Friday 6 September 2013

மலரே என்னிடம் மயங்காதே 1


குடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை செலுத்தினேன். நாங்கள் குடியிருக்கும் வீட்டை நெருங்கியதும் காரின் வேகத்தை சுத்தமாக குறைத்தேன். கேட்டுக்கு வெளியிலேயே காரை நிறுத்தி பார்க் செய்தேன். அலறிக்கொண்டிருந்த ஹிமேஷ் ரேஷம்மயாவை ஆஃப் செய்தேன். சாவி திருகி, இன்ஜினை சாந்தமாக்கினேன்.

கேட் திறந்து உள்ளே சென்று.. கயல்விழியை நான் கட்டிப் பிடித்து கொஞ்சுவதற்கு முன்பு.. என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நான்.. அசோக்..!! இயந்திரவியலில் இளநிலை பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவன். ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை, உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்யும் ஒரு நிறுவனத்தில் உத்தியோகம். உற்பத்தி பிரிவு ஒன்றுக்கு மேலாளராக இருக்கிறேன். சற்றே கடினமான வேலைதான்..!! மாதாமாதம் முதல் தேதி ஆனதும், எனது வங்கிக்கணக்கு ஐம்பதாயிரத்து சொச்சம் அதிகமாக காட்டும். மேலே நான் கொஞ்சப் போவதாக சொன்ன கயல்விழி, என் மனைவி..!! ஓராண்டுக்கு முன்புதான் எங்களுக்கு மணமானது..!! மாங்கல்யத்தை அவளுடைய கழுத்தில் பூட்டி.. என்னை அவளுடைய பதியாகவும்.. அவளை என்னில் பாதியாகவும்.. மாற்றிக்கொண்டேன்..!! இருவருக்கும் மணமாகிய இந்த ஒரு வருட காலத்தில், எங்கள் இருவருடைய மனமும்.. இப்போது ஒன்று கலந்து ஒரு மனமாகி போயிருந்தது..!! இல்லற வாழ்க்கை உமிழ்ந்த இன்பத்தில்.. நானும் கயலும் நனைந்து.. திளைத்துப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..!! எங்கள் இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம்.. மிக மிக அலாதியானது..!! சரி.. வாருங்கள்.. கயலை பார்க்கலாம்..!! கேட் திறந்து கதவை நெருங்கியவன், காலிங் பெல்லை அழுத்த கையை நகர்த்தினேன். அப்போதுதான் 'விஷ்ஷ்... விஷ்ஷ்... விஷ்ஷ்...' என்ற சப்தத்துடன் எனது செல்போன் வைப்ரேட் ஆனது. பாக்கெட்டுக்குள் கிடந்து பதறி துடித்தது. காலிங் பெல் அழுத்தும் முன்பு, 'கால் செய்வது யார்' என பார்த்துவிடலாம் என்று எனக்கு தோன்ற.. செல்போனை வெளியே எடுத்தேன்..!! கயல்தான் கால் செய்கிறாள். வீட்டுக்குள்தான் இருக்கிறாள். காரில் வந்து நான் இறங்கியதை கவனிக்கவில்லை போலும் அவள்..!! சின்னதாக அவளிடம் விளையாடலாம் என்று நினைத்தவாறே, கால் பிக்கப் செய்தேன். "ஹலோ..!!" என்றேன். "அப்பாவும், தங்கச்சியும் கெளம்பிட்டாங்கப்பா..!!" என்றாள் எடுத்ததுமே அடுத்த முனையில் அவள். "ம்ம்.. எத்தனை மணிக்கு ட்ரெயின்..??" "எட்டு மணிக்கு..!!" "காலைல முகூர்த்தத்துக்கு சரியா போய் சேர்ந்திடுவாங்களா..?" "ம்ம்.. அதுலாம் போயிருவாங்க.. ஆறு மணிக்குலாம் ட்ரெயின் அங்க ரீச் ஆயிடும்..!!" "ஆறு மணிக்குலாம் போயிடுமா..? அப்போ கரெக்டா இருக்கும்..!!" "ம்ம்ம்.. அது சரி... நீ எப்போ ஆபீஸ்ல இருந்து கெளம்புற..?" "அ..அது.. இன்னும் ஒரு.. ரெண்டு மணி நேரம் ஆகும்மா.." நான் சற்றே கேஷுவலாக பொய் சொன்னேன். "இன்னும் ரெண்டு மணி நேரமா..? அப்போ.. வீட்டுக்கு வர்றதுக்கு பத்தாயிடுமா..??" அவள் சலிப்பாக கேட்டாள். "பத்தரை கூட ஆயிடும்..!!"ப்ச்.. போடா..!! எருமை மாடு..!! கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்ல..!! சரியான.... ஜடம்..!!" "ஒய்.. இப்போ எதுக்கு திட்டுற..?" "பின்ன என்ன..? புள்ளத்தாச்சி பொண்டாட்டி ஒருத்தி.. வீட்டுல தனியா இருக்காளே.. காலாகாலத்துல வீட்டுக்கு போய்.. அவளை கட்டிப் புடிச்சு கொஞ்சலாமேனு.. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? எப்போ பாரு.. வேலை.. வேலை.. வேலை..!! உனக்குலாம் எதுக்கு பொண்டாட்டி..? உன் கம்பெனில இருக்குற கட்டிங் மெசினையோ.. வெல்டிங் மெசினையோ கல்யாணம் பண்ணி தொலைச்சிருக்க வேண்டியதுதான..? நீயும் அதை காலம் பூரா கட்டிக்கிட்டு அழுதிருக்கலாம்.. நானும் நிம்மதியா இருந்திருப்பேன்..!!" "ம்ம்ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்கு.. இந்த யோசனை எனக்கு முன்னாடியே இல்லாம போச்சே..? சரி பரவால.. இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகலை... உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு.. வெல்டிங் மெசினோட எனக்கு வெடிங்..!! எப்பூடி..???" "ம்ம்ம்ம்... வெளக்கமாரு..!!!!!" "ஹ்ஹ்ஹஹாஹ்ஹ்ஹஹா...!!" "சிரிக்காதடா.. நான் செம கடுப்புல இருக்கேன்.." அவள் சிணுங்கலாக சொன்னாள். "சிரிப்பு வருதே செல்லம்.. என்ன பண்ண சொல்ற என்னை..? ஹ்ஹஹா...!!" "சிரி சிரி.. நல்லா சிரி.. இன்னும் பத்து நாளைக்கு உனக்கு ஒன்னும் கெடயாது மவனே..!! ‘ஒன்னே ஒன்னுடி.. ஒன்னே ஒன்னுடி’னு.. ஒதட்டை பிதுக்கிட்டு வருவேல.. ஓங்கி ஒன்னு போடுறேன் இரு.." "ஹேய்.. இதுலாம் அநியாயம்டி..!! அக்கிரமம்.. அராஜகம்..!!" "நீ பண்றது மட்டும் நியாயமா..? பொண்டாட்டியை விட.. போல்ட், நட்டு கணக்கு பாக்குறதுதான உனக்கு முக்கியம்..??" "ப்ளீஸ் கண்ணம்மா.. அப்டிலாம் சொல்லாத.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!! இன்னைக்கு நான் செம மூடுல இருக்கேன்.. வந்ததும் எனக்கு சூடா ஒன்னு வேணும்..!! ஓகேவா..??" "சூடாதான..?? வா.. கரண்டியை காய வச்சு.. சூடா ஒன்னு போடுறேன்.. வாயிலேயே..!!" "ம்ஹூம்.. நான் கேட்டது முத்தம்..!!" "உன் முகறைக்கட்டை..!! இங்க பாரு.. முத்தம் வேணும்னா.. ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு ஓடிவா..!! இல்லனா கரண்டில நல்லா சூடுதான் கெடைக்கும்..!!" "ம்ம்ம்ம்... சரி.. ஒருவேளை நான் ஒன்பது மணிக்குள்ள வந்துட்டா..?" "முத்தம் கெடைக்கும்..!!" "எத்தனை..???" "என்ன கேள்வி இது..? ஒண்ணுதான்..!!" "அதுலாம் பத்தாது எனக்கு..!!" "ஓ.. அப்போ எத்தனை வேணுமாம்.. ஐயாத்தொரைக்கு..?" "பத்து..!!" "ஓஹோ.. ரொம்பதான் ஆசை.." "ப்ச்.. தரமுடியும்னா சொல்லு.. நான் வர்றேன்.." "ம்ம்ம்ம்.. சரி.. ஒன்பது மணிக்குள்ள வந்துட்டா.. பத்து முத்தம்..!!" "லிப்ஸ்ல..?" "லிப்ஸ்லதான்டா சொல்றேன்.. வா..!!" "சரி.. ஒருவேளை எட்டு மணிக்குள்ளயே வந்துட்டன்னா..?" "எட்டு மணிக்குள்ள வந்துட்டேனா.. ம்ம்ம்ம்... டபுள்..!! ட்வெண்ட்டி..!!" "வாவ்...!!! அட்ராக்டிவ் ஆஃபர்..!! ம்ம்ம்ம்.. சரி.. அப்போ இன்னும் ஒரே நிமிஷத்துல வந்துட்டேன்னா..?" "ஒரே நிமிஷத்துல எப்படி வருவ நீ..? பறந்து வந்தாலும் பத்து நிமிஷமாவது ஆகுமே.. உன் ஆபீஸ்ல இருந்து இங்க வந்து சேர்றதுக்கு...!!" "ப்ச்.. வந்துட்டன்னா..?? ஆஃபர் என்னனு சொல்லு..!!" "ஓகே.. நூறு முத்தம்..!! லிப்ஸ்ல..!! போதுமா..??" "ஹையா..!!!!!!!!!!! ஜாலி ஜாலி...!!!!! டுடே இஸ் மை லக்கி டே… பேபி..!!!!!! ஹே.. ஹே.. ஹே.." "ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. ஏன் இப்டி கத்துற..?" "ஹண்ட்ரட் கிஸஸ் ரெடி பண்ணி வச்சுக்கோ கண்ணம்மா.. இதோ வந்துர்றேன்.. இன்னைக்கு உனக்கு உதடு ரெண்டும் வீங்கப் போகுதுடியோவ்.." "என்னது..??? வந்துர்றியா..?? ஒரே நிமிஷத்துலையா..?? எப்புடி..??" "ஹ்ம்ம்.. இப்புடி..!!" சொல்லிக்கொண்டே நான் காலிங் பெல்லை, நான்கைந்து முறை 'கீங் கீங் கீங்..' என்று அழுத்தினேன். "அட திருட்டு ராஸ்கல்..!! வெளில நின்னுக்கிட்டேதான் இவ்ளோ நேரம் வெளையாடிட்டு இருந்தியா..? உன்னை என்ன பண்ணுறேன் பாரு..!!"கடுப்புடன் கத்தியவள் காலை பட்டென கட் செய்தாள். அடுத்த சில வினாடிகளிலேயே படாரென கதவை திறந்தாள். திறந்தவள், இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு, கண்களை இடுக்கி கூர்மையாக என்னையே முறைத்தாள். நான் எதுவும் சொல்லவில்லை. உதட்டில் ஒரு நமுட்டு புன்னகையுடன் அவளையே குறும்பாக பார்த்தேன். அரக்கு நிறத்தில் ஒரு புடவை உடுத்தி அம்சமாக நின்றிருந்தாள் என் மனைவி..!! பளிச்சென்ற பால்நிலா முகத்துடனும், பலூன் மாதிரி உப்பியிருந்த வயிறுடனும் நின்றிருந்தாள். முகத்தை கழுவி லேசாக பவுடர் தீற்றியிருப்பாள் போலிருக்கிறது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் மணம் குப்பென ஆளை தூக்கியது. கருவுற்றபின் கொஞ்சமாய் சதை போட்டிருந்தவளின் மேனியில், மினுமினுப்பும் ஏறியிருந்தது. தாய்மை அடையும் போது, கூடவே சேர்ந்து, ஒரு தனிக்களையும் வந்து விடுகிறது இந்த பெண்களுக்கு..!! கருவுற்ற தேவதையாய் காட்சியளித்தாள் என் மனைவி..!! அவள் விழிகளை உருட்டி குறுகுறுவென என்னையே பார்க்க, நான் இப்போது மெலிதாக புன்னகைத்தேன். ஒரு கண்ணை திறந்து வைத்துக்கொண்டு, மற்றொரு கண்ணை மட்டும் மூடி.. குறும்பாக சிமிட்டினேன். முறைத்துக் கொண்டிருந்தவளிடம் இப்போது மாற்றம் தெரிந்தது. அவளுக்கு சிரிப்பு எழுந்திருக்க வேண்டும். அதை உள்ளுக்குள்ளே வைத்து அடைக்க முயற்சித்தாள். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்து.. அடக்க முயன்ற அந்த சிரிப்பு.. அவளுடைய உதட்டின் ஊடே மெலிதாக கசிந்தது..!! கண்களாலும் இப்போது காதலாக புன்னகைத்தவள், குறும்பான குரலில் சொன்னாள். "பொறுக்கி..!!!" "ஓ.. பொறுக்கியா நான்..? வா.. பொறுக்குறேன்.." நான் வீட்டுக்குள் நுழைந்து அவளை அணைத்துக் கொண்டேன். "எதை பொறுக்க போறடா பொறுக்கி..??" "வேற என்ன..? முத்தம்..!!" சொல்லிக்கொண்டே நான் உதட்டை குவிக்க, அவள் அவளுடைய நான்கு விரல்களை ஒன்றாய் சேர்த்து என் உதட்டிலேயே பட்டென அறைந்தாள். "அதுலாம் ஒன்னும் கெடயாது போ.." "ஹேய்.. இதுலாம் சீட்டிங்..!! ஹண்ட்ரட் கிஸஸ் தர்றேன்னு இப்போத்தான சொன்ன..?" "எது சீட்டிங்..??? நீ பண்ணுனதுதான் சீட்டிங்..!!" "நான் என்ன சீட்டிங் பண்ணினேன்..?" நான் அப்பாவியாக கேட்டேன். "ம்ம்..?? வீட்டுக்கு வெளிலேயே நின்னுக்கிட்டு.. ஆபீஸ்ல இருக்குறேன்னு பொய் சொல்றதுக்கு பேர் என்னவாம்..??" "நோ நோ..!! அதுலாம் எனக்கு தெரியாது..!! நீ தர்றேன்னு சொல்லிருக்குற.. தந்தே ஆகணும்..!!" நான் அடம் பிடித்தேன். "முடியாது.. போடா..!!" அவள் கறாராக சொன்னாள். "என்னது.. முடியாதா..?? ஏய்.. கொழந்தைப் பையனை ஏமாத்தாதடி.." "ஆமாம்.. ஒன்னுந்தெரியாத கொழந்தை இவரு..?? வாயில வெரல் வச்சா கூட கடிக்க மாட்டாரு..??" "வெரல் வச்சா கடிக்க மாட்டேன்.. வேற எதையாவது வச்சுப்பாரு.. கடிக்கிறேன்..!!" நான் குறும்பாக சொல்ல, "ச்சை.. கருமம்..!!". அவள் உதட்டை சுளித்து சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நான் திடீரென்று என் முகத்தை நகர்த்தி, எனது உதடுகளால் அவளது உதடுகளை தேடிப் பிடித்து கவ்விக்கொண்டேன். அவளுடைய தடித்த கீழுதடு எனது முரட்டு உதடுகளுக்குள் சிக்கிக்கொள்ள, மெலிதாக உறிஞ்சினேன். இரண்டு கைகளாலும் அவளது வழவழ கன்னத்தை தடவிக் கொடுத்தவாறே, அவளது இதழ்களை ஆர்வமாய் சுவைத்தேன். கயலும் ஆரம்பத்தில் சற்று திணறித்தான் போனாள். 'முடியாது.. பிடிக்காது..' என்று பிகு செய்தவள், இப்போது எனது முத்த சுவைக்குள் கட்டுண்டு கிடந்தாள். கண்களை லேசாக செருகிக் கொண்டு.. 'ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்..' போதையாய் முனகிக்கொண்டு.. உதடுகளை பிளந்து எனக்கு வசதியாக காட்டிக்கொண்டு..!!! கயலை முத்தமிடுவது ஒரு சுகானுபவம்..!! அவளுக்கு ரோஜா இதழ்கள் போல விரிந்த செந்நிற உதடுகள். கீழுதடு சற்றே தடியாக.. பிதுங்கியவாறு.. கவர்ச்சியாக.. கவ்விக்கொள்ள தூண்டும்..!! வரி வரியாய் இருக்கும் உதட்டு ரேகைகளில்.. தேன் கசிந்த மாதிரி ஒரு ஈரம் எப்போதும் மினுமினுக்கும்..!! இனிப்பான அவளுடைய அந்த உதட்டு ஈரம்தான்.. இப்போது எனது தொண்டைக்குழிக்குள் அமிர்தமாய் இறங்கிக் கொண்டிருந்தது..!! ஆசை தீர அந்த அதரத்து அமிர்தம் உண்டு முடித்து, நான் அவளுடைய உதடுகளை விடுவித்தபோது.. கயல் என்னை சற்றே கிறக்கமாக பார்த்தாள். அவளது இரண்டு கைகளாலும் எனது கழுத்தை கட்டிக்கொண்டு கிசுகிசுப்பாக சொன்னாள். "ம்ம்ம்.. பெட்ரூம் தூக்கிட்டு போ அசோக்..!!"நான் புன்னகைத்தவாறே என் மனைவியை அப்படியே அலாக்காக தூக்கிக் கொண்டேன். அவளுடைய அழகு முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டே, படுக்கையறைக்கு அள்ளி சென்றேன். உள்ளே நுழைந்ததும், கண்ணாடிப் பொருள் போல கவனமாய் அவளை கட்டிலில் கிடத்தினேன். அவளுக்கு அருகே படுத்துக் கொண்டேன். ஒரு கையால் அவளுடைய கூந்தலை தடவிக் கொடுத்தவாறு, காதலாய் அவளையே பார்த்தேன். அவளும் என் முகத்தையே கொஞ்ச நேரம் ஆசையாக பார்த்தாள். அப்புறம் சற்றே குறும்பான குரலில் என்னை அழைத்தாள். "அழகு புருஷா..!!" "ஹஹா.. அழகா நான்..??" எனக்கு சிரிப்பு வந்தது. "பின்ன இல்லையா..??" "பொய் சொல்லாத கயல்.." நான் அப்படி சொன்னதும், அவள் என்னை கொஞ்ச ஆரம்பித்தாள். "போடா.. நான் எதுக்கு பொய் சொல்ல போறேன்..? கரு கருன்னு சாஃப்டா.. ஸ்டைலா.. தலைமுடி..!! குட்டியா.. ஷார்ப்பா.. அந்த ரெண்டு கண்ணு..!! நீளமா.. உருண்டையா.. எனக்கு ரொம்ப பிடிச்ச இந்த மூக்கு...!! ரோஸ் கலர்ல.. தடியா.. இந்த சேட்டைக்கார லிப்ஸ்..!! அதிகமும் இல்லாமா.. கம்மியும் இல்லாம.. அளவான என் பேவரிட் மீசை..!! எனக்கு நீ அழகுதான்..!! சொல்லப்போனா.. நீ மட்டுந்தான் அழகு..!!" "ஓஹோ..?? ம்ம்ம்.. எனக்கும் நீ அப்படித்தான் கயல்..!!" "ஹேய்.. இது பொய்..!! உனக்கு என்னை விட காஜல் அகர்வாலைதான புடிக்கும்..?" "அ...அது.. அ..அதுலாம்.. க..கல்யாணத்துக்கு முன்னாடி..." "ஆ...ங்.. பொய் சொல்றான் பொய் சொல்றான்.. திருடன்..!!" அவள் பழிப்பு காட்டினாள். "பொய்லாம் சொல்லலை.. உண்மைதான்..!!" நான் போலிக் கோபத்துடன் முகத்தை திருப்பிக்கொள்ள, "ஆஆஆஆவ்வ்..!!" என்று அவள் லேசாக கத்தினாள். "என்னாச்சுடா..??" நான் சற்றே பதட்டமாக கேட்டேன். "உன் பையன் உதைக்கிறான்டா.." அவள் முகமெல்லாம் பெருமிதமாக சொன்னாள். "ஓ.. பையன்னே முடிவு பண்ணிட்டிங்களாக்கும்..??" "பின்ன என்ன..?" "எனக்கு பொண்ணுதான் வேணும்..!!" "உனக்கு வேணும்னா அதுக்கு நான் என்ன பண்றது..? உள்ள கெடக்குறது பையன்தான்..!!" "உனக்கு எப்படி தெரியும்..??" "எல்லாம் எனக்கு தெரியும்.. அதான் இந்த உதை உதைக்குதே..?? அப்டியே... அப்பன் மாதிரியே.. முரடு.. உள்ள இருக்குறப்போவே இந்த பாடு படுத்துது.." அவள் கொஞ்சலாக சொல்லிக்கொண்டே என் மூக்கை பிடித்து திருகினாள். "ஹேய்.. இரு.. எனக்கு பாக்கணும் போல இருக்கு.." நான் ஆசையாக சொல்ல, "ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்.. பாக்கணுமா..?? சரி.. வா.." அவள் சிரிப்புடன் சொன்னாள். தன் புடவையை சற்றே விலக்கி, தனது நிறை மாத வயிற்றை பளிச்சென்று எனக்கு காட்டினாள். வெள்ளை வெளேரென.. புஸ்சென்று பெரிதாக வீங்கியிருந்த அவளது வயிற்றை நான் ஆசையாக பார்த்தேன். எனது விரல்களால் மெல்ல வருடிக் கொடுத்தேன். அப்புறம் என் முகத்தை மென்மையாக அதன் மீது கிடத்தி, உள்ளிருந்து உதைக்கும் சத்தம் வருகிறதா என்று பார்த்தேன். ஒரு சத்தமும் கேளாமல் ஏமாந்தேன்..!! பின்பு முகத்தை திருப்பி 'இச்ச்ச்...' என்று அந்த வயிற்றின் மத்தியில் ஒரு முத்தம் பதித்தேன். என் மனைவியின் முகத்தை ஏறிட்டேன். உதட்டில் புன்னகையுடன், நான் செய்வதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், இப்போது எதிர்பார்ப்பும் ஏகாந்தமும் மிக்க குரலில் சொன்னாள். "இன்னும் பத்து நாள்தான் அசோக்.. நாம மூணு பேராயிடுவோம்..!!" "ம்ம்.. நெக்ஸ்ட் வீக் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிடலாம்ல..?" "ஆமாம்.." நான் இப்போது எழுந்து, அவளுக்கருகே கட்டிலில் தலை சாய்த்து படுத்துக் கொண்டேன். கயல் நகர்ந்து வந்து, எனது தோளில் அவளது தலையை சாய்த்துக் கொண்டாள். நான் அவளுடைய நெற்றியில் 'இச்ச்..' என்று இதமாய் முத்தம் பதித்துவிட்டு, ஆதரவாக அவளது கூந்தலை தடவிக் கொடுத்தேன். அவள் என் சட்டை பட்டன்களின் இடைவெளிக்குள் அவளது வலது கையை செருகி, என் மார்பை தடவியவாறே கேட்டாள். "நாளைக்கும் இதே மாதிரி சீக்கிரம் வந்திடுறியாப்பா..?" "ஏன்மா..?""நாளைக்கு கோயிலுக்கு போகணும் அசோக்.. நீயும் வந்தா சேர்ந்தே போயிட்டு வந்துடலாம்..!! இதே நேரத்துக்கு வந்தா கூட போதும்..!!" "இல்லடா.. நாளைக்கு நெறைய வேலை இருக்கு..!! நான் ஒரு பிசினஸ் பிரசண்டேஷன் கொடுக்கணும்..!! சீக்கிரம் வர முடியாது..!!" "ஓ..!! அப்படியா..??" "ம்ம்ம்.. அந்த புது ட்ரஸ் எடுத்து வை.. நாளைக்கு அதை போட்டுட்டு போறேன்..!!" "எது..??" "அதான்.. போன மாசம் வாங்கினமே.. அந்த லைட் ப்ளூ ஷர்ட்.. டார்க் ப்ளூ பேன்ட்..??" "அச்சச்சோ.. அதுவா..?? அது இன்னைக்குத்தான தொவைச்சு போட்டேன்..??" "அப்படியா..? ம்ம்ம்.. சரி.. பரவால விடு.. வேற ட்ரஸ் போட்டுக்குறேன்.." "இல்ல இல்ல.. இப்போ காஞ்சிருக்கும்.. நைட்டு அயர்ன் பண்ணி வச்சிடுறேன்.. காலைல போட்டுட்டு போ.." "பரவால்லம்மா... எதுக்கு உனக்கு கஷ்டம்..?" "இல்ல.. நீ ஆசைப்பட்டுட்டேல..? அப்புறம் எனக்கு கஷ்டமா இருக்கும்.." அவள் உண்மையிலேயே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, நான் மெலிதாக புன்னகைத்தேன். "சரி.. அதையே அயர்ன் பண்ணிக்கொடு.. நான் போட்டுட்டு போறேன்.." "மொட்டை மாடிலதான் எல்லாத்துணியும் கெடக்குது.. போய் கையோட எடுத்துட்டு வந்துர்ரியா..?" "ம்ம்.. சரிம்மா.." நான் சொல்லிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து கொண்டேன். பாத்ரூமுக்குள் புகுந்து கை கால் அலம்பி, முகம் கழுவிக் கொண்டேன். பேன்ட்டை அவிழ்த்து வீசிவிட்டு, லுங்கிக்கு மாறினேன். என்னுடைய செயல்களை எல்லாம் சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியிடம், "சரி கயல்.. நான் போய் துணிலாம் எடுத்துட்டு வர்றேன்.." என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிட்டு, கதவு திறந்து வெளியே வந்தேன். ஸ்லிப்பர் அணிந்து கொண்டேன். வீட்டுக்கு பக்கவாட்டில், இடது பக்கம் இருந்து மாடிக்கு சென்றடைந்த படிக்கட்டுகளை அடைந்து, மேலே ஏறினேன். ஒவ்வொரு படியாக ஏறும்போதே, "காலமென்னும் தேரில் ஏறி கருமாரி நீ வருகையிலே.. காணக் கண் கூசுதம்மா.. கோடி ஜோதி தெரியுதம்மா.." என்று L.R.ஈஸ்வரியின் குரல் கணீர் என்று காற்றில் மிதந்து வந்தது. உடலில் பட்டென ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது. பக்கத்து தெரு மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா என்பது ஞாபகத்துக்கு வந்தது..!! படியில் இன்னும் மேலே செல்ல செல்ல, காற்றில் கலந்த அந்த கானஒலியின் டெசிபல் அளவு, இன்னும் அதிகரித்துப் போய் ஒலித்தது. மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. மொட்டை மாடியை அடைந்ததுமே என் கண்கள் அபகரிக்கப்பட்டன. ஆகாயத்தில்.. அந்தரத்தில்.. வான வேடிக்கைகளின் வர்ண ஜாலங்கள்..!! கீழிருந்து 'விஷ்ஷ்ஷ்ஷ்...' என்று, மேல் நோக்கி கிளம்பி சென்ற வான வெடிகள், குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும், 'டொம்...!!!!' என்று பெரும் சப்தத்துடன் வெடித்து, அழகாய்.. வண்ண மயமாய்.. நெருப்புப் பூக்களாய்.. மீண்டும் கீழேயே சிதறிக் கொண்டிருந்தன. மேலே சென்று ஒரு வெடி சிதறுவதற்குள்ளாகவே, அடுத்த வெடி அதை ஃபால்லோ செய்து கிளம்பி.. இடைவிடாமல் வெடித்து.. வானத்தில் வண்ணமாரி பொழிந்து கொண்டிருந்தன.வான வேடிக்கைகளின் அழகினை கண்களால் விழுங்கிக்கொண்டே, நான் மொட்டை மாடியின் ஒரு பக்க ஓரத்திற்கு சென்று, பக்கத்து தெருவுக்கு என் பார்வையை வீசினேன். அம்மன் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. வெளிச்சத்தை விளக்குகள் வாரியிறைக்க, அம்மன் பளிச்சென்று ஜொலித்தாள். அம்மன் அலங்காரத்தை தூரத்தில் இருந்தே தெளிவாக காண முடிந்தது. பல்லாக்கில் அம்மன் அமர்ந்திருக்க, பக்தர்கள் அதை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு அடியாய் பொறுமையாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மக்கள் கும்பம் வைத்து வழிபட்டார்கள். பல்லாக்குக்கு வெகு அருகே.. இருபுறமும்.. கேரளா செண்டை மேளங்கள்.. 'திடும்.. திடும்.. திடும்..' என முழங்கி, கேட்பவர்களின் இதயத்தை அதிர செய்தன..!! மேளத்தின் தாளத்துக்கு ஏற்ப.. ஊர்வலத்தின் முன்பு.. ஒரு ஆணும் பெண்ணும்.. தலையில் கரகம் சுமந்து.. காலில் சலங்கைகள் கட்டி.. லாவாகமாகவும், அதே நேரம் நளினமாகவும் ஆடிச் சென்றார்கள்..!! அலகு குத்திக்கொண்டு.. அருள் வந்து ஆடிக்கொண்டு.. விழிகளை அகலமாய் திறந்து வைத்துக்கொண்டு.. நாக்கை நீளமாய் வெளியே துருத்திக் கொண்டு.. சென்ற பக்தர்கள்.. பயத்துடன் கலந்த பக்தியை.. பார்ப்பவர்களுக்கு புகட்டிக் கொண்டிருந்தார்கள்..!! வான வேடிக்கைகளிலும், அம்மன் ஊர்வலத்திலும், அதிர்ந்து முழங்கிய மேளதாளத்திலும் என் மனம் பட்டென்று லயித்து போனது. ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்தபோதே, புகைக்க வேண்டும் போல் ஒரு உள்உணர்வு எழுந்தது. பாக்கெட் தடவி, மிச்சமிருந்த ஒற்றை சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டேன். பற்ற வைத்து, புகையை கொஞ்சமாய் உள்ளிழுத்து, நிதானமாய் வெளியே விட்டவாறே.. அடுத்த தெரு ஊர்வலத்தின் அழகை, கண்களால் அனுபவித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை..!! புகையிலை தீர்ந்து, நெருப்பு விரல் சுட்ட போதுதான் உணர்வு வந்தது. பட்டென உதறி எறிந்தேன். எறிந்து விட்டு சூடுபட்ட விரலை உதடுகளால் ஊதிக்கொண்டே திரும்பியவன், ஒரு கணம் லேசாக அதிர்ந்து போனேன். கயல் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நான் வியப்பாய் கேட்டேன். "ஏய்.. நீ எதுக்கு வந்த..?" "எவ்ளோ நேரம் கத்துறது..? கூப்பிடுறது காதுலையே விழலையா..?" அவள் சற்றே சலிப்பாய் கேட்டாள். "கூப்டியா..?" "சரியாப் போச்சு.. 'அசோக்.. அசோக்..'னு கத்தி.. தொண்டைத்தண்ணி வத்திப் போச்சு.." "ஐயோ.. ஸாரிம்மா.. இந்த சத்தத்துல எதுவும் கேக்கலை..!! எதுக்கு கூப்பிட்ட..?" "உங்க ஆபீஸ்ல இருந்து ஃபோன் வந்தது.. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னாங்க..!! இந்தா.. கால் பண்ணி பேசு.. அவங்க வச்சுட்டாங்க..!!" சொல்லிக்கொண்டே அவள் என் செல்போனை நீட்ட, நான் வாங்கி யார் கால் செய்தது என்று பார்த்தேன். எங்கள் டைரெக்டர் கால் செய்திருந்தார். இந்த நேரத்திற்கு இந்த ஆள் எதற்கு கால் செய்கிறார்..? கேள்வியுடனே திரும்ப அவருக்கு டயல் செய்து பேசினேன். ஒரு க்ளையண்டிற்கு இந்த வாரம் டெலிவரி செய்வதாக ஒத்துக்கொண்ட காம்போனண்டுகளை பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். அந்த சத்தத்தில் கத்தி கத்தி கஷ்டப்பட்டுத்தான் பேச வேண்டி இருந்தது. ஒரு வழியாக பேசி முடித்து காலை கட் செய்தபோது, கயல் சற்றே முறைப்பாக கேட்டாள். "ஆமாம்.. காஞ்ச துணிலாம் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்து.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற நீ..?" "அ..அது.. சும்மா.. சாமி ஊர்வலம் போச்சு.. பாத்துட்டு இருந்தேன்.." "ம்க்கும்.. சாமி ஊர்வலம் பாக்குற மூஞ்சை பாரு.. உண்மையை சொல்லு.. என்ன பண்ணிட்டு இருந்த..?" "ஹேய்.. சத்தியமா சாமி ஊர்வலந்தான்டி பாத்தேன்.." "இல்லையே.. சிகரெட் வாடை வருதே..? தம்மடிச்சியா..?" அவள் மூக்கை உறிஞ்சி ஸ்மெல் செய்துகொண்டே கேட்டாள். "அ..அது... அதுலாம் இல்ல.." நான் மாட்டிக்கொண்டதை மழுப்ப முயல, "இல்லையா..?? எங்க ஊது.." அவள் விடாப்பிடியாய் கேட்டாள். நான் தயங்கி தயங்கி ஊத, அவள் பட்டென்று கையால் மூக்கை பொத்திக் கொண்டாள். "ச்சை.. கருமம்..!! நாறுது..!!" "ஏய்.. நீதானடி ஊத சொன்ன..?" "அதுக்கு..?? திருட்டு ராஸ்கல்..!!! எங்கிட்ட ரெண்டுன்னு கணக்கு சொல்ல வேண்டியது.. அப்பப்போ இங்க மொட்டை மாடில வந்து திருட்டு தம் அடிக்க வேண்டியது..!! எத்தனை நாளா நடக்குது இது..??" "ஐயோ.. டெயிலிலாம் இல்லைடி.. இன்னைக்குத்தான்.. அதுவும் சாமி ஊர்வலம் பாத்துட்டு.. அப்படியே.." "இதை நம்ப சொல்றியா என்னை..?" "நம்புனா நம்பு.. நம்பாட்டி போ.." "ம்ம்ம்..!! சரி.. நம்புறேன்..!! ஆனா.. இன்னைக்கு கோட்டா இத்தோட முடிஞ்சு போச்சு.. நைட்டு சாப்பாட்டுக்கு அப்புறம்லாம் கெடையாது.. இனிமே நாளைக்குத்தான்..!! சரியா..?" அவள் படபடவென பொரிந்தாள். "ம்ம்.. சரி சரி..!! உன் இன்ஜினை கொஞ்சம் நிப்பாட்டு.. வுட்டா.. லொட லொட லொடன்னு ஓட்டிட்டே இருப்ப..!! வா.. கீழ போலாம்..!!" நான் சலிப்பாய் சொன்னேன். கொடியில் காய்ந்து தொங்கிய துணிகளை எல்லாம், நான் கிளிப் நீக்கி கைகளில் சேகரித்துக் கொண்டேன். கிளிப்களை மீண்டும் கொடியிலே தொங்கவிட்டுவிட்டு, துணிகளை மட்டும் காலி செய்தபோது, எனது இரண்டு கைகளும் நிறைந்து போயிருந்தன. கயல் பொறுமையாக எனக்கு முன்னால் நடக்க, முகத்தை மறைக்கும் துணிகளோடு நான் அவள் பின்னால் நடந்தேன். படிக்கட்டை அடைந்து அவள் கீழே இறங்க, நானும் அவள் பின்னாலேயே இறங்கினேன்."பாத்து இறங்கும்மா.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதேதான் அது நடந்தது. ஒரு நொடிதான்..!!!!! கால் இடறியதோ.. புடவை தடுத்ததோ.. கயல் தடுமாறிப் போனவளாய்.. பொத்தென்று நிலைகுலைந்து விழுந்தாள். 'அம்மாஆஆஆ...!!!!' என்று அவள் அலற ஆரம்பிக்கும் முன்பே, அந்த குறுகலான படிகளில் சரிந்து.. 'கட கட கட'வென கீழ் நோக்கி உருள ஆரம்பித்தாள். பதறிப்போன நான் சுதாரிக்கும் முன்பே, பாதி தூரம் உருண்டு சென்று விட்டாள். 'கயல்...!!!!' என்று நான் பெருங்குரலில் கத்தியவாறு, துணிகளை போட்டுவிட்டு படிகளில் இறங்கி ஓட.. கயல் ஒவ்வொரு படியாக.. உருண்டு உருண்டு உருண்டு... கீழே... கடைசிப் படிவரை...!!! அம்பு தைத்த அன்னப்பறவையாய் சொத்தென்று தரையில் போய் வீழ்ந்து கிடந்தாள்..!! "கயல்ம்மா.. கயல்ம்மா.. கயல்ம்மா.." நான் காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டே ஓடிச்சென்று, கீழே கிடந்த என் மனைவியை தூக்க முயன்றேன். அவள் முகத்தில் சிறு கீறல் கூட இல்லை..!! மேலே வானில் நின்ற வட்ட நிலவின் அதே பிரகாசம்..!! கண்கள் ஒருமாதிரி நிலைகுத்திப் போனது போல.. என்னையே மலங்க மலங்க பார்த்தாள்..!! உதடுகள் படபடவென துடித்துக் கொண்டிருந்தன..!! இமைகள் பரிதாபமாய் வெட்டிக் கொண்டன..!! அவள் அணிந்திருந்த புடவை, இப்போது இடுப்புக்கு கீழே முழுவதும் ஈரமாகி சொதசொதத்து போயிருந்தது..!! அவளுடைய நிலையை பார்த்த என் கண்களில்.. உடனே ஒரு கண்ணீர் ஆறு உற்பத்தியாகி, போல பொலவென கொட்ட ஆரம்பித்தது..!! "ஐயோ... கயல்ம்மா.. என்னம்மா நீ..??? பா..பாத்து..." சொல்லிக்கொண்டே அவளை தூக்கலாம் என்று எனது இடது கையை அவளது பின்னந்தலைக்கு கொடுக்க, அந்த கையில் பெயின்ட் மாதிரி பிசுபிசுப்பாய் ஏதோ ஒட்டியது..!! அது என்ன என்று என்று கையை எடுத்து பார்க்க... என் உள்ளங்கை முழுவதும்.. சிவப்பாய்... ரத்தம்...!!!! என் கண்மணியின் ரத்தம்..!!!!! குலை நடுங்கிப் போனது எனக்கு..!! மிரண்டு போனேன் நான்..!!!! "ஆஆஆஆஆஆஆ.... ஐயோ....!!!!!" என்று என் மார்பில் 'படார்.. படார்.. படார்..' என இரண்டு கையாலும் அறைந்துகொண்டு அலறினேன்..!!! பக்கத்து தெருவின் செண்டை மேளங்கள் இப்போது 'டம்.. டம்.. டம்..' என இடிபோல் முழங்கின..!! வான வெடிகள் 'டமால்.. டமால்..' என வெடித்து சிதறி காதைப் பிளந்தன..!! எனது அலறல் கேட்டு, பால்கனி வழியாக எட்டிப் பார்த்த பக்கத்து வீட்டு மாமி, 'ஐயய்யோ... கடவுளே...!!!!!' என்று அதிர்ந்து போய் கத்தினாள். அவசரமாய் அவளுடைய கணவரை அழைத்துக்கொண்டு, என் வீட்டிற்கு ஓடி வந்தாள். "ஐயோ.. பனிக்குடம் உடைஞ்சிடுச்சு தம்பி... உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்.. தூக்குப்பா...!!"

அவள் பதட்டமும் பரிதவிப்புமாய் சொல்ல, நான் என் தேவதையை தூக்கி இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டேன். "கார் சாவி எங்க இருக்கு அசோக்..?" "உ..உள்ள ஸார்.. ஹால்ல.. டே..டேபிள்..." எனக்கு பேசுவதற்கு நாவே எழவில்லை. அவர் ஓடிச்சென்று கார்சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை தாழிட்டு விட்டு வந்தார். என்னுடைய காரை ஸ்டார்ட் செய்ய அவர் முன்னால் ஓட, நான் கயல்விழியை தூக்கிக்கொண்டு வேகமாக பின்னால் நடந்தேன். என்னை எப்போதும் மயக்கும் என் மனைவியின் மதி முகத்தை, நீர் கோர்த்த என் விழிகளுடன் பார்த்தேன். அவளும் என் முகத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கிடுகிடுவென கிடந்து நடுங்கியது. அவளது கண்கள் என்னையே காதலும், பரிதாபமுமாய் பார்த்தன. மூக்கு விம்மியது..!! உதடுகள் துடித்தன.. எதுவோ சொல்ல முயன்றன.. ஆனால் சிறு சப்தம் கூட வெளிவரவில்லை..!! சப்தம் வராவிட்டாலும்.. அவளது உதட்டசைவில் இருந்தே.. அவள் என்ன சொல்ல முயலுகிறாள் என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது..!! "அசோக்..!!!!!!"சரியாக ஒரு வருடம் கழித்து..!! அதிகாலை..!! இதமான குளிருக்கு கதகதப்பாய், இழுத்து மூட போர்வை தேடும் அதிகாலை..!! இமைகள் பிரிக்க, மிகவும் இன்னல் பட வேண்டிய அதிகாலை..!! மூன்றாம் வீட்டின் தாளிக்கும் வாசனை வந்து, மூக்கை துளைக்கிற அதிகாலை..!! காகத்தின் கரைச்சலோ, காரின் இரைச்சலோ, காதுக்கு எரிச்சலாய் தோன்றும் அதிகாலை..!! நான் இப்போதெல்லாம் காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைப்பதில்லை. பக்கத்து வீட்டில் தினமும் காலை டிபன், இட்லி அல்லது தோசைதான். அதற்கு தொட்டுக்கொள்ள தினமும் தேங்காய் சட்னிதான். சரியாய் ஏழு மணிக்கெல்லாம் பக்கத்து வீட்டு வனஜா மாமி, மிக்ஸியில் சட்னி அரைப்பாள். மிக்ஸியின் முரட்டு ப்ளேடுகளுக்குள் சிக்கி, தேங்காய் சில்லுகள் அரைபடும் கரகர ஒலி, காற்றில் மிதந்து வந்து என் காதுகளில் மோதும். அந்த மாதிரி ஒரு ஒலி செவிப்பறையில் விழ நேர்ந்தால், அவன் கும்பகர்ணனாய் இருந்தாலும், அதற்கு மேலும் தூங்குவது சாத்தியமில்லாத ஒன்று. இன்றும் அப்படித்தான்..!! மிக்ஸி சத்தம் என் உறக்கத்தை கலைத்தது. இமைகளை பிரிக்கும் முன்பாக, நான் என் இடது கையை நகர்த்தி எதையோ தேடினேன். தேடியது சிக்கியதும் என் விழிகளை மெல்ல திறந்தேன். வெண்முத்து பற்கள் தெரியுமாறு, புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த கயல்விழி, காணக் கிடைத்தாள். கொஞ்ச நேரம் அவளது அழகு முகத்தை ஆசையாய் பருகியவன், பின்பு எனது விரல்களால் அவளது கன்னத்தை மெல்ல வருடினேன். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு.. இதே தினத்தில்தான் கயல் எங்களை விட்டு பிரிந்தாள். அவள் கணித்த மாதிரியே, ஒரு ஆண் குழந்தையை பத்திரமாய் பெற்றுப் போட்டுவிட்டு, அன்றே நிரந்தரமாய் தன் விழிகளை மூடிக் கொண்டாள். அபிஷேக் என்று குழந்தைக்கு பெயரிட்டிருக்கிறோம். அவள் உயிரோடிருக்கையில் தினமும் காலையில் அவளது முகத்தில்தான் விழிப்பேன். காபி கலந்து எடுத்து வந்து, கண்மூடி தூங்கும் என்னருகே வாசனையாய் அமர்ந்து, தலை மயிர் கோதிவிட்டு, நெற்றியில் இச்சென்று இதழ் ஒற்றி எடுத்து, என் காதோரமாய் 'டைமாச்சுப்பா.. எந்திரி..' என்று கிசுகிசுப்பாள்..!! நான் கண்கள் திறந்து அவளது மலர்ந்த முகத்தை நோக்குவேன். அப்போது உடலெங்கும் ஒரு உற்சாகம் பரவும் பாருங்கள்.. அடுத்த நாள் அதிகாலை வரை அந்த உற்சாகம் எனக்குள் தங்கியிருக்கும்..!! அவள் இந்த மண்ணை விட்டு போன பிறகும், அதிகாலையில் அவள் முகம் பார்க்கும் பழக்கம், இன்னும் என்னை விட்டு போக வில்லை. அவளுடைய புகைப்படத்தில்தான் தினமும் விழிக்கிறேன். அவள் முகத்தில் விழிக்காத தினம், ஒரு தினமாகவே என் கணக்கில் வராது. "எந்திரிச்சுட்டீங்களா அத்தான்..??" குரல் கேட்டு நான் பார்வையை திருப்பினேன். வாசலில் மலர்விழி நின்றிருந்தாள். கயலின் தங்கை..!! ஒரு வருடம் முன்பு வரை.. துறுதுறு பெண்ணாய் துடிப்புடனும்.. இளமைத் துள்ளலுடனும்.. விளையாட்டுத்தனமாய் திரிந்தவள். அக்கா சென்ற பிறகு நிறைய மாறிவிட்டாள். எக்கச்சக்க பொறுப்பு வந்துவிட்டது அவளுக்கு. அபிஷேக்கை அவள்தான் முதல் நாளிலிருந்து கவனித்துக் கொள்கிறாள். அவனுக்கு ஒரு பொறுப்பான அம்மாவாகவே மாறி விட்டாள். மெத்தையில் குப்புறப்படுத்திருந்த நான் இப்போது புரண்டேன். கண்களை இப்போது நன்கு அகலமாக திறந்து மலர்விழியை பார்த்தேன். மென்மையான குரலில் சொன்னேன். "ம்ம்.. எந்திரிச்சாச்சு மலர்.." "காபி எடுத்துட்டு வரவா..?" "ம்ம்.." அவள் கிச்சன் பக்கம் திரும்பி நடந்தாள். நான் மேலும் சிறிது நேரம், புகைப்படத்திலிருந்த கயலின் முகத்தை பார்த்துவிட்டு, படுக்கையில் இருந்து எழுந்தேன். பாத்ரூமுக்குள் புகுந்து ப்ரஷ் செய்தேன். வெளியே வந்ததும் ஆவி பறக்கும் காபி தம்ளரை மலர் நீட்டினாள். வாங்கிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். செய்தித்தாளை மேய்ந்தவாறே, காபியை உறிஞ்சினேன். காபி குடித்து முடித்தபோது, மலர் ஹாலுக்குள் நுழைந்தாள். அவள் கையிலிருந்த அபிஷேக்கை 'டேய் கண்ணா.. வா வா...' என்று ஆசையாக நான் வாங்கிக் கொண்டேன். 'அபிக்குட்டி.. அபிக்குட்டி..' என்று செல்லம் கொஞ்சியவாறு, அவன் இடுப்பில் விரல் வைத்து கிச்சு கிச்சு மூட்டினேன். அவன் பொக்கை வாய் திறந்து 'கெக்கக்கக்கே...' என்று அழகாக சிரித்தான். மகனுடன் மனம் லயித்து நான் விளையாடிக் கொண்டிருக்க, அதையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த மலர், பின்பு மெல்லிய குரலில் என்னை அழைத்தாள். "அத்தான்.." "ம்ம்.." நான் நிமிராமலே கேட்டேன். "குளிச்சுட்டு கொஞ்சம் சீக்கிரம் கெளம்புறீங்களா..? கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்..!!" "கோயிலுக்கா..? எதுக்கு..? என்ன விசேஷம் இன்னைக்கு..??" நான் இப்போது குழப்பமாய் மலரை ஏறிட்டேன்."என்னத்தான்.. மறந்துட்டீங்களா..? இன்னைக்கு அபிக்கு பர்த்டே..!!" அவள் ஆச்சரியமான குரலில் கேட்க, எனக்கு நெஞ்சுக்குள் சுருக்கென எதுவோ குத்துவது மாதிரி இருந்தது. இன்று என் மனைவியின் நினைவு நாள் என்பது, மனதில் ஆழமாய் பதிந்து போயிருந்த எனக்கு, என் மகனின் பிறந்த நாளும் கூட என்ற நினைவு ஏன் வரவில்லை..?? 'அபி வந்த சந்தோஷத்தை விட.. கயல் சென்ற துக்கம்தான் உனக்கு பல மடங்கு அதிகம்' என்று என் மூளை எனக்கு பட்டவர்த்தனமாக உணர்த்தியது. 'டா..டாக்டர்..!! கொழந்தைக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. என் வொய்ஃபை எப்டியாவது காப்பாத்திடுங்க.. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா.. என்னால தாங்கிக்க முடியாது..!! ப்ளீஸ் டாக்டர்..!!' அன்று ஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் நின்று, அழுகிற விழிகளுடன் அரற்றியது.. இப்போது என் மனதில் பளீரென மின்னல் மாதிரி வெட்டியது..!! மூளை நரம்புகள் அனைத்திலும் இப்போது பலவித குழப்ப எண்ணங்கள், குறுக்கும் நெடுக்குமாய் ஓடின..!! கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். தலையை இருகையாலும் அழுத்தி பிடித்துக் கொண்டேன். குழப்பத்தில் இருந்து விடுபடாமலேயே குழந்தையை மலரிடம் நீட்டினேன். அவள் வாங்கிக்கொண்டதும், சோபாவில் இருந்து எழுந்தேன். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, வறண்டு போன குரலில் சொன்னேன். "நா..நான் வரலை மலர்.. நீ போயிட்டு வா.." "ஏன்த்தான்..?" "ப்ச்.. வரலைன்றேன்ல..? விடு.." "அதான் ஏன்னு கேக்குறேன்..?" "எ..எனக்கு மனசு சரியில்ல மலர்.. நான் வரலை.." "அக்காவும் இன்னைக்குத்தான் நம்மை விட்டு போனாளேன்னா..?" "......" நான் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றேன். "பேசுங்கத்தான்.." "என்ன பேச சொல்ற..?" "ஓ..!! அப்போ இன்னைக்கு பூரா இப்படித்தான் இருக்கப் போறீங்களா..?" "என்னால முடியலை மலர்.. கண்ணை தொறந்தாலும் மூடுனாலும்.. கயல்தான் வந்து நிக்கிறா..!!" "இங்க பாருங்கத்தான்.. அக்கா இறந்தது ரொம்ப கொடுமைதான்..!! இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதுக்காக அபியை நீங்க பழி வாங்குறது என்ன நியாயம்..??" அவளுடைய குரல் என்னை குற்றம் சாட்டுவது போலிருக்க, "என்ன சொல்ற நீ..? நான் என்ன பழி வாங்குறேன்..?" நான் இப்போது சூடாக கேட்டேன். "பின்ன என்ன..? இவன் முகத்தை பாருங்கத்தான்.. இவன் என்ன பாவம் பண்ணினான்..? இன்னைக்கு இவனோட ஃபர்ஸ்ட் பர்த்டே.. இன்னைக்கு போய்.. நீங்க இப்படி அழுது வடிஞ்சுட்டு உக்காந்திருக்குறது.. கொஞ்சங்கூட நல்லால்ல..!! இவனோட அப்பா நீங்க.. கோயிலுக்கு போய் இவன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணனும்னு கூட உங்களுக்கு தோணலையா..? அக்கா இறந்தது உங்களுக்கு சோகமா இருக்கலாம்.. ஆனா.. அந்த கோவத்தை தயவுசெஞ்சு அபிகிட்ட காட்டாதீங்க..!!" அவள் படபடவென பொரிந்தாள். "எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல மலர்..!! என் மேலதான் எனக்கு கோவம்..!!" "ஏன்..?" "கயல் இறந்ததுக்கு காரணமே நான்தான..?" "ஐயோ.. ஏன்த்தான் இப்டிலாம் பேசுறீங்க..?" "உண்மைதான..? அன்னைக்கு நான் மொட்டை மாடில அவ்ளோ நேரம் வேடிக்கை பாத்துட்டு நிக்கலைன்னா.. உன் அக்கா மாடிக்கே வந்திருக்கமாட்டா.. அப்படி ஒரு கொடூரமும் நடந்திருக்காது..!!" "என்ன பேசுறீங்க நீங்க..? அக்கா இறந்தது ஒரு ஆக்சிடன்ட்..!! ஆக்சிடன்ட்னாலே யார் மேலயும் எந்த தப்பும் இல்லைன்னுதான அர்த்தம்..?? நீங்க ஏன் உங்களை காரணமா நெனச்சுக்கிறீங்க..?? அப்படி பாத்தா.. அன்னைக்கு.. 'காஞ்ச துணிலாம் எடுத்து வச்சுட்டு போடீ..'ன்னு அக்கா எங்கிட்ட சொன்னா.. நான்தான் ஊருக்கு கெளம்புற அவசரத்துல மறந்துட்டு போயிட்டேன்..!! அப்போ.. அக்கா இறந்ததுக்கு காரணம் நாந்தான்னு நான் சொல்லிக்கவா..?? இல்ல.. ஊர்வலத்தை பாத்துட்டுத்தான அவ்ளோ நேரம் மாடில நின்னீங்க..? உங்களை அவ்ளோ நேரம் அங்க நிக்க வச்ச.. அந்த சாமியை குத்தம் சொல்லலாமா..??" அவள் சற்றே காட்டமாக கேள்விக் கணைகளை என் மீது வீச, நான் பேச்சிழந்து போனேன். தலையை குனிந்தவாறு அமைதியாக நின்றேன். மலர் சில வினாடிகள் என்னையே பாவமாக பார்த்தாள். அப்புறம் மிக மிக சாந்தமாக தன் குரலை மாற்றிக் கொண்டு சொன்னாள். "அத்தான்.. அக்காவை மறக்குறது.. எங்களுக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குது..!! ஆனா.. அதையே மனசுல போட்டு கொழப்பிக்கிட்டு.. நீங்க ஒவ்வொரு நாளும் உருகி உருகி..!! உங்களை நெனச்சாத்தான் எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்கு..!! இப்போவே ஒரு வருஷம் ஆகிப் போச்சு.. இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருக்கப் போறீங்க..?" "....." "நான் சொல்றதை கேளுங்கத்தான்.. கொஞ்சம் கொஞ்சமா மனசை மாத்திக்க முயற்சி பண்ணுங்க.. அக்காவை மறந்துட்டு.. அடுத்து என்னன்னு யோசிங்க..!! அபியை கொஞ்சம் நெனச்சு பாருங்கத்தான்.. அவனுக்காகவாவது நீங்க மாறித்தான் ஆகணும்..!! இன்னைல இருந்து ஆரம்பிங்க.. கெளம்புங்க.. கோயிலுக்கு போயிட்டு வரலாம்..!!" மலர் நீளமாய் பேசி முடிக்க, நான் உடலில் இருந்த ஜீவன் எல்லாம் வற்றி போனவனாய் பொத்தென்று சோபாவில் அமர்ந்தேன். அபி என்ன நினைத்தானோ, திடீரென வீறிட்டு அழ ஆரம்பித்தான். எனக்கும் மலருக்கும் இடையில் நிலவிய ஒரு இறுக்கமான சூழ்நிலை.. அவனையும் பாதித்திருக்க வேண்டும். அழுகிற குழந்தையை, 'ச்சோ.. ச்சோ.. ச்சோ..' என்று முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்தியவாறே, மலர் நான் எடுக்கப் போகும் முடிவுக்காக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனது மனம் அவள் சொன்ன வார்த்தைகளையே தீவிரமாய் அசை போட்டுக் கொண்டிருந்தது. அவள் பேச்சிலிருந்த நியாயம் மனதை உறுத்த.. லேசாய் வலித்தது..!! அபிக்காகவாவது மலர் சொல்வது போல நான் மாறித்தான் ஆகவேண்டும் என்று தோன்றியது. என் மனைவி இறந்ததன் பாதிப்பு என்னோடு போகட்டும். என் மகனுக்கு அந்த பாதிப்பு வேண்டாம். அபி பெரியவனாகும் போது.. 'தன்னுடைய பிறந்த நாள் என்பது.. தன் தாயின் இறந்த நாளும் கூட..' என்ற உண்மை அவனுக்கு தெரிய வந்தால், அது எவ்வளவு மோசமான பாதிப்பை அவனுக்குள் ஏற்படுத்தும்..? அவன் பிறந்த தினத்தை அவனே வெறுத்து ஒதுக்குவது எவ்வளவு கொடுமையான விஷயம்..? இல்லை.. அந்த உண்மை அவனுக்கு இறுதி வரை தெரியவே கூடாது..!! ஒரு முடிவுக்கு வந்தவனாய் சோபாவில் இருந்து எழுந்தேன். "ரெடியாயிரு.. ஒரு அரை மணி நேரத்துல கெளம்பலாம்.." நான் சொல்லிவிட்டு விடுவிடுவென உள்ளே நடந்தேன். "தேங்க்ஸ்த்தான்.." என் முதுகுக்கு பின்னால் மலரின் குரல் சந்தோஷமும், நன்றியும் சரிவிகிதத்தில் கலந்து ஒலித்தது. அடுத்த அரை மணி நேரம் கழித்து, மூவரும் கோயிலுக்கு கிளம்பினோம். அருகிலேயே இருக்கும் ஒரு விநாயகர் கோயில். காரை விடுத்து நடந்தே சென்றோம். அபியின் பெயரில் அர்ச்சனை செய்தோம். கோயிலில் இருந்த பதினைந்து நிமிடமும், கயல் பற்றிய எண்ணங்கள் என் கவனத்தை சிதைக்காமல் பார்த்துக் கொண்டேன். அபி எந்தக்குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வேண்டும் என்று மனமுருக ஆனைமுகத்தானிடம் வேண்டிக் கொண்டேன். கோயிலை விட்டு வெளியே வந்த போது, "ஸார்.. வூட்டுக்கார அம்மாவுக்கு ஒரு மொழம் மல்லிப்பூ வாங்கி கொடு ஸார்.." சொல்லிவிட்டு வெள்ளந்தியாய் சிரித்தாள், அந்த பூ விற்கும் பெண்மணி. நான் சற்றே அதிர்ந்து போனேன். என்னையும் மலரையும், மலர் கையில் இருக்கும் குழந்தையையும் பார்த்து.. நாங்கள் இருவரும் கணவன் மனைவி என்று நினைத்து விட்டாள் போலிருக்கிறது. நான் இப்போது திரும்பி மலரை பார்த்தேன். அவள் ஒரு மாதிரி அவஸ்தையாய் நெளிந்து கொண்டிருந்தாள். எந்த மாதிரி ரியாக்ட் செய்வது என்று கூட புரியாதவள் மாதிரி காட்சியளித்தாள். ஓரிரு வினாடிகள். அப்புறம் நான் மலரை பார்த்து மெலிதாக புன்னகைக்க, இப்போது அவளும் இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள். "பூ வாங்கிக்கிறியா..?" நான் மலரிடம் இயல்பாக கேட்க, "இல்லத்தான்.. வேணாம்.." அவள் தயங்கினாள். "வெள்ளிக்கெழமையும் அதுவுமா புஷ்பத்தை வேணான்னு சொல்லக் கூடாது தாயி.." பூவை எப்படியும் விற்று விட வேண்டும் என்று, புதிதாய் லாஜிக் எல்லாம் தயாராக வைத்திருந்தாள் பூக்காரி."பரவால்ல.. வாங்கிக்கோ.." "ம்ம்ம்.. சரித்தான்..!!" "மொழம் எத்தனை ரூபாம்மா..?" "பதினஞ்சு ரூபாதான் ஸார்.." "சரி.. ஒரு ரெண்டு மொழம் குடுங்க.." நான் பர்ஸ் திறந்து பணம் நீட்ட, அந்தப் பெண்மணி இரண்டு முழம் பூ அளந்து, பிளேடால் கட் செய்தாள். அதை பந்தாக உருட்டி மலரிடம் நீட்டிக்கொண்டே, வாயெல்லாம் பல்லாக சொன்னாள். "மஹாலட்சுமி மாதிரி இருக்குற கண்ணு.. உன் பேர் என்ன தாயி..?" "ம..மலர்..!!" "அதுசரி.. பேர்ல பூவை வச்சிக்கினுதான்.. கூடைல இருக்குற பூ வேணான்னியா..?" அந்தப் பெண்மணி சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தாள். ஆனால் அவள் அடித்த ஜோக்குக்கு, எங்கள் இருவரிடமும் லேசான ஒரு புன்முறுவல் மட்டுமே வெளிப்பட்டது. மீண்டும் நடந்து வீட்டுக்கு வந்தோம். மலர் இட்லி, தேங்காய் சட்னி சமைத்திருந்தாள். அபியின் பிறந்த நாள் என்று, அடிஷனலாக கேசரி செய்திருந்தாள். நாக்கில் படும்போது கேசரி இனிப்பாகவே இருந்தது. தொண்டையில் இறங்கும்போதுதான்.. கயலின் நினைவுகளை சேர்த்துக்கொண்டு இறங்க.. கசந்தது..!! கஷ்டப்பட்டு சாப்பிட்டு விட்டு, காரில் நான் ஆபீசுக்கு கிளம்பினேன். வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் சாலையில் இருக்கிறது எங்கள் கம்பெனியின் ப்ரொடக்ஷன் யூனிட்.. பள்ளிக்கரணையில் இருந்து காரில் கிளம்பினால், கால் மணி நேரத்தில் கம்பெனி காம்பவுண்டுக்குள் புகுந்து விடலாம். இரண்டாயிரம் பேருக்கு மேல் எம்ப்ளாயிகளாக உள்ள கம்பெனி..!! 25 மில்லியனுக்கு மேல் டர்ன் ஓவர் செய்கிற கம்பெனி..!! ஃபோர்ட்.. ஸ்வராஜ் மஸ்தா.. டொயோட்டா.. மஹிந்திரா.. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.. எல்லாம் எங்கள் மதிப்பு மிக்க கஸ்டமர்கள்..!! ஆபீசில் அன்றும் வழக்கமான அலுவல்கள்தான். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக கயலின் நினைவுகள் நெஞ்செல்லாம் அடைத்திருக்க.. கவனம் சிதறியது..!! அடிக்கடி தலையை பிடித்துக் கொண்டு வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். லீவ் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விடலாமா என்று கூட தோன்றியது. அந்த மாதிரி ஒரு அமைதியில்லா மனநிலையுடனே நான் அலுவல்கள் கவனித்தேன். எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது மாதிரி அமைந்தது, அன்று டைரெக்டர் உடனான மேனேஜர்ஸ் மீட்டிங். கார் என்ஜினில் உள்ள, க்ராங்க் ஷாஃப்டின் இயக்கத்துக்கு உதவக் கூடிய ஒரு பேரிங்-தான், என்னுடைய யூனிட்டில் பெருமளவு உற்பத்தியாகும் காம்போனன்ட். என்னுடைய யூனிட்டில் இருந்து உற்பத்தியாகி சென்ற பேரிங்குகள், குவாலிட்டி டிப்பார்ட்மன்ட்டில் எக்கச்சக்கமாய் ரிஜக்ட் செய்யப்பட்டு விட.. டைரெக்டரோ எனக்கு ரிவிட் அடித்தார்..!! உச்ச பட்ச டென்ஷனுக்கு நான் உள்ளானேன்..!! மீட்டிங் முடிந்து.. திரும்ப எனது கேபினுக்குள் நுழைந்து.. ஃபைல்களை புரட்டிப் பார்க்க.. மணி என்ற லேபரின் கவனக்குறைவுதான்... ரிஜெக்ஷன் ரேட் அதிகமாக முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்க முடிந்தது..!! என் மனதில் இருந்த சோகம், விரக்தி, இயலாமை எல்லாம்.. மணியின் மீது கடுங்கோபமாக உருவெடுத்தது..!! ஆத்திரத்துடன் ப்ரொடக்ஷன் ப்ளான்ட்டுக்குள் நுழைந்தேன். யாரிடமோ பல் இளித்து பேசிக்கொண்டிருந்த மணியை, பயங்கர கோபத்துடன் நெருங்கினேன். அவன் என் முகத்தை பார்த்ததிலே சற்று மிரண்டு போயிருந்தான். அவனிடம் ஸ்க்ரூ கேஜ் தூக்கிப் போட்டு, ஒரு காம்போனன்ட்டை அளந்து, சரியான அளவு சொல்ல சொன்னேன். அவன் தடுமாறினான்..!! அளந்து பார்த்து, 0.05 எம்.எம் தவறாக சொன்னான். அவ்வளவுதான்..!! நான் காட்டுத்தனமாக கத்த ஆரம்பித்தேன். அதிகமாய் அவனுடைய தன்மானத்தை சிதைக்கும் வார்த்தைகள்..!! மொத்த ப்ளான்ட்டும் திரும்பி எங்கள் இருவரையும் பார்த்தது. மணியோ அவமானம் தாங்காமல் தலையை குனிந்து கொண்டான். "பேசுடா..!! வாயில என்ன கொழக்கட்டையா வச்சிருக்க..? மரம் மாதிரி நிக்கிறான் பாரு..!! சம்பளம் வாங்குறேல..? ஒழுங்கா வேலை பாக்கனும்னு அறிவில்ல..? துன்ற சோறுலாம் எப்டிடா செரிக்குது உனக்கு..??" நான் உஷ்ணமான வார்த்தைகளை கக்கிக்கொண்டிருந்தேன். இப்போது பக்கத்து மெசினில் ட்ரில்லிங் போட்டுக் கொண்டிருந்த பன்னீர் என்னை நெருங்கினார். பன்னீர் எங்கள் கம்பெனியில் ஒரு சீனியர் லேபர்..!! இன்னும் ஐந்தாறு வருடங்களில் ரிடயர்மன்ட்..!! தொழிற்சங்கத்தில் முக்கியமான பதவியில் இருப்பவர். என்னை சமாதானம் செய்யும் குரலில் பேசினார்."சரி விடுங்க ஸார்..!! இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க.. இனிமே கவனமா இருப்பான்..!! நான் பாத்துக்குறேன் ஸார்.. நீங்க போங்க..!!" பன்னீரின் சாந்தமான முகமும், சமாதானமான பேச்சும் எனது வேகத்தை வெகுவாக குறைத்தது. எனது முகத்திலும் வார்த்தையிலும் கொப்பளித்த கோபம், கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது. மணியின் முகத்தையும், பன்னீரின் முகத்தையும் மாறி மாறி சில வினாடிகள் பார்த்து விட்டு, நான் அமைதியாக திரும்பி நடந்தேன். என்னுடைய கேபினுக்குள் புகுந்து தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தேன். மனதில் ஒரு உறுத்தல்..!! மணி மீது கோபம் கொள்ள காரணம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த கோபத்தை வெளிபடுத்திய விதம் கண்மூடித்தனமானது என்று, என் மூளையில் தெளிவாக உறைத்தது. நான் இதுவரை இந்த மாதிரி நடந்து கொண்டதில்லை. எனது பர்சனல் வாழ்க்கையின் கோபதாபங்களை பணியிடத்தில் காட்டியதே இல்லை. கஷ்டமாக இருந்தது..!! "உள்ள வரலாமா..?" குரல் கேட்டு நான் நிமிர்ந்து பார்த்தேன். கதவை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தபடி பன்னீர் நின்றிருந்தார். அதுவரை சோர்ந்து போய் சேரில் அமர்ந்திருந்த நான், இப்போது சற்று சுதாரித்து.. நிமிர்ந்து அமர்ந்து கொண்டேன். "ம்ம்.. வா.." பன்னீருக்கு நான் அனுமதி அளிக்க, அவர் உள்ளே நுழைந்தார். "என்னாச்சு உனக்கு..??" என்று கேட்டவாறு எதிரில் கிடந்த சேரில் அமர்ந்தார். "எ..என்னாச்சு... ஒ..ஒன்னுல்லையே.." நான் சமாளிக்கும் விதமாக சொன்னேன். "அப்புறம் எதுக்கு அங்க வந்து காட்டுக் கத்தல் கத்துன..?" "அவன் என்ன பண்ணிருக்கான்னு தெரியும்ல..?" "தெரியும் அசோக்கு.. அவன் புதுசா கண்ணாலம் ஆனவன்.. கொஞ்சம் கவனம் இல்லாம இருக்குறான்.. அவனை நான் பாத்துக்குறேன் விடு..!! உனக்கு என்னாச்சுன்னுதான் கேக்குறேன்..!!" "ப்ச்.. டைரக்டர் என்னை புடிச்சு.. காட்டு காட்டுன்னு காட்டிட்டாரு பன்னீர்.. இவனுக பண்ணுற தப்புக்குலாம்.. நான் திட்டு வாங்க வேண்டி இருக்கு.." "இருக்கட்டும்.. ஆனா அது ஒன்னும் புதுசு இல்லையே.. டெயிலி நடக்குறதுதான..? வழக்கமா உன் ரூமுக்குள்ள கூப்பிட்டுதான புத்தி சொல்லுவ..? இன்னைக்கு என்னாச்சு..? ஏன் அப்படி நடந்துக்கிட்ட..? ப்ளான்ட்ல எல்லாம் உன்னையே மெரண்டு போய் பாத்தானுக தெரியுமா..?" "......" நான் பதில் பேசாமல் அமைதியாக இருந்தேன். பன்னீர் என் முகத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தார். முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை அவர். கூர்மையாக பார்த்தார். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் அவர் மெல்ல உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைக்க, நானும் இப்போது புன்னகைத்தேன். அவர் இப்போது சற்றே இறுக்கம் தளர்ந்த குரலில் சொன்னார். "ம்ம்ம்.. இன்னைக்கு ஏன் நீ இப்படி இருக்குறேன்னு எனக்கு புரியுது.. உன்கிட்ட எனக்கு கொஞ்சம் தனியா பேசணும்.." "பேசு.. இங்க வேற யாரு இருக்குறா..?" நானும் இப்போது இலகுவான குரலில் சொன்னேன். "இப்போ வேணாம்.." "ஏன்..??" "ஏனா..? நான் என்ன உன்னை மாதிரியா..? எனக்கு நெறைய வேலை இருக்குதுப்பா..!!" தன் மேனேஜரான என்னிடமே நக்கல் அடித்தார் பன்னீர். "ஓ..!! அப்போ நான் என்ன வெட்டியா உக்காந்திருக்குறனா..?" "அதை நான் வேற என் வாயால சொல்லனுமா..? சும்மா இந்த கம்பூட்டர் பொட்டியை தட்டிக்கினே.. காசை சொளையா அள்ளுறேல நீ..? உன்னலாம் லேத் ஓட்ட விடனும்.. அப்போ தெரியும் உனக்கு.. வேலைனா என்னான்னு..?" "ஹ்ஹ.. ஹ்ஹ.. இங்க பாரு.. இதுலாம் வேற யார்கிட்டயாவது போய் சொல்லு..!! நாங்களும் எல்லாம் ஓட்டிருக்குறோம்.. எல்லாம் ஓட்டிட்டுத்தான்.. இன்னைக்கு மேனேஜரா வந்து உக்காந்திருக்கோம்..!! சரி.. ஏதோ பேசணும்னு சொன்னியே.. என்ன மேட்டர்னு சொல்லு..!!" "இங்க வேணாம்.. சாயந்திரம் சரக்கு போட்டுக்கினே பேசலாம்.." "ம்ம்ம்ம்.... சரக்கா..????? சரி.. ஒரு ஆறு மணிக்கா கெளம்பலாம்.." "ஆறு மணிக்கா..? எனக்கு நாலு மணிக்கே ஷிஃப்ட் முடிஞ்சிடும்..!! ரெண்டு மணி நேரம் நான் என்ன பண்றது..?" "கம்பெனிக்கு வெளில வெயிட் பண்ணு.." "சும்மா தண்டத்துக்கு வெளில உக்காந்திருக்க சொல்றியா..? எனக்கு ரெண்டு மணி நேரம் O.T போட்டுக் கொடு..!! சும்மா இருக்குற நேரத்துல வேலை செஞ்சா.. துட்டாவது கெடைக்கும்..!!""ஹாஹா..!! சரி போ.. பிரபாகர்ட்ட சொல்லி.. உனக்கு O.T போட சொல்றேன்.." "தேங்க்ஸ் அசோக்கு.." "வெறும் தேங்க்ஸ் மட்டுந்தானா..?" "வேற என்ன வேணும்..?" "சாயந்திரம் சரக்கு உன் செலவு.." "அடப்பாவி..!! இதுக்குலாம் சரக்கு கொஞ்சம் ஓவர் அசோக்கு.. வேணுனா அந்த O.T காசுக்கு ஒரு போட்டி வாங்கித்தர்றேன்..!! நல்லா துன்னு...!!" "ஹ்ஹாஹ்ஹாஹ்ஹா....!!" O.T, போட்டி என்று பன்னீர் ரைமிங்கில் பேச.. நான் வாய்விட்டு சிரித்தேன். பன்னீர் எப்போதும் இப்படித்தான்..!! நான் மனம் சோர்வடையும் போதெல்லாம் இப்படி ஏதாவது பேசி என் மனதை இலகுவாக்குவார். எனக்கும் அவருக்கும் அவ்வளவு அன்னியோன்யம். எட்டு வருட நட்பு எங்களுடையது..!! அவர் என்னிடம் பேசிவிட்டு வெளியேறியதும், என் மனதில் இருந்த ஒருவித இறுக்கம் வெகுவாக குறைந்திருந்தது. சற்று முன் திட்டிய மணியை கூட என் கேபினுக்கு வரவழைத்து, என் கோபத்தை வெளிப்படுத்திய விதத்துக்காக மன்னிப்பு கேட்டேன். அவனும் நெகிழ்ந்து போனான். சரியாக ஆறு மணிக்கு பன்னீர் என் ரூமுக்குள் எட்டிப் பார்த்து, வெளியில் காத்திருப்பதாக சொன்னார். நான் அதன் பிறகு ஒரு பதினைந்து நிமிடம் கழித்து கிளம்பினேன். காரை எடுத்துக் கொண்டு, காத்திருந்த பன்னீரை பிக்கப் செய்து கொண்டேன். பத்தே நிமிடத்தில் விஜய நகரை அடைந்தோம். பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு சுமாரான பாருக்குள் புகுந்து கொண்டோம். பன்னீர் இரண்டு குவார்ட்டர் ஜானெக்ஷா வாங்கிக் கொண்டு வந்தார். அவருக்கு போட்டி சொல்லிக் கொண்டார். நான் சிப்ஸ் வாங்கிக் கொண்டேன். ஆரம்பித்தோம்..!! முதல் ரவுண்டில் கம்பெனி விஷயங்களை பேசிக் கொண்டிருந்தவர், இரண்டாவது ரவுண்டின் போதுதான் அவர் சொல்ல நினைத்த மேட்டருக்கு வந்தார். பிளாஸ்டிக் கப்பில் இருந்த மொத்த பிராண்டியையும், நான் ஒரே மூச்சில் தொண்டைக்குள் ஊற்ற.. என்னையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவர், சற்றே இறுக்கமான குரலில் சொன்னார். "ம்ம்ம்.. நல்லா உள்ள ஊத்து.. அப்டியாவது உள்ள இருக்குற உன் பொண்டாட்டி நெனைப்புலாம் பொசுங்குதான்னு பாக்கலாம்.." "என்ன சொல்ற நீ..??" நான் சிப்ஸ் கடித்துக் கொண்டே குழப்பமாய் கேட்டேன். "இல்ல.. பொண்டாட்டி போன சோகத்துலதான.. போற வாறவன் மேலலாம் வுழுந்து புடுங்குற..? அதை சொன்னேன்.." நான் சில வினாடிகள் அமைதியாக அவரையே பார்த்தேன். அப்புறம் ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டு, குபுகுபுவென புகை விட்டவாறே சொன்னேன். "இங்க பாரு பன்னீர்... நான் இன்னைக்கு கொஞ்சம் டென்ஷனாகி அந்த மணியை திட்டிட்டேன்.. தப்புதான்..!! இனிமே இந்த மாதிரி நடக்காம பாத்துக்குறேன்..!! ஆனா.. என் பொண்டாட்டியை நான் மறக்குறதுலாம்.. இந்த ஜென்மத்துல நடக்காது பன்னீர்.. அதை நீ புரிஞ்சுக்கோ..!!" "எப்படி நடக்கும்.. இல்ல.. எப்படி நடக்கும்னு கேக்குறேன்..?? நீ கொஞ்சமாவது அவளை மறக்க முயற்சி செஞ்சாதான நடக்கும்..? திரும்ப திரும்ப அதையே நெனச்சுட்டு இருந்தா..??" "எப்படி நெனைக்காம இருக்க சொல்ற..? உனக்கு தெரியாது பன்னீர்.. நான் அவ மேல.." "எல்லாம் எனக்கு தெரியும் அசோக்கு..!! ஆனா.. அவளே போனப்புறம்.. இன்னும் அவளையே நெனச்சுக்கிட்டு.. நீ உன் வாழ்க்கையை பாழாக்கிக்கிறது சரி கிடையாது..!!" "என்ன பண்ண சொல்ற என்னை நீ..?" "நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ.. அதுதான் சரி.. இன்னொரு பொண்ணு வந்தாதான்.. உன் பொண்டாட்டி நெனைப்பு உன்னை விட்டு போகும்..!!" "ஹாஹா..!! உனக்கு இன்னும் புரியலை பன்னீர்..!! கயலை தவிர வேற எந்த பொண்ணோட நெனைப்பும் எனக்கு தேவையில்லை..!! அவ எடத்துல வேறொருத்தியை வச்சு பாக்க.. சத்தியமா என்னால முடியாது..!! வேற ஏதாவது யோசனை இருந்தா சொல்லு..!!" அவர் அவ்வளவு சொல்லியும் நான் பிடிவாதமாக இருக்க, பன்னீர் டென்ஷன் ஆனார். குரலை உயர்த்தி கத்தினார். "டேய்.. ஏண்டா இப்படி இருக்குற..? சொல்றது புரியலையா உனக்கு..??" "எதுக்கு இப்போ கத்துற..?" "பின்ன என்ன..? அவன் அவன் பொண்டாட்டி உசுரோட இருக்குறப்போவே நாலஞ்சு வச்சுக்கிட்டு சுத்துறானுக.. உனக்கு என்ன வந்தது..?" "எவன் வேணா எப்படி வேணா இருந்துட்டு போகட்டும்.. என்னையும் அப்படி இருக்க சொல்லாத..!!" "அப்போ நான் சொல்றதை கேக்க மாட்ட..? என் வார்த்தைக்கு அவ்ளோதான் மதிப்பு..??"பன்னீர் அப்படி கோபமாக கேட்டதும், நான் பட்டென்று அமைதியானேன். அவருடைய கண்களையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்தேன். அப்புறம் என் குரலை இலகுவாக்கிக் கொண்டு, சற்றே கேலியான குரலில் கேட்டேன். "சரி.. நான் ஒரு கேள்வி கேக்குறேன்..!! அதுக்கு நீ பதில் சொல்றியா..?" "என்ன..?" அவர் டென்ஷன் குறையாமலே கேட்டார். "உனக்கும் சின்ன வயசுலேயே.. உன் பொண்டாட்டி உன்னை விட்டு போயிட்டாங்கள்ல..? நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல..?" அவ்வளவுதான்..!! பன்னீர் அந்த கேள்வியை சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. அதிர்ந்து போனார். விழிகளை விரித்து ஒரு மாதிரி வித்தியாசமாக பார்த்தார். தடுமாற்றமான குரலில்.. "அ..அது.. அது..." திணறினார். "ம்ம்ம்.. சொல்லு.." "இங்க பாரு அசோக்கு.. அத வேற.. இது வேற.." "என்ன வேற வேற..??" "என் பொண்டாட்டி என்னை விட்டு போறப்போ.. நான் ரெண்டு கொழந்தைக்கு அப்பா.." "இருந்தா என்ன..? அப்போ உனக்கும் என் வயசுதான இருக்கும்..? நீ நெனச்சிருந்தா.. இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிருந்திருக்கலாம்ல..? உனக்கு என்ன பொண்ணா கெடைச்சிருக்காது..? ஏன் பண்ணிக்கலை..?" "இன்னொரு கல்யாணம் பத்திலாம் நான் நெனச்சு பாத்தது இல்ல அசோக்கு.. அதுக்கு காரணம்லாம் இல்ல.." "காரணம் இருக்கு பன்னீர்.. எனக்கு தெரியும்..!!" "என்ன..?" "என்னை மாதிரி.. உனக்கும் உன் பொண்டாட்டி மேல அவ்ளோ பாசம்.. அவங்க நெனைப்பு இப்போவும் உன் மனசுல இருக்குறது எனக்கு தெரியும்..!!" "அ..அசோக்கு .. நான் சொல்ல வர்றதை.." "உனக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா பன்னீர்..??" நான் ஆணித்தரமாக கேட்க அவர் சோர்ந்து போனார். என் வார்த்தைகளில் இருந்த உண்மை அவருடைய மனசாட்சியை சுட்டிருக்கும். அவரால் பேச முடியவில்லை. ஒரு மாதிரி பரிதாபமாக என்னையே பார்த்தார். இறந்து போன அவர் மனைவியின் நினைவை, நான் இப்போது கிளறி விட்டுவிட்டேன் என்று தோன்றியது. அந்த நினைவில்தான் இப்போது தத்தளிக்கிறார் என்று எனக்கு புரிந்தது. இப்போது நான் அவருக்கு ஆறுதலான குரலில் சொன்னேன். "பன்னீர்.. நான் உன்னை கஷ்டப்படுத்தனும்னு அப்படி சொல்லல.. நீ என்னை புரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன்.." "பரவால வுடு..!! ம்ம்ஹ்ஹ்ம்ம்... என் வாழ்க்கைதான் எப்படியோ போயிடுச்சு.. உன் வாழ்க்கை இப்படி சந்தோஷம் இல்லாம இருக்குறது எனக்கு புடிக்கலை அசோக்கு.. அதான் அப்படிலாம் பேசிப்புட்டேன்..!! என்னை மன்னிச்சுடு..!!" "ஹையோ.. இப்போ நான் சந்தோஷமா இல்லைன்னு யார் சொன்னா..? நான் சந்தோஷமாத்தான் இருக்குறேன் பன்னீர்..!! எனக்கு என்ன கொறைச்சல்..? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்..!!" நான் முகத்தை மலர்ச்சியாய் வைத்துக் கொண்டு, உற்சாகமான குரலில் படபடவென சொன்னேன். சொல்லிவிட்டு பன்னீரை பார்த்து அழகாக புன்னகைத்தேன். அவர் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் என்னையே பார்த்தார். ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் உதட்டில் மெலிதாக ஒரு புன்னகையை கசியவிட்டவாறு, சற்றே எள்ளலான குரலில் சொன்னார். "நீ பொய் சொல்றேன்னு எனக்கு தெரியும் அசோக்.. ரொம்பலாம் நடிக்காத..!!" சொல்லிவிட்டு, அவர் என்னை கண்டு கொள்ளாமல் ப்ராண்டியை எடுத்து உறிஞ்ச ஆரம்பித்தார். எனது முகம் இப்போது பட்டென மலர்ச்சியை இழந்தது. உதட்டில் இருந்த புன்னகை சென்ற இடம் தெரியாமல் போயிருந்தது. அவருடைய வார்த்தைகளில் இருந்த உண்மை இப்போது எனது மனசாட்சியை சுட்டது..!! நீரை கொட்டலாமா என எனது விழிகள் ரெடியாயின..!! அப்புறம் நானும் பன்னீரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக மிச்சமிருந்த பிராண்டியை குடித்து முடித்தோம். பன்னீர் தெளிவாக இருந்தார். எனக்குத்தான் கொஞ்சம் ஓவர் ஆகிவிட்டது. தள்ளாடினேன். காரை ஓட்டுவதாக சொன்ன என்னிடம் இருந்து சாவியை அவர் பிடுங்கிக் கொண்டார். நான் அருகில் அமர்ந்திருக்க, அவரே கார் ஓட்டினார். பள்ளிக்கரணை நோக்கி கார் சீரான வேகத்தில் சீறியது..!! வீட்டை அடைந்தோம். காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருந்தோம். கையில் தோசைக் கரண்டியுடன் மலர் வந்து கதவை திறந்து விட்டாள். அபி தரையில் அமர்ந்து பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நாங்கள் சத்தம் போடாமல் வீட்டுக்குள் நுழைந்தோம். இருவரும் சென்று சோபாவில் அமர்ந்து கொள்ள, இடுப்பில் கை வைத்து மலர் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். உஷ்ணமான குரலில் கேட்டாள். "குடிச்சிருக்கியா..???" அவள் கேட்டது என்னிடம் அல்ல..!! பன்னீரிடம்..!! அவள் அப்பாவிடம்..!!!! அதிர்ச்சியாக இருக்கிறதா..???? ஆமாம்.. உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன்.. பன்னீர்தான் என் மாமனார்..!!!! ஆனால் அவரை என் மாமனாராக நான் ஒரு நாளும் பார்த்தது இல்லை. முதலில் அவர் எனக்கு நண்பர். அப்புறந்தான் எனக்கு மாமனார். எட்டு வருடங்கள் முன்பு இந்த கம்பெனியில் சேர்ந்தபோது, எனக்கு கீழே வேலை பார்க்கும் பன்னீரோடு எனக்கு நல்ல நட்பு உருவானது. பின்பு அவருடைய மூத்த மகள் கயல்விழியையே எனக்கு மனைவியாக்கிக் கொண்டேன். எனக்கு சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ளும் படியாக யாரும் இல்லை. மதுரையில் இருக்கும் மாமா மட்டும் விதி விலக்கு..!! அவரும் எப்போதாவது போனில் பேசுவதோடு சரி. எனது திருமணத்துக்குப் பிறகு என் மனைவியின் குடும்பத்தை என் குடும்பமாக மாற்றிக் கொண்டேன். அவர்களை கட்டாயப் படுத்தி.. என் வீட்டிலேயே தங்கிக் கொள்ள செய்திருக்கிறேன்..!! "எ..என்னது.. குடிச்சனா..?? இ..இல்லையே..??" பன்னீர் தடுமாறினார்.

"ஏன் பொய் சொல்ற..? அதான் உன் மூஞ்சியை பாத்தாலே தெரியுதே..? நீ குடிச்சு உடம்பை கெடுத்துக்குறது பத்தாதுன்னு.. அத்தானையும் கூட்டிட்டு போய் கெடுக்குறியா..??" "நான்தான் குடிக்கலைன்னு சொல்றேன்ல..? ஏன் அசோக்கு.. நாம குடிச்சோம்..????" பன்னீர் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டேன். இப்போது மலர் டென்ஷனானாள். தன் அப்பாவை பார்த்து கத்தினாள். "ஐயோ.. உனக்கு எத்தனை தடவை சொல்றது.. அத்தானை பேர் சொல்லி கூப்பிடாதேன்னு..??" "அப்படியே பழகிப் போச்சு மலரு.. விடு.." "கடவுளே..!!! எங்கயாவது... மகளை கட்டிக்கிட்ட மாப்ளையை.. மாமனாரே பேர் சொல்லி கூப்பிடுவாங்களா..? வா.. போ... ன்னு மரியாதை இல்லாம பேசுவாங்களா..?" "இதுல என்ன இருக்கு..? அசோக்கு எனக்கு ரெண்டு வருஷமாத்தான் மாப்ளை.. எட்டு வருஷமா என் ஃப்ரண்ட்..!!" "ஃப்ரண்டா இருக்குறப்போ கூப்பிட்டு தொலைச்ச சரி.. மாப்ளையானப்புறம் அதை மறந்து தொலைக்கிறதுக்கு என்ன..??" இப்போது நான் பன்னீருக்கு சப்போர்ட்டாக மலரிடம் பேசினேன். "ப்ச்.. பரவால விடு மலர்.. அப்டியே கூப்பிடட்டும்..!! நீயுந்தான் பெத்த அப்பான்ற மரியாதையை இல்லாம.. அவரை போ.. வா..ன்ற..?" "இல்லைத்தான்.. அப்டிலாம் விட முடியாது..!! நான் கூப்பிடுறது வேற.. அவர் கூப்பிடுறது வேற.." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பன்னீர் இடைமறித்து மகளிடம் சொன்னார். "அதான்.. அவனே பரவாலன்னு சொல்றான்ல..? நீ ஏன் குதிக்கிற..??" அவ்வளவுதான்..!! மலர் உச்ச பட்ச டென்ஷனுக்கு போனாள். "என்னது.. அவனா..????? நானும் சொல்லிட்டே இருக்குறேன்.. திரும்ப திரும்ப சொல்ற நீ..??? உன்னை என்ன பண்றேன் பாரு.." தோசைக் கரண்டியை ஓங்கியவாறு தன் அப்பாவை அடிக்க ஓடினாள். மகளிடம் அடி வாங்காமல் தப்பிக்க, இப்போது பன்னீர் சோபாவில் இருந்து எழுந்து ஓடினார். மலரும் விடாமல் விரட்டினாள். இருவரும் சோபாவை சுற்றி சுற்றி ஓடி விளையாட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தேன்..!! கிலுகிலுப்பையை ஆட்டிக்கொண்டிருந்த அபியும்.. இப்போது எழுந்து நின்று.. தன் எலிப்பற்களை காட்டியவாறு.. அவர்களை பார்த்து கைகளை தட்டி சிரித்தான்..!!மனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் எனக்கும்..!! 'இப்படியே இருக்கப் போகிறாயா.. சோகத்திலிருந்து மீண்டு வா..' என என் அறிவு கிடந்து அலறினாலும், எனது மனம் கண்டு கொள்வதாயில்லை. கயலின் நினைவுகளை உதறவும் முயல்வதில்லை. மலரும், பன்னீரும், அபியும்.. மனம் விட்டு சிரித்துக் கொண்டிருக்க.. எனக்குள்ளும் அந்த உற்சாகம் கொஞ்ச நேரம் உறைந்திருந்தது. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் அறைக்குள் நுழைந்தபோது, அத்தனை நேரம் காணாமல் போயிருந்த கயல்.. மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.. கனமாக..!! கயலின் முகம் காணவேண்டும் என்று எனது கண்கள் துடித்தன.. அவளது குரல் கேட்கவேண்டும் என்று காதுகள் தவித்தன..!! 'முகம் காண புகைப்படம் இருக்கிறது.. குரல் எப்படி..' என்கிறீர்களா..?? சொல்கிறேன்..!! எனக்கும் கயலுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருந்த சமயம். பன்னீருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாய் ஒருநாள் கயலை சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்து மிரண்டவளை சமாதானம் செய்து, வெளியே கூட்டி சென்றேன். ஒரு ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டோம். அவள் கைகழுவ சென்ற கேப்பில்.. அவளது ஹேன்ட் பேக் திறந்து.. அவளுடைய செல்போனை எடுத்து.. எனது நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்து..!! அப்படித்தான் அவளுடைய செல்நம்பரை நான் அறிந்து கொண்டேன்..!! "ஃபோன்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ்.. அப்பாக்கு தெரிஞ்சா ப்ராப்ளம்.." கயல் கெஞ்சினாள். "ப்ச்.. தெரிஞ்சாத்தான..? அதுலாம் ஒன்னும் தெரியாது.. அப்டியே ஒருவேளை தெரிஞ்சாலும்.. பன்னீர்ட்ட நான் பேசிக்கிறேன்.. நீ பயப்படாத..!! சரியா..??" "ம்ம்.. சரி..!! ஆனா... " "என்ன ஆனா..?" "அடிக்கடிலாம் பண்ண வேணாம்.." "அப்புறம்..?" "நைட்டு வேணா பண்ணிக்கோங்க.. பத்து மணிக்கு மேல..!!" "ம்ம்ம்.. சரி.. நைட்டே பண்றேன்..!! என் நம்பர் உன் மொபைல்ல.. டயல்ட் கால்ஸ்ல இருக்கும்.. நீ எப்போவாவது ஃப்ரீயா இருக்குறப்போ.. எங்கிட்ட பேசணும்னு தோணுச்சுனா கால் பண்ணு.." நான் சொல்லி முடிக்கும் முன்பே, "ஐயையோ.. நான்லாம் பண்ண மாட்டேன்பா.. நீங்களே பண்ணுங்க..!!"என்று பதறியவளை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக இருந்தது. இவளை வைத்துக் கொண்டு நான் என்ன ரொமான்ஸ் செய்யப் போகிறேன் என்று ஏக்கமாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் மதியமே, 'சும்மா..!! நீங்க சாப்டிங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்க கால் பண்ணினேன்.. வச்சிர்றேன்..' என்று அவள் என் நம்பருக்கு கால் செய்து வழிந்தபோது.. இதை விட என்ன பெரிய ரொமான்ஸ் இருந்துவிட முடியும் என்று என் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்தன..!! அப்புறம் எங்களுக்கு திருமணமாகி, கயல் என் வீட்டிற்கு வரும்வரை.. தினமும் இரவு.. செல்போன் சூட்டில் எங்கள் காதுகள் இரண்டும் சிவந்து.. திகுதிகுவென எரியும் வரை.. இருவரும் பேசுவோம்..!! நாங்கள் போனில் பேசிக் கொள்கிறோம் என்பது அப்புறம் பன்னீருக்கும், மலருக்கும் தெரிந்து போனது. ஆனால் அவ்வளவு நேரம் பேசுவோம் என்பது இன்றுவரை அவர்களுக்கு தெரியாது..!! அப்படி ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டதைத்தான், நான் கயலுக்கே தெரியாமல் ரெகார்ட் செய்து வைத்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் அதை அவளுக்கு போட்டுக் காட்டி, கிண்டல் செய்வேன். அவள் அதை டெலீட் செய்ய பலமுறை முயன்று தோற்றிருக்கிறாள்..!! ஒருவேளை அப்படி அவள் டெலீட் செய்திருந்தால்.. இப்போது நினைத்த போதெல்லாம் கயலின் குரலை கேட்கும் இன்பத்தை.. நிச்சயமாய் என் காதுகள் இழந்திருக்கும்..!! அந்த ஒலிப்பதிவை நான் ஒரு MP3 கோப்பாக மாற்றி வைத்திருந்தேன். என்னுடைய கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பிலேயே போட்டு வைத்திருந்தேன். இப்போது அதைத்தான் அமர்ந்து கேட்க ஆரம்பித்தேன். காதுகளுக்கு ஹெட்ஃபோன் கொடுத்துவிட்டு.. கண்களை இமைகளால் போர்த்திவிட்டு.. கம்ப்யூடர் சேரில் வசதியாய் தலையை சாய்த்துவிட்டு..!! "ம்ம்.. சொல்லுங்க.." "ஹேய்.. என்னாச்சு.. கட் பண்ணிட்டு போயிட்ட..?" "அப்பா கூப்பிட்டாரு.. அதான்.." "பன்னீர் இன்னும் தூங்கலையா..?" "ம்ஹூம்..!! அப்பாவும், பொண்ணும் இன்னும் அரட்டை அடிச்சுட்டுதான் கெடக்குதுங்க.!!" "ஓ..!! மலரும் முழிச்சிருக்காளா..?" "ஆமாம்.. அந்த குட்டி சாத்தானுந்தான்..!! என்னைக்கும் சீக்கிரம் தூங்கிடுங்க.. இன்னைக்குன்னு பார்த்து ரெண்டும் கொட்ட கொட்ட முழிச்சுட்டு உக்காந்துக்கிட்டு.. நம்ம உசுரை வாங்குதுங்க..!!" "ஹ்ஹாஹ்ஹா...!! ம்ம்ம்.. கொஞ்சம் மலர்ட்ட ஃபோனை கொடேன்..!!" "எதுக்கு..??" "சும்மாதான்.." "ப்ச்.. எதுக்குன்னு சொல்லுங்க.." "என்ன நீ.. நானும் என் மச்சினியும் ஏதாவது ஜாலியா பேசிக்குவோம்.. உனக்கு என்ன..? போய் ஃபோனை கொடு.. போ..!!" "ஓஹோ.. ஐயாவுக்கு ஜாலியா பேசணுமோ..? உதை விழும்..!!" "ஹ்ஹாஹ்ஹா...!! ஹேய்.. ப்ளீஸ்டி..." "சும்மா இருங்கப்பா.. அவகிட்ட என்ன ஜாலிப்பேச்சு உங்களுக்கு..??? அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!!!" "ஏய்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.." "ப்ச்..!! அப்புறம்.. நான் ஃபோனை கட் பண்ணிட்டு போயிடுவேன்..!!" "ஏய்.. ஏய்.. இரு இரு.. கட் பண்ணிடாத..!! நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.. உன்னை சீண்டிப் பாக்கலாம்னு..!!" "ம்.. ம்.. சும்மா சொல்லாதீங்க.. எனக்கும் தெரியும்.." "என்ன தெரியும்..?" "ம்ம்ம்..?? நீங்க என் தங்கச்சியை சைட் அடிக்கிறது... அவ கிட்ட ஜொள்ளு வுடுறது.." "அடிப்பாவி..!! ம்ம்ம்ம்... இப்போத்தான் உண்மைலாம் வெளில வருது..!!" "என்ன உண்மை..?" "நான் இத்தனை நாளா சாதாரணமா உன் தங்கச்சிட்ட பேசுறதை.. சந்தேக கண்ணோட பாத்துட்டு இருந்திருக்குற நீ..!! நான் ஒன்னும் அந்த மாதிரி கிடையாதும்மா..!! பக்கா டீசன்ட்..!!" "ம்ம்ம்.. நம்பிட்டேன் நம்பிட்டேன்..!!" "ஹ்ஹாஹ்ஹா...!! ம்ம்ம்... அப்புறம்..??" "..........................." "ஹேய்.. என்ன சத்தத்தையே காணோம்..?? கோவமா..??" "அதெல்லாம் ஒண்ணுல்ல.. தூக்கம் வருது.." "அதுக்குள்ளையா..?" "ம்ம்ம்...!! உங்களுக்கு தூக்கம் வரலையா..?" "ம்ஹூம்.." "போய் தூங்குங்கப்பா.. டைமாச்சு.. காலைல ஆபீஸ் வேற போகனும்ல ..?" "தூக்கம் வரலையே.. என்ன பண்ண சொல்ற..?" "பெட்ல போய் படுத்துக்கிட்டு.. கண்ணை இறுக்க்க்க்கி மூடிக்குங்க.. தூக்கம் தானா வரும்..!!" "பெட்லதான் படுத்திருக்கேன்.. கண்ணை கூட மூடிக்கிட்டேன்.. தூக்கம்தான் வரல..!!" "ஓ..!! அப்போ என்ன பண்ணலாம்..?" "சரி.. நீ அந்த பாட்டு பாடு.. நான் கேட்டுக்கிட்டே தூங்குறேன்.." "எந்த பாட்டு..?" "அதான்.. அன்னைக்கு பாடுனியே.. P.சுசீலா பாட்டு.." "ஓ.. அதுவா..?? ம்ம்ம்.. சரி.. பாடுறேன்.. அப்டியே கேட்டுட்டு தூங்கிடனும்.. என்ன..?" "ம்ம்.. சரி..!!" அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு தேனில் நனைந்த கயலின் குரல்..!! "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல.. உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல.. நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல.. நீ இல்லாமல் நானும் நானல்ல.. நீ… இல்லாமல் நானும் நானல்ல.. இங்கு நீயொரு பாதி நானொரு பாதி.. இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி.. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்.. காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல.." எவ்வளவு நேரம் என்று சரியாக தெரியவில்லை..!! வின்ஆம்ப்-இல் ரிப்பீட் சாங் செட் செய்திருந்தேன். அதனால் கயலின் குரல் திரும்ப திரும்ப என் செவிப்பறையில் செந்தேன் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்தது. உள்ளே சென்றிருந்த ஆல்கஹாலும், மூளையின் செல்களை மந்தமாக்க, முடிந்த அளவு முயற்சித்தது. என்னையும் அறியாமல் அப்படியே உறங்கிப் போனேன். "அத்தான்.. அத்தான்.." மலர் என் தோளைப் பற்றி உலுக்க, நான் பட்டென விழிகள் திறந்தேன். கயலுடன் கொஞ்சிக் கொண்டிருந்த கனவுலகை விட்டு, நனவுலகில் வந்து விழுந்தேன். தலையை திருப்பி.. தூக்க கலக்கத்தில் சிவந்த கண்களுடன், மலரின் முகத்தை மலங்க மலங்க பார்த்தேன். "என்னத்தான்.. சேர்லயே தூங்கிட்டிங்க.. பெட்ல போய் படுத்துக்கோங்க.. போங்க.." "ம்ம்ம்.." சொல்லிக்கொண்டே நான் கை நீட்டி மவுஸ் தேட, "நான் ஷட் டவுன் பண்ணிக்கிறேன்த்தான்.. நீங்க போய் தூங்குங்க.." நான் சேரை விட்டு எழுந்தேன். சற்று முன்பு கசங்கலாகவும், கொஞ்சம் அழுக்காகவும் இருந்த மெத்தை விரிப்பு இப்போது மாற்றப்பட்டிருந்தது. சலவை செய்யப்பட்ட புது விரிப்பை.. சுருக்கமில்லாமல் விரித்து.. தலைக்கும் காலுக்கும் இரண்டு தலையணைகள் என.. படுக்கையை மலர் ஒழுங்கு படுத்தி வைத்திருந்தாள். நான் மெத்தையில் சுகமாக வீழ்ந்து.. விழிகளை மூடிக் கொண்டேன். உறங்கலானேன்..!! ஓரிரு நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். எனக்குள் ஒரு உள்ளுணர்வு ஏதோ சொல்லி எனை எழுப்ப.. நான் உறக்கம் விடுத்து.. மெல்ல என் கண்களை திறந்து பார்த்தேன். சற்றே அதிர்ந்து போனேன்..!! மலர் என் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள். ஒரு மாதிரி வித்தியாசமான பார்வை..!! என்னாயிற்று இவளுக்கு..??? ஏன் இப்படி பார்க்கிறாள்..??? அவள் பார்வையில் இருந்தது.. அன்பா.. இரக்கமா.. கருணையா.. பரிதாபமா.. இல்லை.. இவை எல்லாம் கலந்த ஒன்றா..??? எனக்கு புரியவில்லை..!! அமைதியாக அசையாமல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை, எனது குரல் கலைத்தது. "என்னாச்சு மலர்..?" "ஒ..ஒன்னுல்லத்தான்.. ஒ..ஒன்னுல்ல.. தூ..தூங்குங்க..!!" திணறலாக சொன்னவள் சுவரை தடவி, சுவிட்சை தேய்த்து விளக்கை அணைத்தாள். சப்தம் வராமல் மெல்ல கதவை சாத்தியபடி, அறையை விட்டு வெளியேறினாள். நான் அப்புறமும் கொஞ்ச நேரம் மலரையும் அவள் பார்வையையும் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஏன் அப்படி பார்த்தாள்..?? அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்..?? அப்புறம் உறங்கிப் போனேன். அவளுடைய பார்வையும் எனக்கு மறந்து போனது. ஆனால் அந்த பார்வையின் அர்த்தம் பத்தே நாட்களில் எனக்கு புரிந்து போனது.என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன் இருக்கிறான். முகுந்த் என்று பெயர். அவனுக்கு ஒரு தம்பி. வைபவ்..!! வைபவ் ஹைதராபாத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். அவனுக்கு பெண் பார்க்கிறார்கள் என்று தகவல் எனக்கு முகுந்த் மூலமாக கிடைத்தது. நான் பன்னீரிடம் பேசி, மலருடைய ஜாதகத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஜாதகம் பொருந்தியிருந்தது. மலரை ஒரு நாள் பெண் பார்க்க வருவதாக கேட்டிருந்தார்கள். கயலின் நினைவு நாள் சென்ற பிறகு ஒருநாள் வாருங்கள் என்று, நானும் சொல்லியிருந்தேன். அவர்கள் பெண்பார்க்க வருவதற்கு முதல்நாள்தான் அது நடந்தது. வேலை நாட்களில் மதிய உணவு, நானும் பன்னீரும் சேர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். சரியாக 12.30-க்கெல்லாம் பன்னீர் வந்து என் கேபின் கதவை தட்டுவார். 'வேலை பாக்குறது மாதிரி நடிச்சது போதும்.. வெளிய வா.. சாப்பிட்டு வரலாம்..' என்பார். நானும் என்னவேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், இரண்டே நிமிடங்களில் தயாராகி அவருடன் கிளம்பிவிடுவேன். கம்பெனி கேண்டீனில்தான் சாப்பாடு. பத்தே ரூபாயில் அம்சமான அளவு சாப்பாடு..!! அன்று சாப்பிடும்போது.. அப்பளத்தை கை வைத்து நொறுக்கிக்கொண்டே பன்னீர் சொன்னார்..!! "அவளுக்கு.. கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியா போயிடுச்சு அசோக்கு.." "யாருக்கு..?" சாம்பாரை விரலால் கலக்கிக்கொண்டே நானும் குழப்பமாய் கேட்டேன். "மலருக்கு..!!" "ஏன்.. என்னாச்சு..??" "அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பொண்ணு பார்க்க வரவேணாம்னு சொல்ல சொல்றா..!!" பன்னீர் சொல்ல நான் சற்றே அதிர்ந்தேன். "ஏன்..?" "அவளுக்கு கல்யாணம் வேணாமாம்.. இப்படியே இருந்திட போறாளாம்.." "என்ன சொல்ற பன்னீர்..? அவங்க நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றதா சொல்லிருக்காங்க.." "தெரியும் அசோக்கு.." "அப்புறம்..?? கடைசி நேரத்துல இப்படி சொன்னா..? நான்தான் போன வாரமே உன்னை அவகிட்ட சொல்ல சொன்னேன்ல..?" "சொல்லிட்டேன் அசோக்கு.. அவ அன்னைக்கே வேணாம்னுதான் சொன்னா..!! உன்கிட்ட சொன்னா.. நீ மனசு கஷ்டப்படுவேன்னு நான் சொல்லல..!! அவளை பேசி சம்மதிக்க வச்சிடலாம்னு நெனச்சேன்.. ஆனா.. இப்போ அது முடியாது போல இருக்கு.. புடிவாதமா இருக்குறா.. காலைல அவளுக்கும் எனக்கும் பெரிய சண்டையா போச்சு..!!" "இப்போ என்ன பண்றது..? அந்தப் பையன் வேற ஹைதராபாத்ல இருந்து இதுக்காக கிளம்பி வர்றான் பன்னீர்.." "நீ அவகிட்ட பேசு அசோக்கு.. நீதான் அவளுக்கு லாயக்கு.. நீ சொன்னாத்தான் அவ கேட்பா..!! ரொம்ப சிலுப்புனான்னா.. செவுள்லயே நாலு அறை வுடு.." எனக்கு நிஜமாகவே மலர் மீது பயங்கர எரிச்சல் வந்தது. என்ன பெண் அவள்..?? அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று நாங்கள் இங்கு கிடந்தது இவ்வளவு சிரமப் படுகிறோம்.. இவளானால் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல்..?? கல்யாணமே வேண்டாம் என்றால்.. என்ன பேச்சு அது..?? எனக்கு அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. பன்னீரை பார்த்தால் அவளுக்கு சற்று இளக்காரம்தான். அவர் சொல்வதை காதில் போட்டுக் கொள்ள மாட்டாள். அழகாக அவரை சமாளித்து விடுவாள். ஆனால் என்னிடம் அப்படி இருக்க மாட்டாள். என்னிடம் நிறைய மரியாதை உண்டு அவளுக்கு. நான் சொல்லும் வார்த்தைகளுக்கு நிறைய மதிப்பு கொடுப்பாள். பன்னீர் சொல்வது மாதிரி நான்தான் இதற்கு சரியான ஆள். நானே பேசுகிறேன். அன்று மாலை சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பிவிட்டேன். மலரிடம் தனியாக பேசுவதற்காகத்தான்..!! நாலு மணிக்கெல்லாம் வீட்டை அடைந்தேன். கதவை திறந்த மலர் என்னை நம்பமுடியாமல் பார்த்தாள். சற்றே ஆச்சரியமான குரலில் கேட்டாள். "என்னத்தான்.. இன்னிக்கு சீக்கிரமே வந்துட்டீங்க..?"

"ஒண்ணுல்ல மலர்.. சும்மாத்தான்.." "உ..உடம்புக்கு ஏதாவது..??" ஆச்சரியமான அவளது குரல் இப்போது பட்டென கவலையாக ஒலித்தது. "அதுலாம் ஒண்ணுல்ல.. சும்மாதான் கெளம்பி வந்தேன்.." "ம்ம்.. காபி போடவா..?" "போடு..!! அபி என்ன பண்றான்..?" "தூங்குறான்த்தான்.." நான் உடை மாற்றிக்கொண்டு, முகம் கழுவிவிட்டு, ஹாலில் வந்து அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் மலர் காபி கப்புடன் வந்தாள். கொடுத்துவிட்டு, நான் காபி உறிஞ்சுவதையே கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சற்றே தயக்கமான குரலில் சொன்னேன்."உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மலர்.." "எ..என்னத்தான்..?" அவளிடமும் இப்போது லேசான தடுமாற்றம். "உக்காரு.. சொல்றேன்.." நான் சோபாவை நோக்கி கைநீட்ட, அவள் எனக்கு எதிரே தயங்கி தயங்கி அமர்ந்தாள். என்ன விஷயம் பேசப் போகிறேன் என்று அவள் கணித்திருப்பாள் என்று நினைக்கிறேன். ஒரு மாதிரி அவஸ்தையாக நெளிந்தாள். நான் மெல்ல ஆரம்பித்தேன். "வைபவ்னு ஒரு பையன் இருக்குறான் மலர்.." "ம்ம்.. அ..அப்பா சொன்னார்.." "ஏன் வேணாம்ன்ற..?" "எ..எனக்கு.. எனக்கு பிடிக்கலைத்தான்.." "என்ன பிடிக்கலை..?" "இ..இந்த கல்யாணம்.." "ஏன்..? அந்தப்பையனை பாக்காம.. அவனை பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம.. பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்..?" "அந்தப்பையனை பிடிக்கலைன்னு சொல்லல.. எனக்கு கல்யாணமே பிடிக்கலை.. நான் இப்படியே இருந்திடுறேன்த்தான் .." "அதான் ஏன்னு கேக்குறேன்..?" "ப்ளீஸ்த்தான் என்னை கம்பெல் பண்ணாதீங்க.." அவள் நழுவ முயல, "காரணம் சொல்லு.. நான் கம்பெல் பண்ணமாட்டேன்.." நான் விட மறுத்தேன். மலர் இப்போது பட்டென்று அமைதியானாள். என்னுடைய பார்வையை சந்திக்க துணிவில்லாமல், தலையை கவிழ்ந்து கொண்டாள். கைவிரல்களை கோர்த்துக்கொண்டு நெறித்தாள். நானும் கொஞ்ச நேரம் அவளையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் காலி கப்பை டீப்பாயில் வைத்தபடி, என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த அந்த கேள்வியை கேட்டேன். "யாரையாவது லவ் பண்றியா மலர்..?" மலரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. என் கேள்வி அவள் காதில் விழுந்ததா என்று கூட எனக்கு குழப்பமாக இருந்தது. நான் இப்போது சற்றே எரிச்சலானேன். "உன்னைத்தான் கேக்குறேன்.. யாரையாவது லவ் பண்றியா..?" "........." "இப்டி உம்ம்னு இருந்தா.. என்ன அர்த்தம்.. ஆமாம் இல்லைன்னு ஏதாவது ஒன்னு சொல்லலாம்ல..? இங்க பாரு.. பன்னீர்கிட்ட நீ சொல்ல தயங்கிருக்கலாம்.. ஆனா என்கிட்டே உனக்கு.." நான் பேசிக்கொண்டிருக்கும்போதே, "ஆமாம்..!!" என்றாள் மலர் பட்டென. நான் அதிசயித்து போனேன். பதில் சொல்ல அவளை தூண்டியிருந்தாலும், 'இல்லை..!!' என்ற பதிலைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். அந்த வார்த்தை வந்து விழும் என்றுதான் என் காதுகளும் காத்திருந்தன. அவளுடைய உதடுகள் இப்போது படபடத்தன. கைவிரல்கள் நடுநடுங்கின. மலர் யாரையோ காதலிக்கிறாள் என்பது எனக்கு நம்ப முடியாத செய்தி. அவளிடம் காதலுக்கான அறிகுறியை, இத்தனை நாளாய் கொஞ்சம் கூட நான் கண்டதில்லை. வீட்டை விட்டு எங்கேயுமே செல்லாமல், வெளி ஆட்கள் யாருடனும் பேசாமல்.. யாரை காதல் செய்கிறாள் இவள்..?? "ம..மலர்.. நெ..நெஜமாவா சொல்ற..?" "ம்ம்.." "எ..என்னால நம்பவே முடியலை..!! ம்ம்ம்.. ச..சரி.. யார் அந்த பையன்..?" "அது வேணாம்த்தான் ப்ளீஸ்.." அவள் அவசரமாய் மறுத்தாள். "ப்ச்..!! யார்னு சொல்லலைன்னா எப்படி..?" "வேணாம்னு சொல்றேன்ல.. விடுங்க.." "உன்கூட படிச்சவனா..?" "ம்ஹூம்.." "பக்கத்து வீட்டு ஆண்ட்டி பையன் ஷ்யாமா..? நீ கூட அடிக்கடி அவன் கூட பேசிட்டு இருப்பியே.. ம்ம்..?அவனா..?" "இ..இல்ல.." "ஆன்லைன்ல ஷேர் ட்ரேடிங்லாம் பண்ற.. அதுமூலமா யாராவாது பழக்கமா..? ஆன்லைன் லவ்வா..?""ஐயோ.. அதுலாம் இல்லைத்தான்.." "அப்புறம் யாரு மலர்..? யார்னு சொன்னாத்தான.. நான் ஏதாவது பண்ண முடியும்..?" "நீங்க எதுவும் பண்ண வேணாம்.. இதை இப்படியே விட்டுடுங்க.." "ஏன் அப்படி சொல்ற..?" "நான் மட்டுந்தான் லவ் பண்றேன்.. அவருக்கு என் மேல விருப்பம் இல்ல..!!" "ஓ..!! சரி பரவால்ல.. யார்னு சொல்லு.. நான் தெரிஞ்சுக்குறேன்..!!" "ப்ளீஸ்த்தான்.. வேணாம்..!!" "ப்ச்..!! அடம் பிடிக்காத மலர்.. சொல்லு..!!" "வேணாம்.. சொன்னா நீங்க கோவப்படுவீங்க.." "இல்ல.. கோவப்பட மாட்டேன்.. ப்ராமிஸ்..!! சொல்லு மலர்.. ப்ளீஸ்..!! யார் அது..?" "......." "இப்டி சைலண்ட்டா இருந்து இரிடேட் பண்ணாத மலர்.. இப்போ சொல்லப் போறியா.. இல்லையா..?" என்னுடைய குரல் இப்போது எரிச்சலாகவும், கோவமாகவும் ஒலித்தது. மலர் அதன் பிறகும் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள். நான் அவளையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் திடீரென்று என்ன நினைத்தாளோ..?? ஒரு முடிவுக்கு வந்தவள் மாதிரி, பட்டென அவளுடைய முகத்தை நிமிர்த்தினாள். என்னுடைய கண்களை கூர்மையாக பார்த்தவாறு, அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னாள். "நீங்கதான்..!! உங்களைத்தான் நான் லவ் பண்றேன்..!!" அவ்வளவுதான்..!! உச்சபட்ச அதிர்ச்சியில் நான் அப்படியே உறைந்து போனேன்..!! சுத்தமாய் அதை எதிர்பார்க்கவே இல்லை நான்..!! இப்போது எனது உதடுகள் படபடக்க ஆரம்பித்தன..!! எனது கைவிரல்கள் நடுநடுங்கின. தடுமாறினேன்..!! வார்த்தைகள் என்னிடமிருந்து திணறலாய் வெளிப்பட்டன. "ம..மலர்.. வெ..வெளையாடாத... ப்ளீஸ்.." "இல்லத்தான்.. நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!! ஐ லவ் யூ..!!" அவளுடைய குரலில் ஒரு அசாத்திய உறுதி தெரிந்தது. "அறைஞ்சுடுவேன் மலர்.." நான் கோவமாய் கத்தினேன். "சொன்னேன்ல..? யார்னு சொன்னா நீங்க கோவப்படுவீங்கன்னு நான் சொன்னேன்ல..?" "மடத்தனமா பேசுனா.. கோவம் வராதா..?" "மனசுல உள்ளதை பேசுனா.. மடத்தனமா உங்களுக்கு தெரியுதாத்தான்..?" "எ..என்னைப் போய்.. லவ் பண்றேன்னு சொல்றியே.. அது மடத்தனம் இல்லாம என்னது..?" "ஏன்.. உங்களுக்கு என்ன..?" "நா..நான் உன் அக்காவோட ஹஸ்பண்ட்..." "அக்காதான் இப்போ இல்லையே..?" "நான் ஒரு கொழந்தைக்கு அப்பா மலர்.." "அபிக்கு நான் அம்மாவாகி ரொம்ப நாளாச்சுத்தான்.." "புரியாம பேசாத..!! நா..நான்.. நான் உன் அக்காவையே மனசுல நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்..!!" "அதுதான்.. அதுதான் உங்க மேல எனக்கு காதல் வரவே காரணம்..!!" "ப்ச்.. கயலை இந்த ஜென்மத்துல என்னால மறக்க முடியாது மலர்.." "எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. என் காதலும் மாறாதுத்தான்..!!" "அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்.." "என்னவேனா பண்ணிக்கோங்க.. என் மனசை மாத்திக்க முடியாது..!! சொன்னா சொன்னதுதான்.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அ..அது உங்களோடதான்..!!" அவள் ஆவேசமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உள்ளே அபி விழித்துக்கொண்டு, அழுகிற சத்தம் பெரிதாக கேட்டது. உடனே.. 'இதோ.. வந்துட்டேன்டா கண்ணா..' என்று மலர் எழுந்து உள்ளே ஓடினாள். அவசரமாய் பால் கலந்து ஃபீடிங் பாட்டிலில் அடைத்துக்கொண்டாள். குழந்தையை தூக்கிக்கொண்டு, ஹாலுக்கு வந்து என் எதிரே அமர்ந்தாள். அபி பசியில் இருந்திருப்பான் போல. அவன் பருக பருக, பரபரவென பாட்டிலில் இருந்த பாலின் அளவு குறைந்து கொண்டிருந்தது. நான் எதுவும் பேச தோன்றாமல், சோர்ந்து போனவனாய் சோபாவில் அமர்ந்திருந்தேன். செயலற்றுப்போய் அசைவில்லாமல் அமர்ந்திருந்தேன். மனதில் பலவித குழப்பங்கள் இப்போது..!! தலையை குனிந்து நெற்றியை கீறிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம்..!! அப்புறம் மெல்ல தலையை நிமிர்த்தி, மலரை ஏறிட.. அவள் இப்போது என்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அதே பார்வை..!! அன்று இரவு பார்த்தாளே.. அதே.. மயக்கும் மந்திரத்தனமான பார்வை..!! காதல் பார்வை..!!!!"இங்க பாருங்கத்தான்.. உங்க மனசு எனக்கு புரியுது..!! உங்களுக்கு இது ஷாக்கா இருக்கும்னு எனக்கும் தெரியும்..!! நீங்க மனசை போட்டு ரொம்பலாம் அலட்டிக்க வேணாம்.. நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்லி.. உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன்..!! அதே மாதிரி.. நீங்களும் என்னை வேற யாரையாவது கட்டிக்க சொல்லி கட்டாயப் படுத்தாதீங்க.. ப்ளீஸ்..!! என்னால அது முடியாது..!!" "என்னை கல்யாணம் செய்துக்கணும்னு நெனச்சா.. நீ காலம் பூரா இப்படியேதான் இருக்கணும் மலர்..!!" "பரவாலத்தான்.. இப்படியே உங்க முகத்தையும் அபி முகத்தையும் பாத்துக்கிட்டு.. காலத்தை கழிச்சுடுவேன் நான்.. கவலை இல்லை எனக்கு..!!" அவள் உறுதியாக சொல்ல, நான் ஓரிரு வினாடிகள் அவளுடைய கண்களையே கூர்மையாக பார்த்தேன். அப்புறம் ஒரு பெருமூச்செறிந்தவாறு சொன்னேன். "ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பன்னீருக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு மலர்..!!" "சொல்லித்தான் ஆகணும்..!! நீங்களே முடிவு பண்ணுங்க.. நீங்க சொல்றதா.. இல்ல நான் சொல்றதான்னு..!!" "அப்போ.. நீ உன் மனசை மாத்திக்கமாட்ட..?" "முடியாதுத்தான்..!! கஷ்டம்..!!" "முயற்சி செஞ்சு பாக்கலாம்ல..?" "அக்காவை மறக்க நீங்க ஏன் முயற்சி பண்ணல..?" "உன்கூட விவாதம் பண்ண நான் விரும்பலை மலர்.. இது உன் வாழ்க்கை..!! எது நல்லதுன்னு நீயே நல்லா யோசி.. யோசிச்சு நல்ல முடிவா எடு..!!" நான் இறுதியாக சொல்ல, அப்புறம் மலர் எதுவும் பேசவில்லை. வாயை இறுக மூடிக்கொண்டாள். அபி பாலை காலி செய்துவிட்டு, தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தான். மடியில் கிடந்த அவனுக்கு இதமாக, மலர் தன் காலை சீரான வேகத்தில் ஆட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்படி காலை ஆட்டிக் கொண்டே, கருவிழிகளை ஒருபக்கமாய் நகர்த்தி என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தாள். என்னை ஊடுருவி.. என் இதயத்தை துளைத்தெடுப்பது மாதிரியான பார்வை..!! அந்த பார்வையின் அனலை தாங்க முடியாமல், நான் தலையை குனிந்து கொண்டேன். அப்போதுதான் கதவை தள்ளிக்கொண்டு பன்னீர் உள்ளே வந்தார். நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த நிலையை பார்த்து அவர் சற்று குழம்பிப் போனார். நான் மலருடன் பேச்சு வார்த்தை நடத்த வந்திருக்கிறேன் என்று அவருக்கு தெரியும். 'நான் தெளிவாக அமர்ந்திருப்பேன்.. மலர் குழப்பமாக தலை கவிழ்ந்திருப்பாள்..' என்று எதிர்பார்த்திருப்பார் போலும். இங்கே நிலைமை தலைகீழாக இருக்க, அவருக்கு அது குழப்பத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். அது அவரது முகத்திலேயே தெளிவாக தெரிந்தது. அப்புறம் அன்று முழுவதும் யாரும் அந்த விஷயம் பற்றி பேசிக்கொள்ளவில்லை. சாப்பிடும்போது கூட பொதுவான விஷயங்கள்தான் பேசிக்கொண்டோம். நான் மலரை சம்மதிக்க வைத்திருப்பேன் என்று பன்னீராக ஒரு முடிவு கட்டியிருப்பார் போலிருக்கிறது. சகஜமாக இருந்தார். அடுத்த நாள் காலை நான் ஆபீஸ் கிளம்பி ரெடியாகி, என் அறையை விட்டு வெளியே வந்தபோது, பன்னீர் கிளம்பி சென்றிருந்தார். நான் மலரை தேடினேன். கிச்சனில் இருந்து சப்தம் வந்தது. எட்டிப் பார்த்தேன். மலர் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும், "ரெடியாயிடுச்சுத்தான்.. ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. எடுத்து வைக்கிறேன்.." சொல்லிவிட்டு, அவளுடைய வேலையை தொடர்ந்தாள். நான் இப்போது கிச்சனுக்குள் நுழைந்து, அவளை நெருங்கினேன். அவளுக்கு அருகே சென்று, என் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அவளையே முறைத்து பார்த்தேன். மலர் இப்போது நிமிர்ந்து என்னை பார்த்தாள். நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டே மென்மையாக கேட்டாள். "என்னத்தான்..?" "என்ன முடிவு பண்ணிருக்குற..?" நான் இறுக்கமான குரலில் கேட்டேன். "எதை பத்தி..?" "உன் மனசை மாத்திக்கிறதை பத்தி.." "நான் எப்போ என் மனசை மாத்திக்கிறதா உங்ககிட்ட சொன்னேன்..?" "நல்லா யோசின்னு நேத்து சொன்னனே..?" "ப்ச்.. காமடி பண்ணாதீங்கத்தான்..!! நீங்க எப்படி மனசுக்குள்ள அக்காவோட குடும்பம் நடத்திட்டு இருக்கீங்களோ.. அது மாதிரிதான் நானும் உங்களோட குடும்பம் நடத்திட்டு இருக்குறேன்..!! நேத்து வந்து நீங்க ரெண்டு டயலாக் விட்டவுடனே.. என் மனசு பட்டுன்னு மாறிடுமா..?" அவள் சொல்லிவிட்டு கேசுவலாக மீண்டும் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள். நான் எரிச்சலானேன். "புத்தியே இல்லையா உனக்கு..?" "ஆமாமாம்.. இருந்தா ஏன் உங்களை லவ் பண்ண போறேன்.?" அவள் வாய்க்குள் முணுமுணுத்ததை என்னால் யூகிக்க முடிந்தது. "என்னது..????" நான் முகத்தை சுருக்கியவாறு கேட்க, அவள் பாத்திரத்தை படார் என்று வாஷ் பேசினுக்குள் போட்டுவிட்டு, பட்டென என் பக்கம் திரும்பினாள். எரிச்சலாக கேட்டாள். "ப்ச்.. இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்..?" "என் மேல அப்படி என்ன உனக்கு லவ்வுன்னு தெரியனும்.." "அதான் நேத்தே சொன்னனே.. புரியலையா உங்களுக்கு..?" "எ..என்ன..?" மலர் இப்போது அமைதியானாள். வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டாள். சில வினாடிகள் எங்கேயோ வெறித்து பார்த்துவிட்டு, பின்பு மீண்டும் என் முகத்தை பார்த்தாள். இப்போது அவளுடைய அந்த காந்தப் பார்வை..!! என் கண்களில் புகுந்து, இதயத்தை வருட முயலும் காதல் பார்வை..!! அவள் குரலில் இருந்த எரிச்சல் சுத்தமாய் காணாமல் போய், மிகவும் கனிவுடன் பேசினாள். "இங்க பாருங்கத்தான்.. அக்கா மாதிரி ஒரு அதிர்ஷ்டக்காரி இருக்க முடியாது.. அதேபோல அவளை மாதிரி ஒரு துரதிர்ஷ்டக்காரியையும் பார்க்க முடியாது..!! நீங்க புருஷனா கெடைச்சது அவளோட அதிர்ஷ்டம்.. ஆனா ரொம்ப நாள் அந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாம போனது.. அவளோட துரதிர்ஷ்டம்..!!" "கயல் கிடைச்சதுக்கு நான்தான் மலர் கொடுத்து வச்சிருக்கணும்.." "ஹ்ஹா.. பொண்டாட்டி இருக்குறப்போவே அவளுக்கு துரோகம் பண்ண சான்ஸ் தேடுற ஆம்பளைங்களுக்கு மத்தில.. அக்கா போனப்புறமும் அவ நெனைப்பிலேயே வாழ்றீங்க..!! நீங்க கெடைச்சதுக்கு அக்காதான்-த்தான் கொடுத்து வச்சிருக்கணும்..!! அவளோட கெட்ட நேரம்.. கொஞ்ச நாள்லயே உங்களை விட்டு போயிட்டா..!!" "........" "அக்கா விட்ட எடத்துல இருந்து நான் ஆரம்பிக்கணும்னு.. ஆசைப்படுறேன்..!! அவகிட்ட இருந்து நழுவுன அந்த அதிர்ஷ்டம்.. என் கைல விழாதான்னு ஏங்குறேன்..!! ப்ளீஸ்த்தான்.. என்னை புரிஞ்சுக்குங்க.. என் காதலை ஏத்துக்கங்க.. உங்க காயத்துக்கு நான் மருந்தா இருப்பேன்..!! ப்ளீஸ்..!!" அவள் கண்கள் கலங்க உருக்கமாக சொன்னாள். அதை கேட்டு நான் இளகிக்கொண்டு இருக்கும்போதேதான், கொஞ்சம் கூட என் மனதை படிக்காதவளாய் அந்த வார்த்தைகளை சொன்னாள். அவ்வளவு நேரம் அவளுக்காக உருகிக் கொண்டிருந்தவனை, உடனடியாய் உக்கிரமாய் மாற்றிய வார்த்தைகள்..!! மேலே அவள் சொன்னதை தொடர்ந்து அதே ஃப்ளோவில் சொன்ன வார்த்தைகள்..!! "அக்கா இடத்துல நான் இருக்குறேன்.. அவளை விட நான் உங்களை நல்லா பாத்துப்பேன்...!!" அவ்வளவுதான்.. எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்ததோ..!! பெரிய குரலில் கத்தினேன்..!! "வாயை மூடு..!! கயலை மறக்கடிக்கிற எந்த காரியத்தையும் நான் பண்ணுறதா இல்ல..!! அவளோட இடம்.. இன்னொரு பொண்ணுக்கு கெடைக்கவே கெடைக்காது..!! அதை மொதல்ல புரிஞ்சுக்கோ.. நீ நெனைக்கிறதுலாம் நடக்காது மலர்..!!" இப்போது அவளும் எரிச்சலானாள். அவ்வளவு தூரம் அவள் உருகியும், நான் உஷ்ணமான வார்த்தைகளை கொட்ட, அவளும் இப்போது கோபமாய் சீறினாள். "அப்போ.. நீங்க நெனைக்கிறதும் நடக்காது..!!" சொல்லிவிட்டு வாஷ்பேசினில் கிடந்த பாத்திரத்தை எடுத்து பரபரவென தேய்க்க ஆரம்பித்தாள். "நான் என்ன நெனைக்கிறேன்..?" "என் மனசு மாறிடும்னு நெனைக்கிறிங்கல்ல..?" "நீ மாத்திக்கோ மாத்தாம போ.. அதைப்பத்தி எனக்கு கவலை இல்ல.." "அப்புறம்..??" "இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க.." "அதுக்கு..??" "அவங்க வந்துட்டு போகுறவரை கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்கோ.." "என்னால முடியாது..!! அவங்களை வரவேணாம்னு சொல்லிடுங்க..!!" "கடைசி நேரத்துல எப்படி வரக்கூடாதுன்னு சொல்றது..?""ஆரம்பத்துல வர சொல்றப்போ எங்கிட்ட கேட்டுட்டா வர சொன்னீங்க..? இதை மட்டும் வந்து கேக்குறீங்க..? ஒருவாரமா அவர்ட்ட சொல்லிட்டு இருக்குறேன்.. வேணாம் வேணாம்னு..!! இப்போ என்னை வந்து குறை சொன்னா..??" "எப்போ உனக்கு இவ்வளவு திமிர்த்தனம் வந்துச்சு மலர்..??" "நான் பேசுறது திமிரா தெரியுதா உங்களுக்கு..? இங்க பாருங்கத்தான்.. மனசுல உங்களை வச்சுக்கிட்டு.. இன்னொருத்தனுக்கு காபியை நீட்டி.. காட்சிப்பொருள் மாதிரி அவன் முன்னால என்னால நிக்க முடியாது..!! நெனச்சுப்பாக்கவே அருவருப்பா இருக்கு எனக்கு..!!" "ஏன்.. எதையுமே புரிஞ்சுக்காம பேசுற நீ..?" "நான் என்ன புரிஞ்சுக்கலை..?" "அந்தப்பையன் உன்னை பாக்குறதுக்காக.. லீவ்லாம் போட்டுட்டு.. ஹைதராபாத்ல இருந்து வர்றான்.." "தேவலோகத்துல இருந்து குதிச்சே அவன் வரட்டுமே.. என்ன இப்போ..?" "ப்ச்..!! ரொம்ப நல்ல பையன் மலர்.. எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. கை நிறைய சம்பாதிக்கிறான்..!!" "கடவுளாவே இருக்கட்டும், கவலை இல்லைன்றேன்.. என்ன பேசுறீங்க நீங்க..?" "இப்டி எதுத்து எதுத்து பேசிட்டு இருந்தா.. அப்டியே அறைஞ்சிடுவேன் மலர்.." சொன்னவாறு நான் கையை ஒங்க, "அறைங்க.. ஆத்திரம் போற வரை நல்லா அறைஞ்சிட்டு போங்க.." அவள் கன்னத்தை திருப்பி, நான் அறைவதற்கு வாட்டமாய் காட்டினாள். "ச்சை..!! பைத்தியம்தான் புடிச்சிருக்கு உனக்கு..!!" "ஆமாம்.. பைத்தியந்தான்..!!" "முடிவா என்னதான் சொல்ற..?" "என் முடிவை எப்போவோ சொல்லிட்டேன்..!!" "எனக்கு அதுலாம் தெரியாது.. ஈவினிங் அவங்க வர்றப்போ.. நீ ரெடியா இருக்கணும்.. அவ்ளோதான்..!! இல்லனா.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!!" ஆத்திரமாய் சொல்லிவிட்டு நான் கிச்சனை விட்டு வெளியே வந்தேன். கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தேன். "இருங்கத்தான்.. சாப்பிட்டு போங்க.." காதில் வந்து விழுந்த.. கவலை தோய்ந்த மலரின் வார்த்தைகளை.. கண்டுகொள்ளாமல்.. கதவை அறைந்து சாத்தி வெளியேறினேன். அன்று மதியம் மூன்று மணிக்கெல்லாம் நானும் பன்னீரும் ஆபீசில் இருந்து காரில் கிளம்பினோம். மலர் அடித்த கூத்துக்களை பற்றி, பன்னீரிடம் நான் மூச்சு விடவில்லை. பஸ் ஸ்டாண்ட் சென்று பெண் பார்க்க வந்தவர்களை பிக்கப் செய்து கொண்டோம். முகுந்த், வைபவ், அவர்களுடைய அம்மா, முகுந்தின் மூன்று வயது குட்டிப்பெண்.. என நான்கு பேராய் வந்திருந்தார்கள். எல்லோரும் கலகலப்பாய் ஏதோ பேசிக்கொண்டே வர.. எதிலும் கலந்து கொள்ள முடியாமல்.. எண்ணம் முழுவதும் கவலையும் குழப்பமுமாய் நான் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன்..!! வீட்டை அடைந்த போது ஐந்து மணியை நெருங்கியிருந்தது. கதவை திறந்துவிட்ட மலர், என்னை ஒரு முறை முறைத்துவிட்டு, உள்ளறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள். வந்தவர்களை சோபாவில் அமர செய்து, அவர்களுக்கு இனிப்பு, காரம் எடுத்துக் கொடுக்குமாறு பன்னீரிடம் பார்வையாலேயே உணர்த்திவிட்டு, நான் மலர் இருந்த அறையை நோக்கி நடந்தேன். மலர் அபியுடன் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். அபியை சுற்றி கலர் கலராய், குட்டி குட்டியாய், பிளாஸ்டிக் பந்துகள் இறைந்து கிடந்தன. அதற்கு நடுவில் ஒரு பெரிய கண்ணாடி பவுல் இருந்தது. 'இந்த பால்-டா கண்ணா.. இந்த பால்..' என்று மலர் ஒவ்வொரு பந்தாக விரல் நீட்ட, அபி தன் பிஞ்சுக்கையால் அவள் சொன்ன பந்தை, சரியாக பொறுக்கி பவுலில் போட்டுக் கொண்டிருந்தான். நான் வந்தது நின்றதை இருவரும் கண்டு கொள்ளவே இல்லை. விளையாட்டை தொடர்ந்தார்கள். நான் கொஞ்ச நேரம் மலரையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் பொறுமையில்லாமல், குரலில் கடுகடுப்பை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். "என்ன பண்ணிட்டு இருக்குற நீ..?" "என்ன பண்ணிட்டு இருக்குறானா.. பாத்தா தெரியலை..? என் பையனோட வெளையாண்டுக்கிட்டு இருக்குறேன்..!!" மலர் கிண்டலான குரலில் சொன்னாள். "ப்ச்.. வெளையாண்டது போதும்.. எந்திரிச்சு வா.. அவங்க வந்துட்டாங்க..!!" "அவங்க வந்தா..? அதுக்கு நான் என்ன பண்ணுறது..?" "முகத்தை கழுவிக்கோ.. லைட்டா பவுடர் போட்டுக்கோ.. ஏதாவது பட்டுப்புடவையை கட்டிக்கிட்டு.. வந்தவங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா.." "அது என்னால முடியாது..!! வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க..!!"அவள் அலட்சியமாய் சொல்ல, எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. எக்கச்சக்கமாய் எரிச்சல் அவள் மீது..!! சத்தம் போட்டால் ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்டுவிடப் போகுது என்று.. குரலில் மட்டும் கோபத்தை குழைத்துக் கொண்டு.. கிசுகிசுப்பாகவும் கடுமையாகவும் சொன்னேன்..!! "மலர்..!! நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல..!! என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்குற உன் மனசுல..??" மலர் இப்போது நிமிர்ந்து என் முகத்தை பார்த்து முறைத்தாள். அவளுடைய பார்வையில் அப்படி ஒரு உஷ்ணம்..!! சீற்றமாக சொன்னாள். "ஓ..!! என் மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கேன்னு தெரியனுமா..?? ஓகே.. சொல்றேன்..!! வாங்க..!!" என்றவள் அவசரமாய் எழுந்தாள். ஒரு கையில் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டாள். இன்னொரு கையால் எனது கையை இறுக்கமாக பற்றி, என்னை இழுத்து சென்றாள். 'ஏய்.. மலர்.. என்ன பண்ற நீ..?' என்று நான் பதறிக் கொண்டு இருக்கும்போதே, என்னை கொண்டு போய் ஹாலில் நிறுத்தினாள். காபிக்காக ஹாலில் காத்திருந்தவர்கள் நிமிர்ந்து, கலவரமாக எங்கள் இருவரையும் பார்த்தார்கள். பன்னீர் எதுவும் புரியாமல் திகைப்பாய் எங்களை ஏறிட்டார். மலர் படபடவென உரத்த குரலில் அவர்களை பார்த்து பேச ஆரம்பித்தாள். "நீங்கதான் என்னை பொண்ணு பார்க்க வந்தவங்களா..?? எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. என்னை நீங்க பொண்ணு பாக்க வந்ததுல எனக்கு இஷ்டம் இல்ல..!! இதோ நிக்கிறாரே.. இவர் பேர் அசோக்.. என் அத்தான்.. இவரைத்தான் நான் விரும்புறேன்.. கட்டிக்கிட்டா இவரைத்தான் கட்டிக்கணும்னு முடிவோட இருக்குறேன்.. இவர்தான் என் புருஷன்னு மனசுக்குள்ள இவரோட குடும்பம் நடத்திட்டு இருக்குறேன்..!! கைல இருக்குறது இவருக்கும் என் அக்காவுக்கும் பொறந்த குழந்தை.. இப்போ என் குழந்தை ஆயிடுச்சு.. நான்தான் இவனுக்கு அம்மா..!! இந்த வீடு.. என் புகுந்த வீடு.. என் புருஷன் இருக்குற வீடு.. அப்டி நெனச்சுத்தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இந்த வீட்டை விட்டு வேற எங்கேயும் வர்ற மாதிரி எனக்கு ஐடியா இல்ல..!! எல்லாரும் சிரமப்பட்டு இங்க வந்துருப்பீங்கன்னு நெனைக்கிறேன்.. உங்களோட சிரமத்துக்குலாம் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்..!! என்னை மன்னிச்சிடுங்க..!!" மலர் பேச பேச.. அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனார்கள். நடப்பதை எல்லாம் நம்ப முடியாமல் திகைப்பாய் பார்த்தார்கள். ஸோஃபாவில் இருந்து மெல்ல ஸ்லோ மோஷனில் எழுந்தார்கள். பன்னீர் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தார். மாப்பிள்ளை பையன் பாதி கடித்திருந்த பால்கோவாவை பட்டென தட்டில் போட்டான். பேசக் கூட நா எழாதவர்களாய், அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். எனக்கோ பன்னீருக்கோ அவர்களை தடுக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. முகுந்த் மட்டும் என்னை ஏறிட்டு.. "என்ன அசோக் இது.. இதுலாம் முன்னாடியே சொல்றது இல்லையா..?" என்று சலிப்பாய் சொல்லி, என்னை தலை குனிய வைத்தான்.

அவர்கள் அந்தப்பக்கம் சென்றதுதான் தாமதம்.. இந்தப்பக்கம் மலருடைய கன்னத்தில் 'பொளேர்ர்..!!' என்று ஒரு அறை விழுந்தது..!! எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாத பன்னீர்தான், இப்போது ரவுத்திரமாயிருந்தார். மகளை கை நீட்டி அறைந்திருந்தார். கன்னத்தில் அறை விழுந்த வேகத்தில் மலர் ஸோபாவில் சென்று பொத்தென்று விழுந்தாள். நடப்பதை உணர்ந்துகொண்டு நான் சுதாரிக்கும் முன்பே, பன்னீர் தன் புறங்கையை இன்னொரு முறை வீச.. மலருடைய இன்னொரு கன்னமும் 'பளார்ர்ர்...' என அறை வாங்கி சிவந்தது. "ஐயோ.. என்ன பன்னீர் நீ..? அவதான் அறிவில்லாம நடந்துக்குறான்னா.. நீயும்..?" சொன்னவாறே நான் பன்னீரை வளைத்து பிடித்து தடுத்தேன். "விடு அசோக்கு.. ரொம்ப செல்லம் கொடுத்து.. கொடுத்து.. கொழுப்பு ஏறிப் போச்சு இவளுக்கு.. திமிர் புடிச்ச கழுதை..!!" பன்னீரை தடுத்து நிறுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. அவரை சமாளித்து சமாதானப் படுத்துவதற்குள், நான் திணறிப் போனேன். ஆனால் கன்னத்தில் விழுந்த அறைக்காக, மலர் கொஞ்சம் கூட கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. நினைத்ததை சாதித்துவிட்ட திருப்திதான் அவளுடைய முகமெங்கும் நிறைந்து கிடந்தது. எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து மட்டும், கண்ணீர் பொலபொலவென வடிந்து கொண்டிருந்தது. அவளோடு சேர்ந்து இப்போது அபியும் அழ ஆரம்பிக்க, மலர் அவனை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளுடைய கண்கள் இப்போது அதிகப்படியான நீரை கொட்ட ஆரம்பித்தன. அடுத்த நாள் மதியம், என்னை சாப்பாட்டுக்கு அழைக்க பன்னீர் வரவில்லை. 12.45 வரை காத்திருந்துவிட்டு, நான் என் கேபின் விட்டு வெளியே வந்தேன். ஃப்ளோரில் பன்னீரை காணவில்லை. குழப்பத்துடனே நடந்து கேண்டீன் சென்றேன். அங்கேயும் அவரை காணவில்லை. எதிரே வந்த ஒரு தொழிலாளியிடம், "பன்னீரை பாத்தியா..?" என்று கேட்க, அவன் "கேண்டீன் பின்னால நிக்கிறாரு ஸார்.." என்றுவிட்டு போனான். நான் கேண்டீன் பின்பக்க கதவை நோக்கி நடந்தேன். கதவு திறந்து வெளியே சென்றேன். புளிய மரத்துக்கு கீழே புகை விட்டவாறு நின்ற பன்னீர், பார்வைக்கு கிடைத்தார். நான் மெல்ல நடந்து அவரை நெருங்கினேன். நேற்று சம்பவத்திற்கு பிறகு இப்போதுதான் அவரிடம் பேசுகிறேன். "சாப்பிடலையா..?" என்றேன். "பசிக்கல.." என்றார் வெறுமையான குரலில். "ஒரு தம் கொடு.." "நீ சாப்பிடலையா..?" "எனக்கும் பசிக்கலை.." பன்னீர் இப்போது நிமிர்ந்து என்னை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தார். பின்பு மேல் சட்டையிலிருந்து அந்த கோல்ட் பில்டர் பாக்கெட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் ஒரு சிகரெட்டை மட்டும் உருவிக் கொண்டேன். உதட்டில் பொருத்திக் கொண்டேன். அவர் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி, எனது உதட்டில் இருந்த சிகரெட்டின் தலையில் நெருப்பு வைத்தேன். இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக புகை விட்டுக் கொண்டிருந்தோம். பின்பு பன்னீரே மெல்லிய குரலில் ஆரம்பித்தார். "எனக்கு இன்னும் ஒரு மாசம் டைம் கொடு அசோக்கு.." "எதுக்கு..?" நான் புரியாமல் கேட்டேன். "நான் என் பொண்ணை கூட்டிக்கிட்டு.. என் வீட்டுக்கே போயிர்றேன்..!! இப்போவே சொன்னா.. வீட்டுல குடியிருக்குறவங்க.. ஒரு மாசத்துல காலி பண்ணிடுவாங்க..!!" அவர் சொன்னதை கேட்டு நான் திகைத்தேன். "எ..என்ன பேசுற நீ..? இப்டிலாம் பேசாத பன்னீர்.. அப்புறம் நான் கடுப்பாயிடுவேன்..!!" "ச்சே.. நான் அதுக்காக சொல்லல அசோக்கு.." "நீ எதுக்காகவும் சொல்ல வேணாம்.. எதுக்காகவும் என்னை விட்டு பிரியவும் வேணாம்..!! நீ எப்போவும் என் கூடத்தான் இருக்கணும்..!! புரியுதா..?" "இவ்ளோ நடந்தப்புறம் நான் எப்படி உன்கூட இருக்க முடியும்..? இனிமேலும் நாங்க உன் வீட்டுல இருக்குறது நல்லது இல்ல அசோக்கு.." "ஐயோ.. நீ என்னை விட்டு போறதால.. எந்த பிரச்னையும் சால்வ் ஆகப் போறது இல்ல பன்னீர்..!!" "அப்புறம்..?? வேற என்ன பண்ணலாம்னு சொல்ற..??" "அவ புத்தி இல்லாம இப்டிலாம் நடந்துக்குறா.. லவ்வு அது இதுன்னு பைத்தியம் மாதிரி உளர்றா..!! அவளை அடிச்சுலாம் திருத்த முடியாது.. அன்பா பேசித்தான் அவளை நம்ம வழிக்கு கொண்டு வரணும்..!! இதுலாம் தப்புன்னு நீ அவளுக்கு சொல்லி புரிய வை.. அவளை கண்டிச்சாலே எல்லாம் சரியா போயிடும்.. அவ மனசை நிச்சயமா நம்மால மாத்த முடியும்..!!" நான் சொல்லிக்கொண்டிருக்க, பன்னீர் இப்போது தன் நெற்றியை சுருக்கினார். "ஓ..!! நீ அப்டி நெனச்சுக்கிட்டு இருக்கியா..??" என்று அவர் சொன்னது எனக்கு புரியவில்லை.எப்டி..?" என்றேன் குழப்பமாய். "இங்க பாரு அசோக்கு.. நான் நேத்து அவளை அறைஞ்சது.. அத்தனை பேர் முன்னாடி உன்னை அவமானப் படுத்தினதுக்காக..!! உன்னை விரும்புறேன்னு சொன்னதுக்காக இல்ல..!!" அவர் தெள்ளத்தெளிவாய் சொல்ல, நான் இப்போது தடுமாறினேன். "ப...பன்னீர்.. எ..என்ன சொல்ற நீ..?" "ஆமாம்.. உனக்கு புரியலையா..? வேற எதுக்கு அவளை அறைஞ்சேன்னு நெனச்ச..? பொண்ணு பாக்க வந்தவங்க முன்னாடி உன்னை அவமானப் படுத்துனத்தை தவிர.. என் பொண்ணு வேற என்ன தப்பு பண்ணிட்டா..? ஒரு அயோக்கியனை லவ் பண்றேன்னு சொல்லிட்டு வந்து நின்னா.. அவளை கண்டிக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு..!! அவ உன்னைல லவ் பண்றேன்னு சொல்றா..? என்ன சொல்லி என் பொண்ணை கண்டிக்க சொல்ற அசோக்கு..?? அவளை எதுத்து பேசுறதுக்கு எனக்கு ஏதாவது பாயிண்ட்டு சொல்லு பாப்போம்..? இல்ல.. திருத்துற அளவுக்கு என் பொண்ணு என்ன தப்பு பண்ணிட்டான்னாவது சொல்லு..!!" அவர் பேச பேச.. நான் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தேன். பன்னீரிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வரும் என்று நான் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசக்கூட, எனக்கு நாவெழவில்லை. அதிர்ந்து போன முகத்துடன் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினார். "என் பொண்ணுக்கு எவ்வளவு துணிச்சல்னு நேத்தே பாத்தேல..? அவ மனசை மாத்த முடியும்னுலாம் எனக்கு தோணலை அசோக்கு.. மாத்துறதுக்கும் நான் முயற்சி பண்ண போறதும் இல்ல.. முடிஞ்சா நீ உன் மனசை மாத்திக்கோ..!!" தீர்க்கமாக சொன்ன பன்னீர், தீர்ந்து போன சிகரெட்டை காலில் போட்டு மிதித்து நசுக்கிவிட்டு, என் பதிலுக்கு கூட காத்திராமல் என்னை கடந்து சென்றார். நான் செயலிழந்தவனாய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். அப்புறம் சிகரெட் நெருப்பு என் விரல்களை சுட.. சுய நினைவு வந்து வெடுக்கென அதை உதறினேன்..!!

No comments:

Post a Comment