Tuesday, 7 April 2015

சுகன்யா... 105

"இப்ப பாக்கி இருக்கறது உங்க வூட்டுப்பிரச்சனைதானா?"

"கொழந்தை பொறக்கட்டும்.. அந்தப் பிராப்ளத்தையும் சால்வ் பண்ணிட மாட்டேன்...? கோமதியை என் தலைமேலே வெச்சிக்கிட்டு நான் தாங்கோ தாங்குன்னு தாங்கறதை பாத்ததும், என் மாமியார் அப்படியே ஐஸ் மாதிரி உருகிப்போயிட்டாங்க. இப்ப என்னை மாதிரி ஒரு மருமவனை இந்த உலகத்துலே எங்கேயும் பாக்க முடியாதுங்கறாங்க."

"கோமதியோட வாந்தியும்... சீனுவோட டைரக்ஷ்ன்தானா?"

"கோமதி, தன் அம்மாளை பாத்ததும், அம்மா கழுத்தைக் கட்டிக்கிட்டு குதிகுதின்னு குதிக்கறா. வாந்தி கீந்தி எல்லாம் மாயமா போயிடிச்சி. இந்த வாந்தி சீன் மட்டும் இன்னைக்கும் எனக்கு ஒரு புரியாத புதிராத்தான் இருக்கு." 



"ஊருக்கெல்லாம் பிலிம் காமிக்கற உனக்கே, கோமதி பிலிம் காமிச்சிட்டா போல இருக்கு?" செல்வா தன் வாய்விட்டுச் சிரித்தான். 


"எது எப்படியிருந்தா என்னடா? என் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கா... அதைப்பாத்து என் மாமியார் சந்தோஷமா இருக்காங்க... அவங்க ரெண்டு பேரையும் பாத்து நானும் சந்தோஷமா இருக்கேன்..."

"நீ சொல்றது சரிதான்..."

"செல்வா... என்னைத் தப்பா நினைக்காதேடா... உன் ஸிஸ்டர் மீனாவும் வேலைக்கு போறா... வீட்டை விட்டு வெளியே போனா, அடுத்தவன் கிட்ட பேசித்தானே ஆகணும்?"

"ஆமாம்.."

"ஈகோ பாக்காம, சுகன்யாவுக்கு ஒரு தரம் போன் பண்ணி... அயாம் சாரின்னு ஒரே ஒரு வார்த்தையில அவகிட்ட மன்னிப்பு கேளுடா..."

"ப்ச்ச்ச்..."

"அந்த சமயத்துல அவ உன்னை வாரி கொட்டித் திட்டினாலும், பதில் எதுவும் பேசாதே. உனக்கு கிடைச்ச வாழ்க்கையை அவளை மாதிரி ஒரு நல்ல துணையோட சந்தோஷமா எஞ்சாய் பண்ணுடா..."

"ம்ம்ம்.. பேசறேன்டா அவகிட்ட..."

"ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான்... இன்னொரு விஷயம்... தனியா ரூம் பாக்கற எண்ணத்தை விட்டுட்டு... இன்னைக்கே வேண்டாம்.... நாளைக்கு நிதானமா உன் வீட்டுக்குபோய், 'நான் தப்பு பண்ணிட்டேன்னு' அப்பா எதிர்ல ஒரு தரம் தலை குனிஞ்சு நிக்கறதுலே எந்த தப்பும் இல்லேடா. கோழி மிதிச்சு எந்த குஞ்சும் இதுவரைக்கும் செத்தது இல்லே..." 

இதுவரை செல்வா பார்த்தேயிராத வேலாயுதத்தின் இன்னொரு முகம் மெல்ல மெல்ல வெளிப்பட்டுக்கொண்டிருக்க... அவன் முகத்தையே செல்வா மவுனமாக, வெறித்துக் கொண்டிருந்தான்.

இன்னைக்கு வரைக்கும் வேலாயுதத்தை எதுக்கும் உதவாத ஒரு குடிகாரப்பயன்னுதானே நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்? இவன் என்னடான்னா, தன்னோட தினசரி வாழ்க்கையில எந்த சிக்கலையும் இழுத்துவிட்டுக்காம, ரொம்பத்திருப்தியா, மகிழ்ச்சியா வாழ்ந்துகிட்டு இருக்கானே?

வெற்று உடம்பில், கோமதியின் பழம் புடவையொன்றை போர்த்திக்கொண்டு, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் தன் நண்பனைப் பார்த்து செல்வா மனதுக்குள் வியந்தவனாய் அன்றிரவு முழுவதும் சரியாக தூக்கம் பிடிக்காமல், பாயில் புரண்டு கொண்டிருந்தான். விடியலில் அவனையும் அறியாமல் தூக்கம் விழிகளைத் தழுவ, காலை எட்டுமணி ஆனபின்னும் எழுந்திருக்கவில்லை அவன்.

"மச்சான்.. ஆஃபீஸ் போவலையாடா?" தன்னைத் தட்டி எழுப்பி, கையில் சுடச்சுட வேலாயுதம் கொடுத்த காஃபியை மெதுவாக உறிஞ்சத் தொடங்கினான் செல்வா.

"போகணும்டா...?"

"சாயந்திரம் நான் வர லேட்டாகும்... ஒரு சாவியை நீ வெச்சுக்கோ..."

"இல்லே மச்சான்.. என்னோடது சின்னப்பைதானே... நான் ஆஃபிசுக்கே எடுத்திட்டு போயிடறேன்.."

"என் மேல கோவமாடா..."

"உன் மேல எனக்கென்னடா கோவம்? நீ சொன்னமாதிரி நான் வாழ்க்கையிலே தேவையேயில்லாத சில காம்பிளிகேஷன்களை உண்டு பண்ணிகிட்டு இருக்கேன். இந்த சிக்கலை நிதானமா சரி பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.."

"தட்ஸ் த ஸ்ப்ரிட்..." வேலாயுதம் வெள்ளையாக சிரித்தான்.

"ராத்திரி நீ ஏன்டா பொண்டாட்டி புடவையை போத்திக்கிட்டு தூங்கினே?" செல்வா அவன் முகத்தை புன்னகையுடன் நோக்கினான்.

"உனக்கும் கல்யாணம் ஆனாத்தான் இதெல்லாம் புரியும்... "

"விஷயத்தைச் சொல்லுடா..."

"கோமதி என் பக்கத்துல படுத்துக்கலேன்னா எனக்குத் தூக்கமே வராது... ஒடம்பு வாசம் துணியிலே இருக்குல்லே... அவ பொடவையை போத்திக்கிட்டா, அவளே என் கூட படுத்திருக்கறதா ஒரு நெனைப்பு வந்து மஜாவா தூங்கிடுவேன்." வேலாயுதம் கண்ணைச் சிமிட்டி குழந்தையாகச் சிரித்தான்.

* * * * *

"அயாம் சாரிப்பா..." அன்று இரவு வீடு திரும்பிய செல்வா, டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நடராஜனின் எதிரில் அரை நிமிடம் தயங்கி நின்றான்.

"இதை அந்த பொண்ணுகிட்ட சொல்லுடா..."

"மொதல்ல நீ சாப்பிட வாடா..." பிள்ளையைக் கண்ட மல்லிகா பரபரப்பானாள்.

"நான் சாப்பிட்டேன்... நீங்க சாப்பிடுங்கம்மா..." விடுவிடுவென தன் அறையை நோக்கி நடந்தான் செல்வா.

* * * * *

வேலாயுதத்திடம் சொன்னபடி, தன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்ட செல்வா, சுகன்யவிடம் மன்னிப்பு கேட்க மட்டும் மனதுக்குள் இலேசாகத் தயங்கிக்கொண்டிருந்தான். இன்றைக்கு வேண்டாம்; நாளை முதல் வேலையாக அவளிடம் நான் பேசிவிடுகிறேன் என அந்த வாரம் முழுவதும் அவளுக்கு அவன் போன் செய்வதை தள்ளிப் போட்டுக்கொண்டேயிருந்தான்.

தனக்கு பிடிக்காத ஒருவனுடன், தன் காதல் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்க முயன்ற சம்பத்துடன், தான் பேச வேண்டாம் என்று சொன்ன பின்னும், சுகன்யா சிரித்து சிரித்து பேசினாள் என்ற எரிச்சலில் செல்வா இருந்து கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில், அலுவலகத்தில் சுகன்யாவைப்பற்றி யாரோ இருவர் தரக்குறைவாக பேசியதைக் கேட்டதன் விளைவால், அவன் தன் மனதுக்குள் கோபத்தில் வெந்து கொண்டிருந்த நேரத்தில், சாவித்திரி அந்த தீயில் எண்ணையை ஊற்றியதும் செல்வா அன்று பற்றி எரிந்தான்.

செல்வா முழுவதுமாக பற்றி எரிந்து கொண்டிருந்த சமயத்தில், சுகன்யாவும், சுனிலும், மோட்டர் சைக்கிளில் ஜோடியாக பயணித்து வந்ததும், அவன் சுகன்யாவை வேண்டுமென்றே திமிராக சண்டைக்கு இழுத்தான். பின்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் சுகன்யாவின் மனதை நோக அடித்தான். அவள் இதயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தான்.

சுகன்யாவின் பிரிவை அவன் அனுபவிக்கத் தொடங்கியதும், அவள் தன் மேல் வைத்திருந்த அன்பை, நேசத்தை, தீராத காதலை அவன் மெல்ல மெல்ல உணரத்தலைப்பட்டான். தனிமை என்னும் கொடுமை அவனை வாட்டியெடுக்க ஆரம்பித்தது. நிழலின் அருமையை அவன் பிரிவு என்னும் வெம்மையில் புரிந்து கொள்ளத் தொடங்கிய போதிலும், மனம் அவளுடன் சமாதானம் செய்து கொள்ள விழைந்த போதிலும், அவளுடன் இயல்பாக பேசத் தயங்கினான் செல்வா.

தான் சுகன்யாவிடம் இயல்பாக பேச முயற்சித்தாலும், அவள் தன்னிடம் மீண்டும் பழைய நேசத்துடன் பேசுவாளா என்ற அச்சம் அவன் மனதுக்குள் எப்போதும் இருந்தது. இந்த அச்சத்தினாலேயே அவன் அவளுடன் உடனடியாக பேச தயங்கினான்.

வார முடிவில், செல்வா தன்னை, சுகன்யாவிடம் பேசுவதற்கு மனதளவில் தயார் செய்து கொண்டபின்னும், குற்றமுள்ள அவனுடைய நெஞ்சு எப்போதும் குறுகுறுத்துக் கொண்டேயிருந்ததால்தான், சுகன்யாவுக்கு நேராக போன் செய்யாமல், அனுராதாவை கூப்பிட்டு, சுகன்யாவின் நலம் விசாரித்தான்.

காலம் யாருக்காவும் நிற்கப்போவதில்லை. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகவும் மாறிவிட்டன. இந்த இரண்டு மாதங்களில் செல்வாவின் போக்கே முற்றிலும் மாறிவிட்டிருந்தது. தன் உடைகளை, புத்தகங்களை, மற்ற பொருட்களை சிறிது சிறிதாக, அவன் தன் வீட்டின் மாடியறைக்கு கொண்டு சென்றுவிட்டான். சாப்பிடுவதற்கு மட்டுமே கீழே இறங்கி வருவதை தன் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

தன் தாயுடன், தன் தந்தையுடன், மீனாவுடன், தன் மிக நெருங்கிய தோழன் சீனுவுடன், இவர்கள் மட்டுமல்லாமல், வேறு எவருடனும்கூட, தேவைக்குமேல் ஒரு வார்த்தை கூட அதிகமாக பேசுவதை தவிர்த்து, யார் அவனிடம் பேசினாலும், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்ல ஆரம்பித்தான்.

தன் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, தேவையில்லாமல் தன் தலையை நிமிர்த்துவதேயில்லை என்ற முடிவுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டான். 

சுகன்யா தில்லிக்குப் போய் முழுசா மூணு மாசம் முடிஞ்சு போச்சு. இன்னும் ஒருவாரத்துல சென்னைக்கு திரும்பிடுவா. அவ திரும்பி வந்ததும், நேருக்கு நேராக அவகிட்ட நான் மன்னிப்பு கேக்கப் போறேன். அவளோட மனசைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். கண்டிப்பா அவ என்னை மன்னிச்சிடுவா. தன் செல்லில் சிரிக்கும் சுகன்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.

கேன்டீனில் தான் வழக்கமாக எப்போதும் உட்க்காரும் மூலையில் தனியாக விழிகளை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் செல்வா. அவன் எதிரிலிருந்த தேனீர் ஆறிக்கொண்டிருந்தது.

"ஹாய் செல்வா எப்படியிருகே?"

தனக்கெதிரிலிருந்து உற்சாகமான பெண் குரல் ஒன்று வந்ததும், நனவுலகத்திற்கு வந்தான் செல்வா. சுகன்யாவின் தோழி வித்யா கையில் டீ கோப்பையுடன் அவன் டேபிளுக்கு எதிரில் நின்றிருந்தாள்.

"பைன்.. உக்காருங்க.. உக்காருங்க.. நீங்க எப்படியிருக்கீங்க மேடம்...? அப்புறம் என்ன குழந்தை வீட்டுக்கு வந்திருக்கு?"

"ஆண் குழந்தைதான்... செல்வா.." வித்யாவின் முகம் மகிழ்ச்சியில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

"குட்.. குட். சந்தோஷம்... நல்ல ட்ரீட் குடுக்கப்போறீங்கன்னு சொல்லுங்க..."

"நீயும், சுகன்யாவும் ஒண்ணா வீட்டுக்கு வாங்க.. அப்பத்தான் ட்ரீட்.." வித்யா முறுவலித்தாள்.

"அதெல்லாம் இருக்கட்டும்... டூயூட்டிலே எப்ப ஜாய்ன் பண்ணீங்க?"

"இன்னைக்குத்தான்..."

"உங்க செக்ஷன்ல இப்ப ஈ-கவர்னர்ன்ஸ் சாஃப்ட்வேர் அப்டேஷன் நடந்துகிட்டிருக்கு... அதனால வேலை கொஞ்சம் அதிகமாயிருக்கு. கோபலன் சார்கிட்ட கேட்டு, லைட் சீட்டா வேற எங்கயாவது வாங்கிக்கோங்க..." செல்வா இலசாக முறுவலித்தான்.

"சாவித்ரி போனதுக்கு அப்பறம் எங்க செக்ஷ்ன்ல்ல தேவையேயில்லாத பிரச்சனைகள் கொறைஞ்சுருக்குன்னு எனக்குத் தோணுது..."

"ரியலி நைஸ் டு ஹியர் தட்.."

"செக்ஷ்ன்ல இப்போதைக்கு, சுகன்யா பாத்துக்கிட்டு இருந்த சீட்டு சுனில்ன்னு புதுசா ஒருத்தன் வந்திருக்கானே,. அவன் கிட்ட இருக்கறதாலே, எனக்கொண்ணும் அவ்வளவா கஷ்டம் இருக்காதுன்னு தோணுது. ஃபர்தர் தட் சுனில் சீம்ஸ் டு பி சின்சியர்..."

"யா... ஐ நோ... ஐ நோ... ஹீஸ் அன் இன்டெலிஜண்ட் கய்.." செல்வா சுனிலை மனசார பாராட்டினான்.

"தில்லியிலேருந்து ட்ரெய்னிங் முடிஞ்சு திரும்பி வர்ற அனுராதாவையும் என் செக்ஷ்ன்ல்லத்தான் போஸ்ட் பண்ணப்போறாங்க... அவளும் நல்லா வொர்க் பண்றவ... " டீயை ரசித்து குடித்துக்கொண்டிருந்தாள் வித்யா..

"அப்படியா... " செல்வாவின் முகத்தில் சட்டென எழுந்த மெல்லிய அதிர்ச்சியை அவனால் மறைத்து கொள்ள முடியவில்லை.

"ஆமாம்.."

"சுகன்யாவை, கோபலன் சார் எங்கே போஸ்ட் பண்ணப்போறார்?" மெல்லியகுரலில் வினவினான் செல்வா.

"நிஜமாவே உனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாதா செல்வா?" வித்யா தன் ஈர உதடுகளை ஹேங்கியால் துடைத்துக் கொண்டாள்.

"இல்லே மேடம்.." செல்வா தன் முகத்தை திருப்பிக்கொண்டான்.

"ஹேய்... லுக் ஹியர்... சுகன்யா உங்கிட்டே எதுவும் சொல்லலியா?"

"....."

"ஆமாம் செல்வா... தெரியாமத்தான் கேக்கறேன். அப்படி என்ன தீராதப்பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே? சுகன்யா எங்கே இருக்கா? அவ எங்கே இருக்கப்போறா? எதுவுமே உனக்குத் தெரியலேங்கறே? இந்த லட்சணத்துல இருக்கு உங்க ரெண்டு பேரோட காதல்... திஸ் ஈஸ் ரியலி வெரி பேட்..."

"மேடம்... ப்ளீஸ்... இப்ப என்னை எதுவும் கேக்காதீங்க..." செல்வாவின் குரல் குளறியது.

"நீ எதுவும் சொல்லவேண்டாம்பா... சுகன்யாவையே நான் கேட்டுக்கிறேன்.."

"மேடம்.. அவளுக்கு போஸ்டிங் பாண்டிச்சேரிலே ஆயிடலியே?"

"இல்லே... லாஸ்ட் வீக்கே சுகன்யா, தனக்கு போஸ்டிங் தில்லியிலேத்தான் வேணும்ன்னு அப்ளை பண்ணியிருந்திருக்கா. இன்னைக்கு கோபலன் அவளோட டெல்லி போஸ்டிங்கை அப்ரூவ் பண்ணிட்டார். நெக்ஸ்ட் ஒன் இயர் அவ நார்த்லேத்தான் இருந்தாகணும்."

"நிஜமாவா மேடம்..." செல்வாவின் இடது கை விரல்கள் இலேசாக உதறிக்கொண்டிருந்தன.

"அவ அப்ளிகேஷனை ப்ராஸஸ் பண்ணி பைல்லே புட் அப் பண்ணதே நான்தான். ஆர்டர்சை நெட்ல அப்லோட் பண்றதுக்காக உனக்கு காப்பி மார்க் பண்ணியிருந்தேனே, அதைக்கூட நீ பாக்கலியா?"

வித்யாவுக்கு பதிலேதும் சொல்லாமல், செல்வா ஒரு நடைபிணமாக எழுந்து தன் அறையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான். 



அடுத்த ஒரு வருஷத்துக்கு தில்லியிலேயே இருக்கறேன்னு சுகன்யாவே வேண்டி விரும்பி தனக்கு, போஸ்டிங் வாங்கிக்கிட்டான்னா, அவளுக்கு என் மூஞ்சை பாக்கறதுக்கு இஷ்டமில்லேன்னுதானே அர்த்தம்?

யோசிக்க யோசிக்க செல்வாவுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. மனதிலிருக்கும் பரபரப்பு அடங்கட்டும் என விழிகளை மூடி ஓரிரு நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தான். ஏதோ முடிவுக்கு வந்தவனாக, இரண்டு வாரத்திற்கு லீவு அப்ளிகேஷனை எழுதி கோபாலனின் உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தான்.

திரும்ப சீட்டுக்கு வந்த செல்வா, வாட்டர் ஜக்கிலிருந்த நீரை வேக வேகமாக பருகினான். குடித்த வேகத்தில் உதடுகள் நனைந்து, குளிர்ந்த நீர் அவன் முகவாயில் ஒழுகி, மேல் சட்டை நனைந்தது. அறைக்குள்ளாகவே மேலும் கீழுமாக மெல்ல நடக்க ஆரம்பித்ததும், உடலின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது போலிருந்தது அவனுக்கு. இடது மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான். மணி நான்கரைதான் ஆகியிருந்தது. இன்னும் முழுசா ஒரு மணி நேரத்தை ஓட்டியாகணும்.

தன் எதிரில் டேபிளின் மேல் குவிந்திருந்த பைல்களை ஒவ்வொன்றாகப் பிரித்து, அவைகளை படிக்காமலேயே, கண்ணை மூடிக்கொண்டு, கையெழுத்திட்டு தூக்கி எறிந்தான். இண்டர்காம் அடித்தது. கோபாலன் அவனை தன் ரூமுக்கு வருமாறு அழைத்தார். எப்போதும் லிஃப்டை உபயோகிக்கும் அவன் மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி அவர் அறையை அடைந்தான்.

"குட் ஈவீனிங் சார்..."

"வாப்பா செல்வா... உக்காரு... எப்படியிருக்கே?"

சட்டென தன் முகத்தில் இருந்த கண்ணாடியை கழட்டி மேஜையின் மேல் எறிந்தார் அவர். சேரிலிருந்து எழுந்து நின்றவர், கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தார். சீட்டுக்குப் பின்னால் முக்காலியின் மீதிருந்த பிளாஸ்கை திறந்து இரு கோப்பைகளில் ஆவி பறக்கும் காஃபியை ஊற்றி, ஒரு கப்பை அவன் பக்கம் நீட்டினார்.

"தேங்க் யூ சார்..."

சந்தோஷமா இருந்தலும் கண்ணாடியை கழட்டி எறியறான். கோபம் வந்தாலும் இதைத்தான் பண்ணறான். இப்ப இவன் எந்த மூடுல இருக்கான்னு தெரியலியே? செல்வா அவர் முகத்தை, அவர் கண்களை படிக்க முயற்சி செய்து தோற்றுப்போனான்.

கோபாலன் நல்ல மனுஷன்தான்... ஆனா சிலநேரத்துல அதிகமா உரிமை எடுத்துக்கிட்டு எதிர்ல இருக்கறவன் உயிரை உண்டு இல்லேன்னு எடுப்பான். கூப்பிட்டா, எதுக்கு கூப்பிட்டேன்னு சட்டுன்னு விஷயத்தை சொல்ல மாட்டான்.

இந்த ஆஃபிசுல நடக்கறதெல்லாம் இவனுக்குத் தெரியும் ? ஆனா ஒன்னுமே தெரியாத மாதிரி அமுக்கமாக இருப்பான். அடுத்தவனை வெறுப்பேத்தி வெறுப்பத்தி, அவன் மனசுல இருக்கறதை அவன் வாயாலேயே சொல்ல வெப்பான். செல்வாவுக்கு அந்த நேரத்தில் அவருடைய செயல்கள் சற்றே எரிச்சலை ஊட்டின.

கோபலான் காஃபியை குடிக்க ஆரம்பிக்கும் வரை பொறுமையாக அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் செல்வா. என்ன? எனக்கு இப்ப லீவு குடுக்க முடியாதுன்னு சொல்லப்போறானா? சொல்லட்டுமே... சொல்ல நினைக்கறதை சட்டுன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?

வீட்டுக்குப்போய் மெடிகல் லீவ் அனுப்பிட்டு போறேன். மிஞ்சிப்போனா பாண்டிச்சேரிக்கு போடாம்பான். இல்லை பெங்களூர் ஆஃபிசுக்கு போடாம்பான். நானே இந்த ஊரை விட்டே எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போயிடணும்ன்னுதானே நினைக்கிறேன்? சுகன்யா இல்லாத ஊருல எனக்கென்ன வேலை...?

இது என்ன? மூச்சுக்கு முன்னூறு தரம் சுகன்யா... சுகன்யா... சுகன்யா...?. தூரத்துல இருந்துகிட்டும் என் உயிரை ஏன் இப்படி வறுத்து எடுக்கிறா? செல்வா தன் முகவாயை அழுத்தமாக ஒரு முறை வருடிக்கொண்டு, தன் எதிரில் இருந்த காஃபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

சை... இவனுக்கு சக்கரை வியாதின்னா... நானும் சக்கரையேயில்லாத காஃபியை குடிக்கணும்ன்னு எதாவது சட்டமா? இல்லே எனக்கென்ன தலையெழுத்தா? விருட்டென அவன் மனதில் மெலிதான ஒரு எரிச்சல் எழுந்தது. காபியை குடிக்காமல் அப்படியே வைத்துவிடலாமா என அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

செல்வா... உன் மனசோட அலைச்சலை கட்டுப்படுத்த முயற்சி பண்ணுடா. தேவையில்லாம மனசுல கிளம்பற எரிச்சல் தன்னால நின்னுடும். மனதில் எழுந்த எரிச்சலை வலுக்கட்டாயமாக அவன் துடைத்து எறிவதாக நினைத்தான். முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டான்.

இதுதாண்டா வாழ்க்கை. ஒருத்தனுக்கு எப்பவும் தித்திப்பே கிடைக்காது. அப்பப்ப அவன் கசப்பையும் சாப்பிட்டுத்தான் ஆகணும். சுத்தமாக சக்கரையே இல்லாத அந்த காஃபியும் இப்போது தொண்டைக்கும் மனதுக்கும் மிகவும் இதமாக இருப்பதாக அவன் உணர ஆரம்பித்தான். 


"டேட்டா அப்டேஷன்லாம் எப்படி போயிகிட்டு இருக்கு? பிளான் பண்ணபடி எல்லாம் முடிஞ்சிடுமில்லையா?"

"முடிச்சிடறேன் சார்... என் செக்ஷ்ன்லேயும் ரெண்டு வேகன்சி இருக்கு.. ஒரு ஆள் குடுத்தீங்கன்னா... டார்கெட்டை நெக்ஸ்ட் மன்த் எண்டுக்கு முன்னாடியே அச்சீவ் பண்ணிடலாம்."

"குட்... மூணு பேரு ட்ரெயினிங் முடிஞ்சு வர்றாங்க... ஆனா அனுராதாவுக்கு சுகன்யா பார்த்துக்கிட்டு இருந்த சீட்டை கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். பாண்டிச்சேரிக்கு அனுவோட ப்ளேஸ்ல ஒரு ஆளை போஸ்ட் பண்ணணும். பெங்களூரு பையன் ஒருத்தன் வர்றானே, அவனை உனக்குத் தர்றேன். ஈஸ் தட் ஓ.கே?"

"தேங்க் யூ சார்..."

"ஆமாம்... தலைக்கு மேல வேலை இருக்கும் போது, தீடீர்ன்னு லீவுலே போறேன்னு ஏன் என்னை மிரட்டறே?" கோபாலன் செல்வாவின் கண்களை நேராகப்பார்த்தார். அவன் அவருடைய கூரியப்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், தன் தலையை தாழ்த்திக்கொண்டான்.

"கொஞ்சம் ஓய்வு தேவைப்படுது சார்."

"உடம்புக்கா... இல்லே மனசுக்கா...?" கோபாலன் உரக்க சிரித்தார்.

"...."

"செக்ஷ்ன்லே எதாவது பிரச்சனையா?"

"நோ.. நோ... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே..." தலையை சட்டென இடவலமாக ஆட்டினான் அவன்.

"எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சொல்லு... அயாம் ஆல்வேஸ் ரெடி டு ஹெல்ப் யூ..." மெல்ல சிரித்தார் கோபாலன்.

"யெஸ் சார்... ஐ நோ இட் சார்..."

"உன்னை நான் மூணு மாசமா வாட்ச் பண்ணிகிட்டுத்தான் இருக்கேன். சம்திங்க் ஈஸ் மிஸ்ஸிங்... உன் வயசுல எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க... என்ன பிராப்ளம் உனக்கு... சொன்னாத்தானே தெரியும்?"

"சார்... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சும் எனக்கென்ன பிரச்சனைன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?" செல்வாவின் தலை இன்னும் குனிந்தே இருந்தது.

"செல்வா... என்னத்தப்பா நினைக்காதே... சுகன்யாவோட டில்லி போஸ்டிங் அவளுடைய முழு விருப்பத்தோட, அவகிட்ட நான் பர்சனலா பேசினதுக்கு அப்புறம் நடந்த ஒண்ணு. மொதல்லே அனுவைத்தான் அங்கே ரிடெய்ன் பண்றதா இருந்தேன்."

"சார்..."

"அனுவுக்கு அடுத்த மாச ஆரம்பத்துல கல்யாணம் பிக்ஸ் ஆகுதாம். அந்த பையனும் சென்னையிலதான் வேலை செய்யறானாம். அய்தர் சுகன்யா ஆர் அனு இவங்க ரெண்டு பேருலே ஒருத்தர்தான் இப்போதைக்கு சென்னைக்கு வரமுடியும். சுகன்யாவும் மேல ஏதோ படிக்கப்போறேன்னு சொன்னா..."

"சார்... உங்களை நான் கொறை சொல்லலே. அனு ஈஸ் ஒன் ஆஃப் மை வெரி குட் ஃப்ரெண்ட்ஸ்... அவளுக்கு கல்யாணம் ஆகி, அவ தன் ஸ்பௌசோட சென்னையில இருக்கறதுல எனக்கும் சந்தோஷம்தான்."

"யெஸ்..."

"ஆனா... சுகன்யா தில்லியிலே படிக்கப்போறேன்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். அவ சென்னைக்கு திரும்பி வந்தா இந்த ஆஃபிசுலே என் மூஞ்சை பாத்தே ஆகணும். அவளுக்கு என் முகத்தைப்பாக்க பிடிக்கலே... இதுதான் சார் உண்மை..." செல்வா விருட்டென தன் சீட்டிலிருந்து எழுந்தான்.

"செல்வா ப்ளீஸ்... ஒரு நிமிஷம் உக்காருப்பா. இப்பல்லாம் நீ சட்டு சட்டுன்னு எரிச்சல் படறே; சுகன்யாவை நீ தப்பா புரிஞ்சுகிட்டிருக்கே. உங்களோட பர்சனல் விஷயத்துல தலையிடறேன்னு நினைக்காதே... நீ எதை எதையோ உன் மனசுக்குள்ளே போட்டு வீணா கொழம்பிகிட்டு இருக்கே... உன் மனசை மட்டுமில்லே; உன் லவ்வரோட மனசையும் புண்ணாக்கிட்டே....!?"

"....."



"மை டியர் யங் மேன்... நான் சொல்றதை நல்லா காது குடுத்து கேட்டுக்கோ... சுகன்யா ஈஸ் ரியலி எ ஜெம்... ஐ நோ ஹெர் ஃப்ரெட்டி வெல்... யூ ஆர் ஃபார்சுனேட்... ஷி ஸ்டில் லவ்ஸ் யூ வெரி வெரி மச்... நான் உனக்கு பதினைஞ்சு நாள் லீவு குடுக்கறேன்... இல்லே டெம்பரரி ட்யூட்டியிலே தில்லிக்கு அனுப்பறேன். வொய் டோண்ட் யூ கோ அண்ட் மீட் யுவர் லேடி தேர்?" கோபாலன் தன் கண்களை குறும்பாகச் சிமிட்டினார்.

"சார்.. என்ன சொல்றீங்க நீங்க..."

"ஆல் த வெரி பெஸ்ட்... இதை போற வழியிலே என் பீ.ஏ. கிட்ட குடுத்துடு... "

கோபாலன் டேபிளின் மேல் கிடந்த அவனுடைய விடுமுறை விண்ணப்பத்தில் சேங்ஷண்ட் என எழுதி அதன் கீழ் தன் கையெழுத்தை கிறுக்கி அவனிடமே திருப்பிக் கொடுத்தார். கண்ணாடியை முகத்தில் ஏற்றிக்கொண்டார். அடுத்த பைலை பிரித்து அதில் மூழ்க ஆரம்பித்தார். இதற்கு மேல் அவர் தன்னிடம் எதுவும் பேசமாட்டார் என்பது செல்வாவுக்கு புரிந்தது.

"தேங்க் யூ சார்..." 



சுகன்யா... 104

உன்னை என் புள்ளைன்னு சொல்லிக்கறதுக்கே, வெக்கமாயிருக்குடா. எங்கேயாவது கண்ணு மறைவா ஒழிஞ்சுத்தொலைடா...'

நடராஜன் கோபத்தில் செல்வாவை நோக்கிக் கூவியதும், ரோஷத்துடன் கையில் கிடைத்த நாலு பேண்டையும், நாலு சட்டையையும் ஒரு தோள் பையில் திணித்துக் கொண்டு, வீட்டு வாசலில் தன் கையை இறுகப்பிடித்து தடுத்து நிறுத்திய தங்கை மீனாவின் பிடியையும் விருட்டென உதறிவிட்டு, தெருக்கோடியை அடைந்த செல்வா அதற்கு மேல் எங்கு போவது என புரியாமல் விழித்தான்.

வயிறு கபகபவென பசியால் எரிந்து கொண்டிருந்தது. சாப்பாடு தயாராக இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும் என சொல்லிய சுந்தரம் அய்யர் அவனைப்பார்த்து இதமாக சிரித்தார். சூடாக ஒரு காஃபியை வாங்கி குடிக்க ஆரம்பித்ததும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க, மேற்கொண்டு என்ன செய்வதென நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான் செல்வா.

பெரிய புடுங்கல் மாதிரி வீட்டை விட்டு கிளம்பிட்டே. சொந்த வீட்டை விட்டா, உரிமையா எந்த நேரத்துலேயும் உள்ள நுழையறதுக்கு இருக்கற இன்னொரு இடம் சீனுவோட வீடுதான். என் விஷயத்துல அனாவசியமா தலையிட வேணாம்ன்னு அவனோடவும் வம்பிழுத்து இன்னும் முழுசா ஒரு நாள் ஆவலே.



இந்த வீட்டு மாப்பிள்ளையா ஆகப்போறவர்கிட்ட மரியாதையா பேசுடான்னு மீனா நேத்துதான் நோட்டிஸ் விட்டா; வெக்கத்தை விட்டுட்டு என்னடா மாப்ளேன்னு சீனு வீட்டு மாடியிலே போய் ஒரு மாசம் வேணாலும் படுத்துக்கலாம். ஆனா அங்கப் போனது நடராஜ முதலியாருக்கு தெரிஞ்சா, அடியே மல்லிகா, உன் ஆசைப்புள்ளை நம்ம சம்பந்தி வீட்டுக்கு போய் என் மானத்தை வாங்கறான்டீன்னு எக்கச்சக்கத்துக்கு அம்மாகிட்ட எகிறி எகிறி குதிப்பார். இருக்கற பிரச்சனை போதாதா?

லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கலாமா? இந்த ஏரியாவுல நாள் ஒண்ணுக்கு, சாதாரண அறைக்கே குறைஞ்சது ஆயிரம், ஆயிரத்து ஐநூறுன்னு நெத்தியில பட்டை தீட்டி கழுத்துல கொட்டை கட்டிடுவானுங்க. செல்வாவின் மனது வரவு செலவு கணக்கு போட ஆரம்பித்தது.

பணம் போறது பெரிசு இல்லே; இந்த ஏரியாவுலே தெரிஞ்சவங்க யார் கண்ணுலயாவது பட்டுட்டா ஏன்டா இப்படீன்னு உயிரை வாங்குவானுங்க; அவனவன் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லியே தொண்டைத்தண்ணி வத்திப்போயிடும். மனம் போன போக்கில் செல்லை எடுத்து நோண்டினான் செல்வா.

வேலாயுதம்... நம்ப வேலாயுதத்தைப்போய் பாத்தா என்ன? அவனுக்கு இருக்கற கான்டாக்ட்ஸுக்கு ரெண்டு நாள்லே அடையாறு, பெசன்ட் நகர், இந்திரா நகர் ஏரியாவிலேயே சீப்பா ஒரு ரூம் பாத்துக் குடுத்துடுவான். மனதுக்குள் ஒரு முடிவுடன் எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டான்.

* * * *

"வாடா மச்சி.. வா... வா... மழை கிழை வந்துடப் போவுதுடா.."

முகத்தில் நிஜமான சந்தோஷத்துடன், பொய்யாக வானத்தைப்பார்த்துவிட்டு, உற்சாகமாக கூவினான் வேலாயுதம். ஃபிரிஜ்ஜ்லிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து அவனிடம் நீட்டினான். செல்வாவின் தோளிலிருந்த பையைக்கண்டதும், சற்றே வியப்புடன் ஏற இறங்க அவனைப்பார்த்தாலும், அதைப்பற்றி உடனடியாக அவன் எதுவும் கேட்கவில்லை.

"தேங்க்ஸ்டா.. பேனைக் கொஞ்சம் வேகமாக்குடா வேலு..."

சோஃபாவில் சரிந்து வசதியாக உட்கார்ந்துகொண்ட செல்வா சோம்பலாக முனகினான். ஹாலை சுற்றி கண்களை சுழல விட்டான். வீடே நீட் அண்ட் க்ளீனாக எல்லாமே அதது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன. ஒரு பொறுப்பான பெண்ணின் கைவண்ணத்தில் வீடு பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. கிச்சனிலிருந்து வெங்காயம், தக்காளி வதங்கும் வாசனை வந்து கொண்டிருந்தது.

"எப்ப மச்சி கல்யாண சாப்பாடு போடப்போறே?" வேலாயுதம் இளித்தான்.

"எனக்கு கல்யாணமும் இல்லே; உனக்கு கல்யாண சாப்பாடும் இல்லே..." தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறியை வெறிக்க ஆரம்பித்தான் செல்வா.

"என்னா மச்சான்.. அபசகுனமா பேசறே?" வேலு அவன் கழுத்தை கட்டிக்கொண்டான்.

"நான் நேத்து காத்தால சாப்பிட்டதுதான்டா... ரொம்ப பசிக்குது... சாப்பிடறதுக்கு என்னடா இருக்கு? செல்வாவின் குரல் கலக்கமாக எழுந்தது.

"என்னடா பேசறே மச்சான்... வொயிட் ரைஸ் ரெடியாருக்குடா... அஞ்சு நிமிஷத்துல கத்திரிக்காய் சாம்பார் கொதிச்சிடும்.. மவராசனா சாப்பிடுறா..." செல்வாவின் பேச்சைக்கேட்டு ஒரு வினாடி விக்கித்துப்போன வேலாயுதம் மேற்கொண்டு எதுவும் பேசாமல், கிச்சனை நோக்கி ஓடினான்.

கோமதியோட சத்தத்தையே காணோமே? செல்வா மனதில் யோசனையுடன் எழுந்து வேலுவின் பின்னால் நடக்க ஆரம்பித்தான். வலது புறம் திறந்திருந்த பெட்ரூமில் அவன் பார்வை செல்ல, கட்டிலின் நடுவில் இளம் சிவப்பு நிற சேலையொன்று நீளக்கொடியாக கிடந்தது. கோமதியினுடையதாகத்தான் இருக்கவேண்டும். அவன் பார்வையில் இருந்த கேள்வியைப் புரிந்துகொண்டான் வேலு.

"மச்சான்.. கோமதி அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கடா... வர்றதுக்கு ஒரு பத்து நாளாகும். உன் தலையெழுத்து நீ என் கை சமையலைத்தான் சாப்பிட்டுத் தொலைக்கணும்..."

செல்வா மொகமே சரியில்லே. ஏதோ பிரச்சனையோட வந்திருக்கான். சாப்பிட்டு முடிக்கட்டும்... அப்புறமா நிதானமா என்ன ஏதுன்னு விசாரிக்கலாம். மனதில் எண்ணங்கள் ஓட வெள்ளையாகச் சிரித்துக் கொண்டே சாம்பாருக்கு தாளித்துக் கொட்டிய வேலாயுதத்தின் கன்னங்களில் சதை ஏறியிருந்தது. மெலிதாக தொப்பையும் விழ ஆரம்பித்திருந்தது.

"ஆளே பளபளன்னு இருக்கேடா... தொப்பை விழுது... கோமதி கை சாப்பாடு உன் ஒடம்புக்கு நல்லா செட்டாயிட்டாப்ல இருக்கு..." செல்வா சிரித்தான்.

"நம்பாளு சூப்பரா சமைப்பா மச்சான். கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனி வாட்டி உன்னைக் வீட்டுக்கு வாடான்னு கூப்பிட்டேன்? நீதான் வரவேயில்லை. பத்து நாள் முன்னாடி கூட கோமதி உன்னை சுகன்யா கூட மார்கெட்ல பாத்தாளாம்."

செல்வா அவன் முகத்தை நேராக பார்ப்பதை தவிர்த்தான்.

"செல்வா... செல்வாங்கறீங்க... நல்ல ஃப்ரெண்டுன்னு வேற சொல்றீங்க... நம்ம மேரேஜ்க்கு அப்புறம் ஒரு தபா கூட நம்ம வீட்டுக்கு நீ வல்லியேன்னு கோம்ஸ் கூட ரெண்டு மூணு தரம் ஃபீல் பண்ணிருக்காடா..."

சுகன்யாவின் பேரை வேலாயுதம் சொன்னதும் செல்வாவின் முகம் சுருங்க, அவன் முகம் சுருங்கியதை, இவன் கண்கள் தவறாமல் படித்துக் கொண்டன.

சர்தான்... நம்ப மச்சான் செல்வா, சுகன்யா கூட தகறாரு பண்ணிக்கிட்டு வந்திருக்கான். பிகரு வெச்சிருக்கறவன் அத்தினி பேரும் தவறமா அட்சிக்கிறானுங்கப்பா. லவ் பண்றவனை ராடு வுடாத பொண்ணுங்களே இந்த ஊர்லேயே கிடையாதா? தானும் தன் மனைவி கோமதியும் காதலர்களாக இருந்த காலத்தில் வாரத்துக்கொரு முறை அடித்து பிடித்துக் கொண்டதெல்லாம் வேலாயுதத்தின் நினைவுக்கு வர அவன் சிரிக்க ஆரம்பித்தான்.

"வெல்லாயுதம்.. ஏன்டா சிரிக்கறே?"

"நீ பசியில இருக்கும்போது நான் எது சொன்னாலும் உனக்கு கோவம்தான் வரும். மொதல்லே சாப்பிடு மச்சான். அதான் பொட்டி படுக்கையோட வந்திட்டீல்லா? பொறுமையா சொல்றேன்..."

“ஹேய்... நக்கலா.. வாய் மேலேயே போடுவேன்..” செல்வாவின் முகம் சுருங்கியது.

“கோச்சிக்காதே மச்சான்...”

இரண்டு தட்டுகளில் சாதத்தை அள்ளி போட்டான். சாம்பாரை தளர தளர ஊற்றினான். வெந்தய வாசனை மூக்கைத் துளைத்தது. தொட்டுக்கொள்ள எலுமிச்சை ஊறுகாயை ஜாடியிலிருந்து தாராளமாக வழித்து போட்டான் வேலு. பசி வேகத்தில் மொத்தமாக பரிமாறுவதற்கு முன்னரே அப்பளத்தை எடுத்து கடிக்க ஆரம்பித்தான் செல்வா. கையில் தட்டு வந்ததும் வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

"சாம்பார் சூப்பரா இருக்குடா வேலு..." நண்பனை மனமார பாராட்டியவன் இன்னொரு கரண்டி சாம்பாரை எடுத்து தட்டில் ஊற்றிக் கொண்டான்.

"கோமதிகிட்ட கத்துக்கிட்டேன்டா..." வேலாயுதம் தன் பெண்டாட்டி புராணத்தை அன்று முழுவதும் நிறுத்தவேயில்லை. 

“இந்தாடா”

இரும்பு பீரோவிலிருந்து, சுத்தமாக துவைத்து வைக்கப்பட்டிருந்த லுங்கிகளில் ஒன்றை எடுத்து செல்வாவிடம் நீட்டிய வேலாயுதம் ஏர்கண்டீஷனரை ஓடவிட்டான். டபுள் காட்டில் சுவரோரமாக உருண்டு படுத்தவன், அவனையும் படுத்துக்கொள்ள சொன்னான்.

“வேணாம்டா... புருஷன் பொண்டாட்டி படுக்கற கட்டிலு... ஒரு பாயைக்குடு; இப்படியே நான் தரையில படுத்துக்கிறேன்.”

செல்வா கட்டிலில் படுக்கத் தயங்கினான். சுவரில் பதித்திருந்த ஸ்லேபில் வரிசைய் வரிசையாக புடவை மடிப்புகள் வீற்றிருந்தன. பிளாஸ்டிக் கயிற்றுக்கொடியில், ஹேங்கரில் மாட்டப்பட்ட ஒரு நைட்டியும், சல்வார் கமீசும் தொங்கிக் கொண்டிருந்தன. பாவாடை வரிசைகள், ஜாக்கெட்டுகள், அறையில் பெண்மையின் ஆதிக்கம் தூக்கலாக இருந்தது.

செல்வாவின் கையிலிருந்த லுங்கியிலிருந்து மெல்லிய பவுடர் வாசம் வந்து கொண்டிருந்தது.

"கோமதி... துணியெல்லாம் தொவைச்சு அதுமேல லேசா பவுடரை தூவிடுவா... வாசனையா இருக்குல்லே?" வேலாயுதத்தின் முகம் பெண்டாட்டியின் பெருமையைப் பேசிய போது பூவாய் மலர்ந்தது.

காதலிச்சு கட்டிக்கிட்டவளை ரொம்பவே தலை மேல தூக்கி வெச்சிக்கிறான். என் சுகன்யாவுக்கு முன்னாடி, இந்த கோமதியெல்லாம் நிக்க முடியுமா? செல்வாவுக்கு அவனுள் காரணமேயில்லாமல் ஏதோ புகைந்தது.

“மச்சான்... நடுகூடத்துல உக்கார வெச்சு நாளு கிழமையிலே எத்தனை தரம் உங்கம்மா எனக்கு சோறு போட்டு இருக்காங்க. வித்தியாசம் பாக்காதடா. உன் வூடு மாதிரி நெனைச்சுக்கோடா. ஃப்ரியா இரு மச்சான்...” வேலாயுதத்தின் குரலில் எல்லையில்லாத நட்பு வழிந்து ஓடியது.

“தேங்க்ஸ்டா...”

“நமக்குள்ள என்னடா மண்ணாங்கட்டி தேங்சு...?”

“ம்ம்ம்ம்...” செல்வாவும் படுத்தான். போம் மெத்தை அமுங்கி அவன் உடலை உள்வாங்கிக்கொண்டது.

“வீட்டுல கோச்சிக்கிட்டு வந்திட்டியாடா? உங்க நிச்சயதார்த்தம்தான் நல்லபடியா முடிஞ்சுப்போச்சே? இப்ப எதுனா புதுசா பிரச்சனையா? நீ வீட்டை விட்டு வந்தது உன் ஆளுக்குத் தெரியுமா?”

“ப்ச்ச்ச்... சுகன்யாவை நான் தலை முழுகி ஒரு வாரம் ஆச்சு... அவ இப்ப டில்லியிலே இருக்கா...”

“டேய்... நானும் பாக்கறேன்... நாக்குல நரம்புல்லாம பேசிகினே போறே? ஒரு தரத்துக்கு ரெண்டு தரமா சொல்றேன். நீ பேசறதெல்லாம் சுத்தமா நல்லால்லே. மப்புல இருக்கறவன் கூட இப்டீல்லாம் பேசமாட்டான்டா.” வேலு சட்டென அதிர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்தான்.

“எனக்கு ஒரு ரூம் வேணும்டா.” செல்வா முனகினான்.

“நான் உனக்கு ரூம் பாத்துக் குடுத்தேன்னு சீனுவுக்கு தெரிஞ்சா அவன் என்னை செருப்பால அடிப்பான்...”

“வேலு.. இப்போதைக்கு இங்க நான் இருக்கறது யாருக்கும் தெரியவேணாம்...”

“தண்ணியில உக்காந்துக்கிட்டு ஒருத்தன் குசு வுட்டானாம். அந்தக் கதையா இருக்குதுடா நீ பேசறது. இன்னிக்கு ஈவினிங்குள்ள தல உன்னைத் தேடிகிட்டு இங்க வந்து என் தலையை உருட்டலே, நீ என் பேரை மாத்தி வெய்டா...”

“என் விஷயத்துல தலையிடாதேன்னு நேத்தே அவனுக்கு வார்னிங் குடுத்துட்டேன். என்னைத் தேடிக்கிட்டு எவனும் இங்கே வரமாட்டான்.”

ஸ்ப்ளிட் ஏஸி அந்த சின்ன அறையில், சத்தமில்லாமல், வெகு அருமையாக வேலை செய்து கொண்டிருந்தது. செல்வா போர்வையை எடுத்து போத்திக்கொண்டான்.

“சீனுவும், நீயும், உங்க சொந்த வாழ்க்கையிலே மாமன், மச்சான் ஆவப்போறிங்க. உங்க வெவகாரத்துல நான் குறுக்கே வர்லே. நீ என் வூட்டுல பத்து நாளு இரு; பத்து மாசம் இரு; ஆனா உள்ளூர்ல அப்பன், ஆத்தா தங்கச்சின்னு எல்லாரும் இருக்கும் போது தனி ரூம் பாக்கற வேலைல்லாம் நல்லதுக்கு இல்லே. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம்...!” வேலாயுதத்தின் முகம் கல்லாக மாறியிருந்தது. 



“வேலு... ஏ.சீ. ஃபிரிஜ்... வாஷிங் மெஷின்.. அது இதுன்னு உன் வீடே ஏகத்துக்கு தடபுலா இருக்கே? மொத்தமா இவ்வளவு பைசா ஏதுடா?” வேலாயுதம் போட்டுக்குடுத்த காஃபியை குடித்துக் கொண்டே செல்வா சிரித்தான்.

“ம்ம்ம்... புது பைக்கை வுட்டுட்டியேடா? எல்லாம் மாமியார் வாங்கிக்குடுத்தது மச்சான். அவங்க சேவிங்ஸ் மொத்தத்தையும் எனக்கு மொய் எழுதிட்டாங்க...” அவனும் இவனுடன் சேர்ந்து சிரித்தான்.

“கோவில்ல உன் மேரேஜ்ன்னைக்கு, நீ நல்லாயிருப்பியாடான்னு, மண்ணை வாரி வாரித் தூத்தினாங்க..”

“அது பழைய கதை மச்சான். லேடீஸ் மனசை, நம்ம ஈகோவால நாம புரிஞ்சிக்கறதே இல்லே. என் மாமியார் சைக்காலஜியை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணேன். வசதியா, சொகமா இருக்கேன்.” ஹோவென சிரித்தான் வேலாயுதம்.

"என்னடா சொல்றே?" ஈகோ, கீகோங்கறான். என்னைப்பத்தி பேசறானா? செல்வாவின் முகம் சட்டென விழுந்தது.

"உன் மேல உயிரையே வெச்சிருந்த சுகன்யா, உனக்கு பிடிக்காதவன் கிட்ட செல்லுல பேசினான்னு அவளை சந்தேகப்பட்டியே? அதுக்கு பேரு என்னடா? நான் சொல்றேன். அதுக்கு பேருதான் ஈகோடா. நாம பண்ணது தப்புன்னு தெரிஞ்சா சட்டுன்னு சம்பந்தபட்டவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடணும்."

வேலாயுதம் தன் விரல் நடுவிலிருந்த சிகரெட்டை நீளமாக இழுத்து ஊதினான். செல்வா அவனுக்குப் பதிலேதும் கொடுக்காமல், அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கோமதியோட அம்மா தன் பொண்ணை எவ்வளவு ஆசையா வளர்த்து இருப்பாங்க; அவங்க மனசுல அவளைப்பத்திய கனவுகள் என்னன்ன இருந்திருக்கும்? ஒன் பைன் மார்னிங், எனக்கு அவளை புடிச்சிருக்குன்னு, அவளை என் வீட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டா, அவங்க அதை ஒத்துப்பாங்களா?"

"கோம்ஸும்தானே உன்னை லவ் பண்ணா?"

"இருக்கலாம்...."

"அப்புறம் என்னா?"

"நான் விரும்பின பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, நான் என் ஈகோவை திருப்தி படுத்திக்கிட்டேன். கோமதியும் தன் ஆசைதான் முக்கியம்ன்னு அவங்க வீட்டைவிட்டுட்டு என் பின்னாடி வந்துட்டா. இதை ஒரு தாயோட ஆங்கிள்லேருந்து பாருடா மச்சான்.."

"அவங்களுக்கு புடிக்காத ஒரு விஷயத்தைப் பண்ணி, அவங்க மனசை, நாங்க ரெண்டு பேருமே புண்படுத்திட்டோம் இல்லையா? புருஷன் இல்லாம தன் பொண்ணை வளர்த்து படிக்க வெச்ச பொம்பளைக்கும் ஈகோ இருக்குமில்லே?" தன் கையிலிருந்த சிகரெட் துணுக்கை வீசியெறிந்தான் வேலு.

"ம்ம்ம்..."

"நாளைக்கு எங்க பொண்ணு இதே காரியத்தைப் பண்ணா; எங்க மனசு எவ்வளவு பாடு படும்?"

"வேலு... என்னடா நீ இன்னைக்கு என்னன்னமோ பேசறே?"

"ஆமாம் மச்சான்.. சுகன்யா கழுத்துல தாலியை கட்டிட்டு அவகூட ஒரு ஆறுமாசம் நீ குடும்பம் பண்ணதுக்கு அப்புறம் நீயும் இப்படித்தான் பேசுவே.. கோமதி இப்ப தலைமுழுகாம இருக்காடா..."

"கங்கிராட்ஸ்டா..." செல்வா அவன் கையை குலுக்கினான்.

"கோமதி கன்சீவ் ஆனதும், ரொம்பவே வாந்தி வாந்தின்னு கஷ்டப்பட்டா; வீட்டுல சிகரெட் பிடிக்கறதைக்கூட நான் நிறுத்திட்டேன். தண்ணியடிக்கறது அவளுக்கு பிடிக்கலேன்னு அதையும் விட்டுட்டேன்; இந்த விஷயத்துல உன் தங்கச்சி மீனா எனக்கு ஒரு தரம் பெருசா ராடு வுட்டுட்டாப்பா..."

"சீனு சொன்னான். ஆனா இப்ப நீ சிகரெட் பிடிச்சே?"

"நீ வந்திருக்கே... மனசு சந்தோஷமா இருக்கு... பத்து நாள் கழிச்சு இன்னைக்குத்தான் புடிச்சேன்.. இதோட என்னைக்கு புடிப்பேனோ...?"

"அப்புறம்..?"

"மிஸ்டர் உன் பொண்டாட்டி மனசுல ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு... அது என்னன்னு கேட்டு தீத்து வைங்கன்னு ஒரு கைனகாலஜீஸ்ட் சொன்னா..."

"ம்ம்ம்"

"என்னம்மா கோம்ஸுன்னேன்? எங்கம்மாவை பாக்கணுங்க; அவங்க கையால ஒரு வாய் சாப்பிடணுங்கன்னு அழுதா..."

"ஓ மை காட்..."

"ராத்திரி பத்து மணி.. கால்லே செருப்பு கூட இல்லாம, இடுப்புல லுங்கி, மார்லே சட்டையோட, என் மாமியார் வூட்டு கதவை தட்டினேன்... எங்கடா வந்தே நாயேன்னாங்க?"

"காட்..."

"அத்தே.. உங்க பொண்ணை நான் என்னால முடிஞ்ச அளவுக்கு, சந்தோஷமாத்தான் வெச்சிக்கிட்டு இருக்கேன்... ஆனா இப்ப அவளுக்கு உடம்பு சரியில்லே. உடனே நீங்க வந்து அவளைப் பாக்கணும்; அப்புறமா என்னை எதுவும் குத்தம் சொல்லிடாதீங்கன்னு ஒரு பிட்டு போட்டேன்."

"என் பொண்ணுக்கு என்னடா ஆச்சு? அவளை கொன்னே போட்டுட்டியாடா குடிகார நாயேன்னு என் தலை மயிரை புடிச்சி உலுக்கு உலுக்குன்னு உலுக்கிட்டாங்கப்பா..."

"அத்தே.. அவ மூணு மாச கர்ப்பமா இருக்கா... கடைசியா உங்களை ஒரு தரம் பாத்துடணும்ன்னு ஆசை படறா... நீங்க இப்பவே வந்தாகணும்ன்னு அவங்க கையை பிடிச்சிக்கிட்டு, மூஞ்சை உம்முன்னு வெச்சிக்கிட்டு, குரலை இழுத்து இழுத்து பேசி, சின்னதா ஒரு ஃபிலிம் காட்டினேன்..."

"கிங்குடா நீ..." செல்வா சிரித்தான்.

"துணைக்கு நம்ப தோஸ்த் ஆட்டோக்கார தியாகுவையும் கூப்பிட்டுக்கிட்டு போயிருந்தேன். என் மாமியார் குய்யோ மொறையோன்னு கூச்சப்போட்டுகிட்டு வீட்டுக்குள்ளவே இங்கேயும் அங்கேயும் ஓடினாங்க. ராத்திரி நேரத்துல கூச்சலைக் கேட்டு பக்கத்து வூட்டு காரனுங்க எட்டிப்பாக்க ஆரம்பிச்சிட்டாங்க."

"தகராறு எதாவது ஆயிடிச்சா?"

"நான் என்னா பண்ணேண்? என் மாமியாரை, சட்டுன்னு அப்படியே அலேக்காத் தூக்கி ஆட்டோவுல போட்டுகினு நம்ப வூட்டுக்கு வந்துட்டேன்..."

"கில்லாடிடா நீ..."

"எல்லாம் உன் மச்சான் சீனுவோட திரைக்கதை, வசனம் டைரக்ஷ்ன்தாம்பா... அவன் சொல்லி குடுத்த மாதிரியே ஆக்டிங் குடுத்தேன்." வேலு தன் 'தல'யை மனதுக்குள் நன்றியுடன் நினைத்துக்கொண்டான்.

"ஒரு பொண்ணு என்னைக் காதலிச்சி, நான்தான் முக்கியம்ன்னு என் பின்னாடி வந்தா பாரு; அவ சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்டா செல்வா... அவளுக்காக நான் என்னா வேணா பண்ணுவேன்... யார் கால்லே வேணா விழுவேன்." மிடுக்காக வேலு பேச பேச, செல்வாவின் முகம் இலேசாக கருத்தது. 

"கால்லே விழுந்தியா? யார் கால்லே விழுந்தே?"

"வீட்டுக்கு வந்ததும்.. என் பொண்டாட்டி கோமதி முழுசா எழுந்து வந்து வூட்டுக்கதவை தொறந்தா, என் மாமியார் என்னை பெண்டு எடுக்க மாட்டாங்களா?" வேலு கெக்கேபிக்கே என சிரித்தான்.

"அப்றம்..."

"இங்க குந்திகினு இருக்கோமே இதே எடம்தான்... நீள நெடுக அவங்க கால்லே விழுந்துட்டேன்... அத்தே என்னை மன்னிச்சுடுங்க... நான் பண்ணது தப்புதான்... உங்களுக்கு இஷ்டம் இல்லாம, உங்ககிட்ட சொல்லாம கொள்ளாம, உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

"ம்ம்"

"இப்ப என் பொண்டாட்டி வவுத்துல இருக்கற என் புள்ளை பொழைக்கணும்... கொஞ்சம் நாள் நீங்க என் கோமதிக்கு பொங்கிப் போடணும்... உங்களுக்கு என் மேல கோவம்ன்னா என்னை இப்படியே மிதிங்க... ஆனா உங்க ஆசைப்பொண்ணை தண்டிக்காதீங்கன்னேன்."



"அவ்ளோதான் மச்சான். அவங்க கால்லே என் கை பட்டதும்... ஆடிப்போயிடாங்க என் மாமியாரு... எழந்திருங்க மாப்பிளேன்னாங்க...! என் பொண்டாட்டியை தன் மடிலே போட்டுகினு, ஆத்தாளும் பொண்ணும், ராத்திரி பூரா ஒரே பாசமழையா பொழிஞ்சிக்கிட்டாங்க..."

"குட்..."

"எனக்கொரு பாய் தலையணையை குடுத்து ஹாலுக்குத் தொரத்திட்டாங்க... இங்கே மாமியார் இருந்த ஒரு வாரம் நான் என்னுதை கையிலதான் புடிச்சிக்கிட்டு கிடந்தேன்."



Monday, 6 April 2015

சுகன்யா... 103

"சுகன்யா... செல்வா உங்கிட்ட நடந்துகிட்ட விதத்தை நான் சரின்னு சொல்லலே. அவன் என் பிள்ளைங்கறதுக்காக நியாயப்படுத்தவும் இல்லே. திரும்பவும் சொல்றேன். அவன் செய்தது தப்புதான்."

"...."

"சுகன்யா... அவன் யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு உன்னை அவன் சந்தேகப்பட்டதை, எங்களுக்காக, நீ முழுசா மறந்துடணும்ன்னுதான் நான் கேக்கறேன். சுகன்யா என்னை சுயநலக்காரன்னு மட்டும் நினைச்சுடாதே. உன்னை நான் எந்தக்காரணத்துக்காவும் இழக்க விரும்பலேம்மா. இதுதான் உண்மை.

"அங்கிள் நீங்க என் மேல வெச்சிருக்கற அன்புக்கு ரொம்ப தேங்க்ஸ்..."

"சுகன்யா... எனக்கு உன்னோட தேங்க்ஸ் வேண்டாம்மா... அவனை நீ இந்த ஒரு தரம் மன்னிக்கக்கூடாதா?"

"அங்கிள்... ப்ளீஸ்..." சுகன்யா விசும்ப ஆரம்பித்திருந்தாள்.



"அயாம் சாரி... கொழந்தை நீ தனியா இருக்கே... என்னவோ பேச நினைச்சு.... என்னவோ பேசி... உன்னை நான் அழவெச்சுட்டேன்... அயாம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி ஃபார் திஸ்..." நடராஜன் குரலில் சுயபரிதாபம் மிகுதியாக இருந்தது.

"இட்ஸ் ஆல் ரைட் அங்கிள்... நான் தப்பு பண்ணலேங்கறதை நீங்க புரிஞ்சிகிட்டு இருக்கீங்க பாருங்க... அதை உங்க வாயாலே என் கிட்ட இன்னைக்காவது சொன்னீங்க பாருங்க... அதுவே எனக்குப் போதும். உங்க வார்த்தைகளாலே, என் மனசு ரொம்பவே இலேசாயிட்ட மாதிரி நான் ஃபீல் பண்றேன். நான் தனியா இல்லேங்கற ஒரு உணர்வு எனக்கு இப்ப வந்திடிச்சி..."

"சுகன்யா... பீ ப்ரேவ்... ஐ நோ.. யூ... நீ தைரியமான பொண்ணு... நீ எங்கேயிருந்தாலும், நீயே தப்பு பண்ணணும்ன்னு நினைச்சாலும் உன்னாலத் தப்பு பண்ண முடியாதும்மா.. எதுக்கு நீ அழறே? நீ எதுக்கும் அழாதே.. உனக்கு நாங்கல்லாம் இருக்கோம்மா..."

"தேங்க் யூ அங்கிள்..." சுகன்யா தன் விழிகளை புறங்கையால் துடைத்துக்கொண்டு, மூக்கை உறிஞ்சினாள்.

"உனக்கு செல்வா மேல இருக்கிற கோபம் ஞாயமானதும்மா..." நடராஜன் தன் குரலை இழுத்தாற் போல் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

"அங்கிள் அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே..."

"அப்ப நீ ஏன் உன் ட்ரெயினிங் முடிஞ்சதும் சென்னைக்கு திரும்பி வரலே?"

"இதுக்கு மேல இதைப்பத்திமட்டும் தயவு செய்து நீங்க எதுவும் கேக்காதீங்க அங்கிள்...."

"சுகா... மீனாவை மட்டும் நான் என் மகளா நினைக்கலே. செல்வா அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தன்னைக்கு, எங்க பசியறிஞ்சு, எங்களுக்காக வேகாத வெய்யில்லே ஓட்டமா ஓடி, உன்னோட ரெண்டு கை கொள்ளாத அளவுக்கு சாப்பிட விதவிதமா வாங்கிட்டு வந்தியே, அந்த நிமிஷத்திலிருந்தே உன்னை நான் என் மகளா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். அந்த உரிமையிலே சொல்றேம்மா... பிடிவாதத்தினாலே எந்த பயனும் இல்லேம்மா..."

"நிஜமாவே அவர் மேல எனக்கு எந்த கோபமும் இல்லே... என்னை நம்புங்க அங்கிள்..."

"நான் உன்னை நம்பறேன்... உன் செல்வா ரொம்பவே ஒடைஞ்சு போயிருக்காம்மா..." நடராஜன் பொய் சொல்லவில்லை என்பது அவருடைய குரலிலிருந்து அவளுக்கு புரிந்தது.

"அங்கிள்... இதுக்கெல்லாம் காரணம் நான் இல்லே...." செல்வா உடைந்து போயிருக்கிறான் என நடராஜன் சொன்னதும் அவள் தன்னுள் ஏதோ இளகுவதாக உணர ஆரம்பித்தாள்.

"யெஸ்... இன் ஏ வே... யூ ஆர் கொயட் ரைட்... திரும்பவும் சொல்றேம்மா... அந்த முட்டாள் தன் தப்பை உணர்ந்துட்டான். இதை மட்டும் என்னால நிச்சயமா சொல்லமுடியும். உன்னைப் பாக்க, உங்கிட்ட பேச, உங்கிட்ட மன்னிப்பு கேக்க அவன் துடிச்சிக்கிட்டு இருக்கான்."

"ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ... அவன் சொல்லி நான் இன்னைக்கு உங்கிட்டே பேசலே... அவன் தரப்புல நான் உன் கிட்ட வாதடால. நான் உன்னிடம் பேச நினைச்சதே வேற ஒரு முக்கியமான் விஷயம்... "

"அவர் தன்னோட தப்பை ரியலைஸ் பண்ணிட்டாருன்னு எப்படி நீங்க அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க அங்கிள்?"

"உன்கிட்ட மீனா எப்ப பேசினாலும், அவ பேசி முடிச்சதுக்கு அப்புறம் உன்னைப்பத்திய எல்லா விஷயத்தையும் அவகிட்டருந்து நாங்க கேட்டுத் தெரிஞ்சுக்குவோம். அதை அவன் திருடன் மாதிரி ஒளிஞ்சு நின்னுக்கிட்டு ஒரு வரி விடாம கேட்டுக்கிட்டு இருப்பாம்மா...."

"ம்ம்ம்" சுகன்யாவின் உதடுகள் துடிக்க ஆரம்பித்தன.

"மீனாவை தனியா அழைச்சிக்கிட்டுப் போய், சுகன்யா எப்படியிருக்கா? சுகன்யா நல்லா இருக்காளா? சுகன்யா என்னைப்பத்தி ஏதாவது கேட்டாளா? சுகன்யாவோட கோபம் அப்படியேதான் இருக்கா... என் மேல அவளுக்கு இருக்கற கோவம் இன்னும் கொஞ்சம் கூட கொறையலயான்னு, நூறு தரம் உன்னைப்பத்தி அவகிட்ட செல்வா கேக்கிறானே... அதுக்கெல்லாம் என்னம்மா அர்த்தம்?"

"அங்கிள்..."

"சுகன்யா... ப்ளீஸ் செல்வாவுக்கு திரும்பவும் உன்கிட்ட அன்பு செலுத்த, நீ ஒரே ஒரு வாய்ப்பு குடுக்கணும்ம்மா..." நடராஜனின் குரல் கெஞ்சலாக வந்தது.

"அங்கிள் நீங்க என்னைத் தப்பா நினைக்கக்கூடாது..."

"சொல்லும்மா..."

"ஐ நீட் சம் டயம்... இப்பத்தான் என் மனசு கொஞ்சம் கொஞ்சமா நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பிக்கிட்டு இருக்கு."

"சுகன்யா... தேங்க் யூ ம்ம்மா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... நீ இவ்வளவு சொன்னதே எனக்குப் போதும்..." நடராஜன் குரலில் இப்போது மிகுந்த உற்சாகம் வந்திருந்தது. 

"அங்கிள்... என்னவோ பேச நினைச்சு என்னவோ பேசிட்டேன்னு சொன்னீங்க... ஏதோ முக்கியமான விஷய்ம்ன்னு சொன்னீங்க?" சுகன்யா மெல்ல பேச்சை செல்வாவிடமிருந்து திசை திருப்ப விரும்பினாள்.

"சுகன்யா... நீ உன் மனசுல என்ன இருக்குங்கறதை என் கிட்டவும் சரியா சொல்ல மாட்டேங்கறே? அதனாலத்தான் நான் சொல்ல வந்ததை எப்படி சொல்றதுன்னு தயங்கறேன்." நடராஜன் சிறிய பீடிகையுடன் பேசத்தொடங்கினார்.

"அங்கிள்... நீங்க என் விஷயத்தை மறந்துடுங்க. அது முடிஞ்சு போன விஷயம். இப்ப நீங்க பேச நினைக்கறததை சொல்லுங்க."

"எதும்ம்மா முடிஞ்சு போன விஷயம்?" நடராஜனின் குரல் சூடாக வருவதாக சுகன்யாவுக்கு பட்டது.

"எங்க நிச்சயார்த்தம்..."

"யார் சொன்னது?" இப்போது அவர் குரலில் சிறிதளவு சீற்றம் இருந்தது.

"உங்க மகன்தான் சொன்னாரு?" நடராஜனின் குரலில் இருந்த சீற்றத்தை உணர்ந்த சுகன்யாவின் குரலில் இலேசாக நடுக்கம் எழுந்தது.

"அவன் சொல்லிட்டா போதுமா?" நடராஜனின் குரல் இலேசாக உயர்ந்தது.

"அங்கிள்...?"

"நீயும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச்சு இருக்கலாம். உங்களுக்குள்ள சண்டை போட்டுகிட்டு இருக்கலாம். ஆனா உன்னை எங்க வீட்டு மருமகளா நிச்சயம் பண்ணது யாரும்மா? நானும் உன் அத்தை மல்லிகாவும் நிச்சயம் பண்ண கல்யாணம் இது. இஸ் தட் ரைட்?"

"யெஸ்..."

"இந்தக் கல்யாணத்தை நிறுத்த உங்களுக்கு உரிமையில்லே... இந்த திருமணத்தை இப்படி பாதியில நிறுத்த எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லே..."

"மேரேஜை நீங்க உறுதி செய்திருக்கலாம்.. ஆனா வாழப்போறது நாங்கத்தானே அங்கிள்?" சுகன்யாவின் குரல் சுத்தமாக வலுவேயில்லாமல் தேய்ந்து போயிருந்தது.

"நீ சொல்றது உண்மைதான்.. நான் இல்லேங்கலே... அதே சமயத்துலே எங்களுக்கும் உங்க வாழ்க்கையில பங்கு இருக்கு.. நீங்க எடுக்கற முடிவுகள் உங்களை மட்டுமில்லே... உங்களை சுத்தி இருக்கற நிறைய நபர்களை பாதிக்குதும்மா... எங்க ரோலை நாங்க எப்படி விட்டுக்குடுத்துட முடியும்?"

"அங்கிள்..." சுகன்யா முனகினாள்.

"அனாவசியமா அடுத்தவங்க வாழ்க்கையில தலையிடறது தப்புன்னு எனக்கும் தெரியும்... உங்க பிரச்சனையை உங்களாலே ஹேண்டில் பண்ண முடியலேங்கறப்ப, அட்லீஸ்ட், நீயாவது அதை என் கிட்ட சொல்லியிருக்கலாம்லே?"

"எங்க நடுவுல இருந்த பிரச்சனையை நான் உங்ககிட்ட சொல்லி இருக்கலாம்... அப்படி சொல்லாதது என்னோட தப்புன்னு நான் ஒத்துக்கறேன்... அங்கிள் இதுக்காக நீங்க என்னை மன்னிக்கணும்..."

"தில்லியிலே என்னோட ட்ரெய்னிங் முடிஞ்சு நான் ஊருக்கு திரும்பி வந்ததுக்கு பின்னாடி, எங்க கல்யாணத்தை எப்ப வேணா நீங்க பிக்ஸ் பண்ணுங்க மாமான்னு மீனாவோட பொறந்த நாளைன்னைக்கு என் கிட்ட சொன்னியே? இது உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ஞாபகம் இருக்கு அங்கிள்.."

"உனக்கும் செல்வாவுக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சனை வந்திருக்கலாம்... அறிவு கெட்டத்தனமா அவன் எதையாவது உங்கிட்ட உளறியிருக்கலாம். இந்த விஷயத்துல இன்னைக்கு வரைக்கும் உன்னை நான் ஏதாவது தப்பா சொன்னேனா?"

"இல்லே அங்கிள்..."

"அப்படியிருக்கும் போது நீ ஏன் என்னை திரும்ப திரும்ப அங்கிள்ன்னு சொல்லி உன் கிட்டேயிருந்து என்னை அன்னியமாக்கறே?" தன் மனதில் இருந்த உறுத்தலை அவர் கடைசியில் அவளிடம் கொட்டிவிட்டார்.

"அயாம் சாரி அங்கிள்... சாரி... சாரி... மாமா... நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு நான் சுத்தமா நினைக்கவேயில்லை.... மனசுல எந்த உள்நோக்கமும் இல்லாமத்தான் நான் உங்களை அங்கிள்ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். அது தப்புன்னு நீங்க ஃபீல் பண்ணா... ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க மாமா.."

"நீயே இன்னும், என் வீட்டுக்கு வரலே. ஏன்... நீயே சொல்லிட்டு வந்த மாதிரி, ட்ரெய்னிங் முடிஞ்சு சென்னைக்கே இன்னும் திரும்பி வரலே. எப்ப என் வீட்டுக்கு வருவேன்னு கேட்டா எனக்கு டயம் வேணுங்கறே? இந்த நிலையிலே, இன்னொரு கல்யாணத்தைப்பத்தி எப்படிம்மா நான் உங்கிட்ட பேசறது?"

"எனக்கு புரியலே மாமா.. என்னச் சொல்றீங்க நீங்க? இன்னொரு கல்யாணமா?" சுகன்யா ஒரு வினாடி திடுக்கிட்டுப்போனாள்.

"மீனாவை தங்களோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகணும்ன்னு சீனுவோட அத்தையும், அவன் அம்மாவும், ரொம்பவே அவசரப்படறாங்கம்மா..."

"மாமா இது ரொம்பவும் சந்தோஷமான விஷயமாச்சே...!! இதைச் சொல்றதுக்கு எதுக்காக நீங்க இப்படி தயங்கறீங்க?" சுகன்யா நிதானமாக மூச்சு விட ஆரம்பித்தாள்.

"நீங்க ரெண்டு பேரும், ஒருத்தரோட ஒருத்தர், முகத்தை முறிச்சிக்கிட்டு நிக்கும் போது, நான் எந்த மூஞ்சை வெச்சுக்கிட்டு என் பொண்ணு கல்யாணப் பத்திரிக்கையோட உங்க வீட்டுக்குள்ள நுழையறது?"



"மாமா... மீனா கல்யாணத்துகான வேலைகளை நீங்க தாராளமா பாக்க ஆரம்பிக்கலாம்...!! இதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லே.."

"ம்ம்ம்ம்.. அப்புறம்.."

"மாமா.. மீனா கல்யாணத்துக்காக நான் என்ன செய்யணும்? அதை மட்டும் சொல்லுங்க! இப்ப என் ஃப்ரெண்ட் மேரேஜ் நடக்கறதுல, எங்க வீட்டுல, யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது..." சுகன்யா உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தாள்.

"என் ஃப்ரெண்ட் குமாரசாமியைப்பத்தி எனக்கும் நல்லாத் தெரியும்... அவர் மீனாவோட கல்யாணத்துல எந்த பிரச்சனையும் பண்ணமாட்டார்... ஆனா.."

"ஆனா...? ஆனா... என்ன மாமா?"

"நாங்க முடிவு பண்ணபடி, உன் கல்யாணம்தான் முதல்லே நடக்கணும்... எங்க வீட்டு மருமகளா நீ முன்னே நின்னு, உன் ஃப்ரெண்டு கல்யாணத்தை நீ நடத்தி வைக்கணும்ன்னுதான் நானும், உன் அத்தையும் ஆசைப்படறோம். மீனாவோட ஆசையும் இதுதாம்மா... மொதல்லே இதுக்கு நீ ஒத்துக்கணும்..."

"மாமா... என் நிலைமையையும் கொஞ்சம் நீங்க யோசனைப் பண்ணி பாருங்க. 'உன்னை நான் வெறுக்கறேன்னு நான் போட்ட மோதிரத்தை என் மூஞ்சியிலே வீசி எறிஞ்சுட்டு போன ஒருத்தரோடு,' நான் எப்படி திரும்பவும் சகஜமா பழக முடியும்? எப்படி என் மனசுல எந்த வருத்தமும் இல்லாதது போல அவருகிட்ட சிரிச்சுப் பேச முடியும்? எங்களுக்குள்ளே எதுவே நடக்காத மாதிரி எப்படி அவரை திருமணம் பண்ணிக்க முடியும்?"

"தப்புதாம்மா... செல்வா பண்ணது தப்புதான்... நான்தான் சொன்னனே அவன் தன் தப்பை உணர்ந்துட்டான்னு! செல்வா உன்கிட்ட மன்னிப்பு கேக்க தயாரா இருக்கான்."

"நீ சென்னைக்கு திரும்பி வரலே... உனக்கு போஸ்டிங் தில்லியிலே ஆயிடிச்சுன்னு தெரிஞ்சதும், ஒரு தரமில்லே.. இரண்டு தரமில்லே... தொடர்ந்து உனக்கு நாலு நாள் அவன் போன் பண்ணியிருக்கான்.. நீதான் அவன்கிட்ட பேசாம, ஒவ்வொரு தரமும் லைனை கட் பண்ணிட்டியாமே? இது உண்மைதானா?"

"மாமா...ப்ளீஸ்..." சுகன்யாவின் குரல் மீண்டும் தழுதழுக்க ஆரம்பித்தது.

"சுகன்யா.. அவன் என்னதான் சொல்ல விரும்பறான்னு ஓரே ஒரு தரம் நீ கேட்டு இருக்கலாம்லே?"

"ப்ச்ச்... கேட்...கேட்டு இருக்கலாம்.. ஆம்பிளைக்கு கோவம் வரலாம்... ஆனா எனக்கு மட்டும் கோவம் வரக்கூடாதா மாமா?" சுகன்யா தீடிரென முறுக்கினாள்.

"வரலாம்ம்மா... உன் கோவம் நியாயம்ன்னு நீ கேக்காமலேயே நாலு தரம் நான் சொல்லிட்டேனே?" சுகன்யாவின் குழந்தைத்தனமான முறுக்கலை கண்டு நடராஜன் மெல்ல சிரித்தார்.

"எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க... சிரிக்காதீங்க.. நீங்க சிரிச்ச எனக்கு கெட்ட கோவம் வரும்..." சுகன்யா தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"சுகன்யா... சும்மா நீ பிடிவாதம் பிடிக்காதேம்மா. நீ ரொம்ப பிடிவாதக்காரின்னு உன் அம்மா... உன் அத்தை மல்லிகா கிட்ட சொல்லியிருக்காங்களாம்... நான் சொல்றதை கொஞ்சம் கேளு... உன் பிடிவாதத்தை எங்களுக்காக கொஞ்சம் விட்டுக்குடு. எங்க வீட்டுக்கு எப்ப நீ வரப்போறேன்னு நாங்க தவிச்சுக்கிட்டு இருக்கோம்ம்மா... எங்க தவிப்பையும் நீ புரிஞ்சுக்கணும்."

"...."

"செல்வா மேல உனக்கு கோவம் இல்லேன்னு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே சொன்னே? நடந்ததையெல்லாம் நான் மறந்துட்டேன்னு, சொன்னது நீதானே?"

"ஆமாம் மாமா அப்படி நான் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனா இப்ப சொல்றேன்... நான் அவர் மேல ரொம்பக் கோவமா இருக்கேன்..." சுகன்யா தாயிடம் பொம்மை கடையில் முரண்டு பிடிக்கும் சிறு குழந்தையாக தன் மூக்கை உறிஞ்சினாள்.

"சுகன்யா... அழாதேம்மா.. செல்வா பண்ணத்தப்புக்கு அவனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு நீ நினைக்கிறியோ அதை நீ அவனை நேரா பாக்கும் போது குடு. இது உனக்கும் அவனுக்கும் நடுவுல நீ தீத்துக்க வேண்டிய விஷயம்."

"சுகன்யா... தேவையில்லாம எங்களை நீ ஏன் தண்டிக்கறே? எங்களை மட்டும் நீ தண்டிக்கலே... கூடவே உன் அப்பாவை, உன் அம்மாவை, உன் மேல தன் உசுரையே வெச்சிருக்கற உன் ரகு மாமாவை, உன் கல்யாணத்தைப் பாக்கணும்ன்னு துடிச்சிக்கிட்டு இருக்கற உன் தாத்தா, பாட்டி, இவங்களையும் ஏம்மா தண்டிக்கறே?"

"மாமா... யாரையும் தண்டிக்கணுங்கறது என் விருப்பமில்லே.... என்னை நானே தண்டிச்சுக்கறேன்... ஏன்டா ஒருத்தனை காதலிச்சோம்ன்னு எனக்கு இருக்கு?"

"சரி... செல்வா மட்டுமா உன்னை நேசிச்சான்? எங்க குடும்பத்துல இருக்கற எல்லோரும் உன்னை நேசிக்கிறோம். அவன் உன்னை பைத்தியக்காரத்தனமா, வெறுக்கறேன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நாங்கள்ல்லாம் உன்னை வெறுக்கலையே?"

"இல்லே மாமா..."

"சுகன்யா நீ புத்திசாலிப் பொண்ணு. வாழ்க்கையில எப்பவும் ஒரே நேரத்தில ரெண்டு விஷயங்கள் நடக்கும்..."

"நிஜமாவே இப்ப நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை அங்கிள்."

"நாம நடக்கும்போது வலது காலை எடுத்து ஒரு அடி முன்னே வெச்சா, அந்தக் கால் பதியபோற இடம் மேடா, இல்லை பள்ளமான்னு, கவனமா பாத்து வைக்கிறோம். அந்த எடத்தை எப்படியிருந்தாலும் நாம நம்ம மனசார வரவேற்று ஏத்துக்கறோம்."

"ம்ம்ம்.."

"ஏன்னா.. வலது காலை கீழே வெக்காம இடது காலை தூக்க முடியாது..."

"யெஸ்..."

"அதே சமயத்துல எந்த எடத்துலேருந்து நம்ம காலை எடுத்து வெச்சோமோ, அந்த இடத்தைப்பத்தி நாம அதிகமா நெனைக்காம சட்டுன்னு மறந்துடறோம். இதுதான் வாழ்க்கை... இப்படித்தான் நீ உங்களுக்குள்ள நடந்த அந்த கசப்பான நிகழ்ச்சியை மறந்துடணும்ன்னு நான் சொல்றேன்."

"இதைத்தான் நானும் சொல்றேன் மாமா..."

"சொல்லு சுகன்யா.. நீ என்ன சொல்ல விரும்பறே?"

"செல்வாவோட எனக்கிருந்த உறவு... நான் கடந்து வந்துட்ட இடம்... அந்த இடத்தை நானும் மறக்க விரும்பறேன்... நான் எடுத்து வெக்கப் போற அடுத்த அடி என்னன்னு எனக்கு இன்னும் தெளிவாப் புரியலே... நான் எடுத்த வைக்கப்போற அந்த அடி தப்பாயிடக்கூடாதேன்னு நான் எனக்குள்ள ரொம்ப பயப்படறேன்.."

"ம்ம்ம்ம்... ஐ அண்டர்ஸ்டேண்ட்..." சுகன்யா என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் நடராஜன் தன் மனதுக்குள் குழம்ப ஆரம்பித்தார்.

"அதனாலத்தான் எனக்கு இப்ப கொஞ்சம் டயம் வேணும்ன்னு உங்கக்கிட்ட கேக்கிறேன் மாமா..." சுகன்யா மெல்லிய குரலில் மரியாதையுடன் நடராஜனுடன் பேசிய போதிலும், அவள் குரலில் இருந்த விரக்தியையும், சலிப்பையும் நடராஜன் உணர்ந்து கொண்டார்.



"உன் இஷ்டம்மா... இதுக்கு மேல நீ இதைத்தான் செய்யணும்ன்னு, உன்னை நான் வற்புறுத்தமாட்டேன். ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும் நீ மட்டும்தான் என் வீட்டுக்குள்ள என் மருமகளா நுழைய முடியும்." நடராஜன் நீண்ட பெருமூச்செறிந்தார்.

"மாமா.. என்னை நீங்க தப்பா நினைக்கக்கூடாது..."

"இல்லேம்மா... நிச்சயமா இல்லே... நீங்க ரெண்டு பேரும் பழையபடி ஒண்ணா சேர்ந்து என் வீட்டுத் தோட்டத்துல நின்னுகிட்டு சிரிக்கறதைப் பாக்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. உனக்கு தேவையான அளவுக்கு டயம் எடுத்துக்கோ... ஆனா என் ஆசையை மட்டும் நீ நிராசையா ஆக்கிடாதே..!"

"ம்ம்ம்..."

"ரொம்ப நேரமாயிடுச்சு.. குட் நைட்... சுகன்யா..." சட்டென தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் நடராஜன்.

"குட் நைட் மாமா..." சுகன்யாவும் மெல்ல முணுமுணுத்தாள். அப்போதைக்கு அவள் தன்னை சிறிது ஆசுவாசமாக உணர ஆரம்பித்தாள். 


சுகன்யா... 102

"குட்மார்னிங் சுகன்யா... சம்பத் ஹியர்.."

"அத்தான் வெரி வெரி குட்மார்னிங் ... நீங்க நிம்மதியா தூங்கினீங்களா? இல்லே கனவு கண்டுகிட்டு கட்டில்லே உருண்டுகிட்டு இருந்தீங்களா?"

சுகன்யாவும், அனுவும் பார்க்கில் காலாற நடந்து முடித்தபின் புல்தரையில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்தார்கள். 'அனு... உன் ஆள்தான்டீ' சுகன்யா ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு அனுவை நோக்கி கண்ணடித்தாள்.

"காலங்காத்தால கிண்டலா? நல்லாத் தூங்கினேன். அப்புறம் ரொம்ப தேங்க்ஸ் சுகா... அயாம் ரியலி ஹேப்பி... எழுந்ததுமே மனசுக்குள்ள ஒரு தெளிவு வந்த மாதிரி இருக்கு..."

"குட்.. அது இருக்கட்டும்.. இப்ப எனக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?இதையெல்லாம் இனிமே அனுகிட்ட வெச்சிக்கோங்க... நேத்து நீங்க அவ நம்பரை வாங்கிக்கலையா?" சுகன்யா விஷமமாகச் சிரித்தாள்."



"நீ பர்மிஷன் குடுத்தா நேர்லேயே வந்து அவ நம்பரை வாங்கிக்கலாம்ன்னு நினைக்கிறேன். அப்படியே அவகிட்டவும் நன்றி சொல்லலாம்ன்னு இருக்கேன். " சம்பத்தும் குறும்பாக சிரித்தான்.

"உங்காளை பாக்கறதுக்கு என் பர்மிஷன் எதுக்கு?" சம்பத் தன்னைப்பார்க்க வரப்போகிறான் என தெரிந்ததும் அனுவின் முகம் மலர ஆரம்பித்தது.

"நீ தானே அவளுக்கு லாயர்... இன்னைக்கும் நான் ஃப்ரீதான்... உனக்குத் தெரியாம எப்படீ நான் அவளை மீட் பண்றது?" சம்பத் இழுத்தான்.

"புரியுது அத்தான்... புரியுது... நீங்க தாராளமா ஹாஸ்டலுக்கு வந்து அவளை எங்கே வேணா அழைச்சிட்டுப்போங்க... ஆனா அவளை முழுசா, பத்திரமா, திரும்ப இங்கேயே கொண்டுவந்து விட்டுடுங்க. சந்தோஷம்தானே?" சுகன்யா அனுவின் இடுப்பைக் கிள்ளினாள்.

"சும்மா இருடீ..." அனு சிணுங்கினாள்.

"அனு பக்கத்துல இருக்காளா?"

"இருக்கா... பார்க்ல இருக்கோம். அல்ரெடி ஸ்பீக்கர் ஆன்... நாம பேசறதை அவளும் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கா... அவகிட்ட செல்லை குடுக்கறேன்; பேசறீங்களா?"

"அதான் நேர்ல வர்றேனே..."

"குட்மார்னிங்ன்னு விஷ்தான் பண்ணுங்களேன். கொறைஞ்சா போயிடுவீங்க?"

"ஹாய் அனு... குட்மார்னிங்..."

"குட்மார்னிங் சம்பத்... ஹவ் ஆர் யூ? இன்னைக்கு வர்ர்றீங்களா?" தன் உதடுகளில் பொங்கும் சிரிப்புடன் அனு குழைந்தாள்.

"ம்ம்ம்.."

"எத்தனை மணிக்கு?"

"அரவுண்ட் டென்.. இஸ் தட் ஓ.கே..?"

"எப்ப வேணா வாங்க... வெய்ட் பண்ணிகிட்டு இருப்பேன்..." அனு செல்லை சுகன்யாவிடம் கொடுத்தாள்.

"அத்தான்... ஒரு விஷயம்..."

"சொல்லு சுகா..."

"ட்ரெய்னிங் முடிஞ்சதும், சென்னையிலதான் அனுவுக்கு போஸ்டிங்ன்னு முடிவாயிடிச்சி... அதனால நீங்களும் சீக்கிரமா சென்னைக்கு வந்துடுங்களேன்..."

"ம்ம்ம்... உடனடியா அது எப்படி முடியும்?"

"உங்களோட வொர்க் எக்ஸ்ஃபீரியன்சை என் அப்பாவுக்கு அனுப்புங்கன்னு சொன்னேன்லா..."

"சுகா... இதைப்பத்தி அம்மாவும் என்கிட்ட பேசினாங்க. பட் அயாம் நாட் ஏபிள் டு டேக் எ டிஷிஷன்..."

"யூ ஆர் க்வாலிஃபைட் இனஃப்... தே நீட் எக்ஸ்பீரியன்ஸ்ட் பெர்சோனல்.. அப்புறம் எதுக்காக தயங்கறீங்க?அத்தையும் இதைப்பத்தி என் அப்பா கிட்ட பேசினாங்களாம்... அவர்கிட்ட நீங்களும் ஒரு தரம் பேசுங்களேன்..."

"ஓ.கே.. பெங்களூரு போனதும் ஐ வில் சென்ட் மை ரெஸ்யுமேஅண்ட் டாக் டு ஹிம்.."

"மறந்துடாதீங்க.. அப்புறம் கரெக்டா பத்து மணிக்கு வந்துடுங்க... அனு வில் பீ வெய்டிங் பார் யூ..." சுகன்யா மனதுக்குள் திருப்தியுடன் கலகலவென சிரித்துக்கொண்டே செல்லை அணைத்தாள். 

அனு கட்டியிருந்த வெள்ளை நிற காட்டன் புடவையில், கண்ணுக்கு இதமான இளம் பச்சை நிற பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன. இறுக்கமான கருப்பு நிற ரவிக்கையில் அவளுடைய முன்னழகுகள் தங்களை எடுப்பாக காட்டிக்கொண்டிருந்தன. அவள் கட்டியிருந்த புடவை அவளுடைய குழிந்த தொப்புளின் அழகை சிறிதளவு காட்டியும், காட்டாமலும், அவள் நடக்கும்போது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

அனு, பால்கனிக்கு சென்று தெருவை நோட்டமிட்டாள். திரும்பி வந்து அறையில் சேரில் உட்கார்ந்தாள்.நிமிடத்துக்கு இரண்டு முறை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். விருட்டென மீண்டும் பால்கனிக்கு போனாள். இரண்டு நிமிடம் அங்கே நின்றாள். திரும்பவும் அறைக்குள் வந்தாள். செல்லை எடுத்து சமயத்தைப் பார்த்தாள். அனு படும் அவஸ்தையைப் பார்த்த சுகன்யா மெல்ல சிரித்தாள்.

"எதுக்குடி இப்ப சிரிக்கறே நீ?" அனு சிணுங்கினாள்.

"அனூ குட்டீ.. உன்னைப்பாத்து நான் ஏன்டீ சிரிக்கப்போறேன்?"

"பின்னே?"

"சட்டுன்னு மணி பத்தாகி தொலைய மாட்டேங்குதேன்னு என் வாட்சைப்பாத்து சிரிச்சேன்.." சுகன்யா கட்டிலிலிருந்து எழுந்து அனுவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.

"சுகா... உன்னை நான் மீட் பண்ணியிருக்கலேன்னா,என் சம்பத் எனக்கு கிடைச்சே இருக்கமாட்டார்.உன்னை நான் என் வாழ்க்கை பூரா மறக்கமாட்டேன்டீ" அனுவின் குரல் தழைந்தது.

"ஹேய்.. ரொம்ப எமோஷனல் ஆகாதே... ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலேயும் என்ன நடக்கணுமே அது மட்டும்தான் நடக்கும். நடக்க வேண்டியது கட்டாயம் நடந்துதான் தீரும்..இட் ஈஸ் எ மேட்டர் ஆஃப் டயம்."

"சுகா.. உங்க அத்தை சட்டுன்னு கோபப்படுவாங்கன்னு சொன்னியே, என்னை வேணாம்ன்னு சொல்லிட மாட்டாங்களே?"

"சேச்சே...அதெல்லம் இல்லடி.. நான் அவங்களோட நார்மல் குணத்தை சொன்னேண்டீ.. புருஷனா இருந்தாலும் சரி; புள்ளையா இருந்தாலும் சரி; சட்டுன்னு எப்படி அவங்க கோவப்படறாங்களோ அதே மாதிரி அடுத்த அஞ்சு நிமிஷத்துல பாசத்தை மழையா அவங்க மேல பொழிவாங்கடீ... ஆனா எங்க மாமா... அதான் உன் ஆளோட அப்பா இருக்காரே; அவர் ஒரு பர்ஃபெக்ட்... பக்கா ஜெண்டில்மேன்.. உன்னை தன் தலை மேல தூக்கி வெச்சுக்குவார். மாமாகிட்ட பேசறியா... நீ பேசினா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்?"

"வேணாம்டீ.. எனக்கு பயமா இருக்குடீ..கொஞ்சம் பொறுக்கலாம்டீ... மொதல்லே சம்பத் தன்னோட வீட்டுல என்னைப் பத்தி பேசிடட்டும். அப்புறமா நான் அவங்ககிட்ட பேசறேன்."

"எங்க அத்தையே அவங்க காலேஜ் டேஸ்ல, லவ் பண்ணவங்கதான்டீ.. காதலைப்பத்தி, காதல் வசப்பட்ட ஒரு பெண்ணோட மனசைப்பத்தி, அவங்களுக்கு நல்லாத் தெரியும்டீ."

"ஐ சீ..."

"அன்பார்ட்சுனேட்லி அவங்க லவ் சக்ஸஸ்ஃபுல் ஆகலை. நீ எதுக்கும் கவலைப்படாதேடீ...கல்யாண விஷயத்துல அத்தானுக்கு அவங்க வீட்டுல முழு சுதந்திரம் குடுத்திருக்காங்க. சம்பத் எந்த பொண்ணை ஓ.கேன்னு சொன்னாலும் அவங்களுக்கு ஓ.கே தான். "

"நான் உன்னைத்தாண்டீநம்பியிருக்கேன்.."

"டோண்ட் வொரி.. உனக்கென்னடீ கொறைச்சல்? நீ ஏன் இப்படி பயந்து சாகறே? உன்னை நானே அழைச்சிட்டுப்போய் எங்க அத்தைகிட்ட அறிமுகப்படுத்தறேன். எங்கத்தான் ஒரே பையன்.ஏகப்பட்ட சொத்து இருக்கு அவருக்கு.நல்லாக் கேட்டுக்க. எங்க அத்தை வீட்டுல நீ ராணி மாதிரி இருக்கப்போறே."

"ப்ச்ச்... எனக்கு சொத்தெல்லாம் வேணாம்டி.. இவர் கிடைச்சா, அதுவே போதும்டீ..."

அனுவின் செல் கிணுகிணுத்தது. சம்பத்துதான் அவளை அழைத்திருந்தான். ரிஸப்ஷனில் இருப்பதாக சொன்னான்.

"போயிட்டு வரேன்டீ..."

"அனு.. ஆல் த பெஸ்ட்... கொஞ்சம் பொறுமையா இரு..."

"என்னடி சொல்றே?"

"ம்ம்ம்.. நீ ஒரு பாப்பா... நேத்து காலையிலத்தான் நீ வயசுக்கு வந்திருக்கே; நான் சொல்றதோட அர்த்தம் உனக்கு புரியலே? கல்யாணம் ஆகற வரைக்கும் முழுசா டேமேஜ் ஆகாம இருடீன்னு சொல்றேன்.." சுகன்யா ஹோவென சிரித்தாள்.

"போடீ.. இவ ஒருத்தி.. நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்..." அனு அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, தன் முகத்தில் வெட்கத்துடன் ரிசப்ஷனை நோக்கி வேகமாக ஓடினாள்.

* * * * *

சுகன்யா... நானும்தான் ஒருத்தனை மனசாரக் காதலிச்சேன். என் காதல் தோத்துத்தான் போச்சு. அதுக்காக நான் செத்தா போயிட்டேன்? இன்னொருத்தன் கூட சந்தோஷமா வாழ்ந்து இவனை பெத்துக்கலையா? என் புள்ளை சம்பத் வாழ்க்கையோட நிஜமான அர்த்தத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கறான்.

என் புள்ளை, காலம் பூரா உன்னையே நெனைச்சுக்கிட்டு வாழ்ந்துடுவேன்னு அடாவடி பண்றான்டீ. உன் பேச்சை அவன் கேப்பான்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கும்மா. எனக்காக ஒரு தரம் நீ அவன் கிட்ட பேசறயா?

ராணி அத்தே... உங்க பிள்ளை நிஜமாவே லக்கி. தங்கமான மனசுள்ள பெண் ஒருத்தி உங்க வீட்டுக்கு மருமகளா வரப்போறா. நான் அதிகமா எந்த முயற்சியும் எடுக்காமலேயே உங்க பிரச்சனை தன்னால முடிஞ்சுப்போச்சு. கடந்தவாரம், தன்னிடம் செல்லில் அழுது புலம்பிய தன் அத்தை ராணியின் முகம் அவள் மனதில் சட்டென வந்தது. சுகன்யா எழுந்து பால்கனிக்கு வந்தாள்.

ஹாஸ்டல் கேட்டுக்கு வெளியில், கேட்டுக்கு எதிரில் உயரமாக வளர்ந்திருந்த மாமரத்தின் நிழலில் நின்றிருந்த சம்பத்தை அனு நெருங்கியதும், அவன் அவளை விருட்டென இழுத்து தன் மார்போடு அணைத்து அவள் கன்னத்தில் உரிமையுடன் முத்தமிட்டான்.

"அனு.. ரியலி யூ ஆர் வெரி வெரி ப்யூட்டிஃபுல் இன் திஸ் சாரி... தேவதை மாதிரி இருக்கே..." சம்பத் தன் விழிகளை இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"ப்ளீஸ்.. சம்பத்... விடுங்க என்னை... சுகன்யா பால்கனியில நின்னுகிட்டு இருக்கா..." சம்பத் சட்டென அவளை தன் பிடியிலிருந்து விடுவித்தான். அனு, சுகன்யா நிற்கும் திசையை நோக்கி தன் கையை உற்சாகமாக ஆட்டினாள். சம்பத்தை நோக்கி தன் முகம் மலர சிரித்தாள்.

"அனு எதுக்கு சிரிக்கறே?" சம்பத்தும் சுகன்யா நின்ற திசையை நோக்கி தன் கையை ஆட்டினான்.

"டேமேஜ் ஆகாம, முழுசா வந்து சேருடீன்னு இப்பத்தான் சுகன்யா சொல்லி அனுப்பினா. ஆனா நீங்க என்னடான்னா, அவ எதிர்லேயே என் கன்னத்தை கடிக்கறீங்க?" கன்னத்தை துடைத்துக்கொண்டு, அனு விழுந்து விழுந்து சிரித்தாள்.

சுவாமி மலை முருகா.. என் அனுவும், என் அத்தானும் என்னைக்கும் இப்படியே சந்தோஷமா சிரிச்சுக்கிட்டெ இருக்கணும். சுகன்யா அவர்களை நோக்கி உற்சாகமாக தன் கரத்தை அசைத்துக்கொண்டிருந்தாள்.

சம்பத் அனுவின் கழுத்தை சுற்றி தன் கரத்தை ஆசையுடன் போட்டுக்கொண்டான். அவள் அவன் இடுப்பில் தன் கையை தவழவிட்டுக்கொண்டாள். காலியாக இருந்த நடைபாதையில் அவர்கள் இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தார்கள். தலையில் காயும் வெய்யில் அவர்களுக்கு சுத்தமாக உறைக்கவில்லை. 

பால்கனி தரையில், குளிர்ந்த நீரை ஒன்றுக்கு இரண்டு முறையாக தெளித்து, தரை ஜில்லென்று ஆனவுடன், ஒரு பெட்ஷீட்டை விரித்து நிம்மதியாகப் படுத்திருந்தாள் சுகன்யா. அவள் உள்ளத்தில் அன்று அசாதாரணமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

நிசப்தமான அந்த இரவில், தன் தலைக்கு மேல் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்த சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் அவளை குளிப்பாட்டிக்கொண்டிருக்க, நிலவின் குளுமையை, அவள் தன் மெய்மறந்து, அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

சந்திரனுக்கு இருபத்தேழு பெண்டாட்டியாமே? ஒவ்வொரு நட்சத்திரமும் அவனுக்கு ஒரு மனைவியாமே? தலைக்கு மேல் ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவில், பூர்ணசந்திரன் மெதுவாக உலா வந்து கொண்டிருந்தான். இன்னைக்கு ஒரு ஆணும், பெண்ணும் ஒருத்தரோடு ஒருத்தர் மனசொத்து வாழறதே கஷ்டமாயிருக்கறப்ப, இருபத்தேழு பெண்களை, அஸ்வினியிலேருந்து ரேவதி வரைக்கும், கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்திரன், எப்படி ஓரே நேரத்துல அவங்களை சமாளிச்சு இருப்பான்?

இளம் வயதில் சுந்தரி சொல்லியிருந்த புராணக் கதையொன்று சுகன்யாவின் நினைவுக்கு வர உதடுகளில் இளம் புன்முறுவல் ஒன்று எழுந்தது. இப்ப என் அனு என்ன பண்ணிக்கிட்டு இருப்பா? ம்ம்ம்.. என்ன பண்ணுவா? அத்தான் சம்பத்தோட செல்லுல, குசுகுசுன்னு எதையாவது பேசி சிரிச்சுக்கிட்டு இருப்பா... காதலர்களுக்கு பேசறதை தவிர வேற வேலை என்ன இருக்கு?

தில்லியில் ட்ரெய்னிங் முடிந்ததும், அனு சென்னை ஆஃபிசில் சேருவதற்கான போஸ்டிங் ஆர்டருடன், தமிழ்நாட்டுக்கு கிளம்பிப்போய் இரண்டு வாரங்களாகி விட்டிருந்தபோதிலும் இன்னும் ட்யூட்டியில் அவள் சேர்ந்திருக்கவில்லை. தனது சொந்த ஊரான பாண்டிச்சேரியில், தனக்கு கிடைத்த ஜாய்னிங் டயமை, பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துக்கொண்டிருந்தாள்.

சுகன்யா... நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டீ...!! ஊருக்கு வந்த ரெண்டு நாள்லே, எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறேங்கற சாக்குல, ஒண்ணுமே சொல்லாம கொள்ளாம, என் சம்பத், தன் அப்பா, அம்மாவோட, எங்க வீட்டுக்கு தீடீர்ன்னு காலையிலேயே வந்து நிக்கறாரு. அன்னைக்கு நான் எழுந்து குளிக்கக்கூட இல்லேடீ.

எங்கம்மா கதவைத் தொறந்தப்ப, நான் வீட்டு ஹால்லே, சோஃபாவுல கால் மேல கால் போட்டுக்கிட்டு கேஷுவலா நைட்டிலத்தான் படுத்திருந்தேன். அவங்க எல்லோரையும் ஒண்ணாப் பாத்ததும் எனக்கு கையும் ஓடலே; காலும் ஓடலே; அப்படியே திகைச்சு போய் நின்னுட்டேன்டீ.



நான் சாதரண நேரத்துல எப்படி இருப்பேன்னு அவங்க தெரிஞ்சுக்க விரும்பினாங்களாம். உங்கத்தைக்கும், மாமாவுக்கும் என்னை ரொம்ப பிடிச்சுப்போச்சுடீ. அவங்க எங்கக் மேரேஜுக்கு அவங்க விருப்பத்தை, சம்மதத்தை, அப்பவே அங்கேயே என் எதிர்லேயே சொல்லிட்டாங்க.

சுகன்யா... உங்க அத்தையும் மாமாவும் ரொம்ப பெருந்தன்மையானவங்கன்னு, நீ சொன்னப்ப நான் நம்பவே இல்லே; நேர்ல அவங்களை பாத்து பேசினதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, உங்கத்தைக்கு ரொம்பவே தாராள மனசுடி. அவங்க என்னை பிடிச்சிருக்குன்னு தன் வாயால மட்டும் சொல்லலேடி; சட்டுன்னு தான் போட்டுக்கிட்டிருந்த தங்கச்செயினை கழட்டி என் கழுத்துலே போட்டு அழகு பாத்தாங்கன்னா, பாத்துக்கோயேன்.

மாமாவும் எங்கிட்ட ரொம்ப அன்பா பேசினாருடீ. இன்னும் ஒரே மாசத்துல எங்க கல்யாணத்தை முடிச்சிடணும்ன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. சுகா... இதெல்லாத்துக்கும் முக்கியமான காரணம் நீதான்டீ. அனு தன் மனதில் பொங்கும் மகிழ்ச்சியை அவளிடம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை சொல்லி சொல்லி நெகிழ்ந்து கொண்டிருந்தாள்.

சுந்தரியும், சம்பத்தின் கல்யாண விஷயத்தை மட்டுமல்லாமல், சென்னையில் குமாரசுவாமியின் கம்பெனியில் ஹெச். ஆர். டிவிஷனில் அவன் சேர்ந்துவிட முடிவெடுத்திருப்பதை பற்றியும் சுகன்யாவிடம் ஒரு வாரத்திற்கு முன் சொல்லியிருந்தாள்.

வேணிக்கு இது எத்தனையாவது மாசம்? எட்டாயிருக்கணுமே? அவகிட்டவும் மனசு விட்டு பேசி ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடிச்சி. இப்ப பேசலாமா? இப்ப மணி பத்தாயிடுச்சே? சங்கரும் அவளும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தாலும் இருக்கலாம். இப்ப அவளை எதுக்காக கூப்பிட்டு தொந்தரவு பண்ணணும்? நாளைக்கு ஈவினிங் அவகிட்ட கண்டிப்பா பேசிடலாம்.

கண்களை மூடி படுத்திருந்தவள் சட்டென புரண்டு படுத்தாள். எழுந்து உட்கார்ந்து வானத்தை நிமிர்ந்து பார்த்தாள் சுகன்யா. இத்தனை குளுமையான நிலவொளியிலும் ஏன் என் மனசு இப்படி எட்டு திசையிலும் தேவையே இல்லாம ஓடிகிட்டு இருக்கு? ஏன் எனக்கு வேண்டியவங்களையெல்லாம் திரும்ப திரும்ப நினைச்சுப் பாக்குது?

ஏன்டீ சுகன்யா... உனக்கு வேண்டியவங்க எல்லாரையும் நீ இன்னைக்கு நினைச்சிட்டியா? மனம் அவள் நெற்றிப்பொட்டில் பட்டென அடித்தது.

யெஸ். சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

பொய் சொல்லாதடி..!. எங்கிருந்தோ ஒரு குரல் அவள் காதில் கேட்டது. தன் தலையை விருட்டென ஆட்டிக்கொண்டாள் சுகன்யா.

பயிற்சி முடிந்தபின், தில்லியிலேயே பணி புரிய தனக்கு விருப்பமென சுகன்யா எழுதிக்கொடுத்த விண்ணப்பம், ஒரே நாளில் அங்கீகரிக்கப்பட்டு, அவளுக்கு ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலேயே சேர உத்திரவு கொடுக்கப்பட்டதோடு அல்லாமல், அதே வளாகத்துக்குள்ளாகவே அவளுக்கு தங்குவதற்காக அரசாங்க க்வார்ட்டர்ஸும் ஒதுக்கப்பட்டுவிட்டது.

சுகன்யா எடுத்த இந்த முடிவு தெரிந்ததும், குமாரசுவாமி தன் மனதுக்குள் சிறிது ஆடித்தான் போனார். நடராஜனிடம் இதைச்சொல்லி வருத்தப்படவும் செய்தார். சிவதாணுவும், சுந்தரியும் தங்களால் ஆனமட்டும் அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கடைசியில் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனார்கள்.

தாத்தா...! இப்பத்தான் நான் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கேன்! தில்லியிலே நான் நிரந்தரமாகவா இருக்கப்போறேன்? ஆஃப்டர் ஆல், மிஞ்சி மிஞ்சிப்போனா இன்னும் ஒரு வருஷம்தான் இங்கே நான் இருக்கமுடியும்? அதுக்கு அப்புறம் என்னை தமிழ்நாட்டுக்கு மாத்திடுவாங்க. ஒண்ணு நான் பாண்டிசேரியில வொர்க் பண்ண வேண்டியிருக்கும்; இல்லேன்னா சென்னை ஆஃபீசுக்கே வந்திடுவேன். நான் என்ன இன்னும் சின்னப்பொண்ணா? என்னைப்பத்தி ரொம்பக் கவலைப்படாதீங்க தாத்தா!

பாட்டியும், நீங்களும், ஃப்ளைட்ல, ரெண்டு மணி நேரத்துல தில்லிக்கு வந்துடலாம். ஒரு மாசம் என்னைப் பாக்கறதுக்கு நீங்க வாங்க. அடுத்த மாசம் உங்களையெல்லாம் பாக்கறதுக்கு நான் ஓட்டமா ஓடி வந்துடறேன். இல்லையா; நீங்க என் கூடவே இருக்கலாம். எனக்குன்னு இங்கே தனி வீடு கிடைச்சிருக்கு. சுகன்யா மிகவும் பிடிவாதமாக தான் எடுத்த முடிவில் நிலையாக நின்றாள்.

கட்டிலின் மேல் கிடந்த சுகன்யாவின் செல் மெல்ல சிணுங்க ஆரம்பித்தது. மணி பத்தாச்சு. இந்த நேரத்துல யார் கிட்டேருந்து கால் வருது? அனுவாத்தான் இருக்கும்! சம்பத் இதைச் சொன்னாரு. சம்பத் அதைச்சொன்னாருன்னு, இன்னைக்கு என்ன புதுக்கதை சொல்லப்போறாளோ? வர்ற காலை அட்டண்ட் பண்ணிட்டு, டயமுக்கு தூங்கினாத்தான், நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்து, சமையலை முடிச்சுட்டு, ஆஃபிசுக்கு ஒழுங்கா கரெக்டான நேரத்துக்குப் போக முடியும்???

சுகன்யா விருட்டென எழுந்தாள். பவுர்ணமி நிலவுக்கும், அதன் குளுமையான மெல்லிய வெளிச்சத்திற்கும் ஒரு டாட்டா காட்டினாள். தரையில் கிடந்த பெட்ஷீட்டை உதறியெடுத்துக் கொண்டு, தன் படுக்கையறைக்குள் வேகமாக நுழைந்தாள். 

"ஹலோ.. அயாம் சுகன்யா ஹியர்... நீங்க யாரு?" செல்லை பாய்ந்து எடுத்த சுகன்யாவால், தன்னை அழைத்தது யார் என்பதை அவளால், செல்லில் பளிச்சிட்ட நம்பரை மட்டும் வைத்து புரிந்து கொள்ள முடியவில்லை.

"சுகன்யா... எப்படியிருக்கேம்மா? மறுபுறத்திலிருந்து வந்த குரலில் அன்பும், கனிவும் பொங்கிக்கொண்டு வந்தன.

"நான் நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க எப்படி இருக்கீங்க?" மறுமுனை இனிமையாக பேச ஆரம்பித்ததும், தன்னுடன் பேசுவது யார் என்பதை புரிந்து கொள்வது, சுகன்யாவிற்கு இப்போது சிரமமாக இல்லை.

"சுகன்யா... மணி ஏற்கனவே பத்தாயிடுச்சு... உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணிடலியே?" நடராஜன் மிருதுவாக பேசினார்.

"அங்கிள்... நீங்க என்னை எப்ப வேணாலும் கூப்பிடலாம். ஆனா யாரோ முகம் தெரியாத ஒருத்தர் கிட்ட பேசற மாதிரி என் கிட்ட நீங்க ஃபார்மலா பேசினா, அப்புறம் உங்க கிட்ட நான் பேசமாட்டேன்... ஆமாம்..."

நடராஜனுடன் சகஜமாக சிரித்து பேசுவதாக நினைத்தவளால் மேற்கொண்டு ஏதும் பேசமுடியாமல், தன் முகம் வாடி சட்டென மவுனமானாள். அவர் தன்னைக் கூப்பிட்டு பேசுவார் என்று சுகன்யா சிறிதும் எதிர்பார்த்திராததால், கன்னங்கள் சிவந்து, உடலின் உஷ்ணம் வேகமாக ஏறி அவளுடைய குரல் சட்டெனத் தழுதழுத்தது.

நடராஜனின் குரலால், சில நாட்களுக்குப் பிறகு, தீடிரென புயலாகத் தன் மனசுக்குள் வந்து நின்ற செல்வாவின் முகம் சட்டென போகமாட்டேன் என அடம் பிடிக்க ஒரு நொடி தன் விழிகளை மூடி மூடித்திறந்தாள். இன்னைக்குத் தூங்கினமாதிரிதான் என மனதுக்குள் குமைய ஆரம்பித்தாள்.

செல்வா தன்னுடன் சண்டையிட்டுவிட்டு போனபின், நடராஜனோ, மல்லிகாவோ தன்னிடம் பேசாமலே இருந்தது அவள் மனதை அவ்வப்போது உறுத்திக்கொண்டுதான் இருந்தது. ஆயிரம்தான் இருந்தாலும் புள்ளையை பெத்தவங்களாச்சே... புள்ளையோட தப்பை அவங்க ஒத்துக்குவாங்களா? முதல் ஒரு மாதம் அவள் மனது இந்த போக்கில் போனது என்னவோ உண்மைதான். நாளாக நாளாக இந்த உறுத்தல் அவள் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

நடராஜன், இப்ப எங்கிட்ட என்ன பேசுவார்? சுகன்யாவின் மனசில் இந்த கேள்வி எழுந்ததும், அவளுக்கு இடது தொடைக்கு கீழ் முழங்கால் இலேசாக உதறியது. இரு கால்களும் தங்கள் வலுவினை இழந்து பஞ்சாக துவண்டன. கட்டிலில் சரிந்து உட்கார்ந்து கொண்டாள். மீனாவின் பிறந்த நாளன்றுதான் அவரை, அவள் கடைசியாக சந்தித்து இருந்தாள். தங்கள் கல்யாணத்தைப்பற்றி அவருடன் மனம் திறந்து பேசிவிட்டு வந்திருந்தாள்.

அந்த வாரக்கடைசியில், கடற்கரையில், செல்வா வெகு மூர்க்கமாக, தன்னை, தன் உறவை, தன் காதலை தன்னிடமிருந்து முறித்துக்கொண்டு போனதும் அவள் நினைவிற்கு வந்தது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் கழித்து, சுகன்யா தில்லிக்கு வந்த பின், நடராஜனுடன் மீண்டும் அன்றுதான் முதன்முறையாக பேசிக்கொண்டிருக்கிறாள்.

"தேங்க் யூ சுகன்யா..!!"

நடராஜனின் குரலில் இருந்த சங்கடம் இப்போது வெகுவாக குறைந்தது போலிருந்தது. தன் 'காலை' அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனையும், சுகன்யாவின் அந்த நேரத்து மனநிலையையும் வெகு துல்லியமாக அவர் கணக்கிட்டு விட்டிருந்தார். அவளுடன் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்பதையும் அவர் திட்டமிட்டுவிட்டிருந்தார்.

"அங்கிள்... மல்லிகா அத்தை எப்படி இருக்காங்க...?" சுகன்யா தன் மூச்சை நீளமாக இழுத்து தன்னை சுதாரித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

"ஏதோ இருக்காம்மா..?"

"ஏன் அங்கிள் சலிச்சிக்கிறீங்க? அவங்களுக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே?" வாய்க்கு வாய் தன்னை அன்புடன், உரிமையுடன், தில்லி வருவதற்கு முன் மாமாவென அழைத்துக்கொண்டிருந்த சுகன்யா இன்று தன்னை 'அங்கிள்' என்று விளித்தது அவருக்கு சுருக்கென்றிருந்தது.

"தடிமாடாட்டாம், புத்தியே இல்லாத, ஒரு புள்ளையை பெத்து வெச்சிருக்கோமே? சலிச்சுக்காம என்ன பண்றது?" இப்போது நடராஜனின் குரல் தழுதழுப்பாக இருந்தது.

"அங்கிள்...??"

"சுகன்யா.... மொதல்லே அந்த அறிவுகெட்ட முண்டம் பண்ண தப்புக்கு நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேம்மா..."

நடராஜன் நிஜமாகவே அந்த கசப்பான நிகழ்ச்சியால் கலங்கிப் போயிருக்கிறார் என்பதை அவருடைய குரல் அவளுக்கு தெளிவாக சொன்னது. அவர் பேசமுடியாமல் திணறிக்கொண்டிருப்பதையும் சுகன்யா உணர்ந்தாள்.

"அங்கிள்... பெரியவங்க நீங்க என்ன தப்பு பண்ணீங்க? எந்த காரணமும் இல்லாம, நீங்க இப்படி என் கிட்ட மன்னிப்பு கேட்டு என்னை கில்டியா ஃபீல் பண்ண வைக்காதீங்க... அங்கிள் ப்ளீஸ்..." சுகன்யாவின் கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

"ஒரு பெண்ணோட மனசை புரிஞ்சுக்கத்தெரியாதவனா, அவன் மேல உண்மையான அன்பு வெச்ச ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதையை குடுக்கத் தெரியாதவனா என் புள்ளையை நான் நான் வளர்த்திருக்கேனே; அது என் தப்புத்தானேம்மா..." நடராஜன் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

"அங்கிள்... செல்வா அன்னைக்கு ரொம்ப கோபமா இருந்தப்ப.. நான் என்னால முடிஞ்சவரைக்கும் பொறுமையா இருந்தேன் அங்கிள்.. என் நடத்தையை திரும்ப திரும்ப அவர் சந்தேகபட்டு என்னைத் தவறா பேசினதுனாலேதான் என் பொறுமையை நான் இழந்துட்டேன்.. அயாம் சாரி..."

"எல்லா விஷயத்தையும் நான் கேள்விப்பட்டேன். நீ தப்பு பண்றவ இல்லேம்மா... உன்னாலத் தப்பு பண்ணவே முடியாதும்மா.. செல்வா உன்னை சந்தேகப்பட்டது ரொம்பப் பெரிய தப்பு..."

"அங்கிள்... எல்லாம் என் கெட்ட நேரம்... இதுல அவரை மட்டும் கொறை சொல்லி எந்த பலனுமில்லே..."

"அயாம் சாரிம்மா... நீ ஆயிரம்தான் சொன்னாலும், என் புள்ளை செல்வா பண்ணது தப்புதாம்மா... நீயில்லே... வேற எந்த பொண்ணாயிருந்தாலும் இந்த அளவுக்கு உன்னை மாதிரி பொறுமையா இருந்திருக்க மாட்டாள்."

"நான் அதையெல்லாம் மறந்துடறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்... அங்கிள்..."



"ரொம்ப சந்தோஷம்மா... நடந்ததை நீ மறந்திட முயற்சி பண்றேன்னு சொல்றியே... உனக்கு உண்மையாவே பெரிய மனசு... ஆனா எங்களையெல்லாம் நீ மறந்துடலியே?"

"நோ... நோ.. அங்கிள் இப்படியெல்லாம் பேசி என்னை அழ வெக்காதீங்க... லாஸ்ட் வீக் கூட நானும் மீனாவும் பேசிகிட்டுத்தான் இருந்தோம். சீனுவும் அப்பப்ப என்கிட்ட பேசிகிட்டுத்தான் இருக்கார்."

"தெரியும்மா... ஆனா நீ செல்வா மேல இன்னும் கோபமா இருக்கேங்கறதும் எனக்குத் தெரியும்... இப்ப ஒரு விஷயத்தை நான் உங்கிட்ட சொல்ல விரும்பறேன்."

"சொல்லுங்க அங்கிள்..."

"எங்களால, உன்னைத்தவிர வேற யாரையும் எங்க வீட்டு மருமகளா நெனைச்சுப்பாக்க முடியலம்ம்மா..."

"....." 


சுகன்யா... 101

"அனு... கிளம்புடீ... என் அத்தான் என்னைப்பாக்க வந்திருக்கார். நான் பேசினதுலேருந்து நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நினைக்கிறேன்... காலையிலே இன் ஃபேக்ட் அவர்கிட்ட வேற ஒரு விஷயமா பேசணும்ன்னு நினைச்சேன்... ஆனா அவர் நம்பர் கிடைக்கலே... தீடீர்ன்னு மனுஷன் டெல்லிக்கு வந்து நிக்கறார்...
நான் ஒரு முட்டாள்டீ.. இன்னைக்கு அவருக்கு பர்த்டேன்னு நான் மறந்தே போயிட்டேன்... கீழே போனதும் சரியான சண்டை இருக்கு..." சுகன்யா பரப்பரப்பாக பேசிக்கொண்டிருந்தாள்.

"சுகன்யா... உன் அத்தான் உன்னைப் பாக்க வந்திருக்கார். இன்னைக்கு அவருக்கு பொறந்த நாள். கோவிலுக்கு போகணுங்கறார். அவர் கூட நீ போயிட்டு வாடி. உங்கக்கூட நான் வேற எதுக்குடி நடுவுலே?"



"என்னடீ பேசறே? உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன்; நீ எங்கக்கூட வந்துதான் ஆகணும். நீ வரலேன்னா நானும் அவர்கூட லஞ்சுக்கு போக மாட்டேன்..."

"என்னடி இப்படி அர்த்தமில்லாம அடம் புடிக்கறே? உங்க அத்தானை எனக்கு தெரியாது. என்னை அவருக்குத் தெரியாது?" அனு நிஜமாகவே தயங்கினாள்.

"அனு... என் அத்தானை உனக்குத் தெரியாட்டா பரவாயில்லே; ஆனா நான் சொல்றதை கேளு. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீயும் சந்தோஷமா இருக்கணும்ன்னு நான் விரும்பறேன்." சுகன்யாவின் முகத்தில் காரணமேயில்லாமல் ஒரு கள்ளச்சிரிப்பு பொங்கி பொங்கி வந்து கொண்டிருந்தது.

"நீ சந்தோஷமா இருக்கேங்கறது உன் முகத்தைப் பார்த்தாலே நல்லாத் தெரியுதுடீ" அனு நகருவதாக தெரியவில்லை.

"அப்படீனா இப்ப நீ எதுவும் பேசாம என் கூட எழுந்து வா..." சுகன்யா, அனுவின் கையை பிடித்து அவளை இழுத்தாள்.

"ஓ.கே. நான் ரிசப்ஷன் வரைக்கும் வர்றேன். உன் அத்தானை விஷ் பண்ணிட்டு ரூமுக்குத் திரும்பிடறேன்... இஸ் தட் ஓ.கே.?"

"இல்லே. நிச்சயமா இல்லே. ரிசப்ஷன் வரைக்கும் வர்றேங்கறே? அப்படியே கோவிலுக்கும், லஞ்சுக்கும் எங்கக்கூட வர்றதுல உனக்கு என்னடி பிரச்சனை? காலையிலே கோவிலுக்கு போகணும்ன்னு நீயே சொன்னியா இல்லியா?"

"ஆமாம் சொன்னேன்..."

"நானும் என் அத்தானும் லவ்வர்ஸா? அப்படீல்லாம் ஒண்ணுமில்லையே? ஹீ ஈஸ் ஜஸ்ட் மை ஃபிரண்ட் ஆஸ் தட் ஆஃப் யூ... எங்கக்கூட வர்றதுக்கு நீ ஏன் தயங்கறே?"

"சே... சே... அவரை எனக்கு முன்னே பின்னே தெரியாதேடீ... நீங்க ரிலேடிவ்ஸ்... உங்களுக்குள்ள இன்னைக்கு பேசிக்கறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கும்.. அவரோட மேரேஜ் பத்தி நீ பேசும் போது நான் எதுக்கு குறுக்கேன்னு நினைக்கறேன் அவ்வளவுதான்."

"எனக்கு பிரச்சனை இல்லே.. என் அத்தானுக்கு நீ வர்றதுனாலே எந்தப் பிரச்சனையும் இருக்காது... அவர் ரொம்ப ஜோவியல் டைப்... எனக்கு அவரைப்பத்தி தெரியும்..."

"என்னமோ நீ சொல்றே? ஆனாலும் எனக்கு தயக்கமாத்தான் இருக்கு.."

"அனுக்குட்டி... சும்மா படுத்தாதேடி.. சட்டுன்னு கிளம்புடி செல்லம்..."

அனுவைக் கொஞ்சிக்கொண்டே எழுந்த சுகன்யா,
அவளை விருட்டென இழுத்து தன் தோளோடு அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள். சுகன்யாவின் முகத்தில் பூத்திருந்த அந்தப் புன்னகைக்கு அர்த்தம் என்ன என்பதை அந்த நொடியில் அனுவால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியவில்லை. சுகன்யா அறையை பூட்டி சாவியை தன் தோள் பையில் போட்டுக் கொண்டாள். அனுவின் இடுப்பில் தன் இடது கையை தவழவிட்டவளாக, வேகமாக ரிசப்ஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"அனு... உன் லவ்வரோட பர்த் டே என்னைக்குங்கறதை நீ நிஜமாவே மறந்திட்டியா?" அவர்கள் இருவரும் ரிசப்ஷனை நோக்கி மெல்ல நடந்துகொண்டிருந்தார்கள்.

"இப்ப எதுக்கு இந்தக்கேள்வியை கேக்கறே நீ?"

நடந்து கொண்டிருந்த அனு சட்டென நின்றாள். அன்றைய தேதி ஜூன் மூன்று என்பது சட்டென அவள் மனதுக்குள் உறைக்க அவள் காதலனின் களையான முகம் அவள் கண்ணுக்குள் வந்து நின்றது. சுகன்யாவின் முகத்திலிருந்த குறும்புப்புன்னகையின் அர்த்தம் இன்னும் அவளுக்கு முழுமையாக விளங்கியிருக்கவில்லை. அனு, ஒரு நொடி, சுகன்யாவின் கையை இறுக்கிப்பிடித்தாள். சுகன்யா மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

"அனு... உன் மனசுக்குள்ளவே நீ நினைச்சிக்கிட்டு இருக்கற உன் காதலனை, அவனோட பிறந்த நாளன்னைக்கு, நீ விஷ் பண்ண விரும்புவேன்னு நான் முழுமையா நம்பறேன்." இதை சொல்லிவிட்டு சுகன்யா, அனுவின் முகத்தை நோக்கி மிக மிக இயல்பாக சிரித்தாள். அவள் உதடுகளில் இருந்த குறும்பின் அர்த்தம், அனுவுக்கு இப்போது இலேசாக புரிவது போல் இருந்தது.

"சுகன்யா... என்னடி சொல்றே நீ? உண்மையைச்சொல்லுடீ... இப்ப இங்கே வந்திருக்கறது யாரு?" இப்போது அவர்கள் ரிசப்ஷனை அடைந்து விட்டிருந்தார்கள். 


“ஹாய் சுகன்யா ஹவ் ஆர் யூ? ஹாய் அனு... ஹவ் டு யூ டூ? எப்போ, எங்கே, யாரை, யார்கூட சந்திப்போம்ன்னு எதிர்பாக்கவே முடியலியே? நம்ம லைப்ல இப்படியெல்லாம் கூட நடக்குமான்னு நிஜமாவே நான் இன்னைக்கு ஆச்சரியப்படறேன்? திஸ் ஈஸ் ரியலி எ சர்ஃப்ரைஸ் டு மீ. நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஃப்ரெண்ட்ஸா?” சம்பத் வியப்புடன் பேசிக்கொண்டிருந்தான்.

சுகன்யாவுடன் வந்துகொண்டிருந்த அனுராதாவைக் கண்டதும் சம்பத்தின் முகத்தில் இருந்த உற்சாகப் புன்னகையின் நிறம் சற்றே மாறி மங்கலடித்தது.ஒரே நொடியில் அவன் தன்னை சுதாரித்துக்கொண்டு, எப்போதும் தன் முகத்திலிருக்கும் இயல்பான புன்னகையை வரவழைத்துக் கொண்டான். சினேகிதிகள் இருவரையும் இதமான குரலில் விஷ் செய்தவன், முகத்தில் சிறிதும் தயக்கமேயில்லாமல் அவர்கள் கைகளையும் பிடித்து குலுக்கினான்.

ரிசப்ஷனுக்குள் நுழையும் போதே அங்கே வந்திருப்பது யாராக இருக்கும் என்பதை அனு ஓரளவுக்கு யூகித்துவிட்டிருந்தாலும், சுகன்யாவுக்கு சம்பத் நெருங்கிய உறவு என்பதை மட்டும் அவளால் சுத்தமாக நம்பவே முடியவில்லை. அவளும் சம்பத்தைப்போல் தன்னுள் திகைத்துத்தான் போயிருந்தாள்.

அனுவின் யூகத்துக்கு ஏற்ப, சம்பத் ரிசப்ஷன் வாசலில் நின்றவாறு புன்னகையுடன் தங்களை விஷ் செய்ததைக் கண்டதும், அவள் மனதில் இனம் புரிந்து கொள்ள முடியாத ஒரு மகிழ்ச்சி பீறிட்டெழ ஆரம்பித்தது. சம்பத்தை அவள் கடைசியாக பார்த்து ஒரு வருஷத்துக்கும் மேலாகியிருந்தது.

அனுவின் மனதை கொள்ளையடிக்கும் கவர்ச்சியான அதே சிரிப்பு, இன்றும் சம்பத்தின் முகத்தில் பூத்திருந்தது. அந்த இனிமையான, இதமான, சிரிப்பில்தானே அவள் அவனிடம் மயங்கி போயிருந்தாள். அவனுடைய கம்பீரமான குரலில் தானே, அவள் தன் மனதை அவனிடம் பறிகொடுத்திருந்தாள். அவனுடைய மிடுக்கானத் தோற்றத்தை கண்டுதானே தன் காதலை அவனிடம் தெரிவித்திருந்தாள்.

சம்பத் இப்ப கொஞ்சம் மெலிஞ்சி போயிருக்கானே? எப்பவும் பார்ட்டி பார்டீன்னு அலையறவன்; இன்னும் அந்த பழக்கமெல்லாம் இவனுக்கு இருக்கோ என்னவோ? நேரத்துக்கு சரியா சாப்பிடறது இல்லையோ? ஆனா இந்த ஒரு வருஷத்துலே, முகத்துல ஒரு மெச்சூரிட்டி வந்த மாதிரி இருக்கே?

அவனே சொன்ன மாதிரி, திடுதிப்புன்னு, எதிர்பார்க்காத நேரத்துல, அவனோட பொறந்த நாளைன்னைக்கு என் எதிர்ல வந்து நிக்கறானே? நான் அவனை காதலிச்சது, நான் அவங்கிட்ட என் நேசத்தை சொன்னது, இதெல்லாம் அவனோட ஞாபகத்துல இருக்குமா? என்னைப் பாத்ததும் வெகு இயல்பா சிரிச்சானே?

இதுக்கு என்ன அர்த்தம்? என்னை அவன் மறக்கலேன்னுதானே அர்த்தம். கடைசீல என் மனசுக்குள்ள இருக்கற ஆசை நிறைவேறப்போகுதா? என் வேண்டுதல் வீண் போகலையா? நான் கும்பிடற தெய்வம் என்னை கைவிடலியா? தெரியலியே? அனுவின் மனம் மகிழ்ச்சியில் ஒரு பக்கம் பொங்க, மறுபுறம் ஆயிரம் கேள்விகளுடன் தவிக்க, அவள் உடல் சிலிர்த்துப்போய் நின்றாள்.

"அயாம் பைன்... ஹவ் டூ யூ டூ சம்பத்... ஹேப்பி பர்த் டே டு யூ" அனு தன் மனசார அவனை வாழ்த்தினாள்.

"தேங்க் யூ அனு... தேங்க் யூ வெரிமச்...?" சம்பத் அனுவின் வலது கையை மென்மையாக அழுத்தினான்.

"அத்தான்... அனுவோட கையை குலுக்கினது போதும்.. என் பக்கமும் கொஞ்சம் திரும்புங்க... ஹேப்பி பர்த் டே டு யூ..." சுகன்யா தாமரையாக மலர்ந்தாள்.

"தேங்க் யூ சுகா... உன் வாழ்த்துக்கு தேங்க்யூ... பட் இன்னைக்கு ஒரு நாளாவது என்னை நீ கிண்டல் பண்ணாம இரேன்.." அவளிடம் கெஞ்சுவது போல் அவன் நடித்தான்.

"அத்தான்.. நீங்க உண்மையைச்சொல்லுங்க. என் ஃப்ரெண்ட் அழகா இருக்காளா இல்லியா?"

"ஹேய்.. அனுவுக்கென்ன? ஷி ஈஸ் வெரி வெரி நைஸ் லேடீ.. அண்ட் ஷீ ஈஸ் ஆல்வேஸ் ப்யூட்டிஃபுல்..." அனுவின் முகத்தை, அவனுடைய பாராட்டுதலால் சிவந்த அவள் முகத்தை, அவன் தன் ஓரக்கண்ணால் பார்த்தான். உண்மையாகவே அனு இப்ப முன்னைக்கு அழகா இருக்காளே? உடம்புல கொஞ்சம் சதை போட்டிருக்கு... நல்லா கலர் ஏறின காஷ்மீர் ஆப்பிள் மாதிரி இருக்கா? சம்பத் அவளை நீளமாக ஒரு முறைப்பார்த்தான்.

"அத்தான்... அனுவையோ, அல்லது அவளோட வாழ்த்தையோ இன்னைக்கு நீங்க எதிர்பாத்தீங்களா?"

"நிச்சயமா இல்லே. பட் அயாம் ரியலி ஹேப்பி டு மீட் ஹர் அகெய்ன். அனுவை சந்திச்சி கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலே இருக்கும். பெங்களுரூலேருந்து எங்க கம்பெனி வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்ததுக்கு அப்புறம் இப்பத்தான் அவளைப் பாக்கறேன். தேங்க் யூ அனு. தேங்க் யூ ஃபார் யுவர் விஷ்ஷஸ்." மீண்டும் ஒரு முறை சம்பத் அவள் கையை பிடித்து மகிழ்ச்சியுடன் குலுக்கினான்.

"உலகம் ரொம்ப சின்னது. நாம நினைக்காததெல்லாம் நடக்குதுன்னு, போனவாரம் நான் சொன்னப்ப நீங்க சிரிச்சீங்களே, இப்ப என்ன சொல்றீங்க?" சுகன்யா சம்பத்தை நோக்கி கேலியாகச் சிரித்தவள், அனுவையும் குறும்பாக நோக்கினாள்.

"யெஸ்... யூ ஆர் ரைட் சுகன்யா..."அவர்கள் மெல்ல காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். இதமான காற்று அவர்கள் உடலைத் தழுவிக் கொண்டுபோனது.


"நான் ரூமுக்கு போறேன்டீ சுகன்யா... நீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க..." காரை நெருங்கியதும் அனு சற்றே தயங்கி நின்றாள்.

"வொய்... அனு?எங்க கூட வர்றதுக்கு உனக்கென்ன தயக்கம்? ஏதோ என்னை முன்னே பின்ன தெரியாதவன் மாதிரி ஏன் நினைக்கிறே?"

"அப்படீல்லாம் இல்லே சம்பத்..."

"என் பர்த்டேன்னைக்கு, எங்க கூட லஞ்ச் சாப்பிட உனக்கு இஷ்டமில்லையா? இல்லே; என்னையே உனக்குப் பிடிக்கலையா?" சம்பத் பேசியபின் சட்டெனத் தன் நாக்கை கடித்துக் கொண்டான். ஏதோ நினைவில் சட்டென அவளுடைய இடது கையைப் பிடித்தான்.

உன்னைப் பிடிக்காமலாடா, உன் பொறந்து நாளுக்கு கோவிலுக்குப் போய், உன் பேர்ல அர்ச்சனை பண்ண நினைச்சேன்? என் காதல் வேண்டாம்ன்னு என் மனசை நீ நொறுக்கிட்டுப் போயிருக்கலாம்.

ஆனா நான் இன்னும் உன்னை மறக்கவும் முடியாமே, என் மனசுலேருந்து உன்னை தூக்கி எறியவும் முடியாமே ஒரு பைத்தியக்காரியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என் மனசுல இருக்கறது உனக்கு புரியாதுடா. அனு தன் மனதுக்குள் புழுங்கினாள்.

"அத்தான்.. அனு இன்னைக்கு, அவ மனசுக்கு ரொம்ப நெருக்கமான யார் பேருக்கோ கோவில்லே அர்ச்சனை பண்றதா இருந்தா. அவ மனசுக்கு நெருங்கியவங்க யாருங்கறதை நான் யதேச்சையா கண்டுபுடிச்சிட்டேன்." அவர்கள் இருவரும் ஒன்றாக உட்காரட்டும் என்ற எண்ணத்தில் சுகன்யா காரின் முன் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டாள். அனுவும் சம்பத்தும் பின் சீட்டில் அமர்ந்தனர்.



"சுகன்யா... பிளீஸ்... கொஞ்ச நேரம் சும்மாருடி..." அனு தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள். காரில் உட்கார்ந்த பின்னும் சம்பத், அனுவின் கரத்தை தன் பிடியிலிருந்து விடவில்லை.

"அனு... பீ சீர்ஃபுல்..." சம்பத் ஆதரவாக அவளை நோக்கி புன்னகைத்தான்.சம்பத்தின் கரத்திலிருந்து தன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டாள் அனு.

"அத்தான்... அனு சொல்ற மாதிரி நான் சும்மாயிருக்கப் போறது இல்லே. நீங்க என்ன காரணத்துக்காக அனுவோட அன்பை, காதலை வேணாம்ன்னு சொன்னீங்களோ... இப்ப அதைப்பத்தி நான் ஆராய்ச்சி பண்ண விரும்பலே. அதனால எந்த பிரயோசனமும் இல்லே. ஒரு விதத்துல அது ஏற்கனவே முடிஞ்சு போன விஷயம்."

"சுகன்யா... இப்ப இதைப்பத்தி நாம பேசியே தீரணுமா?" சம்பத் தன் முகத்தை, கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவன், ஓரக்கண்ணால் அனுவைப் பார்த்தான். சுகன்யாவின் மனதிலிருப்பது என்னவென்று அவனுக்கு புரிந்துவிட்டது.

அனு யாரையுமே பார்க்காமல் கார் கண்ணாடியின் வழியே சாலையை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தாள்.சுகன்யா அடுத்ததாக என்னப்பேசுவாள் என்பது அவளுக்கும் புரிந்துவிட்டது.

"அத்தான்.. சுத்தி வளைச்சுப்பேச எனக்கு விருப்பமில்லே. உங்களுக்கும் அது பிடிக்காது. நாமெல்லாம் குழந்தைகளும் இல்லே. இந்த வயசுல ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்க்கையிலே உண்மையா இருக்கறதுதான் முக்கியம். அதுதான் புத்திசாலித்தனம்."

"அனு என்னோட ஃப்ரெண்ட்.. அனுவும் நீங்களும் ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸா இருந்திருக்கீங்க. உங்களுக்கு அவளைப்பத்தி, அவ குணத்தைப்பத்தி, தெரிஞ்ச மாதிரி எனக்கும் அவளைப்பத்தி ஓரளவுக்குத் தெரியும்."

"இந்த நிமிஷத்துல, உங்க மேல அனு வெச்சிருக்கற ஆசை, காதல், நேசம், இதைப்பத்தியெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும்." ஆனா உங்களுக்குத் தெரியாது.நீங்க அதை தெரிஞ்சுக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்."

"ம்ம்ம்.." சம்பத் தன் பார்வையை அனுவின் புறம் திருப்பினான். அனு இன்னமும் ரோடையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஒரு நேரத்துல, அனுவோட காதலை நீங்க ஏத்துக்க மறுத்து இருக்கலாம். ஈரத்துணியிலே சுத்தி வெச்சிருக்கற மல்லிகை பூவை மாதிரி, இன்னமும் உங்களை, அவ தன் மனசுக்குள்ளவே பொத்தி பொத்தி வெச்சிக்கிட்டு இருக்கா. உங்க நினைப்புங்கற வாசனையை தன் உள்ளத்குள்ளவேமுகர்ந்து முகர்ந்து பாத்துகிட்டு, தன் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கா."

"சுகன்யா... இன்னைக்கு அவரோட பர்த் டேப்பா. இன்னைக்கு பூரா அவர் சந்தோஷமா இருக்கணும். இதுதான் என் ஆசை. எனக்கும் அவருக்கும் நடுவுல என்னைக்கோ நடந்த ஒரு மேட்டரை, இப்ப நீ டிஸ்கஸ் பண்ணியே ஆகணுமா?" அனு தன் பார்வையை காருக்குள் திருப்பமால் முனகினாள்.

"கொஞ்ச நேரம் நீ சும்மாயிருடீ... நீயாடீ என்னை இவர்கிட்ட உன்னைப்பத்தி பேச சொன்னே?"

“ப்ச்ச்ச்... இல்லே...” அனு மீண்டும் மெல்லிய குரலில் முனகினாள்.

“பாத்தீங்களா அத்தான்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செல்லுலே பேசும்போது, நான் யார் மனசை புரிஞ்சுகலேன்னு என் கிட்ட கேட்டீங்களே? இப்ப உங்களுக்கு புரியுதா?"

"சுகா.."

"உங்க பர்த் டே அன்னைக்கு உங்க சந்தோஷம்தான் முக்கியம்ன்னு நினைக்கறவளோட மனசைத்தான் இப்ப நீங்க முக்கியமா புரிஞ்சிக்கணும்."

“சுகன்யா... அயாம் சாரி.. உண்மையாகவே உன்னோட குற்றசாட்டுக்கு இப்ப என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியலே.” முகத்தில் இலேசான குழப்பத்துடன் சம்பத் தன் சீட்டில் தளர்ந்து சரிந்தான்.

“அத்தான்.. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொல்றதை மட்டும் காது குடுத்து கேட்டாப் போதும்...”

“சுகன்யா உன் அத்தான்கிட்ட நீ பேச விரும்பறதையெல்லாம், என் எதிர்லேதான் பேசணுமா?” அனு அசௌகரியமாக தன் ஆசனத்தில் நெளிந்தாள்.

"ஆமாம்டீ... நீ கொஞ்ச நேரம் பேசாம இருன்னு சொல்றேன்"

“அத்தான், உங்ககிட்ட எனக்கிருக்கற உறவாலேயும், உங்க மேல இருக்கற உண்மையான அக்கறையாலேயும், அனுவோட ஃப்ரெண்டுங்கற உரிமையாலேயும், இப்ப நான் உங்க ரெண்டு பேரைப்பத்தியும் பேசிகிட்டு இருக்கேன். உங்க தனிப்பட்ட விஷயத்துல நான் தலையிடறது உங்களுக்கு பிடிக்கலேன்னா அதை ஓப்பனா சொல்லிடுங்க..."

இதுவரை பின்சீட்டை நோக்கி அவர்களைப் பார்த்து உரையாடிக்கொண்டிருந்த சுகன்யா விருட்டென திரும்பி உட்கார்ந்துகொண்டு, தன்னெதிரில் தன்னை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கும் அகலமான வீதியைப்பார்க்க ஆரம்பித்தாள்.

"சுகா.. உன்னை நான் தப்பா எதுவும் சொல்லலீயே? எதுக்காக நீ கோவப்படறே?" சம்பத் தன் முகம் சுருங்கினான்.

"பின்னே எப்படி பேசணுங்கறீங்க? நீங்க பழைய சம்பத்தாயிருந்தா நான் அனுவைப்பத்தி உங்ககிட்ட பேசியே இருக்க மாட்டேன். நிச்சயமா அவளை என்னோட அழைச்சிக்கிட்டே வந்திருக்க மாட்டேன்."

"சுகன்யா... ப்ளீஸ்... நான் சொல்றதை கேளேன்." தன்னால் அவர்கள் நடுவில் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாதேயென்ற ஆதங்கத்தில் அனு அவர்கள் பேச்சின் நடுவில் நுழைந்தாள்.

"சரிடீ.. கடைசியா என்னை நீ ஒரே ஒரு வார்த்தை பேசவிடுடீ... அத்தான்... இப்ப நீங்க அனுவோட செல்லை வாங்கிப்பாருங்க. ஒண்ணுல்லே; ரெண்டுல்லே; பத்து போட்டோ வெச்சிருக்கா. அத்தனையும் உங்களோடதுதான். ஒரு நாள்லே பத்து தரம் திரும்ப திரும்ப அந்த படங்களை பாத்துக்கிட்டு இருப்பா..." சம்பத் அனுவைப்பார்த்தான்.

"அவளைப் பொறுத்தவரைக்கும், அவ காதல் முடிஞ்சுப் போன விஷயம் இல்லே. அவ உங்களையே எப்பவும் தன்னோட மனசுக்குள்ளவே நெனைச்சிக்கிட்டு இருக்கா." சுகன்யா இப்போது அவர்களை பார்க்காமல் கார் ஓடிக்கொண்டிருந்த பாதையை நோக்கியவாறு பேசிக்கொண்டிருந்தாள்.

"ஓ மை காட்..." இம்முறை சற்று உரக்கவே முனகினான் சம்பத்.

முனகிய சம்பத் தன் அருகில் உட்கார்ந்திருந்த அனுவின் முகத்தை தயக்கத்துடன் மீண்டும் ஒருமுறைப் பார்த்தான். அனு தன் இருகரங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக கோர்த்து தன் மடியின் மேல் வைத்திருந்தாள்.

கார் ஓடும் வேகத்தில் அனுவின் முகத்தில் அடித்த மெலிதான வெய்யிலில், அவளுடைய குழந்தை போன்ற முகம் அழகாக மின்னிக்கொண்டிருந்தது. அனுவுக்குத்தான் எவ்வளவு அழகான மூங்கில் மாதிரி வழவழப்பான கைகள்? எத்தனை நீள நீளமான விரல்கள் இவளுக்கு? அமைதியான முகம். ஆரவாரமில்லாத பேச்சு. சம்பத், தன் பார்வையில் சிறிதும் காமம் என்பதேயில்லாமல் அவளை நோக்கினான்.

அனு நீ அழகு மட்டுமில்லே; புத்திசாலியும் கூட; இதுல எனக்கு கொஞ்சமும் சந்தேகமேயில்லை. உன்னை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உன் அழகுல எனக்கு மோகமிருக்கு. ஆனா உன்னை நான் காதலிக்கலைங்கறதுதான் உண்மை. உன்னை மட்டுமல்ல; என்னால எந்தப்பெண்ணையும் காதலிக்க முடியாது. எந்த பெண்ணோடவும் நிரந்தரமான உறவை வெச்சுக்க எனக்கு விருப்பமில்லே. எனக்கு காதல், திருமணம், இதுலேல்லாம் சிறிதளவும் நம்பிக்கையில்லை.

அனு... என்னை நீ புரிஞ்சுக்கணும். உன்னை நான் எந்த விதத்திலும் வற்புறுத்தலை. உனக்கு சரின்னா, நம்ம ஓய்வு நேரத்துல, நம்ம மனசுல இருக்கற ஆசைகளை, உடலின் தேவைகளை, நம்ம விருப்பங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து தீத்துக்கலாம். உனக்கு விருப்பம் இருக்கறவரைக்கும் இந்த உறவு நமக்குள்ள நீடீக்கும். உனக்கோ எனக்கோ போதும்ன்னு தோணும்போது இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடலாம்.

அனுராதா தன் காதலை சம்பத்குமாரனிடம் தெரிவித்தபோது, அவளை, அவள் மனதை, அவள் காதலை புரிந்துகொள்ளமால், அவளிடம் கொஞ்சமும் வெட்கமில்லாமல், பைத்தியக்காரத் தனமாக பேசியது அவன் நினைவுக்கு வந்தது. அந்தக் காலத்துலதான் நான் புத்தியே இல்லாம, யாரையுமே மதிக்காம, திமிர் பிடிச்சி அலைஞ்சுக்கிட்டு இருந்தேனே? சம்பத் தன் தலையை வேகமாக உதறிக்கொண்டான்.

என்னை இவ காதலிக்கறான்னு தெரிஞ்சும், இவளோட காதல் எனக்கு தேவையில்லைன்னு இவளை நான் உதறினதுக்கு அப்புறமும், இவ தன் மனசுக்குள்ளாகவே ஒரு வருஷத்துக்கும் அதிகமா என்னை காதலிச்சுக்கிட்டு இருக்காளே? என் பிறந்த நாளை நினைவு வெச்சுக்கிட்டு இருந்து, என்னோட நலனுக்காக, கோவில்ல அர்ச்சனை செய்ய நினைக்கிறாளே?

என்னை நினைச்சு, தன் காதலை நினைச்சு, என் கண் முன்னாலேயே என் நினைவுல இவ தன் கண் கலங்குகிறாளே. எனக்காகவும் ஒருத்தி அழுறாளா? இது உண்மையாவே சாத்தியம்தானா? சம்பத் அதிர்ந்து போனவனாக அனுவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஏன்டா முடியாது? சுகன்யாவை நீ காதலிக்கறேங்கலையா? ஆறு கடலை சேர்ந்துதான் ஆகணும்ன்னு நீ கதை சொல்லலியா? எவ்வளவு காலமானாலும் நீயா வர்ற வரைக்கும் உனக்காக காத்திருப்பேன்னு சுகன்யாகிட்ட ஜம்பமடிச்சிக்கிட்டியேடா, அது உனக்கு மறந்து போச்சா? சுகன்யாவை நீ உன் மனசுக்குள்ளவே நினைச்சுக்கிட்டு இருக்கறது உண்மைன்னா அனு ஏன் உன்னை தன் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு இருக்கக்கூடாது?

மனதுக்குள் வெகுவாக அதிர்ந்த சம்பத் மெல்ல அனுராதாவின் பக்கம் திரும்பினான். அவள் வலது கரத்தை மிகுந்த நேசத்துடன் வெகு மெண்மையாக தன் இடது கையால் பற்றினான். அனு அவனை நோக்கித் திரும்ப, அவன் விழிகள் அவள் விழிகளை கனிவுடன், காதலுடன் நோக்கின. அனுவின் விழிகள் லேசாக கலங்க ஆரம்பித்தன.

"அனு... ஏண்டி உன் வாய்லே என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்கே? வாயைத்தொறந்து சொல்லேண்டீ.."

"என்னடீ சொல்ல சொல்றே?" அனு தழுதழுத்தாள்.

"உங்களை நான் காதலிக்கலே; உங்களை நான் எப்பவோ மறந்துட்டேன்; சுகன்யா சொல்லிகிட்டு இருக்கறதெல்லாம் சுத்தப்பொய்ன்னு என் அத்தான் மூஞ்சைப்பாத்து ஒரே ஒரு தரம் சொல்லேண்டீ.."

உள்ளத்தில் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற உண்மையான விருப்பத்தில், ஆசையில், தன் மேலிருக்கும் ஒரு தலைக்காதலால், தன் பெற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற மறுக்கும் தன் அத்தானின் மனதை மாற்றிவிடவேண்டும் என்ற உணர்ச்சியுடன் கோபமாக சுகன்யா அனுவிடம் வெடித்தாள். தன் பேச்சுக்கு பதிலேதும் வராததால், சட்டென திரும்பி பின் சீட்டை நோக்கினாள்.

காரின் பின்னிருக்கையில், சம்பத்தின் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டு, அனு தன் விழிகளை மூடி உட்கார்ந்திருந்தாள். சம்பத்தின் இடது கரம் அனுவின் தோளில் விழுந்திருந்தது. அனுவின் வலது கரத்தை, அவன் தன் இடது கரத்தால் பற்றி வருடிக் கொண்டிருந்தான்.

கார் மலைமந்திரின் முன் கிறீச்சிட்டு நின்றது.

"அனு குட்டீ உன் கண்ணைத் தொறடீ... கோவில் வந்திடிச்சிடீ..." களிப்புடன் கூவிய சுகன்யா காரின் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கினாள்.

"சுகன்யா... ஒரு சின்ன திருத்தம் சொல்லட்டுமா?" தன் பக்கத்து கதவைத் திறந்துகொண்டு இறங்கிய சம்பத், தன் முகத்தில் புன்னகையுடன், அனு இறங்குவதற்காக வசதியாக அவள் பக்கத்து கதவை திறந்து கொண்டு நின்றான்.

"அத்தான் நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்களோ, அதை முதல்லே உங்க அனுராதாகிட்ட சொல்லுங்கோ... அவ தன் காது குளிர கேக்கட்டும்..." சுகன்யாவின் முகத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

"ஓ.கே... சுகன்யா... கோவில் என்னைத் தேடி வராதுங்கறது எனக்கு இன்னைக்கு நல்லாப் புரிஞ்சு போச்சு. எனக்காக திறந்திருக்கிற ஒரு கோவிலைத் தேடி நான்தான் போகணும்." காரிலிருந்து இறங்கிய அனு அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் பார்த்தாள்.

"அனு... எனக்காக நீ காத்துக்கிட்டு இருந்தே. இப்ப நானே உன்னைத் தேடி வந்திருக்கேன். என்னை நீ ஏத்துக்குவியா?" சம்பத் படபடக்கும் உள்ளத்துடன், அனுவின் முகத்தை உற்று நோக்கினான்.



அனுராதா, சம்பத்குமாரனின் இடதுபுறத்தில் நின்றிருந்தாள். அவள் பதிலேதும் பேசாமல், தன் வலது கரத்தால், அவன் இடது முழங்கையை வளைத்துக்கொண்டாள். அவன் இடது தோளில் தன் தலையை சாய்த்துகொண்டு, சில நொடிகள் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றாள்.

"சுகன்யா... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டீ." மெல்லிய குரலில் சொன்னவள் சம்பத்தை இழுத்துக்கொண்டு அர்ச்சனை தட்டுகள் விற்கும் இடத்தை நோக்கி, தன் கால்கள் தொய்ய, தொய்ய, மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.