங்கிட்ட வந்து செட்டில் ஆகிட்டா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அசோக்.. என் மனசார சொல்றேன்.. ஃப்ரம் மை ஹார்ட்..!! ஹஹாஹஹாஹஹா...!!" "ரொம்ப சிரிக்காதீங்க திவாகர்.. திவ்யாவுக்கு கூடிய சீக்கிரமே உங்களை பத்தி தெரிய வரும்..!!" "ஹாஹா.. அது தெரியிறப்போ பாத்துக்கலாம் செல்லம்.. இப்போ என்ன அவசரம்..?? ம்ம்ம்ம்.. அப்புறம்..?? திவ்யாவை நீயும் லவ் பண்ணுனியா கண்ணா.. ம்ம்.? ம்ம்..? ஹஹாஹஹா..!! எவ்வளவு பழகிருக்கோம்.. எங்கிட்ட கூட நீ சொல்லலை பாத்தியா..? ஹஹாஹஹா..!!" திவாகரின் கிண்டல் அசோக்கிற்கு எரிச்சலை கிளப்பியது, "திவாகர்.. உங்க நக்கலுக்குலாம் நான் ஆளு இல்ல.. எனக்கு வேற வேலை இருக்கு..!!" "இருப்பா இருப்பா.. உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்..!!" "என்ன..??" "முன்னாடிலாம் நான்தான் திவ்யாகிட்ட கெஞ்சிட்டு இருப்பேன் அசோக்.. இப்போ என்னடான்னா.. அவ கெஞ்சுறாப்பா..!! நான் ஒன்னு சொன்னா.. அதை எப்படி விழுந்து விழுந்து பண்ணுறா தெரியுமா..?? எல்லாம் உன்னாலதான்..!! ம்ம்ம்ம்.. போற போக்கை பாத்தா.. எனக்காக என்ன வேணா செய்வா போல இருக்கு..!! என்ன வேணா..!!!" இரண்டாவதாக சொன்ன 'என்ன வேணா'விற்கு திவாகர் எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுக்க, அசோக் இப்போது டென்ஷன் ஆனான். "இங்க பாருங்க திவாகர்.. நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க..!! நான் இப்போ அமைதியா இருக்குறதுக்கு ஒரே காரணம்.. திவ்யா மனசுல நான் இன்னும் மோசமானவனா போயிட கூடாதுன்னுதான்..!! அவளுக்கு உங்களால ஏதாவது கெடுதல் நடந்துச்சுன்னு வச்சுக்கோங்க.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!" "ஹாஹா.. என்னடா கண்ணா பண்ணிடுவ..?" "உங்க உயிரை பறிக்க கூட நான் தயங்க மாட்டேன்..!!" "ஐயையோ.. எனக்கு பயத்துல உச்சா வந்துடுச்சே..!!!! ஹாஹாஹாஹாஹாஹா.. போடா டேய்..!! இந்த மிரட்டலை எல்லாம்.. எவனாவது கோயில் வாசல்ல உக்காந்து உண்டக்கட்டி துன்னுட்டு இருப்பான்.. அவன்ட்ட போய் உடு ராசா.. ஐ'ஆம் திவாகர்..!!" "உசுருன்றது உனக்கும் உண்டக்கட்டி துன்றவனுக்கும் ஒண்ணுதான் ராசா.. கத்தியை எடுத்து சொருகுனா.. நீயும் செத்து போவேல..?" "ஹாஹா.. சரி சரி.. இப்போ ஏன் தேவையில்லாம டென்ஷன் ஆகுற..? நான் என்ன இப்போவேவா அவளை அந்த 'என்னவேணா' செய்ய சொல்லப் போறேன்..? நல்ல ஜாலி மூடுல இருந்தேன்.. நீயும் டென்ஷனாகி என்னையும் டென்ஷனாக்கிட்ட..!! பாரு.. நான் எதுக்கு கால் பண்ணினேன்ற மேட்டரையே மறந்துட்டேன்.." "எதுக்கு கால் பண்ணுனீங்க..?" "உனக்கு ஒரு ஷோ காட்டலாம்னுதான்.." "என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை.." "அப்படியே உன் மொகறையை ரைட்ல திரும்பி.. கிரவுண்ட் ப்ளோரை பாரேன்.." அசோக் அவன் சொன்னதை செய்ய, அங்கே கையை உயர்த்தி ஆட்டியவாறு திவாகர் காட்சியளித்தான். அந்த மாலின் கீழ்த்தளத்தில் அமைந்திருந்த அந்த திறந்தவெளி உணவகத்தில்..!! அவன் முன்பிருந்த வெண்ணிற டேபிளில்.. மூன்று பிளேட்டுகளில்.. ஏதோ உணவுப்பண்டங்கள்..!! அவன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். அருகில் திவ்யாவை காணவில்லை. "ஓ.. இங்கதான் இருக்கீங்காளா..?" "ஆமாம்.. நீ அந்த வாட்ச் ஷாப்புக்கு வந்ததுல இருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்டா கண்ணா..!!" "திவ்யா..?" "அவளோட இதுல மசாலா கொட்டிப் போயிடுச்சு.. ஹஹாஹஹா..!! துப்பட்டால.. துப்பட்டால.. நீ தப்பா நெனச்சுக்காத.. ஹஹாஹஹா..!! அதை வாஷ் பண்ண போயிருக்கா..!!" "ச்சே.. நீங்கல்லாம் மனுஷனே இல்ல திவாகர்.." "ஹாஹா.. தேங்க்ஸ் அசோக் செல்லம்..!! சரிசரி.. நான் காலை கட் பண்றேன்.. நீ எங்கயும் போயிடாத.. அங்கேயே நில்லு..!! உன் ஆளு மேல கை போடுறேன்.. கண்ணு குளிர பாத்துட்டு போ..!!" சொன்ன திவாகர் காலை கட் செய்தான். அவன் சொன்னதை புரிந்து கொள்வதற்கே அசோக்கிற்கு சில வினாடிகள் பிடித்தது. அதற்குள் துப்பட்டா வாஷ் செய்ய சென்றிருந்த திவ்யா திவாகருக்கு அருகில் வந்து அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுமே திவாகர் அவளுடைய தோள் மீது கைபோட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளை இறுக்கிக்கொண்டு ஓரக்கண்ணால் அசோக் அந்த காட்சியை பார்க்கிறானா என்று கவனித்தான். அவ்வளவுதான்.. அதை பார்த்துக் கொண்டிருந்த அசோக்கிற்கு உடலும், மனதும் தீப்பற்றி எரிந்தது போல இருந்தது. துடித்துப் போனான். அவனுடைய கண்கள் பொலபொலவென நீரை கொட்ட ஆரம்பித்தன. மேலும் அந்த காட்சியை காண சகியாமல் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான். 'ச்சே.. என் தேவதையை யாரோ ஒரு கயவன் என் கண் முன்பே அணைத்துக் கொள்கிறான்.. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே..? எனக்கு ஏன் இந்த தண்டனையை கொடுத்தாய் இறைவா.. எனக்கு ஏன் இந்த கையாலாகாததனத்தை கொடுத்தாய்..? ஏன் இப்படி செய்கிறார்கள் இவர்கள்.. ஒரு பொது இடத்தில்.. இப்படி..? ச்சே.. திவ்யாவுக்கும் இதில் சம்மதம்தானா..?'அசோக் அழுதான்..!! அவனை கடந்து சென்ற இரு கல்லூரி பெண்கள் அவனையே வித்தியாசமாக திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றார்கள். அசோக் அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்க விரும்பவில்லை. விறுவிறுவென நடந்து அந்த தளத்தின் ஒரு முனைக்கு ஓடினான். 'பொண்ணுகளை நம்பாதீங்க.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்க..!!' சிட்டிபாபு சற்றுமுன் கூறிய வார்த்தைகள், அவனுடைய காதுகளில் கொடூரமாய் மோதி அவனை விரட்டி அடித்தன. அங்கிருந்த ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்து கொண்டான். கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மனம் விட்டு அழுதான். ஓரிரு நிமிடங்கள்..!! அழுது முடித்ததும்.. முகத்தில் நன்றாக நீர் இறைத்து கழுவிக் கொண்டான். கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான். அதற்குள்ளாகவே அவனது கண்களும், முகமும் வீங்கிப் போயிருந்தன. உதடுகள் இன்னும் படபடத்துக் கொண்டிருந்தன. யாராவது பார்த்தால் அழுதிருக்கிறான் என்று உடனடியாய் புரிந்து கொள்வார்கள். ஏதோ யோசனை வந்தவனாய் தன் பாக்கெட்டில் இருந்த குளிர் கண்ணாடியை எடுத்து கண்களுக்கு பொருத்தினான். உதடுகளை மடித்து உள்ளே வைத்துக் கொண்டான். இப்போது அவனது முகம் சலனமற்றுப் போய் காணப்பட்டது. அவனுக்கு திருப்தியாக இருந்தது. ரெஸ்ட் ரூம் விட்டு வெளியே வந்தான். படியிறங்கி கீழ் தளத்துக்கு சென்றான். வேகமாக பார்க்கிங் ஏரியா நோக்கி நடையை போட்டான். அவன் பைக்கை நிறுத்தியிருந்த இடத்தை நெருங்கியவன், ஒரு சிறிய அதிர்ச்சிக்கு உள்ளானான். அவன் பைக்குக்கு அருகே திவ்யா நின்றிருந்தாள். அவனுடைய பைக்கை ஒரு கையால் தடவிக் கொண்டிருந்தாள். 'இவள் என்ன செய்து கொண்டிருகிறாள் இங்கே..?' அசோக்கிற்கு ஏனோ இப்போது திவ்யாவின் மீது கொள்ளை கொள்ளையாய் ஒரு இனம்புரியாத எரிச்சல்..!! ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல், அவளை நெருங்கி முகத்தையும் குரலையும் இறுக்கமாக வைத்துக் கொண்டு சொன்னான். "எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் வழி விடுறீங்களா..? பைக்கை எடுக்கணும்..!!""அண்ணா.." "ம்ம்ம்.." "அண்ணா.." "சொல்லு அசோக்.." "அந்த நாயி என் முன்னாடியே திவ்யா மேல கை போட்டுட்டான்ணா.." அசோக் அழுகிற குரலில் சொல்ல, "ம்ம்ம்.." செல்வா அசுவாரசியமாய் கேட்டுக்கொண்டார். அசோக் இப்போது பிளாஸ்டிக் கப்பில் மிச்சம் இருந்த விஸ்கியை எடுத்து கடகடவென தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான். ஒரு கை நிறைய சிப்சை அள்ளி வாயில் போட்டு கரகரவென பற்களால் அறைத்தான். விழுங்கினான். 'ஆஆஆவ்..!!' என்று பெரிதாக ஒரு ஏப்பம் விட்டான். கீழே கிடந்த கிங்ஸ் பாக்கெட் திறந்து ஒரு சிகரெட் எடுத்து வாயில் வைத்துக் கொண்டான். தலை நிலைகொள்ளாமல் தள்ளாட, விரல்கள் கட்டுப்பாடு இழந்து தடுமாற, மிகவும் சிரமப்பட்டு அந்த சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாய் புகையை இழுத்து வெளியே ஊதியவன், மீண்டும் ஆரம்பித்தான். "அண்ணா.." "ம்ம்ம்.." "அண்ணா.." "சொல்லு அசோக்.." "அந்த நாயி என் முன்னாடியே திவ்யா மேல கை போட்டுட்டான்ணா.." செல்வா இப்போது சற்றே எரிச்சலுற்றார். "ஐயையையையே.. வந்ததுல இருந்து ஆயிரம் தடவை சொல்லிட்ட அசோக்.. விடு அதை..!!" "என்னண்ணா நீங்களே இப்படி சொல்றீங்க..? எனக்கு உங்களை விட்டா வேற யாரு இருக்கா..?" "அதுக்காக சொல்லலை அசோக்.. அதையே நெனச்சு பொலம்பிட்டு இருந்தா.. வேதனை இன்னுந்தான் அதிகமாகும்.. அந்தப் பேச்சை விடு..!!" "என்னால முடியலைன்னா.. நெஞ்செல்லாம் அப்படியே எரியுது.. !! 'உன் ஆள் மேல கை போடுறேன் பாருடா'ன்னு சொல்லிட்டு அவன் கை போடுறான்.. இவளும் ஈஈ'ன்னு இளிச்சுட்டு கம்முனு இருக்குறாண்ணா..!!" "ம்ம்ம்.." "நான் அவளை எவ்வளவு சின்சியரா லவ் பண்ணினேன் தெரியுமாண்ணா.. அவளுக்காக என்னல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா..?" "எல்லாம் எனக்கு தெரியும் அசோக்.. திவ்யாவுக்கும் அது தெரியும்..!! அவ கூடிய சீக்கிரம் உன்னை புரிஞ்சுக்குவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!!" "இல்லண்ணா.. அவ்ளோதான்.. எல்லாம் போச்சு.. என் வாழ்க்கையே நாசமா போச்சு..!! இவ்வளவு நாளா அவகூட பேசிட்டு இருக்குறப்போவே அவளுக்கு என்னை பத்தி புரியலை.. இனிமேலா புரியப் போகுது..? சிட்டிபாபு அப்போவே சொன்னாரு..!!" "சிட்டிபாபுவா..? அது யாரு..?" "அவர் பெரிய ஞானிண்ணா..!!" "ஓஹோ..? என்ன சொன்னாரு அவரு..?" "பொண்ணுகளை நம்பாதீங்கடா.. பொண்ணுகளை மட்டும் நம்பவே நம்பாதீங்கன்னு சொன்னாரு..!!" "நல்ல தத்துவந்தான்..!!" "நான்தான் அதுபுரியாம.. அவளை நம்பித் தொலைச்சேன்.. அவ எனக்கு சூப்பு கொடுத்துட்டு போயிட்டா..!!" "அவ வருவா அசோக்.. கவலைப்படாத..!!" "இல்லண்ணா.. அவள்லாம் வரமாட்டா.. அவ்ளோதான்..!!" "சரி வராட்டா போறா.. விடு..!! அவ இல்லைன்னா என்ன.. உனக்கு வேற பொண்ணா கெடைக்காது..?" "ஓஹோ..?? திவ்யா இல்லைன்னா.. திரிஷான்றிங்களா..??" "ஆமாம்.." "நோ..!! எனக்கு திரிஷாலாம் வேணாம்.. எனக்கு என் திவ்யாதான் வேணும்..!! ஆனா.. அது அப்புறம்.. இப்போ எனக்கு தீர்த்தம்தான் வேணும்..!!" சொன்ன அசோக் பாதி காலியிருந்த அந்த விஸ்கி ஃபுல் பாட்டிலை கையிலெடுக்க, செல்வா அவசரமாய் அதை பறித்தார். ம்ஹூம்.. குடிச்சது போதும்.. அவளை நெனச்சு நீ உன் உடம்பை கெடுத்துக்குற.. வேணாம்..!!" "அண்ணா.. குடுங்கண்ணா.." "சொன்னா கேளு அசோக்.. போதும்.. உனக்கு ஓவராயிடுச்சு.. உளற ஆரம்பிச்சுட்ட..!!" "ப்ளீஸ்ண்ணா.." "முடியாது..!!" அவர்கள் அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான், அறை வாசலுக்கருகில் இருந்து அந்த மென்மையான குரல் கேட்டது. "எ..என்னங்க.. ஒரு நிமிஷம்.." அசோக்கும் செல்வாவும் ஒரே நேரத்தில் வாசலை திரும்பி பார்த்தார்கள். எண்ணெய் மினுக்கும் தலையும், எடுப்பாக சுற்றப்பட்ட தாவணியும், கருத்த தேகமும், களையான முகமுமாக அந்தப் பெண் நின்றிருந்தாள். கண்மணி..!!! அவளை பார்த்ததும் கையில் விஸ்கி பாட்டிலுடன் இருந்த செல்வா அப்படியே பதறினார். உளறினார். "எ..என்னம்மா.. இந்த நேரத்துல..?" "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. வாங்க.." "இரு.. இரு.. வந்துட்டேன்.." செல்வா விஸ்கி பாட்டிலை அசோக்கிடம் ஒப்படைத்துவிட்டு, வாசலை நோக்கி ஓடினார். அவரும், அந்த கண்மணியும் மொட்டை மாடியின் அடுத்த மூலையை நோக்கி நடக்க, அவர்கள் செல்வதையே அசோக் தலையை நீட்டி பார்த்துக் கொண்டிருந்தான். போகையிலேயே.. "நீங்களுமா..?" அந்தப்பெண் கேட்டது. "ஐயையோ.. நான் இல்ல.. அவன் மட்டுந்தான்.. நான் சும்மா வேடிக்கை பார்ப்பேன்.." செல்வா பதறினார். இருவரும் தூரமாக போய் நின்றுகொண்டு ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தார்கள். விழிகள் சுழல.. தலை தள்ளாட.. அசோக் கொஞ்ச நேரம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் சின்னதாகிப்போன சிகரெட்டை நசுக்கி அணைத்துவிட்டு, விஸ்கி பாட்டிலின் கழுத்தை திருகினான். ஆறாவது ரவுண்டை ஆரம்பித்தான். அவ்வப்போது செல்வாவையும், கண்மணியும் எட்டி பார்த்துக் கொண்டான். அவர்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசியிருப்பார்கள். அப்புறம் அந்தப்பெண் கிளம்பியது. போகும் முன் அறைக்குள் எட்டிப்பார்த்து 'வர்றேண்ணா' என்று அசோக்கிடமும் சொல்லி சென்றது. 'வாம்மா தங்கச்சி..' என்று அசோக்கும் உளறினான். உள்ளே வந்த செல்வா கேட்டார். "என்ன.. அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சுட்டியா.. சொல்ற பேச்சையே நீ கேட்கவே மாட்டேன்ற அசோக்..!!" "ஐயோ.. அது கெடக்குது விடுங்க..!! என்னண்ணா நடக்குது இங்க..?" "எ..என்ன நடக்குது.. ஒன்னும் நடக்கலை.." செல்வாவிடம் இப்போது ஒரு தடுமாற்றம். "அந்தப்பொண்ணு ஏன் இங்க வந்துட்டு போகுது..?" "அ..அது.. அது சும்மா வந்துட்டு போகுது.." "இல்ல.. என்னமோ இருக்குது.. என்னன்னு சொல்லுங்க.." "ஒண்ணுல்ல அசோக்.. நீ சாப்பிடு.. நான் இன்னொரு நாள் சொல்றேன்.." "இன்னொரு நாளா..? இப்போவே சொல்லுங்கண்ணா.. அந்த இன்னொரு நாள் வருதோ வரலையோ..?" "ஏன் அசோக் இப்படிலாம் பேசுற..?" "அப்போ என்ன மேட்டர்னு சொல்லுங்க..!!"அசோக் செல்வாவை விடாமல் துளைத்தெடுத்தான். செல்வா கொஞ்ச நேரம் தயங்கினார். அப்புறம் தொண்டையை கனைத்துக்கொண்டு மெல்லிய குரலில் சொன்னார். "நானும் கண்மணியும் கல்யாணம் பண்ணிக்க போறோம் அசோக்.." "அண்ணா.. என்னண்ணா சொல்றீங்க.. நெஜமாவா..?" அசோக் ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் கேட்டான். "ஆமாம் அசோக்.. நாளைக்கு அவளோட மாமா ஒருத்தர் ஊர்ல இருந்து வராராம்.. அவர் என்னை பார்த்து பேசணும்னு ஆசைப்படுறாராம்.. அதான் காலைல வீட்டுக்கு வாங்கன்னு.. இப்போ வந்து சொல்லிட்டு போறா..!!" "என்னண்ணா நீங்க.. எவ்வளவு சந்தோஷமான விஷயம்.. ஏண்ணா இத்தனை நாளா எங்கிட்ட சொல்லலை..?" "ஒருவாரமா இந்த மேட்டரை உன்கிட்ட சொல்லனும்னுதான் நானும் நேரம் பாத்துட்டு இருந்தேன் அசோக்.. ஆனா நீ எந்த நேரமும் திவ்யாவை நெனச்சுக்கிட்டு சோகமா இருக்குற.. அதான் சொல்லலை.." "இதுல என்னண்ணா இருக்கு..?" "எப்படி அசோக்.. நீ கஷ்டத்துல இருக்குறப்போ.. நான் எப்படி உன்கிட்ட வந்து 'நான் சந்தோஷமா இருக்குறேன்'னு சொல்ல முடியும்..?" "அடப்போங்கண்ணா.. எனக்கு என்ன கஷ்டம்.. நான் நல்லாத்தான் இருக்குறேன்..!! அதுசரி.. கண்மணியை எப்படி சம்மதிக்க வச்சிங்கன்னு சொல்லவே இல்லையே..?" "கண்மணி ரொம்ப பாவம் அசோக்.." "என்னண்ணா சொல்றீங்க..?" "அவ சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி.. புருஷனை இழந்தவ அசோக்..!! பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.. ஒரே வருஷத்துல அவ புருஷன் மஞ்சகாமாலை வந்து இறந்து போயிட்டான்..!! கிராமத்துல இருக்குறவங்க 'அதிர்ஷ்டம் கெட்டவ.. புருஷனை முழுங்கிட்டா..' அப்படின்னு கண்மணியை பேசிருக்காங்க.. அந்த பேச்சை தாங்கிக்க முடியாம.. எல்லாத்தையும் காலி பண்ணிட்டு இங்க வந்து மெஸ் ஆரம்பிச்சிருக்காங்க..!!" "ஓ..!!" "எனக்கே இப்போ ரெண்டு வாரம் முன்னாடிதான் தெரியும்..!! அவளே அடக்கிக்க முடியாம.. எல்லாத்தையும் எங்கிட்ட கொட்டிட்டா..!! நான்தான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிருகேன்ல.. அவளுக்கு ஆரம்பத்துல இருந்தே என் மேல ப்ரியம் அசோக்.. ஆனா.. அவ நெலமையை நெனச்சுக்கிட்டு.. அவளோட காதலை என்கிட்டே இருந்து மறைச்சுட்டா..!! போன வாரம் எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சு.. அவ அம்மாகிட்டயே போய் நேரடியா பேசிட்டேன்.. ஆரம்பத்துல அவங்க தயங்குனாங்க.. அப்புறம் ஒத்துக்கிட்டாங்க..!! அடுத்த மாசம் கல்யாணம் வச்சுக்கலாம்னு பேசி முடிச்சிருக்கோம்..!!" "ம்ம்ம்.. இவ்வளவு மேட்டர் நடந்திருக்கு.. எல்லாத்தையும் எங்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்களே..?" "என்ன அசோக்.. நான்தான் ஏன் சொல்லலைன்னு சொன்னேன்ல..?" "ம்ம்ம்.. அந்த கண்மணியை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குண்ணா.. உங்க காதலை புரிஞ்சுக்கிட்டு உங்ககிட்ட வந்து சேர்ந்துட்டாளே.. ரியல்லி கிரேட்ணா..!! எனக்குந்தான் ஒருத்தி வந்து வாச்சிருக்குறாளே..? லூசு சிறுக்கி.. என்ன பண்ணு.. எவ்வளவு சொல்லு.. ஒன்னும் அவ மண்டைல ஏறாது..!!""விடு அசோக்.. அதெதுக்கு இப்போ..?" "சரி விடுங்க..!! ரொம்ப ஹெப்பியான ந்யூஸ் சொல்லிருக்கீங்க.. ஐயோ.. இப்போ இதை நாம செலப்ரேட் பண்ணியே ஆகணுமே..!! அந்த பாட்டிலை எடுங்கண்ணா..!!" "சொன்னா கேளு அசோக்.. போதும்.." "ப்ளீஸ்ண்ணா.." "ம்ஹூம்.. நான் அல்லோ பண்ண மாட்டேன்.." "சரி.. பாட்டில்தான் தர மாட்டேன்றீங்க.. பாட்டாவாது போடுங்க.... எனக்கு டான்ஸ் ஆடனும் போல இருக்கு.." "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. பத்துநாளா அந்த பாட்டை திருப்பி திருப்பி போட்டு.. சிடியே தேஞ்சு போச்சு அசோக்.." "பரவாலண்ணா போடுங்க.. ப்ளீஸ்.." செல்வா அந்த சிடியை எடுத்து செருகி, பாடல் செலக்ட் செய்து வால்யூம் அதிகரித்தார். அசோக் அந்தப் பாடலின் தாளத்துக்கு தகுந்தவாறு குத்தாட்டம் போட ஆரம்பித்தான். "காதல் எங் காதல் அது கண்ணீருல போச்சு அது போச்சு அட தண்ணீருல காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள பாழான நெஞ்சு இப்ப வெண்ணீருல அடிடா அவள உதைடா அவள விட்ரா அவள தேவையே இல்ல"கொஞ்ச நேரம் அறைக்குள்ளேயே ஆடியவன், அப்புறம் வெளியே ஓடினான். பதறிப்போன செல்வா அவனுக்கு பின்னாலேயே ஓடினார். அறைக்கு வெளியில் எரிந்த குண்டு பல்பு, அந்த மொட்டை மாடி முழுதும் வெளிச்சம் பரப்பியிருந்தது. அசோக் மொட்டை மாடியின் மையமாக சென்று நின்றுகொண்டு, மனம் போன போக்கில் ஆட ஆரம்பித்தான். செல்வா அவனை சமாளித்து உள்ளே அழைத்து செல்ல முயன்றார். "அசோக்.. என்ன அசோக் இது... உள்ள வா.." "விடுங்கண்ணா.. நான் டான்ஸ் ஆடனும்.." "ஆடு.. ரூமுக்குள்ள வந்து ஆடு.." "இல்ல இல்ல.. நான் இங்கதான் ஆடுவேன்.." செல்வா எவ்வளவோ முயன்றும் அசோக் கேட்காமல் அடம்பிடித்து, அங்கேயே நின்று ஆடிக்கொண்டிருந்தான். செல்வாவும் ஒரு கட்டத்தில் சலித்துப் போய் அவனை ஆடட்டும் என்று விட்டுவிட்டார். கைகளை கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டார். காதல் வேதனை தாங்காமல், கையை காலை அசைத்து குத்தாட்டம் போடுகிற அசோக்கையே, கண்களில் நீர் துளிர்க்க பார்த்துக் கொண்டிருந்தார்.சித்ரா அப்போதுதான் சமையலை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். 'அவரும் இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலை.. இந்த திவ்யா கழுதையும் இன்னும் ஆளைக்காணோம்..' என்று சலிப்பாக மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். ஆண்பாவம் பார்க்கலாம் என்று டிவியை போட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் பார்த்திருப்பாள். அதற்குள் அவளது செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது. அப்பாதான் ஊரில் இருந்து கால் செய்தார். "ஹலோ.. சொல்லுங்கப்பா.." "ஹலோ.." "ம்ம்.. சொல்லுங்கப்பா.." "ஹலோ.. நீ பேசுறது கேக்கலைம்மா.. நான் பேசுறது கேக்குதா..?" "ஒரு நிமிஷம் இருங்கப்பா.. வெளில வரேன்.." சித்ரா செல்போனில் சிக்னல் ஐகானை கவனித்துக்கொண்டே, கதவை திறந்து வீட்டுக்கு வெளியே வந்தாள். "ம்ம்.. சொல்லுங்கப்பா.. இப்போ கேக்குதா..?" "ம்ம்.. இப்போ கேக்குதும்மா.." "சொல்லுங்கப்பா.. நல்லாருக்கீங்களா.. அம்மா நல்லாருக்காங்களா..?" "நாங்க நல்லா இருக்குறது இருக்கட்டும்.. இந்த அசோக்கு பயலுக்கு என்னாச்சு..?" "ஏன்ப்பா.. என்ன பண்ணுனான்..?" "வாரம் ஒரு தடவையாவது ஃபோன் பண்ணுவான்.. ரெண்டு வாரமா அதுவும் பண்ணலை.. நான் பண்ணுனாலும் எடுக்கவே மாட்டேங்குறான்.. சாயந்திரம் ஃபோன் பண்ணினேன்.. எடுத்தான்.. ரெண்டு வார்த்தைதான் பேசுனான்.. எப்படிடா இருக்கேன்னு கேட்டேன்.. படக்குன்னு கட் பண்ணிட்டான்..!! இப்போ அரை மணிநேரமா அடிச்சு அடிச்சு பாக்குறோம்.. எடுக்கவே மாட்டேன்றான்..!! இப்போ அடிச்சா சுச் ஆப்புன்னு வருது..!! ஏன் இப்டிலாம் பண்ணுறான்.. என்னம்மா ஆச்சு அவனுக்கு..??" "அது.. அது வந்து.." "சொல்லும்மா.. என்னாச்சு..??" "ஒன்னுல்லப்பா.. அவன் ஆபீஸ்ல ஏதோ பிரச்னைன்னு சொல்லிட்டு இருந்தான்.. அதான் அப்படி இருக்கான் போல.." "என்ன பிரச்னையாமாம்..?" "தெரியலைப்பா.. நான் கேட்டுக்கலை..!!" "என்னம்மா நீ.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்குற..?" அவர் சித்ராவை திட்டிக் கொண்டிருக்கும்போதே, லிஃப்ட் கதவு திறந்து கொள்ள திவ்யா வெளிப்பட்டாள். "ஐயோ.. அப்டிலாம் இல்லப்பா.." "உன்னை நம்பித்தான அவனை அங்க விட்டுருக்கோம்..? அக்கா இருக்கா.. அம்மா மாதிரி பாத்துப்பான்னுதான அனுப்பி வச்சோம்..?" "ஆமாம்ப்பா.." "அப்புறம் நீயே இப்படி சொன்னினா..? அவனுக்கு எதுனா பிரச்னைன்னா.. மொதல்ல நீயே அதை சரி பண்ணிருக்கணும்..? உன்னால முடியலைன்னா.. எங்கிட்டயாவது சொல்லிருக்கணும்..!! எதுவுமே பண்ணலைன்னா எப்படி..?" திவ்யா சித்ராவை ஏறிட்டு கூட பார்க்காமல், தலையை குனிந்தவாறே அவளை கடந்து சென்றாள். "இல்லப்பா.. நான்.." "நீ எதுவும் சொல்ல வேணாம் சித்ரா.. போய் அவன்கூட பேசு.. அவனுக்கு என்ன பிரச்னைன்னு பாரு.. உன்னால முடியலைன்னா அப்பாக்கு போன் அடி.. புருஷன், நாத்தனார்னு அவுகளையே கவனிச்சுட்டு இருக்காத.. தம்பியையும் கொஞ்சம் பாத்துக்க.." "ம்ம்.. சரிப்பா.." "மொதல்ல அவனை போன் அடிக்க சொல்லு.. உன் அம்மா இங்க கெடந்து பொலம்பிட்டு இருக்கா.. 'என் புள்ளைக்கு என்னாச்சோ.. ஏதாச்சோ'ன்னு.. 'அழுவாதடி.. அவனுக்கு ஒன்னும் ஆவாது'ன்னு சொன்னாலும்.. கேட்டுத் தொலைய மாட்டேன்றா.. எழவெடுத்தவ..!! போய் உடனே அவனை போன் அடிக்க சொல்லு..!!" "சரி சொல்றேன்.." "வச்சிடவா..?"சித்ரா இப்போது சற்றே எரிச்சலுற்றாள். 'இந்த அசோக் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்..? அப்பாவிடம் இப்படி திட்டு வாங்க வைத்துவிட்டான்..? அந்த திவ்யா போய் தொலைந்தால்தான் என்ன..? வேறு பொண்ணா கிடைக்காது இவனுக்கு..? ச்சே.. எல்லாம் என் நேரம்.. எனக்குன்னு வந்து வாச்சிருக்குதுக பாரு எல்லாம்..!!' உடனடியாய் அசோக்கை சென்று பார்க்கவேண்டும் என்று சித்ராவிற்கு தோன்றியது. அடுத்த முறை அப்பாவிடம் இருந்து கால் வந்தால், இவ்வளவு பொறுமையாக பேசிக்கொண்டு இருக்க மாட்டார். திவ்யாதான் வந்துவிட்டாளே.. கதவை கூட சாத்தாமல்.. காலில் மட்டும் செருப்பை அணிந்து கொண்டு சித்ரா கிளம்பி விட்டாள். ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த தெருவில் தம்பி வசிக்கும் வீட்டை சென்றடைந்தாள். பக்கவாட்டில் தெரிந்த படிக்கட்டை அடைந்து பொறுமையாக மேலேறினாள். மொட்டை மாடியை அடைந்தவள், அங்கே தன் தம்பி நின்றிருந்த கோலத்தை கண்டதும் அப்படியே அதிர்ந்து போனாள். அறைக்கு உள்ளே ஏதோ பாட்டு ஓடிக்கொண்டிருக்க, வெளியே அசோக் பைத்தியக்காரன் மாதிரி ஆடிக் கொண்டிருந்தான். செல்வாவோ கைகளை கட்டி சுவற்றில் சாய்ந்தவாறு அவன் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். உடன் பிறந்த தம்பியை அந்த கோலத்தில் கண்டதும், சித்ராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கத்திக்கொண்டு அவனை நோக்கி ஓடினாள். "டேய்.. அசோக்.. என்னடா பண்ணிட்டு இருக்குற..?" "ஹேய்.. டான்ஸ்க்கா.. தெரியலை..?" "என்ன செல்வாண்ணா.. இவன் பாட்டுக்கு இப்படி ஆடிட்டு இருக்கான்.. நீங்களும் பாத்துட்டு இருக்கீங்க..?" "நான் சொன்னேன்மா.. கேக்க மாட்டேன்றான்.." "டேய்.. ஆடுனது போதும் நிறுத்துடா.." சித்ரா சென்று அசோக்கின் கைகளை பற்ற, "விடுக்கா.. நான் அப்படித்தான் ஆடுவேன்..!! அண்ணா.. இன்னும் கொஞ்சம் சவுண்டு வைண்ணா.." "அசோக்.. இப்போ ரூமுக்குள்ள போகப் போறியா இல்லையா..?" "முடியாது.. என்ன பண்ணுவ..?" "உள்ள போடா.." அவள் கத்தினாள். "ம்ஹூம்.." அவ்வளவுதான்..!! சித்ரா பொறுமை இழந்தாள்..!! அசோக்கின் கன்னத்திலேயே 'பளார்.. பளார்..' என அறைந்தாள். "ஐயோ.. என்னம்மா நீ.. விடும்மா.. அடிக்காத அவனை.." செல்வா வந்து சித்ராவை தடுக்க முயன்றார். "விடுங்க செல்வாண்ணா.. என்ன நெனச்சுட்டு இருக்குறான் இவன்..?" செல்வாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சித்ரா அசோக்கின் கன்னத்தில் இன்னும் ரெண்டு அறை விட்டாள். இப்போது அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அழுதுகொண்டே பெரிய குரலில் கத்தினான். "அடிக்கா.. அடிச்சே என்னை கொன்னுடு.. நான் நிம்மதியா செத்து போயிடுறேன்.." அசோக் கத்த, சித்ரா இப்போது ஸ்தம்பித்து போனாள். "ஏண்டா இப்படி எல்லாம் பண்ற..?" "என்னால முடியலைக்கா.." "இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இந்த ஆட்டம் ஆடுற..?" "இன்னும் என்ன ஆகணும்..?" "என்ன ஆச்சுன்னு சொல்லு.." "இன்னைக்கு நான் ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தேன்க்கா.. இவளும் அந்த திவாகரும் அங்க சாப்பிட வந்திருந்தாங்க.. நான் அவங்களை கவனிக்கலை.. அந்த பாடு என் செல்லுக்கு கால் பண்ணி சொல்லுறான்க்கா.. 'உன் ஆளு மேல கையை போடப் போறேன்.. பாத்துட்டு போடா பன்னாடை'ன்னு.. என் முன்னாடியே அவன் அவ மேல கைபோட்டு என்னை நக்கலா பாக்குறான்க்கா.. என்னால ஒரு மசுரும் புடுங்க முடியலை..!! நான்லாம் ஏன் இன்னும் இருக்குறேன்..?" "ம்ம்ம்..""ச்சை.. என்ன பேசுற நீ..? அவ போனா.. போய்த் தொலையுறான்னு விட மாட்டியா..? அவளையே நெனச்சுக்கிட்டு உன் வாழ்க்கையை பாழாக்கிப்பியா..?" "உனக்கு என்ன..? உன் கூந்தல்ல இருந்து எதோ வுழுந்துட்ட மாதிரி சொல்வ..? நாந்தான அவளை லவ் பண்ணினேன்.. என் கஷ்டம் எனக்குத்தான தெரியும்..??" "என்ன உன் கஷ்டம்.. பெரிய கஷ்டம்..? நான்தான் ஆரம்பத்துல இருந்தே படிச்சு படிச்சு சொன்னேனடா.. அவ உனக்கு வேணாம் வேணாம்னு.. அறிவில்லாம காதலிச்சுட்டு.. இப்போ அவஸ்தைப்படுற..!! சரி.. அது கெடக்கட்டும்.. !! செல்லை எதுக்கு ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குற.. அப்பா கால் பண்ணி கத்துறாரு..!!" "அவர் தேவையில்லாம சும்மா சும்மா கால் பண்றாருக்கா.. அவன் அவன் இங்க நொந்து போயி கெடக்குறான்.. அவரு கால் பண்ணி 'நல்லா இருக்கியா நல்லா இருக்கியா'ன்னு நாப்பது தடவை கேக்குறாரு.. அதான் ஆஃப் பண்ணி போட்டேன்..!! என்னை டார்ச்சர் பண்ண வேணாம்னு அவர்கிட்ட கொஞ்சம் சொல்லி வையி..!!" "அப்படியே அறைஞ்சன்னா..?? அவர் உன்னை பெத்தவருடா.. நல்லா இருக்கியான்னு கேட்க கூடாதா..? அங்க அம்மாவும், அப்பாவும் உனக்கு என்னாச்சோன்னு துடிச்சு போய் கெடக்காங்க..!! இரு.. நான் அவருக்கு கால் பண்றேன்.. மொதல்ல அவர்கிட்ட நாலு வார்த்தை பேசு..!!" "போடு போடு.. பேசுறேன்..!! ஆனா.. இன்னொரு தடவை நல்லாருக்கியான்னு கேட்டா.. செத்து பொணமாயிட்டேன்னு சொல்லிருவேன் பாத்துக்கோ.." "ஏண்டா இப்படி என்னை வதைக்கிற..?" "நான் என்ன வதைக்கிறேன்.. நீ ஃபோனை போடு.. நான் பேசுறேன்.." "விடு.. நீ ஒன்னும் பேச வேணாம்..." "குடுக்கா.." "சொல்றேன்ல..? விடு.. இந்த நெலமைல நீ ஒன்னும் பேச வேணாம்.. நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்.. நீ நாளைக்கு காலைல.. போதைலாம் தெளிஞ்சப்புறம் அவர்கிட்ட பேசு..!!" "சரி விடு.. உன் இஷ்டம்.." "மொதல்ல நீ ரூமுக்குள்ள போ.." சித்ரா அசோக்கின் கையை பிடிக்க, அவன் உதறினான். "விடுக்கா.. நானே வரேன்.." நடந்தவன் ஒரு அடிதான் எடுத்து வைத்திருப்பான். அதற்கே தடுமாறினான். சித்ரா அவனை தாங்கி பிடித்துக் கொண்டாள். "என் மேல கை போட்டுக்கடா.. அக்கா உன்னை கூட்டிட்டு போறேன்.." "என்னை என்ன புதுசா குடிக்கிறவன்னு நெனச்சியா..? எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டெடியா இருப்பேன்.. இதுவரைக்கும் என் குடியுலக வாழ்க்கைல.. நான் வாமிட்டே எடுத்தது இல்லை.. தெரி.. ஓஓஓஓவ்வ்வ்வ்வ்..!!!!" சொல்லி முடிக்கும் முன்பே அசோக் வாந்தி எடுக்க ஆரம்பித்தான். குடித்த விஸ்கியையும், அரைத்த சிப்சையும் வாய் வழியாக வெளியே கொட்டினான். சித்ரா பதறிப் போனாள். தம்பியின் நிலையை கண்டு கலங்கிப் போனாள். அவன் குனிந்து வாந்தி எடுக்க, இவள் சென்று அவனுடைய தலையை இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டாள். அவனோ அவளுடைய கையை தட்டிவிட்டான். வயிற்றை பிடித்துக்கொண்டு அந்த மொட்டை மாடியின் மையத்திலேயே குடம் குடமாய் வாந்தி எடுத்தான். சித்ரா அசோக்கையே பரிதாபமாக பார்த்தாள். பார்க்க பார்க்க அவளால் உள்ளுக்குள் எழுந்த துக்கத்தை அடக்க முடியவில்லை. வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள். செல்வாவோ செய்வதறியாது திகைத்து, நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வயிற்றில் இருந்ததை எல்லாம் அசோக் வெளியில் கொட்டிய பிறகு, சித்ராவும் செல்வாவும் அவனை அழைத்து சென்று, படுக்கையில் கிடத்தினார்கள். அவன் வாந்தி எடுத்ததை சுத்தம் செய்கிறேன் என்று சொன்ன சித்ராவிடம், 'விடும்மா.. நான் பாத்துக்குறேன்..' என்று கூறினார் செல்வா. ஒரு பக்கெட் நிறைய தண்ணீரும், விளக்குமாறும் எடுத்துக்கொண்டு சென்று, நீரை ஊற்றி ஊற்றி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.சித்ரா அசோக்கின் அறைக்கு திரும்பினாள். விழிகள் செருக உறங்கிக் கொண்டிருந்த தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் அவனுடைய முகத்தையே அமைதியாக பார்த்தாள். அசோக்கின் உடல் சலனமில்லாமல் கிடக்க, அவனுடைய உதடுகள் மட்டும் அசைந்து கொண்டிருந்தன. ஏதோ ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தான். சித்ரா தன் காதுகளை கூர்மையாக்கி, அவன் என்ன முனகுகிறான் என்று கேட்டாள். "தி..திவ்யா.. தி..திவ்யா.. தி..திவ்யா.." சித்ராவுக்கு இப்போது அழுகையை அடக்க முடியவில்லை. உதடுகள் துடிதுடிக்க அழுதாள். 'என் தம்பியின் வாழ்க்கையை எப்படி ஆக்கி வைத்திருக்கிறாள் அந்த பாதகத்தி..? கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்துக்கொண்டு எவ்வளவு சந்தோஷமாய் திரிவான் என் தம்பி..? இப்படி சுணங்கிப்போய் சுருண்டு படுக்க வைத்துவிட்டாளே..? சிறு வயதில் இருந்து இவன் அழுதே நான் பார்த்தது இல்லையே..? இன்று தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கின்றானே..?’ சித்ரா அசோக்கின் தலைமுடியை இதமாக கோதி விட்டாள். உடனே அசோக் தன் இமைகளை திறந்து அக்காவை பார்த்தான். இருவரும் ஒரு சில வினாடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்புறம் சித்ரா ஆற்றாமை தாளாமல் கேட்டாள். "ஏண்டா தம்பி இப்படிலாம் பண்ற..? அக்காவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?" "நான் ஏன் இப்படிலாம் பண்றேன்னு உனக்கு தெரியலையாக்கா..?" "தெ..தெரியலைடா.." "நெஜமா தெரியலை..?" "ம்ஹூம்.." "என்னால திவ்யா இல்லாம இருக்க முடியாதுக்கா..!! அவ எனக்கு வேணும்க்கா.. அவ எனக்கு வேணும்..!! என் காதலியாவோ, என் பொண்டாட்டியாவோ கூட அவ எனக்கு வேணாம்.. எப்படியோ அவ என் லைஃப்ல இருந்தா போதும்..!! இத்தனை நாளா அவளுக்கு என் மேல காதல் இல்லைன்னு தெரிஞ்சா கூட.. அவகூட பேசிக்கிட்டு.. அவ சிரிப்பை பாத்துக்கிட்டு.. அவளை என் நெஞ்சுல சாச்சுக்கிட்டு.. சந்தோஷமா இருந்தேன்க்கா.. இப்போ அந்த சந்தோசம் கூட எனக்கு இல்லையேக்கா..? நான் என்ன பண்ணுவேன்..?" அசோக்கின் கண்களில் இருந்து இப்போது நீர் கசிய ஆரம்பித்தது. உடனே சித்ராவுக்கும் அழுகை பீறிட்டு கிளம்பியது. "அவ இல்லைன்னா என்னடா.. நாங்கல்லாம் இல்லையா உனக்கு..?" "அ..அவ எனக்கு முக்கியம்க்கா.. எ..எனக்கு.. வேற எதுவும் சொல்ல தோணலை..!!" "அவளை அவ்ளோ புடிக்குமாடா உனக்கு..?" சித்ரா உணர்ச்சிப் பூர்வமாக கேட்க, அசோக் இப்போது எதுவும் பேசவில்லை. அவனுடைய மனக்கண்ணில் ஒரு படம் ஓட ஆரம்பித்தது. சிறு வயதில் இருந்து திவ்யாவைப் பற்றிய அவனது நினைவுகள். திவ்யா சிரித்தது.. அழுதது.. வெட்கப்பட்டது.. கோவப்பட்டது.. கன்னம் கிள்ளியது.. காதை திருகியது.. தலையில் குட்டியது.. நெஞ்சில் சாய்ந்தது.. மடியில் உறங்கியது.. வெறுப்பாக பார்த்து அமில வார்த்தைகளை துப்பியது.. எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக.. வரிசையாக அவன் மனக்கண்ணில் ஓடியது..!! உதடுகளை பிரித்து மெல்லிய குரலில் சொன்னான்.

"புடிக்கும்க்கா.. ரொம்ப ரொம்ப புடிக்கும்..!!"அவ்வளவுதான்..!! சித்ரா தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அவளுடைய மனதில் பலவித யோசனைகள்..!! இத்தனை நாளாய் அசோக் திவ்யாவை காதலிக்கிறான் என்பது அவளைப் பொறுத்தவரை ஒரு நகைப்புக்குரிய விஷயமாக இருந்தது. இன்று.. அந்த திவ்யா தன் தம்பியின் மனதில் எந்த அளவுக்கு ஆழமாய் பதிந்து போயிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டாள். அவள் இல்லாமல் இனி இவன் சிரிக்கவே போவதில்லை என்று தோன்றியது. அப்படியே சிரித்தாலும் அது அடுத்தவர்களுக்காக பூசிக்கொள்ளும் அரிதார சிரிப்பாகவே இருக்கும். இல்லை.. இதை இப்படியே விடக் கூடாது..!! இப்படியே விட்டால் என் தம்பியின் வாழ்க்கை நாசமாக போய் விடும். அவளுடைய நினைவில் இவன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட தயங்க மாட்டான். இவனுடைய வாழ்க்கையை காப்பாற்ற நான் என்ன செய்யப் போகிறேன்..? சற்று முன் அப்பா சொன்னாரே..? 'அக்கா இருக்கா.. அம்மா மாதிரி பாத்துப்பான்னுதான அனுப்பி வச்சோம்..?' இதுவரை இவனுக்கு அம்மா போலவா நான் நடந்து கொண்டிருக்கிறேன்..? என்ன செய்யலாம்..? யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். "அசோக்.." தம்பியை அன்பாக அழைத்தாள். "ம்ம்.." "அக்கா மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..?" "ம்ம்.. இருக்குக்கா.." "சரி.. இப்போ அக்கா சொல்றேன் கேட்டுக்கோ..!! அவளை உன்கூட அக்கா சேர்த்து வைக்கிறேன்..!! நம்ம ஊரு சனமெல்லாம் கூடியிருக்க.. நீ திவ்யா கழுத்துல தாலி கட்ட.. அவ உன் கையை புடிக்க.. நான் அவ கையை புடிச்சு.. அக்னியை சுத்தி வரத்தான் போறோம்..!! இது கண்டிப்பா நடக்கும்..!! இப்போ நீ எந்த கவலையும் இல்லாம.. நிம்மதியா தூங்கு..!!" "அக்கா.." அசோக் அக்காவையே நம்பமுடியாமல் பார்த்தான். "அக்கா சொல்றேன்ல.. தூங்கு..!!" சித்ரா அசோக்கின் தலை முடியை கோதி விட, கொஞ்ச நேரத்திலேயே அவன் தூங்கிப் போனான். சித்ரா உடனே தன் வீட்டுக்கு கிளம்பி விடவில்லை. அவள் ஒரு முடிவுடன்தான் இருந்தாள். அசோக் உறங்கிய பிறகும் நெடுநேரம் செல்வாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். செல்வாவும் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்திருந்தார். அசோக்கை பற்றியும், திவ்யாவின் மீதான அவனுடைய காதலைப் பற்றியும் தனக்கு தெரிந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சித்ராவிடம் கொட்டி தீர்த்தார். சித்ராவும் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அவளுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக தோன்றின. செல்வா சொல்ல சொல்ல.. அசோக் திவ்யாவின் மீது கொண்டுள்ள காதலின் தீவிரம் அவளுக்கு முழுமையாக புரிய ஆரம்பித்தது..!! சித்ரா மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது கார்த்திக் திரும்பியிருந்தான். ஆனால் திவ்யா இரவு உணவு கூட உண்ணாமல், அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'செய்வதை எல்லாம் செய்துவிட்டு.. நிம்மதியாக உறங்குவதை பார்..' என்று சித்ரா திவ்யாவை மனதுக்குள் திட்டினாள். அடுத்த நாள் காலையிலும் திவ்யா சீக்கிரமே எழுந்து காலேஜுக்கு ஓடிவிட்டாள். அன்று மாலை.. சீக்கிரமே திவ்யா வீட்டுக்கு திரும்பிவிட்டாள். அவள் காலிங் பெல் அடித்தபோது, சித்ராதான் சென்று கதவு திறந்து விட்டாள். திறந்துவிட்டவள் அவளையே முறைத்து பார்க்க, அவளோ அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அவளுடைய அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டாள். திவ்யா உள்ளே சென்றதும், சித்ரா இந்தப்பக்கம் குட்டி போட்ட பூனை மாதிரி இங்கும் அங்கும் அலைந்தாள். அடிக்கடி திவ்யாவின் அறையையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டாள். அவள் மனதில் பல்வேறு குழப்பங்கள். எல்லாம் நன்றாக நடக்கவேண்டுமே என்ற பயம் வேறு..!! கொஞ்ச நேரம் அந்த மாதிரி அவஸ்தையாக அலைந்தவள், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள். அறையை நெருங்கியவள் கதவை 'லொட்.. லொட்..' என்று தட்டினாள். வெளியே செல்வதற்காக மேக்கப் போட்டுக் கொண்டிருந்த திவ்யா, அசுவாரசியமாய் திரும்பி பார்த்தாள். வாசலில் சித்ரா நிற்பதைக் கண்டதும் அப்படியே அதிர்ச்சியில் திகைத்து போனாள். சித்ரா இந்த மாதிரி திவ்யாவின் அறை வாசலில் வந்து நிற்பது இதுவே முதல் முறை. அதுதான் திவ்யாவிடம் அப்படி ஒரு திகைப்பு..!! திவ்யா அந்த மாதிரி திகைத்துக் கொண்டிருக்கும்போதே.. சித்ரா பதினைந்து வருடங்களுக்கு அப்புறமாக.. திவ்யாவின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து.. தன் வாய் திறந்து.. பேச ஆரம்பித்தாள்..!! "எ..எனக்கு.. உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா..!!"நியூட்டனின் மூன்றாம் விதி மிக பிரபலம்..!! இயற்பியல் பயிலாதவர்கள் கூட, அந்த விதியை மிக இயல்பாக மேற்கோள் காட்டி பேசுவது, நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான்..!! நான் இங்கு சொல்லப் போவது வேறு.. எனக்கு நியூட்டனின் முதல் விதியை மிகவும் பிடிக்கும்..!! உங்களில் எத்தனை பேர் அவருடைய முதல் விதியை படித்திருக்கிறீர்கள்..? படித்தவர்களில் எத்தனை பேருக்கு அது இப்போது ஞாபகம் இருக்கிறது..?? என்னடா இவன்.. கதை படிக்க வந்தால் கத்தியை போடுகிறான் என்று எண்ணாதீர்கள்.. காரணம் இருக்கிறது..!! சரி. அந்த முதல் விதியை நான் என்னுடைய சொந்த வரிகளில் சற்று எளிமையாக சொல்கிறேன்..!! 'வெளிப்புற அழுத்தம் எதுவும் இல்லாமல், எந்தப் பொருளும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாது..!!' இது ஒரு இயற்பியல் விதி..!! ஆனால்.. மனிதர்களுக்கும், அவர்களுடைய மனங்களுக்கும் இந்த விதி மிகவும் பொருந்தும்..!! புத்தியில் வலுவாக ஒரு அடி விழாத வரை எந்த மனிதனின் அடிப்படை குணமும் மாறாது..!! நல்லவனோ, கெட்டவனோ.. திருடனோ, தீவிரவாதியோ.. அரசியல்வாதியோ, ஆன்மீகவாதியோ.. அவர்களுடைய அடிப்படை குணம் மாற வேண்டும் என்றால்.. அவர்களுடைய மூளையை பலமாக ஏதோ ஒன்று பாதித்திருக்க வேண்டும்..!! சித்ராவின் மனமாற்றத்திற்கும் அதுதான் காரணம். நேற்று அவள் புத்தியில் வலுவான ஒரு அடி விழுந்தது. தம்பியின் காதல் தோற்றுப் போனால், அவனை அவள் இழக்க நேரிடுமோ என்ற பயம்தான் அந்த வலுவான அடி..!! அதனால்தான் தனது பதினைந்து வருட பிடிவாதத்தை தூக்கி எறிந்து விட்டு, அவளுடைய அடிப்படை குணத்தை மாற்றிக்கொண்டு, இன்று திவ்யாவின் அறை வாசல் வந்து நிற்கிறாள்..!! "எ..எனக்கு.. உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா..!!" ஆனால், திவ்யா அதை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. இறுதி வரை இவள் தன்னுடன் பேசவே மாட்டாள் என்ற எண்ணம்தான் அவள் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது. இப்போது அவள் தன் அறை வாசலிலேயே வந்து நின்று, பேசவேண்டும் என்றதும் அதிர்ந்து போனாள். திகைத்தாள்.. திணறினாள்.. தடுமாறினாள்..!! சித்ரா இப்போது திவ்யாவின் அறைக்குள் நுழைய, திவ்யாவை ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. தன் கண்களையே கூர்மையாக பார்க்கும் சித்ராவின் பார்வையை, ஏனோ திவ்யாவால் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. அவள் இந்த மாதிரி ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டதே இல்லை. அவளுடைய உடல் நடுக்கம் எடுக்க, அந்த சூழ்நிலை இப்போது அவளுக்கு அசௌகர்யமாக பட்டது. திவ்யாவுக்கு அங்கே நிற்பது பிடிக்கவில்லை. அந்த சூழ்நிலையை தவிர்த்துவிட வேண்டும் என்று எண்ணினாள். அவசரமாக அறை வாசலை நோக்கி ஓடினாள். திவ்யாவின் எண்ணம் சித்ராவுக்கு உடனே புரிந்து போனது. அவளும் வேகமாக குறுக்கே நகர்ந்து, 'நில்லுடி...!!' என்று கோபமாக கத்தியவாறு, திவ்யாவின் இடது கையை எட்டிப் பிடித்தாள். இழுத்து அவளை மீண்டும் அறைக்குள்ளேயே தள்ளினாள். உள்ளே தள்ளப்பட்ட திவ்யா தடுமாறிப் போனாள். கால்கள் இடற, மெத்தையிலே சென்று பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்தவள், சித்ராவின் முகத்தை ஏறிட்டு பார்க்க விரும்பாமல், அப்படியே தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய நுரையீரல் இப்போது அதிவேகமாய் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளிவிட, திவ்யாவுக்கு 'புஸ்.. புஸ்..' என்று மூச்சிரைத்தது. அவளுடைய மார்புப்பந்துகள் ரெண்டும் 'குபுக்.. குபுக்..' என விரிந்து விரிந்து சுருங்கி கொண்டிருந்தன. சித்ரா இப்போது சற்றே ஆவேசமாக பேச ஆரம்பித்தாள். "போதும் திவ்யா.. என்னை பாத்து.. நீ மெரண்டு மெரண்டு ஓடுனது போதும்..!! நான் எதிரே வந்தா மூஞ்சியை அந்தப்பக்கம் திருப்பிக்கிறதும்.. க்ராஸ் பண்றப்போ தலையை குனிஞ்சிக்கிறதும்.. ரூம் விட்டு வெளில வர்றப்போ நான் வெளில நிக்கிறனான்னு எட்டிப் பாத்துட்டு வர்றதும்.. போதும்.. எல்லாம் போதும்..!! என்னை பாத்தா ராட்சசி மாதிரி தெரியுதா உனக்கு..? பேசுனா கடிச்சா வச்சிடுவேன்..? உன் அண்ணிதான..? அண்ணன் பொண்டாட்டிதான..? பேசு என்கூட..!!" திவ்யா எதுவும் பேசவில்லை. 'புஸ்.. புஸ்..' என்று மூச்சிரைத்தவாறு, தனது பெரிய விழிகளை அகலமாய் திறந்து, தரையையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். சில வினாடிகள் காத்திருந்துவிட்டு, பின் சித்ராவே தொடர்ந்தாள்."பேசு திவ்யா.. இன்னைக்கு நீ பேசித்தான் ஆகணும்.. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!! என் தம்பியை நெனச்சா எனக்கு பயமா இருக்கு..!! உன் மேல இருக்குற பிரியத்துல.. உன்கூட பேசாம இருக்குற ஏக்கத்துல.. அவன் ஏடாகூடமா ஏதாவது செஞ்சுக்குவானோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!! நேத்து அவன் இருந்த நிலைமையை நீ பாத்திருந்தா.. உனக்கு புரிஞ்சிருக்கும்.. அவனை அந்த கோலத்துல பாத்த எனக்கு நெஞ்சே வெடிச்சு போச்சு திவ்யா..!! ஏன் இப்படி செஞ்ச.. ஏன் அவனை இந்த நெலமைக்கு ஆளாக்கி வச்சிருக்குற..??" சித்ரா கத்த, இப்போது திவ்யா தனது தலையை சரக்கென திருப்பி, தன் அண்ணியை கூர்மையாக ஒரு உக்கிரப்பார்வை பார்த்தாள். 'நான் என்ன பண்ணுனேன் உன் தம்பியை..?' என்பது மாதிரி இருந்தது அந்தப்பார்வை..!! ஓரிரு வினாடிகள்தான் அப்படி பார்த்திருப்பாள். உடனே மீண்டும் தலையை கவிழ்த்துக் கொண்டாள். ஆனால் அதற்கே சித்ரா சற்று மிரண்டு போனாள். பட்டென தன் குரலில் ஒரு மென்மையை குழைத்துக்கொண்டு பேசினாள். "இங்க பாரு திவ்யா.. நான் உன்னை குறை சொல்றேன்னு நெனைக்காத..!! நீ அவசரப்பட்டு நெறைய முடிவு எடுக்குற.. அது உனக்கு நல்லது இல்லம்மா..!! அசோக்கை பத்தி நான் சொல்லி.. நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்ல.. உனக்கே அவனைப் பத்தி நல்லா தெரியும்..!! உன்மேல அவனுக்கு எவ்வளவு பாசம் தெரியுமா.. உன்னை திட்டுறேன்னு எத்தனை தடவை என்கிட்டே சண்டைக்கு வந்திருக்கான் தெரியுமா..? அவன் எவ்வளவு நல்லவன்.. எப்படி கள்ளம் கபடம் இல்லாம சிரிச்சுட்டு திரிவான்.. அவனுக்கு புடிக்காத ஆளுங்ககிட்ட கூட.. அவங்க மனசு நோகாம நடந்துக்குவான்தான..?? எதிரிக்கு கூட கெடுதல் நெனைக்க மாட்டான் என் தம்பி.. அவன் உயிருக்கு உயிரா காதலிக்கிற உனக்கா கெடுதல் நெனைப்பான்..?? கொஞ்சம் யோசிச்சு பாரும்மா..!!" திவ்யா அமைதியாக தரையை பார்த்து அமர்ந்திருந்தாலும், அவளது மூளை அவளையுமறியாமல் சித்ரா சொன்ன விஷயங்களை அசை போட்டு பார்த்தது. 'சித்ரா சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அசோக் நல்லவன்தான்.. யாரையும் நோகடிக்காத நல்ல மனசுக்காரன்தான்.. ஆனால்.. ஆனால்.. அதற்காக அவன் என் காதலை அழிக்க நினைத்தது எந்த விதத்தில் சரியாகும்..??' திவ்யா யோசிக்க, அதற்குள் அவளது மனதை படித்தவளாய் சித்ரா சொன்னாள். "தயவு செஞ்சு.. அசோக் உன் காதலை கெடுக்க நெனச்சவன்னு மட்டும் சொல்லிடாத..!! ஆரம்பத்துல.. உன் மேல இருந்த காதலால.. மனசு தடுமாறி அவன் ஒருதடவை அந்த மாதிரி செஞ்சது என்னவோ உண்மைதான்..!! ஆனா.. அப்புறம்.. திவாகர் திரும்ப வந்தப்புறம்.. அவனோட காதலை எல்லாம் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டு.. உன் காதலுக்கு எவ்வளவு உதவி செஞ்சான்னு நெனைச்சு பாரு.. உனக்கு எவ்வளவு யோசனை சொன்னான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு.. அந்த திவாகருக்கு புடிக்கிற மாதிரி உன்னை மாத்தினது.. அவன்கிட்ட எப்படி பேசணும்.. எப்படி பழகனும்னு உனக்கு டிப்ஸ் கொடுத்தது.. எல்லாம் யோசிச்சு பாரு..!! திவாகரோட குடிப்பழக்கம் உனக்கு தெரிஞ்சப்போ.. அவரோட காதலை முறிச்சுக்க நீ ரெடியானப்போ.. அவசரப்படாத திவ்யான்னு உன்னை தடுத்தது யாரு..? உன் காதலை கெடுக்கனும்னா.. அசோக் ஏன் இதெல்லாம் செய்யணும்..? அவனுக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்றதை தவிர வேற எந்த நோக்கமும் இல்ல திவ்யா.. தயவு செஞ்சு இதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!" திவ்யாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய மூளை இப்போது சற்றே குழம்பியது. 'ஆமாம்.. எல்லாம் சரியாகத்தான் செய்தான்.. நானும் அப்படித்தான் நம்பினேன்.. அப்புறம் ஏன் அன்று வந்து திடீரென அப்படி சொன்னானாம்..? திவாகரை மறந்துவிடு என்று..!! ஏதோ நண்பர் மூலம் விசாரித்தேன் என்று கதையெல்லாம் அளந்தானே..? ஏன் அப்படி பொய் சொல்லி என் காதலை பிரிக்க நினைக்கவேண்டும்..?' திவ்யாவின் மூளை குழம்பிக்கொண்டிருக்க, சித்ரா தொடர்ந்தாள். "உனக்கு அந்த திவாகரைப் பத்தி சரியா தெரியலை திவ்யா.. அந்த ஆள் சரி கிடையாது.. ரொம்ப மோசமான கேரக்டர்..!! 'திவ்யாவை உன்கிட்ட இருந்து பிரிச்சு காட்டுறேன்'னு அசோக்கிட்டயே வந்து சவால் விட்டு பேசிருக்கான்.. தன்னோட மோசமான குணங்களை பத்தி சொல்லி.. 'முடிஞ்சா திவ்யாகிட்ட இதெல்லாம் சொல்லிப்பாரு.. அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்'னு திமிரா பேசிருக்கான்..!! திவாகர் மேல இருந்த கோவத்துலதான்.. அசோக் அன்னைக்கு 'திவாகரை மறந்துடு'ன்னு உன்கிட்ட சொன்னது..!! அசோக் சொன்னவிதம் வேணா.. அவசரப்பட்டு, அறிவில்லாம சொன்னதா இருக்கலாம்..!! ஆனா.. அதுக்கும் அவன் உன் மேல வச்சிருந்த அக்கறைதான் காரணம் திவ்யா..!! இந்த மாதிரி ஒரு ஆள்கிட்ட நீ சிக்கிட கூடாதுன்ற அக்கறைதான்..!!" திவ்யா இப்போது சற்றே ஏளனமாக சித்ராவை ஒரு பார்த்தாள். 'இது என்ன புதுக்கதையாக இருக்கிறது..? ஒருமனிதன் எதற்காக தன்னைப் பற்றியே கேவலமாக சொல்லிக் கொள்ள வேண்டும்..? திவாகர் அப்படிப்பட்டவர் கிடையாது.. அக்காவும், தம்பியும் சேர்ந்துகொண்டு என்னை குழப்ப நினைக்கிறார்கள்..!!' மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்ட திவ்யா, மீண்டும் தன் பார்வையை சித்ராவின் முகத்திலிருந்து வேறுபக்கமாக திருப்பிக் கொண்டாள். திவ்யாவுடைய நெஞ்சு இன்னும் மேலும் கீழுமாய் வேகமாக ஏறி இறங்கி, அவசர மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. சித்ராதான் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் திவ்யாவிற்கு தாகமெடுத்தது. டேபிள் மீது இருந்த தண்ணீர் ஜக்கை எட்டி எடுத்தாள். 'கடகட'வென நீரை தொண்டைக்குள் நிறைய சரித்துக் கொண்டாள். திவ்யா நீர் அருந்தி முடிக்கும் வரை, அவளுடைய முகத்தையே சித்ரா பொறுமையில்லாமல் முறைத்துக் கொண்டிருந்தாள்.நீரருந்தி முடித்த திவ்யா, இப்போது செல்போனை கையிலெடுத்து நோண்ட ஆரம்பிக்க, சித்ரா நிஜமாகவே படு எரிச்சலானாள். அவளுடைய கையிலிருந்த செல்போனை வெடுக்கென பிடுங்கி மெத்தை மீது எறிந்தாள். திவ்யா எதுவும் சொல்லவில்லை. சித்ராவை ஏறிட்டும் பார்க்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு தன் சுவாசத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். சித்ரா இப்போது எரிச்சலான குரலில் திவ்யாவிடம் கேட்டாள். "நான் இவ்வளவு சீரியஸா இங்க பேசிட்டு இருக்கேன்.. நீ செல்லை நோண்டிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?? நான் உன் வாழ்க்கையைப் பத்தித்தாண்டி பேசிட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு..?? நீ எவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கிருக்கேன்னு உனக்கு புரியுதா..?? அந்த திவாகர் ரொம்ப ஆபத்தானவன் திவ்யா.. அவன்கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்து..!! அவனை பத்தி இன்னும் சொல்றேன்.. அவன் எந்த மாதிரி ஆளுன்னு நீயே ஒரு முடிவுக்கு வா..!!" கண்கள் மூடி அமைதியாக இருந்த திவ்யா, இப்போது தன்னையும் அறியாமல் தன் காதுகளை கூர்மையாக்கி, சித்ரா என்ன சொல்லப் போகிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தாள். சித்ரா அவள் பேசிய வேகத்திலேயே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். "நேத்து அந்த திவாகர் என்ன பண்ணிருக்கான் தெரியுமா..?? நீயும் அவனும் ஏதோ ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிட போயிருந்தீங்களாமே..? அசோக்கும் அப்போ அங்கதான் இருந்திருக்கான்.. நீ ஹேன்ட் வாஷ் பண்ண போயிருந்தப்போ.. அசோக்குக்கு ஃபோன் பண்ணி.. 'இப்போ உன் ஆளு வருவா.. அவ மேல கை போடுறேன்.. பாத்துட்டுப்போ..'ன்னு எகத்தாளமா சொல்லிருக்கான்..!! எவ்வளவு ஒரு கேவலமான, வக்கிரமான புத்தி இருந்தா.. ஒரு ஆளு இப்படி சொல்லிருப்பான்..? அவன் கைல உன் வாழ்க்கையை ஒப்படைச்சா.. என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு..!!" சித்ரா சொல்ல சொல்லவே, திவ்யாவின் மூளைக்குள் சுருக்கென்று ஏதோ தைத்தது..!! அவ்வளவு நேரம் வேண்டா வெறுப்பாக அண்ணியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவளுடைய முகத்தில், பட்டென ஒரு சீரியஸ்னஸ் வந்து உட்கார்ந்து கொண்டது. நிமிர்ந்து அமர்ந்தாள். அவளுடைய மனம் பரபரப்பாய் பலவிஷயங்களை யோசிக்க ஆரம்பித்தது. 'என்ன சொல்லுகிறாள் இவள்..? இவள் சொல்வது உண்மையா..? ஆமாம்.. நான் துப்பட்டாவை வாஷ் செய்துகொண்டிருந்தபோது, திவாகர் தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாரே..? அது வேறு யாரிடமோவா.. இல்லை இவள் சொல்வது மாதிரி அசோக்கிடமா..? ஒருவேளை அசோக்கிடம்தானோ..? அவனிடம்தான் இவள் சொல்வது மாதிரி பேசினாரோ..? அதனால்தான் என்றும் இல்லாத வழக்கமாய் என் தோள் மீது கை போட்டு அணைத்தாரா..? அதைப் பார்த்த ஆத்திரத்தில்தான் அசோக் அப்படி அசுர வேகத்தில் பைக்கில் பறந்தானோ..? இந்தமாதிரி எல்லாம் கீழ்த்தரமாய் நடந்துகொள்ளக் கூடிய ஆளா திவாகர்..? இல்லை.. இல்லை.. அவருக்குத்தான் அசோக்குடைய செல்நம்பரே தெரியாதே..? அப்புறம் எப்படி பேசியிருப்பார்..?? இரு இரு.. ஏன் முடியாது..?? என்னுடைய செல்போனில் அசோக்குடைய நம்பர் இருக்கிறதே.. ஹேன்ட் பேக்கின் சைட் ஜிப் வேறு திறந்திருந்ததே..?? ஒருவேளை...??? ஐயோ...!!! இப்போது ஏன் இவர்கள் பேச்சைக் கேட்டு திவாகரை தவறாக எண்ணுகிறாய்..?? இயல்பாக நடந்த விஷயங்களை இவர்கள் ஏதோ திரித்து சொல்கிறார்கள்..!! ஒருவேளை அவை இயல்பாக நடந்தவை இல்லையோ.. இவர்கள் சொல்வதுதான் உண்மையோ..?? ஆஆஆ...!!' திவ்யா இப்போது உச்சபட்ச குழப்பத்துக்கு உள்ளானாள். அவளுடைய மனக்குளத்தில் ஒரே நேரத்தில் ஓராயிரம் கற்கள் விழுந்த மாதிரியாக, அலைஅலையாய் குழப்ப அதிர்வுகள்..!! சிந்திக்க சிந்திக்க.. மூளை கொதிப்பது போல வலியெடுத்தது திவ்யாவுக்கு..!! திவ்யாவுடைய மாற்றத்தை கவனியாது சித்ரா தொடர்ந்து வேகமாக பேசிக் கொண்டிருந்தாள். "நல்ல யோசி திவ்யா.. இந்த மாதிரி ஒரு ஆளை நீ காதலிக்கனுமா..? ஹ்ஹ.. சொல்லப்போனா.. அந்த ஆள் மேல உனக்கு இருக்குறது காதலான்னு கூட எனக்கு சந்தேகமா இருக்குது..!! 'அவனை காதலிக்கட்டுமா..?'ன்னு அசோக்கிட்ட அபிப்ராயம் கேட்டியாமே..?? காதல்ன்றது ஒரு பொண்ணுக்கு இப்படியாடி வரும்..?? இங்க இருந்து வரணும்டி.. நெஞ்சுல இருந்து வரணும்..!! மனசு சொல்லணும்.. 'இவன் நமக்கு சொந்தமானவன்.. கடைசிவரை இவன்கூடத்தான் இருக்கப் போறோம்'னு.. மனசு அப்படி சொன்னப்புறம் யார் பேச்சை கேட்டும் அதை மாத்தக்கூடாது..!! உன் மனசு அப்படி சொல்லிருந்ததுன்னா.. அசோக்கிட்ட அந்தமாதிரிலாம் நீ அபிப்ராயம் கேட்டிருக்கமாட்ட.. 'இவனைத்தான் நான் காதலிக்கிறேன்'னு.. பொட்டுல அறைஞ்ச மாதிரி சொல்லிருப்ப..!!"

நிஜமாகவே திவ்யாவிற்கு இப்போது பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது..!! அவளுடைய புத்தியில் சம்மட்டியால் அடித்தது போல பலமாக ஒரு அடி விழுந்தது..!! 'என்ன சொல்கிறாள் இவள்..? அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. கடைசியில் என்னுடைய காதலையே சந்தேகிக்கிறாளே..? திவாகர் மீது எனக்கிருப்பது காதல் இல்லையா..?? காதல் இல்லாமல் வேறென்ன..??'"அந்த ஆள் ஏதோ விஷம் குடிக்கப் போறேன்னு சொன்னானாம்.. உடனே நீ அழுதுக்கிட்டே 'ஐ லவ் யூ..' சொன்னியாம்..?? என்னடி இதுலாம்..?? இதுக்கு பேரா லவ்வு..???" சித்ரா சீற்றமாய் கேட்க, திவ்யா மூச்சு விடாமல் அமர்ந்திருந்தாள். "சரி.. இப்போ நான் ஒன்னு சொல்றேன்.. செய்றியா..? நான் சொல்றதெல்லாம் கொஞ்சம் கண் மூடி நிதானமா யோசிச்சு பாரு.. உன் மனசு என்ன சொல்லுதுன்னு பாரு..!!" சித்ரா சொல்ல, திவ்யா தலையை குனிந்தவாறே.. அவளுடைய கட்டுப்பாடின்றியே.. அதற்கு தயாரானாள். "அசோக்கை நெனைச்சு பாரு.. அசோக்.. உன் அசோக்.. உனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச உன் அசோக்..!! சின்ன வயசுல இருந்தே அவன் உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருந்தான்னு கொஞ்சம் நெனச்சு பாரு.. உனக்கு எது புடிக்கும், எது புடிக்காதுன்னு பாத்து பாத்து செய்வானே..? உன் சந்தோஷத்துக்காக அவன் என்னெல்லாம் பண்ணிருக்கான்னு நெனச்சு பாரு.. அவனை விட உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவங்க யாராவது உண்டான்னு யோசி..!! அவனை கட்டிக்கிட்டா நீ எவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு நெனச்சு பாரு.." சித்ரா சொல்ல சொல்ல.. திவ்யாவின் மனதுக்குள் ஒரு படம் ஓட ஆரம்பித்தது..!! அசோக்கை தன் காதலனாக.. கணவனாக.. கழுத்தில் மாங்கல்யம் சூட்டுபவனாக.. காதலோடு மார்பில் சாய்த்துக் கொள்பவனாக..!! நினைக்க நினைக்க.. ஒரு இனம்புரியாத உணர்ச்சி அலை திவ்யாவின் உடலெங்கும் ஓடியது..!! படக்கென தன் தலையை பலமாக உதறி, அந்த உணர்வை வெட்டி எறிந்தாள்..!! 'என்ன இது.. என் மனம் ஏன் இப்படி எல்லாம் வெட்கமில்லாமல் சிந்திக்கிறது..?' திவ்யா உச்சபட்ச குழப்பத்தில் சிக்கி திளைத்துக் கொண்டிருக்க, சித்ராவின் கண்களில் இப்போது திடீரென கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது. விழிகளில் தேங்கிய நீருடன் தழதழத்துப் போன குரலில் சொன்னாள். "என் மனசாட்சியை தொட்டு சொல்றேண்டி.. அசோக் மாதிரி ஒரு நல்ல புருஷன் சத்தியமா உனக்கு கெடைக்க மாட்டான்..!! அவனை வெறுத்து ஒதுக்கி.. அவன் வாழ்க்கையையும் பாழாக்கி, உன் வாழ்க்கையையும் பாழாக்கிக்காத..!!" சொல்லி முடிக்கும் முன்பே, கண்களில் தேங்கியிருந்த நீர் இப்போது சித்ராவின் கன்னங்களை நனைத்து ஓட ஆரம்பித்தது. அழுகிற விழிகளுடனே.. அவளது கைகள் இரண்டையும் கூப்பி.. தொழுது.. திவ்யாவிடம் பரிதாபமாக கெஞ்சினாள்..!! "ப்ளீஸ் திவ்யா.. அண்ணி உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்..!! என் தம்பியை ஏத்துக்கோ.. அவன் வாழ்க்கையை காப்பாத்து..!! ப்ளீஸ்..!!" திவ்யா இப்போது தனது விழிகளை உயர்த்தி, தன் எதிரே நிற்கும் சித்ராவை ஏறிட்டாள். ஏறிட்டவள் அவள் நின்றிருந்த கோலத்தை கண்டதும், ஒருகணம் அப்படியே திகைத்துப் போனாள். இவள் ஒருநாள் இப்படி ஒரு கோலத்தில் தன் எதிரே நிற்கப் போகிறாள் என்று திவ்யா கனவிலும் எண்ணியது இல்லை. கைகூப்பி தன் முன் நிற்கும் அண்ணியைப் பார்த்து திவ்யா கலங்கிப் போனாள். ஆனால் அந்த கலக்கத்தை வெளியில் காட்ட விருப்பம் இல்லாதவளாய், மீண்டும் தன் தலையை கவிழ்த்துக் கொண்டாள். இப்போது சித்ரா அழுகையை நிறுத்தினாள். இரண்டு கையாளும் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மூக்கை லேசாக விசும்பிக் கொண்டாள். புதிதாய் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் சொன்னாள். "இரு.. ஒரு நிமிஷம் இங்கயே இரு..!! உனக்கு நான் ஒன்னு காட்டனும்.. அசோக் உன்னை எந்த அளவு நேசிக்கிறான்னு உனக்கு காட்டனும்..!! ஓடிடாத.. அண்ணி இதோ வந்துடுறேன்..!!" சொன்ன சித்ரா அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். திவ்யாவுக்கு ஏனோ இப்போது எழுந்து ஓடவேண்டும் என்று தோன்றவில்லை. சித்ரா இன்னும் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. 'அசோக் எந்த அளவுக்கு என்னை நேசிக்கிறான்..?' தெரிந்து கொள்ள அவளுடைய உள்மனம் ஆர்வமாக இருந்தது. அரை நிமிடம் கூட ஆகியிருக்காது. சித்ரா மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய கையில் இப்போது புதிதாக ஒரு பை முளைத்திருந்தது. அந்தப் பையை திவ்யா அமர்ந்திருந்த கட்டிலுக்கு மேலாக உயர்த்தி பிடித்து, தலை குப்புற கவிழ்த்தாள். பொலபொலவென ஏதேதோ பொருட்கள், அந்தப் பைக்குள் இருந்து விழுந்து, மெத்தையில் விழுந்து ஓடின..!! 'என்ன இதெல்லாம்..?' என்பது போல திவ்யா அவற்றை பார்த்தாள். பார்க்க பார்க்க.. அவளுடைய உடம்பின் அனைத்து செல்களிலும் ஒரு பரவசமான உணர்ச்சி உடைப்பெடுத்து ஓட ஆரம்பித்தது..!! வார்த்தைகளில் சொல்ல முடியாத மாதிரியான.. ஒரு புதுவிதமான.. அதுவரை அவள் அனுபவித்திராத அற்புதமான உணர்ச்சி..!! வீணையின் தந்திகளை விரல்களால் மீட்டுவது போல.. அவள் உடலின் நாடி நரம்புகள் அத்தனையையும் மீட்டிப் பார்த்தது அந்த வினோதமான உணர்ச்சி..!! மெத்தையில் சிந்திக் கிடந்தது எல்லாம், சிறுவயதிலிருந்தே திவ்யாவின் ஞாபகார்த்தமாக அசோக் சேர்த்து வைத்திருந்த பொருட்கள்..!! சில உடைந்த வளையல் துண்டுகள்.. ஒரு நெளிந்து போன நட்ராஜ் ஜியாமட்ரி பாக்ஸ்.. குப்பையில் வீசிஎறிந்த இயர்ஃபோன்.. குற்றாலத்தில் தவறவிட்ட காதணி.. மறந்து போயிருந்த இதயவடிவ கீ செயின்.. தொலைந்துபோனது என எண்ணியிருந்த பூனை படம் போட்ட கர்ச்சீஃப்.. எப்போதோ அசோக்கிற்கு பரிசளித்த பேனா.. எதற்காக எடுத்து வைத்திருக்கிறான் என்றே தெரியாத கடல் கிளிஞ்சல்கள்..!! இன்னும் ஏதேதோ பொருட்கள்.. கலர் கலராய்.. சிறிதும் பெரிதுமாய்.. புதிதும், பழையதுமாய்..!! எல்லாப் பொருட்களுக்கும் மையமாய் அந்த டைரி திறந்த வாக்கில் விழுந்திருந்தது..!! ஃபேன் காற்றில் டைரியின் காகிதங்கள் படபடத்தன..!! அதனுள்ளே செருகி வைத்திருந்த காதல் சொல்லும் கார்டுகள், இப்போது வெளிய வந்து கட்டில் முழுதும் சிதறி கிடந்தன..!! டைரியின் சில பக்கங்களில் தென்பட்ட திவ்யாவின் கோட்டு சித்திரங்கள்..!! ஒரு சித்திரத்தின் நெற்றியில் அவளுடைய ஸ்டிக்கர் போட்டு..!! எல்லா பக்கங்களிலும் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த எக்கச்சக்கமான 'I LOVE YOU DIVYA ..!!'க்கள்..!! "பாரு திவ்யா.. அவன் உன் மேல வச்சிருக்குற காதலை பாரு..!! என் தம்பி எந்த அளவுக்கு உன் மேல பைத்தியமா இருந்திருந்தா.. இதெல்லாம் சேர்த்து வச்சிருப்பான்..? நல்லா பாரு..!! இவன் உனக்கு வேணாமா திவ்யா.. உன் மேல உயிரையே வச்சிருக்குற இவன் உனக்கு வேணாமா..?" தழதழத்த குரலில் சொன்ன சித்ரா அப்படியே மடங்கிப்போய் தரையில் அமர்ந்தாள். கட்டிலில் சாய்ந்து கொண்டாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். திவ்யா உண்மையிலேயே திகைத்துப் போனாள். அசோக் அவளை காதலிக்கிறான் என்று அவளுக்கு தெரியும். ஆனால்.. 'எப்போதிருந்து..?' என்ற உண்மை இப்போதுதான் அவளுடைய புத்தியில் வலுவாக அறைந்தது. விவரம் தெரியாத சின்ன வயதில் இருந்தே இதையெல்லாம் பொறுக்கி எடுத்து பொக்கிஷமாக சேகரித்து வைத்திருக்கிறான் என்றால்..?? திவ்யாவின் மனக்கண்ணில் இப்போது அசோக்கின் காதல் திடீரென அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. மளமளவென மலை அளவு வளர்ந்து அவள் முன்பு பிரம்மாண்டமாக நிற்க, அதை அவள் அண்ணாந்து பார்த்தாள். திவ்யாவுடைய கண்கள் இரண்டும் இப்போது கண்ணீரை கசிய ஆரம்பித்தன. சொட்டு சொட்டாய் கண்ணீர் வெளிப்பட்டு அவளுடைய கன்னங்களை நனைத்து ஓட, அவளது உதடுகள் படபடத்தன. பற்களால் அழுத்தி தன் உதடுகளை கடித்து உணர்ச்சியை கட்டுப்படுத்த முயன்றாள். கொட்டிக்கிடந்த பொருட்களை தனது வலது கையால் அப்படியே தடவிப் பார்த்தாள். அவளுடைய விரல்கள் ஐந்தும் அந்தப் பொருட்கள் மீது அலைஅலையாய் ஊர்ந்து சென்றன. ஒவ்வொரு பொருளாக கடந்து சென்ற அவளுடைய கை.. ஒரு பொருளை மட்டும் பற்றி மேலெழும்பியது..!! அது.. திவ்யாவின் ஒற்றைக் கால் கொலுசு..!! மரம் வளருமென முட்டைகளை புதைத்த அன்று காணாமல் போன கொலுசு..!! 'அழகா இருக்கு திவ்யா..!!' என்று அசோக் ஆசையாக சொன்னவாறு, அன்று தடவிப் பார்த்த கொலுசு..!! இதோ அருகில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாளே.. அவளுடன் திவ்யா பேசாமலிருக்க காரணமான சம்பவம் நடந்த அன்றுதான் இந்தக் கொலுசும் காணாமல் போனது..!! திவ்யாவுடைய வலது கையில் நிரந்தரமாகிப் போன ஒரு நெருப்பு சுட்ட தழும்பும், அன்றுதான் முதன்முறையாக கையில் ஏறியது..!! இப்போது திவ்யா கொலுசை இறுகப் பற்றியிருந்த கையை மெல்ல திருப்பி, அந்த தழும்பை பார்த்தாள். அதை பார்க்க பார்க்க.. அவளுடைய கண்கள் இன்னும் அதிகப்படியான நீரை சிந்தின. சித்ரா இப்போது தலையை நிமிர்த்தி திவ்யாவை பார்த்தாள். அப்புறம் அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவளுக்கு, திவ்யாவுடைய தழும்பு கண்ணில் பட்டது. சில வினாடிகள் அந்த தழும்பையே பாவமாக பார்த்த சித்ரா, அப்புறம் தன் வலது கையை மெல்ல நீட்டினாள். திவ்யாவுடைய முழங்கைக்கு அருகே தென்பட்ட அந்த தழும்பை தன் கைவிரல்களால் மெல்ல வருடினாள். திவ்யா தன் கையை சித்ராவிடமிருந்து இப்போது விலக்கிக் கொள்ளவில்லை. அண்ணியின் முகத்தை ஏறிட்டாள். அவளோ இப்போது பரிதாபமான குரலில் சொன்னாள். "சின்ன வயசுல.. நான் தெரியாம செஞ்ச தப்பால.. உன் கைல சூடு விழுந்துடுச்சு..!! அன்னைக்கு நான் ரொம்ப சின்னப்பொண்ணு.. ஏதோ கேக்கனுமேன்னு பேருக்கு கேட்டேன்.. இப்போ வளர்ந்து பெரியவளாயிட்டேன்.. என் மனசார கேக்குறேன்.. என்னை மன்னிச்சுடு திவ்யா..!! உன் கைல சூடு விழ வச்சதுக்கு என்னை மன்னிச்சுடு..!!" சித்ரா சொல்லிவிட்டு அழ, திவ்யாவாலும் அவளுடைய உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சி அலைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. அவளுடைய உதடுகள் துடிக்க, கண்களில் இருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்ட ஆரம்பித்தது. கண்களில் வழியும் நீருடனே அண்ணியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். சித்ராவும் திவ்யாவும் அவ்வாறு அருகருகே அமர்ந்து கொண்டு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், மெத்தையில் கிடந்த திவ்யாவின் செல்போன் அலறியது..!!ஒரே நேரத்தில் திவ்யாவும், சித்ராவும் செல்போனை திரும்பி பார்த்தார்கள். 'DIVAKAR CALLING.. DIVAKAR CALLING..' என்று டிஸ்ப்ளே பளிச்சிட்டது..!! இருவரும் ஒரே நேரத்தில் செல்போனை நோக்கி கைநீட்ட, அது திவ்யாவின் கையில் சிக்கியது. இப்போது சித்ரா லேசான பதட்டத்துடன் சொன்னாள். "ப்ளீஸ் திவ்யா.. அ..அந்த காலை கட் பண்ணு.. அண்ணி சொல்றதை கேளு.. அந்த ஆள் சகவாசமே நமக்கு வேணாம்..!! நீ, அசோக், நான், உன் அண்ணன்.. நம்ம நாலு பேரும் நிம்மதியா சந்தோஷமா இருக்கலாம்..!! ப்ளீஸ் திவ்யா.." திவ்யா ஒரு சில வினாடிகள் அண்ணியின் முகத்தையும், கையிலிருந்த செல்போனையும் மாறி மாறி பார்த்தாள். கொஞ்ச நேரத்திற்கு அவளுடைய மனதில் ஒரு குழப்பமான போராட்டம். அப்புறம் ஏதோ முடிவுக்கு வந்தவளாய், பட்டென காலை பிக்கப் செய்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக்கொண்டே, "ஹலோ.." என்றாள். "........................." அடுத்த முனையில் திவாகர் ஏதோ கேட்க, "ம்ம்.. கெளம்பிட்டேன்.. இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க வந்துடுவேன்..!!" திவ்யா சொல்லிவிட்டு காலை கட் செய்ய, சித்ரா இப்போது சுத்தமாய் பேச்சிழந்து போயிருந்தாள். திவ்யாவையே ஒருமாதிரி ஸ்தம்பித்துப்போய் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். திவ்யா எழுந்தாள். ஈர டவலால் முகத்தை துடைத்துக் கொண்டு, லேசாக பவுடர் பூசிக் கொண்டாள். பேக் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டாள். தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டுகொண்டிருக்கும் சித்ராவை ஓரிரு வினாடிகள் கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அவசரமாய் நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள். சித்ரா நீர்த்திரையிட்ட விழிகளுடன், இறுதி வரை எதுவுமே பேசாமல் செல்லும் திவ்யாவின் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.குண்டும் குழியுமாக இருந்தது அந்த சாலை. மிதமான வேகத்தில் செல்லும்போதே ஆட்டோ அப்படியும் இப்படியுமாய் குலுங்கியது. திவ்யாவோ ஆட்டோவுக்குள்ளே மனம் கலங்கிப்போனவளாய் அமர்ந்திருந்தாள். அவளுடைய பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்திருந்தது. அவளுடைய மூளையின் ஒவ்வொரு அணுவிலும், குறுக்கும் நெடுக்குமாய் பலவித குழப்ப எண்ணங்கள். அவள் எவ்வளவோ முயன்று மனதை தெளிவாக வைத்துக் கொள்ள நினைத்தும், அது மேலும் மேலும் குழம்பிய குட்டையாகவே மாறிக்கொண்டிருந்தது. அசோக்கும், திவாகரும் அவளுடைய மனக்கண்ணில் மாறி மாறி தோன்றிக் கொண்டிருந்தார்கள். வசீகரமாக சிரித்தார்கள். ஆளுக்கொரு புறம் நின்று கையசைத்து அழைத்தார்கள். அவள் குழம்பிப்போய் பரிதாபமாக பார்க்க, இருவரும் கைகொட்டி சிரித்தார்கள். சிந்தித்து சிந்தித்து.. அந்த குழப்ப எண்ணங்களில் உழன்று உழன்று.. திவ்யாவுக்கு மூளை தீப்பிடித்துக் கொண்டது மாதிரி இருந்தது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். தலையை இரண்டு புறமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அமைதியாக ஆட்டோ சீட்டில் தலையை சாய்ந்துகொண்டாள். "நீ சொன்ன எடம் வந்துருச்சும்மா.. இங்கயா.. இன்னும் போகனுமா..?" ஆட்டோக்காரரின் குரல் திவ்யாவை நனவுலகுக்கு இழுத்து வந்தது. ஒருகணம் அவள் எங்கே இருக்கிறோம் என்றே குழம்பிப் போனாள். தலையை அப்படியும் இப்படியுமாய் திருப்பி திருப்பி பார்த்தாள். வெளியே இப்போது நன்றாக இருட்டியிருந்தது. ஆட்டோ நின்ற இடம் ஓரளவுக்கு பிடிபட்டதும், ஆட்டோவுக்கு பின்புறமாக இருந்த கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். கொஞ்ச தூரத்திலேயே ஒரு மரத்தின் அடியில் திவாகரின் கார் நிற்பது தெரிந்தது. உடனே அவசரமாய் ஆட்டோக்காரரிடம் சொன்னாள். "இங்கதாங்க.. நிறுத்துங்க.." ஏறும்போதே பேசியபடி மீட்டருக்கு மேலே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கினாள். திரும்பி திவாகரின் காரை நோக்கி நடந்தாள். அவள் காரை நெருங்கியதுமே, காரின் ஒருபக்க கதவு திறந்து கொண்டது. உள்ளே ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததுமே ஏதோ ஒரு விரும்பத்தகாத நெடி அவளுடைய நாசியை குப்பென தாக்கியது. 'என்ன ஸ்மெல் இது..? இது.. இது.. சில சமயங்கள் அசோக்கிடம் இருந்து இந்த ஸ்மெல் வருமே..? தி..திவாகர் குடித்திருக்கிறாரா என்ன..?' அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, "எவ்வளவு நேரம் வெயிட் பண்றது..?" திவாகர் ஒருவித எரிச்சலான குரலில் கேட்டான். "ஸா..ஸாரி.." என்றாள் திவ்யா மென்மையாக. "காலேஜ்ல இருந்து அப்போவே கெளம்பிட்டல..? அப்புறமும் ஏன் லேட்டு..?" "வீ..வீட்டுக்கு கெஸ்ட் வந்துட்டாங்க.." "ம்ம்.. எல்லாம் நம்மள மண்டை காய விடுறதுக்குனே எங்க இருந்தாவது வந்துருவானுக..!! சரி போலாமா..?" "ம்ம்.. போலாம்..!!" கார் கிளம்பியது. திவாகருக்கு இன்னும் கோபம் போகவில்லையோ என்று திவ்யாவுக்கு பட்டது. நேற்று நள்ளிரவு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் விட்டதற்கு காலையில் அவனிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள். 'உடம்பு சரியில்லை.. நல்ல தலைவலி..' என்று சமாளித்துப் பார்த்தும் அவன் சமாதானம் ஆகவில்லை. நன்றாக இவளை திட்டிவிட்டு காலை கட் செய்துவிட்டான். அப்புறம் திவ்யா திரும்ப கால் செய்தபோது, திவாகர் எடுக்கவில்லை. திவ்யாவுக்கு ஏனோ மறுபடியும் கால் செய்து அவனிடம் கெஞ்ச தோன்றவில்லை. அவளுடைய மனதில் வேறு சில குழப்பங்கள். அப்படியே விட்டுவிட்டாள். மதியத்துக்கு மேல் அவனே திரும்ப கால் செய்தான். 'ஈவினிங்காவது சீக்கிரம் வா..!!' என்றான் கோபம் குறைந்தவன் போல. இப்போது பார்த்தால் மீண்டும் கோபமாக இருக்கிறானோ என்பது மாதிரி இருந்தது அவனது முகம். ஆனால் அவள் அவ்வாறு நினைத்து கொண்டிருக்கும்போதே, "ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்குற திவ்யா..?" திவாகர் மிகவும் கவலையாக கேட்டான். "அ..அப்டிலாம் ஒன்னும் இல்லையே..?" "இல்ல.. உன் முகம் ஏதோ வாடிப் போன மாதிரி இருக்குது..!!" "சேச்சே.. அப்டிலாம் எதுவும் இல்ல திவாகர்.. நான் நார்மலாத்தான் இருக்குறேன்..!!" "ம்ம்ம்... இந்த ட்ரெஸ் உனக்கு நல்லா இருக்கு திவ்யா..!!" "தே..தேங்க்ஸ்.." சொல்லிவிட்டு திவ்யா மெலிதாக புன்னகைக்க, அவனும் இப்போது இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தான். 'இவன் எந்த நேரத்தில் எந்த மாதிரி பிஹேவ் செய்வான் என்றே புரிந்து கொள்ளவே முடியவில்லையே.. ஏன்..?' என திவ்யா இப்போது மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். தான் அணிந்திருந்த உடையை ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள். பார்த்ததுமே அசோக்கின் நினைவு அவளுடைய மனதுக்குள் பரபரவென பரவ ஆரம்பித்தது.ஐயே.. இது எனக்கு பிடிக்கவே இல்ல.." "ப்ச்.. உன் ஆளுக்கு புடிக்கனுமா வேணாமா..?" "பு..புடிக்கணும்.." "அப்போ இதை எடுத்துக்கோ..!!" அசோக்கின் நினைவு வந்ததும், சற்றுமுன் ஆட்டோவுக்குள் இருந்த அதே மனநிலைக்கே திவ்யா இப்போது மீண்டும் ஆட்பட்டாள். மீண்டும் குறுக்கும் நெடுக்குமாய் அதே குழப்ப எண்ணங்கள். மீண்டும் அதே தலைவலி..!! திவாகர் அமைதியாக காரை செலுத்திக் கொண்டிருக்க, திவ்யா கண்களை மூடி மனதை ஆசுவாசப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். ஒரு பத்து நிமிடங்கள் இருக்கும். ஏதோ ஒரு குழப்பமான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த திவ்யா திடீரென விழிப்பு வந்தவளாய் தலையை உதறிக் கொண்டாள். கார் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். சுற்றிலும் கும்மென்று இருள் மண்டிக்கிடந்தது. தெருவிளக்குகள் கூட இல்லாத சாலையில் கார் சீறிக் கொண்டிருந்தது. "எங்க போயிட்டு இருக்கோம்..?" திவ்யா குழப்பமாக கேட்டாள். "என் வீட்டுக்கு..!!" "வீட்டுக்கா..? வீட்லையா பார்ட்டி..??" "எஸ்..!!" "நே..நேத்து ஏதோ ரெஸ்டாரன்ட்ன்னு சொன்னீங்க..?" "அது என் பிசினஸ் பிரண்ட்சுக்காக.. அது ஈவினிங்கே முடிஞ்சது..!! இது உனக்கு மட்டும்.. ஸ்பெஷலா..!!" திவாகர் சொல்லிவிட்டு இளித்தான். "ஓ..!! நான் ரெஸ்டாரன்ட்ன்னு நெனச்சேன்.." "எங்க இருந்தா என்ன..? அதில்லாம.. நீ இதுவரை என் வீட்டுக்கு வந்ததே இல்லைல..?" "ம்ஹூம்.." "இன்னைக்கு வா.. வந்து பாரு.. நீ வாழப்போற வீட்டை..!! நேரா வீட்டுக்கு போறோம்.. ஃபோன் பண்ணி சாப்பாடு ஆர்டர் பண்றோம்.. மொட்டை மாடில கேண்டில் லைட் வெளிச்சத்துல உக்காந்து சாப்பிடுறோம்..!! வாவ்... நெனச்சுப் பாக்கவே ரொம்ப ரொமாண்டிக்கா இருக்குல..?" திவாகர் உற்சாகமாக கேட்க, "ம்ம்ம்.." திவ்யா சுரத்தே இல்லாத குரலில் சொன்னாள். அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்களில் கார் அந்த வீட்டை அடைந்தது. சுற்றிலும் எந்த வீடும் இன்றி இருளுக்குள் தனியாக நின்றிருந்தது திவாகரின் வீடு. திவ்யா நினைத்ததை விட வீடு பெரிதாக பிரமாண்டமாகவே இருந்தது. திவாகர் காரை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்தி பார்க் செய்தான். இறங்கிக் கொண்டார்கள். அந்த ஆறடி உயர க்ரில் கேட்டை திவாகர் திறந்து உள்ளே தள்ளிவிட்டான். இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். "வீட்ல யாரும் இல்லையா..?" ஹாலுக்குள் நுழைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே திவ்யா கேட்டாள். "நீ வர்றேன்னு வேலைக்காரங்களுக்குலாம் லீவ் கொடுத்து அனுப்பிச்சுட்டேன்..!!" திவாகர் சொல்ல, திவ்யாவுக்கு ஏதோ மனதுக்குள் உறுத்தியது. 'ஏன்.. அவர்கள் இருந்தால் என்ன..?' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, திவாகர் கேஷுவலான குரலில் கேட்டான். "சரி என்ன சாப்பிடுற..? காபி, டீ ஆர் ஜூஸ்..?" என்று கேட்டவன், திவ்யா பதில் சொல்வதற்கு முன்பே, "ஜூஸ் சாப்பிடலாம்.. சரியா..?" என்று அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். மேலும், "நானே இன்னைக்கு என் கையால.. என் செல்ல திவ்யாக்குட்டிக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்.. ஜஸ்ட் டூ மினிட்ஸ்.. இங்கயே வெயிட் பண்ணு..!!" என்று கொஞ்சலாக சொல்லிவிட்டு உள்ளறைக்குள் சென்று மறைந்தான். திவ்யாவுக்கு எதுவுமே சொல்ல தோன்றவில்லை. திவாகரை எதிர்த்து எதுவும் பேச தோன்றவில்லை. அமைதியாக சென்று ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டவள், கர்ட்டைனை விலக்கி வெளியில் தெரிந்த இருளை வெறித்தாள். ஒரு ஐந்து நிமிடத்தில் திவாகர் மீண்டும் ஹாலுக்குள் பிரவேசித்தான். இப்போது அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு க்ளாஸ்கள் உதித்திருந்தன. சிரித்தவாறே நடந்து வந்து திவ்யாவின் தோளை தொட்டான். அவள் திரும்பி பார்த்ததும் ஒரு க்ளாஸை அவளிடம் நீட்டினான். திவ்யா குழப்பமான குரலில் கேட்டாள். "என்னது இது..?" "ஸ்வீட் லைம்..!!" "ஐயோ.. லைம் எனக்கு பிடிக்காதே.." திவ்யா முகத்தை சுளித்தவாறே சொல்ல, "ஆனா.. எனக்கு பிடிக்குமே..?" திவாகர் பல்லை காட்டினான். "கமான் திவ்யா.. சாப்பிடு.. நல்லாருக்கும்.." என்று அவளை கட்டாயப்படுத்தினான். திவ்யாவும் சற்று தயங்கிவிட்டு, அப்புறம் மெல்ல அந்த ஜூஸை பருக ஆரம்பித்தாள். ஜூஸ் குடித்து முடித்ததும், "சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன் திவ்யா.. இன்னும் டென், ஃபிப்டீன் மினிட்ஸ்ல வந்துடும்..!! வா.. அதுவரை நான் உனக்கு வீட்டை சுத்தி காட்டுறேன்..!!" காலி க்ளாசை டீப்பாயில் வைத்துவிட்டு, இருவரும் ஹாலில் இருந்து உள்ளறைக்குள் நுழைந்தார்கள். திவாகர் ஒவ்வொரு அறையாக திறந்து அவளுக்கு காட்டிக் கொண்டு வந்தான். ஒரு அறைக்குள் நுழைந்ததும் உள்ளே விளக்குகளை போட்டுவிட்டு, சற்றே குறும்பான குரலில் சொன்னான். "இந்த வீட்லயே இதுதான் ரொம்ப ஸ்பெஷலான ரூம் திவ்யா.. ஹாஹா.. நம்ம பெட்ரூம்..!!" வாயெல்லாம் பல்லாக சொல்லிவிட்டு கண்ணடித்தான். திவ்யா முகத்தை இறுக்கமாகவே வைத்திருக்க, திவாகர் தொடர்ந்தான். "நம்ம லைஃப்ல இந்த ரூம்லதான்.. நாம ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ண போறோம் ..!! ஹஹாஹஹாஹஹா..!!" திவாகர் ஏதோ பெரிய ஜோக் அடித்தவன் போல சிரிக்க, திவ்யாவால் ஏனோ அந்த ஜோக்கை ரசிக்க முடியவில்லை. அவஸ்தையாக நெளிந்தாள். இப்போது திவாகர், அவளை நெருங்கி, "உள்ள வா திவ்யா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..!!" என்றவாறு திவ்யாவின் தோளில் கைபோட்டு அவளை அணைத்துக் கொண்டான். உடனே, "ஐயோ.. எ..என்ன திவாகர் இது..?" திவ்யா பதறிப்போய் விலகிக்கொண்டாள். "ஏன்.. என்னாச்சு..?" "இ..இல்ல.. ஒண்ணுல்ல.." "அப்புறம் என்ன..? வா..!!" என்றவாறே அவன் மீண்டும் அணைத்துக் கொள்ள முயல, திவ்யா மீண்டும் விலகினாள். "நோ திவாகர்.. வேணாம்.." "ஏன்..?" திவாகர் இப்போது முகம் சுருங்கிப் போனவனாய் கேட்டான். "எ..எனக்கு பிடிக்கலை.." "அதான் ஏன்னு கேக்குறேன்.." "எ..எனக்கு சொல்ல தெரியலை.. ஆனா வேணாம்..!!" "கமான் திவ்யா.. என்ன நீ இப்படி வெட்கப்படுற..? வீ ஆர் லவ்வர்ஸ்..!! லவ் பண்றவங்க இந்த மாதிரி ஹக் பண்ணிக்கிறது.. கிஸ் பண்ணிக்கிறது.. எல்லாம் சகஜம்..!! கமான்..!!" சொன்ன திவாகர் இப்போது மீண்டும் திவ்யாவை அணைத்துக்கொண்டான். ஆனால் இந்தமுறை அவள் விலகிவிட முடியாதபடி மிக இறுக்கமாக அவளை பிடித்திருந்தான். திவ்யா பதறினாள். 'ப்ளீஸ் திவாகர்..' என்றவாறு விலகிக்கொள்ள முயன்றாள். அவளால் முடியவில்லை. திமிறினாள். முடியவில்லை. வேறு வழியில்லாமல் கெஞ்சலாக சொன்னாள். "ப்ளீஸ் திவாகர்.. விட்ருங்க.. எ..எனக்கு பிடிக்கலை..!!" "ஹாஹா.. எனக்கு பிடிச்சிருக்கே..? நான் விட மாட்டேன்.." திவாகர் பிடியை இன்னும் இறுக்கமாக்கினான். "ப்ளீஸ் திவாகர்.." திவ்யாவின் கண்களில் இப்போது நீர் துளிர்க்க ஆரம்பித்தது. "நோ..!!" "ப்ளீஸ்.." "ஹாஹா.. என்ன நீ..? நான் தொடாம வேற யாரு உன்னை தொடப்போறாங்க..? எனக்கு இல்லாத உரிமையா..?" என்று கேட்டவாறே திவாகர், தன் பிடிக்குள் சிக்கியிருந்த திவ்யாவின் முகத்தை நோக்கி குனிந்து முத்தமிட முயன்றான். அவ்வளவுதான்..!!! திவ்யாவுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ. 'நோ..!!!!' என்று அலறியவாறே, திவாகரின் மார்பில் இரண்டு கைகளையும் ஊன்றி, அவனை பலமாக பின்னால் தள்ளிவிட்டாள். திவாகர் நிஜமாக அந்தமாதிரி ஒரு ஆவேசத்தை திவ்யாவிடம் இருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. நான்கு எட்டு பின்புறமாக தள்ளப்பட்டு, பின்பு தடுமாறி நின்றான். திவ்யா அப்புறமும் ஆவேசம் அடங்காதவளாய் கத்தினாள். "இல்லை.. உங்களுக்கு அந்த உரிமை இல்லை..!!!" திவாகர் திகைத்துப் போனான். தன் காதில் வந்து விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவனாய் திவ்யாவையே பார்த்தான். பிறகு திணறலான குரலில் கேட்டான். "தி..திவ்யா.. எ..என்ன சொல்ற நீ..? நான் திவாகர்.. உ..உன்.. உன் காதலன்..!! எனக்கு உன்னை தொட உரிமை இல்லையா..??"திவ்யா இப்போது எதுவும் சொல்லவில்லை. சில வினாடிகள் திவாகரின் முகத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து இப்போது கண்ணீர் பெருமளவு கொட்டிக்கொண்டிருந்தது. படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்து கொண்டாள். பதற்றத்தில் அவளுடைய மார்புகள் படுவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. திவ்யா இப்போது தலையை குனிந்து கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். கொஞ்ச நேரம் அந்த மாதிரி அமைதியாக நின்றவாறே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அப்புறம் தன் தலையை நிமிர்த்தி திவாகரை ஏறிட்டாள். அவளுடைய முகத்தில் இப்போது புதிதாக ஒரு தெளிவு பிறந்திருந்தது. தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். மிகவும் தைரியமான, அதே நேரம் நிதானமான குரலில் திவாகரை கேட்டாள். "நீங்க ஏன் என்னை லவ் பண்றீங்க திவாகர்..?" திவ்யாவின் அந்த கேள்வியை திவாகர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. திணறினான். "எ..என்ன கேள்வி இது..?" "கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..!! என்னை ஏன் லவ் பண்றீங்க..?" "எ..எனக்கு உன்னை பிடிக்கும்.." "அதான்.. ஏன் என்னை பிடிக்கும்..?" திவ்யா கேள்விகளால் கிடுக்கிப்பிடி போட, திவாகர் உளற ஆரம்பித்தான். "நீ.. நீ அ..அழகா இருக்குற.." "அப்புறம்..?" "எனக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்குற.." "ம்ம்ம்.. அப்புறம்..??" "அ..அப்புறம்.. நான் சொல்றதெல்லாம் செய்ற.." "ம்ம்.. வேற..?" "அ..அவ்ளோதான்..!! ஆமாம்.. இப்போ எதுக்கு இதெல்லாம் கேக்குற..?" "ம்ம்ம்.. மொத்தத்துல.. நான் அழகா இருக்கேன்.. உங்களுக்கு பிடிச்ச மாதிரிலாம் நடந்துக்குறேன்.. நீங்க சொல்றதெல்லாம் செய்றேன்.. சரியா..??" "நீ.. நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியலை திவ்யா.." திவ்யா எங்கே வருகிறாள் என்றே திவாகருக்கு புரியவில்லை. குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திவ்யாவோ அமைதியாக வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுடைய கண்களில் கண்ணீர் மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. சில வினாடிகள்..!! அப்புறம் கண்ணீர் வழியும் கண்களுடனே திவாகரின் பக்கம் திரும்பி பார்த்து சொன்னாள். "நான் அழகா இல்லாட்டி கூட.. ஒருத்தன் என்னை லவ் பண்ணுவான்.. தெரியுமா திவாகர்..? நீங்க சொன்னதெல்லாம் நான் செய்றேன்னு சொன்னீங்களே.. நான் சொன்னதெல்லாம் செய்றதுக்கு ஒருத்தன் இருக்கான்.. அது உங்களுக்கு தெரியுமா திவாகர்..?" "தி..திவ்யா.." திவாகரிடம் இப்போது மெலிதாக ஒரு அதிர்ச்சி. "சி..சின்ன வயசுல இருந்தே என்னை லவ் பண்றான்.. என் மேல உயிரையே வச்சிருக்கான்.. என் சந்தோஷத்துக்காக என்னவேணாலும் பண்ணுவான்..!! நான் அவனை அவ்வளவு ஹர்ட் பண்ணினப்புறமும்.. இன்னும் என்னையே நெனச்சுட்டு இருக்குற ஒரு பைத்தியக்காரன் இருக்கான் திவாகர்.. உங்களுக்கு தெரியுமா..?" சொல்லி முடிக்கும் முன்பே திவ்யா உடைந்து போய் 'ஓ..!!' வென அழ ஆரம்பித்தாள். "ஹேய்.. திவ்யா.. நீ ஏதோ தேவையில்லாம குழப்பிக்கிற.." "இல்லை திவாகர்.. இப்போத்தான் நான் தெளிவா இருக்கேன்..!!" "இங்க பாரு திவ்யா.. நான் உன்னை லவ் பண்றேன்.. எனக்கு.." திவாகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, திவ்யா குறுக்கிட்டாள். "நோ திவாகர்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!! நான் நானாவே உங்ககிட்ட நடந்துக்கலையே..?? அப்புறம் எப்படி நீங்க என்னை லவ் பண்ணிருக்க முடியும்..?? உ..உங்களுக்கு என்னோட இந்த அழகு புடிக்குமா திவாகர்.. அது இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் எங்கிட்ட இருக்கும்..!! இந்த ட்ரெஸ்.. இந்த மேக்கப்.. என் பேச்சு.. நான் உங்ககிட்ட நடந்துக்கிற விதம்.. இதெல்லாம் பிடிச்சிருக்கா..?? இது எல்லாமே அசோக் எனக்கு சொல்லிக் கொடுத்தது திவாகர்..!! இப்படி நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்னு நான் போட்ட வேஷம்..!! நீங்க நெனைக்கிற திவ்யாவுக்கும், நிஜமான திவ்யாவுக்கும் நெறைய வித்தியாசம்.. நீங்க என்னை லவ் பண்ணலை..!!" "தி..திவ்யா.. அப்படி சொல்லாத.. நீ.. நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கும்..!!" திவாகர் சமாளிக்க முயன்றான். "இல்லை திவாகர்.. உங்களுக்கு பிடிக்காது..!! உங்களுக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கிட்டாத்தான் உங்களுக்கு பிடிக்கும்.. நீங்க சொல்றதெல்லாம் நான் செஞ்சாத்தான் என்னை உங்களுக்கு பிடிக்கும்..!! கொஞ்ச நேரம் முன்னாடி அந்த ஜூஸ் சாப்பிட்டோமே.. அப்போ..!! அது ஒரு சின்ன சாம்பிள்..!! ஆனா.. அசோக்கோட லவ் அப்படி இல்லை..!!" இப்போது திவாகர் சற்றே எரிச்சலானான்."இங்க பாரு.. அவன் லவ் எப்படி வேணா இருந்துட்டு போட்டும்.. ஆனா நீ என்னைத்தான் லவ் பண்ற.. அதை ஞாபகம் வச்சுக்கோ..!!" "இல்லை திவாகர்.. நான் உங்களை லவ் பண்ணலை..!!" திவ்யா பட்டென சொல்ல, திவாகர் அதிர்ந்து போனான். "தி..திவ்யா.. என்ன சொல்ற நீ..?" "ஆமாம் திவாகர்..!! காக்கா குருவின்னா இப்படித்தான் இருக்கும்ன்ற மாதிரி.. காதலும் இப்படித்தான்னு நானா அதுக்கு ஒரு வடிவம் கொடுத்துட்டேன்..!! இந்த மாதிரி ஒரு ஆளோடதான் எனக்கு காதல் வரப் போகுதுன்னு.. முன்னாடியே நானா ஒரு லிஸ்ட் போட்டுக்கிட்டேன்.. அந்த லிஸ்ட்ல இருக்குற குவாலிட்டியோட உங்களை பார்த்ததும் எனக்கு உங்க மேல ஒரு அட்ராக்ஷன்..!! அதை லவ்வுன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..!! ஆனா.. நாலும் நாலும் சேர்ந்தா எட்டுன்னு கணக்கு போடுற மாதிரி.. காதல் இல்லைன்னு இப்போ எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!!" "திவ்யா.. நீ அவசரப் படுற.." "ம்ஹூம்.. நான் ரொம்ப நிதானமா இருக்கேன் திவாகர்..!! உங்களை பிரிஞ்சு இருக்கணும்னு ரெண்டு தடவை அசோக் எங்கிட்ட சொல்லிருக்கான்.. மொத தடவை நான் ஒண்ணுமே சொல்லலை.. ரெண்டாவது தடவை கொஞ்சம் அடம் புடிச்சேன்.. ஆனா ஒத்துக்கிட்டேன்..!! ரெண்டு தடவையும் எதையோ இழந்துட்ட மாதிரி ஒரு ஃபீல் எனக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.. ஆனா.. என்னால உங்களை பிரிஞ்சு இருக்க முடிஞ்சது.. வேற எந்த குழப்பமும் இல்லாம இருக்க முடிஞ்சது.. ஏன்னா.. அப்போலாம் என்கூட அசோக் இருந்தான்..!! ஆனா இப்போ.. அவனைப் பிரிஞ்சு இந்த பத்து நாள்.. என்னால முடியலை திவாகர்.. சத்தியமா என்னால முடியலை..!!" திவ்யா அழ ஆரம்பித்தாள். "திவ்யா.." "இவ்வளவுக்கும் அவன் தப்பு பண்ணிருக்கான்.. நம்மை பிரிக்க ஏதோ சதி பண்ணிருக்கான்னு நம்புனேன்.. அப்படி இருந்தும் என் மனசு அவன் பின்னாடியே ஓடுதே..? அது ஏன் திவாகர்..??" "ப்ளீஸ் திவ்யா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு.." "அவன் என்னை தொடுறப்போ.. அவனோட ஸ்பரிசத்துல கெடைக்கிற அந்த ஸ்நேஹ உணர்வு.. உங்க ஸ்பரிசத்துல எனக்கு கிடைக்கலையே.. அது ஏன்..?? அவன் நெஞ்சுல சாஞ்சுக்குறப்போ கெடைக்கிற அந்த அமைதி, அந்த நிம்மதி, அந்த பாதுகாப்பு உணர்வு.. அது வேற யார்கிட்டயும் கெடைக்காதுன்னு எனக்கு இப்போ நல்லா தெரிஞ்சு போச்சு திவாகர்..!!" "ஓஹோ..?? இப்போ முடிவா என்னதான் சொல்ல வர்ற நீ..?" திவாகர் இப்போது பொறுமை இழந்தவனாய் கேட்டான். "இன்னுமா உங்களுக்கு புரியலை..?? நான் அசோக்கை லவ் பண்றேன் திவாகர்..!!! எஸ்..!!! ஐ லவ் அசோக்.. ஐ லவ் ஹிம்..!!!" திவ்யா சற்றுமுன் சித்ரா தன்னிடம் சொன்ன மாதிரி.. திவாகரின் பொட்டில் அறைந்த மாதிரி.. சொன்னாள்.. இல்லை.. கத்தினாள்..!! திவ்யா அந்த மாதிரி உறுதியாகவும் ஆவேசமாகவும் கத்த, திவாகர் ஸ்தம்பித்துப் போனான். அதிர்ந்து போனவனாய் திவ்யாவின் முகத்தையே சில வினாடிகள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். பார்க்க பார்க்க அவனுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறியது. ஒரு மாதிரி வெறுப்பை திவ்யாவின் மீது உமிழ்ந்தது. தன் கால்களை மெல்ல பின்னால் அடியெடுத்து வைத்து, பின்பக்கமாக நகர்ந்தான். கையால் தடவி, அந்த அறையின் சுவற்றோடு பொருத்தப்பட்டிருந்த கப்போர்டை திறந்தான். உள்ளே இருந்த அந்த விஸ்கி பாட்டிலையும், க்ளாசையும் எடுத்தான். அவனுடய செய்கையை பார்த்து திவ்யா திகைத்துக் கொண்டிருக்கும்போதே, கிளாசில் கொஞ்சம் விஸ்கியை ஊற்றி அப்படியே உள்ளுக்குள் சரித்துக் கொண்டான். மீண்டும் ஒருமுறை க்ளாஸை விஸ்கியால் அவன் நிரப்ப, திவ்யாவுக்கு இப்போது உதறல் எடுக்க ஆரம்பித்தது. "இ..இங்க பாருங்க திவாகர்.. உங்க கோவம் நியாயந்தான்.. நான் செஞ்சது தப்புதான்.. உங்க மேல இருந்த அட்ராக்ஷனை காதல்னு நம்பி.. உங்களையும் நெறைய குழப்பி விட்டுட்டேன்.. உங்க மனசுல ஆசையை வளர்த்துக்க நான் காரணமா இருந்துட்டேன்..!! நான் செஞ்சது தப்புதான்.. அதுக்கு என்னை மன்னிச்சுடுங்க..!!" திவ்யா தன் இரண்டு கைகளையும் கூப்பி கெஞ்சினாள். திவாகரோ அமைதியாக விஸ்கி பருகினான். திவ்யா தொடர்ந்தாள். "ஆனா.. நான் வேணும்னே அப்படி செய்யலை.. என் மனசறிஞ்சு செய்யலை.. அசோக் மேல எனக்கு இருந்த காதலை.. இன்னைக்குத்தான் நானே உணர்ந்தேன்.. நீங்க பெரிய மனசு பண்ணி.." திவ்யா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "ஏய்.. ச்சீய்.. நிறுத்துடி.." திவாகர் கத்தினான். திவ்யா அதிர்ந்து போனாள். மிரட்சியாக திவாகரையே பார்த்தாள். திவாகர் இப்போது விஸ்கி பாட்டிலை விட்டுவிட்டு, திவ்யாவை நோக்கி மெல்ல நகர்ந்தான். அவன் பார்வையில் இருந்த குரூரம் திவ்யாவை மிரள செய்தது. மெல்ல பின்வாங்கினாள். "தி..திவாகர் ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.." "அதான் எல்லாம் சொல்லிட்டியே.. இன்னும் என்ன சொல்லப் போற..? ம்ம்ம்ம்... என்னடி சொன்ன..? நீ என்னை லவ் பண்ணலையா..? நீ என்னடி சொல்றது.. நான் சொல்றேன்.. நான் உன்னை லவ் பண்ணலைடி..!! எனக்கு உன் உடம்பு மேலதான் ஆசை.. போதுமா..??" "தி..திவாகர்.." "நான் பாட்டுக்கு என் பிசினஸை பாத்துட்டு இருந்தேண்டி..!! நீயா வந்த.. கொஞ்சி கொஞ்சி பேசுன.. ஃபோட்டோ அனுப்பி 'என்னையும் பாருங்க.. என் அழகையும் பாருங்க'ன்னு ஆட்டுன.. நான் இழுத்த இழுப்புக்குலாம் வந்த..!! உன் மேல இருந்த ஆசைல.. நான் என் வேலையெல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி அலைஞ்சுட்டு இருந்தேன்.. உன்னால எனக்கு எவ்வளவு டென்ஷன்.. எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? இப்போ திடீர்னு வந்து.. நான் இன்னொருத்தன் கூட போறேன்னு நீ சொன்னா.. நான் என்ன வெரல் சப்பிக்கிட்டு வேடிக்கை பாக்கணுமா..?" "தி..திவாகர்.. உங்க பேச்சே சரியில்லை.. எனக்கு பயமா இருக்கு.. தயவு செஞ்சு என்னை வெளில போக விடுங்க..!!" "வெளில போகனுமா..?? சரி.. இத்தனை நாள் நான் சொன்னதெல்லாம் செஞ்சேல..? கடைசியா ஒன்னு சொல்றேன்.. அதையும் செஞ்சுடு.. நானே உன் வீட்டுல கொண்டு போய் உன்னை ட்ராப் பண்றேன்..!!" திவாகர் சற்றே கிண்டலான குரலில் சொல்ல, "எ..என்ன..?" திவ்யா மிரட்சியாக கேட்டாள். "நம்ம லைஃப்ல இந்த ரூம்லதான், ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ண போறோம்னு கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னேன்ல..? ரொம்பலாம் வேணாம்.. ஒரு.. ஒரே ஒரு மணி நேரம்.. என்கூட அந்த பெட்ல ஸ்பென்ட் பண்ணிட்டு போ..!!" திவாகர் சொல்லி முடிக்கும் முன்பே, "ச்சீய்...!!!" என்று திவ்யா வெறுப்பாக கத்தினாள். திவாகரோ எரிச்சலானான். "என்னடி கத்துற.. உனக்கு புடிக்குதோ புடிக்கலையோ.. இன்னைக்கு நீ என்கூட படுத்துத்தான் ஆகணும்.. வா..!!" திவாகர் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து திவ்யாவை எட்டி பிடித்தான். முரட்டுத்தனமாய் அவளை இறுக்கி அணைத்தான். மூர்க்கமானவனாய் அவளுடைய கழுத்தில் தன் முகத்தை வைத்து தேய்த்தான். திவ்யா பதறிப் போனாள். அலறினாள். "ஆஆ.. திவாகர்.. வேணாம்.. ப்ளீஸ்..!!" "ஹாஹா.. வேணாமா..?? பிடிக்கலையா உனக்கு..?? ஆனா எனக்கு பிடிச்சிருக்கே..??" "உ..உங்களை கெஞ்சிக் கேக்குறேன்.. என்னை விட்ருங்க திவாகர்.. நான் அசோக்குக்கு சொந்தமானவ..!!" அழுதாள். "இன்னும் கொஞ்ச நேரம் நீ எனக்குத்தான்டி சொந்தம்..!! அவன்தான் நீ எப்படி இருந்தாலும் உன்னை லவ் பண்ணுவான்னு சொன்னேல.. என்கூட ஒருமணி நேரம் இருந்துட்டு போ.. என்ன சொல்றான்னு பாக்கலாம்..!!" "ப்ளீஸ்.. திவாகர்.." "இதெல்லாம் பாத்துத்தாண்டி நான் பைத்தியக்காரன் ஆயிட்டேன்.." வக்கிரமாக இளித்த திவாகர், திவ்யாவின் ஒருபக்க மார்பை கொத்தாகப் பற்றி, வெறித்தனமாக பிசைய, "ஆஆஆஆஆ...!!!" திவ்யா வலி தாளாமல் அலறினாள். திவாகர் எந்த அளவுக்கு ஒரு கொடிய மிருகம் என்பதை கொஞ்ச நேரத்திலேயே உணர்ந்து கொண்டாள். இந்த மிருகத்திடம் இருந்து தப்பித்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். உடனே தன்னை இறுக்கியிருந்த திவாகரின் புஜத்தை வாயால் கவ்வி கடித்தாள்.ஆஆஆஆஆ...!!!" இப்போது திவாகர் வலி தாளாமல் அலறினான். திவ்யாவிடம் இருந்து விலகிக் கொள்ள முயன்றான். அவள் கடித்த கடியை விடாமல் இருக்க, ஆவேசமாய் அவளை அப்படியே பின்னால் பிடித்து தள்ளிவிட்டான். திவ்யா தடுமாறிப்போய் பின்புறமாக சரிந்தாள். கால்கள் இடற மெத்தையில் சென்று பொத்தென்று விழுந்தாள். திவாகர் இப்போது உச்சபட்ச ஆத்திரத்தில் இருந்தான். பற்களை கடித்து கத்தினான். "எவ்வளவு திமிர்டி உனக்கு..?? பொட்டச்சி நீ.. உன் வீரத்தை எங்கிட்ட காட்டுறியா..? இப்போ நான் என் ஆம்பளை வீரத்தை காட்டுறேன்.. உன்னால தாங்க முடியுதான்னு பார்க்கலாம்.." கொக்கரித்த திவாகர் வெறியுடன் திவ்யா மீது பாய்ந்தான். ஆத்திரம் அவன் கண்ணை மறைத்திருந்தது. திவ்யாவின் அழகு மீதிருந்த வெறி அவனை குருடனாக்கியிருக்க வேண்டும். அதனால்தான் திவ்யாவின் கையில் என்ன இருக்கிறது என்பதை கூட அவன் கவனிக்கவில்லை. மெத்தையில் தள்ளிவிடப்பட்ட திவ்யாவின் கையில் இப்போது புதிதாக ஒன்று முளைத்திருந்தது. அது.. திவாகரின் பாக்கெட்டில் செருகியிருந்த பால்பாயின்ட் பேனா..!! திவ்யா கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. தன் வலது கையில் சிக்கியிருந்த அந்த பேனாவை இறுகப் பற்றினாள். சரக்கென கையை வீசி, தன் மீது பாய்ந்த திவாகரின் முகத்தில் குத்தினாள். வேகமாக வீசப்பட்ட பேனாவின் கூர்மையான முனை, திவாகரின் கன்னத்தில் குத்தி துளையிட்டது. சிவப்பு இரத்தில் ரத்தம், அவன் கன்னத்தில் இருந்து தெறித்து ஓடியது. அவ்வளவுதான்..!! திவாகர் 'ஆஆஆஆஆ..!!' என வலியை தாங்க முடியாமல் அலறினான். கன்னத்தை பிடித்து கத்தியவாறு திவ்யாவின் மீதிருந்து எழுந்தான். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு காட்டுத்தனமாக கத்தினான். நிற்க முடியாமல் தள்ளாடினான். அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் சராமாரியாக கீழே தள்ளி விட்டான். அப்புறம் கால்கள் இடற.. தரையில் விழுந்து.. கன்னத்தை பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தான். திவ்யா எழுந்தாள். கீழே கிடந்தது துடிக்கும் திவாகரையே வெறுப்பாக ஒரு பார்வை பார்த்தாள். வலியை தாளாமல் வாய் திறந்து அலறிக் கொண்டிருந்த திவாகரிடம் இறுக்கமான குரலில் சொன்னாள். "தேங்க்ஸ் ஃபார் யுவர் பென்.. திவாகர்..!!" தான் முதன்முதலாக திவாகரை பார்த்தபோது வெட்கத்துடன் சொன்ன அதே வார்த்தைகளையே, இப்போது அவர்களது இறுதி சந்திப்பின் இறுதி வார்த்தைகளாய், வெறுப்புடன் உமிழ்ந்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள். கேட் திறந்து வெளியேறிய திவ்யா சிட்டாக பறக்க ஆரம்பித்தாள். சுற்றிலும் இருள் அப்பிக் கிடந்தது. எது எந்த திசை என்று அவளுக்கு சுத்தமாக பிடிபடவில்லை. கால்கள் சென்ற திசையில் அசுர வேகத்தில் ஓடினாள். காலில் செருப்பில்லாமல்.. கல்லும், முள்ளும் குத்துவதை பொருட்படுத்தாமல்.. ஓடினாள். அவ்வப்போது திரும்பி, திவாகர் தன்னை தொடர்ந்து வருவானோ என்று பயத்துடன் பார்த்துக்கொண்டே ஓடினாள். அப்படி ஒருமுறை திரும்பி பார்த்தபோதுதான், எதிரே வந்த காரை கவனிக்காமல் குறுக்கே ஓடினாள். கார் உடனே ப்ரேக் அடித்து நின்றும், அதன் மீது மோதி தூக்கி எறியப்பட்டாள்.சித்ராவும், கார்த்திக்கும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஆளுக்கொரு திசையை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். சித்ரா கண்களில் வழிந்த நீரை மீண்டும் ஒருமுறை துடைத்துக் கொண்டாள். கார்த்திக் தாடையை சொறிந்தவாறு தீவிர யோசனையில் இருந்தான். சற்றுமுன் ஆபீஸில் இருந்து வீடு திரும்பிய கார்த்திக், மனைவி அமர்ந்திருந்த கோலத்தை கண்டு திகைத்துப் போனான். கண்களில் வழியும் நீரோடு எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து பதறிப் போனான். 'ஏய்.. என்னடி.. என்னாச்சு.. ஏன் இப்படி உக்காந்திருக்குற..?' என்று கார்த்திக் கேட்டதுதான் தாமதம். அத்தனை நாட்களாய் அவனிடம் இருந்து மறைத்து வைத்த மொத்த ரகசியத்தையும் சித்ரா அவனிடம் கொட்ட ஆரம்பித்தாள். அசோக்கின் காதல் பற்றி.. திவ்யாவின் காதல் பற்றி.. அசோக்குக்கும், திவ்யாவுக்கும் ஏற்ப்பட்ட பிணக்கு பற்றி.. எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். கார்த்திக்கும் எல்லா விஷயங்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டான். அவனுக்கு நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தன. 'இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா..' என நிறைய ஆச்சரியம் அவனுக்கு..!! சித்ரா எல்லாம் சொல்லி முடிக்க.. கார்த்திக் எல்லாம் கேட்டுக்கொள்ள.. அதன் பிறகுதான் இருவரும் இந்தமாதிரி அமர்ந்திருக்கிறார்கள். தொண்டையை செருமிக்கொண்டு கார்த்திக் மெல்ல ஆரம்பித்தான். "ம்ம்ம்.. இவ்வளவு நடந்திருக்கு.. எல்லாரும் எங்கிட்ட இருந்து மறைச்சுட்டீங்களே..?" "நான்தான் சொல்றேன்ல.. இது இவ்வளவு சீரியஸா போகும்னு நான் நெனைக்கவே இல்ல.." "சரி.. பரவால விடு.. இப்போவாவது சொன்னியே..!! ஆமாம்.. இப்போ அவ எங்க போயிருக்கா..?" "அந்தப்பையனை பாக்கத்தான் போயிருக்கா.. நான் சொல்ல சொல்ல கேட்காம..!!" "ம்ம்.. வரட்டும்.. நான் அவகிட்ட பேசிக்கிறேன்.. அவ மனசுல என்னதான் நெனச்சிருக்கான்னு தெரியலை..!! ஆளாளுக்கு செல்லம் குடுத்து ரொம்ப கெட்டுப் போயிட்டா..!! வரட்டும்.. நான் இன்னைக்கு நல்லா கேக்குறேன்.. அசோக்கை விட நல்ல பையன் வேற எவன் கெடைப்பான்னு கேக்குறேன்..!!" "இங்க பாருங்க.. அவகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசுங்க..!! நான் இறங்கிப்போய் பேசுனா அவ கேட்பான்னு நெனச்சேன்.. ஆனா.. ஆனா அவ.. என்னை கொஞ்சம் கூட மதிக்கலை..!! கடைசி வரை.. மூடுன வாயை தெறக்காமலே போயிட்டா..!! நீங்க கோவப்பட்டு.. அப்புறம் அவ ஏடாகூடமா ஏதாவது முடிவு எடுத்துடப் போறா.. கொஞ்சம் பார்த்து பேசுங்க..!!" "ப்ச்.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ விடு..!! அசோக்கை கட்டிக்க அவளை சம்மதிக்க வைக்கவேண்டியது என் பொறுப்பு..!!" "அப்படி மட்டும் நீங்க செஞ்சிட்டீங்கன்னா.. என் மனசுல இருக்குற பாரம் இறங்கிடும்.. நிம்மதியா இருப்பேன்..!!" சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் காலிங்பெல் அடித்தது. உடனே எழப்போன சித்ராவை கார்த்திக் தடுத்தான். "நீ இரு.. நான் போய் பாக்குறேன்.." ஹாலுக்கு வந்து கதவை திறந்த கார்த்திக் அதிர்ந்து போனான். வெளியே அவர்கள் நின்றிருந்தார்கள். திவ்யாவின் கல்லூரி தோழி அஞ்சு, அவளுடைய வழுக்கைத்தலை அப்பா, அவர்கள் தாங்கிப்பிடிக்க நின்றிருந்த சோர்ந்து போன திவ்யா. "தி..திவ்யா.. திவ்யா என்னாச்சும்மா..?" கார்த்திக் பதற்றமாக கேட்க, அவள் பதிலளிக்கவில்லை. கண்கள் செருகிப் போய் அண்ணனையே பரிதாபமாக பார்த்தாள். கார்த்திக் அஞ்சுவை ஏற்கனவே அறிந்திருந்தான். ஓரிருமுறை திவ்யாவுடன் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இப்போது அஞ்சுவிடம் திரும்பி கவலையாக கேட்டான். "எ..என்னம்மா... என்னாச்சு என் தங்கச்சிக்கு..?" "பயப்படுறதுக்கு ஒன்னுல்லண்ணா.. கார்ல வந்துட்டு இருந்தோம்.. குறுக்க வந்து விழுந்துட்டா..!! அடிலாம் ஒன்னும் படலை.. எப்படி குறுக்க வந்து விழுந்தேன்னு கேட்டா எதுவும் பேச மாட்டேன்றா..!! கொஞ்சம் பயந்த மாதிரி இருக்குறா.. டயர்டா வேற இருக்குறா.. படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா.. எல்லாம் சரியாப் போயிடும்னு நெனைக்கிறேன்..!!"கார்த்திக் திவ்யாவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். அதற்குள் உள்ளறைக்குள் இருந்து பதறிப்போய் எழுந்து ஓடிவந்திருந்த சித்ரா, அவளை இன்னொரு பக்கம் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். கார்த்திக்கும், சித்ராவும் கைத்தாங்கலாக திவ்யாவை அழைத்து சென்றார்கள். திவ்யாவுடைய அறைக்கு அழைத்து சென்று அவளை படுக்கையில் படுக்க வைத்தார்கள். தங்கையின் நிலையை தாங்கமுடியாமல் அவளுடைய கன்னத்தை வருடியபடி கார்த்திக் கேட்டான். "தி..திவ்யா.. என்னம்மா ஆச்சு..?" "எனக்கு ஒன்னுல்லண்ணா.. ஐ'ஆம் ஆல்ரைட்..!! என்னை கொஞ்ச நேரம் தனியா.. நிம்மதியா இருக்க விடுங்க.. ப்ளீஸ்..!!" அதன்பிறகு கார்த்திக் எதுவும் பேசவில்லை. திவ்யாவை அவளுடைய அறையில் விட்டுவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். சரியான நேரத்தில் வந்து.. திவ்யாவுக்கு உதவி செய்து.. பொறுப்பாக வீட்டில் கொண்டு வந்து ஒப்படைத்த.. அஞ்சுவுக்கும், அவள் அப்பாவிற்கும்.. இருவரும் மனமார நன்றி சொல்லிக் கொண்டார்கள். அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து.. சித்ரா வீட்டு வேலை எல்லாம் முடித்துவிட்டாள். சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் இப்போதுதான் கழுவி அடுக்கி வைத்தாள். ஒரு ஜக் நிறைய தண்ணீர் பிடித்துக்கொண்டு கிச்சன் விட்டு வெளியே வந்தாள். தங்கள் பெட்ரூமுக்கு சென்றாள். அதற்குள் தூங்க ஆரம்பித்திருந்த கார்த்திக்கிடம் இருந்து மெலிதான குறட்டை ஒலி வந்துகொண்டிருந்தது. ஜக்கை ஒரு டேபிள் மீது வைத்துவிட்டு தானும் உறங்கலாம் என்றுதான் முதலில் கட்டிலில் அமர்ந்தாள். அப்புறம் ஏதோ நினைத்தவளாய் எழுந்துகொண்டாள். தங்கள் அறையை விட்டு வெளியே வந்தாள். திவ்யாவின் அறையை நோக்கி நடந்தாள். திவ்யாவின் அறைக்குள் புகுந்தவள், சுவற்றை தேய்த்து குழல்விளக்கை உயிர்ப்பித்தாள். கட்டில் மீது பார்வையை வீசினாள். கட்டிலில் திவ்யா குழந்தை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தாள். வாயை 'ஓ'வென திறந்து வைத்துக்கொண்டு, அசந்து போய் நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். அவளுக்கு அருகே சென்ற சித்ரா சில வினாடிகள் அவளுடைய மாசுமருவற்ற முகத்தையே அமைதியாக பார்த்தாள். 'என்னாயிற்று இவளுக்கு..? ஏன் இப்படி இருக்கிறாள்..? கசக்கிப்போட்ட காகிதமாய் வந்து கிடக்கிறாளே..? என்னாயிற்று என்று கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள்..!! ரொம்பத்தான் நெஞ்சழுத்தம் இவளுக்கு..!! இல்லாவிட்டால், நான் அவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் வாயை இறுக்க மூடிக் கொண்டிருப்பாளா..? அப்படி என்ன பிடிவாதம் இவளுக்கு..?? அழுத்தக்காரி.. ராட்சஸி..!!' மனதுக்குள் திவ்யாவை திட்டியவாறே, ஓரமாய் கிடந்த போர்வையை எடுத்து, சித்ரா திவ்யாவுக்கு போர்த்தி விட்டாள். அவளுடைய கால்களை மென்மையாக உயர்த்தி அதனடியில் ஒரு தலையணையை திணித்தாள். அறை வாசலை நோக்கி நடந்தாள். விளக்கை அணைக்க சித்ரா கையை உயர்த்திய போதுதான், அவளுக்கு பின்னால் இருந்து ஈனஸ்வரத்தில் அந்த குரல் கேட்டது. "அண்ணீ..!!!!!" சித்ராவுக்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. 'எங்கிருந்து வருகிறது இந்தக்குரல்..?' மெல்ல திரும்பி பார்த்தாள். படுக்கையில்.. உறங்கியிருந்த திவ்யா இப்போது விழிகளை திறந்திருந்தாள். ஆனால் இன்னும் அந்த விழிகள் சோர்வாகவே செருகியிருந்தன. 'இவளா அப்படி அழைத்தாள்..?' என சித்ரா திகைத்துக் கொண்டிருக்கும்போதே, திவ்யா மீண்டும் சித்ராவை அழைத்தாள். "அண்ணீ..!!!!!" அவ்வளவுதான்..!! சித்ரா அப்படியே சிலிர்த்துப் போனாள்..!! ஜிவ்வென்று உடம்பெல்லாம் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி ஒரு சிலிர்ப்பு அவளுக்கு..!! முதன்முறையாக யாரோ அவளை அப்படி அழைக்கிறார்கள்..!! இத்தனை நாட்களாய் தன்முன் வாய்திறக்காமலே இருந்த திவ்யா, முதன்முறையாக அவளை அழைக்கிறாள்.. அன்பு ஒழுக..!! அதுவும் பசியாகிப்போன கன்று ஒன்று தாய்ப்பசுவை அழைப்பது போல, ஏக்கமாக அழைக்கிறாள்..!! எப்படி இருக்கும் சித்ராவுக்கு..?? அவளுடைய கண்கள் பட்டென கலங்கிப் போயின. சிலிர்த்துப்போன உடல் இப்போது வெடவெடவென நடுங்கியது..!! அதற்குள் திவ்யா படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து.. "என்னை மன்னிச்சுடுங்க அண்ணி..!!" என்று ஒரு கையை நீட்டி பரிதாபமாக சொல்லவும், சித்ரா அப்படியே உருகிப் போனாள். ஓடிப்போய் அவளை வாரி அணைத்துக் கொண்டாள். அழுகையை அடக்க முடியாமல், தழதழத்த குரலில் சொன்னாள். "ஏய்.. ச்சீய்.. என்னடி நீ..?? நீ எதுக்கு மன்னிப்பு கேக்குற..?? நீ என்ன தப்பு செஞ்ச..??" "இல்ல அண்ணி.. நான் நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! யார் நல்லவங்க.. யார் கெட்டவங்கன்னு கூட புரிஞ்சுக்காம.. நெறைய தப்பு பண்ணிட்டேன்..!! எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்திட்டேன்..!!" சொல்லும்போதே திவ்யாவின் கண்களில் நீர் ஒழுக ஆரம்பித்தது. "ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல திவ்யா..!! அழாத.. கண்ணை தொடைச்சுக்கோ ..!!" சொன்ன சித்ரா அவளே திவ்யாவின் கண்களை துடைத்தாள். "உ..உங்களைக்கூட இத்தனை நாளா நான் புரிஞ்சுக்கலை அண்ணி.." "ஐயோ.. அதெல்லாம் எதுக்கு இப்போ.. நீ எங்கிட்ட பேசுறதே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?" "எனக்கு உங்ககிட்ட பேசனும்னுதான் ஆசை அண்ணி.. ஆனா.. ஏதோ ஒன்னு வந்து என்னை தடுத்துடும்..!! சின்ன வயசுல நாம போட்ட சண்டை.. உங்க கூட பேசமாட்டேன்னு நான் சில்லித்தனமா போட்ட சபதம்..!! அந்த சபதத்தை எப்படியாவது காப்பாத்தனும்னு ஏதோ ஒரு பிடிவாதம்.. மத்தபடி உங்கமேல எனக்கு எந்த கோவமும் இல்ல அண்ணி..!!" "எனக்கு தெரியும் திவ்யா.. எனக்கு தெரியும்..!!" சித்ரா திவ்யாவை அணைத்துக்கொண்டாள். இருவரும் ஒருவர் தோளில் இன்னொருவர் முகம் சாய்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். சித்ரா ஆதரவாக திவ்யாவின் முதுகை வருடிக் கொடுக்க, திவ்யா அமைதியாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். சில வினாடிகள்..!! அப்புறம் திவ்யா திடீரென கேட்டாள். "அசோக் என் மேல கோவமா இருக்கானா அண்ணி..?" "ச்சேச்சே.. அப்டிலாம் ஒண்ணுல்ல.." "இல்ல.. அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டான்..!! அழுத்தக்காரன்.. அவன் லவ்வையே இத்தனை நாளா எங்கிட்ட சொல்லாம மறைச்சவன்தான..?"

"ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..? அவனுக்கு உன் மேல கோவம்லாம் ஒண்ணுல்ல திவ்யா..!!" "இருக்கும் அண்ணி.. கண்டிப்பா இருக்கும்..!! நான் அவனை என்னெல்லாம் சொல்லிட்டேன்..? செருப்பால அறைஞ்ச மாதிரி எப்படிலாம் பேசிட்டேன்..? அவன் எப்படி துடிச்சு போயிருப்பான்..?? கண்டிப்பா அவனுக்கு என் மேல கோவம் இருக்கும்..!!" திவ்யா அழுதவாறே சொல்ல, "ச்சே.. என்ன பேசுற நீ..? அ..அவன்.. அவனுக்கு உன் மேல கோவமே வராது திவ்யா.. அவன் உன் மேல எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கான்னு உனக்கு தெரியாது..!!" "தெரியும் அண்ணி.. என் மேல அவன் உயிரையே வச்சிருக்கான்.. எனக்கு நல்லா தெரியும்..!! அதான்.. அவனை காயப்படுத்திட்டேன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" "நீ தேவையில்லாம மனசை போட்டு கொழப்பிக்கிற திவ்யா.. அதுக்குலாம் அவசியமே இல்ல..!!" "இல்ல அண்ணி.. அவன் இதுவரை எனக்கு எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கான்.. எனக்கு சிரிப்பும், சந்தோஷமும் மட்டுந்தான் கொடுத்திருக்கான்..!! ஆனா நான் அவனுக்கு கொடுத்ததுலாம்.. கஷ்டமும், வலியும், வேதனையுந்தான்..!! அவன் என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?" திவ்யா பரிதாபமாக கேட்க, சித்ரா உருகிப் போனாள். "ஏய்.. தி..திவ்யா.." "நான் அவன் கால்ல விழுந்து கெஞ்சினா.. என்னை ஏத்துப்பான்ல அண்ணி..?" திவ்யா உடைந்து போய் அழுதாள். "ப்ச்.. பைத்தியம் மாதிரி ஏதாவது உளறாத திவ்யா..!! நீ ஏதோ ரொம்ப கொழம்பி போய் இருக்குற.. பேசாம படுத்து தூங்கு..!! காலைல அவனைப் பாத்து பேசு.. காலுலாம் ஒன்னும் விழ வேணாம்.. உன் மனசுல இருக்குறதை சொல்லு.. அவன் உன்னை தலைல தூக்கி வச்சு ஆடுவான்.. அதுக்கு அண்ணி உத்திரவாதம் தர்றேன்.. சரியா..? இப்போ தூங்கு..!!" சித்ரா திவ்யாவை படுக்க வைத்தாள். போர்வை போர்த்தி விட்டாள். அவளுடைய கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தாள். கொஞ்ச நேரத்திற்கு திவ்யாவின் முகத்தையே கண்கள் கொட்டாமால் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் எழுந்து கொண்டாள். அறையை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் அவள் நகர முயல, திவ்யா இப்போது அவளுடைய கையை எட்டி பற்றினாள். சித்ரா நின்றாள். எதுவும் புரியாமல் திரும்பி பார்த்தாள். 'என்ன..?' என்பது போல திவ்யாவை ஏறிட்டாள். திவ்யா எதுவும் பேசவில்லை. தனது வலது கையில் இருந்த அந்த தழும்பை தடவிக் காட்டினாள். சித்ரா இன்னும் குழப்பமாய் திவ்யாவையே பார்க்க.. திவ்யா இப்போது முகத்தில் ஒரு அழகான ஸ்நேக புன்னகையுடன் சொன்னாள். "சின்ன வயசுல என் கைல பட்ட சூடு..!! அந்தக்காயம் இப்போ ஆறிடுச்சு அண்ணி.. எனக்கு இப்போ வலிக்கலை..!!" இப்போது சித்ராவும் கண்களில் நீர் துளிர்க்க திவ்யாவைப் பார்த்து புன்னகைத்தாள். திவ்யாவின் தலை முடியை லேசாக கலைத்துவிட்டவள், இதமான குரலில் சொன்னாள். "லூசு.. நிம்மதியா படுத்து தூங்குடி..!!" சித்ரா திரும்பி நடந்தாள். கண்களில் வழிந்த நீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டாள். மறுகையால் விளக்கை அணைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.அடுத்த நாள் காலை.. அசோக் அக்காவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, கார்த்திக் ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்ததும் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்த கார்த்திக்குக்கு, பதிலுக்கு ஒரு புன்னகையை தந்தான். ஹாலை கடந்து உள்ளே சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். ஸ்டவ்வில் பால் கொதிப்பதை பார்த்துக் கொண்டிருந்த அக்காவிடம் சற்றே எரிச்சலாக கேட்டான். "என் டைரியை எடுத்துட்டு வந்தியா..?" "டைரியா.. எந்த டைரி..?" "ப்ச்.. தெரியாத மாதிரி நடிக்காத.. நீதான் எடுத்துட்டு வந்தேன்னு செல்வாண்ணா சொல்லிட்டாரு..!!" "ஓ.. அதுவா..? அதுக்காகவா இப்படி அரக்கப்பரக்க ஓடியாற..? சரி.. காபி போடுறேன்.. சாப்பிடுறியா..?" "அதுலாம் ஒன்னும் வேணாம்.. டைரியை எடுத்துட்டு வா.." "கொஞ்சூண்டு பால் மிச்சம் இருக்குடா.. வேஸ்டா போயிடும்.. போடுறேன்.. சாப்பிடு..!!" "ப்ச்.. மொதல்ல என் டைரியை எடுத்துக்குடுக்கா..!!" "ஐயையையே..!! காலாங்காத்தாலேயே கால்ல வெண்ணித்தண்ணியை ஊத்திக்கிட்ட மாதிரி.. டைரி டைரின்னுக்கிட்டு..!! இப்போ அந்த டைரியை வாங்கிட்டுப்போய் என்ன பண்ணப்போற..? 'ஐ லவ் யூ திவ்யா.. ஐ லவ் யூ திவ்யா..'ன்னு கிறுக்காம இருக்க முடியலையோ..??" "அதுக்கில்ல.. அதுல ஒரு ஃபோன் நம்பர் நோட் பண்ணி வச்சேன்.. அது வேணும்..!!" "ஓஹோ..?? இரு காபி போட்டுட்டு போய் எடுத்துட்டு வர்றேன்..!!" "நீ மொதல்ல போய் எடுத்துட்டு வா.. நான் உடனே கால் பண்ணனும்..!!" "ஏண்டா இப்படி பறக்குற..?? சரி.. எடுத்துட்டு வர்றேன்.. நீ எங்கயும் போயிடாத.. இங்கயே இரு.. ஸ்டவ்வை பாத்துக்கோ..!! பால் பொங்கிடுச்சுன்னா.. ஆஃப் பண்ணிடு..!!" "சரி சரி.. பாத்துக்குறேன் பாத்துக்குறேன்..!!" என்றவன், சற்றே குரலை தாழ்த்திக்கொண்டு, "ஆமாம்.. அவ இல்லையா..?" என்று அக்காவிடம் கேட்டான். "எவ..?" "நான் எவளை கேட்பேன்..?" "திவ்யாவா..? வெளில போயிருக்கா..!!" சொல்லிவிட்டு சித்ரா கிச்சனை விட்டு வெளியேற, அசோக் ஸ்டவ்வை கவனிக்காமல், கப்போர்டுகளில் அடுக்கி வைத்திருந்த டப்பாக்களை பார்வையிட்டான். அதில் முந்திரிப்பருப்பு போட்டு வைத்திருந்த டப்பாவை எடுத்து, உள்ளங்கை நிறைய கொட்டிக் கொண்டான். கொறிக்க ஆரம்பித்தான். வேறென்னவெல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான். கிச்சனை விட்டு வெளியே வந்த சித்ரா நேராக சென்று, திவ்யாவின் அறைக்குள் நுழைந்தாள். திவ்யா அப்போதுதான் குளித்து முடித்து ஃப்ரஷாக இருந்தாள். கூந்தலை பின்னிக் கொண்டிருந்தாள். சித்ராவை பார்த்ததும், 'வாங்க அண்ணி..' என்று புன்னகைத்தாள். சித்ராவும் ஒரு ஸ்நேக புன்னகையை அவளிடம் வீசிவிட்டு, உள்ளே நடந்து சென்று.. திவ்யாவின் படுக்கையில்.. தலைமாட்டுக்கு அருகே கிடந்த அந்த டைரியை எடுத்தாள்..!! அதைப்பார்த்த திவ்யா, உடனே சற்றே ஏக்கமாய் கேட்டாள். "ஏன் அண்ணி.. அது என்கிட்டயே இருக்கட்டுமே..?" "அவன் டைரியை வாங்கிட்டு போக வந்திருக்கான்.." "அ..அசோக் வந்திருக்கானா..?" திவ்யா ஒருமாதிரி உற்சாகமும், பதற்றமும் ஒன்று சேர்ந்தமாதிரியான குரலில் கேட்டாள். "ம்ம்.. வந்திருக்கான்..!! உன்னைப்பத்தி கேட்டான்.. நீ வீட்டுல இல்லைன்னு சொல்லிருக்கேன்.. நீ இருக்கேன்னு தெரிஞ்சா.. உடனே ஓடிப்போயிடுவான்..!! அதான்.. பொய் சொன்னேன்..!!" "ம்ம்.. என் மேல அவ்ளோ கோவமா அவனுக்கு..?" "ஐயோ.. ஐயோ..!! கோவம்லாம் ஒன்னும் இல்ல திவ்யா.. நீ வந்து பேசிட மாட்டியான்னு.. அவன் ஒவ்வொரு செகண்டும் துடிச்சுக்கிட்டு இருக்கான்.. நீ என்னடான்னா..!! சரி.. நான் வேணா ஒன்னு பண்ணவா..? திவ்யா உன்கிட்ட ஏதோ பேசனுமாம்னு.. உன் ரூமுக்கு அவனை அனுப்பி வைக்கவா.. பேசுறியா அவன்கிட்ட..??" "இல்ல அண்ணி.. வேணாம் வேணாம்.. நான் அப்புறமா பேசிக்கிறேன்..!!" திவ்யா பதற்றமாக சொல்ல, சித்ரா அவளை பரிதாபமாக பார்த்தாள். "சரி உன் இஷ்டம்..!! உன் மனசுல இருக்குறதை நீயே மொதல்ல அவன்கிட்ட சொல்லு.. அதுவரை நான் ஒன்னும் சொல்லலை..!! சரியா..??" "ம்ம்.. சரி அண்ணி..!!"சித்ரா அந்த அறையை விட்டு வெளியேறினாள். டைரியுடன் கிச்சனுக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் உடனே பதறிப்போனாள். ஸ்டவ்வில் வைத்திருந்த பால் கொதித்து, பொங்கி வழிந்து கொண்டிருந்தது. கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றிருந்த அசோக்கோ, கப்போர்டை நோண்டிக் கொண்டிருந்தான். எரிச்சலான சித்ரா, ஒரு கையால் ஸ்டவ்வை ஆஃப் செய்துகொண்டே, அடுத்த கையால் அசோக்கின் தலையில் ஓங்கி குட்டினாள். "ஆஆஆ..!! ஏன்க்கா கொட்டுற.. வலிக்குது..!!" "ஸ்டவ்வை பாத்துக்க சொல்லிட்டு போனா.. அங்க என்ன பாத்துட்டு இருக்குற..?" "முந்திரிப்பருப்பு கெடைச்சது.. பாதாம் பருப்பு இருக்குமான்னு பாத்துட்டு இருந்தேன்..!!" "உனக்கு இருக்குற கொழுப்புக்கு பாதாம் பருப்பு ஒண்ணுதான் பாக்கி..!! இந்தா.. உன் டைரி..!!" "தேங்க்ஸ்க்கா..!!" டைரியை வாங்கிக்கொண்டு அசோக் கிச்சனை விட்டு வெளியேற, "ஏய்.. போயிடாதடா..!! காபி போட்டுட்டேன்.. குடிச்சுட்டு போ..!!" சித்ரா கத்தினாள். "போடு போடு..!!" சலிப்பாக சொன்ன அசோக், ஹாலுக்கு வந்தான். கார்த்திக்குக்கு எதிரே கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். டைரியின் கடைசி பக்கத்தை புரட்டினான். அதில் குறித்திருந்த நம்பருக்கு செல்போனை எடுத்து கால் செய்தான். கால் பிக்கப் செய்யப்படவில்லை. மீண்டும் ஒருமுறை முயன்று தோற்றான். அப்புறம் சலிப்படைந்தவனாய் முயற்சியை கைவிட்டு செல்போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். வரப் போகும் காபிக்காக காத்திருந்தான். அப்படி காத்திருக்கும் போதுதான் அதை கவனித்தான். திறந்து வைக்கப்பட்டிருந்த டைரியின் காகிதங்கள் காற்றில் படபடக்க, இப்போது வேறொரு பக்கம் விரிந்திருந்தது. அந்தப்பக்கத்தில் ஆங்காங்கே அவனுடைய கிறுக்கலை தவிர இப்போது வேறு சில கிறுக்கல்கள்..!! திவ்யாவின் கையெழுத்தில்.. 'ஐ லவ் யூ டா அசோக்.. ஐ லவ் யூ டா அசோக்..' என்று..!! அசோக்கிற்கு ஒருகணம் எதுவும் புரியவில்லை. 'எப்படி இது சாத்தியம்..? திவ்யாவா இப்படி எல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறாள்..? அப்படியானால்.. அவள் தன் மனதை மாற்றிக் கொண்டாளா..? நிஜமாகவா..? திவ்யாவிடம் அக்கா பேசுவாள் என்று தெரியும்.. ஆனால்.. திவ்யா அவளை எல்லாம் மதிக்கவே மாட்டாள் என்றுதானே எண்ணியிருந்தேன்..? ஒருவேளை அக்கா பேசிபேசி திவ்யாவின் மனதை மாற்றி விட்டாளோ..? என் அக்காவுக்குள் இவ்வளவு திறமையா..? அதுசரி.. திவ்யா மனம் மாறியிருந்தால், அதை ஏன் இன்னும் என்னிடம் சொல்லவில்லை..?' அசோக்கிற்கு குழப்பமாய் இருந்தது. ஆனால்.. அதேநேரம் அவனுடைய உடம்பெல்லாம் பரவசமாய் ஒரு உணர்ச்சி பரவுவதையும் அவனால் உணர முடிந்தது. 'இது மட்டும் உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்..? திவ்யா என் காதலை புரிந்துகொண்டு என்னை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்..? அப்படி மட்டும் நடந்துவிட்டால்.. அதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்கும்..?' "இந்தாடா காபி.." சித்ரா அசோக்கின் கவனத்தை காபி நீட்டி கலைத்தாள். அசோக் காபியை வாங்கி அமைதியாக உறிஞ்ச ஆரம்பித்தான். சித்ராவும் இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டு காபியை அருந்தினாள். இவர்கள் ஹாலில் அமர்ந்து பேசுவதை எல்லாம், திவ்யா அவளுடைய அறைக்குள் இருந்தவாறு காதுகளை கூர்மையாக்கி கவனித்துக் கொண்டிருந்தாள். காபியை உறிஞ்சியவாறே அசோக் கார்த்திக்கிடம் கேட்டான். "நீங்க காபி சாப்பிடலையா அத்தான்..?" "ஹாஹா.. நான் அப்போவே சாப்பிட்டேன் அசோக்..!!" கார்த்திக் இளிக்க, சித்ரா இப்போது இடைமறித்து இடக்காக சொன்னாள். "உன் அத்தான் காலைல பெட்ல இருந்து எந்திரிச்சதும்.. பல்லு கூட வெளக்காம.. அந்த காபியை அப்படியே ரசிச்சு ரசிச்சு உறிஞ்சுவாறு பாரு..!! அடா அடா.. அதை பாக்குறதுக்கு ஆயிரம் கண் பத்தாது..!!" சித்ராவின் நக்கலில் கார்த்திக் பட்டென முகம் சுருங்கிப் போனான். வெட்கப்பட்டுக்கொண்டு தன் முகத்தை ந்யூஸ் பேப்பருக்குள் புதைத்துக் கொண்டான். சித்ரா திரும்பி அசோக்கிடம் கேட்டாள். "அது சரி.. நீ ஏதோ கால் பண்ணனும்னு சொன்னியே.. பண்ணிட்டியா..?" "பண்ணுனேன்.. யாரும் எடுக்க மாட்டேன்றாங்க..!!" "ம்க்குக்கும்.. இதுக்காகத்தான் காலங்கத்தால வந்து டைரி டைரின்னு டான்ஸ் ஆடுனியாக்கும்..?" "இல்லக்கா.. இன்னைக்கு எனக்கு நெறைய வேலை இருக்கு..!!" "என்ன வேலை..?" "ஜெர்மன் எம்பஸிக்கு போகணும்..!!" "எதுக்கு..?" "என்னோட விசா ப்ராசிங்ல ஏதோ சிக்கலு.. அதான்..!!" அசோக் சொல்ல இப்போது கார்த்திக் அவனிடம் கவலையாக கேட்டான். "விசாவா..? என்ன அசோக்.. ஆன்சைட் போறதுன்னு முடிவே பண்ணிட்டியா..??""ம்ம்.. ஆமாம்த்தான்.. முடிவு பண்ணிட்டேன்..!!" அசோக் இங்கே சொல்ல, உள்ளே கேட்டுக்கொண்டிருந்த திவ்யாவுக்கோ சுருக்கென்று இருந்தது. "மூணு வருஷம்ல..?" "ஆமாம்த்தான்.. கொஞ்சம் எக்ஸ்டன்ட் ஆனா கூட ஆகலாம்.." "எப்படி அசோக்.. மூணு வருஷம்.. எங்களைலாம் விட்டுட்டு இருந்துடுவியா..?" "கஷ்டந்தான்.. ஆனா இருந்துடுவேன்.. வருஷத்துக்கு ஒரு தடவை வந்துட்டு போவேன்த்தான்.. ஒன்னும் பிரச்னை இல்ல..!!" அசோக் கார்த்திக்கிடம் சொல்லிக்கொண்டிருக்க, சித்ரா இப்போது இடையில் புகுந்தாள். "இவன்கிட்ட இப்படி கேட்க கூடாதுங்க.. வேற மாதிரி கேக்கணும்.." "வேற மாதிரின்னா எப்படி..?" அசோக் அக்காவை முறைத்தான். "மூணு வருஷம் திவ்யாவை விட்டு இருந்துடுவியா..?" "ஏன்..? இருந்தா என்ன..?" "ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..!!" "என்ன சொல்ல சொல்ற..? அவ கொரங்கு மூஞ்சியை பாக்க சகிக்காமத்தான் நான் ஆன்சைட்டே போறேன்.. போதுமா..??" "அடப்பாவி..!!" சித்ரா இங்கே வாய்பிளக்க, உள்ளே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவுக்கு சுருசுருவென இருந்தது. 'ம்ஹூம்.. இதை இப்படியே விடக் கூடாது..!! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்..?' திவ்யா ஓரிரு விநாடிகள்தான் யோசித்திருப்பாள். உடனே துணிச்சலாக ஒரு முடிவுக்கு வந்தாள். பின்னிய கூந்தலை தூக்கி பின்னால் போட்டுவிட்டு விருட்டென்று எழுந்தாள். தன் அறையில் இருந்து வெளிப்பட்டு ஹாலை நோக்கி ஒரு வீர நடை நடந்து வந்தாள். தூரத்தில் திவ்யா முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு வருவதை கவனித்த அசோக் பதறிப் போனான். 'இவ்வளவு நேரம் உள்ளேதான் இருந்தாளா இவள்..? ஐயையோ..!!' பதறியவன், கிசுகிசுப்பான குரலில் அக்காவிடம் கேட்டான். "என்னக்கா.. வெளில போயிருக்கான்னு சொன்ன..?" "ம்ம்.. சும்மா.. பொய் சொன்னேன்..!!" சித்ரா கூலாக சொல்லிவிட்டு காபியை உறிஞ்சினாள். அதற்குள் திவ்யா ஹாலுக்குள் நுழைந்திருந்தாள். வந்தவள் நேராக சென்று சித்ராவுக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டாள். அசோக்கை ஒருமுறை ஏறிட்டு பார்த்து, அப்புறம் 'ம்ஹ்ம்..' என்று முகத்தை சிலுப்பிக் கொண்டாள். "குடிச்சது போதும் அண்ணி.. குடுங்க..!!" என்று சித்ராவின் கையில் இருந்த காபியை பறித்தாள். "ஏய்.. ஏய்.. எச்சிடி இது.." என்று சித்ரா பதறினாள். "பரவால.. குடுங்க..!!" கேஷுவலாக சொன்ன திவ்யா, சித்ரா சாப்பிட்ட மிச்ச காபியை வாங்கி உறிஞ்ச.. அசோக்கும், கார்த்திக்கும் அதிர்ந்து போய்.. வாயை பிளந்தார்கள்..!! 'காண்பதெல்லாம் கனவா நனவா..?' என குழம்பிப் போனவர்கள், கண்ணிமைக்க கூட மறந்து போய் விழிகள் விரிய அமர்ந்திருந்தார்கள். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு கார்த்திக் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தான். மற்ற மூவரும் பேசிக்கொண்டார்கள். ஆனால்.. அசோக்கும், திவ்யாவும் ஒருவருக்கொருவர் நேரிடையாக பேசிக்கொள்ளவில்லை. இருவரும் சித்ராவிடம்தான் பேசினார்கள். திவ்யாதான் முதலில் ஆரம்பித்தாள். "என்ன ஆச்சு அண்ணி உங்க தம்பிக்கு..? கோணவாயன் கொட்டாவி விட்ட மாதிரி உக்காந்திருக்கான்..??" "தெரியலையே திவ்யா.. எதையோ பாத்து பயந்தவன் மாதிரி இருக்கான்.." "பயமா.. எனக்கா..? அதுலாம் ஒன்னும் கெடயாது.." அசோக் இடையில் புகுந்து சொன்னான். "வேற என்னதான் பிரச்னையாம் அவனுக்கு..?" "எனக்கு என்ன பிரச்னை..?" "அப்புறம் எதுக்கு ஊரை விட்டு ஓடுறான்னு கேளுங்க அண்ணி.." "ஹாஹா.. ஆன்சைட் போறதுக்கு பேரு.. ஊரை விட்டு ஓடுறதா.. கேளுக்கா..!!" "அவன் எங்க வேணா போகட்டும்.. எதுக்கு என் மூஞ்சியை பாக்க சகிக்காம போறதா சொல்லணும்..? அதுவும் கொரங்கு மூஞ்சியாம்.. என் மூஞ்சியை பாத்தா கொரங்கு மாதிரியா இருக்கு..? மொதல்ல அவன் மூஞ்சியை ஒழுங்கா கண்ணாடில பாக்க சொல்லுங்க அண்ணி..!!" "ஆமாம் அசோக்.. என்னதான் இருந்தாலும் நீ திவ்யாவை கொரங்குன்னு சொல்லிருக்க கூடாது.. அக்கா இதை வன்மையா கண்டிக்கிறேன்..!!" சித்ரா ஏதோ நாட்டாமை மாதிரி சொன்னாள். உடனே அசோக், "அக்கா.. இது நல்லா இல்ல..!! எனக்கு அந்த வார்த்தையை கத்துக்கொடுத்ததே நீதான்..!! நானாவது இன்னைக்கு ஒருநாள்தான் அவளை அப்படி சொன்னேன்.. நீ இதுவரை ஒரு ஆயிரம் தடவையாவது அவளை கொரங்கு கொரங்குன்னு சொல்லிருப்ப.. ஞாபகம் வச்சுக்கோ..!!" என்று அக்காவை மாட்டிவிட்டான். "சரி சரி.. விடு.. இப்போ எதுக்கு அதெல்லாம்..? ஸாரி திவ்யா..!!" சித்ரா அசட்டு சிரிப்புடன் சமாளிக்க முயன்றாள். திவ்யாவோ அவளுக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள். "ப்ச்.. அண்ணி.. நீங்க எதுக்கு அண்ணி ஸாரி கேக்குறீங்க..? நீங்க என் அண்ணி.. நீங்க என்னவேணா என்னை சொல்லலாம்.. உங்களுக்கு அந்த உரிமை இருக்கு..!! இவன் எப்படி சொல்லலாம்..? இவன் என்ன என்னை கட்டிக்கப் போறவனா..? ரொம்ப உரிமையா பட்டப்பேர் வச்சு என்னை கூப்பிடுறான்..?? கேளுங்க அண்ணி..!!" "ம்ம்.. பாயின்ட்..!! பதில் சொல்லு தம்பி..!!" சித்ரா முகமெல்லாம் மீண்டும் பிரகாசமாக கேட்டாள். "நான் ஒருகாலத்துல அவளுக்கு ஃப்ரண்டா இருந்தவன்னு சொல்லுக்கா..!!" அசோக் சலிப்பாய் சொன்னான். உடனே திவ்யா, "ப்ச்.. இந்த ஒருகாலத்துல ஃப்ரண்டா இருந்த கதைலாம் இப்போ வேணாம்..!! இவனைலாம் என் ஃப்ரண்டா என்னால ஏத்துக்க முடியாது.. வேணும்னா என் பாய்ஃப்ரண்டா இருந்துட்டு போகட்டும்..!!! ஓகேவான்னு கேட்டு சொல்லுங்க அண்ணி..!! ஆனா அதுக்கும் ஒரு கண்டிஷன்.. இந்த ஆன்சைட் ட்ரிப்லாம் கேன்சல் பண்ணிடனும்.. என்னை விட்டு எங்கயும் போகக் கூடாது.. என் கூடவே இருக்கணும்..!!" திவ்யா சொல்ல சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் குபுகுபுவென ஒரு சந்தோசம் பொங்கியது. அந்த மாதிரி ஒரு உச்சபட்ச சந்தோஷத்தை அவன் அனுபவித்ததே இல்லை. திவ்யாவை காதலாக திரும்பி பார்த்தான். அதற்குள் சித்ரா, "என்னடா தம்பி.. டீல் உனக்கு ஓகேவா..?" என்றாள். அசோக் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், முகத்தை இறுக்கமாக மாற்றிக்கொண்டு, "ஓஹோ.. அந்த அளவுக்கு ஆகிப் போச்சா..?? ஆமாம்.. அப்படி என்ன திடீர்னு என் மேல லவ்வு..?? கேளுக்கா..!!" என்றான். "திடீர்னுலாம் இல்ல.. ஆரம்பத்துல இருந்தே இந்த லூசுப்பயலைத்தான் நான் லவ் பண்றேன்னு சொல்லுங்க அண்ணி..!!" "அப்படின்னா அந்த திவாகர்..?" "அவன் கெடக்குறான் டுபாகூர்..!! அவனை நேத்தோட தலை முழுகியாச்சுனு சொல்லுங்க அண்ணி..!!" "ஓஹோ..?? ஆரம்பத்துல இருந்தே என் மேல அவ்வளவு லவ்வுன்னா.. அப்புறம் ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லலையாம்..? கேளுக்கா..!!" "அதை கேக்குறதுக்கு இவனுக்கு எந்த தகுதியும் இல்லைன்னு சொல்லுங்க அண்ணி..!! 'யாரைடா லவ் பண்றே'ன்னு கேட்டா.. 'அவ ஒரு லூசு'ன்னு சொல்றான் அண்ணி..!! இவன் மட்டும் சின்ன வயசுல இருந்தே இவன் லவ்வை அமுக்குனி மாதிரி அமுக்கி வச்சுப்பானாம்.. நாங்க மட்டும் உடனே வந்து சொல்லனுமா..? என்ன அநியாமா இருக்கு..?? எனக்கு என்ன இவனை மாதிரி சூது வாது தெரியுமா..?? நான் கொழந்தைப்பொண்ணு.. எது லவ் எது அட்ராக்ஷன்னு புரிஞ்சுக்க கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு..!! அதுக்கு என்ன இப்போ..??" திவ்யா சொல்லிவிட்டு அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொள்ள, அவளுடைய கன்னத்தை பிடித்தவாறு சித்ரா சொன்னாள். "ஆமாண்டா அசோக்.. பாவம்டா இவ.. கொழந்தைப்பொண்ணு.. ஏத்துக்கோடா இவளை..!!" "இல்லைக்கா.. இன்னும் எனக்கு நெறைய கொழப்பமா இருக்கு.. அதுலாம் கிளியர் ஆகணும்..!!" "இன்னும் என்னடா கொழப்பம் உனக்கு..??" சித்ரா கேட்க, அதற்குள் திவ்யா பொறுமை இழந்தவளாய்.. "ப்ச்.. என்ன அண்ணி.. இன்னும் இவன்கிட்ட கெஞ்சிக்கிட்டு..?? எதுக்கு வளவளன்னு இழுக்குறான் இப்போ..?? நான் இவனை லவ் பண்றேன்.. வாழ்ந்தா இவன்கூடாதான்னு முடிவு பண்ணிட்டேன்.. இவனை விட்டு என்னால ஒருநாள் கூட பிரிஞ்சி இருக்க முடியாது..!! ஆன்சைட் ட்ரிப்பை கேன்சல் பண்றானா இல்லையான்னு கேட்டு சொல்லுங்க அண்ணி.." என்றாள்."அவ்வளவு ஈஸியாலாம் அதை கேன்சல் பண்ண முடியாது.. சொல்லுக்கா..!!" என்றான் அசோக். "ஏனாம்..?" "நான் வாக்கு கொடுத்துட்டேன்.." "வாக்கு கொடுத்துட்டானா..? நாக்கை கட் பண்ணிடுவேன்னு சொல்லுங்க அண்ணி..!! இவன் எப்படி ஜெர்மனி போறான்னு நான் பாக்குறேன்.. ஃப்ளைட்டுக்கு பாம் வச்சுடுவேன்..!!" "ஐயயையோ.. ஏன் இப்போ சண்டை போட்டுக்குறீங்க..?" என்று சித்ரா புலம்பியதை இருவருமே கண்டுகொள்ளவில்லை. நேரடியாகவே இருவரும் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தார்கள். "ஏய்.. என்னடி நீ.. ரொம்ப பேசுற..?" "நீ மட்டும் என்ன கொஞ்சமாவா பேசுற..? ஒளறுவாயன் ஓல்ட்மங்க் குடிச்ச மாதிரி ஓவராத்தான் பேசிட்டு இருக்குற..!!" "யாருடி.. நான் ஓவரா பேசுறனா.. நான் ஓவரா பேசுறனா..?" அசோக் எகிற, "அப்புறம் யாரு.. நானா..? போகாதன்னு சொன்னா.. பொத்திக்கிட்டு இருக்க மாட்டியா..?" திவ்யாவும் சீறினாள். "போடீ..!! நான் ஆன்சைட் போகத்தான் போறேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.." "வேணாம் அசோக்.." "என்னடி பண்ணுவ..?" "என்ன பண்ணுவனா.. என்ன பண்ணுவனா.." கடுப்பான திவ்யா டீப்பாய் மேலிருந்த டைரியை எடுத்து அசோக்கின் தலையிலேயே 'மடார்.. மடார்..' என்று போட ஆரம்பித்தாள். அசோக் திணறிப்போனான். 'ஏய்.. அடிக்காதடி அடிக்காதடி..' என்று அவளை சமாளிக்க முயன்றான். 'அப்போ போகமாட்டேன்னு சொல்லு.. போகமாட்டேன்னு சொல்லு..' என்று அடிப்பதை தொடர்ந்து கொண்டிருந்தாள். 'சரிடி.. போகலை.. போகலை.. போதுமா..?' என்றவாறு அசோக் திவ்யாவின் கையிலிருந்த டைரியை படக்கென்று பறித்தான்.

அவ்வளவுதான்..!! குனிந்திருந்த திவ்யா தடுமாறிப் போனாள். அப்படியே அசோக்கின் மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் அசையக் கூட மனமின்றி, அசோக்கின் முகத்தையே ஆசையாக பார்த்தபடி அப்படியே கிடந்தாள். அசோக்கும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கும் விலகிக்கொள்ள தோன்றவில்லை. திவ்யாவை அணைத்துக்கொண்டு சலனமில்லாமல் கிடந்தான். பார்த்துக்கொண்டிருந்த சித்ராவும், கார்த்திக்கும்தான் பதறிப் போனார்கள். "ஏய்.. எந்திரிங்கப்பா.. நாங்கல்லாம் இருக்குறோம்.." என்றவாறு பாய்ந்து சென்று அவர்களை பிரித்துவிட படாதபாடு பட்டார்கள். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து.. அசோக் அந்த மொட்டை மாடியில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு நின்று கொண்டிருந்தான். திவ்யாவுக்காக காத்திருந்தான். ஈரப்பதமான தென்றல் காற்று ஜிலுஜிலுவென வீசி, அசோக்கின் கேசத்தை கலைத்துவிட முயற்சி செய்தது. அது மதியம் இரண்டு மணிதான். ஆனால் மாலை ஆறு மணியோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு சூரிய வெளிச்சம் இன்றி வானம் மந்தமாக காட்சியளித்தது. நீலவானம் எங்கும் இப்போது திரள்திரளாய் அடர்கருப்பு மேகங்கள். எந்த நேரமும் வானம் பொத்துக்கொண்டு மழையை ஊற்றிவிடும் என்று அசோக்கிற்கு தோன்றியது. திவ்யா படிக்கட்டில் இருந்து மொட்டை மாடியில் பிரவேசித்தாள். ஒருமாதிரி அப்படியும் இப்படியும் திரும்பி திரும்பி, திருட்டுப் பார்வை பார்த்தபடியே வந்தாள். அசோக் தனது பின்புறத்தை காட்டியவாறு கைகட்டி நின்றிருந்தான். அசோக்கை நெருங்கிய திவ்யா, அவனது புட்டத்தில் ஒரு தட்டு தட்டினாள். உடனே அசோக் திரும்பினான். திவ்யாவை பார்த்து அழகாக புன்னகைத்தான். திவ்யா எந்த உணர்ச்சியும் காட்டாமல், "ம்ம்.. இந்தா.." என்று தன் வலது கையை அவன் முன்பாக நீட்டினாள். அவளுடைய உள்ளங்கையில் நீளமாய் ஒரு சிகரெட்டும், ஒரு மேட்ச்பாக்சும் இருந்தன. அதைப் பார்த்த அசோக் இப்போது குழப்பமாய் திவ்யாவை ஏறிட்டான். ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்தவன் மாதிரி, முகத்தை சுளித்தவாறு கேட்டான். "என்னது இது..??" அவன் அவ்வாறு கேட்க, உடனே திவ்யா எரிச்சலானாள். "ப்ச்.. அப்டியே போட்டேன்னா.. இது என்னன்னு உனக்கு தெரியாதா..?" "என்னன்னு தெரியுதுடி.. இதை எதுக்கு கைல வச்சு சுத்திக்கிட்டு இருக்கேன்னு கேட்டேன்..?" "ம்ம்.. மொட்டை மாடிக்கு போய் ரெண்டு இழுப்பு இழுத்து பாக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்..!! உதை வாங்குவ.. உனக்குத்தாண்டா எடுத்து வந்தேன்.. லூசு..!!" "எனக்கா..?? நான் உன்கிட்ட தம்மு வேணும்னு கேட்டனாக்கும்..??" "அப்புறம் எதுக்கு மொட்டை மாடிக்கு வர சொன்ன..?" "ப்ச்.. மொட்டை மாடிக்கு வர சொன்னேன்.. தம்மு எடுத்துட்டு வர சொன்னனா..?" இப்போது திவ்யா நிஜமாகவே குழம்பிப் போனாள். நெற்றியை சுருக்கி, தலையை ஒரு கையால் சொறிந்தவாறே கேட்டாள். "அ..அப்புறம்.. அப்போ எதுக்கு சிக்னல் கொடுத்த..?" "எப்போ..?" "ப்ச்.. அப்போடா..!! எல்லாரும் உக்காந்து சாப்பிட்டுட்டு இருக்குறப்போ.. யாருக்கும் தெரியாம.. எனக்கு மட்டும் நைஸா சிக்னல் குடுத்தியே.. உதட்டுல வெரலை வச்சு இப்படி இப்படி பண்ணுனியே..?" "அடி லூசு.. அது சிகரெட்டுக்கு கொடுத்த சிக்னல் இல்ல..!!" "அப்புறம்..??" "இதுக்கு கொடுத்த சிக்னல்..!!" அசோக் உதட்டை பிதுக்கி 'முத்தத்துக்காக கொடுத்த சிக்னல்' என்று திவ்யாவுக்கு உணர்த்தினான். உடனே திவ்யாவின் முகம் குப்பென வெட்கத்தில் சிவந்து போனது. அவளுடய உடலில் ஜிவ்வென்று ஒரு உணர்வு ஓடி அவளை சிலிர்க்க வைத்தது. அவளுடய உதடுகள் படபடத்தன. கைவிரல்கள் காற்றில் டைப் அடித்தன. அவளுடைய செழித்த மார்புகள் ரெண்டும் 'குபுக் குபுக்'கென ஏறி இறங்கின. அசோக்கின் முகத்தை ஏறிட வெட்கப்பட்டுக்கொண்டு, வேறெங்கோ பார்வையை திருப்பியவாறு மெல்லிய குரலில் சொன்னாள். "ச்சீய்.. போடா.. அதெல்லாம் ஒன்னும் கிடையாது..!!" "ப்ளீஸ்டி திவ்யாக்குட்டி.. ஒன்னே ஒன்னு.. ப்ளீஸ்..!!" "ப்ச்.. சொல்றேன்ல..? அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!! தம் எடுத்துட்டு வந்திருக்கேன்.. அடி..!! கீழ போகலாம்...!! இப்போல்லாம் நாம தனியா எங்க போனாலும்.. ரெண்டும் குசுகுசுன்னு ஏதோ பேசிக்கிட்டு கிண்டல் அடிக்குதுங்க..!!" "எனக்கு தம்முலாம் வேணாம்.. கிஸ்தான் வேணும்..!!" "இப்போதைக்கு தம் மட்டுந்தான்.. கிஸ்லாம் கிடையாது..!!" "ம்ம்ம்.. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா..?" "என்ன..?" "நான் தம்மை விட்டு ரெண்டு நாள் ஆகுது..!!" அசோக் சற்றே பெருமையாக சொல்ல, "என்னடா சொல்ற..?" திவ்யா நம்பமுடியாமல் கேட்டாள். "ஆமாம் திவ்யா.. தம்மு, தண்ணி.. எல்லாம் விட்டாச்சு..!! நேத்து உக்காந்து உன்னை நெனச்சு ஒரு கவிதை கூட எழுதிட்டேன்..!! தெரியுமா..??" "ஹஹாஹஹாஹஹா...!! கவிதையா..?? நீயா..??" "ஏய்.. இங்க பாரு.. கவிதையை கேக்காமலே இப்படிலாம் நக்கலா சிரிக்கப்படாது..!! கவிதையை சொல்றேன்.. கேட்டுட்டு அப்புறம் சொல்லு.. நல்லாருக்கா இல்லையான்னு..!!" "ஹஹாஹஹாஹஹா...!! சரி சரி சொல்லு.. சொல்லித்தொலை..!!" உடனே அசோக் தான் நேற்று எழுதிய, தனது முதல் கவிதை சொல்ல தயாரானான். தொண்டையை செருமிகொண்டான். பத்தாயிரம் பேர் கூடியிருக்கும் மேடையில் கவிதை வாசிப்பவன் போல பாவனை செய்து கொண்டு.. நிறுத்தி நிதானமாக.. ஏற்ற இறக்கத்துடன் சொன்னான்..!! "கண்கள் எனது.. கட்டில் எனது.. கனவுகளுக்கு மட்டும் நீயே கட்டளையிடுகிறாய்..!! உள்ளம் எனது.. உடலும் எனது.. உணர்வுகளுக்கு மட்டும் நீயே உத்தரவிடுகிறாய்..!!" சொல்லி முடித்தவன், காலரை தூக்கி விட்டவாறு பெருமையாக திவ்யாவிடம் கேட்டான். "எப்படி இருக்கு..??" "ம்ம்ம்.. மின்னலே படப்பாட்டை உல்ட்டா பண்ணின மாதிரி இருக்கு.. இருந்தாலும் பரவால..!!" "கொழுப்புடி உனக்கு..!! உன் மூஞ்சிக்கு உல்ட்டா பண்ணுன கவிதையே ரொம்ப ஜாஸ்தி..!! உனக்காக இதெல்லாம் பண்றேன் பாரு.. உனக்கு நக்கலாத்தான் இருக்கும்..!!" "ஹாஹா.. சரிசரி.. பண்ணு பண்ணு.. நான் நக்கலடிக்கலை..!!" திவ்யா சிரித்தவாறே சொல்ல, அசோக் இப்போது கிண்டலான குரலில் சொன்னான். "ம்ம்ம்.. கவிதை கூட ஈசியா வந்துடுச்சு திவ்யா..!! இந்த சைட் அடிக்கிறதை விடுறதுதான்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஏதாவது கலரா க்ராஸ் ஆச்சுன்னா.. கண்ணு என் கண்ட்ரோல்ல இல்லாம.. பின்னாடியே போகுது.. ரொம்ப கஷ்டமா இருக்கு..!! என்ன பண்ணலாம் திவ்யா..?" என்று அப்பாவியாக கேட்டான். "ஓஹோ..?? கண்ணுமுழியை தோண்டி கைல குடுத்துடுறேன்.. அப்புறம் ஒன்னும் கஷ்டமா இருக்காது..!!" "ஹஹாஹஹாஹஹா...!!" "மவனே.. உன் சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சிடு..!! எவளையாவது பார்த்தேன்னு தெரிஞ்சது.. மூக்கு பேந்துடும், பாத்துக்கோ..!!" "ஹாஹா.. சரிசரி.. பாக்கலை..!!" "ம்ம்ம்.. அப்போ இதை கஷ்டப்பட்டு சுட்டுட்டு வந்ததுலாம் வேஸ்ட்டா..?" திவ்யா மீண்டும் உள்ளங்கையை திறந்து காட்ட, "இன்னுமா இதை கைல வச்சுட்டு இருக்குற..?" சொன்ன அசோக் திவ்யாவின் கையிலிருந்த சிகரெட்டையும், மேட்ச் பாக்சையும் எடுத்து தூரமாய் தூக்கி எறிந்தான். அப்புறம் திரும்பி திவ்யாவைப் பார்த்து அழகாக, ஒரு குழந்தைத்தனமான புன்னகையை வீசினான். திவ்யா இப்போது கண்ணிமைக்காமல் அசோக்கையே காதலாக பார்த்தாள். பார்க்க பார்க்க.. 'என் மீது இவன் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறான்..? எனக்காக இவன் என்னவெல்லாம் செய்கிறான்..?' என்று அவளுக்கு பெருமையாக இருந்தது. அவளுடைய உள்ளத்துக்குள் காதல் ஊற்று குபுகுபுவென பொங்க ஆரம்பித்தது. திவ்யா இப்போது அசோக்கை நெருங்கி நேருக்கு நேராக நின்றுகொண்டாள். இரண்டு கைகளாலும் அவனது இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவளுடைய உடல் அசோக்கின் உடலை உரசிக்கொண்டிருக்க, அவளது பட்டு மார்புகளோ அசோக்கின் நெஞ்சில் தாராளமாகவே தவழ்ந்து கொண்டிருந்தன. இருவரது முகங்களுக்கும் வெகு நெருக்கமாக இருக்க, ஒருவர் அடுத்தவரின் வாசனையை முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. அசோக்கிற்கு அந்த நெருக்கம் பிடித்திருந்தது. அந்த நெருக்கம் தந்த சுகத்தில் திளைத்தவனாய் திவ்யாவை பார்த்தான். திவ்யா சற்றே கிறக்கமான குரலில் கேட்டாள். "எல்லாம் எனக்காகவாடா..??" "ம்ம்.." "என்னைய உனக்கு அவ்வளவு பிடிக்குமா..??" "ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!! உன் அளவுக்கு உலகத்துல வேற யாரையும் பிடிக்காது..!!" "ம்ம்.. ஐ லவ் யூ டா..!!" "ஐ லவ் யூ டி..!!""இதெல்லாம் நீ பண்ணனும்னு அவசியம் இல்லடா அசோக்.. காதலுக்கும், கண்டிஷனுக்கும் எந்த கனெக்ஷனும் இல்லைன்னு இப்போ நான் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்..!! நான் எதுவும் சொல்ல மாட்டேன்.. நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு.. எனக்காக எதுவும் நீ மாத்திக்க வேணாம்..!!" "ம்ஹூம்.. நான் மாத்திப்பேன்..!! என் லவ்வை புரிஞ்சுக்கிட்டு.. என்னை தேடி வந்த என் தேவதைக்காக.. அவளுக்கு புடிச்ச மாதிரி என்னை நான் மாத்திப்பேன்..!! அவ சந்தோஷத்துக்காக என்ன செய்யணுமோ.. எல்லாம் செய்வேன்..!!" இப்போது திவ்யா தன் கைகள் இரண்டாலும் அசோக்கின் கன்னங்களை தாங்கிப் பிடித்தாள். அவனையே கண்கொட்டாமல் காதலாக பார்த்தாள். "என்ன திவ்யா அப்படி பாக்குற..?" அசோக் புரியாமல் கேட்டான். "இல்லடா.. நான் தேடுனது என் உள்ளங்கைக்குள்ளேயே இருந்திருக்கு..!! அது தெரியாம.. நான் உலகம் பூரா போய் தேடிப்பாத்துட்டு வந்துட்டேன்டா அசோக்..!!" "ஹாஹா.. பைத்தியம்..!!" "ம்ம்ம்.. பைத்தியந்தான்..!! சரி.. உன் சந்தோஷத்துக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லு.. செய்றேன்..!!" "ஹாஹா.. நீயா..?? நீ என்ன செய்யப் போற..??" "என்னவேணாலும்..!! சொல்லு.. என்ன வேணும்..??" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. நான் என்ன கேட்கப் போறேன்..?? இறுதிவரை உன் அன்பு.. இப்போதைக்கு ஒரே ஒரு முத்தம்..!!" "போடா பொறுக்கி.. சுத்தி சுத்தி முத்தத்துலையே வந்து நிக்கிறான்..!!" திவ்யா இப்போது ஒரு போலிக்கோபத்துடன், அசோக்கிடம் இருந்து விலகிக் கொண்டாள். "ப்ளீஸ்டி.. ஒன்னே ஒன்னு..!!" "ஐயையையே..!! இது என்ன.. உன்னை லவ் பண்ணினது ரொம்ப தப்பாப்போச்சே.. சும்மா சும்மா முத்தம் கேக்குற..?? அல்ரெடி ரெண்டு நாள்ல.. இருபத்திரண்டு முத்தம் ஆகிப்போச்சு.. நாம ரொம்ப ஸ்பீடா போறோம்னு எனக்கு தோணுது..!!" "லூசு.. இதுக்குலாமா அக்கவுன்ட் வச்சுப்ப..?" "ஏன்..?? உன்னை மாதிரி ஆளுகளுக்குலாம்.. இந்த மாதிரி அக்கவுன்ட் வச்சிக்கிறது நல்லதுதான்..!!" "ஹாஹா.. சரி சரி..!! உன் அக்கவுண்ட்ல.. ப்ளஸ் ஒன் போட்டுக்கோ.. வா..!!" "நோ.. நோ..!!" "ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" அசோக் கெஞ்சிக் கொண்டிருக்கும்போதே, வானம் தூறல் போட ஆரம்பித்தது. அசோக்கும், திவ்யாவும் அண்ணாந்து வானத்தை பார்த்தார்கள். பொட்டு பொட்டாய் விழ ஆரம்பித்த துளிகள், சில வினாடிகளிலேயே சடசடவென பெருமழையாய் மாறிப் போயின..!! "அய்யய்யோ.. மழை புடிச்சுக்கிச்சு..!!" திவ்யா பதறிப்போய் படிக்கட்டை நோக்கி ஓடினாள். நாலைந்து எட்டுகள் வேகமாக எடுத்து வைத்தவள், அப்புறம் அப்படியே நின்று திரும்பி அசோக்கை பார்த்தாள். அசோக் அசையாமல் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான். அதற்குள்ளாகவே பாதி நனைந்து போயிருந்தான். திவ்யா கையசைத்து அவனை அழைத்தாள். "வாடா.. மழை ஊத்துது.." "இல்ல.. நான் வரலை.." "ஏன்.. என்னாச்சு..??" "நான் வரலை திவ்யா.. நான் இங்கயே இருக்குறேன்.. நீ வேணா போ..!!" திவ்யா இப்போது அசோக்கை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் அந்தப்பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பார்வையாக மாறியது. ஓரிரு வினாடிகள்தான்யோசித்திருப்பாள். ஓடிச்சென்று அசோக்கை அணைத்துக் கொண்டாள். அசோக்கும் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல, அவளை வாரி தன்னுடன் இறுக்கிக் கொண்டான். திவ்யா இப்போது காதலும், கிறக்கமுமாய் சொன்னாள். "இல்ல.. நான் போகலை.. நான் உங்கூடத்தான் இருப்பேன்..!!" சொல்லிவிட்டு அசோக்கை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். மேலே இருந்து ஜில்லென்று மழை நீர் கொட்டி, இணைந்திருந்த இருவரது உடலையும் நனைத்து, குளிர்விக்க முயன்றது. ஆனால்.. அதற்கு போட்டியாக.. அவர்களது தேகம் இரண்டும் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக உரசி.. அனல் உண்டாக்க ஆக வேண்டிய காரியங்களை செய்தன..!!இதமும், கதகதப்புமாய்.. இருவரும் உடல்கள் பிண்ணிக்கொள்ள நின்றிருக்க.. அவர்களது இதழ்களும் கூட.. அவர்களையும் அறியாமல்.. ஒன்றை ஒன்று நெருங்கின..!! இரு ஜோடி இதழ்களுக்கும் இடையே இப்போது இரண்டு, மூன்று மில்லிமீட்டர் இடைவெளிதான் இருக்கும்.. அத்தனை நெருக்கம்..!! அசோக் போதையும், கிறக்கமுமாய் கேட்டான்.

"தரவா..?" "வேணாமா..?" "தந்தப்புறம் அடிக்க மாட்டியே..?" "தரலைன்னாத்தான் அடிப்பேன்.. அடி வேணுமா இப்போ..?" "ஹாஹா.. என்னாச்சு உனக்கு திடீர்னு..?" "ஏன்.. ஒன்னும் ஆகலையே..?" "நான் அப்ப பொய் சொல்றேன்றியா..?" "நீ இப்படி பேசிட்டேதான் இருக்க போறியா..?" "வேற என்ன பண்ணனும்..?" "ம்ம்.. பச்சைக்கொழந்தை.. சொல்லித் தரணுமாக்கும்..?" "ஏன்.. சொல்லித்தந்தா என்ன.. கொறைஞ்சு போயிடுவியாக்கும்..?" "ஹாஹா.. சொல்லித்தரணுமா.. என் கண்ணனுக்கு..?" "ஹாஹா.. இன்னும் புரியலையா.. என் கண்மணிக்கு..?" திவ்யா புரிந்து கொண்டாள். பாய்ந்து சென்று தன் உதடுகளால் அசோக்கின் உதடுகளை கவ்விக் கொண்டாள். சுவைக்க ஆரம்பித்தாள். அவர்களுடைய உதடுகள் ரெண்டும் எசகுபிசகாய் சிக்கிக்கொண்டு சண்டையிட.. அதைப்பார்த்து வெட்கம் கொண்ட அவர்களது விழிகள்.. இப்போது இமைகளை கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து போர்த்திக் கொள்ள ஆரம்பித்தன..!! மொட்டை மாடியில்.. கொட்டும் மழையில்.. முத்தத்துக்காக இதழ்கள் நான்கையும்.. யுத்தம் செய்ய விட்டுவிட்டு.. சித்தம் மொத்தமும்.. பித்தம் ஏறிப்போய்.. நின்றிருந்தனர் அசோக்கும், திவ்யாவும்..!!

No comments:

Post a Comment