Friday, 6 September 2013

நெஞ்சோடு கலந்திடு.. 2


இரண்டே நிமிடத்தில் அந்த அப்பார்ட்மன்ட்சை அடைந்தார்கள். வேகத்தை குறைத்து பிரேக் இட்டதும் சித்ரா இறங்கிக்கொண்டாள். க்ளட்சை பிடித்தவாறே.. "நான் ரூம் போயிட்டு அப்புறம் வரேன்க்கா.." என்றான் அசோக் எஸ்கேப் ஆகும் எண்ணத்துடன். "மேல வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." சித்ரா கடுகடுப்புடன் சொல்லிவிட்டு அவனை கடந்து செல்ல, அசோக்கிற்கு வேறு வழி தெரியவில்லை. பைக்கை ஓரமாக நிறுத்தி லாக் செய்துவிட்டு, தன் அக்காவின் பின்னால்.. அறுக்கப்போகிற ஆடு மாதிரி நடந்து சென்றான். லிஃப்டில் ஏறிக்கொண்டார்கள். நாலாவது ஃப்ளோர் வந்து லிஃப்ட் விட்டு இறங்கும் வரை சித்ரா எதுவும் பேசவில்லை. உம்மென்று இருந்தாள். அசோக்கும் தேமே என்று விழித்தவாறே சென்றான்.

கதவை திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழையும் போதுதான் சித்ரா ஆரம்பித்தாள். ரொம்பவே இறுக்கமான குரலில் கேட்டாள். "திவ்யாவுக்கா..? வேற எவளுக்குமா..?" "எ..எது..?" என்றான் அசோக்.. திணறலாகவும், புரியாதவன் மாதிரியும். "நடிக்காதடா..!! உன் பேக்ல இருக்குற அந்த கார்டும் ரோஸும் யாருக்குன்னு கேட்டேன்..!!" "அ..அது.." "ம்ம்.. சொல்லு.." அசோக் தடுமாறினான். அவன் அக்கா கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, அவன் கண்களையே கூர்மையாக பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! அசோக்கிற்கு தான் மாட்டிக்கொண்டோம் என்பது தெளிவாக விளங்கிப் போனது. இனியும் எதையும் மறைக்க முடியாது என்று தோன்றியது. சொல்லிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். அக்காவின் பார்வை உஷ்ணத்தை தாங்க முடியாமல்.. தலையை குனிந்தவாறே.. தயங்கி தயங்கி சொன்னான். "தி..திவ்யாதான்..!! வே..வேற யாரு..??" அவன் சொல்லி முடிக்கும் முன்பே, சித்ரா பட்டென உச்சபட்ச கோபத்துக்கு சென்றிருந்தாள். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது. பார்வையின் வெப்பம் பலமடங்கு அதிகரித்தது. குரலை உயர்த்தி கத்தினாள். "உனக்குலாம் புத்தின்றதே கொஞ்சம் கூட கிடையாதா..??" "என்னாச்சு இப்போ..?" "பின்ன என்ன.. உலகத்துல வேற பொண்ணே உனக்கு கிடைக்கலையா.. லவ் பண்றதுக்கு..?" "ஏன்.. திவ்யாவுக்கு என்ன..? அவளுக்கென்ன கொறைச்சல்..??" "என்ன கொறைச்சலா..?? என்ன இருக்கு அவகிட்ட..?? திமிரு.. புடிவாதம்.. தான்தான்ற அகம்பாவம்..!! காலேஜ் நாள்லயே எட்டு மணிக்குத்தான் எந்திரிக்கும் சோம்பேறி கழுதை.. திங்கிறதுக்கு என்ன இருக்குன்னு பாக்குறதுக்கு தவிர கிச்சன் பக்கமே எட்டிப் பாக்க மாட்டா..!! யார்கிட்ட எது பேசுனாலும் ஒரு எதிர் வாதம்..!! இவளை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்திடலாம்னு நீ நெனைக்கிறியா..?" "ப்ச்.. இதுலாம் ஒண்ணும் பெரிய கொறையா எனக்கு தெரியலைக்கா.. மேரேஜ் ஆயிட்டா.. எல்லாம் சரியாயிடுவா..!!" அசோக்கும் இப்போது சற்றே தைரியமாக பேசினான். "கிழிச்சா..!! ஒன்னு சொல்புத்தி இருக்கனும்.. இல்லனா சுயபுத்தி இருக்கனும்.. இவளுக்கு ரெண்டும் கெடயாது..!!! இவளாவது திருந்துறதாவது..? இவ கடைசி வரை இப்படியேத்தான் இருக்கப் போறா..!!" "நீ சொல்ற மாதிரிலாம் இல்லக்கா அவ.. ரொம்ப நல்லவ..!! உனக்கு அவ மேல காரணமே இல்லாம கண்மூடித்தனமா கோவம்.. அதான் எல்லாமே தப்பா தெரியுது..!!" அசோக் அப்படி சொன்னதும், சித்ரா அவனை ஒருமாதிரி வித்தியாசமாக பார்த்தாள்.ஓஹோ..? நான்கூட என்னவோ நெனச்சேன்.. நல்லாத்தாண்டா உன்னை மயக்கி வச்சிருக்கா..!! எங்க போனாலும் ரெண்டு பேரும் ஒண்ணா போறதும்.. ஒண்ணா வர்றதும்.. இளிச்சு இளிச்சு அவ உன்கிட்ட பேசுறதும்..!! அப்போவே நெனச்சேன்..!!" "அக்கா.. என்ன பேசுற நீ..?? அவ ஒன்னும் அப்படிலாம் இல்ல..!! நான்தான் அவளை லவ் பண்றேன்.. அவ அந்த மாதிரிலாம் என்கிட்டே எப்போவும் பேசுனது இல்ல.. நானும் அவகிட்ட எதுவும் சொன்னது இல்ல..!! இன்னைக்குத்தான் என் மனசுல உள்ளதை அவகிட்ட சொல்லலாம்னு.." "ஓஹோ..?? இன்னைக்குத்தான் உங்க காதலை அந்த மகாராணிகிட்ட சொல்லப் போறீங்களோ..?" "ம்ம்.. ஆ..ஆமாம்.." "இங்க பாரு அசோக்.. அக்கா சொல்றதை கேளு..!! அந்த கார்டை கிழிச்சு குப்பைல போட்டுட்டு உன் ரூமுக்கு போ.. அவளை மறந்திடு..!! அவளை விட சூப்பரான பொண்ணா.. அக்கா உனக்கு பார்த்து கட்டி வைக்கிறேன்..!! அக்காவை நம்பு.. அக்கா சொன்னா கேட்பேல..?" "ம்ஹூம்.. எ..எனக்கு திவ்யாதான் வேணும்.." "ஐயோ..!! ஏண்டா இப்படி என்னை வதைக்கிற..? இப்போத்தான் ஒண்ணை பேசி சமாளிச்சு.. அடக்கி வச்சிருக்கேன்.. இப்போ நீ ஆரம்பிக்கிற..?" "அடக்கி வச்சிருக்கியா..? அது யாரை..?" "ம்ம்..?? உன் அத்தானை..!!" "எதுக்கு..?" "திவ்யாக்கும் உனக்கும் முடிக்கலாம்னு அவருக்கு ஒரு ஆசை.. 'உன் தம்பி ஒத்துப்பானா..?'ன்னு எங்கிட்டயே வந்து கேக்குறாரு..!! அதுலாம் வேணாம்னு சொல்லிப்பாத்தேன்.. அப்புறமும் விடாம நைசா ரெண்டு தடவை கேட்டாரு..!! வந்துச்சு எனக்கு கோவம்.. புடிச்சு ரெண்டு ஏறு ஏறுனேன்.. அந்த மாதிரி நெனைப்புலாம் மனசுல வச்சுக்கவே வச்சுகாதீங்கன்னு..!! போட்ட போடுல.. இப்போத்தான் வாயை மூடிக்கிட்டு கம்முனு கெடக்காரு..!! பிரச்னை முடிஞ்சதுன்னு நான் நிம்மதியா இருக்குறேன்.. இப்போ நீ புதுசா ஆரம்பிக்கிற..?" "புதுசாவா..?? நான் சின்ன வயசுலயே ஆரம்பிச்சுட்டேன்க்கா.. அப்போ இருந்தே.. அவதான் என் பொண்டாட்டின்னு நெனச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்..!!" "எ..என்னடா சொல்ற..??" சித்ராவின் முகத்தில் இப்போது ஒரு கலக்கம் தெளிவாக தெரிந்தது. "இங்க பாருக்கா..!! அத்தானை வேணா நீ ஈசியா மாத்திருக்கலாம்.. இவன் இல்லைன்னா இன்னொரு மாப்பிள்ளையை தங்கச்சிக்கு பாக்கலாம்னு.. அவரும் ஈசியா மனசை மாத்திட்டு இருந்திருப்பாரு..!! ஆனா.. என்னை அவ்ளோ ஈசியா மாத்திற முடியாது.. திவ்யா இல்லன்னா இன்னொருத்தின்னு.. என் மனசு என்னைக்கும் நெனைக்காது..!!" அசோக் உறுதியாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல, சித்ரா ஆடிப்போனாள். உடல் சோர்ந்து போன மாதிரி அவளுக்கொரு உணர்வு. தன் தம்பியின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சற்றே மெல்லிய குரலில் கேட்டாள். "ஓ..!! அப்போ நீ அக்கா சொல்றதை கேட்கமாட்ட..? அவதான்னு முடிவே பண்ணிட்ட..?" "ஆமாம்..!! அவளைத்தான் காதலிக்கிறேன்.. அவளைத்தான் கட்டிப்பேன்..!!" அசோக் சொல்ல, "அப்போ.. உனக்கு அக்கான்னு ஒருத்தி இருக்குறதையே மறந்துடு..!!" வெடுக்கென சொல்லிவிட்டு சித்ரா உள்ளே நடந்தாள். அசோக் பதறிப் போனான். ஒரு கணம் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தவன், அப்புறம் சுதாரித்துக்கொண்டு அக்காவின் பின்னால் ஓடினான்."அக்கா.. நில்லுக்கா.. என்ன பேசுற நீ..?" "பின்ன என்னடா..? அவதான் முக்கியம்னா போ.. 'ஐ லவ் யூ'ன்னு அவகிட்ட போய் சொல்லு.. அவளும் ஈன்னு இளிச்சுக்கிட்டு.. 'ஸேம் டூ யூ'ன்னு சொல்வா..!! ரெண்டு பேரும் காதல் பண்ணுங்க.. கல்யாணமும் பண்ணிக்கோங்க..!! ஆனா.. உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்னு மட்டும் கனவுலயும் நெனச்சிடாத.." சித்ரா படபடென பொரிந்து தள்ள, "அக்கா.. என்னக்கா இது.." சித்ராவின் தோளைப் பற்றியவாறு அசோக் பரிதாபமாக சொன்னான். "சத்தியமா வரமாட்டேன் அசோக்..!! என் கல்யாணத்தப்ப.. என் கையை பிடிக்க வராம.. ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவ அவ..!! அவ கல்யாணத்துக்கு எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு நான் வந்து நிப்பேன்..? சத்தியமா வரமாட்டேன்..!!" "ஐயோ.. இப்டிலாம் பேசாதக்கா..!! ஏன்க்கா இப்படி இருக்குற..? சின்ன வயசுல போட்ட சண்டையை இன்னும் மனசுல வச்சுக்கிட்டு.. மறக்காம..??" "மறக்கவா..?? இதை போய் அவகிட்ட சொல்லேன்.. அவ மறக்குறாளான்னு பார்ப்போம்..!! நானா மறக்க மாட்டேன்னு புடிவாதம் பண்ணிட்டு கெடக்குறேன்..?? இன்னமும் சாப்பாட்டை டைனிங் டேபிள்ள எடுத்து வச்சிட்டு.. நான் என் ரூமுக்குள்ள போயி கதவை மூடிக்கனும்.. அப்புறந்தான் அவ வெளில வந்து சாப்பிடுவா..!! சாப்பிடுறப்போ அவ கண்ணுலேயே நான் படக்கூடாது.. பட்டுட்டா அவ்வளவுதான்.. போட்டுட்டு அப்படியே ஓடிடுவா..!! அவ டிவி பாக்குறப்போ நான் டிவி பார்க்க கூடாது.. அவ திங்க்ஸ் எதுவும் நான் தொடக்கூடாது.. அவ இப்படி வந்தா அப்படி போகணும்.. அப்படி வந்தா இப்படி போகணும்..!! அக்கா நொந்து போயிருக்கேண்டா அசோக்.. என்னவோ நான்தான் எதையும் மறக்காம.. எல்லாத்தையும் மனசுல வச்சிக்கிட்டு இருக்குறதா சொல்ற..!! நானா மறக்க மாட்டேன்றேன்..??" ஆத்திரமாக பேச ஆரம்பித்த சித்ராவின் குரல், முடிக்கும்போது அப்படியே தழதழத்து போனது. அவளுடைய கண்கள் கலங்கிப் போயின. வேறுபுறமாக திரும்பி கண்களை துடைத்துக் கொண்டாள். மூக்கை லேசாக விசும்பிக் கொண்டாள். அசோக்கை பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தாள். அசோக்கிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சித்ரா தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாள் என்பது அவன் எதிபார்த்ததுதான். ஆனால் இந்த அளவிற்கு இருக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திரவில்லை. திவ்யாவின் காதலை பெற்ற பிறகு அக்காவின் சம்மதத்தை வாங்கலாம் என்று நினைத்திருந்தான். ஆனால்.. இப்போது அது இயலாது போலிருகிறது..!! அக்கா அவள் பக்க நியாயங்களை, அழுகையுடனே எடுத்துரைக்க.. நிச்சயமாய் குழம்பிப் போனான்..!! அக்காவுடைய சம்மதம்தான் இப்போது பிரதானமாக தெரிந்தது..!! நிதானித்தான். யோசித்தான். அத்தானும் இப்போது அவனுக்கு சாதகமான மனநிலையில்தான் இருக்கிறார். அக்காதான் இடையில் தடைக்கல்லாக நிற்கிறாள். அக்காவும், திவ்யாவும் மனமாறி கைகுலுக்கிக் கொண்டால், அவனும் திவ்யாவும் மணமாகி கைபற்றுவது எளிதாகிவிடும் என்று தோன்றியது. திவ்யாவிடம் தன் காதலை சொல்வதை தற்காலிகமாக தள்ளிப்போடுவது என முடிவு செய்தான். தொண்டையை லேசாக செருமிக்கொண்டு சொன்னான். "சரிக்கா.. நான் அவகிட்ட இன்னைக்கு எதுவும் சொல்லல.. கொஞ்ச நாள் போகட்டும்.. நாம பேசி நல்ல முடிவா எடுக்கலாம்..!!" அசோக் அப்படி சொன்னதுமே சித்ராவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்..!! தன் தம்பியையே நம்பமுடியாமல் பார்த்தாள். அவளுடைய கண்கள் மீண்டும் பனித்துக் கொண்டன. விழிநீருடனே.. வியப்பும், மகிழ்ச்சியுமாய் கேட்டாள்..!! "அ..அசோக்.. நெ..நெஜமாவா சொல்ற..?" "ஆமாக்கா.." "தேங்க்ஸ்டா தம்பி.. தேங்க்ஸ்..!! அக்கா மேல நீ வச்சிருக்குற நம்பிக்கைக்கு..!! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..!!" "ம்ம்.." "ஆ..ஆனா.. அக்கா உனக்கு எப்போவும் நல்லதுதான் நெனைப்பேன்.. சரியா..?? அதை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கோ..!!எனக்கு தெரியும்க்கா..!!" "என் மேல கோவம்லாம் இல்லைல..?" "சேச்சே.. அதெல்லாம் ஒன்னுல்லக்கா..!! சரி.. நான் ரூமுக்கு போறேன்..!!" "இருடா.. காபி போடுறேன்.. சாப்பிட்டு போ.." "பரவால்ல.. நான் ஆபீஸ்ல இருந்து கெளம்பும்போதே.. சாப்பிட்டுத்தான் வந்தேன்..!! கெளம்புறேன்..!!" அசோக் சொல்லிவிட்டு கிளம்பினான். வீட்டை விட்டு வெளியே வந்தான். லிஃப்டுக்காக காத்திருந்தான். அவன் மனதில் இப்போது ஏகப்பட்ட குழப்பம்..!! திவ்யாவின் மனதில் என்ன இருக்கிறது என்று இன்று தெரிந்துவிடும் என்று எண்ணியிருந்தவனுக்கு எதிர்பாராத வகையில் ஏமாற்றம்..!! அக்காவுக்கும் திவ்யாவுக்கும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாய் ஏற்பட்ட சண்டை.. இப்போது இப்படி விஸ்வரூபம் எடுத்து இவன் காதலுக்கு குறுக்காக நிற்பது.. நினைக்க நினைக்க அவன் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..!! லிப்ட் மேலே வந்தது.. திறந்தது..!! அது திறந்ததும் அசோக் சின்னதாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானான்..!! திவ்யா லிப்டுக்குள் இருந்து வெளிப்பட்டாள். இவனை பார்த்ததும் முகம் மலர்ந்தாள். "ஹாய் அசோக்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?" என்று ஆச்சரியப்பட்டாள். "சு..சும்மாதான் திவ்யா.." "நானே உன் ரூமுக்கு வரணும்னு நெனச்சுட்டு இருந்தேன்.. பரவால.. நீயே இங்க வந்துட்ட..!!" "என்ன விஷயம்..?" "வா.. உள்ள வா.. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..!!" அசோக்கின் கையை உரிமையாகப் பற்றி, மீண்டும் அவனை வீட்டுக்கு இழுத்து சென்றவள், வீட்டு வாசலில் தன் அண்ணி நின்றிருப்பதை பார்த்ததும், பட்டென அவன் கையை விடுவித்தாள். தலையை குனிந்தவாறு.. "என் ரூமுக்கு வா.." என்று சன்னமான குரலில் அசோக்கிடம் சொல்லிவிட்டு தன் அண்ணியை கடந்து சென்றாள். விடுவிடுவென நடந்து வீட்டுக்குள் விரைந்தாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சித்ரா தன் தம்பியிடம் திரும்பி கேட்டாள். "அப்படி என்ன முக்கியமான விஷயமாம்..?" "எ..எனக்கு தெரியலைக்கா.." "சரி போ.. போய் பேசு.." "ம்ம்ம்.." சொல்லிவிட்டு அசோக் சித்ராவை கடக்க, "சொன்னது ஞாபகம் இருக்குல..?" என்றாள் சித்ரா அவன் பின்னால் இருந்து. "ம்ம்.. இருக்கு இருக்கு.." சற்றே சலிப்பாக சொன்ன அசோக், ஹாலுக்குள் நுழைந்து திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். சாத்தியிருந்த கதவை தள்ளி உள்ளே சென்றான். திவ்யா மெத்தையில் அமர்ந்திருந்தாள். அதற்குள்ளாகவே தன் லேப்டாப்பை திறந்து மடியில் அமர்த்தி வைத்திருந்தாள். அசோக் உள்ளே சென்றதும் அவன் முகத்தை ஏறிட்டவள், "கதவை லாக் பண்ணிடு அசோக்.. உன் அக்கா ஏதும் ஒட்டுக் கேட்க போறா.." அவள் கேஷுவலாக சொல்ல, அசோக் மனதுக்குள் நொந்துகொண்டான். 'எதிரெதிர் திசைகளில் முறைத்துக்கொண்டு இருக்கும் இவர்களுக்குள் எப்படி சமாதானம் செய்து வைக்கப் போகிறேன்..? என் மனவீட்டில் வீற்றிருக்கும் இவளுடன் எப்போது மணமேடையில் வீற்றிருக்க போகிறேன்..?' சலிப்பாய் ஒருமுறை தலையை அசைத்துவிட்டு, கதவை லாக் செய்துவிட்டு, திவ்யாவுக்கு அருகில் சென்று மெத்தையில் அமர்ந்தான்."ம்ம்.. சொல்லு திவ்யா.. என்ன முக்கியமான விஷயம்..?" "இரு இரு.. சொல்றேன்.." பதில் சொன்ன திவ்யா லேப்டாப்பை நோண்டுவதிலேயே கவனமாக இருந்தாள். "ப்ச்.. எனக்கு வேலை இருக்கு திவ்யா.. சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்பனும்..!!" "அடச்சை.. இருடா.. சொல்றேன்..!! ஆமாம்.. நீ என்ன.. இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் ஆபீசுல இருந்து வந்துட்ட..?" "சும்மாதான்.. வேலை பார்க்க எரிச்சலா இருந்தது.. கெளம்பி வந்துட்டேன்.." "ம்ம்.. வந்ததும் நேரா அக்காவை கொஞ்சிட்டு போகலாம்னு இங்க வந்தியாக்கும்..?" "அதெல்லாம் ஒண்ணுல்ல.. வழில பார்த்தேன்.. பைக்ல கூட்டிட்டு வந்தேன்.. அப்படியே மேல வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..!!" "ஓஹோ.. என்னைப் பத்தி எதுவும் சொன்னாளா..?" "அதுலாம் ஒன்னும் சொல்லல.." "ஹேய்.. சும்மா சொல்லுடா..!!" திவ்யா கிண்டலாக சொல்ல, அசோக் கடுப்பானான். "ப்ச்..!! உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் கெடைச்சேனா..? அதான் ஒன்னும் சொல்லலைன்னு சொல்றேன்ல..?" அவன் கோபமாக, "கோவப்படாதடா.." அவள் கொஞ்சினாள். "கோவப்படலை..!! மேட்டர் என்னன்னு சீக்கிரம் சொல்லு.. நான் கெளம்புறேன்..!!" "ஹ்ம்ம்.. இதுதான் மேட்டர்.. பாரு.." சொல்லிக்கொண்டே திவ்யா லேப்டாப்பை அவன் பக்கமாக திருப்ப, அசோக் இப்போது அந்த லேப்டாப் ஸ்க்ரீனில் பார்வையை வீசினான். திரையில் அந்த ஆள் சிரித்துக் கொண்டிருந்தான். கோதுமை நிறத்தில் மழுமழுவென்று சவரம் செய்யப்பட்ட முகம். அடர் கருப்பில் சுருள்சுருளாய் கேசம். கண்ணாடி அணிந்திருந்தான். உதடுகள் தடியாய்.. சிவப்பாய் இருந்தன..!! பாப்புலரான ஒரு பாலிவுட் ஆக்டரை ஞாபகப்படுத்தினான். "யார் இது திவ்யா..?" என்றான் அசோக் குழப்பமாய். "இவரைத்தான் நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன்.. ஆள் எப்படி இருக்காரு..?" இதழ்களில் புன்னகையும், முகத்தில் வெட்கமுமாய் திவ்யா கேட்டாள். அதை கேட்ட மாத்திரத்திலேயே.. அசோக்கின் இதயக்கண்ணாடி இடி விழுந்த மாதிரி நொறுங்கி.. சிதறி தூள்தூளானது..!!காதலை மனதினில் பூட்டி வைக்காதீர்கள்..!! அது காதலென்று உறுதியானதுமே உரியவர்களுக்கு உணர்த்தி விடுங்கள்..!! காதலை உணர்தலை விட, உணர்த்துதல் மிகவும் கடினமான காரியம்தான்.. கவனமாக கையாள வேண்டிய விஷயம்தான்.. இல்லை என்று சொல்லவில்லை..!! ஆனால்.. காதலை உணர்த்த காலம் தாழ்த்தினால்.. இறுதிவரை அந்தக்காதலை, உங்கள் இதயக்கூட்டுக்குள் புதைத்து வைக்கும் பரிதாப நிலைக்கு நீங்கள் தள்ளப்படக்கூடும்..!! அப்படிப்பட்ட ஒரு பரிதாப நிலை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான், அசோக்கின் மனதை இப்போது அசுரத்தனமாய் கவ்வியிருந்தது..!! அசோக் அந்த பயத்தையும், அதனால் எழுந்த பதட்டத்தையும் மனதுக்குள் மறைத்துக்கொண்டு, சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான். "ம்ம். ந..நல்லாருக்காரு திவ்யா..!! ஆ..ஆமாம்.. யா..யாரு இவரு.. எப்படி உனக்கு பழக்கம்..?" "இவர் பேர் திவாகர்.. இ..இப்போ கொஞ்ச நாளா.. ஒரு ஒருமாசமாத்தான் பழக்கம்.. ஆன்லைன் மூலமா..!!" "ஆன்லைன் மூலமாவா..?" "ம்ம்.. எனக்கு சில ஈ-புக்ஸ் வேணும்னு ஒரு ஃபோரத்துல கேட்டிருந்தேன்.. இவர்தான் அதெல்லாம் என் ஈமெயிலுக்கு அனுப்பினாரு..!! அப்புறம் நான் தேங்க்ஸ் சொல்ல.. அவர் என்னைப் பத்தி கேட்க.. நான் அதுக்கு பதில் சொல்ல.. அப்படியே பழக்கம் ஆகிடுச்சு..!!" "ஓ..!! ஃபோன்ல பேசிருக்கியா அவர் கூட..?" "இல்லடா.. சேட் மட்டுந்தான்.. ஃபோட்டோவே இன்னைக்கு காலைலதான் அனுப்பினாரு..!!" "ஆன்லைன்ல வர்ற ஆளுங்களை நம்புறது கொஞ்சம் கஷ்டம் திவ்யா.." "சேச்சே.. இவர் அப்படி இல்ல அசோக்..!! ரொம்ப நல்லவர்..!!" "ம்ம்.. என்ன பண்றார்..?" "பிசினஸ்.. ஷேர் ட்ரேடிங்..!!" "ம்ம்ம்.." "எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நல்லா கலகலப்பா பேசுறாரு.. என் டேஸ்டும் அவர் டேஸ்ட்டும் நல்லா ஒத்துப் போகுது..!! எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. அவர் எழுதின கவிதைலாம் கொஞ்சம் அனுப்பிச்சிருந்தாரு.. எவ்வளவு அமேசிங்கா இருந்தது தெரியுமா..?? நான் தேடிட்டு இருந்தது இவரைத்தான்னு தோணுது அசோக்..!! இவரை லவ் பண்ணலாம்னு நெனைக்கிறேன்..!! நீ என்ன நெனைக்கிற..?" திவ்யா ஒருவித குறுகுறுப்புடனும், அசோக் என்ன சொல்லப் போகிறான் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் கேட்டாள். அசோக் இப்போது தடுமாறினான். அவனுடைய இதயம் பதறி துடிதுடித்துக் கொண்டிருந்தது. தன் மனதில் இருந்த காதலை அவளிடம் சொல்லி, அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிந்து கொள்ள எண்ணியிருந்தான். அவளோ இன்னொருவனை காதலிக்கலாமா வேண்டாமா என்று இவனிடமே இளித்துக்கொண்டு கேட்கிறாள். என்ன சொல்லுவான் அவன்..? பாவம்..!! சற்றே திணறலாகத்தான் அதற்கு பதிலளித்தான். "இ..இதுல நான் நெனைக்கிறதுக்கு என்ன இருக்கு திவ்யா..? இ..இது உன் லைஃப்.. நீதான் முடிவெடுக்கனும்..!!" அசோக் அப்படி விட்டேத்தியாக சொன்னதும், அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த திவ்யாவின் முகம் பட்டென வாடிப்போனது. ஒரு மாதிரி அதிர்ச்சியுற்றவளாக அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். அப்புறம் தன் மடியில் இருந்த லேப்டாப்பை படக்கென மூடினாள். மெத்தையின் ஓரமாய் அதை தூக்கி போட்டாள். தலையை கவிழ்ந்தவாறு.. முகத்தை சோகமாக வைத்தபடி அமர்ந்து கொண்டாள்."ஹேய்.. திவ்யா.. என்னாச்சு..?" அசோக் ஆறுதலாக அவளுடைய தோளை தொட, "போடா.. எங்கிட்ட பேசாத.." என்று அவன் கையை திவ்யா சட்டென தட்டிவிட்டாள். "ப்ச்.. இப்போ என்ன கோவம் உனக்கு..?" "பின்ன என்ன..? நீ சொன்னதைக்கேட்டு என் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு தெரிஞ்சுதான் சொன்னியா..? இது.. இந்த லவ்.. நேத்துதான் நானே ஃபீல் பண்ணின விஷயம்.. முதல்ல உன்கிட்டதான் சொல்றேன்.. வேற யாருக்குமே இது தெரியாது..!! நீ என் பெஸ்ட் ஃப்ரண்டுன்தான உன்கிட்ட சொன்னேன்..? என் லைஃப்ல உனக்கு அக்கறை இருக்குன்னு நெனச்சுதான உன்கிட்ட வந்து சொன்னேன்..? நீ என்னடான்னா.. யாருக்கோ என்னவோ போச்சுன்ற மாதிரி பேசுற..? போடா.. எங்கிட்ட பேசாத.. போ..!!" சொல்லும்போதே திவ்யாவுக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வர, அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்..!! அசோக் அப்படியே உருகிப் போனான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, 'நெஜமாவே ஒரு மாசத்துல முட்டை மரம் வளர்ந்திடுமா அசோக்..?' என்று விழிகள் விரிய கேட்ட திவ்யா கண்களுக்குள் வந்து போனாள். 'நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்..' என்றுவிட்டு தன் வெண்பற்கள் மின்ன வெகுளியாய் சிரித்தாள். அசோக்கிற்கும் இப்போது லேசாக கண்கள் கலங்கின. நகர்ந்து திவ்யாவுக்கு அருகில் நெருக்கமாக அமர்ந்துகொண்டான். தனது வலது கையால் அவளுடைய தோளை வளைத்து, தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவளுடைய புஜத்தை பற்றி அழுத்தியவாறே, உண்மையான வருத்தத்துடன் சொன்னான். "ஸாரி திவ்யா..!!" "ஒன்னும் வேணாம்.. போ.." "ப்ச்.. அதான் ஸாரின்னு சொல்றேன்ல..?" "ஸாரிலாம் ஒன்னும் வேணாம்.. இனிமே இந்த மாதிரி பேச மாட்டேன்னு சொல்லு..!!" "சரி சரி.. இனிமே இந்த மாதிரி பேச மாட்டேன்.. போதுமா..?" அசோக் அந்த மாதிரி சொன்னதும், இப்போது திவ்யாவும் இறங்கி வந்தாள். "போடா..!!" என்று கொஞ்சலாக சொன்னவாறே அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். பின்பு அதே குழந்தைத்தனமான கொஞ்சலுடனே தொடர்ந்தாள். "எனக்கு வேற யாருடா இருக்காங்க..? என் மேல உண்மைலேயே அக்கறை உள்ள ஒரு ஆள்னா அது நீதான்னு நெனைக்கிறேன்.. நீயே இப்டிலாம் பேசினா.. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?" "ஐயோ.. அதான்.. இனிமே அந்த மாதிரி பேச மாட்டேன்றேன்ல..?" "ப்ராமிஸ்..?" "ப்ராமிஸ்..!! சரி.. அதை விடு.. அவரை பத்தி சொல்லு..!! உன் மனசுல இருக்குறதை அவர்கிட்ட சொல்லிட்டியா..?" "ப்ச்.. உன்கிட்டதான் முதல்முதல்ல சொல்றேன்னு சொன்னேன்ல..?" "ஓகே ஓகே..!! எந்த ஊர் அவர்..?" "சென்னைதான்.. பெசன்ட் நகர்ல இருக்காராம்.. அடையாறுல ஆபீஸ்..!!" "அவர் பிசினஸ்லாம் எப்படி போகுதுன்னு ஏதாவது சொன்னாரா..?" "போன வருஷந்தான் ஸ்டார்ட் பண்ணினார் போல.. பரவால்லாம போறதா சொன்னார்..!!" "ம்ம்.. அவருக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்குதா..?" "ம்ஹூம்.. தெரியலை..!! அவர் அந்த மாதிரிலாம் எதுவும் பேசினது இல்ல.. ஜஸ்ட் ஜென்ரலாத்தான் பேசிக்குவோம்..!!" "ம்ம்.." சொல்லிவிட்டு அசோக் தன் மோவாயை சொறிந்தபடி யோசனையில் மூழ்க, "நீ என்னடா நெனைக்கிற..?" என்று திவ்யா அந்த பழைய கேள்வியையே கேட்டாள். "ஆன்லைன்ல..?? அதான் யோசிக்கிறேன்..!!" "ஆன்லைன்னா என்ன அசோக்..? அவங்களும் மனுஷங்கதான..?" திவ்யா அந்தமாதிரி சொல்ல, அசோக் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்."ம்ம்ம்ம்.. ம்ம்ம்... சரி திவ்யா.. இப்போதைக்கு அவர்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. அவர் கூட பேசி அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு..!! ஐ மீன்.. உன் மேல அவருக்கு இன்ட்ரஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சுக்க..!! அப்புறம் பாத்துக்கலாம்.. சரியா..?" அசோக் நீளமாக சொல்லிவிட்டு திவ்யாவின் முகத்தையே பார்க்க, அவள் "ம்ம்.. சரிடா.." என்றாள் பலத்த யோசனைக்கு அப்புறம். "சரி திவ்யா.. நான் கிளம்புறேன்.." என்று அசோக் கிளம்ப, "அசோக்.." திவ்யா அழைத்தாள். "ம்ம்.." "திவ்யா.. திவாகர்..!! எங்க பேர் பொருத்தம் கூட நல்லா இருக்குல..?" அவள் ஒரு மாதிரி குழந்தையின் குதுகலத்துடன் கேட்க, அசோக் உள்ளுக்குள் பொடிப்பொடியாய் நொறுங்கினான். உள்ளத்தில் பொங்கிய உணர்சிகளை முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான். வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதடுகளில் வரவழைத்துக் கொண்டான். திவ்யாவின் முன் நெற்றி முடிகளை விரல்களால் மெல்ல கலைத்தவாறே சொன்னான். "ம்ம்.. ரொம்ப பொருத்தமா இருக்கு திவ்யா..!!" இதழில் புன்னகையுடன் சொல்லிவிட்டு வெளியே வந்தாலும், அசோக்கின் இதயம் முழுவதும் வேதனைத்தீயில் வெந்து கொண்டிருந்தது. அவனது உடலும், மனதும் அவன் வசம் இல்லாமல் ஏதோ சூனியத்தில் சென்று நிலைத்திருந்தது. சற்றுமுன் திவ்யா தந்த அதிர்ச்சியில் அவனது உடல் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது. தான் சிறுவயதில் இருந்து பார்த்து பார்த்து கட்டிய காதல் மாளிகை.. அவனது கண் முன்னாடியே.. விரிசல் விட்டு.. உடைந்து.. உருக்குலைந்து.. சரிந்து.. தரைமட்டமானதை.. எண்ணி எண்ணி அவன் நெஞ்சு குமுறிக் கொண்டிருந்தது..!! 'அசோக்.. என்னாச்சுடா..' என்ற அக்காவின் அழைப்பு அவன் காதில் ஏறவில்லை. உயிரற்ற ஜடம் ஒன்று செல்வது போல, அனிச்சையாக நடந்து சென்று வீட்டை விட்டு வெளியேறினான். பைக்கில் சாவி போட்டு திருகி கிக்கரை உதைத்தவன், அதை நிறுத்தியது ஒரு பார் வாசல் முன்பாக..!!

குடித்தான்.. குடித்தான்.. குடித்துக்கொண்டே இருந்தான்..!! சிறுவயதில் இருந்து மூளையில் சேர்ந்திருந்த திவ்யாவின் நினைவுகள், ஒன்றன் பின் ஒன்றாய் அவனது நெஞ்சுக்குள் எழுந்து, கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க.. தொண்டைக்குள் விஸ்கியை ஊற்றி அத்தீயை அணைக்க முயன்றான்..!! ஆல்கஹால் அவனது மூளையை முடமாக்கி, நினைவலைகளுக்கு அணை போட முயன்று தோற்றுப் போனது..!! எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போலத்தான் ஆயிற்று அசோக்கின் நிலைமை..!! பொங்கி வந்த குமுறலை அடக்க முடியாமல்.. அருகில் அந்நியர்கள் இருகிறார்கள் என்ற கவலையும் இல்லாமல்.. 'ஓ..!!' என்று பெரிய குரலில் அலறி.. அங்கேயே அழுதான்..!!அன்று இரவு ஒன்பது மணிக்கு.. மீண்டும் தன் அக்கா வீட்டுக்கு திரும்பினான் அசோக்.. இரவு உணவு அருந்த..!! அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உண்டிருந்தாலும் ஆள் மிக நிதானமாகவே இருந்தான். கால்கள் தள்ளாடவில்லை.. பேச்சு தடுமாறவில்லை..!! காதல் தந்த வலி.. விஸ்கி தந்த போதையை.. விழுங்கியிருந்தது..!! திறந்திருந்த கதவை தள்ளி வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்ததுமே 'ஹஹக்கஹஹக்கஹஹக்க..' என ஸ்டார்ட்டிங் ட்ரபுள் உள்ள காரில் சாவி போட்ட மாதிரியான ஒரு குரல்தான் அவன் காதில் வந்து விழுந்தது. எதிரே சோபாவில் அமர்ந்திருந்த சித்ராவின் கணவன் கார்த்திக்கின் சிரிப்பொலிதான் அது..!! வெறும் பனியன் மற்றும் லுங்கியில் இருந்தான் கார்த்திக்..!! சிரிக்கையில் அவனது தொப்பை, பனியனுக்குள் கிடுகிடுவென குலுங்குவது தெளிவாக தெரிந்தது. கார்த்திக் ஏன் அப்படி சிரிக்கிறான் என்று ஒருகணம் புரியாத அசோக், அப்புறம் தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தான். டிவியில் கார்ட்டூன் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பேஸ்பால் மட்டையை எடுத்துக்கொண்டு டாம் விரட்ட, இண்டு இடுக்கெல்லாம் புகுந்து ஜெர்ரி தப்பித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துதான் அவனுக்கு சிரிப்பு அப்படி பீறிட்டு எழுகிறது என்று புரிந்தது. 'கழுதை வயசாச்சு.. இன்னும் கார்ட்டூன் பாத்து சிரிச்சுட்டு இருக்கான்..' என்று கார்த்திக் மேல் அசோக்கிற்கு லேசாக எரிச்சல் வந்தது. ஆனால் அவனுடைய எரிச்சல் பார்வையை பொருட்படுத்தாமல் கார்த்திக் சிரிப்புடன் சொன்னான். "ஆங்.. அசோக்.. வா.. வா.. இப்போதான் ஆபீஸ்ல இருந்து வர்றியா..? " "இல்ல.. அப்போவே வந்துட்டேன்.." "உக்காரு வா.. டாம் அண்ட் ஜெர்ரி பாக்கலாம்.." "இல்லத்தான்.. நீங்களே பாருங்க..!!" "ஓ..!! அப்போ.. உனக்கு ரொம்ப பசிக்குதுன்னு நெனைக்கிறேன்.. சரி சரி.. போ. சாப்பிடு..!! உங்கக்கா மொச்சைக்குழம்பு வச்சிருக்கா.. செமையா இருக்குது.. அத்தான் அல்ரெடி ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டேன்..!!" பெருமையாக சொல்லிவிட்டு மீண்டும் தொப்பை குலுங்க சிரித்த கார்த்திக்கை அசோக் சற்றே கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான். அப்புறம் உள்ளே நடந்து சென்றான். கிச்சனுக்குள் எட்டிப் பார்த்தான். சித்ரா நின்றிருந்தாள். ஸ்டவில் எதையோ கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும், "உக்காருடா.. எடுத்து வைக்கிறேன்.." என்றாள். அசோக் அமைதியாக நடந்து சென்று டைனிங் டேபிள் முன்பு அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்திலேயே சித்ரா அவனுக்கு முன்பாக சாப்பாடு பரிமாறினாள். எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தவனை, "என்னடா எங்கயோ பாத்துட்டு இருக்குற.. சாப்பிடு.." என்று சித்ரா அதட்டவும், சுய நினைவுக்கு வந்தான். சாதத்தை பிசைந்து அள்ளி விழுங்க ஆரம்பித்தான். சித்ரா ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு, தம்பிக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள். ஹாலை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். ஹாலில் இருந்து கார்ட்டூன் சப்தமும், கார்த்திக்கின் கனைப்பு ஒலியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இவர்கள் பேசுவது அவன் காதில் விழாது என்று தெரிந்தது. சற்றே தைரியம் பெற்றவளாய் சன்னமான குரலில் ஆரம்பித்தாள். "என்னடா சொன்னா அவ..?" "எவ..?" என்றான் அசோக் எரிச்சலாக."ப்ச்.. திவ்யாடா.. முக்கியமான விஷயம்னு உள்ள கூட்டிட்டு போனாளே.. என்ன சொன்னா..?" "ஏதோ சொன்னா.. எங்க அவளை ஆளைக் காணோம்..?" "அவ தூங்குறா.. அவளை விடு..!! அவ என்ன சொன்னான்னு சொல்லு.." அசோக் சாதத்தை மென்று கொண்டே, தலையை திருப்பி திவ்யாவின் அறையை ஒரு பார்வை பார்த்தான். விளக்குகள் அணைக்கப்பட்டு இருண்டிருந்தது. 'என் தூக்கத்தை நிரந்தரமாய் பறித்துவிட்டு அவள் நிம்மதியாக தூங்குகிறாளா..?' அசோக்கின் மனதுக்குள் ஒரு இனம்புரியாத எரிச்சல் பரவியது. "என்னடா ஆச்சு..? ஏன் கம்முனு உக்காந்திருக்குற.. சொல்லுடா.. என்ன சொன்னா..?" "ம்ம்.. அவ லவ்வை சொன்னா..!!" அசோக் சற்றே வெறுப்பான குரலில் சொல்ல, "எ..என்னடா சொல்ற..?" என்று சித்ரா பதறினாள். "ஆமாம்.. அவ யாரையோ லவ் பண்ணப் போறாளாம்.. அதை சொல்லிட்டு இருந்தா..!!" "யாரையோவா..? அப்போ.. நீ இல்லையா..?" "ம்ஹூம்..!! நான் இல்லை..!!" அசோக் தலையசைக்க, "அப்பாடா...!!!" என்று சித்ரா இப்போது ஒரு நீண்டதாய் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அசோக் அவளை வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்தான். "உனக்கு என்ன இவ்வளவு சந்தோஷம்..?" "பின்ன இருக்காதா..?? நல்ல வேளை.. என் தம்பி தப்பிச்சான்..!! இப்போத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு..!!" முகமெல்லாம் பிரகாசமும், குரலெல்லாம் உற்சாகமுமாக சித்ரா சொல்ல, அசோக் கடுப்பானான். சில வினாடிகள் தன் அக்காவின் முகத்தையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மீண்டும் தட்டில் இருந்த உணவை அள்ளி, வாயில் திணித்துக் கொள்ள ஆரம்பித்தான். அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தவனை சித்ரா விடவில்லை. மீண்டும் ஆரம்பித்தாள். "ஆமாம்.. யாருடா அந்தப் பையன்..?" "யாரு..?" "அதான்.. அவ லவ் பண்ற பையன்..!!" "ப்ச்.. அதெல்லாம் அவ எங்கிட்ட சொல்லலை.." "ஏய்.. பொய் சொல்லாதடா.. இவ்வளவு சொல்லிருக்கா.. அதை சொல்லாமலா இருந்திருப்பா..? சொல்லுடா..!!" "அதான் சொல்லலைன்னு சொல்றேன்ல.. விடேன்.." அசோக்கின் குரலில் இப்போது எரிச்சல் எக்கச்சக்கமாக ஏறியிருந்தது. "இதை என்னை நம்ப சொல்றியா..?" "நம்பாட்டா போ.." "ஹேய்.. கேக்குறேன்ல.. சொல்லுடா.." "உஷ்ஷ்ஷ்ஷ்... ப்பா…!!!! உன் டார்ச்சர் தாங்க முடியலை..!! சரி... நாளைக்கு சொல்றேன்.. இப்போ என்னை கொஞ்சம் சாப்பிட விடுறியா..?" "சரி சரி..!! ம்ம்ம்ம்... அந்தப்பையன் பேர் என்னன்னாவது சொல்லேன்..?" அவ்வளவுதான்..!! 'எங்க பேர் பொருத்தம் கூட நல்லா இருக்குல..?' என்ற திவ்யாவின் குதுகல குரல், ஏனோ இப்போது அவனுடைய காதில் வந்து கொடூரமாய் மோதியது. திவ்யா தந்த வேதனையும், அவனது இயலாமையும், அக்காவின் பிடுங்கலும் எல்லாம் ஒன்று சேர.. கோபத்தின் உச்சிக்கே சென்றான். புறங்கையை வீசி, சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை தரையில் விசிறியடித்தான். பறந்து போய் தரையில் விழுந்த தட்டு, 'டண்டண்டண்டண்' என்று காதுக்கு ஒவ்வாத ஒரு ஒலியை கிளப்பியது. சாதத்தை வீடெங்கும் தெளித்திருந்தது. சர்ரென்று சுழன்று, பின்பு தரையோடு அடங்கியது..!!சித்ரா அதிர்ந்து போய் எழுந்தாள். விழிகள் விரிய தன் தம்பியையே நம்ப முடியாமல் பார்த்தாள். அசோக் இவ்வளவு கோபப்பட்டு அவள் பார்ப்பது இதுவே முதல் முறை. அசோக்கும் எழுந்து கொண்டான். "அதான்.. நாளைக்கு சொல்றேன்னு சொல்றேன்ல..?" என்று உஷ்ணமாய் முறைத்தவாறு கத்தினான். ஓரிரு வினாடிகள் அக்காவின் முகத்தையே வெறுப்பாக பார்த்தவன், கையைக் கூட கழுவாமல் அப்படியே வெளியேறினான். சித்ரா அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தாள். அசோக்குடைய காதலின் தீவிரம் ஒரே வினாடியில் அவள் உச்சந்தலைக்கு சென்று உறைக்க.. அவளுடைய உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது..!! ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவியில் இப்போது டாம், ஜெர்ரியை அடிக்கிறேன் பேர்வழி என்று வீட்டில் இருந்த பாத்திரங்களை எல்லாம் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கார்த்திக் அதற்கு சிரிக்கவில்லை. அதிர்ந்து போனவனாய் சோபாவில் இருந்து எழுந்து நின்றிருந்தான். அசோக் அவசரமாக கதவு திறந்து வெளியேறுவதையே ஒருவித மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.அசோக் தன் அறைக்கு திரும்பியபோது, செல்வாவும் வந்திருந்தார். அலமாரியில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தார். அசோக் நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தார். அவனிடம் ஏதோ பேச வாயெடுத்தார். அதற்குள் அசோக்.. "எனக்கு மனசு சரியில்லண்ணா.. எதா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.." என்று விட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான். காய்ந்து போயிருந்த கையை கழுவிக்கொண்டான். மெத்தையில் வீழ்ந்தான். உடலை போர்வையால் மூடிக்கொண்டான். விழிகளை இமைகளால் மூடிக்கொண்டான். ஆனால்.. மனதை மூட ஏது மூடி..? உலையிட்ட பானையாய் அவன் உள்ளம் கொதிக்க.. திவ்யாவின் நினைவுகள் பொங்கிக்கொண்டு வெளிவந்தன..!! உள்ளம் விழித்துக்கொண்டு அசுரத்தனமாய் ஆட்டம் போட.. உறக்கம் செத்துப் போயிருந்தது..!! போர்வைக்குள்ளேயே புரண்டு புரண்டு படுத்தான்..!! எவ்வளவு நேரம் அந்த அவஸ்தையோ..? "அசோக்.." என்று அழைத்தவாறு செல்வா போர்வையை மெல்ல இழுக்க, அசோக் உச்சபட்ச எரிச்சலுக்கு உள்ளானான். படக்கென எழுந்து கொண்டு அவரிடம் சீறினான். "என்னண்ணா.. எனக்குத்தான் மனசு சரியில்ல.. யார்கிட்டயும் பேச மூட் இல்லன்னு சொன்னேன்ல..?" அவன் அவ்வாறு வெறுப்பை உமிழ, செல்வா மிரண்டு போனார். ஒருமாதிரி பரிதாபமாக அவன் முகத்தையே பார்த்தார். அப்புறம் தயங்கி தயங்கி திணறலாக சொன்னார். "இ..இல்ல அசோக்.. எனக்கும் ம..மனசே சரியில்ல.. யார்கிட்டயாவது பேசணும் போல இருக்கு.. அதான்.." இப்போது அசோக் அப்படியே முகம் மாறினான். அவரை பாவமாக பார்த்தான். 'இவர் என்ன தவறு செய்தார்..? யார் மீதோ உள்ள கோவத்தை இவரிடம் காட்டுகிறேனே..?' என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். 'ஸா..ஸாரிண்ணா.. இருங்க.. வர்றேன்..' என்று மென்மையாக சொன்னவாறு, போர்வையை உதறிவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக்கும் செல்வாவும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். நிலவொளியின் மசமசப்பான வெளிச்சத்தை தவிர, சுற்றிலும் இருள் பரவியிருந்தது. வீட்டை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரங்கள், ஜிலுஜிலுவென காற்றை உமிழ்ந்து கொண்டிருந்தன. தெரு நாய் ஒன்று குரைக்கும் சத்தம் எங்கோ தூரமாய் கேட்டது. அசோக் ஒரு சிகரெட் பற்றவைக்க, "எனக்கும் ஒரு சிகரெட் கொடு அசோக்.." என்றார் செல்வா இறுக்கமான குரலில். அவரை வித்தியாசமாக பார்த்த அசோக், "தம்லாம் அடிப்பீங்களாண்ணா..?" என்றான் சிகரெட் ஒன்றை உருவி அவரிடம் நீட்டிக்கொண்டே . "ம்ம்.. சின்ன வயசுல திருட்டு தம் அடிச்சிருக்கேன்.. பதினேழு வயசுல அதெல்லாம் விட்டுட்டேன்.. அப்புறம் இப்போதான் அடிக்கிறேன்.." செல்வா சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொள்ள, அசோக்கே பற்றவைத்தான். இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக புகை விட்டுக்கொண்டிருந்தார்கள். அப்புறம் செல்வாதான் மெல்ல ஆரம்பித்தார்."எங்கப்பா எங்களை விட்டு போறப்போ.. எனக்கு பதினேழு வயசு அசோக்.. நான்தான் மூத்தவன்.. எனக்கு ரெண்டு தங்கைங்க.. ஒரு தம்பி.. என் அம்மா..!! எல்லாரையும் விட்டுட்டு அவர் நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு..!!" "ஓ..!!" "அப்போல்லாம் எங்கம்மா அடிக்கடி எங்கிட்ட வந்து புலம்புவாங்க.. 'உன்னை நம்பித்தான் நம்ம குடும்பமே இருக்குயா..'ன்னு அழுவாங்க..!! அதுவரைக்கும் ஊதாரித்தனமா இருந்த நான் அப்புறம் ரொம்ப மாறிட்டேன்.. குடும்பம் முக்கியம்னு நெனச்சேன்.. நல்லா உழைச்சேன்.. சம்பாதிச்சேன்..!!" "ம்ம்" "ரெண்டு தங்கச்சிங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்.. தம்பி அவனே ஒரு பொண்ணை தேடிக்கிட்டான்..!! அம்மாவும் அஞ்சு வருஷம் முன்னாடி சீக்குல படுத்து.. சீக்கிரமே கண்ணை மூடிட்டாங்க..!! எல்லாம் முடிஞ்சு பாத்தா.. நான் மட்டும் தனியா நின்னேன் அசோக்.. என்னைப் பத்தி கவலைப்பட கூட எந்த ஜீவனும் இல்லைன்னு ஆயிடுச்சு..!!" "ம்ம்" அசோக்கிற்கு இப்போது செல்வாவின் மீது ஒரு இனம்புரியாத பச்சாதாபம் பிறந்தது. "எனக்குன்னு ஒருத்தி வர மாட்டாளான்னு எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கும்.. ஆனா.. இத்தனை வயசுக்கப்புறம் நான் யார்கிட்ட பொண்ணு கேட்டு போறது..? சொல்லு.. எனக்குலாம் எவன் பொண்ணு கொடுப்பான்..? அதான்.. காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்றாங்களேன்னு.. காதலை நம்ப ஆரம்பிச்சேன்..!! என்னையும் எவளாவது காதலிச்சுட மாட்டாளான்னு நெனைப்பு..!! ஆனா.. அந்த காதலும் எனக்கு கெடைக்கலை.. ஏக்கத்தை மறைக்க.. என்ன செய்றதுன்னு தெரியாம.. எல்லாரும் என்னை காதலிக்கிறாங்கன்னு.. உங்ககிட்டலாம் சும்மா சொல்லிட்டு திரிவேன்..!!" "ம்ம்.. புரியுதுண்ணா.." "ஆனா.. கண்மணி அந்த மாதிரி இல்ல அசோக்.. அவ பேச்சும் நடவடிக்கையும்.. அவளுக்கு என் மேல விருப்பம் இருக்குன்னு எனக்கே தெளிவா தெரிஞ்சது.. எனக்குன்னு ஒருத்தி வந்துட்டான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன்..!! அவளை உண்மையா காதலிச்சேன்.. ஆனா.. ஆனா அவ.. அப்டிலாம் எதுவும் இல்லைன்னு.. இன்னைக்கு மூஞ்சில அறைஞ்ச மாதிரி சொல்லிட்டா அசோக்.. எனக்கு.. எனக்கு நெஞ்சே வெடிச்சுப் போன மாதிரி ஆயிடுச்சு..!!" அவர் உடைந்துபோன குரலில் சொல்ல, அசோக் செல்வாவுக்காக அப்படியே உருகிப் போனான். தான் அனுபவிக்கும் அதே வலியை, தனக்கெதிரே நிற்கும் இந்த ஜீவனும் அனுபவிக்கிறது என்பதை அறிந்ததும்.. அவன் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த உள்ளக்குமுறல் வெளியே பொங்கியது. பெரிய குரலில் கத்தினான். "ச்சே..!!! இந்தப் பொண்ணுகளே இப்படித்தாண்ணா..!! நம்மளை எல்லாம் அவளுக புரிஞ்சுக்கவே மாட்டாளுக..!! இவளுகளை உருகி உருகி காதலிக்கிற நாமதாண்ணா முட்டாளுக..!!" அவன் அப்படி கத்தவும், இப்போது செல்வா பட்டென்று முகம் மாறினார். அதிர்ந்து போனவராய் அசோக்கை பார்த்தார். அவனுடைய சீற்றத்தில் இருந்தே, அவனும் ஏதோ கெட்ட செய்தி வைத்திருக்கிறான் என்று ஒரே நொடியில் புரிந்து கொண்டார். "அ..அசோக்.. நீ.. அப்போ.. தி..திவ்யா..??" என்றார் திணறலாக. "ஆமாண்ணா..!! நீங்க சொன்னதெல்லாம் தப்பா போச்சுண்ணா.. அவ என்னை ஏமாத்திட்டா..!! அவ மனசுல நான் இல்லைண்ணா.. அவ மனசுல நான் இல்லை..!!" சொல்லிவிட்டு அசோக் உடைந்து போய் 'ஓ..'வென அழ ஆரம்பித்தான். செல்வா பதறிப் போனார். சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு, அவனை ஆறுதலாக தழுவிக் கொண்டார். அசோக் அவர் தோளில் முகம் புதைத்து கண்ணீர் வடிக்க, அவர் அவனது முதுகை தட்டிக்கொடுத்து.. 'அசோக்.. அசோக்.. அழாதப்பா.. ப்ளீஸ்.. அசோக்..' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.அடுத்த நாள் காலை..!! இரவு நெடுநேரம் உறக்கமில்லாமல் தவித்த அசோக், அதிகாலையில்தான் உறங்கவே ஆரம்பித்திருந்தான். அதிகாலை குளிருக்கு இதமாக, போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டு, அசந்து போய் தூங்கினான். எதோ சத்தம் கேட்டு அசோக்கிற்கு விழிப்பு வந்தது. போர்வையை விலக்கி முகத்தை வெளியே கொண்டு வந்து, விழிகளை மெல்ல திறந்து பார்த்தான். அவன் விழிகளை திறந்ததுமே அவன் முகத்தில் பளிச்சென மின்னல் வெட்டியது மாதிரி இருந்தது. கூடவே கலகலவென்று திவ்யாவின் சிரிப்பொலி..!! அசோக்கிற்கு சில வினாடிகள் எதுவுமே புரியவில்லை. கண்களை ஒருமுறை நன்றாக கசக்கி விட்டுக் கொண்டான். மீண்டும் திறந்து பார்த்தான். முகத்தில் குறும்பு கொப்பளிக்க திவ்யா அவனுக்கெதிரே அமர்ந்திருந்தாள். அவள் கையில் ஒரு டிஜிட்டல் கேமரா..!! அவள் உதடுகளில் சிரிப்பு குமுறிக்கொண்டு வெளியே வர முயல, வாயை ஒரு கையால் பொத்தி, அந்த சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தாள். அசோக் தூக்க கலக்கமும், எரிச்சலுமாக கேட்டான். "ஹேய்.. நீ என்னடி பண்ணிட்டு இருக்குற இங்க..?" "சும்மாதான்.. உன்னை பாக்கலாம்னு வந்தேன்..!! ஒன்பது மணி ஆகியும் நீ நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தியா..? சரி.. கரெக்டா நீ கண்முழிக்கிறப்போ ஒரு ஸ்னாப் எடுக்கலாம்னு பத்து நிமிஷமா உன் பக்கத்துலையே உக்காந்துட்டு இருக்கேன்..!! என்னென்னவோ சவுண்டு குடுத்து பாக்குறேன்.. நீ எந்திரிக்கிற மாதிரியே இல்லை.. சரியான தூங்கு மூஞ்சி..!!" "அப்டிலாம் ஒன்னும் இல்ல.. நைட்டு தூங்குறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..!! "ஓஹோ..?? ஆனா.. பத்து நிமிஷம் வெயிட் பண்ணினதுக்கு சூப்பர் ஸ்டில்டா.. செம எக்ஸ்ப்ரஷன் கொடுத்திருக்குற நீ.. சான்சே இல்ல..!!" என்றவள் குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள். "எங்க குடு.. பார்ப்போம்.." "வேணாம்.. நீ டெலீட் பண்ணிடுவ.." "ப்ச்.. பண்ண மாட்டேன்.. குடு.." "ப்ராமிஸ்..??" "ப்ராமிஸ்டி..!!" "இந்தா..!! டெலீட் பண்ணின..? மவனே.. மண்டைலையே நல்லா போடுவேன்..!!" கண்டிஷனுடனே திவ்யா கேமராவை அசோக்கிடம் ஒப்படைத்தாள். அசோக் அதை வாங்கி டிஸ்ப்ளே அழுத்தி பார்த்தான். தலை மயிர் எல்லாம் கலைந்து போய், எல்லாப்பக்கமும் குத்திட்டு நிற்க.. தூக்கம் அகலாத முகம் வாடிப்போயிருக்க.. இமைகள் முழுமையாக விலகாமல் கண்கள் சுருங்கிப் போயிருக்க.. இவன் வேறு உதட்டை குரங்கு மாதிரி பிதுக்கியிருந்தான்.. மொத்தத்தில் ரொம்பவே அசிங்கமாக இருந்தான்..!! இப்படி ஒரு ஃபோட்டோ உயிரோடு இருப்பது என்றைக்காயிருந்தாலும், தன் இமேஜுக்கு ஆபத்து என்று அசோக்கிற்கு தோன்றியது. சற்றும் யோசிக்காமல் பட்டன் தட்டி, அதை அழித்தான். அவ்வளவுதான்.. அடுத்த நொடியே அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு விழுந்தது.. திவ்யாதான் குட்டினாள்..!! அசோக் வலியில் அலறினான்..!! "ஆஆஆஆ..!!!! லூசு..!!!! ஏண்டி கொட்ன..?"பின்ன என்ன..? நீ பாட்டுக்கு அசால்ட்டா டெலீட் பண்ணிட்ட.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த ஃபோட்டோவை எடுத்தேன் தெரியுமா..? எல்லாம் போச்சு..!!" "அதுக்காக.. கொட்டுவியா..?" "அப்புறம்..?? நான்தான் டெலீட் பண்ணினா.. மண்டைல போடுவேன்னு சொல்லிட்டுத்தான கைல குடுத்தேன்..?" "அசிங்கமா இருந்ததுடி.. அதை வச்சுக்க சொல்றியா..?" "சட்டில இருந்தாத்தான அகப்பைல வரும்..? ஃபோட்டோ நல்லாருக்கனும்னா.. நாம கொஞ்சமாவது அழகா இருக்கணும்..!! அது வெளங்காம.. கேமரா சரியில்ல.. ஃபோட்டோ சரியில்லன்னு.. லூசுத்தனமா சொல்ல வேண்டியது.." அவள் கேலியாக சொல்ல, அசோக் கடுப்பானான். "ஏண்டி.. காலாங்காத்தால கலாய்க்கிறதுக்குன்னே வந்திருக்கியா நீ..?? உன்னை என்ன பண்றேன் பாரு..!!" அசோக் போர்வையை உதறிக்கொண்டு எழ, "ஐயய்யோ.. கொலை கொலை..!! யாராவது என்னை காப்பாத்துங்க..!!" என்று கத்திக்கொண்டே திவ்யா எழுந்து ஓடினாள். அசோக் விரட்டினான். காலையிலேயே எழுந்து குளித்து பக்திப்பழமாய் அமர்ந்திருந்த செல்வா.. அவர்கள் குழந்தைகள் மாதிரி ஓடிப்பிடித்து விளையாடுவதை பார்த்து.. வேடிக்கையாக சிரித்தார்..!! அறையை விட்டு வெளியேறி மொட்டை மாடியில் நுழைந்தபோது, அசோக் திவ்யாவை வளைத்து பிடித்தான். கேமரா வைத்திருந்த கையால் அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், இன்னொரு கையை மடக்கி அவள் தலையிலேயே 'நங்.. நங்.. நங்.. நங்..' என்று நாலைந்து குட்டு குட்டினான். ஒவ்வொரு குட்டுக்கும் திவ்யா, 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என அலறிக்கொண்டே இருந்தாள். "ஆஆஆஆ..!! விடுறா.. தடிமாடு..!! வலிக்குது..!!" திவ்யா கெஞ்சினாள். "அப்போ நீ கொட்டுனது மட்டும்.. எனக்கு வலிக்காதா..?" அசோக் திவ்யாவைப் பிடித்திருந்த பிடியை தளர்த்தினான். "அதுக்காக.. நான் ஒரு கொட்டு கொட்டுனதுக்கு.. நீ நாலஞ்சு கொட்டு கொட்டுவியா..? ஷ்ஷ்ஷ்ஷ்.. வலி உயிர் போகுது..!!" திவ்யா உச்சந்தலையை பரபரவென தேய்த்துக் கொண்டாள். "அது நீ கொட்டுனதுக்கு வட்டி..!!" "வெவ்வெவ்வே..!! மூஞ்சைப்பாரு..!! நீ மாறவே இல்ல.. சின்ன வயசுல இருந்து உன்கிட்ட கொட்டு வாங்கி கொட்டு வாங்கியே.. என் தலை நல்லா வீங்கி பெருசாயிடுச்சு..!!" "ஹ்ஹாஹ்ஹா..!!" "இளிக்காத.. சரி சரி.. வா..!! அப்படியே என்னை ஒரு ஸ்னாப் எடு பாப்போம்..!!" "ம்ம்.. இங்க வேணாம்.. வா.. அப்படி போயிடலாம்.." அசோக் திவ்யாவை அழைத்து சென்றான். உயரமாய் மொட்டை மாடி வரை வளர்ந்திருந்த ஒரு தென்னை மரம், அவளுக்கு பின்னணியில் வருமாறு, அவளை நிற்க சொன்னான். வெளிச்சம் அவளுடைய முகத்தில் சரியாக விழுமாறு திருப்ப சொன்னான். க்ளிக் செய்யும் வரை.. 'லைட்டா தலையை குனி.. இல்ல ரொம்ப.. ம்ம்.. இப்போ ஓகே.. ஸ்மைல்.. கொஞ்சம் கம்மி பண்ணிக்கோ..' என்று இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டே இருந்தான்.திவ்யா தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தாள். காலை நேர சூரிய கதிர்கள் அவளுடைய முகத்தில் பட்டு தெறிக்க, அவளது நிலா முகம் மேலும் பிரகாசித்தது. அவள் அழகாக புன்னகைக்க.. அசோக் க்ளிக் செய்தான்..!! அருமையாக வந்திருந்தது அந்த புகைப்படம்..!! டிஸ்ப்ளேயில் அவளுடைய அழகை ஒருகணம் ரசித்த அசோக், "செம அழகா இருக்குற திவ்யா..!!" என்றான் விழிகளை விலக்க மனதே இல்லாதவனாய். "எங்க குடு.. பாக்கலாம்..!!" திவ்யா வாங்கிப் பார்த்தாள். பார்த்தவள், "வாவ்..!!! நான் கூட என்னவோ நெனச்சேன்.. நல்லா எடுத்திருக்கடா.. குட் ஜாப்..!!" என அதிசயித்தாள். "தேங்க்ஸ்..!! ஐயாகிட்ட இதுமாதிரி இன்னும் என்னன்னவோ திறமை ஒளிஞ்சிருக்கு.. உனக்குத்தான் தெரியலை..!!" "அடங்குடா டேய்..!! இதுல உன் திறமை என்ன இருக்கு..?? நான் அழகா இருக்கேன்.. அதான் ஃபோட்டோவும் அழகா வந்திருக்கு..!! நான்லாம் இதுவரை என் ஃபோட்டோ எதையும் டெலீட் பண்ணினது இல்லைப்பா.. ஃபோட்டோ எடுத்தவங்களையும் நங் நங்னு தலைல கொட்டினது இல்ல..!!" "ஒய்..!! நக்கலா..?" அசோக் கடுப்பானான். "ஹாஹா..!! விடு விடு..!! உண்மையை சொன்னா கோவம் வரத்தான் செய்யும்..!!" "போடீ லூசு..!!" "ம்ம்ம்... இதை அனுப்பினா அவருக்கு பிடிக்கும்ல அசோக்..?" திவ்யா திடீரென அப்படி கொஞ்சலாக கேட்க, அசோக் குழம்பினான். "யாருக்கு..?" "அவருக்குத்தான்.. திவாகருக்கு..!! என் ஃபோட்டோ வேணும்னு கேட்டிருந்தார்.. அதான்.. காலைலேயே கேமரா எடுத்துட்டு உன்னை பார்க்க வந்தேன்..!! இதை அவருக்கு அனுப்பலாமா அசோக்.. நல்லாருக்குல..?" திவ்யா சொல்ல சொல்ல, அசோக் அப்படியே உள்ளுக்குள் உடைந்து நொறுங்கினான். காலையிலேயே திவ்யாவின் முகத்தில் விழித்ததும், அவள் செய்த கலாட்டாவிலும்.. மிகவும் இலகுவாக மாறியிருந்த அவனது மனதை.. நேற்றிரவு இருந்த அந்த சோகம் வந்து மீண்டும் கவ்விக்கொண்டது..!! 'ச்சே.. என் காதலியின் அழகை இன்னொருவன் ரசிக்க.. என் கையாலேயே புகைப்படம் எடுத்திருக்கிறேனே..?' எரிச்சலாக இருந்தது. அந்த கேமராவை வாங்கி அப்படியே தரையில் அடித்து உடைத்துவிடலாமா என்பது போலொரு ஆத்திரம் வந்தது. ஆனால்.. பொங்கி வந்த ஆத்திரத்தை உடனடியாய் அடக்கிக்கொண்டு, திவ்யாவை ஏறிட்டு பரிதாபமாக புன்னகைத்தான்.

"என்னடா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்ற..? அனுப்பட்டுமா.. அவருக்கு பிடிக்குமா..?" "ம்ம்.. அனுப்பு திவ்யா.. பிடிக்கும்..!!" "தேங்க்யூடா.. தேங்க்யூ..!!" உற்சாகமாக கத்திய திவ்யா, அசோக்கை ஒருமுறை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அப்புறம் மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தவள், "ஐயோ.. எனக்கு டைமாச்சு அசோக்.. நான் கெளம்புறேன்.. ஈவினிங் பார்க்கலாம்.. பை..!!" என்று சொல்லிவிட்டு மான் மாதிரி துள்ளி குதித்து படியிறங்கி ஓடினாள். இதயம் தீப்பற்றி எறிய.. கண்கள் கலங்க ஆரம்பிக்க.. அவள் போவதையே பார்த்தவாறு.. அசோக் உறைந்து போய் நின்றிருந்தான்.திவ்யா சென்ற சில நிமிடங்களிலேயே சித்ரா படியேறி மேலே வந்தாள். அவளுடைய ஒரு கையில் ஒரு பெரிய டிஃபன் கேரியர்..!! நேற்று இரவு கோபமாக சென்ற தம்பி காலையில் சாப்பிட வர மாட்டான் என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. சமைத்ததை கேரியரில் கட்டி, தம்பியின் அறைக்கே எடுத்து வந்திருந்தாள். அசோக்கிடம் அவள் அதிகமாகவெல்லாம் பேசிக்கொள்ளவில்லை. "குளிச்சுட்டு வா.. சாப்பிடலாம்.." என்று முறைப்பாக சொன்னவள், செல்வாவிடம் திரும்பி, "செல்வாண்ணா.. உங்களுக்கும் சேர்த்துத்தான் எடுத்துட்டு வந்திருக்கேன்.. இன்னைக்கு ஒரு நாள் மெஸ்ல சாப்பிடாம.. நான் சமைச்சதை சாப்பிடுங்க..!!" என்றாள் உண்மையான அன்புடன். அசோக்கும் அவளிடம் எதுவும் பேசவில்லை. அமைதியாக சென்று, பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்துவிட்டு வந்ததும், சித்ரா இருவருக்கும் சாப்பாடு பரிமாறினாள். இட்லியும், சட்னியும் சமைத்து கொண்டு வந்திருந்தாள். இட்லியை அசோக்கின் தட்டில் போட்டுக்கொண்டே, அவனிடம் சன்னமான குரலில் கேட்டாள். "கோவமா..?" "அதுலாம் ஒண்ணுல்ல.. சட்னியை ஊத்து..!!" என்றான் அசோக்கும் முறைப்பாக. "நெலக்கடலை சட்னி.. உனக்கு பிடிக்கும்னு செஞ்சேன்..!!" என்றாள் சித்ரா சற்றே முகம் மலர்ந்தவளாக. "ம்ம்.. ஊத்து ஊத்து.." அசோக் அப்புறமும் இறுக்கமான குரலில் சொல்ல, ஓரக்கண்ணால் தன் தம்பியை பார்த்து சித்ரா புன்னகைத்தாள். அப்புறம் ஒரு ஐந்தாறு நாட்கள் அதிக முக்கியத்துவம் இல்லாமலே கழிந்தன. திவ்யா திவாகருடன் தொடர்ந்து தினமும் சேட் செய்தாள். திவாகரின் கேள்விக்கு எப்படி பதில் சொல்லுவது என்று அடிக்கடி அசோக்கிடம் கேட்டுக்கொண்டாள். அசோக் அச்சமயம் அருகில் இல்லாவிட்டால் கூட.. அவனுடைய செல்போனுக்கு கால் செய்து.. 'ஆட்டுக்கால் சூப் எனக்கு புடிக்குமான்னு கேக்குறாருடா.. என்ன சொல்றது..?' என்று கேட்டு இம்சை செய்வாள். அசோக்கும் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஏதோ ஒரு பதில் சொல்வான். அன்று அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை, அடுத்த நாள் அசோக்கிற்கு அப்டேட் கொடுத்து விடுவாள். அசோக்கும் அசுவாரசியமாய் அதை கேட்டுக் கொள்வான்..!! அப்போதுதான் ஒரு நாள்.. அது ஒரு சண்டே மதியம்..!! எல்லோருக்கும் விடுமுறை..!! திவ்யா அவளுடைய அறையில் முடங்கியிருந்தாள். அக்காவின் வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்தியிருந்த அசோக், ஹாலில் அமர்ந்து.. சித்ராவிடமும், கார்த்திக்கிடமும் தன் ஆபீசில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை.. சொல்லிக்கொண்டிருந்தான். "அசோக்.. ஒரு நிமிஷம் இங்க வாயேன்..!!" திவ்யாவின் குரல் கேட்டு அசோக் திரும்பி பார்த்தான். திவ்யா தனது அறையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 'என்ன..??' என்பது போல அசோக் சைகையால் கேட்டான். 'இங்க வா...!!!' என்பது போல அவள் சைகையால் பதிலளித்தாள். வேறு வழியில்லாமல் அசோக் எழுந்தான். கார்த்திக்கிடமும், சித்ராவிடமும் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்துவிட்டு.. திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். "என்ன திவ்யா..?" என்றான் அவளுடைய அறைக்குள் நுழைந்ததுமே. "அவர் ஆன்லைன் வந்திருக்கார்டா.. பேசப் போறேன்.. நீ என் பக்கத்துல இரேன்...!!" "ப்ச்.. நான் எதுக்கு திவ்யா.. நீ பேசு..!!" "என்னடா இப்படி சொல்ற..? நீதான் என் நலம் விரும்பி.. என் லவ் அட்வைசர்..!! நீயே இப்படி சொன்னா.. எப்படி..? வாடா.. ப்ளீஸ்..!!" அவள் கெஞ்ச, அசோக் நொந்து போனான். வேண்டாவெறுப்பாக சென்று அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான். திவ்யா மிக உற்சாகமாக திவாகருடன் சேட் செய்ய ஆரம்பித்தாள். அவ்வப்போது அசோக்கிடம் திரும்பி ஆலோசனை கேட்டுக்கொண்டாள். அசோக்கும் எரிச்சலை அடக்கிக்கொண்டு அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் இருவரும் பொதுவாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்புறம் அந்த திவாகர்தான் மெல்ல ஆரம்பித்தான். திவ்யாவுடைய ஃபோட்டோவை இப்போது பார்த்துக் கொண்டிருப்பதாக சொன்னான். அவளுடைய அழகை புகழ்ந்தான். திவ்யா நேற்று அவனுடைய கனவில் வந்ததாக திடீரென சொன்னான். 'மனசே சரியில்ல.. ரெண்டு நாளா சரியா சாப்பிடலை.. தூங்கலை..' என்று பிதற்றினான். அசோக் அவர்கள் பேசுவதை பார்ப்பதும், அப்புறம் எரிச்சலாக எங்கேயோ வெறிப்பதுமாக இருந்தான். அப்போதுதான் திவ்யா உற்சாகமான குரலில் கத்தினாள்."டேய்.. சொல்லிட்டாருடா.. சொல்லிட்டாரு..!!" "என்ன சொல்லிட்டாரு..?" என்றான் அசோக் எதுவும் புரியாமல். "லவ்வை சொல்லிட்டாரு.." அவ்வளவுதான்... அசோக் உச்சபட்ச பதட்டத்துக்கு உள்ளானான். அவனுடைய உடல் தானாகவே நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது. இதயம் படபடக்க.. உள்ளத்தில் உணர்ச்சி அலைகள் சுழன்றடிக்க.. சேட் திரையில் பார்வையை வீசினான். 'ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித் யூ..' என்று திவாகர் அனுப்பிய வாசகம், அவனுடைய கண்களை கோரமாய் தாக்கியது. தளர்ந்து போனான்..!! "...... நான் என்ன சொல்லட்டும்..?" திவ்யா கேட்டது அரைகுறையாகத்தான் அவன் காதில் விழுந்தது. "ம்ம்.. என்ன கேட்ட..?" திரும்ப அவளிடம் கேட்டான். "நானும் அவரை லவ் பண்றேனான்னு கேக்குறாருடா.. என்ன சொல்லட்டும்..? எஸ் சொல்லிடவா..? ம்ம்..?? சொல்லிடவா..???" திவ்யா எக்கச்சக்க ஆர்வமும், கொள்ளை கொள்ளையாய் உற்சாகமுமாக கேட்க.. அசோக்கின் மனம் எந்த மாதிரி ஒரு உணர்ச்சித் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் என்பதை வார்த்தைகளில் சொல்வது கடினம்..!! பதறினான்.. திணறினான்.. தடுமாறினான்..!! பதில் சொல்ல தயங்கினான்..!! திவ்யாவோ முகத்தில் பிரகாசமும், கண்களில் மின்னலும், கீபோர்டில் தயாராய் விரல்களுமாய் இருந்தாள். "சொல்லுடா.. அவர் வெயிட் பண்றார்.. எஸ் சொல்லிடவா..?" அவனை அவசரப் படுத்தினாள். அப்போதுதான் அசோக்கின் மனதில் ஒரு விபரீத எண்ணம் ஓடியது..!! இது இறைவன் அவனுக்கு அளித்திருக்கும் ஒரு வாய்ப்பாக தோன்றியது..!! அதை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் என்று தோன்றியது..!! திவ்யாவின் மீது அவனுக்கிருந்த அளவு கடந்த காதல்.. அவனுடைய மனசாட்சியின் கழுத்தை நெரித்து ஊமையாக்கி இருந்தது..!! அந்த லேப்டாப்பையே ஒரு வெறித்த பார்வை பார்த்தவாறு.. அசோக் இறுக்கமான குரலில் சொன்னான். "நீ அவரை லவ் பண்ணலைன்னு சொல்லு திவ்யா..!!!" "எ..என்னடா சொல்ற..?" திவ்யா விழிகளை விரித்து அதிர்ந்தாள். அசோக்கையே நம்ப முடியாத மாதிரி ஒரு பார்வை பார்த்தாள். "சொல்றேன்ல..? உனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்லைன்னு அனுப்பு.." திவ்யா ஓரிரு வினாடிகள்தான் யோசித்திருப்பாள். அதிர்ந்து போனவளாய் அசோக்கை பார்த்திருப்பாள். அப்புறம் பட்டென சகஜமானாள். அவளுடைய முகம் இயல்புக்கு திரும்பியிருக்க, இதழ்களில் லேசாய் ஒரு புன்னகை அரும்பியிருந்தது. அசோக்கை சற்றே பெருமிதமாக ஒரு பார்வை பார்த்தவள், "சரி.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!" என்றாள். லேப்டாப் பக்கம் திரும்பி, படபடவென டைப் செய்து, 'ஸாரி.. நான் உங்களை லவ் பண்ணலை.. எனக்கு அந்த மாதிரி எதுவும் ஐடியா இல்ல..' என்று திவாகருக்கு அனுப்பினாள். அனுப்பிவிட்டு அசோக்கை திரும்பி பார்த்தாள். வெகுளித்தனமாய் ஒரு குழந்தை சிரிப்பை உதிர்த்தாள். அசோக்கிற்கு இப்போது அவனது இதயத்தை எதுவோ பிசைவது மாதிரி ஒரு உணர்வு..!! திவ்யா அந்த மாதிரி அனுப்பியதற்கு திவாகரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அசோக்கும், திவ்யாவும் சேட் விண்டோவையே கவனமாக பார்த்துக்கொண்டிருக்க.. அடுத்த முனையில் திவாகர் அமைதியாக இருந்தான். பின்பு பட்டென அவனது ஐடி ஆஃப்லைன் காட்டியது. "என்னடா.. ஆஃப்லைன் போயிட்டாரு..?" திவ்யாவின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அசோக் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். "ஏண்டா அப்படி சொல்ல சொன்ன..?" திவ்யா பரிதாபமாக கேட்க, அசோக் இப்போது அவளுடைய தோளில் கைபோட்டு, அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளும் அவனது அணைப்புக்கு எதிர்ப்பு காட்டாமல், அவன் மீது சாய்ந்து கொண்டாள். அசோக் அவளுடைய கூந்தலை இதமாக கோதி விட்டான். திவ்யா தன் முகத்தை சற்றே நிமிர்த்தி மீண்டும் அசோக்கிடம் கேட்டாள். "சொல்லுடா.. ஏன் அப்படி சொல்ல சொன்ன..?" "ம்ம்..? எல்லாம் காரணமாத்தான்..!!" அசோக் இறுக்கமான குரலில் சொன்னான். "அவர் திரும்ப வருவார்ல..?" திவ்யா பரிதாபமாக கேட்க, "வருவாரு.. வருவாரு.." என்றான். மனதுக்குள் 'வரக்கூடாது.. வரக்கூடாது..' என்று இறைவனை வேண்டிக்கொண்டான்.அண்டம் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் காரணங்களை நீங்கள் அடுக்க இயலும். அசைக்க முடியாத ஒரு காரணத்தை நான் சொல்லுகிறேன். அதன் பெயர்.. நம்பிக்கை..!! ஒரு உயிரணு கொள்ளும் நம்பிக்கைதான் கருவாகிறது..!! தவழும் குழந்தை நம்பிக்கையினை பற்றிக்கொண்டுதான் மேலெழுகிறது.. நிற்கிறது.. நடக்கிறது.. ஓடுகிறது..!! பள்ளி செல்லும் பையன் முதுகில் மூட்டை கட்டி எடுத்து செல்வது புத்தகங்களை மட்டும் அல்ல.. கூடவே நம்பிக்கையையும்..!! வேலை தேடுவோர் உறையின் உள்ளே இடுவது பயோ டேட்டா மட்டுமல்ல.. பதில் வரும் என்ற நம்பிக்கையையும்..!! தாலி கட்டுவதும், அதற்கு தலையை குனிவதும்.. நீடிக்கும் என்ற நம்பிக்கையால்..!! பொருள் ஈட்டுவதும், அதனுடன் புகழ் தேடுவதும்.. நிலைக்கும் என்ற நம்பிக்கையால்..!! எடிசன் கொண்ட நம்பிக்கைதான் இன்று உலகம் முழுதும் எரிந்து கொண்டிருக்கிறது..!! கிரஹாம்பெல் கொண்ட நம்பிக்கைதான் உங்களது, எனது பாக்கெட்டில் இன்று கிணுகிணுக்கிறது..!! மனிதர்கள் கொண்ட நம்பிக்கையால்தான் அணுவை பிளந்து ஆராய்ச்சி செய்ய இயன்றது..!! நாடுகள் கொண்ட நம்பிக்கையால்தான் அணு ஆயுதப்போர் இன்னும் மூளாமல் இருக்கிறது..!! ஒரு உயிர் இன்னொரு உயிரின் மீது வைக்கும் நம்பிக்கை என்பது அற்புதமான விஷயம்..!! உலகை இன்னும் சுழல செய்து கொண்டிருக்கும் உன்னதமான விஷயம்..!! அத்தகைய நம்பிக்கையை கொல்லுகிற செயல் மிகப்பெரிய குற்றம்..!! விஷத்தை விட கொடியது..!! நம்பிக்கை துரோகம் என்பது நல்ல மனம் கொண்டார்கள் செய்யத் துணியும் காரியம் அல்ல..!! அதே நேரம்.. இயல்பிலேயே நல்ல இதயம் கொண்டவர்கள், அறிந்தோ அறியாமலோ அத்தகைய குற்றம் செய்துவிட்டால், அவர்கள் படுகிற மன உளைச்சலும் சொல்லி மாளாது..!! அசோக் அத்தகைய உளைச்சலுக்குத்தான் இப்போது உள்ளாகியிருந்தான்..!! "ஏண்டா அப்படி சொல்ல சொன்ன..?" என்று திவ்யா திரும்பவும் கேட்டபோது, "அவர் உன்னை எந்த அளவு லவ் பண்றாருன்னு பாக்கலாம்னு நெனச்சேன்.. ஆனா.. அவர் இப்படி பட்டுன்னு ஆஃப்லைன் போவார்னு நெனைக்கலை.." என்று சொல்லி சமாளித்தான். திவ்யாவும் அந்த பதிலில் ஓரளவு சமாதானம் ஆனாள். ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே.. "அவர் எப்படியும் திரும்ப வந்துடுவாருல அசோக்..?" என்று திவ்யா பாவமாக கேட்கும்போது நொந்து போய் விடுவான். திவாகர் ஆஃப்லைன் சென்று, அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லாமல் போய், இன்றோடு ஐந்து நாட்கள் ஆகின்றன. இந்த ஐந்து நாட்களும் அசோக் அடைந்த மனப்போராட்டம் மிகவும் கொடிது..!! 'தவறு செய்து விட்டோமோ..?' என்று ஒரு எண்ணம் அவன் மனதை எந்த நேரமும் அரித்துக் கொண்டே இருந்தது. வழக்கமாக குறும்பு கொப்பளிக்கும் திவ்யாவின் முகம், அந்த ஐந்து நாட்களும் ஒருவித மென்சோகத்தில் மூழ்கிக்கிடக்க, அசோக்கிற்கு அவள் முகத்தை காண சகிக்கவில்லை. அவளை பார்க்கும் போதெல்லாம் ஒருவித குற்ற உணர்வின் பிடியில் அவன் சிக்கிக் கொள்வதையும் தவிர்க்க இயலவில்லை..!!அன்று அசோக்குடைய அலுவலக நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். அந்த நண்பன் அவர்களுடைய டீமில் அனைவருக்கும், அன்று மதிய உணவு ட்ரீட் கொடுத்தான். அவர்கள் சென்ற உணவகத்திற்கு மிக அருகில்தான் திவ்யா படிக்கும் கல்லூரி உள்ளது. தின்று முடித்ததும் அனைவரும், திரும்ப அலுவலகம் கிளம்ப, அசோக் மட்டும் திவ்யாவை ஒரு எட்டு சென்று பார்த்து வீட்டு வரலாம் என்று பைக்கில் கிளம்பினான். பைக்கை கல்லூரி வளாகத்துக்குள் செலுத்தி பார்க் செய்தவன், செல்போன் எடுத்து திவ்யாவின் நம்பருக்கு கால் செய்தான். காத்திருந்தான்..!! கால் பிக்கப் செய்யப்பட்டது. எதிர் முனையில் வேறொரு பெண்ணின் குரல்..!! "ஹலோ.." "தி..திவ்யா..??" அசோக் திணறலாக கேட்டான். "அவ இங்க இல்லீங்களே..? நான் அவ ஃப்ரண்டு பேசுறேன்...!!" "எங்க போயிருக்கா..?" "அவ பேஸ்கட்பால் கிரவுண்ட்ல இருப்பா.. பேகை இங்க போட்டுட்டு போயிட்டா.." "ஓ..!! தேங்க்ஸ்ங்க..!! ம்ம்ம்... ஆமாம்.. உங்க பேரு..??" அசோக் கேட்க, "அது எதுக்கு உங்களுக்கு..?" அடுத்த முனை சூடானது. "சரி.. வேணாம்.. விடுங்க..!!" காலை கட் செய்த அசோக், அருகில் புல் வெட்டிக் கொண்டிருந்த ஒரு தொழிலாயிடம், பேஸ்கட்பால் மைதானம் எங்கிருக்கிறது என்று கேட்டு அறிந்து கொண்டான். செல்போனை பேன்ட் பாக்கெட்டில் செருகியவாறே, அந்த ஆள் கைகாட்டிய திசையில் மெல்ல நடையை போட்டான். புதிதாக போடப்பட்டிருந்த சிமென்ட் சாலை. அதன் இருபுறமும் உயர உயரமாய், பச்சை பச்சையாய் மரங்கள்.. அவன் நடந்து சென்ற அந்த சாலையை நிழலால் நனைத்திருந்தன..!! வெளிர் சாம்பல் நிற சாலையில் உதிர்ந்திருந்த பழுப்பு நிற இலைகளில், ஷூ கால்கள் பதிய அசோக் நடந்து சென்றான்..!! நேராக நடந்து சென்றவன், புல் வெட்டியவன் சொன்ன நூலகத்தை அடைந்ததும், இடப்பக்கம் திரும்பினான். இப்போது தூரமாக பேஸ்கட்பால் மைதானம் கண்ணில் பட்டது. தனியாக பந்தை தரையில் தட்டியவாறே, இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்த திவ்யாவும்..!! மைதானத்தை நெருங்கியவன், சற்று தூரமாகவே நின்று கொண்டான். மர நிழலில் போடப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டான். பந்து தட்டி ஓடிக்கொண்டிருந்த திவ்யாவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். திவ்யா அவள் மட்டும் தனியாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள்... கொளுத்தும் வெயிலில்..!! அவள்தான் அந்த நேரத்தில் அங்கு வந்து தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்றால்.. அந்தப்பக்கம் ஜீன்ஸ் அணிந்த இரண்டு பேர்.. ஏதோ சீரியசாக பேசிக்கொள்வது மாதிரி பாவ்லா செய்து கொண்டு.. உச்சி வெயிலில் நின்று அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்..!!

அசோக் வந்ததை திவ்யா கவனிக்கவில்லை. பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தாள். தன்னை சுற்றி எதிரணியினர் இருப்பது மாதிரி கற்பனை செய்துகொண்டு, அவர்கள் கைகளில் பந்து சிக்காதவாறு, நெளிந்து வளைந்து காப்பாற்றிக்கொண்டு, அப்படியும் இப்படியுமாய் ஓடினாள். அப்புறம் திடீரென திரும்பி.. லேசாக ஜம்ப் செய்து.. கூடையை நோக்கி சர்ரென பந்தை எறிந்தாள். அதுவும் அழகாக வளையத்துள் புகுந்து, வலைக்குள் நுழைந்து பொத்தென்று கீழே விழுந்தது..!! இளநிலை பட்டம் படிக்கையில்தான், இந்த பேஸ்கட்பால் ஆர்வம் திவ்யாவுக்கு பிறந்தது. இப்போது இந்த கல்லூரி பெண்கள் அணிக்கு அவள்தான் கேப்டன்..!! பேஸ்கட்பால் அவளுக்கு அவ்வளவு பிடித்து போனது. அசோக்கிற்கும் அது நன்றாகவே தெரிந்த ஒரு விஷயம்..!! ஒருமுறை இந்தமாதிரி அவனிடம் சொல்லியிருக்கிறாள். "மனசு சரியில்லன்னு வச்சுக்கோ.. பேஸ்கட்பால் கோர்ட் போய்.. ரெண்டு ஷூட் போட்டா போதும்..!! அப்டியே கூல் ஆகிடுவேன் நானு..!!" ஓரிரு நிமிடங்கள் கழித்துதான் திவ்யா அசோக்கை கவனித்தாள். எதேச்சையாக திரும்பியவள், அவனை பார்த்ததும் அப்படியே நின்றாள். ஒருகணம் திகைத்தவள், அப்புறம் லேசாக ஒரு புன்னகையை அவனிடம் வீசினாள்... அந்த புன்னகையுடனே கையில் வைத்திருந்த பந்தையும்..!! பறந்து வந்த பந்தை சரியாக கேட்ச் செய்த அசோக், பதிலுக்கு திவ்யாவை பார்த்து புன்னகைத்தான்.திவ்யா நடந்து வந்து அவனுக்கருகே அமர்ந்து கொண்டாள். முகத்தில் வழிந்த வியர்வையை துவாலையால் துடைத்துக் கொண்டே கேலி தெறிக்கும் குரலில் கேட்டாள். "ஆபீஸ் பொண்ணுகள்லாம் உனக்கு அலுத்து போயிட்டாளுகளா..?" "ஏன்...?" "கலர் பார்க்க காலேஜுக்கே கெளம்பி வந்துட்டியேன்னு கேட்டேன்.." "கலரா..?? உங்க காலேஜ்ல படிக்கிறதுகள எல்லாம் கலர்னு சொல்லாத..!! கலர்களா அதுங்க.. காட்டேரிங்க..!!" "ஏன்..??" "பின்ன..? பேரை கேட்டா கடிக்க வர்றாளுக.." "ஹாஹா..!! யார்கிட்ட பேர் கேட்ட..?" "உனக்கு கால் பண்ணேன்.. ஒருத்தி எடுத்தா.. அவகிட்ட..!! நல்லா கருங்கல்லை முழுங்குன காக்கா மாதிரி ஒரு வாய்ஸ்..!! ஆ..ஆமாம்.. அவ பேர் என்ன..??" அசோக் எதேச்சையாக கேட்பது மாதிரி கேட்க, "அது எதுக்கு உனக்கு..?" என திவ்யா தெளிவாக இருந்தாள். "கிழிஞ்சது..!! எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்கடி..!! அவளும் இப்டித்தான் கேட்டா..!!" "ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!" திவ்யா பெரிதாக, அழகாக சிரித்தாள். அப்புறம் அந்த சிரித்த முகத்துடனே கேட்டாள். "ம்ம்ம்.. சாப்டியாடா..??" "ஆச்சு ஆச்சு.. ஒரு ட்ரீட் இன்னைக்கு..!! இங்கதான்.. ராயல் என்க்லேவ் இருக்குல.." "ஆமாம்.." "அங்கதான்.. செம தீனி..!! சிக்கன், டர்க்கி, ஃபிஷ்.. வயிறு ஃபுல் ஆயிடுச்சு..!! ம்ம்ம்ம்.. நீ சாப்டியா திவ்யா..?" அசோக் சிரித்தவாறே கேட்க, "இ..இல்லடா.." திவ்யாவின் முகம் பட்டென மாறியது.. சோர்வாக..!! "ஏன்..?" "ஒரு மாதிரி.. மனசே சரியில்ல..!! அதான்.. பால் எடுத்துட்டு இங்க வந்துட்டேன்..!!" சொல்லிவிட்டு திவ்யா வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டாள். அவ்வளவு நேரம் உற்சாகமாக இந்த அவளது முகம், பட்டென இப்போது வாடிப் போயிருந்தது. வாடிப்போன அவளுடைய முகத்தை பார்க்க.. அசோக்கிற்கு இப்போது வலித்தது..!! கடந்த ஐந்து நாட்களாக அடிக்கடி அவனை வாட்டி வதைக்கிற அந்த குற்ற உணர்ச்சி, இப்போது மீண்டும் வந்து அவன் மனதை கவ்விக் கொண்டது..!! சற்றே தடுமாற்றமான குரலில் கேட்டான். "தி..திவாகர் திரும்ப வராதாதலையா...?" திவ்யா அந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. எங்கேயோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இப்போது அசோக் குற்ற உணர்ச்சியை குழைத்த குரலில் சொன்னான். "ஸா..ஸாரி திவ்யா.." அவன் அப்படி சொல்ல, திவ்யா உடனே பதறிப் போனாள். "ஐயோ.. என்னடா நீ..?? நீ எதுக்கு ஸாரி கேக்குற..??" "என்னாலதானா அப்படி ஆச்சு..? நாந்தான உன்னை லவ் இல்லன்னு சொல்ல சொன்னேன்..?? நான் மட்டும் அப்படி சொல்லாம இருந்திருந்தா.. இப்போ எந்த பிரச்னையும் இருந்திருக்காது...!!! ஸாரி திவ்யா.. என்னை மன்னிச்சுடு..!!" "அசோக்.. ப்ளீஸ்.." "நா..நான்.. நான் தப்பு பண்ணிட்டேன் திவ்யா.." "அதுலாம் ஒண்ணுல்ல.. உன் மேல எந்த தப்பும் இல்ல..!!" "இல்ல.. உனக்கு புரியலை.. நான்.." அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா டென்ஷனானாள். கத்தினாள். "ப்ச்..!! இப்போ நிறுத்தப் போறியா..? இல்லனா.. அப்படியே அறையவா..?? லூசா நீ..??" "......" அசோக் இப்போது அமைதியானான். "அவர் திரும்ப வர்றாரு.. இல்லனா வராம போறாரு.. அதுக்காக நீ இப்படிலாம் தேவையில்லாம ஃபீல் பண்ணிட்டு இருக்காத..!! ப்ளீஸ்..!!"சற்றே கோவமாக சொன்ன திவ்யா, சோர்ந்து போயிருந்த அசோக்கின் முகத்தையே கொஞ்ச நேரம் பாவமாக பார்த்தாள். அப்புறம் அவனுடைய வலது கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். லேசாக அழுத்தம் கொடுத்தாள். இப்போது தன் குரலை மிக மென்மையாக மாற்றிக் கொண்டு சொன்னாள். "இங்க பாருடா.. இப்படிலாம் நீ ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்ல..!! நீ எனக்கு நல்லதுன்னு நெனச்சுத்தான அப்படி சொல்ல சொன்ன..? நீ என்ன வேணுன்னேவா அப்படி பண்ணின..?? அப்புறம் ஏன் ஃபீல் பண்ற..?? இனிமே இப்படிலாம் பேசாத அசோக்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" அழுது விடும் குரலில் சொன்ன திவ்யா, அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவனுடைய கையை இறுக்கி கட்டிக் கொண்டாள். அசோக்குக்கு உள்ளத்தில் எழுந்த உணர்சிக் கொந்தளிப்பை அடக்க மிகவும் கஷ்டமாக இருந்தது. 'நீ என்ன வேணுன்னேவா அப்படி பண்ணின..??' என்ற திவ்யாவின் குரல் திரும்ப திரும்ப அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. அசோக்கிற்கு இப்போது தன்மீதே ஒருவித வெறுப்பு வந்தது. 'ச்சே.. என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் இவள்..? அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டேனே..? நட்பின் மூலம் உருவாகியிருந்த இவளது நம்பிக்கையை.. எனது காதலுக்கு திருட்டுத்தனமாக பயன்படுத்திக் கொள்வது என்ன நியாயம்..? என்னுடைய காதல் எனக்கு பெரிதாக இருக்கலாம்..!! ஆனால்..அவள் விரும்பி தேடுகிற வாழ்க்கையை.. இடையில் புகுந்து கெடுக்க.. எனக்கு என்ன உரிமை இருக்கிறது..? ச்சே.. தவறு செய்துவிட்டேன்.. எப்படியாவது இந்த தவறை சரி செய்தாக வேண்டும்..!! அந்த திவாகர் திரும்ப வந்தால்தான் என் மனதில் இருந்து இந்த குற்ற உணர்வு விலகும்..!! வருவானா..?' அசோக் இப்போது ஒரு கையால் திவ்யாவின் மோவாயை மெல்ல பற்றி, அவளது முகத்தை நிமிர்த்தினான். தெளிவான ஒரு பார்வை பார்த்தான். நம்பிக்கை கொப்பளிக்கும் குரலில் சொன்னான். "கவலைப்படாத திவ்யா.. அவர் கண்டிப்பா வருவாரு..!!" அசோக் அவ்வளவு நம்பிக்கையாக சொல்ல, இப்போது திவ்யாவின் முகமும் அவ்வளவு நேர சோர்வு மறைந்து, மலர்ச்சிக்கு போனது..!!ஒரு இரண்டு நாட்கள் ஆகியிருக்கும். அசோக் தன் ஆபீசில் இருந்தான். நேரம் மாலை ஐந்து மணியை நெருங்கியிருந்தது. யாருக்கோ மெயில் டைப் செய்து கொண்டிருந்தவனை, அவனுடைய சீனியர் மேனேஜர் சுந்தர் இன்டர்காமில் அழைத்தார். 'இவர் எதுக்கு இந்த நேரத்தில் தன்னை அழைக்கிறார்..?' அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை..!! சிஸ்டத்தை லாக் செய்துவிட்டு அசோக் எழுந்து சென்றான். உள்ளே நுழைந்தவனை அவர் வரவேற்று இருக்கையில் அமர சொன்னார். கொஞ்ச நேரத்திற்கு.. 'வேலை எல்லாம் எப்படி போகிறது..?', 'வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா..?' என்பது மாதிரி பொதுவான கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர், அப்புறம் அவர் அழைத்து பேச காரணமான அந்த முக்கியமான விஷயத்துக்கு வந்தார். "ஜெர்மனில இருந்து ஒரு காண்ட்ராக்ட் சைன் ஆகப்போகுது அசோக்.. புது கிளையன்ட்..!! ராஜன் சொன்னாரா..?" (ராஜன் என்பது அசோக்கின் ப்ராஜக்ட் லீட்) "ம்ம்.. சொல்லிட்டு இருந்தாரு சுந்தர்.." "இட்ஸ் ஹ்யூஜ்.. யூரோப்ல நாம இவ்ளோ பெரிய ப்ராஜக்ட் எக்சிக்யூட் பண்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்..!!" "ம்ம்.." என்றான் அசோக், இதெல்லாம் எதுக்கு தன்னிடம் சொல்கிறார் என்ற குழப்பத்துடனே. "இங்க இருந்து ஒரு மூணு பேரை அனுப்பனும் அசோக்.. இட்ஸ் லாங் டெர்ம்..!! அண்ட்... வெரி வெரி டிமாண்டிங் ஸ்கில்ஸ் அண்ட் ஹார்ட் வொர்க் ரெக்வயர்ட்..!! ராஜன் உன்னை ரெகமன்ட் பண்ணினாரு.. நீ என்ன சொல்ற..?" "ஓ..!!" அசோக்கிற்கு இப்போது எல்லாம் தெளிவானது. அதே நேரம் பயங்கர ஆச்சரியமாகவும் இருந்தது. லாங் டெர்ம் என்றால்.. இவர் சொல்வதை வைத்து பார்த்தால்.. குறைந்தது மூன்று வருடங்கள்..!! ஜெர்மனி சென்று, கிளையன்ட் கம்பெனியில் வேலை பார்த்து.. அவர்கள் விரும்பிய ப்ராஜக்டை ஸ்மூத்தாக முடித்துக் கொடுக்கும் வேலை..!! எக்கச்சக்கமாய் சம்பாதிக்கும் வாய்ப்பு..!! இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காக இங்கு வேலை பார்க்கும் அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கம்பெனியில் இவனை விட சீனியர் ப்ரோக்ராமர்கள் எல்லாம் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால்.. அவர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு அசோக்கிடம் அந்த வாய்ப்பு தேடி வந்ததுதான், அவனது ஆச்சரியத்துக்கு காரணம். கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. ஆனால்.. சந்தோஷம் கொள்ள முடியவில்லை. காரணம்.. அந்த மூன்று வருடங்களில்.. வருடத்திற்கு ஒரு முறைதான் இந்தியா வர இயலும்.. வருடத்திற்கு ஒரு முறைதான் திவ்யாவை பார்க்க இயலும்..!! "என்ன அசோக்.. எதுவும் சொல்லாம உக்காந்திருக்குற..?" அசோக்கின் யோசனையை சுந்தர் கலைத்தார். "ஆ..ஆங்.. இட்ஸ் சர்ப்ரைஸிங்.. யு நோ..!! நா..நான் எக்ஸ்பெக்ட் பண்ணல..!!" "ஹாஹா..!! சர்ப்ரைஸ்..?? ம்ம்ம்ம்.. ஸ்வீட் சர்ப்ரைஸ்தான..??" அவர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே , 'என்னை பந்தாட பிறந்தவளே.. இதயம் ரெண்டாக பிளந்தவளே' அசோக்கின் செல்போன் அலறியது. அசோக் அவசரமாக பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எடுத்து பார்த்தான். திவ்யாதான் அழைத்தாள். 'இவள் எதற்கு இந்த நேரத்தில் கால் செய்கிறாள்..?' என்று அசோக் புருவத்தை சுருக்கி ஓரிரு வினாடிகள் யோசித்தான். அப்புறம் காலை கட் செய்துவிட்டு சுந்தரின் முகத்தை ஏறிட்டான். அவர் புன்னகை மாறாத முகத்துடன் கேட்டார். "ம்ம்.. சொல்லு அசோக்.. ஸ்வீட் சர்ப்ரைஸ்தான..??" "எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சுந்தர்.. ஆக்சுவலி.. ஐ ஆம்.."என்று அவன் இழுத்துக்கொண்டிருக்க, மீண்டும் ஸ்ரீநிவாஸ் பாடினார். மீண்டும் திவ்யாதான்..!! இப்போது அந்த சுந்தர் ஒரு மாதிரி அவஸ்தையாக பெருமூச்சு விட்டார். மீண்டும் காலை கட் செய்ய முயன்ற அசோக்கை தடுத்தார். "இட்ஸ் ஓகே அசோக்.. ஏதாவது முக்கியமான காலா இருக்கப் போகுது.. வெளில போய் அட்டன்ட் பண்ணு..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. ஐ'ம் டன்..!! ஒன்னும் அவசரமில்ல.. பொறுமையா யோசிச்சு சொல்லு..!! உன் பாஸ்போர்ட்டை அட்மின்ல கொடுத்திடு.. அவங்க விஸா ப்ராசஸ் பண்ணட்டும்.. மொதல்ல விஸா வரட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்.. சரியா..??" படபடவென சொன்னவர், கட்டை உயரலை உயர்த்தி காட்ட, "தேங்க்ஸ் சுந்தர்..!!" என்றுவிட்டு அசோக் அவருடைய அறையை விட்டு வெளியே வந்தான். கதறிக்கொண்டிருந்த செல்போனின் பிக்கப் பட்டனை அழுத்தி, அதன் பதற்றத்தை நிறுத்தினான். காதில் வைத்துகொண்டவன் சற்றே எரிச்சலான குரலில்தான் கேட்டான். "என்ன திவ்யா..?" "அவர்கிட்ட இருந்து மெயில் வந்திருக்குடா..!!" அடுத்த முனையில் திவ்யா உற்சாகமாக கத்தினாள். உடனே அசோக்கின் மனதை ஒரு இனம்புரியாத சோகம் வந்து கவ்விக் கொண்டது. அதே நேரம் இத்தனை நாள் அவனை வாட்டி வதைத்த குற்ற உணர்ச்சி, இனிமேல் இருக்கப்போவதில்லை என்ற நிம்மதியும், அவன் மனதில் பரவியதை அவனால் உணர முடிந்தது. இனி திவ்யா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வைத்து, எந்த விபரீத விளையாட்டும் விளையாடக் கூடாது என்று முடிவெடுத்தான். முடிந்த அளவுக்கு திவ்யாவின் காதலுக்கும், அவளது நல்வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான். குரலில் ஒரு புத்துணர்ச்சியை வரவழைத்துக்கொண்டு திவ்யாவிடம் பேசினான். "வாவ்..!! தேட்ஸ் கிரேட்..!! ம்ம்ம்... எ..என்ன சொல்றார்..?" "நான் லவ் பண்ணாட்டாலும் அவர் என்னை லவ் பண்ணிட்டேதான் இருப்பாராம்.. அவரால என்னை மறக்கவே முடியாதாம்.. பிரிஞ்சு போயிடலாம்னுதான் முடிவு பண்ணினாராம்.. ஆனா முடியலையாம்..!! 'ஒரு வாரமா ஒழுங்கா சாப்பிடலை.. தூங்கலை.. உன் நெனைப்பாவே இருக்குன்'னு.. ஒரே பொலம்பல்..!! உருகி உருகி ஒரு கவிதை வேற எழுதி அனுப்பிருக்காரு..!! பாவம் அசோக்.. அவரை நாம ரொம்ப கஷ்டப் படுத்திட்டோம்னு நெனைக்கிறேன்..!!"

"ம்ம்.. கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது திவ்யா..!! அப்புறம்.. வேற என்ன சொன்னார்..? " "இன்னைக்கு நைட்டு ஆன்லைன் வர்றாராம்.. நான் கண்டிப்பா சேட் பண்ண வரணும்னு சொல்லிருக்கார்..!!" "ம்ம்.. குட்.. கோ அஹெட்.. போய் சேட் பண்ணு.." "ஓகேடா..!! அப்புறம்.. நான் இன்னொன்னு நெனச்சேன்.." "என்ன..?" "இனிமேலும் அவர்கிட்ட எதையும் மறைக்க வேணாம்னு தோணுது அசோக்.. நானும் அவரை லவ் பண்றேன்னு சொல்லிடுறேன்.. சரியா..?" திவ்யா ஆர்வமாக கேட்க, அசோக் அவசரமாக தடுத்தான். "ஹேய் ஹேய்.. வெயிட்..!! வேணாம் வேணாம்.. இப்போ எதுவும் சொல்லாத..!!" "ஏண்டா..?" திவ்யாவின் குரலில் ஒரு ஏமாற்றம்.வெறும் ஆன்லைன்ல அவர் சொன்னதை மட்டும் நம்பி எந்த முடிவுக்கும் வந்துட வேணாம் திவ்யா..!! அவரை பத்தி.. அவரோட நிஜ வாழ்க்கை பத்தி.. இன்னும் நல்லா தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் உன் லவ்வை சொல்லலாம்..!!" "ஓ..!! ஓகே.. அதுவும் கரெக்ட்தான்..!! ம்ம்.. ஆனா.. இன்னைக்கு அவர் ஆன்லைன் வர்றப்போ.. என்னோட முடிவு என்னன்னு கேட்டா.. நான் என்ன சொல்றது..?" "நல்ல கேள்வி..!! ம்ம்ம்ம்.... சரி... நீ என்ன பண்றேன்னா.. 'இப்போதைக்கு.. நாம ரெண்டு பேரும் கொஞ்ச நாள் பேசலாம்.. பழகலாம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நல்லா தெரிஞ்சுக்கலாம்.. காதலை பத்தி அப்புறமா டிஸைட் பண்ணிக்கலாம்..' அப்டின்னு புடிகொடுக்காமவே சொல்லு..!!" அசோக் அவ்வாறு சொன்னதும், அடுத்த முனையில் திவ்யாவுக்கு ஒருவித திருப்தி ஏற்பட்டது. "வாவ்.. கலக்குறடா அசோக்..!! லவ் அட்வைசர்னா நீதான் லவ் அட்வைசர்..!! இப்படித்தான் இருக்கணும்..!! ம்ம்.. நல்லாருக்கு இந்த டீல்.. அவரும் ஒத்துப்பார்னு நெனைக்கிறேன்..!!" "கண்டிப்பா ஒத்துப்பார்..!! அப்புறம்.. இன்னொரு விஷயம் திவ்யா.. " "என்ன..?" “நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்டுக்கோ.." "ம்ம்.. சொல்லு.." "சப்போஸ்.. அவர் உன்மேல லவ் ஃபீலிங்க்சொட ஏதாவது பேசினாரு.. உருகுனாரு.. ரொமாண்டிக்காலாம் ஏதாவது உளர்னாருன்னு வச்சுக்கோ.. ப்ளீஸ் டோன்ட் என்கரேஜ் ஹிம்..!! உடனே வேற டாபிக் மாத்திடு.. இல்லனா வேற ஏதாவது பேசுங்கன்னு நேராவே சொல்லிடு.." "ம்ம்.. ஓகே..!! ஆனா.. ஏன் அந்த மாதிரி சொல்ற..?" "காரணம் இருக்கு.. அவர் உன்னை புகழ ஆரம்பிச்சா.. உனக்கு கால் தரையில நிக்காது..!! கால் தரையில நிக்கலைன்னா.. மூளை வேலை செய்யாம போயிடும்.. அதான் சொன்னேன்..!!" "வெவ்வவ்வவ்வே .!! போடா.. நான் ஒன்னும் அப்டிலாம் கெடயாது..!!" "நான் வெளையாட்டுக்கு சொல்லல திவ்யா.. சீரியஸா சொல்றேன்..!! இனிமே அவர்கிட்ட பேசுறப்போ ரொம்ப தெளிவா இரு.. உன்னைப் பத்தி அதிக டீடெயில் அவருக்கு கொடுக்காத.. அவரைப் பத்தி நெறைய தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு..!! அவர் எந்த மாதிரி ஆள்னு தெரிஞ்சுக்குறது நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.. அந்த மாதிரி கேள்வியா கேளு.. அதே நேரம் அவருக்கு சந்தேகம் வராத மாதிரி கேளு..!! சரியா..? " "ம்ம்.. சரிடா..!!" சில வினாடிகள் அமைதியாக இருந்த அசோக், அப்புறம் குரலை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டு சொன்னான். "திவ்யா.." "ம்ம்.." "திஸ் இஸ் நாட் எ கேம்.. திஸ் இஸ் யுவர் லைஃப்..!! யு காட் தேட்..?" "ம்ம்.." "வெளையாட்டுத்தனமா இருக்காத திவ்யா.. திஸ் இஸ் வெரி வெரி சீரியஸ்..!! நீ ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கணும்.. புரியுதா..?" "ம்ம்.. புரியுதுடா..!!" இப்போது திவ்யாவின் குரலிலும் ஒருவித சீரியஸ்னஸ் தென்பட்டது.அன்று இரவு உணவுக்காக அசோக் வீட்டிற்கு வந்ததுமே, திவ்யா அவனை தன் அறைக்கு தனியாக அழைத்து சென்றாள். தனது மெயில் பாக்ஸ் திறந்து, தானும் திவாகரும் பேசிக்கொண்ட சேட் ஹிஸ்டரியை அவனுக்கு எடுத்து காட்டினாள். அசோக்கும் மிக கவனமாக அதை பார்வையிட்டான். திவாகர் தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை, தன் மனதுக்குள் ஏற்றிக் கொண்ட அசோக், திவ்யா பேசியவற்றை மட்டும் சற்றே உன்னிப்பாக நோக்கினான். திருத்தங்கள் சொன்னான். வேறு எந்த மாதிரி பேசியிருக்கலாம் என்று ஆலோசனை கூறினான். திவ்யாவும் அசோக் கூறியவற்றை கூர்மையாக கவனித்துக் கொண்டாள். அப்புறம் அது தினசரி வாடிக்கை ஆனது..!! திவாகரும் திவ்யாவும் தினசரி சேட் செய்துகொள்வதும், அதை அன்றோ அடுத்த நாளோ.. அசோக்கும், திவ்யாவும் பேசி விவாதிப்பதும் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வாகிப் போனது..!! திவாகரை பற்றி நிறைய விஷயங்கள் அவர்களுக்கு தெரிய வந்தன. தெரிந்த விஷயங்கள் திருப்திகரமானதாகவே இருந்தன..!! திவ்யா சின்ன சின்ன விஷயங்களை கூட அசோக்கிடம் கேட்டு அனுமதி வாங்கிக் கொண்டே செய்தாள். அசோக்தான் தன் காதலை காக்க வந்த கண்கண்ட தெய்வமாக கருதினாள். சில நேரங்களில் இப்படி கூட நடக்கும்.. "டேய்.. நீ கொஞ்ச நேரம் இவர்கிட்ட பேசிட்டு இரேன்.. நான் இதோ ரெண்டு நிமிஷத்துல வந்துர்றேன்.." என்று திவாகரிடம் பாதி சேட் செய்து கொண்டிருக்கையிலேயே, லேப்டாப்பை தூக்கி அசோக்கிடம் கொடுத்துவிட்டு திவ்யா வெளியே சென்றுவிடுவாள். சென்றவள் ஒரு பத்து நிமிடங்கள் கழித்துதான், ஹார்லிக்சோ காம்ப்ளானோ கலந்து, இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு வருவாள். அசோக்கும் அதுவரை.. திவாகர் காதல் மயக்கத்தில் உளறுவதற்கெல்லாம் 'உம்' கொட்டிக்கொண்டிருப்பான். அப்புறம் லேப்டாப்பை திவ்யாவிடம் கொடுத்துவிட்டு, அவள் கையில் இருக்கும் கப்பை வாங்கி உறிஞ்சுவான். திவ்யாவுக்கு காதல் ஆலோசகனாக இருப்பது அசோக்கிற்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. தன் இதய வீட்டில் பூத்திருப்பவள், இன்னொருவனை கட்டிக்கொள்ள விரும்புவதும், அதற்கு அவனே ஆலோசனை சொல்லும் சூழ்நிலையாகிப் போனதும்.. அவன் கண் முன்னரே அவர்கள் காதல் மொழி பேசிக்கொள்வதும்.. அனுபவித்துப் பார்த்தாலே அந்த வலி புரியும்..!! மனதெல்லாம் தாளமுடியாத அளவிற்கு வலி எடுத்தாலும், கலங்கிப்போகாத அளவிற்கு தெளிவாகவே இருந்தது..!! திவ்யாவின் சந்தோஷமான வாழ்க்கையை தவிர தனது காதலுக்கு வேறென்ன உயரிய லட்சியம் இருந்துவிட முடியும் என்ற தெளிவுதான் அது..!! அவள் சந்தோஷமாக இருந்தால்.. அதை விட தன் காதலுக்கு வேறென்ன வேண்டும் என்று தோன்றியது..!! இந்த மாதிரியே ஒரு இரண்டு வாரங்கள் சென்றன..!! அப்போது ஒரு நாள்.. அசோக்கை பார்ப்பதற்காக அவன் அறைக்கு திவ்யா வந்தாள். அசோக் அப்போது அங்கே இல்லை. செல்வாதான் வெற்று மார்புடன் தரையில் மல்லாக்க படுத்தவாறு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். திவ்யாவை பார்த்ததும், 'வா..வாம்மா திவ்யா.. வா..' என்று உளறியவர், பதறியடித்து உள்ளே ஓடிபோய் ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே வெளியே வந்தார். திவ்யா பார்வையை வேறு பக்கமாய் திருப்பிக் கொண்டு கேட்டாள்.

"அசோக் இல்லையா செல்வாண்ணா..?" "கீழ்தான்மா போனான்.. நீ பாக்கலையா..?" "இல்லையே.. நான் பாக்கலை.." "ஹவுஸ் ஓனர் கூப்பிட்டு அனுப்பிச்சிருந்தாரு.. பாத்துட்டு வர்றேன்னு போனான்..!! அவன் நம்பருக்கு கால் பண்ணி பாரு..!!" திவ்யா தன் செல்போன் எடுத்து அசோக் நம்பரை தேடி டயல் செய்தாள்..!! காதில் வைத்துக் கொண்டாள்..!! 'என்னை பந்தாட பிறந்தவளே.. இதயம் ரெண்டாக பிளந்தவளே'

நெஞ்சோடு கலந்திடு.. 1


பதினைந்து வருடங்களுக்கு முன்பு..!! மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்.. சிலைமானை தாண்டியதும் இடப்பக்கமாக முதலில் வருகிற அந்த சிறிய கிராமம்தான் வேப்பங்குளம்..!! சாலையின் இருபுறமும்.. நீர்குடித்து நாளாகி.. தாகத்தில் தகித்திருந்த.. காய்ந்து போன வயல்நிலங்கள்..!! வானத்தை வாய்பிளந்து பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தன..!! அவற்றின் ஊடே.. ஆங்காங்கே கருவேல மரங்கள் மட்டும் பச்சை நிறத்தில் கெக்கலிப்புடன் தலையாட்டிக் கொண்டிருந்தன..!! வயல் வரப்புகளில் வளர்ந்திருந்த கோரைப்புற்களை கடித்து, பசி தீர்த்துக் கொள்ளும் ஒரு ஆட்டுக்கூட்டம்..!! அந்த ஆட்டுக்கூட்டத்திற்கு சற்று தள்ளியே அந்த ஆள் நின்றிருந்தான். அழுக்கேறியும் கசங்கியும் போயிருந்த வேஷ்டியை, அவன் உயர்த்தி கட்டியிருக்க, உள்ளே அணிந்திருந்த சிவப்புநிற கால்சட்டை, பளிச்சென வெளியே தெரிந்தது. உச்சி வெயில் மண்டையை பொசுக்காமல் இருக்க.. தலையை முழுவதுமாய் மறைத்து.. துண்டு போர்த்தியிருந்தான். அவனுடைய ஒரு கையில்.. நீளமான தடிமனான ஒரு கம்பு. இன்னொரு கையில்.. இன்னும் சிறிது நேரத்தில் அவனுடைய வயிறை குளிர்விக்கப்போகும்.. பழைய சாதம் அடங்கிய தூக்குச்சட்டி..!!

நிதானமாக மதமதப்பாக புல் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள், திடீரென மிரண்டு போய், 'பே...!!!!' என்று கத்தியவாறு, பேய்பிடித்துக் கொண்டமாதிரி நாலாபுறமும் சிதறி ஓடின. குழப்பத்தில் ஆடுகள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, அவற்றின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் 'கிணிகிணி' ஓசை, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்தது. ஆடுமேய்ப்பவன் காரணம் புரியாமல் திகைத்துப் போய் நின்றிருக்க, ஆட்டுக்கூட்டத்தை அந்தமாதிரி சிதறி ஓட செய்த அந்த சிறுவனும், அந்த சிறுமியும் ஒரே நேரத்தில் வரப்பை தாண்டிக் குதித்தவாறு ஓடி வந்து கொண்டிருந்தார்கள். "ஏய்ய்ய்ய்... எடுப்பட்ட பய புள்ளைகளா..!! என்ன பண்றேன் பாரு உங்களை...!!" ஆத்திரத்துடன் பல்லைக் கடித்து கத்திய ஆடு மேய்ப்பவன், சிறுவர்களை வளைத்து பிடிக்க இரண்டு எட்டு எடுத்து வைத்தான். அதற்குள் ஆடுகள் கன்னாபின்னாவென சிதறி தூரமாய் ஓட ஆரம்பிக்க, சிறுவர்களை பிடிக்கும் முயற்சியை கைவிட்டு, ஆடுகளை விரட்டிக்கொண்டு ஓடினான். நாக்கை வளைத்து வாய்க்குள் அடக்கி, "கெக்கெக்கெக்கெக்கெக்..." என்று ஒருவித வினோத ஒலியை எழுப்பியவாறு.. கையில் இருந்த கம்பை சுழட்டியவாறு.. வேகமாகவும், அதே நேரம் தூக்குச்சட்டியின் மூடி திறந்துவிடாமல் கவனமாகவும்.. செருப்பில்லா கால்களுடன் ஆடுகளின் பின்னால் ஓடினான். அவனுடைய திட்டையும், ஆடுகளின் பின்னால் அவனுடைய ஓட்டத்தையும்.. சுத்தமாக கண்டு கொள்ளாமல் அந்த சிறுவனும், சிறுமியும் ஒவ்வொரு வரப்பாக தாண்டி தாண்டி குதித்து ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஒரு ஐந்தாறு வரப்புகளை அந்த மாதிரி தாண்டிக் குதித்ததுமே, அவர்கள் செல்ல நினைத்த இடம் வந்து சேர்ந்தது.வயல்வெளிகளுக்கு நடுவே ஆறடி உயரத்திற்கு அந்த அகலமான மணல் மேடு..!! அதன் மையத்தில் ஒரு பெரிய கருவேல மரம், அந்த மேடுமுழுக்க நிழல் பரப்பியிருந்தது..!! இரண்டு கைகளையும் ஊன்றி, இருவரும் மெல்ல கவனமாக அந்த மேட்டில் ஏறினார்கள். உச்சியை அடைந்ததும், 'ஹே.. ஹே.. ஹே..' என்று.. அரை நிமிடத்துக்கும் மேலாக இருவரும் மூச்சிரைத்தார்கள். பின்பு தலையை திருப்பி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒரே நேரத்தில் இதழ்களை விரித்து அழகாக புன்னகைத்தார்கள். பின்பு அந்தப்புன்னகை.. வெண்பற்கள் வெளியே தெரியும் அளவிற்கு பெரும் சிரிப்பாய் மாறியது. சிறுவன்தான் மூச்சிரைப்புடனே முதலில் பேசினான். "நீ கூ..கூட ஓடி வர்றப்போ.. உன் கால் கொ..கொலுசு.. ஜல்ஜல்னு.. கே..கேக்க நல்லாருக்கு திவ்யா.." "என் கொ..கொலுசை உனக்கு பிடிச்சிருக்கா அசோக்..?" கேட்டுக்கொண்டே திவ்யா தன் பாவாடையை மெல்ல மேலே உயர்த்தி, காலில் அணிந்திருந்த கொலுசை அசோக்கிற்கு தெளிவாக காட்டினாள். அசோக்கும் திவ்யாவின் வெளுத்த கால்களை கவ்வியிருந்த அந்த வெள்ளிக்கொலுசுகளை ஆசையாக பார்த்தான். "ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு திவ்யா.. புதுசா..?" "ஆமாம்.. எங்கப்பா நேத்து மதுரை போயிருந்தார்ல..? வாங்கிட்டு வந்தாரு.." "உன் காலுக்கு.. நல்லா.. அழகா இருக்கு திவ்யா.." "நல்லா பளபளன்னு மின்னுதுல..?" "ஆ..ஆமாம்.." இருவரும் கொஞ்ச நேரம் அந்த கொலுசுகளிலேயே பார்வையை பதித்திருந்தார்கள். பின்பு அசோக் மெல்ல கைநீட்டி, அவளது வலது கால் கொலுசை தொட்டான். அப்புறம் மெல்ல கையை கீழிறிக்கி அவளது பிஞ்சு பாதத்தை தடவினான். உடனே திவ்யா உயர்த்தி பிடித்திருந்த பாவாடையை படக்கென்று கீழே நழுவவிட்டாள். தன் முன் மண்டியிட்டிருந்த அசோக்கின் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்தாள். அசோக்கும் அவளைப்பார்த்து மெலிதாக புன்னகைத்துவிட்டு, அப்புறம் பேச்சை மாற்றும் விதமாக சொன்னான். "ம்ம்.. சரிசரி.. வா.. வந்த வேலையை பார்ப்போம்.. அதை வெளில எடு.." "இரு அசோக்.. எடுக்குறேன்.." திவ்யா கையில் இருந்த பையை பிரித்தாள். உள்ளே கைவிட்டு அந்த நான்கு முட்டைகளை வெளியே எடுத்தாள். சற்றுமுன் அவள் தன்வீட்டில் இருந்து திருடிக்கொண்டு வந்த முட்டைகள். அடைகாத்த கோழியை அடித்து விரட்டிவிட, அதன் அடியில் கிடந்த முட்டைகள். அவைகளை அசோக்கின் கையில் கொடுத்தாள். அதை வாங்கி கீழே வைத்த அசோக், தன்னுடைய பிஞ்சு கைகளால் மண்ணை தோண்டி குழி பறிக்க ஆரம்பித்தான். அவன் செய்வதையே கவனமாய் பார்த்துக்கொண்டிருந்த திவ்யா அப்பாவியாய் கேட்டாள். "நெஜமாவே மரம் வருமா அசோக்..?" "ம்ம்.. வரும் திவ்யா.. பெரிய மரம் வரும்..!!" "முட்டை காய்க்குமா..?" "ம்ம்.. பெருசு பெருசா.. தேங்கா மாதிரி காய்க்கும்..!!" "அவ்ளோ பெருசாவா..? நெஜமாவா சொல்ற..??" "நெஜந்தான் திவ்யா.. நான்தான் சொல்றேன்ல..?" "ம்ம்.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!! நம்ம மரத்துல காய்க்கிற முட்டையை வேற யாருக்கும் குடுக்க கூடாது அசோக்.. நம்ம ரெண்டு பேருக்கு மட்டுந்தான்.. சரியா..?" "சரி திவ்யா..!! நாம சாப்டது போக மிச்ச முட்டையை வச்சு.. முத்தலிபு பாய் ஜவுளிக்கடை பக்கத்துல.. நாம ஒரு முட்டைக்கடை ஆரம்பிக்கலாம்.. நெறய சம்பாதிக்கலாம்.." "நெஜமாவா சொல்ற..??" திவ்யா கண்களில் கனவு பளபளக்க கேட்டாள். குழி ஓரளவு பெரிதானதும், அசோக் அந்த நான்கு முட்டைகளையும் உடைத்து உள்ளே ஊற்றினான். மண்ணை தள்ளி மூடினான். இருவரும் எழுந்து நின்றார்கள். மூடப்பட்ட குழியையே கொஞ்ச நேரம் இமைக்காமல் பார்த்தார்கள். திவ்யா மெல்ல கேட்டாள். "மரம் வளர எத்தனை நாள் ஆகும் அசோக்..?" "ஒரு மாசம் ஆகும்.." "அவ்ளோ பெரிய மரம்.. ஒரு மாசத்துல வளர்ந்திடுமா..?" திவ்யா சற்றே நம்பிக்கை இல்லாமல் கேட்டாள். "வளர்ந்திடும் திவ்யா.. நான்தான் சொல்றேன்ல..?" "ம்ம்.. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!" இப்போது திவ்யாவின் குரலில் புதிதாக நம்பிக்கை பிறந்திருந்தது. முட்டைகளை புதைத்த இடத்தையே திவ்யா ஆசையும், கனவுமாக பார்த்துக் கொண்டிருக்க, அசோக் மட்டும் சற்றே தூரமாய் பார்வையை வீசியிருந்தான்... அந்த ஆட்டுக் கூட்டம் மீது..!!ஒன்று சேர்ந்து ஒழுங்காய் புல் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், இப்போது மீண்டும் முன்புபோலவே சிதறி எல்லாத்திசைகளிலும் ஓடின. இந்தமுறை அவைகளை சிதறி ஓடச்செய்தது இன்னுமிருவர். திவ்யாவின் அம்மா பத்மாவும், அசோக்கின் அக்கா சித்ராவும். இருவரும் ஓட்டமும், நடையுமாக அந்த மணல்மேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். பத்மாவின் கையில் ஒரு பிரம்பு. ஆடுகள் கலைந்து ஓடியதற்காக சலித்துக்கொண்ட ஆட்டுக்காரனுக்கு, 'போடா கிறுக்குப்பயலே..' என்று அந்த பிரம்பால் 'சுளீர்...!!' என ஒரு அடி கிடைத்தது. பார்க்கும்போதே பயங்கர கோவத்துடன் வருகிறாள் என்று தெளிவாக தெரிந்தது. அசோக் பதறிப்போய் திரும்பி கத்தினான். "திவ்யா.. திவ்யா.." "ச்சீய்.. பக்கத்துலதான நிக்கிறேன்.. ஏண்டா கத்துற..?" "உன் அம்மா வர்றாங்க திவ்யா.. குச்சி வச்சிருக்காங்க.. ஓடிடு.." திவ்யா அதிர்ந்து போனாள். கையில் பிரம்புடன் கோவமாக வரும் அம்மாவையே திகைப்பாய் பார்த்தாள். சுதாரித்துக்கொண்டு அவள் ஓடுவதற்கு முன்பே அவர்கள் இருவரும் மணல் மேட்டை நெருங்கியிருந்தார்கள். சித்ரா திவ்யாவை நோக்கி கை நீட்டி, பத்மாவிடம் கத்தினாள். "இவதான் அத்தை முட்டையை திருடிட்டு ஓடி வந்தா.." "ஏண்டி.. இவ சொல்றது உண்மையா..? எங்கடி முட்டையை..?" பத்மா தன் மகளை பார்த்து கேட்டாள். "கு..குழி தோண்டி.. முட்டையை உடைச்சு ஊத்தி.. மூடிட்டோம்..!! நாங்க.. மு..முட்டை மரம் வளர்க்க போறோம்.." திவ்யா நடுக்கமான குரலில் சொன்னாள். "அடக் கூறுகெட்ட பய மவளே.. நானே ஒத்தைக்கோழி என்னைக்கு பத்துக்கோழியா மாறும்னு கனவு கண்டுக்குட்டு கெடக்கேன்.. இப்படி இருந்த முட்டையெல்லாம் உடைச்சு மண்ணுல ஊத்திருக்கியே..? என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு..? ஏய்.. சித்ரா.. புடிடி அந்த திருட்டுக்கழுதையை.." ஆத்திரத்துடன் அவளுடைய அம்மா கத்த, திவ்யா மிரண்டு போய் ஓட ஆரம்பித்தாள். சித்ரா அவளை வளைத்து பிடித்து கோழிக்குஞ்சு மாதிரி அமுக்கினாள். 'விடுடி.. முண்டக்கண்ணி.. விடுடி..' என்று திவ்யா கிடந்து துடிக்க, சித்ராவோ உடும்புத்தனமாய் அவளை பிடித்திருந்தாள். இழுத்து சென்று அவள் அம்மாவிடம் ஒப்படைத்தாள். "களவாணிச்சிறுக்கி.. வீட்டுல ஒரு பொருளை நம்பி வைக்க முடியுதா..? அதைத்திருடி இதைத்திருடி.. அடக்கோழி முட்டையையும் திருடிட்டு வந்திருக்குறியே..?" "எங்க மரம் வளர்ந்ததும் உன் முட்டையை திருப்பி குடுத்துர்றேன்.." "எதுத்தாடி பேசுற.. எடுபட்ட சிறுக்கி..!! எவ்வளவு கொழுப்பு உனக்கு ..? என்ன பண்ணுறேன் பாரு உன்னை..!! உன் தோலை உரிச்சு உப்புக்கண்டம் போடுறனா இல்லையான்னு பாரு.." பத்மா கையில் வைத்திருந்த பிரம்பால், 'சுளீர்.. சுளீர்..' என, திவ்யாவின் கால்களில் இரண்டு இழுப்பு இழுக்க, 'ஆஆஆ.. !! ஆஆஆ...!!' என திவ்யா அலறி துடிக்க ஆரம்பித்தாள். "வீட்டுக்கு வா.. கரண்டியை காய்ச்சி திருடுற கைல சூடு வைக்கிறேன்.. இனிமே உனக்கு ஜென்மத்துக்கும் திருட்டு நெனைப்பே வரக்கூடாது.." சொன்ன பத்மா, திவ்யாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து செல்ல ஆரம்பித்தாள். திவ்யா அழுது அரற்றிக்கொண்டும், அவளுடன் வரமாட்டேன் என்று அடம்பிடித்து துள்ளி குதித்துக்கொண்டுமே சென்றாள். அவர்கள் கொஞ்ச தூரம் சென்றதும், அசோக் தன் அக்காவை நெருங்கினான். வெறுப்பாக முறைத்தான். "ஏன்டி சொல்லிக்குடுத்த..?" "ம்ம்ம்.. நான் என்ன பண்ண..? அவ அம்மா 'நீதான் திருடினியாடி'ன்னு என்னல்ல கேக்குறா..?" கொஞ்ச நேரம் தன் அக்காவையே முறைத்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் திவ்யாவும் அவள் அம்மாவும் சென்ற திசையில் திடுதிடுவென ஓட ஆரம்பித்தான். இழுத்து செல்லப்பட்ட திவ்யா, ஒரு புதர் தடுக்கி கால் இடறி கீழே விழுந்தாள். விழுந்தவளை 'எந்திரிடி சனியனே..' என்று அவள் அம்மா ஒரு கையை பிடித்து கொத்தாக மேலே தூக்கினாள். மீண்டும் தரதரவென அவளை இழுத்து செல்ல ஆரம்பித்தாள். அவர்களுக்கு பின்னால் ஓடிவந்துகொண்டிருந்த அசோக், திவ்யா கால் இடறி விழுந்த இடத்தை அடைந்ததும், ப்ரேக் அடித்தமாதிரி அப்படியே நின்றான். மெல்ல குனிந்தான். திவ்யாவுடைய ஒற்றைக்கால் கொலுசு அங்கே கழண்டு விழுந்து கிடந்தது. ஒருகையால் அந்த கொலுசை எடுத்தான். ஓரிரு வினாடிகள் அந்த கொலுசையே பாவமாக பார்த்தான். அப்புறம் கைக்குள் வைத்து அந்த கொலுசை இறுகப் பற்றிக்கொண்டு மீண்டும் வேகம் எடுத்து ஓட ஆரம்பித்தான். திவ்யாவின் வீட்டை அசோக் அடைந்தபோது, அவளது அழுகுரல் மட்டும் பெரிதாக வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. 'வேணாம்மா.. வேணாம்மா..' என்ற திவ்யாவின் பரிதாபமான குரல் அசோக்கின் பிஞ்சு மனதை பிசைந்தது. வீட்டுக்கு முன்பிருந்த திண்ணையில் ஏறினான். உடலை எக்கி மரத்திலான அந்த ஜன்னல் கதவை திறந்தான். மிரட்சியாய் ஒரு பார்வையை உள்ளே வீசினான். முதலில் அவன் பார்வையில் சிக்கியது திவ்யாவின் அண்ணன் கார்த்திக்தான். ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். அவனுடைய வாய் அசைபோட்டுக் கொண்டிருந்தது. அவன் கையில்.. சென்ற வாரம் திருவிழாவிற்கு செய்த பணியாரம். வாய் இயங்கிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை மட்டும் அசையாமல் ஓரிடத்தில் நிலைத்திருந்தது.அவன் பார்வை பதிந்திருந்த இடத்தில் அவன் அம்மாவும் தங்கையும் நின்றிருந்தார்கள். பத்மாவின் ஒரு கையில் திவ்யா அகப்பட்டிருக்க, அவளது இன்னொரு கையில் அடுப்பில் வைத்து எடுக்கப்பட்டிருந்த கரண்டி. அதை நீட்டி நீட்டி தன் மகளை மிரட்டிக் கொண்டிருந்தாள். "சொல்லுடி.. இனிமே திருட மாட்டேன்னு சொல்லு.." "மாட்டேன்மா.. இனி திருட மாட்டேன்.." "இன்னொரு தடவை நீ திருடுனேன்னு தெரிஞ்சது.. திருடுன கை பொசுங்கி போகும் பொசுங்கி.." சொல்லிக்கொண்டே அவள் அந்த கரண்டியை திவ்யாவின் கைக்கு அருகில் எடுத்து சென்றாள். உடனே திவ்யா பயந்துபோய் 'விலுக்' என்று ஒரு துள்ளு துள்ளினாள். பத்மா அதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. திவ்யாவை பிடித்திருந்த பிடி தளர்ந்தது. அவளுடைய கை விடுபட்டது. விடுபட்ட வேகத்தில் சுடுபட்ட கரண்டியில் திவ்யாவின் வலது கை உரசியது. அவ்வளவுதான்..!! "ஆஆஆஆஆ...!!!" என்று அலறிக்கொண்டு திவ்யா கீழே விழுந்து துடித்தாள். தூண்டிலில் சிக்கிக்கொண்ட மீன் மாதிரி, கை கால்களை உதறிக்கொண்டு துடிதுடித்தாள். பத்மாவின் தாயுள்ளம் படக்கென பதறிப்போனது. கையில் இருந்த கரண்டியை தூர எறிந்து விட்டு, தன் மகளை அள்ளி எடுத்தாள். "ஐயோ... ஐயோ... அடிப் பாவிமவளே.. நான் சும்மா பயமுறத்ததானடி செஞ்சேன்..!! ஏண்டி இந்த ஆட்டம் ஆடுற..? ஆடுகாலி சிறுக்கி..!!" என்று உடனடியாய் ஒரு ஒப்பாரி வைத்தாள். ஊஞ்சலில் அமர்ந்திருந்த தன் மகனிடம் திரும்பி, "டேய் கார்த்திக்கு.. அந்த அலமாரில மை பாட்டில் இருக்கும்.. எடுத்துட்டு வாடா..!!" என்று கத்தினாள். கார்த்திக் ஊஞ்சலில் இருந்து இறங்கினான். 'இப்போதே செல்லலாமா.. இன்னொரு கடி கடித்துவிட்டு செல்லலாமா..' என்பது போல கையிலிருந்த பணியாரத்தை ஒரு பார்வை பார்த்தான். "வெரசா எடுத்துட்டு வாடா.. வெட்டிப்பய மவனே.." பத்மா ஆத்திரமாய் கத்தவும், கையில் வைத்திருந்த பணியாரத்தை ஊஞ்சலில் வைத்துவிட்டு கார்த்திக் அவசரமாய் உள்ளே ஓடினான். திவ்யா அலறி துடித்துக் கொண்டே இருந்தாள். அசோக்கால் நீண்ட நேரம் அவளுடைய கதறலை கேட்க முடியவில்லை. அவளுடைய துடிப்பை பார்க்க முடியவில்லை. திண்ணையில் இருந்து இறங்கினான். உள்ளம் முழுக்க சோகத்துடன் தன் வீட்டை நோக்கி மெல்ல நடையை போட்டான்.அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு, அசோக், திவ்யா, சித்ரா மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே இல்லை. மூன்றாம் நாள் மாலை.. பெல் அடித்ததும், அசோக் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தான். ஸ்கூல் மெயின்கேட் நோக்கி நடக்க ஆரம்பித்தான். எங்கிருந்தோ ஓடிவந்த அவனுடைய அக்கா சித்ரா அவனுக்கு பின்புறமாக வந்து அவன் தோளை தொட்டாள். அசோக் திரும்பி பார்த்ததும், சற்றே பரிதாபமான குரலில் கேட்டாள். "ஏண்டா தம்பி என்கிட்டே பேசவே மாட்டேன்ற..?" "போடீ.. திவ்யாவை அவ அம்மாகிட்ட நீதான மாட்டிவிட்ட..? உன்னாலதான அவ கைல சூடு வாங்குனா..? உன்கிட்ட பேசமாட்டேன் போ..!! திவ்யா எவ்ளோ பாவம் தெரியுமா..? எப்படி அழுதா தெரியுமா..?" "அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்..? நான் என்ன வேணும்னா செஞ்சேன்..? தெரியாமத்தானடா..!! என்கிட்டே நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா அசோக்கு..!! நான் வேணா அந்தப்புள்ளைட்ட மன்னிப்பு கேட்டுடவா..?" சித்ரா அவ்வாறு பரிதாபமாக கேட்கவும், அசோக் இப்போது சற்றே இறுக்கம் தளர்ந்தான். 'ம்ம்.. சரி..' என்று தன் அக்காவை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். இருவரும் திவ்யாவை தேடி சென்றார்கள். புளியமரத்துக்கு கீழே இருந்த சிமென்ட் பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்த திவ்யா பார்வைக்கு கிடைத்தாள். தூரத்தில் சித்ராவை பார்த்ததுமே வெறுப்புடன் வேறுபக்கமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள். "என்னை மன்னிச்சுடு திவ்யா.. நான் தெரியாம பண்ணிட்டேன்.." சித்ரா உண்மையான குற்ற உணர்ச்சியுடன் சொல்ல, "உன்கூட பேச எனக்கு புடிக்கல.. போயிடு.." திவ்யா முறைப்பாக சொன்னாள். "நான்தான் மன்னிப்பு கேக்குறேன்ல..?" சித்ரா கெஞ்ச, "நான்தான் போயிடுன்னு சொல்றேன்ல..?" திவ்யா கத்தினாள். "தெரியாம பண்ணிட்டேன் புள்ள.." "சொன்னது காதுல விழுகுலையா..? என்முன்னால நிக்காதடி.. போ.. போயிடுடி..!! முண்டக்கன்னி..!!" திவ்யா அந்த மாதிரி திமிராக சொல்லவும், இப்போது சித்ராவும் எரிச்சலானாள். அவளும் இப்போது குரலை உயர்த்தி கத்தினாள். "என்ன புள்ள.. பாவமேனு பேசலாம்னு வந்தா.. ரொம்பத்தான் கத்துற..? எத்தனை நாள் என் கூட பேசாம இருக்குறேன்னு நானும் பாக்குறேன்.." சொல்லிவிட்டு திரும்பி விடுவிடுவென நடந்தாள். "பேச மாட்டேண்டி.. உன்கூட பேசவே மாட்டேன்.." திவ்யா சித்ராவின் முதுகை பார்த்து கத்தினாள். "ம்ம்.. பாப்போம் பாப்போம்.." என்றாள் சித்ரா கேலியான குரலில். "போடீ போடீ.. முண்டக்கண்ணி.." "போடீ போடீ.. வெள்ளைப்பன்னி.." அக்கா ஆத்திரத்துடன் கத்திவிட்டு செல்ல.. திவ்யா இன்னொரு பக்கமாக முகத்தை திருப்பி முறைத்துக் கொண்டிருக்க, அசோக் கொஞ்ச நேரம் அப்படியே பரிதாபமாக நின்றிருந்தான். அப்புறம் பொத்தென்று பெஞ்சில் அமர்ந்தான். சோகமாக முகத்தை வைத்தபடி, தலையை பிடித்துக் கொண்டான். அசோக்கிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனுக்கு அக்காவையும் பிடிக்கும். திவ்யாவையும் பிடிக்கும். இரண்டு பேரும் இவ்வாறு சண்டையிட்டுக்கொண்டது அவனுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் இல்லை. அதில்லாமல்.. அக்கா மீது இருக்கும் கோபத்தில், திவ்யா எங்கே இனிமேல் அவனுடன் பேசாமலே போய் விடுவாளோ என்ற கவலை வேறு அவனுடைய மனதை ஒருபக்கம் அரித்துக் கொண்டிருந்தது. அவன் அந்தமாதிரி கவலையுடன் அமர்ந்திருக்கையில்தான், திவ்யாவுடைய பட்டுக்கரம் ஒன்று அவன் தோள் மீது படர்ந்தது. வாடிப்போயிருந்த அவனது முகத்தை வாஞ்சையுடன் தொட்டு திருப்பியது. அவ்வளவு நேரம் வெறுப்பில் நனைந்த வார்த்தைகளை துப்பியது இந்த உதடுகள்தானா என நம்ப முடியாத அளவுக்கு, இப்போது திவ்யாவின் உதடுகள் அன்பில் அமிழ்ந்த வார்த்தைகளை சிந்தின. "என்னாச்சு அசோக்.. ஏன் ஒரு மாதிரி இருக்குற..?" "ஒ..ஒண்ணுல்ல திவ்யா.." அசோக் தடுமாற்றமாய் சொன்னான். "ஏன் ரெண்டு நாளா என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வரலை..?" "நீ என் மேல கோவமா இருப்பியோன்னு நெனச்சேன்.."சேச்சே.. எனக்கு உன் அக்கா மேலதான் கோவம்.. உன் மேல இல்ல.." "நெஜமாவா சொல்ற.. அப்போ.. என்கூட எப்போவும் போல பேசுவியா..?" இப்போது அசோக்கின் குரலில் எக்கச்சக்க உற்சாகம். "ம்ம்.. பேசுவேனே..? எப்போவும் போல பேசுவேன்.. எப்போவும் பேசுவேன்..!! இரு இரு.. உனக்காக ஒன்னு கொண்டு வந்திருக்குறேன்.." சொன்ன திவ்யா தன் ஸ்கூல் பேகுக்குள் கைவிட்டு ஒரு பாக்சை எடுத்தாள். பாக்சை திறந்து உள்ளே இருந்த அந்த காகித பொட்டலத்தை வெளியே எடுத்தாள். "என்னது இது திவ்யா..?" "பனங்கற்கண்டு.." பொட்டலத்தை பிரித்து அசோக்கிடம் நீட்டினாள். "ஹை.. எனக்கு ரொம்ப புடிக்கும்.." "ம்ம்.. தெரியும்..!! அதான்.. வீட்டுல இருந்து அம்மாவுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடு.." "ம்ம்... இந்தா திவ்யா.. நீயும் கொஞ்சம் சாப்பிடு.." "எனக்கு வேணாம் அசோக்.. நான் அப்போவே சாப்பிட்டேன்.. நீ நல்லா சாப்பிடு.." அசோக் கற்கண்டை அள்ளி வாயில் போட்டுக்கொள்ள, அவன் சாப்பிடுவதையே திவ்யா ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். கற்கண்டை சுவைத்துக்கொண்டே அசோக் தன் வலது கரத்தை நீட்டி, திவ்யாவுடைய வலது கரத்தை தொட்டான். திருப்பினான். தீக்காயம் பட்ட இடத்தை பார்வையிட்டான். திவ்யாவுடைய வலது கையில்.. முழங்கைக்கு சற்று கீழே.. உட்புறமாக.. மூன்று இன்ச் அளவு நீளத்திற்கு.. கோடு போட்ட மாதிரி அந்த தீக்காயம். அந்த காயத்தை சுற்றி அசோக் இதமாக தடவினான்.. மயிலிறகால் வருடுவது மாதிரி..!! "ரொம்ப வலிக்குதா திவ்யா..?" "இல்ல அசோக்.. இப்போ வலிக்கலை.." "உன் கையை புடிச்சுக்கவா..?" "ம்ம்.. புடிச்சுக்கோ.." வருடிக்கொண்டிருந்த கையை அசோக் இப்போது நகர்த்தினான். திவ்யாவின் வலது கரத்தோடு, தனது வலது கரத்தை இணைத்தான். அவளுடைய விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான். அழுத்தி பற்றிக்கொண்டான்..!!இன்று..!! அசோக் பல் தேய்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் ப்ரஷ் பிடித்து இடதும் வலதுமாய் இயக்கிக் கொண்டிருந்தவன், இன்னொரு கையில் செய்தித்தாளை விரித்து வைத்திருந்தான். கண்கள் செய்திகளை அவ்வப்போது மேய்ந்து கொண்டிருந்தாலும், அவனுடைய கவனம் முழுவதும், செல்வாவின் மேலேயே இருந்தது. செல்வா செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்றது. செல்வாவின் செய்கைகளிலேயே படிந்திருந்தது. செல்வா அவனது அறைத்தோழன். அறைத்தோழன் என்றதும் அசோக்குடைய பள்ளித்தோழனோ, கல்லூரித்தோழனோ என்று நினைத்து விடாதீர்கள். செல்வாவிற்கு வயது நாற்பதை நெருங்குகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அரைக்கிழவன் வயதில் அசோக்கிற்கு ஒரு அறைத்தோழன்..!! ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை. அதில்லாமல் ஓய்வு நேரங்களில் எல்.ஐ.சி ஆப் இன்டியாவிற்கு ஏஜன்ட் வேலையும் செய்கிறார். 'லைஃப் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி விக்கிற மாதிரி உலகத்துல ஒரு தர்மசங்கடமான வேலை வேற எதுவும் இல்லை அசோக்..' என்று அடிக்கடி புலம்பிக்கொள்(ல்)வார். ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த அறைக்கு, அசோக் தன் கல்லூரித்தோழன் சுரேஷுடன் குடி வந்தான். வந்த இரண்டு மாதங்களிலேயே இந்த செல்வா அவர்களுடன் வந்து ஒட்டிக்கொண்டார். செல்வாவும் சுரேஷும் ஒரே ஊர்க்காரர்களாகிப்போனது அசோக்கின் துரதிர்ஷ்டம்..!! சென்ற மாதம் சுரேஷ் ஆன்சைட் என்று அமெரிக்காவிற்கு பறந்து விட, இப்போது அசோக்கும் செல்வாவும் மட்டுந்தான்..!! அசோக் எழுவதற்கு முன்பே அதிகாலையிலே எழுந்து அதிசயமாய் செல்வா குளித்து முடித்திருந்தார். வழுக்கை பரவாத பாகங்களில், வளர்ந்திருந்த முடிகளில், வெள்ளை நிறம் கொண்டவை இப்போது காணாமல் போயிருந்தன. டை அடித்திருக்கிறார் என்று தெளிவாக தெரிந்தது. எப்போதாவது அணியும் ஜீன்ஸ், டி-ஷர்ட்டை இப்போது அணிந்திருந்தார். 'என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி..' என்ற சிட்டுக்குருவி பாடலை சீட்டியடித்தபடியே, ஷாருக்கான் சிபாரிசு செய்த க்ரீமை முகம் முழுக்க அப்பி தேய்த்தார். ஒரு புதுவிதமான உற்சாகத்துடனே, அறைக்குள் உலவிக்கொண்டிருந்தார். அதைத்தான் அசோக் அப்படி வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான். "ஏன் அசோக்.. ஒரு சாயல்ல என்ன பார்த்தா.. மாதவன் மாதிரியே இல்ல..?" செல்வா ஒரு மாதிரி ஸைட் போஸ் கொடுத்தபடியே கேட்க, அசோக் செம கடுப்பானான். வாயில் இருந்த நுரையை ஜன்னல் வழியே வெளியே துப்பிவிட்டு, வெடுக்கென சொன்னான். "மாதவன் மாதிரியா..? மயில்சாமி மாதிரி இருக்கீங்கண்ணா..!!" "என்ன அசோக் இப்படி சொல்லிப்புட்ட..?" "பின்ன என்ன..? ஏண்ணா காலாங்காத்தாலேயே காமடி பண்றீங்க..? என்னாச்சு உங்களுக்கு இன்னைக்கு..?" "அ..அது.. அது வந்து.. அண்ணனுக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சுடா அசோக்.." செல்வா வெட்கத்துடன் சொன்னார். "மறுபடியுமா..?" அசோக் நொந்துபோனவனாய் கேட்டான். "ஆமாம்.." "இப்போ யாரு..?" "நம்ம புவனா ஆண்ட்டியோட பொண்ணு.. கண்மணி..!!" சிட்டுக்குருவி பாடலின் சீக்ரட் இப்போது புரிந்து போனது, அசோக்கிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. ஆனால் புவனாவை ஆண்ட்டி என்று செல்வா சொன்னதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. புவனா என்பது, செல்வா தினமும் சாப்பிடுகிற மெஸ்சுக்கு சொந்தக்காரி. அக்கா என்று கூட சொல்ல முடியாது.. செல்வாவுக்கு தங்கை என்று சொல்லும் அளவிற்கு.. இளமையாக இருப்பாள். இல்லையென்றால் செல்வா முதிர்ந்து போய் தெரிவார் என்றும் சொல்லலாம். "கண்மணியா..? அது சின்ன பொண்ணுண்ணா.. பாவம்..!!" "காதல்ல பாவம், புண்ணியம்லாம் கெடையாது அசோக்..!! காதல்ன்றது.." அவர் ஆரம்பித்ததுமே அசோக் காதை பொத்திக்கொண்டான். 'ங்கொய்யால.. கேப் கெடைச்சா காதல் பத்தி தத்துவம் சொல்ல ஆரம்பிச்சுடுறான்யா இந்த ஆள்' என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. 'காதல்ன்றது உப்புமா மாதிரி அசோக்..', 'காதல்ன்றது ஊத்தாப்பம் மாதிரி அசோக்..', 'காதல்ன்றது உளுந்த வடை மாதிரி அசோக்..', என்ற ரீதியில் ஆரம்பித்து இதுவரை ஏகப்பட்ட தத்துவம் சொல்லியிருக்கிறார் செல்வா. 'விக்ரமன் படமா பாத்து கெட்டுப்போயிட்டான்யா இந்த ஆள்..' என்று நினைத்துக்கொண்டான். அவர் தத்துவம் சொல்லி முடித்துவிட்டார் என்று உறுதியான பிறகே காதை கொஞ்ச கொஞ்சமாய் திறந்தான். செல்வா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்."......... அப்போ அவ என்னை லவ் பண்றானுதான அர்த்தம்..?" "எவ..??" அசோக் புரியாமல் கேட்டான். "ப்ச்.. அவதான்பா.. கண்மணி..!!" கிழிஞ்சது..!! இவர் இப்படித்தான்..!! இவர் ஏதோ மன்மதராசா மாதிரியும், உலகத்தில் உள்ள பெண்கள் எல்லாம் இவரிடம் ஜொள்ளுவிட்டு திரிவது மாதிரியும் நினைப்பு இவருக்கு..!! இந்த ஐந்து மாதத்தில் பத்து, பதினைந்து பெண்களுக்கு மேல் இவரை காதலிப்பதாக சொல்லிவிட்டார்..!! "எதை வச்சு அவ உங்களை லவ் பண்றான்னு சொல்றீங்க..?" "இப்போலாம் ஒழுங்காவே நீங்க சாப்பிடுறது இல்ல.. எளைச்சு போயிட்டீங்க.. நல்லா சாப்பிடுங்க.. அப்டின்னு சொல்றாப்பா..!! இதுக்கு என்ன அர்த்தம்..? என் மேல அவளுக்கு அப்படி என்ன அக்கறை..? இதுக்கு பேர் காதல்தான..?" "அண்ணா.. வெளையாடாதீங்கண்ணா..!! அவ ஏதோ.. நீங்க நல்லா சாப்பிட்டா.. கூட ரெண்டு கல்த்தோசை விக்குமேன்னு சொல்லிருப்பா..!! அதைப்போய் காதல்னு சொல்றீங்க..?" "அட போப்பா..!! உனக்கு தெரியாது.. பார்வையே காட்டிக் கொடுத்திடும்..!! காதல்ல எனக்கு நெறைய அனுபவம் இருக்கு அசோக்.. நான் கரெக்டா கண்டுபிடிச்சுடுவேன்..!! உங்க காதலையே நான் எப்படி கரெக்டா கண்டுபுடிச்சேன் பாத்தேல..?" "ஐயையோ.. நீங்க வேற..!! நாங்க லவ்லாம் பண்ணலைண்ணா.. நாங்க ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்..!!" "ம்ஹூம்..!!" "ஏண்ணா நம்ப மாட்டேன்றீங்க..? நான்தான் சொல்றேன்ல..?" "நான் நம்ப மாட்டேன்.. நான் நம்ப மாட்டேன்..!! நீயும் அந்தப்பொண்ணும் லவ் பண்றீங்க.. லவ் பண்றீங்க..!! இதை நான் ஆணித்தரமா அடிச்சு சொல்வேன்..!!" "ஷ்ஷ்ஷ்ஷ்.... என்னால முடியலை..!! ஆளை விடுங்க.. வேற ஏதாவது பேசுங்க..!!" அசோக் காலில் விழாத குறையாக கதற, செல்வா சற்று மனமிறங்கினார். மீண்டும் கண்ணாடி முன் சென்று நின்றுகொண்டு, விட்ட இடத்தில் இருந்து மேக்கப்பை தொடர்ந்தார். அவர் சீவி சிங்காரித்து வருவதற்குள் அசோக்கை பற்றி மேலும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அசோக் சென்ற வருடம்தான் எஞ்சினியரிங் முடித்தான். ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சிறிய சாஃப்ட்வேர் கம்பெனியில், குறைந்த ஊதியத்திற்கு ஒரு வேலை கிடைத்தது. அந்த கம்பெனியில் சேர்ந்து கொள்வது என்று முடிவெடுத்தான். தங்குவதற்கு இடம் வேண்டுமே..? தயக்கமே இல்லாமல் சென்னையில் இருக்கும் தன் அக்கா சித்ராவிற்கு கால் செய்தான். அவள் பார்த்து தந்த அறைதான் இது..!! அதுவும் தான் வசிக்கும் அப்பார்ட்மன்ட்சுக்கு அடுத்த தெருவிலேயே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு போர்ஷன்..!!..!! சித்ரா எப்போது சென்னை வந்தாள் என்று கேட்கிறீர்களா..? வருகிறேன் வருகிறேன்.. பொறுங்கள்..!! சித்ராவுக்கும் சென்ற வருடம்தான் திருமணம் ஆனது. தன் கணவனுடன்தான் அடுத்த தெரு அப்பார்ட்மன்ட்சில் குடியிருக்கிறாள். அவளுடைய கணவன் வேறு யாரும் கிடையாது.. திவ்யாவின் அண்ணன் கார்த்திக்தான்..!! எஸ்.. அனலில் விழுந்த புழுவாய் தங்கை அலறி துடித்துக் கொண்டிருந்தபோது, பணியாரத்தை பரிதாபமாய் பார்த்த அதே கார்த்திக்தான்..!! இப்போது அரசு வங்கி ஒன்றில் பணக்கட்டுகளுக்கு இடையில் பணிபுரிகிறான்..!! திவ்யாவை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. சொல்கிறேன்..!! திவ்யாவும் சென்னையில்தான் ஒரு கல்லூரியில் மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் பயில்கிறாள். சித்ராவும் கார்த்திக்கும் குடியிருக்கும் அதே வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். முதல் மூன்று வருடங்கள் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தாள். அண்ணனுக்கு திருமணம் ஆனதும், அவனுக்கென்று சென்னையிலேயே ஒரு வீடு வந்ததும்.. 'ஏன் தேவையில்லாத தெண்ட செலவு..?' என்பது மாதிரியான குடும்பத்தினர் நெருக்குதலுக்கு உட்பட்டு.. விருப்பமும், வேறு வழியும் இல்லாமல்.. ஹாஸ்டலை காலி செய்துவிட்டு அந்த வீட்டில் தங்கியிருக்கிறாள். திவ்யாவுக்கும் சித்ராவுக்கும் இன்னும் ஏழாம் பொருத்தம்தான்..!! சிறுவயதில் பேசிக்கொள்ளாமல் பிரிந்தவர்கள் இன்று வரை பேசிக்கொள்ளவில்லை..!! சித்ரா தன் அண்ணியாக வருவதில் அவளுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. வீட்டு பெரியவர்களிடம் கூட சண்டையிட்டு பார்த்தாள். அவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க.. திவ்யாவால் எதுவும் செய்ய முடியவில்லை..!! ஏதோ அயலார் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவள் போலத்தான், அண்ணனின் திருமணத்தன்று சுற்றி திரிந்தாள். சித்ராவின் கையை பிடித்து மணவறையை வளம் வரக்கூட, திவ்யாவின் சித்தி பெண்ணை வைத்துத்தான் சமாளித்தார்கள். விருப்பம் இல்லாமல் அண்ணனின் வீட்டில் வந்து தங்கியிருந்தவளுக்கு, அசோக்கும் அருகிலேயே குடிவந்தது சற்றே நிம்மதியையும், எக்கச்சக்கமாய் சந்தோஷத்தையும் கொடுத்தது. அசோக்குடன் நிறைய நேரம் செலவழிக்கிறாள். அசோக் தங்கியிருக்கும் அறைக்கு சகஜமாக வந்து செல்வாள். மேலே.. செல்வா அசோக்குடன் இணைத்துக் கூறிய அந்த பெண்.. திவ்யாதான்..!! அவர்களுடைய நெருக்கத்தைப் பார்த்து அவராக அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.செல்வா மேக்கப்பில் மூழ்கிவிட, அசோக் பாத்ரூம் சென்று குளித்தான். குளித்து முடித்து வேறு உடைகள் அணிந்து வெளியே வந்தபோது, செல்வா கிளம்பி ரெடியாக இருந்தார். "அப்போ.. நான் போயிட்டு வர்றேன் அசோக்.." "எங்கண்ணா கேளம்பிடீங்க..?" "வேறெங்க..? மெஸ்ஸூக்குத்தான்.. சாப்பிட்டு வர்றேன்பா..!!"

"ஓ.. சரிண்ணா.." "ஹ்ஹ்ம்ம்ம்.. நீ கொடுத்து வச்ச மகராசன்..!! அக்கா வீடு பக்கத்துலையே இருக்குது.. அங்கேயே சாப்பிட்டுக்குவ..!! லவ் பண்ற பொண்ணு வேற அந்த வீட்டுலையே இருக்குது.. அப்படியே ரொமான்ஸ் லுக் விட்டுக்கிட்டே சாப்பிடுவீங்க..!!" "ஐயோ.. அண்ணா.. ஏண்ணா இம்சை பண்றீங்க..? நாங்க லவ்லாம் பண்ணலைண்ணா.." அசோக் எரிச்சலாக கத்தினான். "நோ நோ..!! நீ அந்தப்பொண்ணை லவ் பண்ற.. அந்தப்பொண்ணும் உன்னைத்தான் லவ் பண்ணுது.. யார்கிட்ட விடுறீங்க உங்க கதையை..? நான் நம்ப மாட்டேன்.. நான் நம்ப மாட்டேன்..!! என்னை யாரும் ஏமாத்த முடியாது..!!" அவர் கூலாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தார். கூச்சமே இல்லாமல் 'என் கண்மணி.. என் காதலி.. இளமாங்கனி.. எனை பார்த்ததும்.. சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே..' என்று சத்தம் போட்டு பாடிக்கொண்டே சென்றார். கதவை சாத்தி வெளியேறினார். பாட்டுக்கு ஏற்றவாறு தன் கைகளையும், இடுப்பையும் நெளித்தவாறே அவர் சென்றது செமகாமடியாக இருந்தது..!! அசோக் கொஞ்ச நேரம் அவரையே வெறுப்பாக பார்த்தான். அப்புறம் அவனும் தயாராகி அக்கா வீட்டிற்கு சாப்பிட கிளம்பினான்.ஆறு அடுக்குகள் கொண்ட அப்பார்ட்மன்ட்ஸ் அது..!! அதில் நான்காவது அடுக்கில்தான் சித்ராவின் வீடு இருக்கிறது..!! அப்பார்ட்மன்ட்சுக்கு வெளியிலேயே அசோக் பைக்கை பார்க் செய்தான். லிஃப்ட் பிடித்து நான்காவது தளத்துக்கு சென்றான். வீடு திறந்தே இருக்க உள்ளே நுழைந்தான். மிக்ஸியில் எதையோ அரைத்துக்கொண்டிருந்த சித்ரா, அசோக் உள்ளே நுழைந்ததும் ஒருமுறை ஏறிட்டு பார்த்தாள். அப்புறம் அவனை கண்டுகொள்ளாமல், அவளது வேலையில் கவனத்தை செலுத்தினாள். அசோக் அவளை நெருங்கினான். சற்றே கொஞ்சலாக கேட்டான். "என்னக்கா பண்ணிட்டு இருக்குற..?" "ஹ்ம்ம்.. பாத்தா தெரியலை..? தேங்கா அரைச்சுக்கிட்டு இருக்குறேன்.." சித்ரா சற்றே சலிப்பாக சொன்னாள். "அப்போ.. டிபன் இன்னும் ரெடியாகலையா..?" அசோக் அப்படி கேட்டதும், அக்கா எரிச்சலானாள். "அப்டியே போட்டன்னா..!! என்னவோ ரொம்ப குடுத்து வச்சவன் மாதிரி வந்து கேக்குற..?" "அடிப்பாவி.. உங்க வீட்டுல சாப்பிடுறதுக்கு.. மாசாமாசம் ஆயிரம் ரூபா கொடுக்குறேன்.. ஞாபகம் இருக்கட்டும்..!!" "ஆமாம்.. இவரு கொடுக்குற ஆயிரம் ஓவாயை வச்சுத்தான் நாங்க இங்க கோட்டை கட்டப்போறோம்..? உன் ஆயிரம் ஓவாயை நீயே வச்சுக்கோ சாமி.. நாளைல இருந்து வேற எங்கயாவது சாப்பிட்டுக்க..!!" அவள் அப்படி மிஞ்சியதும், அசோக் இப்போது கொஞ்சலாக சொன்னான். "என்னக்கா.. கோவிச்சுக்குற..? நீயே இப்படி சொன்னா.. நான் சாப்பாட்டுக்கு வேற எங்க போவேன்..?" "ஏன்.. அந்த புவனா மெஸ்ல போய் சாப்பிடு..!!" "என்னதான் இருந்தாலும்.. என் அக்காவோட கையால சமைச்சதை சாப்பிடுறது மாதிரி வருமா..?" "என்ன.. அக்கா மேல ரொம்பத்தான் பாசம் இன்னைக்கு.." "இன்னைக்கு இல்லக்கா.. என்னைக்குமே அப்படித்தான்..!! உனக்குத்தான் புரியுறது இல்ல..!!" அவன் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதுதான் திவ்யா அவளுடைய அறையில் இருந்து வெளிப்பட்டாள். குளித்து முடித்து புதிதாய் பூத்த பூ மாதிரி வந்தாள். அசோக்கை பார்த்ததும் மலர்ந்துபோன அவள் முகம், அருகிலேயே அவளுடைய அக்காவும் இருப்பதை அறிந்ததும் பட்டென சுருங்கியது. அமைதியாக நடந்து சென்று ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். ரிமோட் எடுத்து டிவி ஆன் செய்தாள். அசோக் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருக்க, இப்போது அவளும் திரும்பி இவனை பார்த்தாள். அசோக் அவளிடம் சைகையாலே ஏதோ சொன்னான். அவளும் திரும்ப சைகையாலேயே ஏதோ கேட்டாள். அப்புறம் அசோக் சொல்ல வந்ததை அவள் புரிந்துகொண்ட மாதிரி தலையசைத்தாள். சில வினாடிகள் டிவி பார்த்தவள் அப்புறம் எழுந்து கொண்டாள். நடந்து உள்ளறைக்கு சென்று மறைந்தாள். இவர்கள் இருவரும் சைகையால் பேசிக்கொண்டதை, சித்ரா ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தாள். திவ்யா உள்ளே சென்றதும், அசோக்கிடம் கேட்டாள். "என்ன பண்ணுனீங்க இப்போ ரெண்டு பேரும்..?" "எ..என்ன பண்ணுனோம்.. ஒன்னும் பண்ணலையே..?" அசோக் திணறினான். "ப்ச்.. நடிக்காதடா.. நான் பாத்துக்கிட்டுத்தான இருக்குறேன்..?" "ஐயோ.. ஒன்னும் இல்லக்கா.." "ரெண்டு பேரும் என்னை ஏதோ கேலி பண்ணுனீங்க.. கரெக்டா..?" "சேச்சே.. என்னக்கா நீ..? என் செல்ல அக்காவை நான் கேலி பண்ணுவேனா..?" அசோக் தன் அக்காவின் கன்னங்கள் இரண்டையும் பிடித்துகொண்டு கொஞ்ச, அவள் பட்டென அவனுடைய கைகளை தட்டிவிட்டாள். "அப்போ.. என்ன மேட்டர்னு சொல்லு.." "அதான் ஒன்னும் இல்லைன்னு சொல்றேன்ல..? நம்பிக்கை இல்லையா..?" "ம்ஹூம்..!! நான் அவளையும் நம்ப மாட்டேன்.. அவகூட சேர்ந்து நீ சுத்திட்டு இருக்குற வரை உன்னையும் நம்ப மாட்டேன்..!!"அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, திவ்யா மீண்டும் ஹாலுக்குள் பிரவேசிக்க, சித்ரா கப்சிப் ஆனாள். மிக்ஸி ஜாரை திறந்து அரைபட்ட தேங்காயை வழித்தெடுக்க ஆரம்பித்தாள். திவ்யா தலையை குனிந்தவாறே நடந்து வந்தாள். இவர்கள் இருவரையும் கடக்கும்போது, "மொட்டை மாடிக்கு வா..!!" என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு சென்றாள். கதவை திறந்து வெளியேறினாள். திவ்யா செல்லும்வரை அவளையே ஓரக்கண்ணால் முறைத்துக்கொண்டிருந்த சித்ரா, அவள் சென்றதும் தன் தம்பியிடம் திரும்பி எரிச்சலாக கேட்டாள். "எதுக்குடா மொட்டை மாடிக்கு வர சொல்றா..?" "எனக்கு எப்படிக்கா தெரியும்..? போனாத்தான் தெரியும்.." சொல்லிக்கொண்டே அசோக்கும் வாசலை நோக்கி நகர, சித்ரா அவனுக்கு பின்னால் இருந்து கத்தினாள். "போ.. போ.. உன் போக்கே சரியில்ல தம்பி..!! என்னைக்கோ ஒருநாள் மூக்கை சிந்திக்கிட்டு எங்கிட்டத்தான் வந்து நிக்கப் போற..!!" அக்காவுடைய அங்கலாய்ப்பை பொருட்படுத்தாது அசோக் வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கவாட்டில் சென்ற படிக்கட்டுகளை அடைந்து மேலேறினான். மொட்டை மாடியை அடைந்தான். திவ்யா அங்கே கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு இவனுக்காக காத்திருந்தாள். இவன் சென்றதும், சற்றே வெறுப்பாக கேட்டாள். "என்ன சொல்றா.. உன் அருமை அக்கா..? ஓவரா சவுண்டு வுடுறா..?" "ஏய்.. என்னதான் இருந்தாலும் அவ உன் அண்ணன் பொண்டாட்டிடி.. கொஞ்சம் மரியாதையா பேசு.." "போ போ.. அவளைலாம் என்னால அண்ணியா ஏத்துக்க முடியாது..!!" "ஐயோ.. கடவுளே..!! திருந்தமாட்டேன்னு அடம் புடிக்குறீங்க ரெண்டு பேரும்..!! சரி சரி.. ஏத்துக்க முடியாம போனா வேணா போகட்டும்..!! நான் எடுத்துக்கிட்டு வர சொன்னதை எடுத்துட்டு வந்தியா..?" "ம்ம்.. ஒண்ணுதான் எடுத்துட்டு வந்தேன்.. போதும்ல..?" "போதும் போதும்.. எடு..!!" அசோக் சொன்னதும் திவ்யா தன் ஷர்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு அதை எடுத்தாள். அது.. சிகரெட்..!! சற்று முன்பு அசோக் சைகையாலே அவளிடம் எடுத்து வர சொன்ன சிகரெட்..!! தன் அண்ணனின் பாக்கெட்டில் இருந்து ஆட்டையை போட்டு அவள் எடுத்து வந்த சிகரெட்..!! அதை கையில் எடுத்தவள், மூக்குக்கு அருகே எடுத்து சென்று முகர்ந்து பார்த்தாள். உடனே முகத்தை சுளித்து 'உவ்வே..!!' என்றாள். "கருமம்.. இந்த நாத்தம் நாறுது.. எப்படித்தான் இதை குடிக்கிறீங்களோ..?" "ம்ம்ம்.. தீப்பெட்டியை எடு.. குடிச்சு காட்டுறேன்.." சிகரெட்டை அவளிடம் இருந்து பறித்துக்கொண்டே அசோக் கிண்டலாக சொல்ல, திவ்யா தன் இடுப்பில் செருகியிருந்த தீப்பட்டியை எடுத்து அவனிடம் நீட்டினாள். அசோக் தீக்குச்சி கிழித்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே ஊதினான். அவன் புகை விடுவதையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த திவ்யா சற்றே சலிப்பான குரலில் சொன்னாள். "சின்ன வயசுல இருந்து.. உனக்கு எதையாவது வீட்டுலருந்து திருடிக் குடுக்குறதே எனக்கு பொழப்பா போச்சு..!!" "ஏன்.. என்னாச்சு.. ரொம்பத்தான் சலிச்சுகுற..?" "பின்ன என்ன..? சிகரெட் அடிக்கடி காணாம போகுதே.. ஒருவேளை தங்கச்சி தம்மடிக்க ஆரம்பிச்சுட்டாளோன்னு என் அண்ணன் தப்பா நெனச்சுக்க போறான்..!!" "சரி சரி.. விடு.. இனிமே உன்னை சிகரெட் எடுத்துட்டு வர சொல்ல மாட்டேன்.. ப்ராமிஸ்..!!" "அப்படியே.. இனிமே சிகரெட்டே பிடிக்க மாட்டேன்னு ஒரு ப்ராமிஸ் பண்ணிடேன்..?" "போடீ.. அதுலாம் நம்மால முடியாது.." "ம்ம்ம்... நான்லாம் சொல்லியா நீ கேட்க போற..? அதுக்குலாம் ஆளு வந்தாத்தான் நீ அடங்குவ..!! பொண்டாட்டி வந்து 'பொளேர்.. பொளேர்..'னு நாலு அறை விட்டதுந்தான்.. நீ தம்மடிக்கிறதை விட போற.." "ஹாஹா.. அதுக்குலாம் சான்சே இல்ல.." "ஏன்..?" "நான்தான் கல்யாணமே பண்ணிக்கப் போறது இல்லையே..?""என்னடா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட..?" "எனக்கு இந்த காதல், கல்யாணம்.. இதுலலாம் நம்பிக்கையே இல்லை திவ்யா..!!" "ம்ம்ம்.. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்குப்பா..!!" "காதல்லயா..? கல்யாணத்துலயா..?" "காதல்க்கல்யாணத்துல..!!" "ஓ..!! அப்போ.. மேடம் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா..?" "ஆமாம்..!! முன்னப்பின்ன தெரியாத ஒருத்தனுக்கு எப்படி அசோக் கழுத்தை நீட்டுறது..? அவனை நம்பி எப்படி என் லைஃபை ஒப்படைக்கிறது..? ஸோ.. எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது காதல்க் கல்யாணம்தான்..!!" "ம்ம்.. நல்ல முடிவுதான்..!!" அசோக் புகையை ஊதிக்கொண்டே சொல்ல, திவ்யா இப்போது ஆகாயத்தை வெறித்து.. அந்தரத்தில் பார்வையை பதித்தவாறு.. கண்களில் எதிர்கால கனவுடன் சொன்னாள். "எனக்குன்னு ஒருத்தன் இந்நேரம் பொறந்திருப்பான் அசோக்.. எனக்காக உருகப் போறான்.. என்னை உள்ளங்கைல வச்சு தாங்கப் போறான்.. எனக்காகவே வாழப் போறான்..!! அவனை தேடி.. கண்டுபிடிச்சு.. பேசி.. பழகி.. திகட்ட திகட்ட காதலிச்சு.. அப்புறமா கல்யாணம் பண்ணிக்கணும்..!!" "ம்ம்.. உனக்கு வரப் போறவன் எந்த மாதிரி இருக்கணும்..?" "அப்டிலாம் பெருசா ரெஸ்ட்ரிக்சன் எதுவும் இல்ல..!! எந்த மாதிரி இருக்க கூடாதுன்னு வேணா சொல்றேன்.." "சொல்லு.." "தம்மடிக்க கூடாது.." "ம்ம்.." "தண்ணியடிக்க கூடாது.." "ம்ம்.." "வேற பொண்ணை சைட் அடிக்க கூடாது.." "சுருக்கமா சொன்னா.. என்னை மாதிரி இருக்க கூடாது..??" "ஹாஹா..!! ஆமாம் ஆமாம்..!! ம்ம்ம்.. இது இல்ல.. நீ என்னோட பேஸிக் கண்டிஷன்லையே ஃபெயில் ஆயிடுவ..!!" "அது என்ன கண்டிஷன்..?" "எனக்கு புருஷனா வரப் போறவன்.. சத்தியமா சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வொர்க் பண்ணக் கூடாது..!!" "அடிப்பாவி.. இப்படி ஒரு கண்டிஷனா..? அப்படி என்ன சாப்ட்வேர் ஆளுங்க மேல உனக்கு கோவம்..?" "என்னவோப்பா..!! எனக்கு உங்க இண்டஸ்ட்ரியே புடிக்கலை.. ஆளுங்களும்.. அவங்க கல்ச்சரும்..!!" "ம்ம்.. அவ்ளோதான் கண்டிஷனா..? இல்ல.. இன்னும் இருக்கா..?" "இன்னும் ஒரு முக்கியமான கண்டிஷன் இருக்கு.." "என்ன..?" "அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!! எனக்காக.. என்னை நெனச்சு.. நெறைய கவிதை எழுதி தள்ளனும்.. நான் அதை படிச்சு படிச்சு ரசிக்கனும்..!!" "கிழிஞ்சது.. உனக்கு நான் மேரேஜ் அப்ளிகேஷன் அனுப்பிச்சா.. என் ரெஸ்யுமே ஷார்ட்லிஸ்ட் கூட ஆகாது போல இருக்கே..?" "ஹாஹா..!! உன் ரெஸ்யுமேதான் எல்லாத்துக்கும் கீழ.. அடில கிடக்கும்..!!" "ஹ்ம்ம்..." "ஆனா.. ஃப்ரண்ட்ஷிப் அப்ளிகேஷன் அனுப்பிச்சு பாரு.. உன் ரெஸ்யுமே தவிர.. வேற எதையும் நான் தொட்டுக்கூட பார்க்க மாட்டேன்..!!" அவ்வளவு நேரம் முகத்தில் ஒரு சிரிப்புடனே பேசிக்கொண்டிருந்த திவ்யா, திடீரென அந்த மாதிரி சீரியஸாக சொல்லிவிட்டு, அசோக்கின் முகத்தை அன்பு ஒழுக பார்க்க.. இப்போது அசோக்கும் அப்படியே நெகிழ்ந்து போனான். திவ்யாவின் கண்கள் லேசாக கலங்கின. அசோக் உரிமையாக அவளுடைய தோளில் கைபோட்டு அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்."ஹேய்.. லூசு.. என்ன இது..?" "ஆமாம் அசோக்.. எனக்கு லைஃப் ஃபுல்லா உன் ஃப்ரண்ட்ஷிப் வேணுண்டா..!! எப்போவும் என்கூடவே இருக்கணும்..!!" "ப்ச்.. உன்னை விட்டு நான் எங்க போயிடுவேன்..? உன்கூடதான் இருப்பேன்.. எப்போவும்..!! சரியா..?" "ம்ம்.." "சரி வா.. கீழ போகலாம்..!! அக்கா தேடிட்டு இருப்பா..!!" சொல்லிவிட்டு அசோக் சிகரெட்டை சுண்டி எறிந்தான். இருவரும் படியிறங்கி கீழே வந்தார்கள். திவ்யா மீண்டும் அவள் அறைக்குள் சென்று முடங்கிக்கொள்ள, அசோக் கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே சித்ரா சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்தாள். "சுட்டது போதும்.. பசிக்குது.. எடுத்துக்குறேன்.." என்று கல்லில் கிடந்த சப்பாத்தியை அசோக் கையில் எடுத்துக் கொண்டான். அந்த மாதிரி எடுக்க அவன் குனிந்தபோது, அசோக்கின் மூச்சுக்காற்று சித்ராவின் முகத்தில் மோத, அவள் படக்கென்று முகத்தை சுளித்தாள். கையில் வைத்திருந்த தோசைக் கரண்டியாலேயே அசோக்கின் தலையில் ஒரு போடு போட்டாள். அசோக் அலறினான். "ஆஆஆஆ...!! ஏண்டி அடிக்கிற..?" "எருமை மாடு..!! போய் தம்மடிச்சுட்டு வந்தியா..?" "தம்மா..? அதுலாம் ஒண்ணுல்ல.." சொல்லியவாறே, சப்பாத்தியை ஒரு தட்டில் போட்டுக்கொண்டான். "பொய் சொல்லாத.. அதான் குப்புன்னு நாறுதே..? இதுக்குத்தான் உன்னை மொட்டை மாடிக்கு வர சொன்னாளா..? அவதான் உன்னை கூட்டிட்டு போய் கெடுக்குறதா..?" "இல்ல இல்ல.." "நீ மட்டுந்தானா..? இல்ல.. அவளும் அடிக்கிறாளா..?" "ஐயையே..!! அவள்ளாம் இல்ல.. நான் மட்டுந்தான்..!! அவ அப்புராணிக்கா.. அவளைப் போய் சந்தேகப் படுறியே..?" "நீதான் மெச்சிக்கணும்..!! அவளலாம் நம்ப முடியாது.. அடிச்சாலும் அடிப்பா..!!" "ப்ச்.. அதான் இல்லைன்னு சொல்றேன்ல..? அப்புறம் என்ன நொய்நொய்ன்னு..? ஆமா.. இதென்ன.. சப்பாத்திக்கு தேங்கா சட்னி பண்ணிருக்குற..?" "அது சப்பாத்திக்கு இல்ல.. தோசைக்கு..!!" "தோசையா..? ஏன்.. உன் வீட்டுகாரருக்கு ஒரு ஐட்டம் பத்தாதா..? எல்லாரும் உயிர் வாழ்றதுக்காக சாப்பிடுவாங்க.. மனுஷன்.. சாப்பிடுரதுக்காகவே உயிர் வாழ்றான்யா..!!" "அடச்சீய்.. தோசை அவருக்கு இல்ல..!!" "அப்புறம்..?" "அந்த குரங்குக்கு..!!" அவள் குரங்கு என்று விளித்தது திவ்யாவைத்தான்..!! "ஏன்.. அவளுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்..?" "அவளுக்கு சப்பாத்தி பிடிக்காது.. சப்பாத்தி பண்ற அன்னைக்கு.. அவளுக்கு தனியா ஏதாவது செஞ்சு கொடுத்திடனும்..!! இல்லனா.. மகாராணிக்கு கோவம் வந்துடும்..!! நாலு நாள் சாப்பிட மாட்டா.. பட்டினி கெடக்குறேன்னு வீட்டுல ஆக்டிங் குடுத்துட்டு.. பாய் கடைல போய்.. பரோட்டாவா தின்பா..!! நமக்கெதுக்கு அந்த பாவம்னுதான் அவளுக்கு ஏதாவது தனியா செஞ்சு கொடுத்திடுவேன்..!!" "ம்ம்ம்.. உங்க ரெண்டு பேர் ரிலேஷன்ஷிப்பை நெனச்சா.. புல்லரிக்குதுடி எனக்கு..!! ஆமாம்.. உன் புருஷனை எங்க..? சத்தத்தையே காணோம்..?? இன்னும் எந்திரிக்கலையா..?" "அப்போவே எந்திரிச்சுட்டாரு.. குளிச்சுட்டு இருக்காரு..!!" "இவ்ளோ நேரம் பாத்ரூம்ல என்ன பண்றாரு.? வழக்கமா.. டைனிங் டேபிள்ளதான ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ணுவாரு..? நல்லா தின்னு தின்னு.. இப்போ பீப்பா மாதிரி ஆயிட்டாருக்கா..!!" "உதை வாங்க போற படவா..!! அவருக்கு மனசுல எந்த கெட்ட எண்ணமும் இல்லடா.. அதான் உடம்பும் வஞ்சனை இல்லாம வளருது..!! உன் அருமை ஃப்ரண்டு ஒருத்தி இருக்காளே.. அவளை பாத்தியா..? அவளுக்கு மனசு ஃபுல்லா வெனயம்.. அதான் உடம்புல ஒன்னும் ஒட்ட மாட்டேன்னுது..!!' "போதும்.. போதும்.. புருஷனுக்கு ரொம்பத்தான் சப்போர்ட்டு..!!" பேசிக்கொண்டே அசோக் சாப்பிட்டு முடித்தான். கைகழுவிக்கொண்டு.. "அப்போ.. நான் கெளம்புறேன்க்கா..!!" என்று சித்ராவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் கிச்சனை விட்டு வெளியே வந்தபோது, "அசோக்.. ஒரு நிமிஷம் இங்க வந்துட்டு போயேன்.."என்று திவ்யா தன் அறையில் இருந்து தன் தலையை மட்டும் வெளியே நீட்டி அவனை அழைத்தாள். அசோக் எதுவும் புரியாமலேயே திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். கதவை தள்ளி உள்ளே சென்றான். கைகளை விரித்தவாறு திவ்யா நின்றிருந்தாள். "இன்னைக்கு நான் எப்படி இருக்கேன்..? இந்த ட்ரெஸ் ஓகேவா..?" என்று முகமெல்லாம் பிரகாசமாய் கேட்டாள் திவ்யா. 'என்ன இது.. இன்று.. ஆளாளுக்கு அலங்காரம் செய்துகொண்டு என்னிடம் வந்து காட்டுகிறார்கள்..?' என்று அசோக் தன் மனதுக்குள் நினைத்து கொண்டான். ஆனால்.. செல்வா கேட்டபோது எழுந்த ஒரு எரிச்சலான உணர்வு இப்போது இல்லை.. அதற்கு எதிர்ப்பதமான ஒரு உணர்வு..!! திவ்யாவை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளவெடுத்தான்..!!சிவப்பு நிறத்தில் ஒரு புடவையை நேர்த்தியாக உடுத்தியிருந்தாள். அலை அலையாக கேசம்..!! சலவை செய்த நிலவினை போன்றதொரு ஒளிமுகம்..!! உருளும் திராட்சைகளாய் இரு கருவிழிகள்..!! உருண்டையான கூர்மையான நாசி..!! தேன் சொட்டும் ஆரஞ்சு சுளைகளாய் பிளந்து கொண்ட இதழ்கள்..!! சந்தனத்தில் பாலை குழைத்து பூசிவிட்ட மாதிரியான மேனி வண்ணம்..!! தேர்ந்த சிற்பி ஒருவன் செதுக்கிய மாதிரியான தேகக்கட்டு..!! தேவதை மண்ணில் குதித்த மாதிரியான.. திவ்யா..!! "வாவ்...!!!! யூ லுக் கிரேட்..!!!!" "ரியல்லி..???" "எஸ் திவ்யா..!! என்ன விசேஷம் இன்னைக்கு..?" "இன்னைக்கு காலேஜ்ல நான் ஒரு பேப்பர் ப்ரசன்ட் பண்ண போறேன்.." "ஓ..!! பசங்கள்லாம்.. அப்படியே சொக்கிப் போகப் போறானுக..!!" "போடா.. வெளையாடாத..!!" "இல்லடி.. சீரியஸ்..!!" "ம்ம்.. அப்போ ஓகேதான..? எதுவும் குறை இல்லையே..?" அவள் அப்படி கேட்டதும், அசோக் இன்னொரு முறை அவளை மேலும் கீழும் பார்வையிட்டான். அப்புறம் சற்றே கேலியான குரலில் சொன்னான். "குறை எதுவும் இல்ல.. ஏதோ ஒன்னு அதிகமா இருக்குற மாதிரிதான் இருக்குது.." "ஏய்..." திவ்யா முறைத்தாள். "அடச்சீய்..!! இதை சொன்னேன்டி.. இந்த ஸ்டிக்கர் பொட்டு..!! இது வேணாம்.. எடுத்துடுறேன்..!!" சொல்லிக்கொண்டே திவ்யாவின் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை அசோக் அகற்றினான். "மேட்சிங்கா ஒரு பொட்டு வச்சா.. நல்லாருக்கும்னு நெனச்சேன்..!!" "ம்ஹூம்.. நல்லால்ல..!! அது இல்லாம இருந்தாத்தான் நல்லாருக்கு..!!" "ம்ம்.. சரி..!! நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!" "சரி திவ்யா.. நான் கெளம்பவா..?" "இரு.. நானும் வர்றேன்.. என்னை பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணிடு..!!" "ஓகே.. வா..!!" பத்தே நிமிடங்களில் திவ்யா சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள். அசோக் பைக்கில் கொண்டுபோய் அவளை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்தான். மீண்டும் தன் அறைக்கு வந்தான். செல்வா இன்னும் திரும்பியிருக்கவில்லை. கதவை திறந்துகொண்டு தனது அறைக்குள் நுழைந்தான். மெத்தையில் பொத்தென்று விழுந்தான். ஓரிரு நிமிடங்கள் அப்படியே சீலிங்கை வெறித்தபடி கிடந்தான். பின்பு புரண்டு.. கை நீட்டி.. அலமாரியில் இருந்து அந்த டைரியை எடுத்தான். பக்கங்களை புரட்டினான். அவன் தேடிய பக்கம் வந்ததும் நிறுத்தினான். ஆர்வமாகவும் ஆசையாகவும் பார்வையை வீசினான்..!! அங்கே திவ்யா அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அவன் நேற்று இரவு தூக்கம் வராமல் எழுந்து.. பென்சிலாலேயே நேர்த்தியாக வரைந்த திவ்யாவின் ஓவியம்..!! கண்களாலேயே ஆசை தீர.. திவ்யாவின் அழகை அள்ளிப் பருகினான் அசோக்..!! வலது கையின் ஐந்து விரல்களாலும் மென்மையாக அந்த ஓவியத்தை வருடினான்..!! பின்பு.. அந்த விரல்களின் இடுக்குக்குள்ளே.. அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த.. திவ்யா அறியாமலே அவளிடமிருந்து களவாடிய.. அந்த ஸ்டிக்கர் பொட்டை ஓவியத்தின் நெற்றியில் ஒட்டினான்..!!காதலுக்கும், கவிதைக்கும் என்ன தொடர்பு..? காதல் மயக்கம் கொண்டவர்களில் கணிசமான விழுக்காட்டினர், ஏன் கவிதையிலும் மையல் கொண்டு திரிகின்றனர்..? அசோக்கிற்கு புரியில்லை..!! "அவருக்கு நல்லா கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்..!!" திவ்யாவின் வார்த்தைகள் திரும்ப திரும்ப அவனுடைய செவிப்பறையில் வந்து மோதிக்கொண்டிருந்தன. தான் திவ்யாவை உயிருக்கும் மேலாக காதலித்துக்கொண்டிருப்பதாக கருதிக்கொண்டிருக்கிறான். ஆனால் தனக்கு ஏன் கவிதையில் ஈடுபாடு இல்லாமல் போனது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஒருவேளை தன் காதலில் ஏதும் குறை உள்ளதா..? ச்சே..!! இருக்காது..!! முயலவில்லை.. அதனால்தான் கவிதை முளைக்கவில்லை..!! ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். இன்று திவ்யாவை நினைத்து ஒரு கவிதையாவது எழுதிப் பார்த்துவிடவேண்டும்..!! எப்படி ஆரம்பிப்பது..?? அன்பே என்றா.. அடியே என்றா..?? கண்ணே என்றா.. காதலியே என்றா..?? உயிரே என்றா.. உறவே என்றா..?? ஆரம்ப வார்த்தையிலேயே அடுக்கடுக்காய் குழப்பம்..!! நெற்றியை சொறிந்தவாறே நெடுநேரம் அமர்ந்திருந்தான். எதுவுமே பிடிபடாமல் போக எரிச்சலுக்கும் இயலாமைக்கும் உள்ளானானான்..!! பேனா பிடித்த அவன் கை சும்மா இராமல், கிறுக்க ஆரம்பித்தது. திவ்யா என்றும்.. ஐ லவ் யூ என்றும்.. வார்த்தைகளை தாறுமாறாக காகிதத்தில் சிந்தியும் சிதறியும் வைத்தது..!! புத்தகங்களில் காணும் புதுக்கவிதைகளை விட, அவளுடைய பெயர் அழகாக இருப்பதாக, அவனது கண்களுக்கு தோன்றிற்று..!! 'சரியான அல்பம்டி நீ.. நீயே ஒரு அற்புதமான கவிதை.. எதுக்குடி உன்னை நெனச்சு கவிதை எழுதனும்னு உனக்கு ஒரு அல்ப ஆசை..?' என்று திவ்யாவிடம் கேட்பதாக மனதுக்குள் சொல்லிப் பார்த்தான். சிரிப்பு வந்தது..!! அடுத்த கணமே.. ச்சே..!! 'கவிதை எழுத தெரியலை.. அதுக்கு இப்படி ஒரு சப்பைக்கட்டா..?' என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப.. கடுப்பானான்..!! கிறுக்கிய காகிதத்தை கையில் எடுத்து எரிச்சலுடன் கசக்கி எறிந்தான். எறிந்தவன் அடுத்த கணமே அதற்காக வருந்தினான்..!! எறியப்பட்ட காகிதம் வாசலில் நின்ற செல்வாவின் முகத்தில் பட்டு கீழே விழுந்தது. ஒருகணம் அசோக்கை திகைப்பாய் பார்த்த செல்வா, பின்னர் குனிந்து அந்த பேப்பரை எடுக்க சென்றார். அசோக் பதறிப்போய் எழுந்து ஓடினான். "அண்ணா.. வேணான்னா.. இருங்க.." "ஏன்.. என்னாச்சு..""ஒன்னுல்லன்னா.. அதை கொடுங்க.." என்றவாறு செல்வாவின் கையிலிருந்த காகிதத்தை, அசோக் பறிக்க முயன்றான். "ஏன் இப்படி பதர்ற..?? அப்போ இதுல ஏதோ மேட்டர் இருக்குது..!! இரு.. என்னன்னு பாக்குறேன்..!!" "ஐயோ.. அண்ணா.. வேணாம்.." "ஏய்.. இருடா..!!" "அண்ணா.. ப்ளீஸ்ண்ணா.." அசோக் கெஞ்சிக்கொண்டிருக்கும்போதே, செல்வா பிடிவாதமாக அந்த காகிதத்தை பிரித்தார். கசங்கல் நீக்கி பார்த்தார். பார்த்ததுமே அவர் முகத்தில் பல்பு எரிந்த மாதிரி ஒரு பிரகாசம். அசோக்கிடம் திரும்பி, அவன் மீது ஏளனமாய் ஒரு பார்வையை வீசியபடியே, எள்ளலான குரலில் சொன்னார். "ஹ்ஹ.. நாங்கதான் சொன்னோம்ல..?" "அண்ணா.. அ..அது நீங்க நெனைக்கிற மாதிரி இல்ல.." அசோக்கின் குரல் சற்றே பரிதாபமாக ஒலித்தது. "ஹேய்.. 'திவ்யா ஐ லவ் யூ.. திவ்யா ஐ லவ் யூ..'ன்னு கிறுக்கன் மாதிரி கிறுக்கி வச்சிருக்குற..? நான் நெனைக்கிற மாதிரி இல்லனா.. வேற எப்படி..?" "அ..அது.. அது வந்து.." "ம்ம்ம்.. சொல்லு..." "நா..நான் மட்டுந்தான் அவளை விரும்புறேன்.. அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாது..!! ஜஸ்ட் ஒன்சைட்..!!" "ஓஹோ..!! அவகிட்ட உன் லவ்வை சொல்லிட்டியா..?" "இ..இல்ல.." "அப்புறம் எப்படி அந்தப்பக்கம் இருந்து ஒன்னும் கிடையாதுன்னு நீயா சொல்ற..? நான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ..!! அந்தப் பொண்ணு உன்னைத்தான் லவ் பண்றா.. உன்னைத்தான் லவ் பண்றா..!!" "அட போங்கண்ணா..!! நீங்க வேற.. வயித்தெரிச்சலை கெளப்பாதீங்க..!!! குடுங்க அதை..!!" அசோக் அவர் கையிலிருந்த காகிதத்தை வாங்கிக்கொண்டு சேரில் சென்று அமர்ந்தான். டைரிக்குள் அந்த காகிதத்தை வைத்து மூடினான். அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த செல்வா, அப்புறம் மெல்ல நடந்து அவனுக்கருகில் சென்றார். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, டேபிளில் சாய்ந்து கொண்டார். அசோக்கையே முறைத்து பார்த்தபடி சொன்னார். "எனக்கு உன் மேல கோவம்.." "ஏன்..?" "லவ் பண்ணிட்டு இத்தனை நாளா 'இல்ல இல்ல' ன்னு என்னை ஏமாத்திட்டு இருந்தேல்ல..?" "ப்ச்.. டபுள் சைடா இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பேண்ணா..!! இது.. நான் மட்டுந்தான்.. அதான் உங்ககிட்ட சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் தயக்கம்.." "இருந்தாலும்.. உன் மேல எனக்கு கோவம்.. கோவந்தான்..!!" "சரி.. அதுக்கு..???" "உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும்.." "என்ன தண்டனை..?" "இன்னைக்கு நீ தண்ணியடிக்கிற..!!" செல்வா சொல்ல, அசோக் பக்கென அதிர்ந்தான். "ஐயோ.. அண்ணா..!! அந்த தண்டனை மட்டும் எனக்கு வேணவே வேணாம்.." "நோ நோ..!! நான் முடிவு பண்ணிட்டேன்.. இன்னைக்கு நீ தண்ணியடிச்சே ஆகணும்.." "வெளையாடாதீங்கண்ணா.. எனக்கு இன்னைக்கு தண்ணியடிக்கிற மூடுலாம் இல்ல.." "உனக்கு மூடு இருக்கா இல்லையான்லாம் எனக்கு கவலை இல்ல.. வா.. கெளம்பு..!!" "அண்ணா.. ப்ளீஸ்ண்ணா.." "கெளம்புடா.. எந்திரி.. பேன்ட்டை மாட்டு.."அசோக் கெஞ்ச கெஞ்ச, செல்வா அவன் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றார். தண்ணியடிக்க அசோக்கிற்கு பெரிதாக மூடேல்லாம் தேவையில்லை. 'எங்க வீட்டு குழாய்ல இன்னைக்கு தண்ணி வரலைடி..' என்று சாலையை கடக்கும் யாரோ யாரிடமோ பேசிக்கொண்டிருந்தால் கூட.. அது இவன் காதில் வந்து விழுந்துவிட்டால்.. அவ்வளவுதான்..!! அது போதும் அவனுக்கு..!! அப்புறம் ஏன் இவ்வளவு பிடிவாதம் என்கிறீர்களா..? செல்வாவுடன் சேர்ந்து ஒருமுறை தண்ணியடித்திருக்கிறான். அதன் பிறகு அந்த தவறை செய்யவே கூடாது என்று ஒரு முடிவு கட்டியிருந்தான். அதனால்தான் அந்த தயக்கம்..!! 'செல்வா அளவுக்கதிகமாக குடித்துவிட்டு ரவுசு செய்வாராக இருக்கும்' என்று எண்ணி விடாதீர்கள். அதுவும் இல்லை.. செல்வாவுக்கு குடிப்பழக்கமே கிடையாது..!! இது வேறு மாதிரி பிரச்னை..!! "ஆஃப் தந்தூரி சிக்கன் வாங்குனா.. போதும்லண்ணா..?" "ஃபுல்லாவே வாங்கிடு அசோக்..!! அதுல என்ன கஞ்சத்தனம்..?? அப்புறம்.. ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிட்டிருக்கியா நீ..?" "ம்ம்.. சாப்பிட்டிருக்கேண்ணா..!!" "இருந்தாலும் இந்த ஹோட்டல்ல சாப்பிட்டிருக்க மாட்ட… அதுவும் ஒன்னு சொல்லிடு.." "நெறைய ஆர்டர் பண்ற மாதிரி இருக்குண்ணா.. வேஸ்ட்டா போயிட போகுது.." "வேஸ்ட்லாம் ஆவாது.. நீ ஆர்டர் பண்ணு..!!" அசோக் செல்வாவையே பரிதாபமாக பார்த்தான். செல்வா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகும் நிறைய உயிரினங்களின் பெயரையும், அவற்றின் உடல் உறுப்புகளின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆர்டர் குறித்துக்கொண்டவனின் முகம் அகலமாகிக் கொண்ட சென்றது. எல்லாவற்றையும் பார்சல் கட்டிக்கொண்டு இருவரும் அறைக்கு திரும்பினார்கள். அசோக் ஒருமாதிரி நொந்துபோன குரலில் சொன்னான். "சரக்கு நூறு ரூபாய்தான்.. சைடிஷ் எழுநூறு ரூபாய்க்கு வாங்கிருக்குண்ணா.." "இருக்கட்டும் அசோக்.. என்னைக்கோ ஒருநாள் குடிக்கிற.. இதுக்கெல்லாம் கணக்கு பார்க்காத..!! காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்..!!" "ஓஹோ.. அப்படியா..? உங்க பர்த்டே ட்ரீட் குடுக்குறப்போ.. காசை பத்தி வேற மாதிரி சொன்னீங்களே..?" "என்ன சொன்னேன்..?" "ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் அசோக்குனு.." "அப்படியா சொன்னேன்..? எனக்கு ஞாபகம் இல்லையே..?" செல்வா அப்பாவியாய் நடிக்க, அசோக்கால் அவரை முறைத்து ஒரு பார்வை மட்டுந்தான் பார்க்க முடிந்தது. அடுத்தவன் காசு மட்டும் இன்னைக்கு இன்கமிங் நாளைக்கு அவுட்கோயிங்.. ஆனா இவர் காசை மட்டும் கவுன்ட் பண்ணித்தான் காவேரில கடாசுவாரு..!! மனதுக்குள் நொந்து கொண்டான்..!! அறைக்கு திரும்பியதும், கட்டிக்கொண்டு சென்றதை காலி செய்ய ஆரம்பித்தார்கள். அசோக் விஸ்கியையும்.. செல்வா சைடிஷையும்..!! என்னவோ.. நாளைக்கே உலகம் அழிந்து விடப்போவது போல.. செல்வா சிக்கனையும், மட்டனையும் கடித்து குதறினார். அவர் மிச்சம் வைத்த பீஸ்களை கடித்தபடியே அசோக் விஸ்கியை விழுங்கினான். இறுதியாக ஒரு மடக்கு விஸ்கியும், ஒரே ஒரு சிக்கன் பீஸும் மிச்சம் இருந்தது. அசோக் அந்த ஒரு மடக்கையும் உள்ளே ஊற்றிவிட்டு தேடியபோது, அந்த சிக்கன் பீஸ் செல்வாவின் வாய்க்குள் அரைபட்டு கூழாகியிருந்தது.அசோக் செல்வாவை சற்றே வெறுப்புடன் பார்த்தான். அவர் அவனை சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. 'ஏஏஏஏவ்...!!!' என்று ஒரு ஏப்பத்தை வெளிப்படுத்தியவாறு, சுவரில் சாய்ந்துகொண்டார். ஒரு குச்சியை எடுத்து பல்சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அசோக் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகையை உள்ளிழுத்து வெளியே ஊத.. அவன் கண்கள் செருகின.. தலை சுழன்றது..!! இருவருமே இப்போது ஒரு மயக்கத்தில் இருந்தார்கள். அசோக்கிற்கு மது மயக்கம். செல்வாவிற்கு உண்ட மயக்கம்..!! அப்போதுதான் அசோக் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த அந்த கேள்வியை தயங்கி தயங்கி செல்வாவிடம் கேட்டான். "அண்ணா.." "ம்ம்.." "எனக்கு ஒரு சந்தேகம்.. உங்ககிட்ட கேட்கவா..?" "கேளு.." "காதலிச்சாதான் கவிதை வருமா..?" "ஏன்.. காப்பியடிச்சா கூட வருமே..?" அவர் வெடுக்கென சொல்ல, அசோக் அவருடைய பதிலில் அப்படியே ஆடிப்போனான். "அண்ணா.. எப்படிணா இப்டிலாம்..?? பின்னிட்டீங்க..!! நீங்க இதுவரை சொன்ன தத்துவத்துலயே இதுதான் சூப்பர்..!!" "தேங்க்யூ.. தேங்க்யூ..!! அது சரி.. உனக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்..??" "அ..அது.." "எது..?" "அந்தப் பொண்ணு இருக்குல்லண்ணா..?" "கண்மணியா..?" "அடச்சை.. திவ்யாண்ணா..!!" "ம்ம்.. ஆமாம்.. இருக்கு..!! அதுக்கென்ன..?" "போன வாரம் அவகிட்ட பேசிட்டு இருந்தேன்.. அவளுக்கு காதலனா வரப் போறவன் எப்படி இருக்கணும்னு.."

"சரி.." "என்னென்னவோ சொல்றாண்ணா அவ..!! தண்ணியடிக்க கூடாதாம்.. தம்மடிக்க கூடாதாம்.. சைட் அடிக்க கூடாதாம்.. சாஃப்ட்வேர் பையன் வேணாமாம்.." "ஓஹோ..!!" "எ..எனக்கு.. எனக்கு எல்லா கண்டிஷனும் ஓகேண்ணா.. நான் மாத்திக்குவேன்.. தம்மு, தண்ணி எல்லாம் விட்ருவேன்.. என் வேலையை கூட ரிசைன் பண்ணிட்டு.. வேற வேலை தேடிப்பேன்..!! ஆனா.. அவ.. அவளுக்கு வரப் போறவனுக்கு கவிதை எழுத தெரிஞ்சிருக்கணும்னு சொல்றாண்ணா.. நான் எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்துட்டேன்.. எனக்கு வர மாட்டேன்னுது..!! என்னண்ணா பண்ணலாம்..?" அசோக் அந்த மாதிரி ஒரு கேள்வியை முன்வைத்ததும், செல்வா அமைதியானார். தீவிரமாக எதையோ சிந்தித்தார். அப்புறம் தொண்டையை லேசாக செருமிக்கொண்டு ஆரம்பித்தார். "அசோக்.. நான் ஒரு கதை சொல்றேன் கேக்குறியா..?" "கதையா..???" அசோக் சற்றே மிரள, செல்வா அதை கண்டுகொள்ளாமல் ஆரம்பித்தார். "எங்க கிராமத்துல ரமா ரமான்னு ஒரு பொண்ணு இருந்தது.. அழகான பொண்ணு, அப்பாவிப் பொண்ணு.. வெகுளிப் பொண்ணு, வெள்ளந்தியான பொண்ணு..!! அப்போ.. எங்க ஊருக்கு ட்ராமா போடுறதுக்கு ரமேஷ்னு ஒருத்தன் வந்தான்.. தார்ல குளிச்ச காட்டெருமை மாதிரியே இருப்பான்..!! அவன் வாயை தெறந்தா.." "கப்படிக்குமா..?" "இல்ல.. கவிதையா கொட்டும்..!! அவனுக்கும் ரமாவுக்கும் எப்படியோ பழக்கம் ஆயிடுச்சு.. அவன் ரமாகிட்ட கவிதையாத்தான் பேசுவான்.. 'எருமை சாணம் அள்ளிட்டியா'ன்னு கேக்குறதை கூட.. எதுகை மோனையோடத்தான் கேட்பான்..!! ரமா அவன் பேச்சுல மயங்குனா.. அவனை கண்மூடித்தனமா காதலிக்க ஆரம்பிச்சா..!!" "ம்ம்.. அப்புறம்..?""ஒருநாள் ரெண்டு பெரும் ஊரை விட்டு ஓடுனாங்க.. ரயில்ல போயிட்டு இருக்குறப்போவே.. எதுத்த சீட்டுல உக்காந்திருக்குற பொண்ணை ரமேஷ் உஷார் பண்ணிட்டான்.. ரமா கொண்டு வந்த நகையை எல்லாம் அபேஸ் பண்ணிட்டு.. எதுத்த சீட்டு பொண்ணோட.. பாதி வழியிலயே ஜூட் வுட்டுட்டான்..!! மெட்ராஸ் வந்து முழிச்சு பாத்த ரமா.. அனாதையா நடுத்தெருவுல நின்னா..!! இப்படி ஒருத்தன் பேசிப்பேசியே ஏமாத்தி.. நம்ம வாழ்க்கையை சீரழிச்சுட்டானேனு.. மனம் குமுறிப்போய் நின்னா..!! அப்புறம் அவளை பாபுன்னு ஒரு நல்ல மனுஷன் ஏத்துக்கிட்டான்.. அது வேற கதை.." "அண்ணா.. இந்தக்கதையை நான் ஏதோ பாரதிராஜா படத்துல பாத்திருக்கேன்.." அசோக் அப்படி சொல்ல, செல்வா இப்போது பம்மினார். "ஓ..!! அந்தப்படத்தை நீ பாத்துட்டியா..?" "ஏண்ணா இப்படி இருக்குறீங்க..? என் உயிர்த்தோழன் கதையை என்கிட்டயே விடுறீங்க..?" "சரி சரி.. அதை விடு.. நான் எதுக்கு இந்தக்கதையை சொல்ல வந்தேன்னு உனக்கு புரியுதா..?" "எதுக்கு..??" "நீ தண்ணியடிக்கிறது, தம்மடிக்கிறது, கவிதை எழுத தெரியாம இருக்குறது.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல அசோக்.." "அப்புறம்.. வேற எது மேட்டர்..?" அசோக் கேட்டதும் செல்வா ஒரு கணம் அமைதியானார். அவன் முகத்தை ஒருமாதிரி கூர்மையாக பார்த்தார். அப்புறம் அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார். "நீ திவ்யாவை எந்த அளவுக்கு உண்மையா லவ் பண்றேன்றதுதான் மேட்டர்..!! நீ அவளை எந்த அளவுக்கு லவ் பண்ற..?" "அண்ணா.. உயிரையே கொடுப்பேண்ணா.. சின்ன வயசுல இருந்தே.. அவதான் என் பொண்டாட்டின்னு நெனச்சு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்..!!" "அப்புறம் என்ன..? தைரியமா போய் உன் லவ்வை அவகிட்ட சொல்லு..!! உன் காதல் உண்மையா இருந்தா.. கண்டிப்பா அது சக்சஸ் ஆகும்..!!" சொல்லிவிட்டு செல்வா மீண்டும் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். விட்டத்தை வெறித்து பார்த்தபடி பல் குத்த ஆரம்பித்தார். அசோக்கும் இப்போது அமைதியானான். சிகரெட் புகையை நுரையீரலுக்கு அனுப்பியவாறே, சிந்தனையில் ஆழ்ந்தான். செல்வா சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது என்று தோன்றியது. 'தனது காதல் உண்மையானதுதானே..? அப்புறம் ஏன் இந்த தயக்கம்..?' உண்மைக்காதலை உடைத்து சொல்ல.. ஏன் பயம் கொள்ள வேண்டும்..?? காதல் செய்பவர்களுக்கு அவர்களுடைய காதலை தவிர வேறு என்ன தகுதி வேண்டிக்கிடக்கிறது..? சிகரெட் விரலை சுட ஆரம்பித்ததும், அசோக் அதை ஆஷ் ட்ரேயில் வைத்து நசுக்கினான். எங்கோ உறைந்து போன பார்வையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்த செல்வாவிடம் மெல்ல கேட்டான். "அப்போ.. நாளைக்கே திவ்யாட்ட என் லவ்வை சொல்லிடவாண்ணா..?" "நீ சொல்றியோ இல்லையோ.. நான் சொல்லப்போறேன்.." அவர் பதிலை கேட்டு "அண்ணா..." என அசோக் அலறினான். "ஐயையே.. நான் நாளைக்கு கண்மணிட்ட என் லவ்வை சொல்லப் போறேன்னு சொன்னேன்பா..!!" "நல்லவேளை.. நான் பயந்தே போயிட்டேன்..!!" "நீ எதுக்கு பயப்படுற அசோக்..? திவ்யா உன்னைத்தான் லவ் பண்றா.. அவ கண்ணுல நான் அந்தக்காதலை பார்த்தேன் அசோக்.. தைரியமா போய் சொல்லு.. அவ உன் லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!!" "ம்ம்.. சரிண்ணா.." "ம்ஹ்ஹ்ம்ம்.. எனக்குத்தான் நாளைக்கு என்னாகப் போகுதோ தெரியலை.." வருத்தமான குரலில் சொன்ன செல்வாவை பார்க்க, அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனுஷன் காதலுக்காக ரொம்ப ஏங்குகிறார் என்று தோன்றியது. அவ்வளவு நேரம் தன்னை உற்சாகப்படுத்திய அவருக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணினான். "நீங்களும் ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்கண்ணா.. கண்டிப்பா கண்மணியும் உங்க லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!! தைரியமா போய் சொல்லுங்க..!!" "நெஜமாவா சொல்ற..?" உடனே, சோர்ந்து போயிருந்த செல்வாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். "ஆமாண்ணா.. அவளும் பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லப் போறா பாருங்க..!!" "அசோக்.. நீ சொல்றது மட்டும் நடந்துடுச்சுனா.. நான் உன் சக்கரைக்கு வாய் போடுறேன்.." "அண்ணா...!!!!!" அசோக் இப்போது பெரிதாக அலறினான். "ச்சை.. ஸாரி அசோக்.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு..!! உன் வாய்க்கு சக்கரை போடுறேன்..!!" "சரக்கடிச்சது நான்.. டங் ஸ்லிப் ஆகுறது உங்களுக்கா..? சைடிஷ் தின்னதுக்கே.. ரொம்ப உளர்றீங்கண்ணா நீங்க..!!"அடுத்த நாள் மாலை.. அசோக் சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பிவிட்டான். திவ்யாவிடம் இன்று தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்திருந்தான். அவள் ஐந்தரைக்கெல்லாம் கல்லூரியில் இருந்து திரும்பி விடுவாள். அதற்குள் தானும் வீட்டை அடைந்து விடவேண்டும். அவளை எங்காவது வெளியில் அழைத்து செல்ல வேண்டும். மனதில் உள்ள காதலை துணிந்து சொல்லிவிட வேண்டும்..!! தனது காதலை எப்படி அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்கும்.. இரவே அவன் ஒத்திகை பார்த்துவிட்டான்..!! வார்த்தைகளை தேடித்தேடி தேர்ந்தெடுத்து.. மாலை போல கோர்த்து.. மனதுக்குள் வைத்திருந்தான்..!! அவ்வாறு அவன் ஒத்திகை பார்க்கையிலே.. சினிமாவில் நாயகர்கள் காதல் சொல்லும் காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. காதலை சொல்லுகையில் ஒரு கார்டும், ஒற்றை ரோஜாவும் கைவசம் இருந்தால் நல்லது என்று தோன்றியது..!! அவன் தங்கியிருக்கும் அறைக்கு அருகாமையிலேயே ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. ஆபீசில் இருந்து கிளம்பியதும் அசோக் நேராக அங்கேதான் சென்றான். ஆறு தளங்கள் கொண்ட அந்த காம்ப்ளக்ஸ்சின் நான்காவது தளத்தில்தான் அந்த கிரீட்டிங் கார்ட் அண்ட் கிஃப்ட் ஷாப் இருக்கிறது. விதவிதமான வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்பு பொருட்களும்.. குவித்தும் அடுக்கியும் வைக்கப்பட்டிருந்த.. மிகப்பெரிய கடை..!! அசோக் கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் செலவழித்து அந்த அட்டையை தேர்வு செய்தான். மாலை நேர மலையோரத்தில்.. நிழலுருவாய் தழுவிக்கொள்ளும்.. காதலனும் காதலியும்..!! உள்ளே திறந்து பார்த்தால்.. இரத்த நிறத்தில் துடிக்கும் இருதயம்..!! அருகிலேயே.. அசோக் திவ்யாவிடம் சொல்ல நினைத்த வார்த்தைகளுக்கு நெருங்கி அர்த்தம் வரக்கூடிய.. ஆங்கில சொற்றொடர்கள்..!! இறுதியாக கீழே.. இட்டாலிக் ஸ்டைலில்.. I Love You..!! பார்த்ததுமே பிடித்துப்போக, அசோக் அதை எடுத்துக் கொண்டான். அநியாய விலை கேட்ட, பில் போடும் பெண்ணிடம், புன்னகை மாறாமல் பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். பில்லிங் கவுண்டருக்கு அருகிலேயே, விற்பனைக்கு இருந்த சிவப்பு ரோஜா ஒன்றையும் கையில் எடுத்துக்கொண்டு, "இதையும் பில்-ல சேர்த்துக்கோங்க..!!" என்றான். இரண்டையும் ஒரு கவரில் வைத்து வாங்கிகொண்டான். தன் தோளில் கிடந்த பேக் திறந்து உள்ளே வைத்தான். பேகை மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டு, 'ஆல் தி பெஸ்ட்' என்று புன்னகைத்த அந்த பெண்ணுக்கு, ஒரு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு வெளியே வந்தான். லிஃப்டுக்காக பட்டன் ப்ரஸ் செய்துவிட்டு காத்திருந்தான். அவனுடைய இதயம் முழுக்க ஒருவித படபடப்பும், ஒருவித நிம்மதியும் சரிவிகிதத்தில் நிறைந்திருந்தது. தனது காதலுக்கு திவ்யா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற எண்ணத்தினால் ஏற்பட்டது அந்த படபடப்பு..!! ஆனால்... இத்தனை நாளாய் மனதுக்குள்ளேயே காதலை பூட்டி பூட்டி வைத்து அனுபவித்த வேதனை.. இன்றோடு தீரப்போகிறது என்ற நினைவு.. அதே அளவு நிம்மதியையும் அசோக்கிற்கு கொடுத்திருந்தது..!!லிஃப்ட் வந்ததும் ஏறிக்கொண்டான். கும்பலாக இருந்தது லிஃப்ட்..!! அசோக்கிற்கு ஒரு ஓரமாகவே இடம் கிடைத்தது. நெருக்கியடித்து நின்றுகொண்டான். அந்த கார்டை இன்னொரு முறை பார்க்கவேண்டும் போலிருந்தது. பேக் திறந்து கார்டையும் ரோஸையும் எடுத்தான். கார்ட் பிரித்து.. உள்ளே எழுதியிருந்த வரிகளை இன்னொரு முறை வாசித்தான்..!! தன் இதயத்தில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துரைக்கப் போகும் அந்த வரிகளை பார்த்ததும்.. அவனுடைய இதழ்களில் அவனையும் அறியாமல் ஒரு புன்னகை..!! எங்கோ கனவுலகில் மிதந்து கொண்டிருந்த அசோக், க்ரவுண்ட் ஃப்ளோர் வந்து, ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு இறங்கிய போதுதான்.. நனவுலகுக்கு திரும்பினான். எல்லோருக்கும் வழிவிட்டு லிஃப்ட் உள்ளேயே ஒதுங்கி நின்றான். கையில் இருந்த கார்டையும், ரோஸையும் திரும்பவும் பேகுக்குள் திணித்தான். பேகை தோளுக்கு கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன், அதிர்ந்து போனான்..!! லிஃப்டில் இருந்து எல்லோரும் இறங்கி சென்றிருக்க, அந்தப்பெண் மட்டும் இறங்காமல், இவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவள்.. அவனுடைய அக்கா... சித்ரா..!! அவளுடைய கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை..!! "அ..அக்கா.. நீ.. நீ எங்க இங்க..?" என்று தடுமாறினான். "கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது.." சித்ராவின் குரல் ஒருமாதிரி இறுக்கமாக ஒலித்தது. "எ..எந்த ஃப்ளோர்ல ஏறுன..?" கேட்டுக்கொண்டே அசோக் லிஃப்ட் விட்டு வெளியே வர, "சிக்ஸ்த் ஃப்ளோர்ல..!!" பதிலளித்துக்கொண்டே சித்ராவும் வெளியே வந்தாள். "ஓ.. நான் ஏறுனப்போவே உள்ள நின்னுட்டு இருந்தியா..? நான் கவனிக்கவே இல்ல.." "ம்ம்.. ஆமாம்.. நீ என்ன இந்தப்பக்கம்..?" "நா..நான்.. நான் சும்மா... சும்மாதான்க்கா வந்தேன்..!!" "ம்ம்.. பைக்லதான வந்த..?" "ஆ..ஆமாம்.. வெளில நிப்பாட்டிருக்கேன்.." "வா.. என்னை வீட்டுல விட்ரு..!!" சித்ரா சொல்லிவிட்டு விடுவிடுவென முன்னால் நடக்க, அசோக் பரபரவென தன் தலையை சொறிந்தவாறே அவளுடைய முதுகை பார்த்துக் கொண்டிருந்தான். 'பாத்திருப்பாளோ..? அவள் பேச்சே சரியில்லையே..? மேலே இருந்து கீழே வரும் வரை சைலன்ட்டாக என்னையே வாட்ச் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறாளே..? பாத்திருப்பாள்..!! அப்புறம் ஏன் எதுவும் கேட்காமல் செல்கிறாள்..?? ஒருவேளை பாத்திருக்க மாட்டாளோ..?? வேறு ஏதோ எரிச்சலை என்னிடம் காட்டுகிறாளோ..??' எதுவும் புரியவில்லை அவனுக்கு..!!

அசோக் பார்க்கிங் ஏரியா சென்று பைக்கை கிளப்பிக் கொண்டு வந்தான். சித்ரா காம்ப்ளக்ஸ் வாசலில் தயாராக காத்திருந்தாள். அவளுக்கு முன்னால் வந்து அசோக் பைக்கை நிறுத்தியதும் ஏறிக்கொண்டாள். அவனுடைய தோளைப் பற்றிக்கொண்டாள். அக்கா ஏறிக்கொண்டதும் அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கினான். அவளுடைய அப்பார்ட்மன்ட்ஸ் இருக்கும் சாலையில் வண்டியை விரட்டினான். "ஓவர் ஸ்பீட் ஒடம்புக்கு நல்லது இல்ல தம்பி.. கொஞ்சம் மெதுவா போ..!!" சித்ரா இரட்டை அர்த்தத்தில் சொல்ல, அசோக்கிற்கு 'ஜிலீர்...!!!' என்று மனதுக்குள் ஒரு நடுக்கம்..!! அவனுடைய வலக்கை ஆட்டோமேடிக்காக வண்டியின் வேகத்தை குறைத்தது..!!