Pages

Thursday 19 June 2014

பாவம் அவள்!


நாங்கள் குடியிருந்த தெருவுக்கு அடுத்த தெருவில் ஒரு 'கேர் ஆப் பிளாட்பார்ம்' கேஸ் ஒருத்தி இருந்தாள். அனாதை. அவளுக்கு முப்பது வயது இருக்கலாம். இளம் வயதில் அவள் அழகாக இருந்திருப்பாள் என்பதற்கான சுவடுகள் அவளிடம் இருந்தன. அவள் எப்படி இந்த நிலைக்கு வந்து சேர்ந்தாள் என்று தெரியவில்லை.

தெரு ஓரத்தில் உட்கார்ந்திருப்பாள். என்னைப் பார்த்துவிட்டால் என் பின்னாடியே ஓடிவந்து காசு கேட்பாள். "அண்ணா அண்ணா ஒரு ரூபா ரெண்டு ரூபா குடுங்க அண்ணா" என்று கேட்பாள். என் கையில் சில்லறை இருந்தால் கொடுத்திருக்கிறேன். இரவில் தெரு ஓரத்திலேயே படுத்துத் தூங்குவாள் போல. அவள் சேலையும் ஜாக்கெட்டும் அழுக்காக இருந்து பார்த்திருக்கிறேனே தவிர, கிழிசல் எதையும் கண்டதில்லை. அக்கம்பக்கத்து வீடுகளில் உணவை யாசகம் கேட்டுப் பெற்று உண்பாள் போல. ஆனால் குளிப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் என்ன செய்வாள் என்று தெரியவில்லை. ஒருவேளை அந்தத் தெருவில் இருந்த பெண்மணிகளில் இரக்கம் உள்ளவள் யாராவது அவளுக்கு உதவி செய்திருக்கலாம் இந்த விஷயத்தில். உறக்கம் இல்லாத இரவுகளில் அவள் நினைப்பு வரும். பாவம் அவள் என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வேன். ஒரு நாள் அந்தத் தெரு வழியாகப் போய்க்கொண்டிருக்கும்போது அவள் ஒரு சிறுவனுடன் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அந்தச் சிறுவன் எதுவும் சொல்லாமல் மௌனமாக நின்றுகொண்டிருந்தான். இவள்தான் அவணைத் திட்டிக்கொண்டிருந்தாள். அந்தச் சிறுவன் இவளை ஏதாவது சீண்டியிருக்கலாம் என்பது என் யூகம். இல்லாவிட்டால் இவள் ஏன் அவனோடு சண்டை போடப்போகிறாள்? "டேய் ஏண்டா அப்படி என்கிட்டே நடந்துகிட்டே? நான் என்ன உன்னோட பொண்டாட்டியா? இல்லே நீதான் என் புருஷனா? சொல்லுடா? நான் உன்னை ஓத்தேனா? இல்லே நீதான் என்னை ஓத்தியா?" என்று கேட்டுக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுவனிடம். நல்ல வேளையாக அங்கே வேறு யாரும் இல்லை. இருந்திருந்தால் அவளிடம் சண்டைக்குப் போயிருப்பார்கள். அவளை அடிக்கக்கூட அடித்திருப்பார்கள். அந்தப் பையன் என்னவோ செய்திருக்கிறான். அதனால்தான் இவள் அவனைத் திட்டுகிறாள். இருந்தாலும் அப்படி ஆபாசமாக, பச்சையாகக் கேட்டிருக்க வேண்டியதில்லை.

ஆனால் ஒரு விஷயம் புரிந்தது. என்னதான் அனாதை என்றாலும், பிச்சைக்காரி என்றாலும் அவளுக்கும் செக்ஸ் உணர்ச்சிகள் இருக்கும் இல்லையா? அதுதான் அவளை இப்படி பச்சையாகப் பேசத் தூண்டுகிறது. தன் உணர்வுகளை இப்படிப் பேசித் தீர்த்துக்கொள்கிறாள் போல. பாவம் அவள் என்று நினைத்துக்கொண்டேன்.

No comments:

Post a Comment